Jump to content

காற்றில் கரையாத நினைவுகள்


Recommended Posts

காற்றில் கரையாத நினைவுகள்: பண்பாட்டின் கடைசிக் காட்சிகள்!

 

 
cheliyan%20art

நாம் வசிக்கும் உலகம் விடிந்துவிட்டதை என் அறையின் சாளரம் வழியே விரல்களை நீட்டிக்கொண்டு வந்த வெளிச்சக் கதிர்கள் உணர்த்தின. வெளியே எட்டிப் பார்த்தபோது எப்போதும் கேட் கும் பறவைகளின் இசை காணாமல் போயிருந்தது. அவற்றைத் தாங்கி நிற்கும் மழைமரம் வீழ்த்தப்பட்டிருந்தது. வாழ்விடம் பறிக்கப்பட்டதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவை காலி செய்திருந்தன.

வெற்றிடங்கள் எல்லாம் கட்டிடங்களாக உருவாகிக் கொண்டிருக்கும் மூச்சுத் திணறும் சூழலில், எனக்குள் அதிகரித்துக்கொண்டிருக்கும் வெறுமை உறுத்திக் கொண்டே இருக்கிறது.

நினைவு தெரிந்த நாளில் இருந்து அரை நூற்றாண்டு கால இடைவெளி யில் பார்க்கும் திசையெங்கும் நிகழ்ந்து இருக்கும் மாற்றங்கள் இந்த பூமியை அந்நியக் கிரகமாக ஆக்கியிருக்கின்றன.

மாணவர்கள் புன்னகையுடன் புத்தக மூட்டையைத் தூக்கிக்கொண்டு நாம் சென்ற புகழ்பெற்ற பள்ளிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, சீண்டுவார் இல்லாமல் நோஞ்சானாக மாற, புஷ்டியு டன் புதிய பள்ளிகள் ஊரெங்கும். விளையாடுவதும், படிப்பதும் செயல்பாடாக ஆகிவிட்ட செயற்கைச் சூழ லில் கல்வி. பாரம்பரியப் பள்ளிகள் களையிழந்து எந்த நொடியிலும் அணைந்துவிடும் விளக்காக நீடிக்கும் நிலை.

ஒரு மணி நேரம் முன்பே சென்று ‘நல்வரவு’ என்று போடுவதில் தொடங்கி ‘வணக்கம்’ போடும் வரை ஆர்வத் தோடு தவமிருந்த திரையரங்குகள் பல்லடுக்கு அங்காடிகளாக மாறிப்போய்விட்டன.

அந்தத் திரைகளில் தெரிந்த அவதா ரப் புருஷர்களும், சரித்திர நாயகர் களும், அங்கே காற்று மண்டலத்தை இனிய இசையால் நிரப்பிய பாடல்களும் நமக்கு மட்டுமே தெரியும் மாயச்சூழல். அவற்றின் மறைவோடு நமக்குள்ளும் ஒரு பகுதி மரித்துப்போன வருத்தம்.

 

கரைந்துபோகும் சாம்பிராணிப் புகை

சின்ன வயதில் நீள, அகலங்களை அளந்து பருவத்துக்கு ஏற்ற விளையாட்டை விளையாடிய மைதானங்கள் வீடுகளாக எழும்பிவிட்டன. அங்கே பந்தோடும், பம்பரத்தோடும், கில்லி தாண்டலோடும், நுங்கு வண்டியோடும், எதுவும் இல்லாதபோது ஓடிப் பிடித்தும் விளையாடி மகிழ்ந்த நினைவுகள் சாம்பிராணிப் புகையாகக் கரைந்து போகின்றன. கைகளைக் கொண்டு வாசனையைப் பிடிக்க முயல்வதைப் போல வீண் பிரயத்தனங்களுடன் பழமையில் நீந்த நினைக்கும் முயற்சிகள்.

மழை என்றால் நனைவதில் மகிழ்ந்து, உடையை ஈரமாக்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பி யும் எந்த நோயும் அப்போது தாக்கவில்லை. தேங்கிய தண்ணீரிலெல்லாம் காகித ஓடங்கள் விட்டு மழையை வரவேற்ற அந்த நாளையும், மழை அறிவிப்பு வந்தால் இலவச இணைப்பாக வரும் விடுமுறை அறிவிப் பையும் எதிர்பார்த்து பிள்ளைகள் தொலைக்காட்சி முன் தவமிருக்கும் இந்த நாளையும் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. அன்று சன்ன மழைக்கே கிணற்றில் நீர் சல சலக்க ஆரம்பித்துவிடும். சின்ன மழை பெய் தால் நிரம்பிவிடும் ஏரிகள் இப்போது ஆக்கிரமிப்புகளால் எந்த மழைக்கும் நிரம்பாமல் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

எந்த நீச்சல்குளத்துக்கும் சென்று நீந்தப் பழகவில்லை. நீந்தக் கற்றுக்கொடுக்கும் ஆசானாக சுரைக் குடுக்கை முதுகில் ஏறியது. அதற்காகவே தோண்டப்பட்டதுபோல் அகல மாக வாய் விரித்து குளமாகக் காட்சியளிக்கும் வேளாண் கிணறுகள். யார் அதிக உயரத்தில் இருந்து குதிப் பது என்று போட்டிகள். மிதிவண்டிப் பழக்கமும் அவ்வாறே நண்பர்கள் விரல்பிடித்து கற்றுத் தர பாடமானது. பள்ளிப் பருவத்தில் நீச்சல் பழகிய பெரிய கிணறுகள் தூர்ந்து போய் கட்டிடங்களாகிவிட்டன. அங்கே நீர்ப் பாய்ச்ச நிலமும் இல்லை, ஏர் உழுவதற்கு ஆளும் இல்லை. நகரத்தின் பேராசைக் கரங்கள் அருகில் இருக்கும் கிராமங்களின் குரல்வளையையும் நெரிக்கத் தவறவில்லை.

 

கதவு தட்டாமல் வரலாம்

தூரத்துச் சொந்தமோ, சொந்தத்தின் சொந்தமோ, யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பின்றி வீட்டுக்கு வரலாம். இருப்பதை அவர்களுக்குப் பரிமாற, குறை சொல்லாமல் சாப்பிடும் பண்பு இருந்தது. எப்போது வேண்டுமானாலும் வருகிற உறவினர் இரவில் படுப்பதற்காக ஒதுக் கிய கயிற்றுக் கட்டில் இப்போது தொய்ந்துபோய் தொல்பொருளாய் இருக்கிறது.

எப்படியெல்லாம் நம் உலகம் மாறிப்போய்விட்டது!

கற்பனைக்கும் எட்டாத இம்மாற்றங்களில் கரைசேர முடியாமல் தரைதட்டி நிற்கும் நினைவுகள் மனமெங்கும்.

நாகரிக வளர்ச்சியின் இடுக்குகள் வழியாக நழுவும் பண்பாட்டின் கடை சிக் காட்சிகள் புகையும் ஊதுவத்தியின் இறுதித் துண்டாய் ஞாபகங்களைக் கிளறிவிடுகின்றன. கனவாக இருந்த அனைத்தும் இன்று ஏன் நிறைவேறின என்கிற சலிப்புடன் வாழ்க்கையைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு இருக்கி றோம்.

வாடகை வீட்டில் குடியிருந்தவர்களுடைய ஒரே கனவாக இருந்து, உண்பதிலும் உடுப்பதிலும் மிச்சம் பிடித்துக் கட்டிய பெரிய வீடு, வெளிநாட்டில் பிள்ளைகள் வாழ முதியோர் இல்லமாய் பயமுறுத்துகிறது.

இரவு நேரங்களில் ஒரே பேச்சுத் துணையாய் சத்தமாக ஒலிக்கும் தொலைக்காட்சித் தொடர்கள். நெருக் கிப் படுத்துக்கொண்டபோது வந்த ஆழ்ந்த தூக்கம் புரள வசதி வந்த பிறகு வாய்க்காமல் போனது. ஒரே ஒரு கடிகாரம் இருந்தபோது எல்லாம் குறித்த நேரத்தில் நடந்தன. அறைக்கொரு கடிகாரமும், ஆளுக்கொரு அலாரமும் இருக்கும்போதுதான் எல்லாம் தாமதமாகிறது.

 

பழமையை நோக்கிய பயணம்

வீட்டில் சாப்பிடும்போது அம்மாவிடம் அதிக எண்ணெய் ஊற்றி ஓட்டல் தோசைபோல வேண்டும் என்று அடம்பிடித்த நாம், இன்று உணவகங்களில் வீட்டுத் தோசையைப் போல வேண்டுமெனச் சொல்லி காத்திருக்கிறோம். கருப்பட்டிக் காப்பியை சல்லிசாக நினைத்த நாம், இப்போது அதிக விலை கொடுத்து கலப்படக் கருப்பட்டி யை வாங்கி வருகிறோம்.

சன்ன அரிசிக்காக நெல்லை மெருகேற்றியவர்கள் இன்று கொட்டை அரிசியே உடலுக்கு நல்லது என்று அதைத் தேடி அலைகிறோம். போந்தாக் கோழி முட்டை சுவையாக இருக்கும் என்று சொன்னவர்கள் நாட்டுக் கோழி முட்டைக்காக இரண்டு மடங்கு விலை கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். வெகுதூரம் வந்துவிட்ட பிறகு, மீண் டும் கரிம விவசாயம், இயற்கை எரு, நாட்டுப் பசு, செக்கில் ஆட்டிய எண்ணெய், பாரம்பரிய உணவு வகைகள், மண்பாண்ட சமையல், வெல்லப் பலகாரம், சிறுதானியம், பருத்தி உடை என்று பழமையை நோக்கி நொண்டியடிக்கும் முயற்சிகளால் நம்பிக்கைத் துளிர்கள்.

ஒரு காலத்தில் மார்கழி மாதக் கோலங்களால் நிறைந்திருந்த தெருக் கள் வீடுகளின் பெருக்கத்தால் மூச்சுத் திணறி வாகனங்களை வழியெங்கும் பிதுக்கிக்கொண்டு நிற்கின்றன. நேரத் தைத் துரத்தும் நெருக்கடியில் மாதங்களுக்குள் இருக்கும் வித்தியாசத்தை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமே அறிவிக்கின்றன. மாலைவேளைகளில் வீட்டுக்கு வெளியே நின்று அனைத்தையும் அலசும் பெண்களின் கூட்டம் முகநூலிலும், அலைபேசி குறுஞ் செய்திகளிலும் காணா மல் போய்விட்டது.

 

தீவுகளான மனிதர்கள்

அன்று அடுத்த வீடு காலி யாக இருந்தால் யார் புதிதாகக் குடிவரப் போகிறார்கள் என்று காட்டிய அக்கறை இன்று அறவே இல்லை. யார் வந்தாலும் அவர்களோடு எந்தப் பரிவர்த்தனையும் இல்லை என்பதால் அண்டை வீடு அந்நியமானது.

உலகம் மட்டுமா மாறிப் போயிருக்கிறது? நாம் ஒவ்வொருவருமே மாறிப்போய்விட்டோம். நம் புன்னகையில் சிநேகம் இருப்பதைவிட பதற்றம் அதி கம் இருக்கிறது. வசதிகளின் நடுவே மகிழ்ச்சியைத் தொலைத்த வருத்தம்... 50 ஆண்டுகளாக நம்மைச் சுற்றி நிக ழும் மாற்றங்களைக் கவனித்த தலைமுறைக்கு அவசியம் இருக்கும். பெற்றவற்றைவிட இழந்தவை அதிகம் என்றும், முளைத்தவற்றைவிட தொலைத்தவை நிறைய என்றும் எண்ணும் இடைப்பட்ட தலைமுறை இது. திரும்பிப்போக முடியாத பாதிக் கிணற்றுப் பயணம்.

சொந்த ஊரில் அந்நியராக, பிழைக் கும் ஊரில் அகதியாகத் தொடரும் வாழ்வில் பழைய மகரந்த நொடிகளில் சற்று மனம் லயிப்பதற்கே இந்த ’காற்றில் கரையாத நினைவுகள்’.

- நினைவுகள் பரவும்...

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

காற்றில் கரையாத நினைவுகள் 2: விருந்தே மருந்தாக!

 

 
cheliyan%20padam

அண்ணா நகருக்குச் சென்றிருந்த நான் அங்கு வாழும் என் நண்பர் ஒருவரின் நினைவு வர, சந்திக்கலாம் என்ற ஆர்வத்தில் அவர் வீட்டுக்குச் சென்றேன். மாலை நேரம். அவரோ தொலைக்காட்சியில் தோய்ந்து இருந்தார். என்னைப் பார்த்ததும் ஆனந்த அதிர்ச்சி அடைவார் என்று எதிர்பார்த்தேன். அவரோ தொலைபேசியில் சொல்லிவிட்டு வந்திருக்கலாமே என்பதுபோலப் பார்த்தார். ‘‘ நான் இந்த வழியாக வந்தேன், வெறுமனே எட்டிப் பார்க்க நினைத்தேன்..’’ என்று சமாளித்துத் திரும்பினேன்.

விருந்து என்பது தமிழகத்தில் வித்தியாசமான பதம். வீட்டுக்கு வருகிறவர் அனைவரும் விருந்தினர். இன்று உறவினர் மட்டுமே விருந்தினர். அதிலும் நெருங்கிய சொந்தம் மட்டுமே அடங்கும். ஒன்றுவிட்டவர்களைக் கழற்றிவிட்டுப் பல நாட்களாகிறது.

அந்தக் காலத்தில் அனைவரும் உறவினர்கள். ஓர் ஊரில் இருக்கும் அனைவரும் முப்பாட்டன் வகையில் சொந்தமாய் இருப்பார்கள். திண்ணையில் அமர்ந்திருக்கும் அனைவரும் உணவு வேளையில் உண்ண அழைக்கப்படுவார்கள். பின்னர், பணி நிமித்தமாக வெவ்வேறு இடங்களில் குடியேற நேர்ந்தாலும் அந்த நெருக்கம் நீடித்தது.

 

எப்போதும் வரலாம்

நகரத்தில் இருக்கும் உறவினர் வீட்டுக்குச் செல்லாமல் வருவது மரியா தைக் குறைவு. அவர்களும் செய்தி தெரிந்தால் கோபப்படுவார்கள். நகரத்துக்குச் செல்வது அரிது. கிராமத்தில் இருந்து பண்டிகைக்குத் துணி எடுக்கவும், தீபாவளிக்குப் புதிதாக வெளி யான திரைப்படம் பார்க்கவும் நகரத்துக்கு வருகிறவர்கள் திரும்பிச் செல்ல பேருந்து இல்லாததால், உறவினர் வீட்டில் தங்குவார்கள். வருவதை முன்கூட்டிச் சொல்லும் வசதிகள் அன்றுஇல்லை. வருகிறவர்களை எந்நேரமானாலும் வரவேற்று, வீட்டில் இருப்ப தைக் கொஞ்சம் சூடாக்கி அப்பளம் பொரித்தோ, பப்படம் சுட்டோ தட்டை நிரப்பிப் பரிமாறுவார்கள். இதற்காகவே சாப்பாடு போட பாக்கு மட்டை நீரில் நனைக்க பரணில் இருக்கும். எப்போதுமே கொஞ்சம் கூடுதலாகச் சமைப்பது அன்றைய வழக்கம்.

வருகின்ற உறவினர்கள் கூடமாட ஒத்தாசை செய்வார்கள். ஒருவர் காய்கறி நறுக்க, இன்னொருவர் வெங்காயம் உரிக்க, வெகு சீக்கிரம் சமை யல் மணக்க மணக்கத் தயாராகும். பாத்திரம் அலம்பி வைப்பது வரை உரிமையோடு உதவுவார்கள். தன்முனைப்பில்லா உறவுமுறை அது.

இன்று சொந்த வீட்டிலேயே சொல்லாமல் போனால் சோறு கிடைக்காது. அனைத்தையும் உண்டு கழுவி கவிழ்த்து வைப்பதே மாநகரங்களில் மாபெரும் சாதனை. பழையதை உண்ண அங்கு நாய்கள்கூடத் தயாராக இல்லை. சொல்லி வந்தாலும் உறவினர் கால் மேல் கால் போட்டு களித்திருக்கும் காலம் இது. அவர்களையும் அழைத்துக்கொண்டு உணவகம் செல்லும் நிலை. அல்லது, வெளியில் இருந்து தருவித்த பலகாரங்கள் சம்பிரதாயத்துக்காகப் பரிமாறப்படும். வந்தவர் கள் அவற்றைப் பார்வையிலேயே உண்டு முடித்து விடுவார்கள்.

 

பேசுவதெல்லாம் கதை

எங்கள் சின்ன வய தில் மாமா மகனோ, அத்தையோ வருவது தெரிந்தால் வீட்டுக்குள் எப்போது நுழைவார்கள் என்று வழிமேல் விழிவைத்துப் பார்த்திருப்போம். சிலரிடம் மோட்டார் சைக்கிள் இருக்கும். அந்தக் காலத்தில் அது அரிது. மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டால் அவர்தான் வந்துவிட்டாரோ என்று வாசலுக்கு விரைந்து வந்து பார்ப்போம். அதில் கதை சொல்லும் அத்தை, மாமாக்கள் உண்டு.

அவர்களுடன் யார் இரவில் படுத்துக்கொள்வது என்று போட்டிப் போடுவோம். அவர்கள் எது பேசினாலும் அது கதையாய்த் தோன்றும். வீட்டினர் அவர்களோடு பேசுவதை வாயைப் பிளந்து கேட்போம். விருந்தினர் வந்தால் படிப்பதில் இருந்து விடுதலை என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி.

வருகிற உறவினர் இன்னொரு நாள் தங்க நேர்ந்தால் வீட்டில் இருக்கும் வேட்டி, புடவை அவர்களுக்கு மாற்றுடையாகப் பரிமாறப்படும். ஊரில் எந்த சொந்தக்காரர் திருமணம் என்றாலும் வந்து தங்குகிற உறவுகள் உண்டு.

வீட்டிலேயே பலகாரங்கள் செய்து உறவினர் வீட்டுக்கு எடுத்துச் செல்கிற கரிசனம் இருந்தது. அன்று கடையில் வாங்குவது கடைச்சரக்காகக் கருதப்பட்டது. உறவினருக்காக வீட்டில் செய்யும் விசேஷப் பலகாரங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கும் குதூகலம் தரும். இன்று அக்காள், அண்ணனோடு மட் டும் உறவு முடிந்துவிட்டது. அவர்க ளும் தங்குவதற்காக வருவதில்லை. திக் விஜயத்தோடு சரி. தங்காததற்குக் காரணம் தங்கள் வீடே சொர்க்கம் என்ற நினைப்புதான். கிடைக்கிற இடத்தில் பாயை விரித்துப் படுப்பவர் இப்போது இல்லை. வசதிகளோடு சமரசம் செய் யத் தயாராக இல்லை.

 

ஆச்சரியம் இழந்த கண்கள்

இன்றைய குழந்தைகள் புதிதாக வரும் உறவினரிடம் புன்னகையோடு உபசரிப்பை முடித்துக்கொள்கின்றன. அரு கில் சென்று ஆசையாய்ப் பேசுவது இல்லை. அவர்களுக்குக் கதைகளைச் சொல்ல கணினி இருக்கிறது. கணினிக் கதைகளில் கரிசனம் இருக்குமா!

பொழுதுபோகாமல் அலைந்த தலைமுறை அது. இன்று மிடுக்குக் கைபேசி யால் பொழுதுபோதாத தலைமுறை.

உறவு என்பது அன்று இருவழிப் போக்குவரத்து. எதையும் எதிர்பார்க்காமல் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்குத் தந்தார்கள், ‘அல்ல அவசர’த்துக்கு ஓடி வந்துவிடுவார்கள். உடல்நலம் சரியில்லை என்றால் உடனிருந்து பணிவிடை செய்வார்கள். அன்று உறவு உரிமையாய் இருந்தது, இன்று கடமையாய்த் தேய்ந்தது.

எனக்குத் தெரிந்து பெரியப்பா வீட் டில் தங்கிப் படித்தவர்கள் உண்டு. வசதியின்மையால் அத்தை வீட்டில் வசித்து கல்லூரியைக் கடந்தவர்கள் உண்டு. அன்றும் விடுதி வசதிகள் இருந்தன.

ஆனாலும் உறவினர் வீடு கற்களால் ஆகாமல் கனிவால் ஆனதால் கதவுகள் அனைவருக்கும் அகலத் திறந்தன. அனுசரித்தும், பொறுத்துக்கொண்டும் உறவுகளோடு கூடிக் களித்த காலம் அது.

விதவைத் தங்கையைத் தங்களுடன் வைத்துக்கொண்ட அண்ணன்கள் உண்டு.

இன்றோ சென்னையிலேயே இருந்தாலும் எவ்வளவு வற்புறுத்தியும் தங்க மறுக்கும் நெருங்கிய சொந்தங்கள். இன்று சொந்தத்தைவிட சுதந்திரம் முக்கியம்.

 

உறவுச் சங்கியில் மாற்றம்

காலாண்டுத் தேர்வுக்கும், முழுஆண்டுத் தேர்வுக்கும் பயிற்சிகள் நெரிக் காத விடுமுறை உண்டு.

அப்போது உறவினர் வீட்டுக்குக் குழந்தைகள் செல்வார்கள். அங்கு புதிய மனிதர்களோடு பழகி, புதியன கற்றுத் திரும்பி வருவார்கள்.

நான் எங்கள் அத்தை வீட்டுக்கு 5-ம் வகுப்பு விடு முறையில் சென்று சதுரங் கம் கற்றேன், நீச்சல் பயின்றேன், தேங்காய் உறிக்கக் கற்றேன்.

இன்று எந்தக் குழந்தை யும் தங்கள் வீட்டைவிட்டு வேறெங்கும் செல்வதில்லை. அவர்கள் அறையைவிட்டுக்கூட அகல விரும்புவதில்லை.

அடிக்கடி சந்திக்கும் நிலையில் இருந்து எப்போதாவது சந்திக்கும் சூழலுக்கு உறவுச் சங்கிலி மாறியதால் அதில் கணுக்கள்தோறும் விரிசல்கள்.

 

கை நீட்டும் நட்பு

இன்று உறவுவிட்ட இடத்தை நட்பு பிடித்துக்கொண்டது. அவசரமாகப் பணம் வேண்டும் என்றால் அன்று நெருங்கிய சொந்தம் நீட்டியது கை.

இன்று ஆத்ம நண்பர்கள்தான் ஆபத்துக்கு வருகிறார்கள். அவர்களே திருமணத்தின்போது அத்தனை இடத்திலும் நின்று சேவகம் புரிகிறார்கள். உறவு மரபுரீதியான வரவேற்பில் முடிந்து போகிறது.

எந்த நெருக்கமும் தொடராவிட்டால் தொய்ந்து போகும். இத்தனை மாற்றங்கள் நடுத்தரக் குடும்பங்களில் நடந்தாலும் இல்லாதவர்களிடம் இன்னமும் உறவின் செழுமை நீடிக்கிறது. அவலம் என்றால் அழுகிற கண்களும், கவலை என்றால் துடைக்கிற கைகளும் ஏழைகளிடம் மிச்சமிருக்கிறது. அவர்கள் இல்லம் சிறிதாக இருந்தாலும் இதயம் பெரிதாக இருக்கிறது.

அவர்கள் நமக்கு உறவின் மேன்மையை மவுனமாய்க் கற்றுத் தந்துகொண்டே இருக்கிறார்கள்.

- நினைவுகள் பரவும்...

http://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

காற்றில் கரையாத நினைவுகள் 3: அழைப்பு மணி ஓசை

 

 
ALL1Tnadu02IMG2
13ChRELkkn3
 
ALL1Tnadu02IMG4
ALL1Tnadu02IMG2
13ChRELkkn3
 

ஐம்பது

ஆண்டுகளுக்கு முன்பு, எதிர்காலத்தில் தந்தியில்லாத தொலைபேசி புழக்கத்துக்கு வரும்; அதைப் போகும் இடமெல்லாம் எடுத்துச் செல்லலாம் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்தத் தொலைபேசியில் கணக்கு போடலாம், கணினி பார்க்கலாம், மின்னஞ்சல் அனுப்பலாம், பாட்டு கேட்கலாம், பாடம் படிக்கலாம், புகைப்படம் எடுக்கலாம், புத்தாண்டு வாழ்த்து அனுப்பலாம், குறுந்தகவல் தரலாம், குரலோசைத் தகவல் அனுப்பலாம், கைகுழல் விளக்காகப் பயன்படுத்தலாம், விழிப்பு மணி நேரம் குறிக்கலாம், சங்கேத வார்த்தையால் மூடி வைக்கலாம், அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு வணக்கமும் வாழ்த்தும் அனுப்பலாம், திரைப்படம் பார்க்கலாம், முன்பதிவு செய்யலாம், விளையாடி மகிழலாம், பொருட்கள் தருவிக்கலாம், அரட்டை அடிக்கலாம்.. என்று யாராவது நம்மிடம் சொல்லியிருந்தால், அவரை புத்திசுவாதீனம் அற்றவர் என்று பட்டம் கட்டிப் பரிகசித்திருப்போம்.

அன்று சாதாரண தொலைபேசியே அரிதாக இருந்தது. பணக்காரர்கள் மட்டுமே வைத்திருக்கும் சாதனம் அது. திரைப்படங்களில் தென்படும் அதிசயக் கருவி. கதாநாயகன் தொலைபேசியில் பேசுவதுபோன்று சுவரொட்டிகள் முளைக்கும். தவறான அழைப்பால் ஆணுக்கும், பெண்ணுக்கும் அத்துமீறிய சிநேகம் ஏற்பட்டதுபோல திரைக்கதைகளும் உண்டு.

பல வீடுகளில் தொலைபேசியில் பேசுவதுபோல நிழற்படம் எடுத்து மாட்டுவதும் உண்டு. உயர்பதவியில் இருப்பவர்கள் தொலைபேசியில் பேசுவதுபோன்ற படத்தை செய்தித்தாள்கள் வெளியிடுவது உண்டு.

சாமானியர்கள் அவசரமாகப் பேசுவதற்கு அஞ்சலகத்துக்குச் செல்ல வேண்டும். எதிர்முனையில் இருப்பவருக்கும் சொந்தத் தொலைபேசி இருக்காது. இருப்பவர் வீட்டில் சொல்லி அழைக்க, மனு போட வேண்டும். அவரோ அலுத்துக்கொண்டே வரவழைப்பார். அந்நியர் வீட்டில் அத்தனை செய்தியையும் பேச முடியாது. லேசில் அழைப்பு கிடைக்காது. கிடைத்தாலும் தொடர்பு நீடிக்காது. பதிவுசெய்து காத்திருப்பவர் பட்டியல் நீளும்.

7-ம் வகுப்பு படிக்கும்போது எனக்கு தொலைபேசியில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அதைக் காதில் வைத்த தும் அத்தனை மகிழ்ச்சி. எங்கள் வகுப்பில் ஓரிருவர் வீட்டில் மட்டுமே தொலைபேசி இருந்தது. எங்காவது வாய்ப்பு கிடைத்தால் அந்த எண்ணுக்கு சுற்றி, என்ன பேசுவது என்று தெரியாமல் தவிப்போம். அன்று தொலைபேசி இணைப்பு கிடைப்பது அபூர்வம். நாடாளுமன்ற உறுப்பினர் பரிந்துரை செய்தால் விரைவில் அளிக்கப்படும்.

1990-ல் பணியாற் றும்போதுகூட வெளியூருக்குப் பேச வசதியின்றி இருந்தது. அவசரமாக நாகையில் இருந்து நன்னிலத்துக்கு பேச மின்னல் அழைப்பைப் பதிவு செய்ய வேண்டும். சமயத்தில் மின்னலோடு இடியும் வரும். தேர்தல் நேரத்தில் மட்டும் எங்கும் பேசும் வசதி அனுமதிக்கப்படும். மாவட்ட ஆட்சியருக்கு மட்டுமே எப்போதும் பேசும் வசதி உண்டு.

பொதுமக்கள் பேச தனியார் தொலைபேசி இணைப்பகங்கள் முளைத்த காலமொன்று உண்டு. அங்கு சாவகாசமாகப் பேசுபவரை விரைந்து முடிக்கும்படி பின்னால் இருப்பவர் நச்சரிப்பார்கள். அது கைகலப்பில் முடிவதும் உண்டு.

 

வயதும் தொழில்நுட்பமும்

இன்று 2 வயது குழந்தைக்கே அலைபேசி விளையாட்டுப் பொருளாகிவிட்டது. அழும் குழந்தைகளுக்கு அலைபேசியே வாயடைக்க வைக்கும் மருந்து. அதைப் பயன்படுத்தும் விதங்களை, சின்னக் குழந்தைகள் பெரியவர்களைவிட வேகமாக கற்றுக்கொள்கின்றனர். காரணம், பழுதாவதைப் பற்றி அவர்கள் பயப்படுவதில்லை. தொழில்நுட்பத் தடை குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு ஏற்படுவது இயற்கை.

அலைபேசி அறிமுகமானபோது அந்தஸ்தின் அடையாளமாக இருந்தது. நட்சத்திரங்களும், பெரும் முதலாளிகளும் மட்டுமே வாங்கக்கூடிய விலை உயர்ந்த பொருளாக அது இருந்தது. செங்கல் அளவுக்குப் பெரிதாய் இருந்த அதை சிலர் காட்டும்பொருட்டு கைகளில் ஏந்தித் திரிவார்கள். ஒரு நிமிடம் பேச ஊர்ப்பட்ட காசு.

அன்று, திரை நடிகர்களிடம் மட்டும் இருந்த அலைபேசி இன்று திரையரங்கைப் பெருக்குகிறவர்களிடமும் இருக்கும் அளவு சகஜமாகியிருப்பது மிகப் பெரிய தகவல் புரட்சி. சில நேரங்களில் சமத்துவத்தை சாதுர்யமாக செய்துவிடுகிறது தொழில்நுட்பம். அன்று வீதிக்கொரு தொலைபேசிகூட இல்லாத நிலை. இன்று ஆளுக் கொரு அலைபேசி சாத்திய மாகியிருக்கிறது.

அலைபேசி வந்த பிறகு பல அற்புதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. மலிவு விலையில் ஊர்தியை அமர்த்தி மாநகரத்தில் பயணம் செய்ய முடிகிறது. காத்திருக்கும் நேரத்தை அது கணிசமாகக் குறைத்திருக்கிறது. பேசி நேரத்தை வீணடிக்காமல் குறுஞ்செய்தி அனுப்பிக் காசையும், காலத்தையும் மிச்சம் பிடிக்க முடிகிறது. கணினி உதவியின்றி மின்னஞ்சலைப் பார்த்து உடனடியாக பதில் அனுப்ப முடிகிறது.

அன்றாடம் நம்மை எச்சரிக்க வேண்டிய நிகழ்வுகளை மணியடித்து தெரிவிக்க ஏற்பாடு செய்யலாம். வருகிற அழைப்பில் எது முக்கியம் என்பதை, எண்ணைப் பார்த்து முடிவுசெய்யலாம்.

பயணத்தின்போது அரிய தகவல்களை காணொலியாகக் காண முடிகிறது. ஒருவர் பேசுவதைப் பதிவுசெய்து பத்திரப்படுத்தலாம். யார் யார் பேசினார் என்பதை அறிந்துகொள்ளும் வசதி உண்டு. படித்த நண்பர்களின் தொலைந்த முகவரிகளைக் கண்டுபிடித்து, குழுவை அமைத்து, மறுபடியும் பள்ளிச் சிறார்களாய்ச் சிறகடிக்கலாம். ஒருவர் அளித்த செய்தியை அப்படியே இன்னொருவருக்கு அனுப்பி வைக்க முடியும்.

விபத்தின்போதும், பேரிடரின்போதும் நிவாரணப் பணிகளை நிறைவேற்ற முடிகிறது. இப்படி எத்தனையோ வகைகளில் உயிரைக் காப்பாற்றவும், உணர்வைப் பரிமாறவும் உதவும் ஒப்பற்ற சாதனமாக அதன் உயிர்ப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. சென்னைப் பெருவெள்ளத்தில் அலைபேசி ஆற்றிய பணி அபாரம்.

ரோஜா மெத்தையைத் தந்தாலும் அதற்கே ஒவ்வாமை வரும் வரை விடாத மனம் நம்முடையது. அபூர்வமாகத் தகவல் பரிமாற மட்டுமே தேவைப்பட்ட கருவி பொழுதுபோக்குச் சாதனமாகி, போதைப்பொருளாகவும் ஆகிவிட்டது. ஒருவரது கைப்பேசியை 2 நாட்கள் பிடுங்கிவைத்துவிட்டால் அவருக்கு மூளைக்கோளாறு ஏற்பட்டுவிடும்.

அதில் அவருக்கு வருகிற செய்திகளை 2 நாட்கள் தொடர்ந்து படித்தால் நமக்கு புத்திசுவாதீனம் பாதிக்கப்படும். அன்று தொலைபேசி மட்டும் பயன்பாட்டில் இருந்தபோது அத்தனை எண்களும் அத்துபடியாக இருந்தது. இன்று மனைவியின் எண்ணே மனப்பாடம் இல்லை.

அன்று காதலை வெளிப்படுத்துவது கடினமாக இருந்தது. கடிதம் எழுதி, ஒருவேளை, பெண்ணுடைய அப்பா வின் கையில் கிடைத்தால் என்னாகும் என்ற அச்சம். இன்று யாருக்கு வேண்டுமானாலும் எதையும் அனுப்பலாம் என்ற துணிச்சல். ‘சுயமி’ (செல்ஃபி) மோகம் சிலருக்கு அதிகம். எங்கு சென்றாலும் தங்களை விதவிதமாக ‘சுயமி’ எடுக்கும் நார்சிச மனப்பான்மை. உடனடியாக அதை முகநூலில் சேர்க்கும் அவசரம்.

அந்தஸ்தின் அடையாளமாக இருந்த அலைபேசி அடிமை சாசனமாகவும் ஆகிவிட்டது. சில நிறுவனங்க ளில் ஊழியர்கள் 23 மணி நேரமும் அதை விழிப்பில் வைத்திருக்க வேண்டும்.

எப்போது வேண்டுமானாலும் மேலாளரிடம் இருந்து அழைப்பு வரலாம்.

கதவைத் திறந்து வைத்தால் காற்றைவிட அதிகமாக கொசு வருவதுபோல, இரவு முழுவதும் வர்த்தக அழைப்புகளால் வாடுபவரும் உண்டு.

முன்பெல்லாம், ஓர் அழைப்பு வந்தால் வீடே தொலைபேசியைச் சுற்றி நிற்கும். இன்று மனைவியின் பேசியை கணவன் எடுப்பது அநாகரிகம். இணைக்க வந்த சாதனம் பிரிக்குமோ என்ற அச்சம். நேரத்தை சேமிக்க வந்த அலைபேசி இன்று உபரி நேரத்தையும் உறிஞ்சிக் கொள்கிறது.

- நினைவுகள் பரவும்..

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

காற்றில் கரையாத நினைவுகள்: வீட்டைக் கட்டிப் பார்!

 

 
 
kkn4

ஓவியம்: இளஞ்செழியன்   -  ஓவியம்: இளஞ்செழியன்

 

 

சொந்த வீடு என்பது நடுத்தர வர்க்கத்து கனவாகவும், ஏழை மக்களின் ஏக்கமாகவும் இருந்தது ஒரு காலம். சம்பளக்காரர்கள் வாடகை வீட்டில் வாழ்க்கையைக் கழித்த நிலை. சின்னச் சின்ன வீடுகள் ஒரே வளாகத்துக்குள் கட்டப்பட்டு பல்வேறு தரப்பினர் சொந்தமாக வாழ்ந்த சூழல் அன்று இருந்தது.

அன்று வீடு கட்டுவதற்கு நிலம் வாங்குவதே பெரிய சாதனை. குடியேற்றமில்லாத இடத்தில் வாங்கிய பிறகு, அது களவு போகாமல் இருக்க வாரம் ஒரு முறை சுற்றுலாப் போல பார்த்து வருவார்கள்.

அங்கு பெரிய கட்டிடம் எழும்பி நிற்பதைப் போன்ற கற்பனையோடு திரும்புவார்கள். நிலம் வாங்கியதும் தம் பிடித்து, வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி சேமிக்கத் தொடங்குவார்கள்.

 

சந்தோஷத்தின் வரைபடம்

வீட்டுக்கு வரைபடம் போடுவதே பெரிய அப்யாசம். பத்து பேரைக் கலந்தாலோசிப்பார்கள். சீட்டு போடுவார்கள். இருக்கும் தொகையை வைத்து கடக்கால் போடுவார்கள். வருங்கால வைப்பு நிதியையும், சீட்டுத் தொகையையும் கொண்டு மேலே கட்டத் தொடங்குவார்கள். அதற்குப் பிறகு நகைகள் அடகு. சிலருடைய நகைகள் கழுத்தில் இருந்ததைவிட கடையில் இருந்த நேரமே அதிகம்.

வீடு கட்டத் தொடங்கும் முன்பு குடிசை ஒன்றைப் போட்டு ஒருவரைக் குடும்பத்துடன் குடியமர்த்த வேண்டும். கட்டுமானத்துக்குத் தருவிக்கும் சாமான்கள் திருடு போகாமல் இருக்க அது அவசியம். முதலில் கிணறு தோண்ட வேண்டும். தண்ணீர் வந்துவிட்டால் பெரிய மகிழ்ச்சி.

வீடு தொடங்கியதும் வருவோர் போவோரெல்லாம் ஆளுக்கொரு யோசனை சொல்வார்கள். அவர்கள் சொல்வதெல்லாம் சரியெனப்படும். பின்னால் தேவைப்படுமென ஒதுக்கி வைத்த பணமெல்லாம் வழித்தெடுக்கப்படும். பெண்கள் கடுகு டப்பாவிலும், மிளகு டப்பாவிலும் ஒளித்து வைத்தவை வெளியில் வரும்.

 

அன்று வீட்டில் திண்ணை இருந்தது

வீட்டைக் கட்டுவது மேஸ்திரி மட்டுமே. பொறியாளர் யாரும் அப்போது இல்லை. பாதியில் அதிகப் பணம் கேட்டு தகராறு செய்வார். சில நாள் வேலை நின்றால் வேதனை ஏற்படும். வீடு முடியும்போது மேஸ்திரி குடும்பமும் உறவில் ஒன்றாக ஆகிப்போகும்.

அந்தக் காலத்தில் வீட்டின் வெளியே திண்ணைகள் இருக்கும். படிக்கவும், எழுதவும், அழகாய் அமர்ந்து மழையைப் பார்க்கவும், சிறிது நேரம் படுத்து உறங்கவும் திண்ணைகள் இரண்டும் திண்டு திண்டாய் இருக்கும்.

எங்கள் வீட்டை அத்துவானக் காட்டில் கட்டினோம். மனை விலை அங்குதான் கட்டுபடியானது. புதிதான பகுதியில் வீடு கட்டினால் பாதை இருக்காது, வடிகால் இருக்காது, மின்சார வசதியும் இருக்காது.

ஊரில் இருக்கும் பூச்சிபட்டு எல்லாம் விளக்கு வெளிச்சத்துக்கு ஓடி வரும். சுதந்திரத்தைச் சுவைக்க நினைத்தவர்கள் வாடகை வீட்டிலேயே வாழ்ந்திருக்கலாமே என எண்ணத் தொடங்குவார்கள்.

 

அத்துவானக் காடும் ஒரு கூடும்

பாம்புகள் படையெடுக்கும். பல்லிகள் பெருக்கெடுக்கும். ஒவ்வொரு வசதிக்கும் நடந்து நடந்து கால் தேயும். அந்த இடத்தில் யார் வீடு கட்டச் சொன்னது என்று அத்தனை பேரும் கேட்டுத் தொலைப்பார்கள். அக்கம்பக்கத்தில் புதிய வீடு வராதா என்று தவம் இருப்போம். யாரேனும் வீடு கட்ட வந்தால் கட்டச் சொல்லி வற்புறுத்துவோம்.

காய்கறித் தோட்டம் போடப்படும். மரங்கள் நடப்படும். புதிதாக ஒவ்வொரு வீடு முளைக்கும்போதும் நம்பிக்கை முளைக்கும். குழந்தைகளுக்கோ விளையாட ஆள் கிடைத்த மகிழ்ச்சி ஏற்படும். அருகில் இருக்கும் காலி மனைகள் விளையாட்டுத் திடல்களாக மாறும். விறகுக் குச்சிகள் மட்டையாகும். ரப்பர் பந்து சீறிப் பாயும்.

 

மேலே சுழலும் காற்றுப் பூ

 

அரிக்கன் விளக்கில் படிப்பு நிகழும். ஆனாலும் மதிப்பெண்கள் அதிகம் கிடைக்கும். மின்சாரம் வந்த பின்பு கவனம் சிதறும். இருந்தாலும் இஸ்திரி போட்ட சட்டையோடு பள்ளி செல்ல பரவசமடைவோம்.

குண்டு விளக்கு குழல் விளக்காக வசதிக்கேற்ப வளர்ச்சியடையும். மின்விசிறி மாட்டும்போது நந்தவனத்தையே வீட்டுக்குள் அழைத்து வந்ததைப்போல் ஆனந்தம் ஏற்படும். மின்விசிறிக்கு அடியில் யார் படுப்பது என்று குழந்தைகளுக்குள் தள்ளுமுள்ளு ஏற்படும்.

40 வயது நிகழும்போது வீடுகட்டி முடித்தால் பெரிய சாதனை நிகழ்த்திய திருப்தி ஏற்படும்.

சொந்த வீடு என சொல்லிடத்தான் எத்தனை பெருமை! மண்ணில் பூத்த மல்லிகைக்குத்தான் எத்தனை மணம்! நிலத்தில் காய்த்த கத்தரிக்குத்தான் எத்தனை சுவை!

வீட்டை ஒட்டிய பள்ளி. பணியிடம் சார்ந்த நண்பர்கள். கூப்பிடு தூரத்தில் உறவுகள். சொர்க்கமே இல்லமாக மாறிய நினைவு. எத்தனையோ பல மாளிகைகள் அருகில் முளைத்தாலும் ஏக்கம் இல்லை. பொறாமை இல்லை. நம்மைவிட அவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்ற எண்ணம்கூட இருந்தது இல்லை. நமக்கு வாய்த்தது நமக்குப் போதும்.

 

நேற்று மாதிரி இன்றில்லை

இன்று பணிக்குச் சேர்ந்ததும் வீடு வேண்டும் என்ற எதிர்பார்ப்பு.

வங்கிகள் வழங்கும் தாராளக் கடன். அலுவலகம் அளித்திடும் முன்பணம். சிலர் கட்டிய வீட்டோடு கட்டிக்கொள்ளும் மனைவி. பலருக்கு அவர்களே வாங்கும் அடுக்கக வீடு.

நிலத்தை அடிக்கடி பார்க்கும் அக்கறை தேவையில்லை. கதவையோ, ஜன்னலையோ தேர்ந்தெடுக்கும் உரிமையில்லை. மெத்தப் படித்தவர்கள் கட்டும் கட்டிடங்கள். முகம் தெரியாத அவர்களிடம் நமக்கு ஒட்டோ, உறவோ இல்லை. தவணை தவறாமல் பணத்தைச் செலுத்தினால் உரிய நேரத்தில் வீட்டுச் சாவி நம் கைக்கு.

அங்கு மிதித்துச் செல்ல மண்ணும் இல்லை. நம்முடையது மட்டும் எனச் சொல்ல எந்த இடமும் இல்லை. கதவை வீட்டுக்குள் நுழைந்த உடனே சாத்த வேண்டும். இல்லாவிட்டால் பொருட்கள் களவு போகும். வீட்டுச் சத்தம் வெளியே போகும். அண்டை வீட்டோடு சண்டை நிகழும்.

 

நீ யாரோ? நான் யாரோ?

அருகில் இருப்பவர் யார் என நமக்கு முகமும் தெரியாது, முகவரியும் தெரியாது. நாமாகச் சென்று பேச முயன்றால் பெரும் ஏமாற்றமே அங்கு மிஞ்சும். தினமும் பார்த்தும் பேசாமடந்தையாக பலரும் இருப்பர். மின்தூக்கியில் அவர்களோடு செல்வதுகூடநெடும் பயணமாக நினைக்கத் தோன்றும்.

வீடே சிறையாக, கட்டிடமே கல்லறையாக, பாதி உயிரோடு மீதியைப் போக்க சுரத்தில்லாமல் இவற்றில் வாழ்பவர் உண்டு. பிறந்ததில் இருந்து மண்ணையே மிதிக்காமல் மண்ணுக்குள் செல்வதே அடுக்கக வாழ்க்கை. ஒவ்வொரு அறையிலும் கழிவறை உண்டு.

குளியலறைகள் நிறைய. ஆனால் குளிக்கத் தண்ணீரோ குறைவு. நேரம் பார்த்து தண்ணீரை நிரப்பும் ஒழுக்கக் கோட்பாடு. பகலிலும் வேண்டும் வெளிச்ச விளக்குகள். யார் கதவைத் தட்டினாலும் சரிபார்த்துத் திறக்கும் சங்கடங்கள். வளாகத்துக்குள் இருக்கும் வெற்றிடங்களில் மாலைவேளையில் பொழுதுபோகாமல் காற்று வாங்கக் காத்துக்கிடக்கும் பெரிசுகள். இந்த அடுக்ககங்களில் தனியாக இருக்கும் முதியவர் இறந்த விஷயமே தெரியாமல் போய்விடும் அபாயங்கள் உண்டு. பக்கத்து வீடு அண்டைக் கண்டமாக ஆகும் விபத்தில் இந்த விபரீதங்கள் சாத்தியம்.

இத்தனைக்கும் மீறி சென்னை போன்ற மாநரங்களில் வாடகைக்கு இருப்போருக்கு விதிக்கப்படுகிற நிபந்தனைகளில் இருந்து விடுதலை என்ற ஒரே நிம்மதி இவர்களுக்கு.

வீடு வாங்குவது இன்று சாதனையல்ல, நிகழ்வு. அன்றிருந்த மகிழ்ச்சியும், திருப்தியும் இன்று கட்டிய வீட்டை வாங்குபவர்களுக்கு கட்டாயம் இருக்க வாய்ப்பில்லை. நோகாமல் நோன்பு இன்று சாத்தியம். வலியில்லாததால் சுகமில்லாமல் போன வீடுகள் எப்படி இல்லமாகும்! அவை எவ்வாறு பிரபஞ்சத்தின் பிரதிநிதியாகும்?!

- நினைவுகள் படரும்...

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

காற்றில் கரையாத நினைவுகள்: கடிதாசி

 

 
 
epi5jpg
 
 

கடிதம் என்பது சிறகு முளைத்த பந்து; இறகு முளைத்த இதயம். அப்பாவிடம் இருந்து வந்தால் பற்று, விருப்பமானவரிடம் இருந்து வந்தால் கிளுகிளுப்பு, நண்பனிடம் இருந்து வந்தால் எதிர்பார்ப்பு, அதிகாரியிடம் இருந்து வந்தால் பதற்றம் என்று உறையைப் பார்த்ததும் உடம்பு முழுவதும் உணர்ச்சி கொந்தளிக்கும்.

கடிதத்தால் வாழ்க்கை மாறிப்போனதாக காவியங்களும், திரைப்படங்களும் வெளிவந்த காலம் உண்டு. தாமதமான வேலைவாய்ப்புக் கடிதத்தால் நிலைகுலைந்த இளைஞன், தவறிப் போன காதல் கடிதத்தால் தலைகுனிந்த காதலர்கள், அநாமதேயமாக வந்த புகார்க் கடிதத்தால் அவமானப்பட்ட அபலைகள் என புனைவு இலக்கியத்தில் பல நிகழ்வுகளுக்குக் கடிதம் காரணமாக கற்பிக்கப்பட்ட காலம் ஒன்று உண்டு.

முகவரி மாறியதால் வாழ்வே திசை திரும்பியதாக படைக்கப்பட்ட புதினங்களும் உண்டு. கடித இலக்கியம் என்கிற புனைவும் இருந்தது.

கடிதத்தில் முகம் தெரியும்

கடிதங்களாலே அதில் மொத்தக் கதையும் நகரும். தம்பிக்கும், தந்தைக் கும் கடிதம் எழுதுவதுபோல நாட்டு நடப்பை எழுதி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடைமுறையும் இருந்தது.

அறிவுரைகளை மாணவர்களுக்குத் தோளில் கைபோட்டு தோழமையுடன் கடிதமாக எழுதும் வழக்கமும் இருந்தது.

கடிதம் என்பது காகிதமல்ல; வாழ் வின் பகுதி. அந்தக் காலத்தில் கடிதத்தை வாசிக்கும்போது எழுதியவர் முகம் அதில் தெரிவதைப் போலவும், அவரே பேசுவதைப் போலவும் திரைப்படங்களில் காண்பிப்பார்கள். வாழ்க்கையின் ஒருகட்டத்தில் எல்லோருமே அன்று ஒரு கடிதத்துக்காகக் காத்திருந்தார்கள்.

வேலைவாய்ப்புக்கான ஆணை கிடைக்காதா என்றும், பெண் வீடு பார்த் துச் சென்றவர்கள் சம்மதம் தெரிவிக்க மாட்டார்களா என்றும், எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வராதா என்றும், விரும்பிய படிப்புக்கு அழைப்பு வராதா என்றும் வாழ்நாள் முழுவதும் அன்று நல்ல சேதிக்காக தபால்காரரை எதிர்பார்த்து மக்கள் தவமிருந்தார்கள்.

அன்று ஒரு கடிதம் வந்தால் இல்லத் தில் யார் வேண்டுமானாலும் பிரித்துப் படிக்கலாம் என்ற சுதந்திரம் இருந்தது. கடிதம் வீட்டுக்கானது. முகவரி மட்டுமே குடும்பத் தலைவரின் பெயரில் இருக்கும்.

வீட்டில் நீளக் கம்பி குடைக் கைப் பிடியைப் போன்ற தோற்றத்துடன் தொங்கிக்கொண்டிருக்கும். படித்து முடித்த கடிதங்கள் அதில் பத்திர மாகச் சொருகப்படும். எந்தக் கடிதத்தையும் தூக்கி எறியும் வழக்கமில்லை.

மஞ்சள் குளித்த அஞ்சல்

எப்போதாவது நுனிகளில் கருப்பு மை தடவிக்கொண்டு மரண அஞ்சல் அட்டை வந்து சேரும். உடனே, அது கண்டந்துண்டமாகக் கிழிக்கப்பட்டு குப்பையில் வீசி எறியப்படும். மங்கள நிகழ்வுகள் மூலைகளில் மஞ்சள் பூசிக்கொண்டு வருவதும் அவற்றை நிகழ்வு முடிந்த பிறகும் கோத்து வைப்பதும் உண்டு.

கடிதங்களெல்லாம் ஆவணங்களாகக் கருதப்பட்ட காலம் அது. ஆண்டு முடிந்த பிறகு அனைத்துக் கடிதங்களும் ஆராயப்படும். போகிப் பண்டிகை அன்று தேவையற்றவை நெருப்புக்குக் கொடுக்கப்படும்.

சொந்தங்களை அன்று கடிதக் கயிறுகள் இறுக்கிக் கட்டின. தொய்வு விழும்போதெல்லாம் ஆறுதலாகக் கடிதம் வந்தால் அத்தனை வருத்தமும் ஆவியாகும். எல்லாவற்றையும் கடிதத்தில் சொல்லி நிம்மதி அடையும் உறவும் நட்பும் இருந்தன. எல்லோரும் நலம் என்று தொடங்கும் கடிதத்தில் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் அம்மை வந்த சேதி விலாவாரியாக விளக்கப்படும்.

காலில் புண் ஏற்பட்டது முதல் வீட்டு முருங்கை மரத்தில் கம்பளிப்பூச்சி வந்தது வரை அனைத்தையும் தெரி விக்கும் வழக்கம் இருந்தது. ஒரு செய்தியில் இருந்து இன்னொரு செய்திக்கு கடித வரிகள் தாவும்போது ‘நிற்க’ என்று எழுதும் மரபும் இருந்தது.

ஒரே கடிதம் பல முறை படிக்கப் படும். அப்பா படித்து முடித்த பிறகு அம்மா அதை சாவகாசமாகப் படிப்பார். பலர் எழுத்துக்கூட்டிப் படிக்கக் கற்றது கடிதம் என்னும் காவியத்தால்தான். வெற்றி பெற்றதற்குப் பாராட்டுக் கடிதமும், தோல்வியுற்றதற்கு ஆறுதல் சொல்லியும் சாயும் தோளாய் நீளும் கடிதங்கள் நிறைய இருந்தன.

நலம், நலமறிய அவா

கடிதம் போடாவிட்டால் கோபித்துக்கொள்வார்கள். அதற்காகவே எதையேனும் எழுதி அஞ்சலில் சேர்க்கும் வழக்கம்கூட இருந்தது. திடீரென எழுதுபவர்கள் கடிதம் போட்டுவிட்டு உடனே மறுமடல் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.

அழகான கையெழுத்தால் கடிதத்தை அலங்கரிப்பார்கள் சிலர். அந்த முத்துமுத்தான கையெழுத்தைப் பார்க்கும்போதே பரவசம் ஏற்படும். அவர் கள் நம் அருகில் வந்து காதுகளின் ஓரம் கிசுகிசுப்பதைப் போல நெருக்கம் தோன்றும். நமக்காக மெனக்கெட்டு எழுதியிருக்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்படும். அஞ்சலட்டையில் அந்தரங்கங்களை எழுதும் கஞ்சர்களும் இருப்பார்கள். எந்தப் பகுதியையும் வீணாக்காமல் வளைத்து வளைத்து எழுதிச் சிக்கனம் காட்டும் சிலரும் உண்டு.

அஞ்சல் கொண்டு வருகிறவர் அன்று முக்கியப் பிரமுகர். தபாலில் இருப்பதற்கு அவரே பொறுப்பு என்பதைப் போன்ற எண்ணம் அன்று எல்லோருக்கும் இருந்தது.

தேர்வில் வெற்றி பெற்றதும் அவ ரைக் கட்டிப்பிடித்த மாணவர்கள் உண்டு. இல்லத்தின் அங்கமாக ஆன தபால்காரர்களும் இருந்தார்கள். அவர் கள் அந்தப் பகுதியில் அனைவருக்கும் அறிமுகமான பிரபலம்.

இப்படிக்கு தங்கள் அன்புள்ள

திருமணங்களுக்கும் அழைக்கப்படுவார். இன்று கடிதத்தைக் கொண்டு வருகிறவர் பெயர்கூட தெரியாத நிலை. அதைக் கடமையாக மட்டுமே பார்க்கும் மனப்பான்மை. அன்று அஞ்சல்காரரை மட்டுமா மதித்தோம். சிவப் புத் தபால் பெட்டியையும் பார்த்தால் சிலிர்த்துப் போவோம். அதன் வழியாக எத்தனை தகவல்கள் வந்து சேர்ந்தன என்று பூரிப்பு அடைவோம். எத்தனை கோந்து இருந்தாலும் எச்சிலால் ஒட் டிய கடிதங்களே அதிகம்.

அஞ்சலகம் அடிக்கடி செல்வதை செயலாகக் கொண்டவர்களும் இருந்தார்கள். பணவிடை அனுப்பவும், பதிவு அஞ்சல் அனுப்பவும் வரிசையில் காத்திருப்போம். படித்து முடித்த பிறகு பணிக்காக எதிர்பார்க்கும் அவசரத்தில் வீட்டுக்கு அஞ்சல் வரும் வரை காத்திருக்காமல் அஞ்சல் நிலையத்துக்கே சென்றுவிடுவோம்.

கடிதம் என்றால் களிப்பும், தந்தி என்றால் பயமும் ஏற்பட்ட காலம் அது. மாணவர்களாக இருந்தபோது விடுதிக்குச் சென்றதும் முதலில் விலாவாரியாகக் கடிதம் எழுதுவோம்.

பேராசிரியர் பெயர் முதல் காலை யில் உண்ட சிற்றுண்டி வரை அனைத்தையும் எழுதி ஆர்வமாகப் பகிர்வோம். மூன்று மாதங்கள் முடிந்த பிறகு பணம் கேட்பதற்கு மட்டும் கடிதம் செல்லும். சடங்காக நான்கு விசாரிப்புகளை அங்கங்கே தூவுவோம்.

தொடக்கத்தில் வீட்டுச் சிந்தனையைவிட்டு வெளிவர முடியாத பழக்கதோஷம். அப்போது அப்பாவின் கடிதத்தை ஆர்வமுடன் எதிர்பார்த்து அறைக்குச் செல்வோம். பிறகு பழக்கமே தோஷமானதால் கடிதம் மீது நாட்டம் குறையும்.

மற்றவை நேரில்

அன்று பேனா நண்பர்கள் என்ற நட்பு வட்டம் உண்டு. தெரியாதவர்களை நட்பாக நினைத்து கடிதத்தின் மூலம் சிநேகம் செய்யும் நடைமுறை அது. இன்று அதுவே முகநூலாக ஆகிப்போனது. முகம் தெரியாதவர்களும், முகவரி தெரியாதவர்களுமே முகநூல் நண்பர்கள்.

காலம் எதையும் நீடிக்க விடுவது இல்லை. இன்று கடிதம் என்பது மொழிப் பாடத்துக்கான ஒரு பயிற்சி. மின்னணுச் சாதனத்தில் உடனே அழைத்துப் பேசலாம், குறுந்தகவல் தரலாம், மின்னஞ்சல் செய்யலாம்.

எந்த வீட்டிலும் கடிதங்களை கோக் கும் கம்பியும் இல்லை; அப்படியான பழக்கமும் இல்லை. கடிதம் எழுதும் பொறுமையும் யாருக்கும் இல்லை. கைப்பட எழுதும் பழக்கம் இளைய தலைமுறையிடம் அறவே இல்லை. கடிதம் என்பது மறைமுகமான சமூகத் தணிக்கை.

அரசு அலுவலகங்களால் மட்டுமே இன்று கடிதப் போக்குவரத்து உயிர்த்திருக்கிறது. மொட்டைக் கடிதங்களை யும் சேர்த்து.

தந்தியைப் போல தபாலும் காலாவதியாகும் காலம் ஒன்று வரலாம். கடிதம் மறைந்தால் அத்துடன் பல கனவுகள் அழியும். கடிதங்களை காலத் தின் இதயத்தில் வைத்து காப்பாற்ற வேண்டாமா!

- நினைவுகள் படரும்...

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

காற்றில் கரையாத நினைவுகள்: கைக்கும் வாய்க்கும்!

 

 
kkn%206
 
 
 
 

இன்று நமக்குக் கிடைத்த அனைத்தும் முயன்று பெற்றவை என்பது எத்தனை சிறுவர்களுக்குத் தெரியும். ஒரு காலத்தில் கையில் காசு இருந்தாலும் கடையில் அரிசி கிடைக்காது. பிறகு, காசு இருந்தால் உணவு தானியம் கிடைக்கும். இப்போது பலருக்கு இரண்டும் கிடைக்கும் நிலைமை.

அந்தக் காலத்தில் நடுத்தரக் குடும்பங்களில் பெரும்பாலும் காலை உணவு பழையசோறு. இரவில் ஊற்றிய நீரை பெரியவர்கள் நீராகாரமாகப் பருகுவார்கள். குளிர்சாதனப் பெட்டி இல்லாததால் பாலை இருப்பு வைக்க வசதியில்லை. காலை 8 மணி வரை காப்பிக்கும், தேநீருக்கும் பால் உண்டு. அதற்குப் பிறகு கடுங்காப்பிதான். பழையசோற்றுக்கு தொட்டுக்கொள்ள பெரும்பாலும் ஊறுகாய். அவ்வப்போது கொசுறாக கொஞ்சம் வெல்லம் கிடைக்கும். முக்கிய உறவினர் திடீரென முளைத்தால் ஆபத்பாந்தவனாக உப்புமா கிளறப்படும். தொட்டுக்கொள்ள நாட்டுச் சர்க்கரை. அதிக நாள் உபயோகிக்காத ரவையில் வண்டு கள் படையெடுக்கும். வாரம் ஒரு நாளோ இரண்டு நாளோதான் இட்லி, தோசை இருக்கும். மாவாட்டுவது மகத்தான சாதனை. ஒருவர் அரைக்க, மற்றொருவர் மாவைத் தள்ள, அது திரைக்கதைகள் அலசப்படும் நேரம். இரண்டாவது நாள் மிஞ்சிய மாவை கோதுமை கலந்து ஒப்பேற்றுவார்கள். அல்லது வெங்காயம் வரமிளகாய் போட்டு புளிக்காத தோசை சுட்டுத் தருவார்கள்.

 

நினைவின் தேன் மிட்டாய்

ரொட்டி என்பது காய்ச்சலின்போது உண்ணும் உணவு. ஜாமாவது, வெண்ணெயாவது. பாலில் தொட்டு சாப்பிடும் வழக்கம். இனிப்பு என்பது அபூர்வம். பண்டிகைக்கு மட்டுமே பலகாரம். அதுவும் நாட்டுப் பலகாரம். சில நேரங்களில் செய்யப்படும் மைசூர்பாவை உடைக்க சுத்தியல் தேவைப்படும். இனிப்பு உளுந்துவடை, அப்பம், அதிரசம் இவையே முக்கியப் பலகாரங்கள். விருந்தினர் வந்தால் உண்டு பஜ்ஜி, போண்டா.

சின்ன வயதில் இனிப்பென்றால் அலைவோம். கடைகளில் கடலை மிட்டாய், தேன் மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய் இவையே அதிகம். பொருட்காட்சிகளில் பஞ்சு மிட்டாய் கிடைக்கும். எப்போதாவது வீட்டுப்பக்கம் கடிகார மிட்டாய் விற்க ஒருவர் வருவார். அதைக் கைகளில் கட்ட கடித்துக் கடித்துச் சாப்பிடுவோம். ஒரே ஒரு ஐஸ்கிரீம் கடை சேலம் பேருந்து நிலையத்தில். நகருக்குச் சென்றால் அவசியம் போவோம்.

அமாவாசையில் படையல் நடக்கும். காலையில் விரதம் இருந்தவர்கள் இரவு சிற்றுண்டி மட்டுமே அருந்த வேண்டும் என்ற எழுதப்படாத விதி. பருவத்துக்கேற்ற காய்கறி. மார்கழித் தையில் மொச்சை அதிகம். பரிமாறியதும் முதலில் பொரியலைச் சாப்பிடுவோம். எது கிடைத்தாலும் சாப்பிடும் உள்ளம். ஓடியாடி விளையாடியதால் பசியைத் தணித்தால் போதுமென்பதே நோக்கம். சப்பாத்திக்கு சட்டினியைக்கூடத் தொட்டுக்கொள்வோம். இட்லிக் குப் பல வீடுகளில் மிளகாய்ப்பொடியே கிடைக்கும். ஒரு பொரியல், சாம்பார், ரசம் - இதுவே மதிய உணவு. பணியாரம் என்பது ஆண்டுக்கொரு முறை. அவ்வப்போது ஆப்பம், அடை. அடுத்த நாள் பூரி என்றால் முதல் நாள் இரவே பூரிப்பு ஏற்படும்.

 

முட்டை அதிசயம்

மாலையில் வகுப்பில் இருந்து வந்தால் பொரிவிளங்காய் உருண்டை விளையாடச் செல்லும் முன் உண்ணக் கிடைக்கும். பெரும்பாலும் இயற்கை சார்ந்த தின்பண்டங்கள். சுண்டல், நிலக்கடலை போன்றவை அதிகம். கடலைப்பொரியைக்கூட ரசித்துச் சாப்பிடுவோம்.

சந்தையில் வாங்கிய பனங்கிழங்கு, சர்க்கரைவள்ளி, குச்சிக்கிழங்கு ஆகியவை வேகவைத்ததும் வீட்டையே நறுமணமாக்கும். அன்று மக்காச்சோளம் எல்லோருக்கும் பிடித்தமான உணவு. தோகையை உரித்துக் கடித்துத் தின்பதில் மகிழ்ச்சி. இன்று அமெரிக்க மக்காச்சோளம் உரிக்கப்பட்டு குப்பிகளில் கிடைக்கிறது. சீத்தாப்பழத்தை சாப்பிடும்போது அதிகக் கொட்டையை யார் உமிழ்கிறார்கள் என்று எங்களுக்குள் போட்டியே நடக்கும்.

அசைவ உணவு வீடுகளில் மாமிசம் என்பது வாரம் ஒரு முறை. நாட்டுக் கோழிகூட அபூர்வம். கோழியடித்தால் ஊருக்கே தெரியும். சில முரட்டுக் கோழிகளைப் பிடிக்க ஊரே திரளும். முட்டை என்பது அதிசயப் பொருள். சில கடைகளில் மட்டும் இரும்புக் கூண்டுகளில் இருப்பு வைக்கப்படும். பாயாசம் என் பது அபூர்வம். பாயாசத்தில் இருக் கும் ஜவ்வரிசியை கைகளில் பிடிக்க முயன்று முயன்று தோற்போம்.

ஏழைகளின் உணவு பெரும்பாலும் களி, கம்மஞ்சோறு, சோளச்சோறு. காலையில் நீரில் கரைத்து குடிப்பார்கள். மாலையில் உழைத்து முடித்ததும் நீராடிய பிறகு சுடச்சுட சோறும், குழம்பும் அருந்துவார்கள். இன்று சாலை போடுகிறவர்கள் உணவகத்தில் தருவித்த பொட்டலத்தைப் பிரித்து சிற்றுண்டி உண்கிறார்கள். பல மாவட்டங்களில் இன்று அறுவடைக் கூலியாக நெல்லை ஏற்பதில்லை. ‘‘எதற்காக நாங்கள் சோறு சாப்பிட வேண்டும்? புரோட்டா குருமாவை ருசித்துச் சாப்பிடுவோம்’’ என பணமாக வாங்கிக்கொள்ளும் பழக்கம் வந்துவிட்டது.

 

அம்மாவின் கை ருசி

அன்று உணவில் எளிமை இருந்தாலும் அனைவரும் தரையில் அமர்ந்து உண்பதில் அத்தனை ருசி. சிலநாள் மதிய சோறு அதிகம் மீந்துவிடும். குழந்தைகள் அதைச் சாப்பிட சோம்பல் முறிப்பார்கள். உடனே அம்மா அனைவரையும் வட்ட வடிவில் உட்கார வைத்து, சோற்றை பெரிய சட்டியில் போட்டு நன்றாகப் பிசைந்து உருட்டி உருட்டி கைகளில் வைப்பார். அத்தனை சோறும் ஐந்தே நிமிடத்தில் காலியாகிவிடும். இன்னும் வேண்டுமென கைகள் நீ..ளு...ம்.

அன்று ரேஷன் அரிசியை வாங்கி இல்லாதவர்களுக்குக் கொடுத்த நடுத்தரக் குடும்பங்கள் உண்டு. அரிசி வாங்கினால் அதில் கல்லையும், மண்ணையும் அகற்றுவது பெரிய பயிற்சியாகவே இருந்தது. அதனால் அன்று எதையும் வீணடிக்க மாட்டார்கள். பழைய சோறு அதிகம் மிஞ்சினால் வடகமாகும். இரவுச் சோறு புளிச்சாறு கலந்து அடுத்த நாள் வெங்காயம், உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து புளிசாதமாக்கப்படும். வாழைப்பழத்தைக்கூட குழந்தைகள் விரும்பும். அன்று பழையதை வாங்கிக்கொள்ளும் யாசகர்களும் இருந்தனர்.

வட இந்திய உணவுகள் அப்போது அதிகம் இல்லை. சூப் என்பது எங்காவது கிடைக்கும். நாண், தந்தூரி எல்லாம் அரிதான பதார்த்தங்கள். வட இந்தியா சென்றபோதுதான் பன்னீர் பட்டர் மசாலாவைச் சுவைத்தேன். இன்று பல இளைஞர்கள் உணவகங்களில் விரும்பிச் சாப்பிடுவது அவற்றையே. பாரம்பரிய இனிப்புகளான லட்டு, ஜிலேபி போன்றவை இன்று பிடித்தமானவை அல்ல. ஐஸ்க்ரீம், பேஸ்ட்ரி போன்றவையே அவர்கள் விரும்பும் இனிப்பு. அடிக்கடி அவர்கள் கைகளில் பீட்ஸா, பர்கர். இடியாப்பத்தைத் தொடாதவர்கள் நூடுல்ஸை நொறுக்குகிறார்கள். காரணம், இட்லி தோசை நித்தமும் வீட்டிலேயே தயாராகிவிடுகின்றன. உபயம் மின்சார உபகரணங்கள். கறிக்கோழி வரத்தால் அடிக் கடி அசைவ உணவு. பெட்டிக் கடையிலும் முட்டை கிடைக்கும்.

 

நாக்கு நீ... ள... ம்

சன்ன ரக அரிசியில் இன்று சுவையில்லை. அபரிமிதமாக விளையும் காய்கறியில் ருசியும் இல்லை. நெய்யில் மணமே இல்லை. பாலில் சுவையில்லை. அளவு மட்டுமே அபரிமிதம். தொப்பையும், தொந்தியும் அதிகம். நீரிழிவு அதிகரிப்பு. கொழுப்பு கூடுதல். இதனால் கண் கெட்ட பிறகு உணவுக் கட்டுப்பாடு. இப்போது எளியவர்கள் சிறுதானியத்தைத் தொடுவதில்லை. பணக்காரர்கள் களியும், கம்மஞ்சோறும் சாப்பிடுகிறார்கள். நகர்களெங்கும் சிறுதானிய உணவகங்கள். ஆனால் அங்கும் ருசிக்கே பிரதானம். இன்னும் நமக்கு நாக்கே முக்கியம்.

உணவு நடந்து வந்த பயணம் நெடியது. இன்று பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் நீண்ட இடைவெளி. எல்லா வீடுகளிலும் இரண்டுவிதச் சிற்றுண்டிகள். எதையும் நன்றியுடன் சாப்பிடுவதும், விழிப்புணர்வுடன் நினைத்துக்கொள்வதும் இன்னும் சில இல்லங்களில் தொடரவே செய்கின்றன.

- நினைவுகள் படரும்...

http://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

காற்றில் கரையாத நினைவுகள் : கிணறு வெட்டிப் பார்!

 

 
kkn7
 
 
 

அப்போதெல்லாம் வீடு கட்டுவதற்கு முன்பே தொடங்கிவிடும் கிணறு வெட்டும் படலம். எங்கு நீர் இருக்கிறது என்பதை விஞ்ஞானப்படி அறிவதெற்கெல்லாம் அத்துபடியாகாத மக்கள். உள்ளூரில் ஒருவர் வாழைத்தண்டை கைகளில் வைத்துக்கொண்டு அங்குமிங்கும் நடந்து ‘இங்குதான் கங்கை இருக்கிறது’ என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்வார். அங்கு பூஜையோடு எல்லைகள் வரையறுக்கப்படும். கிணறு வெட்டுவதற்கென்றே பிரத்தியேகமாக தொழில்நுட்பம் தெரிந்த குடும்பங்கள் அன்றைக்கு இருந்தது.

இரண்டு பேர் கோவணத்துடன் தோண்ட ஆரம்பிப்பார்கள். இரண்டு மூன்று அடிகள் மண் தொடர்ந்து வந்ததும், இப்படியே இறுதிவரை இருக்கும் என்று எண்ணி உரிமையாளர் நெஞ்சம் மகிழ்வதுண்டு. அடுத்து வருவது மொரம்பு. அதற்குப் பின்னர் பாறை தட்டுப்படுமசின்ன வயதில் எங்கள் வீட்டுக்கு கிணறு தோண்ட வந்தவர்களைப் பார்த்து வியந்திருக்கிறேன். அவர்கள் பித்தளைத் தூக்கில் கூழ் கொண்டுவருவார்கள். அப்போது பித்தளை மலிவு. மதியம் மரத்தடியில் அமர்ந்து அதைக் குடிப்பார்கள். நம்மிடம் வெங்காயம், பச்சைமிளகாய் மட்டும் இரவல் பெற்று, கூழைக் குடித்துவிட்டு கயிற்றைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் இறங்குவார்கள்.

அவர்கள் பிடிப்பது கயிறு அல்ல; உயிரு என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை.

கடப்பாரையை வைத்து சம்மட்டியால் பாறையில் துளைபோட வேண்டும். பிறகு வெடிமருந்தை அதில் திணித்து நூலைப் பொருத்தி எடுத்துச் செல்ல வேண்டும். நான்கைந்து துளைகளை இவ்வாறு நிரப்பிய பிறகு, அவர்கள் மேலே வந்து கிணற்றை மூங் கில் படலால் மூடுவார்கள். வெடிக்கிற கற்கள் வெளியே தெறிக்காமல் இருக்க படலின் மீது கற்களை வைப்பார்கள். மறுமுனையில் தீ வைத்துவிட்டு ‘வேட்டுவேட்டு’ என்று கத்தியவாறே ஓடுவர்.

அப்பக்கம் வருகிறவர்களெல்லாம் காதைப் பொத்திக்கொண்டு வேட்டு வெடிக்கும் வரை காத்திருப்பார்கள். ஒவ்வொரு வேட்டாக வெடிக்கும். நான்கு வேட்டுகளும் வெடித்த பிறகு, மக்கள் நகர பச்சைக்கொடி காட்டப் படும்.

புகை அடங்க பத்து நிமிடம் ஆகும். அதற்குப் பிறகு இறங்கி இடிபாடுகளின் உதவியோடு உளியைக்கொண்டு அனைத்தையும் சமமாக்குவார்கள். மாலையில் அயர்ந்து மேலே வந்து வேட்டிக்கு மாறி, முகத்தைக் கழுவிக்கொண்டு கிளம்புவார்கள். அவர்கள் வாழ்க்கை சோகச் சித்திரமாகவே இருக்கும்.

கடப்பாரைகளை சாணை பிடிக்க கொதிக்கும் கரித்துண்டுகளின் நடுவே காற்றை அனுப்பி சிவக்கக் காய்ச்சி அவற்றை சம்மட்டியால் அடித்து கூர்மைப்படுத்துவார்கள். பல நேரங்களில் காற்றடிக்கப் பயன்படுகின்ற (துருத்திப் பெட்டி) கருவியை யார் இயக்குவது என்று எனக் கும் அண்ணனுக்கும் ஒரு போட்டியே நடக்கும்.

 

கொய்யா மரங்களுக்கு வழிந்தோடி...

திடீரென பெய்கிற மழையில் கிணறு நனைந்ததும் வெட்டு கிற வேள்வி நிறுத்தப்படும். எட்டு மாதங்கள் கிணறு பெரிய தொட்டியாகப் பயன்படும். வாளி கிணற்றில் அறுந்து விழுந்தால் அதை எடுக்க பாதாளசோளி (பாதாளக் கரண்டி) என்ற கருவி உண்டு.

சிக்கனமாக நீரைச் செலவழிக்கக் கற்றுக்கொண்டது அப்பருவத்தில்தான். செடிகள் வாடாமல் இருக்க ஆளுக்கொரு செடியில் பல் துலக்குவோம். குளிக்கிற நீரெல்லாம் கொய்யா மரங்களுக்கு வழிந்தோட வாய்க்கால். எப்படி எச்சரிக்கையாக இருந்தாலும் நிலத்தடி நீர் இறங்கும்போது கிணறு வறண்டுவிடும். வெட்டும் படலம் தொடரும்.

அடியூற்று வராதா என்கிற ஆர்வமே காரணம். நான்கு மாதங்களுக்கு வெளியில் இருந்து தண்ணீர் எடுத்து வர வேண்டும். பரணில் இருந்த கொப்பரைகளும், குடங்களும் கீழே இறங்கும். மரங்களின் அருகில் துணிகள் துவைக்கப்படும்.

கிணறு வெட்ட குறைந்த ஒப்பந்தம் பேசி குடும்பத்தோடு தினமும் வந்தார் ஒருவர். அவர் மகனுக்கு என் வயது. அவரது மகனைப் பார்க்கும்போது ‘இப்படி இருந்திருந்தால் படித்துத் தொலைக்கவும், பரீட்சை எழுதவும் தேவையில்லையே’ என்றுகூட சில நேரங்களில் எண்ணத் தோன்றும். முன்பணம் வாங்கிவிட்டு பாதியிலேயே கம்பி நீட்டிவிட்டார் அவர்.

இன்னொரு ஜோடி. அதில் ஒருவர் 60 வயதான முதியவர். அவ்வளவு சுறுசுறுப்பாக சம்மட்டி அடிப்பார். மற்றவர் அவர் மருமகன். தேக்குப்போன்ற தேகம்.

ஆனால் மந்தம். பெரியவர் நம் வீட்டில் தண்ணீர்கூட குடிக்க மாட்டார். அவ்வளவு சாங்கியம். திடீரென கனவில் வெள்ளைப் புடவை உடுத்தி அழகான தேவதை கிணற்றில் படுத்துக்கொண்டதாகவும், அது கங்கைதான் என்றும் அப்பாவுக்கு நம்பிக்கையூட்ட அவரும் அப்பாவியாக கேட்பார்.

கடைசிவரை அடியூற்று வராமலேயே போய்விட்டது. எந்தக் கிணறைப் பார்த்தாலும் எட்டிப் பார்க்கும் பழக்கம் அப்போது ஏற்பட்டது.

 

கிணறு தோண்டுபவர்...

பக்கத்து மனையினர் கிணறு தோண்டியபோது, முத்தியால் எனக்கு அறிமுகமானார். எட்டாம் வகுப்பு படித்தவர். எங்கள் வீட்டு செய்தித்தாளை வாங்கி ஆர்வமுடன் படிப்பார்.

ஆறு மாதங்கள் கடுமையான பணி. மதியம் திரைப்படங்களின் கதைகளையெல்லாம் சொல்வார். ‘கடவுள் ஏன் கல்லானான்’ என்ற பாட்டுக்கு படத்தில் வருவதுபோலவே, மண்வெட்டியைப் பிடித்துக்கொண்டு நடித்துக் காண்பிப்பார்.

அந்தப் பாட்டு அவருக்கே அதிகம் பொருந்தும் என்பது அப்போது எங்களுக்கும் தெரியவில்லை, எங்கள் வேப்ப மரத்தடியில்தான் சாப்பாடு. வேட்டு விடும்போது கூடுதலாக கற்கள் சிதற ‘தோட்டா’ என்கிற வெடிமருந் தைப் பயன்படுத்துவார்.

ஒரு முறை மூங்கில் படலை உடைத்துக்கொண்டு சீறிய சிறுகல் அவர் மண்டையில் விழுந்தது. சின்னக் காயம்தான். எங்கள் வீட்டில் இருந்த மருந் தைப் போட்டோம்.

அடுத்த நாளே முத்தியால் பணிக்கு வந்துவிட்டார். துளியும் நிச்சயமற்ற வாழ்க்கையில், பூமி வறண்டுபோகும் போது மட்டுமே வேலை கிடைக்கும் சூழலில் கயிற்றின் மேல் நடக்கும் அபாயத்துடன் அவர்கள் வாழ்க்கை அன்றி ருந்தது.

ஒரு நாள் பாறையைத் துளையிடும் போது கல் சிதறி கண்களில் விழுந்தது. மருத்துவமனைக்கு சென்றும் பலனில்லை. பார்வை குறையத் தொடங்கியது.

அதற்குப் பிறகும் முத்தியால் பணி யில் தொடர்ந்தார். எங்களிடம் ‘வயிறு இருக்கிறதே, என்ன செய்ய!’ என்று கேட்டார். அதுதான் அவருடைய அதிகபட்ச புலம்பல். எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்பவர்களாகவே ஏழைகள் எப்போதும் இருந்திருக்கிறார்கள்.

 

அந்த நாற்காலியில்...

காஞ்சிபுரத்தில் நான் பணியாற்றும்போது முகாம் அலுவலகத்துக்கு ஒருவர் வந்திருப்பதாகவும், சின்ன வயதில் இருந்தே என்னைத் தெரியுமென பார்க்க வற்புறுத்துவதாகவும் உதவியாளர் சொல்ல, அனுமதித்தேன். சற்று முதுமையடைந்த எளிய மனிதர். ‘‘அன்பு, என்னைத் தெரியலையா? நான்தான் முத்தியால்’’ என்றார். எங்கோ பேப்பரில் பார்த்துவிட்டு தேடி வந்திருக்கிறார். தேநீர் கொடுத்தேன். இரண்டு மூன்று சால்வைகளை அளித்தேன். ‘‘என்ன வேண்டும்?’’ என்றேன். ‘‘உன்னை இந்த நாற்காலியில் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன், அவ்வளவுதான்!’’ என்றார். வணங்கியபடியே சென்றுவிட்டார்.

இன்றிருக்கிற ஆழ்குழாய் கிணறு யுகத்தில் கிணறு வெட்டும் அனுபவங் கள் பலருக்கு இருக்க வாய்ப்பு இல்லை. முகம் தெரியாத மனிதர்கள் மூன்றே நாட்களில் முடித்துவிடுகிறார்கள். அன்று கிணற்றடியில் துணி துவைக்கப்படும், பாத்திரம் அலம்பப் படும். படக் கதைகள் பரிமாறப்படும்.

அண்மையில் பட்டமளிப்பு விழா ஒன்றுக்காக தர்மபுரி சென்றிருந்தேன். பட்டமளிப்பு உடையில் ஒரு மாணவர் என் னைப் பார்க்க தீவிரம் காட்டினார்.

அருகில் அழைத்து ‘‘என்ன தம்பி?’’ என்றேன்.

‘‘நான் முத்தியால் தாத்தா பேரன். எப்போதும் உங்களைப் பற்றி தாத்தா பேசுவார். நாங்கள் நம்ப வேண்டும் என்று தான் காஞ்சிபுரம் வந்தார். நீங்கள் கொடுத்த சால்வையைத்தான் எப்போ தும் போர்த்திக்கொண்டிருப்பார்’’ என் றார்.

‘‘தாத்தா எப்படி இருக்கிறார்?’’

‘‘சென்ற ஆண்டு காலமாகிவிட் டார்!’’என்றார்.

எனக்கு பேரனை நினைத்து பெருமைப்படுவதா, தாத்தாவை எண்ணி வருத்தப்படுவதா என்ற குழப்பம் வெகு நேரம் நீடித்தது.

- நினைவுகள் படரும்...

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

காற்றில் கரையாத நினைவுகள் : மிதிப்பதும், மதிப்பதும்!

 

 
 
17chmbn%20%20cheliyan%20padam
 
 
 

நாங்கள் பள்ளியில் படிக்கும்போது மிதிவண்டியே அலங்காரத் தேர். வீட்டுக்கொரு மிதிவண்டி அவசியம். இன்று கார்களில் ‘நானோ’ தொடங்கி ‘பென்ஸ்’ வரை தரவரிசை இருப்பதைப் போல அன்று பணக்கார மிதிவண்டிகளும் இருந்தன. கொஞ்சம் முடிந்தவர்கள் உராய்வில் எரியும் (டைனமோ) விளக்கு வைத்த சைக்கிள் வைத்திருப்பார்கள். எளியவர்கள் சைக்கிளில் மண்ணெண்ணெய் விளக்கை மாட்டியிருப்பார்கள். சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு அந்த விளக்கு காற்றில் அணையாமல் இருக்கும்.

அன்று எல்லோருக்கும் நடையே பிரதானம். சிலருக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது. அவர்கள் கிராமத்தில் இருந்து நடந்தே வருவார்கள். இன்று இருக்கின்ற வாகன வசதிகள் அப்போது அறவே கிடையாது. அன்று நடை போக்குவரத்து, இன்று உடற்பயிற்சி.

இரண்டு சைக்கிள்கள் இருக்கும் வீடே வசதியானது. சைக்கிளில் காற்றடிக்க பம்ப் இருக்கும் வீடே பணக்கார வீடு. பள்ளிக்கு முன்னால் இருக்கும் சைக்கிள் கடைகளில் மாணவர்களைக் கவர்வதற்காக அவர்களே காற்றடித்துக் கொண்டால் இலவசம் என்கிற சலுகை வழங்கியிருப்பார்கள்.

பெண்கள் மிதிவண்டி ஓட்டுவது அன்றைய நாட்களில் அபூர்வமாகவே இருந்தது. சிவகாமி டீச்சர் எங்கள் தொடக்கப் பள்ளிக்கு சைக்கிளில் வந்து புரட்சி செய்தார். எல்லோரும் அவரை ‘சைக்கிள் டீச்சர்’ என்றே அழைப்பார்கள். மாணவர்களுக்கு அவரிடம் கொஞ் சம் பயம் ஜாஸ்தி.

அன்று மிதிவண்டி ஓட்டப் பழகுவது பெரிய சாதனை. முதலில் சின்ன சைக்கிளை வாடகைக்கு எடுக்க வேண்டும். ஒருசில கடைகளில்தான் சின்ன சைக் கிள் இருக்கும். சக நண்பர்கள் நான்கு புறமும் பிடிக்க, ஓட்டத் தொடங்க வேண்டும். அவர்கள் ஒரு பக்கம் பிடித்தால், சைக்கிள் மறுபக்கம் சாயும். கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை வந்து பெடலை மிதிக்கத் தொடங்கினால், நமக்கு ஓட்ட வந்துவிட்டது என்ற நம்பிக்கையில், நண்பர்கள் பிடித்திருக்கும் கையை எடுத்துவிடுவார்கள். அவர்கள் சைக்கிளைப் பிடிக்கவில்லை என்று தெரிந்துவிட்டால் போதும்.. அதுவரை சுமுகமாக போய்க்கொண்டிருந்த வண்டி தாறுமாறாக ஓடும்.

 

இடுப்பை வளைக்காதே

சைக்கிள் ஓட்டக் கற்றுத் தருபவர்கள் ‘இடுப்பை வளைக்காதே’ என செல்லமாக தலையில் குட்டுவார்கள். பலமுறை அடிபட்டு, கால் கை காயங்களை வீட்டுக்குத் தெரியாமல் மறைத்து, ஓட்டக் கற்றதும், உலகத்தை வென்ற மகிழ்ச்சி ஏற்படும்.

ஆரம்பத்தில் குரங்குப் பெடலில்தான் சைக்கிள் ஓட்டத் தொடங்குவோம். ‘குரங்குப் பெடல்’ என்கிற அந்தப் பெயர் எப்படி வந்தது என்பது இப்போது வரை சத்தியமாகத் தெரியவில்லை.

பிறகு, குறுக்குக் கம்பி மீது வளைந்து நெளிந்து ஓட்டுவோம். கால் எட்டாதது தான் காரணம். ஒருவழியாக எட்டும் போது நமக்கும் மீசை முளைத்த மகிழ்ச்சி. சைக்கிள் ஓட்டத் தெரியும் வரை அன்று சமூகம் யாரையும் ஆணாக அங்கீகரித்ததில்லை.

 

டபுள்ஸ் செல்ல தடை

சைக்கிள் ஓட்டக் கற்றதும், அதுவே பல வாகனங்களாக தோன்றத் தொடங்கும். ‘ஷோலே’ படம் வந்தபோது மிதிவண்டியையே குதிரையாக நினைத்து சவாரி செய்வோம். என்னதான் ஓட்டினாலும் அப்பாவின் சைக்கிள் அவருக்கு மட்டுமே. அதை லேசில் நம்மிடம் தரமாட்டார். அதற்கு காற்றடிப்பதும், ஞாயிற்றுக்கிழமைகளில் அதை துடைத்து வைப்பதும் மகன்களின் வேலை. வாராவாரம் முறைவைத்து துடைப்போம். அப்பா நம்மை நம்பி சைக்கிள் கொடுப்பது, ஆண் குழந்தைகளுக்கு தாவணி போடும் சடங்குபோல.

சைக்கிளில் இருவர் (டபுள்ஸ்) செல்ல தடை இருந்த காலம் ஒன்று உண்டு. அப்படிப் போனதற்காக போலீஸ்காரர்களிடம் பிடிபட்டவர்கள் உண்டு. டபுள்ஸ் போய் மாட்டிக்கொண்டால், சக்கரங்களில் இருக்கிற காற் றைப் பிடுங்கிவிடுவதுதான் அதற்கு தண்டனை. எதிரே வருகிற சில நல்லெண்ணம் கொண்டவர்கள் ‘போலீஸ் பிடிக்குது’ என்று எச்சரிக்கை தர, அங்கு நாங்கள் இறங்கி நடந்து தப்பித்தது உண்டு.

ஒரே ஒரு போலீஸ்காரர் இருந்தால் போதும், ஒட்டுமொத்த திருவிழாவும் ஊரில் எந்தச் சத்தமும் இன்றி நடந்தேறும். அன்று மக்களிடம் அந்த அளவு கட்டுப்பாடு இருந்தது.

‘சைக்கிளின் பின்னால் மூட்டை வைக்க அனுமதிக்கப்படுகிறது. கொஞ்சம் சைக்கிள் அசைந்தால் மனிதனால் குதித்துவிட முடியும், மூட்டையால் முடியுமா?’ என்ற யோசனை அரசுக்கு வர, சைக்கிளில் டபுள்ஸ் போவது அனுமதிக்கப்பட்டது. அதற்குப் பிறகு மூன்று பேர்கூட போய் விதியை மீறத் தொடங்கினார்கள். எப்போதுமே, விதியை மீறுவதில் மக்களுக்கு அலாதி சுகம்.

நாங்கள் வேளாண் கல்லூரியில் படித்தபோது, பரந்த அந்த வளாகத்துக்குள் மாணவர்களும், மாணவிகளும் மிதிவண்டிகளில் சிட்டுக்களைப் போல சிறகடிப்பார்கள். அங்கு அனைத்து மாணவர்களுக்கும் மிதிவண்டி அவசியம். அப்போதுதான் காலை 7 மணிக்கு காக்கி சீருடையில் மண்வெட்டியோடு செய்முறை வகுப்புக்குச் சென்று, நெல் வயலில் நிற்க முடியும். 10 மணிக்குத் திரும்பி வந்து குளித்து முடித்து, தேநீர் பருகி அடுத்த வகுப்புக்கு ஆஜராக முடியும். மாலை வேளைகளில் தாவரப் பூங்காவுக்குப் பயணித்து, பட்டாம்பூச்சிகளை வலைவீசிப் பிடித்துவர முடியும். இரவு தேநீர் விடுதிக்குச் சென்று சூடாக தேநீர் அருந்திவிட்டு வந்து, நள்ளிரவு வரை படிக்க முடியும். பல மாணவிகள் அங்கு வந்த பிறகு, ஒரே மாதத்துக்குள் சைக்கிள் விடுவதற்கு கற்றுக்கொள்வார்கள். எதுவும் தேவை என்கிறபோது, மனசுக்குள் வைராக்கியம் நுழைந்து விடுகிறது.

கோவையில் அப்போது திரையரங்குகளில் ‘சைக்கிள் டிக்கெட்’ என்கிற ஒன்று உண்டு. குறிப்பிட்ட எண்ணிக்கையில் நுழைவுச் சீட்டுகளை ஒதுக்கி, சைக்கிள் கொண்டு வருகிறவர்களுக்கு வரிசை யாக விநியோகிப்பார்கள். நாங்கள் முதல் காட்சி தொடங்கும்போதே சைக்கிளை வரிசையில் நிறுத்திவிடுவோம். இரவுக் காட்சிக்கு எளிதில் டிக்கெட் கிடைத்துவிடும். பூட்டிய கேட்டுகளை தாண்டிக் குதித்து தயாராக ஒருவர் நிற்க, மற்றவர் சைக்கிளை தம் பிடித்துத் தூக்கிக் கொடுப்பதும் உண்டு.

இப்படி முதல் நாளே படத்தைப் பார்த்துவிட்டு, அடுத்த நாள் கல்லூரி முழுவதும் தாங்களே அதை இயக்கியது போல சில நண்பர்கள் தம்பட்டம் அடிப்பார்கள்.

இன்று மழலைப் பள்ளிக்குச் சேரும் முன்பே குழந்தைகள் மிதிவண்டி ஓட்டக் கற்றுக்கொண்டு விடுகிறார்கள். காரணம், இரு பக்கமும் சாய்ந்தாலும் விழாத முட்டுக்கொடுக்கும் வசதி. சில நாட்களில் அவர்களே சமத்தன்மையை அறிந்துகொள்கிறார்கள். வாகன சமத்தன்மை வாழ்க்கையிலும் வரும்போது தான் உண்மையான வெற்றி சாத்தியமாகும்.

 

தூரம் முக்கியம் அல்ல

அன்று மோட்டார் சைக்கிள் அபூர்வம். அதில் அதிக ‘புடுபுடு’ சத்தம் வந்தால் அது உயர்ந்த ரகம் என்று எங்களுக்கு நினைப்பு. அப்படி ஒருவர் ஓட்டி வரும்போது பதினெட்டுப் பட்டிக்கும் அந்தச் சத்தம் கேட்கும்.

இன்றோ இளைஞர்கள் பாத்ரூமுக்குக்கூட பைக்கில் போகிறார்கள். அதிக வேகத்தில் பறந்து, முட்டி மோதி, சிலர் மூளைச் சாவில் முடிகிறார்கள். குறைந்த தூரத்துக்கு சைக்கிளில் சென்று அடிபட்டவர்கள் அன்று யாருமே இல்லை. வண்டியிலேயே இருந்தது வேகத்தடை. பெரும்பாலும் தூரங்களை சைக்கிளால் கடந்தவர்களுக்கு அன்றைய நாட்களில் மருத்துவம் தேவைப்படாத உடல்நலம் வாய்த்தது. இன்று இருசக்கர வாகன வரிசையில் சைக்கிளுக்கு இடமில்லை. எரிபொருளோடு ஓடும் வாகனத்துக்கே அந்த முத்திரை.

கார்கள் அன்று அதிசயம். ஊருக்கு ஒன்று இருப்பதே பெரிது. எந்த கார் என்பது முக்கியமில்லை. எதுவாக இருந்தாலும் அந்தஸ்து. இன்று கார்களை நிறுத்தக்கூட இடம் இல்லாத சூழல். தெருக்கள்தோறும் நிரம்பி வழிகிற நெரிசல்.

தூரம் என்பது முக்கியம் அல்ல; நேரம் என்பதே முக்கியம் என்பது மாநகரங்கள் உணர்த்தும் பாடம். அப்படிப் பார்த்தால் இன்னும் சில நாட்களில் ‘கார்களால் கடப்பதைவிட கால்களால் விரைவில் கடந்துவிடுவோம்’ என்கிற காலம் வரும். மிதிவண்டிகளுக்கு மகுடம் மறுபடியும் வரும். அப்போது மிதிக்கத் தொடங்குவதை மதிக்கத் தொடங்குவோம்!

- நினைவுகள் படரும்...

http://tamil.thehindu.com/opinion/blogs/article23568405.ece

Link to comment
Share on other sites

காற்றில் கரையாத நினைவுகள்!- ஆயிரம் பொய் சொல்லி...

 

24chmbn%20kknIMG
24chmbn%20%20cheliyan%20art
 
24chmbn%20kknIMG0
 
 
 

திருமணம், வீடுகளில் நடந்த காலமொன்று இருந்தது. இல்லம் சிறிதாக இருந்தாலும் உள்ளம் பெரிதாக இருந்ததால் அது சாத்தியமானது.

ஊரே மூன்று நாட்களுக்கு முன்பு களைகட்டிவிடும். அத்தனை வீடுகளின் அடுப்புகளும் அணைந்துவிடும். கல்யாண வீட்டில் அவர்களுக்குச் சாப்பாடு. கலகலப்பும், கலாய்ப்பும் கிராமம் முழுவதும் கேட்கும். கூம்பு வடிவ ஒலிபெருக்கி ‘இங்கு விசேஷம்’ என்று அறிவிக்கும். மொத்தம் நான்கே பாடல்கள். திரும்பத் திரும்ப ஒலித்து கேட்பவர்களுக்கு மனப்பாடம் ஆகிவிடும். திருமணத்தன்று ‘மணமகளே மணமகளே வா வா’ பாடல் கட்டாயம் ஒலிப்பதுண்டு.

உணவுக்கு முன்பு உழைப்பைப் பகிர்கிற நடைமுறை. ஒருவர் காய் நறுக்க, இன்னொருவர் அரிசி களைய, மற்றொருவர் அப்பளம் பொரிக்க, சுடச்சுட சாப்பாடு தயாராகும். உணவு என்பது அறுசுவை அல்ல. அள்ளி ஊற்றும் குழம்பு, குளம்கட்டி அடிக்கும் சோறு, கொஞ்சம் பொரியல், தாராள ரசம், தாளித்த நீர்மோர் இவையே பெரும்பாலும் இருக்கும். ஆனால், அதற்குத்தான் அத்தனை ருசி!

 

உறவு விசிறி... உன்னதத் தூக்கம்

ஊர்க்காரர்கள் திருமண வீட்டுக்கு ஒத்தாசையோடு உபரிப் பொருட்களையும் கொண்டுவருவார்கள். ஒருவர் காய்கறி, இன்னொருவர் வெங்காயம், மற்றொருவர் அரிசி என்று அந்தக் கல்யாணம் அனைவர் வீட்டுக்கும் உரிமையானது. வாழை பயிரிட்ட ஒருவர், கல்யாண வீட்டு வாசலில் கட்டுவதற்கு தாரோடு வாழை மரங்களைக் கட்டைவண்டியில் கொண்டுவந்து, அவரே ஆசையாய்க் கட்டுவார். வீட்டுக்கு முன்பு பந்தலிடப்படும். அங்குதான் மணவறை அமைக்கப்படும். வசதிக்கேற்ப பந்தலின் விசாலம் பெரிதாய் விரியும்.

பெண்களெல்லாம் பாயில் அமர, ஆண்களெல்லாம் திண்ணையில் சாய, உறவுகளெல்லாம் புதுப்பிக்கப்படும். சரமாரியாய் நல விசாரிப்புகள். இரவு நேரத்தில் அத்தனை வீடும் சத்திரமாகும். திண்ணைகளெல்லாம் கட்டில்களாகும். பெரியவர்களுக்கு கயிற்றுக் கட்டில். கொசுவை மீறி, புழுக்கத்தை மீறி உறவு விசிறியால் உன்னதத் தூக்கம். போர்வை வேண்டுமென்றோ, மெத்தை தேவையென்றோ யாரும் கொடி பிடித்ததுமில்லை, அடுத்தவரிடம் குறை சொன்னதுமில்லை.

பந்தி என்பது சொந்தங்கள் பரிமாறும் சுகமான உபசரிப்பு. தரையில் விரியும் நீளப் பாய்கள். சமயத்தில் படுக்கைப் பாயே மடித்து விரிக்கப்படும். முதலில் ஜிலேபித்தூள் தூக்கலாக உள்ள இனிப்பைப் பரிமாறுவார்கள். பின்னர் வடை. அதற்குள் அப்பளம் பெரிதாக எண்ணெய் சொட்டச்சொட்ட. சோற்றை ஒருவர் இலையில் தள்ளிக்கொண்டே போவார். ஏழை உறவினர்கள் இனிப்பை அப்புறம் சாப்பிட லாம் என்று எடுத்து பத்திரப்படுத்துவதும் உண்டு.

 

பந்தல் போடும் சந்தோஷம்

சொந்தத்தில் பெண்ணைக் கொடுப்பதே பெரும்பாலும் வழக்கம். நன்றாகத் தெரிந்த குடும்பத்தில் நான்கு முறை நடந்து, பெண்ணை உற்று கவனித்து, அவளிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டு, சுறுசுறுப்பைச் சரிபார்த்து, நடையை எடைபோட்டு, பின்னர் பேசி திருமணம் நிச்சயிப்பார்கள். சிலருக்கு சின்ன வயதிலேயே முடிவு செய்து விடுவார்கள்.

தாலிகட்டி முடித்ததும் உறவினரெல் லாம் மணமக்களைத் தங்கள் வீட்டுக்கு வரும்படி அழைப்பது மரபு. அவர்களை இரண்டு நாள் தங்க வைத்து தடபுடலாக சாப்பாடு போட்டு அனுப்பி வைத்து, அப்பெண்ணுக்கு ‘நாங்களெல்லாம் இருக்கிறோம்’ என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துவார்கள். அடுத்து நடக்கும் திருமணத்துக்கு அந்தப் பெண்ணே ஓடியாடி அத்தனைப் பணிகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வாள். அந்தத் திருமணத்திலேயே இன்னும் சில திருமணங்களின் முன்மொழிவுகள் நடந்தேறிவிடும். பந்தலை அவிழ்க்கும்போது விடுமுறை முடிவதைப் போல சோகமொன்று சொல்லாமல் கொள்ளாமல் நெஞ்சில் புகுந்துவிடும்.

 

அத்தைமார்கள்

பின்னர் வந்தது பெருஞ்சத்திரங்கள். பெரும்பாலும் நகரத்தில் இருப்போர் அங்கு நல்ல காரியங்களை நடத்துவது உண்டு. ஆனாலும் இரண்டு நாள் கொண்டாட்டங்கள் இருக்கும். முதல் நாள் காலையில் முக்கிய உறவினர் முகாமிடுவார்கள். பெண்ணுக்கு பூ கட்டுவதில் இருந்து புடவை கட்டிவிடுவதுவரை அத்தைமார்கள் முந்திக்கொண்டு உதவுவார்கள். தூரத்தில் இருக்கும் சொந்தமெல்லாம் சந்திப்பதற்கு அத்திருமணம் ஒன்றே வாய்ப்பாக இருந்தது. இரவு நேரத்தில் அங்கேயே அனைவரும் கிடைத்ததை விரித்துப் படுத்துக்கொள்வார்கள். வெகுநேரம் கதைகள் பேசி களித்திருப்பார்கள். முகூர்த்தத்துக்குள் தயாராகி அட்சதையோடு காத்திருப்பார்கள்.

 

‘வரவேற்புக்கு மட்டும் வா’

இப்போது எந்தத் திருமணமும் வீட்டில் நிகழ்வதில்லை. பிரம்மாண்டமான நட்சத்திர மண்டபங்கள். ‘வரவேற்புக்கு மட்டுமே வா’ என்று அழைக்கின்ற அழைப்பிதழ்கள். அன்று பெரும்பாலும் நடந்தோ, மிதிவண்டியிலோ திருமணம் சென்றபோது பிரச்சினை ஏதும் பெரிதாய் இல்லை. இன்று மண்டபங்களில் வாகனங்களை எங்கே நிறுத்துவது என்பதே கேள்விக்குறி.

திருமணம் என்பது இன்று அந்தஸ்தாகிவிட்டது. சிலர் கூட்டுகிற கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு மண்டபம் போய்ச் சேர்வதற்குள் மண்டை காய்ந்துவிடுகிறது. அன்று ஒலிபெருக்கி என்றால் இன்று பாட்டுக் கச்சேரி. கல்யாணியும், காம்போதியும் காற்றில் கரைய கேட்டு ரசிக்கவோ, தாளம் போடவோ யாரும் இருப்பதில்லை. பல இடங்களில் காதைப் பிளக்கிற மெல்லிசைக் கச்சேரி நடுவே குசலம் விசாரிப்பதில்கூட குளறுபடிகள்.

சில நேரங்களில் ஒரே ஒரு முறை சந்தித்தவரும் அழைப்பிதழை தந்துவிட் டுப் போய்விடுகிறார். அங்கு செல்லும் போது திருமணம் அவருடைய பெண்ணுக்கா? மகனுக்கா என்று குழப்பம். நான்கைந்து மண்டபங்கள் ஒரே இடத் தில் இருக்க, தப்பித் தவறி வேறொரு மண்டபத்துக்குச் சென்றுவிட்டு அங்கு யாருமில்லாததால் அசடு வழிய உரிய மண்டபத்துக்கு வருபவர் உண்டு.

பல நிகழ்வுகளில் அழைக்கும்போது இருக்கும் வீரியம் ஆஜராகும்போது இருப்பதில்லை. சில இடங்களில் மணமக்களைப் பார்ப்பது திருப்பதி தரிசனம்போல் சிரமமாக இருக்கும்.

 

கல்யாண நைவேத்தியம்

நிற்கிற பந்திகளில் நிறைய பலகாரங்கள். அதில் இருக்கும் நெருக்கத்தில் உணவை எடுத்து வந்து சாப்பிடுவது போராட்டம். உட்காரும் பந்திகளில் வரிசையாக பதார்த்தங்களை வைத்துவிட்டு கூப்பிடும் வழக்கம். சாப்பிட்டாலும், சாப்பிடாவிட்டாலும் எத்தனை பதார்த்தம் என்பதை சமைக்கிற நிறுவனம் தீர்மானிக்கும்.

அத்தனைக்கும் காசு. இரண்டாம் முறை பதார்த்தங்களை நைவேத்தியம்போல காட்டிக்கொண்டே செல்வார்கள். தலையை ஆட்டினால் இலையில் விழும். சம்பந்தா சம்பந்தமில்லாத உணவு வகைகள். தென்னிந்திய உணவுக்கு இறுதியில் வரும் சூப். திடீரென கைக்குட்டை ரொட்டி இலையில் விழும். அதற்கு எதைத் தொட்டுக்கொள்வது என்பதைக் கண்டுபிடிப்பதே பெரும்பாடு. உண்பவற்றைவிட உதிர்ப்பவை அதிகம். அவ்வளவையும் சாப்பிட்டாலும் திருப்தி கிடைக்காத மனநிலை. நாம் சாப்பிடும்போதே எப்போது முடிப்போம் என்று ‘உறுமீன் வருமளவு காத்திருக்கும் கொக்குபோல’ சிலர் காத்திருப்பார்கள்.

 

அலங்கார தாமதம்

பல இடங்களில் வரவேற்பு 7 மணிக்கு என்று போட்டிருப்பார்கள். பெண்ணும், மாப்பிள்ளையும் வருவதற்கே 8 மணி ஆகிவிடும். அதற்குள் வந்தவர்களுக்குப் பொறுமை போய்விடும். மாநகரங்களில் வீட்டுக்குப் போய்ச் சேர்வது போரில் இருந்து திரும்புவதைப் போல சாதனையாகிவிடுகிறது.

அத்தனை பேரும் தாமதிக்கிற பெண்ணையும், மாப்பிள்ளையையும் கண்டபடி திட்டித் தீர்ப்பார்கள். இதுவே திருமணத்துக்கான ஆசிர்வாதம். அன்று அத்தைகள் கட்டிய சேலையைச் சுற்றிவிடவும், சித்தி பூசிய பவுடரை முகத்தில் அப்புவதற்கும் இன்றைக்கு அழகு நிலையங்கள் செல்வதே தாமதத்துக்குக் காரணம். திருமணம் என்பது இன்று மங்கள நிகழ்வு அல்ல. செல்வாக்கைக் காட்டும் அடையாளம். ‘எத்தனை பேர் எனக்கிருக்கிறார்கள் பார்’ என்று சொல்லும் உரத்த செய்தி.

இன்றையத் திருமணம் மணமக்களோடு எடுக்கும் புகைப்படத்தோடும், செயற்கையாகப் புரியும் புன்னகையோடும் முடிந்துவிடுகிற அம்சம்.

- நினைவுகள் படரும்...

http://tamil.thehindu.com/opinion/blogs/article23654175.ece

Link to comment
Share on other sites

காற்றில் கரையாத நினைவுகள் 10: வெள்ளித்திரையில் காண்க!

 

 
 
kkn10
01chmbn%20%20kkn%2010IMG0
 

எங்கள் சின்ன வயதில் திரையரங்குகளே தேவலோகங்கள். வீட்டின் இருப்பிடத்தைச் சொல்லவும், பேருந்து நிறுத்தத்தை அடையாளப்படுத்தவும் அவையே முகவரியின் முன்மொழிவுகள். வீட்டுக்கு அருகில் இருக்கும் திரையரங்கு, கனவுலகத்துக்கான ஒற்றையடிப் பாதை!

அன்று திரைப்படம் என்பது அனைவருக்கும் கனவாக இருந்தது. கவலைகளை மறக்கும் மருந்தாக ஒற்றடம் கொடுத்தது. திரை குறித்த எதுவும் குறைவாகத் தெரிந்திருந்ததால், திகட்டாமல் தித்தித்தது. மாதம் ஒருமுறை வானொலியில் ஞாயிறு மதியம் 3 மணிக்கு திரைப்படம் ஒன்று ஒலிச்சித்திரமாக ஒலிபரப்பாகும். அதைக் கேட்பதில் அவ்வளவு மகிழ்ச்சி. ‘நேயர் விருப்பம்’, ‘நீங்கள் கேட்டவை’ என்று திரைப்படப் பாடல்களைக் கேட்கும்போது, ‘யாருடைய விருப்பமான பாடல் வரப் போகிறது...’ என்று வீட்டுக்குள் போட்டியே நிகழும்.

அந்தக் காலத்தில் மாவட்டத் தலை நகரத்தில் இருக்கும் திரையரங்குகளில் மட்டுமே புதுப்படங்கள் வெளியாகும். பெரும்பாலும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளில் அதிகப் படங்கள் திரைக்கு ஓடிவரும். குடும்பத் தலைவர்கள் மாதம் ஒரு திரைப்படம் என்று நிதிநிலை அறிக்கையை நேர்செய்வார்கள். பெற்றோர் பார்த்துவிட்டு வந்து குழந்தைகள் பார்க்க அனுமதி அளிப்பது வழக்கம். இப்படி அறிவிக்கப்படாத இரண்டாம் தணிக்கை அப்போது இல்லங்களிலே இருந்தது.

 

குலுக்கல் சந்தோஷம்

ஒரு திரைப்படம் பார்த்துவிட்டு வந்தால், அடுத்த படம் வரும் வரை அதையே பேசிக் களித்திருப்போம். திரைப்படத்தின் அத்தனை வசனங்களும் அத்துபடியாகியிருக்கும். அதுவும் நகரத்தில் பலமுறை ஓடி நசுங்கிக் கசங்கிய பிறகே, வீட்டுக்கு அருகில் இருக்கும் திரையரங்குக்கு வந்து சேரும். அப்போது குளிர்சாதன வசதியெல்லாம் அரிதினும் அரிது. பக்கவாட்டில் வரிசையாக இருக்கும் மின்விசிறிகள் மட்டுமே. பெண்களுக்கென்று தனி வரிசை. தனியே இருக்கைகள். மாடி உள்ள திரையரங்குகளில் இருவரும் அமர அனுமதி உண்டு. முதலில் செல்பவர்கள் மின்விசிறிக்கு அருகே இருக்கையைப் பிடிக்க முந்தியடிப்பர்.

மறுநாள் திரைப்படம் பார்க்க வீட்டில் அனுமதி கிடைத்ததும் முதல் நாள் இரவே மகிழ்ச்சி ஆரம்பித்துவிடும். நண்பர்களிடம் எல்லாம் அந்த நல்ல செய்தி பரிமாறப்படும். இருப்பதிலேயே நல்ல உடையை எடுத்து அணிந்துகொண்டு எல்லோரும் தயாராகிவிடுவார்கள். முன்கூட்டியே சென்று வரிசையில் நின்று சினிமா டிக்கெட்டை வாங்கியதும் குலுக்கலில் பணம் விழுந்த குதூகலம்.

 

பிஹாரில் வெள்ளம்

திரையரங்கில் சிறிது நேரம் கழித்து பாட்டு போடுவார்கள். அந்தப் பாட்டும் வேறொரு படத்தின் பாட்டு. மணி ஒலித்தால் படம் போடப் போகிறார்கள் என்று பொருள். பிறகு ‘நல்வரவு’ என்று போட்டதும் அரங்கில் ஆரவாரம் ஏற்படும். அடுத்து விளம்பரச் செய்திகள். ‘பலவிதப் பற்பொடிகள் உள்ளன. சில வழவழப்பானவை, சில சொரசொரப்பானவை’ என்று ஒருவர் பேசத் தொடங்குவார். எத்தனை முறை அதைப் பார்த்திருப்போம்!

செய்திச்சுருளைப் போடும்போதே கை தட்டல் ஒலிக்கும். ‘செய்திச்சுருள்’ என்றால் அரதப் பழசாக இருக்கும். ‘பிஹாரில் வெள்ளம்’ ஏற்பட்ட செய்தியை அங்கு வறட்சி நிலவும்போது போட்டுக் காண்பிப்பார்கள். இந்தியா கிரிக்கெட்டில் எப்போதோ ஜெயித்ததைப் பார்த்து, எதுவென்று தெரியாமல் கை தட்டுவார்கள். மூலப்படத்தைப் போடும்போது எத்தனை ரீல்கள் என உற்றுப் பார்ப்போம். அதிக ரீல்கள் என்றால் அதிக மகிழ்ச்சி, அதிக நேரம் படம் பார்ப்போமே என்றுதான். இடைவேளையில் முறுக்குத் தட்டுடன் விற்பனையாளர்கள் படையெடுப்பார்கள். இஞ்சிமொரப்பாவைப் பற்றி அவர்கள் சொல்வதைக் கேட்டால் மருந்துக்கடைகளை எல்லாம் மூடிவிடலாம்போலத் தோன்றும். தண்ணீர் தாகம் எடுத்தாலும் அடக்கிக் கொள்வோம். திரையரங்கின் மூலையில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட குவளைகள் நடுத்தர வீட்டு நாயை ஞாபகப்படுத்தும். திரும்பி வரும்போது தியேட்டர் வாசலில் விற்கும் ‘பாட்டுப் புத்தகம் ஒன்றை 10 பைசாவுக்கு வாங்கி வருவோம். அடுத்த நாள் அதில் உள்ள பாடல்களை நாங்கள் பாட, வீட்டில் உள்ளோருக்கு விதவிதமாகத் தலைவலி எடுக்கும்.

 

‘மாடர்ன் தியேட்டர்ஸ்’

எந்த ஊருக்குச் சென்றாலும் திரைப்படம் பார்ப்பதே பொழுதுபோக்கு. கிராமத் திரையரங்குகளில் மணல் தரையில் பல படங்களைப் பார்த்திருக்கிறோம். அங்கெல்லாம் ஜெனரேட்டர் இருக்காது. மின்தடை ஏற்பட்டால் எப்போது மீண்டும் மின்சாரம்வரும் என்று யாருக்கும் தெரியாது. அப்போதெல்லாம் தியேட்டர்களில் நான்கு இடைவேளைகள் வரும். பார்த்த படத்தையே மீண்டும் மீண்டும் பார்த்தாலும் அலுப்பு ஏற்படாத அனுபவம்.

சேலம் நகரத்தில் வரிசையாகத் திரையரங்குகள். கிராமத்து மக்கள் எதற்காக நகரத்துக்கு வந்தாலும் படம் பார்க்காமல் திரும்புவதில்லை. ஆங்கிலத் திரைப்படம் மட்டுமே காண்பிக்கும் ‘சென்ட்ரல்’, ‘நியூ இம்பீரியல்’ என்ற திரையரங்கங்கள். எங்கள் வீட்டுக்கு அருகில் ‘உமா தியேட்டர்’ இருந்தது. அதில்தான் பெரும்பாலான திரைப்படங்கள் நாங்கள் பார்த்தோம். அன்று திரையரங்கில் டிக்கெட் கொடுப்பவரை தெரிந்து வைத்திருப்பது பெருஞ்செல்வாக்கு. திரையரங்க உரிமையாளர்களே அன்று ஊரில் பெரிய பணக்காரர்களாக அறியப்பட்டார்கள்.

படப்பிடிப்புகளின் தலைநகராக சேலம் ஒருகாலத்தில் இருந்தது. ஏற்காடு அடிவாரத்தில் இருக்கும் ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ அன்று பிரபலமான திரைப்பட நிறுவனம். இன்று ‘உமா தியேட்டர்’ இல்லை. நாங்கள் சின்ன வயதில் படம் பார்த்த பல அரங்குகள் இன்று வணிக அங்காடிகளாகிவிட்டன. அவற்றைப் பார்க்கும்போதெல்லாம் எங்களுக்குள் இருந்த பல திரைக்கதைகள் கிழித்தெறியப்பட்டதைப் போல மனமெங்கும் வருத்தங்கள். அடிவாரத்தைக் கடக்கும்போது ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ பற்றிய பேச்சு வந்து மனத்தை அமுக்கும். எத்தனை மகத்தான காவியங்களை அந்த நிறுவனம் படைத்தது என்று எண்ணிப் பார்க்கத் தோன்றும்.

இன்று எண்ணற்ற படப்பிடிப்பு நிறுவனங்கள் அடுக்ககங்களாகவும், கல்லூரிகளாகவும் மாறி காணாமல் போய்விட்டன.

 

‘பொதிகை’யில் சினிமா

திரைப்படம் உச்சத்தில் இருக்கும்போது தொலைக்காட்சி மூலை முடுக்குகளுக்கும் வந்து சேர்ந்தது. வட இந்தியாவில் இருக்கும்போது நாங்கள் சித்திரமாலாவில் வரும் ஒரே ஒரு தமிழ்ப் பாட்டுக்காக ஒற்றைக் காலில் தவம் இருப்போம். சமயத்தில் தமிழ்ப் பாட்டு வராமல் ஏமாற்றமடைவோம். ஞாயிற்றுக்கிழமைகளில் ‘பொதிகை’ தொலைக்காட்சியில் திரைப்படம் ஒளிபரப்பாகும்போது தெருவெல்லாம் வெறிச்சோடிக் கிடக்கும். அப்போது வருகிற விருந்தினரை எந்த வீடும் ரசித்ததில்லை. வீட்டை வெளியில் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்து தொலைக்காட்சியில் படம் பார்த்தவர்கள்கூட உண்டு. கிரிக்கெட் நடக்கும்போது சிலர் தொலைக்காட்சிப் பெட்டியை தங்கள் வீட்டு வாசலில் அனைவரின் வசதிக் காக வைப்பார்கள். அன்று தொலைக்காட்சி என்பதே அபூர்வம்.

கல்லூரிக்குச் சென்றபோது வேளாண் பல்கலைக்கழகத்தின் அண்ணா அரங்கத்தில் வாரந்தோறும் திரைப்படங்கள். நாயகிகள் அழுகிற காட்சி வருகிறபோது ஒளிக்கற்றையின் நடுவே கைகளை நீட்டி குறும்புக்கார மாணவர்கள் கண்களைத் துடைத்து விடுவது உண்டு. இன்று திரைப்படம் என்பது முன்கூட்டியே முடிவு செய்யும் நிகழ்வு.

எதிர்பார்ப்புகளும், ஏக்கங்களும் யாருக்கும் இல்லை. எந்த அரங்கம் என்பதை மட்டுமல்ல, எந்த இருக்கை என்பதையும் இருக்கிற இடத்திலேயே தீர்மானித்து பதிவுசெய்யும் வசதி. இடம் பிடிக்கிற முஸ்தீபோ, முன்கூட்டியே செல்கிற மும்முரமோ சிறிதும் இல்லை. ஆனாலும் படம் தொடங்கிய பிறகு குழல்விளக்குடன் இருக்கையை அடையாளம் காணும் கூட்டம் குறைந்தபாடில்லை.

ஒரே நாளில் பட்டிதொட்டிகளிலும் புதுப்படங்கள் வெளியாகிவிடுகின்றன. 3 நாட்கள் ஓடினால் போதும் முழுத்தொகையும் வந்துவிடும் என்கிற நிலையில் ‘வெற்றிகரமான 50-வது நாள்’ என்ற சுவரொட்டியை எங்கேயும் காண முடிவதில்லை. அன்று மொத்தப் பட வசனமும் நினைவில் இருக்கும். இன்று சென்ற முறை பார்த்த படமே மறந்து போகுமளவு தொலைக்காட்சியிலும், அரங்குகளிலும் படங்களின் வரிசை.

வணிக வளாகங்களில் வெளிநாட்டு வரலாற்றுச் சின்னங்களைப்போல சுத்தமான அரங்குகள். பளபளக்கும் கழிப்பறைகள். நடுங்கும் குளிர்சாதன வசதி. பணத்துக்கேற்ப நொறுக்குத்தீனி. இத்தனையும் இருந்தாலும் அன்று காத்திருந்து படங்களைப் பார்த்திருந்த மகிழ்ச்சி எங்கள் தலைமுறைக்கு எப்போதும் இருக்காது. கொசுக்களை மீறி, மூட்டைப்பூச்சிகளைத் தாண்டி சண்டைக் காட்சிகளுக்கு கை தட்டிய காலம் இனி ஒருபோதும் வரவே வராது.

- நினைவுகள் படரும்...

http://tamil.thehindu.com/opinion/blogs/article23736255.ece

Link to comment
Share on other sites

காற்றில் கரையாத நினைவுகள்: கருப்பு வெள்ளைச் சித்திரங்கள்!

 

 
 
08chmbn%20%20iraiyanbu%20katturaiIMG
 
 
kkn11
08chmbn%20%20iraiyanbu%20katturaiIMG1
08chmbn%20%20iraiyanbu%20katturaiIMG
 

புகைப்படம் அன்று அரிய ஆவணம், வாழ்ந்ததற்கும் மறைந்ததற்கும். சுவரில் சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் இப்போது அழ வைத்துவிட்டுச் சென்ற மனிதரின் அடையாளம். சுவர்கள் புகைப்படங்களை மாட்டுவதற்காகவே கட்டமைக்கப்பட்டன அன்று. வாழ்க்கைச் சரிதத்தை கல்வெட்டுகளைப் போல முகவெட்டுகளால் அளக்க முயன்ற காலம் அது.

அன்று நிலையம் (போட்டோ ஸ்டுடியோ) சென்றுதான் புகைப்படம் எடுக்க வேண்டும். ஒளியைப் பாய்ச்சும் விளக்குகள், ஓவியத் திரை, அருகில் எப்போதும் வாடாத மலரவும் முடியாத செயற்கைப் பூக்கள். இருக்கையில் அமரும்போது லேசான பதற்றம் எடுக்கும். தயாராகச் சொல்லிவிட்டு புகைப்படக் கலைஞர் கருப்புத் துணிக்குள் புகுந்துகொண்டு சிரிக்கச் சொல்லும்போதுதான் முகம் இறுக்கமடையும். கருவியை இயக்கும்போது வெளிச்ச வெள்ளத்தில் கண்கள் கூசும். தூங்குவதுபோல் படம் பதிவாவதும் உண்டு. எடுத்து முடித்ததும் எதையோ சாதித்த திருப்தி.

புகைப்படம் என்பது அழகின் கனவு. எந்தப் படத்திலாவது அழகாகத் தெரிய மாட்டோமா என்கிற அடிப்படை ஆதங்கத்தின் ஏக்கப் பதிவு. படம் எந்த நாளில் கிடைக்கும் என்று பணத்தைக் கட்டியதும் ஆர்வமாய்க் கேட்போம். சொன்ன நாளில் அது கிடைத்ததே இல்லை. கேட்டால் மூக்கையும், முழியையும் தொட்டுச் சரி செய்ய முயற்சி நடப்பதாய் பதில் வரும். பலமுறை நடந்து படத்தைப் பெற்று பரபரப்பாகப் பார்க்கும்போது ‘நம் முகம்போல இல்லையே’ என்று முதலில் தோன்றும். நம்மினும் அழகாக இருப்பதே நல்ல புகைப்படம்.

ஆண் குழந்தைக்கு முடியிறக்கும் முன்பு படமெடுப்பது மரபு. சீவி சிங்காரித்து கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு வைத்து நிலையத்துக்குச் சென்று படம் பிடிப்பார்கள். அப்படம் அத்தனை வீட்டிலும் தவறாமல் இருக்கும். பெண் குழந்தைகள் பூப்பெய்தியதும் கூந்தலில் வாழைமடல் வைத்து தைத்து பூவலங்காரம் செய்து புகைப்படம் எடுப்பது உண்டு.

 

’போட்டா புடிச்சா ஆயுசு கொறையும்’

அதிகப் புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறைந்துவிடும் என தவிர்த்த பெரிசுகள் உண்டு. தொண்ணூறு வயதில் குறைவதற்கு ஏது ஆயுள் என்று அவர்களை குறுக்குக் கேள்வி கேட்டதில்லை. எல்லோர் வீட்டிலும் திருமணப் புகைப்படம் இருக்கும். துக்கப்படவும் வெட்கப்படவும். நடுத்தர வயதில் இன்னொரு புகைப்படம். கணவன் அமர மனைவி அருகில் நின்றவாறு தோரணையுடன். தோரணையெல்லாம் புகைப்படத்தில்தான் என்பது இருவருக்கும் தெரியும். என் நண்பர் வீட்டில் அறுபது வயதில் தாத்தாவை மட்டும் புகைப்படம் எடுப்பதற்காக பாட்டி கோபித்துக்கொண்டு இரண்டு நாட்கள் சரியாகச் சாப்பிடவில்லையாம். ஆமாம், அன்று புகைப்படம் எடுப்பது இன்று திரைப்படம் எடுப்பதுபோல.

நிழற்படக் கருவி அன்று அரிய சாதனம். பணக்காரர் வசமே இருக்கும் பண்டம். வளைந்தும் நெளிந்தும், குனிந்தும் அசைந்தும் புகைப்படம் எடுப்பவரை எல்லோரும் பயத்துடன் நேசித்த காலம். மேல்நிலை வகுப்பு படிக்கும்போது தாவரவியல் வகுப்புக் காக ஏற்காடு சென்றிருந்தோம். ஒரே ஒரு மாணவன் புகைப்படக் கருவி யோடு வந்தான். அவனைச் சுற்றியே அத்தனை கூட்டமும்.

முதலில் இருந்தது கருப்பு - வெள்ளை காலம். வண்ணப்படங்கள் சாத்தியம் என்றுகூட யாரும் எண்ணிப் பார்க்கவில்லை. எண்பதுகளில் வண்ணப்படங்கள் எடுக்கும் தொழில்நுட்பம் வந்தது. ஆனால், படங்கள் எல்லாம் அழுது வடியும். எடுத்தவுடன் பிரதி கிடைக்கும் புகைப்படக் கருவியை திரைப்படம் ஒன்று தெரியப்படுத்தியது. அதற்குப் பின்னர் சந்தையின் சந்துபொந்துகளில் அது புகுந்துகொண்டது.

திருமணம் என்றால் புகைப்படமே பிரதானம் என்றிருந்த நிலை மாறி, காணொலி அதனுடன் கைகோத்துக் கொண்டது. ஆனாலும் யாரும் அதை அடிக்கடி பார்த்ததாய்த் தெரியவில்லை.

 

தாஜ்மகாலுக்கு முன்பாக..

கல்லூரியில் நாங்கள் படிக்கும்போது அகில இந்தியச் சுற்றுலாவுக்குப் பயணப்பட்டோம். புகைப்பட ஆல்பங்களைப் போகிற இடங்களிலெல்லாம் மலிவு விலையில் வாங்குவோம். எங்கள் நண்பர் ஒருவர் ’சலங்கை ஒலி’ படத்தில் வருகிற சிறுவன்போல டப்பாக் கருவியொன்றை எடுத்து வந்தார். எங்களிடம் அதுகூட இல்லை. வேறு சில நண்பர்கள் கூட்டாகச் சேர்ந்து உயர் ரகக் கருவி வாங்கி வந்தனர். எங்கள் கருப்பு - வெள்ளைப் புகைப்படங்கள் புகைமூட்டத்துக்குப் பின்பு நிற்பதைப்போல தெளிவாகப் பதிவாயின. அவர்கள் எடுத்த புகைப்படங்கள் பல வண்ணத்தில் பளிச்சென்று மின்னலிட்டன. தாஜ்மகால் முன்பு அதை அவர்களே கட்டியதைப் போல பெருமையோடு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். எங்களுக்கோ மும்தாஜ் இறந்த சோகம் மட்டுமே.

இன்று தொழில்நுட்பம் வளர்ந்து புகைப்படக் கலை பாய்ச்சல் வேகத்தில் முன்னேறிவிட்டது. படச் சுருளின்றி படமெடுக்கும் மின்னணு வசதி. கருப்பு - வெள்ளை இன்று மருந்துக்கும் இல்லை. வீட்டில் விதவிதமாக புகைப்படம் மாட்டும் பழக்கமும் இல்லை. சுவரில் புகைப்படத்தில் யாரேனும் இருந்தால் உயிருடன் இல்லை என்கிற அளவுக்குக் குறைவான காட்சிப்படுத்துதல். வாடகை வீட்டில் ஆணி அடிக்க ஆயிரம் நிபந்தனை. அடிக்கிற ஆணி யால் சுவரே சாயுமோ என்கிற நடுக்கம்.

பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது முக்கியப் பிரமுகர்களை ஊடகவியலாளர் புகைப்படம் எடுப்பதைப் பார்த்து அதிசயம் ஏற்படும். அத்தனை நிகழ்வையும் ஒன்றுவிடாமல் அடுக்கடுக்காக எடுத்துச் செல்கிறார்களே, இதில் எதைத் தேர்ந்தெடுப்பார்கள் என்கிற கேள்வியும் தோன்றும். ஒன்றுதானே வெளிவரப் போகிறது, எதற்கு இத்தனை பிரயத்தனம். சிறந்ததை எடுக்கவே அத்தனை முயற்சியும் என்று நண்பர் சொன்னபோது அசந்து போனேன். ஒரு விதை முளைக்கவே மரங்களில் அத்தனை மலர்கள்.

 

ஓவ்வொருவரும் கேமரா மேன்

இன்று கைபேசியிலேயே கேமரா வசதி. நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கில் படங்கள் எடுக்கும் புகைப்பட போதையோடு ஒரு சிலர் உண்டு. அவரவர் படத்தை அழகாக்கி, வெண்மையூட்டி உலக அழகோடு முகநூலிலும், புலனத்திலும் போடும் வசதி. எதற்கெடுத்தாலும் சுயமி (ஷெல்ஃபி). நின்றாலும் உட்கார்ந்தாலும் சகட்டுமேனிக்கு எடுத்துத் தள்ளும் ஆர்வம். பிரபலமான மனிதரோடு புகைப்படம் எடுத்து உடனடியாக முகநூலில் ஏற்றுவதே மூல நோக்கம். இத்தனை புகைப்படத்தை என்ன செய்வார்கள் என்கிற சந்தேகம் எனக்கு எப்போதும் தோன்றும்.

எனக்கு புகைப்படங்களில் ஆர்வம் எப்போதும் இருந்ததில்லை. அந்த நொடியைத் தவறவிட்டு கருவியில் பதிவு செய்வது இரண்டாம் தர இன்பம் என்றே எண்ணுவேன். கண்களைக் காட்டிலும் சிறந்த கருவியும் இல்லை, மனத்தைக் காட்டிலும் உயர்ந்த படச்சுருளும் இல்லை என்பது என் நம்பிக்கை. நாம் இழந்த அனுபவங்களே இனிய புகைப்படங்கள்.

ஒரு காலத்தில் யாருடன் புகைப்படத்தில் நிற்கிறோம் என்பது பெருமைக்கான சேதி. திரைப்படங்களில் பொம்மைக் கத்தியில் நாயகன் வேறொரு பாத்திரத்தை குத்தியதைப் போல புகைப்படம் எடுத்து, வில்லன் மிரட்டும் காட்சிகள் உண்டு. நீதிமன்றங்களில் அன்று அது முக்கிய ஆவணம். இன்றோ யாருடன் இருப்பதுபோலவும் செயற்கையாய் காட்சியைச் செய்துவிட முடியும். அதிகப் புழக்கத்தில் ஆவணத்தன்மையை புகைப்படம் இழந்தது என்னவோ உண்மை.

 

சுயமி மோகம்

அதிகப் புகைப்படம் எடுப்பது ஆயுளைக் குறைக்கிறதோ இல்லையோ, அதிக சுயமியால் அற்பாயுளில் போனவர்கள் உண்டு. யானையை படம் எடுத்து துதிக்கையில் சிக்கி, அருவியை எடுக்க அதிலேயே விழுந்து, வாழ்வை முடித்த பேதைகள் உண்டு. ’நாம் என்பது நம் உடலல்ல’ என்பதையும், உடலைத் தாண்டிய நாம் யார் என உணர்வதே வாழ்வின் சாரம் என்பதையும் தெரிந்து கொண்டவர்கள் உண்மை முகம் நமக்குத் தெரிய ஒப்பனை முகத்தை அடுத்தவர்களுக்குக் காட்ட ஆயத்தங்கள் செய்வதில்லை. அவர்கள் தங்கள் மூலமுகம் எது என்பதை உணர அணிந்திருக்கும் முகமூடிகளைக் கழற்றுவதிலேயே மும்முரம் காட்டுவார்கள். அப்போது எந்த முயற்சியும் இல்லாமல் அவர்களுக்கே தெரியாத அழகிய முகம் வெளிப்படும்.

மனிதர்களின் கழுத்தில் மாலை அணிவிக்க எப்போதும் மகிழ்ச்சியுடன் புன்னகைக்கும் நான், கண்ணாடிக்குள் இருக்கும் உருவத்துக்கு மாலைபோட கண்கலங்கிப் போகின்றேன்.

- நினைவுகள் படரும்...

http://tamil.thehindu.com/opinion/blogs/article23810032.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

காற்றில் கரையாத நினைவுகள் 12: பழக்கமும் முதிர்ச்சியும்!

 

 
15CHRGNJALLI

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர், சென்னை மெரினா காமராஜர் சாலையில் நடத்திய போராட்டம்.   -  G_SRIBHARATH

 
 
15CHRGNJALLI

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர், சென்னை மெரினா காமராஜர் சாலையில் நடத்திய போராட்டம்.   -  G_SRIBHARATH

 

பெண் என்பவள் அதிசயமாகவும், ஆண் என்பவன் அவசர மாகவும் அறியப்பட்ட காலம் ஒன்று இருந்தது. அன்று மழலையர் வகுப்பிலேயே தனி வரிசைகள். ஆரம்பப் பள்ளியில் சகஜமாகப் பழகியவர்கள் உயர்நிலைப் பள்ளியில் ஒதுங்கி அமர்வது பழக்கம்.

இருபாலர் பயிலும் பள்ளிகள் அன்று மிகவும் குறைவு. எதற்கு வம்பு என நிர்வாகம் நினைத்தது. எங்கள் பள்ளியோ பெண்களும் படிக்கும் பள்ளி. எட்டாம் வகுப்பு வருகிறபோது அரும்பு மீசை ஆரம்பிக்கும். பெண்கள் தாவணி அணிவது அப்போது கட்டாயம். ஒன்றாய்ப் படித்தாலும் ஒரு வரிகூட பேசாமால் உம்என்று இருக்க வேண்டும் என்று பெண்களுக்குப் போதிக்கப்பட்டது. தூரத்தில் ஆண் வருகிறபோதே தலையைத் தாழ்த்திக்கொண்டு பார்க்காததுபோல் கடந்து செல்ல வேண்டும். அப்படியே ஏதேனும் கேட்டாலும் முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்வதே வழக்கம்.

பிரிக்கப் பிரிக்க ஆர்வம் அதிகரிக்கும். 6-ம் வகுப்பிலேயே சில மாணவர்கள் அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசி அசிங்கப்படுவார்கள். பெண்க ளைப் பற்றியே சிந்திப்பதில் அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். ஒவ் வொரு வகுப்பிலும் ஒரு பெண்ணை உலகப் பேரழகியாக அறிவித்துவிடுவார்கள். அதை அறிந்த மற்ற அத்தனை பெண்களுக்கும் வருத்தம் ஏற்படும். அவரவர் கண்களில் அவர்களே அழகு. நான்கைந்து மாணவர்கள் அந்தப் பெண்ணை பகிரங்கமாகப் பின்தொடர்வர்கள். எங்குச் சென்றாலும், என்ன செய்தாலும், அவர்கள் வீட்டு நாய் போல சென்று வருவதை அனைவரும் அறிவர். வீடுவரை வழியனுப்பிவிட்டு வருவதும் உண்டு. 8-ம் வகுப்பு வரை படிப்பில் எட்டாத உயரத்தில் இருந்தவர்கள் இதனால் குட்டிக்கரணம் போட்டு மதிப்பெண்களில் மந்தமாகி குப்புற விழுவதும் உண்டு.

 

 

கொடி கட்டிப் பறக்கும் பெண்கள்

ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் இந்த மாணவர்கள் காதல் கடிதங்களைக் கொடுப்பதும், அதைப் பெற்ற அப்பெண்கள் செருப்பைக் கழற்றிக் காண்பிப்பதும் உண்டு. சில நேரங்களில் கண்களால் அம்பு எய்தியது போதாதோ என்று எண்ணி, காகித அம்புகளை எறிவதும் உண்டு. இந்தப் பள்ளிப் பேரழகி கள் கல்லூரி சென்றதும் அங்கு தங்களைவிட இன்னும் அழகான பெண்களைப் பார்த்து உள்ளம் நொறுங்குவதும் உண்டு. அறிவால் சிறந்த பெண்கள் அங்கேயும் கொடிகட்டிப் பறப்பார்கள். அழகு எப் போதும் தொடர்புடைய உணர்வுதான் என்பது புரியும் போது காலம் கடந்திருக்கும்.

எனக்குத் தெரிந்த ஒரு மாணவன் 10-ம் வகுப்பில் 500-க்கு பெற்ற மதிப்பெண்களைவிட மேனிலை வகுப்பில் 1,200-க்கு பெற்ற மதிப்பெண்கள் குறைவு. கற்பனைகளுக்கு உருவம் கொடுத்து கனவுகளில் மிதந்ததால் வழுக்கி விழுந்த வரலாறு அது.

எங்கள் பள்ளி மேனிலை ஆனபோது ஆண்கள் மட்டும் படித்த பல பள்ளி மாணவர்கள் அங்கு சங்கமமாயினர். அவர்களுக்கு அதுவரை பெண்களின் வாசனையே கிடையாது. அவர்கள் அந்தப் புதிய அனுபவத்தில் வசமிழந்து போனதைப் பார்த்திருக்கிறேன். அவர் கள் மேற்படிப்புக் கனவுகள் சபலத்தின் காரணமாக சரிந்ததைக் கண்டிருக்கிறேன்.

இது கல்லூரியிலும் தொடர்வது உண்டு. மழலையர் வகுப்பில் இருந்து மேநிலை வரை ஆண்கள் மட்டுமே படிக்கும் வகுப்புகளில் படித்தவர்கள் கல்லூரிக்கு வந்ததும், அங்கிருக்கும் அத்தனை பெண்களும் மென்னடை போட்டு ஓடும் தேவதைகளாகத் தென்படுவார்கள்.

அவர்கள் பாட்டுப் போட்டிகளில் ஜாடையாகப் பாடி தங்கள் கனியாத காதலைத் தெரிவிப்பார்கள். இன்னும் சிலரோ முகத்தில் பச்சை குத்தாத குறையாக சிலர் பெயரை உதட்டில் இச்சை குத்தித் திரிவார்கள். எங்கள் கல்லூரியிலேயே நான்காண்டு பட்டப் படிப்பை கடைசி வரை முடிக்காமல் போனவர்கள் உண்டு.

ஆனாலும் அது ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே இடைவெளி இருந்த காலம். அன்று பெண்கள் தங்குவதற்குத் தனி வளாகம். அவர்கள் அரங்கத்தில் படம் பார்க்க தனி நேரம். நாடகப் போட்டிகள் நடக்கும். ஆனால், ஆண்களே அனைத்திலும் பங்கு பெறுவார்கள். பெண்கள் வேடத்தில் மீசை சரியாக முளைக்காத மாணவர்கள் நடிப்பார்கள். குரலை பெண்மையாக்க பெரி தும் முயல்வார்கள். எங்கள் பல்கலைக்கழகத்திலேயே பல முன்மொழிவுகள் உரிய நேரத்தில் வைக்கப்படும். தள்ளப்பட்டவை நூறு என்றால், கொள்ளப்பட்டவை ஒன்றிரண்டு உண்டு. அந்த சொர்க்கத்திலேயே சில திருமணங்கள் நிச்சயிக்கப்படுவது உண்டு. நடந்த பிறகு வாழ்க்கை நரகமாக மாற இணைந்த வேகத்தில் பிரிந்தவர் உண்டு. நீடித்து நெடு வாழ்வு வாழ்பவரும் உண்டு.

 

பேதம் குறைந்த தமிழ்நாடு

இன்று ஆண் - பெண் பேதம் தமிழகத்தில் வெகுவாகக் குறைந்துவிட்டது. பள்ளியிலும், கல்லூரியிலும் மாணவ - மாணவியர் சகஜமாகப் பேசிப் பரிமாறிக்கொள்கிறார்கள். ஒருவர் எழுதிய நோட்டை அடுத்தவர் வாங்கிப் படிக்கிறார்கள். சந்தேகம் கேட்டுத் தெளிகிறார்கள். சேர்ந்து தேநீர் பருகுவது சகஜமாகி இருக்கிறது. நூலகத்துக்கு ஒன்றாகச் செல்கிறார்கள். ‘வாடா’ ‘போடா’ என அழைப்பது இயல்பாகியிருக்கிறது. அதற்கு எந்த மாணவனும் கோபித்துக்கொண்டதாகத் தெரியவில்லை. எங்கள் கல்லூரிப் பருவத்தில் அப்படி யாரும் அழைத்தும், கேட்டும் பழக்கமில்லை. இரண்டு பெண்கள் ஓர் ஆணோடு அமர்ந்து பேசுவதும், இரண்டு மூன்று ஆண்களோடு ஒரு பெண் சொந்த ஊருக்கு தொடர்வண்டியில் பயணிப்பதும் இன்று யாருக்கும் விகற்பமாகப் படவில்லை. மாணவிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் வகுப்புத் தோழர்கள் மருத்துவமனைக்கு அழைத் துச் செல்கிறார்கள். ரத்தம் தரவும் சித்தம் செய்கிறார்கள்.

 

வீடு வரை நட்பு

மகள் வேறொருவரோடு நட்பாகப் பழகுவதை அனுமதிக்கும் பெற்றோர் இன்று. வீடுவரை மகளின் வகுப்புத் தோழனை அழைத்து வந்தாலும் மரியாதை கொடுத்து சவரட்சணை செய் யும் மனப்பான்மை. இரண்டு வீட்டுப் பெற்றோரும் அறிமுகமாகிக்கொள்ளும் அளவு விசாலமான பழக்கவழக்கம். ‘பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருக்கக் கூடாது’ என்ற பழைய பஞ்சாங்கத்தை உதறி எறிந்துவிட்டு ‘என் மகள் தவறு செய்ய மாட்டாள்’ என்ற திடமான நம்பிக்கை. அன்று ஆண் ஓட்டுகிற இருசக்கர வாகனத்தில் அந்நியப் பெண் அமர்ந்து செல்வது தீயாய்ப் பரவும் செய்தி. இன்று ஏற்றிக்கொள்வதும், பயணம் செய்வதும் சாதாரணம். இவற்றையெல்லாம் கண்டுகொள்ளவோ, பெரிதுபடுத்தவோ யாருக்கும் நேரம் இருப்பதில்லை.

அன்று வகுப்புத் தோழியிடம் ‘இன்று உன் உடை அழகாக இருக்கிறது’ என்று சொன்னால் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு செல்லும் மனப்பான்மை இருந்தது. இன்று புலனத்தில் ‘நீ அழகு’ என்று தகவல் அனுப்பினால் கைகூப்புகிற சமிக்ஞைகளை அனுப்புவது சாதாரணம். எந்த மாணவனாவது தோழியிடம் விரும்புவதாகச் சொன்னால் ஏற்றுக்கொள்வதிலும், மறுப்பதிலும் கண்ணியம் காட்டுகிற பெரும்போக்கு ஏற்பட்டிருக்கிறது. மறுத்து விட்டால் ஒரு சில இடங்களில் நிகழும் வன்மத்தைத் தவிர மற்ற நேர்வுகளில் ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று சொல்லி திருமணத்துக் கும் செல்லும் தாராளம் இருக்கிறது.

சென்னைக் கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்காக நடந்த கிளர்ச்சியில் எத்தனையோ கல்லூரி மாணவர்கள் சில பகல் இரவுகளாக தவமிருந்தனர். அங்கேயே உணவு, உறக்கம் என்று போராட்டத்தின் நோக்கத்தை அடையும்வரை தீர்க்கமாக இருந்தனர். அங்கே பெற் றோர் துணிச்சலாக தங்கள் மகள்களை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் அங்கு கோஷமிட்டார்கள். மற்ற மாண வர்களோடு கலந்து குரல் கொடுத்தார்கள். அவர்களைக் கண்காணிக்க யாருமில்லை. அவர்களே தங்களுக்கு வேலி யாக இருந்தார்கள்.

வட இந்தியாவில் இருந்து வந்த என் நண்பர் ‘மாணவ - மாணவியர் ஒன்றாக ஈடுபடும் இத்தகைய கிளர்ச்சிக்கு வடக் கில் வாய்ப்பே இல்லை’ என்று சிலாகித்தார்.

சின்ன அசம்பாவிதம்கூட நடக்காமல் அத்தனை இதயங்களிலும் அன்புச் சுவடுகளை மட்டும் பதித்துவிட்டு விலகிச் சென்றது அந்தப் பெருங்கூட்டம். 30 ஆண்டுகளுக்கு முன்பு இது சாத்திய மாகி இருக்குமா என்பதை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியாது.

- நினைவுகள் படரும்...

http://tamil.thehindu.com/general/literature/article23888969.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரையாத நினைவுத் தொடர் மிக அருமையாக உள்ளது. பகுதி 1 மட்டுமே படித்து முடித்துள்ளேன். எம் கடந்து வந்த பதைகளை மீட்டிப் பார்க்க வைக்கும் ஒரு தொடராக இருக்குமென்று அடுத்த பகுதிகளின் படங்களைப் பார்த்து புரிந்து கெள்ள முடிகிறது. பகிர்வுக்கு நன்றிகள் நவீனன்.

Link to comment
Share on other sites

காற்றில் கரையாத நினைவுகள் 13: இரவல் பழக்கம்!

 

 
22chmbn%20%20cheliyan%20art
 
 
 

ஏழ்மையிலும் செம்மை இருந்த காலம் ஒன்று இருந்தது. பற்றாக்குறையிலும் உள்ளம் நிரம்பி வழிந்தது. பக்கத்து வீடும் நம் வீட்டின் நீட்சியாக நகரங்களிலும் அன்புக் கரம் நீட்டிய மனநிலை அன்று. எப்போது வேண்டுமானால் நம்மிடம் இல்லாததைப் பக்கத்து வீடுகளில் கேட்டுப் பெறலாம் என்பது எத்தனை பெரிய வசதி. அன்று பண்டம் மாற்றுமுறை பாசத்தால் நிகழ்ந்தது. புதிதாக நம் வீட்டு வத்தக் குழம்பு சின்னக் கிண்ணத்தில் அடுத்த வீட்டுக்குப் பயணிக்கும். அங்கு வைத்த மிளகு ரசம் இங்கு பதிலுக்கு வந்து சேரும். எந்த விசேஷமாக இருந்தாலும் அதற்காகச் செய்த பலகாரம் சுற்றியுள்ள வீடுகளுக் கும் சுடச்சுட வழங்கப்படும்.

நம் வீட்டு முருங்கை அதிகம் காய்த்தால், அது அடுத்த வீட்டினர் சாம்பார் வைப்பதற்காகவும். பக்கத்து வீட்டு செவ்வாழை தார் போட்டால் தண்டும் பழமும் கண்டிப்பாக நம் சமையலுக்கு வந்து சேரும். பால்காரர் மாடு கன்று போட்டதும் மறக்காமல் சீம்பால் அளிப்பது உண்டு. அதற்காகவே நாங்கள் அவர்கள் வைத்திருக்கும் மாடு எப்போது கன்று போடும் என்று காத்திருந்ததும் உண்டு. பாலில் கலக்கும் தண்ணீரை சீம்பாலால் அவர்கள் சரிசெய்து விடுவார்கள். இருப்பவர் இல்லாதவருக்குத் தருவதும், அதிகம் இருப்பவர் அடுத்தவரிடம் பகிர்வதும், யாரும் உபதேசிக்காமல் அன்று மக்கள் கடைப்பிடித்த நெறிமுறையாக இருந்தது.

 

ஒரே பொருளாதார நிலையில் இருப்பவர்கள் அருகருகே வாழ்ந்த சூழல் அது. எல்லோரிடமும் அவ்வப்போது பற்றாக்குறை தலைநீட்டும். அதை புரையேறும் தலையைத் தட்டிக்கொடுப்பதைப் போல சுற்றியிருப்பவர்கள் தங்கள் தாராளத்தால் அமுக்கி விடுவார்கள்.

 

’ரெண்டு தீக்குச்சி வேண்டும்’

நாங்கள் சிறுவராக இருக்கும்போது எங்கள் வீட்டுக்கு எதிரே மாட்டு வண்டி ஓட்டும் அண்ணன் தம்பிகள் ஐவர் இருந்தனர். அவர்களுக்கு நாங்கள் வைத்த பெயர் ’பஞ்ச பாண்டவர்’. காலையில் பள்ளிக்குச் செல்லும் வழியில் நாங்கள் தட்டுப்பட்டால் ஒற்றைக் கைகொடுத்து எங்களை ஏற்றிக்கொண்டு பயணித்துப் பள்ளியில் இறக்கிவிடுவார்கள். நூறு கிலோ அரிசி மூட்டைகளை அலாக்காக முதுகில் தூக்குவார்கள். உடலில் இரும்பையும் உள்ளத்தில் காந்தத்தையும் வைத்திருந்தவர்கள் அவர்கள். சமயத்தில் தீக்குச்சிகளை இரவல் கேட்டு இரவில் வருவார்கள். தீப்பெட்டிகூட சமயத்தில் வாங்க முடியாத சூழல் இருந்ததை இன்றையத் தலைமுறை நம்ப மறுக்கும்.

அந்தத் தோழர்கள் வீட்டுப் பெண்கள் அரிசி களைந்து, பருப்பு வேகவைத்து, சாதம் வடித்து பானையில் ஊற்றிய நீரையெல்லாம் எடுத்துக்கொண்டு, கைநிறைய சாணத்தை வீட்டில் போட்டுவிட்டுச் செல்வார்கள். சமயத்தில் மிஞ்சிய குழம்பையும், சோற்றையும் கொடுத்தால் மறுக்காமல் வாங்கிச் செல்வார்கள். நள்ளிரவில் அரிக்கன் விளக்கோடு வெளியே வந்தால் அலறியடித்துக்கொண்டு ’என்ன ஆபத்தோ!’ என்று விசாரிக்க வருவார்கள். ’அண்ணன்’ என்றும் ’தம்பி’ என்றும் உறவு வைத்து அளவளாவுவார்கள். அத்தனை அந்நியோன்யம்.

அன்று அவசரத்திற்கொன்று கேட்பது கவுரவக் குறைச்சல் அல்ல. அதிகாலையில் காப்பித் தூள் டப்பா வறண்டி ருப்பதைப் பார்த்து, பக்கத்து வீட்டில் ஒரு குவளை இரவல் வாங்கி திருப்பித் தருவது உண்டு. இரண்டு நாட்கள் வெளியூர் சென்றுவிட்டு வந்தால் பாலுக்குப் புரையூற்ற பக்கத்து வீட்டில் இரண்டு கரண்டி தயிர் வாங்கி வருவது உண்டு. அவற்றையெல்லாம் மகிழ்ச்சியோடு கொடுத்தார்கள், மன நிறைவோடு பகிர்ந்தார்கள்.

 

ஜமுக்காளமும் மடக்கு நாற்காலியும்

மரச் சாமான்கள் அன்று விலை அதிகம். வீட்டடுக்கான முக்கியப் பொருட்களில் அவற்றிற்கு முதலிடம் இல்லை. பெரும்பாலும் பெண்களுக்கு பாயே விரியும். கொஞ்சம் வசதி இருந்தால் ஜமக்காளம் விரிக்கப்படும். ஆண்கள் அமர ஒன்றிரண்டு இரும்பு மடக்கு நாற்காலிகள். சிறுவர்கள் தரையில் அமர வேண்டும். வருகிற உருப்படி அதிகமானால் மர ஸ்டூல்கள் மேலிருக்கும் அரிசி டின்கள் இறக்கப்பட்டு துணியால் அவசரமாக சுத்தம் செய்யப்பட்டு இருக்கைகளாக மாறும். இன்னும் சிலர் கூடுதலாக வந்தால் அண்டை வீடுகளில் இருந்து நாற்காலிகள் இறக்குமதி செய்யப்படும். விருந்தினர் சென்றதும் உடனடியாகத் திருப்பி ஒப்படைக்கப்படும். ஏணி என்பது ஒரு சில வீடுகளில் மட்டுமே இருக்கும்.

பரணில் இருக்கும் பாத்திரம் எடுக்கவும், கூரையில் ஏறி பழுது பார்க்கவும் வேண்டியபோது அடுத்தவர் ஏணி நமக்கு ஏற்றம் தர சித்தமாக இருக்கும். மரணம் என்பது பெரும்பாலும் வயோதிகத்தில் வரும். இறந்தவரை சாய வைக்கிற நாற்காலிகூட இரவலாய்ப் போகிற இடங்கள் உண்டு.

நம்மிடம் போதிய நாற்காலிகள் இல்லையே என்று யாரும் வருத்தப்பட்டதில்லை. உடனே இரவல் வாங்கி வர மகன்கள் என்கிற இரு காலிகள் இருந்ததால். தோசை சுடுவதற்கு அம்மாக்கள் கைவசம் முக்காலி இருக்கும். விருந்தினர் அமர்ந்து சாப்பிட நான்கைந்து பலகைகள் இருந்தன. தரையில் அமர்ந்து சாப்பிடும்போது அளவோடு சாப்பிட்டதோடு மட்டுமல்லாமல், மூட்டு வலியும் முழங்கால் வலியும் வராமல் எல்லோரும் திடமாக இருந்தார்கள்.

 

பக்கத்து வீட்டு அட்டிகை

அவசரம் என்றால் அடுத்த வீட்டினரிடம் மிதிவண்டியை இரவல் வாங்குவது உண்டு. திருப்பும்போது மரியாதைக்காக காற்றை நிரப்பித் தருவார்கள். சமையல் எரிவாயு திடீரெனத் தீரும்போது பக்கத்து வீட்டு உபயத்தால் அடுப்பைப் பற்ற வைப்பதும் உண்டு. அன்று கத்தி முதல் சுத்தி வரை தேவையான பொருளை வழங்கிக்கொள்வதில் நட்பும், உரிமையும் சோம்பல் முறித்தன. கைக்கும் வாய்க்குமே வருமானம் நீடிக்கும் பரிதாப நிலை நடுத்தரக் குடும்பங்களில் நர்த்தனமாடியது. பெண் பார்க்க வருகிறபோது பக்கத்து வீட்டு அட்டிகைகூட பெண்ணின் கழுத்தை அலங்கரிக்கப் பயன்படும்.

இரவல் என்பது சின்ன நகரங்களில் மட்டுமே இருந்தது. கிராமங்களில் யார் வேண்டுமானாலும் எந்த வேப்ப மரத்திலும் பல் துலக்க குச்சியை ஒடித்துக்கொள்ளலாம். எந்த மோட்டார் ஓடினாலும் தங்கள் துணிகளை மூட்டையாக எடுத்துச் சென்று துவைத்துக்கொள்ளலாம். ஓடுகிற தண்ணீரில் சிண்டுகள் சோப்புத் தேய்த்துக் குளித்துக்கொள்ளலாம்.

அதற்காகவே பெரிய தொட்டிகள். உழவர்கள் தங்கள் நிலத்தில் இன்றும் வாணிகம் செய்வதில்லை. வருவோர் போவோர் ஆசையோடு மாங்காய் கேட்டால் காசு வாங்காமல் பறித்துத் தருவார்கள். கரும்பு வயல்களில் அங்கேயே ஒடித்து ருசிக்கத் தடையில்லை. குழந்தைகளுக்குப் பால் என்று கேட்டால் பணம் பெற்றுக் கொடுப்பதில்லை. இந்த அரிய பண்புகளால் சிற்றூர்களில் இன்னமும் மனிதம் ஜீவித்திருக்கிறது.

வீட்டுக்குள்ளேயும் இரவல் உண்டு. அண்ணன் வளர்ந்ததும் தம்பிக்கு அந்த சட்டை தானாக வரும். அக்காவின் தாவணி தங்கைக்குத் தாரை வார்க்கப்படும். ஐந்தாவது படிக்கும் அண்ணன் முழு ஆண்டுத் தேர்வு முடிந்ததும் நான்காம் வகுப்பை முடித்த தம்பிக்கு புத்தகங்களை அப்படியே ஒப்படைக்க, அவன் அதிலேயே படிப்பைத் தொடரும் சிக்கனங்கள் உண்டு. வசதியற்ற மாணவர்கள் மற்றோர் படித்த புத்தகங்களை அரை விலைக்கு வாங்கி அவற்றை வைத்துத் தேறுவது உண்டு. வண்ணப் பென்சில்கள் வீட்டின் பொதுவுடைமை. வேண்டியபோது அண்ணன் தம்பிகள் எடுத்துப் பயன்படுத்தி மீள வைப்பது மரபு.

இன்று பொதுவுடைமை என்பது இல்லத்துக்குள்ளேயே இல்லை. அண்ணனுக்கு வாங்குவதை தம்பிக்கும் தருவிக்க வேண்டும்.

இல்லாவிட்டால் தகராறு. அவசரத்துக்கு என்று அடுத்தவரிடம் கேட்பது அநாகரிகம். அழுகி எறிவார்களே தவிர, பகிர்ந்து மகிழ மாட்டார்கள். பற்றாக்குறை இல்லாத நிலை பல வீடுகளில் இன்று இருக்கிறது. பெட்டியில் இல்லாத வறுமை உள்ளத்தை நிறைத்திருப்பது உண்மை.

- நினைவுகள் படரும்...

http://tamil.thehindu.com/opinion/blogs/article23956344.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

காற்றில் கரையாத நினைவுகள் 14: பள்ளிக்கூடம் போகலாம்!

 

 
 
cheliyan%20art
 
 

அருகில் இருக்கும் பள்ளியே அழகான பள்ளி. அன்று சில குடும்பங்களில் அத்தனை வசதிகள் இருந்தாலும், பொங்கிப் பெருகும் செல்வம் கொழித்தாலும் நகரத்துக்குச் சென்று பிள்ளைகள் படித்து வருகிற வழக்கமில்லை. அப்பா, அம்மாவுடனேயே குழந்தைகள் தங்கி, கிராமத்துப் பள்ளியில் படிப்பதே வாடிக்கை. இன்றிருப்பதுபோல விடுதியில் தங்கிப் படிக்க வைப்பதும், மதிப்பெண்களைக் கொட்ட வைக்கும் பள்ளிகளில் அனுமதித்து, பெற்றோர் அங்கேயே அறையெடுத்துத் தங்கும் அவலமும் அன்றில்லை.

பள்ளி என்பது படிக்க மட்டுமல்ல; ஒன்றாகச் சேர்ந்து விளையாடவும், அன்பையும் பண்பையும் கற்கவும் அது நாற்றங்கால். கட்டிடம் முக்கியமல்ல. தரையின் ஜொலிப்பு அவசியமல்ல. நடத்தும் ஆசிரியரின் ஆளுமையும் முக்கியமல்ல. காலை முதல் மாலை வரை பள்ளி வளாகத்தில் குழந்தைகள் பட்டாம்பூச்சியாகச் சிறகடித்துப் பறந்தால் போதுமென பெற்றோர் நினைத்த காலம் அது.

 

பள்ளியில் சேர பிறப்புச் சான்றிதழ் கூட அன்று தேவையில்லை. வலது கையால் தலைக்கு மேல் வைத்து இடது காதை முழுமையாகத் தொட் டால் படிக்கிற வயது வந்துவிட்டது என்று பொருள். குள்ளமாக இருந்த தால் எனக்கு எட்டவில்லை. இருந்தா லும் சேர்த்துக் கொண்டனர். இன்று வரை எட்டாமல்தான் இருக்கிறது. பள்ளிக்கு முதல் நாள் செல்ல அன்று குழந்தைகள் அழுததில்லை. வீட்டில் யாரும் பொத்திப் பொத்தி வளர்க்காத தால் பள்ளி எங்களை பயமுறுத்தவில்லை.

 

பாட்டும், எழுத்தும் படிப்பு

அன்று பெரும்பாலும் மாணவர்கள் நடந்தே வருவார்கள். ஒரு சில வசதி யான குடும்பங்கள் குழந்தைகளை மிதிவண்டியில் கொண்டுவந்து விட ஆள் வைத்திருப்பார்கள். பள்ளியில் தாமதமானால் மகன்களைத் தேடும் தந்தையுமில்லை, அழைத்துச் செல் லும் அயர்ச்சியும் இல்லை. படிப்பைக் காற்றடிப்பதுபோல கஷ்டப்பட்டு மூளைக்கு அனுப்பும் முயற்சியும் இல்லை. தனிப்பாடம் என்பது ஆரம்பப் பள்ளியில் கிடையவே கிடையாது. படிப்பு என்பது பாட்டும், எழுத்தும்.

ஆரம்பப் பள்ளியில் அத்தனை பாடத்துக்கும் ஒரே ஆசிரியர். காலை முதல் மாலை வரை வகுப்பறை அந்த ஒருவர் கண்காணிப்பில் தவழும் தாய்மடி. கை பிடித்து சின்னப் பலகையில் ஆனா, ஆவன்னா எழுதக் கற்றுத் தருவார்கள். பல்பத் தால் எழுதிய பாடத்தை அழித்த பிறகும் சுவடுகள் இருக்கும். பள்ளித் தோழன் பலகை யைத் துடைக்க கற் றுத் தந்த உத்தி ஒன்று. உள்ளங்கைகள் இரண்டையும் அதன் மேல் வைத்து ‘காக்கா காக்கா தண்ணி போடு, குருவிகிட்ட சொல்லாதே’ என்போம். கை வியர்வையை தண்ணீர் என நினைத்து பலகையைச் சுத்தம் செய்வோம். நண்பன் ஒருவன் இலை ஒன்றைக் காண்பித்து படிப்புத் தழை என்று பறித்து பையில் வைப்பான். அதை வைத்தால் படிப்பு நன்றாக வருமாம். நானும் செய்திருக்கிறேன். அது அழுகி துர்நாற்றம் வந்ததோடு சரி. மாம்பழம் வரைய தமிழ் எழுத்து ‘மு’வை எழுதி சுழிப்பதைச் செய்து உள்ளிருப்பவற்றை அழிப்பது எளிய வழி.

அன்று அகல உழுவதைவிட ஆழ உழுதது அதிகம். எங்களுக்கு முதல் வகுப்பில் சரஸ்வதி டீச்சர். மாணவர்களுக்கு இன்னொரு தாயாய் இருப்பார். எந்தக் குழந்தையையும் அவர் திட்டியது இல்லை. காலையில் பள்ளியில் பிரார்த்தனை நடக்கும்.

 

முதல் பூ டீச்சருக்குத்தான்

இரண்டாம் வகுப்பில் பென்சில் அறிமுகமாகும். காகிதம் எழுதத் தரப் படும். எங்களுக்குச் சொல்லிக் கொடுத்த சாவித்திரி டீச்சர் கத்தரிக் காய் எவ்வளவு நல்லது என்று வகுப்பெடுத்தார். அதுவரை கத்தரிக்காயைத் தொடாமல் இருந்த நான், அதற்குப் பிறகு சுவைத்துச் சாப்பிடத் தொடங்கினேன். ஆசிரியர் வாக்கே வேத வாக்கு.

மூன்றாம் வகுப்பில் ஜோதி டீச்சர். அவ்வளவு எளிமையாக எங்களுக்கு ஆங்கிலத்தை அறிமுகப்படுத்தினார். அத்தனை மாணவர்களிடமும் சிரித்த முகத்துடன் நடந்துகொள்வார். மூன் றாம் வகுப்பில்தான் ஆங்கில எழுத்துகள் கற்றுத் தரப்பட்டன. எழுதப் பேனாவும் எங்களுக் குத் தரப்படும். ஆண்டு தொடக்கத்தில் பெறுகிற பேனாவை முழுஆண்டுத் தேர்வு வரை பாதுகாக்க வேண்டும். அவ்வப்போது கீழே விழுந்து உடைந்து முள் (நிப்) முறியும். புது முள்ளுக்கு 3 பைசா. நீல மசியை நிரப்ப 3 பைசா. கருப்பு மையை நிரப்ப 4 பைசா. நாளடைவில் தேய்ந்து முள் பட்டையடிக்க ஆரம்பிக்கும். புது முள் கொஞ்சம் அழுத்தமாக எழுத, அதன் நடுவே பிளேடை விட்டு நெம்புவதும் உண்டு. சமயத்தில் பேனா லீக்கடித்து சட்டைப் பை மசியால் நனைவதும் உண்டு. நான்காம் வகுப்பிலும், ஐந் தாம் வகுப்பிலும் கமலாட்சி டீச்சர். பள்ளி முடியும் வரை கண்டிப்பு, அதற்குப் பிறகு கனிவு.

வீட்டுப் பாடம் என்பது அரை மணி நேர வேலை. ஒன்றாம் வகுப்பில் சின்னக் கரும்பலகையின் இரண்டு பக்கமும் எழுதும் அளவே வீட்டுப் பாடம். இரண்டாம் வகுப்பில் 16-ம் வாய்ப் பாடு வரை பலமுறை எழுதி எதைக் கேட்டாலும் உடனடியாகச் சொல்ல வேண்டும். திண்ணையிலேயே அமர்ந்து வீட்டுப் பாடத்தை முடித்த பிறகு உள்ளே நுழைவோம். அதற்குப் பிறகு விளையாட்டு மட்டுமே. இருட்டும் வரை விளையாட்டு. பின்னர் வீட்டுக்கு வந்து கை, கால் அலம்பி சாப்பிட்ட பிறகு சுகமான தூக்கம். வீட்டில் எப்போதும் ஆசிரியர் பற்றியே பேச்சு இருக்கும். ஒவ்வோர் ஆண்டும் வகுப்பாசிரியருக்கு பொங்கல் வாழ்த்து அட்டையை கைப்பட வரைந்து, அனுப்புவதற்கு காசு இல்லாததால் அப்படியே வைத்திருப்போம். வீட்டுச் செடியில் முத லில் பூத்த சாமந்தியை டீச்சருக்கு எடுத்துச் செல்வதில் அப்படியொரு பெருமை.

 

நண்பனை காணவில்லை

ஆண்டுத் தொடக்கத்தில் வாங்கித் தருகிற இரண்டு, மூன்று ஜோடி சீருடை மட்டுமே. அவற்றில் கழுத்துப் பட்டை நுனியில் மஞ்சள் தடவி அணிந்து செல்வோம். முக்கால்வாசி மாணவர்கள் மதிய இடைவேளையில் வீட்டுக்கு வந்து உணவருந்திவிட்டுச் செல்வார்கள். குடிநீர்க் குப்பிகளை தூக்கிச் செல்லும் வழக்கமில்லை. பள்ளியின் குடிநீர்க் குழாயில் கைகளைக் குவித்து கவ லையின்றி நீர் பருகி நிம்மதியாக இருந்தோம். பள்ளி வேலைகளை குழுவாக மாணவர் செய்த காலம் அது. அடுப்புக் கரி, ஊமத்தங்காய் ஆகியவற்றை அரைத்து வகுப்பறைக் கரும்பலகையில் மாணவர்கள் அவ்வப்போது பூசுவார்கள். மண் பானை யில் தண்ணீர் கொண்டு வர ஒரு குழு. பெருக்க ஒரு குழு. பிரார்த்தனை மைதானத்தை கூட்டுவதற்கு ஒரு குழு.

என்னோடு மூன்றாம் வகுப்பு வரை ஒன்றாகப் பள்ளிக்குச் சேர்ந்து செல் கிற நண்பன் ஒருவன் உண்டு. நான்காம் வகுப்பு தொடங்கும்போது என்னை அழைத்துச் செல்ல அவன் வரவில்லை. காத்திருந்து பார்த்திருந்துவிட்டு, களைத்துப் போய் அவசர அவசரமாக பள்ளிக்கு ஓடினேன். வகுப்பிலும் அவன் இல்லை. ஒரு வாரம் கழித்து நான் படித்த மூன்றாம் வகுப்பைக் கடக்கும்போது அவனை அங்கு பார்த்தேன். எல்லாக் காலத்திலும் தேர்ச்சி பெறாமல் போவது ஒருவித சோகம்தான்.

நாங்கள் துவைத்த உடையோடு பள்ளிக்குச் செல்கையில் ஓரிரு மாணவர்கள் அங்கங்கே சலவை செய்த கூர்மையான உடைகளுடன் பள்ளிப் பேருந்துக்கு காத்திருப்பதைப் பார்ப்போம்.

 

சீருடை கூர்மையும் புத்தி கூர்மையும்

எங்கள் கையில் அத்தனை புத்தகங்களையும் அட்டவணை என்கிற பாகுபாடே இல்லாமல் சுமக்கும் பை. அவர்களிடமோ பளபளக்கும் சின்ன அலுமினியப் பெட்டி. அவர்கள் மிகவும் உயர்ந்த படிப்பைப் படிக்கிறார்கள் என்கிற எண்ணம். உயர்நிலைப் பள்ளி யில் சேர்ந்து ஆறாம் வகுப்பில் அவர்கள் வந்து எங்களோடு இணையும்போது அது எவ்வளவு பெரிய தவறு என்பது புரியும். சீருடையின் கூர்மைக்கும், புத்திக் கூர்மைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

இன்று மழலையர் பள்ளியில் சேர்வதற்கே மகத்தான கூட்டம். முதல் நாளே சென்று விண்ணப்பம் வாங்க வீதியில் படுத்து பெற்றோர் காத்திருக் கும் பள்ளிகளும் உண்டு. பள்ளி இறுதி வரை கங்காரு குட்டிகளைச் சுமப்பதுபோல பெற்றோர் காபந்து செய்யும் நடைமுறை.

படிப்பு என்பது நிகழ்காலத்தைத் தவறவிட்டு எதிர்காலத்தை மட்டுமே கருத்தில் கொள்ளும் திட்டமிட்ட முதலீடு இன்று.

- நினைவுகள் படரும்...

http://tamil.thehindu.com/opinion/blogs/article24085252.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான அட்டகாசமான தொடர். தமிழகத்து வாழ்க்கை முறையுடன் எழுதப்பட்டாலும் அப்படியே 100 % எங்கள் வாழ்க்கையுடனும் பொருந்திப் போகின்றது. தொடருங்கள் நவீனன்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

காற்றில் கரையாத நினைவுகள்! 15: பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு

 

 
12chmbn%20%20cheliyan%20art
 
 
 

‘அந்தக் காலத்தில்‘ என்று ஆரம்பித்தாலே வயதாகிவிட்டது என்று பொருள். ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் நடந்த மாற்றங்கள் முந்தைய 500 ஆண்டு களுக்கான வளர்ச்சியை அனைத்துத் துறையிலும் உள்ளடக்கியது என்பதால்,50 ஆண்டுகள் ஆயுள் நிறையப் பெற்றவர்க்கு சென்ற ஆண்டே யுகமாகத் தோன்றும் விசித்திரம் உண்டு.

நாங்கள் பள்ளி சேரும்போது பெரும்பாலும் அப்பா வந்தது இல்லை. பல சிறுவர்களுக்கு அம்மா மட்டுமே வருவார். அதற்குப் பிறகு அம்மாவும் வந்தது இல்லை. அந்தந்தப் பகுதி யில் இருக்கும் மாணவர்கள் அங்குள்ள பள்ளியில் சேருவது நடைமுறையாக இருந்தது. யாரும் பள்ளியின் நீள அகலங்களை வைத்து தரம் பிரித்துப் பார்த்தது இல்லை. பள்ளி செல்வது பல் துலக்குவதைப் போல இயல்பாக இருந்த காலம் அது. காலையில் அதிகம் தூங்கினால் எட்டி உதைக்கப்பட்டு எழுப்பப்பட்ட குழந்தைகள் உண்டு. யாரும் ‘நேரத்துக்குப் போ’ என உசுப்பியதும் இல்லை, ‘நிறைய மதிப்பெண் பெறு’ என்று உற்சாகப்படுத்தியதும் இல்லை. பள்ளியில் அதிகம் குறும்பு செய்யும் மாணவனை மிரட்டும் உச்சபட்ச எச்சரிக்கையே, ‘அம்மாவை அழைத்துவரச் சொல்லி விடுவேன்’ என்பதே.

 

சிலேட்டும் சின்ன குறிப்பும்

 

ஆசிரியர்கள் யாரென்று தெரிந்துகொள்ளாமலேயே ஆரம்பப் பள்ளிப் படிப்பு முடிந்துவிடும். நாங்களாகச் சென்று வீட்டில் சகல நேரமும் ஆசிரி யர் பெருமை பேசுவோம். அன்று சிறுவர்களுக்கு டீச்சரே உலகம். எங்களுக்கு நம்பகமான கலைக் களஞ்சியமே எங்கள் வகுப்பு ஆசிரியர்தான். அவர் நன்மதிப்பைப் பெற்றுவிட மாட்டோமா என்பது பெரிய எதிர்பார்ப்பு. ‘நன்று’ என வீட்டுப் பாடத்தில் ஆசிரி யர் எழுதிவிட்டால், சிலேட்டை அழிக்காமல் அனைவரிடமும் காட்டி மகிழ்வோம்.

‘உங்கள் மகன் ஒழுங்காகப் படிக்கவில்லை’ என்கிற சின்ன குறிப்புகூட வீட்டுக்கு அனுப்பப்பட்டது இல்லை. தேர்வு முடிந்ததும் பெற்றோரிடம் கை யொப்பம் வாங்கி வர ‘ரேங்க் ஷீட்’ தரப்படும். என்ன மதிப்பெண் பெற்று இருந்தாலும் சிறிய கடிதலுடன் அது கையெழுத்தாகிவிடும்.

உயர்நிலைப் பள்ளியில் சேர மாற்று சான்றிதழ் எங்கள் வசமே கொடுக்கப்பட்டுவிடும். அதற்குப் பிறகு அருகில் இருக்கும் உயர்நிலைப் பள்ளியே எங்களுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம். அன்று சேர்க்க மட்டும் யாரேனும் ஒரு பெற்றோர் வருவார். அதிகக் கெடு பிடி இல்லாமல் சேர்க்கை நடக்கும். அந்தந்த உயர்நிலைப் பள்ளிக்கு என்று அணைக்கு நீர்ப் பிடிப்புப் பகுதி இருப்ப தைப் போல குறிப்பிட்ட தொடக்கப் பள்ளிகள் உண்டு. அங்கிருந்து வருபவருக்கு அவசியம் இடமுண்டு.

 

பெற்றோரின் பெருந்தவம்

எனக்காக என் அப்பா ஒருநாளும் பள்ளிக்கு வந் தது இல்லை. பெரும்பாலான மாணவர்களுக்கு அன்று அதுவே நிலைமை. ஆண்டு விழாக்களில் பல மாணவர்கள் பரிசு பெறும் போது புகைப்படம் எடுக்கவும் ஆள் இருக்காது. அவற்றைக் குறித்து லட்சியம் செய்யவும் பெருமைப் படவும் அன்றையப் பெற்றோருக்கு அவகாசம் இல்லை. இன்றோ போட்டி யில் தோற்ற மகனுக்கு கடையில் கோப்பை வாங்கித் தரும் பெற்றோர் உண்டு.

‘என்ன படிக்கிறான்’, ‘ஏது படிக்கி றான்’ என்று தெரியாமலேயே பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் உண்டு. விடிய விடிய விழித்து தேநீர் தயாரித்து மகனின் மனப்பாடத்தைப் பரிசோதிக் கும் பெற்றோர் அன்று கிடையாது. கைக்கும் வாய்க்குமாய் நாட்களைத் தள்ளிய காலத்தில் அதற்கெல்லாம் அவகாசம் இல்லை.

இன்று தேர்தல் முடிவை தொலைக்காட்சியில் பார்ப்பதுபோல தேர்வு முடிவுகளைப் பற்றி ஆர்வமாய் அறியும் பழக்கமும் இல்லை. கல்லூரியில் அனுமதிப்பதற்கு மட்டும் பெற்றோர் வருவது உண்டு.

இன்று மழலையர் பள்ளியில் சேர்க்கவே பெற்றோர் பெருந்தவம் புரிகின்றனர். இடம் கிடைக்குமா என்று மடி யில் நெருப்புடன் மன்றாடுகின்றனர். விருப்பமான பள்ளியில் இடம் கிடைத் தால் அங்கப்பிரதட்சணம் செய்கிற பெற்றோரும் உண்டு. மழலையர் பள்ளியில்கூட மாதம் ஒருமுறை பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு.

பதற்றத்துடன் பற்கள் படபடக்க நிற் கும் பெற்றோரைப் பார்க்கலாம். திருப் பதி தரிசனத்துக்கு முந்துவதைப் போல வகுப்பாசிரியரை முதலில் பார்க்க தள்ளுமுள்ளுவில் ஈடுபடும் ஆர்வக்கோளாறுகளும் உண்டு. மக னைப் பற்றி நான்கு வார்த்தைகள் நல்லபடி கேட்டால் முகம் மெய்ஞானம் அடைந்ததைப் போன்ற பரவசத்துடன் பளபளக்கும். அங்கு வகுப்பறையில் ஒட்டப்பட்டிருக்கும் படக்குறிப்புகளைப் பார்த்து மளமளவென குறிப்புகள் எடுக்கும் அம்மாக்கள் உண்டு. அதிலிருக்கும் செய்தியை ஆசிரியர் கற்றுத் தருவதற்கு முன்பு உணவை ஊட்டும்போது சொல்லிக் கொடுத்து முதலிடம் பெற வைக்கும் முயற்சிக்காகவே அந்தக் கடும் உழைப்பு.

 

மனதில் கட்டிய மலைக் கோட்டை

எந்த வீட்டிலாவது முணுக் முணுக் என விளக்கு மங்கலாக எரியும் வெளிச்சத்தில் பெற்றோர் இருவரும் தலையில் துண்டு போட்டுக்கொள் ளாத சோகத்துடன் அமைதியாக அமர்ந்திருந்தால் அன்று அவர்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு நடந்திருக்கிறது என்றும், நல்லபடியாக நான்கு வார்த்தைகள் மகனைப் பற்றியோ, மகளைப் பற்றியோ ஆசிரியர் சொல்லவில்லை என்றும் தெரிந்துகொள்ளலாம். அந்த ஒரு நிமிடத்தில் அவர்கள் மனத்தில் கட்டிய மலைக்கோட்டை சரிந்து விழுந்ததால் இந்த சோகக் காட்சி. இந்த சந்திப்புகளில் பெரும்பாலான பெற்றோருக்கு இருக்கும் பதற்றமே, ‘நம் குழந்தை முட்டாளாகப் பிறந்துவிட்டதோ’ என்பதே. ‘உங்கள் மகன் மகிழ்ச்சியாக இருக்கிறான், பள்ளி பிடித்திருக்கிறது’ என்று எல்லாவற்றையும் நேர்மமறையாகச் சொல் லும் பள்ளிகள் பல உண்டு. அவர்கள் மகனைப் பற்றி மட்டும் பின்னூட்டம் கேட்டால் பிரச்சினை இல்லை. அடுத்த வர் மகனைப் பற்றி உயர்வாகச் சொன்னவற்றை தன் மகனுக்கு சொல்லவில்லையே என்ற ஆதங்கமே அதிகம். இப்பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பில் ஒரு நன்மை ஏற்படுவது உண்டு. அது குறும்பு செய்யும் குழந்தைகளின் தாய்மார்கள் நெருக்கமாகிவிடுகிறார்கள். எல்லாம் ஓர் ஆறுதலை முன்வைத்துத்தான்.

இன்று தொலைபேசி புலனம் வழி யாக வீட்டுப்பாடம் அஞ்சல்வழிக் கல்விபோல அனுப்பப்படுவதுண்டு. ஒரு நாள் உடல்நலத்தால் விடுப்பு எடுத்தாலும் வீட்டுப்பாடம் செய்வது விடு படக்கூடாதாம். இதனால் குழந்தைகள் ‘பள்ளிக்கே சென்றிருக்கலாம்’ என்று பரிதவிப்பது உண்டு.

 

யார் எதிர்கொள்வது

முதன்முறை எதிர்மறை பின்னூட் டம் கிடைத்துவிட்டால் அதற்குப் பிறகு நிகழும் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பிற்கு யார் செல்வது என்று கணவன் - மனைவிக்குள் சண்டை சச்சரவு நடப்பதுண்டு. எந்தப் பெற்றோராவது வாரி சைப் பற்றி நல்ல அபிப்பிராயம் கிடைத்துவிட்டால் ‘பாரத் ரத்னா’ கிடைத்ததைப்போல உச்சாணி மகிழ்ச்சிக்குச் சென்று விடுவதுண்டு.

இன்று பள்ளிக்கு கொண்டுவிடுவதும், கூட்டிவருவதும் நிதமும் செய்யும் பெற்றோர் உண்டு. அவர்கள் பள்ளி யின் வாசலில் அக்கூட்டத்தில் தங்கள் குழந்தை எங்கே வருகிறது என வழி மேல் விழிவைத்து காத்திருப்பது கண்கொள்ளாக் காட்சி. சீருடையில் அத்தனை குழந்தைகளும் ஒரே மாதிரி இருப்பார்களே!

 

கரை சேர்க்கும் பொறுப்பு

இன்று வீடுகள் பள்ளிகளின் நீட்சி. அன்றோ பள்ளி வீடுகளின் நீட்சி. பெற்றோரே தலைமையாசிரியராகும் அவலம். மகனுக்காக விடுப்பெடுத்துக்கொண்டு படிப்பு கற்றுத் தரும் காலம். அவர்களே படித்திருந்தால் அதிக மதிப்பெண்கள் எடுத்திருப்பார்கள். பெற்றோரைவிட்டால் அவர்களே தேர்வு எழுதவும் சம்மதிப்பார்கள்.

இதற்கெல்லாம் காரணம் பெற் றோர் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்ததும் அங்கு அவர்களை ஒப்படைத்து விட்டதாகவும், அவர்களைக் கரையேற்றும் பொறுப்பு பள்ளிக்கே இருப்பதாகவும் கருதுவதே காரணம்.

தங்களால் முடியாமல் போனவற்றை வாரிசுகள் சாதிக்க வேண்டும் என்ற ஆசையேஅதற்கு மூலம். அன்று கோபம் வந்தால் ஆசிரியர்கள் முது கில் இரண்டு தட்டு, தலையில் ஒரு கொட்டு என்று அப்போதே நேர்செய்து விடுவார்கள். இப்போது ஆசிரியர்-பெற்றோர் சந்திப்பு வரை அடக்கி வைத்திருக்கிறார்கள், பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளை மீட்க ‘நீலச் சிலுவை’ அமைப்பு ஒன்று தேவைப்படும் காலத்தில் நாம் இருக்கிறோம்.

- நினைவுகள் சுடரும்...

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

காற்றில் கரையாத நினைவுகள் : தேர்வெனும் அனுபவம்

 

 
26chmbn%20kkn%20padam

அன்று படிப்பு என்பது தேர்வுக்கு முதல் நாள். அன்று மட்டும் கூட்டுப் புழுவாய் கவனம் சிதறாமல் நடத்திய பாடங்களை நன்றாகப் படித்தால் போதும். தேர்ச்சி பெறுவதே இலக்காக இருந்தது. ஆசிரியர் நடத்துவதே அன்று போதும். அவர்கள் கொடுக்கும் வீட்டுப் பாடம், கற்றுத் தருகிற வரைபட அறிவு, எழுதுகிற கட்டுரை நோட்டு போன்றவற்றை முறையாகச் செய்தால் வெற்றி நிச்சயம். வகுப்பில் பாடம் நடத்திய பிறகு புத்தகத்திலேயே பாடத்தில் இறுதியில் இருக்கும் கேள்விகளுக்கான பதில்களைக் குறித்துக் கொடுப்பார்கள். அவற்றை முழுதாகப் படித்தால் போதும். அப்போதும் இருந்தன மாதத் தேர்வுகள், காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு. ஆனாலும் நடந்தன வலிக்காமல் தேர்வுகள். தேர்வு குறித்து பெற்றோர் கவலை கொண்டதும் இல்லை, பள்ளி அவர்களை பயமுறுத்தியதும் இல்லை. ஆண்டுதோறும் நடக்கும் பொதுத் தேர்வுகளை ஏதோ ஒலிம்பிக் போட்டிபோல முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக அன்று பத்திரிகைகள் அச்சடித்ததும் இல்லை. மாதத் தேர்வுக்கு நாமே கொண்டுபோக வேண்டும் விடையெழுதும் தாள்கள். அரையாண்டு, காலாண்டு என்றால் பள்ளி முத்திரையோடு வெள்ளைத் தாள்கள் விநியோகிக்கப்படும்.

தேர்வு குறித்த அச்சமில்லாத காலம் அது. மதிப்பெண்கள் குறித்து பெற் றோர் கன்னத்தில் கைவைத்தபடி காத்திருக்காத யுகம் அது. நான்கைந்து பிள்ளைகள் இருக்கும் வீட்டில் எந்தப் பிள்ளை என்ன வகுப்பு படிக்கிறது என்பதே தெரியாமல், தப்பாகச் சொல்லும் அப்பாக்கள் உண்டு. சமயத்தில் அண் ணன் தவறி தம்பியுடன் ஒரே வகுப்பில் படிக்கிற நிகழ்வுகளும் உண்டு. அதற்காக அண்ணன் குற்ற உணர்வில் குறுகியதும் இல்லை, தம்பி தற்பெருமையில் தளும்பியதும் இல்லை.

 

 

அப்போது ஏது கைக் கடிகாரம்?

இயற்கை அறிவு வெளிப்படவே தேர்வு. தேர்வு வருகிறபோது அன்று மாணவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பெறுகிற மதிப்பெண்களை எண்ணியல்ல, தேர்வுக்குப் பின் வருகிற விடு முறையை எண்ணி. ஒவ்வொரு தேர்வு முடிந்ததும் மாலையில் படிக்கத் தொடங்கும் வரை விளையாட்டு தொடரும். ’சென்று படி’ என்று வற்புறுத்தும் பெற்றோரும் இல்லை, அடுத்த மாணவனை ஒப்பிட்டு ஓட நினைத்த போட்டியாளரும் இல்லை.

அப்போது ஏது கைக் கடிகாரம்? வகுப்பறைக்கொரு கடிகாரம்கூட இருந்ததில்லை. தேர்வு தொடங்கியதும் அரை மணி நேரத்துக்கு ஒருமுறை பள்ளி மணியடித்து எச்சரிக்கை செய்யும். கண்காணிப்பு ஆசிரியர் ‘அரை மணி நேரம் முடிந்தது. இன் னும் 2 மணி நேரம் இருக்கி றது’ என்று கறாராகச் சொல்வார். தண்ணீர்க் குப்பிகளை யாரும் எடுத் துச் சென்றதும் இல்லை. எழுதுகிற அவசரத்தில் தாகம் எங்கே எடுக்கும்? இருந்தாலும் பள்ளி அலுவலக உதவியாளர் ஒரு வாளியில் குடிநீரோடு வகுப்பு வகுப்பாகச் சென்று தண்ணீர் தருவார். அதைக்கூட விரைவாக வாங்கிக் குடித்து முடித்து பரீட்சையைத் தொடர்வோம். கடைசி 10 மணித் துளி இருக்கும்போது 2 முறை எச்சரிக்கை மணி அடிக்கும். உடனே கண்காணிப்பாளர் ‘விடைத்தாளைக் கட்டிவிட்டு எழுதுங்கள்’ என கண்டிப்புடன் சொல்வார். கடைசி மணி அடித்ததும் விடைத் தாள்கள் தேர்வெழுதும் மாணவர் களிடம் இருந்து பிடுங்கப்படும். ஆனால், அதற்கு ஒருநாளும் வாய்ப்புத் தந்ததில்லை. யார் முதலில் வெளியே வருவது என்பதே அங்கு முக்கியமான போட்டி.

 

பாஸ் மார்க் 35

எப்படி தேர்வு எழுதியிருந்தாலும் காலாண்டு விடுமுறையில் களியாட்டங்களுக்குக் குறைவில்லை. விடு முறையை நாங்கள் துய்க்கக் கூடாது என்பதில் குறியாக இருப்பதைப் போல பள்ளி ஆசிரியர்கள் கட்டளை ஒன்றைப் பிறப்பிப்பார்கள். ‘வினாத் தாள்கள் அனைத்துக்கும் விடுமுறை முடிந்து வரும்போது விடையெழுதிக் கொண்டுவர வேண்டும்’ என்பதே அந்த மரண தண்டனைக்கு நிகரான நிபந்தனை. நாங்கள் எழுதிச் சென்றதும் இல்லை, அவர்கள் கேட்டு நச்சரித்ததும் இல்லை. அவர்கள் அடிப்பதைப் போல அடித்தார்கள், ஆனால் நாங்கள் அழுவதைப் போல அழவில்லை.

அன்று படிப்பில் கனிவு இருந்தாலும் கட்டுப்பாட்டில் பள்ளிகள் கடுமையாக இருந்தன. எங்கள் பள்ளியில் எதிலும் பாரபட்சம் இருந்ததே இல்லை. காப்பிஅடித்த ஆசிரியரின் மகனே தேர்வு அறையில் இருந்து அனுப்பப்பட்டு, அதே வகுப்பில் படிப்பைத் தொடர்ந்த தும் உண்டு. தேர்வுத் தாளைத் திருத்து கிற ஆசிரியர், தன் மகன் எழுதியதற்கு மட்டும் அதிக மதிப்பெண் போட்ட சம்பவங்களும் உண்டு.

தேர்வு விடுமுறைகள்தோறும் விசேஷங்கள் உண்டு. அரையாண்டு விடுமுறை முடிகிறபோது பொங்கல் திருவிழா வரும். கடைசி விடுமுறை நாளைப் போல சோகமானது மாணவன் வாழ்வில் எதுவும் இருக்காது. அதைப் போல விரைவில் முடிகிற ஒன்றும் இருக்காது. தேர்ச்சி பெறுவதற்கு 35 மதிப்பெண்கள் என்றாலும் 30 பெற்றாலே அடுத்த வகுப்புக்கு அனுப்பிவிடுவதும் உண்டு. அன்று முழு ஆண்டுத் தேர்வின் முடிவு அஞ்சலட்டையில் வீட்டுக்கே வரும்.

 

கடைசி நாள் டீ பார்ட்டி

எந்தப் பாடத்துக்கும் நோட்ஸை (வழி காட்டி) மாணவர்கள் பயன்படுத்தியது இல்லை. தமிழ் பாடத்துக்கு எல்லோரிடமும் ‘கோனார் உரை’ இருக்கும்.

‘படிப்பு விடுப்பு’ 10 நாள் உண்டு. பலர் அப்போதுதான் படிக்கத் தொடங்குவார்கள். 8-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு. 11-ம் வகுப்புக்கு அப்போது விருப்பப் பாடம் உண்டு. பல பேர் அதிக மதிப்பெண் பெறலாம் என்று கணக்கை எடுத்து கஷ்டப்படுவார்கள். பள்ளி இறுதித் தேர்வுக்கு முன்பு 3 ‘திருப்புதல் தேர்வுகள்’ நடக்கும். மாணவர் மன்றம் நடத்தும் சிறப்புத் தேர்வுகளும் உண்டு.

அப்போதெல்லாம் ஆண்டு விழா ஆண்டு இறுதியில்தான் நடக்கும். கலை நிகழ்ச்சிகளுக்கு ஒத்திகை நடக்கும். பள்ளியை விட்டு பிரிந்து செல்லும் மாணவர்களுக்குத் ‘தேநீர் விருந்து’ (டீ பார்ட்டி) நடக்கும். மாணவர்கள் பங்களிப்புடன் ஆசிரியர்களுக்குச் செய்யும் கவுரவம் அது. விருந்தென்றால் ஓர் இனிப்பு, கொஞ்சம் காராபூந்தி, குளிர்பானம் அவ்வளவுதான். அந்தக் காலத்தில் எப்போதாவது மட்டுமே தின்பதற்கு இனிப்பு கிடைக்கும். வகுப்பு வகுப்பாக புகைப்படம் எடுக்கும் பழக்கமும் அப்போது இருந்தது. இன்று ஆண்டு விழா பல பள்ளிகளில் ஜூலை மாதமே நடக்கிறது

தேர்ச்சி பெறாத மாணவர்களை யாரும் இழித்துப் பேசியதில்லை. அவர்கள் படித்த வகுப்பிலேயே தங்கி இளைய மாணவர்களுடன் ஐக்கியமாவார்கள். விளையாட்டில் கெட்டிக்கார மாணவர்கள் சிலர், ‘‘பள்ளிக்குத் தாங்கள் தொடர்ந்து போட்டிகளில் விளையாட வேண்டுமென்று ‘ஃபெயில்’ செய்துவிட்டார்கள்’’ என்று சொல்லித் திரிவார்கள்.

தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வெற்றியைக் கொண்டாட முனைவதுண்டு. அன்று கொண்டாட்டம் என்றால் அருகில் இருக்கும் திரையரங்கில் படம் பார்ப்பது மட்டுமே. தேர்ச்சி பெறாத மாணவர்களும் அவர்களோடு சேர்ந்துகொள்வார்கள்.

வாழ்க்கையே முடிந்துவிட்டதாக பூதாகரமான எண்ணங்களை மனதில் தாங்கி விபரீத முடிவுகளை யாரும் எண்ணிப் பார்த்ததில்லை. காரணம், அன்று போட்டி இல்லை. பொறாமை இல்லை.

 

கோடையிலும் வகுப்பு

11-ம் வகுப்பு படித்துவிட்டு பணிக் குச் சென்றவர்கள் அதிகம். அரசுப் பணி கிடைத்ததால் படிப்பைப் பாதி யில் விட்டவர் உண்டு. பள்ளி இறுதித் தேர்வு மதிப்பெண்களை வைத்து தபால் இலாக்காவில் நேரடி பணி நியமனம் பெற்றவர் உண்டு.

இன்று தேர்வு என்பது போருக்குப் புறப்படுவதைப்போல. பெற்றோர் நெற்றியில் திலகம் வைத்து அனுப்பு கிறார்கள். மகன் மேனிலை வகுப்பு என்றால் முடிவு வெளியாகும்போது அத்தனை பேரும் தொலைபேசியில் என்ன மதிப்பெண் என்று விசாரித்து துளைத்து எடுக்கிறார்கள். இன்று கோடையிலும் வகுப்பு. விதவிதமான பயிற்சி. தினம் ஒரு தேர்வு. எப்போதும் படிப்பு. படித்தவற்றை உடனே மறந்து, அடுத்தவற்றை நினைவில் கொள்ளும் அவசரம்.

மறுபடியும் தேர்வை தேர்வாகவே பார்க்கும் காலம் ஒன்று வராதா!

- நினைவுகள் படரும்...

http://tamil.thehindu.com/opinion/blogs/article24259697.ece

Link to comment
Share on other sites

காற்றில் கரையாத நினைவுகள் 18: நட்பெனும் நிழலில்!

 

 
 
03chmbn%20%20cheliyan%20art
 
 

அன்று நட்பை வசிக்கும் இருப்பிடமும், படிக்கும் பள்ளியுமே தீர்மானித்தன. ஒரே பகுதியில் குடியிருப்பவர்கள் பெரும்பாலும் ஒரே பள்ளியில் படிப்பார்கள். அண்ணன்கள் இருவரும் ஒரே வகுப்பிலும், தம்பிகள் இருவரும் ஒரே வகுப்பிலும் படிக்க குடும்பங்கள் இரண்டும் நெருங்கிவிடும். அன்று பரீட்சை என்பது முதல்நாள் படிப்பு என்பதால் கூடிப் பேசவும், ஓடி ஆடவும் அவகாசம் இருந்தது.

நண்பர்களை விளையாட்டு என்கிற கண்ணுக்குத் தெரியாத கயிறே இணைத்தது. நன்றாகப் படிக்கிற மாணவனை நண்பன் எனச் சொல்வதைவிட, அதிகமாக கோல் அடிக்கிற மாணவனை நண்பன் எனச் சொல்வதே அன்று பெருமையாக இருந்தது.

ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போதே எங்களுக்கு அகலமான மைதானங்கள் தட்டில் வைத்துத் தரப்பட்டன. அதிகம் ஆக்கிரமிக்கப்படாத வீட்டுமனைகள் உள்ள பகுதி என்பதால் காலியிடங்களெல்லாம் கால்பந்து மைதானங்கள்; அரைகுறைக் கட்டிடங்கள் எல்லாம் கண்ணாமூச்சி விளையாட்டரங்கங்கள். எப்போதும் விளையாட்டு, பருவத்துக்கு ஏற்ப விளையாட்டு. பொங்கல் பண்டிகை சமயத்தில் கடைகளில் பம்பரம் வந்துவிடும். கோடைக் காலத்தில் கில்லி தாண்டல். அவ்வப்போது பச்சைக் குதிரை, சோடா மூடியை வட்டத்துக்குள் வைத்து சல்லியால் அடித்து வெற்றி பெறுவது என்று பணமே இல்லாத பலவித விளையாட்டுகள். பந்து மட்டும் இருந்தால் ஒருவருக்கொருவர் அடித்து விளையாடும் சூரப்பந்து. கொஞ்சம் வசதி இருந்தால் கட்டுமானச் செங்கல் ஸ்டம்ப்ஸ் ஆகும். விறகுக் கட்டைதான் பந்து அடிக்கும் மட்டை.

 

கால்சட்டையில் ‘தபால்பெட்டி’

 

அன்று மாவட்டம் முழுவதும் ஒன்றிரெண்டு பணக்காரப் பள்ளிகள் மட்டுமே. மற்றவற்றில் அனைவரும் சங்கமம். எனவே, ஏற்றத் தாழ்வற்ற நட்பு நிலவியது. என்னுடன் தொடக்கப் பள்ளியில் படித்த அன்வரும், அரவிந்தனும் நெருங்கிய நண்பர்கள். அரவிந்தனோ துணிக்கடை வைத்திருப்பவரின் மகன். அன்வரின் தந்தையோ மாட்டுவண்டி வைத்திருந்த எளிய மனிதர். எங்களுக்கு இடையே எந்த இடைவெளியும் நட்பில் இருந்தது இல்லை. சில மாணவர்களுக்கு கால்சட்டையில் கிழிசல் இருக்கும். மற்றவர் அதை ‘தபால்பெட்டி’ என்று கேலி செய்வார்கள். அந்த கால் சட்டையை அணிந்த மாணவனும் அதற்கு சிரித்துக்கொள்வான். அந்த நொடியோடு அந்தக் கேலி மறைந்துவிடும்.

ஏழை மாணவர்களே பள்ளிக்குக் காசு கொண்டு வருவார்கள். வீட்டில் கூழ் குடித்தாலும் பள்ளியில் விருப்பமானதை வாங்கித் தின்னட்டும் என்பதில் அவர்களின் பெற்றோர் குறியாக இருந்தனர். அம்மாணவர்கள் வாங்குகிற தேன்மிட்டாயையும், சவ்வு மிட்டாயையும் அத்தனை நண்பர்களுக்கும் பகிர்ந்து தருவார்கள்.

கமர்கட்டை சட்டை நுனியில் மடித்து ‘காக்காய் கடி’ கடித்துத் தருவார்கள். எச்சிலால் நோய் வரும் என எடுத்துச் சொல்ல ஆளும் இல்லை; அதை நினைத்துப் பார்க்கும் மனமும் அப்போது இல்லை. எந்த மாணவனுக்காவது இருமல் வந்தால் நண்பன் சென்று ‘சளி மிட்டாய்’ என்ற ஒன்றை வாங்கி வந்து தருவான். அதோடு இருமல் நின்றுவிடும்.

நண்பர்களுக்குள் சண்டைகளும் வரும். ஆனால், அது வீடுவரை போகாது. எந்த மாணவனும் சண்டைபோட்டு அடி வாங்கியதை புகாராகச் சொன்னது இல்லை. அடுத்த நாளே சண்டைபோட்ட மாணவர் இருவரும் சமமாக அமர்ந்து கதைகள் பேசி சிரித்திருப்பார்கள்.

 

மாணவர் திரைப்படம்

ஆண்டு இறுதியில் தேர்ச்சி பெற்றது தெரிந்ததும் பழைய நோட்டுகளை எல்லாம் எடுத்துச் சென்று எடைக்குப் போட்டு காசு பெறுவது வழக்கம். அதில் சக மாணவர்களுக்குத் தின்பண்டம் வாங்கித் தருவதும் உண்டு. ‘மாணவர் திரைப்படம்’ என்று ஆண்டுக்கொரு முறை திரையிடப்படும். பள்ளிக்கூடமே அந்தத் திரைப்படத்துக்கு எங்களை அழைத்துச் செல்லும். பள்ளிப் போட்டிகளில் யார் முதல் பரிசு பெற்றாலும் அனைத்து மாணவர்களும் ஆசையாக கைத் தட்டுவார்கள். இன்று பள்ளிகளில் பரிசளிக்கும்போது கைத் தட்ட ஆளே இல்லை. அடிக்கடி கைத் தட்டும்படி அறிவிப்புகள் மட்டுமே ஒலிக்கின்றன. அடுக்கடுக்காகப் பரிசுகள் தந்தால் கைத் தட்டுவது எப்படி இயல்பாய் நிகழும்.

நாங்கள் உயர்நிலைப் பள்ளிக்கு வரும்போது ஆங்கில ஊடகத்தில் தொடக்கத்தில் இருந்து படித்த சில மாணவர்கள் வந்து சேர்வார்கள். அவர்கள் பேசுகிற நுனிநாக்கு ஆங்கிலத்தைக் கண்டு நாங்கள் தாழ்வு மனப்பான்மையில் தவழ்வது உண்டு. ஆனால், ஓரிரு மாதங்களில் அவர்களையும் எங்களைப் போலவே தமிழில் பேச தயார் செய்துவிடுவோம். மாலை நேரத்தில் மைதானத்தில் அமர்ந்து குழுவாய்ச் சேர்ந்து படிக்கிற வகுப்புகள் அன்றைக்கு இருந்தன.

 

இரும்புக் கை மாயாவி

என்னுடன் படித்த மாணவர் ஒருவர், திலீப் என்று பெயர். மூக்குப்பொடி கம்பெனிக்குச் சொந்தக்காரர். அவர் கொண்டுவந்த மூக்குப் பொடியை மாணவர் ஒருவர் வாங்கி மற்றவர் மூக்குகளில் திணித்து ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி வரை சொல்லி அவர்கள் ‘எச்’ என்று தும்முவதைக் கண்டு சிரிப்பது உண்டு. ஓரிரு மாணவர் வாங்கும் ‘இரும்புக் கை மாயாவி’, ‘பெய்ரூட்டில் ஜானி’, ‘மஞ்சள் பூ மர்மம்’ போன்ற காமிக்ஸ் புத்தகங்கள் வகுப்பறையையே வலம் வரும்.

ஆண்டு முழுவதும் சீருடை கட்டாயம். தீபாவளிக்கு மறுநாள் மட்டும் வண்ண உடையில் வரலாம் என்ற விதித் தளர்வு உண்டு. அப்போது கிறிஸ்துமஸுக்கு வாங்கிய புதுத் துணியையும், ரம்ஜானுக்கு வாங்கிய புதுச் சட்டையையும் அணிந்துகொண்டு அந்த மாணவர்கள் வருவது உண்டு.

கல்லூரிக்கு படிக்க வரும்போது ‘நட்பு’ என்பது அன்பினால் மட்டுமே அன்று நிகழ்ந்தது. பலதரப்பட்ட பொருளாதாரப் பின்னணியில் இருந்து மாணவர்கள் கல்லூரியில் சேர்வார்கள். அவர்கள் இணக்கத்தை பணம், காசு தீர்மானிக்காது. ஏழை மாணவன் ஒருவனுக்கு விடுதிக் கட்டணம் கட்ட தாமதமானால் மற்றொரு மாணவன் மனம் உவந்து கட்டுவான். சுற்றுலாச் செல்லும் இடங்களில் யாராவது பணத்தைத் தொலைத்துவிட்டால், எல்லோரும் கொஞ்சம் பங்களித்து அந்த மாணவனுக்கு செலவுக்குக் கொடுப்பார்கள். எந்த மாணவனாவது விபத்தில் சிக்கினால் ஓடிச் சென்று ரத்தம் கொடுக்கும் நண்பர்கள் இருந்தார்கள்.

இன்றும் எங்கள் பள்ளியில் படித்து சேலத்திலேயே பணியாற்றும் மாணவர்கள் அன்று இருந்ததைப் போலவே இன்றும் நெருக்கமாக இருக்கிறார்கள். அடிக்கடி சந்திக்கிறார்கள். ஒருவருக்கொருவர் ஒத்தாசை செய்துகொள்கிறார்கள். யாருக்கேனும் பிரச்சினை என்றால் ஓடிச்சென்று உதவுகிறார்கள். சின்ன வயதில் பள்ளியில் இட்ட நட்பு உரம் இன்று வரை கனிகளைத் தந்து பசியாற்றுகிறது.

 

‘என்னை மறந்துவிடாதே...’

என்னுடன் ஐந்தாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்த மாணவன் ராஜசேகர். உயர்நிலைப் பள்ளியில் வேறு பிரிவுக்குச் சென்றுவிட்டார். ஒரு நாள் மாலையில் பள்ளி திரும்பும்போது ‘அன்பு’ என யாரோ கூப்பிட திரும்பிப் பார்த்தேன். கையில் மண்வெட்டியுடன் ராஜசேகர். ‘‘அப்பா இறந்துவிட்டார். படிக்க இயலாதச் சூழல். கொத்துவேலைக்கு வந்துவிட்டேன். என்னை மறந்துவிடாதே’’ என்றார். அன்று இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. இப்போது எங்கிருக்கிறாரோ தெரியவில்லை.

என்னோடு ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்த நண்பர்கள் உண்டு. அன்று அமைதியாக இருந்த ஹரன் இன்று ‘பாரதியார்’ நாடகத்தில் சுப்பிரமணிய சிவா பாத்திரத்தில் கலக்குகிறார். உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் எங்கள் பள்ளி நட்புகளை ‘புலனம்’ (வாட்ஸ் அப்) என்கிற ஒற்றைச் சரடு இணைத்துவிட்டது. அவர்கள் ஒருமையில் என்னை அழைத்தாலும் என்னால் அவர்களை அப்படி அழைக்க முடியவில்லை. ஒரே இடத்தில் ஓடினாலும் இறங்கும்போது இன்னொரு வெள்ளமாக இருக்கும் நதிகள் அவர்கள் என்பதால்.

இன்றோ பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாவட்டரீதியாகவும், சாதிரீதியாகவும் நட்பு எல்லைகள் சில இடங்களில் குறுகிவிட்டன.

பிரிவுகளைத் தாண்டிய அன்றைய நட்பில் எதேச்சையாக அறிமுகமாகி, நாகையில் நான் சார் ஆட்சியராகப் பணிபுரிந்தபோது என்னுடன் தங்கிப் படித்த சுரேஷ் என்கிற நண்பர், துணை ஆட்சியராகத் தேர்வு பெற்றார். திருவில்லிப்புத்தூருக்கு அவர் திருமணத்துக்குச் சென்றிருந்த நான், பால்கோவா வாங்கி வந்தேன். அந்தப் பால்கோவா தீர்வதற்குள் அவருடைய மரணம் சம்பவித்து விட்டது.

ஒவ்வொரு நல்ல நண்பரின் எண்ணையும் அலைபேசியில் இருந்து அகற்றுவதைவிடப் பெரிய சோகம் எதுவுமில்லை.

- நினைவுகள் படரும்...

http://tamil.thehindu.com/opinion/blogs/article24317741.ece

Link to comment
Share on other sites

காற்றில் கரையாத நினைவுகள்! 19: பண்டிகை, பலகாரம், புத்தாடை!

 

kkjpg

ஒரு நுகர்வில் ஏற்கெனவே முழுமையாக தயாரிக்கப்பட்டவற்றை சமூகம் தேர்ந்தெடுக்கத் தொடங்கினால் மற்றவற்றிலும் அதைக் கடைப்பிடிக்கும் என்பதற்கு சாட்சியாக இன்றைய பண்டிகைகள் குறித்த அணுகுமுறைகள் இருக்கின்றன.

புதுத்துணி என்பது மகிழ்ச்சியான ஒன்றாக இருந்த காலம் உண்டு. அடுத்த நாள் புதுத்துணி போடப்போகிறோம் என்றால் முதல் நாளே மனத்தில் மகிழ்ச்சி மத்தளமடிக்கும். முழுஆண்டு விடுமுறைக்குப் பிறகு பள்ளிக்கூடம் திறக்கப்படும்போது அடுத்த நாள் புதுப் பேனா, புதுநோட்டு, புதுப் பை, புதுச் சீருடை என அனைத்தும் புத்தம்புதிது என்பதில் மெத்த மகிழ்ச்சி ஏற்படும்.

 

துணி எடுப்பது ஒரு பக்கமென்றால், அதைத் தைப்பது இன்னொரு பக்கம். கோடை விடுமுறையில் சீருடைக்கான துணியும், ஆண்டுக்குத் தேவையான வண்ணத் துணிகளும் எடுக்கப்படும். அன்று ஆண்டுக்கான நுகர்வு மனப்பான்மை பல நேர்வுகளில் இருந்தது. வருடம் முழுவதும் தேவையான பருப்பு, புளி, அரிசி ஆகியவற்றை ஒரே சமயத்தில் வாங்கி வைப்பர். ‘வருடத்துப் பண்டம்’ என்று அவற்றை அழைப்பார்கள். துணிகளிலும் அதே அணுகுமுறை.

‘ஊதா கலரு’ சட்டை

பள்ளி திறக்கப்படுகிறது என்றால் விடுமுறை முடிந்து நண்பர்களைப் பார்க்கும் ஆர்வமும், புதுச் சீருடையுடன் போகும் குதூகலமும் இதயத்தில் ஏறிக்கொள்ளும். எங்களுக்கு தொடக்கப் பள்ளியில் வெள்ளைச் சட்டை, நீலக் காற்சட்டை. உயர்நிலைப் பள்ளியில் வெள்ளைச் சட்டை, காக்கி காற்சட்டை. வெள்ளையும் மருவி மருவிநாளடைவில் காக்கிக் கலருக்கு வந்துவிடும். சிலர் நீலத்தை கண்டபடி கலந்து ‘ஊதா கலர்’ சட்டையுடன் வருவார்கள். அன்று சொட்டு நீலமெல்லாம் இல்லை.

பெற்றோரே தொடக்கத்தில் பிள்ளைகளுக்குத் துணியெடுத்து வருவார்கள். பிறகு, கொஞ்சம் வளர்ந்ததும் குழந்தைகளை அழைத்துச் சென்றாலும் பெற்றோரே துணிகளைத் தேர்ந்தெடுப்பார்கள். பின்னர் பெற்றோர் தேர்வு செய்ததில் எது வேண்டும் என்பதை பிள்ளைகள் தேர்ந்தெடுக்கும் விருப்புரிமை மட்டும் வழங்கப்படும். தோளுக்கு வளர்ந்ததும் துணியெடுக்க பணம் தரப்படும். அதற்குள் விருப்பமானதை எடுத்து வரலாம். அப்போது 500 ரூபாயைத் தாண்டினால் கடைக்காரர் மஞ்சள் பை ஒன்றை இலவசமாகத் தருவார். அதைப் பெறுவதற்கு சிலர் வாக்குவாதம் நடத்துவார்கள். துணியெடுத்து திரும்பி வரும்போது சிற்றுண்டிச்சாலையில் அனைவருக்கும் உணவு. அந்த உணவு அவ்வளவு தித்திப்பு.

தீபாவளிக்கு மட்டும் சிறப்பாக அதிகப் பணத்தில் துணியெடுத்துத் தருவார்கள். துணியைத் தைத்துக் கொடுக்க குடும்பத் தையல்காரர் இருப்பார். அவர் தைத்துக்கொடுக்க கடைசி வரை இழுத்தடிப்பார். அதைத் தைத்து வாங்கி வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். விடியும் வரை காத்திருந்து வாங்கி வந்த நிகழ்வுகளும் உண்டு.

முற்றத்தில் சிரிக்கும் கோலம்

பண்டிகைகள் அன்று ஆண்டு முழுவதும் உண்டு. அவற்றுக்காக சின்னச் சின்ன பலகாரங்கள் வீட்டிலேயே செய்யப்படும். ஆடி முதல் தேதி தேங்காய் சுடுவது; கார்த்திகைக்குப் பொரி; சரஸ்வதி பூஜைக்கு கடலை, பொரி, சுண்டல்; தமிழ்ப் புத்தாண்டு தொடக்கத்துக்கு பாயாசம்; பிள்ளையார் சதுர்த்திக்கு கொழுக்கட்டை என்று எளிய பலகாரங்கள் அக்கம்பக்கத்து வீடுகளை ஒன்றிணைத்தன. ஆளுக்கொரு பணி செய்தால் மட்டுமே பண்டிகை சிறக்கும்.ஆயுத பூஜைக்குப் பிள்ளைகள் அனைவரும் கதவு, ஜன்னலைத் துடைக்க வேண்டும். பிறகு அவற்றுக்கு பொட்டு வைக்கப்படும். அத்தனை உபகரணங்களும் சுத்தமாக்கப்படும்.

முதல் நாள் பூஜை போட்டவரே அடுத்த நாள் பூஜை போடும் வரை அவற்றை எடுத்து உபயோகிக்க முடியாது. புத்தகங்கள் அனைத்தையும் பூஜைக்கு வைத்துவிடுவோம். பொங்கலன்று இரவு அக்காமார்கள் வாசலில் பல மணி நேரம் பிரயாசப்பட்டு பெரிய பெரிய கோலம் போடுவார்கள். செம்மண் சரிகையுடன் வெள்ளைக் கோலங்கள் வீட்டு முற்றத்தில் சிரிக்கும். வீடுகளில் முறுக்கை அடைக்கும் டின்கள் கட்டாயம் இருக்கும்.

சீடை எப்படி இருக்கும்?

பண்டிகைகளில் எதற்கும் இல்லாத சிறப்பு நகர்ப்புரத்தில் தீபாவளிக்கு உண்டு. பெரும்பாலும் முறுக்கு அல்லது காராபூந்தி. அம்மாவே தயாரிக்கும் லட்டு, அல்லது மைசூர் பா. அவ்வப்போது கொசுறாக அதிரசம். கிருஷ்ணர் ஜெயந்தியை சில மாணவர்கள் சீடையோடு கொண்டாடியதாகச் சொல்வார்கள். எனக்குசீடை என்றால் தெரியாது. சொன்னவனை ‘கொண்டுவந்து காட்டு’ என்றேன். அவனும் ‘நாளை கொண்டு வருகிறேன்’ என ஒவ்வொரு நாளும் சொல்லி கடைசி வரை கொண்டுவரவே இல்லை.

இன்று எல்லாம் தயார்நிலையில் கிடைக்கின்றன. வாசலில் ஒட்டுகிற நெகிழிக்கோலங்கள். ஏனென்றால் இன்று பலருக்கு குனிந்தால் நிமிர முடியாது. தரையிலே அமர்ந்து கோலமிட இயலாது. சீடை, முறுக்கு என பண்டிகைக்குத் தகுந்தவாறு பொட்டலம் கட்டி விற்பனைக்குத் தயார். பிள்ளையார் சதுர்த்திக்கு கொழுக்கட்டைகள் விற்கப்படுகின்றன.

தீபாவளிக்குப் பல்வேறு இனிப்புகளை வாங்கி வர சீட்டுப்போடும் பழக்கம் பல இடங்களில் முளைத்துவிட்டன. யாரும் சிரமப்படாமல் பண்டிகைகளைக் கொண்டாடிவிடுகிறார்கள், எந்தத் திருப்தியும் இல்லாமல்.

உல்லாசம் பொங்கும் தீபாவளி அப்போதெல்லாம் தைக்காமல் ஆயத்த ஆடையை வாங்கி வருவது கவுரவக் குறைவு. கடைசி நாளில் ஊக்கத்தொகை (போனஸ்) பெறுபவர்கள் அவசரத்துக்காக வாங்கி உடுத்துவது ஆயத்த ஆடை என்கிற அபிப்பிராயம் இருந்தது. இப்போது பெரும்பாலானோர் தைத்த உடைகளுக்குத் தாவிவிட்டார்கள். உடையைவிட தைப்பதற்கு அதிக செலவாகும் காலம்.

உடை உடலோடு ஒட்டியிருக்க வேண்டும் என்கிற கட்டாயம் ஏதுமில்லை. தொளதொளவென அணிந்தாலும் தொல்லையில்லை என்பது இன்றைய நாகரிகம். அடுத்தவர் அணிவதைப் பற்றி நாம் கவலைப்படக் கூடாது, கேள்வி கேட்கக் கூடாது என்கிற மேற்கத்திய பண்பாடு நமக்குள்ளும் ஊடுருவி விட்டது. பண்டிகை என்றால் அன்று பகிர்வதே அடையாளமாக இருந்தது. இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு விநியோகிப்பதே பண்டிகையின் நோக்கம். அக்கம்பக்கம் இருக்கும் ஏழைபாழைகளுக்கு இனிப்பையும், பலகாரங்களையும் வழங்குவது முறை. பண்டிகை அன்று நண்பர்கள் வீட்டுக்கு வருவார்கள். அப்பாவின் நண்பர்கள், அம்மாவோடு பணிபுரிந்தவர்கள் என அனைவரின் வருகையால் வீடு அல்லோகலப்படும்.

அதிகாலை 3 மணிக்கே தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் கொள்வார்கள். 6 மணிக்கெல்லாம் வருபவரை வரவேற்கத் தயார். அண்டை வீடுகளில் இருந்து தட்டில் பலகாரங்கள் தவழ்ந்து வரும்.

வந்த தட்டை சொந்தப் பலகாரங்களால் நிரப்பி அனுப்புவார்கள். இப்போதும் சில இடங்களில் இருக்கிறது சன்னமாக இந்தப் பழக்கம். சென்ற தீபாவளிக்கு தெரிந்த ஒருவர் ‘ஹோம் மேட் ஸ்வீட்ஸ்’ எனச் சொல்லி ஒரு பொட்டலத்தை அன்போடு கொடுத்துச் சென்றார். மறுபடியும் அந்த அன்பைக் கலந்து செய்யும் அதிசயம் முளைக்காதா என்று அதில் இருந்த அதிரசங்கள் நினைக்கத் தூண்டின.

அழையாமல் போகாதே...

இப்போது பண்டிகையின்போது எல்லோருக்கும் அவர்களுக்கான பரப்புவெளி தேவைப்படுவதால் நண்பர்கள் வந்து அளவளாவும் நிகழ்வுகள் வெகுவாகக் குறைந்துவிட்டன. இப்போது பல வீடுகளில் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக ஒளிபரப்பாகும் படங்களைப் பார்ப்பதில் மட்டுமே மக்கள் மும்முரம் காட்டுகிறார்கள். யாரேனும் தெரியாமல் வந்துவிட்டால் அவர்கள் அழையா விருந்தினராகவே நடத்தப்படுவார்கள்.

இப்போதும் முதல் நாள் வரை ஊக்கப்பணம் (போனஸ்) வரும் என்று காத்திருப்பவர்களையும், அவர்கள் எதிர்பார்த்த தொகை கிடைக்காமல் போவதையும் பார்க்க நேரிடுகிறது. ‘நம் தந்தையும் நல்ல துணி வாங்கித் தருவார்’ என்று வாசலை நோக்கி ஏக்கத்துடன் காத்திருக்கும் அந்தக் குழந்தைகள் இப்போதும் கண்ணீரின் விளிம்பில் கலங்கித் தவிக்கின்றனர்.

நோகாமல் நோன்பு கொண்டாடுபவர்கள் ஒருபுறமும், நோன்பே நோயாக மாறும் அவல நிலையில் சிலர் இன்னொருபுறமும் இருக்க வாழ்க்கை எப்போதும் சீனப் பெருஞ்சுவர்களுக்கு இடையே நிகழ்கிற நாடகமாகத் தொடர்கிறது.

- நினைவுகள் படரும்..

http://tamil.thehindu.com/opinion/blogs/article24377374.ece

Link to comment
Share on other sites

காற்றில் கரையாத நினைவுகள் 20: செய்திகள்... வாசிப்பது...

 

 

 
radiojpg

சகல பொழுதுபோக்குகளுக்கும் சாதனமாக வானொலி இருந்த காலம் உண்டு. ‘ரேடியோப் பெட்டி’ என அதற்கு நாமகரணம். அதை உயரத்தில் வைத்திருப்பதற்கென்று பிரத்யேகப் பலகை. அதன் மீது கம்பீரமாக அதன் இருப்பு. நம் சுகதுக்கங்களைப் பகிர்ந்துகொண்டும், ஆற்றிக்கொண்டும் அனுசரணையாக இருந்த அது, வீடுகளில் அயர்வைப் போக்கும் ஆசானாகவும் திகழ்ந்தது.

காலையில் ஒருவிதமான கையொப்ப இசை. அதற்குப் பிறகே நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கும். ஆகாஷவாணியின் செய்திகள் மட்டுமே ஆதாரப்பூர்வமானவை. அவை வாசிக்கும் நேரங்களில் கடிகார முள் சரியான நேரத்திற்கு திருப்பி வைக்கப்படும். செய்திகள் வாசிப்பது என்று சற்று கம்பீரம் கலந்த சரோஜ் நாராயணசாமியின் குரலில் மோனலிசாவின் புன்னகையில் இருக்கிற அத்தனை ரசங்களைப்போல பாவங்கள் வெளிப்படும். எங்கு வானொலியில் செய்தி ஒலித்தாலும் அந்தப் பக்கம் செல்கிற அத்தனை வழிப்போக்கர்களும் ஒரு நிமிடம் நின்று முக்கியச் செய்திகள் இருக்கின்றனவா என்று கேட்டுவிட்டுச் செல்வார்கள். நாட்டின் தலைவர்கள் உடல்நலமில்லாமல் இருந்தால் ‘என்ன ஆயிற்று!’ எனக் கேட்பதற்கு செய்தி எப்போது வாசிப்பார்கள் என மக்கள் காத்திருப்பார்கள். ‘அண்ணா பேசுகிறார்’ என்று அறிவிக்கப்பட்டால் வானொலி இருக்கும் வீடு சாவடியாகும். தேர்தல் நேரத்தில் முடிவுகளைக் கேட்க கூட்டம் கூடும். வானொலி இருக்கும் வீடு அன்று வசதியானதாகக் கருதப்பட்டது.

 

பிறகு வந்தது இணைப்புத் தேவைப்படா டிரான்சிஸ்டர். எந்த இடத்திற்கும் எடுத்துச் செல்லலாம் என்பதே அதன் மகத்துவம். அளவு குறையக்குறைய மவுசு அதிகம். குடும்பக்கட்டுப்பாட்டை திக்கெங்கும் பரப்பியதில் அகில இந்திய வானொலிக்கு மிகப் பெரிய பங்கு. அதை ‘ஆகாஷ்வாணி’ எனச் சொல்வதா என்று தமிழகத்தில் கிளம்பியது மிகப் பெரிய சர்ச்சை. இந்தியா - பாகிஸ்தான் போர் 1971-ஆம் ஆண்டு நடந்தபோது தேசப்பற்றை ஊட்டியதில் வானொலிக்கு இருந்தது பெரும் பங்கு.

யாராவது முக்கியத் தலைகள் சாய்ந்தால் சோகமான இசை வானொலியில் கிளம்பும். அதுவே அன்று வெற்றிடத்திற்கு அடையாளம்.

நாங்கள் சிறுவராய் இருந்தபோது பிடித்த பாடல் வருகிறதா என வானொலியைத் திருப்பிப் பார்த்திருப்போம். காதைத் திருகினால் கான மழை பொழிவது வானொலி மட்டுமே. விநாடி வினா நிகழ்ச்சி வானொலியில் பிரபலம். இளைஞர்களை ஊக்குவிக்க இளைய பாரதம். கல்லூரிகளில் நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகளின் தொகுப்பாக மலரும். நம் பெயர் வானொலியில் வராதா என பொது வினாக்களுக்கு விடையெழுதிப் போடுவோம். வந்துவிட்டால் துள்ளிக் குதிப்போம்.

முத்துப்பந்தல் என்கிற ஒரு நிகழ்ச்சி. இன்றைய திரைப்படத் தொகுப்பு நிகழ்ச்சிகளுக்கு அதுவே முப்பாட்டன். கதைபோல ஒரு சம்பவத்தைச் சொல்லி அதன் இடையே சூழலுக்குத் தகுந்தவாறு திரைப்படப் பாடல் ஒன்றை ஒலிக்கச் செய்வார்கள். அதற்கு நான் உரையெழுதி அனுப்பினேன். பள்ளி முகவரி போட்டே அஞ்சல் செய்தேன். தேர்வானதாய் கடிதம் வந்தது. பள்ளி முழுவதும் அதே பேச்சு. தந்தையுடன் திருச்சிக்குப் பயணித்தேன். நிலையம் சென்றதும் பேரதிர்ச்சி. முத்துப்பந்தல் நிகழ்ச்சி மாணவர்களுக்கு அல்ல, பெரியவர்களுக்கே என அவர்கள் சொன்னதும் என் அத்தனை கப்பல்களும் கடலில் மூழ்கின. கையிலிருந்த எதுவும் நழுவி கீழே விழுந்து உடையவில்லை. காரணம், அந்தக் கடிதம் மட்டுமே கையிலிருந்தது. அன்று அப்பாவிற்கு அதிக செலவு வைத்து விட்டோமே என்று எதுவுமே சாப்பிடாமல், ‘பசியே இல்லை’ எனச் சமாளித்து வீடுவந்து சேர்ந்தேன். அப்படி என் முதல் முயற்சி முற்றிலும் தோல்வியானது. முத்துப்பந்தலில் முத்தெடுக்க முயன்று மூழ்கிப் போனேன்.

எங்களுக்கு திருச்சி வானொலியே காதுகளுக்குத் தாயகமாக இருந்தது. தேநீர்க் கடைகளிலும், உணவகங்களிலும் மக்களை ஈர்க்க ரேடியோப் பெட்டிகள் அன்று அத்தியாவசியம். ஊருக்கொரு ரேடியோ ரூம் உண்டு. அதை இயக்குவதற்கு ஆட்கள் இருந்தார்கள். கொழுக் மொழுக்கென்றிருக்கும் குழந்தை படம் போட்ட மர்ஃபி ரேடியோக்கள் அன்று பிரபலம். அந்தக் குழந்தையைப்போல ஆகவேண்டுமென்றே அத்தனை தாய்மார்களும் குழந்தையைக் காட்டி சோறு ஊட்டுவார்கள். குருவிக்காரர்கள் தோளில் வானொலிப்பெட்டியும் தொங்கும். அன்று தவணை முறையில் ரேடியோ விற்பனை உண்டு.

வானொலி என்றால் மறக்க முடியாதது வீடும் வயலும் நிகழ்ச்சி. மாலை வேளையில் அற்புதமான பாடலுடன் அது ஆரம்பமாகும். அதைக் கேட்காமல் உழவர்கள் தூங்க மாட்டார்கள். பயிர்சாகுபடியிலும், பயிர்க்காப்பு முறையிலும் வானொலிக்குப் பெரும் பங்கு இருந்தது. பயிர்களுக்கு பூச்சிமருந்து அடிக்கவும், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவும் விழிப்புணர்வை ஏற்றியதில் வானொலிக்கு முதலிடம்.

திரையிசை அன்று குறைவு. வர்த்தக ஒலிபரப்பில் அது அவ்வப்போது எட்டிப்பார்க்கும். திரைத்துறையினர் வழங்கும் தேன்கிண்ணத்திற்காக மூடிய செவிகளும் திறந்துகொள்ளும். திருச்சி வானொலியின் சூரியகாந்தி என் சமவயதினருக்குப் பசுமையாய் நினைவிருக்கும். தென்னூர் கிருஷ்ணமூர்த்தி அத்தனை வேடங்களிலும் அபாரமாய் நடிப்பார். வானொலியில் நாடகங்களில் மின்னும் வீரம்மாள், மன்னை ஜெயராமன், பார்வதி ராமநாதன் ஆகி யோர் குடும்ப உறுப்பினர்களைப்போல ஆகிப்போனார்கள்.

வானொலியில் நாட்டுப்பற்றுப் பாடல்கள், இலக்கியப் பேருரைகள், கவியரங்கங்கள், பட்டிமன்றங்கள் என அறிவை அடர்த்தியாக்கும் பல நிகழ்வுகள். அவற்றைக் கேட்டுக் கேட்டு கேள்வி ஞானம் அனைவருக்கும் கூடியது. செந்தமிழிலில் பேசுகிற முறையை மாற்றி, பேச்சுத் தமிழில் ஐந்து நிமிடம் பேசி இன்று ஒரு தகவலின் மூலம் என்றும் இதயத்தில் நிலைத்திருக்கும் இடத்தைப் பிடித்தவர் தென்கச்சி சுவாமிநாதன். நகைச்சுவையே பேச்சாக ஜொலித்தவர் முசிறி வீராசாமி.

பொங்கல் திருவிழாவின்போது சென்னையில் அவசியம் நடக்கும் கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச். சேப்பாக்கம் பொங்கி வழியும். வானொலி நேர்முக வர்ணனை மூலைமுடுக்குகளிலெல்லாம் ஆட்டத்தைப் பார்க்கும் ஆனந்தத்தை அள்ளித் தரும். திடீரென முளைத்தது தமிழ் வர்ணனை. ராமமூர்த்தி, கூத்தபிரான் ஆகியோர் அழகு தமிழில் வர்ணிக்க, மணி என்பவர் சிறப்புக் கருத்து தெரிவிக்க தமிழ்மயமானது கிரிக்கெட்.

தமிழர்களின் திரைப்பட ஆர்வத்தைத் தீர்க்க வந்தது இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தின் வர்த்தக நிகழ்ச்சி. கே.எஸ். ராஜாவின் குரல் அனைவருக்கும் அத்துப்படி. நூற்று ஐம்பது பெயர்களை மளமளவெனப் படித்து நேயர்கள் அனைவரையும் திருப்திப்படுத்துவார். வானொலிக்கென்றே ரசிகர் பட்டாளம் இருந்தது. விரும்பிக் கேட்ட நேயர்களில் அவர்கள் பெயர் நாளொன்றுக்கு மூன்று முறை ஒலிக்கும். போடிநாயக்கனூர் நீலா, கொண்டைக்கவுண்டன்பாளையம் முத்துக்குமார், நிலக்கோட்டை பள்ளப்பட்டி ஆறுமுகம், ராஜதானிக்கோட்டை சித்தன் ஆகியோர் பெயர் அனைவருக்கும் தெரிந்தவை.

அரசு வானொலியில் நிகழ்ச்சி தயாரிப்பாளர் பதவி அவ்வளவு எளிதல்ல. அத்தனை கெடுபிடிகள். நிறையத் தெரிந்திருக்க வேண்டும். அகில இந்திய வானொலியில் பணியாற்றுவது பெரும் பேறு. உச்சரிப்பை அவர்கள் பேசுவதை வைத்து சரிபார்த்துக்கொள்ளலாம். இன்று தனியார் வானொலி நிலையங்களின் ஆதிக்கம். தொகுப்பாளர்கள் உச்சரிப்பில் ‘ல’, ‘ள’, ’ழ’ எதுவும் உருப்படியாக இல்லை. ‘பள்ளி’ மருவி ‘பல்லி’ ஆகிவிட்டது.

வானொலியை அனுபவிக்க தனிப்பெட்டி தேவையில்லை. கைபேசியே போதும். நிகழ்ச்சியாளர்கள் பேசிக்கொண்டேயிருப்பதால் அது சத்தங்களின் சாம்ராஜ்யமாகி விட்டது. தொலைக்காட்சி வந்த பிறகு புதிதாகப் பிறந்த குழந்தையை எல்லோரும் கவனிக்க பெரிய குழந்தை அழுவதைப்போல கேலிச்சித்திரம் ஒன்று வெளியானது. அந்த நிலையை பண்பலை மாற்றியமைத்தது. பணியாற்றிக்கொண்டே பாடல் கேட்க பண்பலையே பல இடங்களில் ஒலிக்கிறது. இரவு வாகனம் ஓட்டுபவர்களுக்கு அதுவே பேச்சுத் துணை. எங்கு போக்குவரத்து நெரிசல் என்பதுகூட உடனடியாக அறிவிக்கப்படும் மின்னல் வேக அணுகுமுஈறை.

காட்சிப்படுத்துதலை வானொலி கற்றுத் தந்தது. நாமாக அதில் வருபவர்களுக்கு உருவம் ஒன்றை உருவாக்கினோம். கடைசி வரை அவ்வுருவம் தெரியாமலிருந்தது சுவாரசியம். இன்று குரல்களின் பரிச்சயம் நெரிசலின் காரணமாகக் குறைந்து வருகிறது.

- நினைவுகள் படரும்...

https://tamil.thehindu.com/opinion/blogs/article24440058.ece

Link to comment
Share on other sites

காற்றில் கரையாத நினைவுகள் 21: கை மருத்துவம்!

 

 
34e2abdcP1443464mrjpg

முன்பெல்லாம் உடல்நலம் சரியில்லை என்றால் குடும்ப மருத்துவர் ஒருவர் இருப்பார். அவர் குடும்பமே நமக்குப் பழக்கமானதால் அவர் குடும்ப மருத்துவர். அவரிடம் அத்தனை அத்துமீறல்களுக்கும் இடமுண்டு.

தன்முனைப்பில்லாத தகைமை. எந்நேரமும் சென்று அவர் வீட்டுக் கதவைத் தட்டலாம். அவர் கனிவோடு கதவைத் திறப்பார்.

 
 

தேவைப்பட்டால் சட்டையை மாட்டிக்கொண்டு வீட்டுக்கும் வருவார்.

வீட்டு உறுப்பினர்கள் உடல்பற்றிய தகவல்கள் அவருக்கு அத்துபடியாகியிருக்கும். யாருக்கு சூட்டு உடம்பு, யாருக்கு சீத உடம்பு என்பது தெரியும். நாடி பிடிப்பார், வெப்பமானி வைப்பார்.

என்ன பிரச்சினை என்று உடனே சொல்லி விடுவார். அவரோடு ஊசி போட உதவியாக கம்பவுண்டர் ஒருவர். அவரே தயாரித்த மிக்சர் தருவார். இரண்டே நாட்களில் இருந்த இடம் தெரியாமல் காய்ச்சல் ஓடிப்போகும். அவரிடம் ஊசியும் இருக்கும். கொதிக்கிற நீரில் ஊசியைப் போட்டு ஊறவைத்து பிறகு சொருகுவார்கள். ஊசி போட்டால் உடல் உடனே சரியாகிவிடும் என்கிற நம்பிக்கை இப்போதும் கிராமப்புறங்களில் உண்டு.

எங்கள் ஊரில் வையாபுரி டாக்டர், நமச்சிவாயம் டாக்டர் என இருவர் இருந்தனர். அவர்கள் சிரிப்பிலேயே பாதி வலி போய்விடும். வையாபுரி டாக்டர் கஞ்சிதான் சாப்பிட வேண்டும் என்பார். அதிகம் வலியுறுத்திக் கேட்டால் ஒரு இட்லி சாப்பிடச் சொல்வார்.

நமச்சிவாயம் டாக்டர் மருத்துவமனை யில் ‘நோய்நாடி...’ என்று தொடங்கும் குறளை எழுதி வைத்திருப்பார். தமிழ்ப் பற்றாளர். பெண்ணுக்கு நற்பசலை என்று பெயர் வைத்திருந்தார். பரிச்சயமான முகங்கள் நம்பிக்கையை இதயத்தில் நங்கூரம் பாய்ச்சின.

அந்தக் காலத்தில் மருத்துவரைப் பார்ப்பது வீட்டு வைத்தியம் பலனளிக்காத போதுதான். பெரியவர்கள் அனுபவத்தின் காரணமாக எளிய வைத்திய முறைகளை முன்வைப்பார்கள்.

சளியில்லாமல் இருமல் தொடர்ந்து வந்தால் உள்நாக்கு தடித்திருக்கிறது எனப் பொருள். கொஞ்சம் மிளகாய்ப் பொடியை உள்நாக்கில் வைப்பார்கள். எச்சில் வழியும்படி ஐந்து நிமிடம் வாயைத் திறந்து வைத்திருக்க வேண்டும். இருமல் சரியாகிவிடும். மூச்சுப் பிடித் தால் இரண்டு கைகளிலும் உலக்கை களைப் பிடிக்கச் சொல்லி ஒருவர் ஏதோ மந்திரிப்பார். சரியாகிவிடும். சூடுபிடித் தால் சொட்டுச்சொட்டாக சிறுநீர் வரும். ஒரு குவளை வெந்நீர் குடித்தால் போதும்.

தொப்புளில் விளக்கெண்ணெயைத் தடவச் சொல்வார்கள்.

விளையாடும்போது அடிபட்டால் கிணற்றுப்பூண்டை கசக்கி காயத்தில் வைத்தால் தழும்பே ஏற்படாமல் ஆறி விடும். ஆழமான வெட்டாக இருந்தால் சுண்ணாம்பைக் குழைத்து அங்கு தடவி னால் ரத்தம் நின்று காயம் சரியாகிவிடும். ஒருமுறை தேங்காய் உரிக்கையில் என் இடது ஆட்காட்டி விரலில் கொடுவாள் பட்டு ஆழமாகக் காயம் ஏற்பட்டது. சுண்ணாம்பைக் குழைத்து அப்பினேன். சரியாகிப் போனது.

நகச்சுத்தி வந்தால் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை கொதிக்கிற வெந்நீரில் விரலை நனைத்தால் போதும். எந்த மாத்திரையும் தேவையில்லை. கண்ணில் கட்டி வந்தால் நாமக்கட்டியைக் குழைத்து தடவினால், சுவடில்லாமல் அமுங்கிவிடும். இல்லாவிட்டால் கிராம்பைத் தேய்த்து அதன் சாறைத் தடவினால் போதும்.

தேள் கடித்தால் மிதிவண்டியின் விளக் குக்குச் செல்லும் காயிலில் உள்ள செம்புப்பகுதியைக் கடிவாயில் வைத்து சக்கரத்தைச் சுற்றினால் வலி போன இடம் தெரியாது. அம்மை வந்தால் கட்டிலில் வேப்பந்தழை, குடிக்க மோர், உண்ண மொந்தன் வாழைப்பழம். வீட்டிலேயே வயிற்றுப் பிரச்சினைக்கு இரவில் படுக்கும் முன் ஒரு கரண்டி விளக்கெண்ணெய் கொடுப்பார்கள். வயிறு சுத்தமாகும், கழிவறை அசுத்தமாகும்.

ஜீரணக்கோளாறு இருந்தால் நெளிவுக் குப்பியில் இருக்கும் ஓமத்திரவத்தை குடிக்கக் கொடுப்பார்கள். வலி பறந்து போகும். சளி இருந்தால் ஊசியில் மிள கைக் குத்தி விளக்கில் சுட்டு முகர்ந்தால் அனைத்து அழுக்கும் வந்துவிடும்.

இருமல் இருந்தால் வாயில் நான்கு மிளகை அடக்கிக்கொண்டு தூங்கச் செல்வோம். அடுத்த நாள் குரல் சகஜமாகிவிடும். என் அம்மா ஆசிரியை என்பதால் குரலுக்கு வேலை அதிகம். சரமாரியாக இருமல் ஒருமுறை படையெடுத்தது. தெரிந்த ஆசிரியர் கடுக்காயை வாயில் அடக்கி வைக்கும்படி சொல்ல இருமல் நின்றது. கடுக்காய் வைத்தியம் மீண்டும் மிடுக்காய்ப் பேச வைத்தது.

மஞ்சள்காமாலை வந்தால் எங்கள் கிராமமான சிவதாபுரத்தில் மருந்து ஊற்றுவார்கள். காலையில் சுடுசோறில் தயிர் போட்டு சாப்பிட்டுவிட்டுச் செல்ல வேண்டும். கண்களில் மருந்து ஊற்றியதும் தாரை தாரையாக கண்ணீர் வரும். எரிச்சல் தாங்க முடியாது. இரண்டு முறை ஊற்றினால் சரியாகிவிடும். அதற்கென்றே ஒரு குடும்பம் இருந்தது. பணம் வாங்கவே மாட்டார்கள்.

காமாலைக்குப் பத்தியம் முக்கியம். இட்லிக்கு உளுந்துக்குப் பதிலாக வெந் தயம் போட்டு ஆட்டுவார்கள். எண் ணெய்ப் பண்டம் அறவே கூடாது. சாதத்தைக் குழைத்துக் கொடுப்பார்கள். ஆறு மாத பத்தியம் அவசியம்.

அன்று பள்ளிக்கே மருத்துவக் குழு வரும். உயரம், எடை எல்லாம் அப்போது தான் கணக்கிடப்படும். தொழுநோய் இருக்கிறதா என சோதனை செய்வார் கள். கடைசியில் பெரும்பாலான மாணவர்களுக்கு, ‘போஷாக்கான உணவு அருந்தவும்’ என்று எழுதிக் கொடுப்பார்கள். அன்று குண்டு மாணவர்கள் குறைவு.

இன்று குடும்பம் என்கிற அமைப்பு சிதைய, குடும்ப மருத்துவர் என்கிற நிலையும் குறைந்துவிட்டது. இன்று ஒவ்வொன்றுக்கும் ஒரு மருத்துவர். என்ன படித்திருக்கிறார் என்பது தெரிந்த பிறகே சிகிச்சைக்குச் செல்கிறார்கள் மக்கள். இன்று கைராசியைவிடக் கட்டிடம் முக்கியம். அன்று மருத்துவர் சொன்னது வேதவாக்கு. இன்று இணையத்தில் அரைகுறையாக படித்து விட்டு மருத்துவரையே அதிகப் பிரசங்கித்தனமாக கேள்வி கேட்பவர்கள் அதிகம்.

நுகர்வோர் மன்றங்களால் ஏற்பட்ட விழிப்புணர்வில் அனுபவத்தில் வியாதியை அறிய முடிந்தாலும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தும் கட்டாயம். யாரும் ‘ரிஸ்க்’ எடுக்க விரும்புவதில்லை. பரிசோதனைகள் நடத்தினால்தான் இன்று பலருக்குத் திருப்தி. அப்போதுதான் அவர்களுக்கு அது பெரிய மருத்துவமனை. இன்று மருத்துவம் அந்தஸ்தோடு ஐக்கியமாகிவிட்டது.

இன்று காய்ச்சல் வந்தால் லேசில் சரியாவதில்லை. எங்கு பார்த்தாலும் மருத்துவமனை. திரும்புகிற திக்கெல்லாம் மருந்துக் கடைகள். பெரிய மருத்துவமனைகளில் அரசைவிட அதிக சிவப்புநாடா முறை. இப்போது உள்ளே போவதற்குள் கோப்பு ஒன்று போடப்பட வேண்டும். அதிலிருந்தே சிகிச்சை ஆரம்பம். மருத்துவர் நினைத்தாலும் மாற்ற முடியாத வழிமுறைகள். அறுவை செய்பவர் ஒருவர், தையல் பிரிப்பவர் வேறொருவர், தொடர் சிகிச்சை செய்பவர் இன்னொருவர் என்கிற எதார்த்தங்களும் உண்டு. மருந்து வாங்குவதற்கு முதலில் சீட்டை மருந்தகத்தில் தர வேண்டும்.

அத்தனை மருந்தும் இருக்கிறதா என ஆராய்ச்சி செய்து, பணம் கட்ட அனுப்புவார்கள். பிறகு பணம் கட்டி இன்னோர் இடத்துக்குச் சென்று ஒப்படைக்க வேண்டும். நீள்வரிசையில் நம் பெயரை எப்போது அழைப்பார்கள் எனக் காத்திருந்தால் நீதிமன்றத்தைப்போல மூன்று முறை நம் பெயர் கூவப்படும்.

அன்று சர்க்கரை என்பது ஒன்றிரண்டு பேருக்கு அரிதாய் இருக்கும். இன்று தேநீர்க் கடையில் தேநீர் கேட்டால் ‘சர்க்கரை போட வேண்டுமா’ என்கிற கேள்வி முதலில் கேட்கப்படுகிறது. அன்று ‘ஸ்ட்ராங்கா, லைட்டா’ என்று மட்டுமே கேட்பார்கள். சிலர் பாசந்தியைச் சாப்பிட்டுவிட்டு சர்க்கரை இல்லாத காபி குடிக்கும் கறாரான பேர்வழிகள்.

அன்றிலிருந்து இன்றுவரை மருத்துவமனைக்கு பிரசவத்தைத் தவிர வேறெதற்குச் சென்றாலும் மனம் மகிழ்ச்சியாக இருப்பதில்லை.

- நினைவுகள் படரும்...

https://tamil.thehindu.com/opinion/blogs/article24500969.ece

Link to comment
Share on other sites

காற்றில் கரையாத நினைவுகள் 22: ஊருக்குப் போவது

 

 

 
9925c0fcP1445032mrjpg

முன்பெல்லாம் பிறந்த கிராமத்தைவிட்டு வெளியே வராமல், தங்களுடைய வாழ்வையே முடித்துக் கொண்டவர்கள் உண்டு. அதிகபட்சம் சம்பந்தி வீட்டுக்குச் சென்றிருப்பார்கள். சொந்தத்திலேயே பெண் கொடுப்பது அன்றைய வழக்கம். அதிகத் தொலைவில் இருக்கும் மாப்பிள்ளைக்கு பெண் கொடுக்க மாட்டார்கள்.

இன்று வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் என்ன பணி செய்தாலும் கவலைப் படாமல் பெண் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. பெண் கொடுத்து, பெண் வாங்குவதும் நடைமுறையில் இருந்தது. மருமகளும், மருமகனும் ஒரே வீட்டில். பெரிய நகரங்களைப் பலர் திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருப்பார்கள். பட்டணம் போவது என்று சென்னைக்கு வருவதையே சிலாகித்துச் சொல்வது வழக்கம்.

 

கால்களே வாகனம்

நாங்கள் மும்பை சென்றிருந்தபோது என் நண்பர் ஒருவர், ‘எங்கள் பாட்டியை இங்கே கொண்டுவந்து விட்டால் திரும்பி வரவே தெரியாது’ என்று சொன்னார். அந்தக் காட்சி நினைத்துப் பார்க்கும்போதே கொடூரமாக இருந்தது.

அடிக்கடி வெளியில் சாப்பிடுவது கவுரவக் குறைச்சலாக இருந்த காலம் அது. ‘வாங்கித் தின்னானாம், வீங்கிச் செத்தானாம்’ என்று எங்கள் பக்கம் ஒரு சொலவடையே உண்டு. வெளியில் சாப்பிட்டு கட்டுப்படியாகாது என்பதே அதன் பொருள்.

பெரும்பாலும் நடையே வாகனம். எவ்வளவு நடக்க முடியுமோ அவ்வளவு தூரம்தான் செல்வார்கள். பணத்துக்காக உறவுகளிடம் தனி மதிப்பு இல்லாத காலம். குழந்தைகளுக்கு அத்தை, மாமா என்று பிடிப்பு ஏற்பட காலாண்டு, அரையாண்டு, முழுப்பரீட்சை விடுமுறைகளில் உறவினர் வீட்டுக்குப் பயணப் படுவது வழக்கம்.

புதிய சூழல் புதிய தெளிவுபுது ஊரில் புதுப்புது நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய சூழல். நிறைய விளையாட்டு. அப்பா, அம்மாவின் சகல நேரக் கண்காணிப்பில் இருந்து விடுதலை. சில சிறுவர்கள் தாத்தா, பாட்டி வீட்டிலேயே வளர்வது உண்டு. அவர்கள் அதிக சுதந்திரத்தோடு இருப்பார்கள். எதையும் அருகில் இருந்து பார்ப்பதைவிட தொலைவில் இருந்து பார்க்கும்போது தெளிவு கூடுதலாக இருக்கும். பாட்டி வீட்டில் வளரும் பிள்ளைகள் எதிர்காலத்தில் சுயசிந்தனையோடு இருப்பதும் உண்டு.

சொந்தக்காரர்கள் வீட்டுக்குப் போவது என்றால் சின்னத் துணிப் பையில் இரண்டு சட்டை, இரண்டு காற்சட்டை, இரண்டு உள்ளாடைகள் ஆகியவை எடுத்துக் கொள்ளப்படும். ஒன்று கொடியில், ஒன்று மடியில், மற்றொன்று இடையில். அவ்வளவுதான் மொத்த உருப்படிகள். படுக்கிற இடமோ பகிர்கிற உணவோ முக்கியமில்லை. உணர்வுக்கு முன் உணவு எம்மாத்திரம்!

அங்கு புதிதுபுதிதாய்க் கண்டறியும் அனுபவத்தில் ஆனந்தம் மேலிடும். ஒருநாளும் பெற்றோரை நினைத்து பிள்ளைகள் ஏங்காது. இன்று ஊருக்கு அனுப்பினால் பிள்ளைகள் சுவரில் அடித்த பந்துபோல திரும்பி வந்துவிடுகின்றனர்.

பள்ளிச் சிற்றுலா...

முன்பெல்லாம் பள்ளியில் அரிதாகச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வார்கள். எங்கள் பகுதியில் இருந்த தென்னிந்திய கண்ணாடித் தொழிற்சாலைக்கு ஒரு

முறை எங்கள் பள்ளியில் இருந்து கூட்டிச் சென்றார்கள். அதுவே பேரனுபவமாக இருந்தது.

அதற்குப் பிறகு வேலைநிறுத்தம் காரணமாக அந்தத் தொழிற்சாலை யையே இழுத்து மூடினார்கள். அங்கு பணியாற்றியவர்கள் வறுமையுற்று ஏற்கெனவே கொடுத்ததைவிட குறைவா கக் கொடுத்தால்கூட ஏற்றுக்கொள் கிறோம் என மன்றாடியதாகச் சொல்வார்கள். பலர் சோற்றுக்கே வழியின்றி சோர்ந்து இறந்ததை நானறிவேன்.

பள்ளியில் ஒருமுறை மேட்டூர் அணைக்கு அழைத்துச் சென்றார்கள். உயர்நிலைப் பள்ளியில் சாத்தனூர், செஞ்சிக்கோட்டை போன்றவற்றுக்கு சுற்றுலா அறிவித்தார்கள். இதுபோன்ற நிகழ்வுகளில் மூத்தவர்களுக்கே முன்னுரிமை. ஒருமுறை என் சகோதரி கன்னியாகுமரி சுற்றுலாவுக்குச் சென்று, வீட்டுக்கு என்ன வாங்குவது எனத் தெரியாமல், அங்கு விற்ற விதவிதமான வண்ண மண்களை வாங்கிகொண்டு வந்தார். அதை வைத்து என்ன செய்வது என்று வீட்டுக்குள் பெரிய விவாதமே நடந்தது.

10 நாட்கள் முகாம்

நாங்கள் மிதிவண்டி எடுத்துக்கொண்டு சேலம் அம்மாபாளையத்திள் இருக்கிற மாமாங்கத்துக்குச் செல்வோம். அங்கு ஒரு குளத்தில் வற்றாத நீர். ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்ய ராமன் விட்ட அம்பால் ஏற்பட்ட நீர்நிலை அது என்பது ஐதீகம். அதில் நீந்திக் குளிப்போம். அதேபோல சித்தர் கோயிலுக்கு சைக்கிளில் செல்வோம். அங்கு வற்றாத கிணறுகள் உண்டு. அதில் திருப்தி வரும் வரை குளியல் போடுவோம்.

நான் தேசிய மாணவர் படைக்காக சங்ககிரிக்கு பத்து நாட்கள் முகாம் சென்றது இன்னும் நினைவில் இருக்கிறது. ஒரு நாள் சாலை போடுகிற பணியில் ஈடுபட்டோம். திரும்பி வரும்போது வேலைநிறுத்தப் போராட்டம் (ஹர்த்தால்) காரணமாக சரக்குந்தில் திரும்பி வந்தோம்.

சேலத்தில் நடக்கும் கண்காட்சிக்கு தொடக்கப் பள்ளி மாணவர்களை ஆசிரியர் அழைத்துச்செல்வது உண்டு. ஒரு ரூபாய் கட்டணம்.

ஒருமுறை கண்காட்சியில் அனைத்தையும் கண்டுகளித்த பிறகு வகுப்பாசிரி யர் கவலையோடு காணப்பட்டார். ஒரு மாணவன் பணமே கொடுக்காமல் கண்காட்சிக்கு வந்துவிட்டான். பிறகு கணக்கைப் பார்த்து கண்டு பிடித்தார். யாரெனத் தெரிந்ததும் அவனை அழைத்து விசாரித்தாரே தவிர, வெகுண்டெழ வில்லை. அந்த மாணவன் அதற்குப் பிறகு பள்ளிக்கு வரவேயில்லை.

பெரியம்மாவும் சிறுகிழங்கும்

சொந்தக்காரர்கள் வீட்டுக்கு வரும்போது கிடைத்ததையோ, முடிந்த தையோ வாங்கி வருவார்கள். அதற்கும் அவர்களுக்குத் தருகிற உபசரிப்புக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. எங்கள் பெரியம்மா ஒருவர் தீபாவளி நேரத்தில் சிறுகிழங்கு கொண்டு வரு வார். இன்னோர் உறவினர் பனைவெல்லம் கொண்டு வருவார்.

ஊருக்குச் சென்றால் திரும்பி வரும் வரை சேதி எதுவும் தெரியாது. அது பற்றி வீட்டினர் கவலைப்பட்டதும் கிடையாது. அன்று இன்றிருப்பதைப் போல தொலைபேசியோ, அலைபேசியோ இல்லை. இப்போதெல்லாம் நிமிடத்துக்கு நிமிடம் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்று நேர்முக வர்ணனை நடக்கிறது. அவர்கள் சொன்ன இடத்துக்குத்தான் சென்றிருக்கிறார்களா என்று பார்க்கும் வசதியும் வந்துவிட்டது.

கல்லூரியில் படிக்கும் சமயத்தில் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றபோது, சில மாணவர்கள் முதன்முறையாக கடலைப் பார்த்தனர். அதைவிட்டு வரவே அவர்களுக்கு மனம் வரவில்லை. ஒகேனக்கல்லை முதன்முறையாக அதிசயமாய்ப் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கினோம். அதில் குளித்துக் கொண்டிருந்தவர்களை பேருந்துக்கு அழைத்து வருவது பெரும் பாடாய் இருந்தது.

வேளாங்கண்ணி, திருப்பதி, நாகூர்

இன்றைய சிறுவர்களோ நயாகரா அருவியையே காணொலியில் பார்த்துவிடுவதால் அவர்களுக்கு அந்த அருவிகள் வியக்கும் வீழ்ச்சிகளாய் இருப்பதில்லை. பார்க்கிற பழக்கம், அதிசயிக்கும் குழந்தை இயல்பை நீர்த்துப்போகச் செய்துவிடுகிறது.

அன்றைய நாளில் மொத்தக் குடும்பமும் ஊருக்குப் போவது அபூர்வம். அப்படிச் செல்வது பெரும்பாலும் கோயில்களுக்காகத்தான் இருக்கும். அப்படிச் செல்வது கூட அநேகமாக திருப்பதி, பழநி, வேளாங்கண்ணி, நாகூராகத்தான் இருக்கும்.

ஒரு மாதம் முன்பிருந்தே அதுபற்றிக் கற்பனையில் பேசிக் களித்திருப்பார்கள். இரண்டு காசு, மூன்று காசு என மிச்சமாகிற சில்லறையை அங்கிருக்கும் யாசகர்களுக்குப் போட முடிந்து வைப்பார்கள். எங்கு காலை உணவை சாப்பிடுவது என்பது தொடங்கி சிந்தனை விரியும். சென்று வந்ததற்கு அடையாளமாக சில வீடுகளில் மொட் டைத் தலைகள் பளபளக்கும்.

கட்டுச்சோற்றுப் பயணம்

இப்போதெல்லாம் குழந்தைகள் மொட்டை அடித்துக் கொள்ளத் தயாராக இருப்பதில்லை. அப்பாக்கள்தான் மொட்டை அடித்துக் கொள்கிறார்கள். அப்போதெல்லாம் யாராவது காசிக்கு யாத்திரை சென்று வந்தால், அவர்களுடைய காலில் விழுந்து வணங்குவதை புண்ணியம் என்று கருதினார்கள்.

எளிய குடும்பங்கள் கட்டுச்சோறோடு பயணம் செய்யும். மூன்று வேளையும் புளிச் சோறு. டெல்லியில் இருந்து தொடர்வண்டியில் வருகிறபோது எளியவர் ஒருவர் அத்தனை வேளையும் பொட்டலம் கட்டியிருந்த பூரிக் கிழங்கை உண்பதைப் பார்த்தேன்.

அன்று விமானப் பயணம் மாபெரும் கனவு. இன்று வெளிநாடு சகஜம். இன்றைய நாளில் தண்ணீர் குடிப்பதைப் போல சர்வ சாதாரணமாக கோடை விடுமுறையில் மலைவாழ் தலங்களுக்கு மக்கள் செல்கின்றனர். அதற்காகவே சீட்டுப் போடுகின்றனர். ஆண்டுக்கொரு ஊர் என கண்டுகளிக்கின்றனர். வார இறுதிகளில் அருகில் இருக்கும் இடங்களுக்கு சிற்றுலா சென்று வரு கின்றனர்.

எத்தனையோ இடங்களுக்குச் சென்றாலும் அங்கெல்லாம் தங்கள் சொந்த ஊரையும் சிலர் தூக்கிக் கொண்டு செல்வதுதான் வியப்பாக இருக்கிறது!

- நினைவுகள் படரும்...

https://tamil.thehindu.com/opinion/blogs/article24559801.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

காற்றில் கரையாத நினைவுகள் : எது பொற்காலம்!

 

 
9caf80f4P1448651mrjpg

மனம் பழையவற்றை வசந்தகாலமாக எண்ணிப் பார்க்கும் விசித்திரம் கொண்டது. சிலநேரங்களில் விடு பட்டவைகூட மகிழ்ச்சியானதாக தோன் றும். விடுதலையானவன் சிறைச்சாலையைக் கடக்கும்போது சோகப்படுவதுபோன்ற ஒருவித மயக்கம் அது. சமூக அளவில் இந்த 50 ஆண்டுகளில் எத்தனையோ விரும்பத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்திருக் கின்றன. கல்லூரியில் கிராம முகாம் சென்றபோது, அங்கிருந்த தேநீர் கடைகளில் இரட்டைக் குவளைகள் இருப்பதைப் பார்த்து வேதனைப் பட்டோம். ஒருவரை ‘ஒதுக்கிவைக்கப்பட்டவர்’ எனக் குத்திக் காட்டு வதற்கு அதனினும் வேறு முத்திரை இல்லை. இன்று எல்லா இடங் களிலும் காகிதக் குவளைகள் அந்த அவலத்தை அறவே நீக்கி விட்டன. மனிதர்கள் செய்ய முடியாததை தொழில்நுட்பம் சாதித்துவிட்டது.

இந்திய ஆட்சிப் பணி என்பது கனவாக இருந்த காலம் மாறி எண்ணற்ற சிற்றூர்களில் இருந்து தமிழில் படித்தவர்கள் எழுதித் தேர்ச்சி பெற்று இந்தியாவெங்கும் உயர்ந்த பணிகளில் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறோம். மாதிரித் தாள்கள் எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்ள சென்னையில் ஒரு வாரம் தங்கியிருந்து நடையாக நடந்து அவற்றைப் பெற்ற அனுபவம் எனக்கு உண்டு.

 

இன்று விரலைச் சொடுக்கினால் விவரங்கள் குவியல் குவியலாக வந்துவிழும் இணைய வசதி. அரிய புத்தகங்களை எளிதில் பெறும் வசதி. உலகின் எந்த மூலையில் கிடைக்கும் புத்தகத்தையும் கணினியில் பதிவிறக்கம் செய்து விடலாம். அறிவு ஒரு சாராருக்கே சொந்தம் என்பதை அடித்து ஒடித்த விஞ்ஞான முன்னேற்றம். எந்த நாட்டுக்கும் ஒரு விநாடியில் மின்னஞ்சல் அனுப்ப முடியும் என்ற அதிவேக தகவல் பரிமாற்ற வசதி.

நிறைய குழந்தைகள் பெரிய வயிற்றுடன். வெளிறிய முகத்துடன். குழி விழுந்த கண்களுடன் போஷாக்குக் குறைவுடன் இருந்த நிலை மாறி இன்று ‘ஊளைச் சதையை குறைப்பது எப்படி?’ என்கிற கவலையில் பெற்றோர். அன்று கோழிமுட்டை என்பது ஒரு சில கடைகளில் இரும்புக் கூடையில் உறியில் தொங்கும் அபூர்வ வஸ்து. பால் காலையில் மட்டுமே கிடைக்கும் அரிய பண்டமாக இருந்த நிலை மாறி, 24 மணி நேரமும் பாக்கெட்டில் வாங்கி வரும் பொருள்.

வதவதவென பிள்ளைகளைப் பெறுவது வாடிக்கையாக இருந்தது. பெண்கள் உடல்நலம் குறைந்து, ஆண்கள் கவலைகள் நிறைந்து அப்போதெல்லாம் கதைகளில் ‘40 வயதுப் பெரியவர்’ என்று எழுதும் வழக்கம் இருந்தது. இன்று 60 வயது நிறைந்தவர்களும் 20 வயதுபோல இருக்க முனைகிறார்கள். வயது என்கிற வரையறை இன்று எடுபடுவதில்லை.

எங்கு பார்த்தாலும் ஓலைக் குடிசைகள் இருந்த சிற்றூர்கள் இன்று மெல்ல மெல்ல மாறி வருகின்றன. அப்போது ஓட்டு வீடு அரிது. மாடி வீட்டை கல்வீடு என்று அழைப்பார்கள். இன்று பல வீடுகள் மச்சு வீடுகளாக மாறி வருகின்றன. அரசு கட்டித் தரும் வீடுகளும், மானியத்தால் உருவாக்கப்படும் இல்லங்களும் நிமிர்ந்து நிற்கின்றன. அன்று வசதியுள்ளவர் உபயோகித்த ஆடைகளை வாங்கி அணிந்து கொள்ள சிலர் ஆயத்தமாக இருந்தார்கள். இன்று பழைய துணிகளை யாரும் பெற விருப்பமாக இல்லை.

இன்றைய தலைமுறை சென்ற தலைமுறையைவிட உயரமாகிக்கொண்டிருக்கிறது. ஊட்டச்சத்துக்கள், புரதம் போன்றவை தாராளமாகக் கிடைப்பதும் இதற்குக் காரணம். தெளிவான முகமும், தோற்றப் பொலிவும் அனைவருக்கும் சாத்தியமாகும் நிலை உருவாகிக்கொண்டு வருகிறது. பலரது முகத்தில் படித்த களையும், கற்றறிந்த தேஜசும் காணப்படுகின்றன. கல்லூரிக் கல்வி ஒரு சில ருக்கு மட்டுமே என்பது மாறி மேனிலைப் பள்ளி களாக மூலைமுடுக்குகளிலெல்லாம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. பொறியியல் படிப்பு சிற்றூர்களிலும் கிடைக்கிறது. பள்ளிப் பக்கமே எட்டிப் பார்க்காத குடும்பங்களில் மருத்துவமும், பொறியியலும் சாத்தியமாகியிருக்கின்றன.

வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது. வாங்கும் திறன் அதிகரித்திருக்கிறது. பஞ்சம், பட்டினி ஆகியவற்றின் தாக்கம் குறைந்திருக்கிறது. சோப்புகூட ஆடம்பரப் பொருள் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட காலம் ஒன்று உண்டு. இன்று சின்னச்சின்ன ஊர்களிலும் உடல் தூய்மையை உறுதிசெய்யும் பொருட்கள் சின்னப் பொட்டலங்களாக கண் சிமிட்டி மின்னுகின்றன. ஊருக்கு ஓர் ஆங்கிலப் பள்ளி என்றிருந்த நிலை மாறி திரும்பிய பக்கமெல்லாம் ‘ஆங்கிலவழி படிப்பு’ என்று அந்நிய மொழியில் படிப்பது இப்போது சர்வசகஜமாகிவிட்டது. ஆனால், தமிழும் சரியாகப் படிக்கத் தெரியாமல் ஆங்கிலமும் முறையாக பேசத் தெரியாமல் ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு காலாய்த் தடுமாறும் தலைமுறை ஒன்று உருவாகியிருக்கிறது.

இன்று சமூக விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. திரைத் துறையினரும் நடிப்பு மட்டுமே வாழ்வு என நினைக்காமல் மக்களின் நாடித் துடிப்புகளையும் அறிந்து களத்தில் இறங்கிப் போராடுகிறார்கள்.

ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி எதையோ தொலைத்த உணர்வு எங்கள் தலைமுறையில் அனைவருக்கும் இருக்கிறது. அந்த இனம்புரியாத சோகத்தை எப்படி ஆற்றுவது என்று புரியாமல் அடிக்கடி பழைய நினைவுகளில் மூழ்கி மகிழ்ச்சியாக இருந்த காலங்களை மனத்தால் வருடிப் பார்க்கின் றோம்.

பிள்ளைகளுக்கு எல்லாம் வாங்கித் தந்தும் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போன்று தோன்ற வில்லை. ஆனால் அன்று எதுவுமே யாரும் வாங்கித் தராமலேயே நாங்கள் மகிழ்ச்சியாக இருந்த உணர்வு. இன்று வீட்டில் பொருட்களெல்லாம் குவிந்தும் ஒருவித வெறுமை. உறுப்பினர்கள் நிறைந்தும் ஒருவிதத் தனிமை.

மிகுந்த பாதுகாப்பான வாழ்க்கைக்கு நடுவில் ஏதோ பயம் ஊஞ்சலாடுகிறது. தூங்கி எழும்போது பொழுதை ரசித்துக்கொண்டு எழுபவர்கள் குறைவு. எதுவும் இல்லாதபோது இருந்த சுதந்தரம் எல்லாம் இருக்கும்போது பறிபோனதைப் போன்ற பரிதாபம்.

நம் உறவுகளையும், உரிமைகளையும் யாரோ வழிப்பறி செய்ததைப்போன்ற எண் ணம். ஏதோ ஒன்று குறைகிற மாதிரியே எப்போதும் இருக்கிறது. சுவர்கள் பலமாக இருந்தாலும் இதயம் பலவீனமாக இருக்கிறது.

நாகையில் கல்லார் தர்காவில் கந்தூரி விழாவின்போது அங்கு இருக்கும் இஸ்லாமிய நண்பர்கள் அக்கரைப் பேட்டை நைனியப்ப நாட்டாரை `அப்பா’ என்று அழைப்பதைப் பார்த்து பூரித்துப் போயிருக்கிறேன். சின்ன வயதில் எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் சுபான் பாயும், விக்டர் குடும்பமும் அண்ணன், தம்பிகளாக உறவு வைத்து அழைத்துப் பழகியது நினைவுக்கு வந்தது. இப்போது அக்கம்பக்கங்களில் ஏனோ கண்ணுக்குத் தெரியாத இமயத் தடுப்புகள் பிரி வினைகளின் பெயரால் எல்லா இடங் களிலும் விரவிக் கிடப்பதைப் போன்ற வேதனை.

புதிய புதிய சந்திப்புகளில் பழைய உறவுகளையும், நட்புகளையும் தொலைத்துக்கொண்டே இருக்கிறோம். எல்லாம் மேம்போக்காக இருக்கும் பழக்கத்தில் மையத்தைத் தவற விடுகி றோம்.

இழந்தவற்றை நினைவுபடுத்த எப்போதும் இல்லாத அளவு எல்லா இடங்களிலும் பழைய மாணவர்கள் சந்திப்பு. அங்கு வழியிலேயே இடறி விழுந்தவர்கள் நினைவில் இதயம் வலிக்கிறது.

ஓய்வுக்குப் பிறகு சகோதர சகோதரிகள் ஒரே இடத்தில் ஒன்றாய்த் தங்க முடியாதா! செலவைப் பிரித்து உணவைப் பகிர்ந்து உயிரை நீட்டிக்க முடியாதா! ஒரே சமையலறையில் உள்ளங்கள் ஒன்றாக மாலையில் பழங்கதைகள் பேசி களித்திருக்க இயலாதா! அதிக நாட்கள் முடியாவிட்டாலும் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு வாரமாவது ஒன்றாய்க் கூடி மகிழலாமே!

அப்போது அந்தப் பொற்காலம் திரும்பலாம்.

அன்பின் ஆதிக்கம் அனைத்து சுயநலங்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு எழும்பி நிற்கும் காலம்தானே பொற்காலமாக இருக்க முடியும்!

- நிறைந்தது -

https://tamil.thehindu.com/opinion/blogs/article24685809.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.