Jump to content

‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்!


Recommended Posts

23. துக்கம் தவிர்த்தல்

 

 

அன்றைக்கு முழுவதும் நான் வசந்த மண்டபத்தில்தான் அமர்ந்திருந்தேன். அலையடித்துக்கொண்டிருந்த குளத்து நீரும், பசுமையின் பல நிறங்களைச் சதுரம் சதுரமாகக் காட்டிக்கொண்டிருந்த வயல்வெளியும், ஓயாமல் சத்தமிட்டுக்கொண்டிருந்த சிட்டுக் குருவிகளும், எப்போதாவது சரளைக் கற்களை அரைத்துக்கொண்டு மெல்ல நகர்ந்துபோகும் மாட்டு வண்டிகளும், வைக்கோல் வாசனையும் பொதுவாக எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அன்று எதன்மீதும் கவனம் செல்லவேயில்லை. அது துக்கமா என்று தெரியவில்லை. நெஞ்சை அழுத்தத்தான் செய்தது. ஆனால் அப்பாவிடம் நான் வினய் குறித்துச் சொன்னதைத் தவறு என்று என்னால் நினைக்க முடியவில்லை. ஏதோ ஒருவிதத்தில் அவனுக்கு நான் நல்லது செய்ததாகவே தோன்றியது. ஆனால் அப்பா எடுத்த முடிவு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அம்மா பதில் சொல்லாமல் அதை ஏற்றது அதைவிடப் பெரிதாகத் தாக்கியது. ஒன்று மட்டும் எனக்குப் புரியவில்லை. என் வீட்டில் மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?

இப்போது நினைத்துப் பார்த்தாலும் எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. முதல் முதலில் வினய் பீடி குடித்த விவகாரம் வீட்டுக்கு வந்தபோது, என்றைக்காவது ஒருநாள் அவன் பத்மா மாமியின் பெண்ணோடு ஊரை விட்டு ஓடிப்போவான் என்று ஏனோ எனக்குத் தோன்றியது. அவனுக்கு அந்தப் பெண்ணின் மீது ஒரு கண் இருந்ததை நான் அறிவேன். என் வயதுக்கு நான் அதையெல்லாம் வெளிப்படையாகப் பேசுவது கூடாது என்று என்னையறியாமல் நினைத்துக்கொண்டிருந்ததால், அவனிடமோ, வேறு யாரிடமோ அதைப்பற்றிப் பேசியதில்லை. பெண்களின் மீதான ஈர்ப்பு பற்றி ஏராளமான ஐயங்களும் குழப்பங்களும் எனக்கிருந்த காலம் அது. உள்ளுக்குள் முட்டி மோதிக்கொண்டிருந்த பல சங்கதிகளை உதறி உதிர்த்து ஒவ்வொன்றாக எடுத்துப்பார்த்தால், என்னை எனக்கே பிடிக்காமல் போய்விடும் என்று தோன்றும். அதனாலேயே பெண்களைப் பற்றி நினைக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் நானொரு நல்ல பையனாகவே இருந்துவிட முடிவு செய்திருந்தேன். அதாவது பள்ளிக்குச் செல்லும் நேரம். விளையாட்டு மைதானத்தில் இருக்கும் நேரம். வீட்டில் இருக்கும் நேரம். குளித்துவிட்டு பெருமாளை விழுந்து சேவிக்கும் நேரம். அம்மாவோடு செலவழிக்கும் நேரம். படிக்கிற நேரம்.

பொதுவாகப் பள்ளி விட்டு வீடு திரும்பும் நேரங்களில்தான் நான் பெண்களைக் குறித்து நினைப்பேன். சென்ற வருடம் வரை என் வகுப்பில் என்னோடு படித்துக்கொண்டிருந்த பல பெண்கள், அந்த வருடம் சட்டென்று தாவணிக்கு மாறிவிட்டிருந்தார்கள். வி மடிப்புத் தாவணியும் மடித்துக் கட்டிய இரட்டைப் பின்னலும். ஓ. கடவுளல்ல; ஒரு கலைஞனால் மட்டுமே அப்படியொரு வடிவழகைப் படைக்க முடியும். எனக்கு தாவணி அணிந்த அத்தனைப் பெண்களுமே அன்றைக்கு அழகாகத் தெரிந்தார்கள். பிறந்தது முதல் என்றுமே நான் கண்டறியாத பெண்களின் இடுப்பை அந்தத் தாவணிப் பெண்களிடம்தான் முதலில் கண்டேன். அரைக்கணம் போதும் எனக்கு. அதற்குமேல் நான் உற்றுக் கண்டதில்லை. அந்த அரைக்கணத்து நினைவை ஒரு முழு நாளுக்குச் சேமித்துவைத்து மாலை வீடு திரும்பும்போது எடுத்து நினைப்பேன்.

ஆனால், வினய் என்னிடம் இடுப்பைக் குறித்துப் பேசியதில்லை. மிக நேரடியாக அவன் மார்பைப் பற்றித்தான் சொன்னான். பெண்களின் மார்பு. அவன் சொன்னபோது எனக்குச் சற்றுப் பூரித்துப்போனது உண்மை. ஆனாலும் ஐயோ இப்படி அசிங்க அசிங்கமாகப் பேசுகிறானே என்றுதான் நினைத்தேன். எதையெல்லாம் குற்றம் என்று நினைத்தேனோ அதெல்லாம் பிடித்திருந்தது. எதையெல்லாம் திருட்டுத்தனம் என்று நினைத்தேனோ, அதையெல்லாம் ரகசியமாக ரசித்துக்கொண்டிருந்தேன். நான் ரகசியமாகச் செய்ததை வினய் வெளிப்படையாகச் செய்தபோது, அவன் ஒரு நல்ல பொறுக்கியாவான் என்று நினைத்தேன். சற்றும் எதிர்பாராவிதமாக அவன் மயானத்தில் சாம்பல் பூசிக்கொண்டு நின்றதைக் கண்டபோது என்னால் தாங்க முடியாமல் போய்விட்டது.

விஜய் வீட்டை விட்டுப் போனபோது எனக்கு வருத்தம் இருந்ததே தவிர, நான் அதைக் குறித்துப் பெரிதாக யோசிக்கவில்லை. முதலில் அவன் ஒரு பெரிய மந்திரவாதியாகிவிடுவான் என்று நினைத்தேன். பிறகு அவன் சித்தராவான் என்று தோன்றியது. சித்தெல்லாம் ஒன்றுமில்லை என்று அவன் சொன்ன பிறகு, அவன் அல்லிக் குளத்துக்கு அடியில் தவம் செய்யும் ரிஷிகளுள் ஒருவனாகிவிடுவான் என்று முடிவு செய்துகொண்டேன். ஆனால் வினய்யின் நடவடிக்கை எனக்கு மிகுந்த குழப்பத்தையும் அதிர்ச்சியையும் தந்தது. ஒரு பித்தனுக்குரிய குணாதிசயங்கள் அவனிடம் சேரத் தொடங்கியிருப்பதாகத் தோன்றியது. ஒருவிதத்தில் அது என் அச்சம்தான். என் வயதும் ஒரு காரணமாயிருக்கலாம். ஆனால் அப்படி ஒரேயடியாக அவன் வீட்டை விட்டுப் போவதற்கு நான் காரணமாவேன் என்று எதிர்பார்க்கவில்லை.

அப்பா, பள்ளிக்கூடத்தில் அவனுக்கு டிசிகூட வாங்கவில்லை. அதெல்லாம் அவசியமில்லை என்று சொல்லிவிட்டார். ‘இங்க படிச்சிக் கிழிச்சதெல்லாம் போதும். அவனுக்கு சரியான இடம் காஞ்சீபுரம்தான்’ என்று சொன்னார். அவர், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியாரின் பரம பக்தர். ‘வேதாந்த தேசிகரோட புத்ரன் வரத நாராயணாச்சார்ட்டே நேரடியா பாடம் கேட்டவர். அவரளவு ஞானஸ்தர் லோகத்துலயே கிடையாது’ என்று அடிக்கடி சொல்லுவார். மாதம் ஒருமுறை காஞ்சீபுரத்துக்குப் போய் வரதராஜரை சேவித்துவிட்டு, மடத்துக்கும் சென்றுவிட்டு வருவார்.

வினய் அங்கே தங்கிப் படித்தால் புத்தி தடுமாறாமல் இருக்கும் என்று அப்பா நினைத்தார். கட்டுக் குடுமியும் பன்னிரண்டு திருமண்ணும் வைரக்கல் வைத்த கடுக்கண்ணுமாக வினய் வீட்டுக்குத் திரும்பிவரக் குறைந்தது எட்டாண்டுகள் ஆகும் என்று கேசவன் மாமா சொன்னார்.

‘ஆனா வரும்போது ஞானப்பழமா வருவாண்டா உங்கண்ணன். நாலாயிரமும் படிச்சிருப்பான். திருப்பதிலயோ ஸ்ரீரங்கத்துலயோ காஞ்சீபுரத்துலயோ அவனுக்கு உத்தியோகம் ஆயிருக்கும். புத்தி தெளிஞ்சிருப்பான். பகவத் ஸ்மரணம் தவிர இன்னொண்ணு இருக்காது பாத்துக்கோ’ என்று கேசவன் மாமா சொன்னார்.

நான் அம்மாவிடம் கேட்டேன். ‘பண்ணது தப்புதான். அதுக்கு அடிச்சாச்சு, கண்டிச்சாச்சு. எதுக்காக இப்படி மடத்துல கொண்டு போய்த் தள்ளினார் அப்பா?’

‘தங்கணுமேன்ற தவிப்புதான்’ என்று சொல்லிவிட்டு அவள் போய்விட்டாள். எனக்குப் புரியவில்லை. எங்கு தங்க வேண்டும்? எதற்குத் தங்க வேண்டும்? அவள் ஏதோ சொல்ல நினைப்பதையும், ஆனால் கவனமாக அதைத் தவிர்ப்பதையும் என்னால் உணர முடிந்தது. என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை. பெருமாள் ஏன் என்னைச் சிறுவனாகப் படைத்தான் என்று நொந்துகொண்டு வசந்த மண்டபத்துக்குப் போய் அமர்ந்தேன்.

வெகு நேரம் அழுதுகொண்டுதான் இருந்தேன். சொல்லாமல் வீட்டைவிட்டுப் போன விஜய்க்காகக்கூட நான் அத்தனை அழவில்லை என்பதை நினைத்துக்கொண்டேதான் அழுதேன். ஒருவேளை, இந்த அழுகை இருவருக்கும் சேர்த்த அழுகையாக இருக்குமோ என்று தோன்றியது. ஆனால் அப்போதும் அம்மா அழவில்லை என்பதுதான் உறுத்திக்கொண்டே இருந்தது. எப்படி அவளால் முடிகிறது? ஒரு பிள்ளை சொல்லாமல் ஓடிப்போனான். இன்னொருவனை வலுக்கட்டாயமாகக் கொண்டுபோய் எங்கோ தள்ளிவிட்டு வந்தாயிற்று. நான்கு பேர் இருந்த வீட்டில் மிச்சம் இருப்பது இரண்டே பேர். முடியுமா? தகிக்காதா? தாங்கக்கூடியதுதானா அது?

எனக்கு யாரிடமாவது பேச வேண்டும் போலிருந்தது. அம்மாவிடமோ, அப்பாவிடமோ, மாமாவிடமோ அல்ல. வினோத்திடமும் அல்ல. வேறு யாரிடமாவது. ஆனால் யாருடன் பேசுவது? எனக்குப் புரியவில்லை. மிகவும் குழப்பமாகவும் கலக்கமாகவும் இருந்தது. என்னால் இனிமேல் பாடங்களில் கவனம் செலுத்த முடியுமா என்று சந்தேகமாக இருந்தது. எல்லா அதிர்ச்சிகளும் ஒரு நாளில் நடந்து முடிந்துவிடுகின்றன. ஆனால் அவற்றின் வீரியமும் தாக்கமும் வாழ்நாள் முழுதும் தொடரும் போலிருக்கிறது.

அந்தக் கணத்தில்தான் எனக்குத் தோன்றியது. எதற்கும் அதிர்ச்சியுறாத ஒரு வாழ்வை எனக்கே எனக்காகப் பிரத்தியேகமாகச் செய்துகொண்டால் என்ன? துக்கம் தரத்தக்க எதையும் அண்டவிடாதிருப்பது. துக்கத்தின் ஒரு சொட்டு நிழலும் என் மீது படியாமல் பார்த்துக்கொள்வது. துக்ககரமான எந்த ஒரு நிகழ்விலும் பங்கு கொள்ளாதிருப்பது.

 

குருநாதர் இறந்துவிடுவார் என்று தெரிந்தபோது, நான் ஆசிரமத்தைவிட்டுப் புறப்பட்டுவிட்டதன் காரணம் அதுதான். எனக்கு அவர்மீது பற்றில்லாமல் இல்லை. பாசமில்லாமல் இல்லை. பக்தியோ, மரியாதையோ சற்றும் குறைந்ததேயில்லை. நான் ஆக நினைத்த வடிவை அவர் எனக்குச் சமைத்துக் கொடுத்தவர். என் ஆளுமையின் பிரம்மாண்டம் அவர் வடிவமைத்தது. அதில் சந்தேகமில்லை. ஆனாலும் மரணம் துக்ககரமானது. உலவிய ஒரு உயிரைக் கிடந்த கோலத்தில் காண்பது ஒரு சவால். வைராக்கியத்துக்கோ, விரக்திக்கோ இட்டுச்செல்லும் எது ஒன்றும் எனக்குத் தேவையில்லை என்று அன்று முடிவு செய்தேன்.

அன்றைக்கு மாலை வரை நான் வசந்த மண்டபத்தில் இருந்து எழவேயில்லை. எப்படியும் என்னைத் தேடிக்கொண்டு வினோத் அங்கு வருவான் என்று நினைத்தேன். ஆனால் வரவில்லை. தென்பட்டுக்குப் போகிற யாரிடமாவது அம்மா என்னைப் பார்த்தால் வீட்டுக்கு வரச் சொல்லி, சொல்லி அனுப்புவாள் என்று தோன்றியது. அப்படியும் யாரும் வந்து என்னைப் பார்க்கவில்லை. ஒரு முழு நாள் என்னைக் குறித்து நினைக்காமலே இருந்திருப்பாளா? நான் என்ன ஆனேன், எங்கே போனேன் என்று தேடத் தோன்றாதா?

இதுவும் எனக்கு வியப்பாக இருந்தது. அம்மாவின் பல பக்கங்களை நான் திறக்கவேயில்லை என்று தோன்றியது. ஆனால் அவள் ஒரு சராசரி இல்லை என்று மட்டும் அடிக்கடி நினைப்பேன். இந்தச் சொற்கள் இப்போது வருவன. அன்றைக்கு எனக்கு இதற்கெல்லாம் அர்த்தம் தெரியாது. மொழியற்ற வடிவில் உணர்ந்ததுதான். இதையேதான் பின்னாள்களில் என் குரு சொன்னார். மொழியற்ற, சிந்தனையுமற்ற வடிவில் இறைவனுடன் பேசுவது குறித்து. சிந்திப்பதை நிறுத்திவிட்டு, மொழி களைந்து உரையாடுவது குறித்து.

முடியுமா என்று ஏன் அப்போது கேட்டேன்? தெரியவில்லை. எனக்கே முடிந்திருக்கிறதே. இப்போதுதான் அதுவும் புலப்படுகிறது.

இருட்டும் நேரம் நான் வசந்த மண்டபத்தை விட்டுப் புறப்பட்டேன். அப்போதும் வீட்டுக்குப் போகத் தோன்றவில்லை. என்னமோ நினைத்துக்கொண்டு, அல்லிக் குளத்தைக் கடந்து கடற்கரைச் சாலை வரை போனேன். சட்டென்று கோவளம் பக்கம் காலை எட்டிப் போட்டு நடக்க ஆரம்பித்தேன். முக்கால் மணி நேரம் எதையெதையோ நினைத்தபடி நடந்துகொண்டே இருந்தேன். நடுநடுவே அம்மா தேடுவாள், அம்மா தேடுவாள் என்று தோன்றியபடி இருந்தது. ஆனாலும் திரும்பத் தோன்றவில்லை. என்னையறியாமல் கடலையொட்டி இருந்த தர்காவுக்குப் போய்ச் சேர்ந்திருந்தேன்.

அந்த நேரத்திலும் தர்காவில் ஏழெட்டுப் பேர் இருந்தார்கள். நெற்றியில் ஸ்ரீசூர்ணம் இட்ட பையன் இங்கு எதற்கு வந்திருக்கிறான் என்று அவர்களுக்குத் தோன்றியிருக்கும். நான் இலக்கே இல்லாமல் தர்காவைச் சுற்றி வந்துகொண்டிருந்தேன். அந்த இடம் முழுதும் காய்ந்த மீனின் வாசனை அடித்தது. காற்றில் ஈரம் இருந்தது. அந்த ஈரத்தின் வாசனை மணலில் இருந்து எழுந்துவந்து காற்றில் கலந்துகொள்வதாக நினைத்தேன். சிறிது நேரம் தர்காவின் பின்புறம் கடலை நோக்கியவாறு அப்படியே அமர்ந்திருந்தேன். வெகு தொலைவில் ஒரே ஒரு படகு கரையை நோக்கி வந்துகொண்டிருந்தது தெரிந்தது. அந்தப் படகில் ஒரு விளக்கு இருந்தது. படகு நீரில் ஏறி இறங்குவதற்கேற்ப அந்த விளக்கின் ஒளியும் மேலே ஏறி ஏறி உள்ளிறங்கிக்கொண்டிருந்தது. என் மனத்தை யாரோ கழட்டி எடுத்து அந்தப் படகுக்குள் பொருத்திவிட்டாற்போல் உணர்ந்தேன்.

எவ்வளவு நேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்தேனோ தெரியாது. யாரோ என் பின்னால் வந்து நிற்பதுபோலத் தெரியவும், சட்டென்று எழுந்துகொண்டேன்.

அவரை எனக்குத் தெரியும். அம்மாவோடு சில சமயம் அந்தப் பக்கிரியைப் பார்க்க நானும் வந்திருக்கிறேன். அவர் ஒரு பிச்சைக்காரர் என்று முதலில் நினைத்தேன். அம்மா அவரிடம், வீட்டுக்கு வரும் சிறு பிரச்னைகளை விவரித்து மந்திரித்துக்கொண்டு போவதையும், தாயத்து கேட்டு வாங்கி வருவதையும் கண்டபின், அவர் பிச்சைக்காரர் இல்லை என்று முடிவு செய்துகொண்டேன். ஒரு முஸ்லிம் சாமியார் என்று எண்ணிக்கொள்வது எனக்கு வசதியாக இருந்தது.

எதிர்பாராவிதமாக அந்த மனிதர் என் முன்னால் வந்து நின்றபோது என்ன பேசுவதென்று எனக்குத் தெரியவில்லை. கடற்கரையின் வெளிச்சமற்ற வெளிச்சத்தில், என்னை அவருக்கு அடையாளம் தெரிந்ததா என்றும் தெரியவில்லை.

‘வீடு எங்கே?’ என்று அவர் கேட்டார்.

‘திருவிடந்தை’

‘தனியா வந்திருக்கியா? வீட்ல தேடுவாங்களே.’

‘போகணும்’ என்று சொன்னேன்.

‘கெளம்பு, கெளம்பு. சீக்கிரம் போ’ என்றார்.

நான் தலையசைத்துவிட்டு நாலடி நடந்திருப்பேன். அவருக்கு என்ன தோன்றியதோ. வேகமாக என்னை நெருங்கி என் தோளை அழுத்தி நிறுத்தினார். ஒரு கணம் என்னை உற்றுப் பார்த்தார். என் நெற்றிப் பொட்டில் கைவைத்து என்னவோ சொன்னார். அந்த மொழி எனக்குப் புரியவில்லை. கொஞ்சம் பயமாக இருந்தது. அவர் சித்தரா, டாக்டரா என்று வீட்டுக்குப் போனதும் அம்மாவிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஏனெனில், ஒரு சமயம் அப்பாவுக்குத் தீராத வயிற்றுப்போக்கு வந்தபோது, அம்மா அந்தப் பக்கிரியிடமிருந்துதான் ஏதோ ஒன்றை வாங்கிவந்து அப்பாவுக்கு வெந்நீருடன் சேர்த்துக் கொடுத்தாள். அதைச் சாப்பிட்ட பின்பு அப்பாவுக்கு பேதி நின்றுவிட்டது. அன்றைக்கு அது என்னவென்று கேட்கத் தோன்றவில்லை எனக்கு. இன்று மறக்காமல் கேட்க நினைத்துக்கொண்டேன்.

அவர் என் நெற்றிப் பொட்டில் கைவைத்து மந்திரித்துவிட்டு, ‘போ’ என்று சொன்னதும் அவருக்கு நான் தேங்ஸ் சொன்னேன். சிரித்தார். அப்படியொரு சிரிப்பை என் வாழ்நாளில் நான் கண்டதில்லை. இருட்டில் நாலைந்து பற்கள் மட்டும் வெளியே தெரியும்விதமான பூடகச் சிரிப்பு. ஒரே ஓட்டமாக நான் அந்த இடத்தை விட்டுப் பறந்துவிட்டேன்.

ஆனால், என்னையறியாமல் மறுநாள் ஏனோ அவரிடம்தான் போய் நின்றேன்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

  • Replies 176
  • Created
  • Last Reply

24. ஐயாவுக்கு ஒரு கடிதம்

 

 

சாம்பல் பூத்த எரிந்த கட்டை போலிருந்தது அவர் முகம். அவர் அணிந்திருந்த ஜிப்பாவும் தலைக்குச் சுற்றியிருந்த துணியும்கூடத் தமது நிறமிழந்து சாம்பல் வண்ணத்திலேயே காட்சியளித்தன. வார் அறுந்த செருப்புக்குப் பின் குத்தியிருந்தார். பெரிய பெரிய நீலக் கட்டங்கள் போட்ட அழுக்கு லுங்கியை தேவைக்கு அதிகமாக இடுப்பில் மடித்துவிடப் போக, அவரது வலது முழங்காலில் ஒரு காயம் பட்டு ஆறிக்கொண்டிருந்தது தெரிந்தது. பொதுவாக, அந்த வயதில் கோவளம் தர்கா அருகே நான் பார்த்த அனைத்து முஸ்லிம் பக்கிரிகளும், மெல்லிய ஜெமினி கணேசன் மீசையும் அடர்த்தியான அம்ஜத்கான் தாடியும் வைத்திருப்பார்கள். எத்தனை பெரிய கூட்டத்திலும் அது அவர்களைத் தனியே தூக்கிக் காட்டும். ஆனால் அந்தப் பக்கிரி அந்த மெல்லிசு மீசைகூட வைத்திருக்கவில்லை. தாடி மட்டும்தான். தினமும் பொழுது விடிந்ததும் மீசையை மட்டும் மறக்காமல் ஷேவ் செய்துவிட்டுத்தான் பல் துலக்கப் போவார் என்று தோன்றியது.

கேளம்பாக்கத்தில் எங்கள் பள்ளிக்கூடத்தை அடுத்து ஒரு கீரைத் தோட்டம் இருந்தது. பெரிய தோட்டம். எப்படியும் இரண்டு, இரண்டரை ஏக்கரா பரப்பளவுக்கு இருக்கும். எல்லாக் காலங்களிலும் அந்தத் தோட்டத்தில் ஏதேனும் நாலைந்து கீரைகள் பயிரிடப்பட்டுக்கொண்டே இருக்கும். அந்த மண்ணுக்கு அப்படியென்ன மகத்துவமோ. எந்தக் கீரை போட்டாலும் நான்கு நாள்களில் பளிச்சென்று முளைத்து நிற்கும். பெரியதொரு தரைக்கிணற்றில் இருந்து ஏற்றம் வைத்து நீர் பாய்ச்சுவார்கள். பாத்திகளெங்கும் தண்ணீர் தரதரவென்று வழிந்தோடுவது பார்க்க ரசமாக இருக்கும். சுற்றிலும் தென்னை மரங்கள் அரண்போலக் காத்து நிற்கும் அத்தனை பெரிய தோட்டத்தின் நட்ட நடுவில், இரண்டடிக்கு இருபதடி ஓர் இடைவெளி இருக்கும். நானும் எத்தனையோ முறை தோட்டத்துக்குப் போகும்போதெல்லாம் அங்கு வேலை பார்க்கிறவர்களிடம் அந்த இடைவெளி எதற்கு என்று கேட்டிருக்கிறேன். யாரும் சரியான பதிலைச் சொன்னதில்லை. ‘அது மொதலாளி வெக்க சொன்ன இடம்’ என்பார்கள். எதற்கு என்றால், தெரியாது. முதலாளி அங்கே கயிற்றுக் கட்டில் போட்டுப் படுப்பாரா என்றால் அதுவும் கிடையாது. தோட்டத் தொழிலாளிகள் அந்த இடத்தை வேறு ஏதேனும் காரியத்துக்குப் பயன்படுத்துவார்களா என்றால் தெரியாது. ஆனாலும் கீரை வனத்தின் குறுக்கே ஒரு விபூதிப் பட்டை போன்ற வெட்ட வெளி.

அந்தப் பக்கிரியின் தாடி நிறைந்த, மீசை மழித்த முகத்தைப் பார்த்தபோது எனக்கு அந்தக் கீரைத் தோட்டம்தான் நினைவுக்கு வந்தது. சொன்னால் கோபித்துக்கொள்ள மாட்டார் என்று தோன்றியதால், அதை அவரிடமும் சொன்னேன். அவர் சிரித்தார். தாடியைத் தடவியபடியே, ‘சரியாத்தான் சொல்லுறே. இது அந்த மாதிரிதான்’ என்று சொன்னார்.

‘நீங்க மீசையும் வெச்சிண்டேள்னா நன்னாருக்கும்.’

‘அப்படியா?’ என்று கேட்டார். என்ன காரணததாலோ, பேசும்போது எனதிரு கரங்களையும் இழுத்து இழுத்து வைத்துக்கொண்டு உருவி விட்டுக்கொண்டே இருந்தார். பிறகு என்னை இன்னும் நன்றாக முன்னால் வந்து அமரச் சொல்லி, தோள் பட்டைகளைப் பிடித்து அதேபோல் உருவிவிட்டார். என் பாதங்களைக் காட்டச் சொல்லி சிறிது நேரம் அவற்றை உற்றுப் பார்த்தார். காது மடிப்பை வளைத்துப் பார்த்தார். இடது கையால் என் கழுத்தைப் பிடித்து முன்னால் இழுத்துக் குனியவைத்து தலை முடியை வலக்கரத்தால் கலைத்து சிறிது நேரம் ஆராய்ச்சி செய்தார்.

‘எனக்கு உடம்புக்கெல்லாம் ஒண்ணுமில்லே. மந்திரிக்க வேணாம்’ என்று சொன்னேன். மீண்டும் சிரித்தார்.

‘நான் மந்திரிப்பேன்னு உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்.

‘ஓ, தெரியுமே. எங்கம்மாவோட நானே வந்திருக்கேனே.’

‘அப்படியா? உங்கம்மா இன்னிக்கு வரலியா?’

‘இல்லை. நான் தனியாத்தான் வந்தேன்.’

‘நேத்தும் தனியாத்தான் வந்த.’

‘ஆமா. மனசு சரியில்லே. அதான் பீச்சுக்கு வந்தேன்.’

‘திருவிடந்தைலயும் பீச்சு இருக்குதே.’

‘தெரியல. என்னமோ இங்க வந்தேன்.’

‘வர வெச்சிட்டான்போல.’

‘யாரு?’

அவர் அதற்கு பதில் சொல்லவில்லை. தர்காவை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தார்.

‘உங்க பெருமாள சொல்றேளா?’

‘இங்க உள்ளவரு சாமி இல்லே. தமீம் அன்சாரின்னு ஒரு மகான். பெரிய பக்தர்.’

‘அப்ப இது கோயில் இல்லியா உங்களுக்கு?’

‘இல்ல. இது தர்கா. மசூதிதான் கோயில் மாதிரி.’

‘ஓ. சமாதியா இது?’

‘ஆமா. நபியோடகூட பத்ரு போர்ல கலந்துக்கிட்டவரு தமீம் அன்சாரி. எத்தனையோ வருசம் முன்ன இந்தியாவுக்கு வந்து, இங்க கோவளத்துல இறந்துட்டாரு. இறை நேசர்னு சொல்லுவோம்.’

‘ராமானுஜர் மாதிரி!’ என்றேன் உற்சாகத்துடன். அவர் சிரித்தார்.

‘ஐயிர் ஊட்டுப் புள்ளையா நீ?’

‘ஐயங்கார்’ என்று சொன்னேன்.

‘ரெண்டும் ஒண்ணுதான். அதவிடு. என்னாண்ட எதுக்கு வந்த?’

‘தெரியல. எங்கம்மாக்கு நீங்க நிறைய தடவை மந்திரிச்சி தாயத்து குடுத்திருக்கேள். நீங்க வியாதிக்கு மட்டும்தான் செய்வீங்களா இல்ல வேற எல்லாத்துக்குமா?’ என்று கேட்டேன்.

‘வேறென்ன வோணும் உனக்கு?’

சொல்லலாமா என்று ஒரு கணம் தயக்கம் ஏற்பட்டது. ஏனோ முதல் நாள் அவரைப் பார்த்துவிட்டுப் போனதில் இருந்தே, அவரைக் குறித்தே நினைத்துக்கொண்டிருந்தேன். அண்ணா ஓடிப்போனது, வினய் காஞ்சீபுரத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது இரண்டினைக் குறித்தும் அவரிடம் பேசலாம் என்று தோன்றியது. எனக்குத் தென்படாத ஏதேனும் ஒரு உட்குறிப்பை அவர் கண்டறிந்து சொல்ல வாய்ப்பிருப்பதாக நினைத்தேன். இல்லாவிட்டால் ‘பெருமாள் தீர்த்தத்துக்கு மிஞ்சின மருந்தில்லே’ என்று வாய்க்கு வாய் சொல்லிக்கொண்டிருக்கும் அம்மாவே அவரைத் தேடிப்போய் ஏன் சூரணம் வாங்கிவரப் போகிறாள்?

இன்னொரு சம்பவம்கூட நினைவுக்கு வந்தது. மாமாவே இதைச் சொன்னதாக, விஜய் வீட்டில் இருந்த காலத்தில் ஒரு சமயம் என்னிடம் சொல்லியிருக்கிறான்.

கேசவன் மாமாவின் மனைவி காலமாகி ஒன்றிரண்டு வருடங்கள் ஆன பின்பு, அவருக்கு இன்னொரு திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று அப்பா ஆசைப்பட்டிருக்கிறார். ‘இப்படியே இருக்க முடியாது கேசவா. உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேணும்’ என்று பலமுறை அவரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஆனால் மாமா அதற்குச் சம்மதிக்கவில்லை. அம்மாவும் தன்னால் முடிந்த விதத்தில் எல்லாம் முயற்சி செய்து பார்த்துவிட்டு, எதுவும் நடக்காதபடியால் அந்தப் பக்கிரியிடம் போய் விஷயத்தைச் சொல்லியிருக்கிறாள். தம்பிக்கு இன்னொரு திருமணம் நடக்க வாய்ப்பிருக்கிறதா? அரைக்கணம்கூட யோசிக்காமல், இல்லை என்று சொல்லிவிட்டாராம்.

அம்மா அதிர்ந்து போய்விட்டாள். ஏன் என்று கேட்டதற்கு, எழுந்து போ, அவ்வளவுதான் என்று சொல்லியிருக்கிறார்.

அதற்குப் பிறகும் அம்மாவும் அப்பாவும் எத்தனையோ முறை மாமாவின் இரண்டாம் திருமணம் குறித்துப் பேசியிருக்கிறார்கள். அம்மா, கேசவன் மாமாவிடம் சண்டை போட்டு, அழுது ஆர்ப்பாட்டமெல்லாம் செய்து பார்த்திருக்கிறாள். வம்படியாக நாலைந்து இடங்களில் சொல்லிவைத்து ஜாதகங்கள் தருவித்திருக்கிறாள். என்ன முயற்சி செய்தும் மாமாவுக்கு அது நடக்கவில்லை. அவருக்கு தாடி முடி நரைக்க ஆரம்பித்தபோது, வீட்டில் இயல்பாக அந்தப் பேச்சு இல்லாமல் போய்விட்டது.

நான் அந்தப் பக்கிரியிடம் இந்த விஷயத்தை நினைவுகூர்ந்து, ‘அதெப்படி எங்க மாமாவுக்கு ரெண்டாங்கல்யாணம் நடக்காதுனு நீங்க சொன்னேள்? உங்களுக்கு அவரைத் தெரியக்கூடத் தெரியாதே? அம்மாவாவது எப்பவாவது உங்கள வந்து பாப்பா. மாமா கோயில் மடப்பள்ளியிலே வேலை பார்க்கிறவர். அவர் இங்கல்லாம் வரமாட்டாரே’ என்று கேட்டேன்.

 

‘அப்படியா? நானா சொன்னேன்? நெனப்பில்லப்பா’ என்று அவர் சொன்னார். நான் பலவிதமாக நினைவூட்டியும் அவரால் என் அம்மாவைக்கூட நினைவுகூர முடியவில்லை. அம்மாவோடு நானே வந்து அவரைப் பார்த்திருக்கிறேன் என்றபோதும், என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை என்றே சொன்னார்.

‘உங்களுக்கு ஞாபக மறதி ஜாஸ்தி போலருக்கு’ என்று சொன்னேன்.

‘இருக்கும், இருக்கும்’ என்று சொன்னார். தன்னருகே வைத்திருந்த ஒரு அழுக்கு மூட்டையைப் பிரித்து அதனுள் இருந்து ஒரு பிஸ்கட் பொட்டலத்தை எடுத்தார். ஏற்கெனவே அதில் நாலைந்து பிஸ்கட்டுகளை அவர் சாப்பிட்டுவிட்டு மிச்சத்தைச் சுருட்டி வைத்திருந்தார். ஒன்றை எடுத்து அவர் கடித்துவிட்டு, இன்னொன்றை என்னிடம் நீட்டி, ‘சாப்பிடு’ என்று சொன்னார்.

நான் தயங்கினேன்.

‘ஒண்ணுஞ்செய்யாது. சாப்டு’ என்று மீண்டும் சொன்னார். நான் அதை வாங்கிக்கொண்டேன்.

‘ஒனக்கு என்கிட்டே என்ன கேக்கணும்?’

‘தெரியல. எங்கண்ணா வீட்டைவிட்டுப் போயிட்டான். இன்னொரு அண்ணாவை, அப்பா காஞ்சீபுரம் மடத்துல கொண்டுபோய் சேர்த்துட்டார். ஏன் இப்படியெல்லாம் நடக்கறதுன்னு புரியல. எனக்கு அழுகையா வருது’ என்று சொன்னேன்.

அவர் சிறிது நேரம் என் வலக்கையைப் பிடித்துக்கொண்டு முணுமுணுவென்று என்னவோ உச்சரித்துக்கொண்டிருந்தார். அதை முடித்துவிட்டு, அதே அழுக்கு மூட்டையை மீண்டும் பிரித்து எதையோ தேடினார். அவர் தேடிய பொருள் அத்தனை எளிதில் அகப்படாதபடியால், மூட்டைக்குள் இருந்த பொருள்கள் அனைத்தையும் எடுத்து வெளியே வைத்தார். அதில் ஒரு அழுக்கு லுங்கி, கிழிந்த துண்டு ஒன்று, பனைமரம் படம் போட்ட மஞ்சள் நிற டால்டா டப்பா ஒன்று, விபூதிச் சம்புடம் போல மரத்தாலான கிண்ணம் ஒன்று, ஹுக்கா பிடிக்கிற குழாய் ஒன்று, ஒரு புகையிலைப் பொட்டலம், அரபி மொழிப் புத்தகங்கள் இரண்டு, ஒரு பிடி சில்லறைக் காசுகள், ஒரு சந்தன மாலை என்று என்னென்னவோ வெளியே வந்தன. கடைசியாக அவர் தேடியது அனைத்துக்கும் அடியில் இருந்தது.

அது ஒரு அமிர்தாஞ்சன் தைல டப்பா. அடக்கடவுளே. எனக்கொன்றும் தலைவலி இல்லையே. இவர் இதையா இத்தனை நேரம் தேடிக்கொண்டிருந்தார் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தபோதே, அவர் அந்த டப்பாவின் மூடியைத் திறந்தார். அதில் தைலம் இல்லை. மாறாகக் கொஞ்சம் மண் இருந்தது. எங்கிருந்து எடுத்த மண் என்று எனக்குத் தெரியவில்லை. அதை வைத்து அவர் என்ன செய்வார் என்றும் புரியவில்லை. அவர் அந்த மண் டப்பாவைத் திறந்ததும் ஒருதரம் முகர்ந்து பார்த்தார். பிறகு அதிலிருந்து ஒரு சிட்டிகை மண்ணை எடுத்து, ‘வாயத் தொற?’ என்று என்னைப் பார்த்துச் சொன்னார்.

எனக்குப் புரியவில்லை. இந்த மனிதர் நான் சொன்ன எதையுமே சரியாகப் புரிந்துகொள்ளவில்லையோ என்று தோன்றிவிட்டது. எனவே மீண்டும் சொன்னேன், ‘எனக்கு உடம்புக்கு ஒண்ணுமில்லை.’

‘பரவால்ல வாயத் தொற தம்பி’ என்று சொன்னார்.

சிறிது நடுக்கத்துடனே வாயைத் திறந்து காட்டினேன். நான் எதிர்பார்த்ததுபோல, அவர் அந்த மண்ணை என் வாயில் போடவில்லை. போட்டால் துப்பிவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. மாறாக, என் நாக்கில் அந்த மண்ணை வைத்து ஒரு இழு இழுத்தார். பிறகு அவரே அதை வழித்து வெளியே போட்டுவிட்டு லுங்கியில் விரலைத் துடைத்துக்கொண்டார்.

‘என்ன செஞ்சிங்க இப்போ?’ என்று கேட்டேன். சிரித்தார்.

‘ஒண்ணுமில்ல. நீ வீட்டுக்குப் போ’ என்று சொன்னார்.

‘இல்லே. எனக்குத் தெரியணும். நீங்க என்ன செஞ்சிங்க?’

‘அவசியம் தெரியணுமா?’

‘கண்டிப்பா தெரியணும்.’

‘அப்ப எனக்கு பத்து காசு குடு’ என்று சொன்னார். நான் உடனே என் நிஜார் பாக்கெட்டுகளில் தேடிப் பார்த்தேன். என்னிடம் பத்து காசு இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தேன். வீட்டுக்குப் போய் எடுத்துவந்து கொடுப்பதென்றால், இன்னும் ஒரு மணி நேரம் ஓடிவிடும். எனவே, ‘இப்ப நீங்க சொல்லுங்கோ. நான் நாளைக்கு எடுத்துண்டு வந்து குடுக்கறேன். இப்ப என்கிட்ட காசு இல்லே’ என்று சொன்னேன்.

‘அப்படியா? சரி, அப்ப ஒண்ணு செய். நாளைக்குப் பத்து காசு கொண்டுவந்து குடுத்துட்டுக் கேளு. சொல்றேன்.’

ஏன் அவர் அப்படி அடம் பிடித்தார் என்று எனக்கு இன்றும் புரியவில்லை. ஆனால் நான் பலமுறை மன்றாடியும் அவர் தாம் செய்ததன் காரணத்தை எனக்குச் சொல்லவில்லை. வேறு வழியின்றி நான் மறுநாள் பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பும்போது, நேரே வீட்டுக்குப் போகாமல் கோவளம் தர்காவுக்குப் போய் அவரிடம் பத்து காசைக் கொடுத்து ‘இப்ப சொல்லுங்கோ’ என்று சொன்னேன்.

அப்போதுதான் அவர் சொன்னார், ‘நீயும் போகத்தான் போற. என்ன, அதை ஒரு ரெண்டு வருசம் தள்ளிப் போடச் சொல்லி ஐயாவுக்கு லெட்டர் எழுதினேன்.’

(தொடரும்)

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

25. பகவத் சங்கல்பம்

 

 

வினய் காஞ்சீபுரத்துக்குப் போய்ச் சேர்ந்து ஆறு மாதங்கள் இருக்கும். இடையில் இரண்டொரு முறை அப்பாவும், மாதம் ஒரு முறை மாமாவும் அவனைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தார்கள். ஒரே ஒரு சமயம், அப்பா போகும்போது அம்மாவை உடன் அழைத்துப் போனார். அம்மா அப்போது அவன் தங்கிப் படித்துக்கொண்டிருந்த மடத்துக்குப் போகவில்லை. வரதராஜர் கோயில் குளக்கரையில் வைத்து அவனைப் பார்த்ததாகச் சொன்னாள்.

‘என்னால நம்பவே முடியலடா விமல். உங்கண்ணன் எப்படி இருக்கான் தெரியுமா இப்போ? கட்டுக்குடுமியும் திருமண்ணுமா, பாத்தா என் கண்ணே பட்டுடும்போல இருந்தது’ என்று சொன்னாள்.

குளக்கரையில் வைத்து வினய் அம்மாவுக்கு முதலாயிரத்தில் நூறு பாசுரங்கள் சொல்லிக் காட்டியிருக்கிறான். அதோடு நிறுத்தாமல், அவனே அம்மாவைப் பெருமாள் சன்னிதிக்கும் அழைத்துச் சென்றிருக்கிறான்.

‘நான் சேவிச்சுட்டேண்டா‘ என்று அம்மா சொன்னபோது, ‘பரவால்ல வாம்மா’ என்று சொல்லி வலுக்கட்டாயமாகக் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு மீண்டும் உள்ளே போயிருக்கிறான்.

பட்டாச்சாரியார் அவனைக் கண்டதும், ‘வாடா, இவா உங்கம்மாவா? ஏன் மாமி இத முன்னாடியே சொல்லமாட்டேளோ? இருங்கோ’ என்று சொல்லி மீண்டும் ஒருமுறை அம்மாவுக்காகக் கற்பூர ஆரத்தி காட்டி, தீர்த்தம் சடாரியெல்லாம் அளித்து, தாயார் சன்னிதியில் ஸ்பெஷலாக ஒரு அர்ச்சனை வேறு செய்து அனுப்பியிருக்கிறார்.

‘இனிமே எனக்கு அவனைப் பத்திக் கவலையே இல்லேடா விமல். என்னமோ கெட்ட நேரம், அப்போ அவனை அப்படிப் படுத்தி எடுத்திருக்கு. குழந்தை இப்போ ஞானவானா ஆயிண்டிருக்கான்’ என்று சொன்னாள்.

வினய் என்னவானாலும் எனக்கு அது குறித்துக் கவலை இல்லை. ஆனால், அம்மா மகிழ்ச்சி கொள்ளும்படியாக அவள் எதிரே அவன் நடந்துகொண்டிருக்கிறான் என்பதை அறிந்தபோது சற்று நிம்மதியாக இருந்தது.

பிறகு ஒருநாள் அப்பா, வீட்டில் எல்லோரையுமே அழைத்துக்கொண்டு காஞ்சீபுரத்துக்குப் போனார். மடத்தில் நானும் வினோத்தும் அவனைப் பார்த்தபோது, ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டிருந்தான். நாங்கள் உள்ளே போனபோது, மடத்துக்கு மளிகை சாமான்கள் வந்து இறங்கியிருந்தன. கடைக்காரப் பையன் பெரிய பெரிய மூட்டைகளில் இருந்து ஒவ்வொரு பொட்டலமாக எடுத்து எடுத்துக் கீழே வைக்க, வினய் கையில் லிஸ்ட் வைத்துக்கொண்டு படித்து சரி பார்த்துக்கொண்டிருந்தான்.

‘வெல்லம் ரெண்டு கிலோ போட்டிருந்தது வரலே. பச்சைக் கல்ப்பூரம் வரலே. விளக்குத் திரி வரலே. சமித்து மூட்டை இளைச்சாப்ல இருக்கே. எத்தன கட்டு குடுத்தனுப்ச்சார் முதலியார்வாள்?’ என்று அவன் கேட்டபோது, கடைப்பையன் திருதிருவென்று விழித்தான்.

அம்மாவுக்குப் பெருமை பிடிபடவில்லை. ‘அவன் வெறுமே சந்தை சொல்லக் கத்துக்கலே. வாழக் கத்துண்டிருக்காண்டா’ என்று கேசவன் மாமா சொன்னார். ‘பிரமாதம்டா. பிரமாதம்டா’ என்று திரும்பத் திரும்பச் சொல்லி, அவன் முதுகில் தட்டிக்கொண்டே இருந்தார். வினய் எங்களுக்கு அவனது நண்பர்களை அறிமுகப்படுத்திவைத்தான். மடத்தின் நிர்வாகி இருந்த இடத்துக்கு அழைத்துச் சென்று ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அறிமுகம் செய்தான். உபாத்தியாயரிடம் சென்றபோது சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்து, எழுந்து அபிவாதயே சொல்லிவிட்டு, அதன் பிறகுதான் ‘இவா எங்கம்மா’ என்று ஆரம்பித்தான்.

அப்பாவுக்குப் பெருமை பிடிபடவில்லை. அங்கிருந்த அத்தனைப் பேரிடமும் திரும்பத் திரும்ப நன்றி சொல்லிக்கொண்டே இருந்தார். அவர் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. வினய் கெட்டுப் போகாதிருக்க வேண்டும் என்று நினைத்துத்தான் அவர் அவனைப் பாடசாலையில் கொண்டுபோய்ப் போட்டார். அவன் ஒன்றும் கற்காமல், எதையும் அறியாமல் வெறுமனே எட்டு வருடங்கள் கழித்துத் திரும்பி வந்திருந்தாலும், அவர் அதைப் பெரிதாக எடுத்துக்கொண்டிருக்கப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால், ஒரு வருடத்துக்கும் குறுகிய காலத்துக்குள் ஒருவன் இத்தனைப் பொறுப்பும் திறமையும் ஞானமும் பெற்றவனாகிவிட முடியுமா! எப்படி சாத்தியம்?

மடத்தில் சந்தை சொல்லிக்கொடுக்கும் அந்த உபாத்தியாயர் சொன்னார், ‘இதெல்லாம் பகவத் சங்கல்ப்பம். சேரவேண்டியது எப்படியும் சேர்ந்துடும். கூடாதுன்னா இழுத்து வெச்சிக் கட்டினாலும் அறுத்துண்டு ஓடிடும்.’

ஆயிரத்தில் ஒரு சொல் அது. என்னால் அதை மறக்கவே முடியாது.

வினய் காஞ்சீபுரம் பாடசாலைக்குப் போய்ச் சேர்ந்து இரண்டரை வருடங்கள் ஆகியிருந்தன. திருவிடந்தை கோயிலில் பிரம்மோத்சவத்துக்கு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. கோயிலெங்கும் சுவர்களிலும் தூண்களிலும் இருந்த பழுதுகள் செப்பனிடப்பட்டு சுண்ணாம்பும் காவியும் பூசினார்கள். பந்தல் போட்டு பத்து நாள்களுக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து கமிட்டி கூடி அறிவித்தார்கள். கேசவன் மாமா அந்நாள்களில் வீட்டுக்கே வரவில்லை. கோயிலே கதியென்று கிடந்தார். தினசரி வீதி உலா, கதாகாலட்சேபம், பாராயணம் என்று ஊரே அமர்க்களப்பட ஆரம்பித்தது. எங்கள் வீட்டில் சமைப்பதே நின்றுபோனது. காலை, மதியம், இரவு மூன்று வேளையும் கோயில் பிரசாதமே உணவாகிப் போனது. அம்மா நினைத்துக்கொண்டால், கோயிலுக்குப் போய் உட்கார்ந்துவிடுவாள். வேலைக்குப் போகிற நேரம் தவிர, மிச்ச நேரமெல்லாம் அப்பாவும் கோயிலிலேயேதான் இருந்தார். எனக்கும் வினோத்துக்கும் வீட்டில் கேள்வி கேட்க ஆளில்லாமல் போனது. நாங்கள் இஷ்டத்துக்கு ஊரைச் சுற்றித் திரிந்தோம். நண்பர்களோடு விளையாடினோம். ஆங்காங்கே மோர்ப் பந்தல்களில் தாகம் தணித்துக்கொண்டு இரவு பகலாக ஊரைச் சுற்றி வந்தோம்.

உற்சவம் தொடங்குவதற்கு நான்கு தினங்களுக்கு முன்னால் அப்பா, வினய்க்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். பத்து நாள் உற்சவத்தில் ஓரிரு நாள்களுக்காவது அவன் ஊருக்கு வந்துபோக முடிந்தால் நன்றாக இருக்கும் என்று அதில் சொல்லியிருந்தார். மறுநாளே வினய் கோயில் ஆபீஸுக்கு போன் செய்து, மாமாவைக் கூப்பிட்டுப் பேசினான். கடைசி மூன்று நாள் வருகிறேன். தொடர்ச்சியாக ஒருவாரம் ஊரில் இருந்துவிட்டுப்போகிறேன் என்று சொல்லியிருக்கிறான்.

மாமாவுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அங்கிருந்தே அந்தச் சேதியைக் கத்திக்கொண்டு வீட்டுக்கு வந்து அறிவித்தார்.

‘அத்திம்பேர், அவன் வரான். கடேசி மூணு நாள் உற்சவத்துக்கு அவன் இங்கதான் இருக்கப் போறான்!’

எனக்கு நினைவு தெரிந்து, எங்கள் குடும்பம் முற்று முழுதான மகிழ்ச்சியைக் கொண்டாடிய ஒரே தருணம் அதுதான். வினய் வருகிறான் என்றதுமே, அப்பா தனது தங்கைகளுக்கெல்லாம் கடிதம் எழுதி விவரம் சொல்லிவிட்டார். எல்லோரையும் உற்சவத்துக்கு வரும் சாக்கில், வீட்டுக்கு வந்து தங்கும்படிக் கேட்டிருந்தார்.

அப்பாவுக்கு இரண்டு தங்கைகள் இருந்தார்கள். எனக்கு அந்த இரண்டு அத்தைகளுமே அதிகப் பரிச்சயம் இல்லாதவர்கள். ஒருவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்தார். இன்னொருத்தர் சென்னை வில்லிவாக்கத்தில் குடியிருந்தார். அப்பா தலையெடுத்துத்தான் தங்கைகள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார் என்று அம்மா எங்களிடம் சொல்லியிருக்கிறாள். ஆனால் அடிக்கடி வந்து போகிற உறவாக அவர்கள் எக்காலத்திலும் இருந்ததில்லை. அடிக்கடி என்ன? எனக்குத் தெரிந்து அத்தைகள் என்று இரண்டு பேர் எனக்குண்டே தவிர, சந்தித்ததில்லை. அப்பா எப்போதாவது கோயில் ஆபீசுக்குப் போய் அவர்களுடன் போனில் பேசிவிட்டு வருவார். பேசிய விவரங்களை அம்மாவிடம் சொல்லுவார். அப்போது அவர்கள் பெயர் காதில் விழுவதுடன் சரி.

அந்த முறை, ‘சந்திராவையும் ஜெயஸ்ரீயையும் உற்சவத்துக்கு வரச் சொல்லியிருக்கேன்’ என்று அப்பா வீட்டில் சொன்னபோது, அம்மாவுக்கே சற்று ஆச்சரியமாகப் போய்விட்டது.

‘என்ன சொன்னா?’ என்று கேட்டாள்.

‘முடிஞ்சா வரேன்னா. வினய் ஊர்லேருந்து வரான்னு சொல்லியிருக்கேன். அவன பாக்கறதுக்கு வருவான்னு நினைக்கறேன்’ என்று அப்பா சொன்னார்.

 

அப்பாவுக்கு அதுதான் ஆசை. தங்கைகள் எதிரே வினய்யை உட்காரவைத்து அரை மணி நேரம் பிரபந்தம் சொல்லவைக்க வேண்டும். ஊர்ப் பையன்கள் அத்தனை பேரும் கோயில் உற்சவத்தில் வெறுமனே பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டுவிட்டுப் போகிறபோது, அவன் மட்டும் சந்தையில் சேர்ந்துகொண்டு நாலாயிரம் சேவிப்பான். பெருமாள் வீதி உலா வரும்போது முன்னால் போகும் கோஷ்டியில் அவன் இருப்பான். பரிபாஷைகள், சம்பிரதாய ஒழுக்கங்கள், பெரிய மனித சேர்மானங்கள். தன் மகனை வேறொருவனாக மிக உயரத்தில் நிறுத்தி அவர்களுக்குக் காண்பிக்கும் வேட்கை அவருக்கு இருந்ததை நான் புரிந்துகொண்டேன். ஒன்றும் பிழையில்லை. அவர் பெருமைப்பட்டுக்கொள்ள அவருக்கென்று வேறு யார் இருக்கிறார்கள்?

சொன்னது போலவே ஏழாம் நாள் உற்சவத்தன்று வினய் ஊருக்கு வந்து சேர்ந்தான்.

‘செங்கல்பட்டு வந்து காண்டீபன் பிடிச்சி கேளம்பாக்கத்துல இறங்கி நடந்து வரேன்’ என்று சொன்னான்.

‘இன்ன பஸ்ல வரேன்னு சொல்லமாட்டானோ ஒருத்தன்? நான் சைக்கிள் எடுத்துண்டு வந்திருப்பேனோல்யோ?’ என்று அப்பா சொன்னார். அம்மா அவனை வீட்டு வாசலில் நிற்கவைத்து ஆரத்தி எடுத்து உள்ளே வரச் சொன்னாள். மாமா தாங்கமுடியாத பரவசத்தில் அவனைக் கட்டியணைத்து மாற்றி மாற்றி முத்தமிட்டார்.

‘நீ சாதிச்சுட்டேடா. சரியான நேரத்துலே, சரியான இடம் போய்ச் சேர்ந்தே பாரு! அதுதான் பகவத் கிருபை. அன்னிக்கு அத்திம்பேர் சொல்லச் சொல்லக் கேக்காம ஒன்ன காஞ்சீபுரத்துல கொண்டு தள்றேங்கறாரேன்னு எனக்கு ஆறவேயில்லே. ஆனா இப்ப யோசிச்சிப் பாத்தா, அவர் செஞ்சதுதான் சரின்னு படறது. என்ன இருந்தாலும் பெத்தவர் இல்லியா? அவர் கணக்கு சரியாத்தான் இருக்கும்!’

கேசவன் மாமாவுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. மாடவீதி நான்கிலும் ஓடி ஓடி ஒவ்வொரு வீட்டுப் படியாக ஏறி வினய் வந்திருக்கும் விஷயத்தைச் சொல்லிவிட்டு வந்தார். அவனது வருகை பிரம்மோற்சவத்தைத் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது என்று வினோத் சொன்னான்.

எங்களுக்கும் சந்தோஷமாகத்தான் இருந்தது. நாளெல்லாம் வினய் எங்களுக்கு காஞ்சீபுரத்துக் கதைகளைச் சொல்லிக்கொண்டிருந்தான். அவனது சிநேகிதர்கள். உபாத்தியாயர். கற்றுக்கொண்ட பாசுரங்கள். வரதர் கோயிலுக்கு தினசரி போய்விடுவானாம். ‘கோயில்னா அதுதான். பெருமாள்னா அவர் மட்டும்தான்’ என்று வினய் சொன்னான்.

அப்பா ஒரு நிரந்தரப் புன்னகையுடன் அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருந்தார்.

‘நீங்க தப்பு பண்ணிட்டேள்ப்பா. என்னை அஞ்சு வயசுலயே பாடசாலைல கொண்டு போய்ப் போட்டிருக்கணும். அப்ப அத்தி வரதர் சேவிச்சிருப்பேன். அது முடியாம போயிடுத்து பாருங்கோ’ என்று அவன் சொன்னபோது, ‘என் கண்ணே’ என்று அம்மா அவனை இழுத்து இறுக்கிக் கட்டிக்கொண்டாள்.

‘அதென்ன அத்தி வரதர்?’ என்று வினோத் கேட்டான்.

‘குளத்துக்கடியிலே ஒரு பெருமாள் இருப்பர். நாப்பது வருஷத்துக்கு ஒரு தடவைதான் வெளியிலே வருவார் அவர்’ என்று கேசவன் மாமா சொன்னார்.

‘வெறும் பெருமாள் சிலை இல்லே வினோத். ஒரு சன்னிதி அது. தனிக் கோயில்னே சொல்லலாம். அவர சேவிக்கணும்னா நாப்பது வருஷம் காத்துண்டிருக்கணும். மனுஷாளா பொறந்து ப்ராப்தம்னு ஒண்ணு இருந்தா, இந்த ஜென்மத்துல ரெண்டு தடவை மட்டும்தான் அவர சேவிக்கமுடியும். அப்படி ரெண்டு தடவையும் அத்தி வரதரை சேவிச்சவாளுக்கு அடுத்த ஜென்மா கிடையாது’ என்று வினய் சொன்னான்.

எனக்கு அண்ணாவின் ஞாபகம் வந்துவிட்டது. அல்லிக் குளத்துக்கு அடியில் இன்னமும் தவத்தில் இருக்கும் ரிஷிகளைச் சென்று சந்தித்துவிட்டு வந்தவன் அவன். ஒரு முயற்சி எடுத்தால், வினய்யும் வரதர் கோயில் புஷ்கரணியில் குதித்து நீந்தி உள்ளேபோய் அத்தி வரதரைச் சேவித்துவிட்டு வந்துவிட முடியாதா? இத்தனை ஆசைப்படுகிறவனுக்கு அதைச் செய்வதா கஷ்டம்?

‘அதெல்லாம் தப்பு. அவரச் சேவிக்க அவர் அனுக்ரஹம் வேணும்’ என்று வினய் சொன்னான்.

அவன் திருவிடந்தையில் இருந்த அந்த ஒரு வாரமும் எங்கள் வீடு அமர்க்களப்பட்டது. பிரம்மோற்சவத்தின் கடைசி மூன்று தினங்களும் அவன் அப்பா ஆசைப்படி கோயில் சேவாகாலத்தில் கலந்துகொண்டு கணீரென்று பாசுரங்கள் சொன்னான். கருட சேவையின்போது பெருமாளைத் தூக்கிக்கொண்டு போன கூட்டத்தில் அவனே முதலாவதாக நின்றான். வேட்டியைத் தார்ப்பாய்ச்சிக் கட்டிக்கொண்டு என்ன ஓட்டம் ஓடினான்! என்னால் அதையெல்லாம் நம்பவே முடியவில்லை. அப்படியொரு மாற்றம் அவனுக்குள் நிகழும் என்று கற்பனைகூடச் செய்ய முடியவில்லை.

உற்சவமெல்லாம் முடிந்து, விடுமுறையும் முடிந்து அவன் மீண்டும் ஊருக்குக் கிளம்புவதாகச் சொல்லிவிட்டு பஸ் ஏறியபோது, அம்மாவின் முகத்தில் விவரிக்க இயலாத ஒரு பேரமைதியைக் கண்டேன். இனி அவனைக் குறித்துக் கவலைப்படவே வேண்டாம் என்று தோன்றியிருக்கும்.

‘நீ முடிச்சிட்டு வாடா பயலே. நித்ய கல்யாணப் பெருமாளுக்கு இனிமே நித்ய கைங்கர்யம் பண்ணப்போறது நீதான்! நான் அதெல்லாம் ஏற்பாடு பண்ணிடுவேன்’ என்று கேசவன் மாமா சொன்னார். அவன் சந்தோஷமாக பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து, அனைவருக்கும் கையாட்டி விடை கொடுத்துவிட்டுத்தான் போனான்.

போய்ச்சேர்ந்து நான்கு நாள்களுக்குப் பிறகு, மடத்தில் இருந்து கோயில் ஆபீசுக்கு போன் செய்து யாரோ மாமாவிடம் பேசியிருக்கிறார்கள். வினய் ஏன் இன்னும் ஊரிலேயே இருக்கிறான், எப்போது காஞ்சீபுரத்துக்கு வந்து சேருவான் என்று கேட்டார்களாம்.

(தொடரும்)

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

26. ஊருக்கு ஓர் அழகி

 

 

பலார்ஷா ஸ்டேஷனில் ரயில் நின்றபோது, வெளியே வியாபாரிகள் சப்பாத்திக் கல் விற்றுக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். வட்ட வடிவில் வழுவழுப்பான கற்கள். ஒவ்வொரு கல்லும் குறைந்தது இரண்டு கிலோ எடை இருக்கும். தலைக்குப் பத்துக் கற்களை அடுக்கி வைத்துக்கொண்டு, ஜன்னல் ஜன்னலாக நகர்ந்து போய்க்கொண்டிருந்தார்கள். ரயில் பயணிகளில் யார் சப்பாத்தி இடும் கற்களை வாங்குவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ரயிலிலேயே சப்பாத்தி இட்டு, சுட்டு உண்ணக்கூடிய வசதி கிடையாது. வடஇந்தியர்கள் பொதுவாக, ரயிலில் விற்கும் சப்பாத்திகளைக்கூட வாங்குவதில்லை. அவரவர் வீட்டிலேயே சப்பாத்தி சுட்டு அடுக்குகளில் எடுத்துவந்துவிடுகிறார்கள். என் இருக்கைக்கு எதிரே அமர்ந்திருந்த குடும்பம், ரயில் ஏறியதில் இருந்து இருபத்தி ஐந்து சப்பாத்திகளைச் சாப்பிட்டு முடித்திருக்கிறார்கள். கணவன் மனைவியும் இரு பிள்ளைகளும். அந்தப் பெண்மணி எடுத்துவந்திருக்கும் அடுக்கில் இன்னும் குறைந்தது நாற்பது ஐம்பது சப்பாத்திகள் இருக்கும். இன்னொரு பெரிய தூக்குச் சட்டியில் பருப்புக் கூட்டு வைத்திருந்தாள். அந்தப் பெண்மணியின் கணவரைப் பார்த்தபோது, அவர் ஒரு நகை வியாபாரியாக இருப்பார் என்று தோன்றியது. ஆனால், அறிமுகத் தயக்கம் விலகி பேச்சு சகஜமாகி அவர் தன்னைப் பற்றிச் சொன்னபோது, அவர் ஒரு யுனானி மருத்துவர் என்று அறிந்தேன். மருத்துவரானாலும் வேளைக்குப் பன்னிரண்டு சப்பாத்திகள் சாப்பிடுவதெல்லாம் உடல் நலனுக்கு உகந்ததல்ல என்று சொல்ல நினைத்தேன். ஆனால் சொல்லவில்லை.

அந்தக் குடும்பம் திரும்பத் திரும்ப என்னை நச்சரித்துக்கொண்டே இருந்தது. ‘நீங்கள் ஏன் எதுவுமே சாப்பிடாமல் இருக்கிறீர்கள்?’

‘இல்லை. நான் நாற்பத்து எட்டு மணி நேர விரதத்தில் இருக்கிறேன்.’

‘சென்னை போய்ச் சேருகிற வரை பசி தாங்குமா?’

நான் அவர்களிடம் இரண்டு சப்பாத்திகளையாவது வாங்கி உண்டால் அவர்கள் அமைதியாகிவிடுவார்கள் என்று தோன்றியது. ஆனால் பயணங்களில் நான் பொதுவாக எதுவும் உட்கொள்வதில்லை. கிளம்புவதற்கு முன்னால், ஒரு கிலோ தந்தூரி சிக்கன், நான்கு முட்டை, ஒரு தம்ளர் பால் அருந்திவிட்டு வண்டி ஏறினால் போதும் எனக்கு. அடுத்த நாற்பத்து எட்டு மணி நேரத்துக்கு எனக்கு வேறெதுவும் வேண்டியிருக்காது. அவ்வப்போது தண்ணீர் மட்டும் அருந்தினால் போதும்.

இது ஒரு வசதி. என் குருநாதர் எனக்குச் சொல்லிக்கொடுத்த வழி. வெளியூர்ப் பயணங்களின்போது எதையும் உண்ணாதிருப்பது. கிளம்புவதற்கு முன்னால் முழுக் கொழுப்புணவு ஒன்றை பசி தீரும்வரை சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டுவிட்டால் போதுமானது. அடிக்கடி கழிப்பறைக்குப் போகிற வேலையும் இருக்காது. குறைந்தது ஒரு முழுநாள் உண்ணாதிருக்கும்போது, உடல் இயந்திரம் செரிமானம் தாண்டி வேறு சில காரியங்களைச் செவ்வனே செய்யும். அது, அடுத்த உணவுக்குப் பிறகு மேலும் புத்துணர்ச்சியாக உணர வைக்கும்.

இதை நான் சொன்னபோது, அந்த யுனானி மருத்துவருக்குப் பெரிய ஆச்சரியமாகிப் போய்விட்டது.

‘வெறும் கொழுப்பா? முழுக் கொழுப்பா?’ என்று திரும்பத் திரும்பக் கேட்டார்.

‘ஆம். அதிலென்ன சந்தேகம்?’

‘சுவாமிஜி, எதற்கும் ஒரு மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டுவிடுங்கள்’ என்று சொன்னார். நான் உடனே சரி என்று சொல்லிவிட்டேன்.

அறிவுரை சொல்வதையே பிழைப்பாகக் கொண்டவனுக்கு, அறிவுரைகள் ஒவ்வாமை ஏற்படுத்துபவை. எப்படி ஒரு நல்ல சமையல்காரன் கல்யாண வீடுகளில் தான் சமைத்ததை உண்பதில்லையோ அப்படி.

பேச்சை மாற்ற விரும்பி, நான் அந்த யுனானி மருத்துவரின் மனைவியிடம் வெளியே விற்றுக்கொண்டிருந்த சப்பாத்திக் கற்களைக் காட்டி, ‘நீங்கள் ஒன்று வாங்கிக்கொள்ளலாம்’ என்று சொன்னேன்.

‘என் வீட்டில் இருக்கிறதே’ என்று அவள் சொன்னாள்.

‘இருக்கலாம். ஆனால் உங்கள் சப்பாத்திகள் மிகவும் கனமாகத் தெரிகின்றன. பலார்ஷா கற்களில் சப்பாத்தி மிக மெல்லிசாக வரும்.’

‘அப்படியா? இது எனக்குத் தெரியாதே’ என்றவள், சட்டென்று வெளியே விற்றுக்கொண்டிருந்த ஒரு பையனைக் கூப்பிட்டு, உடனடியாக ஒரு ஜன்னல் வியாபாரத்தை முடித்தாள்.

யுனானி மருத்துவர், அந்தக் கல்லை வாங்கித் தடவிப் பார்த்தார். என்னிடமும் கொடுத்தார். நானும் தடவிப் பார்த்தேன். மென்மையாக, நன்றாக இருந்தது. எங்கள் வீட்டில் அம்மா இதே போன்றதொரு கல்லை வைத்திருந்தாள். அது ஒரு அபூர்வம். பொதுவாகத் தமிழ்நாட்டில் சப்பாத்திக் கல் என்பது மரத்தாலான பொருளாகவே இருக்கும். இம்மாதிரி பாலீஷ் போடப்பட்ட கருங்கற்கள் பயன்பாட்டில் இருந்ததில்லை. வட்ட வடிவில் மரப்பலகை ஒன்றைச் செதுக்கி, அதன்மீது வழுவழுப்பான பிளாஸ்டிக் தாளை ஒட்டியிருப்பார்கள். வாரச் சந்தைகளில், திருவிழாக்காலங்களில் விற்பனைக்குக் கிடைக்கும். அம்மாவுக்கு எங்கிருந்து அந்தக் கருங்கல் கிடைத்தது என்று தெரியவில்லை. இந்த பலார்ஷா கல்லைவிட அது கனமானது. தூக்கித் தலையில் அடித்தால் கண்டிப்பாக மண்டை உடைந்து ரத்தம் கொட்டும்.

இதை எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்கிறேன் என்றால், வினய் ஊரில் இருந்து புறப்பட்டுக் காஞ்சீபுரம் போய்ச் சேரவில்லை என்ற தகவல் வந்தபோது, அப்பா அந்தச் சப்பாத்திக் கல்லில்தான் முட்டிக்கொண்டு அழுதார். நான்கு முறை முட்டிக்கொண்ட உடனேயே, கேசவன் மாமா பாய்ந்து அவர் கையில் இருந்த கல்லைப் பிடுங்கி வீசியெறிந்துவிட்டார். ஆனால் அப்பாவின் நெற்றி புடைத்துக்கொண்டுவிட்டது. விநாடிப் பொழுதில் புசுபுசுவென்று ஊதி ஒரு குழிப் பணியாரம் போலாகிவிட்டது.

‘என்னடி பண்ணுவேன் நான்? இப்படி பண்ணிட்டானே இந்தப் பிள்ளை? அப்படி எங்க போய்த் தொலைஞ்சிருப்பான்? நன்னாத்தானே இருந்தான்? சரியாத்தானே இருந்தான்? எல்லாமே சரியாத்தானே இருந்தது? திடீர்னு என்ன கிராக்கு பிடிச்சிப்போச்சோ தெரியலியே?’

குமுறிக் குமுறி அழுதுகொண்டிருந்தார். அண்ணா காணாமல் போனபோதாவது, நாலு இடங்களில் தேடிப் பார்த்து அதன் பிறகே கிடைக்கவில்லை என்ற திருப்தியிருந்தது. வினய் காணாமல் போனதே நான்கு தினங்களுக்குப் பிறகுதான் தெரியவந்ததால், எங்கே போய்த் தேடுவது என்றுகூடப் புரியவில்லை.

வினோத்தான் சட்டென்று சொன்னான், ‘அப்பா அவன் ஒருவேளை திருப்பதிக்குப் போயிருக்கலாம்ப்பா.’

‘திருப்பதியா?’

‘ஆமாப்பா. திருப்பதிலதான் சாதம் ஃப்ரீ. அங்க போனா நிம்மதியா சாகறவரைக்கும் சாப்பாட்டு பிரச்னையில்லாம வாழலாம்னு அண்ணா அவன்கிட்டே சொன்னதா ஒருநாள் சொன்னான்.’

அம்மாவுக்கு இந்தத் தகவல் மிகுந்த அதிர்ச்சியளித்தது. ‘சாதம் என்னிக்குடா உங்களுக்குப் பிரச்னையா இருந்தது?’ என்று கேட்டாள்.

‘பெரிய வருமானம் இல்லேன்னாலும், என்னிக்கு இந்த வீட்ல சோறு பொங்காம இருந்திருக்கு? குழம்பிருந்தா ரசம் இல்லே, ரசமிருந்தா குழம்பில்லே. ஆனா சோறில்லாம விட்டிருக்கேனா?’ என்று கேட்டாள்.

‘அக்கா, நீ இரு. வினோத், யாரு சொன்னா? விஜய்யா?’ என்று கேசவன் மாமா கேட்டார்.

‘ஆமா மாமா. சின்ன வயசுல அப்பா எங்கள எல்லாம் ஒரு சமயம் திருப்பதிக்குக் கூட்டிண்டு போனாளே, அப்ப போயிட்டு வந்தப்போ சொன்னானாம்.’

‘இது உனக்கு எப்படித் தெரியும்?’

‘அண்ணா காணாம போனப்போ, அவன் திருப்பதிக்குப் போயிருக்கலாம்னு வினய் சொன்னான் மாமா.’

மாமா அரைக் கணம்கூட யோசிக்கவில்லை. ‘அத்திம்பேர், நான் கெளம்பறேன். ரெண்டு நாள்ல வரேன்’ என்று சொல்லிவிட்டு, ஒரே ஒரு மஞ்சள் பையில் ஒரு வேட்டி சட்டை மட்டும் எடுத்துக்கொண்டு புறப்பட்டுப் போனார்.

அன்றைக்கே, என்னையும் வினோத்தையும் பத்மா மாமி வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு, அப்பாவும் அம்மாவும் காஞ்சீபுரத்துக்குக் கிளம்பிப் போனார்கள்.

மாமி மிகுந்த அக்கறையும் கனிவுமாக எங்கள் இருவரையும் கவனித்துக்கொண்டாள். உட்காரவைத்து சாப்பாடு போடும்போது, ‘ஏந்தான் உங்காத்துக்கு இப்படி ஒண்ணு மாத்தி ஒண்ணு கஷ்டம் வந்து சேர்றதோ தெரியலே போ’ என்று சொன்னாள். ‘என்னவானாலும் மனசத் தளர விட்டுடாதீங்கோடா. உங்கப்பாம்மாக்கு நீங்க ரெண்டு பேரும்தான் தூணா நின்னு தாங்கணும்’ என்று சொல்லிவிட்டு, இரவுக்குச் சமைக்கக் காய்கறி வாங்கிவருவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பிப் போனாள்.

காத்திருந்தாற்போல, பத்மா மாமியின் மகள் சித்ரா என்னருகே வந்து அமர்ந்து, ‘ஏண்டா வினய் காணாம போயிட்டான்?’ என்று கேட்டாள். ஒரு கணம் எனக்குத் தாங்கமுடியாத கோபம் வந்தது. ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி அவளை திடுக்கிடவைக்க மிகவும் விரும்பினேன். அது ஒரு அர்த்தமற்ற கோபம் என்பதெல்லாம் அப்போது எனக்குத் தெரியவில்லை. உண்மையில் யார் மீது அல்லது எதன் மீது கோபம் என்றும் இனம் காண முடியவில்லை. எனவே வெறி பிடித்தவன்போலச் சொன்னேன், ‘நீதான் காரணம். உன்னாலதான் அவன் காணாமப் போனான்!’

‘ஐயோ, நான் என்னடா செஞ்சேன்?’

‘நீ வினய்ய லவ் பண்ணியா?’

சித்ரா என்னைவிட இரண்டு வயது மூத்தவள். நான் பெண்களை நினைக்க ஆரம்பித்தபோது, ஒரு சில சமயம் அவளைப் பற்றியும் நினைத்துப் பார்த்திருக்கிறேன். அது ஒரு கொலைப் பாவம் என்று உடனே தோன்றிவிடும். என் மானசீகத்தில் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு சிந்தனையை மாற்றிக்கொண்டுவிடுவேன். ஓரிரு நாள் இடைவெளியில் மீண்டும் என்னையறியாமல் அவளை நினைப்பேன். திருவிடந்தையில் அந்நாள்களில் அவள் மட்டும்தான் பார்க்க லட்சணமாக இருந்த ஒரே பெண். என்னைவிட இரண்டு வயது மூத்தவள் என்ற ஒரே காரணத்தால், என்னால் அவளைத் தொடர்ந்து நினைக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் வினய் அவளைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கிறான் என்று தெரியவந்தபோது, ஏனோ சில காலம் எனக்கு அவனைப் பிடிக்காமல் போனது. பிறகு அதுவும் சரியானது. என்ன தவறு? அவன் சித்ராவைவிட இரண்டு வருடங்கள் மூத்தவன். திருவிடந்தையில் அவன் நினைத்து ரசிக்கவும் வேறு அழகிகள் கிடையாதுதான்.

எனக்கு மிக நன்றாகத் தெரியும். காஞ்சீபுரத்துக்குப் போவதற்கு முன்னால், வினய் பெரும்பாலான நேரங்களில் சித்ராவைத்தான் நினைத்துக்கொண்டிருந்தான். வாய் விட்டுச் சொன்னால்தானா என்ன? அவனுக்குள் இருந்த பல்வேறு குழப்பங்களுக்கு இவள் ஒரு காரணமாயிருப்பாளோ என்று எனக்கு அப்போது தோன்றியது. எல்லாக் குழப்பங்களையும் உதிர்த்துவிட்டுத்தான் அவன் பாடசாலைக்குப் போய்ச் சேர்ந்தான். அல்லது போனபின் அவை தன்னியல்பாக உதிர்ந்திருக்க வேண்டும். ஒன்றரை ஆண்டுக்காலம் முற்றிலும் வேறொரு சூழலில், பெருமாளும் பாராயணமும் புளியோதரையுமாக வாழ்ந்த ஒருவனுக்கு திடீரென்று மீண்டும் என்ன ஆயிருக்கும்? புரியவேயில்லை.

என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று முடிவு செய்துகொண்டுதான் நான் சித்ராவிடம் கேட்டேன், ‘நீ வினய்ய லவ் பண்ணியா?’

‘ஐயோ’ என்று வினோத் என்னை அதிர்ச்சியாகப் பார்த்தான்.

‘பரவால்லடா. இவ இவம்மாட்ட சொல்லி, மாமி நம்ப அப்பாட்ட சொல்லி, அப்பா என்னை பெல்ட்டால அடிச்சாலும் பரவால்ல வாங்கிக்கறேன். ஆனா எனக்கு இதுக்கு பதில் தெரியணும். நீ சொல்லு சித்ரா. வினய்ய நீ லவ் பண்ணியா?’ என்று மீண்டும் கேட்டேன்.

‘சீ, அதெல்லாம் இல்லை. யார் சொன்னா உனக்கு?’ என்று சித்ரா கேட்டாள்.

‘அவன் அடிக்கடி உன்னை நினைச்சிண்டிருந்தான்.’

‘அப்படியா?’ என்றாள். சிறிது ஆச்சரியப்பட்டது போலிருந்தது. ஆனால் உடனே அழ ஆரம்பித்தாள். ‘நீ இப்படியெல்லாம் பேசறது எனக்குப் பிடிக்கலே. எங்கம்மாக்கு தெரிஞ்சா கொலையே பண்ணிடுவா’.

‘சரி இனிமே பேசலை. ஆனா வினய் காணாமபோனதுக்கு நீயும் ஒரு காரணம்’ என்று சொன்னேன்.

அவளால் அந்த அதிர்ச்சியைத் தாங்கவே முடியவில்லை. நான் அதை அன்று சொல்லியிருக்கக் கூடாது. அது என் அறிவின் முதிர்ச்சியின்மையை எனக்கே தெரியப்படுத்திய தருணம். பத்மா மாமியின் மகளைப் பற்றி வினய் என்னிடம் சொன்னபோதுகூட, அவள் மார்புத் திரட்சிக்கு உள்ளே இருக்கும் எலும்புகளையும் ரத்தத்தையும் பற்றித்தான் சொன்னான். அல்லிக் குளத்தில் தற்கொலைக் காட்சிக்குத் தயாரான கன்னட நடிகையைக் கண்டபோது அவனுக்கு எழுந்த அதே உணர்வு.

என்னால் அந்த வயதில் அதை வேறு மாதிரி புரிந்துகொள்ளவே முடியவில்லை. வினய் மனத்தில் சித்ரா இருந்திருக்கிறாள். அல்லது அப்படி அவள் அங்கே இடம்பிடிக்க ஏதுவாக அவள் ஏதாவது பேசியிருக்கலாம், சிரித்திருக்கலாம். அட, காதலித்திருக்கத்தான் கூடாதா?

ஆனால், அது ஏன் வினய்யின் ஒருதலைக் காதலாக இருந்திருக்கக் கூடாது என்று என்னால் யோசிக்க முடியவில்லை. தூண்டுதல் அவளிடத்திலிருந்தே வந்திருக்க வேண்டும் என்று தீர்மானமாகத் தோன்றியது.

அப்படியே இருந்திருந்தால்தான் என்ன? காஞ்சீபுரத்துக்குப் போனபிறகு அனைத்தையும் அவன் மறந்துதானே போனான்? பிரம்மோற்சவத்துக்கு வந்தபோதுகூட,

‘எம்மனா, என் குலதெய்வமே

என்னுடைய நாயகனே

நின்னுளேனாய்ப் பெற்ற நன்மை

இவ்வுலகினில் ஆர் பெறுவார்?

நம்மன் போலே வீழ்த்து அமுக்கும்

நாட்டில் உள்ள பாவம் எல்லாம்

சும்மெனாதே கைவிட்டு ஓடித்

தூறுகள் பாய்ந்தனவே’

என்று கண்மூடிக் கிரங்கி நின்று பாசுரம் சொன்னவனுக்கு, பத்மா மாமியின் மகளோ, அவளது மார்பகத்தினுள்ளே உள்ள எலும்பும் சதையுமோ நினைவில் இருந்திருக்க வாய்ப்பில்லை.

வேறு ஏதோ நடந்திருக்கிறது. மிக நிச்சயமாக சித்ரா அதற்குக் காரணமில்லை. அல்லது அவள் மட்டும் காரணமாயிருக்க முடியாது.

அன்றிரவு படுக்கப் போகும்முன் நான் சித்ராவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். ‘நான் சொன்னத மறந்துடு. உங்கம்மாட்ட சொல்லிடாத’ என்று சொன்னேன்.

‘சொல்லமாட்டேன் விமல். எனக்கு ஒரு அண்ணா இருந்து அவன் ஓடிப்போயிருந்தா, நானும் இந்த மாதிரியெல்லாம்தான் யோசிச்சிப் பாத்திருப்பேன்.’

அப்போது எனக்கு அவளைப் பிடித்தது. வெகுநாள் கழித்து, அன்றிரவு மீண்டும் அவளை நினைத்துக்கொண்டு தூங்கிப்போனேன்.

மறுநாள் பத்மா மாமி வீட்டிலேயே குளித்து, சாப்பிட்டுவிட்டுப் பள்ளிக்கூடம் போகும் வழியில், வினோத் என்னைத் திட்டினான். நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது என்று சொன்னான். அது இரண்டு குடும்பங்களுக்கு இடையில் பெரிய பகையை உருவாக்கிவிடும் என்று அவன் அஞ்சினான்.

‘இல்லேடா. அவ அவம்மாட்ட சொல்லமாட்டேன்னு சொல்லிட்டா.’

‘அப்படித்தான் சொல்லுவா. ஆனா கண்டிப்பா இது பெரிய பிரச்னையாயிடும் பார். நம்பம்மாவுக்கு இருக்கற கஷ்டம் போதாதுனு இதுவேற ஒண்ணு.’

எனக்கு அழுகை வந்தது. அடக்கிக்கொண்டு, ‘அவதான் காரணம்னா என்னிக்காவது வினய் திரும்பி வந்துடுவாண்டா. அந்த மாதிரி எந்தக் காரணமும் இல்லேன்னாத்தான் அண்ணா போன மாதிரி ஆயிடுமோன்னு தோணித்து’ என்று சொன்னேன்.

வினோத்துக்கு நான் சொன்னது புரியவில்லை. சிறிது நேரம் அவன் யோசித்துக்கொண்டே இருந்தான். பிறகு கேட்டான், ‘அண்ணா போன மாதிரின்னா? அவன் வரவே மாட்டான்னு சொல்றியா?’

அந்தக் கணம் எனக்கு தோன்றியது. அப்பாவிடமோ அம்மாவிடமோ சொல்லாத நானறிந்த உண்மைகளை இவனிடம் சொல்லலாம். என்ன நடந்தாலும் சரி. செருப்படி பட்டாலும் சரி. இதற்குமேல் என்னால் தூக்கிச் சுமக்க முடியாது.

‘ஆமா. அவன் வரமாட்டான்.’

‘ஏண்டா?!’ என்று அதிர்ச்சியுடன் கேட்டான்.

‘அவன் சன்னியாசி ஆயிட்டாண்டா. இமயமலைக்கோ எங்கியோ போயிட்டான்!’ என்று சொன்னேன்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

27. இடப்பெயர்ச்சி

 

 

நினைத்துப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. அண்ணா வீட்டை விட்டுச் சென்றபின், அதைப்பற்றிச் சற்றேனும் வாய் திறந்து பேசுவதற்கான துணிவை நான் பெறுவதற்கு இரண்டு வருடங்கள் தேவைப்பட்டிருக்கின்றன. அப்போதுகூட அப்பாவிடமோ, அம்மாவிடமோ, மாமாவிடமோ என்னால் அதைப் பேச முடியாது என்று தீர்மானமாகத் தோன்றியது. வினோத்தை நான் தேர்ந்தெடுத்ததன் காரணம், அவன் மட்டும்தான் மிச்சமுள்ள ஒரே நபர். ஒரு வாக்குமூலம்போல, நானறிந்தவற்றை அவனிடம் சொல்லிவிட்டால், ஏதோ ஒரு விதத்தில் என் கடமை முடிந்துவிடும் என்று நினைத்தேன். என் வாழ்வின் ஆகக் குழப்பமான காலகட்டத்தை நான் அப்போது கடந்துகொண்டிருந்தேன். கோவளம் தர்கா அருகே நான் சந்தித்த பக்கிரி, திரும்பத் திரும்ப என் கனவில் வந்துகொண்டே இருந்தார். நான் ஓடிப்போவேன் என்று எப்படி அவர் சொல்கிறார்? அதற்குச் சற்றும் வாய்ப்பில்லை என்றுதான் அன்றைக்கு எனக்குத் தோன்றியது. ஏனென்றால், என்னை எனக்கு மிக நன்றாகத் தெரியும். இந்த உலகில், என்னைக் காட்டிலும் சொகுசு விரும்பி வேறு யாரும் இருக்க முடியாது.

உறவின் சொகுசு. பாசத்தின் சொகுசு. பாதுகாப்பின் சொகுசு. வேளைக்குக் கிடைக்கும் உணவின் சொகுசு. உல்லாசத்தின் சொகுசு. தாவணி போட ஆரம்பித்த பின்பு பத்மா மாமியின் மகள் சித்ரா இன்னமுமே அழகாகியிருக்கிறாள். சற்று மெனக்கெட்டிருந்தால், வினய் அவளை வென்றிருக்கலாம். இரண்டு வயது மூத்தவள் என்றாலும், இந்நாள்களில் நான் முன்பளவு குற்ற உணர்வின்றி அவளை அடிக்கடி நினைத்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். ஒரு வேகத்தில், வினய்யை அவள் விரும்பினாளா என்று கேட்டுவிட்டாலும், அவள் இல்லை என்றபோது சற்று நிம்மதியாகத்தான் இருந்தது என்பதை நிதானமானபின் உணர்ந்தேன்.

நான் நன்றாகப் படித்தேன். சிறந்த மதிப்பெண்கள் பெறுகிற மாணவர்கள் பட்டியலில் எப்போதும் என் பெயர் இருந்தது. பெரிய துயரங்களற்ற ஒரு நேர்த்தியான வாழ்க்கை எனக்கு எப்படியும் வசப்பட்டுவிடும் என்பது அப்போதே தெரிந்திருந்தது. நான் ஓடிப்போக ஒரு காரணத்தையும் என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை. ஆனால், அந்தப் பக்கிரி அதைத்தான் சொன்னார். இரண்டு வருடங்கள் அதைத் தள்ளிப்போடச் சொல்லி, அவரது எஜமானிடம் கேட்டிருப்பதாக.

அப்போதும்கூட நான் என்னைக் குறித்துக் கவலைகொள்ளவில்லை. என் அச்சமெல்லாம் அம்மாவைப் பற்றித்தான். இரண்டு மகன்களைப் பறிகொடுத்திருக்கிறாள். நானும் போய்விட்டால் அவள் என்ன ஆவாள்? அதுசரி. நான் ஏன் போக வேண்டும்?

எப்படி யோசித்துப் பார்த்தாலும், எனக்கு அதற்கு ஒரு காரணம்கூடப் புலப்படவில்லை. இரண்டு பேர் இல்லாமல் போனதன் தொடர்ச்சியாக, வீட்டின் மீதான என் ஒட்டுதலும் இறுக்கமும் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டிருப்பதாகத்தான் தோன்றியது. வினய்யைக் குறித்து விசாரிப்பதற்காகக் காஞ்சீபுரம் போயிருக்கும் அம்மாவும் அப்பாவும் திரும்பி வந்ததும், அவர்களோடு உட்கார்ந்து நிறையப் பேச வேண்டும் என்றெல்லாம் நினைத்துக்கொண்டேன். நிச்சயமாக அண்ணாவைக் குறித்தல்ல. அதை வினோத்திடம் சொல்லிவிட முடிவு செய்திருந்தேன். பிறகு அவன் அதை அவர்களிடம் சொல்லுவதென்றால் சொல்லிக்கொள்ளட்டும். நானாக வாய் திறக்கப்போவதில்லை என்று எண்ணிக்கொண்டேன்.

‘சொல்லுடா. அவன் எங்க போனான்? உனக்கு என்ன தெரியும்?’

வினோத் கேட்டபோது, நான் எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன். ‘அவன் நம்மள மாதிரி பையன் இல்லடா. அவன் வேற.’

‘அப்படின்னா?’

‘அவன் ஒரு ஞானி.’

‘அப்படின்னா?’

‘எனக்குத் தெரியலே. ஆனா அவன் யோகாவெல்லாம் பண்ணுவான். தியானம் பண்ணுவான். தண்ணிக்கடியிலே அவனால பதினஞ்சு நிமிஷம் மூச்சடக்கி நிக்கமுடியும். நான் பாத்திருக்கேன்.’

‘எப்போ?’

‘எவ்ளவோ வாட்டி. அவனுக்கு யாரோ ஒரு சித்தரோட தொடர்பு இருந்திருக்கு. யார்னு அவன் சொனதில்லை. ஆனா, திருப்போரூர் சாமிய அடிக்கடி போய்ப் பாப்பான்.’

‘என்ன சொல்றே நீ? திருப்போரூர் சாமி ஐயங்கார் இல்லியேடா?’ என்று வினோத் சொன்னான்.

எனக்கு அதற்கு என்ன பதில் சொல்லுவதென்று தெரியவில்லை. சிறிது நேரம் யோசித்துவிட்டு, ‘விஜய்யே ஐயங்கார் இல்லை வினோத். அவன் ரொம்ப நாளா பூணூலே போட்டுக்கலை.’

‘ஐயோ’ என்றான் வினோத்.

‘தெரியாதோல்யோ? அதான். க்ளவரா அதை ஆத்துல மறைச்சி வெச்சிண்டிருந்தான்.’

‘உனக்கு எப்படித் தெரியும்?’

‘தெரியும். அவனே சொல்லியிருக்கான்.’

வினோத்தால், நான் சொன்ன பல விஷயங்களை நம்ப முடியவில்லை. குறிப்பாக, அவன் தலைகீழாக நின்ற கதை. காலை அசைத்து நரியை விரட்டிய கதை. அல்லிக்குளத்துக்கு அடியில் அவன் ரிஷிகளைச் சந்திக்கச் செல்லும் கதை.

அதனாலென்ன? எனக்கு அவன் நம்புவது அவசியமென்று தோன்றவில்லை. சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தேன். ஒரு விதத்தில் அவன் நம்பாதிருந்தாலே நல்லது என்றும் தோன்றியது.

‘நீ ஒரு லூசு. அவன் ஒண்ணும் ஞானியெல்லாம் இல்லை. அண்ணாக்கு படிப்பு சரியா வரலை. அதனாலதான் அவன் ஓடிப்போயிட்டான்’ என்று வினோத் சொன்னான்.

இது அபாண்டம் என்று எனக்குத் தோன்றியது. என்னளவுக்கு அவன் மதிப்பெண்கள் பெறுபவனல்ல என்பதை நானறிவேன். ஆனால், அண்ணா என்றைக்கும் எதிலும் தோல்வியுற்றதில்லை. எல்லா பாடங்களிலும் கௌரவமான மதிப்பெண்களை அவனால் பெற முடிந்திருக்கிறது. வீடு அவன் படிப்பைக் குறித்துப் பெரிதாகக் கவலைப்படாத அளவுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை அவன் செய்துகொண்டுதான் இருந்தான். ஒரு வகையில், வீட்டின் கவனத்தைத் தன்புறம் திருப்பாதிருப்பதற்காகவேகூட அவன் அதைச் செய்திருக்கலாம். என்னைவிட ஒரு வயது மூத்தவனான வினோத்துக்கு இது எப்படிப் புரியாதிருக்கிறது?

‘அதெல்லாம் சும்மா. நமக்குத் தெரியாம அவன் எதாவது பெரிய பிரச்னைல சிக்கிண்டிருப்பான். அதச் சொல்ல தைரியமில்லாம ஓடிப்போயிட்டான்’ என்று வினோத் சொன்னான்.

‘அப்ப வினய் ஏன் போனான்?’ என்று நான் கேட்டேன்.

வினோத் வெகுநேரம் எதுவும் பேசவில்லை. அவன் யோசித்துக்கொண்டிருந்தாற்போலத் தோன்றியது. வினய் ஓடித்தான் போனானா என்றே அவன் சந்தேகப்பட்டான். ‘நீ வேணா பாரேன். அப்பாவும் அம்மாவும் இன்னிக்கு அவனை மடத்துல பார்த்திருப்பா.’ என்று சொன்னான்.

அப்படி நடந்திருந்தால், எனக்கும் அது மகிழ்ச்சிதான். ஆனால் ஏனோ அது நடக்காது என்றே தோன்றியது. திரும்பத் திரும்ப, கோவளத்தில் நான் சந்தித்த பக்கிரிதான் நினைவுக்கு வந்தார். வினய் ஓடியிருக்காவிட்டால், அவர் அதையல்லவா முதலில் சொல்லியிருப்பார்? என் ஓட்டத்தைத் தள்ளிப்போடச் சொன்னதாகச் சொல்ல என்ன அவசியம்?

நான் வினோத்திடம் அவரைக் குறித்தும் சொன்னேன். ஆனால் கவனமாக, அவர் என்னைக் குறித்துச் சொன்னதை மறைத்துவிட்டு, அவரிடம் போய்ப் பேசியதை மட்டும் தெரிவித்தேன்.

‘அவர் ஒண்ணும் சித்தர் இல்லை’ என்று வினோத் சொன்னான்.

‘அம்மாவே அவர்ட்ட போய் அடிக்கடி பேசிட்டு வருவா. எனக்குத் தெரியும்!’

‘எனக்கும் தெரியும்டா. நானும் அம்மாவோட போயிருக்கேன். அவர் ஒரு நாட்டு டாக்டர் மட்டும்தான்’ என்று வினோத் சொன்னான்.

அவனுக்கு ஒரு சமயம் முகமெங்கும் கட்டி வந்துகொண்டே இருந்தது. ஒரு கட்டி வளர்ந்து, ஊதிப் பெருத்து உடைந்ததும், அடுத்தது முளைக்கும். அதன் காலம் முடிவடையும்போது, இன்னொன்று உடனே முளைவிடும். அப்பா அவனை இரண்டு மூன்று டாக்டர்களிடம் அழைத்துச் சென்று காட்டி, இஞ்செக்‌ஷன், மாத்திரை என்று எவ்வளவோ செய்து பார்த்தார். அவனது பிரச்னை தீராமலே இருந்தது. கேசவன் மாமாதான் கோவளத்துப் பக்கிரியிடம் அழைத்துச் சென்று காட்டலாம் என்று அம்மாவிடம் நினைவூட்டியது. எனக்குத் தெரிந்து, அவன் அந்தப் பக்கிரியைச் சந்தித்த ஒரே சந்தர்ப்பம் அதுதான். அவரிடம் இதை நினைவூட்டினால், ‘அப்படியா? இருக்கலாம்’ என்றுதான் சொல்லுவார். அம்மாவையே நினைவில்லாதவருக்கு, வினோத்தை எப்படித் தெரிந்திருக்கும்?

அன்று அந்தப் பக்கிரி, வினோத்தின் கட்டியின் மீது ஒரு பிடி விபூதியை வைத்துத் தேய்த்து மந்திரித்துவிட்டதாக அம்மா சொன்னாள்.

‘முஸ்லிம்னா விபூதியெல்லாம் வெச்சிருப்பாளான்ன?’ என்று அப்பா கேட்டார்.

‘தெரியலே. ஆனா அவர் விபூதிதான் தேய்ச்சார். சரியாயிடும்னு சொன்னார்’ என்று அம்மா சொன்னாள்.

இரண்டு நாளில் அவனது கட்டி வடியத் தொடங்கிவிட்டது. அதன்பின் அது திரும்ப வரவேயில்லை. வினோத்துக்கு அது ஒரு அற்புதம் என்றெல்லாம் எண்ணத் தோன்றவில்லை. விபூதியில் அவர் ஏதோ மூலிகை கலந்து தேய்த்திருக்கலாம் என்றுதான் நினைத்தான். பெரிதாக அதைப்பற்றி அவன் யாரிடமும் சொல்லிக்கொண்டிருக்கவும் இல்லை. எனக்குத்தான் அப்போது அது மிகப்பெரிய வியப்பாக இருந்தது. டாக்டர்களால் முடியாத ஒன்றை ஒரு பக்கிரி எப்படி சாதித்திருப்பார்? அண்ணாவிடம் அதைக் குறித்து நான் கேட்டேன். ‘மருந்து, விபூதியிலே இல்லை. அவர் தேய்ச்சது வெறும் மண்ணாவோ, சாணியாவோ, எதுவாவோகூட இருக்கலாம். மருந்து வேற இடத்துலேருந்து வந்திருக்கு’ என்று அவன் சொன்னான்.

எனக்கு அது புரியவில்லை. ‘மந்திர பலமா?’ என்று கேட்டேன்.

‘அதுகூட இல்லே.’

‘பின்னே?’

அப்போது அவன் ஒன்று சொன்னான். அன்றைக்கு எனக்கு அது சற்றும் விளங்கவில்லை. அவன் காணாமல் போய் கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் கழிந்து, வினோத்துடன் தற்செயலாக அந்த விஷயத்தைப் பேசப்போக, சட்டென்று ஏதோ ஓரிழை பிடிபட்டதுபோலத் தோன்றியது.

‘கட்டி கரைஞ்சிபோகலே வினய். அது இடம் மாறிப் போயிருக்கு.’

‘அப்படின்னா?’

‘அவர் எடுத்துண்டுட்டார் அதை. அவர் மூஞ்சிலயோ முதுகுலயோ எங்கயோ ஒட்டவெச்சுண்டுட்டார். அவ்ளோதான். இல்லேன்னா, வேற யாருக்காவது குடுத்திருப்பார்.’

காஞ்சீபுரத்துக்குப் போன அப்பாவும் அம்மாவும் மூன்றாம் நாள் காலை ஊருக்குத் திரும்பி வந்தார்கள். இரண்டு பேர் முகத்தையும் பார்க்கச் சகிக்கவில்லை. அழுது அழுதே கருகிவிட்டாற்போலிருந்தது. திருப்பதிக்குப் போன மாமா, இன்னும் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை. அவராவது ஏதாவது நல்ல செய்தியுடன் வரமாட்டாரா என்று அப்போதும் அப்பா எதிர்பார்த்துக்கொண்டுதான் இருந்தார்.

‘மடத்துல என்னப்பா சொன்னா?’ என்று வினோத் கேட்டான்.

‘அவா யாருக்கும் தெரியலே. இவன் இங்கேருந்து கெளம்பி அங்க போகலே’ என்று சொன்னார்.

காஞ்சீபுரத்தில் வினய் இருந்த ஒன்றரை வருட காலத்தில் அவன் பழகிய, அவனை அறிந்த அத்தனை பேரையும் அப்பாவும் அம்மாவும் சந்தித்துப் பேசிவிட்டு வந்திருக்கிறார்கள். யாராலுமே அவன் காணாமல் போனதை நம்ப முடியாதிருந்திருக்கிறது.

‘யாராவது கடத்திண்டு போயிருக்கலாம். நீங்க போலிஸ் கம்ப்ளைண்ட் குடுத்துடுங்கோ’ என்றுதான் நிறையப் பேர் சொன்னார்களாம்.

கடத்திச் செல்லும் வயதா!

அன்றிரவெல்லாம் அப்பா என்னையும் வினோத்தையும் அழைத்து உட்காரவைத்து என்னென்னவோ சொல்லிக்கொண்டிருந்தார். ‘இன்னும் நாங்க ரெண்டு பேரும் பிராணன விடாம இருக்கோம்னா, அதுக்குக் காரணம் நீங்க ரெண்டு பேரும்தான். என்னிக்கும் இது ஞாபகத்துல இருக்கட்டும்’ என்று அவர் சொன்னது மட்டும் இன்னமும் எனக்கு நினைவில் இருக்கிறது.

அடுத்த நாள் காலை விடிந்தபோது, கேசவன் மாமா வீடு வந்து சேர்ந்தார்.

‘அக்கா...’ என்று வாசலில் நின்றவாறே அவர் அழைத்தபோது, அவர் குரல் என்னவோ போலிருந்தது.

‘என்னாச்சு கேசவா?’ என்று அப்பாதான் பதைத்துப்போய் ஓடிவந்தார். அம்மா வழக்கம்போல் எவ்வித முக மாறுதலும் இன்றி, அடுக்களை வாசலில் நின்றே கவனித்துக்கொண்டிருந்தாள்.

‘போனியா? பாத்தியா? எதாவது தெரிஞ்சிதா?’ என்று அப்பா கேட்டார்.

‘பாத்தேன் அத்திம்பேர். ஆனா வினய் இல்லே. விஜய்’ என்று மாமா சொன்னார்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

28. எழுப்புதல்

 

 

கேசவன் மாமா திருமலைக்குச் சென்று இறங்கியபோது, அபூர்வமாக அன்றைக்குக் கூட்டம் குறைவாக இருந்தது. ஆண்டுப் பரீட்சை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்திருந்த சமயம் என்பதால், ஜனவரத்து குறைவாக இருக்கிறது என்று அவர் நினைத்தார். இருப்பினும், அத்தனை எளிதில் வினய்யை அங்கே தேடிக் கண்டுபிடிப்பது சாத்தியமல்ல என்றே தோன்றியது. அது நேர வேண்டும். அவன் தானாகத் தன் கண்ணில் பட வேண்டும். அதற்குப் பெருமாள் துணை புரிந்தாக வேண்டும்.

குளத்தில் குளித்துவிட்டு, திருமண் இட்டுக்கொண்டு அதிகாலை ஜீயருடன் அவர் திருப்பாவை சேவை கோஷ்டியில் போய் நின்றுகொண்டார். திருப்பாவை சேவையில் யார் வேண்டுமானாலும் போய்ச் சேர்ந்துகொள்ளலாம். மூன்றே நிபந்தனைகள். காதுக்குக் கீழே கிருதா வளர்ந்திருக்கக்கூடாது. தாடியில்லாமல் மீசை மட்டும் வைத்திருக்க அனுமதியில்லை. அல்லது முற்றிலும் மழித்திருக்க வேண்டும். தென்கலையோ, வடகலையோ, இரண்டிலொரு திருமண் கட்டாயம். மற்றபடி திருப்பாவை தெரிந்திருக்கிறதா என்றெல்லாம் யாரும் பரிசோதிக்கமாட்டார்கள். ஜீயர் கோயிலுக்குள்ளே போகும்போது, பின்னாலேயே ஒட்டிக்கொண்டு போய்விடலாம். கெடுபிடியின்றி பத்து நிமிடங்கள் சன்னிதியில் நிற்கமுடியும்.

கேசவன் மாமா, திருப்பாவை சேவையை முடித்துக்கொண்டு மனமார வேண்டிக்கொண்டார். எப்படியாவது வினய் கண்ணில் பட்டுவிட வேண்டும். அதன்பின் அவனைப் பேசி சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்துச்செல்வது அவருக்குப் பெரிய பிரச்னையாக இருக்காது. இதை மட்டும் நடத்திக் கொடுத்துவிட்டால், அடுத்த முறை திருவிடந்தையில் இருந்து பாத யாத்திரையாகவே மலைக்கு வருவதாக அவர் வேண்டிக்கொண்டார்.

கோயிலை விட்டு வெளியே வந்ததும், அவர் நேரே உணவுக் கூடத்துக்குத்தான் போனார். தரும உணவு. வரிசையில் நின்று ஒவ்வொரு முகத்தையும் கவனிக்க ஆரம்பித்தார். தமிழ் முகங்கள். தெலுங்கு முகங்கள். ஹிந்தி முகங்கள். திருமலையில் தென்படும் முகங்களில் ஏனோ மலையாள முகங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. சமீப காலத்தில் பிரபலமாகத் தொடங்கியிருக்கும் ஐயப்பன் அவர்களை வளைத்துப் போட்டுவிடுகிறார் போலிருக்கிறது. தவிரவும், பிராந்தியக் கடவுள் அணுகச் சுலபம் என்று கருதியிருக்கலாம்.

மதியம் இரண்டு மணி வரை, கேசவன் மாமா உணவுக் கூடத்தைவிட்டு நகரவேயில்லை. காத்திருக்கும் வரிசையிலும் பந்தி வரிசைகளிலும் சுற்றிச் சுற்றி வந்துகொண்டே இருந்தார். வினய் அங்கு வரவில்லை. கிளம்பும்போதே அவர் மறக்காமல் வினய்யின் புகைப்பட நெகடிவ் ஒன்றை எடுத்துச் சென்றிருந்தார். கீழ்த்திருப்பதியில் இறங்கியதும் ஒரு ஸ்டுடியோவுக்குச் சென்று அதில் பத்து ப்ரிண்ட் போட்டு எடுத்துக்கொண்டுதான் மலை ஏறியிருந்தார். உணவுக்கூடத்தில் உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்த சிலரிடம் விவரம் சொல்லி, அவர்களிடம் போட்டோவையும் கொடுத்துவிட்டுத்தான் வேறிடம் தேடிச் சென்றார்.

மலை முழுதும் கால் போன போக்கில் நடந்துகொண்டே இருந்துவிட்டு, மாலை பாபவிநாசம் அருவிக்கரைக்குச் சென்று சேர்ந்தார். அருவியில் அதிகம் தண்ணீர் வரத்து இல்லை. ஆனால், அந்த இடம் மாமாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதற்குமுன் அவர் அங்கு சென்றதே இல்லை. அங்கே குளித்துக்கொண்டிருந்தவர்கள், சுற்றி அமர்ந்து கதை பேசிக்கொண்டிருந்தவர்கள், மரத்தடி நிழல்களில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தவர்கள் என்று கண்ணில் பட்ட அத்தனை பேரிடமும் வினய் குறித்து அவர் விசாரித்தார். புகைப்படத்தைக் காட்டிக் காட்டி எங்காவது பார்த்தார்களா என்று கேட்டார். யாரோ பாவம் வந்த இடத்தில் பிள்ளையைத் தொலைத்திருக்கிறார் என்று எண்ணி அவர்களும் கனிவோடு பதில் சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். இதுவரை பார்க்கவில்லை; பார்த்தால் அவசியம் காவல் நிலையத்தில் தகவல் சொல்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

அன்று காலை முதல் கேசவன் மாமா எதுவுமே சாப்பிட்டிருக்கவில்லை. நாளெல்லாம் அலைந்து திரிந்ததில் தலை சுற்றி, கிறுகிறுவென்று வந்தது. அருவித் தண்ணீரை நாலு கை அள்ளிக் குடித்துவிட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தார். இருட்டும் வரை சுற்றித் திரிந்துவிட்டு, அதற்குமேல் அலைய முடியாது என்ற நிலை வந்தபோது கல்யாணக் கட்டத்துக்கு வந்து, அந்தக் கட்டடத்தின் வாசலில் ஒரு ஓரமாகத் துண்டை விரித்துப் படுத்துவிட்டார். கால் வலி கொன்றெடுத்தது. நாள் முழுதும் உண்ணாதிருந்தது வேறு கண்ணைத் திறக்கமுடியாமல் செய்திருந்தது. எப்படியாவது வினய்யைக் கண்டுபிடித்துவிடலாம் என்று எண்ணித்தான் அவர் திருமலைக்கு வந்திருந்தார். அது முடியாதோ என்று அப்போது அவருக்குச் சந்தேகம் வந்தது. அது துக்கம் அளித்தது. அழுகை வந்தது. அடக்கிக்கொண்டு அப்படியே படுத்துக்கிடந்தார். பிறகு எப்படியோ உறங்கிப்போய்விட்டார்.

நள்ளிரவு யாரோ தன்னைத் தொட்டு எழுப்புவதுபோலத் தோன்றவும், கேசவன் மாமா திடுக்கிட்டுக் கண் விழித்துப் பார்த்தார். அப்போதுதான் விஜய் அங்கிருப்பது அவருக்குத் தெரியவந்தது.

‘ஐயோ’ என்றுதான் அவருக்கு முதலில் அலறத் தோன்றியிருக்கிறது. ‘நீயாடா? நீயாடா இங்க இருக்க? டேய் பாவி! இவ்ளோ நாளா இங்கயாடா இருக்க?’ என்று அவனைப் பிடித்து உலுக்கியிருக்கிறார்.

‘இல்லே மாமா. இவ்ளோ நாளா நான் இங்கே இல்லை. இப்பத்தான் வரேன்’ என்று அண்ணா சொல்லியிருக்கிறான்.

‘ஏண்டா அப்படி செஞ்சே? எங்கடா போய்த் தொலைஞ்சே?’ என்று கதற ஆரம்பித்தவருக்கு, அதற்குமேல் பேச்சே வரவில்லை. பத்து நிமிடங்கள் இடைவிடாமல் அழுது தீர்த்தார். அவர் அழுது முடிக்கும்வரை அண்ணா ஒன்றும் பேசவில்லை. பிறகு, ‘பசியா இருக்கா? எதாவது சாப்பிடறேளா?’ என்று கேட்டுவிட்டு, தன் தோள் பையில் இருந்து ஒரு சாத்துக்குடி பழத்தை எடுத்து நீட்டினான்.

மாமாவால் அதை நம்பவே முடியவில்லை. மிக நிச்சயமாக அவர் அண்ணாவைச் சந்திப்போம் என்று நினைத்திருக்கவில்லை. திருப்பதியில் உணவுப் பிரச்னை இராது என்று அவன் என்றோ சொன்னதை நினைவில் வைத்திருந்து வினய் குறிப்பிட்டதுதான் அவரை அங்கே செலுத்திச் சென்றது. என்ன காரணத்தாலோ அண்ணா வெறும் உணவை உத்தேசித்துத் திருப்பதிக்குப் போக நினைத்திருக்கமாட்டான் என்றே அவர் கருதினார். ஆனால் ஓடிப்போக வேறு என்ன காரணம் இருந்தாலும், உடனடி உணவுப் பிரச்னை வராதிருக்க வினய் அந்த இடத்தைத்தான் தேர்ந்தெடுத்திருப்பான் என்றும் அவர் நினைத்தார்.

‘அவனுக்கு வேறென்ன தெரியும்? பிரபந்தம் சொல்லுவான். கோஷ்டில போவான். கோயில் கைங்கர்யங்கள் தெரிஞ்சிருக்கும். அதுல பிழைக்க நினைச்சா திருப்பதி பொருத்தம்தானே?’ என்று அவர் சொன்னார்.

அன்றிரவு முழுதும் அண்ணா, கேசவன் மாமாவுடன் பேசிக்கொண்டிருந்தான். ‘தேடாதிங்கோ மாமா. என்னைத் திரும்ப ஆத்துக்குக் கூட்டிண்டு போகணும்னு தயவுசெஞ்சி நினைக்காதிங்கோ. நான் அங்க வரமாட்டேன்.’

‘ஏண்டா?’ என்று மாமா கேட்டார்.

‘உங்களுக்கு சொன்னா புரியாது. விட்டுடுங்கோ.’

‘இப்ப நீ எங்க இருக்கே? என்ன பண்ணிண்டிருக்கே?’

‘சொன்னேனே, உங்களுக்குப் புரியாது.’

‘கொன்னுடுவேன் படவா. பெத்த தாய் தகப்பனைத் தவிக்க விடுறதெல்லாம் மகா பாவம்டா’ என்று கேசவன் மாமா சொன்னார். அண்ணா அமைதியாக இருந்தான். ‘அப்படி அவாள தவிக்க விட்டுட்டு எங்க போய் என்ன சாதிப்பே நீ? ஒரு புல்லைக்கூட உன்னால பிடுங்க முடியாது பாத்துக்கோ. நான் சும்மா சொல்லலே விஜய். என் வயித்தெரிச்சல் இதைச் சொல்ல வெக்கறது. வேண்டாம். என்னோட ஆத்துக்கு வந்துடு.’

‘மன்னிச்சுடுங்கோ மாமா. அது முடியாது’ என்று அண்ணா சொன்னான்.

மாமாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவனுக்கு வீட்டில் என்ன குறை இருந்தது? ஒன்றுமே இல்லை. விட்டுச்செல்லத் தோன்றும் அளவுக்கு அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை. சொல்லிவைத்த மாதிரி, இன்றைக்கு வினய் காணாமல் போயிருக்கிறான். இப்படி ஆளாளுக்கு ஒழிந்துபோகத்தானா அக்கா உங்களையெல்லாம் பெற்றுப்போட்டாள்?

அவரது கண்ணீரும் கதறலும் அண்ணாவுக்குப் புரியாமல் இல்லை. ஆனால் அவன் தன் முடிவில் உறுதியாக இருந்தான்.

 
 

‘உங்கள ஒண்ணு கேக்கறேன். நீங்க இங்க படுத்து தூங்கிண்டிருந்தேள். நானாத்தான் வந்து தொட்டு எழுப்பினேன். ஏன் செய்யணும்?’

‘அதைத்தாண்டா கேக்கறேன் ராஸ்கல். வரமாட்டேன்னு இப்படி அழிச்சாட்டியம் பண்றதுக்கு, என் முகத்துல முழிக்காமலே இருந்திருக்கலாமே?’

‘செஞ்சிருக்கலாம் மாமா. ஆனா ஒண்ணு சொல்லணும்னு நினைச்சேன். அதனாலதான் உங்ககிட்ட வந்தேன்.’

‘என்னது?’

'நான் ஆத்துக்குத் திரும்பி வருவேன் மாமா. கண்டிப்பா அது ஒரு நாள் நடக்கும். ஆயிரமானாலும், அம்மாக்கு கொள்ளிபோட நாந்தானே வந்தாகணும்?’ என்று அண்ணா சொன்னான்.

அதற்குமேல் மாமாவுக்குப் பேச்சே வரவில்லை. சீ என்று காறித் துப்பிவிட்டு, எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டார்.

*

நடந்த அனைத்தையும் மாமா விவரித்து முடித்தபோது, அப்பாவும் அம்மாவும் மௌனமாக அழுதுகொண்டிருந்தார்கள். வினோத் பயத்தில் நடுங்கி ஒடுங்கிப்போய் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தான். ஐந்து பேர் இருந்த வீட்டில் ஒரு சொல்லும் உலவாதிருந்தது என்னவோ போலிருந்தது.

‘அவனுக்கு என்னமோ ஆயிடுத்துக்கா. அவன் சரியா இல்லே. பேச்சே சரியா இல்லே. அவன் பாத்த பார்வை சரியா இல்லே. நின்ன தோரணை சரியா இல்லே. விஜய் வேற யாரோ மாதிரி ஆயிட்டான்க்கா’ என்று மாமா சொன்னார்.

‘அவன் ஆயிரம் சொல்லட்டும்டா. நீ ஏன் அவனை விட்டுட்டு வந்தே? பிடிச்சி இழுத்துண்டு வந்திருக்க வந்திருக்க வேண்டியதுதானே?’ என்று அப்பா கேட்டார்.

மாமா வெகுநேரம் ஏதோ யோசித்துக்கொண்டே இருந்தார். என்ன நினைத்தாரோ. சட்டென்று சுவரில் முட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தார்.

‘விடு கேசவா. நீ என்ன பண்ணுவே பாவம்’ என்று அம்மா சொன்னாள்.

‘இல்லேக்கா. நாலு பேர உதவிக்குக் கூப்ட்டுண்டாவது அவன இழுத்துண்டு வந்துடணும்னுதான் நினைச்சேன். ஆனா அவன் சொன்ன அந்த வார்த்தைக்குள்ள என்னமோ இருந்திருக்குக்கா. கனம்மா இரும்புக் கை ஒண்ண ஒளிச்சிவெச்சி ப்ரயோகம் பண்ண மாதிரி சொன்னான்க்கா. நானா கெளம்பல தெரியுமோ? அது என்னைப் பிடிச்சித் தள்ளிண்டே போயிடுத்துக்கா. கீழத் திருப்பதி வந்தப்பறம்தான், நான் என்ன பண்ணேன்றதே நெனப்புக்கு வந்தது. ஐயோ விட்டுட்டமேன்னு திரும்ப மலைக்கு ஓடினேன். ஆனா அவனைப் பாக்க முடியலேக்கா.’ சொல்லிவிட்டு, மாமா கேவிக் கேவி அழத் தொடங்கினார்.

என்னால் அதற்குமேல் அமைதியாக இருக்க முடியாது என்று தோன்றியது. என்ன ஆனாலும் நானறிந்ததைச் சொல்லிவிட முடிவு செய்தேன். அமைதியாக அறைக்குள் சென்று ஒரு ஸ்டூலை இழுத்துப்போட்டு, பரண் மீது ஏறினேன். அப்பாவின் டிரங்குப் பெட்டியை நகர்த்திவிட்டு, அண்ணா அதன் பின்னால் மறைத்து வைத்திருந்த நாடிச் சுவடியைத் துழாவி எடுத்தேன்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

29. கண்ணீரின் கனம்

 

 

நான் பதறக் கூடாது. நான் உணர்ச்சி வயப்படலாகாது. என்ன ஆனாலும் அம்மாவை நிலைகுலையச் செய்யும்படியாக எதையும் செய்வதில்லை என்று பிரக்ஞை பூர்வமாக முடிவெடுத்தவன் நான். எனக்கு நான் வகுத்த விதியை நான் மீறுவதற்கில்லை. ஆனால் என்னால் அந்த அவலச் சுவை ததும்பும் கணங்களைக் கடக்க முடியவில்லை. வீட்டுக் கூடத்தில் எரிந்துகொண்டிருந்த அறுபது வாட்ஸ் விளக்கிலிருந்து ஒளியின் வடிவில் கண்ணீரே ஒழுகிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. சுவரெங்கும் கண்ணீர். தரையெங்கும் கண்ணீர். அப்பா, அம்மா, கேசவன் மாமா, வினோத் நான்கு பேருமே மாற்றி மாற்றி அழுதுகொண்டிருந்தார்கள். தாழிட்ட வாசல் கதவு தாண்டி இந்தத் துக்கமும் கண்ணீரும் வெளியே போக வழியில்லை. இது இங்கேயேதான் கிடக்கும். மேலும் மேலும் பெருகிப் பெருகி ஒரு பொருளாக உருத்திரண்டு கூடத்தை அடைக்கும். இடம் போதாமல் அறைகளுக்குப் பரவும். அடுக்களை முழுதும் வியாபிக்கும். காரை பெயர்ந்த வீட்டின் சுவர்கள் அனைத்தும் கண்ணீரின் கனத்த மோதல் பொறுக்காமல் மேலும் பெயர்ந்து விழும். சிதிலங்களில் அண்ணாவின் நினைவு புதைந்து மண்ணோடு சேர்ந்து மட்கும்.

அப்படி மட்கிப் போய்விட்டால்கூடப் பரவாயில்லை. அம்மா அதை மட்க விடுவாளா என்று சந்தேகமாக இருந்தது. கணத்துக்குக் கணம் அப்பா தன் ஆற்றாமைச் சொற்களால் இட்டு நிரப்பிய துக்கத்தின் இடைவெளிகளை அம்மா தன் மௌனத்தினால் மெழுகிவிட்டுக் கொண்டிருந்தாள்.

அந்தச் சுவடியை நான் கையில் வைத்திருந்தேன். கணப் பொழுது முடிவுதான். அதைக் கொண்டுபோய் நடுக்கூடத்தில் விட்டெறிந்துவிட்டால் போதுமானது. என்னதுடா என்று மாமா குனிந்து எடுத்துப் பார்ப்பார். தமிழில் எழுதப்பட்ட சுவடிதான் அது. ஆனாலும் படிப்பது அத்தனை சுலபமல்ல. அதன் தொன்மமும், பழுப்பேறி பல எழுத்துகள் காணாமலாகியிருந்ததும் மட்டுமல்ல காரணம். அதிலிருந்த தமிழின் முகம் காலத்தின் பேய்ப் பாய்ச்சலில் மண்மூடிக் கிடந்தது. அது வேறு தமிழ். புராதனமானது. பூடகத்தன்மை கொண்டது. பலமுறை அதை எடுத்துப் படித்த அண்ணாவே தனக்கு அது முற்றிலும் புரிந்ததில்லை என்றுதான் சொல்லியிருக்கிறான். ஆனால் அதிலுள்ள வரிகளின் சாரத்தை அவன் அறிவான். அது எங்கள் குடும்பத்தைப் பற்றியது. ஒரு பெரும் சரித்திரத்தின் ஒரு வரி. ஆனால் முழுதையும் தாங்கி நிற்பது. திருப்போரூர் சாமிக்கு அது எங்கிருந்து கிடைத்தது என்று தெரியவில்லை. அதை அவர் எப்படிச் சரியாக அண்ணாவைப் பிடித்து ஒப்படைத்தார் என்பதும் தெரியவில்லை. எல்லாமே அவன் சொன்னதுதான். அவன் என்ன சொன்னாலும் அது உண்மையாக மட்டுமே இருக்கும் என்று நான் ஏன் நினைக்கிறேன்? எனக்கு அது புரியவில்லை. என்னையறியாமல் நான் அவனைக் கண்டு பிரமித்திருக்கிறேன் என்று தோன்றுகிறது. அவன் சாதாரணமானவனில்லை என்று அடிமனத்தில் எப்போதோ ஒரு வித்து விழுந்திருக்கிறது. காரணம் புரியாத எண்ணம்.

என் கவலையெல்லாம், என்னைப்போல என் வீடு அவனை அப்படி நினைக்குமா, நம்புமா என்பதுதான். மாமா அவனை அயோக்கியன் என்று சொன்னார். ‘எவன் கேட்டான் இவன் கொள்ளியை? இவன் கொள்ளி வெக்கலேன்னா உன் கட்டை வேகாதாக்கா? விட்டுட்டு ஓடின நாய்க்காகவா உன் கொள்ளி காத்துண்டிருக்கும்? விடமாட்டேன்க்கா. இவா எவனுமே இல்லேன்னாலும் நான் இருக்கேன் ஒனக்கு. தம்பியா நீ நினைச்சுக்கோ. புள்ளையாவே இருந்துட்டுப் போறேன்’ என்று சொன்னார்.

ஆற்றாமையும் ஆதங்கமும் நிறைந்து ததும்பிக்கொண்டிருந்த தருணத்தில், அந்தச் சுவடியைக் கொண்டுபோய்க் கொடுப்பது அபத்தமாகிவிடுமோ என்று ஒரு கணம் நினைத்தேன். ஆனால் ஏதோ ஒரு வகையில் அம்மாவுக்கு அதிலொரு தெளிவு கிடைக்கலாம் என்று தோன்றியது. என்னைத்தான் துருவித் துருவிக் கேட்பார்கள். அனைத்துக்கும் பதில் சொல்லியாக வேண்டியிருக்கும். அது பிரச்னையல்ல. ஆனால் இத்தனை நாளாக ஏன் மறைத்தாய் என்றொரு கேள்வி வரும். அண்ணா ஓடிப்போன கணத்திலேயே தெரிந்ததைச் சொல்லியிருந்திருக்கலாம். அப்போது செய்யவில்லை. துணிவில்லை என்பதுதான் காரணம். ஒரு அச்சம். ஒரு தப்பித்தல் உணர்வு. அனைத்தையும் தாண்டி, அண்ணாவின் ஓட்டம் தடைப்பட்டுவிடக் கூடாது என்று அடிமனத்தில் நினைத்திருக்கிறேனா என்ன? அவன் போனது சந்தேகமில்லாமல் இழப்புத்தான். எத்தனையோ இரவுகள் அவனை எண்ணிக்கொண்டு உள்ளுக்குள் கலங்கி நின்றிருக்கிறேன். அதன் பெயர் பாசம்தானா என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை. வீட்டில் அத்தனை பேரையும் விட்டுவிட்டு அவன் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள என்னைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் அறிய முடியாத பூடகத் தன்மை கொடுத்த உறவின் நெருக்கமாக இருக்கும்.

உறவு நிலைகளின் புதிர்த்தன்மை பேரெழில் கொண்டது. அன்பென்றும் பாசமென்றும் ஒற்றைச் சொற்களில் அனைத்தையும் முடிந்து வைத்துவிட நினைக்கிறது மனம். உண்மையில், சொற்களற்ற பெருவெளியில் காற்றில் அலைக்கழியும் ஒரு சிறு சிறகு அல்லது சருகு நிகர்த்த ஸ்தூலமாகத்தான் நான் அதை உணர்ந்தேன். எதையும் நகர்த்தி வைத்துவிட முடியும் என்று தோன்றியது. தேவை என்ன, அவசியம் என்ன என்பதுதான் விஷயம். அவன் அம்மாவையும் நகர்த்தி வைத்ததில்தான் நான் திகைத்துப் போனேன். எத்தனை பெரிய ஞானம் சித்தித்தாலும் எனக்கு அது சாத்தியமில்லை என்றே கருதினேன். சாத்தியமே ஆனாலும் செய்ய விரும்பமாட்டேன் என்று தோன்றியது. அந்த வயதில் என்னால் இதை யோசிக்க முடிந்ததேகூட எனக்கு வியப்பாகத்தான் இருந்தது.

நான் ஒரு முடிவுக்கு வந்தேன். அந்த நாடிச் சுவடியை நான் அனைவருக்கும் பொதுவாகக் கொண்டுபோய் வைக்கவேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் மிக நிச்சயமாக அம்மாவுக்கு அது தேவை. தொடர்ந்து தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் உள்ளுக்குள் அவள் சிதிலமாகிக்கொண்டே இருப்பதாகத் தோன்றியது. என்றைக்காவது ஒரு நாள் கோயில் வாசலில் குவித்திருக்கும் சரளைக் கற்களைப்போல், இதுதான் அம்மா என்று ஒரு குவியலைக் காட்டி யாராவது சொல்லிவிடுவார்களோ என்று அஞ்சினேன். அதனால் அந்தச் சுவடியை அவள் மட்டும் அறியும்படியாக அடுக்களைக்கு எடுத்துச் சென்று துவரம் பருப்பு டப்பாவுக்குள் போட்டு மூடினேன். ‘இது எப்படி இங்க வந்தது? யார் கொண்டு வந்து வெச்சா?’ என்று கேட்டால் ஒன்றும் சொல்லாதிருந்துவிடுவது. அடித்து உதைத்து மிரட்டினாலும் எனக்குப் பிரச்னையில்லை. சொல்ல வேண்டாம் என்றால் வேண்டாம்தான். நான் சொல்லி எதையும் யாரும் நம்பப் போவதில்லை என்று நினைத்தேன். அதைக் காட்டிலும் அம்மாவின் அப்போதைய துயரத்துக்கு நான் காரணமாக இருக்க விரும்பவில்லை.

மறுநாள் காலை அம்மா பருப்பு டப்பாவைத் திறந்தபோது அந்தச் சுவடியை எடுத்தாள். நான் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். ஆனால் ஒன்றும் அறியாதவன்போல நகர்ந்து போய்விட்டேன். அம்மா அதைப் படிக்க முயற்சி செய்தாள். ஆனால் முடியவில்லை. அப்பாவிடம் வந்து, ‘இது என்னதுன்னு பாருங்கோ’ என்று சொன்னாள்.

அப்பா அதை வாங்கிப் பார்த்தார். அவருக்கும் ஒன்றும் புரியவில்லை. கேசவன் மாமாவும் வாங்கிப் படித்துப் பார்த்தார். ‘எங்க இருந்தது இது?’ என்று கேட்டார்.

‘துவரம் பருப்பு டப்பாக்குள்ள இருந்தது கேசவா. எப்படி வந்ததுன்னு தெரியலே.’

‘நீயாடா?’ என்று மாமா கேட்டார்.

‘எனக்கென்ன தெரியும்?’ என்று நான் பதில் சொன்னேன். தனக்கும் ஒன்றும் தெரியாது என்று வினோத் சொன்னான். அதுதான் எனக்கு வியப்பாக இருந்தது. அண்ணாவைப் பற்றி நான் அறிந்த அனைத்தையும் அவனிடம் சொல்லியிருந்தேன். இப்படி ஒரு சந்தர்ப்பம் வரும்போது அவன் கண்டிப்பாக அதை வீட்டில் சொல்வதோடு, நான் சொன்னதையும் தவறாமல் குறிப்பிடுவான் என்றுதான் நினைத்தேன். நான் சற்றும் எதிர்பாராவிதமாக அவன் தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லாததுபோலக் காட்டிக்கொண்டது சற்றுக் குழப்பமாக இருந்தது.

‘நானில்லே, நீயில்லே, யாருமில்லேன்னா யாரு கொண்டுவந்து பருப்பு டப்பால போட்டது?’ என்று அப்பா கேட்டார்.

 

‘டப்பால போட்டது இருக்கட்டும் அத்திம்பேர். இவ்ளோ நாளா இது எங்க இருந்தது? இந்தாத்துல சுவடில்லாம் கிடையாதே’ என்று மாமா சொன்னார். வெகுநேரம் அந்தச் சுவடியைப் படிக்க அவர்கள் முயற்சி செய்தார்கள். புராதனமான ஒற்றைப் பனை ஓலை. ஒரு எழுத்தும் புரியாமல் அதில் கிறுக்கியிருந்தது. ஆணியால் கீறி, மஞ்சள் பொடி தூவிய எழுத்துகள். சுவடியின் பழுப்பில் மஞ்சள் மங்கிக் கிட்டத்தட்டக் காணாமலாகிக்கொண்டிருந்தது.

‘எண்ணெய் தடவி வெய்யில்ல வெச்சா படிக்க முடியும்னு நினைக்கறேன்’ என்று மாமா சொன்னார்.

அப்பா அந்தச் சுவடியின் மீது விரலில் தொட்டு தேங்காய் எண்ணெய் தடவினார். அம்மா அதை எடுத்துச் சென்று வெயில் படும்படி வைத்துவிட்டு வந்தாள். வினோத்தைக் கூப்பிட்டு, ‘உண்மைய சொல்லு. இது ஏது உனக்கு? எங்கேருந்து வந்தது?’ என்று கேட்டாள்.

‘சத்தியமா எனக்குத் தெரியாதும்மா. நான் வெக்கலே. இந்த மாதிரி ஓலையை இப்பத்தான் பாக்கறேன்’ என்று அவன் சொன்னான்.

‘விமல்..’ என்று அம்மா என்னை அழைத்தாள். வாழ்வில் முதலும் முடிவுமான ஒரு பெரும் பொய்யைச் சொல்லிவிட முடிவு செய்துகொண்டு நான் அம்மாவின் அருகே சென்றேன். ஆனால் அம்மா என்ன நினைத்தாளோ. என்னிடம் அவள் வினோத்தைக் கேட்டதுபோலக் கேட்கவில்லை. மாறாக, ‘நேத்து கார்த்தால குழம்புக்குப் பருப்பு எடுத்தப்போ அது அந்த டப்பால இல்லை. இப்ப இருக்குன்னா எப்படி?’ என்று கேட்டாள்.

‘தெரியலம்மா’ என்று சொல்லிவிட்டேன்.

கீழைத்தெருவில் ஒரு சக்தி உபாசகர் இருந்தார். புதுப்பாக்கம் போக்யோ டானரீஸில் வேலை பார்த்து ரிடையர் ஆகி, அதன்பின் சக்தி உபாசகரானவர். அப்பா அந்தச் சுவடியை அவரிடம் எடுத்துச் சென்று விவரம் சொல்லியிருக்கிறார். ‘இந்த மாதிரி சுவடியெல்லாம் எங்காத்துல கிடையாது. திடீர்னு இன்னிக்கு இது கிடைச்சிது. ஒண்ணும் புரியலே.’

அவர் அந்தச் சுவடியை வாங்கி, உயர்த்தி வைத்துப் படித்துப் பார்த்தார்.

‘பசங்க ரெண்டு பேரும் தெரியலேன்னு சொல்றா. நாங்களும் இப்படி ஒண்ணைப் பாத்ததில்லே. திடீர்னு இது அடுக்களைக்குள்ள எப்படி வந்திருக்கும்?’

அப்பாவுக்கு அவர் என்ன பதில் சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை. அப்பா அதை வீட்டில் பொதுவில் பேசவில்லை. அவர் உபாசகரைப் பார்க்கப்போனது எங்களுக்குத் தெரியும். போய் வந்தபோது, ‘என்ன சொன்னார்?’ என்று அம்மா கேட்டபோது நான் அருகில்தான் இருந்தேன். ஆனால் அப்பா அதற்கு பதில் சொல்லவில்லை. அமைதியாக உள்ளே போய்விட்டார். அதன்பின் அம்மாவிடம் அவர் எப்போது என்ன சொன்னார் என்று தெரியவில்லை. அந்தச் சுவடியை அதன்பின் அவர் எங்கே எடுத்து வைத்தார் என்றும் எனக்குத் தெரியவில்லை.

அது எனக்குத் தீராத வியப்பு. அண்ணாவைக் குறித்து, எங்கள் குடும்பத்தைக் குறித்து, யாருமறியாத சில ரகசியங்களைக் குறித்து நான்கே வரிகளில் அந்தச் சுவடி சொல்லுவதாக அண்ணா என்னிடம் சொல்லியிருந்தான். திடீரென்று அப்படியொரு சுவடி கிடைக்குமானால், அதில் என்ன எழுதியிருக்கிறது என்று அறிய விரும்பமாட்டார்களா. யாரையாவது பிடித்து எப்படியாவது அதைப் படித்துவிடத் தோன்றாதா? அம்மா ஏன் பேசாதிருக்கிறாள்? அப்பா ஏன் அமைதியாகிவிட்டார்? கேசவன் மாமாகூட வினய் காணாமல் போனது தொடர்பாக இங்கே அங்கே அலைந்து திரிந்து யார் யாரையோ பார்த்துவிட்டு வந்தாரே தவிர, அந்தச் சுவடியை மறந்தே விட்டாற்போலத்தான் இருந்தது.

எனக்குத் தாங்கவில்லை. மறுநாள் பள்ளிக்கூடம் போகும்போது வினோத்திடம் கேட்டேன். ‘நீ ஏண்டா என்னை மாட்டிவிடலே? நாந்தான் உன்கிட்ட எல்லாத்தையும் சொன்னேனே?’

‘அப்பா உன்னைத் திட்டுவா. மாமா அடிப்பா. நீயும் மனசு உடைஞ்சு போய் ஆத்தைவிட்டுப் போயிட்டேன்னா அம்மா செத்தே போயிடுவாளேடா!’ என்று சொன்னான்.

அப்போது எனக்கு உறுதியாகத் தோன்றியது. நாங்கள் இரண்டு பேரும் என்றென்றைக்கும் அம்மாவுக்குப் பிள்ளைகளாக வீட்டில்தான் இருப்போம்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

30. சிவன் கோயில் பிரசாதம்

 

 

வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போகலாம் என்று கேசவன் மாமா சொன்னார். ஓலைச்சுவடி படிக்கத் தெரிந்தவர்கள் அங்கேதான் இருக்கிறார்கள். ஒருவர் சொல்வதை இன்னும் நான்கு பேரிடம் கேட்டு சரி பார்த்துக்கொள்ளவும் அதுதான் வசதி.

‘அதெல்லாம் அவசியமா?’ என்று அப்பா கேட்டார்.

‘இல்லியா பின்னே? தானா வந்து ஒரு சுவடி நம்மாத்துல உக்காந்திருக்குன்னா, அதுல என்னமோ இருக்கு அத்திம்பேர். என்னன்னு தெரிஞ்சிண்டே தீரணும்’ என்று தீர்மானமாகச் சொன்னார்.

‘தானா ஒண்ணு எப்படி வரும்? என்னால அதை நம்ப முடியலே’ என்று அம்மா சொன்னாள்.

‘எதைத்தான் நம்ப முடியறது இந்தாத்துல? நன்னாருந்த ரெண்டு பேர் சொல்லிக்காம ஓடிப்போனதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு?’

‘கிடைச்சவனையும் கோட்டை விட்டுட்டு வந்தியே, அதையும் சேர்த்துச் சொல்லு’ என்றார் அப்பா. மாமாவுக்கு வாயடைத்துவிட்டது. திரும்பத் திரும்ப அவர் பலமுறை சொல்லிவிட்டார். திருப்பதியில் எப்படி அவர் விஜய்யை விட்டுவிட்டு வந்தார் என்று அவருக்கே புரியவில்லை. ‘வேணும்னு செய்வனாக்கா? என்னமோ ஒரு சக்தி என்னை இழுத்துண்டுபோன மாதிரி ஆயிடுத்துக்கா. திரும்ப சுயநினைவு வந்து மலைக்கு ஓடினா அவனைக் காணலே.’

‘விடு கேசவா. உன்னைப் பத்தி எங்களுக்குத் தெரியாதா? இதெல்லாம் கர்மா. நாம படணும்னு இருக்கு. பட்டுண்டிருக்கோம்’ என்று அம்மா அவரைச் சமாதானப்படுத்துவாள். என்னால் அவளைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவளுக்குத் துக்கம் இருந்தது. அழுகை வந்தது. அங்கலாய்ப்பு இருந்தது. பத்மா மாமியிடம் தினத்துக்கு நூறு முறை போய்ப் போய்ப் புலம்பிக்கொண்டிருந்தாள். ‘என்ன குறை வெச்சேன் இதுகளுக்கு? கண்ணாட்டம்தானே பாத்துண்டிருந்தேன்? கடிஞ்சி ஒரு வார்த்தகூடப் பேசினதில்லே. ஆத்துல குரல் ஒசத்தி ஒரு சண்டை போட்டதில்லே. அசம்பாவிதமா ஒண்ணுமே நடக்கலே. ஆனாலும் போயிடுத்துகளே.’

‘வருத்தப்படாதடி. எனக்கென்ன தோணறது தெரியுமா? ரெண்டும் பெரும் பணக்காராளா ஆகி கோட்டும் சூட்டுமா திரும்பி வரும் பாரு. இந்த டொக்கு கிராமத்துலே மாட்டிண்டு என்ன பண்ண முடியும்? எங்கயாவது பம்பாய் கல்கத்தான்னு போய் சம்பாதிச்சிண்டு வரும் பாரு’ என்று மாமி சொல்லுவாள்.

‘யாரு கேட்டா மாமி இதுகள் சம்பாத்தியத்தை? அவர் உடம்புல தெம்பு இருக்கறவரைக்கும் உழைக்கப்போறார். நன்னா படிக்க வெச்சி ஒரு உத்தியோகத்த தேடிக் குடுக்கத்தான் போறார். பெத்த கடமைக்கு அதை நாங்க செய்ய மாட்டோமா? அந்த நம்பிக்கை இல்லாம போயிடுமா?’

‘பைத்தியமே. உத்தியோகம், மாச சம்பளமெல்லாம் சாத்துஞ்சாதத்துக்குப் போதும். அதைத்தானே தினம் பொங்கிப் போட்டுண்டிருந்தே? உம்பிள்ளைகள் ராயலா வாழ நினைச்சிருக்கா. அதுக்கு உத்தியோகம் பாக்கறவனா இருந்தா போதாது. பத்து பேருக்கு உத்தியோகம் குடுக்கறவனா மாறணும். அப்படி மாறி வருவான்கள் பாரு.’

‘தெரியலியே மாமி. அம்பானிகூட அப்படித்தான் கெளம்பி வெளிநாட்டுக்கு ஓடினார், திரும்பி வந்து ரிலையன்ஸ் ஆரம்பிச்சார்னு எங்காத்துக்காரர் சொன்னார். ஆனா அவர்கூட அவாத்துல சொல்லிட்டுத்தான் போனாராமே?’

‘கிழிச்சார். உம்பிள்ளை வெளிநாட்டுக்குப் போறேன்னு சொன்னா நீ போக விட்டுடுவியாக்கும். நாஞ்சொல்றத நம்புடி. விஜய் எங்கயோ போய் ஒரு வேல தேடிண்டுதான் அடுத்தவன கூப்ட்டிருக்கான். உன் குடித்தன கஷ்டத்த மொத்தமா தீக்கற அளவுக்கு சம்பாதிச்சிண்டு அம்பாசிடர்ல வந்து இறங்கப் போறான் பாரு.’

‘கேக்க நன்னாருக்கு மாமி. ஆனா ஒண்ர வருஷம் காஞ்சீபுரத்துல பாடசாலைல படிச்சிட்டு இவன் எங்க போய் என்னத்த பண்ணுவான்? ஸ்கூல் படிப்பும் அரைகுறை. இந்தப் படிப்பும் அரைகுறை.’

‘படிச்சவன் என்னிக்குப் பணக்காரனாயிருக்கான்? உம்பிள்ளேள் நாலுமே புத்தி சூரியன்கள். எனக்கென்ன தெரியாதுன்னு நெனச்சியா? நாலு பேர் ஜாதகத்தையும் நான் பாத்திருக்கேன்’ என்று பத்மா மாமி சொன்னாள்.

அம்மாவுக்கு அது உண்மையிலேயே பெரிய ஆறுதல்தான். பத்மா மாமிக்குக் கொஞ்சம் ஜாதகம் பார்க்கத் தெரியும். திருவிடந்தையில் அநேகமாக அத்தனை பேர் ஜாதகத்துக்கும் அவளிடம் ஒரு பிரதி இருக்கும். திருமணப் பொருத்தம் பார்ப்பது, பால் காய்ச்ச, கிரகப் பிரவேசம் செய்ய நாள் பார்த்துக் கொடுப்பது என்று முடிந்ததைச் செய்துகொண்டிருந்தாள். அண்ணாவின் ஜாதகத்தை முதல் முதலில் பார்த்தபோதே, ‘இவன் பெரிய தொழிலதிபரா வருவான்‘ என்று சொன்னாளாம். வினய் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, ‘எழுதி வெச்சிக்கோ. வினய் ஒரு ஸ்கூல் வாத்தியாராத்தான் போவான்’ என்று சொல்லியிருக்கிறாள். ஊரிலேயே நூறு வயது தாண்டி வாழப் போகிற முதல் நபர் வினோத் என்றும், நான் ஒரு சினிமாக் கலைஞனாவேன் என்றும் சொல்லியிருக்கிறாள்.

‘அம்பானி ஓடிப்போனதாலதான் பிசினஸ் பண்ணி பெரிய ஆளா ஆனார். நாந்தான் சொன்னேனே, விஜய் ஒரு தொழிலதிபராத்தான் ஆவான்னு? அதான் அவனும் ஓடிப்போனான்’ என்று பத்மா மாமி சொன்னாள்.

‘ஆனா கொள்ளி போட வருவேன்னு சொல்லிட்டானாம் மாமி’ அம்மாவால் அதைத்தான் தாங்கவே முடியவில்லை.

‘பைத்தியம். அவன் அந்த அர்த்தத்துல சொல்லியிருக்கமாட்டாண்டி. கடேசி காலம் வரைக்கும் உன்னோட கூடத்தான் இருப்பேன்னு சொல்லியிருக்கான். உன் தம்பி ஒரு தத்தி. ஒரு மண்ணும் சரியா புரியாது அவனுக்கு.’

அர்த்தமற்ற ஆறுதல் என்று எனக்கே புரிகிறபோது அம்மாவுக்கு அது புரியாமலா இருக்கும்? ஆனாலும் வேண்டித்தான் இருந்தது. பத்மா மாமியிடம் புலம்புவது தவிர கோயிலுக்குப் போய் தாயார் சன்னிதியில் உட்கார்ந்து சிறிது நேரம் புலம்பிவிட்டு வருவாள். மாமாவிடம் புலம்புவாள். அப்பாவிடம் புலம்புவாள். என்னையும் வினோத்தையும் அழைத்து உட்கார வைத்துப் புலம்புவாள். துயரத்தின் மூழ்கடிப்பிலிருந்து இன்னும் மீள முடியாமல் அவதிப்படுபவளைப் போலத்தான் காட்டிக்கொண்டாள். ஆனாலும் அம்மா ஒரு நிதானத்தின் வளையத்துக்குள்ளேயே இருப்பதாக எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது. அவளது அழுகைக்கும் புலம்பல்களுக்கும் அப்பால் எங்கோ ஓரிடத்தில் அவளது வேறொரு மனம் நிலைகொண்டிருப்பதாக நினைத்தேன். அந்த மனத்துக்குத் துயரம் இல்லை. கண்ணீர் இல்லை. கதறல்கள் இல்லை.

முடியுமா? வாய்ப்பில்லை என்றுதான் தோன்றியது. ஆனாலும் புலம்பாத நேரங்களில் அம்மாவின் மௌனம் எனக்கு அதைத்தான் திரும்பத் திரும்பச் சொன்னது. ஒரு கண் தெரிவிக்காததையா சொற்கள் சொல்லிவிடும்? அவள் பார்வையின் தெளிவும் தீட்சண்யமும் எனக்குச் சமயத்தில் அச்சமூட்டும் அளவுக்கு விரிவு கொள்ளும். அனைத்தையும் ஏற்கெனவே தரிசித்து ஜீரணித்துவிட்ட பாவனை. வாழவேண்டியிருப்பதால் சொற்களோடு புழங்க வேண்டியிருப்பதாக நினைக்கிறாளா?

அன்றைக்கு நாங்கள் வைத்தீஸ்வரன் கோயிலுக்குக் கிளம்பினோம். முதலில் என்னையும் வினோத்தையும் பத்மா மாமி வீட்டில் விட்டுவிட்டுப் போவதாகத்தான் இருந்தது. கிளம்பும் நேரத்தில் அம்மா நாங்களும் வரட்டும் என்று சொல்லிவிட்டாள். ‘எதுக்கு?’ என்று அப்பா கேட்டதற்கு, ‘பரவால்ல அத்திம்பேர். இனிமே தனியா விட்டுட்டு எங்கயும் போகவேண்டாம்’ என்று கேசவன் மாமா பதில் சொன்னார்.

அதிகாலை கேளம்பாக்கத்தில் இருந்து பஸ் பிடித்து செங்கல்பட்டு போய் இறங்கி, அங்கிருந்து வேறொரு பஸ் ஏறி வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போய்ச் சேர்ந்தபோது, மதியம் பன்னிரண்டு மணியாகிவிட்டது. ‘பசிக்கறது’ என்று வினோத் சொன்னான். கோயிலுக்குப் போய்விட்டு வந்து சாப்பிடலாம் என்று அம்மா அவனைச் சமாதானப்படுத்தினாள். ‘இல்லேன்னா நடை சாத்திடுவா.’

அவசர அவசரமாகக் கோயிலுக்குப் போய்விட்டு வெளியே வந்தோம். ‘பிரசாதம் எதாவது வேணுமா?’ என்று அப்பா தயக்கத்துடன் கேட்டார். அம்மா எங்கள் இருவரையும் பார்த்தாள். நாங்கள் பதில் சொல்லாமல் அமைதியாகவே இருந்ததால், ‘சரி போகலாம்’ என்று கிளம்பிவிட்டார். அப்பாவுக்கு சிவன் கோயில்களுக்குப் போவதில் பிரச்னை இல்லை. ஆனால் அங்கே பிரசாதம் வாங்கிச் சாப்பிட யோசிப்பார். யாராவது கொண்டுவந்து கொடுத்தாலும் ஒரு சிட்டிகை கிள்ளியெடுத்து வாயில் போட்டுக்கொண்டு போதும் என்று சொல்லிவிடுவார். சிறு வயதில் அவரது தாத்தா சொல்லிக்கொடுத்த வழக்கம் என்று சொல்லியிருக்கிறார். சிவன் கோயில்களில் பிரசாதம் வாங்கித் தின்னாதே.

 

‘ஏம்ப்பா?’ என்று நான் ஒரு சமயம் கேட்டிருக்கிறேன்.

‘என்னமோ காரணம் இருக்கும். இல்லாம இருக்காது’ என்று மட்டும் பதில் சொன்னார். எனக்கு அந்த பதில் போதுமானதாக இல்லை. அம்மாவிடம் மீண்டும் கேட்டேன். ‘சிவன் கோயில் பிரசாதமெல்லாம் பெருமாள் கோயில் பிரசாதத்தவிட டேஸ்டா இருக்கும். நம்மளவாளுக்கு அந்த டேஸ்ட கொண்டுவர முடியறதில்லியேன்னு காண்டு’ என்று சொன்னாள். நான் சிரித்துவிட்டேன்.

கோயிலை விட்டு வெளியே வந்ததும், நாங்கள் ஒரு ஓட்டலுக்குச் சென்றோம். சாப்பிட்டுவிட்டு பில்லுக்குப் பணம் கொடுக்க வந்தபோது, கேசவன் மாமா ஒரு துண்டுச் சீட்டை எடுத்து கல்லாவில் இருந்த நபரிடம் நீட்டி, ‘இந்த அட்ரசுக்கு எப்படிப் போகணும்?’ என்று விசாரித்தார்.

‘பத்து நிமிஷம் நடக்கணும். இல்லேன்னா ஜட்கா வெச்சிக்கிட்டு போயிடுங்க. வெய்யிலா இருக்கு பாருங்க’ என்று அவர் சொன்னார்.

அப்பா ஒரு ஜட்கா வண்டி பிடித்தார். உள்ளே புல் பரப்பி அதன் மீது கோணி விரித்திருந்தது. புல்லின் வாசனை நன்றாக இருந்தது. நாங்கள் ஏறி உட்கார்ந்ததும் வண்டிக்காரன் கம்பிக் கொக்கியை மாட்டிவிட்டு முன்னால் சென்று ஏறி உட்கார்ந்து, ‘ஹக் ஹக்’ என்று சத்தம் கொடுத்தான். வண்டி புறப்பட்டது. எனக்கு அந்த குதிரை வண்டிப் பயணம் மிகவும் பிடித்திருந்தது. அதற்கு முன் நான் அப்படியொரு வண்டியில் சென்றதில்லை. வழியெங்கும் கடைகள். சாலை நிறைத்த மனிதர்கள். வீதிக்கு நான்கு நாடி சோதிட நிலையங்கள்.

‘நாடி ஜோசியம்னா என்னம்மா?’ என்று வினோத் கேட்டான்.

‘நாடி படிச்சி சொல்லுவா.’

‘நாடின்னா என்ன?’

‘நாடின்னா... நாடிதான். நம்மள பத்தி ஓலைல எழுதி வெச்சிருப்பா.’

‘யாரு?’

‘ரிஷிகள், மகான்கள்.’

‘அப்ப இப்ப நம்மகிட்ட இருக்கறது நாடியா?’

‘தெரியலே. என்னமோ சுவடி. என்னமோ எழுதியிருக்கு. அதுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கறதுக்குத்தான் இப்ப போறோம்.’

நான் வினோத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். எப்படி அவனால் இப்படி இருக்கமுடிகிறது என்று ஆச்சரியமாக இருந்தது. நான் அந்த நாடிச் சுவடியைப் பற்றி அவனிடம் சொல்லியிருக்கிறேன். அண்ணாவுக்கு அது வந்து சேர்ந்த கதையும்கூட. ஒன்றுமே தெரியாததுபோல காட்டிக்கொள்வது பெரும் வித்தை. அதை எப்படி இவன் அநாயாசமாகச் செய்கிறான்? ஒரு வார்த்தை. ஒரே ஒரு சொல். திருப்போரூர் சாமியிடம் போய்க் கேட்டால் தெரிந்துவிடும் என்று சொல்லியிருந்தால், வைத்தீஸ்வரன் கோயிலுக்கே வந்திருக்கப் போவதில்லை. நான் சொல்லாதிருந்தது பெரிதல்ல. அவன் அப்படிக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்ததுதான் எனக்கு வியப்பூட்டிக்கொண்டிருந்தது. எனக்காகவா? நான் வீட்டை விட்டுப் போய்விடக் கூடாதென்பதற்காகவா? நான் அத்தனை முக்கியமா அவனுக்கு?

ஆனால் நானொரு கோழை. பொய்யன். பெற்ற தாயாகவே இருந்தாலும் உண்மையை மறைப்பவன். அதற்குச் சில நியாயங்களை நெய்து வைத்திருப்பவன். யாருமே ஒப்புக்கொள்ள முடியாத நியாயங்கள். எனக்கு அதைக் குறித்துச் சற்றும் கவலை கிடையாது. யாருடைய கண்ணீருக்கும் நான் காரணமாயிருக்க விரும்பவில்லை என்பதுதான் என் சுயம்.

பல வீதிகளைக் கடந்து அந்த குதிரை வண்டி ஓடிக்கொண்டே இருந்தது. நடந்தாலே பத்து நிமிடங்களில் போய்விடலாம் என்று அந்த ஓட்டல்காரர் சொன்னாலும், குதிரை வண்டியில் நாங்கள் அந்த இடத்துக்குப் போய்ச் சேரவே பத்து நிமிடங்கள் பிடித்தன. இறங்கும்போது வண்டியில் இருந்து ஒரு பிடி புல்லை உருவி என் நிஜார் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன். ‘எதுக்குடா?’ என்று வினோத் கேட்டான்.

‘சும்மாதான். வாசனை நன்னாருக்கு’ என்று பதில் சொன்னேன்.

கேசவன் மாமா எங்களை வெளியே காத்திருக்கச் சொல்லிவிட்டு அந்த வீட்டுக்குள் போனார். இரண்டு நிமிடங்களில் திரும்பிவந்து எங்களை உள்ளே அழைத்துச் சென்றார். ஸ்ரீ காகபுஜங்கர் நாடி ஜோதிட நிலையம் என்று உள்ளே ஒரு சிறிய பலகை இருந்தது. வெளியே வாசலில் வைக்க வேண்டியதை இங்கே எதற்கு வைத்திருக்கிறார்கள் என்று யோசித்தேன். எழுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் வந்து உட்கார்ந்ததும், அப்பாவும் அம்மாவும் அவரை விழுந்து சேவித்தார்கள்.

‘சொல்லுங்கோ. நாடி பாக்கணுமா?’

கேசவன் மாமா அந்தச் சுவடியை எடுத்து அமைதியாக அவரிடம் நீட்டினார்.

‘என்ன?’

‘இதுல என்ன எழுதியிருக்குன்னு தெரியணும். திடீர்னு நேத்து ஆத்துல இது இருந்தது. இதுக்கு முன்னாடி இருந்ததில்ல. எங்கேருந்து, எப்படி, யார் கொண்டுவந்து போட்டதுன்னே தெரியலே’ என்று அப்பா சொன்னார்.

என் ஆர்வம் என்னை நிலைகொள்ளாமல் அடித்துக்கொண்டிருந்தது. அவர் வாய் திறந்து என்ன சொல்லுவார் என்று தவித்துக்கொண்டிருந்தேன். பதற்றத்தோடு வினோத்தைத் தொட்டு அழைத்தேன். அவன் திரும்பி என்ன என்று கேட்டான். சொல்ல எனக்கு ஒன்றுமில்லைதான். ஆனால் எனக்கிருந்த தவிப்பும் பதற்றமும் அவனுக்கும் இருக்கிறதா என்று பார்க்க விரும்பினேன்.

அந்தப் பெரியவர் சுவடியை விளக்கு வெளிச்சத்தில் தூக்கிப் பிடித்துப் படித்துப் பார்த்தார். பிறகு அப்பாவிடம் அதைத் திருப்பிக் கொடுத்தார்.

‘தொடர்ந்து ரெண்டு அசம்பாவிதம் குடும்பத்துலே. எல்லாம் ஏன் நடக்கறதுன்னே புரியலே. தாங்கமாட்டாம தவிச்சிண்டிருக்கோம். பெரியவா நீங்க எதாவது நல்ல வார்த்தை சொன்னேள்னா கேட்டுப்போம்.’

அப்பாவுக்குப் பேசவே முடியாமல் துக்கம் அடைத்தது. அவர் தனக்காக வைத்திருந்த சொம்பை எடுத்து அவரிடம் நீட்டினார்.

‘என்னது?’

‘குடிங்க’ என்று சொன்னார். தண்ணீர்தான். அப்பா நான்கு வாய் அருந்திவிட்டுத் திருப்பிக் கொடுத்ததும் வாங்கி வைத்துவிட்டு, ‘இந்த சுவடியிலே ஒண்ணுமில்லே. இது எதோ வைத்திய சுவடிலேருந்து உருவினது’ என்று சொன்னார்.

‘ஆனா எப்படி எங்க வீட்டு அடுக்களைக்கு வந்ததுன்னு புரியலையே?’ என்று அம்மா கேட்டாள்.

அதற்குமேல் எனக்கு அந்த உரையாடல் ஆர்வம் தரவில்லை. வைத்தியச் சுவடியா? வம்ச சரித்திரம் என்றல்லவா அண்ணா சொன்னான்? அண்ணா பொய் சொன்னானா?

என்னால் அதை நம்ப முடியவில்லை.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

31. சாமி

 

 

என் நம்பிக்கைகள் தகர்ந்துகொண்டிருந்தன. என் ஆதர்சம் நொறுங்கிக்கொண்டிருந்தது. பிரமிப்புகளின் திருதராஷ்டிர அரவணைப்பு நெகிழ்ந்து கொடுக்க ஆரம்பித்திருந்தது. என்னால் அண்ணாவை ஒரு பொய்யனாக எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. அவனிடமிருந்து எனக்கு வந்து சேர்ந்த ஒவ்வொரு சொல்லும் சத்தியம் என்று கருதுவதை ஒரு கௌரவமாக நினைத்திருந்தேன். ஆனால் அவன் ஏன் அப்படிச் சொன்னான்? ஏதோ ஒரு மருத்துவச் சுவடியின் ஒரு பக்கம். அது கிடைப்பதற்குத் திருப்போரூர் சாமி தேவையில்லை. எனக்குத் தெரிந்தே நீலாங்கரையில் ஒரு நாட்டு மருத்துவர் அப்போது இருந்தார். ஊரார் அவரைப் பண்டார தேசிகர் என்று அழைப்பார்கள். அதுதான் அவரது இயற்பெயரா அல்லது ஏதோ ஒரு காரணம் பற்றி அப்படியொரு பெயர் அவருக்கு அமைந்ததா என்று எனக்குத் தெரியாது.

ஒரு சமயம் எங்கள் பள்ளிக்கூடத்தில் ஸ்கவுட்ஸ் கேம்ப்பாக எங்களை நீலாங்கரைக்கு அழைத்துச் சென்றார்கள். அதிகாலை ஐந்து மணிக்குப் புறப்பட்டு, ஊர்வலம் போவதுபோலப் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் நாங்கள் நீலாங்கரைக்குப் போய்ச் சேர்ந்தபோது, கடலோரம் ஏழெட்டுத் தென்னை மரங்களுக்கு நடுவே அமைந்திருந்த பண்டார தேசிகரின் பந்தல் போட்ட ஓட்டு வீட்டில்தான் எங்களுக்குக் காலை ஆகாரம் கொடுத்தார்கள். எங்கள் ஸ்கவுட் மாஸ்டரின் பால்ய சிநேகிதர் அவர் என்பது அப்போது தெரிந்தது. ‘பசங்களா இவரு பெரிய பண்டிதரு. பெரிய பெரிய புஸ்தகமெல்லாம் படிச்சவரு. பாத்துக்கங்கடா’ என்று ஆசிரியர் சொன்னார். தேசிகரின் வீட்டில் ஏராளமான புராதனமான புத்தகங்களும் ஓலைச் சுவடிகளும் இருந்தன. வைத்திய வல்லாதி, கன்ம நூல், அகஸ்தியர் பரிபூரணம், முப்பூ சூஸ்திரம், போகர் முனிவரின் சரக்கு வைப்பு எண்ணூறு என்று அங்கே நான் கண்ட பல புத்தகங்களின் பெயர்கள் எனக்கு இன்னமும் நினைவிருக்கின்றன. ஒரு சுவடியை நான் தொடலாமா கூடாதா என்று தயங்கியபடியே ஓரத்தில் மெல்லத் தொட்டபோது, ‘எடுத்துப் பாரு தம்பி’ என்று தேசிகர் சொன்னார். அண்ணா வைத்திருந்த சுவடிப் பக்கம் போலத்தான் அதுவும் இருந்தது. புராதனமானது. பழுப்பேறியது. தெளிவற்ற எழுத்துகளில் எதையெதையோ பேசியது.

‘இது கடம்பாவனி பிரசவ சூத்திரம். எண்ணி ஏழு மூலிகெ. உடுகாட்டி, உரோசிதம், அமரகோளம், இல்லி, சயவரி, உடுநி, கட்டிணசஞ்சீவினி. முடிஞ்சிதா? இந்த ஏழ என்னமா சேர்த்து, எப்பிடிக் கட்டி ஒண்ணாக்குறதுன்றதுதான் சங்கதியே. இன்னிக்கி யாரு இதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு பிரசவம் பாக்குறாங்க? பிரசவ மரணமே இல்லாம செய்யமுடியும் தம்பி. ஆனா பாரு, போற போக்குலே கத்தியில்லாமெ பிரசவமே இல்லைன்னு சொல்லிப்பிடுவான்கள்’ என்று அவர் சொன்னார். சிறுவர்களுக்கு இதெல்லாம் என்ன புரியும் என்று அவர் எண்ணிப் பார்க்கவேயில்லை. வந்திருந்த அத்தனை மாணவர்களையும் கூப்பிட்டுக் கூப்பிட்டு அருகே உட்கார வைத்துக்கொண்டு என்னென்னவோ சொன்னார். எங்களுக்கு அவர் சொன்ன எதுவும் புரியவில்லை. ஆனாலும் ஒரு நூறடி ஆழத்தில் புதைந்துபோன மனிதர் ஒருவரைத் தோண்டி எடுத்து மேலே கொண்டுவந்து வைத்த மாதிரி இருந்தார். அதை ரசித்தோம்.

அண்ணா ஒருவேளை நீலாங்கரை வைத்தியரிடம் எதற்காவது போயிருப்பானோ என்று தோன்றியது. அவரிடமிருந்து எடுத்துவந்த சுவடித் தாளை திருப்போரூர் சாமி கொடுத்ததாகச் சொல்லிவிட்டானோ? எனக்கு அதைத் தெரிந்துகொள்ளாவிட்டால் நிம்மதி இராது என்று தீர்மானமாகத் தோன்றியது. வினோத்திடம் விஷயத்தைச் சொல்லி, ‘நீயும் வருகிறாயா?’ என்று கேட்டேன்.

‘எங்க? நீலாங்கரைக்கா?’

‘இல்லே. திருப்போரூருக்கு. அந்த சாமிய நேர்ல பாத்து ஒரே ஒரு வார்த்தை கேக்கணும் எனக்கு.’

‘என்னது?’

‘அவருக்கு அண்ணாவைத் தெரியுமா? தெரியாதா?’

இடைப்பட்ட நாள்களில் நானும் வினோத்தும் வழக்கத்துக்கு விரோதமாகச் சற்று நெருங்கியிருந்தோம். வீட்டில் பெரியவர்களுக்குத் தெரியாமல் நாங்கள் இருவரும் அண்ணாவைப் பற்றியும் வினய்யைப் பற்றியும் நிறையப் பேசினோம். அண்ணா காணாமல்போனதற்கு நான் எண்ணியிருந்த காரணத்தை முதலில் இருந்தே வினோத் நம்பவில்லை. ‘அவன் ஒண்ணும் ஞானியெல்லாம் இல்லே’ என்றுதான் சொன்னான்.

‘ஆனா அவன் தியானமெல்லாம் பண்ணுவாண்டா. தலைகீழாக்கூட நிப்பான். நானே பாத்திருக்கேன்.’

‘அது ப்ராக்டிஸ் பண்ணா வரும்’ என்று வினோத் சொன்னான்.

நான்கூட ஓரிரு முறை சுவரோரம் தலையணை ஒன்றை வைத்து, அதன்மீது தலையை நிறுத்தி, காலை மேலே உயர்த்திப் பார்த்திருக்கிறேன். என்னால் அது முடியவில்லை. மூச்சு வாங்கியது என்பதைவிட பயமாக இருந்தது. எந்தக் கணமும் தடாரென்று விழுந்துவிடுவேன் என்று தோன்றியது. இத்தனைக்கும் சுவரோரம்! ஆனால் அண்ணா வெட்ட வெளியில் மிக அநாயாசமாகத் தலை குப்புற நின்றான். அப்படி நின்றதோடு மட்டுமின்றி, கையை அசைப்பது போன்ற லாகவத்தில் ஒரு காலையும் திருப்பி அசைத்தான். பயிற்சிதான். அதை மறுப்பதற்கில்லை. ஆனால் யாருக்கு இதையெல்லாம் பயிலத் தோன்றும்? எனக்குத் தோன்றவில்லையே? வீட்டில் வேறு யாருக்கும் இப்படியெல்லாம் எண்ணிக்கூடப் பார்க்க முடிந்ததில்லையே? இதை ஒரு சாதனையாக அவன் கருதியிருந்தால், அத்தனை பேரையும் கூப்பிட்டு வேடிக்கை பார்க்கச் சொல்லி, செய்து காட்டியிருப்பான். எங்கள் வீடென்ன, ஊரே அசந்துபோய்க் கைதட்டியிருக்கும். ஆனால் அவன் என்னை மட்டுமல்லவா சாட்சிக்கு வைத்தான்? நான் சொல்லுவதை யாரும் எக்காலத்திலும் பொருட்படுத்தப்போவதில்லை என்பதை எப்படியோ தெரிந்துகொண்டுதான் அவன் அப்படிச் செய்தானோ என்று தோன்றியது.

என்னவானாலும் அவனைப் பற்றி இன்னும் ஒரு வரியாவது தெரிந்துகொண்டுவிட வேண்டும் என்று தீவிரமாக நினைத்தேன். அந்த வாரம் வெள்ளிக்கிழமை, பள்ளிக்கூடம் விட்டு நேரே வீடு திரும்பாமல், திருப்போரூருக்குப் போய்விடுவது என்று முடிவு செய்தேன். ஆரம்பத்தில் மிகவும் தயங்கினாலும், நான் இடைவிடாமல் வற்புறுத்தியதால் வினோத்தும் என்னோடு வரச் சம்மதித்தான்.

பள்ளிக்கூடத்தின் வாசலிலேயே பேருந்து நிற்கும். காண்டீபன் பஸ் சர்வீஸ். சரியாகப் பள்ளி விட்டு ஐந்து நிமிடங்களில் ஒரு வண்டி வரும். நாங்கள் காத்திருந்து அதில் ஏறி திருப்போரூருக்குப் போய்ச் சேர்ந்தோம்.

‘முதல்ல கோயிலுக்குப் போகணுமா?’ என்று வினோத் கேட்டான்.

‘அதெல்லாம் வேணாம். சாமி எங்க இருக்கும்னு யாரையாவது கேக்கணும். சீக்கிரம் பார்த்துட்டு ஆத்துக்குப் போயிடணும். இல்லேன்னா அப்பா சந்தேகப்படுவார்.’

நாங்கள் கோயில் வாசலில் தேங்காய்க் கடை வைத்திருந்த பெண்மணியிடம் திருப்போரூர் சாமியைக் குறித்து விசாரித்தோம்.

‘எதுக்கு?’ என்று அந்தப் பெண்மணி கேட்டாள்.

நான் கூசாமல் பொய் சொன்னேன், ‘எங்கம்மா அவர பாக்கப் போயிருக்கா. அம்மாகிட்டதான் ஆத்து சாவி இருக்கு.’

அந்தப் பெண்மணி சொன்ன வழியில் நாங்கள் சாமி வீட்டை அடைந்தபோது வெளியே ஒரு ஜட்கா வண்டி நின்றுகொண்டிருந்தது. ‘டேய், அவர் எங்கயோ கிளம்பிண்டிருக்கார் போலருக்கே’ என்று வினோத் சொன்னான்.

‘பரவால்ல வா’ என்று அழைத்துக்கொண்டு நேரே உள்ளே போய்விட்டேன். வீடு மிகவும் இருட்டாக இருந்தது. தாழ்வாரத்தில் இரண்டு காவி வேட்டிகள் உலர்ந்துகொண்டிருந்தன. நாலைந்து கௌபீனங்களும் ஒரு காசித் துண்டும் தரையில் விரித்துப் போடப்பட்டிருப்பதைக் கண்டேன். ஒரு பெரிய பிரம்புக்கூடை நிறைய காய்ந்த மாலைகள் கிடந்தன. தாழ்வாரத்தை ஒட்டி மாடிக்குச் செல்லும் மரப்படிக்கட்டுகள் முழுதும் அரிசி மணிகள் சிந்தியிருந்தன. சாமி வீட்டு சமையல் கட்டு மாடியில்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

நாங்கள் கூடத்துக்கு வந்தபோது அங்கே ஒரு பெரியவர் தரையில் அமர்ந்து கணக்குப் பிள்ளை மேசை மீது ஒரு பேரேட்டை வைத்துக்கொண்டு ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். எங்களைக் கண்டதும், ‘யாரு?’ என்று கேட்டார்.

‘சாமிய பாக்கணும்’ என்று வினோத் சொன்னான்.

‘சாமி வெளிய கெளம்பிட்டிருக்காங்களே. காலமே வாங்க தம்பிகளா’

‘இல்லே. ரெண்டு நிமிஷம் பாக்கணும். இப்பவே’ என்று சொன்னேன்.

 

பின்புறம் யாரோ வந்து நிற்பது போலிருந்தது. திரும்பிப் பார்த்தேன். சாமிதான் நின்றிருந்தார். சடைமுடியும் நெற்றி நிறைத்த விபூதியும் வெள்ளையும் கருப்புமாகப் படர்ந்திருந்த பெரும் தாடியும் இடுப்பு வேட்டியையே நெஞ்சு வரை இழுத்து கழுத்தைச் சுற்றிப் போர்த்தியிருந்த கோலமுமாக அவரை நான் முதல் முதலில் அப்போதுதான் அத்தனை நெருக்கத்தில் கண்டேன்.

எங்கள் பள்ளிக்கூட ஆண்டு விழாவுக்கு வந்திருக்கிறார். பித்தா பிறைசூடி என்று பாட்டுப் பாடி ஐந்து நிமிடங்கள் ஏதோ பேசிவிட்டுப் போனார். அப்போது பார்த்ததைவிட நேரில், நெருக்கத்தில் இன்னமும் சற்றுக் கருப்பாயிருந்ததுபோலத் தோன்றியது.

‘ஆரு தம்பி?’ என்று சாமி கேட்டது.

‘திருவிடந்தைலேருந்து வரோம். விஜய்யோட ப்ரதர்ஸ்’ என்று நான் சொன்னேன்.

அவர் முகத்தில் எதையும் புரிந்துகொண்ட பாவனை இல்லை. வெறுமனே எங்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தார்.

‘படிக்கிற பசங்களா?’ என்று கேட்டபடி, தன் கையில் வைத்திருந்த சுருக்குப் பையைத் திறந்து உள்ளே இருந்து விபூதி எடுத்து எங்கள் கையில் போட்டார். ‘தணிகா, பசங்களுக்குப் பிரசாதம் குடுத்துடு’ என்று சொன்னார். கணக்குப் பிள்ளை உடனே எழுந்து உள்ளே போனார்.

‘சாமி உங்ககிட்டே நாங்க பேசணும்.’

‘என்ன?’ என்பது போல ஒரு பார்வை பார்த்தார்.

‘எங்கண்ணா உங்களைப் பத்தி சொல்லியிருக்கான். அவன் இப்ப எங்களோட இல்லை. ஓடிப்போயிட்டான்’ என்று வினோத் சொன்னான்.

யார் என்ன என்று கேட்டறிவதற்கு முன்னால், அவர் ‘என்ன வயசு?’ என்று கேட்டார்.

‘பதினேழுலே போனான். இப்போ அவனுக்கு பத்தொம்பது இருக்கும்’

‘ஓ...’ என்றது சாமி.

‘அவனை உங்களுக்குத் தெரியும்னு சொன்னான். நீங்க அவனுக்கு ஒரு ஓலைச்சுவடி குடுத்திருக்கிங்க.’

‘நானா?’

‘ஆமா. அப்படித்தான் சொன்னான். அதுலே அவன் ஓடிப்போவான்னு எழுதியிருக்காம். நாலு வரியிலே எங்க குடும்பத்தோட மொத்த கதையும் இருக்குன்னு சொன்னிங்களாம்.’

அவர் சில விநாடிகள் என்னை உற்றுப் பார்த்தார். பிறகு, ‘வா’ என்று சொல்லிவிட்டு மாடிப்படி ஏற ஆரம்பித்தார். நாங்கள் இருவரும் அவர் பின்னால் படியேறச் சென்றபோது கணக்குப் பிள்ளை இரண்டு சாத்துக்குடிப் பழங்களோடு வந்தார். ‘போறச்சே வாங்கிக்கறோம்’ என்று வினோத் சொன்னான்.

‘சாமி இப்ப வெளிய கெளம்பணும்’ என்று அவர் மீண்டும் சொன்னார். மேலே போய்க்கொண்டிருந்த சாமி நின்று, ஒருகணம் அவரைத் திரும்பிப் பார்த்தார். பிறகு, ‘இன்னிக்குப் போகலை. நாளைக்குப் பார்த்துக்குவம்‘ என்று சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்தார். ‘வா தம்பி’ என்று எங்களைப் பார்த்துச் சொல்லிவிட்டுத் தனது இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டார்.

அது அசப்பில் ஒரு சிம்மாசனம் போலத்தான் இருந்தது. ஆனால் கால்கள் இல்லை. தரையிலேயே முதுகு வைத்த மணைப் பலகை போலக் கிடந்தது. ஆனால் பெரிது. நெடு நேரம் உட்கார்ந்தால் புட்டம் வலிக்குமே என்று யாரோ யோசித்து மெத்தென்று வெல்வெட் துணி விரித்து வைத்திருந்தார்கள். ஆசனத்துக்கு எதிரே ஒரு சிறு மேசை இருந்தது. தரையில் இருந்து முக்கால் அடி உயரம். இரண்டரை அடி அகலம் இருக்கும். சாமி அந்த மேசையின் மீது எதிரே உட்காருகிறவர்கள் பார்க்கிறபடிக்கு ஒரு முருகன் சிலையை வைத்திருந்தது. சிலையின் பாதங்களில் நான்கைந்து ரோஜா இதழ்கள் சிதறிக் கிடந்தன. ஒரு பெரிய விபூதிச் சம்புடம். அருகே ஒரு குங்குமக் கிண்ணம். நீள் செவ்வக அறை முழுதும், அறுபடை வீட்டுக் காட்சிகள் சித்திரமாகத் தீட்டப்பட்டிருந்தன.

எங்களுக்கு அது வியப்பாக இருந்தது. சாமி இப்படித் தனது தனியறைக்கு எங்களை அழைத்துவந்து பேசுவார் என்றெல்லாம் நாங்கள் எண்ணியிருக்கவில்லை. தவிரவும், சாமி என்பவர் எப்போதும் பக்தர்களின் நடுவே பவனி வருகிறவராக இருப்பார் என்று நான் எண்ணியிருந்தேன். வரிசையில் நின்றுதான் அவரை தரிசிக்கவேண்டி இருக்கும் என்று வழியில் சொல்லிக்கொண்டே வந்தேன். ஆனால் சற்றும் எதிர்பாராவிதமாக அவர் மிகவும் எளிமையாகவும் தனித்தும் இருந்தார்.

வினோத்தான் ஆரம்பித்தான். ‘எங்கண்ணா உங்களைத் தெரியும்னு சொன்னான். நிஜமாவே தெரியுமா சாமி?’

‘பேரென்ன சொன்னே? விஜய்யா?’

‘ஆமா’

‘சுவடி வெச்சிருந்தானா? நான் குடுத்தேன்னு சொன்னானா?’

‘ஆமா சாமி.’

‘ஐயரூட்டுப் புள்ளதானே?’ என்று ஒருதரம் கேட்டுக்கொண்டார்.

‘ஆமா. நாங்க ஐயங்கார்.’

அவர் சிரித்தார். பிறகு, ‘அந்த சுவடிய எடுத்தாந்திங்களா?’ என்று கேட்டார்.

‘இல்லே. அதை அப்பா வெச்சிருக்கார். ஆனா அது நாடியெல்லாம் இல்லை; எதோ வைத்திய சுவடின்னு சொல்றா.’

‘யாரு சொன்னாங்க?’

‘வைத்தீஸ்வரன் கோயில்ல போய்க் கேட்டோம்.’

அவர் மீண்டும் சிரித்தார். ‘உங்கண்ணன் ஒரு நாள் காணாம போயிடுவான்னு எனக்குத் தெரியும். போவுறதுக்கு முன்ன, கூடப் பொறந்த ஒருத்தர்ட்டே சொல்லிட்டுப் போடான்னு சொன்னேன். சொன்னானா?’ என்று கேட்டார்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

32. விபூதி யோகம்

 

 

அவரைப் பார்க்க ஓர் அணைந்த தீப்பந்தம் போலிருந்தார். தலை முதல் கால் வரை ஒரே அளவு. தோள்களிலோ, வயிற்றிலோ, இடுப்பிலோ, முதுகிலோ சற்றும் சதைப்பிடிப்பில்லை. முதுமையின் தளர்ச்சி அவரது கரங்களில் ஓடிய நரம்புகளில் தெரிந்தது. பேசும்போது வார்த்தைக்கு வார்த்தை எச்சில் விழுங்கிப் பேசினார். அப்படி அவர் எச்சில் விழுங்கும்போதெல்லாம் தொண்டையில் ஓர் எலும்பு இறங்கி ஏறியதைக் காண முடிந்தது. முகம் அடர்ந்த தாடியும் முடிந்த சடை முடியும் அள்ளிப் பூசிய விபூதியும்  மார்பில் புரண்ட குண்டு குண்டு ருத்திராட்ச மாலைகளும் அவரது தோற்றத்துக்கு ஒட்டவைத்த மாதிரி இருந்தது. ஆள் கறுப்புத்தான். ஆனால் எளிய வேட்டி சட்டையில் தாடியும் சடையும் இல்லாதிருந்தால் நடிகர் சுருளி ராஜனைப் போல் இருப்பார் என்று நினைத்தேன்.

என் வியப்பெல்லாம் அதி பயங்கரமான ஒரு செய்தியை மிகச் சாதாரணமான தொனியில் எப்படி இவரால் பேச முடிகிறது என்பதுதான். வினோத் கடும் கோபத்துடன் அவரிடம் கேட்டான், 'ஒருத்தன் வீட்ட விட்டு ஓடிப் போகப்போறேன்னு சொன்னா, நல்லது போயிட்டு வான்னு சொல்லுவிங்களா நீங்க? உடனே அவனோட அப்பா அம்மா யாருன்னு விசாரிச்சி அவங்களுக்கு சொல்ல வேணாமா? இது மட்டும் இப்ப எங்கப்பாவுக்குத் தெரிஞ்சா என்ன நடக்கும் தெரியுமா?'

அவர் அப்போதும் பதறவில்லை. 'தம்பி, உங்கண்ணன் ஓடிப் போவேன்னு என்கிட்ட சொல்லவேயில்லியே? அவன் போயிடுவான்னு எனக்குத் தெரியும்னுதான் சொன்னேன்.'

'அத நீங்க அவன்கிட்ட சொன்னது தப்பு. எங்கப்பாட்டதான் சொல்லியிருக்கணும்.'

'உங்கப்பா இங்க வரவேயில்லியேப்பா!' என்று அவர் சொன்னார். இதற்கு என்ன பதில் சொல்வதென்று வினோத்துக்குத் தெரியவில்லை. 

'உங்க ரெண்டு பேர்ல யாருகிட்டே அவன் சொல்லிட்டுப் போனான்?' என்று சாமி கேட்டது.

'சொல்லிட்டுப் போகலை. ஆனா அவன் என்னென்னவோ மாதிரி நடந்துண்டான். என்கிட்டே கொஞ்சம் பேசியிருக்கான்.' என்று நான் சொன்னேன்.

'என்ன மாதிரி நடந்துக்கிட்டான்?' அவருக்குக் கதை கேட்கும் ஆர்வம் வந்துவிட்டாற்போல் இருந்தது. எனக்கு அது பிடிக்கவில்லை. நான் கதை சொல்ல அங்கே போயிருக்கவில்லை என்பதே காரணம். 

'எங்கண்ணாவுக்கு அந்தச் சுவடிய குடுத்தது நீங்கதானா?' என்று கேட்டேன்.

அவர் சிறிது யோசித்தார். பிறகு, 'நான் குடுக்கலை. அவன் எடுத்துக்கிட்டுப் போனதைத் தடுக்கவும் இல்லை' என்று சொன்னார். 'ஒண்ணு தெரிஞ்சிக்கங்க பிள்ளைங்களா. உங்கண்ணன் சாதாரணப்பட்டவன் இல்லை. அவன் வேற.'

'அப்படின்னா?'

'உங்கண்ணனாத்தானே கெளம்பிப் போனான்? வேற ஒருத்தனா வருவான்.'

'எப்போ?' என்று வினோத் கேட்டான்.

'தெரியலப்பா. அநேகமா அன்னிக்கி நான் இருக்க மாட்டேன்' என்று அவர் சொன்னார்.

அவரிடம் பேசுவதில் பெரிய பயன் இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. 'அந்தச் சுவடி மருத்துவச் சுவடியா?' என்று மட்டும் கேட்டேன்.

'இருக்கும் தம்பி. எனக்குச் சுவடியெல்லாம் படிக்கத் தெரியாது. இங்க அதைப் பார்த்தான். பார்த்ததுமே எடுத்து வெச்சிக்கிட்டான். ஒனக்கு எதுக்குடா அதுன்னு கேட்டதுக்கு, இது எங்க வம்ச சரித்திரம்னு அவந்தான் சொன்னான்.'

இந்தப் பதில் என்னை மேலும் குழப்பியது. சுவடி படிக்கத் தெரியாத சாமிக்குச் சுவடி எதற்கு? யாரோ ஒருவன் அது தனது வம்ச சரித்திரம் என்று சொன்னால் உடனே சரியென்று ஒப்புக்கொண்டு விடுவாரா! அப்புறம் இவரென்ன சாமி? அதையெல்லாம்விட, இவரிடமிருக்கும் சுவடியை உரிமையுடன் எடுத்துச் செல்லுமளவுக்கு அண்ணா எப்படி இவருக்கு நெருக்கமானான்? அப்படி எதைக் கண்டான் இவரிடம்?

எனக்கு அவர் பெரிய ஞானி என்றோ, எல்லாம் அறிந்தவர் என்றோ தோன்றவில்லை. ஒரு சித்தராக இருக்க வாய்ப்பே இல்லை என்று தீர்மானமாகத் தோன்றியது. வாழைப்பழத்தில் இருந்து பிள்ளையார் சிலை எடுத்த சித்தர் அளவுக்குக் கூட இவரால் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்தேன். ஆனால் அண்ணா வீட்டை விட்டுப் போவான் என்று சரியாகக் கணித்திருக்கிறார். அவனிடம் அதைத் தெரியப்படுத்தியிருக்கிறார். அதுதான் உறுத்திக்கொண்டே இருந்தது.

நான் ஒரு தீர்மானத்துக்கு வந்து, துணிச்சலாக அதைக் கேட்டேன், 'உண்மைலயே உங்களுக்கு எதாவது பவர் இருக்கா? எங்கண்ணா ஏன் உங்ககிட்டெ வந்தான்?'

அவர் திடுக்கிடவும் இல்லை, திகைக்கவும் இல்லை. உணர்ச்சியற்ற பார்வையில் என்னை வெகுநேரம் அமைதியாகப் பார்த்துக்கொண்டே இருந்தார். பிறகு, 'இப்ப நீ எதுக்கு வந்தே?' என்று கேட்டார். 

'அண்ணாவைப் பத்தித் தெரிஞ்சிக்க. அவன் எங்க போனான்னு உங்களுக்குத் தெரியுமா?'

'தெரியாது. அவனைப் பத்தியே எனக்கு ஒண்ணுந்தெரியாது தம்பி. அவன் போயிடுவான்னு மட்டும்தான் தெரியும்.'

'அதான் எப்படி?'

'எப்படின்னு கேட்டேன்னா என்ன சொல்லுவேன்? சரி போ. நீயும் போகத்தான் போறே. தோ, இவனும் போயிடுவான். இது நடந்தப்பறம் திரும்பி வந்து கேளு. கேக்க வேணாம், அப்ப ஒனக்கே புரிஞ்சிடும்' என்று அவர் சொன்னார். 

உண்மையிலேயே நாங்கள் இருவரும் திகைத்துப் போனோம். 'டேய், இவரு பெரிய பிள்ளை பிடிக்கிற கும்பலோட தலைவன் போல இருக்கார். வேணாம்டா. நாம போயிடலாம்' என்று வினோத் சொன்னான். அதை அவர் காது படவே அவன் சொன்னதுதான் விசேடம். அதற்கும் அவர் சிரிக்கவோ, கோபப்படவோ இல்லை.

கிளம்பும்போது வினோத் சொன்னான், 'சாமி நாளைக்கு எங்கப்பாட்ட சொல்லி அவர இங்க கூட்டிண்டு வருவேன்.'

'வாயேன்?'

அவர் சற்றும் அதிராமல் பேசியது எனக்கு மேலும் மேலும் வியப்பூட்டியது.

'எங்கப்பா பெரிய கோவக்காரர். உங்க மேல போலிஸ் கம்ப்ளைண்ட் குடுப்பார்.'

'சரி.'

'எங்கண்ணா எங்க போனான்னு சொல்லிடுங்கோ.'

'நாந்தான் தெரியாதுன்னு சொன்னனே தம்பி? அவன் ஒண்ணும் என்கிட்ட சொல்லிட்டுப் போகலை. அப்படிச் சொல்லிட்டுப் போக அவன் என்ன வேலை வெச்சிக்கிட்டு ஊருக்கா போனான்?'

'பின்னே?'

'போகணும்னு அவன் விதி. போனான். ஒனக்கும் அதே விதிதான். நீயும் போவ. உன் தம்பியும் போவான்.'

'இது உங்களுக்கு எப்படித் தெரியும்?' என்று நான் ஆங்காரமாகக் குரல் எழுப்பிக் கத்தினேன். உண்மையில் நாந்தான் மிகவும் பதற்றமாகியிருந்தேன்.

'தெரியல கண்ணு. எழுவத்தாறு வயசாகுது எனக்கு. இதுவரைக்கும் யாருகிட்டயும் இப்படியெல்லாம் நான் சொன்னதுமில்ல; யாரப் பத்தியும் இந்த மாதிரி நினைச்சதும் இல்ல. என்னமோ உங்களப் பாக்குறப்ப அப்படித் தோணுது.' என்று அவர் சொன்னார். 

எனக்குக் குழப்பமும் பதற்றமும் கணந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருந்தன. ஒருவேளை வினோத் சொன்னதுபோல அவர் ஒரு பிள்ளை பிடிக்கிற ஆளாக இருப்பாரோ என்றுகூட நினைத்தேன். ஆனால் எழுபத்து ஆறு வயது முதியவர். சிவனடியார். பார்த்தால் தப்புத்தண்டா செய்யக்கூடியவராகத் தெரியவில்லை. தவிரவும் தாடியில்லாமல் வெள்ளை உடை அணிந்தால் சுருளி ராஜனைப் போலிருக்கக்கூடியவர். கடைசியில் நான் கேட்டே விட்டேன்.

'தயவுசெஞ்சி உண்மையச் சொல்லுங்கோ. உங்களுக்கு எதாவது சக்தி இருக்கா?'

அவர் என்னை அருகே வரச் சொன்னார். தன்னெதிரே இருந்த விபூதிச் சம்புடத்தில் இருந்து இரு விரல்களுக்கிடையே ஒரு சிட்டிகை எடுத்து என் நெற்றியில் தேய்த்தார். வினோத்தையும் அருகே அழைத்தபோது, 'வேணாம். நாங்க விபூதி வெச்சுக்கறதில்லே' என்று அவன் சொன்னான்.

'பரவால்ல தம்பி. தப்பில்லே.'

'இல்லே. எனக்கு வேண்டாம்.'

இப்போது அவர் சிரித்தார். 'இப்ப ஒண்ணு சொல்லணுன்னு தோணுது. சொல்லவா?' என்று கேட்டார். 

 

 

'என்ன?'

'நீ சிவனைப் பார்த்துடுவ. ஸ்தூலமாவே பார்த்துடுவ.'

வினோத்துக்கு மிகுந்த கோபம் உண்டாகிவிட்டது. 'யோவ் போய்யா!' என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று மாடிப்படி இறங்கிப் போய்விட்டான். எனக்குத்தான் சங்கடமாகிப் போனது. 'சாரி. அவன் கொஞ்சம் கோவப்படுவான்' என்று மட்டும் சொல்லிவிட்டு நானும் அந்த அறையைவிட்டு வெளியேறினேன்.

வீடு திரும்பும் வழியில் வினோத் தீர்மானமாகச் சொன்னான், 'அந்தாள் ஒரு ஃப்ராடு விமல். சரியில்லே. அண்ணா எதுக்கோ இவர்கிட்டே வந்திருக்கான். நான் வீட்டைவிட்டுப் போயிடுவேன்னு சொல்லியிருப்பான் போலருக்கு. அதை வெச்சிண்டு இவரா கதை கட்டி விட்டுண்டிருக்கார்.'

எனக்கு அதெல்லாம் முக்கியமாகவே படவில்லை. நானும் வினோத்தும்கூட வீட்டை விட்டுப் போய்விடுவோம் என்று எப்படி இவர் சொல்லியிருப்பார்? எழுபத்து ஆறு வயது முதியவர். பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருக்கும் பையன்களிடம் இப்படிப் பேசலாமா என்று கணப்பொழுது நினைத்துப் பார்க்க மாட்டாரா! அப்படியொரு ஞானதிருஷ்டியில் எல்லாம் தெரிந்துவிடுகிறதென்றால் என் அப்பாவைக் கூப்பிட்டுப் பேசுவதுதானே முறை?

அந்த வயதில் எனக்கு அவரைப் புரியவில்லை. பிறகு ஒரு சமயம் அந்தப் புரிதல் நிகழ்ந்தது. ஆனால் சுவடியே படிக்கத் தெரியாத ஒருவரிடம் மருத்துவச் சுவடி எப்படி வந்தது என்பது மிகப்பெரும் புதிராக இருந்தது. அதை அண்ணா வம்ச சரித்திரம் என்று சொன்னதாகவும், எடுத்துக்கொண்டபோது தடுக்காதிருந்துவிட்டதாகவும் சொன்னது அதன்பின்பும் புரியவில்லை.

'கொள்ளி போட வருவேன் மாமா' என்று திருப்பதியில் அண்ணா கேசவன் மாமாவிடம் சொல்லிவிட்டுப் போனதைத்தான் நினைத்துக்கொண்டேன். அப்படி ஒரு சந்தர்ப்பம் மட்டும் அமைந்துவிட்டால் அவனிடம் முதல் வினாவாக அதைத்தான் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். 'மருத்துவச் சுவடியிலே என்ன பெரிய வம்ச சரித்திரத்தைக் கண்டாய்?'

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

33. காலச்சுருள்

 

ரயில் ஆந்திர மாநிலத்தின் எல்லையைத் தொட்டுக் கடந்து ஏதோ ஒரு ஸ்டேஷனில் வந்து நின்றிருந்தது. சிறிய ஸ்டேஷன்தான். நான் ஸ்டேஷன் பெயரைக் கவனிக்கத் தவறியிருந்தேன். ஆனால் அந்த ஊரே மிக அழகானதொரு ஊராக இருக்க வேண்டும் என்று தோன்றியது. நான் அமர்ந்திருந்த பெட்டி, எஞ்சினில் இருந்து வெகு தொலைவு பின்னால் இருந்ததால், ஸ்டேஷன் பிளாட்பாரத்துக்கு அங்கே கூரை இல்லை. முன்பக்கம் மட்டும் ஆஸ்பெஸ்டாஸ் தகடு வேய்ந்திருந்தது. முன்புறம் மக்கள் இறங்கிச் செல்வதும் ஏறுவதும், வியாபாரிகள் தேநீர், குடிநீர், நொறுக்குத் தீனிகள் விற்பதும் நிகழும் போல. நான் இருந்த பகுதிக்கு யாருமே வரவில்லை. பிளாட்பாரத்தில் நான்கைந்து புங்கை மரங்கள் வளர்ந்திருந்தன. ஸ்டேஷனுக்கு அப்பால் ஒரு பெரிய ஏரி இருந்தது. ஏரிக்கரை முழுதும் மரங்கள். ரயில் பெட்டியில் இருந்து அந்தக் காட்சியைக் காண்பதே ஒரு அனுபவமாக இருந்தது.

நான் அமர்ந்திருந்த பெட்டிக்கு அருகே யாரும் எதையும் விற்றுக்கொண்டு வராததில் என் எதிரே அமர்ந்திருந்த யுனானி மருத்துவரின் குடும்பம் மிகவும் தவித்துப் னதைக் கண்டேன். டாக்டரின் மனைவி ஒரு டசன் பழம் வாங்க வேண்டும் என்று இரண்டு மூன்று மணி நேரங்களாகச் சொல்லிக்கொண்டே இருந்தார். இடையில் ஒரே ஒரு ஸ்டேஷனில்தான் வண்டி நின்றது. மருத்துவர் பர்ஸை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டு இறங்கிப்போனார். ஒரு நிமிடத்தில் வண்டி புறப்பட்டுவிட்டது. பழம் வாங்கச்சென்ற கணவரைக் காணாமல் அந்தப் பெண்மணி தவித்துப்போய்விட்டார். ஜன்னலுக்கு வெளியே கையை ஆட்டி ஆட்டிக் கத்தினார். பதற்றத்தில் அவருக்கு வியர்த்தே விட்டது. அந்தக் கணம், அந்த யுனானி மருத்துவர் தன் குடும்பத்தைப் பிரிந்து எங்காவது சென்றுவிடுவது என்று முடிவெடுத்து இருந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கணம் தோன்றியது. உடனே, இது என்ன அபத்தம் என்றும் நினைத்துக்கொண்டேன். நூறு கோடி இந்தியர்களில் நான்கில் இருந்து நாலாயிரம் பேர் வரை அப்படி நினைக்கலாம். நிகழ்த்தியும் காட்டியிருக்கலாம். பெரும்பாலானவர்கள் குடும்பத்தையே விரும்புகிறார்கள். அது ஒரு சௌகரியம். குறைந்தபட்சம் உணவளவில். அதிகபட்சம் உறவளவில்.

எனக்கு உடனே சிரிப்பு வந்துவிட்டது. என்னால் எப்படி அந்த யுனானி மருத்துவரை அப்படி எண்ணிப்பார்க்க முடிந்தது என்று புரியவேயில்லை. ரயிலில் ஏறியதில் இருந்து அவர் நொடிக்கொருதரம் சாரதா, சாரதா என்று தன் மனைவியை அழைத்துக்கொண்டே இருந்தார். பேச ஏதாவது சங்கதி இருந்துதான் தீர வேண்டுமென்பதில்லை. அந்தப் பெயரை உச்சரித்துக்கொண்டிருப்பதே ஒரு யோகம் என்று கருதியிருப்பார் போல. அந்தப் பெண்மணியின் கையில் ஒரு நாவல் இருந்தது. மிகவும் கனமான புத்தகம். அதை எழுதிய ஆசிரியரின் பெயர் எனக்குப் பரிச்சயமாக இல்லை. அது ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரின் நாவலாக எனக்குத் தோன்றவில்லை. இருந்தாலும், அந்தப் பெண்மணி கவனம் நகர்த்தாமல் அந்தப் புத்தகத்திலேயே மூழ்கிக் கிடந்தார். கணவர் அழைக்கும்போதெல்லாம் புத்தகத்தில் இருந்து தலையை நிமிர்த்தாமலேயே பதில் சொல்லிக்கொண்டிருந்தார். தன்னைப் பார்த்து அவர் பதிலளிக்காததில் அந்த மருத்துவர் சற்றும் கோபமோ எரிச்சலோ கொள்ளவில்லை. அவருக்கு அது பழகியிருக்கக்கூடும். அவர் பற்றிக்கொள்ள மனைவியின் குரல் மட்டும் போதும் என்ற முடிவுக்கு வந்திருக்கலாம். அவரது பதில்கள் பொருத்தமானவையாக இல்லாமலே போனாலும், அதில் அவருக்குப் பிரச்னை இராது என்று தோன்றியது.

சட்டென்று எனக்குப் புலப்பட்டுவிட்டது, யுனானி மருத்துவர் இறங்கிய ஸ்டேஷனில் இருந்து அப்படியே குடும்பத்தை விட்டு நகர்ந்திருப்பாரோ என்று ஏன் எனக்குத் தோன்றியது என்பதற்கான காரணம். அந்த வருடம் சித்ரா பவுர்ணமிக்கு ஸ்ரீரங்கம் செல்லலாம் என்று கேசவன் மாமா சொன்னார். காவிரியில் குளித்து, பெருமாளை சேவித்துவிட்டுக் காவிரிக்கரையில் கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்து சித்ரான்னங்கள் சாப்பிட்டு வரலாம் என்ற அவரது யோசனையை அப்பா உடனே ஏற்றுக்கொண்டார். அன்றைக்கு மாலையே அவர் யாரிடமோ சொல்லி அனுப்பி ஐந்து பேருக்கும் ரயிலில் போக வர டிக்கெட்டுக்கு ஏற்பாடும் செய்தார்.

அண்ணாவும் வினய்யும் வீட்டை விட்டுப் போன பிற்பாடு நாங்கள் எங்குமே செல்லவில்லை. பல மாதங்கள் அப்பாவும் அம்மாவும் வீட்டை விட்டேகூட அதிகம் வெளியெ வரவில்லை. அப்பா நீண்ட விடுப்பு எடுத்துக்கொண்டு சிறிது காலம் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தார். மாமா மட்டும்தான் எல்லாம் சரியாகிவிடும், எப்படியும் வந்துவிடுவான்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார். வெறுமனே சொல்லிக்கொண்டிராமல், தன்னால் முடிந்த விதங்களில் எல்லாம் அவர்கள் இருவரையும் தேடவும் செய்தார். இடையில் ஒரு பதினைந்து நாள் ஏதோ ஒரு வடஇந்திய யாத்திரைக் குழுவுடன் சேர்ந்துகொண்டு காசி, கயா, பத்ரிநாத், கேதார்நாத் வரைகூடப் போய்விட்டு வந்தார். எனக்கு நன்றாகத் தெரியும். மாமா தீர்த்த யாத்திரை செல்லவில்லை. ஒருவேளை, அண்ணாவோ வினய்யோ அங்கே கண்ணில் பட்டுவிட மாட்டார்களா என்ற நப்பாசையே அவரது பயணத்துக்குக் காரணம். திருப்பதியில் அண்ணாவைப் பார்த்தது போல இன்னொரு தருணம் நிகழாதா என்று அவர் மிகவும் ஏங்கியிருந்தார். அப்படி ஒரு சந்தர்ப்பம் மட்டும் அமைந்துவிட்டால், என்ன ஆனாலும் கட்டி இழுத்துவந்து விடுவது என்ற வெறியுடன்தான் புறப்பட்டுச் சென்றார். துரதிருஷ்டவசமாக அவரது அந்தப் பயணம் நிறைவடையும் வரை அவரால் இருவரையுமே கண்டுபிடிக்க முடியாமல் போனது.

‘பத்ரிலே உள்ள ஒரு ஆசிரமம் விடாம விசாரிச்சிட்டேன் அத்திம்பேர். காசில அத்தனை படித்துறைக்கும் நேர்ந்துண்டா மாதிரி போய்ப் போய்ப் பாத்தேன். அங்க உள்ள மடங்கள்ள எல்லாம் விசாரிச்சேன். போற இடம், பாக்கற மனுஷா ஒருத்தரையும் விடலே. எல்லாமே பிரயோசனமில்லாம போயிடுத்து’ என்று மேல் துண்டால் கண்ணைத் துடைத்துக்கொண்டு சொன்னார்.

‘நீ ஒருத்தண்டா கேசவா. சாமியாராகல்லாம் ஒரு தராதரம் வேண்டாமோ? இவனுகளுக்கு அப்படியென்ன ஞான சகவாசம் கிடைச்சிதுன்னு கேக்கறேன்? புத்தர் மாதிரி உக்காந்து தவம் பண்ணி கிடைச்சிருக்குமானா அதுக்கும் இந்தக் காலத்துல எல்லாம் வாய்ப்பில்ல பாத்துக்கோ. என்னமோ நாம இப்படி கெடந்து புலம்பிண்டிருக்கணுன்னு எழுதிட்டான். விடு’ என்று சொல்லிவிட்டு அப்பா நகர்ந்து போனார். அம்மா ஒன்றுமே பேசவில்லை. அவள் பார்வையெல்லாம் என் மீதே இருந்தது. எனக்கு அது குறுகுறுவென்றிருந்தது. என்னதான் நினைக்கிறாள் இவள்? நானும் விட்டுப் போய்விடுவேன் என்றா? அப்படித்தான் அந்தக் கோவளத்துப் பக்கிரி சொன்னார். அதையேதான் திருப்போரூர் சாமியும் சொன்னார்.

வினோத் அந்த விவகாரத்தை வீட்டில் கண்டிப்பாகச் சொல்லுவான் என்று நான் எண்ணியிருந்தேன். ஆனால் நாங்கள் திருப்போரூர் போனதையே மறந்துவிட்டவன் போல ,மறுநாள் முதல் மிகத் தீவிரமாகப் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டான். அவன் அப்படி விழுந்து விழுந்து படித்து நான் பார்த்ததே இல்லை. மாலை நேர விளையாட்டுகளை நிறுத்திவிட்டான். பள்ளிக்கூடத்தில்கூட நண்பர்களோடு அவன் அதிகம் பேசுவதில்லை என்று அவன் வகுப்பில் படித்த பையன்கள் சொன்னார்கள். உணவு இடைவேளைகளிலும் அவன் படித்துக்கொண்டே இருந்தான். படித்தவற்றை உடனுக்குடன் எழுதிப் பார்த்தான்.

‘என்னடா ஆச்சு ஒனக்கு?’ என்று நானே ஒரு நாள் கேட்டதற்கு, ‘நன்னா படிச்சிடணும் விமல். நாமதான் நம்ம அப்பாம்மாவ கடேசி வரைக்கும் பத்திரமா வெச்சிண்டு பாத்துக்கணும். போன ரெண்டு பேர பத்தின துக்கம் நம்மள பாத்துத்தான் அவாளுக்குத் தீரணும்’ என்று சொன்னான்.

அப்பா விரக்தியில் பேசிக்கொண்டிருந்தபோது அம்மா என்னையே பார்த்தது எனக்கு மிகவும் உறுத்தியது. நான் சட்டென்று அவள் அருகே போனேன். ‘நான் அப்படியெல்லாம் போயிடமாட்டேம்மா. எனக்கு ஒன்னோட இருக்கறதுதான் பிடிக்கும். என்னிக்கும் நான் ஆத்துலதான் இருப்பேன்’ என்று சொன்னேன். அம்மா என்னை அரவணைத்து வருடிக் கொடுத்தாள். உடனே வினோத்தும் ஓடி வந்து அவளருகே நின்றுகொண்டான். ‘விஜய்யும் வினய்யும் கண்டிப்பா வந்துருவாம்மா. ரெண்டு பேரும் எங்கயோ வேலை தேடிண்டு போயிட்டான்னு நினைக்கறேன்’ என்று சொன்னான். நான் அவனைப் பார்த்தேன். விவகாரமாக எதுவும் பேசிவிடுவேனோ என்று பயந்திருப்பான் போல. ‘நீ வேணா பாருடா. கோட்டும் சூட்டுமா வந்து இறங்கத்தான் போறான் ரெண்டு பேரும்’ என்று மீண்டும் சொன்னான்.

 

அன்று ஒரு விஷயத்தை உறுதிப்படுத்திக்கொண்டேன். திருப்போரூர் சாமி சொன்னதையோ, கோவளத்துப் பக்கிரி சொன்னதையோ எந்நாளும் நான் வீட்டில் சொல்லுவதற்கில்லை. அண்ணா சாமியாராகியிருக்கமாட்டான் என்று அப்பா தீர்மானமாக நம்பியது அம்மாவுக்குப் பிடித்திருந்தாற்போலத் தோன்றியது. அந்த நினைவை மென்று காலம் கழிக்க அவள் விரும்பியிருக்கலாம். அதை ஏன் கெடுக்க வேண்டும்?

இடைப்பட்ட காலத்தில் அப்பா ஒரு வேலை மாறினார். கோவளம் தாஜ் கொரமண்டல் ஓட்டலில் அவருக்குப் புதிய வேலை கிடைத்தது. முன்னைக் காட்டிலும் ஐந்நூறு ரூபாய் சம்பளம் அதிகம் என்று சொன்னார். கேசவன் மாமா கோயிலின் தலைமைப் பரிசாரகராகப் பதவி உயர்வு பெற்றார். அம்மாவுக்குத் தலை நரைக்கத் தொடங்கியது. அப்பாவுக்கு சர்க்கரை வியாதி வந்தது. நான் பத்தாம் வகுப்பில் நாநூற்றுப் பதினான்கு மதிப்பெண்கள் பெற்றுத் தேறினேன். வினோத் மேல்நிலைப் பள்ளிக்குப் போகாமல் பத்தாம் வகுப்பை முடித்த பின்னர் நேரடியாக தரமணியில் இருந்த பாலிடெக்னிக்குக்குப் போய்ச் சேர்ந்தான். வீட்டில் ஒரு இஞ்சினியராவது இருக்க வேண்டும் என்று அப்பா ஆசைப்பட்டதை அவன் தீர்த்துவைக்க முடிவு செய்திருந்தான்.

ஒவ்வொரு வருடமும் அண்ணாவின் பிறந்த நாள், வினய்யின் பிறந்த நாள் வரும்போதெல்லாம் அம்மா மௌனமாகிவிடுவாள். அன்று முழுதும் அவள் சாப்பிடுவதே இல்லை. அப்பாவுக்கும் துக்கம் இல்லாதிருக்காது. ஆனால் தன் துக்கத்தின் சாறை இன்னொருவர் மீது தெளிக்கக் கூடாது என்று அவர் கருதத் தொடங்கியிருந்தார். முன்னைப்போல் அவருக்குக் கோபம் வருவதில்லை. தாஜ் கொரமண்டலுக்குப் போக ஆரம்பித்ததில் இருந்தே அவர் மிகவும் சாதுவாகிப்போனார். அம்மாவோ, மாமாவோ யார் என்ன சொன்னாலும் யோசிக்காமல் உடனே சரி என்று சொல்ல ஆரம்பித்திருந்தார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்த மரியாதையை அவர் வினோத்துக்கும் தரத் தொடங்கியிருந்ததுதான். அவன் என்ன சொன்னாலும் சரி. அவன் என்ன செய்தாலும் சரி. அம்மா எதற்காவது கருத்துக் கேட்டால்கூட, ‘வினோத்த கேட்டுண்டு பண்ணு’ என்பார். காலை ஆறரைக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டுக் கல்லூரிக்குச் சென்று மாலை ஏழு மணிக்கு வீடு திரும்பும் வினோத், அதன்பின் ஒரு மணி நேரம் வீட்டு வேலைகள் என்னவாவது இருந்தால் அதைச் செய்து முடித்துவிட்டு எட்டரைக்குப் படிக்க உட்காருவான். பதினொரு மணி வரை படித்துவிட்டே படுப்பான்.

நம்பிக்கையை உருவாக்குவதல்ல. அதை வழங்குவது ஒரு கலை. வினோத் அக்கலையில் மிகவும் தேர்ச்சியுற்றிருந்தான். என்னைப் பார், என்னைப்போல் நீயும் இரு என்று அடிக்கடி எனக்குச் சொல்லவும் செய்தான். திடீரென்று வீட்டின் மீது அவனுக்கு உண்டான பிணைப்பு, எடுத்துக்கொண்ட பொறுப்புகள் என்னை மிகவும் கவர்ந்தன. இன்னொரு அசம்பாவிதம் வீட்டில் இனி நிகழாது என்று நானே நம்ப ஆரம்பித்திருந்தேன். அப்போதுதான் அந்த சித்ரா பவுர்ணமி வந்தது. மலைக்கோட்டை எக்ஸ்பிரஸில் டிக்கெட் ரிசர்வ் செய்து நாங்கள் குடும்பத்தோடு ஸ்ரீரங்கத்துக்குக் கிளம்பினோம்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

34. லிங்கப் பிரதிஷ்டை

 

 

கொள்ளிடத்தில் தண்ணீர் இருந்தது. அது வழக்கமாகச் சித்திரையில் இருக்கும் தண்ணீர் அளவைக் காட்டிலும் அதிகம் என்று அப்பா சொன்னார். கரையெங்கும் மக்கள் வீசப்பட்ட நாற்றுகளைப்போலச் சிதறிக் கிடந்தார்கள். எங்கும் பேச்சு. எல்லா முகங்களிலும் சந்தோஷம். குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். பெரிய பெரிய ஒயர் கூடைகளில் கட்டுச் சாதங்கள். நதிக்கரையில் துண்டு விரித்து அமர்ந்து சாப்பிடுவதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தார்கள். இருட்ட வேண்டும். அதுதான் கணக்கு. நிலவு தெரியத் தொடங்கிவிட்டால் கொண்டாட்டம் ஆரம்பமாகிவிடும்.

‘முன்னல்லாம் சித்ரா பௌர்ணமிக்கு இங்கே சங்கீத வித்வான்கள் வருவா. ஒரு மைக் கிடையாது. மேடை கிடையாது. ஒண்ணுங்கிடையாது. உக்காந்து பாட ஆரம்பிச்சான்னா மணிக்கணக்கா கேட்டுண்டே இருக்கலாம்’ என்று அப்பா சொன்னார். அப்பாவுக்குப் பூர்வீகம் ஸ்ரீரங்கம். பத்துப் பன்னிரண்டு வயதில் குடும்பம் இடம் பெயர்ந்துவிட்டது. தாத்தா ஒரு பிரிட்டிஷ் அதிகாரிக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தவர் என்று அப்பா சொல்லியிருக்கிறார்.

‘கச்சேரிக்கெல்லாம் போவிங்களா?’ என்று வினோத் கேட்டான்.

‘அப்படின்னு இல்லே. அதெல்லாம் தஞ்சாவூர்லே நடக்கும். ஸ்ரீரங்கத்துல பெருமாள் சேவிக்கறது ஒண்ணுதான் ஜோலி. தினம் ஒரு உற்சவம். புறப்பாடு. சேவாகாலம். சித்ரா பௌர்ணமின்னா மட்டும் இங்க கொள்ளிடத்துக்கு வந்துடுவோம் அப்பல்லாம். நெஜத்த சொல்லணும்னா நான் பாட்டுக் கேட்டதே வருஷத்துல அந்த ஒரு நாள்தான்.’

அப்பா பாட்டு கேட்டோ, எதையாவது பாடி முணுமுணுத்தோ நான் என்றுமே கேட்டதில்லை. அவர் சினிமா பார்க்கமாட்டார். புத்தகங்கள் படிக்கும் வழக்கம் கிடையாது. அவருக்கு நண்பர்கள் இருந்ததில்லை. வேலைக்குப் போவதும் வீட்டுக்கு வருவதும் தவிர அவர் வேறெதையும் செய்து நான் கண்டதில்லை. கேசவன் மாமா தினமணி வாங்க வேண்டும் என்று அடம் பிடித்து வீட்டுக்குப் பேப்பர் போட வைத்தபோது ஓரிரு நாள் எடுத்துப் புரட்டியிருக்கிறார். அதன்பின் அதையும் தொடவில்லை. மாலை ஒருவேளை செய்தி கேட்பார். அதை ஒரு கடமை போலச் செய்வார். மற்றபடி உலகத்தோடு அவருக்கு வேறு தொடர்புகள் இருந்ததில்லை.

இத்தனைக் காலம் இல்லாமல் திடீரென்று இந்த வருடம் ஸ்ரீரங்கத்துக்குப் போகலாம் என்று அவர் சொன்னதே அம்மாவுக்குப் பெரிய வியப்பு. ஆற்றங்கரையில் வேட்டி விரித்து ஐந்து பேரும் மொத்தமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது அதைக் காட்டிலும் நம்ப இயலாத தருணம். எனக்குத்தான் சற்று பயமாக இருந்தது. ‘அதுகள் ரெண்டும் இருந்திருந்தா எவ்ளோ நன்னா இருந்திருக்கும்!’ என்று பெரியவர்கள் மூவரில் யாராவது ஒருவர் சொல்லிவிட்டால்கூட முடிந்தது கதை. அதன்பின் யாரும் சிரிக்க முடியாது. எதையும் பேசவும் முடியாது. இருளைப் போலக் கவியும் மௌனத்தின் வலைப்பின்னல்களுக்குள் ஒடுங்கிவிட வேண்டியதுதான். அதுகூடப் பரவாயில்லை. ஆற்றங்கரை வெட்ட வெளியில் செங்கல் வைத்து அடுப்பு மூட்டி அம்மா மூன்று மணியில் இருந்து நிறைய சமைத்திருக்கிறாள். இதற்காகவே, வரும்போது மளிகை சாமான், பாத்திரம் பண்டங்களெல்லாம் எடுத்துப்போயிருந்தோம். புளியோதரை, தேங்காய் சாதம், தயிர் சாதம். உருளைக்கிழங்கு பொரியல். அபூர்வமாக, அப்பா தானே கடைக்குப் போய் அரைக்கிலோ வாழைக்காய் சிப்ஸ் வாங்கி வந்திருந்தார். ‘ஒனக்குப் பிடிக்குமேன்னுதாண்டா’ என்று கேசவன் மாமா சொன்னார்.

எனக்கு அந்தச் சூழல் மிகவும் பரவசமளித்தது. நதியும் மக்களும். தனித்தனியே பொருள் தரும் பல நூறு சொற்கள் ஒரே சமயத்தில் பல நூறு பேரிடமிருந்து புறப்பட்டு வெளிப்படும்போது பொருள் உதிர்த்து சத்தமாகும் விந்தையைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன். நதியைப் போலவே அதுவும் முடிவற்றதாயிருந்தது. சட்டென்று நதியெங்கும் சொல்லாகி ஓடினால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தேன். என்னமோ தோன்றி, அம்மாவிடம் இதைச் சொன்னபோது, ‘இந்தா இப்போ இத சாப்டு’ என்று ஒரு வாழைப்பழத்தை எடுத்து என்னிடம் கொடுத்தாள்.

எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ஒவ்வொரு சொல்லும் வாழைப்பழமாகிவிட்டால், அம்மா சிப்ஸ் பாக்கெட்டைப் பிரித்துவிடுவாள் என்று தோன்றியது. ஆனால் அதைச் சொல்லவில்லை.

அப்பா, ஸ்ரீரங்கத்தில் கழிந்த தன் இளமைக்காலத்தைச் சொல்லிக்கொண்டிருந்தார். ‘எங்கப்பா பெரிய இங்கிலீஸ் ஸ்காலர். பிரிட்டிஷ்காரனே பிரமிச்சுப் போற மாதிரி இங்கிலீஷ் பேசுவார்’ என்று சொன்னார்.

‘என்ன படிச்சவர்?’ என்று கேசவன் மாமா கேட்டார்.

‘படிப்பெல்லாம் ஒண்ணுமில்லே கேசவா. அப்பாக்கு வெள்ளத்தோல்காரான்னா ஒரு ப்ரீதி. திருச்சினாப்பள்ளில டெபுடி கலெக்டரா இருந்த ஒருத்தனுக்கு இவர் என்னமோ ஹெல்ப் பண்ணியிருக்கார். வாரும் ஓய், நம்மளோடவே இருந்துடும்னு சொல்லி மெட்ராசுக்குக் கூட்டிண்டு போயிட்டான் அவன்.’

‘அதுக்கு முன்னாடி?’

‘ஸ்கூல் வாத்யார். ஸ்கூல்னா என்னன்னு நெனச்சே? திண்ணைப் பள்ளிக்கூடம். உத்தர வீதியிலே ஒரு பட்டாச்சார் ஆத்து வாசல் திண்ணையிலே நடக்கும். கார்த்தால ரெண்டு மணி நேரம். சாயந்திரம் ரெண்டு மணி நேரம். அவ்ளோதான் ஸ்கூல்.’

‘சம்பளம்?’ என்று வினோத் கேட்டான்.

‘சம்பளமாவது ஒண்ணாவது? ஆத்து வாசல்லே வருஷத்துக்கு ரெண்டு தடவை வண்டியிலே அரிசி மூட்டை வந்து இறங்கும். உப்பு புளி பருப்பெல்லாம் ஒரு ரெட்டியார் கடையிலே கணக்கு வெச்சிண்டு வாங்கிக்க வேண்டியது. விஜயதசமி அன்னிக்கு அவர்ட்ட படிக்கிற பிள்ளைகளோட தகப்பனார் கடைக்குப் போய் கணக்கைக் கேட்டு செட்டில் பண்ணிட்டு வந்துடுவா.’

‘அதென்ன விஜயதசமி அன்னிக்கு மட்டும்?’

‘அதென்னமோ தெரியலே. ஆனா அப்பல்லாம் அப்படித்தான். பத்து பிள்ளைகள் படிச்சான்னா, பத்து பேர் ஆத்துலயும் பேசி வெச்சிண்டு, மொத்தமா கொண்டுபோய் கணக்குத் தீத்துடுவா.’

அப்பா இன்னும் நிறைய சொன்னார். பாலக்கரையில் ஒரு இங்கிலீஷ்கார சிப்பாயை குதிரையில் இருந்து இறங்கச் சொல்லி இவரை ஏற்றி உட்கார வைத்து ஓட்டிப் போகச் சொன்னாராம். ‘அந்தக் காலத்துலே வெள்ளைக்கார சிப்பாய் எதிர்லே நின்னு பேசக்கூட எல்லாரும் பயப்படுவா. எங்கப்பா அவாளையெல்லாம் விரல் சொடுக்கிக் கூப்டுவா.’

அம்மா புன்னகை மாறாமல் அவர் பேசுவதை மௌனமாகக் கவனித்துக்கொண்டே இருந்தாள். எத்தனையோ முறை அப்பா இந்தக் கதைகளை அவளுக்குச் சொல்லியிருக்கக்கூடும். பெரிய சுவாரசியங்களற்ற இளமைப்பருவம்தான் என்றாலும், அவரிடம் சொல்வதற்கு அது ஒன்றுதான் இருந்தது. தாத்தாவும் அவரது ஆங்கிலப் புலமையும். தாத்தாவும் பிரிட்டிஷ் அதிகாரிகளும். தாத்தாவும் அவரது ஆளுமையும்.

என் அப்பாவைப் பற்றிப் பிற்காலத்தில் நான் நினைவுகூர என்னவெல்லாம் இருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். அவரது டிரங்குப் பெட்டி ஒன்றைத்தவிர வேறெதுவும் எனக்கு சட்டென்று அப்போது நினைவில் வரவில்லை. ஆனால் இரண்டு பிள்ளைகள் விட்டுவிட்டுப் போன பிறகும், ஒரு மனிதர் தன் பிள்ளைப் பிராயத்தை நினைவுகூர முடிவது பெரிய விஷயம் என்று நினைத்தேன். கேசவன் மாமாதான் அந்த ரகசியத்தைப் பிற்பாடு போட்டு உடைத்தார்.

‘புரியலியா உனக்கு? எத்தனை வயசானாலும் எத்தனை கஷ்டம் அனுபவிச்சாலும், கடைசிக்காலம் வரைக்கும் அவர் அவரோட தகப்பனாரோடதான் இருந்தார். அவர் சாகறவரைக்கும் இவர்தான் வெச்சிக் காப்பாத்தியிருக்கார். இன்னிக்கு உங்க ரெண்டு பேருக்கும் அவரோட தகப்பனாரைப் பத்தி சொல்றார்னா, இந்த சுபாவம் உங்களுக்காவது நிலைக்கணும்னு நினைக்கறார்.’

நாங்கள் வெகு நேரம் பேசிக்கொண்டே இருந்தோம். நானும் வினோத்தும் படிப்பில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்படுவது பற்றி அப்பாவுக்கு மிகுந்த சந்தோஷம் என்பதை அன்று வெளிப்படையாகச் சொன்னார்.

‘நமக்கெல்லாம் இது ஒண்ணுதாண்டா போக்கிடம். படிப்பில்லேன்னா பிழைப்பில்லே.’

‘சாப்பிடலாமா?’ என்று அம்மா கேட்டாள்.

‘இன்னும் பத்தே பத்து நிமிஷம்மா’ என்று சொல்லிவிட்டு, ‘அப்பா நான் ஆத்துல குளிக்கணும்’ என்று வினோத் சொன்னான்.

‘இருட்டிடுத்தேடா. மொதல்லயே சொல்லியிருக்கக்கூடாதா?’

‘பரவால்லப்பா. பத்தே நிமிஷம். இவ்ளோ தண்ணிய பாத்துட்டு குளிக்காம போனா நன்னாருக்காது.’

அப்பா மறுக்கவில்லை. ‘நீயும் போறியாடா?’ என்று என்னைக் கேட்டார்.

‘வேண்டாம். அவனுக்கு ஜலதோஷம் பிடிச்சுக்கும்’ என்று அம்மா உடனே சொன்னாள்.

‘பரவால்லம்மா. அம்ருதாஞ்சன் தேய்ச்சிக்கறேன்’ என்று சொல்லிவிட்டு சட்டென்று சட்டையைக் கழட்டிவிட்டேன்.

‘நீயும் வேணா போயேண்டா கேசவா’ என்று அம்மா மாமாவிடம் சொன்னாள்.

‘இல்லேக்கா. இப்ப குளிக்கணும்னு தோணலை. சாயந்திரம் ஸ்டேஷன்லயேதான் குளிச்சாச்சே!’

நானும் வினோத்தும் ஆற்றில் இறங்கினோம். பெரிய ஆழம் இல்லை. ஆனால் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்ததால் ஒரு இழுப்பு இருந்தது. அது சுகமாகவும் இருந்தது. வெயில் தணிந்து குளிர்க்காற்று வீச ஆரம்பித்திருந்ததால் மிகவும் இதமாக இருந்தது. நாங்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நீந்திக் குளித்தோம். அப்பாவும் அம்மாவும் கரையில் அமர்ந்து எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அண்ணாதான் எங்கள் மூவருக்குமே நீச்சல் கற்றுக் கொடுத்தவன். ‘கத்துக்கறதுக்கு அல்லிக்குளம் சரிப்படாது. நாம தையூர் தோப்புக்குப் போயிடுவோம்’ என்று சொல்லி நடத்தியே அழைத்துச் செல்வான். தையூர் பண்ணையின் மாந்தோப்புக்குள் ஒரு தரைக் கிணறு உண்டு. நல்ல விஸ்தாரமாகப் பதினைந்தடி விட்டத்துக்குப் பரந்து விரிந்த கிணறு. உள்ளே இறங்கிப் போவதற்குக் கருங்கல் வைத்த படிக்கட்டுகள் உண்டு. பகல் பதினொரு மணிக்கு மேல் பெண்கள் கூட அந்தப் படிக்கட்டுகளில் உட்கார்ந்து குளிப்பார்கள். பண்ணைக்குப் பெரிய மனசு. குளிக்க வரும் யாரையும் கூடாது என்று தடுக்க மாட்டார். ‘பசங்களா, மாங்கா அடிச்சா மட்டும் சும்மா விடமாட்டேன். சும்மா குளிச்சிட்டுப் போறதுனா போங்க’ என்று சொல்லுவார். நாங்கள் குளித்துவிட்டு ஏழெட்டு மாங்காய் அடித்துத் தின்றுகொண்டேதான் திருவிடந்தைக்குத் திரும்புவோம்.

தரைக் கிணறில் நீச்சல் பயின்ற பிறகு நான் தனியே சென்று அல்லிக் குளத்தில் நீந்த ஆரம்பித்தேன். அண்ணா சொன்னது சரிதான். நீச்சல் பயிலக் கிணறே சரி. ஆனால் வினய் எவ்வளவோ கேட்டும் அவன் கடலுக்கு அழைத்துச் செல்ல மட்டும் மறுத்துவிட்டான். ‘எனக்குக் கடல் நீச்சல் தெரியாது. எனக்குத் தெரியாத ஒண்ணை நான் உங்களுக்குச் சொல்லித்தர முடியாது’ என்று சொன்னான். கொள்ளிடத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது நான் அவனை மட்டுமேதான் நினைத்துக்கொண்டிருந்தேன். என் மனமெங்கும் நிறைந்திருந்த அவனது ஞாபகங்கள் பொங்கி வெளியேறி நீரோடு கலந்து நகர்வது போலச் சொற்களற்று உணர்ந்தேன். சின்னச் சின்ன விஷயங்கள்தாம். ஒரு ஞாயிற்றுக் கிழமை அவன் அப்பாவையும் மாமாவையும் எங்களோடு சேர்த்து அழைத்துக்கொண்டு அல்லிக் குளத்துக்கு வந்தான்.

‘எதுக்குடா?’ என்று அப்பா கேட்டார்.

‘எப்படி கத்துண்டிருக்கான்னு பார்க்கறதுக்கு’ என்று சொல்லிவிட்டு எங்களைத் தண்ணீரில் குதிக்கச் சொன்னான்.

அந்த வயதில் அப்பாவின் முன்னால் அது ஒரு பெரும் வீர சாகசமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றிவிட்டது. என்றுமில்லாத வழக்கமாக, இருபதடி தொலைவுக்கு நடந்து சென்று அங்கிருந்து ஓடி வந்து குளத்தில் பாய்ந்து குதித்தேன்.

‘டேய் பாத்து! பாத்து!’ என்று அப்பா கத்தினார். அது இருபதடி நீளக் குளம். நான் அப்பாவை மேலும் வியப்பூட்டும் விதமாக நீருக்கடியிலேயே நீந்திச் சென்று அவருக்கு எதிர்ப்புறம் கரையேறி நின்றேன். வினய்யும் வினோத்தும் தண்ணீரில் அன்றைக்குக் குட்டிக்கரணமெல்லாம் அடித்துக் காட்டினார்கள்.

‘பரவால்லேடா விஜய். உன் தம்பிகளுக்கு உருப்படியா ஒண்ண கத்துக்குடுத்துட்டே’ என்று அப்பா சொன்னார்.

சட்டென்று இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்து வினோத்திடம் சொல்லலாம் என்று அவனைத் தேடினேன். எனக்குப் பக்கத்தில்தான் அவனும் குளித்துக்கொண்டிருந்தான். சட்டென்று எங்கே போனான்?

சுற்றுமுற்றும் பார்த்தேன். அவன் என் கண்ணில் படவில்லை. கரையேறி விட்டானா என்று பார்த்தேன். இல்லை. அம்மா, அப்பா, மாமா மூவர் மட்டும்தான் அங்கே அமர்ந்திருந்தார்கள். எங்கே போய்த் தொலைந்தான் இவன்?

நான் மேலும் சிறிது தூரம் நீந்திச் சென்று அவன் தென்படுகிறானா என்று பார்த்தேன். சட்டென்று யாரோ என் காலை இழுப்பது போலிருந்தது. சுதாரித்துக்கொண்டு திரும்பினேன். வினோத்தான்.

‘நாயே, பயந்தே போயிட்டேன்’ என்று சொன்னேன்.

கழுத்தளவு ஆழத்தில் அவன் என் கையைத் தேடித் துழாவி அதை இழுத்து எதையோ அதில் வைத்து அழுத்தினான்.

‘என்னடா?’

‘எடுத்துப் பாரு.’

நான் என் கையை நீரில் இருந்து வெளியே எடுத்து உயர்த்திப் பார்த்தேன். அது ஒரு சிவ லிங்கம். மிகவும் சிறியது. ஓர் உள்ளங்கைக்குள் அடங்கிவிடக் கூடியதுதான். வழுவழுப்பாக இருந்தது.

‘ஏதுடா இது?’ என்று கேட்டேன்.

‘தெரியலே விமல். தானா வந்து என் கையிலே உக்காந்தது!’ என்று சொன்னான்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

35. விஸ்வரூப தரிசனம்

 

 

திருப்போரூர் சாமியைத்தான் நான் நினைத்துக்கொண்டேன். அந்த மனிதரிடம் என்னவோ இருந்திருக்கிறது. போகிறபோக்கில் சொல்லிவிட்டுப் போனாலும், அவரது சொல் எப்படியோ வரலாறாகிவிட்டது.

ஆற்றில் அந்தச் சிவ லிங்கம் கிடைத்ததை நான் அப்போது பெரிதாக நினைக்கவில்லை. யாராவது போட்டிருப்பார்கள் என்று வினோத்திடம் சொன்னேன்.

‘ஆனா இத்தனை நூறு பேர் குளிக்கறாளே. யாருக்கும் கிடைக்காம இது ஏண்டா எனக்குக் கிடைச்சிருக்கும்?’ என்று வினோத் கேட்டான்.

‘தெரியலே. ஆனா நன்னாருக்கு. சின்னதா, அழகா.’

அவன் என் கையில் இருந்து அந்த லிங்கத்தை வாங்கிப் பார்த்தான். எனக்கென்னவோ அவனது கை நடுங்குவதுபோலத் தோன்றியது.

‘விமல், இது ஸ்ரீரங்கம். வைஷ்ணவத் தலம். இங்க ஓடற ஆத்துத் தண்ணில சிவலிங்கத்த கொண்டு வந்து யார் போட்டிருக்க முடியும்?’ என்று வினோத் கேட்டான்.

‘இங்கதான் போடணுமான்ன? வேற எங்கயாவது யாராவது போட்டிருப்பா. ஓட்டத்துல அது அடிச்சிண்டு வந்திருக்கும்டா’ என்று சொன்னேன். ஆனால் சொல்லும்போதே எனக்கு யோசனையாக இருந்தது. அந்த லிங்கம் கருங்கல்லால் ஆனது போலத்தான் இருந்தது. ஆனால் வழுவழுப்பாக இருந்தது. தூக்கிப் பார்த்தால் கால் கிலோ கனம் தெரிந்தது. தண்ணீரில் அடித்து வந்திருக்க முடியுமா? போட்டால் மூழ்கித்தான் போகும் என்று தோன்றியது. ஏனென்றால், நாங்கள் நின்ற இடத்தில் காலுக்கடியில் நிறைய கூழாங்கற்கள் இருந்தன. உருளைக்கிழங்கு அளவுக்கான கற்கள். இந்த லிங்கமும் அநேகமாக அந்தக் கற்களைப் போன்ற கனபரிமாணம் கொண்டதுதான். எங்கிருந்து அடித்து வரப் பட்டிருக்கும்?

வினோத் சொன்னான், ‘எனக்கு வேற என்னமோ தோணறதுடா. திருப்போரூர் சாமி சொன்ன மாதிரி இது சிவன் எனக்குக் குடுத்த பிரத்தியட்சக் காட்சியா இருக்குமோ?’

அதெல்லாம் வாய்ப்பே இல்லை என்று சொன்னேன். ‘பிரத்தியட்சம்னா நேர்ல வந்து நிக்கறது. இந்த மாதிரி பொம்மையா கிடைக்கறதில்லே.’

‘ஆனா கோவிந்த ஜீயருக்கு இந்த மாதிரிதான் ஒரு லிங்கம் கிடைச்சதா வினய் என்கிட்டே சொல்லியிருக்கான்.’

‘அது யாரு?’

‘ராமானுஜரோட தம்பியாம். ஐ திங்க் சித்தி பிள்ளை. அவருக்கு காசிலயோ எங்கயோ குளிக்கறப்போ இந்த மாதிரி ஒரு சிவலிங்கம் கிடைச்சிதாம். அத எடுத்துண்டுபோய் காளஹஸ்தியிலே பிரதிஷ்டை பண்ணி பூஜை பண்ண ஆரம்பிச்சிட்டாராம்.’

‘ஓஹோ. அப்பறம் எப்படி அவர் ஜீயர் ஆனார். ஸ்மார்த்தாள்ள ஜீயர் உண்டான்ன?’ என்று கேட்டேன்.

வினோத் அதற்கு பதில் சொல்லவில்லை. அவன் அந்த லிங்கத்தையே வெகு நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். சட்டென்று என்ன நினைத்தானோ. ‘இங்க பக்கத்துலதான் திருவானைக்கா இருக்கில்லே?’ என்று கேட்டான். கரையேறியதும் அப்பாவிடமும் அதைத்தான் கேட்டான்.

‘ஆமா. ஸ்ரீரங்கத்துலேருந்து நடந்து போற தூரம்தான். ரயில்வே கேட்டுக்கு அந்தப் பக்கம் திருவானைக்கா. இந்தப் பக்கம் ஸ்ரீரங்கம்’ என்று அப்பா சொன்னார். அவன் அதற்குமேல் ஒன்றும் கேட்கவில்லை, யாருடனும் பேசவும் இல்லை. அமைதியாகவே சித்ரான்னங்களை உண்டான். ஆற்றில் கை கழுவ இறங்கியபோது, ‘நாளைக்குக் கார்த்தாலே திருவானைக்காவுக்குப் போகணும்னு தோணறதுடா. அப்பாட்ட சொல்லேன்’ என்று சொன்னான்.

அன்றிரவு நாங்கள் ஆண்டவன் ஆசிரமத்து மடத்தில் தங்கினோம். மாமாவுக்கு அங்கே ஒருவரைத் தெரிந்திருந்தது. விடியற்காலை ஐந்து மணிக்கு எழுந்து தயாராகிவிட்டால் விஸ்வரூப தரிசனத்துக்கு அழைத்துச் செல்வதாக அவர் சொல்லியிருந்தார். அப்பாவுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. ‘நாலு மணிக்கே எழுந்துடணும்’ என்று அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். இரவு பன்னிரண்டரைக்கு நான் பின்புறம் செல்லக் கண் விழித்தபோது, அப்பா விழித்துக்கொண்டு அமர்ந்திருக்கக் கண்டேன்.

‘தூங்கலியாப்பா?’ என்று கேட்டபோது, ‘கார்த்தால சேவிச்சுட்டு அப்பறமா தூங்கிக்கலாம்னு நினைச்சேன்’ என்று சொன்னார். நான் வினோத்தைத் திரும்பிப் பார்த்தேன். அவன் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தான். அவன் கேட்டது நினைவுக்கு வந்து அப்பாவிடம் அதைச் சொன்னேன், ‘விஸ்வரூப தரிசனம் முடிஞ்சதும் திருவானைக்காவுக்கு ஒரு நடை போயிட்டு வருவோமாப்பா?’

‘எதுக்கு?’ என்று அப்பா கேட்டார்.

‘இல்லே. அதுவும் பழைய கோயில். நாயன்மாரெல்லாம் பாடியிருக்கா. போனதே இல்லியேன்னுதான் கேட்டேன்.’

அப்பா பதில் சொல்லவில்லை.

‘வினோத்தும் ஆசைப்பட்டான்ப்பா’ என்று சொன்னேன்.

‘அப்படியா? உன்கிட்டே சொன்னானா?’

நான் தலையசைத்தேன். தண்ணீரில் கிடைத்த லிங்கத்தைப் பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று வினோத் என்னிடம் சொல்லியிருந்தான். அவன் அதைச் சொல்லியிருக்காவிட்டாலும் நானாக அதை அப்பாவிடம் சொல்லியிருப்பேனா என்பது சந்தேகம்தான். இது ஒன்றும் அமானுஷ்யமோ, அற்புதமோ இல்லையென்றாலும், அப்பாவும் அம்மாவும் நிச்சயமாகக் கலவரமடைந்துவிடுவார்கள் என்று தோன்றியது. ஆனால் அம்முறை ஏனோ எனக்குச் சற்றும் பதற்றமோ, கவலையோ இல்லை. மாறாக நானே நினைத்திராத ஒரு வியப்புணர்வே என்னை ஆட்கொண்டிருந்தது. எப்படி நிகழ்கிறது இதெல்லாம்! எனக்கென்னவோ, வினோத் நிச்சயமாக எங்களோடு ஊர் திரும்பப் போவதில்லை என்று தோன்றிவிட்டது.

இது ஒரு சூட்சுமம். எதிலும் பொருந்தாத ஏதோ ஒரு ரகசியம். சமிக்ஞை. திருப்போரூர் சாமிகூட இப்படியொரு சந்தர்ப்பத்தை ஞான திருஷ்டியில் கண்டு சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்றுதான் நினைத்தேன். ஆனாலும் அவர்மூலம் அது வெளிப்பட்டிருக்கிறது. ‘நீயும் போகத்தான் போற.’

எப்படி முடிந்தது? யார் நிகழ்த்துவது இதையெல்லாம்?

அண்ணா விட்டுச் சென்றபோதும், வினய் காணாமல் போனபோதும் எழாத ஒரு வியப்புணர்வு அது. இதுதான் நடக்கப்போகிறது என்று தெரிந்துவிட்ட பிறகு மனம் அதற்கு ஏதோ ஒரு கட்டத்தில் தயாராகிவிடுகிறது. இரண்டு பேர் இல்லாமல் போனபோது வீடு அடைந்த பரபரப்பை நான் அறிவேன். முட்டிக்கொண்டு அப்பாவும் அம்மாவும் அழுத சுவர்களை எத்தனையோ தினங்கள் தொட்டுத் தடவிப் பார்த்திருக்கிறேன். எங்கள் வீட்டுச் சுவர்களெல்லாம் கண்ணீரால் பூசப்பட்டவை. அது காய்ந்து காரையாகி ஆங்காங்கே பெயர்ந்து நிற்கும். வீட்டைச் செப்பனிட வேண்டும் என்று அப்பா நினைத்ததே இல்லை. பூச்சுவேலையின் அவசியம் உணரப்படும் போதெல்லாம், திரும்பத் திரும்பக் கண்ணீர் தானாகச் சென்று சுவரில் படியும். காலக்கிரமத்தில் காய்ந்து போகும்.

எனக்கென்னவோ மறுநாள் பொழுது விடியும்போதே வினோத் எங்களோடு இருக்கமாட்டான் என்றுதான் தோன்றியது. அதற்காக நான் தூங்காமல் விழித்துக்கொண்டே எல்லாம் இருக்கவில்லை. நன்றாகவே தூங்கினேன். ஆனால் காலை வினோத்தான் என்னை எழுப்பினான். ‘டேய், அப்பா ரெடியாயிட்டா. அம்மா குளிக்கப் போயிருக்கா. சீக்கிரம் எழுந்து பல்லைத் தேய். கோயிலுக்குப் போகணும்’ என்று சொன்னான்.

எனக்குக் கண்ணைத் திறக்கவே முடியாத அளவுக்கு எரிச்சலாக இருந்தது. முதல் நாள் முழுவதும் திருச்சி, பாலக்கரை என்று எங்கெங்கோ அலைந்து திரிந்துவிட்டுத்தான் நாங்கள் கொள்ளிடக் கரைக்குப் போய்ச் சேர்ந்தோம். ‘இன்னிக்கு கோயிலுக்கு வேண்டாம். கூட்டம் அதிகம் இருக்கும். நாளைக்குக் கார்த்தால போகலாம்’ என்று அப்பா சொல்லியிருந்தார். நாளெல்லாம் நாங்கள் ஒதுங்க ஒரு இடம் தேடாதிருப்பதற்காகவே, அவர் எங்களை தனது சிறு வயதில் சுற்றித் திரிந்த இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்று காட்டினார். ‘ராத்திரி மடத்துக்குப் போயிடலாம் அத்திம்பேர்’ என்று கேசவன் மாமா சொல்லியிருந்ததால் ராத்தங்கல் பிரச்னை விட்டது என்று நினைத்திருப்பார். அப்பாவுக்குச் செலவு செய்ய மனம் வராது. சிறு வயதில் இருந்தே ஏழைமையில் உழன்று வந்த மனிதர் அவர். சிறிய வேலைகள், சிறிய சம்பளம் என்று வாழ்க்கை அவருக்குச் சிக்கனமாக வாழச் சொல்லிக் கொடுத்திருந்தது. நான்கு பிள்ளைகளை ஒருவேளைகூடப் பட்டினி போடாதிருப்பதே தன் சாதனை என்று மாமாவிடம் ஒருமுறை சொல்லியிருக்கிறார். இதைக் கேசவன் மாமா எனக்குச் சொல்லியிருக்கிறார்.

 

வினோத் என்னை மீண்டும் மீண்டும் எழுப்பிக்கொண்டிருந்தான். வேறு வழியின்றி நான் எழுந்து உட்கார்ந்தேன். அந்த அதிகாலை நேரத்திலேயே மடத்தில் நிறைய நடமாட்டம் இருந்தது. உடம்பெங்கும் திருமண் சாத்திக்கொண்டு யார் யாரோ வேகவேகமாக எங்கோ ஓடிக்கொண்டிருந்தார்கள். ஜீயர் கெளம்பறார் என்று யாரோ சொன்னார்கள். ‘சீக்கிரம் போய் பல்லைத் தேய்டா’ என்று வினோத் சொன்னான். நான் களைப்புடன் எழுந்து மடத்தின் பின் பக்கம் போனேன். பல்லைத் தேய்த்துவிட்டுக் கிணற்றடியில் குளித்து முடித்தபோது, அங்கிருந்த குளியலறைக்குள் இருந்து அம்மா குளித்து முடித்துவிட்டு மடிசாருடன் வெளியே வந்தாள். என்னைக் கண்டதும், ‘ரெடியாயிட்டியா? சமத்து’ என்று சொன்னாள்.

அப்பா எனக்கும் வினோத்துக்கும் திருமண் இட்டுவிட்டார். ஒரு மாறுதலுக்கு நாங்கள் இருவரும் அன்றைக்கு வேட்டி கட்டியிருந்தோம்.

‘மடத்துல தங்கினா வேஷ்டி கட்டிண்டுதான் ஆகணும். திருமண் இட்டுண்டுதான் தீரணும்’ என்று மாமா சொன்னார்.

நாங்கள் விஸ்வரூப தரிசனத்துக்குக் கோயிலுக்குப் போய்ச் சேர்ந்தோம். நூற்றுக்கணக்கில் மக்கள் குவிந்திருந்தார்கள். இன்னும் உள்ளே திரை திறந்தபாடில்லை என்று தெரிந்தது. காப்பிகூடக் குடிக்காமல் கிளம்பி வந்தது எனக்கு என்னவோ போலிருந்தது. அடிக்கடி கொட்டாவி வந்தது. வினோத்தைத் தனியே கூப்பிட்டுச் சொன்னேன், ‘ராத்திரி அப்பாகிட்ட கேட்டேண்டா. ஆனா அவர் ஒண்ணும் பதில் சொல்லலே.’

‘எது?’

‘திருவானைக்கா போகணும்னு சொன்னியே, அது.’

‘பரவால்ல விடு’ என்று வினோத் சொன்னான். இதுவும் எனக்கு வியப்பாக இருந்தது. ஒரே இரவில் முந்தைய தினத்தின் உணர்ச்சிப் பெருக்குகள் வடிந்துவிடுமா? சிவ லிங்கத்தின் சக்தி அவ்வளவுதானா? ஒருவேளை நான்தான் தேவையில்லாமல் கற்பனை செய்துகொண்டுவிட்டேனோ என்று தோன்றியது.

உள்ளே மணியடிக்கும் சத்தம் பலமாகக் கேட்டது. கோயில் யானை முதல் சேவைக்காக முன் மண்டபத்தில் நுழைந்தது. கூடியிருந்த அத்தனை பேரும் ரங்கா ரங்கா என்று கோஷமெழுப்பினார்கள். நாங்கள் கூட்டத்தில் முந்தித் திணித்துக்கொண்டு உள்ளே போக ஆரம்பித்தோம். ‘சீக்கிரம் வாடா’ என்று வினோத் என் கையைப் பிடித்து இழுத்தான். அப்பாவின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு கேசவன் மாமா அவனுக்கும் முன்னால் உள்ளே போய்க்கொண்டிருந்தார். அம்மா என் பக்கத்தில்தான் இருந்தாள். அத்தனை நெரிசலிலும் சற்றும் முகம் சுளிக்காமல் அவள் ஸ்ரீசூக்தம் சொல்லிக்கொண்டிருந்ததைக் கவனித்தேன்.

என்னால் அந்த அழுத்தத்தையும் நெரிசலையும் தாங்க முடியவில்லை. மூச்சு முட்டிக்கொண்டிருந்தது. யாரோ என் காலைக் கட்டி பின்னால் இழுப்பதுபோல உணர்ந்தேன். நான்கு புறமும் ஜனக்கூட்டம் இடித்துத் தள்ளிக்கொண்டு முன்னால் போகப் பார்க்க, என்னையறியாமல் நான் என்னைத் தள்ளுகிறவர்களை விலக்கி ஒவ்வோர் அடியாகப் பின்னால் போய்க்கொண்டிருந்தேன். அம்மா என்னைக் கவனிக்கவில்லை. இப்போது எனக்கும் அவளுக்கும் நாலைந்தடி இடைவெளி ஏற்பட்டுவிட்டிருந்தது.

என்னமோ தோன்றியது. சரி போ, இந்தக் கூட்டம் முதலில் உள்ளே போய்வரட்டும்; முடிந்தால் பிறகு போய்க்கொள்ளலாம் என்று நினைத்து, வலுக்கட்டாயமாக நான் என்னைப் பின்னால் செலுத்திப் போய்க்கொண்டே இருந்தேன். அப்பா, மாமா, வினோத், அம்மா எல்லோரும் சன்னிதிக்குள் போய்விட்டார்கள். நான் வெளிப்பிராகார மண்டபத்தின் ஓரத்துக்கு வந்து சேர்ந்திருந்தேன். அப்போதுதான் மூச்சுவிட முடிந்தது. அதற்குள் எனக்கு வியர்த்துப்போயிருந்தது.

என்ன ஜனம் இது? சற்றும் ஒழுங்கற்ற வடிவில்தான் பக்திப் பெருக்கு இருக்குமானால் ஒழுங்கின் இன்றியமையாமையைப் பேச அவசியமென்ன? திருப்பதியில் இதைக் காட்டிலும் பெரிய கூட்டம்தான். ஆனால் அங்கே ஒழுங்கு செய்ய ஆட்கள் இருந்தார்கள். சத்தம் போட்டுக் கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தெரிந்து வைத்திருந்தார்கள். கணப் பொழுது தரிசனம் முடித்துவைத்து, அடுத்த சில விநாடிகளில் சன்னிதிக்கு வெளியே கொண்டு தள்ளிவிடுவார்கள். இங்கே அந்த நேர்த்தி இல்லை. நேர்த்தியற்ற வழிபாட்டில் எனக்கு ஆர்வமில்லை.

வெளியே வந்ததும் அப்பாவும் அம்மாவும் ‘எங்கடா போயிட்டே? நன்னா சேவிச்சியா?’ என்று கேட்பார்கள். வெறுமனே தலையசைத்துவிட்டால் போதும் என்று நினைத்துக்கொண்டேன். சிறிது நேரம் உட்காரலாம் என்று நகர்ந்து சென்று மண்டபத் தூண் ஓரம் ஏறி அமர்ந்தேன்.

யாரோ கூப்பிடுவது மாதிரி இருந்தது.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

36. காற்றில் கரைதல்

 

 

என் கனவுக்குள் நான் தூங்கிக்கொண்டிருந்தேன். வாழ்வில் என்றுமே அப்படியொரு நிச்சலனமான உறக்கம் எனக்கு வாய்த்ததில்லை. வெளியெங்கும் பஞ்சு மெத்தைபோல நீலம் சுருண்டு சுருண்டு மேகமாக உருக்கொண்டு வந்து கவிந்து நின்றது. அது குளிர்ச்சியாக இருந்தது. அதுவரை நான் நீல நிற மேகத்தைக் கண்டதில்லை. மேகம் சாம்பல் பூசித்தான் இருக்கும். இந்த நீலம் வான்வெளிக்குரியது. ஆனால் அதை மேகம் பூசியிருந்தது. மெல்ல மெல்ல அது இறங்கி வந்து என் பக்கங்களை நிரப்பியது. சுற்றிலும் நீலம். அடகுக்கடை சேட்டுகளின் திண்டுத் தலையணைகளைப் போல. ஆனால் கனமற்றது. ஓரிடம் நிற்காமல் மிதந்துகொண்டே இருந்தது. அம்மேகச் சுருள்களுள் ஒன்று, நான் புரண்டு படுத்தபோது எனக்குக் கீழே சென்று என்னை ஏந்திக்கொண்டது. அதுவும் சுகமாக இருந்தது. அப்போதுதான் முதல் முதலில் மேகத்தின் மென்மையை உணர்ந்தேன். சிறகினும் மெல்லிய புதரொன்று உண்டா உலகில்? அது புதர்தான். நீர்த்துளிகள் மறைத்த மேகப்புதர். அப்படியே என்னை அள்ளி ஏந்தி அந்தரத்தில் அது கொண்டு சென்றது. மூடிய கண்களுக்குள் நீலம் மட்டுமே நிறைந்திருந்தது. என்னை யாரோ ஒரு தேவதை தூக்கிச் செல்வதாக முதலில் நினைத்தேன். ஆனால் என்னால் புரண்டு படுக்க முடிந்தது. உருள முடிந்தது. எழுந்து உட்கார முடிந்தது. நடக்கவும் ஓடவும்கூட முடிந்தது. இத்தனையும் சாத்தியமானாலும், நான் இன்னொன்றின் கரத்தில் இருப்பதை உணர்ந்தேன். நீல நிற மேகம்.

அந்த அனுபவம் நான் அதற்குமுன் அடையாதது. ஒரு சிறுவனின் பரவசத்துடன் அதை எதிர்கொண்டேன். முடிவற்ற வெளியில் மேகப் பந்துகள் என்னைச் சுமந்துகொண்டு எங்கெங்கோ போய்க்கொண்டிருந்தன. சிறிது நேரம் தரையில் இறங்கி நின்றால் நன்றாயிருக்கும் என்று தோன்றியது. குதிக்கலாம் என்று பார்த்தால், நான் நிற்பதே தரையில்தான் என்று தெரிந்தது. ஆனால் தரை தெரியவில்லை. நிலமும் வானும் மறைந்து முழுதும் நீலமயமாகியிருந்தது. சரி இப்படியே இருந்துவிட்டுப் போய்விடுவோம் என்று நினைத்து மீண்டும் அதன் மடிகளில் படுத்துக்கொண்டேன்.

ஒரு நாள். இரண்டு நாள். ஒரு மாதம். ஒரு வருடம். பத்து வருடங்கள். எனக்குக் காலம் மறந்தே போனது. கடந்த தினங்களின் நினைவுகள் யாவும் அழிந்து நானொரு வெள்ளைத் தாள் ஆகியிருந்தேன். புள்ளிகள், கோடுகள், கிறுக்கல்கள் ஏதுமற்ற வெறும் தாள். ஒரு வெள்ளைத் தாளை யாரும் விமரிசித்துவிட முடியுமா? சிறப்பு என்ற ஒற்றைச் சொல்லுக்குள் எத்தனை யுகங்களை அது கழித்திருக்கும்! நானொரு வெள்ளைத் தாள். நன்றாகத்தான் இருந்தது. அதைவிட என் வெண்மையையும் மாசற்ற பூரணத்துவத்தையும் நானே பார்க்கவும் உணரவும்கூட முடிந்தது. சதையோ எலும்புகளோ ரத்தமோ நரம்புகளோ இல்லாமல் போய் ஒரு டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டுக்குப் போகிற இரட்டைப் பின்னலணிந்த பெண்ணின் சைக்கிள் ஹேண்ட் பாரில் சொருகிய வெள்ளைத் தாளைப் போலவே இருந்தேன்.

சுமார் தொண்ணூறு வருடங்கள் நான் அப்படியே மேகப் பொதிகளால் தூக்கிச் செல்லப்பட்டு உலகெங்கும் சுற்றி, தரைக்கு வந்து சேர்ந்தபோது, திருவானைக்கா ரயில்வே லெவல் கிராசிங்கை ஒட்டியிருந்த ஒரு குடிசைக்குள் கண் விழித்தேன்.

‘எந்திரிச்சிட்டியா தம்பி?’ என்று என்னெதிரே வந்து அந்தக் கிழவன் சிரித்தான். ‘இந்தா, இதைக் குடி’ என்று ஒரு குவளையில் எதையோ தந்தான். நான் ஒன்றும் கேட்காமல் அதை வாங்கிக் குடித்தேன். காரமாக இருந்தது.

‘காப்பித்தண்ணில இஞ்சி இடிச்சிப் போட்டது. காரம் உறைக்குதா?’ என்று கேட்டான்.

‘ஆமா.’

‘அப்ப சரியா இருக்கும். குடி.’

‘இது எதுக்கு?’

‘சாப்ட்ட இல்லே சக்கர பொங்கல்? அது செரிக்கறதுக்கு.’

நான் சிரித்தேன். அந்த இஞ்சிக் காப்பியைக் குடித்து முடித்துக் குவளையைக் கீழே வைத்தேன். என் வாழ்வில் அவனொரு தீராத வியப்பாகப்போகிறான் என்பது எனக்குப் புரிந்துவிட்டது. அதுதான் என்னை அவன்பால் ஈர்த்துச் சென்றது. ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். நான் ஸ்ரீரங்கத்துக்குச் சென்றிருக்கிறேன். எனக்கு அது அந்த ஊருக்கு முதல் பயணம். அப்பா உள்பட எங்களைத் தெரிந்தவர்கள் அங்கே யாரும் கிடையாது. கூட்டத்தில் உதிர்ந்த முகங்களாக இரண்டு நாள்களாக அம்மண்ணைத் துழாவிக்கொண்டிருக்கிறோம். சித்ரா பவுர்ணமி. விஸ்வரூப சேவை. ஆண்டவன் ஆசிரமத்துச் சாப்பாடு. இதோ சன்னிதிக்குள் போயிருக்கும் அப்பாவும் அம்மாவும் வெளியே வந்துவிட்டால், புறப்பட்டு ஊருக்குப் போகவேண்டியதுதான்.

முன் மண்டபத்தில் நான் அவர்களுக்காகக் காத்திருந்தபோதுதான் அவன் என்னை நெருங்கித் தொட்டான். ஈஈ என்று கேவலமாகச் சிரித்தான். முதலில் அவனை ஒரு பிச்சைக்காரன் என்று நினைத்தேன். உடனே அவன் ஒரு பைத்தியக்காரனாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. அழுக்கேறிக் கசங்கிக் கிழிந்திருந்த ஒரு நாலு முழ வேட்டியும், யாருக்கோ தைத்த அளவில் தொளதொளத்த சட்டையும் அணிந்திருந்தான். தாடி மீசை மண்டியிருந்தது. பராமரிக்கப்படாத தாடி மீசை. ஆனால் எண்ணெய் தடவி தலைமுடியை மட்டும் படிய வாரியிருந்தான். வெட்டப்படாத அவனது விரல் நகங்களில் அழுக்கேறிக் கறுத்துக் கிடந்தது. ஒடுங்கிய, எலும்பு தெரியும் தாடையும் முகவாயும் கழுத்து நரம்புகள் புடைத்த தேகக்கட்டும், வயசுக் காலத்தில் அவன் நிறைய ஓடி உழைத்திருப்பான் என்று நினைக்க வைத்தன.

ஆனால், குளிக்காமல் ஒருவன் கோயிலுக்கு வருவானா! அவனைக் கண்டதும் எனக்கு எரிச்சல் வந்தது. சட்டென்று எழுந்து சற்றுத் தள்ளிப்போய் உட்கார்ந்துகொண்டேன். அவன் என்னைப் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். என்னிடம் அப்போது சில்லறை ஏதுமில்லை. ‘இல்லப்பா’ என்று சொல்லச் சங்கடமாக இருந்தது. அதனால்தான் தள்ளிப்போய் அமர்ந்தேன். ஆனால் அவன் விடாமல் என் அருகே மீண்டும் வந்து நின்றான். சிரித்தான்.

‘என்ன?’ என்று கேட்டேன்.

‘இந்தா’ என்று தன் கையில் இருந்த தொன்னையை நீட்டினான். அதில் சர்க்கரைப் பொங்கல் இருந்தது.

‘இல்ல வேணாம்.’

‘பரவால்ல சாப்டு’ என்று சொன்னான்.

‘வேணான்னு சொல்றனே.’

‘நீ சாப்ட்டுத்தான் ஆகணும்’ என்ற அவனது பதில் எனக்குச் சிரிப்பை வரவழைத்தது. எனக்கு இவன் யார் கட்டளையிடுவதற்கு? நான் முறைத்தேன்.

‘விமல், அப்பா சொன்னா கேக்கணும்!’ என்று அவன் சொன்னான்.

திக்கென்று ஒரு கணம் திகைத்துப் போனேன். அப்பா என்று அவன் தன்னைக் குறிப்பிட்டுக்கொண்டது எனக்குப் பிரச்னையாக இல்லை. ஆனால் என்னைப் பெயர் சொல்லி அழைத்தது எப்படி?

‘உங்கண்ணன் சொல்லியிருக்கான். நீ இங்க வருவேன்னு. வரும்போது உனக்கு சர்க்கரைப் பொங்கல் தரச் சொன்னான்’ என்று சொன்னான்.

சில விநாகள் எனக்கு எதுவுமே புரியவில்லை. இவன் யார்? இவனுக்கு என் அண்ணாவை எப்படித் தெரியும்? சரி எப்படியோ சந்தித்திருக்கலாம் என்று வைத்துக்கொண்டாலும், அண்ணா என்னைப் பற்றி இவனிடம் என்ன சொல்லியிருக்கக்கூடும்? என் பெயரைச் சொல்லியிருக்கலாம். ஆனால் அது நாந்தான் என்று எப்படி இவன் அறிவான்? இன்றைக்கு நான் இங்கே வருவேன் என்பது எப்படித் தெரிந்திருக்கும்? இத்தனைப் பெரிய கூட்டத்தில் என்னை எப்படி இவன் அடையாளம் கண்டிருப்பான்?

‘இந்தா, சாப்டு’ என்று மீண்டும் அந்தத் தொன்னையை நீட்டினான். நான் தயக்கத்துடன் அதை வாங்கிக்கொண்டு, ‘யார் நீங்க?’ என்று கேட்டேன். அவன் சொன்ன பதில்தான் என்னைத் தூக்கிவாரிப் போடச் செய்தது.

‘அட சாப்டுப்பா. நீ ஒண்ணும் குழந்தையுமில்லே, உனக்கு பிரசாதத்துல மயக்க மருந்து கலந்து குடுத்து ஒன்ன தூக்கிட்டுப் போக நான் கிரிமினலும் இல்லே.’

அதற்குமேல் நான் ஒன்றும் பேசவில்லை. அந்த சர்க்கரைப் பொங்கலை வாங்கிச் சாப்பிட்டு முடித்தேன். இப்போது அவன் புன்னகை செய்தான். என் அருகே அமர்ந்து, ‘உங்கண்ணன் சொல்லிட்டுப் போனான். அவன் கெளம்பிப் போயி நாலா வருசம் ஒன்ன வந்து பாப்பானாம். அப்ப, அந்த வம்ச சுவடி எப்படி மருந்து சுவடியா மாறிச்சின்னு சொல்லுவானாம்.’

உண்மையில் நான் அதிர்ந்துவிட்டேன். சட்டென்று அந்தக் கிழவனின் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டு, பேச்சற்றுப் போய் நின்றேன். என் உடல் என்னையறியாமல் நடுங்கிக்கொண்டிருந்தது. தொண்டை வறண்டுவிட்டது. கண்ணில் இருந்து கரகரவென நீர் வழிய ஆரம்பித்தது. பொருளற்ற பல நூறு உணர்ச்சிகளின் பெருவெள்ளத்தின் மையத்தில் நான் சிக்கியிருந்தேன். அது ஒரு சமுத்திரம்தான். சந்தேகமில்லை. ஆழம் காணவியலாத நீர்ப்பரப்பின் அடியோட்டமாக ஒரு மின்சக்தி இருப்பதை உணர்ந்தேன். அது என்னைத் தூக்கித் தூக்கிப் போட்டுக்கொண்டிருந்தது. மெல்ல மெல்ல நான் என் உணர்வை இழக்கத் தொடங்கினேன். என் கண்கள் சொருக ஆரம்பித்தன. கால்கள் தள்ளாடத் தொடங்கின. விழுந்துவிடுவேனோ என்ற அச்சம் எழுந்த நேரத்தில் மிதக்கத் தொடங்கினேன். அப்போதுதான் என்னைச் சுற்றி நீல நிற மேகம் ஒன்று மெதுவாக நகர்ந்து வர ஆரம்பித்தது. ஒன்றன்பின் ஒன்றாகப் பல நூறு மேகப் பொதிகள் என்னை ஏந்தி எடுத்துச்செல்லத் தொடங்கியதும் அதன்பிறகுதான்.

ஆனால், எப்போது நான் அந்தக் கிழவனின் குடிசைக்கு வந்து சேர்ந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் கோயிலில் அமர்ந்திருந்ததையும் அப்பா, அம்மா, கேசவன் மாமா, வினோத் எல்லோரும் சன்னிதிக்குச் சென்றிருந்ததையும் எண்ணிப் பார்த்தேன். இந்நேரம் அவர்கள் சன்னிதியை விட்டு வெளியே வந்திருப்பார்கள். என்னைத்தான் தேடிக்கொண்டிருப்பார்கள். அடக்கடவுளே. அனைத்தையும் மறந்து எப்படி நான் இங்கே வந்து சேர்ந்தேன்?

நான் அவசரமாக எழுந்தபோது கிழவன் சிரித்தான். ‘எங்க போற?’

‘கோயில்லே எங்கப்பாம்மா என்னைத் தேடிண்டிருப்பா.’

‘எவ்ளோ நாளா?’ என்று அவன் கேட்டான்.

முதலில் எனக்கு அவன் சொன்னது புரியவில்லை. சட்டென்று ஏதோ தோன்ற, ‘நான் எப்ப இங்க வந்தேன்?’ என்று கேட்டேன்.

‘அது ஆச்சு ரெண்டு நாள்’

‘ஐயோ! ரெண்டு நாளா? ரெண்டு நாளாவா தூங்கிண்டிருந்தேன்?’

‘நீ எங்க தூங்கின? உலகத்தையில்ல சுத்தி வந்த? ஒன்ன சுத்தி நீல நீலமா இருந்திச்சா இல்லியா?’ என்று அவன் கேட்டான்.

‘ஐயோ ஆமா. அது எப்படி உங்களுக்குத் தெரியும்?’

அவன் மீண்டும் சிரித்தான். ‘உக்காரு. ஒனக்கு இப்ப பசிக்கும். முதல்ல சாப்டு. எல்லாம் அப்பறம் சொல்றேன்’ என்று சொன்னான்.

எனக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் பயமாக இல்லை. அவன் பைத்தியம் இல்லை என்பது தெரிந்துவிட்டது. அவன் என் அண்ணாவைச் சந்தித்திருக்கிறான். அண்ணா என்னைப் பற்றியும் இன்னும் பலவும் அவனோடு பேசியிருக்கிறான். மிக முக்கியமாக அந்தச் சுவடி. அண்ணாவை ஒரு பொய்யன் என்று நினைத்துவிட்டேனே? அந்த மருத்துவச் சுவடி ஒரு மாயமாக இருக்கக்கூடும் என்று ஏன் எண்ணாமல் போனேன்? அவனைக் குறித்து நான் அறிந்ததெல்லாம் ஒன்றுமே இல்லை என்று முதல் முதலில் அப்போது தோன்றியது. என்ன ஆனாலும் இந்தக் கிழவன் மூலம் அவனைச் சந்தித்துவிடுவது என்று முடிவு செய்துகொண்டேன்.

அவனது குடிசைக்குப் பின்புறம் பத்தடி இடம் இருந்தது. சிறியதாக ஒரு கிணறும் அதனருகே ஒரு செம்பருத்தி புதரும் இருந்தது. ஏழெட்டுப் பூக்கள் பூத்திருந்தன. நான் பல் துலக்கிவிட்டு, கிணற்றில் இருந்து நீர் இறைத்துக் குளித்தேன். துடைத்துக்கொள்ள அவன் ஒரு அழுக்கு வேட்டியைக் கொடுத்தான். மறுக்காமல் வாங்கித் துடைத்துக்கொண்டேன். அதையே கட்டிக்கொண்டு உள்ளே வந்து அமர்ந்தேன். அவன் எனக்கு நான்கு இட்லிகளைச் சாப்பிடக் கொடுத்தான். ஒன்றும் பேசாமல் அதைச் சாப்பிட்டு முடித்தேன். மீண்டும் ஒரு கருங்காப்பி போட்டுத் தந்தான். அதையும் வாங்கிக் குடித்தேன்.

‘அண்ணா இப்போ எங்க இருக்கான்?’ என்று கேட்டேன்.

அவன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பிறகு, ‘இடம் தெரியும். ஆனா இப்பப் போயி நீ அவன பாக்க முடியாது.’

‘ஏன்?’ என்று கேட்டேன்.

‘அவன் விரும்ப மாட்டான்.’

‘என்னைப் பாக்கவா?’

‘யாரையுமே.’

அவன் சொன்னது எனக்குப் புரியவில்லை. எனவே திரும்பத் திரும்ப அண்ணாவின் இருப்பிடத்தைக் குறித்துக் கேட்டுக்கொண்டே இருந்தேன்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து அவன் சொன்னான், ‘தம்பி, ஒனக்கு நம்பிக்கை இல்லேன்னா போய் வேணா முயற்சி பண்ணிப் பாரு. அவன் குற்றாலத்துலே இருக்கான். ஆனா ஒன்னால அவன கண்டுபிடிக்க முடியாது.’

‘அதான் ஏன்னு கேக்கறேன்.’ எனக்குப் பொறுமை போய்விட்டது.

அவன் என் தலையைப் பாசமாக வருடிக் கொடுத்தான். ‘அவஞ்சொன்னது சரிதான். நீ சின்னப்பய. ஆளுதான் வளந்துட்டே. சரி சொல்றேன் புரிஞ்சிக்க. அவனா விரும்பினாலொழிய நீ அவன பாக்க முடியாது. அவன் காத்துக்குள்ள கரைஞ்சி உக்காந்திருக்கான்’ என்று சொன்னான்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

37. நாய்வழி

 

 

அவன்தான் எனக்குப் பணம் தந்தான். திருச்சிராப்பள்ளி பேருந்து நிலையத்துக்கு வந்து என்னை வண்டி ஏற்றிவிட்டதும் அவன்தான். பஸ் கிளம்பும்போது ஜன்னலுக்கு வெளியே நின்று சிரித்தான். ‘எப்பிடியும் நீ உங்கண்ணன பாக்கப் போறதில்லே. திரும்பிப் போறப்ப என்னை வந்து பாத்துட்டுப் போ’ என்று சொன்னான்.

நான் அதற்கு பதில் சொல்லவில்லை. அவன் சொன்னது காதிலேயே விழாததுபோல நடந்துகொண்டேன். எனக்கென்னவோ நிச்சயமாக நான் அண்ணாவைக் குற்றாலத்தில் சந்தித்துவிடுவேன் என்று தோன்றியது. அவனைப் பேசி, மசியவைத்து வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட முடியும் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. குறைந்தபட்சம் அம்மாவோடு அவனை ஃபோனிலாவது பேச வைத்துவிட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். நகர்ந்த வருடங்களில் அண்ணா இல்லாதுபோன துக்கத்தின் சுவடுகள் சற்று மறைய ஆரம்பித்திருந்தன. வினய் போன பிற்பாடு இந்த அதிர்ச்சிகள் என் வீட்டுக்குப் பழகிப் போகத் தொடங்கியிருந்தன என்றே நினைத்தேன். எப்படியும் வினோத் போய்விடுவான் என்று எனக்கே தோன்றத் தொடங்கியிருந்த நிலையில், நானும் தங்க மாட்டேன் என்று ஒன்றுக்கு இரண்டு பேர் சொல்லியிருந்ததுதான் குழப்பமாகவே இருந்தது.

ஆனால் அது உண்மையாகாது என்று நினைத்தேன். ஏனென்றால், அன்றைய மன நிலையில் நான் வீட்டை விட்டு வெளியேறுவதை எண்ணிப் பார்க்கவும் விரும்பவில்லை. அண்ணா குற்றாலத்தில் இருக்கிறான் என்று அந்தக் கிழவன் சொன்னபோதுகூட, உடனே சென்று அப்பாவிடம் தகவலைச் சொல்லி அவரையும் அழைத்துக்கொண்டு போகலாம் என்றுதான் தோன்றியது. ஆனால், நான் இரண்டு நாள் இடைவிடாது உறங்கியிருந்தேன். சர்க்கரைப் பொங்கலில் அவன் அபின் கலந்து கொடுத்திருந்த விவரம் பின்னர்தான் எனக்குத் தெரிந்தது.

‘நல்லாத்தான் இருந்தது. ஆனா சொல்லிட்டுக் குடுத்திருக்கலாம்’ என்று நான் சொன்னேன்.

அவன் சிரித்தான். ‘சொன்னா நீ எப்பிடி அதத் திம்பே? முதல்ல என்னோடகூட வந்திருக்கவே மாட்டியே’ என்று சொன்னான்.

அதுவும் உண்மைதான். ஆனால் இரண்டு தினங்களாக என்னைக் காணாமல் அம்மாவும் அப்பாவும் எங்கெல்லாம் அலைந்திருப்பார்கள், எத்தனைக் கவலைப்பட்டிருப்பார்கள் என்று நினைத்துப்பார்க்க சிரமமாக இருந்தது. கண்டிப்பாக அவர்களுக்கு அண்ணாவின் நினைவும் வினய்யின் நினைவும் வந்திருக்கும். அவர்களைப் போலவே நானும் ஓடிப்போய்விட்டதாகத்தான் நினைப்பார்கள். ஆனால் அம்மா, உன்னைவிட்டு நான் எங்கும் போகிற உத்தேசம் இல்லை. குறைந்தபட்சம் இப்போது அப்படியொரு எண்ணம் நிச்சயமாக இல்லை. நாளை நானும் மனம் மாறலாம். திருப்போரூர் சாமியும் கோவளத்துப் பக்கிரியும் சொன்னது நடக்கலாம். ஆனால் நாளைதான். இன்றல்ல.

என் கவலையெல்லாம், வினோத் சொல்லாமல் கொள்ளாமல் போய்விடப்போகிறானே என்பது குறித்துத்தான் இருந்தது. அதெப்படி அவன் கையில் சிவலிங்கம் வந்து விழும்? அதை வைத்துக்கொண்டிருந்தபோது அவனது கை நடுங்கியதை நான் கண்டேன். தண்ணீருக்குள் நின்றிருந்தாலும் அவன் கண்கள் கலங்கியிருந்ததையும் கவனித்தேன். சிவன் பிரத்தியட்சம் என்று திருப்போரூர் சாமி சொன்னது, அந்தக் கணத்தில் அவனை பாதித்ததை உணர முடிந்தது என்னால். நான் வினோத்துடன் ஒரு நீண்ட உரையாடலை நிகழ்த்த விரும்பினேன். பிரத்தியட்சம் என்பது லிங்கமல்ல. பிரத்தியட்சம் என்பது தோற்றமும் அல்ல. அல்லிக் குளத்தில் ஓடிவந்து குதிக்கிறபோது எழும் அதிர்வை நிகர்த்த ஏதோ ஒன்று அது. உள்ளுக்குள் நிகழ்வது.

அன்று காலை நான் கண் விழித்தபோது அவனைத்தான் முதலில் பார்த்தேன். எனக்குக் காரணமே இல்லாத ஒரு பெரும் சந்தோஷம் தோன்றியது. ஏனெனில், அன்றிரவுக்குள் அவன் ஓடிவிடுவான் என்று நான் முடிவு செய்திருந்தேன். அது நிகழாததே எனக்கு மிகுந்த நம்பிக்கையளித்தது. அதனால்தான் அவனுடன் பேச நினைத்திருந்தேன். ஊருக்குப் போய்ச் சேர்ந்த பிறகு. குளக்கரையில் அவனைக் கூப்பிட்டு உட்கார வைத்து. ஆனால் அதற்குமுன் நான் இப்படி சொல்லாமல் கொள்ளாமல் தென்காசிக்குக் கிளம்ப வேண்டிவரும் என்று நினைத்தே பார்க்கவில்லை.

கிழவன் சொன்னான், ‘தம்பி குத்தாலத்துலே இப்ப தண்ணி வரத்து இல்லே. ஆனா தேனருவியிலே கொஞ்சம் இருக்கும். மறக்காம அங்க ஒருக்கா குளிச்சிரு.’

‘நான் ஒண்ணும் ஜாலியா ஊர் சுத்திப் பார்க்கப் போகலை’ என்று பதில் சொன்னேன்.

‘ஆனா ஊர சுத்திட்டுத்தான் திரும்புவே. அது நிச்சயம்.’

‘ஆமா. சுத்துவேன். அண்ணாவைத் தேட வேணாமா?’

இப்போதும் அவன் சிரித்தான். ‘தேடு தேடு. நல்லாத் தேடு. ஆனா கிடைக்கமாட்டான்.’

‘ஏன் இப்படி அபசகுனமாவே பேசறிங்க? அவன் போனப்பறம் எங்க வீட்ல எவ்ளோ கஷ்டம் தெரியுமா? எங்கம்மா இப்பல்லாம் சிரிக்கறதே இல்லை’ என்று சொன்னேன். அவன் என்ன நினைத்தானோ. சிறிது நேரம் பேசவேயில்லை. எங்கோ வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தான். பேருந்து நிரம்பி, வண்டி கிளம்பிய பின்பும் பேசவில்லை. ஒரு பத்தடி தூரம் வண்டி புறப்பட்டுப் போனபோது வெறி பிடித்தாற்போல ஓடிவந்து ஜன்னலில் எக்கி, என் கையைத் தொட்டு அழைத்தான்.

‘என்ன?’

‘நீ விட்டுட்டு ஓடுவ பாரு, அப்ப உங்கம்மா சிரிப்பாங்க’ என்று சொன்னான்.

மறுநாள் விடியும் நேரம் நான் தென்காசியில் இறங்கினேன். திருச்சி போலவே அங்கும் வெயில் கொளுத்தியெடுக்கும் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் இறங்கும்போதே சிறு தூறல் இருந்தது. அது மகிழ்ச்சியளித்தது. ஒரு டீக்கடையில் காப்பி சாப்பிட்டேன். பொதுக் கழிப்பிடத்தில் கடன்களை முடித்துவிட்டு சாலையோரக் கடை ஒன்றில் ஒரு வேட்டி மட்டும் வாங்கிக்கொண்டு அருவிக்கரைக்குச் சென்றேன். கிழவன் சொன்னதுபோல பெரிய நீர்வரத்து இல்லைதான். ஆனாலும் நின்று குளிக்கும் அளவுக்குத் தண்ணீர் இருக்கவே செய்தது. அரை மணி நேரம் குளித்துவிட்டு, வேட்டியை மாற்றிக்கொண்டு கோயிலுக்குப் போனேன்.

எனக்கிருந்த பிரார்த்தனையெல்லாம் ஒன்றுதான். எப்படியாவது அண்ணாவைப் பார்த்துவிட வேண்டும். குற்றாலம் பெரிய ஊர் அல்ல. ஒரு நாள் முழுதும் நடந்தால் ஊர் முழுவதையும் சுற்றி வந்துவிடலாம். ஆனால் அவன் கண்ணில் பட வேண்டும். அதுதான் முக்கியம். ஆனால் அந்தக் கிழவன் அது நிகழாது என்று சொல்லியிருந்தான். இப்போதே நான் குற்றாலத்துக்குக் கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டு அவன் வீட்டில் எழுந்தபோதே அவன் அதைத்தான் சொன்னான். ‘பிரயோசனமில்ல தம்பி.’

இவன் யார் அப்படிச் சொல்ல என்றுதான் நினைத்தேன். அதைவிட, அண்ணா எங்கிருந்து இப்படிப்பட்ட மனிதர்களைத் தேடிப் பிடிக்கிறான் என்பது புரியாத விஷயமாக இருந்தது. திருவானக்கா கிழவனை அண்ணாவுக்கு முன்பே தெரிந்திருக்க நியாயமேயில்லை. அவன் சுற்றத் தொடங்கிய பின்புதான் பழக்கமாகியிருக்க வேண்டும். ‘அது ஆச்சி, ரெண்டர வருசம்’ என்று கிழவன் சொல்லியிருந்தான். இரண்டரை வருடங்களுக்குமுன் அண்ணா என்னைப் பற்றி இவனிடம் சொல்லியிருக்கிறான். காலத்தின் இடைவெளியை இடக்கையால் நகர்த்திவிட்டு, நேற்று அவன் நிகழ்த்திய சாகசம் எனக்குப் புரியவில்லை. எப்படி என்னை அடையாளம் கண்டான்? என் கட்டுப்பாட்டு எல்லைகளைத் தகர்த்துவிட்டு எப்படி என்னை அவனோடு அழைத்துச் சென்றான்? இரண்டு நாள் அவன் வீட்டில் சுயநினைவின்றிக் கிடந்திருக்கிறேன். ஒரு பிள்ளை பிடிக்கிறவனைப்போல, போதை மருந்து கொடுத்து என்னைக் கடத்தித்தான் சென்றிருக்கிறான். ஆனாலும் அவன் மீது எனக்குக் கோபம் வரவில்லை. அவனுக்கு அண்ணாவைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்திருந்ததுதான் காரணம்.

கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு கண்ணி எல்லா இடங்களிலும் புதைந்து கிடக்கிறது. கால் வைத்து மாட்டிக்கொள்ள நபர்கள் தேடிக் காத்திருக்கும் கண்ணி. அண்ணா தன் காலை அதில் வைத்துவிட்டான். வினய் வைத்துவிட்டான். வினோத்தும் வைக்கப்போகிறான். ஆனால் நான் சிக்கமாட்டேன் என்றுதான் அப்போதும் தோன்றியது.

அன்றெல்லாம் நான் குற்றாலத்தின் வீதிகளில் அலைந்து திரிந்துகொண்டே இருந்தேன். ஒரு வீட்டு வாசலில் கொய்யா பழுத்துத் தொங்கிக்கொண்டிருந்ததை ஓரிடத்தில் பார்த்தேன். எதற்கும் இருக்கட்டும் என்று ஏழெட்டு கொய்யாக் காய்களைப் பறித்து என் தோள் பையில் போட்டுக்கொண்டு கிளம்பினேன். நாள் முழுதும் அதைத் தின்றுகொண்டேதான் அலைந்தேன். கண்ணில் பட்ட ஒவ்வொரு முகத்திலும் என் அண்ணாவைத் தேடிக்கொண்டிருந்தேன். கோயில், மண்டபங்கள், ஓடைப்பாதை, அருவிக்கரை என்று தரைத் தளத்தில் போய்த் தேடக்கூடிய அனைத்து இடங்களிலும் அன்று தேடித் தீர்த்தேன். இரவு கோயில் வாசலிலேயே படுத்துத் தூங்கினேன். மறுநாள் மலையேறிப் போய்த் தேடலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

விடிந்து எழுந்தபோது என்னருகே நாய் ஒன்று படுத்திருக்கக் கண்டேன். நான் கண் விழித்தபோது அதுவும் விழித்தெழுந்தது. என்னைப் பார்த்து சிறிதாக இரண்டு முறை குரைத்தது. நான் அதைப் பொருட்படுத்தாமல் எழுந்து நடக்க ஆரம்பித்தபோது, அது பாய்ந்து என் முன்னால் வந்து நின்று மீண்டும் குரைத்தது. நான் சில விநாடிகள் அதையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன காரணத்தாலோ அதை அண்ணாவே என்னிடம் அனுப்பியிருப்பான் என்று தோன்றியது. இப்போதெல்லாம் இம்மாதிரியான விபரீத பயங்கரக் கற்பனைகள் நிறைய வருகின்றன. எல்லா இடங்களிலும் என்னவாவது ஒரு அற்புதம் நிகழ்ந்துவிடும் என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது. ஏதோ சரியில்லை அல்லது எல்லாமே சரியாக இருக்கின்றன என்று நினைத்துக்கொண்டேன்.

அந்த நாய்க்கு நான் அலுத்திருக்க வேண்டும். என்னைவிட்டு நகர்ந்து செல்ல ஆரம்பித்தது. ஏதோ நினைத்துக்கொண்டு நான் அது போன வழியிலேயே போக ஆரம்பித்தேன். மனத்தில் அந்த எண்ணம் மட்டும் தீராமல் அப்படியே தேங்கி நின்றது.

இந்த நாய் என்னை அண்ணாவிடம் கொண்டு சேர்க்கப்போகிறது.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

38. மீன் உண்டவன்

 

 

அது என்ன கிறுக்குத்தனம் என்று தெரியவில்லை. அன்றைக்குப் பகல் முழுதும் அந்த நாய் எங்கெல்லாம் சென்றதோ, அதன் பின்னாலேயே போய்க்கொண்டிருந்தேன். அது ஓய்வெடுக்க அமர்ந்தபோது நானும் அமர்ந்தேன். இடையிடையே அது தனது உறவினர்களையோ, நண்பர்களையோ சந்தித்து ஓரிரு வார்த்தைகள் பேசியதைக் கவனித்தேன். ஒன்று புரிந்தது. நாய்கள் பெரும்பாலும் சோம்பியிருப்பதில்லை. அதன் இலக்கு என்னவென்று தெரிவதில்லையே தவிர, எதையோ தேடிக்கொண்டு அது போய்க்கொண்டேதான் இருக்கிறது. நான் நாயைத் தொடர்ந்து போனாலும், என் கவனம் முழுவதும் எங்காவது அண்ணா கண்ணில் படுகிறானா என்பதிலேயே இருந்தது. ஏனோ அவன் ஒரு முனிவரைப் போலக் காட்டுக்குள் தனிமை தேடி அமர்ந்து தவமிருக்கமாட்டான் என்று நினைத்தேன். அறிமுகமற்ற முகங்களின் நடுவேதான் தனிமையின் உச்சத்தைக் கண்டுணர முடியும். கூட்டத்தில் கரைவது காற்றில் கரைவதினும் பேரனுபவம்.

அவன் காற்றுக்குள்தான் மறைந்திருப்பான் என்று அந்தக் கிழவன் சொல்லியிருந்தான். எனக்கென்னவோ அது ஒரு மிகை என்று பட்டது. இந்தச் சில வருடங்களில் அப்படியான சக்திகளை அவன் பெற்றிருக்கமுடியும் என்று தோன்றவில்லை. உண்மையில் அப்படியொரு சக்தி இருந்துவிடத்தான் முடியுமா!

என் அறிவியல் ஆசிரியர் ஒரு ஆன்மிகவாதி. பெரிய மகான்களின் சரிதங்கள், சுய சரிதங்கள் வாசிப்பதில் அவருக்கு விருப்பம் அதிகம். வகுப்பு முடிவதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்னால் பாடத்தை முடித்துக்கொண்டு, அந்தப் பத்து நிமிடங்களுக்கு ஏதாவது ஒரு கதை சொல்லுவார். அது யாராவது ஒரு மகானின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவமாக இருக்கும். நாங்கள் ஸ்ரீரங்கம் புறப்படுவதற்குச் சில நாள்களுக்கு முன்னர் அவர் அப்படி ஒரு கதை சொன்னார். திரைலங்கர் என்றொரு துறவியைப் பற்றிய கதை. குருவிடம் பயின்று முடித்துவிட்டு, அவர் தனியே சாதகங்கள் செய்து பார்ப்பதற்காகக் கிளம்பி இமயத்துக்குப் போனார். இத்தனை நாள், இன்னின்ன பயிற்சிகள் என்ற திட்டமெல்லாம் இல்லை. சும்மா போனார். போனவர் எங்கெங்கோ அலைந்து திரிந்துவிட்டு, சரி போதும் ஊருக்குப் போகலாம் என்று எண்ணியபோது இருபது வருடங்கள் கழிந்துவிட்டிருந்தன. அடடா இத்தனைக் காலம் குருவைப் பார்க்காதிருந்துவிட்டோமே, மறந்தே போனோமே என்று அவருக்கு ஒரே வருத்தமாகிவிட்டது. உடனே தன் மானசீகத்தில் குருவை அழைத்தார். ‘குருவே, நலமாக இருக்கிறீர்களா? எங்கே இருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். ‘ஒரு வழியாக என் நினைவு வந்துவிட்டதா? கிளம்பி வா வாரணாசிக்கு’ என்று குருவும் அதே மானசீகத்தில் தன் இருப்பிடத்தைத் தெரிவித்தார். ‘கும்பமேளா ஆரம்பித்திருக்கிறது. நான் இங்கேதான் இருக்கிறேன்.’

தகவல் வந்த மாத்திரத்தில், திரைலங்கர் இருந்த இடத்தில் இருந்து அப்படியே எழுந்து காற்றில் மறைந்துவிட்டார். அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர் காசியில் உள்ள தசாஸ்வமேத கட்டத்தில் இருந்தார்.

மீண்டும் குருநாதர் தகவல் அனுப்பினார். ‘மகனே, நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு மேல் நான் அங்கே வருவேன். அதுவரை காத்திரு.’

திரைலங்கர் அங்கேயே இருந்தார். சொன்னதுபோல அன்றிரவு பன்னிரண்டு மணிக்குக் கூட்டம் முற்றிலும் கரைந்து காணாமலாகியிருந்த நிலையில், நதிப்பரப்பின் அக்கரையில் ஓர் ஒளிப்புள்ளி தோன்றியது. அந்தப் புள்ளி மெல்ல மெல்ல நகர்ந்து கரையின் இந்தப் பக்கம் வந்து சேர்ந்து திரைலங்கரின் குருவாக மாறியது. மகிழ்ச்சிப் பரவசத்துடன் திரைலங்கர் தனது குருவை விழுந்து வணங்கினார்.

‘வா, நமக்கொரு முக்கியமான வேலை இருக்கிறது’ என்று திரைலங்கரையும் ஓர் ஒளிப்புளியாக்கி எடுத்துக்கொண்டு, குரு மீண்டும் ஆற்று வெளியின் மீது மிதந்து போனார். பாதி தூரம் போனதும் அவர்கள் நீருக்குள் இறங்கத் தொடங்கினார்கள். ஒளி தண்ணீரைத் தொட்டதும் நீர் விலகிக்கொள்ளத் தொடங்கியது. ஓர் ஆழ்துளைக் கிணறுபோல அந்த இடம் குழிந்துகொண்டே போகப் போக, குருவும் சீடரும் அதனுள் இறங்கிச் சென்றுகொண்டே இருந்தார்கள்.

இரண்டாயிரம் அடி ஆழத்துக்கு அவர்கள் சென்று சேர்ந்தபோது, ஒரு நிலவறை போன்ற இடம் அங்கு உருவாக்கப்பட்டிருப்பதைத் திரைலங்கர் கண்டார். எங்கிருந்து வருகிறது என்றே தெரியாமல் அந்த நிலவறையெங்கும் வெளிச்சம் ஒரு நதியைப்போலப் பொங்கிப் பிரவகித்துக்கொண்டிருந்தது. திரைலங்கருக்குக் கண் கூச்சமெடுத்தது. அப்படியொரு பேரொளிப் பிரவாகத்தை அவர் என்றுமே கண்டதில்லை. ‘குருவே இது என்ன இடம்?’ என்று கேட்டார்.

‘குழந்தாய், இது யோகிகள் சந்திக்கும் இடம். பல்லாண்டுக் காலங்களாகக் காற்று வெளியில் எங்கெங்கோ அலைந்து திரியும் யோகிகள், கும்பமேளா நடக்கிற நாள்களில் இங்கே வந்து கூடுவார்கள். இந்த முறை நீயும் இந்த சத்சங்கத்தில் பங்குபெற அனுமதிக்கப்படுகிறாய்!’ என்று குரு சொன்னார். அந்தக் கணம் அந்தப் பேரொளிப் படலம் மெல்ல மெல்ல மட்டுப்பட்டு, அந்த நிலவறையின் தோற்றம் சற்றே தெளிவு பெறத் தொடங்கியது. நூறு நூறு யோகிகள் அங்கே குழுமியிருப்பதைத் திரைலங்கர் கண்டார். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஜன சமூகத்திடமிருந்து விலகிக் கானக வெளியில் யார் கண்ணிலும் படாமல் உலவிக்கொண்டிருக்கும் யோகிகள். நூறு வயது தாண்டியவர்கள். முன்னூறு வயதைத் தொட்டவர்கள். வயதே கண்டறிய முடியாதவர்கள். காலத்தின் வயதைத் தன் வயதாக்கிக்கொண்டவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் பேசிய மொழி ஒவ்வொரு விதமாக இருந்தது. பல நூறு மொழிகள். ஆனால் எல்லா மொழியும் எல்லோருக்கும் அங்கே புரிந்தது. திரைலங்கர் அதையெல்லாம் பிரமிப்பும் வியப்பும் மேலோங்கப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அறிவியல் ஆசிரியர் இந்தக் கதையைப் பாதி சொல்லிக்கொண்டிருந்தபோதே, வகுப்பு முடிந்து மணியடித்துவிட்டார்கள். மீதிக் கதையை மறுநாள் சொல்வதாகச் சொல்லிவிட்டு அவர் கிளம்பிச் சென்றார். நான் அன்றிரவெல்லாம் அதையேதான் யோசித்துக்கொண்டிருந்தேன். இமயத்தின் ஏதோ ஒரு மூலையில், எங்கோ ஒரு கானகத்தில் இருந்த யோகி, எப்படி ஒரு மணி நேரத்தில் காசிக்கு வந்து சேர்ந்திருக்க முடியும்? ஒரு மனித உடலை ஒரு யோகி நினைத்தால், ஒளிப்புள்ளியாக்கி எடுத்துக்கொண்டு போய்விட முடியுமா? முன்னூறு வயது யோகி. நூற்று எண்பது வயது யோகி. மரணமற்றவர்கள். உண்டா? சாத்தியமா அதெல்லாம்?

‘யோகப் பயிற்சிகள் சாத்தியமாக்கும்’ என்று அறிவியல் ஆசிரியர் சொன்னார். ஆனால் நான்காண்டுக் காலத்தில் அண்ணா அப்படிப்பட்ட பயிற்சிகளில் தேறியிருப்பானா? காற்றுக்குள் ஒளிந்துகொள்ளும் வித்தை அறிந்திருப்பானா?

எனக்கென்னவோ அந்த திருவானைக்கா கிழவன் பொய் சொல்கிறான் என்றே திரும்பத் திரும்பத் தோன்றியது. தவிரவும் இக்காலம் யோகிகளுக்கானதல்ல என்று நினைத்தேன். அண்ணாவுக்கு ஓர் உணர்வெழுச்சி இருந்தது. அதில் எனக்குச் சந்தேகமில்லை. அவன் எதையோ ஒன்றைக் குறி வைத்து நகர்ந்துகொண்டிருந்ததை என் சிறு வயது முதல் கண்டுவந்திருக்கிறேன். அது என்னவென்று அப்போது எனக்குப் புரிந்ததில்லை. பின்னாள்களில், நான் என் அறிவியல் ஆசிரியர் அளித்த உந்துதலால், சித்தர்களைக் குறித்தும் யோகிகளைக் குறித்தும் நிறையப் படிக்கத் தொடங்கியபோது மிகத் தெளிவாக ஒன்றை அறிந்தேன். இது எதுவும் சாமானியர்கள் நுழையக்கூடிய பிராந்தியமல்ல. அண்ணா ஒரு சாமானியன்தான் என்று எண்ணிக்கொள்வது எனக்கு சௌகரியமாக இருந்தது.

அன்று மதியத்துக்குமேல் நான் நாயைப் பின் தொடர்வதை விட்டுவிட்டு, மீண்டும் மலையேறி காட்டுக்குள் சென்றேன். எந்தத் திட்டமும் இன்றி கால் போன வழியில் நடந்துகொண்டே இருந்தேன். அவ்வப்போது தூறல் விழுந்தது. ஒரு சில நிமிடங்களுக்கு நல்ல மழையேகூடப் பெய்தது. சென்ற வழியெல்லாம் நீரின் சலசலப்பு இருந்துகொண்டே இருந்தது. நான் அதற்குமுன் ஒரு கானகத்தைக் கண்டதில்லை. மலையேறுவது எத்தனை சிரமமான பணி என்பதை அறிந்திருக்கவில்லை. துணைக்கு யாருமில்லாமல் எதற்காக இப்படி பைத்தியக்காரத்தனமாகத் திரிகிறோம் என்ற வினா அவ்வப்போது எழுந்தாலும், என்னால் அப்படிச் செய்வதைத் தவிர்க்க முடியவில்லை. ஒன்று செய்திருக்கலாம். நான் அண்ணாவைத் தேடிக்கொண்டு குற்றாலத்துக்கு வந்திருக்கிறேன் என்று வீட்டுக்கு ஒரு போனாவது செய்து தகவல் சொல்லியிருக்கலாம். என்னையும் இழந்துவிட்டதாக அம்மாவும் அப்பாவும் எண்ணிக் குமுறிக்கொண்டிருக்கப் போகிறார்களே என்ற எண்ணம் மட்டும் அடிக்கடி எழுந்தது.

ஒரு தருணம். அண்ணா கண்ணில் பட்டுவிட்டால் போதும். அவனை அம்மாவோடு பேச வைத்துவிட்டால் போதும். அனைத்தும் சமன் செய்ததாகிவிடும்.

நெடு நேரம் நடந்து களைத்துப் போனேன். திரும்பவும் இவ்வளவு தூரத்தையும் எப்படி நடந்து கடந்து நகரை அடையப்போகிறேன் என்று நினைக்கவே பிரமிப்பாக இருந்தது.

இருட்டிவிட்டால் திரும்புவது சிரமமாகிவிடுமே என்று தோன்றியது. இருப்பினும் அங்கேயே நிற்கவோ, திரும்பவோ தோன்றவேயில்லை. நடந்துகொண்டுதான் இருந்தேன். முக்கால் மணி நேரம் நடந்த பிறகு ஒரு குடிசை தெரிந்தது. அப்பாடா என்றிருந்தது. யாராவது இருப்பார்கள். சிறிது பேசி இளைப்பாறலாம் என்று நினைத்து அங்கே சென்றேன்.

அது ஒரு காட்டிலாகா ஊழியரின் குடிசை. நான் சென்றபோது அவரது மனைவிதான் அங்கு இருந்தாள்.

‘வழி தப்பி வந்துட்டியளா?’ என்று கேட்டாள்.

‘இல்லம்மா. எங்கண்ணா இங்க இருக்கான்னு தெரிஞ்சிது. அவனைத் தேடி வந்தேன்’ என்று பதில் சொன்னேன்.

‘என்னவா இருக்காக?’

இதற்கு என்ன பதில் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. அவன் நான்கு வருடங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு ஓடிப் போனவன். எதை நோக்கி ஓடினான் என்று சரியாகத் தெரியவில்லை. நிச்சயமாக அவன் ஒரு வேலை தேடிக்கொண்டு போயிருக்க முடியாது என்று மட்டும் சொன்னேன்.

அவள் சிறிது யோசித்தாள். ‘எப்படி இருப்பாக அவுக?’ என்று கேட்டாள்.

‘புருவத்துக்கு நடுவுல பொட்டு வெச்ச மாதிரி ஒரு மச்சம் இருக்கும்.’

‘ஆமா. ஒல்லியா, வெடவெடன்னு முருங்கக்காயாட்டம்...’

‘தெரியுமா? நீங்க பாத்திருக்கிங்களா? இங்கயா இருக்கான்?’ எனக்குப் பதற்றமாகிவிட்டது.

‘இப்ப கொஞ்ச நாளாத்தான் பாக்குதேன். இங்கனதான் சுத்திக்கிட்டு இருப்பாப்ல.’

‘ஐயோ, எங்க? எங்க பாக்கலாம்?’

‘எங்க இருக்காகன்னு தெரியலயே தம்பி. ஆனா பாப்பேன். ரெண்டு நாள் முன்ன இங்க நம்ம வீட்ல காப்பித் தண்ணி கேட்டுக் குடிச்சிட்டுப் போனாக.’

நான் எப்படியும் அவனைப் பார்த்துவிடுவேன் என்று உறுதியாகத் தோன்றியது. என் பதற்றத்தையும் தவிப்பையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், அந்தப் பெண்ணின் கணவன் வீடு வரும்வரை அங்கேயே காத்திருந்தேன். அவனிடம் விவரம் சொல்லி ஓரிரு தினங்கள் நான் அவன் வீட்டிலேயே தங்கலாமா என்று கேட்டேன்.

‘இடம் பத்தாது தம்பி’ என்று அவன் சொன்னான்.

‘இல்லே. நான் வெளியிலயே படுத்துக்கறேன். சாப்பாடெல்லாம் வேணாம். இங்க இருந்துக்க மட்டும் அனுமதி குடுத்தேள்னா போதும்’ என்று சொன்னேன்.

‘பாப்பார ஊட்டுப் புள்ளையா நீயி? அண்ணன்னு சொல்றே? அந்தப் பையன் மீனெல்லாம் திங்குதானே?’ என்று அவன் சொன்னான்.

அண்ணா மீன் சாப்பிடுகிறானா? இது எனக்குச் செய்தியாக இருந்தது. நம்ப முடியவில்லை.

‘நீங்க பாத்திங்களா?’ என்று கேட்டேன்.

‘ஆமா. ஆத்துல புடிச்சி பச்சையாவே தின்னுதான். தேனருவிப்பக்கம் பாத்தேன்.’

‘அவன் என்ன பண்ணிண்டிருக்கான்? பிச்சை எடுக்கறானா? காஷாயம்... காவி கட்டிண்டிருக்கானா?’

‘அதெல்லாம் இல்ல தம்பி. ஒன்ன மாதிரி, என்னை மாதிரிதான் இருக்கான். சவரம் பண்ணிக்காமெ திரியுதான் பரதேசியாட்டம். இரு. திரும்ப வரானா பாப்பம்’ என்று அவன் சொன்னான்.

அன்றிரவு நான் அந்தக் குடிசைக்கு வெளியே, அந்தப் பெண்மணி அளித்த பாயை விரித்துப் படுத்தேன். குளிர்க்காற்றும் தூறலும் உறங்கவிடாமல் செய்தன. இருந்தாலும், அண்ணாவைப் பார்த்துவிடுவேன் என்ற நம்பிக்கை எனக்குப் போதுமானதாக இருந்தது.

மறுநாள் அதிகாலை ஐந்து மணி இருக்கும். ஒரு நூல்கண்டைப் போல என் உடலைச் சுருக்கி, முறுக்கி, ஒடுக்கிக்கொண்டு தூக்கத்தின் விளிம்பைத் தொட்டுக்கொண்டிருந்தபோது, யாரோ என்னைத் தொடுவதுபோல உணர்ந்தேன். அலறியடித்துக்கொண்டு எழுந்தபோது, அந்த நாய் என்னருகே நின்றிருந்தது.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

39. அக்னி சந்தானம்

 

 

மரத்தில் இருந்து உரித்தெடுத்து உலர்த்திய பட்டையின் நிறத்தில் இருந்தது அந்த நாய். அடி வயிற்றில் எலும்புகள் தெரிந்தன. வலப்புறப் பின்னங்காலின் மேற்புறம், புட்டத்துக்குச் சற்றுத் தள்ளி அதற்கு ஏதோ காயம் பட்டிருந்தது. காயத்தை வட்டமிடும் ஈக்களை விரட்ட அது ஓயாமல் தன் வாலைச் சுழற்றிக்கொண்டே இருந்தது. நான் குற்றாலத்துக்கு வந்து இறங்கியது முதல் அந்த நாயைத் தொடர்ந்துகொண்டிருந்தபோது எனக்கு வித்தியாசமாக எதுவும் தோன்றவில்லை. எப்படியும் இலக்கின்றி அலையப்போகிறேன், அதை ஏன் இந்த நாயின் பாதையில் அலைந்து திரியக் கூடாது என்று எண்ணித்தான் அது போன வழியெல்லாம் போனேன். ஒரு கட்டத்தில், நாயைத் தொடர்வதை விட்டு என் இஷ்டத்துக்கு மலை மீது ஏறத் தொடங்கினேன். ஆனால் நான் சற்றும் எதிர்பாராவிதமாக இப்போது நாய் என்னைத் தேடி வந்திருக்கிறது. இதில் ஏதோ சூட்சுமம் இருக்கக்கூடும் என்று அப்போதுதான் தோன்றியது. அண்ணாவே அதை என்னிடம் அனுப்பி வைத்திருப்பானோ என்று நினைத்தேன். அல்லது அவனே நாய் வடிவம் எடுத்துவிட்டானா?

தோன்றத்தான் செய்தது. ஆனாலும் அப்படியெல்லாம் இருக்காது என்றும் உடனே சொல்லிக்கொண்டேன். அற்புதங்கள் எனக்குப் பிடிக்கும். ஆனால் அவை கதைகளில் மட்டுமே நிகழக்கூடியவை என்று நினைத்தேன். துயரங்களின் அடியாழத்தில் அமர்ந்திருந்தும் அதன் ஈரம் படாமல் என்னைத் தற்காத்துக்கொள்ள முடிந்ததன் பலன் அது ஒன்றுதான். எதற்கும் உணர்ச்சி வயப்படுவதில்லை. எது குறித்தும் பரவசமாவதில்லை. கண்ணீர்? அறவே கிடையாது. புன்னகை ஒன்றைத்தான் என் போர்வையாக்கிக்கொண்டிருந்தேன். அது தேவைப்படுகிறது. எதையும் மறைப்பதற்கு. அல்லது எதையாவது அடைவதற்கு. சொல்கூட அப்போது எனக்கு இரண்டாம் பட்சமாகத்தான் இருந்தது. புன்னகை போதுமென்று நினைத்தேன். என் புன்னகையை நீங்கள் அறியமாட்டீர்கள். அதில் தெய்வீகம் கிடையாது. மயக்கும் குண விசேடங்கள் ஏதுமில்லை. அது இயல்பானது. பாவனைகள் களைந்த ஒரு மாயப் பாவனை கொண்டது. கணப்பொழுதில் விரிந்து நிறைந்து மறைந்துவிடக் கூடியது. ஆனால் அதற்கொரு நாதமுண்டு. புன்னகையின் நாதம். புலரியின் வசீகரத்துக்கு ஒப்பானதொரு நாதம். அதையே ஆயுதமாகவும் கேடயமாகவும் கொள்ள வேண்டுமென்று முடிவு செய்திருந்தேன்.

இந்த உலகில் புன்னகையைக் காட்டிலும் ஒரு பேரற்புதம் வேறில்லை என்று கருதியிருந்தேன். எந்த உணர்வையும் அதனுள் இட்டுப் புதைத்துவிட முடியும். எதையும் தாங்கும் புவிக்கு நிகரான வல்லமையை மனிதன் பெறக்கூடிய ஒரே வித்தை அதில்தான் ஒளிந்துள்ளது. அதைக் காட்டிலும் அற்புதம் ஒன்றுண்டா?

அண்ணாவை நான் சந்திக்க நேர்ந்தால் என் புன்னகையைத்தான் முதலில் எடுத்து விரிப்பேன். அதில் பரவசம் இருக்காது. உணர்ச்சிப் பெருக்கு இருக்காது. கண்ணீர் இருக்காது. கதறல் அறவே இராது. ஒரு புன்னகை. வெறும் புன்னகை. ஆனால் சகல உணர்ச்சிகளையும் அது உள்ளடக்கியிருக்கும். என் கண்ணை நீங்கள் உற்றுப் பார்த்தால் என் புன்னகையின் ஊற்று அங்கே புலப்படும். இதழ்களால் புன்னகை செய்வது இயற்கை விரோதம். கண் போதும். கணப்பொழுது போதவே போதும். அவனில்லாமல் வளர்ந்த வருடங்களில் நான் மனிதர்களைப் புரிந்துகொள்ளவும் மௌனத்தால் அவர்களை ஈர்த்து நிறுத்தவும் பழகிப் பயின்றிருந்தேன். வீட்டில்கூட வீணாகப் பேசுவதே கிடையாது. ஒரு சொல்லில் ஒரு பதில். அல்லது ஒரு பார்வையில் ஒரு வினா. சொற்களை இறைக்காதவரை ஆளுமை கட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்பதைக் கண்டுகொண்டேன்.

உண்மையில் நான் சொல்ல வேண்டிய உண்மையைச் சொல்லாதிருக்க வேண்டியே இவற்றைப் பழகினேன். தொடக்கத்தில் இது குறித்த குற்ற உணர்ச்சி எனக்கிருந்தது. போகப் போக அது பழகி, மங்கிவிட்டது. என்ன இப்போது? அண்ணா வீட்டை விட்டுப் போகவிருக்கிறான் என்பது எனக்குத் தெரியும். அவன் சில யோக சாதனைகள் செய்து பழகியதைப் பார்த்திருக்கிறேன். உலகம் பயணப்படும் பாதை தனக்குச் சரிப்பட்டு வராது என்று அவன் நினைத்ததை நான் அறிவேன். அவனிடம் ஒரு சுவடி இருந்தது. இவ்வளவுதானே? இதை நான் முன்பே அறிவேன் என்பதைச் சொல்லாதிருந்துவிடுவதில் என்ன பிழை? சொன்னால் மட்டும் அவன் திரும்பி வந்துவிடுவானா? அல்லது தேடிப் போய் அழைத்து வந்துவிடத்தான் முடியுமா?

என்றைக்காவது அவன் வருவான் என்ற நம்பிக்கையை நான் அம்மாவுக்கு மிச்சம் வைத்தேன். என் மௌனமும் புன்னகையும் அதற்கு உதவின. என்ன பிழை? ஒன்றுமில்லை. ஒன்றுமேயில்லை. இது பாவம் என்றால் எந்த தெய்வம் என்னைத் தண்டித்துவிடும் பார்க்கலாம் என்று எண்ணிக்கொண்டேன். அப்படி ஒரு தருணம் வரவேயில்லை. தெய்வங்கள் என்னை மறந்துவிட்டிருந்தன. அல்லது நான் அவற்றைப் புறக்கணித்திருந்தேன். வினய் வீட்டை விட்டுப் போன பிறகு நான் முற்றிலும் வேறானவன் ஆகியிருந்தேன். என் வாழ்வில் அதிர்ச்சிகளுக்கு இனி இடமே இருந்துவிடக் கூடாது என்று முடிவு செய்து அதற்கான பயிற்சிகளை ஒழுங்காக மேற்கொண்டேன். மரணங்களைக் கூர்ந்து கவனித்தேன். திருமணக் கொண்டாட்டங்களின் தோலுரித்து எலும்புகளைத் தேடத் தொடங்கினேன். உறவுகளும் அதன் சிடுக்குகளும்.

ஒன்று நினைவுக்கு வருகிறது. பத்மா மாமியின் மகளை வினய் காதலித்தான் என்று நான் அவளிடம் சொன்னபோது அவள் பெரிதும் அதிர்ச்சியடைந்ததை நான் அறிவேன். தனக்கு அப்படியொரு அபிப்பிராயமே இருந்ததில்லை என்று அன்று அவள் என்னிடம் சொன்னது முற்றிலும் உண்மை. ஆனால் அதற்குப் பிறகு காணாமல் போன வினய்யை அவள் விரும்ப ஆரம்பித்துவிட்டாள். இதையும் நான் கவனித்தேன். ரசித்தேன் என்று சொல்ல வேண்டும். பார்க்கிற போதெல்லாம் அவள் வினய்யைப் பற்றி என்னிடம் கேட்காதிருக்கவில்லை.

‘அவன் என்னைப் பத்தி உன்கிட்டே பேசியிருக்கானாடா?’

‘இல்லே.’

‘அப்பறம் எப்படி அவன் என்னை விரும்பினான்னு சொன்னே?’

‘அது எனக்குத் தெரியும்.’

‘பாவம் இல்லே? எங்க போனானே தெரியலியேடா விமல்? போலிஸ் கம்ப்ளைண்டெல்லாம் குடுத்தேளே? ஒண்ணுமே நடக்கலியா?’

‘ம்ஹும்.’

‘கிடைச்சிட்டான்னா நன்னாருக்கும்.’

‘அவனைக் கல்யாணம் பண்ணிண்டுடுவியா நீ?’ என்று கேட்டேன்.

அவள் சிரித்தாள். சற்று வெட்கமுற்றாள் என்று நினைக்கிறேன். ஆனால் மறுக்கவில்லை. ‘திரும்பி வந்துட்டான்னா நானே அவன்கிட்டே பேசிடுவேன்’ என்று சொன்னாள்.

எளிய தீர்வுகள் எல்லோரிடமும் இருக்கின்றன. மிக எளிதில் எல்லோராலும் ஒரு முடிவுக்கு வந்துவிட முடிகிறது. எளிதில் சமாதானம் கொள்ளும் மனத்தை இயற்கை வழங்கியிருக்கிறது. எல்லாம் எளிது. கண்ணீரைப் போலவே, அது உலர்ந்து போவதும்கூட.

அம்மாவுக்கும் அது உலர்ந்துதான் போயிருந்தது. இந்தச் சமயத்தில் அண்ணாவைத் தேடிப் போனேன், அதனால்தான் காணாமல் போனேன் என்று சொல்லிக் கிளறி வைப்பது வீண் வேலை என்று எனக்குத் தோன்றாமல் இல்லை. ஆனாலும் அதைச் செய்ய விரும்பினேன். இது பாசத்தால் நிகழ்ந்தது என்று எண்ணால் எண்ண முடியவில்லை. எனக்கு அவனைப் பார்க்க வேண்டும். சிறிது பேசவேண்டி இருந்தது. அவன் கூப்பிட்டுக் கூப்பிட்டு உட்காரவைத்துப் பேசிய நாள்களில் நான் அவனுடன் பேசவேயில்லை. அது ஒரு தவறுதான் என்று தோன்றியது. அன்றைய எனது பக்குவமும் தெளிவும் அவ்வளவுதான். இன்றைக்கு நான் அப்படியல்ல. நிச்சயமாக அல்ல. நான் வேறு. தெளிவு என்று நான் எண்ணிக்கொண்டிருப்பதன் சாறில் ஒரு துளியையேனும் அவன் மீது நான் தெளித்துவிட விரும்பினேன்.

என்ன பெரிய கடவுள்? என்ன பெரிய யோகம்? என்ன பெரிய கர்மா? யாவே த்வயக்ஷகம் ஜீவேத்ரணம் க்ருத்வா க்ருதநிவேத: பஸ்மி பூதஸ்ய தேஹ புனராஹமம் குத:? என்று கேட்ட சார்வாகன் எனக்குப் பிடித்துப்போயிருந்தான். ஆனால், நான் வெளிப்படையாக எங்கும் கடவுளை மறுக்கப்போவதில்லை என்று உறுதி பூண்டிருந்தேன். தெரியாத ஒன்றை மறுத்து ஆகப்போவது ஒன்றுமில்லை. எதற்கு அவனை நினைத்து நேர விரயம் செய்துகொண்டிருக்க வேண்டும்?

இந்த உலகம் அழகானது. வாழ்வு இனிதானது. மனிதர்கள் பெரும் சுரங்கம். தோண்டத் தோண்ட எத்தனையெத்தனை அற்புதங்களை உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறார்கள்! மனிதர்களும் அவர்தம் தேவைகளும். அது முடிவற்றது. எல்லைகளில்லாதது. வேட்கையின் பிரவகிப்பில் வாழ்வையே ஒரு சருகாக்கி ஓடவிட்டு வேடிக்கை பார்க்கிற இனம். இதைப் பயில்வதல்லவா யோகம்? இதை ஆராய்வதல்லவா ஞானம்?

என்னை உறக்கத்தில் இருந்து எழுப்பிவிட்ட நாய் தன்னியல்பாக எங்கோ நடந்து போக ஆரம்பித்திருந்தது. ஒரு ஆர்வத்தில் நானும் அதன் பின்னால் போகத் தொடங்கியிருந்தேன். மலைக்காட்டின் குளிர் நான் சகிக்கக்கூடியதாக இல்லை. மழை இல்லை என்றாலும் காற்றின் ஈரம் தோலைக் குத்திக் குடைந்தது. பாதையற்ற பாதைகளில் அந்த நாய் எங்கெங்கோ போய்க்கொண்டே இருந்தது. இருளின் பூரணமான கருமையை விழுங்கியபடி முன்னால் விரைந்த அதன் பார்வையை எனதாக்கிக்கொண்டு என் எதிரே விரிந்த வனத்தை விழுங்கிக்கொண்டிருந்தேன்.

வெளிச்சம் சற்று புலப்படத் தொடங்கிய நேரம் எங்கெங்கோ சுற்றி மீண்டும் அந்தக் குடிசை இருந்த இடத்துக்கருகிலேயே நான் வந்துவிட்டிருந்ததை உணர்ந்தேன். சற்று வெட்கமாக இருந்தது. ஒரு காலை நடைப்பயிற்சி என்பது தவிர எந்த அற்புதத்தையும் அந்த நாய் தந்துவிடவில்லை. எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

‘என்ன தம்பி, வெள்ளன எந்திரிச்சிட்டிகளா?’ என்று கேட்டபடி அந்தக் காட்டிலாகா ஊழியர் குடிசையை விட்டு வெளியே வந்தார். நான் தலையசைத்தேன். ஒரு காப்பி சாப்பிட்டால் நன்றாயிருக்கும் என்று தோன்றியது. ஆனால் கேட்கத் தயக்கமாக இருந்தது.

‘உங்க ஒய்ஃப் தூங்கறாங்களா?’ என்று கேட்டேன்.

‘எங்க தூங்குறது? அவ அப்பமே எந்திரிச்சிப் போயிட்டா.’

‘எங்க?’

‘இன்னிக்கி அவ தங்கச்சிய பொண்ணு பாக்க வராக. பாளையங்கோட்டைக்குப் போகணுன்னு பத்து நாளா சொல்லிக்கிட்டிருந்தா.’

‘ஓ. அப்ப உங்களுக்கு சாப்பாடு?’

‘பாத்துக்கிட வேண்டியதுதான்’ என்று சொல்லிவிட்டு, ஒரு வேப்பங்குச்சியுடன் பின்பக்கம் போனார்.

அன்றைய தினத்தை நான் எப்படிக் கழிக்கப்போகிறேன் என்று குழப்பமாக இருந்தது. காட்டிலாகா ஊழியர் எட்டு மணிக்கு டூட்டிக்குப் புறப்பட்டுச் சென்றுவிடுவார். அதோடு மாலை ஆறு மணிக்குத்தான் திரும்பி வருவார். அதற்குள் தங்கைக்கு நிச்சயம் செய்து முடித்துவிட்டு அவரது மனைவி வந்து சேர்ந்துவிடுவாரா என்று கேட்கத் தயக்கமாக இருந்தது.

ஒரு கணம் தலையைச் சிலுப்பிக்கொண்டேன். இதென்ன வினோதம்? இவர்களை எனக்கு முன்பின் தெரியாது. இவர்கள் அண்ணாவைப் பார்த்திருக்கிறார்கள். அது ஒன்றுதான் தொடர்பு. அழைத்துச் சென்று அவனைக் காண்பிக்கக்கூடியவர்களும் அல்லர். அவன் எங்கிருக்கிறான் என்று தெரியாது என்று சொல்லிவிட்டார்கள். தப்பித்தவறி அவன் இந்தப் பக்கம் மீண்டும் வந்தால் நானே பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். அதற்கு இவர்கள் எதற்கு?

மீண்டும் மனித மனத்தின் விசித்திரக் கவலைகளைத்தான் எண்ணிக்கொண்டேன். ஒரு சராசரியாக இருந்துவிடுவது எப்போதும் சௌகரியம்தான். சிந்திக்காதிருந்துவிட முடியுமானால் இன்னுமே சௌகரியம்.

ஏழரை மணிக்கு அவர் வேலைக்குப் புறப்பட்டுப் போனார். நான் வீட்டுக்கு வெளியேதான் அப்போதும் அமர்ந்திருந்தேன். ‘இங்கனயே இரு தம்பி. உங்கண்ணாத்தை இன்னிக்கி ஒருவேளை வருவாரு. வந்தா கூப்ட்டு இருக்க வையி. நான் வந்துடுதேன்’ என்று சொல்லிவிட்டுப் போனார்.

பதினொரு மணி சுமாருக்கு அந்தப் பக்கமாக நாலைந்து பேர் தடதடவென ஓடினார்கள். ஒருவனைப் பிடித்து நிறுத்தி என்ன விஷயமென்று கேட்டேன். ‘ஒருத்தன் கட்டைய கொளுத்திப் போட்டு அதுமேல படுத்துக் கெடக்கறானாம் தம்பி. ஒடம்புல ஒத்த காயம்கூட படவேயில்லியாட்டிருக்கு. சின்ன வயசு சித்தர்னு பேசிக்கிடறாங்க.’

நானும் எழுந்து ஓட ஆரம்பித்தேன்.

(தொடரும்)

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

40. சொல்லாலானவன்

 

காட்டுப் பாதையில் என்னால் அவர்கள் வேகத்துக்கு ஈடுகொடுத்து ஓட முடியவில்லை. மேடு ஏறுவதில் எனக்குப் பிரச்னை இல்லை. ஆனால் சரிவுகளில் இறங்கும்போது கால் தடுக்கியது. ஆனால் அவர்கள் அநாயாசமாக இயற்கையின் நெளிவுசுளிவுகளைத் தாண்டிக் கடந்து போய்க்கொண்டே இருந்தார்கள். இருபது நிமிடங்களுக்குமேல் நான் ஓடியிருப்பேன். மூச்சிறைத்து ஓரிடத்தில் நின்றுவிட்டேன். என்னோடு ஓடிய கிராமத்து மக்கள் நிற்காமல் முன்னேறிச் சென்றுகொண்டே இருந்தார்கள். மனத்தில் அப்போது எனக்குத் தீர்மானமாகத் தோன்றியது. அது என் அண்ணாதான். அவனைத் தவிர வேறு யார் அம்மாதிரி விஷப் பரீட்சைகள் செய்ய முடியும்? இம்முறை அவனைத் தவறவிட்டுவிடக் கூடாது என்று மீண்டும் எழுந்து வெறிகொண்டு ஓடினேன்.

அவர்கள் சென்று சேர்ந்த இடத்தை நான் அடைந்தபோது, கூட்டமாக இருபது பேர் வரை அங்கே குழுமியிருந்தார்கள். ஒரு பக்கம் ஓடையின் சலசலப்பு. கரையெங்கும் அடர்ந்து வளர்ந்திருந்த மரங்களின் பசுமை. கண்ணில் பட்ட எல்லைவரை எங்கும் மனிதர்கள் வாழ்வதற்கான அறிகுறியே தெரியாத அடர்வனமாக இருந்தது அது. என்னோடு ஓடி வந்தவர்கள் ஏழெட்டுப் பேர்தான். மற்றவர்கள் எங்கிருந்து எப்போது வந்து சேர்ந்திருந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் விஷயம் எப்படியோ வெளியே போயிருக்கிறது. யாரோ ஒருவர் பார்த்துவிட்டு எப்படியோ மற்றவர்களுக்குத் தகவல் சொல்லியிருக்கிறார்.

ஓடையை ஒட்டிய ஒரு பெரும் பாறையின் எதிரே பத்திருபது கட்டைகள் எரிந்து கிடந்தன. சாம்பல் மூடிய அவற்றின் உள்ளே இன்னமும் கங்கு இருந்தது. புகைந்தது.

‘இதுமேலதாங்க படுத்துக் கெடந்தாரு. என்னமோ மெத்தையில படுத்திருக்கறதாட்டம்’ என்று ஒருவன் சொன்னான்.

நான் நெருங்கிச் சென்று அந்த எரிந்த கட்டைகளில் ஒன்றைத் தொட்டேன். விரல் சுட்டது. இன்று முழுவதுமே அந்தச் சூடு அங்கு இருக்கும் என்று தோன்றியது.

‘நீ பாத்தியா சேகரா? நெசமாத்தானா?’ என்று யாரோ கேட்டார்கள்.

‘குத்தாலநாதர் சத்தியமாண்ணே. அந்தக் காலத்துல உடன்கட்டை ஏறுவாங்களாமே, அப்பிடி எதாச்சும் பைத்தாரத்தனம் பண்ணுதானோன்னு பயந்து போய் ஓடியாந்தேன். நெருங்கிப் பாத்தப்பத்தான் தெரிஞ்சிது, அவுக தவம் பண்ணிட்டிருக்காகன்றது.’

என்னால் நம்பவே முடியவில்லை. அதிர்ச்சியும் வியப்பும் ஒருங்கே தாக்க, அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டு வாய் பிளந்து நின்றேன்.

ஓர் இளைஞன். எப்படியும் இருபது இருபத்து இரண்டு வயதுதான் இருக்கும். முகமெங்கும் தாடி. தோள் வரை நீண்டு வளர்ந்திருந்த தலைமுடி. மேலுக்குச் சட்டை அணிந்திருக்கவில்லை. இடுப்பில் ஒரு வேட்டி மட்டும் கட்டியிருந்தான். அதுவும் முழங்கால் உயரத்துக்குத் தூக்கிக் கட்டியிருந்தான். யாருமற்ற வனாந்திரத்தின் பேரெழிலைப் பருகியபடியே நடந்துகொண்டிருந்தவன், ஓடைக்கரையை நெருங்கியதும் சற்றுத் தாமதித்தான். அங்கிருந்த பாறையின் மீது வெகுநேரம் அமர்ந்திருந்தான். மரம் வெட்டச் சென்ற சேகரன், போகிறபோது அந்த இளைஞனைப் பார்த்துக்கொண்டேதான் போயிருக்கிறான். ஆனால் அப்போது வித்தியாசமாக அவனுக்கு ஏதும் தோன்றவில்லை. யாரோ சுற்றுப் பயணி என்று நினைத்திருக்கிறான். அல்லது பைத்தாரக் கிறுக்கன்.

அவன் திரும்பும்போதுதான் அந்த யோகி கட்டைகளைக் கொளுத்திவிட்டு அதன் மீது ஏறிப் படுத்ததைக் கண்டிருக்கிறான். ஐயோ என்று அலறிக்கொண்டு அவன் அருகே ஓடி வந்து சேர்வதற்குள் கட்டைகள் திகுதிகுவென்று எரியத் தொடங்கியிருந்தன. ஒரு பாயைப் போல் அதைப் பாவித்து மேலே படுத்திருந்த யோகி, தலைக்குமேலே கையை உயர்த்திக் கூப்பிய வண்ணம் கண்மூடிக் கிடந்தார்.

அழைப்பதா, கீழே தள்ளிவிடுவதா, கத்திக் கூப்பாடு போட்டு யாரையாவது கூப்பிடுவதா, விழுந்து கும்பிடுவதா என்று புரியாத குழப்பத்தில் அவன் சில நிமிடங்கள் வைத்த கண் வாங்காமல் அவரையே பார்த்துக்கொண்டு நின்றான். எரிந்துகொண்டிருந்த கட்டைகள் மெல்ல மெல்லத் தணிய ஆரம்பித்து நெருப்பு அடங்கி, கங்கு தெரிய ஆரம்பித்தது. யோகி நிதானமாகத் தன் கண்களைத் திறந்து பார்த்தார். அதில் இருந்து எழுந்து வெளியே வந்து ஓடையில் இறங்கி உடம்பைத் தேய்த்துக் குளித்தார்.

இப்போது சுய உணர்வு பெற்ற சேகரன் வேகமாக அவர் அருகே ஓடி, ‘சாமி...’ என்று அழைத்தான்.

‘என்ன?’ என்று அவர் திரும்பியதும் கையெடுத்துக் கும்பிட்டான். தனது இடது கையை உயர்த்தி ஆசி வழங்குவது போலச் செய்துவிட்டு திரும்பிப் பாராமல் அவர் கிளம்பிச் சென்றார்.

அவன் சொல்லி முடித்த கதையைக் கூட்டத்தில் பலர் நம்பவில்லை என்பது எனக்குப் புரிந்தது. ‘கிறுக்குப் பய சும்மா எதோ சொல்லுதான்யா’ என்று ஒருவர் சொன்னார்.

‘இல்லண்ணே, சாமி சத்தியம். நான் பாத்தேண்ணே.’

‘எள வயசு சாமியா?’

‘ஆமாண்ணே. நெடுநெடுன்னு ஈச்ச மரமாட்டம் வளத்தி. மீச மாதிரி புருவம். ரெண்டு புருவம் சேர்ற இடத்துல பொட்டு வெச்ச மாதிரி ஒரு மச்சம் இருந்ததுண்ணே.’

‘ஏண்டா அப்பிடி ஒருத்தன் இங்க இருந்தான்னா பிடிச்சி வெக்கவேண்டியதுதானே? ஊருக்குள்ள கூட்டிட்டு வந்திருக்கலாம்ல?’

‘அவரு நிக்கவேயில்லண்ணே. கைய ஒசத்தி ஆசீர்வாதம் பண்ணிட்டுப் போயிட்டே இருந்துட்டாரே.’

நான் அவர்கள் சம்பாஷணையில் குறுக்கிடவேயில்லை. ஆனால் அவர்கள் பேசிய ஒவ்வொரு சொல்லையும் உள்ளுக்குள் ஏந்தி இருத்திக்கொண்டேன். அது அண்ணாதான். எனக்கு சந்தேகமேயில்லை. ஆனால் தணலின் மீது கிடக்குமளவுக்கு இந்நாள்களில் அவன் தன் சாதனைகளில் முன்னேறியிருப்பான் என்று என்னால் நம்ப முடியவில்லை. சட்டென்று அந்தத் திருவானைக்கா கிழவன் ஞாபகம் வந்துவிட்டது. எத்தனைக் கெட்ட கிழவன்! ‘அவன் அங்கதான் இருக்கான். ஆனா நீ பாக்கமாட்டே’ என்று அடித்துச் சொன்னான். ஒரு கணம் அந்தக் கிழவனின் மீது கோபம் வந்தது. உடனே அந்தக் கோபம் உதிர்ந்து ஓர் அதிசய உணர்வு எழுந்தது. இதுவும் கண்ணுக்குத் தெரியாத பல கண்ணிகளின் அந்தரங்கப் பிணைப்புத்தான். எங்கிருந்து அண்ணா அந்தக் கிழவனைப் பிடித்தான்? என்ன பேசினான்? என்னவெல்லாம் சொல்லியிருப்பான்? எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் குற்றாலத்தில் அண்ணா இருப்பதை அறிந்த கிழவன், நான் குற்றாலத்துக்கே சென்றாலும் அவனைச் சந்திக்க முடியாது என்று எப்படி அப்படியொரு தீர்மானத்துடன் சொல்ல முடியும்? மானசீகத்தில் பேசிக்கொள்கிறவர்களா? முடியுமா? அதெல்லாம் சாத்தியம்தானா?

குழப்பமாக இருந்தது. புதிர்களின் அழகை யோசிக்க ஆரம்பித்தேன். இது ஒரு அனுபவம். மகத்தான பேரனுபவம். என் அண்ணா ஒரு யோகி. வாழ்வில் அவன் எதைத் தேடப் போய் எங்கே நிற்கிறான் என்று அறிய முயல்வதே என் சாதகம். நான் அதை விடப் போவதில்லை. அவன் என் கண்ணில் படுகிறானா இல்லையா என்பதே முக்கியமில்லை என்று தோன்றிவிட்டது. ஆனால் என்னால் அவனை நினைக்காதிருக்க முடியாது. தேடாதிருக்க முடியாது. தேடிப் போகிற இடங்களில் இறுதிவரை இப்படிப் பிறர் சொற்களாகவே அவன் எனக்குக் காட்சியளிக்க முடிவெடுத்துவிட்டானா?

சொல்லாலானவன். எனக்கென்னவோ அவன் திட்டமிட்டு என்னைத் தவிர்க்க விரும்புவான் என்று தோன்றவில்லை. என்றைக்காவது சந்திக்கும் நேரம் ஒன்று வராமல் போகாது என்று நினைக்கவே விரும்பினேன்.

கூட்டத்தில் ஒருத்தன் அண்ணாவைப் பார்த்தவனிடம் கேட்டான், ‘எல்லாஞ்சரிடா தம்பி. நெருப்புல படுத்துக் கெடந்து எந்திரிச்சிப் போனாகன்னு சொன்னியே, ஒடம்புல தீத்தழும்பு பட்டிருக்கும்ல?’

‘நீ நம்பமாட்டண்ணே. அதனாலதான் நாஞ்சொல்லலை. அவுக கட்டியிருந்த வேட்டி மட்டுந்தான் லேசா பொசுங்கியிருந்தது. சூத்தாமட்டை தெரிஞ்சிதண்ணே. ஆனா நெருப்புப்பட்ட சுவடே இல்லே.’

அதற்குமேல் எனக்குக் குற்றாலத்தில் இருப்புக் கொள்ளவில்லை. மீண்டுமொரு முறை அருவிக்குச் சென்று ஆசை தீரக் குளித்தேன். குளிக்கும்போது அந்தக் காட்டிலாகா ஊழியர் சொன்னது நினைவுக்கு வந்தது. ‘ஆத்துல மீன புடிச்சி பச்சையாவே கடிச்சித் திங்குதான்.’

அண்ணாவா? நான் சிரித்தே விட்டேன். இதைக் கண்டிப்பாகக் கேசவன் மாமாவிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஐயோ ஐயோ என்று அவர் தலையில் அடித்துக்கொள்வார்.

‘அவன் மீன் சாப்பிடறதை விடுங்கோ. நான் அபின் சாப்ட்டேன். தெரியுமா?’ என்று கேட்டால் மீண்டும் ஐயோ ஐயோ.

‘ரொம்ப நன்னா இருந்தது மாமா. அப்படியே காதெல்லாம் பஞ்சடைச்சுப் போயி, கண்ணெல்லாம் நீலமாகி, காத்துல மிதந்துண்டே இருந்தேன். ரெண்டு நாள் மிதந்திருக்கேன்னா பாத்துக்கோங்கோ.’

ஐயோ ஐயோ.

அன்றைக்கு மாலை நான் திருநெல்வேலிக்கு வந்து சேர்ந்துவிட்டேன். கையில் மிச்சம் இருந்த பணம் சென்னை வரை செல்வதற்குப் போதுமா என்று சந்தேகமாக இருந்தது. ஒரு கண்டக்டரிடம் சென்னைக்குச் செல்ல டிக்கெட் தொகை எவ்வளவு என்று கேட்டேன். அவர் சொன்னதைக் காட்டிலும் என்னிடம் ஒன்பது ரூபாய் குறைவாக இருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.

சட்டென்று ஏதோ தோன்றி திருச்சி வண்டியில் ஏறி அமர்ந்தேன். திருவானைக்காவுக்குப் போய் அந்தக் கிழவனை இன்னொரு முறை பார்த்துவிட்டுப் போகலாம் என்று தோன்றியது. என் அனுபவத்தைச் சொல்வதல்ல முக்கியம். நான் ஊர் திரும்பவும் அவரிடம்தான் பணம் கேட்க வேண்டும். இந்த உலகில் எனக்கு உதவுவதற்கு இருந்த ஒரே அந்நிய மனிதன் அவன்தான் என்று நினைத்துக்கொண்டேன்.

என்னைக் கண்டதும் கிழவன் சிரிப்பான். ‘என்ன தம்பி அண்ணன பாத்தியா?’ என்று நக்கலாகக் கேட்பான்.

ஆமாம் பார்த்தேன் என்று சொல்லிவிடலாம் என்று நினைத்துக்கொண்டேன். வண்டி கிளம்ப ஆரம்பித்தது.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

41. பிசிறுகளின் காதலன்

 

 

சத்திரம் பேருந்து நிலையத்தில் நான் இறங்கும்போதே அவன் என் கண்ணில் பட்டான். வேட்டியைத் தார்ப்பாய்ச்சிக் கட்டிக்கொண்டு, மேலுக்கு எதையும் அணியாமல் வெற்று மார்பின் குறுக்கே இரு கரங்களையும் பெருக்கல் குறிபோலப் போட்டுக்கொண்டு குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தவன், என்னைக் கண்டதும் சிரித்தான். எனக்கும் சிரிப்பு வந்தது. ‘நீ வருவேன்னு தெரியும், அதான் பஸ் ஸ்டாண்டுக்கே வந்துட்டேன்’ என்று சொல்வானென எதிர்பார்த்தேன். ஏனோ அவன் அதைச் சொல்லவில்லை. மாறாக, விட்ட இடத்தில் தொடங்குவதுபோல, ‘பாக்க முடியல இல்ல? நாந்தான் சொன்னேனே?’ என்றான்.

நான் அதைக் கண்டுகொள்ளாமல், ‘ஊருக்குப் போகப் பணம் குறையறது. எனக்கு இங்க தெரிஞ்சவர் நீங்க மட்டும்தான். பஸ்ஸுக்கு பணம் தர முடியுமா?’ என்று கேட்டேன்.

அவன் சிறிது நேரம் என்னை உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தான். பிறகு, ‘சட்டைப்பையிலே வெச்சிருக்கேன். கெளம்பு’ என்று சொன்னான்.

எனக்குப் புரியவில்லை. என்ன என்று கேட்டேன். ‘உஞ்சட்டைப் பையிலே வெச்சிருக்கேன் தம்பி. கெளம்புன்னு சொன்னேன்’ என்று மீண்டும் சொன்னான். நான் குழப்பத்தோடு என் சட்டைப்பைக்குள் கைவிட்டேன். ஒரு நூறு ரூபாய்த் தாள் இருந்தது. உடனே நான் அவனை நிமிர்ந்து பார்த்தேன். ‘நீங்க சித்தரா?’ என்று கேட்டேன். அவன் இதற்கும் சிரித்தான். அந்தச் சிரிப்பு எனக்குப் பிடிக்கவில்லை. அவனைச் சற்றுக் கோபப்படுத்திப் பார்க்கலாம் என்று ஏனோ தோன்றியது. ‘மேஜிக் தெரிஞ்சவரா?’ என்று அடுத்துக் கேட்டேன். இதற்கு அவன் சிரிக்கவில்லை. உடனே பதில் சொன்னான், ‘ஆமா.’

எனக்குத் தெரிந்துவிட்டது. அவன் ஒரு சித்தர்தான். எங்கிருந்து அண்ணா அவனைப் பிடித்தான் என்று என்றாவது கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். அது அவ்வளவு முக்கியமல்ல. ஆனால் என் மனத்தில் அவனைக் குறித்த வியப்போ, பிரமிப்போ உருவாகவேயில்லை என்பதைக் கவனித்துக்கொண்டே இருந்தேன். திரும்பத் திரும்ப அவனை நான் ஒருமையிலேயே நினைத்தேன். மனத்தில் உருவாகாத மரியாதைப் பன்மையைச் சொல்லில் அதனால்தான் என்னால் ஏற்ற இயலவில்லை. ஒருவேளை நான் குற்றாலத்தில் அண்ணாவைச் சந்தித்திருந்தால் இது மாறியிருக்கலாம் என்றும் தோன்றியது.

இப்படி யோசித்துக்கொண்டிருந்தபோதே அவன் சொன்னான், ‘மரியாதையெல்லாம் வெறும் பாவனை. நான் அதை எதிர்பார்க்கறதில்லே. உங்கண்ணன் என்னை சொரிமுத்துன்னு பேர் சொல்லியே கூப்புடுவான். நான் தேர்ந்தெடுக்கறவங்களை நான் அப்படித்தான் நினைக்கவும் பேசவும் வெப்பேன்.’

இது என்னை அதிரவைத்தது. இவன் என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறானா!

சட்டென்று, ‘மன்னிச்சிடுங்க. தப்புதான்’ என்று சொன்னேன்.

அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. ‘அந்த பஸ்ஸு கெளம்புது பாரு. போய் ஏறிக்க’ என்றான்.

‘இல்லே. நான் கொஞ்ச நேரம் கழிச்சிப் போறேன். உங்ககிட்டே பேசணும்.’

‘என்னா இருக்குது பேச? உங்கண்ணன் படுக்கைய பாத்துட்டல்ல? அவ்ளதான். உங்க வீட்ல ஒருத்தருக்குத் தெரியப்படுத்தணுன்னு ஒரு இது. அது ஒனக்கு வாய்ச்சிது. பதமா பக்குவமா இத உங்கம்மாப்பாட்ட சொல்லு. இதையுஞ்சொல்ல தெகிரியம் வரலன்னா, கோவளத்துக்குப் போயி சம்சுதீன்கிட்டேயாச்சும் சொல்லிடு. அவன் உங்கம்மாவுக்குத் தெரியப்படுத்திடுவான்.’

‘சம்சுதீனா?’

‘அவம்பேரு அதான். மசூதி வாசல்ல கெடப்பான். ஒனக்கு அவனைத் தெரியும்.’

ஏனோ எனக்கு அவனை விட்டு உடனே நகர்ந்துவிட வேண்டும் என்று இப்போது தோன்றியது. மனத்தில் எழுந்த உணர்வு அச்சமா என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் எனக்குள் ஒரு சிறு நடுக்கம் இருந்ததை உணர்ந்தேன். இது வேறு உலகம். இவர்கள் வேறு மனிதர்கள். தற்செயலாக அண்ணா இவர்களுள் ஒருவனாகிப் போயிருக்கிறான். நல்லது. அது அவனது கர்மா. ஆனால் நான் இதைக் குறித்தெல்லாம் வியப்பதற்கில்லை என்று எண்ணிக்கொண்டேன். நகர்ந்த வருடங்களில் நான் நிறைய வாசிக்க ஆரம்பித்திருந்தேன். சித்தர் பாடல்கள். இந்து மதம். யோகம். ஆன்மிகம். தந்திரா. சித்து. மூலிகை மருத்துவம். என்னென்னவோ. பல யோகிகள், சித்தர்களின் வாழ்க்கை வரலாறுகளை வாசித்துப் பார்த்தேன். பக்கம் தோறும் அவர்கள் அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டே இருந்தார்கள். எத்தனை எத்தனை அற்புதங்கள்! இரவைப் பகலாக்குவதில் தொடங்கி, நீரில் நடப்பது, காற்றில் பறப்பது, உடல் விட்டு உயிரை நகர்த்தி மீண்டும் உடலோடு சேர்ப்பது வரை என்னென்னவோ. யோக விஞ்ஞானம் சார்ந்த அடிப்படை அறிவு உண்டாகிவிட்டால் இவை எளிதில் புரிந்துவிடும் என்று நினைத்தேன். ஆனால் அத்தனை பேரும் பிறந்து வாழ்ந்து இறந்துதான் போயிருக்கிறார்கள். ஆனால் மரணத்தை வெல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். அதுதான் பெரும்பாலானவர்களின் நோக்கமாக இருந்திருக்கிறது.

எனக்கு அதுதான் உடன்பாடற்றதாக இருந்தது. மரணத்தை எதற்கு வெல்ல வேண்டும்? வாழ்வின் அனைத்துப் பிசிறுகளையும் நான் விரும்பினேன். மரணம் உள்பட. முரண்பாடுகளில் ஒளிந்துள்ள கவித்துவத்தை ரசித்தேன். கண்ணீரின் ருசியும் புன்னகையின் வாசனையும் இணையும் புள்ளியைத் தேடுவதை விடுத்து, மரணத்துக்கு எதிரான துவந்த யுத்தத்தை நிகழ்த்திக்கொண்டிருப்பதில் என்ன அர்த்தம் உள்ளது?

கடவுள். ஐயோ அவன் ஒருத்தன் இந்த யோகிகளை என்ன பாடு படுத்தி எடுக்கிறான்! வாழ்வை விடுத்து மலை முகடுகளில் அவர்கள் தேடிச் செல்லும் பக்காத் திருடன். சிலருக்கு அவன் அகப்படுகிறான். பலர் இறுதிவரை தேடிவிட்டுக் காலாவதியாகிவிடுகிறார்கள். ஆனால் காலம்தோறும் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சௌக்கியமாகத் தேடட்டும். எனக்கு அதில் ஆர்வம் இல்லை. நிகழ மறுக்கும் அற்புதமான இந்த வாழ்வே எனக்குப் போதும். இதன் கசடுகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. இதன் துவர்ப்பு பிடித்திருக்கிறது. இதன் வாசனையும் துர்நாற்றமும் எனக்குப் பாதுகாப்பாக உள்ளது. போதும். அற்புதங்களை அவர்களே நிகழ்த்திக்கொள்ளட்டும். அதை வியக்க நான் ஆளில்லை. கிழவனால் ஒரு நூறு ரூபாய்த் தாளைத்தான் என் சட்டைப் பையில் கொண்டுவைக்க முடியும். தலைகீழாக நின்றாலும், அவனால் ஒரு நூற்று ஒரு ரூபாய்த் தாளை உண்டாக்க முடியாது.

அற்புதங்களின் மீதான ஈர்ப்பு உதிர ஆரம்பித்திருந்தது. அன்றைய என் வயதுக்கு அது அதிகம்தான். அதில் சந்தேகமில்லை. ஆனாலும் நான் அப்படித்தான் இருந்தேன். அதிசயப் பிறவிகளும் கடவுளை நோக்கிய அவர்களது முயற்சிகள் மிகுந்த பயணங்களும் தொடக்கத்தில் எனக்கும் ஆர்வம் தரத்தக்கவையாகத்தான் இருந்தன. ஏதோ ஒரு கட்டத்தில் மனித மனத்தினும் பெரிய அற்புதம் வேறில்லை என்று கண்டேன். அதை அலையவிட்டு வேடிக்கை பார்ப்பதுதான் எத்தனை சுகமான காரியம்! முட்டாள்தனமாக அதைக் கட்டுப்படுத்தி ஒருமையில் நிறுத்துவதை யோகமென்கிறது உலகம். என்ன பெரிய சித்து? என்ன பெரிய அதிசயம்? என் சட்டைப்பையில் அந்தக் கிழவன் நூறு ரூபாய்த் தாளை எனக்குத் தெரியாமல் வைத்தது ஓர் அற்புதமா? எந்தப் பிரயத்தனமும் இன்றி எனக்குத் தேவையான பணம் என்னிடம் வந்து சேர நான் ஒரு வழி கண்டறிந்தேனே, அதுவல்லவா அற்புதம்?

நான் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. இப்படியெல்லாம் நான் எண்ணுவதைக்கூட அவன் படித்திருப்பான் என்று அறிவேன். அதனாலென்ன? எதிராளி மனத்துக்குள் ஓடுகிற எண்ணங்களை இழுத்து நிறுத்திப் படிப்பது ஓர் அறிவியல். ஆனால், அது மின்சார ரயிலில் பயணம் செய்கிறபோது வெளியே விரையும் கம்பங்களை எண்ணுவதை நிகர்த்ததுதான். இன்னொருவன் மனத்தைப் படித்து எனக்கென்ன ஆகப்போகிறது? அடுத்தவர் டைரியை வாசிக்கும் எளிய கிளுகிளுப்புதான் அதிலும் இருக்கிறது. எனக்கு மனிதர்களை அவரவர் சொற்களின் மூலம் படிக்கவே விருப்பம். உண்மையும் பொய்யும் மாறி மாறி முலாம் பூசுகிற சொற்கள். பொய்யும் அழகுதான். உண்மையின் பேரெழில் அதற்கும் உண்டு. முற்றிலும் உண்மையானவை எப்படி அலுத்துப் போகுமோ, அதே போலத்தான் முழுப் பொய்களும் திகட்டும். மனிதர்கள் தம் மானசீகத்தில் சரி விகிதம் அறிந்து அதைக் கலந்து வெளிப்படுத்துகிறார்கள். அதுதான் அழகு. அதன்மூலம்தான் மக்களைப் படிக்க வேண்டும். பூரணத்தில் இருந்து பூரணத்தை ஏன் எடுக்க வேண்டும்? பூரணங்கள் அருங்காட்சியகத்தில் பத்திரமாக இருக்கட்டும். நான் பிசிறுகளின் காதலனாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.

நான் அந்தக் கிழவனிடம் விடைபெற்று, சென்னை செல்லும் பேருந்தில் ஏறிக்கொண்டேன். ஏறியதுமே கண்டக்டரிடம் அந்த நூறு ரூபாய்த் தாளைக் கொடுத்து டிக்கெட்டும் வாங்கிவிட்டேன். அது யார் காசோ, எங்கிருந்து வந்ததோ. வாழைப்பழப் பிள்ளையாரின் வேறொரு வடிவம். ஒழியட்டும் என்று எண்ணிக்கொண்டு கண் மூடித் தூங்க ஆரம்பித்தேன்.

இரண்டு மணி நேரம் அயர்ந்து தூங்கித்தான் போனேன். பிறகு என்னருகே இருந்தவரிடம் இருந்து செய்தித் தாளை வாங்கிப் புரட்டினேன். வண்டி விழுப்புரம் தாண்டியதும் ஒரு சாலையோர விடுதியின் முன்னால் நின்றது. பத்து நிமிடங்கள் நிற்கும் என்று கண்டக்டர் சொல்லிவிட்டு இறங்கிச் சென்றார். எனக்கும் ஒரு காப்பி சாப்பிடலாம் என்று தோன்றியது. வண்டியை விட்டு இறங்கினேன்.

முன்புறம் கூரை வேய்ந்த ஒரு சிறிய உணவகம் அது. வெளியே ஒரு ஸ்டூலில் பெரிய ஸ்பீக்கர் வைத்துப் பாடல் ஒலிபரப்பிக்கொண்டிருந்தார்கள். குளிர்பானங்கள். பிஸ்கட்டுகள், திரைப்படப் பாடல் ஒலித்தட்டுகள். உள்ளே முட்டை தோசை, இடியாப்பம் தயாராக உள்ளதாக வாசலில் நின்று ஒருவன் சொல்லிக்கொண்டிருந்தான்.

ஒரு கணம் தயங்கினேன். சரி, காப்பிதானே சாப்பிடப் போகிறோம் என்று உள்ளே சென்று உட்கார்ந்தேன். காப்பி சொல்லிவிட்டுத் திரும்பியபோது என் பக்கத்தில் ஒரு பெண் வந்து உட்கார்ந்தாள். அவளுக்கு முப்பத்தி ஐந்து முதல் நாற்பது வயது இருக்கும் என்று நினைக்கிறேன். அவளும் ஒரு காப்பி சொன்னாள். சொல்லிவிட்டுச் சட்டென்று என்னிடம் திரும்பி, ‘வேணுமா?’ என்று கேட்டாள்.

‘என்ன?’

‘வேணுமா?’

‘என்னது வேணுமா?’

‘ஐய, தெரியாத மாதிரி கேக்குது பாரு’ என்று மிகவும் உரிமையுடன் என் விலாவில் இடித்தாள்.

எனக்குப் புரிந்தது. சட்டென்று நான் அங்கிருந்து எழுந்து அடுத்த மேசைக்குச் சென்று உட்கார்ந்துகொண்டேன். அவள் சில விநாடிகள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு என்ன நினைத்தாளோ, ‘காப்பி வேணா’ என்று சொல்லிவிட்டு எழுந்து வெளியே போய்விட்டாள்.

நான் காப்பியைக் குடித்துவிட்டு வெளியே வந்தபோது, அவள் எனக்காகக் காத்திருந்ததைக் கண்டேன். அவள் ஏதும் பேசுவதற்குள் பேருந்தில் ஏறி உட்கார்ந்துவிட வேண்டும் என்று நினைத்து வேகமாக நடந்தேன். ஆனால் அவள் நான் முற்றிலும் எதிர்பாராவிதமாக என் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினாள்.

‘வண்டி இன்னும் அஞ்சு நிமிசம் நிக்கும். வேணுன்னா சொல்லு. பின்னாடி இடம் இருக்குது. பதினஞ்சு ரூபா குடு. போதும்.’

நான் அவளை முறைத்தேன். இதென்ன விபரீதம்? பட்டப் பகலில் பொது வெளியில் இப்படிப் பேச முடியுமா? சரி முடிகிறது. ஐந்து நிமிடங்கள். பதினைந்து ரூபாய். ஒரு நேர்த்திக்கடன் போல் யாராவது இதற்கு ஒப்புக்கொண்டு ஒதுங்குவார்களா?

‘வேணான்னா வேணான்னு சொல்லு. நான் அடுத்த ஆளப் பாக்கப் போவேன்ல? டைம் வேஸ்ட் பண்றியே? பஸ்ஸு கெளம்பிரும்ல?’

‘வேணாம்’ என்று சொல்லிவிட்டு, வேகமாகச் சென்று பேருந்தில் ஏறி அமர்ந்தேன். சற்றுப் படபடப்பாக இருந்தது. நான் வீட்டைவிட்டுத் தனியே எங்கும் போகாதவன். இந்தப் பயணம் நான் திட்டமிடாதது. என் அப்பாவும் அம்மாவும் என்னைக் காணாமல் எவ்வளவு வேதனை அடைந்திருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். ஏதோ ஒரு நப்பாசையில் அண்ணா இருக்கும் இடம் தெரிந்ததால், அவனைத் தேடித் தனியே போய்விட்டேன். அவனைப் பார்க்க முடியாவிட்டாலும் அவனைப் பற்றிய ஒரு பெரிய உண்மையை அறிந்து வந்திருக்கிறேன். கிழவன் சொன்னதற்காக இல்லாவிடினும் இதை நிச்சயம் நான் வீட்டில் சொல்லிவிடுவேன். ஏதோ ஓரிடத்தில் ஒவ்வொரு சங்கதிக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்துத்தான் ஆக வேண்டும்.

வண்டி அங்கிருந்து கிளம்பியபோது, அந்தப் பெண் நான் அமர்ந்திருந்த இடத்தருகே வந்தாள். நான் அவளைப் பார்க்கக் கூடாது என்று எண்ணிக்கொண்டு எங்கோ பார்க்க ஆரம்பித்தேன். அவள் சிரித்தாள். ஏனோ அதை நான் பார்த்துவிட்டேன்.

‘தொட்டுப் பாக்கணுன்னு தோணுதில்ல? அப்பறம் என்ன?’ என்று அவள் கேட்டாள். எனக்கு மிகவும் அவமானமாகப் போய்விட்டது. சீ என்று வேறுபுறம் திரும்பிக்கொண்டேன். வண்டி வேகமெடுத்து வெகுதூரம் சென்ற பிறகுதான் என்னால் நிதானத்துக்கு வர முடிந்தது. அப்போது நினைத்தேன். அது உண்மையா? அவளைத் தொட்டுப் பார்க்க எனக்குத் தோன்றியதா?

நிச்சயமாக இல்லை. ஆனால் தொட்டுப் பார்த்திருக்கலாம் என்று இப்போது நினைத்தேன்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

42. உடலும் உள்ளமும்

 

 

இரவு ஏழு மணிக்குப் பேருந்து மாமண்டூரை நெருங்கிக்கொண்டிருந்தது. முகத்தில் வீசிய காற்றில், பகல் முழுதும் அடித்த வெயிலின் மிச்சம் இருந்தது. நான் மிகவும் களைத்திருந்தேன். குறுகலான இருக்கையில், இன்னொருவர் அருகே அமர்ந்திருப்பது மிகுந்த வலி தரத்தக்கதாக இருந்தது. நான் நிமிர்ந்து உட்கார்ந்தால் அவர் தோளில் இடித்தது. காலை நீட்ட முயன்றால் எனக்குக் குறுக்காக அவர் கால் நீட்டியிருந்தார். திரும்பினால் உரசவேண்டி இருந்தது. எனக்குச் சிறிது நேரம் கால்களை மடக்கி உட்கார வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அது சாத்தியமாக இல்லை. ஒரு காலை மடக்கிவிட்டேன். இன்னொன்றைத் தூக்கி மடக்க முடியவில்லை. எதிர் இருக்கையில் முட்டிக்கொண்டு நின்றது. அத்தனை நெருக்கம். இன்னொரு ஐந்து பத்து நிமிடங்களுக்கு எங்காவது வண்டியை நிறுத்தி இளைப்பாற அனுமதிக்கமாட்டார்களா என்று எண்ணிக்கொண்டிருந்தபோது விபத்தானது.

 

நான் பயணம் செய்த பேருந்தின் ஓட்டுநர் சரியாகத்தான் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தார். எதிர்ப்புறம் வந்த காருக்கு அந்த இரவுப்பொழுதில் அத்தனை வேகம் இருந்திருக்கக் கூடாது. இத்தனைக்கும், முழுதும் மோதி நொறுங்கவில்லை. ஒரு உரசல்தான். அதற்குள் ஓட்டுநர் சுதாரித்துக்கொண்டு வண்டியை இடப்புறம் ஒடித்து வளைத்துவிட்டார்.

ஆனாலும் அது விபத்துதான். கூக்குரல்களும் அலறல்களும் பேருந்துக்குள் உறங்கிக்கொண்டிருந்தவர்களை விழித்தெழச் செய்துவிட்டது. எல்லோரும் எல்லாக் கம்பிகளிலும் மோதிக்கொண்டோம். ஆளாளுக்கு என்னென்னவோ சொல்லிக் கத்த ஆரம்பித்துவிட்டார்கள். ஓட்டுநர் ஒரு வழியாக வண்டியைச் சாலையோரம் கொண்டு சென்று நிறுத்தினார். காத்திருந்தாற்போல், அத்தனை பேரும் அலறிப் புடைத்துக்கொண்டு வண்டியை விட்டு இறங்கிவிட்டார்கள்.

பேருந்தில் உரசிய கார், எதிர்ப்புறம் தன் கட்டுப்பாட்டை இழந்து எப்படி எப்படியோ ஓடியிருக்க வேண்டும். விபத்தான இடத்துக்கு இருபதடி தூரம் தள்ளிச் சென்று, ஒரு நாய் சிறுநீர் கழிக்கும் தோற்றத்தில் பின் சக்கரத்தை உயர்த்திக்கொண்டு எதிலோ மோதி நின்றிருந்தது. பேருந்தில் இருந்து இறங்கிய கண்டக்டரும் டிரைவரும் அந்தக் காரை நோக்கித்தான் முதலில் ஓடினார்கள். அதற்குள், அந்தப் பிராந்தியத்தில் நடந்து போய்க்கொண்டிருந்தவர்களும் சாலையோரக் கடைக்காரர்களும் அங்கே குழுமிவிட்டார்கள்.

நல்லவேளையாகக் காருக்குள் இருந்தவர்களுக்கு காயம் மட்டுமே பட்டிருந்தது. யார் உயிரும் போகவில்லை என்று சில விநாடிகளில் தெரிந்துவிட்டது. நான் அமர்ந்திருந்த இருக்கையின் முன் இருக்கையில்தான் முட்டிக்கொண்டேன். நெற்றியிலும் மூக்கிலும் நல்ல வலி இருந்தது. என் அருகே இருந்தவர் புத்திசாலித்தனமாக அந்தச் சந்தர்ப்பத்தில் என் மீது சாய்ந்து என்னைக் கொலை செய்ய வருபவர்போல இறுக்கிப் பிடித்துக்கொண்டுவிட்டார். அவருக்கு வலிக்கும் அளவுக்கு ஒன்றுமில்லை என்று தெரிந்தது. சாலையோரம் நாங்கள் கூடி நின்று, நடந்த விபத்தைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். யாருக்கும் உயிர் போகவில்லை என்பது எல்லோருக்கும் நிம்மதியாக இருந்தது. ஆனால் பேருந்து உடனே புறப்பட வாய்ப்பில்லை என்று கண்டக்டர் வந்து சொன்னார். விபத்துக்குக் காரணமான காரோட்டி தன் தவறை ஒப்புக்கொண்டாலும், போலீஸுக்குத் தகவல் தெரிவித்துவிட்டதால் அவர்கள் வரும்வரை வண்டியை எடுக்க முடியாது.

இது எனக்கு மிகுந்த ஆசுவாசம் அளித்தது. நான் கால் வலி தீர மெல்ல நடக்க ஆரம்பித்தேன். அந்நாள்களில் மாமண்டூர்ச் சாலையில் கடைகள் அதிகம் கிடையாது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு பெட்டிக்கடைகள் மட்டும்தான் இருந்தன. அவற்றையும் விளக்கு வைத்த ஒரு மணி நேரத்தில் மூடிவிடுவார்கள். எல்லாக் கடைகளின் வாசலிலும் நாய்கள் படுத்திருந்தன. சாராயக் கடைக்குச் செல்லும் வழி என்று அம்புக்குறி இட்ட போர்ட் ஒன்றைக் கண்டேன். அது ஒரு குறுகலான பாதையில் போகச் சொல்லி வழி காட்டியது. முற்றிலும் வெளிச்சமில்லாத சாலை. ஒருபுறம் சீமைக்கருவேல புதர்களும் மறுபுறம் ஏதோ ஒரு பெரிய தொழிற்சாலையின் பின்புற காம்பவுண்டு சுவரும் அந்தப் பாதைக்கு அரண்களாக இருந்தன. நான் ஏன் அந்தப் பாதையில் நடக்கத் தொடங்கினேன் என்று தெரியவில்லை. சும்மா சிறிது நேரம் நடப்பது மட்டுமே என் நோக்கம். ஒரு ஐந்து நிமிடங்கள். போதும். திரும்பி வந்தால் பேருந்தை எடுத்துவிடுவார்கள். பத்து இருபதுக்கு செங்கல்பட்டில் கடைசிப் பேருந்து கிளம்பும். அதைப் பிடித்துவிட முடிந்தால் கேளம்பாக்கத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து போய்விடலாம் என்று எண்ணியிருந்தேன்.

அந்தக் குறுகிய பாதையில் நூறடி நடந்திருப்பேன். புதருக்குள் இருந்து யாரோ யாரையோ அழைப்பதுபோலத் தெரிந்தது. இருட்டில் உருவம் தெரியவில்லை. ஆனால் அங்கே யாரோ இருந்தார்கள். மேலும் சிறிது நடந்தபோது, எனக்கு எதிரே ஓர் உருவம் சற்றுத் தொலைவில் நடந்து வந்துகொண்டிருந்ததைக் கண்டேன். யாரோ சாராயக் கடையில் இருந்து திரும்பிக்கொண்டிருக்க வேண்டும். இந்த சாராய போதை என்பது எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. எனக்கு அந்த திருவானைக்கா கிழவன் கொடுத்த அபின் பிடித்திருந்தது. சட்டென்று தரையில் இருந்து தூக்கிப் பஞ்சுப் பொதியின் மீது உட்கார வைத்துவிடுகிற பொருள். அது ஒரு அனுபவம்தான். மறக்க முடியாததும்கூட. எனக்கென்னவோ, சாராயம் அப்படியொரு அனுபவத்தைத் தரக்கூடியதாக இருக்காது என்று தோன்றியது. அபின் கலந்த சர்க்கரைப் பொங்கலைத் தின்றபோது நான் உளறவோ, நடை தடுமாறவோ இல்லை என்பதை நினைவுகூர்ந்தேன். மயக்கத்தில்தான் கிடந்திருக்கிறேன். ஆனால் அதை மயக்கம் என்று உணரவேயில்லை. கோயிலில் இருந்து திருவானைக்கா வரை அவனோடு நடந்து சென்றபோதும் சரி, அவன் வீட்டுத் தரையில் படுத்து உறங்க ஆரம்பித்தபோதும் சரி. என் செயல் எனக்கு நினைவில் இருந்தது. அப்பாவும் அம்மாவும் தேடுவார்களே என்று நினைத்துக்கொண்டேதான் இருந்தேன். உறங்கிய பின்பும் கனவில் நான் முழு விழிப்புடன் இருந்தேன். திருவிளையாடல் திரைப்படத்தில் ஞானப்பழத்துக்காக மயில் மீதேறி உலகம் சுற்றிய பாலமுருகனைப் போலச் சுற்றி வந்தது இப்போதும் நினைவிருக்கிறது. ஆனால் நான் பார்த்த குடிகாரர்கள் எப்போதும் உளறிக்கொண்டே இருந்தார்கள். கால்களை வளைத்து வளைத்து நடப்பார்கள். எந்தக் கணமும் விழுந்துவிடுவதற்குத் தயாராவதற்காகவே அவர்கள் குடிக்கிறார்கள் என்று தோன்றியது. எந்நாளும் நான் குடிக்கமாட்டேன் என்று தோன்றியது. போதை ஒரு சுகானுபவம் என்றால், சுகமளிக்கக்கூடிய எதையும் அலங்கோலப்படுத்திப் பார்ப்பது தகாது. ஒரு சுகத்துக்காக நம்மை நாமே அலங்கோலப்படுத்திக்கொள்வது அதனினும் துக்ககரமானது. சொன்னேனல்லவா? நான் துக்கங்களை வெறுப்பவன். துயரங்களின் சாறு என் மீது தெளித்துவிடாதிருக்க எப்போதும் எச்சரிக்கையோடு நடப்பவன்.

நான் பார்த்துக்கொண்டிருந்தபோதே, அந்தக் குடிகாரன் முட்புதர்களை விலக்கி, உள்ளே இறங்கிச் செல்ல ஆரம்பித்தான். ஒரு ஆர்வத்தில் நான் புதரோரம் நின்று அவன் போவதைக் கவனிக்கத் தொடங்கினேன். அதிகத் தொலைவு இல்லை. அவனை அங்கே ஒலியெழுப்பி அழைத்த பெண், நான்கைந்து புதர்களுக்குப் பின்னால்தான் நின்றுகொண்டிருந்தாள். அவளால் அவன் முகத்தைக் காண முடியாது. அவனுக்கும் அவளது முகம் புலப்பட வாய்ப்பில்லை. இருள் அனைத்து முகங்களின் மீதும் கருமை பூசி மறைத்து இருந்தது. இருப்பினும், எனக்கு ஒலிகள் போதுமானதாக இருந்தது. ஒரு சல்லாபத்தை, ஒலிகளைக் காட்டிலும் வேறெது துல்லியமாக உணர்த்தும்?

நானும் ஒரு புதரின் பின்னால் மறைந்து நின்றுகொண்டு, சத்தம் வந்த திக்கையே பார்த்துக்கொண்டிருந்தேன். தரையொன்றும் அத்தனை சுத்தமாக இல்லை. திக்கித் திணறித்தான் கால் வைக்கவேண்டி இருந்தது. இருப்பினும், அனுபவசாலியான அந்தப் பெண், ஒதுங்கியிருந்த புதரின் அருகே இருவர் அமரவும் கிடக்கவும் இடம் உண்டாக்கி வைத்திருப்பாள் என்று நினைத்துக்கொண்டேன். சட்டென்று எனக்கு மதியம் சந்தித்த பெண்ணின் நினைவு வந்தது. ஒரே நாளில் ஒரே மாதிரியான இரு பெண்கள். வீட்டுக்கு வெளியே உலகம் இப்படியாகத்தான் எனக்கு விரிய வேண்டும் என்று இருந்திருக்கிறது. அண்ணாவும் வினய்யும் வீட்டை விட்டுச் சென்றபோது இந்தப் பாதையைக் கடந்திருப்பார்களா? அண்ணா வாய்ப்பில்லை. ஒருவேளை வினய் இதனைக் கண்டிருக்கலாம் என்று நினைத்தேன்.

என்றைக்காவது நேரம் ஒதுக்கி அமர்ந்து வினய்யைக் குறித்து யோசிக்க வேண்டும் என்று வெகு நாள்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். அவன் விட்டுச் சென்றதன் நியாயம் எனக்கு அப்போதுவரை விளங்கவேயில்லை. அண்ணாவைப்போல அவன் சந்தேகத்துக்கு இடமளித்து என்றுமே நடந்துகொண்டதில்லை. பெண் உடல் குறித்து அவன் நிறைய சிந்தித்துக்கொண்டிருந்தான் என்பது எனக்குத் தெரியும். உறுப்புகளின் உட்புறம் உள்ள எலும்பு, நரம்பு, ரத்தம் குறித்தெல்லாம் பேசினாலும் எனக்கென்னவோ அவன் பத்மா மாமியின் மகள் பற்றிய ஏக்கத்தையே வேறு வடிவில் தணித்துக்கொண்டிருந்ததாகப் பட்டது. ஒரு விஷயம் சொல்ல வேண்டும். பொதுவாகவே, பாடசாலைகளில் படிக்கப்போகிற பையன்களுக்குச் சீக்கிரம் திருமணம் ஆகிவிடும். இது மிகையே இல்லை. திருவிடந்தையிலேயே வினய்க்கு முன்னதாக பட்டாச்சாரியாரின் மகன் அகோபிலத்தில் ஒரு பாடசாலைக்கு ஏழு வயதில் கிளம்பிப் போனான். பதினாறு வயதில் வைரக் கடுக்கன்னும் கட்டுக் குடுமியுமாக அவன் ஊர் திரும்பியபோது, சன்னிதித் தெருவில் அவனுக்குப் பெண் கொடுக்க ஆறேழு குடும்பங்கள் தயாராக இருந்ததாக அம்மா சொல்லியிருக்கிறாள்.

‘ஸ்ரீதரனுக்குப் பதினெட்டு வயசுல அவாத்துல கல்யாணம் பண்ணிட்டா. அடுத்த வருஷம் ஒரு பொண்ணு. ரெண்டு வருஷம் கழிச்சி ஒரு பிள்ளை. இன்னிக்குப் பாரு, இப்பவே மாமா மாதிரி ஆயிட்டான், தொந்தியும் சந்தனமுமா.’

கேசவன் மாமாவின் நண்பர் ஒருவர் மகாபலிபுரத்தில் இருந்தார். அவரது பிள்ளையை கேசவன் மாமாதான் கும்பகோணத்துக்கு அழைத்துச் சென்று ராஜா வேதபாட சாலையில் சேர்த்துவிட்டு வந்தார். ஸ்மார்த்தப் பையன். அவனுக்குப் பதினேழு வயதிலேயே திருமணமாகிவிட்டது. அவன் கல்யாணத்துக்கு மாமா என்னையும் அழைத்துச் சென்றது நினைவிருக்கிறது.

‘சட்டப்படி தப்புன்னு சொல்லுவா. கம்ப்ளைண்டுன்னு ஒண்ணு குடுக்கலன்னா சட்டத்துக்கு என்ன மதிப்பு?’ என்று கேசவன் மாமா கேட்டார்.

வினய் வேதபாட சாலைக்குப் போய்ச் சேர்ந்தபோது, நான் அதைத்தான் நினைத்தேன். எப்படியும் நாலாயிரம் கற்றுக்கொண்டு திரும்பும்போதே அப்பா அவனுக்கு ஒரு பெண்ணைப் பார்த்து வைத்துவிடுவார். அதிகபட்சம், இருபது வயதில் அவனுக்குத் திருமணம் ஆகிவிடும். அந்தப் பெண் பத்மா மாமியின் மகள் சித்ராவா, வேறு யாராவதா என்பது மட்டும்தான் எனக்கு மிச்சமிருந்த வினா.

ஆனால் அவனும் சொல்லாமல் ஓடித்தான் போனான். சித்ராவினும் பேரழகி ஒருத்தி அவனுக்குக் கிடைத்திருப்பாள் என்று எண்ணிக்கொள்வது அப்போது எனக்கு சௌகரியமாக இருந்தது. வாழ்வை வெறுத்து ஓடவோ அல்லது அண்ணாவைப்போல் ஞான வேட்கை கொண்டு அலைந்து திரியவோ அவன் பொருத்தமானவனில்லை என்று நினைத்தேன். வினோத்திடமும் இதையேதான் பலமுறை சொன்னேன். அவன் நம்பினானா இல்லையா என்பதல்ல. திரும்பத் திரும்ப இதைச் சொல்லிக்கொள்வதன் மூலம், ஏதோ ஒரு விதத்தில் என்னைத் திருப்திப்படுத்திக்கொள்வதாகத் தோன்றியது. எனக்கு அது வேண்டியும் இருந்தது.

இரண்டு நிமிடங்கள் நான் அந்த புதரின் பின்னால் நின்றுகொண்டு கவனித்திருப்பேன். முதலில் சிரிப்பும் கிசுகிசுப்பான பேச்சொலியும் கேட்டன. அவர்கள் சல்லாபத்தை ஆரம்பித்துவிட்டார்கள் என்று தெரிந்தது. எதற்குப் பைத்தியம்போல் இதைப் போய் நின்று பார்க்கிறேன் என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். இருந்தாலும் ஓர் ஆர்வம் இருந்தது. ‘தொட்டுப் பாக்கத் தோணுதில்ல?’ என்று மதியம் கேட்ட பெண்ணின் குரல் மீண்டும் கேட்டது. அவசியம் தொட்டுப் பார்க்க வேண்டும்தான். அதிலென்ன சந்தேகம்? இத ஈர்ப்பில் அல்லவா உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது? இதில் எனக்கு வெட்கமெல்லாம் இல்லை. ஆனால், உச்சி வெயிலிலோ அல்லது இம்மாதிரி இருட்புதரிலோ எனக்கு முடியாது. செயல்பாடுகளில் லலிதம் முக்கியம். ஒவ்வொரு அசைவிலும் உள்ளார்ந்த பேரமைதியும் அதனுள்ளே பெரும் இசையும் இழையோடுவது அதனினும் எனக்கு முக்கியம். வாழ்வின் வாசனை நிதானத்தில் உள்ளது. பதற்றத்தின் மேடு பள்ளங்களை நான் அறவே வெறுத்தேன். தவிரவும், வாடகைக்கு ஒரு பெண்ணை அமர்த்திக்கொள்வதெல்லாம் எனக்கு ஒவ்வாமை தரும். என் இயல்பு வேறு. என் பிரத்தியேகங்களின் தன்மை வேறு. எனக்குள் ஒரு கிருஷ்ணரைப்போல நான் எப்போதும் கோபிகைகளின் அரவணைப்பில் இருந்தேன். ஆ, அந்த நினைவுதான் எத்தனைப் பெருஞ்சுகம்!

சரி கிளம்பிவிடலாம் என்று எண்ணி நான் புதரை விட்டு விலகி, சாலைக்கு வந்தேன். நான் நடக்கத் தொடங்கிய விநாடி அந்தச் சத்தம் என் செவியைத் தாக்கியது. எனக்கு நன்றாகத் தெரிந்தது. அது ஒரு மரண அறிவிப்பு ஓலம். சத்தம் எழுந்த உடனேயே அந்தப் புதருக்குள் இருந்து வெளிப்பட்டு அந்தப் பெண் ஓட ஆரம்பித்தாள். அவள் கையில் ஒரு கத்தி இருந்தது.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

43. சாட்சிக்காரன்

 

 

நான் அதற்குமுன் ஒரு கொலையைக் கண்டதில்லை. இப்போதுகூட ஒரு கொலை நிகழ்ந்திருக்கிறது என்பது மட்டும் தெரியுமே தவிர, நான் அதை நேரில் பார்க்கவில்லை. ஆனால் அந்தக் குடிகாரனின் மரண ஓலம் என்னை அந்தக் கணம் சற்று அசைத்தது. எத்தனைத் தெளிவான திட்டம்! அவன் குடித்துவிட்டு வருகிற வழியை அவள் தேர்ந்தெடுத்திருந்தாள். முட்புதர்கள் நிறைந்த இடம். தெரு விளக்குகூட இல்லாத இருட்டுச் சூழல். ஒரு மரண ஓலம் கேட்டால்கூட யாரும் அவ்வளவு விரைவில் ஓடி வந்துவிட முடியாத இட அமைப்பு. அந்தச் சாலையின் இறுதியிலோ அல்லது திருப்பத்திலோதான் சாராயக்கடை இருக்க வேண்டும். சாலை முழுதும் புதர்களும் ஒரு பெரும் காம்பவுண்டுச் சுவரும் மட்டுமே இருபுறமும் நிறைந்திருந்தன. ஒரு பேச்சுக்கு சாலை என்கிறேனே தவிர, அது தார் காணாத மண் தரைதான். மேடு பள்ளங்களும் சாக்கடை நீர்த்தேக்கங்களும் மிகுதி. இருளுக்குக் கண் பழகிய பின்புதான் வழி புலப்படும். மிகச் சரியான ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து, துல்லியமாகத் தான் நினைத்ததை அந்தப் பெண் முடித்திருந்தாள்.

இப்போது என் முன் இருந்த குழப்பங்கள் இரண்டு. நான் இறந்தவனை அல்லது இறந்துகொண்டிருந்தவனைக் கவனிப்பதா? அல்லது குத்திக் கொன்றுவிட்டு தப்பித்து ஓடிக்கொண்டிருப்பவளைத் துரத்திச் செல்வதா? இரண்டுமே என் இயல்புக்குப் பொருந்தாத காரியங்கள் என்று உடனே தோன்றியது. அந்த இடத்திலிருந்து அகன்றுவிடவே நான் மிகவும் விரும்பினேன். விடிந்ததும் எப்படியும் போலிஸ் வரும். அதிர்ச்சித் தகவல் பிராந்தியம் முழுதும் பரவும். கும்பல் கூடும். கொலைக்கான காரணங்கள் அலசப்படும். கொலையாளி யார் என்ற தேடல் தொடங்கும். அது பெரும்பாலும் இறந்தவனின் பின்னணியில் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கப்படும்.

அவன் யாராக இருப்பான்? அவன் ஒரு குடிகாரன். அவனுக்கும் ஒரு பெயர் இருக்கும். பெற்றோர் இருக்கலாம். மனைவி, மக்களும்கூட. குத்திவிட்டு ஓடியவளை ஒரு கணம் கணிகையென்று எண்ணிவிட்டேன். அவள் அவனால் வஞ்சிக்கப்பட்டவளாக இருக்கலாம். மனைவியாகவேகூட இருக்கக்கூடும். எத்தனை நாள் வெறுப்போ, விரக்தியோ, வேதனையோ திரண்டு எழுந்து ஒரு கணத்தில் அவளை இம்முடிவெடுக்க வைத்திருக்கிறது.

அப்பா! என்ன ஓட்டம் ஓடினாள். அது என்னால் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாத விரைவு. புதரில் இருந்து அவள் வெளிப்பட்டு சாலையை அடைய மிஞ்சினால் மூன்று விநாடிகள்கூட ஆகியிருக்காது. அப்படியொரு மிருகப் பாய்ச்சல். ஆனால் கொன்றுவிடுவது என்று முடிவு செய்துவிட்ட பின்பு அவனது வருகைக்காகவும் தருணத்துக்காகவும் அவள் மணிக்கணக்கில் காத்திருந்திருப்பாள். அதில் சந்தேகமில்லை. அவள் முகத்தை நான் பார்த்திருக்கலாம். ஒரு கொலையை உத்தேசித்து, திட்டமிட்டு, செய்தும் முடித்த ஒரு பெண்ணின் முகம் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. நானறிந்ததெல்லாம் என் அம்மாவின் முகம் மட்டும்தான். என்னிடம் எப்போதும் புன்னகையையும், வீட்டில் பொதுவாக உணர்ச்சியற்ற ஒரு பாவத்தையும் நிரந்தரமாக அவள் வழங்கிக்கொண்டிருப்பாள். இது எனக்கு நினைவு தெரிந்த நாளாக. அம்மா என்னிடம் என்றுமே புன்னகையின்றிப் பேசியதில்லை. அது பாசத்தில் வருகிற புன்னகையாக எனக்குத் தோன்றியதுமில்லை. எனக்கான அவளது முகத்துக்கு அது ஒரு அடையாளச் சின்னம். சிறு கோபங்கள் உதிரும் கணங்களிலும் அவள் முகத்தில் அந்தப் புன்னகையை நான் கண்டிருக்கிறேன். அது மின்சாரக் கம்பங்களில் எப்போதேனும் நெருப்புப் பொறி தோன்றி உதிர்வதுபோல மின்னி மறையும்.

அப்பாவுடன் பேசுகிறபோதெல்லாம் அம்மாவின் முகத்தில் ஒரு சோகத்தின் நிழல் படரும். ஆனால் குரல் மாறாது. சொற்களில் கனம் கூடாது. எளிய சொற்கள். மிகச் சிக்கனமான வெளிப்பாடு. ஆனாலும் சோகம்தான் அதில் நீரோட்டமாயிருக்கும். சோகம்தானே தவிர, விரக்தி இராது. என்ன ஆனால் என்ன? வாழ்ந்துதான் தீர வேண்டும் என்ற தெளிவு அவளிடம் என்றும் இருப்பதாக எப்போதும் நினைப்பேன்.

அம்மாவுக்கு அப்பால் நான் பார்த்த, நினைத்துக்கொண்ட பெண்களின் எண்ணிக்கை வெகு சொற்பம். பத்மா மாமியின் மகள் சித்ரா ஒரு சுமாரான அழகி என்பதில் சந்தேகமில்லை. எனக்கு அவளைப் பிடிக்கும். பிடிக்கும் என்றால், திருட்டுத்தனமாக அவளை நான் பல சமயம் நினைத்து ரசித்திருக்கிறேன். அவளைப் போலவே பள்ளியில் என்னோடு அப்போது படித்துக்கொண்டிருந்த கார்த்திகாயினியையும் அவ்வப்போது ரசிப்பேன். கார்த்திகாயினி மலையாளி. அவளது தந்தை மின்சார வாரியத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தார். பூர்வீகம் எர்ணாகுளம் என்றாலும், இரண்டாம் வகுப்பின்போதே அவள் இங்கே இடம் மாறி வந்து சேர்ந்தவள். ஆனால் எனக்குப் பத்தாம் வகுப்பின்போதுதான் அவள் பரிச்சயமானாள்.

இவர்கள் இருவரைத் தவிர தென்பட்டில் விசாலாட்சி என்றொரு பெண், தையூர் பண்ணையின் பேத்தி முருகுசுந்தரி, கேளம்பாக்கம் மன்னார் உணவக உரிமையாளரின் தங்கை மகள் பானுமதி என்று மேலும் சில பெண்களையும் நான் அறிவேன். இவர்கள் எல்லோருமே ஏதோ ஒருவகையில் என்னைக் கவரக்கூடியவர்களாக இருந்தார்கள். பல்வேறு உணர்ச்சிகள் வந்து போகும் முகங்கள்தான் எல்லோருக்கும் என்றாலும், ஒரு கொலையை உத்தேசிக்கக்கூடிய பெண் இவர்களில் யாரும் கிடையாது.

சரி, ஒரு தவறைத் தெரிந்தே செய்வோம் என்று முடிவு செய்து, நான் அந்த இடத்தில் இருந்து புறப்பட்டேன். மனசாட்சியுள்ள ஒரு மனிதன் மிக நிச்சயமாகக் குத்திக் கொல்லப்பட்ட ஒருவனை அப்படியே விட்டுவிட்டுப் போகமாட்டான். நான் மனசாட்சியுள்ளவன் அல்லன். அல்லது என் மனம் நான் செய்ய நினைக்கிற காரியங்களுக்கு மட்டுமே சாட்சி சொல்லும்.

அடடே, என்ன அழகு இது! என் மனமும் அதைக் குறித்து நினைக்கும் நானும் வேறு வேறாக அல்லவா மாறிவிட்டோம். என்றால் என் மனத்தை நினைப்பது எது? என் உடலா? என் ஆன்மாவா? மூளைதான் யோசிக்கிறது. மனத்தைக் குறித்து யோசிக்கிற மூளை. எனில் மூளைதான் ஆன்மாவாக இருக்குமோ? அண்ணாவிடம் கேட்டால் ஏதேனும் ஒரு பதில் கண்டிப்பாகச் சொல்லுவான். என்றைக்காவது பார்க்க நேர்ந்தால் கேட்க வேண்டியதுதான்.

நான் அந்த இருட்டுச் சந்துப் பாதையில் இருந்து திரும்பி நடக்க ஆரம்பித்தேன். பேருந்து புறப்பட ஆயத்தமாகியிருக்கும் என்று தோன்றியது. இந்த ஏழெட்டு நிமிடங்களில் போலிஸ் வந்து, விசாரணையை முடித்திருப்பார்கள். விபத்தில் யாருக்கும் பெரிய காயங்கள் இல்லை என்பதால், வண்டியை அனுப்பி வைப்பதில் சிக்கல் இருக்காது. அந்தக் காரோட்டிதான் பாவம். அநேகமாக அவன் மாட்டிக்கொள்வான் என்று நினைத்தேன்.

நான் பெருஞ்சாலையை நெருங்கியபோது, பேருந்து இன்னமும் கிளம்பாமல் இருந்ததைக் கண்டேன். எப்படியும் செங்கல்பட்டை அடையவே நள்ளிரவாக்கிவிடுவார்களோ என்று சந்தேகம் வந்தது. அலுப்பும் களைப்பும் ஒரு கொலைக்கு சாட்சியாக இருந்தது குறித்த பதற்றமும் என் நடையைக்கூட மாற்றியிருந்தன. உண்மையிலேயே மிகவும் தளர்ந்துதான் போயிருந்தேன். சாலையைக் கடக்கவிருந்த நேரம் சட்டென்று நெருங்கி, என் கையைப் பிடித்து அவள் இழுத்தாள். எங்கிருந்து வந்தாள், என்னை எதற்கு இழுக்கிறாள் என்று எனக்கு ஒரு கணம் புரியவில்லை. திரும்பிப் பார்த்து, ‘என்ன’ என்று கேட்டேன்.

‘நில்லு. நீ அங்கதான நின்னுக்கிட்டிருந்த?’

‘எங்க?’

‘உள்ளார, முள்ளு புதராண்ட.’

இவளா? இவளா அந்தப் பெண்? வீதி விளக்கு வெளிச்சத்தில் இப்போது அவள் முகத்தை என்னால் பார்க்க முடிந்தது. நினைத்தபடி கொலை செய்து முடித்துவிட்டு, மின்னல் வேகத்தில் பறந்துவிட்டவள், இன்னொரு புதரின் பின்னால் இருளோடு கரைந்து பதுங்கியிருந்த என்னையும் பார்த்திருக்கிறாளா! இது எப்படி சாத்தியம்? நான் அவள் முகத்தை அப்போது பார்க்கவேயில்லை. என்னால் அது முடியவில்லை. ஆனால் அவள் பார்த்திருக்கிறாள்.

‘கேக்கறேன்ல? நீதான அது?’

நான் அரைக்கணம் யோசித்தேன். பின், ‘ஆமா. ஒண்ணுக்குப் போகப் போனேன். அப்பத்தான் நீ உள்ளேருந்து ஓடி வந்தே.’

‘அதைக்கேக்கலை. அவன் செத்துட்டானா? அது தெரியுமா?’

‘நான் பாக்கலை.’

‘போலிசுல சொல்லப் போறியா?’

‘இல்ல. நான் வெளியூர். அந்த பஸ்ல போயிட்டிருக்கேன்’ என்று பேருந்தைச் சுட்டிக்காட்டினேன்.

அவள் என்னை ஏற இறங்கப் பார்த்தாள்.

‘இல்லே. நிஜமாவே நான் போலிசுக்கெல்லாம் போகமாட்டேன். எனக்கு வேற வேலை இருக்கு’ என்று மீண்டும் சொன்னேன். அவள் பதில் சொல்லவில்லை. ஆனால் என் முகத்தை மனத்துக்குள் எழுதிக்கொள்பவள் போல, என்னையே உற்று நோக்கிக்கொண்டிருந்தாள். தப்பித்தவறி என்னால் ஒரு பிரச்னை வருமானால் முகத்தை நினைவில் கொள்ளவேண்டியது அவசியம் என்று கருதியிருக்கலாம். ஆனால் பெண்ணே, ஒரு கொலையைக் கண்ட பின்பும், கொலையாளியை இத்தனை நெருக்கத்தில் பார்த்த பின்பும் சற்றும் பதற்றமுறாமல் நின்று பேசுகிற ஒருவனை நீ எவ்வாறு வகைப்படுத்துவாய்? என்னைக் கண்டு நீ அச்சப்படவே தேவையில்லை. நான் வெறும் ஒரு சருகை நிகர்த்தவன். இருக்கிறேன் என்பதைத் தவிர என் இருப்பின் பொருள் ஏதுமில்லை.

அவளுக்குச் சற்று நம்பிக்கையளிக்கலாம் என்று தோன்றியது. ‘வரேன்’ என்று சொல்லிவிட்டுப் புன்னகை செய்தேன். அவள் சட்டென்று மீண்டும் என் கையை எட்டிப் பிடித்தாள்.

‘என்ன?’

‘ஒரு நிமிசம் வந்துட்டுப் போ’ என்று என்னை இழுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

‘இல்லே. நான் போகணும். இந்த வண்டி போயிடுச்சின்னா கஷ்டம்.’

‘பரவால்ல வா’ என்றாள். கையை உதறிக்கொண்டு ஓடிப்போய் பேருந்தில் ஏறிவிடலாமா என்று நினைத்தேன். ஏனோ அதைச் செய்யவில்லை.

(தொடரும்)

 

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

44. ஒரு சிறிய கொலை

 

 

அவள் வீடு மிகவும் சிறியதாக, ஒரு குங்குமச் சிமிழின் மூடியைத் தனியே எடுத்துக் கவிழ்த்து வைத்தாற்போல் இருந்தது. ஓலை வீடுதான். ஆனால் உள்ளே ஒரு டிவி பெட்டி இருந்தது. டிவியின் மீது ஒரு ரவிக்கையும் உள்பாவாடையும் கிடந்தன. தரையிலேயே ஒரு ஓரமாகத் துணிகள் மடித்து வைக்கப்பட்டிருந்தன. அரைத் தடுப்புச் சுவருக்கு அப்பால் சமையலறை. அலுமினியப் பாத்திரங்களும் ஓர் அடுப்பும் இருந்தன. அவள் அந்த வீட்டில் தனியாகத்தான் இருந்தாள் என்று நினைத்தேன். ஓர் ஆண் உடன் இருப்பதற்கான எந்த அடையாளமும் அங்கில்லை.

‘ஆமா, எனக்குக் கல்யாணமெல்லாம் ஆவலை’ என்று அவள் சொன்னாள்.

‘அப்ப அவன் யாரு? உன் காதலனா?’ என்று கேட்டேன்.

அவள் அதற்கு உடனே பதில் சொல்லவில்லை. அவளுக்கு இருந்ததெல்லாம் ஒரு பெரிய சந்தேகம் மட்டும்தான். நான் உண்மையிலேயே கண்ட கொலையைக் குறித்து போலிசாரிடம் சொல்லுவேனா மாட்டேனா என்பது. நான் உண்மையிலேயே கொலை நடந்ததை நேரில் பார்த்திருக்கவில்லை என்பதை எத்தனையோ விதமாக அவளிடம் எடுத்துச் சொல்லிப் பார்த்தேன். அவள்தான் கொன்றாள் என்பது தெரியும். குத்துப்பட்டவன் நிச்சயம் இந்நேரம் இறந்து போயிருப்பான். அதிலும் சந்தேகமில்லை. ஆனாலும் பார்த்தேன் என்று எப்படிச் சொல்வது. அந்தக் கொலைக்கும் எனக்கும் நடுவே இருட்டு நின்றுகொண்டிருந்தது.

‘நீங்களா வந்து கேக்கலைன்னா, அத செஞ்சது நீங்கதான்னு எனக்குத் தெரிஞ்சிருக்கவே தெரிஞ்சிருக்காது’ என்றும் சொன்னேன். அவள் சிறிது யோசித்தாள். ‘சரி போ. மாட்டிக்கணும்னு இருந்தா மாட்டிக்கிட்டுத்தான் ஆவணும். அதையெல்லாம் யோசிக்காம ஒண்ணும் செய்யல’ என்று சொன்னாள்.

‘அப்பறம் என்ன? விடுங்களேன். நான் கிளம்பறேன்.’

அவள் சட்டென்று என் கையைப் பிடித்தாள். ‘ஜெயிலுக்குப் போயிடுவேன் தம்பி. அதுல ஒண்ணுமில்ல. எம்பொண்ணு ரொம்ப கஷ்டப்படுவா’ என்று சொன்னாள்.

‘உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?’

‘இல்லை. அந்த நாயி தாலி கட்டலை.’

இப்போது எனக்குச் சற்றுப் புரிந்தது. காதல் தோல்விதான். ஆனால் சற்று ஆழம் கொண்டது. எல்லைகளைச் சற்று நகர்த்தி வைத்துக்கொண்டு காதலித்திருக்கிறாள். எப்படியோ சில உணர்ச்சிகள் மனிதர்களை இஷ்டத்துக்கு எடுத்து விழுங்கத் தொடங்கிவிடுகின்றன. அஜீரணம் குறித்த கவலை அதற்கு எழுவதில்லை. உலகைப் பற்றிய அச்சமோ, கலக்கமோ அக்கணத்தில் மறைந்துகொண்டுவிடுகின்றன. உணர்ச்சியின் பேயாட்டம் எத்தனைக் காலம் நீடிக்கிறது என்பதைப் பொறுத்து இழப்புகளின் சதவீதம் அமைகிறது. ஆனால், இழப்புத்தான். அதில் சந்தேகமில்லை. எந்த ஓர் உணர்ச்சியும் எதையும் இழக்காதிருக்கச் செய்யும் வரம் பெற்றிருப்பதில்லை.

நான் அவளுக்கு எந்த விதத்தில் ஆறுதல் சொல்லலாம் என்று யோசித்தேன். அது ஓர் அவசியம் என்று தோன்றவில்லை என்றாலும், என்னைக் குறித்த அச்சமின்றி அவள் அடுத்த தினங்களை வாழ்வதற்காகவாவது எதையாவது சொல்லிவிட்டுப் போகலாம் என்று தோன்றியது. நான் போலிசுக்கெல்லாம் போகப் போவதில்லை என்று ஏற்கெனவே சொல்லியிருந்தேன். ஏனோ அது அவளுக்குப் போதுமானதாக இல்லை. அவளது பேச்சில், அசைவுகளில் ஒரு பதற்றம் இருந்ததைக் கண்டேன். செய்த கொலை காரணத்தால் வந்த பதற்றமாகவோ, அதை ஒருவன் பார்த்திருக்கிறானே என்பதாலோ வந்ததாக இருக்கலாம்.

ஆனால் பெண்ணே, இது உன் வாழ்க்கை. ஒரு மனிதன் நீ விரும்பக்கூடியவனாக இருந்திருக்கிறான். அவனிடம் நீ உன்னைத் தந்திருக்கிறாய். சாட்சிக்கு ஒரு பெண் குழந்தை. பரவாயில்லை. ஒன்றும் பிழையில்லை. அதே மனிதனைக் கொல்லும் அளவுக்கு வாழ்வு உன் கழுத்தை நெரித்திருக்கிறது. துக்கங்களின்றி வாழ்வேது? துயரற்ற பேருலகம் என்பது ஒரு கனவு. எல்லோருக்கும் வருவது. ஆனால் கனவுதான். கடவுளைப் போலவே அதுவும் இல்லாத ஒன்று. அல்லது இருந்தும் பயனற்றது. வாழ்வென்பது துயரங்களின் சாரம். ஆனால் ஒரு கொலைக்கான வெறியும் வேகமும் எல்லோருக்கும் வருவதல்ல. இதனைக் காட்டிலும் உக்கிரமான தருணங்கள் எத்தனையோ பேருக்கு எத்தனையோ வடிவங்களில் வரத்தான் செய்கின்றன. என் தாயைத் தெரியுமா உனக்கு? நான்கு பிள்ளைகளைப் பெற்றவள். அதில் இரண்டு சொல்லாமல் ஓடிப்போய்விட்டன. ஒருவன் யோகியாக எங்கோ அலைந்துகொண்டிருக்கிறான். இன்னொருவன் என்னவானான் என்று தெரியவில்லை. நாளைக்கு நான் வீட்டுக்குப் போய்விடுவேன் என்றாலும், இந்தக் கணம் அவளுக்கு நானும் இல்லாமல் போனவன்தான். வாழ்வில் மூன்று முறை சுய கொலை செய்துகொள்ள என் அம்மாவுக்குச் சந்தர்ப்பங்கள் வந்து போயிருக்கின்றன. ஆனால் இன்றும் அவள் உயிருடன்தான் இருக்கிறாள். அது என்ன மனம்! அது என்ன வார்ப்பு! துக்கங்களை நகர்த்தி வைத்துவிட்டு தினமும் விடிந்ததும் அரிசி களைந்து போட்டு உலை வைத்துக்கொண்டிருக்கிறாள்.

ஒன்று புரிந்துகொள். அது வாழ்வின் மீதான பிரேமை அல்ல. மரணத்தை அஞ்சிய கோழைத்தனமும் அல்ல. இருக்கப் பணிக்கப்பட்டவர்களின் குறைந்தபட்சப் பொறுப்புணர்ச்சி.

அவளுக்கு என்ன புரிந்ததோ. சிறிது அழுதாள். பிறகு, ‘என்னை ஏமாத்திட்டு மட்டும் ஓடியிருந்தான்னா ஒண்ணுஞ்செஞ்சிருக்கப் போறதில்ல. எங்கம்மாவோடல்ல ஓடிப் போனான்?’ என்று சொன்னாள்.

நான் அவளை நிதானமாகத் தலைமுதல் கால் வரை பார்த்தேன். இருபத்து இரண்டு அல்லது இருபத்து மூன்று வயதிருக்கும் என்று தோன்றியது. கறுப்பாகத்தான் இருந்தாள். பெரிய அழகெல்லாம் இல்லை. முகத்தில் வசீகரமாக ஏதேனும் தெரிகிறதா என்று பார்த்தேன். அப்படியும் ஒன்றும் தோன்றவில்லை. ஒரு பெண். மிகவும் சராசரியாக யாரோ ஒரு அயோக்கியனிடம் ஏமாந்த மக்குப் பெண். இவளைப் பெற்ற மக்குப் பெண்மணி இப்போது எங்கு இருக்கிறாள் என்று கேட்டாள் நிச்சயம் அவள் சொல்லியிருப்பாள். எனக்கு அது முக்கியமாகப் படவில்லை. ஒருவேளை அவளையும் இவள் கொன்றிருக்கலாம். அல்லது கொலை செய்வதற்குத் திட்டம் தீட்டியிருக்கலாம். இல்லாமல் போகச் செய்வது ஒரு சாதனையா? நினைவுகளை என்ன செய்வாள்?

‘உங்க மகளுக்கு என்ன வயசு?’ என்று கேட்டேன்.

‘மூணு வயசு ஆகுது. என் சினேகிதி வீட்ல விட்டு வெச்சிருக்கேன்.’

‘ஏன்?’

‘இங்க நிலவரம் சரியில்லியே? எங்கம்மா இப்படிச் செய்வான்னு நான் நினைக்கலை.’

‘உங்கம்மாவுக்கு என்ன வயசு?’ என்று கேட்டேன். பிறகு ஏன் கேட்டேன் என்று எனக்கே வருத்தமாகப் போய்விட்டது. அவள் அதையெல்லாம் கவனிக்கவில்லை. கேட்ட கேள்விக்கு உடனே பதில் சொன்னாள், ‘நாப்பத்தி ஆறு.’

‘அப்ப அவனுக்கு?’

இப்போது அவள் என்னைப் பொருட்படுத்திப் பார்த்தாள். இவனுக்கு எதற்கு இதெல்லாம் என்று தோன்றியிருக்கலாம். நான் ஒரு சாட்சி. நான் இருப்பது நிச்சயமாக ஆபத்து. ஒரு கொலைதான் கஷ்டம். ஒன்று பழகிவிட்டால் இரண்டாவதில் ஒன்றுமில்லை. கூர் தீட்டிய கத்திக்கு இன்னொரு கழுத்து என்பது பெரிய சிரமமாயிராது. யாருமற்ற இந்த அடர் இரவு வேளையில் என் வாயில் ஒரு துணியை அடைத்துக் கொன்று வீசி விடுவது சுலபம். அதைத்தான் அவள் உத்தேசித்துக்கொண்டிருக்கிறாளா?

‘அவன் நல்லவன்னு நெனைச்சேன். கட்டிக்கறேன்னு சொன்னான். சரின்னு படுத்தேன். அப்ப எனக்குத் தெரியலை. அவன் என்னைக் கட்டிக்கறேன்னு சொன்னதே, எங்கம்மா மேல எனக்கு சந்தேகம் வந்துடக் கூடாதுன்னுதான்.’

‘ஐயோ.’

‘அம்மாவா இருந்துக்கிட்டு இப்படி ஒருத்தி இருப்பாளா சொல்லு. பெத்த பொண்ண அடகு வெக்கப் பாத்திருக்கா பழிகார முண்டை. எனக்கு ஒரு புள்ள பொறக்கற வரைக்கும்கூட மறைச்சிருக்கா.’

இது என்ன மாதிரி அம்மா! எனக்கு இப்படியான அம்மாக்களைத் தெரியாது. இது வேறு. முற்றிலும் நானறியாதது. ஆனாலும் அம்மாதான். குறைந்தது இருபது வருடங்கள் இவளை வளர்த்திருக்கிறாள். இவளுக்கொரு மகள் பிறக்கும்போது அருகே இருந்து கவனித்துக்கொண்டிருப்பாள். எல்லாமே தனது ரகசிய உறவின் மதில் சுவர்களாக இருக்கும் என்று நினைத்திருப்பாளா? அந்தக் குடிகாரன் அத்தனைப் பெரிய ஆளுமையா? மகளை பலி கொடுத்தாவது தனக்கு அவன் வேண்டும் என்று எண்ணுமளவு என்ன இருந்திருக்கும்?

நான் அவளிடம் ஒன்று மட்டும் சொன்னேன், ‘நியாயமா நீ உங்கம்மாவைத்தான் கொலை பண்ணியிருக்கணும். அவனைக் கொன்னது தப்பு.’

அவள் நெடுநேரம் அழுதாள். பிறகு முந்தானையில் கண்ணைத் துடைத்துக்கொண்டு சிரித்தாள்.

‘ஆமால்ல? ஆனா மனசு வரலியே?’ என்று சொன்னாள்.

அந்தக் கணம் தோன்றியது. கொலையுணர்வைவிடக் கொடிது இதுதான்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

45. புல்லாகுதல்

 

 

சந்தடி அடங்கிய சாலையில் நான் நடந்துகொண்டிருந்தேன். இருபுறமும் கரிய பெரும் தவலைகள் போல் மரங்கள் அடர்ந்து கவிந்து சாலையை மூடியிருந்தன. காற்றின் வெம்மை தணிந்து ஈரம் கலந்திருந்தது. எங்கோ குரைத்த நாயின் இருப்பு நான் முற்றிலும் நினைவகன்று போய்விடாமல் காத்தது. எத்தனை நேரமாக நான் நடந்துகொண்டிருந்தேன் என்று தெரியவில்லை. ஆனால் நிற்கவில்லை. எங்கும் நின்றுவிடத் தோன்றவில்லை என்பதுதான் உண்மை. அவள் பேசிய சொற்கள் ஒரு ரவுடியின் அடாவடித்தனம் போல என்னைப் புரட்டியெடுத்துக்கொண்டிருந்தன.

வெறும் பாசம். வேறெந்த உணர்ச்சியையும் அது இல்லாமல் செய்துவிடுமென்றால் அதன் வீரியத்தைக் குறைத்து மதிப்பிட இயலாது. எனக்கும் பாசம் உண்டு. அதை நான் ஒரு போர்வையென எடுத்து விரித்து அனுபவித்திருக்கிறேன். யார் மீதாவது வைக்கிற பாசம். எதன் பொருட்டாவது நெகிழச் செய்துவிடுகிற உணர்ச்சி. எனக்கு அம்மாவைப் பிடிக்கும். என் வாழ்வில் நான் சொன்ன பொய்கள், மாற்றிப் பேசிய நிஜங்கள், நடக்காது என்று எனக்கே தெரிந்தும் அளித்த வாக்குறுதிகள் யாவும் அவளுக்காகச் சொன்னவை. கணப் பொழுது அவளை மகிழ்வடையச் செய்வதற்கு நான் எதையும் செய்யக்கூடியவனாக இருந்திருக்கிறேன் என்பதை விழிப்புடன் எண்ணிப் பார்த்தேன். ஆனால் உண்மையில் அவள் மகிழ்ச்சியடைந்தாளா, நான் சொன்னவற்றை நம்பினாளா, ஏற்றாளா என்று பரிசீலனை செய்ததில்லை. இறங்கிப் போகிற போக்கில் தூக்கிப் போட்டுவிட்டுப் போகிற பஸ் டிக்கெட்டைப் போலவே சொற்களை அவளிடத்தில் பயன்படுத்தியிருக்கிறேன். சொற்கள் என்றால் பொய்கள். சொற்கள் என்றால் பூச்சுகள் கொண்டவை. புன்னகை ஏந்தியவை. நம்பிக்கை தருபவை. அவற்றின் நோக்கம் ஒன்றுதான். அவள் சந்தோஷப்பட வேண்டும்.

எதிலிருந்து இந்தப் பாசம் உற்பத்தியாகிறது என்று எண்ணிப் பார்த்தேன். எனக்கு அம்மாவின் மீதிருந்த அத்தகைய உணர்ச்சி அப்பாவின் மீது இருந்ததில்லை. இதற்கும் எனக்குக் காரணம் தெரியவில்லை. நியாயமாக என் அப்பாவைத்தான் நான் அதிகம் விரும்பியிருக்க வேண்டும். மிகக் குறைந்த வருமானத்தில், கவனமாகத் திட்டமிட்டுக் குடும்பத்தை நடத்திக்கொண்டிருந்த மனிதர். வஞ்சனையின்றி வீட்டில் அனைவரையும் அவர் நேசித்தார். எதிலும் என்றைக்கும் கூடுதல் குறைவு என்பதே கிடையாது. பாசமோ கோபமோ வேறெதுவோ. எல்லாவற்றையும் எல்லாருக்கும் சரி சமமாகப் பிரித்துத் தரத் தெரிந்த மனிதர். அம்மாகூட யாருக்கு எது பிடிக்கும் என்று யோசித்துச் செய்கிறவள். ‘உனக்கு இன்னிக்கு கரமுது இவ்ளோதான். கத்திரிக்காய்னா வினய்க்கு ரொம்பப் பிடிக்கும். இன்னும் இருக்கான்னு கேப்பான். அவனுக்கு வை’ என்று தீர்மானமாகச் சொல்லி எடுத்து வைத்துவிடுவாள். அப்பா என்றும் அப்படி நடந்துகொண்டதில்லை. எங்கள் சிறு வயதுகளில் தீபாவளிக்குத் துணி எடுக்கப்போகிற தினம் ஒன்று போதும் உதாரணத்துக்கு.

எனக்கு நினைவு தெரிந்து அப்பா கோ-ஆப்டெக்ஸ் தவிர வேறெங்கும் புதுத்துணி வாங்கமாட்டார். விலை மலிவு என்பதைத் தாண்டி ஏதோ கடமைப்பட்டவர் போல அவர் நடந்துகொள்வதாக எனக்குத் தோன்றும். அவர் ஏன் மற்ற கடைகளைப் பொருட்படுத்துவதில்லை என்று நாங்கள் அனைவரும் எத்தனையோ முறை கேட்டுவிட்டோம். அவர் பதில் சொன்னதில்லை. அம்மாவுக்குப் புடைவைகூட அங்கேதான். அபூர்வமாக ஒரு தீபாவளிக்குப் பட்டுப்புடைவை வாங்கிக் கொடுத்தார். அதைக்கூட கோ-ஆப்டெக்ஸில்தான் வாங்கினார்.

‘நல்லில நன்னாருக்கும்னு எல்லாரும் சொல்றா’ என்று அம்மா போகிற வழியில் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் அப்பா பொருட்படுத்தவில்லை. அடையாறில் இறங்கி, அதே கோ-ஆப்டெக்ஸ். ‘என்ன பிடிச்சிருக்கோ எடுத்துக்கோ’ என்று சொல்லிவிட்டு ஒதுங்கி நின்றார்.

எங்கள் நான்கு பேருக்கும் எப்போதும் அவர் தேர்ந்தெடுப்பது கைத்தறிச் சட்டைத் துணியும் காட்டன் பேண்ட் துணியும்தான். எந்த நிறம், என்ன டிசைன் என்பதைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அவர் எங்களிடம் வழங்கிவிடுவார். யாராவது ஒருவர் சொல்வதை எல்லோரும் ஏற்றுக்கொள்வோம். ஆனால் ஒரே ஒரு தேர்வுதான் சாத்தியம். அப்பா, நான்கு பேருக்கும் அந்தத் துணியிலேயே கிழிக்கச் சொல்வார். யாரும் வேறொன்றை விரும்பிவிட முடியாது. எந்தப் பண்டிகைக் காலத்திலும் நாங்கள் ஆளுக்கொரு வண்ணமும் வடிவமைப்பும் கொண்ட ஆடையை அணிந்ததில்லை. பள்ளிக்கூடத்தில் உள்ளதைப் போலவே வீட்டிலும் யூனிபார்ம் அணிவது எங்களுக்குப் பழகிப்போனது.

கேசவன் மாமாதான் சொன்னார். ‘அத்திம்பேருக்கு சட்டைத் துணிலகூட வித்தியாசம் இருந்துடக் கூடாது. அததுக்கு கல்யாணமாகி நாலு பொண்ணுகள் ஆத்துக்கு வரவரைக்கும் அவர் கணக்கு நாலில்லே; ஒண்ணுதான்.’

ஆனாலும் எனக்கு அம்மாவின் மீதுதான் பிரியம் மிகுந்திருந்தது. அப்பாவை அதிகம் விரும்பிய அண்ணாவும் வினய்யும் வீட்டை விட்டு ஓடிப்போனது ஒருவேளை என்னை பாதித்திருக்கலாம். ஆனால் அதற்கு முன்பிருந்தே நான் அப்படித்தான். அண்ணாக்கள் இருவரும் விட்டுச் சென்றபின் அந்தப் பாசத்தின் கனம் அதிகரித்ததே தவிர, சற்றும் குறையவில்லை. சொன்னேனே, பொய்கள்? அவை அவளுக்காக. அவளது சந்தோஷத்துக்காக.

அந்தக் கொலைகாரப் பெண் என்னைப்போலத்தான் இருந்திருக்கிறாள். மட்ட ரகமானதொரு தாயாக இருந்தாலும் அவளைக் கொல்ல மனம் வரவில்லை என்று அவள் சொன்னாள். எனக்கு அது மிகவும் வியப்பாக இருந்தது. கொல்ல வேண்டாம். ஒரு வெறுப்பு இராதா? நான் கிளம்பும்போது, ‘சாப்பிடறியா தம்பி?’ என்று கேட்டுவிட்டு ஒரு பாத்திரத்தை எடுத்து வைத்தாள். அதில் பிசைந்த சாம்பார் சோறு இருந்தது.

‘அந்தக் கருமம் புடிச்சவ இன்னும் வீடு வரல பாரு. அவளுக்காகத்தான் எடுத்து வெச்சேன். பரவால்ல, நீ தின்னுடு’ என்று சொன்னாள். நான் அதை மறுத்துவிட்டுப் புறப்பட்டேன். பேருந்து நின்றிருந்த இடத்துக்கு நான் வந்தபோதே ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. வண்டி கிளம்பிச் சென்றிருக்கும் என்று தெரியும். ஆனால் நான் எந்த வண்டியிலும் ஏற நினைக்கமாட்டேன் என்பதை அப்போது உணரவில்லை. நடக்கலாம் என்று நினைத்தேன். முக்கால் மணி நேரம் நடந்தபின்பு, நடந்துகொண்டே இருக்கலாம் என்று தோன்றியது. ஒரே சிந்தனைதான். அம்மாவின் மீது எனக்கிருந்த பாசம் என்னை அச்சம் கொள்ள வைத்துக்கொண்டிருந்தது. வாழ்வில் முதல் முறையாக நான் அவளை எண்ணி அஞ்ச ஆரம்பித்தேன். ஒரு போதைப் பொருளினும் வீரியம் கொண்ட உணர்ச்சிக்கு நான் ஒருபோதும் அடிமையாகிவிடக் கூடாது என்று நினைத்தேன். எனக்குக் கடவுள் வேண்டாம் என்று முடிவு செய்திருந்ததற்கு என்ன காரணம் வைத்திருந்தேனோ, அதுவேதான் அம்மா விஷயத்திலும் என்று தோன்றியது. அம்மாக்கள் கடவுள்கள்தாம். அதில் சந்தேகமில்லை. ஆனால் எனக்குக் கடவுள்களின் தேவை அத்தனை முக்கியமாக இருக்காது என்று பட்டது.

இதுதான் விரக்தியா, இதுதான் என்னை வீட்டை விட்டு நகர வைக்கிறதா என்று கேட்டுக்கொண்டேன். இல்லை என்று தோன்றியது. நான் விரக்தி கொள்ள இந்த உலகில் ஒன்றுமே இல்லை. நான் அனைத்தையும் நேசித்தேன். உலகில் காணக் கிடைக்கும், நுகரக் கிடைக்கும் ஒவ்வொன்றும் எனக்கு உவப்பானவையாகவே இருந்தன. அம்மாவின் மடிச் சூடு நான் அறிவேன். சாலையோரத் தேநீர் விடுதியில் என் கையைப் பிடித்து இழுத்த விலைமகளின் ஸ்பரிசமும் அதே போலத்தான் சுட்டது. கொலையைச் செய்துவிட்டு உட்கார்ந்து அழுதுகொண்டிருந்த இந்தப் பெண்ணின் கண்ணீரும்கூட அதே தகிப்பில்தான் இருக்கும்.

நல்லது. எனக்குக் கண்ணீருடன் உறவில்லை. அற்புதங்களில் ஆர்வமில்லை. ரகசியங்களைத் தூக்கிச் சுமந்து சுமந்து மூச்சு முட்டுகிறது. ஒரு கணத்தில் உதறிவிடக்கூடிய எல்லாவற்றையும் ஏன் இன்னும் உதறாதிருக்கிறேன்? ஒரு அம்மா. ஒரு அப்பா. ஒரு வீடு. ஒரு குடும்பம். ஒரு நட்பு வட்டம். ஒரு வாழ்க்கை. ஒரு சௌகரியத்துக்குப் பழகிவிடுகிற மனம் இப்படித்தான் பாசத்தின் பூச்சுக்குள் தன்னை மறைத்துக்கொள்ளும் என்று தோன்றியது. இனி யார் மீதும் பாசம் செலுத்த வேண்டாம் என்று முடிவு செய்துகொண்டேன். என் பிரத்தியேகமான அக்கறைக்குரிய ஒரே ஜென்மம் நானாகவே இருந்துவிட முடிவு செய்தேன். அதுகூட அத்தனை அவசியமா? ஒரு புல்லைப் போல் அடையாளமற்று இருந்துவிட்டுப் போய்விடுவது பரம சுகமாயிருக்கக்கூடும். ஆனால் எனக்கு அடையாளங்களுடன் பிரச்னை இல்லை. உறவுகள்தான். அது மட்டும்தான்.

ஒரு காரியம் செய்தேன். எனக்கு அச்சமில்லை என்பதை நானே நிரூபித்துக்கொள்ள முடிவு செய்து, ஓர் உணவகத்தின் வாசலில் இருந்த தொலைபேசியில் இருந்து என் வீட்டை அழைத்தேன்.

அம்மாதான் எடுத்தாள்.

‘விமல் பேசறேம்மா’ என்றதும் அவள் அலறிவிட்டாள். உடனே சத்தம் போட்டு அப்பாவை அழைத்து, மாமாவை அழைத்து, வினோத்தை அழைத்து களேபரப்படுத்திவிட்டாள்.

‘எங்கடா போய்த் தொலைஞ்சே கடங்காரா? நாங்கல்லாம் உசிரோட இருக்கறதா சாகறதா?’ என்று கேட்டாள்.

நான் மிகவும் திடப்படுத்திக்கொண்டு சொன்னேன். ‘நீ இருப்பேம்மா. சாகமாட்டே. ஆனா இனிமே நான் உனக்கில்லை. வரேன்’ என்று சொல்லிவிட்டு போனை வைத்தேன். மீண்டும் கால் போன திக்கில் நடக்க ஆரம்பித்தேன்.

(தொடரும்)

http://www.dinamani.com/junction/yathi/2018/may/18/45-புல்லாகுதல்-2921581.html

Link to comment
Share on other sites

46. உடலாகுபெயர்

 

 

நிலத்தின் நிறம் மாறிக்கொண்டே போகிறது. பச்சையும் பழுப்பும் சாம்பலும் சிவப்பும் வெளிர் மஞ்சளுமாகக் கண்ணெதிரே ரயிலின் சன்னல் செவ்வகத்துக்கு அப்பால் பூமி கணத்துக்கொரு நிறம் கொண்டு கடக்கிறது. ஆனால் வானம் ஒரே மாதிரி இருக்கிறது. படர்ந்து நகர்ந்த மேகத் திட்டுகளை ஏந்திய வானம். ஓடும் ரயிலின் தடதடப்பு உடலுக்குப் பழகிவிட்டிருக்கிறது. அதன் சத்தம் செவிக்குப் பழகியது போல. இப்போதெல்லாம் நீண்ட பயணங்களில் பொதுவாக நான் படிக்க விரும்புவதில்லை. பேச்சுகூட அத்தனை முக்கியமில்லை. நிலமும் வானமும் அடையாளமற்ற முகங்களும் எனக்குப் போதும். என்னையறியாதவர்கள் என்றால் இன்னுமே விசேடம். ஆனால் ஏனோ இந்த மக்கள் காவி ஆடை அணிந்தவர்களைச் சற்றுத் தள்ளி வைத்துப் பார்க்கப் பழகியிருக்கிறார்கள். அதுவே சௌகரியம் என்று நினைக்கிறார்கள். என் காவி புனிதத்தின் சின்னமல்ல. அது என் குருநாதர் எனக்களித்தது. ஒரு போர்வை. ஒரு ஆயுதம். அல்லது ஒரு கேடயம். எதையும் துறக்காதவனின் காவி. சரி போ, உடுத்திக்கொள் என்று என் மீது தூக்கிப் போட்டுவிட்டுப் போய்ச் சேர்ந்தார். இதை நான் யாரிடமும் சொல்லுவதில்லை. சொல்லி என்ன ஆகப் போகிறது? நான் திருமணமாகாதவன். இம்மக்களுக்கு அது ஒன்றே போதுமானதாக இருக்கிறது. ஆனால் துறப்பது என்றால் அது ஒன்றுதானா! ஒரு நிறத்துக்கு இந்த மண் அளித்திருக்கும் கௌரவம் மிகப் பெரிது. நான் அதை விழிப்புடன் கவனிப்பவன். ஒரு மாறுதலுக்கு அவ்வப்போது என் காவி பட்டுத் துணியாகும். என்னிடம் சில வெல்வட் காவி உடுப்புகளும் உண்டு. அபூர்வமாகச் சில சமயம் என் பிரத்தியேகத் தையல்காரர் என் அங்கியின் ஓரங்களை சரிகை வைத்து அலங்கரித்துத் தருவார். எனக்கு அதுவும் பிடிக்கும். சிறிய தாடியும் சிறந்த புன்னகையும் வெல்வட் காவி உடுப்பும் ஊடுருவும் பார்வையும் யாருக்கும் சாத்தியமே. ஆனால் இதன் சொகுசை அடையாளம் கண்டு அனுபவிக்க ஒரு தேர்ச்சி வேண்டும். அது என்னிடம்தான் உண்டு. அல்லது என்னைப் போலச் சிலர். மக்கள் பட்டுக்காவி சன்னியாசிகளை சீக்கிரம் விரும்ப ஆரம்பித்துவிடுகிறார்கள். அவர்களுக்கு எளிய சில மூச்சுப் பயிற்சிகள் போதுமானதாக உள்ளது. உடலுக்கும் உள்ளத்துக்கும் சட்டென்று ஒரு ஓய்வைப் பிச்சையாக அளிக்கும் பயிற்சிகள்.

என் ஆசிரமத்தை நான் திட்டமிட்டு உருவாக்கினேன். அமைதியை மட்டுமே அங்கு அலங்காரப் பொருளாகப் பயன்படுத்தினேன். வெறும் அமைதி. ஓம் போன்ற ஒலித்தட்டுகள் அங்கே கூடாது என்று தீர்மானமாகச் சொல்லியிருந்தேன். திருவுருவங்களுக்கு இடமில்லை. பூஜைகள் இல்லை. மணிச்சத்தம் இல்லை. பிரசாதங்கள் கிடையாது. முக்கியமாக, நான் யாருக்கும் விபூதி அளிப்பதில்லை. என்னைத் தேடி வருகிறவர்களுக்குச் சொல்லித்தர என்னிடம் சில மூச்சுப்பயிற்சிகள் உண்டு. மிக மிக எளிதான பயிற்சிகள். அவை அவர்களை உட்காரவைக்கின்றன. உட்காருகிறவர்களோடு நான் பேச ஆரம்பிக்கிறேன். பேச்சு என்றால் உரையாடல். நான் கொஞ்சம் பேசுவேன். பிறகு எதிராளியைப் பேசவிடுவேன். அபத்தங்களை ரசிப்பது போலொரு சிறந்த பொழுதுபோக்கு வேறில்லை. எனக்கு அபத்தங்களை ரசிக்கப் பிடிக்கும். இந்த உலகில் பேசப்படும் பெரும்பாலான விஷயங்கள் அபத்தமானவையே என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. பேசாதிருப்பது ஒன்றே புனிதமானது. எண்ணம் சொல்லாகும்போது அபத்தங்கள் ஆனந்தத்தாண்டவம் ஆட ஆரம்பித்துவிடுகின்றன.

என் ஆச்சரியமெல்லாம் ஒன்றுதான். அபத்தத்தின் பூரணம் என்று தெரிந்தே நான் பேசுகிற பலவற்றை மக்கள் சிலிர்ப்போடு கேட்டுக்கொண்டு போகிறார்கள். என் முன்னால் கண்ணில் நீர் பெருக நின்று கைகூப்பி வணங்குகிறார்கள். ஆசிரமத்துக்கு ஆயிரங்களில் தொடங்கி லட்சங்கள் வரை நன்கொடை அளிக்கிறார்கள். என்ன வேண்டும் இவர்களுக்கு? எது பற்றாக்குறையாகி என்னைத் தேடி வருகிறார்கள்?

மிகவும் யோசித்துவிட்டு நானொரு முடிவுக்கு வந்தேன். எதுவும் இல்லாமல் இவர்கள் யாரும் வரவில்லை. எல்லாம் அபரிமிதமாக இருக்கிறபடியால் வருகிறார்கள். எல்லாம் நிறைய இருக்கிறவர்களுக்கு எதுவுமில்லாதவனின் சகாயம் ஏதோ ஒரு கட்டத்தில் தேவைப்பட்டுவிடுகிறது. இத்தனைக்கும் நான் கடவுளைக்கூட முன் நிறுத்துவதில்லை. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தைப் பேசுவதில்லை. பொய் சொல்லாதே, திருடாதே, தருமம் செய் என்று போதிப்பதில்லை. வெறுமனே அவர்களைப் பேசவிட்டுக் கேட்கிறேன். ஒரு புன்னகையில் அரவணைத்துவிடுகிறேன். எல்லாம் சரியாகிவிடும் என்று யாருக்கும் வாக்குத் தருவதில்லை. முட்டி மோதி செருப்படி படு என்றுதான் சொல்கிறேன். கர்மாவை வாழ்ந்துதான் கழித்தாக வேண்டும். ஆனால் கவலையின்றிக் கழிக்க முடியும். எதற்குக் கவலை கொள்ள வேண்டும்? உன் உலகத்தில் உன்னைத் தவிர யாருமில்லை என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தேன். அது ஒருவித உசுப்பிவிடும் உத்தி. போராடத் தூண்டும் உத்தி. செய்யப்போவது அவன்தான். செருப்படியும் அவனுடையதுதான். அடி வாங்கித்தான் தீர வேண்டும் என்பதை எடுத்துச் சொல்ல ஒருவன் வேண்டியிருக்கிறான்.

என்ன விசித்திரம்! ஆனால் எனக்கு இது பிடித்திருந்தது. என் குருநாதர் எனக்கு வேத உபநிடதங்களின் பல அங்கங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். நான் தர்க்க சாஸ்திரம் பயின்றிருக்கிறேன். யோகக் கலையின் மிகச் சில அம்சங்களை அறிவேன். அதிகம் பயிற்சி செய்ததில்லை. அவ்வப்போதைய முதுகு வலிக்கும் இடுப்புப் பிடிப்புக்கும் என்னால் சுய வைத்தியம் செய்துகொள்ள முடியும். அவ்வளவுதான். போதுமே?

ஒரு சமயம் வகுப்பில் மாணவன் ஒருவன் கேட்டான், ‘குருஜி, என்ன முயற்சி செய்தாலும் என் மனத்தை என்னால் கட்டுப்படுத்தவே முடிவதில்லை.’

‘அப்படியா? நீ என்ன முயற்சி செய்தாய்?’

‘நான் தியானம் செய்கிறேன். பிராணாயாமம் செய்கிறேன். ஜபம் செய்கிறேன்.’

‘சரி, கட்டுப்படுத்த முடியாத உன் மனம் எதை நோக்கி ஓடுகிறது?’

‘பெரும்பாலும் பெண்களை.’

‘சரியாகச் சொல். பெண் என்றால் முழு உருவமா, முலைகளா, யோனியா?’

அவன் ஒரு கணம் தயங்கினான். வெட்கப்பட்டு அருகே உள்ளவர்களைப் பார்த்தான்.

‘பரவாயில்லை சொல்’ என்று நான் மீண்டும் சொன்னேன்.

‘எல்லாம்தான் குருஜி.’

‘அப்படியென்றால் நீ மிகவும் சரியாக இருக்கிறாய். உனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.’

‘ஆனால் இது தவறல்லவா?’

‘பெண்ணை நினைப்பது தவறென்றால் இந்த உலகில் பெண்கள் பிறந்திருக்க வேண்டியதே இல்லை. இதுவேதான் அவர்களுக்கும் ஆண்கள் விஷயத்தில்.’

‘ஆனால் காமத்தைக் கடந்தால் அல்லவா கடவுள்?’

நான் சற்றும் யோசிக்கவில்லை. ‘யார் சொன்னது? எல்லாவற்றிலும் இருக்கிற கடவுள் காமத்தில் எப்படி இல்லாதிருப்பான்?’ என்று கேட்டேன்.

‘இதோ பார். மனோமயகோசத்தைக் கட்டுப்படுத்துவது அத்தனை எளிதல்ல. அது பிராணமயகோசத்தின் பங்காளி. இந்த இரண்டுமே சூட்சும வகையறா. இதனால்தான் சூட்சுமத்தை சிந்திக்காதே என்கிறேன். ஸ்தூலத்தில் இருந்து தொடங்கு. உன் உடலைக் கவனி. சிறிய பிரயத்தனங்களில் அதை உன் வசப்படுத்திவிட முடியும்.’

‘ஆனால் உடலைக் கவனித்தால் போதுமா?’

‘முடிந்ததைச் செய்வதுதான் யோகம். முடிந்ததையும் செய்யாதிருப்பதுதான் யோகத்தின் எதிர்நிலை.’

இதுதான். இவ்வளவுதான். என் வகுப்புகளை நான் இவ்வாறுதான் அமைத்துக்கொள்கிறேன். துயரங்களில் இருந்து விடுதலை என்பது மனித குலத்தின் மாபெரும் கனவாக இருக்கிறது. ஆனால் எப்படி நான் இந்த மக்களுக்குச் சொல்லிப் புரியவைப்பேன்? மனித குலத்தின் கட்டுமானமே துயரங்களின் அடிக்கல்லின் மீது எழுப்பப்பட்டதுதான் என்பதை?

‘என் பிரியமான நண்பர்களே, இந்த மண்ணில் புத்தன் ஏன் ஜெயிக்கவில்லை என்று யோசித்திருக்கிறீர்களா? கிருஷ்ணனால் ஏன் யுத்தத்தைத் தவிர்க்க முடியவில்லை என்று தெரியுமா உங்களுக்கு? ஜரதுஷ்டிரன் காலாவதியாகிப் போனான். வர்த்தமான மகாவீரர் இருந்த சுவடாவது இருக்கிறதா? ஆனால், இயேசு எப்படி உலகின் நம்பர் ஒன் ஆளுமையானார்?’

‘அது மிஷனரிகள் செய்த வேலை’ என்று ஒருவன் உடனே பதில் சொன்னான். நான் புன்னகை செய்தேன். ‘இல்லை நண்பனே. வெறும் பிரசாரம் ஓரெல்லைக்கு மேல் பலன் தராது. மதத் தலைவர்கள் அத்தனை பேரும் ஆன்மாவைக் குறித்துச் சிந்தித்துக்கொண்டிருந்தபோது, இயேசுதான் உடலைப் பற்றி யோசித்தார். தேக சொஸ்தம் அவரது முதன்மைக் கருவி. குருடர்கள் பார்த்தார்களா என்று கேட்காதே. ஊமைகள் பேசினார்களா என்று மடக்க நினைக்காதே. அவரால் குறைந்தபட்சம் ஒரு ஜலதோஷத்தையாவது சரி செய்ய முடிந்திருக்கிறது. ஒரு விஷக் காய்ச்சலை விரட்டியடிக்க முடிந்திருக்கிறது. வியாதிகளைத் தீர்த்ததால் அவர் வென்றார். அது இல்லாமல் அத்தனைக் கோடி ஜனம் சென்று விழ வேறு காரணமே கிடையாது.’

‘அப்படியானால் டாக்டர்கள்தான் கடவுளா?’

‘இல்லை. மருந்தாக மாறத் தெரிந்த வைத்தியன் கடவுளாகிவிடுகிறான்’ என்று சொன்னேன்.

அன்றைக்கு வகுப்பு முடிந்து அனைவரும் கலைந்து சென்றதும், ஒரு பெண் என்னருகே வந்து நின்றாள்.

‘என்ன?’ என்று கேட்டேன்.

‘அவர் கிறிஸ்தவராவதற்கு நீங்கள் கதவு திறந்துவிட்டீர்கள்!’

நான் சிரித்தேன். ‘என் பேச்சு அவனை மதத்துக்குள் கொண்டு தள்ளுமானால், எதிலிருந்தும் அவனுக்கு மீட்சி கிடைக்காது. அவனது நிரந்தர மதம் முட்டாள்தனமாகத்தான் இருக்கும்.’

‘மதம் பெரிதல்ல என்கிறீர்களா?’

‘எதுவுமே பெரிதல்ல பெண்ணே. உன்னைக் கவனி. இந்த உலகில் நீ மட்டும்தான் பெரிது. உனக்கு மிஞ்சி ஒன்றுமில்லை. உன் அழகு. உன் வனப்பு. உன் ஆரோக்கியம். உன் அறிவு. உன் தெளிவு. உன் நிம்மதி. உன் மகிழ்ச்சி. உன் கொண்டாட்டங்கள். இவ்வளவுதான். இது போதும்.’

‘அப்படியானால் கடவுள்?’

‘அவன் உனக்கு முன்மாதிரி. அவனைப்போல் ஆனந்தமாக இருக்க எப்படி உன்னைத் தயாரிக்கிறாய் என்பதுதான் விஷயம். அதைத்தான் உடலில் இருந்து தொடங்கச் சொல்கிறேன்.’

அவள் புன்னகை செய்தாள். நான் உங்களைத் தொடலாமா என்று கேட்டாள். இப்போது நானும் புன்னகை செய்தேன். என் வலக்கைய நீட்டினேன். அவள் அதை ஏந்தி எடுத்து முத்தமிட்டாள். ‘நீங்கள் ஒருநாள் என் வீட்டுக்கு வர வேண்டும். என் அப்பாவைச் சந்திக்க வேண்டும்.’

‘அப்படியா? உன் தந்தை என்ன செய்கிறார்?’

‘அவர் ஒரு அரசியல்வாதி.’

‘எம்எல்ஏவா? எம்பியா? எந்தத் தொகுதி?’

‘அதெல்லாம் இல்லை. அத்தனை எளிதில் உங்களுக்கு அதைச் சொல்லிப் புரியவைக்க முடியாது. அவர் மேலிடங்களின் நண்பர். பேப்பரில் பேர் வராது. டிவியில் முகம் காட்டமாட்டார். ஆனால் காய் நகர்த்தல்கள் பல அவர்மூலம் நிகழும்.’

‘ஓ. சந்திக்கலாமே? ஆனால் அவருக்கு நான் எதற்கு?’ என்று கேட்டேன்.

‘அப்பா எப்போதும் கவலைப்பட்டுக்கொண்டே இருப்பார். எப்போதும் பதற்றமாகவே இருப்பார். உங்களுடன் பேசினால் அவர் சற்று மாறக்கூடும்.’

‘அப்படியா?’ என்று சிரித்தேன்.

நான்கு நாள் இடைவெளியில் அவள் மீண்டும் என் ஆசிரமத்துக்கு வந்தாள். ‘போகலாமா?’ என்று கேட்டாள். ஒரு பிஎம்டபிள்யூ காரில் நான் பயணம் செய்தது அதுதான் முதல் முறை. அந்தப் பயணம் முழுவதும் அவள் என் கையைப் பிடித்துக்கொண்டே அருகில் அமர்ந்திருந்தாள். மிகவும் வாசனையாக இருந்தாள்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.