நவீனன் பதியப்பட்டது May 11, 2018 Share பதியப்பட்டது May 11, 2018 ரத்த மகுடம் பிரமாண்டமான சரித்திரத் தொடர்1. மீண்டும் சிவகாமியின் சபதம்கே.என்.சிவராமன் இந்த இடம்தான். இங்குதான் தன்னைச் சந்திக்க ஒரு நபர் வருவார் என்றும் அவர் சொற்படி நடக்கும்படியும் புலவர் தண்டி கட்டளையிட்டிருந்தார். அதை ஏற்றே மல்லை கடற்கரைக்கு கரிகாலனும் நடந்து வந்திருந்தான். ஆனால், எப்போதும் மனதை ஆற்றுப்படுத்தும் அந்த இடம் அன்று ஏனோ அலைக்கழித்தது. நிச்சயம் சந்திக்கப்போகும் நபர் யாராக இருக்கும் என்ற கேள்வியின் அழுத்தத்தால் இந்த உணர்வு விளையவில்லை. ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்பதற்கான எச்சரிக்கையே அது. என்னவாக இருக்கும்? மேடான பகுதியில் அழுத்தமாகக் கால்களை ஊன்றியபடி புருவங்கள் முடிச்சிட சுற்றும்முற்றும் அலசத் தொடங்கினான். வைகாசி மாத சுக்கில பட்ச சதுர்த்தி என்பதால் பகலின் வெப்பம் தணிந்து இரவின் மூன்றாம் நாழிகையில் இதமான காற்று வீசிக் கொண்டிருந்தது. விரிந்திருந்த கடலில் அலைகளால் உந்தப்பட்ட நாவாய்கள் முன்னும் பின்னும் ஆடியதன் விளைவாக நங்கூரம் பாய்ச்சி நின்ற பல நாட்டுக் கப்பல்களின் கொடிகள் அசைந்தவண்ணம் இருந்தன. அந்த நாவாய்களில் இருந்து கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த வணிகப் படகுகளின் துடுப்புகள் சரேல் சரேலென்று துழாவப்பட்டதாலும், கரையோரம் வந்து இழுக்கப்பட்ட படகுகளாலும், படகில் இருந்து குதித்த வணிகர்களாலும், கரையோரத்திலும் சற்றுத் தள்ளியும் இருந்த கட்டுமரங்களில் மீன் பிடிக்க மீனவர் வீசிய வலைகள் பலமாகப் பல இடங்களில் இழுக்கப்பட்டதாலும் அலைகள் குழம்பியும் கலங்கியும் தெளிவதுமாக இருந்தன. அக்கம்பக்கத்து உப்பளங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட வெள்ளை உப்பை உள்நாட்டுக்கு எடுத்துச் சென்று அதற்குப் பதிலாக நெல்லை ஏற்றி வந்துகொண்டிருந்த படகுகளை உப்பங்கழிகளின் தளைகளில் ஆங்காங்கு பிடித்துப் பிணைத்துக் கொண்டிருந்த பரதவரின் அதட்டலான குரல்களும், ஓடிய படகுகளின் துடுப்புகள் கழிகளின் நீரில் பாய்ந்து எழுப்பிய சரேல் சரேல் என்ற சத்தங்களும், ஆங்காங்கு அலுவல் புரிந்து கொண்டிருந்த சுங்கக் காவலரின் கட்டளைக் கூச்சல்களும் வெகுதூரம் வரை கேட்டுக் கொண்டிருந்தன. மேல் நாட்டவரும் கீழ்நாட்டவரும் தூரக் கீழ்த் திசை நாடுகளுக்குச் செல்வதற்கு ஒன்றுகூடும் துறைமுகமாக மல்லைப் பெருந்துறை இருந்ததால் சீனரும், அராபியர்களும், தமிழரும், ஆந்திரரும், வட நாட்டாரும் கலந்து காணப்பட்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. தட்டை முகமும் மஞ்சள் நிறமும் உள்ள குள்ளச் சீனரும்; மொட்டையடித்துத் தலைக்கு துணி கட்டி தொள தொளத்த உடைகளுடன் நடந்த சிவந்த மேனியும் திடகாத்திர தேகமும் உள்ள அராபியரும்; அதிக உயரமோ அதிக குள்ளமோ இல்லாத தமிழரும் கலந்து நின்ற காட்சி மல்லை கடற்கரையை நவரத்தினங்கள் போல் மாற்றியமைத்திருந்தன. இந்த ஒளிக்கு ஒலி சேர்ப்பதுபோல் சுங்கக் காவல் வீரர்கள் ‘ம்… இப்படி…’, ‘அந்தப் பக்கம் அல்ல…’ என பொதி சுமக்கும் ஊழியர்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இவை எல்லாம் இம்மி பிசகாமல் எப்போதும் போல் அன்றும் நிகழ்ந்தன. மல்லை கடைவீதியிலும் மாற்றங்கள் ஏதும் தென்படவில்லை. எப்போதும் போல் நெரிசலுடனேயே காணப்பட்டது. இறக்குமதியான பொருட்களுக்கு சுங்க வரி கட்டப்பட்டதும் அவற்றுக்கு உரிய வணிகர்கள் தங்கள் இடங்களுக்கு அவற்றை எடுத்துச் சென்று உள்நாட்டு விற்பனைக்கு தனியாகவும், கடையில் விற்பதற்கு தனியாகவும் பொருட்களைப் பிரித்து அடுக்கியவண்ணம் இருந்தனர். எந்தெந்த பொருட்கள் எந்தெந்த கடைகளில் விற்பனையாகின்றன என்பதை அறிவுறுத்தும் விதமாக ஒவ்வொரு கடையின் மேலும் கொடிகள் பறந்துகொண்டிருந்ததால் பல நாட்டு வணிகர்களும், வீரர்களும், வனிதையர் கூட்டமும் தங்களுக்குத் தேவையான கடைகளை நோக்கி படையெடுத்துக் கொண்டிருந்தார்கள். கடை வீதியின் ஓரத்திலிருந்த புஷ்ப மரங்கள் உதிர்த்த நானாவித மலர்களின் சுகந்தம் அப்பகுதியை அரவணைத்து ரம்மியமாக்கி இருந்தது. வேல்களை ஏந்தியபடி நடமாடிய பல்லவ வீரர்கள் நெருக்கத்திலும் ஒரு சீர்மையையும் நேர்மையையும் சிருஷ்டித்துக் கொண்டிருந்தனர். சில கடைகளில் அதிகமாகக் கூடி வழியை மறித்த மக்கள் வீரர்களால் கண்ணியமாக எச்சரிக்கப்பட்டும், அது இயலாவிடில் மெதுவாகத் தள்ளப்பட்டும் ஒழுங்குக்குக் கொண்டு வரப்பட்டனர். சில முரடர்கள் பெண்கள் கூடிய இடங்களில் அத்துமீறி நுழைய முற்பட்டபோது பல்லவ வீரர்களின் ஈட்டிகள் அவர்களைத் தடுத்து நிறுத்தின. இதனால் வியாபாரம் தடையின்றி நடைபெற்றது. போலவே வெளிநாட்டு மரக்கலங்களுக்கு வழிகாட்டுவதற்காக மல்லை நகரின் கலங்கரை விளக்கத்தில் சுடர் விட்டுப் பிரகாசித்த பெரும் தீ்ப்பந்தங்களுக்கு அவ்வப்போது எண்ணெய் விட்டுக் கொண்டிருந்த காவலாளிகள் மேலிருந்து எண்ணெய் கேட்டுப் போட்ட கூச்சல்களும், அதற்கு தரை மட்டத்திலிருந்து கிடைத்த பதில்களும் சேர்ந்து அமைதியைக் கிழிப்பதற்கு உயரம் ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தன. எந்த மாற்றமும் எந்த இடத்திலும் தென்படவில்லை. பல்லவ நாட்டின் வருவாய்க்கான கேந்திரமாக மல்லை இயங்கிக் கொண்டே இருந்தது. ஆம். வருவாய்க்கான கேந்திரம்தான். தன்னையும் அறியாமல் கரிகாலனின் நாசியிலிருந்து பெருமூச்சு ஒன்று வெளியேறியது. அரிசி உற்பத்தி சோழர்களுக்கும், யானைகளின் பெருக்கம் சேரர்களுக்கும், முத்துக்களின் ஆதிக்கம் பாண்டியர்களுக்கும் கை கொடுப்பதுபோல் பல்லவர்களுக்கு குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் எந்தப் பொருளின் தனித்த உற்பத்தியும் இல்லை. அதனாலேயே வரி விதித்து வருவாயை அதிகரிக்க கவனம் செலுத்தினார்கள். செங்கொடி என்னும் சித்ரமூலம் என்ற மூலிகைக் கொடிக்கு செங்கொடிக்காணம்; நீலோற்பலம் எனப்படும் குவளைச் செடிகள் நடகுவளைக்காணம்; சீன நாட்டிலிருந்து பெறப்பட்ட மருக்கொழுந்து செடிகள் பயிரிட வரி; பயிர்த்தொழிலுக்கு நீர் பெற நேர்வயம்; கிணறு தோண்ட உல்லியக்கூலி; உள்நாட்டில் விற்கும் தானியங்களுக்கு வரி; சில இடங்களைக் கடந்து செல்ல ஊடுபோக்கு வரி; மீன் பிடிக்க பட்டினச்சேரி; கள் இறக்க ஈழப்பூட்சி; கால்நடை வளர்க்க இடைப்பூட்சி; பால் மற்றும் பால்பொருட்களின் உற்பத்திக்கு இடைப்பூட்சிதண்டல்; குயவர்களிடம் இருந்து குசக்காணம்; தட்டாரிடமிருந்து தட்டுக்காயம்; உடைகளை வெளுப்போர் பயன்படுத்திய பாறைக்கு பாறைக்காணம்; ஓடக்காரர்களிடமிருந்து பட்டிகைக் காணம்; நெசவாளர்களிடமிருந்து தறிக்கூறை; எண்ணெய் எடுப்போரிடமிருந்து செக்கு; பொருட்களை வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையில் இருக்கும் தரகர்களுக்கான தரகு வரி; ஆடை நெய்ய நூல் நூற்போரிடமிருந்து பாடாம் கழி; கொல்லர்களிடம் கத்திக் காணம்; பறையடிப்போரிடமிருந்து நெடும்பறை; நெய் விற்போர் அரசுக்குச் செலுத்திய நெய்விலை; நீர் இறைக்கப் பயன்படும் ஏற்றத்துக்கு ஏற்றக்காணம்; திருமண நிகழ்ச்சிகளுக்கு கலியாணக்காணம்; ஒவ்வொரு கிணறு தோண்டவும் வரி... இதுதவிர வீரத்துக்காணம், ஆத்துக்காணம், ஊராட்சி சாதிப் பொன், பரிக்காணம், உறிக்காணம், அரிகொழி, புதக்குதிகை, குற்றதுவை... நீளும் வரிகளின் பட்டியல்தான் பல்லவ நாட்டை வாழவே வைக்கின்றன. அதனாலேயே சுங்கத் துறை ஒருவகையில் இந்நாட்டின் முதுகெலும்பாகவே திகழ்கிறது. பெருமூச்சுடன், தன்னைச் சந்திக்கப் போகும் நபர் யாராக இருக்கும் என யோசித்தபடி மேட்டிலிருந்து இறங்கி கடற்கரையில் கரிகாலன் நடக்க முற்பட்டபோது - அந்த விபரீதம் நடந்தது. கிட்டத்தட்ட ஐம்பது அரபுப் புரவிகள் வாயு வேகத்தில் மணலில் ஓட ஆரம்பித்தன. இன்னும் பழக்கப்படுத்தப்படாத குதிரைகள் அவை என்பது பார்த்ததுமே தெரிந்தது. இது விபரீதமல்லவா? குளம்புகளில் மக்கள் சிக்கினால் என்ன ஆகும்? பொதுவாக அரபு நாட்டிலிருந்து தமிழகத்துக்கு வரும் குதிரைகளை நள்ளிரவு கடந்தபின் எச்சரிக்கை செய்துவிட்டே கடற்கரை மணலில் ஓடவிட்டு பரிசோதிப்பார்கள். அரசர்களுக்கு, தளபதிகளுக்கு, போர் வீரர்களுக்கு, ரதங்களுக்கு, வணிகர்களுக்கு என தர வாரியாக அவற்றைப் பிரித்து உரியவர்களிடம் சேர்ப்பிப்பார்கள். நகுலசகாதேவரால் இயற்றப்பட்ட அசுவசாஸ்திரம் கற்றவர்கள் மட்டுமே புதிதாக வந்திறங்கும் குதிரைகளின் தன்மையைக் கண்டறிய முடியும். பல்லவ நாட்டில் அசுவசாஸ்திரம் அறிந்தவன் அவன் மட்டும்தான். எனவே, அரபு நாடுகளில் இருந்து புரவிகள் வரும்போதெல்லாம் அவற்றின் தரத்தை சோதிக்கும் பொறுப்பு அவனிடமே ஒப்படைக்கப்படும். இதுதான் இத்தனை நாட்களாக நடந்து வந்த நடைமுறை. இதற்கு மாறாக இன்று தன்னிடம் கூட தகவல் தெரிவிக்காமல், வந்திறங்கிய குதிரைகளை மணலில் ஓடவிட்டிருப்பவர் யார்? விடையை பிறகு அறியலாம். தறிகெட்டு ஓடும் புரவிகளைக் கட்டுக்குள் கொண்டு வருவதுதான் இப்போது முக்கியம். விரைந்த கரிகாலனின் கால்கள் தாமாக நின்றன. ஆச்சர்யம் மெல்ல மெல்ல அவனைச் சூழ ஆரம்பித்தது. ஏனெனில் அவன் அச்சப்பட்டதுபோல் எதுவும் நடக்கவில்லை. கடற்கரையில் குழுமியிருந்த மக்களை எந்தவகையிலும் அவை சிதறடிக்கவில்லை. மாறாக, தறிகெட்டு ஓடியபோதும் ஓர் ஒழுங்கு அதனுள் தென்பட்டது. எனில் புரவிகளின் மொழி அறிந்த யாரோ அவற்றின் செவிகளில் அன்பாகக் கட்டளையிட்டிருக்க வேண்டும். அதன்பிறகே கட்டை அவிழ்த்து அவற்றை கடற்கரை மணலில் ஓடவிட்டிருக்க வேண்டும். நாம் அறியாத அந்த அசுவசாஸ்திரி யார்..? பூத்த கேள்விக்கான பதிலாக ஓர் இளம்பெண் தோன்றினாள். அதிகம் போனால் அவளுக்கு பதினாறு வயதுதான் இருக்கும். புரவிகளுக்கு சமமாக ஓடியபடியே அவற்றின் தரத்தையும் அவள் ஆராய்வதை கரிகாலனால் உணர முடிந்தது. குதிரையின் கழுத்துக்குக் கீழே ஓரங்குல நீளத்தில் இரண்டு அல்லது மூன்று சுழிகள் இருந்தால் அது தெய்வமணி. அரசர் அல்லது அவருக்கு சமமானவர் இப்புரவியைப் பயன்படுத்தலாம். குளம்புக்கு மேல் ஒன்று அல்லது இரண்டங்குல நீளத்துக்கு ரோமங்கள் வளர்ந்திருந்தால் அது சிந்தாமணி. முதுகின் வலப்பக்கம் சுழி இருந்தால் அது மேகலை. தொண்டையின் கீழ் இடபத்தின் கழுத்தைப் போல் மயிர்கள் குறுக்காக வளர்ந்திருந்தால் அது கண்டாபரன். குதிரையின் தலை, நெற்றி, மார்பு, பிடரி, பீசனம் என ஐந்து இடங்களிலும் சுழி இருந்தால் அது ஜெயமங்கலம். தேகம் ஒரு நிறமாக இருந்து, தலை, மார்பு, ஒருகால் பீசம், வால் ஆகிய இடங்கள் வெளுத்திருந்தால் அது சஷ்டமங்கலம். குதிரையின் முதுகில் இரு பக்கங்களிலும் சுழியிருந்து நெற்றியில் தாமரை மொட்டைப் போன்று இன்னொரு சுழி இருந்தால் அது சுமங்கலம். இவை நல்ல சாதிக் குதிரைகளுக்கான அறிகுறிகள். எனில், இங்கு ஓடுபவை அனைத்துமே உயர்ரக புரவிகள். யுத்தத்துக்கு ஏற்றவை. இதைத்தான் கச்சிதமாக அந்தப் பெண் பரிசோதிக்கிறாள். யார் இவள்..? ‘‘உங்களைச் சந்திக்க ஒருவர் வருவார் என புலவர் தண்டி சொன்னாரே... அவர் இவர்தான். தங்களைப் போலவே குதிரைகளின் காதலர்!’’ கரிகாலனின் அருகில் வந்து விடையளித்தான் பல்லவ நாட்டின் புரவிப்படைத் தளபதியான வல்லபன். ‘‘இதற்கு முன் இப்பெண்ணைப் பார்த்ததில்லையே... புலவரின் சிஷ்யையா?’’ ‘‘இல்லை. நம் மன்னர் பரமேஸ்வர வர்மரின் மகளுக்கு சமமானவர்!’’ ‘‘விளக்கமாகச் சொல்!’’ ‘‘மகேந்திரவர்ம பல்லவர் காலத்தில் புகழ்பெற்று விளங்கினாரே ஆயனச் சிற்பி... அவரது மகள் சிவகாமியின் வளர்ப்புப் பேத்திதான் இவர். இவரது சொற்படி தங்களை நடக்கும்படி புலவர் கேட்டுக் கொண்டார். ஏனெனில் இவரும் ஒரு சபதம் செய்திருக்கிறார். அது உங்கள் வழியாக நிறைவேற வேண்டும் என நம் இளவரசர் ராஜசிம்மர் விரும்புகிறார்...’’ கரிகாலனின் மனக்கண்ணில் வாதாபி பற்றி எரிந்தது. புரவியை அணைத்தபடி ஓடியவளை விட்டு அவன் கண்கள் அகலவில்லை. ‘‘இவள் பெயர்?’’ ‘‘பாட்டியின் பெயரையே தனக்கும் வைத்துக் கொண்டிருக்கிறார். சிவகாமி!’’ (தொடரும்)ஓவியம்: ஸ்யாம் http://www.kungumam.co.in Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted May 19, 2018 தொடங்கியவர் Share Posted May 19, 2018 ரத்த மகுடம்-பிரமாண்டமான சரித்திரத் தொடர் கே.என்.சிவராமன்-2 ‘‘சிவகாமி...’’ மனதுக்குள் உச்சரித்த கரிகாலனின் மனதில் பல்வேறு உருவங்கள் அலைக்கழித்தன. இமைகளை மூடி சில கணங்கள் நின்றவன் சட்டென்று வல்லபனை ஏறிட்டான். ‘‘தன் பாட்டியைப் போலவே இவளும் ஏதோ சபதம் செய்திருப்பதாகச் சொன்னாயே..?’’ ‘‘அப்படித்தான் பல்லவ இளவல் என்னிடம் குறிப்பிட்டார்...’’ ‘‘என்ன சபதம்?’’ ‘‘தெரியாது. அதுகுறித்து அவர் எதுவும் சொல்லவில்லை. ஒருவேளை நீங்களே அறிந்துகொள்ள வேண்டுமென அவர் நினைத்திருக்கலாம். ஆனால், ஒன்று...’’ ‘‘என்ன?’’ ‘‘உங்கள் வழியாக இந்த சிவகாமியின் சபதம் நிறைவேற வேண்டும் என்றே, தான் விரும்புவதாகத் தெரிவித்தார்...’’‘‘எப்போது?’’ ‘‘ஆறு திங்களுக்கு முன் அவரைக் கடைசியாகச் சந்தித்தபோது...’’கரிகாலன் யோசனையில் ஆழ்ந்தான். ‘‘சபதத்தை நினைத்தால் மனம் இருப்புக் கொள்ளாமல் தவிக்கிறது...’’ மெல்ல வல்லபன் முணுமுணுத்தான். ‘‘ஏன்?’’ ‘‘திரவுபதியின் சபதம் கெளரவர்களை அழித்தது. கண்ணகியின் கோபம் மதுரையை சாம்பலாக்கியது. நரசிம்மவர்ம பல்லவர் காலத்தில் சிவகாமி அம்மையாரின் சபதம் சாளுக்கிய தேசத்தையே அழித்தது. அந்தப் போரில் நாம் வெற்றி பெற்றோம். அதேசமயம் சாளுக்கியர்களுக்கு சமமாக யுத்தத்தால் நாமும் அதிகம் இழந்தோம். பயிர்கள் நாசமாகின. கடைநிலை கைவினைக் கலைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தார்கள். கால்நடைகளை, மேய்ச்சல் நிலங்களைப் பறிகொடுத்த பூர்வகுடிகள் இன்னமும் அவற்றைத் திரும்பப் பெறவில்லை. இப்போது இந்த சிவகாமி தன் பங்குக்கு ஏதோ சபதம் செய்திருக்கிறார். இதனால் என்ன விளைவுகள் ஏற்படப் போகிறதோ..?’’ ‘‘அச்சப்படுகிறாயா வல்லபா..?’’ ‘‘இல்லை. இப்போதிருக்கும் நிலையை எண்ணினேன்...’’ ‘‘அதற்கென்ன..?’’ ‘‘கரிகாலரே... அமைச்சர் பிரதானிகள் நம் மன்னரிடம் உரையாடும்போது நானும் அங்கிருந்தேன்...’’ ‘‘ம்...’’ ‘‘பல்லவ நாடு மழையை நம்பி இருக்கும் பூமி என்பது தங்களுக்கே தெரியும். சில ஆண்டுகளாக மழை பொய்த்து வருகிறது. வசூலிக்கும் வரிகளில் ஒரு பகுதியை பஞ்ச நிவாரணத்துக்கு ஒதுக்குவதால் அதை அவ்வப்போது மக்களுக்கு பகிர்ந்தளித்து ஓரளவு சமாளிக்கிறோம். வரும் ஐப்பசி, கார்த்திகையில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக ஜோதிடர்கள் தெரிவிக்கிறார்கள். அது மட்டும் நடக்கவில்லையென்றால் வரும் ஆண்டை எதிர்கொள்வது இயலாத காரியம் என்கிறார்கள் அமைச்சர் பிரதானிகள்...’’ சொன்ன வல்லபன் அருகில் வந்து கரிகாலனின் கைகளைப் பிடித்தான். ‘‘என்ன வல்லபா..?’’ ‘‘ஒரு வேண்டுகோள். பல்லவ நாடு இப்போதிருக்கும் நிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள இரண்டாம் புலிகேசி யின் மகனும் சாளுக்கிய மன்னருமான விக்கிரமாதித்தர் திட்டமிட்டிருப்பதாக செய்தி கிடைத்திருக்கிறது. பெரும் படையைத் திரட்டி வருகிறாராம். எப்போது வேண்டுமானாலும் போர் முரசு கொட்டப்படலாம். எனவே, இந்த சிவகாமியின் சபதம் என்னவென்று அறிந்து, முடிந்தவரை அதை நிறைவேற்றுவதைத் தள்ளிப் போடுங்கள்...’’ சொல்லிவிட்டு விறுவிறுவென்று சிவகாமியை நோக்கி வல்லபன் சென்றான். இதற்குள், நாட்கணக்கில் மரக்கலங்களில் பயணித்த மயக்கம் நீங்க புரவிகளும் கடற்கரை மணலில் ஓடிப் புரண்டு இயல்புக்குத் திரும்பியிருந்தன. ‘‘அனைத்துமே நல்ல சாதிக் குதிரைகள்தான். யார் யாருக்கு எதை எதை அளிக்கலாம் என்பதை வீரர்களிடம் தெரிவித்திருக்கிறேன்...’’ என்ற சிவகாமி, தள்ளி நின்ற கரிகாலனை உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆராய்ந்தாள்.‘‘உங்களுக்காகக் காத்திருப்பவர் அவர்தான். பெயர் கரிகாலர்...’’ தலையசைத்துவிட்டு, தன்னையே பார்த்துக் கொண்டிருந்த கரிகாலனை நோக்கி மணலில் கால்கள் புதைய சிவகாமி நடந்தாள். முதல் பார்வையிலேயே கரிகாலன் மீது அவளுக்கு மரியாதை வந்தது. காரணம், அவன் கண்கள். அவளது பார்வையை மட்டும்தான் அது எதிர்கொண்டிருந்தது. மற்றபடி உடலின் வேறு அங்கங்களை அது ஆராயவில்லை. இத்தனைக்கும் புரவிகளுக்கு சமமாக அவள் ஓடி முடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறாள். எனவே அப்போதும் பெருமூச்சுகள் வெளியேறிக் கொண்டிருந்தன. அதற்கு அறிகுறியாக அவளது ஸ்தனங்களும் உயர்வதும் தாழ்வதுமாக இருந்தன. அணிந்திருந்தது மார் கச்சைதான். ஆனால், அது நீராட்டத்தின்போது அணிபவை. புரவிகளுடன் கடற்கரையில் ஓடவேண்டும் என்பதாலும், சமயத்தில் கடலிலும் மூழ்கி எழவேண்டியிருக்கும் என்பதாலும், வழக்கமாக வெளியே செல்லும்போது உடுத்தும் கச்சையைத் தவிர்த்திருந்தாள். எனவே, மறைய வேண்டிய இடங்கள் மறைந்தும் மறையாமல் ஸ்தனங்களின் அளவைப் பறைசாற்றிக் கொண்டிருந்தன. இடுப்பில் உடுத்தியிருந்ததும் மெல்லிய ஆடைதான். ஆனால், வெண்மைக்கு பதில் சற்றே சிவப்பு சாயம் ஏறியவை. இப்படி வேண்டும் என நெசவாளர்களிடம் நெய்யச் சொல்லியிருந்தாள். இந்த மெல்லிய உடையும் காலம்காலமாக மல்லை வாழ் பெண்கள் கடலாடும்போது அணிபவைதான். அதனால்தானே தொண்டைமான் இளந்திரையன் காலத்தில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் தனது பெரும்பாணாற்றுப் படையில், மல்லை மாதரசிகளின் ஆடைகளைக் கொன்றையின் மெல்லிய கொம்புகளிலே தவழும் பனித்திரைக்கு ஒப்பிட்டிருந்தார்! அப்படிப்பட்ட மெல்லிய ஆடையையே அன்று சிவகாமி அணிந்திருந்தாள். அப்படியிருந்தும் கரிகாலனின் கண்கள் அவளை மொய்க்கவில்லை. மனதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தவனைத்தான் புலவர் தண்டி அனுப்பியிருக்கிறார். நிம்மதியுடன் அவனை நெருங்கியவள், ‘‘செ-லி நா- லோ-செங்-கியா பா-தோ-பா-மோ” என தனித்தனிச் சொற்களாக அவனுக்கு மட்டும் கேட்கும்படி அழுத்திச் சொன்னாள்! கரிகாலனின் கண்கள் விரிந்தன. செ-லி என்றால் . நா-லோ-செங்-கியா என்றால் நரசிம்ம. பா-தோ-பா-மோ என்றால் போத்தவர்மன். மொத்தமாகச் சேர்த்தால் நரசிம்ம போத்தவர்மன். இரண்டாம் நரசிம்மவர்மரான ராஜசிம்மனை சீனர்கள் இப்படித்தான் அழைத்தார்கள்*. இதையேதான் சங்கேதச் சொல்லாக ரகசியங்களைப் பரிமாறிக் கொள்ளவும், பரஸ்பர நம்பிக்கையுடன் பணியாற்றவும் பல்லவ நலம் விரும்பிகள் தங்களுக்குள் உபயோகித்தார்கள். அப்படிப்பட்ட சொல்லை இந்த சிவகாமி உச்சரிக்கிறாள் என்றால்... இவள் நம்பிக்கைக்கு உரியவள்தான். ‘‘சொல்லுங்கள்...’’ சுற்றி வளைக்காமல் நேரடியாகக் கரிகாலன் விஷயத்துக்கு வந்தான். ‘‘இளவரசரைச் சந்திக்க வேண்டும்..!’’ ‘‘என்ன விஷயமாக?’’ ‘‘அதை அவரிடம்தான் சொல்ல முடியும். இளவரசர் இருக்கும் இடம் உங்களுக்கு மட்டுமே தெரியும். அங்கு என்னை அழைத்துச் செல்லுங்கள். இது புலவர் தண்டியின் உத்தரவு!’’ சிவகாமி இப்படிச் சொல்லி முடித்ததும், தனக்கு நேராக நின்று கொண்டிருந்த அவளது தோளைப் பிடித்து கரிகாலன் விலக்கினான். ‘என்ன...’ என்று கேட்க முற்பட்டவளின் வாயைப் பொத்தி கண்களால் ஓரிடத்தைக் காண்பித்தான். கடற்கரையை ஒட்டியிருந்த தோப்பிலிருந்து மூவர் யாருக்கும் சந்தேகம் வராதபடி கடலில் இறங்கிக் கொண்டிருந்தார்கள். வைகாசி மாத சுக்கில பட்ச சதுர்த்தி என்பதால் இரவின் ஐந்தாம் நாழிகையிலும் பிறை நிலவு வெள்ளிப் பாளங்களாகக் கடலில் ஜொலித்துக் கொண்டிருந்தது. மூவருமே தங்கள் முகத்தை வஸ்திரங்களால் மூடியிருந்தார்கள். எனினும் அவர்கள் இடுப்பிலிருந்த வாளின் நுனி, கிடைத்த ஒளியிலும் ஒளிர்ந்தது. ‘‘இவ்வளவு விரைவில் இதை எதிர்பார்க்கவில்லை...’’ முணுமுணுத்த கரிகாலன் தன் வலக்கரத்தை சிவகாமியின் இடுப்பில் சுற்றினான். ‘‘கடலாடும் காதை என மற்றவர்கள் நினைக்கட்டும்...’’ என அவள் செவியில் முணுமுணுத்துவிட்டு, கடலை நோக்கி அவளை இழுத்தபடி நடந்தான். இடுப்பில் தவழ்ந்த விரல்கள் அத்துமீறாததாலும், கண்முன்னே தெரிந்த காட்சி ஆபத்துக்கு அறிகுறியாக இருந்ததாலும் தன் பங்குக்கு சிவகாமியும் ஒத்துழைத்தாள். அரைவட்டமாக அர்த்த சந்திர வடிவத்திலிருந்த நீராடு கட்டத்தின் கரையோரத்தை நெருங்கிய கரிகாலன், இடைவெளி விட்டு நின்றிருந்த பெரும் தூண்களில் ஒன்றை தனது இடது கையால் அணைத்தான். பொந்து ஒன்றுக்குள் சென்ற அவனது கரம் எதையோ தேடித் துழாவியது. நினைத்தது கிடைத்ததும் கையை வெளியே எடுத்தான். இரு வாள்கள்! ஒன்றை சிவகாமியிடம் கொடுத்துவிட்டு கடலில் இறங்கினான். முடிந்தளவு இருவரும் வாளை மறைத்துக் கொண்டார்கள். கரையில் இருந்தவர்களுக்கு எவ்வித சந்தேகமும் ஏற்படவில்லை. காதலர்கள் என நினைத்து தங்கள் பார்வையைத் திருப்பிக் கொண்டார்கள். அர்த்தசேது என்று கொண்டாடப்பட்ட மல்லைக் கடல், சேதுவைப் போலவே நீண்ட தூரம் ஆழமில்லாதது. கடலோர நீர்ப்பகுதியும் குளம் போல் சிற்றலைகளை எழுப்பக் கூடியது. இடுப்பளவு நீரில் நடந்தார்கள். இருவரின் பார்வை மட்டும் தொலைவில் நகர்ந்து கொண்டிருந்த அந்த மூவரையும் பின்தொடர்ந்தபடியே இருந்தது. ‘‘நம்மைப் போலவே அவர்களும் கழுத்தளவு நீருக்கு வந்துவிட்டார்கள்!’’ சிவகாமி எச்சரித்தாள். ‘‘ஆம். எப்போது வேண்டுமானாலும் அவர்கள் நீந்தத் தொடங்கலாம். இலக்கை அவர்கள் அடைவதற்குள் நாம் தடுத்தாக வேண்டும்...’’ சொன்ன கரிகாலன் அடுத்த கணம் அவளை அணைப்பதுபோல் அணைத்து விழுவது போல் கடலில் விழுந்தான். அதன் பிறகு இருவரின் தலையும் கடலுக்கு வெளியே தெரியவேயில்லை. அந்த மூவரும் இருந்த திக்கை நோக்கி நீருக்குள்ளேயே நீந்தினார்கள். ஒரேயொருமுறை மட்டும் தன்னுடன் நீந்தும் சிவகாமியைப் பார்த்தான். ஒரு கரத்தில் வாளை ஏந்தியபடி மறுகரத்தால் நீந்திக் கொண்டிருந்தாள். தன்னைப் போலவே அவளும் அசுவசாஸ்திரி மட்டுமல்ல... மச்ச சாஸ்திரியும் கூட என்பது புரிந்தது. நீரின் அடி ஆழ இருட்டு மெல்ல மெல்லப் பழகியது. இருளும் ஒளிதான். சந்தேகமேயில்லை. வரைகோடு போல் மூன்று உருவங்கள் சில கணங்களுக்குப் பின் தட்டுப்பட்டன. முழங்கையால் சிவகாமியை இடித்து செய்கை செய்துவிட்டு கரிகாலன் வாளைச் சுழற்ற ஆரம்பித்தான். இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த மூவரும் ஆரம்பத்தில் தடுமாறினாலும் பிறகு சுதாரித்து இடுப்பிலிருந்த தங்கள் வாட்களை உருவினார்கள். நிலத்தில் நடப்பது போலவே கடலுக்குள்ளும் வாள் சண்டை உக்கிரமாக நடந்தது. கரிகாலனும் சிவகாமியும் கைகோர்த்திருந்த மூவரையும் பிரித்தார்கள். நீரின் கனத்தை வாள் வீச்சுகள் கிழித்தன. இருவர் காயம்பட்டு தங்கள் வாட்களை நழுவவிட்டார்கள். எஞ்சியவனின் கழுத்தை பின்னால் இருந்து கரிகாலன் நெருக்கினான். மூச்சுத் திணறல் ஏற்படவே அனைவரும் கடலுக்கு வெளியே தலையை நீட்டினார்கள். நிலவொளியில், தான் பிடித்திருந்தவனின் முகத்தைப் பார்த்ததும் கரிகாலன் அதிர்ந்தான்! (தொடரும்) ஓவியம்: ஸ்யாம் http://www.kungumam.co.in Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted May 25, 2018 தொடங்கியவர் Share Posted May 25, 2018 ரத்த மகுடம்-பிரமாண்டமான சரித்திரத் தொடர் கே.என்.சிவராமன் - 3 எப்பேர்ப்பட்ட சிக்கலான சூழ்நிலையியலும் புத்தியை மிகத் தெளிவாக நிறுத்திக்கொண்டு செயல் புரியக்கூடிய ஆற்றல் உடையவன் என்றும், அதிர்ச்சி என்றால் என்னவென்றே அறியாதவன் என்றும் பெயர் வாங்கியிருந்த கரிகாலனின் நுண்ணறிவுகூட அன்றைய இரவின் ஐந்தாம் நாழிகையில் தன் முன் நின்றவனின் முகத்தைக் கண்டதும் ஒரு கணம் துணுக்குறவே செய்தது. யாரை எதிர்பார்த்தாலும் இந்த மனிதனை எதிர்பார்க்கவில்லை என்பதற்கு அடையாளமாக கரிகாலனின் மனம் அப்பால் இருந்த நாவாய்கள் போலவே இப்படியும் அப்படியுமாக அசைந்தது. ஏதேதோ சிந்தனைகள் சிற்றலைகள் போலவே அவன் மனதைத் தாக்க ஆரம்பித்தன. நீருக்கடியில் உதைத்துக் கொண்டிருந்த அவன் கால்கள் கூட கடந்த கால வரலாற்றை நிகழ்காலத்துக்கு அழைத்து வந்து எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறதோ என கவலைப்பட்டன. அனைத்துக்கும் காரணமாக இருந்த அந்த மனிதனின் முகத்தில் மட்டும் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. அந்தத் தோற்றமே கரிகாலனை இயல்புக்குக் கொண்டு வந்தது. கழுத்தை நெரித்துக் கொண்டிருந்த தன் விரல்களை நிதானமாக விலக்கினான். ‘‘மன்னிக்க வேண்டும்...’’ என அடுத்து அவன் பேசியபோது கூட சாந்தமே நிரம்பி வழிந்தது.‘‘எதற்கு மன்னிப்பு கரிகாலா... என் கழுத்தை நெரித்ததற்கா?’’ ‘எப்படி என்னை நீ இனம் கண்டாயோ அப்படி உன்னையும் நான் அறிவேன்’ என்ற தொனி அக்குரலில் தென்பட்டது. ‘‘இல்லை...’’ பதில் சொன்ன கரிகாலன் கடல் நீரில் நனைந்திருந்த தன் தலை சிகையைச் சிலுப்பி பிறை நிலவில் உலர்த்தினான். ‘‘பிறகு?’’‘‘எந்த முன்னறிவிப்பும் இன்றி இரு வீரர்களுடன் மல்லைக் கடலில் கடலாட வந்த கதம்ப நாட்டு இளவரசரான உங்களைத் தடுத்து நிறுத்தியதற்காக!’’சொன்ன கரிகாலன் தன்னைப் போலவே நீரிலிருந்து வெளியே வந்திருந்த சிவகாமியைப் பார்த்தான். ‘‘காலம் திரண்டு வந்ததுபோல் இளவரசர் இரவிவர்மன் நம் முன் நிற்கிறார். வரவேற்பதுதான் பல்லவ நாட்டின் இயல்பு. வயதிலும் மூத்தவர் என்பதால் தலை வணங்கு சிவகாமி!’’ ‘‘தேவையில்லை...’’ கணீரென்று ஒலித்தது இரவிவர்மனின் குரல். ‘‘சம அந்தஸ்துள்ளவர்கள் பரஸ்பரம் வணங்குவதில்லை..!’’கரிகாலனின் புருவங்கள் முடிச்சிட்டன. ‘‘புரியவில்லை...’’‘‘இதில் புரியாமல் போக என்ன இருக்கிறது கரிகாலா! எப்படி நீ எனக்கு தலை வணங்க வேண்டியதில்லையோ... அப்படி சிவகாமியும் வணங்கத் தேவையில்லை! பிறப்பாலும் குடும்பப் பாரம்பரியத்தாலும் நாம் மூவருமே சமமானவர்கள்தான்!’’‘‘என்ன சொல்கிறீர்கள் கதம்ப இளவரசரே?’’‘‘உண்மையை கரிகாலா! இவள் யாரென்று பல்லவ நாட்டு மக்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். உங்கள் மன்னர் பரமேஸ்வர வர்மனின் வளர்ப்பு மகள் என சற்றுமுன் வல்லபன் உன்னிடம் அறிமுகப்படுத்தி இருக்கலாம். இத்தனை நாட்களாக இவள் எங்கிருந்தாள் என்ற கேள்வி உனக்குள் தொத்தி இருக்கலாம். அப்படிப்பட்ட எந்த வினாக்களும் கதம்பர்களுக்கோ சாளுக்கியர்களுக்கோ இல்லை! சிவகாமியின் பிறப்பிலிருந்து இப்போது பல்லவ இளவரசரிடம் செய்தி சொல்ல உன்னுடன் இவள் புறப்பட்டிருப்பது வரை சகலமும் எங்களுக்குத் தெரியும்! இவள் செய்திருக்கும் சபதம் உட்பட!’’ இரவிவர்மன் இப்படிச் சொல்லி முடிக்கவும், தன் வாளை உயர்த்தி அவன் மீது சிவகாமி பாயவும் சரியாக இருந்தது. இருவர் மீதும் தன் பார்வையை கரிகாலன் பதித்திருந்ததால் உடனடியாக அவள் கரங்களைப் பிடித்து நிறுத்தினான். ‘‘தவறு சிவகாமி...’’‘‘எது? எதிரி நாட்டு சிற்றரசின் இளவரசர் பல்லவ நாட்டுக்குள் சுதந்திரமாக உலவுவதா?’’‘‘இல்லை...’’ கரிகாலனின் குரல் அழுத்தமாக ஒலித்தது.‘‘பிறகு?’’ ‘‘உனக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்படாமல் தடுப்பது என் கடமை! பிராமணர்களைக் கொல்லக் கூடாது என சாஸ்திரம் சொல்கிறது. இரவிவர்மர் சத்திரியரல்ல. பிராமணர். புலவர் தண்டியிடமிருந்து வந்திருக்கும் உனக்கு வரலாறு தெரிந்திருக்கும். என்றாலும் திரும்பவும் நினைவுபடுத்துகிறேன். ஒருவகையில் அர்த்த சாஸ்திரம் எழுதிய கெளடில்யரின் கதையேதான். என்ன, அதில் சந்திரகுப்தரை கெளடில்யர் அரசராக்கினார். இதில், தானே மன்னரானார்...’’ நிறுத்திய கரிகாலனின் முகம் உணர்ச்சியில் கொந்தளித்தது. சற்று நிதானித்தவன் தொடர்ந்தான். ‘‘காஞ்சி கடிகையில் கல்வி கற்று வந்த மயூர சர்மன் என்ற பிராமணருக்கு ஓர் அவமானம் பல்லவர்களால் ஏற்பட்டது. அதற்குப் பழிவாங்க கதம்பர்களின் அரசரானார். குந்தள தேசத்தை ஆண்டார். ஆரம்பத்தில் பல்லவர்களுக்கு அடங்கியிருந்தவர்கள் பிறகு கங்க வர்மன் காலத்தில் தனியாட்சி பெற்றார்கள்...’’ ‘‘அதன்பிறகு இரு நூற்றாண்டுகள் வரை கதம்ப ராஜ்ஜியத்தை ஆண்டவர்கள் தங்களுக்கு கப்பம் கட்டிக் கண்டிருந்த சாளுக்கியர்களிடம் அரசைப் பறிகொடுத்து சிற்றரசாக சுருங்கினார்கள்...’’ கரிகாலன் ஆரம்பித்த சரித்திரத்தை இடைவெட்டி சிவகாமி முடித்தாள். ‘‘சிற்றரசாக இருப்பது ஒன்றும் அவமானமில்லை சிவகாமி. நேற்று சாதவாகனர்களிடம் அடங்கி இருந்த பல்லவர்கள்தான் இன்று பெரும் நிலப்பரப்பை ஆள்கிறார்கள். நேற்று தொண்டை மண்டலத்தையும் ஆண்ட சோழர்கள் இன்று பல்லவர்களுக்குக் கட்டுப்பட்டு இருக்கிறார்கள். நாளை சோழர்களுக்கு அடங்கிய சிற்றரசாக பல்லவ நாடு மாறாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை...’’ நீந்தியபடியே நெஞ்சை உயர்த்தி கம்பீரமாக அறிவித்தான் இரவிவர்மன். ‘‘அப்படி கதம்பர்களும் இழந்த பெருமையை மீண்டும் பெற வேண்டும் என்பதற்காகத்தான் பல்லவர்களின் துறைமுகப் பட்டிணத்துக்கு ரகசியமாக வந்திருக்கிறீர்களா?’’‘‘இல்லை என்று சொன்னால் நம்பப் போகிறாயா அல்லது ஆம் என்று சொன்னால் ஏற்கப் போகிறாயா..? அவரவர் தேசம் அவரவருக்கு உயர்வானது சிவகாமி. இன்றைய நண்பர்கள் நாளைய பகைவர்கள். நிகழ்கால எதிரிகள் எதிர்காலத் தோழர்கள். மல்லைக் கடற்கரைக்கு இந்த நள்ளிரவில் இரு வீரர்களுடன் நான் வந்தது குற்றமென்றால், பல்லவ அரசரின் நன்மதிப்பைப் பெற்று அவர் குடும்பத்தில் ஒருத்தியாக ஊடுருவி, சபதம் என்ற பெயரில் எல்லோரையும் நம்ப வைத்து பல்லவ குலத்தையே வேரறுக்க காய்களை நகர்த்தி வரும் உனது செயலுக்கு என்ன பெயர்?!’’‘‘இரவிவர்மா..?’’‘‘அலைகளை மீறி இரையாதே சிவகாமி. பயந்து கட்டுப்பட நான் அரபுப் புரவி அல்ல. கதம்ப இளவரசன். பல்லவர்களைப் பழிவாங்க சாளுக்கியர்களுடன் இணைந்திருப்பவன். நேர்மையான எதிரி. உன்னைப் போல் நம்பிக்கைத் துரோகி அல்ல!’’அடுத்த கணம் சிவகாமியின் வாள் இரவிவர்மனின் தலையை நோக்கி இறங்கியது. நியாயமாகப் பார்த்தால் கதம்ப இளவரசரின் மரணம் மல்லைக் கடலிலேயே சம்பவித்திருக்க வேண்டும். காயம்பட்டு தங்கள் ஆயுதங்களைப் பறிகொடுத்திருந்த இரு வீரர்களும் அப்படித்தான் நினைத்தார்கள். வீலென்று அலறவும் செய்தார்கள். ஆனால், நடக்கும் என்று நாம் நினைப்பது நடக்காமல் போவதும், நடக்கவே வாய்ப்பில்லை என்று நம்புவது நடப்பதும்தானே மனித வாழ்க்கை? அதுவேதான் மல்லைக் கடலிலும் அப்போது நடந்தது. கரிகாலனின் வாள் உயர்ந்து சிவகாமியின் வீச்சைத் தடுத்தது. இவ்வளவும் இரவிவர்மனின் தலைக்கு மேல்தான் நடந்தது. என்றாலும் அசையாமல் நின்றான். தன்னைக் காத்ததற்காகக் கரிகாலனிடம் நன்றியும் சொல்லவில்லை. தன்னைத் தாக்க முற்பட்டதற்காக சிவகாமியிடம் பாயவும் இல்லை. ‘‘ஆத்திரக்காரிக்கு புத்தி மட்டு...’’ என்று மட்டும் அலட்சியமாக முணுமுணுத்தான்.‘‘இரண்டாவது முறையாக என்னைத் தடுக்கிறீர்கள் கரிகாலரே! பிரம்மஹத்தி தோஷம் சூழ்ந்தாலும் பரவாயில்லை. அபாண்டமாக என்மீது குற்றம் சுமத்தும் இரவிவர்மனைத் தண்டிக்காமல் இங்கிருந்து நகரமாட்டேன்!’’ ‘கரிகாலா... நான் பொய் சொல்கிறேனா இல்லையா என்பதை நீயே ஆராய்ந்து அறிந்துகொள். இப்போது என்னிடம் பறித்துக் கொண்ட வாளைத் திருப்பிக் கொடுத்துவிட்டுத் தள்ளி நில். சிவகாமி யின் வீச்சுக்கு பதில் சொல்லிவிட்டு உன்னிடம் சிறைப்படுகிறேன்!’’ ‘‘ஏற்கனவே சிறைப்பட்டுத்தான் இருக்கிறீர்கள் கதம்ப இளவரசே!’’என்ற கரிகாலன் தன் வாளால் சிவகாமியின் வாளைத் தட்டிவிட்டான். ‘‘பல்லவ மன்னர் மீது ஆணை. இனி வாளை நீ எடுக்கக் கூடாது...’’ கட்டளையிட்டவன், கரையிலிருந்து மூன்று படகுகள் தங்களை நோக்கி வருவதைக் கண்டான். ‘‘வீரர்களை அழைத்துக் கொண்டு வல்லபன் வருகிறான். நம்மை அவன் நெருங்குவதற்குள் சொல்லி விடுங்கள்...’’ ‘‘எதை கரிகாலா?’’‘‘எதற்காக இங்கு வந்தீர்கள்?’’‘‘உனக்குத் தெரியாதா? நரசிம்மவர்ம பல்லவர் காலத்தில் வாதாபியை நீங்கள் எரித்ததற்கு பழிவாங்க திட்டமிடும் சாளுக்கிய மன்னர் எந்த பூர்வாங்க நடவடிக்கையும் எடுக்காமலா போர் முரசு கொட்டுவார்!’’‘‘அதற்காக கதம்ப இளவரசரையேவா அனுப்பி வைப்பார்?’’ ‘‘ஏன், இரவி வர்மன் வேவு பார்க்கக் கூடாது என ஏதேனும் சட்டம் இருக்கிறதா? பல்லவ இளவல் இராஜசிம்மன் எங்கிருக்கிறான் என்ற தகவல் அவனது உயிர் நண்பனான உனக்கு மட்டும்தான் தெரியும். இப்போது இந்த சாகசக்காரியுடன் அந்த இடத்துக்கு நீ செல்லப் போகிறாய். நீயோ வீராதி வீரன். சூராதி சூரன். அப்படிப்பட்ட உன்னைப் பின்தொடரும் பொறுப்பை சாதாரண வீரர்களிடம் எப்படி ஒப்படைக்க முடியும்? அதனால்தான் நானே சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் அனுமதியுடன் இங்கு வந்தேன். ஆனால்...’’ ‘‘என்னிடம் பிடிபட்டீர்கள்...’’ ‘‘அதற்காக ஜெயித்துவிட்டதாக நினைக்காதே! இந்த இரவி வர்மன் இல்லாவிட்டால்...’’ ‘‘வேறொருவர் என்னைப் பின்தொடர்ந்து பல்லவ இளவல் இருக்கும் இடத்தைக் கண்டறிய முற்படுவார்... இதைத்தானே சொல்ல வருகிறீர்கள்? வருபவர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்று எனக்குத் தெரியும்...’’ என கரிகாலன் பதில் சொல்லி முடித்தபோது மூன்று படகுகளும் அவர்களைச் சூழ்ந்தன. கணித்தது போலவே வல்லபன் தலைமையில்தான் பத்து வீரர்கள் வந்திருந்தனர். அவனை நோக்கி மடமடவென்று கரிகாலன் உத்தரவிட்டான். ‘‘காயம்பட்ட இருவரையும் ஆதுரச் சாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துவிட்டு மல்லைச் சிறையில் அடை. கதம்ப இளவரசரை காஞ்சிக்கு அழைத்துச் செல். ஆனால், சிறையில் அடைக்க வேண்டாம். தனி மாளிகையில் வீரர்களின் கண்காணிப்பில் வைத்திரு. அரசருக்குரிய மரியாதை இவருக்கு குறைவின்றி வழங்கப்பட வேண்டும்...’’சரி என்பதற்கு அறிகுறியாக வல்லபன் தலையசைத்தான். ‘‘கரிகாலரே...’’ ‘‘என்ன வல்லபா?’’‘‘கரையிலிருந்து பார்த்துவிட்டு நாங்களாக இங்கு வரவில்லை...’’‘‘பிறகு?’’‘‘கட்டளைக்கு அடிபணிந்தே படகுடன் வந்தோம்...’’‘‘அனுப்பியது யார்?’’‘‘புலவர் தண்டி! கரையில் கூடாரமடித்துத் தங்கியிருக்கிறார்...’’ ‘‘சரி. அவரைச் சந்திக்க நாங்கள் செல்கிறோம்...’’‘‘இல்லை...’’‘‘என்ன இல்லை?’’‘‘வந்து... கரிகாலரே... உங்களையும் சிவகாமியையும் உடனடியாக பல்லவ இளவல் இருக்கும் இடத்துக்குச் செல்லச் சொன்னார்...’’‘‘முடியாது வல்லபா. சிவகாமி குறித்து சில சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன...’’‘‘அதுகுறித்து கவலைப்பட வேண்டாம் என்றும், எக்காரணம் கொண்டும் சிவகாமியை சந்தேகப்பட வேண்டாம் என்றும்...’’‘‘புலவர் சொல்லச் சொன்னாரா?’’ ‘‘இல்லை. கட்டளையிட்டிருக்கிறார்!’’ கரிகாலன் திக்பிரமை பிடித்து நின்றான். சிவகாமியின் முகத்தில் பல்வேறு உணர்வுகள் தாண்டவமாடின. இதைப் பார்த்து இரவிவர்மன் வாய்விட்டுச் சிரித்தான். அத்துடன் தன் இடுப்பிலிருந்த சிறிய மூங்கில் குழாயை எடுத்து பலமாக ஊதினான். வெளியேறிய காற்று இசையாகப் பிரவாகம் எடுத்தது. அந்த இசை பல்லவ நாட்டின் தலையெழுத்தையே மாற்றப் போகிறது என்பதை அப்போது யாரும் அறியவில்லை. (தொடரும்) Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted June 1, 2018 தொடங்கியவர் Share Posted June 1, 2018 ரத்த மகுடம்-பிரமாண்டமான சரித்திரத் தொடர் கே.என்.சிவராமன்-4 ‘‘என்ன... அந்த பிராமணன் கூடாரத்தில் இருக்கிறானா..?’’ இரவிவர்மனையும் காயம்பட்ட இரு வீரர்களையும் படகில் அழைத்துக்கொண்டு வல்லபன் கரையில் இறங்கியதுமே இந்தச் சொற்கள் அவன் செவியைக் கிழித்தன. கோபத்துடன் வாளை உருவ முற்பட்டவன், சொன்னவன் ஒரு காபாலிகன் என்று தெரிந்ததும் அமைதியானான். ‘‘ஏன்... தலையைச் சீவ வேண்டியதுதானே..?’’ அலட்சியமாகக் கேட்ட காபாலிகன் சுற்றிலும் பார்த்தான். வல்லபனுக்கு அருகில் இருந்த இரவிவர்மனைப் பார்த்ததும் அவன் முகம் சுருங்கியது. ‘‘பிராமணன்...’’ உதட்டைச் சுழித்தபடி வல்லபனை கோபத்துடன் பார்த்தான். ‘‘பல்லவ மன்னனுக்கு வேறு வேலையே இல்லையா... எதற்காக இந்த விஷக் கிருமிகளை வீரர்கள் சூழ நடமாட அனுமதிக்கிறான்? முன் காலத்திலும் பிராமணர்கள் தமிழகத்துக்குள் வரத்தான் செய்தார்கள். ஆனால், சாதாரண மக்களாக அவர்களை வாழவே தமிழ் மன்னர்கள் அனுமதித்தார்கள். அதிகாரத்தின் பக்கம் அவர்களை நெருங்க விடவில்லை. போறாத வேளை... வேளிர்களாக பிரிந்திருந்தவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு தமிழ் நிலப்பரப்பையே தாரை வார்த்துக் கொடுத்துவிட்டார்கள். அதன் பலனைத்தான் இப்போது அனுபவிக்கிறோம். இதற்கெல்லாம் காரணம் பல்லவர்கள்தான். என்று அவர்கள் தலையெடுத்தார்களோ அன்று பிராமணனின் கொட்டம் ஆரம்பித்து விட்டது. ஏற்கனவே இந்திர விழாவாக இருந்த தமிழ்த் திருவிழாவை சித்ரா பெளர்ணமியாக்கி நாசம் செய்துவிட்டார்கள். காதலும் வீரமும் இரு கண்களாக இருந்த சமூகத்தை, காதலே தவறோ என்று எண்ணும்படி செய்துவிட்டார்கள். எதிர்பாலினத்தைக் காதலிப்பதுதான் இயற்கை. அதை அப்படியே இறைவனைக் காதலிப்பதுதான் பக்தி என மாற்றிவிட்டார்கள்! வட நாட்டுக்கும் தென்னாட்டுக்கும் வாசலாக இந்த தொண்டை மண்டலம் இருப்பதால் சாரி சாரியாக இங்கு வந்து குடியேற ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களுக்கு பட்டுக் கம்பள வரவேற்பு அளிக்க பல்லவ மன்னன் சித்தமாக இருக்கிறான். அவர்கள் தனித்து வாழவும், தனி ராஜ்ஜியங்கள் நடத்தவும் பிரம்மதேயம் என்ற பெயரில் மக்களின் நிலங்களை வாரி வழங்குகிறான். சாதாரண மக்களுக்கு எடுத்ததற்கெல்லாம் வரி. பிராமணனுக்கோ, எவ்வளவு நிலத்தை அவன் அபகரித்தாலும் வரியே இல்லை. ஏன்... அவன் தவறே செய்தாலும் தண்டிக்கும் உரிமை மன்னனுக்கும் இல்லை!’’ ஆவேசத்துடன் பொங்கிய காபாலிகன், தன் முகத்தை வல்லபனுக்கு நேராகக் கொண்டு வந்தான். ‘‘காஞ்சி கடிகையில் படித்தவன்தானே நீ? வரலாற்றை அறிவாய்தானே? வட நாட்டு மக்களை இந்த பிராமணர்கள் என்ன பாடு படுத்துகிறார்கள் என்று உனக்குத் தெரியாதா? அதே நிலை தமிழ் மண்ணிலும் ஏற்பட வேண்டுமா? பல்லவ மன்னனுக்கு அருகில்தானே இருக்கிறாய்? இதையெல்லாம் அவனிடம் எடுத்துச் சொல்ல மாட்டாயா? ம்... மாட்டாய். உன் பங்குக்கு மன்னன் சொல்வதற்கெல்லாம் தலையசைத்து சில கிராமங்களை உன் பெயருக்கு பெறத்தானே முயற்சிப்பாய்? எலும்புத் துண்டுக்கு ஆசைப்படும் உன்னைப் போன்றவர்கள் இருக்கும் வரை பிராமணன் அதிகாரத்தை கையில் எடுக்கவே செய்வான். இனி இந்த தமிழ் மண்ணை ஒருவராலும் காப்பாற்ற முடியாது. சாஸ்திரமும் சம்பிரதாயமும்தான் ஆளவே போகிறது. போ... போ... கூடாரத்தில் காத்திருக்கும் புலவன் என்ற பெயரில் பல்லவ நாட்டையே கட்டுப்படுத்தும் அந்த பிராமணனுடன் சேர்ந்து இனி எந்த வழிகளில் எல்லாம் குடியைக் கெடுக்கலாம் என்று திட்டம் தீட்டு...’’ பதிலை எதிர்பார்க்காமல் அந்த காபாலிகன் நகர்ந்து இருளில் கரைந்தான். அதுவரை அமைதியாக இருந்த வல்லபன், அதன் பிறகு கணமும் தாமதிக்கவில்லை. ‘‘காயம்பட்ட இருவரையும் ஆதுரச் சாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துவிட்டு சிறையில் அடையுங்கள்...’’ என வீரர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு, ‘‘வாருங்கள் கதம்ப இளவரசே...’’ என இரவிவர்மனை அழைத்துக்கொண்டு புலவர் தண்டி தங்கியிருக்கும் கூடாரத்தை நோக்கி நடந்தான். ‘‘காபாலிகன்...’’ என ஏதோ சொல்ல இரவிவர்மன் முற்பட்டான். அதை பாதியிலேயே தடுத்தான் வல்லபன். ‘‘தன் கருத்தை அவர் முன் வைத்தார். பல்லவ நாட்டில் அதற்கு சுதந்திரம் உண்டு. மன்னரின் முகத்துக்கு நேராகவே அவரை விமர்சிக்கலாம்...’’ இதற்குள் இருவரும் கூடாரத்தை நெருங்கிவிட்டார்கள். ‘‘ஆசார்ய தேவோ பவ...’’ என வாய்விட்டும், ‘என் சென்னியில் ஆசார்யன் திருவடிகள் பதியட்டும்’ என உள்ளுக்குள் தமிழிலும் சொன்னபடி இரவிவர்மனுடன் நுழைந்தான். சட்டென்று இருவரது பார்வையிலும் பட்டது அம்பிகை விக்ரகம்தான். அந்த சுவர்ண விக்ரகத்தின் முகத்தில் அன்று அபரிமிதமான காந்தி வீசிக்கொண்டிருந்தது. பக்கத்திலிருந்த வெள்ளிக் குத்து விளக்கு அளித்த ஒளியின் பிரதிபலிப்பு மட்டுமல்ல அது. விளக்கின் ஒளிக்கும், ஒளியின் பிரதிபலிக்கும் சக்திக்கும் மேலாக ஏதோ ஒரு விளக்க முடியாத ஜாஜ்வல்யம் அம்பாளின் வதனத்திலும் அம்புஜப் பாதங்களிலும் தெரிந்தது. அருள்விழிகள் மூடித்தான் கிடந்தன. செய்த சிற்பி கண் மலரைத் திறக்காமலேயே வைத்திருந்தான். ஆனால், மூடிய அந்தக் கண்களுக்குள்ளே இருந்தும் அம்பிகை பார்ப்பதைப் போன்ற ஒரு பிரமை. அது சம்பந்தமான ஓர் ஒளிவீச்சு வெளிவந்து கொண்டுதானிருந்தது. அம்பாளின் கிரீடத்தின் உச்சியிலிருந்து இறங்கி வதனத்தின் நடுவில் தொங்கிய ஒரு சிவப்புக்கல், நெருப்புத் துண்டம் போல் எரிந்தாலும் அது திரிபுரம் எரித்தவனின் மூன்றாவது கண்ணைப் போல் இல்லை. மாறாக, அருணோதயச் சிவப்பை வீசி அருள் புரிவதாக இருந்தது. மேலும் கீழுமாகத் திரும்பிய இரு உள்ளங்கைகளின் பத்ம ரேகைகளும், சங்கசூட முத்திரைகளும் உலகத்தைக் காக்கும் சக்ர விதானங்களாகத் திகழ்ந்தன. பத்மாசனத்தில் அமர்ந்திருந்த அம்பிகையின் மடிந்த கால்களின் பாதங்கள், தந்திர சாஸ்திரத்தில் வேத ரிஷிகளும் காண முடியாத எத்தனையோ சூட்சுமங்கள் இருப்பதை அறிவுறுத்தின. ஜகன்மாதாவான மகாசக்தியின் பொன்மேனிக்கு ஆசார்யர் என்றழைக்கப்படும் புலவர் தண்டி மிக அழகாகப் புஷ்பாலங்காரம் செய்திருந்தார். தாழை மலர் படல்கள் அவள் இடைக்குப் பாவாடையாகத் திகழ்ந்தன. காஞ்சியின் மல்லிகைச் செண்டு கிரீடத்தைச் சற்றே மறைத்தது. இரண்டு மாணிக்கத் தண்டைகள் அவற்றைத் தழுவி நின்ற காரணத்தால், அம்பாளின் கணுக்கால்களுக்கு மட்டும் பூச்சரங்கள் இல்லை. ஆனால், அருள் கைகளின் மணிக்கட்டுகளுக்கு பவழமல்லி வளையங்களை ஆசார்யர் அணிவித்திருந்தார். இத்தனைக்கும் சிகரம் வைக்கும் முறையில் அம்பிகையின் அபிஷேக பீடத்தில் அவள் பாதங்களுக்குக் கீழே இரண்டு பெரும் தாமரை மலர்களை நன்றாகப் பிரித்து மகரந்தம் புலனாகும் வகையில் வைத்திருந்தார் புலவர் தண்டி. இவ்வளவு அலங்காரங்களையும் அள்ளிப் பருகிய வல்லபன், ஆசார்யரைப் பார்த்தான். அம்பிகையின் பரம பக்தரும், அம்பிகையுடன் இராக் காலங்களில் நேரிடையாகப் பேசுகிறவர் என்று பிரசித்தி பெற்றவரும், பேரரசர்களின் மணிமுடிகள் பல பாதத்தில் படப்பெற்றவரும், மகா யோகி என்று பெயர் பெற்றவரும், காளிதாசனுக்கு ஈடாகச் சொல்லப்பட்டவருமான மகாகவி தண்டி, கண்களை மூடிக் கொண்டு அம்பிகையைப் போலவே பத்மாசனம் போட்டு அம்பிகைக்கு வலது புறத்தில் வியாக்ராசனத்தில் அமர்ந்திருந்தார். இடையின் பஞ்சகச்ச ஆசார வேஷ்டியும், அதை இணைத்துப் பிடித்திருந்த உத்தரீயமும், மார்பின் குறுக்காக ஓடிய பூணூலும், உடலெங்கும் பூசப்பட்ட திருநீறும், நெற்றியில் துலங்கிய குங்குமமும் அவருக்கு தெய்வீகத் தன்மையை அளித்திருந்தன. மூடிய அவர் கண்களும் அம்பிகையின் கண்களைப் போலவே மூடிய நிலையிலும் உள்ளிருந்து பார்ப்பவை போலத் தோன்றின. கண்களைத் திறந்து இருவரையும் பார்த்து புன்னகைத்தவர், ‘‘தீர்க்காயுஷ்மான் பவ...’’ என கைகளை உயர்த்தி வல்லபனை ஆசீர்வதித்தார். கதம்ப இளவரசரான இரவிவர்மன் சற்று முன்னால் வந்து தன் குல வழக்கப்படி அபிவாதையே சொல்லி அவரை நமஸ்கரித்தான். அவன் தலையில் கை வைத்து ‘‘தீர்க்காயுஷ்மான் பவ...’’ என ஆசீர்வதித்தவர் அவனை ஏறிட்டார். ‘‘காலம் உன்னை இங்கு அழைத்து வந்திருக்கிறது இரவிவர்மா...’’ ‘‘காலமா..?’’ ‘‘சந்தேகமா? பிறப்பும் இறப்பும் இன்பமும் துன்பமுமாகிய அனைத்துக்கும் காலமே காரணம். உலகத்தில் எல்லாப் பொருள்களையும் நல்லவையாகவும் கெட்டவையாகவும் மாற்றுவதும் காலம்; பிரஜைகளை எல்லாம் அழிப்பதும் காலம்; மறுபடி சிருஷ்டி செய்வதும் காலம். எல்லோரும் உறங்கும்போது காலம் விழித்திருக்கிறது. காலத்தைத் தாண்ட யாராலும் முடியாது. ஒருவராலும் நிறுத்தப்படாமல் எல்லாப் பொருள்களிலும் ஒரேவிதமாக காலம் சஞ்சரிக்கிறது. நடந்தனவும் நடப்பனவும், நடக்கப் போவதுமாகிய பதார்த்தங்கள் எவையோ அவை காலத்தால் செய்யப்பட்டவை!’’ தண்டி இப்படிச் சொல்லி முடித்ததுமே இரவிவர்மன் சிரித்தான். ‘‘ஏன் சிரிக்கிறாய் இரவி வர்மா?’’ ‘‘வேறென்ன செய்யச் சொல்கிறீர்கள் ஆசார்யரே? சிவகாமி யார் என்று உங்களுக்கும் தெரியும். அப்படியிருந்தும் பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மரிடம் சொல்லி தன் மகளாக அவளைத் தத்தெடுக்கும்படி செய்திருக்கிறீர்கள். ஒரு காரியமாக பல்லவ இளவல் ராஜசிம்மர் ரகசியமாக வாழ்கிறார். அந்த இடம் உங்களுக்குக் கூடத் தெரியாது. அப்படியிருக்க, இப்போது சிவகாமியை அங்கு அனுப்பி வைத்திருக்கிறீர்கள். அதுவும் சங்கேத மொழியை அவளுக்குக் கற்றுத் தந்து, கரிகாலனை நம்ப வைத்து. இதையெல்லாம் செய்திருப்பவர் நீங்கள். அப்படியிருக்க, பழியை ஏன் காலத்தின் மீது போடுகிறீர்கள்?’’ ‘‘இதையெல்லாம் நான் செய்தது கூட காலத்தின் கட்டளையாக இருக்கலாமே!’’ சொன்ன புலவர், வல்லபனைப் பார்த்து, ‘‘கரிகாலன் என்ன சொல்லியிருப்பான் என்று தெரியும். அவன் கட்டளைப்படி கதம்ப இளவரசரை உரிய மரியாதையுடன் மாளிகையில் தங்க வை. உங்கள் இருவரையும் காஞ்சியில் சந்திக்கிறேன்...’’ என விடை கொடுத்தார். இருவரும் சென்றதும் தன் பின்னால் இருந்து சதுரங்கப் பலகையை எடுத்து காய்களை அடுக்கி எதிராளி இல்லாமலேயே தன்னந்தனியாக தாயம் ஆட ஆரம்பித்தார். அவர் மனதில் திட்டங்கள் வருவதும் போவதுமாக இருந்தன. ‘ஒரு தேரும், ஒரு யானையும், ஐந்து காலாட்களும், மூன்று குதிரைகளும் சேர்ந்தது ஒரு பத்தி. மூன்று பத்தி கொண்டது ஒரு சேனாமுகம். மூன்று சேனாமுகங்கள் சேர்ந்தது ஒரு குல்மம். மூன்று குல்மங்கள், ஒரு கணம். மூன்று கணங்கள் ஒரு வாகினி. மூன்று வாகினிகள், ஒரு பிருதனை. மூன்று பிருதனைகள் சேர்ந்தது ஒரு சமு. மூன்று சமுக்கள், ஓர் அனீகினி. பத்து அனீகினிகள் ஓர் அசெளஷஹிணி...’ முணுமுணுத்தவர் தாயத்தை உருட்டி காய்களை இப்படியும் அப்படியுமாக நகர்த்தினார். ஒரு நாழிகைக்குப் பிறகு அவர் முகத்தில் திருப்திக்கான அறிகுறிகள் பூத்தன. அருகிலிருந்து ஓர் ஓலையை எடுத்து மடமடவென்று எழுதியவர் தொண்டையைக் கனைத்தார். அடுத்த கணம் கூடாரத்தின் பின்னால் இருந்து ஒருவன் வந்து அவரை வணங்கினான். அவன், காபாலிகன்! இரவிவர்மனை அழைத்துக் கொண்டு வல்லபன் வந்தபோது வழிமறித்துப் பேசியவன்! ‘‘ஆசார்யார் சொன்னபடியே நடந்துகொண்டேன்!’’ ‘‘நல்லது. ஆதிவராகன் குகைக்கு செல். அங்கு சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் இருப்பார். அவரிடம் இந்த ஓலையைக் கொடுத்து விட்டு வெளியே வந்து இதை வாயில் வைத்து ஊது!’’ என்றபடி சில நாழிகைகளுக்கு முன் எந்த மூங்கில் குழலை எடுத்து இரவிவர்மன் ஊதினானோ அதேபோன்ற குழல் ஒன்றை காபாலிகனிடம் கொடுத்தார்! (தொடரும்) http://www.kungumam.co.in/ Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted June 8, 2018 தொடங்கியவர் Share Posted June 8, 2018 ரத்த மகுடம்-பிரமாண்டமான சரித்திரத் தொடர் கே.என்.சிவராமன்-5 சூரிய உதயத்துக்கு சில நாழிகைகளே இருந்த அந்தத் தருணத்திலும் மல்லை நகரத்தில் காவல் பலமாக இருந்தது. காவல் வீரர்கள் பெரும் வீதிகளில் சதா நடமாடிக் கொண்டிருந்தனர். இதை சற்றுத் தொலைவிலிருந்தே காபாலிகன் கவனித்தான். பல்லவ மன்னருக்கும் பல்லவ இளவரசருக்கும் குருவாக இருப்பவர் புலவர் தண்டி. அப்படிப்பட்டவர் பல்லவர்களின் பரம எதிரியான சாளுக்கிய மன்னரிடம் கொடுக்கச் சொல்லி ஓர் ஓலையைக் கொடுக்கிறார். இது புரியாத புதிர் என்றால் சத்ரு நாட்டுக்குள், அதுவும் வீரர்கள் நடமாட்டம் மிகுந்த மல்லைத் துறைமுக நகரத்தில் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் எப்போது வந்தார்... எவர் கண்ணிலும் படாமல் அவரால் எப்படி ஆதிவராகக் குகைக்கோயிலில் இருக்க முடிகிறது என்பதெல்லாம் விளங்காத விஷயங்கள். இக்கேள்விகளுக்கு பதில் தேடுவது ராஜ குற்றம். ஏனெனில் பல்லவ நாட்டின் குரு இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார். எனவே, வினவுவதை விட கட்டளைக்கு அடிபணிவது சாலச் சிறந்தது. இந்த முடிவுக்கு வந்த காபாலிகன், நேர் வழியைத் தவிர்த்தான். மலைப்பாறை வழிகளிலும் அடர்ந்த தோப்புகளின் வழியாகவும் சுற்றிச் சென்று ஆதிவராகக் குகையை அடைந்தான். குகை திறந்திருந்தது. மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளே நுழைந்தவன் சிறு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருப்பதைக் கண்டான். அந்த விளக்குக்கு எதிரே தனித்த ஒரு மனிதர் மட்டும் நின்றிருந்தார். ராஜ தோரணை தென்பட்டாலும் அந்த மனிதரிடம் அரச குலத்துக்கான அடையாளங்கள் இல்லை என்பதை அறிந்த காபாலிகன் எச்சரிக்கை அடைந்தான். ‘சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் இங்கு இருப்பார் என்றல்லவா புலவர் தண்டி கூறினார்... இங்கு வந்தால் வேறு யாரோ இருக்கிறார்களே... ஒருவேளை சாளுக்கிய மன்னர் இன்னும் வரவில்லையோ...’ யோசனையுடன் ஆதிவராகன் குகை என்று பிரசித்தி பெற்ற அந்தக் குடைவரைக் கோயிலுக்குள் நுழைவதை விடுத்து சிறிது பின்வாங்கி, குகை வாயிலின் ஒரு புறத்தில் காபாலிகன் பதுங்கினான். அந்நேரத்திலும் விடாது எரிந்து கொண்டிருந்த தூங்கா விளக்கு, மலையைக் குகை போல் குடைந்து முதலாம் நரசிம்மவர்ம பல்லவரால் நிர்மாணிக்கப்பட்ட அந்தக் கோயிலின் உட்புறம் நன்றாகத் துலங்கும்படி செய்திருந்தது. இதன் விளைவாக, வாயிற்படிக்கு நேர் எதிரில் மலையின் உட்சுவரில் சிற்பி நிர்மாணித்திருந்த ஆதிவராகப் பெருமான் திருவுருவம் மட்டுமின்றி அக்கம் பக்கத்தில் செதுக்கப்பட்டு உயிருள்ளவை போல் காணப்பட்ட மற்ற பிம்பங்களும் தெள்ளெனத் தெரிந்தன. ஒரு கையால் அவனி தேவியை அணைத்து உயரத் தூக்கி வைத்துக் கொண்டும், இன்னொரு கையால் அவள் பாதத்தைப் பிடித்துக் கொண்டும்; இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்திக்கொண்டும் காட்சியளித்த பரந்தாமனான ஆதிவராகனின் சீரிய பார்வையில் உக்கிரமும் சாந்தியும் கலந்து கிடந்தன. தரையில் ஊன்றிய நாரணனின் இடது திருவடியும், ஆதிசேஷன் தலையைப் பீடமாக்கிக் கொண்ட வலது கழலிணையும் அசுரனிடம் பொருது மீண்ட புராண நிகழ்ச்சிக்குச் சான்று கூறும் தோரணையில் காட்சியளித்தன. ஆதிவராகனின் சீறிய தோற்றத்துக்கு அணை போடும் ஆற்றலுடையவளாக, அசுரனுடன் பொருது மீண்ட சீற்றத்தைத் தணிக்கும் கருணை சொரூபமாக அருள் சுரக்கும் வெட்கக் கண்களுடன் பெருமானின் கரங்களில் வளைந்து கிடந்தாள் பூமிப் பிராட்டி. எம்பெருமான் திருவடிக்குத் தலை கொடுத்திருந்த ஆதிசேடனும் அவனருகில் இருந்த நாக கன்னிகையும் தங்களுக்குக் கிடைத்த திருவடியில் மெய் மறந்திருந்தார்கள். ஆதிவராகன் அருள் தோற்றத்தின் விளைவாக மெய்மறந்தது ஆதிசேடன் மட்டுமல்ல, அந்தக் கோயிலுக்குள் ஆதிவராகன் முன்பு அந்த மனிதரும்தான் என்பதை காபாலிகனால் உணர முடிந்தது. மார்பில் இரு கைகளையும் கட்டிக்கொண்டு, கால்கள் இரண்டையும் லேசாக அகற்றிக் கொண்டு ஆஜானுபாகுவாக நின்றிருந்த அம்மனிதரின் தலை நிமிர்ந்திருந்ததால் அவர் எம்பெருமான் உருவத்தை அணு அணுவாக ஆராய்வதை உணர்ந்தான் வாயிற்படியின் மூலையிலிருந்த காபாலிகன். அளவோடு சிறுத்த இடுப்பும், அதற்கு மேலும் கீழும் உறுதியுடன் இருந்த உடற்கூறுகளும் இடைவிடாத யோகப் பயிற்சிக்குச் சான்று கூறின. கால்கள் ஏதோ இரும்பால் செய்யப்பட்டதைப் போல் இருந்த தோரணை அவர் திடத்தைச் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்தது. நெற்றியில் சூரணம். தலையில் பட்டு தலைப்பாகை. மார்பில் போர்த்திய நிலையில் பட்டு வஸ்திரத்துடன் காணப்பட்ட அந்த மனிதரின் கன்னத்தில் லேசாகப் புலப்பட்ட முதிர்ச்சி, அவர் நடுத்தர வயதைக் கடந்தவர் என்பதை உணர்த்தியது. இந்நிலையில் அந்த மனிதர் லேசாகத் திரும்பி உட்பாறையின் வலது பக்கத்திலிருந்த மூன்று சிற்பங்களைக் கவனிக்கத் தொடங்கினார். இப்படி அவர் அரைவாசி திரும்பியதால், அவர் முகம் தூங்கா விளக்கில் நன்றாகத் தெரிந்தது. நன்றாகத் தீட்டப்பட்ட ஈட்டிகளின் முனைகளைவிடப் பிரகாசித்த கண்கள், அந்தச் சிற்பங்களை வியப்புடனும் ஓரளவு சீற்றத்துடனும் நோக்கின. எதிரே தெரிந்த மூன்று சிற்பங்களை நோக்கியபோது, அந்த இதழ்களில் வெறுப்பு கலந்த பயங்கரப் புன்முறுவல் ஒன்று தவழ்ந்தது. சிற்பங்களை அமைத்திருந்த லாவகத்தால் சிற்பங்கள் அந்த மனிதரை நோக்குகின்றனவா அல்லது அந்த மனிதர் சிற்பங்களை நோக்குகிறாரா என்று புரியவில்லை. மலைப்பாறையில் குடையப்பட்டிருந்த மூன்று சிற்பங்களில் ஆண் சிற்பம் மகேந்திர பல்லவர் என்பதை அந்த மனிதர் உணர்ந்து கொண்டிருக்க வேண்டுமென்பதை அவர் விட்ட பெருமூச்சு உணர்த்தியது. தலையில் கவிழ்க்கப்பட்ட கிரீடத்துடனும், அக்கம் பக்கத் தோள்களைச் சடை போல் தொட்ட முடியுடனும், எதிரே குச்சு போல் இடுப்பிலிருந்து இறங்கிய ஆடையின் பட்டைக் கச்சத்துடனும் காணப்பட்ட மகேந்திர பல்லவரின் முகத்தில் தெரிந்த கம்பீரம், அந்த மனிதரை வியக்க வைத்ததா அல்லது கொதிக்க வைத்ததா என்பதை அவரது முகபாவத்திலிருந்து காபாலிகனால் உணர முடியவில்லை. பாறையின் ஒரு பகுதியாக கம்பீரத்தின் அடையாளமாக மகிஷியொருத்தியின் கையைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்த மகேந்திர பல்லவரின் இடையில் சற்றுப் பின்புறமாக இருந்த கத்தியையும் அந்த மனிதர் கவனிக்கத் தவறவில்லை. கத்தியைக் கவனித்த அந்த மனிதரின் கண்கள் கோபத்தால் ஜொலித்தன. அவர் கையொன்று அவரது இடைக் கச்சையில் நீண்டு தொங்கிக்கொண்டிருந்த கத்தியின் முகப்பைத் தடவியது. மகேந்திரபல்லவர் பாறையிலிருந்து சிறிது நகர்ந்தாலும் வாளை உருவ அந்த மனிதர் தயாராயிருந்ததாகத் தோன்றியது வாயிலின் மூலையில் நின்றிருந்த காபாலிகனுக்கு. மகேந்திரபல்லவர் மகிஷிகள் இருவரும் மகுடம் அணிந்து அழகின் அடையாளமாகத் திகழ்ந்தனர். இருவரின் ஒடிந்த இடைகளும், உருட்டி விடப்பட்ட மார்புகளும், காலில் துலங்கிய சிலம்புகளும் அவர்கள் இருவரையும் இரட்டைப் பிறப்புகளைப் போல் காட்டின. அந்தக் காலத்துச் சிற்பங்கள் பலவற்றைப் போல் அந்த மகிஷிகள் இருவரில் ஒருத்தியே ஆடை அணிந்திருந்தாள். அவ்விரு சிற்பங்களையும் அந்த மனிதர் நீண்ட நேரம் பார்க்கவில்லை. குகையில் நின்றிருந்தவர், இடப்புறப் பாறைச் சுவரில் செதுக்கப்பட்டிருந்த சிம்ம விஷ்ணுவின் சிலையையோ, கஜலட்சுமி யின் சிலையையோ கூடத் திரும்பிப் பார்க்கவில்லை. ஆதிவராகப் பெருமானை வணங்கிய பிறகு மீண்டும் மீண்டும் பல்லவ சக்கரவர்த்தியையும் மகிஷிகள் இருவரையுமே கவனித்தார். அந்த சமயத்தில் காபாலிகனின் கையில் இருந்த மண்டையோடு வாயிலின் மூலையில் லேசாக உராயவே அந்த மனிதர் மெல்ல வாயிலை நோக்கித் திரும்பினார். அப்படித் திரும்பியபோது விளக்குக்கு முன்னிருந்து அவர் அகன்றுவிடவே விளக்கு வெளிச்சம் காபாலிகன் மீது நன்றாக விழுந்தது. ஏற இறங்க அவனை ஆராய்ந்தவரின் முகத்தில் புன்னகை பூத்தது. தொடர்ந்து அவர் உதட்டிலிருந்து, ‘‘ஏதேது... பல்லவ நாட்டில் சைவர்கள் எல்லோரும் தீவிர வைஷ்ணவர்களாக மாறுவது போல் தெரிகிறதே...’’ என்று வந்து விழுந்த சொற்கள் காபாலிகனை சங்கடப்படுத்தியது. ‘‘ஈசனைத் தவிர வேறு எவரையும் வணங்கேன்...’’ என்றான் கம்பீரமாக. ‘‘அப்படியானால் எதற்கு ஆதிவராகர் கோயிலுக்கு சூர்யோதய சமயத்தில் வருகை தந்தாய்? ஒருவேளை போரில் வெற்றியடைய விரும்பி பெருமானை தரிசிக்க வந்தாயா? என்ன விழிக்கிறாய்? பல்லவர்களின் வழக்கம் அப்படித்தானே? சற்று முன்பு நான் கூர்ந்து நோக்கிய சிற்பம் மகேந்திரபல்லவருடையது! அவரது திருக்குமாரர் நரசிம்ம பல்லவன் வாதாபி மீது படையெடுக்கும் முன் ஆதிவராகனைத் தரிசித்து விட்டுச் சென்றான் என பல்லவர் வம்ச வரலாறு கூறுவதை அடியேன் படித்திருக்கிறேன்...’’ இதைச் சொன்ன மனிதரை வைத்த விழியை எடுக்காமல் காபாலிகன் பார்த்தான். முக்கியமாக ‘மகேந்திர பல்லவர்’ என்று ‘ர்’ போட்டு மரியாதையுடன் அழைத்தவர், நரசிம்ம பல்லவரை மட்டும் ‘நரசிம்ம பல்லவன்’ என ஒருமையில் அழைத்ததை! எனவே காபாலிகன் மெல்லக் கேட்டான். ‘‘தாங்கள் யார்?’’ ‘‘ஸ்ரீராமபுண்யவல்லபர்!’’ நிதானமாக அந்த மனிதர் பதிலளித்தார். எந்தப் பெயரை எதிர்பார்த்தாலும் இந்த நாமகரணத்தை காபாலிகன் எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் முகத்திலிருந்தே ஸ்ரீராமபுண்யவல்லபர் புரிந்து கொண்டார். ‘‘இந்தச் சிறியவனை அறிவாய் போலிருக்கிறதே?’’ என்றார் முன் எப்போதும் இல்லாத வாஞ்சையுடன். ‘‘கேள்விப்பட்டிருக்கிறேன்...’’ காபாலிகன் இழுத்தான். ‘‘என்னவென்று?’’ ‘‘சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தருக்கு போரையும் அமைதியையும் நிர்ணயிக்கும் அமைச்சர் என்று!’’ ‘‘அது அடியவனாகத்தான் இருக்கும் என்று எப்படிச் சொல்கிறாய்?’’ ‘‘ ஸ்ரீராமபுண்யவல்லபர் என்ற பெயரில் ஒருவர்தான் இருக்கிறார்!’’ காபாலிகன் உறுதியுடன் சொன்னான். ‘‘அப்படியானால் எங்கள் மன்னருக்குத் தர வேண்டிய ஓலையை அவரது அமைச்சரான என்னிடம் தர ஏன் யோசிக்கிறாய்?!’’ பெரும் அலையொன்று முகத்தில் மோதியது போல் காபாலிகன் நிலைகுலைந்தான். ‘‘ஓலையா? எந்த ஓலை..?’’ தட்டுத் தடுமாறி சொற்களைச் சிதறவிட்டான். ‘‘புலவர் தண்டி உன்னிடம் கொடுத்து அனுப்பிய ஓலை!’’ கம்பீரமாக பதில் சொன்னார் ஸ்ரீராமபுண்யவல்லபர். இதற்கு மேலும் தாமதிப்பதிலோ, வார்த்தை விளையாட்டில் இறங்குவதிலோ, தப்பிக்க முயற்சிப்பதிலோ பயனில்லை என்பது காபாலிகனுக்கு தெளிவாகப் புரிந்தது. தன் இடையில் மறைத்து வைத்திருந்த ஓலையை எடுத்து அவரிடம் கொடுத்தான். ‘சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தனுக்கு...’ என்றிருந்த விலாசத்தை அலட்சியம் செய்துவிட்டு ஓலையைப் பிரித்த ஸ்ரீராம புண்யவல்லபரின் புருவங்கள் சுருங்கின. ஏனெனில் ஓலையின் தொடக்கமே ‘கரிகாலனையும் சிவகாமியையும் பின்தொடர ஆட்களை அனுப்பிவிட்டு இந்த ஓலையைப் படிக்கும் மரியாதைக்குரிய சாளுக்கிய போர் அமைச்சரான ஸ்ரீராம புண்யவல்லபருக்கு...’ என்றுதான் இருந்தது! வாய்விட்டு இதைப் படித்தவர் அதன்பிறகு வந்த வாக்கியங்களைத் தனக்குள் வாசிக்கத் தொடங்கினார். காபாலிகன் அவரையே கவனித்துக் கொண்டிருந்தான். அவரது நெற்றியில் முத்து முத்தாக வியர்வைகள் பூத்தன. அடிக்கடி அவரது கண்கள் சுருங்கின. முகம் கடுமையாவதும் பிரிவதுமாக நர்த்தனமாடியது. அப்படியானால் ஸ்ரீராம புண்யவல்லபர்தான் ஆதிவராகர் கோயிலில் இருக்க வேண்டும் என்பதை புலவர் தண்டி அறிந்திருக்க வேண்டும். சாளுக்கிய நாட்டின் அறிவிக்கப்பட்ட போர் அமைச்சரின் வியூகத்தை பல்லவ நாட்டின் அறிவிக்கப்படாத போர் அமைச்சரான புலவர் உடைக்கிறார். அதற்கான விதை அந்த ஓலையில் இருக்க வேண்டும். அதனால்தான் ஸ்ரீராம புண்யவல்லபரின் வதனம் ஓலையைப் படிக்கப் படிக்க மாறுகிறது... ‘‘கொடுக்க மட்டுமே உத்தரவு. கிளம்புகிறேன்...’’ பதிலை எதிர்பார்க்காமல் வெளியில் வந்த காபாலிகன் பாறைக்கு மறுபுறம் சென்றான். தாமதிக்காமல் புலவர் தண்டியின் கட்டளைப்படி தன் இடுப்பிலிருந்து மூங்கில் குழலை எடுத்து ஊத முற்பட்டான். அதற்குள் அவனுக்கு அருகில் இருந்து யாரோ ஒருவர் அதே போன்றதொரு மூங்கில் குழலை எடுத்து ஊதினார். அடுத்த கணம் நூறு வராகங்கள் சேர்ந்து சத்தமிட்டால் என்ன ஒலி எழும்புமோ அப்படியொரு ஒலி எட்டுத் திசையிலும் ஒலித்தது! ஊதியவர் யாரென்று பார்த்த காபாலிகன் அதிர்ந்தான். காரணம், அங்கு பல்லவ மன்னரான பரமேஸ்வர வர்மர் நின்றிருந்தார்! (தொடரும்) http://www.kungumam.co.in/ Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted June 21, 2018 தொடங்கியவர் Share Posted June 21, 2018 ரத்த மகுடம்-பிரமாண்டமான சரித்திரத் தொடர் கே.என்.சிவராமன்-6 அரசருக்கு உரிய எந்த ஆடை, ஆபரணங்களும், பாதுகாப்பு வீரர்களும் இன்றி சாதாரண உடையில் வெகு சாதாரண மனிதரைப் போல் தன்னந்தனியாக பல்லவ மன்னரான பரமேஸ்வர வர்மர் ஆதிவராகன் குகைக் கோயிலுக்குப் பின்னால் அந்த விடியற்காலையில் வருவார் என்பதை சற்றும் எதிர்பார்க்காத காபாலிகன் உணர்ச்சிவசப்பட்டான். அந்த உணர்ச்சியை அதிர்ச்சியின் விளிம்புக்கு அழைத்துச் செல்லும் செயலை அடுத்து அவர் செய்தபோது தடுமாறினான். ஏனெனில் ஸ்ரீராமபுண்ய வல்லபரைச் சந்தித்த பிறகு எந்த மூங்கில் குழலை ஊதும்படி புலவர் தண்டி தனக்கு கட்டளையிட்டிருந்தாரோ அதேபோன்ற மூங்கில் குழலை எடுத்து பல்லவ மன்னர் ஊதியதுதான். இதனையடுத்து நூறு வராகங்கள் சேர்ந்து எழுப்பும் ஒலி பிறந்து அந்த இடத்தையே அதிர வைத்தது. ‘‘மன்னா... தாங்கள்... இங்கு...’’ என வார்த்தைகள் வராமல் தடுமாறிய காபாலிகனின் வாயை தன் கரங்களால் பல்லவ மன்னர் மூடினார். கண்களால் ‘பேசாமல் இரு...’ என ஜாடை காட்டினார். அது ஏன் என அடுத்த கணமே புரிந்தது. ஆதிவராகன் கோயிலுக்குள்ளிருந்து ஸ்ரீராமபுண்ய வல்லபர் வேகமாக வெளியில் வந்தார். மறைந்திருந்த வீரர்களும் பதற்றத்துடன் அவரை நெருங்கினார்கள். அவர் மூங்கில் குழலை ஊதவில்லை என்பதும், வேறு யாரோ ஊதியிருக்கிறார்கள் என்பதும் வந்த வீரர்களுக்குப் புரிந்ததால் அவர்கள் திகைத்தார்கள். ‘‘எல்லாம் புலவர் தண்டியின் வேலை...’’ வீரர்களிடம் ஸ்ரீராமபுண்யவல்லபர் சொல்வது மறைந்திருந்த பல்லவ மன்னருக்கும் காபாலிகனுக்கும் தெளிவாகக் கேட்டது. ‘‘மூங்கில் குழலின் ஓசைக்கும் நமது நடமாட்டத்துக்கும் இருக்கும் தொடர்பை தனக்கேற்ப பயன்படுத்திக் கொள்ள புலவர் முயற்சிக்கிறார்...’’ புன்னகைத்த ஸ்ரீராமபுண்ய வல்லபர் தன் கையிலிருந்த ஓலையைப் பார்த்தார். ‘‘புலவரை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியும். வாருங்கள்...’’ என்றபடி நடக்க முற்பட்டார். ‘‘அமைச்சரே...’’ முன்னால் நின்றிருந்த வீரன் தயங்கினான். ‘‘என்ன..?’’ ‘‘அந்த காபாலிகனை...’’ ‘‘ஒன்றும் செய்ய வேண்டாம். சற்று நேரத்துக்கு முன் புலவரின் கட்டளைப்படி மூங்கில் குழலை ஊதியது கூட அவன்தான். திடீரென காபாலிகனைக் கைது செய்தால் அது மக்கள் மத்தியில் தேவையில்லாத மதக் குழப்பத்தை ஏற்படுத்தும். தவிர இன்னும் சிறிது காலத்துக்கு அவன் வெளியில் நடமாடுவதுதான் நமக்கு நல்லது...’’ சொன்ன ஸ்ரீராமபுண்ய வல்லபர் சுற்றிலும் ஒரு பார்வை பார்த்து விட்டு மந்தகாசத்துடன் முன்னால் நின்ற வீரனை ஏறிட்டார். ‘‘தன்னைத் தடுத்து நிறுத்தி விட்டார்கள் என்பதை நமக்கு அறிவிக்கும் விதமாக முதலில் கதம்ப இளவரசன் மூங்கில் குழலை ஊதினான். இப்போது இரண்டாவது முறையாக நூறு வராகங்கள் ஒலி எழுப்பியதோ நம் வீரர்களுக்கான செய்தி. ஊதியது நாமல்ல என்பது வீரர்களுக்குத் தெரியாது. தங்களுக்கு இடப்பட்ட கட்டளைப்படி இந்நேரம் மல்லைக் கடற்கரையை நோக்கி நகர்ந்திருப்பார்கள். அவர்களை இப்போது தடுக்க முடியாது. தடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஊதியது யாராக இருந்தாலும் அது நமக்குப் பயனளிப்பதுதான். எனவே, இப்போது மல்லை அரண்மனைக்குச் சென்று அடுத்து செய்ய வேண்டியதைக் குறித்து ஆலோசிப்போம்...’’ சொன்ன ஸ்ரீராமபுண்ய வல்லபர் விடுவிடுவென்று வீரர்கள் சூழ நடந்தார். அவர் மறையும் வரை காத்திருந்த பல்லவ மன்னர் குறுஞ்சிரிப்புடன் தலைப்பாகையைப் பிரித்து அதன் ஒரு நுனியால் தன் முகத்தை மறைத்தார். பிறகு தன்னைத் தொடரும்படி காபாலிகனுக்கு கண்களால் கட்டளையிட்டுவிட்டு மல்லை கடற்கரையை நோக்கி நடந்தார். அந்த இடத்தை அவர்கள் அடையவும் மூன்று வீரர்கள் தங்கள் புரவிகளை ஒரே சீராக நடத்திக் கொண்டு வரவும் சரியாக இருந்தது. மக்கள் கூட்டத்துடன் கலந்தபடி பல்லவ மன்னர் நின்றார். அவரை ஒட்டி காபாலிகன் பயபக்தியுடன் நின்றான். மல்லைக் கடற்கரையின் மேடான பகுதிக்கு அந்த மூன்று வீரர்களும் வந்ததும் நின்றனர். உடனே நடுவில் இருந்தவன் ஏதோ சைகை செய்ய, பக்கங்களில் இருந்த இரு வீரர்கள் தங்கள் புரவிகளின் பக்கவாட்டுகளில் செருகப்பட்டிருந்த கொம்புகளை எடுத்து பலமாக மூன்று முறை விட்டுவிட்டு ஊதினார்கள். சட்டென அந்தப் பிரதேசத்தில் இரைச்சல் நின்று அமைதி பரவியது. அதுவரை கடலில் நீராடிக் கொண்டிருந்த ஆடவரும் பெண்டிரும் நீராட்டத்தை நிறுத்தி கரையைப் பார்த்தனர். வந்திருக்கும் வீரர்கள் யார் என்பதை உணர்ந்து கொண்ட சில ஆடவர்கள் கடலில் இருந்து கரையேறி தங்கள் ஆடைகளை உடுத்த விரைந்தனர். வீரர்களாக இருந்தவர்கள் தரைமீது கிடத்தப்பட்டிருந்த வாட்களையும், கேடயங்களையும் நாடி அவற்றைக் கையிலெடுத்துக் கொண்டு புரவி வீரர் மூவர் இருக்குமிடம் நோக்கி விரைந்தனர். திடீரென வீரர்களிடமும் மற்றவர்களிடமும் துரிதப்பட்டு விட்ட நடவடிக்கைகளைப் பார்த்த பெண்டிரும் நீராட்டத்தை முடித்துக் கொண்டு பாறையின் மறைவிடங்களுக்குச் சென்று ஆடைகளை அணிந்தவண்ணம் புரவி வீரர் மூவரையும் பார்த்து பிரமிப்படைந்தனர். மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்த பரதவர் கூடத் தங்கள் தங்கள் வலைகளை இழுத்துச் சுருட்டிப் படகுகளில் போட்டு கரைக்கு வர முற்பட்டனர். மல்லைக் கடற்கரையில் இருந்த மாந்தர் அனைவருக்கும் புரவி வீரர் மூவரும் சாளுக்கிய வீரர்கள் என்பது புரிந்தது. கடந்த ஒரு திங்களாகவே சாளுக்கியர்கள் படையெடுப்பு பற்றிய வதந்திகள் எங்கும் உலாவி வந்தன. எனவே, விருப்பமற்ற செய்தியை வெளியிடவே அந்த வீரர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை அவர்களது உள்ளுணர்வு உணர்த்தியது. ஆனால், அந்தச் செய்தி ஊகத்துக்கும் அப்பாற்பட்டதாக இருக்கும் என்பதை மட்டும் அவர்கள் அணுவளவும் அறியாததால், நடுவில் இருந்த புரவி வீரன் அறிவித்த செய்தியைக் கேட்டதும் அனைவரும் திக்பிரமை பிடித்து நின்றார்கள். பக்கத்திலிருந்த வீரர்கள் கொம்புகளை எடுத்து ஊதியதை அடுத்து, கடலாடியவர்கள் அருகில் கூட்டமாக வந்ததும் நடுவில் இருந்த வீரன் தன் கையை உயர்த்திக் கூறினான். ‘‘பல்லவர் குடிமக்களே! இன்று முதல் நீங்கள் சாளுக்கிய வேந்தரின் குடிமக்கள்! சாளுக்கிய மன்னர், ரணரசிகன், ராசமல்லன், விக்கிரமாதித்த மகாப்பிரபு காஞ்சி மாநகருக்குள் பிரவேசித்து விட்டார்! காஞ்சி மண்டலம் இனி சாளுக்கியரின் ஆணைக்கு உட்பட்டது. ஆகவே, மாமல்லபுரத்துவாசிகளான நீங்கள் அனைவரும் உங்கள் இல்லங்களுக்கு அமைதியாகச் செல்லுங்கள். பின்னால் வரும் சாளுக்கியர் படை நகர ஆதிக்கத்தை ஏற்கும் வரை வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம்!’’ இப்படி அவன் சொல்லி முடித்ததும் மீண்டும் கொம்புகள் இருமுறை ஊதப்பட்டன. பிறகு அப்புரவி வீரர்கள் மூவரும் கடற்கரையில் இருந்து கூப்பிடும் தூரத்திலிருந்த தெருக்களை நோக்கி விரைந்தார்கள். அதேசமயத்தில் காஞ்சி - மல்லைப் பாதையில் பெரும் டங்கா ஒன்று விடாமல் சப்தித்தது. அத்துடன் குதிரைப் படை ஒன்றின் சீரான குளம்பொலிகள் கேட்கத் தொடங்கின. சில கணங்கள் அப்படியே சிலையாக நின்ற அந்த மக்கள், மெல்ல மெல்ல எட்ட இருந்த நகரப் பகுதியை நோக்கி நகர ஆரம்பித்தார்கள். காபாலிகனின் கைகளைத் தட்டிவிட்டு பல்லவ மன்னர் நடக்கத் தொடங்கினார். கேட்ட செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீளாத காபாலிகன் எதுவும் பேசாமல் அவரைப் பின்தொடர்ந்தான். கூட்டத்துடன் நடந்த மன்னர், வணிகத் தெருவுக்குள் நுழைந்ததும் சற்றே தன் நடையின் வேகத்தைக் குறைத்தார். அவர் கண்கள் சுற்றிலும் சலித்தன. மெல்ல மெல்ல கூட்டத்திலிருந்து பிரிந்தவர், ஏழாவது கடையை நெருங்கியதும் சட்டென அதற்குள் நுழைந்தார். அவர் மீது கண் வைத்திருந்த காபாலிகனும் அதேபோல் நுழைந்தான். இவர்களுக்காகவே திறந்திருந்த அக்கடை அதன் பிறகு திரைச்சீலையால் மூடப்பட்டது. வேறு யாரும் தங்களைப் பின்தொடரவில்லை என்பதை காபாலிகன் கவனித்தான். மன்னரோ திரும்பியே பார்க்காமல் ஐந்தடி நடந்தார். பிறகு குனிந்து தரையிலிருந்த பலகையைத் தூக்கி அதனுள் இறங்கினார். கடைக்குள் ஒரு சுரங்கம் இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்காத காபாலிகன் தன் உணர்வுகளை மறைத்தபடி அங்கிருந்த படிக்கட்டில் இறங்கினான். மெல்லிய அகல் விளக்கு அவர்களை வரவேற்றபோது சமதளத்தை அடைந்திருந்தார்கள். ‘‘வல்லபா...’’ பல்லவ மன்னர் குரல் கொடுத்தார். ‘‘மன்னா...’’ என்றபடி மறைவிடத்திலிருந்து வெளியே வந்தான் பல்லவ நாட்டின் புரவிப்படைத் தளபதியான வல்லபன். ‘‘வந்திறங்கிய அரபுப் புரவிகளை சிவகாமி பரிசோதித்தாளா..?’’ ‘‘ஆம் மன்னா. தங்கள் கட்டளைப்படி இச்செயலை மக்கள் முன்பே மல்லைக் கடற்கரையில் அரங்கேற்றினோம். எதிர்பார்த்தது போலவே சிவகாமி தேவியின் தேர்வு பிரமாதமாக இருந்தது...’’ ‘‘நல்லது. அப்புரவிகளை அந்தந்த இடங்களுக்கு அனுப்பிவிட்டாய் அல்லவா?’’ ‘‘கட்டளையை நிறைவேற்றிவிட்டோம் மன்னா. சாளுக்கியர்களை எதிர்கொள்ள நாமும் தயாராக இருக்கிறோம் என்பதை இப்புரவித் தேர்வு மக்களுக்கு உணர்த்தியிருக்கும்...’’ வல்லபனின் முகத்தில் நம்பிக்கை சுடர்விட்டது. மன்னர் இயல்பாகத் திரும்பி காபாலிகனை ஏறிட்டார். ‘‘என்ன சந்தேகம்? கேள்...’’ காபாலிகன் உமிழ்நீரை விழுங்கினான். ‘‘அதில்லை மன்னா... பல்லவ நாட்டை சாளுக்கியர்கள் இப்போது ஆக்கிரமித்திருக்கிறார்கள்...’’ ‘‘ஆமாம். அந்த அறிவிப்பைத்தான் நாமும் கேட்டோமே!’’ ‘‘அப்படியிருக்க மக்கள் நம்மை நம்புவார்களா..? எவ்வித போருமின்றி நாட்டை எதிரிக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டோம் என்று நினைக்க மாட்டார்களா?’’ ‘‘மாட்டார்கள் காபாலிகரே!’’ வல்லபன் உணர்ச்சியுடன் பதிலளித்தான். ‘‘மூன்று சாளுக்கிய வீரர்களும் அறிவிப்பு செய்தபோது நானும் அங்கிருந்தேன். முதலில் அதிர்ந்த மக்கள் பிறகு அமைதியாகக் கலைந்தார்கள். அதுவும் கட்டுப்பாட்டுடன். எப்படியும் தங்கள் மன்னர் இதற்கு தக்க பதிலடி கொடுப்பார் என்ற நம்பிக்கை ஏற்படும்போதுதான் இப்படியொரு அமைதியைக் கடைப்பிடிப்பார்கள்...’’ ‘‘ஆனால், காஞ்சி எதிரிகளின் வசமாகி விட்டதே..?’’ காபாலிகனின் முகத்தில் இனம் புரியாத உணர்வுகள் தாண்டவமாடின. ‘‘ஆம்...’’ இம்முறை பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மர் பதில் அளித்தார். ‘‘நாம் எந்த எதிர்ப்பையும் காண்பிக்கவில்லையே...’’ காபாலிகனின் குரலில் ஒலித்தது இயலாமையா அல்லது வேறு உணர்வா என்பது அவனுக்கே தெரியவில்லை. ‘‘மேலோட்டமாகப் பார்த்தால் அப்படித்தான் தெரியும் காபாலிகரே. சாளுக்கியர்கள் படையெடுப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இவ்வளவு விரைவாக காஞ்சியை அவர்கள் நெருங்குவார்கள் என நாம் எதிர்பார்க்கவில்லை. ஒருவகையில் இது பல்லவ நாட்டு ஒற்றர்களின் தோல்விதான். ஆனால், இதையே வெற்றியாக மாற்ற முடியும். அதைத்தான் நாம் செய்யப் போகிறோம்...’’ மாறாத புன்னகையுடன் மன்னர் பதிலளித்தார். ‘‘ஆனால்..?’’ காபாலிகன் மென்று விழுங்கினான். ‘‘இழுக்க வேண்டிய அவசியமேயில்லை காபாலிகரே...’’ சட்டென்று வல்லபன் பதில் சொன்னான். ‘‘ஓரளவு போர் முறைகளை அறிந்தவர் நீங்கள். எனவே இப்போதிருக்கும் நிலை உங்களுக்குப் புரியும். காஞ்சிக்கு அருகில் சாளுக்கியர்களுடன் இப்போது நாம் போர் புரிந்தால் என்னாகும்? கலைச்செல்வங்கள் எல்லாம் அழியும். நம் மன்னர் அதை விரும்பவில்லை. அரசுகள் இன்று இருக்கும், நாளை இருக்காது. ஆனால், கலைச்செல்வங்கள் அப்படியல்ல. அவை காலம் கடந்தும் நிற்கும். அவற்றுக்கு எந்த சேதாரமும் ஏற்படக் கூடாது என மன்னர் நினைக்கிறார். அதனால்தான் அவர் பேச்சுக்கு கட்டுப்பட்டு தற்காலிகமாக பல்லவ மண்டலத்தை எதிரிகளுக்கு ரத்தமின்றி விட்டுக் கொடுத்திருக்கிறோம்...’’ ‘‘அப்படியானால்..?’’ காபாலிகனின் முகத்தில் மகிழ்ச்சி பூத்தது. ‘‘போர் முடியவில்லை..!’’ பல்லவ மன்னரின் கண்கள் ஒளிர்ந்தன. ‘‘போர் நடக்குமா?’’ ‘‘இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது! சிவகாமியின் சபதம் அதை தொடங்கி வைத்திருக்கிறது!’’ (தொடரும்) http://www.kungumam.co.in Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted June 23, 2018 தொடங்கியவர் Share Posted June 23, 2018 ரத்தமகுடம்-பிரமாண்டமான சரித்திரத் தொடர் பிரமாண்டமான சரித்திரத் தொடர்கே.என்.சிவராமன் : 7 காபாலிகனின் முகத்தில் பல்வேறு உணர்வுகள் தாண்டவமாடின. அவன் மனக்கண்ணில் எண்ணற்ற காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக அலைமோதின. புருவங்கள் முடிச்சிட்டுப் பிரிந்தன.இவை அனைத்துமே சில கணங்கள்தான். பின்னர் அவன் முகம் தெளிந்தது. ஒருவழியாக காபாலிகன் உண்மையைப் புரிந்துகொண்டான் என்பதை அறிந்த வல்லபனின் உதட்டில் புன்னகை அரும்பியது. ‘‘நமது ஒற்றர் ஒருவழியாக நிதர்சனத்தை உணர்ந்து விட்டதாகத் தெரிகிறது...’’ என்றான்.ஆமோதிப்பதற்கு அறிகுறியாகத் தலையசைத்த காபாலிகன், பல்லவ மன்னரை ஏறிட்டான். ‘‘மன்னா... சிவகாமி என்றால்...’’ ‘‘அவளேதான்!’’ இடையில் வெட்டி வாக்கியத்தை முடித்தார் பரமேஸ்வர வர்மர். ‘‘எந்தச் சூழ்நிலையிலும் அறிந்துகொண்ட உண்மையைப் பகிரங்கப்படுத்தாதே. உனக்குள் அதை புதைத்துவை. சமயம் வரும்போது அதுவாக வெடித்துச் சிதறும். அப்போது உலகுக்கு சிவகாமி யார் என்று தெரியட்டும்! அதுவரை கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்!’’‘‘உத்தரவு மன்னா...’’ காபாலிகன் தலைவணங்கினான். ‘‘அப்படியானால் இனி ஆகவேண்டியதைப் பார்க்கலாம்!’’ என குரல் கொடுத்தபடியே அங்கு வந்து சேர்ந்தார் புலவர் தண்டி.‘‘ஆச்சார்ய தேவோ பவ...’’ என முன்னால் வந்து அவரை வணங்கினார் பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மர்.இதனைத் தொடர்ந்து வல்லபனும் பின்னர் காபாலிகனும் புலவரை வணங்கினார்கள். ‘‘தீர்க்காயுஷ்மான் பவ...’’ என மூவரையும் ஆசீர்வதித்த புலவர் தண்டி, சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.‘‘கதம்ப இளவரசர் இரவிவர்மனை மல்லை அரண்மனையில் சேர்ப்பித்து விட்டாய் அல்லவா?’’ ‘‘தங்கள் ஆணையை நிறைவேற்றி விட்டேன் ஆச்சார்யரே...’’ வல்லபன் பதில் அளித்தான். ‘‘நல்லது. இனி அவரை சாளுக்கிய போர் அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபர், தன் திட்டத்துக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்வார். அதற்குள் கரிகாலனும் சிவகாமியும் வெகுதூரம் சென்றிருப்பார்கள்...’’ வளர்ந்திருந்த தன் தாடியைத் தடவியபடி புன்னகைத்தார் புலவர்.‘‘திட்டத்தின் அடுத்த படிக்கு இனி செல்லலாமா ஆச்சார்யரே..?’’ பயபக்தியுடன் பல்லவ மன்னர் கேட்டார்.‘‘அதிலென்ன சந்தேகம் மன்னா? உன் கனவு எந்தளவுக்கு விரிந்தது... மானுட சமுதாயத்தைத் தழுவியது... என்பதை விரைவில் பல்லவ நாடு மட்டுமல்ல... சாளுக்கிய நாடும் உணரும். அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளைச் செய்துவிட்டுத்தான் இங்கு வந்திருக்கிறேன்...’’ ‘‘ஆச்சார்யார் சொல்வது...’’‘‘நாம் இருவரும் வகுத்த திட்டத்தைத்தான் மன்னா...’’ சொன்ன புலவர், மூவரையும் அருகில் அழைத்தார். பல்லவ மன்னர் அவருக்கு அருகில் வந்தார். வல்லபன், பரமேஸ்வர வர்மருக்கு ஓரடி தள்ளியும், காபாலிகன் ஈரடி தள்ளியும் நின்றார்கள்.‘‘ஒற்றர்களை எட்டு திசைக்கும் அனுப்பியிருக்கிறேன். மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் அவர்கள் இரண்டறக் கலந்து, ‘பல்லவர்கள் படை திரட்டி வருகிறார்கள்...’; ‘விரைவில் சாளுக்கியர்களுடன் போர் நடக்கப் போகிறது...’; ‘காஞ்சி மீண்டும் கைப்பற்றப்படும்...’ என பேச ஆரம்பிப்பார்கள். ‘மழையில்லாமல் ஏற்கனவே தவித்து வரும் நாம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் பல்லவ மன்னர் காஞ்சியை விட்டு வெளியேறினார்... இதனால் காஞ்சிச் செல்வங்கள் மட்டுமல்ல... நமது வாழ்வாதாரங்களும் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன...’ என எடுத்துச் சொல்வார்கள்...’’ விவரித்துக்கொண்டே வந்த புலவர், பேசுவதை நிறுத்திவிட்டு வல்லபனையும் காபாலிகனையும் மாறி மாறிப் பார்த்தார். தான், சொல்வதைத் தவிர வேறு சிந்தனைகளுக்குள் அவர்கள் செல்லாதபடி மானசீகமாகக் கட்டிப் போட்டுவிட்டுத் தொடர்ந்தார்.‘‘இவற்றில் எதுவுமே பொய்யில்லை; மிகையில்லை. உண்மையைத்தான் மக்களுக்கு எடுத்துச் சொல்லி ஒற்றர்கள் புரிய வைக்கப் போகிறார்கள். ஏனெனில், எந்த நாடுமே எந்த மன்னரின் ஆட்சிக்குக் கீழும் தொடர்ச்சியாக இருந்ததில்லை. ஆதி நாள் முதலே அடிக்கடி கைமாறிக் கொண்டேதான் இருக்கிறது; இருக்கும். குறிப்பாக காஞ்சி மாநகரம்...’’ நிறுத்திய புலவரின் கண்களில் கடந்த காலம் விரிந்தது. அதனுள் பயணித்தபடியே தொடர்ந்தார்.‘‘சோழர்களின் ஆளுகைக்குக் கீழ் காஞ்சி தொண்டை மண்டலமாக இருந்தது. அப்போது பல்லவர்கள் வடக்குப் பக்கம்தான் ஆட்சி செய்து வந்தார்கள். பின்னர் காஞ்சியைக் கைப்பற்றி தங்கள் தலைநகரமாக அறிவித்தார்கள். இடையில் சிலகாலம் காஞ்சி மற்றவர்கள் கையில் இருந்தது. பின்னர் மீண்டும் பல்லவர்கள் வசம் வந்தது. அந்த வகையில் இப்போது சாளுக்கியர்கள் பிடியில் காஞ்சி இருக்கிறது. இந்த வரலாறு மக்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே, ஆட்சியாளர்கள் மாறுவது குறித்த அச்சமோ குழப்பமோ அவர்களுக்கு இருக்காது. ஆனால்...’’நிறுத்திய புலவர் தன் முன்னால் நின்ற மூவரையும் ஏறிட்டார். ‘‘இழந்த நாட்டை ஒரு மன்னன் மீண்டும் அடைய வேண்டுமென்றால் அதற்கு படை பலத்தை விட இன்னொரு பலம் அவசியம். அதுதான் மக்களின் நம்பிக்கை! இது மட்டும்தான் எந்தவொரு மன்னனுக்கும் வெற்றியைத் தேடித் தரும். நம் மன்னர் மீண்டும் காஞ்சியின் அரியாசனத்தில் அமரப் போவது அந்த பலத்தால்தான்!’’சொல்லி முடித்த புலவர், நிகழ்காலத்துக்கு வந்தார். ‘‘மேலோட்டமாகப் பார்க்கும்போது ‘சாளுக்கியர்களுக்கு பயந்து பல்லவ மன்னர் கோழையைப் போல் போர் புரியாமல் காஞ்சியை விட்டு ஓடி விட்டார்...’ என்றுதான் நினைக்கத் தோன்றும்...’’ ‘‘ஸ்ரீராமபுண்ய வல்லபரும் இந்த பிரசாரத்தைத்தான் மேற்கொள்ளப் போகிறார் ஆச்சார்யரே...’’ நிதானமாகச் சொன்னார் பல்லவ மன்னர்.‘‘இதை முன்பே நாம் ஊகித்ததனால்தானே மன்னா நம் தரப்பு நியாயங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க ஏற்பாடு செய்திருக்கிறோம்...’’ கண்சிமிட்டிய புலவர், தொடர்ந்தார்.‘‘இதனுடன் கூடவே பல்லவ இளவரசர் பெரும் ஆயுதங்களுடன் வந்துகொண்டிருக்கும் தகவலையும், வந்திறங்கிய அரபிப் புரவிகளின் அருமை பெருமைகளையும் கசியவிடப் போகிறோம். அதுமட்டுமல்ல...’’நிறுத்திய புலவர் கணத்துக்கும் குறைவான நேரத்தில் பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மரின் கண்களைச் சந்தித்தார். நான்கு விழிகளும் எதையோ உரையாடின. வல்லபனும் காபாலிகனும் இதை கவனிக்கவே செய்தார்கள். பேச்சின் உட்பொருள் அவர்களுக்குப் புரிந்தது. என்றாலும் புலவரே அதை வெளிப்படுத்தட்டும் என அமைதி காத்தார்கள்.அதற்கேற்ப புலவரே அதை வெளிப்படுத்தினார். ‘‘சிவகாமி குறித்த ரகசியத்தை வதந்திகளாகப் பரவவிட ஏற்பாடு செய்திருக்கிறோம்... ‘சாளுக்கிய மன்னரின் குடும்பத்தைச் சேர்ந்தவள்தான் அவள்...’; ‘பல்லவர்களை நேர் வழியில் வீழ்த்த முடியாது என்பதால் சாளுக்கிய போர் அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபர் சிவகாமியை பல்லவ மன்னரின் குடும்பத்துக்குள் ஊடுருவ விட்டிருக்கிறார்...’; ‘அவள் வழியாக ஆயுத ரகசியங்களை அறிந்து சாளுக்கியர்கள் வெற்றி பெற முயற்சிக்கிறார்கள்...’ என்றெல்லாம் விரைவில் மக்கள் பேசப் போகிறார்கள்...’’ ‘‘சிவகாமி விஷயம் நமக்கு சாதகமாக அமையாது என்று தோன்று கிறது புலவரே...’’ வல்லபன் இடைமறித்தான்.‘‘எதனால் அப்படிச் சொல்கிறாய்?’’ புருவத்தை உயர்த்தியபடி பல்லவ மன்னர் கேட்டார்.‘‘கதம்ப இளவரசருக்கு அவளைப் பற்றிய உண்மை தெரிந்திருக்கிறது மன்னா...’’‘‘அதனால் என்ன? ஸ்ரீராமபுண்ய வல்லபருக்கும்தான் அது தெரியும்...’’ சட்டென்று புலவர் பதில் அளித்தார்.வல்லபனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அந்தக் குழப்பம் அடுத்து அவன் பேசியபோது வெளிப்பட்டது. ‘‘எனில் நாம் கிளப்பிய வதந்தியை ஸ்ரீராமபுண்ய வல்லபர் உடைக்க மாட்டாரா..?’’‘‘அவரால் மட்டுமல்ல... ஒருவராலும் முடியாது வல்லபா... வதந்திகளுக்கு அந்தளவு சக்தி இருக்கிறது. அதன் ரிஷிமூலத்தைக் கண்டவர் மட்டுமல்ல... அதை அழிப்பதற்கான வழியை அறிந்தவரும் இந்தப் பிரபஞ்சத்திலேயே எவரும் இலர். அதனால்தான் ‘அர்த்த சாஸ்திரம்’ எழுதிய கவுடில்யர், வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்...’’ அழுத்தம்திருத்தமாகச் சொல்லி முடித்த புலவர், அதன்பிறகு நேரத்தைக் கடத்தவில்லை. ‘‘காபாலிகனே... காற்றைவிட விரைவாக சோழ நாட்டுக்குச் சென்று சோழ மன்னரிடம் இந்த ஓலையை நீ கொடுக்க வேண்டும்...’’‘‘உத்தரவு ஆச்சார்யரே...’’ பயபக்தியுடன் அந்த ஓலையை வாங்கி தன் இடுப்பில் மறைத்து வைத்த காபாலிகன், புலவரையும் மன்னரையும் வணங்கிவிட்டு வந்த வழியே சுரங்கத்தை விட்டு வெளியேறினான்.அவன் செல்லும்வரை காத்திருந்த புலவர், பல்லவ மன்னரை நோக்கி கண்களால் உரையாடிவிட்டு வல்லபன் பக்கம் திரும்பினார்.கட்டளையை ஏற்க சித்தமாக அவர் அருகில் பல்லவ நாட்டின் புரவிப்படைத் தளபதி வந்தான்.‘‘கரிகாலன் இப்போது சிவகாமியுடன் நடு நாட்டில் இருக்கிறான். அவன் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து ‘சிவகாமி ஆபத்தானவள்... பல்லவ இளவல் இருக்கும் இடத்தை அறிவதற்காக நல்லவள் போல் வேடமிட்டிருக்கிறாள்... அவளிடம் எச்சரிக்கையுடன் இருக்கும்படி’ நான் சொன்னதாகத் தெரிவித்துவிடு! முடிந்தால் உன் கற்பனை வளத்தைக் கலந்து சிவகாமி குறித்து மேலும் சில புகார்களை என் பெயரில் தெரிவி!’’ என்றார் புலவர். வல்லபனுக்குத் தலை சுற்றியது. வதந்திகளுக்கு முக்கியத்துவம் அளித்த கவுடில்யர் மேல் கோபம் வந்தது. எது நிஜம்... எது பொய்... என்று பிரித்துப் பார்க்க முடியாத மாயச்சூழலில் தன்னையும் புலவர் சிக்க வைத்திருப்பதை உணர்ந்தான். என்றாலும் உருட்டப்படும் பகடையின் இறுதி இலக்கு பல்லவ நாட்டை மீட்பது என்பதால் தன்னைச்சமாளித்துக் கொண்டு மன்னரையும் புலவரையும் வணங்கிவிட்டு விடைபெற்றான்.‘‘பாவம்... எனது புரவிப்படைத் தளபதி அதிர்ச்சியிலிருந்து மீள நாளாகும்...’’ அவன் சென்ற திக்கைப் பார்த்தபடியே பல்லவ மன்னர் முணுமுணுத்தார்.‘‘எல்லாம் பல்லவ நாட்டின் நன்மைக்குத்தான்...’’ கம்பீரமாக அறிவித்த புலவர், ‘‘விடைபெறுகிறேன் மன்னா. புலவர்களைக் கைது செய்யும் துணிச்சல் எந்த மன்னனுக்கும் இல்லை. சாளுக்கியன் விக்கிரமாதித்தனும் அதற்கு விதிவிலக்கல்ல. காஞ்சியில் எனது மாளிகையிலும், கடிகையிலும் இருப்பேன். எப்போது வேண்டுமானாலும் நம் வழக்கப்படி என்னைத் தொடர்பு கொள்ளலாம்...’’ ‘‘நல்லது ஆச்சார்யரே... திட்டப்படி காய்களை நகர்த்தப் புறப்படுகிறேன்...’’ என்ற பரமேஸ்வர வர்மர் குனிந்து புலவரின் காலைத் தொட்டு வணங்கினார். ‘‘ஜெயம் உண்டாகட்டும்!’’ பல்லவ மன்னரின் தலையைத் தொட்டுப் புலவர் ஆசீர்வதித்தார். ‘‘ஆச்சார்யரே... ஒன்றே ஒன்று கேட்கலாமா?’’‘‘கேள்மன்னா!’’‘‘உண்மையிலேயே கரிகாலனும் சிவகாமியும் இப்போது நடு நாட்டில் இருக்கிறார்களா?’’‘‘இல்லை மன்னா! வல்லபன் அவர்களைச் சந்தித்து விடக் கூடாது என்பதற்காக அப்படிச் சொன்னேன்!’’‘‘அப்படியானால் அவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள்..?’’ பரமேஸ்வர வர்மர் கேட்க நினைத்தார். ஆனால், மவுனமாக விடைபெற்றுச் சென்றார். ‘‘பல்லவ நாட்டை ஆள நீயே தகுதி வாய்ந்தவன் பரமேஸ்வரா... உனது இப்போதைய மவுனம் அதை நிரூபிக்கிறது. கரிகாலனும், சிவகாமியும் உன் கனவை நிறைவேற்றுவார்கள்..! ’’மனதுக்குள் சொல்லிக் கொண்ட புலவர் அந்த இடத்தை விட்டு கடைசியாக அகன்றார். எப்போதும்போல் அப்போதும் அவர் உள்ளம் கரிகாலனைத்தான் நினைத்துக் கொண்டிருந்தது. ‘ஆமாம்... இப்போது அவன் என்ன செய்து கொண்டிருப்பான்..? சிவகாமியின் சபதத்தைக் கண்டறிந்திருப்பானா..?’புலவரின் கணிப்புப் படியே சிவகாமியின் ரகசியத்தைத்தான் அந்தக் காட்டின் மறைவிடத்தில் கரிகாலன் அறிந்து கொண்டிருந்தான். ஆனால், அவள் செய்த சபதத்தை அல்ல; மாறாக, அவளது வழுவழுப்பை!இருவரும் மெய்மறந்திருந்த அந்த நிலையை மறைவாக இருந்தபடி ஓர் உருவம் பார்த்துக் கொண்டிருந்தது! (தொடரும்) ஓவியம்: ஸ்யாம் http://www.kungumam.co.in/ Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted June 30, 2018 தொடங்கியவர் Share Posted June 30, 2018 ரத்தமகுடம்-பிரமாண்டமான சரித்திரத் தொடர் கே.என்.சிவராமன்-8 பிரமை தட்டும் காட்சியைக் கண்ட கரிகாலனின் உள்ள உணர்ச்சிகள் ஒரு நிலையில் இல்லாமல் பெரிதும் கலங்கிவிட்டதால் அடுத்து என்ன செய்வது என்பதை அறியாமல் மந்திரத்தால் கட்டுண்டவன் போல் சிலையென நின்றான். வனாந்திரத்தின் மறைவிடத்தில் பெரும் மரமொன்றில் சாய்ந்தும் சாயாமல் கிடந்த சிவகாமியின் அழகிய உடலின் ஒரு பாதியை இலைகளை ஊடுருவிய கதிரவனின் கிரணங்கள் வந்து வந்து தழுவியதால் வெளிப்பட்ட அங்கங்களின் ஜொலிப்பு அவன் சித்தத்தை சிதறடித்தது. அதுவரை அவன் மனதை அரித்து வந்த சிவகாமி யாராக இருப்பாள் என்ற வினாவும், கதம்ப இளவரசர் இரவிவர்மன் அவளைக் குறித்து எழுப்பிய சர்ச்சைகள் எந்தளவுக்கு உண்மையாக இருக்கும் என்ற தேடுதலும், யார் என்ன சொன்னாலும் சிவகாமியை நம்பு எனத் திரும்பத் திரும்ப ஆட்கள் வழியே எதற்காக புலவர் தண்டி சொல்லி அனுப்பியிருக்கிறார் என்ற கேள்வியும் இருந்த இடம் தெரியாமல் அகன்றது. எதற்கும் அசையாத கரிகாலனின் இரும்பு நெஞ்சம் தன் முன் வெளிப்பட்ட மோகனாஸ்திரத்தின் வசியப் பிணைப்பில் இறுகியது. அந்த சமயத்தில் புற்களின் வழியே தன் காலில் ஏறிய சிற்றெறும்புகள் தங்கள் இயல்புப்படி கடித்ததைக்கூட அவன் பொருட்படுத்தவில்லை. பொருட்படுத்தும் நிலையிலும் அவனில்லை. அதுவரையில் அவன் செவியில் லேசாக விழுந்து கொண்டிருந்த பறவைகளின் ஒலியும், பூச்சிகளின் ரீங்காரமும்கூட அடியோடு அகன்றது. உலகமே ஒலியிலிருந்து விடுபட்ட சூன்யம் போலவும், அருகில் இருக்கும் சிவகாமியின் அழகிய உடல் பிரதிபலித்த ஒளி மட்டுமே உலகத்தில் நிலைத்த உயிர் நிலை போலவும் தோன்றியதால், அப்புறமோ இப்புறமோ... எப்புறமும் நகரக் கூடிய உணர்வை இழந்து நின்றான். மெய்மறந்து கிடந்தது மரத்தில் சாய்ந்திருந்த சிவகாமியா அல்லது அவளைப் பார்த்து பிரமை தட்டி நின்றுவிட்ட கரிகாலனா என்பதை ஊகிக்க முடியாத அந்த வனாந்திரத்தின் பூச்சிகளில் சில அந்தப் பாவையையும் அவனையும் சுற்றிச் சுற்றி வந்து உண்மையை அறிய முற்பட்டன. தோல்வியைத் தழுவி அகன்றன. இதனையடுத்து, மந்திரத்தை மந்திரத்தால்தான் எடுக்க முடியும்... அதை எடுக்கும் நேரமும் வந்துவிட்டது என்பதை நிரூபிக்க எண்ணிய வானவெளி, நாண்மீன் எனப்பட்ட அசுவினி நட்சத்திரக் கூட்டத்தையும், கோண்மீன் எனப்பட்ட செவ்வாய், புதன் முதலிய கிரகங்களையும் மெல்ல மெல்ல அந்திசாயும் அந்த நேரத்திலும் ஒன்று திரட்டி கரிகாலனின் மனோநிலையை அந்த அழகியின் மாயா சக்தியிலிருந்து விடுவிக்க ஏற்பாடு செய்துகொண்டிருந்தது. விண்ணின் விருப்பப்படி விதி வகுக்கப்படுகிறது; நட்சத்திரங்களின் அசைவுக்குத் தகுந்தபடி மனித வாழ்க்கை இயங்குகிறது என்று கூறும் ஜோதிட சாஸ்திரத்தை மெய்ப்பிக்கவே அந்த வனத்தில் ஒதுங்கியவள் போல் அதுவரை கிடந்த அந்தப் பேரழகியும், அசுவினியும் செவ்வாயும் புதனும் ஒளிவிடத் தொடங்கிய அந்த மாலை நேரத்தில் கரிகாலனின் மனதைக் கட்டுப்படுத்தியிருந்த மந்திரக் கணையை மெல்ல அவிழ்க்கவும், அவன் உணர்ச்சிகளை மெல்ல மெல்ல அவனுக்குத் திரும்ப அளிக்கவும் தன் பூவுடலை லேசாக ஒருமுறை அசைத்தாள். அந்த ஓர் அசைவு கரிகாலனின் இதயக் கட்டை அவிழ்த்து அவனை இந்த உலகுக்குக் கொண்டு வந்துவிட்டதால், அவள் அங்கங்களை வெறித்துப் பார்த்து நேரத்தைக் கடத்திய தன் மதியீனத்தை நினைத்து நொந்துகொண்டான். என்னதான் கட்டுப்பாடாக இருந்தாலும் ஆண் - பெண் நெருக்கம் என்பது உணர்ச்சியை ஊசி முனையில் வைப்பது என்ற உண்மை அந்த நேரத்தில் அவனுக்குப் புரிந்தது. தன்னை நிதானப்படுத்திக்கொள்ளும் விதமாக தன் தொண்டையைச் செருமிக் கொண்டான். பல்லவ இளவலைக் காணவேண்டியும், அவரிடம் தகவல் சொல்வதற்காகவும் தன்னுடன் பயணிக்கும் சிவகாமியை அப்படி, தான் வெறிப்பது சரியல்ல என்பது காலம் கடந்தே அவனுக்கு உறைத்தது. அதுவும் பல்லவ மன்னரின் வளர்ப்பு மகள் என வல்லபனால் அறிமுகப்படுத்தப்பட்டவள் அல்லவா இவள்... எனில், இளவரசியாக அல்லவா இவளை மரியாதையுடன் நடத்த வேண்டும்... அப்படியிருக்க... மேற்கொண்டு கரிகாலனால் யோசிக்க முடியவில்லை. சில கணங்களுக்கு முன் கதிரவனின் வெளிச்சத்தில் பளபளத்த அவள் அங்கங்கள் மீண்டும் அவன் மனக்கண்ணில் எழுந்தன. மல்லைக் கடற்கரையில் உற்றுக் கவனிக்காத, கவனிக்கத் தவறவிட்ட பாகங்கள் எல்லாம் தெள்ளத் தெளிவாக இப்போது தெரிந்தன. ‘ஆர்க்கும் நூபுரங்கள் பேரி, வேற்கண், வெம்புருவம் போர்வில்’ என்று பெண்களின் அங்கங்களிலும் அணிகலன்களிலும் போர்க்கலங்களைப் பிற்காலத்தில்தான் கம்பன் கண்டான். இதன் காரணமாகவும் கவிச்சக்கரவர்த்தி எனக் கொண்டாடப்பட்டான். அந்தக் கற்பனைக்கு எல்லாம் முன்கூட்டியே இலக்கணம் வகுக்க முளைத்த காவியப் பாவை போல் அன்றிருந்தாள் சிவகாமி. தமிழகத்து மரபுப்படி மஞ்சளைத் தேய்த்துத் தேய்த்துத் தினம் நீராடியதால் செண்பக மலரின் இதழ்களின் மஞ்சள் நிறத்தையும் வழுவழுப்பையும் பெற்று, பொன் அவிழ்ந்து கொட்டுவது போன்ற மேனியைப் படைத்த சிவகாமியின் ஓவிய உடலை சிவப்பு நிற மெல்லிய ஆடை ஆசையுடன் தழுவியிருந்தது. அப்படித் தழுவி நின்ற ஆடை, உடலின் வழுவழுப்புக் காரணமாக நழுவி விடாமல் இருக்க இடுப்பில் இறுக முடிச்சிட்டிருந்தாள். குவிந்து நின்ற கால்களுக்கு இடையில் அந்த ஆடை உள்ளடங்கி, கால் தொகுப்புகளின் பரிமாணத்தைப் பற்றி மட்டுமின்றி அவள் மகோன்னத அழகைப் பற்றிய இதர ஊகங்களுக்கும் வரம்பற்ற இடத்தைக் கொடுத்தன. இடை ஆடை நழுவாமல் இருக்கத்தான் முடிச்சிட்டிருந்தாள். இடைக்கு மேலே கொங்கை வரை தந்தங்கள் மட்டுமே வழுவழுப்புடன் பளபளத்தன. அப்படியிருந்தும் சிவகாமி பிறந்த பூமியும், வளர்ந்த குடியும் கற்றுக் கொடுத்த பண்பின் காரணமாக கச்சையை நன்றாக இழுத்துக் கட்டியிருந்தாள். சங்குக் கழுத்து வெற்றிடமாகவே காட்சியளித்தது. கச்சைக்கு மேலே தெரிந்த பிறை வடிவமான விளிம்புகள், கண்களையும் கருத்தையும் அள்ளிச் சென்றன. அந்த வனப்பு சிவகாமியின் கண்களிலும் வெட்கமாகப் படர ஆரம்பித்திருந்தது. சந்திர வதனத்தில் வளைந்து கிடந்த கறுப்பு விற்புருவங்களுக்குக் கீழே மீன் உருவத்தில் ஓடிய இமைகளின் அமைப்புக்குள்ளே இந்திரஜாலம் செய்துகொண்டிருந்தது இரு கருவிழிகளா அல்லது காமன் கணைகளா? விடை சொல்ல முடியாத பெரும் புதிர்! அந்தக் காமன் கண்கள் இரண்டையும் தடுத்து நிறுத்திய நாசியின் ஒருபுறத்தில் அந்தத் தமிழ்ப் பெண் கதிரவனைப் போன்று வேலைப்பாடுள்ள பொட்டு அணிந்திருந்தாள். அந்தப் பொட்டில் சுற்றிக் கிடந்த வைரங்களும் நடு மத்தியில் பதிக்கப்பட்டிருந்த மரகதக் கல்லும் பச்சையும் வெள்ளையும் கலந்த புது நிறத்தை வழவழப்பான அவள் கன்னத்தில் பாய்ச்சி அங்கு நகையில்லாத குறையைப் போக்கிக் கொண்டிருந்தன. எத்தனை வர்ண ஜாலங்களையும் என்னால் விழுங்க முடியும் என்று அறைகூவுவது போல் நன்றாகக் கறுத்து அடர்த்தியாக நுதலுக்கு மேலே தலையில் எழுந்த அவள் கறுங்குழலின் மயிரிழைகளில் இரண்டு, கன்னத்தின் பக்கமாக வந்து, முக்கனியின் செயற்கைக் கற்கள் என்ன அப்படி பிரமாதமான வர்ண ஜாலத்தைக் காட்டி விடுகின்றன என எட்டிப் பார்த்தன. எழும்பி மோதும் அலைகளாலும், ஆழ இறங்கிச் செல்லும் சுழல்களாலும் இணையற்ற வனப்பைப் பெறும் நீலக் கடலைப் போலவே வளைந்தும் எழுந்தும் தாழ்ந்தும் உள்ளடங்கியும் கிடந்த உடலமைப்பினால் சொல்லவொண்ணா எழில் ஜாலங்களைப் பெற்றிருந்த சிவகாமி, அழகில் மட்டுமன்று, ஒரு கையை இடையில் கொடுத்து மற்றொரு கையால் மரத்தைப் பிடித்து நின்ற தோரணையிலும் பெரும் கம்பீரத்தைப் பெற்று மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் ராணியைப் போல் தோன்றினாள். இந்தத் தோற்றம் கரிகாலனின் மனக் கண்ணை அகற்றி நடப்புக்குக் கொண்டு வரவே... மீண்டும் தொண்டையைக் கனைத்தான். இதைக் கேட்டு சிவகாமி மெல்லச் சிரித்தாள். அந்தச் சிரிப்பு கரிகாலனுக்கு சங்கடத்துக்கு பதில் கோபத்தையே வரவழைத்தது. தனது உணர்ச்சிகளை அவள் புரிந்துகொண்டாள் என்பதை உணர அவனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. எனவே ‘‘எதற்காக சிரிக்கிறாய்?’’ என அவள் மீது பாய்ந்தான். ‘‘இடைவெளி விட்டு இருமுறை கனைக்கிறீர்கள்... சிரிக்காமல் வேறென்ன செய்யச் சொல்கிறீர்கள்?’’ கேட்ட சிவகாமியால் அதற்கு மேல் நிற்க முடியவில்லை. அவன் மனக்கண்ணில் என்ன காட்சிகள் வெளிப்பட்டிருக்கும் என்பதை அவளால் ஊகிக்க முடிந்தது. மல்லைக் கடலில் தன் கண்களை நேருக்கு நேர் சந்தித்துப் பேசிய கரிகாலன் அல்ல தன்னருகில் இப்போது நிற்கும் கரிகாலன் என்பதை கணப்பொழுதில் உணர்ந்தாள். அதனாலேயே எப்போதும் சுடர் விடும் கம்பீரம் மறைந்து நாணம் அவள் மேனியெங்கும் பரவ, படரத் தொடங்கியது. இதற்கு மேலும் நிற்க முடியாது... கால்கள் நடுங்கத் தொடங்கி விட்டன... என்பதை அறிந்தவள் மெல்லச் சரிந்தாள். புல்தரையில் அமரவேண்டும் என்றுதான் நினைத்தாள். ஆனால், மரத்தோடு சரிந்ததில் இடுப்பு தடுமாறி அவளை விழவைத்தது. எழுந்திருக்கத் தோன்றாமல் அப்படியே தரையில் படுத்தாள். இருவரது நிலையும் இருவருக்கும் புரிந்தது. அது தனிப்பட்ட கரிகாலன் / சிவகாமியின் உணர்ச்சிகள் அல்ல. இயற்கை வகுத்த விதிப்படி நர்த்தனமாடும் ஆண் / பெண் உணர்ச்சிகள். புலன்களை அடக்கிய முனிவர்களே தடுமாறும் கட்டத்தில் அப்போது இருவரும் இருந்தார்கள். கரை உடையக் கூடாது என இருவரது புத்தியும் எச்சரிக்கை செய்யவே முற்பட்டது. அதைக் கேட்கும் நிலையில் இருவரது உணர்வுகளும் இல்லை. ஒருவரையொருவர் நம்பாமல் சந்தேகப்படுகிறோம்... ஒருவரைக் குறித்த குழப்பம் மற்றவருக்கு இருக்கிறது... நம்பிக்கையை விட பரஸ்பரம் அவநம்பிக்கையே மேலோங்கி நிற்கிறது... என்பதையெல்லாம் இருவரும் அறிந்திருந்தாலும்... அந்தக் கணத்தின் அடிமைகளாகவே இருவரும் காட்சி தந்தார்கள். ஊசி முனையில் இன்னும் எத்தனை கணங்கள் தவம் செய்ய முடியும்? ஏதேனும் ஒரு பக்கம் சாய்ந்துதானே ஆகவேண்டும்..? திரும்பிப் படுக்காமல், எழுந்திருக்கவும் செய்யாமல், குப்புறவும் கிடக்காமல், மல்லாந்தபடி தன் வலது காலை உயர்த்திப் படுத்திருந்த சிவகாமியின் அருகில் கரிகாலன் அமர்ந்தான். அவனது இடது கையை அவளது வழுவழுப்பான இடுப்பு வரவேற்றது. பதிந்த உள்ளங்கையின் ரேகைகள் அவளது இதயத்தை ஊடுருவி முத்திரை பதிக்க முற்பட்டன. புறத்தை மறந்து இருவரும் அகத்துக்குள் மூழ்கினார்கள். முத்தெடுக்கும் தருணத்தில் அந்த ஒலி எழும்பியது. நூறு வராகங்கள் ஒருசேர சத்தம் எழுப்பினால் என்ன ஒலி கேட்குமோ அந்த ஒலி அந்த வனப் பகுதியின் அமைதியைக் கிழித்தது. சட்டென்று சுயநினைவுக்கு வந்த இருவரும் எழுந்து நின்றார்கள். தரையில் வைத்திருந்த தன் வாளை கரிகாலன் எடுத்துக் கொண்டான். இருவரின் கண்களும் தங்களைச் சுற்றிலும் சலித்து அலசின. செவிகள் கூர்மையடைந்து, சருகுகள் மிதிபடும் ஒலியைத் துல்லியமாக உள்வாங்கின. ஒருவர் பின்னால் மற்றவர் நின்றபடி தங்களைச் சுற்றிலும் அடுத்து நடக்கவிருக்கும் நிகழ்வை எதிர்கொள்ளத் தயாரானார்கள். அதற்கேற்ப ஏழெட்டு வீரர்கள் உருவிய வாட்களுடன் வட்டமாக அவர்களைச் சூழ்ந்துகொண்டார்கள். (தொடரும்) http://www.kungumam.co.in Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted July 7, 2018 தொடங்கியவர் Share Posted July 7, 2018 ரத்தமகுடம்-பிரமாண்டமான சரித்திரத் தொடர் கே.என்.சிவராமன்-9 ‘‘மொத்தம் ஏழு பேர்...’’ தன்னைச் சுற்றிலும் பார்வையால் அலசியபடியே திரும்பிப் பார்க்காமல் சிவகாமி சொன்னாள். ‘‘இல்லை எட்டு. தென்மேற்கு மூலையில் சருகுகள் மிதிபடும் ஓசை கேட்கிறது...’’ கரிகாலன் பதிலளித்தான். ‘‘ஆம். அந்தப் பக்கமாக பறவைகள் படபடத்து கிளைகளில் இருந்து பறக்கின்றன...’’ சொன்னபடியே நின்றவாக்கில் மெதுவாக வட்டமடிக்கத் தொடங்கினாள். சிவகாமியின் முதுகுடன் தன் முதுகை ஒட்டியும் ஒட்டாமல் வைத்திருந்த கரிகாலன், அவளுக்கு சமமாக தானும் வட்டமாக நகரத் தொடங்கினான். நான்கு விழிகளும் எட்டுத் திசைகளிலும் இருந்த மொத்தக் கோணத்தையும் சலித்தன. ‘‘சூழ்பவர்கள் சாளுக்கியர்களல்ல!’’ சிவகாமியின் குரலில் நிதானம் வழிந்தது. ‘‘முக அமைப்பும் உடல் வாகும் தமிழர்களையும் நினைவுபடுத்தவில்லை...’’ கரிகாலனின் புருவங்கள் முடிச்சிட்டன. ‘‘நண்பர்களுக்கான இலக்கணமும் தட்டுப்படவில்லை...’’ மந்தகாசத்துடன் சிவகாமி பதிலளித்தாள். ‘‘கால்களைக் குறுக்குவாட்டில் வைத்தபடி நம்மைச் சூழ்கிறார்கள்...’’ கரிகாலன் குரலைத் தாழ்த்தினான். ‘‘கவனித்தேன். நேர்கோட்டில் அவர்கள் அடியெடுத்து வைக்காதது நம் அதிர்ஷ்டம்...’’ உதட்டைப் பிரிக்காமல் சிவகாமி புன்னகைத்தாள். ‘‘நம் இருவரையும் எதிர்நோக்கியபடி நால்வர் வருகிறார்கள்...’’ ‘‘மற்ற நால்வர் பக்கவாட்டில்...’’ ‘‘பதினாறு விழிகளும் நம் உடலைத்தான் குறி வைக்கின்றன...’’ எதையோ உணர்த்துவதுபோல் கரிகாலன் இதை அழுத்திச் சொன்னான். ‘‘அசுவங்கள் போலவே!’’ உணர்ந்து கொண்டதற்கு அறிகுறியாக சிவகாமி பதிலளித்தாள். ‘‘அசுவ சாஸ்திரத்தை நீ கசடறக் கற்றவள்...’’ ‘‘உங்களைப் போலவே!’’ ‘‘பக்கவாட்டை இப்போதைக்கு மறந்துவிடுவோம்! அவர்கள் உடனடியாக நம்மைத் தாக்க மாட்டார்கள்...’’ சொன்ன கரிகாலன் நின்றான். தன் கரங்களால் தனக்குப் பின்னால் முதுகைக் காண்பித்தபடி நின்றிருந்த அவளையும் நிறுத்தினான். நிறுத்திய கைகளின் மொழி சிவகாமிக்குப் புரிந்தது. கால்களை அழுத்தமாக ஊன்றினாள். ‘‘நேருக்கு நேர் சந்திக்கும் புரவிகள் ஒரு புள்ளியில் விலகும்...’’ ‘‘சட்டென்று பாய்ந்து மற்றொன்றை வீழ்த்த முற்படும்...’’ வாக்கியத்தை முடித்தாள் சிவகாமி. கரிகாலனின் நயனங்கள் சந்துஷ்டியை வெளிப்படுத்தின. சாதுர்யமான பெண். எண்ணெய்யில் ஊறிய திரியாக கப்பென்று தீயைப் பற்றிக் கொள்கிறாள். கொழுந்து விட்டு எரியத் தயாராக இருக்கிறாள். இவளைப் போல் இன்னும் இருவர் படைகளை நடத்தக் கிடைத்தால் போதும். பல்லவர்களை ஒருவராலும் வீழ்த்த முடியாது. ‘‘என்னிடம் வாள் இருக்கிறது...’’ ‘‘எனக்கான வாள் அவர்களிடம் இருக்கிறது!’’ சிவகாமியின் உதடுகள் பதிலளித்தன. வேண்டுமா? நீளம் தேவையா..?’’ ‘‘நீளம் எனில் கூடுதலாகப் பாய முடியும்!’’ ‘‘என்னை நோக்கி வருபவர்களிடம் உனக்குத் தேவையானது இருக்கிறது!’’ முணுமுணுத்த கரிகாலன், அவளைப் பிடித்திருந்த தன் கரத்தை எடுத்தான். வலது காலை முன்னோக்கி நகர்த்தி கால் கட்டை விரலால் தரையில் அரைவட்டம் இட்டான். தன் வாளை இரு கைகளாலும் கெட்டியாகப் பிடித்தான். எதற்காக இப்படிச் செய்கிறான் என்பது அவனை நோக்கி வந்த இருவருக்கும் புரியவில்லை. முன்னேறுவதை சற்றே தாமதப்படுத்தினார்கள். தரையில் அவர்கள் பாதங்கள் நிலைகொள்ளாமல் அலைபாய்ந்தன. இதற்காகவே காத்திருந்தது போல் கரிகாலன் தன் வாளை முன்னோக்கிச் சுழற்றி காற்றைக் கிழித்தான். அறுபட்ட காற்று ஒன்று சேர்வதற்குள் தன் இடக்கையால் சிவகாமியின் இடுப்பை அழுத்திப் பிடித்து அவளை வட்டமாகத் தன் பக்கம் இழுத்தபடியே தூக்கினான். காலை அழுத்தமாக ஊன்றியிருந்த சிவகாமி, வாகாக அந்த வேகத்துக்கு எழும்பினாள். கணக்கிட்டது போலவே கரிகாலன் அவளைத் தன் தலைக்கு மேல் தூக்கினான். சுழன்ற வேகத்தில் சிவகாமியின் பாதங்கள், நீளமான வாட்களைப் பிடித்திருந்த இருவரது தாடையையும் வேகமாகப் பெயர்த்தன. இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவ்விருவரும் நிலைதடுமாறி விழ... பிடித்திருந்த அவர்களது வாள்கள் நழுவ... இமைக்கும் நேரத்தில் சிவகாமி அதைக் கைப்பற்றினாள்! கணங்களில் நடைபெற்ற இந்தச் சம்பவங்கள் மற்ற அறுவரையும் அதிர்ச்சியடைய வைத்தன. நிலைகுலைந்த புரவிகளை அடக்குவது அவ்விரு அசுவ சாஸ்திரிகளுக்கும் சுலபமாக இருந்தது! இருவர் இருவராக இருந்த அறுவர் கூட்டணியை கரிகாலனும் சிவகாமியும் தகர்த்தார்கள். கரிகாலனின் வாள் அதிக நீளமில்லை; குட்டையுமில்லை. பட்டையாகவும் இல்லை; மெல்லியதாகவும் இல்லை. நடுவாந்திரமாக, கச்சிதமாக இருந்தது. தனக்கென அவன் வடிவமைத்த வாள் என்பதால் அவன் அசைவுக்கு அது கட்டுப்பட்டது. அவன் பேச நினைத்ததை இம்மி பிசகாமல் உரையாடியது. கால்களை முன்னோக்கி நேராகவும் பக்கவாட்டிலும் மாறி மாறி நகர்த்தி எதிராளியைத் திணறடித்தான். கால்களின் நர்த்தனத்துக்கு நேர் மாறாக வாளின் நடனம் இருந்ததால் எந்த முறையில் வாளைப் பாய்ச்சுகிறான் என்பதை அவனைச் சூழ முற்பட்டவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. முன்னோக்கிப் பாய்ந்தும், பின்னோக்கி நகர்ந்தும், பக்கவாட்டில் வாளை வீசியும் சுழல்காற்றைப் போல் சுழன்ற கரிகாலன், அவ்வப்போது சிவகாமி என்ன செய்கிறாள் என்றும் கவனித்தான். ஆச்சர்யமே ஒவ்வொரு அணுவையும் சூழ்ந்தது. தன்னிரு கரங்களிலும் இரு நீளமான வாட்களையும் ஏந்தியிருந்த அந்தப்பாவை, பாய்ந்து பாய்ந்து தாக்குவதிலேயே அதிக கவனம் செலுத்தினாள். அது முரண்டு பிடிக்கும் அரபிக் குதிரைகளை அடக்க அதன் மீது பாய்ந்து ஏறி அமர முற்படுவது போலவே இருந்தது. போலவே, பாய்ந்தவளின் கரங்களில் இருந்த வாட்கள் கீழ் நோக்கி வீசப்படும்போதெல்லாம் இடியாக இறங்கி அவளைத் தாக்க முற்பட்டவர்களின் தோளை நொறுக்கின. அந்தச் சூழலிலும் கச்சையிலிருந்து வெளிப்பட முயற்சித்த பிறைகளின் ஜொலிப்பு கரிகாலனை இம்சிக்கவே செய்தது. மின்னலென அவ்வப்போது தோன்றி மறைந்த நாபிக் கமலத்தின் சுழியும், ஆழமும் மலர்ந்தும் மறைந்தும் காண்பித்த காட்சிகள் ஊகங்களுக்கே அதிகம் வழிவகுத்தன. வாழையும், தந்தங்களும் வெட்கித் தலைகுனியும் அளவுக்கு வழுவழுப்புக்குப் பெயர்போன அவளது கரங்களும் கால்களும் ஊர்த்துவ தாண்டவமாடி எதிராளிகளைப் பந்தாடின. விரிந்தும் குறுகியும் அகன்றும் சேர்ந்தும் மாயாஜாலங்களை நிகழ்த்திய கால்களும், அவை உடம்புடன் சேர்ந்த இடமும், அவ்விடத்தின் கனமும் கணத்தில் கரிகாலனைப் பித்து நிலைக்கு அழைத்துச் சென்றன. காமமும் வன்மமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை எந்தத் தத்துவஞானி சொன்னாரோ... அவர் வாயில் சுத்தமான தேனைப் பிழிந்து ஊற்ற வேண்டும். சில கணங்களுக்கு முன் தன் விரல்களில் நெகிழ்ந்து குழைந்த அங்கங்கள் இந்தளவு பாறையாக மாறி எதிராளியைப் பெயர்க்கும் என கரிகாலன் துளியும் எதிர்பார்க்கவில்லை. நாணமும் மடந்தையும் பெண்களின் இயல்பல்ல. தேவையான சமயத்தில் வெளிப்படும் அவர்களது ஆபரணங்கள். எல்லோர் கண்களுக்கும் அவை தட்டுப்படுவதில்லை. தகுந்தவர்களைக் காணும்போதே அவை வெளிப்பட்டு ஜொலிக்கின்றன. குழையத் தெரிந்தவர்களுக்கு குடலை உருவி மாலையாக அணியவும் தெரியும். நெகிழ்பவர்கள்தான் கடினப்படுகிறார்கள். வாழ்க்கையின் மகத்தான இந்தத் தத்துவத்தை அந்தக் கணத்தில் தன் அசைவின் வழியே கரிகாலனுக்கு போதித்துக் கொண்டிருந்தாள் சிவகாமி. அன்னையின் நடனம் ஈசனை உத்வேகம் அடையச் செய்தது. சக்தியுடன் போட்டி போடுவதற்காகவே சிவன் நடனமாடினான். அதனாலேயே சக்தியில்லையேல் சிவனில்லை என்ற சொற்றொடர் பிறந்தது. இது உண்மையா அல்லது கற்பனையா என்று தெரியாது. ஆனால், சிவகாமியின் வாள் வீச்சுக்கு ஏற்ப கரிகாலன் தன் வாளைச் சுழற்றி எதிராளியைப் பந்தாடினான் என்பது மட்டும் நிஜம். வண்டை அழைக்க மொட்டு மலர்ந்தது. மொட்டு மலர வண்டு ரீங்காரமிட்டது. ஈசனின் நடனத்தில் சக்தி தன் மனதைப் பறிகொடுத்தது போலவே கரிகாலனின் வாள் நர்த்தனத்துக்கு சிவகாமி மயங்கினாள். திரண்ட அவனது புஜங்களும், கடினப்பட்ட அவனது முழங்கையும் முழங்காலும், சுற்றி வளைத்த வீரர்களை மட்டுமல்ல, தன் மனதையும் பந்தாடுவதை சிவகாமி உணர்ந்தாள். ஒடிசலான அந்த தேகத்தில் மலைக் குன்றே குடியிருக்கும் என்பதை அவள் கற்பனைகூட செய்து பார்க்கவில்லையே! வீசும் காற்று மட்டுமல்ல, வீசப் போகும் காற்றும் அவனது வாள் வீச்சுக்கு ஏற்பவே தங்கள் போக்கை அமைத்தன; அமைக்க நிர்ப்பந்திக்கப்பட்டன. இப்படிப்பட்ட வீரன் ஒரு நாழிகைக்கு முன் தன் முன்னால் தழையத் தழைய மண்டியிட்டு அமர்ந்திருந்தான் என்பதை நினைக்க நினைக்க அவள் உள்ளம் பொங்கியது. நரம்புகள் யாழாகி சப்தஸ்வரங்களையும் மேனி எங்கும் இசைத்தன! அதிர்ந்த உடல் உற்சாகக் கடலில் முத்துக் குளித்தது. அவளது வாள் அசைவில் அவை இறுமாப்புடன் வெளிப்பட்டன. இருவர்தானே... வளைத்துவிடலாம்... என்ற மிதப்பில் அவர்களை நெருங்கிய எட்டு வீரர்களும் கொஞ்சம் கொஞ்சமாக நிலைகுலைந்தார்கள். அவர்களது உடலில் இடைவெளியின்றி இருவரது வாட்களும் மாறி மாறி கோடுகளை இழுத்தன. கோடிட்ட இடங்களில் இருந்து பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கு குருதி பெருகி அவர்களது உடலை நனைத்தன; குளிப்பாட்டின. வாட்களைப் பறிகொடுத்தார்கள். மணிக்கட்டை பெயர்த்துக் கொண்டார்கள். வெட்டுப்பட்ட மரங்களாகத் தரையில் சாய்ந்தார்கள். கரிகாலனும் சிவகாமியும் முன்பு போலவே ஒருவர் பின்னால் மற்றவர் நின்றார்கள். இம்முறை அவள் முதுகில் தன் முதுகு பட்டும் படாமல் இருப்பது போல் கரிகாலன் நிற்கவில்லை. மாறாக, முதுகோடு முதுகு உராயும்படி நின்றான்; நின்றாள்; நின்றார்கள். சொற்கள் மெளனம் காக்க அவர்களது உடல்கள் உரையாடின. பரஸ்பரம் அடுத்தவரது வீரத்தை மெச்சிக்கொண்டன. தழுவித் தழுவி உச்சி முகர்ந்தன. பெருக்கெடுத்த வியர்வை திரிவேணி சங்கமம் போல் இருமேனி சங்கமமாகி இரண்டறக் கலந்தன. முன்பு போலவே நின்றவாக்கில் மெதுவாக சிவகாமி வட்டமடிக்கத் தொடங்கினாள். அவளுக்குச் சமமாக கரிகாலனும் வட்டமாக நகரத் தொடங்கினான். தங்களை எதிர்க்க யாருமில்லை எனப் புரிந்ததும் இருவரும் விலகினார்கள். போர் முடிந்ததும் இரு வீரர்கள் தேகம் இணைய நிற்பார்களே... அப்படி அருகருகில் நின்றார்கள். சுழன்று சுழன்று வட்டமடித்ததால் ஏற்பட்ட பெருமூச்சுகள் இருவரது நாசிகளையும் அதிர வைத்து வெளியேறின. சிவகாமியின் கையடக்க கொங்கை எழுவதும் தாழ்வதுமாக இருந்ததை கரிகாலன் கவனித்தான். அவன் பார்க்க வேண்டும் என்பதற்காகவே மூன்றாம் பிறையை ஐந்தாம் பிறையாக்கினாள் சிவகாமி! வீரத்தின் பக்கமிருந்த நாணயம் காதலின் மறுபக்கத்தை நோக்கித் திரும்ப ஆரம்பித்தது. எப்படி ஊசி முனையில் தள்ளாடிய உணர்ச்சிகளை சில நாழிகைகளுக்கு முன் சருகுகளின் சப்தங்கள் கலைத்தனவோ அப்படி சிருங்கார ரசத்தை விட்ட இடத்திலிருந்து பருக முற்பட்ட இருவரையும் ஒரு குரல் இயல்புக்குக் கொண்டு வந்தது.‘‘வாள் மகளே வா! வாள் மகனுடன் வா!’’ கடைக்கண்ணால் ஒருவரையொருவர் பார்த்தபடியே இருவரும் வாட்களை இறுக்கிப் பிடித்தார்கள். எவ்வித சலனமும் இன்றி குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினார்கள். இமை மூடித் திறப்பதற்குள் கரிகாலனின் தொடை மீது தன் இடது காலை வைத்து எம்பிய சிவகாமி வாளை ஓங்கியபடி அங்கு நின்றிருந்த மனிதன் மீது பாய்ந்தாள். அடுத்த கணம் அவள் கையில் இருந்த வாள் பறந்தது. குழந்தையைத் தரையில் இறக்குவதுபோல் சிவகாமியை இறக்கிய அந்த மனிதன் தன் குறுவாளை அவள் கழுத்தில் வைத்தான். நிதானமாகக் கரிகாலனை ஏறிட்டான். இதனையடுத்து அந்த மனிதன் உச்சரித்த சொற்கள், வாளை உயர்த்தி நின்ற கரிகாலனை மட்டுமல்ல, சிவகாமியையும் உலுக்கியது. ‘‘சண்டையிட நான் வரவில்லை. சிவகாமியின் சபதம் குறித்துப் பேசவே வந்திருக்கிறேன்!’’ (தொடரும்) http://www.kungumam.co.in Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted July 13, 2018 தொடங்கியவர் Share Posted July 13, 2018 ரத்தமகுடம் பிரமாண்டமான சரித்திரத் தொடர் கே.என்.சிவராமன் - 10 ‘‘சண்டையிட வரவில்லை. சிவகாமியின் சபதம் குறித்து பேசவே வந்திருக்கிறேன்!’’ சொன்ன அந்த மனிதன் சிவகாமியின் கழுத்தில் பதித்திருந்த தன் குறுவாளை எடுத்துவிட்டு அவளை கரிகாலனை நோக்கித் தள்ளினான். தனது வாள் வீச்சை அநாவசியமாகத் தடுத்து நிறுத்திவிட்டு எதுவும் நடக்காததுபோல் தனது சபதம் குறித்து அந்த மனிதன் அறிந்திருப்பதாகக் குறிப்பிட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியினாலும், மிதமான வேகத்தில் அவன் தள்ளியதாலும், பரந்து விரிந்திருந்த கரிகாலனின் மார்பில் வந்து சிவகாமி விழுந்தாள். என்றாலும் சமாளித்து அவன் தோளை உரசியபடி அருகில் நின்றாள். பலவித உணர்ச்சிகளும் கேள்விகளும் அலைக்கழித்ததால் கரிகாலன் அவளைத் தாங்கிப் பிடிக்கவுமில்லை. தோளோடு உரசிய அவள் தோளுக்கு ஆறுதலோ செய்தியோ சொல்லவும் முற்படவில்லை. தன் முன்னால் அலட்சியமாக நின்றிருந்த அந்த மனிதனை உச்சி முதல் உள்ளங்கால் வரை அலசினான். நாற்பது வயதிருக்கும். விடாமல் உடற்பயிற்சி செய்பவன் என்பதற்கு அறிகுறியாக அவன் உடல் உருண்டு திரண்டு கட்டுக்கோப்புடன் காணப்பட்டது. வயிறு ஒட்டியிருந்தது. அது பசியினால் அல்ல என்பதைக் குறித்துக் கொண்டான். அதிக உயரமில்லை. அதேநேரம் உயரம் குறைவுமில்லை. கை மணிக்கட்டில் வாள் காயங்கள் தென்பட்டன. அக்காயங்கள் வேறு இடங்களில் படராததால் வாள் வீச்சில் அந்த மனிதன் சளைத்தவனில்லை என்பது புரிந்தது. கூர்மையான நாசி. நாடி, நரம்பை ஊடுருவும் தீட்சண்யமான பார்வை. முகம் மட்டும் எங்கோ பார்த்தது போலவும் நெருக்கமாகவும் தோன்றியது. பார்வையை இடுக்கி அம்முகத்தை கரிகாலன் உள்வாங்கினான். மனதுக்குள் பதிந்திருந்த பல்வேறு முகங்களின் பிம்பங்களோடு அதை சரசரவென ஒப்பிட்டான். சட்டென்று அவன் கண்கள் விரிந்தன. இந்த மனிதன்... தவறு... ஒருமையில் விளிக்கக் கூடாது. இந்த மனிதர்... அவரா..? கரிகாலன் தன்னை இனம் கண்டுகொண்டான் என்பதை உணர்ந்த அந்த மனிதரும் ஆமோதிக்கும் வகையில் கண் சிமிட்டினார். கம்பீரமும் எதிர்க்கும் உணர்வும் மறைந்து தன் உடல் முழுக்க மரியாதை பரவுவதையும் அது தன் உடல்மொழியில் வெளிப்படுவதையும் அறிந்துகொள்ள கரிகாலனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. அவ்வுணர்வுக்குக் கீழ்ப்படிந்து தன் முன்னால் நிற்பவருக்கு வணக்கம் தெரிவிக்க அவன் முற்பட்டபோது சிவகாமியின் குரல் அச்சூழலை வேறு தளத்துக்கு அழைத்துச் சென்றது. ‘‘யார் நீ? எனது சபதம் குறித்து உனக்கு என்ன தெரியும்..?’’ ‘‘பரவாயில்லையே... கரிகாலனுடன் இணைந்து இயைந்து பயணப்பட்டதில் பக்குவப்பட்டு விட்டாயே..?’’ முகம் மலர அந்த மனிதர் புன்னகைத்தார். கரிகாலன் மெளனமாக இருப்பதைக் கவனித்துவிட்டு குழப்பத்துடன் தானே உரையாடலைத் தொடர்ந்தாள். ‘‘எதைக் குறிப்பிடுகிறாய்?’’ ‘‘மல்லைக் கடலுக்கும் இந்த வனத்துக்குமான இடைப்பட்ட தூரத்தை!’’ தடங்கலின்றி அந்த மனிதர் பதிலளித்தார். ‘‘என்ன சொல்கிறாய்..?’’ சிவகாமியின் குரலில் மெல்ல மெல்ல கோபம் படர ஆரம்பித்தது. ‘‘உண்மையை!’’ அலட்சியமாக விடையளித்த அந்த மனிதர் நிதானமாக சிவகாமியை நெருங்கினார். ‘‘மல்லைக் கடலில் கரிகாலனுக்குச் சமமாக மூழ்கியும் மூழ்காமலும்; நீந்தியும் நீந்தாமலும் ஒரு மனிதனை நெருங்கினாய். வாள் சண்டையிட்டு அவனை வீழ்த்தினாய். அப்போது அந்த மனிதனும் உனது சபதத்தைக் குறித்துத்தான் குறிப்பிட்டான். உன்னை நம்ப வேண்டாமென்றும் கரிகாலனிடம் அழுத்திச் சொன்னான். பல்லவ அரச குடும்பத்தை வீழ்த்த வந்திருக்கும் கோடரி என உன்னைச் சுட்டினான். அப்போது நீ கோபம் கொண்டு உன் வாளை உயர்த்தி அவனைத் தாக்க முற்பட்டாய். கரிகாலன் அதைத் தடுத்தான்!’’ நேரில் பார்த்தது போல் நடந்த சம்பவங்களை அப்படியே விவரித்த அந்த மனிதர் கரிகாலனையும் சிவகாமியையும் மாறி மாறிப் பார்த்தபடியே தொடர்ந்தார். ‘‘கதம்ப இளவரசரை உனக்கு அறிமுகப்படுத்தினான்! அதே நிகழ்வுதான் இங்கும் அரங்கேறியிருக்கிறது. என்ன... உனது சபதத்தை மட்டுமே நான் குறிப்பிட்டேன். மற்றபடி பல்லவ அரச குடும்பத்தைச் சிதைக்க வந்தவளாக உன்னைக் கருதவில்லை! ஒருவேளை அதனால்தான் கதம்ப இளவரசன் இரவிவர்மனுக்குக் கொடுத்த வாள் மரியாதையை இப்போது எனக்கு நீ வழங்கவில்லையோ என்னவோ! என்றாலும் நீ பக்குவப்பட்டிருப்பதாக நான் நினைப்பது பொய்யாக இருந்தாலும் அதில் எனக்கு ஆனந்தமிருக்கிறது! எனவே அப்படியே கருதிக் கொள்கிறேன்! என்ன கரிகாலா, நான் சொல்வது சரிதானே? சரியாகத்தான் இருக்கும். சற்று நேரத்துக்கு முன் நீங்கள் இருவரும் நெருக்கமாக இருந்ததை என் கண்ணால் கண்டேனே! பக்குவப்படுத்தித்தான் இருக்கிறாய்! உன் தீண்டல் வாள் மகளைக் குழைத்து வைத்திருக்கிறது!’’ வாய்விட்டுச் சிரித்த அந்த மனிதரை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் சிவகாமி தன் பார்வையைத் தாழ்த்தினாள். எவரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத ஆனந்தத்தை அல்லவா சற்று நேரத்துக்கு முன் கரிகாலனுடன் அனுபவித்தாள்..? அது அவளுக்கு மட்டுமே உரியதல்லவா..? அதைப்பற்றி முன்பின் அறியாத ஒரு மனிதர் அவளிடமே விவரிக்கும்போது அர்த்தங்களுக்கு அப்பாற்பட்ட உணர்வுதானே பூக்கும்? சிவகாமிக்குள்ளும் அதுவேதான் பூத்தது. குனிந்த தலையை அவள் நிமிர்த்தவில்லை. இதற்கு மேலும், தான் அமைதியாக இருப்பது அழகல்ல என்பதை கரிகாலன் உணர்ந்தான். எனவே எதிரிலிருந்த மனிதரை அவளுக்கு அறிமுகப்படுத்தினான். ‘‘இவர் உன்னை ஒருமையில் அழைத்ததற்காக வருத்தப்படாதே சிவகாமி. அந்த உரிமை இவருக்கு இருக்கிறது!’’ ‘‘என்ன உரிமை?’’ சட்டென பார்வையை உயர்த்தி கரிகாலனை ஊடுருவினாள். ‘‘தகப்பன் உரிமை!’’கரிகாலன் இப்படிச் சொன்னதுமே சிவகாமியின் உணர்வுகள் தாண்டவமாடின. ‘‘புரியவில்லை...’’‘‘பல்லவ மன்னர் உன்னைத் தனது மகளாகக் கருதுகிறார் அல்லவா?’’ ‘‘ஆம். அவர் என் தந்தைக்குச் சமமானவர்..!’’‘‘எனில், இவர் உன் சிறிய தந்தை!’’‘‘என்ன..?’’‘‘பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மரின் சித்தப்பா மகன்தான் இவர்!’’ என்று சொன்ன கரிகாலன் முறைப்படி அவரை வணங்கினான். அதை ஏற்று தலையசைத்த அந்த மனிதர் சிவகாமியை வாஞ்சையுடன் பார்த்தார். ‘‘அடியேனை ஹிரண்ய வர்மன் என்பார்கள்! ஹிரண்யன் என என்னை பெயர் சொல்லியும் நீ அழைக்கலாம்! தந்தையை பெயர் சொல்லி மகள் அழைப்பது உலக வழக்கம்தானே!’’ மறுகணம் முன்னால் வந்து ஹிரண்ய வர்மரின் காலைத் தொட்டு சிவகாமி வணங்கினாள். ‘‘மனம் போல் மாங்கல்யம் அமையட்டும் மகளே! உனக்கு ஏற்ற மணமகனைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறாய்!’’ தோளைத் தொட்டு அவளை நிமிர்த்தினார் ஹிரண்ய வர்மர். ‘‘எந்தக் காரணத்தைக் கொண்டும் கரிகாலனை விட்டுவிடாதே! உன்னைப்பற்றிய சந்தேகங்களை கதம்ப இளவரசன் இரவிவர்மன் கிளப்பியபிறகும் புலவர் தண்டியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு உன்னிடம் எதையும் விசாரிக்காமல், முழுமையாக நம்புகிறானே... இப்படி ஒருவன் கிடைக்க நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும்! பரஸ்பர நம்பிக்கைதான் வாழ்க்கைப் பயணத்தை எல்லா சிரமங்களிலும் கடக்க வைக்கும்! இவன் உன்னை தன் கைகளில் ஏந்திக் கடக்கவும் வைப்பான்; உன் சபதம் நிறைவேறவும் துணை புரிவான்!’’ சிறிய தந்தை சொல்லச் சொல்ல தன் கன்னங்கள் சூடாவதை சிவகாமி உணர்ந்தாள். ஓரக் கண்ணால் கரிகாலனைப் பார்த்துவிட்டு நிலத்தை அளந்தாள். கண்கொள்ளாக் காட்சியாக ஹிரண்ய வர்மருக்கு இது அமைந்தது. மகளின் மலர்ந்த வெட்கம் எப்போதும் தந்தையை மகிழ்விக்கும்! ‘‘உங்கள் இருவரது வீரத்தை அளவிடத்தான் சற்று முன் என் வீரர்களை வைத்து நாடகமாடினேன். எதிர்பார்த்ததுக்கு மேலாக இருவரும் அதில் வெற்றி பெற்றுவிட்டீர்கள். இனி நாம் காலத்தைக் கடத்த வேண்டாம். வாருங்கள்..!’’‘‘எங்கு மன்னா!’’ என்று கரிகாலன் கேட்கவில்லை. மாறாக சிவகாமி ‘‘எங்கு தந்தையே!’’ என்று கேட்டாள். ‘‘ஆயுதச் சாலைக்கு மகளே! கரிகாலா... நாம் எதிர்பார்த்தது போலவே எல்லாம் நடந்திருக்கிறது. காஞ்சியும் பல்லவ நாடும் இப்போது சாளுக்கியர்களின் வசம். போருக்கு இன்னும் சில திங்களே இருக்கின்றன. அதற்குள் பல்லவ இளவலை நீங்கள் அழைத்து வர வேண்டும். இடையில் உங்களைச் சந்தித்து ஆயுதச் சாலை இருக்கும் இடத்தை உங்களுக்குக் காட்டும்படி புலவர் தண்டி உத்தரவிட்டிருக்கிறார். அதனால்தான் இங்கு வந்தேன். புரவிகள் வேண்டாம். நடந்தே செல்லலாம் வாருங்கள்...’’ என்றபடி ஹிரண்ய வர்மர் வனத்துக்குள் புகுந்தார். ‘‘இதற்காகவா கடல் கடந்து உங்கள் நாட்டிலிருந்து வந்தீர்கள்?’’ சிவகாமியுடன் அவரைப் பின்தொடர்ந்தபடி கரிகாலன் கேட்டான். ‘‘அண்ணனுக்கு உதவ வேண்டியது என் கடமையல்லவா? நரசிம்ம வர்மர் வாதாபியைத் தீக்கரையாக்கியபின் சாளுக்கியர்கள் எப்போது வேண்டுமானாலும் பழிக்குப் பழி வாங்க முற்படுவார்கள் என்று தெரியும். அதை எதிர்கொள்ள வேண்டுமென்று வணிகர்கள் வழியாக அவ்வப்போது ஆயுதங்களை அனுப்பி மறைவிடத்தில் சேகரித்து வருகிறேன்...’’ அதன்பிறகு மூவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மெளனமாக நடந்தார்கள். அரை நாழிகை பயணத்துக்குப் பின் மலையடிவாரத்தை அடைந்தார்கள். ‘‘இதற்குள்தான் ஆயுதங்கள் இருக்கின்றன!’’ கம்பீரமாக அறிவித்தார் ஹிரண்ய வர்மர். ‘‘மலைக்குள்ளா..?’’ கரிகாலன் புருவத்தை உயர்த்தினான். ‘‘ஆம். மலையின் கர்ப்பத்தில் பாதுகாப்பாகக் குடிகொண்டிருக்கிறது!’’‘‘சுரங்கத்தின் திறவுகோல் எங்கிருக்கிறது தந்தையே!’’ பரபரப்புடன் சிவகாமி கேட்டாள். ‘‘புத்திசாலிப் பெண்!’’ மெச்சிய ஹிரண்ய வர்மர், ஆளுயரப் பாறைகளுக்கு மேல் இருந்த உச்சியை தன் ஆள்காட்டி விரலால் சுட்டிக் காட்டினார். ‘‘அங்கு!’’மறுகணம் மடமடவென்று பாறை மீது சிவகாமி ஏறத் தொடங்கினாள். கரிகாலன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். மாலைச் சூரியன் அவளை ஒளியால் நீராட வைத்தான். இதனைத் தொடர்ந்து செண்பக மலர் இதழ்களின் மஞ்சள் நிறத்தையும் வழுவழுப்பையும் பெற்று பொன் அவிழ்ந்து கொட்டுவது போல் அவள் மேனி தங்கத் தகடாகப் பளபளத்தது. அந்தக் கணத்தில் அவள் சரீரமே ஸ்ரீசக்கரமாக ஜொலித்தது. பார்வை ஊசியால் மடமடவென்று பிசிறின்றி அவள் மேனியென்னும் தகட்டில் ஸ்ரீசக்கரத்தை வரைய ஆரம்பித்தான். கால்களை உயர்த்தி உயர்த்தி அவள் ஏறியபோது பிரஹ்ம ரந்தரம், பிந்துஸ்தானமாகவும்; சிரசு, திரிகோணமாகவும்; நெற்றி, அஷ்டகோணமாகவும்; புருவ மத்தி, அந்தர்த்தசாரமாகவும்; கழுத்து, பஹிர்த்தசாரமாகவும்; ஸ்தனங்கள், மந்வச்ரமாகவும்; நாபி, அஷ்டதள பத்மமாகவும்; இடுப்பு, ஷோடசதள பத்மமாகவும்; தொடைகள், விருத்தத்ரயமாகவும்; பாதங்கள், பூபுரமாகவும் மாறி முழுமை பெற்றன. ‘‘பார்வையைத் திருப்பாமல் சொல்வதை மட்டும் கேள் கரிகாலா!’’ஹிரண்ய வர்மரின் குரல் அவனை நடப்புக்குக் கொண்டு வந்து நிறுத்தியது. ‘‘சொல்லுங்கள் மன்னா!’’ ‘‘புலவர் தண்டியிடம் பாடம் கற்றதால் நீயும் சாக்த உபாசகனாகி இருக்கிறாய்! அதனாலேயே மனம் கவர்ந்த பெண்ணின் உடல், ஸ்ரீசக்கரமாக உனக்குக் காட்சியளிக்கிறது!’’ ‘‘இதை தவறென்று சொல்கிறீர்களா?’’‘‘ஆண் / பெண் விஷயத்தில் சரி / தவறு என மூன்றாம் மனிதர் கருத்து சொல்ல முடியாது. தன்னை ஆவாஹனம் செய்யச் சொல்லி ஆணிடம் தன்னையே ஒரு பெண் ஒப்படைத்தபின் தந்தையானாலும் அவன் அந்நியன்தான்...’’‘‘மன்னா!’’‘‘சொல்ல வந்தது வேறு. சிவகாமி விஷயத்தில் புலவர் தண்டி சொல்வதை எந்தளவுக்கு நம்புகிறாயோ அதே அளவுக்கு கதம்ப இளவரசன் இரவிவர்மன் சொன்னதையும் நம்பு!’’ ‘‘...’’ ‘‘பல்லவ குலத்தை அழிக்கத்தான் சிவகாமி வந்திருக்கிறாள்! உன்னையும் அதற்குப் பயன்படுத்தத்தான் திட்டமிடுகிறாள்! புலவரையும் என்அண்ணனையும் போல் நீயும் இவளிடம் ஏமாந்துவிடாதே! எச்சரிக்கையாக இரு. எங்கள் குலத்தைக் காக்கும் பொறுப்பு உனக்கிருக்கிறது!’’ (தொடரும்) http://www.kungumam.co.in/ Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted July 21, 2018 தொடங்கியவர் Share Posted July 21, 2018 ரத்தமகுடம் பிரமாண்டமான சரித்திரத் தொடர் கே.என்.சிவராமன் -11 ‘‘கரிகாலா! பல்லவ குலத்தை அழிக்கத்தான் சிவகாமி வந்திருக்கிறாள்! உன்னையும் அதற்குப் பயன்படுத்தத்தான் திட்டமிடுகிறாள்! புலவர் தண்டியையும் என் அண்ணனும் பல்லவ மன்னருமான பரமேஸ்வர வர்மரையும் போல் நீயும் இவளிடம் ஏமாந்து விடாதே! எச்சரிக்கையாக இரு. எங்கள் குலத்தை காக்கும் பொறுப்பு உனக்கிருக்கிறது!’’சொன்ன ஹிரண்ய வர்மர், நிமிர்ந்து குரல் கொடுத்தார். ‘‘சிவகாமி!’’‘‘தந்தையே!’’‘‘உச்சியில் கைக்கு அடக்கமாக ஒரு கல் இருக்கிறதா?’’‘‘ம்...’’‘‘அதை எடுத்துக் கொண்டு ஐந்தடி நகரு... இன்னும் கொஞ்சம்... ஆம். அங்குதான்! வட்டமாகக் குழி ஒன்று தெரிகிறதா?’’‘‘ம்...’’‘‘அதனுள் அந்தக் கல்லை நுழைத்து வலப்பக்கமாக ஐந்து முறை திருகு!’’ஹிரண்ய வர்மர்கட்டளையிட்டபடியே சிவகாமி செய்தாள்.அடுத்த கணம், அவள் நின்றிருந்த இடத்துக்கு நேர் கீழே, கரிகாலனுக்கு சற்றுத் தள்ளி பூமி பிளந்ததுஎவ்வித உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் நின்றிருந்த கரிகாலன், தன் முன்னால் நிகழும் சகலத்தையும் ஒரு பார்வையாளனைப் போல் பார்த்துக் கொண்டிருந்தான். தன்னுடன் பேசும்போது ஹிரண்ய வர்மரின் குரலில் வெளிப்பட்ட கோபமும் ஆத்திரமும் சிவகாமியுடன் உரையாடும்போது மறைந்து குழைவுடன் வெளிப்படுவதைக் குறித்துக்கொண்டான். தெளிவாகப் புரிந்தது. சிவகாமியை மையமாக வைத்து, அவள் செய்திருக்கும் சபதத்தை முன்வைத்து, பல்லவர்களைச் சுற்றி வலை பின்னப்படுகிறது. இயக்கும் சூத்திரதாரி யாரென்று தெரியவில்லை. சிவகாமியின் பூர்வீகத்தையும் அவள் செய்திருக்கும் சபதத்தையும் அறிந்துகொண்டால் மட்டுமே வலையை விரித்து பல்லவர்களை அழிக்க முற்படுபவர்கள் யாரென்று அறியமுடியும். ஒருவேளை கதம்ப இளவரசரும், ஹிரண்ய வர்மரும் சொல்வது போல் சிவகாமியே கூட அந்த சூத்திரதாரியாக இருக்கலாம்.கண்ணால் காண்பதையும் காதால் கேட்பதையும் நம்பாமல் தீர விசாரித்தே முடிவுக்கு வரவேண்டும். அதன்பிறகே பல்லவர்களை அழிக்க முற்படும் அந்த மர்ம நபரை வீழ்த்த வேண்டும். அது தன் மனதைக் கொள்ளையடித்திருக்கும் சிவகாமியாகவே இருந்தாலும் சரி...கரிகாலன் இந்த முடிவுக்கு வரவும் பாறை மீதிருந்து சிவகாமி இறங்கி வரவும் சரியாக இருந்தது. ‘‘வாருங்கள்... கர்ப்பக்கிரகத்தினுள் நுழையலாம்!’’அழைத்த ஹிரண்ய வர்மர், தன் முன்னால் கீழ்நோக்கி விரிந்த படிக்கட்டில் இறங்க ஆரம்பித்தார். அவரைத் தொடர்ந்து இறங்க முற்பட்ட கரிகாலனின் தோளை உரசியபடி சிவகாமி இறங்கத் தொடங்கினாள்.தன் தோளை வரவேற்க வேண்டிய, தைரியம் சொல்லி அரவணைக்க வேண்டிய கரிகாலனின் தோள், உணர்ச்சி ஏதுமின்றி அருகிலிருக்கும் பாறை போல் சலனமற்று இருந்ததை கணத்தில் சிவகாமி உணர்ந்தாள். பாறை மீது, தான் ஏறியிருந்த சமயத்தில், தன் சிறிய தந்தை ஏதேனும் கூறியிருக்க வேண்டும்... அதுவும் தன்னைப் பற்றி. அதனால்தான் கரிகாலன் கடினப்பட்டிருக்கிறான். அவள் கண்களில் அதுவரை பூத்திருந்த இனம்புரியாத உணர்வு மெல்ல மெல்ல வடிந்தது. அவனைப் போலவே அவளும் உள்ளுக்குள் இறுகினாள். ஓரடி தள்ளி நகர்ந்தாள்.சிவகாமிக்குள் நிகழ்ந்த மாற்றத்தை கரிகாலனும் உணர்ந்தான். இப்போது அமைதி காப்பதே நல்லது என்பதை அவன் புத்தி உணர்த்தியது. அதற்குக் கட்டுப்பட்டு அவளை முன்னால் நடக்கும்படி சைகை செய்தான்.மறுப்பு சொல்லாமல் ஹிரண்ய வர்மரைத் தொடர்ந்து படிக்கட்டில் இறங்கினாள் சிவகாமி. முப்பது படிக்கட்டுகள் வரை ஒருவர் பின் ஒருவராக அமைதியாக இறங்கினார்கள். சமதளத்தை அவர்கள் அடைந்ததும் சற்று நிதானித்தார்கள். மேலிருந்து வந்த வெளிச்சம் தவிர வேறு ஒளி அங்கில்லை. இதற்குள் ஹிரண்ய வர்மர் முன்னோக்கி நகர்ந்து அங்கிருந்த கல்தூணை அடைந்தார். அதனுள்ளிருந்த பொறியைத் திருகினார்.அடுத்த கணம் அவர்கள் இறங்கி வந்த பாதை மூடிக்கொண்டது. இருள் சூழ்ந்தது. இருளின் ஒளி பழக்கப்படும் வரை மூவரும் அசையாமல் நின்றார்கள். மெல்ல மெல்ல வானில் நட்சத்திரங்கள் மின்னுவது போல் அவர்கள் கண் முன்னால் ஒளிக்கற்றைகள் பூக்கத் தொடங்கின. அவை அனைத்தும் வாளிலிருந்து வெளிப்பட்ட ஒளிகள் என்பதும், வாட்களை ஒளிர வைத்தது ஆங்காங்கே எரிந்து கொண்டிருந்த விளக்குகள் என்பதும் கரிகாலனுக்கும் சிவகாமிக்கும் புரிய சில கணங்களாகின.‘‘தந்தையே..!’’ தன்னையும் மறந்து சிவகாமி கூவினாள். ‘‘எத்தனை வாட்கள்... ஆயிரக்கணக்கில் இருக்கும்போல் தோன்றுகிறதே...’’‘‘ஏன் லட்சங்கள் என்று சொல்லத் தயங்குகிறாய்?’’ சிரித்தபடி ஹிரண்ய வர்மர் கேட்டார். ‘‘எப்படி இது சாத்தியமாயிற்று தந்தையே?’’பிரமிப்புடன் கேட்டபடியே வாட்களின் பக்கம் சென்ற சிவகாமியை சடாரென்று கரிகாலன் இழுத்தான். ‘‘அருகில் செல்லாதே! இவை அனைத்தும் கொடிய நாகங்களின் விஷத்தில் ஊறியவை. சின்ன கீறல் கூட உயிரை மாய்த்துவிடும்...’’‘‘உண்மையாகவா..?’’ சிவகாமியின் குரலில் திகைப்பு வழிந்தது.‘‘சத்தியமாக. தமிழகத்தில் மட்டுமல்ல... சாளுக்கியர்கள் உட்பட இப்பரப்பில் இருக்கும் எந்த தேசத்திலும் இப்படிப்பட்ட வாட்கள் தயாராவதில்லை. ஹிரண்ய வர்மர் ஆட்சி செய்யும் பகுதியில்தான் சர்வ சாதாரணமாக இந்த ஆயுதங்களை உருவாக்க முடியும்...’’சொன்ன கரிகாலனையும், அதை ஆமோதித்தபடி பெருமையுடன் கேட்டுக் கொண்டிருந்த ஹிரண்ய வர்மரையும் மாறி மாறி சிவகாமி பார்த்தாள். அடக்கி வைக்கப்பட்டிருந்த வினா, அவளையும் அறியாமல் வெளிப்பட்டது. ‘‘தந்தையின் நாடு எங்கிருக்கிறது..?’’‘‘கடல் கடந்து!’’ கரிகாலன் பதிலளித்தான். ‘‘கடல் கடந்தா... பல்லவர்கள் அங்குள்ள நிலப்பரப்பையுமா ஆள்கிறார்கள்..?’’‘‘சின்ன திருத்தம் மகளே!’’ அதுவரை அமைதியாக இருந்த ஹிரண்ய வர்மர் வாய் திறந்தார்.‘‘என்ன தந்தையே..?’’‘‘பல்லவர்கள் என்பதற்கு பதில் தமிழர்கள் என்று சொல்!’’‘‘விளங்கவில்லை தந்தையே..?’’‘‘உன் பிழையல்ல சிவகாமி... வரலாற்றை அறிந்துகொள்ள முயற்சி செய்யாத தமிழர்களின் குற்றம் அது. அதனால்தான் ஆய கலைகளிலும் வல்லவரான புலவர் தண்டியின் ரகசிய மாணவியாக நீ இருந்தபோதும் இந்த உண்மையை அறியாமல் இருக்கிறாய்...’’‘‘புலவரை குற்றம்சாட்டுகிறீர்களா தந்தையே..?’’‘‘இல்லை! உன் அறியாமையைச் சுட்டிக்காட்டுகிறேன்!’’‘‘சற்று விளக்க முடியுமா?’’‘‘புலவர் தண்டி ஒரு சக்தி உபாசகர் என்பதை நீ அறிவாய் அல்லவா..?’’‘‘ஆம்!’’ ‘‘சாக்தர்களுக்கு லலிதா சகஸ்ரநாமம்தான் பிரதானம்...’’‘‘ம்...’’‘‘அந்த லலிதா சகஸ்ரநாமத்தை அகத்தியருக்கு உபதேசித்தவர் ஹயக்ரீவர்!’’‘‘புலவர் சொல்லியிருக்கிறார் தந்தையே...’’‘‘அவர் சொல்லாமல் விட்டதில்தான் உனது அறியாமையை நான் சுட்டிக் காட்டியதற்கான விஷயம் அடங்கியிருக்கிறது சிவகாமி...’’‘‘...’’‘‘எடுத்ததுமே அகத்தியருக்கு லலிதா சகஸ்ரநாமத்தை ஹயக்ரீவர் உபதேசிக்கவில்லை. லலிதா பரமேஸ்வரியின் அருமை பெருமைகளை கும்ப முனிக்கு அவர் விளக்கி வந்தபோது... போகிறபோக்கில், ‘அம்பாளின் ஆயிரம் நாமங்கள்’ என்றார். உடனே ஹயக்ரீவரை இடைமறித்த அகத்தியர், ‘ஆயிரம் நாமங்களா..? அதென்ன...’ என்று கேட்டார். இதன் பிறகே, தன் முன் மாணவராக கைகட்டி அமர்ந்திருந்த அகத்தியருக்கு லலிதா சகஸ்ரநாமத்தை ஹயக்ரீவர் உபதேசித்தார். இப்போது சூட்சுமம் புரிகிறதா சிவகாமி...’’ ‘‘இல்லை தந்தையே!’’‘‘மறைபொருளாக இருக்கும் ரகசியத்தை எடுத்ததுமே எந்த குருவும் தன் மாணவர்களுக்குக் கற்றுத்தரமாட்டார். மாணவர்களுக்குள் தேடல் இருக்க வேண்டும். கற்றுத் தரும்போது உற்றுக் கவனித்து வினாக்களைத் தொடுக்க வேண்டும். அப்போதுதான் பாத்திரமறிந்து குரு கல்வி என்னும் பிச்சையை இடுவார். அப்படி ஹயக்ரீவரிடம் இடைமறித்து அகத்தியர் கேள்வி கேட்டதால்தான் லலிதா சகஸ்ரநாமம் உலகுக்கே கிடைத்தது...’’‘‘அதுபோல் புலவரிடம் நான் கேட்டிருக்க வேண்டும் என்கிறீர்களா..?’’‘‘ஆம் சிவகாமி. சங்ககால சோழர்களுக்குள் நடந்த வாரிசுரிமைப் போட்டி குறித்த பாடங்கள் வரும்போது புலவரை இடைமறித்து நீ வினா தொடுத்திருக்க வேண்டும்!’’ ‘‘தவறுதான் தந்தையே. இப்போது கேட்கிறேன். கடல் கடந்த நாடுகளிலும் தமிழர்கள் ஆட்சி செய்கிறார்களா..?’’‘‘ஆம்! அதற்கு அத்தாட்சியாக நானே உன் முன்னால் நிற்கிறேன்!’’ நெஞ்சை உயர்த்தி கம்பீரமாக அறிவித்த ஹிரண்ய வர்மர், தமிழக சரித்திரத்துக்குள் அடங்கிய தன் வரலாற்றை விளக்கத் தொடங்கினார். ‘‘கேள் மகளே! நீயும்தான் கரிகாலா... தமிழர்களின் மகோன்னதமான சரித்திரத்தை இருவரும் கேளுங்கள்...’’ உணர்ச்சிப் பிழம்புடன் ஹிரண்ய வர்மர் சொல்லத் தொடங்கினார். செவிக்குக் கிடைத்த உணவை எவ்வித குறுக்கிடலும் செய்யாமல் கரிகாலனும் சிவகாமியும் பருகத் தொடங்கினார்கள்.‘‘மிக மிகப் பழமையான நிலப்பரப்புகளில் தொண்டை மண்டலமும் ஒன்று. சோழர்களும், பல்லவர்களும், ஆதொண்டச் சக்கரவர்த்தியும் ஆட்சி செய்வதற்கு முன்பே தொண்டை மண்டலம் இருந்திருக்கிறது. அப்போது அதன் பெயர், ‘குறும்பர் நிலம்’. குறும்பர் இன மக்கள் தங்கள் நிலத்தை இருபத்து நான்கு கோட்டங்களாகப் பிரித்து ஆட்சி செய்து வந்தனர். காவிரிப்பூம்பட்டினத்து சோழ வணிகர்களுடன் கடல் வாணிகம் நடத்தி வந்தனர். சோழப் பரம்பரையின் ஒப்பும் உயர்வும் அற்ற கரிகாலச் சோழன், குறும்பர் நாட்டைக் கைப்பற்றினார். பின்னர் இப்பகுதியை தொண்டைக் கொடியால் சுற்றப்பட்டு கடல்வழி வந்த நாகர் மகனான இளந்திரையன் ஆண்டதால் இப்பகுதி ‘தொண்டை மண்டலம்’ எனப் பெயர் பெற்றது.இதையெல்லாம் இலக்கியங்களில் நீங்கள் இருவரும் படித்திருப்பீர்கள். போலவே, சோழ தேசத்தில் வாரிசுரிமைப் போர் நடந்ததையும், அதில் வென்று கரிகாலன் மன்னரானார் என்பதையும். இந்தப் போட்டியில் கரிகாலனைக் கொல்ல சதிகள் அரங்கேறியிருக்கின்றன. கரிகாலன் தன் தாயோடு தங்கியிருந்தபோது அந்த இடம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. அப்போது தன் மாமன் இரும்பிடத்தலையாரால் அவர் காப்பாற்றப்பட்டார். என்றாலும் நெருப்பில் அவர் கால் கருகிவிட்டது. அதனாலேயே அவருக்கு கரிகாலன் என்ற பெயர் நிலைத்தது... என்பதையெல்லாம் அறிந்திருப்பீர்கள். ஆனால், மறைபொருளாக இதனுள் அடங்கிய செய்தியை கவனிக்கத் தவறியிருப்பீர்கள். அதில் பிரதானமானது சோழ தேசத்தில் வாரிசுரிமைப் போர் நடந்தது என்பது. அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட சோழர்கள் சங்க காலத்தில் ஆட்சி உரிமை கோரியிருக்கிறார்கள் என்பது. இதில் மன்னராகப் பொறுப்பேற்றவர்களின் பெயர் மட்டுமே வரலாற்றில் பதிந்திருக்கிறது. எனில், மற்றவர்கள் என்ன ஆனார்கள்..? எங்கு சென்றார்கள்..?இந்தக் கேள்வியை மனதில் இருத்திக் கொள்ளுங்கள். இப்போது நாம் தவறவிட்ட அடுத்த செய்திக்கு நகர்வோம். அதுதான் தொண்டைமான் இளந்திரையன் கதை! புகார் நகரத்தை நெடுமுடிக்கிள்ளி ஆட்சி செய்து வந்தபோது, ஒருநாள் உலா சென்றான். அப்போது நாக நாட்டைச் சேர்ந்த அரசன் வளைவணனின் மகளானபீலிவளையைக் கண்டான். காதல் கொண்டான். இருவரும் காந்தர்வ மணம் செய்து கொண்டார்கள். ஒரு திங்கள் சதி பதியாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள்.அவர்களது அன்புக்கு அடையாளமாக பீலிவளை கருவுற்றாள். திடீரென்று ஒருநாள் நெடுமுடிக்கிள்ளியிடம் எதுவும் சொல்லாமல் அவள் மறைந்துவிட்டாள்.காதலியைப் பிரிந்து நெடுமுடிக்கிள்ளி தவித்தான். யாருக்கும் எந்த விபரமும் தெரியவில்லை. தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டு புகாரில் அவன் வாழ ஆரம்பித்தான். இந்நிலையில் நாகர் நாட்டிலிருந்த தன் தந்தையின் அரண்மனைக்குச் சென்றுவிட்ட பீலிவளை உரிய காலத்தில் அழகான ஆண் மகனை ஈன்றாள். ஒருநாள் மணிபல்லவத் தீவில் இருந்த புத்த பீடிகைக்கு வழிபட குழந்தையுடன் சென்ற பீலிவளை, அங்கு புகார் நகரத்தைச் சேர்ந்த பெரு வணிகரான கம்பளச் செட்டியைச் சந்தித்தாள். தன் அருமை மகனைப் பட்டுத் துணியில் வைத்து, ஆதொண்டைக் கொடியால் சுற்றி, ஒரு மணிப்பேழையில் வைத்து, ‘உங்கள் மன்னரிடம் இவனை ஒப்படையுங்கள்’ என்று கொடுத்தாள்.குழந்தையுடன் புகாருக்கு கம்பளச் செட்டி புறப்பட்டார். நள்ளிரவில் அலைகள் மோதி அவரது கலம் கவிழ்ந்தது. பயணம் செய்தவர்கள் அனைவரும் பரதவர்களால் காப்பாற்றப்பட்டனர். ஆனால், குழந்தை என்ன ஆனது என்று யாருக்கும் தெரியவில்லை. செய்தி அறிந்த நெடுமுடிக்கிள்ளி, துயருற்றான். தன் மகனை நினைத்து ஏங்கினான். இதற்கிடையில் மணிப்பேழையில் ஆதொண்டைக் கொடியால் சுற்றப்பட்டிருந்த குழந்தை கடலில் மிதந்து ஓர் இடத்தில் கரையை அடைந்தது. பின்னர், தான் அடைந்த இடத்தை அக்குழந்தை வளர்ந்து ஆளானதும் ஆட்சி செய்தது. அதுதான் ‘தொண்டை மண்டலம்!’ அந்தக் குழந்தைதான் இளந்திரையன்.‘மணிமேகலை’யில் இந்தக் கதையை நீங்கள் படித்திருக்கலாம். இதில் பீலிவளையின் நாடாகக் குறிப்பிடப்பட்டுள்ளதே நாக நாடு... அதுதான் மறைபொருள் செய்தி! அதனுள்தான் தமிழகத்தின் மகத்தான சரித்திரம் புதையுண்டிருக்கிறது. ஆம். நாகலோகம் அல்லது நாகநாடு என்பது புராணக் கதை அல்ல; கற்பனையல்ல! அது ரத்தமும் சதையுமான மனிதர்கள் வசிக்கும் ஓர் நாடு!’’கம்பீரமாக அறிவித்த ஹிரண்ய வர்மர், தொடர்ந்தார். அவர் சொல்லச் சொல்ல கரிகாலனின் கண்களும் சிவகாமியின் விழிகளும் விரிந்தன. (தொடரும்) http://www.kungumam.co.in Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted July 28, 2018 தொடங்கியவர் Share Posted July 28, 2018 ரத்த மகுடம் பிரமாண்டமான சரித்திரத் தொடர் - 12 ‘‘என்ன சொல்கிறீர்கள் தந்தையே! நாகலோகம் அல்லது நாக நாடு என்பது புராணக் கற்பனை அல்லவா..? ரத்தமும் சதையுமான மனிதர்கள் உயிருடன் வாழும் பிரதேசமா..?’’ஆச்சர்யம் விலகாமல் சிவகாமி கேட்டாள். ‘‘ஆம் குழந்தாய்! அந்த உலகத்தைச் சேர்ந்தவன்தான் நான்! பல்லவ குடியின் கிளை மரபினர் மட்டுமல்ல... சோழ அரச பரம்பரையின் வம்சாவளியினரும் அந்த நிலப்பரப்பைத்தான் ஆட்சி செய்கின்றனர். திகைக்க வேண்டாம். கோச்செங்கட் சோழ மன்னனின் சரித்திரம் உணர்த்தும் உண்மை இது...’’ கம்பீரமாக அறிவித்த ஹிரண்ய வர்மர், தன்னிடம் வினவிய சிவகாமியையும், கேள்வி கேட்காமல் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த கரிகாலனையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, தன்னை இருவரும் கவனிக்கிறார்கள் என்பதை உணர்ந்து தொடர்ந்து பேச ஆரம்பித்தார். ‘‘தமிழக சரித்திரத்தில் மறக்க முடியாத மன்னர்களில் கோச்செங்கட் சோழனும் ஒருவர். அவரது வாழ்க்கையை புலவர் தண்டி வழியாக அறிந்திருப்பீர்கள். என்றாலும் இப்போது அதை நானும் சொல்கிறேன். ஏனெனில் நாம் உரையாடி வரும் விஷயத்துக்கும் அவரது சரித்திரத்துக்கும் தொடர்பிருக்கிறது. முதலில் நீங்கள் அறிந்த வரலாற்றிலிருந்தே தொடங்கலாம். கோச்செங்கட் சோழன் குறித்து நீங்கள் கேள்விப்பட்டது என்ன..? ‘சேரன் செங்குட்டுவனால் சோழர் ஒன்பது பேரும் முறியடிக்கப்பட்ட நிலையில், சோழ நாட்டை அபாயமும் வாரிசுப் போட்டியும் சூழ்ந்த சூழலில் பிறந்தவன் கோச்செங்கட் சோழன். இவர் சுபதேவன் என்ற சோழ அரசருக்கும் கமலவதி என்ற அரசிக்கும் பிறந்தவர். நீண்டு அரசாள்வதற்கு உரிய நேரத்தில்தான் தன் மகன் பிறக்க வேண்டும் என்பதில் தாய் கமலவதி உறுதியுடன் இருந்தார். ஜாதகத்தில் நம்பிக்கை உடையவரான கமலவதி, குறிக்கப்பட்ட நல்ல நேரத்துக்கு முன்பாகவே பிள்ளைப் பேறு நிகழும் சூழல் வந்தபோது ஒரு நாழிகை நேரத்துக்கு குழந்தை வெளிவர முடியாதபடி தன்னைத் தலைகீழாக நிறுத்தி வைக்கச் சொன்னார். ராணியின் பேச்சை மீற முடியாத பணிப்பெண்களும் அவரது கால்களைக் கட்டி அவரைத் தலைகீழாக நிறுத்தினார்கள். அதன் விளைவாக காலம் தாழ்த்தி உலகையே ஆளும் நல்ல நேரத்தில் பிறந்த குழந்தையின் கண்கள் தாமதத்தால் சிவந்திருந்தன. தனது குழந்தையின் சிவந்த கண்களை முதலும் கடைசியுமாகப் பார்த்த தாய் கமலவதி, ‘என் கோச்செங்கணானே...’ என்று அழைத்தார். அதுவே பிறந்த குழந்தையின் பெயராகக் கடைசி வரை நிலைத்தது...’இந்தக் கதையைத்தான் புலவர் தண்டி உங்களிடம் சொல்லியிருப்பார். சரித்திரத்திலும் இதுவே வருங்காலத்தில் பதிவாகப் போகிறது. இவற்றின் நம்பகத்தன்மை குறித்து இங்கு நான் கேள்வி எழுப்பப் போவதில்லை. அது நமக்கு அவசியமும் இல்லை. எது எப்படியாக இருந்தாலும் கோச்செங்கட் சோழன் என்ற மன்னர் வாழ்ந்தது உண்மை. சோழ நாட்டை அவர் ஆண்டது சத்தியம். சைவ சமயத்தைக் காக்க 70 சிவன் கோயில்களுக்கு மேல் அவர் கட்டியது நிஜம். அதனாலேயே காலம் கடந்தும் அவர் பெயர் நிலைக்கப் போகிறது என்பது நிச்சயம். எனவே, அப்படியொரு மன்னர் வாழ்ந்தாரா என்ற வினாவைத் தொடுக்கப் போவதில்லை. மாறாக, நீங்கள் கேள்விப்பட்ட, உங்களிடம் சொல்லப்பட்ட கோச்செங்கட் சோழன் குறித்த கதையில் மறை பொருளாக ஓர் உண்மை புதைந்திருக்கிறதே... அதைத்தான் சுட்டிக் காட்டி வெளிச்சமிட்டுக் காட்டப் போகிறேன்...’’சொன்ன ஹிரண்ய வர்மர் சற்று நேரம் அமைதியாக இருந்தார். அவர் முகத்தில் பல்வேறு உணர்வுகளும் உணர்ச்சிகளும் தாண்டவமாடின. மனம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த கரிகாலனும் சிவகாமியும் அமைதியாக நின்றார்கள். எதேச்சையாக சிவகாமியின் பக்கம் திரும்பிய கரிகாலன் அவள் ஓரக் கண்ணால் கூட தன்னைப் பார்க்கவில்லை... ஏறிடவும் முற்படவில்லை என்பதைக் கண்டான். வலித்தது. சுரங்கப் படிக்கட்டில் தன்னிடம் ஒண்டிய அவள் தோள்களுக்கு, தான் ஆறுதல் சொல்லாததே இந்த விலகலுக்குக் காரணம் என்பதைப் புரிந்துகொள்ள அவனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. சந்தேகங்கள் பலப்பல எழுந்தாலும் உடனே அவளை அணைந்து ஆறுதல் வழங்க வேண்டுமென்று தோன்றியது. சின்னப் பெண். முகம் தெரியாதவர்கள் எல்லாம் தன் வாழ்க்கையைக் குறித்துப் பேசும்போதும், தன் நடத்தை மீது கேள்விகளை எழுப்பும்போதும் மனம் கொந்தளிக்கவே செய்யும். நம்பிக்கைக்குரியவரின் தோளில் சாய்ந்து, பொங்கும் உணர்வுகள் அடங்கும் வரை அமைதியாக இருக்கவே தோன்றும். இதை எதிர்பார்த்துத்தான் தன்னருகில் வந்திருக்கிறாள். ஆனால், அப்போது, தான் இருந்த மனநிலையில் தன்னையும் அறியாமல் அவளைப் புறக்கணித்துவிட்டோம். அந்தக் காயத்திலிருந்து இப்போது குருதி வழிந்துகொண்டிருக்கிறது. அது வடுவாக மாறுவதற்கு முன் ஏதாவது செய்தாக வேண்டும். முடிவுடன் தள்ளி நின்ற கரிகாலன் மெல்ல அவளை நெருங்கி நின்றான். தோள்கள் பட்டும் படாமலும் உரசின. சலனமற்ற பார்வையுடன் நிமிர்ந்து அவனை ஏறிட்டாள். நான்கு கண்களும் உரசின. மோதின. அனலைக் கக்கின. துவண்டன. சரிந்தன. சிவகாமியின் நயனங்கள் வெடிக்கும் தருவாயில் ஹிரண்ய வர்மர் அந்த அமைதியைக் கிழித்து சூழலைத் தன் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தார். ‘‘கோச்செங்கட் சோழன் சிவபிரானின் அருளைப் பெற்றவர் என்று போற்றப்படுகிறார். தான் பிறந்த சிதம்பரத்தை மிகச் சிறந்த சிவப்பதியாக மேம்படுத்தினார். தில்லையில் வாழ்ந்த அந்தணர்களைக் கொண்டு முடிசூட்டிக் கொண்டார். இதன்பிறகு சோழர்களுக்கு முடி சூட்டும் தகுதி தில்லை அந்தணர்களுக்கு உரிமையானது. அப்பரும் சம்பந்தரும் கோச்செங்கட் சோழனின் கோயில் வளர் நெறியைப் போற்றி உள்ளனர். கோச்செங்கணானின் வாழ்க்கை சோழ அரசின் பதவிக்கான போட்டியில் வென்று அரசராகத் தேர்வான ஒருவரது கதை என்றால், அவரது சமகாலத்தில் வாழ்ந்த சேரரால் தோற்கடிக்கப்பட்ட மற்ற ஒன்பது சோழ இனத்தவர்களுடைய கதை, வாழ்க்கை என்னஆனது..? இந்தப் போட்டியில் தொண்டை மண்டலத்தை ஆண்ட இளந்திரையனின் வழி வந்தவர்கள் என்ன ஆனார்கள்..? சோழ வம்சத்தின் அரசராக முடிசூட்ட இயலாதவர்கள், தங்களுக்குரிய அங்கீகாரங்கள் கிடைக்காத நிலையில் புதிய அரச இனங்களைத் தோற்றுவிக்க முயன்றார்களா..? இந்த வினாக்களைத்தான் உங்களுக்கு சரித்திரங்களைக் கற்றுத் தந்தவர்களிடம் தொடுத்திருக்க வேண்டும். இந்தக் கேள்விகளையே கோச்செங்கணானின் வரலாற்றுக்குப் பின்னால் இருக்கும் மறை பொருளான சரித்திரம் என்கிறேன்!’’நிறுத்திய ஹிரண்ய வர்மர், இதுவரை, தான் கூறியதை இருவரும் உள்வாங்கட்டும் என சில கணங்கள் அமைதியாக இருந்தார். பின்னர் தொடர்ந்தார்.‘‘இதுவரை நான் சொல்லியவை அனைத்தும் சங்க காலத்தில் நிகழ்ந்தவை. அதன்பிறகு பல்லவர்கள் தமிழகத்தை ஆள ஆரம்பித்தார்கள். இந்தப் பல்லவர்கள் யார் என்ற கேள்வி தமிழக வரலாற்றில் எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கும். இன்னார் வம்சமா அல்லது அன்னார் வழித்தோன்றலா எனக் கேட்டவண்ணம் இருப்பார்கள். இறுதி உண்மை, ‘சாதவாகனப் பேரரசின் தென்கிழக்குப் பகுதியில் பல்லவர், ஆனந்தர், விஷ்ணுகுண்டர், இக்குவாகர், சாலங்காயனார் முதலிய சிற்றரசர்கள் இருந்தனர். சாதவாகனப் பேரரசு சிதைவுற்ற பிறகு பல்லவர்கள் தெற்கே பெயர்ந்து வேங்கடத்தின் தென்பகுதியையும், தமிழகத்தின் வடபகுதியையும் தங்கள் ஆளுகையின்கீழ் கொண்டு வந்து அதிகாரம் செலுத்தினர்...’ என்பதாக இருக்கும்! அந்தளவுக்கு வேங்கடத்துக்கு அப்பாலும் தமிழக சரித்திரத்துக்குத் தொடர்பிருக்கிறது. ஏனெனில் வட வேங்கடத்துக்கு அந்தப் பக்கம் இருக்கும் பகுதியும் தமிழர்கள் ஆண்ட பிரதேசங்கள்தான். உதாரணத்துக்கு இப்போதைய சோழர்களையே எடுத்துக் கொள்வோம். பல்லவர்கள் தமிழகத்தை ஆள்கிறார்கள். இந்நிலையில் பழைய சோழ மரபினரில் சிலர் ஆந்திரப் பகுதியில் குடியேறி குறைந்த நிலப்பரப்பை ஆண்டு வருகிறார்கள். ஒருவேளை சோழர்கள் தலைதூக்கி பல்லவர்கள் ஒடுக்கப்பட்டாலும் இதேதான் நிகழும். பல்லவ அரச மரபைச் சேர்ந்த சிலர் வேங்கடத்துக்கு அப்பால் இடம்பெயர்ந்து தங்கள் காலத்தைக் கழிப்பார்கள்! ஒரு விஷயம் தெரியுமா..? குகைக் கோயில்களை அமைப்பதில் பல்லவர்களுக்கு முன்னோடிகளாக இருந்தவர்கள் சாதவாகனர்கள்தான். கிருஷ்ணா ஆற்றின் கரையில் விநுகொண்டாளைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த சாதவாகனர்கள் உண்டவல்லி, பெசவாடா, மொகல்ராசபுரம், சித்தநகரம் ஆகிய இடங்களில் குகைக் கோயில்களை அமைத்தனர். மகேந்திரவர்ம பல்லவரின் வல்லம், மாமண்டூர் குகைக்கோயில்கள் அப்படியே உண்டவல்லியில் விஷ்ணுகுண்டர் அமைத்த குகைக் கோயில்களை அடியொற்றியவை. இப்போது ஒவ்வொரு பல்லவ மன்னர்களாக கோயில் கட்டடக் கலையை மேம்படுத்தி வருகிறார்கள். இதையெல்லாம் இங்கு குறிப்பிடக் காரணம், பல்லவர்களுக்கும் சோழர்களுக்கும் இருக்கும் பந்தத்தை அழுத்தமாகப் பதியவைக்கத்தான். அப்போதுதான் நாகலோகம், நாக நாடு குறித்து உங்களுக்குப் புரியும்! கரிகாலா! சிவகாமி! தொண்டை மண்டலத்தை ஆண்ட இளந்திரையனின் தாய் பீலிவளை நாகர் அரசரான வளைவணனின் மகள் என்பதை அறிவீர்கள். போலவே பல்லவ அரசர் வீரகூர்ச்சவர்மர் நாகர் மகளை மணந்து அரசு பெற்றார்*. இப்படி தமிழகத்துக்கும் நாக நாட்டுக்கும் இருக்கும் தொடர்பைப் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். இந்த நாக நாடு எங்கிருக்கிறது தெரியுமா..? கடல் கடந்து!** எங்கள் நாட்டுக் கல்வெட்டில் பீமவர்மர், இரணியவர்மர் ஆகிய மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். பாரத தேசத்தில் ஓடும் புண்ணிய நதியான கங்கையைப் போலவே அங்கும் ஒரு நதி பாய்கிறது. அதற்கு ‘மாகங்கை’ என்று பெயர். காலப்போக்கில் அப்பெயர் மருவி ‘மீகாங்’ என மாறியது. கடலில் கலக்கும் இந்த மீகாங் நதியின் வழியாக எங்கள் நாட்டுக்குள் எளிதில் நுழையலாம். பல கால்வாய்கள் கடல் வழியில் இருந்து நாட்டின் மையப் பகுதிக்குச் செல்கின்றன. எனவேதான் இந்த நதிக்கரை ஓரத்தில் பூனன்களின் ஆட்சி நிலைபெற்றது. ஆற்றல்மிக்க சந்தையாகவும் உருவெடுத்தது. பல நாட்டுப் பொருட்கள் பூனன் ஆட்சியில் தங்குதடையின்றி கிடைத்தன. இந்த பூனன்களின் ஆட்சிக்கும் தமிழகத்துக்கும், பல்லவர், சோழர்களுக்கும் தொடர்பிருக்கிறது! அந்த சம்பந்தத்தின் ஒரு கண்ணியாக கவுண்டின்யர் என்ற அந்தணர் விளங்குகிறார். இதையும் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் இளந்திரையனின் பிறப்புக்கும், கோச்செங்கணான் சோழரின் தாயாதிகளுக்கும் பூனன்களின் வம்சத்துக்கும் இருக்கும் தொடர்பு விளங்கும். இந்த ஆயுதங்களை எப்படி நான் இங்கு சேகரித்தேன்... எந்த வகையில் என் அண்ணனும் இப்போதைய பல்லவ மன்னருமான பரமேஸ்வர வர்மர் சாளுக்கியர்களை எதிர்க்க உதவப் போகிறேன் என்பதும் உங்களுக்குப் புரியும்!’’நிறுத்திய ஹிரண்ய வர்மர், அழியாப் புகழ்பெற்ற சரித்திரத்தை விளக்கத் தொடங்கினார். (தொடரும்) http://www.kungumam.co.in/ Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted August 4, 2018 தொடங்கியவர் Share Posted August 4, 2018 ரத்த மகுடம் பிரமாண்டமான சரித்திரத் தொடர் - 13கே.என்.சிவராமன் ‘‘நாகர்களின் ஆட்சிப் பகுதியில் ஒருமுறை பூனன் லியோ என்ற பெண்மணி ஆண்டு வந்தார். திருமணமாகாத அவர், அழகே உருவானவர். சர்வ லட்சணங்களையும் தன் அங்கங்களில் ஏந்தியவர். பொதுவாக அழகு இருக்கும் இடத்தில் அறிவாற்றல் இருக்காது என்பார்கள். இந்த மூதுரை பூனன் லியோ விஷயத்தில் பொய்த்தது. அழகுக்கு சமமாக அறிவும் மதியூகமும் அவரிடத்தில் குடிகொண்டிருந்தது. தன் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்தை ஒரு குறையும் இன்றி பூனன் லியோ ஆண்டு வந்தார். மக்கள் நிம்மதியாக நடமாடினர். எதிரிகள் அந்நாட்டை நெருங்கவே அஞ்சினர். இதே காலத்தில் மெளஃபெள என்ற நாட்டில் ஹிவெண்டியன் என்ற ஒரு பக்திமான் இருந்தார்...’’ கரிகாலனும் சிவகாமியும் தன்னை கவனிக்கவேண்டும் என சுவாசத்தை சீராக்கிய ஹிரண்ய வர்மர் அவர்கள் இருவரது நயனங்களையும் மாறி மாறிப் பார்த்தார். மெல்ல மெல்ல தன்னை நோக்கி அவர்களை வசப்படுத்திவிட்டு மகத்தான வரலாற்றைச் சொல்ல ஆரம்பித்தார்.‘‘அந்த ஹிவெண்டியன் வழக்கம்போல் ஓரிரவு உறங்கும்போது அந்த தரிசனம் அவருக்குக் கிடைத்தது. அதுவும் கனவு ரூபத்தில் அச்செய்தி வந்தது. கடவுள் அவர் முன் தோன்றி சர்வ வல்லமை படைத்த ஒரு வில்லைக் கொடுத்து, படகில் ஏறி கடல் கடந்து பயணம் செய்து நாகர்களின் ஆட்சிப் பகுதிக்குச் செல்லும்படி கட்டளையிட்டார்! விழித்துக் கொண்ட ஹிவெண்டியன், நிச்சயம் இது தெய்வத்தின் கட்டளைதான் என உறுதியாக நம்பி கோயிலுக்குச் சென்றார். என்ன ஆச்சர்யம்! கனவில் கண்ட வில் அங்கிருந்தது! இது தெய்வ சங்கல்பம் எனத் தீர்மானித்து அதை கையில் எடுத்துக்கொண்டு கடற்கரைக்குச் சென்றார். படகில் ஏறி, கடவுளின் ஆக்ஞைப்படி புறப்பட்டார்.ஹிவெண்டியன் தன் நாட்டுக்கு வருவதை ஒற்றர்கள் மூலம் அறிந்த பூனன் லியோ, வெகுண்டார். ஒரு பெண்ணாக, தான் இருப்பதால் தன் நாட்டை அபகரிக்கவே ஹிவெண்டியன் வில்லுடன் வருவதாக எண்ணினார். வருபவரின் வீரதீரப் பிரதாபங்களை ஒற்றர்கள் விரிவாகவே பூனன் லியோவிடம் விளக்கியிருந்தனர். அவரிடம் இருக்கும்வில் தெய்வாம்சம் பொருந்தியது என்பதையும் அரசி அறிந்திருந்தார்.எனவே, வருவது ஒற்றை ஆளாக இருந்தாலும், அவர் வில்லாதி வீரர் என்பதால், தன் நாட்டின் ஒட்டுமொத்தப் படைகளையும் திரட்டி அவரை எதிர்க்க கடற்கரைக்கு வந்தார். கடலையே பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு புள்ளியாக படகு ஒன்று தெரிந்தது. பார்வையை உன்னிப்பாக மாற்றி அதையே கவனித்தார். படகு நெருங்க நெருங்க அதற்குள் ஓர் மனிதன் நின்றுகொண்டிருப்பதைக் கவனித்தார். வாட்டசாட்டமான உடல்வாகு. மனிதன் என்று சொல்வதைவிட இளைஞன் என்று அழைப்பதே சாலப் பொருத்தமாக இருக்கும் என்பதை தனக்குள் குறித்துக் கொண்டார். குறிப்பாக, வருபவரின் தோளை அலங்கரித்த வில்லின் மீது பூனன் லியோவின் பார்வை படிந்தது. அதுதான் தெய்வாம்சம் பொருந்திய வில்... அதனைக் கொண்டுதான் தன் நாட்டை அபகரிக்கப் போகிறார்... இந்த எண்ணம் உதித்ததுமே பூனன் லியோ சற்றும் தாமதிக்கவில்லை. கடவுளின் அம்சம் பொருந்திய வில்லை ஏந்தியவராகவே இருந்தாலும், வருபவர் தன் மக்களை அடிமையாக்க வந்திருப்பவர். எனவே, கடவுளின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு கடவுளையே எதிர்க்கத் துணிந்தார்! வரும் படகின் மீதும் அதில் நிற்பவர் மீதும் அம்பு எய்தும்படி தன் வீரர்களுக்குக் கட்டளையிட்டார்!அரசியின் கட்டளையை உடனே வீரர்கள் நிறைவேற்றினார்கள். நாணை இழுத்து அம்பு மழையை அப்படகின் மீது பாய்ச்சினார்கள்...’’நிறுத்திய ஹிரண்ய வர்மர், சில கணங்கள் எதுவும் பேசாமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். முக்கியமான வரலாற்றுக் கட்டங்களை விவரிக்கும்போதெல்லாம் இப்படி அவர் இடைவெளி விடுவதும் முன்பின் நடப்பதும் வாடிக்கை என்பதை கடந்த சில நாழிகைக்குள் உணர்ந்திருந்த கரிகாலனும் சிவகாமியும் அமைதியாக அவரையே பார்த்தவண்ணம் நின்றார்கள். சிவகாமிக்குள் உணர்ச்சிகள் கொந்தளித்துக் கொண்டிருந்தன. குறிப்பாக, நாகர்களை ஆண்டு வந்தது பூனன் லியோ என்ற பெண்மணி என்ற குறிப்பு அவளைக் கவர்ந்திருந்தது. எத்தனை இடையூறுகளை அந்த அரசி சமாளித்திருக்க வேண்டும் என்பதை நினைக்க நினைக்க சிவகாமியின் உள்ளம் கடல் அலைகளைப் போல் பொங்குவதும் அடங்குவதுமாக இருந்தது. கடலில் தோன்றும் அலைகள், அக்கடலிலேயே வடிவதுபோல் இனம்புரியாத வாஞ்சையுடன் மேலெழுந்த அவள் உள்ள உணர்ச்சிகள் அதே மனதுக்குள் வடிந்தன.பூனன் லியோ எந்தளவுக்கு சிவகாமியிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்ள கரிகாலனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. கற்றாரை கற்றாரே காமுறுவர். வீராங்கனைகளை வீராங்கனைகளே புரிந்துகொள்வர்! தன் தோளுடன் உரசி நின்ற சிவகாமியின் தோளை தன் கரங்களால் சுற்றி ஆற்றுப்படுத்தினான். சலனமற்று அவனை ஏறிட்ட சிவகாமி, சலனத்தின் பிடியில் சிக்கத் தொடங்கியபோது ஹிரண்ய வர்மனின் குரல் அதைக் கிழித்தது. விட்ட இடத்திலிருந்து அவர் தொடர ஆரம்பித்ததை கரிகாலனைப் போலவே அவளும் கவனிக்கத் தொடங்கினாள்.‘‘தன்னை நோக்கி வரும் அம்பு மழையைக் கண்டு ஹிவெண்டியன் திகைக்கவில்லை. மாறாக, அவர் உதட்டோரம் புன்னகை பூத்தது. தன் தோளில் இருந்த வில்லை எடுத்தார். முதுகுப் பக்கம் இருந்த அம்பாரியிலிருந்து அம்பு ஒன்றை எடுத்து நாணில் பூட்டினார். கடற்கரையில் நின்றிருந்த படைகளை நோக்கி அதை எய்தார்!அந்த அம்பு குறிபார்த்து பூனன் லியோவின் சிரசில் இருந்த கிரீடத்தைக் குத்தி அதைக் கீழே விழ வைத்தது. இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக ஹிவெண்டியன் எய்த அம்புகள் கரையிலிருந்த படைகளைச் சிதறடித்தன. அதேநேரம் பூனன்களின் படைகள் எய்த அம்புகள், கரையை நோக்கி வந்துகொண்டிருந்த படகைத் தாக்கவும் இல்லை; படகின் மீது நின்றிருந்த ஹிவெண்டியன் உடலில் சிறு காயத்தையும் ஏற்படுத்தவில்லை.இந்த மாயாஜாலத்தைக் கண்டு பூனன் லியோ திகைத்தார். தான் கேள்விப்பட்டதற்கும் மேல் ஹிவெண்டியன் வில்லாளியாக இருப்பதை கண்ணுக்கு நேராகப் பார்த்தார். பெண்ணாக இருந்தும் அதுநாள் வரை அவர் உடலில் மலராத வெட்கம், அந்த நொடியில் பூத்தது. அங்கங்கள் அனைத்தும் வரும் ஆண்மகனின் தழுவலை எதிர்பார்த்து விரிந்தன.வருபவர் எதிரியல்ல; தன் மணாளர் என்பதை பூனன் லியோ உணர்ந்து கொண்டார். எனவே, எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் படகில் இருந்து இறங்கிய ஹிவெண்டியரிடம் சரணடைந்தார். தன் முன் நாணத்துடன் நின்ற பூனன் லியோவைக் கண்டதும் ஹிவெண்டியர் மனதுக்குள்ளும் மொட்டு மலர்ந்தது. இவை எல்லாமே தெய்வ சங்கல்பம்தான் என்ற முடிவுக்கு வந்த ஹிவெண்டியர், மனமுவந்து பூனன் லியோவையும் ஏற்றுக்கொண்டார். மன்னராக முடிசூட்டிக் கொண்டு நாகர்களின் தேசத்தையும் ஆளத் தொடங்கினார். இவர்களுக்கு அழகான ஆண்மகன் ஒருவன் பிறந்தான். தனக்குப் பிறகு தன் மைந்தனுக்கு ஹிவெண்டியர் முடிசூட்டினார்.இப்படித்தான் பூனன்களின் ஆட்சி தோன்றி, வலுப்பெற்று நிலைத்தது. கரிகாலா! சிவகாமி! ஒரு விஷயம் தெரியுமா? இந்த பூனர்களுக்கும் மகாபாரதத்துக்கும் தொடர்பிருக்கிறது!’’ சொன்ன ஹிரண்ய வர்மர் மகிழ்ச்சிக்கு அறிகுறியாக வாய்விட்டுச் சிரித்தார்.கரிகாலனும் சிவகாமியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘‘திகைக்க வேண்டாம். உங்கள் செவியில் நான் பூச்சுற்றவில்லை. கல்வெட்டு ஆதாரங்களுடன்தான் சொல்கிறேன்...’’ உற்சாகத்துடன் அவர்கள் இருவரையும் ஹிரண்ய வர்மர் நெருங்கினார்.‘‘பிராமணர்களில் சிறந்தவர் என கவுண்டின்யர் அறியப்படுகிறார். அதனாலேயே இவரது வம்சாவளியினரும் உறவினர்களும் இவர் பெயரைத் தாங்கிய கோத்திரத்துடன் வாழ்கிறார்கள். அப்படிப்பட்ட கவுண்டின்யர், துரோணரின் மகனான அஸ்வத்தாமனிடம் இருந்து ஈட்டி ஒன்றைப் பெற்றார். அதை எடுத்துக் கொண்டு படகில் ஏறி, கடல் கடந்து வந்து நாக நாட்டிலுள்ள பவபுரத்தில் நட்டார். அத்துடன் நாக மன்னரான சோமரின் மகளையும் மணந்தார்.இவை எல்லாமே எங்கள் வம்சத்தைக் குறித்த கதைகள்; சரித்திரம். பூனர்களின் மரபைத் தோற்றுவித்த ஹிவெண்டியரின் வம்சம் காலப்போக்கில் மங்கி அழியத் தொடங்கியது. அப்போது தன்னை ஹிவெண்டியரின் பரம்பரையைச் சேர்ந்தவன் என்று கூறிக் கொண்டு இன்னொரு மனிதன் படகில் வந்து இறங்கினான். அவனை தங்கள் மன்னராக மக்கள் ஏற்றுக் கொண்டனர். இந்திரவர்மன், ஜெயவர்மன், ருத்திரவர்மன்... என இந்த வம்சம் தொடர்ந்து ஆட்சி செய்தது. இந்த இடத்தில்தான் முக்கியமான மறைபொருள் மறைந்திருக்கிறது. கரிகாலா! சிவகாமி! இதை மட்டும் நீங்கள் கவனித்துவிட்டால் எல்லாமே புரிந்துவிடும்...’’ என்று நிறுத்தினார் ஹிரண்ய வர்மர்.‘‘தந்தையே! ‘வர்மன்’ என்ற பெயரைத்தானே குறிப்பால் உணர்த்த வருகிறீர்கள்..?’’ சட்டென்று சிவகாமி கேட்டாள்.‘‘உன்னை ஏன் தன் வளர்ப்பு மகளாக என் சகோதரன் பரமேஸ்வர வர்மர் கருதுகிறார் என இப்போது புரிகிறது! கெட்டிக்காரி...’’ புருவத்தை உயர்த்தி அவளைப் பாராட்டிய ஹிரண்ய வர்மர், தொடர்ந்தார்.‘‘சிவகாமி ஊகித்தது சரிதான். ‘வர்மன்’ என்ற பெயர்கள் சத்திரியர்களுக்கு மட்டுமே சொந்தமானவை! அதுவும் பல்லவர்களுக்கு உரியவை! ஆம். இரண்டாவது ஹிவெண்டிய வம்சத்தைத் தோற்றுவித்தவர்கள் பல்லவ வம்சத்தைச் சேர்ந்த சிம்ம வர்மரின் இரண்டாவது மகனான பீம வர்மர்! அதாவது என் பாட்டனார். சிம்ம வர்மரின் முதல் மகனான சிம்ம விஷ்ணுவின் வழித்தோன்றல்கள் தமிழகப் பகுதிகளை ஆள... அவர்களுக்கு இடையூறு வழங்க வேண்டாம் என பீம வர்மர் கடல் கடந்து சென்று தனக்கென ஒரு நாட்டை ஏற்படுத்திக் கொண்டார்...’’ ஹிரண்ய வர்மர் இப்படிச் சொன்னதும் சிவகாமி முதல்முறையாக இடைமறித்தாள். ‘‘அப்படியானால் பூனர்களின் ராஜ்ஜியத்தை ஸ்தாபித்த ஹிவெண்டியர் யார்..?’’‘‘சிவகாமி... இன்னுமா புரியவில்லை? சோழர் வம்சத்தைச் சேர்ந்தவர்தான் ஹிவெண்டியர். அரச மரபில் பிறந்தும் இளையவராக இருந்ததால் ராஜ்ஜியம் ஆளும் பேறு அவருக்குக் கிடைக்கவில்லை. எனவே, கடல் கடந்து சென்று நாக மன்னரின் மகளை மணந்து அந்நாட்டுக்கு அரசரானார். பூனர்களின் வம்சத்தைத் தோற்றுவித்தார்!இப்படி சோழர்களுக்கும் பல்லவர்களுக்கும் பல நூற்றாண்டு களாக விட்ட குறை தொட்ட குறையாக ஓர் உறவு நீடிக்கிறது. அதனால்தான் சோழர்கள் தாழ்ந்து பல்லவர்கள் கோலோச்சும்போதும் சிற்றரசுக்கு மேம்பட்ட ஸ்தானத்தை சோழர்களுக்கு அளித்து கவுரவிக்கிறார்கள். இதே நிலை நாளையே சோழர்கள் தலையெடுத்து பல்லவர்கள் தாழும்போதும் நிலவும். ஏனெனில் ரத்த உறவு அந்தளவுக்கு இருவருக்கும் இடையில் பலமாக நிலவுகிறது!போகிறபோக்கில் இதைச் சொல்லவில்லை சிவகாமி. பல்லவர்களின் கட்டடக்கலை மரபை கடல் கடந்து நாங்கள் வளர்க்கிறோம். நாளை சோழர்கள் இதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவார்கள். விதை ஒன்றுதான். அது தமிழ் மண்! அதனாலேயே அந்நியர் பிடியில் இப்பரப்பு சிக்காமல் பாதுகாக்கும் பொறுப்பு கடல் கடந்து வாழும் எங்களுக்கும் இருக்கிறது. இதன் காரணமாகவே நாக விஷங்கள் தோய்த்த ஆயுதங்களை சிறுகச் சிறுகக் கொண்டு வந்து இங்கு சேகரித்திருக்கிறோம்...’’உணர்ச்சிப் பிழம்புடன் ஹிரண்ய வர்மர் இப்படிச் சொல்லி முடித்த அடுத்த கணம் அந்தக் குரல் ஓங்கி ஒலித்தது.‘‘அதற்காக சாளுக்கிய தேசம் உனக்கு நன்றி தெரிவிக்கிறது ஹிரண்ய வர்மா!’’ கம்பீரமாக அறிவித்தபடி அலட்சியமாக சுரங்கத்துக்குள் நுழைந்தார் சாளுக்கியர்களின் போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபர்! (தொடரும்) ஓவியம்: ஸ்யாம் http://www.kungumam.co.in/ Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted August 18, 2018 தொடங்கியவர் Share Posted August 18, 2018 ரத்த மகுடம் பிரமாண்டமான சரித்திரத் தொடர் - 14 ‘‘என்னவொரு அழுத்தமான தெளிவான வரலாற்றை எளிமையாகச் சொல்லியிருக்கிறாய் ஹிரண்ய வர்மா! கேட்கக் கேட்க திகட்டவே இல்லை! இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த பிரதேசத்தை சாளுக்கியர்கள் ஆள நிச்சயம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்! சாளுக்கியர்கள் மீது நீ கொண்ட அன்புக்கும் எங்கள் அரசு... தவறு... நம் அரசு ஸ்திரப்படத் தேவையான நாக விஷங்கள் தோய்த்த ஆயுதங்களைக் கொடுத்ததற்கும் எங்கள் மன்னர் விக்கிரமாதித்தர் சார்பாக உனக்கு நன்றி தெரிவிக்கிறேன்! மன்னரிடம் சொல்லி உனக்கு தக்க கைமாறு செய்யவும் வழிவகுக்கிறேன்!’’ கணீரென்று அறிவித்தபடி தங்கள் அருகில் வந்த சாளுக்கியர்களின் போர் அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபரை இமைக்கவும் மறந்து பார்த்தார் ஹிரண்ய வர்மர். ‘‘திகைப்புக்குக் காரணம் புரிகிறது ஹிரண்ய வர்மா! என்னை நானே அறிமுகப்படுத்திக் கொள்வதில் தயக்கம் ஏதுமில்லை. அடியேனின் திருநாமம் ஸ்ரீராமபுண்ய வல்லபன் என்பது. சாளுக்கிய மன்னரிடம் போர் அமைச்சராகப் பணிபுரிகிறேன். உன் அளவுக்கு பிரபலமானவன் அல்ல. சாதாரண மனிதன். எனவே, கடல் கடந்த தேசத்தின் அரசனான நீ என்னை அறிந்திருக்க வாய்ப்பில்லை...’’அலட்சியமாகச் சொல்லிவிட்டு தன் பார்வையைத் திருப்பினார். தள்ளி நின்றிருந்த கரிகாலன் மீதும் அவனை ஒட்டி நின்றிருந்த சிவகாமியின் மீதும் அவர் நயனங்கள் படிந்தன. மொட்டினை விரிக்கும் மலரைப் போல் அவர் உதட்டில் புன்னகை பூத்தது. ‘‘உலகிலேயே பரவசமானது இளம் காதலர்களை நேருக்கு நேர் எதிர்கொள்வதுதான்! சரிதானே கரிகாலா?’’ சுரங்கமே அதிரும் வகையில் வாய்விட்டுச் சிரித்த ஸ்ரீராமபுண்ய வல்லபர், சட்டென்று கரிகாலனை நெருங்கி அவன் செவியோரம் முணுமுணுத்தார்.‘‘ஆமாம்... சிவகாமியின் சபதத்தை அறிந்துகொண்டாயா அல்லது உன்னைத் தாக்கிய அவளது அழகு பாணங்கள் ஏற்படுத்திய மயக்கத்திலிருந்து இன்னமும் விடுபடாமல் இருக்கிறாயா? இரண்டாவதாகச் சொன்னதுதான் சரியாக இருக்க வேண்டும். வனாந்திரப் பிரதேசத்தில் மெய்மறந்து இருவரும் இருந்ததைத்தான் பார்த்துக் கொண்டே இருந்தேனே...’’ சிவகாமி தன்னிரு உள்ளங்கைகளையும் மடக்கி இறுக்கினாள். அதைக் கண்டு ஸ்ரீராமபுண்ய வல்லபர் தன் முகத்தில் போலி அதிர்ச்சியைக் காட்டினார். ‘‘பயமாக இருக்கிறது சிவகாமி! கோபப்பட்டு என்னை எரித்து விடாதே!’’ நடிப்பின் இலக்கணத்தை அரங்கேற்றிய சாளுக்கியர்களின் போர் அமைச்சர் அப்படியே திரும்பி ஹிரண்ய வர்மரை ஏறிட்டார். ‘‘நாம் உரையாட வேண்டியது நிறைய இருக்கிறது. அதற்கு முன் உன் சந்தேகத்தைத் தீர்த்துவிட்டால் இயல்பாகப் பேசமுடியும். இதற்கும் முன் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். ஒரு தேசத்தின் மன்னனாக நீ இருந்தும் சாதாரண போர் அமைச்சனான நான் உன்னை ஒருமையில் அழைக்கக் காரணம் இருக்கிறது. அது பகை நாட்டின் போர் அமைச்சன் என்பதால் அல்ல. அந்தளவுக்கு சாளுக்கியர்கள் மரியாதை தெரியாதவர்கள் அல்ல...’’ என்றபடி ஹிரண்ய வர்மரை நெருங்கி அவர் தோளை அணைத்தார். ‘‘வயது காரணமாக மட்டும் உன்னை ஒருமையில் அழைக்கவில்லை. உறவு முறையின் அடிப்படையிலும்தான்! என்ன அப்படிப் பார்க்கிறாய்! ஹிரண்ய வர்மா... நானும் உன் கோத்திரத்தைச் சேர்ந்தவன்தான்! கவுண்டின்ய கோத்திரம். சத்திரியர்களாக இருந்தும் பல்லவர்கள் தங்களை பரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாக அறிவித்துக் கொள்கிறார்கள். இது தமிழகத்துக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். ஆனால், கடல் கடந்த தேசத்தை ஆள்பவன் நீ. உன் நாட்டை ஒரு காலத்தில் ஆட்சி செய்தவர் கவுண்டின்யர். எனவே, ஏதோ ஒரு வகையில் உன் குருதியில் எங்கள் கோத்திரமும் கலந்திருக்கிறது. அந்த வகையில், நாம் இருவருமே உறவினர்கள்தான்!’’ மெல்ல ஸ்ரீராமபுண்ய வல்லபரின் அணைப்பிலிருந்து விடுபட்டு எதையோ சொல்ல முற்பட்ட ஹிரண்ய வர்மரை தன் கரங்களை உயர்த்தித் தடுத்தார். ‘‘இதை நீ ஏற்கவில்லை என்றாலும் எனக்குக் கவலையில்லை. என் எண்ணத்தை மாற்றுவதாகவும் இல்லை. அவரவர் நினைப்பில் அவரவர் இருப்பதில் தவறேதுமில்லை!’’ சொன்ன சாளுக்கியர்களின் போர் அமைச்சர் தன்னை விட்டு விலகிய ஹிரண்ய வர்மரை மீண்டும் நெருங்கவில்லை. மாறாக, இருந்த இடத்திலிருந்தே கரிகாலனையும் சிவகாமியையும் மாறி மாறிப் பார்த்துப் புன்னகைத்தார்.‘‘ஹிரண்ய வர்மனுக்கு நன்றி தெரிவித்து விட்டேன்! அடுத்து உங்கள் இருவருக்கும் என் அன்பை வெளிப்படுத்த வேண்டும். எதற்குத் தெரியுமா? இந்த ஆயுதக் குவியல் இருக்கும் இடத்துக்கு என்னை அழைத்து வந்ததற்கு!’’ தங்களைப் பின்தொடர்ந்து வந்ததால் இந்த இடத்துக்கு வர முடிந்தது என்பதையே அவர் குறிப்பிடுகிறார் என்பது கரிகாலனுக்கும் சிவகாமிக்கும் புரிந்தது. என்றாலும் அவரே அதை வெளிப்படுத்தட்டும் என அமைதியாக நின்றார்கள். இதை உணர்ந்ததுபோல் ஸ்ரீராமபுண்ய வல்லபரும் தொடர்ந்தார்.‘‘எவ்வித சிரமமும் இன்றி பல்லவ நாட்டை சாளுக்கியர்கள் கைப்பற்றி இருக்கிறார்கள்...’’‘‘சின்ன திருத்தம். கைப்பற்றவில்லை. மக்களுக்கும் கலைச் செல்வங்களுக்கும் சேதாரம் ஏற்படக்கூடாது என்பதற்காக எங்கள் பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மர் தற்காலிகமாக விட்டுக் கொடுத்திருக்கிறார். காலத்தால் நீங்கள் வெற்றி பெற்றிருப்பதாகக் கருதுகிறீர்கள். மற்றபடி நாங்கள் தோல்வியடையவில்லை...’’ இடைமறித்தான் கரிகாலன். ‘‘இப்படித்தான் நீங்கள் பூசி மெழுகப் போகிறீர்கள் என்பதும், இதே வாசகத்தை வரலாற்றில் பதிய வைக்க முற்படப் போகிறீர்கள் என்றும் எங்களுக்குத் தெரியும். இதை நம்புவதற்கு சாளுக்கியர்கள் ஒன்றும் மடையர்களல்ல! சீறி வந்த எங்கள் படைகளை எதிர்கொள்ளப் பயந்து தன் தலைநகரான காஞ்சிபுரத்தை விட்டு ஓடி ஒளிந்தவன்தான் உங்கள் பரமேஸ்வர வர்மன்! இந்த உண்மை வாதாபியின் கல்வெட்டில் நிரந்தரமாக இருக்கும்!’’ ‘‘எனில் அதை அழிக்கும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது...’’ நெஞ்சை நிமிர்த்திச் சொன்னான் கரிகாலன்.‘‘எப்படி? நரசிம்ம வர்மனைப் போல் வாதாபியை எரித்தா..?’’ கேட்ட ஸ்ரீராமபுண்ய வல்லபரின் கண்கள் சிவந்தன. ‘‘அன்று மகேந்திர வர்மனின் புதல்வன் செய்த காரியத்துக்குப் பழிக்குப் பழி வாங்கத்தான் எங்கள் மன்னர் விக்கிரமாதித்தர் புறப்பட்டிருக்கிறார். அவர் தலைமையில் ஒவ்வொரு சாளுக்கியனும் அணிதிரண்டிருக்கிறான். அதுவும் நாடி நரம்பெல்லாம் பல்லவர்களுக்கு பதிலடி தர வேண்டும் என்ற வெறியுடன்! ஓடி ஒளிந்திருக்கும் நீங்கள் படைகளைத் திரட்ட முற்படுவீர்கள் என்பதும், அதன் ஒரு பகுதி யாக எங்கோ மறைந்திருக்கும் பல்லவ இளவல் ராஜசிம்மனைத் தொடர்புகொள்ள முயல்வீர்கள் என்பதும் அரசியல் பாடம் படித்த அனைவரும் ஊகிக்கக் கூடியதுதான். இதற்காக ராஜசிம்மனின் அந்தரங்க நண்பனான நீ களத்தில் இறங்குவாய் என்பதும் எதிர்பார்த்ததுதான். அதனால்தான் உன்னைப் பின்தொடர கதம்ப இளவரசன் இரவிவர்மனை நியமித்தோம். எதிர்பாராத நேரத்தில் அவன் உங்களிடம் சிக்கிக் கொண்டான். மாற்றாக வேறு யாரையும் அனுப்பாமல், திமிங்கலத்தைப் பிடிக்க நானே களத்தில் குதித்தேன். உங்களைப் பின்தொடர்ந்தேன். சிறை செய்யும் நோக்கம் இல்லாததால் உங்களைக் கைது செய்யவில்லை. பார்வையை விட்டு விலகாமல் பார்த்துக்கொண்டேன். அதனாலேயே உங்கள் சரசங்களையும் காண நேரிட்டது! அதற்காக மன்னிப்பும், இந்த ஆயுதக் குவியல் இருக்கும் இடத்தைக் காண்பித்ததற்காக நன்றியும் தெரிவிக்கிறேன்! இதைச் சொல்வது ஸ்ரீராமபுண்ய வல்லபன் அல்ல! சாளுக்கிய தேசத்தின் போர் அமைச்சர்!’’ சொன்னவர் ‘‘யாரங்கே!’’ என்று குரல் கொடுத்தார். அடுத்த கணம் இரண்டிரண்டு பேராக வரிசையில் சாளுக்கிய வீரர்கள் வேல்களுடனும் வாட்களுடனும் சுரங்கத்துக்குள் நுழைந்து ஹிரண்ய வர்மர், கரிகாலன், சிவகாமி ஆகியோரைச் சுற்றி நின்றார்கள்.‘‘கரிகாலா! உன்னை சிறை செய்யும் நோக்கம் இல்லை. ஹிரண்ய வர்மா... கடல் கடந்த தேசத்தின் மன்னன் நீ! எங்கள் நாட்டு வணிகப் பொருட்களுக்கு உன் நாட்டில் சந்தை வேண்டும். அதற்கு உத்தரவாதம் கொடுக்கும் பட்சத்தில் உன்னையும் விடுவிக்கிறேன்! மூவரும் எவ்வித அச்சமும் இன்றி இங்கிருந்து வெளியேறலாம். இந்த ஆயுதங்கள் சாளுக்கியர்களுக்குச் சொந்தமானது. இனி இதை எங்கள் வீரர்கள் பாதுகாப்பார்கள்!’’அறிவித்த ஸ்ரீராமபுண்ய வல்லபர், பழையபடி கரிகாலனை நெருங்கி அவன் செவியில் முணுமுணுத்தார். ‘‘கதம்ப இளவரசன் எச்சரித்தும், ஹிரண்ய வர்மன் எடுத்துச் சொல்லியும் சிவகாமியை நீ ஏன் சந்தேகப்படாமல் இருக்கிறாய் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது! அது வயதின் கோளாறு அல்ல. இயற்கையின் விதி! பெண்ணைப் படைத்ததே ஆணுக்கு இன்பம் அளிக்கத்தானே! இதைத் தவிர வேறெந்தப் பணியைத்தான் பெண்களால் மேற்கொள்ள முடியும், சொல்! அந்த மகிழ்ச்சியை உனக்கும் வழங்குகிறேன். பூரணமாக நீயும் அனுபவி. உன்னுடனேயே சிவகாமியை அழைத்துச் செல்!’’ என்றபடி கண்சிமிட்டினார். தன் தோளுடன் ஒட்டியிருந்த சிவகாமியின் தோள்கள் ஸ்ரீராமபுண்ய வல்லபர் பேசப் பேச கடினப்பட்டதை உணர்ந்த கரிகாலன், அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிந்திருந்தான். அதுவேதான் சாளுக்கிய போர் அமைச்சர் கண்சிமிட்டி முடித்ததும் அரங்கேறியது. ஸ்ரீராமபுண்ய வல்லபர் மறைந்திருந்து கண்டது சிவகாமியின் சிருங்கார ரசத்தைத்தான். ஆனால், அவளுக்குள் ரவுத்திர ரசமும் இரண்டறக் கலந்திருக்கிறது என்பதை கரிகாலன் மட்டும்தானே அறிவான்..! அவன் உணர்ந்ததை அப்போது அங்கிருந்தவர்களுக்கு சிவகாமி வெளிப்படுத்தினாள். என்ன ஏது என்று மற்றவர்கள் சுதாரிப்பதற்குள் குனிந்து வளைந்து உயர்ந்து பாய்ந்து சென்றவள், குவிக்கப்பட்டிருந்த நாக விஷங்கள் தோய்ந்த வாட்களின் குவியலில் இருந்து ஒன்றை லாவகமாக உருவினாள். இரண்டிரண்டு பேராக நின்றிருந்த சாளுக்கிய வீரர்கள் நிலைமை புரிந்து தங்கள் வாட்களை உயர்த்தி அவளை எதிர்கொள்வதற்குள் தன் தாக்குதலை மேற்கொண்டாள். முன்னால் நின்றிருந்த இரு சாளுக்கிய வீரர்களும் பிரேதமாக தரையில் விழுந்தார்கள். அவர்கள் வயிற்றில் எப்போது தன் கரத்தில் இருந்த வாளை சிவகாமி பாய்ச்சினாள்..? அங்கிருந்த வீரர்களுக்குப் புரியவே இல்லை. இந்தச் சம்பவத்திலிருந்து அவர்கள் மீள்வதற்குள் இரண்டாவது, மூன்றாவது வரிசையில் நின்றிருந்த சாளுக்கிய வீரர்களும் வெட்டுப்பட்ட மரமாகத் தரையில் சாய்ந்தார்கள்! அவ்வளவுதான், வரிசையும் ஒழுங்கும் வட்டமும் கலைந்தது. நிலை தடுமாறிய சாளுக்கிய வீரர்கள் என்ன செய்வது... பதில் தாக்குதல் எப்படி நடத்துவது... எனப் புரியாமல் விழித்தார்கள். ஒன்றிரண்டு பேர் அவசரப்பட்டு சிவகாமியைச் சூழ முற்பட்டார்கள். அப்போது அங்கிருந்த வாட்களின் குவியலில் அவர்களது உடல்கள் உராய்ந்தன. அவ்வளவுதான், நாக விஷங்கள் அவர்களது குருதியில் கலந்தன. இமைக்கும் பொழுதில் சடலமாக விழுந்தார்கள். வெறும் பெண்... சிருங்கார ரசத்துக்கு மட்டுமே உரியவள்... என்றெல்லாம் சிவகாமியைப் பற்றிச் சொன்ன ராமபுண்ய வல்லபர், நடப்பதை நம்ப முடியாமல் பார்த்தார். இந்தத் திகைப்பும் அதிர்ச்சியும் கரிகாலனுக்கு ஏற்படவே இல்லை. வாளை உயர்த்தியபடி சிவகாமி நின்றிருந்த கோலம் அவனுக்கு ஸ்ரீசக்ர நாயகியைத்தான் நினைவுபடுத்தியது. பிரம்மனின் அம்சமான பிராம்மணியாக; விஷ்ணுவின் சக்தியான வைஷ்ணவியாக; ருத்திரரின் சரிபாதியான மாஹேஸ்வரியாக; வேல்முருகனின் குமார சக்தியான கவுமாரியாக; இந்திரனுக்கு எல்லாமுமான ஐந்திரியாக... காட்சி தந்தாள். அதுமட்டுமா? வராக சக்தியானவள் வராக ரூபமுடையவளாக வராகியாகத் தோன்றினாள். மறுகணம் நிருதி சக்தியாக நாரசிம்மி யாக அச்சமூட்டினாள். தொடர்ந்து யம சக்தியான யாமியாக; வருண சக்தியான வாருணியாக; குபேர சக்தியான கவுபேரியாக... பலவாறு சாளுக்கிய வீரர்களைப் பந்தாடினாள். தரையில் விழுந்த பிணக் குவியல்களில் இருந்து குருதி ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. அந்த வெள்ளத்தில் மாமிசங்கள் சேறு போலவும், தலைமுடிகள் பாசி போலவும், வாட்களும் வேல்களும் அறுபட்ட கை, கால் உறுப்புகளும் மீன்களைப் போலவும் மிதந்தன. பிரமை பிடித்து நின்ற ஸ்ரீராமபுண்ய வல்லபரை நோக்கி கனல் கக்கும் கண்களுடன் வாளை உயர்த்தியபடி சிவகாமி நெருங்கினாள்... (தொடரும்) http://www.kungumam.co.in Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted August 24, 2018 தொடங்கியவர் Share Posted August 24, 2018 ரத்த மகுடம் பிரமாண்டமான சரித்திரத் தொடர் - 15 அந்த இடத்திலேயே ஸ்ரீ ராமபுண்ய வல்லபர் மடிந்தார் என்றுதான் அதுவரை நடந்ததை எல்லாம் திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்த ஹிரண்ய வர்மர் நினைத்தார்.கனல் கக்கும் கண்களுடன் வாளை உயர்த்தியபடி சாளுக்கிய போர் அமைச்சரை சிவகாமி நெருங்கியதை யார் கண்டாலும் அப்படிப்பட்ட முடிவுக்குத்தான் வருவார்கள்.ஆனால், உயர்த்திய வாளை ஸ்ரீ ராமபுண்ய வல்லபரின் மார்பிலோ தலையிலோ சிவகாமி இறக்கவில்லை. மாறாக, அவரது பின்னால் நின்றபடி தன் வாளின் நுனியை அவர் கழுத்தில் பதித்தாள். கணத்துக்கும் குறைவான நேரம் கரிகாலனின் நயனங்களைச் சந்தித்தாள். அதில் வெளிப்பட்ட செய்தி கரிகாலனுக்கு நன்றாகவே புரிந்தது. ‘கடந்த காலங்களில் எடுத்ததற்கெல்லாம் எதிராளியை வெட்ட முற்பட்டதுபோல் இம்முறை செய்யமாட்டேன். என்னைத் தடுத்து நிறுத்தும் பணியையும் உங்களுக்கு வழங்க மாட்டேன்...’‘‘ஆண்களுக்கு இன்பம் அளிக்க மட்டுமே பெண்கள் படைக்கப்படவில்லை என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்...’’ ஸ்ரீ ராமபுண்ய வல்லபரிடம் நிதானமாகச் சொன்னாள் சிவகாமி. ‘‘ஒட்டுமொத்தமாக பெண்களைத் தரக்குறைவாக நீங்கள் பேசியதாகத் தென்பட்டாலும் அது முழுக்க முழுக்க என்னைக் குறி வைத்தது என்பது பிறக்கவிருக்கும் சிசுவுக்கும் தெரியும். என்றாலும் உங்களை மரியாதையாக அழைக்கவும் நடத்தவுமே விரும்புகிறேன்! வயது மட்டுமே அதற்குக் காரணமல்ல. ஒரு தேசத்தின் அமைச்சர் பொறுப்பில் நீங்கள் இருப்பதே பிரதான காரணம். நீங்கள் வகிக்கும் பதவிக்கு உரிய மரியாதையை அளிக்கவேண்டியது பல்லவ மன்னரின் மகளாக நடத்தப்படும் இந்தப் ‘பெண்ணின்’ கடமை. அதிலிருந்து நழுவுவது பல்லவ நாட்டையே அவமதிப்பதற்குச் சமம். ஒருபோதும் அப்படிப்பட்ட செயலில் இறங்க மாட்டேன்...’’அழுத்தம்திருத்தமாகச் சொன்ன சிவகாமி, கடைசி வாக்கியத்தை உச்சரிக்கும்போது கரிகாலனை நோக்கினாள். இது தனக்காகச் சொல்லப்பட்டது என்பதை அவனும் உணர்ந்தான். ‘என்னைக் குறித்து யார் என்ன சொன்னாலும் நம்ப வேண்டாம். பல்லவ நாட்டுக்கு ஒருபோதும் நான் துரோகம் இழைக்க மாட்டேன்...’ ‘‘அளிக்கும் மரியாதையை ஏற்று நீங்கள் அமைதியாக இருப்பீர்கள் என நம்புகிறோம். மாறாக ஏதேனும் செய்ய முற்பட்டால் நாக விஷம் தோய்ந்த இந்த வாள்...’’ வாக்கியத்தை முடிக்காமல் ஸ்ரீ ராமபுண்ய வல்லபரின் தொண்டைக் குழியைத் தடவினாள்.அங்கிருந்த அனைவருக்குமே நிலைமை புரிந்தது. குறிப்பாக சாளுக்கிய போர் அமைச்சருக்கு. உடன் வந்த வீரர்களில் ஒருவர் கூட தன்னைக் காப்பாற்றும் நிலையில் இல்லை என்பதை உணர அவருக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. என்றாலும் ஒரு நம்பிக்கை இருந்தது. அது புன்முறுவலாகவும் வெளிப்பட்டது. கரிகாலனின் கருவிழிகளில் மிதந்த அக்காட்சியை ஸ்ரீ ராமபுண்ய வல்லபரின் பின்னால் நின்றிருந்த சிவகாமி கண்டாள். ஏளனச் சிரிப்பு அவள் முகத்தில் பூத்தது. இதன்பிறகு நடந்தது சாளுக்கிய போர் அமைச்சர் கனவிலும் நினைத்துப் பார்க்காதது.சிவகாமியின் ஒரு கரத்தில் இருந்த வாள், அவரது கழுத்தைத் தடவிக் கொண்டிருக்க... மறுகரத்தை இமைக்கும் பொழுதில் சாளுக்கிய போர் அமைச்சரின் இடுப்புக்கு கொண்டு வந்தாள். வேட்டியின் மடிப்பில் பதுங்கியிருந்த மூங்கில் குழலை லாவகமாக எடுத்து ஊதினாள்.மறுகணம் நூறுக்கும் மேற்பட்ட வராகங்கள் ஒருசேர குரல் கொடுப்பது போன்ற ஒலி பிறந்தது. இதனைத் தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட சாளுக்கிய வீரர்கள் ஈட்டிகளுடன் சுரங்கத்துக்குள் இறங்கினார்கள். கண் முன் விரிந்த காட்சியைக் கண்டு திகைத்து நின்றார்கள்!மாகாளியாக வாய்விட்டுச் சிரித்தாள் சிவகாமி. ‘‘நிச்சயம் வெளியில் கொஞ்சம் ஆட்களை நிறுத்தி வைத்திருப்பீர்கள் என்பதை ஊகித்தேன். எந்த போர் அமைச்சரும், தான் அழைத்து வரும் வீரர்களை பகுதி பகுதியாகப் பிரித்தே எதிரிகளைச் சுற்றி வளைக்க முற்படுவார் என்பது யுத்த தந்திரத்தின் பால பாடம். நீங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?!பதுங்கி இருக்கும் வீரர்களை நீங்கள் அழைக்கும் விதம் என்னவாக இருக்கும் என்பதை அறியவேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் ஒரு மூங்கில் குழாயை எடுத்து ஊதுவதுதான் சாளுக்கிய வீரர்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றம் என்பதை புலவர் தண்டி ஏற்கனவே சொல்லியிருக்கிறார்!’’ அலட்சியத்துடன் முன்னால் நின்ற சாளுக்கிய வீரர்களைப் பார்த்தாள். ‘‘கட்டளையிட்டால்தான் செய்வீர்களா? கையிலிருக்கும் ஈட்டிகளைத் தரையில் போடுங்கள். சிறிய தந்தையே... சுரங்கத்தின் ஈசான்ய மூலையில் கொடிகள் படர்ந்திருக்கின்றன. அக்கொடிகளை வெட்டி இந்த ஈட்டிகளை ஒன்றாகக் கட்டுங்கள். மீதிக் கொடியைக் கொண்டு இந்த வீரர்களின் கால்களைப் பிணையுங்கள்...’’கரிகாலனின் பார்வை சமிக்ஞையை ஏற்று சிவகாமியின் கட்டளையை ஹிரண்ய வர்மர் நிறைவேற்றினார்.இதற்குள் ஸ்ரீ ராமபுண்ய வல்லபரின் தோளில் இருந்த அங்கவஸ்திரத்தை எடுத்து சிவகாமி அவரது கைகளைப் பின்புறமாகக் கட்டினாள். இடுப்பு வேட்டி அவிழாமல் இருக்க அவர் கட்டியிருந்த சிறிய வஸ்திரத்தை அவிழ்த்து அவர் வாயில் அடைத்தவள், எல்லாவற்றையும் அசையாமல் பார்த்துக் கொண்டிருந்த கரிகாலனை நெருங்கினாள். அவளும் எதுவும் பேசவில்லை. அவனும் உரையாடலைத் தொடங்கவில்லை. இருவரது கண்களும் பல்வேறு விஷயங்களை அலசின; ஆராய்ந்தன. கனைப்புச் சத்தம் கேட்டு இருவரும் திரும்பினார்கள். ஹிரண்ய வர்மர் தன் பணியை முடித்திருந்தார்.அதுவரை அமைதியாக இருந்த கரிகாலன் இம்முறை அதைக் கலைத்தான். ‘‘பல்லவ நாட்டுக்கு மிகப்பெரிய உதவியைச் செய்திருக்கிறீர்கள். இதற்காக ஒவ்வொரு பல்லவ வீரனும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறான். இந்த ஆயுதங்களைப் பெற்று உரிய இடத்துக்குக் கொண்டு செல்லும் பொறுப்பை புலவர் தண்டி எங்களிடம் ஒப்படைக்கவில்லை. உங்களிடம் அவர் அப்படிக் கூறியிருந்தாலும் எங்களுக்கு இடப்பட்ட கட்டளை வேறு. அதை நிறைவேற்ற நாங்கள் புறப்படுகிறோம். எப்படியும் இன்னும் சிறிது நேரத்தில் புலவரால் அனுப்பப்பட்டவர்கள் இங்கு வருவார்கள். அவர்களிடம் ஆயுதங்களை நீங்கள் ஒப்படைக்கலாம்...’’‘‘நல்லது கரிகாலா! இவர்களை என்ன செய்வது?’’ ‘‘எதுவும் செய்ய வேண்டாம் மன்னா! ஆயுதங்கள் அப்புறப்படுத்தப்பட்டதும் சுரங்கத்தை மூடாமல் சென்று விடுங்கள். எப்படியும் சாளுக்கிய போர் அமைச்சரைத் தேடி வீரர்கள் வருவார்கள். அவர்கள் இவர்களைக் காப்பாற்றி அழைத்துச் செல்வார்கள்...’’சொன்ன கரிகாலன் ஹிரண்ய வர்மரை நெருங்கி வணங்கினான்.அவனை அள்ளி அணைத்தவர், சிவகாமியைப் பார்த்தபடி அவனிடம் சொன்னார். ‘‘வெற்றி மங்கை எப்போதும் உன் பக்கத்தில் இருக்கிறாள். செல்லும் காரியம் மட்டுமல்ல... செய்யப் போகும் காரியங்களிலும் ஜெயம் உனக்கே..!’’ தலையசைத்துவிட்டு கரிகாலன் தள்ளி நின்றான். புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக தன் சிறிய தந்தையின் காலைத் தொட்டு சிவகாமி நமஸ்கரித்தாள்.அவளது தோள்களைத் தொட்டு ஹிரண்ய வர்மர் எழுப்பினார். ‘‘ஸ்ரீ சக்கர நாயகியை உன் உருவில் காண்கிறேன் சிவகாமி! ஆண்கள் கூட துணிந்து செய்யத் தயங்கும் விஷயங்களை அநாவசியமாகச் செய்கிறாய். உன்னைப் போன்ற வீராங்கனைகள் இருக்கும் வரை பல்லவ நாடு யாரிடமும் அடிமைப்பட்டு விடாது. சென்று வென்று வா...’’ இருவருக்கும் விடைகொடுத்தபோது அவரையும் அறியாமல் அவர் கண்கள் கலங்கின.கட்டப்பட்ட நிலையில் இருந்த சாளுக்கிய போர் அமைச்சரிடம் கரிகாலன் சென்றான். ‘‘உங்கள் வீரர்களை அழித்ததும், உங்களுக்குப் பாதுகாப்பாக வந்தவர்களை இப்படிக் கட்டி உருட்டியதும் நானல்ல. வீரர் கூட்டமும் அல்ல. மாறாக, ‘ஆண்களுக்கு இன்பம் அளிக்கத்தானே பெண்களைப் படைத்திருக்கிறான்..?’ என உங்களால் ஏளனமாகச் சுட்டப்பட்ட ஒரு பெண்தான் மகத்தான் இந்தச் செயலை தன்னந்தனியாகச் செய்திருக்கிறாள்! இதுதான் பல்லவ வீரம். இதுதான் தமிழகப் பெண்களின் உரம். மீண்டும் நாம் யுத்தகளத்தில் சந்திப்போம்!’’ சொல்லிவிட்டு விடுவிடுவென்று வெளியேறினான். சிவகாமி எதுவும் சொல்லாமல் இரு வாட்களை எடுத்துக் கொண்டு ஸ்ரீ ராமபுண்ய வல்லபருக்கு ஒரு புன்னகையை மட்டும் பரிசாக வழங்கிவிட்டு கரிகாலனைத் தொடர்ந்தாள்.இருவரும் சுரங்கத்தை விட்டு வெளியே வந்தார்கள். ஒரு வாளை அவனிடம் கொடுத்தாள். பெற்று தன் இடுப்பில் அதைக் கட்டிக் கொண்ட கரிகாலன் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு தன் உதட்டைக் குவித்து விநோதமான ஒலி ஒன்றை எழுப்பினான். இரு புரவிகள் புதர்களை விலக்கிவிட்டு அவர்கள் அருகில் வந்தன.இருவருமே தத்தம் குதிரைகளை நெருங்கினார்கள். ஏறவில்லை. மாறாக அதன் நெற்றியை முத்தமிட்டார்கள். இடுப்பைத் தடவிக் கொடுத்தார்கள். கால்களைப் பிடித்துவிட்டார்கள். புரவிகள் இரண்டும் கூச்சத்தில் நெளிந்து அவர்களது கன்னங்களைத் தடவி தங்கள் அன்பை வெளிப்படுத்தின.அதன்பிறகு இருவரும் தாமதிக்கவில்லை. தாவி தத்தம் புரவிகளில் ஏறினார்கள்.‘‘வட திசையா?’’ சிவகாமி கேட்டாள்.கரிகாலன் பதிலொன்றும் சொல்லவில்லை.‘‘நம்பிக்கை இல்லையென்றால் சொல்ல வேண்டாம். முன்னால் செல்லுங்கள். பின்னால் வருகிறேன்!’’‘‘வடமேற்குத் திசை!’’ சட்டென்று கரிகாலன் பதிலளித்தான்.‘‘நல்லது! முன்னால் செல்கிறேன். பின்தொடர்ந்து வாருங்கள். என்னைக் கண்காணிக்கவும் வசதியாக இருக்கும்!’’ சொன்ன சிவகாமி குனிந்து அசுவத்தின் செவியில் எதையோ முணுமுணுத்தாள். புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக அதுவும் தன் பிடரியைக் குலுக்கியது.நிதானமான வேகத்துடன் இரு அசுவசாஸ்திரிகளும் ஒருவர் பின் ஒருவராகப் பறந்தார்கள். புரவியிடம் தென்பட்ட நிதானம் சிவகாமியின் உள்ளத்தில் இல்லை. மனமென்னும் அக்னிக் குஞ்சில் அவள் தேகம் தகித்துக் கொண்டிருந்தது. கரிகாலன் இன்னமும் தன்னை நம்பவில்லை என்ற உண்மை அவளை எரித்து எரித்துச் சாம்பலாக்கியது. எந்தவொரு பெண்ணும் நம்பிக்கைக்குரிய ஆணிடம்தான் தன்னையே ஒப்படைப்பாள். வாழ்க்கைச் சூழல் காரணமாக பரத்தைத் தொழிலை மேற்கொள்பவளாக அவள் இருந்தாலும் அவளது நேசத்துக்கு உரியவன் என ஒருவன் இருப்பான். அவனிடம் மட்டுமே அவளால் பூரணமாக ஒன்ற முடியும்.அப்படியொரு தருணம் தங்கள் இருவரது வாழ்க்கையிலும் வந்து போயிருக்கிறது. ஹிரண்ய வர்மர் மட்டும் வராமல் இருந்திருந்தால் கரை உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்திருக்கும். இதை கரிகாலன் உணரவில்லை என்றாலும் அவன் தேகம் புரிந்து கொண்டிருக்கும். பூரணத்தை உணரும் சக்தியற்றதா அவன் உடல்..? அப்படியிருந்தும் சந்தேகத்தின் மேகம் அவனைச் சூழ்ந்திருக்கிறதே...நினைக்க நினைக்க பிரளயகாலத்தின் அலைகளாக அவள் மனம் சீறியது. இந்த ஆவேசம்தான் சற்று முன் சுரங்கத்தில் ருத்ர தாண்டவம் நடத்தியது. அப்படியும் அடங்காமல் இப்போதும் பொங்குகிறது. ஓர் அணைப்பு... ‘பரிபூரணமாக உன்னை நம்புகிறேன்...’ என்பதை வெளிக்காட்டும் பார்வை... போதும். பிரளயம் அடங்கிவிடும். ஆனால், நடக்குமா..?சிவகாமி நினைத்து முடிப்பதற்குள் கரிகாலனின் புரவி அவளை அணைத்தாற்போல் மறித்து நின்றது.பரவசத்துடன் அவனை ஏறிட்டாள். எதிர்பார்த்தது எதிரில் இருந்த நயனங்களில் வழியவில்லை. ஏமாற்றம் மூர்க்கத்தை அதிகரித்தது. தன் கால்களால் குதிரையைத் தட்டி முன்செல்ல கட்டளையிட்டாள். ‘‘பொறு...’’ அவளுக்கு மட்டும் கேட்கும் விதத்தில் முணுமுணுத்த கரிகாலன், அவள் புரவியின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்தான்.‘என்ன..?’’பதில் சொல்லாமல் அண்ணாந்து பார்த்தான்.சிவகாமியின் பார்வையும் மேல்நோக்கிச் சென்றது.பறவைகள் படபடப்புடன் கிறீச்சிட்டபடி அங்கும் இங்கும் பறந்தன.சட்டென சிவகாமிக்கு விபரீதம் புரிந்தது. இடுப்பிலிருந்து வாளை உருவினாள்.ஜாடை மூலம் அவளை முன்னால் செல்லும்படி கரிகாலன் செய்கை செய்தான்.முன்பு போலவே அதே நிதானத்துடன் தன் குதிரையைச் செலுத்தினாள். கருவிழிகளில் எச்சரிக்கை குடிகொண்டது. சருகுகளை மிதித்தபடி கரிகாலன் அமர்ந்திருக்கும் புரவியின் குளம்போசையைக் கேட்டாள். மெல்ல மெல்ல குளம்புகளின் ஒலி அதிகரித்தது. எனில், நான்குக்கும் மேற்பட்ட புரவிகள் தங்களைப் பின்தொடர்கின்றன. கணக்கிட்ட சிவகாமி, தான் அமர்ந்திருக்கும் புரவியின் பிடரி ரோமம் கொஞ்சம் கொஞ்சமாகக் குத்திட்டு நிற்பதைக் கண்டாள்.அடுத்த கணம், தன் வாளை வலதும் இடதுமாகச் சுழற்றினாள்.சாளுக்கிய வீரன் ஒருவன் வெட்டுப்பட்ட தலையுடன் அந்தரத்தில் பறந்தான்! (தொடரும்) - கே.என்.சிவராமன் http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14114&id1=6&issue=20180824 Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted August 31, 2018 தொடங்கியவர் Share Posted August 31, 2018 ரத்த மகுடம் : பிரமாண்டமான சரித்திரத் தொடர்
Recommended Posts