Jump to content

‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்!


Recommended Posts

‘யதி’ -  துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்!

 

 
series_logo_edited

 

தினமணி இணையதளத்தில் எழுத்தாளர் பா. ராகவன் எழுதும் புதிய தொடர் ‘யதி’

இந்தியாவில் துறவறம் என்பது இன்று காசுக்கு விற்கும் பண்டமாகி விட்டது. நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு காசைக் கொட்டித் தர தயாராக இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உங்களுக்கு ஹைடெக் துறவறத்தைப் பற்றிப் போதிக்க கார்ப்பரேட் சாமியார்கள் (துறவிகள்) தயாராக இருப்பார்கள். ஆனால், உண்மையில் துறவறம் என்றால் என்ன? இன்று நாம் காணும் துறவறத்தில் துளியளவு கூட நிஜ துறவறத்தின் சாயலோ, சாரமோ இல்லை என்பதே நிஜம். அதை உணர்ந்தவர்களாகவே இருந்த போதும் நம்மால் கார்ப்பரேட் துறவிகளைத் தவிர்க்க முடியவில்லை என்றால் காரணம் துறவறம் பற்றிய நமது அறியாமையே! எது நிஜமான துறவறம்? அதைப் பற்றித்தான் வேத விற்பன்னர்களின், நிஜமான துறவிகளின் கடினமான வேத நூல்களின் துணை கொண்டு தினந்தோறும் அலசவிருக்கிறார் எழுத்தாளர் பா.ரா. சாமானியர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத மொழிநடையில் இருக்கும் அந்த நூல்களின் சாரத்தை அனைவருக்கும் புரியும் வகையில் வெகு எளிதாக்கியும் தரவிருக்கிறார். வாசகர்கள் தவறாது வாசித்துத் தொடர் குறித்த தங்களது கருத்துக்களை, சந்தேகங்களை, விவாதங்களை உடனுக்குடனாகப் பதிவு செய்து தெளிவு பெறலாம்.

pa.ra_.jpg

தொடர் குறித்துப் பா. ரா வின் வார்த்தைகளில்....

யதியைத் தொடங்குகிறேன். 2009ல் என் அப்பாவின் புத்தகச் சேமிப்பை ஒரு நாள் அளைந்து கொண்டிருந்தபோது 'ஜாபால உபநிடதம்' என்ற பழம்பிரதியொன்று கண்ணில் பட்டது. அது எத்தனை காலப் பழசு என்றுகூடத் தெரியவில்லை. முதல் சில பக்கங்கள் இல்லாமல், பழுப்பேறி, செல்லரித்து, தொட்டால் உதிரும் தருவாயில் இருந்தது அந்நூல். அப்பா வேதாந்த நாட்டம் கொண்டவரல்லர். அப்படியொரு பிரதியை அவர் தேடி அடைந்திருக்க முடியாது. யாரோ கொடுத்திருக்க வேண்டும். அல்லது எப்படியோ அவரிடம் வந்து சேர்ந்திருக்க வேண்டும். இருபதாம் நூற்றாண்டின் மிகத் தொடக்க காலத்து அச்சில் சமஸ்கிருத மூலமும் எளிதில் புரியாத தமிழ் அர்த்தமும் [பெரும்பாலும் சமஸ்கிருதச் சொற்களையே தமிழ் லிபியில் அர்த்தம் என்று தந்திருந்தனர்] கொண்ட மிகவும் ஒல்லியான புத்தகம். புரட்டினாலே உதிர்ந்துவிடுகிற பக்கங்களை கவனமாகத் திருப்பிப் படிக்க ஆரம்பித்தேன். மிஞ்சினால் இருபது நிமிடங்கள் படித்திருப்பேன். எனக்கு அது சரியாகப் புரியவில்லை. ஆனால் 'ஜாபால உபநிடதம்' என்ற பெயரும் அதன் இறுதிப் பகுதியில் விவரிக்கப்பட்டிருந்த துறவற ஒழுக்க நியமங்களும் திரும்பத் திரும்ப நினைவில் இடறிக்கொண்டே இருந்தன.

ஒரு துறவியாகிவிட வேண்டும், காற்றைத் தவிர இன்னொன்றில்லாத பெருவெளியில் தனித்துத் திரியவேண்டும் என்று முன்னொரு காலத்தில் கனாக் கண்டதுண்டு. அது வாழ்வின் குரூரங்களிலிருந்து தப்பித்துச் செல்ல அன்று எனக்குத் தோன்றிய வழி. ஒரு பொறியாளன் ஆவது போல, டாக்டராவது போல, வழக்கறிஞராவது போலத் துறவியாவது என்பதும் ஓர் இயலாகவே எனக்குள் பதிந்திருந்தது. எங்கெங்கோ அலைந்து பல சன்னியாசிகளை, சித்தர்களை, காவி அணிந்த வெறும் பிச்சைக்காரர்களைச் சந்தித்து என்னென்னவோ பேசியிருக்கிறேன். சில்லறை சித்து ஆட்டங்களைக் கண்டு, வியப்புற்று வாயடைத்து நின்றிருக்கிறேன். ராமகிருஷ்ண மடத்துத் துறவியொருவர் முக்கால் மணி நேரம் பற்பல வேதாந்த விஷயங்களைப் பேசி, இதில் உனக்குப் புரிந்த ஏதாவது ஒரு வரியைச் சொல் என்றபோது, ஒரு சொல்கூடப் புரியாத என் மொண்ணைத்தனத்தை எண்ணி இரவெல்லாம் கதறி அழுதிருக்கிறேன். சானடோரியம் மலை உச்சிக்குச் சென்று தியானம் செய்ய அமர்ந்து கொள்ளி எறும்புக் கடிபட்டு உடம்பெல்லாம் வீங்கி அவதியுற்றிருக்கிறேன். வாழ்வினின்று தப்பி ஓடுவதல்ல; பெருங்காதலுடன் ஒட்டுமொத்த மானுட சமூகத்தையும் அள்ளி அரவணைக்கும் பக்குவமே துறவு என்பது புரிந்த காலத்தில் எனக்கொரு மகள் பிறந்திருந்தாள். இதே புரிதல் தலைகீழாக நிகழ்வதன் விளைவாகவே இன்றைய பட்டுக்காவி சன்னியாசிகள் பிறக்கிறார்கள் என்பதும் புரிந்தது.

எக்காலத்திலும் நான் துறவியாகப் போவதில்லை என்பது தெளிவாகப் புரிந்த பின்பு துறவு நிலை குறித்து நிறையப் படிக்க ஆரம்பித்தேன். அதன் முக்கிய விளைவாக, துறவிகளைத் தேடிச் செல்லும் வழக்கம் நின்றுபோனது. பிரமிப்புகளும் மயக்கங்களும் இல்லாமல் போயின. ஜீவநதிகளைப் போல் மண்ணெங்கும் ஓடிக் கலந்த அத்தகைய பிறவிகள் சரஸ்வதியைப் போல நிலம் நுழைந்து முகம் மூடிக் கொண்டுவிட்டார்கள். தேங்கியிருப்பதெல்லாம் அறமற்ற வெறும் நிறம்.

முற்றிலும் உதிர்ந்து இல்லாமலே போய்விட்ட அப்பாவின் சேகரமான அந்த ஜாபால உபநிடதத்தின் வேறு பிரதி எங்காவது கிடைக்கிறதா என்று வெகு காலம் தேடினேன். கிடைக்கவில்லை. அது அதர்வ வேதத்தின் உபநிடதம் என்று ஓரிடத்திலும் அனுமனுக்கு ராமன் உபதேசித்தது என்று வேறொரு இடத்திலும் படித்தேன். அமரர் பாலகிருஷ்ண சாஸ்திரிகள் ஜாபால உபநிடதம் யஜுர் வேதத்தைச் சார்ந்தது என்று எப்போதோ சொன்னது நினைவுக்கு வந்தது. எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. வேதங்களையும் [விடியல் வெளியீடு] உபநிடதங்களையும் [ராமகிருஷ்ண மடம் வெளியீடு] தமிழில்தான் படித்தேன். இதில் உள்ள சிக்கல் என்னவெனில், படிப்பதில் பெரும்பகுதி புரியாது. புரிந்த பகுதிகள் என்று நான் எண்ணிய பலவற்றையும் தவறாகவே புரிந்துகொண்டிருப்பதைப் படிப்படியாக அறிந்தேன். அதைப் பல சந்தர்ப்பங்களில் பல்வேறு நபர்கள் சுட்டிக்காட்டித் திருத்தியிருக்கிறார்கள். சந்தேகமின்றி நான் மொண்ணைதான். அதனாலென்ன? இன்னும் முட்டி மோதிக்கொள்ள வாழ்க்கை நீண்டுதான் கிடக்கிறது.

சென்ற ஆண்டு நண்பர்கள் மாயவரத்தான் மற்றும் சீமாச்சு உதவியால் எனக்கு வாசிக்கக் கிடைத்த யாதவ பிரகாசரின் [ராமானுஜரின் பூர்வாசிரம குரு - பின்னாளில் ராமானுஜரின் சீடர் ஆனார்.] யதி தரும சமுச்சயம் [ஆங்கில மொழியாக்கம்] ஒரு விதத்தில் ஜாபால உபநிடதத்தின் மறு வடிவமாகத் தோன்றியது. வேதகால ரிஷிகள் துறவறம் குறித்துப் பேசிய அனைத்தையும் யாதவ பிரகாசர் தமது பிரதியில் தொகுத்திருக்கிறார். துறவிலக்கணம் என்று அதில் சொல்லப்பட்டிருக்கும் எது ஒன்றும் இன்று நடைமுறையில் இல்லை. அந்நூல் சுட்டிக்காட்டும் விதமான ஒரு துறவியும் இன்றில்லை.

ஆனாலும் இந்த மண்ணில் துறவிகளுக்கு மதிப்பிருக்கிறது. தொழவும் பழிக்கவும் அவர்கள் வேண்டியிருக்கிறார்கள். நான்கு விதமான சன்னியாச ஆசிரமங்கள் இன்னமும் புழக்கத்தில் இருக்கின்றன. இந்த நான்கில் ஒன்றையேனும் அணுகிக் கடக்காமல் எந்த ஒரு சராசரி இந்தியனின் வாழ்வும் நிறைவடைவதில்லை. விமரிசனத்துக்காகவேனும்.

யதி, சன்னியாசிகளின் உலகில் உழலும் கதை. நாமறிந்த காவி, நாமறிந்த ஆளுமைகள், நமக்குத் தெரிந்த துறவிகளின் வாழ்வுக்கும் செயலுக்கும் அப்பால் உள்ள, எங்கோ ஓடி ஒளிந்துகொண்ட ஒரு ஜீவநதியின் சத்தியத் தடம் தேடிப் போகிறேன். ஆனால் வேறு வழியில்லை. தெரிந்ததைக் கடந்துதான் தெரியாதது நோக்கிச் செல்ல வேண்டும். கண்ணைக் கட்டிக்கொண்டு காற்றில் கத்தி வீசியபடியே நடக்கிற அனுபவம். எழுத்து மட்டுமா, வாழ்வும் அதுவேயல்லவா? செய்ய நினைத்திருப்பது பெரும்பணி. எண்ணியவண்ணம் இது நடந்தேற இறையருள் கூடவேண்டும்.

 

ஒரே கண்ணியில் பொருத்தப்பட்ட மூன்று பெரும் மக்கள் கூட்டத்தின் வாழ்வைத் தனித்தனி நாவல்களாக எழுத ஒரு நாள் ஓரெண்ணம் தோன்றியது. சரஸ்வதி நதிக் கரையோரம் அதர்வ வேதம் தோன்றிய காலம் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் எழுபதுகளில் பிறந்த தலைமுறை வரை நீளும் பெருங்கதை. மூன்றும் தனித்தனிக் கதைகள்தாம். வேறு வேறு காலம், வேறு வேறு விதமான வாழ்க்கை, வேறு வேறு மனிதர்கள். யதி அதில் ஒரு நாவல். சென்ற ஆண்டே இதை எழுத ஆரம்பித்தேன். ஆனால் சற்றும் தொடர்பில்லாமல் பூனைக்கதை முந்திக்கொண்டு வந்துவிட்டது. என் கட்டுப்பாட்டை மீறி எழுத்து இழுத்துச் செல்லும் பக்கமெல்லாம் போய்த் திரிவது ஓர் அனுபவம். எழுதிக்கொண்டே இருப்பதொன்றே என் நோக்கமும் வேட்கையும் என்பதால் இது குறித்தெல்லாம் வருந்துவதேயில்லை.

எனவே யதி தன் பயணத்தை இங்கு தொடங்குகிறான்.  கருத்துரைக்கலாம், விமரிசிக்கலாம், சக பயணியாக உடன் வரலாம். இலக்கற்ற நீண்ட பெரும் பயணங்களில் முகங்களல்ல; குரல்களே வழித்துணை.

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

  • Replies 176
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு வேள்வியை தொடங்கியிருக்கின்றீர்கள் செவ்வனே முடிய வாழ்த்துக்கள்.மங்களம் உண்டாகட்டும்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

1. நீலக் குறிஞ்சி

 

 

விரிந்து விடைத்த செவிகளை ஆவேசமாக அசைத்துக்கொண்டு ஓடிவரும் மதம் கொண்ட யானையின் பிளிறலைப் போலிருந்தது இந்திராவதியின் பேரிரைச்சல். தண்டகாரண்யப் பெருவனத்தின் அடர்த்தியும் இருளும் நதியின் ஓசையைத் தம்மேல் பூசிக்கொண்டு அச்சமூட்டின. காற்றுக்குத் தலைவிரித்தாடிய தடித்த மரங்களின் நிழலாட்டம் நதியின் சுருதிக்குச் சேராமல் தன்னியல்பில் வேறொரு ஓசையின் ஊற்றைத் தோண்டிக்கொண்டிருந்தது. சம்பந்தமில்லாமல் திடீரென்று எங்கிருந்தோ ஒரு ஓநாயின் குரல் சீறி அடங்கியது. தாங்கொணாக் குளிரில் நடுங்கியவண்ணம் கூடாரத்துக்குள் நான் உறங்காமல் சத்தங்களுக்கு என்னைத் தின்னக் கொடுத்துக்கொண்டிருந்தேன். எனக்குத் தீராத வியப்பு, இந்திராவதியின் இந்தச் சீற்றம். மர்டிகுடாவில் அது புறப்படும் இடத்தை முன்பொரு சமயம் பார்த்திருக்கிறேன். ஒரு நாளெல்லாம் அதன் தடம் பற்றி, கரையோரம் நடந்து சென்றிருக்கிறேன். அங்கு இந்த ஆவேசம் கிடையாது. அலையடிப்பு கிடையாது. அச்சுறுத்தும் பேரோசை கிடையாது. வனாந்திரத்தைக் குடைந்துகொண்டு சமவெளியை நோக்கிப் பெருக்கெடுக்கும்போது எங்கிருந்தோ அதற்கொரு ராட்சசத்தனம் சேர்ந்துவிடுகிறது. இயற்கைதான். ஆனாலும் வனத்தின் ஆகிருதி நதிக்குப் பொறுக்கமுடியாது போய்விடும்போலிருக்கிறது. அதன் அடர்த்தியைக் கிழித்துக்கொண்டு சீறுவதில் வெறி கொண்ட சந்தோஷம். உன்னைவிட நான் வீரியம் மிக்கவன். உன்னைக் காட்டிலும் என் உரு பெரிது. உனது அமைதியை எனது ஆவேசம் புணர்ந்து பெருகுவதே இயற்கை.

நல்லது. இயற்கை பெரிதுதான். அது பெரிது என உணரும் மனத்தைவிடவா என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

ஒரு தேநீர் அருந்தினால் நன்றாக இருக்கும்போலிருந்தது. தூள் இருந்தது. அடுப்பு இருந்தது. ஒரு வார்த்தை சொன்னால், உறக்கம் துறந்து எழுந்து எனக்குத் தேநீர் தயாரித்துத் தர நான்கு பேர் என்னுடன் இருந்தார்கள். ஆனால் எக்காரணம் கொண்டும் இரவு முழுதும் நெருப்பைப் பற்றவைக்க வேண்டாம் என்று கானகவாசி ஒருவன் மாலை திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டுச் சென்றதுதான் யோசனையாக இருந்தது. மிருகங்களைக் குழப்பத்துக்கும் பதற்றத்துக்கும் உள்ளாக்கக்கூடிய எதையும் செய்யாதிருப்பது நல்லது. இந்த ஓரிரவைக் கடந்துவிட்டால் விடிந்ததும் கிளம்பி, ஜகதல்பூர் எல்லைக்குப் போய்விடலாம். நான்கு மணி நேரம் நடந்தால் போதும். அப்போதும் வனம் இருக்கும். நதியும் இருக்கும். ஆனால் இந்த அடர்த்தியும் அச்சமூட்டும் பேரோசையும் இராது. மனித மனங்களின் அச்சங்களை விழுங்கி விழுங்கித்தான் பகல் சூடாகிவிடுகிறது. அச்சமற்ற மிருகங்கள் உலவும் அடர்ந்த கானகத்துக்குள் வெளிச்சம் அரிதாகவே ஊடுருவுகிறது. வெப்பம் துறந்த வெளிச்சம்.

பொதுவாக, எனக்கு இம்மாதிரி சாகசப் பயணங்களில் விருப்பம் இருப்பதில்லை. வருத்திக்கொள்வதற்காக இந்த உடல் படைக்கப்படவில்லை என்று எப்போதும் தோன்றும். சிந்தனையோ, செயலோ, இனம் குறிப்பிட இயலாத ஒரு சொகுசின் வயப்பட்டது. அனுபவம் ஒரு பேரெழிற் புதையல்தான். அதில் சந்தேகமில்லை. ஆனால் வருத்திக்கொண்டுதான் அதை அடையமுடியும் என்று நான் நம்பத் தயாரில்லை.

ஒருசமயம், மேற்குத் தொடர்ச்சி மலையில் குறிஞ்சி பூக்கத் தொடங்கிவிட்டதாகத் தகவல் வந்தது. போகலாம் என்று சதஸில் எல்லோரும் சொன்னார்கள். அதற்கென்ன, போகலாமே? வருடம் முழுவதும் எங்கெங்கு இருந்தோ, யார் யாரோ அழைத்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். எப்போதும் எங்காவது போய்க்கொண்டேதான் இருக்கிறேன். உடம்பை வருத்தாமல் லபிக்கக்கூடிய எதுவும் எனக்கு விலக்கல்ல. பயணங்கள் உள்பட. ஆனால் இதை நான் வெளிப்படுத்துவதில்லை. போகலாம் என்ற ஒரு சொல் போதும். பயணத்தை இன்பகரமாக்கும் காரியத்தை என்னைச் சேர்ந்தவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

அன்றைக்கு ஆண்களும் பெண்களுமாக இருபது பேர் என்னோடு புறப்படத் தயாரானார்கள். குலுக்கி எடுக்காத உயர்தர சொகுசுப் பேருந்து ஒன்று தருவிக்கப்பட்டது. அதன் நடுப்பகுதியில் இருந்த இருக்கைகள் அகற்றப்பட்டு, எனக்கு வசதியாக ஒரு சோபா பொருத்தப்பட்டது. கண்ணாடி ஜன்னல்களுக்குத் திரை போடப்பட்டது. பயணங்களின்போது நான் எடுத்துச்செல்லும் சிறு புத்தக அலமாரியை மறக்காமல் அங்கே கொண்டுவந்து பொருத்தினார்கள். பிளாஸ்கில் வெந்நீர். பசிக்குப் பழங்கள், பிரெட். களைப்புற்றுப் படுக்க நினைத்தால் தலையணை, போர்வை. அவசரத் தேவைகளுக்கு மருந்து மாத்திரைகள். எதுதான் இல்லை? எதுவும் இல்லாமல் நான் எப்போதும் இருப்பதில்லை.

மூணாருக்கு நாங்கள் சென்று சேர்ந்தபோது, மலை முகட்டில் இருந்து ஒரு பெரும் வெண் பாறையைப் புரட்டிப்போட்டாற்போல் பனிமேகம் திரண்டு இறங்கி வந்துகொண்டிருந்தது. ஏறத் தொடங்கும்போது அத்தனைக் குளிர் இல்லை. உறுத்தாத வெயிலும் சற்றே அடர்த்தி மிக்க மென்காற்றுமாகக் கொஞ்சம் சொகுசாகத்தான் இருந்தது. என் மாணவர்கள் எனக்கொரு இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டும் என்று நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது. எனக்கு மலை ஏறும் அவஸ்தையைத் தராமல் எங்கிருந்தோ ஒரு பல்லக்கைத் தருவித்து, அதில் அமரவைத்து தூக்கிக்கொண்டு ஏறிச் சென்றார்கள். இதெல்லாம் அதிர்ஷ்டமல்ல. தெளிவான, திட்டமிட்ட உழைப்பு. என் இருப்பின் நியாயத்துக்கு, பிறப்பு தொடங்கி நான் இட்ட விதைகளும் உரங்களும் அநேகம். இன்னொருவரால் கற்பனையில்கூட எட்டிப்பிடிக்க முடியாத சாகசம் அது. அதைத்தான் நினைத்துக்கொண்டேன்.

என்னையறியாமல் புன்னகை செய்திருக்கிறேன்போல. என் பார்வை நிலைகுத்தி நின்ற மலை உச்சியையும் முகத்தில் சுரந்த புன்னகையையும் கவனித்துவிட்ட சீடன் ஒருவன், ‘குருஜி இயற்கையின் பேரெழிலை மொத்தமாக உறிஞ்சிக் குடித்துக்கொண்டிருக்கிறார்’ என்று உடன் வந்தவர்களிடம் கிசுகிசுப்பதைக் கவனித்தேன். இன்னொரு புன்னகையை அவனுக்காகத் தரலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

மலைப்பாதையின் இருபுறமும் முழங்கால் அளவுக்குப் புதர்கள் மண்டிக்கிடந்தன. வேரிலிருந்து பிய்த்துக்கொண்டு திரண்டெழுந்த தண்டுகள். தண்டுகளில் இருந்து விலகிப் பிரியும் சிறு கிளைகள். கிளைகளில் முளைவிட்ட இலைகள். இலைகளை நனைத்த பனி. உற்றுப் பார்த்தால், ஒவ்வொன்றும் வேறு வேறு செடிகள்தாம். இலைகளின் அகலமும் நுனிக் கூர்மையும் கவனமாக மாற்றிச் செதுக்கப்பட்டிருக்கிற செடிகள். பச்சையிலும் துல்லியமான அடர்த்தி பேதங்கள். மனித முகங்களை வடிவமைப்பதைக் காட்டிலும் இது சிரமம்தான். சிப்பிக்குள் சித்திரம் எழுதுவதுபோல. தவிர, ஒரே உயிர்தான் என்றாலும் ஒன்றிலிருந்து கிளைக்கிறபோதே தன் உருவையும் வெளிப்பாட்டையும் வேறுபடுத்திக் காட்டிக்கொள்வதில்தான் எத்தனை வேட்கை இந்தச் செடிகளுக்கு! ஆயினும் கலவையான வாசனையில் அவை புதர்த்தன்மை எய்திவிடுகின்றன. நெருங்கிப் படர்ந்த அடர்த்தியில் ஓர் அச்சுறுத்தல் சேர்ந்துவிடுகிறது. சிந்தனை ஒரு புதர். நெருங்கி அமர்ந்து ஒவ்வொரு செடியாக, ஒவ்வொரு இலையாக எடுத்து நீவிவிட்டு உற்றுக் கவனிக்கலாம். முகர்ந்து பார்த்து பேதம் அறியலாம். எது நல்லது? எது கெட்டது? எது மருந்தாகும்? எது விஷமாகும்? யாரையாவது கேட்கலாம். சிந்தனையைப் பற்றி நானறிந்ததுபோல, செடிகளைப் பற்றி மலைவாசி மக்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். சித்த வைத்தியர்களுக்குச் சற்று சுமாராக. எந்த இயலும் கணப்பொழுதில் தரிசனமாகத் தோன்றி மூளைக்குள் நிறைந்துவிடுவதில்லை. ஆசைகளின் வேகத்துக்கு வாழ்க்கை ஒரு வழுக்கு மரம்தான். சார்ந்திருப்பதுதான் உயிர்த்திருப்பதின் ஆதார விதி போலிருக்கிறது. செடிகளுக்கே அதுதான் என்றால் மனிதன் எம்மாத்திரம்?

வேறு வழி? எல்லாமே வேண்டித்தான் இருக்கிறது. சிறு தகவல்கள். புள்ளிவிவரங்கள். கீழைக் கதைகள். மேலைக் கதைகள். நாடோடிக் கதைகள். அற்புதத் தகவல்கள். சித்து கொஞ்சம். சித்த வைத்தியம் கொஞ்சம். யோகம் கொஞ்சம். கடவுள் கொஞ்சம். லௌகீகம்? சரிதான். அது இல்லாமலா?

 

By பா. ராகவன் 

இன்னும் நாநூறு மீட்டர் ஏறி, மறுபுறம் ஐந்நூறு மீட்டர் இறங்கினால் போதும் என்று உடன் வந்த ஆதிவாசி சொன்னான். எனக்குக் குளிர் பிரச்னையாக இல்லை. ஆனால் சட்டென்று பனி ஒளிந்துகொண்டு மழையாகிவிடுகிறது. பாதங்களை நெருடும் அக்குபஞ்சர் செருப்புபோலக் கன்னங்களின் இருபுறமும் குத்துவது, என்னைத் தூக்கிக்கொண்டு நடப்பவர்களை இம்சிக்கிறது என்று தோன்றியது. பெருமழையில் உள்ள மென்மை, வேகமான சிறு தூறல் அல்லது சாரலில் இல்லை. மழையைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. இது காற்றின் வேலை. இந்த மலையில் அது எந்தப்பக்கம் இருந்து வீசுகிறது என்றே கண்டுபிடிக்க முடிவதில்லை. தொலைவில் விழுந்துவிடுவதுபோல அசைகிற சில்வர் ஓக் மரங்களின் சாய்வாட்டம் தெரிந்தது. நின்று பார்க்கலாம். மரங்களின் அசைவுக்கு எப்போதும் ஒரு தாளகதி உண்டு. அசைந்துகொண்டும் ஆடிக்கொண்டும் இருப்பதே உலகின் இயல்பு என்று எடுத்துச்சொல்லுகிற லாகவம். இயல்பே ஆனாலும் இலக்கணத்துக்கு உட்பட்டுத்தான் ஆக வேண்டும் என்று போதிக்கிற பாவனை. இயல்பு மீறும்போது மரம் முறிந்துவிடுகிறது.

‘அங்கே பாருங்கள். அந்த மரங்களின் அசைவைக் கவனியுங்கள்.’

நான் சுட்டிக்காட்டிய திசையில் சீடர்கள் திரும்பிப் பார்த்தார்கள். ‘தலையைக் கலைத்துவிட்டுக்கொண்டு சாமியாடும் பெண்களைப் போன்றதல்ல மரங்களின் ஆட்டம். தலை ஆடிக்கொண்டிருந்தாலும் ஒழுங்காக வகிடெடுக்கிற நேர்த்தி அதில் ஒளிந்திருப்பது தெரிகிறதா?’

‘ஆமாம் குருஜி!’ வியப்போடு சொன்னார்கள்.

‘அதுதான். ஒழுக்கமீறலில்கூட ஒரு லயம் வேண்டும். ஒழுக்கமோ, மீறலோ அல்ல. லயமே ருசி. இப்போது யோசியுங்கள். பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பூத்தால் போதும் என்று இந்தக் குறிஞ்சிகளுக்கு யார் உத்தரவிட்டிருப்பார்கள்? அது பத்து வருடத்தில் பூத்தால் வேண்டாம் என்று சொல்லிவிடுவோமா?’

‘நிச்சயமாக இல்லை.’

‘இதே ஸ்ட்ரோபைலான்திஸ் குந்த்யானாவில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பூக்கும் இனமுண்டு. அதை யாரும் பொருட்படுத்துவதில்லை. முப்பத்தியாறு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கிற வகை ஒன்றுண்டு. அதை யாரும் நினைவு வைத்திருந்து போய்ப் பார்த்து ரசிப்பதில்லை. பன்னிரண்டு ஒரு சௌகரியம்.’

‘மனித சௌகரியத்தைச் சொல்கிறீர்களா குருஜி?’

ஒரு கணம் யோசித்தேன். எல்லாமே அப்படித்தானே? அதனதன் அறிவு விரிவுகொள்வதற்கேற்ப அர்த்தங்களை உற்பத்தி செய்துகொள்வதில் இருக்கிறது.

‘ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். நீலகிரி மலைப் பள்ளத்தாக்கில் இந்தக் குறிஞ்சி பூப்பதை வைத்துத்தான் தோடர்கள் அந்நாள்களில் தமது வயதைக் கணக்கிட்டார்கள். நாலு குறிஞ்சி பார்த்தவன், ஆறு குறிஞ்சி பார்த்தவன் என்று மூப்பர்களைக் குறிப்பிடுவார்கள்.’

நடப்பவர்களுக்குப் பொழுதுபோகும்படி பேசியபடியே வந்தேன். நாங்கள் சிகரத்தின் உச்சிக்கு வந்து சேர்ந்தபோது நேரம் மாலை ஐந்தாகியிருந்தது. இன்னும் பாதி வழிதான். மறுபுறம் ஐந்நூறு மீட்டர்கள் இறங்கினால் போதும். நீலக் குறிஞ்சிப் புதர்களை அடைந்துவிடலாம். ஒரு மணியின் தோற்றத்தில் கொத்துக் கொத்தாக மலர்ந்துகிடக்கிற பூக்கள். காற்றில் அது அசைகிறபோது காதுகளில் மணிச்சத்தம் ஒலிக்கிறதா பார்க்க வேண்டும்.

தொண்ணூற்று நான்காம் வருடம் ஆனமலையில் குறிஞ்சி பூத்தபோது நான் தனியாள். அன்றெனக்குக் காவி இருந்தது. ஆனால் அடையாளமில்லை. சீடர்கள் கிடையாது. நான் சொல்வதைக் கேட்க நான்கு பேர் இல்லை என்பதல்ல விஷயம். எனக்கு சொல்லத் தெரியுமா, என்ன சொல்வேன் என்பதில் எனக்கே குழப்பம் இருந்த காலம் அது. ஆனால் என் குரு தீர்மானமாகச் சொன்னார். ‘மொழியின் குழந்தை நீ.’

நான் அதை அப்போது நம்பவில்லை. ஆனால் அடுத்தடுத்து நடந்த நூற்றுக்கணக்கான சம்பவங்கள் அதைத்தான் எனக்கு நிரூபித்தன.

மீண்டும் புன்னகை செய்தேன்.

சிகரத்தில் இருந்து இறங்க ஆரம்பித்து முக்கால் மணி நேரம் சென்றிருக்கும். நீலக் குறிஞ்சிகள் பூத்திருந்த இடத்தை நாங்கள் நெருங்கியபோது வெகுவாக இருட்டிவிட்டிருந்தது. உருவம் தெரியாத அடரிருள். சீடர்களுக்கு ஒரே ஏமாற்றமாகப் போய்விட்டது. மீண்டும் நாளைதான் வர வேண்டுமா என்று கேட்டார்கள்.

‘நீலக்குறிஞ்சியை நீங்கள் புகைப்படத்தில் பார்த்ததில்லையா?’

‘புகைப்படத்தில் பார்த்து என்ன குருஜி?’

‘பிறகு? தொட்டுப் பார்க்க வேண்டும். அவ்வளவுதானே? தொடுங்கள்.’ நான் தொட்டுக் காட்டினேன்.

‘தொடுவது மட்டும்தானா?’

‘வேறென்ன? அதன் உருவம் உங்களுக்குத் தெரியும். புகைப்படத்தில் பார்த்திருக்கிறீர்கள். இதோ இப்போது தொடுவதற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிள்ளி முகர்ந்து பார்க்க விரும்பினாலும் செய்யலாம். வேறென்ன வேண்டும்?’

தர்க்கப்படி சரிதான். ஆனால் ஓர் அனுபவம் இல்லாமல்போகிறதே என்று அவர்கள் வருத்தப்பட்டார்கள். ஒரு கணம் யோசித்தேன். ‘வா. என்னைத் தொடு. நான் வேறு அது வேறல்ல’ என்று சொன்னேன். அந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத அந்தப் பதிலில் திகைப்புற்ற பெண்ணொருத்தி, பரவசம் மேலிட்டுப் பாய்ந்து வந்து ‘குருஜி’ என்று என்னை இறுக்கிக் கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள்.

மதியம் அவள் கார்லிக் சிக்கன் சாப்பிட்டிருப்பாள் என்று தோன்றியது.

(தொடரும்)

By பா. ராகவன் 

http://www.dinamani.com/junction/yathi/2018/mar/19/1-நீலக்-குறிஞ்சி-2881855--2.html

Link to comment
Share on other sites

 

2. புரிந்ததில் இருந்து விடுதலை

 

 

பெரிய காரியம் நடந்துவிடும்போலிருக்கிறது. நீயாவது பக்கத்தில் இருந்தால் உன் அம்மா சந்தோஷப்படுவாள் என்று கேசவன் மாமா தந்தி கொடுத்திருந்தார்.

அப்போது நான் மத்திய பிரதேசத்தில் சுற்றுப் பயணம் செய்துகொண்டிருந்தேன். இருபது நாள் பயணம். இருபது இடங்களில் சொற்பொழிவு. எனக்கு ஹிந்தி தெரியாது. ஆங்கிலத்தில்தான் பேசுவேன். சட்டென்று யாரும் எதிர்பாராத விநாடியில் என் பேச்சு தமிழுக்கு மாறிவிடும். ஆயிரம் பேர் நிறைந்த அரங்கு அந்தக் கணம் நிலைகுலைந்துபோய்விடும். அதனாலென்ன? நான் நிறுத்தமாட்டேன். குறைந்தது பத்து நிமிடங்கள் இடைவிடாமல் தமிழில் பேசிவிட்டுப் புன்னகை செய்வேன். என்ன பிரச்னை உங்களுக்கு? நான் பேசியது புரியவில்லையா?

‘ஆமாம், ஆமாம்’ என்று கூட்டம் கூக்குரலிடும்.

‘இதுவரை புரிந்த அனைத்திலிருந்தும் உங்களை விடுவிப்பதற்காகத்தான் புரியாத மொழியில் இவ்வளவு நேரம் பேசினேன்’ என்று சொல்லுவேன். ‘எதையும் முழுதாகப் புரிந்துகொண்டுவிடாதீர்கள். அது ஒரு ஆபத்து. புதிர்கள் இல்லாத வாழ்வில் சுவாரசியம் இல்லை. சுவாரசியம்தான் வாழ்வின் அர்த்தமே தவிர, தெளிவடைவது அல்ல. தீர்மானங்களுக்கு வந்து சேர்வதல்ல. ஒவ்வொன்றையும் அன்றன்றே முடித்து பைசல் செய்வதற்கு வாழ்வென்ன மளிகைக் கடைக் கணக்கா? அதையே நாம் மாதம் ஒருமுறை அல்லவா செய்கிறோம்?’

கூட்டம் கைதட்டும். நான் மீண்டும் ஆங்கிலத்தில் உரையாட ஆரம்பிப்பேன். பொதுவாக நான் சொற்பொழிவுகளுக்குத் திட்டமிடுவதில்லை. மொழியின் குழந்தை அல்லவா. அதைச் சார்ந்த அக்கறை மட்டும்தான் எனக்கு எப்போதும் இருக்கும். சரியான மொழி வசமாகிவிட்டால் அபத்தங்களின் அழகியலை உதறி விரித்து உலர்த்திவிடலாம். அனுபவம் எனக்குக் காட்டித்தந்த பாடம் அதுதான். மக்கள் அறிவின்மையின் உலகில் மட்டுமே சௌகரியமாக உலவ விரும்புகிறார்கள். அறிதலோ, அறியாமையோ அல்ல. அறிவின்மை. முட்டாள்தனத்தின் கவித்துவம் அனைவருக்கும் பிடித்திருக்கிறது. முடை நாற்றத்துக்கு மூக்கு பழகிவிட்ட பிற்பாடு அத்தர் வியாபாரம் செய்யப் புறப்படுவதில் பொருளில்லை.

அன்றைய சொற்பொழிவை இருபது நிமிடங்கள் முன்னதாக முடித்துக்கொண்டேன். நிகழ்ச்சி அமைப்பாளரிடம் எனக்கு வந்திருந்த தந்தியைக் காட்டி, விவரம் சொன்னபோது துடித்துப் போய்விட்டார். ‘ஐயோ, உடனே கிளம்புங்கள். இப்போதே விமான டிக்கெட்டுக்கு ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொன்னார். எனக்கென்னவோ அத்தனை சீக்கிரம் அது நிகழ்ந்துவிடும் என்று தோன்றவில்லை.

கேசவன் மாமா கவலைப்பட்டுத் தந்தி கொடுத்ததில் பிழையில்லைதான். அவருக்கும் வயதாகிவிட்டது. தான் முந்தியா, தமக்கை முந்தியா என்ற வினாவைச் சிந்தித்துக்கொண்டேதான் ஒவ்வொரு நாளும் படுக்கையை விட்டு எழுந்திருப்பாராயிருக்கும். மனைவியோ குழந்தைகளோ இல்லாத மனிதருக்குத் தமக்கையின் இருப்பு ஒன்றே தன் இருப்பின் அர்த்தமாயிருக்கும். அந்தப் பாசம் சித்திரிப்புகளுக்குள் அடங்காத பேரிலக்கியம். ஊரில் இருந்த காலம்வரை மிக நெருக்கமாக நான் அதைக் கவனித்திருக்கிறேன். விட்டு விலகி வெளியேறித் திரியத் தொடங்கிய முதல் சில வருடங்கள் தொடர்பில்லாமல் இருந்தாலும், எனக்கென்று ஓர் இடமும் அடையாளமும் உருவாகத் தொடங்கிய பின்னர் எல்லாம் சரியாகிவிட்டது.

மாமா ஒரு சமயம் என்னைப் பார்ப்பதற்கு மடிகேரிக்கே வந்திருந்தார். நான் அப்போது ஒரு ஸ்தாபனமாகியிருக்கவில்லை. ஆனால் ஸ்தாபனமாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அறிந்திருந்தேன். எனக்குச் சில சீடர்கள் சேர்ந்திருந்தார்கள். எளிய சில மூச்சுப் பயிற்சிகளின் மூலம் நான் அவர்களுடைய சில்லறை வியாதிகள் பலவற்றை குணப்படுத்திக் கொடுத்திருந்தது காரணம். மடிகேரியில் நான் தங்குவதற்கு அவர்கள்தாம் ஒரு வீடு எடுத்துக் கொடுத்திருந்தார்கள்.

ரம்மியமான மலைச்சாரலில் தொந்தரவில்லாத வசிப்பிடம். ஒரு கூடையைக் கவிழ்த்துவைத்த அளவுக்குத்தான் வீடு என்றாலும் எனக்கு அது போதும். வீட்டைச் சுற்றி பத்தடி வெற்றிடம் இருந்தது. வீட்டுக்காரர் இரும்புக் கம்பி வேலி போட்டிருந்தார். நட்டு வளர்க்க அவசியமின்றி ஏராளமான பூச்செடிகளும் புல்வகையும் தன்னியல்பாக முளைத்துச் செழித்திருந்தன. சற்று அழகுபடுத்தினால் ஒரு ஆசிரமமாகத் தோற்றம் தந்துவிடமுடியும் என்று தோன்றியது. பின்னணியில் இயல்பாக அமைந்திருந்த மலைச்சாரல் ஒரு வரப்பிரசாதம். ஒரு காவிரியைப்போல நான் பொங்கிப் புறப்பட ஆயத்தமாகிக்கொண்டிருந்தேன்.

அந்த வீட்டுக்கு வாடகை என்னவென்று எனக்குத் தெரியாது. வீட்டு உரிமையாளரை முதல் நாள் பார்த்ததுடன் சரி. சீடர்கள் அவரிடம் என்னைப் பற்றிச் சொன்னபோது, ‘மாஸ்டர்’ என்று குறிப்பிட்டதை மிகவும் ரசித்தேன். எனது காவி அங்கியும் கருத்த இளம் தாடியும் கூர்ந்த பார்வையும் மேலான புன்னகையும் அந்த வீட்டு உரிமையாளரைக் கவர்ந்திருக்க வேண்டும். என்னிடம் ஜெபமாலையோ, கமண்டலமோ, அகண்ட பெரும் பூஜை அறைத் தேவைகளோ இல்லை என்பது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. என்னிடம் ஒரு புகைப்பட தெய்வம்கூட இல்லாததைக் கண்டு, ‘நீங்கள் ஆத்திக சாமிதானே?’ என்று சற்றே சந்தேகப்பட்டுக் கேட்டார். ‘ஒரு சாமி எப்படி நாத்திகராக இருப்பார்?’ என்று பதிலுக்கு நான் கேட்டது அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. பத்து நிமிடங்கள் அவருடன் முண்டகோபநிஷத் குறித்துப் பேசிக்கொண்டிருந்துவிட்டு, ‘சரி புறப்படுங்கள், நான் என் பயிற்சிகளில் அமர வேண்டும்’ என்று சொன்னதே, நான் விரும்பும்வரை அந்த வீட்டில் குடியிருப்பதற்கான குத்தகைப் பணமாகிவிடும் என்பதை அறிந்திருந்தேன்.

மறுநாள் நான் விடிந்து எழுந்து வெளியே வந்து பார்த்தபோது வீட்டு வாசலில் கோலம் போடப்பட்டிருந்தது. ப்ரணாம் குருஜி என்றபடி சீடன் ஒருவன் ஃப்ளாஸ்கில் காப்பி எடுத்து வந்தான். இன்னொருவன் சிற்றுண்டி கொண்டு வந்தான். மதிய உணவுக்கு என்ன வேண்டும் என்று அவர்கள் கேட்டபோது நான் புன்னகையுடன் மறுத்தேன். ‘நான் பிக்‌ஷை எடுத்து உண்ண வேண்டியவன். என்னை உட்காரவைத்து சோம்பேறியாக்கிவிடாதீர்கள்’ என்று சொன்னேன்.

அவர்களுக்கு அது கடும் அதிர்ச்சியளித்தது. ‘நீங்கள் போய் பிக்‌ஷை எடுப்பதா? அதெல்லாம் முடியாது; கூடாது’ என்று தீர்மானமாக ஒரே குரலில் சொன்னார்கள்.

‘என்னைத் தடுக்காதீர்கள். வேறெந்தவிதத்திலும் நான் என் நிர்வாணத்தை நெருங்க இயலாது’ என்று சொன்னேன்.

‘புரியவில்லை குருஜி.’

‘அகங்காரமே ஆடை. அதைக் களைவதற்குப் பிக்‌ஷை எடுத்து உண்பதே சரி. வேண்டுமானால் ஒன்று செய்கிறேன். இன்று உன் வீட்டுக்கு வருகிறேன். நாளை இவன் வீடு. அடுத்த நாள் அவன் வீடு. ஆனால் நான்தான் வருவேன். பிக்‌ஷை கேட்ட பிறகுதான் நீங்கள் எனக்கு உணவளிக்க வேண்டும்.’

பாவனைகள் சக்திமிக்கவை. மின்சாரம் நிகர்த்த வீரியம் கொண்டவை. ஆனால், சரியான இடத்தில், சரியான அளவில் கையாளத் தெரிந்திருப்பது அவசியம். மேதைமை என்பது அதில் அடங்கிய சங்கதி. எனக்குத் தெரியும், சந்தேகமில்லாமல் நானொரு மேதை. எனக்குத் தெரிந்த இந்தப் பேருண்மையை நான் உலகுக்கு அறிவிக்கத் தருணம் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு பிக்‌ஷையில் அதனை ஆரம்பித்திருந்தேன்.

அப்போதுதான் கேசவன் மாமா என்னைத் தேடிக்கொண்டு மடிகேரிக்கு வந்து சேர்ந்தார். என்னைக் கண்டதும் அவரது உணர்ச்சிகள் கட்டுக்கடங்காமல் பெருக்கெடுக்கத் தொடங்கின. வெகுநேரம் என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கதறித் தீர்த்தார். அவர் சமநிலைக்கு வரும்வரை நான் அமைதியாக இருந்தேன். ஒரு சொல்கூடப் பேசவில்லை. பிறகு அவருக்கு என் கையால் தேநீர் தயாரித்துக் கொடுத்து அருந்தச் சொன்னேன். குடித்துவிட்டு அவர் கோப்பையை வைத்த பிறகு, ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.

‘இருக்கேண்டா. உங்கம்மாதான் மூச்சத் தவிர ஒண்ணும் மிச்சமில்லாதவளா ஆயிட்டா. பாவி, அப்பா போனதுக்குக்கூட வராம போயிட்டியே!’

நான் அமைதியாக இருந்தேன். அவர் ஆவேசம் மீதுற என்னைத் திட்டத் தொடங்கினார். ‘என்னடா பெரிய சன்னியாசம்? என்னத்தக் கண்டே இதுல? கடவுள பாத்துட்டியோ? ஆமான்னு பொய் சொன்னேன்னா தொலைச்சி கட்டிடுவேன் சொல்லிட்டேன். தோபார், பக்தி ஒரு போர்வை. பலதுலேருந்து தப்பிச்சிக்க உதவற கருவி. அவ்ளோதான் என்னைப் பொறுத்தவரைக்கும். சராசரி மனுஷாளுக்கு ஆயிரம் கஷ்டம். அதையெல்லாம் மறக்க சில பேர் குடிக்கறான். சில பேர் சிகரெட் பிடிக்கறான். கஞ்சா குடிக்கறான், இன்னும் என்னென்னமோ பண்றான். நீயும் நானும் தயிர்சாதம். நமக்கு பெருமாள் பேர்தான் லாகிரி. அத இப்படி காஷாயம் கட்டிண்டு வந்துதான் சொல்லிண்டு திரியணுன்னு அவசியமில்லே. பெத்தவ எக்கேடு கெட்டா என்ன, தகப்பன் செத்தே போனாத்தான் என்னன்னு விட்டுத் தொலைச்சிட்டு வந்தவனுக்குத்தான் தெய்வம் காட்சி குடுக்கும்னா, அத நிக்கவெச்சி செருப்பால அடிப்பேன் பாத்துக்கோ.’

நான் அவருக்கு பதிலே சொல்லவில்லை. இதில் பதில் சொல்ல என்ன இருக்கிறது? பதினெட்டு வயதில் நான் வீட்டைத் துறந்து வெளியே வந்தேன். அதன்பின் பத்து வருடங்கள் பைத்தியக்காரன்போல எங்கெங்கோ அலைந்து திரிந்த பின்பு என் குருவை இதே மடிகேரியில்தான் சந்தித்தேன். அவரோடு நான்கு வருடங்கள். அவர் காலமான பிறகு என் பாதையைத் தீர்மானிப்பதற்காக மேற்கொண்ட பயிற்சிகளிலும் முயற்சிகளிலும் இரண்டு வருடங்கள் ஓடிப்போயின. இதோ, எனக்கெனச் சில சீடர்கள் இன்று பிறந்திருக்கிறார்கள். ஒதுங்க ஓரிடம் கிடைத்திருக்கிறது. மாமாவுக்குக் கடிதம் எழுதி, வந்து பார்க்கச் சொல்லும் அளவு தைரியம் கிடைத்திருக்கிறது.

‘கேக்கறேன்ல? சொல்லு, உண்மையச் சொல்லு. நீ கடவுள பாத்தியா? அப்படி ஊர் உலகமெல்லாம் திரிஞ்சி என்னத்த கத்துண்டே? ஒன்ன பாத்ததும் இதத்தான் கேக்க சொன்னா உங்கம்மா.’

நான் புன்னகை செய்தேன். ‘அம்மா செத்துப்போனா நான் அவசியம் ஊருக்கு வருவேன் மாமா’ என்று சொன்னேன்.

ஆனால் எனக்குத் தெரியும். அந்தத் தருணத்தில் என்னைக் காட்டிலும் அம்மா பார்க்க விரும்பக்கூடியது என் மூத்த அண்ணனைத்தான். நான் வீட்டை விட்டுப் போவதற்கு ஆறாண்டுகளுக்கு முன்னர் அவன் போயிருந்தான். அவன் வெளியேறிய அடுத்த ஆண்டே இரண்டாவது அண்ணன் காணாமல் போனான். அவனுக்கு இரண்டாண்டுகள் கழித்து மூன்றாவது அண்ணன். கடைசியாக நான்.

‘நாலு பெத்தும் நாசமா போகணுன்னு அவ தலைல எழுதினவன் மட்டும் என் கையில கிடைச்சான்னா அவன வெட்டி பொலிபோடாம விடமாட்டேண்டா!' என்று கேசவன் மாமா சன்னதம் வந்தவர்போலக் கண்கள் சிவக்க, உதடு துடிக்கச் சொல்லிவிட்டுப்போனது நினைவில் நகர்ந்துபோனது.

காலம் ஒரு மின்மினியைப் போலச் சுடர்ந்து அணைந்து, சுடர்ந்து அணைந்து நகர்ந்து நகர்ந்து எங்கெங்கோ கொண்டுபோய்விட்டது. நான் மத்தியப் பிரதேசத்தில் சுற்றுப் பிரயாணம் செய்துகொண்டிருந்தபோது வந்து சேர்ந்த தந்தி, மீண்டும் என் மூத்த அண்ணாவை நினைத்துப் பார்க்க வைத்தது. சற்றும் எதிர்பாராதவிதமாக யாரோ சொன்னார்கள். தண்டகாரண்ய வனத்தில் புதிதாக ஒரு யோகி அலைகிறார். ஒரு விநாடிகூட உட்காராமல் நடந்துகொண்டே இருக்கிறார். திடீர் திடீரென்று ஓடவும் ஆரம்பிக்கிறார். எண்ணிப்பார்க்க முடியாத வேகத்தில் மரக்கிளைகளில் தாவி ஏறிக் காணாமல் போய்விடுகிறார்.

‘அவரை நீங்கள் யாராவது பார்த்தீர்களா? அவர் பேசுகிறாரா?’

பார்த்ததாகச் சொன்ன ஒருவனை என்னிடம் அழைத்துவந்தார்கள். அவன், இந்திராவதி பெருக்கெடுக்கும் சித்ரகூட அருவிக் கரையோரம் கடை போட்டு வியாபாரம் செய்கிற கிராமத்தான். அவனிடம் பேச ஆரம்பித்த ஐந்து நிமிடங்களிலேயே எனக்கு விளங்கிவிட்டது. அது என் அண்ணாதான். இந்த உலகில் இரு புருவங்களுக்கு மத்தியில் துல்லியமாக வைக்கப்பட்ட கருஞ்சாந்துப் பொட்டைப்போல மச்சம் உள்ளவர்கள் யாரும் இருக்க முடியாது, அவனைத் தவிர. அவன் பிறந்தபோது அதையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டுத்தான் அம்மாவிடம் பட்டாச்சாரியார் சொல்லியிருக்கிறார், ‘இந்தப் பிள்ளை உன்னிடம் தங்கமாட்டான்.’

என் பன்னிரண்டு வயதில் அவனைக் கடைசியாகப் பார்த்ததுடன் சரி. இன்று அவனுக்கு ஐம்பத்தொன்பது வயது இருக்கும். மீண்டும் சந்தித்துவிடத்தான் போகிறேனா?

ஒரு வாரத்தில் ஊருக்கு வருவதாக மாமாவுக்குத் தகவல் அனுப்பிவிட்டுத்தான் தண்டகாரண்யத்துக்குள் புகுந்தேன்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

3. வானம் பார்த்த கால்கள்

 

 

ஒரு திருடனைப்போலக் கானகத்துக்குள் ஊடுருவிக்கொண்டிருந்தது வெளிச்சம். இரவெல்லாம் தூங்காதிருந்ததில், விடியும்போது கண்ணை அழுத்தியது. கம்பளத்தை இழுத்துப் போர்த்திக்கொண்டு சுருண்டுகொள்ளத் தோன்றிய நினைவைத் தவிர்க்க முடியவில்லை. இம்மாதிரித் தருணங்களில் வெளிச்சம் ஒரு சௌகரியம். தவிர, நம்மைச் சுற்றி நான்கு பேர் விழித்திருக்கிறார்கள் என்ற எண்ணம் இன்னொரு கம்பளம். இரண்டு மணி நேரம் தூங்குகிறேன், பிறகு எழுப்புங்கள் என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டுத் திரும்பிப் படுத்துவிடலாம். ஆனால் திட்டம் குலைந்துவிடும். பரிச்சயமற்ற வனத்தில் நான்கு நாள்களாக அலைந்து திரிந்துகொண்டிருந்தேன். இடம் தெரியாது. இலக்கு தெரியாது. திசை தெரியாது. அபூர்வமாக எங்காவது தொலைவில் ஒற்றை விளக்கு வெளிச்சம் தெரிந்தால், ‘அதோ கிராமம்!’ என்று வியப்புடன் அந்தப் பிராந்தியத்தை நோக்கி நடக்கத் தொடங்குவோம். ஆதி மனிதர்களிடம் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, விரிவான அபிநயங்களின் உதவியுடன் நாங்கள் வந்த நோக்கத்தை விளக்குவோம். ஒரு யோகி. பிராந்தியத்துக்கு அவர் புதியவர். ஆனால் இந்தப் பகுதியில் அவர் உலவிக்கொண்டிருப்பதாகப் பார்த்தவர்கள் சிலர் சொல்லியிருக்கிறார்கள். அவரை நீங்கள் பார்த்தீர்களா? எங்கே இருக்கிறார் என்று தெரியுமா?

நான்கு நாளும் எனக்கு இல்லை, தெரியாது என்ற பதில்களே கிடைத்தன. காட்டுவாசிகளுக்கு வேறு சில துறவிகளைத் தெரிந்திருந்தது. அவர்கள் அடையாளம் சொல்லி அழைத்துச் சென்றார்கள். அவர்கள் யாரும் யோகிகள் அல்லர். அடர்ந்த கானகத்தின் சில இயற்கையான குகை சௌகரியங்கள் அவர்களுக்கு வாடகையில்லாமல் ஒதுங்க ஒரு வழியமைத்துத் தந்திருந்தது. அனுபவத்தில், பழக்கத்தில், நீண்ட நாள் பரிச்சயத்தில் அவர்கள் மிருகங்களிடம் இருந்து தம்மைக் காத்துக்கொள்ளும் வழிகளை உருவாக்கிவைத்திருந்தார்கள். தண்டகாரண்யத்தில் நான் சந்தித்த சாதுக்களுள் ஒரு சிலரை என்னால் மறக்கவே முடியாது. சித்ரகூட அருவிக்கு வடக்கே முப்பத்தி ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் கிராமவாசி ஒருவன் எங்களை ஒரு குகைக்கு இட்டுச் சென்றான். சுற்றிலும் அடர்த்தியான செம்மரங்கள் நிறைந்த பகுதி அது. யானைகள் உலவும் பகுதி என்று அவன் சொன்னான். அதனாலேயே, அடித்துத் தின்னும் மிருகங்கள் அந்தப் பக்கம் அதிகம் வருவதில்லை என்பது அவன் சொன்ன தகவல். மிருகங்கள் இப்படியெல்லாம் எல்லை வகுத்துக்கொண்டு வாழக்கூடியவையா! எனக்குத் தெரியவில்லை. எனக்கு அந்த இயலில் அதிகப் பரிச்சயம் கிடையாது. ஆனால் தெரிந்துகொள்வதில் பிரச்னையில்லை. ஒருவேளை இந்தக் கானகத்தில் என் அண்ணாவை நான் சந்திக்க நேர்ந்தால் அவனிடம் கேட்கலாம். அவன் என்னைப்போல் சுக சமரசம் செய்ய விரும்பாதவனல்ல. சொல்லப்போனால், தன்னை வருத்திக்கொள்வதன் உச்ச இன்பத்தைத் தொடுவதே சிறு வயதில் அவன் இயல்பாக இருந்தது. நாங்கள் விழுந்து புரண்டு ஆடித் திரிந்த திருவிடந்தை சவுக்குக் காட்டில் அவன் புரியாத சாதனைகள் இல்லை. என் பன்னிரண்டாவது வயதில், அவன் ஒரு நரிக்குக் கட்டளையிட்டு, அது அவன் சொன்னதை நிறைவேற்றிய காட்சியை நேரில் பார்த்திருக்கிறேன்.

அந்நாளை என்னால் மறக்கவே முடியாது. கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பு வெறும் சத்தமாக மட்டுமே கேட்கும் தொலைவி,ல் சவுக்கு மரங்கள் அடர்ந்து நிறைந்த ஒரு பகுதிக்கு அவன் என்னை அழைத்துச்சென்றான். அப்போது வானம் நன்றாக இருட்டத் தொடங்கிவிட்டிருந்தது. இருளில் ஆடும் சவுக்கு மரங்களில் மோகினிகள் மறைந்திருப்பார்கள் என்று என் இரண்டாவது அண்ணா சொல்லியிருந்ததை எண்ணிக்கொண்டேன். அடிவயிற்றில் மெலிதாக ஓர் அச்சம் புறப்பட்டு நரம்புகளின் வழியே உடலெங்கும் பரவுவதுபோல் இருந்தது. சிலிர்த்தது. எனக்குள் நிகழ்ந்ததுதான். வாய்விட்டு நான் அதைச் சொல்லவேயில்லை. ஆனாலும் என் மனத்தைப் படித்தவன்போல அண்ணா என்னைப் பார்த்துச் சிரித்தான். ‘கிளைகளற்ற மரங்களில் மோகினிகளால் எதைப் பிடித்துக்கொண்டு தொங்கமுடியும்? அவன் சொன்னதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாதே’ என்றான்.

மேற்கொண்டு நான் என் அதிர்ச்சியையோ, வியப்பையோ தெரிவிப்பதற்கு அவன் இடம் தரவில்லை. அன்றைய சாதனைக்காக அவன் தேர்ந்தெடுத்த இடம் அதுதான்போலிருக்கிறது. சவுக்குத் தோப்புக்குள் தவறி விளைந்திருந்த ஒரு காட்டாமணக்கு புதரை நோக்கிச் சென்றான். தனக்கென அங்கே அவன் மறைத்துவைத்திருந்த ஒரு சிறு பாறையை உருட்டிவந்து ஒரு மரத்தின் அடியில் போட்டான்.

‘என்ன செய்யப் போகிறாய்?’ என்று நான் கேட்டேன்.

‘நீயே பார்’ என்று சொல்லிவிட்டு அந்தப் பாறையின் மீது ஏறி நின்றுகொண்டான். உச்சந்தலைக்கு மேலே கைகளைக் கூப்பி சிறிது நேரம் கண்மூடி இருந்தான். என்ன நினைத்தானோ, சட்டென்று இடது காலைத் தூக்கி மடித்து வலது முட்டிக்கு முட்டுக் கொடுப்பதுபோல வைத்தான். எனக்கு பயம் வந்துவிட்டது. அது உருண்டையான பாறை. அம்மா உருட்டி உருட்டிக் கையில் வைக்கும் குழம்பு சாதத்தின் நிறம்தான் அதற்கும் இருந்தது. இருட்டத் தொடங்கியிருந்த நேரம் என்பதால் இன்னமுமே மங்கலாகத்தான் தெரிந்தது. என்னதான் கீழே இருப்பது கடற்கரை மணல் என்றாலும் இப்படியெல்லாம் சர்க்கஸ் செய்யத் தகுந்த பீடம் அது இல்லை என்று தோன்றியது. கொஞ்சம் சரிந்தாலும் அண்ணா கீழே விழுந்துவிடுவான். இரண்டு கால்களை ஊன்றி அந்தப் பாறையின் மீது நிற்பதே எனக்கு சிரமம் என்றுதான் பட்டது. அவன் எப்படி ஒற்றைக் காலில் நிற்கிறான்? எனக்குப் புரியவேயில்லை. நான் வியப்போடு அவனையே பார்த்துக்கொண்டிருந்தபோது, அவன் கண்களைத் திறந்தான். என்னைப் பார்த்துச் சிரித்தான்.

‘விமல், பயப்படாமல் திரும்பிப் பார். நமது விருந்தினர் என்னைப் பார்க்க வரவில்லை. நீ இந்த இடத்துக்குப் புதியவனல்லவா? உன்னைப் பார்க்கத்தான் வந்திருக்கிறார்’ என்று சொன்னான்.

விருந்தினரா! இவன் யாரைச் சொல்கிறான்? நான் குழப்பத்துடன் திரும்பியபோது எனக்கு ஏழெட்டடி தொலைவில் கண்ணில் கற்பூரம் வைத்தாற்போல ஒரு நரி நின்றுகொண்டிருந்தது. ஐயோ என்று நான் வாய்விட்டு அலறத் தொடங்கியபோது, அண்ணா சட்டென்று பாறையைவிட்டுக் கீழிறங்கி என் வாயைப் பொத்தினான். ‘கத்தாதே. அவர் உன்னை என்ன செய்தார்? அல்லது என்ன செய்துவிடுவார்? நான்தான் இருக்கிறேன் அல்லவா?’

‘வேண்டாம். எனக்கு பயமாக இருக்கிறது. நான் போகிறேன்’ என்று சொன்னேன்.

‘உனக்கு இன்று ஒரு குறிப்பிட்ட யோக சாதனையை அறிமுகப்படுத்தலாம் என்று நினைத்தேன். நீ அதை விரும்பக்கூடும். உனக்கு அது என்றைக்காவது உதவவும் கூடும்.’

‘எனக்கு என் உயிர்தான் முக்கியம். நரி நாயைப்போல் கடிக்குமா என்று எனக்குத் தெரியாது. ஆனால் நாய்க்கடிக்கு வைத்தியம் உள்ளதுபோல நரிக்கடிக்கு இருக்குமா என்று தெரியவில்லை. கோவிந்தராஜ் டாக்டர் அதிலெல்லாம் தேர்ந்தவராக இருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை.’

அவன் மீண்டும் சிரித்தான். ‘என்னை நம்பு. அது உன்னை ஒன்றும் செய்யாது. நீ என்னைக் கவனி. என்னை மட்டும்.’

‘என்னால் முடியாது. நான் போகிறேன்’ என்று சொன்னேன்.

அவன் என்ன நினைத்தானோ. ‘சரி, இப்போது அது இங்கிருந்து போக வேண்டும். அவ்வளவுதானே?’

‘ஐயோ அதை அடித்துத் துரத்தப் பார்க்காதே. ஏதாவது செய்து வைத்துவிடும்.’

‘உயிர்களைத் துன்புறுத்துவது தவறு விமல். நான் அதைச் செய்யமாட்டேன்.’

‘ஆனால் அது என்னையே முறைக்கிறது. எனக்கு பயமாக இருக்கிறது.’

‘இப்போது போய்விடும். ஒரு நிமிடம் இரு’ என்று சொல்லிவிட்டு, மீண்டும் அந்த உருண்டைப் பாறையின் பின்புறம் போய் நின்றுகொண்டு குனிந்து தனதிரு கைகளாலும் பாறையை அழுத்திப் பிடித்துக்கொண்டான். ஒரு விநாடி. இரண்டு விநாடி. மூன்றாவது விநாடி பாறையை அழுத்திக்கொண்டு அவனது உடல் அப்படியே தலைகுப்புற மேலே எழுந்தது. என் கண்ணெதிரே என் அண்ணா பாறைக்குத் தலை கொடுத்து சிரசாசனம் செய்துகொண்டிருந்தான். ஆனால் சாய்மானம் கிடையாது. அவன் கையை ஊன்றிக்கொண்டிருந்த பாறை உருளும் தன்மை கொண்டது. அசைந்துகொண்டிருந்தது. எந்தக் கணமும் அது அவனைக் கவிழ்த்துவிடும் என்று தோன்றியது.

 

ஆனால் நல்லவேளை அப்படி எதுவும் நிகழவில்லை. அண்ணா சில விநாடிகளில் சாய்மானமில்லாத நிலையில், அசையாது தலைகீழாக நிற்கப் பழகியவன் என்பது புரிந்துவிட்டது.

நான் நம்பமுடியாத வியப்புடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கு அந்தக் கணம் நரி அங்கே நின்றுகொண்டிருந்ததே மறந்துவிட்டது. இவன் என்ன செய்கிறான்? இதையெல்லாம் யாரிடமிருந்து கற்றான்? அப்பா, அம்மாவிடமோ, தனது மற்ற இரு தம்பிகளிடமோ இதைப் பற்றியெல்லாம் மூச்சுக்கூட விடாதவன், என்னை மட்டும் எதற்காக அழைத்துவந்து இதையெல்லாம் காட்டுகிறான்?

‘விழுந்துடப் போறடா. இறங்கிடு!’ என்று நான் கத்தினேன்.

அடுத்தக் கணம் அவன் செய்ததுதான் உச்சம். மேலே உயர்த்திய தனதிரு கால்களில் ஒன்றை அப்படியே பக்கவாட்டில் விரித்தான். ஒரு திசைகாட்டிபோல நீண்ட காலில் இருந்து பாதம் மட்டும் கழட்டிவிடப்பட்டதுபோல சற்றே வளைந்து முன்புறமாக நீண்டது. அதை இரண்டு முறை அசைத்தான். பிறகு மெதுவாக அந்தக் காலை நேராக்கி மீண்டும் வானம் பார்த்து நிறுத்தினான். அப்படியே ஒரு உண்டிவில்லைப்போல் இரு கால்களையும் முன்புறம் வளைத்து மெல்ல மெல்லத் தரையை நோக்கி இறக்கினான். இப்போது கைகளைப் பாறையில் இருந்து விடுவித்துக்கொண்டு துள்ளி எழுந்து நின்றான்.

‘திரும்பிப் பார். நமது விருந்தாளி போய்விட்டார்.’

நான் அச்சத்துடன் திரும்பிப் பார்த்தேன். அவன் சொன்னது உண்மைதான். அதுவரை அங்கு நின்றிருந்த நரி அப்போது இல்லை. எப்போது போனது? எப்படிப் போனது?

‘கையை உயர்த்தினால் நாய் விலகும். காலை உயர்த்தினால்தான் நரி விலகும்’ என்று அண்ணா சொன்னான்.

அன்றைக்கு அவன் எனக்குச் சில யோகாசனங்களைச் செய்து காட்டினான். எப்படியும் ஒரு மாதத்துக்குள் தரையில் இருந்து ஓரடி உயரத்துக்கு எழும்பி, அந்தரத்தில் அமர்ந்துவிடும் வித்தை கைகூடிவிடும் என்று சொன்னான்.

‘எப்படி இதெல்லாம் செய்யற?’ என்று நான் திரும்பத் திரும்பக் கேட்டேன். அவன் அதற்கு பதில் சொல்லவில்லை. என்னைக் கையைப் பிடித்துக்கொண்டு கடலோரத்துக்கு அழைத்துச் சென்றான். இருளும் கடற்காற்றும் சவுக்குத் தோப்பின் லயம் பிசகாத அசைவும் யாருமற்ற பெருவெளியும் தனிமையும் அமைதியும் எனக்கு மிகவும் புதிதாக இருந்தது. பிறந்தது முதல் புழங்கும் கிராமம்தான். ஆனாலும் இருட்டிய பின்பு எந்நாளும் கடலோரத்துக்கு வந்ததில்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் இருட்டத் தொடங்கும் நேரம் வீட்டில் அண்ணா காணாமல் போய்விடுவதை நினைத்துப் பார்த்தேன்.

‘இருட்டு ஒரு சௌகரியம். நிறையப் புதிர்களை அப்போதுதான் அவிழ்க்கமுடியும்’ என்று அண்ணா சொன்னான். ‘விமல், உன்னிடம் ஒன்று சொல்லுவேன். இதை எப்போதாவது சமயம் வாய்க்கும்போது அம்மாவிடம் நீ சொல்லிவைக்க வேண்டும்.’

‘என்னது?’ என்று கேட்டேன்.

‘நான் ரொம்ப நாள் இங்கே இருக்கமாட்டேன்.’

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் அவன் கையைப் பிடித்துக்கொண்டு கேட்டேன், ‘விட்டுட்டுப் போயிடப்போறியா? பசிச்சா என்ன பண்ணுவ?’

அவன் புன்னகையுடன் என் தலையை வருடிக் கொடுத்தான். ‘நீ குழந்தை. உனக்குப் புரியாது. ஆனால் உன் மூலமாகச் சொன்னால்தான் அம்மாவுக்கு இது புரியும்’ என்று சொன்னான்.

அன்றைக்கு இரவு முழுதும் நான் தூங்கவேயில்லை. அண்ணா ஓடிப்போய்விடப் போகிறானே என்ற அச்சத்தில் கொட்டக் கொட்ட விழித்துக்கொண்டு அவனையே பார்த்தபடிதான் படுத்திருந்தேன். ஆனால் அவன் காலைவரை அடித்துப் போட்டாற்போல நன்றாகத் தூங்கிக்கொண்டுதான் இருந்தான். அடுத்தடுத்த நாள்களும் அப்படியேதான் கழிந்தன. அவன் சொன்னதை அம்மாவிடம் எப்படிச் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. அம்மா அழத் தொடங்கிவிட்டால் அதை என்னால் தாங்கவே முடியாது. அப்பாவிடம் சொல்லலாம் என்றால் பயமாக இருந்தது. அப்பா கோபக்காரர். அண்ணனை நிற்கவைத்து பெல்ட்டால் விளாறிவிட்டால் பெரிய கஷ்டமாகிப் போய்விடும். அதையெல்லாம்விட எனக்குப் பெரிய குழப்பம், அவன் எதற்காக வீட்டை விட்டுப் போக முடிவு செய்திருக்கிறான் என்பது. இதை என் மற்ற இரு சகோதரர்களுடன் விவாதித்தால் ஒருவேளை விடை தெரிந்துவிடக்கூடும். ஆனால் யாருக்கும் தெரியவேண்டாம் என்று கேட்டுக்கொண்டு, என்னைத் தனியே அழைத்துச் சென்று சொன்ன வார்த்தைக்கு ஒரு மதிப்பில்லையா!

சிறிது காலம் நான் அதைப் பற்றியேதான் நினைத்துக்கொண்டிருந்தேன். அண்ணாவும் வழக்கம்போலப் பகல் பொழுதுகளில் பள்ளிக்கூடத்துக்குப் போய்வந்துகொண்டிருந்தான். மாலை வேளையில் விளையாடப் போவதாகச் சொல்லிவிட்டு எங்காவது காணாமல் போய்விடுவான். இருட்டி நெடுநேரம் கழித்து வீடு திரும்புவான். அப்பா திட்டுவார். கண்டுகொள்ளாமல் சாப்பிட்டுவிட்டுப் படுத்தால், அதோடு மறுநாள் காலைதான் கண் விழிப்பான். இப்படியே சில மாதங்கள் கடந்ததில், எப்போதோ அவன் சொன்னதை நான் முற்றிலும் மறந்தே போய்விட்டேன்.

அன்றைக்குப் பொழுது விடிந்து நான் எழுந்தபோது வீட்டில் அண்ணா இல்லை. அவன் எங்கே போனான் என்று அம்மா எல்லோரிடமும் கேட்டுக்கொண்டிருந்தாள். வாக்கிங் போய்விட்டு பஞ்சாயத்து ஆபீஸில் ரேடியோ செய்தி கேட்டுவிட்டு வீடு திரும்பிய அப்பாவின் முகம் உறைந்துபோயிருந்தது. என்ன ஆச்சு என்று அம்மா கவலையோடு கேட்டதற்கு, ‘சஞ்சய் காந்தி செத்துப்போயிட்டார். ப்ளேன் ஆக்ஸிடென்ட்’ என்று பதில் சொன்னார்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

4. நாமகரணம்

 

 

பாதி வாய் பிளந்த நிலையில் இறந்துகிடக்கும் ஒரு கருங்குரங்கின் தோற்றத்தில் இருந்தது அந்தக் குகை. தண்டகாரண்ய வனவாசி ஒருவன் என்னை அதனுள் அழைத்துச் சென்றபோது, உண்மையில் எனக்கு சிரிப்புத்தான் வந்தது. இந்த சாதுக்கள் எவற்றிடமிருந்து தப்பித்து இப்படி ஓர் இடம் தேடிவந்து ஒளிந்து வாழ்கிறார்கள் என்று புரியவில்லை. சாதனைகள் புரிந்து பழகுவதற்குத் தனிமை தேவை என்பது எனக்குத் தெரியும். ஆனால் ஒரு போதையாகிவிடும் அளவுக்குத் தனிமை பழகிவிடுவதும் ஆபத்தே அல்லவா? நான் சன்னியாசம் ஏற்றபோது எனக்குள் நியமித்துக்கொண்ட வைராக்கியம், எதனிடமிருந்தும் விலகுவதில்லை என்பதுதான்.

‘அப்புறம் அது எப்படி சன்னியாசமாகும்?’ என்று என்னோடு குருகுலத்தில் பயின்ற மாணவன் ஒருவன் ஒரு சமயம் கேட்டான்.

‘ஆகும். விலகுவதற்குச் சமமான வீரியம், நெருங்கிக் கரைந்து காணாமல் போய்விடுவதிலும் உள்ளது’ என்று பதில் சொன்னேன்.

‘அப்படியென்றால் பெண்?’ சட்டென்று கேட்டுவிட்டான். நான் வாய்விட்டுச் சிரித்தேன். எல்லா முயற்சிகளும் சென்று சரணடையும் பிராந்தியமாக யுகம் யுகமாக இருந்துவருகிற பிறப்பு. யாரால் தவிர்க்கமுடிந்திருக்கிறது? தள்ளிப்போயிருப்பது வேறு. ஆனால் பெண்ணை நினைக்காத ஆண் பிறப்பென்று ஒன்று இருக்க வாய்ப்பில்லை. சக்தி ரூபமாகக் கருதுவதும் ஒரு பாவனைதான். உடலின் துணையின்றி நினைவில் புரண்டு மீள ஒரு சௌகரியம். தொழுவதற்கும் புணர்வதற்கும் வித்தியாசம் என்று ஏதேனும் இருக்கிறதா என்ன. சொன்னேனே, நெருங்கிக் கரைந்து காணாமல் போவது.

‘நீ ஒரு அயோக்கியன். வேஷதாரி. தயவுசெய்து ஓடிப் போய்விடு. உன்னால் நம் குருகுலத்துக்கே கேடு.’ அவன் மிகவும் பதற்றமடைந்திருந்ததைக் கண்டேன். என்ன சொல்லி அவனை சமாதானப்படுத்தலாம் என்று யோசிக்க ஆரம்பித்தேன். அவன் எனக்கு மிகவும் பின்னால் குருகுலத்தில் வந்து சேர்ந்தவன். உபநிஷத், கீதை, பாரதம், மேலைத் தத்துவம் என்று ஏராளமாகப் படித்துவிட்டுவேறு வந்திருந்தான். மஃபத்லால் நிறுவனத்தில் பிராந்திய விற்பனை அதிகாரியாக வேலை கிடைத்து மைசூருக்கு வந்தவனுக்குத் தற்செயலாக ஒரு கல் இடறி எங்கள் குருகுலத்துடன் தொடர்பு உண்டானது. பெரிய சம்பளம், வசதியான வாழ்க்கை, சுக சௌகரியங்கள், குடும்பம், உறவுகள் எதுவும் வேண்டாம் என்று மொட்டை அடித்துக்கொண்டு காவியுடுத்திக்கொண்டவன்.

‘ஆனால் நண்ப, நான் அடைந்தவை போதாது என்ற வேட்கையுடன் மேலும் அடைவதற்காக இங்கு வந்து சேர்ந்தவன் என்று சொன்னால் உனக்குப் புரியுமா? நீ என்னைக் காட்டிலும் வயதில் மூத்தவன். என்னைவிட அதிகம் வாசித்தவன். என்னைவிட வைராக்கியம் மிக்கவன். அழகனும்கூட. ஆனாலும் சொல்கிறேன். மரணத் தருவாயில் நீ திருப்தியடைந்தவனாக இருக்கமாட்டாய். நானோ, உலகை வென்ற செங்கிஸ்கானைப்போல் உணர்ந்தபடி விண்ணை வென்ற இந்திரனாவதற்காக இறந்துபோவேன்.’

அவன் முற்றிலும் நம்பிக்கை இழந்தவனாக என்னை வெறுப்போடு பார்த்துக்கொண்டே இருந்தான். அவனுக்கு ஒரு கதை சொன்னேன். உண்மையில் அது கதையல்ல. எனக்கு நடந்ததுதான். ஆனால் ஒரு கதையைப்போலவே விவரணைகளுடன் சொன்னேன். அது அவனுக்கு அவசியம் என்று பட்டது. என் குருநாதர் என்னை மொழியின் குழந்தை என்று வருணித்ததைக் குறித்துச் சொன்னேன் அல்லவா? அன்றைக்குத்தான் அவர் என்னைக் குறிஞ்சி மலரைப் பார்த்துவரச் சொல்லி ஆனமலைக்கு அனுப்பிவைத்தது நடந்தது.

சட்டென்று அவர் மொழியில் இருந்து மலரை நோக்கித் தாவியதில் ஏதோ பொருள் இருக்கும் என்று தோன்றியது. பயணம்தானே? போனால் போகிறது என்று கிளம்பினேன்.

முதலில் நான் குமுளிக்குப் போய்ச் சேர்ந்தேன். அன்றைக்கு உள்ளூர் கம்யூனிஸ்டுகள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். லாரி உரிமையாளர்களுடன் ஊழியர்களுக்குச் சிக்கல். சம்பள உயர்வு கோரிக்கைகள். போராட்டம், ஊர்வலம், கடையடைப்பு.

எனக்கு நல்ல பசி. எங்காவது ஒரு தேநீர்க் கடை திறந்திருந்தால்கூடப் போதும். இரண்டு பன் சாப்பிட்டு ஒரு தேநீரைக் குடித்தால், ஒரு நாளைக் கடத்திவிடலாம். ஆனால் அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது. சாலையோரம் பழங்களைக் குவித்து விற்பனை செய்பவர்கள் இல்லை. உணவகங்கள் இல்லை. ஒன்றுமே இல்லை. ஊரே உறங்கிவிட்டாற்போலிருந்தது. பிற்பகல் வரை தாக்குப்பிடித்துப் பார்த்து முடியாமல் போய்விட, வேறு வழியில்லாமல் ஒரு வீட்டுப் படியேறி கதவைத் தட்டினேன்.

சிறிய வீடுதான். முன்புற ஓட்டுச் சரிவுக்கு அப்பால் சிறிய முற்றம் ஒன்று இருந்தது. அதன் இருபுறமும் இரண்டு அறைகள். பின்னால் அடுக்களை. விரியத் திறந்துவைக்கப்பட்டிருந்த வீடு ஒரு புராதனமான குகையை நினைவுபடுத்துவதுபோலிருந்தது. நான் கதவை இரண்டாம் முறை தட்டினேன். இப்போது ஒரு பெண் வந்தாள்.

பெண்ணே எனக்குப் பசிக்கிறது. ஊரில் கடையடைப்பு நடந்துகொண்டிருப்பதால் உண்ண ஒன்றுமில்லை. நான் இரவிகுளத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். போய்த் திரும்பும் வரை பசி தாங்க வேண்டும். உண்ண ஏதேனும் கிடைக்குமா?

இயல்பாகவே கேட்டேன். அது என் குரு சொல்லிக் கொடுத்தது. உணவைக் கேட்பதற்கு வெட்கப்படாதே. தயங்காதே. கிடைக்கிறபட்சத்தில், உண்மையிலேயே போதுமான அளவு வருவதற்குமுன் போதுமென்று சொல்லாதே.

இருங்கள் வருகிறேன் என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் உள்ளே போனாள். சில நிமிடங்களில் ஒரு அலுமினியத் தட்டில் மொச்சைக் கொட்டை குழம்பு ஊற்றிய சோறு எடுத்துவந்து வைத்துவிட்டு, உட்காருங்கள் என்று சொன்னாள்.

யார் என்று உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. கணவனாயிருப்பான். அவள் அதற்கு பதில் சொல்லவில்லை. சாப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு, ஒரு குவளை தண்ணீரும் கொண்டு வைத்துவிட்டு உள்ளே போய்விட்டாள். அந்தக் கதவருகிலேயே அமர்ந்து நான் முழுக்கச் சாப்பிட்டு முடித்தேன். பசி போய்விட்டது. அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு, உன் பெயரென்ன என்று கேட்டேன்.

‘சாப்பிட்டாயிற்றல்லவா? போய் வரலாம்’ என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள்.

ஒரு கணம் எனக்குத் திடுக்கிட்டுவிட்டது. அவள் பெயர் எனக்கு அநாவசியம் என்று அவள் நினைத்ததல்ல காரணம். எனக்கு ஏன் அவளது பெயரைக் கேட்கத் தோன்றியது என்று புரியவேயில்லை. பெயரில் என்ன இருக்கிறது? அவள் அன்னபூரணி. தட்டென்றோ, சோறென்றோ, குழம்பென்றோ அவளை நினைவில் நிறுத்துவது பெரிய விஷயமே அல்ல. குனிந்து தட்டை அவள் என்முன் வைத்தபோது அவளது இடுப்பு சற்றே உள்வாங்கி வெளிவந்ததைப் பார்த்தேன். என்ன சாப்பிட்டாலும் குண்டாகாத உடல் வாகு என்று அப்போது நினைத்துக்கொண்டேன். பெரிய அழகியெல்லாம் இல்லை. சராசரி மலையாளப் பெண்தான். ஆனால் நிச்சயம் குமுளிக்காரி இல்லை. நடு கேரளத்தில் எங்கிருந்தோ இங்கு வாழ வந்திருப்பாள் போலிருக்கிறது. ஒரு பெயராக அவளை நினைவில் இருத்திக்கொள்ள எனக்கு எந்த அவசியமும் இல்லைதான். உணவாகவோ இடுப்பாகவோ பதியவைத்துக்கொள்ள வாய்ப்பிருந்தும் நான் ஏன் பெயர் கேட்டேன்? புரியவேயில்லை.

அதன்பின் குருவோடு சுமார் மூன்றாண்டுகள் பாரதமெங்கும் சுற்றித் திரிந்த பிற்பாடு என்றோ ஒருநாள், ‘சரி உனக்கு சன்னியாச தீட்சை அளிக்கிறேன்’ என்று சொன்னார். அந்த தீட்சைச் சடங்கின்போதுதான் முதல் முதலாக என் முழுப்பெயரைக் கேட்டார். ‘மாற்றுவதற்கு முன்னால் எதை மாற்றப்போகிறேன் என்று அறிந்துகொள்வது அவசியம்.’

‘குருஜி, என் முழுப்பெயர் விமல் குமார்.’

ஏனோ அவர் புன்னகை செய்தார். நான் காரணம் சொன்னேன். ‘என் மூத்த அண்ணா பிறந்தபோது நடிகர் விஜயகுமார் கந்தன் கருணை படத்தில் நடித்திருந்தார். அவரது பெயர் நவீனமாக இருப்பதாக அம்மாவுக்குத் தோன்றியிருக்கலாம். அவள் அந்தப் பெயரை விரும்பியிருக்கலாம். அண்ணாவுக்கு விஜய் குமார் என்றே பெயர் வைத்தாள். அடுத்தவன் பிறந்தபோது அதே மாதிரி வியில் ஆரம்பிக்கும் பெயராகத் தேடி வினய் குமார் என்று வைத்தாள். அவனுக்குப் பிறகு பிறந்தவன் வினோத் குமார் ஆனான். நான் விமல் குமார்.’

 

அதற்குமேல் அவருக்கு விளக்கம் ஏதும் தேவைப்படவில்லை. என் தலையில் தனது உள்ளங்கையை வைத்துச் சற்று நேரம் கண்மூடி அமர்ந்திருந்தார். பிறகு, எழுந்திரு என்று சொன்னார். நாங்கள் அப்போது ஒகேனக்கல் அருவிக்கரையோரம் நின்றிருந்தோம். பிரம்மாண்டமான ஆகிருதியுடன் ஆக்ரோஷமாகப் பொங்கிப் பொழிந்துகொண்டிருந்த அருவி. அதன் சத்தத்தின் லயத்தை தியானம் செய்யச் சொன்னார். கண்ணை மூடிக்கொண்டு நான் அருவிச் சத்தத்தை உற்றுக் கவனிக்க ஆரம்பித்தேன். இரண்டு நிமிடங்கள் ஆகியிருக்கும்.

‘விமலானந்த! வா என்னோடு’ என்று குரு என்னை அழைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார். நான் அமைதியாக அவரோடு நடந்துகொண்டிருந்தேன். வெகு நேரம் என்னால் அமைதி காக்க முடியவில்லை. சட்டென்று சொல்லிவிட்டேன். ‘குருஜி, நான் வேறு பெயர் எதிர்பார்த்தேன்.’

அவர் என்னை ஏற இறங்கப் பார்த்தார்.

‘இல்லை. வேறு ஏதாவது ஒரு பெயர். இந்தப் பெயரில் நேற்றைய நெடி இருக்கிறது. நான் அதை முற்றிலும் களைந்துவிட விரும்புகிறேன்.’

நான் சற்றும் எதிர்பாராத ஒரு பதில் அவரிடமிருந்து வந்தது. ‘உன்னால் வேறு எதையெல்லாம் களைய முடிந்திருக்கிறது? நீ பெண்களின் முலைகளை ரசிக்கிறாய். அழகான உதடுகளைக் காணும்போதெல்லாம் மனத்துக்குள் அதைக் கையில் ஏந்தி சுவைத்து மகிழ்கிறாய். நான் ஊரில் இல்லாத நாள்களில் சிகரெட் பிடிக்கிறாய். வாரம் ஒருமுறை சுய இன்பம் அனுபவிப்பதில்லை என்று உன்னால் சொல்ல முடியுமா? உனக்குப் பணம் பிடித்திருக்கிறது. புகழ் வேண்டியிருக்கிறது. ஓர் அதிகார மையம் ஆக விரும்புகிறாய். இவை அனைத்தையும் டைரியில் எழுதிவைக்கிற நேர்மையும் உன்னிடம் இருக்கிறது. மறுப்பாயா?’

திடுக்கிட்டுவிட்டேன். என்ன பேசுவதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தபோது அவரே சொன்னார். ‘விமலா, துறவு என்பது வழங்கப்படுவதல்ல. உணரப்படுவது. நீ துறவியல்ல. துறவி ஆகவும் போவதில்லை.’

‘பிறகு எதற்கு எனக்கு தீட்சையளித்தீர்கள்?’ நான் தொண்டை கிழிந்துவிடும் ஆவேசத்துடன் கத்தினேன்.

‘நான் தீட்சையளித்ததாக யார் சொன்னது? உன்னை எனக்குப் பிடிக்கும். உன் விருப்பங்கள் நிறைவேற உன் தலையில் கைவைத்து ஆசீர்வதித்தேன். அவ்வளவுதான்.’

‘அப்புறம் எதற்கு எனக்குக் காவி?’ என் குற்ற உணர்வே சொற்களில் ஆவேசமாகப் புகுந்து புகுந்து புறமுதுகிட்டுக்கொண்டிருந்தது.

அவர் அப்போதும் நிதானம் இழக்கவில்லை. அமைதியாகத்தான் சொன்னார். ‘நீ மாற வாய்ப்பில்லை விமலா. ஆனால் உன்னால் நிறையப் பேர் வாழ்வில் மாற்றமடையமுடியும் என்று எனக்குத் தோன்றுகிறது. உனக்கு நல்ல பேச்சு இருக்கிறது. நீ மொழியின் கருவியாக வளர்ந்திருக்கிறாய். இன்னும் சிறிது காலம் கழித்து எங்காவது போ. என்னைவிட்டு அகன்றுவிடு. பெருங்கூட்டத்தில் நீ விரும்பும் அடையாளத்தைப் பெற முயற்சி செய். காவியில் ஒன்றுமில்லை. பேன்ட் சட்டை அணிந்தும் துறவியாக இருக்கமுடியும். ஆனால் காவி உன்னைப் புறத்தே காலிப் பயலாகாமல் காக்கக்கூடும்.’

அரை மணி நேரம் கதறி அழுது தீர்த்தேன். பிறகு நிதானத்துக்கு வந்தபோது, அவர் சொன்னதில் பிழையே இல்லை என்று தோன்றியது. நான் அப்படித்தான். நான் அதுதான். அது மட்டும்தான்.

குரு சொன்னார். ‘கண்ணுக்குத் தென்படாதவரை கடவுளுக்கு நம்மால் ஆபத்தில்லை. அவர் பெயரை உபயோகிக்க அவர் ராயல்டி கேட்காதவரை அவர் ஒரு பொதுச் சொத்து. பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிப்பது மனிதப் பிறவியின் ஆதார குணம். கடவுளின் பெயரால்தான் நீ பிழைப்பு நடத்துவாய். அது தவறு என்றுதான் நான் சொல்லுவேன். ஆனால் செய்யாதே என்று சொல்லமாட்டேன். விரைவில் அதிலிருந்து உன்னால் விடுபட முடிந்தால் மகிழ்ச்சி கொள்வேன்.’

நீண்ட நேரம் நான் அமைதியாக இருந்தேன். பிறகு கேட்டேன். ‘குருஜி, நீங்கள் பெண்களின் முலைகளை எண்ணிப் பார்ப்பதுண்டா?’

அவர் யோசிக்கவேயில்லை. சட்டென்று பதில் சொன்னார், ‘கண் திறந்த கணத்தில் பார்த்த முதல் உறுப்பு. எப்படி நினைக்காதிருப்பேன்? முலைகள்தாம் என் கடவுள். ஆனால் கடவுளைத் தொட்டு, கசக்கிப் பார்க்க எனக்குச் சக்தி இல்லை.’

குருகுலத்து நண்பனிடம் நான் இந்த இரு சம்பவங்களையும் விவரித்து முடித்தபோது அவன் நடுங்கிப் போய்விட்டான். குருவின் மீதே அவனுக்குச் சந்தேகம் வந்திருக்கும் என்று எனக்குத் தோன்றியது. அதைக் கேட்டறியவும் ஆவலாக இருந்தது. ஆனால் நான் எதுவும் கேட்பதற்கு முன்னால் அவன் முந்திக்கொண்டான்.

‘சிறிது காலம் கழித்து என்னைவிட்டுப் போய்விடு என்று அவர் சொன்னதாகச் சொன்னாயே, எப்போது போகப் போகிறாய்?’

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

5. பித்தளைப் பிள்ளையார்

 

 

தண்டகாரண்யத்து வனவாசி என்னை அந்தக் குகைக்குள் அழைத்துச் சென்ற நேரம் அங்கே மூன்று சன்னியாசிகள் இருந்தார்கள். ஒருவர் ஒரு ஓரமாகப் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார். இன்னொருவர் தியானத்தில் இருக்க, மூன்றாம் நபர் ஒரு காடா விளக்கின் வெளிச்சத்தில் ஓலைச்சுவடி ஒன்றைப் படிக்க முயற்சி செய்துகொண்டிருந்தார். சுவரோரம் ஒரு கணப்புச் சட்டி இருந்தது. இரண்டு மூன்று துணிப்பைகளில் பிதுங்கப் பிதுங்க ஏதோ அடைத்துவைக்கப்பட்டிருந்தது. உள்ளே இருப்பது வெளியே தெரியாதபடிக்கு மேற்புறம் சணல் கோணிச் சுருணைகள் சொருகப்பட்டிருந்தன. ஒரு சில கலயங்கள், பாக்குமட்டைத் தட்டுகள் இருந்தன. அருவியில் பிடித்த மீன்கள் கொஞ்சம் இன்னொரு ஓரத்தில் உலரவைக்கப்பட்டிருந்தன. அவை பாதி காய்ந்த மீன்களாக இருந்தாலும் அதன் வாடை அங்கே இல்லை. மாறாக, எங்கிருந்தோ அடர்த்தியாகத் திரண்டுவந்த எருமைச் சாண வாசம்தான் குகை முழுதும் பரவி நிறைந்திருந்தது.

உள்ளே சென்றதும் வனவாசி அவர்முன் விழுந்து வணங்கி எழுந்து கைகளைக் கட்டிக்கொண்டான். எனக்குச் சற்றும் பரிச்சயமில்லாத சத்திஸ்கரி மொழியில் என்னைக் காட்டி ஏதோ சொல்லத் தொடங்கினான்.

அவர் என்னை ஒரே ஒருமுறை நிமிர்ந்து பார்த்தார். உட்காரச் சொல்லிக் கைகாட்டிவிட்டு, பார்வையை அந்த வனவாசியின் பக்கம் திருப்பி ஏதோ பேச ஆரம்பித்தார். அவர் பேசிய எந்த ஒரு சொற்றொடரும் சிறியதாக இல்லை. குறைந்தது பதினைந்து சொற்களில்லாமல் ஒரு வரியைக்கூட அவர் நிறைவு செய்வதில்லை என்று தோன்றியது. பதில் சொல்லிக்கொண்டிருந்த வனவாசியும் நீளநீளமாகவே பேசினான். சுமார் ஐந்து நிமிடங்கள் இடைவிடாமல் அவர்கள் உரையாற்றிய பின்பு, வனவாசி என்னிடம் திரும்பி ‘தெரியவில்லை’ என்ற பொருளில் இரு கைகளையும் விரித்தான். எளிய பதில். மிகச் சிறியதும்கூட. ஆனால் அதைக் கண்டடைவதற்கு எத்தனை நூறு சொற்களை விரயம் செய்யவேண்டியதாகிவிட்டது இவர்கள் இருவருக்கும்!

நான் அந்த சாதுவுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு குகையைவிட்டு வெளியே வந்தேன். அவர்கள் சித்தர்களா என்று என் சீடன் ஒருவன் அந்த வனவாசியிடம் கேட்டான். நான் புன்னகை செய்தேன். அவன் கேட்டது அந்த வனவாசிக்குப் புரிந்ததா என்றும் தெரியவில்லை. கேள்வி கேட்ட மரியாதைக்கு அவனும் விரிவாக ஏதோ விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தான். அது நிச்சயம் என் சீடனுக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை.

என்ன காரணத்தாலோ எனக்கு அற்புதங்களின் மீது ஆர்வமில்லாது போய்விட்டது. என் பயணங்களில் நூற்றுக்கணக்கான சித்தர்களை நான் சந்தித்திருக்கிறேன். சில அற்புதங்களை நேருக்கு நேர் எதிர்கொண்டும் இருக்கிறேன். எனக்குத் தெரியாத ஓர் இயல் என்பதைத் தாண்டி அதில் வியக்க ஒன்றுமில்லை என்றே எப்போதும் தோன்றி வந்திருக்கிறது.

ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வந்தது. அது நாங்கள் நான்கு பேரும் வீட்டில் இருந்த காலம். கோயிலுக்கு யாரோ சித்தர் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு அப்பா விடிகாலையிலேயே குளித்து முழுகி, சந்தியாவந்தனமெல்லாம் செய்துவிட்டுக் கிளம்பிப் போயிருந்தார். வாய்ப்பிருந்தால் அவரை வீட்டுக்கு அழைத்துவருவதாக அம்மாவிடம் சொல்லியிருந்தார். கோயில் கமிட்டியில் இருந்தவருக்கு அதெல்லாம் ஒரு சிரமமா? எப்படியும் அழைத்து வந்துவிடுவார் என்று எங்கள் எல்லோருக்குமே தெரிந்திருந்தது. அதனால் அம்மாவும் சீக்கிரம் குளித்து மடிசாரெல்லாம் உடுத்திக்கொண்டு, வீட்டைப் பெருக்கித் துடைத்து வாசலில் பெரிய கோலம் போட்டு வைத்துவிட்டு அப்பா வருகிறாரா என்று திண்ணையில் அமர்ந்து காத்திருந்தாள். முன்னதாக எங்கள் நான்கு பேரையும் எழுப்பி, தூக்கக் கலக்கத்தோடு குளிக்கவைத்து, ஆளுக்கொரு வேட்டியை இடுப்பில் சுற்றிவிட்டு, அப்பா வரும்வரை படித்துக்கொண்டிருக்கச் சொல்லியிருந்தாள். தையூர் சந்தைக்குப் போய்விட்டுக் காய்கறிப் பைகளுடன் சைக்கிளில் வந்துகொண்டிருந்த கேசவன் மாமா, அந்நேரத்தில் அம்மாவை வாசல் திண்ணையில் பார்த்ததில் சற்றே வியப்படைந்தார். என்ன என்று சைக்கிளை நிறுத்திவிட்டுக் கேட்டார்.

‘யாரோ சித்தர் வந்திருக்காராம் கோவிலுக்கு. காலங்கார்த்தால கதவ இடிச்சி ஆராம்து சொல்லிட்டுப் போனான். முடிஞ்சா ஆத்துக்குக் கூட்டிண்டு வரேன்னு சொல்லிட்டு இவரும் போயிருக்கார்.’

‘ஓஹோ’ என்றார் கேசவன் மாமா. சித்தர் வருவதற்குள் தன்னால் வீட்டுக்குப் போய் குளித்து முடித்து மடியாக வந்து நிற்கமுடியுமா என்ற சந்தேகம்போல. குளிக்காவிட்டால் சித்தர் ஒன்றும் கோபித்துக்கொள்ளமாட்டார் என்று தீர்மானித்து, சைக்கிளை எங்கள் வீட்டுத் திண்ணை ஓரம் ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு உள்ளே வந்தார். ‘என்னடா பசங்களா, படிக்கறிங்களா?’ என்று கேட்டார். நான்கு பேரில் வினய்தான் மாமா செல்லம். அவரைப் பார்த்ததும் சட்டென்று புத்தகத்தைப் போட்டுவிட்டு எழுந்துவந்து, ‘கிரிக்கெட் ஆடலாம் வரிங்களா?’ என்றான்.

‘உங்கப்பா பார்த்தா தோலை உரிச்சிடுவார். படிங்கோ, படிங்கோ. அவர் வரவரைக்கும் படிச்சிண்டிருங்கோ. நன்னா சத்தம் போட்டுப் படிங்கோ’ என்று சொல்லிவிட்டு அடுக்களைக்குள் புகுந்தார்.

அம்மா அப்போதுகூட எழுந்து உள்ளே வரவில்லை. மாடவீதியின் வலப்புற வரிசையில் ஏழாவது வீடு எங்களுடையது. முன்புறம் ஓட்டுச் சரிவும் அதன்பின்னால் தளமும் போட்ட புராதனமான வீடு. திண்ணையைத் தாண்டியதுமே சிறிதாக ஒரு நடையோடியை அடுத்து முற்றம் வந்துவிடும். முற்றத்தின் இரு புறங்களிலும் இரண்டு அறைகள். பின்கட்டில் சமையல் அறையை ஒட்டினாற்போலப் பாத்திரம் துலக்க அப்பா ஒரு தொட்டி கட்டிவிட்டிருந்தார். கிணற்றில் நீர் இறைத்து தொட்டியில் கொட்டிக்கொண்டு உட்கார்ந்தால், அம்மா நாளெல்லாம் தேய்த்துக்கொண்டே இருப்பாள். எத்தனை தேய்த்தாலும் எந்நாளும் எங்கள் வீட்டுப் பாத்திரங்கள் துலங்கிப் பொலிந்து நான் பார்த்ததில்லை. எல்லாம் எந்தக் காலத்திலோ அம்மா தனது கல்யாணச் சீராகக் கொண்டுவந்த பாத்திரங்கள். பித்தளையும் எவர்சில்வருமாக ரகத்துக்கு இரண்டு ஜோடி இருக்கும். அப்பாவுக்கு காப்பி மட்டும் பித்தளை தம்ளரில் கொடுத்தால் போதும். வாழ்வில் வேறு எதையுமே அவர் எதிர்பார்த்ததில்லை. ஆனால், அம்மா அத்தனை வருடங்களாக தினம் தவறாமல் தேய்த்தும் அந்த தம்ளர் பளபளத்ததில்லை. ‘சிலதெல்லாம் அப்படித்தான். மாத்த முடியாது; தூக்கிப்போடவும் முடியாது’ என்று சொல்லுவாள்.

ஐந்தரைக்குக் கோயிலுக்குப்போன அப்பா, ஏழே முக்காலுக்கு வேர்க்க விறுவிறுக்க வீட்டுக்கு ஓடி வந்தார். ‘அவர் வரார். வரேன்னு சொல்லிட்டார்.’

உடனே அம்மா இங்குமங்கும் சிதறிக்கிடந்த பொருள்களை எடுத்து ஒழுங்கு செய்து வைத்தாள். மாமா தனக்காகப் போட்டுக்கொண்ட காப்பி டிக்காஷனில் மிச்சம் இருந்ததை வேறொரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்கவைத்து அதன் நடுவே வைத்துச் சூடுபடுத்தினாள். பீரோவைத் திறந்து எதையோ தேடி, எந்தக் கல்யாணத்திலோ யாரோ வைத்துக் கொடுத்து, பிரிக்காதிருந்த புதிய வேட்டியொன்றை எடுத்துவந்து தாம்பாளத்தில் வைத்தாள். மாமா நாலு வெற்றிலை, இரண்டு கொட்டைப் பாக்குகளை அதன் மீது வைத்து அழகுக்கு இரண்டு வாழைப் பழங்களையும் வைத்தார்.

ஒரு சித்தரை நாங்கள் அதுவரை பார்த்ததில்லை. அவர் என்னென்ன செய்வார் என்பது குறித்த தெளிவு எங்கள் யாருக்கும் இல்லை. ‘என்ன வேணா பண்ணுவார்’ என்று கேசவன் மாமா சொன்னது சரியாகப் புரியவில்லை. காவியும் ஜடாமுடியும் நீண்ட தாடியும் கமண்டலமுமாக தூர்தர்ஷனில் ஒளிபரப்பான அகத்தியர் திரைப்படத்தின் கதாநாயகர்தான் என் நினைவில் வந்தார். அவர் பெயர் சீர்காழி கோவிந்தராஜன் என்பதைப் பிற்பாடு அம்மாவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். அம்மாவின் சினிமா ஆர்வம் அளப்பரியது. எப்போதும் ஏதாவது படம் பார்த்துக்கொண்டோ அல்லது ரேடியோவில் பாட்டுக் கேட்டுக்கொண்டோ மட்டுமே அவளால் இருக்கமுடியும். அதுவும் உரத்த சத்தத்தில் கேட்டால்தான் அவளுக்குத் திருப்தியாகும். ‘ஏம்மா இப்படி?‘ என்று மூத்த அண்ணா பல சமயம் சலித்துக்கொண்டிருக்கிறான். ஒரே ஒரு சமயம் அம்மா அதற்கு பதில் சொல்லியிருக்கிறாள். ‘இதுவும் இல்லேன்னா செத்துப்போயிடுவேனே.’

 

நாங்கள் மிகுந்த ஆர்வமுடன் எதிர்கொள்ளத் தயாரான சித்தர் அன்று எங்கள் வீட்டுக்கு வந்தார். ஆனால் அசப்பில் அவர் எங்கள் மனத்தில் இருந்த பிம்பத்தை ஒத்திருக்கவில்லை. சாதாரணமான எட்டு முழ வேட்டி கட்டியிருந்தார். உள்ளே இருக்கும் பனியன் தெரியும்படி இரண்டு பட்டன்களை அவிழ்த்து விட்டுக்கொண்டு அரைக்கை சட்டை அணிந்திருந்தார். நெற்றியில் ஒரு சந்தனப் பொட்டும் அதன் நடுவே கறுப்பாக ஒரு பொட்டும் இருந்தது. சற்றுமுன் வரை வெற்றிலை போட்டுக் குதப்பிக்கொண்டிருந்தவர், வீட்டுக்குள் நுழையும் முன் வெளியே துப்பியிருக்க வேண்டும். சட்டையில் ஒன்றிரண்டு சொட்டுகள் சிந்தியிருந்ததை எப்படியோ கவனிக்க மறந்திருக்கிறார்.

‘வாங்கோ வாங்கோ’ என்று அப்பா இடுப்பு வரை குனிந்து வரவேற்று அவரை அமரவைத்தார். அப்பாவும் அம்மாவுமாக அவரை விழுந்து சேவித்துவிட்டு நகர்ந்துகொள்ள, கேசவன் மாமா அதன்பின் சேவித்தார். ‘இப்படி வாங்கோடா’ என்று அப்பா எங்களை அழைத்தார். நாங்கள் வரிசையில் வந்து நின்று அவரை வணங்கினோம். அவர் கையை உயர்த்தி ஆசீர்வாதம்கூடச் செய்யவில்லை. வெறுமனே எங்களைப் பார்த்துச் சிரித்தார். அம்மா, தயாராக வைத்திருந்த வெற்றிலைத் தாம்பாளத்தை எடுத்துவந்து அவர் முன் வைத்தாள். அவர் அதிலிருந்து ஒரு வாழைப் பழத்தை மட்டும் எடுத்து தோலை உரிக்க ஆரம்பித்தார். மீண்டும் எங்கள் நான்கு பேரையும் ஒரு பார்வை பார்த்தார். என்ன நினைத்தாரோ, உரித்த பழத்தின் பாதியைத் தன் வாயில் போட்டு மென்று விழுங்கினார். மீதமிருந்த பாதி பழத்தை இடது உள்ளங்கையில் வைத்து வலக்கையால் மூடினார். சில விநாடிகள்தாம். மூடிய கைகளை அப்படியே பிசைய ஆரம்பித்தார். சிக்குண்ட வாழைப்பழம் பிதுங்கி நாலாபுறமும் வெளியே வரத் தொடங்கியது. அப்பாவும் அம்மாவும் பக்திப் பரவசம் மேலிட கைகூப்பியபடியே அவரைப் பார்த்துக்கொண்டிருக்க, சற்றும் எதிர்பாராதவிதமாக அது நிகழ்ந்தது.

அவரது உள்ளங்கைகளுக்குள் இருந்து பிதுங்கி வழிந்துகொண்டிருந்த வாழைப்பழத்தோடு சிறிதாக ஒரு பித்தளை பிள்ளையார் சிலை வெளிப்பட்டுக் கீழே விழுந்தது.

அவ்வளவுதான். அப்பா தடாலென்று மீண்டும் அவர் காலில் விழுந்தார்.

‘எடுத்துக்கோங்கோ’ என்று சித்தர் சொன்னார்.

அப்பா அந்தச் சிலையை எடுத்துக் கண்ணில் ஒற்றிக்கொண்டு பெருமிதமுடன் அம்மாவிடம் நீட்டினார். அம்மா உடனே அதை வாங்கிக்கொண்டு உள்ளே ஓடினாள்.

அதற்குமேல் என் மூத்த அண்ணா பொறுக்கவில்லை. ‘எங்காத்துல பிள்ளையார், முருகர், சிவன் பார்வதியெல்லாம் கிடையாது. நாங்க ஐயங்கார். பெருமாள் சிலை ஒண்ணு வரவெச்சித் தாங்களேன்!’ என்று கேட்டான்.

சித்தர் வெகுநேரம் பேசவேயில்லை. அண்ணாவையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். அதற்குள் அப்பா பதற்றமாகி அவனைக் கீழ்க்குரலில் அதட்டி, அவன் பேசியதற்கு அவரிடம் மன்னிப்பும் கேட்டிருந்தார். அவர் ஒன்றும் சொல்லவில்லை. கிளம்பும்போது மட்டும் எங்கள் நான்கு பேரின் பெயர்களையும் அப்பாவிடம் கேட்டார்.

‘மூத்தவன் விஜய் குமார். அடுத்தவன் வினய் குமார். இவன் வினோத் குமார். கடைசிப் பையன் விமல் குமார்’ என்று அவர் அறிமுகப்படுத்தியதும், இடைவெளியே இல்லாமல் கேசவன் மாமா சொன்னார்: ‘பேரெல்லாம் சம்மந்தமே இல்லாம இருக்கேன்னு நினைக்காதீங்கோ. அதெல்லாம் எங்கக்கா நவீனமா ஆசைப்பட்டு வெச்சது. அத்திம்பேர் எவ்ளோ சொல்லியும் கேக்கமாட்டேன்னுட்டா.’

அவர் புன்னகை செய்தார். வரேன் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். அம்மா அவரிடம் எதையோ கேட்க நினைத்து, சொற்களில்லாமல் தவித்துத் தவித்துத் தணிந்துகொண்டிருந்ததை அன்று கண்டேன். அவர் வாசல் படி இறங்கும்போதுகூட, அப்பாவின் தோளை இடித்து எதையோ கேட்கச் சொல்லி சைகை செய்துகொண்டிருந்தாள். அவருக்கும் ஏதோ தயக்கம் இருந்ததாகப் பட்டது. இருந்தாலும் அம்மாவை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு அவரை வழியனுப்பும்விதமாகக் கூடவே போக ஆரம்பித்தார்.

எப்படியும் கடற்கரைச் சாலை வரை அவர் சித்தரோடுகூட போயிருப்பார் என்று நினைக்கிறேன். அதற்குள் அம்மா கேட்க விரும்பிய அந்த ஏதோ ஒன்றை அவர் அவசியம் சித்தரிடம் கேட்டிருப்பார். அம்மா என்ன கேட்க நினைத்தாள் என்பதோ, சித்தர் அதற்கு என்ன பதில் சொல்லி அனுப்பினார் என்பதோ கடைசிவரை எனக்குத் தெரியாமலே போய்விட்டது. அண்ணா சொல்லிக்கொண்டிருந்தது மட்டும் நன்றாக நினைவிருக்கிறது.

‘ஒரு பித்தளைப் பிள்ளையாருக்கு இத்தனை ஆர்ப்பாட்டம் வேண்டாம். கடைசிவரைக்கும் அவரால ஒரு பித்தளை வெங்கடாசலபதியைக் கொண்டுவர முடியல பாத்தியா?’

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

6. சந்தித் தருணம்

 

 

தடாகம் முழுவதும் அல்லி பூத்து நிறைந்திருந்தது. ஒரு மைல் நீளத்துக்குத் தவழ்ந்து வந்து மோதிய கடல் காற்றுக்கு நீர்ப்பரப்பு ததும்பிக்கொண்டிருந்தது. பூக்கள் ஒன்றோடொன்று உரசியபடியே நீரெங்கும் அலைந்து சுழன்று வருவதுபோலத் தோன்றியது. அண்ணா வெகு நேரம் கரையில் அமர்ந்து பூக்களையே பார்த்துக்கொண்டிருந்தான். வழக்கத்துக்கு மாறாக அன்றைக்கு அவன் கண்கள் மிகவும் பிரகாசமாக, ஒரு கோலத்தில் வைத்த புள்ளிகளைப்போல் துல்லியமாகத் தெரிந்தன. இயல்பில் அவனுடைய கண்கள் மிகவும் சிறியவை. பேசும்போது அதையும் இடுக்கிக்கொண்டே பேசுவான். புருவங்கள் குவிந்து நடு மச்சம் புடைத்துக்கொண்டு நிற்கும். எனக்குத் தெரிந்து அவன் யாரையும் நேருக்கு நேர் பார்த்துப் பேசியதே இல்லை. ஒன்று அவன் பார்வை வேறெங்காவது இருக்கும். அல்லது புருவங்களைச் சுருக்கி, கண்களைக் கிட்டத்தட்ட மூடிக்கொண்டுதான் பேசுவான். பேச்சென்றும் அதனைச் சொல்ல முடியாது. சேர்ந்தாற்போல் நான்கு வார்த்தைகள் பேசிவிட்டால் அபூர்வம். கேட்ட கேள்விக்கு பதில். அதனைத் தாண்டி, யாரோடும் தனக்கு எதுவும் இல்லை என்பதுபோலத்தான் இருப்பான். பள்ளிக்கூடத்துக்குப் போவது வருவதோ, வீட்டில் சொல்லும் வேலைகளைச் செய்வதோ, படிப்பதோ, விளையாடுவதோ தடைபட்டதில்லை. அவன் எல்லோரையும்போலத்தான் இருந்தான். எல்லாவற்றிலும் பங்குகொண்டான். ஆனால் அவன் எல்லோரையும்போல இல்லை என்பதைக் கவனமாக மறைத்துவைத்திருந்தான். வீட்டை விட்டு ஓடிப்போவதற்குச் சில மாதங்களுக்கு முன்னதாகத்தான் தன்னைச் சற்று வெளிப்படுத்த ஆரம்பித்தான். அதுவும் என்னிடம் மட்டும்.

உள்ளதிலேயே வயதில் சிறியவனிடம் சொல்லிவைப்பது நல்லது என்று நினைத்திருக்கலாம். என் மூலமாகத் தன்னைப் பற்றி வீடு அறிய நேர்ந்தால், எதுவும் முழுதாகப் போய்ச் சேராமல் குத்துமதிப்பாக மட்டும் தான் காணாமல் போனதற்கான காரணத்தை அறிவிக்கலாம் என்று எண்ணியிருக்கலாம். அல்லது வேறு ஏதேனும் காரணம் இருந்திருக்குமா என்று இப்போதுவரை நானும் யோசித்துப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். பிடிபடவில்லை.

அன்றைக்குக் குளக்கரையில் அவன் என்னைச் சட்டையைக் கழட்டச் சொல்லி, சந்தியாவந்தனம் செய்யச் சொன்னான். எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. ‘இப்பொ எதுக்கு?’ என்று கேட்டேன்.

‘சந்தி வேளைதானே? பண்ணு, பரவால்ல’ என்று சொன்னான்.

நான் என் சட்டையைக் கழட்டிவிட்டு டிராயருடன் குளத்தில் இறங்கி முழங்கால் ஆழத்தில் நின்றுகொண்டு சந்தி பண்ணத் தொடங்கினேன்.

‘உரக்க சொல்லிண்டே பண்ணு’ என்றான்.

‘எனக்கு அவ்ளோ சரியா தெரியாது. உபஸ்தானம் மனப்பாடம் ஆகலை.’

‘பரவால்ல உரக்க சொல்லு.’

முடியாது போடா என்று சொல்லிவிட்டு ஓடிவிடலாமா என்று நினைத்தேன். ஏனோ அப்படிச் செய்யத் தோன்றவில்லை. தனது ரகசிய யோகப் பயிற்சிகள் சிலவற்றைப் பார்க்க அவன் என்னை அனுமதித்திருந்ததும், யாருக்கும் தெரியாமல் திருப்போரூர் முருகனடிமை சாமிகள் மடத்திலிருந்து அவன் எடுத்துவந்து வைத்திருந்த ஒரு நாடிச் சுவடியை எனக்கு என்றாவது ஒருநாள் காட்டுவதாகச் சொல்லியிருந்ததும்தான் காரணம். எனக்கு சுவடி என்றால் என்னவென்று அப்போது தெரியாது. நாடி என்றாலும் தெரியாது. ‘கோவிந்தராஜ் டாக்டர் கைய பிடிச்சிப் பாப்பாரே, அதுவா?’ என்று அவனிடம் கேட்டேன்.

‘இல்ல. இது வேற. ஒனக்கு சொன்னா புரியாது. ஆனா நிச்சயமா ஒருநாள் சொல்லுவேன்’ என்று சொன்னான்.

‘உனக்கு மட்டும் எப்படி இதெல்லாம் புரியும்?’

‘கத்துக்கறேன்.’

‘யாருகிட்ட?’

‘அதெல்லாம் உனக்கு வேண்டாம். ஆனா நான் சொல்ற எதையும் நீ யாருக்கும் சொல்லக் கூடாது. அப்படி சொன்னேன்னா, அதோட நான் உன்கூட பேசறதை நிறுத்திடுவேன்.’

‘ஐயோ சொல்லமாட்டேண்டா’ என்று உடனே பதில் சொன்னேன்.

அன்றைக்கு நான் குளக்கரையில் சந்தி பண்ணி முடித்து வந்ததும் அண்ணா சட்டையைக் கொடுத்து, இந்தா போட்டுக்கொள் என்று சொன்னான். நான் சட்டை அணிந்ததும் சற்றும் எதிர்பாராவிதமாக என்னை நெருங்கி அமர்ந்து என் தோளில் கைபோட்டுக்கொண்டான். ‘உன்னை எதுக்கு சந்தி பண்ணச் சொன்னேன்?’ என்று கேட்டான்.

‘எதுக்கு?’

‘இன்னிலேருந்து ஒரு நாள் தவறாம நீ ரெண்டு வேளை சந்தி பண்ணு. நாப்பத்தெட்டு நாள் பண்ணேன்னா போதும். அதுக்கு மேல வேண்டாம்.’

‘அதான் எதுக்கு?’

‘மந்திரத்த வாய்விட்டுச் சொல்லு. மனசுக்குள்ள சொல்லாத.’

‘எதுக்குன்னு கேக்கறேனே?’

அவன் சில விநாடிகள் அமைதியாக இருந்தான். புருவம் குவித்து என்னை உற்றுப் பார்த்தான். பிறகு, ‘உன் சுவாசம் சரியா இல்லே. உடம்புக்கு வந்து படுத்துப்பேன்னு தோணறது. சந்தியாவந்தன மந்திரத்த உரக்க சொல்றது மூலமா சில பிரச்னைய சரிபண்ணமுடியும்.’

‘நிஜமாவா?’

‘மந்திரத்துல ஒண்ணுமில்லே. அந்த வார்த்தைகளோட உச்சரிப்புதான் விஷயம். இந்த மாதிரி இன்னும் சில மந்திரம் இருக்கு. தினம் ரகுவீர கத்யம் சொல்றவனுக்கு வயித்து வலியே வராது.’

‘நீ சும்மா சொல்ற’ என்றேன் சிரித்துக்கொண்டே. அவன் மீண்டும் சில விநாடிகள் கண்ணிமைக்காமல் என்னை உற்றுப் பார்த்தான். பிறகு கண்களை மூடிக்கொண்டு உரத்த குரலில் சொல்லத் தொடங்கினான்.

அபிசரண ஹுதவஹ பரிசரண விகடன ஸரபஸ பரிபதத்

அபரிமித கபிபல ஜலதி லஹரி கலகல-ரவ குபித மகவஜி

தபிஹனன-க்ருʼதனுஜ ஸாக்ஷிக ராக்ஷஸ த்வந்த்வ-யுத்த...

எனக்குத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது. இதையெல்லாம் இவன் எப்போது படித்தான்? யார் சொல்லிக் கொடுத்தது? நிச்சயமாக அம்மாவுக்குத் தெரியாது. அப்பாவுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. அவருக்குத் தெரிந்ததெல்லாம் பல்லாண்டு பல்லாண்டு மட்டும்தான். அதைக்கூடப் புத்தகத்தை வைத்துக்கொண்டுதான் சொல்லுவார். பள்ளிக்கூடத்திலோ, கோயிலிலோ, வேறெங்காவதோ இவனை இழுத்து உட்காரவைத்து இப்படியொரு மந்திரத்தைச் சொல்லிக்கொடுக்க, எனக்குத் தெரிந்து திருவிடந்தையில் யாருமில்லை. அண்ணா அடிக்கடி சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியே போவதைப் பார்த்திருக்கிறேன். அவனேதான் ஒரு நாள் திருப்போரூருக்குப் போவதாகவும் அங்கே ஒரு சாமியாரைப் பார்த்து வருவதாகவும் என்னிடம் சொன்னான். அந்தச் சாமியாரை நானும் ஒரு சமயம் பார்த்திருக்கிறேன். எங்கள் பள்ளிக்கூட ஆண்டுவிழாவுக்கு வந்திருக்கிறார். எனக்கென்னவோ அவர் ரகுவீர கத்யம் தெரிந்த சாமியாராகத் தோன்றவில்லை.

அண்ணா சொன்னான், ‘வாழ்க்கை ரொம்பச் சின்னதுடா விமல். பாடம் மட்டும் படிச்சி மார்க் வாங்கி வீணாப் போயிடக் கூடாது.’

அவன் பேசிய பல விஷயம் எனக்குப் புரியவில்லை. அதனால்தான் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள அவன் என்னைத் தேர்ந்தெடுத்திருப்பான் என்று பிறகு தோன்றியது. அன்றைக்குத் தடாகக் கரைக்கு அவன் என்னை அழைத்துச்சென்றதன் காரணம், என்னை சந்தியாவந்தனம் பண்ணச் சொல்ல மட்டுமல்ல. முழுதும் இருட்டும்வரை காத்திருந்துவிட்டு அவன் சட்டை, நிஜாரைக் கழட்டிவிட்டு வெறும் ஜட்டியுடன் எழுந்து நின்றான்.

‘என்னடா இது?’ என்று நான் சற்று பயந்தேன்.

‘நான் குளத்துக்குள்ள இறங்கி தியானம் பண்ணப்போறேன். வெளிய வர பத்து நிமிஷமாகும். இங்கயே இரு’ என்று சொல்லிவிட்டு, என் பதிலுக்கு நிற்காமல் நீரில் பாய்ந்துவிட்டான்.

 

எனக்கு உண்மையிலேயே அச்சமாகிவிட்டது. பத்து நிமிடங்கள் எப்படி ஒருவனால் நீருக்கு அடியில் நிற்கமுடியும்? அவனுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாதே என்று வராகப் பெருமாளிடம் வேண்டிக்கொள்ள ஆரம்பித்தேன். என்னையறியாமல் பிரார்த்தனை விரைவில் நின்றுபோய் ஒன்று, இரண்டு, மூன்று என்று நொடிகளை எண்ணத் தொடங்கினேன். நான் எவ்வளவு எண்ணினேன், பத்து நிமிடங்கள் ஆனதா என்றெல்லாம் எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால் அண்ணா செத்தே போய்விட்டான் என்று என் உள்மனம் அலறத் தொடங்கிய நேரம், அவன் நீரின் மேல் மட்டத்துக்கு எழுந்துவந்தான்.

‘டேய், எப்படிடா இது!’ என்று பிரமித்து நின்றுவிட்டேன். அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. ‘விமல், இந்தக் குளத்துல காலவ ரிஷி இருக்கார். இன்னமும் உள்ளயேதான் இருக்கார். அதுவும் உயிரோட. யுக யுகமா அவரால எப்படி மூச்சடக்கித் தவம் பண்ண முடியறதுன்னு யோசி.’

‘நீ பாத்தியா அவர?’

‘அடிக்கடி பாக்கறேன்.’

‘ஐயோ நீ பொய் சொல்ற!’ என்று நான் அலறினேன்.

அவன் தீர்மானமாக இல்லை என்று தலையாட்டினான். ‘என் வாய்ல என்னிக்குப் பொய் வருதோ அன்னிக்கு நான் செத்துப்போயிடுவேன்’ என்று சொன்னான்.

‘வேணாண்டா. இப்படியெல்லாம் பேசாதே. எனக்கு பயம்மா இருக்கு.’

அவன் சட்டையால் ஈரத்தைத் துடைத்துக்கொண்டு நிஜாரை மட்டும் போட்டுக்கொண்டு வெற்றுடம்புடன் அமர்ந்தான். சட்டையை அப்படியே விரித்துக் காயப்போட்டான்.

நான் அப்போதுதான் கவனித்தேன். அவன் உடம்பில் பூணூல் இல்லை. ‘டேய், பூணூல் தண்ணிக்குள்ள விழுந்திருக்கு. போச்சு, அப்பா பாத்தா தோலை உரிச்சிடுவார்.’

அவன் சிரித்தான். ‘ரொம்ப நாளாவே இல்லியே. நீ இப்பதான் பாக்கறியா?’ என்று கேட்டான். எனக்கு அது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

‘அப்படின்னா நீயேதான் கழட்டினியா?’

‘ஆமா.’

‘ஏண்டா?’

‘அதுக்கெல்லாம் ஒரு அர்த்தமே இல்லை விமல். உடம்புக்கே அர்த்தம் கிடையாது. உடம்புமேல கிடக்கிற நூலுக்கு என்ன பெரிய அர்த்தம்!’

‘உனக்கு என்னமோ ஆயிடுத்து!’ என்று சொன்னேன்.

அவன் வெகுநேரம் ஒன்றும் பேசவில்லை. எனக்கும் என்ன பேசுவதென்று தெரியவில்லை. அண்ணாவைப் பார்க்கவே எனக்கு அச்சமாக இருந்தது. அன்றைக்கே அம்மாவிடம் அவனைப் பற்றிச் சொல்லிவிடலாமா என்று நினைத்தேன். ஏனோ அதற்கும் தைரியம் வரவில்லை. மேற்கொண்டு அவனைப் பற்றி அறிய முடியாமல் போய்விடுமோ என்கிற பயம். அம்மாவுக்கு எப்படியாவது அவனை ஓர் ஆசிரியராக்கிவிட வேண்டும் என்று விருப்பம். அப்பாவிடம் அடிக்கடி அதைச் சொல்லிக்கொண்டிருப்பாள். ‘ஒரு டிகிரி முடிச்சிட்டு ஒரு பிஎட்ட பண்ணிட்டான்னா போதும்.’ தனது மற்ற மூன்று மகன்களின் எதிர்காலத்தைப் பற்றி அம்மா என்றைக்குமே பேசி நான் கேட்டதில்லை. பரீட்சைகளில் குறையும் மதிப்பெண்களைக்கூட அவள் எங்கள் விஷயத்தில் பொருட்படுத்தமாட்டாள். ‘அடுத்த பரீட்சைல சேத்து வாங்கிடு’ என்று மட்டும் சொல்லுவாள். அதையும் செய்யாது போனாலும் அலட்டிக்கொள்ளமாட்டாள். அண்ணாதான் மதிப்பெண் குறையும்போதெல்லாம் அக்கறையுடன் அருகே வந்து உட்கார்ந்து சொல்லுவான், ‘படிப்புல குறையே வெக்கக் கூடாது விமல். இந்தப் படிப்பால பத்து காசு பிரயோசனம் கிடையாதுதான். ஆனா இதுதான் இப்ப கடமைன்னா, இத சரியா செஞ்சிடணும். உனக்கு பாடத்துல எதாவது புரியலன்னா என்னைக் கேளு. சொல்லித்தரேன்.’

சொல்லிக்கொடுத்தும் இருக்கிறான். அப்போதெல்லாம் அவன் முற்றிலும் வேறொரு நபராகவே காட்சியளிப்பான். பாடப் புத்தகங்களை ஒப்புக்குக்கூடப் புரட்டிப் பாராமல், தன் நினைவில் இருந்து ஒரு நீரோடையைப்போலப் பொழிந்துகொண்டே இருப்பான். அவன் ஓர் ஆசிரியராவதற்கு எல்லா தகுதிகளும் கொண்டவன் என்று எனக்கே அந்நாள்களில் அடிக்கடித் தோன்றும்.

அன்றைக்கு அல்லித் தடாகக் கரையில் நான் அதை நினைவுகூர்ந்தேன். ‘இதெல்லாம் வேணாண்டா உனக்கு. அம்மா நீ ஒரு வாத்யாராகணுன்னு எவ்ளோ ஆசைப்படறா தெரியுமா?’

‘இல்லை விமல். அம்மாக்கு நான் வாத்யாராகணுன்னெல்லாம் விருப்பம் கிடையாது. அவளுக்குப் பிள்ளையா என்னிக்கும் இருக்கணும்னு மட்டும்தான் விருப்பம்.’

‘அப்படின்னா?’

அப்போதுதான் அவன் அதைச் சொன்னான். ‘என்னிக்கோ ஒருநாள் நான் விட்டுட்டுப் போயிடுவேன்னு அவளுக்குத் தெரியும்.’

‘ஐயோ!’ என்றேன். பிறகு, ‘நீ போயிடுவியா?’ என்று கேட்டேன்.

‘போய்த்தான் தீரணும். ஆனா எப்போன்னு தெரியலை.’

‘வேணாம்டா!’ என் கண்கள் கலங்கிவிட்டன. ‘நீ வாத்யாராகலன்னாலும் பரவால்லடா. கோயில்ல பட்டாச்சாரியாராயிடு. நீதான் ஸ்லோகமெல்லாம் சொல்றியே.’

அவன் சிரித்தான். நடு நெற்றியில் குறுக்காக ஒரு கோடிழுத்துக் காட்டினான். ‘நீ சின்னவன். உனக்கு இப்போ புரியாது. வா, போகலாம்’ என்று சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு எழுந்து நடக்க ஆரம்பித்தான்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

7. அக்னிஹோத்ரம்

 

 

தண்டகாரண்ய வனத்தில் ஐந்து தினங்கள் அலைந்து திரிந்து எந்தப் பயனும் இல்லாது போயிற்று. என்னால், அந்த வனத்தில் வசித்துவந்த சில சாதுக்களை, சில திருடர்களை, சில போதை அடிமைகளைப் பார்த்துப் பேச முடிந்ததே தவிர, யாரும் என் வினாவுக்கு விடை சொல்லக்கூடியவர்களாக இருக்கவில்லை. இரு புருவங்களுக்கு மத்தியில் கறுப்பாகப் பொட்டு வைத்தாற்போன்ற மச்சம் கொண்ட ஒரு மனிதன். அவன் ஒரு யோகியாக இருக்கலாம். சித்தனாக இருக்கலாம். எதுவுமில்லாமல், வெறுமனே காவி தரித்த மனிதனாகவும் இருக்கலாம். ஒரு கொலைகாரனாக. கொள்ளைக்காரனாக. அவன் என்னவாக இப்போது இருக்கிறான் என்று எனக்குத் தெரியாது. யோகிதான் என்று நேரில் பார்த்த கிராமவாசி ஒருவன் சொன்னது மட்டும்தான் அவனைப் பற்றி அங்கே கிடைத்த ஒரே தகவல். அது சற்றுத் திருப்தியாக இருந்தது. நேரில் பார்த்து உறுதி செய்துகொள்ள வழியில்லாதுபோனாலும், அண்ணா தான் விரும்பிய ஓரிடத்துக்கே போய்ச் சேர்ந்திருக்கிறான் என்று எண்ணிக்கொள்ளலாம். ஊருக்குச் சென்று மரணப் படுக்கையில் கிடக்கிற அம்மாவிடம் அதைச் சொல்லலாம். அவளை அனுப்பிவைக்க அதுவே இறுதிப் பேருந்தாக அமையக்கூடும்.

சலிப்புடன் நான் ஜகதல்பூர் வந்து சேர்ந்தபோது, கேசவன் மாமாவிடமிருந்து இரண்டாவது தந்தி வந்திருந்ததை என் சீடர்கள் எடுத்துவந்து கொடுத்தார்கள். எனக்குச் சிறு உதறல் இருந்தது. ஆனால் விபரீதமாக ஏதுமில்லை என்று சொல்லித்தான் என் மாணவர்கள் தந்தித் தாளை நீட்டினார்கள். இந்த முறை, ‘கிளம்பிவிட்டாயா, என்றைக்கு வந்து சேருவாய்’ என்று மாமா கேட்டிருந்தார். ஒரு போன் செய்து பேசிவிடுங்களேன் என்று சீடர்கள் சொன்னார்கள். எனக்கு அது யோசனையாக இருந்தது. வெறும் குரலாக என்னை அம்மாவின் செவிகளுக்குக் கொண்டுசேர்ப்பதில் எந்தப் பயனும் இராது என்று தோன்றியது. அது துக்கத்தின் சாறாகத்தான் அவள் தொண்டைக்குள் இறங்கும். இறுதிச் சொட்டுப் பாலில் விஷம் கலந்த பாவத்தை எதற்குச் சேர்த்துக்கொள்வானேன் என்று நினைத்தேன். அம்மாவுக்கு நான் செய்யக்கூடிய ஒரே பெரிய உபகாரம், எப்படியாவது அவள் கண் மூடுவதற்குள் அண்ணாவைக் கண்டுபிடித்து அழைத்துச்சென்று நிறுத்துவதுதான். ஆனால் என்னால் அது முடியுமா என்று யோசனையாக இருந்தது. கடவுளை உதவிக்குக் கூப்பிடவும் தயங்கினேன். எனக்கும் அவனுக்குமான உறவு பெரும்பாலும் சிறப்பாக இருந்ததில்லை. தோற்றங்களில் என்ன இருக்கிறது? மனத்துக்குள் என் அறிவின் தீப்பொறிகளைப் புதைத்து நான் அடுக்கிய கருங்கற் சுவர்க் கோட்டையின் எல்லைக் கதவுகளுடன் அவனது இருப்பு வரையறுக்கப்பட்டிருக்கிறது. அவன் உள்ளே வந்ததில்லை. அங்கேயேதான் இருக்கிறான். வெகு காலமாக. முற்றிலுமாக நான் அவனை வெளியேறச் சொன்னதில்லை. கூப்பிட்டு அமரவைத்துக் கொஞ்சிய நினைவும் இல்லை.

நினைத்துப்பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. அன்றைக்குப் பூணூலைக் கழற்றிவிட்டதாக அண்ணா சொன்ன இரவெல்லாம் எனக்கு உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. அண்ணாவுக்கு விபரீதமாக ஏதாவது நிகழ்ந்துவிடுமோ என்று அச்சமாக இருந்தது. உறங்கவேயில்லை. அவன் செய்தது சந்தேகமில்லாமல் ஒரு மாபெரும் பாவம் என்று எனக்குத் தோன்றியது. அதை வீட்டில் சொல்லி, கண்டிக்க வைப்பதையோ, அல்லது நானே நல்லது எடுத்துச்சொல்லி அவனைத் திருத்தப் பார்ப்பதையோ நடக்கக்கூடிய ஒன்றாக நான் கருதவில்லை. என்னால் முடிந்ததெல்லாம், மறுநாள் லஷ்மிவராகர் சன்னிதிக்குச் சென்று மனமார அவனுக்காகப் பிரார்த்தனை செய்தது மட்டும்தான்.

வீட்டில் இருந்து இருபதடி தூரம்தான் கோயில். வாசல் கதவைத் திறந்தாலே கோயில் மதில் சுவர் காவிப் பட்டைகளைத்தான் பார்த்தாக வேண்டும். தப்பித் தவறிக்கூட லஷ்மிவராகனுக்குத் தெரியாமல் யாரும் எதையும் செய்துவிட முடியாது. சன்னிதியில் அவனைக் கிட்டத்தில் பார்க்கும்போதெல்லாம் அந்நாள்களில் எனக்குச் சிலிர்ப்பேற்படும். ஒரு ஆளைப் போலவேதான் இருப்பான். ஒரு காலைச் சற்றே மடக்கி, தொடையில் தாயாரை உட்கார வைத்துக்கொண்டு, காதலுடன் அவள் முகத்தைத் திரும்பிப்பார்க்கிற கோலம்தான் என்றாலும், அந்தக் காதலின் கம்பீரம் சொற்களுக்கு அப்பாற்பட்டது. எந்த ஒரு மனிதப்பிறவிக்கும் அப்படியொரு பார்வை சாத்தியமில்லை. எந்தக் கணமும் அவன் தன் தேவியை இறக்கிவைத்துவிட்டு ‘என்ன விஷயம்?’ என்று நம்மைத் திரும்பிக் கேட்டுவிடுவான் என்று தோன்றிக்கொண்டே இருக்கும்.

நான் பட்டாச்சாரியாரிடம் ஒரு சமயம் கேட்டிருக்கிறேன், ‘எப்பவும் இவ்ளோ பக்கத்துல நிக்கறேளே, உங்களுக்கு பயமாவே இருக்காதா?’

அவர் சிரித்தார். ‘எதுக்கு பயப்படணும்? அவன் நமக்கெல்லாம் அப்பா. தப்பு பண்ணா மட்டும்தான் அப்பா கண்டிப்பார். நாம சரியாவே இருந்துட்டா அப்பாட்ட என்ன பயம்?’

அதனால்தான் நான் பயந்தேன். என் அண்ணா ஒரு தவறு செய்திருக்கிறான். மந்திரம் சொல்லி, லஷ்மிவராகப் பெருமாள் சாட்சியாகக் கோயில் மண்டபத்தில் வைத்து அவனுக்கு அப்பா உபநயனம் செய்திருக்கிறார். நான் பார்த்து அவன் சந்தியாவந்தனமெல்லாம் செய்ததில்லை. அவன் மட்டுமா. நாங்கள் நான்கு பேருமே பூணூல் போட்ட கொஞ்ச காலத்துக்கு அப்பாவுக்காக, அவர் கண்ணில் படும்படியாக சந்தி செய்துகொண்டிருந்தோம். பிறகு இயல்பாக அது விடுபட்டுப்போனது. என்றைக்காவது அப்பா அதைச் சொல்லி வருத்தப்படுவார். ‘ஒழுங்கா பண்ணிங்கன்னா நன்னா படிப்பு வரும். அதுக்காகத்தான் சொல்றேன்’ என்று சொல்லுவார். அவரது திருப்திக்காக நான் மட்டும் எப்போதாவது அவரெதிரே சந்தி பண்ணுவேன். அண்ணாக்கள் யாரும் மந்திரங்களை நினைவில் வைத்திருந்தார்களா என்றே எனக்குத் தெரியவில்லை.

அம்மா இதைப்பற்றியெல்லாம் என்றுமே எங்களிடம் கேட்டதில்லை. ஒழுக்கம் சார்ந்த அவளது வரையறைகள் என்னவாக இருந்தன என்பது எப்போதும் எனக்குப் புரிந்ததில்லை. ஒரு சமயம் வினய், யாரோ நண்பனோடு சேர்ந்து பீடி குடித்திருக்கிறான். அது ஒரு ஆர்வம். அந்த வயதில் யாருக்குத்தான் இல்லாதிருந்திருக்கும்? வாய் குவித்துப் புகையை உள்ளே இழுத்து உலவவிட்டு, பிறகு அதை வளையம் வளையமாக வெளியேற்றிப் பார்த்து மகிழ்வது அனைவருக்குமே பிடித்தமான ஒன்று. வினய் அதைத்தான் செய்திருக்கிறான். துரதிருஷ்டவசமாக, தையூர் சந்தைக்கு அந்நேரம் கொள்முதலுக்குப் போய்க்கொண்டிருந்த கேசவன் மாமாவின் பார்வையில் அது பட்டுவிட்டது. மாமா அதிர்ந்துபோய்விட்டார். ‘ஐயோ மகாபாவி! என்னடா இது கோலம்!’ என்று அங்கேயே வினய்யை இழுத்துப்போட்டு மிதி மிதி என்று மிதித்திருக்கிறார். ஆத்திரம் அடங்காமல், அவனைத் தரதரவென்று இழுத்துக்கொண்டுபோய் தையூர் பண்ணையின் பம்ப் செட்டில் முக்கிக் குளிக்கவைத்து ஈரம் சொட்டச் சொட்ட வீட்டுக்கு இழுத்துவந்தார்.

என்ன என்று அப்பா கேட்டார்.

‘மோசம் போயிட்டேள் அத்திம்பேர். இந்த மகாபாவி உங்க பேரக் கெடுக்கறதே குறியா வெச்சிண்டிருக்கான்’ என்று ஆரம்பித்து அரை மணி நேரம் நடந்ததைப் புலம்பிக் கொட்டிவிட்டு, கண்ணைத் துடைத்துக்கொண்டு வெளியேறிச் சென்றார்.

அப்பா வெகுநேரம் ஒன்றும் பேசவில்லை. வினய் ஒரு குற்றவாளியின் தோரணையில் தீர்ப்பு வெளிவரக் காத்திருந்தான். விஷயம் அப்போது அம்மாவுக்குத் தெரியாது. அவள் கோயிலுக்குப் போயிருந்தாள். அவள் வரும்வரை அப்பா ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அம்மா வீட்டுக்குள் நுழைந்ததுமே, வினோத் அவளுக்கு விஷயத்தைத் தெரியப்படுத்திவிட்டான். அவள் கையில் எடுத்துவந்திருந்த குங்குமப் பிரசாதத்தை எங்கள் நான்கு பேர் நெற்றியிலும் இட்டுவிட்டாள். பிறகு அப்பாவிடம் சென்று குங்குமத்தை நீட்ட, அவர் எடுத்துத் தன் நெற்றியில் வைத்துக்கொண்டார்.

‘சொல்லு, உம்புள்ளைய என்ன பண்ணலாம்?’ என்று கேட்டார். அம்மா சிறிது நேரம் யோசித்தாள். பிறகு அடுக்களைக்குள் சென்று இரவு உணவுக்கு ஆயத்தம் செய்ய ஆரம்பித்தாள்.

‘கேக்கறேனே, என்ன பண்ணப்போறே அவனை?’ அப்பா மீண்டும் உரக்கக் கேட்டார்.

‘விட்டுடுங்கோ. அவனுக்குச் சரின்னு பட்டதாலதானே செஞ்சிருக்கான்? தப்புன்னு அவனுக்கே தோணும்போது நிறுத்திடுவான்’ என்று சொல்லிவிட்டு, சாப்ட வாங்க எல்லாரும் என்றாள்.

 

வினய் அப்படி ஒரு பதிலை எதிர்பார்த்திருக்கவில்லை என்று தோன்றியது. உண்மையில் அவனை அப்பாவும் அம்மாவும் அடித்தும் திட்டியும் அழுதும் தீர்த்திருந்தால் மிகவும் திருப்தியாகியிருப்பான். மாமாவுக்கு வந்த கோபத்தில் ஒரு சதவீதத்தைக்கூட அம்மாவிடம் காணமுடியாதது அவனுக்கு மிகுந்த ஏமாற்றமளித்திருக்க வேண்டும்.

அன்றிரவு நாங்கள் நான்கு பேரும் உறங்கியிருப்போம் என்று நம்பி, அப்பாவும் அம்மாவும் வாசல் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். உண்மையில் பயத்தின் வசப்பட்டிருந்த வினய் மட்டும்தான் உறங்கிப்போயிருந்தான். அண்ணாவோ, வினோத்தோ, நானோ சற்றும் உறக்கமின்றி வெறுமனே படுத்துத்தான் இருந்தோம்.

‘நீங்க ஏதாவது கண்டிச்சேளா?’ என்று அம்மா அப்பாவிடம் கேட்டாள்.

‘இல்லே. பேசவேயில்லே.’

‘அது போதும். பேசாம இருக்கறதும் கண்டிக்கறதும் ஒண்ணுதான். விட்டுடுங்கோ’ என்று அம்மா சொன்னாள்.

‘கஷ்டமா இருக்கு அகி. எங்க வம்சத்துல ஆசாரசீலர்னு யாருமில்லேன்னாலும் உங்கப்பா, தாத்தாவெல்லாம் நாள் தவறாம அக்னிஹோத்ரம் பண்ணி வாழ்ந்தவா. இந்தப் பிள்ளை இப்படி பண்ணுவான்னு எதிர்பாக்கலே.’

‘பரவால்லேங்கறனே?’ என்று அம்மா சொன்னது என் காதில் விழுந்தது. சற்று அதிர்ச்சியாக இருந்தது. உடனே நான், அண்ணா கவனித்துக்கொண்டிருக்கிறானா என்று திரும்பிப் பார்த்தேன். எங்கள் வீட்டில் முற்றத்தின் வடக்கு நடையோடியில்தான் நாங்கள் நான்கு பேரும் படுப்பது வழக்கம். சுள்ளிக்கட்டைப் பிரித்துப் போட்டாற்போல வரிசையாக எங்கள் படுக்கைகள் அங்குதான் விரிக்கப்பட்டிருக்கும். அப்பாதான் தினமும் எங்களுக்குப் படுக்கை போட்டு வைப்பார். மூன்று பாய்களை விரித்து, அதன் மீது முதலில் ஒரு போர்வையை விரிப்பார். சுருக்கங்கள் இல்லாமல் அதை நேர்த்தியாகப் பாய்களை மூடும்படி அமைத்து, அதன் மீது அம்மாவின் பழைய ஒன்பது கஜம் புடவை ஒன்றை இரண்டாக மடித்துப் போடுவார். மீண்டும் அமர்ந்து அதன் சுருக்கங்களை மெதுவாகப் பிரித்து ஒழுங்கு செய்வார். அதன்பின் நான்கு தலையணைகளை எடுத்து வந்து அருகருகே போட்டுவிட்டு, ‘மணியாச்சு, வந்து படுங்கோ’ என்று ஒரு குரல் கொடுப்பார். இதெல்லாம் இரவு ஒன்பது மணிக்கு நடந்துவிடும். நாங்கள் படுத்து அரை மணி ஆன பின்புதான், அப்பாவும் அம்மாவும் சாப்பிட உட்காருவார்கள். பேசியபடி சாப்பிட்டுவிட்டு, மேலும் சிறிது நேரம் வாசல் திண்ணைக்குப் போய் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். பொதுவாக, அவர்கள் இரண்டு பேரும் எப்போது படுக்க வருவார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. காலை கண் விழிக்கும்போது அப்பா மீண்டும் அதே வாசல் திண்ணையில் பேப்பர் படித்துக்கொண்டிருப்பார். அம்மா சமையலறையில் காப்பி போட்டுக்கொண்டிருப்பாள்.

இந்த ஒழுங்கு என்றுமே மாறியதில்லை. எனக்குத் தெரிந்து முதல் நாளாக அன்றைக்குத்தான் நாங்கள் தூங்காமல் அவர்கள் இருவரும் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்தோம். அண்ணா கண்ணை மூடிக்கூட பாவனை செய்யவில்லை. கொட்டக்கொட்ட விழித்தபடியேதான் படுத்திருந்தான். இரு கைகளையும் தலைக்கு அடியில் கொடுத்து, மேலே சுழலும் மின் விசிறியைப் பார்த்தபடி சும்மா கிடந்தான். வினோத் போர்வையைத் தலையோடு காலாக இழுத்துப் போர்த்திக்கொண்டு தன் விழிப்பை மறைக்கப் பார்த்துக்கொண்டிருந்தது புரிந்தது. நான் எழுந்து உட்கார்ந்து அண்ணாவைப் பார்த்தேன். அவன் திரும்பி என்னைப் பார்த்துப் புன்னகை செய்தான். ‘தூக்கம் வரலியா?’ என்று கேட்டான்.

‘அம்மா என்னடா இப்படி சொல்றா? பீடி பிடிக்கறது தப்பில்லியா?’ என்றேன் நம்பமுடியாத வியப்புடன். அவன் மீண்டும் புன்னகை செய்தான். ‘தப்பா இல்லியான்னு உனக்கு சரியா புரியணுன்னா, நீயும் ஒரு தடவை மாமா எதிர்ல நின்னு பிடிச்சிப் பாரு.’

‘ஐயோ வினய்ய மாமா போட்டுப் பின்னி எடுத்திருக்கார். நான் மாட்டேன்.’

‘அப்ப ஒண்ணு செய். அம்மா எதிர்லயே நின்னு பிடி.’

‘ஐயோ!’ என்றேன் அலறலுடன்.

‘உன்னையும் ஒண்ணும் சொல்லமாட்டா விமல். பயப்படாத’ என்று அண்ணா சொன்னான்.

‘அதான் ஏன்?’ நான் விடாமல் கேட்டேன்.

அண்ணா அதற்கு பதில் சொல்லவில்லை. வெளியே கதவு அடைக்கப்படும் சத்தம் கேட்டது. அப்பாவும் அம்மாவும் பேசி முடித்து உள்ளே வந்தார்கள். நான் சட்டென்று படுத்து போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டேன். அன்றைக்கும் எனக்கு முழு இரவும் உறக்கமில்லாமல் போய்விட்டது. அப்பாவும் அம்மாவும் விளக்கை அணைத்துவிட்டு வந்து எங்கள் நான்கு பேருக்கும் அந்தப் பக்கம் ஒருவரும் இந்தப் பக்கம் ஒருவருமாகப் படுத்தார்கள்.

சரியாகத் தெரியவில்லை என்றாலும் இரவெல்லாம் அம்மா அழுதுகொண்டிருந்ததாகத்தான் எனக்குத் தோன்றியது.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

8. புறப்பாடு

 

 

எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. இப்போதுதான் அதைச் சந்தேகம் என்கிறேனே தவிர, அந்த வயதில் அது ஒரு தீர்மானமாகவே எனக்குள் பதிந்திருந்தது. வினய் பீடி குடித்த விஷயத்தில் ஒன்றுமே நடக்காத மாதிரி நடந்துகொண்ட அம்மா, என் மூத்த அண்ணா சம்பந்தப்பட்ட எதிலும் அப்படி இருக்கமாட்டாள் என்றே தோன்றியது. உதாரணத்துக்கு, பீடியைக் குடித்தது வினய் அல்ல; விஜய்தான் என்றால் அம்மா என்ன செய்திருக்கக்கூடும்? நிச்சயமாகக் கதறித் தீர்த்திருப்பாள் என்று நினைத்தேன். அவனை அமரவைத்து மணிக்கணக்கில் நல்ல புத்தி சொல்லியிருப்பாள். அவனுக்காக அவள் விரதமிருப்பாள். உணவில் எதையாவது தவிர்ப்பாள். வெறுந்தரையில் படுப்பாள். கோவளம் தர்கா வாசலில் எப்போதும் அமர்ந்திருக்கும் ஒரு பக்கிரியை அவளுக்குத் தெரியும். வீட்டில் ஏதாவது பெரிய பிரச்னை வரும்போதெல்லாம் அம்மா ரகசியமாக அவரிடத்தில் சென்று ஆலோசனை கேட்டு வருவது வழக்கம். அண்ணாவுக்காக அவரிடம் தாயத்து மந்திரித்து வாங்கிவந்து கட்டினாலும் கட்டுவாள். இதனால் எல்லாம்தான் அவன் பூணூலைக் கழட்டிவிட்ட விவரத்தை நான் அவளிடம் சொல்ல வேண்டாமென்று முடிவெடுத்தேன். அந்த வயதில் அவளது கண்ணீரைத் தாங்குகிற சக்தி எனக்கு இல்லாதிருந்தது.

அண்ணாவிடம் இதைச் சொன்னபோதுதான் அவன் அந்த நாடிச் சுவடியைக் குறித்து முதல் முதலில் என்னிடம் பேசினான். ‘நீ நினைக்கறது தப்பு விமல். நான் கொலையே பண்ணாலும் அம்மா ஒண்ணும் சொல்லமாட்டா. அப்பாவையும் வாயத் திறக்க விடமாட்டா’ என்று சொன்னான்.

‘எப்படி சொல்றே நீ?’

‘சுவடி அப்படித்தான் சொல்றது’ என்றான் அண்ணா. அவன் வைத்திருந்த சுவடியை நான் ஏழெட்டு முறை எடுத்துப் பார்த்திருந்தேன். ஆனால் அதில் எந்தப் பயனும் இல்லை. அதில் எழுதியிருந்ததில் ஒரு சொல்லைக்கூட என்னால் படிக்க முடியவில்லை. மிகவும் பழுப்பேறிப்போயிருந்த புராதனமான சுவடி அது. புதிய சுவடியாக இருந்தாலுமே என்னால் படித்திருக்க முடியாது. ஏனெனில் அந்தத் தமிழ் நான் அறியாததாக இருந்தது. பல எழுத்துகள் பாதி அழிந்திருந்தன.

‘டேய், உண்மைய சொல்லு. ஒனக்கு மட்டும் இது புரியுமா?’ என்று நான் அண்ணாவிடம் கேட்டேன்.

‘புரியாதுதான்’ என்று அவன் பதில் சொன்னான்.

‘அப்பறம் எதுக்கு உனக்கு இது?’

‘இது நம்ம குடும்பத்த பத்தின சுவடி விமல். நாலு வரில நம்மள பத்தித் தெளிவா எழுதியிருக்கா. நமக்கு இதைப் படிச்சி புரிஞ்சிக்கத் துப்பில்லேன்றது வேணா உண்மையா இருக்கலாம். ஆனா இது நம்மள பத்தி எழுதினது. அதனால நமக்கு முக்கியம்.’

‘யார் சொன்னா நம்மள பத்தி எழுதினதுன்னு?’

‘ஒரு சித்தர்.’

‘திருப்போரூர் சாமியா?’

‘அவர்கிட்ட இருந்துதான் எடுத்துண்டு வந்தேன். ஆனா சொன்னது அவர் இல்லே. அது வேற.’

எனக்குப் பல சமயம் அவன் சம்பவங்களைப் புனைந்துவிடுகிறானோ என்ற சந்தேகம் வரும். அனைத்துமே உண்மைதான் என்றால் அதை வீட்டில் அனைவருக்கும் பொதுவாக ஏன் ஒருபோதும் சொல்ல மறுக்கிறான்? ஒவ்வொரு முறையும் ‘யாரிடமும் சொல்லாதே’ என்று சொல்லிவிட்டு என்னிடம் அவன் பேசத் தொடக்கும்போதும் எனக்கு இந்தக் கேள்வி எழும். யோகம், சித்து, தவம், தியானம், பிராணாயாமம் என்று பல சொற்களை நான் அவனிடமிருந்துதான் பெற்றேன். அவன் எல்லோரையும்போல இல்லாமல் வேறு விதமானதொரு வாழ்வை ரகசியமாக வாழ்ந்துகொண்டிருக்கிறான் என்று எனக்குப் புரிந்தது. அதைப்பற்றி அறியவும் அவனோடு பேசி, புதிதாக எதையேனும் தெரிந்துகொள்ளவும் எனக்கு விருப்பமிருந்தது. ஆனால் என் விருப்பம் எப்போதும் சந்தேகத்தின் திரைச்சீலையைத் தன் மீது போர்த்திய வண்ணமே வெளிப்படுவதாயிருந்தது.

அண்ணா சொன்னான், ‘வாழற நாள்பூரா சந்தேகம் மட்டும்தான். மனுஷன் செத்தாலும் அவன் சந்தேகம் சிரஞ்சீவியாத்தான் இருக்கும்.’

பல சமயம் எனக்கு அவன் பேசுவது புரியாது. அவன் ரகசியமாக வைத்திருந்த அந்த நாடிச் சுவடியைப் போலவே பேசுவதாகத் தோன்றும். அவன் மட்டும் அதை அப்பாவிடமோ, கேசவன் மாமாவிடமோ கொடுத்தால் கண்டிப்பாக அதில் எழுதியிருப்பது என்னவென்று தெரிந்துவிடும். ஆனால் முடியவே முடியாது என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டான்.

‘நீ மட்டும் இதை அப்பாட்ட சொன்னேன்னா, அதோட நான் உன்னோட பேசமாட்டேன்.’

அண்ணா அந்தச் சுவடியை மிகவும் ரகசியமான ஓரிடத்தில் வைத்திருந்தான். எங்கள் நான்கு பேரின் பாடப் புத்தகங்கள், துணிமணிகளை வைத்துக்கொள்வதற்காக, இருக்கிற இரண்டு அறைகளில் ஒன்றை அம்மா ஒழித்துவிட்டிருந்தாள். அந்த அறை எப்போதும் களேபரமாகவே காணப்படும். எங்கும் துணிமணிகளும் புத்தகங்களும் இறைந்துகிடக்கும். எழுதிக் கிழித்துப்போட்ட தாள்கள், ஊக்கு உடைந்த பென்சில்கள், ரப்பர் அழித்த தூசுக் குப்பை, பென்சில் சீவிய குப்பை, இங்க் போடும்போது சிந்தியதைத் துடைக்காமல் விட்டதால் உண்டான கறைகள் ஏராளமாக இருக்கும். வினோத்துக்கு சுவரில் கிறுக்கும் பழக்கம் உண்டென்பதால், அந்த அறையின் சுவரெங்கும் கணக்கு, அறிவியல் பாடக் குறிப்புகளால் நிறைந்திருக்கும். அந்த அறையில் ஒரு பரண் உண்டு. அப்பாவின் புராதனமான இரண்டு டிரங்குப் பெட்டிகள் அங்கிருக்கும். அப்பாவின் திருமணத்துக்கு வாங்கிய வேட்டிகள், ஒரு வெள்ளிக் குத்துவிளக்கு, சில வெள்ளிப் பாத்திரங்கள், அம்மாவின் முகூர்த்தப் பட்டுப் புடைவை, சில பழைய புகைப்படங்கள் அதில் உண்டு. வருடத்துக்கு ஒருமுறை எப்போதாவது அப்பா அந்த இரு பெட்டிகளையும் கீழே இறக்கிவைத்துத் திறந்து பார்ப்பார். எல்லாம் சரியாக இருக்கிறதா என்று எண்ணி வைப்பாரோ என்னவோ. மற்றபடி வருடம் முழுதும் அந்தப் பரணைச் சீந்துவார் கிடையாது. அண்ணா, புத்தக அலமாரியில் கால் வைத்து மேலே ஏறி, அந்தப் பரணில் உள்ள அப்பாவின் பெட்டிக்குப் பின்புறமாக அந்த ஓலைச் சுவடியைப் போட்டு வைத்திருந்தான். அதை அவன் ஒரு சுருணைத் துணியில் சுற்றித்தான் வைத்திருந்தான். இருந்தாலும் அது நாளுக்கு நாள் அழிந்துகொண்டே போவதாகத்தான் எனக்குத் தோன்றியது. ஒவ்வொரு முறையும் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் அவன் என்னைத் துணைக்குக் கூப்பிட்டுக்கொண்டு பரண் மீதேறி அந்தச் சுவடியை எடுத்துப் பார்க்கும்போதும் எனக்கு பயமாக இருக்கும். எதற்காக அந்தப் பயம் என்று தெரியாது. ஆனாலும் நடுங்கும். வியர்த்துவிடும்.

‘உனக்கும்தான் அதைப் படிக்க முடியல, புரியலன்னு சொல்றியே. அப்பறம் எதுக்கு அடிக்கடி அதை எடுத்து வேற பாக்கற?’ என்று ஒரு நாள் அவனிடம் கேட்டேன்.

‘மனப்பாடம் பண்ண முடியறதான்னு பாக்கறேன். மனசுல ஏத்திண்டுட்டா அப்பறமா மெதுவா புரியறப்போ புரிஞ்சிட்டுப் போகட்டுமே?’

‘இன்னுமா மனப்பாடம் ஆகலை?’

‘ஆகாது விமல். ஆகாதுன்னு சொல்லியேதான் அவர் குடுத்தார்.’

‘அவர்னா யார்?’

‘சொன்னேனே, திருப்போரூர்ல ஒருத்தர்.’

அது என் ஆர்வத்தைத் தூண்டியது. எத்தனை எத்தனை பாடப் பக்கங்களை நான் மனப்பாடம் செய்திருக்கிறேன்! முந்தைய வருடத்துப் பாடங்கள்கூட இன்னமும் நினைவில் இருக்கின்றன. இந்த நான்கு வரிகள் மனத்தில் நிற்காதா. அதையும் பார்த்துவிடலாம் என்று ஒருநாள் அவன் ஓலைச்சுவடியை எடுத்தபோது வாங்கி வைத்துக்கொண்டு வார்த்தை வார்த்தையாகப் படிக்க முயற்சி செய்தேன். அதில் பல சொற்களின் அமைப்பே எனக்கு புரியவில்லை. அச்செழுத்தாக இருந்தால் மனப்பாடம் செய்துவிடுவது சுலபம் என்று தோன்றியது. அது கையால் கிறுக்கப்பட்டது என்பதால் எழுத்துகளே புரியாதிருந்தது.

 
 

‘பனை ஓலைல முள்ளால கீறி எழுதி, மஞ்சள் பொடி போட்டு எழுத்தா தெரிய வெப்பா அந்தக் காலத்துல’ என்று அண்ணா சொன்னான். அந்தக் காலம் என்றால் எந்தக் காலம்? அந்தக் காலத்து முறை இவனுக்கு எப்படித் தெரியும்? கேட்டால் திருப்போரூர் சாமி சொன்னதாகச் சொல்லிவிடுவான். என்றைக்காவது ஒருநாள் நான் அந்த சாமியைச் சந்திப்பேன். அப்போது என் அண்ணாவைப் பற்றி அவரிடம் விசாரிப்பேன். பொக்கிஷம் போன்றதொரு ஓலைச் சுவடியை ஒரு பதினேழு வயதுப் பையனிடம் எந்தத் தைரியத்தில் அவர் கொடுத்தனுப்பினார் என்று கேட்பேன். எங்கள் குடும்பத்தைப் பற்றிய வரிகள் கொண்ட சுவடி என்றால், அதை ஏன் என் பெற்றோருக்குக் காட்டாமல் மறைக்கச் சொன்னார் என்று கண்டிப்பாகக் கேட்டறிவேன்.

‘விமல், இந்தச் சுவடி அம்மாக்குப் புரியும். அவ படிச்சிடுவா. ஆனா அது இப்ப நடக்காது’ என்று அண்ணா சொன்னான்.

‘வேற எப்பொ நடக்குமாம்?’

அவன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பிறகு நீண்டதொரு பெருமூச்சு எழுந்தது. சட்டென்று கண்ணை மூடி அமர்ந்து பிராணாயாமம் செய்யத் தொடங்கினான். ஆறு நிமிடங்கள் அதைச் செய்து முடித்துவிட்டு மீண்டும் சுவடியைப் பரணில் பத்திரப்படுத்திவிட்டு இறங்கிவந்து சொன்னான். ‘என்னிக்குன்னு எனக்குத் தெரியாது. ஆனா அன்னிக்கு என் பொறந்த நாளா இருக்கும். அன்னிக்கு யாரோ ஒருத்தர் செத்துப்போன சேதி வரும்.’

‘ஐயோ, என்னடா சொல்றே நீ? இதை யாரு ஒனக்கு சொன்னது? திருப்போரூர் சாமியா?’ என்று கேட்டேன்.

‘இல்லை. நானேதான் சொல்றேன். நடக்கும் பார்’ என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறிச் சென்றான்.

அதுதான் எனக்குத் தீராத வியப்பாகத் தங்கிப்போனது. அண்ணா சொன்னதுபோலத்தான் நடந்தது. அன்றைக்கு அவனது பிறந்த நாள். அவன் எழுவதற்கு முன்னால், தான் எழுந்து குளித்து, வழக்கமான சமையலுக்கு மேலே ஏதாவதொரு இனிப்புப் பண்டம் செய்துவிட வேண்டும் என்று அம்மா மும்முரமாக அடுக்களையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தாள். ஏழு மணிக்கு நான் கண் விழித்துப் பார்த்தபோது அப்பா வெளியே போய்விட்டிருந்தார். வினய்யும் வினோத்தும் ஒரே போர்வைக்குள் சுருண்டு படுத்திருந்தார்கள். வழக்கத்துக்கு மாறாக அண்ணா ஏன் இன்றைக்குத் தலையோடு காலாகப் போர்த்திக்கொண்டு உறங்குகிறான் என்று நான்தான் அவன் போர்வையை விலக்கிப் பார்த்தேன். அண்ணா அங்கில்லை. இரண்டு தலையணைகளை ஒன்றன் கீழ் ஒன்றாக வைத்து, அதற்குத்தான் தன் போர்வையை அவன் போர்த்திவிட்டிருந்தான்.

அப்போது எனக்கு வித்தியாசமாக ஏதும் தெரியவில்லை. எழுந்து பின்புறம் சென்று பல் துலக்கி, முகம் கழுவிக்கொண்டு அடுக்களைக்குச் சென்று அம்மாவிடம் காப்பி கேட்டேன். வாங்கிக் குடித்துவிட்டு, வாணலியில் வறுபட்டுக்கொண்டிருந்த முந்திரிகளைப் பார்த்தேன். அதன் நறுமணத்தைச் சிறிது அனுபவித்துவிட்டு, ‘எதுக்கு ஸ்வீட்?’ என்று கேட்டேன்.

‘விஜய்க்கு கேசரிதானே பிடிக்கும்? அதான்’ என்று அம்மா சொன்னாள். பொட்டிலடித்தாற்போல் இருந்தது. ஒரு பாய்ச்சலில் மீண்டும் வந்து படுக்கையைப் பார்த்தேன். கொல்லைப்புறம், வாசல், அல்லிக் குளம், வசந்த மண்டபம் என்று கால் போன திக்கெல்லாம் ஓடி ஓடித் தேடிக் களைத்து வீடு திரும்பியபோது ‘எங்கடா போயிட்டே நீ? விஜய் எப்ப எழுந்தான்? காலங்கார்த்தால அவனையும் காணோம். காப்பிகூட சாப்டாம எங்க போய்த் தொலைஞ்சான்னே தெரியல’ என்று அம்மா சொன்னாள்.

எனக்கு அழுகை வெடித்துக்கொண்டு வந்தது. நான் அழுதால் அம்மா பதறிவிடுவாள். அண்ணா வீட்டை விட்டுப் போய்விட்டான் என்று நான் சொல்லவேண்டி வரும். அப்பாவும் அம்மாவும் கேசவன் மாமாவும் மாற்றி மாற்றி என்னைக் கேள்வி கேட்டுத் துளைப்பார்கள். எனக்குத் தெரிந்ததையெல்லாம் சொல்லிவிடலாம்தான். ஆனால் அப்போதிருந்த மனநிலையில் என்னால் ஒரு சொல்கூடப் பேச முடியாது போலிருந்தது. உடல் முழுதும் உதறிக்கொண்டிருந்தது. விளையாட்டுப்போல அவன் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டு, ரகசியம் காத்தது எத்தனை பெரிய தவறாகிவிட்டது!

ஒன்றுமே பேசாமல் நான் வீட்டுக்குள் போய்விட்டேன். அம்மா வினயை அழைத்து அண்ணா எங்கே போனான் என்று பார்த்துவரச் சொல்லிக்கொண்டிருந்தாள். அவன் சட்டையை மாட்டிக்கொண்டு புறப்பட்டபோதுதான், அப்பா வேகவேகமாக வீட்டுக்கு வந்து சஞ்சய் காந்தி இறந்துவிட்டதாக அம்மாவிடம் சொன்னார்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

9. மூல மந்திரம்

 

 

சிதையிலிருந்து உருவியெடுத்த தழல் துண்டுகளைப்போலத் தகித்துக்கொண்டிருந்தன அம்மாவின் விழிகள். அவள் அழுவதுபோலவும் இல்லை, அழாததுபோலவும் இல்லை. சாதாரணமாகத்தான் பேசிக்கொண்டிருந்தாள். ஆனால் அந்தக் குரலுக்குள் தடம் புரண்ட ரயிலின் பெட்டிகளைப் போன்றதொரு கோர பிரம்மாண்டம் இருப்பதாகப் பட்டது. தனது பதற்றத்தை அவள் உரக்கப் பேசி மறைத்துக்கொள்வதாகத் தோன்றியது. எல்லாமே சரிதான், எல்லாமே வரக்கூடியதுதான், எதையும் எதிர்பார்க்காமல் இருந்தால்தான் தவறு என்கிற தொனியை ஒரு போர்வையாகப் போர்த்திக்கொண்டு, யாருக்கோ தேறுதல் சொல்லுகிற பாவனையில் தனக்குத்தானே இடைவிடாது பேசிக்கொண்டிருந்தாள். அப்பா வாயே திறக்கவில்லை. வினய்யும் வினோத்தும் என்ன நடந்திருக்கிறது என்பதை உள்வாங்கவே சிரமப்பட்டுக்கொண்டிருப்பதுபோலப் பட்டது. கேசவன் மாமாதான் முற்றத்துத் தூணில் முட்டிக்கொண்டு முட்டிக்கொண்டு அழுதார்.

‘பாவி பாவி, மகாபாவி. இதுக்காக்கா அவனைப் பெத்தே? இதுக்கா அவன் இஷ்டத்துக்கு வளரவிட்டே? ஒரு வார்த்தை கண்டிச்சிருப்பியா? தப்பா எதாவது சொல்லியிருப்பியா? மார்க் சரியில்லே, அது சரியில்லேன்னு திட்டியிருப்பியா?’ ஆற்றமாட்டாமல் அரற்றிக்கொண்டிருந்த கேசவன் மாமாவின் அருகே சென்று அப்பா அவரது தோளைத் தொட்டார்.

‘கேசவா, கண்டிக்கிற அளவுக்கு அவன் பொறந்ததுலேருந்து எந்தத் தப்பும் பண்ணதில்லடா. பள்ளிக்கூடத்துல எந்தப் பரீட்சையிலயும் அவன் தொண்ணூறு மார்க்குக்குக் கீழ வாங்கினதே இல்லை’ என்று சொன்னார்.

மாமா, போலிஸ் ஸ்டேஷனுக்குப் போய் புகார் கொடுத்துப் பார்க்கலாம் என்று சொன்னார். எங்கே, எவ்வளவு தூரம் போயிருக்கமுடியும்? எப்படியும் பிடித்துவிடலாம் என்று அவர் நம்பினார். அம்மாவிடம் இதனைச் சொன்னபோது அவள் பதில் சொல்லவில்லை. அதிர்ச்சியில் சித்தம் கலங்கி நின்றுவிட்ட பாவனையில், அவள் தீவிரமாக ஏதோ யோசித்துக்கொண்டிருப்பதாகத்தான் எனக்குத் தோன்றியது. நான் ஒரு முடிவெடுத்தால் அத்தனை பேரின் குழப்பங்களையும் தீர்த்துவைத்துவிடமுடியும். தேடிப் பயனில்லை. அண்ணா ஒரு தீர்மானத்துடன் போயிருக்கிறான். இனி அவன் திரும்பி வரமாட்டான்.

சொல்லிவிடலாம்தான். ஆனாலும் எனக்கு அச்சமாக இருந்தது. அவன் ஓடிப்போனதைவிட, அவன் ஓடிப்போகப்போகிறான் என்பது தெரிந்தும் நான் யாரையும் எச்சரிக்காதிருந்திருக்கிறேன் என்பது மிகப்பெரிய குற்றமாகிவிடும். அம்மாவால் அதனைத் தாங்கவே முடியாது என்று தோன்றியது.

எனக்குத் தீராத வியப்புகளாக அன்றைக்கு இரண்டு மிச்சமிருந்தன. நான் எப்படி அத்தனை அழுத்தக்காரனாக இருந்திருக்கிறேன் என்பது முதலாவது. சந்தேகத்தின் நெல்லளவு நிழல்கூட யாருக்கும் படராத வண்ணம் அண்ணா எப்படித் தன்னை அத்தனைக் காலமாக மறைத்துவந்திருக்கிறான் என்பது அடுத்தது. அவன் செய்துகொண்டிருந்த யோகப்பயிற்சிகளை நான் அறிவேன். ஆனால் ஒரு நாளும் அவன் அவற்றை வீட்டில் அமர்ந்து செய்து பார்த்ததில்லை. பெரும்பாலும் மாலை வேளைகளில் சவுக்குத் தோப்பில்தான் செய்வான். நரிகளுக்கு பயந்து யாரும் நுழைய விரும்பாத நேரம் அது. அவனிடம் சில விநோதமான புத்தகங்கள் இருந்தன. எல்லாம் செல்லரித்த, மிகப் பழங்காலத்துப் புத்தகங்கள். இரவுப் பொழுதுகளில் வீட்டில் அனைவரும் உறங்கிய பிறகு, ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு அவன் பின்கட்டுக்குப் போய் கிணற்றடி விளக்கைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்து படிப்பான். ஒரு சில சமயம் நான் சிறுநீர் கழிக்க நள்ளிரவு எழுந்து செல்லும்போது அதைப் பார்த்திருக்கிறேன்.

முதல் முறை அவன் அப்படிப் படித்துக்கொண்டிருந்ததை நான் பார்த்தபோது அவன் சற்றே திடுக்கிட்டுப் புத்தகத்தை மறைத்ததுபோலிருந்தது. ஆனால் விரைவில் சகஜமாகிவிட்டான். ‘வா, இப்படி உக்காரு’ என்று என்னிடம் சொன்னான்.

‘என்னடா படிக்கறே? கெட்ட புஸ்தகமா?’ என்று கேட்டேன்.

‘நீயும் வேணா படிச்சிப் பாரு’ என்று என்னிடம் அதை நீட்டினான். அந்தப் புத்தகத்துக்கு அட்டை இல்லை. எழுத்துருக்கள் மிகவும் புராதனமாக, ஒடுங்கி நெளிந்து உருக்குலைந்திருந்தன. பழுப்புத் தாள்களைப் புரட்டப் புரட்ட எனக்கு மிகவும் விநோதமாக இருந்தது. அந்த மொழி எனக்குப் புரியவில்லை. நாலைந்து வரிகளில் ஏதேதோ மந்திரங்களும் அதன் அடியில் கட்டம் போட்டு, அதே மந்திரங்களின் சொற்களை ஒவ்வொரு கட்டத்தில் இட்டு நிரப்பியும் இருந்தது.

‘நீ மந்திரவாதி ஆகப் போறியாடா?’ என்று ஆர்வமுடன் கேட்டேன். அவன் இல்லை என்று தலையசைத்தான்.

‘அப்பறம் எதுக்கு இதெல்லாம் படிக்கறே? இது எதோ மந்திர தந்திர புஸ்தகம் மாதிரி இருக்கே?’

‘இது சித்து. இது என்னன்னு எனக்குத் தெரிஞ்சிக்கணும்’ என்று அவன் சொன்னான்.

‘இந்தப் புஸ்தகம் ஏது உனக்கு?’

‘திருப்போரூர் சாமி வெச்சிருந்தார்.’

எனக்கு அதுதான் பெரிய குழப்பமாக இருந்தது. அந்தத் திருப்போரூர் சாமியை ஒரு நாளாவது நான் சந்தித்தே தீர வேண்டும் என்று தோன்றியது. இவன் எப்போது அவரிடம் சென்று அறிமுகமானான், எப்படி நெருக்கமானான் என்றே எனக்குப் புரியவில்லை. புராதனமான நூல்களையும் ரகசிய ஓலைச் சுவடிகளையும் கொடுத்தனுப்பும் அளவுக்கு அப்படி என்ன சிறப்பைக் கண்டார் இவனிடம்?

என்னை அவரிடம் அழைத்துச் செல்லும்படி விஜயிடம் கேட்டேன். அவன் சிறிது நேரம் யோசித்துக்கொண்டிருந்துவிட்டு, ‘வேணாம் விமல். நீ நன்னா படி. நீ நன்னா வந்தாத்தான் அம்மாக்கு சந்தோஷம்’ என்று சொன்னான்.

‘ஏன் நீ நன்னா படிக்கறதில்லியான்ன? அப்படி ஒண்ணும் தெரியலியே. நல்ல மார்க் எல்லாம் வாங்கறியே?’ என்று சொன்னேன்.

அவன் சிரித்தான். ‘அப்பாம்மா படிக்கவெக்கறதால படிக்கறேன். மார்க் வாங்கினாத்தான் அவாளுக்கு சந்தோஷம். அதனால வாங்கிக் குடுத்துடறேன். ஆனா இந்தப் படிப்பு எனக்குப் பிடிக்கலை’ என்று பதில் சொன்னான்.

எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. அவன் வைத்திருந்த புத்தகத்தை மீண்டும் ஒருமுறை புரட்டிப் பார்த்தேன். ‘இதையெல்லாம் ரகசியமாத்தான் படிக்கணுமா? அம்மாக்குத் தெரிஞ்சா பிரச்னையாயிடுமா?’ என்று கேட்டேன்.

‘அப்படியெல்லாம் இல்லை. ஆனா, அம்மா பயந்துடுவா.’

‘நீ எப்படி பயப்படாம இருக்கே?’

‘தெரியலடா’ என்று விஜய் சொன்னான். சிறிது நேரம் அமைதியாக இருந்தவன், என்ன நினைத்தானோ, ‘நாளைக்கு சாயங்காலம் வசந்த மண்டபத்துக்கு ஆறு மணி சுமாருக்கு வா. நான் அங்கதான் இருப்பேன். உனக்கு ஒண்ணு காட்டறேன்’ என்று சொன்னான். அதைச் சொல்லிவிட்டு, ‘நாளைக்கு அந்த அற்புதம் உனக்குத் தெரியணும்னா, இன்னிக்கு நான் இதை இங்க படிச்சிண்டிருந்ததை நீ யார்கிட்டேயும் சொல்லக் கூடாது!’ என்று சொன்னான்.

அற்புதம்!

அப்படியொன்றை அவன் எனக்குக் காட்டுவதென்றால் நான் ஏன் அம்மாவிடம் எதையும் சொல்லப்போகிறேன்! படிப்பைத் தாண்டி அன்றைக்கு எங்கள் கிராமத்தில் என் வயதுச் சிறுவர்களுக்கு வேறொன்றும் தெரியாது. எப்போதாவது வீதியில் கூடி விளையாடுவது உண்டுதான். ஆனால் அதெல்லாம் சில மணித் துளிகளுக்குள் முடிந்துவிடக்கூடிய வைபவம். ஏனோ சிறுவர்கள் ஒன்றுகூடி விளையாடுவதை அன்றைய பெரியவர்கள் அதிகம் விரும்பாதவர்களாக இருந்தார்கள். படி, படி என்பதைத் தாண்டி அவர்கள் வேறெதையும் மறந்தும் சொல்லமாட்டார்கள். மல்லையிலோ திருப்போரூரிலோ படூரிலோ கோயில் திருவிழா வந்தால் மட்டும் குடும்பத்தோடு கிளம்பிச் செல்வோம். வருடம் ஒருமுறை நடக்கும் படூர் மயானகொள்ளைத் திருவிழா எனக்கு ரொம்பப் பிடிக்கும். மற்றபடி கேவலம் நான்கு மாங்காய் அடித்துத் தின்ன விரும்பினால்கூட சைக்கிள் எடுத்துக்கொண்டு தையூர் தோப்புக்குப் போனால்தான் உண்டு. திருவிடந்தையில் கடலையும் சவுக்குக் காட்டைத் தவிர இன்னொன்று கிடையாது.

எனவே மறுநாள் அண்ணா எனக்குக் காட்டவிருந்த, நானறியாத அந்த அற்புத அனுபவத்துக்கு அந்தக் கணத்தில் இருந்தே தயாராக ஆரம்பித்தேன். வரும்போது அம்மாவுக்குத் தெரியாமல் ஒரு பொட்டலத்தில் பிடி சர்க்கரை எடுத்துவரச் சொல்லியிருந்தான். மறக்காமல் அதை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

வசந்த மண்டபம் எங்கள் வீட்டில் இருந்து பதினைந்து நிமிட நடை தூரம்தான். சுற்றிலும் வயல்களும் ஒரு பெரிய ஏரியும் சிறிதாக ஒரு அல்லிக் குளமும் வழியேறத் தென்னை மரங்களும் நிறைந்திருக்கும். அங்கே போய்ச் சேர சரியான பாதை கிடையாது. ஒற்றையடி மண் பாதை முழுதும் சரளைக் கற்கள் நிரம்பியிருக்கும். உற்சவ காலங்களில் பெருமாள் வீதி உலா போகும்போது அந்த மண்டபத்தில் சிறிது நேரம் இளைப்பாறுவார் என்று அப்பா சொல்லியிருக்கிறார். ஆனால் எனக்கு நினைவு தெரிந்து நான் எங்கள் ஊரில் எந்தத் திருவிழாவும் நடந்து பார்த்ததில்லை. உற்சவர் நித்யகல்யாணப் பெருமாளை வேண்டிக்கொண்டு விரதம் இருந்தால், கல்யாணம் ஆகாதவர்களுக்கு உடனே குதிர்ந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை உண்டு. அதைப் பிடித்துக்கொண்டு எப்போதாவது, யாராவது வண்டி கட்டிக்கொண்டு குடும்பத்தோடு கோயிலுக்கு வருவார்கள். சிறிய கோயில்தான் என்பதால் சுற்றிப்பார்க்க உள்ளே ஒன்றும் இருக்காது. காடாக முளைத்துக்கிடக்கும் புல்லின் மீது நடந்து மூன்று சந்நிதிகளைச் சேவித்து முடிக்க எவ்வளவு நேரம் ஆகும்? பத்து நிமிடங்களில் அர்ச்சனை முடித்து பிரசாதம் வாங்கிக்கொண்டு வெளியே வந்துவிட்டால், திரும்பக் கிளம்பும்வரை பொழுது போக வேண்டுமே? ஊரைச் சுற்றிக் காலார நடந்துவிட்டு வரலாம் என்று புறப்படுகிறவர்கள் அந்த மண்டபத்தில் அமர்ந்து புளியோதரையோ, தயிர் சாதமோ சாப்பிடுவார்கள். குளத்தில் இறங்கி, தண்ணீர் அள்ளிக் குடித்துவிட்டு ஒன்றிரண்டு அல்லிப் பூக்களைப் பறித்துக்கொண்டு ஊர் திரும்புவார்கள்.

அன்று மாலை அண்ணா சொன்ன ஆறு மணிக்குச் சரியாக நான் வசந்த மண்டபத்துக்குப் போய்ச் சேர்ந்தபோது அவன் அல்லிக் குளத்தின் நடுவே நீந்திக் குளித்துக்கொண்டிருந்தான். ‘டேய் நான் வந்துட்டேண்டா’ என்று மண்டபத்தில் நின்றுகொண்டு கத்தினேன். அவன் அதைக் கண்டுகொள்ளவில்லை. சுமார் இருபது நிமிடங்கள் ஏகாந்தமாகக் குளம் முழுதும் பரவி நீந்திக்கொண்டே இருந்தான். பிறகு கரையேறி வந்து என்னைப் பார்த்துச் சிரித்தான். அவிழ்த்து மடித்து வைத்திருந்த தனது வேட்டியைக் குளத்து நீரில் நனைத்துப் பிழிந்து இடுப்பில் சுற்றிக்கொண்டு மண்டபத்துக்கு வந்தான்.

‘என்னடா இது ஈர வேஷ்டி! துண்டு எடுத்துண்டு வரலியா? இப்படி சொட்டச் சொட்ட நிக்கறியே!’ என்று நான் சொன்னேன்.

‘பரவால்ல. நீ உக்கார்’ என்று சொல்லிவிட்டு அவன் சுற்றுமுற்றும் பார்த்தான். அந்த நேரத்தில் தென்பட்டு போகிறவர்களோ, திருவிடந்தைக்கு அங்கிருந்து வருகிறவர்களோ யாரும் இருக்கமாட்டார்கள் என்பது எனக்கே தெரியும். அந்தச் சாலை பகல் பொழுதிலேயே பொளேரென்று வெறுமையாகத்தான் கிடக்கும். எப்போதாவது சவுக்குக் கட்டைகள் ஏற்றிய மாட்டு வண்டிகள் சரளைக் கற்களை அரைத்துக்கொண்டு போகும். ஆனந்தமாக பீடி குடித்தபடி ஹேய் ஹேய் என்று மாட்டை விரட்டும் வண்டிக்காரர்கள், வசந்த மண்டபத்தை தாண்டிக் கோயில் கண்ணில் பட ஆரம்பித்ததுமே வலித்துக்கொண்டிருக்கும் பீடியை விசிறி எறிந்துவிடுவார்கள். அப்படி அவர்கள் வீசியெறியும் பீடிகளால் ஈர்க்கப்பட்டுத்தான் முதல் முதலில் குடித்துப் பழகியதாக வினய் பின்பொரு சமயம் என்னிடம் சொன்னான்.

‘யாரும் வரலை. என்ன அற்புதம்?’ என்று நான் அண்ணாவிடம் கேட்டேன். ஆர்வம் எனக்குக் கட்டுக்கடங்காது பெருகிக்கொண்டிருந்தது.

அவன் ஒன்றும் பேசவில்லை. மண்டபத்தின் ஒரு ஓரமாக மடித்துவைத்திருந்த தனது சட்டையின் பாக்கெட்டில் இருந்து ஒரு சாக்பீஸை எடுத்தான். கண்மூடி தியானம் செய்துவிட்டு, மண்டபத் தரையில் ஓரடி நீள அகலத்துக்கு ஒரு சதுரக் கட்டம் வரைந்தான். பிறகு அந்தப் பெரிய சதுரத்துக்குள் ஐந்து, ஐந்தாக இருபத்து ஐந்து சிறு சதுரங்களை வரைந்தான். அதன்பின் ஒவ்வொரு கட்டமாக, வ-லம் எ-றீயும் 15 / ந-ஐம் அ-ஐயும் 9 / சி-நம் உ-சவ்வும் 4 என்று தொடங்கி விறுவிறுவென்று ஏதோ எழுத ஆரம்பித்தான்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. மிகவும் குழப்பமாகவும் சிறிது பதற்றமாகவும் இருந்தது. ‘என்னடா பண்ற?’ என்று அடிக்குரலில் சொற்களை நசுக்கிக் கேட்டேன். அவன் பதில் சொல்லாமல் அந்த இருபத்து ஐந்து கட்டங்களையும் நிரப்புவதில் குறியாக இருந்தான். ம-ஈம். ய-சௌம். சி-நம். ந-ஐம். வ-லம். திரும்பத் திரும்ப இதே சொற்கள்தாம். ஆனால் இரண்டாவது வரிகளில் அ-ஐயும், உ-சவ்வும், எ-றீயும், ஓ-ஸிரீயும் என்று கட்டத்துக்கொன்றாக வேறெதையோ மாற்றி எழுதிக்கொண்டு போனான்.

எழுதி முடித்துவிட்டு என்னைப் பார்த்துச் சிரித்தான்.

‘என்னது இது?’

‘சொல்றேன். கொஞ்ச நேரம் பேசாம இரு’ என்று சொல்லிவிட்டு பத்மாசனமிட்டு அமர்ந்துகொண்டான். ‘சர்க்கரை கொண்டுவரச் சொன்னனே?’

நான் என் நிஜார் பாக்கெட்டில் இருந்து பொட்டலத்தை எடுத்து அவன்முன் வைத்தேன். அவன் அதைப் பிரித்து அந்தப் பெரிய சதுரத்தின் வடகிழக்கு மூலையில் வைத்தான். கண்ணை மூடி, கைகளைக் கூப்பிக்கொண்டு மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்தான்.

ஓம்-றீயும்-ஐயும்-சவ்வும்-ஸ்ரீயும்-கிலியும்-ஆக்ருஷ்ணாய-ஸ்வாஹா.

ஓம்-றீயும்-ஐயும்-சவ்வும்-ஸ்ரீயும்-கிலியும்-ஆக்ருஷ்ணாய-ஸ்வாஹா.

ஓம்-றீயும்-ஐயும்-சவ்வும்-ஸ்ரீயும்-கிலியும்-ஆக்ருஷ்ணாய-ஸ்வாஹா.

ஓம்-றீயும்-ஐயும்-சவ்வும்-ஸ்ரீயும்-கிலியும்-ஆக்ருஷ்ணாய-ஸ்வாஹா.

நான் பயந்துவிட்டேன். இது நிச்சயம் ஏதோ பேய் வரவழைக்கும் மந்திரமாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. அண்ணா அந்த ஒரு வரி மந்திரத்தை ஆயிரத்தெட்டு முறை மூச்சு விடாமல் உச்சரித்து நிறுத்தினான். அதுவரை நடுக்கமுடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். பேய் வந்து என்னை அடித்தாலும் பரவாயில்லை; அவனுக்கு ஒன்றும் ஆகிவிடக் கூடாதே என்று கவலைப்பட்டேன். இவன் மட்டும் ஏன் எல்லோரையும்போல இருக்கமாட்டேனென்கிறான்? யாருக்கும் தெரியாத எதையெதையோ எங்கிருந்தோ அறிந்துவைத்திருக்கிறான். அதெல்லாம் எப்படி முடிகிறது என்றுதான் தெரியவில்லை.

கண்ணைத் திறந்து என்னைப் பார்த்தவன் புன்னகையுடன் சொன்னான், ‘இது பேய் மந்திரம் இல்லை. ஆகர்ஷண மூல மந்திரம்.’

எனக்கு அடிவயிற்றில் பகீரென்று பந்து திரண்டு எழுந்தது. பேய் மந்திரம் என்று நான் நினைத்ததை அவன் எப்படி அறிந்தான்? ‘ஐயோ... நீ முழு மந்திரவாதியாவே ஆயிட்டேடா!’ என்று கத்திக்கொண்டே எழுந்து ஓட ஆரம்பித்தேன்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

10. பேயின் நாக்கு

 

 

இரவு பதினொன்றரை இருக்கும். என் கனவில் ஒரு பேய் வந்தது. அது ஆண் பேயா, பெண் பேயா என்று சரியாகத் தெரியவில்லை. தலை முதல் கால் வரை செக்கச்செவேலென்று சேவல் கழுத்தைத் துணியாக நெய்தாற்போன்ற அங்கியொன்றை அது அணிந்திருந்தது. எத்தனை முயன்றும் என்னால் அந்தப் பேயின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. அநேகமாக அது முதுகைக் காட்டிக்கொண்டு நின்று பேசியிருக்க வேண்டும். எத்தனை பிரம்மாண்டமான, அகன்ற பெரும் முதுகு! வெறும் முதுகைக் காட்டியே ஒருவனை அச்சமுற வைக்க முடியுமென்றால் அது ஒரு பேயால் மட்டுமே முடியும். எனக்கு உடம்பெல்லாம் நடுநடுங்க ஆரம்பித்துவிட்டது. அண்ணா தெரியாமல் ஏதோ மந்திரம் சொல்லி வரவழைத்துவிட்ட பேய். அதைத் திருப்பி அனுப்ப அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், அழைத்தவனை விட்டுவிட்டு அது ஏன் என்னைத் தேடி வந்திருக்கிறது? நல்ல உறக்கத்தில் இருந்த என்னை அது மெல்ல நெருங்கித் தொட்டது. பிறகு லேசாகத் தட்டி விழிப்புற வைத்தது. பார்த்ததும் நான் அலறத் தொடங்கும் முன் என் வாயைப் பொத்தியது. எனக்கு அதுவும் ஆச்சரியம். எனக்கு முதுகைக் காட்டி நின்றுகொண்டிருந்த பேய் எப்படித் தன் கைகளைப் பின்புறமாக நீட்டி என் வாயைச் சரியாகத் தொட்டுப் பொத்த முடிகிறது? அப்படியே என்னை எழுப்பி, கொல்லைப்புறம் வரும்படிச் சைகை செய்துவிட்டு அது முன்னால் போனது. கட்டுண்டவன்போல நான் அதன் பின்னால் எழுந்து சென்றேன். சத்தமில்லாமல் கதவைத் திறந்து கிணற்றடிக்குச் சென்ற பேய், அங்கே விளக்கைப் போட்டது. ஆனால் அப்போதும் என்னால் அதன் முதுகைத்தான் காண முடிந்ததே தவிர, முகத்தையல்ல.

‘என்ன வேண்டும்?’ என்று நான் குரல் நடுங்கக் கேட்டேன்.

‘நீதான் வேண்டும். எப்போது வருகிறாய்?’

‘எங்கே?’ மீண்டும் நடுக்கம்.

‘பேய்களின் உலகத்துக்கு. உன் சகோதரன் உன்னை அங்கே அழைத்துச் செல்லச் சொல்லி என்னிடம் சொல்லியிருக்கிறான்.’

‘ஐயோ எதற்கு?’

‘நீ தவறிப்போய் மனிதனாகப் பிறந்துவிட்டாய். பிறப்பிக்கும்போது செய்த பிழையைக் கடவுள் சரி செய்ய நினைக்கிறார்.’

‘என் அண்ணா அனுப்பியதாக அல்லவா நீ சொன்னாய்? அப்படியானால் அவன் கடவுளின் ஆளா? அவனை விடு. கடவுள் எப்படி ஒரு பேயுடன் சிநேகிதம் வைத்துக்கொண்டிருக்க முடியும்? அவர் சம்பந்தப்பட்ட ஒரு காரியத்தில் நீ ஈடுபடவே முடியாது.’

‘பேசிக்கொண்டிருக்க எனக்கு விருப்பமில்லை. நீயாக வந்தால் அழைத்துச் செல்வேன். அல்லது உன்னை எடுத்து விழுங்கிக்கொண்டு போய்விடுவேன்.’

‘ஐயோ! நான் வர முடியாது. எனக்குக் கடவுளே வேண்டாம். அவரிடம் போய்ச் சொல்லிவிடு‘ என்று சொல்லிவிட்டுத் தலைதெரிக்க ஓட ஆரம்பித்தேன். அந்தப் பேய் அசையாமல் நின்று நான் ஓடுவதைப் பார்த்துக்கொண்டே இருந்தது. ஒரு மைல் தூரத்துக்கு நான் ஓடியிருப்பேன் என்று நினைக்கிறேன். வீட்டிலிருந்து பாய்ந்து வெளியேறி, கிழக்கு மாட வீதியைக் கடந்து, உற்சவ மண்டபத்தைச் சுற்றிக்கொண்டு கடற்கரைச் சாலை வரை மூச்சு விடாமல் ஓடினேன். அச்சம் ஓய்ந்தபாடில்லை. ஒரே ஒரு முறை அங்கே சென்றபின் திரும்பிப் பார்த்துவிட்டு, மீண்டும் இடப்புறமாகத் திரும்பி கோவளத்தை நோக்கி ஓடத் தொடங்கினேன்.

என் இலக்கு கோவளம் தர்காதான். தர்காவின் வாசலில் எப்போதும் அமர்ந்திருக்கும் முஸ்லிம் பக்கிரியை அம்மாவுக்கு மட்டுமல்ல; எனக்கும் தெரியும். அம்மாவோடு அந்தப் பக்கம் போகும்போதெல்லாம் அவரை நான் பார்த்திருக்கிறேன். அந்த மனிதர் சிரிக்கமாட்டார். யாருடனும் பேசுவதும் கிடையாது. யாராவது வீட்டில் பிரச்னை, வியாதி என்று எதையாவது கொண்டுவந்து அவர்முன் போட்டால், சில நிமிடங்கள் கண்மூடி எதையோ முணுமுணுத்துக்கொண்டிருப்பார். அவரையறியாமல் அவரது இடக்கரம் மார்புவரை நீண்டிருக்கும் தாடியை உருவிவிட்டுக்கொண்டிருக்கும். மந்திரம் உருட்டி முடித்தபின் அவர் தனது குல்லாவை ஒருமுறை கழட்டி, வழுக்கைத் தலையைத் துடைத்துக்கொள்வார். மீண்டும் குல்லாவை அணிந்துகொண்டு அவரவர் தேவைக்கேற்ப நல்ல வார்த்தையோ, தாயத்தோ தருவார்.

எப்படியாவது அவரை நெருங்கி, அடைக்கலமாகிவிட்டால் அந்தப் பேயிடமிருந்து தப்பித்துவிடலாம் என்று நினைத்துத்தான் நான் கோவளத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தேன். ஆனால் நான் தர்கா சாலையில் திரும்பும் இடத்தில் எனக்கு எதிரே ஒரு சிவப்புச் சுவரைப்போல அந்தப் பேய் மறித்துக்கொண்டு நின்றிருந்தது. இப்போதும் அது தன் முகத்தைக் காட்டவில்லை. முதுகுதான் தெரிந்தது. கண்மண் தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தவன், எதன் மீது மோதுகிறோம் என்பதே தெரியாமல், பேயின் முதுகில் சென்று மோதிக்கொண்டு கீழே விழுந்தேன்.

இப்போது அது திரும்பியது. என்ன ஆச்சரியம்! அந்தப் பேயின் முகம் உள்ள பக்கமும் முதுகைப் போலவேதான் இருந்தது. அளவில் பெரிதான ஒரு பேட்மிண்டன் ராக்கெட்டை நிகர்த்த முதுகு. அங்கே கண் இல்லை. மூக்கோ காதுகளோ இல்லை. வாய் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு சிறிய துவாரம் மட்டும் இருந்தது. அத்தனை சிறிய துவாரம் வழியே அந்தப் பேய் எப்படி என்னை எடுத்து விழுங்கமுடியும்?

அப்போதுதான் எனக்குச் சிறியதொரு நம்பிக்கை வந்தது. கொஞ்சம் மூச்சு விட்டுக்கொண்டு, உரத்த குரலில் அதனை எச்சரிக்க ஆரம்பித்தேன். ‘போய்விடு. நீ விபரீதமாக ஏதோ திட்டத்தோடு வந்திருக்கிறாய். ஆனால் உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது.’

‘அப்படியா?’ என்றது பேய். அதன் வாயாக இருந்த துவாரத்துக்குள் இருந்து ஒரு பட்டு நூலைப்போல் ஏதோ ஒன்று நீண்டு வெளியே வந்தது. முதலில் அது ஒரு மண்புழு என்று நினைத்தேன். ஆனால் அதன் நீளம் நம்பமுடியாததாக இருந்தது. மெல்ல மெல்ல நீண்டுகொண்டே வந்த அது ஒரு பாம்பாக இருக்கலாம் என்று பிறகு தோன்றியது. ஆனால் ஒரு பாம்பைக் காட்டிலும் நீளமாக அது சுருண்டு சுருண்டு வெளிப்பட்டுக்கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் அதுதான் பேயின் நாக்கு என்பது எனக்குப் புரிந்துவிட்டது. என்ன செய்வது என்று நான் முடிவெடுக்கும்முன் அதன் நாக்கு மெல்ல என்னைச் சுற்றிச் சுழன்று அப்படியே இறுக்கிக் கட்டியது.

‘விடு. என்னை விட்டுடு’ என்று நான் அலறத் தொடங்கினேன். பேய் அதைப் பொருட்படுத்தவில்லை. என் எலும்புகள் நொறுங்குமளவுக்கு அதன் நாக்கு ஒரு பாசக் கயிறேபோல் என்னைக் கட்டி இறுக்கி அப்படியே தூக்கியது. உடனே அதன் நீளம் சுருங்க ஆரம்பித்தது. நாக்கு, பேயின் வாய்க்குள் சுருங்கி அடங்கத் தொடங்கியபோது நானும் மெல்ல மெல்ல அதனுள்ளே போக ஆரம்பித்தேன். முற்றிலும் உள்ளே போகவிருந்த கணத்தில் என் முழுப் பலத்தையும் திரட்டி, அம்மா என்று அடி வயிற்றிலிருந்து ஓலமிட்டுக் கண் விழித்தேன்.

அதற்குமேல் என்னால் படுத்திருக்க முடியவில்லை. பயத்தில் நான் சின்னாபின்னமாகியிருந்தேன். எழுந்து சென்று அடுக்களையில் விளக்கைப் போட்டு தண்ணீர் எடுத்துக் குடித்தேன். மீண்டும் விளக்கை அணைத்துவிட்டு வாசல் திண்ணைக்குப் போய் உட்கார்ந்துகொள்ளலாம் என்று முடிவு செய்து இருட்டில் யார் மீதும் கால் படாமல் ஜாக்கிரதையாக நடந்து தாழ்வாரத்தைக் கடந்து வாசல் கதவைத் திறந்தேன்.

அண்ணா அங்கே அமர்ந்திருந்தான். என்னைக் கண்டதும் புன்னகை செய்தான்.

‘டேய் நீ தூங்கலியா?’

‘இல்லை. உக்கார்’ என்று சொன்னான்.

‘எனக்கு ஒரு பயங்கரமான கனவுடா. அம்மாவை எழுப்பியிருப்பேன். என்னமோ வேணாம்னு தோணிடுத்து. பாரு, இன்னும் என் கையெல்லாம் உதறுது’ என்று அவன்முன் என் கைகளை நீட்டினேன்.

‘என்ன கனவு?’

‘எல்லாம் பேய்க் கனவுதான். நீ என்னமோ பண்ணல்ல? பேய் மந்திரம் சொன்னியே...’

அவன் சட்டென்று என்னை நிறுத்தினான். ‘அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. அது மூலமந்திரம். ஆகர்ஷண மந்திரம். நீ மட்டும் கடைசிவரை இருந்து பிரசாதம் வாங்கி சாப்ட்டிருந்தா, ஒனக்கு என்னென்னமோ நல்லது நடந்திருக்கும்’ என்று சொன்னான்.

‘பிரசாதமா!‘

‘ஆமா. ஒன்ன எடுத்துண்டுவரச் சொன்னனே சர்க்கரை! அதுதான் பூஜைக்கப்பறம் பிரசாதமா மாறும்.’

 

என்னால் அவன் சொன்ன எதையும் ஏற்கவும் முடியவில்லை; நம்பவும் முடியவில்லை. ஆனால் பிடித்திருந்தது. என் கனவில் அன்று வந்த பேய் மிக நிச்சயமாக அன்று மாலை அவன் நிகழ்த்திய பூஜையின் விளைவுதான். நியாயமாக நான் அவனைக் கடிந்துகொண்டிருக்கலாம். அம்மாவிடம் அவன் செய்யும் களேபரங்களைப் பற்றி எடுத்துச்சொல்லி கண்டிக்கச் சொல்லியிருக்கலாம். கேசவன் மாமாவிடம் சொல்லிவிட்டால் அதற்குமேல் பிரச்னையே இராது. மாமா இருபத்து நான்கு மணி நேரமும் அவனைக் கண்காணித்து, மிரட்டி அதட்டி ஒரு வழிக்குக் கொண்டு வந்திருப்பார்.

ஏன் நான் அதைச் செய்யாமல் போனேன்? என்னால் உணர இயலாத ஒரு சாகச முயற்சியை அவன் மேற்கொண்டிருப்பதாக என் உள்ளுணர்வு சொன்னது. அது சார்ந்த ஆர்வப் படபடப்பும் நிகரான அச்சமும் எனக்கு இருந்தது. அந்தந்தக் கணங்களில் அவன் சொல்கிற அனைத்துமே இந்த இரு உணர்வுகளையும் எனக்கு அளித்தாலும் பிற்காலத்தில் இதெல்லாம் பெரும் விபரீதமாக உருக்கொள்ளக்கூடிய சாத்தியங்கள் உள்ளவை என்றெல்லாம் எனக்குத் தோன்றவேயில்லை என்றுதான் இப்போது தோன்றுகிறது. அதனால்தான், அவன் எனக்கு நிகழ்த்திக் காட்டிய அனைத்தையுமே வெறும் கதையும் காட்சியுமாக உள்வாங்கியிருக்கிறேன்.

அன்றைக்கு அவனிடம் கேட்டேன், ‘என்னமோ அற்புதம்னு சொன்னியே? அது என்ன?’

‘நீதான் ஓடிப்போயிட்டியே?’

‘பரவால்ல. இப்ப சொல்லு. என்ன அற்புதம் நடந்தது?’ என்று விடாமல் கேட்டேன்.

அவன் என்னை உற்றுப் பார்த்தான். ‘நீ நம்பமாட்டே. நேர்ல பார்த்திருக்கணும்.’

‘இல்லை. நம்பறேன், சொல்லு’ என்று மீண்டும் சொன்னேன்.

‘நான் அரையடி உசரத்துல காத்துல மிதந்தேன்’ என்று அண்ணா சொன்னான்.

‘நிஜமாவா!’

‘சத்தியம். அது நடந்தது. நீ பாத்திருக்கலாம். ஆனா ஓடிப்போயிட்டே.’

‘இல்ல. இதெல்லாம் நடக்கவே நடக்காது’ என்று நான் அடித்துச் சொன்னேன்.

‘நடந்தது விமல்! இன்னொரு தடவை எப்ப நடக்கும்னு எனக்குத் தெரியலை. ஆனா ரொம்ப நாளா நான் பண்ண பயிற்சி பலன் குடுத்துடுத்து’ என்று சொன்னான்.

எனக்கு அதற்குமேல் பேச்சே எழவில்லை. எத்தனை பெரிய பைத்தியக்காரத்தனத்தைச் செய்துவிட்டேன்! அண்ணா எனக்குக் காட்ட விரும்பிய அற்புதம், உண்மையில் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடியதல்ல. சொல்லப்போனால் அவனுக்கே அது ஒரு அற்புதம்தான். பல காலமாக அதனை ஓர் இலக்காக வைத்து அவன் நானறியாத ஏதேதோ பயிற்சிகளைச் செய்துபார்த்து வந்திருக்கிறான். நேற்றைக்கு மாலை எல்லாம் திரண்டு வரவிருந்த நேரம். என் அறியாமையால் நான் ஒரு பெரும் அனுபவத்தைத் தவறவிட்டிருக்கிறேன்!

என்னையறியாமல் என் கண்களில் இருந்து தரதரவென்று நீர் வழிந்தோடியது. நான் அண்ணாவின் கையைப் பிடித்துக்கொண்டு, ‘இன்னொரு தடவை பண்ணிக்காட்டுடா!’ என்று கெஞ்ச ஆரம்பித்தேன்.

‘முடியுமான்னு தெரியல. பாப்போம்‘ என்று சொன்னான். ‘ஆனா இதையெல்லாம் நீ யார்ட்டயும் சொல்லக் கூடாது. யாருக்கும் இதெல்லாம் புரியாது.’

எனக்கும்தான் புரியவில்லை. ஆனாலும் என்னை அவன் நம்புகிறான்! அது எனக்கு அவன் அளித்த கௌரவமாக அப்போது தோன்றியது. அவன் மீது மிகப்பெரிய மரியாதை உருவானது. அண்ணா படுபயங்கர சக்திகள் மிக்க மந்திரவாதி மாண்ட்ரேகைக் காட்டிலும் சிறந்ததொரு ஆகிருதியாக விரைவில் உலகுக்கே தெரியவருவான் என்று நினைத்தேன். இதை அவனிடம் சொன்னபோது அவன் முகம் சுளித்தான்.

‘உனக்கும் புரியல இல்லே? நான் மந்திரவாதி இல்லை விமல். அப்படி ஆகணும்னு எனக்கு இஷ்டமும் இல்லை.’

‘பின்னே?’

‘இது வேற. ஒனக்குப் புரியணும்னா நீ கேள்வியே இல்லாம என்னைப் பின்தொடர்ந்து வந்துண்டே இருக்கணும்’ என்று சொன்னான்.

நான் தூங்கப் போய்விட்டேன். பொழுது விடியட்டும் என்று நினைத்தேன். பல்லைத் துலக்கிவிட்டு, காப்பி குடித்து முடித்த கணம் முதல் அவன் சொன்னபடி, கேள்வியே கேட்காமல் அவனது சீடனாகிவிடலாம் என்று முடிவு செய்துகொண்டேன்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

11. கிருஷ்ணார்ப்பணம்

 

 

அன்றைக்குக் கிருஷ்ண ஜெயந்தி. மற்றப் பண்டிகைகள் எப்படி இருந்தாலும் எங்கள் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக இருக்கும். காலை எட்டு மணிக்கு மிஷினுக்குப் போய்விட்டு வா என்று சொல்லி, ஒரு பையில் அரிசி, ஒரு பையில் வறுத்த உளுத்தம்பருப்பைக் கொடுத்து அம்மா எங்களை அனுப்பிவைப்பதில் அது ஆரம்பிக்கும். அந்நாள்களில் திருவிடந்தையில் மாவு மிஷின் கிடையாது. கோவளத்துக்கோ, கேளம்பாக்கத்துக்கோதான் போக வேண்டும். சைக்கிள் ஓட்டும் ஆசையில் வினய் தானே போய் வருவதாகச் சொல்லிவிட்டு, அண்ணாவின் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிப் போவான். ‘டேய், டேய், ஒரு நிமிஷம் இருடா..’ என்று கத்தியபடியே இன்னொரு சிறு பிளாஸ்டிக் கவரில் நாலைந்து பிடி ரேஷன் அரிசியைப் போட்டு எடுத்துக்கொண்டு அம்மா வெளியே ஓடி வருவாள். இதுவும் வருடம் தவறாமல் நடக்கும். ‘இத முதல்ல குடுத்து அரைச்சிக் குடுக்க சொல்லி தனியா வாங்கிண்டுடு. அதுக்கப்பறம் அரிசியைப் போடச் சொல்லு’ என்பாள். முன்னதாக அரைத்துச் சென்றவர்கள் எதைப் போட்டு அரைத்திருப்பார்களோ என்ற சந்தேகம். அது கடலை மாவாகவோ, மஞ்சள் தூளாகவோ, கேழ்வரகு மாவாகவோ இருந்தால் அரிசி மாவு நன்றாக வராது. நிறம் மாறிவிடும். மணமும் ருசியும்கூட மாறிவிடும். நான்கு பிள்ளைகளைப் பெற்றவளுக்குப் பண்டிகை என்பது பட்சணங்களுக்கான தினம். கடவுள் ஒரு சாக்கு. பக்தி ஒரு சாக்கு. எப்போதுமா விதவிதமாக சமைத்துக்கொண்டும் தின்றுகொண்டும் இருக்கிறோம்? எப்போதோ ஒரு நாள். வருடத்துக்கு ஒரு முறை. அதில் அம்மாவுக்கு எந்தக் குறையும் இருந்துவிடக் கூடாது.

அன்று முழுதும் அம்மா பச்சைத் தண்ணீர் தவிர எதுவும் சாப்பிடமாட்டாள். சமையல் மேடையில் இருக்கும் அடுப்பு தரைக்கு வந்துவிடும். ஒரு மணைப் பலகையைப் போட்டு உட்கார்ந்துகொண்டு, அடுப்பில் வாணலியை ஏற்றி எண்ணெய்யைச் சுடவைக்க ஆரம்பித்தால், பிற்பகல் மூன்றரை நான்கு மணி வரை வேலை ஓயவே ஓயாது. முறுக்கு, தட்டை, தேன் குழல், அதிரசம், அப்பம், சுய்யம், கொழுக்கட்டையில் வெல்லக் கொழுக்கட்டை ஒரு ரகம், உப்புக் கொழுக்கட்டை ஒரு ரகம் என்று ஒன்று மாற்றி ஒன்று செய்துகொண்டே இருப்பாள். இடையிடையே பசிக்கிறது என்று யாராவது வந்தால், ஐந்து நிமிடம் அடுப்பை அணைத்துவிட்டு கேட்பவர்களுக்கு மட்டும் சாப்பிட ஏதாவது கொடுப்பாள். அது பழங்களாக இருக்கும். காப்பியாக இருக்கும். ஆனால் கண்டிப்பாக அன்றைக்குப் பகல் முழுதும் வீட்டில் சமையல் கிடையாது. அதில் மாற்றம் இராது.

எங்கள் நான்கு பேரில் எனக்குத்தான் தின்பண்டங்கள் மீது சபலம். கண்ணெதிரே ஒரு தேன்குழல் உருவாகிப் பூத்து, எண்ணெய் மினுமினுப்புடன் தாம்பாளத்தில் வந்து இறங்கும்போது நாக்கில் நீரூரும். ஆனால் அம்மா தொட விடமாட்டாள். அடுக்கடுக்காகப் பண்டங்களைச் சுட்டுச் சுட்டு இறக்குவாளே தவிர, அவளும் ஒரு விள்ளலைக்கூட வாயில் போடமாட்டாள். அம்மா நகர்ந்து செல்லும் சில விநாடிகளில் ஒரு துண்டு தட்டையையாவது எடுத்து மென்றுவிட ஒவ்வொரு வருடமும் முயற்சி செய்வேன். என்றுமே அது நிறைவேறியதில்லை. அம்மாவுக்கு அடுப்பில் கண் இருந்திருக்கிறது. அல்லது அவள் பட்சணங்களுக்குள் தன்னை ஒளித்து வைத்துவிட்டுத்தான் கொல்லைப் பக்கம் எழுந்து போவாள். நான் அடுக்களைக்குள் நுழைந்தாலே, எங்கிருந்தோ அவளது குரல் வந்துவிடும். ‘எதையும் தொடக் கூடாது.’

‘ராத்திரி எப்படி எல்லாத்தையும் சாப்பிடமுடியும்? இப்ப கொஞ்சம் குடுத்தா என்ன?’ என்று நான் கேசவன் மாமாவை உதவிக்கு அழைப்பேன்.

‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. உங்கம்மா கொன்னுடுவா’ என்று சொல்லிவிட்டு மாமா நகர்ந்துவிடுவார்.

வினய்யும் வினோத்தும் அன்றைய பகல் முழுதும் வீட்டுக்குள் காலடிகூட எடுத்துவைக்கமாட்டார்கள். எத்தனை முயற்சி செய்தாலும் எதுவும் கிடைக்காது என்பது தெரியுமாதலால், நாளெல்லாம் வீதியில் அலைந்து திரிந்துவிட்டு இருட்டும் நேரம்தான் வீடு திரும்புவார்கள். அண்ணா, கேட்கவே வேண்டாம். எடுத்துவந்து எதிரே வைத்தாலும் சாப்பிடலாமா வேண்டாமா என்று பத்து நிமிடங்கள் யோசித்துவிட்டு முடிவு சொல்லக்கூடியவன் அவன். பிரச்னையெல்லாம் எனக்குத்தான்.

அன்றைக்கு நடந்த சம்பவம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அது எனக்கு மறக்கமுடியாத கிருஷ்ண ஜெயந்தி. அம்மா முள் முறுக்கு, தேன்குழலை மட்டும் முடித்துவிட்டு, அடுத்த சுற்றுக்கு ஆயத்தம் ஆவதற்கு முன்னால் எழுந்து வாசலுக்குச் சென்றிருந்தாள். பக்கத்து வீட்டு மாமி என்ன காரணத்துக்காகவோ கூப்பிட்டிருந்தாள். அதுதான் சந்தர்ப்பம் என்று எனக்குத் தோன்றியது. ஓசைப்படாமல் அடுக்களைக்குள் நுழைந்து ஒரு முள் முறுக்கை மட்டும் எடுத்து நிஜார் பையில் போட்டுக்கொண்டு கிணற்றடிக்குப் போய் உட்கார்ந்துகொண்டேன். உதவிக்கு ஒரு பாடப் புத்தகம். படிக்கிற பாவனையில் சிறு சிறு துண்டுகளாக உடைத்து உடைத்துத் தின்னத் தொடங்கியிருந்தேன்.

அம்மா, பக்கத்து வீட்டு மாமியிடம் பேசி முடித்துவிட்டு மீண்டும் அடுக்களைக்கு வந்து, விட்ட இடத்தில் இருந்து வேலையைத் தொடங்கியும் அரை மணி நேரத்துக்குமேல் ஆகிவிட்டது. நான் முழு முறுக்கையும் திருப்தியாகச் சாப்பிட்டுவிட்டு, அதற்குப் பின்பும் படித்துக்கொண்டே இருந்தேன். அம்மா கண்டுபிடிக்கவில்லை என்பது எனக்கு மிகுந்த சந்தோஷம் தந்தது.

மாலை அப்பா வீடு திரும்பி, கிணற்றடியில் குளித்து முழுகி திருமண் இட்டுக்கொண்டார். பஞ்சக்கச்சம் உடுத்தி பூஜையில் அமர்ந்து பாராயணத்தை ஆரம்பித்தார். நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் நாநூறு பாசுரங்கள் சேவிப்பது அவர் வழக்கம். பெரியாழ்வாரில் நூறு. ஆண்டாள் முழுமையாக. நம்மாழ்வார் கொஞ்சம். மற்றவர்களில் ஆளுக்குக் கொஞ்சம். மொத்தமாகச் சேவித்து முடித்த பிறகு அனைவரையும் கூப்பிட்டார். அம்மா, செய்த பட்சணங்கள் அனைத்தையும் எடுத்துவந்து பூஜையறையில் அமுது செய்விக்க வைத்தாள். அப்பா அனைத்து பட்சணங்களின் மீதும் ஒரு துளசி இலையைக் கிள்ளிப் போட்டுவிட்டு நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நூறு தடாய் வெண்ணெய் வைத்த பாசுரத்தைச் சொல்லி முடித்து, கற்பூர ஆரத்தி ஆன பிற்பாடு எந்தத் தடையும் இல்லை, எடுத்துச் சாப்பிடுவதற்கு. பட்சணங்கள் ஒரு பக்கம் என்றால் வடை, அக்கார அடிசிலுடன் விருந்தும் இருக்கும். முழுநாளும் உண்ணாதிருந்துவிட்டு ஒரே மொத்தமாகத் தின்று தீர்க்க வருடத்துக்கு ஒரு தினம்.

அன்றைக்கு அம்மா, கிருஷ்ண விக்ரகத்தின் முன் அத்தனைப் பலகாரங்களையும் கொண்டு வைத்ததும் அண்ணாவுக்கு என்ன தோன்றியதோ. சட்டென்று குனிந்து ஒரு அப்பத்தை எடுத்துக் கடித்துவிட்டான்.

நாங்கள் பயந்தே போய்விட்டோம். மிக நிச்சயமாக ஒரு பூகம்பம் வெடித்துவிடும் என்று எனக்குத் தோன்றியது. அப்பா துர்வாசரைப்போல உக்கிரமாக எழுந்து நின்றார். கேசவன் மாமா அவசர அவசரமாக அண்ணாவைப் பிடித்து இழுத்து, அவன் கையில் இருந்த அப்பத்தைப் பிடுங்கிப்போட்டு, ‘அறிவில்லே ஒனக்கு? ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்காதோ? இன்னும் ரெண்டு நிமிஷத்துல முடிஞ்சிடப்போறது. அதுக்குள்ள என்ன?’ என்று கேட்டார்.

நான் அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். நைவேத்தியத்துக்கு முன்பு ஒரு விள்ளல்கூட உள்ளே போய்விடக் கூடாது என்ற அவளது பல்லாண்டுக் கால விரதத்தை ஒரே ஒரு அப்பக் கடியில் முறியடித்திருக்கிறான் அண்ணா. என்னைப்போல் திருட்டுத்தனமாக அவன் அதைச் செய்திருந்தால் எந்தப் பிரச்னையும் வந்திருக்கப் போவதில்லை. எதற்காக இப்படி எல்லோரும் கூடியிருக்கும்போது செய்தான்? அதுவும் சில விநாடிகளில் அம்மாவே எடுத்துக் கொடுத்துவிடவிருந்த சூழ்நிலையில்?

அப்பா அவனைக் கண்டபடி திட்ட ஆரம்பித்தார். இரண்டு நிமிடங்கள் மூச்சு விடாமல் திட்டித் தீர்த்துவிட்டு, ‘தரித்திரம். வந்து வாய்ச்சுது பாரு நமக்குன்னு’ என்று சொல்லிவிட்டு ஓய்ந்தார்.

‘விட்டுடுங்கோ, பரவால்ல’ என்று அம்மா சொன்னாள்.

‘என்ன பரவால்ல? அந்த அப்பத்த நகர்த்தி வை. அது வேண்டாம் இன்னிக்கு’

‘பரவால்ல. அம்சி பண்ணிடுங்கோ’

‘அதான் எடுத்துத் தின்னுட்டானே. அப்பறம் எதுக்கு அது பெருமாளுக்கு?’

அம்மா, அண்ணாவை ஒரு பார்வை பார்த்தாள். சற்று சிரித்தாள். அவனும் சிரித்தான். ‘நான் ஒண்ணும் சொல்லமாட்டேண்டா. நீ சாப்ட்டா சந்தோஷம்தான். பெருமாள் ஒண்ணும் நினைச்சிக்கமாட்டார்’ என்று சொன்னாள்.

 

இது எனக்கு வியப்பாக இருந்தது. சற்று துணிச்சல் உண்டாகி, ‘நானும் ஒரு தப்பு பண்ணேம்மா’ என்று சொன்னேன்.

‘என்ன?’

‘மத்தியானம் நீ ரேகா மாமியோட பேசிண்டிருந்தப்போ ஒரு முள்ளு முறுக்க எடுத்துண்டு போயிட்டேன். ரொம்ப ஆசையா இருந்ததும்மா’ என்று சொன்னேன்.

அப்பா, மாமா, அம்மா மூவருமே சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. பூஜை முடித்து நைவேத்யமாகாமல் பெருமாள் காத்துக்கொண்டிருப்பதை யார் அவர்களுக்கு எடுத்துச் சொல்வது? அந்தப் பேரமைதி மிகவும் குரூரமாக இருந்தது. வினய் என்னை யாருக்கும் தெரியாமல் இடுப்பில் கிள்ளினான். சனியனே என்று சொன்னான்.

அம்மா என்ன நினைத்தாளோ. சட்டென்று குனிந்து முள் முறுக்கு இருந்த பாத்திரத்தை மட்டும் உள்ளே எடுத்துச் சென்று வைத்துவிட்டுத் திரும்பி வந்து, ‘நடக்கட்டும்’ என்று சொன்னாள்.

எனக்கு அது தாங்கமுடியாத அவமானமாக இருந்தது. ‘விஜய் சாப்ட்டது மட்டும் தப்பில்லியா?’ என்று திரும்பத் திரும்பப் பொறுமிக்கொண்டிருந்தேன். அம்மாவோ அப்பாவோ அதற்கு பதில் சொல்லவேயில்லை. நல்ல நாளும் அதுவுமாகக் குழந்தைகளைக் கடிந்துகொண்டு பண்டிகை சந்தோஷத்தைக் கெடுக்க வேண்டாம் என்று அப்பா நினைத்திருப்பார். அன்றிரவு நாங்கள் அமைதியாகச் சாப்பிட்டோம். படுத்துவிட்டோம்.

அம்மா அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு ஒரு தம்ளர் தண்ணீர் மட்டும் குடித்துவிட்டுப் படுக்க வந்தபோது, ‘ஐயோ நீ ஏன் சாப்பிடலை?’ என்று அப்பா கேட்டார்.

‘குழந்தைகள் தெரியாம பண்ணாலும் தப்பு தப்புதான். இது பிராயச்சித்தம்’ என்று அம்மா சொல்லிவிட்டாள். எனக்கு மிகவும் சங்கடமாகிப்போனது. ‘நீ சாப்பிடும்மா, சாப்பிடும்மா’ என்று திரும்பத் திரும்ப அவளிடம் கெஞ்சிப் பார்த்தேன். முடியவே முடியாது என்று மறுத்துவிட்டாள். ஏதோ ஒரு கணத்தில் எனக்குத் தோன்றியது. வம்புக்காகவே அம்மா நான் எடுத்துத் தின்ற பண்டத்தை மட்டும் நைவேத்தியத்துக்கு வைக்காமல் உள்ளே எடுத்துச் சென்றுவிட்டு, அண்ணா எடுத்துச் சாப்பிட்டதை அனுமதித்ததற்குத்தான் அது பிராயச்சித்தம்.

சரி, பட்டினி கிடக்கட்டும் என்று நானும் போய்ப் படுத்துவிட்டேன்.

அன்று நள்ளிரவு அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தபோது அண்ணா ஓசைப்படாமல் என்னை மட்டும் எழுப்பினான்.

‘என்னடா?’ என்று அடிக்குரலில் கேட்டேன்.

‘எழுந்து வா’ என்று சொன்னான்.

நாங்கள் இருவரும் பூஜையறைக்கு வந்தோம். அம்மா வீடெங்கும் முதுகு உடைய வரைந்திருந்த கிருஷ்ணர் பாதங்கள் அங்கேதான் வந்து பூர்த்தியடைந்திருந்தன. ஒரு சிறிய பெஞ்சைக் கவிழ்த்துப்போட்டு நாலாபுறமும் தோரணம் கட்டி, பூமாலைகள் தொங்கவிட்டு அப்பா ஒரு தாற்காலிக சன்னிதியை உருவாக்கி அதில் கிருஷ்ணனை ஏளப்பண்ணியிருந்தார். துளசியும் ரோஜாவும் சாமந்தியும் மல்லியும் உதிரிகளாக அந்த பெஞ்சு சன்னிதிக்குள் குவிந்துகிடக்க, அண்ணாவிடம் இருந்து மாமா பிடுங்கிப்போட்ட அப்பத்துண்டு ஒரு மூலையில் அப்படியே கிடந்தது.

அண்ணா அந்த அறையில் விளக்கைப் போடவில்லை. ஆனால் அப்போதும் எரிந்துகொண்டிருந்த குத்து விளக்குகளின் ஒளியில் எல்லாமே பளிச்சென்று தெரிந்தன.

‘எதுக்குடா கூப்ட்ட? என்ன பண்ணப் போற?’ என்று கேட்டேன்.

‘அந்த அப்பத்த எடுத்துண்டு வா’ என்று அண்ணா சொன்னான்.

நான் கீழே கிடந்த அப்பத்துண்டை எடுத்து வந்து அவனிடம் நீட்டி, ‘இருந்தாலும் நீ பண்ணது தப்புடா. அம்மாக்கு தெரியாம சாப்ட்டிருக்கலாம். இப்படி எல்லார் எதிர்லயும் அப்படி செஞ்சிருக்க வேண்டாம்’ என்று சொன்னேன்.

அவன் பதில் சொல்லவில்லை. அவன் ஏற்கெனவே கடித்தது போக மிச்சமிருந்த அந்த அப்பத்தை இரண்டாகக் கிள்ளி எடுத்தான். அப்பத்துக்குள் இருந்து ஒரு சிறிய - மிகச் சிறிய கிருஷ்ணர் விக்கிரகம் கீழே விழுந்தது. பித்தளைக் கிருஷ்ணர்.

‘மாமா அப்படி கலாட்டா பண்ணாம இருந்திருந்தார்னா அப்பவே இதை எடுத்து அப்பாகிட்ட குடுத்திருப்பேன். இனிமே குடுக்கறதுல உபயோகமில்லே. நீ யார்ட்டயும் சொல்ல வேண்டாம்’ என்று சொன்னான்.

நான் நடுங்கிக்கொண்டிருந்தேன். அண்ணாவா! என் அண்ணாவா இதனைச் செய்தான்! அவனால் இதெல்லாமும் முடியுமா! அன்றைக்கு வீட்டுக்கு வந்த சட்டை போட்ட சித்தர், வாழைப் பழத்தில் இருந்து பிள்ளையார் எடுத்ததைப் போன்றதொரு காரியம். ஆனால் அண்ணா அவரிடம் கேட்டானே. உங்களால் ஒரு பெருமாள் விக்கிரகத்தை எடுத்துத்தர முடியுமா என்று? பதிலே சொல்லாமல் அவர் போனாரே.

நான் சட்டென்று அவனிடம் கேட்டேன், ‘உன்னால ஒரு பிள்ளையார் சிலையை எடுத்துத்தர முடியுமா?’

அவன் சிறிதும் யோசிக்கவில்லை. விண்ட அப்பத்தை மேலும் இரு துண்டுகளாக்கினான். இப்போது அதே அளவில் ஒரு பிள்ளையார் சிலை கீழே விழுந்தது.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

12. போனவன்

 

 

என்னால் அதை அன்றைக்கு நம்ப முடியவில்லை. இன்றுவரை அண்ணாவைப் பற்றி நினைக்கும்போதெல்லாம், எனக்கு அப்பத்தில் இருந்து விக்கிரகங்கள் விழுந்த காட்சி நினைவில் வராதிருப்பதில்லை. அவன் சில சித்து வேலைகள் அறிந்துவைத்திருந்தான் என்று பின்னாளில் தெரிந்துகொண்டேன். ஆனால் எப்போதும் புரியாத விஷயம், யாரிடமிருந்து அவன் அதையெல்லாம் கற்றான் என்பதுதான். அடிக்கடி சவுக்குக் காட்டுக்கு அவன் தனியாகச் சென்று சில பயிற்சிகள் செய்வது, வீட்டிலேயே இரவுப் பொழுதுகளில் எழுந்து சென்று பின்புறம் அமர்ந்து தியானம் செய்வது, ரகசியமாகச் சில புத்தகங்களைப் படிப்பது, சுவடி வைத்திருப்பது இதெல்லாம் என் சிறு வயதுகளில் அவன் மீதான ஆர்வம் தூண்டக்கூடிய அம்சங்களாக விளங்கின. ஒரு துப்பறியும் கதைப் புத்தகம் அளிக்கக்கூடிய ஆர்வம். ஒரு சாகசக் காட்சியைக் கண்டுகளிக்கிற ஆர்வம். குளத்துக்கு அடியில் முனிவர்களைக் காண்பதாக அவன் சொல்லும்போதெல்லாம், மனத்துக்குள் அதனை ஒரு காட்சியாக விரித்துவைத்து முனிவர்கள் நிறைந்த சபையொன்றில் அண்ணா அவர்களோடு உரையாடிக்கொண்டிருப்பதுபோல எண்ணிப்பார்ப்பது எனக்கு அப்போது பிடித்திருந்தது. பிடிமானம் ஏதுமின்றி, பாறையின் மீது அவன் சிரசாசனம் செய்தபோது, ஒரு சர்க்கஸ் காட்சியைக் காணுகிற உணர்வுதான் அன்றைக்கு எனக்கு இருந்திருக்க வேண்டும். அவனோடு இருந்த தருணங்களை சிறந்த பொழுதுபோக்கு அனுபவங்களாகவே நான் உள்வாங்கியிருக்கிறேன் என்பது எனக்குப் பிறகுதான் புரிந்தது. சரியாகச் சொல்லுவதென்றால், அப்பத்தில் இருந்து விக்கிரகங்கள் விழுந்தபோது.

அன்று எனக்கு மிகவும் பயமாகிவிட்டது. தானொரு மந்திரவாதி இல்லை என்றுதான் அவன் சொன்னான். ‘அப்ப நீ சித்தரா?’ என்று கேட்டதற்கு, ‘அதெல்லாம் ரொம்பப் பெரிய வார்த்தை. நான் அதெல்லாம் இல்லை’ என்று பதில் சொன்னான். ‘அப்ப நீ யாரு?’ என்று கதறியேவிட்டேன்.

‘அதுதான் கேள்வி. கண்டுபிடிச்சிட்டு சொல்றேன்’ என்று சொன்னான். எனக்கு அது முற்றிலும் புரியவேயில்லை.

‘எனக்கு அதெல்லாம் வேண்டாம். அப்பத்துலேருந்து எப்படி விக்கிரகம் எடுத்தே? அதை மட்டும் சொல்லு’ என்று விடாப்பிடியாகக் கேட்டேன். அவன் புன்னகை செய்தான்.

‘நீ சொல்லாம விடமாட்டேண்டா. இப்ப நீ சொல்லலைன்னா நிச்சயமா நான் இதை அம்மாகிட்ட சொல்லிடுவேன்’ என்றும் சொன்னேன்.

‘விமல், உன்னை ஒண்ணு கேக்கறேன். பதில் சொல்லு. அப்பாக்கு என்ன சம்பளம்?’

‘தெரியாதே.’

‘சரி, நான் சொல்றேன். ரெண்டாயிரத்து முந்நூறு.’

‘சரி.’

‘மாசக் கடைசி ஆனா செலவுக்குப் பணமில்லேன்னு எல்லா மாசமும் புலம்பறாரா இல்லியா?’

‘ஆமா.’

‘அப்ப ஆத்துல என்ன நடக்கறது?’

‘என்ன நடக்கறது?’

‘திட்டிண்டோ, முணுமுணுத்துண்டோ அம்மா உள்ளேருந்து பணம் எடுத்துண்டு வந்து குடுக்கறா. அப்பப்ப பிரச்னை தீந்துபோயிடறது. இல்லியா?’

‘ஆமா.’

‘அப்பா மட்டும் சம்பாதிக்கற இடத்துல அம்மாகிட்ட எப்படி ரகசியமா பணம் இருக்கு? அதுவும் அப்பா சம்பாத்தியம்தானே?’

‘ஆமா.’

‘ஆனா அம்மா தன்கிட்ட குடுக்கற காசுல கொஞ்சத்த எடுத்து தனியா டப்பால போட்டு வெக்கறா. சுத்தமா பணம் தீர்ந்துபோகும்போது எடுத்துத் தரா.’

‘ஆமா. சிறுசேமிப்பு. ஸ்கூல்ல சொல்லிக் குடுத்திருக்கா.’

‘இது அந்த மாதிரிதான். விக்ரகமோ, வேற ஒண்ணோ. எடுத்து ஒரு இடத்துல போட்டு வெச்சிடறது. தேவைப்படறப்ப அதை இன்னொரு இடத்துலேருந்து எடுத்துக் காட்றது.’

‘இல்லே. இது அது இல்லே. அம்மா அடுக்களைல உளுத்தம்பருப்பு டப்பாலதான் பணம் போட்டு வெக்கறா. அங்க போய்தான் எடுத்துண்டு வந்து குடுக்கறா. அடுக்களைல வெச்ச பணத்த அப்பா சட்டைப்பைலேருந்து எடுத்துத் தந்தாத்தான் நீ சொல்றது பொருந்தும்.’

அவன் சிரித்தான். ‘சரியாத்தான் சொல்றே. அடுக்களைல வெச்சத, அடுக்களைலேருந்தே எடுக்கறது எல்லாரும் பண்றது. அதை அப்பா சட்டைப் பையிலேருந்து எடுக்கறதுதான் வித்தை. அதைத்தான் நான் கத்துக்கறேன்.’

‘வித்தைன்னா மேஜிக்தானே?’

உண்மையில் எனக்குப் புரியவைக்க வேண்டும் என்றெல்லாம் அவன் அன்று விரும்பியதாகத் தெரியவில்லை. ஆனால் நான் விடாமல் நச்சரித்துக்கொண்டே இருந்தேன். ஏனென்றால் அந்த விக்கிரகம் விழுந்த கணத்தில் நான் அடைந்த அதிர்ச்சியும் வியப்பும் ஒரு முழு வாழ்நாளுக்குமானது. யாரோ ஒரு சித்தர் அதைச் செய்தபோது எனக்கு வியப்பு மட்டும்தான் இருந்தது. பெரிய மகான் என்று நினைத்துக்கொண்டேன். அதையே என் அண்ணா செய்தபோது இவன் ஏதோ தந்திரம் செய்கிறான் என்று தோன்றியது. ஆனால் தந்திரமே என்றாலும் ஒரு கிருஷ்ணர் விக்கிரகம் விழுந்தது சரி. எப்படி நான் கேட்டதும் ஒரு பிள்ளையார் விக்கிரகமும் விழுந்தது?

அவன் மீண்டும் சிரித்தான். ‘கிருஷ்ணர் விக்கிரகத்த நான் காட்டினதும் நீ அடுத்தபடியா அதைத்தான் கேப்பேன்னு எனக்குத் தெரியும். ஏன்னா அன்னிக்கு சித்தர் வந்தப்போ நான் அவரை மடக்கினத நீ கவனிச்சிண்டிருந்தே.’

‘ஆமா, ஆமா’ என்றேன். ‘அவரால ஏன் அன்னிக்கு பெருமாள் விக்கிரகம் எடுக்க முடியலை?’

‘ஏன்னா அவர் சேத்து வெச்ச விக்கிரகங்கள்ல பெருமாள் விக்கிரகம் இல்லை. அன்னிக்கு அவரால பிள்ளையார் விக்கிரகம் மட்டும்தான் முடிஞ்சது. அன்னிக்கு சாயந்திரமே அவர் பெருமாள் விக்கிரகம், லஷ்மி விக்ரகம், சிவலிங்கம்னு நாலஞ்சு விதமா வாங்கி ஸ்டாக் வெச்சிருப்பார்.’

‘ஐயோ எனக்குப் புரியவேயில்லைடா’ என்று சொன்னேன்.

மேற்கொண்டு அவன் விளக்கம் சொல்லவில்லை. ஆனால், ‘புரிய வெப்பேன். கொஞ்ச நாளாகும் அதுக்கு. ஆனா அதுவரைக்கும் ஆத்துல யார்ட்டயும் நீ இதையெல்லாம் சொல்லக் கூடாது. சொன்னேன்னா...’

அந்த வரி இல்லாமல் அவன் எந்த ஒரு உரையாடலையும் நிறைவு செய்ததில்லை.

‘ஆனா, மாமா பிடுங்கிப் போடலேன்னா விக்கிரகத்த எடுத்து அம்மாட்டயே குடுத்திருப்பேன்னு சொன்னியே? அப்ப மட்டும் தெரிஞ்சிடாதா?’ என்று கேட்டேன்.

அவன் சட்டென அமைதியாகிவிட்டான். வெகுநேரம் யோசித்துக்கொண்டே இருந்தான். பதில் வரட்டும் என்று நான் காத்திருந்தேன். அன்றைக்கு அவன் அதற்குப் பதில் சொல்லவில்லை. அடுத்த நாளோ, அதற்கும் மறுநாளோகூட சொல்லவில்லை. அந்தச் சம்பவம் நடந்த நான்காம் நாள் அவன் என்னைக் கோயிலுக்கு அழைத்துச் சென்றான். தாயார் சன்னிதியில் நாங்கள் அமர்ந்திருந்தோம். சேவிக்க வந்த யாருக்காகவோ சன்னிதியைத் திறந்து கற்பூரம் காட்டி, ஒரு சிட்டிகை குங்குமம் கொடுத்துவிட்டு, பட்டர் மீண்டும் சன்னிதியைப் பூட்டிக்கொண்டு போய்விட்டார்.

இப்போதைக்கு அவரோ வேறு யாருமோ அங்கு வரப்போவதில்லை என்பதை நிச்சயப்படுத்திக்கொண்டு அண்ணா சொன்னான், ‘என் மனசுல அப்படி பட்டுது விமல். அன்னிக்கு நான் என்னவாகப்போறேன், எங்கே போகப்போறேன்னு அம்மாக்கு குறிப்பா புரியவெச்சிடலான்னு தோணித்து. என்னிக்கோ ஒருநாள் எப்படியோ தெரியப்போறதை நானே சுட்டிக்காட்டிடலாம்னு நினைச்சேன்.’

‘என்ன தெரியப்போறது? நீ சித்தர் ஆயிடுவேன்னா?’

அவன் இல்லை என்று திடமாகத் தலையசைத்தான்.

‘பின்னே?’

‘சித்தெல்லாம் ஒண்ணுமில்லே. நான் தேடறது வேற.’

‘எனக்கு நீ பேசறதெல்லாம் புரியலடா. ஆனா பயம்மா இருக்கு. எதுக்கும் நீ அம்மாட்ட சொல்லிடேன்? சொல்லாம இதெல்லாம் பண்ணாதடா’ என்று சொன்னேன். அவன் நெடுநேரம் எங்கோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். பிறகு, ‘அன்னிக்கு என்னமோ சொல்லிடணும், இல்லேன்னா தெரியப்படுத்திடணும்னு தோணித்து. அப்பறம் வேணாம்னு பட்டுடுத்து.’

‘ஏண்டா?' நான் அதிர்ந்துபோயிருந்தேன்’

‘தெரியலே. அவளுக்கே தெரிஞ்சத நாம ஏன் கிளறிக்காட்டணும்னு தோணிடுத்து’ என்று சொன்னான்.

கடைசிவரை அண்ணா தீர்மானமாக இருந்தான். அவன் வீட்டை விட்டுப் போகத்தான் போகிறான் என்பது அம்மாவுக்குத் தெரியும் என்று அதன்பின்பும் நாலைந்து முறை என்னிடம் சொல்லியிருக்கிறான். ஏனோ எனக்குத்தான் அதைச் சரியான பொருளில் உள்வாங்க அன்றைக்குத் திறனில்லாது இருந்தது. சொன்னேனே. எனக்கான பொழுதுபோக்கு அமானுஷ்யக் கதையை ஒரு நிகழ்கலையாக அவன் நிகழ்த்திக் காட்டிக்கொண்டிருந்ததாகவே எண்ணியிருக்கிறேன். விக்கிரக சம்பவத்துக்குப் பிறகு என் எண்ணம் சற்று மாறித்தான் இருந்தது. ஆனாலும் ஏனோ திரும்பத் திரும்ப அம்மாதிரியான அற்புதங்கள் ஏதாவது நடக்குமா என்று எதிர்பார்த்தே அவனோடு சுற்றிக்கொண்டிருந்தேன்.

அவன் இல்லாமல்போன தினத்தன்றுதான் என் பிழை எனக்குப் புரிந்தது. நான் வீட்டில் அவனைப் பற்றிச் சொல்லியிருக்க வேண்டும். அல்லது அவனிடமாவது முழுதும் கேட்டறிந்திருக்க வேண்டும். ஒரு கதையாக, கனவாக எண்ணிப் பார்க்கப் பரவசம் தருகிற எல்லாம் உண்மையில் எத்தனை வீரியமுடன் தாக்கக்கூடியது என்பதை அன்றுதான் அறிந்தேன்.

அப்பா குமுறிக் குமுறி அழுதுகொண்டிருந்தார். கேசவன் மாமா முற்றத்துத் தூணில் முட்டிக்கொண்டு அழுதார். வினய்யும் வினோத்தும் பிரமை பிடித்தாற்போலாகிவிட்டார்கள். மாமாதான் சத்தம் போட்டார், ‘ஏண்டா இங்க நிக்கறிங்க? போய்த் தேடுங்களேன்? அவன் எங்க போனான்னு பாருங்களேன்!’

காத்திருந்தாற்போல், அண்ணாவின் சைக்கிளை வினய் எடுத்துக்கொண்டு கிளம்ப, வினோத் பின்னால் ஏறிக்கொண்டான். திருவிடந்தை முழுவதும் சுற்றித் தேடிவிட்டு, கோவளம், கேளம்பாக்கம், தையூர் வரை போய் அண்ணாவின் வகுப்பில் படிக்கிற பையன்களையெல்லாம் பார்த்து விசாரித்துவிட்டு, அவர்கள் பன்னிரண்டு மணிக்கு வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். யாருக்குமே அவனைப் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. மாமா செங்கல்பட்டில் இருந்து நாவலூர் வரை போகும் காண்டீபன் பஸ் சர்வீஸின் முதலாளியை நேரில் சென்று பார்த்து விவரம் சொல்லி, அந்த கம்பெனியின் அனைத்து கண்டக்டர்களையும் கூப்பிட்டு விசாரித்திருக்கிறார். ஒரு பையன். பதினெட்டு வயதுப் பையன். நெடுநெடுவென்று ஒல்லியாக, உயரமாக இருப்பான். இரு புருவங்களுக்கு மத்தியில் பொட்டு வைத்தாற்போலக் கறுப்பாக ஒரு மச்சம் இருக்கும். அவனை யாராவது பஸ்ஸில் பார்த்தார்களா? எங்கே போய் இறங்கினான் என்று தெரியுமா?

கண்டக்டர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. எனவே, கேசவன் மாமா கோவளம் போலிஸ் ஸ்டேஷனுக்குப் போய் ஒரு புகார் கொடுத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தார்.

அன்றைக்கு முழுவதும் வீடு ரணகளப்பட்டது. அப்பா நினைத்து நினைத்து அழுதுகொண்டிருந்தார். திடீர் திடீரென்று ஆவேசம் வந்தாற்போல உரத்த குரலில் கத்தினார். பூஜையறைக்குச் சென்று சுவாமி படங்களையெல்லாம் விசிறியடித்தார். ‘நீயெல்லாம் ஒரு தெய்வமா? ஒழி. எங்கயாவது போயிடு. இனிமே என் வீட்ல ஒனக்கு இடமில்லே’ என்று திட்டினார். திருவிடந்தை முழுதும் விஷயம் தெரிந்து யார் யாரோ வீட்டு வாசலுக்கு வந்து விசாரித்துவிட்டுப் போனார்கள். கேசவன் மாமாதான் அவர்களையெல்லாம் சமாளித்து அனுப்பிக்கொண்டிருந்தார்.

அம்மா அடுக்களையைவிட்டு வெளியே வரவேயில்லை. அண்ணா வீட்டை விட்டுப் போய்விட்டான் என்பது தெரிந்த கணம் அதிர்ந்துபோய் உட்கார்ந்தவள்தான். அவள் எழுந்திருக்கவேயில்லை அங்கிருந்து. யாருடனும் பேசவும் இல்லை.

எனக்கு பயமும் பதற்றமும் சம விகிதத்தில் உடலெங்கும் பரவி நிறைந்திருந்தது. பரண் மீது ஏறி அந்த நாடிச் சுவடியை எடுத்துக் காட்டிவிட்டால், எல்லோருக்கும் எல்லாம் புரிந்துவிடும். ஆனால் அதைச் செய்வதற்கு எனக்குத் துணிவு வரவில்லை. அப்பாவின் முழுக் கோபமும் என் மீது திரும்பிவிடும் என்று நினைத்தேன். இன்னொன்றும் நான் செய்திருக்கலாம். சுவடிகூட அவசியமில்லை. அன்றைக்கு அப்பத்தில் இருந்து அண்ணா எடுத்துக் காட்டிய கிருஷ்ணர் விக்கிரகம், பிள்ளையார் விக்கிரகம் இரண்டையும் நான் பத்திரமாக என்னுடைய புத்தகப் பைக்குள்தான் பொட்டலம் கட்டி வைத்திருந்தேன். அதைக் காட்டி அன்றைக்கு நடந்ததைச் சொன்னால்கூடப் போதும்.

கடைசிவரை நான் அந்த இரண்டையும் செய்யவேயில்லை. கவனமாக, விக்கிரகங்களை மட்டும் எடுத்துச்சென்று அல்லிக் குளத்தில் வீசிவிட்டு, மானசீகமாக அம்மாவின் மடியில் படுத்து அரை மணி நேரம் அழுதேன். பிறகு அண்ணா நிச்சயம் ஒருநாள் திரும்பி வருவான் என்று நினைத்துக்கொண்டு, வரும்போது அவன் எப்பேர்ப்பட்ட ரிஷியாகியிருப்பான், என்னெல்லாம் வித்தைகள் கற்றுத் தேர்ந்திருப்பான், ஊரைக் கூட்டி அவனைக் காண்பித்து அம்மா எப்படியெல்லாம் பரவசப்படுவாள் என்று கற்பனை செய்து பார்க்க ஆரம்பித்தேன்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

13. காவல்

 

 

மாடத்தில் வைத்த விளக்கின் நிழல் சுவரில் படர்ந்து லேசாக அசைவதுபோல, அடுக்களைக்குள் அம்மா அமர்ந்த இடத்தில் இருந்து எழுந்திருப்பது தெரிந்தது. போனவனை எண்ணிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். இருப்பவர்களுக்குப் பசிக்க ஆரம்பித்திருக்கும் என்பதை அவள் அறிவாள். எது இருந்தாலும் இல்லாது போனாலும் வேளைக்குப் பசிக்கத் தவறுவதில்லை யாருக்கும். துக்கத்திலும் கோபத்திலும் சோறு வேண்டாம் என்று சொல்லுவதெல்லாம் எத்தனை வேளைக்கு சாத்தியம்? தீயற்றுப் போனாலும் கங்கற்று இருப்பதில்லை எந்தக் குண்டமும்.

அம்மா அடுப்பை மூட்டுவது தெரிந்தது. அரிசி களைவது தெரிந்தது. உலை வைத்துவிட்டு அடுக்களையை விட்டு வெளியே வந்தாள். வினய்யைக் கூப்பிட்டு ஏதாவது காய் வாங்கி வரச் சொல்லிப் பணம் கொடுத்து அனுப்பினாள். அவன் சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பிய நேரம், கேசவன் மாமா விடுவிடுவென வீட்டுக்குள் நுழைந்தார். அவர் கையில் ஒரு பெரிய கட்டைப்பை இருந்தது. அந்தப் பை நிறையத் துணிமணிகள் இருந்தன. அவர் தோளில் தொங்கிய இன்னொரு பையில் நாலைந்து பாத்திரங்கள் இருந்தது அவை எழுப்பிய சத்தத்தில் இருந்து தெரிந்தது. அநேகமாக அது மாமாவின் பூஜையறைப் பாத்திரங்களாக இருக்கலாம் என்று நினைத்தேன். வட்டில், சாளக்கிராமம், சொம்பு, கொளபாத்திரம்.

அம்மா அவரிடம் எதுவும் கேட்கவில்லை. வெறுமனே சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டு நின்றாள். பிறகு அப்பாவைப் பார்த்தாள். அவர் பஞ்சாங்கத்தை வைத்துக்கொண்டு ஏதோ கணக்குப் போட்டுக்கொண்டிருந்தார். மாமாவை நிமிர்ந்து பார்த்து, ‘உக்காரு’ என்று மட்டும் சொன்னார்.

‘நான் அந்தாத்த காலி பண்ணிண்டு வந்துட்டேன் அத்திம்பேர்’ என்று மாமா சொன்னார்.

அப்பாவோ, அம்மாவோ அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. இரண்டு பைகளுக்குள் அடங்கக்கூடிய குடித்தனத்தைத்தான் அவர் அத்தனைக் காலமாக அங்கே நடத்திக்கொண்டிருந்திருக்கிறார். காலி செய்வதொன்றும் அத்தனை சிரமான செயலில்லை. மாமாவின் வீடு தெற்கு வீதியை ஒட்டியிருந்த தென்னந்தோப்புக்கு வடக்கே இருந்தது. மிகச் சிறிய ஓட்டு வீடு. உண்மையில் அது குடிசை வீடுதான். ஆறேழு வருடங்களுக்கு முன்புதான் மாமா அந்த வீட்டின் ஓலைக் கூரைகளை மாற்றி சொருகு ஓடு போட்டிருந்தார். மண் தரையை சிமெண்டு தரையாக்கி, புதிதாக ஒரு நிலைக்கால் வைத்து, அதற்கொரு பூஜையும் போட்டு, கிரகப்பிரவேசமாக இல்லாவிட்டாலும் ஒரு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். நுழைந்ததும் ஒரு கூடம். அதிலேயே வலது ஓரத்தில் சமைக்கும் இடம். அதை ஒட்டியே நாலடிக்கு நாலடி பரப்பில் பாத்திரம் துலக்க ஒரு தொட்டி. மொத்த வீடே அவ்வளவுதான்.

‘போதுமேக்கா. நாங்க ரெண்டே பேர். இன்னொண்ணுக்கு இந்த ஜென்மத்துல ப்ராப்தமில்லேன்னு தெரிஞ்சாச்சு. உக்கார ரெண்டடி. படுக்க ஆறடி. இந்த வீடு யதேஷ்டம்’ என்று மாமா சொன்னார். கமலி மாமி அன்றைக்கெல்லாம் மிகுந்த சந்தோஷமுடன் காணப்பட்டாள். எங்கள் ஆறு பேருக்கும் அன்று கேசவன் மாமா வீட்டில்தான் சாப்பாடு. இலை விரித்து, சர்க்கரை வைத்து பருப்பு, நெய், சாம்பார், ரசம், இரண்டுவிதக் காய்கறிகள், வடை, திருக்கண்ணமுதுடன் மாமி அமர்க்களப்படுத்தியிருந்தாள்.

‘என்னத்துக்கு கமலி இவ்ளோ பண்ணியிருக்கே?’ என்று அம்மா கேட்டாள்.

‘இதைவிட்டா வேற எப்ப இதெல்லாம் பண்ணி சாப்பிடறது?’ என்றாள் கமலி மாமி.

மாமா வீட்டில் பெரும்பாலும் சமையல் என்ற ஒன்று இருந்து எனக்கு நினைவில்லை. அவர் கோயில் மடைப்பள்ளியில் உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்தார். புளியோதரை இல்லாத நாள்களிலும் அவருக்கு ததியோன்னத்துக்குக் குறைவிருக்காது. கமலி மாமி பிரமாதமாக ஆவக்காய் ஊறுகாய் போடுவாள் என்பதால், மாமா வீட்டில் பெரும்பாலும் கோயில் ததியோன்னமும் ஆவக்காய் ஊறுகாயும்தான் சாப்பாடாக இருக்கும். மாமி ஒரு நாளும் அதைப்பற்றியெல்லாம் அலுத்துக்கொண்டதில்லை என்று கேசவன் மாமா அடிக்கடிப் பெருமையாகச் சொல்லுவார்.

‘கேட்டுக்கோடா வினோத். உனக்குத்தான் அவன் சொல்றான். சாப்பிடறதுல ஒண்ணுமில்லே. எதையாவது ஒண்ணப் போட்டு வயித்த நிரப்பினா போதும். புத்தி ஒண்ணுதான் எப்பவும் பிரகாசமா இருக்கணும். துலங்கி நிக்கணும். வயித்தையே கவனிச்சிண்டிருந்தா அந்த ஜோலி கெட்டுப்போயிடும்’ என்று அப்பா சொல்லுவார்.

எங்கள் வீட்டில் வினோத்துக்கு மட்டும்தான் விதவிதமாகச் சாப்பிடுவதில் ஆர்வம் அதிகம். அதற்காக அம்மாவை எப்போதும் அவன் நச்சரித்துக்கொண்டே இருப்பான். இட்லித் தட்டில் நாலு குழி மாவூற்றி வைக்கும்போதுகூட கொஞ்சம் கேரட் துருவித் தூவி வேகவிடச் சொல்லுவது அவன் வழக்கம்.

‘இட்லில போய் யாராவது கேரட் போடுவாளா?’ என்று அம்மா கேட்டால், ‘போட்டுத்தான் பாரேன், நாலு கொத்தமல்லிய சேத்துக் கிள்ளிப் போடு. பிரமாதமா இருக்கும்’ என்பான்.

‘உனக்கு யாருடா இதெல்லாம் சொல்லித்தரா?’

‘யாருமில்லே. நானே யோசிப்பேன். முடக்கத்தான் கீரை தோசை பண்றப்போ, கேரட் இட்லி மட்டும் கூடாதா? உப்மாக்கு தாளிக்கறப்போ நாலு துளசியைக் கிள்ளி சேர்த்துப் போட்டுத் தாளிச்சிப் பாரு. அமிர்த வாசனையா இருக்கும்’ என்பான்.

அம்மாவுக்கு அவன் பேச்செல்லாம் எப்போதும் தீராத ஆச்சரியம்தான். இந்தப் பிள்ளை எப்பப்பார் சாப்பாட்டையே நினைத்துக்கொண்டிருக்கிறானே என்று சமயத்தில் அவள் அலுத்துக்கொள்வதுண்டு. ஆனாலும் அவனது ருசி சார்ந்த ஆலோசனைகள் பிழைபட்டுப் போவதேயில்லை என்று அடிக்கடி சொல்லுவாள்.

‘யாரு கண்டா? எனக்கப்பறம் உன் பிள்ளைதான் மடைப்பள்ளி நிர்வாகத்த எடுத்துக்கப் போறானோ என்னமோ’ என்று கேசவன் மாமா சொல்லும்போதெல்லாம், அப்பா அந்தப் பேச்சை வெட்டி விடுவார். &அவனை நான் ஐசிடபிள்யுஏ படிக்கவெக்கப் போறேன். இன்னிக்கெல்லாம் அதுதான் பெரிய படிப்பு. அதைப் படிச்சவாள்ளாம் மெட்ராசுல லட்ச லட்சமா சம்பாதிக்கறாளாம்’ என்பார்.

வினோத்துக்கு அது என்ன படிப்பு என்று விசாரித்து அறிய விருப்பம் இருந்ததில்லை. அப்பாவுக்கும் அநேகமாக அதைப்பற்றி எதுவும் தெரிந்திருக்காது என்றுதான் நாங்கள் அனைவருமே நினைத்தோம். யாரோ சொல்லியிருப்பார்கள். ஐசிடபிள்யுஏ என்பது பெரிய படிப்பு. நாலு பேரில் ஒருவனை அதைப் படிக்க வை. என்ன காரணத்தாலோ அப்பா வினோத்தை அதற்குத் தேர்ந்தெடுத்திருந்தார்.

அவருக்கு அண்ணாவை பாலிடெக்னிக்குக்கு அனுப்ப வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த வருடம்தான் முதல்முதலாக அப்படியொரு படிப்பு அறிமுகமாகியிருந்தது. தொழில் கல்வி. அங்கே படித்துவிட்டால் போதும். எல்லா பெரிய பெரிய தொழிற்சாலைகளிலும் உடனே கூப்பிட்டு வேலை கொடுத்துவிடுவார்கள் என்று அப்பா சொன்னார். அதேபோல, வினய் பெரியவனானதும் எப்படியாவது அவனை அரசாங்கப் பரீட்சை எழுதவைத்து கவர்மெண்டில் போட்டுவிட வேண்டும் என்றும் சொல்லிக்கொண்டிருப்பார். என்ன உத்தியோகம், எந்தத் துறை என்றெல்லாம் பேச்சே கிடையாது. கவர்மெண்டில் போட்டுவிட வேண்டும். வீட்டுக்கு ஒருவனாவது பென்ஷன் வாங்கும் உத்தியோகத்தில் இருக்க வேண்டும் என்பது அவரது இச்சை.

‘அதெல்லாம் ஒரு குடுப்பினை. எல்லாருக்கும் அவ்ளோ லேசுல கிடைச்சிடாது. என்னையே எடுத்துக்கோ. எங்கப்பா தலைகீழா நின்னு தண்ணி குடிச்சிப் பார்த்தார். முடிஞ்சிதா? இந்த ஜென்மால ஒனக்கு விஜிபில டிக்கெட் கிழிக்கற உத்தியோகம்தான்னு எழுதி வெச்சுட்டான். யாரு மாத்த முடியும்?’ என்று அலுத்துக்கொள்வார். விஜிபி திறப்பதற்கு முன்னால் அப்பா முதலைப் பண்ணையில் அதே டிக்கெட் கிழிக்கும் உத்தியோகத்தில்தான் இருந்தார். அதற்கும் முன்னால் மகாபலிபுரத்தில் ஒரு ஓட்டலில் வேலை பார்த்தார். டிக்கெட் கிழிக்கும் உத்தியோகம் என்று அவர் சொன்னாலும், உண்மையில் அவர் அந்த வேலையைச் செய்யவில்லை. கணக்குப் பிரிவில்தான் அவர் பணியாற்றிக்கொண்டிருந்தார் என்பதை வெகு காலம் கழித்துத்தான் நான் தெரிந்துகொண்டேன். அதுவும் அண்ணா சொன்னதுதான்.

 

அன்றைக்கு கேசவன் மாமா வீட்டு கிரகப்பிரவேசத்தில் நாங்கள் ஆறு பேர் மட்டும்தான் விருந்தினர். ஒப்புக்கு ஒரு வாத்தியாரைக்கூட மாமா அழைத்திருக்கவில்லை. அவரே ஒரு ஔபாசனக் கல்லை எடுத்துவைத்து அக்னி சந்தானம் செய்து, தனக்குத் தெரிந்த மந்திரங்களைச் சொன்னார். பத்து நிமிடத்தில் எல்லாம் முடிந்துவிட்டது. ‘இலை போட்டுடலாம்’ என்று கமலி மாமிக்குச் சொல்லிவிட்டு, ‘உக்காருங்கோ அத்திம்பேர்’ என்று சொன்னார்.

அன்று முழுதும் நாங்கள் மாமா வீட்டிலேயேதான் இருந்தோம். என்னமோ புத்தம் புதிதாக ஒரு வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்தாற்போல, அம்மா வாய் ஓயாமல் மாமியைப் புகழ்ந்துகொண்டே இருந்தாள். ‘கண்ணு படும். கோயில் வாச்மேன் முனுசாமி சும்மாத்தானே கெடக்கறான்? கூப்ட்டு ஒரு பூசணிக்காய சுத்தி உடைச்சிட்டுப் போகச் சொல்லு’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

அன்றிரவு மாமா எங்கள் வீட்டுக்கு வந்தபோது, பூசணிக்காய் உடைத்துவிட்ட தகவலைச் சொல்லத்தான் வந்தார் என்று நினைத்தோம். ‘என்னடா?’ என்று கேட்டபோது, மாமா மேல் துண்டால் வாயைப் பொத்தி, குலுங்கிக் குலுங்கி அழுதார்.

‘டேய், என்னன்னு கேக்கறனே? சொல்லித் தொலையேன்’ என்று அப்பா பதற்றத்துடன் முன்னால் வந்தார். அம்மாவுக்கும் பதற்றமாகிவிட்டது. ‘ஆத்துல அவ சகஜமா இருக்காளோல்யோ?’ என்று கேட்டாள்.

‘போயிட்டாக்கா!’ என்று தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தார் கேசவன் மாமா.

ஒரு ஓட்டு வீட்டில் வாழ வேண்டும் என்பது கமலி மாமியின் வாழ்நாள் கனவாக இருந்தது என்று பிற்பாடு மாமா சொல்லிச் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார். தலைமுறை தலைமுறையாக ஏழைமையின் கோரப் பிடியில் சிக்கிச் சின்னாபின்னமான குடும்பம் அவளுடையது. மாமா அவளை மணந்துகொண்டபோது, கமலி மாமியின் அப்பா அவர் கையைப் பிடித்துக்கொண்டு அழுதபடி சொன்னாராம், ‘மாப்ளே, என்கிட்ட மொத்தமா நாப்பத்தியெட்டு ரூபா இருக்கு. அத வெச்சிண்டு ஒரு கல்யாணத்த எப்படி பண்றதுன்னு எனக்குத் தெரியலே. நீங்களே பாத்துப் பண்ணிக்கோங்கோ’ என்று சொல்லி அந்தப் பணத்தை மாமாவின் கையில் திணித்திருக்கிறார்.

‘அந்தப் பொண்ண எனக்குத் தெரியும் கேசவா. தங்கமான பொண்ணு. யோசிக்காம பண்ணிக்கோ’ என்று அம்மாதான் மாமாவுக்கு எடுத்துச் சொல்லியிருந்தது. அம்மா சொல்லிவிட்ட பின்பு மாமாவுக்கு மாற்றுச் சிந்தனையே இருந்ததில்லை. என்றைக்கும். எனவே, சம்மந்தி பிராமணன் கொடுத்த நாற்பத்தியெட்டு ரூபாயை அவர் கையிலேயே திருப்பிக் கொடுத்துவிட்டு, ‘நாள் மட்டும் பார்த்துச் சொல்லுங்கோ. அகிலவல்லி சன்னிதில கல்யாணம். அவாவா ஆத்துல சாப்பாடு’ என்று சொல்லிவிட்டிருக்கிறார்.

கமலி மாமியின் தகப்பனாரெல்லாம் எப்போது போய்ச் சேர்ந்தார் என்பதே எங்களுக்குத் தெரியாது. இதெல்லாம் மாமா எப்போதாவது கொஞ்சம் கொஞ்சமாகச் சொன்ன தகவல்கள்தாம். ஆனால் மாமி ஆசைப்பட்ட ஓட்டு வீட்டில் ஒரு நாள்கூட அவளால் முழுதாக வாழ முடியாமல் போனது மட்டும் நெடுநாள் வரை உறுத்தலாகவே இருந்தது. ‘எல்லாத்துக்கும் ஒரு ப்ராப்தம் வேணும். அவளுக்கு வீட்டுக்கு ஓடு போடற ப்ராப்தம் இருந்திருக்கு. இருந்து பாக்க இல்லே’ என்று கேசவன் மாமா சொன்னார்.

மாமி இறந்த துக்கம் அவருக்குப் பல மாதங்கள் இருந்தன. ஷவரம் செய்யாமல், தலை வாராமல், அழுக்குத் துணி மாற்றாமல்தான் ஊரெல்லாம் திரிந்துகொண்டிருந்தார். அப்பாவும் அம்மாவும் எவ்வளவோ சொல்லியும் இன்னொரு கல்யாணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார். ‘போதும்க்கா. திருப்தியாத்தான் இருந்தோம். திருப்தியாவே போய் சேந்துட்டா. இனிமே என்ன? நீ இருக்கே. அத்திம்பேர் இருக்கார். பிள்ளைகள் இருக்கா. இவ்ளோதான் எனக்கு. என் திருப்தி இவ்ளோதான்’ என்று சொல்லிவிட்டார்.

ஒரு நாளில் நூறு முறை மாமா எங்கள் வீட்டுக்கு வருவார். காலை கோயில் காரியத்துக்குப் போகும்போது ஒருமுறை. எட்டு மணிக்கு காப்பிக்கு ஒரு முறை. பத்து மணிக்கு வந்து அரை மணி தலை சாய்த்துவிட்டுப் போக ஒருமுறை. நடை சாத்தும் நேரம் வீட்டுக்குப் போகும்போது ஒருமுறை. மாலை ஒரு முறை. சந்தைக்குப் போய் வரும்போது ஒருமுறை. இரவு படுக்கப்போகுமுன் ஒருமுறை. பெரும்பாலும் அவர் எங்கள் வீட்டிலேயேதான் இருந்தார். அவருக்கென்று ஒரு ஓட்டு வீடு இருப்பதே எங்களுக்கு மறக்கத் தொடங்கியிருந்தபோதுதான், ‘மொத்தமா வந்துட்டேன்க்கா’ என்று சொல்லிக்கொண்டு மாமா வந்து சேர்ந்தார்.

‘அத்திம்பேர், உங்கள கேக்காமத்தான் இந்த முடிவ எடுத்தேன். ஆனா இதை மாத்திக்கப் போறதில்லே. நீங்க என்னிக்காவது என்னை செருப்பால அடிச்சி வெளிய போன்னு சொன்னாலும் போறதா இல்லே. ஓடிப்போனவன தேடிக் கண்டுபிடிக்கறது ஒரு காரியம்னா, உள்ளவாள பாத்துக்கறதும் இனிமே என் பொறுப்புதான்’ என்று சொன்னார்.

அன்றிரவு வினய்தான் வினோத்திடம் சொல்லிக்கொண்டிருந்தான். ‘மாமா நம்மள பாத்துக்க வரலை வினோத். அம்மாவ பாத்துக்கத்தான் வந்திருக்கார்.’

‘ஏண்டா?’ என்று வினோத் கேட்டான்.

‘அம்மா தற்கொலை பண்ணிண்டுடுவாளோன்னு மாமாக்கு பயம்’ என்று வினய் சொன்னான்.

அதைக் கேட்டதும் எனக்கு மிகவும் அச்சமாகிவிட்டது. உடனே எழுந்து சென்று அம்மாவின் அருகில் படுத்துக்கொண்டேன். விடிந்ததும் அண்ணாவைப் பற்றி நான் அறிந்த அனைத்தையும் ஒரு வாக்குமூலம்போல் அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டே தூங்கிப்போனேன்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு தொடர்....வாசிக்கும்போதே மனசு அலையாமல் அசையாமல் இருப்பதை உணர முடிகிறது.....!  :rolleyes:

Link to comment
Share on other sites

14. சுடர்

 

அன்றைக்கு மறுநாள் பொழுது விடிந்து நான் கண் விழித்தெழுந்தபோது, வீடெங்கும் சாம்பிராணிப் புகை பரவியிருந்தது. பூஜை மாடத்தருகே விளக்கேற்றி, கோலம் போட்டு, அப்பா விசிறியடித்திருந்த படங்களை மீண்டும் அதனதன் இடத்தில் வைத்து மாலை சார்த்தியிருந்தது. அடுக்களைக்குள் அம்மா சகஸ்ரநாமம் சொல்லிக்கொண்டே காய் திருத்திக்கொண்டிருந்தாள். நான் உள்ளே போனபோது எப்போதும்போலச் சிரித்தாள். ‘பல்லு தேச்சாச்சா? காப்பி அதோ இருக்கு பார்’ என்று சொன்னாள்.

எனக்குக் குழப்பமாக இருந்தது. ஓரிரவு முழுதும் ஓடிக் கடந்திருக்கிறது. அண்ணா வீட்டை விட்டுப் போயிருக்கிறான். நேற்றெல்லாம் அம்மாவின் மௌனக் கதறல் என் செவிப்பறையைக் கிழித்திருக்கிறது. இரவு மாமா பெட்டி படுக்கையோடு வந்து நின்று, இனிமேல் இங்கேதான் இருக்கப்போகிறேன் என்று அறிவித்ததற்கு வினய் சொன்ன காரணத்தில் உயிர்க்குலை நடுங்கிப்போயிருந்தேன். ஆனால் எதுவுமே பெரிதல்ல என்பதுபோல இவளால் எப்படிக் காட்டிக்கொள்ள முடிகிறது? அண்ணாவைப் பற்றி நான் அறிந்த அனைத்தையும் அம்மாவிடம் தெரியப்படுத்திவிட அதுதான் சரியான நேரமாக இருக்குமோ என்று ஒரு கணம் நினைத்தேன். காப்பியை எடுத்துக்கொண்டு அவளருகே போய் அமர்ந்துகொண்டேன். ‘சீக்கிரம் குளிச்சிட்டு ரெடியாகணும் விமல். ஸ்கூல் இருக்கோல்யோ?’

உண்மையில் எனக்கு அப்போது பேச்சே வரவில்லை. ஆனால் ஏதாவது ஒரு சொல்லில் ஆரம்பித்துவிட வேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. அம்மாவுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். மீண்டும் அழத்தொடங்குவாள். அப்பா ருத்ரதாண்டவமாடிவிடக்கூடும். மாமா என்னை இழுத்து எதிரே நிறுத்திக்கொண்டு தன் தலையில் அடித்துக்கொண்டு கத்துவார். முதல் நாள் நடந்த அனைத்தும் மறு உருவம் கொண்டு வீடு மீண்டும் துயரத்தின் சாறை உறிஞ்சத்தொடங்கும். இதையெல்லாம் தவிர்த்துவிட்டு அண்ணாவைப் பற்றி எதுவும் பேசிவிட முடியாது என்று உறுதியாகத் தோன்றியது. ஒருவேளை முதல் நாள் இருந்த நிலையிலேயே அன்றைக்கும் பொழுது விடிந்திருந்தால் எனக்கு அந்தத் தயக்கம் இருந்திருக்காதோ என்னவோ. சட்டென்று ஒரு புன்சிரிப்பில், சாதாரணமான பேச்சில், ஒரு சாம்பிராணிப் புகையில் புதைந்த பேருலகை மீட்டுவிடப் பார்க்கிறாள்.

‘குளிக்கப் போகச் சொன்னேனே’ அம்மா நினைவுபடுத்தினாள். நான் எழுந்துகொண்டேன். எதையாவது பேசித்தான் ஆக வேண்டும் என்பதால், ‘அப்பா எங்கம்மா?’ என்று கேட்டேன்.

‘மாமாவோட போலிஸ் ஸ்டேஷன் போயிட்டு வரேன்னு போயிருக்கார்.’

அதை அவள் சொன்னபோது முகத்தை ஆழமாக உற்றுப் பார்த்தேன். எந்த மாறுதலும் இல்லை. முந்தைய தினத்துக்கு முந்தைய அம்மாவைப் போலவேதான் இருந்தாள். போலிஸ் ஸ்டேஷன் போவதை ஒரு செய்தியாக மட்டும் அறிவிக்கமுடியும் என்பது எனக்கு வியப்பாக இருந்தது. சட்டெனத் தோன்றியது. வீட்டில் அப்பாவும் மாமாவும் இல்லாத தருணத்தில் அம்மாவிடம் மட்டும் சொல்லிவிட்டால் என்ன?

இப்போது நினைத்தால் எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. என் குரு என்னைச் சொல்லின் குழந்தை என்று குறிப்பிடுவார். எதையும் சரியான சொற்களில் வெளிப்படுத்திவிடத் தெரிந்தவன் என்றுதான் என்னைப் பற்றி எல்லோரிடமும் அறிமுகப்படுத்துவார். அதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டு. எனது பேச்சு எனக்கே பிடித்துப்போகும் சில தருணங்களில் மகிழ்ச்சியைத் தாண்டி சற்று கர்வம் கொள்வதும் உண்டு. ஆனால் அன்றைக்கு நான் அனைத்துச் சொற்களாலும் வஞ்சிக்கப்பட்டேன். கடைசிவரை என்னால் அம்மாவிடம் அண்ணாவைப் பற்றிச் சொல்லவே முடியாமல் போனது. தயங்கித் தயங்கி நின்றுவிட்டு, பிறகு குளித்து சாப்பிட்டுப் பள்ளிக்குக் கிளம்பிச் சென்றேன்.

மாலை வீடு திரும்பியபோது அப்பா சற்றுத் தெம்பாக இருப்பது போலிருந்தது. எப்படியும் கண்டுபிடித்துவிடலாம் என்று கோவளம் இன்ஸ்பெக்டர் அவரிடம் நம்பிக்கை சொல்லியிருந்தார். அவர் ஸ்டேஷனில் இருக்கும்போதே பல பேருக்கு போன் செய்து அண்ணாவைப் பற்றிய விவரங்களைச் சொல்லி, எங்கே பார்த்தாலும் தகவல் தரும்படி உத்தரவிட்டிருக்கிறார். தாயார் உடல்நிலை கவலைக்கிடம் என்று செய்தித்தாளில் ஒரு விளம்பரம் தரச் சொல்லி ஆலோசனை சொல்லியிருக்கிறார். என்ன காரணத்தாலோ, அப்பா அதைச் செய்ய விரும்பவில்லை.

‘குடுத்துத்தான் பாருங்களேன் அத்திம்பேர். நல்லது நடக்க பொய் சொன்னா என்ன தப்பு?’ என்று கேசவன் மாமா கேட்டார்.

ஆனால் அப்பா முடியவே முடியாது என்று சொல்லிவிட்டார். இந்தப் பேச்செல்லாம் நடந்துகொண்டிருந்தபோது நான் அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். தனக்கும் அதற்கும் சம்பந்தமேயில்லை என்பதுபோல் அவள் காய்ந்த துணிகளை உதறி மடித்து அடுக்கிக்கொண்டிருந்தாள்.

‘நீ சொல்லேன்க்கா. உனக்கு ஒண்ணுனா அவன் ஓடி வந்துட மாட்டானா?’ என்று மாமா சொன்னார்.

அம்மா அதற்கு பதில் சொல்லவில்லை. எனக்கு மட்டும் உறுதியாகத் தோன்றியது. என்னவானாலும் அவன் வரப் போவதில்லை.

அன்றிரவு நாங்கள் மூன்று பேரும் கோயில் முன் மண்டபத்தில் தனியே உட்கார்ந்திருந்தோம். வினோத் மிகவும் கலவரமாகிப் போயிருந்தது எனக்குப் புரிந்தது. வினய் என்னவாகியிருக்கிறான் என்பதைத் தெரிந்துகொள்ள முடியாதிருந்தது.

‘அப்படி எங்கடா போயிருப்பான் அவன்? தப்பு பண்ணவன்தான் தப்பிச்சி ஓடுவான். இவன் தப்பே பண்ணதில்லியே?‘ என்று வினோத் சொன்னான். ‘ஒருவேளை யாராவது கடத்திண்டு போயிருப்பாளோ?’

வினோத்துக்குக் கதைப் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உண்டு. துப்பறியும் கதைகள். சாகசக் கதைகள். பேய்க் கதைகள். பி.டி. சாமி என்பவர் எழுதிய பல புத்தகங்களை அவன் தன் பள்ளிக்கூடப் பைக்குள் மறைத்து வைத்திருப்பான். அதையெல்லாம் அவன் யாரிடமிருந்து வாங்கி வருகிறான் என்று தெரியாது. ஆனால் வாங்கி வருவதை வெறித்தனமாகப் படித்துத் தீர்த்துவிட்டு அடுத்தப் புத்தகத்துக்கு ஓரிரு தினங்களில் மாறிவிடுவான். காரணமே இல்லாமல் அண்ணா காணாமல் போயிருக்க முடியாது; கண்டிப்பாக யாராவது கடத்திக்கொண்டு போயிருக்க வேண்டும் என்கிற முடிவுக்கு அவன் அதனால்தான் வந்தான்.

‘அதெல்லாம் இல்லே. எனக்குத் தெரியும், அவன் திருப்பதிக்குப் போயிருப்பான்’ என்று வினய் சொன்னான்.

இது எனக்கு அதிர்ச்சியளித்தது.

‘திருப்பதிக்கா? எதுக்கு?’ என்று கேட்டேன்.

‘என்னடா கேக்கறான் இவன்? பெருமாள சேவிக்கத்தான்’ என்று வினோத் சொன்னான்.

‘இல்லடா. திருப்பதிலதான் சாப்பாடு ஃப்ரீ. மூணு வேளையும் நன்னா சாப்ட்டுண்டு நிம்மதியா இருக்கலாம்’ என்று வினய் சொன்னான்.

நான் சிரித்துவிட்டேன். ‘இப்ப என்ன நாம காசு குடுத்தா சாப்ட்டுண்டிருக்கோம்? மூணு வேளையும் ஆத்துல நன்னாத்தானே சாப்பிடறோம்? இங்க இல்லாத எதை அவன் அங்கபோய் சாப்டப் போறான்?’ என்று கேட்டேன்.

அண்ணா எப்போதோ வினய்யிடம் திருப்பதிக்குப் போக வேண்டும் என்று சொல்லியிருக்கிறான். ‘ஒரு மனுஷன் கையில பத்து காசுகூட இல்லாம சாகறவரைக்கும் நிம்மதியா வாழறதுக்கு அதுதான் சரியான இடம்’ என்று சொன்னானாம்.

அண்ணாவுக்கு எப்படி அப்படியொரு எண்ணம் வந்திருக்கும் என்று ஆச்சரியமாக இருந்தது. நாங்கள் குடும்பத்தோடு ஒரே ஒரு முறை திருப்பதிக்குப் போயிருக்கிறோம். அப்போது நான் மூன்றாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். சரியான குளிர் காலம். இரவு ஏழு மணிக்கு மலைக்குப் போய் இறங்கியதுமே குளிர்க்காற்று தோலைச் சுரண்ட ஆரம்பித்தது. எனக்கு அந்தக் குளிர் தாங்கவேயில்லை. நடுங்கிப் போய்விட்டேன். அம்மா என்னை இழுத்து இழுத்து தன்னோடு சேர்த்து இறுக்கிக்கொண்டு அவ்வப்போது சற்று ஆசுவாசம் அளித்துக்கொண்டிருந்தாள். எப்படி அந்த ஒரு இரவைக் கடக்கப்போகிறோம் என்று எனக்குக் கவலையாகிவிட்டது.

 

‘இங்கயே உக்காந்துண்டிருங்கோ. சாப்பிடறதுக்கு என்ன கிடைக்கும்னு பாத்துட்டு வந்துடறேன்’ என்று சொல்லிவிட்டு அப்பா கிளம்பிப் போனார். நாங்கள் அப்போது கல்யாண கட்டத்துக்கு முன்னால் இருந்த மரத்தடியில் அமர்ந்திருந்தோம். மலை முழுதும் மனிதர்களால் நிரம்பியிருந்தது. எல்லோரும் மொட்டை அடித்திருந்தார்கள். எல்லா ஆண்களும் அவரவர் பிள்ளைகளைத் தோளில் உயர்த்தி அமரவைத்துக்கொண்டு நடந்துபோனார்கள்.

‘திருப்பதில மொட்டை அடிச்சிண்டே ஆகணுமாம்மா?’ என்று அம்மாவிடம் கேட்டேன்.

‘அப்படின்னு இல்லே. வேண்டுதல் இருந்தா அடிச்சிக்கலாம்.’

‘பொம்பளைங்களெல்லாம் மொட்டை அடிச்சிண்டு போறாளேம்மா.’

‘அவாளுக்கு எதாவது வேண்டுதல் இருக்கும்.’

‘பாக்க நன்னாவேயில்ல.’

‘அப்படியெல்லாம் சொல்லக் கூடாது விமல். மனுஷாளுக்கு அழகக் குடுக்கறது தலைமுடிதான். அதை பெருமாளுக்கு அர்ப்பணம் பண்றதா நினைச்சிண்டு செய்யறது இது’ என்று அம்மா சொன்னாள்.

‘அப்ப அந்த பாட்டிய பாரு. எண்பது வயசுக்கு மேல இருக்கும். அவ எதுக்கு மொட்டை அடிச்சிண்டிருக்கா? அவ என்ன அழகாவா இருக்கா?’ என்று அண்ணா கேட்டான்.

அம்மா அதிர்ச்சியாகிவிட்டாள். அதற்குப் பிறகு அவள் ஒன்றும் பேசவில்லை. அவனுக்கு என்ன பதில் சொல்லிப் புரியவைக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருப்பாள் என்று தோன்றியது. ஆனால் அம்மாவுக்கு பதிலாக எதுவும் கிடைக்கவில்லை.

நான் அண்ணாவிடம் சொன்னேன், ‘நீ அப்படி கேட்டிருக்கக்கூடாது. அம்மா sad ஆயிட்டா பாரு.’

‘தோணிடுத்தே? கேக்காம என்ன பண்றது?’ என்று அண்ணா சொன்னான்.

சாப்பிட ஏதாவது வாங்கி வருவதாகச் சொல்லிவிட்டுப்போன அப்பா முக்கால் மணி நேரம் கழித்துத் திரும்பி வந்தார். அவர் கையில் இருந்த பொட்டலத்தில் புளியோதரை இருந்தது.

‘ஏதுன்னா?’ என்று அம்மா கேட்டாள்.

‘லைன்ல வரவாளுக்கு ஒரு பிடி பிரசாதமா இதத் தரா. நான் ரெண்டு ரூபா குடுத்தேன். மொத்தமா இப்படி பொட்டலம் கட்டிக் குடுத்துட்டா.’

‘நீங்க கோயிலுக்கா போயிட்டு வரேள்?’

‘இல்லல்ல. கோயில் வாசல்ல விசாரிச்சப்போ தெரிஞ்சிது. சாப்டுங்கோ எல்லாரும்’ என்று சொன்னார்.

நாங்கள் சாப்பிட்டு முடித்து, குழாயில் நீர் பிடித்துக் குடித்தோம். இரவு தங்குவதற்கு அப்பா எந்த இடத்திலும் ஏற்பாடு செய்திருக்கவில்லை. தர்ம சத்திரம் எங்கோ இருக்கிறது என்று அவர் கேள்விப்பட்டிருந்தார். ஆனால் அவரால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படியே தேடிப் போனாலும் வந்திருக்கும் கூட்டத்தில் அங்கே நாங்கள் தங்குவதற்கு இடம் கிடைக்குமா என்று எனக்கே சந்தேகமாக இருந்தது. அப்பா என்ன நினைத்தாரோ. சட்டென்று தன் வேட்டியை அவிழ்த்து அந்த மரத்தடியிலேயே விரித்தார். ‘படுத்துக்கோங்கோ’ என்று சொன்னார்.

‘ஐயோ இந்தக் குளிர்லயா?’ என்று வினோத் அலறினான்.

‘ஒரு ராத்திரிதாண்டா கண்ணு. கார்த்தால மூணு மணிக்கு எழுந்து குளத்துல குளிச்சிட்டு பெருமாள் சேவிக்கப் போயிட்டா, குளிரும் தெரியாது; ஒண்ணும் தெரியாது’ என்று அம்மா சொன்னாள்.

திக்கென்றாகிவிட்டது எனக்கு. மூன்று மணிக்குக் குளத்தில் குளிப்பதா! நான் முடியவே முடியாது என்று சொல்லிவிட்டேன். ‘ஊருக்குப் போய் குளிச்சிக்கறேன்.’

அம்மா ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் மறுநாள் அதிகாலை அம்மாவும் அப்பாவும் குளத்தில்தான் முங்கி எழுந்தார்கள். எங்களை முகம் மட்டும் கழுவிக்கொள்ளச் சொல்லி, அப்பா சூரணம் இட்டுவிட்டார். ‘வாங்கோ’ என்று எங்களை அழைத்துக்கொண்டு கோயிலுக்குப் போனார். ஈரம் சொட்டச் சொட்ட அம்மா அவர் பின்னால் வந்தாள்.

அன்றைக்கு அம்மாவும் அப்பாவும் அங்கப்பிரதட்சிணம் செய்தார்கள். உருட்டிவிடுவதற்காக விஜய்யும் வினய்யும் ஆளுக்கொருவர் முன் நின்றுகொண்டார்கள். வினோத்தும் நானும் சிறுவர்களாகத் தெரிந்தபடியால், காவலாளி எங்களைத் தடுக்கவில்லை. கோவிந்தா கோவிந்தா என்று குரல் கொடுத்தபடி கொத்துக் கொத்தாக ஜனங்கள் அங்கப்பிரதட்சிணம் செய்துகொண்டே போவதைக் கண்டேன். அப்பாவும் அம்மாவும் அவர்களோடு சேர்ந்து உருள ஆரம்பித்தார்கள். அரை இருட்டில் கோயில் தாழ்வாரம் முழுவதும் பாம்புகள் ஊர்வதுபோலத் தோன்றியது. எனக்கு மிகுந்த அச்சமாகிவிட்டது. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஏதோ ஆகிவிடும் என்று தோன்றியது. அப்படியெதுவும் நடந்துவிடக் கூடாதே என்று மனத்துக்குள் வேண்டிக்கொண்டேன்.

பத்து நிமிடத்தில் எல்லாம் முடிந்துவிட்டது. அப்பாவும் அம்மாவும் உருண்டபடி த்வஜஸ்தம்பத்துக்கு அருகே வந்து சேர்ந்ததும் எழுந்து கைகூப்பினார்கள். விழுந்து சேவித்தார்கள். உடனே காவலுக்கு இருந்தவர்கள் எங்களை உள்ளே இழுத்துத் தள்ளினார்கள். கோவிந்தா கோவிந்தா என்று குரலெழுப்பியபடி நாங்கள் சன்னிதியை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தோம். முழு இருளில் வெறும் நெய் விளக்கு வெளிச்சத்தில் பெருமாள் ஒரு ஆளைப்போல நின்றுகொண்டிருந்தார். எந்தக் கணமும் அவர் அடியெடுத்து வைத்து வெளியே வந்துவிடுவார் என்று தோன்றியது. மிஞ்சிப்போனால் இரண்டு விநாடி அல்லது நான்கு விநாடிகள் நாங்கள் சன்னிதியில் நின்றிருப்போம். அதற்குள் மீண்டும் இழுத்து வெளியே தள்ளிவிட்டார்கள்.

‘சேவிச்சியாடா? நன்னா சேவிச்சிங்களா?’ என்று அம்மா எங்கள் நான்கு பேரிடமும் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தாள். சன்னிதியில் எரிந்துகொண்டிருந்த நெய் விளக்கிலிருந்து ஒரு சுடரை எடுத்து அவள் தன் புருவத்தின் மத்தியில் வைத்துக்கொண்டாற்போல் இருந்தாள். என்னவோ, அதுவரை நான் பார்த்திராத ஒரு ஜொலிப்பு அவள் முகத்தில் அன்றைக்கு இருப்பதாகத் தோன்றியது.

லட்டு வாங்கி வருவதாகச் சொல்லிவிட்டு அப்பா நகர்ந்து போனார். நாங்கள் கோயிலுக்கு வெளியே படிக்கட்டில் அமர்ந்திருந்தோம். அண்ணா என்ன நினைத்தானோ, தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து என்னருகே வந்து அமர்ந்துகொண்டான். ‘ரொம்பக் குளிர்றதா?’ என்று கேட்டான். தன் சட்டையைக் கழட்டி என்னிடம் கொடுத்து, அதையும் மேலுக்குப் போட்டுக்கொள்ளச் சொன்னான்.

‘விமல், மொட்டையடிச்சிக்கறது அழகை சமர்ப்பணம் பண்றதெல்லாம் இல்லே. மனுஷாளுக்கு எப்பவுமே ஒரு பாதுகாப்பு உணர்ச்சி உண்டு. பெருமாளுக்கேயானாலும் திரும்பக் கிடைக்கக்கூடிய ஒண்ணத்தான் தானம் பண்ணுவா. பெருமாளே இந்தா எடுத்துக்கோன்னு ஒரு கைய, கால வெட்டிக் குடுத்தா திரும்பக் கிடைக்குமா? கிடைக்காதோல்யோ? அதான் மழுங்க சிரைச்சிட்டாலும் திரும்ப முளைச்சிடும்ன்ற நம்பிக்கைல முடிய குடுத்துடறா’ என்று சொன்னான்.

(தொடரும்)

 

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

15. உடைத்தறிதல்

 

 

ஒரு குப்பை லாரி கவிழ்ந்தாற்போலக் கூட்டம் மொத்தம் மொத்தமாக அந்தப் பெரிய கூடத்துக்குள் வந்து விழுந்துகொண்டே இருந்தது. உள்ளே வருகிறவர்கள் ஒரு பக்கமும், சாப்பிட்டுவிட்டு வெளியே போகிறவர்கள் இன்னொரு பக்கமுமாக இருபுற வாயில்களிலும் நெருக்கித் தள்ளிக்கொண்டே இருந்தார்கள். பந்தியில் இருந்தவர்கள் யாரும் இந்த மோதும் கும்பலைக் கவனிக்கவேயில்லை. அவர்கள் அத்தனை பேருமேகூட அப்படி மொத்தத்தில் வந்து விழுந்தவர்கள்தாம். ஆனாலும் சாப்பிடுகிற இடத்தில் பேசிக்கொண்டிருக்கவோ, வேடிக்கை பார்க்கவோ வழியில்லை. கணம் பிசகினாலும் இலையை எடுத்துப் போட்டுவிட்டுப் புதிய இலையை வைத்துச்செல்லப் பணியாளர்கள் பாய்ந்து பாய்ந்து வந்தார்கள். அப்படிப் புதிய இலை விரிக்கப்படும் இடத்தில் எங்கெங்கிருந்தோ ஆட்கள் எகிறிக் குதித்து வந்து அமர்ந்துகொண்டிருந்தார்கள். பிரம்மாண்டமான பாத்திரங்களை இரண்டிரண்டு பேராக நகர்த்திக்கொண்டே வர, பரிமாறுகிறவர்கள் முறத்தால் சாதமெடுத்து இலைகளை நிரப்பிக்கொண்டே போனார்கள். அதை ஒதுக்கி வைப்பதற்குள், யாரோ பாய்ந்துவந்து சொம்பில் சாம்பார் எடுத்து ஊற்றினார்கள். எல்லாமே அதிகம். எல்லாமே அபரிமிதம். அளந்து போட நேரமில்லாத அவசரம். கொதிக்கக் கொதிக்க இலையில் விழுந்த சாதத்தில் குளம் வெட்டி ஊற்றிய குழம்பைக் கலந்து நாங்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்.

முதலில் அப்பா அமர்ந்திருந்தார். அவருக்கு அடுத்து அண்ணா. அவன் பக்கத்தில் அம்மா. அம்மாவுக்குப் பக்கத்தில் நானும் என்னை அடுத்து வினோத்தும் வினய்யும் இருந்தோம்.

‘திருப்தியா சாப்டுங்கோடா. இங்கல்லாம் சங்கோஜமே கூடாது’ என்று அப்பா சொன்னார்.

‘தர்ம சாப்பாடுன்னாலும் நன்னா பண்றா’ என்றாள் அம்மா.

அன்றைக்குத் திருப்பதியில் நாங்கள் உண்ட உணவு மிகவும் காரமாக இருந்தது. சாம்பாரும் ரசமும் கூட்டும் பொறியலும் மொத்தமாக மிளகாய்ச் சாறில் ஊறவைத்துக் கொண்டு வரப்பட்டது போலிருந்தது. வினோத் விக்கிக்கொண்டே சாப்பிட்டான். வினய், உணவு உண்டதைவிட தண்ணீர் அருந்தியதே அதிகம். ஆனாலும் அது பிரசாதம். திருப்பதிக்கு வந்துவிட்டு ஓட்டலில் சாப்பிடப்போவது மகா பாவம் என்று அப்பா சொன்னார்.

அண்ணா மட்டும் எந்தச் சலனமும் இன்றி பருக்கை பருக்கையாகக் கொறித்துக்கொண்டிருந்தான். உணவு விஷயத்தில் அவன் எப்போதுமே அப்படித்தான் சாப்பிடுவான். ஆள்காட்டி விரலும் நடுவிரலும் கட்டை விரலும் மட்டுமே அவனுக்கு ஈரமாகும். அந்த மூன்று விரல்களால் எடுக்கும் உணவை உதட்டில் படாமல் அண்ணாந்துதான் சாப்பிடுவான். நான் வழித்துச் சாப்பிட்டுவிட்டுக் கை முழுதையும் நக்கி உண்கிறவன். இதற்காக அப்பா எத்தனையோ நாள் என்னைக் கண்டித்திருக்கிறார். ‘ஐயோ எச்சில், எச்சில்’ என்று முகத்தைச் சுளித்துக்கொண்டே சொல்வார். எச்சில்தான். ஆனால் உணவின் ருசி பூரணம் என்பது இறுதியாக நக்கித் தின்பதில்தான் உள்ளதென்பது என் கருத்து. இன்று வரையிலுமே நான் அப்படித்தான்.

அன்றைக்கு எங்களோடு அந்தப் பந்தியில் உட்கார்ந்தவர்கள் சாப்பிட்டு முடித்து எழுந்து சென்று அடுத்தப் பந்தி ஆரம்பமான பின்பும் நாங்கள் சாப்பிட்டுக்கொண்டே இருந்தோம். வாழ்நாளில் என்றுமே அத்தனை சாதம் இலையில் விழுந்து நாங்கள் பார்த்ததில்லை. அம்மா உண்மையில் மிரண்டுபோனாள். ‘என்ன இவா, ஒருத்தர் இலையிலே ஒம்பது பேருக்குப் போடறா?’ என்று சொன்னாள்.

‘கும்பலைப் பாரு. இங்கல்லாம் அளந்து போட்டுண்டிருக்க முடியுமா? படியளக்கறவன் கொண்டுவந்து கொட்டிண்டே இருக்கான். அப்பறம் பரிமாறுறவனுக்கு என்ன கஷ்டம்?’ என்றார் அப்பா.

எங்களுக்கு உண்மையிலேயே அந்த அனுபவம் மிகவும் பிரமிப்பாக இருந்தது. இலவசமாகக் கிடைக்கிற உணவு. அதுவும் தரமான உணவு. அளவில்லாத உணவு. யார் வேண்டுமானாலும் வரலாம். உட்கார்ந்து சாப்பிடலாம். எழுந்துபோய் கை கழுவிக்கொண்டு மீண்டும் வரிசைக்குப் போய் நின்றால், அடுத்த வேளை உணவுக்குள் வரிசை நகர்ந்து உள்ளே வந்துவிடும். அப்போது மீண்டும் உட்கார்ந்து சாப்பிடலாம். ஏன் திரும்ப வந்தாய் என்று யாரும் கேட்கப்போவதில்லை. முகங்களல்ல. வயிறுகளும் பசியும் மட்டுமே முதன்மை பெறுகிற இடம்.  சந்தேகமில்லாமல் அது ஒரு சிறப்பான ஏற்பாடுதான்.

ஊருக்குத் திரும்பி, திருப்பதிக்குப் போய்வந்த கதையைப் பிரசாதத்துடன் சேர்த்து, பார்க்கிற அத்தனை பேரிடமும் அம்மா சொல்லிக்கொண்டிருந்தாள். பெருமாள் சேவித்ததைவிட அந்த தரும உணவுச் சத்திரத்தைப் பற்றித்தான் அவள் அதிகம் பேசினாள்.

‘சாதத்தை மலையா பாத்தேன் மாமி! சந்தேகமில்லாம பெருமாள் அதுலதான் இருந்தார்!’

அதைத்தான் வினய் எங்களுக்கு நினைவூட்டினான். ‘அவன் திருப்பதில நம்மளோடல்லாம் பேசவேயில்லைடா. யோசிச்சிப் பாருங்கோ ரெண்டு பேரும். தனியா தனக்குத்தானே என்னமோ யோசிச்சிண்டே இருந்தான். அப்பவே எனக்கு அவன்மேல சந்தேகம்தான்’ என்று வினய் சொன்னான்.

ஆனால் எனக்கென்னவோ வெறும் சோற்றுக்காக அவன் திருப்பதிக்குப் போயிருப்பான் என்று நினைக்கவே கஷ்டமாக இருந்தது. வினய்க்கும் சரி, வினோத்துக்கும் சரி. நான் அதைச் சொல்லிப் புரியவைக்கவே முடியாது. நீ சின்னப் பையன், உனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் சின்னப் பையனிடம்தான் அண்ணா தன் மனத்தைத் திறந்து காட்டியிருக்கிறான். முழுதாக இல்லாவிட்டாலும் பகுதியளவுக்கு. அவன் சொன்ன பல விஷயங்களை என்னால் திரும்ப நினைவுகூர்ந்து அவர்களிடம் சொல்ல முடியுமா என்று சந்தேகமாக இருந்தது. சொன்னால் வரக்கூடிய சிக்கல்கள் வேறு. ஆனால் சொல்லத்தான் முடியுமா?

ஒரு சம்பவம். அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. அப்பாவுக்கு விடுமுறை. என்ன நினைத்தாரோ, பரணில் ஏறி பெட்டியை எடுத்துக் கீழே வை என்று அண்ணாவிடம் சொன்னார். அண்ணாவின் நாடிச் சுவடி வீட்டுக்கு வந்திருக்காத காலம் அது. அண்ணா, புத்தக அலமாரியின் மீது கால் வைத்து ஏறி நின்று அப்பாவின் டிரங்குப் பெட்டியைக் கீழே இறக்கிக் கொடுத்தான். வினய்யும் நானும் சேர்ந்து பிடித்து அதைத் தரையில் வைத்தோம். அப்பா ஆர்வமுடன் பெட்டியைத் திறந்து வைத்துக்கொண்டு குடைவதற்கு உட்கார்ந்தார்.

அப்பாவின் டிரங்குப் பெட்டி ஒரு பெரும் சுரங்கம். அனைவருக்கும் தெரிந்த வெள்ளிப் பாத்திரங்கள், பட்டுப் புடைவை, பட்டு வேட்டிகளைத் தவிரவும், அதில் எப்போதும் புதிதாக ஏதேனும் ஒரு பொருள் வியப்பதற்கு இருந்துகொண்டே இருக்கும். அவர் ஒவ்வொன்றாக எடுத்து தூசு தட்டிக் கீழே வைத்துக்கொண்டே இருக்க, நாங்கள் அதை எடுத்து எடுத்துப் பார்த்துக்கொண்டே இருப்போம். பழைய டைரிகள், அந்தக் காலத்துக் காசுகள், பாக்கு வெட்டி, திருமண் பெட்டி, அப்பாவின் அம்மா, நாங்கள் பார்த்தேயிராத எங்கள் பாட்டியின் அறுபதாம் கல்யாண போட்டோ என்று எடுக்க எடுக்க என்னவாவது வந்துகொண்டே இருக்கும். ஒவ்வொரு பொருளை வெளியே எடுத்து தூசு தட்டும்போதும் அப்பா அது தொடர்பான கதையொன்றைச் சொல்லுவார். சில சமயம் அந்தக் கதை சுவாரசியமாக இருக்கும். சில சமயம் ஆர்வம் தூண்டாது. ஆனால் அத்தனையும் சரித்திரம். அதில் சந்தேகமில்லை.

அவர் வழக்கம்போல் ஒவ்வொரு பொருளாக எடுத்து வெளியே வைத்துக்கொண்டிருக்கும்போது அண்ணா சட்டென்று பெட்டிக்குள் கையைவிட்டு அடியில் எதையோ அவனே வைத்ததுபோல வெளியே எடுத்தான். ஒரு சிறிய துணி முடிப்புக்குள் கோலிக் குண்டுகள்போல இரண்டு பொருள்கள் உருண்டன.

‘ஏய் ஏய்.. ஜாக்கிரதை. அது சாளக்கிராமம்’ என்று அப்பா சொன்னார்.

எங்கள் வீட்டு பூஜையில் நான்கு சாளக்கிராமங்கள் உண்டு. கரேலென்று உருண்டு திரண்ட கற்கள். மொழுமொழுவென்று நாவற்பழத்தை நிகர்த்த கற்கள். அதில் ஒன்று லஷ்மி நரசிம்மர். இன்னொன்று திருப்பதி வெங்கடாசலபதி. மூன்றாவது மகாலட்சுமி. நான்காவது என்னவென்று தெரியவில்லை என்று அப்பா சொல்லுவார்.

‘அது வெறும் கல்லு இல்லே விமல்! உடைச்சிப் பார்த்தா உள்ளே பெருமாள் இருப்பார். ஆனா உடைக்கறது தப்பு. யாரும் செய்ய மாட்டா’ என்று அம்மா சொல்லியிருக்காள்.

 

‘உடைச்சிப் பாக்காம இந்தக் கல்லுல இந்தப் பெருமாள்தான் இருக்கார்னு எப்படித் தெரியும்?’ என்று வினய் ஒரு சமயம் கேட்டிருக்கிறான்.

‘அதெல்லாம் சிலருக்குத் தெரியும். ரொம்ப பெரியவா, மகான்கள் கரெக்டா சொல்லிடுவா.’

‘அதெல்லாம் சும்மா’ என்று அண்ணா சொன்னான்.

‘அப்படியெல்லாம் பேசக் கூடாது’ என்று அவனை அடக்கிவிட்டு அம்மா போய்விட்டாள். அதன்பின் அந்தப் பேச்சு வீட்டில் எழுந்ததில்லை.

இப்போது பூஜையில் இருக்கும் நான்கு சாளக்கிராமங்கள் தவிர, இன்னும் இரண்டு அப்பாவின் டிரங்குப் பெட்டியில் இருக்கிற விஷயம் தெரியவந்திருக்கிறது. நல்லது. இந்த சாளக்கிராமங்களுக்குள் இருக்கும் பெருமாள் யார்?

நான் அப்பாவிடம் கேட்டேன். அவர் சற்று நேரம் யோசித்துவிட்டு, ‘தெரியலடா. இது எங்கப்பாவோட அப்பா காலத்து சாளக்கிராமம். எங்கப்பா பூஜைல வெச்சிருந்தார்னு நினைக்கறேன். என்னமோ என் காலத்துல அது தொடரலே’ என்று அப்பா சொன்னார்.

அன்றைக்கு மதியம் வரை பெட்டியைக் குடைந்துவிட்டு, போதும் என்று அப்பா அதை மூடிவிட்டார். ‘எடுத்து மேலே போட்டுடுடா’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். நாங்கள் மூவரும் உதவி செய்ய, அண்ணாதான் மீண்டும் அதைப் பரணில் ஏற்றினான். அன்றைக்கு மதியம் நாங்கள் சாப்பிட உட்காரவே மூன்று மணி ஆகிவிட்டது. அலுப்பில் அனைவரும் படுத்துவிட்டார்கள். எனக்குத் தூக்கம் வராமல் கிணற்றடிக்குப் போய் உட்கார்ந்துகொண்டு வீட்டுப் பாடம் படிக்க ஆரம்பித்தேன்.

சற்று நேரத்தில் அண்ணா அங்கு வந்தான். வழக்கத்துக்கு மாறாக அவன் முகத்தில் ஒரு புன்னகை இருந்தது. ஏதோ ரகசியம் பதுக்கிய புன்னகை.

‘என்னடா?’ என்று கேட்டேன்.

உள்ளங்கையை விரித்துக் காட்டினான். ஒரு சாளக்கிராமம் இருந்தது.

எனக்கு அச்சமாகிவிட்டது. ‘ஐயோ அப்பா திட்டுவா’ என்றேன்.

‘அப்பாக்குத் தெரியாது. அந்தப் பெட்டில இருந்த ரெண்டுல ஒண்ணு இது’ என்று அண்ணா சொன்னான்.

நான் அதை வாங்கி உற்றுப் பார்த்தேன். எந்த வித்தியாசமும் இல்லை. கறுப்பு நிறத்தில் சற்றே நீண்ட ஒரு கூழாங்கல்லைப்போல இருந்த சிறிய சாளக்கிராமம். ஒரு பக்கம் சற்று நசுங்கியிருந்தது. நசுங்கலின் மறுபுறம் பூச்சி அரித்தாற்போல ஒரு சிறு துவாரம் இருந்தது.

‘டேய் இதையெல்லாம் நாம தொடக் கூடாதுடா. குளிக்காம பூஜைகூடப் பண்ணக் கூடாதுன்னு அம்மா சொல்லுவாளே’ என்றேன்.

‘பெருமாளுக்கு தோஷம் கிடையாது விமல். அதெல்லாம் நாமளே நினைச்சிக்கறது’ என்று அண்ணா சொன்னான். ‘இதுக்குள்ள இருக்கற பெருமாளுக்கு நான் தொட்டது பிடிக்கலேன்னா இவ்ளோ நேரம் வெளிய வந்து சொல்லியிருப்பார். இல்லேன்னா என் கைய விட்டுப் போயிருப்பார்.’

‘ஆனா இது என்ன பெருமாள்னு தெரியலன்னு அப்பா சொன்னாளே!’

அண்ணா சிறிது நேரம் அந்த சாளக்கிராமத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு, ‘நான் சொல்லட்டுமா?’ என்று கேட்டான்.

‘உனக்குத் தெரியுமா?! நிஜமாவா!’

‘சொல்றேன். இது ரங்கநாதர். சயன கோலம்’ என்று சொன்னான்.

என்னால் அதை நம்ப முடியவில்லை. ‘சும்மா சொல்றே’ என்று சொன்னேன்.

அவன் என்ன நினைத்தானோ. உள்ளே சென்று ஒரு சுத்தியலை எடுத்து வந்தான்.

‘ஐயோ வேணாம்டா. இதெல்லாம் தப்பு’ என்று நான் அலறினேன்.

உஷ்ஷ் என்று என்னை அடக்கிவிட்டு, சாளக்கிராமத்தைக் கீழே வைத்தான். யாராவது வருகிறார்களா என்று சுற்றி ஒரு பார்வை பார்த்துக்கொண்டு அதன்மீது ஓங்கி ஓரடி அடித்தான். எனக்கு உயிரே போய்விடும்போலிருந்தது. இது மகா பாவம். இவன் ஏன் இப்படியெல்லாம் முட்டாள்தனம் செய்கிறான்? என்ன ஆயிற்று இவனுக்கு?

அந்தக் கல் இரண்டாகப் பிளந்துகொண்டது. அண்ணா என்ன நினைத்தானோ. கண்ணை மூடிக்கொண்டு அதைத் தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டான். கையில் எடுத்து வைத்துக்கொண்டு இறுக்கி மூடி நெஞ்சோடு அமர்த்திக்கொண்டான். நான் பார்த்துக்கொண்டே இருந்தபோது தனது உள்ளங்கையை விரியத் திறந்து, ‘இப்போ பார்’ என்று சொன்னான்.

நான் நடுங்கும் கரத்தை உயர்த்தி அவன் கையில் இருந்த சாளக்கிராமத் துண்டுகளை எடுத்து உற்றுப் பார்த்தேன். பிளந்த இடத்தின் மடிப்பில் ஓர் உருவம் தெரிந்தது. மிகச் சிறிய உருவம்தான். ஆனால் படுத்த வாக்கில் இருந்தது. கண்ணோ, மூக்கோ, கரங்களோ, தேகமோ, காலோ வேறெதுவுமோ தெரியவில்லை. ஓர் உருவம். மொத்தமாக ஓர் உருவம். ஆனால் சந்தேகமின்றி அது படுத்த உருவம்.

‘பெருமாளே!’ என்று என்னையறியாமல் குரல் கொடுத்தேன். கைகூப்பி நின்றுகொண்டேன். எனக்கு உடலெங்கும் உதற ஆரம்பித்துவிட்டது. கழுத்தில் வியர்த்து சட்டைக்குள் இறங்கியது. நம்பவே முடியாமல் அண்ணாவிடம் கேட்டேன், ‘அன்னிக்கு மகான்களுக்குத் தெரியும்னு அம்மா சொன்னப்போ அதெல்லாம் சும்மான்னு சொன்னியே? இன்னிக்கு நீ எப்படிடா உள்ள இருக்கறவர் ரங்கநாதர்னு சொன்னே?’

அண்ணா சொன்னான், ‘தெரியலேடா விமல். மனசுல பட்டுது. இந்தக் கல்லுக்குள்ள இருக்கற உருவம் கண்ணுக்குத் தெரிஞ்சிதுடா!’

(தொடரும்)

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

16. நூற்று எண்பத்து ஒன்பது தெய்வங்கள்

 

போபாலுக்கு வந்து ரயில் ஏறுவதற்கு முன்னால், கேசவன் மாமாவுக்கு போன் செய்தேன். ஏன் செய்யத் தோன்றியது என்று தெரியவில்லை. அவர் தந்தி கிடைத்த நேரம் புறப்பட்டிருந்தால் இந்நேரம் திருவிடந்தையில் இருந்திருக்கலாம். என்னையறியாமல் எப்படி அண்ணாவைத் தேடிக் கிளம்பினேன் என்று எத்தனை யோசித்தும் காரணம் விளங்கவில்லை. நான் விரும்பாமலேயே ஊருக்குப் போவதைத் தள்ளிப்போட நினைத்தேனா என்று எண்ணிப் பார்த்தேன். மரணத்துக்கான காத்திருப்பைப்போல் அருவருப்பான விஷயம் வேறில்லை. அம்மாவானால் என்ன, வேறு யாரானால் என்ன? மரணம் பூரணமானது. அமைதியும் நிச்சலனமும் கொண்டது. இரவின் அபூர்வ ரகசியங்களை நிகர்த்தது. ஆனால் அதற்காகக் காத்திருப்பதன் குரூரம் மிகவும் ஆபத்து.

நான் வளர்ந்த குருகுலத்தில் ஒரு சமயம் சாதுர்மாஸ்ய விரதம் இருக்கலாம் என்று யாரோ சொன்னார்கள். அதெல்லாம் எங்களுக்கு வழக்கமில்லாதது. பூஜை புனஸ்காரங்களுக்கு எதிரான மனநிலை கொண்ட ஒரு குருநாதரை நான் மிகவும் சிரமப்பட்டுத் தேடிக் கண்டடைந்திருந்தேன். வரலாறும் ஆன்மிகமும் தத்துவமும் விசாரங்களும்தான் எங்களை அங்கே செலுத்திக்கொண்டிருந்தவை. நானறிந்து மருந்துக்கும் அங்கே ஒருநாள் மணியடிக்கும் சத்தம் கேட்டதில்லை. பூஜைகள், விரதங்கள், பஜன் என்று நாள்களைக் கொன்றதில்லை. தெய்வம் ஒன்று என்ற கொள்கைக்கு குருநாதர் முற்றிலும் எதிரானவராக இருந்தார். அவர் கணக்கில் மொத்தம் நூற்று எண்பத்தி ஒன்பது தெய்வங்கள் உண்டு. ஆனால் அவற்றுக்குப் பெயர்கள் கிடையாது. உருவம் கிடையாது. குரு ஒவ்வொரு தெய்வத்தையும் நம்பர் கொடுத்து அழைப்பார். திடீரென்று ‘இந்தப் பதினேழு ரொம்பப் படுத்துகிறான். அவனைக் கொஞ்சம் தட்டிவைக்க வேண்டும்’ என்பார். ‘எண்பத்தாறுக்கு இன்று என்னவோ ஆகிவிட்டது. விடிந்ததிலிருந்து விதவிதமாக ஆடிக்கொண்டே இருக்கிறான். ஆடும்போது ஒருத்தனுக்கு அரிப்பெடுத்தால் எவ்வளவு சிரமம்! இடது காலைப் பின்னால் வளைத்து, கழுத்தைச் சொறிந்துகொள்கிறான். பார்க்கவே தமாஷாக இருந்தது’ என்பார்.

‘முகத்தைப் பார்த்தீர்களா குருஜி?’

‘முண்டக்கலப்பைக்கு முகம் ஏது?’ என்று குரு சொன்னார். ஆனால் எண்பத்தியாறு தனது இடது காலைப் பின்புறம் வளைத்து கழுத்து வரை உயர்த்தி சொறிந்துகொண்டதை அவர் கண்டிருக்கிறார். அது பிரமையல்ல. கற்பனையல்ல. சும்மா கதை விடுவதல்ல. தான் காணாத ஒன்றை அவர் ஒருபோதும் சொல்லமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு ஆழமாக இருந்தது. நூற்று எண்பத்தொன்பது தெய்வங்களுடனும் அவர் நேரடித் தொடர்பில் இருந்தார். அவரது தெய்வங்களுக்கு மொழி கிடையாது. எப்படி முகமில்லையோ அப்படி. அவற்றுக்குப் பசி உண்டு. தாகம் இருக்காது. உறக்கமும் விழிப்பும் உண்டு. ஆனால் காலம் கிடையாது. இரவு பகல் அறியமாட்டார்கள். அவர்களது உடலுறுப்புகளில் மூளை என்ற ஒன்று இருக்காது. ஆனால் மனம் உண்டு. அது ஓர் உறுப்பாகவே செயல்படும் என்று குருஜி சொல்லுவார்.

‘மொழியற்ற அவர்களுடன் நீங்கள் எப்படி உரையாடுவீர்கள்?’

‘மொழியை விலக்கிச் சிந்திக்கும்போது தெய்வங்களுக்குப் புரியும்’ என்பார் குருஜி.

மொழியை விலக்கிச் சிந்திப்பது! எத்தனை உன்னதமானதொரு கலை! முடியுமா அது? யாருக்கு சாத்தியமாகியிருக்கிறது? சொல்கிறாரே தவிர, குருஜிக்கு மட்டும் கைகூடியிருக்குமா என்ன?

‘மொழி பிறப்பதற்கு முன்னால் சித்திரங்கள் பேசவில்லையா விமல்? அதற்கும் முன்னால் சைகைகள் உதவவில்லையா? சைகைக்கும் முன்னால் சிந்தனையே அந்தப் பணியை நிகழ்த்தியிருக்கும் என்பது உண்மையானால், சிந்தனைக்கு முன்னால் சிந்திக்காதிருப்பதே அதைச் செய்திருக்கும்.’

நான் அவரை முற்றிலும் புரிந்துகொள்ள மேற்கொண்ட முயற்சிகளைக் குறித்தும் தெளிந்த கணத்தைக் குறித்தும் பிறிதொரு தருணத்தில் விவரிக்கிறேன். இங்கே சொல்லவந்தது மரணத்துக்கான காத்திருப்பைக் குறித்து. அதற்கு முன்னால் அந்த சாதுர்மாஸ்ய விரதத்தைக் குறித்து.

அந்தப் பையன் எங்கள் குருகுலத்துக்குப் புதிதாக வந்து சேர்ந்தவன். வேதம் தெரிந்த குருநாதர். உபநிடதங்களில் கரை கண்ட மனிதர். பார்க்கும்போதே அவரது நெற்றிப்பொட்டிலிருந்து ஞானச்சுடர் புறப்பட்டு வந்து தன்னைத் தழுவிக்கொள்வதாக அவனுக்குத் தோன்றியிருக்க வேண்டும். எப்படியாவது இவரிடமிருந்து மொத்த சொத்தையும் சுரண்டி எடுத்துக்கொண்டுபோய் எங்காவது மடம் கட்டிக்கொண்டு உட்கார்ந்துவிடலாம் என்று நினைத்திருப்பானோ என்னவோ. வந்த முதல் நாளில் இருந்தே அவன் தீயை மிதித்த பரபரப்பிலேயே இருந்தான். அதிகாலை மூன்றரைக்கு எழுந்து குளிப்பது, ஜபதபங்கள் செய்வது, ஒன்றரை மணி நேரம் தியானத்தில் உட்கார்வது, பிறகு தோட்ட வேலை செய்வது, தண்ணீர் இறைப்பது, குருஜியின் துணிகளைத் துவைத்துப்போடுவது, சாப்பாட்டுக்கு இலைகள் நறுக்கிவைப்பது, குருகுல வளாகத்தை சுத்தமாகப் பெருக்கி மெழுகுவது என்று யாரும் சொல்லாமல் எல்லா வேலைகளையும் தானே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்துகொண்டிருந்தான். குருவுக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது. ‘விமல் அவனை கவனித்தாயா? உன்னைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுத்தான் எழுபத்தியாறு அவனை உருவாக்கியிருக்கிறான்’ என்று சிரித்துக்கொண்டே சொல்வார்.

எப்படி அவனது சுறுசுறுப்பு அவருக்குப் பிடித்திருந்ததோ, அதேபோலத்தான் எனது சோம்பலும் அவரது விருப்பத்துக்குரிய ஒன்றாக இருந்தது. குருகுலத்தில் இருந்த காலத்தில் நான் ஒன்பது மணிக்குக் குறைந்து படுக்கையை விட்டு எழமாட்டேன். ‘இதென்ன சோம்பேறி மடமா?’ என்று அங்கிருந்த அத்தனை பேரும் திட்டுவார்கள். எரிந்து விழுவார்கள். காமேஷ் ஒருமுறை ஒரு சோடா கம்பெனியில் சொல்லிவைத்து ஒரு பாறையளவு பெரிய ஐஸ் கட்டியைத் தருவித்து, உடைத்து, என் போர்வையை உரித்துக் கொட்டி என்னை கதிகலங்க வைத்திருக்கிறான்.

‘அவனை விட்டுவிடு. அவன் தூங்கட்டும்’ என்றுதான் அப்போதும் குருஜி சொன்னார். ‘விழிப்பு நிலை கற்பிக்காத பலவற்றை உறக்கம் சொல்லித்தரும்.’

இதே மனநிலையில்தான் அவர் அந்தப் பையன் கேட்ட சாதுர்மாஸ்ய விரதத்தைக் கடைப்பிடிக்க ஒப்புக்கொண்டார். எங்களுக்கெல்லாம் அது பெரும் அதிர்ச்சி. குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்ளும் விரதங்களும், திடீர் ஒழுக்க நியமங்களும் ஆன்மிக முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய தடை என்று அவர் அடிக்கடி சொல்லுவார். ‘ஒழுக்கமோ ஒழுக்கமின்மையோ, ஏதேனும் ஒன்றில் முழுமை வேண்டும். நியமங்கள் அல்ல. முழுமைதான் பரம்பொருளுக்குப் பாலம்’ என்பார்.

அந்த ஆண்டு வேறு வழியின்றி நாங்களும் விரதம் கடைப்பிடிக்க முடிவு செய்து, மொத்தமாக துங்கபத்திரை நதிக்கரைக்குப் பயணமானோம். நான்கு மாதகாலப் பயணம். நதிக்கரை வாசம். மழையோ, வெயிலோ. அந்த நான்கு மாதங்களும் வெட்டவெளியில் மட்டுமே படுப்பது, பிச்சை எடுத்து மட்டுமே உண்பது என்று குரு சொல்லியிருந்தார். அந்தப் புதிய பையனுக்கு இது மிகுந்த மகிழ்ச்சியையும் பரவசத்தையும் அளித்தது. ஒரு மாறுபட்ட அனுபவத்துக்கு அவன் தன்னைத் தயார் செய்துகொண்டான். ஆனால், கிளம்பும்போது குருஜி ஒரு உத்தரவிட்டார். ‘காஷாயம் வேண்டாம். எல்லோரும் வெள்ளை பைஜாமா, குர்த்தா அணிந்தால் போதும்.’

‘புரியவில்லை குருஜி!’ என்று அவன் நெருங்கி வந்து கேட்டான்.

‘நம் விரதத்தை நாம் காவி துறந்து தொடங்குகிறோம்’ என்று குருஜி சொன்னார். அவனால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை. ‘இதென்ன குருகுலமா அல்லது பைத்தியக்காரர்களின் கூடாரமா?’ என்று ஆவேசமாகக் குரல் எழுப்பி, அன்றைக்கே அவன் எங்கள் குருகுலத்தை விட்டு விலகிப்போனான்.

குருஜி புன்னகை செய்தார். ‘நல்லது குழந்தைகளே. நம் திட்டம் மாறுதல் இல்லாதது. நாம் சாதுர்மாஸ்ய விரதம் கடைப்பிடிக்கப்போகிறோம். கிளம்பலாம்’ என்று சொன்னார்.

 

ஷிமோகாவுக்கு வடக்கே பத்து கிலோ மீட்டர் தொலைவில் குருஜி ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்திருந்தார். ஒரு சிறிய கிராமம் அது. நதிப்படுகை எங்கும் தென்னையும் வாழையும் அடர்த்தியாக வளர்ந்து நிறைந்திருந்த பகுதி. பக்கத்தில் ஒரு பெரிய கோழிப் பண்ணை இருந்தது. நாளெல்லாம் கோழிகளின் கொக்கரிப்புச் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. தவிரவும் அந்தக் காற்றில் கோழித்தீவன வாடை எப்போதும் கலந்திருந்தது. நான்கு மாதங்கள் எப்படி அதைச் சகித்துக்கொண்டு அங்கே இருக்கப்போகிறோம் என்று எனக்கு அச்சமாக இருந்தது. ‘பழகிவிடும்’ என்றார் குருஜி. அவர் ஏற்கெனவே அந்தக் கிராமத்து மக்களுக்குத் தெரிந்தவராக இருந்தார். எமர்ஜென்சி அமலுக்கு வந்தபோது, அவர் அந்தக் கிராமத்தில்தான் தங்கியிருந்ததாக ஊர்க்காரர்கள் சொன்னார்கள்.

‘தலைமறைவாகியிருந்தீர்களா!’ என்று கேட்டேன்.

‘ஆம். கட்டாயத் தலைமறைவு. ஜனதாக்கார நண்பர் ஒருவரைக் காப்பாற்றவேண்டி இருந்தது. அவருக்காக இங்கே வந்து தங்கினேன்’ என்று குரு சொன்னார். அது எனக்கு வியப்பாக இருந்தது. அவருக்கு அரசியல் நண்பர்கள் இருக்கக்கூடும் என்று நான் எண்ணிப் பார்த்ததில்லை. நானறிந்து நண்பர் என்று சொல்லிக்கொண்டு அவரைப் பார்க்க யாருமே எங்கள் இருப்பிடத்துக்கு வந்ததில்லை. எப்போதும் மாலை வேளைகளில் நடக்கும் வேதாந்த வகுப்புகளில் கலந்துகொள்ள ஏழெட்டுப் பேர் வருவார்கள். வகுப்பு முடிந்ததும் விழுந்து கும்பிட்டுவிட்டு எழுந்துபோவார்கள். பிரபலமற்ற ஒரு துறவியைப் பொதுவாக யாரும் பொருட்படுத்துவதில்லை. பூச்சுகளற்ற மேதைமையின் இருப்பிடம் புவியின் பரப்பில் வெகு சொற்பமே.

அந்த நான்கு மாதங்களில் அவரது அன்று வரையிலான வாழ்க்கையைக் குறித்து முழுதும் கேட்டுத் தெரிந்துகொண்டுவிடுவது என்று முடிவு செய்துகொண்டேன். துரதிருஷ்டவசமாக, அந்தக் கிராமத்துக்கு நாங்கள் போய்ச் சேர்ந்த நான்காம் நாள் மாலை அவருக்கு உடல் நலன் கெடத் தொடங்கியது. முதலில் சாதாரணக் காய்ச்சல் போலத்தான் இருந்தது. பிறகு அதுவே வீரியம் கொண்டு நாளெல்லாம் ஓயாமல் சுட்டுத் தீர்த்தது. மெலிந்த தேகமும் குழி விழுந்த கண்களும் ஒடுங்கிய முகவாயும் கொண்ட குருஜி, அந்தக் காய்ச்சல் காலத்தில் தனக்கு உணவு வேண்டாம் என்று சொல்லிவிட்டது பெரும் சிக்கலாகிப்போனது.

‘குருஜி, அடம் பிடிக்காதீர்கள். கொஞ்சம் சாப்பிடுங்கள். இல்லாவிட்டால் மருந்துகள் வேலை செய்யாது.’

‘நான் விரதத்தில் இருக்கிறேன். நானே போய்க் கையேந்திப் பிச்சை எடுக்காத உணவை என்னால் சாப்பிட முடியாது’ என்று சொன்னார்.

‘உங்கள் நாற்பத்தி ஏழு, உங்கள் சார்பாக என்னைப் பிச்சை எடுத்து வரச்சொல்லி சொன்னார்.’

‘அவன் கிடக்கிறான், நான் அவனைப் பொருட்படுத்துவதில்லை. சரியான சந்தர்ப்பவாதி’ என்று சொல்லிவிட்டார்.

முதல் சில தினங்கள் நாங்கள் அவரைக் கட்டாயப்படுத்தி காய்ச்சலுக்கு மருந்து உட்கொள்ள வைத்தோம். ஏழாம் நாள் அவர் கூடாது என்று சொல்லிவிட்டார். எத்தனை மன்றாடியும் ஏற்க மறுத்தார். முன்னர் செய்த தீர்மானத்தின்படி, வெட்டவெளியிலேயேதான் படுத்திருந்தார். நாங்கள் கெஞ்சியும் கதறியும் பார்த்தும் பலனின்றிப்போனது. ஒரு குடில் அல்லது கூடாரம்கூடப் போடக் கூடாது என்று சொல்லிவிட்டார்.

அன்றைக்கு இரவு பேய் மழை அடித்தது. ஆற்றங்கரை மணல் வெளியெங்கும் சேறும் சகதியுமாகிப்போனது. தாக்குப்பிடிக்க முடியாத எங்களில் பலர், கோழிப் பண்ணைக்குள் போய் ஒளிந்துகொண்டு குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். குருஜி படுத்த இடத்தில் இருந்து எழவேயில்லை. முழு இரவும் கொட்டித் தீர்த்த மழைக்குத் தன்னைத் தின்னக் கொடுத்துவிட்டு, மறுநாள் காலை என்னை அழைத்துச் சொன்னார்:

‘விமல், விரைவில் நான் இறந்துவிடுவேன். எனக்கு ஒரு கடன் பாக்கி இருக்கிறது. அதை மட்டும் எனக்காக நீ தீர்க்க வேண்டும். அவசரமில்லை. உன் காலம் முடிவதற்குள் தீர்த்தால் போதும்.’

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

17. ஒரு கோப்பை நெய்

 

 

அவர் இறந்துவிடுவார் என்று எனக்கு அப்போது தோன்றவில்லை. நோயின் கடுமை மரணத்தை எண்ணிப்பார்க்க வைக்கக்கூடும் என்பதை அறிவேன். ஆனால் ஒரு காய்ச்சல், அது எத்தனை தீவிரமாக இருந்தாலும் உயிரைப் பறிக்காது என்று நினைத்தேன். குருவிடம் அதனைச் சொல்லவும் செய்தேன். அவர் எனக்கு பதிலேதும் சொல்லவில்லை. ஆனால் குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும் சொன்னார், ‘நான் இறந்துவிடுவேன். அதற்குமுன் உன்னிடம் சற்றுப் பேச வேண்டும்.’

என்னவோ தோன்றியது. இந்த மனிதரைச் சற்று அலைக்கழித்துப் பார்த்தால்தான் என்ன? தனது இறுதிச் சொற்களை எனக்களிக்க அவர் முடிவு செய்திருந்ததைப் புரிந்துகொண்டேன். அப்படியானால், அவரது இறுதியைத் தீர்மானிப்பவன் நானாக அல்லவா இருப்பேன்? நான் அதைத் தள்ளிப்போட முடிவு செய்துகொண்டேன்.

‘குருஜி, நீங்கள் ஒழுங்காக உணவு உட்கொள்ளவும் மருந்து எடுத்துக்கொள்ளவும் கூடாரத்துக்குள் வந்து படுக்கவும் ஒப்புக்கொண்டாலொழிய நான் உங்களோடு பேசப்போவதில்லை; நீங்கள் சொல்வதைக் கேட்கப்போவதுமில்லை’ என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டேன். அவர் என்னை வற்புறுத்தவில்லை. என்னை சமாதானப்படுத்தி அழைத்துவரச்சொல்லி யாரையும் அனுப்பவுமில்லை. ஆற்றுப்படுகையில் விரித்த கோரைப் பாயில் அவர் படுத்திருந்தார். வானம் மட்டுமே உலகமென்பதுபோல.

சீடர்கள் அவரைச் சுற்றி அமர்ந்து, கவலையுடன் ஏதேதோ கேட்டுக்கொண்டிருந்தார்கள். உணவு வேண்டாம்; பழங்கள் மட்டுமாவது எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லிப் பார்த்தார்கள். அவர் அதையும் மறுத்தார். இரண்டு பேரைப் பிடித்துக்கொள்ளச் சொல்லி, தானே தடுமாறி எழுந்து ஆற்றில் இறங்கி அவ்வப்போது இரண்டு கை நீரள்ளிப் பருகிவிட்டு வந்து மீண்டும் படுத்துக்கொண்டார். பசியால் அவர் இறக்கமாட்டார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் மட்டுமல்ல. எங்கள் குருகுலத்தில் பயின்ற அனைவருக்குமே பசியை வெல்லும் கலை தெரியும். குருஜி எங்களுக்கு முதலில் சொல்லிக்கொடுத்தது அதனைத்தான்.

‘ஆன்மிகம் என்றில்லை. எதில் நாம் முன்னேற நினைத்தாலும் முதலில் வயிற்றைப் பற்றிய நினைவுக்கு விடைகொடுத்தாக வேண்டும்’ என்று குருஜி சொல்வார்.

ஆசிரமத்தில் வசிக்கிறவர்கள் தினமும் விடிந்து எழுந்ததும் ஒரு ஸ்பூன் நெய் அருந்த வேண்டும் என்பதை குருஜி ஒரு கட்டாய விதியாக வைத்திருந்தார். பத்து நிமிடங்களுக்குப் பிறகு காலைக்கடன் முடித்துவிட்டு ஒரு லிட்டர் வெதுவெதுப்பான நீரை அருந்தி முடிக்க வேண்டும். இதற்கு அரை மணி நேரம் கழித்து அவரே ஒவ்வொருவரையாக அழைத்து வேப்பிலை, திப்பிலி, மிளகு வைத்து அரைத்த ஒரு சூரணத்தைக் கொடுத்து விழுங்கச் சொல்லுவார். அந்தக் கசப்புக்கும் காரத்துக்கும் அஞ்சி, பலபேர் அதைத் தூக்கிப் போட்டுவிடுகிறார்கள் என்று தெரிந்த பிறகுதான் அவர் தானே நேரடியாக அதைக் கொடுக்க ஆரம்பித்தார். அவர் எதிரிலேயே வாயில் போட்டு மென்று விழுங்கியாக வேண்டும். விழுங்கி அரை மணி நேரத்துக்குத் தண்ணீர் குடிக்க அவர் அனுமதிக்கமாட்டார். அவர் எதிரே அங்கேயே அமர்ந்து தியானத்தில் ஈடுபட வேண்டும். அந்த அரை மணியைக் கடந்தபிறகு, கசப்புக்குத் தண்ணீர் குடிக்கத் தேடும் வேட்கை இல்லாது போய்விடும். காப்பி, தேநீர் கிடையாது. பகல் பதினொரு மணிக்கு ஒவ்வொருவருக்கும் இரண்டு வெள்ளரிக்காய் அல்லது இரண்டு தக்காளிப் பழங்களைச் சாப்பிடக் கொடுப்பார்கள். அதனோடு ஒரு கறுப்புத் தேநீர். ஆனால் அதில் சர்க்கரை இருக்காது. அடுத்த உணவென்பது மாலை நான்கு மணிக்கு இருக்கும். சிறிதளவு உலர்ந்த திராட்சை, ஒரு பிடி வேர்க்கடலை இருக்கும். அபூர்வமாகச் சில நாள் கொண்டைக்கடலை சுண்டல் செய்யப்பட்டிருக்கும். முழு உணவு என்பது இரவில் மட்டும்தான். சரியாக எட்டரைக்கு அது ஆரம்பிக்கும்.

தேங்காய்ப் பூவில் பிரட்டிய ஒரு துண்டு வாழைப்பழத்தை அப்போது முதலில் சாப்பிட வேண்டும். அதன்பின் அருந்துவதற்கு ஒரு குவளை ரசம் வரும். வேப்பம்பூ ரசம். தூதுவளை ரசம். இஞ்சி ரசம். ஏதேனும் ஒன்று. ஆனால் ஒரு குவளை மட்டும். அதை அருந்தி முடித்ததும் இரண்டு காய்கறிகள் வரும். ஒன்று பச்சையாக. ஒன்று வேகவைத்தது. அதை உண்டு முடித்து இலை காலியானதும் ஒவ்வொரு இலைக்கும் தலா ஒரு சப்பாத்தி பரிமாறப்படும். பருப்புக் கூட்டைத் தொட்டுக்கொண்டு அதைத் தின்று தீர்த்தால் அடுத்ததாக சாதம் வரும். ஏதேனும் ஒரு குழம்பு. குருஜிக்கு மோர்க்குழம்பு என்றால் இஷ்டம். அதனாலேயே அதை மாதம் ஒருமுறை மட்டுமே செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தார். ஆசிரமத்தில் பெரும்பாலும் வத்தக்குழம்புதான் இருக்கும். அபூர்வமாக ஒருநாள் பருப்பு சாம்பார் அமைந்துவிடும். அன்றைக்கெல்லாம் நான் மூன்று முறை, நான்கு முறை சாம்பாரைக் கேட்டுக் கேட்டு வாங்கிப் பிசைந்து வளைத்துக் கட்டுவேன். காய்கறிகளையோ, கூட்டையோ சாதத்துக்குத் தொட்டுச் சாப்பிடக் கூடாது என்று குரு சொல்லுவார். ஒவ்வொரு நாளும் எங்களோடு கூடவேதான் அவர் சாப்பிட உட்காருவார் என்பதால், விதியை மீறக் கஷ்டமாக இருக்கும்.

‘குருஜி, நீங்கள் மிகவும் படுத்துகிறீர்கள். உணவு விஷயத்தில் நீங்கள் சற்று சுதந்தரம் தரலாம்’ என்று ஒருநாள் நான் சொன்னேன்.

‘நான் இழுத்துப்பிடிப்பதெல்லாம் அந்த ஒரு விஷயத்தில் மட்டும்தானே?’ என்றார் அவர்.

யோசித்துப் பார்த்தால் அது உண்மைதான். உணவைத் தவிர வேறு எதிலுமே அவர் என்னைக் கட்டுப்படுத்தியதில்லை. ஒரு வாரம் ஆசிரமத்தில் சமையல் நடக்கும். அடுத்த வாரம் கூசாமல் பிச்சைக்குப் போகச் சொல்லிவிடுவார். சமைத்து உண்டாலும் சரி, பிச்சை எடுத்து உண்டாலும் சரி. கண்டிப்பாக ஒருவேளை உணவுதான். அதில் மாற்றம் இருக்காது.

‘விமல், இந்த உலகில் படைக்கப்பட்ட எந்த உயிரினமும் சரியாக மணியடித்து மூன்று வேளை உண்பதில்லை. மனிதன் மட்டும்தான் கெட்டுப்போய்விட்டான்’ என்றார் குரு.

‘ஆனால் பசிக்கிறதே?’

‘இல்லை. அது உணர்வல்ல. உன் பிரமை. இந்த வேளைக்கு உண்ணாவிட்டால் பசிக்கும் என்பது, சொல்லித் தரப்பட்டிருப்பது மட்டுமே. உண்மையில் நீ உயிர்வாழ ஒருவேளை உணவு உனக்குப் போதும்.’

‘அப்படியா?’

‘ஒரு வாரம் இருந்து பார். புரிந்துவிடும்’ என்று சொன்னார்.

எனக்கு அது புரிவதற்கு ஒருவாரம் போதவில்லை. சுமார் ஒன்றரை மாதங்கள் பிடித்தன. காலை அருந்தும் ஒரு ஸ்பூன் நெய் மட்டுமே மதியம்வரையிலான பசிக்குப் போதும் என்று குருஜி சொன்னது எத்தனை உண்மை என்று வியந்தேன். மதியம் எழுந்த பசியை நான்கு மணி வரை அடக்கிவைத்தால் கிடைக்கும் இரண்டு வெள்ளரிப் பிஞ்சுகளே ஒரு பெரும் விருந்தைப்போல் ருசிக்கும். இரவுணவு பற்றிய எண்ணம் அடுத்த சில மணி நேரங்களுக்கு இல்லாமல் போய்விடும். மீண்டும் பசி தெரிய எட்டு மணியாகும். சரியாக எட்டரைக்கு ஆசிரமத்தில் இலை போடப்பட்டுவிடும்.

ஒவ்வொரு மாதமும் கடைசி பத்து தினங்கள் மட்டும் குருஜி எங்கள் உணவில் மாற்றம் செய்வார். அந்த நாள்களில் காலை பத்து மணிக்கு ஆளுக்கொரு கட்டு கீரை சமைத்து உண்ணலாம். அதோடு இரவு பத்து மணிக்குத்தான் அடுத்த உணவு. அதை உணவென்று எப்படிச் சொல்வது? ஒவ்வொருவரும் நூறு கிராம் உருக்கிய நெய் அருந்திவிட்டுப் படுத்துவிட வேண்டும்.

அவர் எங்கிருந்து இதைக் கற்றார் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் எந்த வரையறைக்குள்ளும் அடங்காத இந்த உணவுப் பழக்கம் சிறிது சிறிதாகப் பசியில் இருந்து எங்களை முற்றிலுமாக வெளியேற்றிவிட்டிருந்தது. பல சமயம் பிச்சைக்குப் போகச் சோம்பேறித்தனப்பட்டுக்கொண்டு நான் இரண்டு மூன்று நாள்களை உண்ணாமலேயே கடந்திருக்கிறேன். சோர்வு தெரியாது. களைப்பாக இருக்காது. அன்றாடப் பணிகள் எது ஒன்றிலும் தொய்வு நேராது. என்னைப் பார்த்து ஆசிரமத்தில் பலபேர் அப்படி ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள்களெல்லாம் சாப்பிடாதிருந்து பார்த்திருக்கிறார்கள். எங்களால் அது முடிந்தது என்பதை எங்களால் நம்பவே முடியவில்லை.

குருஜி புன்னகை செய்தார். ‘வேதகால ரிஷிகள் மாதக்கணக்கில் உணவின்றி, உறக்கமின்றித் தவமிருந்ததெல்லாம் எப்படி என்று நினைக்கிறீர்கள்? இம்மாதிரியான உணவுப் பழக்கத்தால்தான்!’

‘அப்படியானால் யோகப்பயிற்சிகள் இதில் உதவுவதில்லையா?’

 

‘என்ன உளறுகிறாய்? இந்த உணவுப் பயிற்சியே ஒரு யோகமுறை அல்லவா?’ என்று குருஜி கேட்டார்.

ஒரு சமயம், பதினேழு தினங்கள் வெறும் நீரை மட்டுமே அருந்தியபடி அவர் உண்ணாதிருந்ததை நான் கண்டிருக்கிறேன். அந்தப் பதினேழு தினங்களிலும் அவரது அன்றாடப் பணிகள் எதுவும் தடைபடவில்லை. அவர் வழக்கம்போலப் படிக்க வேண்டியவற்றைப் படித்தார். வழக்கம்போல எங்களோடு உரையாடினார். வகுப்பெடுத்தார். பிரசங்கங்கள் செய்தார். நடமாட்டத்தை மட்டும் சற்று மட்டுப்படுத்திக் கொண்டதைக் கவனித்தேன். தினமும் பத்து மைல் தொலைவுக்குக் காலை நடை ஒன்று போய் வருவார். அந்த தினங்களில் அந்தப் பயிற்சியை அவர் மேற்கொள்ளவில்லை.

என்ன நினைத்தாரோ. பதினேழாம் நாள் இரவு படுக்கச் சென்றபோது, ‘காலை நான் உண்ணாவிரதத்தை முடித்துவிடுவேன்’ என்று சொல்லிவிட்டுப் படுத்தார். சொன்னது போலவே மறுநாள் காலை ஒரு ஸ்பூன் நெய் அருந்தித் தமது விரதத்தை நிறைவு செய்தார். அரை மணி நேரம் கழித்து ஒரு தம்ளர் எலுமிச்சைச் சாறு கொண்டுவரச் சொல்லிக் குடித்தார். அன்றைக்கு மட்டும் இரவுணவாக அல்லாமல் காலையே பிச்சைக்குச் சென்று வந்து கிடைத்ததைச் சாப்பிட்டுவிட்டு, ‘நாம் ஆரம்பிக்கலாம்’ என்று முண்டகோபநிஷத்தை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தார்.

எனக்குத் தெரிந்து அவர் நோய் என்று படுத்ததில்லை. சிறு தலைவலி, ஜலதோஷம்கூட அவருக்கு வந்தது கிடையாது. என்ன காரணத்தால் அப்படியொரு காய்ச்சல் கண்டிருக்கும் என்று விளங்கவேயில்லை. குரு சொன்னார், ‘போக ஒரு வழி வேண்டும். எனக்கு விதித்தது இது.’

எனக்கு அந்த சாதுர்மாஸ்ய விரதம் இருக்கும் யோசனையைக் கொடுத்தவனைத் தேடிப்பிடித்துக் கட்டிவைத்துத் தோலை உரிக்க வேண்டும் என்று தோன்றியது. என் நண்பர்கள் அத்தனை பேரும்கூட அதையேதான் சொன்னார்கள். வாடகைக்கு ஓர் அடியாளை அமர்த்தியாவது அவனைத் தேடிப்பிடித்து இழுத்துவரச் செய்யலாம் என்று ஒருவன் சொன்னான். கட்டுப்படுத்த இயலாத கோபத்தை இழுத்துப்பிடிக்க மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தேன். அவரது காய்ச்சல் ஓய்வேனா என்று அடம் பிடித்துக்கொண்டிருந்தது. அந்த நான்கு மாதங்களில், அவர் எங்களுக்கு அதர்வ வேதத்தின் அங்கங்களுள் ஒன்றான ஆயுர்வேதம் குறித்து போதிப்பதாகச் சொல்லியிருந்தார். அவர் ஒரு சிறந்த நாட்டு மருத்துவர் என்பதை நானறிவேன். ஆனால் கண்டிப்பாகத் தனக்கு எந்த வைத்தியத்தையும் செய்துகொள்ளப்போவதில்லை என்ற உறுதியில் இருந்தார்.

விரக்தியிலும் ஆற்றாமையிலும் இருந்த ஒரு கணத்தில் நானே எழுந்துசென்று அவர் அருகே அமர்ந்து கேட்டேன், ‘குருஜி, அவன் உங்களுக்கென்று அனுப்பப்பட்ட காலதூதன் என்பதை எப்படி அறிந்தீர்கள்?’

அவர் நெடுநேரம் அமைதியாகவே இருந்தார். நான் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டபோது, ‘நீ உன் விரதத்தில் இருந்து விலகுகிறாய். நீ என்னோடு பேசப்போவதில்லை, நான் சொல்வதைக் கேட்கப்போவதில்லை என்று விரதம் பூண்டவன். மறந்துவிட்டாயா விமல்?’ என்று கேட்டார்.

எனக்கு அழுகை வந்தது. அடக்கிக்கொண்டு அவர் கரங்களைப் பிடித்துக்கொண்டேன். ‘உங்கள் உயிர் பொருட்டல்ல. ஆனால் என் வாழ்க்கை எனக்கு முக்கியம். நீங்கள் இறந்துவிடக் கூடாதென்று நான் விரும்புவதன் காரணம் சுயநலம்தான். புரிந்துகொள்ளுங்கள்’ என்று சொன்னேன்.

‘உண்மையாகவா?’

‘ஆம். சந்தேகமில்லை. ஆன்மிகத்தில் சுயநலத்தின் இடம் மிகப்பெரிது என்று நான் கருதுகிறேன். என் சுயம் நன்றாக இருந்தால்தான் உங்கள் நூற்று எண்பத்து ஒன்பது தெய்வங்களும் உயிரோடு இருப்பார்கள்.’

சட்டென்று அவர் புன்னகை செய்தார். என் கைகளைப் பிடித்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்தார். என் கன்னங்களை வருடிக் கொடுத்தார். ‘சரி, போய் எங்காவது ஒரு கோப்பை நெய் சம்பாதித்துக்கொண்டு வா’ என்று சொன்னார்.

‘குருஜி, நான் உங்களை அழைத்துச் செல்கிறேன். நீங்களே பிச்சை எடுங்கள். விரதம் கலைய வேண்டாம்.’

‘இல்லை, அது கலையாது. பிச்சை எடுத்துவரும் நெய்யை நீ அருந்து. உன்னை நான் அருந்திவிடுகிறேன். அப்படிச் செய்தால் பாதகமில்லை என்று முப்பத்தியேழு சொல்கிறான்’ என்று சிரித்தபடி சொன்னார்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

18. துளி வாழ்வு, துளி சாவு

 

 

அன்றைக்கு வெள்ளிக்கிழமை, கிருஷ்ண பட்சம், நவமி திதி. சிறிது நேரத்தில் அவர் இறந்துவிடுவார் என்று நாங்கள் அறிந்திருந்தோம். இறந்துவிடுவேன் என்று அவர் சொல்லிச் சரியாக இருபது தினங்கள் கழிந்திருந்தன. படிப்படியாக அவரது பேச்சு குறைந்துகொண்டே வந்தது. நடமாட்டம் ஒரு வாரத்துக்கு முன்னாலேயே இல்லாது போயிருந்தது. பெரும்பாலும் அவரது கண்கள் மூடியே இருந்தன. எப்போதாவது ஒரு சுவரில் விழும் விரிசலைப்போல் அவை திறக்கும். கணப்பொழுது யாரையாவது தேடுவார். சீடர்கள் மொத்தமாக முண்டியடித்து முன்னால் வந்து குழுமி நிற்பார்கள். தேர்ந்தெடுப்பதற்குள் கண்கள் மீண்டும் மூடிக்கொள்ளும். எனக்குத் தெரியும், அவர் என்னைத்தான் தேடினார். தனது கடைசிச் சொல்லை அவர் எனக்காகச் சேமித்திருந்தார். அது என்னவாக இருக்கும் என்றறியக்கூட நான் விரும்பவில்லை. என் குரு ஒரு சொல்லில் இல்லை எனக்கு. மேலும், அவர் சொல்லித்தராத அந்த ஒரு சொல்லைப் பற்றிக்கொண்டுதான் எனது பயணத்தைத் தொடங்க வேண்டும் என்றும் நான் தீர்மானித்திருந்தேன். எனவே, அவர் கண்ணைத் திறக்க முயற்சி செய்தபோதெல்லாம், நான் அவர் தலைக்கு அருகே சென்று நின்றுகொண்டேன்.

குருகுலத்தில் என்னைவிட மூத்தவர்கள் ஆறு பேர் இருந்தார்கள். எனக்குப் பிறகு வந்து சேர்ந்தவர்கள் பத்துப் பேர் உண்டு. இதில் இரண்டு பெண்களும் அடக்கம். அவர்களுள் கார்த்திகாயினி மிகவும் அழகாக இருப்பாள். அவளெல்லாம் சன்னியாசம் வாங்கிக்கொண்டு என்ன செய்யப்போகிறாள் என்பது அந்நாள்களில் எனக்குப் பெரிய வியப்புக் கலந்த வினாவாக இருந்தது. வீட்டைத் துறந்து, உறவுகளைத் துறந்து, படித்த படிப்பை, அது தரக்கூடிய உத்தியோகத்தை, சம்பளத்தை, சௌகரியங்களை ஒதுக்கி எதைத் தேடி அவள் அங்கே வந்தாள் என்று அநேகமாக தினமும் ஒருமுறை அவளிடம் கேட்பேன். அவள் தினமும் ஒரு பதிலைச் சொல்லுவாள். எனது காவியும், குருவோடு எனக்கிருந்த நெருக்கமும் அவளைச் சலிப்புறாமல் என்னுடன் பேசவைத்தன. என்னோடு சேர்த்து மூன்று பேருக்குத்தான் குருஜி அப்போது சன்னியாச தீட்சை வழங்கியிருந்தார். மீதமிருந்தவர்கள் அத்தனை பேரும் எப்போது தமக்கு அக்காலம் வரும் என்று காத்திருந்தார்கள். எனவே, தீட்சை பெற்ற சீடர்களுக்கு மற்றவர்கள் மத்தியில் ஒரு மரியாதை இருந்தது. எத்தனை முயன்றும் தமக்கு இன்னமும் கிட்டாத தீட்சை இவனுக்குக் கிடைத்துவிட இவன் என்ன செய்திருப்பான் என்கிற வினா ஒவ்வொருவருக்கும் இருந்தது. கார்த்திகாயினி என்னிடம் ஒரு நாள் கேட்டாள், ‘நீங்கள் குருவைப்போல் இல்லை. அவரது குணாதிசயம் எதுவும் உங்களிடம் இல்லை. நீங்கள் ஒரு துறவிக்கான ஒழுக்க நியமங்களையும் பின்பற்றுவதில்லை. உங்களைப்போல் வேறு யாராவது இருந்தால், நிச்சயமாக குருஜி அவர்களை சகித்துக்கொண்டிருப்பார் என்று தோன்றவில்லை. உங்களை மட்டும் எப்படி அவர் தன்னருகே வைத்துக்கொண்டிருக்கிறார்?’

நான் புன்னகை செய்தேன். அது ஒரு சிறந்த வினா. நான் குருகுலத்தில் இணைந்த நாள் முதல் அங்கு வசித்துவந்த, வந்து சென்ற அனைவருக்கும் ஒரு கணமாவது அந்த வினா நெஞ்சில் எழாதிருந்திருக்காது. எனது ஒழுங்கீனங்களின் ஊழித் தாண்டவத்தைக் கண்ட யாரும் என்னைக் கொல்ல வேண்டும் என்று எண்ணாதிருந்திருக்க முடியாது. ஒரு விதத்தில், குரு என்னை சக்கர வியூகத்துக்குள் நிறுத்தி அடைகாத்துக்கொண்டிருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். என்னை அவருக்கு மட்டும்தான் தெரியும். என்னை ஏன் அவர் அங்கீகரித்தார் என்பதும் எனக்கு மட்டும்தான் தெரியும்.

பெருமைப்பட்டுக்கொள்ள எல்லோரிடமும் சொல்லிக் காட்டலாம்தான். ஆனால் நான் செய்ததில்லை. ஒரு புன்னகையில் அனைத்தையும் கடந்துவிட நான் அறிவேன். அதுதான் குருவுக்கு நான் செலுத்திய நன்றியாக இருந்தது. என்னால் வேறென்ன முடியும்? அவர் இன்னும் சற்று நேரத்தில் இறந்துவிடுவார் என்று அனைவருக்குமே தெரிந்த கணத்தில் நான் அறிவித்தேன்: ‘சரி நண்பர்களே, நான் புறப்படுகிறேன்.’

‘எங்கே?’ என்று கேட்டார்கள். குரல்களில் பதற்றமும் அச்சமும் இருந்தன.

‘எனக்கெப்படித் தெரியும்? அதை குரு தீர்மானிப்பார். ஆனால் இப்போது நான் கிளம்பியாக வேண்டும்.’

‘ஐயோ, அவரது இறுதிக் கணத்தில் நீங்கள் இல்லாமல் எப்படி?‘

நான் சிரித்தேன். ‘பாதியில் வந்தவன் நான். பாதியில் போவதுதான் சரி.’

உண்மையில், என்னால் அந்த மரணத்தை எதிர்கொள்ள முடியாது என்று தோன்றியது. நான் சிதறி, சின்னாபின்னமாகிவிடுவேன் என்று நினைத்தேன். உட்கார்ந்து அழுகிற ரகமல்ல நான். ஆனால் அவரது மரணத்துக்கு முன் நான் விடைபெற்றுச் சென்றுவிட்டால்தான், நான் சேகரித்த சொற்கள் என்னுடையவையாக இருக்கும். அல்லாத பட்சத்தில், அவரது சமாதிக்கடியில் அவையும் சேர்த்துப் புதைக்கப்பட்டுவிடும் என்று எனக்கு நிச்சயமாகத் தோன்றியது. அதன்பின் நான் அங்கே இருந்தால் என்ன, எங்கே இருந்தால் என்ன? என்னிடம் அப்போது ஒரே ஒரு சொல் மட்டும்தான் இருக்கும். அது அவர் இறுதியாகச் சொன்னதாக இருக்கும்.

இதனால்தான், அந்த இறுதிச் சொல்லை நான் தவிர்க்க நினைத்தேன்.

இருபது தினங்கள். ஒரு முதியவர் தாங்கக்கூடிய வலியாக அது நிச்சயமாக இருந்திருக்காது. அவரது உறுப்புகள் ஒவ்வொன்றாகச் செயலிழந்துகொண்டிருந்ததைக் கண்டேன். முதலில் நகங்கள் கறுத்தன. பின் விரல்கள் மடங்க மறுத்தன. பிடித்து நீவிவிட்டுப் பார்த்தும், எண்ணெய் தேய்த்து உருவிப் பார்த்தும் பயனில்லாமல் போனது. அதன்பின் கை மூட்டுகளும் கால் மூட்டுகளும் செயலிழந்தன. அவரைப் புரட்டிப் போட்டுப் படுக்கவைக்கக்கூட முடியாமல் போனது. நான்கு பேர் சேர்த்துத் தள்ளினால்தான் அவரது உடல் அசைந்தது. வேதனையின் வெளிப்பாட்டை மிகச் சிறு முனகலாகத்தான் அவரிடம் பெற முடிந்தது. முடிந்தவரை, முனகக்கூட செய்யாமல் சகித்துக்கொண்டிருந்தார். படுத்தவாக்கில் மலஜலம் கழிக்க வேண்டியிருந்ததுதான் அனைத்திலும் கொடூரம். சீடர்கள் சற்றும் அருவருப்படையாமல் உடனுக்குடன் அவரைத் துடைத்து சுத்தம் செய்து பவுடர் போட்டுவிட்டார்கள்.

நான் அனைத்தையும் வெறுமனே பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். அவர் அருகே செல்லவேயில்லை. வந்த நாள் முதலே அப்படித்தான். இன்னொரு மூச்சுக்காற்றின் சூட்டை என்னால் தாங்க முடியாது. அதுவும் கண்களால் மூச்சு விட்டு, செவிகளால் பேசுகிறவர்களின் பக்கம் நெருங்காதிருப்பது எப்போதும் நல்லது. துறப்பது என்று முடிவு செய்ததும் நான் முதலில் துறந்தது துறவு நிலையைத்தான். இதை என் குரு அறிவார் என்பதற்கு அப்பால் வேறெதுவும் எனக்கு முக்கியமாகப் படவில்லை. கார்த்திகாயினிக்கு இது புரிய வேண்டுமென்றால், அவள் என்னைத் தேடி வந்து சிஷ்யை ஆவது தவிர வேறு வழியில்லை.

நான் கிளம்பிவிட்டேன். குருகுலத்தில் இருந்த அத்தனை பேரும் என் காலைப் பிடிக்காத குறையாகக் கதறித் தீர்த்தார்கள். ‘தயவுசெய்து போகாதீர்கள். இப்போது நீங்கள் கிளம்பினால் அது துரோகம். குருஜியின் ஆன்மா என்றுமே உங்களை மன்னிக்காது’ என்று மிரட்டிக்கூடப் பார்த்தார்கள். ஒரு புன்னகையில் நான் அனைத்தையும் கடந்து வெளியேறிச் சென்றேன். நான் இன்னும் சிறிது காலம் முன்னதாகக் கிளம்பியிருக்க வேண்டும் என்றுதான் குரு நினைத்தார். என்னிடம் அதைச் சில சமயம் சொல்லவும் செய்தார்.

‘விமல், இது உனக்கேற்ற இடமில்லை. உனக்கேற்ற இடத்தை இன்னொருவர் உனக்குக் காண்பிக்கவே முடியாது. நீ மலைகளும் சமவெளிகளும் பள்ளத்தாக்குகளும் நீர்நிலைகளும் கடலும் பாலையுமற்ற ஒரு பிரதேசத்தைச் சமைக்கவேண்டி இருக்கும். அநேகமாக அதுதான் உன் முதல் பணியாக இருக்கும்.’

‘ஆம் ஐயா. நான் சூனியத்தில் இருந்து பூரணத்தை எடுக்கத்தான் வேண்டும்’ என்று பதில் சொன்னேன். ஆசிரமத்தில் இருந்து நான் வெளியேறியபோது அதைத்தான் எண்ணிக்கொண்டேன். சூனியத்தை அங்கே விட்டுவிட்டு, பூரணத்தை எடுத்துக்கொண்டுவிட்டதாக.

அன்று முழுதும் சாலையில் தென்பட்ட பல வாகனங்களைக் கைநீட்டி நிறுத்தி, அவை போன வழியிலேயே கொஞ்ச கொஞ்ச தூரம் போய் இறங்கிக்கொண்டேன். இரவு எட்டு மணிக்கு நான் பெங்களூர் வந்து சேர்ந்ததும் ஆசிரமத்துக்கு போன் செய்தேன். கார்த்திகாயினிதான் எடுத்தாள்.

‘அவர் போய்விட்டாரா?’ என்று கேட்டேன்.

அவள் குமுறிக் குமுறி அழத் தொடங்கினாள். என்னிடம் அதிகம் பணமில்லை அப்போது. வெகுநேரம் பொதுத் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்க முடியாது. எனவே அவள் அழுகையைப் பாதியில் தடுத்து, ‘அடக்கம் செய்வதற்கு முன்னால் மறக்காமல் அவருக்கு ஷவரம் செய்துவிடுங்கள்’ என்று மட்டும் சொல்லிவிட்டு வைத்துவிட்டேன். அவளுக்கு என்ன புரிந்ததோ. எப்படியும் கன்னடத்தில் அவளறிந்த ஒரு சில கெட்ட வார்த்தைகளையேனும் பயன்படுத்தி என்னைத் திட்டியிருப்பாள் என்று தோன்றியது. கார்த்திகாயினி கோவப்படும்போதும் அழகாகத்தான் இருப்பாள். பேசும்போது அவளது மூக்கின் இரு புறமும் ஒரு பானிபூரியைப்போல் விரிந்து விரிந்து அடங்குவது பார்க்க மிகவும் ரசமாக இருக்கும்.

எனக்கென்னவோ, அம்மாவின் இறுதித் தருணம் நெருங்கிவிட்ட செய்தி கிடைத்தபோது, நான் அண்ணாவைத் தேடிச் சென்றது பலவிதங்களில் என் குருவின் மரணத்தின்போது நான் ஆசிரமத்தை விட்டுப் புறப்பட்டதை ஒத்திருந்ததாகவே பட்டது. துக்கத்தின் நிழலில் நிற்க விரும்பாத சுயநலமல்ல அது. சொல்லப்போனால், அருகே இல்லாதவனுக்குத்தான் அனைத்துத் துயரங்களும் ஆசியாக உச்சந்தலையில் இறங்கும். மேலே விழுந்து புரண்டு கதறிவிட்டால் அதன்பிறகு ஒன்றுமேயில்லை. விலகி நின்று வாழ்வின் ஒரு துளி சாறெடுத்து சாவின் சாற்றில் கலந்து அருந்தி, நினைவில் சாசுவதமாக்கிக்கொள்வது ஒரு கலை. அதைத்தான் நான் செய்தேன்.

ஆனால் ஒரு விருப்பம் இருந்தது. அம்மா என் குருவைப்போல வலிகளுடன் போய்ச் சேரக் கூடாது. எனக்கு நன்றாகத் தெரியும். தனது இறுதித் தினங்களில் அவரால் ஒரு கணம்கூட தியானத்தில் இருந்திருக்க முடியாது. அவரது நூற்று எண்பத்து ஒன்பது தெய்வங்களுள் ஒருவரைக்கூட அழைத்துப் பேசியிருந்திருக்கமாட்டார். வாழ்நாள் முழுதும் அவர் ஓதியறிந்த வேதங்களில் இருந்தோ, உபநிடதங்களில் இருந்தோ ஒரு வரி, ஒரு சொல்லைக்கூட அவர் எண்ணியிருக்கமாட்டார். தேகமும் உலகமும் வலியாலானதாக மட்டுமே நினைத்திருப்பார்.  அந்த இறுதி இருபது தினங்களில் அவரிடமிருந்து வெளிப்பட்ட முனகல் எனக்கு அதைத்தான் தெரிவித்தது. எத்தனை உற்சாகமாக சாதுர்மாஸ்ய விரதம் இருக்கப் புறப்பட்ட மனிதர்! துங்கபத்திரையின் கரையில் ஒரு கூழாங்கல்லைப் போலாகிப்போனார். உண்மையில் எனக்கு அப்படித்தான் தோன்றியது. ஒரு கல்லைக் கொண்டுபோய்த்தான் ஆசிரம வளாகத்தில் அவர்கள் அடக்கம் செய்திருப்பார்கள்.

டெல்லியில் இருந்து சென்னைக்குச் செல்லும் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸில்தான் நான் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போபால் ரயில் நிலையத்தில் இருந்து மீண்டும் ஒருமுறை கேசவன் மாமாவுக்கு போன் செய்தேன். அவள் இறந்துவிட்டாள் என்று ஒருவேளை அவர் சொல்லிவிட்டால், என் பயணத்தை ரத்து செய்துவிட்டு மைசூருக்குப் போய்விடலாம் என்றுகூடத் தோன்றியது. ஆனால் நான் சற்றும் எதிர்பாராவிதமாக மாமாவின் குரலில் ஒரு தெம்பு தெரிந்தது. ‘கெளம்பிட்டியா? நல்லது. வா. சீக்கிரம் வந்து சேரு’ என்று சொன்னார்.

‘மாமா, அம்மா...’

‘இருக்கா. இன்னும் போகலே. இன்னிக்கி கார்த்தாலேருந்து எனக்கு வேற மாதிரி தோணறதுடா. ஒருவேள பொழச்சிண்டுடுவாளோ என்னமோ.’

‘எப்படி மாமா?’ என்று கேட்டேன்.

‘பின்னே? வினய் வந்துட்டானே!’

சட்டென்று எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

19. நீயா

 

 

சினிமாக்காரர்கள் வந்திருக்கிறார்கள் என்று வினோத் வந்து சொன்னான். உடனே என்ன படம் என்று வினய் கேட்டான்.

‘தெரியலடா. தனாவ பாக்கறதுக்காக அகரம்பட்டு போனேன். வர வழில பாத்தேன். ரோடோரம் நிறைய ரிஃப்ளெக்டர் வெச்சிருந்தது’ என்று வினோத் சொன்னான்.

திருவிடந்தையில் தினமும் படப்பிடிப்புகள் இருக்கும். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று எந்த மொழிப் படமாகவும் இருக்கும். கடலை ஒட்டிய சவுக்குக் காடுகளும், கோயிலை அடுத்த பெரிய குளமும் சினிமாக்காரர்களுக்கு மிகவும் விருப்பமான இடங்கள். ஊரில் வேறு எந்த இடமும் அவர்களுக்குப் பொருட்டில்லை. அந்த இரண்டே இரண்டு இடங்கள் போதும். நீண்ட கோள வடிவில் ஒரு குளத்தை வேறு எந்த ஊரிலும் பார்க்க முடியாது. அதுவும் புதையப் புதிய மணல் சரிவுகளை அரணாகக் கொண்ட குளம். படிக்கட்டுகளோ, தடுப்புச் சுவர்களோ அந்தக் குளத்துக்குக் கிடையாது. மணலில் கால் புதைய நடந்துகொண்டே போனால், சட்டென்று ஓரிடத்தில் குளம் நிறுத்தும். என்னைச் சுற்றிக்கொண்டு போ என்று சொல்லும். தரைத் தளத்துக்குப் பத்தடி ஆழத்தில் அலையடிக்கிற குளம். உள்ளே இன்னமும் ரிஷிகள் தவத்தில் இருப்பதை அண்ணா போய்ப் பார்த்துவிட்டு வந்திருக்கிறான். ஆனால் அது எனக்கு மட்டுமே தெரிந்த சங்கதி. சினிமாக்காரர்களுக்குக் குளத்தில் மேலே படர்ந்து மலர்ந்திருக்கும் அல்லிப் பூக்கள்தான் வசீகரம். எங்கிருந்தோ ஓடி வரும் கதாநாயகி கரையின் விளிம்பில் சட்டென்று படுத்துக்கொண்டு உருளத் தொடங்கினால் மணல் சரிவில் அவள் கீழே இறங்கி நீர்ப்பரப்பின் விளிம்பைத் தொடப் பதினைந்து விநாடிகள் பிடிக்கும். உருண்டு வரும் கதாநாயகியின் பிம்பம் நீரில் சுருண்டு எழும். நூற்றுக்கணக்கான பாடல் காட்சிகளில் நீங்கள் இதனைப் பார்த்திருக்கலாம். பாரத தேசத்தில் வேறெந்தக் குளக்கரையிலும் இப்படி ஒரு காட்சியைப் படம் பிடிக்க முடியாது. அந்நாள்களில் திருவிடந்தையில் நித்ய கல்யாணப் பெருமாள்தான் பிரபலமில்லையே தவிர, அந்தக் குளம் மிகவும் பிரபலம்.

கோயிலில் காலட்சேபம் இருந்தது. வேளுக்குடி வரதாச்சாரியார் ராமாயணம் சொல்லிக்கொண்டிருந்தார். ஆறேழு தினங்களாக அம்மா அதற்குப் போய்க்கொண்டிருந்தாள். ஏழு மணிக்கு ராமாயணம் ஆரம்பித்தால் முடிவதற்கு ஒன்பது ஆகிவிடும் என்பதால், அதன்பின் வீட்டுக்கு வந்து இரவுக்குச் சமைப்பது சிரமம். எனவே காலட்சேபம் ஆரம்பித்ததில் இருந்து அவள் மாலையே சமைத்து வைத்துவிட்டுப் போவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள்.

‘விமல், கறிகா ஒண்ணுமில்லே. பந்துலு கடைக்குப் போய் என்ன இருக்குன்னு பாரு. வெண்டைக்காய் இருந்தா அரைக்கிலோ வாங்கிண்டு வா’ என்றாள்.

நான் கடைக்குப் போய் வெண்டைக்காய் வாங்கிக்கொண்டு திரும்பும்போது, குளக்கரையில் வினய் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததைக் கண்டேன். எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது. திருவிடந்தையில் யாரும் படப்பிடிப்புகளை வேடிக்கை பார்க்கமாட்டார்கள். ஒரு திரைப்படம் அளிக்கும் பரவசத்தை, கற்பனையை, ஆர்வத் தூண்டலை நிச்சயமாகப் படப்பிடிப்பு தராது. ஒரே வரி வசனத்தை, அல்லது ஒரு பாடலின் ஏதோ ஒரு வரியைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொடுத்து நடிக்கச் சொல்லுவார்கள். எப்படித்தான் நடிகர்கள் சலிக்காமல் அதை மீண்டும் மீண்டும் செய்கிறார்களோ என்று தோன்றும். நடிகர், நடிகைகளை சும்மா போய்ப் பார்த்துவிட்டு வருவது என்பது ஒரு காலத்தில் இருந்திருக்கலாம். தினமும் படப்பிடிப்பு நடக்கிற கிராமத்தில் அத்தனைக் கலைஞர்களுமே ஏற்கெனவே தெரிந்தவர்களாகிவிடுவார்கள். திரும்பத் திரும்பப் பார்க்க என்ன இருக்கிறது? அதே முகப்பூச்சு. அதே உதட்டுச் சாயம். அதே செண்ட் வாசனை. சிகரெட் வாசனை.

நான் வினய்யை நெருங்கி, ‘இங்க என்னடா பண்றே?’ என்று கேட்டேன். அவன் சற்று திடுக்கிட்டாற்போலத் தெரிந்தது.

‘ம்? ஒண்ணுமில்லே. சும்மாத்தான்’ என்று சொன்னான். நீல நிற ஒயர் பின்னப்பட்ட அலுமினிய சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த நடிகையையே அவன் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். அது ஏதோ ஒரு கன்னடப் படம். அந்த நடிகை, குளத்தில் குதித்துத் தற்கொலை செய்துகொள்வதற்காக வந்திருந்தாள். காப்பாற்றுவதற்குத் தயாராக முன்னதாகக் குளத்துக்குள் மூழ்கியிருந்த கதாநாயகன் சம்பந்தப்பட்ட காட்சிகளைத்தான் அப்போது எடுத்துக்கொண்டிருந்தார்கள். எனக்குத் தெரியும், நடிகைக்கு இன்று வேலை இருக்காது. ஏனெனில் அப்போதே மணி ஐந்தாகியிருந்தது. ஐந்து பத்து நிமிடங்களில் வெளிச்சம் போய்விடும். அதன்பின் அனைத்தையும் வாரிச் சுருட்டி வண்டியில் போட்டுக்கொண்டு படப்பிடிப்புக் குழுவினர் கோவளத்துக்குப் போய்விடுவார்கள். அங்கேதான் தாஜ் கொரமண்டல் ஓட்டல் இருந்தது. படப்பிடிப்புக்கு வரும் கலைஞர்கள் அங்கேதான் எப்போதும் தங்குவார்கள்.

என்ன நினைத்தானோ, வினய் எனக்கு அந்த நடிகையைச் சுட்டிக்காட்டினான். ‘அவளைப் பாரு. பார்த்தா என்ன தோணறது?’ என்று கேட்டான்.

எனக்கு எதுவும் தோன்றவில்லை. சட்டென்று வியக்குமளவுக்கு அவள் பேரழகியாக இல்லாதிருந்தது ஒரு காரணமாயிருக்கலாம். கர்நாடகத்தில் அவள் பெரிய நட்சத்திரமாக இருக்கக்கூடும். பரிச்சயமான முகமாக இல்லாதபடியால், எனக்கு விசேடமாக ஒன்றும் நினைக்க முடியவில்லை.

‘அந்தத் தோலை மட்டும் உரிச்சி எடுத்துட முடிஞ்சா எலும்பும் சதையும் ரத்தம் ஒழுகிண்டு கோரமா இருக்கும் இல்லே? தோலால மூடி வெச்சுட்டா எல்லாம் மறைஞ்சி போயிடறது’ என்று சொன்னான்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு பெண்ணை, தோலை உரித்துவிட்டு யோசிக்க முடியுமா? அப்படியே முடியுமென்றாலும், எதற்காக அப்படி யோசிக்க வேண்டும்?

வினய் சொன்னான், ‘விமல், ஒரு ஆடு, ஒரு கோழி, ஒரு மாடு - இதையெல்லாம் சாப்பிடறவா யாரும் தோலோட நினைச்சிப் பார்க்கறது கிடையாது. உரிச்சி யோசிச்சாத்தான் உணவு. மனுஷாளுக்குப் பொம்மனாட்டி ஒரு உணவு. பொம்மனாட்டிகளுக்குப் புருஷா உணவு. ஆனா தோலோடதான் வேணும். சரியா சொல்லணும்னா தோல் மட்டும்தான் உணவு.’

அவன் கெட்டதாக ஏதோ பேசுகிறான் என்று எனக்குத் தோன்றியது. ஆனால் சரியாகப் புரியவில்லை. தவிர எனக்கு எதற்கு இது என்றும் கேட்க நினைத்தேன். பேச்சை வளர்க்க விரும்பாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

அந்தச் சம்பவம் நடந்து பத்து நாள்களுக்குப் பிறகு ஒரு நாள் என் நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடுவதற்காக அம்மாவிடம் அனுமதி பெற்றுக்கொண்டு கடற்கரைக்குப் போயிருந்தேன். இருட்டும்வரை விளையாடிக்கொண்டிருந்துவிட்டு, இருட்டிய பின்பு வீட்டுக்குத் திரும்பும் வழியில் சவுக்குத் தோப்புக்குள் வினய் போய்க்கொண்டிருப்பதைக் கண்டேன். கூப்பிடலாம் என்று வாய் நுனிவரை பெயர் வந்துவிட்டது. ஒருவேளை அது வேறு யாராவதாக இருக்கலாம் என்று அதற்குள் தோன்றியபடியால், அழைக்காமல் அவனை நோக்கி ஓடத் தொடங்கினேன்.

சவுக்குத் தோப்பு என்பது முடிவே இல்லாத பெருங்காடு. கோவளத்தின் கடற்கரை எல்லையில் ஆரம்பித்து மகாபலிபுரம் வரைக்கும் இடைவெளி விட்டுவிட்டு நீண்டுகொண்டே இருக்கும். பிற்காலத்தில் அந்தக் காட்டை அழித்து ஏராளமான உல்லாச விடுதிகளும் நட்சத்திர உணவகங்களும் பொழுதுபோக்குக் கேந்திரங்களும் உருவாக்கப்பட்டுவிட்டன. நான் திருவிடந்தையில் வசித்தபோது ஊரின் கிழக்குப் பக்கத்துக் கோட்டைச் சுவர்போல சவுக்குக் காடுதான் உயர்ந்து நின்று காக்கும். வழி தெரியாத யாராவது காட்டுக்குள்ளே போய்விட்டால் மீண்டு வெளியே வருவது சிரமம். குத்துமதிப்பாக திசைக் கணக்கை வைத்து சாலையைப் பிடித்துவிட முடியும்தான். ஆனால் நரிகள் மட்டுமின்றி, கள்ளச் சாராயம் காய்ச்சுவோரும் அங்கேதான் தொழில் செய்துகொண்டிருப்பார்கள் என்பதால், வெறுமனே உலவுவதற்கென்று யாரும் அந்தப் பக்கம் போகமாட்டார்கள்.

எனக்கு வினய் ஏன் காட்டுக்குள் போகிறான் என்று குழப்பமாக இருந்தது. நான் பார்த்தது அவனைத்தானா என்று உறுதிப்படுத்திக்கொள்ள அவனைப் பின் தொடர்ந்து ஓட ஆரம்பித்து வெகுதூரம் உள்ளே போய்விட்டேன். அதற்குள் நன்றாக இருட்டவும் தொடங்கிவிட்டபடியால், எனக்கு முன்னால் போனவன் மறைந்தே போய்விட்டான். இப்போது என்ன செய்வதென்று யோசனையாக இருந்தது. வினய், வினய் என்று ஓரிருமுறை குரல் கொடுத்துப் பார்த்தேன். பதில் இல்லை. சரி, திரும்பிவிடலாம் என்று முடிவு செய்து நடக்கத் தொடங்கியபோது, இருளில் ஓர் உருவம் என்னை நெருங்கி வந்து தோளைத் தொட்டது.

அவந்தான்.

‘நெனச்சேன்’ என்று சொன்னேன்.

‘நீ இந்தப் பக்கம் ஏன் வந்தே?’ என்று வினய் கேட்டான்.

‘நீ ஏன் வந்தே?’

‘சும்மாதான். ஒரு சின்ன பரிசோதனை பண்ணவேண்டி இருந்தது’ என்று வினய் சொன்னான்.

எனக்குச் சட்டென்று அண்ணாவின் நினைவு வந்துவிட்டது. அதே காட்டுக்குள்தான் அவன் எனக்கு ஒரு பாறையின் மீது தலை குப்புற நின்று காட்டினான். கால்களை உயர்த்தி விரித்து நரியை நகரவைத்தான். அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. அண்ணா வீட்டைவிட்டுப் போன பிறகு அவனைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் அந்தச் சம்பவம் எனக்குத் தவறாமல் நினைவில் வந்துவிடும். என் அபத்தமான அறியாமையாலும் காரணமற்ற அச்சத்தாலுமே அவனை நாங்கள் இழந்தோம் என்று தோன்றும். கடைசிவரை அம்மாவிடம் நான் அண்ணாவைப் பற்றி அறிந்த எதையுமே சொல்லவில்லை. எனக்கு அதற்குத் துணிச்சல் வரவேயில்லை. என்றைக்காவது பரணில் உள்ள அந்த நாடிச் சுவடி அப்பாவின் கண்ணில் பட்டு, இது என்ன, ஏது என்று விசாரித்தால் அப்போது சொல்லிக்கொள்ளலாம் என்று நிரந்தரமாக அந்த யோசனையைத் தள்ளிப்போட்டிருந்தேன். ஆனால் அந்தக் குற்ற உணர்வு என்னைக் கணம்தோறும் தின்றுகொண்டிருந்தது. அண்ணாவின் மீது அதுவரை எனக்கிருந்த பாசமும் பிரியமும் அவன் பிரிந்து சென்ற பிற்பாடு பல மடங்கு அதிகரித்து, அடிக்கடி என்னைத் தனியே சென்று அழவைத்தது.

சொல்லிவைத்த மாதிரி வினய் ஒரு பரிசோதனைக்காக சவுக்குக் காட்டுக்கு வந்ததாகச் சொன்னது எனக்கு மிகுந்த அதிர்ச்சியளித்தது. நான் அவனிடம் என்ன பரிசோதனை என்றெல்லாம் கேட்கவேயில்லை. ‘நீயா எதாவது முடிவு பண்ணியிருந்தேன்னா நான் கண்டிப்பா இன்னிக்கு ராத்திரியே அம்மாட்ட சொல்லிடுவேண்டா’ என்று சொன்னேன்.

இருளில் அவன் சில விநாடிகள் என்னை உற்றுப் பார்த்தான். பிறகு, ‘வா’ என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தான்.

நாங்கள் காட்டைவிட்டு வெளியே வந்து மண் மேட்டில் ஏறி சாலையின் மறுபுறத்தை வந்தடைந்தோம். வடக்குப்பட்டுக்குப் போய்க்கொண்டிருந்த ஒரு மாட்டு வண்டியில் ஏழெட்டுப் பேர் அமர்ந்திருந்தார்கள். முட்டுக்காடில் ஏதோ கலவரம் என்று அவர்கள் பேசிக்கொண்டு போனது காதில் விழுந்தது.

‘கலவரம்னா கல்லால அடிப்பா இல்லே?’ என்று நான் கேட்டேன்.

‘தெரியலே. நீ வா’ என்று வினய் என் கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துக்கொண்டு ஓட்டமாய் ஓடினான். நாங்கள் கோயில் முன் மண்டபத்துக்கு வந்து சேர்ந்தபோது அங்கே யாருமில்லை. சுற்றுமுற்றும் ஊரடங்கி ஒடுங்கிவிட்டிருந்தது. எங்கும் நடமாட்டமோ பேச்சுக்குரலோ இல்லை. கோயிலுக்குள் வேளுக்குடி வரதாச்சாரியார் ராமாயணம் சொல்லிக்கொண்டிருப்பார். அந்நாளில் எங்கள் ஊரில் மைக் வைத்து சொற்பொழிவு நடத்தும் வழக்கம் கிடையாது. தாயார் சன்னிதிக்கு முன்னால் கதை சொல்பவர் ஒரு தூணில் சாய்ந்து உட்கார்ந்து சொல்லிக்கொண்டிருப்பார். சுற்றி அமர்ந்து நாற்பது ஐம்பது பேர் கேட்டுக்கொண்டிருப்பார்கள். திண்ணைப் பேச்சு போலத்தான் இருக்கும். அண்ணா வீட்டைவிட்டுப் போன பிறகு, அம்மா கோயிலில் நடக்கும் எந்த ஒரு வைபவத்தையும் தவறவிடுவதேயில்லை. அது ராமாயணமோ வேறெதுவுமோ. எதுவுமே இல்லாவிட்டால் சும்மாவேனும் மாலை வேளைகளில் கோயிலுக்குப் போய் சிறிது நேரம் உட்கார்ந்திருந்துவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். சில நாள் கேசவன் மாமாவும் அம்மாவோடு போவார். ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வரும் அப்பா, சம்பிரதாயமாக ‘அம்மா எங்க?’ என்று கேட்டுவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் தனக்காகப் போட்டுவைத்திருக்கும் காப்பியை சூடுபடுத்திக் குடித்துவிட்டு வேலையைப் பார்க்கப் போய்விடுவார்.

அண்ணா ஒருவன் இல்லாமல் போன பிறகு, எங்கள் வாழ்க்கை முறையில் எங்களையறியாமல் இறுக்கம் கூடிக்கொண்டே போனது. எதையாவது செய்து எல்லோரும் இயல்பாக இருப்பதுபோலக் காட்டிக்கொள்ளக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தோம் என்று இப்போது தோன்றுகிறது. வினய்கூட அண்ணா காணாமல் போன பிறகு படிப்பில் தீவிரமாகக் கவனம் செலுத்த ஆரம்பித்திருந்தான். அடுத்து வந்த பரீட்சைகளில் அவன் பெற்ற மதிப்பெண்கள், அதற்குமுன் எப்போதுமே அவன் பெற்றிராதவை. அம்மாவுக்கு மிகுந்த சந்தோஷம்.

‘நன்னா படிடா. நீ படிச்சி பெரிய உத்தியோகத்துக்குப் போகணுன்றதுதான் உங்கப்பாவோட கனவு. நீயாவது அதை நிறைவேத்து’ என்று சொல்வாள்.

மண்டபத்துக்கு வந்து சேர்ந்த பிறகு நான் வினய்யிடம் கேட்டேன், ‘காட்ல என்ன பண்ணிண்டிருந்தே?’

அவன் பதில் சொல்லவில்லை. தன் சட்டை பாக்கெட்டில் இருந்து இரண்டு புகைப்படங்களை எடுத்துக் கீழே வைத்தான். ஒன்று, மகாலட்சுமித் தாயாரின் படம். இன்னொன்று, ‘நீயா’ திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை ஸ்ரீப்ரியாவின் அரை நிர்வாணப் புகைப்படம்.

‘இந்த ரெண்டையும் பார்த்தா உனக்கு என்ன தோணறது?’ என்று வினய் கேட்டான்.

 

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

20. படக்கதை

 

 

நான் ‘நீயா’ திரைப்படம் பார்த்ததில்லை. வினய்யும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. கேளம்பாக்கம் ராஜலட்சுமியில் ஒரு வெள்ளிக்கிழமை மாலைக் காட்சியாகத் திரையிடப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மாலைக் காட்சியுடன் எடுத்துவிட்டார்கள். ஆனால் அந்தப் படத்தில் நடித்த ஸ்ரீப்ரியாவின் அந்தப் புகைப்படம் மிகவும் பிரபலமானது. நாகங்கள் யாவும் அவரைப் பார்த்துத்தான் நெளியக் கற்றுக்கொண்டன என்று நினைக்கத் தூண்டும் அளவுக்குத் தத்ரூபமாக இருக்கும். பல பத்திரிகைகளில் வெளிவந்தது. சுவரொட்டிகளிலும் கண்டிருக்கிறேன். வினய்க்கு எங்கிருந்து அந்தப் புகைப்படம் கிடைத்திருக்கும் என்று யோசித்தேன். தவிர, அந்தப் படத்தை ஒரு தாயார் படத்துடன் சேர்த்துவைத்து சிந்திக்குமளவுக்கு என்ன பிரச்னை ஆயிருக்கும் என்பதும் புரியவில்லை.

‘யோசிச்சிப் பாருடா விமல். ரெண்டும் பொம்மனாட்டி போட்டோ. ஒண்ணு தெய்வம். இன்னொண்ணு மனுஷி. ஆனா போட்டோல ரெண்டும் ஒண்ணுதான்.’

‘சரி’

‘லட்சுமி படத்த பாத்தா தொட்டு கண்ணுல ஒத்திக்கறோம். ஸ்ரீப்ரியா படத்துல மட்டும் ஏன் கண்ணு மார் மேலயே நிக்கறது?’

எனக்குக் கூச்சமாக இருந்தது. பெண்களின் ஒரு சில அங்கங்களை நான் சில காலம் முன்னதாகத்தான் ரசிக்க ஆரம்பித்திருந்தேன். எப்போது அந்தப் பழக்கம் ஏற்பட்டது என்று சரியாக நினைவில்லை. ஆனால் பள்ளிக்கூடத்தில், கோயிலில், சாலையில் போகிற என் வயதுப் பெண்கள் யாரைக் கண்டாலும் உற்று நோக்க ஆரம்பித்திருந்தேன். கண்ணைத்தான் பார்ப்பேன். என்னையறியாமல் பார்வை சரிந்து நெஞ்சில் வந்து நிலைத்துவிடும். இது பாவம், இது நரகத்துக்கு இட்டுச் செல்லக்கூடியது என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். ஆனாலும் பார்க்காதிருந்ததில்லை. பார்த்த மார்புகளைத் தனியே வந்து அமர்ந்து சிந்திக்காதிருந்ததில்லை. அது ஒரு அழகிய திருட்டுத்தனம். அற்புதமான சண்டாளத்தனம். அம்மாவுக்குத் தெரியாமல் அந்த வயதில் நான் செய்துகொண்டிருந்த காரியம் அது ஒன்றுதான். இஷ்டப்பட்டுத்தான் செய்தேன். பிறகு செய்ததை எண்ணி வருந்தி அழுதும் இருக்கிறேன். ஆனாலும் அடுத்தப் பெண்ணைப் பார்க்கும்போது பார்வை நெஞ்சில் இறங்கி நிற்காதிருந்ததில்லை.

ஆனால், வினய் எப்படி இதைப்போய் பட்டவர்த்தனமாகப் பேசுகிறான்? அதுவும் தம்பியிடம் யாராவது இதையெல்லாம் பேசுவார்களா? எனக்கு அவன் அதைச் சொன்னதைவிட, சொன்ன தொனி விநோதமாகப் பட்டது. நாளெல்லாம் முலைகளின் மீதே படுத்துப் புரண்டெழும் வழக்கம் கொண்டவனின் அலட்சியத் தொனி. இதெல்லாம் பெரிய விஷயமா என்பதைப்போல. எனக்கு அவன் அப்படிக் கேட்டது ஓர் அதிர்ச்சி என்றால், என் பதிலை அவன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது இன்னும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

‘சொல்லு விமல். ஸ்ரீப்ரியா படத்துல நீ மாரைத்தானே பாக்கறே? லட்சுமி படத்துல மட்டும் ஏன் கண்ணைப் பார்த்துட்டு உடனே பாதத்தைப் பார்க்கறே?’

‘ஏன்னா அது காட்.’

‘நான் சொல்றேன், ரெண்டுமே வெறும் போட்டோ. ரெண்டுமே கேர்ள்ஸ். அப்பறம் என்ன?’

‘எனக்கு நீ பேசறது பிடிக்கலை. நான் ஆத்துக்குப் போறேன்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிப் போய்விட்டேன். அவன் பீடி குடிப்பவன். நடிகைகளின் புகைப்படங்களைத் திருட்டுத்தனமாக வைத்துப் பார்த்து ரசிப்பவன். யாருக்கும் தெரியாமல் இன்னும் வேறென்னென்ன பழக்கங்கள் அவனுக்கு இருக்குமோ என்று பயமாக இருந்தது. அம்மாவுக்கு இதெல்லாம் தெரிந்தால் செத்தே போய்விடுவாள் என்று தோன்றியது.

நாலைந்து தினங்கள் கழித்து ஒரு நாள் பள்ளிக்கூடத்துக்குப் போகிற வழியில் சொன்னேன், ‘வினய், அண்ணா காணாம போனப்பறம் அம்மா உன்னைத்தான் ரொம்ப நம்பிண்டிருக்கா. தப்பு வழியில மட்டும் போயிடாதடா.’

அவன் சிரித்தான். ‘மார பாக்கறது தப்புன்னா, பகவான் ஏன் அதைப் பொம்மனாட்டிகளுக்குக் குடுத்தான்?’ என்று கேட்டான்.

‘ஏன் குடுத்தான்?’

‘அதுதான் அவன் சாமர்த்தியம்! நமக்கு அவன் வெக்கற டெஸ்ட்.’

‘என்ன டெஸ்ட்?’

‘மாரைப் பாக்கறப்போ உனக்கு அதுக்குள்ள இருக்கற எலும்பும் சதையும் தெரியறதான்னு யோசி. அது தெரிஞ்சிடுத்துன்னா, மார பாக்கறப்போ உன் குஞ்சு எழுந்துக்காது.’

எனக்குத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது. இது நான் சற்றும் எதிர்பாராதது. இப்படியெல்லாம் வாயைத் திறந்து ஒருவனால் அசிங்க அசிங்கமாகப் பேசிவிட முடியுமா! இது கொலையைவிடப் பெரும் பாவமல்லவா! ஏழேழு ஜென்மத்துக்கும் நரகம்தான், சந்தேகமில்லை.

அதற்குமேல் எனக்கு அவனோடு பேச இஷ்டமில்லாமல் போய்விட்டது. வேகவேகமாக நடையை எட்டிப் போட்டு முன்னால் போய்விட்டேன். மதிய உணவு இடைவேளையின்போது வினோத்தை அவன் வகுப்புக்குப் போய்ப் பார்த்தேன். ‘உன்கிட்ட ஒண்ணு பேசணும், வா’ என்று தனியே மைதானத்துக்கு அழைத்துச் சென்று, ‘வினய் சரியா இல்ல. அசிங்க அசிங்கமா பேசறான். கெட்டத்தனம் நிறைய பண்றான் போலருக்கு’ என்று சொன்னேன்.

நான் அவ்வளவுதான் சொன்னேன். ஆனால் மாலை நான் விளையாடிவிட்டு வீடு போய்ச் சேர்வதற்குள் அவன் அம்மாவிடம் நான் சொன்னதைத் தெரியப்படுத்திவிட்டிருந்தான். அம்மா எனக்குக் காப்பியைக் கொடுத்து, குடித்து முடிக்கும்வரை அமைதியாக இருந்தாள். நான் தம்ளரை வைத்துவிட்டுக் கிளம்பியதும், ‘வினயைப் பத்தி எதோ சொன்னியாமே? என்ன?’ என்று கேட்டாள்.

எனக்கு உண்மையிலேயே மிகவும் அச்சமாகிவிட்டது. நான் ஏன் அதை வினோத்திடம் சொன்னேன் என்று வருந்தினேன். உண்மையில் அம்மாவை மனம் வருந்தச் செய்யும் எதையுமே செய்யக் கூடாது என்று எண்ணியிருந்தேன்.

‘சொல்லு விமல். வினய் என்ன பண்ணான்?’ அம்மா விடாமல் கேட்டாள்.

‘இல்லேம்மா. அவன் நடிகை படமெல்லாம் வெச்சிண்டிருக்கான்’ என்று தட்டுத்தடுமாறி, கேட்ட மரியாதைக்கு ஒரு பதிலைச் சொல்லி வைத்தேன்.

‘நடிகை படமா? யாரோட படம்டா?’ என்று கேசவன் மாமா கேட்டார்.

‘ஸ்ரீப்ரியா.’

‘அட! பய நம்மள மாதிரி டேஸ்ட் உள்ளவனா! சர்தான். எனக்கும் அவள ரொம்பப் பிடிக்கும்க்கா’ என்று மாமா சொன்னார்.

‘போதுமே? ஆன வயசுக்கு அது ஒண்ணுதான் குறைச்சல்’ என்று சிடுசிடுத்துவிட்டு, என்னை மட்டும் சமையல் கட்டுக்கு அழைத்துச் சென்றாள்.

‘நடிகை படம் வெச்சுக்கறதெல்லாம் தப்பில்லேடா விமல். அவன் வயசு வரும்போது உனக்கும் யார் போட்டோவாவது வெச்சுக்கலாம்னு தோணும். அதெல்லாம் தப்பே இல்லே.’

இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியளித்தது. அம்மா இப்படிப் பேசுவாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் நான் அவனைப் போன்றவனில்லை என்று அவளுக்குப் புரியவைத்துவிட விரும்பினேன்.

‘எனக்கு அப்படி ஒரு போட்டோ வெச்சுக்கணும்னு தோணித்துன்னா நான் உன் போட்டோவத்தான் வெச்சுப்பேன்’ என்று சொன்னேன்.

அம்மா சிரித்தாள். என்னை அப்படியே வாரி அணைத்துக்கொண்டு உச்சந்தலையில் முத்தமிட்டாள். ‘என் கண்ணு. உன்கிட்ட அம்மா போட்டோ இருக்கா?’

‘இல்லை. ஆனா அப்பா பொட்டியிலே, ஆல்பத்துல இருக்கு. அத பிச்சி எடுத்துண்டுடுவேன்’ என்று சொன்னேன்.

‘ரொம்ப வருஷம் முன்னாடி அதே கல்யாண ஆல்பத்துலேருந்து ஒரு போட்டோவ விஜய் பிச்சி வெச்சிண்டிருந்தான். அத எங்க போட்டானோ தெரியலே.’

நான் அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் அழுவதுபோலத் தெரிந்தது. ஆனால் முகம் கோணாமல், குரல் உடையாமல், கண்ணீரை வெளியே சிந்தாமல் அழ முடியுமா என்று தெரியவில்லை. ஒரு கணம் யோசித்தேன். சட்டென்று அறைக்குள் ஓடி, அண்ணாவின் புத்தக அடுக்கைக் கலைத்துப்போட்டு வேகவேகமாகத் தேடினேன். அவனிடம் அம்மாவின் அந்தப் போட்டோ இருந்தது எனக்குத் தெரியும். ஆனால் அடிக்கடி எடுத்துப் பார்ப்பதெல்லாம் கிடையாது. என்றைக்கோ தோன்றி, ஆல்பத்தில் இருந்து எடுத்து வைத்திருக்கிறான். பிறகு எடுத்ததையே மறந்திருப்பான் என்று தோன்றியது.

 

ஐந்து நிமிடங்கள் அவனது அனைத்துப் புத்தகங்களையும் புரட்டிக் கவிழ்த்து ஒரு வழியாக அந்தப் போட்டோவைக் கண்டுபிடித்துவிட்டேன். ‘அம்மா, கிடைச்சுடுத்து’ என்று கத்திக்கொண்டே அடுக்களைக்குள் அதை எடுத்துக்கொண்டு ஓடினேன்.

‘என்னதுடா?’

‘அண்ணா எடுத்து வெச்சிருந்த போட்டோ’ என்று அவளிடம் நீட்டினேன்.

ஒரு கணம்தான். அம்மாவின் முகம் குப்பென்று பூரித்துப்போனது. நெடுநேரம் அந்தப் படத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அது அம்மாவின் திருமணத்தன்று எடுத்த கறுப்பு வெள்ளைப் புகைப்படம். அம்மா குனிந்து நின்றிருக்க, அப்பா அவள் காலில் மெட்டி அணிவித்துக்கொண்டிருப்பார். உறவுக்கார ஜனம் சுற்றி நின்றிருக்கும். அண்ணாவுக்கு மொத்தப் படங்களில் அந்த ஒரு போட்டோ மட்டும் ஏன் பிடித்தது என்று தெரியவில்லை. அத்தனை ஒன்றும் சிறப்பாக எடுக்கப்பட்ட படமும் அல்ல. என்னமோ அவனுக்குத் தோன்றியிருக்கிறது. கவர்ந்திருக்கிறது.

அம்மா கண்ணைத் துடைத்துக்கொண்டாள். ‘இந்தா, உள்ள கொண்டுபோய் வை’ என்று என்னிடம் திருப்பிக் கொடுத்தாள்.

அப்போதுதான் போட்டோவின் பின்பக்கம் அண்ணா பென்சிலால் ஏதோ எழுதியிருப்பதை நானே பார்த்தேன்.

‘குடு அதை’ என்று அம்மா மீண்டும் வாங்கி, எழுதியிருந்ததைப் படித்தாள். அண்ணாவின் கையெழுத்துத்தான். நிறுத்தி, நிதானமாக, மிகச் சரியாகத்தான் எழுதியிருந்தான்.

‘ஒரு கடமைக்காக ஒருநாள் வருவேன்.’

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

21. மயான காண்டம்

 

 

படூர் வாத்தியார் பார்த்துக்கொள்வதாகச் சொல்லியிருந்ததால், அப்பா என்னை அந்த வருட மயான கொள்ளைத் திருவிழாவுக்கு அனுப்ப ஒப்புக்கொண்டிருந்தார். ஆசைப்பட்டதை வாங்கிச் சாப்பிட, கையில் இரண்டு ரூபாய் கொடுத்திருந்தார்.

‘ஃப்ரெண்ட்ஸெல்லாம் வந்தாங்கன்னாகூட சேர்ந்து ஜாலியா ஊர சுத்து விமல். அதெல்லாம் தப்பே இல்லை. ஆனா கூட்டம் மயானத்துக்குப் போகறப்ப நீ ஆத்துக்கு வந்துடு. கூட வர யாருமில்லேன்னா, வாத்யார் வீட்ல போய் இரு. அப்பா வந்து அழைச்சிண்டு வந்துடுவா’ என்று அம்மா சொன்னாள்.

கேசவன் மாமா திருவல்லிக்கேணி வரை போயிருந்தார். திரும்ப ஒரு நாளாகும் என்று சொல்லியிருந்தார். அவர் இருந்திருந்தால், வாத்தியாரோடு திருவிழா பார்க்க வேண்டிய அவலம் உண்டாகியிருக்காது. ஊர்ப்பெரியவராக, பஞ்சாயத்து முக்கியஸ்தராக, நல்லவராக, அன்பானவராக இருந்தாலும், அவர் என் பள்ளிக்கூட வாத்தியார். அவரது அருகாமையில் பத்திரமாக இருக்கலாமே தவிர, ஜாலியாக இருக்க முடியாது. ஆனால், எனக்கு அன்றைக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. என்றைக்குமில்லாத திருநாளாக வினோத் படிக்க வேண்டியிருப்பதாகச் சொல்ல, வினய் தனக்குத் திருப்போரூரில் கிரிக்கெட் மேட்ச் இருப்பதாகச் சொல்லிவிட்டு அதிகாலையே கிளம்பிப் போய்விட்டிருந்தான். நான் மிகவும் ஆசைப்பட்டேன் என்பதால், அப்பா தனது நண்பரான படூர் வாத்தியாருக்கு போன் செய்து விவரம் சொல்லியிருக்கிறார்.

‘அதுக்கென்ன, நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விட்டுடுங்க. நான் பாத்துக்கறேன்’ என்று அவர் சொல்லியிருக்கிறார்.

எனக்கு அதிலேயே திருவிழா மீதிருந்த விருப்பம் சற்று மட்டுப்பட்டது. படூர் வாத்தியாரின் மகன் என்னோடு படிக்கிறவன்தான். ஒரு சில சந்தர்ப்பங்களில் அவர்கள் வீட்டுக்கு நான் போயிருக்கிறேன். யாரும் தெரியாதவர்கள் இல்லை. அறிமுகமில்லாத முகங்களில்லை. ஆனாலும் அவர் வாத்தியார்.

‘அதெல்லாம் பரவால்ல. ஸ்கூல்லதான் அவர் வாத்தியார். ஆத்துல அன்பாத்தான் இருப்பார். நீ அப்பாவோட கெளம்பு’ என்று அம்மா அனுப்பிவைத்தாள்.

கேளம்பாக்கம், கோவளம், புதுப்பாக்கம், தையூர், திருப்போரூர், நாவலூர், சோழிங்கநல்லூரில் இருந்தெல்லாம் மக்கள் மொத்த மொத்தமாக வந்து சேர்ந்துகொண்டே இருந்தார்கள். படூர் சாலைகளெங்கும் வெறும் உடல்களாக நின்று நகர்ந்துகொண்டிருந்தன. பெரியவர்கள் அவரவர் குழந்தைகளைத் தோளில் ஏற்றி உட்காரவைத்துக்கொண்டு நகர்ந்து போய்க்கொண்டிருந்தார்கள். பெண்கள் ஆளுக்கொரு கூடைப் பையில் முருங்கைக்காய்கள், மஞ்சள் கிழங்கு, கொழுக்கட்டைகளை எடுத்துக்கொண்டு, சத்தம் போட்டுப் பேசியபடியே போனார்கள். எங்கோ யார் யாரோ மொத்தமாக இலை பீப்பீ ஊதினார்கள். எனக்கு அது மிகவும் பிடிக்கும். யாராவது செய்து கொடுத்தால் நாளெல்லாம் வைத்துக்கொண்டு ஊதுவேன். கேசவன் மாமாவுக்கு எட்டும், குளிர்ந்த தினத்தில் கோயில் சுவரில் வளர்ந்திருக்கும் ஆல இலைகளை மடித்து பீப்பீ செய்து வந்து தருவார். படூர் வாத்தியாரிடம் பீப்பீ வேண்டும் என்று எப்படிக் கேட்பது?

நான் வாத்தியாரின் மகன் மூர்த்தியிடம் என் விருப்பத்தைச் சொன்னேன். அவனுக்கு பீப்பீயில் விருப்பம் இல்லை. அவன் திருவிழாக் கடைகளின் பக்கம் பார்வையைச் செலுத்தியபடி வந்தான். ஹரிக்கேன் விளக்கு வைத்த தள்ளுவண்டிகளில் விதவிதமான நிறங்களில் பலகாரங்களை மலை மலையாக அடுக்கி விற்றுக்கொண்டிருந்தார்கள். பார்க்கவே எல்லாம் அழகாக இருந்தது. பலூன் கடைகள், பொம்மைக் கடைகள், பாத்திரக் கடைகள், துணிக் கடைகள் என்று வீதிகளின் ஓரங்களெங்கும் தரையில் பச்சை, நீல நிற பாலிதீன் கோணிகளை விரித்துக் கொட்டிக் குவித்திருந்தது. எல்லாக் கடைகளின் முன்னும் ஆட்கள் குவிந்திருந்தார்கள். எங்கும் குரல்களால் நிறைந்திருந்தது.

அன்றைக்கு மதியம் முதல் இருட்டி இரண்டு மணி நேரமாகும்வரை படூர் முழுவதையும் சுற்றித் தீர்த்திருந்தேன். கால்கள் வலியில் இழுத்துக்கொண்டன. கால் வலி என்று லேசாக முனகிவிட்டுப் படுத்தால் போதும். தூக்கம் நெருங்கும் நேரத்தில், அம்மா வந்து அருகே அமர்ந்து பாதங்களை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு ஒத்தடம் கொடுப்பதுபோல அமுக்கிவிடுவாள். வீட்டுக்குப் போய்விடலாமா என்று ஒருகணம் நினைத்தேன். மயானத்துக்கு மட்டும் போகவேண்டாம் என்று அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. இத்தனை நூறு பேர் போகவிருக்கிற ஓரிடத்துக்கு நான் மட்டும் போகாதிருக்க என்ன அவசியம்?

பேய்களும் பிசாசுகளும் உலவும் இடமானாலும், இன்றைய ஒரு நாள் அவை யாரையும் ஒன்றும் செய்யாது என்று வாத்தியாரின் மனைவி சொன்னாள். சாம்பலும் மணலும் கலந்து செய்யப்படுகிற அங்காளியின் பேருருவம், மயானத்தின் நடுவே கிடத்தப்பட்டிருக்கும். அதன் கண் திறக்கும் வைபவம்தான் உச்சம். எங்கெங்கும் மக்கள் கரகமெடுத்து ஆடிக்கொண்டிருப்பார்கள். தையூர் பண்ணையின் தரைக் கிணற்றில் குதித்துக் குளித்துவிட்டு பூசாரி ஈரம் சொட்டச் சொட்ட எழுந்து வருவார். அங்கிருந்து அவரோடுகூட ஆயிரமாயிரம் பேர் படூர் வரை ஊர்வலமாக வருவார்கள். ஒரு மாறுதலுக்கு பூசாரி அன்றைக்குப் புடைவை கட்டியிருப்பார். முகமெங்கும் சாந்தும் குங்குமமும் பூசியிருப்பார். அவரோடு வருபவர்களுள் யாராவது ஒருவர், வாயில் ஒரு ஆட்டின் பச்சை ஈரலைக் கடித்துக் கவ்விக்கொண்டு கையில் தீச்சட்டி ஏந்தி வருவார். ஆளாளுக்குக் கையில் ஆயுதங்கள் வைத்திருப்பார்கள். வாள்கள். குத்தீட்டிகள். வேல் கம்புகள். ஜல் ஜல்லென்று அதிரும் சலங்கைகளின் சத்தம். எங்கும் ஒலிக்கும் பறையின் பேரரவம்.

எனக்கு அதைக் கேட்கும்போதே, போய்ப் பார்த்தால்தான் என்னவென்று தோன்றியது. மயானத்தில் கொள்ளையடிக்க என்ன இருக்கும் என்ற வினாவொன்று எனக்கு இருந்தது. அதை வாத்தியாரிடம் கேட்கத் தயக்கமாகவும் இருந்தது. எங்கெங்கிருந்தோ வந்து குவியும் சனம், நூற்றுக்கணக்கான சேவல்களை ஒரே சமயத்தில் பலியிடுவதைப் பார்ப்பதே பெரும் புண்ணியம் என்றாள் வாத்தியாரின் மனைவி. எனக்குக் குலை நடுங்கியது. நூறு சேவல்கள்! அத்தனை ரத்தமும் மயானம் முழுதும் பொங்கிப் பரவி வழிந்தோடுவதுபோலக் கற்பனை செய்து பார்த்தேன். உடல் சிலிர்த்தது. ஒருவேளை இதற்காகத்தான் என்னை அந்தப் பக்கம் போகவேண்டாம் என்று அம்மா சொன்னாளோ என்றும் தோன்றியது.

‘அதெல்லாம் போனா தப்பில்லைடா’ என்று மூர்த்தி சொன்னான். ‘நீ வரலைன்னா வீட்லயே இரு விமல். நாங்க வெளிய கதவ பூட்டிக்கிட்டு போயிடுறோம்’ என்று வாத்தியார் சொன்னார்.

‘இல்லை சார். எனக்கு ஆசையாத்தான் இருக்கு. ஆனா அம்மா திட்டுவாளோன்னு பயம்மா இருக்கு.’

அவர் என்ன நினைத்தாரோ. ‘சரி, நான் உங்கப்பாட்ட பேசிக்கறேன். நீயும் வா’ என்று சொன்னார்.

அன்று நள்ளிரவுக்குப் பிறகு நாங்கள் வீட்டைப் பூட்டிக்கொண்டு வீதியில் இறங்கினோம். பகலேபோல எங்கும் வெளிச்சம் பரவி நிரம்பியிருந்தது. காணுமிடம் எல்லாம் மக்கள் கூட்டம். மூலைக்கு மூலை கூம்பு ஸ்பீக்கர் கட்டி, அம்மன் பாடல்கள் ஒலிக்கவிட்டிருந்தார்கள். வாண வேடிக்கைகளும் வேட்டுச் சத்தமும் ஊரை நாலாபுறமும் அரணாகச் சூழ்ந்திருப்பதாகத் தோன்றியது. கும்பலோடு கும்பலாக நாங்கள் மயானத்தை நோக்கித் தள்ளிச் செல்லப்பட்டோம்.

அந்தக் காட்சியை நான் வாழ்நாளில் மறக்கமாட்டேன். வாயில் ஆட்டு ஈரலைக் கடித்துக்கொண்டு ஆவேசமாகத் தீச்சட்டியுடன் முன்னால் ஓடி வந்தவனுக்கு முப்பது முப்பத்து ஐந்து வயது இருக்கும். வருடக்கணக்கில் முடி வெட்டாமல் தலை காடுபோலக் கிடந்தது. அடர்ந்த தாடியும் சிவந்த கண்களும் திரண்டு முட்டிக்கொண்டு நின்ற தோள்களும் எலும்பு புடைத்த மார்புமாக அவன் ஆவேசமாக எடுத்துவைத்த ஒவ்வொரு அடியும் புவியைப் பிளந்துவிடும்போல் அச்சமூட்டியது. பக்கவாட்டில் முட்டித்தள்ளிய கூட்டத்தை அவன் பொருட்படுத்தவில்லை. குறுக்கே யார் வந்தாலும் உதைத்துத் தள்ளிக்கொண்டே ஓடினான். உண்மையில், அத்தனை பெரும் கூட்டத்தை மயானத்தை நோக்கி உந்தித் தள்ளிக்கொண்டுபோனதே அவந்தான் என்று தோன்றியது. கிளம்பியதுதான் தெரியும். எப்போது, எப்படி அங்கே போய்ச் சேர்ந்தேன் என்றே புரியவில்லை.

 

பூசாரியும் ஈரல் கடித்தவனும் மயானத்தை வந்தடைந்தபோது கூச்சலும் பறையொலியும் உச்சத்தைத் தொட்டன. இருளில் ஒருவரையொருவர் முகம் பார்க்கக்கூட முடியவில்லை. ஆங்காங்கே பொருத்தியிருந்த விளக்குகளின் வெளிச்சம், கவிந்திருந்த இருளின் அடர்த்தியைத்தான் பெரிதுபடுத்திக் காட்டியதே தவிர, அடுத்தவர் முகம் பார்க்கக்கூட உதவவில்லை.

நான் சற்று பயந்திருந்தேன். என் வாழ்நாளில் அத்தனை பெரும் சத்தத்தை நான் கேட்டதில்லை. ஒரு பெரும் கூட்டமே ஆவேசம் கொண்டு முட்டி மோதும் என்று தெரிந்திருந்தால், நான் அங்கு சென்றிருக்க மாட்டேன். வாத்தியாரின் வேட்டியை என்ன ஆனாலும் விடக் கூடாது என்று இறுக்கிப் பிடித்துக்கொண்டிருந்தேன். திடீரென்று வானில் ஒரு வெடிச் சத்தம் கேட்டது. உடனே பெண்கள் அத்தனை பேரும் எடுத்து வந்திருந்த முருங்கைக்காய்களையும் மஞ்சள் கிழங்குகளையும் கொழுக்கட்டைகளையும் வானை நோக்கி வீசத் தொடங்கினார்கள். கணப்பொழுதில் மயானம் முழுதும் நிறைந்து நின்றிருந்த அத்தனை பேர் மீதும் முருங்கைக்காய்கள் விழத் தொடங்கின. ஒரு கூட்டம் அதைப் பொறுக்கக் குனிய, பின்னால் வந்துகொண்டிருந்தவர்கள் அவர்களை நெக்கித் தள்ளினார்கள். நெரிசலில் மிதிபட்டுப் பலபேர் கெட்ட வார்த்தைகள் சொல்லித் திட்ட ஆரம்பித்தார்கள்.

பூசாரி உக்கிரமாக சாமியாடிக்கொண்டிருந்தார். உடுக்கைச் சத்தமும் சேகண்டி ஒலியும் செவிகளைக் கிழித்தன. விழாவின் உச்சமாக, அவர் தரையில் படர்ந்து கிடந்த பிரம்மாண்டமான சாம்பல் அங்காளியின் மீது விழுந்து புரண்டு எழுந்தபோது மொத்தக் கூட்டமும் ஆர்ப்பரித்தது. அவர் உடலெங்கும் சாம்பல் பூசி பார்க்கவே பயங்கரமாக இருந்தார். அப்படியே பிடிப்பிடியாக சாம்பலை அள்ளி அள்ளி சூழ்ந்திருந்த மக்கள் மீது வீசினார். மூலைக்கு மூலை சேவல்களின் மரண ஓலம். எனக்குத் தெரியாது. படூர் வாத்தியாரும் ஒரு சேவலை பலி கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார் போலிருக்கிறது. அதற்காக அவர் ஒரு ஆளை நியமித்திருந்தார். எங்கிருந்தோ பாய்ந்து வந்த அந்த நபர், ‘சார் வாங்க’ என்று அவர் கையைப் பிடித்து கும்பலுக்கு நடுவே இழுத்துக்கொண்டு போக, அவர் வேட்டியைப் பிடித்துக்கொண்டிருந்த நானும் அவரோடு ஒட்டிக்கொண்டு பின்னால் போனேன். வாத்தியாரின் மனைவி வருகிறாளா, மூர்த்தி என் பின்னால் வந்தானா என்றுகூடத் தெரியாது. உலகமே சேர்ந்து என்னைச் செலுத்திக்கொண்டிருந்தது போலத்தான் உணர்ந்தேன்.

அந்த நபர் வாத்தியாரை ஒரு மரத்தடிக்கு இழுத்துக்கொண்டு போனான். மயானத்தின் தெற்கு மூலையில் இருந்த மரம் அது. மொத்தப் பரப்பில் அந்த இடம்தான் சற்று மேடாகவும் இருந்தது. அங்கிருந்து பார்த்தபோது, அங்காளியின் சாம்பல் சிலையுருவின் மீது பூசாரி உருண்டு புரளும் காட்சி சற்றுத் தெளிவாகத் தெரிந்தது. கணப்பொழுது நான் பார்வையைத் திருப்பியபோது, வாத்தியார் தனது நேர்த்திக்கடனாக சேவலைச் சீவி பலி கொடுத்துக்கொண்டிருந்தார்.

எங்கள் பள்ளிக்கூடத்தில் அவர் தறி ஆசிரியராக இருந்தவர். கைத்தொழில் பயிற்றுநர். அமைதியே வடிவான மனிதர் என்று பெயரெடுத்தவர். எப்போதாவது வரலாறு, புவியியல் எடுக்கும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வராதிருந்தால், அவரைத்தான் தலைமை ஆசிரியர் அந்த வகுப்புகளுக்கு அனுப்பிவைப்பார். ‘டேய் படிங்கடா’ என்று மட்டும் சொல்லிவிட்டு, ஒரு காகிதத்தைக் கிழித்துச் சுருட்டி, காது குடைய ஆரம்பித்துவிடுவார். வகுப்பு முடியும் நேரத்தில் மட்டும், ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கைத்தொழில் கற்க வேண்டியதன் அவசியத்தைக் குறித்து சில வார்த்தைகள் சொல்லுவார். அவரறிந்த வரலாறும் புவியியலும் அதுவாகவே இருந்தது. ஏனோ அந்த சங்கதி தலைமை ஆசிரியருக்குத் தெரியாமலே இருந்தது. நானறிந்து, பிரம்பைத் தொடாத ஒரே ஆசிரியர் எங்கள் பள்ளியில் அவர்தான். ஆனால் எத்தனை உக்கிரமாகச் சேவலின் சிரத்தைச் சீவித் தள்ளிவிட்டார்! வெட்டிய பின்பும் அந்தச் சேவலின் உடல் துடித்துக்கொண்டே இருந்தது. அரை இருளில் அந்தக் காட்சி அளித்த அதிர்ச்சியில் இருந்து என்னால் வெகு நேரம் மீளவே முடியவில்லை.

திகைத்துப்போய் நான் வாத்தியாரை நிமிர்ந்து பார்த்தேன். என் முகத்தில் அச்சத்தின் துளிகள் தெறித்திருக்க வேண்டும்.

‘என்ன?’ என்றார் வாத்தியார்.

உடனே நான் ஒன்றுமில்லை என்று தலையசைத்தேன். அந்த இடத்தைவிட்டு ஓடிவிட வேண்டும் என்று ஏனோ தோன்றிவிட்டது. உடம்பெங்கும் சாம்பல் பூசி ஆடிக்கொண்டிருந்த பூசாரியின் ஆட்டத்தை விடவும், பக்தியின் உச்சத்தில், கொண்டாட்டத்தின் உச்சத்தில் தம்மை மறந்து குரலெழுப்பிக்கொண்டிருந்த ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தை விடவும் அந்த ஒரு சிறு கழுத்துச் சீவலின் உக்கிரம் என்னை வெகுவாகத் தாக்கியது.

நான் மெல்ல வாத்தியாரின் வேட்டியைப் பிடித்திருந்த கையை விலக்கிக்கொண்டேன். அவர் யாருடனோ பேசிக்கொண்டிருந்தபோது, அவரறியாமல் நாலடி நகர்ந்து சென்று அந்த மரத்தின் மீது சாய்ந்து நின்றுகொண்டேன்.

அப்போதுதான் மரத்தின் மீதிருந்து ஓர் உருவம் கீழே குதித்தது. வரும்போதே மரக்கிளைகளில் பல பேர் ஏறி நின்றிருந்ததை நான் பார்த்திருந்தேன். ஆனால் முகங்களைக் கவனிக்கவில்லை. இப்போது எதிர்பாராவிதமாக என் முன்னால் குதித்தவனைக் கண்டபோது, எனக்குப் பேச்சற்றுப்போனது. அரையில் ஒரு கோவணம் மட்டும் உடுத்தி, முற்றுமுழுதாகச் சாம்பல் பூசிக்கொண்டு இருந்தான். முகமெல்லாம் சாம்பல் புழுதி. அது வினய் என்பதை நான் உணரவே எனக்குச் சில விநாடிகள் பிடித்தன.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

22. உரித்தெடுத்தல்

 

 

தோல், தோல், தோல் என்று பைத்தியம்போல் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தான். தனக்கு மட்டும் சக்தி இருந்தால், நெற்றியில் இருந்து பாதம் வரை மூடியிருக்கும் தோலை உரித்தெடுத்துவிட விரும்புவதாக வினய் சொன்னபோது, எனக்கு மிகுந்த அச்சமாகிவிட்டது. அவனுக்கு ஏதோ ஆகிவிட்டதென்று தோன்றியது. வீட்டுக்குப் போவதற்கு முன்னால் அல்லிக் குளத்தில் குதித்து நன்றாகத் தேய்த்துக் குளித்தான். கரை ஏறி வந்து அப்படியே கோவணத்துடன் சிறிது நேரம் நின்று தன்னை உலர்த்திக்கொண்டு பிறகு உடைகளை எடுத்து அணிந்துகொண்டான். ‘சாம்பலெல்லாம் போயிடுத்தோல்யோ?’ என்று கேட்டான்.

‘எதுக்காகடா நீ அப்படி செஞ்சே?’

‘தெரியல விமல். ஆனா எல்லாத்தையும் உரிச்சிப் பாத்துடணும்னு ஒரு வெறி. இப்ப கொஞ்ச நாளாத்தான் இப்படியெல்லாம் தோணறது. நடிகைங்கள பாத்தா தோலை உரிச்சிப் பாக்கத் தோணறது. பத்மா மாமி பொண்ண பாத்தாலும் அதான் தோணறது. என்னையே உரிச்சிப் பாத்துடமாட்டமான்னு இருக்கு. முடியலியே. அதான் சட்டை பேண்ட்டையாவது கழட்டிப் போட்டுடத் தோணிடுத்து.’

‘எதுக்காகடா உரிக்கணும்? உரிக்க வேணாம்னுதானே பெருமாள் உடம்பை மூடிக் குடுத்திருக்கார்?’

அவன் சிரித்தான். ‘உரிக்க முடியறதா பார்னு சவால் விட்டிருக்கார்டா’ என்று சொன்னான்.

எனக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. அவனுக்குத் தீவிரமாக ஏதோ பிரச்னை உள்ளதென்று தோன்றியது. அண்ணா விஷயத்தில் நடந்துகொண்டதைப்போல, இவன் விஷயத்தில் நான் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்று நினைத்துக்கொண்டேன். அண்ணாவாவது தெளிவாக இருந்தான். தெளிவாகப் பேசினான். தான் எதைத் தேடுகிறோம் என்று என்னிடமாவது அவனால் எடுத்துச் சொல்ல முடிந்தது. சந்தேகமில்லாமல் அவன் ஒரு பக்திமான். அதைத்தாண்டி அவனிடம் ஒரு ஞானத்தேடல் இருந்தது. இதெல்லாம் பின்னால் எனக்கென்று ஒரு பக்குவம் வந்தபோது புரிந்த விஷயங்கள்தாம் என்றாலும் வினய் விஷயத்தில் எனக்கு அந்த வயதிலேயே தீர்மானமாகத் தோன்றியது. இவனுக்குப் பைத்தியம் பிடிக்கவிருக்கிறது.

‘ஆமால்ல? பைத்தியம்தான் போலருக்கு’ என்று அவன் சொன்னான்.

அன்று மாலை அப்பா ஆபீஸ் முடித்துத் திரும்பியபோது, அவரிடம் நான் பார்த்ததைச் சொல்லிவிட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன். எனக்கு வசதியாக அம்மா, மாமாவோடு தையூர் சந்தைக்குப் போய்வருவதாகச் சொல்லிவிட்டுப் போயிருந்தாள். வினோத் வீட்டில்தான் இருந்தான். ஆனால் அது ஒரு பிரச்னையில்லை. பொதுவாக அவன் அப்பா இருக்கும் இடத்தின் பக்கம் வரவே மாட்டான். பசியெடுக்கும்போது ‘அம்மா பசிக்கறது’ என்று குரல் கொடுப்பானே தவிர, என்னைப்போல் அடுக்களைக்கு உள்ளே போய்ப் பேசுகிற வழக்கம் அம்மா விஷயத்தில்கூட அவனுக்குக் கிடையாது. வினய் எல்லோரிடமும் எப்போதும் பேசிக்கொண்டிருக்கிறவன். அவன் தையூர் தோப்பில் பீடி குடித்ததைப் பார்த்துவிட்டு கேசவன் மாமா வீட்டுக்கு வந்து சொன்னதன் மறுநாள், ஒன்றுமே நடக்காததுபோல மாமாவிடமே கிரிக்கெட் விளையாட வருகிறீர்களா என்று கேட்டான். மாமா அப்போதும் அவனுக்கு நல்ல வார்த்தைகள் சொல்லி, கெட்டுப் போகாதிருக்கும்படிக் கெஞ்சியிருக்கிறார்.

‘பீடி பிடிச்சா கெட்டுப் போய்டுவேனா மாமா? அப்ப ஒரு நாளைக்கு பதினாறு சிகரெட் பிடிச்ச விவேகானந்தர் கெட்டவரா?’ என்று வினய் கேட்டதாக மாமா வந்து சொல்லிப் புலம்பிக்கொண்டிருந்தார்.

எனக்கு அந்தத் தகவல் மிகவும் புதிதாக இருந்தது. நான் அம்மாவிடம் ரகசியமாகக் கேட்டேன், ‘விவேகானந்தர் சிகரெட் பிடிப்பாராம்மா?’

‘எனக்குத் தெரியலடா. அவனுக்கு யாரோ அப்படி சொல்லியிருக்கா’ என்று சொன்னாள்.

‘ஆனா சிகரெட்டெல்லாம் கெட்டவாதானே பிடிப்பா?’

அம்மா சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். பிறகு, ‘வினய் நல்லவன்’ என்று சொன்னாள்.

கேசவன் மாமாவுடன் அம்மா சந்தைக்குப் போய் முக்கால் மணி நேரம் ஆகியிருந்தது. அப்பா வாசலில் நாற்காலி போட்டு அமர்ந்து டிரான்சிஸ்டரில் செய்தி கேட்டுக்கொண்டிருந்தார். நான் அவர் அருகே சென்று அமர்ந்துகொண்டேன். சில நிமிடங்கள் அப்பா என்னைப் பொருட்படுத்தவில்லை. செய்தியிலேயே கவனமாக இருந்தார். பிறகு என்ன நினைத்தாரோ, டிரான்சிஸ்டரின் வால்யூமை குறைத்துவிட்டு, ‘என்ன?’ என்றார்.

நான் சற்றும் யோசிக்கவில்லை. ‘வினய் நிறைய தப்பு பண்றாம்ப்பா. அவனை ஒரு டாக்டர்ட்ட கூட்டிண்டு போய்க் காட்டணும். கோவிந்தராஜ் டாக்டர் இல்லே. மெட்ராஸ்ல இருக்கற யாராவது நல்ல டாக்டர்’ என்று சொன்னேன்.

‘தப்பு பண்ணா டாக்டர் எதுக்கு?’

‘இது வேற மாதிரி தப்பு’ என்று சொன்னேன்.

அப்பா இப்போது ரேடியோவை நிறுத்தினார். ‘என்ன பண்ணான் சொல்லு’ என்று கேட்டார்.

மயானக் கொள்ளையில் அவன் வெறும் கோவணத்துடன் மரத்தின் மீதிருந்து குதித்த காட்சியை நான் பார்த்தபடியே விவரித்து முடித்தேன். ‘உடம்பெல்லாம் சாம்பல் பூசிண்டு பாக்கவே பயங்கரமா இருந்தான்ப்பா. எனக்கு அழுகையே வந்துடுத்து. ஏண்டா இப்படின்னு கேட்டதுக்கு எல்லாத்தையும் உரிக்கறேன்னு சொல்றாம்ப்பா.’

அன்றிரவு அப்பா வினய்யை நடுக்கூடத்தில் நிறுத்திவைத்து அடி அடியென்று அடித்துத் தீர்த்தார். அம்மாவும் மாமாவும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். குறுக்கே விழுந்து தடுத்தார்கள். அப்பா நிறுத்தவேயில்லை. ‘பாவி, மகாபாவி! ஏண்டா உம்புத்தி இப்படி போறது? இதுக்காடா எனக்குப் பிள்ளையா வந்து பொறந்தே?’ என்று கதறிக்கொண்டே அடித்தார். இரண்டு பிரம்புகள், ஒரு ஸ்கேல் உடைந்தன. அப்போதும் அவரது ஆத்திரம் தீரவில்லை. ‘எங்க என் பெல்ட்டு? எடு அதை’ என்று உக்கிரமாக பெல்ட்டைத் தேடத் தொடங்கியபோது, மாமாதான் வினய்யைப் பிடித்து இழுத்துச் சென்று ஓர் அறைக்குள் தள்ளிக் கதவைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டார். மறக்காமல் வெளிப் பூட்டை எடுத்துவந்து அந்த அறைக் கதவுக்குப் போட்டு, பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு வெளியே போய்விட்டார்.

எனக்கு மிகவும் பதற்றமாகவும் பயமாகவும் இருந்தது. வினோத் என்னைத் தனியே கூப்பிட்டுப் பத்து நிமிடங்களுக்குத் திட்டினான். ‘நீ அதை அம்மாட்ட சொல்லியிருக்கணும். இப்பப் பாரு, அப்பா அவனை எப்படிப் போட்டு அடிச்சிருக்கார்’ என்று சொன்னான். வினய் என்னோடு பேசப் போவதில்லை என்பது தெரிந்துவிட்டது. இருந்தாலும் அன்றைக்கு அது நடந்தது நல்லதற்கே என்று நினைத்தேன். மாமா கேட்டபோதுகூட, ‘அவன் நடந்துண்டது பாக்க பயமா இருந்தது மாமா. அதனாலதான் சொன்னேன்’ என்று சொன்னேன்.

அன்றிரவு அம்மா, அப்பா, மாமா மூவரும் நெடுநேரம் வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நானும் வினோத்தும் உறங்கிவிட்டோமா என்று பார்க்க, அப்பா ஐந்து நிமிடங்களுக்கொரு முறை உள்ளே வந்து வந்து போய்க்கொண்டிருந்தார். நாங்கள் இரண்டு பேருமே உறங்கியிருக்கவில்லை. ஆனால் வெளியே அவர்கள் பேசுவதைக் கேட்கவும் முடியாதவர்களாக இருந்தோம். அப்பா திட்டமிட்டு மிகவும் ரகசியமான குரலில் பேசுவதுபோலத் தோன்றியது. சரி, என்ன முடிவெடுத்தாலும் விடிந்தால் தெரியத்தானே போகிறது என்று நினைத்துக்கொண்டு தூங்கிப் போய்விட்டேன்.

மறுநாள் விடிந்து நான் கண் விழித்தபோது கேசவன் மாமா வினய்யை அடைத்து வைத்திருந்த அறையின் பூட்டைத் திறந்தார். வினய் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான். மாமா அவனைத் தட்டி எழுப்பி, பல்லைத் தேய்த்துவிட்டு வரச் சொன்னார். ‘அப்படியே கக்கூஸ் போயிட்டு குளிச்சிட்டு வரச் சொல்லு’ என்று அப்பா சொன்னார்.

வினய் பதிலே சொல்லாமல் அவர் சொன்னபடி செய்தான். குளித்து தலைவாரிக்கொண்டு அப்பா முன்னால் வந்து, ‘ரெடிப்பா’ என்று சொன்னான்.

 

அம்மா அவனுக்குக் காப்பி கொடுத்தாள். அதை வாங்கிக் குடித்துவிட்டு, ‘சொல்லுங்கோ’ என்று நின்றான். எதற்கும் தயாராக இருந்தான் என்று எனக்குத் தோன்றியது. அது எப்படி முடியும் என்றுதான் புரியவில்லை. அப்பா அடித்தபோது அவன் சற்றும் முகம் சுளிக்கவில்லை. வலியில் கத்தவில்லை. எதிர்ப்புக் காட்டவில்லை. மாமா அவனை இழுத்துச்சென்று அறைக்குள் தள்ளிப் பூட்டியபோதும் கதவை இடிக்கவில்லை. எனக்குத் தெரிந்து அந்த இரவு அவன் சாப்பிட்டிருக்கவில்லை. ஒருவேளை நான் உறங்கிய பிறகு அம்மா பூட்டைத் திறந்து சாப்பிட ஏதாவது கொடுத்திருக்கலாம். அநேகமாக அப்பா அதை அனுமதித்திருக்க மாட்டார் என்று தோன்றியது. வினோத் சொன்னதுபோல, நான் அம்மாவிடமோ அல்லது மாமாவிடமோ சொல்லியிருக்கலாமோ என்று நினைத்தேன். இருந்தாலும் நான் அப்படியொன்றும் தவறு இழைக்கவில்லை என்றுதான் திரும்பத் திரும்பத் தோன்றியது.

அம்மாதான் சொன்னாள், ‘வினய், அப்பா உன்னை ஸ்கூல்லேருந்து நிறுத்திட முடிவு பண்ணியிருக்கார்.’

அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘ஐயோ ஏம்ப்பா?’ என்று வினோத் கேட்டான்.

‘இது படிச்சது போதும்னு நினைக்கறார். ஒன்ன காஞ்சீபுரத்துல பாடசாலைல போடப் போறார்’ என்று கேசவன் மாமா சொன்னார்.

வினய் ஒன்றுமே சொல்லவில்லை. நான்தான் தாங்கமுடியாமல் கேட்டேன், ‘இங்கேருந்து எப்படி மாமா டெய்லி காஞ்சீபுரம் போயிட்டு வர முடியும்? பஸ் கிடையாதே.’

‘அங்கயேதான் இருக்கணும். படிப்பு முடியறவரைக்கும் வீடு கிடையாது. உறவு கிடையாது. ஒண்ணும் கிடையாது’ என்று அப்பா சொன்னார்.

நான் உடனே அம்மாவைப் பார்த்தேன். அதிர்ச்சியோ வேதனையோ வருத்தமோ சற்றும் அந்த முகத்தில் தெரியவில்லை. அதே சமயம், எப்போதும் படர்ந்திருக்கும் புன்னகையும் இல்லை. எனக்கு மிகுந்த அச்சமாகிவிட்டது. ‘இதெல்லாம் வேணாம்மா. அப்பாட்ட சொல்லும்மா’ என்று திரும்பத் திரும்பக் கேட்டேன். எனக்கு அழுகை வந்தது. எப்போதுமில்லாத வினோத வழக்கமாக, எனக்கே தோன்றும்படி வினய்யின் கைகளை இழுத்து இறுக்கிப் பிடித்துக்கொண்டே பேசினேன்.

‘நான் சும்மா சொன்னேம்ப்பா. வினய் பாவம்ப்பா. இப்படியெல்லாம் பண்ணவேணாமே? இனிமே அவன் ஒழுங்கா இருப்பான்ப்பா.’

அப்பா தன் முடிவில் எவ்வளவு தீவிரமாக இருந்தார் என்பது அந்த வயதில் எனக்குப் புரியவில்லை. அதைவிடப் புரியாத விஷயம், அம்மா எப்படி எதிர்க்கவே செய்யாமல் ஒப்புக்கொண்டாள் என்பது.

நான் வினய்யிடம் திரும்பத் திரும்ப மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். ‘நீ நடந்துண்டத பாத்து பயந்து போய்த்தாண்டா நான் அப்பாட்ட சொன்னேன். அவர் இப்படி பண்ணுவார்னு எனக்குத் தெரியலைடா.’

அவன் ஒன்றும் சொல்லவில்லை.

அன்று காலை அம்மா பொங்கலும் தேங்காய்ச் சட்னியும் செய்திருந்தாள். அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டோம். சாப்பிடும்போது யாரும் எதுவும் பேசவில்லை. சாப்பிட்டு முடித்ததும், ‘கெளம்பறோம்க்கா’ என்று மாமா சொன்னார். வினய், இரண்டு செட் உடுப்புகள் மட்டும் எடுத்துக்கொண்டு தயாராக நின்றான். ‘மடத்துக்கு எஸ்டிடி போட்டுப் பேசிட்டேன். போய் சேர்த்து விட்டுட்டு வந்துடறோம்’ என்று சொல்லிவிட்டு அப்பாவும் மாமாவும் அவனை அழைத்துக்கொண்டு கிளம்பிச் சென்றார்கள்.

நான் நெடுநேரம் அழுதுகொண்டே இருந்தேன். அது நான் சற்றும் எதிர்பாராதது. வினய்யைக் கண்டித்து அல்லது தண்டித்து ஒழுங்கு செய்ய அப்பாவால் மட்டுமே முடியும் என்று எண்ணித்தான் நான் அவரிடம் சொன்னேன். ஆனால் அவர் நடந்துகொண்ட விதமும் எடுத்த முடிவும் எனக்குச் சற்றும் பிடிக்கவில்லை. அம்மா எப்படி அதற்கு ஒப்புக்கொண்டாள் என்ற வினா எனக்கு வெகுகாலம் பதிலற்று அப்படியே இருந்தது. எத்தனையோ முறை அம்மாவிடம் நான் அதைப்பற்றிக் கேட்டுப் பார்த்திருக்கிறேன். அவள் எனக்குச் சரியான பதில் சொன்னதில்லை. என்றைக்கோ ஒரு நாள் வினோத் இதைக் கேட்டபோது மட்டும், ‘அவன் சொல்லிக்காம போனான். இவனை நாம கொண்டுபோய் விட்டோம்னாவது இருந்துட்டுப் போகட்டுமே’ என்று பதில் சொல்லியிருக்கிறாள்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.