Jump to content

‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்!


Recommended Posts

97. எட்டணா

 

 

நதியைப் பார்த்தபடி நெடுநேரம் நாங்கள் பேசாது அமர்ந்திருந்தோம். பேச என்ன இருக்கிறது? பிரதீப் விட்டுவிட்டுப் போனான். அவ்வளவுதானே? சன்னியாசிகளுக்கு வருத்தமில்லை என்று நாங்கள் மூவரும் சொல்லிக்கொண்டோம். ஆனால் அகல் விளக்கில் இருந்து ஒளி கிளம்பிச் சென்று அவன் நெற்றிப் பொட்டில் படர்ந்து மறைந்ததாக நான் சொன்னது அவர்கள் அனைவருக்குமே மிகுந்த அதிர்ச்சியளித்தது. குருநாதர்கூட ‘உண்மையாகவா?’ என்று கேட்டார்.

‘ஆம் குருஜி. நான் பார்த்தேன். ஆனால் துரதிருஷ்டவசமாக அவன் அதைப் பார்க்கவில்லை. அவன் கண்ணை மூடி தியானத்தில் இருந்தான். ஆனால் கண்ணை விழித்ததும் தனக்கு தீட்சை கிடைத்துவிட்டதாகச் சொன்னான்’.

‘அதைப் பார்த்தபோது உனக்கு என்ன தோன்றியது?’

‘நெருப்பு ஒரு பறவை என்று நினைத்தேன்’.

‘நீ அந்த சிவனை நினைக்கவில்லையா?’

‘மன்னிக்க வேண்டும் குருஜி. நான் ஆத்திகனாகவே இருந்தாலும் சிவனை நினைத்திருக்க மாட்டேன். நித்யகல்யாணப் பெருமாளை வேண்டுமானால் நினைத்திருப்பேன்’ என்று சொன்னேன்.

அவர் சிரித்தார். ‘விமல், அவனுக்கு ஞானம் கிட்டியதா, தீட்சை கிட்டியதா என்பதைக் காட்டிலும் நீ எனக்கு வியப்பளிக்கிறாய். கண் முன்னால் ஒளி நகர்ந்து சென்றதைப் பார்த்தபின் இந்நேரம் நீ அனைத்தையும் விட்டு ஓடியிருக்க வேண்டும். நீ அப்படிச் செய்யாததே எனக்கு நீ சொல்வது உண்மையாக இருக்காதோ என்று நினைக்க வைக்கிறது’.

நான் ஒன்றும் சொல்லவில்லை. ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. எனக்கு அப்போது நான்கு அல்லது ஐந்து வயது இருக்கலாம். எங்கள் வீதிக்கு அன்று ஒருவன் வந்தான். அவனை நாங்கள் அதற்குமுன் பார்த்ததில்லை. அவனது ஒரு கையில் பெரியதொரு மயிலிறகு விசிறி இருந்தது. மறு கையில் உடுக்கையோ அல்லது அதைப் போன்ற வேறெதோ ஒரு வாத்தியம் வைத்திருந்தான். அவன் தோளில் ஒரு பை தொங்கிக்கொண்டிருந்த நினைவு. தாடி மீசை நினைவிருக்கிறது. ஒரு தலைப்பாகை கட்டியிருந்தான். அது நினைவிருக்கிறது. அந்தத் தலைப்பாகைத் துணி நீல நிறத்தில் இருந்ததுகூட மனத்தில் அப்படியே பதிந்திருக்கிறது.

எங்கள் வீட்டு வாசலுக்கு வந்து நின்று அவன் உடுக்கையை அடிக்க ஆரம்பித்தான். ‘விஜய், யாரோ பிச்சைக்காரன் போலருக்கு. நான் இங்க வேலையா இருக்கேன். வந்து ஒரு பிடி அரிசி எடுத்துண்டு போ’ என்று அம்மா சமையல் அறையில் இருந்து குரல் கொடுத்தாள். அண்ணா இரு கைகளிலும் அரிசி அள்ளிக்கொண்டு வாசலுக்கு வந்தான். அந்த மனிதன் உடுக்கை அடிப்பதை நிறுத்திவிட்டு, ‘அரிசி வேண்டாம்; காசு கொடு’ என்று கேட்டான்.

அண்ணா மீண்டும் சமையலறைக்குச் சென்று அம்மாவிடம் அவன் சொன்னதைச் சொல்லி, காசு கேட்டான். அம்மா அவனிடம் நாலணாவைக் கொடுத்து அனுப்பினாள். வெளியே வந்த விஜய், அந்த மனிதனின் கையில் நாலணாவை வைத்தான். ‘எட்டணா கொண்டா’ என்று அவன் சொன்னான்.

இம்முறை அம்மாவே வெளியே வந்துவிட்டாள். ‘என்னப்பா பிரச்னை?’ என்று கேட்டாள்.

‘எட்டணா வேணுமாம்’ என்று அண்ணா சொன்னான். அம்மா அவனைச் சற்று வினோதமாகப் பார்த்தாள். என்ன நினைத்தாளோ. தானே உள்ளே சென்று எட்டணாவைத் தேடினாள். ஏனோ அவளுக்கு அப்போது எட்டணாக் காசு கிடைக்கவில்லை. ஒரு பழைய ஐந்து ரூபாய் நோட்டு இருந்தது. அதை எடுத்து வந்து அவனிடமே, ‘எட்டணா சில்றை இல்லே. நீ பாக்கி குடு’ என்று சொல்லிவிட்டு ஐந்து ரூபாய்த் தாளை நீட்டினாள். நோட்டை வாங்கியவன் இப்படியும் அப்படியுமாக அதைத் திருப்பிப் பார்த்தான். அம்மாவைப் பார்த்து சிரித்தான். பிறகு பணத்தை உள்ளங்கையிய்விட்ட்ல் வைத்து மூடினான்.

அவன் மீண்டும் கையைத் திறந்தபோது அதில் ஒரு எட்டணாக் காசு இருந்தது. ஐந்து ரூபாய்த் தாள் எங்கே போனதென்றே தெரியவில்லை. எனக்கு ஒரே ஆச்சரியமாகப் போய்விட்டது. இது எப்படி எப்படி என்று. அவன் அந்த எட்டணாவை அம்மாவிடம் நீட்டினான்.

‘என்ன?’ என்று அம்மா கேட்டாள்.

‘எட்டணா இல்லேன்னு சொன்னிங்களே. இந்தாங்க’.

‘உன்னைத்தான் எட்டணா எடுத்துக்க சொன்னேன். பாக்கி நாலரை ரூபாவைக் கொடு’ என்று அம்மா கேட்டாள்.

அவன் மீண்டும் சிரித்தான். ‘பணம் வேணுமா?’ என்று கேட்டான்.

‘இதென்ன வம்பா போச்சு? எனக்கு வேலை இருக்குப்பா. எட்டணா எடுத்துண்டு மிச்சத்தக் குடு’ என்று அம்மா சொன்னாள்.

‘குடுத்துத்தான் தீரணுமா?’ என்று அவன் மீண்டும் கேட்டான். இப்போது அவனது விரித்த உள்ளங்கையின் நடுவே இருந்த எட்டணா மெல்ல நகர்ந்து அவனது மணிக்கட்டு அருகே வந்தது. எனக்கு ஒரே பயமாகிவிட்டது. ‘அம்மா, காசு நகர்றது’ என்று கத்தினேன். அவன் சிரித்தபடியே நின்றிருந்தான். அந்த எட்டணா மேலும் நகர்ந்து அவனது முழங்கை மடிப்பு வரை போனது. அம்மாவும் அண்ணாவும் அதையே பார்த்துக்கொண்டிருக்க, ‘சொல்லும்மா! காச குடுத்துத்தான் தீரணுமா?’ என்று அவன் மீண்டும் கேட்டான்.

அம்மா சில விநாடிகள் அவனை எரிச்சலுடன் பார்த்தாள். ‘சரி நீயே வெச்சிக்கோ’ என்று சொல்லிவிட்டுச் சட்டென்று உள்ளே போய்விட்டாள். அவன் அப்போதும் சிரித்தான். முழங்கை மடிப்பு வரை போன அந்த எட்டணாக்காசு அப்படியே அவன் சட்டை மடிப்புக்குள் ஏறி மறைந்துகொண்டது. அவன் போய்விட்டான்.

எனக்குத்தான் அதிர்ச்சி தாங்கவேயில்லை. ‘எப்படிடா விஜய்? காசு என்னமா நகர்ந்தது பாத்தியா?’ என்று கேட்டேன். விஜய் ஒன்றும் சொல்லவில்லை. இரண்டொரு நாள் கழித்து தற்செயலாக அந்தச் சம்பவம் பற்றி நான் மீண்டும் பேச்செடுத்தபோது, ‘விட்டுத்தொலை. பணம் பிடுங்க இதெல்லாம் ஒரு வழி’ என்று அம்மா சொன்னாள். சில வருடங்கள் கழித்து என்றோ ஒரு சமயம் நான் விஜயிடம் பேசிக்கொண்டிருந்தபோது அந்தச் சம்பவத்தை நினைவுகூர நேர்ந்தது. அப்போது அவன், ‘பெரிய விஷயமில்லை விமல். இதெல்லாம் சின்ன மேஜிக்தான்’ என்று சொன்னான்.

‘நீ செய்வியா?’

‘முயற்சி பண்ணா முடியும்னுதான் நினைக்கறேன்’.

‘அதெல்லாம் சும்மா. எங்கே பண்ணிக் காட்டு பாப்போம்?’ என்று விடாப்பிடியாகச் சொன்னேன்.

அவன் காசை நகர்த்திக் காட்டவில்லை. நாங்கள் அப்போது கோயிலின் முன் மண்டபத்தில் அமர்ந்திருந்தோம். தூண் ஓரம் ஒரு கட்டெறும்பு போய்க்கொண்டிருந்தது. அதைச் சுட்டிக்காட்டி, ‘அதை இப்போ என்கிட்டே வரவெச்சிக் காட்டட்டுமா?’ என்று கேட்டான்.

நான் அந்த எறும்பைப் பார்த்தேன். அது விஜய் இருந்த இடத்துக்கு நேரெதிர்ப் பக்கம் போய்க்கொண்டிருந்தது. அவனிடம் வர வேண்டுமானால் நின்று திரும்பி வர வேண்டும். ‘சரி, பண்ணு. பண்ணிக்காட்டு’ என்று சொன்னேன்.

விஜய் அந்த எறும்பைச் சில விநாடிகள் உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தான். எங்கோ விரைந்து சென்றுகொண்டிருந்த எறும்பு ஏதோ ஒரு கணத்தில் நின்றது. ஒரு வட்டமடிப்பது போலத் திரும்பி வர ஆரம்பித்தது. நான் பார்த்துக்கொண்டிருந்தபோதே அது விஜய்யின் காலருகே வந்தது.

நான் சட்டென்று சொன்னேன், ‘நான் நம்பமாட்டேன். அது தன்னிஷ்டத்துக்குத்தான் போயிருக்கு. உன்கிட்டே வந்தது ஃப்ளூக்கு’.

‘அப்படியா? சரி இப்போ அது எம்மேல ஏறும் பார்’ என்று சொன்னான். மீண்டும் எறும்பை உற்றுப் பார்த்தான்.

எறும்பு இங்குமங்கும் அலைந்து எங்கு போவதென்று புரியாமல் சிறிது தவித்தது. பிறகு அவனது இடது காலின் மீது ஏறி, சரசரவென்று கழுத்தருகே வந்து நின்றது.

‘போதுமா?’ என்று விஜய் கேட்டான். இது உண்மையில் அன்றெனக்கு மிகுந்த அதிர்ச்சியும் வியப்பும் அளித்த சம்பவம். அண்ணாவைக் குறித்த என் அபிப்பிராயங்கள் ஒன்று திரளத் தொடங்கியிருந்த நேரத்தில் நடந்த சம்பவம் என்பதால் அவன் விட்டுச் சென்றபோது இதையும் சேர்த்தேதான் எண்ணிக்கொண்டேன்.

குருஜியிடம் இந்தச் சம்பவத்தைச் சொல்லி, ‘ஒரு எட்டணாக் காசும் எறும்பும் எப்படி நகர்ந்ததோ அப்படித்தான் அந்தச் சுடரும் நகர்ந்திருக்க வேண்டும்’ என்று சொன்னேன்.

‘அதுசரி. ஆனால் பிரதீப்புக்கு எந்த மேஜிக்கும் தெரியாதே’.

‘அதனாலென்ன? சிவலிங்கத்துக்குத் தெரிந்திருக்கும்’ என்று சொல்லிவிட்டு நான் எழுந்து சென்றேன். குருஜி என்னை விடவில்லை. ஊர் திரும்பும் வழியெல்லாம் திரும்பத் திரும்ப அதையேதான் கேட்டுக்கொண்டிருந்தார்.

‘ஒருவேளை கடவுள் உண்மையிலேயே இருக்கத்தான் செய்கிறாரோ?’

எனக்கு எரிச்சலாக இருந்தது. 'விடுங்கள் குருஜி. அவர் சௌக்கியமாக இருக்கட்டும். எனக்கு அவர் தேவையில்லை. தேவைப்பட்டால் கூப்பிட்டுக்கொள்கிறேன்' என்று சொல்லிவிட்டேன். ஆசிரமத்துக்குத் திரும்பி வழக்கமான வாழ்க்கையை ஆரம்பித்து ஒன்றிரண்டு நாள்களான பின்பு ஒரு நாள் குருவிடம் கேட்டேன். ‘குருஜி, அவனுக்கு ஏன் நீங்கள் இத்தனைக் காலமாக தீட்சை அளிக்காமல் இருந்தீர்கள்?’

அவர் சிறிதும் யோசிக்காமல் உடனே பதில் சொன்னார், ‘அவனுக்கு சன்னியாச மனம் இல்லை. அவன் எந்நாளும் ஒரு சன்னியாசியாக முடியாது’.

‘உண்மையாகவா?’

‘இல்லாவிட்டால் எப்படி அவன் ஒரு பக்தனாகியிருக்க முடியும்? பக்தனான சூட்டில் சிவனே வந்து அருள் பாலித்திருக்கிறான் என்றால், இனி அவன் சிவனுக்கு ஆயுள் சந்தா விசுவாசியல்லவா? சிவனையும் துறந்தால் அல்லவா சன்னியாசி?’

நான் புன்னகை செய்தேன். ‘ஐ லவ் யு குருஜி’ என்று சொன்னேன்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

  • Replies 176
  • Created
  • Last Reply

98. சாட்சி

 

 

ஆசிரமம் அப்போது விரிவடைந்துகொண்டிருந்தது. குருநாதருக்கு அது சங்கடமாகவும் இருந்தது; அதே சமயம் நிறையப்பேர் தேடி வருவது பற்றிய எளிய மகிழ்ச்சியும் இருந்தது. சீடர்களாக மட்டுமே அப்போது ஒன்பது பேர் இருந்தோம். அது தவிரத் தன்னார்வலர்களாகப் பதினைந்து பேர் தினமும் ஆசிரமப் பணிகளை எடுத்துப் போட்டுக்கொண்டு செய்பவர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் மாலை வேளைகளில் குருநாதர் அரை மணிநேரம் சொற்பொழிவாற்றும்படி ஆனது. தொடக்கத்தில் அவருக்கு இது பிடிக்கவில்லை. வற்புறுத்தித்தான் அவரை நாங்கள் உட்காரவைத்தோம். ஒரு கட்டத்தில் அவருக்கு அது பிடித்துவிட்டதா, பழகிவிட்டதா என்று தெரியாமல், அவரே எங்களுக்கு முன்னால் சொற்பொழிவுக்கு வந்து உட்கார ஆரம்பித்தார்.

புதிய பக்தர்களுக்கு முதலில் எங்களைப் புரியவில்லை. கடவுளைக் குறித்து ஒரு வார்த்தைகூடப் பேசாத சன்னியாசிக் கூட்டம் என்பது அவர்களுக்கு வினோதமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் குருநாதரின் பேச்சில் உபநிடதங்கள் வரும். பிரம்ம சூத்திரம் வரும். எப்போதாவது வேதங்களைத் தொட்டுக்காட்டுவார். ஆனால் உடலுக்கும் உயிருக்கும் அப்பால் ஆத்மா என்று என்றுமே அவர் ஆரம்பித்ததில்லை. ஒருநாள் ஆசிரமத்துக்கு வந்திருந்த ஒரு பெண் அதைக் குறித்து அவரிடம் கேட்கவே செய்தாள். ‘குருஜி, நீங்கள் ஆத்மாவை ஏன் தொட்டுக்காட்ட மறுக்கிறீர்கள்?’

அவர் சற்றும் யோசிக்காமல் பதில் சொன்னார், ‘மனத்தை முதலில் அகழ்ந்து முடிப்போமே? ஆத்மாவுக்கு என்ன அவசரம்?’

‘அதில்லை குருஜி. ஆத்மா என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா?’

‘தேடிக்கொண்டிருக்கிறேன் பெண்ணே. கண்டெடுத்தால் சொல்கிறேன்’ என்று அவர் சொன்னார்.

அவரிடம் என்னைக் கவர்ந்தது அதுதான். தன் அறிவுக்கு எட்டாதவற்றை அவர் நம்பத் தயாராக இல்லை. அதே சமயம் அறிதலின் எல்லைகளை விஸ்தரித்துக்கொண்டே போவதிலும் அவர் சுணக்கம் காட்டியதில்லை.

ஒரு சம்பவம். அதனை எப்படி விவரிப்பது என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. உண்மையில் பிற்காலத்தில் அச்சம்பவம் ஒரு பெரும் சரித்திரமாகிப் போனது. தேசம் முழுதும் செய்தித் தாள்களில், வாராந்தரிகளில், வானொலியில் மாற்றி மாற்றி அதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு என்ன வியப்பென்றால் அந்தச் சம்பவத்துக்கு சாட்சியாக இருந்தவர் என் குருநாதர். அவரோடு இருந்ததால் நானும் என் தோழர்கள் சிலரும் நடந்ததை முழுவதுமாக அறிந்திருந்தோம். ஆனால் ஊடகங்கள் பேசிய சரித்திரம் நடந்தவற்றுக்குச் சற்றும் சம்பந்தமற்றதாயிருந்தது.

அன்றைக்கு விடிந்ததில் இருந்தே மேகமூட்டம் அதிகமாயிருந்தது. வெளியே வந்து வானத்தைப் பார்த்த குருநாதர், 'மழை மேகமாகத் தெரியவில்லை. நாம் வெளியே போய்விட்டு வரலாம்' என்று சொன்னார். நான் உடனே சரி என்றேன். காரணம் அதற்கு முந்தைய வாரம் முழுவதும் நான் காய்ச்சலில் படுத்துக் கிடந்தேன். என் குடிலை விட்டு வெளியே வரவேயில்லை. சாப்பாட்டைக்கூட நண்பர்கள் என் குடிலுக்கே எடுத்து வந்துதான் கொடுத்தார்கள். கண்டிப்பாகக் காய்ச்சலுக்கென்று எந்த மருந்தும் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று குருநாதர் சொல்லியிருந்தார். ‘அது எத்தனை நாள் இருக்கிறதோ இருந்துவிட்டுப் போகட்டும். முற்றிலுமாக அதுவாக வெளியேறிச் செல்லும்வரை சும்மா இரு. அப்போதுதான் திரும்பி வராது’ என்று சொன்னார்.

இதனால் எளிய காய்ச்சல் கஷாயங்களைக் கூட நான் தவிர்த்தேன். இரண்டு வேளை ரசத்தில் கரைத்த நொய்க்கஞ்சி மட்டும் அருந்தும்படி அவர் சொல்லியிருந்தார். காய்ச்சல் காலத்தில் வயிற்றை காலியாக வைத்திருப்பதே சிறந்தது என்பது அவர் கருத்து. எனக்கு நாக்கு கசந்துவிட்டிருந்தது. அந்தக் கஞ்சியைக்கூட என்னால் முழுக்க அருந்த முடியவில்லை. கடமைக்குச் சாப்பிட்டுவிட்டு வெறுமனே படுத்துக் கிடந்தேன். இரண்டு மணி நேரம் விடாமல் காய்ச்சல் அடிக்கும். பிறகு படிப்படியாகக் குறையும். தூங்கிவிடுவேன். மீண்டும் அது எப்போது வரும் என்று தெரியாது. இன்னொரு இரண்டு மணி நேரம் சுட்டுப் பொசுக்கிவிட்டு அது பாட்டுக்குப் போகும். இப்படியே ஆறு நாள்கள் கழிந்தன. டைபாய்டு, மலேரியா ரகங்களைச் சேர்ந்த காய்ச்சலாக இருக்குமோ என்று என் நண்பர்கள் பயந்தார்கள். ஆனால் என் நாடி பிடித்துப் பார்த்த குருநாதர், அதெல்லாம் இல்லை; சாதாரண வைரஸ் காய்ச்சல்தான் என்று சொல்லிவிட்டார். எளிய ஆண்ட்டிபயாடிக் மாத்திரைகளைக்கூடப் போடவேண்டாம் என்று சொன்னார்.

‘நீங்கள் சொன்னதை நான் கேட்பேன் குருஜி. ஆனால் உண்மையிலேயே மருந்து எடுக்காமல் காய்ச்சலைத் தானாகப் போகவிட்டால் அது திரும்பி வரவே வராதா?’ என்று கேட்டேன்.

சற்று யோசித்துவிட்டு அவர் சொன்னார், ‘ஆம். குறைந்தது இரண்டு வருடங்களுக்காவது’.

அதைப் பரீட்சித்துப் பார்த்துவிடுவது என்று முடிவு செய்து நான் எந்த மருந்தும் உட்கொள்ளாதிருந்தேன். அந்நாள்களில் அவர் என்னை மூச்சுப் பயிற்சியும் செய்ய வேண்டாம் என்று சொல்லியிருந்தார். தினமும் பதினைந்து நிமிடங்கள் ஆசிரம வளாகத்துக்குள்ளேயே மெதுவாக நடக்கலாம் என்றார். ஆனால் கட்டாயமாகப் பச்சைத் தண்ணீரில்தான் குளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

எங்கள் அனைவருக்குமே அவரது இந்த நிபந்தனைகள் வினோதமாக இருந்தன. கடும் காய்ச்சலில் தவிக்கும் ஒருவன் பச்சைத் தண்ணீரில் எப்படிக் குளிக்க முடியும்?

‘முடியும். குளி. ஒருநாளும் தவறாமல் குளி’ என்று அவர் சொன்னார்.

நான் அதையும் கேட்டேன். எப்போதும்போல அதிகாலை குளிக்காமல் சற்று வெயில் வர ஆரம்பித்த நேரத்தில் குளித்தேன். அது ஒரு பிரமைதான். எங்கள் ஆசிரமத்துக் கிணற்று நீர் என்ன வெயில் அடித்தாலும் பதினைந்து டிகிரி வெப்பத்துக்கு மேல் பிரதிபலிக்காது. காய்ச்சல் தினங்களில் குளியலின் முதல் சொம்பு நீர் உடலில் படும்போதெல்லாம் உயிரே போய்விடப் போகிறது என்று தோன்றும். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் ஆகவில்லை. ஏழு நாள் இடைவிடாமல் அடித்த காய்ச்சல் ஒருவழியாக என்னை விட்டு நீங்கியது.

அந்நாள்களில் நான் நான்கு கிலோ எடை குறைந்திருந்தேன். உடல் லேசாகிவிட்டது போலிருந்தது. உற்சாகமாக இருந்தது. அன்றைக்குத்தான் சூரிய உதயத்துக்கு முன்னால் எழுந்து குளித்துவிட்டுப் பிராணாயாமப் பயிற்சியை மேற்கொண்டேன். அதை முடித்துவிட்டு எளிதான சில யோக அப்பியாசங்களையும் செய்தேன். உறங்கி எழுந்து வந்த குருநாதர் நான் யோகப் பயிற்சி செய்வதைப் பார்த்துப் புன்னகை செய்தார்.

‘உனக்குக் காய்ச்சல் விட்டுவிட்டது’ என்று சொன்னார்.

‘ஆம் குருஜி. இப்போது நான் நன்றாக இருக்கிறேன்’.

‘அப்படியானால் இன்றைக்கு நீ இனிப்பு சாப்பிடு’ என்று சொன்னார். அவரே சமையலறைக்குச் சென்று எனக்காகப் பருப்புப் பாயசம் வைத்து எடுத்து வந்து கொடுத்தார். நான் அதை வாங்கிக் குடித்தபோதுதான் அவர் சொன்னார், ‘இன்றைக்கு நாம் வெளியே போகலாம்’.

நாங்கள் ஆறு பேர் ஒன்றாகக் கிளம்பினோம். இன்ன இடத்துக்குப் போகலாம் என்று குறிப்பாகச் சொல்லாமல் வெளியே போகலாம் என்று குருநாதர் சொன்னால் அதன் பொருள், எப்போது திரும்புவோம் என்று தெரியாது என்பது. சில சமயம் அப்படிக் காலை வேளையில் கிளம்பி இரவு ஆசிரமத்துக்குத் திரும்பிவிடுவோம். சில சமயம் அந்தப் பயணம் ஒன்றிரண்டு தினங்கள் வரை நீளும். ஒரு சமயம் இரண்டு நாள் சுற்றிவிட்டு வருவோம் என்று சொல்லிவிட்டு குருநாதர் பத்து நாள் பயணமாக அதனை மாற்றிவிட்டார். இம்மாதிரிப் பயணங்களில் நாங்கள் எந்த வாகனத்திலும் ஏறுவதில்லை. எங்கு போனாலும், எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும் நடந்தேதான் போவோம். உணவைக் குறித்த கவலை பொதுவாக எங்கள் யாருக்கும் எழாத வண்ணம் குருநாதர் பழக்கியிருந்தார். அதிகபட்சம் நான்கு நாள்கள் வரையிலும்கூட எங்களால் உண்ணாதிருக்க முடிந்தது. அச்சமயங்களில் யாராவது அழைத்து சாப்பிடச் சொன்னால், ‘உணவு வேண்டாம். தலா ஒரு கோப்பை எங்களுக்கு நெய் தர முடியுமா?’ என்று குருஜி கேட்பார். எங்களுக்கு உணவிட்டுப் புண்ணியம் தேடிக்கொள்ள நினைத்த தர்மவானுக்கு அது வினோதமாகப் படும். இருந்தாலும் சாது வாய் திறந்து கேட்டுவிட்டதால் அவரால் அதைத் தட்ட முடியாமல் போய்விடும். விருந்து ஏற்பாடுகளைத் தவிர்த்துவிட்டு உடனே யாரையாவது கடைக்கு அனுப்பி ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் நெய் வாங்கி வரச் சொல்லுவார். நாங்கள் அதைக் கோப்பையில் வாங்கிக் குடித்துவிட்டு மேற்கொண்டு நடக்க ஆரம்பித்துவிடுவோம். ஒரு கோப்பை நெய்யை அருந்திவிட்டு ஆறு நாள் வெறும் நீர் மட்டும் குடித்து சோர்வின்றி வாழமுடியும் என்று குருநாதர் சொல்லித் தந்தார்.

அன்றைக்கு நாங்கள் கிளம்பியபோது ஆசிரமத் தன்னார்வலர் ஒருவர் ஒரு பை நிறைய வறுத்த வேர்க்கடலை, கமர்க்கட்டு, அதிரசம், சப்பாத்திகள் எடுத்து வந்து கொடுத்திருந்தார். குருநாதர் யோசித்தார். ‘இதைத் தூக்கிச் செல்ல வேண்டுமே?’ என்று கவலைப்பட்டார்.

‘பரவாயில்லை குருஜி. நான் எடுத்து வருகிறேன். வழியில் உபயோகப்படும்’ என்று சொல்லி அந்தப் பையை நான் வாங்கிக்கொண்டேன்.

நாங்கள் நடக்க ஆரம்பித்தோம். முதலில் சாலை இருந்த வழியிலேயே சிறிது நேரம் நடந்துவிட்டு, குருநாதர் சட்டென்று மலைச் சரிவில் இறங்கி நடக்க ஆரம்பித்தார். அவர் வயதுக்குக் கையில் ஒரு கழி இல்லாமல் மலைச்சரிவில் அத்தனை அநாயாசமாக அவர் இறங்கியதைப் பார்க்க எனக்கு வியப்பாக இருந்தது.

‘சரிவுகளில் இறங்கும்போது உடல் தன்னியல்பாகச் சற்றுப் பின்பக்கம் சாயும். அதுதான் நடக்க வசதி என்று தோன்றும். ஆனால் அது தவறான முறை. விரைவில் கால் உதற ஆரம்பித்துவிடும். உடலை முன்புறம் தள்ளி, நடை வேகத்தில் கவனம் செலுத்தி மட்டுப்படுத்த வேண்டும். அப்போதுதான் நீண்டதூரம் இவ்வாறு நடக்க முடியும்’ என்று சொன்னார்.

அவர் சொன்னபடியே நாங்கள் நடந்தோம். அந்தக் காடு குருநாதருக்குப் பழக்கப்பட்ட இடம் போலிருந்தது. எத்தனை முறை அந்தப் பக்கம் அவர் சென்றிருப்பாரோ தெரியவில்லை. ஆனால் ஆசிரமத்துக்குள் நடப்பது போலவே அவர் வெகு இயல்பாக அங்கே நடந்து போனார். பல இடங்களில் புதர்களை விலக்கி, பாதை மாறி நடந்தார். அன்று மாலை வரை நாங்கள் நடந்துகொண்டே இருந்தோம். எங்கெங்கோ அலைந்து திரிந்து இறுதியில் காவிரியின் கண்ணுக்குப் புலப்படாத ஒரு துண்டுக்கால்வாய் ஓடி மறைந்த ஒரு பிராந்தியத்துக்கு வந்து சேர்ந்தோம். நதியின் எந்த இடத்தில் அது கிளை பிரிகிறது என்று தெரியவில்லை. ஆனால் அந்தக் கானகத்துக்குள் அந்தக் கால்வாய் தனக்கென ஒரு வழியமைத்துக்கொண்டு நெடுந்தூரம் எங்கள் உடனேயே ஓடி வந்தது. அது மீண்டும் நதியோடு சென்று சேருவதில்லை என்று குருஜி சொன்னார்.

‘வேறு எங்கே போகிறது?’

‘எங்குமில்லை. இந்தக் காட்டுக்குள்ளேயே சுற்றி வந்து காணாமலாகிவிடும்’.

‘புரியவில்லை குருஜி’.

‘சரி வா. அது இல்லாமல் போகும் இடத்துக்கு உன்னை அழைத்துச் செல்கிறேன்’ என்று சொல்லிவிட்டு அந்தக் கால்வாயின் தடம் பற்றி எங்களை அழைத்துக்கொண்டு போனார். சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவுக்கு நாங்கள் அந்தக் கால்வாய்க் கரையோரமாகவே நடந்திருப்போம். எனக்கு மிகவும் களைப்பாகிவிட்டது. சிறிது நேரம் உட்கார வேண்டும் என்று தோன்றியது. குருஜியிடம் அதைச் சொல்ல வாயெடுத்தபோதுதான் அவர்களைப் பார்த்தேன். அதே கால்வாய்க் கரையோரம் நாங்கள் நடந்துகொண்டிருந்த இடத்துக்கு நூறடித் தொலைவில் நான்கைந்து பேர் அமர்ந்திருந்தார்கள். அதில் ஒருவர் சன்னியாசிக் கோலத்தில் இருந்தார். அவரைப் பார்த்ததுமே எனக்கு அடையாளம் தெரிந்துவிட்டது. ஆனால் உறங்கும்போதுகூட அவர் உடன் வைத்திருக்கும் தண்டத்தை அப்போது வைத்திருக்கவில்லை.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

99. கற்பின் கதை

 

காவிரியின் அந்த ரகசியச் சிறு கிளையைக் கால்வாய் என்பதா, ஓடை என்பதா என்று எனக்குச் சந்தேகமாக இருந்தது. அந்த இடத்தில் அந்த நீர்ப்பரப்பைக் கண்டபோது உண்மையிலேயே எனக்கு மிகுந்த பரவசமாக இருந்தது. நாங்கள் நடந்துகொண்டிருந்த மலைச் சரிவில் ஐந்து பெரிய பாறைகள் ஒன்றையொன்று முட்டிக்கொண்டு அடர்ந்து நிறைந்திருக்க, அவற்றின் அடியில்தான் முதல் முதலில் நீர் வரத்தின் சத்தத்தைக் கேட்டேன். ‘குருஜி, நதியோட்டம் இம்மலைக்கு மறுபுறமல்லவா?’ என்றேன். ‘ஆம். இது சிறு கால்வாய். உன்னைப் போல உற்பத்தியாகும்போதே ஓடுகாலியான பிறப்பு’ என்று சொன்னார். நான் சிரித்தேன். அந்தப் பாறைகளின் அடியில் இருந்த இடைவெளிகளில் இருந்து சரசரவென ஏழெட்டு நாகங்கள் சீறி வருவது போலத் தண்ணீர் வந்துகொண்டிருந்தது.

அதன் கரையைப் பற்றிக்கொண்டு நாங்கள் நடந்தபோதுதான் கால்வாய் கிட்டத்தட்ட ஓடி மறையும் இடத்துக்கு அருகே அவரைக் கண்டோம். ‘குருஜி, இது சாதுர்மாஸ்ய விரத காலமா?’ என்று கேட்டேன்.

‘இல்லை’ என்று அவர் சொன்னார். இருந்திருந்தால் நாங்கள் மடிகேரியில் இருந்திருக்க மாட்டோம். வேறு ஏதேனும் ஓரிடம், வேறு ஏதாவது நீர்நிலை இருக்கும் இடமாகத் தேடி குரு எங்களை அழைத்துப் போயிருப்பார். முன்னறிவிப்பு இல்லாமல் குடகுக்கு இவர் வந்திருப்பதன் காரணம் என்னவாயிருக்கும் என்று எங்களுக்குப் புரியவில்லை.

நாங்கள் மேலும் சிறிது தூரம் நடந்து அவர் இருக்குமிடத்தை நெருங்கியபோது அவரும் எங்களைப் பார்த்தார். பார்வையில் சிறு சங்கடம் இருந்தது போலத் தோன்றியது ஒருவேளை என் பிரமையாக இருக்கலாம். என்ன இருந்தாலும் எங்கள் பிராந்தியத்துக்கு வருகை தந்திருக்கும் சக சன்னியாசியை நாங்கள் வரவேற்பதுதான் முறை என்று முடிவு செய்தோம். மேலும் நெருங்கியபோது அவர் உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்து சட்டென்று எழுந்தார். அவரோடு இருந்தவர்களும் எழுந்துவிட்டார்கள். குருநாதர், ‘நீங்கள் சிறிது நேரம் இங்கேயே இருங்கள்’ என்று எங்களிடம் சொன்னார்.

‘ஏன் குருஜி?’

‘அவர் தனிமை தேடி வந்திருக்கலாம். நாம் அநாவசியமாக அவரைத் தொந்தரவு செய்வது தவறு’.

‘நாலு பேரோடு என்ன தனிமை?’ என்று நான் கேட்டேன். குரு அதற்கு பதில் சொல்லவில்லை. ‘இங்கேயே இரு’ என்று மீண்டும் சொல்லிவிட்டு அவர் மட்டும் நெருங்கிச் சென்றார். நாங்கள் நின்ற இடத்திலேயே காத்திருக்க ஆரம்பித்தோம்.

குருநாதர் நெருங்கிச் சென்றதும் அவர் வணக்கம் சொன்னார். குருவும் அவரை வணங்கினார். அதைப் பார்த்தோம். அதன்பின் அவர்கள் பேச ஆரம்பித்தார்கள். அவரோடு உடனிருந்தவர்கள் மரியாதை கருதி நாலடி நகர்ந்து போய் நின்றுகொண்டார்கள். குரு அவருடன் ஐந்து நிமிடங்கள் பேசியிருப்பார் என்று நினைக்கிறேன். பிறகு என்ன நினைத்தாரோ, என்னிடம் திரும்பி, ‘அந்தப் பலகாரப் பையைக் கொண்டு வா’ என்று சொன்னார். ஆசிரமத் தன்னார்வலர் ஆசையாக எங்களுக்காகக் கொடுத்தனுப்பிய பலகாரங்கள். மதியம் சிறிது சாப்பிட்டுவிட்டு மிச்சத்தைப் பையிலேயேதான் வைத்திருந்தேன். இன்னொரு வேளைக்கு உதவும் என்று நண்பர்கள் சொன்னார்கள். ஆனால் இந்த மனிதர் ஏன் அதில் கைவைக்க நினைக்கிறார்?

வேறு வழியின்றி அவரிடம் அந்தப் பையைக் கொண்டு கொடுத்தேன். அப்போதுதான் அவரை நெருக்கத்தில் பார்த்தேன். ஒரு மாம்பழத்தின் வடிவத்தில் இருந்தது அவரது முகம். கன்னங்களில் குறைவாகவும் முகவாயில் சற்று அதிகமாகவும் தாடி முளைத்திருந்தது. மீசை விளைச்சலிலும் ஓர் ஒழுங்கு இருக்கவில்லை. ஒரு புறம் சற்று அடர்த்தியாகவும் மறுபுறம் இடைவெளி விட்டும் இருந்தது. இம்மாதிரியான இயற்கை கொண்டவர்கள் சோம்பேறித்தனம் பாராமல் தினமும் சவரம் செய்துவிடுவதே நல்லது என்று தோன்றியது. சன்னியாசியாக இருந்தாலுமேகூட. அவர் அணிந்திருந்த காவி முக்காடை நொடிக்கொருதரம் இழுத்து இழுத்து விட்டுக்கொண்டே இருந்தார். பொதுவாகப் பெண்கள் அம்மாதிரிதான் முந்தானையைச் சரிசெய்துகொண்டே இருப்பார்கள். சமயத்தில் சரியாக இருக்கும் முந்தானையைச் சரியாக இல்லாமலும் ஆக்கிவிடுவார்கள். கையைக் காலை வைத்துக்கொண்டு யாரால் சும்மா இருக்க முடிகிறது?

‘சரி, நீ போய் அங்கே நில்’ என்று குருஜி சொன்னார். நான் பையைக் கொடுத்துவிட்டு நண்பர்கள் இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்துகொண்டேன். குருஜி அந்தப் பலகாரப் பையை அவரது தொண்டர் ஒருவரிடம் கொடுத்து ஏதோ சொன்னார். மீண்டும் சில நிமிடங்கள் அவரோடு பேசிக்கொண்டிருந்துவிட்டு, வணக்கம் சொல்லி விடைபெற்று எங்களிடம் வந்தார். ‘நேரமாகிவிட்டது போலிருக்கிறதே. நாம் ஆசிரமத்துக்குத் திரும்பிச் செல்லலாம்’ என்று சொன்னார்.

எனக்கு பகீரென்று ஆகிவிட்டது. மணி அப்போதே மாலை நாலரை, ஐந்தாகியிருக்கும் என்று தோன்றியது. இதற்குமேல் புறப்பட்டு எப்போது ஆசிரமத்துக்குப் போய்ச் சேர்வது?

‘அதெல்லாம் போய்விடலாம்’ என்று சொல்லிவிட்டு அவர் முன்னால் நடக்க ஆரம்பித்தார். வேறு வழியின்றி நாங்கள் பின்தொடர்ந்து செல்ல ஆரம்பித்தோம். ஏனோ குருஜி எங்களுடன் பேசவில்லை. இருட்டுவதற்கு முன்னால் இறங்கிய தொலைவை ஏறிக் கடந்துவிட வேண்டும் என்று முடிவு செய்திருப்பார் போல. ஆனால் கால்வாய்க்கரை ஓரம் நாங்கள் பார்த்த பிரபல சன்னியாசி கிளம்பும் உத்தேசத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. இரவு அங்கேயே கூடாரம் அடித்துவிடும் முடிவில் இருந்திருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் அந்தப் பிராந்தியத்தில் கரடிகள் நடமாட்டம் அதிகம் என்று குருஜி சொல்லியிருந்தார். கண்டிப்பாக அதை அவரிடம் தெரிவித்திருப்பார் என்று நினைத்தேன்.

‘அவர் என்ன விஷயமாக இங்கே வந்திருக்கிறார் குருஜி?’ என்று கேட்டேன். குரு அதற்கு பதில் சொல்லவில்லை. அமைதியாக நடந்துகொண்டே இருந்தார். ஆனால் அவர் மிகத் தீவிரமாக ஏதோ யோசித்துக்கொண்டிருந்தாற்போல் தோன்றியது. சரி என்ன அவசரம்? அவரே தோன்றும்போது பேசட்டும் என்று எண்ணி அமைதியாகிவிட்டேன்.

எண்ணியதற்கு மாறாக நாங்கள் மலை ஏறி சாலையை எட்டிப் பிடிக்க இரவு ஏழு மணிக்குமேல் ஆகிவிட்டது. அனைவருமே மிகவும் சோர்ந்திருந்தோம். ‘குருஜி, ஆசிரமத்துக்குக் காலை போகலாம். இப்போது எங்காவது சென்று கால் நீட்டிப் படுக்க வேண்டும்’ என்று ஆகாஷ் சொன்னான்.

‘இல்லை. நாம் போய்விடலாம். நடக்கத்தானே முடியாது? நான் ஏதாவது வண்டிக்கு ஏற்பாடு செய்கிறேன்’ என்றார். எனக்குப் புரியவேயில்லை. அந்த இடத்தில் தொலைபேசி வசதி கிடையாது. வண்டி போக்குவரத்தும் மிகவும் குறைந்துவிட்டிருந்தது. ஆள் நடமாட்டமேகூட அதிகம் இல்லை. இவர் எங்கிருந்து வண்டி பிடிப்பார்? ஆனால் குருநாதர், ‘அதெல்லாம் பிடித்துவிடலாம்’ என்று சொல்லிவிட்டு மலைப்பாதையின் ஓரமாக ஒரு கல்லின் மீது அமர்ந்தார். இதென்ன இந்த மனிதர் இன்று வினோதமாக நடந்துகொள்கிறாரே என்று நாங்கள் பேசிக்கொண்டோம். பதினைந்து நிமிடங்கள் அவர் யாருடனும் பேசாமல் அந்தப் பாறையில் அமர்ந்து ஏதோ யோசித்தபடியே இருந்தார். பிறகு, ‘இப்போது ஒரு கார் வரும் பார். அதைக் கைநீட்டி நிறுத்து’ என்று சொன்னார்.

நாங்கள் அனைவருமே சாலையை மறிப்பது போலக் குறுக்கே போய் நின்றுகொண்டோம். ஒரு கார் வந்தது.

‘குருஜி, உங்களுக்கு என்னவோ ஆகிவிட்டது. மடாதிபதிகளோடு சிநேகம் வைத்துக்கொள்ள ஆரம்பித்து மந்திர தந்திரமெல்லாம் செய்யத் தொடங்கிவிட்டீர்கள்’ என்று சொன்னேன்.

அவர் சிரித்தார். ‘அந்த வண்டியை முதலில் நிறுத்து’ என்று சொன்னார். நாங்கள் நிறுத்தினோம். குருஜியைப் பார்த்ததும் வண்டியை ஓட்டி வந்த நபர் சட்டென்று இறங்கி முன்னால் ஓடி வந்தான். எனக்கு அவனைப் பார்த்ததுமே அடையாளம் தெரிந்துவிட்டது. கால்வாய்க்கரை ஓரம் அந்த சன்னியாசியுடன் நின்றிருந்த நான்கைந்து பேரில் ஒருவன்.

‘ஐயா உங்களை எங்காவது இறக்கிவிட வேண்டுமா?’ என்று கேட்டான்.

‘ஆம். மிகவும் இருட்டிவிட்டது. ஆசிரமத்துக்கு இனி நடந்து போக முடியாதுபோல் இருக்கிறது’.

‘வண்டியில் ஏறிக்கொள்ளுங்கள். இட நெருக்கடி இருக்கும். ஆனாலும் சிறிது நேரப் பயணம்தானே?’

‘அதனால் பரவாயில்லை’ என்று குருஜி சொன்னார். எங்களை ஏறிக்கொள்ளச் சொல்லிவிட்டு, ‘அவர் கிளம்பிவிட்டாரா?’ என்று கேட்டார்.

‘ஆம் சுவாமி. இரவே தலைக்காவேரிக்குச் சென்றுவிட வேண்டும் என்று சொன்னார். வேறொரு வண்டியில் அவரை ஏற்றி அனுப்பிவிட்டுத்தான் வருகிறேன்’.

‘நல்லது’ என்று சொல்லிவிட்டு குருஜியும் வண்டியில் ஏறிக்கொண்டார். ஆசிரமம் வந்து சேரும் வரை நாங்கள் யாரும் எதுவும் பேசவில்லை. இறங்கும்போது, குரு மட்டும் அவனிடம் சில வார்த்தைகள் தனியே பேசினார். அவர் என்ன பேசினார் என்று எங்களுக்குக் கேட்கவில்லை. அவன் கைகூப்பி விடைபெற்றுக்கொண்டு கிளம்பிச் சென்றான்.

எனக்கு அதற்குமேல் பொறுக்கவில்லை. ‘குருஜி, ஏதேனும் பிரச்னையா?’ என்று கேட்டேன். எதற்கும் இருக்கட்டும் என்று, ‘அவருக்கு’ என்று ஒரு சொல்லைச் சேர்த்தேன்.

சிறிது அமைதியாக இருந்துவிட்டு அவர் சொன்னார் ‘ஆம். ஆனால் அதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே இல்லை. சுலபமாக வெளியே வந்துவிடுவார். ஆனால் அவர்மூலம் எனக்கொரு புதிய தரிசனம் சாத்தியமாகும் என்று என்னால் எண்ணிப் பார்க்கவே முடியவில்லை!’

‘தரிசனமா!’

‘நிச்சயமாக’.

‘அப்படி என்ன அவர் கொடுத்தார்?’

‘அவர் கொடுக்கவில்லை. நான் எடுத்துக்கொண்டேன் விமல்’.

‘இதற்குமேல் சோதிக்காதீர்கள் குருஜி. தயவுசெய்து சொல்லிவிடுங்கள். இல்லாவிட்டால் எனக்குத் தலை வெடித்துவிடும்’.

அவர் சிரித்தார். ‘ஒரு நாத்திக சன்னியாசியின் கற்புக்கு எந்நாளும் பங்கம் வராது என்பதுதான் என் தரிசனம்’ என்று சொன்னார்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

100. அருந்தூய்மை

 

 

என்னால் மறக்கவே முடியாத ஒரு தினம் உண்டென்றால் அது அன்றைய தினம்தான். வாழ்வில் முதல் முறையாகவும், ஒரே முறையாகவும் நான் சில தீர்மானங்கள் செய்துகொண்டேன். அவை அனைத்துமே என் குருநாதர் எனக்குப் பிட்சையாக அளித்த யோசனைகள்.

‘விமல்! ஒரு சன்னியாசியிடம் இருக்கவே கூடாதவை மூன்று. முதலாவது பணம். இரண்டாவது அசையாச் சொத்து. மூன்றாவது நேரடி அதிகாரம்’ என்று அவர் சொன்னார்.

நான் உடனே, ‘பெண்?’ என்று கேட்டேன்.

குரு சிரித்தார். ‘இல்லாதிருந்தால் நல்லது. இருந்தே தீருமானால் அதனால் வரக்கூடிய சிறு இடையூறுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். ஆனால் நான் சொன்ன மூன்றும் பெண்ணைக் காட்டிலும் அபாயகரமானவை’.

‘அப்படியா?’

‘நிச்சயமாக’.

‘ஆனால் பணம் இல்லாமல் ஒரு மனிதன் எப்படி வாழ முடியும்? சன்னியாசிக்கும் பசி உண்டே குருஜி?’

‘அதற்குத்தான் உங்களுக்கெல்லாம் பிட்சை எடுக்கப் பயிற்சியளிக்கிறேன். வாரத்தில் மூன்று நாள்கள் கண்டிப்பாகச் சமையல் கிடையாது என்று ஏன் சொல்கிறேன்? பிட்சை எடுத்து உண்பது அகங்கார நாசம் என்பது பொதுவாகச் சொல்லப்படுவது. யோசித்துப் பார். அது அகங்காரத்தை நாசம் செய்வதில்லை. சமைக்கும் பணி அல்லது சம்பாதிக்கும் கடமையில் இருந்து உன்னை நகர்த்தி வைக்கிறது. உனக்கு சிந்திக்க நிறைய நேரம் கிடைக்கிறது’.

ஒரு விதத்தில் அது உண்மைதான் என்று தோன்றியது. ஆரம்பத்தில் பிட்சைக்குப் போகும்போது எனக்குச் சிறிது சங்கடம் இருந்தது. சில வீட்டு வாசல்களில் நின்று எத்தனை அழைத்தாலும் யாரும் வரமாட்டார்கள். குருநாதர் தெளிவாக எங்களுக்கு ஒரு கட்டளை இட்டிருந்தார். ஒரு வீட்டில் பிட்சை கேட்க முடிவு செய்து வாசலில் நின்றால், அந்த வீட்டில் மட்டும்தான் பிட்சை கேட்க வேண்டும். அங்கே கிடைக்காவிட்டால் திரும்பிவிட வேண்டுமே தவிர, அடுத்த வீடு நோக்கிப் போகக்கூடாது.

‘இது பயங்கரமான நிபந்தனையாக இருக்கிறது குருஜி. எந்த சன்னியாசியும் இப்படியொரு வழக்கம் வைத்திருந்ததாக எனக்குத் தெரியவில்லை’ என்று சொன்னேன்.

‘அதனாலென்ன? இந்த வழக்கத்தை நீ ஆரம்பித்து வைத்ததாக இருக்கட்டுமே?’

‘எதற்கு? என்னால் பசி பொறுக்க முடியாது’.

‘அப்படிச் சொல்லாதே. பசியைப் பழகிக்கொள். அது உனக்குப் பிற்காலத்தில் மிகவும் உதவும்’ என்று சொன்னார்.

அது வெகு விரைவில் உண்மையானது. எனக்குப் பசி பழகிவிட்டது. பசியைக் கட்டுப்படுத்தவும் நான் பழகியிருந்தேன். ஒருவேளை உணவில் இரண்டு மூன்று தினங்கள் தாக்குப்பிடிக்க என்னால் முடிந்தது. உண்மையில் அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. அதை நினைவுகூர்ந்துதான் அன்றைக்கு குருநாதர் சொன்ன மூன்று விஷயங்களையும் வாழ்வில் கடைப்பிடித்தே தீருவது என்று முடிவு செய்தேன். அதை அவருக்கு சத்தியமாகவும் செய்து கொடுத்தேன். எனக்கென்று என்றுமே ஒரு வங்கிக் கணக்கு இருக்காது. என் பெயரில் எந்தச் சொத்தும் எந்நாளும் சேராது. அதிகார நந்தியாக ஒருபோதும் நான் இருக்கப் போவதில்லை.

‘ஆனால் குருஜி, நான் இந்த தேசத்தின் தலையெழுத்தாவேன். அதை உங்களால் மாற்ற முடியாது’ என்று சொன்னேன்.

அவர் சிரித்தார். ‘விமல், நீ ஒரு ஆக்ரோஷமான அறிவுக் குழந்தை. உனது பலம் என்பது உன் மொழி. அதன் கூர்மை மங்காமல் பார்த்துக்கொள். உன் லட்சியத்தில் நீ நிச்சயமாக வெல்வாய்’ என்று சொன்னார்.

அன்றைக்கு நாங்கள் சந்தித்த அந்த சன்னியாசி அவர் சார்ந்திருந்த மடத்தின் பீடாதிபதியிடம் கூடச் சொல்லிக்கொள்ளாமல் கிளம்பி வந்திருந்ததாக குரு சொன்னார். அது எனக்கு மிகுந்த அதிர்ச்சியளித்தது.

‘என்ன காரணமாயிருக்கும்?’ என்று கேட்டேன்.

‘சொன்னேனே. அதிகாரம். பணம். நிர்வாகம். விதிமுறைகள். யாருக்கு யார் கட்டுப்படுவது என்ற வினா. அனைத்துக்கும் மேலாகத் தனியொரு பீடம் நிறுவ எண்ணம் வந்துவிட்டால் தீர்ந்தது கதை’.

‘இதையெல்லாம் அவர் உங்களிடம் சொன்னாரா குருஜி?’

‘எப்படிச் சொல்வார்? நான் என்ன அவருக்கு நண்பனா? முன்பின் தெரிந்தவனா? ஒன்றுமேயில்லை. அவர் அணிந்திருந்த காவியை நானும் அணிந்திருந்ததுதான் ஒரே பொருத்தம்’.

‘பிறகெப்படி இவ்வளவு தீர்மானமாக இதுதான் நடந்திருக்கும் என்கிறீர்கள்?’

அவர் சிரித்தார். ‘அவருடன் இருந்தவர்களை கவனித்தாயா? ஒருவர் கணக்காளர். ஒருவர் அரசியல்வாதி. இன்னொருவர் அவரது உதவியாளர். நான்காவது நபர் யாரென்று எனக்குத் தெரியவில்லை. ஐந்தாவது நபர் இந்த ஊர்க்காரன். அவருக்கு இங்கே வேண்டிய சகாயம் செய்து தரச் சித்தமாக இருப்பவன். அவன்தான் நம்மை காரில் அழைத்து வந்து விட்டது’.

‘சரி. அதனாலென்ன?’

‘ஒரு சன்னியாசிக்கு இத்தனை வல்லுநர்கள் நண்பர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை விமல். இது ஒரு ராஜனின் தேவைகள். ஒரு ராஜசபைக்கான தேவைகள்’.

‘இருந்துவிட்டுப் போகட்டுமே? அவர் ஒரு ராஜரிஷியாக இருப்பதில் உங்களுக்கு என்ன பிரச்னை?’

‘எனக்கென்ன பிரச்னை? அவருக்குத்தான் பிரச்னை. எந்த ராஜரிஷியும் ஞானமடைந்ததில்லை’ என்று அவர் சொன்னார். ‘அது ஒரு பதவி. அது ஒரு அந்தஸ்து. அவ்வளவுதான்’.

எனக்கு வெகுநேரம் பேச்சற்றுப் போய்விட்டது. அந்த சன்னியாசியையே நினைத்துக்கொண்டிருந்தேன். எத்தனை புகழ், எவ்வளவு செல்வம், எப்பேர்ப்பட்ட செல்வாக்கு!

‘ஆனால் விமல், எனக்கென்னவோ அவர் உதறிவிட்டு வந்திருப்பதுபோலத் தோன்றவில்லை. நான்கடி முன்னால் தாண்டுவதற்கு ஆறடி பின்னால் வந்துதானே ஓடிப் பாய முடியும்?’

‘ஓ. சரிதான்’.

‘அவர் நினைப்பது நடந்துவிடும். ஆனால் அவரது துறவின் அருந்தூய்மை அர்த்தமிழப்பது உறுதி’.

குருநாதர் கற்பு என்னும் கருத்துருவாக்கத்தைத் தொட்டுக்காட்டினார். அதன் புனிதம். அதன் மகத்துவம். அதன் முக்கியத்துவம். அதன் தீவிரம். காலம் காலமாகச் சொற்களால் அலங்கரிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கும் கருத்துருவாக்கம்.

‘ஆம் குருஜி. கடவுளைப் போலவே மிகக் கவனமாக அலங்கரிக்கப்பட்டது அது’ என்று சொன்னேன்.

‘சிலவற்றை அலங்கரித்து அந்த அந்தஸ்துக்குக் கொண்டு வரலாம். சிலவற்றைத் தன்னியல்புடனேயே அந்தப் பீடத்தில் வைத்துவிட முடியும். துறவு அதிலொன்று’.

‘அவர் என்ன ஆவார் என்று நினைக்கிறீர்கள்?’

குருநாதர் சிறிது நேரம் யோசித்துவிட்டு, ‘ஒன்று தற்கொலை செய்துகொள்வார். அல்லது என்றேனும் ஒரு கொலை வழக்கில் சிக்குவார்’ என்று சொன்னார்.

அன்றிரவு நான் முடிவு செய்தேன். என் சன்னியாசத்தின் நோக்கம், என் சுதந்தரம் மட்டுமே. சௌகரியங்கள் அல்ல. சந்தோஷங்கள் அல்ல. லாபங்களோ இன்னபிறவோ அல்ல. வெறும் சுதந்திரம். அனைத்தையும் உள்ளடக்கிய, அனைத்தினின்றும் விலகி நிற்கிற பூரண சுதந்திரம். அதனால்தான் என்னால் ஒரு நிறுவனமாகாமல் நகர்ந்து நிற்க முடிந்தது. மகாராஷ்டிரத்தின் முன்னணி துணி வர்த்தகர் ஒருவர், ஒரு டிரஸ்ட் அமைத்து அதன் வழியாக இயங்கக்கூடிய அமைப்பாக ஒன்றை ஆரம்பித்துத் தருவதாகச் சொன்னார். புனேவுக்கு அருகில் இருபது ஏக்கர் நிலம் அவருக்குச் சொந்தமாக இருந்தது. அதை எனக்குத் தந்துவிடத் தயாராக இருந்தார். அழகிய, பெரியதொரு ஆசிரமம். தியான மண்டபம். பிரசங்கக் கூடம். உணவு விடுதி. வந்து போகிறவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள்.

‘நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம் குருஜி. அனைத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன். உங்கள் சேவையை நீங்கள் இங்கே இருந்து தொடர்ந்தால் போதும்’ என்று சொன்னார்.

நான் அன்போடு அதை மறுத்தேன். ‘எனக்கு நான் இருக்கும் சிறிய இடம் போதும். அந்த இடம் இப்போதும் அதன் உரிமையாளர் பெயரில்தான் இருக்கிறது. அவர் காலி பண்ணச் சொன்னால் நான் வேறிடம் பார்த்துக்கொண்டு போகவேண்டியதுதான். ஆனால் எனக்கு அதுதான் பிடித்திருக்கிறது’ என்று சொன்னேன்.

இன்னொரு சமயம் ஒரு வெளிநாட்டு பக்தர் என்னுடைய ஆசிரமத்துக்குப் பத்தாயிரம் டாலர் நிதி கொடுக்க வந்தார். அடக்கடவுளே! அதை நான் எந்த வங்கிக்கணக்கில் போடுவேன்? அதெல்லாம் வேண்டாமப்பா என்று சொல்லிவிட்டேன்.

பக்தருக்குத் தீராத ஆச்சரியம். வங்கிக்கணக்கு இல்லையா? அதெப்படி முடியும் என்று திரும்பத் திரும்பக் கேட்டார். அவர் ஊருக்குத் திரும்பிப் போவதற்கு முன்னால் ஆசிரமக் கட்டடத்தில் செய்யவேண்டியிருந்த சில மராமத்துப் பணிகளைச் செய்து கொடுத்து, வெள்ளையடித்துக் கொடுத்துவிட்டுப் போகச் சொன்னேன். வெளேரென்ற எனது பிரசங்க அரங்கமும் அதன் பளிங்குத் தரையும் பரிசுத்தமும் அவரால் உருவானவைதான்.

ஆறு வருடங்களுக்கு முன்னால் உஜ்ஜயினியில் ஒரு சன்னியாசிகள் சம்மேளனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாடு முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான சன்னியாசிகள் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகிக்க என்னைக் கூப்பிட்டார்கள். நான் மறுத்தேன். ‘ஒரு பார்வையாளனாக வந்து போகிறேன். தலைமையெல்லாம் எனக்குச் சரிப்படாது’ என்று சொன்னேன்.

நான் அந்தக் கூட்டத்தில் பேசக்கூட வேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன். வெறும் பார்வையாளன். போதுமே? ஆனால் பார்வையாளர்களாக வந்திருந்த பக்தர்கள் கூட்டம் பெரும்பாலும் என்னைச் சுற்றியே குவிந்திருந்தது. நான் அதை உள்ளூர மிகவும் ரசித்தேன். என்ன பெரிய மேடை? என்ன பெரிய கூட்டம்? அப்போது வெளியாகியிருந்த ஒரு அமிதாப் பச்சன் திரைப்படத்தை முன்வைத்து நான் அவர்களுக்கு நிரந்தரமில்லாத வாழ்வில் சந்தோஷமாக இருப்பது எப்படி என்று சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தேன்.

எத்தனை அரசியல்வாதிகள், எவ்வளவு பெரிய மனிதர்கள், எப்பேர்ப்பட்ட அரிய வாய்ப்புகள்! எனது அமைப்பை ஒரு மாபெரும் நிறுவனமாக்க எனக்குக் கிடைத்தது போன்ற வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் வேறெந்த சன்னியாசிக்கும் கிடைத்திருக்காது. ஆனால் இன்றுவரை என் அமைப்புக்கு நான் ஒரு பெயரைக்கூடத் தந்ததில்லை. அமைப்பு என்ற ஒன்றே இல்லாத ஏற்பாட்டைத்தான் கவனமாக அமைத்து வைத்திருந்தேன்.

குருநாதரைத்தான் அப்போது நினைத்துக்கொண்டேன். இயற்பெயரே இல்லாமல் ஒரு மனிதன் வாழ்ந்து முடித்துவிட்டுப் போக முடியுமென்றால் இதெல்லாம் என்ன பெரிய விஷயம்!

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

101. சிந்திக்கும் மிருகம்

 

 

குருநாதர் இறப்பதற்கு ஒரு நாள் முன்னர் நான் ஆசிரமத்தை விட்டு விலகியதைப் பற்றி முன்பே ஒரு முறை சொன்னேன் என்று நினைக்கிறேன். அந்தச் சம்பவம் அப்போது என்னோடு ஆசிரமத்தில் இருந்த சஹிருதயர்கள் அனைவரையும் மிகவும் பாதித்திருந்தது. நான் அங்கிருந்த நாள்களில் ஒருவராலும் என்னைப் புரிந்துக்கொள்ள முடியாமல் போனதைக் குறித்துப் பலகாலம் அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள் என்று பிறகு அறிந்தேன். அதைவிட அவர்களுக்குப் பெரிய வியப்பு, குரு எப்படி என்னை எனது அனைத்துப் பிழைகளோடும் ஏற்று ஆதரித்தார் என்பது. சில சமயம் எனக்கேகூட அந்த வினா எழுந்ததுண்டு.

ஒருநாள் எனக்கு கஞ்சா குடித்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. மடிகேரியில் கஞ்சா எங்கெல்லாம் கிடைக்கும் என்று நானறிவேன். ஆனால் எனக்குச் சிறு பொட்டலங்களை வாங்கிப் பயன்படுத்திப் பார்க்க விருப்பமில்லை. தோட்டத்தில் இறங்கி, நானே என் கையால் பறித்து எடுக்க விரும்பினேன். இதனை எனது தோழர்களிடம் சொன்னபோது அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். வேண்டாம், மிகவும் தவறு என்று சொன்னார்கள்.

‘அப்படியா? தவறான ஒன்று எனக்குத் தோன்ற வாய்ப்பில்லையே?’ என்று சொல்லிவிட்டு நான் நேரே குருவிடம் சென்றேன்.

‘என்ன?’

‘குருஜி, நான் சிவ மூலிகையைப் பயன்படுத்திப் பார்க்க விரும்புகிறேன். சித்தர்களுக்கெல்லாம் அது மிகவும் உதவியிருப்பதாகப் படித்தேன்’.

‘அதற்கென்ன? பயன்படுத்தி, அதன்மூலம் என்ன செய்யவிருக்கிறாய் என்று சொல். நான் ஏற்பாடு செய்கிறேன்’ என்று அவர் சொன்னார். இது அச்சம்பவத்துக்கு சாட்சியாக இருந்த அனைத்து நண்பர்களுக்கும் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. ஏனெனில், நான் தியானம் செய்து அவர்கள் பார்த்ததில்லை. தவத்தில் ஈடுபட்டுக் கண்டதில்லை. ஓரிடத்தில் நான் பொருந்தி அமர்ந்ததே இல்லை. சிறிது காலம் மூச்சுப் பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன் என்றாலும், போதிய தேர்ச்சி அதில் கிடைத்துவிட்ட பின்பு நான் அதனைத் தொடரவில்லை. தேவைப்படும்போது எந்தப் பயிற்சியையும் மீண்டும் நினைவில் கொண்டுவந்து செயல்படுத்திப் பார்க்க முடியும் என்று தோன்றியதால் விட்டுவிட்டேன். எந்தப் பயிற்சியும் தேவைக்காக மட்டுமே என்பதில் எனக்கு இயல்பாகவே ஒரு தெளிவு இருந்தது.

அக்காலங்களில் ஆசிரமத்தில் எனது ஒரே பணி, வாசித்துக் கொண்டிருப்பதுதான். அதிகாலை ஐந்தரை, ஐந்தே முக்காலுக்கு எழுந்து இரண்டு மணி நேரம் நடந்துவிட்டு வருவேன். வந்த வேகத்தில் ஆசிரம வளாகத்தில் விழுந்துகிடக்கும் இலைக்குப்பைகளை அள்ளி அப்புறப்படுத்திவிட்டுக் குளிக்கச் செல்வேன். குளித்ததும் ஒரு கறுப்புத் தேநீர் அருந்திவிட்டு குருவின் நூலகத்துக்குள் சென்றுவிடுவேன். அது ஒரு பெரிய நூலகமல்ல. ஆனால் அவரிடம் பல அபூர்வமான நூல்களின் சேகரம் இருந்தது. அங்கேதான் ஒரு சமயம் நான் ‘தால்மூத் பாவ்லி’ என்ற புத்தகத்தைக் கண்டெடுத்தேன். ஹீப்ரூ மொழியில் எழுதப்பட்ட யூதர்களின் தத்துவம் மற்றும் மதச் சட்டங்களின் பிரதியின் ஆங்கில மொழிபெயர்ப்பு. மிகப் பழமையான பதிப்பு. ஒரு ஆர்வத்தில் நான் அந்த நூலைப் புரட்ட ஆரம்பித்தபோது குரு என் அருகே வந்தார். ‘படி. ஆனால் நடுவே எழுந்துவிடாதே. முழுக்க முடிப்பதற்கு எட்டில் இருந்து ஒன்பது நாள்கள் தேவைப்படும்’ என்று சொன்னார்.

‘ஒரு சட்டப் புத்தகத்தை எப்படி மொத்தமாக உட்கார்ந்து படிப்பது?’

‘முடியும். சட்ட திட்டங்கள் இல்லாமல் மனிதர்களைச் சமாளிக்க முடியாது என்று உலகம் முழுவதும் ஒரே மாதிரிதான் யோசித்திருக்கிறார்கள். இடம் வேறு, மொழி வேறு, சம்பவங்கள் வேறு. ஆனால் அடிப்படை அனைத்துக்கும் ஒன்றுதான்’.

‘ஆம் குருஜி. மனிதனைத் தவிர உலகில் வேறெந்த உயிரினமும் சட்டங்களின் சட்டையை அணிவதில்லை’.

‘இதில் இருந்து உனக்கு என்ன புரிகிறது?’

‘சிந்தனை மிகவும் ஆபத்தானது. சிந்திப்பதற்குத்தான் இத்தனை சட்டங்களும்’.

‘இந்தச் சட்டங்களும் சிந்தித்து உதித்தவைதான்’.

‘ஆனால் ஒரு சிந்திக்கும் மிருகமாக இருப்பது கிளுகிளுப்பாக இருக்கிறது குருஜி. இதற்குப் பதில் சொல்லுங்கள். மனிதனின் மரணம் என்பது சிந்தனையின் மரணம் என்றால் மற்ற உயிரினங்களின் மரணம் எதனுடையது?’

‘நியாயமான வினா. எனக்கென்னவோ, மனிதனைத் தவிர மற்ற எந்த உயிரும் மரணமடைவதில்லை என்று தோன்றுகிறது’.

‘பிறகு?’

‘அவை சிறிய ஓய்வில் செல்கின்றன’.

‘மீண்டும் வருமா? அப்படியானால் மறு பிறப்பை நீங்கள் ஏற்கிறீர்களா?’

‘மறு பிறப்பா! அப்படியில்லை. இது கதாநாயகிகள் ஒரு காலகட்டத்துக்குப் பிறகு அம்மா வேடத்தில் திரும்ப வருவது போல’.

நான் சிரித்தேன். அன்றைக்கு அறிவற்றிருப்பதற்கும் அறிவை நகர்த்தி வைத்திருப்பதற்குமான வேறுபாடுகளைக் குறித்து குரு நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தார். சம்பாஷணை எங்கெங்கோ விரிந்து இறுதியில் உச்சகட்ட ஆன்மிகம் என்பது சிவனைத் துறப்பதில் சென்று முடியும் என்று சொன்னார். ‘ஆனால் கவனம்! இது நாத்திகமல்ல. அரசியல் நாத்திகத்துக்கும் சித்தாந்த நாத்திகத்துக்கும் அப்பால் தர்க்கபூர்வமாக அணுக முடிந்தால் மட்டுமே இதனைப் புரிந்துகொள்ள முடியும்’.

பலமுறை அவர் சொல்லியிருக்கிறார். ‘நாம் கடவுளை ஏற்காதவர்கள். ஆனால் கடவுளை நினைக்காதிருப்பதில்லை’.

ஏற்பதும் மறுப்பதும் அல்ல. நினைப்பதும் நினைக்காதிருப்பதும்தான் இங்கு விஷயம். நான் அந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். மதங்கள் வரையறுக்கும் சட்டதிட்டங்கள். அல்லது மதத்தின் பெயரால் குருமார்கள் தீர்மானிக்கும் சட்டதிட்டங்கள். எல்லோரையும் அச்சுறுத்த எல்லோருக்கும் யாராவது ஒரு சில நாலு கண்ணன்கள் வேண்டித்தான் இருக்கிறார்கள்.

‘நமக்கு, கண்ணனினும் பெரிய நாலு கண்ணன் இல்லை’ என்று குரு சொன்னார். அவரது கீதை வகுப்புகள் பிரமாதமாக இருக்கும். வருடம் இருமுறை எங்களுக்கு அவர் தலா பதினெட்டு தினங்கள் கீதை வகுப்புகள் எடுப்பார். அந்நாள்களில் எங்கள் ஆசிரமத்தில் கண்ணனுக்குப் பிடித்த நாவல் பழங்கள், அவல் பொரி, வெண்ணெய் போன்ற பிரசாதங்கள் தாராளமாகக் கிடைக்கும். குருநாதரின் சொற்பொழிவுகளின் மூலம் கண்ணனை அறிபவர்களுக்கு அது ஒரு சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருக்கும். ஒரு தெய்வமாகவோ, ஞானியாகவோ, ராஜதந்திரியாகவோ அவர் எப்போதும் கண்ணனைச் சுட்டிக்காட்டியதே இல்லை. உலகின் ஆகப்பெரிய அரசியல்வாதி அவந்தான் என்று அவர் சொல்லுவார்.

எதையோ சொல்ல வந்து நகர்ந்துவிட்டேன். சிவ மூலிகை. ஆம். குருநாதர் எனக்கு அது எதற்கு என்று கேட்டார்.

‘நான் போதைப் பொருள்களைக் குறித்துச் சிறிது யோசிக்க விரும்புகிறேன்’ என்று சொன்னேன். அவர் சிரித்துவிட்டார். ‘இல்லை. உண்மையாகவே குருஜி. பக்தி எப்படிப்பட்ட போதையாக இருக்கும் என்பதை அறியாமல் அதைக் குறை கூறிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. நாலு இழுப்பு கஞ்சா எனக்கு பக்தியைப் புரியவைக்கும் என்று நினைக்கிறேன்’.

அவர் எனது அந்த யோசனையை விமரிசனம் செய்வார் என்று நண்பர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், ‘முட்டாள். கஞ்சாவைக் கொளுத்திப் புகைப்பது அநாகரிகம். அது போதையல்ல. மயக்கம். போதை என்பது போதத்துக்கு நெருங்கிச் செல்வது’.

‘புரியவில்லை குருஜி’.

அன்று மாலை ஆசிரமத்துக்கு ஒரு குடியானவன் வந்தான். குருஜியைச் சந்தித்துத் தனது இடுப்பு முடிப்பில் இருந்து கொத்தாகக் கொஞ்சம் கஞ்சா இலைகளை அள்ளிப் போட்டான். எனக்கு மிகுந்த வியப்பாகிவிட்டது.

‘குருஜி, எனக்காகவா?’ என்று கேட்டேன்.

‘ஆம். நீதானே ஆசைப்பட்டாய்? ஆனால் இதைப் பயன்படுத்தும் விதம் வேறு. நான் சொல்லித்தருகிறேன்’ என்று சொல்லிவிட்டு, விக்னேஷை அழைத்து ஒரு லிட்டர் பாலைக் காய்ச்சச் சொன்னார். பிறகு, என்னைக் கடைக்கு அனுப்பி ஒரு தேன் பாட்டில் வாங்கிவரச் சொன்னார். நான் கடைக்குப் போய் வருவதற்குள் காயத் தொடங்கியிருந்த பாலில் கஞ்சா இலைகளைக் கசக்கிப் போட்டுக் கிளறிக்கொண்டே இருக்கச் சொல்லியிருக்கிறார். சீடர்களுக்கு குரு ஏன் இப்படியொரு விஷப் பரீட்சையில் இறங்குகிறார் என்பது புரியவேயில்லை.

நான் தேன் பாட்டில் வாங்கி வந்தபோது, அந்த ஒரு லிட்டர் பால் அரை லிட்டராகச் சுண்டிவிட்டிருந்தது. பொடித்துப் போட்ட கஞ்சா இலைகள் அதில் எங்கு போயின என்று தெரியவில்லை. குருநாதர், நான் வாங்கி வந்த தேனை அந்தப் பாலில் ஊற்றி அடுப்பைவிட்டு இறக்கி வைத்தார்.

‘குருவே, என்ன செய்கிறீர்கள்?’

‘என் பிரியத்துக்குரிய சீடனுக்கு நான் சோமபானம் தயார் செய்கிறேன்’ என்று சொல்லிவிட்டு, ஒரு தண்ணீர்த் தொட்டிக்குள் அந்த மூடிய பால் பாத்திரத்தைக் கொண்டுபோய் வைத்தார். ‘அது இருக்கட்டும். மூன்று மணி நேரம் சும்மா விட்டுவிடு’ என்று சொன்னார்.

‘இதுவா சோமபானம்?’

‘ஆம்’.

‘இல்லை. ஏதோ ஒரு நிலவுத் தாவரத்தின் இலையில் இருந்து எடுக்கப்படுவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்’.

‘எல்லாம் இந்தத் தாவரம்தான் விமல். பஸ் ஸ்டாண்டுக்குப் போ. அங்கே ஒரு திபெத்தியன் ஸ்வெட்டர் விற்றுக்கொண்டிருப்பான். அவனிடம் போய் கஞ்சாவுக்கு திபெத்திய மொழியில் என்ன பெயர் என்று கேள். சோமராஜா என்று சொல்லுவான்’.

‘அப்படியா?’

அன்றிரவு ஆசிரமத்தில் என் நண்பர்கள் அனைவரும் விநோதமாகப் பார்த்துக்கொண்டிருக்க, குருநாதர் அந்தத் தண்ணீர்த் தொட்டிக்குள் இருந்த பால் பாத்திரத்தை எடுத்து அப்படியே என் கையில் கொடுத்து, ‘அருந்து’ என்று சொன்னார்.

‘உங்களுக்கு?’

‘விருப்பமில்லை. நீ குடி. நீதானே ஆசைப்பட்டாய்?’

நான் அந்த போதைப் பாலை ருசித்து அருந்த ஆரம்பித்தேன். தேன் கலந்த பால். இனிப்புக்குக் கேட்கவா வேண்டும்? ‘பிரமாதமாக இருக்கிறது. உங்களில் யாருக்காவது வேண்டுமா?’ என்று என் நண்பர்களைக் கேட்டேன். சொல்லிவைத்த மாதிரி அனைவருமே வேண்டாம் என்று மறுத்துவிட்டார்கள். எனக்கென்ன போயிற்று? திருப்தியாக அந்த அரை லிட்டர் பாலையும் குடித்துவிட்டுப் பாத்திரத்தைக் கீழே வைத்தேன்.

‘உட்கார்’ என்று குரு சொன்னார்.

நான் ஒரு பாயை விரித்து அமர்ந்தேன்.

‘சுவரோரம் சாய்ந்து அமர்ந்துகொள்’.

அப்படியே செய்தேன்.

‘கண்ணை மூடிக்கொள்’ என்று சொல்லிவிட்டு என் காதருகே வந்து குரு ஓம் என்று சொன்னார். அந்தச் சொல் ஒரு மெல்லிய தாமிரக் கம்பியைப்போல் என் செவிக்குள் நுழைய ஆரம்பித்தது. நான் அதனைப் பற்றிக்கொண்டேன். ஒற்றைச் சொல். வெறும் ஓம். நான் திருப்பிச் சொல்லவில்லை. வெறுமனே அந்த ஒலியைப் பிடித்துக்கொண்டேன். அதனோடு கூட மெல்ல நடக்க ஆரம்பித்தேன். ஓம். காற்றின் அசைவில் அது சற்று வேகமெடுக்கத் தொடங்கியது. நானும் என் நடைவேகத்தை அதிகரித்தேன். ஓம். சட்டென்று அது ஓடத் தொடங்கியபோது நானும் பிடியை நழுவ விடாமல் உடன் ஓடினேன். ஓம். அதன்பின் அது என்னை எங்கு இழுத்துச் சென்றது என்று நினைவில்லை.

நான் போய்ச் சேர்ந்த இடத்தில் அண்ணாவைப் பார்த்தேன். ஒரு மொட்டைப் பாறையின் மீது அவன் அமர்ந்திருந்தான். ஒரு சார்மினார் சிகரெட்டுக்குள் கஞ்சாவைத் திணித்து இழுத்துக்கொண்டிருந்தான்.

(தொடரும்)

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

102. ஒரு பெரும் பாறை

 

 

குருநாதர் இறப்பதற்கு ஒரு நாள் முன்னதாக நான் ஆசிரமத்தை விட்டு வெளியேறிச் சென்றேன். அவர் இறந்து ஆறு மாத காலத்துக்கு நான் மடிகேரி இருக்கும் திசைப்பக்கம் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை. கர்நாடக மாநிலம் முழுதும் அலைந்து திரிந்துவிட்டு சிறிது காலம் ஆந்திரப் பிரதேசத்துக்குப் போய் இருந்தேன். அக்காலத்தில்தான் நான் சொற்பொழிவுகள் ஆற்ற ஆரம்பித்தது. உலகில் உள்ள ஒவ்வொரு நபரையும் என்னை அறிந்தவராக மாற்றும் முயற்சியையும் அப்போதுதான் மேற்கொள்ளத் தொடங்கினேன். ஒரு சன்னியாசி பிரபலமாவதற்கு இரண்டு வழிகள் உண்டு. தடாலடியாக எதையாவது சொல்லி அல்லது செய்து, கவன ஈர்ப்பில் ஈடுபடுவது முதலாவது. யாரும் எண்ணிப் பார்த்திருக்க முடியாத சிநேகபாவத்தை இருபத்து நான்கு மணி நேரமும் சுமந்திருப்பது இரண்டாவது.

இதில் முதலாவது வழி எனக்குரியதல்ல என்று முதலிலேயே முடிவு செய்திருந்தேன். ஒரு சில சில்லறைச் சித்து ஆட்டங்களைப் பயின்றிருந்தால்கூட இது பலனளிக்கும். கூட்டத்தை இழுப்பதற்கு மூடித் திறக்கும் உள்ளங்கையில் இருந்து ஒரு சாக்லேட் எடுத்துக் கொடுத்தால் போதும். இழுத்த கூட்டத்தை உட்காரச் செய்யத்தான் அதிரடி நடவடிக்கைகள் வேண்டும். உதாரணமாக, ராமன் ஒரு கிரிமினல் என்று சொற்பொழிவைத் தொடங்க வேண்டியிருக்கும். அல்லது இயேசுநாதரின் காதலிகளைக் குறித்துச் சில புனைகதைகளை மீள் உருவாக்கம் செய்ய வேண்டியிருக்கும். மதங்களையும் தேசிய அரசியலையும் சரி விகிதத்தில் கலந்து ஒரு சில சாராரின் உணர்வுகளைப் புண்படுத்தி அலங்கரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

இதெல்லாம் எத்தனை மலினமான உத்திகள்! இறப்பதற்குச் சில தினங்களுக்கு முன்னர் குருநாதர் என்னிடம் சொன்னார், ‘விமல்! வாழ்நாளில் மதத்தையோ கடவுளையோ மருந்துக்கும் தொட்டுப் பாராமல் உன்னால் மக்களுக்கு நாலு நல்ல விஷயங்களைச் சொல்ல முடியுமானால் உன்னைக்காட்டிலும் உயர்ந்த ஜீவன் வேறில்லை’.

என்னை மிகவும் பாதித்த போதனை அது. ஒட்டுமொத்தமாக நான் அவரிடம் பயின்றவற்றின் சாரமே அந்த ஒரு வரிதான் என்று நினைத்தேன். ஆனால் என்னால் மட்டுமல்ல; யாராலுமே அது முடியாது என்றுதான் தோன்றியது. நான் வளர்ந்துகொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில்தான் வடஇந்தியாவில் ரஜனீஷும் வளர்ந்துகொண்டிருந்தார். அவர் ஒரு நிறுவனம். அதாவது, பிறக்கும்போதே நிறுவனமாகப் பிறந்த மனிதர். தோன்றும்போது மிகப் பல நிறுவனங்களாக அவர் பல்கிப் பெருகியே தோன்றினார். முதல் முதலில் நான் அவரைக் குறித்து சிந்திக்கத் தொடங்கியபோது, அவர் ஓர் உலக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அமெரிக்காவில் இருந்து துரத்தியடிக்கப்பட்டு, பல ஐரோப்பிய தேசங்கள் அவரைத் தரையில் கால் வைக்க விடாமல் தொடர்ந்து பறக்கவைத்துக்கொண்டே இருந்தன. ஸ்பெயின், பிரேசில், உருகுவே என்று எங்கெங்கோ போய்ப் பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி, இங்கிருந்து நேபாளத்துக்குப் போய், அங்கிருந்து மீண்டும் இந்தியாவுக்கு வந்து சேர்ந்திருந்தார்.

என்ன சொல்ல? ரஜனீஷ் தான் பிறக்கவும் இல்லை, இறக்கவும் இல்லை; இந்தப் பூமிக்கு வந்து போன ஒரு பிரஜை என்று அறிவித்துக்கொண்டவர். சந்தேகமின்றி அவர் ஒரு பயணிதான். அலையும் துறவி. விசாகப்பட்டினத்தில் நான் சந்தித்த கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் அவரைப் பற்றி மணிக்கணக்காக என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். ரஜனீஷின் ஒரு புத்தகத்தைக் கொடுத்து என்னைப் படித்துப் பார்க்கச் சொன்னார்.

அன்றிரவே நான் அந்தப் புத்தகத்தைப் படித்தேன். மனத்தை இல்லாமல் ஆக்கும் கலையை விவரிக்கும் கேள்வி பதில் வடிவிலான புத்தகம் அது. அதைப் படித்தபோது அந்தக் கணமே அவருடன் பேச வேண்டும் போலிருந்தது. ஏனென்றால் அந்தப் புத்தகத்தில் அவர் விவரித்திருந்த பல விஷயங்கள் என் குருநாதர் மூலமாக நான் ஏற்கெனவே அறிந்தவை. எந்த மத நூலும் தத்துவ நூலும் சாஸ்திரங்களும் சொல்லித்தராத, அவற்றுக்குத் தெரிந்தே இராத சூட்சுமம் அது. ‘சராசரி மனிதர்களிடம் ஆத்மாவைக் குறித்துப் பேசுவது வீண்’ என்று குருநாதர் சொல்வார். ரஜனீஷ் தனது புத்தகத்தில் ஆத்மாவின் பக்கம் மழைக்குக் கூட ஒதுங்காதது எனக்கு ஆறுதலாக இருந்தது.

ஆனால் தனது பிரபலத்தை அவர் அந்தப்  பிராந்தியத்தில் இருந்து பெற உத்தேசித்திருக்கவில்லை என்று எனக்குத் தோன்றியது. மதங்கள் மீதும் கடவுள்கள் மீதும் அவர் முன்வைத்த விமரிசனங்கள் பல சமயம் எனக்குக் குழந்தைத்தனமாகத் தோன்றியிருக்கின்றன. ஞானமடைந்த ஒருவன் மதத்தைப் பொருட்படுத்த மாட்டான் என்பதே என் கருத்தாக இருந்தது. ஞானத்தின் மிகக் கனிந்த நிலையில் அவனுக்குக் கடவுளும் வேண்டியிருக்காது. ஆனால் பிரபலத்துக்கு அது தேவை. அதில் சந்தேகமில்லை. எனக்குப் புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்ன பேராசிரியர் ஒரு வார இடைவெளியில், ‘ரஜனீஷ் மணாலிக்குப் போயிருக்கிறார். நான் அங்கு சென்று அவரைச் சந்திக்க முடிவு செய்திருக்கிறேன்’ என்று சொன்னார்.

‘நீங்களும் வருகிறீர்களா?’

‘எதற்கு?’ என்று நான் கேட்ட பின்புதான் அவருக்குத் தான் கேட்டதன் அபத்தம் புரிந்தது.

நான் சிரித்தேன். ‘சினிமா பாட்டு கேட்பது போலச் சொற்பொழிவு கேட்பது ஒரு வழக்கம் என்றால் அதை நான் தவறு என்று சொல்லமாட்டேன். ஆனால் வாழ்வில் ஒரு வெளிச்சம் பெற வேண்டுமென்றால் ஓரிடமாக அடங்கி உட்கார்வதுதான் வழி’ என்று சொன்னேன்.

என்னிடம் அக்காலத்தில் இன்னொரு உத்தியும் இருந்தது. குறிப்பிட்ட நபரை நான் நிரந்தரமாக என்னிடத்தில் தக்கவைத்துக்கொள்ள விரும்பினால், முதலில் அவர்களைப் பேசவிட்டு வேடிக்கை பார்ப்பேன். என்னிடம் வருகிற ஒரு நபர் ரஜனீஷைக் குறித்தோ, தயானந்த சரஸ்வதியைக் குறித்தோ, சின்மயானந்தரைக் குறித்தோ சற்று அதிகமாகச் சிலாகித்தாரென்றால், அவரோடு சேர்ந்து நானும் அவர்களை வானளாவப் புகழ ஆரம்பிப்பேன். ‘நீங்கள் உடனடியாக ஓடிப் போய் சரணடைய வேண்டிய பாதங்கள் அவருடையவைதான்’ என்று அடித்துச் சொல்லி அனுப்பிவைப்பேன்.

போகிற இடத்தில் சம்பந்தப்பட்ட நபர் மறக்காமல் என்னைப் பற்றிப் பேசுவார். ‘விமல்ஜி எத்தனை உயர்ந்த சன்னியாசி தெரியுமா? உங்களைப் பற்றி அவ்வளவு தெரிந்துவைத்திருக்கிறார். வார்த்தைக்கு வார்த்தை உங்களைப் பற்றித்தான் பேசுகிறார். அவரளவு படித்த, ஞானம் பெற்ற ஒரு மகான், இன்னொரு துறவியைப் பற்றி இப்படிப் பேசிக் கண்டதேயில்லை’.

அது ரஜனீஷோ, தயானந்தரோ எனக்கு அது குறித்து அக்கறையில்லை. நான் ஒரு மூலாதாரம் என்றால் அவர்கள் வேறு வேறு மூலாதாரங்கள். எனக்கு மிக நன்றாகத் தெரியும், என்னைக் குறித்து அவர்கள் அவ்வளவு தூரம் அறிந்து வைத்திருக்கவோ, எடுத்துப் பேசவோ ஒன்றுமற்று இருப்பார்கள். எனவே வெறுமனே தலையசைத்துக் கேட்டுக்கொள்வார்கள். இங்கிருந்து கிளம்பிப் போன நபருக்கு அது சற்று வேறு விதமான அனுபவமாக இருக்கும். என்ன இவர் இப்படி இருக்கிறாரே. அவரளவுக்குப் பரந்த மனம் ஏன் இவருக்கு இல்லை என்று ஏதோ ஒரு கட்டத்தில் அவசியம் தோன்றும்.

திரும்பி வந்த பின்பு மீண்டும் என்னை அந்த நபர் சந்திக்க வருவார். நான் மிகுந்த அக்கறையுடன் அவரது பயணத்தைக் குறித்து விசாரித்துவிட்டு, அவர் யாரைச் சந்திக்கச் சென்றாரோ, அவரது நலனைக் குறித்து நிச்சயமாக விசாரிப்பேன். ‘நீங்கள் பாக்யவான். ஒரு பெரும் ஞானியைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறீர்கள். நமது நண்பர்களுடன் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்’ என்று என் சதஸில் அவரை வலுக்கட்டாயமாகப் பேச வைப்பேன்.

எனக்கு மிக நிச்சயமாகத் தெரியும். அவரது அந்த உரையின் இறுதி வரிகளில் அவர் சந்தித்த ஞானியின் நிழலினும் எனது நிழல் நீண்டு வளர்ந்து நிறைந்திருக்கும்.

நான் அந்தப் பேராசிரியருடன்தான் ரஜனீஷைச் சந்திக்கப் போகவில்லையே தவிர, இயல்பாகவே எனக்கு அதற்கொரு சந்தர்ப்பம் வந்தது. அப்போது நான் மடிகேரியிலேயே எனது ஆசிரமத்தை நிறுவுவது என்று முடிவு செய்துகொண்டு, ஆந்திரத்தில் இருந்து கர்நாடகத்துக்குப் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். விசாகப்பட்டினத்தில் என்னைச் சந்திக்க வந்துகொண்டிருந்த இளைஞன் ஒருவனுக்கு அப்போது புனேவில் வேலை கிடைத்துப் போயிருந்தான். என்னைப் புனேவுக்கு வரும்படியும், மடிகேரியில் நான் ஆசிரமம் அமைத்துத் தங்குவதற்கு அங்குள்ள சில நண்பர்கள் மூலம் உதவி பெற முடியும் என்றும் அவன் எனக்குக் கடிதம் எழுதியிருந்தான். அதனால் நான் புனேவுக்கு முதலில் சென்றேன்.

அவன் பெயர் கணேஷ் ராம். விசாகப்பட்டினத்தில் அவனது தந்தையார் ஒரு சுருட்டுத் தொழிற்சாலை வைத்து நடத்திக்கொண்டிருந்தார். பையன் தனது தொழிலில் தனக்குப் பக்க பலமாக வருவான் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். அவனோ, தத்துவம் படித்துப் பேராசிரியராக விருப்பம் கொண்டவனாயிருந்தான். தனது விருப்பத்தில் அரையங்குலமாவது முன்னேற வேண்டுமென்றால் முதலில் விசாகப்பட்டினத்தைவிட்டு நகர்ந்துவிட வேண்டும் என்று முடிவு செய்து, சிறிய வேலை ஒன்றை ஒப்புக்கொண்டு அவன் புனேவுக்குப் போயிருந்தான். உண்மையில் மாதச் சம்பளம் அவசியம் என்று கருதக்கூடிய பின்னணி அவனுக்கு இருக்கவில்லை.

நான் ஒரு வார இடைவெளியில் புனேவுக்குப் போய்ச் சேர்ந்த அதே தினத்தில்தான், ரஜனீஷ் மும்பையில் இருந்து புனேவுக்கு இடம் பெயர்ந்திருந்தார். நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை அவருக்காக அங்கே அவரது பக்தர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள் என்று கேள்விப்பட்டேன். ஆசிரமம் என்றால் ஒரு பெரிய நகரத்தை உள்ளடக்கியது என்பதே அவரது சித்தாந்தமாக இருந்தது. அமெரிக்காவிலும் அவர் அதைத்தான் செய்தார். பிரச்னை வந்ததே அதனால்தான். எனக்குச் சிரிப்பு வந்தது. மடிகேரியில் நான் உருவாக்க நினைத்த ஆசிரமத்துக்கு எனக்கு இரண்டாயிரத்தில் இருந்து மூவாயிரம் சதுர அடிகள் நிலம் போதும். சுற்றிலும் முள் வேலி. மிகச் சிறிய அளவில் இரண்டு மூன்று குடில்கள். சாத்தியமுள்ள அனைத்து மலர்ச் செடிகளையும் நட்டு, ஏழெட்டு மரங்கள் வைத்தால் போதும் என்று திட்டமிட்டிருந்தேன். எனது வகுப்புகளை நான் வானத்தின் அடியில் நடத்தவே விரும்பினேன். மூடிய கதவுகளுக்கு பின்னால் மறைந்துகொண்டு பேசுவதில் என்ன இருக்கிறது? இயேசுநாதர் ஒருநாளும் அறையில் அமர்ந்து பிரசங்கம் நிகழ்த்தியதில்லை. நபி முகம்மது வீட்டு வாசலில் உட்கார்ந்துதான் ஆயிரக்கணக்கான பக்கங்கள் பேசியிருக்கிறார். அதில் மிஞ்சியவற்றைப் போர்க்களத்திலும் போர்க்களத்துக்குப் போகும் வழியிலும் பேசியிருக்கிறார். ஜரதுஷ்டிராவின் பாறை என்று என் குருநாதர் ஒரு பாறையைக் குறித்துச் சொல்வார். போகிற இடங்களுக்கெல்லாம் அந்தப் பாறையைத் தூக்கிச் சென்று, தோன்றிய இடத்தில் கீழே போட்டு, அதன் மீது அமர்ந்து பிரசங்கம் நிகழ்த்துவாராம்.

எனக்கு ஒரு பாறை போதும். விலை மதிப்பற்ற அதன் எளிமையின் மீது நான் என் கோட்டையைக் கட்டிக்கொள்வேன்.

நான் புனேவுக்குப் போய்ச் சேர்ந்தபோது சரியான குளிர்காலம் ஆரம்பித்திருந்தது. மடிகேரியின் குளிருக்கும் புனேவின் குளிருக்கும் சம்மந்தமே இல்லை என்று தோன்றியது. மடிகேரிக் குளிரில் ஒரு கவர்ச்சி உண்டு. அதை ரசிக்க முடியும். அனுபவிக்கத் தோன்றும். நள்ளிரவுப் பொழுதுகளில் எவ்வளவோ தினங்கள் ஆடைகளைக் களைந்துவிட்டு நான் நிர்வாணமாக அமர்ந்து குளிரை தியானம் செய்திருக்கிறேன். பன்னிரண்டு, பதிமூன்று டிகிரி வெப்பநிலையில்கூட சுவாசப் பிரச்னை எழாது. ஆனால் புனேவில் எனக்கு மூச்சு வாங்கியது. இத்தனைக்கும் அங்கு பதினெட்டு டிகிரி குளிர்தான் இருந்தது. அந்த நகரத்தில் என்னால் வெகுநாள் தங்க முடியாது என்று தோன்றியது. கணேஷ் ராமிடம் அதிகபட்சம் மூன்று நாள் இருப்பேன் என்று சொல்லியிருந்தேன்.

அதில் இரண்டாம் நாள் ரஜனீஷைப் பார்த்து வரலாம் என்று தோன்றிக் கிளம்பினேன். கவனமாக எனது காவி ஆடைகளைக் களைந்துவிட்டு எளிய குர்த்தா மட்டும் அணிந்து புறப்பட்டேன்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

103. ஆல் பாஸ் டுடோரியல்

 

 

என் கண்ணில் பட்ட மனிதர்கள் பெரும்பாலும் வெள்ளைக்காரர்களாக இருந்தார்கள். இந்தியாவுக்குச் சுற்றுலா வரும் வெள்ளையர்கள் மொத்தமாக இங்கே வந்துவிடுகிறார்களா என்ன? இத்தனைக்கும் ரஜனீஷ் புனேவுக்கு வந்து இரண்டு நாள்கள்தான் ஆகியிருந்தன. அவரைப் பார்க்கவும் அவரது சொற்பொழிவைக் கேட்கவும் இவ்வளவு பேர் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது நம்பமுடியாத அதிசயமாக இருந்தது. குறைந்தது முன்னூறு வெள்ளையர்களையாவது நான் அங்கே பார்த்தேன். ஆண்களும் பெண்களுமாக அவர்கள் மூலைக்கு மூலை நின்று பேசிச் சிரித்துக்கொண்டிருந்தார்கள். திடீர் திடீரென்று யாராவது ஒருவர் இருந்த இடத்தில் நடனமாடத் தொடங்கிவிடுவார். உடனே அவரோடு நாலைந்து பேர் சேர்ந்துகொள்வார்கள். அதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல வேறு சிலர் ஆங்காங்கே தனியே அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தார்கள். சிலர் உலகை மறந்து முத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள். பெண்ணொருத்தி, ஒரு முத்த ஜோடி தங்கள் பணியை முடித்து விலகும் வரை அருகே அமைதியாக நின்றுகொண்டிருந்துவிட்டு, அவர்கள் விலகியதும் அவர்களிடம் ஏதோ பேசினாள். மூவருமாக உடனே கிளம்பி மைய மண்டபத்துக்குள் சென்றார்கள். வேறு எதற்காக இல்லாவிடினும் முத்தம் ஒரு இயல்பான காரியம் என்று ஒரு பெரும் சமூகத்துக்குப் புரியவைத்ததற்காகவேனும் ரஜனீஷைப் பாராட்டத்தான் வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். எனக்குக்கூட அங்கே நடமாடிக்கொண்டிருந்த அழகிய பெண்களுள் நாலைந்து பேரைக் கூப்பிட்டு சிறிது நேரம் முத்தம் கொடுத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. சிரித்துக்கொண்டேன்.

இதில் ஒரு பிரச்னை இருக்கிறது. தியானத்துக்குக் காதலோ காமமோ தடையாக இருக்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்ட வழக்கம், ஏதோ ஒரு கட்டத்தில் தியானத்தின் ஆகப்பெரிய நோக்கமே முத்தம் என்றாகிவிடும் என்று நினைத்தேன். எனக்கு அம்மனிதரின் மன அமைப்பைப் புரிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. எதையும் மறுப்பது, எதையும் எதிர்ப்பது என்பது ஒரு பாவனை. கவன ஈர்ப்புக்கு அது உதவும் என்றாலும் அதைத் தாண்டி அவரிடம் ஏதோ இருக்கத்தான் வேண்டும் என்று நினைத்தேன். ஏனெனில், தத்துவங்களுக்கும் வேதாந்த விளக்கங்களுக்கும் உலகில் எங்குமே இத்தனை கூட்டம் சேராது. காதலையும் காமத்தையும் ஒரு சன்னியாசியிடம் வந்து பாடம் கேட்டாக வேண்டிய அவசியமில்லை. இதைத்தாண்டி வேறு எதற்கு வருகிறார்கள்? நான் அதை அறிந்துகொண்டே தீர வேண்டும் என்று நினைத்தேன்.

அன்று மாலை ஐந்து மணிக்கு ரஜனீஷ் மைய மண்டபத்துக்கு வருவார் என்றார்கள். மூன்றரை முதலே மண்டபத்தில் கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது. சௌகரியமாக ஒரு சுவரோரம் சென்று நான் அமர்ந்துகொண்டேன். என் அருகில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். மிகவும் வாசனையாக இருந்தாள். பெரிய அழகி என்று சொல்ல முடியாதெனினும் அங்கு இருந்த அத்தனை பெண்களுமே சராசரிக்கு மேற்பட்ட அழகிகளாகத்தான் தெரிந்தார்கள். தவிர, அனைவருமே பணக்கார வீட்டுப் பெண்களாகத் தெரிந்தார்கள். சுமார் ஆயிரத்தைந்நூறு பேர் அன்றைக்கு அந்த அரங்கில் கூடியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதில் யாருமே நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவராகவோ, அல்லது அதற்கும் கீழ்த்தட்டுவாசியாகவோ இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது. சட்டென்று எனக்கு மடிகேரிக்கு வந்த ஒரு வங்காளத்து சன்னியாசியின் நினைவு வந்தது.

குருநாதர் அவரை பிருத்வி பாபா என்று அழைத்தார். எக்காலத்திலோ குருநாதர் வங்காளத்தில் ஒரு சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தபோது அவரை அங்கே சந்தித்திருக்கிறார். நாளெல்லாம் பொழுதெல்லாம் சேரி மக்களுடன் மட்டும்தான் அவர் உரையாடுவார். குப்பங்களைத் தாண்டி நகர்ப்புறப் பகுதிகளுக்கு அவர் வரவே மாட்டார் என்று குரு சொன்னார். படிப்பறிவில்லாத, பொருளாதார சௌகரியங்கள் இல்லாத, நாகரிகம் சார்ந்த ஆர்வமோ அக்கறைகளோ இல்லாத மக்களுடன் மட்டுமே உரையாடுவது அவரது வழக்கம். குப்பத்துக் குழந்தைகளுக்கு சளி பிடித்தாலோ, காய்ச்சல் கண்டாலோ பிருத்வி பாபாவிடம்தான் தூக்கிக்கொண்டு போவார்கள். பாபா அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுவார். அதனோடு சிறிது நேரம் விளையாடுவார். அதுதான் அவரது வைத்தியம். என்ன வியாதியாக இருந்தாலும் அது உடனே குணமாகிவிடுவதை நான் பார்த்தேன் என்று குரு சொன்னார்.

பிருத்வி பாபா மடிகேரிக்கு வந்த தகவல் கிடைத்ததும் குருநாதர் எங்களையெல்லாம் அழைத்துக்கொண்டு அவரைச் சந்திக்கக் கிளம்பினார்.

‘குருஜி, அவரை ஏன் நமது ஆசிரமத்துக்கு அழைத்துவரக் கூடாது?’ என்று கேட்டேன்.

‘முயற்சி செய்து பாரேன்? வந்தால் சந்தோஷம்தான் எனக்கும்’ என்று சொன்னார்.

மடிகேரியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் உயரத்தில் ஒரு ஆதிவாசிக் குடியிருப்பில் அவர் தங்கியிருந்தார். பார்ப்பதற்கு மிகவும் அழுக்காக இருந்தார். நிறைய புகையிலை மெல்லுவார் போலிருக்கிறது. தாடியில் வழிந்து வழிந்து திட்டுத் திட்டாகப் புகையிலைக் கறை படிந்திருந்தது. அவரது கண்கள் ஏதோ புதருக்குள் ஒளித்து வைக்கப்பட்ட கண்களைப் போல உள்ளடங்கி, ஒடுங்கியிருந்தன. இரு கரங்களிலும் நரம்புகள் புடைத்துக்கொண்டு வெளித் தெரிந்தன. பேசும்போது காரிக் காரித் துப்பிக்கொண்டே இருந்தார். அதுவும் உட்கார்ந்த இடத்திலேயே. தன் மேலேயே துப்பிக்கொண்டபோதும் அவர் துடைக்கவில்லை என்பதைக் கவனித்தேன். ஏனோ அவரை ஆசிரமத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்று அப்போது தோன்றியது.

குருநாதர் அவரிடம் மிகவும் மரியாதையுடன் பேசினார். அவருக்காக எடுத்துச் சென்ற பழங்களைக் கொடுத்து வணங்கினார். எங்களை அறிமுகப்படுத்தி ஒவ்வொருவரைக் குறித்தும் உயர்வாக எடுத்துச் சொன்னார். பிருத்வி பாபா எங்களை முன்னால் வரச் சொல்லி, ஒவ்வொருவரையும் தலை தொட்டு ஆசீர்வாதம் செய்தார்.

‘மடிகேரியில் எவ்வளவு நாள் இருப்பீர்கள்?’ என்று குருநாதர் கேட்டார்.

‘எனக்கு இந்த ஊர் பிடிக்கவில்லை. எல்லோரிடமும் இங்கு பணம் இருக்கிறது’ என்று அவர் சொன்னார். குருநாதர் சிரித்தார். ‘என் ஆசிரமத்தில் இப்போது நூற்று நாற்பது ரூபாய் இருக்கிறது. உங்களுக்குப் பிரச்னை இல்லையென்றால் அங்கு வந்து தங்கலாம்’ என்று சொன்னார்.

‘அப்படியா? ஆனால் நான் துப்புவது உன் சீடனுக்குப் பிடிக்கவில்லை’ என்று என்னைச் சுட்டிக்காட்டி அவர் சொன்னபோது எனக்குச் சங்கடமாகிவிட்டது. அப்படியெல்லாம் இல்லை என்று என்னவோ சொல்லிச் சமாளித்தேன். இந்த சித்தர்களின் தொல்லைக்கு ஒரு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

‘என்னால் மூன்று மணி நேரம் நெருப்பின் மீது அமர்ந்து தியானம் செய்ய முடியும். ஆனால் பணம் இருக்கும் இடத்தில் மூன்று விநாடிகள்கூட இருக்க முடிவதில்லை. மூச்சு முட்டிவிடுகிறது’ என்று அவர் சொன்னார்.

ரஜனீஷ் தனது ஆசனத்துக்கு வந்து அமர்ந்தபோது அதைத்தான் எண்ணிக்கொண்டேன். அவரது வெல்வெட் தொப்பியும் வெள்ளிக் கம்பிகள் போல் நீண்டிருந்த தாடியும் கருநீல நிறத்தில் அவர் அணிந்திருந்த பட்டு அங்கியும் வைரம் பதித்த பாத ரட்சைகளும் விலை உயர்ந்த கைக்கடிகாரமும் யாரையும் எளிதில் வசீகரிக்கக்கூடியவை. இயல்பிலேயே அவருக்கு ஒரு வசீகரம் இருந்தது. அழகன் தான். சந்தேகமில்லை. அவர் என்ன அருந்தியிருந்தார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்தக் கண்கள் சொருகிய விதமே விநோதமாக இருந்தது. பொதுவாக, போதையில் சொருகும் கண்கள் மேற்புறமாகச் சென்று சொருகும். இதுவே ஆழ்ந்த தியானத்தில் கண் சொருகுமானால் அது கீழ்ப்பக்கம் வந்து அடங்கும். அவருக்கு இரண்டுமாக இல்லாமல் இடது கண் வலப்பக்கத்திலும் வலது கண் இடப்பக்கத்திலுமாகச் சென்று சொருகி நின்றதைக் கண்டேன்.

அன்றைக்கு அவர் பேசவில்லை. அவரை உட்கார வைத்துவிட்டு ஒரு டேப் ரெக்கார்டரை ஆன் செய்துவிட்டுப் போனாள் ஒரு பெண். எப்போதோ எங்கோ அவர் பேசிய உரையின் பதிவு. ஒலி பெருக்கிகளின் மூலம் அது ஒலிக்கத் தொடங்கியது. என்ன ஆனாலும் நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று தனது பெற்றோரிடம் அவர் தீர்மானமாகத் தெரிவித்த தினத்தைப் பற்றி அதில் பேசியிருந்தார்.

‘நான் ஒரு துறவியாகிவிடுகிறேன் என்று சொல்லியிருந்தால்கூட அவர்கள் சந்தோஷப்பட்டிருப்பார்கள். மகன் ஒரு பிரபல துறவியானாலும் அவர்களுக்குப் பெருமையே. ஆனால் நான் அதுவுமில்லை, என்னை என் இயல்புப்படி அப்படியே விடுங்கள்’ என்று சொன்னதை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை’

எனக்குப் போதும் என்று தோன்றிவிட்டது. சட்டென்று எழுந்து வெளியே போய்விட்டேன். அந்தக் கணம் எனக்கு அவர் ஒரு நல்ல டுடோரியல் காலேஜ் ஆசிரியராகத் தெரிந்தார். எனக்கு அத்தகைய நிறுவனம் ஒன்றை நடத்தும் எண்ணம் அறவே இல்லை என்று சொல்லிக்கொண்டேன். ஒரு ‘ஆல் பாஸ் டுடோரியல்’ நடத்துவதற்கு நான் ஆளல்ல. நான் செய்ய விரும்புவது வேறு.

மறுநாள் கணேஷ் ராம் எனக்கு மடிகேரியில் ஒரு ஏலக்காய் வியாபாரியின் முகவரியைக் கொடுத்து அவரைச் சென்று பார்க்கும்படிச் சொன்னான். ஆசிரமம் அமைப்பதற்கு அவர் உதவுவார் என்று தெரிவித்தான். நான் அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு அன்று இரவே மைசூருக்கு ரயிலேறிவிட்டேன்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

104. சதுரங்கம்

 

 

உன்னை எப்படி ஒரு சன்னியாசியாகக் கருதுவது என்று எனக்கு விளங்கவில்லை என்று வினய் சொன்னான். ரேணிகுண்டாவில் இருந்து கிளம்பிய ரயில் அரக்கோணத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. மிஞ்சினால் இன்னும் ஒன்றரை மணி நேரத்தில் சென்னையைத் தொட்டுவிடும். அங்கிருந்து ஒரு மணி நேரத்தில் திருவிடந்தை. கோயில். அம்மா. கேசவன் மாமா. தெரிந்தவர்கள். தெரியாதவர்கள். வெறும் முகங்கள். எனக்கு மிகவும் களைப்பாக இருந்தது. வினய்யின் சுய துயரத்தின் தீவிரத்தை மட்டுப்படுத்த என் கதையை அவனுக்குச் சொல்லத் தொடங்கி ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. எப்படிப் பார்த்தாலும் அவனது குழப்பத்தையும் சந்தேகங்களையும் அதிகப்படுத்தும்படியாகத்தான் நான் பேசியிருக்கிறேன் என்று புரிந்தது. தான் ஒரு பூரண சன்னியாசியாக இல்லை என்று வருந்திக்கொண்டிருந்தவன், நானும் அப்படித்தான் இருந்திருக்கிறேன் என்பதை அறிந்தபோது உண்மையிலேயே மிகுந்த அதிர்ச்சியடைந்தான்.

‘இல்லை. இதுவல்ல சன்னியாசம். நாம் தவறு செய்துவிட்டோம் விமல்’ என்று சொன்னான்.

‘அப்படியா? எனக்கு அப்படித் தோன்றவில்லையே? நான் சரியாகத்தான் இருக்கிறேன். திருப்தியாகவும் இருக்கிறேன். எனது சன்னியாசம் தன் இலக்கை நோக்கி மிகச் சரியாக நகர்ந்துகொண்டிருப்பதாகவே நினைக்கிறேன்’.

‘முட்டாள். சன்னியாசமே இலக்கு. சன்னியாசத்துக்கு ஏது இலக்கு?’

‘அது உன் பார்வை வினய். எனக்கு என் சுதந்திரமே இலக்கு. அதை எட்டிப் பிடிப்பதற்கு சன்னியாசம் ஒரு கருவி. அவ்வளவுதான்’.

‘சுதந்திரம் சுதந்திரம் என்று எதைச் சொல்கிறாய்? அப்படி ஒன்று யாருக்கும் முழுமையாகக் கிடையாது’.

‘எனக்கு இருக்கிறது. நான் அதை அனுபவிக்கிறேன்’.

‘என்ன பெரிதாக அனுபவித்துக் கிழித்துவிட்டாய்?’

‘அதை எப்படிச் சொல்ல முடியும்? ஒரு பூரண ஆனந்தமயமான நிலையை உன்னால் கற்பனை செய்ய இயலுமா? தளைகளற்றது. கவலையில்லாதது. விடிந்து எழும்போது இன்று செய்ய வேண்டியவை என்றொரு பட்டியல் மனத்தில் உதிக்காத நிலை. யாருக்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்கத் தேவையற்ற நிலை. ஒன்று தெரியுமா? நான் செய்கிற ஒவ்வொரு செயலையும் எனக்குப் பிடிக்கிறதா என்று பார்த்துத்தான் செய்கிறேன். ஒரு சிறு சுளிப்பு என் மனத்துக்குள் உருவானாலும் தவிர்த்துவிடுகிறேன்’.

அவனுக்கு நான் ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்து விவரித்தேன். அப்போது நான் டெல்லியில் இருந்தேன். தலைவர் ஒருவர் வருமான வரிப் பிரச்னையில் மாட்டிக்கொண்டு மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியிருந்தார். ஆளுங்கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்குப் போனவர் அவர். அடுத்து வரும் பொதுத் தேர்தல் சமயம் அவர் சிறையில் இருக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் முடிவு செய்திருந்தார்கள். திட்டமிட்டு மிகவும் கவனமாகக் காய் நகர்த்தி அவரைச் சிக்கச் செய்திருந்தார்கள். உலகெங்கிலும் பரவியிருந்த அவரது பணத்தை கவனமாக எண்ணிப் பட்டியலிட்டு, அனைத்துக்கும் கணக்குக் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

நோட்டீஸ்தான். விஷயம் அப்போது ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. அதைச் சற்றுத் தள்ளிப் போடலாம் என்று எதிர்த்தரப்பு முடிவு செய்திருந்தது. எந்தக் கணமும் செய்தி வெளியே வந்துவிடும் என்ற அச்சத்திலேயே அவரைச் சிறிது காலம் தவிக்க விட்டு வேடிக்கை பார்க்கிற எண்ணம். ரெய்டுக்குப் போகவில்லை. வங்கிக் கணக்கை முடக்கவில்லை. விசாரணை இல்லை. எதுவுமே இல்லை. வெறும் ஒரு நோட்டீஸ்.

அவர் பயந்துபோனார். உடனடியாகச் செய்யக்கூடியது என்ன என்று முடிவு செய்வதற்காகத் தனது நெருங்கிய சகாக்களுடன் கோவாவுக்கு ஒரு சுற்றுப்பயணம் சென்றார். ஏனெனில், அந்த நோட்டீஸ், வழக்கமான வருமான வரித்துறை நோட்டீஸைப் போல நான்கு வரிகளில் எழுதப்பட்டிருக்கவில்லை. மிகவும் விலாவாரியாக ஏழு பக்கங்களில் அவரது சொத்து மதிப்பு பட்டியலிடப்பட்டிருந்தது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அவர் செய்திருந்த அனைத்துத் தொழில் முதலீடுகளைக் குறித்தும் அதில் விவரிக்கப்பட்டிருந்தது. கணக்கில் காட்டப்படாத சுமார் நூற்றைம்பது கோடி ரூபாய்க்கான கணக்கு அதில் கேட்கப்பட்டிருந்தது. நூற்றைம்பது கோடி என்பது அந்நாளில் மிகப்பெரிய தொகை. எந்த உச்சபட்ச ஊழல் வழக்கும் அன்றைக்கு அந்த எண்ணிக்கையைத் தொட்டிருக்கவில்லை. அந்த மனிதரின் விவகாரம் மட்டும் வெளியே வருமானால் தேசம் முழுவதும் அதிர்ச்சி அலை வீசும். இவரா, இவரா என்று உலகமே வாய் பிளக்கும். அவமானத்தின் உச்சத்தில் அவர் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியற்றுப் போகும்.

என்ன செய்யலாம்? தனக்கு நெருங்கியவர்களுடன் விவாதித்து, இறுதியில் அவர் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார்.

‘சுவாமிஜி. பிரச்னை இதுதான். நான் மாட்டிக்கொண்டேன். இதில் இருந்து சேதாரம் இல்லாமல் வெளியே வர நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார்.

சேதாரத்தைத் தவிர்க்க முடியாது என்று எனக்குத் தோன்றியது. ஆனால் அதன் சதவீதத்தைச் சற்றுக் குறைக்க முயற்சி செய்யலாம் என்று சொன்னேன்.

‘என்ன செய்ய வேண்டும்?’

‘அதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும்’.

‘எனக்காக அந்தப் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?’

‘முயற்சி செய்கிறேன்’ என்று சொன்னேன்.

அந்த வாரம் முழுவதும் நான் டெல்லியில் இருந்தேன். எனக்குப் பரிச்சயமான அமைச்சர் ஒருவர் மூலம் பிரதம மந்திரியைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தேன். இரண்டு நாள் கழித்து ‘என்ன விஷயமாகச் சந்திக்க விரும்புகிறீர்கள்?’ என்று அவரது செயலகத்தில் இருந்து ஒரு வினா வந்தது. நான் மறைக்க விரும்பவில்லை. எனவே உண்மைக் காரணத்தைச் சொல்லி, அந்த நோட்டீஸ் தொடர்பாகச் சிறிது பேச வேண்டும் என்று கேட்டேன். இன்னொரு நாள் கழித்து பதில் வந்தது. ‘பிரதமருக்கு இப்போது நேரம் இல்லை’.

அதற்கும் அடுத்த நாள், என் நண்பரான அமைச்சர் நான் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு நேரில் வந்து என்னைச் சந்தித்தார்.

‘நீங்கள் அவருக்கு உதவ நினைக்க வேண்டாமே?’ என்று சொன்னார்.

‘ஏன்? அவர் அந்தளவு மகாபாவி என்று ஆளும் கட்சி முடிவு செய்துவிட்டதா? அடிப்படையில் நல்ல மனிதர். என்ன ஒன்று, அவசரப்பட்டு கட்சி மாறிவிட்டார்’.

‘சுவாமிஜி! நாம் இதைப் பற்றி இனி பேச வேண்டாம் என்று நினைக்கிறேன். நீங்கள் அவரது தொடர்பைத் துண்டித்துக்கொள்வது நல்லது. அது சிக்கல்களில் இருந்து உங்களைக் காக்கும். பிரதமருக்கு உங்கள் சொற்பொழிவுகள் பிடிக்கும். அவர் உங்களைச் சந்திக்க மிகவும் ஆவலாக இருக்கிறார். ஆனால் இப்போதல்ல’.

எனக்குப் புரிந்தது. அன்றிரவு வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டு பேரைத் தனியே சந்தித்தேன். என்ன செய்யவிருக்கிறார்கள் என்று விசாரித்தேன். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அந்தத் தலைவர் மட்டுமல்லாமல் அவருடன் நெருங்கிய தொடர்பில் உள்ள இருபத்து ஏழு பேரை அவர்கள் இலக்காக நிர்ணயித்து வைத்திருந்தார்கள். ஒரு வழக்கு என்று வந்தால் அவருக்கு உதவி செய்யக்கூட யாரும் வெளியே இல்லாதபடி மொத்தமாகச் சிறைப்பிடிக்கும் திட்டம் ஒன்று தயாராகி இருந்ததை அறிந்தேன்.

எனக்கு இது மிகுந்த வருத்தமளித்தது. யாரும் யோக்கியர்கள் இல்லை. யாரும் உத்தமர்கள் இல்லை. யாரும் தவறிழைக்காதவர்கள் இல்லை. எல்லோருக்கும் ஏதோ ஒரு தப்பிக்கும் வழி அமையத்தான் செய்கிறது. அவற்றை முதலில் தேடி அடைத்துவிட்டுப் பிறகு பழி வாங்க ஆரம்பிப்பது என்பது மன்னிக்க முடியாத வன்முறை என்று தோன்றியது. என்ன செய்யலாம் என்று யோசித்தேன். இத்தனைக்கும் அந்தத் தலைவர் எனக்கு மிகவும் நெருங்கியவரெல்லாம் கிடையாது. ஓரிரு முறை சந்தித்திருக்கிறேன். அவ்வளவுதான். அரசியல்வாதிகளுக்குப் பெயர் மட்டும்தான் ஆளுக்கு ஆள் மாறுபடும். மற்றபடி அனைவரும் ஒரே ஆத்மாதான் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

நல்லது. அவருக்கு உதவ வேண்டும். ஆனால் எனக்கு ஏன் அவருக்கு உதவ வேண்டும் என்று தோன்றுகிறது? என்னால் பிரதமரை மீறி என்ன செய்துவிட முடியும்? அதுதான் புரியவில்லை. நாள்கள் ஓடிக்கொண்டே இருக்க, அந்தத் தலைவர் என்னைத் தொலைபேசியில் அழைத்துக் கேட்டார், ‘ஏதாவது செய்ய முடிந்ததா?’

'இதுவரை இல்லை. இன்னும் இரண்டு நாள் அவகாசம் வேண்டும்’ என்று சொன்னேன்.

‘நீங்கள் பிரதமரைத் தொடர்புகொள்ள முயற்சி செய்ததாகக் கேள்விப்பட்டேன். அவர் பேசினாரா?’

‘ஆம். உங்களுக்கு நான் உதவ நினைப்பது அவருக்குப் பிடிக்கவில்லை’.

‘ஐயோ. அப்படியானால் வேறு வழி?’

நான் ஒரு வழியை யோசித்திருந்தேன். அதைச் செய்வதா வேண்டாமா என்று முடிவெடுத்திருக்கவில்லை. அது அவசியமா என்று சிந்தித்துக்கொண்டிருந்தேன். என்னால் அந்த முயற்சியில் நிச்சயமாக வெற்றிபெற முடியும் என்று தோன்றியது. அந்தத் தலைவரை நான் காப்பாற்றிவிடுவேன். அதில் சந்தேகமில்லை. ஆனால் பிரதம மந்திரி முதல் அத்தனை பேரின் வெறுப்புக்கும் ஆளாக நேரிடும். அதைத் தவிர்க்க ஒரு வழி கிடைத்துவிட்டால், நான் யோசித்த வழியைச் செயல்படுத்துவதில் எனக்குப் பிரச்னையே இல்லை.

செய்வதா? வேண்டாமா? அதற்குத்தான் அவரிடம் இன்னும் இரண்டு நாள் அவகாசம் கேட்டேன்.

(தொடரும்)

http://www.dinamani.com/junction/yathi/2018/aug/09/104-சதுரங்கம்-2977054.html

Link to comment
Share on other sites

105. வன்மத்தின் வண்ணம்

 

 

சூழ்ச்சியின்றி அரசியல் இல்லை. சூழ்ச்சியின்றி சுழற்சியில்லை. சூழ்ச்சியின்றி எதுவுமில்லை. அரசியல்வாதிகளுடன் பழகத் தொடங்கிய பின்பு நான் பயின்ற முதல் பெரும் பாடம் இதுதான். ஒரு சன்னியாசியாக இருப்பதன் ஆகப்பெரிய சௌகரியம் இத்தகு சூழ்ச்சிகளின் வலைப்பின்னல்களுக்குள் சென்று சிக்க வேண்டாம் என்பதுதான். உறவுகளும் பகையும் அற்று இருத்தல். அது அத்தனை எளிதல்ல. ஆனால் அதன் சொகுசு அபாரமானது. விவரிப்புக்கு அப்பாற்பட்டது. காற்றில் பறக்கும் ஒரு இறகைப் போல இலக்கின்றி அலைந்து திரிந்து விரும்பினால் அடங்கி இருக்கலாம். அல்லது மேலும் அலைந்து திரிந்துகொண்டே போகலாம். எனக்குப் பிரதம மந்திரி எப்படியோ அப்படித்தான் அந்த எதிர்த் தரப்புத் தலைவரும். வேண்டுதல் வேண்டாமை எனக்குத் தனிப்பட்ட முறையில் இருவரிடமும் இல்லை. ஆனால் அவருக்கு உதவ வேண்டும் என்று எனக்குத் தோன்றியதன் காரணம் மிக எளிது. அவரைப் பழிவாங்க நினைத்த ஆளும் தரப்பின் காரணங்கள் அற்பமானவை. கட்சி மாறாத அரசியல்வாதி யார்? காலை வாரிவிடாத நபர்கள் யார்? மனித குலத்தின் ஆதார இயல்புகள் அனைத்தும் வன்மம் சார்ந்தவை. வக்கிரம் பூசியவை. குரூரத்தின் தடம் பிடித்து ஓடித் திரியும் வேட்கை மிகக் கொண்டவை. அன்பும் அரவணைப்பும் பெருந்தன்மை உள்ளிட்ட வேறெந்த நற்குணமும் மேலான பாவனையே. இதில் எனக்கு சந்தேகமே இல்லை.

என் குருநாதர் நான் இதைக் குறித்துப் பேச்செடுக்கும்போதெல்லாம் புத்தர், ராமலிங்க அடிகள், காந்தியின் பெயரை எடுப்பார்.

‘மன்னித்துவிடுங்கள் குருஜி. அவர்கள் மூவருமே அருங்காட்சியக மனிதர்கள்’ என்று ஒரு சமயம் அவரிடம் சொன்னேன்.

‘அன்பு இயல்பானதல்ல என்கிறாயா?’

‘இருக்க வாய்ப்பே இல்லை என்கிறேன். காதலைச் சொல்லுங்கள். ஒப்புக்கொள்கிறேன். காமத்தைச் சொல்லுங்கள். கேள்வியே கேட்காமல் சரி என்பேன். அன்பு ஒரு மாயை. குளிருக்குப் போர்வை போல மனத்தின் பலவீனமான கணங்களுக்கு அது ஒரு கணப்புச் சட்டி. யாராவது செலுத்தும் அன்புக்காக ஏங்குவது சரி, செலுத்தப்படும் அன்பை ஏந்திக் கொள்வதும் சரி; ஒரு மாய யதார்த்தம். உண்மையில் அன்பற்ற உலகில் நாம் இன்னும் பிழைகளற்று வாழ்வோம் என்றே நினைக்கிறேன்’.

அவர் என்னை மறுத்துப் பேசியதில்லை. ஆனால் ‘அங்கேயே தேங்கிவிடாதே. தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிரு’ என்று சொல்வார். அரசியல்வாதிகளின் பரிச்சயம் ஏற்பட ஆரம்பித்த பின்பு நான் அதைக் குறித்து சிந்திக்க வேண்டிய அவசியமே எனக்கு இருக்கவில்லை. அன்பு ஒரு மாய யதார்த்தம் மட்டுமே. வன்மம் ஒன்றே அடிப்படை மனிதப் பண்பு. இதில் ஆண் பெண் பேதமில்லை. பெரியவர், சிறியவர் பேதமில்லை. படித்தவர், படிக்காதோர் பேதமில்லை. ஜாதி மத இன பேதமும் அறவே இல்லை.

வன்மத்தை எப்படி அன்பால் வெல்ல முடியும்? வெல்லலாம். இறுதியில் குண்டடி பட்டு செத்துப் போகத் தயாராயிருக்க வேண்டும். தரையில் கால் ஊன்றி நிற்பதே நிலத்தின் மீது நிகழ்த்தப்படும் ஒரு வன்முறையல்லவா? பறவையின் சிறகடிப்பு, காற்றின் மீதான வன்முறை. ஒரு புன்னகையைக் காட்டிலும் பெரிய வன்முறை வேறென்ன இருந்துவிட முடியும்?

அந்தத் தலைவரை நான் பத்து நாள் இடைவெளியில் மீண்டும் சந்தித்தேன். அவரிடம் ஒரு தகவலைச் சொன்னேன். அது நிதித் துறை அமைச்சகத்தில் மிக மேல் மட்டத்தில் உள்ள ஒரு தவிர்க்க முடியாத நபரின் மகளும் அவளது கணவரும் சேர்ந்து செய்யும் ஒரு ரகசிய வியாபாரம் குறித்த தகவல். என்னிடம் இருந்த தகவலுக்கு ஒரு ஆதாரமும் இருந்தது. அதையும் சேர்த்தேதான் அவரிடம் அளித்தேன்.

‘ஐயா, இதற்குமேல் இந்த விஷயத்தில் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. இந்த ஆதாரத்தைச் சொல்லி அந்த நபரிடம் பேசுங்கள். பிரதமரை அவர் சமாளித்துக்கொள்வார். வருமான வரித் துறை தாற்காலிகமாக உங்களை மறக்கும்’ என்று சொன்னேன்.

நான் சொன்னவாறு அவர் செயல்பட்டிருந்தால் நிச்சயமாக வழக்கில் இருந்து தப்பித்திருப்பார். அவர் அரசியல்வாதியல்லவா? நான் அளித்த ஆதாரத்துடன் நேரடியாகப் பிரதம மந்திரிக்கே மிரட்டல் விடுத்தார். என்னை மடக்கப் பார்த்தால் உமது பெயரைக் கெடுக்க நான் தயாராகிவிட்டேன் என்று மறைமுகமாகத் தெரிவித்திருக்கிறார். பிரதமருக்கு என்ன போயிற்று? சம்பந்தப்பட்ட நபரை இரவோடு இரவாக யாரோ இல்லாமல் செய்துவிட்டார்கள். ஒரு எளிய விபத்தில் அனைத்தையும் சரி செய்துவிட முடிவது எப்பேர்ப்பட்ட வசதி?

அந்தத் தலைவர் இதை எதிர்பார்க்கவில்லை. என்ன செய்யலாம் என்று என்னிடமே வந்து கேட்டார். நான் யோசிக்கவேயில்லை. வருமான வரித் துறை கவனத்துக்கு வராத அவரது வேறு இரு வருமானக் கால்வாய்களின் வழித்தடத்தை நானே பிரதமருக்கு எடுத்துச் சொல்லிவிட்டு ஊருக்குப் போய்ச் சேர்ந்தேன். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு பிரதம மந்திரி கர்நாடகத்துக்கு வரும்போதெல்லாம் என்னைச் சந்திக்கத் தவறியதே இல்லை. பல இடங்களுக்கு என்னை நல்லெண்ணத் தூதுவராக அவர் அனுப்பிவைத்திருக்கிறார்.

இந்தச் சம்பவத்தை நான் வினய்யிடம் விவரித்தபோது அவன் பயந்துவிட்டான். ‘நிச்சயமாக நீ சன்னியாசி இல்லை. நீ ஒரு கிரிமினல்’ என்று சொன்னான்.

‘இல்லை வினய். நீ தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறாய். முட்டாள்கள் நிறைந்த உலகத்தில் நான் வாழ விதிக்கப்பட்டிருப்பது என் துரதிருஷ்டம். அதற்காக நான் முட்டாளாகிவிட முடியாது. என் சுதந்திரம் என்பது முட்டாள்த்தனத்தை அனுமதிக்காதது. அபத்தங்களுக்கு அங்கு இடமில்லை. அற்பத்தனங்களுக்கு இடமில்லை. நான் அரசியல்வாதிகளுக்கு உதவி செய்பவனல்ல. என்னிடம் உதவி கேட்கும் யாருக்கு வேண்டுமானாலும் என் அறிவின் துளியைக் கிள்ளித்தருவதே என் தருமம். ஆனால் அதை ஏந்தும் பாத்திரம் சரியாக இருக்க வேண்டும். சிந்துவது என் பிழையல்ல’.

‘நீ ஒரு வியாபாரி’ என்று வினய் சொன்னான்.

‘யார் சொன்னது? யாரிடமும் ஒரு பைசா நான் வாங்குவதில்லை. சேவைகளைச் சேவைகளாக மட்டுமே செய்கிறேன். கையேந்துவதில்லை’.

‘உண்மையாகவா?’

‘என் பலம் அதுதான். பணத்தை நான் தொட்டதே இல்லை என்றால் நம்புவாயா? இந்த உலகில் என்னைக் காட்டிலும் எளியவன் யாருமில்லை வினய். இந்தப் பயணத்தில் நான் உண்ணும் வாழைப்பழங்கள்கூட என் சீடர்கள் வாங்கித் தந்தவை. இந்தக் கணம் என்னை அடித்துப் போட்டால் உன்னால் எட்டணாகூட என்னிடமிருந்து எடுக்க முடியாது’.

அவனுக்குப் புரியவில்லை. ‘நீ என்னிடம் மறைக்கிறாய்’ என்று சொன்னான்.

‘நான் எதையுமே மறைப்பதில்லை. ஏனென்றால் மறைக்க என்னிடம் ஒன்றுமில்லை. யோசித்துப் பார்த்தால் வாழ்வில் நான் மறைத்த ஒரே விஷயம் அண்ணா வீட்டைவிட்டுப் போன சம்பவம் மட்டும்தான். அவனை ஓரளவு அப்போது அறிந்தவன் என்ற முறையில் அம்மாவிடம் நான் அதைச் சொல்லியிருக்கலாம். அன்றைய பக்குவம் அதற்கு இடம் தரவில்லை’ என்று சொன்னேன்.

அவன் நெடு நேரம் அமைதியாக இருந்தான். யோசித்துக்கொண்டிருப்பான் என்று தோன்றியது. இருபது வருடங்கள் ஒரு குருவுக்காகத் தேடியலைந்து இறுதியில் சுய தீட்சை அளித்துக்கொண்டு சன்னியாசியானவன் அவன். தேவர்களையும் கந்தர்வர்களையும் தெய்வங்களையும் உத்தேசித்து, பேய்களிடமும் குட்டிச்சாத்தான்களிடமும் சரணாகதியடைந்தவன். அவன் வளர்த்து வந்த இடாகினிப் பேய் ஒன்று ஒருநாள் அவனிடம் சொன்னதாம், ‘உனக்கு என்னைப் பயன்படுத்தத் தெரியவில்லை’.

அந்த அவமானத்தில் அதை அவிழ்த்துவிட்டு ஓடிப் போகச் சொல்லிவிட்டு கோதாவரி நதியில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளப் போயிருக்கிறான். ஒரு கட்டுமரக்காரன் காப்பாற்றிக் கரை சேர்த்து, தனது குடிசையிலேயே அவனைப் பத்து நாள்களுக்குத் தங்க வைத்து சோறு போட்டிருக்கிறான்.

‘புறப்படும்போது அவனுக்கு ஒரு தங்கக் காப்பை அன்பளிப்பாகத் தந்துவிட்டுப் போக நினைத்தேன் விமல். ஆனால் என் சக்திகள் என்னைக் கைவிட்டுப் போயிருந்தன. என்னால் ஒரு துரும்பைக்கூட என் வசப்படுத்த முடியாமல் போனது’ என்று சொன்னான்.

என்னால் அவனைப் புரிந்துகொள்ள முடிந்தது. வாழ்வில் சரி பாதியை அவன் வீணடித்திருக்கிறான். சொரிமுத்துச் சித்தனை விட்டு அவன் போயிருக்கவே கூடாது. அல்லது அவனிடமே திரும்பிச் சென்றிருக்க வேண்டும். அதை ஏன் அவன் செய்யாமல் போனான்?

‘தெரியவில்லை. ஏனோ எனக்கு மீண்டும் அவனிடம் போகத் தோன்றவேயில்லை. இந்நேரம் அவன் இறந்திருப்பான் அல்லவா? அப்போதே அவன் கிழவன்’ என்று சொன்னான்.

இறந்திருக்கலாம். அல்லது உயிரோடும் இருக்கலாம். சித்தர்கள் தமது மரணத்தைக் காரண காரியங்களுடன் மட்டுமே தீர்மானிக்கிறார்கள். இருந்தது போதும் என்பதல்ல; இல்லாமல் இருப்பதன் அவசியம் உணரப்படும்போது மட்டுமே அவர்கள் மறைகிறார்கள்.

நான் வினய்யிடம் சொன்னேன், ‘வருத்தப்படாதே. இன்றுவரை நீ தோற்றிருந்தாலும் இன்றுவரை நீ முயற்சி செய்யாமல் இல்லை. உனக்குத் தெரியுமா? சன்னியாசம் என்பது இறுதிவரை முயற்சியும் பயிற்சியும் மட்டுமே’.

‘என்றால் தேர்ச்சி?’

இதே வினாவை நான் ஒரு சமயம் என் குருநாதரிடம் கேட்டபோது மரணத்தை எதிர்கொள்ளும் விதத்தில்தான் ஒரு சன்னியாசி மற்றவர்களிடம் இருந்து வேறுபடுவான் என்று சொன்னார். எப்படி என்று நான் அவரிடம் கேட்டேன். ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் சொன்ன பதிலை என்னால் வினய்யிடம் சொல்ல முடியவில்லை.

சொன்னால் அவன் அந்தக் கணமே இறந்துவிடுவான் என்று தோன்றியதுதான் காரணம்.

(தொடரும்)

http://www.dinamani.com/junction/yathi/2018/aug/10/105-வன்மத்தின்-வண்ணம்-2977238.html

Link to comment
Share on other sites

106. கண்ணீரின் பனிக்குடம்

 

 

‘ஒருநாள் நான் அண்ணாவைக் குறித்துத் தவமிருந்தேன்’ என்று வினய் சொன்னான். எனக்குத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது.

‘என்ன?’ என்று மீண்டும் கேட்டேன்.

‘என்ன செய்து மீளலாம் என்று தெரியாத சூழ்நிலையில் உணர்ச்சி மேலிட்டு ஒருநாள் அவனை நினைத்துத் தவம் இருந்தேன். அவன் நேரில் வந்து உதவி செய்வான் என்று நினைத்தேன்’.

நான் சிரித்துவிட்டேன். ‘அவன் என்ன செய்ய முடியும்? வேண்டுமானால், உன் காதில் ஓங்காரம் ஓதி உட்கார வைத்துவிட்டுப் போவான். அதற்கு அவன் எதற்கு? சுயமாக தீட்சை வழங்கிக்கொள்ள முடிந்தவனுக்கு சுய மந்திரோபதேசமா சிரமம்?’ என்று கேட்டேன்.

‘இல்லை. அவன் என்னைச் சரிசெய்ய முடியும் என்று அப்போது நான் தீவிரமாக நம்பினேன்’.

‘சரி. உன் தவத்துக்குப் பலனாக அவன் வந்தானா?’

‘வரவில்லை. ஆனால் பேசினான்’.

‘ஓ. என்ன சொன்னான்?’

‘என்னை இமயமலைக்குப் போகச் சொன்னான். சிரமப்பட்டாவது மானசரோவரத்தின் கரையைச் சென்றடைந்துவிடச் சொன்னான்’.

‘பிறகு?’

‘ஒரு பரிக்ரமாவை முடித்துவிட்டு மானசரோவரத்திலேயே அமர்ந்து எட்டு நாள் தவம் செய்யச் சொன்னான்’.

‘செய்தாயா?’

‘இல்லை’.

‘ஏன்?’

‘என்னால் நேபாளத்துக்கு மேலே போக முடியவில்லை. நடப்பது சிரமமாக இருந்தது. மூச்சு விட முடியவில்லை’.

‘அங்கேயே உட்கார்ந்து அவனைத் திரும்பக் கூப்பிட்டுப் பிரச்னையைச் சொல்ல வேண்டியதுதானே? ஆஞ்சநேயர் மாதிரி யாரையாவது அனுப்பி, தூக்கிக்கொண்டு போய் இறக்கிவிடச் சொல்லியிருப்பானே’.

‘நீ கிண்டல் செய்கிறாய்’.

‘வினய், வேறென்ன செய்ய முடியும் சொல். நீ இவ்வளவு அப்பாவியாக இருக்கக் கூடாது. உனக்கு உன் பிரச்னை என்ன என்பதிலேயே நிறையக் குழப்பங்கள் இருக்கின்றன’.

‘எனக்கு ஒரே ஒரு பிரச்னைதான். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்பதுதான் அது’.

‘காரணம், நீ உன் இயல்பில் பயணம் செய்யவேயில்லை. அப்பா சந்தோஷத்துக்காகக் காஞ்சீபுரம் மடத்துக்குப் போய்ச் சேர்ந்தாய். வழியில் அண்ணாவைப் பார்த்துப் பரவசமாகி, அவன் காட்டிய பாதையில் போனாய். சொரிமுத்து செய்து காட்டிய சித்து வேலைகளில் லயித்து அவனுக்குச் சீடனானாய். யாரோ ஒரு துலுக்கனைக் கொன்றாயே, அதுகூட அவனால் செய்ய முடிவதை நம்மால் செய்ய முடியவில்லையே என்ற சுய ஏக்கத்தின் விளைவுதான்’.

அவன் நெடுநேரம் கண்ணிமைக்காமல் என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.

‘வினய், நான் சொன்னேனே சுதந்திரம், அதன் முதல் விதியே அடுத்தவனை நினைக்காதிருப்பதும் அவன் சொற்படி வாழாதிருப்பதும்தான்’.

‘நீ அப்படித்தான் இருக்கிறாயா?’

‘சந்தேகமில்லாமல். நான் என் குருவோடு இருந்த காலத்தில்கூட ஒருநாளும் அவர் சொன்னதைக் கேட்டதில்லை’.

‘இது ஒரு அகங்கார நிலையல்லவா?’

‘சன்னியாசம் என்பதே அகங்கார வெளிப்பாடல்லவா?’

‘ஐயோ’ என்றான்.

‘என்ன ஐயோ? நம் நான்கு பேரில் உச்சபட்ச அகங்காரி அண்ணாதான். அவனுக்கு அவன்தான் முக்கியமாக இருந்தான். அவன் அடைய வேண்டிய இலக்கு முக்கியமாக இருந்தது. அவனது சாதகங்கள், அவனது தவம், அவனது மீட்சி. வீட்டைத் தூக்கியெறிந்துவிட்டுப் போனவன் சும்மா போய்ச் சேராமல் உன்னையும் உருப்படாமல் ஆக்கிவிட்டுப் போனான். சுயநலம் என்பது அகங்காரத்தின் வெளிப்பாடுதான்’.

‘இல்லை. நீ முற்றிலும் பிழையாகப் புரிந்துகொண்டிருக்கிறாய். துறவில் அகங்காரம் கிடையாது. இன்னும் புரியும்படிச் சொல்கிறேன். எனக்கு அகங்காரம் கிடையாது. ஆனால் நான் சன்னியாசியா என்கிற சந்தேகம் அவ்வப்போது வந்துவிடுகிறது’.

‘அதுதான். நான் சொல்ல வருவதும் அதுதான். அகங்காரம் இருந்திருந்தால் நீ சன்னியாசியாகியிருப்பாய். அல்லது அதை உணர்ந்திருப்பாய்’.

‘மன்னித்துக்கொள் விமல். நான் அடைய விரும்பும் தெளிவு வேறு. நீ அடைந்ததாக எண்ணியிருக்கும் தெளிவு வேறு. இது என்றுமே சேராது’ என்று அவன் சொன்னான்.

உண்மைதான். இதை முதல் முதலில் நான் ஶ்ரீரங்கப்பட்டணத்து முக்கூடல் சங்கமத்தில் அவனைச் சந்தித்த அன்றே உணர்ந்தேன். சொன்னால் வருத்தப்படுவான் என்பதால் சொல்லாமல் இருந்துவிட்டேன். எந்தவிதத்திலாவது அவனுக்கு உதவ முடிந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் எனக்கு ஒரு சிறு அச்சம் இருந்தது. நாங்கள் வீடு போய்ச் சேரும் நேரம் அம்மா பிராணனை விட்டுவிட்டால், அதோடு வினய் தனது துறவை விட்டுவிடும் அபாயம் இருப்பதாக ஏனோ எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது. துறவியானால் என்ன, யாரானால் என்ன? மனிதப் பிறப்பின் ஆதார விருப்பங்களுள் ஒன்று பழி வாங்குவது. அவன் தன்னைப் பழிவாங்கிக்கொள்ளத் தன் துறவைக் களைந்துவிடுவான் என்று நினைத்தேன். ஒன்றுக்கு இரண்டு திருமணங்கள் செய்துகொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. என்னைக் கேட்டால் அவன் அப்படிப் போவதே நல்லது என்பேன். ஆனால் அதைச் சொல்ல இதுவல்ல தருணம். முதலில் ஊர் போய்ச் சேர வேண்டும்.

பயணம் மிக நீண்டதாகவும் களைப்பூட்டக்கூடியதாகவும் இருந்தது. பேசிக்கொண்டு வந்ததால் ஓரளவு களைப்பு மறந்திருக்க முடிந்தது. அண்ணா தன்னோடு பேசினான் என்று அவன் சொன்ன பின்பு அந்தக் களைப்பு பூதாகாரமாகப் பெருகத் தொடங்கிவிட்டது. அவன் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறான் தன் மனத்தில்? என்னைத் தவிர எல்லோருடனும் எப்போதும் பேசிக்கொண்டுதான் இருந்திருக்கிறான். வினோத் என்னவானான் என்று அதுவரை எனக்குத் தெரிந்திருக்கவில்லை. நிச்சயமாக அவனோடும் அண்ணா தொடர்பில் இருந்திருப்பான். வழி நடத்தியிருப்பான். பேசியிருப்பான். சந்தித்திருந்தால்கூட வியப்பதற்கில்லை.

நான் வினய்யிடம் கேட்டேன். ‘வினோத்தைப் பற்றி உனக்கும் ஒன்றுமே தெரியாதா?’

‘தெரியவில்லை. எனக்கு அவன் முகமே மறந்துவிட்டது’ என்று அவன் சொன்னான். அதெப்படி மறக்கும்? எனக்குச் சிறு வயது முகங்கள் அனைத்தும் அப்படி அப்படியே நினைவில் இருக்கின்றன. என் உடன் பிறந்தவர்களின் முகங்கள் மட்டுமல்ல. திருவிடந்தையில் நான் பார்த்த அத்தனை பேரின் முகங்களும் நினைவில் உள்ளன. தற்கொலை செய்துகொண்டு இறந்த சித்ராவின் முகம் பார்க்க விகாரமாக இருந்தது என்று கேசவன் மாமா என்னிடம் சொல்லியிருந்தார். என் மனத்தில் இருந்த சித்ராவின் முகம் ஓர் அகல் விளக்கை நிகர்த்த அழகு கொண்டது. வினய்யிடம் நான் அதை நினைவுகூர்ந்தபோது, ‘ஆம். அவள் அழகிதான். வினோத் அவளைத் திருமணம் செய்துகொண்டிருக்கலாம்’ என்று சொன்னான்.

‘எதற்கு? முகமது குட்டியைத் தேடிச் சென்று கொலை செய்ததுபோல அவனையும் உன் கையால் மோட்சத்துக்கு அனுப்புவதற்கா?’

‘சேச்சே. எனக்கு அப்படியொரு பொறாமை எழ வாய்ப்பில்லை விமல்’.

‘அது அந்தத் திருமணம் நின்றுபோனதால் ஏற்பட்ட உணர்வு. அவள் தற்கொலை செய்துகொண்டதாலும் வினோத் ஓடிப்போய்விட்டதனாலும் நீ சொல்லும் சொற்கள்’.

‘அப்படியா நினைக்கிறாய்? தெரியவில்லை. ஆனால், விடிந்தால் திருமணம் என்ற நிலையில் ஒருவன் அனைத்தையும் துறந்துவிட்டுப்போவது என்பது பயங்கரம்’.

‘துறவு மனப்பான்மை திட்டமிட்டு வராது அல்லவா? அது ஒரு தற்செயல்’.

‘ஆம். தற்செயல்தான். ஆனாலும் எதுவோ ஒன்று தூண்டிவிட்டுக் கொண்டிருக்கும்’.

‘என்னை எதுவும் தூண்டவில்லை’.

‘இல்லை. நீ அண்ணாவைத் தேடி அலைந்துகொண்டிருந்தாய். அலைதலின் சுகமே உன் சன்னியாசத்தின் தூண்டுதல்’ என்று அவன் சொன்னான்.

யோசித்துப் பார்த்தேன். பகுதியளவில் அவன் சொல்வது உண்மை என்றே தோன்றியது. ஆனால் நான் அப்படியொன்றும் அலைதலில் விருப்பம் கொண்டவனல்ல. என் அலைச்சலுக்கோ, அசையாதிருக்கும் நிலைக்கோ யாருக்கும் விளக்கம் தர விரும்பாத மனமே அடிப்படைக் காரணம்.

‘வினய், இந்த உலகில் நான் அச்சப்படும் ஒரே விஷயம் கண்ணீர். உண்மையில் நான் கண்ணீருக்கு பயந்துதான் ஓடினேன். என் சன்னியாசம் ஒரு பயத்தில் இருந்து பிறந்ததுதான்’ என்று சொன்னேன்.

‘உண்மையாகவா?’

‘ஆம். என்னால் அம்மாவின் கண்ணீரைத் தாங்கவே முடியவில்லை. அவள் அழாதிருந்தபோதும் அவள் கண்ணீரின் பாரம் என் தலையில் ஒரு பனிப்பாறையாகத் திரும்பத் திரும்ப விழுந்துகொண்டே இருந்தது. நான் விட்டுச் சென்றதற்கு அந்த வலிதான் முக்கியமான காரணம்’.

சிறிது நேரம் இடைவெளிவிட்டு அவன் கேட்டான், ‘அந்தக் கண்ணீரைத் துடைக்க உனக்குத் தோன்றவில்லை அல்லவா?’

நான் சிரித்துவிட்டேன். அப்படித் துடைக்க நினைத்தவன்தான் இன்னொரு குடும்பத்தையும் சேர்த்து அழ வைத்துவிட்டுப் போனான்.

‘வினய், நாம் இருந்த பனிக்குடத்தில் கண்ணீரே நிறைந்திருந்திருக்கிறது. துடைப்பதற்கு நம்மில் யார் கையை நீட்டினாலும் மேலும் கண்ணீரையே பூசிவிட நேரும். என் நோக்கம் வெளியேறிய கண்ணீரைக் காய விடுவதுதானே தவிர, காய்ந்த ஊற்றைப் பீறிட வைப்பதல்ல’.

அவன் புன்னகை செய்தான். என்னை அப்படியே கட்டித் தழுவிக்கொண்டான். ‘நான் சொன்னதைத் திரும்பப் பெறுகிறேன். நீ சன்னியாசிதான்’ என்று சொன்னான்.

மீண்டும் அவன் தவறாகத்தான் புரிந்துகொண்டான் என்பதை நான் சொல்லவில்லை.

(தொடரும்)

http://www.dinamani.com/junction/yathi/2018/aug/13/106-கண்ணீரின்-பனிக்குடம்-2978613.html

Link to comment
Share on other sites

107. வழியனுப்பல்

 

 

அண்ணாவைக் குறித்துத் தவம் இருந்ததாக வினய் சொன்னது திரும்பத் திரும்ப என்னைத் தொந்தரவு செய்துகொண்டே இருந்தது. அவனை நினைத்தேன்; அவன் என்னோடு பேசினான் என்று சொல்லியிருந்தால் எனக்கு அத்தனை பாதிப்பு இருந்திருக்காது. தவம் என்ற சொல் தடுக்கிச் சற்று எரிச்சலானேன். என் குருநாதர் மூலம் எனக்கு அறிமுகமான பிருத்வி பாபாவைப் பற்றிச் சொன்னேன் அல்லவா? அவர் மடிகேரியில் தங்கியிருந்த நாள்களில் ஒரு சம்பவம் நடந்தது. அதைத்தான் நினைத்துக்கொண்டேன்.

மடிகேரியில் அப்போது ருத்ரம்மா என்றொரு மூதாட்டி வசித்து வந்தாள். அவளுக்குக் குடும்பம் குழந்தை குட்டியெல்லாம் கிடையாது. புனித மார்க் தேவாலயத்துக்கு அருகே ஒரு இடிந்துபோன கட்டடத்தின் பின்புறம் மிச்சமிருந்த மூடிய பகுதியைத் தனது வசிப்பிடமாக வைத்திருந்தாள். அந்த இடத்தில் எப்போதும் இரண்டு கோணிப் பைகளைத் திரைச் சீலையாகத் தொங்கவிட்டிருப்பாள். இன்னொரு கோணிப்பையைத் தரையில் விரித்துப் படுத்திருப்பாள். அவளுக்கு என்னவோ ஒரு வியாதி இருந்தது. அது என்ன என்று யாருக்கும் தெரியாது. பொதுவாக ருத்ரம்மா யாருடனும் பேசுவதில்லை என்பதால் அவளை நினைப்பதற்கு யாருக்கும் அங்கே நியாயம் இருந்ததில்லை. பசிக்கும்போது தேவாலயத்தின் வாசலுக்குப் போய் நிற்பாள். யாராவது பாதிரி அவளுக்கு இரண்டு ரொட்டிகளைக் கொடுத்துவிட்டுப் போவார்கள். அவளுக்கு அது போதும். எப்போதாவது நினைத்துக்கொண்டு ஊரைச் சுற்றி வருவாள். வழியில் விழுந்து கிடக்கும் பேரிக்காய், ப்ளம் போன்ற பழங்களைப் பொறுக்கி மடியில் கட்டிக்கொண்டு போவாள். உணவுத்தேவை என்ற ஒன்று இல்லாவிட்டால் நடமாட்டமே அவசியமில்லை என்று நினைப்பவளாக இருந்தாள்.

எங்கள் ஆசிரமம் இருந்த பகுதிக்கு ஒருநாள் அவள் வந்தபோது, குருநாதர் அவளை உள்ளே வந்து சாப்பிட்டுவிட்டுப் போகச் சொன்னார். அவளுக்கு அது புரியவில்லையா அல்லது விருப்பமில்லையா என்று தெரியவில்லை. ஆசிரமத்துக்கு வெளியிலேயே உட்கார்ந்து விட்டாள். திரும்பத் திரும்ப உள்ளே வரச் சொல்லிக் கூப்பிட்டும் அவள் அதைக் கண்டுகொள்ளவேயில்லை. 'சரி அவளுக்கு அங்கேயே சாப்பிட ஏதாவது கொடுங்கள்' என்று குருநாதர் சொன்னார். நாங்கள் அவளுக்கு அன்று ஒரு தட்டு நிறைய எலுமிச்சை சாதமும் சுட்ட அப்பளமும் வைத்துக் கொடுத்தோம். அவள் அந்த சாதத்தையும் அப்படியே இடுப்புத் துணியில் கொட்டி முடிந்துகொண்டு கிளம்பிவிட்டாள்.

வேறொரு சமயம் குருநாதரோடு காலை நடைக்குச் சென்றபோதும் வழியில் அவளைச் சந்தித்தேன். அம்முறை அவள் ஒரு மூங்கிலில் துளை போடும் முயற்சியில் இருந்தாள். ஆணி போல் எதையோ ஒன்றை வைத்து ஒரு மூங்கில் கழியைத் துருவிக்கொண்டிருந்தவளிடம் நெருங்கி, 'உனக்கு என்ன பிரச்னை?' என்று குருநாதர் கேட்டார். அவள் நிமிர்ந்து பார்த்தாள். சட்டென்று சிரித்தாள். மரியாதை கருதி எழுந்து நிற்கவும் செய்தாள். அவள் பைத்தியமில்லை என்று அப்போதுதான் எனக்குத் தெரிந்தது.

‘சொல்லம்மா. உனக்கு என்ன பிரச்னை?’ என்று குரு மீண்டும் கேட்டார்.

‘உடம்பு சரியில்லை’ என்று அவள் சொன்னாள்.

‘என்ன உடம்புக்கு?’

‘தெரியவில்லை. ஆனால் சாகவிடாமல் எதுவோ தடுத்துக்கொண்டிருக்கிறது’ என்று சொன்னாள். அந்தப் பதில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. சாவை எதிர்நோக்கி இருக்கிறோம் என்பதைத்தான் அவள் அப்படிச் சொல்கிறாளோ என்று நினைத்தேன். மேற்கொண்டு நாங்கள் எதுவும் பேசவில்லை. குருநாதர் அவளுக்கு ஆசி கூறிவிட்டு மேற்கொண்டு நடக்க ஆரம்பித்துவிட்டபடியால் நானும் அவரோடு போய்விட்டேன்.

பிருத்வி பாபா மடிகேரிக்கு வந்தபோது குருநாதர் சரியாக ஞாபகம் வைத்திருந்து, ருத்ரம்மாவை அழைத்து வரச் சொல்லி என்னை அனுப்பினார்.

அவள் தங்கியிருந்த இடத்துக்குச் சென்று நான் குரு சொன்னதைத் தெரிவித்தபோது அவள் மறுப்பு சொல்லவில்லை. என்ன விஷயம் என்று கேட்கவில்லை. குருநாதர் அழைத்து வரச் சொன்னார் என்றதுமே எழுந்து, ‘வா போகலாம்’ என்று சொன்னாள்.

பிருத்வி பாபா தங்கியிருந்த ஆதிவாசிக் குடியிருப்புக்கு நாங்கள் சென்று சேர்ந்தபோது அபூர்வமாக வெயில் அடிக்க ஆரம்பித்திருந்தது. அது நல்ல குளிர்காலம். அநேகமாக நாங்கள் வெயிலைப் பார்த்தே பல நாள்களாகியிருந்தன. எனவே பாபா தங்கியிருந்த குடிசைக்கு வெளியிலேயே நாங்கள் தரையில் ஒரு கோரைப் பாய் விரித்து அமர்ந்துகொண்டோம். குருநாதர் மட்டும் ருத்ரம்மாவை அழைத்துக்கொண்டு பாபாவைப் பார்க்க வீட்டுக்குள் சென்றார்.

இருபது நிமிடங்கள் அவர்கள் உள்ளே இருந்தார்கள். அதன்பின் ருத்ரம்மா மட்டும் வெளியே வந்தாள். என்னைப் பார்த்ததும் சிரித்தாள்.

‘என்ன சொன்னார்?’ என்று கேட்டேன்.

‘பத்து நாளில் அனுப்பிவைத்துவிடுவதாகச் சொன்னார்’ என்று சொல்லிவிட்டு அவள் மகிழ்ச்சியுடன் போய்விட்டாள்.

எனக்கு அது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. உடனே எழுந்து குடிசைக்குள் சென்றேன். ‘அவளைப் பத்து நாளில் அனுப்பிவைப்பதாகச் சொன்னீர்களாமே?’ என்று கேட்டேன்.

‘ஆம்’ என்று பாபா தலையசைத்தார்.

‘அவளுக்கு என்ன வியாதி? அதைக் குணப்படுத்த உங்களால் முடியாதா?’

‘அவள் அதைக் கேட்கவில்லையே. போக வேண்டும் என்றுதான் சொன்னாள்’.

‘இதென்ன மடத்தனம்? நோயின் தீவிரத்தில் வருடக்கணக்காக அவதிப்படுபவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். அதைத் தீர்த்து வைக்க முடிந்தால் அதைச் செய்வதை விடுத்து, அனுப்பிவைக்கிறேன் என்று சொல்வது எப்படிச் சரி?’

‘அட என்னப்பா நீ. அவளது நோயே உயிரோடு இருப்பதுதான். அதுவும் காலம் முடிந்த பின்பும் இருப்பது எத்தனைக் கொடுமை தெரியுமா? நியாயமாக அவள் ஏழு வருடங்களுக்கு முன்பே இறந்திருக்க வேண்டும்’.

எனக்கு அவர் பேசியது புரியவேயில்லை. ஆனால் அவர் செய்வது தவறு என்று நிச்சயமாகத் தோன்றியது. எனது அதிருப்தியை பகிரங்கமாக அவரிடம் தெரிவித்தேன். ‘நீங்கள் ஒன்றும் செய்யாமல் இருந்தாலே போதும். விதித்தபடி அவள் இருந்துவிட்டுப் போகட்டும்’ என்று சொன்னேன்.

‘ஏன் இத்தனை உணர்ச்சிவசப்படுகிறாய்? பாபாவுக்குத் தெரியும் விமல்’ என்று குருநாதர் சொன்னார்.

‘என்ன தெரியும்? பார்சல் செய்து அனுப்பத் தெரிவதெல்லாம் ஒரு மகானின் சிறப்பியல்பு ஆகுமா? முடிந்தால் அவளைச் சிறிது காலமாவது மகிழ்ச்சியுடன் வாழ வைக்கச் சொல்லுங்கள்’.

‘ஆம். நீ சொல்வது சரி. இந்தப் பத்து நாளும் அவள் மகிழ்ச்சியுடன் இருப்பாள்’ என்று பிருத்வி பாபா சொன்னார். அந்தப் பத்து நாளும் குருநாதரை மட்டும் தன்னோடு தங்கியிருக்கச் சொல்லிவிட்டு எங்களை மட்டும் ஆசிரமத்துக்குத் திருப்பி அனுப்பிவிட்டார்.

அதன்பின் நடந்ததுதான் வியப்புக்குரியது. மடிகேரிக்குச் சுற்றுலா வந்திருந்த யாரோ ஒரு வங்காளத் தம்பதி தற்செயலாக ருத்ரம்மாவைச் சந்தித்திருக்கிறார்கள். என்ன காரணத்தாலோ அவர்களுக்கு அவளைப் பிடித்துப் போக, ருத்ரம்மாவைத் தாங்கள் தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் சென்று அங்கேயே தங்க வைத்தார்கள். மூன்று வேளையும் ராஜ போஜனம். வெந்நீர்க் குளியல். கணப்புச் சட்டிக் கதகதப்புடன் கூடிய படுக்கை வசதி. தவிர அவர்கள் கார் வைத்துக்கொண்டு ஊர் சுற்றியபோதெல்லாம் ருத்ரம்மாவை உடன் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவளுக்குப் பிடித்தமான புடைவைகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். அவள் விரும்பிய கழுத்தணிகள், செருப்பு, ஒரு கைக்கடிகாரம் என்று அவள் ஆசைப்பட்டுக் கேட்ட அனைத்தையும் சற்றும் யோசிக்காமல் செய்து தந்திருக்கிறார்கள். ஒருநாள் ருத்ரம்மா, மைசூருக்குப் போய் அரண்மனையைச் சுற்றிப் பார்க்க விரும்புவதாகச் சொல்லப் போக, ஏற்கெனவே மைசூர் அரண்மனையைப் பார்த்துவிட்டு மடிகேரிக்கு வந்திருந்தாலும் அவர்கள் சற்றும் முகம் சுளிக்காமல் அவளுக்காக கார் வைத்துக்கொண்டு இன்னொரு முறை மைசூருக்குப் போய்விட்டு வந்திருக்கிறார்கள்.

சரியாகப் பத்து நாள். வாழ்வில் அதற்குமுன் எதற்கெல்லாம் அவள் ஆசைப்பட்டிருக்கிறாளோ, அவை அனைத்துமே அவளுக்குக் கிடைத்துவிட்டன. அந்த வங்காளத் தம்பதி யார், அவர்களுக்கு ஏன் ருத்ரம்மாவை அவ்வளவு பிடித்துப் போனது என்றெல்லாம் எனக்குத் தெரியாது. அந்தப் பத்தாம் நாள் காலை நான் ருத்ரம்மாவைச் சந்தித்தபோது, எதிர்பாராவிதமாக அவளே என்னுடன் பேசினாள். ‘இவ்வளவு திருப்தியாக நான் என்றுமே இருந்ததில்லை தம்பி. என்னை அவர்கள் சொந்தத் தாயைப் போலப் பார்த்துக்கொண்டார்கள். யாரோ என்னமோ. எங்கிருந்தாலும் அவர்கள் நன்றாக இருக்கட்டும்’ என்று சொன்னாள்.

மறுநாள் காலை விடிந்தபோதே செய்தி தெரிந்துவிட்டது. இரவு மாரடைப்பால் அவள் மரணமடைந்திருந்தாள். புனித மார்க் தேவாலயத்துப் பாதிரிகள் ஏற்பாட்டின் பேரில் அவளது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அன்று மாலை குருநாதர் ஆசிரமத்துக்குத் திரும்பி வந்தார். ருத்ரம்மா காலமாகிவிட்ட விவரத்தை நாங்கள் தெரிவித்தபோது, ‘எதிர்பார்த்தேன்’ என்று மட்டும் சொன்னார்.

‘குரூரமான பாபா பத்து நாள் அவளுக்கு சந்தோஷத்தைக் காட்டிவிட்டு சாகடித்துவிட்டார்’ என்று நான் குற்றம் சாட்டினேன். குருநாதர் சிரித்தார்.

‘ஏன் சிரிக்கிறீர்கள்?’

‘இந்தப் பத்து தினங்களும் பாபா உண்ணவில்லை. தண்ணீர் அருந்தவில்லை. உறங்கவில்லை. பேசவில்லை. இருநூற்று நாற்பது மணி நேரங்கள் முள் பலகையின் மீது நின்று தவம் புரிந்துகொண்டிருந்தார். அவளை அனுப்பிவைப்பதற்காக மட்டும்’ என்று சொன்னார்.

‘என்ன?’

‘ஆம் விமல். ஒரு பலகையின் மீது முட்களைப் பரப்பி அதன் மீது நின்று அவர் தவம் புரிந்தார். வாழ்ந்தது போதும் என்று அவள் திருப்தியடையும் வரை அவரது தவம் நீடித்தது. திருப்தியை அவள் மனம் உணர்ந்த மறுகணமே அவளை அனுப்பிவைத்துவிட்டார்’ என்று சொன்னார்.

எனக்குப் பேச்சே இல்லாமல் போனது. நெடு நேரம் தனியே போய் அமைதியாக அமர்ந்திருந்தேன். எப்படி யோசித்தாலும் அந்தச் செயல்பாட்டின் நியாயம் எனக்குப் புரியாதிருந்தது. குருநாதரிடமே கேட்டேன். ‘அப்படியென்ன அவள் முக்கியம்?’

‘அவள் முக்கியம் என்று யார் சொன்னது? அவர் முன்னால் அவள் வந்து நின்றுவிட்டாள் அல்லவா? தன் பிரச்னையைத் தெரியப்படுத்திவிட்டாள் அல்லவா? கேட்டதைச் செய்துகொடுப்பது அவரது தருமம். நீ கேட்டாலும் அவர் இதைத்தான் செய்வார்’ என்று சொன்னார்.

அதற்குமேல் என்னால் அங்கு இருக்க முடியவில்லை. பிருத்வி பாபா தங்கியிருந்த இடத்துக்கு ஓட்டமாய் ஓடினேன். பாபா அப்போது குடிசைக்கு வெளியே ஒரு கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார். அவரது கால்களில் முள் குத்தி ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. அவர் அதைப் பொருட்படுத்தாமல் வானத்தில் நகர்ந்துகொண்டிருந்த மேகங்களையே பார்த்தவாறு மல்லாக்கக் கிடந்தார்.

அருகே சென்று நான் அவரை வணங்கினேன்.

‘என்ன?’ என்று கேட்டார்.

‘எனக்கும் ஒரு பிரார்த்தனை உண்டு. நிறைவேற்றி வைப்பீர்களா?’

அவர் சிரித்தார்.

‘நீங்கள் இன்றே மடிகேரியை விட்டுப் போய்விட வேண்டும். இம்மாதிரி அற்புதங்கள் நிகழாதிருப்பதே உலகுக்கு நல்லது’ என்று சொல்லிவிட்டு திரும்பிப் பாராமல் போய்விட்டேன்.

இதைப் பற்றி குருநாதரிடமோ என் நண்பர்களிடமோ நான் சொல்லவில்லை. அது அவசியம் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால் மறுநாள் பிருத்வி பாபா அந்த ஆதிவாசிக் குடியிருப்பில் இல்லை என்று தெரிந்தது. நிம்மதியாக இருந்தது.

(தொடரும்)

http://www.dinamani.com/junction/yathi/2018/aug/14/107-வழியனுப்பல்-2979819.html

Link to comment
Share on other sites

108. பசித்தவன்

 

 

பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்துக்குச் சற்று முன்னதாக வண்டி நின்றுகொண்டிருந்தது. சிக்னல் கிடைக்கவில்லை அல்லது சிக்னலில் ஏதோ கோளாறு. முக்கால் மணி நேரமாக ரயில் ஒரே இடத்தில் நின்றது எரிச்சலாக இருந்தது. ‘நாம் இறங்கி நடந்து சென்றுவிடலாமா?’ என்று வினய்யிடம் கேட்டேன். அவன் உடனே சரி என்று சொன்னான்.

இருவரும் வண்டியை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தோம். நான் சென்னையைப் பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டன. இடையில் வாய்ப்பு வந்தபோதெல்லாம்கூட கவனமாகத் தவிர்த்து வந்தேன். இது ஏன் என்று எனக்குப் புரியவேயில்லை. நான் யாரிடமும் அச்சம் கொண்டிருக்கவில்லை. யாருக்கும் கடன் பட்டிருக்கவும் இல்லை. யாரைக் கண்டும் ஓடி ஒளிய அவசியமற்றவன். இருந்தபோதிலும் அந்தத் தயக்கம் எனக்கு இருந்தது. இத்தனைக்கும் சென்னையில் இருந்து திருவிடந்தை நாற்பத்து ஐந்து கிலோமீட்டர் தள்ளி இருக்கும் இடம். ஊர்க்காரர்களுக்கு டவுன் என்றால் திருப்போரூர். இன்னும் பெரிய டவுன் வேண்டுமென்றால் செங்கல்பட்டுக்குத்தான் போவார்கள். அவர்களுடைய சென்னை அதிகபட்சம் அடையாறில் முடிந்துவிடும். ஆனாலும் எனக்கு சென்னைக்கு வர தயக்கமாகவே இருந்தது.

வினய்யிடம் இதனைச் சொன்னபோது, ‘நீ நகரத்தை அம்மாவாக உருவகித்துக்கொள்கிறாய் என்று நினைக்கிறேன். அதனால்தான் நெருங்க அச்சப்படுகிறாய்’ என்று சொன்னான்.

இருக்கலாம் என்று தோன்றியது. அப்பா இறந்த செய்தி கிடைத்தபோது ஊருக்குப் போகலாம் என்று ஒருநாள் முழுதும் தோன்றிக்கொண்டே இருந்தது. மறுநாள் காலை வேண்டாம் என்று தோன்றிவிட்டது. மரணங்களில் இருந்து முற்றிலுமாக நகர்ந்து நிற்கவே நான் விரும்பினேன். மனிதர்களிடம் இருந்தும்கூட.

‘ஆனால் நீ கூட்டங்களின் நாயகன் அல்லவா?’

நான் சிரித்தேன். ‘உண்மை. என் குரலை, என் சிந்தனையைக் கூட்டங்களில் உலவவிட்டுவிட்டு நான் நகர்ந்து சென்று வெளியே அமர்ந்துவிடுவேன்’.

‘அது எப்படி முடியும்? உன்னைச் சுற்றி எப்போதும் கூட்டம் இருக்கும் அல்லவா?’

‘அதைத்தான் சொல்கிறேன். என் சொற்கள் அவர்களுக்குப் போதும். நான் தேவையில்லை’.

‘நீயும் உன் சொற்களும் வேறா?’

‘இதில் என்ன சந்தேகம்? நூறு சதம் ஒன்றாக இருக்க வாய்ப்பே இல்லை’.

‘மறுபடியும் நீ ஒரு சன்னியாசி இல்லை என்று சொல்லத் தோன்றுகிறது’.

மீண்டும் சிரித்தேன். ‘வினய், என் சன்னியாசம் முற்றிலும் சுயநலம் சார்ந்தது. என் சுதந்திரமே என் விழைவு. என் மகிழ்ச்சியே என் தியானப் பொருள். என் தேவைகளைத் தீர்த்துவைக்க மட்டுமே எனக்கு மனிதர்கள் வேண்டியிருக்கிறார்கள். என் தேவைகள் விரிந்து பரந்தவை என்பதால், உலகெங்கும் நான் அவர்களை விதைத்து வைக்கிறேன்’.

‘இதை உன் குரு அறிவாரா?’

‘நிச்சயமாக. நான் அவரிடம் எதையுமே மறைத்ததில்லை’.

‘அவர் உன்னை ஏற்றுக்கொண்டாரா?’

சிறிது யோசித்தேன். ‘அநேகமாக இல்லை என்றே நினைக்கிறேன். எனக்கும் அவருக்கும் பொருந்திப்போன விஷயங்கள் பல உண்டு. ஆனால் சில குறைந்தபட்ச சன்னியாச ஒழுக்கங்களைக்கூட நான் கடைப்பிடிப்பதில்லை என்பதில் அவருக்கு மிகுந்த வருத்தம் உண்டு’.

‘அதில் உனக்கு என்ன கஷ்டம்?’

‘அதுவும் ஒரு நிபந்தனையாகி விடுகிறதல்லவா? சுதந்திரம் என்பது எந்தத் தளையும் இல்லாதது. சன்னியாசத்தின் தளை உள்பட’.

அவன் அமைதியாக யோசித்தபடி நடந்துகொண்டிருந்தான். ரயில் பாதையில் நடக்கச் சற்று சிரமமாக இருந்தது. இருவருமே செருப்பு அணிந்திருந்தோம் என்றாலும், சரளைக் கற்களின் மீது நடக்கக் கஷ்டமாக இருந்தது. பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தை அடைந்துவிட்டால் அங்கிருந்து மின்சார ரயில் பிடித்து சென்ட்ரலுக்குப் போய்விடலாம் என்று நினைத்துத்தான் நடக்க ஆரம்பித்தோம். ஆனால் நாங்கள் ரயில் நிலையத்தை அடைவதற்கு முன்னால் சிக்னல் கிடைத்து வண்டியே கிளம்பிவிடுமோ என்று இப்போது தோன்றியது.

‘ஒருவிதத்தில் நாம் இருவருமே கடவுளைத் தொந்தரவு செய்ய விரும்பாதவர்களாக இருந்திருக்கிறோம்’ என்று வினய் சொன்னான்.

‘ஆமாம். ஆனால் என்னைவிட இந்த விஷயத்தில் நீதான் சிறந்தவன்’.

‘எப்படிச் சொல்கிறாய்?’

‘நான் நம்பாதவன். நான் தொந்தரவு செய்யாதது இயல்பானது. ஆனால் நீ கடவுள் நம்பிக்கை உள்ளவன். அப்படி இருந்தும் போய்க் காலில் விழாதிருப்பது பெரிய விஷயம்’.

‘உண்மைதான். என்னவோ ஒரு வெறுப்பு. ஒரு கோபம்’.

‘கடவுள் மீதா?’

‘ஆம். என்னைச் சக்கையாகப் பழிவாங்கிவிட்டான் பரதேசி’.

நான் சிரித்தேன். ‘அவனைத் தப்பு சொல்லாதே. நீ அவன் பழிவாங்க இடம் கொடுத்திருக்கிறாய். அது உன் தவறு’.

‘உண்மைதான். அண்ணா எனக்கு இன்னொரு வழியும் சொன்னான். மத்தியப் பிரதேசத்தில் ஏதோ ஒரு மலைக்குகை. இப்போது அதன் பெயர் மறந்துவிட்டது. அங்கே சென்று ஒரு வாரம் தங்கியிருக்கச் சொன்னான்’.

‘எதற்கு?’

‘எனக்கு ஒரு பாதை புலப்பட்டுவிடும் என்று சொன்னான்’.

‘அங்கே யாராவது சித்தர் இருந்தாரா?’

‘அதெல்லாம் இல்லை. ஆனால் பல சித்தர்களுக்கு அந்தக் குகை ஒரு அடைக்கல ஸ்தலம் என்று அவன் சொன்னான். அங்கே போனால் வெளிச்சம் பிறக்குமாம்’.

‘போக வேண்டியதுதானே?’

‘இதைத்தான் சொன்னேன், தக்க சமயத்தில் கடவுள் என்னைப் பழிவாங்கிவிடுவான் என்று’.

‘ஏன்? என்ன ஆயிற்று?’

‘அப்போது நான் அஸ்ஸாமில் இருந்தேன். அங்கிருந்து மத்தியப் பிரதேசம் போய்ச் சேரக் கையில் பணம் இல்லை’.

‘ஆனால் உன் இடாகினி உதவியிருக்க முடியுமே?’

‘அந்தப் பேச்சை எடுக்காதே. யாரும் உதவவில்லை என்பதுதான் இறுதி லாபம்’.

‘சரி. டிக்கெட் இல்லாமல் பயணம் செய்திருக்கலாமே?’

‘அதற்கு விருப்பமில்லாமல் நடந்தே போக முடிவுசெய்து கிளம்பினேன்’.

‘அதுவும் நல்ல வழிதான்’.

‘அதுதான் முடியாமல் போய்விட்டது. வழியில் எனக்குக் காய்ச்சல் வந்தது. ஒரு மாதம் எழுந்திருக்கவே முடியாதபடி அடித்துப் போட்டுவிட்டது. உடல் எடை முப்பத்து ஒன்பது கிலோவுக்கு இறங்கிவிட்டது’.

‘அடப்பாவமே’.

‘ஒருவேளை மருந்தும் உட்கொள்ளவில்லை. ஒரு மாத காலமும் தண்ணீர் மட்டுமே குடித்துக்கொண்டிருந்தேன். எப்போதாவது ஒன்றிரண்டு வாழைப்பழம். வேறு உணவும் இல்லை’.

‘ஐயோ’.

‘கையில் ஒரு காசுகூட இல்லை. பிச்சை எடுக்கப் பிடிக்கவில்லை. திருட மனம் வரவில்லை. வேறு என்னதான் செய்வேன்?’

‘என்னதான் செய்தாய்?’

‘பயணத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு காசிக்குப் போய் தங்கிவிட்டேன். ஏதாவது ஒரு தரும சத்திரத்தில் உணவு கிடைத்துவிடும். நதிக்கரையில் கட்டையைச் சாய்த்தால் கேட்பாரில்லை’.

நான் சிரித்தேன். ‘நினைவிருக்கிறதா வினய்? அண்ணா உணவை உத்தேசித்து திருப்பதிக்கு ஓடிப்போயிருப்பான் என்று நீதான் சொன்னாய்!’

‘ஆம். நான் உணவை உத்தேசித்துத்தான் காசிக்குப் போனேன். மூன்று வேளையும் அங்கே திருப்தியாகச் சாப்பிட்டேன். ஒரு கட்டத்தில், உணவுதான் பரம்பொருள் என்று நினைத்துவிட்டேன் என்றால் பார்த்துக்கொள்’.

எனக்கு அவன் மீது மிகவும் பரிவு உண்டானது. என் உடன் பிறந்தவனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இந்த உலகில் யார் ஒருவனுக்கு இப்படிப்பட்ட தோல்வி ஏற்பட்டிருந்தாலும் நான் இப்படித்தான் வருந்துவேன் என்று தோன்றியது. இந்தக் காரணத்தாலேயே எனக்கு அண்ணாவின் மீது கட்டுக்கடங்காத கோபம் உண்டானது. எத்தனை பெரிய மடத்தனம் செய்திருக்கிறான்! வினய்யை அவன் வீட்டை விட்டு நகர்த்தியதில் இருந்து ஒரு கோடி பிழைகள். தன்னுடனாவது அவனை வைத்துக்கொண்டிருக்கலாம். அருகே இருந்து சொல்லிக்கொடுத்து ஏதாவது ஒரு வழியில் திருப்பிவிட்டிருக்கலாம். இப்படிப் பாதி வாழ்க்கை முடிந்த வயதில், புறப்பட்ட இடத்தில் இருந்து ஓரடி கூட முன்னேறாதிருப்பதன் அவலம் எத்தனை பெரிது!

‘அவன் வர வேண்டும் வினய். நான் அவனைச் சந்தித்தே தீர வேண்டும். நாக்கைப் பிடுங்கிக்கொள்கிறாற்போலக் கேட்கப்போகிறேன்’ என்று சொன்னேன்.

வினய் சிரித்தான்.

‘ஏன் சிரிக்கிறாய்?’

‘பிழை என்னுடையது. தவறுகளும் குற்றங்களும் என்னுடையவை. இதில் அவன் என்ன செய்ய முடியும்?’

‘பிழைபட்ட ஒரு வழியில் நீ போகத் தொடங்கியதுமே தடுத்திருக்க வேண்டும். அந்தக் கடமை தனக்கு இல்லை என்று நினைத்திருந்தால் உன் பக்கமே முதலில் இருந்து அவன் திரும்பியிருக்கக் கூடாது’.

‘அதெப்படி? உன்னைக்கூட அந்தத் திருவானைக்கா சித்தன் பக்கம் அவன்தானே திருப்பினான்?’

‘யார் சொன்னது? என்னைப் பற்றி அவன் சொரிமுத்துவிடம் சொல்லியிருக்கிறான். அவ்வளவுதான். கோயிலில் சொரிமுத்து என்னைக் கண்டது தற்செயல். கண்ட மாத்திரத்தில் அவன் என்னை அழைத்துக்கொண்டு போய்விட்டான்’.

‘எனக்கென்னவோ வினோத்தும் சொரிமுத்துவைப் பார்த்திருப்பான் என்றுதான் தோன்றுகிறது’.

இதற்கு நான் வாய்விட்டுச் சிரித்தேன். ‘இருக்கலாம். நம் குடும்பத்தின் நம்பகமான டிராவல் ஏஜெண்ட்’.

வினய்யும் சிரித்தான்.

‘அவன் மட்டும் சாகாதிருப்பானேயானால், நிச்சயமாக நான் திருச்சிக்குச் சென்று அவனைச் சந்தித்துவிட்டுத்தான் ஊர் திரும்புவேன்’ என்று சொன்னேன்.

‘சந்தித்தால் என்ன கேட்பாய்?’

‘கேட்க என்ன இருக்கிறது? அவனுக்கு ஆசி வழங்கிவிட்டுப் போவேன். அடுத்த பிறப்பிலாவது அவன் திருந்தி வாழப் பிரார்த்தனை செய்வேன். அவ்வளவுதான்’.

வினய் அதிர்ச்சியோடு என்னைப் பார்த்தான்.

‘ஏன் அப்படிப் பார்க்கிறாய்? சன்னியாசம் என்பது ஒரு மனநிலை. ஒரு ஏடு சொல்லிவிட்டது என்பதற்காக நான்கு பேர் மீது அதனைத் திணிப்பது நியாயமான செயலே அல்ல’ என்று சொன்னேன்.

‘திணிக்கப்பட்டதாகவா நீ உணர்கிறாய்?’

‘என்னை விடு. என் வழி வேறு. இது நான் விரும்பி அடைந்தது. ஆனால் நீ அப்படியல்ல. நிச்சயமாக அல்ல’.

‘அண்ணாவும் விரும்பித்தானே போனான்?’

&யார் கண்டது? சிறு வயதிலேயே அவனை யாராவது மூளைச் சலவை செய்திருக்கலாம்’.

‘அப்படிச் சொல்லாதே. அவன் ஒரு யோகி’.

‘வரட்டும் பேசிக்கொள்கிறேன்’.

நாங்கள் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தை அடைந்து களைப்புத் தீர சிறிது நேரம் அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தோம். அங்கிருந்த குழாயில் தண்ணீர் பிடித்துக் குடித்தோம். முகம் கழுவிக்கொண்டு ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம்.

‘எனக்கு வியப்பாக இருக்கிறது. இங்கே உன்னை அடையாளம் கண்டுகொண்டு இதுவரை யாருமே அருகே வரவில்லை’ என்று வினய் சொன்னான்.

‘சொன்னேனே. தமிழ்நாட்டில் நான் பிரபலம் இல்லை’.

‘இருந்தாலும் முகம்கூடவா தெரிந்திருக்காது?’'

‘தெரியாத வரை சந்தோஷம். வா போகலாம்’ என்று கிளம்பினேன். அரக்கோணத்தில் இருந்து சென்ட்ரல் வரை செல்லும் ரயில் ஒன்று வந்து நின்றது. நாங்கள் அதில் ஏறப்போன சமயம், அந்த ரயிலில் இருந்து வினோத் இறங்கினான்.

அது வினோத் தானா என்று எனக்குச் சிறிது சந்தேகம் உண்டானது. வினய் பார்த்ததுமே ‘வினோத்’ என்று கத்திவிட்டான். அவனால் நம்பவே முடியவில்லை. வினோத்தும் எங்களைப் பார்த்தான். எத்தனை வயதானால் என்ன, வருடங்கள் ஆனால் என்ன? ஒரு புன்னகையில் உதிர்ந்த காலங்களை எழுப்பிக் கட்டிவிட முடிகிறது.

வினோத் எங்களை நெருங்கி வந்தான். புன்னகை செய்தான். ஹரே கிருஷ்ணா என்று சொன்னான்.

(தொடரும்)

http://www.dinamani.com/junction/yathi/2018/aug/15/108-பசித்தவன்-2980510.html

Link to comment
Share on other sites

109. மூவர்

 

 

சிறு வயதில் வினோத் சற்று நிறமாக இருப்பான். அதாவது அண்ணா, வினய், என்னைக் காட்டிலும் சற்று வெளிறிய தோல். இப்போது அவனுக்கு நாற்பத்தொன்பது வயது. என்னைவிட ஒரு வயது மூத்தவன் என்பதால் யோசிக்காமல் அதைச் சொல்லிவிடுவேன். அவனது நிறம் மங்கி என்னைக் காட்டிலும் கறுத்திருந்தான். ஆனால் தலைமுடியும் தாடியும் முற்றிலும் வெளுத்திருந்தது. மாதம் ஒருமுறை மொத்தமாகச் சவரம் செய்துவிடுவான் போலிருக்கிறது. தலையிலும் முகத்திலும் முள் முள்ளாக முடி குத்தி நின்றது. பின்னந்தலையில் சிகை விட்டிருந்தான். கண்ணாடி அணிந்திருந்தான். அரைக்கை வைத்த ஜிப்பாவும் கச்சம் வைத்த வேட்டியும் அணிந்திருந்தான். கழுத்தை ஒட்டி ஒரு துளசி மாலை. நெற்றியில் கோபி சந்தனத் திருமண்.

‘உனக்கு ஏதோ சிவலிங்கம் கிடைத்தது என்று விமல் சொன்னான்’ வினய்தான் ஆரம்பித்தது.

வினோத் சிரித்தான். ‘ஆம். ஆனால் அது இப்போது என்னுடன் இல்லை’.

‘தூக்கிப் போட்டுவிட்டாயா?’ என்று கேட்டேன்.

‘இல்லை. அது தேவைப்பட்ட ஒருவருக்குத் தந்துவிட்டேன்’.

‘எனக்கு இது வியப்பாக இருக்கிறது வினோத். நீ ஒரு பயங்கரமான சிவபக்த சிரோமணியாக வருவாய் என்று எதிர்பார்த்திருந்தேன். எப்போது ஹரே கிருஷ்ணாவுக்கு மாறினாய்?’

அவன் நெடுநேரம் அமைதியாக இருந்தான். என்ன சொல்லலாம் என்பதைவிட எதையெல்லாம் தவிர்க்கலாம் என்று அவன் யோசிப்பது போல எனக்குத் தோன்றியது. எதையுமே சொல்லாவிட்டாலும் பிரச்னை இல்லை என்று சொல்லிவிடலாமா என்று நினைத்தேன்.

அவன் சட்டென்று, ‘அம்மா இன்னும் இருக்கிறாள் அல்லவா?’ என்று கேட்டான்.

‘அப்படித்தான் நினைக்கிறோம். ஆனால் அதிக நாள் இருக்கமாட்டாள் என்று கேசவன் மாமா தந்தி கொடுத்திருந்தார்’.

‘அதனால்தான் வந்தேன்’.

‘நீ மாமாவோடு பேசினாயா?’

‘ஆம். போன் செய்து பேசினேன்’.

‘அட, பரவாயில்லையே? எத்தனை வருடங்களுக்குப் பிறகு?’

‘விட்டுச் சென்று இருபத்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டன’.

‘எப்படிப் பிடித்தாய்?’

‘டெலிபோன் டைரக்டரியில் கோயில் நம்பரைக் கண்டுபிடித்துப் பேசினேன்’.

‘அதைவிடு. உனக்கு எப்படித் தகவல் கிடைத்தது?’ என்று வினய் கேட்டான்.

‘அண்ணா சொன்னான்’ என்று அவன் உடனே பதில் சொன்னதும் சிரித்துவிட்டேன்.

‘வேண்டாம். அவனைப் பற்றிப் பேச்செடுக்காதே. விமல் உன்னைக் கடித்துக் குதறிவிடுவான்’.

‘ஏன்?’

‘இவன் வந்திருப்பது அம்மாவின் இறுதிச் சடங்குக்கல்ல. அண்ணாவைக் கொலை செய்துவிட்டுப் போவதற்காக. அத்தனைக் கோபத்தில் இருக்கிறான்’.

வினோத் என்னை வியப்புடன் பார்த்தான். ‘அவன் ஒரு யோகி. அனைத்தும் அறிந்தவன். காலம் கடந்தவன். மரணமற்றவன். அவன்மீது உனக்கென்ன கோபம்?’ என்று கேட்டான்.

‘அதெல்லாம் இல்லை வினோத். வினய் சற்று மிகையாகச் சொல்கிறான். ஒரு சில கெட்ட வார்த்தைகளைப் பிரயோகித்துவிட்டால் போதும். என் கோபம் தணிந்துவிடும்’ என்று சிரித்துக்கொண்டே சொன்னேன். அவன் கண்ணை மூடிக்கொண்டு ஹரே கிருஷ்ணா என்று சொன்னான்.

‘சரி வினய் கேட்டதற்கு பதில் சொல். எப்போது நீ மதம் மாறினாய்?’

அவன் எங்கள் இருவரையும் புன்னகையுடன் ஒரு பார்வை பார்த்தான். பிறகு தொலைவில் எங்கோ வெறித்துப் பார்த்தபடி சொன்னான், ‘திருமணத்துக்கு ஒருநாள் முன்பு’.

‘அப்படியா? உன் ஜானவாசத்தன்று உனக்கு சிவன் காட்சி கொடுத்து கடத்திக்கொண்டு போய்விட்டான் என்று நினைத்தேனே?’

‘காட்சி கிடைத்தது உண்மை. ஆனால் சிவனல்ல. கிருஷ்ணன்’ என்று சொன்னான்.

எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது. காவிரியில் அவனுக்கு லிங்கம் கிடைத்ததற்கு சாட்சியாக இருந்தவன் நான். அன்றிரவே அவன் விட்டுச் சென்றுவிடுவான் என்று நினைத்திருந்தேன். அது நடக்கவில்லை. வினய் சென்று, நானும் சென்று, பல ஆண்டுகள் வீட்டுப் பிள்ளையாக இருந்து, அம்மாவின் சந்தோஷத்துக்குத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதித்து, அந்த நாளைத் தவிர்த்துவிட்டு ஓடிப் போயிருக்கிறான். அந்தக் கொலை பாதகத்துக்கு சிவன் தான் காரணம் என்று நினைத்திருந்தேன். கள்ளப் பயல் கண்ணன் ஏன் முந்திக்கொண்டான்?

‘அது ஒரு அதிசயம். நான் எண்ணிப் பார்த்திராத அதிசயம்’ என்று அவன் சொன்னான்.

நாங்கள் செண்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்ததும் வினய் பல் துலக்க வேண்டும் என்று சொன்னான். ஒரு கடையில் பிரஷ்ஷும் பேஸ்டும் வாங்கினோம். ‘எங்கள் இருவரிடமும் பணம் இல்லை. உன்னிடம் இருக்கிறதா?’ என்று வினோத்தைக் கேட்டேன். அவன் சிரித்தபடி பணம் எடுத்துக் கொடுத்தான்.

‘பார்த்தாயா வினய்? இதைத்தான் சொன்னேன். இதைத்தான் நான் செய்கிறேன். இன்று மட்டுமல்ல. என்றும். எப்போதும்’.

வினய் ஒரு குழந்தையைப் போலச் சிரித்தான். உண்மையில் நெடுங்காலம் கழித்து அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது போல எனக்குத் தோன்றியது. ஆனால் அதை எப்படி வெளிப்படையாகச் சொல்ல முடியும்? ஒரு மரணத்தை தரிசிக்க நுழைவுச் சீட்டுடன் வந்திருப்பவர்கள் நாங்கள். உயிரோடு இருந்து, கண் திறந்து பார்த்து, ஓரிரு சொற்கள் பேசவும் கூடிய நிலையில் அம்மா இருப்பாளேயானால் உண்மையில் அவளும் மகிழ்ச்சியே அடைவாள்.

‘எனக்கென்னவோ இது பேராசை என்று தோன்றுகிறது’ என்று வினய் சொன்னான்.

‘ஆசையெல்லாம் இல்லை. இப்படியே என்னைத் திரும்பிப் போகச் சொன்னால்கூடப் போய்விடுவேன்’ என்று சொன்னேன்.

‘அது நம் அனைவருக்குமே முடியும். இப்போது தோன்றுகிறது. என் துறவின் ஆகப்பெரிய லாபம், என்னால் உறவுச் சிடுக்குகளில் இருந்து முற்றிலுமாக விடுபட முடிந்திருப்பதுதான். அம்மா சாகக் கிடக்கிறாள் என்ற செய்தி எனக்கு எந்தச் சலனத்தையும் தரவில்லை’ என்று வினய் சொன்னான்.

நான் வினோத்தைப் பார்த்தேன். ‘இல்லை. எனக்குச் சற்று வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் நாம் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. கிருஷ்ணனின் பாதாரவிந்தங்களில் அவள் சென்று சேரப் பிரார்த்தனை செய்வது தவிர. நான் வந்ததே அதற்குத்தான். ஒரு சிறிய பிரார்த்தனை. அதை மட்டும் செய்துவிட்டுப் போய்விடுவேன்’ என்று சொன்னான்.

‘அந்தப் பிரார்த்தனையை நீ இருந்த இடத்தில் இருந்தபடியே நிகழ்த்த முடியாதா?’

‘முடியும். ஆனாலும் அம்மா அல்லவா?’

நான் சிரித்தேன். அவன் தோளைத் தட்டி, ‘சும்மா கேட்டேன்’ என்று சொன்னேன்.

நாங்கள் பல் துலக்கி முகம் கழுவினோம். ரயில் நிலையத்திலேயே இருந்த ஒரு உணவகத்துக்குள் சென்று அமர்ந்தோம்.

‘மூன்று பேர் ஏதாவது சாப்பிடும் அளவுக்கு நீ பணம் வைத்திருக்கிறாயா?’ என்று வினய், வினோத்திடம் கேட்டான். வினோத் தன் ஜிப்பா பாக்கெட்டில் கைவிட்டு இருந்ததை எடுத்து எண்ணிப் பார்த்துக்கொண்டு, ‘இருக்கிறது’ என்று சொன்னான்.

‘உன் இடாகினியை நீ போகவிட்டிருக்கக்கூடாது வினய். அது இருந்திருந்தால் இப்போது மிகவும் உதவியிருக்கும்’ என்றேன். அவன் என்னை முறைத்தான். நாங்கள் ஆளுக்கு இரண்டு இட்லி சாப்பிட்டுவிட்டு காப்பி குடித்தோம்.

‘நீ ஏன் இப்படி இருக்கிறாய்? ஏன் இந்தக் கோலம்?’ என்று வினோத், வினய்யைப் பார்த்துக் கேட்டான். அவன் சிரித்தான். தார்ப்பாய்ச்சிக் கட்டிய நான்கு முழ அழுக்கு வேட்டி மட்டுமே அவன் அணிந்திருந்தான். வெற்று மார்பில் பாதிக்குமேல் முடியெல்லாம் நரைத்திருந்தது. முகம் மண்டிய தாடியும் சிடுக்கு விழுந்த தலைமுடியும் அழுக்கேறிய நகங்களும் அவனை உறுத்தியிருக்க வேண்டும்.

‘எனக்கு இதுவே அதிகம்’ என்று வினய் சொன்னான். ‘அதைவிடு. அண்ணாவை நீ நடுவில் பார்த்தாயா?’

‘ஓ. ஒருமுறை பார்த்தேன்’.

‘எங்கே?’

‘நான் மாயாபூரில் இருந்தபோது அவன் அங்கே வந்தான். அன்றைக்கு ஜென்மாஷ்டமி. எங்கள் கோயிலில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தார்கள். பாட்டும் நடனமும் பஜனையும் பாராயணமுமாக அன்று முழுவதும் நாங்கள் கொண்டாடித் தீர்த்துக்கொண்டிருந்தோம். எல்லாம் முடிந்து நள்ளிரவுக்குப் பிறகுதான் நான் சாப்பிட்டுவிட்டுக் கைகழுவப் போனேன். அண்ணா அங்கே நின்றுகொண்டிருந்தான்’.

‘எங்கே?’

‘எங்கள் கோயிலுக்குப் பின்புறம் இருந்த குழாயடியில்’.

‘எதற்கு வந்தான்?’

‘என்னைப் பார்க்கத்தான்’.

‘என்ன சொன்னான்?’

'அப்பா இறந்துவிட்டார் என்று சொன்னான்.'

எனக்கு நினைவுக்கு வந்தது. அப்பா ஒரு கிருஷ்ண ஜெயந்தி அன்றுதான் இறந்ததாக கேசவன் மாமா சொன்னார். எனக்கு அவர் சொன்னதை நான் வினய்க்குச் சொல்லியிருந்தேன். இவனுக்கு மட்டும் அண்ணாவே நேரில் போய் எதற்குச் சொல்ல வேண்டும்?

‘நான் கிருஷ்ணனால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என் மூலமாக அப்பாவுக்கு நற்கதி கிடைக்கச் செய்ய அவன் நினைத்திருப்பான்’ என்று வினோத் சொன்னதும் நான் உரக்கச் சிரித்தேன்.

‘வினய், சொரிமுத்துவைக் காட்டிலும் இவன் பெரிய டிராவல் ஏஜெண்டாக இருப்பான் போலிருக்கிறதே?’ என்றேன். வினய்யும் சிரித்தான். சட்டென்று வினோத்திடம், ‘நீ திருவானைக்கா சொரிமுத்துவிடம் போனாயா?’ என்று கேட்டான்.

‘யார் அது?’

‘சரி. இவன் மட்டும் தப்பித்தான்’.

நாங்கள் சாப்பிட்டு முடித்து ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தோம். வினோத் ஒரு பிளாட்பாரத் துணிக்கடையில் ஒரே ஒரு காவி வேட்டியும் துண்டும் வாங்கி வினய்யிடம் கொடுத்தான். அது டிசம்பர் மாதம் என்பதால் எங்கெங்கும் ஐயப்ப பக்தர்கள் நிறைந்திருந்தார்கள். எல்லா கடைகளிலும் காவி வேட்டி எளிதாகக் கிடைத்தது. வினய், நடுச் சாலையிலேயே அதை விரித்து உதறிக் கட்டிக்கொண்டு, தனது பழைய அழுக்கு வேட்டியை உருவி சுருட்டி எறிந்தான். நாங்கள் பேசியபடியே செண்ட்ரலில் இருந்து பிராட்வேக்கு நடக்க ஆரம்பித்தோம்.

‘பரவாயில்லை வினோத். நீ ஒரு பணமுள்ள சன்னியாசியாக இருக்கிறாய். உன் கிருஷ்ணன் உன்னை சௌக்கியமாக வைத்திருக்கிறான் என்று நினைக்கிறேன்’ என்று வினய் சொன்னான்.

‘சௌக்கியத்துக்கு என்ன குறை? ஆனால் நான் ஒரு அமைப்பில் சிக்கிக்கொண்டதில் அண்ணாவுக்குச் சற்று வருத்தம்தான்’.

‘வெளியேறச் சொல்கிறானா? செய்துவிடாதே. அவன் ஒரு சர்வ அயோக்கியன். அவன் பேச்சைக் கேட்டால் நீ இவனைப் போலாகிவிடுவாய்’ என்று சொன்னேன்.

வினய் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான். வினோத்துக்கு அது புரியவில்லை.

(தொடரும்)

http://www.dinamani.com/junction/yathi/2018/aug/16/109-மூவர்-2981135.html

Link to comment
Share on other sites

110. உறவறுக்கும் நேரம்

 

 

‘தயவுசெய்து அண்ணாவை கேலி செய்து பேசாதே’ என்று வினோத் என்னிடம் சொன்னான். உண்மையில் என் நோக்கம் அதுவல்ல என்றாலும், வினோத்துக்கு அவன் மீதிருந்த லயிப்பும் சிலிர்ப்பும் நிச்சயமாக எனக்கு இல்லை என்பதை அவனுக்குத் தெரியப்படுத்திவிட விரும்பினேன். ஆனால், ஒவ்வொரு முறை நான் அதைச் சொல்ல ஆரம்பிக்கும்போதும் அவன் அண்ணாவைப் பற்றி என்னவாவது ஒரு கதையை எடுத்து விரித்துவிடத் தயாராக இருந்தான்.

ஒரு சமயம் அவன் தங்கியிருந்த மாயாபூர் கோயிலையும் அதனை ஒட்டிய இஸ்கான் கட்டடங்களையும் விஸ்தரிக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆரம்பத்தில் எல்லாம் முன்புற ஓலைச் சரிவு போடப்பட்ட எளிய கட்டடங்களாகத்தான் இருந்தன என்று வினோத் சொன்னான். பிறகு பக்தர்கள் பெருகத் தொடங்கினார்கள். வெளிநாட்டு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. அதனை ஒட்டிப் பணவரவும் அதிகரித்தது. கிருஷ்ணரையும் பலராமரையும் ராதையையும் இன்னும் சற்று வசதியாக வாழவைக்கலாமே. கட்டுமான வேலைகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஓர் இளம் சன்னியாசியாக வினோத் தனது சக கிருஷ்ண பக்த சன்னியாசிகளோடு சேர்ந்து அதனை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்திருக்கிறான். பகல் முழுதும் வெயிலில் நின்றுவிட்டு களைத்துப் போய் மதியம் மூன்று மணி சுமாருக்கு ஒரு மரத்தடியில் வந்து அமர்ந்தான். அது ஒரு அரச மரம். ஆனால், அவன் அம்மரத்தடியில் அமர்ந்தவுடன் மரத்தின் மீதிருந்து ஒரு மாம்பழம் விழுந்ததாக வினோத் சொன்னான்.

திடுக்கிட்டு அவன் மேலே பார்த்தபோது அங்கு யாரும் இல்லை. அரச மரத்தில் மாம்பழம் பழுக்கவும் வாய்ப்பில்லை. என்றால் பழம் எங்கிருந்து வந்திருக்கும்? அதிக நேரம் யோசித்துக்கொண்டிருக்கப் பசி இடம் தராததால், அவன் பழத்தை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தான். சாப்பிட்டு முடிக்கும்வரை அவனுக்கு அந்த வியப்புத் தீரவில்லை. அது கிருஷ்ணரே அளித்த உணவு என்றுதான் நினைத்தான். ஆனால் உண்டு முடித்தபின் அவனை நோக்கி ஒரு காகித அம்பு பறந்து வந்து விழுந்திருக்கிறது. எடுத்துப் பார்த்தால் அது ஒரு ஒற்றை வரிக் கடிதம்.

‘நீ பசித்திருக்கிறாய். ஆனால் ஆசிரமத்தில் உணவு தீர்ந்துவிட்டது. அதனால்தான் பழத்தை அனுப்பிவைத்தேன். இரவு உனக்குரிய சப்பாத்திகள் கிடைக்கும்போது மறக்காமல் அதில் இரண்டை வீதியில் காத்திருக்கும் பிச்சைக்காரனுக்குப் போட்டுவிடு’ என்று எழுதியிருக்கிறது.

‘அந்தக் கணம் அந்தக் கடிதத்தை எழுதியது அண்ணாதான் என்று என் மனத்துக்குள் தீர்மானமாகத் தெரிந்துவிட்டது’ என்று வினோத் சொன்னான்.

‘இது என்ன அநியாயம்? அது ஏன் கிருஷ்ண பரமாத்வாவாகவே இருக்கக் கூடாது?’

‘இல்லை. என் மனத்தில் எப்போதாவது இப்படி ஒன்று தோன்றும். அது சரியாக இருக்கும். திருமணத்துக்கு முதல் நாள் உறக்கத்தில் கிருஷ்ணனைப் பார்த்தேன் என்றேனே, அதுவும் இப்படித்தான்’.

‘எப்படி?’

‘உறக்கத்தில் ஒரு பெரிய ஒளிக்கோளம் எனக்குத் தென்பட்டது’ என்று அவன் ஆரம்பித்ததுமே, ‘அது ஏன் சிவனாக இருக்கக் கூடாது?’ என்று வினய் கேட்டான்.

‘இல்லை. அதைத்தான் சொல்ல வருகிறேன். அந்த ஒளிக்கோளம் என் கண்ணில் தென்பட்டதுமே அது கிருஷ்ணன் என்று என் மனத்தில் ஒரு குறிப்பு உண்டாகிவிட்டது. எனவே அதை நான் கிருஷ்ணனாக மட்டுமே பார்த்தேன்’.

‘அவன் கையில் குழல் இருந்ததா? தலையில் மயிலிறகு சொருகியிருந்தானா? உண்மையிலேயே அவன் நீலமாகத்தான் இருந்தானா?’

‘எதுவுமே இல்லை. வெறும் ஒளி. ஒளிப்பந்து. அவ்வளவுதான். இறைவனுக்கு நாம் எப்படி உருவம் தர இயலும்? நாம் தரும் உருவத்தை மனிதப் பிறவியல்லாத இன்னொரு உயிரினம் எப்படிக் கொடுக்கும்?’

‘நியாயம். அதனால்தான் அவன் பன்றிகளுக்கு வராகமாகவும் நாய்களுக்கு பைரவராகவும் காட்டு மிருகங்களுக்கு நரசிம்மமாகவும் கடல்வாழ் உயிரினங்களுக்கு மச்சமாகவும் ரெடிமேட் அவதாரங்கள் எடுத்து வைத்திருக்கிறான்’.

‘கிண்டல் வேண்டாம்’ என்று வினோத் மீண்டும் சொன்னான்.

‘ஆனால் உங்கள் இயக்கத்தில் உருவ வழிபாடுதானே நடக்கிறது? எனக்கென்னவோ வடக்கத்தி உருவச் சிலைகளைக் கண்டால் பக்தியே வருவதில்லை’ என்று வினய் சொன்னான்.

‘உணர்ந்தவனுக்கு உருவம் அநாவசியம். உணரும் வரை எல்லாமே அவசியம்’ என்று வினோத் சொன்னான்.

வேறொரு சமயம் அவன் கல்கத்தாவில் ஹூப்ளி நதிக்கரை ஓரம் நடந்துகொண்டிருந்தபோது இளம் துறவி ஒருவரைச் சந்தித்திருக்கிறான். மிஞ்சினால் பத்தொன்பது அல்லது இருபது வயதுக்கு மேல் அவருக்கு இராது. கரையோரம் அமர்ந்துகொண்டிருந்த அந்த இளம் துறவி, சட்டென்று எழுந்து நதிப்பரப்பின் மீது நடந்துசெல்ல ஆரம்பித்ததும் வினோத் திகைத்துவிட்டான். அதற்கு மேல் அவனால் நடக்க முடியவில்லை. நீரின் மீது நடந்துசெல்லும் துறவியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு நின்றிருக்கிறான். அவரும் நடைப்பயிற்சிக்காகத்தான் வந்திருக்க வேண்டும். ஒரு மாறுதலுக்குத் தண்ணீரின் மீது நடந்துவிட்டு அரை மணியில் கரை திரும்பிவிட்டார்.

ஆர்வம் தாங்கமாட்டாமல் வினோத் அவரிடம் ஓடிச் சென்று, ‘சுவாமி..’ என்று அழைத்தான்.

திரும்பிப் பார்த்துப் புன்னகை செய்த அந்த இளம் துறவி, ‘நீங்கள் யதுநந்தன தாஸ் அல்லவா? வாருங்கள். உங்களுக்காகத்தான் காத்திருக்கிறேன்’ என்று சொன்னார். வினோத்தால் நம்பவே முடியவில்லை. ‘எனக்காகவா? என்னை எப்படி நீங்கள் அறிவீர்கள்?’

‘உங்கள் அண்ணா சொல்லியிருக்கிறார்’ என்று அவர் சொன்னார்.

‘அண்ணாவை உங்களுக்குத் தெரியுமா?’

‘நான் அவரது மாணவன்’.

‘அப்படியா? நீங்கள் நீரின் மீது நடப்பதைக் கண்டேன்’.

அவர் புன்னகை செய்தார். ‘இது சில மூச்சுப் பயிற்சிகளின் மூலம் சாத்தியமாவது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் அனைத்தையும் மூச்சுக் காற்றின் மூலம் கட்டி ஆளலாம். ஆனால், யோகம் என்பது அதைத் தாண்டி நெடுந்தூரம் செல்ல வேண்டியது. நான் வெறும் பாலகன்’.

‘அண்ணா எப்படி இருக்கிறான்? அவன் எங்கே இருக்கிறான் என்று தெரியுமா? என்னை அழைத்துச் செல்வீர்களா?’

‘மன்னியுங்கள். எனக்கு அதற்கு அனுமதியில்லை. ஆனால் உங்கள் அண்ணா உங்களை ஒருவாரம் திட உணவு எதையும் உட்கொள்ள வேண்டாம் என்று சொல்லச் சொன்னார்’,

வினோத்துக்கு வியப்பாகிவிட்டது. ‘ஏன்?’ என்று கேட்டான்.

‘உங்களுக்கு ஒரு விஷக்காய்ச்சல் வரவிருக்கிறது. மருந்து சாப்பிட்டு, ஓய்வெடுத்து குணப்படுத்தப் பார்த்தால், ஒரு மாத காலத்துக்கு அது இருந்துவிட்டுப் போகும். மாற்று வழியாக நாளை முதல் ஒரு வார காலத்துக்கு துளசி தீர்த்தம் மட்டும் குடித்து வந்தால், எட்டாம் நாள் அது சரியாகிவிடும் என்று அவர் சொல்லச் சொன்னார்’.

‘அப்படியா? வெறும் நீர் அருந்தி என்னால் பிழைத்திருக்க முடியுமா? அதுவும் ஒருவாரம்’.

‘முடியும். உங்களுக்கு மட்டுமல்ல. உங்களுடைய இன்னொரு சகோதரருக்கும் நாளை முதல் அதே காய்ச்சல் தாக்கும்’ என்று அந்த இளம் துறவி சொன்னதாக வினோத் சொன்னபோது, வினய், ‘டேய் அது நாந்தான்’ என்று கத்தினான்.

நான் சிரித்துவிட்டேன்.

‘வினய், என்ன ஒரு ஓரவஞ்சனை பார். அவனுக்கு வைத்தியம் சொன்னவன் உன்னை அம்போவென்று விட்டுவிட்டான்’.

‘உண்மையாகவா? உனக்கும் விஷக்காய்ச்சல் வந்ததா?’ என்று வினோத் கேட்டான்.

‘ஆம். ஒரு மாதம். சரியாக ஒரு மாதம். கிட்டத்தட்ட இறந்து மீண்டேன்’ என்று வினய் சொன்னான்.

‘ஆனால் நான் அண்ணா சொன்ன துளசி தீர்த்தத்தை மட்டுமே ஒரு வாரம் அருந்தி வந்தேன். எட்டாம் நாள் காய்ச்சல் போய்விட்டது’ என்று சொன்னான்.

‘அந்த இளம் துறவியை நீ மீண்டும் சந்தித்தாயா? அண்ணாவிடம் உன்னைக் கூட்டிச் சென்றானா?’ என்று கேட்டேன்.

‘இல்லை. அப்போது அது நடக்கவில்லை. ஆனால் நான் அண்ணாவை வேறொரு சந்தர்ப்பத்தில் சந்தித்தேன்’.

‘எங்கே? எப்போது?’

‘கயாவில் அவன் அப்பாவுக்கு சிராத்தம் செய்ய வந்திருந்தான்’.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்பாவுக்கு சிராத்தம் செய்திருக்கிறான். தம்பிகளை எந்நேரமும் கண்காணித்துக்கொண்டிருந்திருக்கிறான். என்னை மட்டும் கண்டுகொள்ளவில்லை என்றாலும் மற்ற அனைவரையும் அவன் பொருட்படுத்தாமல் இல்லை. யார் கண்டது? கேசவன் மாமாவுக்குக்கூட அவன் ஏதேனும் செய்திருக்கலாம். அம்மாவுக்கும்கூட.

‘வினோத், இப்போதும் சொல்கிறேன். எனக்கென்னவோ அவன் யோகியாகித் தவம் செய்யப் போனவனாகத் தோன்றுவதே இல்லை. அரபு தேசத்தில் வேலை கிடைத்துப் போய் அங்கிருந்து பணம் அனுப்பும் ஒரு நல்ல மூத்த மகனாகத்தான் தோற்றமளிக்கிறான். கல்யாணம் மட்டும்தான் பண்ணிக்கொள்ளவில்லை. மற்றபடி நம் அப்பா அம்மாவைவிட அவன் பெரிய குடும்பி என்றுதான் தோன்றுகிறது’.

‘இல்லை விமல். நீ நினைப்பது தவறு. அவன் பெரிய யோகி. மிகப்பெரிய மகான். முக்காலமும் அறிந்தவன். ஒன்று தெரியுமா? அம்மாவின் மரணத்தை அவன் எனக்குப் பத்து வருடங்களுக்கு முன்னதாகத் தெரிவித்திருக்கிறான். தேதி, நாள், கிழமை, நேரம் உள்பட’.

‘அப்படியா? அம்மா எப்போது இறப்பாள்?’

‘இன்று செவ்வாய் அல்லவா? வியாழன் இரவு பதினொன்று இருபத்தெட்டுக்கு அவள் காலமாவாள். வெள்ளி காலை ஏழு மணிக்குத் தகனம் நடக்கும்’.

நானும் வினய்யும் பேச்சற்றுப் போனோம். வினய்தான் முதலில் சுதாரித்து, மெல்லக் கேட்டான், ‘அவன் வருவானல்லவா?’

‘நிச்சயமாக வருவான். அவளுக்குக் கொள்ளி வைப்பதோடு குடும்ப உறுப்பினர்களுடனான தொடர்பு முடிந்துவிடும் என்று சொல்லியிருக்கிறான்’.

(தொடரும்)

http://www.dinamani.com/junction/yathi/2018/aug/17/110-உறவறுக்கும்-நேரம்-2982199.html

Link to comment
Share on other sites

111. தரிசனம்

 

 

கயாவில் அண்ணாவைச் சந்தித்த கதையை வினோத் முக்கால் மணி நேரம் எங்களுக்குச் சொன்னான். பிராட்வே பேருந்து நிறுத்த ஜன நெரிசலோ, துர்நாற்றமோ, ஓயாத பெரும் சத்தமோ எங்களுக்கு ஒரு பொருட்டாக இல்லை. ஒரு பெஞ்சில் நாங்கள் மூவரும் சென்று அமர்ந்துகொண்டோம். சிறிது நேரம் வினோத் என்னைப் பற்றியும் வினய்யைப் பற்றியும் விசாரித்துவிட்டு அவன் அண்ணாவைச் சந்தித்த கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.

அவனுக்கு அப்போது அப்பா காலமான விவரம் தெரியாது. அவனது சக கிருஷ்ண பக்தி இயக்கத் தோழமை சன்னியாசிகள் இருவரோடு கயாவுக்கு சுற்றுலாவாகச் சென்றிருக்கிறான். அங்கே ஒரு ஸ்டால் அமைப்பதற்கு அவர்கள் முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். சொந்தமாக ஓரிடம். பின்னால் விரிவாக்கம் செய்துகொள்ளலாம். அது பிரச்னையில்லை. முதலில் சிறிய அளவில் ஒரு கடை. புத்தகங்கள், போட்டோக்கள், ஜப மாலைகள், கோபி சந்தனம், ஊதுபத்தி விற்பனை. இந்த உலகில் தன்னார்வலர்களுக்குப் பஞ்சமே இல்லாத ஒரே இயக்கம் கிருஷ்ண பக்தி இயக்கம்தான் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. ஒரு பொட்டு நெருப்பை எடுத்து ஓரிடத்தில் வைத்துவிட்டால் போதும். ஊர் முழுக்க அதைப் பரவச் செய்துவிடத் தெரிந்த வல்லவர்கள். பக்தியைக் கேளிக்கையாகவும் கொண்டாட்டமாகவும் ஆக்கிவிடும்போது, சராசரி மனங்கள் அதை எளிதில் விரும்ப ஆரம்பித்துவிடும். கேளிக்கையின் உச்சத்தில் பக்தியை நகர்த்தி வைத்துவிட்டாலும், கூடிய கூட்டம் நகராமல் நிற்கும். ரஜனீஷ் அதனைத்தான் செய்தார்.

‘ஆனால் நாங்கள் கேளிக்கையை நிராகரிக்கிறோம் விமல். கொண்டாட்டம் என்பது மட்டும் சரி. பக்தி, கொண்டாடப்பட வேண்டியதுதான்’ என்று வினோத் சொன்னான்.

கயாவில் அவர்கள் ஓரிடத்தைப் பார்த்து விலை பேசி முடித்துவிட்டு, கடை அமைக்க ஏற்பாடு செய்துகொண்டிருந்தபோது ஒருநாள் வினோத் கங்கைக் கரையில் தன் தோழர்களோடு காலை நடை சென்றுகொண்டிருந்தான். அப்போதுதான் அண்ணாவை அவன் பார்த்தான்.

முதலில் அவனுக்கு அது அண்ணாதானா என்று சந்தேகமாக இருந்தது. தடதடவென்று அருகே ஓடிச் சென்று உற்றுப் பார்த்திருக்கிறான். அண்ணாதான். நீருக்குள் நின்றுகொண்டு தர்ப்பணம் செய்துகொண்டிருந்தான். ‘விஜய், விஜய்’ என்று அவன் இரண்டு முறை உரக்க அழைத்தும் அவன் திரும்பவில்லை.

‘அவர் யார்? உங்களுக்குத் தெரிந்தவரா?’ என்று வினோத்தின் நண்பர்கள் கேட்டார்கள்.

‘ஆம். அவன் என் அண்ணா’.

அவர்களால் நம்பவே முடியவில்லை. விஜய் அப்போது இடுப்பு வரை நீண்ட சடாமுடியும் மழித்த முகமுமாக இருந்தான். இடையில் ஒரு கோவணம் மட்டும் கட்டி, இரு தோள்பட்டைகளிலும் ஏதோ மணிக்கயிறு அணிந்திருந்தான். கழுத்தில் ஒன்றுமில்லை. பூணூல் அணிந்திருக்கவில்லை. நதியில் நீரோட்டம் அதிகம் இருந்தது. நின்றால் நகர்த்திவிடும் அளவுக்குத் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. அவன் தனது வலுவான கால்களால் புவியை அழுத்திக்கொண்டு நின்று நீர்க்கடமை ஆற்றிக்கொண்டிருந்தான். பத்து நிமிடங்கள் அவன் அசையவில்லை, திரும்பவில்லை. முடித்துவிட்டு ஒரு முக்குப் போட்டு எழுந்தான். சூரியனைப் பார்த்துக் கும்பிட்டான். பிறகு கரைக்குத் திரும்பி வந்தான்.

தாங்க முடியாத வியப்புடன் வினோத் அவனை நோக்கி ஓடி, ‘விஜய், நீயா!’ என்றான்.

அண்ணா புன்னகை செய்தான்.

‘எப்படி இருக்கிறாய்? இங்கேதான் இருக்கிறாயா?’

‘இல்லை. நேற்றிரவு அப்பா காலமாகிவிட்டார். அவருக்குச் செய்ய வேண்டியதைச் செய்து முடிப்பதற்காக இங்கே வந்தேன்’ என்று சாதாரணமாகச் சொன்னான்.

வினோத்துக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. சில விநாடிகள் பேச்சற்று நின்றுவிட்டான். பிறகு சட்டென்று அங்கேயே அமர்ந்து அப்பாவுக்காகச் சில நிமிடங்கள் தியானம் செய்தான். அவன் கண் விழித்து எழும்வரை அண்ணா அமைதியாக நின்றுகொண்டிருந்தான். எழுந்தபின், ‘எப்படி இருக்கிறாய்?’ என்று கேட்டான்.

‘நீ?’

அவன் பதில் சொல்லவில்லை. சிரித்தான்.

‘நான் உன்னை இப்படிக் கற்பனை செய்திருக்கவில்லை’ என்று வினோத் சொன்னான்.

‘ஆனால் நான் நினைத்த மாதிரிதான் நீ உருப்பெற்றிருக்கிறாய்’.

‘நீ என்ன நினைத்தாய்?’

‘நீ ஒரு சிறந்த கிருஷ்ண பக்தனாவாய் என்று நினைத்தேன்’.

‘எப்போது?’

‘சிறு வயதிலேயே. உனக்கு சிவலிங்கம் கிடைத்ததே. அப்போதே’.

வினய்க்கு அது ஆச்சரியமாக இருந்தது. ‘எனக்கு லிங்கம் கிடைத்தது உனக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டான்.

‘இது ஒரு பெரிய விஷயமா? திருவானைக்காவில் என் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் சொன்னார்’.

‘எனக்கு லிங்கம் கிடைத்தது அவருக்கு எப்படித் தெரியும்?’

‘அதெல்லாம் அவ்வளவு முக்கியமா? உன் கிருஷ்ணனை நீ பார்த்துவிட்டாயா? அதைச் சொல்’.

வினோத் தனது நண்பர்களைத் திரும்பிப் பார்த்தான். அவர்களை அழைத்து அண்ணாவுக்கு அறிமுகம் செய்துவைத்தான். அண்ணா அவர்களுக்கு வணக்கம் சொன்னான்.

சிறு வயதிலேயே அண்ணா வீட்டை விட்டு வெளியேறிச் சென்ற கதையை வினோத் சுருக்கமாக அவர்களுக்கு எடுத்துச் சொன்னதும், அவர்களுக்கு அண்ணாவின் மீது பெருமதிப்பு உருவானது. ‘இப்போது எங்கே இருக்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள்.

‘எங்கும் இருப்பதில்லை. சுற்றிக்கொண்டே இருப்பேன். பெரும்பாலும் இமயச் சாரல்களில். எப்போதாவது காசியில்’.

வினோத் கேட்டான், ‘விஜய், எனக்காவது சொல். உன் குரு யார்? எந்த சக்தி உன்னை வீட்டை விட்டு அழைத்துச் சென்றது?’

‘நான் கபிலரின் மாணவன்’ என்றுதான் அண்ணா அவனிடமும் சொல்லியிருக்கிறான்.

‘கபிலரா?’

‘ஆம். திருவிடந்தை அல்லிக் குளத்தின் அடியில் அப்போது அவர் தவம் புரிந்துகொண்டிருந்தார். நான் அவரை தினமும் சந்தித்தேன். அவரிடம்தான் யோகாப்பியாசங்கள் கற்றேன்’.

நம்புவதற்கு சிரமம் தரக்கூடிய அந்தத் தகவல்களை வினோத்தின் நண்பர்கள் உணர்ச்சியற்ற பாவத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்கள். வினோத்துக்கு அந்த விதமான உரையாடலைத் தொடருவதா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டது. எனவே சட்டென்று பேச்சை மாற்றி, ‘நீ எங்கே தங்கியிருக்கிறாய்? வா போகலாம்’ என்று சொன்னான். அண்ணா புன்னகை செய்து வினோத்தின் நண்பர்களைப் பார்த்து இடக்கையை உயர்த்தி ஆசி சொன்னான். அது அவர்களுக்குச் சற்று அதிர்ச்சியளித்தது. பொதுவாக சன்னியாசிகளுக்கு யாரும் ஆசி சொல்வதில்லை. குரு ஸ்தானத்தில் உள்ளவர்களும் மிக மூத்த துறவிகளும் மட்டுமே அதைச் செய்வார்கள். அண்ணாவுக்கு மிஞ்சினால் என்ன வயது இருக்கும்? அந்த கிருஷ்ண பக்தத் துறவிகளுக்கும் கிட்டத்தட்ட அதே வயதுதான். எனவே அவன் கையை உயர்த்தி ஆசி சொன்னதும் அவர்கள் சற்றுத் திகைத்துவிட்டார்கள்.

அண்ணா புன்னகை செய்தான், ‘நீங்கள் வைணவத் துறவிகள் அல்லவா? நான் வணங்கியதும் நீங்களும் என்னை வணங்கினீர்கள். அதேபோல் நான் ஆசி சொன்னதும் நீங்கள் சொல்ல வேண்டாமா?’ என்று கேட்டான்.

‘ஏன் நீங்கள் வைணவர் இல்லையா?’ என்று வினோத்தின் நண்பர் ஒருவர் கேட்டதும் அண்ணா மீண்டும் சிரித்தான். இல்லை என்று சொன்னான்.

‘பிறகு? உங்கள் குரு கபிலரே ஒரு வைணவர்தானே?’

அண்ணா இப்போது வாய்விட்டுச் சிரித்துவிட்டான். வெகு நேரம் சிரித்தான். மூச்சு விடாமல், கண்ணில் நீர் வரும் அளவுக்குச் சிரித்தான். பிறகு, ‘உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். கபிலர் ஒரு நாத்திகர்’.

என்ன, என்ன என்று அவர்கள் அதிர்ச்சியடைந்து பரபரப்பானார்கள். அண்ணா சிரித்துக்கொண்டே சொன்னான், ‘பிறகெப்படி அவர் சாங்கியத் தத்துவத்தை முன்வைப்பார்? பௌதிகப் பிரபஞ்சத்தின் தன்மையையும் அடிப்படைகளையும் பேசுவதல்லவா சாங்கியம்? பகுத்தறியாமல் மெட்டாஃபிசிக்ஸ் ஏது?’

அவர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தார்கள். ‘இல்லை. நீங்கள் சொல்வது தவறு. கபிலர் மகாவிஷ்ணுவின் அம்சம். அவதாரம் என்றே சொல்வார்கள்’.

‘இருந்துவிட்டுப் போகட்டும். எனக்குக் கபிலரைவிட ஜடத்துக்கும் சேதனத்துக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கும் அவரது தத்துவம்தான் முக்கியம்’ என்று சொன்னான்.

‘அதுதான் அதுதான்! ஜடத்துக்கும் சேதனத்துக்கும் உள்ள வேறுபாட்டின் புரிதலே பக்தியில்தானே நிகழ்கிறது?’

‘இல்லை. ஞானத்தில்’ என்று சொல்லிவிட்டு அண்ணா வினோத்தின் கையைப் பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். ‘நீங்கள் நமது இருப்பிடத்துக்குச் செல்லுங்கள். நான் சிறிது நேரத்தில் வருகிறேன்’ என்று வினோத் தனது நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு அண்ணாவோடு நடக்க ஆரம்பித்தான்.

நகருக்கு வெளியே ஒரு கானகத்துக்குள் அண்ணா அவனை அழைத்துச் சென்றான்.

‘நீ இங்கேயா இருக்கிறாய்?’

‘கயாவுக்கு வந்தால் இங்கே தங்குவேன்’ என்று சொல்லிவிட்டு ஒரு சிறிய குகைக்குள் அவன் வினோத்தை அழைத்துச் சென்றான். மிகச் சிறிய குகை. இயற்கையான குகை போல அது இல்லை. சாதுக்கள் யாரோ தமது சௌகரியத்துக்கு ஆள் வைத்து உருவாக்கிய குகை போலிருந்தது. நான்கு புறமும் பாறைகள் அடைத்து, இடைவெளிகளை சிமெண்டால் பூசியிருந்தார்கள். தரை மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. அண்ணா ஒரு நீண்ட மரப்பலகையை எடுத்துப் போட்டு, உட்கார் என்று சொன்னான்.

வினோத் உட்கார்ந்தான். ‘ஏதாவது சாப்பிடுகிறாயா?’ என்று கேட்டான்.

‘என்ன இருக்கிறது?’

‘பழங்கள் இருக்கின்றன. மாமிசம் இருக்கிறது. ஆனால் அதை நீ சாப்பிட மாட்டாய்!’

‘நீ மாமிசம் உண்பாயா?’

அண்ணா புன்னகை செய்தான். ‘பதினெட்டு நாள்களுக்கு ஒருமுறை நான் உணவு உட்கொள்வேன். அப்போது என்ன கிடைக்கிறதோ அதுதான் உணவு’.

‘என்னால் நம்பவே முடியவில்லை. மாமிசம் தவ நெறிக்கு முரணானதல்லவா?’

‘உடலுக்குத்தானே உணவு. உடலே தவத்துக்கு ஒரு ஊறுதான்’.

‘மடக்கிவிடும்படி பதில் சொல்லித் தப்பிக்க நினைக்காதே. உயிர்க்கொலை பாவம்’.

‘ஆம். ஆனால் நான் கொல்வதில்லை’.

‘பிறகு?’

‘இறந்தவற்றைத்தான் உட்கொள்வேன்’.

வினோத் அதிர்ச்சியடைந்தான். 'எதுவானாலுமா?'

‘ஆம். பிணத்தில் என்ன பேதம்? ஆடு, கோழி, மாடு, பன்றி, மான், மனிதன், மயில், குயில், காகம் எல்லாம் ஒன்றுதான்’.

‘ஹரே கிருஷ்ணா. நீ நர மாமிசம் உண்பாயா?’

‘இல்லை என்று பொய் சொல்ல மாட்டேன். அது ஒரு சுத்திகரிப்பு. உனக்குப் புரியாது. புரியவும் வேண்டாம். நீ எப்படி இருக்கிறாய்? அதைச் சொல்’.

‘மிகவும் அதிர்ச்சியடைந்திருக்கிறேன்’.

‘வினோத், உறவை அறுத்ததுபோல உணவை அறுப்பது யோகிகளுக்கு முக்கியம். ஆனால் அப்பா இறந்ததை அறிந்ததும் தர்ப்பணம் செய்தேன் பார், அந்த மாதிரி பசிக்கும் நேரம் எதையாவது தின்னவேண்டி இருக்கிறது. ஒரு யோகிக்கு உணவில் தேர்வு சாத்தியங்கள் இல்லை’.

‘அப்பா இறந்துவிட்டதாக நீ சொன்னபோது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது’.

‘ஒரு தெருநாய் அடிபட்டு இறக்கும்போதும் அந்த வருத்தம் வருமானால் நீ சரியாக இருக்கிறாய் என்று அர்த்தம்’.

‘ஆம். அப்படித்தான் வருந்துகிறேன்’.

‘நல்லது. பழம் சாப்பிடு’ என்று சொல்லிவிட்டு, ஒரு ஓரமாக துணி சுற்றி வைத்திருந்த நான்கு வாழைப்பழங்களை எடுத்துவந்து கொடுத்தான். வினோத் அதைச் சாப்பிட்டதும் ‘குடிக்க நீர் வேண்டுமா?’ என்று கேட்டான். பிறகு அவனே வெளியே சென்று ஒரு மண் குடுவையில் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தான்.

‘உன்னை இன்று சந்திக்க வேண்டும் என்பது எனக்கு இடப்பட்ட கட்டளை’ என்று சொன்னான்.

‘யார் இட்ட கட்டளை?’

‘அது சொன்னால் உனக்குப் புரியாது. ஆனால் உன் மனத்துக்குள் நான் ஒரு செய்தியை விதைக்க வேண்டும். அது உனக்குள் இறங்க வேண்டுமானால் நீ பசியற்று இருக்க வேண்டும். அதனால்தான் முதலில் சாப்பிடச் சொன்னேன்’.

‘புரியவில்லை’.

‘புரியவேண்டாம். சற்று நேரம் கண்ணை மூடிக்கொண்டு அமைதியாக இரு. கிருஷ்ணனை நினைத்துக்கொண்டிரு’ என்று சொன்னான்.

வினோத் அதற்குக் கட்டுப்பட்டு பத்மாசனமிட்டு அமர்ந்தான். கண்ணை மூடிக்கொண்டான். அண்ணா அவன் எதிரே அமர்ந்துகொண்டு அவனையே சிறிது நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் என்று தெரியவில்லை. வினோத் கண்ணைத் திறந்தபோது அண்ணாவின் நடு நெற்றியில் சிறியதாக ஓர் உருவம் தெரிந்தது. ஒரு யோகியின் உருவம். அது கபிலர்தான் என்று வினோத்துக்குத் தோன்றியது.

(தொடரும்)

http://www.dinamani.com/junction/yathi/2018/aug/20/111-தரிசனம்-2983789.html

Link to comment
Share on other sites

112. கிருஷ்ணனாவது

 

 

வினோத்தால் அந்த நாளை மறக்கவே முடியாது. பூரண ஞானமடைந்த ஒரு யோகியின் எதிரே அமர்ந்திருக்கும் பரவசத்தில் நெடுநேரம் அவன் பேச்சற்று இருந்தான். அவனையறியாமல் அவன் கண்களில் இருந்து நீர் வழிந்துகொண்டே இருந்தது.அவன் சம நிலைக்கு வரும்வரை அண்ணா அமைதி காத்தான். பிறகு, ‘எனக்கு இடப்பட்ட கடமையை நிறைவேற்றிவிட்டேன்’ என்று சொன்னான்.

‘என்ன செய்தாய்?’

‘சொன்னேனே. உன் மனத்துக்குள் ஒரு செய்தியைப் புதைத்திருக்கிறேன்’.

‘இல்லை. என்னால் எதையும் உணர முடியவில்லை. உன்னிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை’.

‘இப்போது வராது. தேவைப்படும்போது அது உன் சிந்தையில் உதிக்கும்’.

‘புரியவில்லை’.

‘வினோத், உனக்கு அந்தத் தகவல் இப்போது தேவையில்லை. ஆனால் ஒருநாள் அது தேவைப்படும். அன்று என் குரல் உன் மனத்தில் அதை ஒலிபரப்பும்’.

‘இதெல்லாம் மாயாஜாலம் போல இருக்கிறது’.

‘ஒன்றுமே இல்லை. வெறும் அறிவியல்’ என்று அண்ணா சொன்னான்.

‘அறிவியலா?’

‘ஆம். அறிவியல்தான். ஒரு கேசட்டில் பதிவுசெய்து வைப்பதைப் போல உன் மனத்துக்குள் பதிந்து வைத்திருக்கிறேன். அவ்வளவுதான். உரிய நேரத்தில் அது ஒலிபரப்பாகும்’.

வினோத் அவனை பிரமித்துப் போய்ப் பார்த்துக்கொண்டிருந்தான். ‘விஜய், நான் எளியவன். எனக்கு யோகம் தெரியாது. சித்து தெரியாது. ஞானமடைந்தவனா என்றால் அதையும் யோசித்துத்தான் சொல்லவேண்டி இருக்கும். ஆனால் நான் பக்தியை என் வழியாகக் கொண்டவன். பக்தி ஒன்றே முக்திக்கு வழி என்று நினைப்பவன்’.

‘தவறில்லை’.

‘எனக்கு கிருஷ்ண மந்திரம் தவிர வேறெதுவும் தெரியாது’.

‘தெரிந்தது போதுமே?’

‘நாம ஜெபம் ஒன்றுதான் நான் செய்வது. நாள் முழுவதும் அதைத்தான் உச்சரித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு இடப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறேன்’.

‘கடை திறப்பது போன்ற கட்டளைகளையா?’

‘ஆம். அதுவும் உண்டு. எங்கள் இயக்கம் செய்யும் பணிகளுள் முதன்மையானது அன்னதானம். தேசம் முழுதும் மிகப்பெரிய அளவில் நடக்கிற காரியம். அதற்கு நிதி வசூல் செய்வதுதான் எனக்கு அனைத்தினும் தலையாய பணி’.

அண்ணா சிரித்தான். ‘பரவாயில்லை. ஆனால் உன் துறவின் நோக்கம் இதுவா என்று அவ்வப்போது கேட்டுக்கொள்’.

‘கேட்காமல் இல்லை. என் துறவின் நோக்கம் அன்றைக்கு ஒளிக் கோளமாகத் தென்பட்டவனின் உருவத்தைத் தெளிவாகப் பார்ப்பது. என்றைக்காவது அது நடந்துவிடும்’.

‘பார்ப்பதா? அது அத்தனை அவசியமா?’

‘இல்லையா?’

‘வினோத்! இறையை உணர்வதுதான் முதன்மையானது. இறைத்தன்மையை நெருங்குவது முக்கியமானது. இரண்டறக் கலத்தல் இறுதியில் வருவது’.

‘அப்படியா சொல்கிறாய்? ஆனால் என் நண்பர்களுடன் நீ பேசியதை வைத்து உன்னை நான் வேறு விதமாக எண்ணிவிட்டேன்’.

‘அது சும்மா தமாஷுக்குப் பேசியது. ஒன்றைப் புரிந்துகொள். அறிவியல் என்பது ஆன்மிகத்தின் புரிந்த பகுதி. புரிந்ததில் தெளிவு இருந்தால்தான் புரியாதவற்றை நோக்கி நகர முடியும்’.

‘எனக்கு உன்னைக் காண ஒரே பிரமிப்பாக இருக்கிறது. உன்னைப் பார்ப்பேன் என்று நினைக்கவேயில்லை’.

அண்ணா சிரித்தான்.

‘இது நம் குடும்பத்தின் விதி வினோத். நாம் நால்வரும் இப்படியாகப் பிரிந்து போக வேண்டியவர்கள் என்பது என்றோ முடிவான விஷயம்’.

‘அவ்வப்போது அம்மாவை எண்ணிக்கொள்வேன். சற்று வருத்தமாக இருக்கும்’.

‘என்ன வருத்தம்?’

‘நான்கைப் பெற்று நான்கையும் இழப்பதன் வலியைச் சொன்னேன்’.

அண்ணா இதற்கு பதில் சொல்லவில்லை. நெடுநேரம் பேசாதிருந்துவிட்டு, ‘அவள் சமாளித்துக்கொண்டுவிட்டாள்’ என்று சொன்னான்.

‘அவர்கள் இருவரும் என்ன ஆனார்கள், எங்கே இருக்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமா? நீ அவர்களைச் சந்தித்தாயா?’

‘சந்திக்கவில்லை. ஆனால் கவனிக்கிறேன்’.

‘வினய் என்ன செய்கிறான்?’

அண்ணா சிரித்தான். ‘அவன் விதியை வெல்லப் பார்க்கிறான். ஆனால் அவனால் அது முடியாது’.

‘ஐயோ’.

‘அவன் ஒரு மாயவலைக்குள் சிக்கிக்கொண்டான். மீள முடியாமல் அவதிப்படுகிறான்’.

‘உன்னால் உதவ முடியாதா?’

‘முடியாது’ என்று உடனே சொன்னான்.

‘ஏன்?’

‘எனக்கு அதற்கு அனுமதி இல்லை’.

வினோத்துக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. சிறிது நேரம் கண்மூடி ஜபம் செய்தான். பிறகு, ‘விமல்?’ என்று கேட்டான்.

அண்ணா சிரித்துவிட்டான்.

‘ஏன் சிரிக்கிறாய்?’

‘அவனும் சன்னியாச ஆசிரமத்தைத்தான் ஏற்றான். ஆனால் ராஜரிஷி ஆகிவிட்டான். வாழ்நாளில் ஒருபோதும் அவன் உண்மை உணரமாட்டான்’.

‘என்ன சொல்கிறாய்?’

‘அவன் ஒரு அரசியல் புரோக்கர். விடு. அவனை மறந்துவிடு’.

வினோத்துக்கு நெடுநேரம் வியப்பு தீரவேயில்லை. இது எப்படி,இது எப்படி என்று திரும்பத் திரும்பத் தனக்குள் கேட்டுக்கொண்டே இருந்தான். அண்ணா அவனுக்குத் தன் வலக்கரத்தில் அணிந்திருந்த மணிக்கயிறை அவிழ்த்துக் கொடுத்தான்.

‘இதை வைத்துக்கொள். இது ஒரு காப்பு. இதை அணிந்துகொள்ள உங்கள் இயக்கம் அனுமதிக்குமா?’

‘தெரியவில்லை. நாங்கள் துளசி மாலை மட்டுமே அணிவோம்’ என்று கழுத்தைத் தொட்டுக் காட்டினான்.

‘பரவாயில்லை. உன் பையில் வைத்துக்கொள்’ என்று சொன்னான்.

வினோத் அதைத் தன் கழுத்தில் தொங்கிய பையில் போட்டுக்கொண்டான். அதில் ஏற்கெனவே ஒரு ஜபமாலை இருந்தது.

அண்ணா அவனிடம் மேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தான். சிறு வயதில் அவனுக்குக் கிடைத்த சுவடியைக் குறித்துச் சொன்னான். ‘அந்தச் சுவடி திருப்போரூர் சாமியிடம் உள்ளதை எனக்குச் சொன்னதே கபிலர்தான்’.

வினோத் சட்டெனக் கேட்டான், ‘கபிலர் ஏன் உன்னைத் தேர்ந்தெடுத்தார்?’

அண்ணா சிறிது யோசித்தான். பிறகு ‘தெரியவில்லை. எனக்கு அந்தக் கொடுப்பினை இருந்திருக்கிறது’ என்று சொன்னான்.

கிளம்பும்போது, ‘உனக்கு உபயோகப்படும்’ என்று சொல்லி இரண்டு மூச்சுப் பயிற்சிகளை அவனுக்குச் சொல்லிக் கொடுத்து அனுப்பிவைத்தான்.

‘மறுபடி உன்னை எப்போது பார்ப்பேன்?’ என்று வினோத் கேட்டான். சிரித்துவிட்டு அண்ணா அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

வினோத் இந்தச் சம்பவத்தை எங்களுக்குச் சொன்னபோது என்னால் வெறுமனே சிரிக்கத்தான் முடிந்தது. வினய்க்குத்தான் ஆற்றாமை பொங்கிவிட்டது. ‘நான் உருப்படமாட்டேன் என்று அவன் சொன்னானா? உண்மையிலேயே அப்படித்தான் சொன்னானா?’ என்று திரும்பத் திரும்பக் கேட்டான். வினோத் அவனை சமாதானப்படுத்த முடிவு செய்தான்.

‘இதோ பார் வினய், பிழைப்பது அல்லது வாழ்வது என்பது வேறு. வாழ்வுக்கு அப்பால் உள்ளவற்றின் அடிப்படைகளை அறிவது வேறு. சன்னியாசம் அதற்கான அடிப்படை சௌகரியம். அதை மற்ற காரியங்களுக்குப் பயன்படுத்த நினைப்பதுதான் எல்லா பிரச்னைகளுக்கும் தொடக்கப்புள்ளி’ என்று சொன்னான்.

‘ஆம். புரிகிறது. ஆனால் பாதி வாழ்க்கை விரயமாகிவிட்டது’.

‘வருந்தாதே. வாழ்வின் நீளம் நீ அறியமாட்டாய். அது நூறாண்டுகளாக இருக்கலாம். நாளையே முடியக்கூடியதாகவும் இருக்கலாம். வாழும் கணத்தில் என்ன செய்கிறோம் என்பதே முக்கியம்’.

‘இனி என்ன செய்வது?’

‘கிருஷ்ணனை நினை. அவனை மட்டும். பக்தி கூட வேண்டாம். வெறும் ஜபம் போதும். வெறுமனே உச்சரித்துக்கொண்டிருப்பதே உன்னை உய்யச் செய்யும்’ என்று வினோத் சொன்னபோது நான் பாய்ந்து அவன் வாயைப் பொத்தினேன்.

‘டேய் நிறுத்து. நீ எனக்கு ஒரு பாதிரி போலத் தெரிகிறாய்’ என்று சொன்னேன்.

‘இல்லை விமல். அவனைத் தடுக்காதே. அவன் எனக்கு நல்லது செய்ய நினைக்கிறான்’.

‘முட்டாள். உனக்கு ஒருவராலும் நல்லது செய்ய முடியாது. உன் வாழ்க்கையை அவன் வாழமாட்டான். உன்னால் ஒருபோதும் அவன் வழியில் போக முடியாது’.

‘ஏன் அப்படிச் சொல்கிறாய்?’

‘நாம் இடறுகிறோம் என்று நீ நினைத்திருந்தால், என்றோ சொரிமுத்துவிடம் திரும்பிச் சென்றிருப்பாய்’ என்று சொன்னேன்.

வினய் அமைதியாகிவிட்டான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ‘ஆம். நீ சொல்வது சரி. நான் யுத்த களத்தில் இருக்கிறேன். எனது தருமம் வேறு’ என்று சொன்னான்.

நான் வினோத்திடம் வினய்யின் பிரச்னையைப் பற்றி விளக்கிச் சொன்னேன். ‘அவன் உன்னை, என்னை, அண்ணாவைவிட வல்லவன். துரதிருஷ்டவசமாக அவன் தெய்வங்களுடன் யுத்தம் புரியத் தொடங்கிவிட்டான். சரணடைந்தால் வாரியத் தலைவர் பதவி நிச்சயம். அதைக் காட்டிலும் அவன் எதிர்க்கட்சிக்காரனாக இருப்பதே நல்லது’ என்று நான் சொன்னதை வினோத் விரும்பவில்லை.

‘நீ மிகவும் மலினப்படுத்துகிறாய்’ என்று சொன்னான்.

‘இல்லை. அதுதான் உண்மை. அவனது கட்டை விரலைப் பார்’ என்று அவன் கையை எடுத்துக் காட்டினேன்.

பல்லாண்டுக்காலம் கட்டுப்போட்டு ஓர் இடாகினியை அடைத்து வைத்திருந்த அந்த விரலின் நிறமே கருநீலமாகியிருந்தது. ரத்த ஓட்டம் முற்றிலும் இல்லாமல் போய், அது ஒரு காய்ந்த கரித்துண்டுபோல் இருந்தது. வினோத்துக்கு அது புரியவில்லை. நான் விளக்கிச் சொன்னதையும் விளங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த உலகின் அனைத்துச் சிக்கல்களுக்கும் கிருஷ்ணன் தீர்வு தந்துவிடுவான் என்று அவன் சொன்னான்.

‘மடையா, வினய் ஒரு கிருஷ்ணனாகியிருக்க வேண்டியவன். இது உன் கிருஷ்ணனுக்கே தெரியும், கேட்டுப் பார்’ என்று கத்தினேன்.

வினோத் பயந்துவிட்டான். ‘சரி. நான் உனக்காக ஜபம் செய்கிறேன்’ என்று வினய்யிடம் சொன்னான்.

நான் தலையில் கைவைத்து அப்படியே அமர்ந்துவிட்டேன்.

(தொடரும்)

http://www.dinamani.com/junction/yathi/2018/aug/21/112-கிருஷ்ணனாவது-2984255.html

Link to comment
Share on other sites

113. வா!

 

 

ஒரு நெருக்கடிக்கு ஆட்பட்டாற்போல உணர்ந்தேன். இதற்குமுன் இப்படி இல்லை. என்றுமே இருந்ததில்லை. என் சன்னியாசத்தின் சாரமான சுதந்திரத்தை அதன் பூரண வடிவில் நான் அனுபவித்துக்கொண்டிருந்தேன். சட்டென்று ஒரே நாளில் அனைத்தையும் யாரோ கலைத்துப் போட்டுவிட்டாற்போல் இருந்தது. நான் ஊருக்கே வந்திருக்கக்கூடாதோ என்று ஒரு கணம் தோன்றியது. உடனே அது சரியல்ல என்றும் தோன்றியது. என்னைப் போன்ற இரண்டு வேறு வேறு சன்னியாசிகளை நான் சந்தித்திருக்கிறேன். தற்செயலாக அவர்கள் என் உடன் பிறந்தவர்களாகவும் இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். அப்படி நினைத்துக்கொள்வது சற்று வசதியாக இருந்தது. ஆனால் அந்த நினைவை மீறியும் அவர்களின் சொந்த அனுபவங்களின் மீது என் கரிசனம் சற்று அதிகம் விழுவதுபோலத் தோன்றியது. எந்தக் கணத்தில் மனம் இளகத் தொடங்குகிறதோ அப்போது ஓடிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

வினோத் தனது கதையை விவரித்துக்கொண்டிருந்தபோது பல சமயம் எனக்கு மிகுந்த மன நெகிழ்ச்சி உண்டானதை கவனித்தேன். வினய் மீதான அவனது அக்கறையையும் கரிசனத்தையும் மேலுக்குக் கிண்டல் செய்தாலும் அதே உணர்வுதான் எனக்கும் உள்ளதென்பதை எண்ணிப் பார்த்தேன். இது ஒரு சன்னியாசிக்குரிய லட்சணமல்ல என்று தோன்றியது. என் குருநாதர் ஒரு சமயம் சொன்னார், ‘விமல்! என்றைக்காவது உன் பெற்றோர், உடன் பிறந்தோர் மீது பிரத்தியேகமாக ஒரு பாசமோ பரிவோ உண்டானால் உடனே சென்று ஒரு சாக்கடைக்குள் படுத்துவிடு. அந்தக் கொசுக்கள் பயந்து அலறி எழுந்து உன்னை மொய்க்கும். ஈக்கள் உன் மூக்கின்மீது வந்து உட்காரும். துர்நாற்றமும் அந்த நாற்றம் எங்கிருந்து வந்திருக்கும் என்ற எண்ணமும் சேர்ந்து உன் வயிற்றைப் புரட்டும். எண்ணிலடங்காத நோய்களின் தொற்று உன்னைத் தாக்கும் என்று அறிவு அச்சுறுத்தும். பத்து நிமிடங்கள் அப்படிப் படுத்திருந்துவிட்டு எழுந்துபோய் நன்றாக சோப்புப் போட்டுக் குளித்துவிடு’.

நான் சட்டென்று எழுந்தேன். ‘என்ன?’ என்று வினோத் கேட்டான்.

‘ஒரு நிமிடம் இரு. வந்துவிடுகிறேன்’ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடக்கத் தொடங்கினேன். பூக்கடை பேருந்து நிலையத்தின் பின்புறம் அந்நாள்களில் ஒரு பெரிய சாக்கடை ஆறு இருந்தது. பன்றிகள் சகஜமாகப் புரண்டு விளையாடும் சாக்கடை. நான் நடக்கத் தொடங்கியபோது அதுதான் முதலில் என் கண்ணில் பட்டது. சற்றும் யோசிக்காமல் அந்தச் சாக்கடைக்குள் இறங்கிப் படுத்துவிட்டேன்.

அந்தப் பக்கம் போய்க்கொண்டிருந்தவர்கள் முதலில் இதைக் கவனிக்கவில்லை. நான் தவறி விழுந்திருப்பேன் என்று எண்ணி ஒரு சிலர் நெருங்கி வந்து ‘எழுந்திருங்கள், எழுந்திருங்கள்’ என்று கூக்குரலிட்டார்கள். எனக்குப் புன்னகை செய்யத் தோன்றியது. ஆனால் அமைதி காத்தேன். நன்றாக ஒருமுறை அதில் புரண்டு சாக்கடை நீரில் மூக்கை அழுத்தி தரையில் அழுந்தத் தேய்த்து அதன்பின்புதான் எழுந்தேன். அந்தக் கோலத்தில் என்னைக் கண்டவர்கள் சட்டென்று விலகிச் செல்லத் தொடங்கினார்கள். எனக்கே அது ஒரு புதிய அனுபவம்தான். குடலைப் புரட்டும் துர்நாற்றத்தை அதற்குமுன் நான் அனுபவித்ததில்லை. சில விநாடிகள் சிரமமாக இருந்தது. ஆனால் கண்டிப்பாக உயிர் போய்விடாது என்று நினைத்தேன்.

சாக்கடையை விட்டு வெளியே வந்து சுற்றுமுற்றும் பார்த்தேன். பேருந்து நிலையத்துக்குள் ஒரு குடிநீர்க் குழாய் இருந்தது நினைவுக்கு வந்தது. நேரே அதை நோக்கிச் சென்றேன். வழியில் என்னைக் கண்ட அத்தனை பேரும் விலகி ஓடினார்கள். குருநாதர் சொன்னது சரிதான் என்று தோன்றியது. அதனைக் காட்டிலும் ஓர் உன்னதமான மருந்து அந்தச் சமயத்தில் எனக்கு வேறு இருந்திருக்க முடியாது என்று பட்டது. நான் அந்தக் குடிநீர்க் குழாயில் தண்ணீர் பிடித்து முகத்தைக் கழுவி, ஆடைகளையும் சுத்தம் செய்யத் தொடங்கியபோது வினோத் பார்த்துவிட்டான்.

‘டேய் அங்கே பார்!’ என்று வினய்க்கும் என்னைக் காட்டினான். இருவரும் இருந்த இடத்தில் இருந்து எழுந்து என்னை நோக்கி ஓடி வந்தார்கள்.

என்ன என்ன என்று வினய் பதற்றப்பட்டான்.

‘ஒன்றுமில்லை வினய். சற்று உதவி செய். தண்ணீர் பிடித்து என் மீது ஊற்று’ என்று சொன்னேன்.

அதற்குள் வினோத் ஒரு கடைக்கு ஓடிச்சென்று ஒரு தகர டப்பாவை வாங்கி வந்திருந்தான். அதில் தண்ணீரைப் பிடித்து என் மீது கொட்டினான். அவன் தண்ணீரைக் கொட்டக் கொட்ட, வினய் என் மீது படிந்திருந்த சாக்கடைக் கழிவுகளைக் கையால் தேய்த்து சுத்தம் செய்தான்.

அது முடிய ஐந்து நிமிடங்கள் ஆயின. வினோத் தன் தோள் பையில் இருந்து ஒரு சோப்பை எடுத்துக் கொடுத்தான். அதையும் தேய்த்துக் குளித்தேன். அவன் தனக்கென எடுத்துவந்திருந்த ஒரு மாற்று உடை அவனிடம் இருந்தது. அதைக் கொடுத்து என்னை அணிந்துகொள்ளச் சொன்னான். ஆயிரம் பேர் நடமாடிக்கொண்டிருந்த பேருந்து நிலையத்தில் சற்றும் வெட்கம் கொள்ளாமல் என் ஜிப்பாவையும் குர்த்தாவையும் அவிழ்த்து எறிந்துவிட்டு வினோத்தின் ஜிப்பாவையும் வேட்டியையும் அணிந்துகொண்டேன். இப்போது அவர்கள் இருவரையும் பார்த்துச் சிரித்தேன்.

‘என்ன ஆயிற்று?’ என்று வினய் கேட்டான்.

‘ஒன்றுமே இல்லை. வா’ என்று அழைத்துக்கொண்டு மீண்டும் நாங்கள் அமர்ந்திருந்த இருக்கைக்கே வந்தேன்.

‘நீ எங்கே கிளம்பிப் போனாய்? ஏன் சாக்கடையில் விழுந்தாய்?’ என்று வினோத் கேட்டான்.

‘மீண்டும் விழுந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்’ என்று பதில் சொன்னேன். அது அவனுக்குப் புரிந்திருக்காது என்று தோன்றியது.

யோசித்துப் பார்த்தால், நான் அவ்வளவு பதற்றமடைந்ததற்குக் காரணம் வினோத் விவரித்த அவனது அனுபவங்கள்தாம். ஐயோ என்று ஒரு கணம் மனத்துக்குள் கதறிவிட்டபோதுதான் சுதாரித்துக்கொண்டேன். நான் சன்னியாசி ஆனதுபோல அத்தனை சுலபமாக இன்னொருவர் ஆகியிருக்க முடியாது என்பதே உண்மை. கடைசி வரை போராடி, தனக்குத்தானே தீட்சை அளித்துக்கொண்ட வினய், இன்றுவரை அது பற்றிய குற்ற உணர்வில் தவிப்பதுகூட எனக்குப் பெரிதாகப் படவில்லை. கிருஷ்ணனால் அலைக்கழிக்கப்பட்ட கதையை வினோத் சொன்னபோதுதான் நான் மனம் நெகிழ்ந்து போனேன். வினய்யை அவன் கடைத்தேற்றுவதற்கு முன்னால் அவனுக்கு நான் என்னவாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதிர்ஷ்டவசமாக குருநாதர் சொன்ன வைத்தியம் நினைவுக்கு வந்து அதைச் செயல்படுத்தியதால் சற்று நிதானமடைந்தேன். என் நாசிக்குள் இன்னமும் அந்தச் சாக்கடையின் நெடி அடித்துக்கொண்டே இருந்தது. அது இருக்க வேண்டியதுதான் என்று தோன்றியது. அது இருக்கும்வரை நான் மீண்டும் ஒருமுறை சலனமடைய மாட்டேன் என்று சொல்லிக்கொண்டேன்.

நாங்கள் அந்தப் பேருந்து நிலைய இருக்கையிலேயே அமர்ந்திருந்தோம். இரண்டு மணி நேர இடைவெளியில் திருப்போரூர் செல்லும் பேருந்துகள் நான்கும், கோவளம் செல்லும் பேருந்துகள் இரண்டும் கிளம்பிச் சென்றதைப் பார்த்தோம். ஆனால் ஏறத் தோன்றவில்லை. அன்றைக்குச் செவ்வாய்க்கிழமை. வியாழக்கிழமை இரவுதான் அம்மா காலமாவாள் என்று அண்ணா சொல்லியிருந்ததாக வினோத் சொன்னது ஒரு காரணமாயிருக்கலாம். எப்படி யோசித்துப் பார்த்தாலும் ஐயோ என்று பதறித் துடித்துக்கொண்டு வீட்டுக்கு ஓடும் நிலையில் நாங்கள் மூவருமே இல்லை என்பது புரிந்தது. இதை வினய்யிடம் குறிப்பிட்டு, ‘சந்தேகப்படாதே. நீ ஒரு சன்னியாசிதான் என்பதை நிரூபிக்க இந்த ஒரு காரணமே போதும்’ என்று சொன்னேன். அவன் சிரித்தான்.

சட்டென்று பேச்சை மாற்றி, ‘உன் கிருஷ்ணன் அத்தனைக் கொடூரமானவனா? எப்படி அவனைச் சகித்துக்கொண்டு இன்னமும் சுமந்துகொண்டிருக்கிறாய்?’ என்று வினோத்திடம் கேட்டான். அவன் புன்னகை செய்தான். ஆனால் பதில் சொல்லவில்லை.

எனக்கே அது வியப்புத்தான். திருமணத்துக்கு முதல் நாள் இரவு அவனது வாழ்வின் புதிய அத்தியாயம் ஆரம்பமாகியிருக்கிறது. அன்றைக்கு ஜானவாச ஊர்வலமெல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்து படுத்தபோது வினோத் உண்மையில் மிகுந்த மகிழ்ச்சியும் கிளுகிளுப்பும் கொண்டிருந்தான். விடிந்தால் திருமணம். புதிய மனைவி. புதிய வாழ்க்கை. தானும் மகிழ்ந்து, அம்மா அப்பாவையும் மகிழ்ச்சியில் ஆழ்த்த அவன் தேர்ந்தெடுத்திருந்த சிறந்த உபாயம். எப்படியாவது சிரமப்பட்டு ஒரு எம்.ஏ., எம்.எட்., முடித்துவிட்டு அரசுப் பள்ளியில் ஆசிரியராகிவிட வேண்டும் என்று அவன் அப்போது நினைத்தான். அது அவனுக்கு முடியாத காரியமும் அல்ல. சித்ரா நிச்சயமாக அதற்கு ஒத்துழைப்பதாகச் சொல்லியிருந்ததும் அவனுக்கு மானசீக பலத்தைத் தந்திருந்தது.

அதையெல்லாம் எண்ணிக்கொண்டுதான் அவன் உறங்கச் சென்றான். அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் எழுப்பிவிடுவேன் என்று அம்மா சொல்லியிருந்தாள். அதற்குள் சிறிது தூங்கிவிடுவது நல்லது என்றே அவனுக்குத் தோன்றியது. படுத்த சில நிமிடங்களில் தூங்கியும் விட்டான். நள்ளிரவு தாண்டி அரை மணி நேரம் ஆகியிருக்கும். சட்டென்று அவனை யாரோ தொட்டு எழுப்புவது போலிருந்தது. வினோத் கண் விழித்துப் பார்த்தபோது அறைக்குள் யாருமில்லை. விளக்கைப் போட்டுப் பார்த்தான். ஒன்றுமேயில்லை. மீண்டும் விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தான்.

இப்போது மீண்டும் யாரோ தொட்டு எழுப்புவது போன்ற உணர்வு ஏற்பட, திடுக்கிட்டுக் கண் விழித்துப் பார்த்தான். யாருமில்லை. வினோத்துக்குச் சிறிது அச்சமாகிவிட்டது. ‘யார்? யாரது?’ என்று குரல் கொடுத்துப் பார்த்தான். பதில் இல்லை. எழுந்து சென்று கதவைத் திறந்து மாமாவின் பக்கத்தில் படுத்துக்கொண்டுவிடலாமா என்று அவன் நினைத்த கணத்தில் அறைக்குள் யாரோ வத்திக்குச்சி கிழிப்பது போன்றதொரு சத்தம் வந்தது. ஒரு ஒளிப்புள்ளி. புள்ளிதான் அது. ஆனால் தோன்றிய கணத்தில் ஒரு பூதாகாரப் பந்தாக உருப்பெற்று சுவரின் மீது படர்ந்து உத்தரத்தில் ஏறித் தொங்கியது. வினோத்துக்கு மிகுந்த அதிர்ச்சியாகிவிட்டது. ஐயோ என்று கத்த நினைத்த கணத்தில் ஒரு ஓங்கார சத்தம் எழுந்து அறையெங்கும் நிறைந்தது. அவன் தன் மனத்துக்குள் சிவ சிவ சிவ என்று ஜபிக்கத் தொடங்கினான். சில விநாடிகள்கூட ஆகியிருக்காது. அவனையறியாமல் சிவநாமம் மாறி கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண என்று உச்சரிப்பு வேறு விதமானது.

அதுவரைதான் அவனுக்கு நினைவிருந்தது. அதன்பின் அந்த ஒளிக்கோளம் மெல்லக் கீழிறங்கி வந்து அவனைத் தொட்டது. ‘ஹே கிருஷ்ணா...’ என்று அலறிக்கொண்டு வினோத் விழுந்து சேவித்தான். அந்த ஒளி தரையில் படர்ந்து அவன் மார்பு வரை ஊர்ந்து அப்படியே அவனை மெல்லத் தூக்கியது. தரையைவிட்டு ஓரடி உயரத்தில் தான் மிதந்துகொண்டிருப்பதை வினோத் கண்டான். பரவசத்தில் அவன் கண்கள் தாரை தாரையாக நீர் சொரிந்துகொண்டே இருக்க, கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண என்று ஓயாமல் உதடுகள் உச்சரித்துக்கொண்டே இருந்தன.

சட்டென்று அந்த ஒளிப் பாளம் ஒரு குச்சியைப் போல ஒல்லியாகி நின்றது. அந்தரத்தில் இங்குமங்கும் ஆடி மிதந்தபடி அவனைச் சுற்றிச் சுற்றி வந்தது. வினோத்துக்குத் தன்னிலை மறந்துபோனது. கிருஷ்ண ஜபத்தை விடாமல் செய்தபடி அவனும் அந்த ஒளிக் குச்சியைச் சுற்றி வர ஆரம்பித்தான். எவ்வளவு நேரம் அப்படி செய்திருப்பான் என்று தெரியாது. இறுதியில் ‘வா’ என்ற ஒற்றைச் சொல் ஒன்று எங்கிருந்தோ ஒலித்தது. யாரும் கைவைத்துத் திறக்காமல் அறைக்கதவு தானே திறந்துகொள்ள அந்த ஒளிக் குச்சி வெளியேறிச் சென்றது. வினோத் அதைப் பின்பற்றிச் செல்லத் தொடங்கினான்.

(தொடரும்)

http://www.dinamani.com/junction/yathi/2018/aug/22/113-வா-2985084.html

Link to comment
Share on other sites

114. ஒளியின் வழி

 

மூன்று பகல்கள், நான்கு இரவுகள். வினோத் நடந்துகொண்டே இருந்தான். அவனுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த அந்த ஒளிக்கோடு ஒரு கட்டத்தில் அவன் கண்ணைவிட்டு மறைந்துவிட்டது. ஆனாலும் தனக்கு வழி தெரியும் என்று அவனுக்குத் தோன்றியது. ஒரு தீர்மானத்துடன் செலுத்தும் சக்தியைப்போல அவன் மனமே அவனை வழிநடத்திப் போய்க்கொண்டிருந்தது. இடையில் அவன் எங்கும் நிற்கவில்லை. உணவு உட்கொள்ளத் தோன்றவில்லை. நீர் அருந்தவும் அவசியம் இருக்கவில்லை. தன் உணர்வு முற்றிலும் இல்லாமல் போய் அவன் மனமும் மூளையும் முற்றிலும் பாதங்களுக்கு இறங்கி அவற்றைச் செலுத்திக்கொண்டிருந்தன. விடிந்தால் தனக்குத் திருமணம் என்பதோ, தன்னைக் காணாமல் வீட்டில் தேடுவார்கள் என்பதோ அவன் நினைவில் அறவே இல்லை. கனவுகளுடன் காத்திருந்த சித்ராவைக் குறித்த எந்த எண்ணமும் எழவில்லை. ஊரே கூடித் தன் வீட்டின் முன் நின்று சபிக்கும் என்று எண்ணிப்பார்க்க முடியவில்லை. அவன் சிந்தை முழுதும் கிருஷ்ணன் நிறைந்திருந்தான். கிருஷ்ணன் அவன் பாதங்களில் அமர்ந்துகொண்டு அவனைச் செலுத்திக்கொண்டிருந்தான்.

நாள்களும் நேரமும் பகலிரவும் முற்றிலும் மறந்து நடந்துகொண்டே இருந்தவன் ஏதோ ஓரிடத்தில் மயங்கி விழுந்தான். எவ்வளவு நேரம் அவன் மயக்கத்தில் இருந்தான் என்று அவனுக்குத் தெரியாது. கண் விழித்தபோது மிகவும் பசித்தது. சுற்றுமுற்றும் பார்த்தான். அது ஒரு நெடுஞ்சாலை. கண்ணுக்கெட்டிய தொலைவில் கடைகள் ஏதும் இல்லை. மனித நடமாட்டமும் தென்படவில்லை. தான் எங்கே வந்திருக்கிறோம் என்று அறிந்துகொள்ள விரும்பினான். இன்னும் சிறிது தூரம் நடக்கலாம் என்று முடிவு செய்தபோது, எந்தப் பக்கம் இருந்து வந்தோம் என்ற குழப்பம் ஏற்பட்டது. சட்டென்று அங்கேயே அமர்ந்து கண்களை மூடி கிருஷ்ண ஜபம் செய்யத் தொடங்கினான். நூற்றெட்டு முறை ஜபித்துவிட்டு எழுந்ததும் அவனது பாதங்கள் மீண்டும் அவனைச் செலுத்திக்கொண்டு போயின. ஆனால் இப்போது அவனுக்குக் கால் வலித்தது. களைப்புத் தெரிந்தது. பசி குதறிப் போட்டுக்கொண்டிருந்தது. ஒரு நெடுஞ்சாலை உணவகம் கண்ணில் பட்டது. உணவகத்தின் வெளியே நான்கைந்து பேருந்துகள் நின்றுகொண்டிருந்தன.

வேறெதையும் சிந்திக்காமல் அவன் நேரே உணவகத்தினுள் நுழைந்து அமர்ந்தான். காணாதது கண்டாற்போல எட்டு இட்லிகள் சாப்பிட்டான். நிறையத் தண்ணீர் குடித்தான். நேரே கல்லாவுக்கு வந்து, தன்னிடம் உண்டதற்குப் பணமில்லை என்று சொன்னான். அங்கிருந்த நான்கைந்து பேர் அவனை இழுத்துப்போட்டு அடி அடி என்று அடித்தார்கள். வினோத் பொறுமையாக அடிகளை வாங்கிக்கொண்டான். அவன் சுருண்டு விழுந்துவிடுவான் என்று தெரிந்தபோது உணவக முதலாளி, ‘சனியனை விட்டுவிடுங்கள்’ என்று சொன்னார். அவன் அந்த நபருக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தான். மீண்டும் நடக்க ஆரம்பித்தான்.

மேலும் இரண்டு நாள்கள் நடந்த பின்பு அவன் கோயமுத்தூரை அடைந்தான். கண்ணில் தென்பட்ட திருமண மண்டபத்தில் இருந்து நாகஸ்வர ஓசையும் மேளச் சத்தமும் கேட்டது. வினோத் அந்த மண்டபத்துக்குள் நுழைந்து நேரே உணவு அரங்கத்துக்குச் சென்றான். திருப்தியாக அமர்ந்து சாப்பிட்டான். வெளியே வரும்போது வெற்றிலை பாக்கு கவர் ஒன்று கொடுத்தார்கள். அதில் ஒரு தேங்காயும் இருந்தது. அதை அடுத்த வேளைக்கு வைத்துக்கொண்டான். ஒரு லாரி டிரைவரிடம் தன்னிடம் பணம் இல்லாததைச் சொல்லி, எப்படியாவது தன்னை குருவாயூருக்குக் கொண்டு சேர்த்துவிட முடியுமா என்று கேட்டான். இரக்க சுபாவம் கொண்ட அந்த டிரைவர், அவனை குருவாயூர் வரை செல்லும் தனது சக டிரைவர் நண்பனின் லாரியில் ஏற்றி அனுப்பிவைத்தார்.

வினோத் குருவாயூரைச் சென்றடைந்தபோது நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது. தன்னை ஏற்றிவந்து இறக்கிவிட்ட லாரி டிரைவருக்கு நன்றி சொல்லிவிட்டு அவன் கோயிலை நோக்கி நடந்தான். இதுதான், இதுதான் என்று அவன் மனத்துக்குள் ஒரு குரல் ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்தக் கணமே பாய்ந்து சென்று கிருஷ்ணனின் பாதாரவிந்தங்களைப் பற்றிக்கொண்டு அவனோடே கரைந்து காணாமலாகிவிட வேண்டும் என்ற வெறி உண்டானது. தன் சக்தியெல்லாம் திரட்டிக்கொண்டு அவன் கோயிலை நோக்கி ஓடத் தொடங்கினான். பத்து நிமிடங்கள் ஓடியபின்பு கோயில் கண்ணுக்குத் தென்பட்டது. வழியெங்கும் இருந்த கடைகளை மூடியிருந்தார்கள். பக்தர்கள் வெகு சாதாரணமாகச் சாலை ஓரங்களிலேயே குடும்பம் குடும்பமாகப் படுத்துக் கிடந்தார்கள். கோயிலை நெருங்கிய பின்புதான் அவனுக்கு இந்நேரம் கோயில் நடை சாத்தியிருக்கும் என்பதே நினைவுக்கு வந்தது. வேறு வழியின்றி அவனும் ஒரு கடை வாசலில் படுத்தான். நன்றாக உறங்கிவிட்டான்.

மறுநாள் காலை விடிந்து எழுந்தபோது அவனுக்குள் இருந்த வெறி சற்று மட்டுப்பட்டு கனிந்த பக்தி ஒன்றே மேலோங்கியிருந்தது. யாரோ ஒரு பக்தரை நிறுத்தி, தனக்கு ஒரு வேட்டி மட்டும் வாங்கித் தர முடியுமா என்று கேட்டான். அவர் சம்மதித்து, அவனை ஒரு கடைக்கு அழைத்துச் சென்று ஒரு வேட்டி வாங்கிக் கொடுத்தார். வினோத் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, ருத்ர தீர்த்தத்தை நோக்கிச் சென்றான். நிம்மதியாக நீரில் இறங்கிக் குளித்து எழுந்தான். படிக்கட்டில் கிடந்த ஒரு கோபி சந்தனத் துண்டை எடுத்துக் குழைத்து நெற்றியில் இட்டுக்கொண்டான். புதிய வேட்டியை அணிந்துகொண்டு பழைய உடைகளைத் தூக்கிப் போட்டான். கோயிலுக்குள் செல்ல வரிசையில் நிற்கும் கூட்டத்தோடு சென்று தானும் நின்றுகொண்டான். அன்று காலை எட்டு முப்பதுக்கு அவனுக்கு குருவாயூரப்பன் தரிசனம் கிடைத்தது. சன்னிதியில் அவன் தன்னிலை மறந்து கிருஷ்ணா கிருஷ்ணா என்று கதறியதை சுற்றி இருந்தவர்கள் வினோதமாகப் பார்த்தார்கள். தன்னை அதுவரை செலுத்திவந்த ஒளி இப்போது மீண்டும் தோன்றி அப்படியே தன்னை ஏந்தி எடுத்துச்சென்று கிருஷ்ணனுடன் சேர்த்துவிடாதா என்று மிகவும் ஏங்கினான். ஆனால் அவ்வாறு ஏதும் நிகழவில்லை. ஆள்கள் பிடித்து இழுத்து அவனை மற்றவர்களோடு வெளியே தள்ளிவிட்டார்கள்.

அன்று முழுதும் அவன் கோயிலுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்தான். பிரசாத வரிசையில் நின்று பிரசாதம் வாங்கி உணவாக உட்கொண்டான். இந்த உலகத்திலேயே தனக்கு மிகுந்த பாதுகாப்பான இடம் அந்தக் கோயில்தான் என்று அவன் மனத்துக்குள் ஓர் எண்ணம் எழுந்தது. காலம் முழுதும் அங்கேயே இருந்து தீர்த்துவிட முடிவு செய்துகொண்டு, மாலை மீண்டும் ருத்ர தீர்த்தக் கரைக்குச் சென்றான். அங்கே அவன் க்ஷேத்ரக்ஞ தாஸ் கோஸ்வாமி என்ற சன்னியாசியைச் சந்தித்தான்.

சுவாமிஜி பாலக்காட்டைச் சேர்ந்தவர். ஆலத்தூரில் பிறந்து வளர்ந்து அங்கேயே படிப்பை முடித்துவிட்டு கிருஷ்ண பக்தி இயக்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்டவர். குளக்கரையில் வினோத் அவரைப் பார்த்தபோது அவனையறியாமல் அவர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. சற்றும் தயங்காமல் அவர் அருகே சென்று நெடுஞ்சாண்கிடையாக அவர் காலில் விழுந்தான். ஆசி சொல்லி எழுப்பிய சுவாமி அவனைப் பற்றி விசாரித்தார்.

‘என்னைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை சுவாமி. எனக்கு கிருஷ்ணனைக் காட்டித் தருவீர்களா?’ என்று வினோத் கேட்டான்.

அன்றைக்கு நெடுநேரம் அவனோடு பேசிக்கொண்டிருந்த சுவாமிஜி, தான் கிளம்பும்போது அவனைத் தன்னோடு அழைத்துச் சென்றார். வினோத் சில மாதங்கள் பெங்களூரில் தங்கியிருந்தான். அதற்கு முன்புவரை ஒரு வாடகைக் கட்டடத்தில் இயங்கிவந்த கிருஷ்ண பக்தர்கள், அந்த ஆண்டுதான் பெங்களூர் வளர்ச்சிக் கழக அதிகாரிகளைச் சந்தித்து கிருஷ்ணருக்குக் கோயில் கட்ட ஓர் இடம் ஒதுக்கித் தரும்படிக் கேட்டார்கள். அந்த ஆண்டு ஆகஸ்டு மாதத் தொடக்கத்தில் கிருஷ்ணருக்கு அங்கே ஓர் இடம் கிடைத்துவிட்டது. பெங்களூர் நகரத்தின் வடக்குப் பகுதியில் அமைந்திருந்த ஒரு சிறு குன்றை அதிகாரிகள் கிருஷ்ணருக்காக விட்டுக்கொடுக்க முன்வந்தார்கள். ஏழு ஏக்கர் பரப்பளவுள்ள வெறும் பாறைக் குன்று. மருந்துக்கும் அங்கே பசுமை கிடையாது. ‘முடிந்தது இந்த இடம்தான். என்ன செய்ய முடியுமோ செய்துகொள்ளுங்கள்’ என்று அதிகாரிகள் சொன்னார்கள்.

அந்தக் குன்றை கிருஷ்ணனின் பேராலயமாக மாற்றும் முயற்சியில் பெங்களூர் பக்தர்கள் ஈடுபட ஆரம்பித்தபோது, வினோத் தன்னை அந்தப் பணியில் முற்றுமுழுதாக ஈடுபடுத்திக்கொண்டான். ஒரு தன்னார்வலனாக அவனது ஈடுபாடும் அர்ப்பணிப்பும் க்ஷேத்ரக்ஞ தாஸ் கோஸ்வாமிக்கு மிகவும் பிடித்துப்போனது. அடுத்த வருடம் இலங்கைக்கு ஒரு நீண்ட சுற்றுப்பயணம் புறப்பட்ட சன்னியாசிகள் குழுவோடு, பிரம்மச்சாரி உதவியாளர்களுள் ஒருவனாக வினோத் தேர்ந்தெடுக்கப்பட்டான். வெள்ளை உடுப்பும் சிறு சிகையும் துளசி மாலையும் கோபி சந்தனமும் அணிந்து அவன் டோலக் அடித்துக்கொண்டும் கிருஷ்ண பஜன் பாடிக்கொண்டும் சன்னியாசிகளோடு சேர்ந்து சென்னை வந்தான். வீட்டைக் குறித்த நினைவு அவனுக்கு அப்போது அறவே இல்லை. ஓரிரவு மட்டும் பிராட்வே ஆர்மீனியன் தெருவில் ஒரு இல்லத்தில் தங்கியிருந்துவிட்டு மறுநாள் புறப்பட்ட கப்பலில் அவர்கள் குழு இலங்கைக்குக் கிளம்பியது.

அந்தக் கப்பல் கொழும்பு சென்றடைந்தபோது, அவனுக்கு மீண்டும் அந்தப் பேரொளியின் தரிசனம் கிடைத்தது.

(தொடரும்)

http://www.dinamani.com/junction/yathi/2018/aug/23/114-ஒளியின்-வழி-2985400.html

Link to comment
Share on other sites

115. இருவர்

 

 

தன் வாழ்நாளில் மீண்டும் ஒருமுறை அந்தப் பேரொளியின் தரிசனம் கிட்டுமா என்று வினோத் அந்த முதல் தரிசனம் நிகழ்ந்த கணத்தில் இருந்து ஏங்கிக்கொண்டிருந்தான். இன்னொரு முறை அப்படியொரு தரிசனம் கிடைக்குமானால், கண்டிப்பாக ஒளியின் ஊடே கிருஷ்ணனைத் தரிசித்துவிட முடியும் என்று அவன் மனத்தில் உறுதியாகத் தோன்றியது. விழித்திருந்த நேரமெல்லாம் அதைக் குறித்து மட்டுமே அவன் யோசித்துக்கொண்டிருந்தான். ஆனால் என்ன யோசித்தும் அந்த முதல் தரிசன அனுபவத்தை மீளக் கொண்டுவர முடியவில்லை. இடைவிடாது பக்தி செய்வதன் மூலம் மட்டுமே இறைவனை அறிய முடியும் என்று திரும்பத் திரும்ப அவனுக்குச் சொல்லித் தரப்பட்டிருந்தது. அவன் அதைத்தான் செய்துகொண்டிருந்தான். எப்போதும் கிருஷ்ண ஜபம். செய்கிற ஒவ்வொரு செயலையும் கிருஷ்ணார்ப்பணம் என்று எண்ணியே செய்தான். உண்ணும் உணவு, பருகும் நீர், சுவாசிக்கும் காற்றுவரை கிருஷ்ணனைத் தவிர வேறில்லை என்பதில் அவனுக்குச் சற்றும் சந்தேகமில்லை. யாருமற்ற பொழுதுகளில் கிருஷ்ண ஸ்மரணை அதிகரித்து, சமயத்தில் அழவும் ஆரம்பித்துவிடுவான். எப்படியாவது உன்னைப் பார்த்துவிட வேண்டும் கிருஷ்ணா என்று தனக்குள் கதறுவான். திருமணத்துக்கு முதல் நாள் தனக்குக் காட்சி கொடுப்பதற்காக வந்துவிட்டு என்ன காரணத்தாலோ கிருஷ்ணன் வேண்டாம் என்று மனத்தை மாற்றிக்கொண்டு போய்விட்டதாக அவன் நினைத்தான். இன்னொரு முறை ஒளிக்கோளம் தென்பட்டால் பாய்ந்து அதன் உள்ளே புகுந்துவிட வேண்டும் என்று அப்போதே நிச்சயம் செய்துகொண்டான்.

கொழும்பு துறைமுகத்தில் அவர்கள் சென்ற கப்பல் நின்றதும், பயணிகள் அனைவரும் முதலில் இறங்கிய பின்பு சன்னியாசிகள் தனியே மொத்தமாக இறங்கினார்கள். மொத்தம் எட்டு சன்னியாசிகள். அவர்களோடு பன்னிரண்டு பிரம்மச்சாரிகள். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் மிகவும் தீவிரமாக நடந்துகொண்டிருந்த சமயம். பாதுகாப்பு கெடுபிடிகளும் பரிசோதனைகளும் அதிகம் இருந்தன. மலையகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியால்தான் அவர்களால் கொழும்புவுக்கு வர முடிந்திருந்தது. இலங்கையில் ஒரு கிருஷ்ணர் ஆலயத்தை எழுப்புவதற்கான சாத்தியங்களை ஆராய்வது திட்டம்.

வினோத் அன்றிரவு சக பிரம்மச்சாரிகளுடன் ஒரு பள்ளிக்கூடக் கட்டடத்தில் தங்கினான். என்றோ அது பள்ளிக்கூடமாக இருந்திருக்க வேண்டும். அப்போது அது செயல்பாட்டில் இல்லை. உடைந்த ஒரு சில மேசை நாற்காலிகள் மட்டுமே அங்கு எஞ்சியிருந்தன. அந்தப் பள்ளிக்கூடத்தை நடத்திக்கொண்டிருந்தவர், இழுத்து மூடிவிட்டு லண்டனுக்குப் போய்விட்டதாகச் சொன்னார்கள். கிருஷ்ணரின் சேவையில் இருப்பவர்களுக்கு சுக சௌகரியங்கள் ஒரு பொருட்டல்ல. அவர்கள் அன்றிரவு பிரெட்டும் வாழைப்பழமும் மட்டும் சாப்பிட்டுவிட்டு அங்கேயே தரையில் துணி விரித்துப் படுத்தார்கள்.

அதிகாலை மூன்று மணிக்கு வினோத்துக்கு யாரோ எழுப்புவது போன்ற உணர்வு ஏற்பட்டது. திடுக்கிட்டுக் கண் விழித்துப் பார்த்தபோது அந்த ஒளிக்கோளம் அவன் படுத்திருந்த அறைக்கு வெளியே அந்தரத்தில் மிதந்துகொண்டிருந்தது. வினோத் பரவசமாகிப் போனான். உடனே எழுந்து ‘கிருஷ்ணா..’ என்று கத்திக்கொண்டு அதனை நோக்கிப் பாய்ந்தான். முதல்முறை நிகழ்ந்தது போலவே இப்போதும் அந்த ஒளிக்கோளம் மெல்ல நகர்ந்து போக ஆரம்பித்தது. வினோத் அதன் பின்னாலேயே நடக்கத் தொடங்கினான். அவன் எவ்வளவு வேகமாக ஓடியும் அந்தக் கோளத்தை அவனால் நெருங்க முடியவில்லை. அவன் கிட்டே போகும்போதெல்லாம் அது பத்தடி தள்ளிப் போய் இருந்தது. ‘கிருஷ்ணா, இந்த முறை என்னைக் கைவிடாதே. என்னை ஏற்றுக்கொண்டுவிடு. உன்னோடு சேர்த்துக்கொண்டுவிடு’ என்று கதறியபடியே வினோத் அதைத் தொடர்ந்துகொண்டிருந்தான்.

நெடுந்தூரம் அவன் நடந்து போய்க்கொண்டே இருந்தான். ஒளியும் நிற்காமல் மிதந்து சென்றுகொண்டே இருந்தது. முற்றிலும் சுய நினைவு அழிந்து அந்த ஒளிக் கோளம் சென்ற திக்கில் அவன் போனான். தோட்டமா, காடா என்று சரியாகத் தெரியாத ஒரு பகுதிக்குள் அது சென்றது. வினோத்தும் விடாமல் அங்கே சென்று சேர, இறுதியில் ஒரு சிறு கோயிலின் பின்புறமாகச் சென்று அந்த ஒளி மறைந்துவிட்டது. வினோத் அதிர்ச்சியானான். கிருஷ்ணா கிருஷ்ணா என்று கதறியபடியே கோயிலைச் சுற்றி வந்து முன்புறம் வந்தான். சன்னிதி மூடியிருந்தது. ஆனால் உள்ளே பார்க்கும்படியாகக் கம்பிக் கதவுதான் போடப்பட்டிருந்தது. சிறியதொரு விளக்கு மட்டும் அங்கே எரிந்துகொண்டிருக்க, வினோத் உள்ளே பார்த்தபோது ஒரு சிவ லிங்கம் தெரிந்தது.

அந்தக் கணத்தில் அவனுக்கு சுய நினைவு மீண்டது. இது என்ன? கிருஷ்ணன் எதற்காக என்னை ஒரு சிவன் கோயிலுக்கு அழைத்து வந்து விட்டிருக்கிறான்? அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. சட்டென்று காவிரி வெள்ளத்தில் தனக்குக் கிடைத்த சிவலிங்கத்தை நினைத்துக்கொண்டான். அந்த லிங்கம் கிடைத்த நாளாக அவன் சிவ நாமத்தை மட்டுமே உச்சரித்துக்கொண்டிருந்தான். திருமணத்துக்கு முதல் நாள் கண்ட ஒளி, கிருஷ்ணன்தான் என்று அவன் மனத்தில் குறிப்பாக ஒன்று விழுந்ததில் இருந்துதான் அவன் கிருஷ்ணனை நினைக்க ஆரம்பித்திருந்தான். சற்றும் எதிர்பாராதவிதமாக கிருஷ்ணன் ஏன் தன்னை சிவன் சன்னிதியில் கொண்டு நிறுத்தியிருக்கிறான்?

வினோத்துக்கு ஒன்றுமே புரியவில்லை. மிகவும் குழப்பமாக, தலை சுற்றுவதுபோல் இருந்தது. மனத்துக்குள் ஒரு மெல்லிய குற்ற உணர்வு எழ ஆரம்பித்தது. சிவனை மறந்தது தவறோ? கிருஷ்ணன் அதைச் சுட்டிக்காட்டுகிறானோ? ஒருவேளை சிவனேதான் ஒளியாக முதலில் வந்தானோ? இப்போது வந்தவனும் அவனேதானா? அப்படியானால் அன்றைக்கு ஒளியைக் கண்ட கணத்தில் இது கிருஷ்ணன் என்று ஏன் மனத்தில் தோன்ற வேண்டும்?

மெல்ல மெல்ல அவனது பதற்றம் அதிகரிக்க ஆரம்பித்தது. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? சிவனுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டுத் திரும்பிப்போய் அந்தப் பழைய பள்ளிக்கூடக் கட்டடத்தில் நண்பர்களோடு படுத்துவிடலாம். அல்லது இந்தச் சம்பவத்தின் குறியீடு என்னவாக இருக்கும் என்று உட்கார்ந்து சிந்திக்கத் தொடங்கலாம்.

இரண்டாவதைச் செய்யலாம் என்று நினைத்து அங்கேயே அவன் அமர்ந்துவிட்டான். தெய்வம் ஒன்று என்பதில் அவனுக்குச் சந்தேகம் இல்லை. ஆனால் அது கிருஷ்ணன்தான் என்று அன்றுவரை நினைத்துக்கொண்டிருந்தான். கிருஷ்ண அனுபவம் ஏற்படுவதற்கு முன்பு அது சிவமாக மட்டுமே இருந்ததையும் நினைவுகூர்ந்தான். லிங்கம் கிடைத்தபோது உண்டான பரவசமும் சிவ பக்தியும் இந்தக் கோயிலுக்கு வந்து சேர்ந்தபோது ஏன் தனக்கு உருவாகவில்லை என்று நினைத்துப் பார்த்தான். மனமெங்கும் கிருஷ்ணன் வியாபித்திருக்கும்போது சிவனைப் பெரிதாகக் கருதத் தோன்றாதது பற்றிய அச்சமும் தவிப்பும் அவனுக்கு ஏற்பட்டது. இது கிருஷ்ணன் தனக்கு வைக்கும் பரீட்சையாக இருக்குமோ என்று நினைத்தான். என்ன செய்து இதிலிருந்து விடுபட முடியும் என்று தெரியவில்லை.

திரும்பிச் சென்று நண்பர்களிடமும் மூத்த சன்னியாசிகளிடமும் தனது அனுபவத்தைச் சொல்லிக் கருத்துக் கேட்கலாமா என்று நினைத்தான். ஆனால் அவன் சொன்ன அந்த ஒளிப்பந்தின் கதையையே அவனோடு இருந்தவர்களுள் பலர் நம்பவில்லை. ‘இதோ பார் வினோத்! கிருஷ்ணன் என்பது ஒரு தத்துவம். தத்துவம் மட்டுமே. உருவமல்ல. நபரல்ல. உணரத் தொடங்கும்வரை மட்டுமே உருவத்துக்கு வேலை. உணர்ந்துவிட்டால் உருவம் பொருட்டல்ல. சைக்கிள் பழகும்போது யாராவது பிடித்துக்கொள்ள வேண்டியிருப்பது போலத்தான் அது’ என்று ஒரு சுவாமிஜி சொன்னார்.

‘ஆனால் நான் கண்ட ஒளிக்கோளம் உண்மை சுவாமிஜி’.

‘அது உன் பிரமையாக இருக்கலாம். அடிமனத்தில் இருந்த கிருஷ்ண தாகம் அதை எழுப்பி வெளியே கொண்டுவந்து நிறுத்தியிருக்கும்’ என்று அவர் சொன்னார்.

அவனுக்கு அப்போது அது புரியவில்லை. அவரோடு விவாதம் செய்யவும் விருப்பமில்லாமல் இருந்தான். அது ஒரு அனுபவம். அவனுக்கு நேர்ந்தது. அவனுக்கு மட்டும் நேர்ந்த அனுபவம். அதை எப்படி அடுத்தவருக்குப் புரியவைப்பது? புரியவைக்கத்தான் முடியுமா?

அதை நினைத்துப் பார்த்தவன், இந்தச் சம்பவத்தை இப்போது போய்ச் சொன்னால் மீண்டும் அதே போன்ற கருத்துகள்தாம் வரும் என்று நினைத்தான். பிரச்னை, அது கிருஷ்ணனா சிவனா என்பதுதானே தவிர, ஒரு ஒளி தன்னைத் திரும்பத் திரும்பத் தொட்டுத் திருப்புவதை இல்லை என்று சொல்லவே முடியாது.

நெடுநேரம் அவன் அந்த சிவன் சன்னிதியிலேயே அமர்ந்திருந்தான். ஏதாவது குறிப்பால் உணர்த்தப்படும் என்று எதிர்பார்த்தான். ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை. பொழுது விடிய ஆரம்பித்திருந்தது. விடியும்போதே மழையும் பெய்யத் தொடங்கியது. திரும்பிவிடலாம் என்று நினைத்தான். ஆனால் இந்தக் குழப்பம் தன்னைச் சாகும்வரை நிம்மதியாக இருக்க விடாது என்று தோன்றியது. என்னவானாலும் கிருஷ்ணன் செயல் என்று எண்ணிக்கொண்டு எழுந்தான்.

அவன் சற்றும் எதிர்பாராவிதமாகப் பின்னங்கழுத்தில் பொளேர் என்று யாரோ அறைந்தார்கள். கிருஷ்ணா என்று அலறிக்கொண்டு அவன் கீழே விழுந்தான். நெற்றி தரையில் மோதி ரத்தம் வந்தது.

(தொடரும்)

http://www.dinamani.com/junction/yathi/2018/aug/24/115-இருவர்-2986590.html

Link to comment
Share on other sites

116. கப்பல்

 

 

இருளில் ஒரு பூனையின் கண்களைப் போல அந்தக் கிழவியின் கண்கள் மின்னிக்கொண்டிருந்தன. ஆனால் அவள் பார்வையில் உணர்ச்சிகள் இல்லை. வெறியோ, கோபமோ இல்லை. அனைத்தையும் அந்த ஒரு அடியில் இறக்கிவைத்துவிட்டவள் போல அமைதியாக வினோத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். தடுமாறிக் கீழே விழுந்த வினோத், ஒன்றும் புரியாமல் மீண்டும் எழுந்து நின்றபோது அவள் சட்டென்று நடந்துபோக ஆரம்பித்தாள். இப்போது தான் என்ன செய்ய வேண்டும் என்று அவனுக்குத் தெரியவில்லை. அவளை அழைப்பதா, எதற்கு அடித்தாள் என்று கேட்பதா, அல்லது போகிறவளை அவள் வழியில் போகவிட்டுவிட்டுத் தன் இருப்பிடத்துக்குத் திரும்பிவிடுவதா என்று குழப்பமாக இருந்தது. அவள் சித்தம் கலங்கியவளாக இருக்கக்கூடும் என்று நினைத்தான். பத்தடி தூரம் நடந்து சென்றவள் ஒரு கணம் நின்று அவனைத் திரும்பிப் பார்த்தாள். இது வினோத் எதிர்பாராதது. ‘வா’ என்று அழைப்பது போலத் தலையை அசைத்தாள். போவதா, வேண்டாமா என்று தெரியாமல் மேலும் சில கணங்கள் யோசித்துவிட்டு, தன்னையறியாமல் அவள் பின்னால் நடக்கத் தொடங்கினான்.

விடியும்வரை அவள் நடந்துகொண்டே இருந்தாள். வினோத்தும் ஒன்றும் பேசாமல் அவள் பின்னால் போய்க்கொண்டிருந்தான். அவ்வப்போது அவன் பின்னால் வருகிறானா என்று அவள் திரும்பிப் பார்த்ததுடன் சரி. ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. தான் ஏன் பைத்தியம்போல அவள் பின்னால் போய்க்கொண்டிருக்கிறோம் என்று அவனுக்குக் குழப்பமாக இருந்தது. ஒரு கிழவி. வயதானவள். சித்தம் கலங்கியவளாக இருக்கலாம். அவள் தன்னை அடித்ததன் காரணத்தைக் கேட்டிருக்கலாம். அல்லது திருப்பித் தாக்கிவிட்டுப் போயிருக்கலாம். அதையும் செய்யாமலேகூடப் போயிருக்க முடியும். இந்த மூன்றையும் செய்யாமல் அவள் பின்னால் தான் ஏன் போய்க்கொண்டிருக்கிறோம் என்று அவனுக்குப் புரியவில்லை. இருப்பினும் அவளைப் பின்தொடர்ந்து போவதைத் தன்னால் தவிர்க்க முடியாது என்று நினைத்தான்.

நடந்துகொண்டே இருந்தவள் சூரிய உதய சமயத்தில் துறைமுகத்தை வந்து சேர்ந்தாள். திரும்பி வினோத்தைப் பார்த்தாள். இம்முறை அவன் நெருங்கும்வரை அசையாமல் நின்றிருந்தாள். அவன் அருகே வந்ததும் சிங்களத்தில் உரக்க ஏதோ சொன்னாள். அவனுக்கு அது புரியவில்லை. என்ன என்று கேட்டான். அவள் மீண்டும் சிங்களத்தில் ஏதோ சொன்னாள். முதல் முறை பயன்படுத்திய சொற்களைக் காட்டிலும் இம்முறை அதிக சொற்களை அவள் பேசினாள். வினோத்துக்கு அவள் பைத்தியம் இல்லை என்று தெரிந்தது. ஆனால் அவள் சொல்வதை விளங்கிக்கொள்ள முடியவில்லை. கையை ஆட்டி ஜாடை காட்டியபடி பேசினால்கூடப் புரிந்துகொள்ளச் சற்று வசதியாக இருக்கும். ஆனால் அவள் அப்படிச் செய்யவில்லை. கைகளை அசைக்காமல், முகத்தில் எந்த உணர்ச்சி பாவத்தையும் காட்டாமல் குரலில் மட்டும் ஏற்றத் தாழ்வுகளை வைத்து ஒலிபரப்பிக்கொண்டிருந்தாள்.

‘அம்மா, எனக்கு நீங்கள் பேசும் மொழி தெரியாது. தமிழ் தெரிந்தவன் நான். சிறிது ஆங்கிலமும் அறிவேன். இந்த இரு மொழிகளில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் பேசினால் என்னால் புரிந்துகொள்ள முடியும். அல்லது வேறு யாருடைய உதவியையாவது பெற்று நீங்கள் சொல்ல விரும்புவதை எனக்குத் தெரிவிக்கலாம்’ என்று அமைதியாகச் சொன்னான்.

இதற்கும் அவள் சிங்களத்திலேயே வேக வேகமாக ஏதோ பதில் சொன்னாள். வினோத் சுற்றுமுற்றும் பார்த்தான். உதவிக்கு யாராவது வருவார்களா என்பதே அவனது எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் ஒவ்வொருவரிடமும் சென்று ‘உங்களுக்குத் தமிழ் தெரியுமா?’ என்று கேட்கத் தயக்கமாக இருந்தது. யுத்த காலத்தில் அது சற்றுப் பொருத்தமற்ற வினாவாக இருக்கும் என்றும் தோன்றியது.

மேலும் சில நிமிடங்கள் அவனுக்கு இந்த அவஸ்தை நீடித்தது. ஒரு கட்டத்தில் அவள் மீண்டும் அவன் கன்னத்தில் பளாரென்று அறைந்து, மீண்டும் சிங்களத்தில் ஏதோ சொன்னாள். உண்மையிலேயே வினோத்துக்கு மிகவும் பரிதாபமாகப் போய்விட்டது. அவள் அடித்தது இம்முறை அவனுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. ஒரு மூதாட்டியைத் தான் ஏதோ ஒரு விதத்தில் அசௌகரியப்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்று கருதினான். என்ன செய்யலாம் என்று அவனுக்குப் புரியவில்லை. சட்டென்று நெடுஞ்சாண்கிடையாக அவள் காலில் விழுந்து கும்பிட்டு எழுந்து நின்றான்.

‘என்னால் உங்களையும் உங்கள் மொழியையும் புரிந்துகொள்ள முடியவில்லை அம்மா. நான் இந்தியாவில் இருந்து வந்திருக்கிறேன். ஒரு கிருஷ்ண பக்தன். சன்னியாசி இல்லை. ஆனால் விரைவில் அப்படி ஆகிவிடுவேன். இரு மொழிகள் தெரிந்த யாரேனும் உதவினால் என்னை உங்களுக்கு விளங்கவைக்க முடியும். அதே போல நீங்கள் சொல்வதையும் நான் விளங்கிக்கொள்ளப் பார்ப்பேன். அது நடக்காமல் நம் உரையாடலுக்கு ஒரு முடிவே இருக்காது’ என்று சொன்னான்.

இம்முறை அவள் பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். பிறகு வா என்று தலையசைத்துவிட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தாள். துறைமுகத்தில் அவளுக்கு யாரையோ தெரிந்திருந்தது. அவரிடம் சென்று ஏதோ பேசினாள். அந்தக் காலை வேளையில் அவளைப் பொருட்படுத்திக் கேட்கவும், அவள் சொன்னதற்குத் தலையசைத்துவிட்டு உள்ளே போகவும் அங்கே ஒருவர் இருந்தார்.

பத்து நிமிடங்களில் திரும்பி வந்தவர், மீண்டும் அவளிடம் ஏதோ சொன்னார். வினோத்தைப் பார்த்து வா என்று சைகை செய்தார். வினோத்துக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் போ போ என்று அவனை அவசரப்படுத்தினாள். வேறு வழியின்றி வினோத் அவரோடு துறைமுகத்துக்குள் நுழைந்தான். அந்தப் பெண்மணி அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு வெளியேறிப் போனாள்.

வினோத்தை உள்ளே அழைத்துச் சென்ற நபர், அவன் கையில் ஒரு டிக்கெட்டைக் கொடுத்தார்.

‘என்ன?’ என்று வினோத் கேட்டான்.

‘நீங்கள் இந்தியாவுக்குப் போய்விடுங்கள். இங்கே இருக்க வேண்டாம்’ என்று அவர் ஆங்கிலத்தில் சொன்னார்.

‘ஏன்?’

‘அது எனக்குத் தெரியாது. ஆனால் இதை உங்களிடம் சொல்லச் சொல்லி அந்தப் பெண்மணி சொன்னார்’.

‘அவர் யார்?’

‘அவர் ஒரு சன்னியாசினி. பார்த்தால் அப்படித் தெரியாது. எனக்கு அவரை வெகு காலமாகத் தெரியும்’.

‘ஐயா நான் கிருஷ்ண பக்த இயக்க நண்பர்களுடன் இங்கே வந்திருக்கிறேன். எனது நண்பர்கள் கொழும்பு நகரில்தான் தங்கியிருக்கிறார்கள். நேற்றுத்தான் நாங்கள் இங்கே வந்து இறங்கினோம். இப்போது என்னைக் காணாமல் அவர்கள் தேடிக்கொண்டிருப்பார்கள். நான் திரும்பிச் செல்ல ஒரு காரணம் தேவையல்லவா?’

‘அது எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் போய்விட வேண்டும் என்று அவர் சொன்னார்’.

வினோத்துக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. ‘வேறு ஏதேனும் சொன்னாரா?’ என்று கேட்டான்.

சிறிது யோசித்துவிட்டு, ‘போக மறுத்தாலும் விடாதீர்கள். எப்படியாவது கப்பல் ஏற்றிவிடுங்கள் என்று சொன்னார்’.

அவனுக்கு உண்மையில் மிகுந்த குழப்பமாகிவிட்டது. என்ன காரணமாயிருக்கும் என்று திரும்பத் திரும்ப யோசித்துப் பார்த்தான். ஒன்றும் விளங்கவில்லை. அவளைச் சந்திக்கும் முன்னர், ஒளிக் கோளம் தன்னை ஏன் ஒரு சிவன் கோயிலுக்கு அழைத்துச் சென்றது என்ற குழப்பம் மட்டுமே அவனுக்கு இருந்தது. இப்போது அந்தப் பெண் சன்னியாசி எதற்காகத் தன்னை இந்தியாவுக்குத் திரும்பச் சொல்கிறாள் என்ற குழப்பம் சேர்ந்துகொண்டது.

ஆனால் நெடுநேரம் அவனால் நின்று யோசித்துக்கொண்டிருக்க முடியவில்லை. அந்தத் துறைமுக ஊழியர் அவனை அவசரப்படுத்தி அழைத்துச் சென்று புறப்படத் தயாராக இருந்த ஒரு சரக்குக் கப்பலில் ஏற்றிவிட்டு, ‘ஊர் போய்ச் சேருங்கள். உங்களைச் சேர வேண்டிய தகவலை அவர் எப்படியாவது உங்களுக்குத் தெரியப்படுத்துவார்’ என்று சொன்னார். இதுவும் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதற்குமேல் என்ன பேசுவது என்று அவனுக்குத் தெரியவில்லை. பத்திருபது பயணிகளும் நிறைய சரக்கு மூட்டைகளும் பெரிய பெரிய சரக்குப் பெட்டிகளும் மட்டும் இருந்த அந்தக் கப்பலில் அவன் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்துச் சென்று அமர்ந்துகொண்டான்.

அவனது நண்பர்களும் சன்னியாசிகளும் இந்நேரம் கண் விழித்து எழுந்திருப்பார்கள். அவனைக் காணாமல் கவலைப்படுவார்கள். முடிந்தவரை தேடுவார்கள். உடனே பெங்களூருக்குத் தகவல் தர முயற்சி செய்வார்கள். அவர்களுக்கு எப்படி இந்த விவரத்தைத் தெரிவிப்பது என்று அவனுக்குப் புரியவில்லை. யாரோ ஒரு பெண் சொன்னதைக் கேட்டுத் தான் எதற்காகக் கப்பல் ஏறினோம் என்று ஒரு கணம் நினைத்தான். ஆனால் தன்னால் அதைச் செய்யாமல் இருந்திருக்க முடியாது என்றும் தோன்றியது. தனக்கு மட்டும் ஏன் இம்மாதிரியான அனுபவங்கள் நிகழ்கின்றன என்று அவனுக்குப் புரியவில்லை. சிறிது கவலையாக இருந்தது. கண்ணை மூடிக்கொண்டு கிருஷ்ணனை நினைக்க முயற்சி செய்தான்.

மூடிய விழிகளுக்குள் ஒரு புள்ளியைப் போல சிறிதாக ஒரு சிவலிங்கம் தோன்றியது. அதை அவன் எதிர்பார்க்கவில்லை. கணப் பொழுதில் அந்தப் புள்ளி ஒரு பலூனைப் போல விரிவடைந்துகொண்டே சென்று பிரம்மாண்டமாக விண்ணையும் மண்ணையும் அடைத்து நின்ற ஒரு பேருருவமாக உருக்கொண்டது. அத்தனை பெரிய லிங்க ரூபத்தை அவன் அதற்குமுன் தரிசித்ததில்லை. சிலிர்த்தது. மறுகணம் கண்ணைத் திறந்தான்.

கப்பல் புறப்பட்டுப் போய்க்கொண்டிருந்தது.

(தொடரும்)

http://www.dinamani.com/junction/yathi/2018/aug/27/116-கப்பல்-2988464.html

Link to comment
Share on other sites

117. குழலோசை

 

 

சென்னை வந்து இறங்கியதும் வினோத்துக்கு அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை. மிகவும் குழப்பமாக இருந்தது. எங்கோ தடுமாறுகிறோம் என்று மட்டும் புரிந்தது. ஆனால் அதைக் குறிப்பாக எடுத்து நோக்க முடியவில்லை. தன்னையறியாமல் சிவனை நெஞ்சத்தில் இருந்து நகர்த்திவைத்தது பிழையோ என்று தோன்றியது. இதைக் குறித்து யாரிடமும் பேசவும் முடியாத அவலம் அவனை வதைத்தது. கழிந்த வருடங்களில் அவன் ஒரு சிறந்த கிருஷ்ண பக்தனாக சக பிரம்மச்சாரிகளாலும் சன்னியாசிகளாலும் கருதப்பட்டு வந்திருந்தான். கணப்பொழுதும் ஓய்வின்றி கிருஷ்ண கைங்கர்யங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்தான். இரவு படுப்பதற்கு எந்நேரம் ஆனாலும் ஆயிரத்தெட்டு முறை ஹரே கிருஷ்ண ஜபம் செய்யாமல் படுக்கமாட்டான். ‘நாளெல்லாம் அதைத்தானே சொல்லிக்கொண்டிருக்கிறாய்? இரவு தனியே எதற்கு?’ என்று அவனது நண்பர்கள் சிலர் கேட்டபோதெல்லாம், ‘உறங்கும் நேரம் ஜபம் இருக்காது. அதை ஈடுகட்ட உறங்கும் முன் அதைச் செய்துவிடுகிறேன்’ என்று சொல்வான்.

எதற்காக கிருஷ்ணன் தன்னை இலங்கை வரை அழைத்துச் சென்றான் என்று எப்படி யோசித்துப் பார்த்தும் அவனுக்கு விளங்கவில்லை. மீண்டும் பெங்களூருக்குச் சென்றால் தான் காணாமல் போனதற்கு விளக்கம் சொல்ல வேண்டும். உள்ளதை அப்படியே சொல்வதில் ஏதாவது சிக்கல் வரக்கூடும் என்று அவனுக்குத் தோன்றியது. தன்னெஞ்சறிய மாற்றிச் சொல்லவும் மனசாட்சி இடம் தராது என்று உறுதியாகத் தெரிந்தது. இது என்ன அவஸ்தை? இன்னொருவருக்கு நிரூபித்து விளக்குவதல்ல; தனக்கே இத்தடுமாற்றம் ஓர் அவமானமல்லவா? தெய்வம் ஒன்றுதான். அதில் சந்தேகமில்லை. அதைச் சிவமென்று எண்ணுவதையும் யாரும் தடைபோட இயலாதுதான். ஆனால் ஒரு பப்பாளிப் பழத்தைப்போல மனத்தை இரண்டாக வகிர்ந்து வைத்துக்கொண்டு வாழ்வது சிரமம். லயிப்பது சிரமம்.

உறுத்தலுடனே அவன் நடந்துகொண்டிருந்தான். பூக்கடை பேருந்து நிலையத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது எதிரே அவன் கேசவன் மாமா வருவதைப் பார்த்தான். அவர்தான் அது. சந்தேகமில்லை. காலம் விதைத்த புதிய அடையாளங்களை மீறி அது மாமாதான் என்று தெளிவாகத் தெரிந்துவிட்டது. முழங்கை வரை நீண்ட சட்டையும் எக்கணமும் அவிழ்ந்துவிடலாம் என்று தோன்றும்படிக்கு இடுப்பில் கட்டிய வேட்டியும் நெற்றியில் இட்ட ஒற்றை ஶ்ரீசூர்ணமுமாக அவரைக் கண்டதுமே அவனுக்கு பகீரென்று ஆகிவிட்டது. அவர் பார்ப்பதற்குள் எங்காவது மறைந்துவிட வேண்டும் என்று நினைத்தான். அந்தக் கணம் அவன் கிருஷ்ணனை மறந்தான். சிவனை மறந்தான். அப்படியே தரையில் படுத்து உருண்டு எங்காவது ஓடிவிட்டால் தேவலாம் போலிருந்தது. மாமாவின் இரு கரங்களிலும் இரண்டு கட்டைப் பைகள் இருந்தன. லிங்கிச் செட்டித் தெருவில் வாங்கினால் சீப், என்.எஸ்.சி. போஸ் சாலையில் சல்லிசாகக் கிடைக்கும் என்று யாரோ எதைக் குறித்தோ அவருக்குச் சொல்லியிருக்க வேண்டும். திருவிடந்தையில் இருந்து பஸ் பிடித்து இவ்வளவு தூரம் இத்தனை காலை நேரத்தில் வந்திருக்கிறார் என்றால் எப்பேர்ப்பட்ட மனிதர்.

வினோத் சுற்றுமுற்றும் பார்த்தான். சட்டென்று இடதுபுறம் வரிசையாகக் கடை வைத்திருந்த காய்கறிக்காரப் பெண்களைத் தாண்டிக் குதித்து மார்க்கெட்டுக்குள் நுழைந்தான். அவன் திரும்பிப் பார்த்தபோது மாமா அவனைப் பார்த்துவிட்டாற்போலத் தோன்றியது. அவனுக்கு அச்சமாகிவிட்டது. உடனே காய்கறி மார்க்கெட்டுக்குள் ஓடத் தொடங்கினான். இன்னொரு முறை திரும்பக் கூடாது என்ற உறுதியுடன் அவன் கால் போன போக்கில் ஓடிக்கொண்டே இருந்தான். எங்கெங்கோ சுற்றி, பூக்கடை பேருந்து நிலையத்தின் பின்புறமாக உள்ளே புகுந்து, முன் வழியாக வெளியே வந்து நின்று மூச்சுவிட்டான்.

இப்போது மாமா தென்படவில்லை. அந்த வரை நல்லது என்று நினைத்துக்கொண்டான். அந்த இடத்தைவிட்டே போய்விட்டால் இன்னமும் நல்லது. ஒரு கணம்தான். உடனே அவனுக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. கொழும்புவுக்குக் கப்பலில் போய்க்கொண்டிருந்தபோது அவன் மாமாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தான். அந்தக் கடிதத்தில் தான் இலங்கையில் இருப்பதாகவும் அம்மா இறந்துவிட்டால் அத்தகவலை வீரகேசரியில் விளம்பரமாக வெளியிட வேண்டும் என்றும் அவன் கேட்டிருந்தான். ஏனென்றால், அவனோடு சென்ற குழுவில் பாதிப்பேர் கொழும்புவிலேயே தங்கும் எண்ணத்தில்தான் கப்பல் ஏறியிருந்தார்கள். கிருஷ்ணனுக்குக் கொழும்பு நகரில் ஒரு ஆலயம் அமைக்கும் திட்டத்தை எப்படியாவது வெற்றிகரமாக்கிவரும் பொறுப்பு அவர்களிடம் தரப்பட்டிருந்தது. அரசாங்க ஒத்துழைப்பைக் கோரிப் பெறுவது முதல் பணி. இடம் தேடுவது அடுத்தது. அதன்பின் சிறிதாக ஒரு குடிசை வீடு கட்டிக்கொள்ள முடிந்துவிட்டால் போதும். அங்கிருந்தபடியே கிருஷ்ண பக்தியைப் பரவச் செய்துவிட முடியும். பரவும் பக்தி பணம் பொருள்களைக் கொண்டுவந்து சேர்க்கும். பிறகு கோயிலைக் கிருஷ்ணன் கட்டிக்கொள்வான்.

எப்படியானாலும் அடுத்த ஐந்தாண்டுகளேனும் தான் இலங்கையில்தான் இருப்போம் என்று எண்ணிக்கொண்டுதான் வினோத் கப்பல் ஏறியிருந்தான். ஆனால் கொழும்புவில் இறங்கிய மறுநாளே கப்பலேறி இந்தியா திரும்பவேண்டி வரும் என்று அவன் நினைத்திருக்கவில்லை. அந்தக் கடிதத்தை எழுதியிருக்க வேண்டாம் என்று இப்போது அவனுக்குத் தோன்றியது. எழுதியதுகூடப் பிழையில்லை. படித்துப் பார்த்துவிட்டுக் கிழித்துக் கடலில் போட்டிருக்கலாம். கர்ம சிரத்தையாகக் கொழும்பு துறைமுகத்தைவிட்டு வெளியேறும் முன்னரே கண்ணில் பட்ட தபால் நிலையப் பெட்டியில் அதனைச் சேர்த்துவிட்டுத்தான் அவன் பட்டணப் பிரவேசம் செய்தான்.

மாமா கண்ணில் மட்டும் பட்டால், அவர் கேட்கும் முதல் கேள்வி அந்தக் கடிதத்தைப் பற்றியதாகத்தான் இருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. அடுத்த வினா சித்ராவுக்குச் செய்த துரோகத்தைப் பற்றி. அதனால் குடும்பத்துக்கு நேர்ந்திருக்கக்கூடிய அவமானத்தைப் பற்றி. இவை அனைத்தையுமே அவனால் தகுந்த பதில் சொல்லிச் சமாளிக்க முடியும்தான். அவன் கிருஷ்ண பக்தனாக மட்டுமோ, சிவ பக்தனாக மட்டுமோ இருந்திருந்தால் அது சாத்தியம். சன்னியாசம் என்னும் உயர் நோக்கத்துடன் பயணம் செய்துகொண்டிருக்கும் ஒருவனுக்கு இரட்டைக் கடவுள்கள் அளிக்கும் இம்சை தாங்க முடியாததாக இருந்தது. இரண்டில் ஒன்றைத் தீர்மானம் செய்யாமல் தன்னால் யாரையுமே சந்திக்கவோ, எதிர்கொள்ளவோ முடியாது என்று தோன்றியது. அதனால்தான் கேசவன் மாமாவை ஐம்பதடி தொலைவில் கண்டதும் அவன் தலை தெரிக்க ஓடினான். இத்தனைக்கும் மத்தியில் தனக்கு அவரைக் கண்டதும் பாசமோ, அதை நிகர்த்த வேறெதுவோ உருவாகவில்லை என்பதையும் அவன் கவனித்தான். அது சற்று நிம்மதியளித்தது. ஒரு தெளிவு உண்டாகும்வரை இனி சுற்றிக்கொண்டே இருப்பது என்று முடிவு செய்தான். சட்டென்று அவனைக் கடந்து நகர்ந்த ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டான்.

ஏறும்போது அவன் அந்த வண்டி எங்கே போகிறது என்று பார்க்கவில்லை. ஏறி அமர்ந்து, நடத்துநர் அருகே வந்ததும் அதைக் கேட்டான். அவர் வினோத்தை ஒரு மாதிரி பார்த்தார். ‘நீங்க எங்க போகணும்?’ என்று பதிலுக்குக் கேட்டார். வினோத்துக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சில விநாடி யோசித்தான். அதற்குள் அவனுக்கு அருகே இருந்த மனிதர், ‘திருவண்ணாமலை’ என்று சொல்லி ஒரு டிக்கெட் வாங்கினார். வினோத்தும் உடனே திருவண்ணாமலை என்று சொன்னான். அவனிடம் சிறிது பணம் இருந்தது. திருவண்ணாமலை வரை டிக்கெட் வாங்குவதற்கு அது போதுமானதாக இருந்ததில் அவன் சற்று நிம்மதியானான். டிக்கெட் வாங்கிக்கொண்டு சாய்ந்து அமர்ந்தபோதுதான் திக்கென்றானது.

திருவண்ணாமலை!

சட்டென்று அருகே இருந்தவரிடம், ‘இந்த வண்டி திருவண்ணாமலை வரைதான் போகிறதா?’ என்று கேட்டான்.

‘ஆம். ஏன் கேட்கிறீர்கள்?’

‘ஒன்றுமில்லை’ என்று சொல்லிவிட்டான். ஆனால் அந்தக் கணம் முதல் அவனுக்கு உடலெல்லாம் நடுங்கத் தொடங்கியது. இதென்ன சொல்லிவைத்த மாதிரி இப்படி நடக்கிறது? சென்னை போய்ச் சேர்ந்த பின்பு என்ன செய்ய வேண்டும் என்று அந்தப் பெண்மணி வழிகாட்டுவார் என்று கிளம்பும்போது, அந்தத் துறைமுக அதிகாரி சொன்னது அவனுக்கு நினைவுக்கு வந்தது. பூக்கடைப் பேருந்து நிலையத்தில் அந்தக் காலை வேளையில் எத்தனையோ பேருந்துகள் எங்கெங்கோ கிளம்பிக்கொண்டிருந்தன. மிகச் சரியாக எப்படித் தான் திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் ஏறினோம்? புரியவில்லை.

இதற்குமேல் இதனைப் பற்றிச் சிந்திக்கக் கூடாது என்று அவனுக்குத் தோன்றியது. சற்றும் உணர்ச்சிவசப்படாமல் நடப்பதை அதன் போக்கில் கவனித்துக்கொண்டே போவதுதான் சரி என்று நினைத்தான். கூடவே அவன் மனத்தில் இன்னொன்றும் தோன்றியது. இன்னொரு முறை அந்த ஒளிக்கோளத்தின் தரிசனம் கிடைத்தால் அதன் பின்னால் நிச்சயமாக எழுந்து போகக் கூடாது என்பதுதான் அது.

தான் சரியாக இருக்கிறோம், சம நிலையில் இருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு உறங்க ஆரம்பித்தான். திருவண்ணாமலை சென்று சேரும்வரை அவன் உறங்கிக்கொண்டேதான் இருந்தான். பேருந்து நின்று அனைவரும் இறங்கிச் சென்றபின் நடத்துநர் வந்து அவனை எழுப்பினார்.

‘திருவண்ணாமலை வந்துவிட்டதா?’ என்று வினோத் பரபரப்பாக எழுந்தான். மண்ணில் கால் வைத்தபோது எங்கிருந்தோ புல்லாங்குழல் சத்தம் கேட்டது.

(தொடரும்)

http://www.dinamani.com/junction/yathi/2018/aug/28/117-குழலோசை-2988732.html

Link to comment
Share on other sites

118. கிருஷ்ண லீலா

 

 

முதலில் வினோத்துக்கு சிரிப்பு வந்தது. பேருந்தை விட்டு இறங்கிய சில நிமிடங்கள் அங்கேயே சாலை ஓரமாகச் சென்று அமர்ந்து அந்தக் குழலோசையைக் கேட்டுக்கொண்டிருந்தான். சிரிக்க வேண்டும்போலத் தோன்றியதால் அனுபவித்துச் சிரிக்கவும் செய்தான். பிறகுதான் அந்த ஓசை எங்கிருந்து வருகிறது என்று சுற்றுமுற்றும் பார்த்தான். ஓசைதான் அது. இசையல்ல. வாசிக்கத் தெரியாத யாரிடமோ ஒரு புல்லாங்குழல் சிக்கிக்கொண்டிருக்கிறது என்று நினைத்தான். அவன் ஏன் திருவண்ணாமலையில் இருந்துகொண்டு தான் வந்து இறங்கும் நேரத்துக்குச் சரியாக அதை ஊத வேண்டும்? ஆளை நேரில் பார்த்து விசாரித்துவிடுவது என்று முடிவு செய்துகொண்டு எழுந்தான்.

அவன் அதற்கு முன் திருவண்ணாமலைக்கு வந்ததில்லை. சிவபக்தி மேலோங்கி சிவ ஸ்மரணையிலேயே கிடந்த நாள்களில் என்றாவது அங்கே போய்வர வேண்டும் என்று எண்ணிக்கொள்வான். ஆனால் முடிந்ததில்லை. விதியே போல இம்முறை திருவண்ணாமலை தன்னை இழுத்துத் தன் பக்கம் வரவழைத்துக்கொண்டிருக்கிறது என்று எண்ணிக்கொண்டு இறங்கிய கணத்தில் கேட்ட குழலோசை, அந்நகரின் மீது அவனுக்கு இருந்த பழைய பரவசமூட்டும் ஞாபகங்களைச் சற்று மட்டுப்படுத்தியது. தனக்கு ஏற்பட்டிருக்கும் ஊசலாட்டம் அவனுக்கு மிகவும் வெட்கமளித்தது. கிருஷ்ணா கிருஷ்ணா என்று சொல்லிக்கொண்டே இருந்தென்ன. மனத்தின் பக்குவம் அரைக்கும் கீழான வேக்காட்டில்தான் உள்ளது. நல்லது. தான் எத்தனைக் கீழானவன் என்பதைப் புரிந்துகொள்ள இது ஒரு சந்தர்ப்பம் என்று நினைத்துக்கொண்டான்.

குழலோசை கேட்ட திக்கில் அவன் நடந்துகொண்டிருந்தான். பேருந்து நிலையத்துக்குத் தெற்குப்புறமாக அந்த ஓசை வந்துகொண்டிருந்தது. அவன் வேறெதையும் கவனிக்காமல் ஓசையை மட்டுமே இலக்காக வைத்து நடந்தான். இரண்டு நிமிடங்களில் அவனுக்கு அந்த ஓசையின் பிறப்பிடம் தெரிந்துவிட்டது. கதவு பூட்டப்பட்டிருந்த ஒரு சிறு அடகுக் கடையின் வெளித் திண்ணையில் அமர்ந்திருந்த பெண்தான் ஒரு புல்லாங்குழலை வைத்து ஊதிக்கொண்டிருந்தாள். அது கச்சேரி வாசிக்கும் புல்லாங்குழல் அல்ல. திருவிழாக்களில் கிடைக்கும் சிறுவர்களுக்கான ஊதுகுழல். கணக்கு வழக்கின்றி ஒன்பது துவாரங்கள் அதில் இருந்தன. அந்தப் பெண்ணோ, முதல் மூன்று துவாரங்களை மட்டுமே பயன்படுத்தி ஊதிக்கொண்டிருந்தாள். மனத்துக்குள் அவள் ஏதோ ஒரு பாடலை அல்லது ஆலாபனையை உத்தேசித்திருக்கக்கூடும். ஆனால் வெளிப்பட்ட ஓசை கொடூரமாக இருந்தது.

அவளைக் கண்டதும் வினோத் நின்றுவிட்டான். சிறிதுநேரம் அவளையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். மிஞ்சினால் அவளுக்கு நாற்பது வயது இருக்கும் என்று தோன்றியது. தலைமுடியின் முன்புறம் முழுதும் நரைத்திருந்தது. பின்னால் அத்தனை வெளுப்பில்லை. வேர்க்கடலைத் தோலின் நிறத்தில் இருந்தாள். ஒழுங்காகத் தேய்த்துக் குளித்தால் இன்னமும் சற்றுப் பளிச்சென்று இருப்பாள் என்று தோன்றியது. ஆனால் அவள் குளித்துப் பல நாள்கள் ஆகியிருக்க வேண்டும். முகமெல்லாம் எண்ணெய் வழிந்துகொண்டிருந்தது. வாராத தலைமுடி காற்றில் அலைந்து ஆடிக்கொண்டிருந்தது. ஏராளமான சுருக்கங்களும் கிழிசல்களும் கொண்ட புடைவை ஒன்றை அணிந்துகொண்டிருந்தாள். ரவிக்கை கிழியாதிருந்தது. அவளுக்குப் பக்கத்தில் ஒரு அழுக்கு மூட்டை இருந்தது. கொஞ்சம் துணிகளும் ஒரு தட்டும் வெளியே தென்பட்டன.

ஒரு பிச்சைக்காரியாகவோ, பைத்தியக்காரியாகவோ அவள் இருக்கலாம் என்று வினோத்துக்குத் தோன்றியது. போகலாம் என்று நினைத்த கணத்தில் அவள் ஊதுவதை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்துச் சிரித்தாள். அருகே வரும்படிச் சைகை செய்தாள். வினோத்துக்குப் போவதா வேண்டாமா என்று யோசனையாக இருந்தது. தன் மேலாடையின் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான். அதில் சில சில்லறைகள் இருந்தன. அழைத்த மரியாதைக்கு நெருங்கிச் சென்று காசைப் போட்டுவிட்டுப் போய்விடலாம் என்று நினைத்து அவளை நெருங்கினான். அவன் நெருங்கி அருகே வரும்வரை சிரித்தபடியே இருந்தவள், கிட்டே வந்ததும், ‘சிவனிடமும் ஒரு குழல் உண்டு’ என்று சொன்னாள்.

அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது. அடுத்தக் கணம் அப்படியே அவள் முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான். எழவேயில்லை. வெகுநேரம் அப்படியே கிடந்தான். அவனை மீறி அழுகை வெடித்துச் சிதறியது. நெடுநேரம் அழுதுகொண்டே இருந்தான். பிறகு அவனே தன்னைத் தேற்றிக்கொண்டு எழுந்து அவள் எதிரே அமர்ந்து கைகூப்பினான். அந்தப் பெண் ஒன்றும் பேசவில்லை. கண்ணை இமைக்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு, ‘நீ பாவம். உன்னை அவன் மிகவும் படுத்துகிறான்’ என்று சொன்னாள்.

‘ஆம் தாயே. சிறு வயது முதல் நான் ஒரு சிவ பக்தனாகவே இருந்தேன். ஒரு நாளில் நடைபெற்ற ஒரு சம்பவத்துக்குப் பின் என் கவனம் முழுதும் கிருஷ்ணனின்பால் சென்றுவிட்டது. பல வருடங்களாக கிருஷ்ணனைத் தவிர வேறு எதையும் நான் நினைக்கவேயில்லை. திடீரென்று இப்போது சில நாள்களாக எனக்கு வினோதமான சம்பவங்களும் அனுபவங்களும் நேர்கின்றன’.

‘என்ன தோன்றுகிறது? சிவன்தான் உனக்கு உரியவன் என்றா?’

‘இல்லை. எனக்கு எதுவும் தோன்றவில்லை. குழப்பமும் அச்சமும்தான் மனமெங்கும் நிறைந்திருக்கிறது’.

‘சரிதான். குழப்பமும் அச்சமும் இருந்தால் கிருஷ்ணன் எப்படி இருப்பான் அல்லது சிவன்தான் எப்படி வந்து உட்காருவான்?’

‘தெரியவில்லை தாயே. இதற்கு விடைதேடித்தான் நான் இங்கே வந்திருக்கிறேன்’.

‘இங்கே என்றால்?’

வினோத் ஒரு கணம் யோசித்தான். ‘ஆம். நான் திட்டமிட்டுத் திருவண்ணாமலைக்கு வரவில்லை. ஏறி உட்கார்ந்த பேருந்து என்னை இங்கே கொண்டுவந்து இறக்கிவிட்டது. இதுவும் சிவன் செயலாக இருக்குமோ என்ற ஐயம் இருக்கிறது’.

அவள் சிரித்தாள். ‘என்னோடு வா’ என்று அழைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

அது கிட்டத்தட்ட கிரிவலம்தான். மலையைச் சுற்றிவரும் பாதையில் அவள் போய்க்கொண்டே இருந்தான். வினோத்தும் அவள் பின்னால் நடந்துகொண்டே இருந்தான். இடையே இரண்டு முறை நின்று, ‘உனக்குப் பசிக்கிறதா? தாகம் எடுக்கிறதா?’ என்று அவள் கேட்டாள். வினோத் இல்லை என்று சொன்னான். அதற்குமேல் அவள் எதுவும் பேசாமல் நடந்துகொண்டே இருந்தாள். ஓரிடத்துக்கு வந்து சேர்ந்ததும், ‘சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொள். நாம் சிறிது தூரம் மலையில் ஏறவேண்டி இருக்கும்’ என்று சொன்னாள். வினோத் அங்கேயே அமர்ந்தான். அவள் தனது புல்லாங்குழலை அந்த அழுக்கு மூட்டைக்குள் சொருகியிருந்தது அவன் கண்ணை உறுத்திக்கொண்டே இருந்தது. சட்டென்று அதை எடுத்துப் பார்த்தான். அவள் சிரித்தாள். ‘ஊது’ என்று சொன்னாள். வினோத் அதைத் தன் வாயில் வைத்து ஊதினான். அவள் ஊதியபோது வந்தது போன்ற ஓசையே வந்தது.

அவள் மீண்டும் சிரித்தபடி, ‘காற்றில் ஒன்றுமில்லை. குழலிலும் ஒன்றுமில்லை. துவாரங்களை மூடித் திறப்பதில்தான் உள்ளது’ என்று சொன்னாள்.

‘ஆம் தாயே. சரியாக மூடவும் சரியாகத் திறக்கவும் தெரிந்தவன் கலைஞன் ஆகிறான்’.

‘ஆனால் சரியாக மூடிக்கொள்ளத் தெரிந்தால் மட்டுமே நீ சன்னியாசி ஆவாய்’ என்று அவள் சொன்னாள். வினோத்துக்கு அவள் சொன்னதன் பொருள் உடனே புரியவில்லை. ஆனால் அவள் தன்னைக் குறிவைத்து அனுப்பப்பட்டவள் என்பது மட்டும் புரிந்துவிட்டது.

சிறிது நேரம் கழித்து அவள், ‘புறப்படலாம்’ என்று சொன்னாள். அவன் எழுந்துகொண்டான். பாதையற்ற வழியில் அவள் முன்னால் உள்ள பாறைகளைப் பிடித்துக்கொண்டு மெல்ல மெல்ல ஏறிக்கொண்டிருந்தாள். வினோத்தும் அவளைப் பின்பற்றி மலையின் மீது ஏறிக்கொண்டிருந்தான். பத்து நிமிடங்களில் அவனுக்கு மூச்சு வாங்க ஆரம்பித்துவிட்டது. வியர்த்துக் கொட்டியது. அவள் திரும்பிப் பார்த்து, ‘முடியவில்லையா?’ என்று கேட்டாள். அவன் ஆம் என்று தலையசைத்ததும், ‘சரி அப்படியே உட்கார்’ என்று அவளும் ஒரு பாறையின் மீது அமர்ந்தாள். வினோத் உட்கார்ந்ததும் தனது மூட்டையைப் பிரித்து உள்ளிருந்து ஒரு சிறிய காகிதப் பொட்டலத்தை எடுத்தாள்.

‘என்ன அது?’

‘சிவ மூலிகை’ என்று அவள் சொன்னாள். அதை நன்றாகக் கசக்கி ஒரு சிறிய குழலுக்குள் திணித்தாள். மீண்டும் மூட்டைக்குள் கைவிட்டுத் தேடி ஒரு தீப்பெட்டியை எடுத்தாள். குழலை வாயில் வைத்து அதைப் பற்றவைத்தாள். அடி வயிறு வரை காற்றை இழுத்து புகையை உண்டாக்கினாள். பிறகு அந்தக் குழலை அவனிடம் கொடுத்து, ‘சாப்பிடு’ என்று சொன்னாள்.

வினோத்துக்குத் தயக்கமாக இருந்தது. ‘பழக்கமில்லை’ என்று சொன்னான்.

‘ஒன்றும் செய்யாது. சாப்பிடு’.

‘சாப்பிடுவதா?’

‘ஆம். இழுப்பதல்ல இது. இது ஒருவித உணவு. சாப்பிடு’ என்று மீண்டும் சொன்னாள். மிகுந்த தயக்கமும் அச்சமும் பதற்றமும் மேலோங்க, வினோத் அந்தக் குழலைக் கையில் வாங்கினான். விரல்கள் நடுங்கின.

‘ஏன் இவ்வளவு அச்சப்படுகிறாய்? ஒன்றும் செய்யாது. சாப்பிடு’.

அவன் வாயில் வைத்துப் புகையை இழுத்தான்.

‘உடனே விடாதே. உள்ளே தேக்கிவை’ என்று அவள் சொன்னதும், அவன் கண்ணை மூடிக்கொண்டு மனத்துக்குள் ஓம் பூஹு ஓம் புவஹ என்று சொல்ல ஆரம்பித்தான்.

அவள் வாய்விட்டு உரக்கச் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் அவனது ஜபம் கலைந்து கண்ணைத் திறந்து பார்த்தான். வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் புகை வெளியேறியது.

‘மீண்டும் சாப்பிடு’ என்று சொன்னாள். அவன் மீண்டும் இழுத்தான். நான்கைந்து முறை இழுத்துவிட்டு அவளிடம் கொடுத்துவிட்டான். அவள் அதை வாங்கி, தானும் இரண்டு முறை இழுத்தாள். பிறகு எரிந்த பகுதியைக் கீழே கொட்டிவிட்டு, மிச்சமிருந்த இலைத் தூளை மீண்டும் காகிதத்துக்குள் போட்டு மடித்து மூட்டைக்குள் வைத்துக்கொண்டு, ‘இப்போது நாம் போகலாம். களைப்புத் தெரியாது’ என்று சொன்னாள்.

வினோத்துக்குத் தன்னால் நடக்க முடியுமா என்று ஐயமாக இருந்தது. கால் பாதங்களுக்குள் யாரோ ஒரு மூட்டை பஞ்சை அடைத்துவைத்துவிட்டாற்போல் இருந்தது. காதுகளுக்குள் சூடாக ஒரு திரவம் வழிவதுபோல் இருந்தது. மூக்கு எரிந்தது. பசுமையற்ற மலைப்பரப்பின் வெளியெங்கும் பழுப்பு நிறத்துக்கு மாறித் தெரிந்தது. அவன் அந்தப் பெண்ணின் கையைப் பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். சிறிது தூரம் போனதும் அவன் நின்றான். அவள், ‘என்ன’ என்று கேட்டாள். வினோத் படபடப்பாகத் தொலை தூரத்தில் எதையோ சுட்டிக்காட்டினான். அவள் பார்த்துவிட்டு மீண்டும் ‘என்ன’ என்று கேட்டாள்.

‘அதோ.. அதோ.. என் கிருஷ்ணன் தெரிகிறான்.. அவன் என்னைக் கூப்பிடுகிறான்...’

‘முட்டாள். இங்கு யாருமில்லை’.

‘இல்லை. ஒளி தெரிகிறது பாருங்கள் தாயே. அதுதான். அது அவன்தான். கிருஷ்ணா...’ என்று கதறிக்கொண்டு ஓட ஆரம்பித்தான். பத்தடி ஓடுவதற்குள் அவனுக்குக் கால் தடுக்கியது. தடாலென்று கீழே விழுந்தவன் பிடிமானமின்றி அப்படியே உருள ஆரம்பித்தான்.

(தொடரும்)

http://www.dinamani.com/junction/yathi/2018/aug/29/118-கிருஷ்ண-லீலா-2989423.html

Link to comment
Share on other sites

119. நிதி சால சுகமா?

 

 

கண் விழித்தபோது அவன் ஒரு குடிசைக்குள் படுத்திருந்தான். அந்தப் பெண் அவன் அருகே அமர்ந்திருந்தாள். வினோத்துக்கு உடலெங்கும் நிறைய சிராய்ப்புகள் ஏற்பட்டிருந்தன. முழங்கால் எரிந்தது. மூக்கு எரிந்தது. இடது கன்னத்தில் எரிந்தது. அனைத்தையும்விடத் தன்னால் எழுந்திருக்கவே முடியாதோ என்று எண்ணும்படியாக இடுப்பில் உக்கிரமாக வலித்தது. ‘எழுந்திருக்காதே. அப்படியே படுத்திரு’ என்று அந்தப் பெண் சொன்னாள். அந்தக் கணம் அவனுக்குத் தோன்றியதெல்லாம் ஒன்றுதான். இவள் தனியாக எப்படித் தன்னைத் தூக்கிவந்து இங்கே கிடத்தியிருப்பாள்? சிறிது வெட்கமாக இருந்தது. அவனையறியாமல் சிரிப்பு வந்தது. அவள் அதைக் கவனித்தாள். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை.

‘என்னை மன்னியுங்கள். உங்களை சிரமப்படுத்தியிருக்கிறேன்’ என்று வினோத் சொன்னான்.

‘அதனால் பரவாயில்லை. உனக்கு கிருஷ்ண தரிசனம் நேர்ந்ததா?’

‘இல்லை. அவன் ஒவ்வொரு முறையும் என்னை இப்படித்தான் ஏமாற்றுகிறான்’.

‘எப்படி?’

‘ஒரு ஒளியாக அவன் எனக்கு வெளிப்படுகிறான். ஆனால் நான் முழுதும் பார்ப்பதற்குள்ளாக மறைந்துவிடுகிறான்’.

‘நின்று நிதானமாகப் பார்க்க வேண்டியதுதானே? எதற்கு அப்படி பேயைப் பார்த்தாற்போல ஓடினாய்?’

இதற்கு என்ன பதில் சொல்வதென்று யோசித்தான். உண்மையில் அந்தப் பதற்றமும் பரிதவிப்பும் எங்கிருந்து வருகிறது என்று அவனுக்குப் புரிவதேயில்லை. ஒவ்வொரு முறையும் ஒளி தோன்றி மறைந்த பின்பு அதை நினைவில் கொண்டு வரப் பார்த்தால், அது வருவதில்லை. அடுத்த பல தினங்களுக்கு உடம்பு அடித்துப் போட்டாற்போல் ஆகிவிடுகிறது. எழுந்து நடமாடக்கூட சிரமமாகிவிடுகிறது. இதை அவன் அந்தப் பெண்ணிடம் சொன்னபோது, ‘சிலருக்கு அப்படித்தான் நேரும்’ என்று சொன்னாள்.

‘அம்மா, நீங்கள் அவனைப் பார்த்திருக்கிறீர்களா?’ என்று வினோத் கேட்டான்.

‘யாரை?’

‘கிருஷ்ணனை’.

‘இல்லை. எனக்கு அவன் அத்தனை நெருக்கமில்லை’.

‘ஆம். நீங்கள் ஒரு சிவனடியார் என்று புரிந்துகொண்டேன்’.

அவள் சிரித்தாள். ‘உனக்கு என்ன பிரச்னை? தெய்வத்துக்கு எதற்குப் பெயர் வேண்டுமென்று நினைக்கிறாய்? உன் கிருஷ்ணனும் சிவனும் இதனால்தான் உன்னை வைத்து விளையாடுகிறார்கள்’.

‘புரிகிறது தாயே. ஆனாலும் என் அறியாமை இங்கேயேதான் நின்று சுழல்கிறது. கொழும்புவில் அந்த ஒளிப்புள்ளி என்னை ஒரு சிவன் கோயிலுக்கு ஏன் அழைத்துச் சென்று விட்டது என்று இப்போதுவரை எனக்குப் புரியவில்லை’.

‘இதில் புரிய என்ன இருக்கிறது? உன் ஒளியை நீ கிருஷ்ணன் என்று நினைத்துக்கொண்டால், கிருஷ்ணன் உன்னை சிவனுக்கு சிநேகமாக்கிவிடப் பார்த்தான் என்று எண்ணிக்கொள். வந்த ஒளி சிவமென்றால் தன் சன்னிதியில் உனக்கு கிருஷ்ணனைக் காட்ட விரும்பியதாக நினைத்துக்கொள். அவ்வளவுதானே?’

அவ்வளவுதானா! மனத்துக்குள் இரண்டாகப் பிளவுபட்டு நிற்கும் அவஸ்தையை எப்படிப் புரியவைக்க முடியும்?

‘தாயே, என்னிடம் என்றோ கிடைத்த சிவலிங்கத்தை நான் புறக்கணித்த குற்ற உணர்ச்சி எனக்கு இன்னும் மிச்சம் இருக்கிறது. கிருஷ்ணனை வணங்கும்போதெல்லாம் அதனாலேயே நான் ஓரத்தில் சிவனை நினைத்துக்கொள்கிறேன்’.

‘என்ன பிழை? ஒன்றுக்கு இரண்டு தெய்வங்கள் உனக்கு உதவி செய்ய இருந்தால் சௌகரியம்தானே?’

‘எங்கே உதவுகிறார்கள்? இரண்டு பேரும் சேர்ந்து அலைக்கழித்துக்கொண்டிருக்கிறார்கள்’ என்று வினோத் சொன்னதும் அவள் சிரித்தாள்.

‘மகனே, நீ நல்லவன். அப்பாவி. உன் அறியாமை அழகானது. உன் அண்ணன் உன்னைப் பற்றிச் சொன்னபோது நான் முதலில் நம்பவில்லை. ஆனால் இப்போது புரிந்துகொண்டேன்’ என்று அவள் சொன்னதும் வினோத்துக்குத் தூக்கிவாரிப் போட்டது.

‘அண்ணாவா? என்ன சொன்னான்?’ என்று கேட்டான்.

‘அது உனக்கு வேண்டாம். ஆனால் நான் உனக்கு ஒரு உதவி செய்ய முடிவு செய்திருக்கிறேன்’.

‘சொல்லுங்கள் தாயே’.

அவள் சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். அவனையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, ‘சரி கண்ணை மூடு’ என்று சொன்னாள். அவன் கண்ணை மூடிக்கொண்டான்.

‘இப்போது சொல்வதைக் கவனமாகக் கேள். கிருஷ்ணனா சிவனா என்று பார்க்காதே. உன் மனத்தில் இப்போது முதலில் தோன்றுவது எதுவாக இருந்தாலும் அதை மட்டும் நினை. அதையே தியானப் பொருளாக்கு. நான் குரல் கொடுக்கும்வரை அதைத் தவிர வேறு எதையும் நினைக்காதே’ என்று சொன்னாள்.

வினோத் சரி என்று சொல்லிவிட்டு அப்படியே கண்களை மூடிக்கொண்டான். பளிச்சென்று சித்ராவின் முகம் அவன் கண்களுக்குள் திரண்டு எழுந்து வந்து நின்றது. அவனுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. இதென்ன விபரீதம்? இவள் முகம் ஏன் இப்போது நினைவுக்கு வருகிறது? ஆட்டத்தைக் கலைத்துவிட்டு முதலில் இருந்து தொடங்கலாமா என்று யோசித்தான். அது கூடாது என்று தோன்றியது. அந்தப் பெண் விதித்த ஒரே நிபந்தனையைக்கூடச் சரியாகப் பின்பற்ற முடியவில்லை என்பது மிகவும் துக்ககரமானதல்லவா.

இருந்துவிட்டுப் போகட்டும் என்று சித்ராவையே நினைக்க ஆரம்பித்தான். சிறு வயதுகளில் வினய், சித்ராவை மிகவும் விரும்பியது அவனுக்கும் தெரியும். ஆனால் அது குறித்து அவன் வினய்யிடம் கேட்டதில்லை. வேறு யாருடனும் விவாதித்ததும் இல்லை. வினய் வீட்டைவிட்டு வெளியேறியபின் வெகு காலத்துக்கு வினோத் சித்ராவைக் குறித்து எண்ணிப் பார்த்ததேயில்லை. எப்போதாவது வீதியில் பார்க்க நேரும்போது சற்றுப் புன்னகை செய்துவிட்டுக் கடந்துவிடுவதே வழக்கம். அவனுக்குப் பள்ளி ஆசிரியர் வேலை கிடைத்த அன்றைக்குத்தான் முதல் முதலில் சித்ரா அழகாகத்தான் இருக்கிறாள் என்று நினைத்தான். என்ன காரணத்தாலோ அப்போது அவனுக்கு வினய்யின் நினைவு வரவில்லை.

சிறு வயது முதல் பார்த்து வரும் பெண். ஒரே ஊர். அடுத்தடுத்த வீதிகளில் வசிப்பவர்கள். இரு குடும்பங்களுக்கும் நல்ல பரிச்சயம் உண்டு. இரு குடும்பங்களுமே ஐயங்கார் குடும்பங்கள். சௌகரியமாக வேறு வேறு கோத்திரம். சித்ராவைத் திருமணம் செய்துகொண்டால் என்ன என்று அன்றைக்குத்தான் அவன் முதலில் நினைத்தான். ஆனால் நினைத்துக்கொண்டதுதான். தவறியும் யாரிடமும் அதைப் பற்றி அவன் பேசவில்லை. ஆசிரியப் பணியை முடித்துவிட்டு ஒவ்வொரு நாளும் ஓய்வு நேரத்தில் அவன் சித்ராவை அதன்பின் நினைத்துக்கொள்ள ஆரம்பித்தான். அது சுகமாக இருந்தது. அவளைக் காதலிக்கலாம் என்றும் நினைத்தான். தனது நள்ளிரவு ரகசிய சிவபூஜைக்குப் பின்பு சிவனின் அனுமதியோடுதான் அவன் சித்ராவை நினைத்துக்கொள்ள ஆரம்பிப்பான். நினைவில் அவளைத் தொடுவான். கன்னங்களை வருடுவான். நெருங்கி முத்தமிடுவான். அவள் கையைப் பிடித்துக்கொண்டு திருவிடந்தையில் இருந்து நீலாங்கரை வரை கடற்கரையில் நடப்பான்.

மறுநாள் காலை தற்செயலாகச் சித்ராவை வீதியில் பார்க்க நேர்ந்துவிட்டால் மிகவும் சந்தோஷமாகிவிடுவான். சிவனே தங்களைச் சேர்த்துவைப்பான் என்று அவன் மனத்துக்குள் தோன்றும். என்றைக்காவது மெல்ல அவளிடம் பேச்சுக் கொடுக்க வேண்டும் என்று எண்ணிக்கொள்வான். அது அபத்தமாக ஆரம்பித்துவிடக் கூடாது என்றும் உடனே நினைத்துக்கொள்வான். அவளுடன் பேசுவதற்குப் பொருத்தமாக ஏதாவது ஒரு விஷயத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைத்து, அதற்காகப் பலநாள் யோசித்தான். அவளது பிரத்தியேக விருப்பங்கள், ஆர்வங்கள் குறித்துக் கொஞ்சமாவது தெரிந்துகொண்டால்தான் அது முடியும் என்று தோன்றியது. யாரைப் போய்க் கேட்பது?

இந்தக் கவலையில் இருந்தபோதுதான் ஒருநாள் கேசவன் மாமா, சித்ரா நன்றாகப் பாடுவாள் என்ற தகவலைத் தற்செயலாக அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்டான்.

‘அப்படியா? எனக்குத் தெரியாதே. மாமி சொன்னதே இல்லியே?’ என்று அம்மா சொன்னாள்.

‘இத்தன வருஷமா பாத்துண்டிருக்கோம். இன்னிக்குத்தான் எனக்கே தெரிஞ்சிதுக்கா. பிரமாதமா பாடறா. இன்னிக்குக் கோயில்ல பெருமாள் சேவிக்க வந்தா. பிராகாரம் சுத்திட்டு தாயார் சன்னிதி வாசல்ல உக்காந்துண்டிருந்தப்ப தனக்குத்தானே மெல்லிசா பாடிண்டிருந்தா.. அந்தப் பக்கமா போனேனா.. எனக்குத் தூக்கி வாரிப் போட்டுடுத்துக்கா. சுருதி சுத்தம்னா அப்படி ஒரு சுருதி சுத்தம். குரலும் நன்னா ஒத்துழைக்கறது அவளுக்கு. ஏண்டிம்மா, இப்படி ரகசியமா பாடிண்டிருக்கே, நன்னா வாய் விட்டுப் பாடப்படாதான்னு கேட்டேன். போங்கோ மாமான்னு வெக்கப்பட்டுண்டு எழுந்து போயிட்டா’ என்று கேசவன் மாமா சொன்னார்.

வினோத்துக்கு இந்தத் தகவல் போதுமானதாக இருந்தது. மறுநாள் பள்ளிக்கூடம் விட்டதும் அவன் திருப்போரூருக்கு சைக்கிளில் போனான். சன்னிதித் தெருவில் ஒரு கேசட் கடை இருந்தது. ஓரிரு முறை அந்தப் பக்கம் போகும்போது அதைப் பார்த்திருக்கிறான். எனவே நேரே அந்தக் கடைக்குச் சென்று எம்.எல். வசந்தகுமாரி, டிகே ஜெயராமன் கேசட்டுகள் சிலவற்றை வாங்கிக்கொண்டான். அன்றைய தேதியில் யார் பிரபலமான கர்நாடக சங்கீதக் கலைஞர்கள் என்று அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. கடைக்காரனிடம் கேட்கச் சற்று வெட்கமாக இருந்தது. எப்பேர்ப்பட்ட சங்கீத ஞானஸ்தராக இருந்தாலும் எம்.எல். வசந்தகுமாரியையும் டிகே ஜெயராமனையும் நிராகரிக்க மாட்டார்கள் என்று அவனுக்கு உறுதியாகத் தோன்றியதால் அவற்றை வாங்கினான். கேசட்டின் மேலே இருந்த பிளாஸ்டிக் உறையைக் கிழித்தெறிந்துவிட்டு அதைப் பையில் போட்டுக்கொண்டு கிளம்பினான்.

மாலை ஆறு மணிக்கு அவன் திருவிடந்தை கோயிலுக்குப் போனான். மாமா அப்போதுதான் கோயிலில் இருந்து கிளம்பிக்கொண்டிருந்தார். ‘என்னடா விசேஷம் இன்னிக்கு?’ என்று கேட்டார்.

‘சும்மாத்தான் மாமா’ என்று சொல்லிவிட்டு நேரே சன்னிதிக்குப் போனான். தீர்த்தம் சடாரி வாங்கிக்கொண்டு தாயார் சன்னிதிக்கு வந்து உட்கார்ந்தான்.

ஆறரைக்கு சித்ரா கோயிலுக்கு வந்தாள். அவள் உள்ளே நுழையும்போதே வினோத் அவளைப் பார்த்துவிட்டான். பதற்றமாக இருந்தது. யாராவது பார்த்தால் என்னவாவது நினைத்துக்கொள்வார்களே என்று கவலையாக இருந்தது. ஆனால் அவன் ஒரு பள்ளி ஆசிரியர். கௌரவமான வேலையில் இருப்பவன். சட்டென்று அப்படி யாரும் உடனே தவறாக நினைத்துவிட மாட்டார்கள் என்றும் தோன்றியது. அவள் பெருமாள் சேவித்துவிட்டுத் தாயார் சன்னிதிக்கு வரும்வரை அவனுக்கு நிலைகொள்ளவில்லை. உடம்பெல்லாம் வியர்த்துவிட்டது. நெஞ்சு வறண்டு தாகம் எடுத்தது. சகித்துக்கொண்டு பொறுமையாகக் காத்திருந்தான்.

சித்ரா சன்னிதிக்கு வந்தபோது மிக மிக இயல்பாக எப்போதும் புன்னகை செய்வது போலவே செய்தான். அவளும் பதிலுக்குச் சிரித்தாள்.

‘நீ நன்னா பாடறியாமே? மாமா சொன்னார்’ என்று ஆரம்பித்தான்.

அவள் சற்று வெட்கப்பட்டாற்போல் இருந்தது.

‘இந்தா’ என்று கேசட்டுகளை நீட்டினான்.

‘என்னது?’

‘எனக்குப் பிடிச்சிருந்தது. உனக்குப் பிடிக்கறதான்னு கேட்டுப் பாரு’ என்று சொன்னான்.

அவள் மறுக்கவில்லை. ‘தேங்ஸ்’ என்று சொல்லிவிட்டு வாங்கிக்கொண்டாள்.

‘பாட்டு கத்துண்டியான்ன?’

‘எப்பவோ கத்துண்டது. ரொம்ப சின்ன வயசுல’.

‘ஏன் விட்டுட்டே?’

‘இங்க யார் இருக்கா சொல்லித்தர?’

‘அப்போ மட்டும் யார் இருந்தா?’

‘என் பாட்டி இருந்தாளே. அவ நன்னா பாடுவா’.

‘ஓ’.

அதற்குமேல் பேசினால் சரியாக வராது என்று அவனுக்குத் தோன்றியது. ‘சரி, கேட்டுட்டு சொல்லு’ என்று மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டான். யாரும் பார்க்கவில்லை என்பது நிம்மதியாக இருந்தது.

இரண்டு நாள் கழித்து சித்ரா வீட்டுக்கு வந்து கேசட்டுகளைத் திருப்பிக் கொடுத்தாள். அம்மாவுக்கு அது மிகுந்த ஆச்சரியம். ‘நீ எப்படா இதெல்லாம் கேக்க ஆரம்பிச்சே?’ என்று வினோத்தைக் கேட்டாள்.

‘எப்பவோ’ என்று மட்டும் சொல்லிவிட்டு, ‘சரி உனக்குப் பிடிச்சிதா?’ என்று சித்ராவிடம் கேட்டான்.

அவள், ‘ம்’ என்று மட்டும் சொன்னாள். மேற்கொண்டு இசை சார்ந்து பேசுவதற்குத் தன்னிடம் ஒன்றுமில்லை என்பதை நினைவுகூர்ந்த வினோத், ‘உக்காரேன். ஒரு பாட்டு பாடு. அம்மா கேப்பா’ என்று சொன்னான்.

அம்மாவுக்கு அதுவே பூரித்துவிட்டது. ‘அதானே? நீ நன்னா பாடுவேன்னு கேசவன் சொன்னான். ஒரு பாட்டு பாடேன்?’ என்று கேட்டாள்.

அன்றைக்கு சித்ரா நிதி சால சுகமா என்ற கீர்த்தனையைப் பாடிக்காட்டினாள். அது மிகவும் நன்றாக இருப்பதாக அம்மா சொன்னாள். வினோத்துக்கு ராகமோ மற்றதோ தெரியவில்லை. சித்ரா சகஜமாகத் தன் வீட்டுக்கு வந்து சொன்ன வார்த்தையைத் தட்டாமல் பாடிக் காட்டியதே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அம்மா அவளுக்குக் காப்பி கொடுத்தாள். குடித்துவிட்டு, ‘போயிட்டு வரேன் மாமி’ என்று சொல்லிவிட்டு அவள் கிளம்பியபோது, வினோத் வாசல்வரை வந்து அனுப்பிவைத்தான்.

அம்மாவுக்கு ஏதாவது புரிந்திருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. புரியவேயில்லை என்றாலும் அது ஒரு சரியான தொடக்கமாக இருக்கும் என்று நினைத்தான். இரவு சீக்கிரமே சாப்பிட்டுவிட்டுப் படுத்து, சித்ராவை நினைத்துக்கொள்ள ஆரம்பித்தான்.

(தொடரும்)

http://www.dinamani.com/junction/yathi/2018/aug/30/119-மாரு-பல்க-2990454.html

Link to comment
Share on other sites

120. வாசனை

 

 

அன்றைக்கு நெடு நேரம் அவன் சித்ராவை நினைத்துக்கொண்டிருக்கும்படி ஆகிவிட்டது. நான் குரல் கொடுக்கும்வரை கண்ணைத் திறக்காதே, நினைப்பதை மாற்றாதே என்று சொன்ன அந்தப் பெண், சொன்னதையே மறந்துவிட்டாளோ என்று வினோத்துக்குத் தோன்றியது. ஆனாலும் கண் விழித்துப் பார்க்கவும் பேசவும் தயக்கமாக இருந்தது. எனவே திரும்பவும் சித்ராவையே நினைக்க ஆரம்பித்தான்.

அவளைக் காதலிப்பதை அவளுக்கு எப்படித் தெரியப்படுத்துவது என்று அவனுக்கு அந்நாள்களில் தெரிந்திருக்கவில்லை. கடிதம் எழுதலாம் என்று முதலில் நினைத்தான். பிறகு அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டான். தற்செயலாகப் பார்க்கும்போது பேசும் ஓரிரு சொற்களில் தன் மனத்தைத் தெரியப்படுத்திவிடுவதே நல்லது என்று தோன்றியது. அவன் அதற்கு முயற்சி செய்யவும் ஆரம்பித்தான்.

ஒருநாள் அவன் பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது தென்பட்டில் யாரோ ஒரு தோழியின் திருமணத்துக்குப் போய்க்கொண்டிருந்த சித்ராவை வழியில் பார்த்தான். உடனே சைக்கிளை விட்டு இறங்கி அவளோடு பேசியபடி நடக்கத் தொடங்கினான். அந்தத் தோழி யார், என்ன வயது, அப்பா யார், அம்மா யார் என்றெல்லாம் அக்கறையாக விசாரித்துத் தெரிந்துகொண்டான். ‘உனக்கு உங்காத்துல வரன் பாக்க ஆரம்பிச்சுட்டாளா?’ என்று மிகவும் இயல்பாகக் கேட்பதுபோலக் கேட்டான். அவள் வெட்கப்பட்டாள். ம் என்று மட்டும் சொன்னாள். பிறகு என்ன நினைத்தாளோ, வெகு நாள்களாகப் பார்த்துக்கொண்டிருந்தாலும் ஒன்றும் தகையவில்லை என்று சொன்னாள். அவனுக்கு அது திருப்தியான பதிலாக இருந்தது. இந்த இடத்தில் பொருத்தமான ஒரு சொல் அகப்பட்டுவிட்டால் தன் மனத்தில் இருப்பதைத் தெரிவித்துவிடலாம் என்று நினைத்தான். அந்த ஒரு சொல்லுக்காக யோசிக்க ஆரம்பித்தான். ‘உனக்கு ஆட்சேபணை இல்லேன்னா நானே உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறேன்’ என்று சொல்லலாமா என்று நினைத்தான். பிறகு அது சரியாக வராது என்று எண்ணி, ‘எங்கம்மாட்ட சொல்லி உங்காத்துல பேச சொல்லட்டுமா?’ என்று கேட்கலாமா என்று யோசித்தான். அனைத்தையும்விட, ‘எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு’ என்பது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது.

யோசித்து ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னதாகவே அவளது இன்னொரு சினேகிதி குறுக்கே வந்துவிட்டாள். ‘நான் அவளோட போறேன்’ என்று சொல்லிவிட்டு சித்ரா போய்விட்டாள். வினோத்துக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தாலும் அவ்வளவு நேரம் அவளோடு நடந்து வந்ததும் பேசியதும் திருப்தியாகவே இருந்தது.

வீட்டுக்கு வந்தபோது டியூஷனுக்கு வந்திருந்த பையன்கள் காத்திருந்தார்கள். அவசரமாக முகம் கழுவி, காப்பி குடித்துவிட்டு அவர்களோடு உட்கார்ந்தான். பாடங்களில் மனம் ஒன்றவேயில்லை. ஏனோதானோ என்று எதையோ சொல்லிக் கொடுத்துவிட்டு சீக்கிரமே அவர்களை அனுப்பிவிட்டு எழுந்து கோயிலுக்குப் போனான். கேசவன் மாமா அங்கே பட்டாச்சாரியாரோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அவனைக் கண்டதும், ‘என்னடா?’ என்று கேட்டார்.

‘சும்மாத்தான் வந்தேன். வாங்களேன், கொஞ்ச தூரம் நடந்துட்டு வருவோம்?’

‘டியூஷனெல்லாம் முடிஞ்சிடுத்தா?’

‘ஆயிடுத்து மாமா’.

‘நான் வரேன்’ என்று பட்டாச்சாரியாரிடம் சொல்லிவிட்டு மாமா எழுந்து வந்தார்.

‘சொல்லு. என்ன சமாசாரம்?’

அன்றைக்கு வினோத் ஒரு தீர்மானத்துடன் இருந்தான். என்ன ஆனாலும் மாமாவுக்குத் தெரியப்படுத்திவிடுவது. சமயம் பார்த்து, அம்மாவிடமும் அப்பாவிடமும் விஷயத்தைச் சொல்லி, நடத்திவைக்க அவரால்தான் முடியும்.

‘மாமா, நீங்க தப்பா நினைச்சிக்கப்படாது. அம்மா எனக்குப் பொண்ணு பாக்கணுங்கறா.. அடிக்கடி அதைப் பத்திப் பேச ஆரம்பிச்சிருக்கா’.

‘ஆமா. அதுல என்ன தப்பு? மிச்சம் இருக்கறவன் நீ ஒருத்தன். நீயாவது அவ திருப்திக்கு இருந்துட்டுப் போயேண்டா’.

‘சரி மாமா. ஆனா பொண்ண எனக்குப் பிடிக்கணும் இல்லியா?’

‘உனக்குப் பிடிக்காத ஒருத்திய உங்கம்மா பண்ணி வெக்கமாட்டா வினோத். கவலைப்படாதே’.

‘எனக்குப் பிடிச்ச ஒருத்தி இருக்கா. அதை நானே சொல்ல சங்கடமா இருக்கு. நீங்க உதவி பண்ணேள்னா நன்னாருக்கும்’.

மாமாவுக்கு ஒரே ஆச்சரியமாகப் போய்விட்டது. அப்படியே அவனை நிறுத்தி நடுச்சாலை என்றும் பாராமல் இறுக்கி அணைத்து விடுவித்தார். ‘போடு சக்கைன்னானாம். யாருடா?’

அவன் வெட்கப்பட்டுக்கொண்டு சித்ராவைப் பற்றிச் சொன்னான். சிறிது நேரம் யோசித்த கேசவன் மாமா, ‘பரவால்லேடா வினோத். நல்ல இடமாத்தான் சொல்றே. எனக்கு சம்மதமாத்தான் படறது’.

‘தேங்ஸ் மாமா. ஆனா லவ்வு கிவ்வுனு ஆத்துல சொல்லி அப்பாவ கலவரப்படுத்த வேண்டாம்னு நினைக்கறேன். இன்னொண்ணு இது லவ்வுமில்லே. அவளுக்கு அப்படி ஒரு அபிப்பிராயம் இருக்கா இல்லியான்னு எனக்குத் தெரியாது. அதனால...’

‘விட்டுடு வினோத். நான் பாத்துக்கறேன்’ என்று மாமா சொன்னார்.

அதன்பின் அவர் அம்மாவிடம் என்ன பேசினார், அப்பாவிடம் என்ன பேசினார் என்றெல்லாம் வினோத்துக்குத் தெரியாது. திடீரென்று ஒரு நாள் அம்மா, பத்மா மாமியின் வீட்டுக்குப் போய் சித்ராவின் ஜாதகத்தைக் கேட்ட விவரமே அவனுக்கு இரண்டு நாள் கழித்துத்தான் தெரியவந்தது. ‘மாமியே பிரமாதமா ஜோசியம் பாப்பா வினோத். ரெண்டு பேரோடதும் நன்னா பொருந்தியிருக்குன்னு சொல்லிட்டா. க்ராஸ் செக்கெல்லாம் அநாவசியம்’ என்று மாமா சொன்னார்.

எண்ணி ஒரே வாரத்தில் நிச்சயதார்த்தம் நடந்து, அடுத்த மாதமே கல்யாணம் என்று உறுதியானது. வினோத்துக்குத் தாங்க முடியாத வியப்பும் சந்தோஷமும் ஏற்பட்டு மாமாவைத் தனியே கூப்பிட்டுக் கேட்டான், ‘அப்பாட்ட எப்படி சொன்னேள்?’

‘ஒன்ன பத்திப் பேச்சே எடுக்கலடா. சித்ரா ஒருத்தி இருக்கான்னு லேசா அக்காட்ட கோடி காட்டிட்டு விட்டுட்டேன். மிச்சத்த அவளே முடிச்சிட்டா’ என்று சொன்னார்.

துறவு சார்ந்த ஒரு சிறு எண்ணமும் அதுவரை தன் மனத்தில் உதித்ததேயில்லை என்பதை வினோத் எண்ணிப் பார்த்தான். காவிரியில் கிடைத்த சிவலிங்கம் அவனை ஒரு சிவ பக்தனாக மாற்றியிருந்ததே தவிர, எதையும் விட்டுச் செல்லும் சிந்தனை அவனுக்குத் தோன்றியதேயில்லை. தான் ஒரு சிவ பக்தன் என்பதை வீட்டுக்குத் தெரியப்படுத்தக்கூட அவன் நினைத்ததில்லை. அதை அவசியமாகவும் கருதியதில்லை. சிவம் அவனது மனத்துக்குகந்த தெய்வமாகியிருந்தது. நள்ளிரவில் மட்டும் அந்த லிங்கத்தை எடுத்துவைத்து சிறிது நேரம் பூஜிப்பான். தியானம் செய்வான். ஆனால் மனம் ஒன்றாது. மீண்டும் எடுத்துப் பெட்டியில் வைத்துவிட்டுப் படுத்துவிடுவான். அது போதும் என்று நினைத்தான். சிவ லிங்கம் கிடைத்த பின்பு அவன் கோயிலுக்குப் போவது படிப்படியாகக் குறைந்துவிட்டிருந்தது. படிப்பு முடித்து வேலை, வேலை விட்டால் டியூஷன் என்று வாழ்க்கையை ஒரு நேர்க்கோட்டில் அவன் அமைத்துக்கொண்டுவிட்டபடியால் வீட்டில் யாரும் அவன் மாறிவிட்டதாக நினைக்க வாய்ப்பே உண்டாகவில்லை. எல்லாம் அதனதன் இயல்பில் இயங்கிக்கொண்டிருப்பது போலவேதான் இருந்தது.

அம்மாவும் அதனால்தான் நம்பிக்கையும் மகிழ்ச்சியுமாகத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தாள்.

ஒரு சம்பவத்தை வினோத் நினைத்துப் பார்த்தான். அது நிச்சயமாகிவிட்ட தருணம். ஓரிரு முறை அவன் சித்ராவுடன் வெளியே போய்விட்டு வந்திருந்தான். அந்த விஷயம் இரு வீட்டாருக்கும் தெரிந்தே நடந்ததுதான். எதுவும் தவறல்ல. எதுவும் தகாததும் அல்ல. எல்லோரும் எல்லாவற்றையும் எளிதாக ஏற்கும் பக்குவத்தைப் பெற்றிருந்தார்கள். சட்டென்று ஒருநாள் அவனுக்கு சித்ராவை முத்தமிட வேண்டும் என்று தோன்றியது. வெறுமனே அல்ல. கட்டியணைத்து முத்தமிட வேண்டும். திசைகள் சாட்சியாக, பெருங்கடல் சாட்சியாக மணல் வெளியில், யாருமற்ற தனிமையில் அது நிகழ வேண்டும் என்று விரும்பினான். ஆனால் இதனை வீட்டில் சொல்லி அனுமதி பெற்றுச் செய்ய முடியாது. வேண்டியது சித்ராவின் அனுமதி மட்டும்தான். தனக்கு ஏன் இப்படி சினிமாத்தனமான ஆசைகள் உதிக்கின்றன என்று அவனுக்கே வியப்பாக இருந்தது. ஆனாலும் அது தேவை, அது நிகழ்ந்தால் நன்றாக இருக்கும் என்று திரும்பத் திரும்பத் தோன்றியது.

அன்று மாலையே அவன் சித்ராவைத் தனியே கூப்பிட்டு, கடற்கரை வரை சென்று வரலாம் என்று சொன்னான். அவள் கோயிலுக்குப் போகும்போது அப்படியே வருகிறேன் என்று சொன்னாள். வினோத் நெடுஞ்சாலை ஓரத்தில் அவளுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தான். சரியாக ஆறரைக்கு சித்ரா அங்கு வந்தாள். பார்த்ததும் புன்னகை செய்தாள். ‘வா’ என்று அழைத்துக்கொண்டு சாலையைக் கடந்து சவுக்குத் தோப்புக்குள் இறங்கி, ஐந்து நிமிடங்களில் கடற்கரையை அடைந்தான்.

பொதுவாக அந்நேரத்தில் அங்கு யாரும் இருக்கமாட்டார்கள். அபூர்வமாக சில சமயம் ஓரிரு மீனவர்கள் அங்கு வந்து போவதுடன் சரி. மீன் பிடிக்கக் கடலுக்குள் போகிறவர்கள்கூட கோவளத்துக்குப் போய் இறங்குவார்களே தவிர, திருவிடந்தைப் பகுதிக்கு வரமாட்டார்கள். ஆரவாரமற்ற அலைகளும் ஒரே சீரான வேகத்தில் வீசும் சவுக்குத் தோப்புக் காற்றும் இதமான இருளும் பிரமாதமாகக் கூடி அமைந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது. காதலுடன் சித்ராவின் கையைப் பிடித்தான். அவள் மறுக்கவில்லை. சிறிது வெட்கப்பட்டாள்.

‘உட்கார்’ என்று சொன்னான்.

இருவரும் மணலில் உட்கார்ந்தார்கள். ‘எதுக்குக் கூப்ட்டேள்?’ என்று சித்ரா கேட்டாள்.

‘உனக்கு ஒரு முத்தம் குடுக்கணும்னு தோணித்து’.

‘ஐயோ!’ என்றாள்.

‘தப்பா?’

அவள் பதில் சொல்லவில்லை.

‘தப்பு, வேணான்னு நினைச்சேன்னா சொல்லு. பண்ணலை. பரவால்லேன்னு நினைச்சேன்னா குடுப்பேன். ஒண்ணே ஒண்ணு’.

என்ன சொல்வதென்று தெரியாமல் அவள் தடுமாறிக்கொண்டிருந்தபோது அவன் சட்டென்று நெருங்கி அவள் உதட்டில் முத்தமிட்டான். அவள் முகபாவம் அப்போது என்னவாக இருந்தது என்று அவனால் சரியாகப் பார்க்க முடியவில்லை. நன்கு இருட்டிவிட்டிருந்ததே காரணம். ஆனால் மறுப்பாகவோ, வெறுப்பாகவோ அவள் ஒன்றும் சொல்லவில்லை. அது அவனுக்குப் போதுமானதாக இருந்தது.

வாழ்வில் முதல் முறையாக ஒரு பெண்ணை நெருங்கித் தொட்டிருக்கிறோம் என்பது அவனுக்குப் பூரிப்பாக இருந்தது. ஒரு பெண்ணின் சருமம் எப்படி இருக்கும் என்று அவனுக்கு அதற்கு முன் தெரியாது. அதன் மென்மை குறித்த கற்பனைகள் இருந்ததே தவிர, வாசனை தெரிந்ததில்லை. இப்போது முதல் முதலில் சித்ராவை நெருங்கி முத்தமிட்டபோது ஒரு பெண்ணின் வாசனை என்பது சிகைக்காய்ப் பொடி டப்பாவில் போட்டு வைத்து எடுத்த ஒரு ரோஜாப்பூவின் வாசனைக்கு நிகரானதாக இருக்கும் என்று தோன்றியது. உடனே தான் தவறாக யோசிக்கிறோமோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. சித்ரா அன்றைக்கு சிகைக்காய்ப் பொடி போட்டுக் குளித்திருக்கலாம். அது அவளது சொந்த வாசனையாக இருக்க முடியாது என்று தோன்றியது. இன்னொரு முறை அவள் முத்தமிட அனுமதித்தால் சரியாகக் கணித்துவிடலாம் என்று நினைத்தான். அதைச் சொல்லாமலே செய்யலாம் என்று முடிவு செய்து மீண்டும் நெருங்கியபோது, ‘வேண்டாமே?’ என்று அவள் சொன்னாள்.

அவன் சட்டென்று விலகிக்கொண்டு, ‘சரி’ என்று உடனே சொல்லிவிட்டான். சிரித்தான். ‘நன்னா இருந்துது இல்லே?’

அவள் தலை குனிந்திருந்தாள். வெட்கம்தான் என்று தோன்றியது. இருந்தாலும் ஏதாவது மேற்கொண்டு கேட்க நினைத்து, ‘அந்த நிமிஷத்துல என்ன நினைச்சிண்டே?’ என்று கேட்டான்.

‘எப்போ?’

‘கிஸ் பண்ணேனே, அப்போ’.

‘ஒண்ணுமில்லே’.

‘பரவால்ல சொல்லு’.

‘ஒண்ணுமே நினைக்க முடியலே’.

அதுதான் தியானமாக இருக்கும் என்று வினோத்துக்குத் தோன்றியது. அன்றிரவு அவன் சிவ லிங்கத்தை வைத்து பூஜித்து, தியானத்தில் அமர்ந்தபோது தன்னையறியாமல் அதை எடுத்து முத்தம் கொடுத்தான். லிங்கத்தின் மீது ஈர மணலின் வாசனை அடித்தது.

(தொடரும்)

http://www.dinamani.com/junction/yathi/2018/aug/31/120-வாசனை-2990799.html

Link to comment
Share on other sites

121. பனிப்புயல்

 

 

அவளது கால்கள் மிகவும் சொரசொரப்பாக இருந்தன. வினோத் அவளது இரண்டு கால்களையும் அழுத்திப் பிடித்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தபோதும் அந்தக் கால்களின் சொரசொரப்பு அவன் மூளையின் ஒரு பகுதியில் நிறைந்து குவிந்திருந்தது. அவள் குளிப்பதேயில்லை; அல்லது அவளுக்கு ஏதோ சரும வியாதி இருக்க வேண்டும் என்று தோன்றியது. அந்த நினைவில் இருந்து விடுபட சிரமமாக இருந்தது. கூடவே தனது மனத்தின் அற்ப ஞாபகங்களை எண்ணி துக்கம் பொங்கவும் செய்தது.சுய துக்கத்தின்மீதுகூட கவிய மறுக்கும் மனத்தின் பலவீனம் அவனை அவமானம் கொள்ளச் செய்தது. அதை எண்ணியும் சிறிது நேரம் குமுறிக் குமுறி அழுதான். அவன் அழுது முடிக்கும்வரை அந்தப் பெண் நகரவில்லை. அவனாக அவளது பாதங்களை விடுத்து எழும்வரை அவனை எழுப்பவும் இல்லை.

வினோத் சற்று சமாதானமாவதற்கு நெடுநேரம் பிடித்தது. அவள் மடியில் தலைவைத்துப் படுக்கலாமா என்று நினைத்தான். அப்படியே அவள் தட்டினால் தூங்கிவிடுவோம் என்று தோன்றியது. அவனுக்கே இதெல்லாம் வியப்பாகவும் இருந்தது. தனக்கு என்ன ஆகிக்கொண்டிருக்கிறது? எல்லாமே சரியாகத்தான் இருந்தது. இலங்கைக்குப் போகாதிருந்திருந்தால் இவ்வளவு அவஸ்தைகள் வந்திருக்காது. ஒரு மனிதனின் ஆகப்பெரிய அவமானம் சுய இரக்கம்தான் என்று அவனுக்குத் தோன்றியது. உறவு பந்த பாசங்களில் இருந்து விடுபடுவது சுலபம். சுய இரக்கத்தில் இருந்து உதறிக்கொண்டு சிறகடிப்பதுதான் தவத்தின் உச்சமாக இருக்கும் என்று அவன் நினைத்தான். ஆனால் தன்னால் ஏன் அது முடியவில்லை?

அந்தப் பெண்ணிடம் அவன் இதனைக் கேட்டான்.

‘உனக்கு சுயத்தின் மீதான பிரக்ஞை விலகாதிருக்கிறது. அதனால்தான் அதன் மீது இரக்கம் வருகிறது. நாளை அன்பு வரும். நேசம் பிறக்கும். பாசம் உதிக்கும். உன் மனம் எண்ணும் எண்ணங்களே சரியென்று அதே மனம் தீர்ப்புச் சொல்லும். மனம் வழங்கும் தீர்ப்பைப் பொதுவாக மூளை ஏற்பதில்லை’ என்று அவள் சொன்னாள்.

யோசித்துப் பார்த்தால் அவள் சொல்வது சரிதான் என்று தோன்றியது. ‘அம்மா, நீங்கள் என்னை இரண்டு கடவுள்களில் ஒருவரை நினைத்துக்கொள்ளச் சொன்னீர்கள். என்னால் ஏன் அது முடியாமல் போனது? நான் ஏன் சித்ராவை நினைத்தேன்?’ என்று அவன் கேட்டான்.

‘கிருஷ்ணனைவிட நீ அவளை அதிகம் விரும்பியிருக்கிறாய்’.

‘இது தவறல்லவா?’

‘யார் சொன்னது? ஒரு பெண்ணின் மீது செலுத்தும் நேசத்துக்கு நிகரான ஆன்மிகம் உலகில் வேறில்லை’.

‘அது ஆன்மிகமா?’

‘அதிலென்ன சந்தேகம்? உனக்கு நான் ஒரு கதை சொல்லவா?’ என்று அவள் கேட்டாள்.

அவன் அவளை நெருங்கி பத்மாசனமிட்டு சரியாக உட்கார்ந்துகொண்டான். அவள் புன்னகை செய்தாள். பிறகு சொல்ல ஆரம்பித்தாள்.

அவள் இமயத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்த நாள்களில் ஓர் இளம் துறவியை அடிக்கடி சந்திக்கும்படி இருந்தது. அந்தத் துறவிக்கு மிஞ்சிப் போனால் முப்பது முப்பத்து இரண்டு வயதுதான் இருக்கும். ஆனால் தோற்றத்தில் அவர் பதினெட்டில் இருந்து இருபது வயதுக்குள்தான் தென்படுவார். தீவிரமான யோக சாதனைகளைச் செய்து தன் உடலை முற்றிலும் தன்வயப்படுத்தியிருந்தார்.  முழங்கால் வரை புதையவைக்கும் நொறுங்கு பனியில் சளைக்காமல் பத்து மைல்கள் வெறுங்காலோடு நடந்து போவார். ‘கால் வலிக்கிறது’ என்று சொல்லி, அதே பனியில் அப்படியே சாய்ந்து படுத்துக்கொள்வார். பொதுவாக அவர் மேலாடை ஏதும் அணிவதில்லை. இடுப்பில் இருக்கும் ஒரு சிறிய துண்டுதான் அவரது உடை. அந்தத் துண்டை அவர் மாற்றுவதும் கிடையாது. வழியில் தென்படும் ஆற்றிலோ ஓடையிலோ அப்படியே அவிழ்த்து அலசிக் காயவைப்பார். அது உலரும்வரை நிர்வாணமாகவே நிற்பார். தனது நிர்வாணத்தை அவர் ஒரு பொருட்டாகக் கருதவே மாட்டார்.

அப்படி ஒருநாள் அவர் அரைத் துண்டைக் காயவைத்துக்கொண்டு நிர்வாணமாக நின்றிருந்தபோதுதான் அந்தப் பெண் துறவி அந்த வழியாகக் கடந்து போக நேர்ந்தது. பார்த்த மாத்திரத்தில் தன்னெதிரே நிற்பவர் ஒரு யோகி என்பதை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. அவள் அவருக்கு வணக்கம் சொன்னாள். பதிலுக்கு அந்த இளம் யோகியும் அவளுக்கு வணக்கம் சொன்னார். ‘உடுப்பின் ஈரம் உலரும்வரை நீங்கள் இதனைக் கட்டிக்கொள்ளுங்கள்’ என்று சொல்லி அவள் தன்னிடம் இருந்த ஒரு துண்டை எடுத்து அவரிடம் நீட்டினாள். அவர் மறுக்கவில்லை. அந்தத் துண்டை வாங்கிக்கொண்டு போய் ஆற்றில் முக்கி ஈரமாக்கி எடுத்து வந்து கட்டிக்கொண்டார். அந்தப் பெண்ணுக்கு இது பெரும் வியப்பாக இருந்தது. இருப்பினும் அதைக் காட்டிக்கொள்ளாமல், ‘என்னிடம் சிறிது உலர்ந்த பழங்கள் இருக்கின்றன. வேண்டுமா?’ என்று கேட்டாள். அவர் பதில் சொல்லாமல் சிரித்தார். அந்தப் பெண் மீண்டும் தனது பையில் கைவிட்டு அள்ளி உலர்ந்த திராட்சைகள் ஒருபிடியை எடுத்து அவரிடம் அளித்தாள். அவர் நன்றி சொல்லி அதை வாங்கி ஒரே வாயில் போட்டு மென்று விழுங்கினார்.

‘நான் ஆந்திரத்தில் இருந்து வருகிறேன்’ என்று அந்தப் பெண் சொன்னாள்.

‘அப்படியா?’ என்று அவர் கேட்டார்.

‘வாரணாசியில் யோகி ஒருவர் இருக்கிறார். அவர் என் குரு. என்னை ஆறு மாதங்கள் இமயத்தில் திரிந்துவிட்டு வரச் சொல்லி அனுப்பினார்’.

‘திரியுங்கள்’ என்று அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்.

‘ஒரு வாரமாக இந்தப் பகுதியில் திரிந்துகொண்டிருக்கிறேன். நீங்கள்தான் முதல் முதலில் என் கண்ணில் பட்ட நபர். மனிதர்களையே பார்க்காதிருந்துவிட்டுப் பார்க்கும்போது ஏதாவது பேசவேண்டும் என்று தோன்றியது’.

அவர் மீண்டும் சிரித்தார். ‘என் குகைக்கு வரலாம்’ என்று சொல்லிவிட்டு, காய்ந்திருந்த தனது துண்டை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு நடக்க ஆரம்பித்தார். அந்தப் பெண் அவர் பின்னால் போகத் தொடங்கினாள்.

அவர்கள் வெகுதூரம் நடந்து போனார்கள். மனித நடமாட்டம் அறவே இல்லாத வழித்தடங்கள் பல அந்த இளம் யோகிக்கு அங்கே தெரிந்திருந்தது. கால் புதைந்த பனியோ, வீசிய கொடூரமான பனிப்புயல் காற்றோ அவரைச் சற்றும் சலனம் கொள்ளச் செய்யவில்லை. திடீர் திடீரென்று பனிப் பாளங்கள் வழியில் பெரும் சத்தமுடன் உருண்டு வந்தபோது அவர் ஹோவென்று சிரித்தபடி சட்டென்று படுத்துக்கொள்வார். அவர் மீது மோதித் துள்ளி விழுந்து அந்தப் பாறைகள் மேலும் உருண்டு செல்லும். அவர் உடனே எழுந்து நின்று கைகொட்டிச் சிரிப்பார்.

அந்தப் பெண்ணுக்கு இதெல்லாம் வியப்பாக இருந்தது. ‘சுவாமி தங்களது குருநாதர் யார்?’ என்று அவள் கேட்டாள். இளம் துறவி இதற்கும் சிரித்துவிட்டு, ‘கபிலர்’ என்று சொன்னார். வழி முழுதும் அந்தப் பெண் தான் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தாள். அவர் முகம் சுளிக்காமல் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொல்லிக்கொண்டு வந்தார். நெடு நேரம் நடந்தபின் அவர்கள் ஒரு குகையின் வாசலுக்கு வந்து சேர்ந்தார்கள். உள்ளே நுழையும் முன் அவர், ‘சாஜிதா..’ என்று யாரையோ அழைத்தார்.

குகைக்குள் இருந்து ஒரு பெண் வெளியே வந்தாள். புராதனமான காஷ்மீரத்து முஸ்லிம் பெண்களைப் போலவே அவள் பர்தா அணிந்து அதன்மீது ஒரு சால்வை போர்த்தியிருந்தாள்.

‘இவர் நமது விருந்தினர். உள்ளே வரலாம் அல்லவா?’ என்று அந்த இளம் துறவி கேட்டார்.

சாஜிதா அந்தப் பெண்ணுக்கு சலாம் இட்டு உள்ளே அழைத்துச் சென்றாள்.

அந்த குகை மிகவும் சுத்தமாக இருந்தது. தரையில் ஓரிடத்தில் கம்பளி விரிக்கப்பட்டு கவனமாக சுருக்கங்கள் நீக்கப்பட்டிருந்தன. இரண்டு மண் கலயங்களும் ஒரு மரப்பலகையும் ஒரு ஓரமாக வைக்கப்பட்டிருந்தன.

‘உட்காருங்கள்’ என்று அந்த இளம் துறவி சொன்னார்.

அந்தப் பெண் கம்பளியில் உட்கார்ந்ததும் சாஜிதா அந்த மரப்பலகையை எடுத்து வந்து அவளுக்கு எதிரே வைத்தாள். இளம் துறவி அதன்மீது அமர்ந்தார்.

‘தேநீர் அருந்துகிறீர்களா?’ என்று சாஜிதா கேட்டாள்.

‘ஆம் பெண்ணே. எனக்கு இப்போது சூடாக ஏதாவது தேவை. வெந்நீர் இருந்தால்கூடப் போதும்’ என்று அந்தப் பெண் சொன்னாள்.

சாஜிதா ஒரு சிறு குமுட்டி அடுப்பை எடுத்து வைத்துப் பற்ற வைத்து ஒரு பாத்திரத்தை அதன்மீது வைத்துத் தண்ணீரை ஊற்றினாள். ஒரு சிறிய டப்பாவில் இருந்து தேயிலைத் தூளை எடுத்து அதில் போட்டுக் கொதிக்கவிட ஆரம்பித்தாள்.

‘இந்த சாஜிதா யார்?’ என்று அந்தப் பெண் கேட்டாள்.

‘எனக்குத் தெரியாது. அவள் ஒரு பாகிஸ்தானி. எப்படியோ இந்தப் பகுதிக்கு வந்து சேர்ந்துவிட்டாள்’ என்று இளம் துறவி சொன்னார்.

‘உங்கள் மாணவியா?’

‘இல்லை’ என்று அவர் உடனே சொன்னார்.

‘அடைக்கலம் தந்திருக்கிறீர்களா?’

‘அடைக்கலமா! எவ்வளவு பெரிய சொல்! எனக்கென்ன தகுதி இருக்கிறது அதற்கு?’

‘பிறகு?’

‘அவளை கோட்லிக்கு அழைத்துச் சென்று விடமுடியுமா என்று என்னிடம் கேட்டாள். மூன்று மாதங்கள் பொறுத்தால் செய்யலாம் என்று சொன்னேன்’.

‘அதென்ன மூன்று மாதம்?’

‘எழுபத்து இரண்டு நாள் அப்பியாசம் ஒன்றைச் செய்துகொண்டிருக்கிறேன். அதை முடித்துவிட்டு அழைத்துச் செல்லலாம் என்று எண்ணியிருக்கிறேன்’ என்று அந்தத் துறவி சொன்னார்.

‘எனக்குப் புரியவில்லை. வழி தப்பி வந்தவள் மூன்று மாதங்கள் காத்திருந்துவிட்டு ஊர் திரும்பச் சம்மதித்தாளா? ஆச்சரியமாக இருக்கிறது’.

‘அது ஒன்றுமில்லை. அவளுக்கு எனது யோகப் பயிற்சிகளைப் பார்க்கப் பிடித்திருக்கிறது. பக்கத்தில் இருந்து கவனிப்பதை மிகவும் விரும்புகிறாள். எனக்கு அதைத் தடுக்க எந்தக் காரணமும் இல்லாததால் நானும் சும்மா இருந்துவிட்டேன்’.

அந்தப் பெண் வியப்பில் பேச்சற்றுப் போனாள். ‘தவறாக எண்ணாதீர்கள். யோகப் பயிற்சிகளுக்கு யாருடைய இடையூறும் வேண்டாம் என்றுதானே இத்தனைத் தொலைவு தேடி வந்தீர்கள்?’

‘ஆம். சந்தேகமில்லை’.

‘முன்பின் தெரியாத ஒரு பெண்ணை உங்களால் இடையூறாகக் கருத முடியவில்லையா?’

‘இல்லையே. அவள் என்னைத் தொந்தரவு செய்வதே இல்லை. மாறாக எனக்குத் தேநீர் தயாரித்துத் தருகிறாள். இரவுகளில் உணவு சமைத்துத் தருகிறாள். மிகவும் உதவியாக இருக்கிறாள்’.

‘இது ஒரு சொகுசு அல்லவா?’

‘ஆம். ஆனால் இது இல்லாவிட்டாலும் எனக்குப் பிரச்னை இல்லையே’ என்று சொல்லிவிட்டு அவர் சிரித்தார்.

அன்றிரவு அந்த இளம் யோகி தன் கையாலேயே அந்தப் பெண்ணுக்கு சமைத்தார். சுடச்சுட ரொட்டிகளும் மிளகாய் ஊறுகாயும் கொடுத்து சாப்பிடச் சொன்னார். சாப்பிட்டுவிட்டுக் கிளம்புவதாக அந்தப் பெண் சொல்லியிருந்தாள். ஆனால் சற்றும் எதிர்பாராதவிதமாக அன்றிரவு அங்கே பனிப்புயல் தாக்கத் தொடங்கியது. ஒரு பிரளயம் போலப் பனி பொங்கி எழுந்து சுழன்று அடித்தது. பாறைகள் உருண்டு சிதறின. வெளியே பலத்த சத்தமுடன் பனிப்பாறைகள் பிளந்து நீர் கொப்பளித்துப் பொங்கும் ஓசை கேட்டது. மரங்கள் பேயாட்டம் ஆடத் தொடங்கின. பல மரங்கள் உடைந்து விழும் ஓசை கேட்டது. இளம் யோகி அவளை அன்றிரவு அங்கேயே தங்கிவிடச் சொன்னார். சாஜிதா அவளுக்குப் படுக்கை ஏற்பாடு செய்தாள். கம்பளியின் மீது இரண்டு சாக்குப் பைகளைப் போட்டு அவளைப் படுக்கவைத்து, அவள் மீது வேறொரு சாக்குப் பையைப் போர்த்திவிட்டாள். ‘மிகவும் குளிரினால் சாக்குப் பைக்குள் படுத்துக்கொண்டு இழுத்துப் போர்த்திக்கொண்டுவிடுங்கள்’ என்று சொன்னாள்.

‘ஏனம்மா, உனக்குக் குளிராதா?’

‘பழகிவிட்டது’ என்று அவள் சொன்னாள்.

‘எத்தனைக் காலமாகப் பழகியது இது?’

‘இப்போதுதான். இவள் வந்து சேர்ந்து இருபது நாள்கள்தான் ஆகின்றன’ என்று இளம் யோகி சொன்னார்.

இரவு அந்தப் பெண்ணுக்கு உறக்கம் வரவில்லை. கண்காணாத பனிமலையின் சிகரங்களுள் ஒன்றில் யாரோ ஒரு யோகியின் குகைக்குள் அன்று தங்குவோம் என்று அவள் எண்ணியிருக்கவில்லை. அந்த யோகியின் குகையில் ஒரு பெண்ணைச் சந்திப்போம் என்று மிக நிச்சயமாக அவளால் நினைக்க முடியவில்லை. அதுவும் ஒரு முஸ்லிம் பெண்.

இதனை அவள் படுத்தபடி நினைத்துக்கொண்டிருந்தபோதே சற்றுத் தள்ளிப் படுத்திருந்த இளம் யோகி சொன்னார், ‘அவள் மிகவும் அன்பானவள். அவளது அன்பின் பரிசுத்தத்துக்கு நிகராகச் சொல்ல ஒன்றுதான் உள்ளது. அது சிவம்’.

(தொடரும்)

http://www.dinamani.com/junction/yathi/2018/sep/03/121-பனிப்புயல்-2993240.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • மிகவும் சரியான பார்வையுடன் கூடிய கணிப்புகள்.  தமிழ்நாடு அரசு  ஈழ தமிழருக்கு ஆதரவாக இருந்தால் மட்டும் போதாது  அதே நேரம் இந்திய மத்திய அரசுடன் நட்புறவுடனும்  செல்வாக்கு செலுத்தகூடிய வல்லமையுள்ளதாகவும்  இந்தியா வெளிநாட்டு கொள்கையில் தங்கள் நினைத்தாதை நடைமுறையில் கொண்டுவரும் ஆற்றல் உள்ளாதாகவும் இருக்க வேண்டும்     இதுவரை இப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கவில்லை  இனிமேலும் இருக்க வாய்ப்புகள் இல்லை   காரணம் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 மட்டுமே இது இந்தியா பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 16இல். ஒரு பங்கு ஆகும்   இவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தியாவை ஆள முடியும்   தமிழ்நாடு இந்தியாவை ஒருபோதும் ஆள முடியாது  ஆனால் இந்தியா எப்போதும் தமிழ்நாட்டை ஆளும்      ஒரு உறுதியான சின்னம் பெறுவதற்கு.  மக்கள் ஆதரவு போதிய அளவு இல்லாத  போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்காத  போதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்காதா  சீமான்  மத்திய அரசையும்  வாக்கு எண்ணும் மெசினையும்  குற்றம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது  
    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.