Jump to content

‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

145. சம்ஹார தேவி

‘எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது’ என்று வினய் சொன்னான்.

‘இரு’ என்று சொல்லிவிட்டு சித்ரா எழுந்து கடலருகே சென்றாள். மணலை அள்ளி ஒரு பானை செய்து, அதில் கடல் நீரை ஏந்தி எடுத்து வந்தாள். இந்தா என்று அவனிடம் நீட்டினாள். வினய் புன்னகையுடன் வாங்கிக்கொண்டான்.

‘உப்பெல்லாம் கரிக்காது. குடி’ என்று சொன்னாள்.

‘நானே பல பேருக்கு இந்த மேஜிக்கை செய்து காட்டியிருக்கிறேன், எனக்குத் தெரியும்’ என்று சொல்லிவிட்டு அவன் நீரைக் குடித்தான்.

‘உனக்கே முடியுமென்றால் என்னை ஏன் கேட்டாய்?’

‘நான் எந்தத் தந்திரங்களையும் பிரயோகிப்பதில்லை என்ற முடிவில் இருக்கிறேன்’.

‘ஏன்?’

‘சித்ரா, நான் ஒரு உச்சத்தைக் குறி வைத்தேன். அதை எப்படி விளக்கிச் சொன்னாலும் உனக்குப் புரியாது. முழுக்க முழுக்க மனித குலத்துக்காக நான் என்னை ஆகுதியாக்க நினைத்தேன். ஆனால் என் வயிற்றுப்பாட்டைத் தீர்ப்பது ஒன்றே பணி என்று ஆகிப் போனது’ என்று அவன் சொன்னான்.

ஐயோ என்று பரிதவித்துப் போனாள் சித்ரா.

‘நான் தெய்வங்களால் கைவிடப்பட்டவன். தேவதைகளால் உதாசீனம் செய்யப்பட்டவன். நான் வசியம் செய்து வைத்திருந்த சாத்தான்களும் ஆவிகளும் ஒரு கட்டத்தில் எனக்குப் பிடிக்காமல் போயின. மிஞ்சிப் போனால் அவர்களால் இப்படி ஒரு சொம்பு உப்பு நீரை நல்ல நீராக்கித் தர முடியும். ஆனால் நான் மகா சமுத்திரத்தையே நன்னீராக்க நினைப்பவன்’ என்று வினய் சொன்னான்.

‘அது எப்படி முடியும்?’

‘முடியும். அதற்கான முனைப்பு என்னிடம் இருந்தது. மிகவும் கஷ்டப்பட்டு உழைத்தேன். என் தவங்களை உனக்குச் சொல்லி விளக்க முடியாது. நெருப்பிலும் நீரிலும் முள்ளிலும் நின்று தவம் புரிந்த சித்தர்களை நீ அறிந்திருக்கலாம். நான் ஒரு ஈர்க்குச்சியின் நுனியில் நின்று தவம் புரிய முயற்சி செய்தவன். தெரியுமா?’

சித்ரா புன்னகை செய்தாள். ‘நான் உன்னை நம்புகிறேன்’ என்று சொன்னாள்.

‘விளையாட்டே இல்லை சித்ரா. ஒரு ஈர்க்குச்சியின் கனத்தைக் காட்டிலும் எனது தேகத்தின் கனத்தைக் குறைப்பதற்கு ஆறு ஆண்டுகள் கடும் முயற்சி செய்தேன். முற்றிலும் சதையற்றுப் போய் எலும்பின் கனத்தையும் குறைக்க ஆரம்பித்தேன். வெறும் காற்று. எனக்கு வேறு உணவே தேவையில்லை என்றானபோது காற்றின் அளவையும் கணிசமாகக் குறைத்தேன்’.

‘ஐயோ! பயங்கரம்’.

‘ஆம். என்னால் மண்ணில் புதைத்த ஒரு ஈர்க்குச்சியின் மீது ஏறி நிற்க முடிந்தது. ஒற்றைக்காலில் மணிக்கணக்கில் நிற்க முடிந்தது. ஆனால் என் சிந்தை கூடவில்லை. எல்லாம் அமையும் தருணம் எதுவோ ஒன்று என்னைப் பிடித்துக் கீழே தள்ளிவிடும்’.

‘பரிதாபமாக இருக்கிறது’.

‘உண்மையிலேயே பரிதாபப்பட வேண்டியவன்தான் நான். உனக்கு கோரக்கர் தெரியுமா?’

‘சித்தர்’.

‘ஆம். பெரிய சித்தர். அவரது சித்த சித்தாந்த பத்ததியைப் பயில்வதற்காக நேபாளம் சென்றேன். ஹட யோகத்தின் அடிப்படையே அந்தப் பிரதிதான். அதைக் கற்றுத்தரக் கூடிய நாத சைவ முனி ஒருவரை அங்கே நான் கண்டேன். ஒரு வருடம் அவருக்குக் கோவணம் துவைத்துப் போட்டு, சமைத்துக் கொடுத்து, கால் பிடித்துவிட்டு குருகுல வாசம் செய்தேன். ஒருநாள் அவர் எனக்கு மனமிறங்கி நாளை முதல் ஆரம்பிக்கலாம் என்று சொன்னார். அன்றிரவு அவர் காலமாகிவிட்டார்’.

இதைச் சொல்லும்போது வினய் கண் கலங்கியிருந்தான். ‘எனக்கு உன்னை நெருங்கி உன் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்று தோன்றுகிறது’ என்று சித்ரா சொன்னாள்.

‘வேண்டாம் பெண்ணே. நான் எந்த அரவணைப்புக்கும் தகுதியற்றவன். அடிப்படையில் ஒரு கலைஞனின் மனத்துடன் கடவுள் என்னை சிருஷ்டி செய்யத் தொடங்கி, இறுதியில் ஒரு கொலைகாரனின் வாள் முனையால் என் விதியை எழுதிவிட்டான்’.

‘நீ என்னைப் பெண்ணே என்று அழைப்பது எனக்குப் பிடித்திருக்கிறது’.

‘ஏன், நீ பெண்தானே?’

அவள் சிரித்தாள். ‘உனக்கு நான் பேயாகத் தோன்றவேயில்லையா?’

‘உணராமலா உன்னை உட்கார வைத்துப் பேசிக்கொண்டிருப்பேன். பேயானாலும் பெண் என்பதுதான் எனக்கு முக்கியம். ஒன்றைப் புரிந்துகொள். பெண் என்பது சக்தி ரூபம். சக்தி அழிவற்றது. முடிவற்றது. அதன் ஆற்றல்கள் நிகரற்றவை. ஆவியாக அலையும்போதும் தவம் புரிந்ததாகச் சொன்னாயே, இது ஒரு ஆணால் முடியாது’.

‘அப்படியா?’

‘என்ன அப்படியா? என்னைப் பார். நான் உயிருடன் இருப்பவன். ஆனாலும் தோற்றேன். நீ செத்தபின் ஜெயித்ததாக நீயேதான் சொன்னாய்’.

அவள் அமைதியாகிப் போனாள். ஏதோ யோசித்துக்கொண்டிருப்பதாக வினய் நினைத்தான். தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவனும் ஒரு மரத்தின் மீது சாய்ந்து கால் நீட்டி அமர்ந்துகொண்டான். அவள் எடுத்து வந்த நீரில் மிச்சம் இருந்ததைக் குடித்துவிட்டுப் பாண்டத்தைத் தூக்கி எறிந்தான். அது மணலாகி உதிர்ந்து இல்லாமல் போனது.

சித்ரா இப்போது பேசத் தொடங்கினாள். ‘நான் கேட்டதற்கு நீ பதில் சொல்லவில்லை’.

‘என்ன கேட்டாய்?’

‘உனக்கு என்னால் உதவ முடியும் என்றேன்’.

வினய் சிரித்தான்.

‘ஏன் சிரிக்கிறாய்? நான் பொய் சொல்லவில்லை’.

‘நீ பொய் சொல்வாய் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் என் விதி எப்படியாக எழுதப்பட்டது என்பதை இவ்வளவு நேரம் உனக்கு விளக்கிய பின்புமா இப்படிக் கேட்கிறாய்?’

‘ஆம். உனக்கு நேர்ந்தவற்றை நீ சொன்னபின்பு எனக்கு அதில் இன்னமும் வெறி ஏறுகிறது. உன்னை வெல்ல வைத்துப் பார்க்க நான் மிகவும் ஆசைப்படுகிறேன்’.

அவன் புன்னகையுடன் அவளைப் பார்த்தான். ‘நீ பெண்ணாக இருந்தால் இப்போது உன்னை அருகே அழைத்து முத்தமிட்டிருப்பேன்’ என்று சொன்னான். ‘சித்ரா, அன்பைக் காட்டிலும் பரிவின் பலத்தை நீ எனக்குக் காட்டிக்கொண்டிருக்கிறாய். உயிரற்ற ஒன்று உயிருள்ள ஒன்றின்மீது கவியும் இந்தத் தருணத்தை நான் நினைவில் சேமிக்கிறேன். உன்னை நான் மறக்கவே மாட்டேன்’.

‘இப்போதும் நீ பதில் சொல்லவில்லை’.

‘எப்படிச் சொல்வேன் என்று எதிர்பார்க்கிறாய்? நான் ஒரு துறவி. நான் யாருக்கும் கடமைப்பட முடியாது’.

‘கடமையாக எண்ணித்தானே உன் தாயின் இறுதிச் சடங்குக்கு வந்தாய்?’

‘ஆம். அது பிறவி எடுத்தபோது என் மீது ஏற்றி வைக்கப்பட்டது. அதை நான் ஒன்றும் செய்ய முடியாது’.

‘அப்படியானால் என்னை உன் தாயாக எண்ணிக்கொள்’.

‘அது என்னால் முடியாது’.

‘ஏன்?’

‘என் தாயின் முலைகளை நான் என்றுமே ரசித்ததில்லை. அவளைக் கட்டித்தழுவி முத்தமிட்டதில்லை. அவளது குறியை நான் சிந்தித்ததில்லை. ஆண், பெண், நபும்சகம் என்பது போலத் தாய் என்பவள் ஒரு பிறப்பு. அவள் ஆணோ பெண்ணோ நபும்சகியோ அல்ல. அது ஒரு தனிப் பிறப்பு. அவள் தாய். அவ்வளவுதான். அவள் ஒருத்தியாக மட்டும்தான் இருக்க முடியும்’.

சித்ரா மீண்டும் சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். பிறகு, ‘நான் கேட்ட விதம் தவறோ என்று இப்போது நினைக்கிறேன்’ என்று சொன்னாள்.

வினய் புன்னகை செய்தான்.

‘நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என்று நேரடியாகக் கேட்டிருந்தால் செய்திருப்பாய் அல்லவா?’

‘முடிந்தால் செய்திருப்பேன்’.

‘நான் என் நோக்கத்தை மறைத்துக்கொண்டு உன் ஆசைகளைத் தூண்டுவது போலப் பேசியது பிழை. என்னை மன்னித்து விடு’ என்று சொன்னாள்.

‘தூண்டினாயா? உன்னால் தூண்ட முடிந்ததா?’

‘இல்லை. நீ அசையவேயில்லை. அதுதான் எனக்கு வியப்பாக உள்ளது. ஆனால் இப்போதும் சொல்கிறேன். உன் லட்சியம் எத்தனை பெரிதாக இருந்தாலும் என்னால் அதை நிறைவேற்றிவைக்க முடியும். நீ உருகும் சக்தி ரூபம் உன் சிந்தையில் வந்து அமரும். உனக்கு அது கட்டுப்படும். நீ விரும்பியதைச் செய்து தரும். என் மொத்தத் தவத்தின் பலனை நான் உனக்காகத் தாரை வார்ப்பேன்’.

‘அப்படியா? சரி, சொல். முடிகிறதா பார்க்கிறேன்’ என்று வினய் சொன்னான்.

அவள் சட்டென்று எழுந்துகொண்டாள். தரை மட்டத்தில் இருந்து ஒன்பதடி உயரத்தில் சென்று நின்றுகொண்டு கண்ணை மூடி ஏதோ மந்திரம் சொன்னாள். பிறகு தனது இடக்கையைத் தரையைப் பார்த்து நீட்டினாள். அதிலிருந்து பீறிட்ட ஓர் ஒளிச்சரடு மணலைத் துளைத்துக்கொண்டு உள்ளே பாய்ந்தது. உடனே அவள் சுட்டிய இடத்தில் இருந்து ஒரு சுனை பீறிட்டது. பீறிட்டெழுந்த நீர், ஒளிச்சரடு பாய்ந்த அதே வேகத்தில் மேலெழுந்து சென்று அவள் கரத்தில் சென்று தேங்கி நிறைந்தது.

சித்ரா அந்த நீரைத் தாரையாக வார்த்து சத்தியம் செய்தாள். ‘இருபத்தைந்தாண்டுக் காலமாக நான் புரிந்த உக்கிரத் தவத்தின் இறுதியில் தேவி எனக்கு வரமளித்தாள். ஒன்று நான் மோட்சத்துக்குச் செல்லலாம். இனி பிறக்காதிருக்கலாம். அல்லது நான் சுட்டிக்காட்டும் யாரோ ஒருவருக்கு அந்த வரத்தை நானே அளிக்கலாம். என் அன்பான வினய்! உனக்கு நான் அந்த வரத்தைத் தாரை வார்த்துத் தருகிறேன். தெய்வங்களால் கைவிடப்பட்டவன் என்று நீ சொன்னாய். உன்னை நான் அந்தத் தெய்வங்களுள் ஒன்றென நியமிக்கிறேன். உன்னைப் பிறப்பற்றவன் ஆக்குகிறேன். அழிவற்றவன் ஆக்குகிறேன். பிரபஞ்சம் முழுதும் ஆளும் தகுதியை உனக்கு நான் உருவாக்கித் தருகிறேன். நீ ஒரு சக்தி. நீ ஒரு விசை. நீ ஒரு பிரகிருதி. அழிவற்ற பேரானந்தப் பெருந்திருவின் உதிரத்தின் ஒரு சொட்டை என் சிரசில் நான் ஏந்தியிருக்கிறேன். அதை உனக்கு நான் மாற்றித் தருகிறேன். எனக்காக நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். என் பெண்மையை மலினப்படுத்திவிட்டுப் போன உன் தம்பியை நீ கொன்றுவிடு’.

(தொடரும்)

 

http://www.dinamani.com/junction/yathi/2018/oct/05/145-சம்ஹார-தேவி-3014392.html

 

Link to comment
Share on other sites

  • Replies 176
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

146. திரிபுவனச் சக்கரவர்த்தி

என் வியப்பின் அடி ஆழக் கசண்டு வரை சுரண்டி எடுத்து என் விழிகள் வெளியே கொட்டிக்கொண்டிருந்திருக்க வேண்டும். வினய் மிகவும் அமைதியாக என்னைப் பார்த்துப் புன்னகை செய்தான். ‘மணல் இப்போது சுடவில்லையா?’ என்று கேட்டான்.

‘இல்லை. எனக்கு சூடு பழகிவிட்டது அல்லது மரத்துவிட்டது’.

‘அநேகமாக மறந்திருக்கும்’ என்று அவன் சொன்னான்.

‘இருக்கலாம். நீ சொன்னதையெல்லாம் கேட்ட பின்பு நீ நினைவில் இருப்பதே வியப்புக்குரிய விஷயம்தான்’.

‘என்னால் அவளைப் புரிந்துகொள்ள முடிகிறது விமல். ஆனால் அவளுக்கு எந்த நியாயமும் உவப்பானதில்லை’.

‘இதில் நியாயம் என்ன இருக்கிறது? அவள் இடத்தில் நீ இருந்தாலும் அதைத்தான் விரும்புவாய். அதுசரி, உன்னை ஒன்று கேட்கிறேன். ஒரு பேயால் கேவலம் ஒரு கொலை செய்ய முடியாதா? அதற்கு எதற்கு அவள் ஒரு அடியாள் தேடுகிறாள்?’

வினய் புன்னகை செய்தான்.

‘அவள் வினோத்தை விரும்பியிருக்கிறாள். நெடுநாள் அல்ல என்றாலும் பழகிய சில தினங்களில் அவன் மீது காதல் வயப்பட்டிருக்கிறாள்’.

‘அதனால் என்ன?’

‘அவனை மீண்டும் சந்தித்தால் பழைய காதல் மீண்டும் துளிக்குமென்று அஞ்சுகிறாள்’.

‘கஷ்டம். ஆவியின் காதல். சனியன், இருந்துவிட்டுப் போகட்டுமே. கொலையும் காமத்துக்கு நிகரான வீரியம் கொண்டதுதானே? செய்துவிட்டுப் போய்விடலாமே?’

‘உனக்குப் புரியவில்லை. அவள் தனது காதலைப் பரிசுத்தமானதென்று கருதுகிறாள். அதன் புனிதத்தை அவன் கொச்சைப்படுத்திவிட்டதாக நினைக்கிறாள். அது உண்டாக்கிய கோபத்தின் மையப்புள்ளிதான் அவளது தவத்தின் தொடக்கம். தவத்தின் உச்சம் என்பது சம்ஹாரம். அது நிகழ்ந்துவிட்டால் அவள் அடங்கிவிடுவாள்’.

‘எங்கிருந்து அடங்குவது? அவளுக்காக நீ கொலை செய்தால் அவளது தவப்பலன் முழுதும் உன்னைச் சேர்ந்துவிடுமல்லவா?’

‘ஆம். அப்படித்தான் சொன்னாள்’.

‘ஒருவேளை நீ செய்ய மறுத்தால்?’

‘அவள் எமனுலகம் போய்விடுவாள். அதன்பின் விதிப்படி அவளுக்கு என்ன உள்ளதோ அதை அனுபவிப்பாள்’.

எனக்கு ஒரு மாயாஜாலக் கதை கேட்பது போலிருந்தது. பிடித்திருந்தது. எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் வினய் தனக்கு நடந்ததை என்னிடம் விவரித்துக்கொண்டிருந்தான். அவனளவு மனக்கட்டுப்பாடும் பரவசம் தவிர்த்த சிந்தையும் எனக்கு ஏன் இல்லாமல் போய்விட்டது என்று வருத்தமாக இருந்தது. உன் தம்பியை எனக்காக நீ கொலை செய்வாயா என்று ஒரு ஆவி என்னிடம் கேட்டிருந்தால் நான் என்ன செய்திருப்பேன் என்று யோசித்துப் பார்த்தேன். குறைந்தது அசிங்கமாகச் சில சொற்களைப் பேசியிருப்பேன். சொற்களால் அதன் சீற்றத்தைக் கிளறிவிடும் மகிழ்ச்சியையாவது அடையப் பார்த்திருப்பேன். அல்லது அமைதியாக நேரம் எடுத்து யோசிக்க ஆரம்பித்திருப்பேன். அரை நூற்றாண்டுக்கால வாழ்வுக்குப் பிறகு கிடைக்கக்கூடிய ஆத்மிக லாபத்தைக் கருத்தில் கொண்டு யோசித்துப் பார்த்தாலும் தவறில்லை. ஒன்றை அழிக்காமல் இன்னொன்றில்லை என்பது இயற்கை நியதி. அழிக்கும் சக்தியாக அல்லாமல், சக்தியின் கருவியாக மட்டுமே இருப்பதில் பிழையில்லை என்ற முடிவுக்குக் கூட வந்திருப்பேன். சந்தேகமின்றி நான் ஒரு சராசரி. எனது பலங்கள் அனைத்தும் என் பலவீனங்களால் வடிவமைக்கப்பட்டவை. சந்தர்ப்பங்களின் சாதகங்களைப் பற்றிக்கொண்டே எனது காலம் காலடியே உருண்டு சென்றிருக்கிறது. பெரிய இழப்புகள் இதுவரை இல்லை. எதையும் பெரிதாக அடைந்துவிடவும் இல்லை. ஆயினும் நான் ஒரு வெற்றிகரமான சன்னியாசி. ஆயிரக்கணக்கானவர்களுக்கு நம்பிக்கையான குரு. என்னை அண்டியிருப்பதன் சௌகரியத்தை வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் உணர்வதாக எப்போதும் என் சீடர்கள் சொல்லுவார்கள்.

‘என்ன யோசிக்கிறாய்?’ என்று வினய் கேட்டான்.

‘இல்லை. என்னை சித்ராவிடம் அழைத்துச் செல்கிறாயா?’

‘எதற்கு?’

‘பேசிப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது’.

‘அநேகமாக அது சாத்தியமில்லை என்று நினைக்கிறேன்’.

‘ஏன்?’

‘நீ அதற்குத் தகுந்தவன் அல்ல’.

‘அப்படியா?’

‘அப்படித்தான் நினைக்கிறேன். அவள் உயிரற்றவள். ஆனாலும் அவள் ஒரு ரிஷி. தவம் இருந்து வரம் பெற்றிருப்பவள். யாருடன் பேசுவது என்பது அவளது தேர்வு. அவளது தீர்மானம். நீதான் இதற்குச் சரியானவன் என்று அவள் நினைத்திருந்தால் அவள் என்னைத் தேர்ந்தெடுத்திருக்க அவசியமில்லை. நேரடியாக உன்னிடம் வந்திருப்பாள்’.

‘நாய் அவதாரம் எடுத்த சொரிமுத்து என்னைத் தேர்ந்தெடுத்த மாதிரியா?’

வினய் சிரித்துவிட்டான். ‘அது எனக்கே வியப்புத்தான். கிழவன் என் மீது மிகவும் கோபத்தில் இருக்கிறான் என்று நினைக்கிறேன்’.

‘விடு. அப்படியொன்றும் அவன் என்னிடம் தேவ ரகசியம் பேசிவிடவில்லை. அண்ணா வந்துவிட்டானா என்று கேட்டதுடன் சரி. அதன்பின் ஒரு சொல்கூடப் பேசவில்லை’.

வினய் சிறிது நேரம் மணல் பரப்பில் அப்படியே கால் நீட்டிப் படுத்தான். சுட்டெரிக்கும் வெயிலைக் கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டு கிடந்தான். பிறகு மீண்டும் எழுந்து உட்கார்ந்து, ‘விமல், எனக்கு நீ உண்மையாக பதில் சொல்வாயா?’ என்று கேட்டான்.

‘நான் பொய் சொல்வதில்லை. தைரியமாகக் கேள்’.

‘என் இடத்தில் நீ இருந்திருந்தால் அவளுக்கு என்ன பதில் சொல்வாய்?’

நான் ஏற்கெனவே எண்ணியதுதான். திரும்பக் கேட்கிறான். ஆனால் இருவிதமான எனது மனநிலை அவனுக்கு உகந்த பதிலாக இருக்காது என்று தோன்றியது. எனவே யோசித்தேன்.

‘அவசரமில்லை. நிதானமாக யோசித்துப் பதில் சொன்னால் போதும்’.

‘என் பதில் உனக்கு அவ்வளவு முக்கியமா? நீ ஒரு சன்யாசி. பற்றற்றவன். நீ யோசிக்க வேண்டியது ஒன்றுதான். ஒரு கொலை செய்யலாமா, வேண்டாமா. அவ்வளவுதானே? இதை நீ ஒரு கோழி பலி கொடுப்பது போலக்கூடக் கருத இடம் இருக்கிறது’.

‘பலி தத்துவம் வேறு. அதைக் கொச்சைப்படுத்தாதே’ என்று வினய் சொன்னான்.

‘மன்னித்துக்கொள். எனக்கு சடங்குகள் மீது நம்பிக்கை கிடையாது’.

‘என் கேள்வியெல்லாம் ஒன்றுதான். சில தனிப்பட்ட லாபங்களுக்காக ஒரு கொலை செய்வது சன்னியாசத்துக்கல்ல; மனிதப் பிறப்புக்கே இழுக்காகி விடுமல்லவா?’

‘ஆனால் பெரிய லாபம். அதையும் நீ யோசிக்க வேண்டும்’.

‘ஆம். பெரிதுதான். அவள் சொன்னது நடக்குமானால் நான் திரிபுவனச் சக்கரவர்த்தி’.

திரிபுவனச் சக்கரவர்த்தி! எத்தனை வண்ணமயமான பீடம்! என் சகோதரன் அப்படியொரு பீடத்தில் ஏறி அமருவானேயானால் நான் அவனது சபையில் ஒரு ராஜகுருவாக இருப்பேன். எல்லா வேளையும் அறுசுவை உணவு உண்டு, சப்ர மஞ்ச கட்டிலில் படுத்துறங்கி, தோன்றினால் நீதி போதனை சொல்லிக்கொண்டு, ஒன்றும் தோன்றாதபோது பல்லக்கில் ஏறி உலகைச் சுற்றி வரலாம். ஆனால் இதெல்லாம் நடக்க வேண்டுமானால் அவன் வினோத்தைக் கொலை செய்ய வேண்டும்.

‘அவன் பாவம் விமல். என்னால் அவனைப் புரிந்துகொள்ள முடிகிறது. பக்தி என்பதே ஒருவித உணர்வுநிலை உச்சம்தான். மூளையை மழுங்கடித்துத்தான் மனம் எழுச்சி பெறுகிறது. அவன் அப்படியொரு தருணத்தில் சித்ராவை விட்டுச் சென்றான். உண்மையில் அந்தக் கணத்தில் அவனுக்கு சித்ரா உள்பட யார் நினைவும் வந்திருக்க வாய்ப்பில்லை. குறைந்தபட்சம் அம்மாவைக்கூட அவன் நினைத்துப் பார்த்திருக்கமாட்டான்’ என்று வினய் சொன்னான்.

‘உண்மை. நானும் அதைப் புரிந்துகொள்கிறேன். ஆனால் உனக்கு ஒன்று சொன்னால் நம்புவாயா? நான் முற்று முழுதான விழிப்பு நிலையில்தான் என் துறவு நிலையை எட்டிப் பிடித்தேன். இனி இது எதுவும் வேண்டாம் என்று முடிவு செய்தபோது நான் அம்மாவை நினைத்தேன். அப்பாவை நினைத்தேன். அண்ணாவை, உன்னை, வினோத்தை, மாமாவை, கோயிலை, நித்ய கல்யாணப் பெருமாளை, பட்டாச்சாரியாரின் வியர்வை துர்நாற்றத்தை, கோவளம் சம்சுதீனை - ஒருத்தர் மிச்சமில்லை. அனைவரையும் நினைவுகூர்ந்து என்னிடம் இருந்து விலக்கி வைத்தேன்’.

‘அப்போதே நீ நாத்திகனாக இருந்தாயா?’

‘இல்லை என்றுதான் நினைக்கிறேன். கோயிலுக்குப் போகும்போது நான் கும்பிட்டுக்கொண்டுதான் இருந்தேன்’.

‘நான் அதைக் கேட்கவில்லை. உன் மனத்தில் கடவுள் இருந்தாரா?’

‘ஆம். இருந்தார்’.

‘பிறகு எப்படி இல்லாமல் போனார்?’

‘வேண்டாம் என்று தோன்றியது. தள்ளி வைத்தேன்’.

‘ஏன் அப்படித் தோன்றியது?’

‘தெரியவில்லை வினய். எனக்கு நானே போதும் என்று நினைத்துவிட்டேன்’.

‘அப்படித் தோன்றியது உனக்குத் தன்னம்பிக்கை அளித்ததா?’

நான் சற்று யோசித்தேன். அப்படியொன்றும் தன்னம்பிக்கை பொங்கி வழிந்த நினைவெல்லாம் இல்லை. என்னால் மானசீகத்தில் எதையும் நெருங்க முடியாததே காரணம் என்று தோன்றியது. அம்மாவைக்கூட நெருங்கித் தொட்ட கணத்தில்தான் அம்மாவாக உணர்ந்திருக்கிறேன். இரண்டடி விலகி நிற்கும்போது பாசம் நிகர்த்த எதுவும் எனக்குள் உதித்ததில்லை.

இதைச் சொன்னபோது, ‘அப்படி இருக்க வாய்ப்பில்லை’ என்று வினய் சொன்னான்.

‘ஆனால் நான் அதையெல்லாம் பெரிதாக எண்ணவேயில்லை. குறிப்பிட்ட காலம் வரை அண்ணாவைத் தேடிக்கொண்டிருந்தேன். பிறகு அதுவும் எதற்கு விட்டுவிடு என்று தோன்றியது. விட்டுவிட்டேன்’.

‘அப்படியா?’

‘ஆம். அம்மா சாகக்கிடக்கிறாள் என்று மாமாவிடம் இருந்து தகவல் வந்தபோது மீண்டும் சில நாள் அண்ணாவைத் தேடினேன். வழக்கம்போல் அவன் எனக்கு அகப்படவில்லை. சரி ஒழிகிறான் என்று விட்டுவிட்டு ரயிலேறிவிட்டேன்’.

வினய் என்னை நெருங்கித் தொட்டான். என் கன்னத்தை மெல்ல வருடினான். ‘நீ இப்படியே இரு. அதுதான் உனக்கு நல்லது’ என்று சொன்னான்.

(தொடரும்)

 

http://www.dinamani.com/junction/yathi/2018/oct/08/146-திரிபுவனச்-சக்கரவர்த்தி-3016025.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

147. கொலைக் குறிப்பு

கோயிலைக் கடந்து வீதிக்குள் நுழையும்போது, நான் வினய்யின் கையைப் பிடித்து நிறுத்தினேன். என்ன என்று கேட்டான்.

 

 

‘தெரியவில்லை. ஆனால் என்னவோ சரியாக இல்லை’.

‘என்ன சரியாக இல்லை?’

‘இல்லை. நான் சரியாக இல்லை என்று சொன்னேன். சற்றுப் பதற்றமாக உணர்கிறேன்’.

அவன் நின்றான். என்னைப் புன்னகையுடன் நோக்கினான். ‘எது குறித்து?’ என்று கேட்டான். யோசித்தேன். குறிப்பிட்ட காரணம் எனக்குத் தோன்றவில்லை. ஆனால் பதற்றமாகத்தான் இருந்தது. வீட்டுக்குப் போகாமல் மண்டபத்திலேயே உட்கார்ந்து விடலாமா என்று தோன்றியது. வினோத்தைப் பார்க்கும்போது அவனிடம் நடந்ததைச் சொல்ல வேண்டும். சொல்லாமல் தவிர்ப்பது நியாயமல்ல. சொல்லுவது உவப்பானதல்ல. துறவிதான் என்றாலும் மரணம் சார்ந்த அவனது சிந்தனை ஓட்டம் எப்படி இருக்கும் என்று தெரியாது. அவன் அச்சமோ, தயக்கமோ கொள்ள வாய்ப்பில்லை என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் குற்ற உணர்வும் அவமான உணர்வும் மேலோங்க, அவன் கணப் பொழுதேனும் கிருஷ்ணனை மறந்து சித்ராவைக் குறித்து நினைத்துக் கண் கலங்கிவிடக் கூடும். எனக்கு சந்தேகமில்லாமல் தெரியும். பத்மா மாமியின் காலில் விழுந்தபோதுகூட அவன் மாமியைக் கிருஷ்ணனாகத்தான் நினைத்தான். அம்மாவை வழியனுப்பி வைக்கும்போதுகூடக் கிருஷ்ணனின் மரணமாகத்தான் அவன் அதைக் கருதுவான். வேறு எதுவாகவும் அவன் நினைக்கப் பழகவில்லை என்பதை நான் அறிந்திருந்தேன். அப்படியொரு உன்மத்த நிலையில், சித்ரா தன்னைக் கொல்லச் சொல்லித் தன் அண்ணனிடமே கேட்டிருப்பது தெரியுமானால் அவனுக்கு என்ன தோன்றும்? அது கிருஷ்ணன் அளிக்க விரும்பும் தண்டனையாக அல்லவா நினைத்துக்கொள்வான்? வாழ்வின் தீராப் பக்கங்களில் தனது மௌனத்தாலும் மோனத்தாலும் கவிதையெழுதிச் செல்கிற கிருஷ்ணன். ஒரு கொலைக் குறிப்பை அவன் எழுதி வைப்பதை வினோத் நிச்சயம் விரும்பமாட்டான். கிருஷ்ணனை எப்படி ஒரு கொலைகாரனாகக் கருத இயலும்? அவனது அசுர வதங்கள் எல்லாமேகூட மோட்ச சன்னியாசப் பிட்சை அல்லவா?

எனக்கு இன்னும் என்னென்னவோ தோன்றியது. மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். ‘வினய், நீ வீட்டுக்குப் போ. நான் சிறிது நேரம் கழித்து வருகிறேன்68 என்று சொல்லிவிட்டு, அவன் பதில் சொல்வதற்குள் திரும்பி நடக்க ஆரம்பித்தேன். அவன் சிறிது நேரம் அங்கேயே நின்று நான் போவதைப் பார்த்துக்கொண்டிருந்தான். நானும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டேதான் கோயில் முன் மண்டபத்தை நோக்கிச் சென்றேன். நான் மண்டபத்தை அடையும்வரை வினய் நகரவில்லை. நான் மண்டபத்தை நெருங்கி, ஒரு தூணோரம் சாய்ந்து அமர்ந்தபின் அவன் நின்ற இடத்தில் இருந்து கையாட்டிவிட்டு வீட்டை நோக்கிப் போகத் தொடங்கினான்.

வினய் வீட்டுக்குப் போகும் நேரம் அம்மா கண்ணைத் திறந்து பார்த்தால் சிறிது பயந்துவிடுவாள் என்று தோன்றியது. அவனது தோற்றம் அத்தனை பயங்கரமாக இருந்தது. அவன் மேல் சட்டை அணிய விரும்புவதே இல்லை. வினோத் கொடுத்ததைக்கூட உதாசீனப்படுத்திவிட்டான். புடைத்துக்கொண்டு வெளியே தெரிந்த அவனது மார்பு எலும்புகளை விரல் வைத்து எண்ண முடிந்தது. கழுத்தில் ஆறேழு நரம்புகள் இற்றுப்போன கயிறுகளைப்போலத் தொங்கிக்கொண்டிருந்தன. முகமெங்கும் மண்டிய தாடியும் சடாமுடியும் உருண்டுகொண்டே இருந்த விழிகளும் அம்மா ரசிக்கக்கூடியவையாக இருக்க முடியாது என்று நினைத்தேன். விரல் நகங்களை அவன் நறுக்குவதில்லை. அதில் படியும் அழுக்கையும் அவன் பொருட்படுத்துவதில்லை. நான் அவனிடம், ‘தினமும் குளிக்கிறாயா?’ என்று கேட்டேன். ‘தோன்றும்போது குளிப்பேன். குளிக்கத் தோன்றும்போது அருகே நீர்நிலை இருக்க வேண்டும். அதுதான் சிக்கல்’ என்று சொன்னான். தனக்கென ஒதுங்க ஓர் இடமின்றியே இருபதாண்டுக் காலத்துக்கும் மேலாக அவன் கழித்திருக்கிறான் என்பது வியப்பாக இருந்தது.

‘ஆனால் எனக்கு அது ஒரு பிரச்னையாகத் தெரிந்ததே இல்லை. உறக்கம் வரும்போதுதான் எங்கே படுப்பது என்ற கேள்வி வரும். உறங்காதிருக்கும்போது உலகம் முழுவதும் என்னுடையதுதான்’ என்று சொன்னான். அண்ணாவைப் போன்றவர்களுக்கு மலைகளெங்கும் குகைகள் உண்டு. மர வீடுகள் கட்டிக்கொண்டு எந்தக் காட்டிலும் இருந்துவிடுவார்கள். ஆனால் வினய் போன்ற சமவெளிச் சன்னியாசிகளின் பாடுதான் சிரமம். ஒரு சமயம், வினய் ஆறு நாள் தவமிருக்க உத்தேசித்து, அதற்காக இடம் தேடிக்கொண்டிருந்தான். அப்போது அவன் ஆந்திர மாநிலத்தில் சுற்றிக்கொண்டிருந்தான். பலப்பல இடங்கள் அலைந்து திரிந்தும் அவன் விரும்பிய தனிமை எங்கும் அமையவில்லை. இறுதியில் கூடூர் ரயில் நிலையத்துக்கு அவன் வந்து சேர்ந்தபோது, ஒரு சரக்கு ரயில் அங்கிருந்து கிளம்பிக்கொண்டிருந்தது. அதில் மூன்று பெட்டிகள் நிறைய நிலக்கரி இருப்பதை அவன் கண்டான். ஒரு பெட்டியைத் திறந்து ஏறிக்கொண்டு கதவை மூடிக்கொண்டான். கௌஹாத்தி வரை சென்ற அந்த சரக்கு ரயிலிலேயே அவன் தனது தவத்தைச் செய்து முடித்தான்.

வினோத் இந்தக் கதையை என்னிடம் சொன்னபோது, ‘அந்தத் தவத்தின் இறுதியில் உனக்கு என்ன கிடைத்தது?’ என்று கேட்டேன்.

‘நிறைய புழுதி. நிறைய அழுக்கு. ஒரு மாதிரி அலர்ஜி உண்டாகி இரண்டு மாதங்கள் என் மூக்கு எரிந்துகொண்டே இருந்தது’ என்று சொன்னான்.

மண்டபத்தில் நான் தனியேதான் இருந்தேன். கோயில் நடை சாத்திவிட்டிருந்தபடியால் வெளியூர் பக்தர்கள் யாரும் இல்லை. சுற்றுப்புற கடைக்காரர்களும் பழைய புடைவைகளைத் திரைச் சீலைகளாகத் தொங்கவிட்டு, உள்ளே அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். மீண்டும் நடை திறக்க இன்னும் இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஆகும். அதன்பின் மீண்டும் பக்தர்கள் வரத் தொடங்குவார்கள். புராண காலம் தொட்டுப் புகழோடு இருக்கிற ஊர். ஆனால் கால மாற்றத்தின் சுவடுகள் எது ஒன்றும் படியவேயில்லை. ஒருவிதத்தில் அது நல்லதே என்றும், இன்னொரு பார்வையில் வருத்தத்துக்குரியதாகவும் தோன்றியது.

மண்டபத்தின் கட்டாந்தரையில் அப்படியே மல்லாக்கப் படுத்தேன். சிறிது நேரம் தூங்கலாம் என்று நினைத்தேன். சீடர்கள் யாரும் உடன் வராமல் நான் வெளியூர்ப் பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல் முறை. என் சீடர் யாராவது என்னை இப்படிக் கட்டாந்தரையில் படுக்கக் கண்டால் துடித்துவிடுவார்கள். குறைந்தபட்சம் இடுப்பு வேட்டியை அவிழ்த்து விரித்தேனும் என்னைப் படுக்கச் சொல்லுவார்கள். வாழ்வின் ஆக சொகுசான விசிறி மடிப்புகளிலேயே வாழ்ந்து பழகிவிட்டேன் என்பதை எண்ணிப் பார்த்தேன். என் துறவின் நோக்கமே அதுதானோ என்று சந்தேகம் வந்தது. இல்லை, சுதந்திரமே என் தெய்வம் என்று வலுக்கட்டாயமாக இழுத்து நினைத்துக்கொண்டு தூங்கப் பார்த்தேன்.

யாரோ மண்டபத்துக்கு வருவதுபோல் இருந்தது. திரும்பிப் பார்த்தேன். வினோத் வந்துகொண்டிருந்தான்.

சட்டென்று எழுந்து உட்கார்ந்தேன். அவன் என்னைப் பார்த்ததும் புன்னகை செய்தான்.

‘வினய் வந்துவிட்டான். வீட்டுக்குப் போனால் பார்க்கலாம்’ என்று சொன்னேன். ‘நீ எங்கே போய்விட்டு வருகிறாய்?’

‘அவனை அழைத்துவரச் சென்ற உன்னையும் காணவில்லை என்பதால் மாமா மிகவும் கவலைப்படத் தொடங்கிவிட்டார். அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக வசந்த மண்டபம் போய் உட்கார்ந்திருந்தேன். போரடித்ததால் எழுந்து வந்தேன்’.

நான் புன்னகை செய்தேன். ‘உட்கார்’ என்று சொன்னேன். அவன் என் அருகே அமர்ந்துகொண்டான்.

‘வினய் வீட்டுக்குப் போயிருக்கிறான்’ என்று மீண்டும் சொன்னேன்.

‘அம்மா சிறிது நேரம் சுயநினைவுடன் இருந்தாள். என்னிடம் பேசினாள். பிறகு நினைவு போய்விட்டது’ என்று வினோத் சொன்னான்.

‘ஓ. மாமா அருகே இருந்தாரா?’

‘இல்லை. பத்மா மாமிக்குப் பிரசாதம் கொடுத்துவிட்டு வர வேண்டும் என்று சொல்லிவிட்டு வெளியே போனார்’.

‘ஓ. நல்லது. அம்மா என்ன சொன்னாள்?’

‘நிறையச் சொன்னாள்’.

‘உன்னை அவளுக்கு அடையாளம் தெரிந்ததா?’

‘முதலில் சிறிது யோசித்தாள். வினய்யா என்று கேட்டாள்’.

‘பிறகு?’

‘விஜய் வந்தானா என்றாள்’.

‘உம்’.

‘என் கழுத்தில் உள்ள துளசி மாலையைப் பார்த்ததுமே அவளுக்கு என்னைப் பற்றிய தகவல்கள் தெரிந்துவிட்டன என்று நினைக்கிறேன்’.

நான் புன்னகை செய்தேன்.

‘எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது விமல். அவள் சற்றும் பரவசமடையவில்லை. கண்ணீர் விடவில்லை. அவள் முகத்தில் தவிப்பின் சிறு சுவடுகூடத் தெரியவில்லை’.

‘விடு. நினைவு மீண்டதே பெரிது’.

‘இல்லை. கேசவன் மாமா எப்படி அழுதார் தெரியுமா? நீ இல்லாமல் போய்விட்டாய். தூணில் முட்டிக்கொண்டு முட்டிக்கொண்டு அழுதார்’.

‘பாவம், நல்ல மனிதர். தனது சக்தி முழுவதையும் பாசமாகச் செலவழித்துவிடப் பார்க்கிறார். காமுகர்கள் இப்படித்தான் சக்தியை விந்துவாக விரயம் செய்வார்கள்’.

வினோத் திகைத்துவிட்டான். ‘நீ என்ன சொல்கிறாய்? நமக்குப் பாசமற்றுப்போனது நாம் தேடிக்கொண்ட வாழ்க்கை. அம்மா ஒரு குடும்பப் பெண் அல்லவா? நான்கு பெற்றவள் அல்லவா? நான்கையும் பறிகொடுத்தவள் அல்லவா?’

‘சரி, அதனால் என்ன? அவள் நாளை இறக்கப் போகிறவள். நினைவு மீண்டதே பெரிது. பேசினாள் என்று வேறு சொல்கிறாய்’.

‘சும்மா பேசியதல்ல. அவளுக்கு அந்தச் சுவடியின் ரகசியம் தெரிந்திருக்கிறது’ என்று வினோத் சொன்னான்.

இது எனக்கு அதிர்ச்சியளித்தது. ‘உண்மையாகவா?’ என்று கேட்டேன்.

‘ஆம். நாம் நால்வரும் வீடு தங்க மாட்டோம் என்பதை அவள் அறிந்தே இருந்திருக்கிறாள்’.

‘அம்மாவே சொன்னாளா?’

‘ஆம்’.

‘வேறென்ன சொன்னாள்?’

‘என் மரணம் வினய்யால் நேரும் என்று சொன்னாள்’.

(தொடரும்)

 

http://www.dinamani.com/junction/yathi/2018/oct/09/147-கொலைக்-குறிப்பு-3016753.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

148. மரண வாக்குமூலம்

வெயில் உக்கிரமாக இருந்தது. இருநூறடி தூரத்தில் கடல் இருந்தும், இடையே ஒரு சவுக்குக் காடு இருந்தும் கோயில் மண்டபத்தில் காற்றே இல்லை. புழுக்கம், உறவுகளைப் போலக் கசகசத்தது. வேறெங்காவது போய் உட்காரலாமா என்று வினோத்திடம் கேட்டேன். எங்கு போனாலும் இப்படித்தான் இருக்கும் என்று சொன்னான். ‘வேண்டுமானால் வீட்டுக்குப் போய் ஃபேன் போட்டுக்கொண்டு உட்காரலாம்’ என்றான். ஆனால் கேசவன் மாமா இருப்பார். அறையில் அம்மா இருப்பாள். திரும்பத் திரும்பப் பேசியவற்றையே பேசவேண்டி இருக்கும்.

‘அதுகூடப் பிரச்னை இல்லை. நாம் வந்திருக்கும் விஷயம் இப்போது வீதியில் அனைவருக்கும் தெரியும். வந்து பார்க்க வரிசையாக வர ஆரம்பித்துவிடுவார்கள்’.

‘ஐயோ. அது இன்னும் கஷ்டம்’.

‘நீ கிளம்பிப் போனதும் எதிர் வீட்டில் இருந்து ஒரு கிழவி வந்தாள். எனக்கு அவளை மறந்தேவிட்டது. என்னைக் கண்டதும் விசிறி எடுத்துவரச் சொல்லி, அதால் என்னை அடிக்க ஆரம்பித்துவிட்டாள்’.

‘அடடே. நான் இல்லாமல் போய்விட்டேனே’.

‘உன் சன்னியாசம், விபசாரத்துக்கு சமம் என்று சொன்னாள்’.

‘விடு. அம்மா மீது அவ்வளவு அன்பு’.

‘பிறகு என்ன நினைத்தாளோ, என்னைக் கட்டிக்கொண்டு சிறிது நேரம் அழுதாள். கடைசிவரை எனக்குத்தான் அவள் பெயர் நினைவுக்கு வரவேயில்லை’.

‘எனக்கு நினைவிருக்கிறது. அவள் ஐயர் மாமி. வரலட்சுமி என்று பெயர். அவளுக்கு ஒரு பெண்ணும் ஒரு பிள்ளையும் இருந்தார்கள். அவள் புருஷன் நாவலூர் பள்ளிக்கூடத்தில் கிளார்க்காக இருந்தார்’.

‘நீ எதையுமே மறக்கவில்லை!’ என்று வினோத் சொன்னான்.

‘ஆம். நான் எதையும் மறக்க விரும்புவதில்லை. உனக்குக் கிருஷ்ணன். வினய்க்கு கஞ்சா. எனக்கு மனிதர்களும் நினைவுகளும். அந்நாள்களில் வரலட்சுமி மாமி பஃப் கை வைத்த ரவிக்கை அணிவாள். அக்ரஹாரத்திலேயே அவள் நடந்துபோவது மட்டும் தனியாகத் தெரியும்’ என்று சொன்னேன். வினோத் சிரித்தான். சட்டென்று சம்பந்தமேயில்லாமல் இன்னோர் இடத்தில் இருந்து உரையாடலைத் தொடங்கினான்.

‘நாம் வீட்டை விட்டுப் போவதற்கு முன்னால் அம்மாவிடம் சிறிது பேசியிருக்கலாம்’.

‘போவதைப் பற்றியா?’

‘இல்லை. பொதுவாகச் சொன்னேன். அவளுக்கு நம்மிடம் சொல்வதற்கு நிறைய இருக்கின்றன என்று நினைக்கிறேன். பிறகு சொல்லிக்கொள்ளலாம் என்று நினைத்திருப்பாள். துரதிருஷ்டவசமாக அது நடக்காமலே போய்விட்டது’.

‘உன்னிடம் என்ன சொன்னாள்?’

‘யோசித்துப் பார்க்கிறேன் விமல். என்னால் ஒரு நேர்க்கோட்டில் அவள் பேசியவற்றைக் கொண்டுவர இயலவில்லை. அவளால் தொடர்ச்சியாகப் பேசவும் முடியவில்லை. ஐந்து நிமிடம் பேசிவிட்டுக் கண்ணை மூடிக்கொண்டு விடுகிறாள். பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் ஏதேதோ பேசுகிறாள். மீண்டும் உறங்கிவிடுகிறாள்’.

எனக்குப் புரிந்தது. அவள் சில சொற்களைச் சேமித்து வைத்திருக்கிறாள். அதை இறக்கி வைத்துவிடப் போக முடிவு செய்திருக்கிறாள். இழுத்துக்கொண்டிருப்பதே அதற்காகத்தான். ஆனால் அந்த ஓலைச்சுவடி விவகாரம் அவளுக்குத் தெரிந்திருக்கிறது என்பது எனக்கு வியப்பாக இருந்தது. வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போவதற்கு முன்பே தெரியுமா என்று நான் வினோத்திடம் கேட்டேன். அப்படித்தான் அவள் பேசியதில் இருந்து புரிந்துகொண்டேன் என்றான். அப்படியானால் எதற்காக அந்தப் பயணம்?

‘ஒருவேளை அப்பாவின் திருப்திக்காக இருக்கலாம்’.

அப்பாவுக்கும் தெரியாமல் அவள் ரகசியங்களை வைத்திருந்தாள் என்பதை நம்ப எனக்குச் சிரமமாக இருந்தது. அப்படி இருக்குமானால், அண்ணா போனபோது அவள் அப்படிக் கதறியிருக்க வாய்ப்பில்லை. வினய் விலகிச் சென்றபோது பத்து நாள்களுக்கு மேல் அவள் அடுக்களையை விட்டு வெளியே வரவேயில்லை. குமுட்டி அடுப்பின் தணலோடு சேர்ந்து வெந்துகொண்டிருந்தாள். நானே நேரில் கண்டிருக்கிறேன். ஶ்ரீரங்கம் கோயிலில் நான் காணாமல் போன பிறகு பல மாதங்கள் அவள் யாருடனும் பேசக்கூட இல்லை என்று கேசவன் மாமா என்னிடம் சொன்னார். கோயிலுக்குப் போவதையே அவள் அறவே நிறுத்தியிருக்கிறாள். அந்த வருட பிரம்மோற்சவ சமயத்தில் அவள் வீட்டை விட்டு வெளியே வரவேயில்லை என்றும், தினசரி காலையில் போடும் வாசல் கோலத்தைக்கூடப் போடவில்லை என்றும் அவர் சொன்னார். முன்னறிவிக்கப்பட்ட துக்கத்துக்கு இவ்வாறெல்லாம் எதிர்வினை புரிய இயலுமா? எனக்குச் சந்தேகமாக இருந்தது.

‘இதைக் கேள். நான் வீட்டை விட்டு ஓடிப்போன மறுநாள் திருமணம் நின்றுபோய் சித்ரா தற்கொலை செய்துகொண்டிருக்கிறாள். பத்மா மாமி மூன்று மாதங்கள் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறாள். அவள் வீட்டுக்கு வந்தபின், அம்மா ஒரு வருட காலம் தினசரி பத்மா மாமி வீட்டுக்குப் போய் சமைத்து வைத்து, துணி துவைத்துக் கொடுத்து, வீடு பெருக்கித் துடைத்து, பாத்திரம் தேய்த்துக் கவிழ்த்துவிட்டு வந்திருக்கிறாள்’.

‘எதற்கு?’

‘என்னால் அதைச் செய்யாதிருக்க முடியவில்லை என்று என்னிடம் சொன்னாள்’.

‘குற்ற உணர்வு’.

‘பிராயச்சித்தம் என்று கருதியிருக்கலாம்’.

பத்மா மாமியின் கணவருக்கு அப்போது வலது பக்கம் பக்கவாதம் கண்டு படுத்த படுக்கையாகியிருக்கிறார். அதன் காரணம் பற்றித்தான் அம்மா அவர்கள் வீட்டுக்குப் போய் உதவி செய்ய ஆரம்பித்திருக்கிறாள். அது பொறுக்காமல்தான் கேசவன் மாமா அவர்களுடைய உணவுத் தேவைக்குத் தானே பொறுப்பேற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறார்.

‘இன்னொன்றையும் கேள். நான் போன பின்பு, அப்பா அம்மாவை வீட்டில் சமைக்கவே விடவில்லை. அவரேதான் பல மாதங்கள் அடுக்களையைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்’.

‘அப்படியா?’

‘ஆம். நெருப்பைக் கண்டு எங்கே கொளுத்திக்கொள்ளும் எண்ணம் அம்மாவுக்கு வந்துவிடப் போகிறதோ என்று அப்பா பயந்தாராம். அம்மாவைத் தளிகை பண்ண அவர் அனுமதிக்கவேயில்லை என்று கேசவன் மாமா சொன்னார்’.

‘அம்மா வேறென்ன சொன்னாள்?’

‘சித்ரா இந்த ஊரிலேயே ஆவியாக அலைந்துகொண்டிருக்கிறாள் என்று சொன்னாள்’.

நான் புன்னகை செய்தேன்.

‘ஏன் சிரிக்கிறாய்?’

‘உன்னிடம் சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன். இனி அதற்கு அவசியமில்லை என்று தோன்றுகிறது. நீ காட்டிக்கொடுத்த கிருஷ்ணன், வினய்க்கு சித்ராவைக் காட்டிக்கொடுத்திருக்கிறான்’.

‘அப்படியென்றால்?’

‘நீலாங்கரை வைத்தியர் வீட்டுக்குப் போய்வரும் வழியில் அவன் சித்ராவைச் சந்தித்துவிட்டான்’.

‘உண்மையாகவா?’

‘ஆம். அம்மா சொன்னது சரி. உன்னைக் கொல்லச் சொல்லி அவள் வினய்யிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறாள்’.

வினோத் சிறிது நேரம் அமைதியாக யோசித்துக்கொண்டிருந்தான். பிறகு அவனிடம் இருந்து மிக நீண்டதொரு பெருமூச்சு வெளிப்பட்டது. என்னைப் பார்த்துப் புன்னகை செய்தான். ‘எனக்குச் சிறிதும் பதற்றமாக இல்லை’ என்று சொன்னான்.

‘இதில் பதற என்ன இருக்கிறது? மரணத்துக்குப் பதறினால் நீ துறவியே அல்ல. நாமெல்லாம் வாழ்வதற்குத்தான் பதற வேண்டும்’.

‘வினய் அதைச் செய்வதைக் காட்டிலும் சித்ராவே செய்தால் நான் சந்தோஷப்படுவேன்’ என்று வினோத் சொன்னான்.

‘அவள் செய்ய மாட்டாள்’.

‘ஏன்?’

‘அது எனக்குத் தெரியாது. ஆனால் பல்லாண்டுகளாக அவள் இத்தருணத்துக்காகக் காத்திருப்பதாக அவனிடம் சொல்லியிருக்கிறாள். இன்னொரு விஷயம், உன் கிருஷ்ணனால் முடியவே முடியாத ஒரு பெரும் வரத்தை அவள் வினய்க்குக் கொலைச் சம்பளமாகத் தரச் சம்மதித்திருக்கிறாள்’.

‘அப்படியா?’

‘ஆம். அவன் கனவு நனவாக, அவள் தனது தவப்பயன் முழுவதையும் தரத் தயார் என்று சொல்லியிருக்கிறாள். பேயான பின் தவமிருந்து என்னென்னவோ வரமெல்லாம் வாங்கியிருக்கிறாள் போலிருக்கிறது. பேய்களுக்கு அது அத்தனை எளிது என்பது முன்னமே தெரிந்திருந்தால், நாமும் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கலாம்’.

‘என்னால் நம்ப முடியவில்லை விமல். இந்த விஷயம் அம்மாவுக்கு எப்படித் தெரிந்திருக்கும்? அதை அவள் என்னிடம் சொல்லவில்லை’.

‘யார் கண்டது? சித்ராவே சொல்லியிருக்கலாம்’.

‘ஆவியாக வந்தா?’

‘ஏன், கூடாதா? ஆவியாகத்தான் அவள் வினய்யைச் சந்தித்திருக்கிறாள்’.

‘நான் அவளைச் சந்திக்க வேண்டும்’.

நான் சிரித்துவிட்டேன். ஏன் சிரிக்கிறாய் என்று வினோத் கேட்டான். நாயாக வந்த சொரிமுத்துவைப் பற்றி அவனிடம் சொன்னேன். ‘நான் அவனைச் சந்திக்க வேண்டும்’ என்று வினய் சொன்னதையும் சொன்னேன்.

‘எனக்கு அது இப்போதும் புதிராகத்தான் உள்ளது. சொரிமுத்து உன்னை அறிவார். வினய் அவரிடம் சில காலம் தங்கிப் பயின்றும் இருக்கிறான். உன்னிடம் அவர் அதிகம் பேசாததுகூடப் பெரிதல்ல. வினய்யை ஏன் அவர் சந்திக்க விரும்பவில்லை?’

‘விருப்பமில்லை என்று ஏன் நாமே எண்ணிக்கொள்ள வேண்டும்? அவசியம் இல்லை என்று அவர் நினைத்திருக்கலாம். ஓலைச்சுவடியைப் பற்றி, நம்மைப் பற்றி அறிந்திருந்த அம்மா, அப்பாவிடம் அது குறித்துக் கடைசி வரை சொல்லாததை எண்ணிப் பார். என்ன காரணம் இருக்க முடியும் அதற்கு?’

‘புரிகிறது. மாமாவுக்குத் தெரியுமா என்று கேட்டேன். தெரியாது என்று சொல்லிவிட்டாள்’.

‘கேசவன் மாமா உண்மையில் பாவப்பட்ட மனிதர். அவர் நமது குடும்பத்தைச் சேர்ந்தவரே இல்லை. இது தெரிந்தால் நொறுங்கிப் போய்விடுவார்’.

‘அறிவேன். அண்ணா இதை என்னிடம் சொல்லியிருக்கிறான். ஆனால் எதற்கு அவருக்குத் தெரிய வேண்டும்? அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்’.

‘நானும் அதைத்தான் நினைத்தேன். வினய் ஒன்றும் உளறி வைக்காதிருக்க வேண்டும்’.

‘அவனிடம் அம்மா பேசாமலேயே இருந்துவிட்டால்கூட நல்லது என்று தோன்றுகிறது’.

நாங்கள் சிறிது நேரம் அமைதியாகக் கோயிலையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தோம். சாப்பிடப் போயிருந்த கடைக்காரர்கள் ஒவ்வொருவராகக் கடையைத் திறக்க ஆரம்பித்திருந்தார்கள். ‘சாமி, இளநி சாப்புடறிகளா?’ என்று ஒரு கிழவன் எங்களை நெருங்கி வந்து கேட்டான். நான் வேண்டாம் என்று சொன்னேன். வினோத் ஒன்றும் சொல்லாமல் இருந்தான். வினய் வீட்டுக்குச் சென்று ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகியிருந்தது. அங்கே என்ன நடக்கிறது எனப் போய்ப் பார்க்கலாமா என்று தோன்றியது. வினோத்திடம் சொன்னபோது, அவன் அதில் ஆர்வம் காட்டவில்லை. ‘இன்றொரு நாளைக் கடத்திவிட்டால் போதும்’ என்று சொன்னான்.

‘நாளை பகலையும் கடத்தியாக வேண்டும்’ என்று நான் சொன்னேன்.

‘அண்ணா வருவேன் என்று சொன்னான். ஆனால் எப்போது வரப்போகிறான் என்று தெரியவில்லை’.

‘வரட்டுமே, என்ன அவசரம்? நம்மைப்போல் அவனும் முன்னால் வந்து உட்கார்ந்துகொண்டு பொழுதைக் கொல்லக் கஷ்டப்படவா? நிதானமாக வரட்டும். நாளை இரவு வந்தால்கூடப் போதும்’ என்று சொன்னேன். வினோத் என்னை உற்றுப் பார்த்தான்.

‘சரி. இப்போது நாம் பொழுதைக் கடத்துவோம். அம்மா சொன்னவற்றை வரிசை மாற்றாமல் நான் உனக்கு அப்படியே சொல்கிறேன். உனக்கு ஏதாவது புரிகிறதா என்று சொல்’ என்று சொன்னான். நான் ஆர்வமுடன் கேட்க ஆரம்பித்தேன்.

(தொடரும்)

 

http://www.dinamani.com/junction/yathi/2018/oct/10/148-மரண-வாக்குமூலம்-3017447.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

149. பொம்மைகள்

பிரபவ வருடம் புரட்டாசி பதினேழாம் நாள், குருவாரம் சரித்திரங்காணாத மழையில் திருவண்ணாமலை திக்கித் திணறிக்கொண்டிருந்தபோது, நாரையூர் கீழத்தெரு அக்ரஹாரத்து துபாஷி நாராயண ஐயங்கார், செண்பகவல்லி தம்பதியின் கனிஷ்ட புத்திரியாக அம்மா பிறந்தாள். அவள் பிறந்த செய்தியை அக்கம்பக்கத்து வீட்டாருக்குக்கூடப் போய்ச் சொல்ல முடியாதபடிக்கு வெளியே வெள்ளம் பாய்ந்துகொண்டிருந்தது. ஊரில் அப்போது மின்சாரமெல்லாம் வரவில்லை. லாந்தர் விளக்கைப் பிடித்துக்கொண்டு நாராயண ஐயங்கார் கண்ணை மூடி காயத்ரி சொல்லிக்கொண்டிருந்தபோது, பிரமாதமாக அலட்டிக்கொண்டு பதறாமல் அவரது தாயாரே அம்மாவுக்குப் பிரசவம் பார்த்து முடித்தாள். ‘ஆயிடுத்துடி. பொண் குழந்தைதான் பொறந்திருக்கு. அடுத்த வருஷம் இன்னொண்ணு பெத்துக்கோ. அது ஆம்பள பிள்ளையா இருக்கும்’ என்று அரை மயக்கத்தில் இருந்தவளைத் தட்டியெழுப்பிக் காதோரம் சொல்லிவிட்டு, எழுந்து உள்ளே போய் வெந்நீர் வைத்து எடுத்து வந்தாள்.

அம்மா நாரையூரிலேயே சிறிது காலம் படித்தாள். ஐரோப்பாவில் இரண்டாவது உலக யுத்தம் ஆரம்பித்து இருந்த சமயம் துபாஷி நாராயண ஐயங்காருக்கு மதராச பட்டணத்தில் உத்தியோகம் அமைந்து குடும்பத்தோடு புறப்பட வேண்டியதாயிற்று. அம்மாவுக்கு அப்போது பதினாறு வயது. அந்த வருடம்தான் அவளது அக்காவுக்குக் கலியாணம் நடந்து அவள் செய்யாறில் புக்ககம் போயிருந்தாள். யுத்த காலத்தில் பட்டணத்துக்குப் போவது அத்தனை உசிதமல்ல என்று ஊரில் அத்தனை பேரும் நாராயண ஐயங்காருக்குச் சொன்னார்கள். ஆனால் தமது பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி அவர் மதராச பட்டணத்துக்குப் போயே தீருவது என்று முடிவு செய்து கிளம்பிவிட்டார்.

பட்டணத்தில் கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் இருந்த ஒரு மிளகாய் வற்றல் மண்டியின் மாடியில் இருந்த நான்கு போர்ஷன்களுள் ஒன்றில் அவர் தமது ஜாகையை அமைத்துக்கொண்டார். சிறிய வீடுதான். பதினைந்தடிக்குப் பத்தடி அளவில் ஒரு கூடம். பத்தடிக்குப் பத்தடியில் ஓர் அறை. அதில் பாதியளவுக்கு சமையலறை.பின்புறம் தட்டுமுட்டு சாமான்கள் போட்டு வைத்துக்கொள்ள ஓர் இடம் இருந்தது. அது கூடத்தைக் காட்டிலும் சிறிது பெரிதாகவே இருந்தது. வீட்டைப் பார்த்த நாராயண ஐயங்காரின் அம்மா ஒரு வாரத்துக்குப் புலம்பி அனத்திக்கொண்டே இருந்தாள். ‘இதென்ன வீடு? இதென்ன ஊர்? மனுஷன் இருக்க முடியுமா இங்கே? என்னத்துக்காக இப்படி ஜெயில்லே கொண்டுவந்து தள்ளியிருக்கே?’

‘கொஞ்சம் பொறுத்துக்கோம்மா. ஒரு மாசத்துலே வீடு பாத்துடலாம். இது இப்போதைக்குத்தான்’ என்று ஐயங்கார் சொல்லிப் பார்த்தார். அவரது அம்மா கேட்கவில்லை. ‘எனக்கு ஆகாதுப்பா இந்த பொந்துவாசமெல்லாம். நான் போறேன் உன் தம்பியாத்துக்கு’ என்று சொல்லிவிட்டு, மறுநாளே தனது பெட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு மயிலம் கிளம்பிப் போய்ச் சேர்ந்தாள். நாராயண ஐயங்கார் அம்மா படித்தது போதும் என்று சொல்லிவிட்டு மூன்றாவதாகப் பிறந்த புத்திரன் கேசவனை சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு குருகுலத்தில் கொண்டுபோய்ச் சேர்த்தார். இந்தச் சமயத்தில் அம்மாவின் அக்காவுக்குப் பிரசவத்துக்கு நாள் நெருங்கியிருந்தது. அப்போது அவர்களது குடும்பம் செய்யாறில் இருந்து திருவண்ணாமலைக்கு இடம் பெயர்ந்திருந்தபடியாலும், பிரசவத்துக்காகவென்று அவளைச் சென்னைக்கு அனுப்ப இயலாதென்று அம்மாவின் அக்கா புருஷன் சொல்லிவிட்டபடியாலும், நாராயண ஐயங்காரின் மனைவி செண்பகவல்லி தனது மூத்த மகள் பிள்ளை பெறுகிறவரை திருவண்ணாமலைக்குப் போய் இருக்க வேண்டியதானது. தனியே போவானேன் என்று அவள் அம்மாவையும் அழைத்துக்கொண்டு திருவண்ணாமலைக்குக் கிளம்பினாள்.

அம்மாவுக்கு அந்த வயதில்தான் நிறையப் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் நாராயண ஐயங்காருக்கு மகளை நல்ல இடம் பார்த்துக் கலியாணம் செய்து கொடுத்துவிடும் விருப்பம் மட்டுமே இருந்தது. இன்னும் இரண்டு வருடம் போகட்டும் என்று செண்பகவல்லி அடம் பிடித்துத் தடுத்து வைத்திருந்ததால் மட்டுமே அவர் பொறுமையாக இருந்தார். இல்லாவிட்டால், அம்மாவின் அக்காவுக்குச் செய்தது போலப் பதினேழு வயதிலேயே மணமுடித்துக் கணக்குத் தீர்த்திருப்பார்.

அம்மா தன் அம்மாவோடு அக்காவின் இரண்டாவது பிரசவத்துக்காகத் திருவண்ணாமலைக்கு மீண்டும் சென்றபோது, துபாஷியான நாராயண ஐயங்காருக்கு மதராச பட்டணத்தில் அப்பாவின் தகப்பனாருடன் மூர் மார்க்கெட் அருகே ஒரு குதிரை லாயத்தில் அறிமுகம் உண்டானது. ‘எம்பொண்ணு ஜாதகம் அனுப்பி வெக்கறேன். உம்ம பிள்ளை ஜாதகத்த நீங்களும் குடுத்தனுப்புங்கோ. பிராப்தம் இருந்தா நடக்கட்டும்’ என்று சொல்லிவைத்தார்.

அதே சமயம் திருவண்ணாமலையில் அம்மா கிரிவலம் செய்துகொண்டிருந்தாள். ‘நம்மளவாள்ளாம் அதெல்லாம் பண்றதில்லே’ என்று அம்மாவின் அம்மாவும் அம்மாவின் அக்காவுடைய புருஷனும் கிளம்பும்போது சிறிது தடுத்துப் பார்த்தாலும் ஊருக்கு வந்திருக்கும் பெண்ணுக்குப் பொழுதுபோக வேண்டுமல்லவா? அக்கம்பக்கத்து வீடுகளில் அறிமுகமான தோழிகளுடன் அம்மா கிரிவலத்துக்குக் கிளம்பினாள். அன்றைக்கு பவுர்ணமி. அக்காலத்தில் மலை சுற்றப் பாதையெல்லாம் கிடையாது. கல்லும் மண்ணும் முள்ளும் பாறைகளும் மண்டிய வழிதான். வீதி விளக்குகள் கிடையாது. வழியில் கடைகள் கிடையாது. கிரிவலம் செல்வோர் எண்ணிக்கையே மிகவும் சொற்பமாகத்தான் இருக்கும். அதிலும் பெண்கள் வலம் போவது அரிது. இருந்தாலும் அம்மாவின் தீராத ஆர்வத்தால் உந்தப்பட்ட சம வயதுப் பெண்கள் அவரவர் வீடுகளில் அனுமதி பெற்றுக்கொண்டு அன்று மாலை கிரிவலத்துக்குப் புறப்பட்டார்கள். இருட்டுவதற்குள் வீடு திரும்பிவிடுவதாக வாக்களித்துவிட்டே அவர்கள் கிளம்பினார்கள்.

நாரையூரில் பிறந்து வளர்ந்திருந்தாலும் அம்மா திருவண்ணாமலைக்குச் சென்றதில்லை. அம்மாவின் அப்பாவான நாராயண ஐயங்கார் அப்படியொன்றும் வீர வைஷ்ணவர் இல்லை என்றபோதும் சிவன் கோயிலுக்குப் போவதைப் பெரிதாக விரும்புகிறவரில்லை. தனது குழந்தைகளை அவர் திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்றதும் இல்லை. அதனால் முதல் அனுபவமான அந்த கிரிவலம் அம்மாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவள் அதுவரை நினைத்திராத அருணாசலேசுவரரை அன்று மாலை முழுதும் நினைத்துக்கொண்டும் தலத்தின் பெருமைகளைத் தோழிகளிடம் கேட்டறிந்தபடியும் நடந்துகொண்டிருந்தாள். நடந்துபோகிற வழியில் ரமணாசிரமம் எதிர்ப்பட்டது. அம்மாவுக்கு ஏற்கெனவே ரமணரின் பெயர் தெரிந்திருந்தது. திருவண்ணாமலையில் வசிக்கும் ஒரு துறவி என்ற அளவில் அவள் அறிந்திருந்த ரமணரைக் குறித்து அவளோடு சென்ற தோழிகள் மேலும் பலப்பல கதைகள் சொல்லி ஆர்வத்தைத் தூண்டினார்கள். போய் சேவித்துவிட்டுப் போகலாம் என்று ஒரு பெண் சொன்னாள். அம்மாவும் சம்மதித்தாள்.

அவர்கள் ரமணரைக் காணச் சென்றபோது ஆசிரம வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. நெருங்கிச் செல்ல நேரமாகும் என்று தோன்றியது. ‘இரு வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு ஒரு பெண் மட்டும் உள்ளே சென்றாள். அவளுக்குத் தெரிந்த யாரோ ஆசிரமத்தில் இருப்பதாக இன்னொரு பெண் அம்மாவிடம் சொன்னாள். அம்மா ரமணாசிரமத்தின் வெளியே நின்றிருந்தாள். அந்த ஆசிரம வளாகத்தின் அருகிலேயே ஒரு அதிஷ்டானம் இருப்பதாகவும் அது சேஷாத்ரி சுவாமிகளுடையது என்றும் உடனிருந்த பெண் அம்மாவிடம் சொன்னாள்.

‘அவர் யார்?’ என்று அம்மா, அந்தப் பெண்ணிடம் கேட்டாள்.

‘சேஷாத்ரி சுவாமிகள் பெரிய மகான். சிறு வயதில் ரமணருக்கு நிறைய உதவிகள் செய்தவர். நாளை என் வீட்டுக்கு வா. என் பாட்டி உனக்கு அவரைக் குறித்து நிறைய சொல்லுவாள்’ என்று அந்தப் பெண் சொன்னாள்.

சும்மா நிற்கும் நேரத்தில் அந்தப் பக்கம் போய்ப் பார்க்கலாம் என்று அம்மாவுக்குத் தோன்றியது. அவள் சேஷாத்ரி சுவாமிகளின் சமாதி இருந்த இடத்தை நோக்கி நடந்தாள். எந்த வித அலங்கார வினோதங்களும் இன்றி ஒரு சமாதி. சேஷாத்ரி சுவாமிகள் என்னும் சித்தர் அந்த இடத்தில் புதைக்கப்பட்டிருக்கும் விவரம் கூட அப்போது எழுதி வைக்கப்பட்டிருக்கவில்லை. ஒரு மடமாகவோ, ஆசிரமமாகவோ உருப்பெறாமல் வெறும் சமாதியாக இருந்த அந்த இடத்துக்கு அம்மா வந்தபோது அங்கு யாரும் இல்லை. அவள் சமாதியை நெருங்கியபோது தன்னியல்பாக அவளது கரங்கள் குவிந்து வணங்கின. சமாதியை ஒருமுறை சுற்றி வந்தாள். என்ன தோன்றியதோ, பிறகு சமாதிக்கு எதிரே சிறிது இடைவெளி விட்டு அமர்ந்துகொண்டாள்.

அவள் பிறந்த இரண்டு ஆண்டுகளில் அந்தச் சித்தர் காலமாகியிருந்தார். திருவண்ணாமலையில் மூலைக்கு மூலை சித்தர்களும் யோகிகளும் ரிஷிகளும் மகான்களும் காலம்தோறும் உதித்த வண்ணம் இருப்பதை அவள் அறிவாள். ஆனால் ஏன் யாரும் அந்த மண்ணிலேயே பிறந்து மகானாவதில்லை என்று அவளுக்குச் சந்தேகம் வந்தது. சேஷாத்ரி சுவாமிகள்கூட எங்கிருந்தோ வந்தவர்தான். ரமணரும் வெளியூர்க்காரர். அம்மா கேள்விப்பட்டிருந்த அத்தனை திருவண்ணாமலைத் துறவிகளும் வெளீயூர் ஆசாமிகளாகவே இருந்தார்கள். அவளுக்கு வியப்பாக இருந்தது. சன்னியாசிகளை ஈர்க்கும் ஊருக்கு அத்தகையோரைப் பிறப்பிக்கும் வல்லமை ஏன் இல்லை?

இதைக் குறித்து அவள் யோசித்துக்கொண்டிருந்தபோது அவள் எதிரே இருந்த சமாதியில் ஒரு சிறு அசைவு ஏற்படுவது போல இருந்தது. அது தன் பிரமை என்று அவள் நினைத்தாள். உற்றுப் பார்த்தபோது மீண்டும் ஒரு அசைவு உண்டானது. நில நடுக்கத்தில் தம்ளர் அசைவது போல அந்தச் சமாதியே சற்று அசைந்து கொடுத்ததை அவள் கண்டாள். சட்டென்று பயந்துவிட்டாள். எழுந்து சென்றுவிடலாம் என்று அவள் நினைத்தபோது ஒரு குரல் கேட்டது.

‘உட்கார்’.

அவள் அக்குரலுக்குக் கட்டுப்பட்டு அங்கேயே அமர்ந்தாள். சிறிது பயமாக இருந்தது. தன்னுடன் வந்த தோழிகள் இப்போது அருகே இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தாள். சரி போ, ஒரு சித்தர் தன்னை என்ன செய்துவிடுவார் என்றும் நினைத்தாள். செய்த புண்ணியம் ஏதேனும் இருந்தால் அருளாசியோடு போய்ச் சேரலாம் என்று எண்ணிக்கொண்டாள். மீண்டும் ஒருமுறை எழுந்து சமாதியை வணங்கிவிட்டு அமர்ந்தாள்.

அப்போது அவள் முன்னால் நான்கு மரப்பாச்சி பொம்மைகள் தோன்றின. இரண்டு விரற்கடை நீளம் மட்டுமே இருந்த மர பொம்மைகள். நான்கும் ஒன்றே போல இருந்தன. அவள் அவற்றை வியப்புடன் தொட்டுப் பார்த்தாள். ஒன்றும் ஆகவில்லை. நடுக்கத்துடன் மீண்டும் ஒன்றைக் கையில் எடுத்துத் தடவிப் பார்த்தாள். வெறும் பொம்மைதான். அது அந்தச் சித்தரின் ஆசியாகத் தனக்குக் கிடைத்திருக்கிறது என்று அவளுக்குத் தோன்றியது. நான்கையும் எடுத்துக் கண்ணில் ஒற்றிக்கொண்டாள். இரு உள்ளங்கைகளிலும் தலா இரண்டு பொம்மைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டு எழுந்து நின்றாள். மீண்டும் ஒருமுறை சமாதியை வலம் வந்து வணங்கிவிட்டு விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தாள்.

(தொடரும்)

 

http://www.dinamani.com/junction/yathi/2018/oct/11/149-பொம்மைகள்-3018129.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

150. மைதிலி

அம்மாவுக்கு நாராயண ஐயங்கார் இருபதாவது வயதில் திருமணம் செய்து வைத்தார். அப்பா அப்போது செகந்திராபாத்தில் ஒரு சேட்டுக் கடையில் கணக்காளராக உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்தார். பெரிய முத்து வியாபாரி. அந்நாளில் ஆந்திரத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலும் அந்த சேட்டுக்கு வியாபாரம் இருந்தது. அப்பா மாதத்தில் பாதி நாள் சரக்கு எடுத்துக்கொண்டு வடஇந்தியாவுக்குப் போகும்படி இருக்கும். பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரம் என்று சுற்றிக்கொண்டே இருப்பார். சரக்குகளைச் சேர்த்துவிட்டுப் பணத்தை வாங்கிக்கொண்டு வந்து சேட்டிடம் கணக்கு ஒப்பித்துவிட்டால் ஒரு வார விடுமுறை தருவார் சேட்டு. அப்படிக் கிடைத்த ஒரு விடுமுறையில்தான் அப்பா மதராசுக்கு வந்து அம்மாவைப் பெண் பார்த்துத் திருமணம் செய்துகொண்டார்.

‘நாம செகந்திராபாத்திலேதான் இருக்கப் போறோமா?’ என்று அம்மா அப்பாவிடம் முதலிரவின்போது கேட்டாள்.

‘கொஞ்சநாளைக்கு நீ எங்காத்துல இரு. ஊர் சுத்தற வேலையைக் குறைச்சிண்டு வந்து உன்னைக் கூட்டிண்டு போறேன்’ என்று சொல்லிவிட்டுப் பத்து நாளில் அப்பா புறப்பட்டுப் போனார். அப்பா அடுத்த முறை மதராசுக்கு வருவதற்கு ஆறு மாதங்கள் ஆயின. அதற்குள் அம்மாவுக்குப் புகுந்த வீட்டு மனிதர்கள் பழகிவிட்டிருந்தார்கள். அன்பான மாமியார், மாமனார். அப்பாவுக்கு ஒரு தங்கை இருந்தாள். அவளுக்குத் திருமணமாகி பெரம்பூரில் வசித்துக்கொண்டிருந்தாள். வாரம் ஒருமுறையாவது அவள் அம்மாவைப் பார்க்க வந்துவிடுவாள். அம்மா அவளுடனும் சிநேகமானாள். அத்தனை வீட்டு வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்ய ஆரம்பித்தாள். மிக விரைவில் அந்த வீட்டில் அவள் இல்லாமல் எதுவும் நடக்காது என்றாகிப் போனது.

‘உங்க பிள்ளைக்கு ஒரு கடுதாசி போடுங்கோ. அவன் சேட்டுக்கு சேவகம் பண்ணதெல்லாம் போதும். கடைய கட்டிண்டு மெட்ராசுக்கே வந்துடச் சொல்லுங்கோ’ என்று அம்மாவின் மாமியார் தனது கணவரிடம் சொன்னாள். அவருக்கும் அது சரி என்று பட்டதால் மகனுக்கு ஒரு கடிதம் எழுதித் தபாலில் சேர்த்துவிட்டு, ஒன்றிரண்டு தினங்களில் அவன் வந்துவிடுவான் என்று காத்திருக்க ஆரம்பித்தார். ஆனால் அப்பா வரவில்லை. மேலும் மூன்று மாதங்களுக்குப் பிறகு அவரிடம் இருந்து ஒரு தபால் வந்தது. ஒரு கடிதத்துடன் அம்மா செகந்திராபாத்துக்கு வந்து சேர ஒரு டிக்கெட்டும் எடுத்து அனுப்பியிருந்தார் அப்பா. வேறு வழியில்லாமல் அம்மாவின் புக்கக மனிதர்கள் அவளை ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று வண்டி ஏற்றி அனுப்பிவைத்தார்கள்.

‘குடும்பம் நடத்தறதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணியிருக்கானா ஒண்ணும் தெரியலியே. பாத்திரம் பண்டமெல்லாம்கூட இருக்காது அவனண்ட. என்ன பண்ணப் போறியோ’ என்று அம்மாவின் மாமியார் கவலைப்பட்டாள்.

‘நான் பாத்துக்கறேம்மா. நீங்க கவலைப்படாதேங்கோ’ என்று அம்மா நம்பிக்கை சொன்னாள்.

மறுநாள் அவள் செகந்திராபாத் சென்று இறங்கியபோது ஸ்டேஷனுக்கு அப்பா வந்திருந்தார். ‘வா’ என்று புன்னகையுடன் அவளை அழைத்துச் சென்று ஒரு ஜட்கா வண்டியில் ஏற்றி, தானும் ஏறிக்கொண்டார். ‘சேட்டு வேலைய விட்டு அனுப்ப மாட்டேன்னுட்டாரா?’ என்று அம்மா கேட்டாள்.

‘எதுக்கு விடணும்?’

‘இல்லே.. உங்கப்பா உங்களுக்கு ஒரு கடுதாசி போட்டிருந்தாரே..?’

‘அப்பாக்கு என்ன தெரியும்? ஒரு உத்தியோகம் கிடைக்கறதே குதிரைக் கொம்பு. இதுல கிடைச்சதை யாராவது விடுவாளோ?’

‘அதுவும் சரிதான். ஆனா பெரியவாளுக்கு நீங்ககூட இருக்கணும்னு ஆசை’.

இதற்கு அப்பா ஒன்றும் சொல்லவில்லை. ஜட்கா வண்டி ஒரு வீட்டின்முன் போய் நின்றது.

‘இதான், இறங்கு’ என்று அப்பா சொன்னார்.

வீடு மிகவும் சிறியதுதான். ஆனால் வெளிச்சமும் காற்றோட்டமுமாக இருந்தது. இரண்டு பேர் வசிக்கப் போதுமான வீடுதான் என்று அம்மாவுக்குத் தோன்றியது. அப்பா தயாராக சமைப்பதற்குப் பாத்திரங்கள் வாங்கி வைத்திருந்தார். ஒரு கட்டில் வாங்கிப் போட்டிருந்தார். அம்மாவை அன்று மாலையே கடைத்தெருவுக்கு அழைத்துச் சென்று நான்கு புடைவைகள், ரவிக்கைகள், உள்பாவாடைகள் வாங்கிக் கொடுத்தார்.

‘என்ன வேணுன்னாலும் சொல்லு. ஊர்ல இருந்தேன்னா உடனே கடைக்குப் போய் வாங்கிண்டு வந்துடலாம். வெளியூர் போயிருந்தேன்னா, வந்ததும் பண்ணிடுறேன்’ என்று அப்பா சொன்னார்.

‘எப்ப வெளியூர் போவேள்?’

‘அது எப்ப வேணா இருக்கும். நாளைக்கேகூட கிளம்புவேன்’ என்று அப்பா சொன்னார்.

இரண்டு நாளில் ஜலந்தருக்குப் போகவேண்டியிருப்பதாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டுப் போனார்.

செகந்திராபாத்தில் அம்மாவுக்கு முதல் சில வாரங்கள் மிகவும் சிரமமாக இருந்தன. இங்குமங்குமாகப் பல தமிழர்கள் இருந்தார்கள் என்றாலும் அவர்கள் குடியிருந்த பகுதியில் தெலுங்கு பேசுவோர் மட்டுமே இருந்தார்கள். அம்மாவுக்கு அந்த மொழி சரியாகப் பிடிபடவில்லை. அவசியத் தேவைகளுக்கான சில சொற்களை மட்டும் கற்றுக்கொண்டு ஒருவாறு சமாளித்துக்கொண்டிருந்தாள். ஆனால் தனக்காக மட்டும் பொங்கிச் சாப்பிடுவது அவளுக்கு மொழிப் பிரச்னையைவிடப் பெரும் பிரச்னையாக இருந்தது. சில நாள் அவள் சமைக்கவே மாட்டாள். பழங்கள் உண்டு தண்ணீர் குடித்துவிடுவாள். நாளெல்லாம் பொழுது போகாமல், வெளியே எங்கு போவதென்றும் தெரியாமல் மிகவும் தடுமாறிக்கொண்டிருந்தாள்.

சற்று அறிமுகமாகியிருந்த பக்கத்து வீட்டுப் பெண்ணிடம், அருகே என்ன கோயில் இருக்கிறது என்று ஒருநாள் கேட்டுத் தெரிந்துகொண்டு அங்கிருந்த ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போய்வர ஆரம்பித்தாள். மாலைப் பொழுதுகளில் கோயிலுக்குப் போய் ஓரிரு மணிநேரம் அங்கு உட்கார்ந்திருந்துவிட்டு வந்தது சற்று ஆசுவாசமாக இருந்தது. கோயிலுக்குப் போகிற வழியில் தபால் ஆபீஸ் இருப்பதைத் தெரிந்துகொண்டு ஒரு கட்டு போஸ்ட் கார்டுகள் வாங்கி வந்து வைத்துக்கொண்டு கடிதங்கள் எழுத ஆரம்பித்தாள். அப்பாவுக்குத் தனியாக, அம்மாவுக்குத் தனியாக, மாமியாருக்குத் தனியாக, மாமனாருக்குத் தனியாக, பெரம்பூர் நாத்தனாருக்குத் தனியாக. சலிக்காமல் எழுதி எழுதி அஞ்சலில் சேர்த்துக்கொண்டே இருந்தாள். ஆனால் ஜலந்தருக்குப் போன அப்பா அங்கே தான் எங்கே தங்கியிருக்கிறோமென்ற விவரத்தை அம்மாவுக்குச் சொல்ல மறந்திருந்தார். அதனால் அப்பாவுக்கு அவளால் அப்போது கடிதம் எழுத முடியாமல் போனது. இருந்தாலும் திரும்பி வந்ததும் காட்டலாம் என்று எண்ணி அவருக்கும் நான்கைந்து கடிதங்கள் எழுதி வைத்திருந்தாள்.

இந்நாள்களில் அவளுக்கு ஆஞ்சநேயர் கோயிலில் மைதிலி என்ற தமிழ்ப் பெண் ஒருத்தி அறிமுகமாகியிருந்தாள். அவள் மிகவும் அழகாக இருப்பதாக அம்மாவுக்குத் தோன்றியது. அதை அவளிடமும் சொன்னாள். அம்மாவைவிட வயதில் மூத்தவளான மைதிலிக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பே திருமணமாகிக் குழந்தைகள் இருந்தன. பட்டுக்கோட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட மைதிலி சிறு வயதிலேயே செகந்திராபாத்துக்கு வந்து சேர்ந்துவிட்டதாகச் சொன்னாள். அவளது தந்தை சமஸ்தானத்தில் உத்தியோகஸ்தராக இருந்தார். கணவரும் சமஸ்தானத்திலேயே காரியஸ்தராக இருப்பதாகவும் அவருக்கு அப்பா அம்மா உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லாத காரணத்தால் தங்கள் வீட்டிலேயே அவரும் வசிப்பதாகவும் சொன்னாள்.

‘உங்களுக்கு அதிர்ஷ்டம்’ என்று மைதிலியிடம் அம்மா சொன்னாள்.

அவள் சிரித்தாள். ‘ஆம். அதிர்ஷ்டம்தான். என் கணவர் என்மீது மிகுந்த அன்பு கொண்டவர். சமஸ்தானக் காரியாலயத்தில் தினமும் மதியம் ராஜ போஜனம் இருக்கும். என் அப்பா அங்கேதான் சாப்பிடுவார். ஆனால் என்னோடு சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்கலாம் என்பதற்காகவே என் கணவர் தினமும் மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்து விடுவார்’ என்று சொன்னாள்.

ஒருநாள் தங்கள் வீட்டுக்கு வரச் சொல்லி மைதிலி அம்மாவுக்குத் தனது முகவரியை எழுதிக் கொடுத்தாள். அது அம்மாவுக்காக அப்பா பார்த்துவைத்த வீட்டில் இருந்து நான்கு மைல் தள்ளி இருந்த முகவரி.

‘அவ்வளவு தூரத்தில் இருந்தா தினமும் நீங்கள் இந்தக் கோயிலுக்கு வருகிறீர்கள்?’ என்று அம்மா ஆச்சரியப்பட்டாள்.

‘என்ன கஷ்டம்? வீட்டில் ஒன்றுக்கு இரண்டு ப்ளெஷர் இருக்கிறது. என் உபயோகத்துக்காகவே என் கணவர் ஒன்றை எனக்குத் தந்திருக்கிறார்’.

‘நீங்கள் புண்ணியம் செய்தவர்’.

‘ஆம். சந்தேகமில்லை. நீங்கள் அவசியம் என் வீட்டுக்கு வர வேண்டும். அம்மா மிகவும் சந்தோஷப்படுவாள்’ என்று அவள் சொல்லிவிட்டுப் போனாள்.

அப்பா ஜலந்தரில் இருந்து வந்ததும் அவரை அழைத்துக்கொண்டு போக வேண்டும் என்று அம்மா முடிவு செய்துகொண்டாள். ஆனால் அம்முறை அப்பாவுக்குப் போன காரியம் அத்தனை எளிதில் முடியவில்லை. தான் ஊர் திரும்ப மேலும் இருபது நாள்கள் ஆகலாம் என்று அம்மாவுக்கு அவர் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்திலும் ஜலந்தர் என்று ஊர் பெயரை மட்டும் எழுதி, தேதி குறிப்பிட்டிருந்தாரே தவிர முகவரியைத் தரவில்லை. இதனால் அம்முறையும் அம்மாவால் அப்பாவுக்கு பதில் கடிதம் எழுத முடியாமல் போய்விட்டது.

ஊரில் இருந்து அப்பா ஒரு கடிதம் எழுதியிருந்தார். நவராத்திரி வருகிறது. நீ ஒரு நடை மதராசுக்கு வந்து போக முடியுமானால் நன்றாக இருக்கும் என்று அதில் சொல்லியிருந்தார். இருபது நாள் தனியேதானே இருக்க வேண்டும் என்று யோசித்த அம்மா, ஊருக்குப் போய்வரலாம் என்று முடிவு செய்தாள். மறுநாள் கோயிலில் மைதிலியைப் பார்த்தபோது இந்த விஷயத்தைச் சொல்லி, தனக்கு ரயில் டிக்கெட் எடுத்துத் தர யாரையாவது அனுப்பி உதவ முடியுமா என்று கேட்டாள்.

‘இதென்ன பிரமாதம்? நான்கூட நாளை மறுநாள் என் கணவரோடு விசாகப்பட்டினத்துக்குப் போகப் போகிறேன். உங்களுக்கு மதராசுக்கு ஒரு டிக்கெட் சேர்த்து எடுத்துவிடும்படி அவரிடமே சொல்லிவிடுகிறேன்’ என்று சொன்னாள். சொன்னபடி மறுநாள் மாலை கோயிலில் சந்தித்தபோது டிக்கெட்டைக் கொடுத்தாள். அம்மா டிக்கெட்டுக்குப் பணம் கொடுத்தபோது வேண்டவே வேண்டாம் என்று அன்போடு மறுத்துவிட்டாள். இந்தக் காலத்தில் இப்படியும் நல்லவர்கள் இருப்பார்களா என்று அம்மாவுக்கு ஒரே ஆச்சரியம்.

‘நான் ஊருக்குப் போய்விட்டு வந்ததும் நிச்சயமாக ஒருநாள் உங்கள் வீட்டுக்கு வருகிறேன்’ என்று சொல்லி விடைபெற்றுக் கிளம்பினாள்.

மறுநாள் அம்மா ஹைதராபாத் ரயில் நிலையத்துக்குப் போனபோது அங்கே மைதிலியைப் பார்த்தாள். அவள் தனது கணவருடனும் நான்கு சிறு குழந்தைகளுடனும் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கக் கண்டாள். மதராஸ் போகிற ரயில் கிளம்பத் தயாராக இருந்தபடியால், அவள் அருகே போய்ப் பேசவோ விடைபெறவோ அப்போது அம்மாவுக்கு அவகாசமில்லாமல் இருந்தது. தவிர அவள் ஏற வேண்டிய பெட்டியும் பிளாட்பாரத்தின் மறுமுனையில் இருந்தது. உரக்கக் குரல் கொடுத்துக் கத்திப் பாத்தாள். மைதிலிக்கு அது காதில் விழவில்லை. சரி போ என்று அம்மா தான் ஏற வேண்டிய பெட்டியை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தாள். மூச்சிறைக்க அவள் ஏறி, இருக்கை தேடி அமர்ந்த மறுகணமே வண்டி கிளம்பிவிட்டது. ஜன்னல் வழியே திரும்பிப் பார்த்தபோது இப்போது மைதிலியின் கணவர் கடையில் எதோ தின்பண்டம் வாங்கிக்கொண்டு இருக்கைக்குத் திரும்புவது தெரிந்தது. ரயிலும் அவர்கள் இருக்கும் திசை நோக்கித்தான் மெல்ல ஊர்ந்து நகர்ந்துகொண்டிருந்தது. இப்போது அம்மாவால் மைதிலியையும் அவளது கணவரையும் நன்றாகவே பார்க்க முடிந்தது.

‘மைதிலி, நான் போயிட்டு வரேன்’ என்று ஜன்னல் வழியே கைநீட்டி அம்மா உரக்கச் சொன்னாள். அவள் திரும்புவதற்குள் அவளது கணவர் திரும்பிப் பார்த்தார். அம்மாவுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ரயிலில் இருந்து குதித்துவிடலாமா என்று நினைத்தாள். ஆனால் வண்டி வேகமெடுத்து பிளாட்பாரத்தைத் தாண்டிவிட்டது.

(தொடரும்)

 

http://www.dinamani.com/junction/yathi/2018/oct/12/150-மைதிலி-3018786.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

151. நிழல் வெளி

மதராசபட்டணத்துக்கு வந்து சேர்ந்த பின்பு அம்மா மீண்டும் செகந்திராபாத்துக்குப் போக விரும்பவில்லை. போக முடியாத சூழ்நிலைகள் உருவானதும் ஒரு முக்கியக் காரணமே. அம்மா ஊருக்கு வந்த இரண்டாம் நாளில் நாராயண ஐயங்காரைக் காலரா தாக்கியது. அம்மாதிரியானதொரு கொடூரமான நோய்த் தாக்குதல் யாருக்குமே வரக் கூடாது என்று பின்னாள்களில் அம்மா பலமுறை சொல்லியிருக்கிறாள். நாராயண ஐயங்கார் பதினெட்டு தினங்கள் காலராவுடன் போராடிவிட்டு இறந்துபோனார். செகந்திராபாத்தில் உள்ள அத்திம்பேருக்குத் தந்தி அடித்துவிட்டு, கேசவன் மாமா தனது தந்தையாரின் இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்தார். அப்பா காரியத்துக்கு வரவில்லை. அங்கே ஒரே கலவரமாயிருக்கிறது என்றும், பத்தாம் நாள் காரியத்துக்கு எப்படியும் வந்துவிடுவார் என்றும் அப்பாவின் அப்பாவும் அம்மாவும் திரும்பத் திரும்ப சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அம்மாவுக்குத் தனது மாமனார் மாமியாரிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. செகந்திராபாத் ஆஞ்சநேயர் கோயிலைப் பற்றிப் பேசினாள். ஆனால் மைதிலியைப் பற்றிச் சொல்லவில்லை.

காரியங்கள் அனைத்தும் முடிந்து சுபஸ்வீகாரம் ஆனதும் அம்மாவை செகந்திராபாத்துக்கு அனுப்பிவைப்பது குறித்து அம்மாவின் அம்மாவும் கேசவன் மாமாவும் பேசிக்கொண்டிருந்தார்கள். ‘இல்லை, அவரே இங்க வந்துடுவார்’ என்று அம்மா அப்போதைக்குச் சொல்லி அதைத் தடுத்து நிறுத்தினாள். இரண்டு மாதங்களுக்குப் பிறகு அப்பா மதராசுக்கு வந்தார். வந்தவர் நேரே தன் வீட்டுக்குப் போய்த் தங்கிக்கொண்டு, அம்மாவை அங்கே வரும்படிச் சொல்லி அனுப்பினார். அம்மா போகவில்லை. அதன்பின்புதான் அப்பாவின் வீட்டாருக்கு லேசாக சந்தேகம் தட்டியிருக்கிறது. மகனிடம் அவர்கள் விசாரிக்க ஆரம்பித்ததும், அப்பா கோபித்துக்கொண்டு மீண்டும் செகந்திராபாத்துக்குப் போய்விட்டார்.

அன்றைக்கு மறுநாள் அம்மாவின் மாமனார் டிராம் பிடித்து மூர் மார்க்கெட் வரை வந்து இறங்கி, அங்கிருந்து தனது வேலையாளை அம்மா வீட்டுக்கு அனுப்பி அம்மாவைக் கையோடு அழைத்துவரச் சொன்னார். மாட்டேன் என்று சொன்னால், ‘நான் காலில் விழுந்து அழைக்கிறேன் என்று சொல்லு’ என்றும் சொல்லி அனுப்பியிருக்கிறார்.

வேறு வழியின்றி, அம்மா தனது மாமனார் வீட்டு வேலையாளுடன் மூர் மார்க்கெட்டுக்குச் சென்றாள். உடன் வருவதாகச் சொன்ன கேசவன் மாமாவை வேண்டாம் என்று சொல்லித் தடுத்து நிறுத்திவிட்டாள். மூர் மார்க்கெட்டில் வைத்து அம்மாவின் மாமனார் என்ன நடந்தது என்று அம்மாவிடம் விசாரித்தார். அம்மா எதைச் சொல்வாள்? ‘என் திருமணத்துக்குப் பின்பு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது’ என்று மட்டும் சொல்லியிருக்கிறாள். அந்த மனிதர் மனம் உடைந்துபோய் வீடு திரும்பினார். அதன்பின் நடந்தவை எதுவும் அம்மாவுக்குத் தெரியாது.

ஒருநாள் நள்ளிரவு அம்மாவின் வீட்டுக் கதவு தடதடவென தட்டப்படும் சத்தம் கேட்டது. கேசவன் மாமா எழுந்துபோய்க் கதவைத் திறந்தார். அப்பா வெளியே நின்றுகொண்டிருந்தார். சட்டை கிழிந்து, தலைமுடியெல்லாம் கலைந்து, முகமெல்லாம் ரத்தக் களேபரமாகியிருக்க, ஒரு கொலை முயற்சியில் இருந்து தப்பித்து ஓடிவந்த கோலத்தில் அவர் இருந்தார். கதவு திறக்கப்பட்டதுமே பாய்ந்து உள்ளே வந்து அவரே கதவை மூடித் தாழிட்டார்.

‘என்ன விஷயம்?’ என்று கேசவன் மாமா கேட்டார்.

‘உன் அக்கா எங்கே?’ என்று அப்பா கேட்டார்.

உறக்கம் கலைந்து, அம்மாவும் அம்மாவின் அம்மாவும் எழுந்து வந்தார்கள். அப்பா அவர்களைப் பார்த்தார். என்ன நினைத்தாரோ, எதுவும் பேசாமல் நேரே அம்மாவின் முன்னால் போய் நின்று சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்தார்.

‘எதற்கு இது?’ என்று அம்மாவின் அம்மா கேட்டாள். அவளுக்கு மிகவும் பதற்றமாகிவிட்டது. ஆனால் அம்மா ஒன்றும் பேசவில்லை.

‘நான் செய்த பாவத்துக்கு’ என்று அப்பா சொன்னார். ‘உங்க பொண்ணுக்குப் புரியும்’ என்றும் சொன்னார். அம்மா அதுவரையிலுமேகூட தன் வீட்டாரிடம் நடந்த எதையும் சொல்லியிருக்கவில்லை என்பது அப்போதுதான் அப்பாவுக்குத் தெரியும். அம்மா அதன்பின்பும் எதையும் சொன்னதாகத் தெரியவில்லை. அன்றிரவு அப்பாவும் அம்மாவும் பத்து நிமிடங்கள் வீட்டின் பின்புறம் இருந்த அரிசிக் களஞ்சியத்தின் மீது சாய்ந்து அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசி முடிக்கும்வரை காத்திருந்துவிட்டு, அம்மாவின் அம்மா அந்த நள்ளிரவு நேரத்திலும் அப்பாவுக்கு சூடாகக் காப்பி போட்டுக் கொடுத்தாள். அப்பா அதை வாங்கிக் குடித்துவிட்டு, ‘நாங்கள் நாளைக் காலை செகந்திராபாத் கிளம்புகிறோம்’ என்று சொன்னார்.

‘இப்போதாவது உண்மையைச் சொல். என்ன நடந்தது?’ என்று கேசவன் மாமா அம்மாவிடம் கேட்டார். அம்மா ‘ஒன்றுமில்லை’ என்று சொன்னாள்.

மறுநாள் அதிகாலை அப்பாவும் அம்மாவும் சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள். ஆனால் அவர்கள் செகந்திராபாத்துக்குப் போகவில்லை. அப்பாவுக்கு அப்போது அகோபிலத்தில் உள்ள ஶ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தில் கணக்கெழுதும் உத்தியோகம் கிடைத்திருந்தது. அந்நாள்களில் அகோபிலத்துக்குப் போகிறவர்கள் மிகவும் குறைவு. சரியான வழி கிடையாது. பேருந்து வசதிகள் கிடையாது. மிகவும் ஆபத்தான பிராந்தியம் என்று சொல்லுவார்கள். ஆனால் அம்மா துணிந்து அப்பாவுடன் அங்கே போய்ச் சேர்ந்தாள். அப்பாவின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறிவிட்டிருந்தன. அவர் ஆசிரம உத்தியோகம் பார்க்கும் நேரம் போக மீதி நேரம் முழுவதையும் அம்மாவுடனேயே செலவழிக்க ஆரம்பித்தார். வீட்டைப் பெருக்குவது, பாத்திரங்கள் துலக்கி வைப்பது, துணி துவைப்பது, ஒட்டடை அடிப்பது, தலையணைகளுக்கு உறை போடுவது, கடைக்குப் போய் வருவது, அம்மாவின் வீட்டு விலக்கு தினங்களில் சமைப்பது என்று ஒரு சிறந்த குடும்பத் தலைவனானார். வீட்டிலும் செய்வதற்கு வேலைகள் இல்லாத சமயத்தில் அவர் பிரபந்தம் படிக்கத் தொடங்கிவிடுவார்.

அம்மாவின் அம்மா காலமான சேதி வந்தபோது, விஜய், வினய் இருவரையும் ஆளுக்கொருவர் தூக்கிக்கொண்டு மதராசுக்குப் போனார்கள். காரியம் முடியும்வரை அப்பாதான் கேசவன் மாமாவுக்குத் துணையாக இருந்தது. நான்காம் நாளே அம்மா குழந்தைகளுடன் ஊருக்குத் திரும்பிவிட்டாள்.

ஆறாண்டுக் காலம் இப்படியே ஓடிய பிற்பாடுதான் கேசவன் மாமாவுக்கு அம்மா ஒரு கடிதம் எழுதினாள். இன்னும் ஒரு மாதத்தில் நாங்கள் மதராசுக்கே குடிமாறி வந்துவிடப் போகிறோம். அம்மாவும் இல்லாத நிலையில் நீ கோவிந்தப்பன் நாயக்கன் தெரு வீட்டில் இன்னும் எதற்குத் தனியே இருக்க வேண்டும்? எங்களோடு திருவிடந்தைக்கு வந்துவிடு.

அது அப்பாவின் அப்பா எந்தக் காலத்திலோ யாரிடமோ சொல்லிவைத்து நூற்று எண்பத்தேழு ரூபாய்க்கு வாங்கிய கோயில் வீடு. அந்த மனிதர் இறக்கும்வரை அவருக்கு அப்படியொரு வீடு இருக்கிறது என்கிற விவரமே யாருக்கும் தெரியாது. இறந்தபின்பு அவரது உயிலில் பார்த்துத்தான் அப்பாவுக்கு அந்த வீட்டைக் குறித்து தெரிய வந்தது. ஒரு நல்ல நாள் பார்த்து அவர்கள் திருவிடந்தைக்குக் குடி வந்தார்கள். அம்மாவும் அப்பாவும் திருவிடந்தைக்கு வரும்போது எனக்கு இரண்டு வயது பூர்த்தியாகியிருக்கவில்லை. என்னுடைய இரண்டாவது வயது பிறந்த நாளுக்கு முதல் நாள் வீட்டில் ஒரு வாத்தியார் வந்து ஏதோ ஒரு ஹோமம் செய்து வைத்துவிட்டுப் போனார். அம்மாவும் அப்பாவும் கோயிலில் வெண் பொங்கலும் புளியோதரையும் தளிகை விட்டு, ஊர் முழுவதற்கும் அன்னதானம் செய்தார்கள். ‘என்ன விசேஷம்?’ என்று விஜய் அம்மாவிடம் கேட்டதற்கு, ‘என் அக்கா நினைவு நாள்’ என்று அவள் பதில் சொன்னாள்.

முன்னுக்குப் பின் தொடர்பு இருப்பது போலவும் இல்லாதது போலவும் ஒரே சமயத்தில் தோற்றமளித்த இத்தகவல்களை அம்மா தன்னிடம் சொன்னதாக வினோத் சொல்லி முடித்தபோது, எனக்கு பதில் பேசவே தோன்றவில்லை. எனக்கென்னவோ, திட்டமிட்டே அம்மா ஆங்காங்கே இடைவெளி வைத்து அவனிடம் பேசியிருப்பதாகத் தோன்றியது. அவள் சுயநினைவின்றிக் கிடப்பதாகவும் பேச்சற்றுப் போய்விட்டதாகவும் கேசவன் மாமா சொன்னதை எண்ணிப் பார்த்தேன். அவரிடம் அம்மா அப்படித்தான் தோற்றம் கொண்டிருக்கிறாள். அவருக்கு அதுவே சரி என்று எண்ணியிருப்பாள் என்று தோன்றியது. வினய்யிடம் ஒருவேளை அவள் மீதமுள்ள தகவல்களை வேறு வடிவத்தில் தரலாம். அல்லது என்னிடமே சொல்லலாம். அண்ணாவுக்காகக் காத்திருக்கலாம். எல்லாவற்றையும் சொல்லிவிட்டுத்தான் போக வேண்டும் என்பதுகூட இல்லை. எப்படிப் பார்த்தாலும், கற்பனைக்கு எட்டாத ஒரு மகத்தான வாழ்வைத்தான் அவள் வாழ்ந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். இப்போதுகூட எனக்கு அவளோடு பேச வேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை. அவள் கையைப் பிடித்துக்கொண்டு சிறிது நேரம் சும்மா அமர்ந்திருக்கலாம் போலிருந்தது.

வினோத்திடம் இதனைச் சொன்னபோது, அவன் கண்கள் கலங்கிவிட்டன.

‘அழுகிறாயா?’ என்று கேட்டேன்.

‘என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை’ என்று அவன் சொன்னான்.

‘ஏன்?’

‘தெரியவில்லை. ஆனால் நான் சமநிலையில் இல்லை. என்னால் இருக்க முடியவில்லை’ என்று சொன்னான்.

‘வினோத், நீ தத்துவங்களில் நம்பிக்கை உள்ளவன். பல உடல்களுக்குள் புகுந்து வெளிவந்தாலும், உயிர் ஒன்றே என்பதை நீ ஏற்பாய் என்று நம்புகிறேன்’.

‘ஆம்’.

‘அப்படியே இதையும் சேர்த்து நம்பு. பல வடிவங்களில் காணக் கிடைத்தாலும் உடலும் ஒன்றேதான்’.

‘அதெப்படி ஒன்றாகும்?’

‘உடலற்ற உயிருக்கோ, உயிரற்ற உடலுக்கோ பொருளில்லை என்பது உண்மை என்றால் இரண்டும் சம அந்தஸ்து வாய்ந்தவை. பொருள் உண்டு என்றாலும் பதில் அதுவே’.

அவன் வெகு நேரம் பிரமை பிடித்தாற்போல எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டே இருந்தான். பிறகு சட்டென்று சொன்னான், ‘இப்போது நான் அண்ணாவுக்காக மிகவும் ஏங்குகிறேன். அவன் வர வேண்டும். அவன் வந்தால்தான் நிறையக் குழப்பங்கள் தீரும்’.

அந்தக் கணத்தில் எனக்கு மனத்தில் பட்டது. அவன் வரமாட்டான்.

(தொடரும்)

 

http://www.dinamani.com/junction/yathi/2018/oct/15/151-நிழல்-வெளி-3020266.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

152. கோடிட்ட இடங்கள்

நாங்கள் வீட்டுக்குப் போனபோது கூடத்தில் கேசவன் மாமா ஒரு ஓரமாகத் துண்டு விரித்துப் படுத்திருந்தார். அம்மாவின் அறைக்கதவு சாத்தியே இருந்தது. வினோத் கதவை லேசாகத் திறந்து பார்த்தான். உள்ளே வினய் இல்லை. அம்மா மட்டும் எப்போதும்போல் கண்மூடிக் கிடந்தாள். ‘அவன் இங்கே இல்லை’ என்று வினோத் என்னிடம் சொன்னான். நான் பின்கட்டுக்குப் போனேன். கொல்லைக் கதவைத் திறந்தபோது வினய் துணி துவைக்கும் கல்லில் சாய்ந்து அமர்ந்து கஞ்சா குடித்துக்கொண்டிருப்பதைக் கண்டேன். சட்டென்று எனக்கு அண்ணாவின் ஞாபகம் வந்தது. மிகச் சரியாக அதே இடத்தில் அமர்ந்துதான் அண்ணா எனக்கு ஒரு சாளக்கிராமத்தை உடைத்துக் காட்டினான்.

வினய் என்னைப் பார்த்தான். ‘வா’ என்று சொன்னான்.

‘நீ உள்ளே வாயேன்?’

‘மாமா தூங்குகிறார்’.

‘ஆம். பார்த்தேன். நீ அம்மாவுடன் பேசினாயா?’

‘பார்த்தேன். அவள் கண்ணைத் திறக்கவில்லை’ என்று வினய் சொன்னான்.

‘அப்படியா? ஆனால் அவள் வினோத்திடம் பேசியிருக்கிறாள்’.

‘அப்படியா?’

‘எழுந்து உள்ளே வா’ என்று சொல்லிவிட்டு நான் உள்ளே போனேன். கேசவன் மாமா உறக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்திருந்தார். ‘எங்கேடா போயிட்டேள் எல்லாரும்? இத்தன வருஷம் கழிச்சி ஆத்துக்கு வந்திருக்கேள். அவள அனுப்பிவெக்கற வரைக்குமாவது இங்கேயே இருக்கக் கூடாதா?’ என்று கேட்டார்.

‘இருக்க கஷ்டமா இருக்கு. மன்னிச்சிடுங்கோ’ என்று வினோத் சொன்னான். நான் புன்னகை செய்தேன். மாமாவுக்கு இது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. சட்டென்று அவர் கண் கலங்கிவிட்டார். ‘அவளும் போயிடுவா. நீங்களும் கெளம்பிடுவேள். ஒண்டிக்கட்டையா நான் இருக்கணுமேடா’ என்றார்.

கஷ்டம்தான். என்னால் அவரது துக்கத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் என்ன சொல்லி சமாதானப்படுத்த முடியும்? சட்டென்று வினய், ‘நீங்களும் கிளம்பிடுங்கோ’ என்றான். மாமா அதிர்ச்சியாகிவிட்டார். சிறிது இடைவெளி விட்டு, ‘எங்கே?’ என்று கேட்டார்.

நான் அந்தப் பேச்சை மாற்ற விரும்பினேன். வினய்க்கு கண்ணைக் காட்டிவிட்டு, ‘அம்மா வினோத்கிட்டே கொஞ்ச நேரம் பேசியிருக்கா மாமா’ என்று சொன்னேன்.

‘அப்படியா?’ என்று அவர் வியந்து போனார். வினோத் சட்டென்று, ‘அம்மா அஹோபிலத்துல இருந்தாளாமே? நீங்க அவ அங்க இருக்கறப்ப போனேளா?’ என்று கேட்டான்.

‘அவ அங்க இருந்ததே, அங்கேருந்து கிளம்பறப்ப அவ எழுதின கடுதாசிலதான் தெரிஞ்சிது. எல்லாம் ஒரே பூடகம்’ என்று மாமா சொன்னார்.

‘என்ன பூடகம்?’

‘என்னன்னு எனக்கு சரியா சொல்லத் தெரியலடா. ஆனா உங்கப்பாவுக்கும் அம்மாவுக்கும் எதோ பிணக்கு இருந்திருக்கு. அப்பறம் அது சரியாப் போச்சு. என்ன பிணக்கு, எப்படி சரியாச்சுன்னு தெரியலே. அந்த காலத்துலதான் அவ அஞ்ஞாத வாசம் மாதிரி எங்கயோ போயிட்டா’.

‘ஓ!’

‘அதையா உன்கிட்டே சொன்னா?’

‘என்னமோ சொன்னா. பாதி புரிஞ்சிது. சிலது சரியா கேக்கலை’ என்று வினோத் சொன்னான். அவன் சற்று ஜாக்கிரதையாக இருக்க விரும்புவதை நாங்கள் புரிந்துகொண்டோம்.

‘ஏன் மாமா, உங்களுக்கும் அம்மாக்கும் எவ்ளோ வயசு வித்தியாசம்?’ என்று வினய் கேட்டான்.

‘அவளுக்கு இப்ப எண்பத்தி ரெண்டு. எனக்கு எழுவத்தி ஒம்போது. கணக்குப் போட்டுக்கோ’.

‘உங்களுக்கு இன்னொரு அக்கா இருந்திருக்கா இல்லே?’

‘அதையும் சொன்னாளா?’ என்று ஆர்வமாகக் கேட்டார்.

‘ஆமா. அவா இப்ப இருக்காளா?’

‘அவ போய்ப் பலகாலமாச்சு. நீங்கள்ளாம் இந்த ஊருக்கு வந்து சேந்தப்பவே அவ போய் சேந்துட்டா’.

‘அவாளுக்குக் குழந்தைகள் உண்டா?’

‘இருக்கானே. ஒரே ஒரு பிள்ளை. அமெரிக்கால எங்கயோ இருக்கான். அதெல்லாம் தொடர்பே இல்லாம போயிடுத்து’.

‘கல்யாணம் ஆயிடுத்தா?’ என்று நான் கேட்டேன்.

‘யாரோ இங்கிலீஷ்காரிய பண்ணிண்டான்னு நினைக்கறேன். சரியா தெரியலே. ஆனா ஆயிடுத்து. அது நிச்சயம்’.

‘ஏன் அப்படி தொடர்பே இல்லாம போச்சு?’ என்று வினோத் கேட்டான்.

‘யாரு? மூத்தவளோடயா? அவ ஆம்படையான் அப்படி. யாரையும் நெருங்கவே விட்டதில்லே பாத்துக்கோ’.

‘ஓ. சண்டையா?’

‘அப்படின்னு இல்லே. என்னமோ முதல்லேருந்தே அவ வாழ்க்கை அப்படி ஆயிடுத்து. அவளுக்குப் பிரசவம் பாக்க எங்கம்மா போனாளாம். ஆனா பேர் வெக்கக்கூட யாரையும் கூப்பிடலே’.

‘கஷ்டம்தான்’.

‘எத்தனையோ பாத்துட்டேண்டா. போதும்னுதான் தோணறது. என்னிக்கு பெருமாள் என் கணக்கை முடிச்சனுப்புவானோ தெரியலே’.

‘அதிருக்கட்டும் மாமா. உங்க சின்ன வயசு ஞாபகத்த எல்லாம் சொல்லுங்களேன்? மூத்த அக்காவோட தொடர்பில்லேன்னாலும் அம்மாவோட இருந்திருப்பேளே’.

‘எனக்கு அக்காவும் அவதான். அம்மாவும் அவதான். என்னன்னு சொல்றது? எம்மேல அவளுக்கு அவ்ளோ பிரியம்’ என்று மாமா சொன்னார். கண்ணைத் துடைத்துக்கொண்டார்.

‘எந்த வயசுலேருந்து?’ என்று வினய் கேட்டான்.

‘நினைவு தெரிஞ்சதுலேருந்தே அப்படித்தாண்டா. மூணு மூணர வயசுல அவ கைய பிடிச்சிண்டு லிங்கிச் செட்டித் தெரு, ஆர்மீனியன் தெரு, தம்புச் செட்டித் தெருவெல்லாம் சுத்தியிருக்கேன்’.

‘அதெல்லாம் ஞாபகம் இருக்கா?’

‘அதுலேருந்துதான் ஞாபகமே ஆரம்பிக்கறது. எங்கப்பா எப்பவாவது அக்காக்கு ஓரணா குடுப்பார். அக்கா அந்த ஓரணாவை அப்படியே சேத்துவெச்சு எனக்குத்தான் கேக்கறதையெல்லாம் வாங்கித் தருவா. கேசவா கேசவான்னு என் கன்னத்த தடவிண்டே இருப்பா. எங்கம்மா பண்ணாதத எல்லாம் அவதான் பண்ணா. பாரு, அந்தப் பாசம்தான் இன்னிக்கு அவ இழுத்துண்டு கெடக்கறப்ப நான் துடிச்சிண்டிருக்கேன்’ என்றவர், சில விநாடிகள் கேவிக் கேவி அழுதார். பிறகு, ‘திரும்பத் திரும்பக் கேக்கறேன்னு நினைச்சிக்காதிங்கோ. நீங்கள்ளாம் ரிஷிகளாயிட்டேள். இருந்தாலும் எனக்கு இந்த சந்தேகம் இருக்கு. அது எப்படிடா பாசம் மொத்தமா வெட்டிண்டு போகும்?’

‘தெரியல மாமா. அம்மாவைத்தான் கேக்கணும்’ என்று வினோத் சொன்னான்.

‘நிஜமாவே அவ பேசினாளா? நானும் எவ்ளவோ நாளா பேச்சு குடுத்துண்டிருக்கேன். ஒரு வார்த்தை வரலியேடா அவ வாய்லேருந்து. உனக்குத்தான் குடுப்பினை போல’ என்று சொன்னார்.

‘ஆனா நான் போனப்போ கண்ணே திறக்கலை’ என்று வினய் சொன்னான்.

‘பேசக் கூடாதுன்னெல்லாம் நினைச்சிருக்கமாட்டா. நீ அப்படி எடுத்துண்டுடாதே. முடியாம போயிருக்கும்’ என்று மாமா அவனுக்கு உடனே சமாதானம் சொன்னார்.

வினய் புன்னகையுடன் அவர் கையைப் பிடித்துக்கொண்டு, ‘இந்த உலகத்துல தப்பா நினைக்க ஒண்ணுமே இல்லை மாமா. சரியா சொல்லணும்னா தப்புன்னே ஒண்ணு இல்லை’.

‘அப்படியா நினைக்கறே நீ?’

‘கண்டிப்பா. ஒவ்வொருத்தர் மனசு ஒவ்வொரு மாதிரி நினைக்கும். அது அவாவா பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, யோசிக்கற சக்தியைப் பொறுத்தது. வளர்ற சூழ்நிலைய பொறுத்தது. தப்பு எது? சரி எது? இந்தாத்துல மீன் சாப்ட்டா தப்பு. கறி சாப்ட்டா தப்பு. உலகத்துல கோடிக்கணக்கான பேருக்கு அதுதான் பிடிச்ச உணவு. அவாளை நாம தப்பு சொல்வோமா?’

‘படவா, நீ சாப்ட்டிருக்கியா?’ என்று மாமா செல்லமாக அவன் வயிற்றில் குத்தினார்.

‘அவனைப் பார்த்தா சாப்பிடறவனாட்டமா தெரியறது? அவன் காத்தைத்தான் பெரும்பாலும் திங்கறான்’ என்று நான் சொன்னேன்.

‘நான் எல்லாமே சாப்பிடுவேன் மாமா’ என்று வினய் சொன்னான்.

‘நெனச்சேன். எதோ கெட்ட நாத்தம் வீசறது உம்மேல’.

‘அது கஞ்சா’ என்று வினோத் சிரித்தபடி சொன்னான்.

‘உடம்ப பாத்துக்கோங்கோடா. உங்களுக்கெல்லாம் நான் என்ன போதனை பண்ண முடியும் வேற? எல்லாருமே சன்னியாசிகள். எல்லாருமே பகவான பாத்தவா. குறைஞ்சது புரிஞ்சுண்டவா. சரியா சொல்றேனா?’

நான் சிரித்தேன்.

‘முயற்சி பண்றவான்னு சொன்னேள்னா சரியா இருக்கும்’ என்று வினோத் சொன்னான்.

‘அதெல்லாம் இருக்கட்டும். இந்த ஞானம் அடையறதுன்றாளே. அதெல்லாம் நடந்துடுத்தா உங்களுக்கு?’ என்று மாமா கேட்டார்.

இதற்கு என்ன பதில் சொல்வதென்று எங்கள் மூவருக்குமே புரியவில்லை. சிறிது நேரம் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தோம். வினய்தான் மௌனத்தைக் கலைத்தான். ‘ஞானமும் மரணமும் ஒண்ணு மாமா. அடைஞ்சிட்டா அதை விளக்க முடியாது’ என்று சொன்னான்.

‘அடப் போடா! ரொம்ப தெரியுமா உனக்கு? எனக்கு மரணமே ஒரு ரெண்டுங்கெட்டான் நிலைன்னுதான் தோணறது’.

‘அப்படியா?’

‘ஆமா. உங்கம்மா ஒருநாள் சித்ரா ஆவியா வந்து தன்னோட பேசினதா சொன்னா. ரூபமா தெரியலேன்னு சொன்னா. ஆனா பேசினது நிச்சயம்’.

‘அப்படியா?' என்று வினய் ஆச்சரியப்பட்டான். வினோத் புன்னகையுடன் அவனைப் பார்த்தான். ‘நீ சொன்னாயா?’ என்பதுபோல வினய் என்னைப் பார்க்க, நான் ஆம் என்று தலையசைத்தேன். உடனே அவன் அமைதியாகிவிட்டான். அதுவரை இல்லாத ஒரு தீவிரபாவம் அவன் முகத்தில் தெரிந்தது.

‘என்ன சொன்னா அவ?’ என்று நான் மாமாவிடம் கேட்டேன்.

‘அதெல்லாம் அக்கா சொல்லலே. ஆனா சித்ரா பேசினதா சொன்னா. ஒருவேளை அவ பிரமையா இருக்கும்னு முதல்ல நினைச்சேன். அவ இல்லைன்னா. சரி என்னதான் பேசினான்னு சொல்லேன்னு விடாப்பிடியா கேட்டேன். சொல்லவேயில்லை கடங்காரி’.

‘நீங்க பத்மா மாமிட்ட கேட்டிருக்கலாமே மாமா? மெனக்கெட்டு இங்க வந்து அம்மாட்ட பேசிட்டுப் போனவ, அவம்மாட்ட பேசாமலா இருந்திருப்பா?’

‘கேட்டேனே. கேக்காமலா இருப்பேன்? அவளுக்கு அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்கலியாம். சித்ரா செத்துப் போனதுமே மாமியோட ஆத்துக்காரர் கயாவுக்குப் போய் மொத்தமா ஒரு சிராத்தம் பண்ணிட்டு வந்துட்டார். அவ போய் பெருமாள் திருவடில சேந்துட்டான்னு மாமி சொல்லிட்டா’.

வினய் சிரித்ததை நான் பார்த்தேன். சட்டென்று மாமாவின் பக்கம் திரும்பி, ‘அம்மா உங்ககிட்ட வேற என்னென்ன சொல்லியிருக்கா?’ என்று கேட்டேன்.

ஒருவேளை அவருக்குப் புரியாமல் போய்விடுமோ என்று நினைத்து, ‘எங்களைப் பத்தி என்ன சொல்லியிருக்கா?’ என்று வினோத் கேட்டான்.

‘ஒன்ணுமே சொன்னதில்லே. நாலு பேரும் அவளுக்கு உசிருக்கு சமானம். சரியா சொல்லணும்னா, உங்களுக்கு அப்பறம்தான் உங்கப்பாவே அவளுக்கு’ என்றவர், ‘சரி இருங்கோ. ஒரு காப்பிய போட்டு எடுத்துண்டு வரேன்’ என்று சொல்லிவிட்டு எழுந்தார். அவர் சமையல் கட்டுக்குப் போனதும் வினய், வினோத்தைப் பார்த்து, ‘அம்மா என்ன சொன்னாள்?’ என்று கேட்டான். வினோத் அதை எப்படிச் சொல்வதென்று புரியாமல் சிறிது தவித்தான். நான் சட்டென்று சொன்னேன், ‘பதற ஒன்றுமில்லை வினய். மாமா எப்படி அவளுக்குத் தம்பி இல்லையோ, அதேபோல நாமும் அவளுக்கு மகன்கள் இல்லை’ என்று சொன்னேன்.

வினய் வியப்பானான். ‘அடடே’ என்று சொன்னான்.

‘உனக்கு இது அதிர்ச்சியாக இல்லையா?’ என்று வினோத் கேட்டான்.

‘எதற்கு அதிர்ச்சியடைய வேண்டும்? ஏதோ ஒரு பெண் வடிவில் இருந்துதான் எல்லோரும் தோன்றுகிறோம். ஏதோ ஒரு பெண் வடிவை அம்மா என்கிறோம். என்னைப் பொறுத்தவரை எல்லாப் பெண்களுமே ஒன்றுதான். எந்தப் பெண் செத்தாலும் நான் கர்மா செய்யத் தயாராக இருக்கிறேன். அது நான் புணர்ந்த பெண்ணாகவே இருந்தாலும் சரி. அம்மாவாக எண்ணிக்கொண்டு செய்ய எனக்கு மனத்தடை ஒன்றுமில்லை’.

வினய்யின் பேச்சு வினோத்துக்கு மிகுந்த அதிர்ச்சியளித்ததை அவனது முகபாவம் சொன்னது. அவன் எதையோ சொல்ல வந்து தவிர்த்ததைக் கவனித்தேன். அது அநேகமாக வினய் மூலம் அவனது மரணம் தீர்மானிக்கப்படும் என்று அம்மா சொன்னதாக இருக்கலாம். அதில் எனக்கு ஒரு சுவாரசியம் இருந்தது. அந்த விஷயத்தை வினோத் முதலில் எடுக்கிறானா அல்லது வினய் சொல்லப்போகிறானா என்று ஆவலுடன் காத்திருந்தேன். இருவருமே வேறு என்னென்னவோ பேசினார்களே தவிர, கவனமாக அதைத் தவிர்த்துக்கொண்டிருந்ததுபோலப் பட்டது. அம்மாவின் மூலம் வினோத் அறிந்த எங்களது பிறப்பின் ரகசியத்தைக் காட்டிலும் அது ஒன்றும் அத்தனை அதிர்ச்சியளிக்கக்கூடிய சங்கதியல்ல என்பதை அவர்கள் இருவருமே அறிவார்கள். இருந்தாலும் ஏன் தயங்குகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.

ஒரு கட்டத்தில் நானே பொறுமை இழந்து வினய்யைக் கேட்டுவிட்டேன், ‘டேய் என்னிடம் சொன்னதை நீயே இவனிடம் சொல்கிறாயா? அல்லது அவனே பேசட்டும் என்று காத்திருக்கிறாயா?’

வினய் என்னை உற்றுப் பார்த்தான். ‘அதைத்தான் நீ கொல்லைப்புறம் வந்தபோது யோசித்துக்கொண்டிருந்தேன்’ என்று சொன்னான்.

'சரி இப்போது சொல். என்னை எப்போது கொலை செய்யப் போகிறாய்?' என்று வினோத் சிரித்துக்கொண்டே கேட்டான். வினய்யும் சிரித்தான்.

‘சிரிக்காதே. பதில் சொல்’.

‘அம்மா காரியம் முடியட்டுமே? இதை அப்புறம் பேசிக்கொள்ளலாம்’ என்று அவன் சொன்னான். எனக்கு அது நியாயமாகப் பட்டது. மாமா எங்கள் மூவருக்கும் காப்பி போட்டு எடுத்துவந்து கொடுத்தார். நாங்கள் நன்றி சொல்லிவிட்டு வாங்கிக் குடித்தோம்.

‘நன்னாருக்கா?’ என்று மாமா கேட்டார்.

‘பிரமாதம்' என்று சொன்னேன். பிறகு, ‘உங்கப்பா சாகறப்போ உங்ககிட்டே எதாவது சொன்னாரா மாமா?’ என்று கேட்டேன்.

‘ஒண்ணுமில்லியே’ என்றார் கேசவன் மாமா.

‘உங்கம்மா?’

‘அவளும் ஒண்ணும் சொன்னதில்லே. ஏன் கேக்கறே?’

‘ஒண்ணுமில்லை’ என்றுதான் நானும் பதில் சொன்னேன். வினய்தான் பிறகு என்னிடம் சொன்னான், ‘அண்ணா வரட்டும். அவன் சொல்லுவான் மிச்சத்தை’.

எனக்கு இப்போதும் அதுதான் தோன்றியது. அவன் வரப்போவதில்லை.

(தொடரும்)

 

http://www.dinamani.com/junction/yathi/2018/oct/16/152-கோடிட்ட-இடங்கள்-3021485.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

153. புன்னகைக் காலம்

நான் கண்மூடியிருந்தேன். மூடிய என் விழிகளுக்குள் ஒரு சருகினைப் போல அம்மாவின் தோற்றம் அடர்ந்திருந்தது. அவள் என்னிடம் கண்ணைத் திறக்கவேயில்லை. வினோத்திடம் பேசியதைப் போலப் பேசவில்லை. அவள் கிடந்தாள். நான் அருகே இருந்தேன். அவ்வளவுதான். கூப்பிட்டுப் பார்க்கலாமா என்று சில முறை யோசித்தேன். ஏனோ வேண்டாம் என்று தோன்றியது. ஒரே ஒருமுறை அவள் தலையைத் தொட்டேன். பிறகு அவளது இடது கை சுண்டு விரலைத் தொட்டேன். நான் வந்திருப்பதை உணர்த்த அது போதுமென்று தோன்றியது. அவள் சுய நினைவில் இருந்தால் நிச்சயமாக அது தெரிந்திருக்கும். பார்க்க வேண்டும் அல்லது பேச வேண்டும் என்று நினைத்திருந்தால் செய்திருப்பாள். ஆனால் அசைவற்று இருந்தாள். எனவே நானும் அமைதியாக அருகே அமர்ந்தேன். சுமார் ஒரு மணி நேரம் நான் அப்படியே இருந்தேன். அசையவில்லை. எழுந்து போகவில்லை. நானறிந்த அம்மாவின் வாசனை அப்போது அவளிடம் இல்லை. பல நாள்களாக மாற்றாத புடைவையின் நெடியும் மூத்திரப் பை நெடியும் கலந்த ஒரு நெடி அந்த அறையெங்கும் வீசியது. மாமா அந்த அறையில் பினாயில் தெளித்துத் துடைப்பார் போலிருக்கிறது. இந்த உலகில் சகிக்கவே முடியாத ஒரு வாசனையென்றால் அது பினாயிலின் வாசனைதான். மூத்திர வாடையைக்கூடச் சமாளித்துவிட முடியும். மூத்திர வாடையை மறைக்கத் தெளிக்கப்படும் பினாயிலின் வாடை குடல் வரை சென்று தாக்கும்.

அம்மாவுக்கு அதெல்லாம் இந்நாள்களில் பழகியிருக்கும். வீட்டில் இருந்த நாள்களில் அவள் படுத்தே நான் அதிகம் பார்த்ததில்லை. நாங்களெல்லாம் படுத்துறங்கும்வரை அவள் சமையல் கட்டிலேயேதான் வேலையாயிருப்பாள். பிறகு எப்போது முடித்துவிட்டு வந்து படுப்பாள் என்று தெரியாது. காலை கண் விழிக்கும்போதும் அவள் சமையல் கட்டில்தான் இருப்பாள். அப்போது காப்பி போட்டுக்கொண்டிருப்பாள். பகல் பொழுதுகளில் சிறிது கால் நீட்டி அமர்வது, கண்ணயர்ந்து போவது எல்லாம் என்றுமே அவளிடம் கிடையாது. எழுந்து குளித்து, புடைவை கட்டிக்கொண்டு பொட்டு வைத்துக்கொள்ளும்போது ஒரு புன்னகையைச் சேர்த்தெடுத்து முகத்தில் பொருத்திக்கொண்டு விடுவாள். இரவு வரை அது அங்கே அப்படியே நிலைத்து நிற்கும். அம்மா என்றால் அந்தப் புன்னகையும் அன்பும் மட்டும்தான்.

அன்புதானா அது? இப்போது எனக்கு அந்த சந்தேகம் வரத் தொடங்கியது. அன்பை ஒரு கடமையாக்கிக்கொள்ள முடியுமா. தவிர, எங்கள் விஷயத்தில் அது கடமையாகவும் அவசியமில்லை என்றே தோன்றியது. என்னவோ நிகழ்ந்திருக்கிறது. ஏதோ ஒரு ஞானம் அல்லது அஞ்ஞானத்தின் உச்சக்கட்டத் தலைவிரிகோல ஆட்டம். அப்பாவை அவள் பழிவாங்க நினைத்திருப்பாள் என்று எனக்குத் தோன்றவில்லை. எனக்கு நினைவு தெரிந்து ஒருநாளும் அவள் அப்பாவின் சொல் மீறியதில்லை. சுள்ளென்று முகம் காட்டியதில்லை. அதெல்லாம்கூட பாவனையாக இருக்கலாம். ஆனால் அப்பாவை நோக்கும்போதெல்லாம் அவள் பார்வையில் புலப்படும் மரியாதை கலந்த பரிசுத்தமான அன்பின் ஈரம் இன்னமும் என் நினைவில் உள்ளது. ஒரு துரோகம் அல்லது அதனை நிகர்த்த வேறெந்த விதமான தாக்குதலுக்குப் பிறகு அப்படியொரு பார்வை யாருக்கும் சாத்தியமில்லை.

ஒருநாள். அன்றைக்கு அம்மாவின் திருமண நாள். அண்ணா அப்போது வீட்டை விட்டுப் போயிருக்கவில்லை. அதற்கு அவன் ஆயத்தமாக ஆரம்பித்திருக்கிறான் என்பதுகூட வெளிப்பட்டிராத காலம். அன்று நான் அதிகாலை சீக்கிரமே உறக்கம் கலைந்து எழுந்துவிட்டேன். மணி பார்த்தபோது ஐந்தரைதான் ஆகியிருந்தது. இன்னும் சிறிது நேரம் தூங்கலாம் என்று எண்ணியபோது வாசலில் பேச்சு சத்தம் கேட்டது. இந்நேரத்தில் வாசலில் யார் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள் என்று எண்ணியபடியே எழுந்து சென்றேன். மாமாதான் அங்கே இருந்தார். எருமை ஓட்டிவந்து பால் கறந்து கொடுத்துவிட்டுப்போகிற தயாளனுடனும் அந்நேரத்தில் பேசுவதற்கு அவரிடம் விஷயம் இருந்தது. என்னைப் பார்த்ததும் ‘என்னடா எழுந்துட்டே?’ என்று கேட்டார்.

‘தூக்கம் போயிடுத்து’ என்று சொன்னேன்.

‘உங்கம்மா டிக்காஷன் போட்டு வெச்சுட்டுத்தான் போயிருக்கா. இரு வந்து காப்பி போட்டுத்தரேன்’ என்றார்.

‘அம்மா எங்க?’

‘அம்மாவும் அப்பாவும் கோயிலுக்குப் போயிருக்காடா. வந்துடுவா’ என்று சொன்னார்.

‘இவ்ளோ சீக்கிரமா?’

‘பின்னே? இன்னிக்கு அவாளுக்கு கல்யாண நாள் இல்லியா?’

திருமண நாள் என்பது ஒரு கொண்டாட்டத்துக்குரிய தினம் என்பதை அன்றுதான் நான் அறிந்தேன். அம்மாவும் அப்பாவும் கோயிலில் இருந்து வந்தபோது எனக்கு மிகவும் வியப்பாகிவிட்டது. அம்மா அன்றுவரை நான் கண்டிராத அழகைப் போர்த்திக்கொண்டிருந்தாள். புதிய புடைவையும் பளிச்சென்ற புன்னகையும் கை நிறைய வளையல்களும் கழுத்தில் ஒரு புதிய தங்கச் சங்கிலியும் அணிந்திருந்தாள். சட்டென்று அதுதான் என் கவனத்தைக் கவர்ந்தது.

‘ஏதும்மா?’ என்றேன்.

அம்மாவுக்கு ஒரே வெட்கமாகிவிட்டது. என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தவித்துத் திண்டாடிப் போனாள்.

‘போனஸ் வந்ததுடா. அதுல வாங்கினது’ என்று அப்பா சொன்னார். அப்பாவுக்கு எப்போது போனஸ் வந்தது, அவர் எப்போது கடைக்குப் போனார், வாங்கி வந்ததை ஏன் யாரிடமும் அதுவரை காட்டவில்லை என்று அடுத்தடுத்து எனக்கு நிறையக் கேள்விகள் எழுந்தன. எல்லாவற்றைவிடவும் பெரிய வினா, அப்பா எங்கள் நால்வருக்கும் எதுவும் வாங்காமல் அம்மாவுக்கு மட்டும் என்று எதுவும் அதுவரை வாங்கி வந்ததில்லை. அம்மாவுக்கு ஒரு புடைவை வாங்கப் போனால்கூட எங்களுக்கு ஒரு கடலை மிட்டாய் பாக்கெட் உடன் வந்து சேரும். வெளியே எங்காவது போகும்போது அவளுக்கு ஒரு முழம் பூ வாங்கிக் கொடுத்தால், உடனே எங்களுக்கு ஆளுக்கொரு பன்னீர் சோடா வாங்கித் தருவார். புதிய ஆடைகள் என்பது பெரும்பாலும் தீபாவளிக்கு மட்டும்தான். துணிக்கடைக்குப் போனால் எங்கள் நான்கு பேருக்கும் டிராயர், சட்டைத் துணி எடுத்துவிட்டு, அதன்பிறகுதான் அம்மாவுக்குப் புடைவை என்று ஆரம்பிப்பார்.

அது எப்போதுமில்லாத வழக்கமாக எனக்குத் தோன்றியது. வினய் உறங்கி எழுந்ததும் அவனிடம் முதலில் சொன்னேன். ‘போய் அம்மா புடைவையப் பாரு. புதுசு’.

அவன் போய் பார்த்துவிட்டு வந்து வினோத்திடம் சொன்னான். பிறகு வினோத் அண்ணாவிடம் சொன்னான். ‘என்ன அதுனால?’ என்று அண்ணா கேட்டான்.

‘அப்பா அம்மாக்கு மட்டும்தான் புதுசு வாங்கியிருக்கா’.

‘கல்யாண நாள்னா அப்படித்தான்’.

‘இன்னிக்குத்தானா கல்யாணமாச்சு?’

‘அப்படி இல்லேடா வினோத். இதே மாசம், இதே தேதில கல்யாணம் ஆயிருக்கு அவாளுக்கு’.

‘பர்த் டேன்னா புதுசு வாங்குவா. இதுக்கெல்லாமா?’

‘அப்படித்தான் போலருக்கு’.

‘நமக்கு வாங்கலியே’.

‘நமக்கா கல்யாணமாச்சு?’

இருந்தாலும் எங்களுக்கு அது சமாதானமாகவில்லை. இதைப்போய் அப்பாவிடமோ, அம்மாவிடமோ கேட்கவும் தோன்றவில்லை. அன்றைக்கு சமையலில் அம்மா கூடுதலாக வடையும் கேசரியும் செய்திருந்தாள். சாப்பிடும்போதே வினோத், ‘என்னம்மா இன்னிக்கு விசேஷம்?’ என்று கேட்டான். மீண்டும் ஒருமுறை மாமா அவர்களது திருமண நாளை அறிவித்தார். எங்களுக்கு அது புதிய அனுபவமாக இருந்தது. அதற்கு முந்தைய வருடங்களிலும் அதே போலத்தான் அந்நாள் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நினைவில் அது இல்லாதிருந்தது. இதே யோசனையுடன் பள்ளிக்குக் கிளம்பிச் சென்றோம்.

மாலை நாங்கள் வீடு திரும்பியபோது வீட்டில் அப்பாவும் அம்மாவும் இல்லை. எங்கே என்று கேட்டதற்கு, ‘வந்துடுவா. நீங்க காப்பிய சாப்ட்டுட்டு விளையாடப் போகலாம்’ என்று கேசவன் மாமா சொன்னார். நாங்கள் விளையாடி முடித்துவிட்டு வீடு வந்த பின்பும் அவர்கள் வரவில்லை. அண்ணாதான் மாமாவிடம் மீண்டும் கேட்டான். ‘எங்கே போயிருக்கா?’

‘திருப்போரூருக்கு’ என்று மாமா சொன்னார்.

அண்ணாவுக்கு அது ஒரே ஆச்சரியமாகப் போய்விட்டது. அப்பாவோ அம்மாவோ முருகர் கோயிலுக்குப் போகும் வழக்கமே இருந்ததில்லை. திடீரென்று என்ன இன்று முருகர் பக்தி?

பிறகு அவர்கள் வீடு திரும்பி, சாப்பிடும்போது பேசிக்கொண்டதில்தான் விஷயம் தெரிய வந்தது. அவர்கள் கோயிலுக்குப் போகவில்லை. திருப்போரூர் தியேட்டருக்குப் படம் பார்க்கப் போயிருக்கிறார்கள்.

‘நன்னாத்தான் எடுத்திருக்கான்’ என்று அம்மா சொன்னாள்.

‘எனக்கு அவ்வளவா பிடிக்கலை’ என்று அப்பா சொன்னார். ‘ஆனா பாட்டெல்லாம் நன்னாருக்கு’.

அது நிறம் மாறாத பூக்கள். பாரதிராஜா எடுத்திருந்த திரைப்படம். கேளம்பாக்கம் ராஜலட்சுமியில் திரையிடாமல் திருப்போரூரில் வெளியிட்டிருந்தார்கள். திருவிடந்தையில் இருந்து பஸ் பிடித்துத் திருப்போரூருக்குப் போய் நிறம் மாறாத பூக்கள் பார்த்துவிட்டுத் திரும்பிய அப்பாவும் அம்மாவும், அன்றைக்கு எனக்கு மிகவும் விநோதமாகத் தென்பட்டார்கள். இரவு படுக்கப் போகும்போது நான் வினோத்திடம், ‘டேய், அம்மா சரியில்லே. ரொம்ப கெட்டுப் போயிட்டா. அப்பாவ அவ லவ் பண்றா’ என்று சொன்னேன்.

‘சீ, படுத்துண்டு தூங்கு’ என்று அவன் என்னை அதட்டினான். ஆனால் சிறிது நேரம் கழித்து அவனும் வினய்யிடம் அதையேதான் வேறு சொற்களில் தெரியப்படுத்தினான். அதை நான் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன்.

என்னையறியாமல் எனக்குச் சிரிப்பு வந்தது. மரணப் படுக்கையில் கிடக்கும் அம்மாவின் எதிரே உட்கார்ந்திருக்கும்போது இதெல்லாம் எப்படி நினைவுக்கு வருகிறது என்று வியப்பாக இருந்தது. ஒரு பெரிய சரித்திர நாவலின் முதல் ஐந்நூறு பக்கங்களை அவள் கிழித்து வைத்துக்கொண்டு மிச்சத்தைத் தைத்து எங்களுக்குப் படிக்கக் கொடுத்தாற்போலத் தோன்றியது. எப்படியானாலும் அம்மாவிடம் பேசிவிட வேண்டும்; அவளைப் பேச வைத்துவிட வேண்டும் என்று நினைத்தேன். இன்னதுதான் என்றில்லை. ஏதாவது. எது குறித்தாவது.

நான் மீண்டும் அவளை மெல்லத் தொட்டேன். அம்மா என்று கூப்பிட்டேன். அவள் கண்ணைத் திறக்கவில்லை. சிறிது தாமதித்து, ‘விமல் வந்திருக்கேம்மா’ என்று சொன்னேன். அப்போதும் அவள் கண்ணைத் திறக்கவில்லை.

‘சரி, நீ கண்ணைத் திறக்க வேண்டாம். அப்படியே பதில் சொல்லு. நாங்க மைதிலிக்குப் பொறந்தோமா, இல்லே உங்கக்காவுக்குப் பொறந்தோமா?’ என்று கேட்டேன்.

நான் கேட்டது வெளியே இருந்தவர்கள் காதில் விழுந்திருக்க வேண்டும். சட்டென்று வினய்யும் வினோத்தும் உள்ளே வந்தார்கள். என்ன என்பதுபோல என்னைப் பார்த்தார்கள். நான் அவர்களிடம் அமைதியாக இருக்கும்படி சைகை செய்துவிட்டு, ‘அதுக்காகல்லாம் நாங்க வருத்தப்படப் போறதில்லே. உனக்குக் கர்மா பண்ணாம திரும்பிப் போகவும் போறதில்லே. ஆனா இதை மட்டும் சொல்லிடு. நாலு பேரும் ஒருத்தருக்குத்தான் பொறந்தோமா, இல்லே இங்க ரெண்டு அங்க ரெண்டுன்ற மாதிரி எடுத்துண்டு வந்தியா?’

அம்மா அப்படியேதான் கிடந்தாள். அசைவே இல்லை. நான் மூக்கருகே கையைக் கொண்டு சென்று வைத்துப் பார்த்தேன். சுவாசம் இருந்தது. இடது கையில் நாடி பிடித்துப் பார்த்தேன். ஓடிக் களைத்து நிற்கப்போகிற வேகத்தில்தான் அது இயங்கிக்கொண்டிருந்தது. சில விநாடிகள் யோசித்தேன். பிறகு வினய்யிடம் திரும்பி, ‘தவறாக எண்ணாதே. உன்னிடம் கஞ்சா மிச்சம் உள்ளதா?’ என்று கேட்டேன்.

‘எதற்கு?’ என்றான்.

‘இருந்தால் சிறிது கொடு’.

அவன் சிறிது தயங்கினான். பிறகு இடுப்பு மடிப்பில் சொருகி வைத்திருந்த பொட்டலத்தை எடுத்து அதில் இருந்து ஒரு சிட்டிகை எடுத்து என் உள்ளங்கையில் வைத்தான்.

‘அந்தத் தண்ணீர் சொம்பை எடு’ என்று வினோத்திடம் சொன்னேன். அவன் தண்ணீர் சொம்பை எடுத்தான்.

‘ஒரு சொட்டு எடுத்து இதில் விடு’.

என் உள்ளங்கையில் இருந்த கஞ்சாவின் மீது அவன் இரண்டொரு சொட்டுகள் நீர் விட்டான். நான் அதை அழுத்தித் தேய்த்தேன். இப்போது கேசவன் மாமா அறைக்குள் வந்தார்.

‘என்னடா பண்றே?’ என்று கேட்டார்.

நான் பதில் சொல்லவில்லை. அந்தச் சிட்டிகை கஞ்சாவைத் துவையல் மாதிரி விரலால் நசுக்கி அரைத்து ஓர் உருண்டை ஆக்கினேன். இன்னும் சில சொட்டுகள் தண்ணீர் விடச்சொல்லி, விரலுக்கு இடும் மருதாணி பதத்துக்குக் கொண்டுவந்தேன்.

‘என்ன பண்றேன்னு கேட்டேனே?’ என்று மாமா மீண்டும் சொன்னார்.

நான் அவரிடம் அமைதியாக இருக்கும்படி சைகை காட்டிவிட்டு, அந்தத் துவையலை அம்மாவின் நாசியருகே எடுத்துச் சென்று வைத்தேன்.

வினோத்தும் மாமாவும் புரியாமல் குழம்பி நிற்க, வினய் மட்டும் புன்னகை செய்தான்.

(தொடரும்)

 

https://www.dinamani.com/junction/yathi/2018/oct/17/153-புன்னகைக்-காலம்-3021939.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

154. துடைப்பக் கட்டை

நான் குருகுல வாசத்தில் இருந்த நாள்களில் ஒரு சம்பவம் நடந்தது. யாரோ ஒரு மனிதன் - எனக்கோ எங்கள் ஆசிரமத்தில் இருந்த பிறருக்கோ அவனை யாரென்றே தெரியாது. எங்கள் ஆசிரமத்துக்கு வருகிற வழியில் அவன் சாலையோரம் விழுந்து கிடந்தான். குடித்துவிட்டு விழுந்திருக்கலாம் என்று எண்ணி நாங்கள் உள்பட அந்தப் பக்கம் போன எல்லோருமே அவனைத் திரும்பத் திரும்பக் கடந்து சென்றோம். ஒரு நாள் முழுதும் அவன் அங்கேயே கிடந்தான். மறுநாளும் அவனை அதே இடத்தில் அதே கோலத்தில் கண்டபோதுதான் சந்தேகம் எழுந்தது. குருவிடம் நான்தான் அவனைக் குறித்துச் சொன்னேன். ‘எங்கே காட்டு?’ என்று அவர் என்னுடன் கிளம்பி வந்தார். அவனது நாடி பிடித்துப் பார்த்தார். பிறகு சுவாசம் இருக்கிறதா என்று பார்த்தார். அதன்பின் நெஞ்சில் காது வைத்து ஏதோ கேட்டார்.

‘இறக்கவில்லை. நன்றாகத்தான் இருக்கிறான்’ என்று சொன்னார்.

‘ஆனால் இப்படி அசையாமல் கிடக்கிறானே குருஜி?’

‘சரி அசைய வைப்போம்’ என்றவர், அந்தக் காட்டுப் பகுதியில் மரம் வெட்டும் தொழிலாளியாகப் பணியாற்றும் பசவய்யாவை அழைத்துவரச் சொன்னார். அவன் வந்ததும் அவனிடம் இருந்து சிறிது கஞ்சாவை வாங்கி ஒரு தாளில் கொட்டிக் கொளுத்திப் புகையச் செய்தார். அந்தப் புகையை அம்மனிதனின் நாசியை நோக்கிச் செலுத்தும் விதமாகக் கையால் கோதிக் கொடுத்தார். என்னால் அதை நம்பவே முடியவில்லை. ஓரிரு நிமிடங்களில் அவனிடம் அசைவுகள் தென்பட்டன. அவன் புரண்டு படுத்தான். பிறகு எழுந்து உட்கார்ந்துவிட்டான். சில தும்மல்கள் போட்டான். எங்களுக்கு நன்றி சொல்லிவிட்டு அவன் வழியில் புறப்பட்டுச் சென்றான்.

‘இதற்கு இப்படியொரு சக்தி உண்டா?’ என்று நான் குருவிடம் கேட்டேன்.

‘கசக்கி, சாறெடுத்து நாசியில் விட்டால் இன்னும் விரைவாக வேலை செய்யும்’ என்று அவர் சொன்னார். அதன் அறிவியலுக்குள் நான் அப்போது செல்லவில்லை. ஒரு வைத்தியம் தெரிந்துகொண்ட மகிழ்ச்சி மட்டும் எனக்கு இருந்தது.

ஆனால், அம்மாவிடம் நான் அந்த வைத்தியத்தைப் பிரயோகித்தபோது நான் எதிர்பார்த்த பலன் எனக்குக் கிட்டவில்லை. அவளது நாசியில் நான் விட்ட கஞ்சா சாறு, விட்ட இடத்திலேயேதான் இருந்தது. சுவாசத்தில் நகர்ந்து வெளியேகூட வரவில்லை. அப்படி அது உருண்டு நகருமானால், அந்த மெல்லிய உறுத்தலில்கூட சிறு அசைவு உண்டாகலாம். அதுகூட நிகழாதது எனக்கு வியப்பாக இருந்தது.

‘என்ன?’ என்று கேசவன் மாமா கேட்டார்.

‘அவள் கண்விழிக்க விரும்பவில்லை’ என்று வினய் சொன்னான். எனக்கும் அதுதான் சரி என்று தோன்றியது. அதற்குமேல் அவளைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் நான் அறையை விட்டு வெளியேறிச் சென்றேன். வினய்யும் வினோத்தும் மேலும் சிறிது நேரம் அங்கே இருந்தார்கள். வினோத் மீண்டும் அவளிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தான்.

‘அம்மா, வினய் வந்திருக்கிறான். அவனுடன் பேசு’.

பதில் இல்லை.

‘உனக்குக் கடைசி ஆசை என்று ஏதாவது இருந்தால் சொல். நிறைவேற்றி வைக்கிறோம்’.

பதில் இல்லை.

‘நாங்கள் மன்னிப்புக் கேட்டால் நீ மகிழ்ச்சி அடைவாய் என்றால் அதையாவது சொல்’ என்று வினய் சொன்னான். எனக்குச் சிரிப்பு வந்தது. ‘டேய், என்னையும் சேர்த்துக்கொள்’ என்று வெளியில் இருந்து குரல் கொடுத்தேன். மாமாவுக்கு நாங்கள் பேசிய விதமும் தொனியும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்று தெரிந்தது. எதேனும் ஒருவிதத்திலாவது நாங்கள் விடைபெறும்போது அவருக்கு ஒரு சிறு கசப்பை மிச்சம் விட்டுச்செல்ல ரகசியமாக மூவருமே விரும்புகிறோம் என்று தோன்றியது. யோசித்துப் பார்த்தால் அது அவசியமும்கூட. போதையைக் காட்டிலும் மிக எளிதில் பாசம் வசப்படுத்திவிடும். உறவு அல்லது உறவின்மை பொருட்டல்ல. பாசம். தனது பல்லாயிரம் கூர்நகக் கரங்களுடன் எப்போதும் கட்டியணைத்து நொறுக்கிக் கிழிக்கக் காத்திருக்கும் அகண்ட பெருமிருகம்.

அம்மா மிகத் தொடக்கத்திலேயே இதை உணர்ந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. அவள் அப்பாவின் மீது காட்டிய பாசம்கூட எங்களுடனான நெருக்கத்துக்கு நடுவே அவள் கிழிக்க நினைத்த கோடாக இருக்கலாம். ஆனால் அந்த வயதில் அதெல்லாம் யோசித்ததில்லை. ஒரு புன்னகையைத் தனது நிரந்தரக் கையெழுத்தாக எங்கள் நினைவில் அவள் பதித்திருந்தாள். ஆனால் அண்ணாவும் வினய்யும் விட்டுச் சென்றபோது அவள் கதறிய கதறல் எனக்கு மறக்கவில்லை. அதை ஒரு நடிப்பாக என்னால் இந்தக் கணம் வரை நினைத்துப் பார்க்க முடியவில்லை. பாசம் இல்லாமல் அப்படியொரு அழுகை வராது. அப்படியொரு துக்கம் முட்டாது. வெடித்துக் கிளம்பாது. உண்மையில் இவள் யார்? என்னவாக இருந்திருக்கிறாள்? அல்லது ஏன் இவ்வாறு இருந்திருக்கிறாள்?

நான் கண்ணை மூடி அமர்ந்து அம்மாவைக் குறித்து தியானம் செய்யத் தொடங்கினேன். திருமணத்துக்கு முன்னால் அப்பாவுக்கு யாரோ ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்திருக்கிறது. அது ஏற்கெனவே நடந்து முடிந்த திருமணத் தொடர்பாகவும் இருக்கலாம். அதன் பொருட்டு அம்மாவுக்கு அவரோடு பிணக்கு உண்டாகியிருக்கலாம். அந்தப் பெண் இறந்திருக்கலாம். அவளது பிள்ளைகளை வளர்க்கச் சொல்லி, அம்மாவிடம் அப்பா மன்றாடியிருக்கலாம். அம்மா சகித்துக்கொண்டு ஏற்றிருக்கலாம். ஆனால் அவள் ஒருநாளும் சகித்துக்கொண்டு வளர்த்த மாதிரி எனக்குத் தோன்றியதில்லை. இப்போது எண்ணிப் பார்க்கும்போதுகூட அப்படியொரு பாவனையை என்றுமே அவளிடம் கண்டதில்லை என்றுதான் தோன்றுகிறது. உலகிலுள்ள அனைத்து அம்மாக்களையும் போலத்தான் அவள் எங்களை வளர்த்தாள். பாசம். பரிவு. அன்பு. அக்கறை. கவனிப்பு. கண்டிப்பு.

ஆனால் என்னவோ ஒன்று இல்லாமல் இருந்ததோ? அதைத் திறமையாக எங்கள் கவனத்தின் கரங்களில் இருந்து அவள் மறைத்து வைத்திருந்தாளோ?

‘பிரத்தியேகத்தன்மை’ என்று ஒரு குரல் கேட்டது. நான் திகைத்துக் கண் விழித்தபோது வினய் என் அருகே அமர்ந்திருந்தான்.

‘என்ன?’ என்று கேட்டேன்.

‘நீ யோசிப்பதை ஊடறுத்தேன். ஒரே காடாத் துணியில் நான்கு மீட்டர் கிழித்து அப்பா நமக்குச் சட்டை தைத்தார். அதையேதான் அம்மா தனது நடவடிக்கைகளில் பிரதிபலித்தாள். இறந்தால் அழவேண்டும். இழந்தாலும் அழ வேண்டும். அவள் அண்ணாவுக்காக, எனக்காக, வினோத்துக்காக, உனக்காக மிச்சம் வைக்காமல் பகிர்ந்து அழுதாள்’.

‘ஐயோ!’ என்றேன்.

‘ஏற்க முடியவில்லையா?’

‘கேட்க முடியவில்லை. ஆனால் அப்பாவை அவள் மன்னித்ததன் நியாயம் பிடிபட மறுக்கிறது’.

‘மன்னிக்கவே இல்லையோ என்னவோ?’

‘மாமாவைக் கூப்பிடு’ என்று சொன்னேன். வினய் எழுந்து உள்ளே சென்று மாமாவை அழைத்து வந்து என் எதிரே உட்கார வைத்தான். அவனும் அமர்ந்துகொண்டான். வினோத் அறைக்குள் இருந்து எட்டிப் பார்த்தான். என்ன நினைத்தானோ, கதவை மூடிக்கொண்டு அவன் உள்ளேயே இருந்தான். இன்னொரு முறை அம்மா அவனிடம் பேசினால் எங்களை அப்போது அழைக்கலாம் என்று நினைத்திருக்கலாம்.

‘என்னடா?’ என்று கேசவன் மாமா கேட்டார்.

‘மாமா, சிறிது மறைக்காமல் பேசலாம் என்று நினைக்கிறேன். அவசியமில்லை என்று நீங்கள் நினைத்தால் இப்போதே சொல்லிவிடலாம்’.

‘எதப் பத்தி?’

‘அப்பாவைப் பற்றி’.

‘என்ன தெரியணும் உங்களுக்கு?’

‘அப்பாவுக்கு இன்னொரு மனைவி இருந்தாளா?’

‘ஐயோ பகவானே’ என்று அவர் பதறி எழுந்துவிட்டார். ‘சன்னியாசியாடா நீ? வெளிய போடா!’ என்று கத்தினார்.

நான் அவரை அமைதிப்படுத்தினேன். ‘சரி விடுங்கள். உங்கள் அப்பாவைப் பற்றிச் சொல்லுங்கள்’.

‘அவரைப் பத்தி என்ன?’

‘அவருக்கு எத்தனை மனைவி?’

மாமா உண்மையிலேயே அதிர்ந்துவிட்டார். ‘இதோ பாருங்கோடா, நீங்க பேசறதெல்லாம் நன்னால்ல. எனக்குப் பிடிக்கலே. உங்கம்மா சாகக் கெடக்கறா. ஒண்ணு, அவ சாகறவரைக்கும் இருந்துட்டு, காரியத்த முடிச்சிட்டுப் போங்கோ. இல்லன்னா இப்ப என்னமோ ஒண்ண மூக்குல கொண்டுபோய் வெச்சேளே, அதை மொத்தமா அவ தொண்டைல அடைச்சி சாகடிச்சிட்டுப் போயிடுங்கோ. பெத்த பாவத்துக்கு அதுதான் அவளுக்கு லபிச்சதுன்னா இருந்துட்டுப் போகட்டும்’ என்று சொன்னார்.

வினோத் அவரை நெருங்கினான். அவர் கரங்களை எடுத்துத் தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு சிறிது நேரம் அவரை அன்போடு பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு, ‘பண்ணாத பாவத்துக்கெல்லாம் தண்டனை இல்லை மாமா’ என்று சொன்னான்.

அவருக்கு அது புரியவில்லை. புரியாததே நல்லது என்று நான் நினைத்தேன். சில நிமிடங்களில் வாசலில் யாரோ வந்திருப்பது தெரிந்தது.

‘யாரு?’ என்று மாமா குரல் கொடுத்தார்.

‘நாந்தான் கேசவா’ என்று சொன்னபடியே பத்மா மாமி உள்ளே வந்தாள். நாங்கள் சட்டென்று எழுந்துகொண்டோம். மாமி எங்கள் மூவரையும் பார்த்தாள். ‘எப்படி இருக்கா?’ என்று கேட்டாள்.

‘இருக்கா. வாங்கோ’ என்று சொல்லிவிட்டு, மாமா அவளை அம்மா இருக்கும் அறைக்குள் அழைத்துச் சென்றார். வினோத் சட்டென்று வினய்யை அழைத்துக்கொண்டு வாசலுக்குப் போனான்.

‘என்ன?’ என்று வினய் கேட்டான்.

‘எனக்காக நீ ஒன்று செய்ய வேண்டும்’.

‘கொன்றுவிடச் சொல்கிறாயா?’

‘அது பிறகு. ரிஷியாகிவிட்டாள் என்று நீ நினைக்கும் சித்ராவிடம் உன்னால் மீண்டும் ஒருமுறை சென்று பேச முடியுமா?’

‘எதற்கு? அவளுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை’.

‘ஒருவேளை தெரிந்திருந்தால்?’

‘என்னிடம் சொல்லியிருப்பாள்’.

‘நான் அப்படி நினைக்கவில்லை. அவள் அம்மாவிடம் பேசியிருக்கிறாள். என் மரணம் உன்னால் சம்பவிக்கும் என்று சொல்லியிருக்கிறாள். இத்தனை தூரம் நம்மை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தவளுக்கு நிச்சயமாக இதெல்லாமும் தெரிந்திருக்கும்’.

‘எதெல்லாம்?’

‘நாம் யாருக்குப் பிறந்தோம் என்பது. மாமா எங்கிருந்து வந்தார் என்பது’.

‘நமக்கு அது அவசியமா?’ என்று நான் கேட்டேன்.

அவன் ஒரு கணம் அமைதியாக யோசித்தான். ‘இல்லைதான். ஆனால் புத்தியில் இது நிறைந்திருக்கும்போது, என்னால் கிருஷ்ணனை நினைக்க முடியவில்லை’.

‘ஆக, கிருஷ்ணனைவிடக் குடும்பம் பெரிதாகிவிடுகிறது’.

‘அப்படி இல்லை. கிருஷ்ணனைவிடக் குப்பை அடர்த்தியானது’.

‘பெருக்கித் தள்ளு’ என்று வினய் சொன்னான்.

‘துடைப்பக்கட்டை இன்னும் வந்து சேரவில்லையே’ என்று வினோத் சொன்னான். நான் சிரித்தேன்.

‘அது ஒருவேளை நாளை வரலாம்’ என்று சொன்னேன்.

(தொடரும்)

https://www.dinamani.com/junction/yathi/2018/oct/18/154-துடைப்பக்-கட்டை-3022616.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

155. கோழைப் பேய்

கிருஷ்ணனைக் குறித்துத் தவம் செய்யப் போனபோதுதான் வினய்க்கு சித்ரா அகப்பட்டாள் என்று நான் சொன்னபோது வினோத் உண்மையில் மிகவும் வருத்தப்பட்டான். ‘நீ அதை நினைத்து வருத்தப்படாதே. மீண்டும் ஒருமுறை முயற்சி செய். அவன் நிச்சயமாக உனக்கு நல்லது செய்வான்’ என்று சொன்னான். வினய் சிரித்தான்.

‘அவன் என்ன நல்லது செய்வது? அதை சித்ராவே செய்வதாகச் சொல்கிறாள். பதிலுக்கு உன்னைக் கொன்றுவிட வேண்டும். இது ஒன்றுதான் நிபந்தனை’.

அவன் சிரித்துக்கொண்டே சொன்னாலும், வினோத்தால் இயல்பாக இருக்க முடியவில்லை. அவன் நகர்ந்து சென்று கொல்லைப்புறத்தில் அதே துணிக்கல் அருகே அமர்ந்துகொண்டான்.

‘ஏன் அப்படி நேரடியாகச் சொன்னாய்?’ என்று நான் வினய்யிடம் கேட்டேன்.

‘அவனுக்கேதான் அம்மா சொன்னதாகச் சொன்னாயே?’

‘அது வேறு. நீ சொல்லும்போது அவனுக்குச் சங்கடமாக இருக்காதா?’

‘அதனால் என்ன? நான் நடக்காத ஒன்றைச் சொல்லவில்லையே?’

‘ஆனால் நடக்கக்கூடாத ஒன்றல்லவா?’

வினய் என் தோளைப் பற்றிக்கொண்டு சிறிது நேரம் என்னையே உற்றுப் பார்த்தான். பிறகு தனது தாடிக்குள் விரல்களை விட்டு நீவிவிட்டுக்கொண்டான். அடர்ந்து சடை படிந்து இடுப்புவரை தொங்கிக்கொண்டிருந்த தலைமுடியை ஒருமுறை படீரென அடித்து சிக்கெடுப்பது போலச் செய்துகொண்டு, ‘விமல், என் ஓட்டம் ஒரு கொலையில்தான் தொடங்கியது. அதைத் தெரிந்துகொண்டதனால்தான் இன்னொரு கொலையோடு அவ்வோட்டத்தை முடித்துவைக்கத் தன்னால் முடியும் என்று அவள் சொல்கிறாள். ஆனால் ஒன்றைப் புரிந்துகொள். வாழ்வு தராத எந்த ஒரு லாபத்தையும் மரணம் தராது. அது இயற்கையானதாக இருந்தாலும் சரி, வலிந்து திணிக்கப்பட்டதானாலும் சரி’.

‘மரணம் விடுதலையைக்கூடத் தராது என்று எண்ணுகிறாயா?’

‘நிச்சயமாக. அப்படியொரு விடுதலை வாய்த்திருந்தால் அந்தப் பைத்தியக்காரி ஏன் இன்னும் பேயாக அலைந்துகொண்டிருக்க வேண்டும்? அதுவும் தன் எதிரி என்று நினைப்பவனை அடித்துக் கொல்லக்கூட வக்கற்ற கோழைப் பேய்’.

‘அதுதான் எனக்கும் புரியவில்லை. பேய்கள் கொலை செய்யாதா?’

அவன் சிரித்தான். ஆனால் பதில் சொல்லவில்லை. பத்மா மாமி அம்மாவைப் பார்த்துவிட்டு அறையை விட்டு வெளியே வந்தாள். கேசவன் மாமா அவளை வாசல்வரை கொண்டு விட்டுவிட்டுத் திரும்ப உள்ளே வந்தார். ‘இன்னொரு காப்பி சாப்பிடறேளாடா?’ என்று கேட்டார்.

‘வேண்டாம் மாமா. வெளியூர்ல யாருக்காவது சொல்லணும்னா சொல்லி அனுப்பிடுங்கோ. நாளைக்கு ராத்திரி அம்மா போயிடுவா’ என்று வினய் சொன்னான். மாமா மிரட்சியுடன் அவனைப் பார்த்தார்.

‘என்ன?’

‘செய்தியாட்டமா சொல்றியேடா!’

‘உள்ளதுதானே?’

‘அவ்ளோ தெரியுமா உனக்கு? சாவு தெரிஞ்சுட்டா மனுஷனுக்கும் கடவுளுக்கும் வித்தியாசம் இல்லேம்பாளேடா!’

‘அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை மாமா. பதட்டப்படாதிங்கோ. இது எனக்குத் தெரிஞ்சதில்லை. அண்ணா சொன்னதா அவந்தான் சொன்னான்’ என்று கொல்லைப்புறம் கைகாட்டினான். வினோத் எழுந்து உள்ளே வந்தான். மாமா மீண்டும் ஒருமுறை அவனிடம் அதைக் கேட்டார். உண்மையிலேயே அவள் நாளை மாலை இறந்துவிடுவாளா?

‘அப்படித்தான் அண்ணா சொன்னான். ஆனா சாயங்காலமில்லே. ராத்திரி ஆயிடும்’.

‘இதைப்போய் நான் யார்ட்ட சொல்லுவேன்?’ என்று மாமா கவலைப்படத் தொடங்கினார்.

‘எதுக்கு சொல்லணும்? நடந்தப்பறம் சொல்லிக்கலாம்’ என்று நான் சொன்னேன். ஆனால், வினய் ஏன் வேண்டியவர்களுக்கு அறிவிக்கலாம் என்று சொன்னான் என்பது எனக்குப் புரிந்தது. அப்பாவின் தங்கை ஒருத்தி இருந்தாள். அவள் இப்போது எங்கே இருக்கிறாள், எப்படி இருக்கிறாள் என்று எங்களுக்குத் தெரியாது. உறவு என்று சொல்லிக்கொள்ள அவள் மட்டும்தான் தனக்கு மிச்சம் என்று அப்பா சிறு வயதுகளில் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்பாவைப் பற்றிய தகவல் ஏதேனும் ஒருவேளை அவளுக்குத் தெரிந்திருக்கலாம் என்று அவனுக்குத் தோன்றியிருக்கும்.

ஆனால் மாமா கோயிலுக்குச் சொல்லிவிட்டு அக்கம்பக்கத்து வீட்டாருக்கு மட்டும் தெரியப்படுத்தினால் போதும் என்றுதான் சொன்னார். ‘பழைய மனுஷா யாரும் இப்ப மிச்சமில்லே. நான் ஒருத்தன்தான் பாக்கி’ என்றார்.

‘உங்கக்கா பையன் யாரோ அமெரிக்காவிலே இருக்கான்னு சொன்னேளே’.

‘இருக்கான். ஆனா எங்க இருக்கான்னு யாருக்குத் தெரியும்? அவனுக்கு உங்க எல்லாரவிட வயசு ஜாஸ்தி. அவனும் இருக்கானோ இல்லியோ?’

‘அவர் பெயர் என்ன?’ என்று வினய் கேட்டான்.

மாமா ஒரு கணம் யோசித்துவிட்டு, ‘சாரங்கபாணி’ என்று சொன்னார்.

‘எல்லாம் சரி மாமா. எங்க நாலு பேருக்கு மட்டும் அம்மா ஏன் இப்படி ஒரே மாதிரியா பேர் வெச்சா?’ என்று வினோத் கேட்டான்.

‘அதுல ஒண்ணுமே நம்மளவா பேர் இல்லே. அதை கவனிச்சியா?’

நம்மளவாளா! எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

‘ஏண்டா சிரிக்கறே?’

‘ஒண்ணுமில்லே. சொல்லுங்கோ’.

‘ஜாதி இல்லேம்பே. நான் எல்லாத்தையும் அறுத்துட்டேன்; பிராமணனே இல்லேம்பே. அதானே?’

‘அவனை விடுங்கோ. அவன் மனுஷனே இல்லே. நீங்க சொல்லுங்கோ’ என்று வினய் சொன்னான்.

‘எது இல்லேன்னு நீ சொன்னாலும் உம்பேச்சு அப்படியேதான் இருக்கு பார்’. ஒரு வெற்றியடைந்த விஞ்ஞானியின் மகிழ்ச்சியுடன் மாமா குதூகலித்தார். நாங்கள் மூவருமே புன்னகை செய்தோம். எழுபத்தொன்பது வயதில் குழந்தையாக இருப்பது ஒரு கொடுப்பினை. மாமாவுக்கு அது வாய்த்திருக்கிறது. அதை ஏன் கெடுக்க வேண்டும்? ஆனால் மாமா, நான் மொழியின் குழந்தை. என்னால் எல்லா மொழிகளிலும் பேச முடியும். தமிழிலேயே ஒன்பது விதமான உச்சரிப்புகளும் பிரயோகங்களும் எனக்குப் பழக்கம்.

அம்மா அந்நாள்களில் நடிகர் விஜயகுமாரின் ரசிகை என்று மாமா சொன்னார். இதனை நாங்கள் ஏற்கெனவே அறிவோம். அண்ணாவுக்கு விஜய் என்று பெயர் வைத்ததால்தான் அடுத்தடுத்துப் பிறந்தவர்களுக்கு அதே முதலெழுத்தில் தொடங்கும் பெயர்களாகத் தேடி வைத்ததாக அம்மா அவரிடம் சொல்லியிருக்கிறாள்.

‘அதெப்படி மாமா முடியும்? பெரியவா யாரும் ஒத்துண்டிருக்க மாட்டாளே? முக்கியமா அப்பாவே ஒத்துண்டிருக்க மாட்டாரே’.

மாமா சில விநாடிகள் அமைதியாக இருந்தார். அவரிடம் இருந்து ஒரு பெருமூச்சு எழுந்தது. கண்ணைத் துடைத்துக்கொண்டார். பிறகு தன்னருகே இருந்த வினோத்தின் கரங்களைப் பிடித்துக்கொண்டு, ‘ஒரு பிரசவத்துக்குக்கூட அவ எங்காத்துக்கு வரவேயில்லே’ என்று சொன்னார்.

‘குழந்தை பிறக்கும். பொறந்ததும் ஒரு கடுதாசி வரும். இன்ன பேர் வெச்சிருக்கோம்னு அதுல எழுதியிருப்பா. அவ்ளோதான்’.

‘நீங்க போய்ப் பார்த்ததில்லியா?’

‘இருக்கற இடம் தெரிஞ்சாத்தானே? கடுதாசி எங்கெங்கேருந்தோ வரும். விஜய் பொறந்தப்போ கர்நூல்லேருந்து கடுதாசி வந்தது. வினய் பொறந்தத பம்பாய்லேருந்து எழுதியிருந்தா. நீ பொறந்த சேதிய ஆறு மாசம் கழிச்சித்தான் சொன்னா. இவனும் பொறந்திருக்கான்னு அவ இந்த ஊருக்கு வந்தபோதுதான் தெரியும்’.

எங்களால் அதை நம்பவே முடியவில்லை. அம்மா மிகவும் திட்டமிட்டுச் சில வேலைகள் செய்திருப்பதாகத் தோன்றியது. அத்தனை நுண்ணுணர்வும் பாதுகாப்புணர்வும் அவளுக்கு இருந்திருக்கிறதா என்று வியப்பாக இருந்தது.

‘சொன்னா சிரிப்பேள். அந்த காலத்துல உங்கப்பா எதோ கள்ளக்கடத்தல் பிசினஸ் பண்றார்னு நான் நினைச்சுப்பேன். என்னன்னு சொல்ல முடியாம உங்கம்மா தவிச்சிண்டிருக்காளோன்னு நினைப்பேன். ஐயோ தப்பான ஒருத்தர்ட்ட மாட்டிண்டுட்டாளேன்னு எவ்ளோ நாள் அழுதிருக்கேன் தெரியுமா?’

வினய் அவரை அப்படியே கட்டியணைத்துத் தட்டிக் கொடுத்தான்.

‘ஆனா அதெல்லாம் இல்லே. உங்கப்பா உத்தமர். அவர் ஆண்டவன் ஆசிரமத்துல உத்தியோகம் பார்த்திருக்கார். பகவான் அனுக்கிரகத்தவிட ஆசார்ய அனுக்ரஹம் பெரிசு. அது அவருக்கு நிறையவே கிடைச்சிருக்கு’.

‘ஆனா இங்க வந்தப்பறம் நீங்க கேட்டிருக்கலாமே மாமா? ஏன் அப்படி ஊர் ஊரா போய் பிள்ளை பெத்துக்கணும்?’

‘கேக்காம இருப்பேனா?’

‘என்ன சொன்னா?’

‘உங்கப்பாக்கு அப்ப நிரந்தர உத்தியோகம் இல்லேடா. என்னிக்கு அது இருந்திருக்கு? எப்பவும் எதோ ஒரு இடத்துல ஒட்டிண்டுதான் காலத்த ஓட்டியிருக்கார். தேசம் பூரா எங்கெங்கயோ அலைஞ்சி, என்னென்னமோ பண்ணியிருக்கார். கொஞ்சநாள் கயாவுல சிராத்தம் பண்ணி வெக்கற பிராமணனாக்கூட இருந்திருக்கார். தெரியுமா உங்களுக்கு?’ என்று மாமா கேட்டார்.

எனக்கு அம்மாவின் கற்பனை வளம் பற்றிய பிரமிப்பு அதிகரித்துக்கொண்டே போனது. தனது மானசீகத்தில் அவள் பிரம்மாண்டமானதொரு கோட்டைச் சுவரை எழுப்பியிருக்கிறாள். வாழ்நாள் முழுதும் அதன் கட்டுமானப் பணியை அவளே நிகழ்த்தியிருக்கிறாள். அப்பா ஒரு உத்தமர். அப்பாவுக்கு உத்தியோகம் சரியாக அமையவில்லை. அப்பா அஹோபிலத்தில் இருந்திருக்கிறார். அப்பா பம்பாயில் இருந்திருக்கிறார். அப்பா ஒரு சவுண்டி பிராமணனாக இருந்திருக்கிறார். கர்நூலில் கணக்குப்பிள்ளை வேலை பார்த்திருக்கிறார். எத்தனை எத்தனை கதைகள்! வாழ்ந்த காலம் முழுவதும் எது ஒன்றைக் குறித்தும் ஒரு சொல்லைக்கூட அப்பா பேசியதில்லை; வெளிப்படுத்தியதில்லை. எங்கள் நால்வருக்கு முன்னதாக ஒரு பெரும் பொய்யைப் பிள்ளையாகப் பெற்று சீராட்டி வளர்த்திருக்கிறார்கள்! எத்தனை பேரால் இது முடியும்? யாருக்கு சாத்தியம்? அந்தப் பொய்க்கு அவசியமற்றுப்போன காலத்தில் எங்களை அனுப்பிவிட்டு அழுது தீர்த்து ஓய்ந்து உட்கார்ந்தாற் போலவே, அதையும் விட்டொழித்துவிட்டுத் திருவிடந்தைக்கு வந்து தங்கிவிட்டார்கள். பெரும் சாதனைதான். சந்தேகமில்லை.

‘அப்படியாவது அவரோடு அவள் வாழ நினைத்ததன் காரணம்தான் விளங்கவேயில்லை’ என்று வினோத் சொன்னான்.

அன்போ காதலோ அவற்றை நிகர்த்த வேறெதுவுமோ இருந்திருக்க வாய்ப்பில்லை என்று நான் நினைத்தேன்.

சட்டென்று வினய் சொன்னான், ‘பழி வாங்க நினைத்திருக்கலாம் அல்லவா? இவனைக் கொன்று பழி தீர்க்க இன்றுவரை பேயாகத் திரியும் சித்ராவைப் போல, அப்பாவை அவள் வாழ்ந்து பழி தீர்த்திருக்கலாம் அல்லவா?’

நாங்கள் பேச்சற்றுப் போனோம்.

மீண்டும் ஒருமுறை அம்மாவின் அறைக்கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றோம். இப்போது அவள் கண்ணைத் திறந்திருந்தாள். சிரித்தாள்.

(தொடரும்)

 

 

https://www.dinamani.com/junction/yathi/2018/oct/19/155-கோழைப்-பேய்-3022955.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

156. கட்டவிழ்ப்பு

வாசலில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. எட்டிப் பார்த்த கேசவன் மாமா பதற்றமானார். ‘சனியனே, உள்ளயே வந்துடுத்து பாரேன்’ என்று பாய்ந்து அதைத் துரத்த ஓடினார். வாசல் படி ஏறி தாழ்வாரத்துக்கு வந்துவிட்டிருந்த நாய், தொடர்ந்து குரைத்துக்கொண்டிருந்ததே தவிர, மாமாவின் மிரட்டலுக்கு மசியவில்லை. ‘ஏய், போ.. போ...’ என்று மாமா வெறுங்கையை ஓங்கி அதனிடம் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். அது மிரளவில்லை. போகவும் இல்லை. சற்று இடைவெளி விட்டுவிட்டு மீண்டும் குரைத்தது.

‘டேய் யாராவது இங்க வாங்கடா. இதைத் துரத்துங்கோ’ என்று மாமா அங்கிருந்து அழைப்பு விடுத்தார். வினோத் எழுந்து வெளியே சென்றான். அவனைக் கண்டதும் அது குரைப்பதை நிறுத்தியது. ஆனால் வெளியேறவில்லை. மாமா தன் முயற்சியை விட்டுவிடாமல் குனிந்து கல்லை எடுப்பதுபோல பாவனை செய்து பார்த்தார். அது வினோத்தின் காலருகே வந்து நின்றுகொண்டது. மீண்டும் குரைத்தது.

‘என்ன பிரச்னை?’ என்று வினய் கேட்டான்.

‘நாய் உள்ளே வந்துவிட்டது போலிருக்கிறது. மாமா தவிக்கிறார்’.

இப்போது அவன் எழுந்து வாசலுக்குப் போக, நானும் அவன் பின்னால் போனேன். எங்கள் மூவரையும் கண்டதும் நாய் குரைப்பதை நிறுத்திவிட்டு அங்கேயே உட்கார்ந்துகொண்டது.

‘ஒரு கட்டை எடுத்துண்டு வாங்கோடா’ என்று மாமா சொன்னார். நான் அந்நாயை உற்றுப் பார்த்தேன். ஒரு சிறு சந்தேகம் இருந்தது. அது முதல் நாள் நான் கோவளம் தர்கா அருகே கண்ட நாய் இல்லை. வேறொரு நாய்தான். ஆனால் பெண் நாய். அதன் வயிறெங்கும் குஷ்டம் வந்தாற்போல வெள்ளைத் திட்டுகள் இருந்தன. கால்களிலும் பின்புறமும் சேறு அப்பியிருந்தது. எங்கே புரண்டுவிட்டு வந்ததோ. நான் பின்புறம் சென்று ஒரு வாளியில் தண்ணீர் எடுத்து வந்தேன்.

‘என்ன பண்ணப் போறே?’ என்று மாமா கேட்டார். நான் பதில் பேசாமல் வாளியைக் கீழே வைத்துவிட்டு அமர்ந்தேன். அதனிடம் வா என்று சொன்னேன். வினோத் அதைத் தொட்டு என் பக்கமாக நகர்த்தினான்.

‘கருமம் கருமம். இதை வெளிய கொண்டு போய்க் குளிப்பாட்டேன்?’ என்று மாமா மீண்டும் அலறினார். அவரால் அதற்குமேல் அங்கே நிற்க முடியவில்லை. ‘என்னமோ பண்ணித் தொலை’ என்று சொல்லிவிட்டு உள்ளே போனார்.

நான் சேறு படிந்த அந்த நாயின் கால்களையும் பின்புறத்தையும் கையால் நீர் அள்ளிக் கொட்டிக் கழுவினேன். மீதமிருந்த தண்ணீரை அதன் முதுகிலேயே கொட்டினேன். வினய் சட்டென்று தன் இடுப்பில் கட்டியிருந்த காவித் துண்டை உருவிக் கொடுத்தான். அதனைக் கொண்டு நான் துடைத்தேன். வினோத் உள்ளே சென்று ஒரு பெரிய கோணிச் சாக்கை எடுத்து வந்தான். ஈரமாகிவிட்டிருந்த தரையில் அதைப் போட்டுத் துடைத்தான். பிறகு அந்தச் சாக்குப் பையையே மடித்து ஒரு ஓரமாகப் போட்டான். நாய் அதன் மீது சென்று அமர்ந்துகொண்டது.

வினய் அதன் அருகே சென்று சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான். உடனே வினோத், ‘யார்?’ என்று கேட்டான்.

‘சொரிமுத்து என்று நினைக்கிறேன்’ என்று நான் சொன்னேன்.

‘நினைக்காதே. நாந்தான்’ என்று அவன் சொன்னான்.

‘அன்று வேறு வாகனத்தில் வந்தீர்கள். அதனால் சிறு குழப்பம்’.

‘வண்டியும் முக்கியமில்லே, வர்றவனும் முக்கியமில்லே. வந்த காரணம்தான் முக்கியம்’ என்று சொன்னான்.

‘அண்ணா இன்னும் வரவில்லை’ என்று சொன்னேன்.

‘தெரிஞ்சிது’ என்று சொல்லிவிட்டு வினய்யை உற்றுப் பார்த்தான். வினய்க்கு அது சங்கடமாக இருந்திருக்க வேண்டும். அமைதியாக நின்றிருந்தான். என்ன பேசுவது? அல்லது எதற்குப் பேச வேண்டும்? எதுவும் அவன் அறியாததாக இருக்க முடியாது. ஒருவேளை அறியாமல் இருந்திருந்தால் அப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது. எனக்கும் சொரிமுத்துவுக்குமான ஓரிரு நாள் உறவை வினய் அவனோடு வாழ்ந்த வாழ்வோடு ஒப்பிடவே முடியாது. அவன் சொரிமுத்துவை நிறைய அறிவான். ஒரு விதத்தில் சொரிமுத்து அவனது முதல் குரு. கடைசிக் குருவும் அவனேதான். வகுப்புக்கு வந்துவிட்டுப் பாடமெடுக்காமல் திரும்பிவிட்ட ஆசிரியர்.

நான் இவ்வாறு நினைத்துக்கொண்டிருந்தபோது நாய் என்னைத் திரும்பிப் பார்த்தது. ‘பிரம்ம லிபி’ என்று சொரிமுத்து சொன்னான். தன் முன்னங்காலால் தனது சிறிய நெற்றியில் கோடிழுத்துக் காட்டியது.

‘ஆனால் எனக்கு யாரும் அப்படியொரு லிபியை எழுதியதாகத் தெரியவில்லை ஐயா’ என்று வினய் சொன்னான்.

‘எழுதாமலா இந்த அலைச்சல் அலைந்தாய்?’

‘பயனற்ற அலைச்சல். இலக்கற்ற அலைச்சல்’.

‘அது உன் எண்ணம். ஒவ்வொரு நதிக்கும் அதன் பாதை வகுக்கப்படுகிறது’.

‘சாக்கடைக்குமா?’

‘நகரும் எதுவும் நதியே. துர்நாற்றம் நீரின் பிழையல்ல’.

வினய் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பிறகு என்ன நினைத்தானோ, சட்டென்று வினோத்தை இழுத்து முன்னால் நிறுத்தி வணங்கச் சொன்னான். வினோத் உடனே சொரிமுத்துவின் எதிரே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி எழுந்தான். வினய் என்னிடம் ஏன் அப்படிச் சொல்லவில்லை என்று யோசித்தேன். சிரிப்பு வந்துவிட்டது. நாய் என்னை ஒருதரம் நிமிர்ந்து பார்த்தது. ஆனால் சொரிமுத்து ஒன்றும் சொல்லவில்லை. சில விநாடிகள் யாரும் பேசாத அமைதி தாழ்வாரத்தை நிறைத்துத் ததும்பிக்கொண்டிருந்தது. கேசவன் மாமா மீண்டும் வெளியே வந்துவிட்டால் சிக்கல் என்று எனக்குத் தோன்றியது. அதை வினய்யிடம் சொன்னபோது, ‘ஒன்றும் பிரச்னை இல்லை. அவர் வரும்போது இவர் பேசமாட்டார்’ என்று சொன்னான்.

‘நீ சித்ராவிடம் என்ன சொல்லிவிட்டு வந்தாய்?’ என்று சொரிமுத்து வினய்யிடம் கேட்டான். திடீரென்று இந்தக் கேள்வி வருமென்று வினய் எதிர்பார்க்கவில்லை போலத் தெரிந்தது. அவன் சிறிது தடுமாறினான்.

‘என்ன சொல்லியிருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?’ என்று அவனைப் பார்த்துக் கேட்டான்.

‘நான் கேட்டதற்குப் பதில் சொல்’.

‘குறிப்பாக நான் ஒன்றும் சொல்லவில்லை. அவள் வினோத்தைக் கொலை செய்யச் சொல்லிக் கேட்டாள். அதை நான் அவளுக்காகச் செய்து தந்தால் நான் விரும்பியதை அடைய முடியும் என்று சொன்னாள்’.

‘சரி’.

‘காமாக்யா தேவி காட்டாத கருணையை ஒரு பேய் காட்டியது என்ற அளவில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் நான் என் விருப்பங்களைத் துறந்து நெடுநாள் ஆகிறது’ என்று வினய் சொன்னான். நான் உடனே வினோத்தைப் பார்த்தேன்.

‘என் துறவு ஒரு பிழையில் தொடங்கியதும் நீங்கள் சொன்ன பிரம்ம லிபியால்தானா?’ என்று அவன் சொரிமுத்துவிடம் கேட்டான்.

‘உள்ளே போய் மாமாவைக் கேள். துறவே ஒரு பிழை என்று சொல்வார்’ என்று நான் சொன்னேன்.

‘ஆனால் உன் அம்மா அப்படிச் சொல்லமாட்டாள்’ என்று சொரிமுத்து சொன்னான். அம்மா எதைத்தான் சொன்னாள்? அவள் எங்களைக் கண்டு கண்விழித்தபோது ஏதாவது பேசுவாள் என்று மிகவும் எதிர்பார்த்தேன். வினோத்திடம் அவ்வளவு நீளக் கதை சொன்னவளுக்கு, மூன்று பேர் ஒன்றாக இருக்கும்போது பேசுவதற்கு ஒரு சொல்கூட இல்லாமல் போய்விட்டது. திரும்பத் திரும்ப அவளைப் பேசவைக்க நாங்கள் முயற்சி செய்து பார்த்தோம். தனது சுய கட்டுப்பாட்டை நகர்த்தி வைத்துவிட்டு வினோத் ஒரு படி இறங்கிச் சென்று, ‘அண்ணாவும் வினய்யும் மட்டும்தான் அந்த மைதிலிக்குப் பிறந்தார்களா? நாங்கள் இருவரும் உனக்குப் பிறந்தவர்களா?’ என்றுகூடக் கேட்டான். ‘அல்லது இவர்கள் இருவரையும் வேறு இடத்தில் இருந்து பறித்து வந்தாயா?’ என்று வினய் கேட்டான். அவள் வாய் திறக்கவேயில்லை. ஆனால் அந்தப் புன்னகை மாறவும் இல்லை. வெறுமனே இருந்தாள். வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தாள். அவ்வளவுதான்.

‘பேச வேண்டாம் என்று முடிவு செய்திருந்தால் பாதிக் கதையை நீ வினோத்துக்குச் சொல்லியிருக்க வேண்டாம்’ என்று நான் சொன்னேன். அதற்கும் பதில் இல்லை. எனக்குப் பொறுமை போய்விட்டது. ‘சரி, நாளை இரவு வரை இப்படியே இரு. பிறகு செத்துப் போகும்போது கூப்பிடு’ என்று சொல்லிவிட்டு, அறையை விட்டு வெளியே வந்துவிட்டேன்.

‘ஏன் கோபித்துக்கொள்கிறாய்?’ என்று பின்னாலேயே வந்து வினய் கேட்டான்.

‘எனக்கென்ன கோபம்? அவள் பேச முடியாமல் இல்லை. பேச ஒன்றுமில்லாமலும் இல்லை. பேச வேண்டாம் என்று எண்ணியிருந்தால் இவனிடம் உளறியிருக்க வேண்டாம்’ என்று சொன்னேன்.

சொரிமுத்துவிடம் இதனைச் சொல்லி வினய் ஆதங்கப்பட்டான். நாய் அதற்கு ஒன்றும் சொல்லவில்லை. ‘நீங்கள் ஒரு உதவி செய்ய முடியுமா?’ என்று நான் கேட்டேன்.

‘என்ன?’ என்று அவன் நிமிர்ந்தான்.

‘ஒரு நிமிடம் இருங்கள்’ என்று சொல்லிவிட்டு நான் வீட்டுக்குள் போனேன். பெருமாள் படத்துக்குப் பின்னால் இருந்த அந்த ஓலைச் சுவடியை எடுத்துக்கொண்டு திரும்பியபோது மாமா பார்க்கிறாரா என்று கவனித்தேன். நல்லவேளை, அவர் அம்மாவின் அறைக்குள் இருந்தார். நான் உள்ளே வந்ததையோ, சுவடியை எடுத்துக்கொண்டு போனதையோ பார்க்கவில்லை. அந்த வரை நல்லது என்று எண்ணிக்கொண்டு வேகமாக வெளியே வந்தேன். சொரிமுத்துவின் முன்னால் அந்தச் சுவடியை வைத்தேன்.

அந்த நாய் அந்தச் சுவடியை ஒருமுறை முகர்ந்து பார்த்தது. பிறகு பின்னங்காலை முன்னால் கொண்டுவந்து அதை நகர்த்தியது.

‘இதில் என்ன எழுதியிருக்கிறது?’ என்று வினய் கேட்டான்.

‘அவன் என்ன சொல்லிவிட்டுப் போனானோ அதுதான்’ என்று சொரிமுத்து சொன்னான்.

‘அதுதான் என்ன?’

‘உங்கள் வம்சத்தின் சரித்திரம்’.

‘நாலு வரி சரித்திரமா?’

‘ஆம். இதை விரித்தால் நான்கு நாள் நிறுத்தாமல் விளக்கம் சொல்லலாம்’.

‘எங்கே சொல்லுங்களேன்?’

‘எதற்கு?’

‘சும்மா தெரிந்துகொள்ளத்தான்’.

‘தெரிந்து என்ன செய்யப் போகிறாய்?’

‘ஒன்றுமில்லை’.

‘அதற்குத் தெரியாமலும் இருக்கலாமே?’

‘இதென்ன விளையாட்டு’ என்று வினோத் கேட்டான்.

‘ஒரு விளையாட்டுமில்லை. எனக்கு அதிகாரமுள்ளவற்றை என்னால் செய்ய முடியும். இல்லாததைப் பற்றி நான் சொல்ல ஒன்றுமில்லை’.

‘அப்படியானால் யார் இதைப் படித்துச் சொல்ல முடியும்?’

‘எதற்கு என்று கேட்டேன்’.

அதற்குமேல் அந்த நாயோடு வாதம் புரிவது வீண் என்று தோன்றிவிட்டது. நான் சுவடியை எடுத்துக்கொண்டேன். சட்டென்று வினய்தான் கேட்டான், ‘சரி, நீங்கள் வந்த காரணம்?’

நாய் இப்போது எழுந்து நின்றது. ‘இதைத்தான் நீ முதலில் கேட்டிருக்க வேண்டும்’ என்று சொரிமுத்து சொன்னான்.

‘தவறுதான். இப்போது சொல்லுங்கள்’.

‘இரு மரணங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்று கொலையாகிவிடக் கூடாது என்று சொல்லத்தான் வந்தேன். அதற்கு அவசியமில்லாமல் போய்விட்டது’ என்று சொரிமுத்து சொன்னான்.

வினய் சட்டென்று சொரிமுத்துவைத் தன் கைகளில் ஏந்தித் தூக்கினான். முகத்துக்கு நேரே வைத்துக்கொண்டு உற்றுப் பார்த்தான். அவன் கண்கள் கலங்கியிருந்தன. உடல் லேசாக நடுங்கிக்கொண்டிருந்தது. ‘என்ன?’ என்று நாய் கேட்டது.

‘எனக்கு உறவில்லை. பாசம் இல்லை. பந்தங்கள் கிடையாது. கடமை என்று ஒன்றுமில்லை. இலக்கு என்று நான் நினைத்துக்கொண்டிருந்ததும் இப்போது இல்லை. பிறப்பைக் குறித்தோ மரணத்தைக் குறித்தோ நான் சிந்திப்பதுமில்லை. இரண்டும் ஒன்றுதான். வலி தரக்கூடியது. எனக்கு இன்றுவரை வேறாகத் தெரிவதெல்லாம் ஒன்றுதான். என்றோ நீங்கள் என்னிடம் கொடுத்தனுப்பிய அந்த எள்ளுருண்டை. அதை மீட்க முடிந்துவிட்டால் எனக்குப் போதும்’ என்று சொன்னான்.

சொரிமுத்து இரு விநாடிகள் அவனை உற்றுப் பார்த்தான். பிறகு சட்டென்று துள்ளிக் குதித்துக் கீழே இறங்கியது. ‘உன் இடது கைக்கட்டை விரலில் இருந்து நீ இறக்கிவிட்ட இடாகினி வேறு யாருமல்ல. சித்ராவேதான்’ என்று சொல்லிவிட்டு வெளியே ஓடிப்போனான்.

(தொடரும்)

 

 

https://www.dinamani.com/junction/yathi/2018/oct/22/156-கட்டவிழ்ப்பு-3024498.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

157. வடக்கிருத்தல்

வினோத் நெடுநேரம் வாசல் படியில் அமர்ந்திருந்தான். சொரிமுத்து இறங்கிச் சென்ற வழியிலேயே அவனது பார்வை நிலைத்திருந்தது. வெயில் இறங்க ஆரம்பித்து வீதியில் நடமாட்டம் ஏற்பட்டிருந்தது. அக்கம்பக்கத்து வீட்டார்கள் காரணமே இல்லாமல் வெளியே வந்து வந்து  அவனைப் பார்த்துவிட்டு உள்ளே போனார்கள். நான் வினய்யிடம் ‘நீ போய் அவன் பக்கத்தில் உட்கார்’ என்று சொன்னேன்.

‘எதற்கு?’

‘ஒரு காண்ட்ராஸ்டுக்குத்தான்’ என்று நான் சொன்னதற்கு அவன் சிரித்தான். ஆனால் மறுக்கவில்லை. வினோத்தின் அருகே சென்று அமர்ந்துகொண்டான். அப்போதுதான் வினோத் கண் கலங்கியிருப்பதைக் கண்டான்.

‘என்ன ஆயிற்று உனக்கு?’ என்று வினய் கேட்டான்.

‘ஒன்றுமில்லை வினய். சொரிமுத்துவிடம் நீ பேசியதைக் கேட்டதில் இருந்து எனக்கு மிகுந்த குற்ற உணர்வாக உள்ளது’.

‘அப்படி என்ன சொல்லிவிட்டேன்?’

‘உனக்குப் புரியாது. நீ வெளிப்படையாக இருக்கிறாய். அடுத்தவர் அபிப்பிராயங்களை நீ பொருட்படுத்துவதில்லை. உனது சிறுமைகள் உனக்கு அவமானகரமானவையாக இல்லை. உனக்குத் தேவைகள் இல்லை. கனவுகள் இல்லை. லாட்டரிச் சீட்டுகள் உன்னை மயக்குவதில்லை. உன்னை வடிவமைத்தது அந்த சொரிமுத்துதான் என்றால் உண்மையிலேயே அவர் மிகப் பெரியவர்’.

வினய் சிரித்தான். ‘என்னை வடிவமைத்தது அவரல்ல. அவராக இருந்திருந்தால் இந்நேரம் நான் இறைவனைக் கண்டிருப்பேன்’.

‘பிறகு?’

‘விடு. இனி அவையெல்லாம் உபயோகமற்றவை’.

‘நீ அவனைக் கொல்லப்போவதில்லை என்பதை அவனால் நம்ப முடியவில்லை. அதுதான் அவனது கண்ணீருக்குக் காரணம்’ என்று நான் சொன்னேன்.

‘தவறா?’ என்று  வினோத் கேட்டான். ‘அதுதான் விதி என்று தெரிந்த பின்பு அதை நிராகரிக்கும் பக்குவம் எத்தனை பேருக்கு வரும்?’

‘இரண்டு மரணங்கள் என்பதுதான் விதி. இரண்டாவது நபர் நீ தான் என்று  நீ ஏன் நினைக்க வேண்டும்?’

‘அம்மா சொன்னாளே’.

‘சொரிமுத்துவும் அதைத்தான் சொன்னான். அதனால் என்ன? கொல்ல நியமிக்கப்பட்டவன் சொல்லவில்லை அல்லவா? அதோடு விடு’.

சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு வினோத் சொன்னான், ‘அம்மா இன்னும் சற்றுப் பேசியிருக்கலாம்’.

வினய் அவனது பின் தலையில் ஓங்கி அடித்து, ‘நீ வராமல் இருந்திருக்கலாம்’ என்று சொன்னான்.

நான் அவனை சமாதானப்படுத்தினேன். ‘கோபப்படாதே. அவனுக்குப் பழைய குற்ற உணர்வு இன்னமும் மிச்சம் உள்ளது’ என்று சொன்னேன்.

‘இல்லை’ என்று வினோத் உடனே மறுத்தான். ‘நான் அப்படிப்பட்டவன் அல்ல. கிருஷ்ணனைத் தவிர எனக்கு வேறு நினைப்பு கிடையாது. அவனது திருவடித் தாமரைகளைத் தவிர என் புத்தியில் இன்னொன்றில்லை. எப்போதும் ஒரு காளிங்கனாக என் சிரசில் நான் அவன் பாதங்களை ஏந்திக்கொண்டிருப்பவன். நான் குற்ற உணர்வுக்கு அப்பாற்பட்டவன்’.

‘அப்படியானால் நீ ஊருக்குள் நுழைந்ததும் பத்மா மாமியைப் போய்ப் பார்த்திருக்க வேண்டிய அவசியமில்லை’ என்று வினய் சொன்னான்.

அவன் சில விநாடிகள் வினய்யை உற்றுப் பார்த்துவிட்டு, ‘ஆம். அவசியமில்லைதான். ஒரு நப்பாசை. அவள் கரங்களால் எனக்கு மோட்சம் சித்திக்குமோ என்று’.

வினய் சிரித்தான். ‘ஒரு சன்னியாசி, மோட்சம் உள்பட எதற்கும் ஆசைப்படுதல் தகாது என்று சொரிமுத்து சொல்வார்’.

‘ஆம். பலனைக் கிருஷ்ணனிடம் விட்டு விடுதல். அது முடிந்துவிட்டால் நான் கிருஷ்ணன் ஆகிவிடுவேனே?’

‘கிருஷ்ணன் ஆவது அத்தனை சுலபமில்லை வினோத். அவன் ஒரு பூரண யோகி. ஆனால் தனது யோகம் முழுவதையும் அயோக்கியத்தனங்களால் மூடி மறைத்தவன். அவனைப் பக்கம் பக்கமாக விமரிசிக்க முடியும். விமரிசகர்களுக்கு இடம் கொடுத்துத் தோற்கடிக்கும் கலையே அவனது யோகத்தின் உச்சம்’ என்று வினய் சொன்னான்.

நான் சட்டென்று கேட்டேன், ‘இவ்வளவு தெரிந்து நீ ஏன் கிருஷ்ணனை தியானம் செய்யச் சென்றாய்?’

வினய் புன்னகை செய்தான். ‘நான் யோகியல்ல. சித்தனல்ல. ஞானமடைந்தவனா என்றால் அதுவுமல்ல. என்னால் பிரம்மச்சரிய விரதத்தைக்கூடக் காக்க முடிந்ததில்லை. திருமணமாகாதவன் என்று வேண்டுமானால் சொல்லலாம். அது ஒரு தகுதியுமல்ல. வாழ்நாளில் பெரும் பகுதியைச் சிறு தெய்வங்களைத் தொழுது கழித்தவன் நான். அவை எனக்கு உதவவில்லை என்று நான் சொல்ல மாட்டேன். எனக்கு அது போதவில்லை. நான் கிருஷ்ணனைப் பரிசோதிக்க விரும்பினேன். என் பிரார்த்தனைக்கு அவன் வந்திருந்தால் அவன் தோற்றிருப்பான். சித்ராவை அனுப்பிக் கெடுத்தான் பார், அதைத்தான் சொன்னேன் அவன் ஒரு அயோக்கியன் என்று. என் தவத்தின் தோல்வியில் அவனது நிரந்தர வெற்றியின் நிழலை நான் கண்டேன். சரியாகச் சொல்லுவதென்றால், இத்தனை ஆண்டுக்காலமாக இவன் அறிய விரும்பிய கிருஷ்ணனை ஒரே நாளில் நான் அறிந்துகொண்டேன்’.

வினோத் சட்டென்று அவனைக் கட்டியணைத்து முத்தம் கொடுத்தான்.

‘சரி நாம் உள்ளே போய்விடலாம்’ என்று நான் சொன்னேன். வீதியில் ஏழெட்டுப் பேர் எங்களையே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். நான் எழுந்ததும் சட்டென்று யாரோ ஒரு மாமா எங்களை நோக்கி விரைந்து வந்தார். அவர் விசாரிக்கத் தொடங்குவார் என்று என் உள்ளுணர்வு சொன்னது. உடனே நான் அவர்கள் இருவரின் முதுகிலும் தட்டி அவசரப்படுத்திவிட்டு உள்ளே போனேன். அவர்கள் எழுந்து உள்ளே வந்து கதவை மூடினார்கள்.

‘இது மிகவும் சிரமம். இவர்களிடம் மாட்டிக்கொண்டால் நம்மால் தப்பிக்கவே முடியாது’ என்று வினோத் சொன்னான்.

‘ஒன்றும் பிரச்னை இல்லை. என்ன கேட்டாலும் சிரித்துவிட்டு அமைதியாக இருந்துவிடு. சில நிமிடங்களில் எரிச்சலாகிப் போய்விடுவார்கள்’ என்று நான் சொன்னேன்.

‘அதையே நான் தவிர்க்க விரும்புகிறேன். எனது பழைய அடையாளங்களின் எச்சங்களை இந்தப் பயணத்துடன் நான் முற்றிலுமாகக் கழுவிக் கரைத்துவிட விரும்புகிறேன். உள்ளவை தாண்டி எந்தக் கூடுதல் சொற்களையும் சேகரித்து வைக்க  என்னிடம் காலி இடம் இல்லை’.

‘நல்லது. ஆனால் இது தவிர்க்க முடியாதது என்பதை நினைவில் கொள். இன்று தப்பிக்கலாம். நாளை நிறையப் பேர் இங்கே வரத்தான் செய்வார்கள்’.

இருட்டிய பின்பு நாங்கள் கோயிலுக்குப் போகலாம் என்று முடிவு செய்தோம். மாமாவிடம் சொன்னபோது, ‘நானும் வரேனே?’ என்றார்.

‘தாராளமாக வாருங்கள். ஆனால் யாரையும் நிறுத்தி அறிமுகப்படுத்தாதீர்கள்’.

‘அடப்போடா. உங்க வேஷத்த பாத்தாலே எல்லாருக்கும் தெரிஞ்சிடும்’ என்று மாமா சொன்னார்.

‘ஒன்றும் பிரச்னை இல்லை மாமா. உங்கள் வேட்டி சட்டைகள் இருந்தால் கொடுங்கள். நாங்கள் அதை அணிந்துகொள்கிறோம்’ என்று நான் சொன்னேன்.

மாமா சிறிது வியப்புற்றார். ‘முடியுமா? பண்ணுவேளா?’ என்று கேட்டார். வினோத் சிறிது தயங்கி, ‘எனக்கு வேண்டாம்’ என்று சொன்னான். அவர் என்னைப் பார்த்தார்.

‘நான் பேண்ட் சூட் கூடப் போடுவேன்’ என்று சொன்னேன்.

‘சரி நீ பேண்ட் சூட்டில் வா. இவன் காவியிலேயே இருக்கட்டும். நான் வெறும் கோவணாண்டியாக வருகிறேன்’ என்று வினய் சொன்னான்.

‘கொன்னுடுவேன். நீங்க ஒருத்தரும் கோயில் பக்கம் வரப்படாது’ என்று மாமா சொன்னார். நான் சிரித்தபடி அவரை சமாதானப்படுத்தினேன்.

‘நித்ய கல்யாணப் பெருமாளைப் பார்த்து வெகுநாள் ஆகிறது. பத்மா மாமி கேட்ட ஒரே ஒரு கேள்விக்கு அவனிடம் பதில் இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டும். அதற்காகத்தான் கோயிலுக்குப் போகலாம் என்றேன்’ என்று சொன்னேன்.

‘என்ன கேட்டா மாமி?’

‘உலகம் முழுவதிலும் இருந்து இங்கே வந்து வேண்டிக்கொள்ளும் பெண்களுக்கு அவன் திருமணம் செய்துவைக்கிறான். இந்த மண்ணில் பிறந்த சித்ராவுக்கு மட்டும் ஏன் துரோகம் செய்தான் என்று கேட்டாள்’.

மாமா சிறிது யோசித்தார். பிறகு பெருமூச்சு விட்டார். ‘பாவம்தான்’ என்று சொன்னார்.

அரை மணியில் நாங்கள் மூவரும் குளித்து வேறு உடை அணிந்து தயாராகிவிட்டோம். மாமாவும் பளிச்சென்று திருமண் ஶ்ரீசூர்ணம் அணிந்து எங்களோடு புறப்பட்டார். ‘நாளைக்கு ஒருநாள். அதுக்கப்பறம் எங்கேருந்து கோயிலுக்குப் போறது? அது ஆயிடுமே பதிமூணு நாள்?’ என்று சொன்னார்.

ஆனால் நாளை அம்மா போய்விடுவாள் என்பதை இப்போதைக்கு யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று நான் மீண்டும் அவரிடம் ஒருமுறை நினைவுபடுத்தினேன். அவர் அதற்கு சம்மதித்தார். வாசல் கதவை வெறுமனே மூடிவிட்டு அவர் படியிறங்கி வந்தார். நாங்கள் கோயிலுக்குப் போனபோது, பத்மா மாமி கோயில் வாசலில் அமர்ந்திருந்தாள். அவளைக் கண்டதும், ‘நீங்க சாயந்தரத்துல வரமாட்டேளே?’ என்று மாமா கேட்டார்.

‘என்னமோ தோணித்து, இன்னிக்கி வந்துட்டேன்’ என்று மாமி சொன்னாள்.

நான் வினோத்தைப் பார்த்தேன். அவனுக்குப் புரிந்தது. அம்மாவை முந்திக்கொள்ள மாமி விரும்பிவிட்டாளா என்ன?

‘நீங்கள்  உள்ளே போங்கள். நான் வருகிறேன்’ என்று அவன் கேசவன் மாமாவிடம் சொன்னான். நான் வினய்க்குக் கண்ணைக் காட்டினேன். ஏன் என்றெல்லாம் கேளாமல் அவன் மாமாவை அரவணைத்தபடி கோயிலுக்குள் அழைத்துச் சென்றான். நானும் பின்னால் போனேன். வினோத் மட்டும் பத்மா மாமியின் அருகே அமர்ந்தான். ‘எப்போ?’ என்று கேட்டான்.

(தொடரும்)

 

https://www.dinamani.com/junction/yathi/2018/oct/23/157-வடக்கிருத்தல்-3024507.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

158. பூரணி

நான் தாயார் சன்னிதியில் இருந்தேன். தனியாகத்தான் இருந்தேன். ‘நீங்கள் நிதானமாக சேவித்துவிட்டு வாருங்கள், ஒன்றும் அவசரமில்லை’ என்று வினய்யிடம் சொல்லி அனுப்பியிருந்தேன்.

‘ஏன் நீ பெருமாள் சன்னிதிக்குக்கூட வரமாட்டியா? அவ்ளோ பெரிய நாஸ்திகனா?’ என்று கேசவன் மாமா கேட்டார்.

‘சேச்சே. அப்படியெல்லாம் இல்லை மாமா. பெருமாளைவிட தாயார் உசத்தி அல்லவா? நான் தாயார் சன்னிதியில் இருக்கிறேன், வாருங்கள்’ என்று சொல்லிவிட்டு வந்து தனியே அமர்ந்தேன். உண்மையில் அந்தத் தனிமையை அப்போது மிகவும் விரும்பினேன். நீ வந்திருக்கவே வேண்டாம் என்று வினோத்துக்கு சொன்னது அவனைக் காட்டிலும் எனக்குத்தான் மிகவும் பொருந்தும் என்று தோன்றியது. ஒருவேளை மூவருக்குமே அது பொருத்தம்தானோ என்னவோ?

அண்ணா கில்லாடி என்று நினைத்துக்கொண்டேன். முன் தேதியிட்டு மரண அறிவிப்பு கிடைத்தவன் தனது பயணத்தைத் தெளிவாகத் திட்டமிட முடிகிறது. இப்படிப் புதைந்த புராதன முகங்களுக்கும் உறவுகளுக்கும் இடையே மாட்டிக்கொண்டு படும் அவதி அவனுக்கில்லை. அவனிடம் அம்மாவின் சில கூறுகள் இருக்கின்றன. எத்தனை சிறந்த அழுத்தக்காரன்! ‘அமுக்கராங்கிழங்கு’ என்று அம்மா சொல்லுவாள். அது அவன் தான். சந்தேகமேயில்லை. அவனுக்கு எல்லாம் தெரியும் என்று வினய்யும் வினோத்தும் மாறி மாறிச் சொன்னபோதெல்லாம் நான் நம்பவில்லை. அவன் ஒரு யோகியாகியிருக்கலாம். காற்றில் பறக்கலாம். நெருப்பில் கிடக்கலாம். சித்துகள் செய்யலாம். அதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை. விதித்திருந்தால் அதெல்லாம் நிகழத்தான் செய்யும். ஆனால் மனத்தைச் சுமையின்றி வைத்திருப்பான் என்று தோன்றவில்லை. வினய்யையும் வினோத்தையும் நேரில் சந்தித்தது, அப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் இருந்தும் என்னைத் தவிர்த்தது, ஆனால் தான் சொல்ல விரும்பிய தகவல்களை எனக்குத் தெரியப்படுத்தியது எல்லாமே அவனுக்குள் இருக்கும் ஏதோ ஒரு மிச்சத்தின் வாசனையாகத்தான் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

தவறில்லைதான். ஒரு துறவிக்கு இதெல்லாம் பொருந்தாது என்று நான் எப்படிச் சொல்வேன்? எதையுமே துறக்காதிருக்கத் துறவறம் கொண்டவனல்லவா நான்? ஆனால் ஒரு குற்ற உணர்ச்சி ஈயைப் போல உள்ளே பறந்துகொண்டிருப்பது அபாயம். என் குருவிடம் நான் பயின்றது அதுதான். குற்ற உணர்வற்று இருப்பதே துறவு. ஒரு குழந்தையிடம் அதனைக் காணலாம். கடவுளிடமும் அது உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகப்பெரிய மாய யதார்த்தத்திடம் அதுகூடவா இருக்காது?

அண்ணாவுக்கு அப்படியொரு குற்ற உணர்வு தொடர்ந்து உறுத்திக்கொண்டே இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் இத்தனை ஒளிந்து வாழ வேண்டிய அவசியமில்லை. வினய்யோ, வினோத்தோ இதைச் சொன்னால் நிச்சயமாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஒரு யோகி காட்டில் திரியாமல் வேறெங்கே அலைவான் என்று கேட்பார்கள். எனக்கென்னவோ அவன் எந்தளவுக்கு யோகியோ, அதே அளவுக்குத் திருடனும்கூட என்றுதான் திரும்பத் திரும்பத் தோன்றியது. என்னை அவன் தொடர்ந்து தவிர்த்து வந்ததன் காரணமாக இப்படித் தோன்றுகிறதா என்றும் எனக்குள்ளே கேட்டுக்கொண்டு பார்த்தேன். ம்ஹும். அதுவல்ல காரணம். என்னை யாரும் தவிர்ப்பது அத்தனை சுலபமல்ல. சந்திப்பு ஒரு பொருட்டா? உன் நினைவில் என் நிழலாடினால் முடிந்தது சங்கதி.

என் கேள்வியெல்லாம் விட்டுச் சென்றவனுக்கு எதற்குக் கரிசனம் என்பதுதான். பத்து காசுக்குப் பெறாத கரிசனம். வழி நடத்தத் தெரியாதவன் அல்லது வழி நடத்த விரும்பாதவன் யாரையும் வீதிக்கு அழைக்கக் கூடாது. வினய் விஷயத்தில் அண்ணா நடந்துகொண்டதை என்னால் அப்படித்தான் பார்க்க முடிந்தது. நான்கு பேரில் கடைசியாக சன்னியாசி ஆனவன் வினோத்தான் என்றாலும் அவனது பக்தியில்தான் எத்தனை தீவிரம்! எவ்வளவு உக்கிரமான நம்பிக்கை! ஆனால் இறக்கும்வரை அவன் கிருஷ்ணனைக் காணப் போவதில்லை என்பதை அண்ணா அவனிடம் சொல்லியிருக்க வேண்டும் என்று நினைத்தேன். நான் சொல்லலாம். இப்போதேகூட விறுவிறுவென்று நடந்து சென்று அவனை எழுப்பி நிறுத்திச் சொல்லிவிட்டு வந்துவிடுவேன். அது ஒரு பிரச்னையே இல்லை. ஆனால் அவனது மதிப்புக்குரிய ஒரு நபரிடம் இருந்து அந்த உண்மை வெளிப்பட்டிருந்தால், இந்நேரம் அவன் வாழ்வு வேறாகியிருந்திருக்கும் அல்லவா?

எனக்குச் சில நிஜமான சித்தர்களைத் தெரியும். அவர்கள் மீது எனக்குப் பெரிய மரியாதை உண்டு. அந்த மரியாதை அவர்களுடைய வெளிப்படைத்தன்மையால் உருவானது. உதகமண்டலத்தில் ரன்னிமேடு என்று ஓர் இடம் உண்டு. உலகின் மிக அழகான ரயில்வே ஸ்டேஷன் அந்த ஊரில் இருப்பதுதான் என்று எனக்குத் தோன்றும். ரன்னிமேடு ரயில்வே ஸ்டேஷன் தரை மட்டத்திலேயே இருக்கும். மலைத் தடத்தில் குறிப்பிட்ட தூரத்துக்கு மட்டும் சிமெண்டு போட்டுப் பூசியது போல. அந்த ஸ்டேஷனைத் தாண்டியதுமே ஒரு சிற்றோடை செல்லும். ரயில் கடக்காத கணங்களில் அந்த ஓடை தண்டவாளத்தைக் கடந்து செல்லும். பளிங்கென்றால் முழுப் பளிங்கு நீர். சந்தன நிறத்தில் கூழாங்கற்கள் ஜொலிக்கும் அதன் அடியாழத்தைக் கைவிட்டுத் தொட்டுப் பார்க்க முடியும். மிகச் சிறிய ஓடைதான். ஆனால் அத்தனை எளிதில் கடந்து சென்றுவிட முடியாது.

முதல் முதலில் ரன்னிமேடு ரயில்வே ஸ்டேஷனைத் தாண்டி ரயில் புறப்பட்டபோது அந்த ஓடை கண்ணில் பட்டு நான் சட்டென்று ரயிலை விட்டுக் குதித்தது நினைவுக்கு வந்தது. ஊட்டியில் என்ன இருக்கிறது? பேரழகு என்பது இந்த இடம்தான் என்று நினைத்தேன். அன்று முழுவதும் அந்த சிற்றோடையின் கரையிலேயேதான் அமர்ந்திருந்தேன். இருட்டும் நேரத்தில் அழுக்கு வேட்டியும் பரட்டைத் தலையும் தாடி மீசையுமாக ஒரு முதியவர் அங்கே வந்தார். ஓடைக்கு மறு பக்கம் எனக்கு நேரே அமர்ந்துகொண்டார். இரு கைகளாலும் தண்ணீரை அள்ளிக் குடித்துவிட்டு என்னைப் பார்த்து, பசிக்கிறதா என்று கேட்டார். நான் நண்பகல் முதல் அங்கேயேதான் அமர்ந்திருந்தேன். எங்கும் எழுந்து செல்லவில்லை. பசிக்காமல் என்ன செய்யும்? புன்னகை செய்தேன். அவர் ஒரு ஆப்பிள் பழத்தைக் கொடுத்து என்னைச் சாப்பிடச் சொன்னார். நன்றி சொல்லிவிட்டு அதை வாங்கித் தின்றேன். நான் உண்டு முடிக்கும்வரை அமைதியாக என்னையே பார்த்துக்கொண்டிருந்தவர், சாப்பிட்டுவிட்டு நான் நீர் அருந்தியதும், ‘நான் உனக்குப் பழமும் தரவில்லை, நீ அதை உண்ணவும் இல்லை’ என்று சொன்னார்.

சரி இருந்துவிட்டுப் போகட்டுமே, அதனால் என்ன என்று கேட்டேன். அவர் சிறிது நேரம் என்னை உற்றுப் பார்த்தார். பிறகு, ‘பசி போய்விட்டதல்லவா?’ என்று கேட்டார்.

‘ஆம். இப்போது பசி இல்லை’.

‘ஏன் இல்லை?’

‘ஏனென்றால் நான் பழம் சாப்பிட்டிருக்கிறேன்’.

‘நாந்தான் உனக்குப் பழமே தரவில்லையே?’

நான் மீண்டும் சிரித்தேன். ‘சரி இப்போது உணர்வாய்’ என்று அவர் சொன்னார். மறுகணம் எனக்குப் பழம் தின்ற உணர்வே இல்லாது போனது. பசி தெரிந்தது. சிறிது ஆச்சரியமாக இருந்தது. நான் அவருக்கு வணக்கம் சொன்னேன்.

‘இன்று உனக்கு இந்தப் பாடத்தை நடத்த எனக்குக் கட்டளை. அவ்வளவுதான். புரிந்ததா?’ என்று கேட்டார்.

‘ஓ, புரிந்தது. பசி என்பது மூளை செய்யும் சிறு சண்டித்தனம்’ என்று சொன்னேன்.

அவர் புன்னகை செய்தார். ‘வருகிறேன்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

மீண்டும் ஓரிரு முறை நான் அவரை அதே ரன்னிமேடு ரயில்வே ஸ்டேஷனை அடுத்த ஓடைக் கரையில் சந்தித்திருக்கிறேன். அப்போதெல்லாம் என்னை அவர் தெரிந்தது போலவே காட்டிக்கொள்ளவில்லை. நானே நடந்த சம்பவத்தைச் சொல்லி அவருக்கு நினைவூட்டியபோதுகூட, ‘அப்படியா?’ என்றுதான் கேட்டார். புதிய புதிய மாணவர்களையும் வேறு வேறு பாடங்களையும் அவரது விதி அவருக்கு அளித்துக்கொண்டேதான் இருக்கும். இது எனக்குப் புரிந்தது. இதையும் அவரிடம் சொன்னபோது, ‘இருக்கலாம், தெரியவில்லை’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

பொள்ளாச்சிக்கு அருகே கோடி சாமியார் என்று ஒருவர் இருந்தார். அவரிடமும் நான் இந்தத் தன்மையை கவனித்திருக்கிறேன். முதல் முறை சந்திக்கச் சென்றபோது, தினமும் சந்திக்கும் நபரைப் போல என் பெயரைச் சொல்லி அருகே அழைத்தார். அப்போது எனக்கு மிகவும் இளம் வயது. திகைப்பில் இருந்து நான் வெளி வருவதற்குள் அவர் எதற்காக அழைத்தாரோ அதைச் செய்து முடித்துவிட்டிருந்தார் போல. அவரது பார்வை அடுத்த நபரின் பக்கம் திரும்பிவிட்டது. மறுமுறை நான் அவரைக் காணச் சென்றபோது என் பக்கமே அவர் திரும்பவில்லை. பெரிய வருத்தமில்லை என்றாலும் பெயர் சொல்லி அழைக்கத் தெரிந்தவருக்கு அடையாளம்கூடவா தெரியாமல் போயிருக்கும் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.

காரணம் உதிக்கும்போது நினைத்து காரியம் முடிந்ததும் மறந்துவிடுகிற அத்தகைய சித்தர்களை நினைத்துப் பார்த்தேன். அண்ணாவால் ஏன் அப்படி இருக்க முடியாது போயிற்று? ஒரு கழுதையைப் போல எங்கள் நினைவை அவன் காலம் முழுதும் சுமந்து திரிவதாகத் தோன்றியது. அவசியமே இல்லாதது. வங்காளத்தில் அவன் வினோத்தைச் சந்தித்திருக்கவே வேண்டாம். வாரணாசியில், கங்கைக் கரையில் வினய்யைச் சந்தித்ததும் அபத்தம் என்றுதான் தோன்றியது. இதோ, அம்மாவின் மரணம் நெருங்கியிருக்கிறது. ஒரு பூரணமான வாழ்வை நிகழ்த்தி முடித்துவிட்டு நிம்மதியாக உறங்கப் போகிறாள். பூடகங்கள் இருந்தாலும் பூரணம்தான். தன்னளவில் அவள் அந்த பூரணத்தின் நாயகியாகத்தான் வாழ்ந்து முடித்திருக்கிறாள். நேரில் வந்து கொள்ளி வைக்கப் போகிற பிரகஸ்பதி தன்னை ஒப்பிட்டுக்கொள்ளாமலா இருப்பான்? தனது முழுமையின் பின்னம் உணராமலா போவான்? அதைவிட, என்னை எப்படி எதிர்கொள்ளப் போகிறான்? நான் அவனிடம் ஒன்றுமே கேட்கப் போவதில்லை என்று முடிவு செய்துகொண்டேன். யாரவன்? கோடானுகோடி மனிதர்களுள் ஒருவன். அவ்வளவுதானே? பார்த்ததும் புன்னகை செய்வேன். ஹலோ சொல்வேன். எப்படி இருக்கிறாய் என்று கேட்பது அபத்தம். அர்த்தமற்றது. எப்படி இருந்தாலும் அதுதான் அவன். அதைத் தெரிந்துகொண்டு என்ன ஆகப் போகிறது?

எனது நிராகரிப்பின் மூலம் அவனது அகங்காரத்தைச் சற்று சிதைத்துப் பார்க்க மிகவும் விரும்பினேன். ஒரு விதத்தில் அம்மாவின் மரணத்தைக் காரணமாகக் கொண்டு நான் அவ்வளவு தூரம் கிளம்பி வந்ததன் நோக்கமே அதுதானோ என்றும் தோன்றியது.

மிகவும் களைப்பாக உணர்ந்தேன். கிளம்பலாம் என்று எழுந்துகொண்டபோது வினய்யும் மாமாவும் தாயார் சன்னிதியை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள்.

(தொடரும்)

 

https://www.dinamani.com/junction/yathi/2018/oct/24/158-பூரணி-3025564.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

159. தாயும் ஆனவள்

‘பட்டாச்சாரியார் பின்னால் வருகிறாரா?’ என்று நான் கேசவன் மாமாவைக் கேட்டேன்.

‘ஏன்?’

‘தாயார் சன்னிதி பூட்டியிருக்கிறதே’.

‘வரச் சொன்னால் வருவார்’ என்று சொன்னார்.

‘நீங்கள் வரச் சொல்லவில்லையா?’

அவர் என்னைச் சற்று சந்தேகத்துடன் பார்த்தார். ‘சொல்லட்டுமா?’' என்று கேட்டார். ‘பரவாயில்லை இருக்கட்டும்’ என்று வினய் சொன்னான்.

‘இல்லை, வரச் சொல்லுங்கள்’ என்று நான் தீர்மானமாகச் சொன்னேன். மாமா என்னை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்துவிட்டுத் திரும்பிச் சென்றார்.

‘உனக்குத் தாயாரைச் சேவிக்க வேண்டுமா?’ என்று வினய் கேட்டான்.

‘இல்லை. தாயார் சன்னிதிக்குள்ளேதான் நீ உன் மானசீகத்தில் சித்ராவை இழுத்துச் சென்று முத்தமிட்டதாகச் சொன்னாய். எனக்கு அந்த இடத்தை எட்டியாவது பார்க்க வேண்டும்’.

அவன் சிரித்தான். ‘எதற்கு?’ என்று கேட்டான்.

‘உனக்குத் தாயாரும் சித்ராவும் வேறு வேறல்ல என்பதை நான் அறிவேன். பேயாக நீ பார்த்தவளைத் தாயாகப் பார்க்க முடிகிறதா என்றொரு சிறு இச்சை’.

‘என் மானசீகத்தில் நான் அவளைத் தொட்டபோது அவளைத் தாயாகக் கருதியதில்லை. அந்தத் தொடுதல் நிகழ்ந்ததனால்தான் அவள் எனக்குத் தாயும் ஆனாள்’.

கேசவன் மாமா, பட்டாச்சாரியாரை அழைத்து வந்து சன்னிதியைத் திறக்கச் சொன்னார். அவர் என்னை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தார். ‘இவர்தான் கடைசியா?’ என்று கேட்டார்.

‘ஆமா. விமல். இப்ப விமலானந்தனாம்’.

‘சன்னியாசிகள் ஈசியா பேர் செலக்ட் பண்ணிண்டுடறா’ என்று பட்டர் சொன்னார்.

‘பெயரில் தொடங்கி அனைத்திலும் ஆனந்தம் சேர்ந்தால் அதுதான் சன்னியாசம்’ என்று சொன்னேன். ‘வாங்கோ’ என்று சொல்லிவிட்டு, அவர் சன்னிதிக்குள் சென்று எரிந்துகொண்டிருந்த விளக்கைத் தூண்டிவிட்டு, நெய் ஊற்றி, மேலும் சிறிது வெளிச்சம் சேர்த்தார்.

மிகச் சிறு வயதுகளில் நான் பார்த்த கோமளவல்லித் தாயார் அப்படியேதான் இருந்தாள். அவள் சன்னிதியும் அதே கறுப்பும் அழுக்குமாகத்தான் இருந்தது. பட்டர் அர்ச்சனையை ஆரம்பித்தார். நான் தாயாரையே பார்த்துக்கொண்டிருந்தேன். சிறு வயதில் நான் அம்மாவுக்கு இந்தத் தாயாரின் முகஜாடை இருப்பதாக நினைத்திருக்கிறேன். பிறகு பள்ளிக்கூடத்தில் என்னுடன் படித்த டெய்சி ராணி என்ற பெண்ணுக்கு இதே முகம் அமைந்திருப்பதாகத் தோன்றியிருக்கிறது. வெகு காலம் கழித்து மடிகேரியில் சந்தித்த ஒரு பெண்ணிலும் நான் கோமளவல்லியைக் கண்டிருக்கிறேன். சிலைகள் உருப்பெற்று எழும் தருணங்கள் மிகவும் அபூர்வமானவை. அது பிரமைதான். ஆனால் அது அளிக்கும் பரவசம் நிகரற்றது. எங்கோ பார்த்தாற்போலத் தெரிகிறதே என்று உள் மனத்தில் ஒரு புள்ளியாகத் தோன்றும் எண்ணம் பரபரவென்று விரிவடைந்து எங்கே, எங்கே என்று தேடித் திரிந்து இறுதியில் இந்தச் சன்னிதிக்குள் வந்து முட்டிக்கொண்டு நிற்கும்.

‘காண்கிற அனைத்து உருவங்களும் இதுவாகத் தோன்றினால் அலைச்சல் நின்றுவிடும்’ என்று வினய் சொன்னான். நான் புன்னகை செய்தேன். பட்டர் அர்ச்சனையை முடித்துவிட்டுக் கற்பூரம் காட்டினார். குங்குமம் கொடுத்தார். கிளம்பும்போது, ‘இருப்பேளோல்யோ?’ என்று கேட்டார். இதற்கும் நான் வெறுமனே புன்னகை மட்டும் செய்தேன். கேசவன் மாமா, பட்டர் கதவைப் பூட்டிக்கொண்டு கிளம்பியபோது, அவரோடு ஏதோ பேசிக்கொண்டு நகர்ந்து போனார். அநேகமாக, நாளைய தினத்தைக் குறித்த முன்னறிவிப்பாக இருக்கும். நான் வினய்யுடன் கோயிலைச் சுற்றிக்கொண்டு வாசலுக்கு வந்தபோது, கங்காதரன் வேக வேகமாக முன் மண்டபம் தாண்டி வந்துகொண்டிருக்கக் கண்டேன். வினோத் அப்போதும் கோயில் வாசலிலேயே பத்மா மாமியுடன் அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்ததையும் பார்த்தேன். மாமியைச் சுற்றி இப்போது நான்கைந்து பெண்கள் சூழ்ந்திருந்தார்கள். மாமி அவர்களிடமெல்லாம் வினோத்தைக் காட்டி அவன் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தாள். அவன் வைணவத் துறவிதான். ஆனால் அது திருவிடந்தை அறியாத வேறொரு வைணவம். ‘ஶ்ரீசூர்ணம் இட்டுக்க மாட்டேளா?’ என்று ஒரு மாமி வினோத்திடம் கேட்டுக்கொண்டிருந்தாள். அவன் சிரித்து சமாளித்துக்கொண்டிருந்ததை ரசித்தபடியே நான் அவனைத் தாண்டி வெளியே போனேன்.

வேகமாக நெருங்கிய கங்காதரன், ‘உங்கண்ணன் வந்துட்டானா?’ என்று என்னிடம் கேட்டான்.

‘இல்லை’ என்று சொன்னேன்.

‘எப்ப வரான்?’

‘யாருக்குத் தெரியும்?’ என்று வினய் சொன்னான்.

‘அவன் வந்ததும் எனக்குத் தகவல் சொல்லு’ என்றான் கங்காதரன்.

‘அப்படி என்ன அவசரம்?’ என்று நான் கேட்டேன்.

‘சாமி கேட்டுச்சி. காலைலேருந்து ரெண்டு மூணு தடவ கேட்டுருச்சி’.

‘எதற்கு? இவனுக்காவது உன் சாமியிடம் கஞ்சா வாங்கும் காரணம் இருந்தது. அவனுக்கு என்ன இருக்கப் போகிறது?’

‘எனக்குத் தெரியல சாமி. சாமி சொன்னதத்தான் சொன்னேன்’ என்று என்னையும் சாமியாக்கிச் சொன்னான். நான் சிரித்துவிட்டேன்.

‘கங்காதரா, நீ என்னை சாமி என்றெல்லாம் குறிப்பிட வேண்டாம். விமல் என்றே அழைக்கலாம்’.

‘வாய் வரமாட்டேங்குதே. டிரெஸ்ஸு படுத்துது’ என்று அவன் சொன்னான்.

நான் வினய்யைப் பார்த்தேன். சிரித்தேன். அவனும் சிரித்தான். ‘அப்ப என் டிரெஸ்ஸு?’ என்று கேட்டான்.

‘இது டிரெஸ்ஸா? கோவணத்தவிட கொஞ்சம் பெரிசா இருக்குது. அவ்ளதான்’ என்று சொன்னான். ஏதோ நினைத்துக்கொண்டவனாக மீண்டும் ஒருமுறை அண்ணா வந்ததும் தனக்குத் தகவல் சொல்லும்படிக் கூறிவிட்டு, தன் வீட்டு முகவரியையும் சொல்லிவிட்டுப் போனான்.

எனக்கு வியப்பாக இருந்தது. அண்ணாவின் வருகையை இத்தனை பேர் எதிர்பார்க்கிறார்கள் என்றால், அம்மாவின் மரணம் இவ்வளவு பேருக்கும் முன்னறிவிக்கப்பட்டிருக்குமா? அப்படியென்ன அவளது சாவுக்குச் சிறப்பு?

‘சொரிமுத்து இங்கே வந்ததை என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை’ என்று வினய் சொன்னான்.

‘யார் கண்டது? சம்சுதீன் பாயும் இங்கேயே எங்காவது சுற்றிக்கொண்டிருக்கலாம்’.

‘தவறு செய்துவிட்டோம். சொரிமுத்துவிடமே சம்சுதீனைப் பற்றிக் கேட்டிருக்கலாம்’.

‘உனக்கு அவரைப் பழக்கம் உண்டா?’

‘பெரிய பழக்கமெல்லாம் இல்லை. சொரிமுத்து சொல்லக் கேள்விதான். ஆனா உனக்குப் பழக்கம் உண்டல்லவா?’

‘ஆம். நானும் வீடு தங்கமாட்டேன் என்று முதல் முதலில் சொன்ன மனிதர்’.

சட்டென்று வினய் ஏதோ நினைத்துக்கொண்டு, ‘டேய், டேய் கங்காதரா’ என்று கத்திக்கொண்டே அவன் போன வழியில் ஓடத் தொடங்கினான். சரி போய்விட்டு வரட்டும் என்று நான் வினோத் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்தேன். இப்போது அங்கே மேலும் ஏழெட்டு மாமிகள் சேர்ந்திருந்தார்கள்.

‘உள்ளே போய் உக்காரலாமே மாமி?’ என்று யாரோ ஒரு கிழவி, பத்மா மாமியிடம் சொன்னாள்.

‘பரவால்லே. இங்கேயே இருக்கேன்’.

‘இது வாசலை அடைச்சிண்ட மாதிரி இருக்கே’.

‘அதனால பரவால்லே. என்ன பெரிய கூட்டம் அம்மறது இங்கே? இருட்டற நாழிக்கு ரெண்டு மூணு பேர் வந்தாலே அதிகம்’ என்று பத்மா மாமி சொன்னாள். அவளது தீர்மானத்தின் வலுவை நான் மிகவும் ரசித்தேன். தனது உள்ளுணர்வின் அடிச்சுவட்டில் நடந்துகொண்டிருக்கிற பெண்மணி. இன்று அவள் அம்மாவைப் பார்க்க வந்தபோதுதான் மனத்தில் பட்டிருக்க வேண்டும். தனது தினங்களும் எண்ணப்படுவதை அவள் ஒரு தரிசனமாக உணர்ந்திருக்கக்கூடும். எனக்கென்னவோ அம்மாவும் அவளும் பேசி வைத்துக்கொண்டு இறுதி தினத்தைத் தீர்மானித்திருக்கக்கூடும் என்று தோன்றியது. பிரச்னை ஒன்றுமில்லை. மாமிக்குக் கொள்ளி போடத் தயார் என்று ஏற்கெனவே வினோத் சொல்லியிருக்கிறான்.

நான் சட்டென்று மாமியிடம், ‘நீங்க அம்மாட்ட கடேசியா எப்ப பேசினேள்?’ என்று கேட்டேன்.

‘ஏன் பேசாம என்ன? இன்னிக்கு உங்காத்துக்கு வந்தப்போகூட பேசினாளே?’

நான் வினோத்தைப் பார்த்தேன். அவன் அமைதியாக இருந்தான்.

‘பேச்சு போயிடுத்துன்னு மொத்தமா சொல்லிட முடியாது பாத்துக்கோங்கோ. அப்பப்ப ரெண்டொரு வார்த்த பேசறா. சட்டுனு கண்ண மூடிண்டுடறா. உள்ளுக்குள்ள என்ன பண்றதோ என்னமோ, யாருக்குத் தெரியும்?’

‘சரி. இன்னிக்கு என்ன பேசினா?’ என்று மீண்டும் கேட்டேன்.

‘பிள்ளைகள்ளாம் வந்திருக்கான்னு சொன்னா. பாத்தேன் மாமின்னேன். எழுந்துபோய் ஒருவாய் சாத்துஞ்சாம் பண்ணிப் போட முடியாம இருக்கேனேன்னா. அதுக்கு என்ன பண்ண முடியும் மாமின்னேன். மூத்தவன் வந்தான்னா கண்ண மூடிண்டுடுவேன்னு சொன்னா’.

நான் வினோத்திடம், ‘போகலாமா?’ என்று கேட்டேன். அவன் பதில் சொல்லவில்லை. மாமியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். பேசிக்கொண்டிருந்த மற்ற பெண்கள் உள்ளே போய்விட்டு வந்துவிடுவதாகச் சொல்லிக்கொண்டு போனார்கள். நான் மாமியின் அருகே அமர்ந்தேன். அவள் கையைத் தொட்டேன். அவள் பாசமுடன் என்னைப் பார்த்துப் புன்னகை செய்தாள்.

‘முடிவு பண்ணிட்டேளா?’

‘ஆமா? பின்னே? இப்பத்தான் இவர்ட்டே சொல்லிண்டிருந்தேன்’ என்று வினோத்தைக் கைகாட்டினாள்.

எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. என் சிறு வயதுகளில் எட்டு முப்பது காண்டீபன் பஸ்ஸுக்காகக் காத்திருக்கும் கூட்டம் ஒன்று இருந்தது. பெரும்பாலும் காய்கறி வியாபாரிகள். முட்டை வியாபாரிகள். உப்பு லோடு எடுத்துச் செல்கிற சிறு வணிகர்கள். எட்டு முப்பதுக்கு காண்டீபன் பஸ் வந்தே தீரும் என்று நம்பி சரக்கை எடுத்துக்கொண்டு கேளம்பாக்கம் முருகைய நாடார் கடை வாசலுக்கு வந்து நிற்பார்கள். அதற்கு முந்தைய ஏழு நாற்பது வண்டியோ, அதனை அடுத்த ஒன்பது இருபது வண்டியோ சரக்கு ஏற்றாது. எட்டு முப்பது சர்வீஸ் மட்டும்தான் சரக்குகளுக்கானது. எத்தனை எத்தனை வருடங்கள்! மழையோ புயலோ, சாலை சரியாக இருக்கிறதோ இல்லையோ, வழியில் ஏதேனும் கலவரம் என்று யாராவது சொன்னாலுமேகூட எட்டு முப்பது காண்டீபன் வராமல் போகாது. சரக்குகளை ஏற்றாமல் செல்லாது. காண்டீபன் பஸ் சர்வீஸ் செயல்பட்டுக்கொண்டிருந்த வரை, பிராந்தியத்தில் சரக்கு வாகனம் என்ற ஒன்று நுழைந்து நான் கண்டதில்லை. அப்படியொரு நம்பிக்கை மக்களுக்கு அந்தப் பேருந்தின் மீது இருந்தது.

அப்படியொரு நம்பிக்கையல்லவா பத்மா மாமிக்குத் தனது மரண வாகனத்தின் மீது உள்ளது?

‘சரி சொல்லுங்கோ. எப்போ?’ இம்முறை நான் கேட்டேன்.

மாமி பதில் சொல்லும் முன் வினோத் எழுந்து என்னைத் தனியே அழைத்துச் சென்றான்.

‘என்ன?’ என்று கேட்டேன்.

‘விடு. அதைப்பற்றி அவளிடம் பேசாதே’.

‘ஏன்?’

‘அவளை இன்றிரவு நான் வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவேன்’.

‘யார் வீட்டுக்கு?’

‘அவள் வீட்டுக்குத்தான்’.

நான் மாமியை மீண்டும் ஒருமுறை பார்த்தேன். ‘வருவாள் என்று தோன்றவில்லை’ என்று சொன்னேன்.

‘வருவாள்’ என்று வினோத் சொன்னான். நான் புன்னகை செய்தேன். ‘சரி முயற்சி செய்து பார்’ என்று சொல்லிவிட்டு, வினய் வருவதற்காகக் காத்திருக்க ஆரம்பித்தேன்.

(தொடரும்)

https://www.dinamani.com/junction/yathi/2018/oct/25/159-தாயும்-ஆனவள்-3026259.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

160. கொள்ளி எறும்பு

‘நான் சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு வர விரும்புகிறேன்’ என்று வினய் சொன்னான். ‘கடற்கரைக்குப் போயேன்’ என்று நான் சொன்னதற்கு வேண்டாம் என்று உடனே மறுத்தான்.

‘ஏன்?’

‘சித்ராவைப் பார்க்க வேண்டி வரலாம்’.

அது ஒரு பிரச்னைதான். கோயிலுக்குள்ளேயே போய் உட்காரச் சொல்லலாம் என்றால் வந்துபோகிற மாமிகள் பொருட்காட்சி காண வந்தாற்போல நின்று நின்று முறைத்துவிட்டுப் போவார்கள். எனக்கும் வினோத்துக்குமே அது பிரச்னையாக இருக்கும்போது வினய்யின் தோற்றத்துக்குக் கேட்கவே வேண்டாம். மாமாவுக்கே அவனது தோற்றம் மிகுந்த சங்கடத்தை அளித்ததை உணர முடிந்தது. ‘ஏண்டா, உங்கண்ணனும் இப்படித்தான் இருப்பானாடா?’ என்று அவர் வினய்யிடம் கேட்டார்.

‘தெரியல மாமா’ என்று வினய் சொன்னான்.

‘நீ பார்த்தப்போ அவன் எப்படி இருந்தான்?’

‘அது பல வருஷம் ஆயிடுத்தே?’

‘பரவால்ல சொல்லு. அப்ப எப்படி இருந்தான்?’

‘இடுப்பு வரைக்கும் முடி தொங்கிண்டிருந்தது. ஆனா இப்படி ஜடை பிடிச்ச மாதிரி இல்லே. பொம்பனாட்டிகளுக்கு இருக்கற மாதிரி. தாடி மீசை இருந்தது. அதுவும் எனக்கு இருக்கற மாதிரி இல்லே. சின்னதாத்தான் இருந்தது. ஜிம்முக்குப் போய் எக்சர்சைஸ் பண்ண மாதிரி உடம்பை கிண்ணுன்னு வெச்சிண்டிருந்தான்’.

‘நடந்துண்டே இருந்தா அப்படி ஆயிடுமோ என்னமோ’.

‘அப்படித்தான்’.

‘நீ ஏன் இப்படி தலைவிரி கோலமா இருக்கே? சன்யாசிகள் லட்சணமா இருக்கப்படாதுன்னு சட்டமா? தோ, இவன் நன்னாருக்கானே. வினோத்கூட சின்னதா சிகை வெச்சுண்டு பாக்கற மாதிரிதான் இருக்கான்’.

வினய் சிரித்தான். பிறகு, ‘யாரும் பார்க்க வேண்டாம்னுதான்’ என்று சொன்னான்.

அவன் தியானம் செய்ய இடம் கேட்டபோது நான் வீட்டின் கிணற்றடியே சரியாக இருக்கும் என்று சொன்னேன். ஆனால் உடனடியாகச் செய்தே தீரவேண்டிய அவசியம் என்ன நேர்ந்தது? இதை நான் அவனிடம் கேட்டபோது, ‘கங்காதரன் பேச்சு சரியாக இல்லை. எனக்கு ஒரு சிறு சந்தேகம் உள்ளது’ என்று சொன்னான்.

‘எதற்கு நீ அவன் பின்னால் ஓடினாய்?’

‘சம்சுதீனைப் பற்றி ஒருவேளை அவனுக்குத் தெரிந்திருக்குமா என்று கேட்பதற்கு’.

நான் சிரித்தேன். ‘நல்ல ஆளைப் பிடித்தாய். அவன் யார் சம்சுதீன் என்று கேட்டிருப்பான்’.

‘ஆம். அப்படித்தான் கேட்டான்’.

‘வேறென்ன சொன்னான்?’

‘குறிப்பாக ஒன்றுமில்லை விமல். ஆனால் அவனிடம் ஏதோ ஒரு பூடகம் உள்ளது. நம்மை செல்லியம்மன் திருவிழாவுக்கு வரவழைத்தது, அவனைச் சந்திக்கச் செய்தது எல்லாமே அந்த நீலாங்கரை சாமியின் வேலைதான் என்பது போலச் சொன்னான்’.

‘என்னால் இதை நம்ப முடியவில்லை’.

‘என்னாலும்தான். நீலாங்கரை சாமி வெறும் வைத்தியர். நான் கவனித்தவரை அவருக்குத் தனித்திறமைகள் ஏதுமில்லை. ஆனால் சொரிமுத்து தன்னோடு பேசுவதாக அவர் என்னிடம் சொன்னார்’.

‘இதை நீ சொரிமுத்துவிடமே கேட்டிருக்கலாமே?’

‘ஏனோ கேட்கத் தோன்றவில்லை. ஆனால் சொரிமுத்துவை அறிந்தவன் என்ற முறையில் இம்மாதிரியான அரை வேக்காடுகளோடு அவர் தொடர்பு கொள்ள மாட்டார் என்பது எனக்குத் தெரியும்’.

‘பிறகு?’

‘ஆனால் சொரிமுத்து வந்திருப்பது அந்த சாமிக்குத் தெரிந்திருக்கிறது. நமது வருகை குறித்து சொரிமுத்துதான் தனக்குத் தெரிவித்ததாகச் சொன்னார்’.

‘ஓ’.

‘எங்கோ ஒரு கண்ணி இடறுகிறது விமல். அதை நான் கண்டறிய வேண்டும். அதற்குத்தான் தனியே உட்கார வேண்டும் என்றேன்’.

நாங்கள் பேசியபடி வீடு போய்ச் சேர்ந்தபோது அம்மா மீண்டும் கண் விழித்திருந்தாள். நாங்களிருவரும் அவள் அருகே சென்று நின்றோம். ஆனால் ஒன்றும் பேசவில்லை. அம்மா எங்களைப் பார்த்துச் சிரித்தாள். ‘சாப்ட்டிங்களா?’ என்று கேட்டாள். ‘கேசவன கூப்டு’ என்றாள். நான் மாமாவை உள்ளே அழைத்தேன்.

‘என்ன?’

‘அம்மா உங்கள கூப்பிடறா’.

‘பேசறாளா! பெருமாளே!’ என்று பரிதவித்து ஓடி வந்து, ‘என்னக்கா?’ என்று கேட்டார்.

‘இவாள்ளாம் சாப்ட்டாளா?’

‘நீ பேசறியேக்கா. இதுவே வயிறு நிறைஞ்சிடுமே. எப்படிக்கா இருக்கே? உடம்புக்கு என்ன பண்றது?’ என்று மாமா கேட்டார். அவரையறியாமல் கண்ணில் நீர் வழிந்துகொண்டிருந்ததைக் கண்டேன். அம்மா புன்னகை செய்தாள். என்னை அருகே அழைத்துத் தடவிக் கொடுத்தாள். வினய்யைக் கூப்பிட்டு அவனது ஜடாமுடியைத் தொட்டுப் பார்த்தாள்.

‘ஒன்னத்தான் அடையாளமே தெரியலே’ என்று சொன்னாள்.

‘நாலு பேரும் நன்னாருக்காக்கா. பெரிய ரிஷிகளாயிட்டா. வயசும் உறவும் தடுக்கறது. இல்லேன்னா விழுந்து சேவிச்சிடுவேன்’ என்று மாமா சொன்னார். ‘ஆனா பாத்தியா? உனக்கு ஒண்ணுன்னு தெரிஞ்சதும் எங்கெங்கேருந்தோ ஓடி வந்துட்டா. அதெப்படிக்கா பாசம் இல்லாம போயிடும்? திருப்தியா உனக்கு? சந்தோஷமா?’

திருப்தி என்ற ஒற்றைச் சொல்லை அவளிடம் இருந்து உருவிவிட வேண்டும் என்பதில் அவர் முனைப்பாக இருந்ததைப் புரிந்துகொள்ள முடிந்தது.

‘அம்மா, எங்களைப் பெற்றவள் யாராக இருந்தாலும் நீதான் எங்களுக்கு அம்மா. அம்மா என்பவள் பெறுபவள் அல்ல. உருவாக்குபவள். நீ எங்களை இவ்வாறாக உருவாக்கினாய்’ என்று நான் சொன்னேன்.

‘நீ எதையும் பேச அவசியமில்லை அம்மா. ரகசியங்கள் எங்களுக்கு முக்கியமில்லை. உறவுகளை உதறிவிட்ட பின்பு எதுவுமேகூட முக்கியமில்லை’ என்று வினய் சொன்னான்.

‘அம்மா நீ உன் இறுதிக் காலத்தில் இருக்கிறாய். உன்னை நல்லபடியாக நாங்கள் வழியனுப்பி வைத்துவிட்டுத்தான் போவோம். சந்தோஷமா?’ என்று நான் கேட்டேன்.

அவள் மீண்டும் புன்னகை செய்தாள். சிறிது நேரம் கண்மூடி இருந்துவிட்டு மீண்டும் கண்ணைத் திறந்து, ‘இதை உங்கள் அப்பாவுக்கும் செய்திருக்கலாம்’ என்று சொன்னாள்.

‘மன்னிக்க வேண்டும் அம்மா. அது கடமை அல்ல’.

‘அவர்தான் எங்களைப் பெற்றவர் என்றாலுமே கடமை அல்ல’ என்று நான் அழுத்திச் சொன்னேன்.

‘வேறு எது கடமை? எனக்குக் கொள்ளி வைப்பதா?’

‘சொல்லக் கஷ்டமாக உள்ளது. ஆனால் அதுதான். அது ஒன்றுதான் கடமை’.

‘யார் வகுத்த தர்மம் இது?’

‘தெரியாது. காலம் காலமாக உள்ளது’.

‘அப்படியா?’

‘ஆம்’.

‘நான் வேண்டாம் என்று நினைத்தால்?’

நாங்கள் அதிர்ந்து போனோம். ‘அம்மா..?’ என்று வினய் அழைத்தான்.

‘இதைத்தான் உங்ககிட்டேல்லாம் சொல்லணும்னு நினைச்சேன். எனக்கு கேசவன் கொள்ளி போடட்டும். நீங்கள்ளாம் பக்கத்துல இருந்தேள்னா போதும்’.

அக்கா என்று அவள் காலைப் பிடித்துக்கொண்டு மாமா கதற ஆரம்பித்தார். எங்களுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பேசியது போதும் என்று அவள் முடிவு செய்துவிட்டது புரிந்தது. கண்ணை மூடிக்கொண்டு தூங்க ஆரம்பித்துவிட்டாள். மாமா மட்டும் நெடுநேரம் அழுதுகொண்டே இருந்துவிட்டு, பிறகு எழுந்து வெளீயே வந்தார்.

‘தப்பா நினைச்சிக்காதீங்கோடா. அவ எதோ சித்தக் கலக்கத்துல பேசிட்டா. பாத்யப்பட்டவா நீங்க இருக்கேள். நல்லபடியா பண்ணி முடிங்கோ. நான் இருக்கேன் ஒத்தாசைக்கு’ என்று சொன்னார்.

‘இல்லை மாமா. அநேகமாக இது அம்மாவின் இறுதி விருப்பம் என்று தோன்றுகிறது. அதை ஏன் நிராகரிக்க வேண்டும்?’ என்று நான் கேட்டேன்.

‘விட்டுது சனின்னு நினைக்கறியா?’ என்று கேசவன் மாமா சீறினார்.

‘சேச்சே, அப்படியில்லை. அவளுக்காக நாங்கள் ஒன்றும் செய்ததில்லை. இந்த விருப்பத்துக்குக் குறுக்கே நிற்காதிருந்தால் போதாதா?’

‘அதெல்லாம் இல்லே. அதெல்லாம் நடக்காது. அவன் விஜய் வந்துடுவான். நீங்க விடுங்கோ, நான் அவண்ட்ட பேசிக்கறேன்’ என்று மாமா சொன்னார். மிகவும் பதற்றமாகக் காணப்பட்டார். மீண்டும் அம்மாவின் அறைக்குள் ஓடி, ‘ஏன்க்கா இப்படி பேசறே? உனக்கென்ன பைத்தியமா? நீ பெத்த நாலும் உனக்காக வந்து நிக்கறப்போ நான் யார் இதையெல்லாம் செய்யறதுக்கு?’ என்றார். அம்மா கண்ணைத் திறக்கவில்லை. நான் மெல்ல மாமாவின் அருகே சென்று, ‘அந்த நான்காவதாக வரவேண்டிய மூத்தது வரட்டும். அப்போது பேசுவாள்’ என்று சொன்னேன்.

மாமா நெடுநேரம் அழுதார். என்னென்னவோ சொல்லி எங்களை சமாதானப்படுத்தப் பார்த்தார். அதற்கு அவசியமில்லை என்று நாங்கள் சொன்னது அவர் சிந்தைக்குச் செல்லவேயில்லை.

‘எம்மேல அவளுக்கு அவ்ளோ பாசம்டா. கேசவன்னா உசிரையே குடுப்பா. அக்காவா அவ? என் அம்மாடா!’ என்று சொன்னார்.

‘அப்படியானால் அவள் முடிவு சரிதான்’.

‘அதெப்படி? அதெல்லாம் இல்லை’ என்று சட்டென்று சொல்லிவிட்டு எழுந்து அடுக்களைக்குச் சென்றார். ‘ராத்திரிக்கு என சாப்பிடுவேள்?’ என்று கேட்டார்.

‘சிரமப்படாதிங்கோ. ஒரு தம்ளர் பால் இருந்தா போதும்’ என்று வினய் சொனான்.

‘எனக்கு அதுவும் அவசியமில்லை’ என்று நான் சொன்னேன்.

‘சும்மா இருங்கோடா. நான் ஒரு உப்மா கெளர்றேன்’ என்று சொல்லிவிட்டு சமையலில் மூழ்கிப் போனார். சிறிது நேரம் கழித்து வினோத் வீட்டுக்கு வந்தான்.

‘மாமி தூங்கிவிட்டாளா?’ என்று வினய் கேட்டான்.

வினோத் அடுக்களையைப் பார்த்தான். பிறகு அம்மாவின் அறையைப் பார்த்தான். ‘பரவாயில்லை சொல்’ என்று நான் சொன்னேன்.

‘என்ன சொல்ல? நாம் இங்கு வந்திருக்கவே வேண்டாம்’ என்று சொன்னான்.

வினய் விழுந்து விழுந்து சிரித்தான். ‘போகிற போக்கைப் பார்த்தால் மரணம் நிகழும்போது நாம் யாரும் இங்கே இருக்கமாட்டோம் போலிருக்கிறது’.

‘நான் கிளம்புகிறேன் வினய்’ என்று வினோத் சொன்னான்.

‘டேய், அவசரப்படாதே. பத்மா மாமி என்ன சொன்னாள்? அதைச் சொல் முதலில்’.

‘என்னென்னவோ’.

‘அப்படியென்றால்?’

‘அம்மாவின் அப்பாவுக்கு நமது அப்பாவின் பழைய வாழ்க்கை நன்றாகத் தெரியுமாம்’.

‘அம்மாவுக்கு முந்தைய பெண் தொடர்பைச் சொல்கிறாயா?’

‘ஆம்’.

‘நம்ப முடியவில்லையே?’

‘ஆனால் அதுதான் உண்மை என்று அவள் சொன்னாள். அவர் வாழ்விலும் அப்படியொரு ரகசியத் தொடர்பு இருந்ததே அவரை அப்படியொரு முடிவு எடுக்க வைத்திருக்கிறது’.

நான் எனக்குள் ஒடுங்கி அடங்கிப் போனேன். என்னால் இப்போது அனைத்தையும் விளங்கிக்கொள்ள முடிந்தது. மூட்டம் விலகிய வானம் போலாகிவிட்டது மனம். அம்மாவின் அக்கா புருஷன் ஏன் இவர்கள் குடும்பத்தோடு இருந்த உறவை முறித்துக்கொண்டு போயிருப்பான் என்ற வினாவுக்கு பதில் தெரிந்தது. அமெரிக்காவில் இருக்கும் அவளுடைய மகன் யாரென்றே கேசவன் மாமாவுக்குத் தெரியாதிருப்பதன் நியாயமும் புரிந்தது.

‘தனது சிரமம் புரிந்த ஒரு மாப்பிள்ளையை அம்மாவின் அப்பா தனது மகளுக்குத் தேடியிருக்கிறார். அவர் ஜாதகம் பார்க்கவில்லை. ஆனால் இதைக் கவனித்திருக்கிறார்’.

‘ஆனால் தன் மகள் வாழ்க்கை வீணாகிவிடுமே என்று ஒரு தந்தை நினைக்கமாட்டாரா?’

‘அது முடிந்து போன உறவு என்று அப்பா சொல்லியிருக்கிறார்’.

‘முடிந்ததன் மிச்சங்களைப் பற்றியுமா?’

வினோத் என்னை உற்றுப் பார்த்தான். ‘மாமா நம் குடும்பத்தைச் சேர்ந்தவரல்ல என்று அண்ணா சொன்னது எத்தனை சரி!’ என்று வியந்தான்.

‘அம்மா இதை அறிவாளா?’ என்று வினய் கேட்டான்.

‘மூச்சைப் பிடித்துக்கொள். அம்மாதான் பத்மா மாமியிடம் இதைச் சொல்லியிருக்கிறாள்’.

நான் அவன் கரங்களைப் பற்றிக்கொண்டேன். ‘நமக்கு இங்கே பெரிய வேலைகள் இல்லை வினோத். சொன்னேனே, ஒரு பார்வையாளனாக நீ நிறுத்தி நிதானமாக ஒரு மரணத்தை தரிசிக்கலாம். அதன் வெறுமைக்குள் தெரியும் கிருஷ்ணனை சேவிக்கலாம். கிருஷ்ணனேதான் பூரண வெறுமை என்பதை அப்போது நீ தரிசனமாக உணர்வாய்’.

‘என்ன சொல்கிறாய்?’

‘அம்மாவின் இறுதி ஆசை, தனக்குக் கேசவன் கொள்ளி வைக்க வேண்டும் என்பது’.

‘அப்படியா? சொன்னாளா?’

‘ஆம்’.

வினோத் திகைத்திருந்தான். அவனுக்குப் பேச்சு வரவில்லை. எழுந்து சென்று வாசலில் சிறிது நேரம் அமர்ந்திருந்தான். முற்றிலும் இருட்டி, வீதி கரேலென ஆகிவிட்டிருந்தது. வீதி விளக்குகள் ஏதும் வந்திருக்கவில்லை. ஒரு நாய் குரைத்தது. ‘சொரிமுத்துவா பார்’ என்று வினய் உள்ளிருந்து சத்தமிட்டான். வினோத் அதைக் கண்டுகொள்ளவில்லை. நான் வெளியே வந்து அவன் அருகே அமர்ந்தேன். ‘வேறென்ன சொன்னாள்?’ என்று கேட்டேன்.

‘தனக்கும் கேசவன் மாமாவே கொள்ளி வைப்பார்’ என்று சொன்னாள்.

‘நீ என்ன சொன்னாய்?’

‘வேண்டாம், உங்களை நான் கயாவுக்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன்’.

நான் திகைத்துப் போனேன்.

(தொடரும்)

https://www.dinamani.com/junction/yathi/2018/oct/26/160-கொள்ளி-எறும்பு-3026899.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

161. சமாதிகளைக் காத்தல்

இரவு நானும் வினோத்தும் வீட்டின் வெளித் தாழ்வாரத்தில் படுத்துக்கொண்டோம். ‘நீங்கள் தூங்குங்கள், நான் பிறகு வந்து படுக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு வினய் கிணற்றடிக்குப் போனான். அவன் கங்காதரனைப் பார்த்துவிட்டு வந்ததில் இருந்து சரியாக இல்லாததுபோல எனக்குத் தோன்றியது. வினோத்திடம் இதனைச் சொன்னேன். ‘அவன் இத்தனை பதற்றமாக அவசியமே இல்லையே?’ என்று கேட்டான். அவன் பதற்றத்தில் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் இயல்பாக இல்லை, அவ்வளவுதான் என்று சொன்னேன். அதற்கு மேல் வினோத் ஒன்றும் பேசவில்லை. தூங்க ஆரம்பித்திருந்தான் என்று தோன்றியது.

எனக்கு உறக்கம் வரவில்லை. எல்லாமே நான் எண்ணிய விதமாகத்தான் நடக்கும் என்று தோன்றியது. அண்ணா வரமாட்டான் என்று திரும்பத் திரும்ப நினைத்தேன். அம்மாவும் ஒருவேளை அதை ஊகித்திருப்பாள். அல்லது அண்ணாவே அவளிடம் தெரிவித்திருக்கக்கூடும். ஒரு பாதுகாப்பு கருதியே அவள் கேசவன் மாமா கொள்ளி வைக்கட்டும் என்று எங்களிடம் சொன்னதாகத் தோன்றியது. மாமாவானாலும் சரி; நாங்களானாலும் சரி. ரத்த சொந்தம் இல்லாத பட்சத்தில் இத்தனைக் காலம் உடன் இருந்து பார்த்துக்கொண்டவருக்குத் தன்னால் கொடுக்க முடிந்த ஒரே அங்கீகாரம் என்று அவள் கருதியிருக்கலாம். பதிலுக்குக் கடைசியாக எங்களுக்கென ஒரு சொல்லை அவள் சேமித்து வைத்திருக்கலாம். அதை ஒரு பொக்கிஷம்போலப் பாதுகாக்கச் சொல்லி எங்களிடம் அளிக்கலாம்.

நான் சிரித்துக்கொண்டேன். எனக்கும் கடைசிச் சொற்களுக்கும் அத்தனை நல்ல உறவு இருந்ததில்லை. என் குருநாதரின் கடைசிச் சொல்லை நான் தவிர்த்துவிட்டுத் தப்பிச் சென்றது நினைவுக்கு வந்தது. ஒரு முழு வாழ்வு தராத செய்தியை ஒற்றைச் சொல் தருமா? எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. குருநாதர் ஒரு நினைவு. அண்ணா ஒரு நினைவு. அம்மா ஒரு நினைவு. நூலகத்தில் அடுக்கிய புத்தகங்களைப்போல நினைவின் வரிசைப் பலகையில் தன் இடத்தைத் தேர்ந்தெடுத்துப் பொருத்திக்கொள்ளும் நினைவுகள். ஆனால் அவை சுமை ஆவதற்கு இடம் கொடுப்பதில்லை என்பதில் நான் தெளிவாக இருந்தேன். என் சுதந்திரம் என்பதே நான் மூட்டை சுமப்பதில்லை என்பதுதான். என் அகங்காரமே அதில்தான் வாழ்ந்துகொண்டிருந்தது.

ஆனால் இப்போது எண்ணிப் பார்த்தேன். அம்மாவின் கண்ணீர் மட்டுமே என்னை வீட்டை விட்டு வெளியேற வைத்தது. அண்ணா விட்டுச் சென்றபோதும் வினய் விட்டுச் சென்றபோதும் அவள் அழுத அழுகை இப்போதும் என் நினைவில் உள்ளது. அதைப் போலி என்று என்னால் எண்ணவே முடியாது. பாசத்தின் ஸ்தூல வடிவம் கண்ணீர் என்று அன்றைக்குச் சொற்களற்று உணர்ந்தேன். அம்மாவின் மொத்தக் கண்ணீரையும் ஒரு பெரிய பனிப்பாறையாக உருமாற்றித் தூக்கிச் சென்று கடலில் எறிந்துவிட மாட்டோமா என்று ஏங்கினேன். அது சாத்தியமில்லை என்று அறிவு தெளிவுபடுத்தியபோதுதான், மிச்சக் கண்ணீரையும் மொத்தமாக இறக்கிவைக்க என்னை நான் வெளியேற்றிக் கொண்டேன்.

இதோ அம்மா இப்போது என்னருகே இருக்கிறாள். அறைக்குள் உறங்குகிறாள். அல்லது உறங்குவதுபோலக் கிடக்கிறாள். அருகே போய் உட்காரலாம். அம்மா என்று அழைத்து ஏதாவது பேசலாம். அவள் பதில் சொல்வதும் சொல்லாது போவதும் அவள் விருப்பம். ஆனால் எனக்கு இறக்கிவைக்க என்னவாவது இருந்தால், அதனைச் செய்யத் தடையேதுமில்லை. அப்படி ஏதாவது இருக்கிறதா?

யோசித்துப் பார்த்தேன். ஒன்றுமில்லை என்றுதான் தோன்றியது. இந்த அம்மா அல்ல; எந்த அம்மாவுமே விரும்பக்கூடிய ஒரு வாழ்வை நான் வாழவில்லை. ஆனால் என் வாழ்வு என் விருப்பம். என்னிடம் பொய் இல்லை. திருட்டுத்தனமில்லை. நான் பணக்காரன் இல்லை. நான் ஏழையுமில்லை. எனது ஒரே அடையாளம், நான் சுதந்திரமானவன் என்பது. எனது சுதந்திரம், பாரதத்தில் இன்னொரு பிரஜை அனுபவித்தறியாதது. இது நானே விரும்பி உருவாக்கியது. இதற்கு வடிவம் கொடுத்ததுதான் என் வாழ்நாள் பணி. வாழ்நாள் சாதனை. கண்ணீரற்ற ஒரு மனிதனை உங்களால் கற்பனையில்கூடக் கண்டெடுக்க முடியாது. ஆனால் நான் அதுதான். நான் அப்படித்தான். என்னை கார்ப்பரேட் சன்னியாசி என்றும் அரசியல் புரோக்கர் என்றும் பெண் பித்தன் என்றும் சொல்வோர் உண்டு. ஆனால் இவை எதுவுமே நானல்ல. எதையும் என்னால் நினைத்த கணத்தில் உதற முடியும் என்பதே, இத்தனைக் காலமாக நான் மேற்கொண்டு வந்த பயிற்சிகள் எனக்களித்த துணிவு.

ஒரு சமயம், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் என்னிடம் ஓர் உதவி கேட்டு வந்தார். பெல்லாரி தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான ஒரு சிறு குன்று தனக்கு வேண்டுமென்று கேட்டு. ஏற்கெனவே வேறு பலர் மூலம் முயற்சி செய்து தோற்ற பின்புதான் அவர் என்னிடம் வந்திருந்தார். அதை என்னிடம் சொல்லவும் செய்தார். ‘எப்படியாவது எனக்கு அந்தக் குன்று வேண்டும், உதவுங்கள்’ என்று கேட்டார். அங்கே அவர் என்ன செய்யப்போகிறார் என்று நான் கேட்டேன். ஒரு வீடு கட்டிக்கொண்டு வசிக்கப்போகிறேன் என்று சொன்னார். பெரும் பணக்காரர்களுக்கு இம்மாதிரி விநோதமான விருப்பங்கள் வருவது எளிய விஷயம். நிறையப் பார்த்திருக்கிறேன். அதனால் பெரிதாக வியப்பை வெளிப்படுத்தாமல், ‘முயற்சி செய்கிறேன்’ என்று சொல்லி அனுப்பிவைத்தேன்.

அந்த பெல்லாரி தொழிலதிபரை எனக்கு நேரடியாகத் தெரியாது. எனக்குத் தெரிந்த இன்னொரு கர்நாடக அரசியல் நண்பர் மூலம் அவரைத் தொடர்புகொண்டு விசாரித்தேன். பரம்பரைப் பணக்காரரான அந்த மனிதரின் மிக நெருங்கிய உறவுகள் சிலரின் சமாதி அந்தக் குன்றில் இருந்தது. அவர் அந்தக் குன்று முழுதும் பாத்தி கட்டி காப்பி பயிரிட்டிருந்தார். விளைச்சலைத் தனது தாயின் சமாதி முன் கொண்டு குவித்து ஒரு படையல் போட்டு அதன்பின் காப்பி போர்டுக்கு அனுப்பிவைப்பது தனது வழக்கம் என்று சொன்னார். நான் அவரிடம் ஒன்று மட்டும் கேட்டேன். ‘உங்களுக்குக் காப்பி பயிர் முக்கியமா? அல்லது அந்த சமாதி முக்கியமா?’

‘நான் தோட்டத்தை விற்கத் தயாராக இருக்கிறேன். அவர் சமாதிகளை அழிக்கமாட்டேன் என்று உத்தரவாதம் தர வேண்டும்’ என்று அவர் சொன்னார். அரசியல்வாதிகளுடன் முட்டல் மோதல் இல்லாதிருக்க வேண்டும் என்ற எளிய வியாபாரப் பாடம்கூட அறியாமலா அவரால் அத்தனை பெரிய தொழிலதிபராக விளங்க முடியும்?

எனக்கு அவர் கேட்டது நியாயமாகப் பட்டது. என்னைத் தொடர்புகொண்ட மகாராஷ்டிர அரசியல்வாதியிடம் விஷயத்தைச் சொல்லி, சம்மதமா என்று கேட்டேன்.

‘சமாதியாவது ஒன்றாவது? அவன் அங்கே கஞ்சா பயிரிட்டுக்கொண்டிருக்கிறான். விடுகிறானா இல்லையா கேளுங்கள். இல்லாவிட்டால் தீர்த்துவிடுகிறேன்’ என்று சொன்னார்.

நான் அமைதியாகத் திரும்பிச் சென்றேன். அந்தக் குன்றுக்கு விரைவில் ஒரு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒரு நாளெல்லாம் அங்கே சுற்றி வந்தேன். தொழிலதிபர் சொன்னது உண்மைதான். அங்கே ஆறு சமாதிகள் இருந்தன. ஆறும் அருகருகே இல்லை. வேறு வேறு இடங்களில் இருந்தன. ஒழுங்காகப் பராமரிக்கப்பட்டு வந்த சமாதிகள். அவருடைய தாயார் தந்தையார், பாட்டனார், இன்னும் ஒன்றிரண்டு உறவுகளின் சமாதிகள். அவற்றை நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, ஶ்ரீரங்கப்பட்டணத்தில் எனக்கு அறிமுகமான பழைய கன்னட நடிகரும் அரசியல்வாதியுமான நண்பர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். மெக்ஸிகோ ஆயுதத் தயாரிப்பு முதலீட்டின் மூலம் அந்த வருடம் அவருக்கு வந்திருந்த லாபப் பணம் இரண்டு பொதுத் தேர்தல்களுக்குப் போதுமானது என்று மிகவும் சந்தோஷமாகச் சொன்னார். எனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும்; என்ன வேண்டும் என்றும் கேட்டார்.

அதே மாதம் அதே தேதி, அதே திதியில் அடுத்த ஆண்டு அந்த மகாராஷ்டிர அரசியல்வாதிக்கு அவரது மகன் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு ஊர் போய்ச் சேர்ந்தேன். இது எனக்குத் தேவையா, எந்த விதத்தில் அவரது மரணம் எனக்கு அவசியம், இதன் பாவ புண்ணியம் என்ன, லாப நட்டங்கள் என்னென்ன - எதைப் பற்றியும் நான் சிறிதும் கவலை கொள்ளவில்லை. மீண்டும் அந்த பெல்லாரி தொழிலதிபரைச் சந்திக்கும் அவசியம்கூட எனக்கு ஏற்படவில்லை. இன்றுவரை சந்திக்கவும் இல்லை. ஆனாலும் அன்று நான் அதனைச் செய்தேன். அது அவருக்காகவா வேறு எதற்காக என்றால் என்னால் பதில் சொல்ல இயலாது. சொல்ல விரும்பமாட்டேன் என்று பொருள். ஆனால் நான் அதுதான். லாப நட்டங்களல்ல. எண்ணியது எண்ணிய விதமாக நடந்தேறுகிறதா என்பதே முக்கியம். என் ரேகையே இல்லாமல் உலகெங்கும் என் கரங்களை நான் பதித்துக்கொண்டிருந்தேன். சிலரது கண்ணீரைத் துடைப்பதற்கும் சிலருக்குக் கண்ணீர் வரவழைக்கவும். என் கண்களில் இல்லாதது அது.

நள்ளிரவு இரண்டு மணிக்கு, வினய் பின்புறக் கதவை சாத்திவிட்டு எழுந்து வந்தான். தாழ்வாரத்தில் வினோத் உறங்குவதையும் நான் உட்கார்ந்திருப்பதையும் கண்டவன், என்னருகே வந்து அமர்ந்தான். நான் புன்னகை செய்தேன்.

‘இன்னும் ஒரே நாள்’ என்று சொன்னேன்.

‘ஆம். நாளை இந்நேரம் அம்மாவைக் கிடத்திவிட்டு நாம் அருகே அமர்ந்துகொண்டிருப்போம்’.

‘மாமா அழுதுகொண்டிருப்பார்’.

‘ஆம். அதை நாம் சகித்துக்கொண்டுதான் தீர வேண்டும்’.

‘எனக்கு அழுகை வராது வினய். நீயும் அழமாட்டாய் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் வினோத் விஷயத்தில் என்னால் அவ்வளவு உறுதியாகச் சொல்ல முடியவில்லை’.

‘அழுகை ஒரு வியர்த்தம்’.

‘ஆனால் சித்தம் அதை சில சமயங்களில் மறந்துவிடுகிறது. பசியெடுப்பதாக நினைக்கிறதல்லவா? அதைப்போல’.

அவன் சிரித்தான். ‘ஒரு விஷயம் உன்னிடம் சொல்ல வேண்டும்’ என்று சொன்னான்.

‘சொல்’.

‘அந்த வைத்தியர் சாமி நம் நான்கு பேரில் யாரையோ கொலை செய்யத் தீர்மானித்திருக்கிறார் என்று நினைக்கிறேன்’.

‘அப்படியா?’

‘அப்படித்தான் தோன்றுகிறது’.

‘அவர் சொரிமுத்துவுக்குத் தெரிந்தவர் என்றாயே? சொரிமுத்து ஒன்றும் சொல்லவில்லையே’.

‘சொரிமுத்துவுக்குத் தெரியாமல் திட்டமிட்டிருக்கலாம். வேறு நோக்கம், வேறு காரணம் இருக்கலாம்’.

‘அவருக்கும் இந்த வீட்டுக்கும் என்ன சம்மந்தம்? அல்லது அவருக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்?’

‘நமக்கும் இந்த வீட்டுக்குமே சம்மந்தமில்லை. உனக்கும் எனக்குமே சம்மந்தமில்லை. இதையெல்லாம் யாருக்குச் சொல்வது? ஆனால் கிழவன் ஏதோ காரணம் வைத்திருக்கிறான் என்று தோன்றுகிறது. நான் சிறிது வெளியே போய்விட்டு வருகிறேன்’ என்று வினய் சொன்னான்.

‘நீலாங்கரைக்கா?’

‘இல்லை. இங்கேயேதான். கடற்கரைக்கு’.

‘எதற்கு?’

‘இப்போது நான் சித்ராவை சந்திக்க விரும்புகிறேன்’ என்று சொல்லிவிட்டு அவன் கிளம்பிச் சென்றான்.

(தொடரும்)

 

https://www.dinamani.com/junction/yathi/2018/oct/29/161-சமாதிகளைக்-காத்தல்-3028829.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

162. கண்ணீரின் குழந்தை

பொழுது விடிவதற்கு முன்பே கேசவன் மாமா எழுந்துவிட்டார். பழக்கம் போலிருக்கிறது. பரபரவென்று பாலைக் காய்ச்சி, காப்பி போட்டு வைத்துவிட்டு எங்களை வந்து எழுப்பினார். வினோத் எழுந்ததுமே, ‘வினய் எங்கே?’ என்றுதான் கேட்டான்.

‘அவன் தன் கேர்ள் ஃப்ரெண்டைப் பார்க்கப் போயிருக்கிறான். வந்துவிடுவான்’ என்று சொன்னேன். ஏழு மணிக்கு வினய் வந்தான். ஓடி வந்தவனைப்போல மூச்சு வாங்க நின்றான். சிரித்தான்.

‘என்ன?’ என்று கேட்டேன்.

‘என்னைப் பேய்களுக்கெல்லாம் பிடிக்கிறது. இந்த ஊர் நாய்களுக்குத்தான் பிடிக்கவில்லை. பார்த்தாலே குரைத்தபடி துரத்த ஆரம்பித்துவிடுகின்றன’ என்று சொன்னான்.

‘ஓடியா வந்தாய்?’ என்று வினோத் கேட்டான்.

‘ஆமாம். கடற்கரைச் சாலையில் இருந்து கோயிலடி வரை மூன்று நாய்களைச் சமாளித்து வந்திருக்கிறேன்’.

‘பெரிய பராக்கிரமம்தான்’.

‘நாய் துரத்தினால் ஓடக் கூடாது’ என்று வினோத் சொன்னான்.

‘பிறகு?’

‘திரும்பி நின்று முறைத்தால் அது நகர்ந்துவிடும்’.

வினய் சிரித்தான். ‘துரத்த வேண்டும் என்று அது விரும்பும்போது அதை நாம் ஏன் தடுக்க வேண்டும்? காலை நேரத்தில் சிறிது ஓடினால் எனக்கும் நல்லதுதானே?’

மாமா எங்களுக்குக் காப்பி எடுத்துவந்து கொடுத்தார். ‘இன்னிக்குத்தானா?’ என்று மூவரையும் பொதுவாகப் பார்த்துக் கேட்டார்.

‘அப்படித்தான் அண்ணா சொன்னான்’.

சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, ‘சரி, பகவான் சித்தம்’ என்று சொல்லிவிட்டு உள்ளே போனார்.

நான் வினய்யிடம், ‘போன காரியம் என்னவாயிற்று?’ என்று கேட்டேன்.

‘எனக்கென்னவோ சித்ராதான் அந்த வைத்தியர் சாமியை எனக்கு மாற்றாகத் தயாரித்து வைத்திருப்பாளோ என்று சந்தேகமாக இருக்கிறது’ என்று சொன்னான்.

‘அப்படியென்றால்? நீ அவளைப் பார்த்தாயா? அதைச் சொல் முதலில்’.

‘பார்த்தேன்’.

‘என்ன சொன்னாள்?’

‘என்ன முடிவு செய்திருக்கிறாய் என்று கேட்டாள்’.

‘சரி’.

‘இதில் நான் முடிவெடுக்க என்ன உள்ளது? கொலை எனது தருமமல்ல என்று சொன்னேன்’.

‘அதற்கு என்ன சொன்னாள்?’

‘உன்னுடைய எந்த தருமம் உனக்கு நீ கேட்டதைச் செய்து கொடுத்திருக்கிறது; இந்த முறை நான் சொல்வதைச் செய், நீ நினைத்தது நடக்கும் என்றாள். கொஞ்சம் மிரட்டல் தொனி இருந்தது இம்முறை’.

‘அடடே? இது நன்றாக உள்ளதே. சரி நீ என்ன சொன்னாய் அதற்கு?’

வினய் பதில் சொல்வதற்குள் வினோத் அவனைத் தடுத்தான். ‘நான் அவளைச் சந்திக்க வேண்டும். உன்னால் ஏற்பாடு செய்ய முடியுமா?’ என்று கேட்டான். ஒரு கணம் யோசித்துவிட்டு, ‘முடியாது என்று நினைக்கிறேன்’ என்று வினய் சொன்னான்.

‘ஏன்?’

‘அவள் உன்னை நேரில் சந்திக்க நினைத்திருந்தால் என்னை அணுகியிருக்க அவசியமில்லை. உன்னைத் தூக்கிப்போய் தோப்புக்குள் வைத்துப் பேசியிருக்கலாம், அல்லது ரத்தத்தை உறிஞ்சி உன்னைக் கடலில் வீசியிருக்கலாம்’.

‘பேய் அதெல்லாம் செய்யுமா?’

‘அவள் வெறும் பேயா? பெரிய தபஸ்வினி’ என்று சொல்லிவிட்டு வினய் சிரித்தான்.

‘சிரிக்காதே. எனக்கு அவளைச் சந்திக்க வேண்டும்’.

‘வேண்டாம் வினோத். உனது சன்னியாச ஆசிரமம் ஒரு ஒழுங்கான வடிவில் கட்டமைக்கப்பட்டது. நீ புனிதங்களை நம்புகிறவன். கிருஷ்ணனை நம்புகிறவன். கடமைகளைக் கொண்டாட்டமாக்கி, கொண்டாட்டங்களை மோட்சமாக்க நினைப்பவன். அவள் கண்ணீரின் குழந்தையாகப் பிறந்து, உனது கோர மரணத்தைத் தனது தியானப் பொருளாகக் கொண்டவள்’.

‘இரு. அவளால் நேரடியாக இவனைத் தீர்த்துக்கட்ட முடியாதா?’ என்று கேட்டேன்.

‘தெரியவில்லை. சொன்னானே நாமஜெபம். அது ஒரு கவசமாக இவனைச் சுற்றி நின்று அவளை நெருங்கவிடாமல் இருக்கலாம்’ என்று வினய் சொன்னான். வினோத் சட்டென்று அவன் கையைப் பிடித்து, ‘தயவுசெய்து இன்னொரு முறை நீ அதை முயற்சி செய்ய வேண்டும் வினய்’ என்று கேட்டுக்கொண்டான். வினய் புன்னகை செய்தான். ஆனால் பதில் சொல்லவில்லை.

ஒன்பது மணிக்கு மாமா எங்கள் மூவரையும் கூப்பிட்டு உட்காரவைத்து, தனக்கு மிகவும் பதற்றமாக இருப்பதாகச் சொன்னார். இதில் பதற என்ன உள்ளது? அம்மா நிறை வாழ்வு வாழ்ந்தவள். போகத்தானே வேண்டும்? இதை நான் நினைவூட்டியபோது ‘புரியறது. ஆனாலும் பதட்டமாத்தான் இருக்கு’ என்று சொன்னார். ‘வாத்யாருக்கு சொல்லணுமேடா. இந்த ஊர்ல அந்த மாதிரி வாத்யார் யாருமில்லியே? நாவலூர்ல ஒருத்தர் இருக்கார்னு நினைக்கறேன். ஆனா அவர் என்ன வேதம்னு சரியா தெரியலே’ என்றார்.

வினய் சிரித்தான். ‘விடுங்கோ மாமா. நான் பாத்துக்கறேன்’ என்று சொன்னான்.

‘உனக்குத் தெரியுமா?’

‘தெரியும்’.

‘என்ன தெரியும்?’

‘அனுப்பி வெக்கற மந்திரம்தானே? அதெல்லாம் சொல்லிடலாம்’.

‘சீ. நீ பிள்ளை. நீ அதெல்லாம் பண்ண முடியாது’.

‘ஏன்? கொள்ளி வெக்கப்போறவன் வேற. நான் சும்மாத்தானே இருக்கப் போறேன்? நீங்க ஆசைப்படற மந்திரத்தை நானே சொல்லி நடத்தி வெச்சிடறேன்’.

‘அதெல்லாம் தப்பு’ என்று மாமா சொன்னார்.

‘தப்பான ஒன்றை இன்னொருவரை வைத்துச் செய்வது மட்டும் சரியா?’ என்று நான் கேட்டேன்.

‘டேய் நான் அந்த அர்த்தத்துல சொல்லலேடா. இவன் சொல்லப்படாதுன்னேன்’.

வினோத் வினய்க்குக் கண் காட்டினான். போதும் என்று ஜாடை செய்தான். அதன்பின் வினய் அந்தப் பேச்சை எடுக்கவில்லை.

மாமா டெலிபோன் டைரக்டரியை எடுத்து வந்து வைத்துக்கொண்டு மயானத்தின் எண்ணைத் தேடி எடுத்துக் குறித்துக்கொண்டார். ‘என்ன அவசரம்?’ என்று கேட்டேன். ‘நாளைக்குக் கார்த்தால தேடிண்டிருக்க முடியாதே’ என்று சொன்னார். எனக்கு சிரிப்பு வந்தது. ‘விடுங்கோ. அண்ணாட்ட சொல்லி வேணும்னா ரெண்டு மூணு நாளைக்குத் தள்ளிப் போடச் சொல்லிடலாம்’ என்றேன்.

‘அப்படியெல்லாம் முடியுமான்ன?’

‘யார் கண்டா? அவன் பெரிய யோகின்னு இவா ரெண்டு பேரும் சொல்றா. பண்ணாலும் பண்ணிடுவான்’.

‘இவா ரெண்டு பேரும் சொல்றான்னா என்ன அர்த்தம்? நீ ஒத்துக்கலியோ?’

‘எனக்கு அவனைப் பற்றி எதுவும் தெரியாது மாமா’ என்று சொன்னேன்.

‘எப்போ கடேசியா பாத்தே?’

‘அவன் வீட்டை விட்டுக் கிளம்பிய தினத்துக்கு முதல் நாள் இரவு’.

‘அவனும் ஒன்னை வந்து பார்க்கவேயில்லியா?’

‘அவசியப்பட்டிருக்காது’.

‘அதைவிடு. ஒனக்கு அவனைப் பார்க்கணும்னு தோணித்தா இல்லியா?’

‘ஓ. ரொம்ப ஆசைப்பட்டேன். அவ்வளவு ஏன்? ரயிலில் வரும்போது வினய்யைப் பார்த்ததும் எப்படிப் பரவசமானேன் என்று அவனையே கேட்டுப் பாருங்கள். இங்கே வந்து இறங்கிய இடத்தில் வினோத்தைக் கண்டதும்கூட அதே பரவசம்தான்’.

‘ஆக, பாசம் இருக்கு உனக்கு!’ மாமா என்னை வளைத்துவிட்டதை நினைத்து சந்தோஷப்பட்டார்.

‘அதில் என்ன சந்தேகம்? நான் எதையும் வெறுத்துத் துறவியாகவில்லையே?’

‘அப்பறம்?’

அவருக்கு என்ன சொல்லிப் புரியவைப்பதென்று எனக்குத் தெரியவில்லை. அன்புள்ள மாமா, என் அன்பின் அபரிமிதத்தைத் தாங்கும் சக்தி இந்த உலகில் உள்ள உயிர்களுக்கு இல்லை. அதனால் விலகிச் சென்று நிற்கிறேன். இது உங்களுக்குப் புரியுமா?

மாமா எழுந்து அம்மாவின் அறைக்குப் போனார். வினய் அதற்குக் காத்திருந்தாற்போல வினோத்திடம், ‘நாளை அவளை எரித்த கையோடு நீ கிளம்பிவிடு’ என்று சொன்னான்.

‘அதற்குமேல் நமக்கென்ன வேலை இங்கே? கிளம்பத்தான் வேண்டும்’.

‘இல்லை. தாமதம் வேண்டாம் என்று சொன்னேன்’.

எனக்கு அவனது அச்சம் விநோதமாக இருந்தது. உறவற்றவனுக்கு இவ்வளவு அக்கறை இருக்குமா என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் ரகசியமாக அவன் மனத்துக்குள் பாசத்தின் பிசுபிசுப்பு ஒட்டிக்கொண்டிருக்கும் என்று என்னால் எண்ண முடியவில்லை. ‘அவன் உனக்காகச் சொல்லவில்லை என்பதைப் புரிந்துகொள்’ என்று வினோத்திடம் சொன்னேன். ‘சித்ரா இன்னும் பல காலம் பேயாகவே சந்தோஷமாக வாழ வேண்டும் என்று அவன் விரும்புகிறான்’.

இதைச் சொன்னதும், வினய் வாய்விட்டு உரக்கச் சிரித்தான். சட்டென்று வினோத் என் கரங்களைப் பிடித்துக்கொண்டான். ‘நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன்’ என்று சொன்னான்.

‘என்ன முடிவு?’

‘அம்மா காரியம் முடிந்ததும் நான் பத்மா மாமியை என்னோடு அழைத்துச் செல்லப் போகிறேன்’.

‘எங்கே?’

‘வாரணாசிக்கு. அப்படித்தான் அவளிடம் வாக்களித்திருக்கிறேன்’.

‘ஐயோ. ஏன்?’

‘தெரியவில்லை. அது எம்பெருமான் சித்தம். என்னை அப்படிச் சொல்லவைத்தான். கோயில் வாசலில் அவள் பிராணனை விட முடிவு செய்து வந்து உட்கார்ந்தாள். அதைக் காட்டிலும், கயாவுக்குச் சென்று இறப்பது உசிதம் என்று ஆசை காட்டி அவளை எழுப்பி வீட்டுக்கு அனுப்பிவிட்டு வந்தேன்’.

‘வேண்டாத வேலை’ என்று வினய் சொன்னான்.

‘இல்லை வினய். எனக்கு அவளைப் பார்க்கப் பாவமாக இருக்கிறது. சித்ராவாவது இறந்தபின் பேயாக அலைகிறாள். இவள் இருக்கும்போதே பேய் அலைச்சல் அலைகிறாள். இரு அலைச்சல்களுக்கும் நான் காரணமாக இருந்தவன். இந்த உறுத்தல் என்னை விட்டு விலகினால்தான் என் கிருஷ்ணனை நான் காண்பேன்’.

‘அதனால்?’

'பத்மா மாமி இறக்கும்வரை அவளுடன்கூட நான் இருக்கப்போகிறேன். முடிந்ததை சமைத்துப் போட்டுக்கொண்டு, அவள் புடைவை துணிமணி துவைத்துப் போட்டுக்கொண்டு, தினமும் கீதை படித்துக் காட்டிக்கொண்டு..’

‘உனக்கென்ன பைத்தியமா?’ வினய்க்குக் கோபம் வந்தது.

‘இருக்கலாம் வினய்’.

‘இதை நீ வீட்டோடு இருந்து அம்மாவுக்குச் செய்திருக்கலாம்’.

‘இப்போது மட்டும் என்ன? ஆள்தான் வேறு. அவளும் அம்மாதானே?’

நான் வினய்யை அமைதிப்படுத்திவிட்டு வினோத்திடம், ‘உள்ளே போய் அம்மாவிடம் இதனைச் சொல். ரொம்ப சந்தோஷப்படுவாள்’ என்று சொன்னேன். அவன் எழுந்து அம்மாவின் அறைக்குள் சென்றான். அங்கே அம்மாவுக்குப் புடைவை மாற்றிவிட்டுக்கொண்டிருந்த மாமாவை வெளியே அனுப்பிவிட்டுக் கதவை மூடிக்கொண்டான். சிறிது நேரம் கழித்து வெளியே வந்தான்.

‘என்ன, சொல்லிவிட்டாயா?’

‘ஆம். சொன்னேன்’.

‘பதில் சொன்னாளா?’

‘இல்லை’.

‘சரி பரவாயில்லை. எப்படியும் காதில் விழுந்திருக்கும். அது போதும்’ என்று சொன்னேன்.

‘விமல், நீ இதை ஆதரிக்கிறாயா?’ என்று வினய் என்னைக் கேட்டான்.

‘சந்தேகமில்லாமல்! இதிலென்ன தவறு?’

‘இது ஒரு முட்டாள்த்தனம். அவன் ஒரு சன்யாசி. அவனுக்கு இது தேவையற்ற வேலை’.

‘ஆனால் கடமை என்று நினைக்கிறானே. நீதானே சொன்னாய்? அவன் கடமைகளைக் கொண்டாட்டமாக்கிக்கொள்கிறவன் என்று? இதையும் அப்படி நினைத்துக்கொண்டால் போயிற்று’.

அவன் ஏதோ சொல்ல வாயெடுத்தபோது, கேசவன் மாமா வேகமாக அருகே வந்தார். ‘டேய், உங்கண்ணன இன்னும் காணமேடா?’ என்றார்.

‘வருவான் மாமா. என்ன அவசரம்?’

‘வந்துடுவானோல்யோ?’

‘வருவான்’ என்று வினோத்தும் சொன்னான்.

‘அப்ப சரி’ என்று நகர்ந்துபோனார். இன்றைய பொழுது முழுவதையும் அவர் இத்தகைய வினாக்களுடனேயே கழிப்பார் என்று தோன்றியது. அண்ணா வருவானா? வாத்தியார் கிடைப்பாரா? மயானத்தின் தொலைபேசி எண் சரியானதாக இருக்குமா? நான் சிரித்தேன். மாமா மீண்டும் ஒருமுறை அருகே வந்து, ‘ஏண்டா, எரிச்சுட்டுப் போயிடுவேளா, இல்லேன்னா சுபம் வரைக்கும் இருப்பேளா?’ என்று கேட்டார். விட்டால், வருஷாப்திகம் வரை இருந்துவிட்டுப் போகச் சொல்லுவார் என்று தோன்றியது.

அவருக்கு என்ன பதில் சொல்லலாம் என்று நான் யோசித்தேன். வினோத் ஏதோ சொல்ல வாயெடுத்தபோது, வினய் அவனைத் தடுத்தான்.

‘மயானத்துலேருந்து நேரா போயிடுவேன் மாமா’ என்று சொன்னான்.

அவர் அதிர்ந்துவிட்டார். ‘ஏண்டா நீ?’

‘நானும்தான் மாமா’.

‘விமல் நீயாவது இருக்கமாட்டியாடா?’

‘மன்னித்துவிடுங்கள்’ என்று சொன்னேன். அவருக்குப் பேச்சு வரவில்லை. எங்களை அப்படியே பார்த்தபடி வெகுநேரம் நின்றிருந்தார். அவர் கண்களில் இருந்து கரகரவென நீர் வழிந்துகொண்டிருந்தது.

‘அம்மாடா!’ என்று சொன்னார்.

அதிலென்ன சந்தேகம்?

(தொடரும்)

 

https://www.dinamani.com/junction/yathi/2018/oct/30/162-கண்ணீரின்-குழந்தை-3029442.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

163. புன்னகை

இருட்ட ஆரம்பித்துவிட்டது. வினய் வாசலுக்குப் போய் உட்கார்ந்துகொண்டான். நானும் வினோத்தும் ஆளுக்கொரு பக்கம் பிடித்து அம்மாவின் கட்டிலை அம்மாவோடு சேர்த்துத் தூக்கிக் கொண்டுவந்து கூடத்தில் வைத்தோம்.

‘ஐயோ ஏண்டா இப்பவே?’ என்று கேசவன் மாமா அலறினார்.

‘பரவாயில்லை மாமா. சிறிது நேரம் அவளோடு இருக்கலாம்’ என்று வினோத் சொன்னான். நாங்கள் மூவரும் அம்மாவின் அருகே அமர்ந்துகொண்டோம். அவள் கண்ணைத் திறக்கவேயில்லை. ஆனால் நினைவோடுதான் இருப்பாள் என்று எனக்குத் தோன்றியது.

‘அக்கா, எதாவது பேசேன்க்கா?’ என்று மாமா கேட்டார். எனக்கு அவரைப் பார்க்கத்தான் பரிதாபமாக இருந்தது. உண்மையிலேயே அம்மா போய்விட்ட பின்பு அவர் என்ன செய்வார்? அம்மாவை ஒரு சாக்காக வைத்துத்தான் அவர் இத்தனைக் காலம் உலவிக்கொண்டிருக்கிறார் என்று நினைத்தேன். தன் வாழ்வின் சாரமாக வேறெதனைச் சொல்ல முடியும் அவரால்?

நான் மாமாவிடமே இதைக் கேட்டேன். சிறிது யோசித்துவிட்டு, ‘ஒரு விதத்துல உண்மைதான். அவளுக்காகத்தான் இருக்கேன். அவ போயிட்டா நானும் சீக்கிரம் போயிடுவேன்’ என்று சொன்னார்.

‘எங்கள பத்தி நீங்க அம்மாட்ட பேசியிருக்கேளா எப்பவாவது?’ என்று வினோத் கேட்டான்.

‘பேசாத நாள் ஏதுடா? இன்னியவரைக்கும் ஆறலியே. எந்தக் கழிச்சல்ல போறவன் உங்க தலைவிதிய எழுதினானோ அவன் நாசமா போவான்னு கோயில் வாசல்ல நின்னு மண்ண வாரி தூத்தியிருக்கேன்’.

‘நான் அதைக் கேக்கலே. நீங்க அப்படித்தான் சொல்வேள். அது தெரியும். அம்மா என்ன சொல்லுவா?’

‘என் புலம்பல கேட்டுப்பா. விடுடா, எங்க இருந்தாலும் நன்னா இருக்கட்டும்னு சொல்லிடுவா. அவ வேற என்ன சொல்ல முடியும்? ஆனா எனக்கென்ன வருத்தம் தெரியுமா? ஓடிப் போனேளே நாலு பேரும். நாலுல ஒருத்தனாவது குண்டா மேளத்துக்கு உறை போட்ட மாதிரி ஒரு வடக்கத்திக்காரியையோ கிறிஸ்துவச்சியையோ, துலுக்கச்சியையோ இவதான் என் பொண்டாட்டின்னு சொல்லி இழுத்துண்டு வந்து நிப்பேள்னு பைத்தியம் மாதிரி ரொம்ப காலம் நினைச்சு, எதிர்பார்த்துண்டிருந்தேன். பாழாப்போன சன்யாசத்துக்கு பலியாயிட்டேளேடா’.

நான் புன்னகை செய்தேன். அவர் கையைப் பிடித்துக்கொண்டு, ‘மாமி செத்துப்போய் எவ்ளோ வருஷமாறது மாமா?’ என்று கேட்டேன்.

‘எதுக்கு கேக்கறே? அது ஆயிடுத்தே ரொம்ப வருஷம்?’

‘என்னோட அஞ்சு வயசுல மாமி போனான்னு நினைக்கறேன்’.

‘இருக்கும். ஆமா. அப்போதான்’.

‘அறுவது வருஷமா நீங்க எப்படி இருக்கேள்? ஒண்டிக்கட்டையாத்தானே?’

‘ஆனா பாசத்த அறுத்துட்டு இல்லியேடா! பொண்டாட்டி குடும்பம் குட்டின்னுதான் எனக்கு இல்லே. அக்கா இருந்தாளே. அத்திம்பேர் இருந்தாரே. நீங்கள்ளாம் இருந்தேளே’.

‘சன்யாசிக்கும் குடும்பஸ்தனுக்கும் அதான் மாமா வித்தியாசம். குடும்பம் இல்லேன்னாலும் உங்களுக்குப் பாசம் இருக்கும். எங்களுக்கு உலகமே குடும்பமா இருக்கும். ஆனா பாசம் இருக்காது. அவ்ளோதான்’.

அவருக்கு ஏதோ புரிந்தாற்போலத் தெரிந்தது. ‘தானா அதெல்லாம் இல்லாம போயிடும் போலருக்கு’.

‘சில பேருக்கு’.

‘எப்படிடா அது நடக்கறது? பொறக்கறப்பவே கூட வர்றது இல்லியா அதெல்லாம்?’

‘இல்லே மாமா. வலிய எடுத்து ஒட்டிக்கறது. அழகா இருக்கும்னு நினைச்சிண்டு கண்ணராவியா லிப்ஸ்டிக் போட்டுக்கறாளே சிலபேர், அந்த மாதிரி’.

‘ஆனா பாசத்த அக்கா ஒரு யோகமா பண்ணாளேடா! ஒரு தபஸ்வினியாட்டம் இருந்தாளேடா. நீங்க பாட்டுக்கு விட்டுட்டுப் போயிட்டேள். உங்க ஒவ்வொருத்தர் பொறந்த நாளுக்கும் ஒரு வருஷம் தவறாம கோயில்ல தளிகை விட்டா. உங்க பேர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை பண்ணா. கோயில் வாசல்ல இருக்கற பிச்சைக்காரா அத்தன பேருக்கும் வருஷத்துல நாலு நாள் வாழையிலை போட்டு வடை திருக்கண்ணமுதோட சாதம் போட்டா. ஒண்ணும் பண்ணாத பிள்ளைகள் மேல எங்கேருந்துடா அந்தப் பாசம் வரும்? லிப்ஸ்டிக்கா அது? ரத்தம்டா! நெஞ்சுலேருந்து விழற துளி’.

மாமா மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தார். நான் படுத்திருக்கும் அம்மாவைப் பார்த்தேன். இதற்காவது அவள் கண்ணைத் திறக்கமாட்டாளா என்று எதிர்பார்த்தேன். நடக்கவில்லை. வினோத்துக்கும் அந்த ஏமாற்றம் இருந்ததாகவே தெரிந்தது. ஒரு கணம் யோசித்துவிட்டு நான் மாமாவிடம் கேட்டேன், ‘நான் என்ன நட்சத்திரம்?’

அவர் யோசித்துவிட்டு, ‘அப்ப அதெல்லாம் யோசிக்கத் துப்பில்லே. இப்ப தோணறது. சொல்லிவெச்ச மாதிரி நீங்க நாலு பேரும் ஒரே நட்சத்திரம். விசாகம்’ என்று சொன்னார்.

‘நீங்களும் அதானே?’ என்று வினோத் கேட்டான். சிறிது யோசித்தவர், ‘தெரியலே. என்னிக்குமே பொறந்த நாள் கொண்டாடினதில்லே’ என்று மாமா சொன்னார்.

‘அம்மா கொண்டாடியிருப்பாளே’.

‘ம்ஹும். மறந்தே போயிட்டேன், போனமாசம் உன் பொறந்தாள் வந்துட்டுப் போயிடுத்துடான்னுவா. சரி போ என்ன இப்போன்னு சும்மா இருந்துடுவேன்’.

‘ஆச்சரியமா இருக்கே? மாமி இருந்தப்போகூடவா கொண்டாடினதில்லே?’

‘இல்லே’ என்று சொன்னார். ‘அவ இருந்த வரைக்கும் அவளுக்காக இருந்தேன். அப்பறம் உங்க எல்லாருக்காகவும் இருந்தேன். நீங்கள்ளாம் போனப்பறம் அக்காவுக்காகவும் அத்திம்பேருக்காகவும் கொஞ்ச காலம். அவரும் போனப்பறம் அக்காதான் எல்லாமே’.

கேட்க வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் கேட்டுவிடுவதே நல்லது என்று தோன்றியது. மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு, ‘நாளையில் இருந்து?’ என்று கேட்டேன்.

மாமா யோசிக்கவேயில்லை. சட்டென்று புன்னகை செய்தார். ‘என்னமோ மனசுல ஒரு எண்ணம் தோணித்து. நீங்க மூணு பேரும் ரொம்ப எதிர்பார்த்துண்டு வந்திருக்கேள். உங்கண்ணன் இன்னும் வரலேன்னாலும் அவனும் அம்மா போயிடுவான்னு நினைச்சுண்டுதான் வரப்போறான். ஒனக்கும் பெப்பே, உங்க அத்தன பேருக்கும் பெப்பேன்னு சொல்லிண்டு அக்கா எழுந்து உக்காந்துட்டான்னா?’

நான் அப்படியே அவரைக் கட்டித் தழுவிக்கொண்டேன். இதற்குமேல் இம்மனிதரைத் துன்புறுத்துவது தகாது என்று தோன்றியது. சன்யாசம் ஒரு தருமம் என்றால் பாசம் ஒரு தருமம். உயர்வென்ன தாழ்வென்ன.

வினய் உள்ளே வந்தான். ‘என்னடா அவன் இன்னும் வரலியா?’ என்று கேசவன் மாமா கேட்டார். அவன் இல்லை என்று தலையசைத்தான்.

‘கவலைப்படாதிங்கோ. எப்படியும் வந்துடுவான்’ என்று வினோத் சொன்னான்.

‘கவலையென்ன? அதான் மூணு பேர் இருக்கேளே. எல்லாம் போதும் போ’ என்று சொல்லிவிட்டு எழுந்து உள்ளே போனார். நான் உடனே அவரை, ‘மாமா..’ என்று கூப்பிட்டேன்.

‘என்ன?’

‘இது, நான்கில் ஒரு பங்கு சன்யாசம்’ என்று சொன்னேன்.

ஒன்பது மணிக்கு மாமா எங்களை சாப்பிடக் கூப்பிட்டார். நாங்கள் மறுக்கவில்லை. அவர் ஒரு பெரிய வெண்கலப் பானையில் அரிசி உப்புமா கிளறியிருந்தார். வீட்டுக்குப் பின்னால் உள்ள பாதாம் மரத்தின் இலைகளைப் பறித்து வந்து வைத்து எங்கள் மூன்று பேருக்கும் உப்புமாவைப் பரிமாறினார். ‘தொட்டுக்க எலுமிச்சங்கா ஊறுகா இருக்கு. பரவால்லியா?’ என்று கேட்டார். நான் வேண்டாம் என்று சொன்னேன். வினய்யும் வினோத்தும் மறுக்காமல் போட்டுக்கொண்டு சாப்பிட்டார்கள். உப்புமா நன்றாக இருக்கிறது என்று சொல்லி வினய் இன்னொரு தரம் கேட்டு வாங்கிச் சாப்பிட்டான். கைகழுவி, தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் அம்மாவின் அருகே வந்து உட்கார்ந்தோம்.

‘சரி, ஒரு பதினைந்து நிமிடங்கள் யாரும் எதுவும் பேசவேண்டாம்’ என்று வினோத் சொன்னான். அம்மாவின் எதிரே சென்று அமர்ந்து கண்ணை மூடி தியானத்தில் ஆழ்ந்து போனான். வினய் அம்மாவின் இடது கையைப் பிரித்து வைத்துக்கொண்டு ரேகைகளை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.

‘ஜோசியம் தெரியுமா?’ என்று நான் அவனிடம் கேட்டேன்.

‘ஏதோ கொஞ்சம் தெரியும்’ என்று சொன்னான்.

‘ஆனால், உலகிலேயே போகப் போகிறவளுக்கு ரேகை பார்க்கிற முதல் மனிதன் நீதான்!’

அவன் சிரித்தான். மீண்டும் அவள் கையை உற்றுப் பார்க்கத் தொடங்கினான். நான் என்னவாவது செய்யலாம் என்று நினைத்து அவளது வலக்கரத்தை இழுத்து வைத்துக்கொண்டு நாடி பார்த்தேன். கணிப்பு சரிதான். எப்படியும் ஓரிரு மணி நேரங்களுக்குள் அவளது வாழ்வு முடிந்துவிடும் என்று மனத்தில் பட்டது. மாமாவிடம் சொல்லி சிறிது தண்ணீர் எடுத்துவரச் சொன்னேன்.

‘பாலா?’ என்று அவர் கேட்டார். நான் சிரித்தேன். ‘தண்ணீர் போதும்’ என்று சொன்னேன். அவர் எழுந்து சென்று ஒரு சொம்பு நீர் எடுத்து வந்து கொடுத்தார்.

‘நீங்களே ஒருவாய் முதலில் கொடுங்கள்’ என்று சொன்னேன். வினய் அம்மாவின் வாயைப் பிடித்துத் திறக்க, மாமா அதில் சில சொட்டுகள் நீரை விட்டார். பிறகு வினய் அதைச் செய்தான். நானும் செய்து முடித்துவிட்டு வினோத்துக்காகக் காத்திருந்தேன். அவன் தியானத்தில் இருந்து இன்னும் எழுந்திருக்கவில்லை. சரி, கண்ணைத் திறக்கட்டும்; அதன்பின் சொல்லலாம் என்று சொம்பைக் கீழே வைத்துவிட்டு அமர்ந்தேன். அம்மா நாங்கள் விட்ட நீரை அருந்தியிருந்தாள். ஒரு சொட்டுக்கூட கீழே சிந்தாமல் நீர் உள்ளே போயிருந்தது.

நான் மாமாவிடம் சொன்னேன், ‘உங்கள் அக்கா உலக மகா அழுத்தக்காரி. இந்தக் கணம் வரை நினைவோடு இருக்கிறாள். ஆனால் கண்ணைத் திறந்து பார்க்க அவளுக்கு விருப்பமில்லை’.

‘அவன் வரணும்டா. வந்தா திறந்துடுவா’ என்று மாமா சொன்னார். கவலையுடன் ஒருதரம் வாசலுக்குப் போய் சிறிது நேரம் நின்றுகொண்டிருந்தார். அப்போது வினோத் கண்ணைத் திறந்து என்னைப் பார்த்தான்.

‘முடிந்ததா? வா. வந்து ஒரு வாய் தண்ணீர் கொடு அவளுக்கு’.

அவன் அம்மாவுக்கு ஒருவாய் தண்ணீர் கொடுத்தான். அதையும் அவள் அருந்தினாள். ஆனால் அசையவில்லை. கண்ணைத் திறக்கவில்லை.

‘நடந்துவிடும் அல்லவா?’ என்று கேட்டேன்.

‘ஆம். இன்னும் ஒரு மணி நேரத்தில்’.

‘அவன் வந்துவிடுவானா அதற்குள்?’

‘வரமாட்டான்’ என்று வினோத் சொன்னான்.

‘என்ன சொல்கிறாய்?’

‘விமல், அன்றொருநாள் அண்ணா என் மனத்துக்குள் ஒரு செய்தியைப் புதைத்து வைத்தான். என்றைக்குத் தேவையோ அன்றைக்கு அது சொற்களாக மாறி என் சிந்தையை எட்டும் என்று சொன்னான்’.

‘ஆம். இதை முன்பே சொன்னாய்’.

‘இப்போது அது நடந்தது’.

நாங்கள் இருவருமே வியப்படைந்தோம். ‘சொல், என்ன அது?’

‘அம்மா மரணமடையும் கணத்தில் அவன் இங்கு இருக்கப்போவதில்லை. ஆனால் அவளது இறுதிச் சடங்கை அவன்தான் நடத்திவைப்பான்’.

கூடத்தில் ஒரு ஈ பறந்துகொண்டிருந்தது. அது எங்களைச் சுற்றிச் சுற்றி வந்தது. ஒரு கட்டத்தில் எங்களைச் சுற்றுவதை நிறுத்திவிட்டு அம்மாவின் நெற்றியின் மீது சென்று அமர்ந்தது. வினய் அதைக் கையசைத்து விரட்டினான். ஹக் என்று அம்மாவின் தொண்டைக்குள் இருந்து ஒரு சிறு ஒலி வெளிப்பட்டது. ‘போய் மாமாவைக் கூப்பிடு’ என்று நான் சொன்னேன். வினோத் வாசலுக்குச் சென்று மாமாவை அழைத்து வந்தான்.

‘என்னடா?’ என்று அவர் கேட்டார்.

நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை. அம்மாவையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தோம். அந்த ஒரு ஒலிக்குப் பின் வேறெந்த சத்தமும் வெளிப்படவில்லை. கிட்டத்தட்ட ஒன்றே கால் மணி நேரம் அவள் அப்படியேதான் இருந்தாள். சுவாசம் இருந்தது. அதைத் தவிர வேறொன்றும் இல்லை. நான் மீண்டும் நாடி பிடித்துப் பார்த்தபோது அது முற்றிலும் நின்றுபோகும் தருவாயை நெருங்கிவிட்டிருந்ததை உணர்ந்தேன். எங்கோ பார்த்துக்கொண்டு, ஏதோ யோசித்தபடி இருந்த வினய் சட்டென்று என் தோளைத் தொட்டான்.

‘இன்னும் பத்து விநாடிகள்’ என்று சொன்னான்.

‘பெருமாளே..’ என்று பரிதவித்துப்போய், மாமா அம்மாவின் பாதங்களைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தார். நாங்கள் அவள் கண்களையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தோம். மிகச் சரியாக எட்டாவது விநாடி அவள் கண்ணைத் திறந்தாள். ஒரு புன்னகை செய்தாள். பிறகு மூடிக்கொண்டாள்.

இப்போது வினய் அவள் நாசியில் கை வைத்துப் பார்த்தான். போய்விட்டாள் என்று சொன்னான்.

‘இனி நீங்கள் வாத்யாருக்கு போன் செய்யலாம் மாமா’ என்று நான் சொன்னேன்.

(தொடரும்)

 

https://www.dinamani.com/junction/yathi/2018/oct/31/163-புன்னகை-3029899.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

164. யாத்திரை

வினய்யும் வினோத்தும் அம்மாவின் தலைமாட்டிலும் கால்மாட்டிலுமாக எதிரெதிரே அமர்ந்திருந்தார்கள். அவள் இறந்துவிட்டாள் என்று தெரிந்த கணத்திலேயே, இருவரும் கண்மூடி தியானத்தில் ஆழ்ந்திருந்தார்கள். எனக்கு அவர்களைத் தொந்தரவு செய்ய விருப்பமில்லை. நான் மாமாவைப் பார்த்தேன். அவர் அழுவார், கதறுவார், அவரைச் சமாதானப்படுத்தவேண்டி இருக்கும் என்று நினைத்திருந்தேன். எதிர்பாராதவிதமாக அவர் மிகவும் அமைதியாகிப் போனார். ஆனால் அவர் கண்களில் துயரத்தின் நிழல் இருந்தது. அது தனது வயது பற்றிய அச்சமாக இருக்கக்கூடும். யாருமற்றுப்போன வெறுமை உண்டாக்கிய பீதியாக இருக்கலாம். எனக்கென்னவோ வினோத் பத்மா மாமியை கயாவுக்கு அழைத்துச் செல்லும்போது கேசவன் மாமாவையும் சேர்த்து அழைத்துச் சென்றுவிடலாம் என்று தோன்றியது. ஆனால் வினோத்தின் முடிவை வினய் ஏன் துறவுக்கு எதிரான மனநிலையாகப் பார்க்கிறான் என்பதை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

நான் அம்மாவைப் பார்த்தேன். வீட்டுக்கு வந்தபோது பார்க்கையில் எப்படி இருந்தாளோ அதேபோலத்தான் இருந்தாள். மூச்சு மட்டும்தான் இல்லை. வலிகள் இல்லாமல், வேதனையில்லாமல் நிதானமாகச் சாப்பிட்டு எழுந்து கைகழுவிவிட்டு வந்து அமர்ந்து வெற்றிலை போட்டு மெல்வதுபோல வாழ்வை மென்று சுவைத்துத் துப்பிக் கொப்பளித்துவிட்டுப் போயிருக்கிறாள் என்று தோன்றியது. ஆனால் ஒரு வெறி இருந்திருக்கிறது. மூச்சுக் காற்றைப்போல அதுதான் அவளைச் செயல்பட வைத்திருக்கிறது. வினோத்திடம் அவள் சொன்ன தகவல்களை எத்தனை முயன்றும் ஒரு நேர்க்கோட்டில் என்னால் கொண்டுவர இயலவில்லை. தனக்கென அவள் வைத்திருந்த நியாயங்களை இறுதிவரை ரகசியமாகவே வைத்திருந்துவிட்டுத் தான் போகும்போது தன்னோடே எடுத்துச் சென்றுவிட்டாளோ என்று நினைத்தேன். அதே சமயம், கேசவன் மாமாவைக் குறித்து பத்மா மாமியிடம் அவள் சொல்லியிருக்கிறாள் என்ற தகவல் சிறிது அதிர்ச்சியளித்தாலும், ஆங்காங்கே எங்களுக்கோ அல்லது வேறு யாருக்கோ அவள் சங்கேதமாகத் தனது ரகசியங்களின் பகுதிகளைப் பிரித்துப் பிரித்துக் கலைத்துப் போட்டுத் தேட விட்டுவைத்திருக்கிறாளோ என்றும் நினைக்கத் தோன்றியது.

தலை வலித்தது. சரி போ என்று விட்டு விலகி வெளியே வந்து நின்று யோசித்துப் பார்த்தால், இத்தனைப் பூடகங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லாமல் மிகவும் எளிதாகவே அவள் வாழ்வைக் கடந்திருப்பாள் என்றும் பட்டது. என்னவானாலும் நான் இதில் என்னைப் பொருத்திக்கொள்வதில்லை என்று முடிவு செய்துகொண்டேன். இது ஒரு கடமை. இதை நான் செய்தே தீர வேண்டும். அவள் இருந்த உடலை இல்லாமல் ஆக்கும்வரை இங்கு இருக்கத்தான் வேண்டும். அதன்பின் ஒன்றுமில்லை.

‘நீ ஒண்ணும் பண்ணமாட்டியா?’ என்று மாமா கேட்டார். யோசனையில் இருந்ததால் அவரது குரல் சட்டென்று கவனத்தைத் தீண்டிக் கலைத்தது. கணப்பொழுது திடுக்கிட்டுப் போய், ‘ம்?’ என்றேன்.

‘இல்லே. அவா ரெண்டு பேரும் எதோ பண்றாளே, நீ ஒண்ணும் பண்ணலியான்னு கேட்டேன்’.

நான் வினய்யைப் பார்த்தேன். பத்மாசனமிட்டுக் கண்மூடி அம்மாவின் தலையருகே அமர்ந்திருந்தான். மூடிய கண்களுக்குள் அவன் உக்கிரமாக எதையோ தரிசித்துக்கொண்டிருப்பது போலப் புருவங்கள் குவிந்து ஒரு மரவட்டையைப் போலச் சுருண்டிருந்தது. வினோத்தும் கண்ணை மூடித்தான் அமர்ந்திருந்தான். ஆனால் அவன் மிகவும் சாதாரணமாக இருப்பவனைப் போலவே காணப்பட்டான்.

‘எப்படியோ அவள நல்லபடியா எம்பெருமான் திருவடில கொண்டு சேர்த்துடுங்கோடா’ என்று மாமா சொன்னார்.

‘அதான் அவளே கெளம்பிப் போயிட்டாளே’.

‘நான் கர்மாக்களைச் சொன்னேன்’.

நான் இதற்குப் பதில் சொல்லவில்லை. பேச்சை மாற்றும்விதமாகக் காலை விடிந்ததும் யார் யாருக்குத் தகவல் சொல்ல வேண்டும் என்று கேட்டேன்.

‘வாசல்ல போய் நின்னுண்டு கொரல ஒசத்தி ஒருவாட்டி சொல்லிட்டு வந்துட்டா போதும். நமக்கு வேற யார் மனுஷா?’

‘சரி. அதைப் பண்ணிடுங்கோ’.

‘வாத்யார்தான் கவலையா இருக்கு’.

‘என்ன கவலை?’

‘இந்த ஏரியாவுலே சாம வேத வாத்யார் யாரும் இருக்கறதா தெரியல்லே. பட்டாச்சாரியார்ட்ட சொல்லி வெச்சிருக்கேன். யோசிச்சிப் பாக்கறேன்னு சொன்னார்’.

‘கவலைப்படாதிங்கோ. வினய் பார்த்துப்பான்’.

‘அவன் வேதம் படிச்சிருக்கானாடா?’

‘எனக்குத் தெரியாது மாமா. ஆனா நான் பண்றேன்னு அவந்தானே சொன்னான்?’

‘அது தப்பு. பிள்ளை அதெல்லாம் பண்ணப்படாது’ என்று மாமா சொன்னார்.

‘சன்யாசிக்கு இந்த எந்த விதியும் பொருந்தாது’ என்று நான் சொன்னேன்.

‘அம்மா பொருந்தறாளோல்யோ? அப்பறம் என்ன?’

ஒரு மணி நேரத்தில் வினோத் கண்ணைத் திறந்தான். இறந்துகிடந்தவளை விழுந்து ஒருமுறை சேவித்தான். பிறகு என்னருகே வந்து அமர்ந்துகொண்டான்.

‘டேய், விஜய் இன்னும் காணமேடா?’ என்று மாமா மீண்டும் அந்தக் கவலைப்பட ஆரம்பித்தார்.

‘வருவான் மாமா’ என்று இம்முறை நான் சொன்னேன்.

‘அவன் என்ன செய்கிறான்?’ என்று வினோத் என்னைக் கேட்டான்.

‘நீ என்ன செய்தாய்?’

‘நான் கீதை முழுவதையும் ஒருமுறை சொன்னேன். சரம ஸ்லோகம் சொல்லி நிறைவு செய்தேன்’.

‘அந்த மாதிரி அவன் ஏதாவது வைத்திருப்பான்’.

‘அதைத்தாண்டா கேட்டேன், நீ ஒண்ணும் பண்ணலியா?’ மாமா மீண்டும் கேட்டார். நான் புன்னகை செய்தேன்.

‘என்ன வேண்டுமானாலும் செய்யலாம் மாமா. ஆனால் எதற்குச் செய்ய வேண்டும் என்ற தெளிவு வேண்டும்’.

‘இதென்னடா அபத்தக் கேள்வி? உங்கம்மாவுக்குத்தான்’.

‘அம்மாதான் போய்விட்டாளே’.

‘நீ விழுந்து சேவிக்கக்கூட இல்லே’.

‘அம்மாதான் போய்விட்டாளே. எதைச் சேவிப்பது?’

‘பெருமாள் புறப்பாடு ஆச்சுன்னா கர்ப்பகிரகத்துக்கு மதிப்பில்லேன்னு சொல்லிடுவியோ?’

நான் சிரித்தேன். அவர் கைகளைப் பிடித்துக்கொண்டு, ‘நீங்கள் ஒரு யாத்திரை போய் வாருங்கள் மாமா. சிறிது மனமாற்றம் ஏற்படும். நான் வேண்டுமானால் ஏற்பாடு செய்து தருகிறேன்’ என்று சொன்னேன். சில விநாடிகள் என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவர், அதுவரை அடக்கிவைத்திருந்த கண்ணீரை அப்போது வெளியே விட்டார். நான் அவரை ஆரத் தழுவிக்கொண்டேன். தட்டிக் கொடுத்தேன்.

காலை ஆறு மணிக்கு மாமா வீட்டை விட்டு வெளியே போனார். பத்து நிமிடங்களில் திரும்பி வந்தார். அதன்பின் வரிசையாகப் பல பேர் வர ஆரம்பித்தார்கள். நாங்கள் மூன்று பேரும் அம்மா இருந்த அறையின் ஓரமாக நின்றுகொண்டோம். கூடத்தின் நடுவே துணி விரித்து அம்மாவைக் கிடத்திவிட்டு, மாமாதான் அருகே அமர்ந்திருந்தார். தலைமாட்டில் எரிந்துகொண்டிருந்த விளக்கின் திரியை அடிக்கடித் தூண்டிவிட்டுக்கொண்டே இருந்தார். அது அவரது பதற்றத்தின் வெளிப்பாடு என்று நினைத்தேன். அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள், கோயில் ஊழியர்கள், ஊர்க்காரர்கள் என்று எப்படியும் இருபது இருபத்து ஐந்து பேர் இரண்டு மணி நேரத்துக்குள் வந்து போய்விட்டார்கள்.

‘பத்மா மாமி ஏன் வரவில்லை?’ என்று நான் மாமாவிடம் கேட்டேன்.

‘சொல்லிட்டேன்’ என்று மாமா சொன்னார். வந்த அனைவரும் எங்கள் மூன்று பேரையும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். எல்லோருக்குமே எங்களிடம் பேசுவதற்கு விருப்பம் இருந்தது. ஆனால் தயங்கினார்கள். ஒரு சிலர் மட்டும் மாமாவிடம் போய் துக்கம் கேட்டுவிட்டு எங்கள் அருகே வந்து, ‘அடையாளமே தெரியலே. இதுல யார் மூத்தவன், யார் அடுத்தவன்?’ என்று கேட்டார்கள். நாங்கள் பொதுவாக அவர்களுக்குக் கைகுவித்து வணக்கம் சொல்லிவிட்டு அமைதியாக இருந்தோம்.

‘இன்னும் அரை மணி நேரம் இருக்கலாம். அதன்பின் ஆரம்பித்துவிட வேண்டியதுதான்’ என்று வினய் சொன்னான்.

மாமா யார் யாரிடமோ சாம வேத வாத்யாருக்காக மெனக்கெட்டுக்கொண்டிருந்தார். நாவலூர் வாத்தியார், ‘ரிக் வேதம்னாக்கூட சமாளிச்சுடலாம். சாமம் தெரியாதே’ என்று சொல்லிவிட்டாராம்.

‘அக்காவ கடைத்தேத்தி அனுப்பியாகணும்டா! யாராவது எதாவது பண்ணுங்கோ’ என்று வந்திருந்த சிலரிடம் மாமா வெடித்து அழுதபடி முறையிட்டுக்கொண்டிருந்தார். வினய்க்குப் பொறுக்கவில்லை. சட்டென்று முன்னால் சென்று அவர் தோளைத் தொட்டான். மாமா திரும்பிப் பார்த்தார்.

‘வாத்யார் வேண்டாம். நான் சொன்னா சொன்னதுதான். நான் பார்த்துப்பேன்’.

மாமா மிரண்டுவிட்டார். அவன் குரலில் தொனித்த கட்டளைத் தொனி அதுவரை அவர் கேட்டறியாதது. அமைதியாகிப்போனார்.

வினய் என்னிடம் வா என்று சொல்லிவிட்டு வெளியே போனான். நான் அவன் பின்னால் போனேன். வசந்த மண்டபத்துக்குப் போகிற வழியில் இருந்த ஒரு தென்னை மரத்தின் மீது அவனே ஏறினான். ஒரு மட்டையை வெட்டிக் கீழே போட்டான். நான் அதை எடுத்துக்கொண்டேன். நாங்கள் வீடு வந்து சேர்ந்தபோது வினோத் எங்கிருந்தோ மூங்கில் கட்டைகளை ஏற்பாடு செய்து வரவழைத்திருந்தான். வினய், அவனே அமர்ந்து ஓலையைப் பின்னி, கட்டைகளை முட்டுக் கொடுத்துப் பாடையைத் தயார் செய்தான். பிறகு ஒரு மண் கலயத்தை எடுத்து வந்து செங்கல் வைத்து நெருப்பு மூட்டி, அதன் மீது வைத்தான். வீதியில் அத்தனை பேரும் நின்று அவன் செய்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

சில நிமிடங்களில் அவன் ஆயத்தப் பணிகளை முடித்துவிட்டு மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்தான்.

‘டேய், கர்த்தா இல்லாம எப்படிடா’ என்று மாமா சொன்னார்.

‘மூணு பேரும்தான் இருக்கோமே மாமா?’

‘அவன் வரலியே இன்னும்?’

‘அவன் வரமாட்டான்’ என்று இப்போது வினோத் சொன்னான். மாமா திகைத்துப்போனார்.

பதினைந்து நிமிடங்கள் மூச்சுவிடாமல் வினய் மந்திரங்களைச் சொல்லி முடித்துவிட்டு மாமாவைப் பார்த்தான். அவருக்கு வேறு வழி இல்லாமல் போனது. மாடவீதிப் பெண்கள் சிலரைக் கூப்பிட்டுப் பேசினார். பத்மா மாமி வந்து சேர்ந்தாள். யாரும் குரலெடுத்து உரக்க அழவில்லை என்பது சற்று நிம்மதியாக இருந்தது. பெண்கள் உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டார்கள். பிறகு சிறிது நேரம் கழித்து  என்னை உள்ளே அழைத்தார்கள். நான் அம்மாவின் உடல் மீது நீர் ஊற்றிக் குளிப்பாட்டினேன். வெளியே வந்து நின்றுகொண்டேன். அவர்கள் மீண்டும் கதவை மூடிக்கொண்டு ஏதோ செய்தார்கள். எல்லாம் முக்கால் மணி நேரத்துக்குள் நடந்தேறியது.

‘வரமாட்டானா? நெசமாவே வரமாட்டானா!’ என்று மாமாதான் திரும்பத் திரும்பப் புலம்பிக்கொண்டிருந்தார்.

நான் அவர் கையைப் பிடித்து நிறுத்தினேன். ‘கொள்ளி நீங்க வெக்கணும்னு அவ சொன்னா. அது அவளோட ஆசை. அப்பறம் உங்க இஷ்டம்’.

யாரோ தீப்பந்தம் ஏந்தினார்கள். நாங்கள் மூவருமாக மாமாவோடு சேர்ந்து அம்மாவைப் பாடையில் ஏற்றி வெளியே கொண்டுவந்தோம். ‘இவாதான் பிள்ளைகளா! இவாதான் பிள்ளைகளா!’ என்று வழியெங்கும் ஆண்களும் பெண்களும் எங்களையே வேடிக்கை பார்த்தார்கள். நாங்கள் யாருடனும் எதுவும் பேசவில்லை. மயானத்தைச் சென்றடையும்வரை மாமாவின் முகத்தைக்கூடப் பார்க்கவில்லை.

இறக்கி வைத்தபின், வினய் மீண்டும் சில மந்திரங்களைச் சொன்னான். மாமாவுடன் மயானம் வரை மூன்று பேர் ஊர்க்காரர்கள் வந்திருந்தார்கள். அவர்களை விலகியிருக்கச் சொல்லி அவன் முதலில் வாய்க்கரிசி போட்டான். பிறகு எங்களைப் போடச் சொன்னான். இறுதியாக மாமாவையும் உடன் வந்திருந்தவர்களையும் அழைத்து, போடச் சொன்னான். ‘இது சாஸ்திரத்துல உண்டா?’ என்று மாமா கேட்டார்.

‘அவன் சொல்றதுதான் சாஸ்திரம். போடுங்கோ’ என்று வினோத் சொன்னான். மாமா அழுதபடியே அரிசியைப் போட்டார்.

குவித்து வைக்கப்பட்டிருந்த விறகுப் படுக்கையின்மீ து அம்மாவை நாங்கள் தூக்கி வைத்தோம். உதவிக்கு வந்த வெட்டியானை வினய் வேண்டாம் என்று சொல்லி நகர்ந்து நிற்கச் சொன்னான். ஒரு வறட்டியின் மீது கற்பூரக் கட்டியை வைத்து, அதை அம்மாவின் நெற்றியின் மீது வைத்தான். திரும்பி, மாமாவைப் பார்த்தான்.

(தொடரும்)

 

 

https://www.dinamani.com/junction/yathi/2018/nov/01/164-யாத்திரை-3030760.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

165. அடங்கல்

மாமா குமுறிக் குமுறி அழுதுகொண்டிருந்தார். அந்த வயதில் யாராலும் அப்படி நிறுத்தாமல் அழுதுகொண்டே இருக்க முடியாது. குறைந்தபட்சம் தலை சுற்றி மயக்கம் வந்துவிடும். அதிகபட்சம் நெஞ்சு வலி வந்து உயிர் போய்விடும். மாமாவுக்கு இரண்டும் நேரவில்லை. ஒரு வாழ்நாள் முழுவதற்குமான கண்ணீரை மொத்தமாக அவர் சிந்திக்கொண்டிருந்தார். மயானத்துக்கு வந்திருந்த ஊர்க்காரர்கள் அவரை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் அமைதியாக நின்றார்கள். நான் வெட்டியானைப் பார்த்தேன். அவனது நிலைமைதான் மிகவும் கவலைக்குரியதாக இருந்தது. யார் கொள்ளி வைக்கப்போவது என்ற வினாவுக்கு அவனுக்கு இன்னும் விடை கிடைத்தபாடில்லை. ஓரிரு முறை அவன் வினய்யைக் கேட்டுப் பார்த்தான். அவன் பதில் சொல்லாமல் திரும்பி முறைக்கவே, அமைதியாகிவிட்டான்.

நான் மாமாவின் அருகே சென்றேன்.

‘நேரமாகிறது. பாத்தியதை உங்களுடையது என்று அம்மாவே சொல்லிவிட்ட பின்பு நீங்கள் யோசிப்பது வீண்’ என்று சொன்னேன்.

‘அவ கெடக்கறா. அவளுக்கு என்ன தெரியும்? எனக்கு இப்போ விஜய் இங்கே வந்தாகணும்!’ என்று சந்நதம் வந்தவர்போலக் கத்தினார். இதற்கு நாங்கள் என்ன சொல்ல முடியும்? மூன்று பேரும் அமைதியாக இருந்தோம்.

எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. பாசத்தில் ரத்த சம்பந்தத்தின் சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். துக்கங்களின் மூலாதாரப் புள்ளியான அது பிறப்பின்போது பிறப்பது. பாலுக்கு முலை தேடும் கணத்தில் ஒரு பரிமாற்றம் நிகழ்ந்துவிடுகிறது. பிறகு பாற்கடலெனப் பொங்கி வழிந்துகொண்டே இருக்கும். மூச்சிருக்கும் வரை. முடிவு எட்டும் வரை. மூச்சுக் காற்றினைப் போலவே உடன் இருந்துவிட்டு, அது விட்டு விலகும்போது உடன் சென்றுவிடும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். மாமா என் நம்பிக்கையை உதிர்த்துப் போட்டுக்கொண்டிருந்தார். அவரது துக்கத்தின் வீரியம் முற்று முழுதாக அவரது நெஞ்சத்திலேயே சுரந்த பாசத்தின் விளைவுதான். அதில் ரத்தக் கலப்பில்லை. பிறப்பின் தொடர்பில்லை. இந்தக் கணம்வரை அவர் அறியாத அப்பேருண்மைக்கு இனி ஒருபோதும் மதிப்பு இருக்கப்போவதில்லை.

அறிந்துகொண்ட நாங்கள் மட்டும் என்ன பெரிதாக மதிப்பளித்தோம்? ஒரு சொட்டுக் கண்ணீருக்கோ, ஒரு சுடுசொல்லுக்கோகூட வக்கற்ற ரகசியம். அந்தச் சுவடியை அண்ணா எதற்காக அத்தனை பத்திரமாகப் பாதுகாத்தான், ஏன் போகும்போது கொண்டு செல்லாமல் போனான் என்று தெரியவில்லை. இன்றுவரை வீட்டில் அது பத்திரமாக இருக்கிறது. அம்மாவே இறந்துவிட்ட பின்பு அதைப் பொருட்படுத்த இனி அங்கு யாரும் இருக்கப்போவதில்லை. ஒரு அதிசயம் நிகழ்ந்து அம்மாவோடு, அந்தச் சுவடியோடு, எங்கள் வீடு அப்படியே மண்ணுக்குள் இறங்கிப் புதைந்து காணாமல் போய்விட்டிருந்தால் எவ்வளவோ நன்றாயிருந்திருக்கும் என்று தோன்றியது. அவசியமே இல்லாமல் ஒரு குடும்பம் வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்டதன் மீதான வெறுப்பும் கோபமும் எனக்குள் சட்டென்று சிலிர்த்தெழுந்தது.

ஒருவேளை ஒவ்வொரு குடும்பமுமே இப்படித்தானா? தொடர்பு என எண்ணிக்கொள்ளும் எது ஒன்றும் தொடர்பல்ல என்று நினைத்தேன். எல்லாமே தனித்தனிக் கண்ணிகள். வந்தது முதல் விடைபெறல் வரை. வருவதற்கு ஏதோ ஒரு வழி. போவதற்கு ஒரே வழி. இடையில் வாழும் கணங்களின் வண்ணமெல்லாம் வெறும் மாயை. வண்ணமல்ல. கறுப்பு வெள்ளைகூட அல்ல. நிறமற்ற ஏதோ ஒன்று. உருவற்றது. குணமும் மணமுமற்றது. ஆனால் மாயை அழகானது. பிரம்மத்தை விடவும் பேரெழில் கொண்டது. எளிதில் பிடித்துப் போகிறது. விரும்பும் வரை சுகமளிப்பது. புரிந்துகொள்ள இயலாத பிரம்மத்தைக் காட்டிலும் புரியக்கூடிய மாயையை நான் மிகவும் விரும்பினேன். குளிரக் குளிர ஒரு போர்வைக்குள் சுருண்டுகொண்டு மெல்லிய கதகதப்புக்குள் கரைத்துக்கொள்கிற பரவசம் பிரம்மத்தில் கிட்டுமா தெரியவில்லை.

வினோத்திடம் இதனைச் சொன்னபோது, ‘ஒரு முறை ருத்ர பிரயாகையில் பனிக்கட்டிகள் நீரோடு சேர்ந்து உருண்டு போய்க்கொண்டிருந்தன. கால் விரல் தரையில் பட முடியாத அளவுக்குக் குளிர் கொட்டிக்கொண்டிருந்தது. சூடான ஒரு தேநீரும் சுகமான ஒரு கம்பளியும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மனம் நினைத்தது. அப்போது ஒரு வயதான துறவி தான் கட்டியிருந்த இடுப்பு வேட்டியை அவிழ்த்து வைத்துவிட்டு, வெறும் கோவணத்துடன் நதியில் இறங்கினார். மூன்று முறை முக்குப் போட்டுவிட்டு, ஓடும் நதிக்கு நடுவே இருந்த ஒரு பாறையின் மீது ஏறி அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார். அவர் முடித்துவிட்டுக் கரையேறியபோது, நதியின் குளிர்ச்சியைப் பற்றிக் கேட்டேன். குளிர் என்பது நீரில் இறங்குவதற்கு முந்தைய உணர்வு என்று சொன்னார்’.

நான் மாமாவிடம் திரும்பிச் சொன்னேன், ‘கேட்டீர்களா? உங்களுக்கான பிரம்மம் கால்மாட்டில் தலை வைத்துப் படுத்திருக்கிறது. அதை நீங்கள் மாயையாக உணர்கிறீர்கள். நெருப்பின் பனிக் குளிர்ச்சியை உங்கள் அக்காவுக்கு நீங்கள் வழங்குவதே சரி’.

அவருக்குப் புரிந்ததா என்று தெரியவில்லை. ‘அது நியாயமில்லேடா விமல். இன்னும் கொஞ்சம் காத்திருப்போமே? அவன் வந்துட்டான்னா?’ என்று மீண்டும் சொன்னார்.

‘மாமா, அவன் வரப்போவதில்லை. தயவுசெய்து அம்மாவின் இறுதி ஆசையை நீங்கள் நிறைவேற்றுங்கள்’ என்று வினோத் மீண்டும் சொன்னான்.

‘வருவான்னு நீதானேடா சொன்னே? வினய்யும் ஆமான்னு சொன்னானே’.

இப்போது வினய், மாமா அருகே வந்தான். ‘அவன் வந்தாலும் எங்களோட நிக்கட்டும். நீங்க வைங்கோ’ என்று சொன்னான்.

‘இதுக்காகத்தானேடா இத்தன வருஷம் கழிச்சி நீங்க வந்திருக்கேள்? எனக்கு எப்படி மனசு வரும்?’

‘மாமா நாங்கள் இதற்காக வரவில்லை’ என்று நான் சொன்னேன்.

‘அப்பறம்? வேற எதுக்காக?’

‘இது எங்கள் துறவு முழுமையுறும் தருணம். வாழ்நாளெல்லாம் அறுத்தெறிந்த நூற்கண்டின் கடைசிச் சிக்கு இது. இதன்பின் ஒன்றுமில்லை’.

‘எழவு அறுத்துட்டுப் போயேன்? வேணான்னா சொல்றேன்?’ அவர் உணர்ச்சிவசப்பட்டுக் கத்தினார்.

‘கத்தி உங்களிடம் இருக்கிறது மாமா!’ என்று வினோத் சொன்னான்.

இதுவும் அவருக்குப் புரியவில்லை. நான் வினய்யைத் தனியே அழைத்துச் சென்று சிறிது நேரம் பேசினேன். அதிக நேரம் அம்மாவை இப்படிச் சிதையின் மீது வைத்திருக்க இயலாது. வெட்டியான் முணுமுணுக்கத் தொடங்கிவிட்டான். உடன் வந்தவர்கள் வீடு திரும்ப விரும்புவார்கள். தவிரவும், இந்த இடத்தில் ஒரு நாடக அரங்கேற்றத்துக்கான அவசியமும் இல்லை. இது நமக்கு ஒரு கடன். செய்து முடித்துவிட்டால் பிறகு அவரவர் பாதை, அவரவர் வழி.

‘மாமா?’ என்றான் வினய்.

‘அவர் தம் நினைவுகளைச் சுமந்துகொண்டு இன்னும் சிறிது காலம் அலைந்து திரிவார். அவர் ஒரு உயிருள்ள சித்ரா. பிறகு அவரும் அடங்கிப் போவார். அவ்வளவுதான்’.

நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, கங்காதரன் வேகவேகமாக அங்கே வந்துகொண்டிருந்தான். வினய்தான் முதலில் அவனைப் பார்த்தான். ‘ஒரு நிமிடம் இரு’ என்று சொல்லிவிட்டு அவன் எதிரே சென்று, ‘என்ன?’ என்று கேட்டான்.

‘இப்பத்தான் சேதி தெரிஞ்சிது. இன்னும் எரிச்சிடலியே?’

‘இல்லை’.

பரிதவிப்புடன் அவன் சிதைக்கு அருகே வந்து சில கணங்கள் அமைதியாக நின்றான். பிரார்த்தனை செய்வதுபோலக் கண்ணை மூடி இருந்துவிட்டு மீண்டும் வினய்யிடம் திரும்பி வந்து, ‘விஜய் இன்னும் வரலியா?’ என்று கேட்டான்.

‘எதற்கு? கொல்லவா? போய்ச் சொல் உன் சாமியிடம். இரண்டாவது பலி அவராக இல்லாதிருக்க அவரைப் பிரார்த்தனை செய்துகொள்ளச் சொல்’.

கங்காதரன் மிரண்டு போனான். ‘டேய் என்ன நீ என்னென்னமோ சொல்லுற? எனக்கொண்ணும் தெரியாது அதெல்லாம்’.

அரைக் கணம்கூட இருக்காது. வினய் அவனை அப்படியே ஒரு சைக்கிள் டயரைப் போலத் தூக்கி வளைத்தான். பலம் கொண்ட மட்டும் விசிறி எறிந்தான். அலறிக்கொண்டு போய் கங்காதரன் விழுந்தபோது, அவன் இடுப்பில் இருந்து ஒரு சிறு கத்தி வெளியே வந்து விழுந்தது. பார்த்துக்கொண்டிருந்த கேசவன் மாமாவுக்கு அந்த விநாடி துக்கம் மறந்து போய்விட்டது. ஐயோ என்று பதறி இரண்டடி பின்னால் போனார். வினய் ஆவேசம் அடங்காதவனாக கங்காதரனை நோக்கி நடந்தான்.

‘வேணாம். என்னை ஒண்ணும் பண்ணிடாத. நான் வந்தது தப்பு. நான் போயிடுறேன்’ என்று அவன் பயந்து பின்வாங்கினான்.

வினய் அவன் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்துத் தூக்கினான். ‘சொல்லு. யாரக் கொல்ல வந்தே?’

தப்பிக்க முடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. இங்குமங்கும் பார்த்தான். வேறு வழியில்லை என்று தோன்றியிருக்க வேண்டும். தன் பதற்றத்தை விழுங்கி வினய்க்கு மட்டும் கேட்கும்படியான கீழ்க்குரலில் ஏதோ சொன்னான்.

அதன்பின் வினய் அவனை எச்சரித்து விடுவித்தான். கங்காதரன் திரும்பிப் பாராமல் ஓடிப் போனான்.

இது மொத்தமே இரண்டு நிமிடங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டது. மாமாவும் அவரோடு வந்திருந்த நண்பர்களும் வினோத்தும் நானும் வெட்டியானும், பேச்சற்றுப்போய் வெறுமனே பார்த்துக்கொண்டு நின்றிருந்தோம். தனது மிச்சமென வினய் சேகரித்து வைத்திருந்தவற்றையும் அந்த ஆக்ரோஷத்தில் கொட்டிக் கரைத்துவிட்டான் என்று எனக்குத் தோன்றியது. ஒருவிதத்தில் அது சந்தோஷமாகவும் இருந்தது.

நான் எதிர்பார்த்தது போலவே வினய் எங்களிடம் திரும்பி வந்தபோது மிகுந்த சாந்தமுடன் காணப்பட்டான். அவன் முகத்தில் அபூர்வமானதொரு புன்னகை பிறந்திருந்தது. சிதைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த தணல் சட்டியைக் கையில் ஏந்தி எடுத்துவந்து மாமாவிடம் கொடுத்தான். இம்முறை மாமா மறுப்பேதும் சொல்லவில்லை. அவர் முகத்தில் அச்சம் குடிகொண்டிருந்தது.

‘போய் வைங்கோ. நீங்கதான் செய்யணும். இதான் விதி’ என்று சொன்னான். நடந்துவிடும் என்ற நம்பிக்கையில் இப்போது வெட்டியான் பந்தத்தைப் பரபரவெனத் தயார் செய்தான். மாமா நடுங்கும் கால்களை உறுதியாக நிலத்தில் பதிக்க முடியாமல் தடுமாறி மெல்ல அம்மாவின் சிதை நோக்கி இரண்டடி வைத்தார்.

சட்டென்று மேலே பிரகாசித்துக்கொண்டிருந்த சூரியனை மறைத்து ஒரு பெரும் கருமேகக் கூட்டம் மெல்லக் கடந்து நகர ஆரம்பித்தது. சூழல் இருண்டுபோனது. மயானத்தின் மரக்கிளைகள் அசைவதை நிறுத்தின. எங்கோ கரைந்துகொண்டிருந்த காகம் ஒன்று கிளைவிட்டு எழுந்து பறந்து போனதைப் பார்த்தேன். மாமா அடுத்த அடியை எடுத்து வைப்பதற்கு முன்பே அவர் கையில் இருந்த தணல் நிறைந்த மண் கலயம் கீழே விழுந்தது. அத்தனை பேரும் திடுக்கிட்டு அதைப் பார்த்த கணத்தில், ஒளியைப் போலொரு நீண்ட ஈர்க்குச்சி சரேலென எங்கிருந்தோ பாய்ந்துவந்து சிதையைத் தொட்டு, அதன் மீது விழுந்தது. யாரும் நெருங்கும் முன் சிதை தானே பற்றிக்கொண்டு எரியத் தொடங்கியது.

மாமா திகைத்துப் போனார். ‘நாராயணா! நாராயணா!’ என்று சிரத்துக்கு மேல் கரம் குவித்துக் கதறத் தொடங்கினார். என்ன நிகழ்ந்தது என்று யாருக்கும் விளங்கவில்லை. வினோத் அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்தான். என்னால் அந்த நேரத்தில் யோசிக்க முடியவில்லை. சரியாகச் சொல்வதென்றால், என் சொற்கள் என்னைக் கைவிட்டன. சொற்களற்ற மொழியில் கடவுள்களிடம் பேசும் திறன் பெற்றவரான என் குருநாதர் என்னைக் கைவிட்டார். என் அனைத்து அறிவுச் சேகரங்களும் என்னை விட்டு விலகி உதிர்ந்துவிட்டதைக் கண்டேன். என்னையறியாமல் கண்ணீர் சுரந்தது. வாழ்விலே முதல் முறை. நல்லது. இது இன்று நிகழ்ந்தாக வேண்டும் போலிருக்கிறது.

‘போகலாம்’ என்று வினய் சொன்னான்.

‘என்னடா நடந்தது இப்போ?’ என்று மாமா அவனிடம் கேட்டார். அவன் அவருக்கு பதில் சொல்லவில்லை. ‘போகலாம்’ என்று மீண்டும் சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினான். வினோத் ஓடிச்சென்று அவனைப் பிடித்து நிறுத்தி, ‘சொல். என்ன நடந்தது?’

‘அது அவன்தான். தன்னைத் தணலாக்கி அவளை எரித்துத் தான் இறந்துபோனான்’ என்று சொன்னான்.

(தொடரும்)

https://www.dinamani.com/junction/yathi/2018/nov/02/165-அடங்கல்-3031414.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

166. சாம்பலின் குழந்தை

என் கால்கள் துவளத் தொடங்கியிருந்தன. எத்தனை நாள்களாக நடந்துகொண்டிருக்கிறேன் என்பதே மறந்துவிட்டது. நான் உண்ணவில்லை. எங்கும் தங்கவில்லை. ஓய்வெடுப்பது பற்றிச் சிந்திக்கக்கூட இல்லை. என் பாதங்கள் என்னை அழைத்துச் சென்ற இடங்களுக்கெல்லாம் போய்க்கொண்டிருந்தேன். எதுவும் தேவைப்படவில்லை என்பதால், யாருடனும் பேசவும் இல்லை. தாகம் எடுக்கும்போது தண்ணீர் மட்டும் அருந்திக்கொண்டிருந்தேன். பசியும் களைப்பும் எப்போது என்னைக் கீழே வீழ்த்தித் தள்ளும் என்று பார்த்துக்கொண்டிருந்தேன். உண்மையில் அப்படி யாருமற்ற வெளியில், உதவிக்கு யாரும் ஓடிவர இல்லாத நிலையில், தன்னந்தனியே விழுந்து கிடக்கவே மிகவும் விரும்பினேன். ஆனால், நானே எதிர்பாராதவிதமாக இன்னமும் விழாமல் இருக்கிறேன். ஆச்சரியம்தான்.

திருவிடந்தையில் இருந்து கிளம்பும் முன், மடிகேரிக்கு போன் செய்தேன். நான் ஆசிரமத்துக்குத் திரும்பி வர நாளாகும் என்று மட்டும் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டேன். வினய், ராமேசுவரம் வரை போய் வரலாம் என்று சொன்னான். நடந்தா என்று கேட்டேன். அதுதானே வசதி என்று அவன் பதிலுக்குக் கேட்டான். ஆனால், அந்த நடை இம்மாதிரி இடைவிடாமல் நிகழ்ந்ததல்ல. தினமும் எட்டு மணி நேரம் மட்டும் நடந்தோம். அதிகாலை மூன்று மணி முதல் ஏழு மணி வரை மட்டும். வெயில் ஏறத் தொடங்கும்போது எங்காவது ஒதுங்கிவிடுவோம். நாளெல்லாம் ஓய்வெடுத்துவிட்டு, மாலை ஐந்து மணிக்கு மீண்டும் நடக்க ஆரம்பித்து, இன்னொரு நான்கு மணி நேர நடை. கடலோரமாகவே நாங்கள் சென்றுகொண்டிருந்தோம். நாகைப்பட்டினத்தைக் கடந்து வேளாங்கண்ணியை நெருங்கும்போது, வினய்க்கு ஏதோ ஒரு யோசனை வந்தது.

‘விமல், இங்கே ஒருநாள் தாமதிக்கலாமா?’ என்று கேட்டான்.

‘ஒன்றும் பிரச்னை இல்லை. எதாவது வேலை இருக்கிறதா?’

‘இல்லை. இங்கே பொய்கைநல்லூர் என்றொரு கிராமம் இருக்கிறது. அங்கே போகலாம்’.

‘என்ன அங்கே?’

‘ஒரு சமாதி. ஒரு சித்தருடையது. கோரக்கர் என்று பெயர்’.

நான் புன்னகை செய்தேன்.

‘ஏன் சிரிக்கிறாய்?’

‘ஒரு சித்தன் செத்துப்போனதை நினைத்தேன்’.

வினய் பதில் சொல்லவில்லை. எங்கோ வெறித்துப் பார்த்தான். நான் எதிர்பாராதவிதமாக அவன் முகத்தில் ஒரு புன்னகை வந்தது. முகம் மண்டிய தாடியைக் கிழித்துக்கொண்டு நான்கு பற்களில் இருந்து அது வெளிப்பட்டது.

‘ஏன் சிரிக்கிறாய்?’

‘அவன் பாவம்’ என்று சொன்னான்.

‘ஏன்?’

‘அவனது குற்ற உணர்வு, அம்மாவின் பிணத்தைக் காணக்கூட விடாமல் தடுத்துவிட்டிருக்கிறது’.

‘அப்படியா நினைக்கிறாய்?’

‘வேறென்ன காரணம் இருக்க முடியும்? அவனுக்கு ஐம்பத்து மூன்று வயது. பத்து வயதில் இருந்து அவன் மனத்துக்குள் சன்னியாசியாக இருந்திருக்கிறான். இருபதில் முழுமையடைந்தான் என்றே வைத்துக்கொள். இத்தனைக் காலம் அவன் கற்ற யோகக் கலையெல்லாம் தேகத்தை ஒரு தீப்பந்தமாக்கத்தான் அவனுக்கு உதவியிருக்கிறது’.

‘பாவம்தான்’.

‘காமத்தினும் பெரிய பேய் இல்லை விமல். அதனினும் பெரிய தெய்வமும் இல்லை. நாமறியாத அவன் வாழ்வில் அவன் பெற்றது, இழந்தது அனைத்துமே அதனைச் சார்ந்ததாகத்தான் இருக்க முடியும்’.

‘அந்தப் பாகிஸ்தானிப் பெண்ணை நினைத்துக்கொண்டு சொல்கிறாயா?’

‘அவள் மட்டுமோ, அவளைப்போல் வேறு யாருமோ. யாருக்குத் தெரியும்? ஆனால், தனது துறவை அவன் அம்மாவுக்குத் தந்த கௌரவமாக நினைத்திருக்கிறான். அதில் சந்தேகமில்லை. கடைத்தேற்ற வருவேன் என்று அவன் சொன்னதை அறிந்ததுமே எனக்கு இது புரிந்துவிட்டது. அது ஒரு அகங்காரம். அழகு பொருந்திய அகங்காரம். உன் பிள்ளை என்னவாக வந்திருக்கிறேன் பார் என்று எதிரே நின்று காட்ட நினைத்த மாறுவேடமணிந்த மழலையின் பேரழகு அது. அவன் மிக நிச்சயமாக ஆதி சங்கரனை நினைத்திருப்பான். அவனையொத்த பிற சன்னியாசிகளை நினைவுகூர்ந்திருப்பான். லௌகீக வாழ்வில் அடைய முடியாத எல்லைகளை எட்டிப் பிடித்து வெற்றிக்களிப்பில் திளைத்துக்கொண்டிருந்திருப்பான். அத்தனையையும் அள்ளி எடுத்துவந்து அவள் முன் கொட்டிக் களிக்க விரும்பினால் அதில் தவறே இல்லை என்பேன்’.

‘செய்திருக்க வேண்டியதுதானே?’

‘சொன்னேனே, குற்ற உணர்வு! அது தடுத்திருக்கிறது’.

‘என்ன பேத்துகிறாய்? காமம் தவறு என்று நீயா சொல்வாய்?’

‘நிச்சயமாக இல்லை. ஆனால் காமத்தின் பரிபூரணம் என்பது அதைத் துறப்பதன் பரிபூரணத்துக்கு எதிர் எல்லையில் நின்று இயங்கக்கூடியது’.

‘சரி, அதனால் என்ன?’

‘அப்படித் துறப்பதன் பரிபூரணத்தை அம்மா அறிந்தவள், பயிற்சி செய்தவள். அவள் பிணமானபோதுகூட அவள் முகத்தில் ஜொலித்த பேரமைதியைக் கவனித்தாயா? நம் மூன்று பேரைக் கண்டபோதும், சமநிலை குலையாத அவளது திட சித்தத்தைக் கவனித்தாயா? காமம் ஒரு தவம். அதனைத் துறப்பதும் தவம்தான். துறந்தவள் எதிரே தனது கறை படிந்த தூய்மையை - அப்படி அவன் எண்ணும் பட்சத்தில், எப்படி அவன் விரித்துக் காட்டுவான்? கணப்பொழுது அவள் சிரித்துவிட்டால் என்னாவது?’

நான் திகைத்துவிட்டேன். இவன் என்ன சொல்ல வருகிறான் என்ற பதற்றம் அதிகரித்தது. உண்மையா, அப்படியும் இருக்குமா, அதுதான் அவளா என்று திரும்பத் திரும்ப உள்ளுக்குள் அலை பாய்ந்துகொண்டிருந்தேன். வினய் தீர்மானமாகச் சொன்னான், ‘அப்பாவின் சுண்டு விரல்கூட தன் மீது பட அவள் அனுமதித்திருக்கமாட்டாள்’.

‘இப்போது எண்ணிப் பார். நீ யாரோ. நான் யாரோ. நாம் அனைவரும் யார் யாரோ. கேசவன் மாமா யாரோ. அப்பா யாரோ. அதிகம் படிக்காத, உலக அனுபவம் பெரிதாக இல்லாத, கட்டுப்பாடான குடும்பத்தில் வளர்க்கப்பட்ட அம்மா, இத்தனை உதிரிகளை சேர்த்துக்கட்டி ஒரு குடும்பமாக்க என்ன நிர்ப்பந்தம்? இந்தக் கூட்டத்தில் தன்னை மட்டும் விலக்கிக்கொண்டிருந்தால் அவள் வாழ்க்கை வேறு. ஆனால் அவள் தன்னைச் சொருகிக்கொண்டு, அத்தனை பேரையும் விலக்கி நிறுத்தி வேடிக்கை பார்த்திருக்கிறாள். என்றைக்கோ யாரோ செய்த பிழையின் வாசனையை இன்றைக்கு நமது மூச்சுக் காற்றுக்குள் மெதுவாக அனுப்பி உணரச்செய்ய முடிகிறதே, இது எப்படி? இது தவமில்லை என்றால் வேறு எது? அவள் யோகி இல்லை என்றால், வேறு யார்? அதனால்தான் சொன்னேன். அவளெதிரே நிற்க அவன் கூசியிருக்கிறான். தனது அகங்காரத்தை மூச்சுக்காற்றில் வெளியேற்றிவிட்டு, அவமானத்தைத் தணலாக்கிக்கொண்டு தன் முடிவை எழுதிக்கொண்டான்’.

எனக்குப் பேச்சற்றுப் போனது. பிரமை பிடித்தாற்போல வினய்யையே பார்த்துக்கொண்டிருந்தேன். என்னையறியாமல் கண்ணில் நீர் சுரந்தது. வினய், ‘என்ன?’ என்று கேட்டான்.

‘சுதந்திரம் தவப் பொருளாக இருக்கும்வரை, என் வாழ்வில் கண்ணீருக்கு இடமில்லை என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் சிறைப்படுதலைத் தவமாக்கிக்கொண்டு, ஒருத்தி என்னை மிதித்து, நசுக்கி எறிந்துவிட்டாற்போல இருக்கிறது’.

‘ஆம். அது சரிதான். அவள் நம் அனைவரையுமே நசுக்கித்தான் எறிந்திருக்கிறாள். தேவியின் கருணைக்காக நான் அலைந்த அலைச்சல், கிருஷ்ணனின் தரிசனத்துக்காக வினோத் மேற்கொண்ட தவம், உலகையே சேவகனாக்கிக்கொள்ள நீ கையாண்ட உத்திகள், மரணத்தை வெல்ல அண்ணா மேற்கொண்ட முயற்சிகள் அனைத்துமே அவள் காலடியில் உதிர்ந்துவிட்டன விமல். தோற்கடிப்பதன் சுகத்தை அனுபவிப்பதற்காக, அவள் வாழ்நாள் முழுதும் தோற்றுக்கொண்டிருந்ததுபோல நடித்திருக்கிறாள். உண்மையில் நாம்தான் தோற்றவர்கள்’.

‘அவள் யாரைத் தோற்கடித்தாள்? அப்பாவையா?’

வினய் சிரித்தான். ‘அவள் விதியின் பெயர் அப்பாவாக இருக்குமானால், அதுதான். அல்லது நாமறியாத வேறொன்று என்றால், அதுவும் சரிதான்’.

நாங்கள் பொய்கைநல்லூரை அடைந்து கோரக்கர் சமாதிக்குச் சென்றபோது, அங்கு யாருமில்லை. வெட்ட வெளியில் தனித்திருந்த அவரது சமாதிக்குக் காலம் கோயில் கட்டிவிட்டிருந்தது. ‘நீ இங்கு வந்திருக்கிறாயா?’ என்று வினய் கேட்டான்.

‘இல்லை. வந்ததில்லை’.

‘நான் பலமுறை வந்திருக்கிறேன்’.

‘எதற்கு?’

‘தெரியவில்லை. வா என்று ஒரு குரல் கேட்கும். கிளம்பிவிடுவேன்’.

‘அவர் உன் குருவா?’

‘இதுவரை இல்லை’.

‘இனி?’

‘யாருக்குத் தெரியும்? குரல் வரும். கிளம்பி வருவேன். நாளெல்லாம் அவர் சமாதி முன் அமர்ந்திருப்பேன். ஒன்றும் நிகழாது. எழுந்து போய்விடுவேன்’.

‘கோரக்கர். சாம்பலில் உயிர்த்தவரல்லவா?’

‘ஆம். ஒன்றுமில்லாதது என்று ஒன்றுமில்லை என்று உணர்த்தியவர். ஒரு காலத்தில் கோரக்கரைப்போல நானும் ஒரு மாபெரும் சித்தனாவேன் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். இப்போது நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது’.

‘நீ சொரிமுத்துவைப் போலாவது ஆகியிருக்கலாம்’.

‘இல்லை. நான் யாரைப்போலவும் ஆக இயலாது விமல். எனது துறவின் சாரமே என் அலைச்சல்தான். நான் உட்கார முடியாதவன். உட்காரத் தெரியாதவன். உட்கார விரும்பாதவனும்கூட’.

‘ஆனால் நீ நல்லவன்!’ என்று சொன்னேன். அவன் சிரித்தான். என்னை ஒருமுறை இறுக அணைத்து விடுவித்தான். ‘அதனால்தான் அந்தச் சுவடியை அம்மாவேதான் உருவாக்கி, அண்ணாவின் கைக்குக் கிடைக்கச் செய்திருக்கிறாள் என்பதை அறிந்தும், யாருக்கும் சொல்லாமல் இருந்துவிட்டேன்’ என்று சொன்னான்.

அன்று முழுவதும், கோரக்கரின் சமாதி முன் வினய் தியானத்தில் அமர்ந்திருந்தான். நான் அவனை வெறுமனே பார்த்துக்கொண்டு அவனருகே சும்மா அமர்ந்திருந்தேன். இருட்டும் நேரம், அவன் தியானம் கலந்து கண் விழித்தான். நான் புன்னகை செய்தேன். அவன் சட்டென்று, ‘மன்னித்துக்கொள். உன்னை நெடுநேரம் காக்க வைத்துவிட்டேன்’ என்று சொன்னான்.

‘பரவாயில்லை. எனக்கு வேறெந்த வேலையும் இல்லையே’.

‘இருந்தாலும், இதெல்லாம் உன் நம்பிக்கைகளுக்குச் சம்பந்தமில்லாதவை’.

‘ஆனாலும் அனுபவம் அல்லவா? சரி விடு. நாம் எதற்கு ராமேஸ்வரம் போகிறோம்?’

‘போக வேண்டுமா என்று இப்போது தோன்றுகிறது’.

‘அப்படியா? ஏன்?’

‘அங்கு ஒன்றுமில்லை. எல்லாம் இங்குதான்’ என்று நெஞ்சைத் தொட்டுக் காட்டினான்.

‘அப்படியானால் நேபாளத்தில் மட்டும் என்ன இருக்கிறது? போகப் போவதாகச் சொன்னாயே?’

‘ஆம். அங்கும் ஒன்றுமில்லை. மனத்தை நிலைபெறச் செய்ய இடங்கள் ஓரளவு உதவும். அதை எடுத்து வெளியே வைத்துவிட்டால், இடம் தேவைப்படாது’.

‘அது முடியும் என்று நினைக்கிறாயா?’

‘சும்மா முயற்சி செய்து பார்க்கிறேனே’ என்று சொன்னான். நான் புன்னகைத்து, அவன் தோளைத் தட்டிக் கொடுத்தேன்.

‘நல்லது. நான் விடைபெறவா?’

‘உன் விருப்பம்’.

‘இந்நேரம், பத்மா மாமியுடன் வினோத் ரயில் ஏறியிருப்பான். நாளை அல்லது நாளை மறுநாள் அவன் கயாவுக்குப் போய்விடுவான்’.

‘ஆம். எனக்கு கிருஷ்ணனை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது. அவன் வினோத்துக்காக இன்னும் நெடுநாள் காத்திருக்கவேண்டி இருக்கும்’ என்று சொன்னான்.

‘சித்ராவைப் போலவா?’

‘சந்தேகமில்லை. சித்ரா என்னாளும் அவனைக் கொல்லமாட்டாள். அவளுக்கு அதற்குத் துணிவில்லை. காமத்தின் வாசலைக்கூடத் தொடாத காதலுடனேயே அவள் வாழ்வு முடிந்துவிட்டது. அவன், காதலின் வாசனையையே அறியாமல், அவளைக் கிருஷ்ணனாகக் கருதி மனத்துக்குள் புணர்ந்துகொண்டே இருக்கிறான். அவன் சொன்னானே என்று லட்சம் முறை ஜபித்துப் பார்த்தபோது எனக்குத் தோன்றியது அதுதான். ஜபம் ஒரு சுய இன்பம். வெறும் சக்தி விரயம்’.

‘அடப்பாவி!’ என்று அலறிவிட்டேன்.

வினய் சிரித்தான். ‘பூரணத்துவத்துக்காக அலைவது வீண். இந்த உலகில் எதுவும் பூரணமடைந்ததல்ல. எச்சங்களில் இருந்து கற்றுக்கொள்வதே நமக்கு விதித்தது’ என்று சொன்னான்.

நான் நெடுநேரம் அமைதியாக நின்றிருந்தேன். எனக்குள் அதுவரை எந்த அதிர்வையும் உண்டாக்காதிருந்த கோரக்கரின் சமாதியை மெல்ல நெருங்கினேன். சிறிது நேரம் அதை உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தேன். சாம்பலில் இருந்து உதித்தவர். உதித்த கணம் வரையல்லவா சாம்பல் ஒரு எச்சம்? உதித்துவிட்ட கணத்தில் சாம்பலும் பூரணமடைந்துவிடுகிறதல்லவா?

‘ஆம். நீ பூரணமல்ல. ஆனால் முயன்றால், உன்னால் ஒன்றையேனும் பூரணமுறச் செய்ய முடியும்’ என்று வினய் சொன்னான்.

நான் அவனருகே வந்து நின்றேன். கையை உயர்த்தி ஆசி கூறும் விதத்தில் சொன்னேன், ‘நீ செய். நான் பார்த்து ரசிக்கிறேன்’.

சொல்லிவிட்டுத் திரும்பி நடக்க ஆரம்பித்தேன். என் பாதங்கள் இழுத்துச் சென்ற திசையெல்லாம் நடந்துகொண்டே இருந்தேன்.

 

 

https://www.dinamani.com/junction/yathi/2018/nov/05/166-சாம்பலின்-குழந்தை-3033238.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

167. திருமுக்கூடல்

கன்னியாகுமரியில் இருந்தேன். முப்புறக் கடலும் சங்கமமாகும் இடத்தை ஒட்டி மணல் வெளியில் தனித்து அமர்ந்திருந்தேன். இருளும் குளிரும் என்னைச் சுற்றி அரண் எழுப்பியிருந்தன. ஈர மணலின் வாசனை நன்றாக இருந்தது. சுற்றுலாப் பயணிகள் வீசிவிட்டுப் போயிருந்த குப்பைகள்கூட ஏதோ ஒரு ஒழுங்குக்குக் கட்டுப்பட்டுச் சிதறியிருப்பதைப் போலவே தோற்றமளித்தன. வியாபாரிகள் கடைகளை மூடிவிட்டுக் கிளம்பியிருந்தார்கள். கடற்கரையில் நடமாட்டம் மிகவும் குறைந்துவிட்டிருந்தது. காலிக் கூடைகளுடன் உரக்கப் பேசியபடி கடந்துபோன பெண்களைப் பார்த்தேன். கைத்தடியுடன் சுற்றிவந்த காவலர் ஒருவர், என்னருகே வந்து உற்றுப் பார்த்தார். நான் புன்னகை செய்தேன். யாரோ சாமி என்று எண்ணியிருப்பார். வணக்கம் சொல்லி நகர்ந்து சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம், இரண்டு நாய்கள் குரைத்துக்கொண்டும் ஒன்றையொன்று துரத்திக்கொண்டும் ஓடிவந்தன. நான் எழுந்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் முடியவில்லை. நடந்துகொண்டே இருந்த களைப்பு அமர்ந்த கணத்தில் இருந்து பூதாகாரமாகப் பெருகிவிட்டிருந்தது. இதற்குமேல் என்னால் ஓரடிகூட எடுத்து வைக்க முடியாது என்று தோன்றியது. ஓடாதவரை அது துரத்தாது என்று வினோத் சொன்னதை நினைத்துக்கொண்டேன். அதையும் பரீட்சித்துப் பார்த்துவிடலாம் என்று அசையாது அப்படியே இருந்தேன்.

 

 

அந்த நாய்கள் என்னைக் கண்டு மிரளவில்லை; என்னை அச்சுறுத்தவும் விரும்பவில்லை. அவை தமக்குள் விளையாடிக்கொண்டிருக்கின்றன என்று நினைத்துக்கொண்டேன். சிறிது நேரம் இங்குமங்கும் ஓடிப் பிடித்து ஆடிவிட்டு ஓரிடமாக இரண்டும் அமர்ந்துகொண்டன. நான் கடலுக்கு நடுவே தெரிந்த பாறை வெளிச்சத்தையே பார்த்துக்கொண்டு இருந்தேன். அங்கே விவேகானந்தர் இருந்தார். கரையில் நான் இருந்தேன். முன்பொரு சமயம் நான் விவேகானந்தர் பாறைக்குச் சென்றிருக்கிறேன். ஒரு கோட்டையைப் போல நிர்மாணம் செய்யப்பட்டிருந்த அந்த நினைவிடத்துக்குள், அப்போதும் இரண்டு நாய்கள் ஓடிக்கொண்டிருந்தன. நாய்களை யார் படகில் ஏற்றிப் பாறைக்குக் கொண்டு வந்திருப்பார்கள் என்று யோசித்தேன். அவை நீந்தியும் வரக்கூடும் என்று படகோட்டி ஒருவன் சொன்னான். எனக்கு அப்போது அது மிகவும் வியப்பாக இருந்தது. தரையில் சிந்திய தானியங்களை உண்ண வரும் காக்கைகள் பத்தடி நடக்கும்போது வருகிற அதே வியப்பு. கோல்கொண்டாவில் ஒரு சமயம் ஓர் அழகிய மயிலைக் கண்டேன். கோட்டைச் சுவரின் மீது அது அமர்ந்திருந்தது. நின்று ரசித்துக்கொண்டிருந்தபோதே அது தனது சிறகுகளை அகல விரித்துப் பறந்து சென்று சிறிது தொலைவில் மீண்டும் அமர்ந்துகொண்டது. பறவைதான். ஆனாலும் நடந்து மட்டுமே பார்த்திருக்கிறோம். காகமும் பறவைதான். ஆனால் பறந்து மட்டுமே கண்டிருக்கிறோம். மனிதனல்லாத அனைத்துப் பிறப்புகளும் ஒன்றுக்கு மேற்பட்ட ஏதோ ஒரு சாமர்த்தியம் இருக்கும் என்று தோன்றியது. அண்ணாவால் நூறு நூற்றைம்பத்து அடி தூரத்துக்குப் பறக்க இயலும் என்று எப்போதோ ஒரு சமயம் கங்கோத்ரியில் நான் சந்தித்த யோகினி ஒருத்தி சொன்னாள். ஒரு மலைச் சிகரத்தில் இருந்து இன்னொரு சிகரத்துக்குப் போக எப்போதாவது அவன் அந்த உத்தியைப் பயன்படுத்துவான் என்று சொன்னாள். ஹட யோகிகள் பறப்பார்கள். நெருப்பில் கிடக்க அவர்களால் முடியும். நீரில் நடக்கக்கூடிய யோகிகள் பலரைக் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எல்லாம் காற்றை வசப்படுத்துதல். உடலைக் காற்றாக்குதல். காற்றுதான் சகலமும். ஆனால் பறவைகள் நடப்பதற்கு ஹட யோகம் பயில்வதில்லை. ஒரு முழு வாழ்நாளைப் பரீட்சைகளில் தொலைப்பதில்லை. சிந்திக்க இயலாத குறைபாட்டை இயற்கை இவ்வாறு அவற்றுக்கு சமன் செய்கிறது என்று நினைத்தேன்.

சட்டென்று ஒரு குரல் கேட்டது. ‘சிந்தித்து மட்டும் நீ என்ன சாதித்தாய்?’

நான் திரும்பிப் பார்த்தேன். யாருமில்லை. அந்த இரண்டு நாய்கள் மட்டும்தான் இருந்தன. எனக்குப் பெரிய வியப்போ, ஆர்வமோ எழவில்லை. இரண்டில் யார் சொரிமுத்து என்று அறியக்கூட விரும்பவில்லை. நான் படுத்துக்கொண்டேன்.

‘பதில் சொல்லிவிட்டுத் தூங்கு. சிந்தித்து நீ என்ன சாதித்தாய்?’

‘ஒன்றுமில்லை. அதனாலென்ன?’

‘ஒன்றும் சாதிக்காததற்கு உனக்கு எதற்குத் துறவு?’

‘அவசியமில்லைதான். வேண்டுமானால் சொல்லுங்கள். அங்கியை அவிழ்த்துத் தந்துவிடுகிறேன்’.

‘நாற்றம் பிடித்த உன் அங்கி எனக்கு எதற்கு? உன் அம்மாவிடம் நீ தோற்றிருக்கிறாய். அது உனக்கு உறுத்தவில்லையா?’

‘நிச்சயமாக இல்லை. என் அம்மா வெல்வதற்கு நான் உதவிய மகிழ்ச்சிதான் எனக்கு. என் சகோதரர்களும் இதில் சம அளவு உதவியிருக்கிறார்கள் என்ற திருப்தி இருக்கிறது’.

‘பாழ். எல்லாம் பாழ். அவன் இறந்திருக்கக் கூடாது. கங்காதரன் சற்றுத் தாமதித்துவிட்டான்’.

இப்போது நான் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தேன். ‘என்ன சொல்கிறீர்கள்? அவன் கொலை செய்ய வரவில்லையா?’

‘உன் அண்ணனை எதற்குக் கொல்ல வேண்டும்?’

‘வேறு யாரை?’

‘அது உனக்குத் தேவையில்லாதது. நீ என்ன செய்யப் போகிறாய்?’

நான் சிரித்தேன். அதை இவருக்கு எதற்குச் சொல்ல வேண்டும்? உலகத்துடன் எனக்கு இருந்த ஒற்றை உறவையும் முடித்துக்கொண்டு வந்திருக்கிறேன். இனி நான் கட்டற்றவன். காற்றேதான். சந்தேகமில்லை. காற்றை வெல்வதைக் காட்டிலும் காற்றாகிவிடுவது எத்தனை உயர்ந்தது! பறவையின் நடையைப் போல இது பிரயத்தனமற்றது. இயல்பாகக் கூடி வருவது. இந்த உலகில் எனக்குக் கடமைகள் என இனி ஒன்றுமில்லை. நான் யாருக்கும் கடமைப்படவும் இல்லை. நான் காசற்றவன். கவலையற்றவன். கடவுளும் அற்றவன். ஒரு தக்கையென என்னால் நீரில் மிதந்து செல்ல இயலும். புழுதியைப் போல், வீசும் காற்றுக்கு என்னை அளிப்பேன். எங்கிருந்து எங்கு தூக்கியெறிந்தாலும் போய் இருப்பேன். மீண்டும் சுமந்து செல்ல வரும் காற்றுக்காக எத்தனைக் காலம் வேண்டுமானாலும் காத்திருப்பேன். அது வராமலே போனாலும் எனக்கு இழப்பில்லை. வலியில்லை. துயரமோ, கண்ணீரோ இல்லை. என் துறவின் சாரமே இதுவல்லவா? இதற்காகவல்லவா இத்தனைக் கால மெனக்கெடல்கள்?

‘முட்டாள்!’ என்றது அது.

இருந்துவிட்டுப் போகிறேன். என்ன அதனால்?

‘ஓயாமல் செய்துகொண்டே இருப்பவன்தான் செயலற்றவனாகிறான். ஏனென்றால் அவன் செயலாகிவிடுகிறான். ஓய்வை உணர்ந்துவிட்டால் மரணத்தை நெருங்கிவிட்டதாகப் பொருள்’.

‘நான் ஓய்ந்துவிட்டேன் என்று யார் சொன்னது?’

‘இலக்கற்று இருப்பது ஓய்வுற்று இருப்பது போலத்தான்’.

‘உங்களுக்கு என்ன அக்கறை?’

அது சிறிது நேரம் அமைதியாக இருந்தது. பிறகு மெல்ல என்னை நோக்கி நடந்து வந்து என் அருகே அமர்ந்து என்னை உற்றுப் பார்த்தது. தன் மூக்கை என் மடியின்மீது தேய்த்து முகர்ந்தது. வாலை உயர்த்தி இப்படியும் அப்படியுமாக இருமுறை ஆட்டியது. நான் என்ன என்று கேட்டேன்.

‘தனிப்பட்ட அக்கறை என்று எனக்கு யாரிடமும் எதுவும் இல்லை. ஆனால் என் கடமைகளில் இருந்து நான் நகர்ந்து செல்வதில்லை. நீ எனக்கு ஒதுக்கப்பட்டவன் என்பதால்தான் உன்னை விடாமல் பின் தொடர்கிறேன்’.

‘ஒதுக்கியவனை உதைத்தால் சரியாகிவிடும்’ என்று சொன்னேன்.

என் அன்பான சொரிமுத்துக் கிழவா, நான் யாருக்கானவனும் இல்லை. எனக்கும்கூட. இந்தக் கணம் நீ கோபம் கொண்டு என்னைக் கடித்து, சாகடிக்கலாம். நான் சொர்க்கத்துக்கோ, நரகத்துக்கோ போகலாம். அல்லது ஒரு பேயாகத் திரியலாம், சித்ராவைப் போல. ஒன்றுமில்லாமல் காற்றாகவும் கரியாகவும் மாறி உருவற்றுப் போய்விடவும் கூடும். கழுகுகளுக்கு உடலைத் தின்னக் கொடுத்துவிட்டு இயற்கையாகிவிடுவேன். எட்டிப் பார்க்காத வரை இதுவா அதுவா என்ற வினா இருக்கத்தான் செய்யும். நான் சிந்தித்துக் கிழித்தது இதுதான். இருப்பதற்கும் இல்லாது போவதற்கும் இடையே வாழ்வது என்ற ஒன்று உள்ளது. நான் அதைக் கண்டவன். அதன் அனைத்து விதமான ருசிகளையும் அறிந்தவன். துறவென்று நீ சொல்வதைத் துறந்தாலும் நான் இப்படித்தான் இருப்பேன். ஒரு முழு வாழ்நாளை அம்மா வீணடித்தாள். என் அண்ணன்களும் அதையே செய்தார்கள். நோக்கம் வேறு. வழிமுறைகள் வேறு. ஆனால் சென்று சேர்ந்த இடம் அதுதான்.

‘நிறுத்து. வினய்க்கு கோரக்கரின் தரிசனம் சற்றுமுன் கிடைத்துவிட்டது’.

‘அப்படியா? மிக்க மகிழ்ச்சி. இமயத்தின் உயர்ந்த காடுகளில் அவன் அண்ணாவின் இடத்தை நிரப்பி மரத்துக்கு மரம், மலைக்கு மலை ஒரு குரங்கைப் போலத் தாவிக்கொண்டிருக்கட்டும்’.

‘பத்மா மாமி விரைவில் இறந்துவிடுவாள். வினோத் அவளுக்கு ஈமச் சடங்குகள் செய்து முடித்துவிட்டு, மதுராவுக்குப் போகப் போகிறான்’.

‘அவனுக்குக் கிருஷ்ண தரிசனம் கிடைக்கட்டும். அவன் ஒரு கோபிகையாகி பிருந்தாவனத்தின் துளசி வனங்களுக்குள்ளே காற்றில் ஆடிக்கொண்டிருக்கட்டும்’.

‘நீ ஏன் இப்படி இருக்கிறாய்?’

நான் சிரித்தேன். அவரை ஏந்தி எடுத்து முத்தமிட்டேன். அப்படியே நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டேன். ‘அன்றொரு நாள் எனக்கு அபின் கொடுத்தீர்களே, அது இப்போது இருக்கிறதா?’

‘எதற்கு?’

‘நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் இது போதவில்லை. மகிழ்ச்சியின் அபரிமிதத்தை நான் அறிய வேண்டும். அதில் திளைத்துக்கொண்டே இருக்க விரும்புகிறேன். இடைவெளியில்லாமல் மேகப் பொதிகளுக்கு நடுவே நான் பறந்துகொண்டே இருக்க வேண்டும். வழியில் கடவுள்களின் சந்தை தென்பட்டால், அதைத் தவிர்த்துவிட்டுப் போய்விடுவேன். கடவுள்கள் மனிதர்களைக் காட்டிலும் அபாயகரமானவர்கள்’.

‘அப்படியா நினைக்கிறாய்? ஒருவேளை வழியில் உன் அண்ணா தென்பட்டால்?’

நான் சிரித்தேன். ‘அது மட்டும் நடக்காது’.

‘ஏன் அப்படிச் சொல்கிறாய்?’

‘அவன் அம்மாவின் இறந்த உடலைக் காண வெட்கப்பட்டதாக வினய் சொன்னான். என்னைக் காண அவன் அச்சப்படுவான்’.

‘அச்சமா?’

‘ஆம். சந்தேகமில்லை. அச்சம்தான்’.

‘என்ன அச்சம்?’

‘கிழவா, தவமென்பது வாழ்வது. வாழ்வென்பது நிறைகுறைகளின் சரி விகிதக் கலவை. நிறைகள் சார்ந்த அகங்காரமும் குறைகள் சார்ந்த குற்ற உணர்வும் தவிர்க்க முடியாதவை. இதில் எதைத் தவிர்க்க நினைத்தாலும் தோற்கத்தான் வேண்டும். அவன் தோற்றவன். நான் வென்றவன் இல்லையே தவிர தோற்க விரும்பாதவன். இது அவனுக்கு மிகுந்த இடைஞ்சலாக இருக்கும் என்று எண்ணுகிறேன்’.

‘நீ ஒரு அயோக்கியன். அரசியல் தரகன். சந்தர்ப்பவாதி. பெண் பித்தன். சுகபோகங்களில் திளைக்க விரும்புபவன். ஆனால், ஞானியைப் போலப் பேசுகிறாய்’.

நான் வாய் விட்டு உரக்கச் சிரித்தேன். ‘ஞானம் பிறக்கும் இடம் புரிகிறதா உங்களுக்கு?’

அது என்னை விட்டு நகர்ந்து அந்த இன்னொரு நாயின் அருகே சென்று அமர்ந்துகொண்டது. கோபத்திலும் ஆவேசத்திலும் அதன் கண்கள் ஜொலித்ததன. ஆக்ரோஷமாக அதற்கு மூச்சு வாங்கி, அடி வயிறு வேகவேகமாக விரிந்து சுருங்கியது. ஆங்காரமாகக் குரல் எழுப்பித் தனது வாயைத் திறந்து பற்களைக் காட்டியது. நான் அமைதியாக அதைப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

தனது தோழனின் திடீர்க் கோபம் அந்த இன்னொரு நாய்க்கு வியப்புக்குரியதாக இருந்திருக்க வேண்டும். அது சட்டென்று சொரிமுத்துவின் உடலைத் தன் முகத்தால் தேய்த்து நக்கியது. பின்னங்காலைத் தூக்கி சொரிமுத்துவின் கால்களின்மீது போட்டு, தட் தட்டென்று இருமுறை தட்டியது. வாலை ஆட்டியது. சட்டென்று எழுந்து நின்று வவ் என்று குரைத்தது. சொரிமுத்துவும் எழுந்துகொண்டார். நான் உட்கார்ந்த நிலையிலேயே அவரைப் பார்த்துக் கரம் குவித்தேன்.

‘போய் வாருங்கள் ஐயா. என்னை ஒரு பொருட்டாகக் கருதாதீர்கள். நான் இருக்கும்வரை இப்படித்தான் இருப்பேன். இறக்கும்போது மகிழ்ச்சியாக இறப்பேன்’ என்று சொன்னேன். சொரிமுத்து திரும்பி நடக்க ஆரம்பித்தார். அவரோடு சென்ற அந்த இன்னொரு நாய் சிறிது தூரம் சென்று, நின்று திரும்பி என்னைப் பார்த்தது. அது சிரித்தாற்போலத் தெரிந்தது. சட்டென்று தனது முன்னங்காலை உயர்த்தி ஆசி வழங்குவது போலச் செய்தது. ‘இனி உன் வழிக்கு நான் வரமாட்டேன்’ என்ற குரல் கேட்டது.

ஒரு கணம்தான். எனக்குப் புரிந்துவிட்டது. அண்ணா என்று அழைக்க வாயெடுக்கும்போதே, இரண்டு நாய்களும் எங்கோ ஓடி இருளில் மறைந்துபோயின. எனக்குச் சிரிப்பு வந்தது. மெல்ல மெல்ல எனக்குள் சிரித்து, அது அடங்காமல் பீறிட்டு வெளிப்பட்டு உரக்கச் சிரிக்கத் தொடங்கினேன். என் கண்ணில் நீர் வரும் அளவுக்குச் சிரித்துக்கொண்டே இருந்தேன். இரவெல்லாம் சிரித்துச் சிரித்து மிகவும் களைத்துப்போனேன்.

மறுநாள் விடிந்து சூரிய உதயம் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கியபோது நான் திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.

பல வருடங்களுக்கு முன்னர் மேற்குத் தொடர்ச்சி மலையில் குறிஞ்சி பூத்திருப்பதாக ஒரு சமயம் தகவல் வந்தது. போய்ப் பார்த்துவிட்டு வரலாம் என்று எனது மாணவர்களுடன் கிளம்பிச் சென்றேன்.

நாளெல்லாம் ஒரு மலை ஏறி மறு புறம் இறங்கி, நீலக் குறிஞ்சிகள் பூத்திருந்த இடத்தை நாங்கள் நெருங்கியபோது வெகுவாக இருட்டிவிட்டிருந்தது. உருவம் தெரியாத அடரிருள். சீடர்களுக்கு ஒரே ஏமாற்றமாகப் போய்விட்டது. மீண்டும் நாளைதான் வர வேண்டுமா என்று கேட்டார்கள்.

‘நீலக்குறிஞ்சியை நீங்கள் புகைப்படத்தில் பார்த்ததில்லையா?’

‘புகைப்படத்தில் பார்த்து என்ன குருஜி?’

‘பிறகு? தொட்டுப் பார்க்க வேண்டும். அவ்வளவுதானே? தொடுங்கள்’. நான் தொட்டுக் காட்டினேன்.

‘தொடுவது மட்டும்தானா?’

‘வேறென்ன? அதன் உருவம் உங்களுக்குத் தெரியும். புகைப்படத்தில் பார்த்திருக்கிறீர்கள். இதோ இப்போது தொடுவதற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிள்ளி முகர்ந்து பார்க்க விரும்பினாலும் செய்யலாம். வேறென்ன வேண்டும்?’

தர்க்கப்படி சரிதான். ஆனால் ஓர் அனுபவம் இல்லாமல் போகிறதே என்று அவர்கள் வருத்தப்பட்டார்கள். ஒரு கணம் யோசித்தேன். ‘வா. என்னைத் தொடு. நான் வேறு அது வேறல்ல’ என்று சொன்னேன். அந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத அந்தப் பதிலில் திகைப்புற்ற பெண்ணொருத்தி, பரவசம் மேலிட்டுப் பாய்ந்து வந்து ‘குருஜி’ என்று என்னை இறுக்கிக் கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள்.

அதுதான் அப்போது எனக்கு நினைவுக்கு வந்தது. சூரிய உதயம் எப்போதும் நிகழ்வது. குமரி முனையில் அதைக் காண்பது ஓர் அனுபவம்தான். சந்தேகமில்லை. நான் குமரி முனையில் இருந்தேன். சூரிய உதயத்தைப் பலமுறை கண்டிருக்கிறேன். ஆனால் இந்த நாளில், இந்த இடத்தில், இப்போது கிடைத்த வாய்ப்பைத் தவிர்த்திருக்க வேண்டாம் என்றுதான் உலகம் சொல்லும்.

சொல்லிவிட்டுப் போகட்டுமே? இன்றெல்லாம் நான் நடப்பேன். இரவு களைத்து எங்காவது படுத்துக் கண் மூடுவேன். அப்போது சூரியன் எனக்காக மீண்டும் உதிக்கும். அல்லது உதிக்கச் செய்வேன். சரி, உதிக்காமலே போனால்தான் என்ன? என் உள்ளங்கைகளைக் காண எனக்கு வெளிச்சம் தேவையில்லை. கண்களும்கூட.

நான் என் மனத்துக்குள் அம்மாவுக்கு நன்றி சொன்னேன். அண்ணாவுக்கு நன்றி சொன்னேன். சொரிமுத்துவுக்குச் சொன்னேன். யாருக்காவது மிச்சம் வைத்திருக்கிறேனா என்று ஒரு கணம் யோசித்துப் பார்த்தேன். ஒன்றுமில்லை என்று தோன்றியது. அதன்பின் வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.

(முற்றும்)

 

https://www.dinamani.com/junction/yathi/2018/nov/06/167-திருமுக்கூடல்-3033805.html

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் மிகவும் நன்றி கிருபன்.......! இந்தக் கதையை  பொத்திப் பொத்தி வைத்து வாசித்தேன். முடிந்து விடப் போகிறதே என்னும் கலவரத்துடன். இன்று முடிந்து விட்டது. பா. இராகவன் சிறந்த எழுத்தாளர் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஆனால் உணர்வுகளுக்குள் பயணித்து இழுத்து வருவது போல் இந்தக் கதை அமைந்திருக்கு.என்னைப்போன்று பலர் இந்தக்கதையை வசித்து வந்திருப்பினம். எங்கே தேர்  தெற்கு வீதியில் நின்றுவிடுமோ என்று யோசித்தேன். ஆனால் கோபுர வாசலுக்கு கொண்டுவந்து சேர்த்துள்ளீர்கள். எல்லோரின் சார்பிலும் மீண்டும் உங்களுக்கு நன்றி.....!  🌺

நால்வகைத் துறவிகள் இப்படித்தான் இருப்பர்  என்று நினைக்கிறன்.....!  🌻

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தொடர்கதையை நான் வாசிக்கவில்லை.! எனினும் சுவி ஐயா போன்ற பல வாசகர்களுக்காக இணைக்கப்படாமல் இடையில் நின்றபோது தொடர்ந்தும் இணைத்தேன். யாழில் இருப்பதனால்  எதிர்காலத்தில் வாசிக்கலாம்தானே😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.