Jump to content

செய்தது நீ தானா


Recommended Posts

செய்தது நீ தானா …-சிறுகதை

%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%
 

விடுமுறை நாளென்றாலே கொஞ்சநேரம் அதிகமாக நித்திரை கொள்ளவேண்டும் என்று நினைத்துக்கொண்டு படுத்தாலும் வேலை நேரத்துக்கே வழமை போல எழும்பிவிடுவேன். ஆனால் அவசரப்படாமல் ஆடியசைந்து ஒரு தேநீரை போட்டு எடுத்துக்கொண்டு போனில் யூ ரியுப் அப்பில்  இளையராஜாவின் இனிய கானங்களை எடுத்து அப்படியே விரலால் சுண்டிவிட  அது தொலைகாட்சி திரைக்கு தாவி அகன்ற திரையில் ஓடத் தொடங்கியதும் சோபாவில் சாய்ந்தபடி  கண்ணை மூடி காட்சியை பார்க்காமல் கேட்பதே ஒரு இன்பம். தமிழ் சினிமாவுக்கு இளையராஜா வராமல் போயிருந்தால் எனது தலைமுறையினருக்கு தேனிசைத் தென்றல் தேவா தான் தெய்வமாகியிருப்பர். வித்தியாசாகரும்,மரகத மணியும் மனதில் நின்றிருப்பார்கள். வாத்தியார் பிள்ளை மக்கு என்பதைப்போல இளையராஜா  வாரிசுகளால் இசையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லையென்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே டிக் , டிக், டிக் படத்திலிருந்து “ஓ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே” பாடல் ஒலிக்கத் தொடங்கியிருந்தது. கண்ணைத் திறந்து பார்க்காமலேயே மனத்திரையில் சவுக்குத் தோப்பில் கமலும் அவர் பின்னல் மாதவி நீச்சலுடையில்  ஓடிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் திடீரென எனக்கு அவனின் நினைவு மீண்டும்  மூளை மடிப்புக்களிலிருந்து சிரமப்பட்டு வெளி  வந்தது.

அவன் உருவம் கூட சிகரெட்டின் புகையிலிருந்து கிளம்பும்  வடிவங்களைப்போல மங்கலாக  நினைவில் உள்ளது. எண்பதுகளின் இறுதி நான் தாய்லாந்தில் புக்கெட் நகருக்கு அருகில் தங்கியிருந்த காலம். தங்கியிருந்தது வீடா, குடிசையா என்று பட்டிமன்றமே நடத்தலாம். கீழ் பாதி சீமெந்து. மேல் பாதி மரப்பலகைகள் பொருத்தப்பட்டுக் கூரைக்குத் தகரம் போடப்பட்ட ஒரேயொரு சிறிய அறை. அதற்கு தகரத்தாலான கதவு. முன்னால்  மூன்று பக்கமும் மூங்கில் பாய்களால் மறைக்கப்பட்ட காற்றோட்டமான சிறிய கூடம். இந்தக் குடிசை வீட்டில் ஒரு மின்னடுப்பு சில அலுமினியப் பாத்திரங்களோடு ஆங்கிலம் மூலம் தாய் மொழி கற்றுக்கொள்ளும் புத்தகமும். பெறுமதியான பொருட்கள் என்றால் சிறிய கலர் தொலைக்காட்சியும் வி சி ஆரும் தான். அப்போ தமிழ் சேனல்கள் எல்லாம் இல்லை. எனவே சிங்கப்பூரிலிருந்து தமிழ்ப் பட கசெட்டுக்களை தபாலில் எடுத்து பார்ப்பதுதான் பொழுதுபோக்கு. அதைவிட என்னிடம் ஒரு வாக் மேனும் இருந்தது.

அன்று மதியம்  தனியொருவனுக்காக எப்படி விதம் விதமாக சமைக்க முடியும்? ஒரு வெறுப்போடு “வெந்ததை தின்று வேகின்ற உடல்” என்கிற பட்டினத்தார் பாடலைப்  பாடிய படியே மின் அடுப்பில் கொதிக்கத் தொடங்கிய உலையில் அரிசி, பருப்பு, கீரை, வட்டமாக வெட்டிய காரட் எல்லாவற்றையும் போட்டு அலுமினிய சட்டியின் வாயை மூடி விட்டு பொரிப்பதற்காக பொலிதீன் பையில்  கட்டி வாங்கி வந்த தவளைக் கால்களை, அதன்  பையைப் பிரித்து ஒரு தட்டில் போட்டு கொஞ்சம் உப்பும் மிளகாய் தூளும் பிரட்டி ஊற வைத்து விட்டு, வாங்கி வந்த கூலான பியர் போத்தல் ஒன்றை எடுத்து மூடியை பல்லால் கடித்து திறந்து சில மிடறு  விழுங்கிய போதுதான் அன்றைய கொடும் வெக்கையும் ,சந்தைக்கு  கெந்திக் கெந்தியே நடந்து போய் விட்டு வந்த காயம் பட்ட காலின் வலியும் கொஞ்சம் குறைந்தது போலவிருந்தது. இரண்டாவது சத்திர சிகிச்சையின் பின்னர் உடைந்த எலும்பை தகடுகள் வைத்து பொருத்தி விட்டிருந்தார்கள். வெளிக் காயம் தான் ஆற வேண்டியிருந்தது. அதுக்கு ஒவ்வொரு நாளும் எனக்கு நானே மருந்து கட்டிக் கொள்வதுதான் அன்றாட கடமை. அடுப்பில் குழையல் சோறு வெந்த பின்னர் இரவுக்கு கொஞ்சம் எடுத்து வைத்துவிட்டு. ஊற வைத்த தவளைக் கால்களை பொரித்து  இன்னொரு பியரையும் குடித்து சாப்பிட்டு விட்டால், பாயை விரித்து சுவரோடு தலைகாணியை அணைத்து  சரிந்திருந்த படியே எப்போதுமே வழைமையாக கேட்கும் வீடியோ காசெட்டை போட்டு விடுவேன். ஊமை விழிகள் படத்தின் தோல்வி நிலையென நினைத்தால் பாடல் போய்க் கொண்டிருக்கும்போது உணர்ச்சி வசப்பட்டாலும், அடுத்து எங்கள் தமிழினம் தூங்குவதோ  என்கிற பாடலின் போது எப்படியும் நித்திரையாகிப் போய் விடுவேன்.

ஆனால் அன்று அடுத்த பாடல் போய் லேசாக கண்கள் செருகிக் கொண்டிருந்த போதே வாசலில் ரகு அண்ணையின் மோட்டர் சைக்கிள் வந்து நின்றது. அருகிலிருந்த பியர் போத்தலை அவசரமாக தலகணைக்கு கீழே மறைத்து விட்டு எழும்பி நின்றேன். கூடவே இன்னொருத்தன். அப்போதுதான் வளர்த்த மீசையை வளிதிருப்பான் என தோன்றியது. கையில் கொண்டு வந்த பையை மார்போடு கட்டியனைத்த படியே வயதுக்கு வந்த பெண்ணைப்போல  ரகு அண்ணனுக்கு பின்னல் நெளிந்த படி நின்றிருந்தான்.

“என்ன அண்ணை  திடீரெண்டு?” என்று கேட்டதும்,

 “ஒண்டுமில்லை இவனுக்கு இங்கை மசாஜ்  பழக்கி அனுப்ப வேணுமாம். இரண்டு நாளைக்கு உன்னோடை வைச்சிரு. பிறகு வந்து கூட்டி போயிடுவன்.” என்றார்.

ஆயுத பயிற்சிக்குதானே உலகம் முழுக்க ஆக்களை அனுப்புவினம். இதென்ன புதிசா மசாஜ் பழக அனுப்பியிருக்கு? தலைவருக்கு ஒரு வேளை நாரிப்பிடிப்பு ஏதும் வந்திருக்குகுமோ? அப்பிடியிருந்தாலும் கேரளா மூலிகை மசாஜ் தானே நல்லது. எதுக்கு தாய்லாந்து? என்று யோசித்தாலும் கேள்வி எதுவும் கேட்க முடியாதே…ரகு அண்ணா போய் விட்டார். ஆனாலும் பையை கட்டிப்பிடித்து நின்றவனிடம்,

 “உன்ரை   பையை ஒருத்தரும் களவெடுக்க மாட்டினம். எங்கையாவது வை”.  என்றுவிட்டு “சாப்பிட்டியா?” என்றேன் . “ம்.. ” என்று தலையை மட்டும் ஆட்டினான்.

நான் சமைத்ததை யாருக்காவது கொடுக்க வேண்டும் என்கிற என்னுடைய பழி வாங்கும் உணர்ச்சி அன்றும் தோல்வியடைத்து போனது. சரி இரண்டு நாளைக்கு இங்கை தானே இருக்கப் போறான் அப்ப பாக்கலாம் என்று என்னை நானே தேற்றிக்கொண்டு, எனக்காக அங்கு ஒரு பாய் தலைகாணி  மட்டுமேயிருந்ததால் அவனுக்கு என்னத்தை கொடுக்கலாமென யோசிக்கும் போதே தனது பையை திறந்து ஒரு சாறத்தை எடுத்து உதறி நிலத்தில் விரித்து விட்டு அமர்ந்துகொண்டு தொலைக்காட்சியை பார்க்கத் தொடங்கி விட்டிருந்தான்.

இரண்டு நாளில் வருவதாகச் சொன்ன ரகு அண்ணன் மறுநாள் மாலையே வந்து அவனைக்கூட்டிக் கொண்டு போய் விட்டார். அந்த ஒரு நாளில் நானும் அவனும் கதைத்த வார்த்தைகளை எண்ணி விடலாம். எனக்கும் அதிகம் கதைக்கும் பழக்கம் இல்லை. ரகு அண்ணா வரும்போது சில சினிமா பட கசெட்டுக்களையும் கொடுத்துவிட்டுப் போனதால் பொழுதுபோய் விட்டது. சுமார் இரண்டு மாதம் கழித்து மீண்டும் அவனை ரகு அண்ணன் என்னோடு கொண்டு வந்து விட்டு  இன்னொரு பாயும் தலைகாணியும் வாங்கிக் கொடுத்து விட்டே போனார். இந்தத்தடவை நானும் அவனும் சில வார்த்தைகள் அதிகமாகப் பேசியிருப்போம். ஒருநாள் இரவு சாப்பிட்டு விட்டு கமல் நடித்த டிக், டிக், டிக் படத்தை பல தடவை பார்த்து மனப்படமாகிப் போயிருந்தாலும் அதில் மாதவியைப் பார்ப்பதற்காகவே அன்றும் கசெட்டை போட்டு ஓட விட்டேன். அதில் கமல் மசாஜ் செய்துகொள்வதைப்போல ஒரு காட்சி வரும். அப்போ தான் அவனிடம்,

“நீயும் மசாஜ் பழகினனி தானே இப்படியெல்லாம் செய்ய வருமா?” என்று கேட்டதும் கொஞ்சம் யோசித்தவன்,

“உடுப்பு எல்லாத்தையும் கழட்டிப்போட்டு துவாயை கட்டிக்கொண்டு குப்புற படுங்கோ.” என்றவன், சமையலுக்கு வைத்திருந்த தேங்காய் எண்ணையை எடுத்துக் கொண்டு வந்து உள்ளங் கையில் எடுத்த எண்ணையை பாயில் குப்புறப்படுத்திருந்த என் பிடரியிலிருந்து சொட்டு சொட்டாக நடு முள்ளந்தண்டு வழியே வழிய விட்டுக்கொண்டு இடுப்புவரை சென்றவன், கட்டியிருந்த துவாயை சட்டென்று உருவி விட்டு தொடர்ந்தும் கால்களின் இறுதி வரை எண்ணையை பூசி முடித்தான். சட்டென்று துவாயை உருவியெடுத்ததை எதிர்பாக்காத நான் “டேய்”. என்றபடி எழும்ப முயன்றபோது .”அசையக் கூடாது”. என்று அவனது கட்டளை கடுமையாகவே வந்ததால் அப்படியே படுத்து விட்டேன். முள்ளந்தண்டின் ஒவ்வொரு மூட்டுகளிலும் அவனது விரல்கள் விளையாடியதில் என் முதுகிலும் டிக்,டிக், டிக் ..

கால் வரை சென்றவன் இப்போ திரும்பி படுக்கச்சொன்னான். தொடைகளுக்கு நடுவே துவாயால் மறைத்தபடி திரும்பி படுத்துக் கொண்டேன். இப்போ நெற்றியிலிருந்து தொடங்கினான். உடலில் புத்துணர்வு மட்டுமல்ல ஔவையார் சொன்ன பத்தாவது உணர்வும் சேர்ந்தே கிளர்ந்து நின்றது. கற்று வந்த மொத்த வித்தையையும் என்மேல் இறக்கி வைத்து விட்டு குளிக்கப் போய் விட்டான். இன்னொரு தடவை இவன் கையால் மசாஜ் செய்தால் நிச்சயம் நான் ஓரினச்சேர்க்கையாளனாக மாறிவிடுவேன் என்கிற பயம் எழுந்திருந்தது. சில நாட்களிலேயே ரகு அண்ணன் வந்து அவனை கூட்டிப் போய் விட்டார். கடைசி வரை அவன் பெயரை நான் கேட்கவேயில்லை. கேட்டிருந்தாலும் அவன் உண்மை பெயரை சொல்லாமல் வாயில் வந்த ஏதாவதொரு பெயரைத்தான் சொல்லியிருப்பான். அவனும் என் பெயரை கேட்கவேயில்லை. கேட்டிருந்தாலும் இங்கேயும் அதே நிலைமைதான். நானும் சில நாட்களின் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு விட்டிருந்ததோடு அவனையும் மறந்து விட்டிருந்தேன் .

00000000000000000000000000000

அந்த நாட்டில் புதிதாக பதவிக்கு வந்திருந்த அரசுத் தலைவருக்கும் அதே நாட்டிலேயே தன் இனத்துக்காகப் புதிதாக அரசமைக்கப் போராடிக்கொண்டிருக்கும் தலைவருக்குமிடையில்  பொது எதிரியை விரட்ட  இரகசியப் பேச்சு வார்த்தைகள் தொடங்கியுள்ளதாக அறிந்துகொண்டேன். அரசுத் தலைவருக்கும் அரசமைக்கப் போராடிக்கொண்டிருந்த தலைவருக்கும் பல ஒற்றுமைகள் இருந்தது. இருவருமே சாதியப் படி நிலைகளில் கீழிருந்து வந்தவர்கள். தன் சார்ந்தவர்களுக்கும் தன்னை நம்பியவர்களுக்கும் எது வேண்டுமானாலும் கொடுப்பார்கள். ஆனால் தங்கள் இருப்புக்கோ பதவிக்கோ ஆபத்து என்று நினைத்து விட்டாலே அது யாராக இருந்தாலும்  போட்டுத் தள்ளிவிட்டு போய்க் கொண்டிருக்கும் நபர்கள். இந்த இருவருக்கிடையிலும் தான் பேச்சுவார்த்தை. பேச்சுவார்த்தையைத் தொடங்கும்போதே பொதுப் பிரச்சனையான இனப்பிரச்சனையை தீர்ப்பது என்று பேசிக்கொண்டாலும் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் ஒருவரை மற்றொருவர் தீர்த்து விடுவது என்பதுதான் அவர்களது திட்டம். ஆனாலும் இருவருக்குமான பொது எதிரிகளை முதலில் முடித்துவிடுவோம், பின்னர் எங்கள் பலத்தை பரிசீலிக்கலாம் என்கிற ரீதியில் பேச்சுக்கள் போய்க்கொண்டிருந்தது .

பிரதி நிதிகளுடனான பல சுற்று பேச்சுக்கள் முடிந்த பின்னர்  நட்சத்திர விடுதியொன்றில் தலைமைச் சிங்கத்தை, தலைமை தாங்கிய சிங்கம் சந்தித்துக் கொண்டது. பேசி முடித்த இறுதியில்,

“நீங்கள் களைத்தது போல உள்ளது. இவன் நல்லதொரு மசாஜ் நிபுணன். நீங்கள் விரும்பினால் இவன் உடல் பிடித்து விடுவான் கொஞ்சம் இளைப்பாறிக் கொள்ளுங்கள்.” என்றது தலைமை தாங்கிய சிங்கம். சிறிது யோசித்த தலைமைச் சிங்கம் தனது மெய்ப்பாதுகாவலர்களைப் பார்த்து தலையசைத்து விட்டு அறை ஒன்றில் புகுந்து கொள்ள, அவனைத்  தனியாக அழத்துச் சென்ற பாதுகாவலர்கள் உடல் முழுதும் பரிசோதனை செய்துவிட்டு அந்த அறைக்குள் அனுப்பிக்  கதவைச்  சாத்திவிட்டார்கள். அவர் அதுவாம், சைக்கிள் ஓடுவதில் வல்லுனராம் என ஏற்கனவே அவரைப்பற்றிய கிசு கிசுக்கள் பரவியிருந்தது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே உள்ளூர் அழகியை திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் கிசு கிசுப்புகளுக்கு பஞ்சமிருக்கவில்லை. பக்கத்து அறையிலேயே ஐஸ்கட்டியை கரைத்துக் கொண்டிருந்த விஸ்கியை அருந்தியபடி அணைந்து போகும் சிகரெட்டில் அடுத்த சிகரெட்டை பற்றவைத்த படியே கைக்கடிகாரத்தை பார்த்து பெருமிதத்தோடு புன்னகைத்துக் கொண்டது தலைமை தாங்கிய சிங்கம். அடிக்கடி நட்சத்திர விடுதியில் பேச்சுவார்தைகள் நடந்து கொண்டிருந்தாலும் சுவி மட்டும் தலைவரின் வீட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் போகும் அளவுக்கு நெருக்கம் இறுக்கமாகியிருந்தது.

முன்னைநாள் பாதுகாப்பு அமைச்சர் ,முன்னைநாள் முப்படைத்தளபதி, கிளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் என ஒரு தரப்பிலும், தனிநாட்டுக்கு வாக்கு கேட்டு பாராளுமன்றம் போன தலைவர், மாற்று அமைப்பு உறுப்பினர்கள் என இந்து சமூத்திரத்தில் மிதக்கும் தீவின் ஆறுகளிலும் குளங்களிலும் பிணம் மிதக்கும் தீவாகிப் போனது. அப்போதுதான் ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் டெனிஸ் விளையாடும் நெட்டையான உள்ளூர் அழகியின்  குட்டைப் பாவாடையில் பிட்டம்   தெரியும் படமொன்று வெளியாகியிருந்தது. அதனை அப்படியே வெட்டி நான் வசித்த வீட்டின்  தட்டையான தகர கதவில் ஒட்டியிருந்தேன். சில நாட்களிலேயே அந்த படத்தை எடுத்த பத்திரிகையாளரை காணவில்லை என்கிற செய்தியும் வந்திருந்தது.

௦௦௦௦0000000000000000000000000

நகருக்கு வெளியே இருந்த ரம்புட்டான் காட்டுக்கு நடுவே அமைந்திருந்த ஆடம்பரமான சிறிய பங்களாவுக்குள் அவனை ஏற்றி வந்த கார் நுழைந்தது. சாதாரணமாக வெளியேயிருந்து பார்த்தால் அப்படியொரு பங்களா இருப்பதே தெரியாது. மெய்ப்பாதுகாவலர்களின் உடல் சோதனையை முடித்துக் கொண்டு அரசுத் தலைவரின் அறைக்குள் அவன் நுழைந்திருந்தான். வழக்கத்தை விட அன்று அந்த அறை முழுதும் வெள்ளை மலர்களாலும் தென்னோலை குருத்தினாலான வண்ண வண்ண வடிவங்களாலும் அலங்கரிக்கப் பட்டிருக்க நடுவே வெள்ளை வெளேரென்ற கட்டிலில் ஒற்றைத் துணியில்லாமல் உருண்டு திரண்ட கறுத்த உருவம் அவனை,

“வா நண்பா. நண்பா வா. இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகள் யாருமே இல்லை. அனைவரையும் ஒழித்து விட்டேன். என் உள்ளம் உற்சாகமாக உள்ளது. அதைப்போலவே என் உடலையும் உற்சாகப்படுத்து”. என்று  அழைத்தார். அங்கிருந்த குளியலறைக்குள் புகுந்து  ஆடைகள் அனைத்தையும் களைந்து குளித்துவிட்டு வெளியே வந்தவன், அங்கிருந்த குடுவையை கையிலெடுத்தபடி கட்டிலுக்கு அருகே மசாஜ் செய்வதற்காகவே பிரத்தியேகமாக செய்யப் பட்டிருந்த  சிறிய வாங்கில் குப்புறப்படுத்திருந்தவரின் பின்பக்கமாக குடுவையிலிருந்த மூலிகை எண்ணையை வழியவிட்டு தொடங்கிய மசாஜ் ஒரு மணி நேரத்தின் பின்னர் அங்கிருந்த கட்டிலில் முடிவடைந்திருந்தது.

இருவருமே லேசாகக் களைத்துப்போயிருந்தனர். கட்டிலில் இருந்து எழும்பியவன் குளியலறைக்குள் சென்று ஆடைகளை அணிந்துகொண்டு வெளிய வந்தபோது, இடுப்பில் ஒரு துண்டை  மட்டும் கட்டிக்கொண்டு நின்றிருந்தவர் திடீரென அவன் முன்னால் வந்து நின்று கையில் இரண்டாக மடிக்கப் பட்ட வெற்றிலையில் இருந்த  மோதிரத்தை எடுத்து அவன் இடதுகை விரலில் மாட்டிவிட்டு, “இனிமேல் நீ என்னை முதலாளி என்று அழைக்கக் கூடாது. நண்பன் என்றே அழைக்கலாம்.” என்றதும், அவரின் செய்கை எவ்வித உணர்வுகளையும் கொடுத்ததாக அவன் முகத்தில் தெரியவில்லை. லேசாகச் சிரித்தவன், விரலில் இருந்த மோதிரத்தை தடவிப் பார்த்தபடியே “உங்களை நண்பன் என்று அழைக்க மனம் வரவில்லை முதலாளி என்றே அழைக்கிறேன். அது மட்டுமல்ல விரைவில் நானும் உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்கவிருக்கிறேன்”. என்றபடியே அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டான்.

௦௦௦௦௦00000000000000000000000

இப்போதெல்லாம் முதலாளிகளும் அரசியல் கட்சி தலைவர்களும் கொண்டாடும் நாளாகிவிட்ட மேதினக் கொண்டாட்டத்தை நடத்த அரசுத் தலைவர் உத்தரவிட்டிருந்தது  மட்டுமல்லாமல் ஊர்வலத்துக்கு  அவரே தலைமையும் தாங்கினார். வழியெங்கும் காவல்துறையின் பாதுகாப்போடு தலைவர் முன்னால் நடந்துவர, தொண்டர்களில் “தலைவன் வாழ்க” கோசம் நகரையே அதிர வைத்தபடி அந்த ஊர்வலம் பிரதான சந்தியை அண்மித்துக் கொண்டிருந்தது. அங்கிருந்த காவல் நிலையத்துக்கு முன்னாலேயே அவரின் தொண்டர்கள் சிலர் சுருட்டியிருந்த கோர்வை பட்டாசுகளை வீதியில் பரப்பத் தொடங்கினார்கள். அப்போதான் எதிர்த்திசையில் சைக்கிளில் வந்துகொண்டிருந்தவனைப் பாதுகாப்பு கடமையிலிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தவே அதனைக் கவனித்த தலைவரோ, “அவன் எனது நண்பன். அவனை விடுங்கள்.” என்றதும், சைக்கிளை அங்கேயே நிறுத்தி விட்டு அவரை நோக்கி சென்றவன், “முதலாளி நான் சொன்ன பரிசை உங்களுக்கு இப்போ தரப் போகிறேன்” என்றபடியே இறுக்கி அணைத்தபோது வீதியில் பரப்பி முடித்த பட்டாசுகளில் ஒருவன் நெருப்பை வைத்தான். பட பட வென்ற பட்டாசு சத்தங்களோடு டமாரென்ற பெரும் சத்தம்…. அவன் உடலில் கட்டியிருந்த குண்டு வெடிக்க தசைத் துண்டுகள் எங்கும் சிதறியது.

அதுவரை அனைவரும் வாழ்த்திய தலைவனும் வாழ்த்திய தொண்டர்கள் பலரும் உடல் சிதறி இறந்துபோய்க் கிடந்தார்கள். மிகுதிப்பேர்  ஒரு தடவை வெடித்த குண்டு மறுபடி வெடிக்காது என்பதைக்கூட யோசிக்காமல் பயத்தில் எங்கு ஓடுவது என்று தெரியாமலே ஓடிக்கொண்டிருந்தார்கள் .

௦௦௦௦௦0000000000000000000000000

இப்போதெல்லாம்  breaking news க்கு நடுவே பிரதான செய்திகள் சொல்லிப் பழகிவிட்ட தமிழ் ஊடகங்கள் இல்லாத காலகட்டத்தில் ஹாங் ஹாங் விமான நிலையத்தில் ஒரு விமானத்துக்காக காத்திருக்கும் மண்டபத்தில் சி என் என் தொலைக் காட்சி செய்திகளை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது திடிரென போடப்பட்ட  “breaking news”அந்த நாட்டின் அரசுத் தலைவர் தற்கொலை குண்டு தாரியால் கொல்லப்பட்டுள்ளார். தற்கொலை குண்டுதாரியின் பெயர் சுவி  என அடையாளம் கண்டுள்ளதாக காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்” .என்று ஒரு புகைப் படத்தையும் காட்டினார்கள் . “அட செய்தது நீ தானா” என்று மனதில் நினைத்தபடியே அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டேன் ..

சாத்திரி -பிரான்ஸ்

%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0% 

http://www.naduweb.net/?p=6909

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.