Jump to content

‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்!


Recommended Posts

72. ப்ரோக்கர்

 

 

‘என்னால் உங்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை குருஜி’ என்று மிருதுளா சொன்னாள். நான் புன்னகை செய்தேன். ‘ஆனால் உங்களைப் புரிந்துகொள்ள முடியாதிருப்பதுதான் திரும்பத் திரும்ப உங்களிடம் என்னை ஈர்க்கிறது.’

‘தவறு பெண்ணே. ஈர்ப்பு என்பது எப்போதுமே ஒற்றைப் புள்ளி சார்ந்ததாக இருக்கக் கூடாது. உலகில் படைக்கப்பட்ட அனைத்தும் நம்மை ஈர்க்க நாம் அனுமதிக்க வேண்டும். நாலா புறங்களில் இருந்தும் நம்மை யாரேனும் ஈர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். போய் ஒட்டிக்கொள்ளும் இடம் ஒன்றாக இருந்துவிட அனுமதித்துவிடாதே. உலகம் முழுதும் உன் இடமாக இருக்க வேண்டும். அல்லது உலகமே நீயாகிவிட வேண்டும்’ என்று நான் மிருதுளாவிடம் சொன்னேன். அவளுக்கு என்ன பதில் சொல்லுவதென்று தெரியவில்லை. அமைதியாக யோசித்துக்கொண்டிருந்தது புரிந்தது.

எனது மெக்ஸிகோ பயணத்தின் நோக்கம் ஒரு வியாபார ஒப்பந்தம் மட்டுமே என்பதை அவளால் நம்ப முடியவில்லை. இத்தனைக்கும் நான் ஒரு ஆயுத வியாபாரியின் தொழிலில் முதலீடு செய்ய வந்திருப்பதை அவளிடம் சொல்லியிருக்கவில்லை. வெறும் வியாபாரப் பேச்சு என்று மட்டுமே சொன்னேன். அதையே அவளால் தாங்க முடியவில்லை.

‘குருஜி, நீங்கள் இதனைச் செய்ய வேண்டுமா?’ என்று அவள் கேட்டாள்.

‘நான் ஏன் செய்யக் கூடாது என்று நீ நினைக்கிறாய்? இதில் எனக்கு லாபமோ நட்டமோ இல்லை. விருப்பும் இல்லை; வெறுப்பும் இல்லை. ஆர்வமோ ஆர்வமின்மையோ சற்றும் இல்லை. ஒரு துறவி ஸ்திதப்ரக்ஞனாக இருப்பது முக்கியம்’ என்று சொன்னேன்.

‘ஆனால் உங்கள் பணி வேறல்லவா? உங்கள் அறம் வேறல்லவா?’

‘எது என் அறம்? உனக்கு நான் மகிழ்ச்சியளிக்கிறேனல்லவா? அதுதான் என் அறம். உன்னைப் போல் யாருக்கு மகிழ்ச்சி தேவைப்பட்டாலும் நான் உதவுவேன். உதவி மட்டும்தான். பிரதிபலன் இதில் கிடையாது. உதவுதலே என் தவம்’ என்று சொன்னேன்.

அவளால் அப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னால் அவளைப் புரிந்துகொள்ள முடிந்தது. வியாபாரம் தவறு என்று அவளால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. அவளது தந்தை மிகப்பெரிய வியாபாரி. பணத்தின் செழுமை, வாழ்வின் செழுமை அந்த வியாபாரத்தில் இருந்து வருவதுதான் என்பதை அவள் அறிவாள். ஆனால் ஒரு துறவி எப்படி அதில் ஈடுபடலாம்?

‘அதுதானே?’ என்று நான் புன்னகையுடன் கேட்டேன்.

அவள் ஆம் என்று தலையசைத்தாள்.

நான் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, ‘பாரதத்தில் கிருஷ்ணன் என்ன செய்தான்?’ என்று கேட்டேன்.

‘என்ன செய்தான்? தருமம் காக்கப் பாண்டவர்களின் பக்கம் நின்றான்.’

‘இல்லை பெண்ணே. கிருஷ்ணன் செய்தது பேரம். இரு தரப்புக்கும் இடையே ஒரு புரோக்கராக நின்று செயல்பட்டான். இவர்கள் தரப்பை அவர்களுக்கும் அவர்கள் தரப்பை இவர்களுக்கும் எடுத்துச் சொன்னான். இரு தரப்புக்குமே எது சரி, எது தவறு என்பதை இறுதிவரை உணர்த்திக்கொண்டே இருந்தான். ஆனால் கௌரவர்களின் தோல்வியோ, பாண்டவர்களின் வெற்றியோ அவனை பாதிக்கவேயில்லை. அவன் தன் கடமை என்று நினைத்ததைச் செய்தான். அவ்வளவுதான்.’

‘ஆனால் நீங்கள் அவனை ப்ரோக்கர் என்கிறீர்கள்!’ அவளால் அந்தச் சொல்லைத் தாங்கவே முடியவில்லை என்பது புரிந்தது. அதை எதிர்பார்த்து, மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுத்துத்தான் நான் அச்சொல்லைப் பயன்படுத்தினேன்.

‘ஆம். ப்ரோக்கர்தான். பேரம் பேசிப் பார்த்த ப்ரோக்கர். கமிஷன் கேட்காத ப்ரோக்கர். ஆனால் இறுதியில் தருமத்தை மன்னர் குலம் காக்கவில்லை. ப்ரோக்கர்தான் காத்தான்.’

‘ஆனால் அவனும் ஒரு மன்னனே அல்லவா?’

‘இல்லை. அவன் துறந்தவன். முற்றிலும் துறந்தவன். என்னைப் போல’ என்று சொல்லிப் புன்னகை செய்தேன்.

இந்தியாவுக்குத் திரும்பும் வழி முழுதும் அவள் இடைவிடாது பேசிக்கொண்டேதான் வந்தாள். அவள் வயதுக்கான சந்தேகங்கள். அவள் வயதுக்கான குழப்பங்கள். நாகரிக நாட்டத்துக்கும் ஆன்மிக முன்னேற்றத்துக்கும் இடைப்பட்ட தூரம். ‘குருஜி, நான் ஒருவனைக் காதலிக்கிறேன். அவனோடு இரண்டு முறை உறவு கொண்டிருக்கிறேன். அதே சமயம் என் பக்தியிலோ, தியானம் செய்வதிலோ, நீங்கள் கற்றுத் தந்த மூச்சுப் பயிற்சிகளைச் செய்வதிலோ குறை வைப்பதில்லை’ என்று சொன்னாள்.

‘இரண்டுக்கும் என்ன சம்மந்தம்?’

‘இல்லை. காதல் தவறென்று தோன்றவில்லை. ஆனால்...’

‘படுத்ததைப் பிழையாகக் கருதுகிறாய். சரியா?’

அவள் மௌனமாகத் தலைகுனிந்தாள்.

‘இதுவே திருமணமாகிவிட்டால் உனக்கு இந்த மனச்சிக்கல் இராது. சரியா?’

‘அப்படித்தான் நினைக்கிறேன்.’

‘இது சராசரி இந்திய மனநிலை. இதில் பிழையில்லை. ஆனால் குற்ற உணர்ச்சி கொள்ளவும் இதில் ஒன்றுமில்லை’ என்று சொன்னேன்.

‘என் அப்பாவுக்குத் தெரிந்தால் இடிந்து போய்விடுவார். தற்கொலை செய்துகொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.’

‘தெரிய வேண்டும் என்று நினைக்கிறாயா?’

‘தெரிந்துவிட்டால்?’

‘மிருதுளா, காமம் தவறே இல்லை. தியானத்தைப் போல அதுவும் புனிதமானது. உன் குற்ற உணர்வால் அதன் புனிதத்தன்மையைக் கெடுக்காதே.’

‘ஆனால் தியானத்தில் குற்ற உணர்வு ஏற்படுவதில்லை. காமத்தில்தான்.’

‘என்றால் உன் உறவில் குற்றம் உள்ளது என்று பொருள். காமத்தில் அல்ல. அது ஒரு வெளிப்பாடு. அன்பைப் போல. காதலைப் போல. கோபம், மகிழ்ச்சி, துயரம் அனைத்தையும் போல வெறும் வெளிப்பாடு. வெளிப்படுத்த வேண்டியதை அடைத்து வைப்பது வன்முறை. வன்முறையில் ரகசியம் கலப்பது வியாதிக்கு வழி வகுக்கும். அதுதான் உன் குற்ற உணர்வு’ என்று சொன்னேன்.

அவள் நெடு நேரம் அழுதுகொண்டிருந்தாள். பிறகு, ‘என் குற்ற உணர்வை விலக்க நான் என்ன செய்யலாம் குருஜி?’ என்று கேட்டாள். நான் சிரித்தேன். ‘ஊருக்குப் போனதும் சொல்லித் தருகிறேன்’ என்று சொன்னேன்.

மடிகேரிக்குப் போய்ச் சேர்ந்தபோது என்னால் மிருதுளாவுக்காக நேரம் ஒதுக்க முடியவில்லை. இருபது நாள்களுக்கு மேலாக என்னைக் காணாதிருந்த சீடர்களும் பக்தர்களும் வந்து மொய்த்துக்கொண்டு விட்டார்கள். கேசவன் மாமாவுக்கு அந்த அனுபவம் புதிது. முந்தைய முறை அவர் என்னைக் காண வந்திருந்தபோது நான் தனி மனிதனாக இருந்தேன். ஓரிரு சீடர்கள் அப்போதும் இருந்தார்கள் என்றாலும் எனக்கென்று அப்போது ஒரு ஆசிரமம் இருக்கவில்லை. நான் இருந்த சிறு வீடே என் ஆசிரமமாக இருந்தது. எப்போதாவது வருகிற ஒரு சிலரைத் தவிர எப்போதும் நான் தனியாகவே இருந்த காலம் அது. ஆனால் இம்முறை மாமா உண்மையிலேயே மிரண்டு போனார்.

‘உன்னை நீ வா போன்னு மரியாதை இல்லாம கூப்பிடலாமா கூடாதான்னு சந்தேகமா இருக்கு விமல்’ என்று சொன்னார்.

நான் சிரித்தேன். ஆனால் பதில் சொல்லவில்லை.

‘என்னமோ இருக்கில்லே? எதோ ஒரு சக்தி இருக்கத்தான் செய்யறது. பாரேன், பைத்தியமாட்டம் நீ என்னிக்காவது ஒரு நாள் ஆத்துக்கு வந்துடுவேன்னு நேத்து வரைக்கும் உங்கம்மாட்ட சொல்லிண்டேதான் இருந்தேன். சும்மா வாய் வார்த்தைக்கு இல்லே. நிஜமாவே அப்படித்தான் நம்பிண்டிருந்தேன்’ என்று சொன்னார்.

நான் அதற்கும் பதில் சொல்லவில்லை.

‘எப்படியோ நன்னாருந்தேன்னா சரி. பெரிய மனுஷாள்ளாம் நிறையப் பேர் வரா போலருக்கே?’ என்று கேட்டார்.

‘உம். அரசியல்வாதிகள் வருவா. சினிமாக்காரா வருவா. அப்பறம் பெரிய பெரிய பிசினஸ் மேக்னட்ஸ். ரெண்டு மாசம் முன்னாடி குமாரமங்கலம் பிர்லா வந்திருந்தார் ஆசிரமத்துக்கு.’

‘அடேங்கப்பா.’

‘எல்லாருக்கும் ஏதோ ஒண்ணு வேண்டியிருக்கே மாமா?’

 

‘உங்கம்மா பாவம்டா’ என்று சட்டென்று சொன்னார். நான் அமைதியானேன். ‘நாலு பேரும் இப்படி பண்ணுவேள்னு இப்ப வரைக்கும் அவளுக்கு நம்பவே முடியலை. எதனால, எதனாலன்னு திடீர் திடீர்னு ராத்திரில முழிச்சிண்டு என்னை எழுப்பிக் கேப்பா. நான் என்னத்தச் சொல்லுவேன்?’

‘கர்மான்னு சொல்லுங்கோ’.

முந்தைய முறை கேசவன் மாமா வந்திருந்தபோது வார்த்தைக்கு வார்த்தை என்னைத் திட்டிக்கொண்டே இருந்தார். படு பயங்கரமான சாபங்கள் அளித்தார். பெற்ற தாயைவிடத் துறவு உள்பட, கடவுள் உள்பட எதுவும் முக்கியமே இல்லை என்று சொன்னார். நான் மௌனமாக அவர் சொன்ன அனைத்தையும் ஆமோதித்து, இறுதிவரை பதிலேதும் சொல்லாமல் அவரை வழியனுப்பி வைத்தேன். ஆனால் இம்முறை அவர் சற்றுத் தளர்ந்திருந்தார். பழைய கோபம் அவருக்கு இல்லை. ஆனால் பழைய துயரத்தின் ஒரு சில சொட்டுகளை அப்போதும் அவர் தேக்கி வைத்திருந்தார். ஒரு கனவு. மிக எளிய, சற்றும் ஆடம்பரமற்ற, ஜோடனைகளற்ற சராசரிக் கனவு. வீடு. குடும்பம். பிள்ளைக் குட்டிகள். வாரிசு. வம்சம்.

‘நீங்கள்ளாம் சராசரி இல்லியோ என்னமோ. உங்கம்மா அதான். நான் அதான். உசிரோட இருந்த வரைக்கும் உங்கப்பாவும் அப்படித்தான் இருந்தார். நாலு பேர்ல ஒருத்தனாவது எங்க கனாவை நிறைவேத்தியிருக்கலாம்’ என்று சொன்னார்.

நான் புன்னகை செய்தேன். ‘நீங்க மனசு வெச்சிருந்தேள்னா வினோத்தை மடக்கிப் போட்டிருக்கலாம். கோட்டை விட்டுட்டேள்!’ என்று சொன்னேன்.

கேசவன் மாமா கேவிக் கேவி அழுதார். உண்மையில் அவரது நோக்கமும் லட்சியமும் அதுவாகத்தான் இருந்திருக்கிறது. முதல் முதலில் நான் மடிகேரியில் இருப்பதை அறிந்து அவர் என்னை வந்து சந்தித்து, திட்டி, சாபமிட்டுவிட்டுப் போன பிறகு அந்தப் பக்கமே வரவில்லை. மீண்டும் என்னைக் காண அவருக்கு இருபது வருடங்கள் பிடித்திருக்கிறது. இடைப்பட்ட வருடங்களில் என் வாழ்வு என் எண்ணத்தைக் காட்டிலும் ஓங்கி வளர்ந்திருந்தது. நான் விரும்பியவற்றைவிட மிக அதிகம் பெற்றிருந்தேன். வட கர்நாடகத்தின் ஒரு மலை உச்சியில் அமர்ந்துகொண்டு வட இந்தியா முழுவதையும் என் கைப்பிடிக்குள் வைத்துக்கொள்ளப் பழகியிருந்தேன். மிகக் கவனமாகத் தமிழ் நாட்டைத் தவிர்த்தேன். அங்கிருந்து வரும் சொற்பொழிவு அழைப்புகளை ஏதேனும் காரணம் சொல்லி நிராகரித்துக்கொண்டிருந்தேன். மாமாவைச் சமாளித்து அனுப்புவது போல அம்மாவைச் செய்துவிட முடியாது என்று எனக்கு எப்போதும் தோன்றும். ஏனெனில் உண்மையில் நான் எதையுமே துறந்திருக்கவில்லை. வீட்டுக்குப் போகவேயில்லை என்றாலும் வீட்டை ஒரு நாளும் நினைக்காதிருந்ததில்லை. குறிப்பாக, வினோத்தைக் குறித்து.

அண்ணா விட்டுச் சென்று, நான் விட்டுச் சென்று, வினய்யும் விட்டுச் சென்ற பின்பு அவன் மட்டும்தான் வீட்டுப் பிள்ளையாக இருந்தான். வெகு நாள் அவன் அப்படி இருக்கமாட்டான் என்பது எனக்குத் தெரியும். அந்த ஶ்ரீரங்கம் பயணத்தின்போதே அது நிகழ்ந்திருக்க வேண்டியது. காவிரியில் அவன் கண்டெடுத்த லிங்கம் மிக நிச்சயமாக அவனை வேறொரு எல்லைக்கு இட்டுச் செல்லப் போகிறது என்று எனக்குத் தெரியும். ஆனால் அது மிகத் தாமதமாகத்தான் நிகழ்ந்திருக்கிறது. தொடர்பற்று இருந்ததால் எனக்குத் தெரியாமல் போய்விட்டது.

‘ஆனாலும் அவன் பண்ணது மன்னிக்கவே முடியாததுடா!’ என்று கேசவன் மாமா சொன்னார்.

‘அப்போ எங்க மூணு பேரையும் மன்னிச்சிடுவேளா?’

அவர் சிறிது யோசித்துவிட்டுச் சொன்னார், ‘ஒழியறது போன்னு எப்பவாவது தோணும். அவன் விஷயத்துல அது கிடையாது.’

(தொடரும்)

 

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

  • Replies 176
  • Created
  • Last Reply

73. சித்ராவும் உருளைக்கிழங்கு போண்டாவும்

 

 

எனக்கேகூட அது ஆச்சரியம்தான். வினோத் குறித்து கேசவன் மாமா பேச ஆரம்பித்தபோது, முதலில் எனக்கு ஒரு கதை கேட்பது போலத்தான் இருந்தது. விரக்தியில் மாமா தன்னையறியாமல் சம்பவங்களை மிகைப்படுத்திவிடுகிறாரோ என்று அடிக்கடித் தோன்றியது. சட்டென்று வேறொரு சந்தேகமும் எழுந்தது. என்ன ஆனாலும், நான் வீட்டுக்கு வந்து யாரிடமும் குறுக்கு விசாரணை செய்யப்போவதில்லை என்பதை அவர் அறிவார். பெற்ற நான்கு பிள்ளைகளும் தமது தாய்க்கு ஆத்மசுத்தியுடன் செய்த துரோகங்களை அவர் பட்டியலிட்டுக்கொண்டிருந்தார். தமக்கைப் பாசம் தன்னியல்பாக அதில் சில மிகைகளைக் கொண்டு சொருகிவிடுகிறதோ என்று நினைத்தேன். என்னவானாலும், சொல்லி முடிக்கும்வரை மாமா அழுதுகொண்டேதான் இருந்தார். நான் குறுக்கிடவில்லை. அவர் பேசி முடிக்கும்வரை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். எல்லாம் சொல்லியானதும் அவர் என்னைப் பார்த்துக் கேட்டார், ‘எங்கக்காவுக்கு என்னடா தலையெழுத்து இப்படியெல்லாம் கஷ்டப்படணும்னு? இப்படியெல்லாம் பண்றதுக்கு நீங்க நாலு பேரும் பேசி வெச்சுண்டு அவளைக் கொன்னு கடல்ல வீசிட்டுப் போயிருக்கலாமே?’

நான் அமைதியாக இருந்தேன். சில வினாக்கள் பதில்களை எதிர்பார்ப்பதில்லை. அவற்றுக்கு வினாவாக மட்டுமே இறுதிவரை இருந்துவிடுவதில்தான் விருப்பம். பொருத்தமான பதில்கள் வந்துவிடுமோ என்ற அச்சம் அத்தகைய வினாக்களுக்கு எப்போதும் இருக்கும். பதில்களை வெறுக்கும் வினாக்கள். பதில்களில் இருந்து விலகியோட விரும்புகிற வினாக்கள்.

நல்லது. எனக்கு கேசவன் மாமாவைக் காட்டிலும் வினோத்தின் மீதுதான் பரிதாப உணர்வு அதிகமாகத் தோன்றியது. மூன்று பேர் விட்டு விலகி ஓடிவிட்ட பின்பு அவன் அனுபவித்திருக்கக்கூடிய தனிமையை எண்ணிப் பார்த்தேன். அது என் அப்பா அம்மா அனுபவித்த தனிமையினும் கொடிது. இதை நான் சொன்னால் யாரும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. ஆனாலும் அதுதான் உண்மை. தன் தனிமையைக் கொல்லத் தெரியாமல் அவன் தவித்திருக்க வேண்டும். ஏற்கெனவே அவனுக்குக் கொள்ளிடத்தில் கிடைத்திருந்த சிவலிங்கம் அவனை சிந்திக்க விடாமல் அடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வீட்டை விட்டுப் போகும்வரை அப்படியொரு சம்பவம் நடந்ததையே அவன் காட்டிக்கொள்ளவில்லை என்று கேசவன் மாமா சொன்னார். கிளம்பிய தினத்தில் தன் ஞாபகார்த்தமாக அந்தச் சிவலிங்கத்தை எடுத்துச் சென்று பூஜையறையில் வைத்திருக்கிறான். அதன் கீழே ஒரு வரி எழுதிய தாள். இவன் கூப்பிடுகிறான்.

உண்மையில் எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. கொள்ளிட வெள்ளத்தில் அவனுக்கு லிங்கம் கிடைத்ததற்கும், அவன் வீட்டை விட்டு விலகிப் போனதற்கும் நடுவே பன்னிரண்டு ஆண்டுகள் உருண்டு புரண்டோடியிருக்கின்றன. இக்காலத்தில் அவன் திருவிடந்தை ஆரம்பப் பாடசாலையில் ஒரு ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறான். வீட்டுக்குத் தெரியாமல் வாரம்தோறும் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலுக்குப் போய்வந்திருக்கிறான். சிவத்தின் மீதான தனது பக்திப் பெருக்கு எங்கே ஏளனத்துக்குரியதாகிவிடுமோ என்ற அச்சத்தில் அதைக் குறித்து யாரிடமும் ஒரு சொல்லும் பேசாமலேயே கழித்திருக்கிறான்.

வினோத்துக்கு இருபத்து மூன்று வயதானபோது, அம்மா வீட்டில் அவனுக்குத் திருமணப் பேச்சை எடுத்தாள் என்று கேசவன் மாமா சொன்னார். இவன் நிச்சயமாக விட்டுப் போகப் போவதில்லை என்பது தெளிவாகியிருந்த நேரம் அது. தனது சொற்ப சம்பளத்தை வீட்டுக்கு மொத்தமாகக் கொடுத்துவிட்டு, ஓய்வுப் பொழுதுகளில் அவன் அம்மாவுக்கு உதவியாகத் துணி மடித்து, பாத்திரங்கள் துலக்கிக் கொடுத்து, வீடு பெருக்கி வாழ்ந்து வந்திருக்கிறான்.

அப்பா அவனிடம் மிகவும் நேரடியாகக் கேட்டாராம். ‘ஒனக்கு கல்யாணம் பண்ணிப் பாக்கணும்னு உங்கம்மா ஆசைப்படறா. சரின்னு பட்டுதுன்னா சொல்லு.’

‘ஏம்ப்பா அப்படிக் கேக்கறேள்? நீங்க என்ன செஞ்சாலும் எனக்கு சரி’ என்று வினோத் பதில் சொன்னான்.

அம்மாவுக்கு அந்தப் பதில் போதவில்லை. எனவே அவளும் தன் பங்குக்கு அவனைத் தனியே கூப்பிட்டுப் பேசியிருக்கிறாள். ‘மூணு பிள்ளைகளை இழந்தவடா நான். அவா மூணு பேரும் உயிரோடதான் இருப்பான்னு தெரியும். ஆனா எங்க இருக்கான்னு தெரியாது. நம்மாத்துக்கு ஏன் இப்படி நடக்கறதுன்னும் எனக்குத் தெரியலே. இதைச் சொன்னா நாலாவதா உனக்கு யாராவது பொண்ணு குடுப்பாளான்னும் எனக்குத் தெரியலே. இருந்தாலும் மனசுக்குள்ள ஒரு நப்பாசை. குறைஞ்சது நீயாவது இதுல தெளிவா இருக்கியான்னு தெரிஞ்சிண்டு முயற்சி பண்ணிப் பாக்க நினைக்கறேன். முயற்சி பண்ணிக் கிடைக்காம போக நிறைய வாய்ப்பு இருக்கு.’

வினோத் யோசிக்கவேயில்லை. ‘கிடைக்கலேன்னா அது என் தலையெழுத்தும்மா. ஆனா நீ ஆசைப்படறதை நீ பண்ணலாம். என்னால எந்தப் பிரச்னையும் வராது’ என்று சொல்லியிருக்கிறான். அதோடு நிறுத்தியிருக்கலாம். ‘எனக்கு ஓடிப் போற விருப்பமெல்லாம் இல்லைம்மா. அவ்ளோ துணிச்சலும் இல்லை.’

இரண்டு நாள் இடைவெளியில், அம்மா வினோத்தின் ஜாதகத்தைக் கோயிலுக்கு எடுத்துச் சென்று தாயார் சன்னிதியில் வைத்து அர்ச்சனை செய்துவிட்டு, பத்மா மாமியிடம் கொண்டுபோய்க் கொடுத்திருக்கிறாள்.

‘பண்ணிக்கறேன்னு சொல்றான் மாமி. இவன் மட்டும்தான் மிச்சம் இருக்கற ஒரே நம்பிக்கை. முயற்சி பண்ணிப் பாக்கலான்னு ஒரு ஆசை.’ அம்மா தயங்கித் தயங்கித்தான் மாமியிடம் பேசினாள்.

பத்மா மாமி, வினோத்தின் ஜாதகத்தை எடுத்து வைத்துக்கொண்டு தீவிரமாகக் கணக்குகள் போட்டாள். சட்டென்று என்ன தோன்றியதோ? ‘நீங்க நாளைக்கு வாங்கோளேன்?’ என்று சொல்லி அம்மாவை அனுப்பிவைத்தாள்.

மறுநாள் அம்மா, பத்மா மாமியின் வீட்டுக்குப் போனபோது அவளது கணவர் வீட்டில் இருந்தார். அம்மாவைக் கண்டதும் ‘சித்ரா ஜாதகத்தோட உங்க பிள்ளை ஜாதகம் நன்னா பொருந்தறது மாமி. உங்களுக்கு இஷ்டமிருந்தா நாம மேற்கொண்டு பேசலாம்’ என்று சொன்னார்.

அம்மாவால் அதை நம்பவே முடியவில்லை. என்ன, என்ன என்று திரும்பத் திரும்பக் கேட்டிருக்கிறாள்.

‘மூணு பேர் ஓடிப் போனா என்ன மாமி? இவன் ஜாதகம் இவன் கால்ல ஆணியடிச்சி உங்காத்துக் கூடத்துல பொருத்தி வெச்சிருக்கறதாத்தான் சொல்றது. படிச்சிருக்கான். சம்பாதிக்கறான். சின்ன வயசுலேருந்து பாக்கறவன் தானே? இஷ்டமிருந்தா சொல்லுங்கோ’ என்று பத்மா மாமியும் சொல்லியிருக்கிறாள்.

சித்ராவுக்கு அவர்கள் நாலைந்து வருடங்களாகவே வரன் பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்று கேசவன் மாமா சொன்னார். ‘என்னமோ தெரியலைடா விமல். அந்தப் பொண்ணுக்கு ஒரு இடமும் தகையலை. இத்தனைக்கும் அவளோடது சுத்த ஜாதகம்’ என்று சொன்னார். நாடு முழுவதும் இருந்து திருவிடந்தை கோயிலுக்கு வந்து வேண்டிக்கொண்டு யார் யாரோ கல்யாணப் பிராப்தி அடைந்துகொண்டிருந்தார்கள். பத்மா மாமி பிறந்தது முதல் நித்யகல்யாணப் பெருமாளை மட்டுமே வணங்கிக்கொண்டிருப்பவள். அவள் மகளுக்கு ஒரு வழி காட்ட மாட்டாரா?

சித்ராவும் பெருமாளுக்கு வேண்டிக்கொண்டு மாலை வாங்கிப் போய் வைத்து விரதம் காத்துக்கொண்டிருந்தாள். சொல்லி வைத்த மாதிரி அப்போதுதான் அம்மா வினோத்தின் ஜாதகத்தை எடுத்துச் சென்று பத்மா மாமியிடம் காட்டியிருக்கிறாள்.

தேய்பிறை போகட்டும் என்று அப்பா சொன்னதால், ஒன்பது நாள்கள் காத்திருந்துவிட்டு அப்பா அம்மா கேசவன் மாமா வினோத் நால்வரும் பத்மா மாமி வீட்டுக்கு சம்பிரதாயப்படி பெண் பார்க்கப் போயிருக்கிறார்கள். மாமி உருளைக்கிழங்கு போண்டாவும் கேசரியும் செய்திருந்தாள். சித்ரா, வினோத்துக்கு மானச சஞ்சரரே பாடிக் காட்டியிருக்கிறாள். வினோத்துக்கு அந்தப் பாட்டு பிடித்திருந்ததா அல்லது உருளைக்கிழங்கு போண்டா பிடித்திருந்ததா அல்லது சித்ராவையே பிடித்திருந்ததா என்று தெரியவில்லை. திருமணத்துக்கு அன்றே சம்மதம் சொல்லிவிட்டு வந்துவிட்டான்.

 

அம்மாவுக்குத் தாங்க முடியாத சந்தோஷம். மறுநாளே கோயிலில் தளிகைக்குச் சொல்லி ஐம்பது பண்டாரங்களுக்கு அன்னதானம் செய்தாள். அப்பா, அம்மாவை மட்டும் அழைத்துக்கொண்டு அடையார் கோ ஆப்டெக்ஸுக்குப் போய் நிச்சயதார்த்தத்துக்குத் துணிமணிகள் வாங்கி வந்தார். பத்மா மாமி வீட்டிலேயேதான் நிச்சயதார்த்தம் நடந்தது. சமையலுக்குத் தனியே யாரையும் சொல்லவேண்டாம் என்று கேசவன் மாமா தீர்மானமாகச் சொல்லிவிட்டு தானே களத்தில் இறங்கினார்.

அந்த நிச்சயதார்த்தத் தளிகையே கல்யாணத் தளிகை போலிருந்தது என்று கேசவன் மாமா சொன்னபோது நான் புன்னகை செய்தேன். சன்னிதித் தெருவில் இருந்த அத்தனை பேரும் வினோத் நிச்சயதார்த்தத்துக்கு வந்திருந்து ஆசீர்வாதம் செய்துவிட்டுப் போனார்கள்.

அன்றிலிருந்து நாற்பதாம் நாள் கல்யாணம் என்று குறிக்கப்பட்ட பத்திரிகையை வாத்தியார் வாசித்து ஆனதும் முதல் முதலாக வினோத் துணிச்சல் பெற்று சித்ராவிடம் பேசியிருக்கிறான்.

‘என்னை ஒனக்கு பிடிச்சிருக்கா? இல்லேன்னா உங்கம்மா சொன்னதுக்காக பண்ணிக்கறியா?’

சித்ரா ஒன்றும் சொல்லவில்லை. வெட்கப்பட்டுக்கொண்டு நின்றாள்.

‘பெரிய சம்பளமெல்லாம் இல்லே. மாசம் ரெண்டாயிரத்து எழுநூறு கையிலே வரும். இனிமே ட்யூஷன் எடுக்கலாம்னு இருக்கேன். அதுல ஒரு நாநூறு ஐந்நூறு வரலாம். கரஸ்பாண்டன்ஸ்ல எம்.ஏ. ஜாயின் பண்ணப் போறேன். அது முடிஞ்சிடுத்துன்னா கவர்மெண்ட் ஸ்கூல்லே முயற்சி பண்ணிப் பாப்பேன். அதிர்ஷ்டம் இருந்தா வேலை கிடைக்கும்’ என்று சொன்னான்.

சித்ரா வெறுமனே தலையாட்டினாள்.

கிளம்பும் முன் வினோத் அவளிடம் மீண்டும் கேட்டான், ‘என்னைப் பிடிச்சிருக்கா?’

‘உம்’ என்று மட்டும் சொன்னாள்.

இரண்டு நாள்கள் கழித்து ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை தூங்கி எழுந்து முகம் கழுவிக்கொண்டு காப்பி குடித்த பின்பு, வினோத் அம்மாவிடம் கேட்டான், ‘அம்மா நான் சித்ராவோட இப்போ வெளிய போனா தப்பாகுமா?’

வீட்டில் அப்போது அப்பா இருந்தார். கேசவன் மாமாவும் இருந்தார். அம்மாவுக்கு குப்பென்று வெட்கமாகிவிட்டது. என்ன பிள்ளை இவன்!

‘அதெல்லாம் போகலாம் ஒண்ணும் தப்பில்லே. அதான் நிச்சயதார்த்தம் ஆயிடுத்தே’ என்று கேசவன் மாமா சொன்னார்.

‘அதுக்கில்லே கேசவா. அவாத்துல ஒத்துக்கணுமில்லியா?’ என்று அப்பா கேட்டார்.

வினோத்துக்குப் புரிந்துவிட்டது. வீட்டில் யாருக்கும் ஆட்சேபணை இல்லை. எனவே, ‘நானே போய் அவப்பாட்ட பேசிப் பாக்கறேம்ப்பா. சரின்னு சொன்னா கூட்டிண்டு போறேன்.’

‘எங்கடா?’ என்று கேசவன் மாமா கேட்டார்.

‘ஒனக்கு எதுக்கு அதெல்லாம்? அவன் எங்க வேணா போகட்டும் சித்ரா இனிமே அவன் பொறுப்பு’ என்று அம்மா சொன்னாள்.

நான்கு பிள்ளைகள் பிறந்த நாளாக வராத பேரானந்தம் அன்று அவள் கண்ணில் தெரிந்ததைக் கேசவன் மாமா கண்டார். புன்னகை செய்தார்.

வினோத் தன்னை அலங்கரித்துக்கொண்டு பத்மா மாமியின் வீட்டுக்குப் போனான். அவன் போன நேரம், சித்ரா பூ தொடுத்துக்கொண்டு வாசல் திண்ணையில்தான் அமர்ந்திருந்தாள்.

‘உங்கப்பாவ பாக்கணும்’ என்று வினோத் சொன்னதும் அவள் எழுந்து வந்து புன்னகை செய்தாள். ‘உள்ளே வாங்கோ.’

வினோத் வீட்டுக்குள் சென்று சித்ராவின் பெற்றோரிடம் விவரம் சொன்னான். ‘என்னமோ தோணித்து. உங்களுக்குத் தப்பா படலேன்னா அனுப்பிவைங்கோ. இல்லேன்னாலும் பரவாயில்லை’ என்று சொன்னான்.

‘கேக்கவே வேண்டாம் மாப்ளை’ என்று சித்ராவின் அப்பா சந்தோஷமாகச் சொன்னார். பத்து நிமிடங்களில் சித்ரா தயாராகி, பளிச்சென்று வேறொரு புடைவையில் வந்து நின்றாள்.

‘தேங்ஸ். ராஜலட்சுமி தியேட்டருக்குத்தான் போறோம். படம் முடிஞ்சதும் கொண்டுவந்து விட்டுடறேன்’ என்று சொல்லிவிட்டு, சித்ராவை அழைத்துக்கொண்டு வினோத் புறப்பட்டான்.

‘தியேட்டர்லே அவளுக்கு முத்தம் குடுத்தேன்னு அவன் என்கிட்டே சொன்னாண்டா!’ என்று கேசவன் மாமா சொன்னார். நான் வினய்யைத்தான் நினைத்துக்கொண்டேன். அவனுக்கு அப்படியொரு அனுபவம் அந்நாள்களில் வாய்த்திருந்தால், மிக நிச்சயமாக அவன் ஓடிப்போயிருக்க மாட்டான் என்று தோன்றியது.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

74. சிவன் செயல்

 

 

அம்மா ஒரு குருவியைப் போலாகிவிட்டாள் என்று கேசவன் மாமா சொன்னார். நிச்சயதார்த்தம் முடிந்த மறுநாளே அவள் கல்யாணத்துக்கு ஆயத்தமாகத் தொடங்கிவிட்டாள். ‘கல்யாணப் பரபரப்பு பொண்ணாத்துக்காராளுக்கு. நீ எதுக்கு இப்படி அலைஞ்சிண்டே இருக்கே?’ என்று அப்பா கேட்டார். அம்மா அதையெல்லாம் கண்டுகொள்ளவேயில்லை. பத்மா மாமியும் அவரது கணவரும் புடைவை வாங்கக் கிளம்பியபோது, அம்மாவும் அவர்களோடு கடைக்குப் போனாள். நகை வாங்க, பத்திரிகை அச்சடிக்க, சமையல்காரனுக்குச் சொல்ல - எதையுமே அவள் விடவில்லை. பத்மா மாமியே அம்மாவிடம் கேட்டிருக்கிறாள், ‘பொண்ணும் பிள்ளையும் இடம் மாறிப் பொறந்துட்ட மாதிரின்னா இருக்கு?’ அம்மா சிரித்தாளே தவிர எதையும் நிறுத்திக்கொள்ளவில்லை. திருவிடந்தை முழுதும் ஒரு வீடு மிச்சமில்லாமல் படியேறிச் சென்று பத்திரிகை கொடுத்துவிட்டு வந்தாள்.

திருமணத்துக்கு முன்பு நான்கு முறை வினோத், சித்ராவை அழைத்துக்கொண்டு வெளியே போய்வந்ததாக கேசவன் மாமா சொன்னார். ஒரு முறை கேளம்பாக்கம் ராஜலட்சுமி தியேட்டருக்கு. மறுமுறை மகாபலிபுரம் போய்வந்திருக்கிறான். மூன்றாம் முறை அவன் வெளியே போவதாகச் சொன்னபோது, ‘எதுக்குடா?’ என்று அம்மா கேட்டிருக்கிறாள். ‘சித்ரா ஆசைப்படறாம்மா’ என்று வெட்கப்பட்டுக்கொண்டே வினோத் பதில் சொன்னான். அம்மா ஒன்றும் சொல்லவில்லை. அம்முறை அவன் சித்ராவோடு மெரினா கடற்கரைக்குப் போயிருக்கிறான். அன்றிரவெல்லாம் மாமாவிடம் தனது எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும் என்று ஆர்வத்தோடு பேசியிருக்கிறான்.

‘எனக்குப் பெரிய எதிர்பார்ப்பெல்லாம் இல்லே மாமா. அம்மா அப்பா காலம் வரைக்கும் அவாளோடகூட இருக்கணும். கடன் இல்லாம வாழணும். வீதியிலே இறங்கி நடந்துபோனா நாலு பேர் கையெடுத்துக் கும்பிடலைன்னா பரவால்லே. ஆனா போறான் பாரு சனியன்னு சொல்லிடக் கூடாது.’

மாமாவுக்கு அவன் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் ஆனதில் மிகுந்த பெருமிதம் உண்டாகியிருந்தது. பி.டி. பரீட்சையில் அவன் தேறிய தினத்தன்று, கோயிலில் அவர் தனது செலவில் சர்க்கரைப் பொங்கல் தளிகை விட்டார். ‘இவ்ளோதாண்டா வினோத். எவ்ளோ சம்பாதிக்கறோம்ன்றது பெரிசே இல்லை. ஆயிரத்துலயும் வாழ முடியும். பத்தாயிரத்துலயும் வாழ முடியும். லட்சத்துலயும் வாழ முடியும். ஆனா வாழறோமா? அவ்ளோதான்’ என்று கேசவன் மாமா சொன்னார்.

வினோத் திருமணத்தை முன்னிட்டு, அப்பா வீட்டைச் செப்பனிட முடிவு செய்தார். கட்டிய நாளாக எங்கள் வீட்டில் எந்த மராமத்துப் பணியும் நடந்ததில்லை. கட்டப்பட்டபோது அந்தச் சுவருக்கு என்ன நிறம் இருந்திருக்கும் என்று குத்துமதிப்பாக யூகிக்கலாமே தவிர, கண்ணுக்குத் தெரியாது. தரை பல இடங்களில் விரிசல் கண்டிருக்கும். முற்றத்தை ஒட்டிய நான்கு தூண்களுமே பூச்சி அரித்து உதிர ஆரம்பித்திருந்தன. கதவுகள், சன்னல்கள் யாவும் புராதனமானவை. கறுப்பேறியவை. பொதுவாகக் கோயிலைச் சுற்றியுள்ள வீடுகள் அனைத்துமே இப்படித்தான் இருக்கும். அவரவர் வசதிக்கு ஏற்பச் செப்பனிட்டுக் கொள்ளலாமே தவிர, அவற்றின் தோற்றத்தில் பெரிய மாறுதல்கள் வராது.

ஏனோ எங்கள் வீட்டில் எக்காலத்திலும் மராமத்துப் பணிகள் நடைபெற்றதில்லை. நாங்கள் மூன்று பேர் ஒவ்வொருவராக வீட்டை விட்டுப் போனது காரணமாயிருக்கலாம். மொத்தமாக இடிந்து தலையில் விழுந்தால் இனியும் யாரும் ஓடிப் போகமாட்டார்கள் என்று அப்பா கருதியிருக்கலாம். ஒரு வழியாக வினோத் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டதில் அந்த வீட்டுக்கு ஒரு கதி மோட்சம் கிடைத்தது.

கேசவன் மாமா திருப்போரூரில் இருந்து ஒரு மேஸ்திரியை அழைத்து வந்து வீட்டைக் காட்டினார். இரண்டு மணி நேரம் அவன் வீட்டை அலசிவிட்டு அறுபதாயிரத்துக்குச் செலவுக் கணக்கு சொல்லிவிட்டுப் போனான். அப்பா அதிகம் யோசிக்கவில்லை. அந்த வாரத்திலேயே ஒரு நல்ல நாள் பார்த்து அவனை ஆள்களோடு வரச் சொல்லிவிட்டார். அம்மா மொத்த வீட்டையும் ஒழித்து எடுத்துக்கொண்டு, ஓர் அறைக்குள் சென்று அடைந்துகொண்டாள். அங்கேயேதான் சமையல். அங்கேயேதான் படுக்கை. நாளெல்லாம் வேலை நடந்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாத அளவுக்கு வீடெங்கும் தூசு நிரம்பித் ததும்பிக்கொண்டிருந்ததாகக் கேசவன் மாமா சொன்னார்.

சுண்ணாம்புத் தூசு மிக அதிகம் இருந்ததில் வினோத்துக்கு ஜலதோஷம் பிடித்துக்கொண்டது. அம்மா மிகவும் கவலையாகிவிட்டாள். உடனே மாமாவை அனுப்பி எங்கிருந்தோ சித்தரத்தை இலைகளைப் பறித்து வரச்சொல்லி கஷாயம் போட்டுக் கொடுத்தாள். அப்பா வெந்நீரில் நீலகிரித் தைலத்தைப் போட்டு அவனை ஆவி பிடிக்கச் சொன்னார். அவன் உறங்கி வெகு நேரம் ஆனபின்பும் அருகே உட்கார்ந்து அவனுக்குத் தலை பிடித்துவிட்டதாகக் கேசவன் மாமா சொன்னார்.

இடைப்பட்ட நாள்களில் அம்மாவும் பத்மா மாமியும் முன்பைக் காட்டிலும் மிகுந்த சிநேகம் கொண்டுவிட்டிருந்தார்கள். நொடிக்கொருதரம் மாமி எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டுப் போவாள். உங்கள காணமேன்னுதான் நானே வந்தேன் என்றபடி அம்மா அவர்கள் வீட்டுக்குப் போக ஆரம்பித்தாள். தினசரி குழம்பு, சாற்றமுது வரை இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் போக வரத் தொடங்கியது மாமாவுக்கே மிகவும் புதிதாக இருந்திருக்கிறது.

‘ஏதேது, சம்மந்தியாகப் போறவா இப்படியா இருப்பா?’ என்று யாரோ கோயிலில் பார்த்து அம்மாவிடம் கேட்டிருக்கிறார்கள். ‘ஒண்ணும் தப்பில்லே. கண்ணு போடாதிங்கோ’ என்று அம்மா சொல்லிவிட்டாள்.

திருவிடந்தையில் கல்யாண மண்டபமெல்லாம் கிடையாது. பத்மா மாமிக்கு எப்படியாவது நித்ய கல்யாணப் பெருமாளின் கண் பார்வைக்கு உட்பட்ட இடத்துக்குள் திருமணத்தை நடத்திவிட வேண்டும் என்று ஆசை. ஆனால் கோயிலில் கல்யாணம் நடத்தும் வழக்கம் கிடையாது. மண்டபம் பார்த்துத்தான் செய்தாக வேண்டும். என்ன செய்யலாம் என்று மாமியும் அவரது கணவரும் அப்பாவிடம் வந்து கேட்டார்கள்.

‘மண்டபம் பார்த்துத்தான் பண்ணனும்னெல்லாம் இல்லே. நீங்க உங்காத்துலேயே வெச்சாக்கூட எங்களுக்குப் பிரச்னை இல்லை. என்னடா வினோத்?’ என்று அப்பா, வினோத்தைக் கேட்டிருக்கிறார். இறுதியில் அப்படித்தான் முடிவு செய்தார்கள். சித்ரா வீட்டு வாசலில் பந்தல் போட்டுக் கல்யாணம். நான்கு மாட வீதிகளையும் சுற்றி ஜானவாச ஊர்வலம் நடத்த வேண்டும் என்று கேசவன் மாமா சொன்னார்.

‘ஓ பேஷா! நான் இன்னிக்கே படூருக்குப் போய் ஜானவாச கார் புக் பண்ணிட்டு வந்துடறேன்’ என்று சித்ராவின் அப்பா அங்கிருந்தே எழுந்து ஓடினார்.

பத்து நாள்களில் வீட்டில் மராமத்துப் பணிகள் யாவும் நிறைவு பெற்றன. பளிச்சென்று மஞ்சள் சுண்ணாம்பு பூசி வீடு அமர்க்களமாகிவிட்டது. வினோத்தின் அறைக்கு மட்டும் அப்பா மொசைக் தரை போடச் சொல்லியிருந்தார். அந்த அறையின் சுவர்களுக்கு மட்டும் நீல நிற சுண்ணாம்பு. யாரிடமோ சொல்லிவைத்து செகண்ட் ஹேண்டில் அப்பா ஒரு ஏர் கண்டிஷனர் பெட்டி வாங்கி வந்து அந்த அறைக்குள் பொருத்தினார்.

‘எதுக்குப்பா இதெல்லாம்?’ என்று வினோத் சங்கடப்பட்டான்.

‘இருக்கட்டும்டா. வேர்த்துதுன்னா நானும் வந்து உக்காந்துப்பேன்’ என்று அப்பா சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு நகர்ந்து போனார்.

வினோத்திடம் அப்போது நான்கு சிறுவர்கள் ட்யூஷன் படித்துக்கொண்டிருந்தார்கள். எட்டாவது, ஒன்பதாவது வகுப்புப் பையன்கள். அம்மா அவர்களுக்கும் கல்யாணத்துக்குப் புதிய சட்டை எடுத்திருந்தாள். ஊரில் இருந்த உறவுக்காரர்கள் ஒவ்வொருவரையாக நினைவுகூர்ந்து உறவைப் புதுப்பித்து நேரில் சென்று பத்திரிகை கொடுத்துத் திருமணத்துக்கு அழைத்துவிட்டு வந்தார்கள்.

மூன்று நாளில் கல்யாணம் என்று நெருங்கி வந்தபோது, வினோத் நான்காவது முறையாக சித்ராவை அழைத்துக்கொண்டு வெளியே போனான். இம்முறை அவன் யாரிடமும் சொல்லிவிட்டுச் செல்லவில்லை. கோவளத்தில் தன்னோடு படித்த பெண்களுக்குப் பத்திரிகை கொடுத்துவிட்டு சித்ரா வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பள்ளிக்கூடம் விட்டு வந்துகொண்டிருந்த வினோத் அவளை வழியில் பார்த்தான். ‘நீலாங்கரை வரைக்கும் போயிட்டு வரலாமா?’ என்று கேட்டபோது அவள் மறுக்கவில்லை. வினோத் தன் சைக்கிளில் அவளை ஏறிக்கொள்ளும்படிச் சொன்னான். இருவரும் சைக்கிளிலேயே நீலாங்கரைக்குப் போனார்கள்.

வினோத்தின் நண்பன் ஒருவன் அங்கே ஒரு ஓட்டல் வைத்து நடத்திக்கொண்டிருந்தான். கடற்கரையோரத்தில் ஓலைக் கூரை வேய்ந்த ஓட்டல். அந்நாள்களில் அம்மாதிரியான உணவகங்கள் பிராந்தியத்தில் வேறு கிடையாது. கடலைப் பார்த்துக்கொண்டே காப்பி அருந்தலாம். சூடாக போண்டா, பஜ்ஜி, மசால் தோசை கிடைக்கும். மகாபலிபுரத்துக்கு வருகிற வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அம்மாதிரியான உணவகங்களே மிகவும் பிடித்திருப்பதாக யாரோ வினோத்தின் நண்பனிடம் சொல்லியிருக்கிறார்கள். அவனுக்கு மகாபலிபுரத்தில் ஓட்டல் நடத்த வசதி இல்லை என்பதால் நீலாங்கரையில் ஆரம்பித்திருந்தான்.

வினோத், சித்ராவுடன் அந்த உணவகத்துக்கு சைக்கிளில் சென்று இறங்கினான். நண்பனுக்குப் பத்திரிகை கொடுத்து திருமணத்துக்கு அழைத்துவிட்டு, இருவரும் ஒரு மேசையின் எதிரெதிரே அமர்ந்து காப்பி சாப்பிட்டார்கள். அப்போதுதான் வினோத் அவளிடம் தன்னைக் குறித்த ஒரு தகவலை வெளிப்படுத்தியிருக்கிறான்.

‘சித்ரா உன்கிட்டே ஒண்ணு சொல்லணும்.’

‘உம்.’

‘ஐயங்காராத்துப் பையன்னாலும் நான் ஒரு சிவ பக்தன்.’

‘அப்படியா?’ என்று சித்ரா கேட்டாள். அவள் பார்வையில் மிகுந்த வியப்பு இருந்ததை வினோத் கவனித்தான்.

‘இந்த விஷயம் இத்தன காலமா ஆத்துல யாருக்கும் தெரியாது. நான் சொல்லிண்டதில்லை.’

‘அதெப்படி முடியும்?’

‘முடிஞ்சிருக்கே. மனசுக்குள்ள எனக்கு ஒரே கடவுள் சிவன்தான். வேற யாரையும் சேவிக்கறதில்லை. ஒண்ணு தெரியுமா? நான் நம்ம கோயிலுக்குப் போயே பல வருஷமாச்சு.’

‘நம்பவே முடியலே. எப்பலேருந்து இது?’

‘சின்ன வயசுலேருந்தே. ஒருவாட்டி, பதினெட்டாம் பெருக்குக்கு திருச்சி போயிருந்தோம். கொள்ளிடத்துல குளிச்சிண்டிருந்தப்போ என் கையிலே ஒரு லிங்கம் தட்டுப்பட்டுது.’

‘வெச்சிருக்கேளா?’

‘இருக்கு. பத்திரமா என் பெட்டிக்குள்ள வெச்சிருக்கேன். தெனம் ராத்திரி எடுத்து வெளில வெச்சிண்டு பூஜை பண்ணி ஏளப்பண்ணிடுவேன்.’

‘உங்கம்மாக்கு தெரியாதா?’

‘சொன்னதில்லை.’

‘ஏன்?’

‘ஏன்னு சட்டுனு சொல்லத் தெரியலை. என்னமோ அப்ப சொல்லத் தோணலை. அப்பறம் அப்படியே பழகிடுத்து.’

‘ஒண்ணு கேக்கறேன். லிங்கம் கிடைச்சதால சிவ பக்தரானேளா? இல்லே அதுக்கு முன்னாடியேவா?’

வினோத் ஒரு கணம் யோசித்தான். பிறகு, ‘லிங்கம் கிடைச்சப்பறம்தான்’ என்று சொன்னான்.

சித்ராவுக்கு அதற்குமேல் என்ன பேசுவதென்று தெரியவில்லை. ஒன்றும் பேசாதிருப்பது சரியில்லை என்று தோன்றியிருக்கும் போல. ‘ஒண்ணும் தப்பில்லியே. சிவனும் ஒரு கடவுள்தானே’ என்று சொன்னாள்.

‘அப்ப நீ என்னைத் தப்பா நினைக்கமாட்டே இல்லியா?’

‘இதை எதுக்கு தப்பா நினைக்கணும்? நீங்க நாஸ்திகரா இருந்தாலும் நான் தப்பா நினைக்கமாட்டேன். அதெல்லாம் அவாவா இஷ்டம்.’

மறுநாள் காலை முதல் இரு வீடுகளும் உறவினர்களால் நிரம்ப ஆரம்பித்துவிட்டன. மாப்பிள்ளை அழைப்பு முடிந்து வினோத் ஜானவாச காரில் ஏறி அமர்ந்தபோது, கேசவன் மாமா எங்கிருந்தோ ஓடிவந்து அவன் கையில் ஒரு பூச்செண்டைக் கொடுத்தார். பெட்ரோமாக்ஸ் விளக்குகள் வெளிச்சத்தில் ஜானவாச கார் நான்கு மாட வீதிகளையும் மெல்லச் சுற்றி வந்ததை ஊரே கூடி நின்று வேடிக்கை பார்த்தது. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அள்ளிப் பிடிக்க முடியாத சந்தோஷம். அப்பா நாகஸ்வர வித்வானிடம், ‘இதை வாசி அதை வாசி’ என்று அமர்க்களப்படுத்திக்கொண்டே வந்தார். அன்றைய ஜானவாச விருந்து உலகத்தரத்தில் இருந்ததாகக் கேசவன் மாமா சொன்னார்.

‘அந்த மனுஷனுக்கு எப்பேர்ப்பட்ட மனசு தெரியுமா? நடக்காமலே போயிடுமோன்னு நினைச்ச பொண்ணு கல்யாணமோல்யோ? அதான், அமர்க்களப்படுத்திப்பிட்டார்’ என்று சொன்னார்.

மறுநாள் காலை ஏழு மணிக்கு முகூர்த்தம். எனவே அனைவரும் சீக்கிரமே வீடு திரும்பிப் படுத்துவிட்டார்கள். படுக்கப் போகுமுன் அம்மா வினோத்திடம் ‘மூணு மணிக்கெல்லாம் எழுந்துடணும்’ என்று சொல்லியிருந்தாள்.

இரண்டரைக்கே அலாரம் வைத்து அவள் எழுந்து காப்பி போட்டுவிட்டு, சரியாக மூன்று மணிக்கு வினோத்தை எழுப்பப் போனபோது, அவன் அறையில் இல்லை. அவனது பெட்டி மட்டும் திறந்திருந்தது. அதில் லிங்கம் இருந்தது. வினோத் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தான்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

75. ஒரு தற்கொலை

 

 

ஆசிரமத்துக்கு வெளியே இருந்த புல்வெளியில் நான் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தேன். கேசவன் மாமா என்னெதிரே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். இருவருக்கும் இடையில் ஒரு சிறு மர ஸ்டூல் இருந்தது. அதன் மீது இரண்டு காப்பிக் கோப்பைகள். நான் குடித்துவிட்டிருந்தேன். மாமா காப்பியைத் தொடவேயில்லை. அவர் காப்பியைக் குடித்து முடித்த பின்பு நான் வினோத்தைப் பற்றிக் கேட்டிருக்க வேண்டும். தவறு செய்துவிட்டேன். அந்தக் காப்பி ஆறியே போய்விட்டது. சுற்றுமுற்றும் பார்த்தேன். உதவியாளர்கள் யாரும் கண்ணில் படவில்லை. ‘மாமா நானே போய் காப்பி எடுத்து வருகிறேன். இது ஆறிவிட்டது’ என்று சொன்னேன்.

‘உக்காருடா. நான் ஒண்ணும் காப்பி சாப்பிடறதுக்காக இங்க வரலை’ என்று கேசவன் மாமா சொன்னார். சிரித்தேன்.

‘சரி சொல்லுங்கோ. வேற எதுக்கு வந்தேள்?’

‘உங்கண்ணன் ஒரு சுவடி வெச்சிருந்தான். உனக்கு ஞாபகம் இருக்கும்.’

‘ஓ, தெரியுமே? வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போய் விசாரிச்சுட்டு அது ஒண்ணுமில்லைன்னு தெரிஞ்சிண்டு வந்தோமே?’

‘ஆமா, அதுதான். ஆனா அதுல என்னமோ இருந்திருக்குடா விமல். ஒண்ணு அந்த நாடி ஜோசியனுக்கு அது புரியலை. இல்லேன்னா அவன் சொல்லாம மறைச்சிட்டான்’ என்று மாமா சொன்னார்.

நான் சில விநாடிகள் அமைதியாக யோசித்தேன். ஏனோ எனக்கு மாமாவிடம் அப்போது உண்மையைச் சொல்லிவிடலாம் என்று தோன்றியது. உண்மையின் ஒரு பகுதியை மட்டும். இனி அவருக்கு அது வியப்பை வேண்டுமானால் தரலாமே தவிர அதிர்ச்சி தர வாய்ப்பில்லை என்று நினைத்தேன். நான்கு பேருமே வீட்டைத் துறந்துவிட்டோம். ஓடிக் கழிந்த வருடங்களில் எனக்கே தலைமுடியும் தாடியும் வெகுவாக நரைத்துவிட்டது. மிகவும் கவனமாக தினமும் சாயம் பூசிக்கொள்கிறேன். வினய் இப்போது எப்படி இருப்பான் என்று யூகிக்கக்கூட முடியவில்லை. அண்ணா மிக நிச்சயமாகப் பதினெட்டு வயதுத் தோற்றத்தை எட்டிப் பிடித்திருப்பான். அவனுக்கு நரைத்திருக்காது. காடுகளிலும் மலை முகடுகளிலும் நடந்து நடந்து அவன் மொத்த உடலும் ஒற்றை எலும்பாகியிருக்கும். தீவிரமான உணவுக் கட்டுப்பாடும் பிராணப் பயிற்சிகளும் அவனுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுளை அளித்திருக்கும். ஒருவேளை அது வேண்டாம் எனக் கருதி அவன் தேக வியோகமேகூடச் செய்திருக்கலாம். யாருக்குத் தெரியும்? வினோத்துக்கும் நிறைய நரைத்திருக்கும். கன்னங்கள் சுருங்கி, உடல் வற்றி மிக நிச்சயமாக வேறு யாரோ ஆகியிருப்பான். வீட்டைத் துறந்து வெளியேறி இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அவன் மாமாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறான். ஒரு முழு வெள்ளைத் தாளில் ஒரே ஒரு வரி. அம்மா இறந்தால் வீரகேசரி பத்திரிகையில் ஒரு விளம்பரம் தரவும். அவ்வளவுதான். வீரகேசரி என்பது இலங்கையில் இருந்து வெளியாகிற பத்திரிகை என்பது அக்கடிதம் வந்த பிறகுதான் அவர் விசாரித்து அறிந்திருக்கிறார்.

‘தேடி வரமாட்டோம்னு நினைச்சிண்டு அங்க ஓடிப் போயிட்டான் போலருக்கு. நான் விடலியே? இலங்கைக்குப் போயிட்டேன்’ என்று மாமா சொன்னார்.

‘கிடைச்சானா?’

‘இல்லை’ என்று சொல்லிச் சில விநாடிகள் வருத்தப்பட்டார். அதற்குப் பிறகுதான் எனக்கு மாமாவிடம் உண்மையின் ஒரு பகுதியைச் சொல்லலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது.

‘மாமா, நீங்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இது நாம் தீர்மானிப்பதல்ல. இயற்கை அல்லது விதி செய்வது.’

‘அதான் தெரிஞ்சிதே.’

‘ஆனால் இதுதான் நடக்கும் என்று அந்தச் சுவடியில் எழுதப்பட்டிருந்தது உண்மை.’

‘அப்படியா?’ என்று மாமா கேட்டார்.

‘ஆமாம். அது வம்சத்தில் யாரோ செய்த பாவத்துக்குக் கிடைத்த சாபம். அந்தச் சுவடியில் அது இருந்தது.’

‘உனக்கு எப்போ தெரியும்?’

‘அண்ணா சொன்னான். ஒருமுறையல்ல. இருமுறை.’

‘ஆனா அது எதோ மருந்து சுவடின்னு அந்த நாடி ஜோசியன் சொல்லிட்டானேடா?’

‘அவர் சொன்னதும் உண்மை.’

‘புரியலியே?’

‘அது கண்கட்டு. அண்ணா அந்தச் சுவடியின் வரிகளை மறைத்து, மாற்றிவிட்டான்.’

‘அதெல்லாம் முடியுமோ?’

‘முடியும். சித்தர்களால் முடியாதது இல்லை.’

‘விஜய் சித்தனா?’

‘ஆம். ஆனால் அது மட்டுமல்ல என்று நினைக்கிறேன். உங்களுக்குப் புரியாது.’

மாமா ஒரு பெருமூச்சு விட்டார். அதில் அவரது துக்கத்தின் வாசனை கலந்திருந்தது. ‘எனக்கு என்னதான் புரியும்? வெறும் மக்கு பிராமணன். சமையக்காரன். அக்கா பிள்ளைகள் நாலும் இப்படிப் போயிடுத்தேன்னு எழுவத்தி நாலு வயசுலயும் உக்காந்து அழுதுண்டிருக்கற அசமஞ்சம்’ என்று சொல்லிவிட்டுக் கேவிக் கேவி அழுதார்.

நான் எழுந்து சென்று அவரைத் தொட்டேன். அவர் கண்ணை உற்றுப் பார்த்துப் புன்னகை செய்தேன். ‘அழாதீர்கள். இது விதி. நாம் இதை ஒன்றும் செய்ய முடியாது.’

‘புரிஞ்சிடுத்து. வினோத் கடுதாசி எழுதி வெச்சிட்டு ஓடிப் போனபோதே புரிஞ்சிடுத்து’ என்று மாமா சொன்னார். நியாயமாக வினய் காஞ்சீபுரத்துக்குப் புறப்பட்டு, பாதி வழியில் திசை மாறியபோதே அவருக்குப் புரிந்திருக்க வேண்டும். குறைந்தது ஸ்ரீரங்கத்தில் நான் காணாமல் போனபோதாவது. உண்மையின் கோர தகிப்பில் இருந்து வெகுதூரம் விலகி நிற்க விரும்பும் சராசரி ஆத்மாக்களுக்கு இது ஒரு பிரச்னை. புரிவதும் புரியாததும் அல்ல. புரிந்துகொள்ள மேற்கொள்ள வேண்டிய எளிய முயற்சியைக் காலவரையறையற்றுத் தள்ளிப் போடுவது. இடையில் ஏதாவது அற்புதம் நிகழ்ந்துவிடாதா என்கிற அற்ப ஆசை. நானறிந்தவரை மனித வாழ்வில் அற்புதம் என்று ஏதும் நிகழ்வதில்லை. பிள்ளையார் சிலையை அல்ல; என்னை யாராவது ஒரு வாழைப்பழத்துக்குள் இருந்து எடுத்துக்கொடுத்தால் வேண்டுமானால் நம்புவேன். மாமாவிடம் இதைச் சொன்னபோது இதுவும் அவருக்குப் புரியவில்லை. ‘என்னமோ போடா’ என்று சொல்லிவிட்டு மேல் துண்டால் கண்ணைத் துடைத்துக்கொண்டார்.

அவரால் ஜீரணிக்கவே முடியாத விஷயம், வினோத் ஏன் திருமணத்துக்கு முதல் நாள் அப்படியொரு காரியம் செய்தான் என்பதுதான். என்னிடம் அதைத் தான் திரும்பத் திரும்பச் சொல்லிப் புலம்பினார்.

‘நாலு தடவை. நாலு தடவை அந்தப் பொண்ண கூட்டிண்டு வெளிய போய் சுத்திட்டு வந்தாண்டா! ஊரைக் கூட்டி கல்யாணம் ஏற்பாடு பண்ணியாச்சு. மொத நாள் சாயந்திரம் ஜானவாச கார்ல உக்காந்துண்டு மாடவீதி நாலையும் சுத்தியாச்சு. அதுக்கப்பறம் இப்படி ஒரு காரியம் பண்ணுவானோ ஒருத்தன்? அந்தப் பொண்ணு வாழ்க்கை சர்வ நாசமாயிடுமேன்னு கூடவா தோணாது? தற்கொல பண்ணிண்டு செத்தாளே! அந்தப் பாவம் இவனை விட்டுடுமா? என்ன பெரிய சிவன்? என்ன பெரிய தரிசனம்? அந்தப் பாஷாண்டி ஒண்ணுக்கு ரெண்டு பொண்டாட்டி கட்டிண்டவன். அவனைப் பிடிச்சித் தொங்கிண்டு இப்படி விட்டுட்டு ஓடறோமேன்னு தோணாதா? க்ஷண நேரத்துல துறக்கறதெல்லாம் எங்கேருந்துடா வரும்? அதுவும் மொத நாள் வரைக்கும் அவ கைய கோத்துண்டு கூத்தடிச்சிட்டு... சீ!’ என்றார் மாமா.

எனக்கு சித்ரா தற்கொலை செய்துகொண்டது மிகுந்த வருத்தமளித்தது. உண்மையில் அழுகையே வந்தது. ஆனால் நான் அழவில்லை. இது கணப் பொழுதில் நிகழ்வதுதான் என்று நான் எப்படி மாமாவிடம் சொல்வேன்? அவருக்கு அது புரியாது. யாருக்குமே புரியாதுதான். இத்தனைக்கும் வினோத் மிகவும் நேர்மையாக ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டுத்தான் போயிருக்கிறான். நான்கு வரிக் கடிதம். அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ அல்ல. நேரடியாக சித்ராவின் பெயருக்குத்தான் அந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.

என்னை மன்னித்து விடு. அல்லது சபித்து விடு. இன்றிரவு என் லிங்கம் பிளந்து சிவ தரிசனமாகிவிட்டது எனக்கு. இனி நான் உன்னோடு வாழ முடியாது. வேறு யாரோடும்கூட.

 

இவ்வளவுதான் அந்தக் கடிதம். அம்மாவின் ஒரு ஓலக் குரலில் ஏழு மணி முகூர்த்தம் ரத்தாகிப் போனது. ஊர் முழுதும் வீட்டு வாசலில் கூடி நின்று என்ன, என்ன என்று விசாரித்துக்கொண்டே இருந்தது. யாருக்கும் அந்தக் கடிதம் புரியவில்லை. பத்மா மாமி தலை தெரிக்கக் கோயிலுக்கு ஓடி தாயார் சன்னிதித் தூணில் முட்டிக்கொண்டு கதறினாள். அவளது கணவர் மயங்கி விழுந்ததும் தெரியாது; யார் அவரை வண்டி ஏற்றி அழைத்துச் சென்று திருப்போரூர் மருத்துவமனையில் சேர்த்தார்கள் என்றும் தெரியாது. பல மணி நேரம் கழித்து பத்மா மாமியும் அவரும் வீடு வந்து சேர்ந்தபோதுதான் சித்ரா விஷம் குடித்து இறந்திருந்த விவரமே தெரிய வந்திருக்கிறது.

எல்லாம் ஒரே நாள். கல்யாணத்துக்கு வந்திருந்த அத்தனை பேரும் சித்ராவின் பிணத்தை எடுத்துச் செல்லும்வரை இருந்து அழுதுவிட்டு வீடு போய்ச் சேர்ந்தார்கள்.

சொல்லிக்கொண்டே வந்தபோது கேசவன் மாமாவுக்குத் தொண்டை அடைத்தது. தனது மரணத்துக்கு முன் சித்ரா ஒரு நல்ல காரியம் செய்திருந்தாள். நீலாங்கரை உணவு விடுதியில் வினோத் தன்னிடம் சொல்லியிருந்த சங்கதிகளை அவள் தன் பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறாள். ஒரு கணம் எனக்கு மிகுந்த வெட்கமாகிவிட்டது. அந்தத் துணிச்சல் சிறு வயதில் எனக்கு இல்லாமல் போய்விட்டது. இருந்திருந்தால் அண்ணா வீட்டை விட்டு வெளியேறியதுமே எனக்குத் தெரிந்த அனைத்தையும் நான் சொல்லியிருப்பேன். குறைந்தது அந்தச் சுவடியையாவது எடுத்துக் கொடுத்து விவரம் சொல்லியிருக்கலாம். ஆனால் இத்தனை ஆண்டுக்காலம் அம்மா உயிருடன் இருந்திருப்பாளா என்பது சந்தேகம்.

வினோத் போனதுதான் அப்பாவின் மரணத்துக்குக் காரணம் என்று கேசவன் மாமா சொன்னார். அடுத்தடுத்து வந்த இரண்டு மாரடைப்புகள். ஆஸ்பத்திரி வாசம். மருந்து மாத்திரைகள். அவன் வீட்டை விட்டு விலகிய நான்கு மாதங்களில் அப்பா போய்விட்டார். எங்கள் நான்கு பேரில் என் இருப்பிடம் மட்டுமே அப்போது கேசவன் மாமாவுக்குத் தெரியும். எனக்கு அவர் தந்தி கொடுத்திருந்தார். நான் அப்போது வட இந்திய சுற்றுப் பயணத்தில் இருந்தேன். காரியத்தை நீங்களே செய்துவிடுங்கள் என்று அவருக்கு பதில் தந்தி கொடுத்துவிட்டு அந்த நினைவை நகர்த்தி வைத்துவிட்டேன். எல்லாம் முடிந்திருக்கும் என்று ஒரு கணக்குப் போட்டு அப்பா இறந்த பதினேழாம் நாள் மாமாவுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன்.

மன்னித்துக்கொள்ளுங்கள். ஆனால் அம்மா இறக்கும்போது அவசியம் வருவேன். நான் மட்டுமல்ல. நான்கு பேருமே வருவோம்.

வந்தால் காலை வெட்டிவிடுவேன் என்று மாமா பதிலுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதை பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்டேன். ஞாபகமாக அந்தக் கடிதத்தை இப்போது எடுத்து வந்து அவரிடம் காட்டிப் புன்னகை செய்தேன். அவர் ஒன்றும் சொல்லவில்லை. மீண்டும் சிறிது நேரம் அழுதார்.

நேரம் மாலை ஆறாகிவிட்டிருந்தது. நான் சொற்பொழிவுக்குத் தயாராகவேண்டும் என்பதால் எழுந்துகொண்டேன். மாமாவை இரண்டு நாள்களாவது ஆசிரமத்தில் தங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவர் உடனே, ‘இல்லே. நாளைக்குப் போயிடுவேன்’ என்று சொன்னார். நான் வற்புறுத்தவில்லை.

‘என்னமோ உன்னைப் பாத்துட்டுப் போகணும்னு தோணித்து. அங்க அக்கா பாவம் தனியா கஷ்டப்படுவா. இப்பல்லாம் கண்ணு சரியா தெரியறதில்லே’ என்று சொன்னார். சிறிது நேரம் கழித்து, ‘அவளை இங்கே ஒரு நடை கூட்டிண்டு வரட்டுமா? நீ ஒண்ணும் சொல்ல மாட்டியோல்யோ?’

நான் உடனே வேண்டாம் என்று சொன்னேன். அவர் ஏன் என்று கேட்கவில்லை. என்னுடன் விவாதம் செய்யவும் இல்லை. நான் அந்த பதிலைத்தான் சொல்லுவேன் என்று எதிர்பார்த்திருப்பார் என்று எண்ணிக்கொண்டேன்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

76. பசி

 

 

ரேணிகுண்டா ரயில்வே ஸ்டேஷனில் நான் வினய்யைச் சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. அது எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சிதான். கடைசியாக அவனை நான் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் சந்தித்துப் பிரிந்தபோது அவன்தான் சொன்னான். ‘அம்மா இறந்தால் நான் ஊருக்குப் போவேன். அப்போது நாம் திரும்ப சந்திக்கலாம்.’ அவனைக் கண்டதும் எனக்கு அந்தச் சொற்கள்தாம் நினைவுக்கு வந்தன. நான் சிரித்தேன். அவனும் சிரித்தான். சட்டென்று நான் இருக்கையைவிட்டு எழுந்து அவனிடம் சென்று, ‘டிக்கெட் இருக்கிறதா?’ என்று கேட்டேன்.

‘இல்லை. தேவைப்பட்டால் வரவழைத்துக்கொள்வேன்’ என்று சொன்னான்.

‘தவறல்லவா?’

‘இல்லை’ என்று சொன்னான். உணர்ச்சியற்ற அவன் முகத்தில் சவக்களை படிந்திருந்தாற்போல எனக்குத் தோன்றியது. காட்டிக்கொள்ளாமல், ‘வினய், அம்மாவைக் குறித்து உனக்கு யார் சொன்னது?’ என்று கேட்டேன்.

‘யாரும் சொல்லவில்லை. எனக்கே தோன்றியது.’

‘என்னவென்று?’

‘அவள் போய்விடுவாள்.’

‘எப்போது?’

‘அது தெரியவில்லை. ஆனால் இந்த தட்சிணாயணத்துக்குள் நடக்கும்.’

‘மிகவும் வயதாகிவிட்டது அவளுக்கு.’

‘ஆம். எழுபத்தொன்பது அல்லவா?’

‘எனக்கு கேசவன் மாமா தந்தி கொடுத்திருந்தார்.’

‘அப்படியா? எனக்கு அவரோடு தொடர்பு இல்லை. வேறு யாரோடும் இல்லை. தற்செயலாக உன்னைத்தான் இதோடு சேர்த்து இரண்டு முறை சந்தித்திருக்கிறேன்.’

நான் புன்னகை செய்தேன். ‘அது என் அதிர்ஷ்டம்’ என்று சொன்னேன்.

அவன் என்னைத் தலை முதல் கால் வரை உற்றுப் பார்த்தான். அவன் கண்ணில் மெல்லிய வியப்புத் தெரிந்தது.

‘என்ன?’ என்று கேட்டேன்.

‘நீ ஒரு செழிப்பான சன்னியாசி.’

‘ஆம். அதிலென்ன சந்தேகம்? நான் ஒரு சுகவாசி. என் சொகுசுகளை என்றுமே குறைத்துக்கொண்டதில்லை. இந்த முதல் வகுப்புப் பெட்டியே எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. பொதுவாக நான் கூபேவில்தான் பயணம் செய்வேன்’ என்று சொன்னேன்.

‘உன்னைப் பற்றி அவ்வப்போது கேள்விப்படுவேன். அரசியல்வாதிகளோடு ஐக்கியமாகிவிட்டாயா நீ?’

‘அப்படிச் சொல்ல முடியாது. ஆனால் அரசியல்வாதிகள் என் வாழ்வில் தவிர்க்க முடியாதவர்கள். வினய், இது ஒரு தொழில். ஒரு வியாபாரம். இதில் எனக்கு வருமானம் என்று தனியே ஒன்றுமில்லை. ஆனால் இந்தியாவில் என்னைக் காட்டிலும் செல்வந்தன் யாருமில்லை.’

அவன் விரக்தியாகச் சிரித்தான். சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, ‘கடவுள் சரியாகத்தான் அளித்திருக்கிறான். இந்தியாவில் என்னைக் காட்டிலும் பரம தரித்திரன் இருக்க முடியாது’ என்று சொன்னான்.

‘ஏன் அப்படிச் சொல்கிறாய்?’

‘நான் சாப்பிட்டுப் பல நாள்களாகிவிட்டன. என்னிடம் பத்து காசு கூட இல்லை’ என்று சொன்னான்.

எனக்கு மிகவும் பரிதாபமாகிவிட்டது. என் இருக்கைக்கு வந்து ஒரு சீப்பு வாழைப்பழங்களை எடுத்துக்கொண்டு அவன் நின்றிருந்த இடத்துக்குச் சென்றேன். ‘இந்தா, சாப்பிடு’ என்றேன்.

அவன் மறுப்பேதும் சொல்லாமல் சாப்பிட்டான். ரயில் பெட்டியின் கதவோரம் நின்று நாங்கள் பேசிக்கொண்டிருந்ததை சக பயணி ஒருவர் பார்த்தார். வினய்யைக் கண்டதும் தன்னியல்பாக அவர் முகம் சுளித்தார். அவனது தோற்றம், ஒரு முதல் வகுப்புப் பயணிக்குரியதாக இல்லை. யாரோ பிச்சைக்காரன் என்று அவருக்குத் தோன்றியிருக்கும். பைத்தியக்காரன் என்று தோன்றியிருந்தாலும் வியப்பில்லை. அவன் அப்படித்தான் இருந்தான். தலைமுடியெல்லாம் சடை விழுந்திருந்தது. நெஞ்சு வரை நீண்டிருந்த தாடி பாதி உடலை மறைத்தது. இடுப்புக்கும் தொடைக்கும் இடையே ஒரு காவித் துணியைத் தார்ப்பாய்ச்சிக் கட்டியிருந்தான். கண்கள் இரண்டும் குழிக்குள் இருப்பவை போலிருந்தன. எலும்புகள் தெரிந்தன. கையை உயர்த்தி அவன் பேசும்போது விரல்கள் நடுங்கியதைக் கவனித்தேன்.

‘கஞ்சா நிறையப் புகைக்கிறாயா?’ என்று கேட்டேன்.

‘ஆம். பெரும்பாலும் அதுதான் உணவு.’

‘நீ அன்றைக்கு எனக்கு ஒரு ஆப்பிள் பழம் வரவழைத்துக் கொடுத்தாய். நான் மறக்கவில்லை’ என்று சொன்னேன்.

‘ஆம். ஆனால் இப்போது என்னால் அதையெல்லாம் செய்ய முடியாது.’

‘அப்படியா? நீ குட்டிச் சாத்தான்களை விரட்டிவிட்டாயா?’

அவன் நெடுநேரம் பதில் சொல்லாமல் என்னை உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தான். நான் மீண்டும் கேட்ட பின்பே பதில் சொன்னான், ‘இல்லை. அவை என்னை ஒதுக்கிவிட்டன.’

நான் அமர்ந்திருந்த இடத்துக்கு அருகே இருந்த டாக்டர் குடும்பம் ரேணிகுண்டாவில் இறங்கிவிட்டது. அந்த இருக்கைகள் காலியாகத்தான் இருந்தன. டிடிஆர் கண்ணில் பட்டால் வினய்க்கு ஒரு டிக்கெட் எடுத்து அமரச் சொல்லலாம் என்று நினைத்தேன். அவன் சட்டென்று சொன்னான், ‘டிக்கெட் இல்லாமலும் உட்காரலாம். நான் விரும்பினால் டிடிஆரை இனி இந்தப் பக்கமே வராமலும் செய்ய முடியும்.’

நான் சிரித்தேன். ‘ஆக விட்டகுறை ஏதோ மிச்சம் உள்ளது.’

அவன் அதற்கு பதில் சொல்லவில்லை. கதவுக்கு வெளியே பின்புறமாக விரைந்த உலகைக் கண்ணில் விழுங்கியபடி நெடுநேரம் அசைவற்று நின்றிருந்தான். சட்டென்று, ‘விமல் எனக்கொரு சந்தேகம். உன்னால் தீர்க்க முடியுமா?’ என்று கேட்டான்.

‘முயற்சி செய்யலாம். ஆனால் ஒன்று. நான் அண்ணாவைப் போல யோகியோ சித்தனோ அல்ல. உன்னைப் போலப் பேய்களுடனும் குட்டிச்சாத்தான்களோடும் உறவு கொண்டவனும் அல்ல. நான் ஒரு புத்திசாலி. புத்திசாலி மட்டும்தான்’ என்று சொன்னேன்.

‘புத்தி ஒரு சுமை. அது இல்லாதிருப்பது அதனினும் சுமை’ என்று வினய் சொன்னான். அவன் உட்கார விரும்பவேயில்லை. ரேணிகுண்டாவில் ரயில் ஏறியவன், ஒரு மணி நேரம் கதவருகே நின்றுகொண்டே இருந்தான். எனக்குக் கால் வலித்தது. உட்காரலாம் என்று தோன்றியது. இரண்டு முறை அவனிடம் சொல்லிப் பார்த்தேன். அவன் அதைக் கண்டுகொள்ளவேயில்லை.

‘விமல், நான் ஒரு சமயம் ஒன்பது தினங்கள் ஓர் இடத்தைவிட்டு அசையாமல் நின்றிருக்கிறேன். இரவு பகல் முழுவதும்’ என்று சொன்னான்.

‘எதற்காக?’

‘ஒரு வித்தை கற்க.’

‘ஓ. என்ன வித்தை?’

‘ஒரு குறிப்பிட்ட சாத்தானைப் பணிய வைப்பதன் பொருட்டு.’

‘பணிய வைத்து?’

‘அது பெண்களை இடம் பெயரவைக்க உதவும்.’

‘தூக்கிச் சென்று நீ சொல்லும் இடத்தில் அடைத்து வைக்குமா?’

‘ஆம். அப்படித்தான்.’

‘உனக்கு எதற்குப் பெண்கள்? யாராவது ஒருத்தி போதாதா? அல்லது ஓரிருவர். பேசாமல் நீ திருமணம் செய்துகொண்டிருக்கலாம்.’

‘நான் எனக்காகச் செய்வதில்லை. ஒன்று தெரியுமா? நான் ஒரு பெண்ணைத் தொட்டு முப்பது வருடங்களாகின்றன.’

‘ஆனால் நினைக்கிறாய்.’

அவன் சற்று திடுக்கிட்டாற்போல் இருந்தது. என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சட்டென்று பார்வையைத் தழைத்துக்கொண்டான். எனக்கு அவன் மீது பரிதாபம் வந்தது. அவன் வலக்கையை இழுத்து நாடி பிடித்துப் பார்த்தேன். அவன் உடனே, ‘உனக்கு மருத்துவம் தெரியுமா?’ என்று கேட்டான்.

 

‘அதெல்லாம் தெரியாது. ஆனால் சிறிது நாடி பார்க்கத் தெரியும். என் குரு சொல்லிக் கொடுத்திருக்கிறார். சர்க்கரை, ரத்த அழுத்தம், பைல்ஸ், பார்வைக் குறைபாடு போன்ற சில வியாதிகளை வெறும் உணவால் சரி செய்யத் தெரியும்.’

‘சர்க்கரையா?’

‘ஆம். முடியும்.’

‘எனக்கு இருக்கிறது’ என்று வினய் சொன்னான்.

‘நீ சொல்லவே வேண்டாம். நாடி சொல்லிவிட்டது.’

‘அது இல்லாவிட்டால் நான் இன்னும் சிலவற்றை முயற்சி செய்து பார்த்திருப்பேன். முடியாமல் போய்விட்டது.’

கண்டிப்பாக அவனுக்கு நான் சர்க்கரை நோயைத் தீர்க்கக் கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.

அவன் ஒரு தவறு செய்திருந்தான். திருநெல்வேலியில் அவனிடம் இருந்த எள்ளுருண்டை களவு போனபோதே அவன் திருவானைக்காவுக்குத் திரும்பிச் சென்றிருக்க வேண்டும். முகமது குட்டியைப் பழி வாங்க வேண்டும் என்று நினைத்ததன் விளைவுதான் தடம் மாறிவிட்டது.

‘அதுசரி அந்த முகமது குட்டியை நீ மீண்டும் சந்தித்தாயா? முடிந்ததா?’ என்று கேட்டேன்.

‘ஓ, அவனைக் கொன்றுவிட்டேன்’ என்று சொன்னான்.

எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. கொலையா என்று திரும்பத் திரும்பக் கேட்டேன்.

‘ஆம். ஒரு மரம் வெட்டும் கோடரியால் அவன் மண்டையைப் பிளந்துவிட்டேன். ரத்தம் முழுதும் வெளியேறும்வரை காத்திருந்துவிட்டு பிணத்தை எடுத்துச் சென்று எரித்துவிட்டேன்.’

‘ஐயோ. மாட்டிக்கொண்டிருப்பாய்!’

‘இல்லை’ என்று வினய் சொன்னான். அவன் முகமது குட்டியை இரண்டாம் முறை சந்தித்தது திருவனந்தபுரத்தில் வைத்து. இம்முறை வினய் சூரிய நாராயண போத்தியிடம் மாணவனாகியிருந்தான். போத்தி ஒரு வசியக் கலைஞன். அவனது கட்டுப்பாட்டில் ஏழெட்டு குட்டிச் சாத்தான்கள் இருந்திருக்கின்றன. திருடு போன பொருள்களை மீட்டுக் கொடுப்பது, செய்வினை வைப்பது, பேய் ஓட்டுவது நில பேரங்களை முடித்துக் கொடுப்பது என்று அவனது வருமானத்துக்குச் சில தொழில்கள் இருந்தன. அது அனைத்தையும்விட அவன் பெண்களை வசியம் செய்வதில் விற்பன்னனாக இருந்தான். பல கல்லூரி மாணவர்கள் அவனது நிரந்தர வாடிக்கையாளர்களாக இருந்திருக்கிறார்கள். அரசியல்வாதிகள், நடிகர்கள், உயரதிகாரிகளும்கூட.

சூரிப் போத்தியிடம் ஒரு பெண்ணைக் காட்டி அவள் தனக்கு வேண்டும் என்று சொல்லிவிட்டால் போதும். ஆறேழு தினங்களில் அந்தப் பெண் சம்பந்தப்பட்டவனைத் தேடித் தானே வந்துவிடுவாள். உண்மையில் வினய் அவனிடம் போய்ச் சேரக் காரணமே ஒரு பெண் தான்.ஓ

(தொடரும்)

 

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

77. கொலைக்களம்

 

 

திருவல்லம் பரசுராமர் ஆலயத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கால்வாய்க் கரையோரம் அமைந்திருந்த ஒரு குடிசை வீட்டில் அப்போது வினய் தங்கியிருந்தான். வந்து ஒரு நாள் ஆகியிருந்தது. அந்த வீட்டைச் சுற்றிலும் நிறையத் தென்னை மரங்கள் இருந்தன. எப்போதும் ஈரக் காற்று அடித்துக்கொண்டே இருந்த இடம். வீட்டை விட்டு வெளியே வந்து எட்டடி நடந்து மேடேறினால் மண் சாலை. சாலைக்கு அந்தப் பக்கம் புழை. அதிகம் நீர் இல்லை என்றாலும் நீரோட்டம் இருந்துகொண்டே இருந்தது. சிறுவர்கள் தோளில் ஒரு வேட்டியைப் போட்டுக்கொண்டு நீரில் இறங்கி வேட்டியை விரித்துப் பிடித்து மீன் அள்ளிக்கொண்டு போனார்கள். வினய்க்கு அந்த இடம் பிடித்தது. இந்த இடத்தில் தனக்கொரு குடிசை கிடைத்தால் நிரந்தரமாகத் தங்கிவிடலாம் என்று நினைத்தான்.

அந்த வீட்டுக்குச் சொந்தக்காரன் வாமா நாயர் ஒரு சோதிடன். யார் யாரிடமோ விசாரித்து, முகம்மது குட்டி திருவனந்தபுரத்தில் இருக்கிறான் என்று கேள்விப்பட்டு, வினய் திருவனந்தபுரத்துக்கு வந்து சேர்ந்து, ஒரு வாரம் அவனைத் தேடிக் கிடைக்காமல் போனபோது வாமா நாயர் அகப்பட்டான். சாலைத் தெருவில் ஒரு உணவகத்தில் அவன் வினய்க்கு எதிரே அமர்ந்து புட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தான். எதிர்பாராத விதமாக அந்த நேரத்தில் வாமா நாயரை அவனது மகள் பார்க்கவி தேவி நினைத்துக்கொள்ள, அவனுக்குப் புரை ஏறி பலமாக இருமினான். வாயில் இருந்த புட்டு மொத்தமும் வினய் மீது தெரித்துவிட்டது. வாமா நாயர் பதறிவிட்டான். மன்னித்துக் கொள்ளுங்கள் மன்னித்துக்கொள்ளுங்கள் என்று பல முறை கும்பிட்டுக் கேட்டுக்கொண்டு தன் மேல் துண்டால் வினய்யின் முகத்தைத் துடைத்து சுத்தம் செய்யவும் ஆரம்பித்துவிட்டான்.

வினய் அந்தச் சம்பவத்தைப் பொருட்படுத்தவேயில்லை. பரவாயில்லை என்று ஒரு சொல்லில் முடித்துவிட்டுத் தன் தட்டில் இருந்த இட்லியைச் சாப்பிட ஆரம்பித்தான். இது வாமா நாயருக்கு மிகுந்த வியப்புக்குரிய சம்பவமாக இருந்தது. சற்றும் நாகரிகமில்லாமல் முகத்தில் அவன் துப்பியிருக்கிறான். ஒரு சிறு முகச் சுளிப்பும் இல்லாமல் ஒருவன் அதைக் கடக்க முடியும் என்றால் எம்மாதிரியான மனநிலை அவனுக்கு வாய்த்திருக்கும்?

‘நீங்கள் யார்?’ என்று நாயர் கேட்டான்.

‘என் பெயர் வினய். தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன்’ என்று வினய் சொன்னான்.

‘எங்கே தங்கியிருக்கிறீர்கள்?’

‘இன்னும் எங்கும் தங்கவில்லை. தங்கும் உத்தேசமும் இல்லை. நான் ஒரு நபரைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அவன் இந்த ஊரில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.’

‘ஓ. அவர் என்ன தொழில் செய்கிறார்?’

என்ன சொல்வதென்று வினய் யோசித்தான். சட்டென்று, ‘நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டான்.

‘நான் ஒரு சோதிடன். சோழி போட்டுப் பார்த்து ஆரூடம் சொல்வேன்.’

அதனால்தான் வினய் வாமா நாயருடன் அவனது வீட்டுக்குப் போனான். ஒரு முயற்சி. ஒருவேளை இது நடந்துவிட்டால் நன்றாக இருக்கும் அல்லவா? வாழ்க்கை எதிர்பாராத அனுபவங்களால் நெய்யப்படுவது. வாமா நாயர் எதிர்பாராதவிதமாக எதிர்ப்பட்டவன். யார் கண்டது? ஒருவேளை முகமது குட்டியை அவனது சோழிகள் காட்டிக் கொடுக்கலாம்.

ஆனால் வீட்டுக்கு அழைத்துச் சென்று உட்காரவைத்து, சோழி போட்டுப் பார்த்த வாமா நாயர், முகமது குட்டி என்ற நபரை வினய் இனி எந்நாளும் சந்திக்கவே முடியாது என்று சொன்னான்.

‘ஐயோ என்ன இப்படிச் சொல்கிறீர்கள்?’

‘சோழி அப்படித்தான் தம்பி சொல்கிறது’ என்று நாயர் சொன்னான். வினய்க்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. ஒரு அபத்தத்தை அதன் எல்லை வரை துரத்திச் சென்று தோற்றுத் திரும்புவதை அவன் மனம் விரும்பவில்லை. என்ன செய்யலாம் என்று யோசிக்கத் தொடங்கியபோதுதான் நாயரின் மகள் பார்க்கவி ஒரு யோசனை சொன்னாள். ‘நீங்கள் சூரிய நாராயண போத்தியைப் போய்ப் பாருங்கள். அவரால் ஒருவேளை உதவ முடியும்.’

வாமா நாயருக்கு இந்த யோசனை பிடிக்கவில்லை. போத்தி ஒரு அயோக்கியன் என்று அவன் சொன்னான்.

‘அவர் என்னவாயிருந்தால் என்ன? ஒரு ஆள் எங்கே இருக்கிறான் என்று கண்டுபிடிக்க வேண்டும். அவ்வளவுதானே?’ என்று பார்க்கவி கேட்டாள்.

‘ஆம். அவன் என்னை ஏமாற்றிவிட்டான். அவனால் என் வாழ்க்கையே தடம் மாறிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. எப்படியாவது நான் அவனைச் சந்தித்தே தீரவேண்டும்’ என்று வினய் சொன்னான்.

‘தம்பி, அடாத செயல் புரிகிறவர்களிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது. அவனால் உனக்கு ஏற்பட்ட இழப்பு என்னவாக இருந்தாலும், அதோடு முடிந்தது என்று நினைத்து விட்டுவிடு. மீண்டும் ஒருமுறை எதையும் இழக்க வேண்டாமே?’ என்று வாமா நாயர் கேட்டான்.

நியாயம் என்றுதான் வினய் நினைத்தான். ஆனால் ஏதோ ஒன்று திரும்பத் திரும்ப அவனை முகம்மது குட்டியை நோக்கி இழுத்துக்கொண்டே இருந்தது. அவனை நினைக்காதிருக்கவே முடியவில்லை. ஒரு எள்ளுருண்டை போனதல்ல பெரிது. எத்தனை அலட்சியமாகத் தன்னை ஏமாற்றிவிட்டுப் போய்விட்டான்! ஒரு வித்தை. தன்னிடம் இருப்பதை என்னவென்று அறிந்து, அதை எடுத்துக்கொண்டும் போக முடிகிற வித்தை. மிக நிச்சயமாக அவன் ஒரு சாத்தானைத் துணைக்கு வைத்திருக்கிறான். அதில் சந்தேகமில்லை. ஏவல் சாத்தான். என்ன சொன்னாலும் செய்கிற உடலற்ற அடிமை. அதே சாத்தானைக் கொண்டு அவனைப் பழிவாங்க வேண்டும் என்று வினய்க்குத் தோன்றியது.

வாமா நாயர் சொல்லச் சொல்லக் கேட்காமல் பார்க்கவி தேவி அவனை சூரிப் போத்தியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். போத்தியின் மகள் பகவதியும் பார்க்கவியும் ஒரே வகுப்பில் ஒன்றாகப் படிக்கிறவர்கள் என்பது வினய்க்கு அப்போதுதான் தெரிந்தது.

வினய் போத்தி வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தபோது அவன் வீட்டுக்கு வெளியே ஒரு பெரிய பாறைக் கல்லின் மீது அமர்ந்து கள் குடித்துக்கொண்டிருந்தான். பார்க்கவியைக் கண்டதும் ‘வரு’ என்று சொல்லிவிட்டு உள்ளே பார்த்துத் தன் மகளுக்குக் குரல் கொடுத்தான்.

‘இல்லை. நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தேன். இவருக்கு உங்களால் ஒரு காரியம் ஆக வேண்டும்’ என்று பார்க்கவி வினய்யைக் காட்டிச் சொன்னாள். போத்தி, வினய்யை ஏற இறங்கப் பார்த்தான். பிறகு உள்ளே அழைத்துச் சென்று உட்காரச் சொன்னான்.

‘சொல். என்ன வேண்டும்?’

வினய்க்கு அந்த வீட்டில் இரண்டு சிறுமிகள் இருந்தது பேசுவதற்குத் தயக்கமாக இருந்தது. பார்க்கவிக்கும் பகவதிக்கும் மிஞ்சினால் பதினைந்து வயதுதான் இருக்கும். அவர்களை எதிரே வைத்துக்கொண்டு முகம்மது குட்டியைப் பற்றி எப்படிப் பேச்செடுக்க முடியும்?

போத்திக்கு அவன் தயக்கம் புரிந்தது. ‘சரி மேலே வா’ என்று அவனை அழைத்துக்கொண்டு மாடிக்குப் போனான். அங்கே ஒரு சிறிய அறை இருந்தது. ஜன்னல்கள் இல்லாத இருட்டு அறை. போத்தி ஒரு விளக்கைப் போட்டான். ஒரு பாயை எடுத்து விரித்து அமர்ந்துகொண்டு அவனையும் உட்காரச் சொன்னான்.

‘சொல். என்ன விஷயம்?’

‘ஒருவனைக் கொல்ல வேண்டும். அவன் என்னை ஏமாற்றியவன்.’

‘கொலையா?’

‘அது என் பிரச்னை. அவன் இருக்கும் இடம் எனக்குத் தெரிய வேண்டும். அதற்கு உங்களால் உதவ முடியும் என்று பார்க்கவி சொன்னாள்.’

அவன் சிறிது நேரம் யோசித்தான். பிறகு, பெயரென்ன என்று கேட்டான்.

‘முகம்மது குட்டி’ என்று வினய் சொன்னதுமே போத்தி சடாரென்று எழுந்து நின்றான்.

‘முகம்மது குட்டியா? அவனை உனக்குத் தெரியுமா?’

‘எனக்குத் தெரிந்த முகம்மது குட்டி ஒரு அயோக்கியன். சில்லறை சாத்தான்களை வைத்துக்கொண்டு திருட்டுத் தொழில் செய்பவன்.’

‘நான் நினைத்தது சரி.’

‘நீங்கள் என்ன நினைத்தீர்கள்?’

‘நான் நினைக்கும் முகம்மது குட்டியைத்தான் நீ தேடி வந்திருக்கிறாய் என்று எண்ணுகிறேன். பார்க்க ஆள் கட்டைக் குட்டையாக, தொப்பையுடன் இருந்தானா?’

 

‘ஆம்.’

‘முழங்கால் வரை லுங்கியை சுருட்டிச் சொருகியிருந்தானா?’

‘ஆம்.’

‘கண்கள் இடுங்கி இங்குமங்கும் அலைபாய்ந்துகொண்டே இருந்தனவா?’

‘ஆம்.’

‘சந்தேகமில்லை. அவன் அயோக்கியன் தான். எத்தனை ரூபாய் இழந்தாய்?’

‘பணமல்ல. ஒரு பொருள்.’

‘தங்கமா?’

‘இல்லை. இது வேறு. அதை நான் சொல்வதற்கில்லை. உங்களால் அவன் இருப்பிடத்தைக் காட்டித்தர முடியுமா என்று சொல்லுங்கள். நீங்கள் கேட்கும் பணத்தைத் தர என்னிடம் இப்போது வசதியில்லை. ஆனால் நான் ஏமாற்ற மாட்டேன். நீங்கள் சொல்லும் தொகையை எப்படியாவது சம்பாதித்துக் கொண்டு வந்து கொடுத்துவிடுவேன்.’

போத்தி நெருங்கி வந்து அவன் தோள்களைப் பற்றினான். கண்ணுக்குக் கண் உற்றுப் பார்த்து, ‘அவன் என் தந்தையை ஏமாற்றியவன். அவரது தென்னந்தோப்பை அபகரித்துக்கொண்டு விரட்டி அடித்துவிட்டான். பயந்த சுபாவம் கொண்டவரான என் தந்தை அந்த விவரத்தை எங்களிடம் சொல்லக்கூடச் செய்யாமல் மனம் வருந்தியே மாரடைப்பு வந்து இறந்துவிட்டார்.’

‘ஐயோ. பிறகு எப்படித் தெரிந்தது?’

‘அந்தத் துலுக்கனே இதை எனக்குத் தெரிந்த ஒருவரிடம் சொல்லிப் பெருமை பீற்றிக்கொண்டிருக்கிறான். ஒன்று சொல்கிறேன். அவனைப் பழி வாங்க நினைத்துத்தான் நான் அதர்வ வேதம் கற்கச் சென்றேன்’ என்று சொன்னான்.

போத்தி யார் என்பது வினய்க்கு அப்போதுதான் தெரிந்தது. பார்க்கவி சொன்ன விதத்தில் அவன் ஒரு சிறிய மந்திரவாதி என்று தோன்றியது.வெற்றிலையில் மை போட்டுப் பார்த்து இருப்பிடம் சொல்லத் தெரிந்தவனாக இருப்பான் என்று நினைத்தான். ஆனால் சூரிப் போத்திக்கு அதைக் காட்டிலும் அதிகம் தெரிந்திருந்தது. அவன் வசியக்கலை பயின்றிருந்தான். அவனது கட்டுப்பாட்டில் ஜென்சி என்ற கிறிஸ்தவப் பெண்ணின் ஆவி ஒன்று இருந்தது. பத்தொன்பது வயதில் காதல் தோல்வியில் இறந்த பெண். மரணத் தருவாயில் போத்தி அவளைக் காப்பாற்றப் பெரும் முயற்சிகள் செய்திருக்கிறான். தற்செயலாக அன்றைக்கு ஒரு வேலை நிமித்தம் எர்ணாகுளம் சென்றிருந்த போத்தி, ரயில்வே ஸ்டேஷன் பெஞ்சில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தவளைத் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு ஓடியிருக்கிறான். எர்ணாகுளம் அரசுப் பொது மருத்துவமனையில் அவளைக் கொண்டு சேர்த்து சிகிச்சை அளிக்கப் பார்த்து, அது பயனின்றி அவள் இறந்து போனாள். பெற்றோராலும் மற்றவர்களாலும் கைவிடப்பட்ட அந்தப் பெண், இறந்த பின்பு யாரென்றே தெரியாத ஒரு வழிப் போக்கன் தன்னைக் காப்பாற்ற மேற்கொண்ட உதவியை எண்ணி நெகிழ்ந்திருக்கிறாள். வசியம் பயின்ற போத்திக்கு அது வசதியாகிவிட்டது. ஜென்சியைத் தன் வசப்படுத்தி அவளைக் கொண்டு பலபேர் வாழ்வின் காதல் பிரச்னைகளைத் தீர்த்து வைத்துக்கொண்டிருந்தான்.

‘எனக்கு முகம்மது குட்டியின் இருப்பிடம் மட்டும் தெரிந்தால் போதும். மற்றதை நான் பார்த்துக்கொள்வேன்’ என்று வினய் அவனிடம் சொன்னான்.

‘அவன் ஓரிடத்தில் இருப்பதில்லை. அவனுக்கென்று ஒரு இருப்பிடம் கிடையாது. ஆனால் ஒவ்வொரு மாதமும் அவன் நட்சத்திரத்துக்கான சந்திராஷ்டம தினத்தன்று அவன் என் அப்பாவின் தோப்புக்கு வருவான் என்பது தெரியும்.’

‘ஓ. அங்கு அவன் என்ன செய்வான்?’

‘அது எனக்குத் தெரியாது. நான் அங்கு சென்றதில்லை. என்னால் அங்கு போக முடியவில்லை.’

‘ஏன்?’

‘அவன் அனுமதிப்பதில்லை. என்னை மட்டுமல்ல. வேறு யாரையும்.’

‘அந்தத் தோப்பு எங்கு இருக்கிறது?’

‘திருவனந்தபுரத்தில் இருந்து தும்பா போகிற வழியில் மூன்றாவது மைல்.’

ஆறு நாள் வினய் திருவல்லத்திலேயே சுற்றிக்கொண்டிருந்தான். இரவு படுப்பதற்கு மட்டும் போத்தி வீட்டுக்குப் போய்விடுவான். அந்த மாடி அறையில் அவன் படுத்துக்கொள்ள போத்தி அனுமதித்தான். அந்த ஆறு நாள்களும் போத்தியின் பணி என்னவாக இருக்கிறது என்பதை வினய் கவனித்தான். அவனைச் சந்திக்க வருகிற ஆள்கள். அவர்களது பிரச்னைகள். இந்தப் பெண்கள் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் சிக்கலளிப்பவர்களாகவே இருக்கிறார்கள். ‘இன்பம் மிகுந்த இடங்களில்தான் வலியும் மிகுந்திருக்கும்’ என்று போத்தி சொன்னான். ‘நான் வலிகளில் இருந்து நிவாரணம் தருகிறேன்.’

கேட்கலாமா என்று யோசித்துவிட்டு வினய் தயக்கமுடன் கேட்டான், ‘நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று உங்கள் மகளுக்குத் தெரியுமா? தாயில்லாப் பெண் என்று தெரிகிறது. சிறுமியாகவும் இருக்கிறாள். அதனால் கேட்டேன்.’

‘தெரியாது’ என்று போத்தி சொன்னான்.

‘வேறு என்ன சொல்லி வைத்திருக்கிறீர்கள்?’

‘நிமித்தம் பார்ப்பவன். ஆரூடம் சொல்பவன்.’

‘என்றைக்காவது தெரியவந்தால் என்ன செய்வீர்கள்?’

‘அவளது பதினெட்டாவது பிறந்த நாளன்று நானே சொல்லிவிடலாம் என்றிருக்கிறேன்’ என்று போத்தி சொன்னான்.

மிதுன ராசியில் பிறந்தவனான முகம்மது குட்டியின் அம்மாத சந்திராஷ்டம தினம் புதன் கிழமை வந்தது. அன்று காலை போத்தி வினய்யை அழைத்துச் சொன்னான், ‘அந்தத் துலுக்கனை உண்மையிலேயே நீ கொன்றால் நீ நினைத்துப் பார்க்காத பரிசொன்றை உனக்கு நான் தருவேன்.’

வினய் யோசிக்காமல் சொன்னான், ‘அவனை நான் கொன்றுவிட்டால் அதைக் காட்டிலும் பெரிய பரிசு எனக்கு வேறில்லை. ஏனென்றால், தினம் தினம் மனத்துக்குள் எப்போதும் நான் அவனைக் கொன்றுகொண்டே இருக்கிறேன். நிஜத்தில் அவன் இன்னும் சாகாதிருக்கிறான் என்பதுதான் என் பெருவலியாக உள்ளது.’

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

78. வெறி தணிதல்

 

 

முகமது குட்டி ஒரு குடிசைக்கு வெளியே படுத்திருந்தான். அத்தனை பெரிய தென்னந்தோப்புக்குள் அந்த ஒரு குடிசை மட்டும் கவிழ்த்த பிரம்புக் கூடை போலக் கிடந்தது. ஒரு காவலாளி இருந்தான். கையில் ஒரு கோலை வைத்துக்கொண்டு தரையில் தட்டியபடியே தோப்புக்குள் அவன் சுற்றிச் சுற்றி வந்தான். வினய் அங்கே ஒரு தோப்பு இருப்பதையே கவனிக்காதவன் போல எங்கோ பார்த்தவாறு தோப்பைக் கடந்து போனான். காவலாளியின் பார்வையில் இருந்து மறைந்தபின்பு தோப்பின் பின்புறமாக மீண்டும் சுற்றி வந்தான். சுற்றிலும் கம்பி வேலி போடப்பட்டிருந்தது. முன் பகுதியில் சிறிது தூரத்துக்கு மட்டும் நாலடி உயரத்துக்குச் சுற்றுச்சுவர் எழுப்பியிருந்தது. பெரிய கதவுகளோ நுழைவாயிலோ இல்லை. இரண்டு ஆள் உள்ளே போகும் அளவுக்கு இடைவெளி விட்டு அங்கே ஒரு ஸ்டூலைப் போட்டுக் காவலாளி அமர்ந்திருந்தான். உள்ளே நுழைவதில் பெரிய பிரச்னை இருக்காது என்று வினய்க்குத் தோன்றியது. அவன் கம்பி வேலிக்குள் மிக எளிதாகத் தன் உடலை நுழைத்து உள்ளே போய்விட்டான்.

ஒரு முசல்மான் சந்திராஷ்டம தினத்துக்கு முக்கியத்துவம் தருவது அவனுக்கு வினோதமாக இருந்தது. அன்றைக்கு மகரத்தில் சந்திரன் சஞ்சரித்துக்கொண்டிருந்த நாள். மகரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்தால் மிதுன ராசிக்காரர்களுக்குச் சிக்கல். சிறிய மனக்குழப்பம் முதல் பெரும் சண்டை சச்சரவுகள் வரை என்ன வேண்டுமானாலும் நிகழலாம். எந்த ராசியில் பிறந்தவரானாலும் மாதம் ஒருமுறை அந்த தினத்தைக் கடந்துதான் தீர வேண்டும். சொரிமுத்துதான் வினய்க்கு இந்த சந்திராஷ்டம சூட்சுமத்தைச் சொல்லிக் கொடுத்திருந்தான்.

‘அன்னிக்கு ஒரு நாள் காணாம போயிடுடா. யாரையும் பாக்காத. யார்ட்டயும் பேசாத. சன நடமாட்டம் இல்லாத இடத்துக்குப் போயி உக்காந்து தியானம் பண்ணு’ என்று சொரிமுத்து சொல்லுவான். சொல்லி வைத்த மாதிரி மாதம் ஒருநாள் அவன் அப்படித்தான் காணாமல் போவான். பொன்மலை ரயில்வே ஸ்டேஷனுக்கோ, துவாக்குடி பொறியியல் கல்லூரி மைதானத்துக்கோ போய் உட்கார்ந்திருப்பான். மறுநாள் காலை வினய் எழுந்திருப்பதற்கு முன்னால் வீட்டுக்கு வந்து படுத்துவிடுவான்.

‘உங்களுக்கு இதுலல்லாம் நம்பிக்கை இருக்கா?’ என்று வினய் கேட்டான்.

‘கெரகம் ஒன்னையும் என்னையும்விட பெரிசா இல்லியா?’

‘ஆமா.’

‘அவ்ளதான். சைக்கிள்ள போறவன் லாரிக்காரன் ஆரன் அடிச்சா ஒதுங்குவானா இல்லியா?’

‘ஆமா.’

‘அதேதான் இது. இருவத்தி நாலு மணி நேரம் தியானத்துல உக்கார ஒரு நாள் கிடைச்சிதுன்னு எடுத்துக்க. உக்காந்து சாதகம் பண்ணு. குண்டலினிய எழுப்பிக் கொண்டாந்து சஹஸ்ராரத்துல நிப்பாட்டு. இல்லியா? பாம்பு சண்ட போடு’ என்பான்.

சொரிமுத்துவிடம் வினய் கற்ற வித்தைகளுள் மிக முக்கியமானது அதுதான். பாம்புச் சண்டை. வயிற்றுக்கும் ஆண்குறிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட நரம்பை சில மூச்சுப் பயிற்சிகளின் மூலம் நிமிர்த்தி, ஒரு கம்பியைப் போல நிற்க வைப்பது முதல் படி. அது நெஞ்சக் குழி வரை எழுந்து நிற்கக்கூடிய பெரும் நரம்பு. பிறகு உச்சந்தலையில் இருந்து ஒரு நரம்பை விரித்து முன் நெற்றி வழியே கீழே இறக்கினால் அது சரியாக அடி வயிற்று நரம்பு எழுந்து நிற்கும் எல்லையை வந்து தொடும். இந்த இரு நரம்புகளையும் பின்னல் போல் பிணைப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அதைத்தான் சொரிமுத்து பாம்புச் சண்டை என்று சொல்லுவான். அது அத்தனை எளிதல்ல. முற்றிலும் வலது நாசியின் வழியாக மட்டும் காற்றை உள்ளே செலுத்திக்கொண்டிருக்க வேண்டும். ஏழு வினாடிகள் இழுக்கும் காற்றை இருபத்தியொரு வினாடிகள் உள்ளே தேக்கி அதில் சரி பாதி அளவை இடது நாசி வழியாக மட்டும் வெளியே விட வேண்டும். இடைவெளியே இல்லாமல் இப்பயிற்சியை ஆயிரம் முறை செய்யும்போது இரண்டு நரம்புகளும் அசைந்து கொடுக்கும். கீழே இருப்பது மேலே எழவும், மேலே உள்ளது கீழே இறங்கவும் ஆரம்பிக்கும். இரண்டு நரம்புகளும் ஒன்றையொன்று தொடும்போது சவாசனத்துக்குப் போய்விட வேண்டும். உடலுக்குள் உள்ள பிராண சக்தியை மொத்தமாக வெளியேற்றிவிட்டு இரண்டும் தொட்டுக்கொள்ளும் தருணத்துக்குக் காத்திருக்க வேண்டும். அப்படித் தொடுகிற விநாடி உடலுக்குள் பாய்கிற மின்சாரம் ஒரு ஊரை எரிக்கிற அளவுக்கு வல்லமை கொண்டது. சொரிமுத்து அதை நாபியில் சேமித்து வைப்பதாகச் சொல்லுவான். ‘சிலபேரு உச்சந்தலைல சேத்து வெப்பாங்க. அது டேஞ்சரு. அப்பிடி செஞ்சிதான் விவேகானந்தர் செத்தாரு. நமக்கு வயிறுதாஞ்செரி.’

‘நெஜமாவே எரிக்குமா?’ என்று வினய் கேட்டான்.

சில விநாடிகள் அமைதியாக இருந்துவிட்டு, ‘செரி, நீயே எதுனா ஒண்ண சொல்லு. எரிச்சிக் காட்டுறேன்’ என்று சொரிமுத்து சொன்னான்.

வினய் சட்டென்று வீட்டு வாசலில் முளைத்திருந்த பச்சைப் புற்களைச் சுட்டிக் காட்டி, ‘அதை எரியுங்கள்’ என்று சொன்னான்.

சொரிமுத்து எழுந்து வாசலுக்கு வந்தான். குனிந்து ஒரு கொத்துப் புல்லைத் தன் இடது கையால் அழுத்திப் பிடித்தான். அடுத்தக் கணம் அவன் கைப்பிடிக்குள் அடங்கிய பசும்புற்கள் தீப்பற்றி எரிந்ததை வினய் கண்டான். சொரிமுத்து கையை விடுவித்துக்கொண்டு, மேற்கொண்டு தீ பரவாமல் அதே கையால் அணைத்துத் தணித்தான்.

‘போதுமா?’

வினய்க்கு அது மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. எப்படியாவது அதைக் கற்க வேண்டும் என்று தீர்மானித்தான். அன்று முதல் நாளெல்லாம் மூச்சுப் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தான். இரண்டு வருடங்களில் அவனால் ஓரளவு வெற்றி பார்க்க முடிந்தது. சொரிமுத்து திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தது ஒன்றுதான். உனக்கு கவனம் குவிவதில்லை.

‘உள்ளார இழுக்குற காத்த நீ மானசீகத்துல பாக்கணும்டா. காத்த எப்பிடி பாக்குறதுன்னு கேக்காத. காத்துதான் கடவுள். பாக்க டிரை பண்ணிக்கிட்டே இருக்கணும். எதுவா நினைச்சிக்கிட்டா புத்தி அதுல நிக்குமோ, அதுவா நினைச்சிக்க. ஆனா பாக்கணும். ஏழு செகிண்டு காத்த இழுக்கிறியா... ஒரு லிங்கத்த கொண்டு போயி உள்ளார சொருகுறேன்னு நெனச்சிக்க. காத்த லிங்கமா பாரு. அப்ப மனசு அதுல தோயும்’ என்று சொரிமுத்து சொன்னான்.

வினய்க்குக் காற்றை லிங்கமாக உருவகம் செய்துகொள்ள முடியவில்லை. அவனுக்கு உள்ளே போகும் காற்றை ஒரு சேலையாக எண்ணிக்கொள்வது வசதியாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் அவன் சேலையை நினைக்கும்போதும் சித்ராவின் நினைவு வந்து அவனை அலைக்கழித்தது. சித்ரா சேலையணிந்து அவன் பார்த்ததில்லை. தாவணியில் பார்த்திருக்கிறான். வீட்டு வாசல் வரை அடியெடுத்து வைத்து நடந்து வருபவள், வீட்டுக்குள் செல்லும்போது மட்டும் ஒரே தாவில் மூன்று படிகளைத் தாண்டிக் குதித்து உள்ளே போகிற வழக்கம் அவளுக்கு உண்டு. ஒரு வண்டு பறப்பது போல அந்த ஒரு கணத்தில் நிகழும் உருமாற்றத்தை வினய் மிகவும் ரசிப்பான். தாவிக் குதிக்கும்போது அவளது தாவணியின் முந்தானை ஒரு விசிறியைப் போல விரிந்தெழுந்து அடங்கும்.

‘அந்த ஒரு காட்சிக்காகவே எத்தனையோ தினங்கள் அவள் வீட்டு வழியாகப் போகிறவனைப் போலப் போய்ப் போய் நின்றிருக்கிறேன்’ என்று வினய் என்னிடம் சொன்னான்.

மூச்சுக்காற்றை ஒரு சேலையாக மட்டுமே தன்னால் எண்ண முடிவதை வினய் கடைசிவரை சொரிமுத்துவிடம் சொல்லவில்லை. அந்தப் பிரச்னையைச் சொல்லியிருந்தால் சொரிமுத்துவே அதற்கு ஏதாவது தீர்வு சொல்லியிருப்பான். அதனால்தான் ஆறு மாதப் பயிற்சியில் சாத்தியமாகிவிடும் என்று சொரிமுத்து சொல்லியிருந்த பாம்புச் சண்டையை அவன் வெற்றிகரமாக நிகழ்த்தி முடிக்க இரண்டாண்டுகள் தேவைப்பட்டன.

 

தென்னந்தோப்பில் முகமது குட்டி அம்மாதிரியான அப்பியாசங்கள் எதையாவது செய்துகொண்டிருப்பானோ என்று வினய்க்கு சந்தேகமாக இருந்தது. சந்திராஷ்டம தின அப்பியாசங்கள். ஆனால் அவன் சாதகம் ஏதும் செய்வதாகத் தெரியவில்லை. குடிசைக்கு வெளியே வெறும் தரையில் கால் விரித்துப் படுத்துக் கிடந்தான். வினய் காலை ஏழு மணிக்கு அந்தத் தோப்புக்குச் சென்றான். பிற்பகல் மூன்று மணி வரை முகமது குட்டி படுத்த கோலத்தில் இருந்து எழவேயில்லை. மூன்றரை மணிக்கு தோட்டக் காவலன் அங்கு வந்தபோது வினய் ஒரு மரத்தின் பின்னால் பதுங்கிக்கொண்டு நின்றான். தோட்டக்காரன் முகமது குட்டிக்கு உணவு எடுத்து வந்து கொடுத்தான். முகமது குட்டி சாப்பிட்டுவிட்டுத் தட்டிலேயே கை கழுவினான். வாயைக் கொப்பளித்துத் தட்டிலேயே துப்பினான். காவல் காரன் அதை எடுத்துச் சென்று கழுவி குடிசைக்குள் வைத்துவிட்டு மீண்டும் தன் இடத்துக்குப் போய்விட்டான். முகமது குட்டி இப்போது ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு உறங்க ஆரம்பித்தான்.

வினய் மேலும் பதினைந்து நிமிடங்கள் அங்கேயே நின்றிருந்தான். முகமது குட்டி நன்றாக உறங்கிவிட்டான் என்பது தெரிந்ததும் தான் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து வெளியே வந்தான். சுற்றுமுற்றும் பார்த்தான். சிறிது தூரத்தில் ஒரு கடப்பாறையும் கோடரியும் மண்வெட்டியும் ஓரிடத்தில் கிடந்தன. தோட்டப் பணிக்காகப் பயன்படுத்துவானாயிருக்கும் என்று எண்ணிக்கொண்டான். சத்தமில்லாமல் கோடரியை மட்டும் எடுத்துக்கொண்டு முகமது குட்டி இருந்த இடத்துக்கு வந்தான். அவன் உண்மையிலேயே நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான்.

சரி, நீ இறந்துவிடு என்று சொல்லிவிட்டுக் கோடரியை ஓங்கி அவன் தலையில் அடித்தான். முகமது குட்டியின் மண்டை பிளந்து ரத்தம் வெளிப்பட்டது. அவன் அலறத் தொடங்கும் முன் வினய் தன் இடது பாதத்தைத் தூக்கி அவன் வாயில் வைத்து அழுத்தினான். மொத்தம் பதிமூன்று வினாடிகள் முகமது குட்டியின் உடல் துடித்தது.  பிறகு அடங்கிவிட்டது. ஆனால் ரத்தம் மட்டும் பொங்கி வழிந்துகொண்டே இருந்தது. வினய் பதற்றமடையவேயில்லை. ஆறேழு நிமிடங்கள் அவன் இறந்த முகமது குட்டியின் உடலைப் பார்த்தபடி அப்படியே நின்றிருந்தான். பிறகு அவனைத் தூக்கித் தன் தோளில் போட்டுக்கொண்டு தோப்பின் தெற்கு எல்லைக்குச் சென்றான். தோட்டக் காவலன் தன் இடத்தில் இருந்து எழுந்து வருவது போலத் தோன்றவே ஒரு கணம் யோசித்துவிட்டு முகமது குட்டியின் உடலைக் கம்பி வேலிக்கு வெளியே தூக்கி எறிந்துவிட்டு அவனும் வெளியே குதித்தான். மீண்டும் தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

79. கண்ணீரைச் சேமித்தல்

 

 

முகமது குட்டியை எரித்தபோது தனக்கு அழுகை வந்ததாக வினய் சொன்னான். அது முகமது குட்டிக்காக வந்த அழுகையல்ல என்று எனக்குத் தோன்றியது. சுய இரக்கத்தின்பாற்பட்டே வினய் அன்று அழுதிருக்க வேண்டும். அல்லது உள்ளுக்குள் அவனையறியாமல் மூண்டிருக்கக்கூடிய அச்சம் அந்த அழுகையைத் தந்திருக்கலாம். எப்படியானாலும் ஒரு சன்னியாசியின் கண்ணில் நீர் பெருகுவது ஓர் அவலமன்றி வேறல்ல.

இதனை என் குருநாதர் எனக்குச் சொன்னார். மகாராஷ்டிர மாநிலத்தில் புனேவுக்கு எழுபது கிலோ மீட்டர் அப்பால் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர் அவர். ஒன்பது வயதில் வீட்டைத் துறந்து கர்நாடகத்துக்கு இடம் பெயர்ந்து வந்தவர். அந்த வயதில் அவரைச் செலுத்திவந்த சக்தி எது என்று வெகுகாலம் அவர் யோசித்துப் பார்த்திருக்கிறார். ஆனால் சரியான விடை கிடைக்கவில்லை. வீடு, அப்பா, அம்மா, ஒரு அண்ணன், ஒரு தங்கை அவருக்கு உண்டு. என்ன காரணத்தாலோ மிகச் சிறுவயதில் இருந்தே தன்னால் யாருடனும் பிரத்தியேக உறவு பேண முடிந்ததில்லை என்று அவர் சொன்னார். எல்லா உயிர்களும் எனக்கானவை என்றே தோன்றியது என்ற வரியை அவர் தனது வாழ்நாளில் குறைந்தது நூறு முறையேனும் சொல்லியிருப்பார்.

அவரது பதினேழாவது வயதில் அவருக்கு ஒரு செய்தி கிடைத்திருக்கிறது. அவரது அப்பா, அம்மா, அண்ணன், தங்கை நால்வரும் ஒரே இரவில் ஒன்றாகத் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார்கள். கடன் பிரச்னையாக இருக்கலாம். அல்லது வேறு ஏதேனும் தாங்க இயலாத பெரும் பிரச்னை. ஏதோ ஒன்று பூதாகாரமாக வந்து தாக்காமல் குடும்பத்தோடு அப்படி யாரும் இறந்து போக முடிவு செய்திருக்கமாட்டார்கள். குருநாதர் அப்போது மடிகேரிக்கு வந்திருக்கவில்லை. ஒரு நாடோடியாக மாநிலம் முழுதும் திரிந்துகொண்டுதான் இருந்திருக்கிறார். அவரது அப்பாவின் தமக்கையின் கணவர் தற்செயலாக அவரை வழியில் கண்டு, அடையாளம் தெரிந்துகொண்டு மேற்படித் தகவலை அவருக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்.

இதற்கு என்ன பதில் சொல்வது, அல்லது அவரிடம் அந்த மனிதர் என்ன எதிர்பார்த்தார் என்று குருவுக்குப் புரியவில்லை. மரணச் செய்தியை அவர் சொல்லி முடித்ததும், ‘ஓ, சரி’ என்று சொல்லியிருக்கிறார். அதற்குமேல் அம்மனிதர் குருநாதருடன் பேச விரும்பவில்லை. ‘கிறுக்குப் பயலே, நீயும் போய்ச் சேர்ந்திருக்கலாம். அல்லது நீ மட்டும் ஒழிந்து தொலைந்திருந்தால் அவர்கள் நன்றாக இருந்திருப்பார்கள்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

‘உங்களுக்கு உண்மையிலேயே வருத்தம் இல்லையா?’ என்று பின்பொரு சமயம் நான் அவரிடம் கேட்டேன்.

‘இருந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன்’ என்று அவர் பதில் சொன்னார்.

‘இது என்ன பதில்? இருந்ததா? இல்லையா? சரியாகச் சொல்லுங்கள்.’

அவர் சிறிது யோசித்துவிட்டு, ‘ஆம். இருந்தது. ஆனால் நான் அழவில்லை. பத்து நிமிடங்களுக்குமேல் அவர்களை நினைக்கவும் இல்லை’ என்று சொன்னார்.

‘ஏன்? அந்த நினைவு துறவுக்கு விரோதம் என்று நினைத்தீர்களா? உலகமே உறவுதான் என்றான பிறகு ஒரு நான்கு பேரின் மரணத்துக்கு ஒரு சொட்டுக் கண்ணீர் விடுப்பதில் என்ன பிழை?’

அப்போதுதான் அவர் சொன்னார். ‘விமல்! மனித ரத்தத்தினும் மதிப்பு மிக்கது கண்ணீர். அது உள்ளத்தின் ஈரம். எப்போதாவது உருப்பெறுவது. எப்போதேனும் கசிவது. அபூர்வமானது. விந்துவினும் வீரியம் கொண்டது. அதைச் சேமிப்பது ஒரு துறவிக்கு மிகவும் முக்கியம்.’

‘கண்ணீரைச் சேமித்து என்ன செய்ய முடியும்?’

‘காமத்தைக் கடந்து என்ன செய்ய முடியுமோ அதைக் கண்ணீரைக் கடந்தும் செய்யலாம்.’

வினய்யிடம் நான் இந்தச் சம்பவத்தைச் சொன்னபோது, அவன் ‘சரிதான். சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்’ என்று சொன்னான். ‘ஆனால் அன்று நான் அழுதது உண்மை. என்னால் அடக்கவே முடியவில்லை.’

எனக்கு அவன் மீது பரிதாபமாக இருந்தது. தன்னால் மீண்டும் சொரிமுத்துவிடம் போகவே முடியாது என்று அவன் முடிவு செய்திருந்தான். சொரிமுத்து தன்னை ஏற்கமாட்டான் என்று அவனுக்குத் தோன்றியிருக்கிறது. அதனாலேயே அவன் சூரிப் போத்தியினிடத்திலேயே தங்கிப்போனான். முகமது குட்டியைக் கொலை செய்து எரித்துவிட்டு அவன் போத்தியின் வீட்டுக்குப் போய் விவரம் சொன்னபோது, சூரிப் போத்தியால் முதலில் அதை நம்பவே முடியவில்லை. ‘எப்படி முடிந்தது? அவன் மிகவும் எச்சரிக்கை உணர்வு உள்ளவனாயிற்றே?’ என்று கேட்டிருக்கிறான்.

‘உறக்கத்தில் யாருக்கும் எச்சரிக்கை உணர்வு வேலை செய்வதில்லை’ என்று வினய் சொன்னான்.

‘அவன் தூங்கிக்கொண்டா இருந்தான்?’

‘ஆம். இளைய பாண்டவர்களை அஸ்வத்தாமன் கொன்றதுபோலக் கொன்றேன். ஒரு கோடரி. ஒரே போடு. தலை பிளந்துவிட்டது.’

‘ஓ. யாராவது பார்த்தார்களா?’

‘இல்லை. ஆனால் ரத்தத்தை அந்தக் தோட்டக்காவலன் பார்த்திருப்பான். போலிசில் போய்ச் சொல்லியிருப்பான்.’

‘ஐயோ. அவன் உன்னைப் பார்த்தானா?’

‘இல்லை.’

‘நீ தோப்புக்குள் நுழைந்ததே அவனுக்குத் தெரியாதா?’

‘ஆமாம். தெரியாது.’

போத்தி வெகுநேரம் பதற்றத்துடன் யோசித்துக்கொண்டே இருந்தான். மறுநாள் செய்தித்தாளில் ஏதாவது செய்தி வருகிறதா என்று பார்த்தான். முகமது குட்டி இறந்த விவரம் எந்தப் பத்திரிகையிலும் வரவில்லை. ஆனால் அடையாளம் தெரியாத பிணமொன்று காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் கிடைத்த விவரம் இரண்டு நாள் கழித்துப் பிரசுரமாகியிருந்தது. ‘அது முகமது குட்டிதான்’ என்று வினய் சொன்னான். போத்தியால் அப்போதும் நம்பவே முடியவில்லை.

‘அத்தனை வெறி உனக்கு இருந்திருக்குமானால் அவனால் நீ இழந்தது மிகப் பெரிதுதான். அது என்னவென்று சொல்’ என்று கேட்டான்.

‘நான் எதையும் இழக்கவில்லை. என் குரு என்னிடம் கொடுத்தனுப்பிய ஒரு கமர்க்கட்டை அவன் களவாடிச் சென்றுவிட்டான். அந்தக் கோபம்தான்’ என்று வினய் சொன்னான். அதன் பிறகுதான், வினய் யாரென்று போத்தி விசாரித்துத் தெரிந்துகொண்டிருக்கிறான்.

‘உனக்கு நான் ஒரு பரிசு தருவேன் என்று சொன்னேன். அது என்னவென்று நீ கேட்கவில்லையே?’

வினய் புன்னகை செய்தான். ‘உங்களால் எனக்கு என்ன தர இயலும்? மிஞ்சினால் எனக்கொரு குட்டிச் சாத்தானை அடிமையாக்க முடியும். அதானே?’

‘இல்லை. உனக்கு நான் அதர்வத்தின் மிக முக்கியமான சில பகுதிகளைச் சொல்லித் தருகிறேன். ஒழுங்காகக் கற்றால், நீ என்னைக் காட்டிலும் பெரிய சாதனைகளைச் செய்ய முடியும்.’

‘உங்களால் ஏன் அது முடியவில்லை?’ என்று வினய் கேட்டான்.

போத்திக்கு அது மிகவும் வருத்தமாகிவிட்டது. என்ன பதில் சொல்வதென்று உடனே தோன்றவில்லை. மிகவும் தயங்கி, யோசித்து, தடுமாறி அதன்பிறகு சொன்னான், ‘நான் பயிலத் தொடங்கிய வயது தவறானது. ஓரெல்லைக்கு மேல் என்னால் கிரகிக்க முடியவில்லை.’

‘என்னால் மட்டும் எப்படி முடியும்? நான் வாலிபத்தைத் தொட்டுக் கடந்துகொண்டிருப்பவன். என் புத்தி ஒருமையில் நிலைப்பதில்லை என்பதுதான் என் குருவின் ஒரே குற்றச்சாட்டு.’

‘அப்படியா? முயற்சி செய்து பார்த்துவிடலாமா?’ என்று புன்னகையுடன் போத்தி கேட்டான்.

ஒரு வாரம் கழிந்த பின்பு ஒரு செவ்வாய்க்கிழமை காலை போத்தி அவனை ஒரு பகவதி ஆலயத்துக்கு அழைத்துச் சென்றான். பெரிய கோயிலெல்லாம் இல்லை. காட்டுப் பகுதியில் இருந்த ஒரு சிறு சன்னிதி. மரம் அறுக்கப்போகிற மக்கள் வழியில் பார்த்து வணங்கிவிட்டுப் போவார்கள்.

அந்தக் கோயிலை அடைந்ததும், போத்தி உள்ளே சென்று இரண்டு மாமரப் பலகைகளை எடுத்து வந்தான்.

‘இது எதற்கு?’ என்று வினய் கேட்டான்.

பலகைகளை எதிரெதிரே போட்டுவிட்டு ‘உட்கார்’ என்று சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே போனான். இம்முறை அவன் ஒரு சிறிய ஹோம குண்டத்தை எடுத்துவந்து வினய்க்கு எதிரே வைத்தான். குண்டத்தின் மறுபுறப் பலகையில் அவன் உட்கார்ந்துகொண்டான். சமித்துகளோ நெய்யோ ஹோமத்துக்கான பிற பொருள்களோ அங்கு இல்லை என்பது வினய்க்கு நெருடலாக இருந்தது. ஆனால் அதையெல்லாம் ஜென்சி எடுத்து வந்து கொடுப்பாள் என்று போத்தி சொன்னான்.

‘இதோ பார். இப்போது உனக்கு நான் சொல்லித்தரப்போவது மிக மிக எளியதொரு வனதுர்கா மந்திரம். தினமும் இதை ஆயிரத்தெட்டு முறை ஜபித்து வர வேண்டும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இந்தக் கோயிலுக்கு வந்து உட்கார்ந்து லட்சத்து எட்டு முறை ஜபிக்க வேண்டும்.’

‘எத்தனை நாள்களுக்கு?’

‘நாற்பத்து எட்டு தினங்கள்.’

‘சரி.’

‘இது எதிரிகளை வசப்படுத்தும் மந்திரம். உன் ஜபம் அன்னையைத் தொட்டுவிட்டால், அதன்பின் உனக்கு எதிரி என்று யாரும் இருக்க முடியாது. அப்படி யார் எப்போது தோன்றினாலும் உன்னால் அவனை நிர்மூலமாக்கிவிட முடியும்.’

வினய்க்குச் சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது. எந்த மந்திரமும் தெரியாமல் ஒரு எதிரியை அப்போதுதான் அவன் சம்ஹாரம் செய்துவிட்டு வந்திருந்தான். குறைந்தபட்சம் ஒரு போலிஸ் கேஸாகக்கூட அது உருப்பெறவில்லை. மாயாஜாலங்கள் புரியக்கூடிய தனது எஜமானன், தனது ரத்தத்தை சாட்சியமாக மண்ணில் கொட்டி வைத்துவிட்டு ஏதோ ரகசியத் திட்டத்துடன் கிளம்பிப்போயிருக்கிறார் என்று அந்தத் தென்னந்தோப்பின் காவலாளி, தெரிந்தவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறானாம்.

வினய் இதனை போத்தியிடம் சொன்னபோது, அவனுக்குச் சட்டென்று கோபம் வந்தது. ‘நீ நம்பவில்லை அல்லவா?’ என்று கேட்டான்.

‘இது அப்படியல்ல. நான் தனியன். எனக்கு எதிரி என்று யாருமில்லை. அதனால் இல்லாத எதிரிக்காக நான் இதனைக் கற்றுத் தேருவதில் என்ன பயன்? எனக்கு உபயோகமாக வேறு ஏதேனும் சொல்லிக் கொடுங்கள்’ என்று வினய் கேட்டான்.

போத்தி தீர்மானமாகச் சொன்னான், ‘இல்லை. உனக்கு ஒரு எதிரி வருவான். உன் கண்ணில் விரல் விட்டு ஆட்டிவைப்பான். அன்று நீ உருத்தெரியாமல் அழிந்துவிடக் கூடாது. இதைக் கற்றுக்கொள். இது உனக்கு உதவும்.’

‘சரி, சொல்லிக் கொடுங்கள்’ என்று வினய் சொன்னான்.

போத்தி சிறிது நேரம் கண்மூடி தியானத்தில் இருந்தான். பிறகு கண்ணைத் திறந்து ஹோம குண்டத்தைப் பார்த்தான். குப்பென்று அதில் அக்னி பிடித்துக்கொண்டு எரியத் தொடங்கியது. எங்கிருந்து வந்ததென்று தெரியாத சமித்துக் கட்டைகளும் நெய் பாட்டிலும் வினய்க்குப் புன்னகை வரவழைத்தன.

போத்தி அதைக் கவனிக்காமல், அவனைத் தன் அருகே செவியை நீட்டும்படி சைகை செய்தான். ஹோம குண்டத்தைத் தாண்டித் தன் முகம் எதிர்ப்புறம் நீளும்படியாக வினய் வில்லாக வளைந்து போத்திக்குத் தன் வலக்காதைக் கொடுக்க, அவன் ‘ஓம் ஹ்ரீம் தும் ஜ்வல தூம்ர லோசனி சண்ட சம்ஹாரி...’ என்று தொடங்கி, நான்கு வரி வன துர்கா காயத்ரியை அவன் காதில் ஓதினான். அதன் தொடர்ச்சியாக, ஒன்பது வரிகள் கொண்ட இன்னொரு மந்திரத்தைச் சொல்லி, வரி வரியாக அவனைத் திருப்பிச் சொல்லச் சொன்னான். வினய் எதிர்பாராத ஒரு கணத்தில் தனது இடக்கரத்தால் அவன் உச்சந்தலையில் ஓங்கி ஒரு அடி அடித்தான். அடுத்தக் கணம் வினய் தன் சிந்தை இழந்துபோனான். கண்ணில் தெரிந்த அக்னி ஜுவாலைக்கு நடுவே அவனுக்கு வன துர்கையின் மூக்குத்தி தென்பட்டது. அதனையே உற்றுப் பார்த்தவண்ணம் கட்டுண்டவன் போல போத்தி சொல்லிக்கொண்டிருந்த மந்திரத்தைத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தான்.

எவ்வளவு நேரம் அவன் அப்படி இருந்தான் என்பது அவனுக்குத் தெரியவில்லை. ஒரு நாள் அல்லது ஒரு வாரம் ஓடியிருக்கும் என்று தோன்றியது. போத்தி ஒரு வழியாக யாகத்தைப் பூர்த்தி செய்து ஔபாசனக் கல்லில் எரிந்து மிஞ்சியிருந்த கரித்தூளை வழித்து இரு கைகளிலும் எடுத்து வினய்யின் தலை முதல் உடம்பெங்கும் பூசித் தடவினான். வினய்க்குப் பேச்சே வரவில்லை. வாழ்வில் முதல் முறையாக சுத்தமாகத் தன் நினைவு என்ற ஒன்றே இல்லாதிருந்தது அப்போதுதான். சொரிமுத்து சொல்லி எவ்வளவோ தினங்கள் அவன் தியானத்தில் அமர்ந்திருக்கிறான். மூச்சடக்கி சில அப்பியாசங்கள் செய்திருக்கிறான். ஆனபோதிலும் அவன் தன்னை மறந்ததில்லை. இடமும் இருப்பும் எப்போதும் நினைவில் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் போத்தி அவன் உச்சந்தலையில் அடித்த ஓரடியில் உலகமே இருண்டு சுருங்கி மறைந்துவிட்டாற்போலானது அவனுக்கு.

பேரனுபவம்தான். சந்தேகமில்லை. போத்தியிடம் என்னவோ இருக்கிறது என்று வினய்க்குத் தோன்றியது. சட்டென்று அவன் பாதம் பணிந்து எழுந்தான்.

‘இதுதான். இவ்வளவுதான். இந்த மந்திரத்தை நாற்பத்து எட்டு நாள் இடைவிடாமல் ஜபம் செய்துகொண்டிரு. அடுத்த நாள் நீ இதன் பலனைக் காண்பாய்’ என்று சொல்லிவிட்டு போத்தி கிளம்பிப் போனான்.

(தொடரும்)

 

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

80. உதவாத உயிர்கள்

 

 

என்றைக்காவது எப்படியாவது சோமன் எனக்கு வரணாவதியைக் காட்டித் தருவான் என்று போத்தி சொன்னான். வரணாவதி என்பது ஒரு மூலிகை என்று வினய்க்குத் தெரியும். அந்தப் பெயரை சொரிமுத்து சில சமயம் சொல்லியிருக்கிறான். அப்போது வினய் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எல்லா சித்தர்களுக்கும் மூலிகைகளின் மீது இருக்கும் ஈர்ப்பு அவனுக்கும் உள்ளதாக நினைத்தான். ஆனால், போத்தியைச் சந்தித்த பிறகு வினய்க்கு அந்த மூலிகையைப் பற்றிய ஆர்வம் வந்துவிட்டது.

அது மட்டும் எனக்குக் கிடைத்துவிட்டால், இந்த உலகின் ஒரே பெரும் வைத்தியன் நானாக இருப்பேன் என்று போத்தி சொன்னான்.

‘இருக்குமிடம் தெரியுமா?’

‘அதுதானே சிக்கல்? அது நம் வீட்டிலேயேகூட இருக்கலாம். வேறெங்காவது இருக்கலாம். அதன் தோற்றம் நமக்கு மிகவும் பரிச்சயமானதாக இருக்கலாம். நாம் தினசரி குழம்புக்கும் மற்றதுக்கும் போடும் கருவேப்பிலையாக இருந்துவிடுமோ என்றுகூட எண்ணியிருக்கிறேன். காலத்தின் மறைப்பில் அந்தப் பெயருக்குரிய மூலிகை எதுவென்று தெரியாமல் போய்விட்டது’.

‘யாருக்குமே தெரியாதா?’

‘இல்லை. ஒரு சிலருக்குத் தெரியும். வாரணாசியில் நான் ஒரு யோகியைச் சந்தித்திருக்கிறேன். அவர் பெயர் விஜய். அவரிடம் அந்த மூலிகை உள்ளதாக அவரது சீடன் ஒருவன் சொன்னான்’ என்று போத்தி சொன்னபோது, வினய் திகைத்துப் போய்விட்டான்.

‘நீங்கள் சந்தித்த யோகியின் பெயர் விஜய் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அவரே சொன்னாரா?’

‘ஆம். அப்படியொரு பெயரில் ஒரு யோகியைக் கற்பனை செய்ய முடியவில்லை அல்லவா?’

‘என் பெயர் வினய். நீங்கள் சந்தித்தது என் அண்ணனை’ என்று வினய் சொன்னபோது, போத்திக்கு ஒரே வியப்பாகிவிட்டது. உண்மையா உண்மையா என்று திரும்பத் திரும்பக் கேட்டிருக்கிறான்.

‘நான் பொய் சொல்லமாட்டேன். அவன் என் அண்ணன்தான். எங்கள் வீட்டில் நாங்கள் நான்கு பிள்ளைகள்’.

அதன்பின் போத்தி நெடுநேரம் ஒன்றுமே பேசவில்லை. மிகவும் தயக்கத்துடன் பிறகு, ‘நீ ஏன் இந்த வழிக்கு வந்தாய்?’ என்று கேட்டான்.

‘தெரியவில்லை. அண்ணா என்னை திருவானைக்காவில் சொரிமுத்து என்ற சித்தரிடம்தான் அனுப்பிவைத்தான். முகமது குட்டியை நான் சந்திக்க நேராமல் இருந்திருந்தால், இப்போதும் நான் சொரிமுத்துவிடம்தான் இருந்திருப்பேன்’.

‘யார் அவர்? பெரிய சித்தரா?’

‘தெரியாது. ஆனால் சித்தர்தான். நிறைய பார்த்திருக்கிறேன்’.

அன்றெல்லாம், போத்திக்குத் தன்னுடைய கதையைத்தான் வினய் சொல்லிக்கொண்டிருந்தான். அண்ணா வீட்டை விட்டுப் போனது. அவன் போனது. நான் போனது. வினோத் என்னவானான் என்று தனக்குத் தெரியாது என்று சொல்லியிருக்கிறான்.

‘இது உண்மையிலேயே ஆச்சரியமானதுதான். ஒரே குடும்பத்தில் இப்படி நடப்பது அபூர்வம்’ என்று போத்தி சொன்னான்.

ஒரு நீண்ட யோசனைக்குப் பிறகு, போத்தியிடம் வினய் மனம் விட்டு ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கிறான். ‘நான் முறைப்படி சன்னியாச தீட்சை பெற விரும்புகிறேன். அதற்கு ஆவன செய்ய உங்களுக்கு யாரையாவது தெரியுமா?’

உடனே இல்லை என்று போத்தி சொன்னான். ‘நான் அந்த வழிக்குப் போவதில்லை. உனக்குமே அது அவசியமில்லை என்று நினைக்கிறேன்’.

‘இல்லை. எனக்கு அது அவசியம்’.

‘ஏன் அப்படி நினைக்கிறாய்?’

‘ஒரு தடுப்பு வேலி இல்லாததுதான் என் பிரச்னை என்று நினைக்கிறேன். முகமது குட்டி என்ற மனிதனைக் கொன்றது எனக்குப் பெரிய விஷயமாகத் தோன்றவேயில்லை. ஆனால் ஒரு கொலையில் இருந்த மனத்தீவிரம் எனக்கு தியானத்தில் கூடுவதில்லை. இது ஒரு பிரச்னை அல்லவா?’

‘நான்தான் தியானமே அவசியமில்லை என்கிறேனே? இதோ பார். மந்திர ஜபம் ஒன்று மட்டும் போதும். அதைக் கொண்டே நினைத்ததைச் சாதித்துவிடலாம்’.

போத்தியுடன் தங்கியிருந்த நாள்களில் வினய் அதைத்தான் செய்துகொண்டிருந்தான். மந்திர ஜபம். இருபது முப்பது சிறு தேவதைகளுக்கான மந்திரங்கள். போத்தி, சோமன் என்ற வேதகாலக் கடவுளைத் தன் மானசீக தெய்வமாக வைத்திருந்தான். எதையும் சோமன் முகமாகவே செய்வது அவனது வழக்கம்.

‘ஒன்றைப் புரிந்துகொள் வினய். தவமும் யோகமும் பெரிய விஷயங்கள்தாம். கடும் பயிற்சி கோருபவை. நம்மைப் போன்ற எளியவர்களுக்கு அது சாத்தியமில்லை. என்னால் என் மகளை விட்டுவிட்டு சன்னியாசம் பெற்றுப் போக முடியாது. நீ சன்னியாசம் வேண்டும் என்று கேட்டாலும், உன்னால் உன் குடும்பத்தின் நினைவைத் துறக்க முடியாது’ என்று போத்தி சொன்னான்.

‘ஆம். கஷ்டம்தான்’.

‘அதனால்தான் சொல்கிறேன். உன் கவனத்தை ஜபத்தில் திருப்பு. சோமனை வணங்க ஆரம்பி. சடங்குகள் சிலவற்றைச் சாதிக்கும். யாகங்கள் சிலவற்றைச் செய்து கொடுக்கும். உனக்கு நான் ஏவல் சொல்லித் தருகிறேன். வசியம் சொல்லித் தருகிறேன். என் ஜென்சியைப் போல் நீ ஒன்றைத் தேடிப் பிடிப்பது சுலபம். தெய்வ தரிசனம்தான் கஷ்டம். ஆத்மாக்களை எளிதில் வசப்படுத்திவிட முடியும்’.

‘ஆனால் இது சிறியதல்லவா?’

‘ஆம். நாம் சிறியவர்கள்தாம். அதையும் மறக்கக் கூடாது’ என்று போத்தி சொன்னான்.

வாரணாசியில் அவன் அண்ணாவைச் சந்தித்த விவரத்தை வினய்யிடம் விவரித்துச் சொல்லியிருக்கிறான். அது நடந்து பதினைந்து வருடங்கள் ஆகியிருக்கின்றன. போத்தி அப்போதுதான் ஜென்சியை முழுமையாகப் பயன்படுத்தித் தனது பணிகளை நிறைவேற்ற ஆரம்பித்திருந்தான். சும்மா போய் சுற்றிவிட்டு வரலாம் என்று வாரணாசிக்குப் போனவன், மணிகர்ணிகா கட்டத்தில் ஒரு மாலைப் பொழுது போய் அமர்ந்து நீர்ப்பரப்பை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்திருக்கிறான். அப்போது அண்ணா அந்தப் பக்கமாகப் போனான்.

தோற்றத்தைக் கொண்டு அவன் ஒரு துறவி என்றோ யோகி என்றோ யாரும் சொல்லிவிட முடியாது. மிகப் பழைய அழுக்கு வேட்டி ஒன்றை அவன் கட்டியிருந்தான். அதில் பல இடங்களில் கிழிந்திருந்தன. மேல் சட்டை அணியாமல் ஒரு மெல்லிய துண்டைப் போர்த்தியிருந்தான். ஏதோ யோசனையோடு படிக்கட்டுகளில் நடந்து போய்க்கொண்டிருந்தவன், போத்தி அமர்ந்திருந்த இடத்தைக் கடந்தபோது சட்டென்று நின்றான். திரும்பிப் பார்த்தான். போத்தியும் அவனைப் பார்த்தான். மொழி தெரியாத, இடம் அறியாத முற்றிலும் புதிய இரண்டு பேர். நின்று உற்றுப் பார்க்கும் ஒருவனிடம் என்ன பேசுவது? அல்லது வெறுமனே சிரிக்க வேண்டுமா?

போத்தி ஒரு ஹலோ சொல்லலாம் என்று நினைத்தபோது, அண்ணா அவனிடம் மலையாளத்தில் பேசியிருக்கிறான். ‘இங்கே உட்கார்ந்து நேரத்தை விரயம் செய்யாதே. இங்கு போகும் எந்த உயிரும் உனக்கு உதவாது’.

சொல்லிவிட்டு, பதிலுக்கு நிற்காமல் அவன் போயேவிட்டான். போத்திக்கு பேயடித்த மாதிரி ஆகியிருக்கிறது. அவன் சொல்லிவிட்டுப் போனதன் பொருளே சில நிமிடங்களுக்குப் பிறகுதான் அவனுக்குப் புரிந்திருக்கிறது. ஐயோ என்று அலறியடித்துக்கொண்டு அண்ணாவைத் தேடி ஓட ஆரம்பித்தான். காசிக் கூட்டத்தில் ஒரு நபரை எங்கே போய்த் தேடிக் கண்டுபிடிப்பது? அதுவும் முகம்கூடப் பரிச்சயமில்லாத யாரோ ஒருவன். அவன் தன்னை மொத்தமாகப் பத்து விநாடிகள் பார்த்திருப்பானா? பார்த்த மாத்திரத்தில் தான் யாரென்று தெரிந்துகொண்டு, தொழிலை அறிந்துகொண்டு, நக்கலாக அப்படி ஒரு வரியை வீசிவிட்டுப் போகிறான் என்றால், அவன் எப்பேர்ப்பட்டவனாக இருக்க வேண்டும்!

எப்படியாவது அண்ணாவைச் சந்தித்தே தீருவது என்று முடிவு செய்து, போத்தி காசி நகரமெங்கும் அலைந்து திரிந்திருக்கிறான். ஒவ்வொரு தெரு வழியாகவும் சந்து பொந்துகள் வழியாகவும் சுற்றித் தேடியிருக்கிறான். கண்ணில் பட்ட சாதுக்கள் அத்தனை பேரிடமும், அண்ணாவின் தோற்றத்தைத் தான் கவனித்த வரையில் விளக்கி, அவர் எங்கே இருக்கிறார் தெரியுமா என்று கேட்டிருக்கிறான்.

‘அவன் எப்படி இருந்தான்? என்ன சொல்லிக் கேட்டீர்கள்?’ என்று வினய் போத்தியிடம் கேட்டான்.

‘என்ன சொன்னேன்? ஆம். அவரது இரு புருவங்களுக்கும் நடுவே ஒரு மச்சம் இருந்தது. பெண்கள் பொட்டு வைப்பது போலொரு மச்சம்’.

‘யாராவது உதவினார்களா?’

‘யாருக்குமே அவரைத் தெரிந்திருக்கவில்லை. அதுதான் என்னைத் தூங்கவிடாமல் அடித்தது. எப்படியாவது அந்த யோகியை நான் மீண்டுமொருமுறை தரிசித்துவிட வேண்டும் என்று தீவிரமாக நினைத்தேன். இருபது நாள் காசி நகரெங்கும் சுற்றியலைந்து தேடினேன்’.

‘இருபது நாளா?’

‘ஆம். நான் எதற்காகக் காசிக்குச் சென்றேன் என்பதே எனக்கு மறந்துவிட்டது. அதுவரை நான் கற்றது, தெரிந்துகொண்ட வித்தைகள், வசியமான பெண்கள், வளைத்துப் போட்ட சாத்தான்கள் அனைத்தையும் இடக்கரத்தால் சுற்றி வளைத்து எடுத்து அந்த மனிதர் தூக்கிப் போட்டுவிட்டாற்போல உணர்ந்தேன்’.

‘ஓ. உங்கள் சாத்தான்கள் அப்போது உங்களை விட்டுப் பிரிந்துவிட்டனவா?’

‘அப்படி இல்லை. ஆனால் அந்த இருபது தினங்களும் நான் எவ்வளவோ முயற்சி செய்து அவரைத் தேடினேன். என் ஜென்சி எனக்காக நம்ப முடியாத அளவுக்கு முயற்சிகள் எடுத்தாள். என்ன செய்தும் என்னால் அவரைச் சந்திக்கவே முடியவில்லை. இறுதியில், என் அலைச்சலைக் கண்டு மனம் இரங்கி அவரேதான் எனக்குக் காட்சி கொடுக்க முடிவு செய்திருக்கிறார்’ என்று போத்தி சொன்னான்.

காட்சி கொடுக்க! வினய்க்கு லேசாகச் சிலிர்த்தது. கூடவே சிரிப்பும் வந்தது.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

81. ஒரு சொல்

 

 

புருவங்களின் மத்தியில் பொட்டு வைத்தாற் போன்ற மச்சம் கொண்ட யோகியைத் தேடிக் காசி நகரெங்கும் அலைந்து திரிந்த சூரிப் போத்தி களைத்துப்போய் ஒரு அன்ன சத்திரத்தின் வெளித் திண்ணையில் வந்து படுத்தான். அது நடு மதிய நேரம் என்பதால் சத்திரத்துக்கு வந்துகொண்டிருந்த பரதேசிகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருந்தது. யார் யாரோ எங்கெங்கிருந்தோ அங்கு வந்துகொண்டே இருந்தார்கள். உள்ளே இரண்டு பெரிய கூடங்கள் இருந்தன. கீழ்த்தளத்தில் இருந்ததைப் போலவே மாடியிலும் இரண்டு கூடங்கள் இருக்க வேண்டும் என்று போத்திக்குத் தோன்றியது. எல்லா இடங்களிலும் ஆட்கள் வரிசையில் போய்ப் போய் உட்கார்ந்தார்கள். யார் எழுதி வைத்த நிதியோ, யாருக்குப் போய்ச் சேர்ந்துகொண்டிருந்த புண்ணியமோ. அங்கு வந்த அத்தனைப் பேருக்கும் சப்பாத்திகளும் பருப்புக் கூட்டும் கிடைத்தன. நல்ல தடி தடியான பெரிய அளவிலான சப்பாத்திகள். சத்திரத்துக்கு வந்த யாத்ரீகர்களும் பிச்சைக்காரர்களும் சாதுக்களும் தயாராகத் தட்டு அல்லது இலை எடுத்து வந்ததைப் போத்தி கவனித்தான். தானும் வரிசையில் போய் தட்டேந்தி உட்கார்ந்து சாப்பிட்டுப் பார்த்தால்தான் என்னவென்று தோன்றியது. ஆனால் மிகவும் சோர்வாக இருந்தது. மோதிக்கொண்டிருந்த கூட்டத்தில் இடம் பிடித்துப் போய் உட்கார்ந்து நான்கு சப்பாத்திகளை வாங்குவதற்கே ஒரு மணி நேரம் ஆகிவிடும் என்று தோன்றியது. பசியைக் காட்டிலும் உறக்கம் அப்போது அவனுக்கு அவசியமாகத் தோன்றியதால் வெளித் திண்ணையில் வந்து படுத்தான்.

இரண்டு நாள்களாக ஓயாமல் நடந்து திரிந்ததில் கால் வலி கொன்றெடுத்துக்கொண்டிருந்தது. அவனுக்கு எப்படியாவது அந்த யோகியைச் சந்தித்துவிட வேண்டும் என்ற வெறி ஒன்றைத் தவிர வேறெதுவும் மனத்தில் இல்லை. சந்தித்தால் மட்டும் என்ன அற்புதம் நிகழ்ந்துவிடும் என்று அடிக்கடித் தனக்குள் கேட்டுக்கொண்டான். ஒரு யோகி பொருட்படுத்தக்கூடிய வாழ்க்கை அவனுடையதல்ல. இதில் அவனுக்குச் சந்தேகமில்லை. ஆனால் அவரை மீண்டுமொரு முறை பார்த்துவிட்டால் சிறிய அளவிலாவது ஏதேனும் மாற்றம் உண்டாக வாய்ப்பிருக்கலாம் என்று நினைத்தான்.

இவ்வாறு எண்ணியபடி அவன் கண்ணை மூடி உறங்க ஆரம்பித்தபோது யாரோ தன்னை எழுப்புவது போலத் தோன்றி, கண்ணைத் திறந்து பார்த்தான். அவன் எதிரே இருபது வயது மதிக்கத்தக்க வாலிபன் ஒருவன் நின்றிருந்தான். அவன் கையில் ஒரு மந்தார இலையில் வைத்த இரண்டு சப்பாத்திகளும் பருப்புக் கூட்டும் இருந்தது.

‘என்ன?’ என்று போத்தி கேட்டேன்.

‘இதைச் சாப்பிட்டுவிட்டு உன்னை என்னோடு கிளம்பி வரச் சொல்லி என் குருநாதர் செய்தி அனுப்பினார்’ என்று அவன் சொன்னான்.

‘யார் உன் குருநாதர்?’

‘அவர் பெயர் விஜய். அவர் ஒரு யோகி. உன்னை இரண்டு நாள் முன்பு மணிகர்ணிகா கட்டத்தில் அவர் பார்த்ததாகச் சொன்னார்’.

‘ஐயோ அவரா?’ என்று போத்தி அலறி எழுந்து நின்றான்.

‘அவர் எங்கே இருக்கிறார்? நான் இப்போதே அவரைப் பார்க்க வேண்டும். இரண்டு நாள்களாக அவரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்’.

‘முதலில் சாப்பிடு’ என்று அவன் சப்பாத்திகளை அவனிடத்தில் கொடுத்தான். போத்திக்கு நடப்பது நிஜமா கனவா என்று புரியவில்லை. இரு சப்பாத்திகளையும் நாலே வாயில் அள்ளி அடைத்துக்கொண்டு கையைக் கழுவிவிட்டு ஓடி வந்து, ‘நாம் போகலாம்’ என்று சொன்னான்.

அந்த வாலிபன் அவனை அழைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். வழியெங்கும் போத்தி தனக்கு நிகழ்ந்த அந்த ஒரு சிறு அனுபவத்தைப் பல்வேறு சொற்களில் திரும்பத் திரும்ப அந்த வாலிபனிடம் சொல்லிக்கொண்டே வந்தான். ‘நான் அவரை இதற்குமுன் பார்த்ததில்லை. அவரும் என்னைச் சந்தித்ததே இல்லை. ஒரு வழிப்போக்கனாக நான் இந்த ஊருக்கு வந்தேன். அவர் என்னைப் பார்த்தது மிஞ்சிப் போனால் பத்து விநாடிகள் இருக்கும். அதற்குள் நான் யார், என்ன செய்கிறேன் என்றெல்லாம் அவருக்குத் தெரிந்துவிட்டது என்றால்...’

‘அதை அறியப் பத்து விநாடிகள் அவருக்கு அதிகம். ஒரு கணம் போதும். சொல்லிவிடுவார்’ என்று சொன்னான்.

‘அப்படியா? அவ்வளவு பெரிய ஞானியா!’

‘அவர் எவ்வளவு பெரிய ஞானி என்று எனக்குச் சரியாகத் தெரியாது. நான் சிறுவன். அவரிடம் பயில்பவன்’.

போத்திக்கு அவனிடம் மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியவில்லை. அவனாகப் பேச்சுக் கொடுக்காவிட்டால் அந்த வாலிபன் வாயே திறப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தான். காசி நகரம் முழுவதையும் நன்கறிந்தவன் போல அவன் விறுவிறுவென்று நடந்துகொண்டிருந்தான்.

‘தம்பி சற்று மெதுவாக நட. என்னால் உன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை’ என்று போத்தி சொன்னான். அவன் நடை வேகத்தைச் சிறிது குறைத்தான். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த பின்பு குடிசைகள் அடர்ந்த குடியிருப்புப் பகுதி ஒன்றை அவன் வந்தடைந்தான். நதிக்கரையில் இருந்து அந்த இடம் குறைந்தது பத்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் என்று போத்தி நினைத்தான். அத்தனை தூரத்தையும் நடந்தேதான் கடந்திருந்தான்.

போத்திக்கு மிகவும் மூச்சு வாங்கியது. வாழ்வில் என்றுமே அவன் அத்தனை வேகமாக, அத்தனை தூரத்தை நடந்து கடந்ததில்லை. ‘அட இரப்பா! ஒரு பத்து நிமிடம் உட்கார்ந்துவிட்டுப் போகலாம்’ என்று சொல்லிவிட்டு ஓரிடத்தில் உட்கார்ந்தும் விட்டான். அந்த வாலிபன் சிரித்தான். ‘நமக்கு இன்னும் இருபது நிமிடங்கள் மட்டுமே உள்ளன ஐயா. குருநாதர் கிளம்பிவிடுவார்.’

‘எங்கே?’

‘வரணாவதி பறிக்க. போய்விட்டாரென்றால் திரும்பி வர எவ்வளவு நாள்களாகும் என்று தெரியாது’.

போத்தி அசந்துபோனான். ‘வரணாவதியா! அது இங்கே கிடைக்கிறதா!’

‘எங்கே கிடைக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் குருநாதர் வரணாவதி பறிக்கப்போவதாகத்தான் சொன்னார்’.

அதற்குமேல் அவனால் அங்கு உட்கார முடியவில்லை. அவனால் அதிகபட்சம் யோசிக்க முடிந்தது ஒன்றுதான். காசியில் அந்த மூலிகை இருக்கிறது! இது போதும். யோகியைச் சந்திக்கும்போது அதைக் குறித்து மேலும் கேட்டுத் தெரிந்துகொண்டுவிடலாம். அருமை. இரண்டு நாள்கள் அவரைத் தேடி அலைந்ததற்குச் சரியான பலன்.

மேலும் சிறிது தூரம் நடந்த பின்பு ஒரு குடிசை வாசலுக்கு வந்து சேர்ந்தார்கள்.

‘உள்ளே அழைத்து வா’ என்று யோகி உத்தரவு கொடுத்தார்.

போத்தி அந்த வாலிபனுடன் குடிசைக்குள் சென்றான். அவர் அந்தக் குடிசையின் வடக்குச் சுவர் ஓரம் ஒரு பாய் விரித்து அமர்ந்திருந்தார். குடிசையில் வேறு ஒரு பொருளும் இல்லை. ஒரே ஒரு பாய். அவ்வளவுதான்.

அவரைக் கண்டதும் போத்திக்கு ஏனோ உணர்ச்சி மேலிட்டு அழுகை வந்தது. சட்டென்று விழுந்து கும்பிட்டு எழுந்தான். அவர் உணர்ச்சியற்ற முகத்துடன் அவனை உற்றுப் பார்த்தார். பிறகு, ‘சொல். எதற்கு என்னைத் தேடினாய்?’

‘தெரியவில்லை ஐயா. கணப்பொழுதில் நீங்கள் நான் யார் என்பதைத் தெரிந்துகொண்டுவிட்டீர்கள். அதை நான் எதிர்பார்க்கவேயில்லை’.

‘அதனால் என்ன?’

‘உங்களுக்கு ஒன்றுமில்லை. ஆனால்.. ஆனால்..’

என்ன சொல்வதென்று போத்திக்குத் தெரியவில்லை. சட்டென்று தன்னைப் பற்றி, தன் பிறப்பு, வளர்ப்பு பற்றியெல்லாம் விலாவாரியாக எடுத்துச் சொல்லத் தொடங்கினான். கோட்டயத்தில் ஒரு பண்டிதரிடம் அதர்வம் பயிலச் சென்ற கட்டம் வந்தபோது சற்றுத் தயங்கினான்.

‘அவர் மகளை நீ ஏமாற்றிவிட்டாய். அதானே?’ என்று யோகி சட்டென்று கேட்டதும் அவனுக்கு அச்சமாகிவிட்டது.

‘முட்டாள். அதர்வத்தின் உபநிஷத்துகளுக்கு நிகராக இந்த உலகில் ஓரிலக்கியமும் கிடையாது. ஆயுர்வேதம் என்னும் அற்புதமான மருத்துவ முறை அதில் கிளைத்து வந்ததுதான். அது உன் கண்ணில் படவில்லை. பரிபூரணத்தின் வாசற்கதவைத் திறக்கும் எளிய சாவி அது. நீ அதைக் கொண்டு சாக்கடை நோண்டிக்கொண்டிருக்கிறாய்’.

போத்திக்கு அழுகை வந்தது.

‘இதோ பார். உன்னிடம் பேசவும் விவாதிக்கவும் எனக்கு ஒன்றுமில்லை. நீ என்னைத் தேடிக்கொண்டே இருந்ததால்தான் அழைத்து வரச் சொன்னேன். இந்தச் சந்திப்பு உனக்கு நல்லது எதையேனும் செய்ய வேண்டும் என்று விரும்புவாயானால் நீ செய்துகொண்டிருக்கும் அனைத்தையும் விட்டொழித்துவிட்டுப் போய் பாரதப் புழையில் முக்குப் போடு’ என்று சொல்லிவிட்டு அவர் எழுந்துவிட்டார்.

‘ஐயா, நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறேன். இன்று முதல் நான் உங்கள் சீடன்’ என்று போத்தி சொன்னான்.

அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை. ‘போபோ. எனக்கு வேலையிருக்கிறது’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.

‘ஐயா போய்விடாதீர்கள். ஒரு சொல். ஒரே ஒரு சொல்லை எனக்கு அளியுங்கள். காசி நகரத்தில் வரணாவதி எங்கே கிடைக்கிறது?’

அவர் ஒரு கணம் போத்தியை உற்றுப் பார்த்தார். பிறகு, ‘காசியில் வரணாவதி இருப்பதாக உனக்கு யார் சொன்னது?’ என்று கேட்டார். போத்தி விழித்தான். சீடனைப் பரிதாபமாகத் திரும்பிப் பார்த்தான். யோகி புரிந்துகொண்டார்.

‘அட முட்டாளே. நான் வரணாவதி பறிக்ககப்போகிறேன் என்று அவன் சொல்லியிருப்பான். அது காசியில் இருப்பதாகச் சொல்லியிருக்க மாட்டானே’.

‘அப்படியா? காசியில் கிடையாதா? வேறு எங்கே உள்ளது?’

மீண்டும் அவனை உற்றுப் பார்த்த யோகி, சற்றுச் சிரித்தார். ‘ஏன், உன் ஜென்சியிடம் கேளேன். முடிந்தால் அவள் பறித்துவந்து கொடுக்கட்டும்’ என்று சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார். திகைத்துவிட்ட போத்தி, அடுத்த விநாடி அவரைப் பின் தொடர்ந்து வெளியே பாய்ந்தான். ஆனால் யோகி எங்கே போனார் என்று தெரியவில்லை. அந்தச் சிறிய சந்தின் இருபுற எல்லைகளின் விளிம்புவரை அவர் நடந்தோ ஓடியோ சென்றதன் சுவடுகூட இல்லை.

(தொடரும்)

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

82. மோகினி

 

 

வரணாவதி. அதைச் சொல்ல ஆரம்பித்துத்தான் வினய், போத்தியின் வாரணாசி அனுபவத்துக்குப் போய்விட்டான். ஒரு விஷயம் மட்டும் எனக்கு நினைத்து நினைத்துச் சிரிப்பு மூட்டிக்கொண்டிருந்தது. எனக்கு யாரென்றே தெரியாத ஒரு குட்டி மந்திரவாதிகூட அண்ணாவைச் சந்தித்திருக்கிறான். ஒருமுறையல்ல; இருமுறை. ஆனால் இன்றுவரை ஒரு நாள் தவறாமல் அவனை நினைத்துக்கொண்டும், சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தேடிக்கொண்டும் இருக்கும் என் கண்ணில் மட்டும் அவன் சிக்கவேயில்லை. அதுவும் அந்தப் போத்தியை இரண்டாம் முறை இழுத்துவைத்து அவனே பேசி அனுப்பினான் என்று வினய் சொன்னபோது வாய்விட்டே சிரித்துவிட்டேன்.

‘உன்னை அவன் சந்திக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் நினைக்காமல் இருந்திருக்க மாட்டான்’ என்று வினய் சொன்னான்.

என்னை அவன் எதற்கு நினைக்க வேண்டும்? உடையளவில் சன்னியாசியாக இருப்பவன் நான். ஒழுக்கங்களுக்கும் எனக்கும் உள்ள இடைவெளி, எனக்கும் என் வீட்டுக்கும் இருந்த இடைவெளியினும் பெரிது. வெள்ளை அணிந்திருந்தால் நானொரு அரசியல்வாதி. வண்ணமயமாக என்னை அலங்கரித்துக்கொள்ள முடிவு செய்திருந்தால் நானொரு திரைக் கலைஞன். நான் காவியில் என்னைப் பொருத்திக்கொண்டேன். சன்னியாசி என்று சொல்லப்பட்டேன். அண்ணாவுக்கு நிச்சயமாக என் மீது வருத்தம் இருக்கும். எங்கள் மூன்று பேரில் என்ன காரணத்தாலோ அவன் என்னை நம்பியிருக்கிறான். சிறு வயதில் தன்னைப் பற்றிய சில விவரங்களைத் தெரிவிக்க என்னைத்தான் அவன் தேர்ந்தெடுத்தான். அது தவறு என்று பின்னாளில் நினைத்திருப்பான் என்று தோன்றியது.

காலத்தின் இலையுதிர்ப்பில் எனக்கு பெற்றோரைப் போலவே சகோதரர்களின் மீதிருந்த பாசமும் மெல்ல மெல்ல உலரத் தொடங்கியபின் மனச்சங்கடம் என்ற ஒன்றே எனக்கு இல்லாது போய்விட்டது. ஆனாலும் நான் நினைப்பேன். அவனை மட்டுமல்ல. அத்தனை பேரையுமே. வெறுமனே நினைத்துப் பார்ப்பது. நடந்த சம்பவங்களை மீண்டும் மனத்துக்குள் ஓடவிட்டு கவனிப்பது. உபயோகம் ஒன்றுமில்லை என்றாலும் எனக்கு அது ஒரு பொழுதுபோக்கு. இயல்பில் நான் மிகவும் விரும்பிய பெருங்கூட்டத் தனிமை என்னளவில் பூரணமாக வாய்த்தது ஓர் அதிர்ஷ்டம்தான்.  அம்மாவின் சாக்கில் அண்ணாவை ஊரில் சந்திக்க நேருமானால் எனக்கு அவனைப் பார்த்து ஒரு புன்னகை செய்வதைத் தவிர, அவனோடு பேசவும் அறியவும் வியக்கவும் ஒன்றும் இருக்காது என்றே தோன்றியது. அவன் வழி வேறு. அவனது தவமும் யோகமும் மற்றதும் என்னைப் பொறுத்தவரை நகைப்புக்குரியவை அல்லவே தவிர, வணங்கக்கூடியதும் அல்ல. இந்த உலகில் வணங்கத்தக்க விதத்தில் ஒரு கடவுள்கூடச் சிக்காத துரதிருஷ்டசாலி நான்.

எனக்கு மிகப்பெரிய வியப்பளித்த விஷயம், சன்னியாச தீட்சைக்காக வினய் நாயாக அலைந்திருக்கிறான் என்பது. சூரிப்போத்தியுடன் இருந்த காலத்தில் அவனால் வரணாவதியைப் பற்றித்தான் அறிய முடியவில்லையே தவிர, ஒன்றிரண்டு சாத்தான்களை வசப்படுத்தி, சில்லறை ஜாலங்கள் செய்யக் கற்றிருக்கிறான்.

‘ஒரு குட்டிச்சாத்தானால் கூடவா அந்த மூலிகையைக் கொண்டு வர முடியவில்லை?’ என்று நான் சிரித்தபடி கேட்டேன்.

‘போத்தியே எவ்வளவோ முயற்சி செய்திருக்கிறான். நானும் என்னாலான விதங்களில் எல்லாம் பாடுபட்டுப் பார்த்துவிட்டேன். அது மட்டும் முடியவில்லை’.

‘அப்படி என்ன மூலிகை அது?’

‘அது ஒரு விஷ முறிவு மூலிகை. எத்தகைய விஷத்தையும் கொல்லும்’.

‘யார் சொன்னது?’

‘எல்லா சித்தர்களும் சொல்லியிருக்கிறார்கள். வேதத்தில் இருக்கிறது’.

‘எந்த வேதம்?’

‘அதர்வ வேதம்’.

‘அடேங்கப்பா’.

‘இது உண்மை. பசித்த ஒருவன் இனம் காணாமல் விஷத்தை உணவென்று எடுத்து உண்டாலும் வரணாவதியை எள்ளோடு சேர்த்து அரைத்து நீருடன் குடிக்கக் கொடுத்தால் அது ஆலகால விஷமே ஆனாலும் செயலற்றுப் போகும்’.

‘விஷத்துக்கெல்லாம்தான் நவீன மருத்துவம் வந்துவிட்டதே. அந்த மூலிகையைத் தேடி எதற்கு அலைய வேண்டும்?’

‘விமல்! உன்னோடு நான் வாதம் செய்ய விரும்பவில்லை. ஆனால் அந்த மூலிகையைத் தேடி நான் பத்து வருடங்கள் அலைந்தேன்’.

அவன் அலைந்துகொண்டிருந்த காலங்களில் அவன் வளர்த்த சாத்தான்கள் அவனுக்கு சோறு போட்டிருக்கின்றன. சூனியம் வைப்பது. வைத்ததை எடுப்பது. திருட்டுப் பொருள்களை மீட்பது. பங்காளிச் சண்டைகள். தீ வைப்புச் சம்பவங்கள். ஒரு பொதுத் தேர்தல் சமயம் ராஜஸ்தானில் உள்ள ஒரு குக்கிராமத்தில் ஐந்நூறு குடிசைகளுக்குத் தீ வைக்கும் பொறுப்பை ஏற்று நிறைவேற்றியதாக வினய் சொன்னான். சொல்லிவிட்டு அழவும் செய்தான். ‘வெறும் பிழைப்புவாதியாகிப் போனேன் விமல்! வெறும் பிழைப்புவாதியாக!’

‘அதிலொன்றும் தவறில்லை விடு. நீ உன் குருநாதரைப் போலக் காதல் பிரச்னைகளைத் தீர்க்க முனையவில்லையா?’ என்று கேட்டேன்.

‘ஆரம்பத்தில் செய்தேன். பிறகு விட்டுவிட்டேன்’.

‘ஏன்?’

‘என்னால் எந்தப் பெண்ணையும் வசியம் செய்து என் வழிக்குக் கொண்டுவர முடிந்தது. ஆனால் என்னிடம் அந்தப் பணியை அளித்தவனுக்கு என்னால் நேர்மையாக இருக்க முடியவில்லை’ என்று சொல்லிவிட்டு, மீண்டும் தலையில் அடித்துக்கொண்டு அழுதான். எனக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. காதலைப் போலவே துறவின் மீது நாட்டம் கொண்ட மனமும் சின்னாபின்னப்பட்டு நிற்கவேண்டியதுதான் போலிருக்கிறது. இது சிக்கல். பெரும் சிக்கல். உள்ளக் கட்டமைப்பை பின்னப்படுத்திவிடத்தக்க சிக்கல். என் வாழ்வில் நான் இத்தகைய பலபேரைச் சந்தித்திருக்கிறேன். தத்துவங்களின் சிகரங்களில் உலவிக்கொண்டிருப்பவர்கள். தவத்தின் உக்கிர எல்லைகளைத் தொட்டுப் பார்த்தவர்கள். அனைத்து விதமான லாகிரிகளின் மீட்டல்களையும் கடந்து மீண்டவர்கள். எந்தக் கல் தடுக்கிப் பெண்ணில் விழுகிறோம் என்பது மட்டும் இறுதி வரை அவர்களுக்குப் புரியாமலேயே போய்விடுகிறது.

‘தனுஷ்கோடியில் நீ ஒரு பெண்ணின் பிரேதத்தை அழுகிய நிலையில் கண்டதாகச் சொன்னாயே, அதன் பிறகும்கூடவா உன்னால் முடியவில்லை?’ என்று நான் வினய்யிடம் கேட்டேன்.

அவன் சிறிது நேரம் அமைதியாக யோசித்துக்கொண்டிருந்தான். ரயிலின் சீரான தடதடப்பு மட்டுமே எனக்கும் அவனுக்கும் நடுவே நிகழ்ந்துகொண்டிருந்தது. பெட்டியில் அனைவருமே தூங்கிக்கொண்டிருந்தார்கள். எனக்கும் உறக்கம் வந்தது என்றாலும் அவனோடு பேசக் கிடைத்த சந்தர்ப்பத்தை நான் தவற விட விரும்பவில்லை.

வினய் சொன்னான், ‘ஆம். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு பல ஆண்டுகள் வரை நான் பெண்களைப் பொருட்படுத்தவேயில்லை’.

‘எந்தப் பெண் வந்து உன் விரதத்தைக் கலைத்தாள்?’

‘மோகினி’ என்று வினய் சொன்னான்.

மோகினியை அவன் கல்கத்தாவில் சந்தித்திருக்கிறான். அவளது தந்தை ஒரு கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். வரணாவதியைத் தேடி அருணாசல பிரதேசம் வரை சென்று சுற்றிவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த வினய், ஒருநாள் ஹௌரா பாலத்துக்கு அருகே அவளைப் பார்த்திருக்கிறான்.

‘ஒரு அம்பின் நுனியைப் போன்ற கூர்மை கொண்ட அப்படியொரு கண்ணை நான் அதற்குமுன் கண்டதே இல்லை’ என்று சொன்னான்.

மோகினி பெரிய அழகியில்லை. நிறமும் சற்று மட்டுத்தான். அவள் வங்காளிப் பெண்ணாக இருக்கமாட்டாள் என்று ஏனோ அவனுக்குத் தோன்றியது. வங்காளத்தில் யாரும் மோகினி என்று பெயர் வைப்பதில்லை என்று அவனுக்கு யாரோ சொல்லியிருக்கிறார்கள்.

‘அதெல்லாம் இல்லை. எனக்கே மோகினி கங்கோபாத்யாய் என்றொரு புள்ளியியல் அதிகாரியைத் தெரியும்’ என்று நான் சொன்னேன்.

‘ஆம். நான் விசாரித்த நபர் வங்காளி இல்லை. அதனால் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை’ என்று வினய் சொன்னான். அந்தப் பெண்ணின் கண்ணில் இருந்த வசீகரம் அவனை அன்றிரவு முழுதும் தூங்கவிடவில்லை. அன்றே அவன் கல்கத்தாவில் இருந்து கிளம்பி கேங்டாக் போவதற்கு இருந்திருக்கிறான். ஆனால் பயணத்தை ஒத்திப் போட்டுவிட்டு, தன் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு சாத்தானை அழைத்து மோகினி எங்கே இருக்கிறாள், என்ன செய்கிறாள் என்று அறிந்துவரச் சொல்லியிருக்கிறான்.

மறுநாள் மதியம் திரும்பி வந்த சாத்தான், அவள் ஒரு கல்லூரி மாணவி என்றும் மிகவும் நவநாகரிகமான ஆண்களை மட்டுமே ஏறெடுத்துப் பார்ப்பாள் என்றும் சொன்னது. உடனே வினய் ஒரு சலூனுக்குப் போய் திருத்தமாக முடி வெட்டி முகச் சவரம் செய்துகொண்டான். அவன் கையில் அப்போது இருந்த பணம் அதற்கே சரியாகப் போய்விட்டது. எனவே தனது கொள்கையைச் சற்று விலக்கி வைத்துவிட்டுத் தனது ஏவலாளியின்மூலம் ஒரு பெரிய துணிக்கடையில் இருந்து ஒரு கோட் சூட்டை எடுத்து வரச் செய்து அதனை அணிந்துகொண்டான். எஸ்பிளனேட்டில் இருந்த ஒரு பாட்டா ஷோ ரூமில் இருந்து ஒரு ஜோடி ஷூக்களையும் எடுத்து வந்து அணிந்துகொண்டான். போகிற காரியம் நல்லபடியாக முடிந்தபின்பு சம்பந்தப்பட்ட துணிக்கடை மற்றும் செருப்புக் கடைகளுக்குத் தீர்க்க வேண்டிய தொகையைப் பைசல் செய்துவிட வேண்டும் என்றும் எண்ணிக்கொண்டான்.

அன்று மாலை அவன் மோகினி படித்துக்கொண்டிருந்த கல்லூரி வாசலுக்குப் போய் நின்றபோது மணி நான்காகியிருந்தது. வினய்யின் ஏவல் சாத்தான் அவள் சரியாக நான்கு பத்துக்குக் கல்லூரியில் இருந்து வெளியே வருவாள் என்று சொல்லியிருந்தது. சொன்னது போலவே அவள் சரியான நேரத்துக்கு வந்தாள். அவளோடு இன்னும் இரண்டு தோழிகள் உடன் வந்துகொண்டிருந்தார்கள். வினய்க்கு அந்தக் கணம் அந்த மூன்று பெண்களையுமே மிகவும் பிடித்துப் போனது.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

83. காமரூபிணி

 

 

‘சித்ரா விஷயத்தில் நான் ஒரு தவறு செய்துவிட்டேன். அவளிடம் என் விருப்பத்தை நான் சொல்லியிருக்க வேண்டும். அது நிகழ்ந்திருந்தால் இத்தனை அவலங்களில் நான் சிக்கியிருக்க வேண்டி இருந்திருக்காது’ என்று வினய் சொன்னான். ‘எனக்குக் காரணமே புரியவில்லை விமல். உன்னிடம் ஆரம்பித்து உலகில் உள்ள அத்தனை பேரிடமும் நான் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டம் வரை பெரும் பொய்யனாக மட்டுமே இருந்திருக்கிறேன். மனத்தில் நினைக்கும் எதையும் யாரிடமும் சரியாகச் சொன்னதே இல்லை’.

‘இப்போதும் அப்படித்தானா?’ என்று கேட்டேன்.

‘நிச்சயமாக இல்லை. இப்போது என்னிடம் ரகசியங்கள் என்று ஏதுமில்லை. என் யோகம், என் தவம் எல்லாமே என் பொய்களைப் பொசுக்கியதுதான்’.

‘பெரிய விஷயம் வினய். அநேகமாக அது பெரும்பாலானவர்களுக்குக் கைகூடாது’.

‘ஆம். சிரமம்தான். ஆனால் நான் அதை ஓர் அப்பியாசமாகச் செய்தேன்’ என்று அவன் சொன்னான். செய்திருப்பான் என்றுதான் தோன்றியது. வழியெங்கும் அவன் தன்னைப் பற்றி சொல்லிக்கொண்டு வந்த பல கதைகள் மிகவும் பயங்கரமாக இருந்தன. காமத்தின் பேரழகை எப்படியெல்லாம் சிதைத்துச் சின்னாபின்னப்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் அவன் முயற்சி செய்திருந்தான். சற்றும் பதற்றமின்றி, யாரைக் குறித்த பயமும் இன்றி, எது பற்றிய அக்கறையும் இன்றிப் பெண்ணுடலைப் பிளந்து கடக்கப் பார்த்திருக்கிறான். ஒரு குரு அமையாமல் போய்விட்டதன் விளைவாக முகிழ்த்த பெரும் பித்தத்தின் உச்ச நிலையில் அவன் தன்னையே குருவாக நியமித்துக்கொள்ளப் பார்த்ததில் ஆரம்பித்திருக்கிறது பிசகு.

வினய் அப்போது யோனி மண்டல வாஸினியின் சன்னிதியில் இருந்தான். கௌஹாத்தியில் அப்போது பெரும் மழைக்காலம். நிலாச்சல் மலைக்குன்றை ஏறிக் கடக்கும்போதே காற்றும் மழையும் எண்திசைகளிலிருந்தும் பீறிட்டடித்துத் தாக்கியது. எந்தக் கணமும் தான் சரிந்து விழுந்துவிடுவோம் என்று வினய்க்குத் தோன்றியது. தவறான நேரத்தில் புறப்பட்டுவிட்டது பற்றிச் சிறிது வருத்தம் ஏற்பட்டது. ஆனாலும் அவனுக்குத் திரும்ப மனமில்லை. உயிரே போனாலும் காமரூபிணியின் சன்னிதானத்தில் போகட்டும் என்று முடிவு செய்துகொண்டு மலை ஏறிக்கொண்டிருந்தான். குத்தீட்டி போல உடலெங்கும் குத்திக் கிழித்த மழை வேகம் அலுப்பூட்டியது. சற்று பயமாகவும் இருந்தது. காமாக்யாவில் அப்போது படிக்கட்டு வசதிகள் கிடையாது. போக்குவரத்து அத்தனை எளிதல்ல. சிறிய குன்றுதான் என்றாலும் அபாயங்கள் அதிகம். கால் வைக்கும் இடம் கல்லா, மண்ணா, புதைச் சேறா என்று எளிதில் கண்டறிய முடியாது. சரிந்து விழ நேர்ந்தால் எழுவது சிரமம். புதர்கள் மண்டிய அதன் சரிவுகளில் விஷ நாகங்கள் வசித்தன. ஒன்றிரண்டு, பத்து நூறல்ல. கணக்கற்ற நாகங்கள். நாகத்தின் விஷத்துக்காகவே காமாக்யாவுக்கு வந்து போகும் ஒன்றிரண்டு பேரை அவன் அறிவான். அவர்கள் மூலமாகத்தான் அவன் தேவியின் சக்திகளைக் கேட்டறிந்திருந்தான்.

ஒரு தரிசனம். ஒரு பார்வை. ஒரு சொட்டு அருள். ஒரு சில்லுடையும் கணத்தில் தனக்குள் என்னவாவது நிகழ்ந்துவிடாதா என்று அவன் எதிர்பார்த்தான். அதுநாள் வரை அவன் வனதுர்க்கையைத் தவிர வேறு யாரையும் வணங்கியிருந்ததில்லை. அவள் அருளால்தான் அவனுக்குச் சில சக்திகள் கைகூடியிருந்தன. அவன் எதிரி பயமற்றவன். காயங்கள் உண்டாகாத உடல் அவனுக்கு வாய்த்திருந்தது. தனது மேல் வரிசைப் பற்களில் நான்கை விஷமேற்றி வைத்திருந்தான். இடது கை கட்டை விரல் நகத்துக்குள் அவன் பாதுகாத்து வளர்த்து வந்த இடாகினி, அவன் எண்ணும் காரியங்கள் உடனுக்குடன் நிறைவேற உதவி செய்துகொண்டிருந்தாள். அவள் வனதுர்க்கையின் அருளால் வாய்த்தவள். சிறுமி. சொன்னதைச் செய்பவள்.

போதும் என்று உட்கார்ந்துவிட ஏனோ அவனுக்கு விருப்பமில்லை. எல்லாம் அடைந்துவிட்டாற்போன்ற எண்ணம் வரும்போதெல்லாம் எதுவுமே அடையக்கூடியதாக இல்லை என்னும் எண்ணமும் சேர்ந்து எழுந்தது. எந்தக் கணமும் இடாகினி தன் கட்டை விரலில் இருந்து உதிர்ந்து ஓடிவிடுவாள் என்ற அச்சத்தில் எப்போதும் கட்டை விரலுக்குக் கட்டுப் போட்டு வைத்திருந்தான். அழகான அனைத்தும் அபத்தமானவையாகவும் ஒருசேரக் காட்சியளிக்கின்றன. அபத்தங்கள் களைந்த ஒரு பெருவாழ்வை உத்தேசிப்பது அத்தனை பெரிய பிழையா? எல்லாம் வேண்டும், எதுவும் வேண்டாம், எல்லாம் இருக்கிறது, எதுவும் இல்லாவிட்டாலும் பாதகமில்லை என்னும் நான்கு முனைகளுக்கிடையே சிக்கி ஊசலாடிக்கொண்டிருந்தது அவன் மனம்.

‘நீ காமரூபிணியை குருவாகக் கொள். உன் பிரச்னையை அவள் சரி செய்து கொடுப்பாள்’ என்று கௌஹாத்தியில் அவன் சந்தித்த தந்திரி ஒருவன் சொன்னான்.

‘அன்னை எப்படி குருவாவாள்? அவளை அடைவதற்கே எனக்கு ஒரு குருமுகம் தேவைப்படுகிறதே?’

‘அது மற்ற ரூபங்களுக்கு. காமரூபிணி வெறும் சக்தி பீடாதிபதியல்ல. குரு பீடமும் அவளே ஆவாள். நீ எத்தனைத் தீவிரத்துடன் அவளை அணுகுகிறாய் என்பதில் இருக்கிறது’ என்று அந்த தந்திரி சொல்லி அனுப்பினான். இத்தனை அலைச்சல்களுக்குப் பிறகும் ஒரு குரு அமையாத வெறுமையில் இருந்த வினய்க்கு அந்தச் சொற்கள் மிகுந்த நிம்மதியளித்தன. அன்று முதல் நாற்பத்து எட்டு தினங்களுக்கு அவன் காமரூபிணியைக் குறி வைத்துத் தவமிருக்க ஆரம்பித்தான். மூன்று தினங்களுக்கு ஒருமுறை உணவு. அரைக் கிலோ கோழிக்கறி அல்லது பத்து முட்டைகள். இரண்டு வாழைப் பழங்கள். இரவு ஒன்பது மணிக்கு உண்டு முடித்துவிட்டு தியானத்தில் அமர்ந்தால் இடைவிடாமல் எழுபது மணி நேரம். தந்திரி அவனிடம் சொல்லியிருந்தான். ‘யோனி என்பது ஒரு வாசல். பெண்ணின் உறுப்பு என்று நீ நினைத்தால் அது. பிரபஞ்சத்தின் கர்ப்ப கிரகத்தின் நுழைவாயில் என்று எண்ண முடியுமானால் அதுவாகும். விஸ்வ யோனி என்று விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வருகிற சொல்லை எண்ணிப் பார்’.

கௌஹாத்தியில் இருந்து தென் கிழக்கே சுமார் முன்னூறு கிலோ மீட்டர் தள்ளி சில்ச்சார் என்ற இடத்தில் அவன் அப்போது இருந்தான். கடும் குளிரும் அடர்ந்த மலைக்கானகமும் திடீர் திடீர் என்று பெய்த பெருமழையும் அவனது தவத்துக்காகவே உருவாக்கப்பட்டவை போல அவனுக்குத் தோன்றியது. உள்ளூர் ஆதிவாசிகளின் உதவியுடன் ஒரு சிறிய குகையைத் தன் வசிப்பிடமாக்கிக்கொண்டு அமர்ந்தான். பாம்புகளைத் தவிர வேறு அபாயமில்லை என்று ஆதிவாசிகள் சொன்னார்கள். பாம்புகள் எனக்குப் பிரச்னை இல்லை என்று வினய் சொன்னான். தனக்கு உதவி செய்த ஆதிவாசிகளுக்கு அவன் தனது இடாகினியின் உதவியால் சில அன்பளிப்புகளைத் தந்து சகாயம் பிடித்திருந்தான். மூன்று நாள்களுக்கு ஒருமுறை அரைக் கிலோ கோழிக்கறி மட்டும் கிடைத்தால் போதும் என்று சொல்லியிருந்தான். கறி கிடைக்காவிட்டால் பத்து முட்டைகள். அதற்குமேல் தனக்கு எந்தத் தேவையும் இல்லை என்று அவன் சொன்னது ஆதிவாசிகளுக்கு வியப்பாக இருந்தது. யாரோ யோகி வந்திருக்கிறார் என்று எண்ணிக்கொண்டு கும்பிட்டுவிட்டுப் போனார்கள்.

வினய் அந்த நாற்பத்து எட்டு தினங்களும் அந்தக் குகையைவிட்டு வெளியே வரவேயில்லை. ஒரு யோனியின் தோற்றத்தைத் தனது தவப் பொருளாகப் புருவ மத்தியில் கொண்டு நிறுத்தினான். காமாக்யா தேவியை அதில் ஆவாஹனம் செய்து மானசீக பூஜை நிகழ்த்தினான். ஒரு புள்ளியாகத் தோன்றிய அந்த யோனி மெல்ல மெல்ல விரிவடைந்து ஒரு வளையல் அளவு வட்டமானது. தேவியின் சன்னிதியைத் தன் மானசீகத்தில் அவன் நெருங்கப் பார்த்தான். இருளும் புகையும் ஈரமும் குங்கிலிய மணமுமாக அந்தக் குகை நீண்டுகொண்டே சென்றது. வினய் அந்த இருளுக்குள் தன் பயணத்தை ஆரம்பித்தான். எங்குமே வெளிச்சத்தின் சிறு புள்ளியும் இல்லாத அடர் இருள். ‘அப்படித்தான் இருக்கும்; பயந்துவிடாதே. நடப்பதை நிறுத்தியும் விடாதே’ என்று தந்திரி சொல்லியிருந்தான். ‘எங்கே உனக்கு வெளிச்சத்தின் முதல் சொட்டு தரிசனமாகிறதோ அதுதான் தேவி. அது தெரிந்ததும் எழுந்து காமாக்யாவுக்குச் செல்’.

நாற்பத்து எட்டு தினங்கள். விரதம் முடிவுறும் கணத்துக்குச் சில மணி நேரங்கள் முன்னதாகவே அவன் வெளிச்சத்தைப் பார்த்துவிட்டான். பரவசத்தில் அவன் கண்களில் இருந்து தாரை தாரையாக நீர் வழிந்துகொண்டே இருந்தது. இதுதான், இதுதான் என்று உள்ளுக்குள் ஆனந்தக் கூத்தாடினான். ஒரு புள்ளி. ஒரே ஒரு புள்ளி வெளிச்சம். அது தெரிந்துவிட்டது. ஆனால் தொலை தூரமாக இருந்தது. வினய் அந்தப் புள்ளியை நோக்கி ஓடத் தொடங்கினான். எவ்வளவு நேரம் ஓடியிருப்பான் என்று அவனுக்குத் தெரியாது. ஆனால் ஓடிக்கொண்டே இருந்தான். மிகச் சிறிய புள்ளியாகத் தெரிந்த அந்த தரிசன வெளிச்சம் சற்றே பெரிதாகத் தோற்றம் கொள்ளத் தொடங்கியபோது அவன் அம்மா என்று அலறினான். அடுத்தக் கணம் கண்ணை விழித்துத் துள்ளி எழுந்தான். தனது இடாகினியின் கட்டை அவிழ்த்து வெளியே இறக்கிவிட்டு உடனே தன்னைக் காமாக்யாவுக்குத் தூக்கிச் செல்லும்படிச் சொன்னான்.

அவன் அங்கு வந்து சேர்ந்தபோது பலத்த மழை பெய்துகொண்டிருந்தது.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

84. இறக்கி வைத்தல்

 

 

வினய் கேரளத்தில் திரிந்துகொண்டிருந்த காலத்தில் நிறைய மழைகளைக் கண்டிருக்கிறான். நின்று அடிக்கும் மழை. ஒரே வீச்சாகக் கொட்டிக் கவிழ்த்துவிட்டு ஓடிவிடுகிற மழை. நசநசவென்று நடக்க விடாத தூறலால் படுத்தியெடுக்கும் மழை. பருவ காலங்களின் ஒழுக்கம் காத்து அடிக்கிற சாரல் மழை. ஆனால் கேரளத்து மழைக்கும் காமாக்யாவில் அவன் பார்த்த மழைக்கும் சம்பந்தமே இல்லை என்று தோன்றியது. இந்த மழையில் ஓர் உக்கிரம் இருந்தது. ஆவேசம் இருந்தது. எதையோ உருட்டிப் புரட்டிக்கொண்டு ஓடிவிடும் வேகம் தெரிந்தது. எப்போதும் இப்படித்தானோ என்று வினய் நினைத்தான். ஏனென்றால் மக்கள் அந்த மழை வேகத்தைப் பெரிதாகப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. மழை அடிக்க ஆரம்பித்ததும் அவர்கள் ஆங்காங்கே கடைகளில் ஒதுங்கிக்கொண்டார்கள். குடை கொண்டு வந்தவர்கள் குடையை விரித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள். கோயிலுக்குப் போய்க்கொண்டிருந்தவர்கள்கூட பெரிதாக மழைக்குக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. முகத்தை மட்டும் அவ்வப்போது துடைத்துக்கொண்டு மலை ஏறியபடியேதான் இருந்தார்கள். அவனுக்குத்தான் காற்றும் மழையும் கலந்தடித்த அந்த வேகம் பயங்கரமாக இருந்தது. இந்த மழையும் தனக்காகவே அனுப்பப்பட்டதாக நினைத்தான். ஒரு குறியீட்டைப் போல மழை தன்னை விடாமல் துரத்தி வருகிறதென்று அவனுக்குத் தோன்றியது. அதன் பொருளை யோசித்தபடி அவன் மெல்ல மெல்ல மலையேறிக்கொண்டிருந்தான்.

பாதி வழி கடந்திருந்த நேரம் மலைப் பாதையில் மழைக்குத் தன்னைத் தின்னக் கொடுத்தபடி யாரோ ஒருவன் சிவனேயென்று அமர்ந்திருந்ததை வினய் பார்த்தான். பரதேசிக் கோலம் இல்லை. மழுங்கச் சிரைத்த முகம். திருத்தமாகச் சீவப்பட்ட தலைமுடி. ஒரு ஜிப்பாவும் தொளதொளவென்று பைஜாமாவும் அணிந்திருந்தான். மழைக்கும் தனக்கும் தொடர்பே இல்லாதது போல மலைப்பாதையில் அமர்ந்து எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால் அவன் கையில் ஒரு ஜபமாலை இருந்தது. அதுதான் வினய்யை அவன்பால் ஈர்த்தது. அவனுக்கு எப்படியும் நாற்பதில் இருந்து நாற்பத்து ஐந்து வயதிருக்கும் என்று நினைத்தான். வெள்ளை என்றோ மாநிறம் என்றோ சட்டென்று சொல்லிவிட முடியாத அசாமிய முகம். மூக்கை அழுத்தி முன் நெற்றி சற்று மேடிட்டிருந்தது. புருவங்களுக்கு அடியில் வெகு தூரத்தில் கண்கள் இருப்பது போலத் தெரிந்தது.

கோயிலுக்கு வந்த யாரோ ஒருவன் மழையை அனுபவிக்க அப்படி வழியில் அமர்ந்திருக்கிறான் என்று வினய் நினைத்தான். நெருங்கியபோதுதான் அது இல்லை என்பது புரிந்தது. நான்கடி தூரத்தில் வினய் அவனை நெருங்கி வந்தபோது அவன் ‘நில்’ என்று சொன்னான்.

‘என்ன?’

‘கையில் என்ன கட்டு?’

வினய் தன் இடக்கை கட்டை விரலைப் பார்த்தான். அவன் சுற்றியிருந்த துணி ஈரமாகியிருந்தது. அவன் சட்டென்று விரல்களை மடக்கி ஈரத்தைப் பிழிந்தான்.

‘எதற்குக் கோயிலுக்குப் போகிறாய்?’

‘தேவியை தரிசிக்க’.

‘என்ன கேட்கப் போகிறாய்?’

‘உனக்கு எதற்கு அது?’

‘இடாகினிகளை அவள் அனுமதிப்பதில்லை’ என்று அவன் சொன்னான். வினய்க்கு திடுக்கிட்டுப் போனது. ‘உனக்கெப்படித் தெரியும்?’ என்று திரும்பக் கேட்டான்.

‘உன் பற்கள் நான்கில் கருநாக விஷம் உள்ளது. அதையும் அவள் விரும்ப மாட்டாள்’.

‘ஐயோ’.

‘உன் நாற்பத்து எட்டு நாள் விரதம் உனக்குப் பலனளிக்க வேண்டாமா?’

‘இல்லை. நிச்சயமாகப் பலன் வேண்டும். எனக்கு தேவியின் அருள் வேண்டும்’.

‘அப்படியானால் போ. பிரம்மபுத்திராவில் போய் முக்குப் போடு. உன் கட்டை விரலில் வைத்திருப்பதோடுகூட அந்த நான்கு பற்களை உடைத்துச் சேர்த்து ஒரு மூட்டையாகக் கட்டு. பின்புறமாகத் திரும்பி நின்று நதியில் போட்டுவிட்டு மீண்டும் தலை முழுகிவிட்டு எழுந்து வா’.

வினய் திகைத்துப் போய் அப்படியே நெடுநேரம் நின்றிருந்தான். அவனாகப் பேசட்டும் என்று அந்த அசாமியன் காத்திருந்தான். மழை நிற்கவேயில்லை. அடித்து வெளுத்துக்கொண்டிருந்தது. கோயிலை நோக்கிப் போய்க்கொண்டிருந்தவர்களும் கோயிலில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தவர்களும் மறைந்துவிட்டார்கள். பிராந்தியத்தில் உயிருடன் இருந்ததே அவர்கள் இருவர் மட்டும்தான் என்பது போலிருந்தது. நெடு நேரம் யோசனைக்குப் பிறகு வினய் சொன்னான், ‘இந்த ஒரு இடாகினிக்காக நான் எட்டு வருடங்கள் செலவிட்டிருக்கிறேன்’.

‘சரி’.

‘விஷ ஜந்துக்கள் என்னை நெருங்க இயலாதபடிக்கு என் உடலையே ஒரு விஷப் பாத்திரமாக்கி வைத்திருக்கிறேன்’.

‘தெரியும். அதனால்தான் சொல்கிறேன். தேவியின் முன்னால் காலிப் பாத்திரங்களை மட்டுமே வைக்க வேண்டும். அவள் நிரப்பித்தர இடமில்லாத பொருள்களுக்கு சன்னிதானத்தில் இடமில்லை’.

வினய்க்கு அழுகை வந்தது. சிறிது நேரம் கதறிக் கதறி அழுதான். அவன் அழுது முடிக்கும்வரை காத்திருந்த அசாமியன், ‘எதற்கு அழுதாய்?’ என்று பிறகு கேட்டான்.

‘தெரியவில்லை. நான் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இங்கு வந்திருக்கிறேன்’.

‘தெரியும்’.

‘நீங்கள் சித்தரா?’

‘என்னவாயிருந்தால் உனக்கென்ன? உனக்குச் சொன்னது உனக்குப் புரிந்ததா இல்லையா? இங்கிருந்து நதிப் படுகையை பதினொரு மணி நேரத்தில் நீ அடையலாம். உன் இடாகினியைப் பயன்படுத்தாதே. நடந்து செல். அல்லது பஸ்ஸில் ஏறிப் போ. மூன்று மணி நேரத்தில் போகலாம்’.

‘என்னிடம் பணமில்லை’.

‘பிச்சை எடு’.

வினய்க்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவன் நிச்சயமாக ஒரு சாதாரண மனிதன் இல்லை என்று தெரிந்தது. ஒரு சித்தனாகவோ யோகியாகவோ இருக்கலாம். தனக்காக அவன் தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டும் வந்து அமர்ந்திருக்கலாம் என்று தோன்றியது. அது ஒருவேளை அண்ணாவாகவே இருக்குமோ என்றும் அவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. கேட்கத் தயக்கமாக இருந்தது.

‘என்ன யோசிக்கிறாய்?’

‘நீங்கள் சொல்வதெல்லாம் சரி. காமரூபிணியின் சன்னிதியில் நான் இந்த இடாகினியுடன் போய் நிற்பது அபசாரம்தான். ஆனால் இவளும் என்னை விட்டுப் போய்விட்டால் நான் ஒன்றுமில்லாதவன் ஆகிவிடுவேன்’.

‘இப்போது மட்டும் உன்னிடம் என்ன இருக்கிறது?’

‘அதுவும் சரிதான். ஒன்றுமில்லாதவன் தான். ஆனால் உயிருடனாவது இருக்கிறேன்’.

‘கேவலம் ஒரு பேயைப் பிரிந்தால் இறந்துவிடுவாயா? அத்தனை பலவீனமானவனா நீ?’

‘தெரியவில்லை. அப்படித்தான் நினைக்கிறேன். நான் நிறைய அடிபட்டவன். எனக்கு குருவருள் கூடவில்லை. அத்தனை பெரிய பாவி’.

அவன் நெடுநேரம் வினய்யை உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தான். மழை சற்று விட்டிருந்தது. தூறல் மட்டுமே அப்போது இருந்தது. குளிர்க்காற்று ஒரு குத்தீட்டியைப் போல உடலெங்கும் குத்திக் கிழித்துக்கொண்டிருந்தது.

‘நீ தவமிருந்து வெளிச்சம் கண்டிருக்கிறாய். என்றால் அவள் சன்னிதானத்துக்குள் நுழைய உனக்கு அனுமதி கிடைத்திருக்கிறது என்று பொருள். முழுக்க நம்பி அவளைச் சரணடைந்தால் நீ நினைத்தது நடக்கும். இதற்குமேல் நான் சொல்ல ஒன்றுமில்லை’ என்று சொல்லிவிட்டு அவன் எழுந்துகொண்டான். வினய் ஏதோ சொல்ல வாயெடுக்குமுன் அவன் விறுவிறுவென்று நடந்து காணாமல் போனான். வினய்க்கு மிகவும் சங்கடமாக இருந்தது. என்ன செய்வதென்று புரியவில்லை. இத்தனை பேசிய மனிதன், நீ சன்னிதிக்குள் நுழைந்த கணம் எல்லாம் நடந்துவிடும் என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப் போயிருக்கலாம் என்று நினைத்தான். பிறகு தன் நினைப்பின் அபத்தம் புரிந்து சற்று வெட்கப்பட்டான். என்ன செய்யலாம் என்று புரியாத குழப்பத்துடன் மீண்டும் குன்றை ஏறிக் கடந்து கோயிலை நெருங்கினான்.

தயக்கமாக இருந்தது. கைக்கட்டுடன் உள்ளே போகாதே என்று அந்த அசாமியன் சொல்லியிருந்தான். போனால் என்ன ஆகும் என்று சொல்லவில்லை. போய்ப் பார்த்தால்தான் என்ன என்று சபலமாக இருந்தது. போன காரியம் நடக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்று பயமாகவும் இருந்தது. அன்று முழுவதும் அவன் மன ஊசலாட்டத்துடன் அங்கேயே நின்று கோயிலைப் பார்த்தபடியே கழித்தான். பிறகு ஒரு முடிவுக்கு வந்து சன்னிதிக்குள் நுழையாமல் விறுவிறுவென்று கீழே இறங்கினான். நெருக்கத்தில் உள்ள நதிக்கரை எங்கே என்று கேட்டறிந்து அந்தத் திசை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

இரண்டு நாள் இடைவிடாமல், மறு சிந்தனை இல்லாமல் நடந்து அவன் நதிப் படுகையை அடைந்தான். ஒரு பெருங்கடலை நிகர்த்த தோற்றத்துடன் பிரம்மபுத்திரா அங்கே ஆரவாரமுடன் அலையடித்துப் பொங்கிப் பொங்கித் தணிந்துகொண்டிருந்தது. வினய் அதன் கரையில் வந்து நின்றான். தனது இடது கை கட்டைவிரலைப் பார்த்தான். அதன் கட்டை அவிழ்த்தான். தன் வேட்டியைக் களைந்து இடாகினியை அதில் இறக்கி வைத்தான். ஒரு கூழாங்கல்லை எடுத்துத் தனது நான்கு விஷப் பற்களைத் தட்டி உடைத்து அதில் போட்டான். ரத்தம் வந்தது. வலித்தது. பொறுத்துக்கொண்டு வேட்டியை இறுக்கிக் கட்டி முடிச்சுப் போட்டு ஒரு மூட்டையாக்கினான். தலைக்குமேலே அதை ஏந்தி எடுத்துக்கொண்டு நதிக்குள் இறங்கினான். அந்த அசாமியன் சொன்னதைப் போல நதிக்கு எதிர்முகமாகத் திரும்பி நின்றுகொண்டு கண்ணை மூடிக் காமரூபிணியை நினைத்தான்.

நெடு நேரம் நினைத்தும் அவள் வரவில்லை.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

85. கருவி

 

 

நான் வினய்யின் கரங்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். உணர்ச்சி வேகத்தில் எங்கே அவன் ஓடும் ரயிலில் இருந்து விழுந்துவிடுவானோ என்ற சந்தேகம் வந்ததே காரணம். தனது அனுபவங்களை வெட்கம் பாராமல் வெளிப்படையாகச் சொல்லிக்கொண்டு வந்தவன் இடையிடையே கண் கலங்கி நின்றதுதான் என்னால் சகிக்க முடியாததாக இருந்தது.

‘இதோ பார் வினய்! கண்ணீர் என்பது ரத்தத்தினும் விலை மதிப்பற்றது. நீ அதை அதிகம் விரயம் செய்கிறாய்’ என்று சொன்னேன்.

‘ஆம். கையாலாகாதவன் அதைத்தான் செய்வான்’.

‘ஏன் அப்படி நினைக்கிறாய்? உனக்கு இன்னும் வயது இருக்கிறது. உடல் ஆரோக்கியம்கூடப் பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது’.

‘இல்லை. நான் சர்க்கரை நோயாளி’.

‘அதைவிடு. என்னால் அதை மூன்று மாதங்களில் முற்றிலுமாகக் குணப்படுத்த முடியும். என் அண்ணனுக்காக நான் அதைச் செய்யமாட்டேனா? நீ ஏன் உன் மனத்தை விட்டுவிட நினைக்கிறாய்? எல்லாம் போய்விட்டது என்று ஒரு நிலை யாருக்கும் இல்லை. ஏதோ ஒன்று மிச்சம் இருப்பதால்தான் உலகம் இன்னும் அழியாதிருக்கிறது’.

‘அப்படியா நினைக்கிறாய்?’

‘நிச்சயமாக’ என்று சொன்னேன். அவனது உணர்ச்சி ஆவேசத்தைச் சற்று மட்டுப்படுத்த நினைத்து சித்ராவை வினோத்துக்குத் திருமணம் செய்துவைக்க வீட்டில் எடுத்த முயற்சிகளைப் பற்றிச் சொன்னேன். வினய்யால் அதை நம்பவே முடியவில்லை. ‘வினோத்தா அப்படிச் செய்தான்?’ என்று கேட்டான்.

‘மிச்சம் இருந்தவன் அவன் மட்டும்தானே? அவன்தான் செய்ய முடியும்’.

‘ஆனால் அவன் திருமணம் வரை சென்றிருக்க வேண்டாம்’.

‘இதை யார் சொல்வது? அவன் விதி அந்த ஜானவாச ஊர்வலத்துக்குப் பிறகு உறக்கம் கலைந்து எழுந்திருக்கிறது’.

‘சித்ரா பாவம்’.

‘பாவம்தான். ஆனால் அந்தப் பாவத்தில் உன் பங்கு சொற்பம் என்று நினைத்து சந்தோஷப்படு’.

‘அதுவும் சரிதான்’ என்று வினய் சொன்னான். சற்று சிரித்த மாதிரி இருந்தது. அது எனக்கு நிம்மதியளித்தது. உண்மையில் அவன் தனது காமாக்யா அனுபவங்களைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கவே வேண்டாம் என்றுதான் நினைத்தேன். சராசரிகளால் நுழையவே முடியாத ஒரு பேருலகின் வாசல் கதவு வரை சென்று தட்டாமல் திரும்பிவிட்ட பரிதாபம் அவனது ஒவ்வொரு சொல்லிலும் தொனித்தது.

‘ஆனாலும் நீ செய்தது அக்கிரமம் வினய். மூட்டை கட்டித் தலையில் ஏற்றிய பின்பு போடவேண்டாம் என்று எப்படித் தோன்றியது?’

‘அந்நேரம் என் மனத்தில் காமரூபிணி உதித்திருந்தால் நான் போட்டிருப்பேன்’.

‘முட்டாள். அவள் கர்ப்பகிரகத்தின் கதவு திறக்கவே உனக்கு நாற்பத்து எட்டு தினங்கள் தேவைப்பட்டிருக்கின்றன. அதெப்படி ஒரு கணத்தில் அவள் உனக்குத் தோன்றுவாள்?’

‘எனக்கு அச்சமாக இருந்தது விமல். நான் அந்தக் கணம் எடுத்த முடிவு மிகப் பெரிது. அது என் வாழ்நாள் சேமிப்பு. மொத்தமாக மூட்டை கட்டி பிரம்மபுத்திராவில் போட்டுவிட்டுக் காமாக்யாவுக்குப் போய் நிற்கத் தயாராக இருந்தேன். ஆனால் ஒன்றும் கிடைக்காது போயிருந்தால்?’

‘இதற்கு நீ நாத்திகனாக இருந்திருக்கலாம்’ என்று சொன்னேன். அவன் தனது இடாகினியுடன்தான் கல்கத்தாவுக்குத் திரும்பிப் போயிருக்கிறான். என்ன பெரிய குருமுகம்? இடைவிடாத ஜபத்தின்மூலம் எத்தகைய பேய்களையும் வசப்படுத்த முடியும் என்பதை அவன் அறிந்திருந்தான். எளிய வனதுர்க்கை மந்திரங்கள். சூரிப்போத்தி சொல்லிக் கொடுத்தவை. எதற்குப் பயன்படுத்துகிறோம் என்பதில் இருக்கிறது புனிதமும் அவலமும். தந்திரங்களின் பெருங்கதவைத் திறக்கக் காமரூபிணி தேவையில்லை. சில பெண்கள் போதும். சில பெண் கருவிகள் போதும்.

தனது தகுதியின்மை பற்றிய அச்சமே அவனை காமாக்யாவுக்குத் திரும்பச் செல்லவிடாமல் தடுத்தது என்பதைப் புரிந்துகொண்டேன்.

‘நீ போயிருக்க வேண்டும் வினய். அப்படி ஒரு இடாகினியை நீ இழந்திருந்தாலும் பாதகமில்லை. காமரூபிணி உனக்கு வைத்த பரீட்சையை நீ எழுதாமல் விட்டது தவறு. குறைந்தபட்சம் நீ அவளையாவது அறிந்துகொண்டிருக்கலாம். அவள் உண்மையா பொய்யா என்பதையாவது’.

‘பொய் என்கிறாயா?’

‘நான் சொல்லவில்லையே? உனக்கொரு தரிசனம் கிட்டியிருக்கும் என்றுதான் சொன்னேன்’.

என்ன காரணத்தாலோ அவனுக்கு கல்கத்தாவுக்கு வந்தபின்பு உடனடியாகத் துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெறத் தொடங்கியிருக்கிறது. ஒரு காவித் துணியை எடுத்து மேலே போட ஒரு நபர் தேவை என்பதற்கு அப்பால் ஒரு குருவின் இருப்பும் அத்தியாவசியமும் தனக்கு அத்தனை வேண்டியிருக்காது என்று அப்போது நினைத்தான். சிவனைப் போலொரு சுயம்பு சன்னியாசியாகத் தன்னால் முகிழ்த்தெழ முடியும் என்று எண்ணிக்கொண்டான். சக்தியின் ஊற்றுக்கண்ணை உடலில் பாதியாகவும் சிரசில் மீதியாகவும் கொண்டவன் அவன். பொங்கிப் பெருகும் கங்கையென்பது விந்துப் பெருங்கடலன்றி வேறென்னவாக இருந்துவிட முடியும்?

வினய் ஒரு முடிவுக்கு வந்திருந்தான். இனி குருவைத் தேடி அலைவதில்லை. தவங்களில் நேரம் கடத்தப் போவதில்லை. தெய்வங்கள் சௌக்கியமாக இருக்கட்டும். தேவதைகளும் சாத்தான்களும் எனக்குப் போதும். ஒன்றல்ல; இனி பத்து விரல்களிலும் கட்டுகள் இருக்கும். இடாகினிகளும் இட்சிணிகளும் சாத்தான்களும் நம்பத்தகுந்தவை. கிட்டாத பேரின்பத்துக்கு வாழ்வை ஆகுதியாக்கும் அவலத்தை இனியும் செய்வதில் அர்த்தமில்லை. எத்தனை ஆண்டுகள் வீணடித்திருக்கிறேன்! எத்தனை இரவுகளை உறங்காது கழித்திருக்கிறேன்! எத்தனை பசி. எத்தனைக் கண்ணீர். என் இருப்பின் நியாயத்தை, என் அலைதலின் அர்த்தத்தை உலகம் முழுதும் விளங்கச் செய்வது தவிர இனி வேறு பணியில்லை.

அன்றைக்குத்தான் அவன் மோகினியைப் பார்த்தான். அதற்கு மறுநாள்தான் அவள் தனதிரு தோழிகளுடன் கல்லூரியில் இருந்து வெளியே வருவதைக் கண்டான். தன் இடக்கை கட்டை விரலைச் சுற்றியிருந்த துணியை அவிழ்த்து இடாகினியை வெளியே விட்டான்.

எஸ்பிளனேடில் வினய் ஒரு விடுதி அறையை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தான். மோகினி அந்த இடத்துக்கு வந்தபோது அவன் முழு நீளக் காவி அங்கி அணிந்து தியானத்தில் அமர்ந்திருந்தான். அவன் கண் விழிக்கும் வரை காத்திருந்த மோகினி, விழித்ததும் விழுந்து வணங்கிவிட்டு, ‘உங்களைப் பற்றி ஒரு பெண் மிகவும் உயர்வாகச் சொன்னாள். நீங்கள் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறீர்களாமே?’ என்று கேட்டாள்.

வினய் பதில் சொல்லவில்லை. தனது இடக்கையை ஒருமுறை மூடித் திறந்து ஒரு எலுமிச்சம்பழத்தை எடுத்து அவளிடம் கொடுத்தான். மோகினிக்கு அதுவே பரவசமளிக்கப் போதுமானதாக இருந்தது. மீண்டும் ஒருமுறை பயபக்தியுடன் அவன் காலில் விழுந்து வணங்கி எழுந்தாள்.

‘உட்கார் பெண்ணே. உன் சைனஸ் இப்போது பொறுத்துக்கொள்ளும்படியாக இருக்கிறதா?’

‘உங்களுக்கு எப்படித் தெரியும்? மாத்திரை எடுத்துக்கொள்கிறேன் சுவாமிஜி’.

‘நல்லது. அந்த எலுமிச்சம்பழத்தை உன்னால் அப்படியே கடித்து உண்ண முடிகிறதா பார். விதைகளோடு சேர்த்து’.

அவள் சற்றுத் தயங்கினாள். ‘ஒன்றும் ஆகாது. சாப்பிடு’.

‘எனக்குப் புளிப்பு அவ்வளவாகப் பிடிக்காது’.

‘சரி. அது புளிக்காது. சாப்பிடு’.

அவள் அந்தப் பழத்தை அவன் எதிரிலேயே வாயில் போட்டு மென்று தின்று முடித்தாள்.

‘புளித்ததா?’

‘இல்லை’.

‘நல்லது. இனி உனக்கு சைனஸ் இருக்காது’.

‘உண்மையாகவா!’

‘அப்படித்தான் நினைக்கிறேன்’.

ஒரு வாரம் வினய் அந்த விடுதி அறையிலேயேதான் தங்கியிருந்தான். மோகினி மீண்டும் அங்கு வரும்போது தனது தோழிகளையும் அழைத்து வந்தாள்.

‘சுவாமி, எனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது. ஒரு வாரமாக என் நோய் இருக்கும் இடமே தெரியவில்லை’.

‘ஓ. அது அன்றே போய்விட்டதே!’ என்று வினய் சொன்னான்.

‘நீங்கள் யார்? உங்கள் பெயரை நாங்கள் கேள்விப்பட்டதில்லை’ என்று மோகினியின் தோழி ஒருத்தி சொன்னாள்.

‘பெயரில் என்ன இருக்கிறது? நான் இந்த ஊருக்குப் புதியவன். உங்களுக்கு முற்றிலும் புதியவன். ஆனாலும் யாரோ என்னைப் பற்றி உங்களிடம் சொல்லியிருக்கிறார்கள்’.

‘ஆம் சுவாமிஜி. ஒரு பெண்மணி. அவரை எனக்கு இதற்கு முன்னால் அறிமுகமில்லை. காளி கோயிலுக்குப் போயிருந்தபோது சந்தித்தேன். இப்படி ஒரு சுவாமிஜி தமிழகத்தில் இருந்து வந்திருக்கிறார் என்று அவர்தான் சொன்னார்’.

வினய் சிறிது யோசித்தான். ‘நீ யாரைச் சந்தித்தாய் என்று எனக்குத் தெரியவில்லையம்மா. நான் கல்கத்தா வந்ததில் இருந்து யாரையுமே சந்திக்கவில்லை. என்னை வந்து சந்தித்த முதல் பெண் நீதான்’.

‘அப்படியா? அப்படியென்றால் கோயிலில் எனக்கு உங்களைப் பற்றிச் சொன்னது யாராக இருக்கும்?’ என்று மோகினி கேட்டாள்.

வினய் அதற்கு பதில் சொல்லவில்லை. கண்ணை மூடி தியானத்தில் ஆழ்ந்தான். பிறகு கண் விழித்துப் புன்னகை செய்தான்.

‘சரி விடு. உனக்கு உதவ வேண்டும் என்பது எனக்கு இயற்கை இட்ட கட்டளை. அதைச் செய்துவிட்டேன். உனக்கு சந்தோஷம் என்றால் சரி’.

அந்தப் பெண்கள் வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார்கள். மிக நிச்சயமாகக் காளியேதான் ஒரு சராசரி வங்காளப் பெண்ணின் தோற்றத்தில் வந்து தங்களை அவனிடம் செலுத்தியதாக நினைத்தார்கள். மோகினியின் ஒரு தோழிக்குச் சிறிது கடன் தொல்லை இருந்தது. குடும்பச் சிக்கல்கள். அப்பா சரியில்லாத வீடு. அவள் அதைச் சொல்லி வருத்தப்பட்டபோது வினய் அவளுக்கு ஒரு தாயத்தைக் கொடுத்தான். ‘இதைக் கொண்டு உன் அப்பாவுக்குக் கட்டிவிடு. இரண்டொரு தினங்களில் சரியாகிவிடும்’.

‘சுவாமி, அவருக்கு ஏழு லட்சம் கடன் இருக்கிறது’.

‘அப்படியா? பரவாயில்லை. கொண்டு போய்க் கட்டு’ என்று வினய் சொன்னான்.

அந்த இன்னொரு பெண்தான் சற்று வினோதமான பிரச்னையைச் சொன்னாள். அவளுக்கு மூன்று காதலர்கள் இருந்தார்கள். மூவரையுமே அவளுக்குப் பிடிக்கும். மூவரில் யாரை வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தில் அவள் இருந்தாள். ‘சுவாமி இது தவறா? என் வாழ்க்கை சகிக்க முடியாதபடி ஆகிவிடுமா?’

‘உன் பெயர் என்ன?’ என்று வினய் கேட்டான்.

மஞ்சுளா என்று அவள் பதில் சொன்னாள். சில விநாடிகள் அமைதியாக யோசித்த வினய், ‘நீ நாளை இரவு இங்கே வா’ என்று அவளிடம் சொன்னான்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

86. கையேந்தல்

 

 

‘ஒரு கொலை செய்ததைக்கூட நான் பாவமாக நினைக்கவில்லை விமல். எனக்குக் கருவியாக இருக்கச் சம்மதித்த இரண்டு பெண்களை என் இச்சைக்குப் பயன்படுத்தினேன் பார், அங்கே நான் அழிந்துவிட்டேன்’ என்று வினய் சொன்னான்.

என்னால் அவனைப் புரிந்துகொள்ள முடிந்தது. நினைவின் இண்டு இடுக்குகள் அனைத்திலும் குற்ற உணர்வின் பூரணத்தை அவன் தெளித்து வைத்திருந்தான். அது உலராத ரத்தச் சேறு. கால் வைக்கும் போதெல்லாம் பாதங்களின் வழியே மேலே ஏறி உச்சந்தலையில் சென்று மோதும். மூளையின் ஒவ்வொரு அணுவையும் துளைத்துத் தாக்கும். ஒரு சர்ப்பமாக, ஒரு புழுவாக, ஒரு கிருமியாகக் குத்திக் கிழிக்கும். எத்தனை ஆண்டுகள்! என்னைத் தவிர அவன் இதை வேறு யாரிடமும் சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது. அவன் தனது கதவுகளை இழுத்து மூடி வெகுகாலம் ஆகியிருக்க வேண்டும். சுய வெறுப்பிலும் அவமான உணர்ச்சியிலும் தன்னைத் துளித்துளியாகச் சிதைத்துக்கொண்டிருந்தவனை எப்படி மீட்பது என்று யோசிக்க ஆரம்பித்தேன். ரயில் தடதடவென்று ஓடிக்கொண்டே இருந்தது. உலகெங்கும் ரயிலின் பேரிரைச்சலைத் தவிர வேறொரு சத்தமில்லை என்று தோன்றியது. நான் மெல்ல ஒரு முடிவுக்கு வந்து அவன் கையைப் பிடித்தேன். புன்னகை செய்தேன்.

‘என்ன?’

‘நீ பாவி என்றால் அப்போது நான் யார்?’ என்று கேட்டேன்.

‘உனக்கென்ன? நீ ராஜரிஷி. உன் உலகின் நியாயங்கள் வேறு. உனது தருமங்களுக்கு நிறம் கிடையாது. வாசனை கிடையாது’.

‘யார் சொன்னது?’

‘நீ அப்படித்தானே வாழ்கிறாய்?’

‘இல்லை வினய். மனித குலத்துக்கு தருமம் என்பது பொதுவானது. நாம் அதை எதிர்கொள்ள அச்சப்பட்டு சில சட்டங்களின் சட்டகங்களைக் குறுக்கே கொண்டு மறைத்துவிடுகிறோம். தருமத்தைக் காட்டிலும் சட்டங்கள் எளியவை. சமாளிக்கக் கூடியவை’.

‘நான் சட்டத்தையும் மதித்ததில்லை’.

‘ஆனால் யோசித்துப் பார். எக்காலத்திலும் உன் காமத்துக்கு நீ விசுவாசமாக இருந்திருக்கிறாய். சன்னிதிக்குச் செல்லாவிட்டாலும் நீதான் உண்மையான காமரூபிணியின் பக்தன்’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தேன். அவனுக்குச் சிரிப்பு வரவில்லை.

‘என்ன மடத்தனம் இது! நான் செய்துகொண்டிருந்த காரியங்கள் யாவற்றுக்கும் மூலாதாரம் அவள்தான். அதர்வம் அவள் கூந்தலின் ஒரு முடி. ஆயிரமாயிரம் பேய்களும் பிசாசுகளும் சாத்தான்களும் இட்சிணிகளும் இடாகினிகளும் அவளது சுண்டுவிரல் நகத்துக்குள் சுருண்டு கிடக்கின்றன. உலகெங்கும் நிகழும் அத்தனைக் கருஞ்சித்து ஆட்டங்களும் அவளது விரலசைப்புக்குக் கட்டுப்பட்டவை. என்னால் அவளைக்கூட முழுதாக நம்பித் தாள் பணிய முடியவில்லை. என் சந்தேகங்களே என் விலங்குகளாகிவிட்டன. என் சந்தேகங்களே என் அவமானம். என் சந்தேகங்களே என்னைச் சாகடிக்கப் போகின்றன’. பேசிக்கொண்டிருந்தபோதே அவன் உணர்ச்சி வயப்பட்டுக் கண்ணீர் சிந்தினான்.

நான் புன்னகை செய்தேன். ‘அப்படியா நினைக்கிறாய்? எனக்கென்னவோ உன்னுடைய இந்தச் சந்தேகங்கள்தாம் உன் தரிசனம் என்று தோன்றுகிறது’.

அவன் திடுக்கிட்டுப் போனான். ‘என்ன சொல்கிறாய்?’

‘இதோ பார் வினய். பக்தி என்பது கண்மூடித்தனமான நம்பிக்கை. நாத்திகம் என்பது இன்னொரு கண்மூடித்தனமான நம்பிக்கை. நீ நாத்திகனாக இல்லாமல், நம்பிக்கைகளுக்கான எல்லைக் கோட்டை வரையறுப்பவனாக இருக்கிறாய். ஒரு விதத்தில் நீ ஒரு உப தெய்வம். ஆனால் எதிர்க்கட்சிக்காரன்’.

‘புரியவில்லை’.

‘நான் என் குருவைக் கண்டடைந்த விதத்தைச் சொல்லுகிறேன். அதிலிருந்து உனக்குத் தேவையானதை உன்னால் எடுத்துக்கொள்ள முடிகிறதா பார்’ என்று சொல்லிவிட்டு ஆரம்பித்தேன்.

அன்றைக்கு நான் மிகுந்த பசியுடன் இருந்தேன். பெங்களூரில் இருந்து திருட்டு ரயில் ஏறி மைசூரைச் சென்றடைந்து, அங்கிருந்து மீண்டும் டிக்கெட் எடுக்காமல் ஒரு பேருந்துப் பயணம் மேற்கொண்டு மடிகேரிக்குப் போய்ச் சேர்ந்தேன். பயணத்தைப் பொருத்தவரை எனக்கு நோக்கமெல்லாம் இல்லை. கண்ணில் பட்ட பேருந்தில் ஏறினேன். அவ்வளவுதான். அது எங்கே போய் நிற்கிறதோ, அங்கே இறங்கிக்கொள்ளலாம் என்பது மட்டும்தான் திட்டம். வழியில் யாராவது பரிசோதகர் டிக்கெட் கேட்டு வந்துவிட்டால், அந்த இடத்தில் இறங்கி அடுத்த வண்டி பிடித்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நிகழவில்லை. பேருந்து மடிகேரிக்குச் சென்று சேர்ந்தபோதுதான் மடிகேரி என்றொரு இடம் இருப்பதையே அறிந்தேன்.

கால் வைத்த மாத்திரத்தில் எனக்கு அந்த ஊரைப் பிடித்துப் போனது. இன்றுள்ள அளவுக்கு அன்றைக்கு அது ஒரு பெரிய சுற்றுலாத் தலமெல்லாம் இல்லை. காவிரியின் பிறப்பிடத்தைக் காண மக்கள் வருவார்கள் என்றாலும் பெரிய கூட்டமெல்லாம் இருந்ததில்லை. நாலாபுறமும் மலை புடைத்த மண்வெளி. சரிவுகளில் காப்பித் தோட்டங்கள். விதவிதமான பழங்கள் பழுத்துத் தொங்கும் கானக வெளி. பசுமையற்ற ஒரு சதுர அடியைக்கூட நான் அங்கு காணவில்லை.

எனக்குப் பசித்தது. கையில் ஒரு ரூபாய்கூட இல்லை. உடுத்தியிருந்த ஆடை மிகவும் அழுக்கேறி, நாற்றமடித்தது. கழட்டிப் போட்டுவிட்டுக் குளிக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் நான் பிராமணன். குளித்த மறுவினாடி எனக்குப் பசிக்க ஆரம்பித்துவிடும். வேறு எதிலும் பிராமணனாக இல்லாவிட்டாலும் இந்த விஷயத்தில் நான் ஒரு பூரண பிராமணன். என் ஆராதனையெல்லாமே வயிற்றை நிரப்புவதாக மட்டுமே அன்று இருந்தது.

என்ன செய்யலாம் என்று யோசித்தேன். பேருந்து நிலையத்தில் ஒரு கழிப்பிடமும் குளியலறையும் இருந்தது. ஆனால் அதற்கும் பணம் கொடுக்க வேண்டும். உள்ளே போய் வேலையை முடித்துக்கொண்டு வெளியே வந்ததும் பணமில்லை என்று சொன்னால் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை. திட்டலாம். சத்தம் போடலாம். அடிக்கலாம். அதை வாங்கிக்கொள்வதில் எனக்குப் பிரச்னை இல்லை. ஆனால் தண்டனையாகக் கழிப்பறையைச் சுத்தம் செய்யச் சொல்லிவிட்டால் என்ன செய்வதென்று யோசித்தேன். அதைவிட இன்னொரு பிரச்னை, குளித்துவிட்டு எதை அணிவது என்பது. நான் அணிந்திருந்த சட்டையையும் வேட்டியையும் மிக நிச்சயமாக என்னால் மீண்டும் அணிய முடியாது. என் வியர்வையின் கோர நாற்றம் என்னாலேயே சகிக்க முடியாததாக இருந்தது. ஏனென்றால், ஒன்பது தினங்களாக நான் அந்த உடைகளை மாற்றாமல் அப்படியே அணிந்துகொண்டிருந்தேன். இதில் ஆறு நாள் குளிக்கவும் இல்லை. குற்றாலத்தில் இருந்து கிளம்பி திருச்சிக்குப் போய் அங்கிருந்து சென்னை செல்லும் பேருந்தில் ஏறி வழியில் இறங்கி வழி மாறியதில் இருந்து பயணம் ஒன்றைத் தவிர வாழ்வில் வேறெதுவுமே இல்லை என்றாகிப் போனது எனக்கு. பசி, தூக்கம், பயம், கவலை, வீட்டு நினைப்பு அனைத்தில் இருந்தும் விடுபட்டு வெளியேற அந்த வேகம் வேண்டியிருந்தது. பேருந்தின் வேகம். ரயில் வேகம். சாலை சரியில்லாத இடங்களில் பேருந்து விழுந்து குலுங்கி ஆடி ஆடிச் சென்றதைக்கூட விரும்பினேன். ரசிக்கவும் செய்தேன். எனக்குள்ளே தேங்கியிருந்த அனைத்தையும் அந்தக் குலுக்கல்களில் உதிர்த்துவிட மிகவும் விரும்பினேன். ஒரு விஷயம்தான் எனக்குத் திரும்பத் திரும்ப அப்போது தோன்றிக்கொண்டிருந்தது. உறவுகளே இல்லாத ஒரு பெரும் வாழ்வு மட்டும் அமைந்துவிடுமானால் மனித வாழ்வில் துயரம் என்ற ஒன்று இருக்காது என்பதே அது. நான் புத்தரை அந்த இடத்தில் நிராகரித்துக்கொண்டேன். ஆசையற்று இருப்பது சாத்தியமில்லை. சாத்தியமற்ற ஒன்றை தரிசனமாகப் பெற்ற அவர் மீது எனக்குப் பரிதாபம்தான் வந்தது. ஆனால் உறவுகள் அற்று இருப்பது சாத்தியமானதுதான் என்று தோன்றியது. துயரங்களின் ஊற்றுக்கண்ணாக உறவுகளே எனக்குத் தோன்றியது. உட்கார்ந்து அலசிப் பார்க்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

ஆனால் அதற்குமுன் நான் குளிக்க வேண்டும். உடை மாற்ற வேண்டும். எதையாவது சாப்பிட வேண்டும். அதற்கு ஒரு வழி கண்டுபிடித்தாக வேண்டும் என்று எண்ணிக்கொண்டே மடிகேரி பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்தேன். வானம் இருளத் தொடங்கியிருந்தது. மதியம் மூன்று மணிக்கே ஆறு மணித் தோற்றம் காட்டியது. நினைக்காத ஒரு கணத்தில் சட்டென்று மழை பெய்யத் தொடங்கியது. என்னையறியாமல் ஓடிப்போய் ஒரு கடைக்கு முன்னால் இருந்த கூரைச் சரிவின் கீழ் நின்றுகொண்டேன். மழையில் இலவசமாகக் குளித்துவிடலாம்தான். ஆனால் ஈரத் துணியுடன் சுற்றிக்கொண்டிருக்க முடியாது. மலைக் காற்று ஏற்கெனவே பனி போர்த்தி வருடிக்கொண்டிருந்தது.

மழை நிற்கும் வரை காத்திருக்க முடிவு செய்தேன். ஆனால் அது நின்றபாடில்லை. அரை மணி நேரம் கடந்த பின்பும் விடாமல் அடித்துக்கொண்டிருந்தது. எனக்குக் கால் வலித்தது. மழைக்கு அந்தக் கடையோரம் ஒதுங்கிய எல்லோருமே குறைந்தது ஒரு தேநீராவது வாங்கி அருந்தினார்கள். அதற்கும் வக்கற்றுப் போய்த்தான் நான் நின்றுகொண்டிருந்தேன். என்ன செய்வதென்று புரியவில்லை. நெடு நேரம் யோசித்துவிட்டு, சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தேன். அந்தக் கடைக்காரனிடம் திரும்பி, ‘எனக்கு ஐந்து ரூபாய் பிச்சையாகத் தர முடியுமா?’ என்று கேட்டேன்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

87. சேரிடம்

 

 

அவன் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. சற்று திடுக்கிட்டாற்போலத் தான் தெரிந்தது. அதனால் என்ன? எனக்குள் ஒரு பாறையை உடைத்துவிட்டாற்போலத் தோன்றியது. மகிழ்ச்சியாக இருந்தது. ஐந்து ரூபாய் எதற்கு? டீ வேண்டுமானால் குடித்துக்கொள் என்று அவன் சொன்னான்.

‘இல்லை. நான் கழிப்பிடம் செல்ல வேண்டும். குளிக்க வேண்டும். அதன் பிறகுதான் உணவைப் பற்றியோ பானத்தைப் பற்றியோ நினைக்க முடியும்’ என்று சொன்னேன்.

‘வெளியூரா?’

‘ஆம். தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன்’.

‘பையை - பணத்தைத் தவறவிட்டுவிட்டாயா?’

‘அப்படி எதுவும் இல்லை. நான் பணமில்லாமல்தான் கிளம்பி வந்தேன். அல்லது இருந்த பணம் தீர்ந்துவிட்டது’.

‘இங்கே யாரைத் தேடி வந்தாய்?’

‘தெரியவில்லை’ என்று சொன்னேன். அதற்குமேல் அவன் என்னுடன் பேசவில்லை. கடையின் உட்பக்கம் கை காட்டி, உள்ளே இருக்கும் கழிப்பறை, குளியலறையை உபயோகித்துக்கொள்ளச் சொன்னான். அவனுடைய வேட்டி சட்டை ஒன்றை எனக்குத் தந்தான். நான் அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு உள்ளே போனேன். இருபது நிமிடங்களில் புத்துணர்ச்சி பெற்று வெளியே வந்தேன். அவன் எனக்கு ஒரு டீ போட்டுக் கொடுத்தான். அதைக் குடித்தேன். பன் வேண்டுமா என்று கேட்டான். ஏனோ சட்டென்று வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். உண்மையில் எனக்கு மிகுந்த பசி இருந்தது. எதையாவது உண்ண வேண்டும் போலத்தான் உணர்ந்தேன். ஆனாலும் என்னை மீறி வேண்டாம் என்று வாயில் வந்துவிட்டது. சிறிது வருத்தப்பட்டேன்.

‘பரீட்சையில் பெயில் ஆகிவிட்டாயா?’ என்று அவன் என்னைக் கேட்டான்.

‘இல்லை’.

‘வீட்டில் கோபித்துக்கொண்டு ஓடி வந்துவிட்டாயா?’

‘நிச்சயமாக இல்லை. என் வீட்டில் யாரையும் என்னால் கோபித்துக்கொள்ளவே முடியாது’.

‘அப்புறம் என்ன? காதல் பிரச்னையா?’

நான் அதுவும் இல்லை என்று சொன்னேன். உண்மையில் ஒருவன் வீட்டை விட்டு ஓடிப் போக நியாயமான ஒரே காரணம் அவனுக்கு வீட்டில் எந்தப் பிரச்னையும் இல்லை என்பதுதான். இதை எப்படிச் சொல்லி என்னால் புரியவைக்க முடியும்?

அந்தக் கடைக்காரனுக்கு என்ன காரணத்தாலோ என்னைப் பிடித்திருக்க வேண்டும். கடைக்கு ஒரு பையன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணியிருக்கலாம். ஒருவேளை நான் பிழைப்புத் தேடி ஓடி வந்திருந்தால் அவனுக்கு மிகவும் வசதியாக இருந்திருக்குமோ?

‘ஐயா, நான் வேலை பார்க்க வரவில்லை. எதற்காக வந்தேன் என்பதையே இனிதான் கண்டுபிடிக்க வேண்டும். என்னை அதிகம் நம்பாதீர்கள்’ என்று மட்டும் சொன்னேன். அதோடு, சரி கிளம்பு என்று சொல்லிவிடுவான் என்று எதிர்பார்த்தேன். நான் முற்றிலும் எதிர்பாராத விதமாக, நான் முன்னர் கேட்ட ஐந்து ரூபாயை அப்போது என் கையில் கொடுத்து, ‘போய் வா’ என்று சொன்னான்.

‘இது எதற்கு? நீங்கள்தான் உங்கள் கழிவறையை உபயோகித்துக்கொள்ள அனுமதித்துவிட்டீர்களே’.

‘பரவாயில்லை. வைத்துக்கொள்’ என்று சொன்னான். எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. மரியாதையாக அந்தப் பணத்தை அவனிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு, ‘தேவை இல்லாதபோது பணம் ஒரு சுமை’ என்று சொன்னேன்.

‘ஆனால் அடுத்த வேளை உனக்குப் பசிக்குமே?’

‘அதை அப்போது பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் எனக்கு இவ்வளவு செய்ததே அதிகம். உங்களை நான் மறக்கமாட்டேன்’ என்று சொல்லிவிட்டு அவனிடம் விடைபெற்றேன். அன்று மாலை இருட்டும் வரை கால் போன திசைகளில் நடந்துகொண்டிருந்துவிட்டு, இருட்டியதும் ஒரு சிறிய கோயிலின் முன் மண்டபத்தில் சென்று படுத்துக்கொண்டேன். அது ஒரு அம்மன் கோயில். இங்கெல்லாம் யாரும் படுக்கக் கூடாது என்று சொல்லி யாராவது விரட்டி விடுவார்களா என்று யோசனையாக இருந்தது. அப்படி யாரும் வரவில்லை. ஆனால் குளிர் பயங்கரமாக இருந்தது. நினைத்து நினைத்து மழை வேறு பெய்துகொண்டே இருந்தது. ஓர் இரவு முழுவதும் இந்தக் குளிரில் எப்படிப் படுத்துக் கிடப்பது என்று கவலையாகிவிட்டது. நெடு நேரம் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன். உடலை ஒடுக்கி ஒடுக்கிப் பார்த்தும் குளிர் அதிகரிக்கத்தான் செய்ததே தவிர சற்றும் குறையவில்லை. விரைவில் எனக்கு உடலே ஒரு பெரிய ஐஸ் கட்டி போல் விரைத்துவிடும் என்று தோன்றியது. மூச்சு விடுவதுகூட சிரமமாக இருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தேன். படுத்துக்கொண்டும் உட்கார்ந்துகொண்டும் இருப்பதைவிட நடப்பது பலனளிக்கும் என்று தோன்றியது.

சட்டென்று எழுந்து நடக்க ஆரம்பித்தேன். கோயிலை விட்டு வெளியே வந்து கால் போன வழியில் போய்க்கொண்டே இருந்தேன். காற்றின் ஈரப்பதம் காதுகள் வழியே அடி வயிறு வரை சென்று தாக்கியது. குளிரில் என் விரல்கள் நடுங்கின. உதடு துடித்தது. ஊரடங்கிய இருளில் நான் ஒருவன் மட்டும் ஒதுங்க இடமின்றித் திரிந்துகொண்டிருந்தேன்.

ஒரு வகையில் அந்தக் கொடும் தனிமையை நான் ரசித்தேன் என்று நினைக்கிறேன். எனக்கு அது வேண்டியிருந்தது. வெறும் வினாக்களால் நிரம்பிய மூளையை அந்தக் குளிரும் தனிமையும் கொத்திக் கொத்தி குப்பையள்ளிப் போட்டுக்கொண்டிருந்தன. என் கேள்விகள் அனைத்தும் உதிர்ந்துவிட்டால் குளிர் என்னை விட்டுப் போய்விடும் என்று தோன்றியது. குளிரை என் அச்சங்களின் ஸ்தூலமாகக் கண்டேன். இந்த அனுபவம் எனக்கு நிச்சயம் தேவை என்று தோன்றியது.

நெடு நேரம் நடந்துகொண்டே இருந்ததில் ஒரு கட்டத்தில் குளிர் எனக்குப் பழகிவிட்டிருந்தது. ஒரு சிறந்த குளிரால் ஒருவனைச் சித்திரவதை செய்ய முடியுமே தவிரக் கொல்ல முடியாது என்று நினைத்தேன். ஒருவேளை கொல்லும் குளிர் வேறாக இருக்கலாம். இது இல்லை. இந்த ஊர்க் குளிர் கொல்லாது என்பது புரிந்துவிட்டது. மகிழ்ச்சியாக இருந்தது. அன்று இரவு முழுதும் நேர்த்திக்கடன் போல மடிகேரியைச் சுற்றிக்கொண்டே இருந்தேன். ஓரிடத்தில்கூட நான் அமரவில்லை. ஓய்வெடுக்க நினைக்கவில்லை. ஒரே இரவில் ஒரு ஊரின் புவியியல் முழுவதையும் கண்டறிந்துகொண்டுவிடும் வேட்கை வந்துவிட்டதா என்ன? அதற்குமுன் மடிகேரி என்ற ஊரின் பெயரைக்கூட நான் கேள்விப்பட்டதில்லை. குடகில் காவிரி பிறக்கிறது என்று எனக்குத் தெரியும். நான் வந்து சேர்ந்த இடம் குடகுதான் என்பதே வந்த பின்புதான் எனக்குத் தெரியும். இடங்களோ, மனிதர்களோ இனி எந்நாளும் எனக்கு முக்கியமாக இராது என்று எண்ணிக்கொண்டேன். எது முக்கியம் என்பதைக் கண்டறிந்துகொள்ள முழு வாழ்நாளும் மிச்சம் இருக்கிறது. பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

மறுநாள் அதிகாலை நான் அந்த ஆசிரமத்தின் வாசலைச் சென்றடைந்திருந்தேன். அந்த இடத்துக்குப் பெயரெல்லாம் இல்லை. உள்ளே ஒரு சாது இருக்கிறார்; அவருக்கு நான்கு சீடர்கள் இருக்கிறார்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. முதலில் அது ஒரு ஆசிரமம் என்பதேகூட எனக்குத் தெரியாது. இடைவெளிவிட்டு நான்கைந்து குடில்கள் இருந்தன. ஒரே ஒரு சிறிய கட்டடம். சுற்றிலும் கம்பி வேலி போடப்பட்டு வேலியெங்கும் மலர்க்கொடிகள் படர விட்டிருந்தார்கள். அது ஒரு தொடக்கப்பள்ளிக்கூடமாக இருக்கும் என்றுதான் முதலில் நினைத்தேன். சிறிது நேரம் உள்ளே சென்று ஓய்வெடுக்கலாம் என்று எண்ணி வேலிப் படலைத் தள்ளித் திறந்துகொண்டு உள்ளே போனேன். கதவற்ற குடிசைக்குள் ஓர் இளைஞன் உறங்கிக்கொண்டிருந்தான். அடுத்தக் குடிலுக்குப் போனபோதும் அங்கொரு இளைஞன் உறங்கிக்கொண்டிருக்கக் கண்டேன். அந்தக் குடிலுக்கும் கதவில்லை. அங்கிருந்த நான்கு குடில்களிலும் தலா ஓர் இளைஞன் உறங்கிக்கொண்டிருக்கக் கண்டேன். நான்கு பேருமே சட்டை அணியாதிருந்தார்கள். வேட்டியும் மேல் துண்டும் மட்டுமே அணிந்திருந்தார்கள். மேல் துண்டை கழுத்தைச் சுற்றிப் போர்த்திக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தார்கள். இந்தக் குளிரில் இவர்களுக்கு மட்டும் எப்படி உறக்கம் வருகிறது என்று எனக்கு வியப்பாக இருந்தது. போர்வை, தலையணை, படுக்கை இருந்துவிடுமானால் இதே குளிர் சுகமானதாக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

நான் அங்கிருந்து நகர்ந்து நான்கு குடில்களுக்கும் எதிரே இருந்த அந்தச் சிறிய கட்டடத்தை நெருங்கினேன். அது ஒரு வீடு போலவோ, அரங்கம் போலவோ இல்லை. கோயில், மடம் என்று என்னவாகவும் என்னால் அதை வரையறுக்க இயலவில்லை. மிகச் சிறிய கட்டடம்தான். மிஞ்சினால் பதினைந்தடிக்கு இருபதடி இருக்கும். எந்த அலங்காரமும் இல்லாமல் சுவர்களுக்குச் சுண்ணாம்புகூடப் பூசாமல் வெறும் செங்கல் கட்டடமாக இருந்தது. பாதி கட்டப்பட்ட கட்டடமாக இருக்கும் என்று நினைத்தேன். அல்லது அதற்குமேல் கட்டுவதற்குப் பண வசதி இல்லாதிருந்திருக்கலாம். பார்க்கப் புதிய கட்டடமாகவும் தெரியவில்லை. நான் அந்தக் கட்டடத்தைச் சுற்றிக்கொண்டு முன் பக்கம் வந்தேன். ஒரு கதவு இருந்தது. ஆனால் லேசாக மூடப்பட்டிருந்ததே தவிர, மூடித் தாழிடப்பட்டிருக்கவில்லை. கதவுகளை நம்பாமல் வாழும் அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் என்னை வசீகரித்தார்கள். நான் அந்தக் கட்டடத்தின் உள்ளே நுழைந்ததுமே ‘யாரது?’ என்றொரு குரல் கேட்டது. இருட்டில் எனக்கு உருவம் சரியாகத் தெரியவில்லை. யாரோ ஒரு நபர் எழுந்து சென்று விளக்கப் போடுவதைப் பார்த்தேன்.

இப்போது எனக்கு அவரும் அவருக்கு நானும் முழுதாகத் தெரிந்தோம்.

‘யார்?’ என்று அவர் கேட்டார்.

‘நான் ஒரு வழிப்போக்கன். இந்த இரவு தங்க இடமின்றித் திரிந்துகொண்டிருந்தேன். கதவற்ற இந்த இடத்தில் சிறிது நேரம் இளைப்பாறிச் செல்லலாம் என்று நினைத்தேன்’ என்று சொன்னேன்.

‘அப்படியா? சரி உட்கார்’ என்று அவர் சொன்னார். முற்றிலும் நனைந்திருந்த என் தோற்றம் அவரை வருத்தியிருக்க வேண்டும். என்னை அமரச் சொல்லிவிட்டு உள்ளே சென்று ஒரு துண்டும் வேறு வேட்டி ஒன்றும் கொண்டு வந்து கொடுத்தார். நான் நன்றி சொல்லி அதை வாங்கி ஈரத்தைத் துடைத்தேன்.

‘தலைமுடியை நன்றாகத் துடை. இல்லாவிட்டால் ஜலதோஷம் பிடிக்கும்’ என்று சொன்னார்.

நான் அப்படியே செய்தேன். நான் அணிந்திருந்த அந்தக் கடைக்காரனின் வேட்டியைக் கழட்டிவிட்டு அவர் அளித்த புதிய வேட்டியை அணிந்துகொண்டேன். மேல் சட்டையை அவிழ்த்ததும், ‘அடடா. உனக்குத் தர இங்கே மாற்றுச் சட்டை இல்லையே’ என்று அவர் சொன்னார். அவர் காவி நிறத்தில் ஒரு ஜிப்பா அணிந்திருந்தார்.

‘எனக்கு அம்மாதிரி ஒரு ஜிப்பா தர முடிந்தால்கூடப் போதும்’ என்று சொன்னேன்.

‘சரி இரு’ என்று சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே சென்று ஒரு ஜிப்பாவை எடுத்து வந்து கொடுத்தார். அது எனக்கு மிகவுமே பொருந்தாமல் தொளதொளவென்று இருந்தது. இருந்தாலும் ஈர உடையை அவிழ்த்துவிட்டு, காய்ந்த உடைகளை அணிந்தது சற்று இதமாக இருந்தது. நான் அவருக்கு மீண்டும் நன்றி சொல்லிவிட்டு, ‘நீங்கள் ஏன் தூங்காமல் இருக்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.

அவர் சிறிது நேரம் என்னை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்துவிட்டுப் பிறகு சொன்னார், ‘நீ வருவாய் என்றுதான்’.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

88. உயர்ஜாதி மிருகம்

 

pa_raghavan150X150

முதல் முதலில் அவரை நான் பார்த்தபோது இந்த மனிதர் இன்னும் சற்று அழகாக இருந்திருக்கலாம் என்று தோன்றியது. ஓர் அழகனாக உருப்பெறத் தொடங்கி, என்ன காரணத்தாலோ பாதியில் கைவிடப்பட்ட படைப்பாகத் தெரிந்தார். அவர் உயரமாகவும் இல்லை. குள்ளமும் இல்லை. ஒல்லியாகவோ, இரட்டை நாடி சரீரம் கொண்டவராகவோ இல்லை. விழிகள் கூர்மையாக இருந்தன. ஆனால் கண்ணின் கீழ்ப்புறம் படிந்திருந்த நிழலில் விழுந்து ஒளி மங்குவதுபோலத் தோன்றியது. தாடி வைத்திருந்தார். அது இல்லாதிருந்தால் இன்னும் சற்று அழகாகத் தெரிவாரோ என்று நினைக்கும்படியாகவே அதுவும் இருந்தது. அவர் அணிந்திருந்த காவி ஜிப்பா அவருக்கு நன்றாக இல்லை. கச்சம் வைத்துக் காவி வேட்டி உடுத்தி இருந்தார். அது அவருக்கு அவ்வளவாகப் பொருந்தவில்லை என்று நினைத்தேன். அவரது தோற்றத்துக்கும் குரலுக்கும்கூடப் பொருத்தமில்லை. கிட்டத்தட்ட பெண் குரல் அவருக்கு. பேசும்போது நெஞ்சில் உருண்டையாக ஏதோ ஏறி ஏறி இறங்கியது தெரிந்தது. இவை அனைத்தையும் மீறி அவர் ஓர் ஆளுமைதான் என்று பார்த்த கணத்தில் தோன்றியது.

நீங்கள் யார் என்று கேட்டேன். தன்னை அவர் ஒரு சன்னியாசி என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். தோற்றத்திலேயே அது தெரிந்தது என்றபோதும் அவர் வாயால் அதைக் கேட்க விரும்பினேன். அவர் இருந்த அந்த அறையில் தெய்வீகமான எந்தப் பொருளோ, புகைப்படங்களோ இல்லை. சுவரில் ஆணி அடித்து இரண்டு காவி ஜிப்பாக்கள் மட்டும் தொங்கிக்கொண்டிருந்தன. ஒரு சிறிய கணக்குப் பிள்ளை மேசை இருந்தது. அதன் மீது அவரது மூக்குக் கண்ணாடி மடக்கப்படாமல் அப்படியே வைக்கப்பட்டிருந்தது. அருகே ஒரு தண்ணீர் பாட்டில் இருந்தது. சற்றுத் தள்ளிப் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாடா கட்டிலில் ஒரு தலையணையும் போர்வையும் இருந்தன.

மிஞ்சினால் அவருக்கு அப்போது அறுபது வயதுதான் இருக்கும். அந்த வயதுக்கு அவர் இன்னமும் திடகாத்திரமாக இருந்திருக்கலாம் என்று பட்டது. எழுபது வயதுக்காரரைப் போலத்தான் நடந்தார். வார்த்தைக்கு வார்த்தை நிறைய இடைவெளி விட்டே பேசினார். என்னிடம், ‘நீ எங்கிருந்து வருகிறாய்?’ என்று கேட்டார். நான் என்னைக் குறித்து சுருக்கமான ஓர் அறிமுகத்தைச் சொல்லி, சிறிது நேரம் அங்கே படுத்துத் தூங்க அனுமதி கிடைக்குமா என்று கேட்டேன்.

இரு என்று சொல்லிவிட்டு எழுந்து உள்ளே சென்றார். இரண்டு வாழைப்பழங்களை எடுத்து வந்து கொடுத்து, ‘நீ பசியோடு இருக்கிறாய். இப்படிப் படுத்தால் தூங்க முடியாது. இதைச் சாப்பிட்டுவிட்டுப் படு’ என்று சொன்னார். நான் பதில் சொல்லாமல் அதை வாங்கி உண்டேன். அவரே தனது தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து கொடுத்துக் குடிக்கச் சொன்னார். அதையும் வாங்கிக் குடித்தேன். ‘சிறுநீர் கழிக்க வேண்டுமா?’ என்று கேட்டார். பிறகு உள் அறையோடு ஒட்டியிருந்த பாத்ரூம் வரை அழைத்துச் சென்று விளக்கைப் போட்டார். நான் முடித்துவிட்டு வந்ததும் தன் கட்டிலைக் காட்டி படுத்துக்கொள்ளச் சொன்னார்.

எனக்குத் தயக்கமாக இருந்தது. ‘பரவாயில்லை படு’ என்று சொன்னார்.

‘நீங்கள் எங்கே படுப்பீர்கள்?’

‘நீ உறங்கி எழுந்ததும் நான் தூங்கிக்கொள்கிறேன். நீ படு’ என்றார். எனக்கு அது விநோதமாகப் பட்டது. முந்தைய நாள் மாலை முதல் நான் இடைவிடாமல் நடந்துகொண்டே இருந்திருக்கிறேன். உண்மையிலேயே ஒதுங்க இடமின்றித்தான் திரிந்தேன். ஓரிடத்தில் அமர்வதைக் காட்டிலும் நடந்துகொண்டிருந்தால் குளிரின் வீரியம் சற்றுக் குறைவதாகத் தோன்றியதால்தான் அப்படிச் செய்தேன். ஆனால் அந்த அதிகாலைப் பொழுதில் எனக்கு அந்தத் துறவியின் இருப்பிடத்தில் அப்படியொரு வரவேற்பும் வசதியும் வாய்க்கும் என்று அனுபவிக்க நேர்ந்தபோதுகூட நம்ப முடியவில்லை. ஏனோ எனக்குப் படுக்க வேண்டாம் என்று தோன்றியது. நான் அந்தக் கட்டிலில் அமர்ந்துகொண்டு அவரையும் இழுத்து உட்காரவைத்தேன். ‘எனக்குத் தூக்கம் வரவில்லை’ என்று சொன்னேன்.

‘நீ மிகவும் களைப்பாக இருக்கிறாய். தூக்கம் வரும்’ என்று அவர் சொன்னார்.

‘ஆனால் வயதில் மூத்தவரான உங்கள் உறக்கத்தைக் கெடுத்துவிட்டு என்னால் உறங்க முடியாது’.

‘அப்படி நினைக்காதே. பொதுவாக எனக்கு இரவில் உறக்கம் வருவதில்லை. நான் பகலில்தான் தூங்குவேன். நீ வரும்போது நான் விழித்திருந்தேனா இல்லையா?’

‘எனக்காகக் காத்திருப்பதாகச் சொன்னீர்கள். ஆனால் உண்மையைச் சொல்லுங்கள். யாரோ திருடன் நுழைந்துவிட்டதாகத்தானே நினைத்தீர்கள்?’

அவர் சிரித்தார். ‘மடிகேரியில் உள்ள திருடர்களுக்கு இந்த ஆசிரமத்தை நன்றாகத் தெரியும். மாலை ஏழு மணிக்கு வந்தால் சப்பாத்தியும் சப்ஜியும் இங்கே கிடைக்கும் என்று தெரிந்து வருவார்கள். இங்குள்ளவர்களை வெட்டிப் போட்டாலும் அவர்களுக்கு வேறு எதுவும் கிடைக்காது’.

அவருக்குச் சிறிது தமிழ் தெரிந்திருந்தது. இளம் வயதில் வேலூரில் ஒரு பள்ளிக்கூடத்தில் சில வருடங்கள் ஆசிரியப் பணி செய்திருப்பதாகச் சொன்னார்.

‘இப்போது என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.

‘சும்மாதான் இருக்கிறேன்’ என்று பதில் சொன்னார். அந்தப் பதில் எனக்குப் பிடித்திருந்தது. அதை அவர் சிரித்துக்கொண்டே சொன்னது இன்னமும் பிடித்தது. அந்த டீக்கடைக்காரன் கேட்டதைப் போலவே அவரும் நான் வீட்டில் கோபித்துக்கொண்டு ஓடி வந்தவனா என்று கேட்டார்.

‘இல்லை. எனக்கு என் வீட்டை மிகவும் பிடிக்கும். அப்பா, அம்மா, சகோதரர்கள், என் தாய்மாமா இவர்கள் அனைவரும் எனக்கு உயிருக்கு நிகர். அதனால்தான் விட்டு விலகிவிட்டேன்’.

‘கடவுளைப் பார்க்க வேண்டுமா உனக்கு?’

‘ஐயோ வேண்டாம்’ என்று அலறினேன்.

‘பிறகு?’

‘நான் ஓடி வந்ததன் காரணம் கேட்கிறீர்களா? உண்மையிலேயே அதற்கொரு காரணம் கிடையாது. ஓடிப்போன என் அண்ணனைத் தேடிப் போனேன். ஏனோ திரும்ப வீட்டுக்குப் போக வேண்டாம் என்று தோன்றிவிட்டது’.

‘உன் படிப்பு, எதிர்காலம் பற்றி யோசித்தாயா?’

‘ஏன்? படித்தால் போகிறது. அதற்கென்ன?’

‘இல்லை. உன்னைப் பற்றி உன் பெற்றோருக்குச் சில கனவுகள் இருக்கும்’.

‘ஆம். இருக்கும். இருக்கிறது’.

‘நீ இப்படி விட்டுவிட்டு வந்தது அவர்களுக்குப் பெரிய துயரத்தைக் கொடுக்கும்’.

‘சந்தேகமில்லை ஐயா’.

‘உனக்கு அந்த வருத்தம் இருக்கிறதா?’

நான் சற்றும் யோசிக்கவில்லை. ‘நிச்சயமாக இருக்கிறது’ என்று சொன்னேன். ‘அதை நினைவூட்டாதீர்கள். கதறி அழுதுவிடுவேன்’.

‘பிறகு ஏன் ஓடி வந்தாய்?’

‘அப்படியொரு கதறல் வாழ்நாளில் இனி எப்போதும் என்னிடம் இருந்து எழக் கூடாது என்பதால்தான். நான் கண்ணீரை வெறுக்கிறேன். துயரங்களில் இருந்து விலகிவிட விரும்புகிறேன். துயரங்களின் பிறப்பிடம் உறவுகள்தான் என்று எனக்குத் தோன்றுகிறது. அதனால்தான் உறவுகளை விட்டு வந்தேன்’ என்று சொன்னேன்.

‘அப்பா! என்ன சுயநலம்!’

அந்தச் சொல் என்னை உறுத்தியது. அது சுயநலம்தானா என்று யோசிக்க ஆரம்பித்தேன். இல்லை என்று தோன்றியது. ஒருவிதத்தில் அது என் வீட்டார் நலன் கருதி நான் எடுத்த முடிவு என்றுகூடத் தோன்றியது. அண்ணா விலகிச் சென்றபோது அப்பாவும் அம்மாவும் அழுத அழுகை எனக்கு நினைவிருக்கிறது. வினய் விட்டுச் சென்றபோது அந்தத் துயரம் இன்னும் பல மடங்கு வீட்டில் அதிகரித்ததைக் கண்டேன். அப்போது கண்ணீர் அவ்வளவு இல்லை. ஆனால் துயரம் இருந்தது. மிக நிச்சயமாக இருந்தது. மௌனத்தின் விஷச் சாறில் ஊறப்போட்ட துயரம். அப்பா, அம்மா, மாமா, வினோத் அனைவருமே அவரவர் கதவுகளை இழுத்துப் பூட்டிக்கொண்டு உள்ளுக்குள் எதையோ உருட்டிக்கொண்டிருந்தார்கள். கடமை போல வீட்டில் இருப்பார்கள். கடமை போலச் சாப்பிடுவார்கள். கடமை போலவே உறங்கி எழுந்து வேலையைப் பார்ப்பார்கள். அம்மாவின் சமையல் ருசி அக்காலங்களில் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது. உணவில் உப்பு, காரம் சரியாக இருக்குமே தவிர ருசி என்ற ஒன்று படிப்படியாகக் குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமலேயே போனது. ஆனால் வீட்டில் யாரும் அது குறித்துப் பேசியதில்லை. ‘டேஸ்டாவே இல்லம்மா’ என்று நான் சொன்னபோதெல்லாம் அம்மா பதில் சொல்லாமல் எழுந்து போய்விடுவாள்.

துயரம்தான். தாங்க முடியாத இழப்புத்தான். யார் இல்லை என்றது? ஆனால் ஒரு துயரம் கொண்டாடப்படத்தக்கதா என்று எனக்குச் சந்தேகமாக இருந்தது. சந்தோஷங்களைப் போலவே துக்கத்தையும் கொண்டாடும் மனோபாவம் மனித குலத்துக்கு எப்படியோ ஒட்டிக்கொண்டுவிட்டது. எந்த மிருகமும் மரணத்துக்காகவோ, சக மிருகம் விட்டுப் பிரிவதற்கோ இப்படி துக்கம் கொண்டாடிக்கொண்டிருப்பதில்லை. மனிதன் எந்த விதத்தில் மிருகத்தினும் மேம்பட்டுவிட்டான்?

இதை நான் அவரிடம் கேட்டபோது, ‘மிருகம் துக்கம் அனுஷ்டிப்பதில்லை என்று உனக்கு யார் சொன்னது? மிருகங்களில் உயர்ஜாதி மிருகம் மனிதன்தான்’ என்று சொன்னார்.

‘அப்படியா? நான் ஒரு மிருகமாக இருக்க விரும்பவில்லை’.

‘சரி இரு. நாற்பத்தொன்பதைக் கேட்டுச் சொல்கிறேன். ஒன்று நீ செத்துப் போய்விட வேண்டும். அல்லது தேவதையாகிவிட வேண்டும்’ என்று அவர் சொன்னார்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

89. பெண் வாசனை

 

 

அவருக்குப் பெயர் கிடையாது. அதாவது அவர் தனது பெயரை யாரிடமும் சொன்னதில்லை. பெயரற்ற ஒருவராகத் தனது அடையாளத்தை நிறுவிக்கொள்வதில் அவருக்கு இளம் வயதில் ஓர் ஆர்வம் இருந்திருக்க வேண்டும். பழகிவிட்ட பின்பு அதையே பின்பற்ற வேண்டியது ஒரு கட்டாயமாகியிருக்கும்.

ஆரம்பத்தில் அவர் பெயர் தெரியாது என்று மற்ற சீடர்கள் சொன்னபோது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. உங்கள் பெயர் என்ன என்று நான் கேட்டபோது அவர் வெறுமனே சிரித்தார். ‘அது அத்தனை முக்கியமா?’ என்று கேட்டார்.

முக்கியமில்லைதான். ஆனாலும் குறிப்பிடுவதற்கு ஒரு பெயர் அவசியமல்லவா?

‘யாரிடம் என் பெயரை நீ குறிப்பிட நினைக்கிறாய்?’

‘அப்படி இல்லை. யாராவது கேட்டால்?’

‘யார் கேட்பார்கள் என்று நினைக்கிறாய்?’

யோசித்துப் பார்த்தேன். அவர் சொல்வது நியாயம்தான். யார் அவர் பெயரைக் கேட்கப் போகிறார்கள்? ஆசிரமத்துக்கோ, அவர் பெயருக்கோ கடிதங்கள்கூட வருவது கிடையாது. அங்கே அப்படி ஒரு ஆசிரமம் இருப்பதுகூடப் பெரும்பாலும் தெரிந்திருக்காது. அவர் மடாதிபதி அல்ல. யோகா ஆசிரியரும் அல்ல. மக்களைக் கூப்பிட்டு உட்கார வைத்துக்கொண்டு நீதிபோதனை வகுப்பெடுக்கும் வழக்கம் அவருக்கு இல்லை. பிரசங்கம் செய்ய மாட்டார். அற்புதங்கள் புரியும் நபரும் அல்ல. ஆனால் அவர் ஒரு சன்னியாசி. அக்கம்பக்கத்தில் இருக்கும் ஒரு சிலருக்குத்தான் அவரைத் தெரியும். பார்த்தால் புன்னகை செய்யும் அளவுக்குப் பழக்கம் உள்ளவர்கள். மற்றபடி அவர் மக்களுக்கான சன்னியாசி அல்ல. கடவுளுக்கான சன்னியாசியா என்றால் அதுவும் இல்லை. பூஜை புனஸ்காரங்கள் கிடையாது. தியானம், தவம் கிடையாது. மந்திர உச்சாடனங்கள் இல்லை. வேள்விகள் இல்லை. அவர் ஒரு நபர். ஞானம் அடைந்தவர். அவ்வளவுதான்.

இந்த அம்சம்தான் முதலில் என்னை அவர்பால் ஈர்த்தது.

‘நீங்கள் தவம் புரியாமல் எப்படி ஞானம் அடைந்தீர்கள்?’ என்று கேட்டேன்.

‘ஞானம் என்ன பலசரக்கா, கடையில் போய் வாங்கி வர? அது உள்ளே இருப்பது. தேடி எடுப்பது மட்டுமே நம் வேலை’.

எனக்கு அது சரியாகப் பட்டது. நிற்காமல் ஊர் சுற்றிக்கொண்டே இருந்ததுதான் தனது தவம் என்று அவர் சொன்னார். ‘யாருடனும் அப்போது நான் பேசவில்லை. கூடியவரை மிகவும் குறைவாக உணவு உட்கொண்டேன். ஒரு நாளில் இரண்டு மணி நேரம் மட்டுமே உறங்கும் வழக்கத்தைக் கடைப்பிடித்தேன். மூன்று நாள்களுக்கு ஒருமுறைதான் குளியல். அதுவும் நீர்நிலை ஏதேனும் கண்ணில் பட்டால் மட்டும். மற்றபடி நடந்துகொண்டே இருப்பேன். யோசித்துக்கொண்டே இருப்பேன்’ என்று அவர் சொன்னார்.

‘எதைக் குறித்து யோசித்தீர்கள்?’

‘வேறென்ன? மரணம்தான்’.

‘என்ன தெரிந்தது?’

‘உள்ளுக்குள் அழகான அனைத்தும் வெளித்தோற்றத்தில் கொடூரமானவை. வெளியே கொடூரமாகத் தெரியும் அனைத்தும் உள்ளழகு கொண்டவை’.

‘இதுதான் ஞானமா?’

‘இதைக் காட்டிலும் ஒரு பெரிய உண்மையை உன்னால் முடிந்தால் நீ கண்டுபிடி’ என்று சொன்னார்.

நான் யோசிக்க ஆரம்பித்தேன். மரணத்தைப் பொறுத்தவரை அவர் சொன்னது சரிதான் என்று தோன்றியது. மரணம் அழகானது. சட்டென்று இல்லாமல் போவதைக் காட்டிலும் ஒரு பேரழகு வேறென்ன இருந்துவிட முடியும்? ஆனால் மரணம் தரும் வலியும் துக்கமும் சகிக்க முடியாதது. இறப்புக்குப் பின் ஒரு உயிர் அதை உணருமா என்று தெரியவில்லை. ஆனால் இருப்பவர்களுக்கு வலி நிச்சயம். யாருக்கு வலித்தால் என்ன? வலி உண்டு. வலி உண்மையானது. அதுதான் கொடூரமானது.

‘விமல், உனக்கு நான் சொல்லித்தரக்கூடிய ஆகப்பெரிய பாடம் ஒன்றுதான். உடல், உயிர், ஆன்மா என்று ஒருபோதும் யோசிக்காதே. உடல், காற்று, கரி என்று யோசித்துப் பழகு’ என்று அவர் சொன்னார். நான் பார்த்த வரையில் அவர் நாளெல்லாம் உபநிடதங்களையே படித்துக்கொண்டிருந்தார். சுக்ல யஜுர்வேதமும் சாமவேதமும் அவருக்கு முழுதாகத் தெரியும். வரி வரியாக அர்த்தம் சொல்லி விளக்கக்கூடியவர். ஆனாலும் இறப்புக்குப் பிந்தைய நிலை பற்றி உபநிடதங்கள் சொல்லுகிற அனைத்தையும் அவர் நிராகரிப்பவராக இருந்தார்.

‘நம் அறிவுக்கு எட்டாத ஒன்று நம்மைப் பொறுத்தவரை இல்லாததுதான். அதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாதே’ என்று ஒருநாள் சொன்னார்.

‘பிறகு எதற்கு நாளெல்லாம் இதைப் படிக்கிறீர்கள்?’

‘எழுதி வைத்துவிட்டார்களே’.

‘அதனால் படித்துத்தான் தீரவேண்டுமா?’

‘படிப்பு என் பலவீனம்’ என்று அவர் சொன்னார். எனக்கு அது பிடித்திருந்தது. அவரிடம் இருந்துதான் எனக்கும் படிக்கும் பழக்கம் பிடித்துக்கொண்டது. குருநாதரிடம் ஒரு பெரிய புத்தகச் சேகரம் இருந்தது. அவர் இன்னதுதான் படிப்பார் என்று சொல்ல முடியாது. வேத உபநிடதங்களில் இருந்து அம்பேத்கர் வரை படிப்பார். மேலை தத்துவம், கீழைத்தத்துவம், ஜென் பவுத்தம், தாவோயிசம் எதையும் விடமாட்டார். அவருக்குக் கவிதைகள் பிடிக்கும். காதல் கவிதைகள் என்றால் கொள்ளைப் பிரியம். திடீர் திடீரென்று ஏதாவது ஒரு காதல் கவிதையைப் படித்துவிட்டு புத்தகத்தோடு வந்துவிடுவார். ‘இதைக் கேள். எப்படி எழுதியிருக்கிறான் பார்’ என்று வரி வரியாக எடுத்துச் சொல்லிப் புளகாங்கிதமடைவார்.

‘எதற்கு இதெல்லாம் உங்களுக்கு?’ என்று கேட்டால், ‘என்ன தப்பு? உயிரை உருக்கி எழுதியிருக்கிறான் பாவம். நான் படிப்பதால் அவன் கதிமோட்சம் உறுதியாகிறதல்லவா?’

‘குருஜி, நீங்கள் காதலித்திருக்கிறீர்களா?’

‘இல்லை’ என்று சற்றும் யோசிக்காமல் சொன்னார்.

‘அமையவில்லையா? விருப்பமில்லையா?’

‘நேரமில்லை’ என்று சொன்னார்.

ஆசிரமத்துக்கு அப்போதுதான் சிறிது சிறிதாக மக்கள் வந்து போக ஆரம்பித்திருந்தார்கள். அந்தக் குற்றத்துக்கு நானே காரணம் என்று ஒருநாள் அவர் என்னைக் கோபித்துக்கொண்டார். காலை நடை, மாலை நடையின்போது வழியில் சந்திக்கும் நபர்கள் சிலர் அப்போது எனக்கு சிநேகமாகியிருந்தார்கள். என்னைக் குறித்துப் பேச நேர்ந்தபோதெல்லாம் நான் குருநாதரைப் பற்றியும் சிறிது சொல்ல ஆரம்பித்தேன். சரி வந்து பார்க்கலாம் என்று ஒருவர் இருவராக வர ஆரம்பித்து, விரைவில் பத்திருபது பேர் தொடர்ச்சியாக தினமும் ஆசிரமத்துக்கு வரக்கூடியவர்களாக மாறியிருந்தார்கள். வேறு வழியில்லாமல் குருநாதர் அவர்களுடன் உட்கார்ந்து பேசும்படியானது.

‘விமல் எனக்குக் கற்றுத்தரத் தெரியாது. ஆனால் எடுத்துக்கொள்ள அனுமதிப்பதில் ஆட்சேபணை இல்லை. இதை நீ அவர்களிடம் சொல்லிவிடு’ என்று சொன்னார். நான் அதைப் பொருட்படுத்தவில்லை. தினமும் மாலை ஒரு மணிநேரம் குருநாதர் பேசுவார். அந்தப் பேச்சைக் கேட்பதற்கு நானே போய் ஆட்களைத் திரட்டிக்கொண்டு வருவேன்.

அப்படித்தான் தற்செயலாக ஒருநாள் மஞ்சு ஆசிரமத்துக்கு வந்தாள். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த பெண். எங்கள் ஆசிரமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அவளது வீடு இருந்தது. அவளது தாய்மாமன் மூலம் குருஜியைப் பற்றிக் கேள்விப்பட்டு ஒரு மாலைக் கூட்டத்துக்கு வந்தவள், தொடர்ச்சியாக தினமும் ஆசிரமத்துக்கு வர ஆரம்பித்தாள்.

மஞ்சு, எங்கள் ஆசிரமத்துக்கு வந்த முதல் பெண். அதனாலேயே என்னால் அவளை மறக்க முடியாது. அவள் அழகாக இருந்தாள். சிறிய முகம். சிறிய உடல். ஒரு தாளைச் சுருட்டுவது போலச் சுருட்டி சொருகிக்கொண்டு போய்விடலாம் போலிருப்பாள். குருஜி பேசும்போது கண்ணிமைக்காமல் உட்கார்ந்து கவனிப்பாள். இப்படி அப்படி அசைய மாட்டாள். சொற்பொழிவு முடிந்தபின் எழுந்து அவர் எதிரே வந்து விழுந்து வணங்கிவிட்டு ஒன்றும் பேசாமல் போய்விடுவாள். மீண்டும் மறுநாள் வருவாள்.

ஆசிரமத்தில் குருஜியைத் தவிர நாங்கள் நான்கு பேர் இருந்தோம். மற்ற மூவரும் எனக்கு முன்னால் அவரோடு வந்து சேர்ந்தவர்கள். ஒருவன் மைசூர்க்காரன். எலக்டிரானிக்ஸ் படித்துவிட்டு வந்து சன்னியாசி ஆனவன். இன்னொருவன் மடிகேரியிலேயே பிறந்து வளர்ந்தவன். பெற்றோர் கிடையாது. சிறு வயதில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்துவிட்டு அதன்பின் எப்படியோ குருஜியிடம் வந்து சேர்ந்தவன். அவனுக்கு குருஜி இன்னமும் தீட்சை தராதிருந்தார். காரணம் சொல்லவில்லை. மூன்றாமவன் மகாராஷ்டிரத்தில் இருந்து வந்தவன். ஆசிரமத்துக்கு வந்து சேருவதற்கு முன்பே அவனுக்கு யோகக் கலையின் சில பகுதிகள் தெரிந்திருந்தது. அவன்தான் எங்களிடம் அதைப் பயில வற்புறுத்தி வகுப்பாக ஆரம்பித்தவன். ‘தப்பில்லை. கற்றுக்கொள்’ என்று குருஜி சொன்னார்.

‘ஆனால் இந்த உடல் வருத்திக்கொள்வதற்கானதில்லை. எந்த ஒரு சிறந்த கலையும் எளிமையானதாகத்தான் இருக்க முடியும். எளிமையாக இல்லாத எதுவும் சிறந்ததாக இருக்காது’ என்று சொல்லுவார்.

நாங்கள் நான்கு பேரும் இரவு நேரங்களில் உறங்கப் போகும் முன்னர் மஞ்சுவைக் குறித்துப் பேசுவதை வழக்கமாக்கிக்கொண்டோம். ஏனோ எங்களுக்கு அது பிடித்திருந்தது. ஒவ்வொரு நாளும் அவள் அணிந்து வரும் ஆடையைப் பற்றிப் பேசுவோம். குருஜி பேசிக்கொண்டிருக்கும்போது அவள் வேறு எந்தப் பக்கமும் பாராமல் அவரையே உற்று நோக்குவது குறித்துப் பேசுவோம். அவள் வயதுக்கு குருஜி பேசுகிற சங்கதிகள் மிகவும் கடினமானவை என்று நாங்கள் நினைத்தோம். அவளுக்கு அதெல்லாம் புரியுமா என்று விவாதிப்போம். ஆனால் மிகவும் கவனமாக அவள் அழகைக் குறித்துப் பேசுவதை நாங்கள் தவிர்த்து வந்தோம். இது எங்கள் நான்கு பேருக்குமே தெளிவாகத் தெரிந்தது. ஆனாலும் தவிர்த்தோம். தவிர்க்கிறோம் என்பதை உணர்ந்தே தவிர்த்தோம். என்றோ ஒருநாள் தற்செயலாக நாந்தான் முதல் முதலில் அந்தத் தடுப்பை உடைத்தேன்.

‘மஞ்சு எவ்வளவு அழகான பெண்!’ என்று சொன்னேன்.

அவர்கள் மூன்று பேரும் மிகுந்த அதிர்ச்சியடைந்தார்கள். ‘நாம் சன்னியாசிகள். பெண்களின் அழகு நாம் பொருட்படுத்தத்தக்கதல்ல’ என்று சொன்னார்கள்.

‘அப்படியா? குருநாதரைக் கேட்டுவிடுகிறேன்’ என்று சொல்லிவிட்டு நான் எழுந்து அவரிடம் போனேன்.

‘என்ன?’

‘குருஜி, மஞ்சு மிகவும் அழகான பெண் என்று நான் சொன்னேன். அப்படிச் சொல்வது தவறு என்று அவர்கள் நினைக்கிறார்கள். அழகை அழகென்று சொல்வது குற்றமா?’ என்று கேட்டேன்.

அவர் என்னைப் பார்த்துப் புன்னகை செய்தார். பிறகு, ‘அழகு என்று பொதுவாகச் சொல்லாதே. அங்கம் அங்கமாக உன்னால் முடிந்தால் வருணித்துக் காட்டு. அழகா இல்லையா என்று பிறகு முடிவு செய்வோம்’ என்று சொன்னார்.

(தொடரும்)

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

90. மழை

 

 

மாநிலம் முழுதும் மழை அடித்துப் புரட்டிக்கொண்டிருந்தது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். மடிகேரியிலேயே ஏழெட்டு இடங்களில் நிலச்சரிவு உண்டாகி, போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. வெளியூர் வாகனங்கள் ஊருக்குள் வர முடியாமல் எங்கெங்கோ பாதி வழியில் நின்றுகொண்டிருந்தன. காலை ஆறு மணிக்குப் பெய்யத் தொடங்கும் மழை, இடைவிடாமல் மதியம் வரை பெய்துகொண்டே இருந்தது. ஒரு நாள் இருநாளல்ல. ஒரு வாரமாகவே அப்படித்தான் இருந்தது. இரண்டு மணிக்குப் பிறகு சிறிது நேரம் இடைவெளி விட்டு மீண்டும் நான்கு மணிக்கு மழை பிடித்துக்கொண்டுவிடும். இரவெல்லாம் மழை. ஓயாத மழை. வெளியே கால் வைக்கவே முடியாது போலிருந்தது. அந்நாள்களில் நான் ஆசிரமத்தை விட்டு வெளியே போகவேயில்லை. பெரும்பாலும் குருஜியின் அறையிலேயேதான் இருந்தேன். அவர் படிக்க விரும்பிய புத்தகங்களை அவருக்காகப் படித்துக் காட்டிக்கொண்டிருந்தேன். இதில் ஒரு வசதி என்னவென்றால் குருவோடு ஒரு பணியில் இருக்கும்போது மற்ற வேலைகளுக்கு யாரும் அழைக்கமாட்டார்கள். முக்கியமாக சமைக்கும் பணி.

இந்த உலகில் நான் மனமார வெறுத்த ஒரு வேலை உண்டென்றால் அது சமையல்தான். சமையலைக்கூட சமாளித்துவிடலாம். உண்டபின் பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்ப்பது எனக்குச் சற்றும் பிடிக்காத வேலை. ஆசிரமத்தில் நாங்கள் ஐந்து பேர் மட்டும்தான் அப்போது இருந்தோம். சமைப்பது என்றால் எங்கள் ஐந்து பேருக்கு மட்டும்தான். அது ஒரு பெரிய காரியமல்ல என்றாலும் எப்படியாவது அதை நான் தவிர்க்கவே விரும்பினேன். சமைக்க வேண்டிய நேரம் நெருங்கும்போது சட்டென்று குருஜியின் அறைக்குள் சென்று அமர்ந்துவிடுவேன். அவர் கேட்காவிட்டாலும் நானாக ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு அவருக்குப் படித்துக் காட்ட ஆரம்பித்துவிடுவேன். சரியாக ஒரு மணி நேரம். சமையல் முடித்துவிட்டு மற்ற மூவரும் வந்து சாப்பாடு தயார் என்று சொல்லும்போது மூடி வைத்துவிட்டு எழுந்துவிடுவேன்.

எனது நண்பர்களுக்கு என்னுடைய இந்த உத்தி புரியவில்லை. அவர்கள் வேலைகளைப் பங்குபோட்டுக்கொண்டு தாங்களே தினமும் சமைத்தார்கள். ஒருநாள் குரு கேட்டார், ‘விமல் உனக்கு சமைக்கப் பிடிக்காதா?’

நான் யோசிக்கவேயில்லை. ‘ஆம் குருஜி’ என்று சொன்னேன்.

‘நினைத்தேன். ஆனால் சாப்பிடப் பிடிக்குமல்லவா?’'

‘மிகவும்’.

‘நல்லது. நீயே ரசித்துச் செய்யும்படியாக உனக்கு நான் சில எளிய சாப்பாட்டு வகைகளைச் சமைக்கக் கற்றுத்தரலாம் என்று பார்க்கிறேன்’.

‘எதற்கு குருஜி? வேண்டாமே’.

‘இல்லை. என்றாவது உதவும்’ என்று சொல்லிவிட்டு அவர் எனக்கு காய்கறி சாலட் செய்யக் கற்றுத் தந்தார். ஒரு கேரட். ஒரு வெங்காயம். ஒரு பெரிய வெள்ளரிக்காய். முட்டைக் கோஸ் இலைகள் கொஞ்சம்.ஒரு தக்காளி. வெங்காயத் தாள் சிறிது. காய்களை அவர் நறுக்கிய விதம் மிகவும் அழகாக இருந்தது. ஒரு குழந்தைக்குத் தலை வாருவது போல அவர் கறிகாய்களை நறுக்கினார். மிகவும் மென்மையாக. அவற்றுக்கு வலிக்கும் என்பது போல. நறுக்கிய காய்களைக் கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது உப்புப் போட்டுக் கிளறினார். அதன்பின் அரை மூடி எலுமிச்சை சாறை அதன்மீது பிழிந்து மீண்டும் கிளறினார். மேலாகச் சில புதினா இலைகளைத் தூவி ஒரு பிளேட்டில் கொட்டி ஒரு ஸ்பூனையும் வைத்து என்னிடம் தந்தார்.

‘சமைக்க சிரமமாக இருந்தால் இப்படிச் செய்து சாப்பிடலாம். இது நன்கு பசி தாங்கும்’ என்று சொன்னார்.

இன்னொரு நாள் பனீர் வாங்கி வரச் சொல்லி உதிர்த்து அதில் அரை தம்ளர் பால் சேர்த்து வேகவைத்து எடுத்தார். வாணலியில் சிறிது நெய் விட்டு தாளித்து அதில் பனீரைக் கொட்டிக் கிளறிக் கொடுத்து, ‘இது பனீர் பொங்கல். இதைச் சாப்பிட்டால் ஒன்பது மணி நேரம் பசிக்காது’ என்று சொன்னார். உண்மையிலேயே அன்று முழுதும் எனக்கு வேறெதுவும் சாப்பிடத் தோன்றவில்லை. அந்தப் பொங்கல் அவ்வளவு ருசியாக இருந்தது. வயிறும் அடங்கியிருந்தது.

நெய்யை உருக்கி, கொதி வரும் நேரம் ஒரு பிடி துளசி இலைகளைப் போட்டு இறக்கிவிடுவார். அது ஆறியதும் அப்படியே எடுத்துக் குடிக்கச் சொல்வார். ‘இருபத்து நான்கு மணி நேரம் பசி தாங்க இதுதான் சரியான உணவு’ என்று சொன்னார்.

குழம்பு, ரசம், கூட்டு, பொரியல் எல்லைகளைத் தாண்டாதிருந்த எனக்கு அவரது மாறுபட்ட உணவு ஆலோசனைகள் ஆர்வத்தைத் தூண்டின. மெல்ல மெல்ல யாருமில்லாத சமயங்களில் சமையலறையில் குருஜி சொல்லிக் கொடுத்தவற்றைப் பரிசோதனை செய்ய ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் என் சகாக்கள் மூவரும்கூட அம்மாதிரியான உணவு முறையின் மீது ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்கள். வெகு விரைவில் நாங்கள் ஒரு நாளில் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ளும் வழக்கத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டோம். என்னால் சாப்பிடாமல் இருக்க முடிகிறது என்பது எனக்கு மிகுந்த அதிசயமாக இருந்தது. ஒரு வேளை தவறினாலும் துடித்துப் போய்விடுபவன் நான். ஆனால் மிக எளிய சில மாற்றங்களின் மூலம் நாளெல்லாம் உண்ணாதிருக்கும் சக்தியைப் பெற குருஜி உதவினார்.

அன்றைக்குக் காலை எழுந்ததுமே குருஜி மழை பார்க்கப் போகலாம் என்று அறிவித்தார். உடனே நான் வரவில்லை என்று சொன்னேன்.

‘ஏன்?’

‘எனக்குக் கொஞ்சம் படிக்க வேண்டும். நீங்கள் போய்வாருங்கள். மாலை நான் சமைத்து வைக்கிறேன்’ என்று சொன்னேன்.

அவர்கள் நான்கு பேரும் மழை பார்க்கப் புறப்பட்டுப் போனார்கள். குருஜிக்கு அது மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. காவிரி தோன்றும் மலை உச்சிக்குப் போய் நின்றுகொள்வார். பெருமழைக் காலங்களில் அங்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் வரமாட்டார்கள். தனிமையின் பிரம்மாண்டம் ஒரு தரிசனமாக மேகங்களின் வழியே கீழிறங்கி வந்து மேனி தொட்டு நகர்ந்து போகும். மழையை ரசிப்பதற்கு மலை உச்சிதான் சரியான இடம் என்று குரு சொல்லுவார்.

ஒருமுறை என்னையும் அவர் காவிரியின் பிறப்பிடத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அன்றும் மழை நாள்தான். ஆனால் இந்தளவு பெருமழை இல்லை. சிகரத்தின் உச்சியில் நாங்கள் ஐந்து பேர் மட்டும் தனியே நின்றிருந்தோம். நாலாபுறங்களில் இருந்தும் மழைச் சாரல் அடித்து எங்களை நனைத்தது. நனைவது ஒரு தவம் என்று அவர் சொன்னார். ‘ஈரத்தை தியானம் செய்’ என்று சொல்லி என்னை அங்கேயே அமர வைத்தார். அரை மணி நேரம் நான் குளிர்ச்சியைக் குறித்தே சிந்தித்துக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் என் நினைவெங்கும் சில்லிட்டுப் போய் மூச்சுக்காற்று சூடாக வரத் தொடங்கியது போல உணர்ந்தேன். குருவிடம் இதனைச் சொன்னபோது, ‘சரியாக இருக்கிறது. அப்படியே வலது நாசியில் காற்றை உறிஞ்சி உள்ளே தேக்கி வை. முப்பது விநாடிகள்’.

நான் அவர் சொன்னது போலச் செய்தேன். முப்பது வரை எண்ணிவிட்டு அவரைப் பார்த்தேன்.

‘இடது நாசி வழியே தேக்கிய காற்றில் பாதியை வெளியே அனுப்பு. சரிபாதி’.

அப்படியே செய்தேன்.

‘மீதமுள்ள காற்றை மீண்டும் வலது நாசி வழியே வெளியே அனுப்பு’ என்றவர், அதன்பின் முப்பது விநாடிகள் மீண்டும் காற்றை உள்ளே இழுக்காமல் சும்மா விடச் சொன்னார்.

என்னால் இருபது விநாடிகள் மட்டுமே அவ்வாறு இருக்க முடிந்தது. அதற்குள் மூச்சு முட்டிவிட்டது.

‘முயற்சி செய்து பார் விமல். இதே போலத் தொண்ணூறு நிமிடங்கள் இடைவிடாமல் உன்னால் செய்ய முடியுமானால் உன்னால் எத்தகைய குளிரையும் வென்றுவிட முடியும்’.

அவர் சொன்னது உண்மை. அன்றைக்குச் செய்ய முடியவில்லை என்றாலும் ஆசிரமத்துக்கு வந்த பின்பு தினமுமே காலை எழுந்ததும் அவர் சொன்ன அந்த மூச்சுப் பயிற்சியை நான் செய்து பார்க்க ஆரம்பித்தேன். சில மாதங்களில் குளிர் எனக்கு மிகவும் பழகிவிட்ட ஒன்றாக இருந்தது. எத்தனை சில்லிட்ட நீரில் இறங்கினாலும் கண நேரத் தவிப்பும் இல்லாதிருந்தது. குளிர்ச்சியில் உடல் புல்லரிப்பதில்லை. என்னால் சட்டையில்லாமல், போர்வையில்லாமல் வெறுந்தரையில் படுத்துத் தூங்க முடிந்தது. கம்பளியும் ஸ்வெட்டரும் மப்ளரும் சுற்றிக்கொண்டு திரியும் மடிகேரிவாசிகள், வெற்றுடம்புடன் அலைந்து திரிந்த என்னை வினோதமாகப் பார்த்தார்கள். அவர்கள் பார்ப்பதற்காகவே நான் எனது அதிகாலை நடையின்போது மேல் சட்டை அணிந்து செல்வதைத் தவிர்க்கத் தொடங்கினேன்.

அன்றைக்கு மழை பார்க்க குருநாதரும் என் மூன்று தோழர்களும் புறப்பட்டுப் போனபின்னர் நான் மதியம் இரண்டு மணி வரை படித்துக்கொண்டே இருந்தேன். அதன்பின் சமைக்கலாம் என்று முடிவு செய்து சமையலறையில் என்னென்ன இருக்கிறது என்று பார்த்தேன். முட்டைக் கோஸ் இருந்தது. கேரட் இருந்தது. கொஞ்சம் அரிசி இருந்தது. ஐந்து பேருக்குப் போதுமா என்று சந்தேகமாக இருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோதுதான் மஞ்சு ஆசிரமத்துக்கு வந்தாள். கொட்டும் மழையில் இவள் ஏன் இப்போது வருகிறாள் என்று எனக்கு வியப்பாக இருந்தது. அவள் மழை கோட் அணிந்திருந்தாள். கையில் ஒரு பெரிய தூக்குச் சட்டி கொண்டுவந்திருந்தாள்.

‘என்ன இது?’

‘பிசிபேளாபாத்’.

‘என்ன?’

‘உங்கள் சாம்பார் சாதத்தின் எங்கள் ஊர் வடிவம்’.

நான் ஆர்வமுடன் அதை வாங்கித் திறந்தேன். குப்பென்று நெய்யின் மணம் நாசியில் ஏறி நிறைந்தது. நன்றாக இருக்கும்போலத் தோன்றியது.

‘இந்த மழைக்கு இதைச் சாப்பிட நன்றாக இருக்கும். குருஜிக்குக் கொடுக்கலாம் என்று கொண்டு வந்தேன்’.

‘மிக்க நன்றி மஞ்சு. என்ன சமைக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். நீ என் வேலையைப் பாதியாக்கிவிட்டாய். பத்து நிமிடங்கள் உட்கார்’ என்று சொல்லிவிட்டு, இருந்த காய்களை நறுக்கி அவசரமாக ஒரு பொரியல் மட்டும் செய்தேன்.

‘பிசிபேளாபாத்தை சூடாகத்தான் சாப்பிட வேண்டும். குருஜி எப்போது வருவார்?’ என்று மஞ்சு கேட்டாள்.

‘தெரியவில்லை. அவர்கள் மழை பார்ப்பதற்காக மலை உச்சிக்குச் சென்றிருக்கிறார்கள். திரும்பி வரும் நேரத்தைச் சரியாகச் சொல்ல முடியாதே’.

‘அடக்கடவுளே. அப்படியானால் நீங்களாவது இப்போதே சாப்பிட்டுவிடுங்கள்’ என்று சொன்னாள்.

அழகான பெண் அன்போடு எடுத்து வந்து சாப்பிடச் சொல்லும்போது எப்படி எனக்கு மறுக்கத் தோன்றும்? நான் அந்த பிசிபேளாபாத்தைச் சாப்பிட்டேன்.

‘பிரமாதமாக இருந்தது. நீயே சமைத்தாயா?’

‘இல்லை. என் அம்மா’.

‘உன் அம்மாவுக்கு என் நன்றியைச் சொல்லிவிடு. மறந்துவிடாதே’.

‘சரி’ என்று சொன்னாள். நாங்கள் நெடு நேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். மஞ்சுவுக்கு நிறைய சந்தேகங்கள் இருந்தன. அவற்றுள் முக்கியமானது கடவுளை நம்புவதா வேண்டாமா என்பது.

‘குருஜியின் சொற்பொழிவுகளைக் கேட்கிறாயே, உனக்கு என்ன தோன்றுகிறது?’

‘நானே கேட்க நினைத்தேன். அவர் பேச்சில் எப்போதும் கடவுளே வருவதில்லை. இது ஏன்?’ என்று அவள் கேட்டாள்.

‘ஏனென்றால் அவருக்கு மொத்தம் நாநூறு கடவுள்கள் உண்டு. யாரைச் சொல்லி, யாரை விட முடியும்? அதனால்தான் யார் பெயரையும் அவர் சொல்வதில்லை’.

‘நாநூறு கடவுள்களா!’

‘ஆமாம். அவரோடு பழகிப் பழகி எனக்கே இப்போது இருநூற்று சொச்சம் பேர் சேர்ந்துவிட்டார்கள்’.

அவள் சிரித்தாள்.

‘நீ நம்பவில்லை அல்லவா? என்னோடு வா’ என்று அவளை எனது குடிலுக்கு அழைத்துச் சென்றேன். உட்கார் என்று சொன்னேன். அவள் தரையில் அமர்ந்தாள். ‘மிகவும் சில்லென்று இருக்கிறது. நீங்கள் ஒரு பாயாவது போட்டுக்கொண்டு அமரலாம்’ என்று சொன்னாள்.

‘அவசியமே இல்லை. என் அறுபதாவது கடவுள் குளிரைத் துரத்திவிடுவான்.’

‘அப்படியா? எங்கே எனக்குத் துரத்திக் காட்டுங்கள் பார்க்கலாம்?’

நான் குருஜி எனக்குக் கற்றுத் தந்த மூச்சுப் பயிற்சியை அவளுக்குச் சொல்லி, செய்ய வைத்தேன். இரண்டு மூன்று முறை தடுமாறினாள். பிறகு சரியாக வந்துவிட்டது. இடைவிடாமல் பத்து நிமிடங்கள் செய்துகொண்டே இருக்கச் சொன்னேன். சட்டென்று ஒரு கணத்தில், ‘ஆம், இப்போது குளிர் போய்விட்டது!’ என்று ஆச்சரியப்பட்டாள்.

‘குளிர்தானே போனது? அறையையே ஹீட்டர் போட்டது போலவும் மாற்ற முடியும். அதை முயற்சி செய்யலாமா?’ என்று கேட்டேன்.

‘ஓ! உடனே’.

நான் அவள் உச்சந்தலையில் கை வைத்தேன். ஒன்பது விநாடிகள் அப்படியே வைத்திருந்தேன். பிறகு மெலிதாக மூன்று முறை கபாலத்தில் தட்டினேன். கண்ணை மூடிக்கொள்ளச் சொன்னேன். தலையில் இருந்து முகவாய் வரை ஒற்றை விரலால் நீளமாக ஒரு கோடு இழுத்தபடி வந்தேன். அவள் உதட்டை என் விரல் தொட்டுக் கீழிறங்கியபோது அவள் கண் திறந்து பார்த்தாள். சிரித்தாள்.

வெளியே மழை மேலும் வலுப்பெற்று சீறிப் பொழியத் தொடங்கியது.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

91. தியானம்

 

 

குருநாதரும் என் சகாக்களும் மழை பார்த்துவிட்டுத் திரும்பி வருவதற்கு மாலை ஆறு மணிக்குமேல் ஆகிவிட்டது. நான்கு பேரும் ஈரத்தில் விரைத்துப் போய் வந்து சேர்ந்தார்கள். குரு ஒரு குழந்தையைப் போலச் சிரித்தார். அவரது விரல்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. நான் அவர்கள் வருகையை எதிர்பார்த்து நான்கு கனமான காய்ந்த டர்க்கி டவல்களை எடுத்து வைத்திருந்தேன். உள்ளே நுழைந்ததும் அதைக் கொடுத்தேன். அவர்கள் துடைத்துக்கொண்டு ஆ, ஊ என்று குளிரைக் கொல்ல முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். ஈரத் துணிகளைக் களைந்து உடம்பெங்கும் துடைத்துவிட்டு, புதிய ஆடைகளை அணிந்துகொண்டு, ‘சூடாக என்ன இருக்கிறது?’ என்று கேட்டார்கள்.

நான் ‘பிசிபேளாபாத்’ என்று சொன்னேன். அவர்கள் அதை முழுதாகக் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை. பாய்ந்து ஓடி அவரவர் தட்டுகளை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தார்கள். குருஜியும் அவர்களோடு அமர்ந்துகொண்டார். மஞ்சு கொண்டு வந்திருந்த பிசிபேளாபாத்தை நான் சற்று சூடு படுத்தி வைத்திருந்தேன். அதனோடு நான் சமைத்திருந்த பொரியலையும் சேர்த்துப் பரிமாறினேன். அவர்கள் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் அள்ளி அள்ளி எடுத்துச் சாப்பிட்டார்கள். ஐந்து நிமிடங்களில் சாப்பிட்டு முடித்துவிட்டுத்தான் என்னை நிமிர்ந்து பார்த்தார்கள். சிரித்தார்கள்.

‘நீ சாப்பிட்டாயா?’ என்று குருஜி கேட்டார்.

‘சாப்பிட்டுவிட்டேன் குருஜி’.

‘நல்லது. என் அறைக்கு வா’ என்று சொல்லிவிட்டு அவர் எழுந்து சென்று கை கழுவிக்கொண்டு தட்டையும் கழுவிக் கொண்டு போய்க் கவிழ்த்துவிட்டுத் தன் அறைக்குப் போனார். நான் சமையலறையைத் துடைத்து சுத்தம் செய்துவிட்டு அவர் அறைக்குள் நுழைந்தேன்.

‘உட்கார்’ என்று சொன்னார்.

அமர்ந்தேன்.

‘உன் முகம் ஏன் என்னவோபோல இருக்கிறது?’

‘இல்லையே. அநேகமாக சமைத்த களைப்பாக இருக்கும்’.

‘இது நீ சமைத்ததுபோல இல்லையே?’

‘ஆம் குருஜி. மஞ்சு கொண்டுவந்திருந்தாள். ஆனால் பொரியல் நான் செய்ததுதான்’.

‘அது தெரிந்தது. சரி சொல். வேறென்ன நடந்தது?’

எனக்குச் சட்டென்று உடலெங்கும் அச்சத்தின் புகை மூட்டம் எழுந்து சுழலத் தொடங்கியது. இந்த மனிதர் யார்? இவருக்கு என்னவெல்லாம் தெரியும்? மந்திர தந்திரங்கள் அறிந்தவரல்லர் என்றுதான் நான் கருதினேன். அதற்கும் அப்பால் அவருக்கு வேறு எதுவோ தெரிந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. எப்படியானாலும் அவர் எதையோ மோப்பம் பிடித்திருக்கிறார். இற்குமேல் நடந்ததை மறைப்பது என்பது வெறும் அபத்தம். சொல்லிவிடலாம் என்று நினைத்தேன். ஆனாலும் சற்றுத் தள்ளிப் போடலாம் என்று தோன்றியது. ஒரு சின்ன ஆட்டம். பிள்ளைக் களி. செய்து பார்த்தால்தான் என்ன?

குருஜி கேட்டார், ‘என்ன நடந்தது என்று கேட்டேன்’.

‘ஒன்றும் நடக்கவில்லையே குருஜி? மஞ்சு வீட்டில் இன்று பிசிபேளாபாத் செய்திருக்கிறார்கள். மழையில் நாம் என்ன சமைத்திருப்போம், என்ன சாப்பிட்டிருப்போம் என்று அவளுக்குக் கவலை வந்துவிட்டது. அவள் அம்மாவிடம் கேட்டு சமைத்ததில் ஒரு பகுதியை நமக்காக எடுத்து வந்துவிட்டாள். மிகவும் நல்ல பெண்’ என்று சொன்னேன்.

‘ஆம். அவள் நல்ல பெண்தான். ஆனால் நீ என்ன செய்தாய்?’ என்று குரு கேட்டார்.

‘அவள் குளிர்கிறது என்று சொன்னாள். நீங்கள் எனக்குக் கற்றுத் தந்த மூச்சுப் பயிற்சியை அவளுக்குச் சொல்லிக்கொடுத்துக் குளிரைச் சற்று மறக்க வைத்தேன்’.

‘பிறகு?’

அதற்குமேல் அதை நீட்டிக்கொண்டு போவது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. எனவே புன்னகை செய்தேன். ‘மன்னியுங்கள். நான் அவளை முத்தமிட்டேன்’ என்று சொன்னேன்.

‘வேறு?’

‘அவ்வளவுதான். வெறும் முத்தம். அவளுக்கும் அதில் சம்மதம் இருந்ததால் முத்தத்தின் கால அளவைச் சற்று நீட்டித்துக்கொண்டேன்’.

அதன்பின் அவர் பேசவில்லை. கண்ணை மூடிக்கொண்டு படுத்துவிட்டார். அவர் மீண்டும் அழைப்பார் என்று நினைத்து நான் சிறிது நேரம் அருகிலேயே நின்றிருந்தேன். ஆனால் அவர் உறங்கத் தொடங்கிவிட்டாற்போல இருந்தது. எனவே சத்தமில்லாமல் அந்த அறையை விட்டு வெளியேறி என் குடிலுக்குச் சென்றேன். சிறிது நேரம் முண்டகோபநிஷதத்தை எடுத்து வைத்துக்கொண்டு படித்தேன். மனம் அதில் நிற்க மறுத்தது. எனக்குப் பெரிய கவலையெல்லாம் இல்லை. ஆசிரமத்தில் இனி நான் இருக்கக்கூடாது என்று குருஜி சொல்லுவாரேயானால், சரி என்று கிளம்பிவிடும் முடிவில்தான் இருந்தேன். ஆனால் ஏனோ அவர் அப்படிச் சொல்லக்கூடியவராக எனக்குத் தோன்றவில்லை. அதனால்தான் சற்றும் கலவரமடையாமல் நடந்ததை அவரிடம் அப்படியே தெரிவித்தேன்.

உண்மையில் மஞ்சுவுக்கும் அந்த அனுபவம் புதிது. அதற்குமுன் தன்னை யாரும் முத்தமிட்டதில்லை என்று அவள் சொன்னாள்.

‘உனக்குப் பிடித்திருக்கிறதா?’ என்று கேட்டேன்.

அவள் மௌனமாக இருந்தாள்.

‘பிடித்திருந்தால் நாம் இதனை நீட்டிக்கலாம். முத்தம் ஒரு யோகம்’ என்று சொன்னேன்.

அவள் அதற்கும் பதில் சொல்லவில்லை. ஆனால் நான் மீண்டும் முத்தமிட முயற்சி செய்தபோது அவள் தடுக்கவில்லை. அம்முறை நான்கைந்து நிமிடங்களுக்கு அந்த முத்தம் நீடித்தது. அவள் அப்படியே கிடந்தாள். ஒரு பொருளைப் போல. உணர்ச்சிகளை வெளிக்காட்டிக்கொள்ளாமல். நானும்கூட அசையவில்லை. ஒரு முத்தத்தைத் தாண்டி வேறெதுவும் நிகழ்ந்துவிடக் கூடாது என்று மட்டும் எண்ணிக்கொண்டேன். சற்று படபடப்பாக இருந்தது. அது தவறா, சரியா என்று நான் கவலைப்படவில்லை. ஆனால், என்னால் அப்போது அதைத் தவிர்த்திருக்கவும் முடியாது என்று தோன்றியது. ஒருவேளை அவள் ஒப்புக்கொள்ள மறுத்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்று சிறிது யோசித்துப் பார்த்தேன். சற்று அசடு தட்டியிருக்கும். அதில் சந்தேகமில்லை. ஆனால் எத்தருணத்திலும் வன்முறையின் பிடியில் நான் விழுந்திருக்க மாட்டேன் என்று உறுதியாக நினைத்தேன்.

முத்தமிட்டு முடிந்து அவள் விலகியதும் சட்டென்று சொன்னேன், ‘இந்த நிமிடங்களில் உன் மனத்தில் வேறெந்த எண்ணமும் இருந்திருக்கக் கூடாது. அல்லது முத்தத்தைத் தாண்டி வேறொன்றை நினைத்தாயா?’

அவள் இல்லை என்று தலையசைத்தாள்.

‘சரி. அப்படியானால் நீ ஐந்து நிமிடங்கள் சரியாக தியானத்தில் இருந்திருக்கிறாய். கவனம் குவிந்த தியானம்’.

‘முத்தம் தியானமா?’

‘சந்தேகமென்ன? எதில் முற்றுமுழுதாக உன் மனம் குவிகிறதோ, அதுவே தியானம். எதில் இன்னொன்றின் நினைப்பு இல்லாது போகிறதோ, அது மட்டுமே தியானம்’.

அவள் சிரித்துவிட்டாள். ‘அப்புறம் கடவுள் எதற்கு? மோட்சத்துக்கு முத்தம் போதுமே?’ என்று சொன்னாள்.

‘ஆம். முத்தமும் மோட்சத்துக்கான வழிதான்’ என்று சொன்னேன்.

அன்று இரவெல்லாம் மழை கொட்டித் தீர்த்துவிட்டது. இனி பொழிய ஒரு சொட்டும் மிச்சமிருக்காது என்பதைப் போல. காலை சற்று வெளிச்சம் வந்ததும் எழுந்து வெளியே வந்து பார்த்தேன். ஏராளமான மரங்கள் வீதியெங்கும் முறிந்து விழுந்திருந்தன. கண்ணில் பட்ட மலைப்பரப்பெங்கும் சிற்றருவிகள் கொட்டிக்கொண்டிருந்தன. சமதளம் வாய்த்த சாலையெல்லாம் ஆறு போல நீர் ஓடிக் கொட்டிக்கொண்டிருந்தது. ஆசிரமத்துக்குள் நாங்கள் வளர்த்த பல மரங்கள் முறிந்து விழுந்திருந்தன. பூச்செடிகள் நனைந்து சுருங்கிச் சரிந்திருந்தன. பூந்தொட்டிகளெல்லாம் நீர் நிரம்பியிருந்தது. ஆசிரம வளாகத்துக்குள் நாங்கள் தங்கியிருந்த ஓலைச் சரிவிட்ட குடில்கள் நான்குமே பகுதியளவில் பழுதாகிவிட்டிருந்தன. இன்னொரு முழு நாள் மழையும் காற்றும் தொடருமானால் நாங்கள் குடில்களை காலி செய்துவிட்டு, குருநாதர் வசிக்கும் கான்கிரீட் கட்டடத்துக்கே இடம் பெயர்ந்துவிடவேண்டி இருக்கும் என்று தோன்றியது. என்ன காரணத்தாலோ அவர் எங்களைத் தனித்தைக் குடில்களில்தான் வசிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். ஆசிரமவாசிகளுள் ஒருவனாக என்னையும் ஏற்றுக்கொண்ட தினத்தன்றே யாரையோ கூப்பிட்டு எனக்கொரு குடில் அமைத்துத் தரச் சொல்லிவிட்டார். அன்று மாலையே என் குடில் தயாராகிவிட்டது. மூன்றடி உயரத்துக்குச் செங்கல் வைத்துப் பூசிய சுவர்கள். மேலே கூரைச் சரிவு. அவ்வளவுதான். கதவு கிடையாது. எங்கிருந்தோ கான்கிரீட் பாளங்களை எடுத்து வந்து தரைக்குப் போட்டு பூசி மெழுகிவிட்டுப் போய்விட்டார்கள்.

எனக்கு அது மிகப்பெரிய வியப்பாகவும் மகிழ்ச்சி தரத்தக்கதாகவும் அன்று இருந்தது. ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்த நாளில் நான் சிறுவன். வீட்டிலேயே எங்கள் நான்கு பேருக்கும் சேர்த்து ஒரே ஒரு அறையைத்தான் ஒதுக்கியிருந்தது நினைவுக்கு வந்தது. அதை ‘என் அறை’ என்று நான் என்றுமே உணர்ந்ததில்லை. ஆனால், ‘என் பிள்ளைகளுக்கு நான் முதலில் தர விரும்புவது பூரண சுதந்தரம். ஒரு தனிக்குடில் அதன் தொடக்கம்’ என்று குருஜி சொன்னார். ஆனால் குடிலுக்குள் அமர்ந்து தியானத்தில் ஈடுபடக் கூடாது என்பது அவரது கண்டிப்பான உத்தரவாக இருந்தது.

‘தியானத்தை வெட்ட வெளியில் செய். இங்கு மலை முகடுகளுக்குப் பஞ்சமில்லை. நதிக்கோ அருவிக்கோ ஓடைகளுக்கோ பஞ்சமில்லை. இறைத்தன்மையின் முழு நிர்வாணம் வெளியெங்கும் நிறைந்திருக்கிறது விமல். அதை வீணடிக்கக் கூடாது’ என்று குருஜி சொன்னார்.

ஆசிரமத்தில் சேர்ந்த நாளில் இருந்து நான் என்றுமே அவர் பேச்சை மீறியதில்லை. தியானத்தை மலைச்சாரலில்தான் வைத்துக்கொள்வேன். தியானம் மட்டுமல்ல. பல மூச்சுப் பயிற்சிகளை, பின்னாள்களில் பயின்ற யோகப் பாடங்களையும்கூட வெட்ட வெளியில்தான் அப்பியாசம் செய்வது வழக்கம். முதல் முறையாகக் குடிலுக்குள் நான் மஞ்சுவை நெருங்கி முத்தமிட்டிருக்கிறேன். அதை ஒரு தியானம் என்று அவளிடம் குறிப்பிடவும் செய்திருக்கிறேன். எப்படிப் பார்த்தாலும் ஒரு சன்னியாசி செய்கிற காரியமல்ல அது. குருஜி என்ன சொல்லப் போகிறார் என்று காத்திருந்தேன்.

நான் உறங்கி விழித்ததற்கு அரை மணி நேரம் கழித்துத்தான் அவர் எழுந்து வெளியே வந்தார். என்னைக் கண்டதும் புன்னகை செய்தார். ‘மழை விட்டிருக்கிறது போலிருக்கிறதே? வாயேன், சிறிது தூரம் நடந்துவிட்டு வரலாம்’ என்று சொல்லிவிட்டு எனக்கு முன்னால் வெளியே இறங்கி நடக்க ஆரம்பித்தார்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

92. மிருக நடமாட்டம்

 

 

மடிகேரியில் குருநாதரின் ஆசிரமம் இருந்த இடம் ஒரு வினோதமான பிராந்தியம். அந்தக் குன்றின் சரிவுகளில் எல்லா மலை வாசஸ்தலங்களிலும் இருப்பது போன்ற குட்டை வீடுகள், சரிவு வீடுகள் உண்டு. ஆனால் ஆசிரமம் அனைத்துக்கும் மேல் வரிசையில் ஒரு மொட்டைப் பாறையின் பின்புறம் தனியே அமைந்திருக்கும். ஆசிரமம் இருக்கும் இடத்துக்கு முந்தைய கொண்டை வளைவு வரை வண்டிகள் வரும். ஆனால் ஆசிரமத்துக்கு ஒரு சைக்கிள்கூட வர முடியாது. குன்றின் அடிப்பகுதியில் இருந்து குடைந்து குடைந்து சாலைகளைப் போட்டுக்கொண்டே வந்தவர்களுக்கு அந்த இடம் வந்தபோது அலுத்திருக்கும் என்று நினைத்தேன். அல்லது அதற்கு மேலே யாரும் போய் வீடு கட்டி வசிக்கமாட்டார்கள் என்று நினைத்துத் திரும்பிப் போயிருப்பார்கள். பல காலம் உண்மையிலேயே யாரும் போகாத இடமாகவே இருந்து கானகம் மண்டிய இடமாகிவிட்டது. பிறகொரு சந்தர்ப்பத்தில் யாரோ ஒருவர் கண்ணில் அந்த இடம் பட்டிருக்கிறது. கொக்கோ பயிரிடலாம் என்று நினைத்து மொத்தமாக அங்கிருந்த நாற்பது ஏக்கரா நிலத்தை உரிமையாக்கிக்கொண்டு பயிரிட ஆரம்பித்தார். தோட்டத் தொழிலாளிகள் போய்வருவதற்காக அவர் செலவிலேயே ஒரு பாதையும் அமைத்தார். இதையெல்லாம் சரியாகச் செய்தவரால் வனத்துறை அதிகாரிகளை ஏனோ சமாளிக்க முடியாமல் போய்விட்டது.அவர் ஒன்றிரண்டு போகம் பயிரிட்டிருந்தால் அதிகம் என்று குருஜி ஒரு சமயம் சொன்னார். பிறகு அந்த இடத்தை அப்படியே விட்டுவிட்டு எங்கோ போய்விட்டார். அக்காலங்களில் அந்தத் தோட்டத்தொழில் அதிபரின் இரண்டு மகன்களுக்கு குருஜி பாடம் சொல்லிக் கொடுப்பதற்காக அங்கே போய்வந்துகொண்டிருந்திருக்கிறார். அந்தப் பழக்கத்தில் அவருக்குக் கொஞ்சம் இடம் ஒதுக்கிக் கொடுத்து ஒரு கட்டடமும் கட்டிக்கொடுத்திருக்கிறார். குருஜி அங்கேயே தங்கி, தமது மகன்களைப் பெரிய மேதைகளாக்கிவிடுவார் என்று எண்ணியிருப்பார். குருஜி அங்கேயேதான் தங்கினார். ஆனால் அந்தத் தொழிலதிபர்தான் இடம் மாற்றிக்கொண்டு போய்விட்டார்.

நாங்கள் நடக்கத் தொடங்கியபோது குருஜி அந்தக் கானகத்தின் பூர்வகதையை எனக்குச் சொல்லிக்கொண்டே வந்தார். கொக்கோ பயிரிட்ட காலத்தின் கதை. கர்நாடகத்தில் அப்போது நிஜலிங்கப்பா முதல்வராகி இருந்தார். மாநிலத்தின் முதல் சட்டப்பேரவையின் நான்காவது முதல்வர். அவர் காலத்தில்தான் முதல் முதலில் மலைப்பகுதிகளில் தோட்டத் தொழில்களுக்கான நடைமுறைகள் ஒழுங்கு செய்யப்பட்டதாக அவர் சொன்னார். நடைமுறைகளை ஒழுங்கு செய்துவிடலாம். மனிதர்களை என்ன செய்ய முடியும்?

‘இந்த இடத்தின் முதலாளி உண்மையில் மிகவும் தன்மையான மனிதர். பெரிய தொழிலதிபராவார் என்று எதிர்பார்த்திருந்தேன். ஏனோ அவரால் வனத்துறை அதிகாரிகளுடன் ஒத்துப்போக முடியாமல் போய்விட்டது’ என்று குருஜி சொன்னார்.

‘அவர் என்ன ஆனார்?’ என்று கேட்டேன்.

‘தெரியவில்லை. இந்தத் தொழிலே வேண்டாம் என்று சொல்லிவிட்டு மங்களூருக்குப் போய் தங்கிவிட்டார். ஓரிரண்டு வருடங்கள் அதன்பின் தொடர்பில் இருந்தார். அதன்பின் அதுவும் இல்லாமல் போய்விட்டது’.

‘இடத்தை வேறு யாருக்காவது விற்றுவிட்டாரா?’

‘அதுவும் தெரியவில்லை. இன்றுவரை இந்த இடத்துக்கு உரிமை சொல்லிக்கொண்டு யாரும் வரவில்லையே? அப்படி வருகிறவரை இந்தத் தோட்டம் முழுவதும் நம்முடையதுதான்’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.

அப்போது அது தோட்டமாக இல்லை. பராமரித்தால்தானே தோட்டம்? புற்களும் புதர்களும் நெடிதுயர்ந்த செம்மரங்களும் வளர்ந்து மண்டியிருந்த காடு அது. எந்தக் காலத்திலோ போட்ட கம்பி வேலியின் மிச்சம் ஆங்காங்கே சிறிது தெரியும். குருஜி தனது இருப்பிடத்தை ஓர் ஆசிரமமாக மாற்றி அமைத்துக்கொண்ட பிற்பாடு கீழிருந்து ஒரு சிலர் வந்து போக ஆரம்பித்தார்கள். நான் ஆசிரமத்துக்குச் சென்று சேர்ந்த பிறகு அப்படி வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. அரசாங்கம் கைவிட்டுவிட்ட அந்தப் பிராந்தியத்துக்கு சுமாரான மண் சாலையொன்று போடப்பட்டதே ஆசிரமத்துக்கு வந்து போகிறவர்களின் முயற்சியால் நடந்ததுதான்.

‘விமல், நிலம் ஒரு குறியீடு. அது ஸ்தூலமல்ல. வெறும் குறியீடு. முகத்தைப் பார்ப்பதற்குக் கண்ணாடி இருப்பது போல மனத்தைக் காண நிலம்’ என்று குருஜி சொன்னார்.

‘அப்படியா?’

‘ஆம். அதனால்தான் நான் அதனை எனது மூன்றாம் நம்பர் கடவுளாக்கி வைத்திருக்கிறேன்’.

‘மனமும் நிலமும் ஒன்றா?’

‘சந்தேகமில்லாமல் ஒன்றுதான். கொள்ளளவு காரணத்தால் மட்டுமல்ல. கொந்தளிக்க முடிவு செய்துவிட்டால் அவனை அடக்கவே முடியாது. அவன் ஒரு பிசாசாகிவிடுவான்’ என்று அவர் சொன்னார். எனக்குச் சட்டென்று அவர் எங்கே வருகிறார் என்பது புரிந்துவிட்டது. நான் புன்னகை செய்தேன்.

‘ஏன் சிரிக்கிறாய்? ஒரு காலத்தில் இங்கே கொக்கோ பயிர் எப்படிச் செழித்து வளர்ந்தது தெரியுமா? முதலாளி இங்கே பக்கத்திலேயே ஒரு சாக்லேட் தொழிற்சாலையை அமைக்க நினைத்திருந்தார். அது நடந்திருந்தால் கர்நாடகத்தின் தலைசிறந்த சாக்லேட் உற்பத்தி மையமாக இது ஆகியிருக்கும். ஆனால் என்ன நடந்தது? இந்த மரங்களைப் பார். அந்த புதர்களைக் கவனி. நம்மால் இப்போது உள்ளே நுழையக்கூட முடியாது. கரடிகளும் பாம்புகளும் காட்டுப் பன்றிகளும் மேய்ந்துகொண்டிருக்கின்றன. இரவுகளில் காட்டெருமைகள் சிலவற்றைச் சில நாள்களாக இங்கே பார்க்கிறேன். சிங்கம், புலிதான் மிச்சம்’.

‘கானகம் நல்லதல்லவா?’

‘ஆம். ஆனால் கொக்கோவின் ருசி அதில் இருக்காது’ என்று குருஜி சொன்னார்.

நான் சட்டென்று அவர் கரங்களைப் பற்றி நிறுத்தினேன். ‘நான் தவறுதான் செய்தேன் குருஜி. ஆனால் அதனை அப்போது விரும்பினேன். விருப்பத்தை ஒதுக்கிவிட்டு எதையும் சாதிக்க இயலாது என்று எனக்கு எப்போதும் தோன்றுகிறது’ என்று சொன்னேன்.

‘ஆனால் நீ தேர்ந்தெடுத்து விரும்பப் பழக வேண்டும். ஏனென்றால், உன் வயது இப்போது உனக்கு ஓர் இடைஞ்சல்’.

வாழ்வில் நான் தேர்ந்தெடுத்த பாதை எத்தனைக் கரடுமுரடானது என்பதை நான் அப்போது அறிந்திருந்தேன். கணப் பொழுது தீர்மானத்தில் என் வீட்டை உதறிவிட்டு நான் கிளம்பியிருந்தேன். ஒரு சொட்டுக் கண்ணீர் இல்லை. சிறு துளித் துயரம் இல்லை. உறவுகளின் ஆக்டோபஸ் பிடியில் இருந்து முற்றிலுமாக விடுபட்டு விலகி நிற்பதே யோகம் என்று எனக்குத் தோன்றியது. ஒளிந்து வாழ்வதென்றால் பெருங்கூட்டத்துக்கு நடுவே கரைந்துவிட வேண்டும். வெளிப்பட்டு நிற்க வேண்டுமென்றால் தரையில் இருந்து ஓரடி உயரத்தில் கால்களைப் பொருத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். எதையும், யாரையும் சாராதிருப்பது. அல்லது அனைத்தின் மீதும் கவிந்து கிடப்பது. எனக்கு மிக நிச்சயமாகக் கடவுள் வேண்டியிருக்கவில்லை. நான் அது குறித்து அப்போது நிறையவே யோசித்துவிட்டிருந்தேன். நான் வெறுப்பதற்குக் கடவுளிடம் ஒன்றுமில்லை. அதே போலவே விரும்பவும் அவன் ஒன்றுமில்லாதவனாக இருந்தான்.

உண்மையில் குருநாதரிடம் நான் மண்டியிட்டதன் ஒரே காரணம் அதுதான். தனது தொண்ணூறு கடவுள்களை அவர் எனக்கு அறிமுகப்படுத்தியபோது அதில் ஒன்றுகூட நான்கு கரங்களோ, கரத்துக்கொரு ஆயுதமோ கொண்டிருக்கவில்லை. உச்சந்தலையில் நதியைத் தேக்கி வைத்திருக்கவில்லை. சிலுவை சுமந்து சென்று அதிலேயே அறைபட்டுச் சாகவில்லை. அனுபவங்களைக் கடவுளாக்குவதன் மூலம் ஞானத்தின் வாயிலைத் திறப்பதை எளிதாக்க முடியும் என்று அவர் கருதினார்.

‘விமல், கடவுள் ஒரு சுமை. மதம் அதைக் காட்டிலும் பெரும் சுமை. வாழ்நாள் முழுதும் மூட்டை சுமந்து கூன் போட்டுவிடாதே’ என்று அவர் என்னிடம் சொன்னார். எனக்கு அது பிடித்தது. சரியாக இருப்பதுபோலப் பட்டது. உறவுகளை உதறியதைப் போலக் கடவுளையும் மதங்களையும் உதறுவது எனக்கு எளிதாக இருந்தது. ‘ஆனால் பெண்ணை நினைக்காதிருக்க முடியவில்லை குருஜி’ என்று சொன்னேன்.

‘ஏன் நினைக்காதிருக்க வேண்டும்? நான் உதறிய கடவுளைத்தான் நான் இன்றுவரை நினைத்துக்கொண்டிருக்கிறேன். நினைத்துக்கொண்டிருப்பதன் மூலம்தான் அவன் நெருங்கிவிடாமல் பார்த்துக்கொள்ள முடியும்’ என்று அவர் அப்போது சொன்னார்.

அதை நினைவுபடுத்தி, மஞ்சுவை நான் முத்தமிட்டது அதன் தொடர்ச்சிதான் என்று அவரிடம் கூறினேன்.

‘முத்தம் ஒரு தியானம் என்று நீ நினைத்தது வரை சரி. ஆனால் நினைத்த மாத்திரத்தில் தியானம் கைகூடாது. முயற்சி செய்துவிட்டுத் தோற்றுவிட்டதாகச் சொல்லிக்கொண்டு மீண்டும் அதையேதான் தேடிப் போவாய்’.

‘மீண்டும் மீண்டும் தியானம் நல்லதலல்வா?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டேன்.

‘தியானம் ஒரு கருவி. நீ கருவிக்குப் பொட்டு வைத்து ஆயுத பூஜை செய்பவனாகிவிட விரும்பினால் தொடரலாம். ஆனால் உன்னை என் பதினேழாம் நம்பர் மன்னிக்க மாட்டான்’ என்று அவரும் சிரித்துக்கொண்டேதான் பதில் சொன்னார்.

அன்று பிற்பகல் வரை நாங்கள் ஆசிரமத்துக்குத் திரும்பவேயில்லை. நடந்துகொண்டேதான் இருந்தோம். முந்தைய நாள் அளவுக்கு அன்று மழை இல்லை. சற்று வடியத் தொடங்கியிருந்தது போலப் பட்டது. ஆனாலும் தூறல் இருந்தது. திடீர் திடீரென்று சில நிமிடங்களுக்கு ஓங்கியடித்துவிட்டுப் போனது. நாங்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆசிரமத்தில் இருந்து வெளியே வந்த கணம் முதல் எந்த மழைக்கும் நிற்காமல், எங்கும் ஒதுங்காமல் நடந்துகொண்டே இருந்தோம். போக்குவரத்தே இல்லாமல் போயிருந்த சாலையில் நடப்பது மிகவும் இதமாக இருந்தது. நாங்கள் போன இடமெல்லாம் மழை எங்கள் உடன் வந்தது. மூன்று மணிக்கு எனக்குப் பசித்தது. குருநாதரிடம் அதனைச் சொன்னேன். 'சரி வா சாப்பிடலாம்' என்று சொல்லிவிட்டு என்னை ஓர் உணவகத்துக்கு அழைத்துச் சென்றார். பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்த சூழ்நிலையில் அந்த ஒரு உணவகம் மட்டும் திறந்திருந்தது எங்களுக்கு ஆறுதலாக இருந்தது. குருஜி எனக்கு தோசையும் காப்பியும் வாங்கிக் கொடுத்தார். அவர் ஒரு கிச்சடி சாப்பிட்டார். பில்லுக்குப் பணம் கொடுக்க அவரிடம் காசில்லை. முதலாளியிடம் மறுநாள் கொடுத்தனுப்புவதாகச் சொல்லிவிட்டு வந்தார். பல்லாண்டுகளாக ஒரே இடத்தில் வசிப்பதில் இது ஒரு சௌகரியம். ஒரு சாதுவாக இருப்பது கூடுதல் சௌகரியம்.

மேலும் சிறிது நேரம் நடந்துவிட்டு மாலை நாங்கள் ஆசிரமத்தை நெருங்கியபோது குருஜி சொன்னார், ‘நடந்ததை மறந்துவிடு விமல். மற்றவர்களிடம் அதைப் பேசிக்கொண்டிருக்காதே. பெண்ணோ, காமமோ தவறென்று நான் சொல்லமாட்டேன். ஆனால் உன் தவத்தில் நீ அடையவேண்டியவை அதிகம். முதல் படிக்கட்டுப் பிச்சைக்காரனாக இருந்துவிட வேண்டாம் என்பதுதான் என் வேண்டுகோள்’ என்று சொன்னார்.

எவ்வளவு உயர்ந்த மனிதர் என்று நினைத்தேன். அவருக்கு ஒரு வாக்குறுதி அளித்தேன். ‘குருஜி, இனி நான் பெண்களை நினைக்கவே மாட்டேன், நெருங்கவே மாட்டேன் என்று பொய் வாக்கு அளிக்க நான் விரும்பவில்லை. ஆனால் எந்தப் பெண்ணும் என்னைச் சலனப்படுத்த அனுமதிக்க மாட்டேன்’ என்று சொன்னேன்.

‘அதுசரி. நாளை மஞ்சு மீண்டும் வந்தால் என்ன செய்வாய்?’

ஒரு கணம் யோசித்தேன். பிறகு சொன்னேன், ‘உச்சந்தலையில் முத்தமிட்டு ஆசிகூறி அனுப்பிவைப்பேன்’.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

93. சிலுவை

 

 

நாம் ஹரித்வாருக்குப் போகலாம் என்று குரு சொன்னார். அந்த வருடம் மகா கும்பமேளா நடக்க இருந்தது. ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே குரு அநேகமாக தினம் ஒருமுறையாவது அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அவரது மனக்கட்டமைப்புக்கு கும்பமேளாவைப் போன்ற விழாக்கள் எவ்வாறு கவனம் ஈர்க்கின்றன என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் அவர் போக வேண்டும், போக வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ஆசிரமத்துக்கு அவ்வப்போது வந்து போகும் ஒரு சலூன் கடைக்காரரிடம் சொல்லி எங்கள் ஐந்து பேருக்கும் ரயில் டிக்கெட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார். கிளம்புவதற்கு ஒரு வாரம் முன்பிருந்து எங்கள் உணவு முறையில் அவர் சில மாற்றங்கள் செய்தார். காலையில் ஏதேனும் ஒரு கீரை மட்டும் சாப்பிட வேண்டும். இரவு வால்நட் ஒரு பிடி. எதற்கு இப்படி என்று கேட்டேன். ‘ஹரித்வாரில் தங்கியிருக்கும் நாள்களில் நமக்கு உணவின் நினைவே வரக் கூடாது’ என்று சொன்னார்.

‘கருடன் எடுத்துச் சென்றபோது சிந்திய அமுதத் துளியைக்கூட நினைக்கக்கூடாதா?’

‘ஆம். அதையும்தான்’.

‘அப்படியானால் நம் பயணம் சுவாரசியமாகத்தான் இருக்கும்’ என்று சொன்னேன்.

நாங்கள் ஹரித்வாருக்குச் சென்று சேர்ந்தபோது, புவியெங்கும் தலைகளும் உடல்களும் கால்களுமாக இருந்தன. எங்கும் கூட்டம் கூட்டமாக மக்கள் அலைந்து திரிந்துகொண்டே இருந்தார்கள். பத்துப் பேருக்கு ஒருவர் சன்னியாசியாக இருந்தார். நீண்ட தாடியும் சடாமுடியும் காவி உடுப்பும் அணிந்து யார் யாரோ எங்கெங்கோ போனபடியும் வந்தபடியும் இருந்தார்கள்.

‘குருஜி, நாம் எங்கு தங்கப் போகிறோம்?’ என்று என் நண்பர்களுள் ஒருவன் கேட்டான்.

‘எங்கு வேண்டுமானாலும் தங்கலாம். இந்நகரமே ஒரு விடுதிதான்’ என்று குரு சொன்னார். பத்து நிமிடங்கள் நடந்தபோது அது உண்மைதான் என்பது புரிந்துவிட்டது. பார்த்த இடங்களில் எல்லாம் மனிதக் கூட்டம் முண்டியடித்தது. நடந்து போகிறவர்களைப் பொருட்படுத்தாமல் நடுச் சாலையிலேயே பல பேர் அமர்ந்து அடுப்பு மூட்டிக்கொண்டிருந்தார்கள். அதனை ஓர் இடைஞ்சல் என்று வாகன ஓட்டிகள்கூடக் கருதவில்லை. சுற்றிக்கொண்டு வண்டி ஓட்டிச் சென்றார்கள். ஒவ்வொரு மரத்தடியிலும் நூறு பேர் இருந்தார்கள். பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் சாப்பிட்டுக்கொண்டும் படுத்து உறங்கிக்கொண்டும் சிவநாமம் உச்சரித்துக்கொண்டும் இருந்தவர்களைப் பார்த்துக்கொண்டே நாங்கள் நடந்தோம்.

‘விமல், உனக்கு ஒன்று தெரியுமா? யோகிகள் இந்தக் கும்பமேளாவைத் தவற விடுவதேயில்லை. இந்நாள்களில் ஒவ்வொரு இரவும் அவர்கள் எங்கெங்கிருந்தோ இங்கு வந்து சேர்ந்துவிடுவார்கள். ஆண்டுக்கணக்கில் பேசாமல் சேர்த்து வைத்திருப்பதையெல்லாம் பேசி விவாதித்துவிட்டு விடியும் நேரம் மாயமாகிவிடுவார்கள்’.

‘அப்படியா?’

‘ஆம். இருபத்து நான்கு வருடங்களுக்கு முன்பு அப்படி ஒரு கும்பமேளாவில் நான் இயேசுவைப் பார்த்தேன்’.

நான் திடுக்கிட்டுப் போனேன். ‘யாரைப் பார்த்தீர்கள்?’ என்று மீண்டும் கேட்டேன்.

‘சொன்னேனே. இயேசுவைப் பார்த்தேன்’.

இதை நம்புவதா, வேண்டாமா என்று எனக்கு ஐயமாக இருந்தது. இயேசு இந்தியாவுக்கு வந்திருக்கிறார் என்று நம்பிச் சொல்லும் ஒரு சிலரை நான் சந்தித்திருக்கிறேன். ஆனால் இயேசுவை இங்கே கும்பமேளாவில் பார்த்தேன் என்று சொல்லும் ஒரு மனிதரை எப்படி வரையறுப்பது?

‘நீ நம்ப வேண்டும் என்பது எனக்கு முக்கியமில்லை. ஆனால் பார்க்காத ஒன்றை நான் பார்த்ததாகச் சொல்லுவதில்லை’ என்று குருஜி சொன்னார்.

‘தவறாக நினைக்காதீர்கள். சட்டென்று ஒரு தேவதைக் கதையுலகத்துக்குள் நுழைவது போலிருக்கிறது’.

‘ஆம் அப்படித்தான் இருக்கும். ஆனால் இது நடந்தது’ என்று குரு சொன்னார்.

அந்தக் கும்ப மேளாவுக்கு அவர் தனியாகத்தான் சென்றிருக்கிறார். இப்போதாவது ரயிலில் சென்று வர டிக்கெட் எடுத்துத் தர ஆள் இருந்தது. அந்நாள்களில் அவருக்கு அம்மாதிரியான உதவிகள் செய்யவும் யாருமில்லை. கும்பமேளா தொடங்குவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் அவர் மடிகேரியில் இருந்து கால் நடையாகவே புறப்பட்டுப் போயிருக்கிறார். தேவக்கோட்டையைச் சேர்ந்த யாரோ நடத்திவந்த தரும சத்திரம் ஒன்றில் தங்கியிருக்கிறார். தமிழர்கள் நடத்திவந்த சத்திரம் என்பதால் சப்பாத்தியுடன் அவருக்குச் சிறிது சாதமும் கிடைத்திருக்கிறது. சத்திரத்தில் சாப்பிட்டுவிட்டு அவர் கும்பமேளா பார்ப்பதற்காகக் கிளம்பிப் போனார்.

நாளெல்லாம் கங்கைக் கரையில் சுற்றித் திரிந்துவிட்டு, இருட்டிய பின்பு சத்திரத்துக்குத் திரும்ப நினைத்தவரால் முடியாமல் போனது. தாங்க முடியாத அளவுக்குக் கால்வலி. மாதக்கணக்கில் நடந்தே ஹரித்வாருக்கு வர முடிந்தவரால், அன்றைய ஒரே ஒருநாள் அலைந்த களைப்பைத் தாங்க முடியாமல் போய்விட்டது. கங்கைக் கரையிலேயே படுத்துவிட்டார். படுத்தபோது அவர் நேரம் பார்க்கவில்லை. விழிப்புத் தட்டியபோதும் மணி என்னவென்று தெரியவில்லை. ஆனால் கண் விழித்தபோது அவர் அருகே யாருமில்லை. லட்சக்கணக்கில் கூடி நின்ற மக்கள் எல்லோரும் எங்கே போய்விட்டார்கள்? இந்த ஹரித்வாரில் அப்படிச் சட்டென்று ஓடி ஒளிந்துகொள்ளவும் இடம் இருக்கிறதா என்ன?

அவருக்கு விநோதமாக இருந்தது. உண்மையிலேயே அவர் இருந்த ஆற்றங்கரையில் அப்போது ஒரு மனித முகம்கூட இல்லை என்று குருநாதர் சொன்னார். குளிர் ஒரு திருடனைப் போல உடலுக்குள் ஊடுருவி சிலிர்ப்புறச் செய்துகொண்டிருந்தது. அதன் வீரியத்தைச் சற்று மட்டுப்படுத்தும் நோக்கில் அவர் ஒரு மூச்சுப் பயிற்சியைச் செய்ய ஆரம்பித்தார். ஐந்து நிமிடங்கள் ஓடியிருக்கும். சட்டென்று மூடிய கண்ணுக்குள் மின்னலைப் போன்ற ஓர் ஒளிப்படலம் உதித்தது. குருநாதர் கண்ணைத் திறந்துவிட்டார். எதிரே சுழன்று ஓடிக்கொண்டிருந்த நதியின் வெகு தொலைவில் அந்த ஒளி உற்பத்தியாகிக்கொண்டிருந்தது. சூரிய உதயத்தைப் போன்ற ஒளியாக அது இல்லை. கண்ணை உறுத்தக்கூடிய மஞ்சள் நிற ஒளி. வடிவம் தீர்மானிக்கப்பட்ட ஒரு தீயின் நாக்கைப் போல எழுந்து நின்ற ஒளி. அந்த ஒளிப் பாளம் மெல்ல மெல்ல அங்கிருந்து நகர்ந்து கரையை நோக்கி வரத் தொடங்கியதை குரு பார்த்தார். அவருக்கு முதலில் எதுவும் புரியவில்லை. அது தன் பிரமையாக இருக்கும் என்று நினைத்தார். ஒருவேளை தான் இன்னமும் உறக்கத்துக்குள்ளேதான் இருக்கிறோமோ என்ற ஐயம் வந்ததும் தன் உச்சந்தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்துப் பார்த்தார். வலித்தது. எனவே தான் உறங்கவில்லை என்பது தெரிந்தது. அப்படியானால் கண்ணில் தென்படும் ஒளிப்பாளம் உண்மைதானா? அது என்ன? எங்கிருந்து, எதற்கு வருகிறது?

ஆர்வம் அதிகரிக்க, குருஜி எழுந்து நின்றுகொண்டார். ஒரு பாதாங்கொட்டை வடிவத்தில் இருந்தது அந்த ஒளி. இன்னொரு பார்வையில் ஏதோ பாய்மரக் கப்பல் போவது போலவும் தோன்றியது. ஆனால் அது கரையை நோக்கித்தான் வருகிறது என்பதில் சந்தேகமில்லை. என்னவாயிருக்கும் என்று அறியும் ஆவலில் அவர் குளிரையும் உறக்கத்தையும் மறந்தார். கரையோரம் இருந்த ஒரு மரத்தின் பின்னால் சென்று நின்றுகொண்டு கவனிக்க ஆரம்பித்தார்.

புறப்பட்ட நேரத்துக்குப் பத்து நிமிடங்களுக்குப் பிறகு அந்த ஒளிப்பாளம் கரையை வந்தடைந்தது. நீர்ப் பரப்பின் எல்லை வரை ஒளியாகவே தெரிந்தது, கரையைத் தொட்டதும் புகை மண்டலமாகிவிட்டது. குருநாதர் பயந்துபோனார். என்ன, என்ன என்று கண்ணைக் கசக்கிக்கொண்டு உற்றுப் பார்க்கத் தொடங்கினார். இருளில் அந்தப் புகை மண்டலம் மெல்ல மெல்லக் கலைந்து நகரத் தொடங்கவும் அங்கே மூன்று யோகிகள் நிற்பதை அவர் கண்டார். இயேசுவைத் தவிர அவருக்கு மற்ற இரண்டு பேரையும் அடையாளம் தெரியவில்லை. தன்னால் அடையாளம் காண முடிந்த அந்த ஒருவர் இயேசுதானா என்று திரும்பத் திரும்ப உற்றுப் பார்த்தார். தனக்கு ஏன் அவர் இயேசுவாகத் தோன்றுகிறார் என்றும் எண்ணிப் பார்த்தார். இயேசுவுக்குப் புகைப்படமெல்லாம் இல்லை. யாரோ வரைந்த படங்கள். யாரோ செதுக்கிய சிலைகள். திருவள்ளுவரைப் போல மனத்தில் நிலைத்துவிட்ட கற்பனை உருவம்.  அந்த உருவம் தெரிவதனாலேயே அது இயேசுவாகத்தான் இருக்க வேண்டும் என்பது என்ன கட்டாயம்?

குருநாதர் தான் கண்ட காட்சியை நம்பவே முடியாமல் இமைக்கவும் மறந்து பார்த்துக்கொண்டே இருந்தார். அந்த மூன்று யோகிகளும் கரையில் நின்று சிறிது நேரம் ஏதோ பேசிக்கொண்டிருந்துவிட்டு மீண்டும் புகை மண்டலமாகிவிட்டார்கள். புகை தண்ணீருக்குள் திரும்பவும் இறங்கியபோது ஒளிப் பாளமாகி நகர ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் அது மறைந்தும் போனது. ஒரு சம்பவத்தின் சாட்சியாகத் தன்னை நிறுத்திய இயற்கையை அவர் எண்ணிப் பார்த்தார். சந்தேகமின்றி அது ஒரு சிலிர்ப்பூட்டும் அனுபவம்தான். வாழ்வில் என்றுமே மறக்க முடியாததும்கூட.

நெடுநேரம் தான் கண்ட காட்சியை எண்ணி எண்ணி வியந்துகொண்டிருந்த குருநாதர், மெல்ல தான் மறைந்து நின்றிருந்த மரத்தடியில் இருந்து வெளிப்பட்டார். அவர்கள் நின்று பேசிவிட்டுச் சென்ற இடத்துக்கு வந்தார். ஒரு வாசனை. அல்லது ஏதேனும் ஒரு அடையாளம். ஒரு கால் தடம். என்னவாவது தனக்குக் கிடைக்கும் என்று அவருக்குத் தோன்றியது. ஆனால் அப்படி எதுவும் இல்லை. நதிக்கரை எப்போதும் போலிருந்தது. நதியின் ஓட்டமும் இயல்பாகவே இருந்தது. குளிர்க்காற்று இப்போது உறைக்க ஆரம்பித்திருந்தது. பரவச நிலையில் குருநாதர் குனிந்து அவர்கள் நின்றிருந்த இடத்தில் இருந்து ஒரு பிடி மண்ணை அள்ளினார்.

அள்ளி எடுத்த மண்ணில் சிறியதொரு சிலுவை இருந்தது என்று சொன்னார்.

(தொடரும்)

http://www.dinamani.com/junction

Link to comment
Share on other sites

94. ஒன்பது முகம்

 

 

அன்றிரவு எனக்கு உறக்கமில்லாமல் போனது. இத்தனைக்கும் குருஜி யாரோ ஒரு சேட்டு பக்தர் மூலம் நாங்கள் வயிறு நிறைய உண்பதற்கும் போர்த்திக்கொண்டு படுப்பதற்கும் ஏற்பாடு செய்திருந்தார். குளிர் சற்று அதிகம்தான் என்றாலும் படுத்தால் உறங்கிவிட முடியும் என்றுதான் என் நண்பர்கள் சொன்னார்கள். நாங்கள் தங்கியிருந்த தரும சத்திரத்தின் மாடியில் ஓட்டை உடைசல்களைப் போட்டுவைக்கும் அறை ஒன்று இருந்தது. ஜன்னல்கள் இல்லாத அந்த அறையில் சிதறிக் கிடந்த பொருள்களை ஓரமாக நகர்த்திவிட்டு நாங்கள் பாய் விரித்துப் படுத்திருந்தோம். ஐந்து பேருக்குமாகச் சேர்த்து மூன்று கம்பளிகள் கிடைத்திருந்தன. பெரிய பிரச்னை இல்லைதான். இருந்தாலும் ஏனோ எனக்கு உறங்கத் தோன்றவில்லை. சத்தமில்லாமல் எழுந்து வெளியே போய்விட்டேன்.

ஓடும் நதியின் மிதமான சத்தமே அந்நகரத்தின் ஆதார சுருதியாக இருந்தது. ஹரித்வாரின் எந்தப் பகுதியிலும் அந்தச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். நதி கண்ணில் படாத பகுதிகளிலும் அந்தச் சத்தம் இருந்துகொண்டே இருப்பதான பிரமை எனக்கு இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில் உண்டானது. நாங்கள் ஹரித்வாருக்கு வந்து மூன்று நாள்கள் கழிந்திருந்தன. கும்பமேளா கொண்டாட்டங்கள் அதன் உச்சத்தை எட்டியிருந்தன. பக்தர்களும் சன்னியாசிகளும் எங்கெங்கும் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் சிவநாமம் ஜபித்துக்கொண்டும் ஆசி வாங்கிக்கொண்டும் ஆசி வழங்கிக்கொண்டும் இருந்தார்கள். நகரெங்கும் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அரசாங்க மருத்துவர்கள் நாளெல்லாம் வாகனங்களில் சுற்றி அலைந்துகொண்டே இருந்ததைக் கண்டேன். யாருக்கு என்ன உபாதை ஏற்பட்டாலும் உடனே வண்டியை நிறுத்தி விசாரித்து சிகிச்சை அளித்துவிட்டுப் போனார்கள். சாலையோர பூரி கடைகளில் மிகவும் வயதானவர்களுக்குக் காசு கேட்காமல் சிற்றுண்டி தரப்பட்டதைப் பார்த்தேன். தள்ளுவண்டியில் வெல்லம் விற்றுச் சென்றவர்கள், கண்ணில் பட்ட சிறுவர்களுக்கெல்லாம் அள்ளி அள்ளி சும்மாவே கொடுத்துக்கொண்டு போனார்கள்.

பொதுவில் உலகம் இப்படியானது இல்லை. மறு பிறப்பின் குறைந்தபட்ச சௌகரியங்களை உத்தேசித்தோ, பிறப்பற்றுப் போவதை உத்தேசித்தோ அவரவர் தமக்குத் தெரிந்த வழிகளில் புண்ணியம் சேமிக்க நினைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மரணத்தையும் அதற்குப் பிந்தைய நிலையையும் ஓயாது நினைக்கக்கூடியவர்கள் வெல்லமும் பூரியும் விற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள். முதல் நாள் ஒரு சம்பவம் நடந்தது. குருநாதர் இயேசுவைச் சந்தித்த கதையைச் சொல்லியான பிறகு நாங்கள் கடைவீதிப் பக்கம் நடந்துகொண்டிருந்தோம். ஒரு கடையில் கூடை கூடையாக ருத்திராட்ச மாலைகளைக் கொட்டிக் குவித்து வைத்திருந்தார்கள். பதினான்கு முகங்கள் வரை இருந்த ருத்திராட்சங்கள் ரகவாரியாகப் பிரித்து வைக்கப்பட்டிருந்தன. குரு என்ன நினைத்தாரோ, சட்டென்று என்னைப் பார்த்து, ‘நீ ஒரு ருத்திராட்சம் வாங்கி அணிந்துகொள் விமல்’ என்று சொன்னார்.

‘ஐயோ எனக்கு எதற்கு?’

‘பரவாயில்லை. அணிந்துகொள். ஒன்பது முகங்கள் உள்ள ருத்திராட்சம் இருக்கிறதா என்று கேள்’ என்று சொன்னார்.

‘அதில் என்ன சிறப்பு?’

‘அதெல்லாம் பிறகு. முதலில் இருக்கிறதா கேள்’ என்று சொன்னார். வேறு வழியின்றி நான் கடைக்காரனிடம் ஒன்பது முகங்கள் உள்ள ருத்திராட்சம் இருக்கிறதா என்று கேட்டேன். அவன் உடனே ஒன்றை எடுத்துக் காட்டினான். நல்லதொரு எலுமிச்சம் பழத்தின் அளவில் ஐம்பத்து நான்கு ருத்திராட்சக் கொட்டைகளைச் சேர்த்துக் கட்டப்பட்ட மாலை.

‘எனக்கு இப்படி வேண்டாம். ஒரே ஒரு ருத்திராட்சம் இருந்தால் போதும்’ என்று சொன்னேன். ‘ஆனால் அது ஒன்பது முகங்கள் கொண்டதாக இருக்க வேண்டும்’.

கடைக்காரன் அங்கிருந்த பல ஒற்றை ருத்திராட்ச மாலைகளை எடுத்து ஆராய்ந்தான். என் நேரம், ஒன்பது முகங்கள் கொண்ட ருத்திராட்சம் எதுவும் தனியொரு மாலையாக அங்கே இல்லை. நான் வேறு கடை பார்க்கலாம் என்று சொன்னேன். குருநாதர் முடியவே முடியாது என்று சொல்லிவிட்டார். கட்டாயப்படுத்தி என்னை அந்தப் பெரிய ருத்திராட்ச மாலையை வாங்கி அணியவைத்தார். அவரே அதற்குப் பணமும் கொடுத்தார். என் நண்பர்களுக்கு ஆச்சரியம். உங்களுக்கு வேண்டுமா என்று குருஜி அவர்கள் மூவரிடமும் கேட்கவேயில்லை. இத்தனைக்கும் நான்கு பேரில் நான் ஒருவன் மட்டும்தான் எதன் மீதும் பிடிப்போ, நம்பிக்கையோ சற்றும் இல்லாதவன். அவர்கள் தெய்வத்தை நம்புகிறவர்களாக இருந்தார்கள். தெய்வமென்றால் உருவமுள்ளதல்ல. அவர்களுடையது ஓங்கார நம்பிக்கை. இருந்தாலும் ஒரு சம்பிரதாயத்துக்காகவேனும் அவர்களையும் அவர் கேட்டிருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. அதை நேரடியாகக் கேட்காமல், ‘நீங்களும் ஒன்று அணியலாமே குருஜி? ஒரு பத்து முகம் அல்லது பதினொரு முகம்?’

‘எனக்கோ எங்களுக்கோ அவசியமில்லை. உனக்குத்தான் இன்றைக்கு இது வேண்டும்’ என்று அவர் சொன்னார்.

இந்த உரையாடலை கவனித்துக்கொண்டிருந்த கடைக்காரனுக்கு அவரது பேச்சு சற்று வியப்பளித்திருக்க வேண்டும். ‘எதனால் அவருக்கு மட்டும் அவசியம் என்கிறீர்கள்? அதுவும் இன்று ஒரு நாளைக்கு மட்டும் அவசியம் என்றால் என்ன அர்த்தம்?’ என்று கேட்டான்.

குரு சற்றும் யோசிக்கவில்லை. ‘இன்றிரவு அவன் மரணத்தைத் தொட்டுவிட்டு மீள்வான் என்று நினைக்கிறேன். மீள்வதற்கு இது தேவை’ என்று சொன்னார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது. என் நண்பர்களும் அதிர்ச்சியடைந்திருந்தார்கள். குரு அப்படியெல்லாம் சொல்லக்கூடியவர் அல்லர். மரணத்தை முன்கூட்டி அறியக்கூடிய சக்தி மிக்கவராக அவர் இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவர் ஒரு அறிவாளி. நிறையப் படித்தவர். படிப்பின் மூலமும் சிந்தனையின் மூலமும் ஞானமடைந்தவர். மற்றபடி சித்தரோ, யோகியோ, வேறு எதுவுமோ அல்ல. மிக நிச்சயமாக அவர் ஒரு ஆன்மிகவாதியல்ல. இதை நான் நன்கறிவேன். அவரது ஆன்மிகம் என்பது அறிவின் பூரணத்துவத்தை தரிசித்துவிட்டு அதனை உதிர்த்துவிடுவது. அதனால்தான் அவர் சொன்னபோது என்னால் அதை நம்ப முடியவில்லை.

ஆனால் அந்தக் கடைக்காரன் ஒரு காரியம் செய்தான். குருநாதர் அவனிடம் கொடுத்த பணத்தை அப்படியே திருப்பிக் கொடுத்துவிட்டான். ஏன் என்று கேட்டதற்கு, ‘பரவாயில்லை. உங்கள் சீடன் நலமாயிருக்க நானும் பிரார்த்தனை செய்வேன்’ என்று சொன்னான்.

அந்தச் சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. நான் இறந்தாலும் சரி. இறப்பில் இருந்து அன்று தப்பினாலும் சரி. பகுதியளவு புண்ணியம் அவனைப் போய்ச் சேரும் என்று ஏனோ தோன்றியது. பாவ புண்ணியங்களை நான் நம்பத்தொடங்கிவிட்டேனா? அல்லது மரணத்தைக் குறித்த எண்ணம் எழும்போது இயல்பாக அவையெல்லாம் வந்து ஒட்டிக்கொண்டுவிடுமா? நெடுநேரம் நான் அது குறித்தே யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் குருநாதர் அதன்பின் அந்தப் பேச்சையே எடுக்கவில்லை. அவர் ஏதாவது சொன்னால், தொடர்ச்சியாகச் சிறிது உரையாடலாம் என்று நாங்கள் நான்கு பேருமே நினைத்தோம். ஆனால் அவர் மிகவும் கவனமாக அந்தப் பேச்சைத் தவிர்ப்பதாகப் பட்டது. வழியெங்கும் கண்ணில் தென்பட்ட சாதுக்களை உற்றுக் கவனிக்கச் சொன்னார். ‘இவர்கள் எல்லோருமே உங்களைப் போலத்தான். எதையோ கண்டு பயந்துபோய் ஓடிவந்தவர்கள்’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.

‘அப்படியா? நீங்களும் எதையோ கண்டு பயந்துதானே ஓடி வந்தீர்கள்?’ என்று கேட்டேன்.

‘இல்லை விமல். என்னைப் பார்த்து யாரும் பயந்துவிடக் கூடாது என்ற பெருந்தன்மையால் விலகி வந்தவன் நான்’ என்று சொன்னார். அன்று மாலை வரை அலைந்து திரிந்துவிட்டு, இரவு அந்தச் சத்திரத்தில் படுப்பதற்காகப் போனோம். வழக்கத்துக்கு விரோதமாக அன்றைக்கு நான் சீக்கிரமே உறங்கிவிட்டேன். குருநாதரும் என் நண்பர்களும் உறங்காமல் என் பக்கத்திலேயே இரவெல்லாம் கண் விழித்து உட்கார்ந்திருக்கிறார்கள் என்பது அதிகாலை நான் கண் விழித்தபோதுதான் தெரிந்தது.

‘ஏன் நீங்கள் தூங்கவில்லை?’ என்று கேட்டேன்.

‘கண்ணெதிரே ஒரு மரணம் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் இவர்கள் தூங்கவில்லை. அது எப்படி நிகழாது போகிறது என்று பார்ப்பதற்காக நானும் உறங்கவில்லை’ என்று குரு சொன்னார். நான் சிரித்தேன். அணிந்திருந்த அந்த ருத்திராட்சத்தை கழட்டி குருவின் கரங்களில் போட்டேன். ‘ரொம்ப கனம்’ என்று சொன்னேன். அவர் ஒன்றும் சொல்லவில்லை. ‘சீக்கிரம் கிளம்புங்கள். நாம் கும்பமேளா பூஜைகளைப் பார்க்கப் போகலாம்’ என்று சொன்னார்.

நான் சிறிது யோசித்துவிட்டு, ‘குருஜி, நீங்கள் என்னையும் தூங்கவிடாமல் உட்கார வைத்திருக்கலாம். வந்த மரணத்தைப் பார்த்துவிட்டாவது அனுப்பியிருப்பேன்’.

‘நீ என்னை நம்பவில்லை’. அவர் குரலில் லேசான வருத்தம் இருந்தது.

‘மன்னியுங்கள். நம்ப முடியவில்லை. ஏனென்றால், ஒரு விபத்துக்கான சாத்தியம் ஏதும் நிகழவில்லை. அதிர்ச்சிதரத்தக்க சம்பவம் ஒன்றும் நடக்கவில்லை. திடீர் உடல்நலக் குறைவுகூட ஏற்படவில்லை. ஒரு விஷப்பாம்போ, பூரானோ, தேளோகூட என்னை நெருங்கவில்லை. எப்போதும்போல் படுத்தேன். எப்போதும்போல் எழுந்தேன். இதில் மரணம் எங்கே வந்து சென்றது என்று புரியவேயில்லை’.

‘நாந்தான் சொன்னேனே, அதை இந்த ருத்திராட்சம் தடுக்கும் என்று?’

‘நல்ல கதையாக இருக்கிறதே. இத்தனை வருடங்களாகவும் நான் இரவுகளைக் கடந்துதான் எழுந்திருக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு பல் துலக்கப் போனேன். நான் என் குருவைச் சிறிதாவது நம்பியிருக்கலாம். அவர் விளையாடக்கூடியவரோ, பொய் சொல்லக்கூடியவரோ அல்ல என்பதை நான் அறிவேன். இருந்தாலும் எதை வைத்து அவர் அன்று நான் இறப்பின் வாசலைத் திறந்து மூடுவேன் என்று சொல்லியிருப்பார் என்பதை என்னால் அறிய முடியவில்லை.

அந்த மூன்றாம் நாள் இரவு நான் உறக்கமின்றி வெளியே அலையப் போனபோது எனக்கு அதற்கான காரணத்தை அறிய நேர்ந்தது. அது நான் சற்றும் எதிர்பாராதது. உண்மையில் நான் என் குருவை விட்டு விலகிவிட வேண்டும் என்று அப்போதே முடிவு செய்துவிட்டேன். செயல்படுத்தத்தான் மேலும் சில ஆண்டுகள் காத்திருக்கும்படியாகிவிட்டது.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

95. உள்ளங்கைத் தொலைக்காட்சி

 

 

படித்துறை ஓரமாகவே நான் நடந்துகொண்டிருந்தேன். நடக்க ஆரம்பித்த சிறிது நேரத்துக்கு படித்துறையிலும் சாலைகளிலும் ஆள் நடமாட்டம் இருந்தது. பிறகு அது மெல்ல மெல்லக் குறையலானது. சாலையெங்கும் அழுக்கும் சேறுமாக இருந்தது. படித்துறையின் அத்தனைக் கற்களிலும் சேறு படிந்திருந்தது. ஈரத்தின் வாசனையும் அடுப்புப் புகையின் வாசனையும் காற்றில் கலந்து வீசியது. ஒரு சீரான வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த கங்கையின் மென்மையான அலையடிப்பைப் பார்த்தபடியே நான் நடந்துகொண்டிருந்தேன். நீர்ப்பரப்பின் நடுவே நிறுவப்பட்டிருந்த கங்கைத்தாயின் சிலையைக் கடந்து இடதுபுறம் திரும்பி நடக்க ஆரம்பித்தபோது ஆள் நடமாட்டம் அங்கே அறவே இல்லை. கடைகளையும் மூடிவிட்டிருந்தார்கள். எங்கோ நாய் குரைக்கும் சத்தம் மட்டும் இடைவிடாமல் கேட்டுக்கொண்டே இருந்தது. ஏனோ எனக்கு ஹரித்வார் அத்தனை ஈர்ப்பாயில்லை. கங்கையின் மிக அழகான தோற்றத்தை நான் கற்பனையில் நெய்து வைத்திருந்தேன். அகன்று விரிந்த பெரும் நதி. கடலைப் போன்ற அலையடிப்பும் கடலுக்கு இல்லாத நளினமும் ஒருங்கே சேர்ந்த இயற்கையின் அதியற்புதப் படைப்பாக எனக்குள் திரண்டிருந்த கங்கையின் வடிவத்தை என்னால் ஹரித்வாரில் காண இயலவில்லை. ஒரு கால்வாயைப் போல அங்கே அந்நதி பெருகிச் சென்றுகொண்டிருந்தது. கட்டாயப்படுத்தி அணை கட்டிவைத்தாற்போல நதியின் இருபுறமும் சாலை போட்டு படித்துறை அமைத்து, குறுக்குப் பாலங்கள் நிறுவி, என்னென்னவோ செய்துவிட்டிருந்தார்கள்.

 

ஒருவேளை ஊருக்கு வெளியே இப்படியெல்லாம் இருக்காதோ என்னவோ. முதல் பார்வையில் நதி என்னை அங்கே கவரவில்லை. குருவிடம் இதனைச் சொன்னபோது, ‘கும்பமேளா முடியட்டும். நாம் கங்கோத்ரி வரை ஒரு பயணம் சென்று வருவோம்’ என்று சொன்னார். ஆம். அது அவசியம் என்று தோன்றியது. ஒரு பிரம்மாண்டமான பனிப்பாறை எப்படி உருகுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். யுகயுகமாக அது உருகிக்கொண்டே இருக்கிறது. இன்னும் பல யுகங்களுக்கு உருகுவதற்கு மிச்சம் வைத்துக்கொண்டே உருகுகிறது. பிரபஞ்ச சக்தியின் மூலாதாரம் எனக்கென்னவோ அந்தப் பனிப்பாறைக்குள் ஒளிந்திருக்கும் என்று தோன்றியது. எத்தனை பெரிய நதி! அப்படியானால் அதைக் காட்டிலும் எத்தனைப் பெரிய பனிப்பாறை! எவ்வளவு பெருஞ்சக்தியைத் தன்னுள் தேக்கிவைத்திருக்கும்! ‘கங்கோத்ரியில் கங்கை பொங்கிப் பெருகத் தொடங்கும் இடத்தின் ஆதார சுருதி, மேல் பிரதி மத்யமம்’ என்று குருஜி சொன்னார். அவருக்கு சங்கீதம் தெரியும்.

 

எப்போதாவது அடிக்குரலில் மென்மையாகப் பாடிக் கேட்டிருக்கிறேன். ஆனால் அது ஹிந்துஸ்தானியாகவோ கர்நாடக சங்கீதமாகவோ இருக்க முடியாது என்று நினைத்தேன். வேறு ஏதோ ஒரு சங்கீதம். சுமாராக இருக்கும்போலத்தான் தோன்றும். குறைந்தபட்சம் ஹரித்வார் நகரத்துக்குள் பாயும் கங்கையின் தோற்றத்தை நிகர்த்தாவது. அவருக்குத் தனது மாணவர்களில் யாராவது ஒருவரேனும் சங்கீதம் பயில வேண்டும் என்ற எண்ணம் உண்டு. துரதிருஷ்டவசமாக நாங்கள் நான்கு பேருமே அந்த விருப்பம் அற்றவர்களாக இருந்தோம். குருநாதர் இன்னமும் சன்னியாச தீட்சை அளித்திராத பிரதீப் என்ற என் நண்பன் உள்ளதிலேயே மிக மோசம். புகழ்பெற்ற திரைப்படப் பாடல்களைக் கேட்க நேர்ந்தால்கூட அந்த இடத்தைவிட்டு உடனே அகன்றுவிடுவான். ‘இசையாக எது என் செவிக்குள் நுழைந்தாலும் என் இதயத் துடிப்பு அதிகரித்துவிடுகிறது. உயிர் போய்விடும் அச்சம் உண்டாகிவிடுகிறது’ என்பான்.

என் அப்பா என் குருநாதரைப் போலவே அடிக்குரலில் பாடக்கூடிய மனிதர். தூங்கி எழும்போது ஏதாவது பாடலை முணுமுணுத்துக்கொண்டேதான் எழுந்திருப்பார். கடும் கோபத்திலோ, வெறுப்புற்றோ இருக்கும் நேரங்களிலும் அவரால் அப்படிப் பாட முடியும். ஒருவிதத்தில் தனது கட்டுக்கடங்காத உணர்ச்சிகளை அவர் அந்தக் கீழ்க்குரல் சங்கீதத்தின் மூலம்தான் தணித்துக்கொள்கிறாரோ என்று தோன்றும். நாங்கள் நான்கு பேரும் வீட்டைத் துறந்து வெளியேறிய பின்பு அவர் அம்மாதிரிப் பாடுகிறாரா என்று அறிய மிகவும் விரும்பினேன். கேசவன் மாமாவைச் சந்தித்தபோது எப்படியோ அதைக் கேட்க மறந்து போனேன்.

கங்கையைப் பார்த்தபடியே நான் நடந்துகொண்டிருந்தேன். நெடு நேரம் நடந்திருப்பேன் என்று தோன்றியது. சிறிது அமரலாம் என்று நினைத்தபோது, ‘அங்கே வேண்டாம், இப்படி வா’ என்று ஒரு குரல் கேட்டது. அது ஒரு பெண்ணின் குரல். நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். இருளில் யார் என்னை அழைத்தது என்று எனக்குப் புலப்படவில்லை. ஒருவேளை அது என் பிரமையாக இருக்கும் என்று தோன்றியது. மேலும் நடக்க முடிவு செய்தபோது மீண்டும் அக்குரல் வந்தது. ‘உன்னை இங்கே வரச் சொன்னேன்’.

குரல் வந்த திசையில் உற்றுப் பார்த்தேன். நான் நடந்துகொண்டிருந்த இடத்துக்குப் பத்தடி தொலைவில் ஒரு மூடிய கடையின் வாசலில் தலையோடு காலாகக் கம்பளியைப் போர்த்திக்கொண்டு அமர்ந்திருந்த உருவத்தைக் கண்டேன். போவதா வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது. எப்படியோ என்னையறியாமல் நான் அந்த உருவத்தை நெருங்கிச் சென்றேன்.

‘உட்காரேன். அதையும் சொல்ல வேண்டுமா?’

நான் அமர்ந்தேன். ‘நீங்கள் யார்?’ என்று கேட்டேன்.

அந்தப் பெண் முக்காட்டை விலக்குவது போலப் போர்த்தியிருந்த கம்பளியை விலக்கினாள். சுமார் நாற்பது வயதிருக்கும் என்று தோன்றியது. சரியான வடஇந்திய முகம். முன் தலையில் முடி நிறையக் கொட்டியிருந்தது. புருவங்கள் இல்லை. நெற்றியில் பொட்டில்லை. புடைவையோ, சல்வாரோ அணியாமல் ஒரு சட்டையை அணிந்திருந்தாள். அவளது அளவுக்குச் சற்றும் பொருந்தாமல் தொளதொளவென்று இருந்த சட்டை. நான் உடனே அவள் கீழே என்ன அணிந்திருக்கிறாள் என்று பார்க்க விரும்பினேன். ஆனால் கம்பளி மடியில் இருந்தது. கீழ் ஆடை தெரியவில்லை.

‘என்ன விஷயம்? எதற்கு அழைத்தீர்கள்?’ என்று கேட்டேன்.

அவள் உடனே பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் என்னை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, பின்புறம் திரும்பி வாயில் இருந்து எதையோ துப்பினாள். அநேகமாக அது புகையிலைக் கட்டையாக இருக்கும் என்று நினைத்தேன்.

‘நேற்று முன் தினம் நீ இறந்திருக்கத்தான் வேண்டும். உன் மரணத்தை ஒத்திவைக்கச் சொல்லி உன் அண்ணன் என்னிடம் கேட்டுக்கொண்டதால் உன் குருவின் மூலம் நான் அதனைத் தடுக்கும்படி ஆனது’ என்று சொன்னாள்.

நான் எழுந்துவிட்டேன். என்னையறியாமல் என் உடல் நடுங்க ஆரம்பித்தது. அங்கிருந்து ஓடிவிடலாம் என்று தோன்றியது. அவள் சிரித்துக்கொண்டே, ‘உட்கார். ஏன் எழுந்துவிட்டாய்? பயப்படாமல் உட்கார்’ என்று சொன்னாள். நான் உட்காரவில்லை. எனவே வேறு வழியின்றி அவளும் எழுந்து நின்றாள். இப்போது அவள் சட்டைக்குக் கீழே கம்மீஸ் அணிந்திருப்பது தெரிந்தது.

‘நீங்கள் யார்?’ என்று மீண்டும் கேட்டேன்.

‘அது அத்தனை முக்கியமா? அதைவிட முக்கியமான ஒரு செய்தி உனக்கு என்னிடம் உண்டு. அதைச் சொல்லவா?’

‘சரி’.

‘நீ கங்கோத்ரிக்குப் போகவேண்டாம் என்று உன் அண்ணன் நினைக்கிறான்’.

‘ஏன்?’

‘அது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதைச் சொல்லச் சொன்னான்’.

‘இதை அவனே என்னிடம் சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே? எங்கிருக்கிறான் அந்த ராஸ்கல்?’

அவள் சிறிது நேரம் ஒன்றும் பேசவில்லை. எனக்குக் கட்டுக்கடங்காத கோபம் வந்தது. விஜய் மீதிருந்த அந்தக் கோபத்தை எங்கே அந்தப் பெண்ணிடம் காட்டிவிடுவேனோ என்று அச்சமாக இருந்தது. அவளை எனக்கு முன்பின் தெரியாது. அவள் யாரோ ஒரு யோகினி. அல்லது சித்தர். வேறு யாராக இருந்துவிட முடியும்? முன்னறிமுகம் இல்லாத ஊரில் இதற்குமுன் என்றுமே பார்த்திராத யாரோ ஒருத்தியைப் பிடித்து எனக்குத் தகவல் அனுப்பத் தெரிந்த அயோக்கியன், அதை நேரில் வந்து அவனே சொன்னால்தான் என்ன?

அவன் என் உயிரைக் காப்பாற்ற நினைத்ததை அந்தப் பெண் சொல்லியிருந்தாள். நல்ல விஷயம்தான். என் அண்ணன் எங்கிருந்தாலும் என்னைக் கவனிக்கிறான். யார் யார் மூலமாகவோ எனக்குச் செய்தி அனுப்புகிறான். யார் கண்டது? ஒருவேளை எங்கள் மூவரையுமே அவன்தான் தாங்குகிறானோ என்னமோ. இல்லை என்று சொல்லிவிட முடியாதல்லவா? அவன் யோகி. பெரிய மகான். இருந்துவிட்டுப் போகட்டுமே. என் கண்ணில் தட்டுப்படாத எதுவும் என்னைப் பொறுத்தவரை உண்மையல்ல. கடவுளுக்கே அதுதான் நிலைமை என்னும்போது இவன் யார் சுண்டைக்காய்?

நான் மனத்தில் நினைப்பதை அந்தப் பெண் படித்திருப்பாள் என்று தோன்றியது. அதனால் பரவாயில்லை என்றும் சேர்த்து நினைத்துக்கொண்டேன். ஆனால் அவள் அதைப் பற்றியெல்லாம் எதுவும் பேசவில்லை. ‘நீ மிகவும் களைப்பாக இருக்கிறாய். சிறிது நேரம் இங்கே உட்கார்ந்துவிட்டுப் போ’ என்று சொன்னாள்.

‘எதற்கு?’ என்று கேட்டேன்.

‘உன் அண்ணன் என் நண்பன். நாங்கள் இருவரும் ஒரே குருவிடம் பாடம் பயின்றவர்கள்’.

‘சரி’.

‘நீ சன்னியாசம் ஏற்ற தினத்தில் அந்தக் காட்சியை அவன் எனக்குக் காட்டித் தந்தான்’.

‘எந்தத் தொலைக்காட்சியில் அது ஒளிபரப்பானது?’

‘அவன் உள்ளங்கையை விரித்துக் காட்டினான். நீ அருவிக்கரையில் சன்னியாசம் பெற்றதை நான் கண்டேன்’.

‘ஓ. அது அவ்வளவு முக்கியமா? உங்களுக்குத் தெரியுமா? நான் ஒரு நாத்திகன். எனக்குக் கடவுளோ மதமோ இல்லை. சித்து, யோகம், ஆன்மிகம் எவற்றின் பக்கமும் ஒதுங்கும் எண்ணம் இல்லாதவன். என் சன்னியாசத்தின் ஒரே நோக்கம், என் சுதந்திரம் மட்டுமே’.

‘உன் அண்ணன் சொல்லியிருக்கிறான். ஆனால் அவனுக்கு அதில் சிறிது வருத்தம்தான்’.

‘என்ன வருத்தம்?’

‘உண்மையை வலுக்கட்டாயமாக நீ தரிசிக்காமல் தவிர்ப்பது பற்றிய வருத்தம்’.

‘அவன் வருத்தத்துக்கு நான் ஒன்றும் செய்ய முடியாதம்மா. எனக்கு ஒன்று மட்டும் சொல்லுங்கள். நான் எவ்வாறு சாக இருந்தேன்? என் குரு என்னை எப்படிக் காப்பாற்றினார்?’

‘உனக்கு நெஞ்சு வலி வந்தது’.

‘அப்படியா? நான் அதை அறியவில்லை’.

‘அறிந்திருக்க முடியாது. ஏனென்றால், அந்த வலியை உன் குருநாதர் அப்போது எடுத்துக்கொண்டார்’.

இது எனக்கு அதிர்ச்சியளித்தது. என் குரு இவ்வாறான செயல்களைப் புரியக்கூடியவர் அல்லர்.

‘ஆம். அவர் அதையெல்லாம் செய்யக்கூடியவர் இல்லைதான். எனக்கு வேறு வழியில்லாததால் அந்தக் கணம் அவர் மூலம் அதைச் செய்தேன்’.

‘ஏன், என் வலியை நீங்களே எடுத்துக்கொண்டிருக்கலாமே?’

‘இல்லை. அது சாத்தியமில்லை’.

‘ஏன்?’

‘ஏற்கெனவே நான் வேறொருவரின் வலியை ஏற்றிருக்கிறேன். கும்பமேளாவுக்குப் பிறகுதான் அதனை நான் இறக்கிவைக்க வேண்டும்’.

‘ஓஹோ. உங்களுக்கெல்லாம் வேறு வேலையே இல்லையா? இதை ஒரு பொதுச்சேவையாக நீங்கள் எல்லோருக்குமே செய்யலாமே? ஏன் நபர்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?’

‘விமல், நாங்கள் வெறும் கருவி. உனக்கு இது புரிய இன்னும் சிறிது காலம் ஆகலாம்’.

‘நான் புரிந்துகொள்ளவே விரும்பவில்லை. ஆனால் என் அண்ணனைப் பார்த்தீர்களானால் ஒரு விஷயம் நிச்சயமாக அவனிடம் தெரிவியுங்கள். இந்த உலகின் ஒரே பெரிய அற்புதம் சுதந்திரமாக இருப்பது மட்டும்தான். என் சுதந்திரமே என் கடவுள். என் மகிழ்ச்சியே என் தரிசனம்’.

‘அப்படியா? நீ அவ்வளவு சுதந்திரமாகவா இருக்கிறாய்?’

‘சந்தேகமே இல்லை அம்மா. எனக்குத் தளைகளே இல்லை. சிந்தனைக்கும் சரி, செயல்பாட்டுக்கும் சரி. நான் இப்படித்தான் இருப்பேன், இறுதிவரை வரையிலுமேகூட’.

‘நல்லது மகனே. நீ எங்கே போனாய் என்று தெரியாமல் உன் குரு கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறார். விடுதிக்குச் செல்’ என்று சொன்னாள்.

சட்டென்று அப்போதுதான் தோன்றியது. பள்ளியில் இருந்து நான் திரும்ப நேரமானால் அம்மா இப்படித்தான் கவலைப்படுவாள். வாசலுக்கு வந்து நிற்பாள். தொலைவில் என் முகத்தைப் பார்த்ததும் திருப்தியாகி உள்ளே போய்விடுவாள். அம்மாவின் இடத்தில் குரு தன்னைப் பொருத்திக்கொண்டுவிட்டாரா என்ன?

அவரை விட்டும் விலகிவிட வேண்டும் என்று அன்றுதான் நினைத்தேன்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

96. தீட்சை

 

 

கங்கோத்ரியில் சூர்ய குண்டத்தின் அருகே நாங்கள் சென்று சேர்ந்தபோது நல்ல வெயில் அடித்தது. ஆனால் வெயில் வெளிச்சமாக மட்டுமே இருந்தது. வெப்பம் இல்லை. வெளியெங்கும் நிரம்பிப் பரவியிருந்த குளிர் அவ்வப்போது அசைந்து நகர்ந்து சிலிர்ப்பூட்டிக்கொண்டிருந்தது. கண்ணுக்கெட்டிய தொலைவெங்கும் பெரிய பெரிய வெண்பாறைகள் சூழ்ந்திருக்க, பொங்கி ஓடிவந்த நதி சிறு சிறு அருவிகளாக விழுந்துகொண்டிருந்தது. எத்தனை உன்னதமான பரிசுத்தம்! நீரின் நிஜத் தோற்றம் அதுதான் என்று தோன்றியது. கண்ணாடியைக் காட்டிலும் துல்லியம். அருவி விழும் இடத்திலும் நிலமும் அதில் நிறைந்த கூழாங்கற்களும் இடைவெளிகளை நிரப்பியிருந்த மணல் துகள்களும் தெரிந்தன.

‘நாம் இறங்கலாம்’ என்று குருநாதர் சொன்னார். நாங்கள் மேலாடைகளைக் கழட்டிவிட்டு நீரில் இறங்கினோம். உருகியோடும் பனியின் குளிர்ச்சி பாதங்களில் சுரீரெனத் தாக்கி, மறுகணமே உச்சந்தலைக்குச் சென்று சேர்ந்து நிலைத்து நின்றது. குருநாதர் தலைக்கு மேலே கரம் குவித்து வணங்கினார். சாஷ்டாங்கமாக நதியை விழுந்து சேவித்தார். நீர்ப்பரப்பில் அப்படியே படுத்துக் கிடந்தார். இயற்கையினும் பெரிய அதிசயம் இல்லை என்று சொல்லிக்கொண்டேன். அன்றெல்லாம் நாங்கள் சூரிய குண்டத்தைவிட்டு நகரக்கூட இல்லை. நெடுநேரம் நீரில் குளித்துத் திளைத்துவிட்டுப் பிறகு கரைக்கு வந்து ஈரம் காய்ந்தோம். வேறு உடை அணிந்துகொண்டு அங்கேயே பாறைகளின் மீது அமர்ந்து ஓடும் நதியைப் பார்த்துக்கொண்டே இருந்தோம். யாரும் யாருடனும் பேசவில்லை. யாருக்கும் பேசுவதற்கு ஒன்றும் இருக்கவில்லை. நதியைத் தவிர அங்கு வேறொன்றும் இல்லை என்பதால் எங்களைத் தொந்தரவு செய்யவும் யாருமில்லை. மாலை வரை நாங்கள் உணவை நினைக்கவில்லை. முதலில் நெஞ்சடைக்கச் செய்த குளிர்ச்சி பழகப் பழக ஒன்றுமில்லாமலாகிப் போனதால், உடலைக் குறித்த நினைவும் இல்லாமலானது. எங்கள் விழிகளில் நதியைத் தவிர வேறெதுவுமே படவில்லை. ஒரு சீரான சத்தமுடன் பொங்கி ஓடிய நதி. பனிப்பாறையின் இண்டு இடுக்குகளில் இருந்துதான் அது பெருகியது. பரந்த பரப்பில் ஆங்காங்கே நிலம் பிளந்த சிறு சிறு நீரூற்றுகளைப் போலத்தான் கிளம்பியது. ஆனால் பெருகத் தொடங்கும் கணத்தில் எப்படியோ அது உரு பெருத்துவிடுகிறது. உருகிய பனியும் உருகாத பனிக்கட்டிகளுமாகச் சுழன்று சுழன்று வந்து விழ்ந்துகொண்டிருந்தது. எத்தனை யுகங்களாக!

குருநாதர் மாலை வரையிலுமே நதியில் அமிழ்ந்து நதியைச் சேவித்துக்கொண்டேதான் இருந்தார். அவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று எங்களுக்குக் கவலையாக இருந்தது. உடல் விரைத்து அவர் இறந்தே போயிருந்தால்கூட வியக்க ஒன்றுமில்லை. எனக்குத்தான் அவரது அந்தக் கோலம் மிகவும் தொந்தரவு செய்தது. நான் நதிக்குள் இறங்கிச் சென்று அவரைத் தொட்டு எழுப்பினேன். ‘என்ன?’ என்று கேட்டார்.

‘போதும். கரையேறிவிடுங்கள்’ என்று சொன்னேன்.

அவர் பதில் சொல்லவில்லை. ஆனால் எழுந்து வந்தார். நாங்கள் நால்வருமே உடனே அவரைத் துடைத்துவிட்டு வேறு உடைகளைக் கொடுத்து அணிந்துகொள்ளச் சொன்னோம். பிரதீப் எங்கிருந்தோ சுள்ளிகளைப் பொறுக்கி வந்து நெருப்பு மூட்டினான். சிறிது நேரம் நாங்கள் அதில் குளிர் காய்ந்தோம். ஹரித்வாரில் இருந்து கிளம்பும்போதே சத்திரத்தில் இருந்து கொஞ்சம் ரொட்டிகளையும் மிளகாய் ஊறுகாயையும் எடுத்து வந்திருந்தோம். அதைப் பிரித்து வைத்துக்கொண்டு சாப்பிட்டோம். ஏனோ குருநாதர் அடிக்கடி என்னைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டார். என் கையைப் பிடித்துக்கொண்டார்.

‘எனக்கு ஒன்றுமில்லை குருஜி. நான் நன்றாகத்தான் இருக்கிறேன். கவலைப்படாதீர்கள்’ என்று சொன்னேன். இருந்தாலும் அவருக்குச் சமாதானமாகவில்லை.

‘வாழ்வில் என்றுமே எனக்கு அப்படித் தோன்றியதில்லை விமல். நீ இறந்துவிடுவாய் என்று மனத்தில் பட்டது. நீ இறக்காதது மகிழ்ச்சிதான். ஆனால் எனக்கு ஏன் அவ்வாறு தோன்ற வேண்டும் என்றுதான் புரியவேயில்லை’ என்று சொன்னார். இதை அவர் ஏழெட்டு முறை என்னிடம் சொல்லிவிட்டிருந்தார். நான் சிறிது நேரம் யோசித்தேன். அந்த யோகினி என்னிடம் சொன்னவற்றை அவரிடம் சொல்வதா வேண்டாமா என்று அதுவரை நான் முடிவு செய்திருக்கவில்லை. சொன்னால் அந்த மனிதர் என்ன ஆவார் என்று யூகிக்கவும் இயலவில்லை. எனக்குத் தெரிந்த குருநாதர் அற்புதங்களை ஏற்காதவர். அவை உண்டென்று அவருக்குத் தெரியும். அதன் அறிவியலையும் அவர் ஓரளவுக்கு அறிவார். இருப்பினும் அது நமக்குத் தேவையில்லை என்று சொல்வதே அவர் வழக்கம்.

‘என்னைப் பொறுத்தவரை எளிய உடல் உபாதைகளில் இருந்து தப்பிக்க சிறிதளவு யோகப் பயிற்சி உதவும். அதேபோலத்தான் மூச்சுப் பயிற்சிகளும். நாமெல்லாம் சன்னியாசிகள். பிட்சை எடுத்து உண்கிறவர்கள். நம்மிடம் நினைத்த மாத்திரத்தில் பணம் புழங்காது. ஒரு தலைவலி, ஜுரம் வந்தால் மருந்தில்லாமல் சரிப்படுத்திக்கொள்ளத் தெரிந்திருந்தால் போதும்’ என்று சொல்வார்.

தலைவலித்தால் அதில் இருந்து விடுபடுவதற்கு குருநாதர் ஒரு சமயம் எங்களுக்கு ஒரு மூச்சுப் பயிற்சியைச் சொல்லிக் கொடுத்தார். நேராக நிமிர்ந்து நின்றுகொண்டு அப்படியே குனிந்து கால் கட்டை விரல்களைத் தொட வேண்டும். அதாவது, உடல் சரி பாதி வளைந்து குனிந்து நிற்க வேண்டும். அந்த நிலையில் இடது நாசியை மூடிக்கொண்டு வலது நாசியால் முப்பது விநாடிகளுக்குக் காற்றை உள்ளே இழுத்து, பிறகு வலது நாசியை மூடிக்கொண்டு இடப்புறத்தால் வெளியேற்ற வேண்டும். ஆறு முறை இதனைச் செய்தால் போதும். எப்பேர்ப்பட்ட தலைவலியும் உடனே விட்டுவிடும் என்று குரு சொன்னார்.

‘குருஜி, குனிந்த நிலையில் காற்றை உள்ளே இழுப்பது தவறல்லவா?’

‘ஆம் தவறுதான். ஆனால் காற்று உடனடியாக மூளைக்குச் சென்று சேர வேறு உபாயமில்லை. சற்று எச்சரிக்கையுடன் இழுக்க வேண்டும்’ என்று சொன்னார்.

வேறொரு நாள் அகிலேஷுக்கு இடுப்புப் பிடித்துக்கொண்டது. வாயுப் பிடிப்பு. இரண்டு நாள்கள் அவன் மிகவும் கஷ்டப்பட்டான். என்னென்னவோ செய்து பார்த்தும் வலி நீங்கவில்லை. குருஜி அவனை இரண்டு செங்கல்களின் மீது கால் வைத்து ஏறி நிற்கச் சொன்னார். அவனது இரு கரங்களிலும் இரண்டு செங்கற்களைக் கொடுத்து கைவிளக்குப்போல ஏந்திக்கொள்ளச் செய்தார். அப்படியே இரண்டு கரங்களையும் உயரே தூக்கிக்கொண்டு பத்து நிமிடங்கள் அசையாமல் நிற்கச் சொன்னார். அந்தப் பத்து நிமிடங்களும் எவ்வளவு குறைவான முறை சுவாசிக்க முடியுமோ அவ்வளவு குறைவாக சுவாசிக்கும்படி அவனிடம் சொன்னார்.

அகிலேஷ் அவர் சொன்னபடியே செய்தான். சரியாகப் பத்து நிமிடங்கள் ஆனதும் குருநாதர் அவன் கைகளில் இருந்த செங்கற்களை வாங்கிக்கொண்டு அவனை இறங்கிவிடச் சொன்னார். இப்போது அவனுக்கு அந்த வாயுப் பிடிப்பு முற்றிலும் இல்லாமலாகியிருந்தது. அவனால் நம்பவே முடியவில்லை. ஒரு குழந்தையைப் போலக் குதூகலமடைந்து அவருக்குத் திரும்பத் திரும்ப நன்றி சொல்லிக்கொண்டிருந்தான்.

‘இவ்வளவுதான் விமல்! ஒரு டாக்டரைத் தவிர்ப்பதற்கு மட்டுமே இவற்றை நாம் பயன்படுத்தலாம். இதுவே வாழ்க்கையல்ல. இது மட்டுமே வாழ்க்கையல்ல. நாம் செய்ய நிறைய இருக்கிறது’ என்று என்னிடம் சொன்னார். மத்தியக் கிழக்கு நாடுகளில் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பு இருந்த பல்வேறு சிறு மதங்களையும் நூற்றுக்கணக்கான சிறு தெய்வ வழிபாட்டு முறைகளைக் குறித்தும் நான் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்பது அவரது விருப்பம். ‘நீ தயாராகிவிட்டுச் சொல். யாரையாவது பிடித்து ஸ்பான்சர் வாங்கி எப்படியாவது உன்னை இராக்குக்கு அனுப்பிவிடுகிறேன்’ என்று ஒரு சமயம் சொன்னார்.

‘குருஜி, மதங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து என்ன ஆகப் போகிறது? நான் பெண்களைப் பற்றி ஆராயலாம் என்று நினைக்கிறேன்’.

‘அப்படியா? அது உன்னை போதையடிமை போல் ஆக்கிவிடும்’.

‘இரண்டும் ஒன்றுதானே? ஆனால் நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன். நான் எதன் அடிமையாகவும் ஆகமாட்டேன்’.

ஏனோ அவர் அதன்பின் அந்தப் பேச்சைத் தவிர்த்துவிட்டார்.

அன்றிரவு நாங்கள் கங்கோத்ரியில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தள்ளி இருந்த ஒரு கிராமத்தில் தங்க முடிவு செய்தோம். வரும் வழியிலேயே அந்த இடத்தில் இரவு தங்கலாம் என்று தீர்மானம் செய்துகொண்டு வந்திருந்தபடியால், மாலை ஆனதும் நேரே அந்த ஊருக்குப் போய்ச் சேர்ந்தோம். வரும்போது அங்கே ஒரு கோயிலைக் கண்டோம். மிகச் சிறிய, அழகான கோயில். ஒரு சிவலிங்கமும் விஷ்ணுவின் சிலையும் காளிதேவி சிலையும் இன்னும் இரண்டு மூன்று சிலைகளும் வரிசையாக அடுத்தடுத்து அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. தனித்தனி சன்னிதிகள் அல்ல. ஒரே கூடத்தில் அடுத்தடுத்து அனைத்துக் கடவுள்களும். அந்தக் கோயிலை அடுத்து பாதி கட்டப்பட்டு, கைவிடப்பட்ட கட்டடம் ஒன்று இருந்ததைக் கண்டோம். அங்கே இரவு தங்கலாம் என்று முடிவு செய்திருந்தோம்.

இரவு நாங்கள் அங்கே சென்று சேர்ந்தபோது பிராந்தியத்தில் மனித நடமாட்டமே இருக்கவில்லை. நாளெல்லாம் நீரில் கிடந்த களைப்பில் படுத்ததும் உறங்கிவிட்டோம். நள்ளிரவுக்கு மேல் எனக்கு விழிப்பு வந்தது. கண் விழித்து எழுந்தபோது பிரதீப்பைக் காணவில்லை. சிறுநீர் கழிக்கச் சென்றிருப்பான் என்று நினைத்தேன். ஆனால் நெடு நேரம் அவன் திரும்பி வராததால் எழுந்து வெளியே சென்று பார்த்தேன். சுற்று வட்டாரத்தில் எங்கும் எந்தச் சத்தமும் இல்லை. நதியின் ஓட்டம் மட்டும் மெலிதாகக் கேட்டுக்கொண்டிருந்தது. இருட்டில் நான் பிரதீப்பைத் தேடி மெல்ல நடக்க ஆரம்பித்தேன்.

எங்கெங்கோ சுற்றிவிட்டு அந்தக் கோயில் வாசலுக்கு வந்தேன். நெருங்கியபோதே அவனைப் பார்த்துவிட்டேன். அவன் கோயிலுக்கு உள்ளேதான் இருந்தான். அங்கிருந்த சிவலிங்கத்தின் எதிரே நிமிர்ந்து உட்கார்ந்து கண்மூடி தியானம் செய்துகொண்டிருந்தான். எனக்கு அந்தக் காட்சி மிகவும் விநோதமாகப் பட்டது. பிரதீப்புக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு என்பதே எனக்கு அப்போதுதான் தெரிந்தது. அது நம்பமுடியாததாக இருந்தது. அதை ஏன் அவன் மறைக்க வேண்டும் என்ற வினா அதனைக் காட்டிலும் பூதாகாரமாக எழுந்து நின்றது. நான் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் கண் விழிக்கும்போது நிச்சயமாக என்னைத்தான் முதலில் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அவனுக்கு அது அதிர்ச்சியாக இருக்கும். தன் குட்டு வெளிப்பட்டுவிட்டதாக அவனுக்குத் தோன்றலாம். என்னவானாலும் விடுவதில்லை என்று தீர்மானம் செய்துகொண்டேன். குருநாதர் அவனுக்கு மட்டும் இன்னமும் சன்னியாச தீட்சை அளிக்காதிருந்ததை எண்ணிப் பார்த்தேன். அவருக்கும் ஏதோ தோன்றியிருக்கும். ஊசலாட்டத்தில் உள்ளவனுக்கு தீட்சை உபயோகமில்லை என்று கருதியிருக்கலாம். என்னவானாலும் இன்று அவனிடம் விசாரித்துவிடுவது என்று முடிவு செய்துகொண்டு காத்திருந்தேன்.

முக்கால் மணி நேரம் நான் அங்கு நின்றிருப்பேன். அத்தனை நேரமும் அவனையேதான் பார்த்துக்கொண்டிருந்தேன். சற்றும் அசையக்கூட இல்லை. திடீரென்று அவனது மூடிய கண்களுக்குள் சிறு அசைவு ஏற்பட்டது. அவனது வலக்கரம் ஒருமுறை எழுந்து அடங்கியது. அவன் முகம் கோணிக்கொண்டு விகாரமாகியது. சட்டென்று அவன் கண்களில் இருந்து கரகரவென நீர் வழியத் தொடங்கியது. எனக்கு மிகுந்த சுவாரசியமாகிவிட்டது. எத்தனை சிறந்த பக்திமான் இவன்! இதை எதற்கு இவ்வளவு காலமாக மறைத்து வைத்திருக்கிறான்? அவசியமே இல்லையே. குருநாதரிடம் சொல்லியிருந்தால் ஆசிரம வளாகத்தில் அவனுக்கென்று ஒரு கோயிலேகூடக் கட்டிக் கொடுத்திருப்பார். போய் பிடித்து உலுக்கி எழுப்பிவிடலாமா என்று நினைத்தேன்.

அந்தக் கணம் அது நிகழ்ந்தது. சிவலிங்கத்தின் எதிரே இருந்த அகல் விளக்கொன்று யாரும் பற்ற வைக்காமல் தானே தீப்பற்றிக்கொண்டு சுடர்விட ஆரம்பித்தது. அந்தக் காட்சியை என்னால் நம்ப முடியவில்லை. நான் பார்த்துக்கொண்டிருந்தபோதே அந்த அகலில் இருந்த சுடர் மெல்லக் காற்றில் எழுந்து நகரத் தொடங்கியது. நேராக அது பிரதீப்பின் நெற்றியை நோக்கி நகர்ந்தது. அவனது இரு புருவங்களுக்கு மத்தியில் சென்று சிறிது நேரம் அசைந்தது. அப்படியே உள்ளே போய் ஒடுங்கிவிட்டது. அந்த இடம் மீண்டும் இருண்டு போனது.

சில நிமிடங்களில் பிரதீப் கண் விழித்தான். என்னைப் பார்த்து சிரித்தான். எனக்கு அப்போது பேச்சே எழவில்லை. கண்டதன் அதிர்ச்சியும் வியப்பும் புத்தியெங்கும் நீக்கமற நிறைந்திருந்தது. என்னைத் திரட்டிக்கொண்டு பேச முற்பட்டேன். என்னைச் சாட்சியாக வைத்து இங்கே என்ன நிகழ்ந்தது என்று அவனிடம் கேட்டேன்.

‘தெரியவில்லை விமல். ஆனால் இது நான் விடைபெறும் நேரம். எனக்கு தீட்சை கிடைத்துவிட்டது. நான் கிளம்புகிறேன் என்று குருவிடம் சொல்லிவிடு’ என்று சொல்லிவிட்டு, திரும்பிக்கூடப் பார்க்காமல் இருளில் இறங்கி விரைந்து எங்கோ காணாமல் போய்விட்டான்.

எனக்கு அந்த யோகினி சொன்னது நினைவுக்கு வந்தது. நியாயம்தான். நான் கங்கோத்ரிக்கு வந்திருக்கக் கூடாது.

(தொடரும்)

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.