Jump to content

‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்!


Recommended Posts

122. மூன்று மாதங்கள்

 

 

அந்தப் பெண் துறவி மறுநாள் காலை குகையை விட்டுப் புறப்பட்டாள். முந்தைய இரவு அடித்த பனிப்புயலும் பேய்க்காற்றும் எங்கு போயின என்றே தெரியாத அளவுக்கு பர்வதம் தியானத்தில் ஆழ்ந்திருந்தாற்போல இருந்தது. கிளம்பும்போது, சாஜிதா அவளுக்குப் பத்து ரொட்டிகள் சுட்டுக் கொடுத்து அன்போடு அனுப்பிவைத்தாள்.

‘இது வேண்டாமே. நான் ஒரு துறவி. அடுத்த வேளைக்கு உணவைச் சுமந்து செல்லக் கூடாது’.

‘வழியில் யாராவது பசிக்கிறது என்றால் அவர்களுக்குக் கொடுங்கள்’ என்று அந்தப் பெண் சொன்னாள். இதைப் பார்த்துக்கொண்டிருந்த இளம் யோகி வெறுமனே சிரித்துக்கொண்டே நின்றார்.

அந்தப் பெண் துறவி விடைபெற்றுச் சென்ற ஒரு வார காலத்தில் மீண்டும் அந்த யோகியைச் சந்திக்கும்படி நேர்ந்தது. அதே இமயம். அதே காஷ்மீரப் பகுதி. ஆனால் இது வேறு இடம். வேறு குகை. இம்முறை பெண் துறவியை சாஜிதாதான் முதலில் பார்த்தாள். பார்த்ததும் புன்னகை செய்து, ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்று கேட்டாள். பெண் துறவி புன்னகை செய்தாள். ‘உன் குருநாதர் எப்படி இருக்கிறார்?’

‘குருநாதரா? அப்படி என்றால்?’

பெண் துறவி அதற்குப் பதில் சொல்லவில்லை. சட்டென்று தன் பையில் கைவிட்டு ஒரு பொட்டலத்தை எடுத்தாள். சாஜிதா ஒரு வாரம் முன்னர் கட்டிக் கொடுத்து அனுப்பிய ரொட்டிகளில் சில மிச்சம் இருந்தது. அதை அவளிடமே கொடுத்து, ‘எனக்கு இது செலவாகவில்லை. நீயே வைத்துக்கொள்’ என்று சொன்னாள்.

சாஜிதா மறுக்கவில்லை. அதை வாங்கி வைத்துக்கொண்டு, ‘நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டாள்.

‘எனக்கெல்லாம் செய்வதற்கு என்ன இருக்கிறது? வெறுமனே சுற்றிக்கொண்டிருக்கிறேன்’.

‘நீங்கள் அவரைப்போல ஒரு யோகியா?’'

‘அவரளவு முன்னேறியவள் இல்லை. ஆனாலும் அந்த வழியில் செல்பவள்தான்’.

‘உங்களை ஒன்று கேட்டால் தவறாக நினைக்காமல் இருப்பீர்களா?’

‘கேள் சாஜிதா’.

'ஒரு பெண் யோகியை நான் சந்திப்பது இது முதல்முறை. உங்கள் வீட்டார் உங்களை எப்படி வெளியே அனுப்பினார்கள்? சொல்லாமல் ஓடிவந்துவிட்டீர்களா?’

பெண் துறவிக்குச் சிரிப்பு வந்தது. ‘அது அவ்வளவு முக்கியமா?’

‘எனக்கு முக்கியம்’ என்று அந்தப் பெண் சொன்னாள். ‘ஹிந்து மதத்தில் நிறையப் பெண் சன்னியாசிகள் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்ததில்லை’.

‘இஸ்லாத்திலும் உண்டே? அஜ்மீரில் நானே ஒரு பெண் சூஃபி சன்னியாசியைச் சந்தித்திருக்கிறேன்’.

அந்தப் பெண் உடனே, ‘சூஃபிகளில் உண்டு. இஸ்லாத்தில் இல்லை’ என்றாள். அந்தப் பெண் துறவி அடக்கமாட்டாமல் விழுந்து விழுந்து சிரித்தாள். இவளை வைத்துக்கொண்டு அந்த இளம் யோகி எப்படி சமாளித்துக்கொண்டிருக்கிறார் என்று அவளுக்கு வியப்பாக இருந்தது. இதை அவளிடம் வேறு விதமாக வெளிப்படுத்தியபோது, ‘அவர் அன்பே வடிவானவர். என்னை என் ஊருக்கு அழைத்துச் சென்று சேர்க்கும் பொறுப்பை ஏற்றதில் இருந்து என்னைக் கவனித்துக்கொள்வதை ஒரு கடமையாகக் கொண்டிருக்கிறார். ஒன்று தெரியுமா? என் பெற்றோர்கூட என்னிடம் அவ்வளவு அன்பு செலுத்தியதில்லை’.

‘அப்படியா? மிகவும் நல்லது. அவர் இங்கேதான் இப்போது இருக்கிறாரா?’

‘ஆம். நான்கு நாள்களாக இந்தக் குகையில்தான் வசிக்கிறோம். இது அவரது நண்பர் ஒருவரின் இருப்பிடம் என்று சொன்னார்’.

‘ஓ. அந்த நண்பரும் இங்கே இருக்கிறாரா?’

‘இல்லை. அவர் இவரிடம் குகையை ஒப்படைத்துவிட்டு சுற்றுப்பயணம் கிளம்பிச் சென்றுவிட்டார்’.

‘நல்லது சாஜிதா. அவர் உள்ளே இருந்தால் நான் வந்திருக்கிறேன் என்று சொல். வணங்கிவிட்டுச் செல்கிறேன்’.

‘அவர் சாதகத்துக்குச் சென்றிருக்கிறார். திரும்பி வர இன்னும் சிறிது நேரமாகும். நீங்கள் உள்ளே வந்து தங்கலாமே?’

பெண் துறவி யோசித்தாள். அது அத்தனை அவசியமா என்று அவளுக்குச் சந்தேகமாக இருந்தது. இருப்பினும், சாஜிதா மிகவும் வற்புறுத்தியதால் அந்தக் குகைக்குள் சென்றாள். முதலில் பார்த்த குகையைக் காட்டிலும் இது சிறியது. தவிர பாறை இடுக்குகளில் ஓட்டைகள் அதிகம் தென்பட்டன. இரவுப் பொழுதுகளில் குளிர் இங்கு அதிகம் இருக்கும் என்று தோன்றியது. அந்தப் பெண் ஓடிச்சென்று ஒரு பாயை எடுத்துவந்து விரித்து, உட்காரச் சொன்னாள். பிறகு ஒரு துணி மூட்டையை எடுத்துவந்து அவிழ்த்து, ‘இதெல்லாம் எனக்கு அவர் வாங்கி வந்து கொடுத்தார்’ என்று காட்டினாள். உள்ளே நான்கு சல்வார் கம்மீஸ்களும் ஒரு பர்தாவும் இருந்தன. எல்லாமே புதிய துணிகள்.

‘அவர் வாங்கிவந்து கொடுத்தாரா? எங்கே போய் வாங்கிவந்தார்?’

‘அது தெரியவில்லை. அவர் சொல்லவில்லை. ஆனால் நான் மாற்று உடை இல்லாமல் கஷ்டப்படுவதைக் கண்டு நேற்றுத்தான் இந்தப் புதிய துணிகளை வாங்கிவந்தார். நன்றாக இருக்கிறதா?’

அந்தப் பெண் துறவிக்கு வியப்பாக இருந்தது. எழுபத்து இரண்டு தினங்கள் யோக சாதனைக்காக காஷ்மீரத்துக்கு வந்ததாக அந்த இளம் யோகி சொல்லியிருந்தார். சாதனை தினங்களில் இதெல்லாம் சாத்தியமா? அவளுக்குப் புரியவில்லை. இதைக் கேட்டறிந்துகொள்வதற்காகவேனும் அவர் வரும்வரை காத்திருக்கலாம் என்று முடிவு செய்தாள்.

யோகி குகைக்குத் திரும்ப வெகுநேரமானது. வந்ததும் அந்தப் பெண் துறவியைக் கண்டு புன்னகை செய்தார். ‘வாருங்கள்’ என்று சொன்னார்.

பெண் துறவி அவருக்கு வணக்கம் சொல்லி சம்பிரதாயமாகச் சில வார்த்தைகள் பேசிக்கொண்டிருந்துவிட்டு அதைக் கேட்டாள். ‘இந்தப் பொறுப்பு உங்களை அலைக்கழிப்பதில்லையா?’

அவர் சிரித்தார். ‘யோகினீ! நான் ஒரு யோக சாதனையைக் குறிக்கோளாக வைத்துத்தான் இங்கே வந்தேன். இந்த இடமும் சூழலும் அதற்குப் பொருத்தமாகவே இருக்கின்றன. ஆனாலும் இந்தப் பெண் பாவம் அல்லவா? இவளுக்கு இங்கு யாருமில்லை. சமவெளிப் பகுதிக்குள் செல்லவே முடியவில்லை. விடாமல் யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் குண்டு வெடிப்புகள். இந்தச் சூழ்நிலையில் இவளைப் பராமரிக்க வேண்டியது எனக்குக் கட்டாயமாகிவிட்டது’.

‘பெரிய இழப்பு உங்களுக்கு’.

அவர் சிறிது நேரம் யோசித்தார். பிறகு சொன்னார், ‘ஆம். இழப்புத்தான். என் சக்தியில் கால்வாசியை நான் இழந்துவிட்டேன். திரும்பப் பெற ஓராண்டு வரைகூட ஆகலாம்’.

‘ஐயோ!’ என்றாள் அந்தப் பெண் துறவி.

‘ஆனால் பிறகு யோசித்தேன். ஆதரவற்ற இவளுக்கு உதவி செய்வதே எனது இந்தத் தவத்தின் நோக்கமாக ஏன் இருக்கக் கூடாது? எங்கள் ஊர்க் கவிஞர் ஒருவர் பாடியிருக்கிறார். அன்பிற் சிறந்த தவமில்லை’.

அந்தப் பெண் துறவி, வினோத்துக்கு இந்தக் கதையைச் சொல்லி முடித்தபோது, ‘மன்னித்துவிடுங்கள் அம்மா. நீங்கள் சொன்ன கதையின் தன்மை வேறு. என் பிரச்னையின் பரிமாணம் வேறு. நான் காதலில் சிக்கியவன். அன்பல்ல அதன் ஆதாரப் புள்ளி. காதல். காமத்தில் தோய்த்தது’.

பெண் துறவி சிரித்துக்கொண்டே சொன்னாள், ‘உனக்குத் தெரியுமா? அந்தப் பெண் சாஜிதாவுக்கு ஒருநாள் குளிர்க்காய்ச்சல் வந்துவிட்டது. உடம்பெல்லாம் தூக்கித் தூக்கிப் போட ஆரம்பித்துவிட்டது. வேறு வழியின்றி, அந்த யோகி அவள் உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டுத்தான் அதை அடக்கவேண்டி இருந்தது’.

‘ஐயோ!’

‘மருத்துவமாகச் செய்ததுதான். ஆனால் அன்று அத்தவறு அங்கே நிகழ்ந்தேவிட்டது என்று அவரே என்னிடம் சொன்னார்’.

அண்ணாவா, அண்ணாவா என்று வினோத் மனத்துக்குள் கூக்குரலிட்டான். அவனால் அதை நம்பவே முடியவில்லை. இது எப்படி சாத்தியம் என்று திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டான்.

‘நடந்ததை விடு மகனே. நடந்ததை எண்ணி அவர் சிறிதும் குற்ற உணர்ச்சி கொள்ளவில்லை என்பதுதான் நான் சொல்ல வந்தது’.

‘அது எப்படி முடியும்?’

‘அதைத்தான் அவர் சொன்னார். ஒரு பெண்ணின் மீது காட்டும் நேசத்துக்கு நிகரான ஆன்மிகம் வேறில்லை’.

வினோத் பேச்சற்றுப் போனான். அதன்பின் மூன்று மாத காலம் அந்த இளம் யோகியும் அந்த முஸ்லிம் பெண் சாஜிதாவும் காதல் ஜோடிகளைப்போல இமயத்தின் சரிவுகளில் சுற்றித் திரிந்திருக்கிறார்கள். ஒருநாள் அந்தப் பெண்ணுக்கே ஏதோ தோன்றி, ‘போதும், என்னைக் கொண்டுபோய் விட்டுவிடுங்கள்’ என்று கேட்டிருக்கிறாள். யோகி மறுசிந்தனையே இல்லாமல் அவளை முசஃபராபாத் வரை அழைத்துச் சென்று விட்டுவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு நேரே காசிக்குப் போனார். கங்கையில் குளித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிக் கால் போன போக்கில் எங்கெங்கோ சுற்றித் திரிந்தார். இறுதியில் அருணாசல பிரதேசத்தில் பிரம்மபுத்திராவின் கரையில் ஒரு வனத்தைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து தவம் புரிய ஆரம்பித்தார். மூன்று மாதங்களில் இழந்ததைப் பதினொரு வருடங்களில் திரும்பப் பெற்றார் என்று அந்தப் பெண் சன்னியாசி சொன்னாள்.

வினோத் வாயடைத்துப் போயிருந்தான். நெடுநேரம் அவன் தன்னுணர்வு எய்தவேயில்லை. அவன் மீளும்வரை அந்தப் பெண் காத்திருந்தாள். பிறகு, ‘சிவன் உனக்கு ஏற்றவன் இல்லை மகனே. இறையின் அந்த வடிவத்தை அணுகுவதும் ஆராதிப்பதும் தியானிப்பதும் அதன்மூலம் பலன் பெறுவதும் பெரும் சாதனை. கஷ்டங்கள் நிறைந்த பாதை அது. எளிய மனங்களுக்கு ஏற்றவன் கிருஷ்ணன்தான். இதை உன் அண்ணன் உன்னிடம் சொல்லச் சொன்னான்’ என்று சொன்னாள்.

வினோத் கேவிக்கேவி அழுதுகொண்டிருந்தான். வெகு நேரம் கழித்து, கண்ணைத் துடைத்துக்கொண்டு எழுந்தான். ‘ஒரு வினாவுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். நான் கண்ட ஒளி சத்தியம். அது என்னை சிவன் கோயிலுக்கு இட்டுச் சென்றது சத்தியம். அங்கிருந்து நான் திருவண்ணாமலைக்கு வந்தது சற்றும் எதிர்பாராமல் நிகழ்ந்தது. இதெல்லாம் எதனால் நடந்தது?’

அவள் புன்னகை செய்தாள். ‘என்ன சொன்னால் நீ திருப்தியடைவாய்? நீ படிக்காத உன் மனத்தின் மறுபக்கம்தான் காரணம் என்று சொன்னால் உனக்குப் புரியுமா?’

‘என் மனமா?’

‘ஆம். அதுதான். அதன் ஊசலாட்டம்தான் ஒளியின் வடிவில் உன்னை அலைக்கழித்தது’.

‘அப்படியானால், நான் கண்ட ஒளி என் கிருஷ்ணன் இல்லையா?’

அவள் அன்போடு நெருங்கி அவன் கன்னத்தை வருடினாள். ‘வளர்ந்துவிட்டாலும் நீ குழந்தை. ஒன்று புரிந்துகொள். கிருஷ்ணன் என்பது ஓர் உருவமல்ல. நபரல்ல. தெய்வமும் அல்ல. அது ஒரு தத்துவம். சாமானியர்களின் தத்துவம்’.

‘அந்த விதத்தில் சிவமும் அதுதானே?’

‘ஆனால் சிடுக்குகளை விரும்பாத மனத்துக்குக் கிருஷ்ணனே சரி. சிவனை அண்டுவதற்கு சவமாவது தவிர வேறு வழியில்லை. நான் மரணத்தைச் சொல்லவில்லை என்பது உனக்குப் புரியும் என்று நினைக்கிறேன்’.

வினோத் அந்த யோகினியின் பாதம் பணிந்து எழுந்தான். கண்ணைத் துடைத்துக்கொண்டான்.

‘கிளம்பிவிட்டாயா?’

‘ஆம் தாயே’.

‘நல்லது. எங்கே போக நினைக்கிறாய்?’

‘எங்கே போனால் எனக்குச் சரி?’

‘மாயாபூருக்குப் போ’ என்று அவள் சொன்னாள்.

(தொடரும்)

http://www.dinamani.com/junction/yathi/2018/sep/04/122-மூன்று-மாதங்கள்-2993927.html

Link to comment
Share on other sites

  • Replies 176
  • Created
  • Last Reply

123. விருந்தும் விசேடமும்

 

 

நாங்கள் பூக்கடை பேருந்து நிலையத்துக்குள்ளேயேதான் இருந்தோம். வீட்டுக்குக் கிளம்ப மனமே வரவில்லை. வீட்டுக்குப் போவதைப் பற்றியும் அங்கே யார் யாரைச் சந்திக்க வேண்டும் என்பதைக் குறித்தும் என்ன பேசலாம் அல்லது எதையெல்லாம் பேச வேண்டாம் என்பதைப் பற்றியும் எங்களுக்குள் பேசி முடிவு செய்துகொண்டு கிளம்பலாம் என்று வினய் சொல்லியிருந்தான். எனக்கு அதில் ஆட்சேபம் ஏதுமில்லை என்பதால் அமைதியாக இருந்தேன். ஆனால் சென்னை வரை வந்த பின்பும் வினோத்தான் வீட்டுக்குப் போவது பற்றி சஞ்சலம் கொண்டிருந்தான். ‘அவசியம் நான் வரத்தான் வேண்டுமா?’ என்று கேட்டான்.

‘இதென்ன முட்டாள்தனமான கேள்வி? நம் நால்வர் மனத்திலும் ஓர் எண்ணம் விழுந்திருக்கிறது. என்னவானாலும் அம்மாவின் இறுதிச் சடங்கில் நாம் கலந்துகொள்வது என்று தீர்மானம் செய்திருக்கிறோம். அதுவும் ஒன்றாக அல்ல. ஒரே காலகட்டத்தில் அல்ல. வேறு வேறு தருணங்களில் நம் நான்கு பேர் மனத்திலும் விழுந்த எண்ணம் அது. அதை எப்படி நிராகரிக்க முடியும்?’ என்று நான் கேட்டேன்.

‘அது மட்டுமல்ல வினோத். அம்மாவின் மரணம் குறித்த சூசகத்தை அண்ணா உன்னிடம்தான் தெரிவித்திருக்கிறான். என்ன பொருள் அதற்கு? நீ அங்கு இருந்தே தீர வேண்டும் என்று அவன் விரும்பியிருக்கிறான்’ என்று வினய் சொன்னான்.

‘வினய், திரும்பத் திரும்ப அவனைப் பெரிய ஆளாக முன்னிறுத்தப் பார்க்காதே. எனக்கு அவன் பேச்சை எடுத்தாலே எரிச்சல் வருகிறது’ என்று சொன்னேன்.

‘ஏன்?’

‘பரதேசி காஷ்மீரத்து மலை உச்சியில் போய் உட்கார்ந்துகொண்டு ஒரு பாகிஸ்தானி பெண்ணைப் புணர்ந்திருக்கிறான். என்ன பெரிய யோகி அவன்? வெறும் அயோக்கியன்’ என்று நான் சொன்னதும் வினோத் சட்டென்று என் கைகளை அழுத்திப் பிடித்தான். ‘வேண்டாம் விமல். அப்படிச் சொல்லாதே’.

‘ஏன்? என்ன தவறு?’

‘உனக்குச் சில அல்லது பல நம்பிக்கைகள் இல்லை. நம்பிக்கைகள் இல்லாமல் சிலவற்றினுள் நுழைந்து பார்க்க இயலாது’.

‘ஒரு பெண்ணுக்குள் நுழைவதற்கு நம்பிக்கைகள் தேவையில்லை. குறி போதும்’.

‘ஐயோ! எத்தனை வக்கிரமாகப் பேசுகிறாய்!’

‘இதோ பார், உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் காமம் பொதுவானது. அதைத் தவிர வேறெதுவும் பொதுவானதில்லை. பொதுவான ஒன்றை நிராகரிப்பது, அல்லது தவறாகக் கருதுவதை நான் எதிர்க்கிறேன்’.

‘டேய் நீ ஒரு துறவி அல்லவா!’

‘ஆம். அபத்தங்களை முற்றிலுமாகத் துறந்தவன் அல்லது துறக்க விரும்புகிறவன்’.

‘அவனை விட்டுவிடு வினோத். அவன் இந்த வழிக்குப் பொருந்தாதவன்’ என்று வினய் சொன்னான். ‘இதோ பார் விமல். மூலாதார சக்தி என்பது ஒன்றுதான். காமத்தில் அதைச் செலவழிக்கலாம். யோகத்தில் அதைச் சேமிக்கவும் செய்யலாம்’.

‘நீ என்ன செய்தாய்?’ என்று உடனே கேட்டேன்.

‘இடாகினியைப் புணர்ந்து இருளில் விழுந்தேன்’ என்று வினய் சொன்னான். சொல்லிவிட்டு சிறிது நேரம் அழுதான். வினோத் வாயடைத்துப் போனான். வினய்யின் அனுபவங்கள் ஒவ்வொன்றும் அவனுக்கு மிகுந்த அதிர்ச்சியளித்தன. இத்தனைக்கும், என்னிடம் சொன்னவற்றுள் பலவற்றை அவன் வினோத்துக்குச் சொல்லவில்லை. அம்மாவைக் கடைத்தேற்றிவிட்டு திபெத் அல்லது நேபாளத்துக்குப் போய்விடப் போவதாகவும், உயிர் இருக்கும்வரை அங்கே தவத்தில் அமரப் போவதாகவும் வினய் அவனிடம் சொன்னான். ‘என் தவப் பொருளாக நான் இறையைக் கொள்ளப் போவதில்லை. என்னையேதான் என் இலக்காக வைக்கப் போகிறேன். உயிர் போவதற்கு முன்னால் என்னைக் கண்டுகொள்ள முடிந்துவிட்டால் போதும்’ என்று அவன் சொன்னான்.

நான் சிரித்தேன். ‘உன்னைக் கண்டுகொள்வது மிகவும் எளிது வினய். நீ ஒரு குழந்தை. பொருந்தாத அப்பாவின் சட்டையை அணிந்துகொண்டு அப்பாவாகிவிட்டதாகக் கற்பனை செய்துகொள்பவன். உனக்கு வேண்டியதெல்லாம் ஒழுங்கான அளவில் தைக்கப்பட்ட ஒரு சட்டை மட்டுமே’.

‘அப்படியா நினைக்கிறாய்?’

‘ஆம். இப்போதும் சொல்கிறேன். நீ ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்துகொண்டுவிடலாம். அல்லது ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து சிறிது காலம் அவளோடு வாழ்ந்துவிட்டு வா. உன் ஆயுட்காலத் தவம் தராதவற்றை அந்தச் சில ஆண்டுகள் உனக்குத் தந்துவிடும்’.

‘இல்லை. அது என்னால் முடியாது. எனக்குப் பெண் வேண்டாம்’ என்று உடனே சொன்னான்.

‘பேய்தான் வேண்டுமா?’ என்று கேட்டேன். சிரித்தான்.

வினோத் சொன்னான், ‘வினய், உன்னை நினைத்தால் எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. எனக்கென்னவோ நீ மீண்டும் அந்த திருவானைக்காவல் சித்தனைத் தேடிச் செல்வது நல்லது என்று தோன்றுகிறது’.

‘என்ன விளையாடுகிறாய்? இவனுக்கே ஐம்பத்து மூன்று வயதாகிறது இப்போது. அந்தச் சித்தனை எங்கே போய்த் தேடுவான்?’

வினோத் சிறிது நேரம் கண்மூடி அமர்ந்திருந்தான். பிறகு, ‘இல்லை. அந்தச் சித்தன் உயிருடன்தான் இருக்கிறான் என்று என் மனத்தில் படுகிறது’ என்று சொன்னான்.

எனக்கு அதை மறுக்கத் தோன்றவில்லை. மறுத்து மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது? ஆனால் என் அன்புள்ள சகோதரா, உனக்கு நேரக்கூடிய எந்த ஒரு நல்விளைவும் உன்னைத் தவிர இன்னொருவரால் நிகழ்வதல்ல என்பதை உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? திருவானைக்காவல் சித்தனுக்குக் கோவளத்துச் சித்தனுடன் தொடர்பு இருந்திருக்கிறது. அண்ணாவுக்கு அந்த இரண்டு பேருடனும் தொடர்பு இருந்திருக்கிறது. அவன் கங்கோத்ரியில் ஆள் வைத்திருக்கிறான். வாரணாசியில் ஆள் வைத்திருக்கிறான். திருவண்ணாமலையில் ஆள் வைத்திருக்கிறான். அத்தனை பேரும் ஒரே மாதிரி பேசுபவர்கள். அத்தனை பேரும் யோகிகள். அல்லது சித்தர்கள். ஒரு வலைப்பின்னலில் யார் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? அதுதான் வழி என்றால் வழியில் தென்படும் யாரிடமும் போய்க் கையேந்தி நிற்கலாமே? ஆனால் கையேந்தியபோது ஆசீர்வதித்த யாரும் கடைத்தேற்றவில்லை. யாரால் முடிந்தது? எல்லோரும் கையை விரிக்கத்தான் செய்தார்கள்.

‘என்னைக் கேட்டால், இந்தக் கூட்டத்தைவிட உன் இடாகினி உத்தமி. அவள் உனக்கு நிறைய செய்திருக்கிறாள்’ என்று சொன்னேன்.

ரயிலில் வரும்போது வினய் எனக்கு இன்னொரு சம்பவத்தைச் சொன்னான். ஒரு சமயம் திடீரென்று அவனுக்கு ஒரு பெரிய மாடமாளிகையில் விருந்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அவனது இடாகினிப் பேயால் கணப்பொழுதில் ஒரு மாளிகையை எழுப்பி, விருந்து சமைத்துப் பரிமாற முடியும்தான். ஆனாலும் நிஜமானதொரு விருந்தில் தான் மதிப்புக்குரிய விருந்தாளியாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று அவன் நினைத்தான். தன் விருப்பத்தை அவன் இடாகினியிடம் சொன்னபோது, ‘அதற்கென்ன? செய்யலாமே? நாம் டெல்லிக்குப் போகலாம்’ என்று அது சொன்னது.

‘டெல்லிக்கு எதற்கு?’

‘குடியரசு தினம் நெருங்குகிறது. ஜனாதிபதி ஒரு தேநீர் விருந்து தருவது இங்கே மரபு அல்லவா? உன்னை நான் அந்த விருந்தில் உட்காரவைக்கிறேன்’ என்று அது சொன்னது.

வினோத்துக்கு மிகுந்த வியப்பாகிவிட்டது. ‘உண்மையாகவா? உன்னால் அது முடியுமா?’

‘ஏன் முடியாது? நீ முதலில் டெல்லிக்குக் கிளம்பு’.

வினய் அப்போது போபால் நகரத்தில் தங்கியிருந்தான். ஒரு பெரிய நகைக்கடைக்காரரின் கடையில் திருடு போயிருந்தது. பல கோடி மதிப்பிலான நகைகள் களவாடப்பட்டிருந்த நிலையில், திருடியவனைப் பற்றிய எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று காவல் துறையினர் கைவிரித்துவிட்டார்கள். யாரோ சொல்லி, யார் மூலமாகவோ கேள்விப்பட்டு அந்த நகைக்கடைக்காரர் வினய்யை போபாலுக்கு வரவழைத்திருந்தார்.

நகரத்தில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தள்ளி இருந்த அவரது பங்களாவில் வினய் தங்கினான். வேளைக்கு நல்ல சாப்பாடு. நிம்மதியான உறக்கம். கூப்பிட்ட குரலுக்கு உதவிக்கு ஓடிவர ஒரு வேலையாள் என்று அவனை அந்த நகைக்கடை அதிபர் பலமாகத்தான் கவனித்துக்கொண்டிருந்தார். வினய் அவர் வீட்டில் தங்கி ஒன்பது நாள் ஒரு யாகம் வளர்த்தான். யாகத்தின் இறுதியில் அவனுக்கு அவரது கடையில் கொள்ளையடித்தவனைப் பற்றிய விவரம் கிடைத்தது. அவன் ஒரு செவிட்டுத் திருடன். மத்தியப் பிரதேசம் முழுவதும் பல இடங்களில் இம்மாதிரி கொள்ளையடித்துவிட்டு புவனேஸ்வருக்கு ஓடிப் போய்விடுவான். சம்பாதித்த அனைத்தையும் செலவிட்டுவிட்டு மீண்டும் திருட வருவது அவனது வழக்கம். பல ஆண்டுகளாகக் காவல் துறையால் நெருங்கவே முடியாமல் சாமர்த்தியமாக அவன் திருடிப் பிழைத்துக்கொண்டிருந்தான்.

வினய், யாகம் முடிவுறும் தருவாயில் யாக குண்டத்தில் இருந்து கொதிக்கக் கொதிக்க ஒரு பிடி சாம்பலை அப்படியே கையால் அள்ளினான். ‘சூட்டைப் பொறுத்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டு, அந்தச் சாம்பலை அப்படியே அந்த நகைக்கடை முதலாளியின் இரு கண்களிலும் வைத்து அழுத்தினான். அந்த மனிதரும், அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த அவரது மனைவி மக்களும் ஐயோ என்று அலற, வினய் அவர்களை சமாதானப்படுத்தி அமைதியாக இருக்கச் சொன்னான். எரிச்சல் மெல்ல மெல்ல மறைந்து ஒருவாறாக அந்த மனிதர் சமநிலைக்கு வந்து கண்ணைத் திறந்தபோது, அவருக்கு அந்தத் திருடன் தென்பட்டான்.

‘அதோ.. அதோ.. நான் அவனைப் பார்க்கிறேன். அவன் என் கண்களுக்குத் தெரிகிறான். அவன் சாலையில் நடந்து போய்க்க்கொண்டிருக்கிறான்!’ என்று அவர் அலறினார்.

‘அமைதியாகக் கவனியுங்கள். அவன் முகத்தை உங்கள் மனத்தில் பதித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், இன்னொருவருக்கு அவன் தென்படமாட்டான். அவனை நீங்களேதான் பிடிக்க வேண்டும். அவன் எங்கே இருக்கிறான் என்று பாருங்கள். இடத்தை கவனியுங்கள்’.

அந்த மனிதர் மேலும் உற்றுக் கவனித்தார். ‘அவன் இங்கேதான் இருக்கிறான். போபாலிலேயேதான் இருக்கிறான். இந்த இடம்கூட எனக்குப் பரிச்சயமான இடம்தான். நான் போயிருக்கிறேன். எனக்குத் தெரியும்’ என்று பரவசக் கூத்தாடி, துள்ளிக் குதித்து எழுந்தார். உடனே தனது ஆட்களை அள்ளி வண்டியில் போட்டுக்கொண்டு கிளம்பிப் போனார்.

அவர் திரும்பி வரும்வரை வினய் யாகத்தைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்தான். இறுதியில் தன் கட்டைவிரல் கட்டை அவிழ்த்து இடாகினியை வெளியே எடுத்தான்.

‘சொல்லுங்கள். என்ன செய்ய வேண்டும்?’

‘அவர் கையில் அவன் சிக்க வேண்டும்’.

அடுத்த அரை மணியில் எல்லாம் முடிந்துவிட்டது. திருடனைத் துரத்திச் சென்ற நகைக்கடை அதிபரும் அவரது ஆட்களும் அவனை சட்டமன்ற வளாகத்துக்கு எதிரே இருந்த ஒரு தேநீர் விடுதியின் வாசலில் மடக்கிப் பிடித்தார்கள். அப்படியே தூக்கி வண்டியில் போட்டுக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள்.

அதன்பின் அவனை அடித்து உதைத்து விசாரித்து ஒரு வழியாக அவன் செலவழித்தது போக மீதமிருந்த நகைகள் அனைத்தையும் மீட்டுவிட முடிந்ததில், அந்த மனிதர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.

வினய்யின் கரங்களைப் பிடித்துக்கொண்டு, ‘நீங்கள் பெரிய ஆள். உங்களுக்கு நான் ஒரு விருந்து தர விரும்புகிறேன்’ என்று சொன்னார்.

அன்றிரவு அவர் வீட்டில் வினய்க்கு ராஜ உபசாரம் நடந்தது. அவன் வாழ்வில் அதுவரை உண்ணாத எத்தனையோ விதமான பலகாரங்களையும் பானங்களையும் அன்று ருசி பார்த்தான். ஆடல், பாடல் கேளிக்கை என்று விடிய விடிய அவர் வீடு அமர்க்களப்பட்டது. கிளம்பும்போது அவர் வினய்க்கு இரண்டு லட்ச ரூபாய்களை சன்மானமாகக் கொடுத்தார். அது அவன் எதிர்பாராத தொகை. அவன் மிகவும் மகிழ்ச்சியானான். அவருக்கு நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

அந்த இரண்டு லட்ச ரூபாயை அடுத்த இரு மாதங்களில் அவன் செலவழித்துவிட்டான். குடியும் குதூகலமுமாக நாள்கள் கழிந்த வேகம் நம்ப முடியாததாக இருந்தது. பணம் முற்றிலும் தீர்ந்துவிட்ட போதுதான், அவன் இடாகினியிடம் இன்னொரு விருந்துக்குச் செல்லும் ஆசையை வெளியிட்டான். அது ஜனாதிபதி மாளிகையில் நடக்கவிருக்கும் விருந்தாக இருக்கும் என்று அவன் எண்ணியிருக்கவில்லை.

(தொடரும்)

http://www.dinamani.com/junction/yathi/2018/sep/05/123-விருந்தும்-விசேடமும்-2994469.html

Link to comment
Share on other sites

124. இரண்டு இட்லிகள்

 

 

அந்தக் குடியரசு தின தேநீர் விருந்தை வினய்யால் மறக்கவே முடியாது. அவனது இடாகினி அவனை ஜனாதிபதி மாளிகையில் வேலை பார்க்கும் ஓர் அதிகாரியின் தோற்றத்துக்கு மாற்றியிருந்தது. கோட் சூட் அணிந்து, பளபளக்கும் ஷூக்கள் அணிந்து ஒரு விலை உயர்ந்த காரில் அவன் முன்னதாக மூன்று மணிக்கே ஜனாதிபதி மாளிகைக்குள் சென்றுவிட்டிருந்தான். இடாகினி தெளிவான உத்தரவுகள் கொடுத்திருந்தது. அவன் பேசக் கூடாது. அவனுக்குப் பதிலாக அது பேசும். அதன் குரல் ஒலிக்கும்போதெல்லாம் பொருத்தமாக அவன் வாயசைத்தால் போதும். யாரைக் கண்டாலும் சிறிதாக ஒரு புன்னகை. எதிராளி வணங்கினால் பதிலுக்கு வணக்கம் சொல்ல வேண்டும். அவர் கறாராகப் பேசினால், அதற்கேற்ற முகபாவத்தைக் கொண்டு வர வேண்டும். ஆனால் பேச வேண்டிய பொறுப்பு அதனுடையது.

‘உன்னை நான் ஓர் அறைக்குள் அழைத்துச் சென்று அமர வைத்துவிடுவேன். போன் அடித்தால் எடுத்துக் காதில் வைத்துக்கொள். பேசவேண்டியதை நான் பார்த்துக்கொள்கிறேன். யாராவது வந்தால் அவர் கண்ணை மட்டும் நேராக உற்றுப் பார்த்தால் போதும். என் குரலுக்கு வாயசைத்துவிட்டு அமைதியாக இருந்துவிடு’ என்று சொன்னது.

‘நான் என்ன உத்தியோகமா பார்க்கப் போகிறேன்?’

‘விருந்து நேரம் தொடங்கும்வரை அங்கே இருந்தாக வேண்டுமே’.

‘ஐயோ பாவம் யாரந்த அதிகாரி? அவரை என்ன செய்தாய்?’

‘ஒன்றுமில்லை. விருந்து முடிந்ததும் அவர் வீட்டுக்குப் போய்விடுவார். கவலைப்படாதே’ என்று இடாகினி சொன்னது.

மாலை ஐந்தரை மணி முதல் ஜனாதிபதியின் விருந்தினர்கள் மாளிகைக்கு வரத் தொடங்கினார்கள். பெரிய பெரிய கார்கள் வந்து நின்று சென்றுகொண்டே இருந்தன. ஊழியர்கள் சலாமிட்டு அவர்களை சிவப்புக் கம்பளத்தில் நடத்தி அழைத்துக்கொண்டு போனார்கள். வினய்க்கு அந்தக் காட்சியே பிரமிப்பாக இருந்தது. அவனால் அன்று மாளிகை முழுவதும் சுதந்திரமாக சுற்றித் திரிய முடிந்தது. யாரும் எதுவும் கேட்கவில்லை. யாருக்கும் எந்தச் சந்தேகமும் எழவில்லை. அவனை அணுகிப் பேசிய ஒவ்வொருவருக்கும், அவன் சார்பில் இடாகினி பதில் சொல்லிக்கொண்டிருந்தது. அவன் வெறுமனே வாயசைத்தும் புன்னகை செய்தும் சமாளித்தான். உயர்ந்த சுவர்களும் பாறைகளைப் போல உருண்டு திரண்டு தொங்கிக்கொண்டிருந்த மேநாட்டு விளக்கு அலங்காரங்களும் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட திரைச் சீலைகளும் மேசை விரிப்புகளும் கம்பளங்களும் கலையழகோடு வடிவமைக்கப்பட்ட பாத்திரங்களும் சீசாக்களும் பார்க்கப் பார்க்கப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல் இருந்தது.

உண்மையில் அவன் சாப்பிட ஆசைப்பட்டுத்தான் அங்கு சென்றான். ஆனால் சாப்பிடவே தோன்றவில்லை. விருந்து தொடங்கி, ஜனாதிபதி சிறிதாக ஓர் உரையாற்றியபின் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாகப் பிரமுகர்கள் கூடி நின்று தமக்குள் பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள். ஜனாதிபதியும் அவரது மனைவியும் மரியாதை நிமித்தம் ஒவ்வொருவரையும் அணுகி சில வார்த்தைகள் பேசிவிட்டு அடுத்தவரை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தார்கள். செய்தித்தாள்களில் மட்டுமே பார்த்திருந்த பல முகங்களை வினய் அன்று நேரில் கண்டான். கால் வலிக்குமளவுக்கு அங்கே சுற்றிச் சுற்றி வந்தான். விருந்து இரவு பத்து மணி வரை நீடித்தது. விருந்தினர்கள் ஒவ்வொருவராகக் கலைந்துபோகத் தொடங்கியபோது, வினய்க்கு சாப்பிடலாம் என்று தோன்றியது. இஷ்டப்பட்ட பலகாரங்களை எடுத்து ஒரு தட்டில் வைத்துக்கொண்டு திருப்தியாக உண்டான். ஜனாதிபதி மாளிகை ஊழியர்கள் மிகவும் மரியாதையுடன் அவனை உட்காரச் சொல்லி, அவர்களே எடுத்துவந்து பரிமாறினார்கள். உண்டு முடித்ததும், விருந்தின் ஞாபகார்த்தமாக அனைவருக்கும் ஒரு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. வினய்க்கும் அந்தப் பரிசு கிடைத்தது. அழகான பரிசுப் பொதியாகக் கட்டப்பட்ட ஏதோ ஒன்று. அவனுக்கு அதெல்லாம் முக்கியமாகவே படவில்லை. திரும்பத் திரும்ப ஒன்றைத்தான் அவன் சிந்தித்துக்கொண்டிருந்தான்.

இந்த மனிதர் இந்த மாளிகைக்குள் நுழைய எத்தனை ஆண்டுக் காலம் அரசியல் ஊறி உழைத்திருப்பார்! வந்திருந்த ஒவ்வொரு விருந்தினருமே அப்படித்தான். அன்றைய விருந்துக்கு இரண்டு மூன்று வெளிநாட்டு அதிபர்களும் வந்திருந்தார்கள். இருபதாண்டுகள், முப்பதாண்டுகள் அரசியலில் போராடி மேலே வந்திருக்கக்கூடியவர்களால் மட்டுமே நுழைய முடியக்கூடிய இடம். எத்தனை சுலபத்தில் என்னால் இந்த விருந்தில் கலந்துகொள்ள முடிந்துவிட்டது!

ஒரு கட்டத்தில் அவன், வந்திருந்த விருந்தினர் யாரோ ஒருவரின் கேள்விக்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தபோது, ஜனாதிபதி அவன் அருகே வந்துவிட்டார். ‘திவாரி! நீங்கள் வெகுநேரமாக வேலை செய்துகொண்டே இருக்கிறீர்கள். சிறிது ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்’ என்று மிகுந்த வாஞ்சையுடன் அவர் சொன்னபோது வினய் புன்னகை செய்து, மரியாதையுடன் அவரது அன்பை ஏற்றான்.

அந்தத் திவாரி யார் என்றுகூட அவன் கண்டதில்லை. அந்தப் பெயரையே அப்போதுதான் முதல் முதலில் கேள்விப்படுகிறான். ஒரு நிலைக்கண்ணாடி இருக்குமானால், திவாரி எப்படி இருப்பார் என்று எதிரே நின்று பார்த்துக்கொள்ளலாம். மாளிகையில் அவன் சுற்றிவந்த இடங்களில் எங்கும் ஒரு நிலைக்கண்ணாடி தென்படவில்லை. அறைகளுக்குள் இருக்கும். அவனுக்கு அங்கேயெல்லாம் செல்ல விருப்பமில்லை. யாருடைய அந்தரங்கத்துக்கும் இடையூறாக இருந்துவிடக் கூடாது என்று நினைத்தான்.

அவன் சாப்பிட்டு ஆனதும், கிளம்பலாமா என்று இடாகினி கேட்டது. ‘இரவு இங்கேயே படுத்து உறங்க முடிந்தால் நன்றாக இருக்கும்’ என்று வினய் சொன்னான்.

சில விநாடிகள் யோசித்துவிட்டு, ‘உறங்குவதில் சிக்கல் இல்லை. ஆனால், விடிந்ததும் அந்தத் திவாரி இங்கேதான் ஓடி வருவான். அப்போது நீ இங்கே இருக்கக்கூடாதே' என்று இடாகினி சொன்னது.

‘அதுவும் சரிதான். பாவம் அந்த மனிதர். ஒரு நல்ல விருந்தை இழந்துவிட்டார்’.

‘உனக்குத் திருப்திதானே?’

‘மிகவும்’.

‘எனக்கு அது போதும்’ என்று சொன்னது. சில விநாடிகளில் அவன் புறப்பட வேண்டிய காரை அதுவே ஓட்டிக்கொண்டு வந்து நிறுத்தியது. வினய் ஏறிக்கொண்டதும் கார் புறப்பட்டது. கரோல் பாக் வரை ஓடிய கார், யுஎன்ஐ செய்தி நிறுவன வாசலில் சென்று நின்றது.

‘இங்கே ஏன் நிறுத்தினாய்?’

‘இதுதான் நாம் இறங்க வேண்டிய இடம்’.

‘அப்படியா?’

‘ஆம். திவாரி தனது காரை இங்கேதான் நிறுத்திவிட்டு உள்ளே போனார். நான் எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்’.

வினய் சிரித்துக்கொண்டே காரை விட்டு இறங்கினான். இடாகினியை எடுத்து மீண்டும் கட்டை விரலுக்குள் பொருத்தி, துணியை வைத்து இறுக்கிக் கட்டினான். தனது கோட் சூட்களைக் கழட்டி காரிலேயே போட்டுவிட்டு பழைய நான்கு முழம் வேட்டிக்கு மாறினான். காரின் கண்ணாடியில் அவன் முகம் பார்த்தபோது, அவன் வினய்யாகவே இருந்ததைக் கண்டான். திருப்தியாக இருந்தது. போதும் போ என்று நடக்க ஆரம்பித்தான்.

மறுநாள் செய்தித்தாள்களில் ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் கார் திருடுபோனது பற்றிய செய்தி சிறிதாக வந்திருந்தது. ஆனால், திருடுபோன கார் திரும்ப வந்து அதே இடத்தில் நின்ற செய்தி அதற்கு அடுத்த நாள் வந்ததா என்று வினய்க்குத் தெரியவில்லை. அவன் அன்று டெல்லியில் இருந்து புறப்பட்டு குருக்ஷேத்திரத்துக்குப் போய்விட்டிருந்தான்.

வினய் எனக்குச் சொன்ன இந்த சம்பவத்தை நான் வினோத்திடம் சொன்னபோது அவன் சட்டென்று கேட்டான், ‘இதில் என்ன சாதித்தாய்?’

‘உனக்குப் புரியாது வினோத். எனக்கு ஜனாதிபதி மாளிகையின் அமைப்பும் வழிகளும் இப்போது மனப்பாடம். ஆயிரம் மைல்கள் தள்ளி அமர்ந்துகொண்டு என்னால் அங்கே சில காரியங்களைச் செய்ய முடியும்’.

‘இதற்கும் ஆன்மிகத்துக்கும் என்ன சம்மந்தம்?’ என்று வினோத் கேட்டபோது நான் சிரித்தேன். ‘பிரச்னையே அதுதான் வினோத். ஆன்மிகம் என்று அவன் நம்பிச் சென்று விழுந்த இடம் இது’ என்று சொன்னேன்.

‘இல்லை. இது அதர்வத்தில் ஒரு பகுதியாக வருகிற கலை. என் மனோசக்தியைத் தூர உள்ள பிரபஞ்சப் பொருள்களின் மீது செலுத்தி அவற்றை என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர என்னால் முடியும்’.

‘பொருள்களை மட்டும்தானே’.

வினய் சிறிது யோசித்தான். ‘ஆம். பொருள்களைத்தான். சிறிது முயற்சி செய்தால் மனிதர்களையும் செய்யலாம்’.

‘என்ன லாபம் அதில்?’

‘நீ பசி பார்த்திருக்க மாட்டாய் வினோத். அதான் இப்படிக் கேட்கிறாய். நான் மாதக்கணக்கில் பட்டினி கிடந்தவன். இரண்டு இட்லிக்காக ஒரு பெரிய தெருச்சண்டை போட்டிருக்கிறேன். ஒரு சமயம், ஒரு டீக்கடை பாய்லரைத் தூக்கிப்போட்டு உடைத்திருக்கிறேன்’ என்று வினய் சொன்னான்.

எனக்கு அது மிகவும் பரிதாபமாக இருந்தது. ‘தவறு செய்துவிட்டாய் வினய். ஜனாதிபதி மாளிகையில் உள்ள பூச்செண்டை உன்னால் உன்னிடத்துக்கு வரவழைக்க முடியும் என்றால், இரண்டு இட்லிகளை வரவழைத்துத் தின்ன முடியாதா?’

‘முடியும். ஆனால் அது தவறு. அதை நான் செய்தால் என் சக்திகள் என்னைவிட்டுப் போய்விடும்’.

‘அப்படியா?’

‘ஆம்’ என்று சொல்லிவிட்டுச் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பிறகு, ‘நான் அனைத்தையும் இழந்ததே அப்படி ஒரு தருணத்தில்தான்’ என்று சொன்னான்.

(தொடரும்)

http://www.dinamani.com/junction/yathi/2018/sep/06/124-இரண்டு-இட்லிகள்-2994769.html

Link to comment
Share on other sites

125. லட்சத்து எட்டு

 

 

வினோத் என்ன நினைத்து அதைச் செய்தான் என்று உண்மையிலேயே எனக்குத் தெரியாது. ஆனால் வினய் தனது ஜனாதிபதி மாளிகை அனுபவத்தைச் சொல்லி முடித்தபோது வினோத்துக்குக் கண் கலங்கிவிட்டிருந்தது. மிகவும் பரிவுடனும் துயரத்துடனும் அவன் வினய்யை நோக்கினான். சட்டென்று தனது தோள் பைக்குள் கையைவிட்டு எதையோ தேடினான். அவன் தேடிய பொருள் அவன் கைக்கு அகப்பட்டுவிட்டதை அவன் முகபாவத்தில் தெரிந்துகொண்டேன். ஆனால் கையை வெளியே எடுக்காமல் அவன் வினய்யிடம் சொன்னான், ‘வினய், நீ என்ன நினைத்துக்கொள்வாய் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. நீ சிரிக்கலாம். என்னுடைய இந்தச் செய்கையைக் கேலி பேசலாம். அல்லது இதைத் தூக்கிப் போடலாம். அது உன் விருப்பம். ஆனால் உன்னிடம் சொல்ல எனக்கு ஒன்று உள்ளது’.

‘என்ன?’ என்று வினய் கேட்டான்.

‘இந்தா’ என்று அவன் ஒரு ஜப மாலையை எடுத்து வினய்யிடம் கொடுத்தான்.

‘எனக்கு எதற்கு இது?’

‘உன் இலக்குகள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். உன் தெய்வம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். உன் பாதை என்னுடைய பாதைக்கு முற்றிலும் எதிரானதாகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் எனக்காக ஒன்று செய். நீ செய்து முடித்த மறுவிநாடி நீ நினைப்பது நடக்கும்’.

‘என்ன செய்ய வேண்டும்?’

‘தனியே போ. யாருமில்லாத ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து லட்சத்து எட்டு முறை கிருஷ்ண மந்திரத்தைச் சொல். உனக்கு கிருஷ்ண பக்தி வேண்டாம். நான் கேட்பது மந்திர உச்சாடனம் மட்டும்’.

‘சரி. சொன்னால்?’

‘சொல்லிவிட்டுப் பிறகு கேள். இந்த உலகில் கிருஷ்ண ஜபத்தைக் காட்டிலும் உயர்ந்த வலி நிவாரணி வேறில்லை’ என்று வினோத் சொன்னான்.

‘அப்படியா?’

‘சந்தேகப்படாதே. என் ஊசலாட்டம் குறித்து உனக்குச் சொன்னேன் அல்லவா? அப்போது அந்தப் பெண் துறவி எனக்குச் சொல்லித்தந்த வழி அது’.

‘ஏன், நீதான் ஏற்கெனவே ஹரே கிருஷ்ணாவில் இருந்தவனாயிற்றே? அவள் என்ன புதிதாகச் சொல்லிக் கொடுத்துவிட்டாள்?’ என்று நான் கேட்டேன்.

‘ஆம். நான் ஏற்கெனவே கிருஷ்ண ஜபம் செய்துகொண்டிருந்தவன்தான். ஆனால், அந்தப் பெண் கிருஷ்ணனை எனக்கு வேறொரு கோணத்தில் அறிமுகப்படுத்தினாள்’.

‘எப்படி?’

‘குறிப்பிட்ட நோக்கம் வேண்டும். அதைத் தெளிவாக அவனிடம் சொல்லிவிட்டு ஜபத்தில் அமர வேண்டும். லட்சத்து எட்டு உருப்படி முடியும்வரை என்ன ஆனாலும் அசையக் கூடாது’.

‘சரி. பிறகு?’

‘நான் கேட்டதை நீ செய்து கொடுத்தால், ‘உனக்கு நான் இன்னது செய்கிறேன்’ என்று ஒரு வாக்குறுதி அளிக்க வேண்டும்’.

நான் சிரித்துவிட்டேன். ‘டேய், இதன் பெயர் பேரம்’.

‘ஆம். பேரம்தான். வியாபாரம் என்றும் சொல்லலாம். தவறில்லை. ஆனால் கிருஷ்ணன் நம்பகமானவன். நாம் சொன்னதைச் செய்தால், அவன் நாம் கேட்டதைத் தந்துவிடுவான்’.

‘உண்மையாகவா?’ என்று வினய் கேட்டான்.

‘எனக்கு நடந்திருக்கிறது’.

‘என்ன?’

‘இனி நான் சிவனை நினைக்கவே கூடாது என்று வேண்டுதல் வைத்து கிருஷ்ணனை நோக்கித் தவமிருந்தேன். லட்சமல்ல. ஒரு கோடி முறை கிருஷ்ண நாமத்தை ஜபித்தேன். ஒருவார காலம் இடத்தை விட்டு அசையாமல் அதைச் செய்தேன்’.

‘உண்மையாகவா?’

‘ஆம். அதன்பின் சிவன் நேரில் வந்து என்னிடம் விடைபெற்றுப் போய்விட்டார். திரும்ப வரவேயில்லை’.

அவன் சொன்ன விஷயமல்ல; அதைச் சொன்னபோது அவன் முகத்தில் தெரிந்த தீவிரத்தை நான் மிகவும் ரசித்தேன். இடைவிடாமல் ஒரு கோடி முறை ஒரு பெயரை உச்சரித்துக்கொண்டே இருந்தால், அது நினைவின் ஆதார சுருதியாகிவிடாதா? அதன்பின் சிவனென்ன, எவனும் உள்ளே நுழைய முடியாதே?

ஆனால் நான் அதை அவனிடம் சொல்லவில்லை. வெறுமனே கேட்டுக்கொண்டிருந்தேன். ஆனால், வினய் மிகவும் கவனமுடன் அவன் பேசியதைக் கேட்டான். நெடு நேரம் யோசித்துக்கொண்டே இருந்தான்.

‘நம்பிக்கை வை வினய். பாதி வாழ்க்கை வீண் என்று நீ அழுதது என்னைக் கலங்கச் செய்துவிட்டது. உன் மீதி வாழ்க்கை உன் விருப்பப்படி அமைவதற்கு கிருஷ்ணன் உதவுவான்’.

‘சரி. ஆனால் நான் என்றுமே ஒரு கிருஷ்ண பக்தன் ஆக முடியாது. அதை முதலில் சொல்லிவிடுகிறேன்’.

‘அவசியமில்லை. அவன் அதை எதிர்பார்க்கவும் மாட்டான்’.

‘லட்சத்து எட்டு முறை ஜபித்தபின் கிருஷ்ணன் எனக்குத் தரிசனமானால், அவனிடம் நான் காமரூபிணியைக் காட்டித்தரச் சொல்லித்தான் கேட்பேன். எனக்கு வேண்டியது அவளது அனுக்கிரகம்தான். கிருஷ்ணனுடையது அல்ல’.

‘சரி. பரவாயில்லை’.

‘அவன் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டால்?’

‘அவன் அப்படிச் சொல்லமாட்டான்’.

‘அவன் உதவாமல் போய்விட்டால்?’

‘அதற்கு வாய்ப்பே இல்லை’.

‘வெறும் லட்சத்து எட்டு போதுமா?’

‘கண்டிப்பாகப் போதும். என்னை நம்பு. நீ நினைப்பது நடக்கும்’.

அந்தக் கணம் வினய் கண்ணை மூடிக்கொண்டு, அதர்வத்தில் இருந்து ஒரு சூக்தத்தைச் சொல்லத் தொடங்கினான். ஆயிரமாயிரம் பேர் நடமாடிக்கொண்டிருந்த பேருந்து நிறுத்தத்தில் அவனது குரல் கம்பீரமாகக் காற்றில் நிறைந்து விரிந்தது. அத்தனை பேரும் அவனைப் பார்த்துக்கொண்டே போனார்கள். அங்கே உலவிக்கொண்டிருந்த ஒரு நாய் சட்டென்று ஓடிவந்து அவன் காலருகே அமர்ந்துகொண்டு அவனையே உற்றுப் பார்க்க ஆரம்பித்தது. புறப்பட்டுச் சென்ற பேருந்துகளில் இருந்தவர்களெல்லாம் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தபடி போனார்கள். மூன்று நிமிடங்கள் நீடித்த அவனது உச்சாடனம், அதன்பின் மெல்ல ஓய்ந்து அடங்கியது. வினய் கண்ணைத் திறந்தான்.

வினோத் அவனைப் பார்த்துப் புன்னகை செய்தான். ‘என்ன இது?’

‘அதர்வத்தில் ஒரு மந்திரம். எங்கள் மரபுக்கு மாறானதொன்றைச் செய்ய நேர்ந்தால் இதனைச் சொல்லிவிட்டே ஆரம்பிப்போம்’.

‘இதைச் சொன்னால் என்ன ஆகும்?’ என்று நான் கேட்டேன்.

‘ஒன்றுமில்லை. உக்கிரதேவதைகள் கோபம் கொள்ளாதிருக்க இது வழி செய்யும்’.

‘ஓ. கிருஷ்ண ஜபம் செய்தால் அவர்கள் கோபித்துக்கொண்டுவிடுவார்களா?’

அவன் அதற்குப் பதில் சொல்லவில்லை. நெடு நேரம் அமைதியாக யோசித்துக்கொண்டிருந்துவிட்டு, பிறகு வாய் திறந்தான். ‘விமல்! நான் பெற்றதைவிட இழந்தவை அதிகம். ஒரு எள்ளுருண்டையில் திசை மாறிய என் வாழ்க்கை என்னை எங்கெங்கோ கொண்டு போய்ச் சேர்த்துவிட்டது. நான் அதில் இருந்து விடுபட விரும்பவில்லை. அதே சமயம் என் பாதையின் எல்லையைப் பார்த்துவிட ஆசைப்படுகிறேன்’.

‘பேராசை’ என்று சொன்னேன்.

‘ஆம். பேராசைதான். இந்த உலகின் அசைக்க முடியாத சக்தி படைத்த பிரகிருதியாக நான் ஆகியே தீர வேண்டும். அதைச் செய்யாமல் நான் சாகமாட்டேன்’.

‘நல்லது. கிருஷ்ணன் உனக்கு உதவட்டும்’ என்று சொன்னேன்.

‘கிண்டல் செய்யாதே. கிருஷ்ணன் நிச்சயம் உதவுவான்’ என்று வினோத் சொன்னான்.

இப்போது வினய்க்கு வீட்டுக்குப் போவதா வேண்டாமா என்ற குழப்பம் வந்துவிட்டது. ‘நான் இப்படியே திரும்பிப் போய்விடவா?’ என்று கேட்டான்.

‘முட்டாள். நாம் எதற்காக வந்திருக்கிறோம்?’

‘ஆம். தவறுதான்’.

‘இரண்டு நாள் கழித்து ஜபித்தால் கிருஷ்ணன் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லப்போவதில்லை. அம்மாவைக் கடைத்தேற்றிவிட்டுக் கிளம்பிப் போய் ஆரம்பி’ என்று சொன்னேன்.

அவன் என்னை உற்று நோக்கினான். ‘நீ பேசுகிற அனைத்துமே எனக்குக் கிண்டலாகத் தோன்றுகின்றன’.

‘அப்படியானால் நான் சரியாகப் பேசுகிறேன் என்று பொருள். ஆம். நான் கிண்டல்தான் செய்கிறேன்’ என்று சொன்னேன்.

‘என்றுமே உனக்கு என் வலிகள் புரியாது விமல்’ என்றான். அவன் கண்கள் கலங்கியிருந்தன.

நான் அன்போடு அவன் கரங்களைப் பிடித்துக்கொண்டேன். ‘நீ என் சகோதரன். வாழ்வில் முட்டி மோதி தோற்றுவிட்டதாகச் சொன்னவன். ஒரு சிறந்த வெற்றி உன்னைச் சேர வேண்டும் என்று எனக்கும் தோன்றத்தான் செய்கிறது. ஆனால் அதை உனக்கு நீயேதான் அளித்துக்கொள்ள வேண்டுமே தவிர, கிருஷ்ணனைப் போன்ற ஒருவன் தருவான் என்று நம்புவதை என்னால் ஏற்க இயலவில்லை. என்னை மன்னித்துக்கொள்’.

‘பரவாயில்லை. உன்னளவில் நீ தெளிவாக இருக்கிறாய். உன் சித்தாந்தத்தின் நுனியில் உன்னால் நின்று விளையாட முடிகிறது. என்னைப் பார். காமரூபிணியின் கடாட்சத்துக்குக்கூட ஒரு புரோக்கர் தேடவேண்டி இருக்கிறது’.

வினோத் துடித்துப் போய்விட்டான். ‘ஹரே கிருஷ்ணா! வேண்டாம் வினய். அப்படியெல்லாம் சொல்லாதே. அவன் பரம்பொருள். உன் காமரூபிணியெல்லாம் அவனுக்குள் ஒடுங்கியிருப்பவள்தான்’.

‘மன்னித்துக்கொள். உன் நம்பிக்கை உனக்கு. என்னுடையது எனக்கு. ஆனால் பேரம் பேரம்தான். அதில் மாற்றமில்லை. நான் கிருஷ்ண மந்திரம் ஜபிக்கப்போகிறேன். அது பலன் தராவிட்டால் உன்னை உதைப்பேன்’.

வினோத் சிரித்தான். ‘தந்தே தீரும்’.

நான் உடனே கேட்டேன். ‘பதிலுக்கு கிருஷ்ணனுக்கு நீ என்ன தருவதாக உத்தேசம்? அது முக்கியம் என்று இவன் சொன்னானே?’

‘அவன் என்ன கேட்டாலும் தருவேன்’.

‘அவன் கேட்கமாட்டான். உன்னால் முடிந்ததை நீயேதான் முன்வந்து சொல்ல வேண்டும்’ என்று வினோத் சொன்னான். ‘ஆனால் சொன்னதைச் செய்தே தீர வேண்டும்’.

‘சரி. இழப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை. பெற வேண்டியவைதான் ஏராளமாக உள்ளன. அவன் என்னையே வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும். அதற்குமுன் நான் நினைத்ததை சாதித்துவிட்டால் போதும்’ என்று சொன்னான்.

வெகுநேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்ததில் எங்களுக்குக் கால்கள் மரத்துப்போயின. கழுத்து, தோள்பட்டையெல்லாம் வலிக்கத் தொடங்கியது. ‘நாம் கிளம்பலாமா?’ என்று வினோத் கேட்டான். உடனே நான் எழுந்துகொண்டேன்.

‘போகத்தான் வேண்டும் அல்லவா?’ என்றான் வினய்.

‘வா’ என்று அவன் கையைப் பிடித்து வினோத் எழுப்பினான். அடுத்து வந்த மகாபலிபுரம் செல்லும் பேருந்தில் நாங்கள் ஏறிக்கொண்டோம். மூன்று பேர் அமரும் ஒரு நீண்ட இருக்கையில் நாங்கள் ஒன்றாக அமர்ந்தோம். நடத்துநர் அருகே வந்தபோது வினோத், ‘மூணு திருவிடந்தை’ என்று சொல்லிப் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கினான். அந்தப் பேருந்து அதற்குமுன் மூன்று சன்னியாசிகளை மொத்தமாகக் கண்டிருக்காது.

வண்டி புறப்பட்டதுமே வினய் சொன்னான், ‘அம்மா நாளை மறுநாள்தானே மரணமடைவாள் என்று சொன்னாய்? நான் அந்த லட்சத்து எட்டு கிருஷ்ண ஜபத்தை நாளையே செய்து முடித்துவிடுகிறேன்’.

(தொடரும்)

http://www.dinamani.com/junction/yathi/2018/sep/07/125-லட்சத்து-எட்டு-2995457.html

Link to comment
Share on other sites

126. களையும் கலை

 

 

பேருந்து எல்.ஐ.சி.யைத் தாண்டும்வரை யாரும் எதுவும் பேசவில்லை. எனக்கு லேசாகத் தூக்கம் வந்து கண்ணை மூடத் தொடங்கியபோது, ‘விமல், உனக்கு என்றைக்காவது குற்ற உணர்வு போல ஏதேனும் தோன்றியிருக்கிறதா?’ என்று வினோத் கேட்டான். எனக்கு எதற்குக் குற்ற உணர்வு ஏற்பட வேண்டும்? இந்த உலகில் பாவமே செய்யாத ஒரு பிறப்பு உண்டென்றால் அது நான்தான். என் சுதந்திரத்தின் பூரணத்துவத்தில் திளைப்பது எப்படி ஒரு குற்றமாகும்?

‘இல்லை. நீ சன்னியாசம் என்னும் புனிதமான தருமத்தை உன் வாயிற்கதவுத் தாழ்ப்பாளாக வைத்துக்கொண்டு உள்ளுக்குள் ஒரு சராசரியாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறாய் என்று தோன்றுகிறது’.

நான் புன்னகை செய்தேன். ‘நான் எதையும் துறந்ததாக என்றுமே சொன்னதில்லையே?’

‘பிறகு எதற்கு உனக்கு தீட்சையும் காவியும்?’

‘நல்ல கதையாக இருக்கிறதே. தீட்சை, நான் பயின்று எழுதிய தேர்வுக்கான சான்றிதழ். காவி எனக்குப் பிடித்த நிறம். ஒரு கோட் சூட் உடையைக் காட்டிலும் இது தருகிற சௌகரியங்களும் மரியாதையும் அதிகம்’.

‘எனக்கு இது சரியாகப் படவில்லை’.

‘அதனால் என்ன? நீ என் சகோதரன். நீ சொல்வதற்கெல்லாம் நான் வருத்தப்பட மாட்டேன்’.

அதன்பின் வினோத் நெடுநேரம் அமைதியாகவே இருந்தான். மீண்டும் திடீரென்று, ‘காமம் துறப்பதை நீ முக்கியமென்று நினைத்ததே இல்லையா?’

‘ஐயோ, இயற்கையை நான் எவ்வாறு நிராகரிப்பேன்? என்னால் என் சிறுநீரைத் துறக்க முடியும்போது காமத்தையும் துறப்பேன் என்று நினைக்கிறேன்’.

‘ஹரே கிருஷ்ணா. நீ ஒரு தவறான மனிதரிடம் பயின்றிருக்கிறாய்’.

நான் சிரித்துவிட்டேன். ‘வினோத் என் குருநாதர் எதையும் சொல்லிக் கொடுத்ததில்லை. நானும் அவரிடம் இருந்து எதையும் கற்கவில்லை. மாறாக நாங்கள் எங்கள் மனங்களின் இண்டு இடுக்குகள் வரை திறந்துவைத்து அடுத்தவர் நுழைந்து மீள அனுமதித்துக்கொண்டோம். அதுதான் என் படிப்பு. அதில் பெற்றதுதான் என் ஞானம்’.

‘தெய்வமும் ஒழுக்கமும் அற்ற ஒரு துறவை என்னால் எண்ணிப் பார்க்கவே முடியவில்லை’ என்று வினோத் சொன்னான்.

‘ஒழுக்கம் என்பதே அடுத்தவர் அபிப்பிராயம்தானே? அதற்கொரு பெயர் கொடுத்தால் தெய்வமாகிவிடுகிறது. எனக்கு அடுத்தவர் அபிப்பிராயம் முக்கியமாக இல்லை என்பதால் தெய்வமும் என்னிடத்தில் முக்கியத்துவம் இழந்துவிடுகிறது’.

‘நீ உன்னிடம் வரும் பெண்களைத் தவறாகப் பயன்படுத்துகிறாய் அல்லவா?’

‘யார் சொன்னது?’

‘எங்களுடைய பெங்களூர் கிளையில் அப்படியொரு பேச்சு ஒரு சமயம் எழுந்தது’.

‘கிருஷ்ண பக்தர்கள் பேசுவதற்கு வேறு சங்கதியே இல்லையா?’

‘இல்லை. நீ அம்மாநிலத்தில் இருப்பவன். உனது புகழ் அம்மாநிலம் முழுதும் பரவியிருப்பது. உன்னைப் பற்றிய உரையாடல்கள் இயல்பானவை’.

இதற்கு என்ன பதில் சொல்வதென்று யோசித்தேன். உண்மையில் நான் எந்தப் பெண்ணையும் என்னிடத்தில் அழைத்ததில்லை. விரும்பி வருகிற யாரையும் நிராகரித்ததும் இல்லை. ஒரு சமயம், எனது கூட்டத்துக்கு வந்திருந்த பெண்களுள் வெண் குஷ்டம் பாதித்த பெண்ணொருத்தி வந்திருந்தாள். அவளை நான் அதற்குமுன் சந்தித்ததில்லை. ஊருக்குப் புதியவள் என்று நினைத்தேன். பிறகு ஏற்கெனவே எனக்கு அறிமுகமான இன்னொரு பெண்தான் அவளை அழைத்து வந்திருக்கிறாள் என்று தெரிந்தது.

‘குருஜி, இவள் என் தோழி. மூன்று வருடங்களாக வீட்டை விட்டு வெளியே வராமலே இருந்தவளை வலுக்கட்டாயமாக உங்களிடம் இழுத்து வந்தேன்’ என்று சொன்னாள்.

‘மூன்று வருடங்கள்! எத்தனைக் கொடிய சிறைத்தண்டனை! ஏன் அப்படி இருந்தாய்?’ என்று அவளிடம் கேட்டேன்.

‘என் நோய் என்னை வெளியே போகவிடாமல் செய்துவிட்டது’ என்று அவள் சொன்னாள்.

எனக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. அன்றைய சொற்பொழிவு முடிந்ததும் நான் அந்தப் பெண்ணை என் அறைக்கு வரச் சொன்னேன். அவள் பேரழகி இல்லை. ஆனால் எளிதில் பிடிபடாததொரு லட்சணம் அவள் முகத்தில் இருந்தது. துரதிருஷ்டவசமாக அவளது நடு மூக்கு மட்டும் வெளுத்து, கன்னங்கள், நெற்றியெல்லாம் இயல்பான நிறத்தில் இருந்தன. காது மடல்கள் வெளுத்திருந்தன. கழுத்து, கைகள் வெளுத்திருந்தன. பின் கழுத்து வெளுத்திருந்தது. வெண் திட்டுகளின் இடையே பழுப்பு நிறத்தில் புள்ளிகள் நிறைய உண்டாகியிருந்தன.

அவள் என்னைக் கண்டதும் விம்மி விம்மி அழுதாள். ஏனோ அழத் தோன்றுகிறது என்று இடையிடையே சொல்லிக்கொண்டே அழுதாள். அதனால் பரவாயில்லை; அழு என்று நானும் அமைதியாக இருந்தேன். அவள் அழுது முடித்துவிட்டு, ‘என் வீட்டில் எனக்குத் திருமணத்துக்குப் பார்க்கத் தொடங்கிய நேரம் எனக்கு இப்படியாகிவிட்டது. இதன்பின்பு எனக்குத் திருமணம் நடக்க வாய்ப்பே இல்லை என்று என் பெற்றோர் முயற்சியைக் கைவிட்டுவிட்டார்கள்’ என்று சொன்னாள்.

‘தொல்லை விட்டது என்று எண்ணிக்கொள். திருமணம் ஒரு மகிழ்ச்சியல்ல’.

‘ஆனால் குருஜி, நானும் ஓர் உயிரினம் அல்லவா? இயல்பான உணர்ச்சிகள் எனக்கும் உண்டல்லவா? என்னை நெருங்கி முத்தமிடும் ஒரு ஆண் மகனுக்காக என் வாழ்நாள் முழுதையும் நான் அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறேன்’.

‘வாழ்நாள் முழுதும்?’

‘ஆம். வாழ்நாள் முழுதும்’.

பிறகு அவள் என் ஆசிரமத்தின் நிர்வாகப் பணிகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பைத் தானே எடுத்துக்கொண்டுவிட்டாள்.

‘நீ அவளை முத்தமிட்டாயா?’ என்று வினய் கேட்டான்.

‘ஆம். ஓரிரவு முழுவதும் அவளது தேகத்தின் ஒவ்வொரு அணுத்துகளிலும் படுவதுபோல முத்தமிட்டுக்கொண்டே இருந்தேன். விடியும்வரை முத்தமிட்டேன். விடிந்தபின் நாங்கள் கலவி கொண்டோம். அன்று பகல் முழுதும் அவள் நிம்மதியாகத் தூங்கினாள். நான் அவளுக்குக் கால் அமுக்கிவிட்டுக்கொண்டிருந்தேன்’.

இதைச் சொன்னதும் வினோத் சற்று நகர்ந்து அமர்ந்துகொண்டான். எனக்குச் சிரிப்பு வந்தது.

‘நீ ஒரு காமாந்தகன்’ என்று வினய் சொன்னான்.

‘இல்லை வினய். அந்தகம் என்பது தவறான சொல். காமம் அழிவல்ல. காமத்தால் ஆக்கத்தான் முடியுமே தவிர அழிக்க இயலாது. தவிர காமம் மட்டுமே என் நோக்கமும் அல்ல. உனக்குத் தெரியுமா? பதினேழு வருடங்கள் நான் காமம் துறந்து வாழ்ந்திருக்கிறேன்’.

‘மனத்தாலும் எண்ணாமல்?’

‘ஆம். நான் துறந்திருக்கிறேன் என்ற நினைவையே அழித்துவிட்டு வாழ்ந்தேன். எனக்கு எதுவுமே வேண்டுமென்றால் வேண்டும். வேண்டாமெனில் வேண்டாம்’.

‘வினய், நீ அவனோடு சேராதே. அவன் சொல்கிற எதையும் கேட்காதே. அவன் வழி நமக்குச் சரிப்படாது’ என்று வினோத் சொன்னான்.

‘டேய், இவன் வழியே உனக்குச் சரிப்படாதே?’ என்று நான் சிரித்துக்கொண்டே கேட்டேன்.

‘ஆம். ஆனால் வினய்யை சரி செய்துவிட முடியும். அவனது சிக்கல்கள் எளியவை. பேரானந்தக் கடலின் ஒரு துளி அவன் உச்சந்தலையில் விழுந்தால் போதும்’.

‘உனக்கு விழுந்திருக்கிறதா?’ என்று கேட்டேன்.

வினோத் அதிர்ச்சியடைந்துவிட்டான். சில விநாடிகள் யோசித்துவிட்டு, ‘கிருஷ்ண ஜபம் ஒன்றே என் ஆனந்தம்’ என்று சொன்னான்.

எத்தனை எளிய வாழ்க்கை! ஜபங்கள். நாம சங்கீர்த்தனங்கள். பண்டிகைகள், திருவிழாக்கள், தேரோட்டம். ஆனால் சகோதரா, என் கேள்வி இதுவல்ல. இவை எதுவுமல்ல. உன் கிருஷ்ணனை நீ பார்த்தாயா? ஏனெனில், என் கடவுளான என் சுதந்திரத்தை நான் ஒவ்வொரு கணமும் தரிசித்துக்கொண்டிருக்கிறேன். அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். இதைத்தான் என் துறவு எனக்கு சாத்தியமாக்கியது. அந்த வகையில் உன் துறவு உனக்கு மூன்று வேளை சாதம்தான் இப்போதுவரை போட்டுக்கொண்டிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வாயா?

நான் கேட்கவில்லை. சிரித்துவிட்டு அமைதியாக இருந்துவிட்டேன். அவன் வினய்க்கு எப்படியாவது மீட்சி கொடுத்துவிட வேண்டும் என்று தீவிரமாக எண்ணிக்கொண்டிருந்தான். ஒரு லட்சத்து எட்டு கிருஷ்ண ஜபத்தின் இறுதியில், வினய்யும் ஒரு கிருஷ்ண பக்தனாகிவிடுவான் என்று தீவிரமாக நம்பிக்கொண்டிருந்தான். வாழ்வில் எவ்வளவோ முயற்சிகளைச் செய்து பார்த்துவிட்டுத் தோற்றதாக முடிவுக்கு வந்திருந்த வினய், இன்னொரு முயற்சியாகக் கிருஷ்ணனைக் கூப்பிட்டுப் பார்க்க முடிவு செய்திருந்ததையும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இவர்கள் இருவரும் சந்தித்திருக்கவே கூடாது என்று சொல்ல நினைத்தேன். குறைந்தபட்சம் வினய் தனது கதையையாவது அவனுக்குச் சொல்லாதிருந்திருக்கலாம்.

‘ஏன்?’ என்று வினய் கேட்டான்.

‘ஐம்பது வயது தாண்டிய அண்ணன் தம்பிகள் அடித்துக்கொண்டு செத்தால் நன்றாக இராதல்லவா? அதனால் சொன்னேன். தவிர இரண்டு சன்னியாசிகள் வெட்டிக்கொண்டு இறந்தால் இந்த உலகம் அதைத் தாங்காது’.

‘நீ பேசாதே’ என்று வினோத் சொன்னான். சிரித்தேன். பிறகு அவனே என்ன நினைத்தானோ, ‘காமம் களைவது ஒரு கலை’ என்று சொன்னான்.

‘ஆம். சந்தேகமில்லை. ஆனால் காமத்தினும் உயர்ந்ததாக அதைச் சொல்ல முடியாது’.

‘அப்படியா நினைக்கிறாய்?’

‘உன்னை ஒன்று கேட்கிறேன். ராதை உடனில்லாத ஒரு கிருஷ்ணனை உன்னால் எண்ணிப் பார்க்க இயலுமா?’

‘சேச்சே. அது வெறும் தத்துவம்’.

‘தத்துவத்துக்கே ஒரு பெண் வடிவம் வேண்டியிருக்கிறது வினோத். வாழ்க்கைக்கு இல்லாமல் எப்படி? ஒன்று கேட்கிறேன். இத்தனை ஆண்டுகள் நீ ஒரு பெண்ணைத் தொடாதிருந்திருக்கலாம். ஆனால் நினைக்காதிருந்திருப்பாயா?’

அவன் என்னை உற்றுப் பார்த்தான். பிறகு தலை குனிந்து, ‘ஆம். அது முடிந்ததில்லை. என் கட்டுப்பாட்டை மீறி எப்போதாவது நினைத்துவிடுகிறேன்’.

‘அதைத்தான் சொல்கிறேன். முகத்தை மட்டும் நினைத்தால் நீ பரமஹம்சராகிவிட முடியும். ஆனால் முலையைத்தான் உன்னால் நினைக்க முடியும்’.

‘இல்லை. இல்லை. நிச்சயமாக இல்லை’ என்று அவன் அலறினான்.

‘என்ன இல்லை? நீ முலையை நினைத்ததே இல்லையா?’

‘அப்படிச் சொல்லமாட்டேன். ஆனால் அது மட்டுமே அல்ல. பல வருடங்களுக்கு முன்னர், நான் பக்குவமடையாமல் இருந்த காலத்தில் அதெல்லாம் உண்டு. இப்போது இல்லை’.

நான் அவன் கரங்களை அன்போடு பற்றிக்கொண்டேன். ‘வினோத்! கிருஷ்ணன் சந்தோஷங்களின் கடவுள். எளிய இச்சைகளின் மீது நிகழ்வதே அவனது காளிங்க நடனம். இச்சைகளை ஒழிக்க நினைப்பது கிருஷ்ண விரோதம். இச்சைகளைக் கடப்பதே அவனது தரிசனத்துக்கு வழி செய்யும்’.

‘புரியவில்லை’.

‘ஒழித்துவிட்ட ஒன்றை எப்படிக் கடக்க முடியும்? இருந்தால்தான் நுழைந்து வெளியேற முடியும்’ என்று நான் சொன்னதும், வினய் பாய்ந்து என்னைக் கட்டியணைத்துக்கொண்டு, ‘இதுதான். இதுதான் நான் முயற்சி செய்தது. இதில்தான் நான் தோற்றேன். இங்கேதான் நான் இறந்தேன்’ என்று சொன்னான். அவன் கண்கள் கலங்கிவிட்டிருந்தன.

(தொடரும்)

http://www.dinamani.com/junction/yathi/2018/sep/10/126-களையும்-கலை-2996602.html

Link to comment
Share on other sites

127. கடத்தல்

 

 

அந்தப் பெண் அவன் எதிரே அமர்ந்திருந்தாள். அவளது தோழி அவனுக்குப் பக்கத்தில் இருந்தாள். வினய் தன்னெதிரே அமர்ந்திருந்தவளின் கண்களையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். நான்கு விநாடிகளுக்கு ஒருமுறை அவள் இமைப்பது அவனுக்கு இடைஞ்சலாக இருந்தது. ‘சிறிது நேரம் இமைக்காதிருக்க முயற்சி செய்’ என்று சொல்லவும் செய்தான். ஆனால் அது அவளால் முடியவில்லை. சிரமப்பட்டாள். அவளது தோழி, ‘நான் முயற்சி செய்கிறேன் சுவாமிஜி’ என்று சொன்னாள். எனவே, இமைக்கும் பெண்ணைத் தன்னருகே அமர்த்திக்கொண்டு, இரண்டாமவளை எதிரே வந்து அமரச் சொன்னான். அவளால் ஏழெட்டு விநாடிகள் இமைக்காதிருக்க முடிந்தது. அதற்கு மேல் முடியவில்லை.

வினய் யோசித்தான். பிறகு இருவரையுமே அருகருகே அமர்த்தி, கண்களை மூடிக்கொள்ளும்படி சொன்னான். அவர்களும் அப்படியே செய்தார்கள். வினய் தனது தீட்சண்யம் பொருந்திய பார்வையை அவர்கள் இருவரது புருவ மத்தியிலும் கொண்டு நிறுத்தினான். இதற்காகத் தனது கண்ணை ஒண்ணரைக் கண்ணாகச் செய்துகொண்டான். பிறகு மெல்ல மந்திரங்களை முணுமுணுக்க ஆரம்பித்தான்.

நெடுநேரம் அவன் தனது பார்வையைப் பிளந்து இரு புருவ மத்தியிலும் வைத்திருந்தபடியால் அவனுக்குத் தலை வலிக்க ஆரம்பித்தது. அடக்கிக்கொண்டு, தொடர்ந்து மந்திர உச்சாடனம் செய்துகொண்டிருந்தான். இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பித்தது நள்ளிரவு ஒரு மணி வரை இடைவெளியின்றி நீண்டுகொண்டே சென்றது. வினய் முதலில் அந்தப் பெண்களின் முகங்களை தியானம் செய்தான். பிறகு அங்கங்களைத் தனித்தனியே உற்று நோக்கி தியானம் செய்யத் தொடங்கினான். கழுத்தைக் கடந்து மார்பங்களின் மீது அவனது பார்வை படிய வந்தபோது, அவனே கைகளை நீட்டி அவர்கள் அணிந்திருந்த துப்பட்டாவை விலக்கிவிட்டான். கிட்டத்தட்ட ஆழ்மன உறக்கத்தின் நெருக்கத்தில் சென்றிருந்த அந்தப் பெண்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இயற்கையின் மிக வினோதமான படைப்புகளில் ஒன்று பெண்களின் மார்பகங்கள் என்று அவனுக்குத் தோன்றியது. ஆப்பிள் பயிரைத் தவிர வேறெதையும் அதற்கு உதாரணமாகச் சொல்லிவிட முடியாது. ஐந்தடி, ஆறடி உயரம் வளர்ந்த ஆப்பிள் மரங்களின் கிளைகள் மிகவும் மெலிதாக இருப்பதை அவன் உதகமண்டலத்தில் கண்டிருக்கிறான். ஒரு குருவி அதன் மீது அமர்ந்தாலும் லேசாக அசைந்துகொடுக்கக்கூடிய அளவுக்கு மெலிதாக அவை இருக்கும். ஆனால் அதில்தான் கொத்துக் கொத்தாக எத்தனை கனிகள் உருவாகின்றன. காற்றில் அசைந்தாலும் விழுவதில்லை. அசையும்போதெல்லாம் ஒவ்வொரு ஆப்பிளும் ஒரு பெண்ணைப்போல அவனுக்குத் தோன்றியிருக்கிறது. படைப்பின் உச்சம் என்று பெண்ணின் மார்பகங்களை மட்டுமே சொல்ல முடியும். அதன் மென்மையும் மிருதுத்தன்மையும் சுண்டி ஈர்க்கும் சுபாவமும். சட்டென்று கூடு விட்டுக் கூடு பாய்வதுபோல ஒரு பெண்ணின் கண்ணுக்குள் நுழைந்து நெஞ்சம் வரை இறங்கி உட்புறம் பார்த்துவிட முடிந்தால், அது எப்பேர்ப்பட்ட அனுபவமாக இருக்கும். நரம்புகள் ஊடோடும் சதைக் கோளம். கொதகொதவென்று முழுதும் பாய்ந்து நிரம்பிய உதிரம். எதுவும் வெளித்தெரியாதபடி போர்த்தப்பட்ட ஆயிரமாயிரம் அணுத்துகள்களால் நெய்த சதைப் பரப்பு. கோலத்தின் நடுவே பூவை வைத்தாற்போல அதன் நட்டநடுவில் சொருகப்பட்ட முலைக்காம்பு. உதிரம் பாலாகும் அவசியமில்லாது போயிருந்தால், காம்புக்கு அவசியமிருந்திருக்காது. அப்போது முலை ஒரு மொண்ணைத்தன்மை எய்தியிருக்கும். காம்பற்ற முலைகள் கவனம் தொடுமா? தெரியவில்லை.

வினய் மேலும் அதை தியானித்தான். இதே பெண்கள் இன்னும் நாற்பது வருடங்களுக்குப் பிறகு எப்படி இருப்பார்கள்? வளர்ந்து செழித்து, பூரித்து நிற்கும் இந்த முலைகள் அப்போது எப்படி இருக்கும்? வாடி உதிர்ந்த ஆப்பிள்களுக்கு வடிவ சேதாரம் பெரிதாக இராது. ஆனால் முலைகள் அப்படியா? ஒரு சுருக்குப் பையில் அடைத்த பொருள்களை ஒவ்வொன்றாக உருவி வெளியே எடுக்கும்போது எய்தும் தோற்றத்தையல்லவா அது பெறவிருக்கிறது? சுருங்கிய சதைகள். முனை மழுங்கிய காம்புகள். கூர்மையற்ற வெளித்தோற்றத்தைக் கடந்து அப்போது உள்ளே போக முடியுமானால் அதே ரத்தம், அதே நரம்புகள். ஆனால் அதே வீரியம் இராது. பிராணன் விலகியோடிக்கொண்டிருக்கும் தருணத்தில், அவயவங்களின் அலங்கார பூஷித சேதாரம் தவிர்க்க இயலாதது.

ஆக சுண்டியிழுக்கச் செய்வது முலைகளா, பிராணனா? உதிரம் கெட்டு நரம்புகள் வலுவிழந்து கிருமிகளின் வாசஸ்தலமாக உடல் மாறக்கூடுமானால், இந்தக் கவர்ந்திழுக்கும் முலைகளின் உட்புற வாயிலைத் திறக்கத் தோன்றுமா? சட்டென்று அவன் தன்னெதிரே இருந்த இரு பெண்களின் ஒருத்தியின் விழிகளுக்குள் நுழைந்து அவள் நெஞ்சத்தை நெருங்கி அதை அழுகிய நிலையில் காண முற்பட்டான். நெளியும் புழுக்களும் குடலைப் புரட்டும் நெடியும். உதிரம் முழுவதும் கரேலென்று சாக்கடைத் திரவமாக மாறிப் பாய்ந்துகொண்டிருந்த நிலையில், வினய் அதில் மெல்ல மெல்ல இடுப்பளவு ஆழத்தில் நடந்து அவளது முலைகளின் மையத்தைத் தொடச் சென்றான். புழுக்கள் அவன் மீது ஏறி நெளிந்தன. சாக்கடைத் திரவம் அவனது நாசித் துவாரங்கள் வழியே உட்புகுந்து மூளை முழுவதையும் சுற்றி வரத் தொடங்கியது. அதன் நெடி அவன் நினைவெங்கும் படர்ந்து குமட்ட ஆரம்பித்தது. சகித்துக்கொண்டு அவன் மையத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தான். தலை சுற்றியது. கண்கள் இருண்டு போயின. கால்கள் படர்ந்து புதைந்த இடமெங்கும் மலக்கிடங்கே போலத் தோன்றின. இன்னும் சில கணங்களில் தொட்டுவிடுவோம் என்று அவனுக்குத் தெரிந்த நேரத்தில் அவனது கரங்கள் அவளது முலைகளை வருடிக்கொண்டிருந்தன.

‘சுவாமிஜி...’ என்று அவள் மெல்ல அழைத்தாள்.

அவன் அப்படியே அவளை இழுத்துத் தன் மடியின் மீது கிடத்திக்கொண்டான். குனிந்து அவள் பின்கழுத்தில் முத்தமிட்டான். இப்போது துர்நாற்றங்கள் மறைந்தன. அவளது கூந்தல் மிகவும் வாசனையாகத் தெரிந்தது. வியர்வை கலந்த அவளது சருமத்தின் நெடியும் கூந்தல் தைலத்தின் நெடியும் இணைந்து புதுவித போதையளித்தன. அவன் நெடு நேரம் அவளை முகர்ந்துகொண்டே இருந்தான். அப்படியே இருவரும் சுருண்டு தரையில் விழுந்து புரளத் தொடங்கினார்கள். இப்போது அவன் அவளது மார்பகங்களை வருடியபோது ரத்தமோ சதையோ நரம்புகளோ நெளியும் புழுக்களோ அவனுக்குத் தெரியவில்லை. மேகத்தின் பொதியில் இருந்து பிய்த்தெடுத்த ஒரு துண்டின் உலகில் அவன் தன்னை மறந்து திளைக்கத் தொடங்கியிருந்தான்.

எவ்வளவு நேரம் அவன் அப்படியே இருந்தானோ தெரியாது. சுய உணர்வடைந்து மீண்டபோது, அவன் அந்தப் பெண்ணின் மீதும், அவன் மீது அவளது தோழியும் படுத்துக் கிடப்பதை உணர்ந்தான்.

வினய் இந்தச் சம்பவத்தைச் சொல்லிவிட்டுக் குமுறிக் குமுறி அழுதான். ‘நான் கல்கத்தாவில் இருந்த காலத்தில் எப்படியாவது பெண்ணுடலைக் கடந்து சென்றுவிட மிகவும் ஏங்கினேன். ஆனால் ஒவ்வொரு முறை நான் முயற்சி செய்தபோதும் சறுக்கினேன். அது என் சுய தீட்சைக்கான தண்டனை என்று எண்ணிக்கொண்டேன்’ என்று சொன்னான்.

‘அழாதே’ என்று சொல்லிவிட்டு வினோத் அவன் கழுத்தின் பின்புறமாகத் தனது வலக்கரத்தை நீட்டி அவன் நெற்றிப் பொட்டைத் தொட்டான். அந்தக் காட்சி திருமணங்களில் மணமகன், பெண்ணுக்குத் திலகமிடும் காட்சியைப்போல எனக்குத் தோன்றியது. பிறகு கண்ணை மூடிக்கொண்டு ஏதோ ஜபித்தான். சில விநாடிகள்தாம். பிறகு கையை எடுத்துவிட்டு, ‘வினய், எனக்குத் திரும்பத் திரும்பத் தோன்றுவதெல்லாம் ஒன்றுதான். கிருஷ்ணனைத் தவிர உனக்கு மீட்சியளிக்கக்கூடியவன் வேறு யாருமில்லை’ என்று சொன்னான்.

‘இனி நான் மீள முடியும் என்று எனக்கே நம்பிக்கையில்லையே?’

‘அப்படி இல்லை. கணம்தோறும் நாம் பிறக்கிறோம். உன் பிறப்புக்கான நேரத்தை நீயே குறி. கிருஷ்ணனைப் பக்கத்தில் வைத்துக்கொள். மிச்சத்தை அவன் பார்த்துக்கொள்வான்’.

மெட்ராஸில் அப்போது டிஜிஎஸ் தினகரன் என்றொரு கிறிஸ்தவப் பிரசங்கி பிரபலமாகிக்கொண்டிருந்தார். எனது சீடர்களுள் ஒருவன் அவரது பிரசங்க கேசட் ஒன்றை எனக்கு அனுப்பி, இதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டிருந்தான். நான் அந்த கேசட்டைப் பொறுமையாகக் கேட்டேன். எனக்கு தினகரனின் பிரசங்கம் மிகவும் பிடித்திருந்தது. இயேசு வருகிறார் என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்தபோது, அவர் வந்தேவிட்டது போன்ற தோற்ற மயக்கத்தை அவரது பிரசங்கம் செய்வதை உணர்ந்தேன். அது சட்டென்று நினைவுக்கு வந்து, ‘வினோத், நீ ஒரு நல்ல தினகரன்’ என்று சொன்னேன்.

அவனுக்கு அது புரியவில்லை.

(தொடரும்)

http://www.dinamani.com/junction/yathi/2018/sep/11/127-கடத்தல்-2997640.html

Link to comment
Share on other sites

128. விட்டகுறை

 

 

பேருந்து கேளம்பாக்கத்தை நெருங்கியபோது இரவு மணி ஒன்பதுக்கு மேல் ஆகிவிட்டது. இதற்குமேல் இன்னொரு வண்டிக்காகக் காத்திருக்க வேண்டாம் என்று வினோத் சொன்னான். திருவிடந்தைவரை நடந்தே போய்விடலாம் என்று முடிவு செய்து, நாங்கள் மன்னார் ஓட்டல் வழியாக இரட்டைக் குளத்தைத் தாண்டிக் கோவளம் சாலையில் நடக்க ஆரம்பித்தோம். குளமெல்லாம் ஒரு காலத்தில் இருந்ததுதான். இப்போது அந்த இடமெல்லாம் கட்டடங்களாகிவிட்டன.

உப்பளங்கள் வெகுவாகக் குறைந்து நிறைய அடுக்குமாடி வீடுகள் வரத் தொடங்கியிருந்தன. அழகான சாலையும் சாலை விளக்குகளும் சாலையோர நடைபாதை வசதியும் நடைபாதைச் செடிகளும் பிரமிப்பளித்தன. நாங்கள் அறிந்த கிராமச் சூழல் அங்கு முற்றிலும் இல்லாது போயிருந்தது.

எங்கள் சிறு வயதுகளில் கேளம்பாக்கத்தில் இருந்து திருவிடந்தை வருவதற்குச் சாலை கிடையாது. உப்பளங்களுக்கு இடையே பாத்தி கட்டியது போலப் போடப்பட்டிருக்கும் மண் மேட்டின் மீதுதான் நடந்து செல்ல வேண்டும். உப்பள முதலாளிகளும் அந்த ஒற்றையடிப் பாதையில்தான் குடை பிடித்துக்கொண்டு நடந்து சென்று மேற்பார்வை பார்ப்பார்கள். சில சமயம் அபூர்வமாக யாராவது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அங்கே வந்துவிடுவார்கள். உடனே ராஜமாணிக்க முதலியார் உப்பு குடோனின் பின்புறம் கவிழ்த்துப் போடப்பட்டிருக்கும் கட்டுமரத்தை எடுத்துத் தண்ணீரில் விட்டு, அதில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு கடலோரம் வரை ஓர் உலா போய்விட்டு வருவார்கள். தலையில் வட்டவடிவமாகப் பெரிய குல்லாய் போட்டுக்கொண்டு சுருட்டு பிடித்துக்கொண்டு கட்டுமரத்தில் போகும் வெள்ளைக்காரர்களின் தோற்றம், அந்நாள்களில் எங்களுக்குப் பெரும் ஏக்கம் தரும். எத்தனை இன்பமான வாழ்வு இந்த வெள்ளைக்காரர்களுக்கு! விடிந்ததும் வீட்டுப்பாடம் செய்யும் நிர்ப்பந்தமில்லை. அடித்துப் பிடித்துக்கொண்டு பள்ளிக்கும் வேலைக்கும் ஓடும் அவசரமில்லை. ரேஷன் கடையில் கருங்கல் வைத்து இடம் பிடித்து நிற்கும் அவசியமில்லை. முடிவற்ற நீர்ப்பரப்பில் கட்டுமரம் ஏறி எங்கு வேண்டுமானாலும் சுற்றிக்கொண்டே இருக்கலாம். அடுத்த ஜென்மத்தில் நான் ஒரு வெள்ளைக்காரனாகப் பிறக்க வேண்டும் என்று எத்தனையோ முறை எண்ணியிருக்கிறேன்.

இதனை நினைவுகூர்ந்து நான் சொன்னபோது வினய் சிரித்தான். அப்படியொரு வெள்ளைக்காரத் துரை சுருட்டு பிடிப்பதைப் பார்த்த பின்புதான் முதல் முதலில் அவனுக்கும் புகைப்பிடித்துப் பார்க்கும் ஆசை உண்டானது என்று சொன்னான். தையூரில் சுருட்டு கிடைக்காததால்தான் அன்றைக்கு பீடி வாங்கிக் குடித்ததாகவும் சொன்னான்.

‘இப்போது உண்டா அந்தப் பழக்கம்?’ என்று வினோத் கேட்டான்.

‘கஞ்சாவுக்காக மட்டும் பயன்படுத்துகிறேன்’ என்று வினய் சொன்னான்.

‘கஞ்சாவா!’

‘ஆம். தியானத்தின்போது அது அவசியம் எனக்கு’.

வினோத் அதன்பின் அந்த விஷயத்தைப் பற்றிப் பேசவில்லை.

கோவளம் சாலையில் நாங்கள் நடந்துகொண்டிருந்தபோது, சிறிது தூரத்தில் இருந்து லவுட் ஸ்பீக்கரில் அம்மன் பாடல் ஒலிக்கும் சத்தம் கேட்டது.

‘விமல், உனக்கு நினைவிருக்கிறதா? சிறு வயதில் நாம் செல்லியம்மன் கோயிலுக்கு வருடம் ஒருமுறை போய்வருவோம்’ என்று வினோத் சொன்னான்.

எப்படி மறப்பேன்? அன்றைக்குச் செல்லியம்மன் கோயில்தான் பிராந்தியத்திலேயே மிக அழகான இடம். சுற்றிலும் வேப்ப மரங்கள் அடர்ந்த நிலப்பரப்பின் நடுவே நிறைய வெட்டவெளி இடம் விட்டுக் கோயிலைக் கட்டியிருந்தார்கள். சிறிய கோயில்தான். ஆனால் வருடா வருடம் அங்கு நடைபெறும் ஆடித் திருவிழா, படூர் மயான கொள்ளைத் திருவிழாவைக் காட்டிலும் விசேடமானது. தெற்கே செங்கல்பட்டு முதல் வடக்கே திருவான்மியூர் வரை உள்ள எல்லா கிராமங்களில் இருந்தும் சனம் வந்துகொண்டே இருக்கும். மாட்டு வண்டிகளிலும் சைக்கிள்களிலும் ஜட்கா வண்டிகளிலும் வந்து சேரும் கூட்டம் கோயிலைச் சுற்றியுள்ள வெட்ட வெளியிலேயே இரண்டு மூன்று நாள்களுக்குத் தங்கிவிடும். பொங்கல் வைப்பார்கள். ஆடு, கோழி பலி கொடுப்பார்கள். சாமி வந்து ஆடுவார்கள். கரகம் நடக்கும். ஒயிலாட்டம் நடக்கும். பத்து நாள் திருவிழா அமர்க்களப்படும். அம்மாவிடம் தலா ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு நாங்கள் நான்கு பேரும் திருவிழாவுக்கு மாலை வேளைகளில் போவோம். கோயில் பூசாரி ஆறுமுகப் படையாச்சியின் மகன் கங்காதரன் அண்ணாவின் வகுப்புத் தோழன் என்பதால் எங்களுக்குப் பிரசாதமெல்லாம் தனியே பார்சலாக வரும். அண்ணாவுக்குக் கேசவன் மாமாவைச் சீண்டுவதற்கு அந்த ஒரு விஷயம் போதும். ‘மாமா, ஆயிரம் சொல்லுங்கோ. செல்லியம்மன் கோயில் பொங்கலாட்டம் உங்களோடது இல்லே’.

‘சீ போடா’ என்பார் கேசவன் மாமா.

அண்ணா வீட்டை விட்டுப் போன பிறகு நாங்கள் வீதியை விட்டு வெளியேறுவதே குறைந்து போனது. வினய் வெளியேறியதும் அம்மா என்னையும் வினோத்தையும் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே தான் வைத்திருந்தாள். கடைக்குப் போகவேண்டுமென்றால்கூட அவளேதான் போவாள். அல்லது மாமாவைப் போகச் சொல்லுவாள். ஆபீஸ் போய்வருவது தவிர வேறெந்த வேலையும் தனக்குரியதல்ல என்று எண்ணிய அப்பாவே பல சமயம் சைக்கிள் எடுத்துக்கொண்டு மார்க்கெட்டுக்குப் போய்வருவாரே தவிர, என்னையோ வினோத்தையோ வெளியே போகச் சொன்னதில்லை. நான் போன பின்பு அம்மாதிரியான நெருக்கடி ஏதும் தனக்கு வீட்டில் இருக்கவில்லை என்று வினோத் சொன்னான். அம்மாவும் அப்பாவும் சோர்ந்துபோயிருப்பார்கள். இழுத்துப் பிடிப்பதன் மீதான நம்பிக்கை விட்டுப்போயிருக்கும். அதனால்தான் வினோத் திருமணக் காலம் வரை வீட்டிலேயே இருந்தானோ என்னவோ?

வினய்தான் சொன்னான், ‘எத்தனை வருடங்கள் ஆனால் என்ன? இதெல்லாம் நமக்கு மறப்பதே இல்லை அல்லவா?’

எப்படி மறக்கும்?

‘நாம் செல்லியம்மன் கோயிலுக்குப் போய்விட்டுப் போகலாமா?’ என்று கேட்டான். நான் உடனே சரி என்று சொன்னேன்.

கோயிலுக்குச் செல்வதற்கு நாங்கள் அறிந்த பாதை அப்போது இல்லை. வழித்தடங்கள் வெகுவாக மாறிவிட்டிருந்தன. வேப்பமரம் ஒன்றுகூடக் கண்ணில் தென்படவில்லை என்பது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அந்தப் பகுதி முழுவதும் வீடுகள் நிறைந்திருந்தன. செல்லியம்மனே ஒரு வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கத் தொடங்கிவிட்டாளோ என்ற சந்தேகம் வந்தது. ஆனால் திருவிழா நடக்கிறது. அதில் சந்தேகமில்லை. வேட்டுச் சத்தம் இடைவிடாமல் கேட்டது. லவுட் ஸ்பீக்கர் அம்மன் பாடல்கள் அவள் அங்கேதான் இருக்கிறாள் என்பதைத் தெரியப்படுத்தின.

நாங்கள் கோயிலை நெருங்கியபோது ஒரே ஒரு வேப்பமரம் மட்டும் மிச்சம் இருந்ததைக் கண்டோம். அது சற்று ஆறுதலாக இருந்தது. அம்மனை அங்கே கொண்டுவந்து அமர்த்தியிருந்தார்கள். சுற்றிலும் மக்கள் கூட்டம். சொல் புரியாத மொத்த சத்தம். இலக்கின்றி அலைந்துகொண்டிருந்த கூட்டத்துக்குள் நுழைந்து நாங்கள் வேப்பமரத்தடியை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தோம். நல்ல இருட்டு, குறைவான வெளிச்சம் என்பதால் எங்களை யாரும் சரியாகப் பார்த்திருக்க முடியாது என்று தோன்றியது.

‘பார்த்தால் மட்டும் உடனே அடையாளம் தெரிந்துவிடுமா என்ன?’ என்று வினோத் கேட்டான்.

அதுவும் நியாயம்தான். ஆனால் மூன்று பேர் காவி உடையில் நடமாடினால் கண்டிப்பாக அது கவனம் ஈர்க்கும். அதன்பொருட்டாவது திரும்பிப் பார்ப்பார்கள். அப்படிப் பார்ப்பவர்களுள் எத்தனை பேருக்கு எங்களைத் தெரிந்திருக்கும்?

யாரும் கவனிக்காதிருந்தால் மகிழ்ச்சி என்று நான் சொன்னேன். நாங்கள் வேப்பமரத்தடியில் அம்மன் வீற்றிருந்த இடத்துக்குப் பத்தடி தூரத்தில் இருந்த தண்ணீர்த் தொட்டியின் அடியில் சென்று நின்றுகொண்டு கவனிக்க ஆரம்பித்தோம்.

அன்றைய திருவிழா நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்துகொண்டிருந்தன. பூசாரி மணியடித்து, கற்பூரம் காட்டிக்கொண்டிருந்தது தெரிந்தது. மக்கள் கலைய ஆரம்பித்திருந்தார்கள். நாங்கள் பார்த்துக்கொண்டே இருந்தபோது வினய்க்கு இடது புறம் இருந்து ஒருவன் எங்களை நோக்கி நடந்து வந்தான். அவன் அருகே வந்தபோது நாங்கள் உற்றுப் பார்த்தோம். அவனும் நின்று எங்களைக் கவனித்தான்.

‘டேய், நீ கங்காதரன்தானே?’ என்று வினய் கேட்டான்.

‘ஆமா நீங்க...’ என்று அவன் சந்தேகத்தோடு எங்கள் மூவரையும் மீண்டும் உற்றுப் பார்த்தான். பிறகு அவனே அடையாளம் தெரிந்துகொண்டு, ‘நீங்க விஜய் தம்பி வினய் இல்லே?’ என்றான்.

வினய் புன்னகை செய்தான்.

‘அப்ப இவன்?’

‘வினோத். நான் விமல்’ என்று சொன்னேன்.

அவனால் நம்பவே முடியவில்லை. வயதும் தோற்றமும் வாழ்வும் வேறு வேறாகிவிட்டிருந்தாலும், நினைவில் பெயர்களும் உருவங்களும் ஒருவாறு உட்கார்ந்துவிடத்தான் செய்கின்றன. கங்காதரன் மகிழ்ச்சியோடு வினய்யை நெருங்கிக் கட்டியணைக்க வந்தான். என்ன நினைத்தானோ. சட்டென்று நிறுத்திக்கொண்டு, ‘சாமி ஆயிட்டியா?’ என்று கேட்டான்.

வினய் சிரித்தான்.

‘ஊருக்கே தெரியும்டா உங்க கதையெல்லாம். பாவம் உங்கம்மாதான் உசிரும் போகாம, கெடக்கவும் முடியாம இளுத்துகிட்டுக் கெடக்குறா. போய் பாத்திங்களா?’ என்று கேட்டான்.

‘இல்லை. இப்போதுதான் வருகிறோம்’.

‘விஜய் வந்திருக்கானா?’ என்று கேட்டான்.

‘தெரியவில்லை. வருவான்’ என்று வினோத் சொன்னான்.

‘எப்பிடி மாறிப் போயிட்டிங்கடா எல்லாரும்! நல்லாருக்கிங்கல்ல?’ என்று அன்போடு விசாரித்தான். நாங்கள் புன்னகை செய்தோம். அவனைக் குறித்தும் அவனது அப்பா அம்மா குறித்தும் விசாரித்தோம்.

‘அவங்கல்லாம் இல்லே. போய்ச் சேந்தாச்சு’ என்று சொன்னான். அவனுக்குத் திருமணமாகி ஒரு பெண் பிறந்து அவளுக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்து நாவலூரில் இருப்பதாகச் சொன்னான்.

‘நீதான் இப்பவும் இங்க பூசாரியா?’ என்று வினய் கேட்டான்.

‘அப்பா காலத்தோட முடிஞ்சிது அதெல்லாம். நமக்கு தையூர்ல பலசரக்கு வியாபாரம் இருக்கில்ல?’ என்று சொன்னான். எங்களை அவசியம் வீட்டுக்கு வரச்சொல்லி அவன் கேட்டுக்கொண்டிருந்தபோது, யாரோ அவன் பேரைச் சொல்லி உரக்க அழைத்தபடி வருவது தெரிந்தது.

‘தோ வர்றேன் ஆச்சாரி’ என்று பதிலுக்குக் குரல் கொடுத்துவிட்டு, ‘அடையாளம் தெரியுதா பாரு. ரங்கநாத ஆச்சாரி’ என்று சொல்லிச் சிரித்தான். ஒரு எழுபது வயதுக் கிழவர் நெருங்கி வந்தார். எங்கள் மூவருக்குமே அவரை அடையாளம் தெரியவில்லை.

‘தெரியலியா? நம்ம நீலாங்கர வைத்தியர்ட்ட அசிஸ்டெண்டா இருந்தவருடா. ஆயிரம் பேரக் கொன்னு இவரும் அர வைத்தியராயிட்டாரு’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தான்.

‘யாரு?’ என்றார் அந்தக் கிழவர்.

‘ஆச்சாரி, இவுக திருவிடந்தப் பசங்க. அண்ணந்தம்பிங்க நாலு பேரு வீட்ட விட்டு ஓடிப்போனாங்களே.. இப்பம்பாருங்க, சாமியாருங்களா திரும்பி வந்திருக்கானுக’.

‘ஓ...’ என்று சொல்லிவிட்டு, ‘மூணுல ஆருடா விஜய்?’ என்று கேட்டார்.

மூன்று பேருமே அவனில்லை என்று சொன்னோம். அண்ணாவை இவர்கள் யாரும் இன்றுவரை மறக்கவில்லை என்பது வியப்பாக இருந்தது. இத்தனைக்கும், அவன் ஊரில் இருந்த காலத்தில் யாருடனும் அதிகம் பேசிப் பழகி நாங்கள் அறிந்ததில்லை. எப்படியோ ஒரு நினைவுச் சின்னமாகிவிடுவதும் ஒரு கலைதான் என்று தோன்றியது.

‘செரி. உங்களாண்ட அப்பறமா பேசிக்குறேன். இங்கதானே இருப்பிங்க?’

ஆம் என்று சொன்னோம்.

67செரி. டேய் கங்காதரா, இந்தா. சாமி உன்னாண்ட இந்த லெட்ர குடுக்க சொல்லிச்சி’ என்று சொல்லி அவன் கையில் ஒரு துண்டுச் சீட்டை வைத்துவிட்டுக் கிழவர் நகர்ந்து போனார்.

‘எந்த சாமி?’ என்று வினய் உடனே கேட்டான்.

‘நீலாங்கர வைத்தியருதான்’ என்று கங்காதரன் சொன்னான்.

67அவர் எப்போது சாமி ஆனார்?’

‘சும்மா சொல்றதுதான். சாமியாரெல்லாம் இல்லே’ என்று சொல்லிவிட்டு கெக்கெக்கே என்று சிரித்தான். விளக்கு வெளிச்சத்தில் அந்தக் கடிதத்தைத் தூக்கிப் பிடித்துப் படித்தான். பிறகு என்ன நினைத்தானோ, ‘டேய், நாளைக்குப் பாப்பம்டா. இப்பம் ஒரு அவசர சோலி’ என்று சொல்லிவிட்டு சட்டென்று கிளம்பிப் போனான்.

அவன் போனபின்பு வினய் சொன்னான். அந்தக் கடிதத்தில் ஒரு வரிதான் எழுதியிருந்தது.

ஒரு பெரிய காரியம் ஆகவேண்டி இருக்கிறது, உடனே வரவும்.

‘நீ எப்படிப் படித்தாய்?’

‘முடியும். விட்ட குறை’ என்று சொன்னான்.

(தொடரும்)

http://www.dinamani.com/junction/yathi/2018/sep/12/128-விட்டகுறை-2998289.html

Link to comment
Share on other sites

129. மருந்து

 

 

நள்ளிரவு வரை நாங்கள் செல்லியம்மன் கோயில் வாசலிலேயேதான் கிடந்தோம். எழுந்து வீட்டுக்குப் போகவே தோன்றவில்லை. கோயில் வாசலில் கால் நீட்டி உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருக்கும் மூன்று பரதேசிகள் யார் என்று விசாரிக்க அந்தப் பக்கம் யாரும் வரவும் இல்லை. பூசாரி கோயில் கதவைப் பூட்டிவிட்டுக் கிளம்பும்போது எங்களைப் பார்த்துவிட்டு சிறிது தயங்கினார். என்ன நினைத்தாரோ, அருகே வந்து ஒரு கும்பிடு போட்டுவிட்டுப் போய்விட்டார். வினய் நெடு நேரம் அண்ணாவைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தான். அவன் தன்னை உடன் அழைத்துச் சென்றிருக்கலாம் என்று நினைக்கிறானோ என்று எனக்குச் சந்தேகமாக இருந்தது. ஆனால் திரும்பத் திரும்ப எனக்குத் தோன்றியது இதுதான். வினய் ஒரு விதத்தில் அண்ணாவைக் காட்டிலும் பெரிய சன்னியாசி. தெரிந்தும் தெரியாமலும் அவன் செய்த தவறுகள் நிறைய இருக்கலாம். ஆனால் அனைத்திலிருந்தும் அவனால் மிக எளிதாக வெளியேறிவிட முடிந்திருக்கிறது. இதை ஏன் அவனால் உணரமுடியவில்லை?

‘இல்லை. என்னால் பெண்ணிலிருந்து வெளியேற முடியவில்லையே?’ என்று அவன் சொன்னான்.

‘தினமும் இன்பம் துய்ப்பவன் போலல்லவா பேசுகிறாய்?’

‘இதுவரை முப்பது முறை நான் புணர்ந்திருக்கிறேன். ஆனால் அந்த நினைவு இப்போதுவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது’.

‘அது பரவாயில்லை. இப்போது ஒரு பெண் அகப்பட்டால்?’

‘நிச்சயமாக ஏறிட்டுப் பார்க்கமாட்டேன்’.

‘அதைத்தான் சொல்கிறேன். நீ முப்பது முறை பார்த்துவிட்டதால்தான் இது உனக்கு சாத்தியமாகிறது. ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன். தப்பித்தவறி வினோத் ஒரு பெண்ணிடம் அகப்பட்டுக்கொண்டால் கிழவனாகும்வரை விடமாட்டான்’.

வினோத்துக்கு இந்தப் பேச்சு பிடிக்கவில்லை. என்ன சொல்லி என் வாயை அடைக்கலாம் என்று யோசித்து, ‘நீ சன்னியாசியோ இல்லையோ, நீ ஒரு சரியான வைஷ்ணவன்’ என்று சொன்னான்.

நான் சிரித்துவிட்டேன். ‘சேச்சே. நாடி நரம்பெல்லாம் தளர்ந்து போகும்ரை சுகபோகம் அனுபவித்துவிட்டு சன்னியாச ஆசிரமத்தை ஏற்பது எனக்கு உடன்பாடல்ல. நடு வயதுக்குள் அனைத்தையும் ருசித்து முடித்துவிட வேண்டும்’ என்று சொன்னேன்.

‘ஒன்று கவனித்தாயா? நாம் நான்கு பேருமே வைணவக் குடும்பத்தில் பிறந்து வைணவத்தை விட்டு வெகுவாக விலகி வந்துவிட்டோம்!’

‘ஆம் வினோத். எனக்கு உட்காரும்போதுகூட சாய்ந்து உட்காரப் பிடிக்காது. முதுகு வலிக்கும்வரை நேராக உட்கார்ந்துவிட்டு, வலிக்க ஆரம்பிக்கும்போது படுத்துவிடுவேன்’ என்று சொன்னேன்.

‘சரி நாம் எப்போது வீட்டுக்குப் போவது?’ என்று வினய் கேட்டான்.

‘என்ன அவசரம்? விடியட்டுமே?’ என்று வினோத் சொன்னான். ஒரு முழு நாள் கழிந்து அடுத்த நாள் இரவுதான் அம்மா காலமாவாள் என்று அவன் சொல்லியிருந்ததை நானும் எண்ணிக்கொண்டேன். இரு நாள் முன்னதாக வீட்டுக்குப் போவதற்கு என்னவோ போல இருந்தது. பாசம் அல்லது அதைப் போன்ற எந்த ஒரு உணர்வும் மனத்தில் எட்டிப் பார்க்கவில்லை என்பது நிம்மதியாக இருந்தது. வினய், வினோத் இருவருமே அப்படித்தான் சொன்னார்கள். என் கவலையெல்லாம் ஒன்றுதான். ஒரு மரணத்தை அருகே இருந்து வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பதை இந்த உலகம் ஒருபோதும் விரும்பாது. ஒரு துளி கண்ணீரையாவது அது கேட்கும். நான் கண்ணீருக்கு எங்கே போவேன்?

‘நமக்குச் சேர்த்து கேசவன் மாமா அழுவார் கவலைப்படாதே’ என்று வினய் சொன்னான்.

‘ஆம். அவர் நம்மை நினைத்தும் அழுவார்’ என்றான் வினோத்.

‘நல்ல மனிதர். சுத்த ஆத்மா. அழுதுவிட்டுப் போகட்டும். நாம் ஏன் இங்கே உட்கார்ந்திருக்க வேண்டும்? சிறிது தூரம் நடந்து கடற்கரைக்குப் போய்விடலாமே?’ என்று கேட்டேன். இருவரும் எழுந்துகொண்டார்கள். ஆளரவமற்ற சாலையில் நாங்கள் மூவரும் கோவளம் கடற்கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். வழி முழுதும் என்னென்னவோ பேசிக்கொண்டே போனோம். நாங்கள் பேசுவதற்கு இவ்வளவு இருக்கிறது என்பதே எங்களுக்கு அப்போதுதான் தெரிந்தது. வினோத், மாயாப்பூரில் இருந்த அனுபவங்களைச் சொன்னான். அங்கிருந்து அவனை பெங்களூருக்கு அனுப்பியபோது, கொழும்பில் இருந்து அவன் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டதற்குத் தண்டனையாக ஒரு வாரம் அங்கே யாருமே அவனுடன் பேசவில்லை. பிறகு தலைமை சன்னியாசியின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டு சகஜ நிலைக்கு மீட்டிருக்கிறான்.

‘எங்களுக்கு கிருஷ்ணன் வேறு ஒழுக்கம் வேறல்ல’ என்று வினோத் சொன்னான். பேசியபடி நாங்கள் நடந்துகொண்டிருந்தபோது எதிரே கங்காதரன் வந்தான். ‘நீங்க இன்னும் வீட்டுக்குப் போகலியா?’ என்று கேட்டான்.

நான் வெறுமனே சிரித்தேன். ‘நீ எங்கே போய்விட்டு வருகிறாய்?’ என்று வினோத் கேட்டான்.

‘சாமி வரச் சொல்லியிருந்திச்சி. போயிட்டு வர நேரமாயிருச்சி. பஸ்ஸு கிடைக்காம ஒரு லாரி புடிச்சி வந்தேன்’ என்று சொன்னான்.

‘இவ்வளவு தாமதமாக வீட்டுக்குப் போனால் உன் மனைவி திட்டமாட்டாளா?’

‘சேச்சே. சாமிய பாத்துட்டு வரேன்னு சொன்னா ஒண்ணியும் சொல்லமாட்டா’.

எனக்கு அந்தச் சாமியைப் பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருந்தது. சிறு வயதில் பார்த்திருக்கிறேன். ஒரு நாட்டு வைத்தியராக ஸ்கவுட் ஆசிரியர் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலம்தான் எப்படி மனிதர்களை சாமியாக்கிவிடுகிறது!

‘அவர் லேசுப்பட்ட ஆளில்ல பாத்துக்கோ. அவருகிட்டே நூறு கோடியோ, நூத்தம்பது கோடியோ சொத்து இருக்குன்னு ஊருக்குள்ள பேச்சு இருக்குது’ என்று கங்காதரன் சொன்னான்.

சித்த வைத்தியரிடம் நூறு கோடி சொத்தா?

இதைக் கேட்டதும் கங்காதரன் சுவாரசியமாகிவிட்டான். சாமியைப் பற்றிப் பேச ஆரம்பித்தான்.

அவர் நம்ப முடியாத அளவுக்கு நல்ல மனம் படைத்தவர். ஆயிரம் இரண்டாயிரம் என்றாலும் அவன் கேட்கும்போதெல்லாம் பணம் தர மறுக்காத சாமி. அவரது வைத்தியசாலையின் பின்புறக் கூரைச் சரிவில் கிளிக்கூண்டுக்குப் பக்கத்தில் சொருகியிருக்கும் பச்சை நிற சுருக்குப் பையை என்றாவது ஒருநாள் எடுத்துப் பார்த்துவிட வேண்டும் என்று கங்காதரனுக்கு அங்கே போகும்போதெல்லாம் தோன்றும். சாமி அதிலிருந்துதான் பணத்தை எடுக்கும். எப்போது அதில் பணம் வைக்கப்படும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் கேட்கும்போதெல்லாம் அதிலிருந்தே எடுக்கும். காது குடையும் பேப்பர்ச் சுருள் மாதிரி சுருட்டி வைக்கப்படும் ஐம்பதுகளும் நூறுகளும்.

சாமிக்குப் பிரம்புக்கூடையில் பணம் வருகிறது என்று ஊருக்குள் ஒரு பேச்சு இருக்கிறது. யார் கொண்டுவருகிறார்கள் என்று யாருக்கும் தெரிந்ததில்லை. யாரிடமிருந்து வருகிறது என்றும் தெரிந்ததில்லை. வைத்தியசாலையில் அவன் பிரம்புக்கூடைகளையும் பார்த்ததில்லை. அகன்ற விசாலமான காரை பூசிய வீடு. முன்பக்கத்துத் தாழ்வாரத்தில்தான் சாமி இருக்கும். செப்பும் தாமிரமும் பூசிக்கொண்டு அதனைச் சுற்றியிருக்கும் கிண்ணங்களெல்லாம் உண்மையில் தங்கக்கிண்ணங்கள் என்றும் ஒரு பேச்சு இருக்கிறது. அதுவும் ஊர்ஜிதமாகாத வதந்திதான். சாமி அவற்றில் கலர் கலராக மருந்துகளைக் குழைத்து வைத்துக்கொண்டு வருகிறவர்களுக்கெல்லாம் கண்ணை மூடி மந்திரம் சொல்லி ஆ திறக்கச் சொல்லி வாயில் ஒரு ஸ்பூன் விடும். சிஷ்யர்கள் இருக்கிறார்கள். வீட்டின் இரண்டாம் கட்டு இருட்டில், பிறவி எடுத்ததே மருந்து இடிக்கத்தான் என்பதுபோல் எப்போதும் இடித்துக்கொண்டிருக்கிற பையன்கள். சாமி அவர்களுடன் அதிகம் பேசி கங்காதரன் பார்த்ததில்லை. அவர் மூலிகை பறிக்க ஏதாவது மலைப் பகுதிக்குக் கிளம்பிப் போகும்போது, சிஷ்யர்கள் உலகைப் பார்க்க வருவார்கள். அகப்படும் சந்துகளில் ஒதுங்கி நின்று அவசரமாக சொக்கலால் ராம்சேட் பீடி குடிப்பார்கள். நாலு இழுப்பு இழுத்துவிட்டு, கற்பூரவல்லி இலைகள் நாலை மென்றபடி திரும்பி வருவார்கள்.

பறிக்கும் மூலிகைகளை சாமி ஈரத் துணியில்தான் முடிந்து எடுத்து வரும். வைத்தியசாலையின் கம்பியடித்த முற்றத்தில் அவற்றை மொத்தமாகக் கொட்டி, இனம் பிரித்துக் காயவைக்கும். மருந்து இடிப்பது ஒரு வேள்வி என்று அடிக்கடி சொல்லும். ஒருவேளை சாமி ரகசியமாக கஞ்சா பயிரிட்டு விற்கிறதோ என்று கங்காதரனுக்கு அடிக்கடி தோன்றும். வைத்தியசாலைக்குப் போகும்போதெல்லாம் மூலிகைகளை உற்று உற்றுப் பார்ப்பான். எடுத்துக் கசக்கி முகர்ந்து பார்ப்பான். ஓரிரு சமயங்களில் கையில் கொஞ்சம் அள்ளி வந்து தனியே பிரித்தும் ஆராய்ந்திருக்கிறான்.

இன்றுவரை எந்த யூகமும் சாமி விஷயத்தில் மெய்யென்று நிரூபணமானதில்லை.

கங்காதரன் தன்னிஷ்டத்துக்குப் பேசிக்கொண்டே எங்களோடு நடந்து வந்தான். இன்றிரவு நிச்சயம் அவனும் வீடு போய்ச் சேரப்போவதில்லை என்று தெரிந்துவிட்டது. விடிந்ததும் தனக்கு நிச்சயமாக சாமியை அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும் என்று வினய் அவனிடம் கேட்டுக்கொண்டான்.

‘அதுக்கென்ன, போலாம். ஆனா எதுக்கு?’

‘எனக்கு கஞ்சா வேண்டும்’ என்று வினய் சொன்னபோது, கங்காதரன் மிரட்சியுடன் அவனைப் பார்த்தான்.

‘பயப்படாதே. கொஞ்சம் போதும்’.

‘அவரு அதெல்லாம் வெச்சிருக்கறதில்லைன்னுதான் நினைக்கறேன்’.

‘அது பரவாயில்லை. ஆளைப் பார்த்தால் அவரிடம் உண்டா இல்லையா என்று நான் கண்டுபிடித்துவிடுவேன்’ என்று வினய் சொன்னான்.

‘அதெப்படி கண்டுபிடிப்பே? எத்தினியோ வருசமா நான் சாமிகூட இருக்கேன். அவருக்குப் பணம் எங்கேருந்து வருதுன்னே என்னாலயே கண்டுபிடிக்க முடிஞ்சதில்ல தெரியுமா?’

‘அப்படியா?’

‘இதக் கேளு. ஒருக்கா செல்லியம்மன் கோயில் பூசாரி, சாமியோட கணக்குப்பிள்ளைய மடக்கி இந்த சமாசாரத்த கேட்டாப்டி’.

‘எந்த சமாசாரம்?’

‘அட பணம் வர்ற சமாசாரம்தான். முழுக்கக் கேளு’ என்றான். அதற்குமேல் நாங்கள் அவன் பேச்சில் குறுக்கிட விரும்பவில்லை.

சாமிக்கு மருந்து பிசினஸ் தவிர வேறெந்தத் தொழிலும் இல்லை என்று அவரது கணக்குப் பிள்ளை சூடம் அணைத்து சத்தியம் செய்திருக்கிறார்.

‘யோவ், பயப்படாதய்யா. நான் யாராண்டயும் சொல்லமாட்டேன். சும்மா ஒரு இதுக்குதான் கேக்குறது. நாட்ல எந்த மருந்து விக்கிற வைத்தியனத் தேடி காருலயும் தேருலயும் பணக்காரங்க வருதாங்க? சிட்டுக்குருவி லேகியம் வாங்க வாரவன்னாக்கூட திருட்டு முழி காட்டிக்குடுத்துரும். அப்பிடி அதுதான் தேவைன்னு நினைக்கறவன் வேலக்காரன அனுப்பாம அவனேவா காரு ஏறி வரப்போறான்? சாமி என்ன தம்பிய இளுத்தி வெச்சி சர்ஜரி பண்ணி பெரிசாக்கியா விடுதாரு? தபாரு.. நாலாநாள் நைட்டு ரெண்டு மணிக்கு குவாலிஸ்ல ஆறு பேர் வந்தாங்கல்ல? அவுங்க யாரு? அத்த மட்டுமானா சொல்லிடு’.

‘நீ ரெண்டு மணிக்கு அங்க எதுக்கு வந்த?’ என்று கேட்டார் கணக்கப்பிள்ளை.

‘மோகினி புடிச்சி இட்டாந்துச்சி. அதா முக்கியம்? ஆறு பேர் வந்தாங்கல்ல? கையில பெருசா சூட்கேசு இருந்திச்சில்ல? அதுக்குள்ளார பணம்தான?’

அவர்கள் பபுவா நியூகினியாவிலிருந்து வந்த கப்பலில் இருந்து மூலிகை எடுத்து வந்தவர்கள்தான் என்று அடித்துச் சொல்லிவிட்டுக் கணக்கப்பிள்ளை திரும்பிப் பாராமல் போய்விட்டார்.

மறுநாள் கங்காதரனைத் தற்செயலாகப் தையூர் சந்தையில் பார்த்தபோது இதைச் சொல்லிப் புலம்பினார்.

‘நாட்ல நல்லவனா ஒருத்தன நடமாட விடமாட்டேங்குறானுக கங்காதரா. சாமி சொக்கத் தங்கம். முப்பது வருசமா அதுங்கூட இருக்கேன். ஒரு தப்புதண்டா கிடையாது. அதிர்ந்து ஒரு வார்த்த பேசாது. தா உண்டு, மருந்துக உண்டு, சூரணம் உண்டு, வெளக்கு வெச்சா திருவருட்பா உண்டுன்னு கெடக்குது. பெரிய எடத்து மனுசங்கள்ளாம் பாக்க வாராகன்னா, அது சாமியோட வித்தைக்கு இருக்கற மகிமை. ஒண்ணு சொல்லுறேன் கேட்டுக்க. சோறு போடறவனையும் சொஸ்தமாக்குறவனையும் சுத்திவர எப்பமும் ஒரு கூட்டம் இருக்கத்தாஞ்செய்யும். இந்த ரெண்டுதாண்டா எல்லாத்துக்கும் அடிப்படெ. இது புரியல நம்மூரு சோம்பேறிகளுக்கு’.

கங்காதரன் வேறுபுறம் திரும்பிச் சிரித்துக்கொண்டான். முப்பது வருடங்களாகக் கூட இருக்கும் கணக்குப் பிள்ளைக்கு மட்டுமல்ல. சாமிக்கு இரண்டு வருஷம் தள்ளிப் பிறந்த அதன் தம்பிக்குக்கூட சாமியைப் பற்றி ஏதும் தெரியாது. தனக்கு மட்டும் தெரியுமா என்ன? கொஞ்சம் தெரியும். தன்னைப் போல் சிலருக்குக் கொஞ்சம் கொஞ்சம் தெரிந்திருக்கும். அந்தச் சிலர் யார் என்று அவர்கள் ஒருவருக்கொருவர் தெரியாது. தனக்கு, தன்னைத் தவிர வேறு யார் யார் என்று இன்றுவரை தெரியாதது போல. யாருக்கும் முழுக்கத் தெரியாது. பெரும்பாலானவர்களுக்கு சுத்தமாகத் தெரியாது. ரங்கநாத ஆச்சாரிக்குக் கொஞ்சம் கூடுதலாகத் தெரிந்திருக்கலாம். ஆனால் கண்டுபிடிக்க முடியாது. செவிட்டு முண்டம். கேட்கிற எதுவும் காதில் விழாது. சாமியின் உத்தரவுகளை மட்டும் கொண்டுவந்து கொட்டிவிட்டுப் போய்விடும். சாமி பெரிய ஆள்தான். ரங்கநாத ஆச்சாரி மாதிரி ஒரு ஆளைத் தனது பர்சனல் அசிஸ்டெண்டாக வைத்துக்கொள்ள வேறு யாருக்குத் தோன்றும்?

கங்காதரன் இன்னும் என்னென்னமோ சொல்லிக்கொண்டே இருந்தான். பிறகு திடீரென்று வீட்டு ஞாபகம் வந்து, ‘நாளைக்கிப் பாப்பம்டா’ என்று சொல்லிவிட்டுப் போனான்.

‘விமல், நீங்கள் இருவரும் விடிந்ததும் வீட்டுக்குப் போய்விடுங்கள். நான் நீலாங்கரை சென்று அந்த சாமியைப் பார்த்துவிட்டு வருகிறேன்’ என்று வினய் சொன்னான்.

(தொடரும்)

http://www.dinamani.com/junction/yathi/2018/sep/13/129-மருந்து-2998999.html

Link to comment
Share on other sites

130. நாயர்

 

 

கங்காதரன் கிளம்பிப் போனபின் நாங்கள் நெடுநேரம் கடற்கரை மணலில் படுத்துக் கிடந்தோம். பகல் முழுதும் நல்ல வெயில் அடித்திருக்க வேண்டும். கடல் காற்றின் குளுமையை ஊடுருவி மணல் பரப்பின் வெதுவெதுப்பை உணர முடிந்தது. எனக்கு தர்கா வரை போய் வரலாம் என்று தோன்றியது. கோவளத்தில் கால் வைத்தது முதல் எனக்கு அந்தப் பக்கிரியின் நினைவுதான் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருந்தது. நான் ஓடிப்போவேன் என்று சொன்ன மனிதர். திருவானைக்கா சித்தனுடன் அவருக்குத் தொடர்பு இருந்திருக்கிறது. அண்ணாவுடன் தொடர்பு இருந்திருக்கிறது. எல்லோரும் ஏதோ ஒரு கண்ணில் ஒருங்கிணைந்திருக்கிறார்கள். என்னை, வினய்யை, வினோத்தை நெருக்கமாகக் கவனித்திருக்கிறார்கள். தற்செயலாகவோ, திட்டமிட்டோ பறவை உதிர்த்த எச்சம் போல எங்களை மறந்து போய்விட்டார்கள். ஒருவேளை அவர்கள் விரும்பிய வழியில் நாங்கள் போயிருந்தால் தொடர்பு நிலைத்திருக்குமோ என்னவோ. ஆனால் நாளை என்ன ஆவோம் என்று அறிந்த மனிதர்களுக்கு நாங்கள் இப்படித்தான் ஆவோம் என்பது தெரியாமலா இருந்திருக்கும்?

படுத்திருந்த என் சகோதரர்களை நான் திரும்பிப் பார்த்தேன். இருவருமே நன்றாக உறங்கிக்கொண்டிருந்தார்கள். வினய் தார்ப்பாய்ச்சிக் கட்டிய அரை வேட்டியுடன் அப்படியே மல்லாக்கக் கிடந்தான். மேல் சட்டை இல்லை. கீழே போட்டுக்கொள்ளச் சொல்லி வினோத் கொடுத்த துண்டைக்கூட மறுத்துவிட்டான். பசியும் அலைச்சலும் தவமும் கஞ்சாவுமாகச் சேர்ந்து அவனது தேகத்தை ஒரு துணி மூடிய எலும்புக்கூடாக்கியிருந்ததைக் கண்டேன். எந்த இடத்திலும் பிடித்துக் கிள்ளமுடியாத உடல். கடல் காற்றின் குளுமை எனக்குக் கணம் தோறும் சிலிர்ப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. ஆனால் அவன் சிறிதும் அசையாமல் ஒரு பொருளைப் போலக் கிடந்தான். மாறாக வினோத், ஒரு குழந்தையைப் போலச் சுருண்டு படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான். ஒரு காவித் துண்டை மப்ளர் போலக் கழுத்து முதல் தலைவரை காது மறைத்துச் சுற்றிச் சொருகிக்கொண்டு, கைகளை இறுக்கி மூடிக்கொண்டு அவன் உறங்குவதைப் பார்க்கவே சிரிப்பாக இருந்தது. மெல்லிய குறட்டைச் சத்தமும் கேட்டது. உறக்கத்தில் யாரும் துறவியாக இருப்பதில்லை. எப்படி உறங்கும்போது யாரும் ராஜனாகவும் இருப்பதில்லையோ அப்படி. ஆனால் கட்டறுத்துப் பொங்கும் மனம், உறங்கும்போது துறவிகளை எப்படித் துன்புறுத்தும் என்று எளிதில் விளக்கிவிட முடியாது. உலக சரித்திரத்தில் எந்த ஒரு துறவியும் தன் உறக்கத்தில் வரும் கனவுகளை உண்மையாக எடுத்துச்சொன்னதாக நான் அறிந்ததில்லை. நானும்கூடச் சொன்னதில்லை.

உறங்கத் தொடங்குவதற்கு முன்னால் இதை நான் குறிப்பிட்டபோது, ‘அதனால்தான் நான் உறங்குவதற்கு முன் ஆயிரத்தெட்டு முறை கிருஷ்ண ஜபம் செய்துவிட்டுப் படுப்பேன். கனவு வராது’ என்று வினோத் சொன்னான். நான் சிரித்துக்கொண்டேன். கனவில் கண்ட ஓர் ஒளிதான் அவனை இத்தனை தூரத்துக்கு இழுத்துச் சென்றிருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்துவிடாதிருக்க எத்தனை மெனக்கெட்டிருப்பான்! அது கனவாக இருந்துவிடக்கூடாது என்று எவ்வளவு நாள் வேண்டிக்கொண்டிருந்திருப்பான்! எனக்கென்னவோ வினோத் கிருஷ்ண பக்தர்களோடு போய்ச் சேர்ந்ததைக் காட்டிலும் ராமலிங்க அடிகளாரிடம் சரணடைந்திருந்தால் இன்னமும் உருப்பட்டிருப்பான் என்று தோன்றியது.

இனி எண்ணி என்ன? அவரவர் ரேகைகளின் அழியாத வழித்தடங்கள் இட்டுச் செல்லும் எல்லைகளின் விளிம்பை நோக்கி ஓடத்தொடங்கி எத்தனையோ காலமாகிவிட்டது. திரும்பிப் பார்க்கவும் நின்று மூச்சு விட்டுக்கொள்ளவும் அவகாசம் இருப்பதில்லை, பெரும்பாலும். பாதையைப் பரிசீலிப்பதற்கு விருப்பம் என்ற ஒன்று யாருக்கும் இல்லை. கிருஷ்ணனிடம் பேரம் பேசி, காமரூபிணியைச் சரிக்கட்ட விரும்புவதாகச் சொன்ன வினய்யின் நேர்மையை நான் மிகவும் ரசித்தேன். அவன் வேறு என்னவாக இருந்தாலும் அவன் வினய்யாக இருக்க முடியாது என்று தோன்றியது. அவன் ஏன் வினய்யாக இருக்கிறான் என்பது வேண்டுமானால் விடையற்ற பெருவினாவாக இருக்கலாம்.

நான் எழுந்துகொண்டேன். உறங்குபவர்களைக் கலைக்க விருப்பமின்றி தர்காவை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். எத்தனை வருடங்கள் ஓடியே போய்விட்டன! திருவானைக்காவில் இருந்து நான் அண்ணாவைத் தேடிக்கொண்டு தென்காசிக்குக் கிளம்பும்போதுதான் கடைசியாகக் கோவளம் பக்கிரியை நினைத்தேன். வாழ்வில் அவரைத் திரும்ப நினைவுகூர எனக்கு அவசியமே இல்லாமல் போய்விட்டது. வினய்யைச் சந்தித்தபின், அவனது கதையைக் கேட்டபோதுதான் மீண்டும் அவரது நினைவு வந்தது. மனிதர் நிச்சயம் காலமாகியிருப்பார் என்றுதான் தோன்றியது. என் சிறு வயதில் நான் அவரைச் சந்தித்தபோதே அவருக்கு சொரிமுத்துச் சித்தன் வயதுதான் இருக்கும். அவர் பெயர் சம்சுதீன் என்பதே சொரிமுத்து சொல்லித்தான் எனக்குத் தெரியும். இடைப்பட்ட காலத்தில் அவர் அம்மாவைத் திரும்பச் சந்தித்திருப்பாரா? எங்களைப் பற்றிப் பேசியிருப்பாரா? இதுதான் எங்கள் விதி என்று அவளுக்குத் தெரிவித்திருப்பாரா? அம்மா அதை எப்படி உள்வாங்கியிருப்பாள்?

சராசரிகளின் இயல்பான எழிலைக் கொண்ட குணம்தான் அம்மாவுக்கு. எந்த வகையிலும் இன்னொரு பெண்ணில் இருந்து அவளை வேறுபடுத்திப் பார்க்க இயலாது. மனைவி ஆனதால் கடமைகள். அம்மா ஆனதால் பாசம். ரேஷன் கார்டில் குடும்பத் தலைவி ஆனதால் பொறுப்புகள், சுமைகள். சுமந்து முடித்து இறக்கி வைத்துவிட்டுப் படுத்துவிட்டாள். இன்றைய தினம் விடிந்து, இருண்டு மீண்டும் ஒருநாள் விடிந்து இருளும்போது போய்ச் சேர்ந்துவிடுவாள். வழியனுப்பி வைப்பதற்கு எத்தனை வழிகள் கடந்து வரவேண்டியிருக்கிறது.

தர்கா அருகே நான் போய்ச் சேர்ந்தபோது காற்றின் வேகம் கூடியிருந்தது. யாருமற்ற மணல் பரப்பில் இருளில் கரைந்து நடப்பது சுகமாக இருந்தது. ஒன்றிரண்டு நாய்கள் இருக்கும் என்று நினைத்தேன். ஏனோ இல்லை. எனக்கு ஓர் அதிர்ஷ்டம் உண்டு. எத்தனையோ இடங்களில் எவ்வளவோ முறை இம்மாதிரி இருளில் தனியே நடந்திருக்கிறேன். எங்கும் வாழும் நாய்கள், எப்போதும் இரவில் நடமாட்டம் கண்டால் குரைக்கும் நாய்கள் ஏனோ என்னைக் கண்டு குரைப்பதில்லை. இது ஒருமுறை இருமுறையல்ல. லட்சம் முறை எனக்கு நடந்திருக்கிறது. எனது சீடர்களே இதை அடிக்கடிச் சொல்லி வியப்பார்கள். எந்த நாயும் குரைக்காது. யாரையும் எச்சரிக்க நினைக்காது. என்னை மிரட்டப் பார்க்காது. இத்தனைக்கும் நான் நாய்களுடன் சிநேகமானவனெல்லாம் இல்லை. யாருக்குமே நான் சிநேகிதனில்லை. என்னைத் தவிர. ஒரு ஆபத்தற்ற உயிரினம் என்று நாய்கள் உணரும் விதத்தில் என் தோற்றத்தில் ஏதோ ஒன்று இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். ஒரு சமயம் மடிகேரியில் இருட்டில் தெரியாமல் ஒரு நாயை மிதித்தே விட்டேன். அப்போதுகூட அது லேசாக முனகிக்கொண்டு நகர்ந்து ஓடியதே தவிர, பதிலுக்குத் தனது எதிர்ப்பைக் காட்டவில்லை. என் சிறு வயதுகளில் கோவளம் தர்காவுக்கு வரும்போதெல்லாம் அங்கு ஏழெட்டு நாய்கள் சுற்றிக்கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். தர்காவுக்கு வந்துவிட்டுப் போகும் பக்தர்கள், பொறை பிஸ்கட் வாங்கிப் போடுவார்கள். அது இல்லாவிட்டாலும் கடலோரக் கருவாட்டுத் துண்டுகளுக்காக அவை அந்த இடத்தை விட்டு நகரவே நகராது.

எங்கே போய்விட்டன அந்த நாய்களும் அவற்றின் வம்சமும்? நான் தர்காவைச் சுற்றிக்கொண்டு முன்பக்கம் வந்தேன். யாருமில்லை. வெறும் அமைதியும் அதை மூடிய இருளும் மட்டுமே நிறைந்திருந்தது. நான் அங்கே சிறிது நேரம் அமரலாம் என்று நினைத்தேன். ஏனோ சம்சுதீனின் நினைவு திரும்பத் திரும்ப வந்துகொண்டிருந்தது. அவர் ஒரு சித்தர் என்பது இறுதிவரை அந்தப் பிராந்தியத்தில் வசித்த யாருக்கும் தெரியாது என்பது வியப்பாக இருந்தது. ஒரு தர்கா வாசல் பிச்சைக்காரனாகவே இருந்துவிட்டுப் போயிருக்கிறார். ஒருவேளை நான் ஊரைவிட்டுப் போன பிற்பாடு தெரிய வந்திருக்கலாம். அநேகமாக அது நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றியது. அம்மாவே அவரை வயிற்று வலிக்கு மந்திரிக்கும் பக்கிரியாக மட்டும்தான் எண்ணியிருந்தாள். வீட்டுக்குப் போகும்போது அம்மாவிடம் சம்சுதீனைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஒருவேளை அம்மா பேசும் நிலையில் இருந்தால் நிச்சயம் அவரைப் பற்றிச் சொல்வதற்கு அவளிடம் கொஞ்சமாவது இருக்கும் என்று தோன்றியது.

ஒரு பத்து நிமிடங்கள் அங்கு அமர்ந்திருந்துவிட்டு எழுந்து நடக்க ஆரம்பித்தேன். இப்போது என்னெதிரே ஒரு நாய் வந்தது. நான் புன்னகை செய்தேன். அப்படியே அசையாது நின்றேன். அதுவும் என் எதிரே வந்து நின்றது. என்னை உற்றுப் பார்த்தது. இருளில் அந்த நாயின் கண்கள் கருநீலத்தில் பளபளத்தன. ‘நான் போகவேண்டும், வழியை விடு’ என்று சொல்லிவிட்டு நான் நடக்க ஆரம்பித்தபோது, ‘உன் அண்ணன் வந்துட்டானா’ என்று அது கேட்டது.

(தொடரும்)

http://www.dinamani.com/junction/yathi/2018/sep/14/130-நாயர்-2999992.html

Link to comment
Share on other sites

131. பூர்ணாஹுதி

 

 

 

அற்புதங்கள் அதனதன் இயல்பில், தோற்றத்தில், விதிப்பில், வார்ப்பில் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. ஒரு சூரியன் உதிப்பதைக் காட்டிலும், ஒரு பெருமழையைக் காட்டிலும் அற்புதமென்று இன்னொன்று இருந்துவிட இயலாது. ஆனால் மனித மனத்தின் விசித்திர மூலைகளை இந்த அற்புதங்களின் பக்கம் நாம் திருப்பி வைப்பதேயில்லை. ஒரு விடியலை நின்று அனுபவிப்பவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? நான் ஒரு சமயம் இரவெல்லாம் ஒரு பூச்செடியின் அருகே நாற்காலி போட்டு அமர்ந்து, ஒரு மொட்டு மலரும் கணத்துக்காகக் காத்திருந்தேன். அது மலரத்தான் செய்தது. ஆனால் மலர்ந்ததைத்தான் கண்டேனே தவிர, மலரும் செயலை அவதானிக்க இயலவில்லை. என் கண்ணெதிரேயேதான் அது மெல்ல மெல்ல விரிந்து முழு மலராகியிருக்க வேண்டும். ஆனாலும் எனக்கு அது தட்டுப்படவில்லை. குவிந்த வடிவத்தைக் கண்டேன். முழுதும் விரிந்த இதழ்களைப் பார்த்தேன். இடையில் நிகழ்ந்த அற்புதம் எனக்கானதல்ல என்று இயற்கை சொல்லாமல் சொல்லிவிட்டுப் போனது. நான் அதைத் தலை வணங்கி ஏற்றுக்கொண்டேன். காம்புக்கும் காற்றுக்குமான கலவியின் குழந்தையென அந்தப் பூவைத் தொட்டு முத்தமிட்டு எழுந்து சென்றேன்.

சட்டென்று அந்தச் சம்பவம் எனக்கு நினைவுக்கு வந்துவிட்டது. என்னை மீறிப் புன்னகை செய்தேன். பதிலுக்கு அந்த நாய் சிரித்ததா என்று எனக்குத் தெரியவில்லை. அது மீண்டும் கேட்டது, ‘அவன் வந்துவிட்டானா?’

நான் சற்றும் பதறாமல், சிறிதளவு அதிசய உணர்வையும் வெளிக்காட்டாமல் பதில் சொன்னேன், ‘அதை நீங்கள் என்னைக் கேட்டுத்தான் தெரிந்துகொள்ள வேண்டுமா?’

‘ஆம். இந்த வடிவில் எனது சில சக்திகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன’.

‘அப்படியானால் சரி. அண்ணா இதுவரை எங்கள் கண்ணில் படவில்லை. எப்படியும் வருவான் என்று நினைக்கிறேன்’.

‘நல்லது. நீ சுகமாக இருக்கிறாயா?’

‘நிச்சயமாக ஐயா. எனது சுதந்திரமே என் சுகம். அது குறைபட நான் அனுமதிப்பதில்லை’.

‘சரி நீ போகலாம்’ என்று அது விடைகொடுத்தது.

சிறிது தூரம் சென்றதும் நான் அந்த நாயைத் திரும்பிப் பார்த்தேன். அது அங்கேயேதான் நின்றுகொண்டிருந்தது. ஆனால் வேறெங்கோ பார்த்துக்கொண்டிருந்தது. சட்டென்று அந்தக் கணத்தில் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. அது சம்சுதீன் பக்கிரியாகத்தான் இருக்கும் என்று ஏன் நினைத்தேன்? அது ஏன் சொரிமுத்துவாகவோ வேறு யாராவதாகவோ இருக்கக் கூடாது? தர்காவின் அருகே கண்டதால் அது சம்சுதீனாகத்தான் இருக்க வேண்டும் என்று இயல்பாகவே தோன்றிவிட்டது. கேட்டுத் தெளிவு படுத்திக்கொண்டுவிடலாம் என்று எண்ணினேன். என் சகோதரர்களிடம் இந்தச் சம்பவத்தைச் சொல்லும்போது இன்னும் சரியான தகவலுடன் சொல்ல முடியும்.

நான் மீண்டும் அந்த நாயை நெருங்கினேன். அது என்னைத் திரும்பிப் பார்த்தது.

‘ஐயா, நீங்கள் இந்த தர்கா வாசலில் இருந்த சம்சுதீன்தானே?’ என்று கேட்டேன். நாய் பதில் சொல்லவில்லை. மீண்டும் வேறெங்கோ பார்த்தது.

‘நீங்கள் பேசியதில் நான் வியப்படையவில்லை. வாழ்வில் நிறைய சித்தர்களைப் பார்க்க நேரிட்டுவிட்டதால், எனக்கு இத்தகைய அதிசயங்கள் வியப்பளிப்பதில்லை. இவை அதிசயம் என்றும் தோன்றுவதில்லை. ஒரு சிறு சந்தேக நிவர்த்திக்காகவே கேட்கிறேன். ஒருவேளை நீங்கள் சொரிமுத்துவாக இருந்தால் உங்களைக் கட்டித் தழுவி ஒரு முத்தமிட்டுவிட்டுப் போய்விடுவேன்’ என்று சொன்னேன்.

காதிலேயே விழாததுபோல அந்த நாய் நகர்ந்து போனது. சட்டென எனக்கு வேறொரு சந்தேகம் வந்துவிட்டது. ஒருவேளை என்னுடன் பேசிய நாய் எங்கோ சென்று, வேறொரு நாய் வந்திருக்கிறதோ? இருளில் அதன் நிறத்தை நான் சரியாகக் கவனித்திருக்கவில்லை. கண்களை மட்டும்தான் பார்த்தேன். இருளில் சுடரும் எல்லா நாய்களின் கண்களைப்போலத்தான் அவையும் இருந்தன. சற்றும் எதிர்பாராத விதமாக முன்னொரு காலத்தில் அண்ணாவைத் தேடி நான் தென்காசிக்குச் சென்றபோது, எனக்கு முன்னால் வழி காட்டிக்கொண்டு போன நாயின் நினைவு வந்தது. நாய் நடந்தது. நானும் நடந்தேன். ஆனால் அண்ணாவைப் பார்க்க முடியவில்லை. இத்தனை வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு நாய். மீண்டும் நான். மீண்டும் அண்ணா. ஒரே வித்தியாசம், நான் கேட்டிருக்க வேண்டியதை அந்த நாய் என்னிடம் முந்திக்கொண்டு கேட்டுவிட்டது.

சரி பரவாயில்லை. ‘நான் போய் வருகிறேன் ஐயா’ என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தேன். இன்னொரு அற்புதம் நிகழும் சாத்தியம் ஏதும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அம்மாவைக் கடைத்தேற்றிவிட்டுப் போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

என் சகோதரர்கள் படுத்திருந்த இடத்துக்கு நான் வந்து சேர்ந்தபோது வினோத் எழுந்து அமர்ந்திருந்ததைக் கண்டேன். வினய் மட்டும் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான். என்னைக் கண்டதும் வினோத் சிரித்தான். ‘எங்கே போனாய்?’ என்று கேட்டான்.

‘சும்மா தர்கா வரை போயிருந்தேன். தூக்கம் வரவில்லை’.

‘என்னாலும் சரியாக உறங்க முடியவில்லை விமல்’.

‘ஆனால் நான் கிளம்பிச் சென்றபோது நீங்கள் இருவருமே அடித்துப் போட்டாற்போலத்தான் கிடந்தீர்கள்’.

‘ஆம். கால் வலி எனக்கு. சிறிது தூங்கினேன். ஆனால் விழிப்பு வந்துவிட்டது’.

‘அது பரவாயில்லை விடு. ஒரு நல்ல கதை சொல்கிறேன், கேட்கிறாயா?’ என்று சிரித்தபடி கேட்டுவிட்டு, தர்காவின் அருகில் நிகழ்ந்த சம்பவத்தைச் சொன்னேன். வினோத் அதிர்ச்சியில் பேச்சற்றுப் போய்விட்டான். உண்மையாகவா உண்மையாகவா என்று திரும்பத் திரும்பக் கேட்டான்.

‘நான் பொய் சொல்வதில்லை வினோத். அது ஒரு முதலையைப் புணர்வது போன்றது. நினைவில் மிகவும் வலித்துக்கொண்டே இருக்கும்’.

‘இல்லை. நீ இதை மிகவும் சாதாரண தொனியில் சொல்கிறாய். உண்மையில் உனக்கு நடந்தது மிகவும் அசாதாரணமானது’.

‘இதில் என்ன அசாதாரணம்? சம்சுதீனோ, சொரிமுத்துவோ நாயாகவும் நரியாகவும், ஏன் நாமாகவும்கூட மாறக்கூடியவர்களே அல்லவா? அல்லது ஒரு நாயின் உடலுக்குள் போய் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு வருவதும் ஒன்றும் அவர்களுக்குப் பெரிய விஷயமல்ல’.

‘இருந்தாலும்..’

‘மன்னித்துவிடு வினோத். என்னால் வியக்க முடியவில்லை’.

‘இல்லை. நான் அவரைப் பார்க்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டுச் சட்டென்று எழுந்தான்.

நான் சிரித்தேன்.

‘ஏன் சிரிக்கிறாய்?’

‘அவர் உன்னைச் சந்திக்க விரும்பவேண்டுமல்லவா? இல்லாவிட்டால் நீ போய் வீணாகத் திரும்பவேண்டி இருக்கும்’.

‘ஆம்’ என்று மீண்டும் அமர்ந்தான்.

‘நானே இரண்டாம் முறை பேச்சுக் கொடுத்தபோது அவர் பதில் சொல்லவில்லை. அல்லது அவர் அந்த நாயில் இருந்து வெளியேறிவிட்டார்’.

வினோத் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து யோசித்துக்கொண்டிருந்தான். திடீரென்று, ‘அவனது வருகை அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது அல்லவா?’ என்று கேட்டான்.

‘இதிலென்ன சந்தேகம். மூத்தவன். கொள்ளி வைக்க வேண்டியவன். வரத்தான் வேண்டுமல்லவா?’

‘வேறு எதுவும் காரணம் இருக்காது என்கிறாயா?’

‘என்னவாக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. நாம் நமது அனுமதியின்றி பிராமண குலத்தில் பிறந்தவர்கள். எனவே குல வழக்கப்படி, கடைசிப் பையனாக நான் சில சடங்குகள் செய்யவேண்டி இருக்கும் என்று நினைக்கிறேன். அதுவும் அம்மா என்பதால்’.

‘எனக்கு அதுவும் இல்லை’.

‘ஆம். நீ கொடுத்து வைத்தவன். வெறும் பார்வையாளன். தொந்தரவின்றி ஒரு மரணத்தை நெருக்கமாக அமர்ந்து நீ கவனிக்கலாம். யாரும் உன்னைத் தொந்தரவு செய்யமாட்டார்கள்’.

அவன் சட்டென்று கேட்டான், ‘ஒருவேளை நான் அழுவேனோ?’

‘ஒரு தவறும் இல்லை. அழுகை வரும்போது உன் கிருஷ்ணனை நினைத்துக்கொண்டுவிடு. அதற்குக்கூட உதவாமல் அவன் எதற்கு தண்டத்துக்கு?’

‘நீ மிகவும் வறண்டுவிட்டாய் என்று நினைக்கிறேன்’.

‘அப்படியா தோன்றுகிறது? மரணம் தவிர்க்க முடியாதது வினோத். மரணத்துக்கான கண்ணீர் என்பது உறவுக்கான ரசீது மட்டுமே. அறுத்துக்கொண்டு போனவனிடம் ரசீது எப்படி இருக்கும்?’

வினோத் வெடித்து அழத் தொடங்கினான், ‘நான் தோற்றுவிட்டேன் விமல். என்னால் எதையுமே அறுக்க முடியவில்லை. மனத்துக்குள் நான் இன்னும் வீட்டுக்குள்ளேயேதான் இருக்கிறேன். என்னை அங்கிருந்து வெளியேற்றச் சொல்லி இன்றுவரை கிருஷ்ணனிடம் மன்றாடிக்கொண்டிருக்கிறேன். அவன் அதைச் செய்வதில்லை’.

நான் அவனை அன்புடன் அரவணைத்துக்கொண்டேன். சிறிது நேரம் அவன் கரங்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டிருந்துவிட்டுப் பிறகு சொன்னேன், ‘பக்தி மனத்தின் பிரச்னையே இதுதான். ஒன்றைப் பற்றிக்கொண்டால் விடவே விடாது’.

‘நான் போயிருக்கவே கூடாதோ?’

‘அதை நீ எப்படி தீர்மானிப்பாய்? உன் விதி உன்னை வீட்டை விட்டு வெளியேற்றியது. நீ அதற்கு அடிபணிந்துதான் தீர வேண்டும்’.

‘நாத்திகனான நீ விதியைக் குறித்துப் பேசுவது விநோதமாக இருக்கிறது’.

‘நான் நாத்திகன் என்று யார் சொன்னது?’

‘நீதானே சொன்னாய்?’

‘இல்லை. நீ தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறாய். எனக்குக் கடவுள்தான் கிடையாதே தவிர, நான் ஒரு நல்ல ஆன்மிகவாதி’.

அவனுக்குப் புரியவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்தான். ‘உன் விதி உன்னை சன்னியாசியாக்கியது. உன் குற்ற உணர்வு உன் பார்வையில் இருந்து கிருஷ்ணனை மறைத்து வைத்தது. வினய்யின் கஞ்சாவுக்கும் உனது கிருஷ்ண ஜபத்துக்கும் வித்தியாசமில்லை. இரண்டுமே கடந்த காலம் மறப்பதற்கு உதவும் வெறும் கருவிகள்’ என்று சொன்னேன்.

அவனால் அதைத் தாங்கிக்கொள்ளவோ, ஏற்கவோ இயலவில்லை. மறுக்க நினைத்தாலும் அது முடியாமல் மேலும் குமுறி அழுதான். அவன் அழுது ஓயும்வரை காத்திருந்தேன். பிறகு சொன்னேன், ‘அம்மாவின் மரணம் உனக்கொரு வெறுமையின் உலகை தரிசனமாகத் தரும். அந்த வெறுமைக்குள் நீ கிருஷ்ணனைக் காண்பாய். கிருஷ்ணனே உனக்கு வெறுமையின் ரூபமாக நிற்பான். கிருஷ்ணனும் வெறுமைதான் என்பது புரியும்போது நீ ஒரு பூரண சன்னியாசி ஆகிவிடுவாய்!’

(தொடரும்)

http://www.dinamani.com/junction/yathi/2018/sep/17/131-பூர்ணாஹுதி-3001473.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

132. கலவரம்

By பா. ராகவன்  |   Published on : 18th September 2018

அதிகாலை ஐந்து மணிக்கு வினய் எங்களை எழுப்பினான். ‘விடிவதற்குமுன் நான் அந்த நீலாங்கரை சாமியைப் போய்ப் பார்த்துவிட விரும்புகிறேன்’ என்று சொன்னான். எங்களுக்கு அதில் பெரிய சுவாரசியம் இல்லை என்பதால் சரி, போய்வா என்று அவனை மட்டும் அனுப்பிவிட்டு, நாங்கள் கடற்கரையிலேயே இருந்தோம். கிளம்பும்போது வினோத் அவனிடம், ‘உண்மையிலேயே உனக்கு கஞ்சா அவ்வளவு அவசியமா?’ என்று கேட்டான்.

‘சொன்னேனே, தவத்தில் இருக்க அது அவசியம். புத்தியை நேர்க்கோட்டில் நிறுத்துவதற்கு’.

அவன் போனபின் வினோத் என்னைப் பார்த்து, ‘அப்புறம் அது எப்படித் தவமாகும்?’ என்று கேட்டான்.

‘என்ன பிரச்னை உனக்கு? மன ஒருமை என்பதுதான் மூலாதாரம். மன ஒருமைக்கு கஞ்சாவைப் பயன்படுத்துவது காலகாலமாக இருந்து வரும் வழக்கம்தானே?’

‘எனக்கு இது புரியவில்லை. இம்மாதிரியான தவங்களை நான் அறிந்ததில்லை. எங்களுக்கு இது கற்றுத்தரப்படவில்லை’ என்று சொன்னான்.

‘பிரச்னையே அதுதான். நீ சொல்லிக் கொடுத்து வளர்ந்த குழந்தை. அவன் காட்டுச்செடியைப் போலத் தானே முளைத்து வேர்விட்டு வளர்ந்தவன். அவனைப் புரிந்துகொள்வது சிறிது சிரமமாகத்தான் இருக்கும்’.

‘எனக்குச் சற்று பயமாகவே இருக்கிறது’ என்று வினோத் சொன்னான்.

‘பயப்படாதே. அவன் போதைக்காகக் கஞ்சா குடிப்பதில்லை. போதத்தில் திளைக்க அதை ஒரு தொடக்கக் கருவியாகப் பயன்படுத்துகிறான். அவனால் எந்தத் தீங்கும் நேராது’.

சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, 67தகன நேரத்தில் அவன் போதை மயக்கத்தில் விழுந்துகிடப்பது போன்றதொரு சித்திரம் என் மனத்தில் எழுகிறது. இது மிகவும் கலவரம் அளிக்கிறது’ என்றான்.

‘அப்படியே இருந்தால்தான் என்ன? அம்மா ஒன்றும் எழுந்து வந்து திட்டப்போவதில்லை’.

‘ஆனால் மாமாவால் அதைத் தாங்க முடியாது’.

‘நம்மிடத்தில் இனி அவரால் எதையும் தாங்க முடியும். கவலையை விடு. நாம் எப்போது வீட்டுக்குப் போகலாம்?’ என்று கேட்டேன்.

‘ஆம். போக வேண்டியதுதான். ஐந்து நிமிடம் இருக்கிறாயா? நான் குளித்துவிட்டு காலை ஜபத்தை முடித்துவிட்டு வருகிறேன்?’ என்று கேட்டான். நான் சரி என்று சொன்னதும் அவன் தனது மேல் அங்கியைக் கழட்டி வைத்துவிட்டுக் கடலுக்குள் இறங்கினான். சூரியன் உதிக்கத் தொடங்கியிராத வானம் கருநீலமும் சிவப்பும் கலந்து ஓர் இரவு விளக்கைப் போலச் சுடர்ந்தது. வினோத் அலைகளிடம் தன்னைக் கொடுத்து இங்குமங்குமாகச் சிறிது நேரம் மிதந்துவிட்டுக் கரைக்கு வந்து, ‘நீயும் குளிக்கலாமே?’ என்று கேட்டான்.

‘பழக்கமில்லை’ என்று சொன்னேன்.

‘எது, குளிப்பதா?’

‘கடலில் குளிப்பது. மீண்டும் வீட்டுக்குப் போயும் இரண்டாம் முறை குளிக்க வேண்டுமல்லவா?’

‘ஆனால் இது ஓர் அனுபவமல்லவா?’

‘நீ குளிப்பதைத்தான் பார்த்தேனே. அது போதும்’ என்று சொன்னேன். அவன் சிறிது நேரம் வெறும் உடம்புடன் காற்றில் நின்றான். காய்ந்தபின், ஒரு துண்டால் துடைத்துக்கொண்டு மீண்டும் வேறு உடை அணிந்துகொண்டான். மறக்காமல் கிழக்குப் பார்த்து அமர்ந்து தன் பைக்குள் இருந்து கோபி சந்தனக் கட்டியை எடுத்து, கண்ணாடி பார்க்காமல் சரியாக நடு நெற்றியில் வரைந்துகொண்டான். ‘இன்னும் ஐந்து நிமிடங்கள்’ என்று சொல்லிவிட்டு, கடலைப் பார்த்து பத்மாசனமிட்டு அமர்ந்து கண்மூடி ஜபிக்கத் தொடங்கினான். 

நான் அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். இம்மாதிரியான எந்த நியமங்களும் எனக்கு எக்காலத்திலும் இருந்ததில்லை என்பது மிகுந்த ஆசுவாசமாக இருந்தது. அவனது கண்டத்தில் இருந்த துளசி மணிகூட எனக்கு உறுத்தும். விரல்களில் நான் மோதிரம் அணிவதில்லை. மணி மாலைகளைத் தொடுவதில்லை. என் அங்கியின் பாக்கெட்டில் பணமோ, துண்டுக் காகிதமோ, வேறெதுவோ எப்போதும் வைப்பதில்லை. உடலின் சுமையை மீறி இன்னும் எதற்குச் சேர்ப்பது?

ஒரு சமயம் - அந்த நாளை என்னால் மறக்க முடியாது. கர்நாடகத்து அரசியல் பிரமுகர் ஒருவர் எனக்கு ஒரு சிறு கைத்துப்பாக்கியை அன்பளிப்பாகக் கொடுத்தார். 

‘இது எதற்கு?’ என்று கேட்டேன்.

‘வைத்துக்கொள்ளுங்கள். என்றாவது உங்கள் பாதுகாப்புக்கு உதவுமல்லவா? தவிர இது உள்ளங்கை அளவே உள்ள துப்பாக்கி என்பதால் பாக்கெட்டில் போட்டு எடுத்துச் சென்று விடலாம்’ என்று சொன்னார். நான் எவ்வளவோ மறுத்துப் பார்த்தும் அவர் கேட்கவில்லை. மிகவும் வற்புறுத்தி அந்தத் துப்பாக்கியை என்னிடம் திணித்துவிட்டார். 

கர்நாடகத்தில் அப்போது ஒரு போராட்டம் நடந்துகொண்டிருந்தது. அங்கிருந்த தமிழர்களின் குடியிருப்புகளைக் கன்னடர்கள் தேடித் தேடிச் சூறையாடிக்கொண்டிருந்தார்கள். சில கன்னட அரசியல்வாதிகளின் அனுக்கிரகத்துடன் ரவுடிகள் நிகழ்த்திக்கொண்டிருந்த அந்தப் போராட்டத்தின் நிழல் கலவரமாக உருப்பெற்று மடிகேரியில் விழத் தொடங்கியபோது, நான் ஊர் வந்து இறங்கியிருந்தேன். எனது ஆசிரமத்துக்குச் செல்லும் பாதையை அடைத்துவிட்டிருப்பதாகச் சொன்னார்கள். சுற்றுப் பாதையில் போக வேண்டும் அல்லது போலீசார் அமைதியை நிலைநாட்டும்வரை அமைதி காக்க வேண்டும் என்று தெரிந்தது. எனக்கு இரண்டிலுமே விருப்பமில்லாதபடியால், காரை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தேன். என்னுடன் என் ஆசிரமத் தோழர்கள் இரண்டு பேர் வந்தார்கள்.

பாதி வழி கடக்கும்வரை எந்தப் பிரச்னையும் எங்களுக்கு ஏற்படவில்லை. திடீரென்று எங்கிருந்தோ ஆக்ரோஷமாகக் கத்திக்கொண்டு ஒரு கூட்டம் முண்டியடித்து ஓடி வந்தது. அவர்களிடம் கனத்த தடிகள் இருந்தன. ஒரு சிலர் அரிவாள் வைத்திருந்தார்கள். அவர்களது கோபாவேசத்தைக் கண்டதும் என்னுடன் வந்த நண்பர்கள் நிலைகுலைந்துவிட்டார்கள். அவர்கள் கன்னடர்கள்தாம் என்றாலும் நான் தமிழன் அல்லவா? சட்டென்று யாராவது ஏதாவது கேட்டால் எனக்கு உடனே கன்னடத்தில் பதில் சொல்ல வராது. தமிழில்தான் ஆரம்பிப்பேன். இரண்டாவது வரியில் என்னால் கன்னடத்துக்குப் போய்விட முடியும் என்றாலும், என் கன்னட உச்சரிப்பே என்னை ஒரு தமிழனாகக் காட்டிக்கொடுக்கக்கூடியது.

‘குருஜி நீங்கள் வாயைத் திறக்காதீர்கள்’ என்றார் ஒரு நண்பர்.

‘மௌன விரதம் என்று சொல்லிவிடுகிறோம்’ என்று இன்னொருவர் சொன்னார்.

‘இதெல்லாம் எதற்கு? நடப்பது நடக்கட்டும்’ என்று சொல்லிவிட்டு நான் அமைதியாக அவர்களை எதிர்கொள்பவன்போல அவர்களை நோக்கியே நடக்க ஆரம்பித்தேன்.

கூட்டத்தில் சிலர் என்னை அறிந்திருந்தார்கள். எத்தனையோ வருடங்களாக மடிகேரியிலேயே வசிப்பவனை உள்ளூர்க்காரர்களுக்கா தெரியாது? அந்தக் கணத்தில் நான் உள்ளூர்க்காரனாக அவர்களுக்குத் தெரிகிறேனா, ஒரு தமிழனாகத் தெரிகிறேனா என்பதுதான் விஷயம். என் நண்பர்கள் மிகவும் அச்சம் கொண்டிருந்தார்கள். ஏதாவது இசைகேடாக நடந்தால் என்ன செய்வது என்று தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தார்கள்.

நெருங்கிவிட்ட கூட்டம் என் முன்னால் நின்றது. அவர்கள் தமிழகத்துக்கு எதிராகச் சில கோஷங்களை எழுப்பினார்கள். கர்நாடகத் தமிழர்கள் அத்தனை பேரும் உடனே காலி செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். நான் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். என்னைத் தாக்குவதா வேண்டாமா என்பதில் அவர்களுக்குச் சிறு தயக்கம் இருந்தது. அந்தத் தயக்கத்தை முற்றிலும் நீக்கிவிட என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.

சட்டென்று என் அங்கியின் பாக்கெட்டில் கையைவிட்டு அந்த அரசியல் பிரமுகர் எனக்குக் கொடுத்த துப்பாக்கியை வெளியே எடுத்தேன். அவர்கள் கண்ணுக்குத் தென்படும்படியாக அதை இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்த்தேன். பிறகு அதை மலைச் சரிவில் விட்டெறிந்துவிட்டு, அவர்களைப் பார்த்துச் சிரித்தேன். இதன்பின் நிகழ்ந்ததுதான் விநோதம். அந்த ரவுடிக் கும்பல் எனக்கு வணக்கம் சொல்லிவிட்டு, மீண்டும் கோஷம் எழுப்பியபடி என்னைக் கடந்து போக ஆரம்பித்தது.

என் நண்பர்களுக்கு இது பெரிய ஆச்சரியமாக இருந்தது. ‘குருஜி, அந்தத் துப்பாக்கியை நீங்கள் அவர்கள் முன் நீட்டியிருந்தால் தலைதெரிக்க ஓடியிருப்பார்கள். ஏன் தூக்கியெறிந்தீர்கள்?’ என்று கேட்டார்கள்.

‘எதற்கு அவர்கள் ஓட வேண்டும். நடந்தே போனால் போதாதா?’ என்று பதிலுக்குக் கேட்டேன்.

‘ஆனாலும் ஒரு நல்ல ஆயுதத்தை இழந்துவிட்டீர்கள்’.

‘இல்லையே. அது தன் கடமையைச் செய்துவிட்டல்லவா போனது?’

‘மீண்டும் ஒருமுறை அவர்கள் நம்மை நோக்கி வந்தால்?’

நான் சிரித்தேன். ‘இம்முறை மேலங்கியைக் கழட்டி எறிவேன்’ என்று சொன்னேன். ‘ஒரு துப்பாக்கி இருந்தால் மட்டும்தான் வாழமுடியும் என்றிருந்தால், இயற்கை நம்மைப் படைக்கும்போதே ஒரு துப்பாக்கியுடன் படைத்திருக்கும். இடையில் வந்து சேரும் எதுவும் நிரந்தரமல்ல’ என்று சொன்னேன்.

அன்றிரவு மெக்சிகோவில் இருந்து கேம்போ என்னைத் தொலைபேசியில் அழைத்தான். அவனது ஆயுத உற்பத்தித் தொழிலில் என் மூலமாக நிகழ்ந்த முதலீட்டின் முதல் விளைச்சலாக, இந்திய மதிப்புக்கு ஐந்நூறு கோடி ரூபாய் தயாராக உள்ளதாகத் தெரிவித்தான். அதை எவ்வாறு அனுப்பிவைக்க வேண்டுமென்று கேட்டான். அனுப்பவேண்டாம், அப்படியே மீண்டும் முதலீடாக்கிக்கொள் என்று சொல்லிவிட்டு, சம்பந்தப்பட்ட அரசியல் பிரமுகருக்கும் கையோடு போன் செய்து தகவல் தெரிவித்தேன். அவருக்குத் தேர்தலின்போது பணம் வந்தால் போதும். தேர்தல் வர அப்போது நெடுங்காலம் இருந்தது.

(தொடரும்)

http://www.dinamani.com/junction/yathi/2018/sep/18/132-கலவரம்-3002129.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

133. உருண்டு போனவை

கிழக்கு கடற்கரைச் சாலை என்பது எங்களுக்கு ஒரு வியப்புக்குரிய பாதையாகவும் நம்ப முடியாத அளவுக்கு நேர்த்தியாகப் போடப்பட்ட ஒன்றாகவும் தெரிந்தது. கடல் மட்டும் இல்லாது போயிருந்தால், சாலையின் அந்தப் புறத்திலும் அடுக்குமாடிக் கட்டடங்கள் நிறைந்திருக்கும் என்று தோன்றியது. என் சிறு வயதில் அம்மாதிரி தார் போடப்பட்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட சாலைகளை நான் கண்டதில்லை. திருப்போரூரில் இருந்து அடையாறு போகும் பேருந்துப் பாதைகூட, என்றோ தெளிக்கப்பட்ட தாரின் மிச்சங்களை மட்டுமே கொண்டிருக்கும். பெரும்பாலும் குண்டும் குழியுமான சாலைதான். இந்தக் கிழக்கு கடற்கரைச் சாலை இருக்கும் இடம் அப்போது ஒரு பெரிய மண் மேடு. இரு புறமும் சவுக்குத் தோப்புகள் அடர்ந்து நிறைந்திருக்கும். சவுக்கு மரங்களின் இடுக்குகள் வழியே கோலத்துக்கு வைத்த புள்ளிகளைப்போலக் கடல் தெரியும். இது ஒரு பெரிய பிராந்தியமாகும் என்று அன்றைக்கு யாராவது சொன்னால்கூட நம்பியிருக்க மாட்டேன்.

சவுக்குக் காடுகள் பெரும்பாலும் அழிந்துவிட்டன என்று வினோத் வருத்தப்பட்டான். கடலை ஒட்டிய நிலப்பரப்பெங்கும் ஏராளமான தனியார் விடுதிகளும் கேளிக்கை அரங்குகளும் ஆக்கிரமித்திருந்தன. மகாபலிபுரத்தை நெருங்க நெருங்க இது இன்னும் அதிகரிக்கும் என்று தோன்றியது. நாங்கள் திருவிடந்தையை நெருங்கியபோது ஊர் முகப்பில் ஒரு பெரிய அலங்கார வளைவு இருப்பது தெரிந்தது. ‘நான் ஊரை விட்டுப் போனபோதுகூட இது இல்லை’ என்று வினோத் சொன்னான். நித்ய கல்யாணப் பெருமாள் கோயிலுக்குச் செல்லும் வழி என்றொரு போர்டு வைக்கப்பட்டிருந்தது. வழியெங்கும் ஏராளமான கடைகள் நிறைந்திருந்தன. வெளியூர் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துமிடத்தில் டோக்கன் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். ‘பெருமாள் பாப்புலர் ஆகிவிட்டார்’ என்று சொன்னேன்.

‘ஆனால் இந்தக் கோயிலுக்கு ஒரு கோபுரம் கட்டலாம் என்று இன்னும் யாருக்கும் தோன்றவில்லை பார்’ என்றான் வினோத். கரி படிந்த மதில் சுவர் அப்படியே இருந்தது. கோயில் வாசலில் தொல்லியல் துறையின் கல்வெட்டு ஒன்று புதிதாக வைக்கப்பட்டிருந்தது. கிட்டே நெருங்கும்போதே நாலைந்து பெண்கள் மாலைகளையும் அர்ச்சனைத் தட்டுகளையும் தூக்கிக்கொண்டு ஓடி வந்தார்கள். நாங்கள் திரும்பிப் பார்த்தபோதுதான் எங்களுக்குத் திருமணம் சார்ந்த பிரார்த்தனை ஏதும் இருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தார்கள். நான் அவர்கள் ஒவ்வொருவரையும் உற்றுப் பார்த்தேன். சிறு வயதில் நான் பார்த்த முகங்களில் நினைவில் இருக்கும் எது ஒன்றாவது யாருடனாவது பொருந்துகிறதா என்று தேடினேன். அவ்வளவு எளிதில் எதுவும் கண்டுபிடிக்கக்கூடியதாக இல்லை. வினோத் புன்னகை செய்தான். அவனுக்கு அது புரிந்தது. ‘மறக்க முடியவில்லை அல்லவா?’ என்று கேட்டான்.

‘நான் எதையும் மறக்க விரும்புவதில்லை வினோத்’ என்று பதில் சொன்னேன்.

வினய் மிகத் தீவிரமாகச் சித்ராவை ஒருதலையாகக் காதலித்துக்கொண்டிருந்த நாள்களில் கோயிலுக்கு வெளியே உள்ள இந்த மண்டபத்துக்குத்தான் அடிக்கடி வந்து உட்கார்வான். சித்ராவின் தோழிகள், அவளது பக்கத்து வீட்டுக்காரர்கள் யார் அந்தப் பக்கம் கடந்துபோனாலும் இழுத்துவைத்து ஓரிரு வார்த்தைகளாவது பேசுவான். அப்போது மட்டும் அவன் முகம் புன்னகை பூத்திருக்கும். எனக்கு அது நெடுநாள் சந்தேகம். சித்ராவைக் கூப்பிட்டு வைத்துப் பேசினால்கூடப் பரவாயில்லை. அவளது அம்மாவைத் தேடிப் போய்ப் பேசினான் என்றால் அறிவாளி என்றே சொல்லிவிடலாம். எதற்கு அவளது தோழிகளையும் அடுத்த வீட்டுக்காரர்களையும் குறிவைக்கிறான்?

எனக்கு அது நெடுநாள் புரியவேயில்லை. ஒரு சமயம் வினய்யிடமே இதைக் கேட்டுவிட்டேன்.

அவன் உடனே, ‘நீ எப்ப பாத்தே?’ என்று பதிலுக்குக் கேட்டான்.

‘எத்தனையோ முறை பார்த்தேன். அதுவா முக்கியம்? கேட்ட கேள்விக்குப் பதில் சொல்’ என்று விடாப்பிடியாக நின்றேன்.

அன்று வினய் சொன்ன பதில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவன் சித்ராவின் தோழிகளிடம் சித்ராவைப் பற்றி ஒருபோதும் பேசியதில்லை. ஊர் நிலவரம், படிப்பு நிலவரம், கோயில் உற்சவ விவரங்கள், கேளம்பாக்கம் ராஜலட்சுமி திரையரங்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் குறித்த தகவல், தையூரில் யாரோ ஒரு மாமி பாட்டு கிளாஸ் ஆரம்பித்திருக்கும் விவரம், அன்று காலை தினத்தந்தியில் படித்த ராசிபலன், கன்னித்தீவு இம்மாதிரியான விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசுவேன் என்று அவன் சொன்னான்.

‘இதெல்லாம் எதற்கு?’

‘குறிப்பிட்ட காரணம் கிடையாது விமல். அவர்கள் சித்ராவுடன் பேசும்போது நான் சொன்ன தகவல்களில் ஏதேனும் ஒன்று வெளிப்பட்டுவிடும். யார் சொன்னது என்று சித்ரா கேட்டால் என் பெயரைச் சொல்லுவார்கள். இப்படி ஒவ்வொருவராக தினமும் குறிப்பிட்ட இடைவெளியில் சித்ராவுக்குள் என் பெயரைச் சொருகிக்கொண்டே இருப்பார்கள் அல்லவா? அதற்குத்தான்’.

எனக்கு அது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவன் தனது காதலில் அன்று மிகவும் தீவிரமாக இருந்தான். சித்ராவிடமே நேரில் பேசலாமே என்று நான் ஓரிரு முறை சொல்லிப் பார்த்தேன். அவன் அதற்கு மிகவும் தயங்கினான். பிறகுதான் எனக்குப் புரிந்தது. அது தயக்கம்கூட இல்லை. மனத்துக்குள் மட்டுமே அவன் சித்ராவுடன் வாழ விரும்பியிருக்கிறான். அவளை விரும்பியதன் எளிய அடையாளங்களை ஆங்காங்கே தூவிவிட்டு, அதனோடே திருப்தியடைந்திருக்கிறான்.

ஒருநாள், நான் திடுக்கிடும்படியாக ஒன்றைச் சொன்னான். ‘விமல்! நேற்றிரவு நான் சித்ராவின் தாவணியை உருவி எறிந்துவிட்டு அவளை இறுக்கி அணைத்துக்கொண்டு கடற்கரையில் நெடுந்தொலைவு உருண்டு சென்றேன். என் நெஞ்சைத் தொட்டுப் பார். அரை மணி நேரம் அவளது மார்பகங்கள் இங்கேதான் புதைந்திருந்தன’ என்று சொல்லித் தன் சட்டையை அவிழ்த்துக் காட்டினான்.

‘உருண்டது தவிர வேறொன்றும் நடக்கவில்லையா?’ என்று நான் கேட்க விரும்பினேன். ஆனால் சட்டென்று ‘சின்னப்பையன் அப்படியெல்லாம் பேசக் கூடாது’ என்று சொல்லிவிடும் அபாயம் இருந்தது. நான் சின்னப் பையனாக இல்லை என்பதை அவன் அறிந்தே இருந்தான். அதனால்தான் சித்ராவைப் பற்றிப் பலமுறை என்னிடம் பேசினான். இருந்தாலும், சில சமயங்களில் நான் அவனது தம்பி என்பதும் வயதில் மிகவும் இளையவன் என்பதும் அவனுக்கு நினைவுக்கு வந்துவிடும்.

இன்னொரு நாள் கோயிலில் தாயார் சன்னிதியின் பின்புறம், சித்ரா அடிப்பிரதட்சிணம் செய்துகொண்டிருந்தபோது அவளை இழுத்து உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டதாகச் சொன்னான். ‘பத்மா மாமி பெரிசா ஆசாரம் பேசுவாளே.. கிஸ் பண்ணும்போது அவ வாய்ல வெங்காய ஊத்தப்பம் வாசனை அடிச்சிது’ என்று அப்போது சொன்னான்.

ஒரு முத்தத்துக்கு அப்பால் அடித்த வெங்காய ஊத்தப்ப வாசனை வரை அவனால் ஒரு கற்பனை வாழ்வை சிருஷ்டித்து அதற்குள் வாழ்ந்துகொள்ள முடிந்தது.

அப்போதெல்லாம் எனக்கு அண்ணா சொல்லும் கபிலர் கதைகளும் வினய் சொல்லும் சித்ரா கதைகளும் ஒரே ரகமானவையாகவே தோன்றும். இரண்டுமே புனைவுகள். இரண்டுமே சுவாரசியமானவை. இரண்டுமே இருவர் வாழ விரும்பிய வாழ்வு. ஆனால் அது நடக்காது என்று அப்போது நினைத்தேன். அண்ணா எப்படியோ தன் வழியில் அதைக் கண்டெடுத்துச் சென்றுவிட்டான். வினய்தான் வீணாய்ப் போனான்.

எண்ணிப் பார்த்தபோது பெருமூச்சு வந்தது. ‘என்ன?’ என்று வினோத் கேட்டான். ஒன்றுமில்லை என்று சொன்னேன். அவனிடம் இந்தத் தகவல்களைச் சொல்ல வேண்டாம் என்று எனக்குத் தோன்றியது. சித்ராவே செத்துப் போய்விட்டாள். வினோத் சன்னியாசியாகவே ஆகிவிட்டான். இன்னொரு சன்னியாசி, சித்ராவை முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் மனத்துக்குள் கட்டி உருண்டிருக்கிறான் என்று சொல்வதில் என்ன இருக்கிறது? இதை வினய்யே அவனிடம் சொன்னால் பிரச்னை இல்லை என்று தோன்றியது. ஆனால் சொல்லி என்ன ஆகப் போகிறது?

‘சரி, வீட்டுக்குப் போகலாம்’ என்று வினோத் சொன்னான்.

‘போகலாம். தெற்கு வீதியைச் சுற்றிக்கொண்டு போகலாமா?’ என்று கேட்டேன். என்னை மீறிச் சிரித்திருக்கிறேன் போலும். வினோத்தும் புன்னகை செய்தான்.

‘அதற்கென்ன? போகலாம்’ என்று சொன்னான். தெற்கு வீதியில்தான் சித்ராவின் வீடு. இப்போது அங்கே யார் இருப்பார்கள்? சித்ராவின் அம்மா இருந்தால் என் அம்மாவின் வயதுதான் அவளுக்கும். சித்ராவின் மரணத்துக்குப் பின் அந்தக் குடும்பம் என்னவாகியிருக்கும் என்று யூகிக்க முடியவில்லை. ஊரைவிட்டே அவர்கள் போயிருக்கலாம். அந்த வீட்டுக்கு வேறு யாரேனும் குடி வந்திருக்கலாம். அவர்களுக்கு நடந்த சம்பவமெல்லாம் தெரியாமலே இருக்கலாம். இருப்பினும் நான் வினோத்திடம், ‘ஒருவேளை அவளது அம்மா உயிருடன் இருந்து, உன்னை அடையாளம் கண்டுகொண்டு சட்டையைப் பிடித்தால் என்ன செய்வாய்?’ என்று கேட்டேன்.

அவன் சற்றும் யோசிக்காமல் பதில் சொன்னான், ‘காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பேன். என்னைக் கல்லால் அடித்துக் கொல்ல நினைத்தாலும் செய்யலாம் என்று சொல்லுவேன்’.

நான் அவனைக் கட்டியணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டேன். ‘நீ ஒரு நல்ல சன்னியாசி’ என்று சொன்னேன்.

நாங்கள் தெற்கு வீதி வழியே நடக்க ஆரம்பித்தோம்.

(தொடரும்)

 

http://www.dinamani.com/junction/yathi/2018/sep/19/133-உருண்டு-போனவை-3002891.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

134. கட்டங்களின் துரோகம்

‘என்னால் நம்ப முடியவில்லை விமல். ஊர் உலகமெல்லாம் எவ்வளவோ மாறியிருக்கிறது. ஆனால் திருவிடந்தை மட்டும் அப்படியே இருக்கிறது. கோயில் வாசலில் கண்ட சில கடைகளைத் தவிர வேறு எந்த முன்னேற்றமும் இல்லை’ என்று வினோத் சொன்னான். எங்கள் சிறு வயதில் நாங்கள் பார்த்த தெற்கு வீதி எந்த மாற்றமும் இன்றி அப்படியே இருந்தது. கரி வழியும் பழைய ஓட்டு வீடுகள். சாலையற்ற சாலை. வழியெங்கும் எருமைச் சாணம். பாதி எரிந்த சைக்கிள் டயர் ஒன்று ஒரு வீட்டு வாசலில் கிடந்தது. அதைச் சுற்றி யாரோ சிறுவன் ஒன்றுக்கு அடித்துவிட்டு ஓடியிருக்கிறான். சம்பவம் நடந்து வெகு நேரம் ஆகியிருக்க முடியாது. நான் வினோத்தைப் பார்த்தேன். அவன் புன்னகை செய்தான்.

சிறு வயதில் நாங்கள் சிறுநீரில் இந்திய வரைபடத்தை வரைந்து பார்ப்பது எங்களுக்குப் பிடித்தமான விளையாட்டு. பள்ளிக்கூடத்தில் ஒருநாள் வினோத் அதனைச் செய்தபோது மகாலிங்கம் வாத்தியார் பார்த்துவிட்டார். அன்றைக்கு நான்கு பிரம்புகள் உடைகிற அளவுக்கு அவனுக்கு முழங்காலுக்குக் கீழே அடி விழுந்தது. குறைந்தது நூறு பேர் பார்க்க, அப்படி அடி வாங்கியது அவனுக்கு மிகுந்த துக்கம் அளித்தது. அதில் பல பேர் பெண்கள் என்பது மேலும் அவமானமாக இருந்தது. அன்று மாலை பள்ளி விட்டதும் வீடு திரும்பும் வழியில் ராஜமாணிக்க முதலியார் உப்பு குடோனின் பின்புறம் வினோத் சிறுநீர் கழிக்க ஒதுங்கினான். போனவனைக் காணோமே என்று சில நிமிட இடைவெளியில் நான் அங்கே போனபோது, வினோத் சிறுநீரில் ஓர் உருவம் வரைந்திருந்தான். மீசைதான் சரியாக வரவில்லை. ஆனால் அதைப் பார்த்ததுமே எனக்குப் புரிந்துவிட்டது. ‘பழி வாங்கிட்டேன்!’ என்று அவன் மகிழ்ச்சியுடன் சொன்னான்.

‘பாவம், நல்ல மனிதர். அவரிடம் கற்ற அடிப்படை ஆங்கிலம்தான் இன்றுவரை உதவுகிறது!’

பேசியபடி நடந்துகொண்டிருந்ததால், நாங்கள் சித்ரா வீட்டை தாண்டிச் சென்றுவிட்டதைக் கவனிக்கவில்லை. வினோத்தான் நினைவுபடுத்தினான். ‘அது அந்த வீடல்லவா? வாசலில் இன்னும் அந்தத் திருமண் சங்கு சக்கரப் படம் இருக்கிறது பார்’.

நாங்கள் மீண்டும் அந்த வீட்டை நோக்கித் திரும்பி நடந்தோம். புராதனமான அந்த வீட்டின் ஓட்டுச் சரிவின் கீழே வாசல் கதவின் இரு புறமும் திண்ணைகள் இருக்கும். திண்ணை தொடங்கும் இடத்தில் கையெட்டும் உயரத்தில் விளக்கு மாடங்கள் இருக்கும். பத்மா மாமி எங்கேனும் வெளியே செல்லும்போது வீட்டுச் சாவியை அங்கேதான் வைத்துவிட்டுப் போவாள். மாமாவோ, சித்ராவோ வீட்டுக்கு வந்தால் அங்கிருந்து சாவியை எடுத்துக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே போவார்கள். யார் கண்ணிலும் எளிதில் படுகிறபடி சாவியை மாடத்தில் வைத்துவிட்டுப் போவதற்குப் பதில் கதவைப் பூட்டாமலேயே போய்விடலாமே என்று அம்மா ஒரு சமயம் பத்மா மாமியிடம் கேட்டாள்.

‘வெளில கிளம்பினா கதவ பூட்டணுங்கறது பழக்கமாயிடுத்து. மாத்திக்க முடியலே. அப்படியே கள்ளன் பூந்தான்னா, கொள்ளையடிச்சிண்டு போக உள்ள என்ன இருக்கு? ரெண்டு அழுக்குப் புடவை, அஞ்சாறு பாத்திரம், ஒரு படி அரிசி. பாத்தான்னா அவன் பாக்கெட்லேருந்து பத்து ரூபா எடுத்து வெச்சிட்டுப் போவான்’ என்று சொல்லிச் சிரித்தாள்.

‘உள்ளே போகலாமா?’ என்று கேட்டேன். வினோத் சிறிது தயங்கினான். வற்புறுத்த வேண்டாம் என்று முடிவு செய்துகொண்டேன். அவன் பேச வாயெடுக்கும் முன் வீட்டுக்குள் இருந்து பத்மா மாமி கழி ஊன்றி மெல்ல நடந்து வெளியே வந்தாள். நாங்கள் இருவரும் ஒதுங்கி நின்றுகொண்டோம். மாமி மெதுவாகத் தலையை உயர்த்தி, புருவங்களுக்கு மேலே ஒரு கையைக் குவித்து வைத்து எங்களைப் பார்த்தாள். ‘ஆரு?’ என்று கேட்டாள். வினோத் உடனே, ‘ஹரே கிருஷ்ணா’ என்று சொல்லிக் கைகூப்பினான். நடுங்கும் கரங்களைக் குவித்து பத்மா மாமி அவனை வணங்கினாள்.

‘ஆருன்னு தெரியல்லியே. வயசாயித்தோன்னோ? கண்ணும் தெரியல்லே, ஞாபகமும் இருக்கறதில்லே’ என்று சொன்னாள்.

நான் சட்டென்று, ‘அது இரக்கப்பட்டு இயற்கை அளிக்கும் வரம்’ என்று சொன்னேன். சிறிது புன்னகை செய்தேன்.

‘உள்ளே வரேளா?’ என்று மாமி கேட்டாள். நான் வினோத்தைப் பார்த்தேன். அவன் அதை மிகவும் விரும்பினான் என்று தோன்றியது. நாங்கள் பத்மா மாமியின் வீட்டுக்குள் சென்றோம்.

‘தூர தேசத்துலேருந்து வரேளா? யாத்ரீகாளா?’ என்று மாமி கேட்டாள்.

‘நான் விமலானந்த. இவர் குருஜி யது நந்தன தாஸ்’ என்று அறிமுகம் செய்துகொண்டேன்.

‘நான் குருவல்ல’ என்று வினோத் உடனே சொன்னான்.

‘அதனால் பரவாயில்லை. நீ இப்போது யது நந்தன தாஸாகவே இல்லாவிட்டாலும் பிரச்னை இல்லை’.

எங்களை உட்காரச் சொல்லிவிட்டு பத்மா மாமி உள்ளே சென்று ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தாள். நான் குடித்தேன். வினோத் வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.

‘கோயிலுக்கு வந்தேளோ?’ என்று மாமி மீண்டும் கேட்டாள். அவளுக்கு என் அம்மாவின் வயதுதான். ஆனால் எப்படியோ இன்றும் நடமாடிக்கொண்டிருக்கிறாள். சுருங்கிக் கசங்கிவிட்டிருந்த முகமும் மொத்தமாக உதிர்ந்துவிட்டிருந்த புருவங்களும் நரம்புகள் ஓடுவது தெரிந்த தேகமும் அதில் இருந்த நடுக்கமும் காலம் விளையாடிய ஆட்டத்தின் மிச்சங்களாக இருந்தன. வீட்டில் அவளைத் தவிர யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. எப்படி இந்தத் தள்ளாத வயதில் சமைத்து சாப்பிட்டுக்கொண்டிருப்பாள் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

சட்டென்று வினோத் கேட்டான், ‘மாமா இல்லியோ?’

‘நீங்க அவருக்குத் தெரிஞ்சவரா? அவர் போயே ரொம்ப வருஷம் ஆயிடுத்தே’.

‘தனியாத்தான் இருக்கேளா?’

‘எப்பவும் தனிதான். அதுக்கென்ன?’ என்று மாமி சொன்னாள்.

‘இல்லே. சமைக்க கொள்ள...’

‘கோவுல்ல கேசவன்னு ஒருத்தர் இருக்கேர். மடப்பள்ளி பார்த்துக்கறவர். தெனம் ரெண்டு வேளை பிரசாதம் கொண்டுவந்து குடுத்துட்டுப் போவார். அத சாப்ட்டுண்டு, காப்பி மட்டும் போட்டுண்டு என்னமோ போயிண்டிருக்கு. இன்னும் காலம் வரல்லியே’ என்று சொன்னாள்.

வினோத் ஏதோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருப்பதுபோலத் தெரிந்தது. அவனுக்குச் சிறிது அவகாசம் தருவதற்காக நான் மாமியிடம் பேச்சு கொடுத்துக்கொண்டிருந்தேன். மாமி எங்களைப் பற்றித் திரும்பத் திரும்பக் கேட்டாள். நான் மடிகேரியில் இருப்பதைச் சொன்னேன். வினோத் மேற்கு வங்காளத்தில் இருந்து வந்திருப்பதைச் சொன்னேன். சிறிது உற்று கவனித்துவிட்டு, அவன் இஸ்கான் சாமியாரா என்று மாமி கேட்டுவிட்டாள். நான் ஆம் என்று தலையசைத்தேன்.

‘ஆனா உங்கள பாத்தா அப்படித் தெரியல்லியே?’ என்று சொன்னாள். நான் சிரித்துக்கொண்டே, ‘நான் இஸ்கான் இல்லை’ என்று சொன்னேன்.

‘பின்னே? ரெண்டு பேரும் சிநேகிதாளா?’

இதற்கு என்ன பதில் சொல்வதென்று சிறிது யோசித்தேன். ஆம் என்றோ இல்லை என்றோ சொல்வது முறையாக இருக்காது என்று தோன்றியது. இதற்குள் வினோத் ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும். அவன் என்னைக் கைநீட்டித் தடுத்துவிட்டு, ‘மாமி, நான் இந்த ஊருக்கு இப்பொ வந்ததுக்கு ரெண்டு காரணம். அதுல ஒண்ணு உங்களைப் பார்த்து மன்னிப்புக் கேக்கறது’ என்று சொன்னான். அவள் சற்றும் எதிர்பாராத விதமாக நெடுஞ்சண் கிடையாக அவள் காலில் விழுந்தான். அவளது பாதங்களைத் தனதிரு கரங்களால் மூடிக்கொள்வதுபோலப் பற்றியபடியே பல விநாடிகள் அப்படியே கிடந்தான்.

மாமிக்கு ஒன்றும் புரியவில்லை. குனிந்து அவனை எழுப்பக்கூடத் தோன்றாமல் அதிர்ச்சியுடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

இருபது விநாடிகளாவது வினோத் அவளது பாதங்களைப் பற்றிக்கொண்டு இருந்திருப்பான். பிறகு அவனே மெல்ல எழுந்து கையைக் கூப்பிக்கொண்டு அவள் எதிரே நின்றான். அவன் முகத்தில் அதுவரை நான் காணாத தெளிவும் தீர்க்கமும் அப்போது தென்பட்டன.

‘உக்காருங்கோ’ என்று மாமி சொன்னாள்.

‘இல்லே. நான்..’ என்று அவன் ஏதோ சொல்லத் தொடங்கும்போது, ‘காப்பி சாப்பிடுவேளா? சன்னியாசிகளுக்கு காப்பி அனுமதி உண்டா?’ என்று கேட்டாள்.

‘பரவால்லே மாமி. காப்பியெல்லாம் வேண்டாம். நான் ஒரு பாவம் செய்தவன். சன்யாசிகள் பொதுவா மத்தவா கால்ல விழறது வழக்கமில்லே. ஆனா, இந்த ஜென்மத்துல நான் செய்து தீர்த்தாக வேண்டிய ரெண்டு மிச்சத்துலே இது ஒண்ணு’ என்று வினோத் சொன்னான்.

மாமி சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். பிறகு, ‘நீங்க வினோத்தா?’ என்று கேட்டாள்.

‘ஆமாம் மாமி’.

‘உக்காந்துண்டேள்னா எனக்கு சௌகரியம். நானும் உக்காருவேன். ரொம்ப நேரம் நிக்க முடியறதில்லே’ என்று சொன்னாள்.

நாங்கள் அங்கிருந்த பெஞ்சு ஒன்றை இழுத்துவந்து போட்டு அமர்ந்துகொண்டோம். ‘சந்தோஷம்’ என்று சொல்லிவிட்டு மாமி எங்கள் எதிரே உட்கார்ந்துகொண்டாள்.

‘உங்கம்மாவ பார்க்கத்தான் கிளம்பிண்டிருந்தேன். ரொம்ப முடியாம இருக்கான்னு கேசவன் சொன்னார். இன்னிக்கு ராத்தாண்டறது கஷ்டம்னார்’.

நாங்கள் அமைதியாக இருந்தோம்.

‘அம்மாவ பாத்தேளா?’

‘இன்னும் இல்லை மாமி. இனிமேத்தான் போகணும்’ என்று சொன்னேன்.

‘நீங்க ரெண்டாமவரா, நாலாமவரா?’

‘நான்தான் சின்னவன். விமல்’ என்று சொன்னேன்.

‘அவர்.. உங்கண்ணா?’

‘வினய் வருவான். மூத்தவன் வரணும். எப்ப வருவான்னு தெரியலே’.

‘என்னமோ. சன்யாசியானாலும் பெத்தவளுக்குக் கொள்ளி போட வரணும்னு நினைச்சேளே, சந்தோஷம். இல்லேன்னா பாவம் கேசவன்தான் அதையும் செய்வார்’ என்று சொல்லிவிட்டு, சட்டென்று என்ன நினைத்தாளோ, ‘கொள்ளி போடுவேள் இல்லியோ? அது ஒண்ணும் சாஸ்திர விரோதம் இல்லியே?’

‘அண்ணா செய்வான் மாமி’ என்று வினோத் சொன்னான்.

‘அப்பப்போ கேசவன்தான் வந்து பார்த்துண்டு, பேசிண்டு இருந்துட்டுப் போவேர். நீங்க நாலு பேரும் சன்னியாசி ஆயிட்டத ஊர்க்காராளால அந்தக் காலத்துல நம்பவே முடியலே. கேசவன் பொய் சொல்றார்னுதான் எல்லாரும் நினைச்சா. ஆனா எனக்குத் தெரியும். உங்க நாலு பேரோடதும் அந்த மாதிரி ஜாதகம்தான்’.

எனக்குத் தாங்க முடியவில்லை. சட்டென்று கேட்டுவிட்டேன், ‘தப்பா நினைச்சிக்காதிங்கோ. அந்த மாதிரி ஜாதகம்னு தெரிஞ்சப்பறம் ஏன் உங்க பொண்ணுக்கு இவனை நிச்சயம் பண்ணேள்?’

மாமி சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். பிறகு பேசத் தொடங்கியபோது தொண்டை அடைத்தது. அழுகை வந்தது. வினோத் அவளுக்குத் தண்ணீர் சொம்பை எடுத்துக் கொடுத்தான். வாங்கிக் குடித்துவிட்டு புடைவைத் தலைப்பில் வாயைத் துடைத்துக்கொண்டாள்.

‘உங்களுக்கு சொன்னா புரியுமோ புரியாதோ? ஒரு வைத்தியன்னா அவனுக்குத் தனக்குத் தானே நாடி பிடிச்சி வைத்தியம் பாத்துக்கத் தெரியாது. இன்னொரு வைத்தியன்கிட்டேதான் போவான். ஒரு அம்பட்டன் தனக்குத்தானே முடி வெட்டிண்டான்னா நன்னாவா இருக்கும்? இன்னொருத்தன்கிட்டேதான் தலைய குடுத்தாகணும். மீறி தானே பண்ணிப்பேன்னு பண்ணிண்டா இப்படித்தான் ஆகும்’.

‘நீங்க அதைச் செய்திருக்க வேண்டியதுதானே?’

‘செஞ்சேனே! அவளுக்கு நூறு இடத்துல வரன் பாத்தேன். ஒவ்வொரு தடவையும் ஜாதகத்த தூக்கிண்டு நாவலூர் வரதராஜ ஜோசியர் கிட்டேதான் ஓடுவேன். இது பொருந்தறது, இது வேண்டாம், இது அமைஞ்சிடும், இது முடிஞ்சிடும்னு அவரும் சொல்லிண்டேதான் இருந்தார். எங்க நடந்தது? ஒண்ணுமே நடக்கலே’.

‘அவர் சரியா பார்க்கலியா?’

‘அப்படியெல்லாம் சொல்றது தப்பு. ப்ராப்தம்னு ஒண்ணு உண்டு. ப்ராரப்த கர்மான்னு ஒண்ணு உண்டு. இந்த ரெண்டுக்கும் நடுவுல உள்ளதுதான் வாழ்க்கை’.

மாமி என்னை மிகவும் வியப்பூட்டிக்கொண்டிருந்தாள்.

‘சரி, அவர் பார்த்து சரியா அமையலை. வேற யார்ட்டயாவது போயிருக்கலாமே?’ என்று கேட்டேன்.

‘போயிருப்பேன். அந்த நேரத்துலதான் உங்கம்மா இவாளோட ஜாதகத்த கொண்டு வந்து குடுத்தா’.

‘இவன் சன்னியாசி ஆகப் போறவன்னு உங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்குமே? எங்க எல்லாரோட ஜாதகத்தையும் நீங்க ஏற்கெனவே பார்த்திருக்கறதா மாமா சொல்லியிருக்கார்’.

‘அது நான் பண்ணின பாவம். நாலு பேரும் இப்படித்தான் போவேள்னு தெரிஞ்சும் உங்கம்மாட்ட நான் அதைச் சொன்னதில்லே. அவ மனச எதுக்குக் கஷ்டப்படுத்தணும்னு சொல்லாம இருந்துட்டேன். ஆனா எப்ப இவாளோட ஜாதகத்த எம்பொண்ணுக்குப் பாக்கச் சொல்லிக்கொண்டு வந்தாளோ அப்ப எனக்கு புத்தி மழுங்கிடுத்து’.

‘அப்படின்னா?’

‘நடந்துடும் நடந்துடும்னு வரதராஜன் சொன்ன எந்த வரனும் எம்பொண்ணுக்கு அமையலை. நடந்துடும்னு நானே நினைச்சதெல்லாம்கூட என்னென்னமோ காரணத்தால தட்டிப் போச்சு. ஜோசியமெல்லாம் பொய்யோன்னு அப்ப நினைக்க ஆரம்பிச்சுட்டேன். அதே மாதிரி இவாளும் சன்னியாசி ஆவார்னு ஜாதகம் சொன்னது ஏன் பொய்யாயிடப்படாது? அப்படி நினைச்சுண்டுட்டேன். இன்னொண்ணு, எப்படியாவது அவளுக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வெச்சிடணும்னு ஒரு வெறி. கல்யாணமாயிட்டா அப்பறம் எங்கேருந்து சன்னியாசி ஆறது? வேணுமானா எழுவது வயசுக்கப்பறம் ஜீயராகிப்பார்னு நினைச்சுண்டேன். அப்படி ஆனா சந்தோஷம்தானே? பெருமைதானே? விடுங்கோ. இதெல்லாம் பொண்ண பெத்தவாளுக்கு அனுபவிச்சே தீரவேண்டியது’.

அதற்குமேல் அவளிடம் என்ன பேசுவதென்று எனக்குத் தெரியவில்லை. மிகவும் பாவமாக, பரிதாபமாக இருந்தது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இதையெல்லாம் நினைவுகூர வைத்து அவதிப்படுத்தியிருக்க வேண்டாம் என்று தோன்றியது. என் மானசீகத்தில் பத்மா மாமியிடம் நான் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன்.

சற்றும் எதிர்பாராவிதமாக வினோத் ஒன்றை அப்போது கேட்டான். ‘இதெல்லாம் விடுங்கோ. உங்க பொண்ணு அல்ப்பாயுசுல போவான்னு கூடவா உங்களுக்கு அவ ஜாதகம் சுட்டிக்காட்டலே?’

மாமி அவனை உற்றுப் பார்த்தாள். புன்னகை செய்தாள். சிரமப்பட்டு எழுந்து அவனருகே வந்தாள். வினோத் சட்டென்று எழுந்துகொண்டான்.

‘நீங்க உக்காருங்கோ’ என்று அவனை அமர வைத்துவிட்டு ’நான் உங்களைத் தொடலாமா?’ என்று கேட்டாள். வினோத் ஒன்றும் சொல்லாதிருந்தான். மாமி அவனது தலையை வருடினாள். கன்னங்களை வருடினாள். ஒரு தேவதையின் கனிவு அவள் கண்களில் புலப்பட்டது. எனக்கே அவளைக் கட்டியணைத்து ஆறுதல் சொல்லத் தோன்றியது. எப்பேர்ப்பட்ட பெண்மணி! ஒரு மாபெரும் துரோகி இருபது வருடங்கள் தலைமறைவாக இருந்துவிட்டுத் திரும்பி வந்திருக்கிறான். அவனிடம்கூட இப்படியொரு வாஞ்சையை வெளிப்படுத்த முடியுமா!

‘கேட்டது தப்புன்னா மன்னிச்சுடுங்கோ’ என்று வினோத் சொன்னான்.

‘நீங்க கேட்டதுல ஒரு தப்பும் இல்லே. தப்பெல்லாம் ஜாதகத்துலதான்’.

‘அப்படின்னா?’

‘என்னத்தைச் சொல்ல? ஜாதகப்படி அவளுக்கு ஆயுசு எழுபது வயசுக்கு மேலே. அவ போவான்னு நான் நினைச்சே பார்த்ததில்லே’ என்று சொன்னாள்.

(தொடரும்)

 

http://www.dinamani.com/junction/yathi/2018/sep/20/134-கட்டங்களின்-துரோகம்-3003597.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

135. ஊழித் தாண்டவம்

பத்மா மாமி சிறிது நேரம் அழவாவது செய்வாள் என்று எதிர்பார்த்தேன். ஆன வயதுக்குக் கோபம் உறைந்து போயிருக்குமென்றாலும், துக்கத்தின் ஈரத் தேக்கங்கள் இன்னும் மிச்சம் இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஒருவேளை அவள் கவனமாகத் தன்னை மறைத்துக்கொண்டு எங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறாளோ என்றும் தோன்றியது. ஆனால் அடையாளம் தெரிந்துகொண்ட கணம் தொடங்கி, சிறிதும் அதிர்ச்சியோ பதற்றமோ அடையாமல் அவள் பேசிக்கொண்டிருந்தது வியப்பாக இருந்தது. எதிரியாகவே இருந்தாலும் உட்கார்ந்து பேச இரண்டு பேர் கிடைத்ததே பெரிது என்று நினைத்துவிட்டாளா? என்னால் தாங்கவே முடியவில்லை. வாயைத் திறந்து கேட்டுவிட்டேன்.

 

 

‘மாமி, உங்களுக்கு இவனைப் பார்த்தால் கோபமே வரவில்லையா?’

‘கோச்சுண்டு என்ன ஆகப் போறது? அவ போய் இருபத்தஞ்சு வருஷத்துக்கு மேலே ஆயாச்சு. இத்தனை வருஷம் கழிச்சி என்னைத் தேடிவந்து கால்ல விழுந்தாரே, இந்த மனசுதான் எனக்கு முக்கியமாப் படறது’ என்று சொன்னாள்.

நான் உடனே, ‘வினோத், இதை உன் சூழ்ச்சி என்று எடுத்துக்கொள்கிறேன்’ என்று சொன்னேன். அவன் பதறிவிட்டான். ‘இல்லை இல்லை. நிச்சயமாக அப்படி இல்லை. இந்தக் கணம் மாமி என்னைத் தற்கொலை செய்துகொள்ளச் சொன்னாலும் நான் தயாராக இருக்கிறேன்’.

‘அது உன் துறவுக்கு அவமானமல்லவா?’

‘ஆம். சந்தேகமில்லை. ஆனால் நான் தருமம் கொன்றவன். அதனால்தான் கிருஷ்ணன் எனக்கு இன்றுவரை தென்படவில்லை’.

‘புத்தர், வர்த்தமானரெல்லாம்கூட இந்த விதத்தில் தருமம் கொன்றவர்கள்தாம்’ என்று சொன்னேன்.

‘தமிழ்ல பேசறேளா? நேக்குப் புரியலே’ என்று பத்மா மாமி கேட்டாள். நான் அவளுக்கு விளக்கினேன். அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, ‘ஆமாமா. அதென்னமோ ஒரு பொண்ண பலி குடுத்தாத்தான் சன்யாசம் கூடும் போலருக்கு. இவருக்கு எம்பொண்ணு ஒரு கருவியா இருந்திருக்கா. புண்ணியவதி போய் சேந்துட்டா’ என்று சொன்னாள்.

வினோத் சட்டென்று எழுந்தான். ‘சரி மாமி. நாங்க கிளம்பறோம். இன்னும் ஆத்துக்குப் போகலை’ என்று சொன்னான்.

‘கிழவிக்கு ஒரு ஆசை. சொல்லட்டுமா?’

‘சொல்லுங்கோ’.

‘எங்காத்துக்கு வந்துட்டு ஒண்ணும் சாப்டாம போறேங்கறேளே. மனசுக்குக் கஷ்டமா இருக்கு’.

‘பரவால்ல மாமி. பொதுவா நான் கார்த்தாலைகள்ள சாப்பிடறதில்லே’ என்று வினோத் சொன்னான்.

‘நீங்க?’ என்று மாமி என்னைப் பார்த்தாள்.

‘எனக்கு அந்த மாதிரி நியமமெல்லாம் இல்லை. பசி இருந்தா மட்டும் சாப்பிடுவேன்’ என்று சொன்னேன்.

‘ஆனா எனக்காக இன்னிக்கு சாப்பிடலாம்’ என்று மாமி மீண்டும் சொன்னாள். நான் வினோத்தைப் பார்த்தேன்.

‘ஒரு தம்ளர் மோர் குடுங்கோ’ என்று அவன் கேட்டான். மாமிக்கு அதுவே மகிழ்ச்சியளிக்கப் போதுமானதாக இருந்தது. அவள் அடுக்களைக்குப் போனாள்.

‘இது என்னால் மறக்க முடியாத தினம்’ என்று நான் சொன்னேன்.

‘ஆம். மிகவும் நல்ல பெண்மணி’.

‘யோசித்துப் பார்த்தால், இந்த உலகில் நம் நான்கு பேரைத் தவிர அநேகமாக மீதி அனைவருமே நல்லவர்களாக இருப்பார்கள் போலிருக்கிறது’.

‘ஏன் அப்படிச் சொல்கிறாய்?’

'பார், நீ செய்த அக்கிரமத்துக்குப் பிராயச்சித்தமாகக் கேசவன் மாமா இன்றுவரை பத்மா மாமிக்குக் கோயில் பிரசாதம் சப்ளை செய்து சம்ரட்சித்துக்கொண்டிருக்கிறார்’ என்று நான் சொன்னதும், வினோத் அடக்கமாட்டாமல் விழுந்து விழுந்து சிரித்தான்.

மாமி இரண்டு தம்ளர்களில் மோர் எடுத்து வந்தாள். நாங்கள் நன்றி சொல்லி வாங்கி அருந்தினோம்.

‘நன்னாருந்ததா? பெருங்காயமெல்லாம் போட்டிருந்தேன்’.

‘பிரமாதமாக இருந்தது’ என்று சொன்னேன்.

வினோத் சொன்னான், ‘மாமி, நான் கிருஷ்ணனுக்கு என்னை ஒப்புக் கொடுத்தவன். திருமணத்துக்கு முதல் நாள் நான் ஊரை விட்டுப் போனதற்குக் காரணம் நானல்ல; அவந்தான்’.

நான் அவளுக்கு சுருக்கமாக வினோத்தின் அன்றைய சூழ்நிலையை விளக்கிப் புரியவைக்க முயற்சி செய்தேன். அவசியமில்லைதான். ஆனாலும் சொல்லத் தோன்றியது. மாமி சட்டென்று பக்தி மிகுந்து வினோத்தைப் பார்த்துக் கரம் குவித்தாள்.

‘இதெல்லாம் நாம தீர்மானிக்கறது இல்லே. நான் உங்களை ஒண்ணும் சொல்லப் போறதுமில்லே’ என்று சொன்னாள்.

‘சொன்னால் சந்தோஷப்படுவேன்’.

‘என்ன சொல்லணும்?’

நான் சட்டென்று குறுக்கே புகுந்து, ‘நாசமாப் போன்னாவது சொல்லுங்கோ’ என்று சொன்னேன். மாமி உடனே, ‘எம்பெருமானே!’ என்று சொன்னாள். இது என்ன மனம் என்று வினோத் என்னைப் பார்த்துச் சொன்னான்.

எனக்குத் திரும்பவும் தோன்றியது. எங்களைத் தவிர மீதமுள்ள அனைவருமே நல்லவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

‘உங்கம்மாதான் பாவம், ரொம்ப மனசுடைஞ்சி போயிட்டா. நாலுமே இப்படிப் போயிட்டா யாருக்குத்தான் தாங்கும்?’ என்று பத்மா மாமி சொன்னாள். நாங்கள் அமைதியாக இருந்தோம்.

‘இவர் போனப்பறம் ஒரு மூணு நாலு மாசம் அவள வெளில பாக்கவே முடியலே. மூணாங்கட்டைத் தாண்டி வரவேயில்லேன்னு கேசவன் சொன்னார்’.

‘நீங்க எப்படி சாமாளிச்சிண்டேள்?’ என்று கேட்டேன்.

‘தெரியலே. பிராணன் போயிடும்னு அப்ப தோணித்து. ஆனா போகலே. அவர் இருந்தவரைக்கும் ஆறுதலா எதாவது சொல்லி பேசிண்டிருப்பார். அவர் போனதும் அதுக்கும் ஆளில்லாம போச்சு’.

‘மாமா எப்ப போனார்?’

‘ஆயிடுத்து, பன்னெண்டு வருஷம். சர்க்கரை ஜாஸ்தியாயிடுத்து. நிக்க முடியலே. நடக்க முடியலே. நாலு வார்த்த சேந்தமாதிரி பேசக்கூட முடியாம சிரமப்பட்டார். ஒரு வழியா போயிட்டார்’.

‘உங்களுக்கு ஷுகரெல்லாம் இல்லியே?’

‘ஒண்ணுமே இல்லே. பாக்கறேளே எப்படி இருக்கேன்?’

நான் சிரித்தேன்.

‘தள்ளாமை மட்டும்தான். உங்கம்மா வயசுதான் எனக்கும். அவ சீக்கிரம் படுத்துண்டுட்டா. நான் இன்னும் நடமாடிண்டிருக்கேன். படுக்கற நேரம் நெருங்கிடுத்துன்னு தெரிஞ்சுட்டா, ஆத்த பூட்டி மாடத்துல சாவிய வெச்சுட்டு கோயில் வாசலுக்குப் போய் படுத்துண்டுடுவேன்’ என்று சொன்னாள்.

‘எதுக்கு?’

‘பின்னே? இத்தன வருஷமா கஷ்டத்த சுமந்துண்டு இருந்ததுக்கு எனக்கு ஒரு ஆசுவாசம் வேண்டாமா?’

எனக்குப் புரியவில்லை. கோயில் வாசலில் போய் ஏன் படுக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டேன்.

‘அந்த நாசமத்துப் போறவன நான் வேற எப்படிப் பழிவாங்குவேன்?’ என்று மாமி சொன்னாள்.

வினோத் அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்தான்.

‘மாமி, நீங்க சொல்றது புரியலே’.

‘புரியும்படியாவே சொல்றேனே. என்ன இப்போ? ஊருக்குள்ள வர்றப்போ கோயில் வாசல்ல பாத்தேளா? எத்தன கார் நிக்கறது! எவ்ளோ பேர் வரா! எங்கெங்கேருந்தோ வரா’.

‘ஆமா’.

‘நித்ய கல்யாணப் பெருமாள்னு பேர வெச்சுண்டு, தேடி வர்ற அத்தனை பொண்ணுகளுக்கும் கல்யாணப் பிராப்தம் பண்ணிக் குடுத்துண்டிருக்கானா இல்லியா?’

‘சரி’.

‘கட்டைல போறவன் எம்பொண்ணுக்கு ஒரு வழிய காட்டினானா சொல்லுங்கோ? அப்படி என்ன பாவம் பண்ணிட்டேன் நான்? எம்பத்து மூணு வயசாச்சு எனக்கு. இந்த எம்பத்து மூணு வருஷமாவும் இதே மண்ணுலயேதான் புரண்டுண்டிருக்கேன். இன்னொரு கோயிலுக்குப் போயிருப்பேனா, இன்னொரு பெருமாள சேவிச்சிருப்பேனா, இவன் தீர்த்தம் வாங்கிக்காம ஒருவேள சாதம் சாப்ட்டிருப்பேனா?’

மாமி உணர்ச்சிமயமாகப் பொழிந்துகொண்டிருந்தாள். எங்களுக்குப் பேச்சே வரவில்லை. பிரமித்துப்போய் அவளையே பார்த்துக்கொண்டிருந்தோம்.

‘என்னை விடுங்கோ. மாமா நடமாடிண்டு இருந்த வரைக்கும் தெனம் கோயிலுக்குப் போய் பெருக்கித் தள்ளி, குப்பையள்ளிப் போட்டுட்டு வருவேர். என்னன்னு நினைச்சேள்? அவர் அந்தக் காலத்து எம்.ஏ. படிச்சவர். எத்தன பெரிய பெரிய அதிகாரிகளெல்லாம் அவரண்ட வந்து கைகட்டி நிப்பா தெரியுமா? அப்பேர்ப்பட்ட மனுஷன், இந்தக் கழிச்சல்ல போறவன் கோயில்ல குப்பை அள்ளிப் போடறதுதான் புண்ணியம்னு கிடந்தார்’.

மாமி தீவிரமாக எதையோ சொல்ல வருவது புலப்பட்டது. ஆனால் சரியாகப் புரியவில்லை. குறுக்கே ஏதேனும் கேட்டால் கண்ணி அறுந்துவிடுமோ என்று அஞ்சி அமைதியாக இருந்தோம். அவள் நிறுத்தாமல் பேசிக்கொண்டே போனாள்.

‘ஒரு உற்சவம் தவற விட்டிருப்போமா, ஒரு திருநட்சத்திரத்துக்கு சேவாகாலம் சாதிக்காம இருந்திருப்பாரா, அவன அனுமதி கேக்காம ஒரு முடிவு எடுத்திருப்போமா! ஒண்ணுமே இல்லியே. சித்ராக்கு கல்யாணம்னு முடிவானதும் பத்திரிகைய தூக்கிண்டு ஓடினாரே மனுஷன்! சன்னிதில கொண்டுபோய் வெச்சுட்டு நிலைப்படில முட்டிண்டு முட்டிண்டு அழுதேர்! கடேசில கருணை காட்டிட்டியேடா ஆதிவராகான்னு அவர் கதறின கதறல் இன்னும் என் காதுல நிக்கறது..’

மாமிக்குத் தொண்டை அடைத்தது. ‘உக்காருங்கோ. கொஞ்சம் அமைதியா இருங்கோ’ என்று வினோத் சொன்னான்.

‘என்னத்த வாரிக் குடுத்துட்டான் எங்களுக்கு? எங்கெங்கேருந்தோ ஏரோப்ளேன் ஏறியெல்லாம் பொண்ணுகள கூட்டிண்டு இங்க வரா. ஒரு மாலைய வாங்கி சாத்திட்டு, ஒரு அடிப்பிரதட்சிணம் பண்ணிட்டு நாப்பது நாள்ள கல்யாணம் நடக்கும்னு தீர்மானம் பண்ணிண்டு போயிடறா. நடந்துடறதே? அத்தன பேருக்கும் நடத்தி வெச்சுடறானே படவா ராஸ்கல்! எம்பொண்ண மட்டும்தானே சீரழிச்சான்! அவளத்தானே கதற வெச்சி சாகடிச்சான். அவனையாவது சும்மா விடறதாவது?’

‘மாமி..!’ என்றேன் அதிர்ச்சியுடன்.

‘நான் தீர்மானம் பண்ணிட்டேன். அவ செத்ததுக்கு இவரில்லே காரணம். அவ ஜாதகம்கூட இல்லே. அவளுக்கு தீர்க்காயுசு ஜாதகம். அதுல எனக்கு சந்தேகமே இல்லே. அதையும் மீறி என்கிட்டேருந்து அவள பறிச்சிண்டான் பாரு, அந்தப் பாவிய ஒரு நாள் நான் கதறவிடுவேன்’.

‘ஐயோ!’

‘என்ன ஐயோ? கோவுல் வாசல்ல போய் படுத்துண்டுதான் பிராணன விடுவேன். அன்னிக்குப் பூரா அவனுக்குப் பட்டினி. என் பொணத்த எடுத்துண்டு போய் எரிச்சுட்டு, புண்ணியாவசனம் பண்ணி, சாந்தி பண்ணி, எல்லாம் பண்ணி முடிச்சப்பறம்தான் கோவுல் கதவு திறப்பா. கோவுலானா என்ன, வீடானா என்ன? பொணம் விழுந்த இடத்துக்குத் தீட்டில்லாம போகுமா?’

நான் பேச்சற்றுப் போனேன். கோபமற்றவள், துக்கமற்றவள் என்று எண்ணியதெல்லாம் எப்பேர்ப்பட்ட பிழை! இது ஊழித் தாண்டவமல்லவா? நித்ய கல்யாணப் பெருமாளால் நிச்சயமாக இந்த உக்கிரத்தைத் தாங்க முடியாது. நெடுநேரம் நாங்கள் உறைந்துபோய் அங்கேயே, அப்படியே நின்றிருந்தோம். பத்மா மாமியின் உடலெல்லாம் நடுங்கிக்கொண்டிருந்தது. நான் அவளைக் கைப்பிடித்து அழைத்துச் சென்று நார்க் கட்டிலில் படுக்க வைத்தேன். ‘தூங்குங்கோ செத்த நேரம்’ என்று சொன்னேன்.

‘என்னமோ சொல்ல வந்தேன். என்னென்னமோ சொல்லிண்டிருந்துட்டேன் இல்லே?’ மாமி சிரித்தாள்.

‘நாலு பேரும் ரிஷிகளாயிட்டேள். நல்லபடியா உங்கம்மாவ மோட்ச லோகத்துக்கு அனுப்பிவைங்கோ’ என்று சொன்னாள். நாங்கள் விடைபெற்று வெளியே வந்தபோது, கேசவன் மாமா வேகவேகமாக அந்தப் பக்கம் வந்துகொண்டிருந்ததைக் கண்டோம்.

(தொடரும்)

 

http://www.dinamani.com/junction/yathi/2018/sep/21/135-ஊழித்-தாண்டவம்-3004784.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கிருபன்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

136. நடை திறப்பு

கேசவன் மாமாவைப் பார்த்தபோது எனக்கு மிகவும் ஆச்சரியமாகப் போய்விட்டது. என்னைத் தேடி அவர் மடிகேரிக்கு வந்தபோது, நான் சிறு வயதில் அவரிடம் கண்ட அதே வேகம், சுறுசுறுப்பு, படபடவென பேசுகிற குணம், சட்டென்று கண்கலங்கிவிடுகிற இயல்பு எல்லாம் அப்படியே இருந்தது. இருபது வருடங்களில் மனிதர் மிகவும் தளர்ந்துவிட்டிருந்தார். தலை முடியும் புருவங்களும் முழுதாக நரைத்திருந்தன. கண்கள் ஒடுங்கிப் போய், நாடி தளர்ந்து நடக்கவே முடியாமல் நடந்து வந்தார். சட்டை அணியாத மார்பில் ஒரு துண்டு மட்டும் போட்டிருந்தார். அதன் மறுமுனையை இடுப்பு வேட்டியில் சொருகியிருந்தார். கால்களில் செருப்பு இல்லை. பாதங்களின் மேற்புறம் முழுவதும் உப்பு பூத்தாற்போலிருந்தது. ஒரு மாட்டு வண்டி மெல்ல நகர்ந்து வருவது போல அவர் எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தார். இன்னும் பார்த்திருக்கவில்லை. குனிந்த தலை நிமிராமல் நிலம் பார்த்தேதான் வந்தார்.

‘வினோத், இங்கே இந்த மனிதர் நம்மைக் கண்டதும் என்ன செய்வார் என்று நினைக்கிறாய்?’ என்று கேட்டேன்.

‘கண் கலங்கிவிடுவார்’.

‘பிறகு?’

‘கட்டியணைத்து அழுவார். நடுச்சாலையில் இது தேவையா என்று யோசிக்கிறேன். நாம் திரும்பி வீட்டுக்குப் போய்விடுவோமா? அங்கே போய் பேசிக்கொள்வோமே?’

‘இல்லை. அவர் அப்படியெல்லாம் செய்ய மாட்டார்’ என்று சொன்னேன்.

‘எப்படிச் சொல்கிறாய்?’

‘பொறுத்திருந்து பார்’.

மாமா எங்களை நெருங்கியபோது, நான் அவர் எதிரே போய் நின்றேன். புன்னகை செய்தேன். புருவங்களுக்கு மேல் விரல் குவித்து அவர் என்னை நிமிர்ந்து பார்த்தார். ‘விமலா!’ என்றார்.

நான் சிரித்தேன். வினோத்தைப் பார்த்தேன். அவனும் அருகே வந்து, ‘சௌக்கியமா?’ என்று கேட்டான்.

‘டேய், வந்துட்டியா? நல்லதா போச்சு போ. ஒருத்தனும் வரக்காணமே, கொள்ளிய போட்டுட்டு நாமளும் கூட ஏறிப் படுத்துண்டுடலாமான்னு நினைச்சிண்டிருந்தேன்’ என்று மாமா சொன்னார்.

‘எப்படி இருக்கேள்?’ என்று கேட்டேன்.

‘இருக்கேன், பூமிக்கு பாரமா. என்னைப் பத்தி என்ன? உங்கம்மாதான் இழுத்துண்டிருக்கா’.

‘சரி, வாங்கோ’ என்று சொல்லிவிட்டு வினோத் நடக்க ஆரம்பித்தான்.

சிறிது தூரம் உடன் வந்தவர் சற்று நின்றார்.

‘என்ன மாமா?’

‘மூச்சு வாங்கறதுடா. வயசாயிடுத்தோல்யோ? உங்க வேகத்துக்கு வர முடியலே’.

நாங்கள் காத்திருந்தோம்.

‘ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் இருக்கேளா?’ என்று கேட்டார்.

‘அதெப்படி மாமா? அவன் கல்கத்தாவிலே இருக்கான். நான் கர்நாடகா’.

‘நான் போன் பண்ணப்போ உன் சிஷ்யாள் யாரோ நீ போபால்ல இருக்கேன்னு சொன்னாளே’.

‘அப்போ அங்கேதான் இருந்தேன்’.

மாமா வினோத்தை முகம் தொட்டுத் திருப்பிப் பார்த்தார். புன்னகை செய்தார். அவனும் சிரித்தான். ‘ஏண்டா இன்ன இடத்துல இருக்கேன்னாவது ஒரு போன் பண்ணக் கூடாதா? அது சன்னியாச தருமத்துக்கு விரோதமாயிடுமா?’

‘அப்படியெல்லாம் இல்லை மாமா. பண்ணணும்னு தோணலை. அதனால பண்ணலை’.

‘பட்டுனு நூல் அறுந்த மாதிரி அறுந்துடுமோ?’

‘அப்படித்தான்னு நினைக்கறேன்’.

‘விமலை மட்டும்தான் நடுல ரெண்டுவாட்டி போய்ப் பாத்தேன். உங்க மூணு பேரையும் கண்டுபிடிக்கவே முடியலே’.

‘வினய் வந்திருக்கான் மாமா. இன்னிக்குப் பார்க்கலாம்’ என்று சொன்னேன்.

‘அவனும் வந்துட்டானா? சந்தோஷம்டா. உங்கம்மா திருப்தியா போய்ச் சேருவா’ என்று சொன்னார்.

‘விஜயும் வந்துடுவான் மாமா’ என்று வினோத் சொன்னான்.

‘உன்கிட்டே சொன்னானா?’

வினோத் சிறிது யோசித்தான். என்னைப் பார்த்தான். ‘வராம இருக்கமாட்டான் மாமா’ என்று நான் சொன்னேன்.

‘நீதான் இவனுக்கு சொன்னியா?’

‘இல்லை. இவனேதான் கிளம்பி வந்திருக்கான். வினய்யும் அவனேதான் வந்தான்’.

‘அவன் எங்கே?’

‘நீலாங்கரை வரைக்கும் போயிருக்கான். வந்துடுவான்’.

‘எப்படிடா? மனசுல தோணிடுத்தா அம்மா போயிடுவான்னு?’

வினோத் புன்னகை செய்தான்.

‘சீக்கிரம் வாங்கோ. ஒரு நிமிஷம் விட்டுட்டு வெளில வந்தாலும் போய்ப் பாக்கறப்ப பிராணன் இருக்குமோ இருக்காதோன்னு பயம்மா இருக்கு’ என்று சொல்லிவிட்டுத் தன் சக்திக்கு மீறிய வேகத்தில் நடக்க ஆரம்பித்தார்.

‘மெதுவாவே போகலாம் மாமா. அவ இன்னிக்குப் போகமாட்டா’ என்று சொன்னேன். கேசவன் மாமா என்னை அதிர்ச்சியுடன் பார்த்தார். ‘பின்னே?’

‘நாளைக்கு ராத்திரி போயிடுவா’.

‘எப்படிச் சொல்றே?’

‘நான் சொல்லலை. அண்ணா இவனுக்கு அப்படி சொல்லியிருக்கான்’.

மாமாவால் நம்பவே முடியவில்லை. சட்டென்று வினோத்தை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டார். ‘இவன் சொல்றது நிசமாடா வினோத்? நீ விஜய்யைப் பார்த்தியா? அவன் எங்கடா இருக்கான்? எப்படி இருக்கான்? என்னவா இருக்கான்?’

‘நான் பார்க்கலை மாமா. ரொம்ப வருஷம் முன்ன ஒரே ஒரு தடவை வாரணாசில பார்த்தேன். அவன் பெரிய யோகி தெரியுமோ?’

‘அப்படித்தான் இருப்பான்னு மனசுல தோணித்து’ என்று மாமா சொன்னார். உடனே என்னைப் பார்த்து, ‘நீ பாத்தியா?’ என்று கேட்டார்.

‘இல்லை மாமா. பார்த்ததில்லை. எனக்கு அவன் முகமே மறந்து போயிடுத்து’.

‘எம்பெருமானே!’

‘ஆனா பார்க்கறதுக்கு நிறைய முயற்சி பண்ணேன். முடியலை. அப்பறம் விட்டுட்டேன்’.

‘ஏண்டா, யோகின்னா சித்தெல்லாம் பண்றானா?’

‘தெரியலை’ என்று வினோத் சொன்னான்.

‘தெரியலைன்னா?’

‘சித்து தெரியாம இருக்காது மாமா. ஆனா பிராக்டிஸா பண்ணமாட்டான்னுதான் நினைக்கறேன்’.

‘நீ அதெல்லாம் கத்துக்கலியா?’

நாங்கள் இருவருமே சிரித்தோம். வினோத் இல்லை என்று சொன்னான். ‘பக்தி யோகம் ஒண்ணுதான் எனக்குத் தெரிஞ்சது. மோட்சத்துக்கு கிருஷ்ண ஜபம் ஒண்ணுதான் வழி’.

‘அடக் கட்டைல போறவனே? இத கல்யாணம் பண்ணிண்டு ஆத்துல உக்காந்துண்டே பண்ணியிருக்கலாமேடா!’

வினோத் பதில் சொல்லவில்லை. சிரித்தான்.

பேசியபடியே நாங்கள் வீட்டைச் சென்றடைந்தோம். படிக்கட்டு சிறிது உடைந்திருந்தது. இரவு நாங்கள் உறங்கச் சென்ற பின்பு, அப்பாவும் அம்மாவும் தினந்தோறும் சிறிது நேரம் அங்கே உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்துகொள்வதற்காக, சத்தமில்லாமல் நான் பலநாள் முற்றத்தைக் கடந்து தாழ்வாரத்தில் வந்து நின்றுகொண்டு பார்ப்பேன். என்றுமே அவர்கள் பேசியது எனக்குக் காதில் விழுந்ததில்லை. சிறகை அசைக்காமல் நடு வானில் மிதக்கும் ஒரு கழுகினைப் போல அவர்கள் பேசும் சொற்களின் ஒலி இங்குமங்கும் நகராமல், இருவர் உதடுகளுக்கு இடையிலேயே மிதந்துகொண்டிருக்கும் என்று எண்ணிக்கொள்வேன்.

‘வாங்கோடா’ என்று மாமா உள்ளே போனார். நாங்கள் அவர் பின்னால் சென்றோம். பத்மா மாமியின் வீட்டைப் போலவே எங்கள் வீடும் மிகவும் பாழடைந்து போயிருந்தது.

‘கடைசியாக என் திருமண ஏற்பாட்டை ஒட்டி சிறிது செப்பனிட்டு சுண்ணாம்பு அடித்தது’ என்று வினோத் சொன்னான். ஆனால் சுவரில் சுண்ணாம்பு இல்லை. பல இடங்கள் காறை பெயர்ந்திருந்தது. உத்தரத்து மரக் கட்டைகளெல்லாம் உளுத்திருந்தன. எல்லா அறைக் கதவுகளும் இழுத்து மூடித் தாழிடப்பட்டிருந்தது. ‘வேறென்ன பண்றது? புழங்கற ஒரே ஆள் நாந்தான். எல்லாத்தையும் திறந்து வெச்சிண்டிருந்தா குப்பை சேரும். தினம் பெருக்கணும். யாரால முடியறது?’ என்று மாமா சொன்னார்.

நாங்கள் முற்றத்தில் நின்றிருந்தோம். இடப்பக்க அறையில் அம்மா இருப்பதாக மாமா சொன்னார். ‘ஆறுமாசம் முன்னாடிதான் ஒரு கட்டில் வாங்கிப் போட்டேன். அவ தரைல படுத்தான்னா எழுப்பி உக்கார வெக்க முடியறதில்லே. மூச்சு வாங்கிடறது’ என்று சொன்னார். அம்மா இருந்த அறைக்கதவும் மூடியே இருந்தது.

‘வாங்கோ’ என்று மாமா சொன்னார்.

‘ஒரு நிமிஷம் மாமா’ என்று சொல்லிவிட்டு, வினோத் வீட்டின் பின்புறம் சென்றான். கால்களைக் கழுவிக்கொண்டு வந்து முற்றத்தில் அம்மா இருக்கும் அறையை நோக்கிக் கண்மூடி அமர்ந்தான். மாமாவுக்கு இப்போது அழுகை வந்துவிட்டது.

‘நாலு பெத்தா. நாலும் ரிஷிகளாயிடுத்து. மகராசி என்ன புண்ணியம் பண்ணாளோ!’ என்று சொன்னார்.

நான் அடுக்களைக்குள் சென்று பார்த்தேன். சில பாத்திரங்கள் இருந்தன. ஒரு பழைய கேஸ் அடுப்பு இருந்தது. ஆனால் சிலிண்டர் இல்லை. ஒரு பம்ப் ஸ்டவ் இருந்தது. அதைத்தான் மாமா பயன்படுத்துவார் என்று நினைத்துக்கொண்டேன்.

‘தளிகையெல்லாம் நின்னு பலகாலம் ஆயிடுத்து’.

‘அப்பறம்?’

‘கோயில் பிரசாதம்தான்’.

‘காப்பி?’

‘உங்கப்பா போனதோட அக்கா அத நிறுத்திட்டா. நான் போட்டு சாப்டப் பிடிக்காம விட்டுட்டேன். வென்னீர் வெக்கறது மட்டும்தான் தளிகை’.

நான் அமைதியாக வெளியே வந்தேன்.

‘ஆனா ஆறலேடா விமல். நன்னா படிச்சிட்டு நீங்க நாலு பேரும் ஃபாரின்ல போய் செட்டில் ஆயிருந்தேள்னாக்கூட இவ்ளோ துக்கம் இருந்திருக்காது’.

‘சன்யாசம் அவ்ளோ பெரிய தப்புன்னு நினைக்கறேளா?’

‘பெருமாளே! தப்புன்னு சொல்லுவேனா! தாங்க முடியலேன்னுதான் சொன்னேன்’.

‘அது ஏற்கெனவே தீர்மானம் பண்ணது மாமா’.

‘யாரோட தீர்மானம்?’

‘அது தெரியலே. கடவுளா இருக்கலாம். இயற்கையா இருக்கலாம். விதியா இருக்கலாம். அண்ணா ஒரு சுவடி வெச்சிருந்தானே, அதுலயே அது எழுதியிருக்கு’.

மாமா சிறிது கண்ணை இடுக்கி யோசித்தார். ‘எது, அந்த வைத்தியச் சுவடியா?’

நான் சிரித்தேன். ‘ஆமா. அதுதான்’.

‘அதுல என்ன எழுதியிருக்கு?’

‘அது இருக்கா இப்போ?’ என்று கேட்டேன்.

‘இருக்கும். பெருமாள் அலமாரியிலே குருவாயூரப்பன் படத்துக்குப் பின்னாடி உங்கம்மா போட்டு வெச்சா. அப்பறம் யாரு அத எடுத்தா?’

‘சரி நான் இப்போ எடுக்கறேன்’ என்று சொல்லிவிட்டு அலமாரியை நோக்கிச் சென்றேன். முற்றிலும் அழுக்கு படிந்து எண்ணெய்ப் பிசுக்கு பரவி, கரி படர்ந்து, உலர்ந்து உதிர்ந்த சில பூக்களோடு தெய்வங்கள் அங்கு வீற்றிருந்தார்கள்.

‘நான் பெருமாளுக்குப் பண்றதெல்லாம் நிறுத்தியாச்சு’ என்று மாமா சொன்னார். தெரிந்தது. நான் பதில் சொல்லாமல் குருவாயூரப்பன் படத்தை நகர்த்தி, பின்பக்கம் கைவிட்டுத் துழாவினேன்.

அது அங்குதான் இருந்தது. இன்னும் பழையதாகியிருந்தது தவிர வேறு மாற்றமில்லை. அதை முற்றத்துக்கு எடுத்துவந்து வெளிச்சத்தில் பார்த்தேன்.

‘இதைத்தான் வைத்திய வரி என்னமோன்னு அந்த வைத்தீஸ்வரன் கோயில்காரர் சொல்லிட்டாரே?’

‘ஆமா. வைத்திய வரிகள்தான். ஒருவேளை அண்ணா வந்தா, வைத்தீஸ்வரன் கோயில்காரருக்குத் தட்டுப்படாத சங்கதி இதுல என்ன இருக்குன்னு எடுத்துக் காட்டுவான்’.

‘என்னமோ சொல்றே. எனக்கு ஒண்ணும் புரியலே’.

‘சிரமப்படாதிங்கோ மாமா. இனிமே இதெல்லாம் தெரிஞ்சிண்டுதான் என்ன ஆகப்போறது?’

‘ஒண்ணுமில்ல, இல்லே?’ மாமா சட்டென்று சிரித்தார். நான் அவர் கைகளைப் பற்றிக்கொண்டேன்.

‘ஒண்ணே ஒண்ணு கேக்கட்டுமாடா விமல்?’

‘தாராளமா’.

‘அக்கா போயிட்டான்னா நான் அதிக நாள் தங்கமாட்டேன். ஒரு நப்பாசை. எனக்குக் கொள்ளிபோடறதுக்கும் வருவேளான்னு..’

நான் அமைதியாக நின்றிருந்தேன். அவரே பிறகு சொன்னார், ‘எப்படி வருவேள்? உங்கப்பா போனதுக்கே வரலியே?’

‘சன்யாசிக்கு அம்மா மட்டும்தான் மாமா உறவு’ என்று சொன்னேன்.

வினோத் தனது பிரார்த்தனையை முடித்துவிட்டுக் கண்ணைத் திறந்தான். எழுந்துகொண்டான்.

‘முடிஞ்சிடுத்தா?’ என்று மாமா கேட்டார்.

‘கதவைத் திறங்கோ. அம்மாவைப் பார்க்கலாம்’ என்று சொன்னான்.

மாமா அந்த அறைக்கதவைத் திறந்தார். அம்மா ஒரு ரோமம் போல உதிர்ந்து கிடந்தாள்.

(தொடரும்)

 

http://www.dinamani.com/junction/yathi/2018/sep/24/136-நடை-திறப்பு-3006269.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

137. விதியும் ஸ்மிருதியும்

‘அக்கா, யாரு வந்திருக்கா பார்’ என்று கேசவன் மாமா சொன்னார்.

அம்மா கண்ணைத் திறக்கவில்லை. நானும் வினோத்தும் அவள் அருகே சென்று அமர்ந்துகொண்டோம். ‘தொடுங்கோடா. அப்ப கண்ண முழிப்பா’ என்று மாமா சொன்னார். நான் சிறிது தயங்கினேன். வினோத் யோசிக்கவேயில்லை. ‘தொந்தரவு பண்ண வேண்டாம் மாமா’ என்று சொன்னான்.

‘ஓ! தொடப்படாதோ?’ என்று மாமா கேட்டார்.

‘சேச்சே. அப்படியெல்லாம் இல்லை’ என்று சொல்லிவிட்டு நான் அம்மாவின் தலையை மெல்ல வருடிக் கொடுத்தேன். அவளிடம் சுவாசம் தவிர வேறெந்த அசைவும் இல்லை. அவளது கண்கள் இரண்டும் இரண்டு சிப்பிகளுக்குள் வைத்து மூடினாற்போலக் குழிந்து கிடந்தன. உதடுகளும் கன்னமும் ஒரே நிறமாயிருந்தன. முகத்தின் சுருக்கங்களை நீவி விரித்தால் முழு உடலுக்கும் போர்த்திவிடலாம் போலிருந்தது. ஒரு கொடிக் கயிறு போல இளைத்துவிட்டிருந்தாள்.

‘சாப்பிடறதே கிடையாது. நாலு வாய் தயிருஞ்சாம். அவ்ளோதான். போதும்னுடுவா. இன்னிக்கி நேத்தில்லே. அஞ்சாறு வருஷமாவே அவ்ளோதான்’.

‘நினைவிருக்கா?’ என்று வினோத் கேட்டான்.

‘சமயத்துல முழிச்சிண்டு பாப்பா. ஒரு வார்த்த, ரெண்டு வார்த்த பேசுவா. அடையாளம் தெரிஞ்சிண்டு பேசறாளா, தெரியாம பேசறாளான்னு கண்டுபிடிக்க முடியாது’.

‘ஃபேன் போட்டுக்கறதில்லியா?’ என்று கேட்டேன்.

‘இருக்கே. ஆனா போடறதில்லே. குளுர் தாங்காது அவளுக்கு’ என்று மாமா சொன்னார். நான் அம்மாவின் நாடி பிடித்துப் பார்த்தேன். உடனே, ‘என்ன தெரியறது?’ என்று மாமா கேட்டார். நான் பதில் சொல்லவில்லை. அறையை விட்டு எழுந்து வெளியே வந்தேன். வினோத் என்னிடம் வந்து ‘என்ன’ என்று கேட்டான்.

‘நீ சொன்னதுதான். மிஞ்சினால் இன்னும் ஒருநாள் தாங்குவாள். நாடி கிட்டத்தட்ட விழுந்துவிட்டது’ என்று சொன்னேன். அவன் நெடுநேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தான். மாமா அவன் பக்கத்தில் சென்று அமர்ந்துகொண்டு, ‘எத்தன வருஷம் கழிச்சி ரெண்டு பேரும் வந்திருக்கேள்? சந்தோஷமா உக்கார்த்தி வெச்சி தளிகை பண்ணிப் போடமாட்டமான்னு இருக்குடா. ஆனா முடியலியே!’ என்று கண்ணைத் துடைத்துக்கொண்டார்.

‘சிரமப்படாதிங்கோ. சாப்பிடறது எனக்கு ஒரு விஷயமே இல்லே’ என்று வினோத் சொன்னான். மாமா என்னைப் பார்த்தார். ‘ஒம்போது நாள் சாப்டாம இருப்பேன் மாமா. பசிக்காது’ என்று சொன்னேன்.

‘உடம்பு போயிடப் போறது பாத்துக்கோங்கோடா’.

‘உடம்பு போகத்தான் செய்யும்’ என்று வினோத் சொன்னான்.

மாமா சட்டென்று அவன் கையைப் பிடித்துக்கொண்டு, ‘எத்தனையோ வருஷம் எங்கெங்கோ சுத்தி, என்னென்னமோ கத்துண்டு வந்திருக்கே. பார்த்தாலே கையெடுத்துக் கும்பிடணும்னு தோணற மாதிரி முகத்துல தேஜஸ் தெரியறது. இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. அது ஏண்டா நம்மாத்துக்கு மட்டும் இப்படி ஒரு விதி? உலகத்துல எந்தக் குடும்பத்துலயும் இப்படி மொத்தமா வாரிக் குடுத்ததில்லியேடா!’

‘தெரியல மாமா’ என்று வினோத் சொன்னான்.

‘எதாவது சாபம் இருக்கும். இல்லேன்னா எந்தத் தலைமுறையிலயோ, யாரோ கேட்டு வாங்கின வரமா இருக்கும்’ என்று நான் சொன்னேன்.

‘வரமா! பெத்துப் போடறதையெல்லாம் சன்னியாசி ஆக்கறேன்னு எந்தத் தாய் சொல்லியிருப்பா? அதெல்லாம் சும்மா’.

‘ஆனா அந்த சுவடியிலே தெளிவா எழுதியிருக்கு மாமா’.

‘என்னன்னு?’

‘இந்தக் குடும்பத்துல பொறக்கற அத்தன பிள்ளைகளும் சன்னியாசியாத்தான் போவான்னு’.

‘நிஜமாவா?’

‘அப்படித்தான் அண்ணா சொன்னான். இந்த வம்சம் இதோட முடியறதுதான் விதி’.

‘அப்போ பகவான்னு ஒருத்தன் விதின்னு ஒண்ணை எழுதிண்டுதான் இருக்காங்கறியா?’

மாமா இப்படிக் கேட்டதும் நான் வெடித்துச் சிரித்துவிட்டேன்.

‘எதுக்கு சிரிக்கறே?’

‘கோயில்லயேதான் இருக்கேள். கைங்கர்யம்தான் பண்ணிண்டிருக்கேள். இத்தன வயசுக்கப்பறம் இப்படி ஒரு சந்தேகம் உங்களுக்கு வரலாமா?’

மாமா சட்டென்று சுருங்கிப் போனார். ‘தப்புதான். ஆனா நாளாக நாளாக, விரக்திதாண்டா ஏறிண்டே போறது. என்ன பெரிய கோயில், என்ன பெரிய பெருமாள்னு சமயத்துல தோணிப் போயிடறது’.

நாங்கள் இதற்கு பதில் சொல்லவில்லை. அமைதியாகவே இருந்தோம். சட்டென்று மாமா கேட்டார், ‘இந்த மாதிரி சன்யாசத்துல விரக்தி உண்டோ? எதுக்கு இது தண்டத்துக்குன்னு தோணுமோ?’

‘திணிச்சிருந்தா தோணும். சன்யாச மனசு தானா உண்டாகியிருந்தா தோணாது’ என்று சொன்னேன்.

‘இதைப் போய் யார் திணிப்பா?’

‘உண்டே. வினய் எப்படி சன்யாசியானான்னு நினைக்கறேள்?’

‘என்னடா சொல்றே?’

‘அண்ணா திணிச்சது அது. அவன் பாட்டுக்கு காஞ்சீபுரத்துல வேதபாடசாலைல படிச்சுட்டு எதாவது சேவாகால கோஷ்டில சேந்துண்டு, கல்யாணம் பண்ணிண்டு போயிருப்பான். வம்படியா அவனை வாலாஜாபாத் பஸ் ஸ்டாண்ட்ல பஸ்ஸை விட்டுக் கீழே இறக்கி நடுத்தெருவுக்கு இழுத்துண்டு போய் விட்டுட்டுப் போயிட்டான் ராஸ்கல்’ என்று சொன்னேன்.

‘அடக்கடவுளே. நிஜமாவா சொல்றே?’

‘அவனே சொன்னதுதான்’.

‘இல்லே மாமா. அவன் விதி மாறிடாம அண்ணா காபந்து பண்ணியிருக்கான். இவன் அதை வேற விதமா சொல்றான்’ என்று வினோத் சொன்னான்.

‘மாறித்துன்னா அது விதியா? ஸ்மிருதி’.

வினோத் இதற்கு பதில் சொல்லவில்லை. மாறாக மாமாவைப் பார்த்து, ‘எதுவும் தப்பாகலே மாமா. எங்க போனாலும் என்னவா ஆனாலும் அனுப்பி வெக்கறதுக்கு சரியா வந்துட்டோமா இல்லியா?’ என்று கேட்டான்.

‘சந்தோஷமா வாழ வெச்சிருக்கலாமேடா. அதவிடவா இது பெரிசு?’ என்று மாமா சொன்னார்.

நாங்கள் இருவருமே சிறிது யோசித்தோம். எதிர்பாராத விதமாக ஒரே சமயத்தில் பதில் சொன்னோம். ‘ஆமா. அதுல சந்தேகமே வேண்டாம்’.

மாமா ஒன்றும் சொல்லவில்லை. சிறிது நேரம் அழுதார். பிறகு எழுந்து சென்று ஸ்டவ்வை மூட்டி, வென்னீர் வைத்து டிக்காஷன் போட ஆரம்பித்தார்.

‘காப்பியெல்லாம் வேண்டாம் மாமா’ என்று நான் சொன்னேன்.

‘எனக்கு வேணும்டா’ என்று சொல்லிவிட்டு மூவருக்கும் காப்பி எடுத்து வந்து வைத்துவிட்டு மீண்டும் அமர்ந்துகொண்டார். ‘எடுத்துக்கோங்கோ’.

நாங்கள் அருந்தி முடிக்கும்வரை அவர் ஒன்று பேசவில்லை. ‘காப்பி நன்னாருக்கா?’ என்று கேட்டார்.

‘ருசி பாக்கறதில்லே’ என்று வினோத் சொன்னான்.

‘பிரமாதமா இருக்கு மாமா’ என்று நான் சொன்னேன்.

‘அதுசரி, வந்ததும் வராததுமா நேரா பத்மா மாமியாத்துக்குப் போயிட்டேளே, என்ன சமாசாரம்?’

நான் சிரித்தேன். ‘இவனுக்காகத்தான்’ என்று சொன்னேன்.

‘அவளே பாவம் தள்ளாம கெடக்கறா. நீ போய் நின்னதுல செத்துகித்துப் போயிட்டான்னா என்னடா பண்றது?’

‘கொள்ளி போட்டுட்டுப் போவேன் மாமா’ என்று வினோத் சொன்னான்.

‘ஐயோ. என்னடா இது?’

‘சொன்னேனே? வாழ வெக்கறதுன்னு நீங்க சொன்னதைவிட அதுதான் பெரிசு. இந்த உலகத்துல உள்ள அத்தன பொம்மனாட்டிகளும் எனக்கு தாயார் ஸ்தானம்’ என்று அவன் சொன்னதும். நான் வினோத்தை இறுக்கி அணைத்து நெற்றியில் முத்தமிட்டேன். அரை மணி நேரம் இப்படியே பேசிக்கொண்டிருந்த பின்பு மாமா சற்று சகஜமானார். வினோத்தைத் தேடி அவர் இலங்கைக்குப் போன கதையைச் சொன்னார். என்னைப் பார்க்க மடிகேரிக்கு வந்ததைச் சொன்னார். திருப்பதியில் அண்ணாவைப் பார்த்தது, வினய்யைத் தேடிக்கொண்டு ராமேஸ்வரத்துக்குப் போனது, ரேணிகுண்டாவுக்குப் போனது, திருவானைக்காவுக்குப் போனது என்று என்னென்னவோ சொன்னார்.

‘அடடே, நீங்க திருவானைக்கா போனேளா? எப்போ?’ என்று கேட்டேன்.

‘அதை ஏன் கேக்கறே? உங்கப்பா ஒரு நாள் யாரோ ஒரு ஜோசியரைப் போய்ப் பார்த்துட்டு வந்தார். எண்ணி எட்டு நாள்ள உம்ம நாலு பிள்ளைகள்ள ஒருத்தன் இருக்கற இடத்த பத்தி தகவல் தெரியும்னு அவர் சொல்லியிருக்கார். சொல்லி வெச்ச மாதிரி கோடாங்கி ஒருத்தன் ஆத்து வாசல்ல வந்து நின்னுண்டு திருவானைக்காவுக்குப் போய் ரெண்டாவது பிள்ளைய பாத்துட்டு வான்னு சொல்லிட்டுப் போயிருக்கான்’.

எனக்கு மிகவும் ஆர்வமாகிவிட்டது. ‘நிஜமாவா!’ என்று கேட்டேன்.

‘நான் ஏண்டா பொய் சொல்லப் போறேன்? இந்த மனுஷன் கெளம்புடா திருவானைக்காவுக்குன்னு என்னையும் அழைச்சுண்டு அன்னிக்கு ராத்திரியே வண்டி ஏறிட்டார்’.

‘அப்பறம்?’

‘அங்க போய் நாயா அலைஞ்சதுதான் மிச்சம். பர்ஸ் தொலைஞ்சி போயி கையில தம்பிடி காசு இல்லாம ரயில்வே லைன்ல நடந்தே திருச்சினாப்பள்ளி வரைக்கும் போனோம்’.

‘தப்பு பண்ணிட்டேள் மாமா’.

‘ஏண்டா?’

‘திருவானைக்கா ரயில்வே கேட் பக்கத்துலயேதான் அப்போ வினய் இருந்தான். தண்டவாளத்துல நின்னு பாத்தாலே அவன் இருந்த வீடு தெரியும்’.

‘எம்பெருமானே! என்னடா சொல்றே?’

‘நானும் ரெண்டு நாளோ மூணு நாளோ அந்த வீட்ல இருந்திருக்கேன்’.

‘யார் வீடு அது?’

‘சொரிமுத்துன்னு ஒரு சித்தர். அப்பவே ரொம்ப வயசானவர். அநேகமா போய்ச் சேர்ந்திருப்பார்’.

‘அப்படியா?’

‘அண்ணாவோட ஃப்ரெண்ட். அண்ணாதான் வினய்யை அங்க அனுப்பினது. என்னைப் பத்தி அவர்கிட்டே சொல்லி என்னை வந்து கூட்டிண்டு போகச் சொன்னதும் அவன்தான்’.

‘அடக்கடவுளே’.

‘ஞாபகம் இருக்கா உங்களுக்கு? ரங்கநாதர் கோயில்ல, சேவிக்கப்போன வரிசைல நின்னுண்டிருந்தேன். திடீர்னு காணாம போயிருப்பேன்’.

‘ஆமா, ஆமா!’

‘சொரிமுத்துதான் பொங்கல்ல அபின் கலந்து குடுத்து என்னைக் கூட்டிண்டு போனது’.

மாமாவால் இதையெல்லாம் நம்பவே முடியவில்லை. நெடுநேரம் பிரமை பிடித்தாற்போல இருந்தார். பிறகு சட்டென்று, ‘வினய் வருவானாடா?’ என்று கேட்டார்.

‘அவன் வந்துட்டான் மாமா. நேத்து ராத்திரி நாங்க மூணு பேரும் செல்லியம்மன் கோயில் திருவிழாவிலேதான் இருந்தோம்’.

‘அப்படியா? சொல்லியிருந்தா நானும் வந்திருப்பேனேடா’.

‘கவலைப்படாதிங்கோ. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவான்’ என்று வினோத் சொன்னான்.

ஆனால் மதியம் வரை வினய் வரவில்லை. எங்கே போயிருப்பான் என்று மாமா கவலைப்படத் தொடங்கினார். நான் வினோத்திடம் மட்டும் சொல்லிவிட்டு, வினய்யைப் போய் அழைத்து வரப் புறப்பட்டேன்.

(தொடரும்)

 

http://www.dinamani.com/junction/yathi/2018/sep/25/137-விதியும்-ஸ்மிருதியும்-3006925.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

138. ஒரு மரணமும் ஒரு கொலையும்

எனக்கு எல்லாமே வியப்பாக இருந்தது. எல்லாமே புதிதாக இருந்தது. ஊரும் அதன் தோற்றமும். உறவும் அதன் இடைவெளியும். கண்ணுக்குத் தெரியாமல் காலம் உருட்டி விளையாடும் கூழாங்கற்களாக எல்லோருமே ஆகிப் போய்விட்டோமென்று தோன்றியது. ஒரு விதத்தில் அந்த அனுபவம் எனக்குப் பிடித்திருந்தது. இன்னொரு பக்கம் எதற்கு இந்தப் பயணம் என்று தோன்றவும் செய்தது. வினய்யைச் சந்தித்தது, வினோத்தைச் சந்தித்தது, மாமாவைப் பார்த்தது, அம்மாவைப் பார்த்தது, பத்மா மாமி வீட்டில் பெருங்காய மோர் குடித்தது இதெல்லாம் நினைவில் சேர்த்து வைத்துக்கொள்ளக் கிட்டிய சம்பவங்களே அன்றி வேறெதற்காக நிகழ்ந்திருக்கும்? எனக்குப் புரியவில்லை. பாசம் அல்லது பரவசத்தின் சிறு தீண்டல்கூட மனத்துக்குள் நிகழவில்லை என்பதை விழிப்புடன் கவனித்துக்கொண்டிருந்தேன். நான் யாரையும் வெறுக்கவில்லை. யாரும் வேண்டாம் என்று எப்போதுமே எண்ணியதில்லை. ஆனால் எதுவும் இன்றியமையாததென்று எந்நாளும் உணர்ந்ததில்லை. குறிப்பாக உறவுகள். இது என்ன மனநிலை? ஏன் இது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை? அதுவும் புரியவில்லை. யோசித்துப் பார்க்கும்போது வினோத்தும் என்னைப் போலத்தான் இருந்தான் என்று தோன்றியது. அம்மாவைக் கண்டபோது அவனிடம் ஏதேனும் சலனம் தென்படுகிறதா என்று உற்றுக் கவனித்தேன். இல்லை. அமைதியாகத்தான் பார்த்தான். அமைதியாகவே அறையை விட்டு வெளியேறினான். மனத்தளவில் அனைத்தையும் உதறிவிட்டுத்தான் வாழ்ந்திருக்கிறோம் என்று தோன்றியது. சிறிது திருப்தியாகவும் இருந்தது. அது ஒரு குரூரமான திருப்தி என்றும் தோன்றியது. உலகம் புறங்கையால் தள்ளிவிடக்கூடிய பிரஜைகள்தாம். சந்தேகமில்லை. ஆனாலும் விலகியிருப்பதன் சொகுசு, வலியற்றுப் போவதில் உள்ளது. அது உலகுக்குப் புரியாது. புரியவும் வேண்டாமே?

நான் கிழக்கு கடற்கரைச் சாலையைக் கடந்து சவுக்குத் தோப்புக்குள் நுழைந்து கடற்கரை மணல் வெளியில் நீலாங்கரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மெயின் ரோடில் நின்றால் பஸ் வரும் என்று கேசவன் மாமா சொல்லியிருந்தார். எனக்கு பஸ்ஸில் போகவேண்டாம் என்று தோன்றியது. தவிர சீக்கிரம் போய், சீக்கிரம் திரும்பி என்ன ஆகப் போகிறது? அம்மா கண்மூடிப் படுத்திருப்பாள். முற்றத்தில் உட்கார்ந்து மாமா பழங்கதைகள் பேசுவார். அடிக்கடி கண்ணீர் வடிப்பார்.

ஒரு கண்ணீரின் எதிர்பார்ப்பை நான் அறிவேன். அது மிருதுவானது. புனிதம் நிரம்பியது. ஒற்றை விரலால் தொட்டு நகர்த்தும் நெருக்கம் எதிர்பார்ப்பது. எனக்குக் கண்ணீரைத் துடைக்கத் தெரியும். மற்ற யாரையும்விட அதைச் சிறப்பாகவே செய்வேன். ஆனால் யாரிடமும் அதில் பிரத்தியேகத்தன்மையை என்னால் வெளிப்படுத்த முடியாது. பாசத்தின் சாறில் என் விரல்கள் தோய மறுக்கின்றன. இந்த உலகில் பாசத்தை நிகர்த்த மாய யதார்த்தம் வேறில்லை என்று எனக்கு எப்போதும் தோன்றும். மனித குலத்துக்குத் தேவையே இல்லாத லாகிரிகளுள் ஒன்று அது. லாகிரியாகப் பயன்படுத்தலாம். எப்போதாவது. ஆனால் விழுந்துவிட்டால் எழுவது கடினம். உள்ளவற்றிலேயே ஆக போதையானது. கிறகத்தில் இருந்து மரணத்தை நோக்கி இட்டுச் செல்லக்கூடியது.

மாமாவுக்காக நான் ஏன் மரணமுற வேண்டும்? அவரோடு இருக்கும் நேரத்தைக் கூடியவரை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் வினய்யை அழைத்து வருவதாகச் சொல்லிவிட்டு நடந்தே புறப்பட்டேன். வினய் கிடைக்காவிட்டாலும்கூட மகிழ்ச்சியுடன் மீண்டும் நடந்தே வீடு திரும்புவேன் என்று நினைத்துக்கொண்டேன்.

திருவிடந்தை எல்லை கடந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்திருப்பேன். கடற்கரை மணலில் தனியே யாரோ அமர்ந்திருப்பது தொலைவில் தெரிந்தது. அது வினய்தான் என்று நினைத்தேன். அவனைத் தவிர இந்த ஊரில் உச்சி வெயிலில் சுடு மணலில் அசையாது அமரக்கூடியவர் வேறு யார்? அவன் அப்போது மேல் சட்டையின்றி இருந்தான். இதென்ன உக்கிரமான மத்தியான வேளை தியானம்? எனக்குச் சிரிப்பு வந்தது. நூறடி தூரத்தில் நெருங்கும்போதே அவனைப் பெயர் சொல்லி அழைத்தேன். அது அவன் காதில் விழவில்லை. எனவே மீண்டும் இன்னும் உரக்க அழைத்தேன்.

இப்போது திரும்பிப் பார்த்தான். நான் கையை உயர்த்தி ஆட்டினேன். வேகமாக அவனை நெருங்கினேன். என்னைக் கண்டதும் அவன் சிரித்தான்.

‘என்ன செய்கிறாய்?’

‘ஒன்றுமில்லை. சும்மா’ என்று சொன்னான்.

‘தியானமா?’

‘சேச்சே. அதெல்லாம் இல்லை’.

‘பிறகு?’

‘சொன்னேனே? சும்மாதான்’.

‘அதை நிழலில் போய் அமரக்கூடாதா? எதற்கு இப்படி வெயிலில் காய்கிறாய்?’

‘அதுவும் சும்மாதான்’.

நான் ஒரு கணம் அவனை உற்றுப் பார்த்தேன். அவனருகே அமர்ந்துகொண்டேன். மணல் மிகவும் சுட்டது. எனக்கு அந்தச் சூடெல்லாம் பழக்கமே இல்லை. என்னால் இயல்பாக அமர முடியவில்லை. அவன் அதைக் கவனித்தான். ‘நீ கஷ்டப்படுகிறாய். உனக்காக வேண்டுமானால் நான் எழுந்து வருகிறேன்’ என்று சொன்னான்.

‘எழுந்து எங்கே வருவாய்?’

‘நீ எங்கு சொல்கிறாயோ அங்கு. ஆனால் வீட்டுக்கு இப்போது வேண்டாம்’.

‘நீ நீலாங்கரை வைத்தியர் வீட்டுக்குப் போயிருப்பாய் என்று நினைத்து வந்தேன்’.

‘ஆம். வைத்தியரைக் காலையே பார்த்துவிட்டேன்’.

‘கஞ்சா கிடைத்ததா?’

‘ஓ!’ என்று தன் இடுப்பு மடிப்பில் சுருட்டி வைத்திருந்த ஒரு காகிதப் பொட்டலத்தை எடுத்து பிரித்துக் காட்டினான். வேண்டுமா என்று கேட்டான்.

‘எனக்கு வேண்டாம். உனக்கு வைத்துக்கொள். வைத்தியர் என்ன சொன்னார்?’

‘அவர் சொன்னதை அப்படியே உன்னிடம் சொன்னால் உன்னால் அதைத் தாங்க முடியுமா என்று தெரியவில்லையே?’

‘பரவாயில்லை சொல். நான் நிறைய அதிர்ச்சிகள் பார்த்தவன்’.

‘இது அதிர்ச்சியளிக்கும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் உன் சமநிலையை நிச்சயமாகப் பாதிக்கும்’.

‘அப்படியா?’

‘சரி. சொல்கிறேன். இத்தனை வருடங்களுக்குப் பிறகு நாம் ஊர் திரும்பியது எதற்காக?’

‘அம்மாவின் மரணத்தை எதிர்நோக்கி’.

‘ஆம். ஆனால் ஒரு மரணம் மட்டுமல்ல. ஒரு கொலையையும் நாம் தரிசித்தாக வேண்டும் என்று சொன்னார்’.

இது நான் எதிர்பாராத பதிலாக இருந்தது. ‘யார் யாரைக் கொல்லப் போகிறார்கள்?’ என்று கேட்டேன்.

‘அதை அவர் சொல்லவில்லை. ஆனால் உங்கள் குடும்பத்தில் ஒரு மரணம் நிகழும்போது ஒரு கொலையும் நிகழும் என்று சொன்னார்’.

‘ஓ. என்னவாம் காரணம்?’

‘தெரியவில்லை. ஏதோ ஒரு திட்டம் நடக்கிறது. அதில் அவர் ஏதோ ஒரு மூலையில் ஒரு கண்ணியாகப் பிணைந்திருக்கிறார். அதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஒன்று சொன்னால் நம்புவாயா? நம் நான்கு பேரில் யாரோ ஒருவர் இன்று அவரைச் சந்திக்க வருவோம் என்று அவர் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்’.

‘இரு. அவர் வைத்தியர்தானே? வேறொன்றும் இல்லையே?’

வினய் புன்னகை செய்தான். ‘சரியாகப் பிடித்துவிட்டாய். அவர் வெறும் வைத்தியரல்ல’.

‘சித்தரா?’

‘அப்படித் தெரியவில்லை. ஆனால் அத்தகையவர்களுடன் தொடர்பில் உள்ளவர் போலத் தெரிந்தது. நேற்றிரவு நீ சொரிமுத்துவைச் சந்தித்தாயாமே? அவர்தான் சொன்னார். உண்மையா?’

இது எனக்கு அதிர்ச்சியளித்தது. கோவளம் தர்கா அருகே நான் சந்தித்தது சம்சுதீன் இல்லை. சொரிமுத்து. கிழவனுக்கு இது மறுபிறப்பா அல்லது மறு உருவமா? தெரியவில்லை.

‘எனக்குச் சொல்லியிருக்கலாம் நீ.நானும் வந்து பார்த்திருப்பேன்’.

‘அதைவிடு. நான் பார்த்தது இரண்டு நிமிடங்கள். அவர் பேசியது இரண்டு வரி. நான் திரும்ப வந்து படுத்துவிட்டேன். நீ நன்றாக உறங்கிக்கொண்டிருந்ததால் உன்னிடம் சொல்லவில்லை. வினோத்துக்குத் தெரியும்’ என்று சொன்னேன்.

‘தவறு செய்துவிட்டாய் விமல். அவரிடம் நீ இன்னும் சிறிது பேச முயற்சி செய்திருக்க வேண்டும். இந்த வைத்தியர் சொல்லாமல் ஆட்டம் காட்டும் சங்கதியை அவனிடம் பெற்றிருக்க முடியும்’.

‘இரு. எனக்கு இந்த வைத்தியரைப் பற்றி ஒன்றும் தெரியாது. நீ ஏதோ பதற்றத்தில் இருப்பதுபோலத் தோன்றுகிறது. சற்று நிதானமாக நடந்ததைச் சொல்’ என்று சொன்னேன்.

அவன் சிறிது நேரம் அமைதியாக யோசித்தபடி இருந்தான். பிறகு என்னைப் பார்த்து சிரித்தான். ‘நான் வந்திருக்கவே வேண்டாம்’ என்று சொன்னான்.

‘ஏன்?’

‘தெரியவில்லை. ஆனால் அப்படித்தான் தோன்றுகிறது’.

‘இதோ பார் வினய். அம்மாவின் மரணத்தில் நாம் கலந்துகொள்ள வேண்டும் என்பது நமக்கு விதிக்கப்பட்டது. இதை நீ அறிவாய் அல்லவா?’

‘ஆம்’.

‘பிறகு அதை எப்படித் தவிர்க்க முடியும்?’

‘இல்லை. நான் அதைச் சொல்லவில்லை. எரியூட்டப்படும்போது வந்து நின்றுவிட்டு ஓடியிருக்க வேண்டும் என்று சொன்னேன்’.

‘உன்னை யாராவது கொன்றுவிடுவார்கள் என்று பயப்படுகிறாயா?’

‘இல்லை. நான் ஒரு கொலை செய்துவிடுவேனோ என்று அச்சப்படுகிறேன்’.

‘நீயா? நீ யாரைக் கொல்வாய்?’

‘தெரியவில்லை. ஒருவேளை வினோத்தாக இருக்கலாம்’ என்று வினய் சொன்னான்.

நான் அதிர்ந்து எழுந்து நின்றுவிட்டேன். அவன் என்னை உட்காரச் சொன்னான். அதிகாலை கோவளம் கடற்கரையில் இருந்து அவன் நீலாங்கரை நோக்கிப் புறப்பட்டது முதல் நடந்தவற்றை வரிசையாகச் சொல்ல ஆரம்பித்தான்.

(தொடரும்)

 

http://www.dinamani.com/junction/yathi/2018/sep/26/138-ஒரு-மரணமும்-ஒரு-கொலையும்-3007934.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

139. பத்து கிராம்

கோவளம் கடற்கரையில் இருந்து திருவிடந்தை எல்லையைத் தொட்டு கடலோரமாகவே வினய் நடந்துகொண்டிருந்தான். என்னவோ திடீரென்று ஓர் எண்ணம் எழுந்து, கடற்கரையை அடுத்த சவுக்குத் தோப்புக்குள் நுழைந்து அதன் வழியே நடக்க ஆரம்பித்தான். முதல் நாள் வினோத் பேசியதில் இருந்து அவனால் விடுபடவே முடியவில்லை. எத்தனை நம்பிக்கை அவனுக்கு! எவ்வளவு திட சித்தமுடன் தனது நம்பிக்கையை என்னுள் விதைக்கப் பார்க்கிறான்! நீ ஒன்றும் செய்ய வேண்டாம். பக்தி கூட அவசியமில்லை. கிருஷ்ணனின் நாம ஜபம் போதும்.

இந்தச் சொற்கள் திரும்பத் திரும்ப அவனை நிலைகொள்ளாமல் செய்துகொண்டிருந்தன. வாழ்வில் அவனளவு முட்டி மோதியவர்கள் இருக்க முடியாது. அவனளவு அடிபட்டவர்களும் இருக்க முடியாது. தோல்வியும் பசியும் அர்த்தநாரி. அவன் அப்படித்தான் பல்லாண்டுக்காலங்களைக் கழித்திருக்கிறான். ஒரு கல் தடுக்கி ஞானம் சித்திக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்த காலம் புரண்டோடிய பின்பு, வசியத்தின் மோகனப் புன்னகையில் வாழ்வை முடிந்து வைத்துக்கொள்ளப் பார்த்தான். அதுவும் நடக்கவில்லை. தெய்வங்களும் தேவதைகளும் சாத்தான்களும் பிரம்ம ராட்சதர்களும் இடாகினிப் பேய்களும் குட்டிச் சாத்தான்களும் ஒன்று சேர்ந்து கைவிட்ட பின்பு அவன் தற்கொலைக்கு முயற்சி செய்தான். அதிலும் தோற்ற பின்பு பிச்சை எடுத்துப் பிழைக்க ஆரம்பித்தான். பசியை மறக்க கஞ்சா குடிக்கத் தொடங்கி, துக்கம் தவிர்க்க அதையே உணவாக்கிக்கொண்டான்.

வாழ்வில் செய்து பார்க்க மிச்சம் ஒன்றுமில்லை என்ற முடிவுக்கு வந்தபோது அவனது கொதிப்புகள் அடங்கத் தொடங்கின. தன்னை மறைத்துக்கொண்டு தண்டகாரண்ய வனத்தில் அவன் சில காலம் வேட்டையாடி உண்டு வாழ்ந்துகொண்டிருந்தான். பிறகு அங்கிருந்து புறப்பட்டு, காளஹஸ்திக்குப் போய்ச் சேர்ந்தான். கோயில் வாசலில் தனது இருப்பிடத்தை அமைத்துக்கொண்டு தினமும் சிவனை வழிபட்டு வரலானான். கிடைக்கும் பிரசாதங்களை மட்டும் உண்டு, எந்த வேண்டுகோளுமின்றி சிவனைக் கும்பிட்டுக்கொண்டிருந்தது சற்றுத் திருப்தியாக இருந்தது. ஒரு கட்டத்தில் அது அலுத்து, அடுத்த இடம் தேடத் தொடங்கியபோதுதான், அம்மாவின் மரணம் நெருங்கிக்கொண்டிருக்கும் குறிப்பு சூட்சுமமாக அவனுக்குக் கிடைத்தது. காளஹஸ்தியில் இருந்து ரேணிகுண்டா வரை நடந்து வந்து டிக்கெட் இல்லாமல் ரயில் ஏறினான்.

வினோத்தை சந்திக்கும்வரை மீண்டும் ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என்ற எண்ணமே அவனுக்கு இல்லை. அம்மாவைக் கடைத்தேற்றிவிட்டு நேபாளத்துக்குப் போய்விடலாம் என்று எண்ணியிருந்தான். அங்கு சென்றும் செய்ய ஒன்றும் உத்தேசமில்லை. சும்மா தோன்றிய எண்ணம்தான். நேபாளத்தில் சிறிது காலம் இருந்துவிட்டு எங்காவது மலை உச்சியில் இருந்து விழுந்து உயிரை விட்டுவிடலாம் என்று எண்ணியிருந்தான். ஆனால் கிருஷ்ண ஜபம் மட்டுமே அவன் எண்ணியவற்றைக் கொண்டு வந்து தரும் என்று வினோத் சொன்னதை ஒரு பரீட்சார்த்தமாகவேனும் செய்து பார்த்துவிட மிகவும் விரும்பினான்.

காலை விடியும் முன்னரே அவன் உறக்கம் கலைந்து எழுந்துவிட்டான். நேரே கடலுக்குள் இறங்கி முங்கிக் குளித்தான். ஈரம் சொட்டச் சொட்ட நீலாங்கரை நோக்கி நடக்க ஆரம்பித்தான். பத்து கிராம் கஞ்சா அவனுக்குப் போதும். ஒரு நாள் முழுதும் பசி தாகமின்றி ஜபத்தில் உட்கார்ந்துவிடலாம். ஏழு மணிக்குள் வைத்தியரிடம் பேசி வேண்டியதை வாங்கிக்கொண்டு திரும்பிவிட வேண்டும் என்று எண்ணித்தான் கிளம்பினான். திருவிடந்தை சவுக்குத் தோப்பிலேயே அமரவும் அவன் எண்ணியிருந்தான். ஆனால் வைத்தியர் வீட்டுக்கு அவன் போய்ச் சேர்ந்தபோது மணி ஏழரை ஆகிவிட்டது. மிகவும் மெதுவாக நடந்திருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டான்.

வைத்தியர் வீட்டு வாசலில் அவரது மாணவர்கள் இரண்டு பேர் சில மூலிகைகளை முறங்களில் பரப்பி வெயிலில் உலர்த்திக்கொண்டிருந்தார்கள். வினய்யைக் கண்டதும் என்ன என்று கேட்டார்கள். சாமியைப் பார்க்க வேண்டும் என்று வினய் சொன்னான். ‘ஒரு நிமிடம் இருங்கள்’ என்று சொல்லிவிட்டு அவர்கள் உள்ளே போனார்கள்.

வினய் அந்த வீட்டின் வாசலில் நின்றிருந்தான். சிறிது நேரத்தில் சாமி தடியூன்றி வெளியே வந்தார்.

‘யாரு?’ என்று கேட்டார்.

வினய் தன் பெயரையோ அடையாளத்தையோ தெரிவிக்கவில்லை. மாறாக, மிகவும் நேரடியாக, ‘எனக்குச் சிறிது கஞ்சா வேண்டும். ஆனால் நான் போதை அடிமை அல்ல’ என்று சொன்னான்.

சாமி அவனை உற்றுப் பார்த்தார். என்ன நினைத்தாரோ, ‘போ, போ’ என்று சைகை செய்துவிட்டு உள்ளே போய்விட்டார். வினய் கிளம்பவில்லை. அவர் வீட்டு வாசலிலேயே சிறிது நேரம் அமர்ந்திருந்தான். தன் மனத்தைக் குவித்து அவர் வீட்டுக்குள் கஞ்சா எங்கே வைக்கப்பட்டிருக்கிறது என்று பார்த்தான். அது அந்த வீட்டின் மாடியில் இருந்த ஓர் அறைக்குள் பல்வேறு விதமான மூலிகைப் பொடிகள் அடங்கிய டப்பாக்களுக்கு நடுவே ஒரு துணியில் பந்து போல முடிந்து வைக்கப்பட்டிருந்தது.

இப்போது உள்ளிருந்து சாமியின் சீடன் ஒருவன் மீண்டும் வெளியே வந்தான். வினய் அங்கேயே அமர்ந்திருப்பதைக் கண்டு, ‘அவர் உங்களைப் போகச் சொல்லிவிட்டார்’ என்று சொன்னான்.

‘இங்கே வா’ என்று அழைத்து, ‘இந்த வீட்டின் மாடியறையில் சிவப்பு நிறத் துண்டில் சுற்றி கால் கிலோ கஞ்சா இருக்கிறது. நீயே அதில் இருந்து சிறிது கிள்ளிக் கொண்டு வந்து கொடுத்தால் நான் போய்விடுவேன். இல்லாவிட்டால் கால் கிலோவும் நஷ்டமாகும்’ என்று சொன்னான்.

அந்தப் பையன் பயந்துவிட்டான். வேகமாக மீண்டும் வீட்டுக்குள் சென்றான்.

சில விநாடிகளில் வெளியே வந்தவன், ‘சாமி உங்களை உள்ளே கூப்பிட்டார்’ என்று சொன்னான்.

வினய் எழுந்து வீட்டினுள் சென்றான்.

வீடு மிகவும் இருட்டாக இருந்தது. சுவர்கள் அனைத்தும் மிகப் புராதனமாகப் பாழடைந்து போய்க் கிடந்தன. உத்தரத்து மரக் கட்டைகள் எப்போதும் உடைந்து விழுந்துவிடும் போலிருந்தன. திருவிடந்தை வீட்டைப் போலவே முன்கட்டு, தாழ்வாரம், முற்றம், முற்றத்தின் இரு புறமும் தலா ஒரு அறை, பின்புறம் சமையல் கட்டு, அதனையடுத்த தோட்டம் என்ற அமைப்பு. ஒரே வித்தியாசம், சாமியின் வீட்டில் மாடி அறை ஒன்று இருந்தது. அது சிறியதாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அந்த அறையினைச் சுற்றி ஓடு வேய்ந்த தாழ்வாரம் இருந்தது. நல்ல காற்று வரும் என்று வினய் எண்ணிக்கொண்டான்.

அவன் உள்ளே போனபோது சாமி முற்றத்தை அடுத்த நடையோடியின் ஓரமாக ஒரு பலகையை முதுகுக்குச் சாய்மானமாகக் கொடுத்து அமர்ந்திருந்தார். செல்லியம்மன் கோயிலில் அவன் பார்த்த ரங்கநாத ஆச்சாரியோ, தெரிந்த வேறு யாருமோ அப்போது அங்கே இருக்கவில்லை. அவனைக் கண்டதும் சாமி, ‘உட்கார்’ என்று சொன்னார்.

வினய் அவர் எதிரே அமர்ந்தான்.

‘என்னா வோணும்?’

‘கஞ்சா’.

‘எதுக்கு?’

‘பத்து கிராம் போதும் எனக்கு. இன்னிக்கு ஒருநாள் சோறில்லாம உக்காரணும். அதுக்குத்தான்’.

‘யாரு நீ?’

என்ன சொல்லலாம் என்று அவன் சிறிது யோசித்தான். பிறகு, ‘ரேணிகுண்டாலேருந்து வரேன். அதுக்கு முன்ன காளஹஸ்தில இருந்தேன்’ என்று சொன்னான்.

‘பார்த்தா சன்னியாசியா தெரியலியே?’

‘அதெல்லாம் தெரியாது’.

‘சித்து தெரியுமோ?’

‘அது உங்களுக்குத் தேவையில்லாத சங்கதி. உங்ககிட்டே சிவ மூலிகை இருக்கு. எனக்கு அதோட தேவை இருக்கு. கொஞ்சம் குடுத்தா போதும். போயிடுவேன்’ என்று சொன்னான்.

சாமி சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. பிறகு தனது சீடனை அழைத்து கண்ணால் ஜாடை காட்டினார்.

சீடன் உள்ளே சென்று ஒரு தட்டில் நான்கு இட்லிகளும் தொட்டுக்கொள்ள மிளகாய்ப் பொடியும் வைத்து எடுத்து வந்து அவன் எதிரே வைத்தான்.

‘சாப்பிடு’ என்று சாமி சொன்னார்.

அவன் மறுக்காமல் அந்த இட்லிகளைச் சாப்பிட்டான். தண்ணீர் குடித்தான். தட்டிலேயே கை கழுவிவிட்டு தட்டை எடுத்துச் சென்று பின்புறம் தொட்டி நீரில் கழுவிக் கொண்டு வந்து சீடனிடம் கொடுத்தான். மீண்டும் சாமி எதிரே வந்து அமர்ந்து, ‘கொண்டுவர சொல்றிங்களா?’ என்று கேட்டான்.

ஆனால் அவன் வருவதற்குள் கஞ்சா மூட்டை இறங்கி வந்திருந்தது.

சாமி அதை அப்படியே பிரித்து அவன் எதிரே வைத்தார். ‘எவ்வளவு வேண்டும்?’ என்று கேட்டார்.

‘பத்து கிராம் போதும்’ என்றவன் தனது வலக்கரத்தின் மூன்று விரல்களைப் பயன்படுத்தி சிறிது எடுத்தான். கண்ணுக்கு நேரே வைத்துப் பார்த்து, ‘சரியா இருக்கும்’ என்று சொன்னான்.

‘இது இங்கே இருக்குன்னு உனக்கு எப்படித் தெரிஞ்சது?’ என்று சாமி கேட்டார்.

‘தரிசனம்’ என்று வினய் சொன்னான்.

‘வேறே என்னல்லாம் தெரியும்?’

‘ஒண்ணுமில்லே. நான் போகலாமா?’

சாமி மீண்டும் அவனை உற்றுப் பார்த்தார். பிறகு, ‘போதையோடு மாத்ரு கர்மா செய்யக் கூடாது’ என்று சொன்னார்.

(தொடரும்)

 

http://www.dinamani.com/junction/yathi/2018/sep/27/139-பத்து-கிராம்-3008749.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

140. தவப் பயன்

வினய்க்கு அந்த வைத்தியர் சாமியுடன் உரையாட விருப்பமில்லாமல் இருந்தது. அவருடன் என்றில்லை. அவனது மனநிலை அப்போது கிருஷ்ண ஜபம் தொடங்குவதைத் தவிர வேறெதையும் விரும்பாததாகவே இருந்தது. ஒரு லட்சம் என்பது எளிய எண்ணிக்கை. ஒரு விளையாட்டுப் போலவே செய்து முடித்துவிட முடியும். ஒருவேளை வினோத் சொன்னது பலித்துவிட்டால் நல்லதுதானே. ஆனால் சாமி அவனைக் கிளம்ப விடமாட்டார் போலத் தெரிந்தது. ஒரு குத்து மதிப்பாகத்தான் அவர் தன்னை யாரென்று தெரிந்துகொண்டிருக்க வேண்டும் என்று அவன் நினைத்தான். உன்னைப் பார்த்தால் சன்னியாசியாகத் தெரியவில்லை என்று அவர் சொன்னது சீண்டிப் பார்ப்பதற்காக இருக்கலாம் என்று தோன்றியது. என்னவானாலும் தன் கட்டுப்பாட்டை விட்டுவிடக் கூடாது என்று வினய் முடிவு செய்துகொண்டான். சிறிதளவு எரிச்சலுற்றாலும் அது தன் நோக்கத்தில் இருந்து நகரச் செய்துவிடும் என்று பட்டது. எனவே வைத்தியரே கிளம்பச் சொல்லும்படியாக அவரது கேள்விகளுக்கு பதில் சொல்வது என்று முடிவு செய்துகொண்டான்.

 

 

‘எனக்கு உங்கம்மாவ தெரியாது. உங்கப்பாவையும் தெரியாது. உங்க நாலு பேரையுங்கூடத் தெரியாதுதான். ஆனா உங்கள பத்தி ஒருத்தன் அடிக்கடி பேசுவான். நெறைய சொல்லுவான்’ என்றார் சாமி.

யார் அது என்று இப்போது கேட்க வேண்டும். வினய் அந்தக் கேள்வியைத் தவிர்க்க விரும்பி, ‘ஓஹோ, அப்படியா?’ என்று சொன்னான்.

‘உங்கண்ணன் எங்க இருக்கான்னு உனக்குத் தெரியுமா?’ என்று சாமி கேட்டார்.

தெரியும் அல்லது தெரியாது என்ற பதில் போதும் என்றாலும், வினய் ‘எனக்கு அண்ணன் தம்பிகளெல்லாம் இல்லை’ என்று சொன்னான்.

‘அம்மா மட்டும் இருக்காளாக்கும்’.

‘ஆமா’.

‘அந்தவரைக்கும் சந்தோசம். விடு, உன்னாண்ட ஒரு விசயம் சொல்லணும்’ என்று சாமி சொன்னார்.

தன்னிடம் பேச அவருக்கு என்ன இருக்க முடியும் என்று வினய்க்கு ஆச்சரியமாக இருந்தது. முன்பின் அறிமுகமில்லாத மனிதர். காவிதான் உடுத்தியிருக்கிறார். ஆனால் வீட்டில் ஒரு புராதனமான குடும்ப போட்டோ இருக்கிறது. அதில் அவர் நாற்காலியில் அமர்ந்திருக்க, அவரது மனைவி பண்டைய நாகரிகத்தை ஒட்டி அருகே நின்று போஸ் கொடுத்துக்கொண்டிருக்கிறார். முழங்கால் உயரத்துக்கு ஒரு சிறுவனும் படத்தில் இருக்கிறான்.

பிரச்னை இல்லை. பிறகு சன்னியாசி ஆகியிருக்கலாம். அல்லது செய்யும் தொழிலுக்கு இது வசதி என்று நினைத்திருக்கலாம்.

‘என்ன, சொல்லுங்கள்’ என்று வினய் கேட்டான்.

‘இது ஒரு சூட்சுமம். ஆனா இத உனக்கு சொல்லணுன்னு எனக்கு விதி. உங்கம்மா உசிரு போன கொஞ்ச நேரத்துல உன் குடும்பத்துல இன்னொரு உசிரு போகும். ஆனா இயற்கையா இல்லே. ஒரு கொல விழப்போகுது’ என்று அவர் சொன்னார்.

வினய்க்கு ஒன்றும் புரியவில்லை. சிறிது நேரம் ஏதும் பேசாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு, ‘எனக்குக் குடும்பமெல்லாம் இல்லை. சாவு பத்தி நான் யோசிக்கறதில்லை’ என்று சொன்னான்.

‘நீதான் சாவேன்னு நான் சொல்லல. உங்க குடும்பத்துல ஒருத்தர்’.

‘எனக்குக் குடும்பமெல்லாம் இல்லை’ என்று மீண்டும் சொன்னான்.

அவர் அதைக் கண்டுகொள்ளாமல், ‘உனக்கு இதைச் சொல்லணுன்னு எனக்கு உத்தரவு. சொல்லிட்டேன்’.

‘யாரோட உத்தரவு?’

‘சொன்னா தெரியுமா. அவர் ஒரு சித்தர்’.

வினய் சிரித்தான். ‘பரவால்ல சொல்லுங்க தெரிஞ்சிக்கறேன்’.

‘தெரியாது ஒனக்கு. ஏன்னா எனக்கே தெரியாது அவரை. தேவைப்பட்டா இந்த மாதிரி உத்தரவு மட்டும் அனுப்புவாரு’.

‘ஓ. எங்கேருந்து?’

‘திருவானைக்கா. ஆனா இப்பம் அவரு இங்க வந்திருக்காரு’.

வினய் சட்டென்று எழுந்துவிட்டான். ‘சொரிமுத்துவா?’ என்று கேட்டான். சாமிக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. ‘தெரியுமா ஒனக்கு?’ என்று கேட்டார்.

‘இங்க வந்திருக்காரா? எங்க இருக்காரு?’

அவன் கேட்டதை அவர் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை. ‘ஒரு நிமிசம் இரு’ என்று சொல்லிவிட்டு, எங்கோ ஒலிக்கும் ஏதோ ஒரு சத்தத்துக்குக் காது கொடுப்பவர்போலக் காதில் கைவைத்து எதன் மீதோ தனது கவனத்தை நிறுத்தினார். சட்டென்று கையை எடுத்துவிட்டு, ‘ஒண்ணுந்தெரியாத மாதிரி கேக்குற? நேத்து ராத்திரியே ஒன்ன பாத்துட்டாராமே?’ என்று சொன்னார்.

வினய் சிறிது நேரம் அமைதியாக யோசித்தான். ஏதோ நிகழ்கிறது என்று புரிந்தது. தொடர்பற்ற சம்பவங்களைத் தொகுத்துப் பார்த்தால் ஏதாவது புரியும். முந்தைய நாள் இரவு அவன் கடற்கரை மணலில் படுத்து உறங்கினான். சொரிமுத்துவை அவன் காணவில்லை. ஆனால் நடுவே உறக்கம் கலைந்து அவன் கண் விழித்துப் பார்த்தபோது அருகே படுத்திருந்த நான் அங்கே இல்லை. எனவே, சொரிமுத்து என்னைத் தான் சந்தித்திருக்க வேண்டும் என்று வினய்க்குத் தோன்றியது.

இந்த வைத்தியர் சாமி, சொரிமுத்துவுக்கு ஒரு வேலையாளாக இருக்கலாம். ஆனால் இவர் சித்தரல்ல. நிச்சயமாக அல்ல என்று வினய் நினைத்தான். சொரிமுத்து, கருவிகள் உதவியின்றித் தான் தெரிவிக்க நினைப்பதை இவர் செவிகளுக்குக் கடத்திவிடுகிறார் என்பது புரிந்தது. அது எப்படி நிகழ்கிறது என்பது இவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை என்றும் அவனுக்குத் தோன்றியது.

நான்கு பேரில் ஒருவனைச் சந்தித்தேன் என்று சொரிமுத்து சொல்லியிருக்கலாம். அல்லது விமல் என்று பெயர் சொல்லியே கூடத் தெரிவித்திருக்கலாம். வைத்தியர் சாமிக்கு எங்கள் நால்வரையுமே பரிச்சயம் கிடையாது என்பதால் வினய்யைத்தான் சொரிமுத்து சந்தித்திருக்கிறார் என்று நினைத்துவிட்டார்.

வினய்க்கு உடனே சொரிமுத்துவைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. எத்தனை உன்னதமான மனிதர்! உடன் இருந்த நாள்களில் அவரது அருமையைத் தான் சரியாக உணரவில்லை என்று இப்போது நினைத்தான். எந்த சக்தி தன்னைத் திரும்ப சொரிமுத்துவிடம் போய்ச் சேராமல் தடுத்திருக்கும் என்று அவன் பல்லாண்டுக்காலம் யோசித்திருக்கிறான். விடை தெரியவில்லை. முடிந்தால் சொரிமுத்துவிடமே அதைக் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். அவனுக்குச் சொரிமுத்து இன்னமும் உயிரோடு இருப்பதே அதிசயமாக இருந்தது.

‘கேட்டனே. உனக்கு அவர தெரியுமா?’ என்று சாமி கேட்டார்.

‘யாரை?’

‘நீ சொன்னவரைத்தான்’.

தெரியும் என்று சொல்வதா, தெரியாது என்று சொல்வதா என்று வினய்க்குக் குழப்பமாக இருந்தது. எதற்கும் இருக்கட்டும் என்று ‘கேள்விப்பட்டிருக்கேன்’ என்று சொன்னான்.

‘செரி. சொல்லச் சொன்னாரு. சொல்லிட்டேன். பாத்துக்க’ என்று சொன்னார்.

உரையாடலை அங்கே முடித்துக்கொள்ளலாம் என்று வினய் தீர்மானித்தான். சட்டென்று கைகூப்பி, ‘நான் கெளம்புறேன்’ என்று சொல்லிவிட்டு பதிலுக்கு நிற்காமல் வேகமாக வெளியேறிச் சென்றான். நிகழவிருக்கும் கொலையில் சிக்கப்போவது யார் என யோசிக்க வேண்டாம் என்று வீட்டு வாசலை விட்டு இறங்கும்போதே அவன் முடிவு செய்தான். யாராக இருந்தால் என்ன? விதியின் செயல்பாடுகளை மாற்ற இயலாது. காரணம் வேண்டுமானால் தேடலாம். ஆனால் அதனால் மட்டும் என்ன பயன்? வாழ்வைக் குறித்தும் மரணத்தைக் குறித்தும் அவன் யோசிப்பதை நிறுத்தி வெகுகாலம் ஆகிவிட்டிருந்தது. இடையிடையே பசியைக் குறித்து யோசிக்கவேண்டி இருந்தது. பசியற்று அலைந்து திரிவதற்கான நிரந்தர வழி ஏதும் இருக்குமா என்று சிறிது காலம் ஆராய்ச்சி செய்திருக்கிறான். உணவைத் துறந்தாலும் அந்நினைவைத் துறக்க முடியாமல் போயிருக்கிறது. உண்மையில் பசியென்பது வயிற்றில் அல்ல; நினைவில் பிறப்பது என்று அவனுக்கு எப்போதும் தோன்றும். நினைவைத் துறக்கத் தவத்தினும் சிறந்த உபாயமில்லை. தவம் நடைபெறுவதற்குப் பசி மறக்க வேண்டியது அவசியம்.

என்ன அழகான மாய வளையம்! யோசித்தபடியே அவன் திருவிடந்தை சவுக்குக் காட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். வழியில் ஒரு பெட்டிக் கடையில் நின்று ஒரு காஜா பீடி மட்டும் வாங்கிக்கொண்டான். கடையில் இருந்த தீப்பெட்டியில் இருந்து இரண்டு குச்சிகளையும் ஒரு காலிப் பெட்டியையும் கேட்டு எடுத்துக்கொண்டு நடக்கத் தொடங்கினான். சவுக்குக் காட்டை அவன் சென்றடைந்தபோது வெயில் நன்றாக ஏறிவிட்டிருந்தது. கடலில் இருந்து வீசிய காற்று மிதமாகச் சுட்டது. அவன் காட்டை மெல்லச் சுற்றி வந்தான். பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்வதே அவனது அப்போதைய கவலையாக இருந்தது. பொதுவாக யாரும் வரமாட்டார்கள்தான். தப்பித்தவறி யாராவது வந்து தவத்தைக் கெடுத்துவிட்டால்தான் சிக்கல். ஆனால் வேறு வழியில்லை. இந்தப் பிராந்தியத்தில் இதனைக் காட்டிலும் வேறு சிறந்த இடம் இருக்கப் போவதில்லை என்று நினைத்தான்.

ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தான். சட்டென்று ஒரு யோசனை வந்தது. உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டு ஜபிக்கத் தொடங்கினால் யாராவது வந்து குரல் கொடுக்கும் அபாயம் இருக்கிறது. இதுவே படுத்துக்கொண்டு ஆரம்பித்தால்? யாரோ பரதேசி தூங்குகிறான் என்று எண்ணிக்கொண்டு அப்பால் சென்றுவிட வாய்ப்புள்ளது அல்லவா? எனவே படுத்தபடி ஜபத்தை நிகழ்த்த அவன் முடிவு செய்தான். வாங்கி வந்திருந்த பீடியைப் பிரித்து புகையிலைத் தூளைக் கீழே கொட்டினான். சாமியிடம் இருந்து வாங்கி வந்த கஞ்சா இலைகளைக் கசக்கி அதனுள் திணித்தான். பற்ற வைத்து ஆழமாக இழுத்துப் புகைத்தான். மனத்தை ஓங்காரத்தில் நிறுத்த முயற்சி ஆரம்பித்தான். அது நெடுநாளாகிவிட்டது. ஒரு காலத்தில் ஏழெட்டு விநாடிகளுக்குள் அவனால் தன் மனத்தை ஒரு கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும். நாளெல்லாம் தன்னை மறந்து தவப்பொருளைச் சிந்தித்தபடி இருப்பான். வெறுப்பும் விரக்தியும் மேலோங்கத் தொடங்கியபின்பு அவன் தவம் புரிவதை நிறுத்திவிட்டான்.

பல்லாண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் ஒரு முயற்சியை ஆரம்பித்திருக்கிறோம் என்பதே அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. இதுவரை எண்ணிக்கூடப் பார்த்திராத கிருஷ்ணனின் வடிவத்தை மனத்துக்குள் கொண்டு வந்து நிறுத்தப் பார்த்தான். ஓங்கார வடிவத்துக்குள் கிருஷ்ணனைப் பொருத்தி அப்படியே தூக்கித் தன் புருவ மத்தியில் வைத்தான். இரு விழிகளையும் மனத்துக்குள் குவித்து அதை தரிசிக்க ஆரம்பித்தான். கஞ்சாவின் போதை சிரசைத் தொட்ட கணத்தில் சட்டென்று ஜபத்தைத் தொடங்கினான். கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண.

சிறிது நேரத்தில் அவனுக்கு இடம் காலம் அனைத்தும் மறந்து போனது. வெளிச்சமும் இருளுமற்றுப் போய் சிந்தை வெளியெங்கும் நீலமானது. ஒரு புள்ளியாகத் தோன்றிய நீலம் மெல்ல மெல்ல விரிந்து வானும் கடலுமாக வியாபித்தது. பிறகு அதுவே புவியானது. புவியில் இருந்து மெல்ல மெல்ல அவன் நகர்ந்து பிரபஞ்ச வெளியில் விழுந்தபோது அதுவும் நீலமாகவே காட்சியளித்தது. நட்சத்திரங்கள் நீலமாயின. கிரகங்கள் நீலநிறத் தோற்றம் கொண்டன. நிலவு நீலமானது. நீலம் ஒரு நாகமாக உருப்பெற்று கதிரவனைத் தீண்டுவதற்காக ஊர்ந்து ஊர்ந்து நகர்ந்து போனது. நீண்டு நெளிந்த அதன் நாவும் நீலமாகவே இருந்தது. சூரியனை அது தொட்டு நீலம் அதனுள்ளும் பரவும்போது தனக்குக் கிருஷ்ண தரிசனம் கிட்டிவிடும் என்று அவன் நினைத்தான். அதனையே இலக்காக வைத்து அவன் நகர்ந்து நகர்ந்து போய்க்கொண்டே இருந்தான்.

‘போதும், கண்ணைத் திற’ என்றொரு குரல் கேட்டது. கிருஷ்ணா என்று அலறிக்கொண்டு வினய் கண்ணைத் திறந்து பார்த்தான்.

சித்ரா நின்றுகொண்டிருந்தாள்.

(தொடரும்)

 

http://www.dinamani.com/junction/yathi/2018/sep/28/140-தவப்-பயன்-3009410.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

141. அடைப்பு

முதலில் அது ஒரு தோற்றப்பிழை என்று வினய்க்குத் தோன்றியது. உடனே அவமானமாகவும் குற்ற உணர்வு கூடியும் சட்டென்று ஒரு துக்கம் திரண்டெழுந்து நெஞ்சை மிதித்தது. அவன் கிருஷ்ணனை நினைத்துத் தவமிருந்தான். கிருஷ்ணனைத் தவிர வேறெதையுமே அந்நேரம் அவன் நினைக்கவில்லை. தன்னியல்பான பக்தி கூடாத மனத்தை ஒருமுகப்படுத்தவும் தன்னை அற்பமாக்கிக் கிடத்தவும் நாமஜபம் உதவும் என்று வினோத் சொல்லியிருந்தது சரிதான் என்று அவன் தனது முயற்சியைத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே உணர்ந்திருந்தான். திரும்பத் திரும்ப உச்சரித்துக்கொண்டே இருந்தபோது கிருஷ்ணன் இனிக்கத் தொடங்கியிருந்தான். அவனது குழலின் ஓசையே நீல நிறமாகிப் பரவி வெளியெங்கும் நிறைந்திருந்ததாக அவனுக்குத் தோன்றியது. அதில் நீந்தித் திளைக்க சுகமாக இருந்தது. நோக்கத்தைக்கூடக் களைந்துவிட்டுக் கிருஷ்ணனில் கரைந்துவிடலாம் என்று அவனுக்கு ஒரு கட்டத்தில் தோன்றியது. ஒரு பிணத்தைப் போல அவன் மணல் வெளியில் விழுந்து கிடந்தான். சிந்தை ஒன்றைத் தவிர வேறெதுவும் இயங்கா நிலையை எய்திவிட்டிருந்தான். உடலெங்கும் ஏறிக் கடித்த சிற்றெறும்புகளும் அவனது சடையை ஒரு வலையென எண்ணி உள்நுழைந்து வெளியேறிய சிலந்திகளும் காற்றில் திரண்டெழுந்து முகமெங்கும் பரவிய மணல் துகள்களும் அவனுக்கு ஒரு பொருட்டாக இல்லை. அந்தக் குரல் வராதிருந்தால் அவன் நாளெல்லாம் ஜபத்தைத் தொடர்ந்திருப்பான். போதை கலைந்து நிதானம் ஏறும்வரை அது நீண்டு நிறைந்திருக்கும். லட்சம் என்பதெல்லாம் என்ன? தொடங்குவதற்கு ஓர் இலக்கு. அவ்வளவுதான். உள்ளே மூழ்கிய பின்பு எண்ணிக்கைகளுக்கு அர்த்தமில்லை. ராய்ப்பூரில் அவனது நண்பன் ஒருவன், ஒரு சமயம் நாற்பது நாள் தவம் என்று அறிவித்துவிட்டு உட்கார்ந்தான். எண்ணி இருபது நிமிடங்களில் அவனது தவம் முடிந்துவிட்டது. பெரும் பரவசக் கூச்சலோடு எழுந்து நின்று கூத்தாட ஆரம்பித்தான். என்ன விஷயம் என்று வினய் கேட்டதற்கு, ‘என் தவத்துக்குப் பலன் கிட்டிவிட்டது. எனக்கு இந்திர தரிசனம் சித்தித்துவிட்டது’ என்று சொன்னான்.

 

 

தனக்கு அம்மாதிரியான அதிர்ஷ்டங்களுக்கு வாய்ப்பில்லை என்று வினய்க்கு எப்போதும் தோன்றும். முட்டி மோதி உதிரம் உலர்ந்து நாடி நரம்புகள் தளரும் நேரத்தில்தான் பிழைத்துப் போ என்று சில பத்து காசுப் பிட்சைகள் விழும். ஆவிகளை அடையாளம் காணவும் அவற்றை இழுத்து நிறுத்திப் பேசவும் வசியப்படுத்தி வைத்துக்கொள்ளவும் அவன் பயின்றதும் தேர்ச்சியடைந்ததும் அவ்வாறு நிகழ்ந்ததுதான்.

வினய் அப்போது கேரளத்தில் இருந்தான். முகம்மது குட்டியையெல்லாம் மறந்து பன்னெடுங்காலமாகியிருந்தது அப்போது. எங்கெங்கோ அலைந்து திரிந்துவிட்டு இறுதியில் ஒரு மலையாள நண்பனின் ஆலோசனையின் பேரில் எர்ணாகுளத்துக்கு வந்து தங்கியிருந்தான். தாந்திரிக விற்பன்னரான நம்பூதிரி ஒருவரிடம் சில காலம் தங்கிப் பயில அவனுக்கு அனுமதி கிடைத்திருந்தது. அது அந்த நண்பன் ஏற்பாடு செய்தது. குறிப்பிட்ட சில ஆவிகளை அடக்கியாள அவனுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. ஆனால் அவன் விரும்பியது வேறு. உலகெங்கும் சுற்றித் திரிந்துகொண்டிருக்கும் எந்த ஒரு ஆவியையும் நினைத்த கணத்தில் தன் புறம் ஈர்க்கவும் தனது பணியில் ஈடுபடுத்தவும் முடியுமா என்று அவன் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தான். அது முடியக்கூடிய ஒன்றுதான் என்று கல்கத்தாவில் அவனுக்கு அறிமுகமான வயது முதிர்ந்த ஆவியுலக ஆய்வாளர் ஒருவர் சொன்னார். எப்படி முடியும், என்ன செய்ய வேண்டும் என்று வினய் கேட்டபோது அவர்தான் அந்தக் கேரள இளைஞனை அவனுக்கு அறிமுகப்படுத்தியது.

‘இவன் பெயர் குட்டப்பன். எர்ணாகுளத்தைச் சேர்ந்தவன். இவனது சித்தப்பாவால் உனக்கு அந்தக் கலையை போதிக்க முடியும்’ என்று அவர் சொன்னார்.

வினய் குட்டப்பனுக்கு வணக்கம் சொன்னான். தன் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டான். தன்னைப் போன்ற தேடலில் உள்ள இன்னொருவனைக் கண்டதும் குட்டப்பனுக்கும் மகிழ்ச்சி உண்டானது. அவன் சில வசிய மருந்துகளைச் செய்யும் விதத்தைக் கற்பதற்காகக் கல்கத்தாவுக்கு அப்போது வந்திருந்தான்.  அவன்தான் வினய்க்குத் தன் சித்தப்பா என்ன செய்கிறார் என்பதைப் பற்றிச் சொன்னான்.

‘இருபத்தி ஏழு நட்சத்திரங்களுள் பதிமூன்று நட்சத்திரங்கள் சிறிது சிக்கல் வாய்ந்தவை. அவை தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் என்று அழைக்கப்படும். அந்தப் பதிமூன்று நட்சத்திரங்களில் இறந்தவர்களை மட்டும்தான் நாம் நமது காரியங்களுக்குப் பயன்படுத்த முடியும்’ என்று அவன் சொன்னான்.

‘அப்படியா?’

‘ஆம். உதாரணமாக அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதியில் இறந்தவர்கள் என்ன முட்டி மோதினாலும் ஆறு மாதங்களுக்கு எமனுலகம் போக முடியாது. அந்த ஆறு மாத அடைப்பு அவர்களுக்கு இருந்தே தீரும்’.

‘ஓ!’

‘ரோகிணியில் இறந்தால் நான்கு மாத அடைப்பு. உத்திரத்தில் உயிர் போனால் மூன்று மாத அடைப்பு. மிருகசீரிஷம், புனர்பூசம், உத்திராடம் இதிலெல்லாம் இறந்தால் இரண்டு மாத அடைப்பு நிச்சயம். என் சித்தப்பா இன்னும்கூட நிறைய சொல்லுவார். பிரச்னை என்னவென்றால் ஒருவர் இறந்தால் உடனே நாம் திதியைத்தான் கவனிப்போம். நட்சத்திரத்தைப் பார்க்க மாட்டோம். ஆனால் நட்சத்திரத்தை கவனித்தால்தான் நமக்கு லாபம்’ என்று குட்டப்பன் சொன்னான்.

‘ஆனால் குறுகிய காலம்தான் அந்த ஆத்மாக்களைப் பயன்படுத்த முடியும் அல்லவா?’

‘அதில் சந்தேகமில்லை. ஆனால் ஆயிரம் பல்லாயிரம் ஆவிகளைக் கட்டிவைக்க முடியும் என்று என் சித்தப்பா சொல்லுவார். குறிப்பாகப் பூரட்டாதி, உத்திரட்டாதியில் இறந்தவர்கள் சுமார் இருபதாயிரம் பேர் என் சித்தப்பாவுக்கு சேவகம் செய்கிறார்கள்’.

இருபதாயிரம் பேர் வேலை செய்யும் ஒரு தொழிற்சாலையை வினய் கற்பனையில் விரித்துப் பார்த்தான். சிரிப்பு வந்தது. இது ஒரு சாகசம் அல்லவா! எத்தனை பேருக்கு சாத்தியமாகும்! ‘உன் சித்தப்பாவை நான் சந்திக்க வேண்டும்’ என்று வினய் சொன்னான்.

குட்டப்பன் வந்த காரியத்தை முடித்துக்கொண்டு ஊர் திரும்பும்போது, வினய்யை உடன் அழைத்துச் சென்றான். ஆனால் அவனது சித்தப்பா வினய்யை ஏற்றுக்கொள்ள மிகவும் தயக்கம் காட்டினார். அவனுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தவற்றைக் குறித்து மிகவும் கவனமாக விசாரித்து அறிந்தார். அவன் கட்டை விரலுக்குள் அடைத்து வைத்திருந்த இடாகினியை வெளியே விடச்சொல்லி சிறிது நேரம் அதனோடு பேசிப் பார்த்தார். ‘இது ஒன்றுதானா?’ என்று கேட்டார்.

‘இல்லை. எனக்கு வேறு இரண்டு ஆவிகளின் சகாயம் உண்டு’.

‘என்ன செய்யும் அவை?’

‘தரிசன லாபங்கள் ஒன்றன் மூலம் கிட்டும். இன்னொன்றைக் கொண்டு காணாமல் போன பொருள்களை மீட்டெடுப்பேன்’.

‘அவ்வளவுதானா?’

அவன் சிறிது யோசித்துவிட்டு, ‘ஆமாம். அவ்வளவுதான்’ என்று சொன்னான்.

குட்டப்பனின் சித்தப்பாதான் முதல் முறையாக வினய்க்கு ஒரு விஷயத்தைச் சொன்னது. ஆறு மாத காலத்துக்கு மேல் ஆவியாக அலைந்துகொண்டிருப்பவற்றோடு சிநேகிதம் கூடாது. அந்தப் பழக்கம் வாழ்வை நசியச் செய்துவிடும். தனிஷ்டா பஞ்சமி காலம் முடிந்து எமனுலகம் கிளம்பும்போதே விடை கொடுத்துவிட வேண்டும். இன்னொரு முறை அதைத் திரும்பிக்கூடப் பார்க்கக் கூடாது.

‘அப்படியா?’

நீ உன்னுடைய இரண்டு சினேகிதங்களையும் தொலைத்துவிட்டு வந்து சேர்ந்தால், உனக்குக் கற்றுத் தருவதைக் குறித்து யோசிக்கலாம்’ என்று அவர் சொன்னார்.

வினய்க்கு இது மிகுந்த குழப்பம் அளித்தது. ஆனால் இடாகினியைப் பற்றி அவர் ஒன்றும் சொல்லவில்லை என்பது சற்று நிம்மதியாக இருந்தது. மறுநாள் ஒரு சிறிய சடங்குக்குப் பிறகு அவன் தன்னோடு தொடர்பில் இருந்த இரண்டு ஆவிகளையும் விடுவித்து அனுப்பிவைத்தான். குளித்துவிட்டு வழியில் தென்பட்ட ஒரு பகவதி கோயிலுக்குச் சென்று கும்பிட்ட பின்பு குட்டப்பனின் சித்தப்பாவைச் சென்று சந்தித்தான்.

‘உட்கார்’ என்று சொன்னார்.

அவன் உட்கார்ந்தான்.

‘உன் கட்டை விரலின் மீதுள்ள கட்டை அகற்று’.

‘எதற்கு?’ என்று வினய் கேட்டான்.

‘நீ எனக்குத் தரப்போகிற குரு தட்சிணை அதுதான்’ என்று அவர் சொன்னார்.

வினய் எழுந்துவிட்டான்.

‘ஏன் எழுந்துவிட்டாய்?’ என்று அவர் கேட்டார்.

‘இல்லை. நான் வாழ்வெங்கும் நிறைய இழந்தவன். மிச்சம் இருப்பது இது ஒன்றுதான். இதையும் குரு தட்சணையாகத் தர நான் விரும்பவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று சொல்லிவிட்டு அவன் கிளம்பும்போது, அவர் என்ன நினைத்தாரோ ‘சரி வந்து உட்கார்’ என்று சொன்னார். வினய்க்கு நம்பிக்கை வரவில்லை.

‘உன் இடாகினி எனக்கு வேண்டாம். ஒருவாரம் உனக்கு நான் சில பாடங்கள் சொல்லித் தருவேன். கற்று முடித்த பின்பு உன் இடாகினியைக் கொண்டு எனக்கு நீ ஒரு சகாயம் செய்து தர வேண்டும்’ என்று அவர் சொன்னார்.

அந்த ஒரு வாரத்தில் அவனுக்கு இரண்டு பாடங்கள் கிடைத்தன. எல்லா ஆவிகளையும் அவை உடலை விட்டுப் பிரியும்போதே கண்டறியும் ஆற்றல் சித்தித்தது. இரண்டாவது, தனிஷ்டா பஞ்சமி ஆவிகளைப் பிரித்தறியக் கற்றுக்கொண்டான்.

‘இன்னும் ஒன்று சொல்லித்தருவேன். எந்த ஆவியையும் உன் பணிக்குப் பயன்படுத்தும் வித்தை. ஆனால் அதற்குமுன் நீ எனக்கு ஒன்று செய்ய வேண்டும்’ என்று அவர் சொன்னார்.

‘சொல்லுங்கள்’.

அவர் சொன்னார். அவன் தனது இடாகினியின் உதவியுடன் அதைச் செய்து கொடுத்தான். குற்ற உணர்வில் அடுத்த நாற்பது தினங்கள் உண்ணாமல் விரதம் இருந்து உடல் நலிந்து படுத்தான். மீண்டு எழ மேலும் மூன்று மாதங்களாயின.

(தொடரும்)

 

 

http://www.dinamani.com/junction/yathi/2018/oct/01/141-அடைப்பு-3010480.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிரமம் பாராது தொடர்ந்து பகிரும் கிருபனுக்கு.......!

Image associée

இக் கதையின் வாசகர் சார்பில் .......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

142. சித்ரான்னம்

அவள் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வதற்கு முன்பே வினய், ‘நீ சித்ராதானே?’ என்று கேட்டது சித்ராவுக்குச் சிறிது வியப்பாக இருந்தது. கால் நூற்றாண்டுக் காலத்துக்கு மேலாக ஒருத்தி பேயாக அலைந்துகொண்டிருக்கிறாள் என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும் என்று வினய்க்குத் தோன்றியது. அதை அவன் எண்ணிப் பார்க்க விரும்பவில்லை. அகால மரணம்தான் என்றாலும், சித்ராவின் தகப்பனார் அவளுக்குச் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்யாமல் இருந்திருக்கமாட்டார். ஒன்றுமே இல்லாது போனாலும் கயாவில் ஒரு நீர்க்கடன். அனுஷ்டானங்களில் நம்பிக்கை கொண்ட மனிதர். நம்பிக்கைகளின்பால் பற்று கொண்ட மனிதர். சடங்குகளைச் சடங்காகவேனும் செய்து முடித்துவிட அவசியம் நினைத்திருப்பார். ஆயினும் அவள் இப்படியாக இருந்தது அவனுக்கு வருத்தமாக இருந்தது.

‘நான் உனக்குத் தெரிகிறேனா?’ என்று சித்ரா கேட்டாள்.

‘ஆம்’.

‘என்னால் உன் அருகே வர முடியவில்லை. நீ ஏதோ செய்கிறாய் என்று நினைக்கிறேன்’ என்று சித்ரா சொன்னாள்.

‘ஆம். பழக்கமில்லாத ஆவிகளை நான் பத்தடி தொலைவில் நிறுத்திவிடுவேன். அவை என்னை நெருங்க இயலாது’.

‘நீ சன்னியாசியாகப் போய்விட்டாய் என்று சொன்னார்கள்’.

‘அதில் சந்தேகமில்லை. நான் சன்னியாசிதான். நீ ஏன் இப்படி இருக்கிறாய்? அதைச் சொல்’ என்று வினய் கேட்டான்.

‘வேறெப்படி இருக்க முடியும்?’

‘நீ வைதரணியைக் கடந்து எமனுலகம் போகவில்லையா?’

‘இல்லை’.

‘ஏன் போகவில்லை?’

‘போக விரும்பவில்லை’.

‘உன் விருப்பத்துக்கெல்லாம் முக்கியத்துவம் இருக்காதே?’

‘இல்லை. நான் தவம் புரிந்து பேயாகவே உலவும் வரம் பெற்றவள்’.

‘யாரைக் குறித்துத் தவம் இருந்தாய்?’

‘தருமதேவன் எனக்கு இந்த வரத்தை அளித்தான்’.

‘நம்ப முடியவில்லை’.

‘ஆனால் அதுதான் உண்மை. எனக்கு மோட்சம் கிடையாது. நரகம் நிச்சயம். அதன்பின் நான் ஒரு பன்றியாகப் பிறப்பேன்’.

‘நல்லது. இங்கு எதற்கு வந்தாய்?’

‘நான் வரவில்லை. இங்கேயேதான் இருக்கிறேன்’.

‘அப்படியா?’

‘நீ சொன்ன கால் நூற்றாண்டுக் காலமாக’.

‘எதற்கு?’

‘சொன்னேனே. நான் தவத்தில் இருப்பவள்’.

‘வரம் கிட்டிவிட்டதாகச் சொன்னதாக ஞாபகம்’.

‘ஆம். அது என்றோ கிடைத்துவிட்டது. ஆனால் அந்த வரமே என் தவம் இடையூறின்றி நடந்து முடிவதற்காகத்தான்’.

வினய்க்கு அவள் மிகவும் விநோதமாகப் பட்டாள். இருபத்தைந்து ஆண்டுக் காலம் ஒரு ஆத்மா ஓரிடத்தில் நிலைகொண்டு தவம் புரியும் என்று அவன் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அவள் பொய் சொல்லக்கூடியவளாகவும் தெரியவில்லை. இறந்த பின்பு மேற்கொள்ளும் தவம் நிச்சயம் வாழ்வு சார்ந்ததாக இருக்க முடியாது என்று அவனுக்குத் தோன்றியது. ஒருவேளை, தனது தயாரின் இறுதிக் காலம் வரை இங்கேயே உலவிக்கொண்டிருந்துவிட்டுப் போக நினைத்திருப்பாளோ?

இருக்கலாம் என்று அவனுக்குத் தோன்றியது. பத்மா மாமி தனி ஆள். உதவிக்கு யாருமற்றவள். ஒற்றைப் பெண் குழந்தையாகப் பிறந்த சித்ரா பாதியில் தன் வாழ்வை முடித்துக்கொண்டுவிட்டாள். ஆனால் பாசம் இல்லாது போகுமா? அவனறிந்த ஒரு பெண்ணின் ஆவி, தனது அடைப்புக் காலம் முடியும்வரை தனது குடும்பத்தில் உள்ள அத்தனை பேருக்கும் நினைத்ததையெல்லாம் செய்து கொடுத்ததை அவன் அறிவான். பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த பெண் அவள். அவளது தம்பிக்கு ஒருநாள் அதிகாலை பென்ஸ் காரில் போவதுபோல ஒரு கனவு வந்திருக்கிறது. அதை அவன் காப்பி குடிக்கும்போது வீட்டாரிடம் சொல்லிக்கொண்டிருந்ததை அந்தப் பெண்ணின் ஆவி கேட்டது. ஒரு மணி நேரத்தில் அந்தக் குடிசைப் பகுதிக்குள் ஒரு பென்ஸ் கார் வந்து நின்றது. ஓட்டுநர் ஒருவர் இருந்தார். சரியாக அந்த வீட்டுக்கு வந்து அவனை வெளியே அழைத்து, காரில் ஏற்றிக்கொண்டு போனார். நாள் முழுவதும் எங்கெங்கோ அலைந்து திரிந்துவிட்டு மாலை வீட்டுக்குக் கொண்டு வந்து இறக்கிவிட்டுப் போய்விட்டார்.

‘நீங்கள் யார்? எனக்கு எதற்காக இதைச் செய்கிறீர்கள்?’ என்று அந்தப் பையன் முழு நாளும் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தான். போகிறபோதுதான் அவர் பதில் சொல்லியிருக்கிறார், ‘தம்பி, உன் அக்கா ஒரு பெரிய அதிகாரி. உனக்கு இன்றொரு நாள் இந்த சந்தோஷத்தைக் காட்டச் சொல்லி என்னை அனுப்பிவைத்தார்’.

‘இந்த கார் அக்காவுடையதா?’

‘இல்லை. அரசாங்கத்துடையது’ என்று அந்த ஓட்டுநர் சொல்லியிருக்கிறார். மறுநாள் செய்தித்தாளில் முதலமைச்சரின் கார் காணாமல் போய், திரும்பக் கிடைத்த செய்தி வெளியாகியிருந்தது.

வினய்க்கேகூட அப்படியொரு வாகன யோகம் அமைந்திருக்கிறது. எளிய மனிதர்களின் அற்ப சந்தோஷங்கள். ஆவிகளால் இந்த விளையாட்டுகளை எளிதாக ஆடிக்கொடுக்க முடியும். ஆனால், இந்த அற்ப சந்தோஷங்களில் லயித்துப்போய் நோக்கம் திசைமாறிவிடுவதுதான் பெரிய சிக்கல். அவனுக்கு அப்படித்தான் ஆனது.

அவனுக்கு வாய்விட்டுச் சிரிக்க வேண்டும்போல் இருந்தது. சட்டென்று சித்ராவின் மீது பரிதாப உணர்வு ஏற்பட்டது. ‘எனக்கு எதிரே பன்னிரண்டடி தூரத்தில் உட்கார்’ என்று சொன்னான். அவள் பதில் பேசாமல் அதற்குக் கட்டுப்பட்டாள்.

‘நான் இங்கே எதற்கு வந்திருக்கிறேன் என்று தெரியுமா?’ என்று வினய் கேட்டான்.

‘தெரியும். உன் அம்மா மரணப் படுக்கையில் இருக்கிறாள்’.

‘ஆம். அவள் நாளை இரவு இறந்துவிடுவாள்’.

‘அது உனக்குத் தெரியுமா?’

‘தெரியும். அவளை எரித்ததும் நான் கிளம்பிவிடுவேன். அவளை கடைத்தேற்றி அனுப்புவதுதான் என் வருகையின் நோக்கம் என்று எண்ணியிருந்தேன். இப்போது புதிதாக ஒன்று தோன்றுகிறது. சொல்லவா?’

‘சொல்’.

‘நான் ஒரு துறவி. ஆனால் என் சிறு வயதுகளில் மனத்துக்குள் நான் நிறைய பிழைகள் புரிந்திருக்கிறேன். அதற்கெல்லாம் உன்னைத்தான் கருவியாகப் பயன்படுத்தினேன். இதை உன்னிடம் சொல்லி மன்னிப்புக் கேட்கலாம் என்று இப்போது தோன்றுகிறது’.

அவள் அமைதியாக இருந்தாள்.

‘நீ ஒரு பெண்ணாகவே இருந்திருந்தாலும் இந்தச் சந்திப்பில் நான் இந்தப் பாவ மன்னிப்பைக் கேட்டிருப்பேன். என் இப்போதைய மனநிலைக்குப் பெண்ணும் பேயும் நாயும் பூனையும் அனைத்தும் ஒன்றுதான்’.

அவள் இப்போதும் அமைதியாக இருந்தாள்.

‘அந்நாள்களில் திருவிடந்தையின் ஒரே அழகி நீதான் என்பது என் எண்ணம். உன்னை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். உன் கன்னம், உதடுகள், சிறிய மார்பகங்கள், தாவணிக்கு இடையே தெரியும் இடுப்பின் சிறு பகுதி என்று அங்கம் அங்கமாகக் கண்டு உறிஞ்சியிருக்கிறேன்’.

அவள் சற்று சங்கடப்பட்டாள். ‘இதையெல்லாம் ஏன் சொல்கிறாய்?’ என்று கேட்டாள்.

‘உனக்குப் புரியுமா என்று தெரியவில்லை. நான் ஒரு தோல்வியுற்ற சன்னியாசி. என் தோல்வியின் ஊற்றுக்கண் உன் நினைவுகள் சார்ந்த குற்ற உணர்வில் உள்ளது’.

‘ஓ. தோல்வியுற்ற சன்னியாசி என்று எதை வைத்துச் சொல்கிறாய்? உனக்கு உறவுகள் உண்டா? ரகசியமாக?’

‘இல்லை. நான் உறவற்றவன். அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. சன்யாசம் என்பது ஒரு மனநிலை. தோற்றமல்ல. அதற்கு மிகவும் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு மனநிலை’.

‘அதில் நீ இல்லையா?’

‘அதில்தான் உள்ளேன். ஆனால் இந்தக் குற்ற உணர்வு என்னை வாழ்வில் திரும்பத் திரும்பப் பலமுறை குற்றம் புரியவைத்துவிட்டது’.

‘புரியவில்லை’.

‘எனக்குச் சில பெண்களைப் பார்க்கும்போது அவர்கள் முகத்தில் உன் முகத்தைப் பொருத்திப் பார்க்கத் தோன்றும்’.

‘சரி’.

‘அப்படி எந்தப் பெண்ணின் மீது உன் முகத்தை ஒட்டவைக்கிறேனோ, அந்தப் பெண்ணை உடனே தொட்டுப் பார்க்கத் தோன்றும்’.

‘சரி’.

‘இது ஒரு மனநோய். இது ஒரு மனநோய்தான் என்பதை நான் மிகத் தெளிவாக அறிந்தும், இதில் இருந்து வெளிவர முயற்சி செய்ததில்லை’.

‘ஏன்? உன் சன்னியாசம் கூடவா உனக்குப் பெரிதாகப் படவில்லை?’

‘இல்லை. என் சன்னியாசத்தின் காரணமே நீதான் என்று நினைத்தேன். உன்னைத்தான் நான் காமாக்யா கோயிலில் கண்ட தேவியாக உணர்ந்தேன். மனத்துக்குள் உன்னைப் புணர்ந்தபோதெல்லாம், நான் தேவியின் திருப்பாதங்களில் மணல் துகளாகி மிதிபடுவதுபோல உணர்ந்தேன்’.

‘ஐயோ. நீ மிகவும் பாவம்’.

‘இல்லை. நான் ஒரு பாவி. பல பெண்களிடத்தில் உன்னைத் தேடத் தெரிந்தவனுக்கு உன்னிடம் அன்றைக்கு என் விருப்பத்தைச் சொல்லி மணம் முடித்து வாழத் துப்பில்லாமல் போய்விட்டது’.

‘எனக்கு நெருங்கி வந்து உன்னைத் தொட வேண்டும் என்று தோன்றுகிறது’.

‘வேண்டாம். தயவுசெய்து அதற்கு முயற்சி செய்யாதே. பத்தடி தூர இடைவெளி அவசியம்’.

‘என்ன காரணம்?’

‘நான் பெண்களை நினைப்பதை நிறுத்திப் பத்தாண்டுகள் ஆகின்றன. என்னிடம் ஒரு இடாகினி இருந்தாள். நான் என்ன சொன்னாலும் செய்யக்கூடிய அடிமை. அவளுக்கும் விடுதலை அளித்து அனுப்பிவைத்துவிட்டேன். விசுவாசமான ஆவிகள் பெண்களின் ஆவிகள்தான் என்று எனக்குச் சொல்லிக்கொடுத்தவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதனால், வாழ்நாள் முழுதும் பெண் ஆவிகளை மட்டுமே நான் என் பணிகளுக்குப் பயன்படுத்தினேன். ஆனால் எனது இந்த முடிவின் பிறகு, எனக்கு ஊழியம் செய்யத் தயாராக இருந்த அனைத்துப் பெண்களின் ஆவிகளையும் விடுவித்துவிட்டேன். இப்போது நான் நிராயுதபாணி. அநாதரவானவன். பணமற்றவன். பசியற்றவன். உறக்கமற்றவன். உறவற்றவன். உணர்வும் அற்றுப் போனவன். ஆவியாகவே இருந்தாலும் நீ ஒரு பெண் என்பதால் என்னை நெருங்க வேண்டாம் என்பது எனது எளிய வேண்டுகோள்’.

அவள் சிறிது நேரம் அவனை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு, ‘சரி. உன் வேண்டுகோளை நான் மீறமாட்டேன். ஆனால் நீ இவ்வளவு வெளிப்படையாகப் பேசியதால் நானும் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். அந்த வயதில் எனக்கு உன் மீது விருப்பமெல்லாம் இருந்ததில்லை. இப்போது ஒருமுறை கட்டித் தழுவ விரும்பித்தான் கேட்டேன்’.

‘வேண்டாம்’ என்று அவன் மீண்டும் சொன்னான்.

‘இங்கே என்ன செய்துகொண்டிருந்தாய்?’

‘கிருஷ்ண ஜபம்’.

‘கிருஷ்ண ஜபமா? நீயா! படுத்துக்கொண்டல்லவா இருந்தாய்?’

‘ஆம். படுத்தபடி அதைத்தான் செய்தேன்’.

‘ஐயோ நான் கலைத்துவிட்டேனா?’

அப்போதுதான் வினய் அதை எண்ணிப் பார்த்தான். எப்படியும் ஒரு லட்சத்தை நெருங்கியிருப்போம் என்று தோன்றியது. கெட்டுவிட்டது. அதனால் என்ன? ஒரு லட்சம் சுலபம். இன்னொரு முறை தொடங்கலாம். அது பிரச்னை இல்லை. ஆனால் சித்ராவை இப்படி எதிர்பாராதவிதமாகச் சந்திக்க நேர்ந்தது பெரிது.

‘ஒரு சந்தேகம் கேட்கலாமா?’ என்று சித்ரா கேட்டாள்.

‘கேள்’

‘நீ ஆவிகளுடன் பரிச்சயமுள்ளவன் என்கிறாய். அதையே தொழிலாகக் கொண்டும் வாழ்ந்திருக்கிறாய். அப்படி இருக்க, கிருஷ்ணனிடம் உனக்கென்ன வேலை?’

இதையும் சொல்லிவிடலாம் என்று அவன் நினைத்தான். ஆனால் என்னவென்று சொல்வது? காமரூபிணியின் காற்சலங்கை என் சிரசின் மீது படுவதற்குக் கண்ணனின் உதவியை நாடுகிறேன் என்றால் இவளுக்குப் புரியுமா? சிரித்துவிட மாட்டாளா! இதென்ன அற்பத்தனம், இதென்ன சிறுபிள்ளைத்தனம் என்று தோன்றிவிடுமோ? சந்தேகமென்ன. சிறுபிள்ளைத்தனம்தான். ஆனாலும் இதில் ஒரு லலிதம் இருக்கிறது. ஒரு லயம் இருக்கிறது. புத்திக்குத் தென்படாத ஒரு சூட்சுமத்தின் மையப்புள்ளி நிலைகொண்ட தருணம்.

சரி போ, சிரித்தால்தான் என்ன என்று ஒரு கணம் தோன்றியது. அவனே ஒரு புன்னகையுடன் ஆரம்பித்தான்.

(தொடரும்)

http://www.dinamani.com/junction/yathi/2018/oct/02/142-சித்ரான்னம்-3011692.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

143. செம்பவழக் கல்

உச்சிப் பொழுது நெருங்கிக்கொண்டிருந்தது. மணல் சுட்டது. ஆனாலும் கடல் காற்றின் ஓதம் சவுக்கு மரங்களின் வழியே பெருகி ஒழுகிக்கொண்டிருந்தது. வினய்க்கு அந்த அனுபவம் மிகவும் விநோதமாகப் பட்டது. பிடித்திருந்தது. சித்ரா இன்னமும் திருவிடந்தையில் ஒரு பேயாக உலவிக்கொண்டிருப்பாள் என்று அவன் எண்ணியிருக்கவில்லை. அவளை உணர்ந்த கணத்தில் இருந்து அவன் கிருஷ்ணனை முற்றிலுமாக மறந்துவிட்டிருந்தான். அவளிடம் என்னென்னவோ பேச வேண்டும் போலத் தோன்றியது. அவள் ஒரு பெண்ணாகவே இருந்திருந்தால் இவ்வளவு பேசத் தோன்றுமா என்றும் சந்தேகம் இருந்தது. ஐம்பது வயதில் ஒரு மனிதன் தனது சிறு வயதுப் பாலியல் கிளர்ச்சிகளை நினைவுகூர்ந்து சொல்ல நேர்வது அரிது. அதுவும் ஒரு பெண்ணிடம். இன்றைக்கெல்லாம் சித்ரா உயிருடன் இருந்திருந்தால் அவளுக்கு நாற்பத்து ஆறு வயதாகியிருக்குமா? அவளிடமே கேட்டான். அவள் ஆமாம் என்று சொன்னாள்.

‘ஒருநாள். அன்று உனக்குப் பிறந்த தினம். அன்றைக்குக் காலையே கேசவன் மாமா இந்தத் தகவலை வீட்டில் சொன்னார். கோயிலில் சொஜ்ஜி தளிகை விடச் சொல்லி உன் அப்பா பணம் கட்டியிருந்தார்’.

‘ஓ!’

‘எட்டு மணிக்கு நீ கோயிலுக்கு வருவாய் என்றும் மாமா சொன்னார். அன்றைக்கு நான் ஏழரைக்கே குளித்துவிட்டுக் கோயிலுக்கு ஓடி உனக்காகக் காத்துக்கொண்டிருந்தேன்’.

அவள் சிரித்தாள்.

‘நீ வந்தாய். உன் அம்மா, அப்பாவுக்கு நடுவே நடந்து வந்தாய். அன்றைக்கு நீ கருநீல நிறத்தில் தாவணியும் வெளிர் நீலத்தில் பூப்போட்ட பாவாடையும் அணிந்திருந்தாய். அந்த வெளிர் நீலத்திலேயே ரவிக்கையும் அணிந்திருந்தாய். அந்நாள்களில் தாவணி நிறத்திலேயேதான் பெண்கள் ரவிக்கை அணிவார்கள். நீ ஒரு மாறுதலாகப் பாவாடையின் நிறத்தில் ரவிக்கையைத் தேர்ந்தெடுத்திருந்தாய். எனக்கு அது பிடித்திருந்தது’.

அவள் வாய்விட்டுச் சிரித்தாள். ‘தைக்கக் கொடுத்த ரவிக்கை கைக்கு வராததால் கிடைத்ததை அணிந்து வந்தேன்’.

‘நீ சன்னிதியில் நின்றிருந்தபோது நான் உன்னையே பார்த்துக்கொண்டிருந்தேன். யாராவது பார்த்தால் வெறுமனே கண்ணை மூடிக்கொண்டால் போதும் என்ற முடிவுடன் எதற்கும் தயாராகப் பெருமாளை நோக்கிக் கை கூப்பிக்கொண்டிருந்தேன்’.

‘அப்படியா?’

‘ஆனால் பட்டாச்சாரியார் என்னை கவனித்துவிட்டார். எனது திருட்டுத்தனம் அவருக்குப் புரிந்துவிட்டது’.

‘என்ன சொன்னார்?’

‘நீ என்னைக் கடந்து திரும்பிப் போகும்போது, உன் தலையில் இருந்த ஒரு பூவை நான் எடுத்துக்கொண்டேன். அதையும் அவர் பார்த்தார்’.

‘ஐயோடா! நான் அதைக் கவனிக்கவேயில்லை’.

‘அன்றைக்கு நீ மருதாணி இட்டிருந்தாய். அது இடக்கரத்தில் சரியாகப் பற்றவில்லை. நான் அதைக் கவனித்தேன்’.

அவள் புன்னகை செய்தாள். ‘பட்டர் பிறகு என்ன சொன்னார் என்று கேட்டேனே?*

இப்போது வினய் புன்னகை செய்தான். ‘வேறென்ன சொல்வார்? உன் அப்பா கஷ்டப்பட்டு உங்களையெல்லாம் படிக்க வைக்கிறார். உன் அம்மா உன்னை மிகவும் நம்பியிருக்கிறாள். இந்த வயதில் இப்படியெல்லாம் நடந்துகொள்ளக் கூடாது...’

‘நீ என்ன சொன்னாய் பதிலுக்கு?’

‘நான் சொல்ல என்ன இருக்கிறது? ஆனால் அன்று நீ அணிந்திருந்த கருநீலத் தாவணியை உருவி திரைச் சீலையாகத் தொங்கவிட்டு, தாயார் சன்னிதிக்குள் உன்னை அழைத்துச் சென்று என் மானசீகத்தில் நூறு முறை புணர்ந்தேன்’.

சித்ரா திகைத்துவிட்டாள். சிறிது நேரம் என்னைப் பார்ப்பதைத் தவிர்த்து வேறு புறம் பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘கோபித்துக்கொண்டு விட்டாயா?’

‘இல்லை என்று எப்படிச் சொல்வேன்? உனக்கு வேறு இடமா கிடைக்கவில்லை?’

இப்போது வினய் குபீரென்று சிரித்துவிட்டான்.

‘சிரிக்காதே. எனக்குக் கோபம் அதிகரிக்கிறது’.

‘சரி சிரிக்கவில்லை. உண்மையைச் சொல்கிறேன். உன்னைத் தொட வேண்டும் என்ற எண்ணம் வரும்போதெல்லாம் ஒரு கருவறையையே நான் மனத்துக்குகந்த இடமாகக் கருதிக்கொள்வேன். காமத்தின் தெய்வீகத்தை வேறெங்கும் நான் விரித்து நுகர்ந்ததில்லை’.

‘எல்லாம் நினைவில்!’

‘ஆம். எல்லாம் நினைவில். அதனால்தான், நிஜத்தில் மூடிய வெறும் அறைகளுக்குள் நான் புணர்ந்த பெண்கள் யாரும் என்னை தேவியின் பாதங்களுக்கு இட்டுச் செல்லவில்லை’.

‘நீ பேசுவதெல்லாம் எனக்கு பயங்கரமாக இருக்கிறது. ஆனால் பிடித்திருக்கிறது. என்னை ஒருவன் இவ்வளவு விரும்பியிருக்கிறான் என்றே எனக்கு இப்போதுதான் தெரிகிறது’.

‘இன்னொன்று சொன்னால் பயந்துவிடுவாய். உன்னை நான் மட்டுமல்ல. விமலும் விரும்பியிருக்கிறான்’.

‘அப்படியா?’

‘காலம் தோறும் எங்கள் குடும்பத்தில் பிறந்த ஒவ்வொருவராலும் நீ விரும்பப்பட்டிருக்கிறாய். மனத்துக்குள் புணரப்பட்டிருக்கிறாய்’.

‘ஆனால் உன் அண்ணா அப்படி இல்லை என்று நினைக்கிறேன்’.

‘தெரியவில்லை. அவன் அதைக் குறித்துச் சொன்னதில்லை. ஒருவேளை அவனும் உன்னை நினைத்திருப்பான் என்றே தோன்றுகிறது. ஏனென்றால், அந்நாளில் நீ ஒருத்திதான் இந்த ஊரின் ஒரே அழகி’.

‘நன்றி’ என்று சொல்லிவிட்டு அவள் சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். பிறகு, ‘ஆனால் நீ உன் இலக்கில் தோற்றுவிட்டதாகச் சொன்னது எனக்கு வருத்தமாக இருக்கிறது’ என்று சொன்னாள்.

‘ஆம் சித்ரா. நான் தோற்றுத்தான் போனேன்’.

‘சரி. தெளிவாகச் சொல். நீ எதை எதிர்பார்த்தாய்?’

‘இப்போது எதற்கு அது? தோல்வியின் பூரணத்தை தரிசித்துவிட்டேன். அது பற்றிய வருத்தங்களும் விலகிவிட்டன. இப்போது நான் கவலைகள் அற்றவன். துக்கம் அற்றவன். சொல்லப் போனால் இப்போதுதான் நான் முழுத் துறவி. பார். ஒரு பெண்ணிடம் பேசக்கூடிய பேச்சா நான் பேசுகிறேன்? என் மனத்தின் மலத்தை இரு கரங்களாலும் அள்ளி உன் முன்னால் பரப்பி வைக்கின்றேன். இதன் துர்நாற்றத்தை எத்தனை எளிதாக என்னால் கடக்க முடிகிறது! எனக்கு இது போதும்’.

அவள் புன்னகை செய்தாள். ‘இது போதும் என்றால் உனக்கு எதற்கு கிருஷ்ணன்? அவனைக் குறித்து ஏன் தவம் இருக்கப் பார்த்தாய்?’

‘நியாயமான கேள்வி. துறவியானாலும் நான் மனிதன். துறவிகளுக்கும் நப்பாசை உண்டு’.

‘அப்படியா?’

‘ஆம். என் தம்பி ஒரு வார்த்தை சொன்னான். கிருஷ்ண ஜபம் நான் அடைய நினைத்ததை இழுத்துவந்து சேர்க்கும் என்றான்’.

‘சரிதான். அப்படியானால் உன் கிருஷ்ணன்தான் என்னை உன்னிடம் அனுப்பியிருக்கிறான் போலிருக்கிறது!’

‘ஒரு நிமிடம். அவன் என் கிருஷ்ணன் இல்லை. என் தம்பியின் கிருஷ்ணன். நான் நேற்றுவரை கிருஷ்ணனை நினைத்ததுகூட இல்லை’.

‘திடீரென்று ஒருநாள் கூப்பிட்டால் அவன் வந்துவிடுவானாமா?’

‘அப்படித்தான் அவன் சொன்னான்’.

‘இவ்வளவு அப்பாவியா நீ?’

‘அவ்வளவு முட்டாளாகவும் இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை ஒரு லட்ச நாமஜபம் என்பது ஒரு பெரிய விஷயமல்ல. சும்மா கிடப்பதை முயற்சி செய்யலாமே என்று நினைத்தேன்’.

‘முடித்தாயா?’

‘இல்லை. அதற்குள் நீ வந்து எழுப்பிவிட்டாய்’.

‘மன்னித்துக்கொள்’.

‘பரவாயில்லை’.

அவள் வினய்யை வெகுநேரம் வெறுமனே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு, ‘உனக்கு நான் ஏதாவது உதவி செய்ய விரும்புகிறேன்’ என்று சொன்னாள்.

‘வேண்டாம் சித்ரா. ஆவிகளிடம் நான் உதவி கோரி வெகுகாலம் ஆகிறது. இப்போது எனக்கு அதில் விருப்பம் இல்லை’.

‘உன் இலக்கு என்னவென்று கேட்டேன். நீ அதை இன்னும் சொல்லவில்லை. ஒருவேளை நீ அதை அடைய நான் உதவ முடியும்!’

‘நீயா!’ அவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

‘ஒரு பேயால் முடியாது என்று சொல்லிவிடாதே. என்னிடம் இருபத்தைந்து வருடத் தவப்பலன் இருக்கிறது. அதை நான் பயன்படுத்துவேன்’.

‘உன் நோக்கத்துக்காக நீ சேர்த்து வைத்திருப்பது!’

‘ஆம். அதைத்தான் உனக்குத் தருகிறேன் என்கிறேன்’.

வினய்யால் அதை நம்ப முடியவில்லை. இவள் என்ன சொல்கிறாள்! எனக்கு எதற்கு இவள் உதவ வேண்டும்! அதனால் இவளுக்கு என்ன லாபம் இருந்துவிட முடியும்!

‘அது பிறகு. நீ வெளிப்படையாக என்னிடம் பேசியது எனக்குப் பிடித்தது. பதிலுக்கு உனக்கு உதவி செய்யலாம் என்று தோன்றுகிறது. விருப்பமிருந்தால் சொல்’.

வினய் வியப்புத் தீராமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு, ‘சரி சொல்கிறேன். எனக்குக் காமரூபிணியின் தரிசனம் வேண்டும். ஒன்று அவளது அனுக்கிரகத்தால் நான் உலகாள வேண்டும். அல்லது அவளுக்குள் ஒடுங்கி இல்லாது போய்விட வேண்டும்’.

‘இவ்வளவுதானா?’

‘இவ்வளவுதான்’.

‘இது என்னால் முடியும் என்று தோன்றுகிறது’.

அவனால் நம்ப முடியவில்லை. சிரித்தான்.

‘சிரிக்காதே. நான் பொய் சொல்லமாட்டேன்’.

‘ஆனால் ஆயிரமாயிரம் ஆண்டுகள் எத்தனையோ பேர் கொடுந்தவம் புரிந்து முயற்சி செய்து தோற்ற இடம் அது’.

‘தெரியும். நான் வென்ற இடமும் அதுதான்’.

அவன் அதிர்ந்தான். ‘என்ன சொல்கிறாய்?’

‘யுக யுகமாக மாதமொரு முறை பெருக்கெடுக்கும் தேவியின் உதிரத்தின் ஒரு சொட்டை என் உச்சந்தலையில் ஏந்தியிருக்கிறேன். இன்னமும் யமலோகம் போகாமல் இங்கிருந்து தவம் புரியும் வலிமையை அதுவே எனக்களித்தது. உலராமல், வழியாமல், உருண்டு விழுந்துவிடாமல் ஒரு செம்பவழக் கல்லாக என் சிரசில் நான் ஏந்திக் காத்துவரும் அதை உன் சிரத்துக்கு என்னால் மாற்ற முடியும்’.

அவன் நடுங்கியபடி எழுந்து நின்று கரம் குவித்தான். ‘தேவீ!’ என்று தன்னை மறந்து குரல் கொடுத்தான்.

‘நான் தேவியல்ல. வெறும் ஆவி. ஆனால் நீயறிந்த ஆவிகளுள் நான் ஒருத்தியல்ல. நான் வேறு. என் தவத்தின் உக்கிரமும் அதில் நான் அடைந்த வெற்றியும் உனக்குப் புரியாது’.

வினய் சட்டென்று நெடுஞ்சாண் கிடையாக அவள் முன்னால் விழுந்து சேவித்தான். நெடுநேரம் அவன் எழுந்திருக்கவேயில்லை. மண்ணில் முகம் புதைத்துக் குமுறிக் குமுறி அழுதான். ‘என்னை மன்னித்துவிடு, என்னை மன்னித்துவிடு’ என்று திரும்பத் திரும்பச் சொன்னான்.

(தொடரும்)

 

http://www.dinamani.com/junction/yathi/2018/oct/03/143-செம்பவழக்-கல்-3012930.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

144. ரிஷி

‘உனக்குப் பசிக்கிறதா?’ என்று சித்ரா கேட்டாள். இல்லை என்று வினய் சொன்னான். ‘காலை நீலாங்கரை வைத்தியர் வீட்டுக்குப் போயிருந்தேன். அங்கே நான்கு இட்லி சாப்பிட்டேன். பொதுவாக நான் காலை வேளைகளில் எதுவும் உண்பதில்லை. இன்று சாப்பிடும்படியாகிவிட்டது. இதோடு நாளை மதியம் உண்டால் எனக்குப் போதும்’ என்று சொன்னான்.

‘சரி, இரண்டு நிமிடம் இங்கேயே இரு. வந்துவிடுகிறேன்’ என்று சொல்லிவிட்டு சித்ரா எழுந்து போனாள். அவள் அருகே இருக்கும்வரை எங்குமே போகத் தோன்றாது என்றுதான் வினய்க்குத் தோன்றியது. தனக்கு ஏன் அவளோடு பேசப் பிடிக்கிறது, எதனால் எல்லாவற்றையும் அவள்முன் இறக்கி வைக்கிறோம் என்று திரும்பத் திரும்ப எண்ணிப் பார்த்தான். ஒரு பாவ மன்னிப்புக் கோருவதில் உள்ள சொகுசு அவனுக்கு அப்போதுதான் புரிந்தது. தொப்பை சுமப்பவனுக்கு அந்தச் சுமை பழகி ஆண்டுக்கணக்கில் வலி மரத்துப் போய் நடந்துகொண்டிருப்பான். என்றாவது ஞானம் வந்து உடல் இளைக்கும்போது இத்தனைக் காலம் இப்படியா அவதிப்பட்டுக்கொண்டிருந்தோம் என்று தோன்றும். சிறு வயதில் வினய் சற்று குண்டாகவே இருப்பான். இரண்டு ஆள் உணவு உட்கொள்வான். உணவைத் தாண்டி நொறுக்குத் தீனிகளில் அவனுக்கு அதிக விருப்பம் இருந்தது. எதைப் பார்த்தாலும் எடுத்து உண்டுவிடுவான். எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவும். அவன் வீட்டை விடுத்துச் சென்றபோது அவனுக்குப் பத்தொன்பது வயது. அப்போது அவன் எழுபத்து ஆறு கிலோ எடை இருந்தான். மெல்லிய தொப்பையும் இருந்தது. ஆனால் வாழ்க்கை புரட்டிப் போட்டு அடித்துப் பசியில் மெலியத் தொடங்கியபின்பு, ஒரு கட்டத்தில் பசி பழகிய பின்பு வயிறு லேசாக இருப்பதன் அருமை அவனுக்குப் புரிய ஆரம்பித்தது. அதன்பின் பசியை வெல்லும் முயற்சியில் அவன் ஈடுபடத் தொடங்கினான். தினமும் காலை எழுந்ததும் இருபது கருவேப்பிலை இலைகளை மென்று தின்னுவான். ஒரு சொம்பு தண்ணீர் குடிப்பான். அதுதான் காலை உணவு. மதியம் சரியாக ஒரு பிடி சோறும், ஒரு பச்சைத் தக்காளிப் பழமும் சாப்பிடுவான். சில நாள் சொரிமுத்து அவனுக்கு ஒரு வெள்ளரிக்காய் வரவழைத்துக் கொடுப்பான். அதையும் சேர்த்து உண்பான். இரவு ஒரு வாழைப்பழம் அல்லது ஒரு சாத்துக்குடிப் பழம். இவ்வளவுதான் அவனது உணவாக இருந்தது. மூன்றாண்டுக் காலம் இப்படியே சாப்பிட்டு வந்ததில் அவன் தலை குனிந்து பார்த்தால் அவனது ஆண்குறி முழுதாகத் தெரியும்படி ஆனது. அதன்பின் சொரிமுத்து அவனுக்குச் சில ஆசனங்கள் சொல்லிக்கொடுத்தான். சில சுவாசப் பயிற்சிகளையும் கற்பித்தான். காற்றை உணவாக உட்கொண்டு பசியை நகர்த்தி வைக்க வினய் பழகத் தொடங்கினான்.எப்போது உணவு ஒரு பொருட்டே இல்லை என்று தெரிந்ததோ, அன்று அவன் கவலையற்றுப் போனான். சாதகங்களில் தீவிரமாக இருந்த நாள்களில் முப்பது முப்பத்தைந்து தினங்கள் வரைகூட அவன் ஒரு பருக்கை சோறும் உண்ணாதிருந்திருக்கிறான். வெறும் நீர் அருந்தி, வெறும் காற்றை உட்கொண்டு நாள்களைக் கடத்தியிருக்கிறான். உணவு நுழையாத உடலுக்குள் நோய்களும் நுழையாது என்று சொரிமுத்து எப்போதும் சொல்வான். ஒரு தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம் என்று எதனாலும் பாதிக்கப்படாமல் எத்தனையோ வருடங்கள் அவன் உற்சாகமாக அலைந்து திரிந்திருக்கிறான்.

அதைத்தான் அவனுக்கு அப்போது நினைத்துப் பார்க்கத் தோன்றியது. தோல்வியின் ருசி முதல் முதலில் தட்டுப்பட்டபோது புத்தி உடனே உணவில்தான் சென்று ஒளிந்துகொள்ளச் சொன்னது. பகாசுரப் பசி எடுக்கத் தொடங்கியதும் அப்போதுதான். அந்தக் காலக்கட்டங்களில் அவன் நிறைய உண்டான். கிடைத்ததையெல்லாம் உண்டான். ஆடு, கோழி, காட்டுப்பன்றி, எருமை என்று அகப்பட்டதையெல்லாம் அடித்துக் கொன்று தோலைக் கிழித்துப் போட்டுவிட்டுப் பச்சையாகவே உண்பான். தோல்வியைத் தீனியில் புதைப்பதைக் காட்டிலும் போதையில் புதைப்பது சௌகரியமானது என்று விந்திய மலைச் சாரல்களில் அவன் திரிந்துகொண்டிருந்த காலத்தில் எவனோ ஒரு போதையடிமை சொல்லிக் கொடுத்துவிட்டு ஒரு பிடி கஞ்சாவையும் கொடுத்துச் சென்றான். அதன்பின் கஞ்சா இல்லாமல் தவமில்லை என்றானது. பசியைத் தவத்தில் வெல்ல நினைத்து, போதையில் தவத்தைத் தொலைத்துத் தூங்கிப் போனான்.

நினைத்துப் பார்த்தபோது வினய்க்கு சிரிப்பு வந்தது. திரும்பவும் அதுதான் தோன்றியது. சொரிமுத்துவை விட்டுப் போயிருக்க வேண்டாம்.

இரண்டு நிமிடங்களில் வருவதாகச் சொல்லிவிட்டுப் போன சித்ரா, ஒரே நிமிடத்தில் திரும்பி வந்து சேர்ந்தாள். எதிரே உட்கார்ந்து புன்னகை செய்தாள்.

‘எங்கே போனாய்?’

‘ஒன்றுமில்லை. யாரோ இந்தப் பக்கம் வந்துகொண்டிருந்தார்கள். அவர்களை திசை மாற்றி அனுப்பிவிட்டு வந்தேன்’.

‘ஏன்?’

‘உனக்கு இடைஞ்சலாக இருக்குமே என்றுதான்’.

‘நன்றி. நான் உன்னைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் பெண்ணே. ஆனால் நீ என்னைத்தான் திரும்பத் திரும்பப் பேச வைத்துக்கொண்டிருக்கிறாய்!’ என்று வினய் சொன்னான்.

‘என்னைப் பற்றி என்ன சொல்ல? உன்னைப் போலவே நானும் வாழ்வில் தோற்றவள். ஆனால் ஆவியாக அலையும் இக்காலத்தில் நான் வென்றுவிடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது’.

அவனுக்கு அதுதான் பெரும் வியப்பாக இருந்தது. இறந்தபின் எமலோகம் போகக் கிளம்பும் எந்த ஆவியும் அவனறிந்து பாதி வழியில் திரும்பி வந்ததில்லை. அல்லது போகாதிருந்ததில்லை. ஆவிகளின் நோக்கம் வாழ்வில் அடையாது விட்ட ஏதேனுமொன்றை எண்ணி மறுகி அதற்காக அலைவதாக இருக்கக்கூடும். ஆனால் எந்த ஆவியும் அதற்காகத் தவமிருந்து வரம் பெற முயற்சி செய்வதில்லை. வாழும்போது செய்யாத எந்தத் தவமும் மரணத்தின்பின் சாத்தியமானதும் அல்ல.

‘யார் சொன்னது உனக்கு? எந்த நிலையிலும் தவம் சாத்தியம். உனக்கொன்று தெரியுமா? உயிருடன் இருந்த காலத்தில் எனக்குப் பெரிய பக்தி கிடையாது. நான் ஒரு சராசரிப் பெண். இறந்த பின்பே நான் ரிஷி ஆனேன்’.

‘ரிஷியா!’ என்றான் வினய்.

‘ஆம். சந்தேகப்படாதே. நான் ஒரு ரிஷி. என் தவத்தின் அருமை எனக்குத் தேடித்தந்த அந்தஸ்து அது’.

‘நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நூற்றுக்கணக்கான ஆவிகளுடன் பழகியவன் நான். எது ஒன்றும் இப்படி ஒன்றைச் சொன்னதில்லை’.

‘ஏன் என்றால் யாருக்கும் என்னை நிகர்த்த லட்சியம் இருந்திருக்காது’.

‘லட்சியமா?’

‘ஆம். அதுதான். என் மரணம் எப்படி நிகழ்ந்தது என்று உனக்குத் தெரியுமா?’

‘நீ தற்கொலை செய்துகொண்டதாக விமல் சொன்னான்’.

‘ஆம். நான் சற்றும் எதிர்பாராத துரோகத்தை உன் தம்பி எனக்குச் செய்தான். இத்தனைக்கும் நான் அவனைக் காதலித்திருக்கவில்லை. அவனை எண்ணி நாள்களைக் கழித்திருக்கவில்லை. அவனைத் தவிர இன்னொருவனை மணப்பதில்லை என்று சபதம் செய்திருக்கவில்லை. முறைப்படி பெண் பார்த்து, நிச்சயம் செய்துதான் எங்கள் திருமணத்துக்கு நாள் குறித்தார்கள்’.

‘'கேள்விப்பட்டேன்’.

‘நிச்சயம் ஆனதில் இருந்து அவன் என்னிடம் மிகவும் அன்போடு நடந்துகொண்டான். நாங்கள் பலமுறை ஒன்றாக வெளியே சுற்றியிருக்கிறோம்’.

‘இதையும் விமல் எனக்குச் சொன்னான். அந்நாளில் இதெல்லாம் நம்ப முடியாத அதிசயமாக இருந்திருக்கும் அல்லவா?’

‘ஆனால் நான் அவனை நம்பினேன். உங்கள் வீட்டில் நீங்கள் மூன்று பேர் ஓடிப் போய் சன்னியாசி ஆனீர்கள். அவன் தனி ஒருவனாக இருந்து உன் அப்பா அம்மாவின் சிறு இச்சைகளைத் தீர்த்துக்கொண்டிருந்தான். அவன் படித்தான். அவன் உத்தியோகம் செய்தான். அவன் சம்பாதித்தான். அவன் ஒரு நல்ல சராசரியாகத் தன்னைத் திறமையாக வெளிக்காட்டிக்கொண்டான்’.

‘ஆம். அதுவும் தெரியும்’.

‘அவன் உன் பெற்றோருக்கு அளித்த அதே நம்பிக்கையை எனக்கும் அளித்தான்’ என்று அவள் சொன்னபோது, வினய்க்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. வினோத் அவளுக்கு முதல் முதலாக முத்தமிட்ட சம்பவத்தை சித்ரா அவனிடம் விரிவாக எடுத்துச் சொன்னாள்.

‘வினய், ஒரு முத்தம் ஆணுக்கு அளிக்கும் கிளர்ச்சியும் பெண்ணுக்குத் தரும் பாதுகாப்புணர்வும் சற்றும் சம்பந்தமே இல்லாதது என்பது உனக்குத் தெரியுமா?’

‘பாதுகாப்புணர்வா?’

‘ஆம். யோனியில் குறியை வைத்துச் சொருகச் சம்மதிப்பது என்பது ஒரு பெண் தனது புருஷனுக்கு அளிக்கும் கௌரவம். அதற்குமுன் உதட்டோடு உதடு சேர்க்க அனுமதிப்பது அவன் மீது அவள் கொள்ளும் நம்பிக்கைக்கு அச்சாரம்’.

‘இல்லை. நீ மிகைப்படுத்துகிறாய் சித்ரா. பாலுறவு இரு தரப்புக்கும் பொதுவானது. உடல் வேட்கை அனைத்து உயிர்களுக்கும் பொது’.

‘வேட்கை வேறு. அது பரஸ்பர நம்பிக்கைக்குப் பிறகு உண்டாவது. நான் அந்த நம்பிக்கையின் பிறப்பிடத்தைச் சுட்டிக்காட்டுகிறேன்’.

‘சரி சொல்’.

‘அவன் என்னிடம் முறைப்படி அனுமதி கேட்டான். ஒரு முத்தமிடலாமா என்று கேட்டபின், அனுமதி பெற்று முத்தமிட முன்வரும் ஆணை எந்தப் பெண்ணும் எளிதில் நம்புவாள்’.

‘சரி’.

‘அவன் என்னை அனுமதி கேட்டு முத்தமிட்டான். அப்படி நெருங்கி முத்தமிடும்போது என் மார்பைத் தொட்டான். அது இயல்பாக நிகழ்ந்திருக்கலாம். திட்டமிட்டும் அவன் தொட்டிருக்கலாம்’.

‘சரி’.

‘நான் ஒன்றும் சொல்லவில்லை. இன்னொரு முத்தத்துக்கு அவன் ஆசைப்பட்டபோது, வெட்கத்தின் போர்வையில் அதைத் தவிர்த்தேன்’.

‘சரி’.

‘இப்போது சொல். குறியைக் கொடுத்தால்தான் ஒரு பெண் தன்னைக் கொடுத்ததாகுமா?’

‘நிச்சயமாக இல்லை. மனம் போதும்’.

‘நான் கொடுத்தேனே? அதை மதிக்க அவனுக்குத் தெரியவில்லையே’.

‘தவறுதான். ஆனால் அவன் தரப்பும் உனக்குப் புரிய வேண்டும்’.

‘என்ன புரிய வேண்டும்?’

‘அவன் திட்டமிட்டு உன்னை விட்டுச் செல்லவில்லை. அவனை ஒரு சக்தி செலுத்திக்கொண்டு போய்விட்டது’.

‘முட்டாள். அது அவன் சொல்லும் பொய். நீ அதை நம்புகிறாயா?’

‘பொய் என்று உனக்கு எப்படித் தெரியும்?’

‘ஞானமடைந்தவனின் முதல் அடையாளம் அவன் வெளிப்படையாக இருப்பான் என்பது. நீ ஞானமடைந்ததை நீ இப்போதுவரை உணரவில்லை. ஆனால் எனக்கு அது தெரிகிறது. இல்லாவிட்டால் என்னிடம் நீ உன் மனத்தைப் பிளந்து காட்டியிருக்க மாட்டாய்’.

‘நன்றி. ஆனால் வினோத் ஞானமடைந்து வீட்டை விட்டு வெளியேறவில்லை. அவன் பைத்தியம் முற்றி வெளியேறியவன்’.

‘எதைச் சொல்கிறாய்? கிருஷ்ணன் தன்னை அழைத்ததாக அவன் ஒரு கதை சொல்கிறானே, அதையா?’

வினய் அவளையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.

‘இதோ பார் வினய், கிருஷ்ணன் ஒரு நித்யக் காதலன். ஒரு காதலைக் கொன்று தன் பக்தனைத் தன்னிடம் அழைக்க அவன் ஒருபோதும் விரும்பமாட்டான். அது அந்த அவதாரத்தின் தத்துவத்துக்கே விரோதமானது’.

‘ஆனால் அவன் உன்னைக் காதலித்திருந்தால்தானே?’

‘ஒழியட்டும். காதல் இல்லை. காமம் இருந்திருக்கிறதல்லவா? அதுதானே அந்த முத்தத்தில் வெளிப்பட்டிருக்க வேண்டும்? ஒரு வேசியிடம் போயிருந்தால்கூட மணிக்கு இவ்வளவு என்று கூலி கொடுத்திருக்க மாட்டானா? இவன் வாழ்க்கை தரச் சம்மதித்தவன் அல்லவா? அப்படி நடந்துகொண்டது தவறே அல்லவா?’

வினய் புன்னகை செய்தான். சிறிது நேரம் எங்கோ பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, ‘அவன் இப்போது என்னவாக இருக்கிறான் என்பது வரை நீ அறிந்திருப்பாய்!’ என்று சொன்னான்.

‘தெரியும். அவன் ஒரு சிறந்த கிருஷ்ண பக்தனாகியிருக்கிறான். அவன் மனத்தில் இப்போது எந்தக் களங்கமும் இல்லை. உனக்குத் தெரியுமா? இன்று காலை அவன் ஊருக்குள் நுழைந்ததும் என் அம்மாவைப் போய்ப் பார்த்து மன்னிப்புக் கேட்டான்’.

‘அப்படியா?’

‘அவன் ஊருக்குள் நுழையும்போதே நான் பார்த்துவிட்டேன். பக்தியில் கனிந்த அவனது முகம் கிட்டத்தட்ட கிருஷ்ணனின் முகத்தைப் போலவே தெரிந்தது’.

வினய் புன்னகை செய்தான்.

‘ஆனால் முகத்தில் என்ன இருக்கிறது? கிருஷ்ணன் ஒரு அயோக்கியன். அவனது பக்தன் மட்டும் எப்படி யோக்கியவானாக இருப்பான்?’ என்று சித்ரா கேட்டாள்.

(தொடரும்)

 

http://www.dinamani.com/junction/yathi/2018/oct/04/144-ரிஷி-3013727.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.