Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

கே.என்.சிவராமன் -31

ஓவியம்: ஸ்யாம்


துடிக்கும் இதயத்துடன் குரலின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு கரிகாலன் கதவைத் திறந்தான். வலது காலை எடுத்து வைத்து அறைக்குள்  நுழைந்தான்.தன்னைத் தொடர்ந்து சிவகாமியும் அறைக்குள் வந்ததையோ அல்லது அந்த அறையின் உட்புற அழகையோ கவனித்து ரசிக்கும்  நிலையில் அவன் இல்லை.பார்வை ஒரே இடத்தில்தான் நிலைகுத்தி நின்றது. அந்த இடமும் அவனை இப்படியும் அப்படியும்  அசையவிடாமல் கட்டிப்போட்டது. இத்தனைக்கும் அது வெறும் நாற்காலிதான். ஆனால், சாதாரண இருக்கை அல்ல. சிம்மாசனம்!வியப்பும் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் சந்தேகமும் ஒருசேர கரிகாலன் மனதில் எழுந்தன. பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் பெரு வணிகர்  மாளிகையில் தங்கத் தகடுகள் பொருத்தப்பட்ட இருக்கைகளும் அதில் வைர வைடூரிய கற்கள் பொருத்தப்பட்டும் இருக்கலாம்; இருக்கவும்  செய்தது. அவனே பலமுறை அதைப் பார்த்திருக்கிறான். அதில் அமர்ந்தபடிதான் பெருவணிகர் அவனுடன் பேசவும் செய்திருக்கிறார். 
13.jpg
ஆனால், சிம்மாசனம்..? வாய்ப்பே இல்லை. பல்லவ நாட்டின் செல்வ வளத்தை தீர்மானிப்பவராகவும் அதிகரிப்பவராகவுமே இருந்தாலும்  மன்னருக்கு, தான் சமம் அல்ல என்பதை எப்போதுமே பெரு வணிகர் நினைவில் வைத்திருப்பார். அதனாலேயே அரண்மனையை  அலங்கரிக்கும் பொருட்களையோ மன்னர் பயன்படுத்தும் சாதனங்களையோ தன் மாளிகையில் அவர் வைத்துக் கொள்ளவும் இல்லை;  பயன்படுத்தவுமில்லை. அப்படியே விலையுயர்ந்த பொருட்கள் தனக்குக் கிடைத்தாலும் அதை மன்னருக்கே காணிக்கையாகச் செலுத்துவார்.
அப்படிப்பட்ட பெரு வணிகரின் மாளிகையில், அதுவும் அவரது அந்தரங்க அறையில் மன்னர் அமரும் சிம்மாசனத்துக்கு சமமான இருக்கை  எப்படி வந்தது..? ஒருவேளை இங்கு சாளுக்கிய மன்னர் வருகை தரலாம் என்பதற்காக சிம்மாசனத்தின் மாதிரியில் ஓர் இருக்கையை தயார்  செய்திருக்கலாம். அதற்காக அதில் மன்னராக இல்லாதவர் எப்படி அமரலாம்..? 

‘‘என்ன பார்க்கிறாய் கரிகாலா..?’’ பிசிறில்லாமல் வாளின் கூர்மையுடன் ஒலித்த குரல் கரிகாலனின் சிந்தனையை அறுத்து எறிந்தது.  நிமிர்ந்து குரலுக்கு உரியவரை ஏறிட்டவனின் கண்களில் மரியாதையும் பக்தியும் குடிபுகுந்தது. எழுந்த கேள்விகள், கேட்க நினைத்த  வினாக்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் கரைந்தன.தன்னையும் மீறி ஓடோடிச் சென்று சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தவரின்  முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தான். ‘‘எழுந்திரு குழந்தாய்...’’ பாசத்துடன் குரல் ஒலித்தது.கட்டுப்பட்டு எழுந்தவன் முட்டி  போட்டு பாதங்களைத் தொட்டு வணங்கினான். குரலுக்கு உரியவர் அவன் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார். மீண்டும் பாதங்களைத்  தொட்டு தன் கண்களில் ஒற்றிக் கொண்டு பவ்யமாக எழுந்தவன்,குரலுக்கு உரியவரின் முன்னால் கைகட்டி நின்றான்.

இதுவரை கரிகாலனுக்குப் பின்னால் நின்றிருந்த சிவகாமி, இப்போது அவனைக் கடந்து சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தவரின் அருகில்  நின்றாள். தன் கைகளால் அமர்ந்திருந்தவரின் தோளைப் பற்றினாள்! பற்றிய கரங்களை குரலுக்கு உரியவர் வெகு பிரியத்துடன் பிடித்தார்.இதனைக் கண்ட கரிகாலனின் கண்கள் அகல விரிந்தன.‘‘என்ன பார்க்கிறாய் கரிகாலா..?’’ புன்னகையைக் கசியவிட்ட குரலுக்கு உரியவரை  அந்தக் கணத்தில் மீண்டும் உச்சி முதல் உள்ளங்கால் வரை மரியாதையுடன் பார்த்தான்.அந்த சிம்மாசனம் அவருக்காகவே தயாரிக்கப்பட்டது  போல் நீக்கமற அதில் அமர்ந்திருந்தார். இடது காலை மடித்தும் வலது காலை உயர்த்தி குத்துக்காலிட்டும் சிம்மாசனத்தில் வைத்திருந்தார்.  கம்பீரம் என்றால் அப்படியொரு கம்பீரம். எழுந்து நின்றால் நிச்சயமாக சராசரியான பெண்களைவிட அதிக உயரம் இருப்பார். அந்த  உயரத்துக்கு ஏற்ற உடல்வாகு. 

அடர் சிவப்பும் இல்லாமல் மென் சிவப்பும் இல்லாமல் மத்திம சிவப்புப் புடவையை அணிந்திருந்தார். தலைக் கேசம் முடிச்சிடப்பட்டிருந்தது.  நெற்றிச்சுட்டியும் கழுத்தில் தொங்கிய நகைகளும் தங்கள் பிறவிப் பயனை அடைந்தன. அவர் அசையும்போதெல்லாம் அசைந்து தங்கள்  மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. புருவ மத்தியில் வட்டமாகத் தீட்டப்பட்டிருந்த திலகமும் நாசியில் ஜொலித்த வைர மூக்குத்தியும் அவரது  அந்தஸ்தை எதிராளிக்கு பறைசாற்றின.  இத்தனையும் மீறி அந்த முகத்தில் ஜொலித்த உறுதியும் கண்களில் வழிந்த அன்பும் கரிகாலனை  நெகிழ வைத்தன. ‘‘தங்களை இங்கு எதிர்பார்க்கவில்லை தாயே...’’ கண்கள் பனிக்க பதில் சொன்னான்.‘‘நானும்தான்!’’ கலகலவென்று  சிரித்தபடி சொன்ன சிவகாமி, குனிந்து அந்த அம்மையாரின் முகத்தைத் தடவினாள். ‘‘உங்கள் பிள்ளையுடன் பேசிக்கொண்டிருங்கள்... அவர்  களைத்திருக்கிறார்! பருகுவதற்கு பழரசம் கொண்டு வருகிறேன்...’’ கரிகாலனைப் பார்த்து கண்சிமிட்டிவிட்டு உட்புறமாக விரைந்தாள்.

அவள் செல்வதையே கண்கள் இடுங்க கரிகாலன் பார்த்தான். காஞ்சிக்கு புதியதாக வந்திருப்பவள் என பல்லவர்களின் புரவிப்  படைத்தளபதியான வல்லபனால் தன்னிடம் அறிமுகம் செய்யப்பட்டு  முழுதாக ஒரு திங்கள்கூட ஆகவில்லை. இடைப்பட்ட நாட்களில்  இருவரும் தனித்திருந்த வேளைகளிலும் அவரவர்களின் பின்புலம் குறித்து உரையாடியதில்லை. அப்படியிருக்க தன் பெரிய தாயாரை  அவளுக்கு எப்படித் தெரியும்..? சிவகாமியின் செயல் அவனுக்கு சந்தேகத்தைக் கிளப்பியது என்றால் அடுத்து ஒலித்த பெரிய தாயாரின் குரல்  அவனை அதிர்ச்சியின் விளிம்புக்கே அழைத்துச் சென்றது.‘‘சரியான பெண்ணைத்தான் பிடித்திருக்கிறாய்! நம் குடும்பத்துக்கு ஏற்ற மணமகள்!  உன் தந்தையும் தாயும் தேடியிருந்தால்கூட இப்படிப்பட்ட வாழ்க்கைத் துணை உனக்குக் கிடைத்திருக்காது!’’ துள்ளியபடி ஓடிய  சிவகாமியைப் பார்த்தபடியே சொல்லிவிட்டு அவனை நோக்கித் திரும்பினார்.

பிரமை பிடித்தபடி கரிகாலன் நின்றான். பெரிய தாயார் என்ன சொல்கிறார்..? ‘‘தாயே...’’ குழப்பத்துடன் அவரது கண்களை நோக்கினான்.‘‘சிவகாமி எல்லாவற்றையும் என்னிடம் சொல்லிவிட்டாள்!’’‘‘எல்லாவற்றையும் என்றால்..?’’ கரிகாலனுக்கு சொற்கள் வர மறுத்தன.‘‘மல்லைக் கடற்கரையில் நீங்கள் சந்தித்தது முதல் காபாலிகனின் ஓலையைக் கண்டு காஞ்சி மாநகரத்துக்குள் நீங்கள் நுழைந்தது வரை!’’‘‘எப்போது தாயே..?’’‘‘சில நாழிகைகளுக்கு முன்..?’’கரிகாலன் பேச்சிழந்து நின்றான். அதைக் கண்டும் காணாததுபோல் புன்னகை பூக்க  அவனது பெரிய தாயார் தன் உரையாடலைத் தொடர்ந்தார். ‘‘சத்திரத்தில் அவளைத் தங்கச் சொல்லியிருந்தாயாமே! ஏதோ ஒரு கடிகை  மாணவன்... பார்க்க பாலகன் போன்று இருந்தானாம்... அவன் வந்து உனக்கு ஆபத்து என்றதும் பதறிவிட்டாளாம். இந்தப் பக்கமாக நீ  வருவாய் என்று அவன் சொன்னதும் ஓடோடி வந்தாளாம்...’’‘‘நீங்கள் அவளைச் சந்தித்தது..?’’
 

‘‘இந்த மாளிகை வாயிலில். கோயிலுக்குச் சென்றுவிட்டு அப்போதுதான் திரும்பியிருந்தேன். நிலைகொள்ளாமல் தவித்துக்  கொண்டிருந்தவளை அழைத்து என்னவென்று விசாரித்தேன். உன்னைப் போலவே என் முகத்தைக் கண்டதும் எல்லாவற்றையும்  கொட்டிவிட்டாள்! அவள் சொன்ன அங்க அடையாளங்கள் உன் தோற்றத்துக்கு பொருந்தி வந்தன. உன்னைத்தான் குறிப்பிடுகிறாள்  என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை! 
’இமைக்காமல் தன் பெரிய தாயாரையே கரிகாலன் பார்த்தான். பெற்றவர்  இல்லை. ஆனால், பெற்றவருக்கும் மேலாக பாலூட்டி சீராட்டி வளர்த்தவர். அதனாலேயே இவரையும் சரி, பெரிய தந்தையையும் சரி,  ஒருபோதும் அவன் அந்நியராகக் கருதியதில்லை. நினைவு தெரிந்த நாள் முதல் ‘தாயே... தந்தையே...’ என்றுதான் அழைத்து வருகிறான்.  எந்தக் காரியம் செய்தாலும் பெரிய தாயாரின் ஒப்புதலைப் பெற்றபிறகே தன் தந்தை செய்வார். 


அதையே தனயனும் கடைப்பிடிக்கிறான். தங்களுக்கு குழந்தை இல்லையே என அவர்களும் வருத்தப்பட்டதில்லை. கரிகாலனும்  அப்படியொரு நினைப்பு அவர்களுக்கு வர அனுமதித்ததில்லை.எப்போதும் அன்பையும் தன் நலத்தையும் மட்டுமே பெரிய தாயார் பெரியதாக  நினைப்பார் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். அதை அணு அணுவாக அனுபவித்தும் வருகிறான்.ஆனால், முதல்முறையாக அந்த  அறையில் அவனுக்கு பலவிதமானஐயங்கள் எழுந்தன. கோர்வையாக பெரிய தாயார் நடந்தவற்றைச் சொன்னாலும் பல இடங்களில் அவை  முரண்பட்டன. உறையூரில் இருக்க வேண்டியவர் காஞ்சிக்கு எப்போது வந்தார்... ஏன் வந்திருக்கிறார்... பெரிய தந்தையும், தந்தையும் என்ன  செய்கிறார்கள்... வந்தவர் எப்படி பெரும் வணிகரின் மாளிகையில் தங்குகிறார்... கதவைத் திறந்து தன்னை வரவேற்ற சாளுக்கிய போர்  அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபருக்கும் தன் பெரிய தாயாருக்கும் என்ன தொடர்பு... குறிப்பாக சிம்மாசனத்தில் அமரும் அதிகாரம்... 

பல்லவர்களின் தோழர்களாக, அவர்களது நலம் விரும்பிகளாக தலைமுறை தலைமுறையாக தாங்கள் வாழ்ந்து வருகையில் திடீரென  சாளுக்கியர்களுடன் நெருக்கம் ஏன்..? எப்போதையும் விட இப்போதல்லவா பல்லவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்... இழந்த  நாட்டை அவர்கள் மீட்க உதவ வேண்டியது நம் கடமையல்லவா..?  கேள்விகள் விழுதாகி மரமாகி தோப்பாகப் படர்ந்தன. கரிகாலனின்  உடல் நடுங்கியது. சிவகாமியின் மீதான சந்தேகம் தன் பெரிய தாயாரின் மீதும் திரும்புவதை எந்தநோக்கில் எடுத்துக்கொள்வது..? இது  தேசத் துரோகமா அல்லது தேச நலனா..?

‘‘என்ன கரிகாலா அமைதியாகி விட்டாய்..?’’கேட்ட பெரிய தாயாருக்கு பதில் சொல்வதற்காக கரிகாலன் வாயைத் திறந்தான். அதற்குள்  வேறொரு இடத்திலிருந்து சொற்கள் வந்து விழுந்தன.‘‘சிவகாமி எப்போது வருவாள் என ஆவலுடன் உங்கள் மகன் எதிர்பார்க்கிறான்...  அப்படித்தானே..?’’ கேட்டபடியே உள்ளறையிலிருந்து முகமெல்லாம் மலர்ச்சியுடன் கம்பீரமாக நடந்து வந்த ஸ்ரீராமபுண்ய வல்லபர்,  கரிகாலனின் தோளைத் தட்டி கண்சிமிட்டிவிட்டு சிம்மாசனத்துக்கு அருகில், ஒரு படி கீழே போடப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்தார்.‘‘சின்னஞ்சிறுசுகள் அல்லவா... அப்படித்தான் இருக்கும்...’’ சாளுக்கிய அமைச்சரைப் பார்த்து புன்னகைத்துவிட்டு கரிகாலனை ஏறிட்டார்  பெரிய தாயார்.கரிகாலன் சிலையென நின்றான்.மடி கனத்தது. அதிலிருந்த சுவடிக் கட்டுகளும்தான்!
 

(தொடரும்) 

 

 

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14629&id1=6&issue=20181214

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 171
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ரத்த மகுடம்- 32

.

பிரமாண்டமான சரித்திரத் தொடர்

புறச்சூழலைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் தனி மனிதனுக்கு இல்லாதபோது வெறும் பார்வையாளனாக நிற்பதும், நடப்பதற்கு ஏற்ப தன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதும்தானே அழகு; நல்லது..?கரிகாலனும் அப்படித்தான் தன் இருப்பை தக்க வைக்க அப்போது முயற்சித்தான். நான்கு நயனங்கள் தன்னை அங்குலம் அங்குலமாக அலசுவதை அவனால் உணரமுடிந்தது. முகத்தைக் கல்லாக்கி எந்த அறிகுறியும் அதில் தெரியாதபடி சிலையாக நின்றான்


27.jpg

நிலவிய அமைதியை ஸ்ரீராமபுண்ய வல்லபரே கிழித்தார். ‘‘அதென்ன உன் இடுப்பில் ஏதோ கட்டு இருக்கிறது..? உன் மனம் கவர்ந்த சிவகாமிக்காகக் கொண்டு வந்தாயா..? அதை நானும் உன் பெரிய தாயாரும்...’’‘‘தாயார்...’’ அழுத்தத்துடன் கரிகாலன் இடைமறித்தான்.கேட்ட அவன் பெரிய தாயாரின் கண்கள் கணத்துக்கும் குறைவான பொழுதில் கலங்கி சரியாகின.‘‘தவறி வந்துவிட்டது...

 

வயதில் பெரியவனாக இருந்தாலும் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன் கரிகாலா!’’ கண்களில் விஷமம் பரவ பெயருக்கு தலைதாழ்த்திய சாளுக்கிய போர் அமைச்சர், ‘‘அந்தக் கட்டை நாங்களும் பார்க்கலாம் அல்லவா..?’’ என்றார். அதில் ‘எடு’ என்ற கட்டளை ஊடுருவி இருந்ததை கரிகாலனால் உணர முடிந்தது.

சீற்றத்துடன் அவரை ஏறிட்டவன், சட்டென்று தடுமாறினான். காரணம் அடுத்து ஒலித்த பெரிய தாயாரின் குரல்.‘‘அட... ஆமாம்... இப்போதுதான் கவனிக்கிறேன்... அது என்ன கரிகாலா..?’’ கட்டளையாக இல்லாமல், ‘கொஞ்சம் காட்டு... நானும் பார்க்கிறேன்...’ என்ற தொனியே அதில் நிரம்பி வழிந்தது.மறுக்கவே முடியாது. இதுவரை இப்படி ஆவல் பொங்க எதையுமே தன்னிடம் பெரிய தாயார் கேட்டதில்லை. எவ்வித உள்முக ஆலோசனைக்கும் செல்லாமல் உடனே தன் இடுப்பில் இருந்த சுவடிக் கட்டுகளை எடுத்து அவரிடம் கொடுத்துவிட்டு பழையபடி பின்னோக்கி வந்து நின்றான்.

புருவங்கள் விரிய பெரிய தாயார் அதை இப்படியும் அப்படியுமாக புரட்டுவதையும், அதிசயத்தை கண்டாற் போல் தன் முகத்தை வைத்துக்கொண்டு ராமபுண்ய வல்லபர் இருக்கையிலிருந்து தன் இடுப்பை சற்றே உயர்த்தி அதைப் பார்ப்பதையும் மனதுக்குள் குறித்துக்கொண்டான். குறிப்பாக சாளுக்கிய போர் அமைச்சரின் கண்களில் பரவிய எச்சரிக்கையை.  

கரிகாலனின் உள்ளுணர்வு கூர்மையடைந்தது. அதற்கு வலு சேர்ப்பது போல் ராமபுண்ய வல்லபர், சற்றே தன் உடலைச் சாய்த்து அமர்ந்தார். அவரது அந்த செய்கை பட்டவர்த்தனமாக அவனுக்கு எல்லாவற்றையும் உணர்த்தியது.அந்த இடம் அவனுக்கு பரீட்சயமான அறை. எனவே உள்ளறையின் கதவு தனக்குப் பின்னால் இருப்பதையும் அங்கிருந்து யாரோ இங்கு நடப்பவற்றை கவனிக்கிறார்கள் என்பதையும் அந்த நபரும் இந்த சுவடிக் கட்டுகளைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே தன் உடலை வளைக்கிறார் என்பதையும் புரிந்துகொண்டான். 

போலவே அந்த நபர் யார் என்பதையும். சிவகாமி! அவளைத் தவிர வேறு யார் அங்கு இருக்கப்போகிறார்கள்..! ஸ்ரீராமபுண்ய வல்லபரின் கைப்பாவைதான் அவள் என்பதை இந்த மாளிகையின் கதவை அவர் திறந்தபோதே தெரிந்துவிட்டதே... என்றாலும் ஒரு விஷயம் மட்டும் கரிகாலனுக்குப் புரியவில்லை. 

தன் இடுப்பில் இருப்பது சுவடிக்கட்டு என்பதை சிவகாமி நன்றாகவே அறிவாள். போலவே அதில் அவளைக் குறித்த ரகசியங்கள்தான் அடங்கியிருக்கின்றன என்பதையும். அப்படியிருந்தும் எதற்காக சாளுக்கிய போர் அமைச்சரும் சிவகாமியும் இந்த சுவடிக்கட்டில் ஆர்வம் காட்டுகிறார்கள்..? ஒருவேளை கடிகையில் அந்த பாலகன் தன்னிடம் உணர்த்த வந்தது வேறு ரகசியத்தையா..?

வேர்விட்ட வினாக்களை பெரிய தாயாரின் குரல் தடுத்து நிறுத்தியது. ‘‘இவை அர்த்த சாஸ்திரத்தின் பகுதிகள் அல்லவா..? இதையா சிவகாமிக்காக எடுத்து வந்தாய்..?’’கரிகாலன் புன்னகைத்தான். தனக்குச் சாதகமாக இதைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தான். எனவே ஸ்ரீராமபுண்ய வல்லபர் உரையாடலில் கலக்க அவன் இடம்தரவில்லை.  

‘‘தாயே! இதை சிவகாமிக்காக எடுத்து வந்ததாக நான் சொல்லவில்லையே... சாளுக்கிய போர் அமைச்சராகத்தானே அப்படியொரு முடிவுக்கு வந்தார்...’’ சொன்னதுடன் நிற்காமல் இரண்டடி முன்னால் நகர்ந்து பெரிய தாயாரிடம் இருந்து அந்த சுவடிக் கட்டை திரும்பப் பெற்று தன் இடுப்பில் பழையபடி வைத்துக்கொண்டான்!

‘‘ஒருவேளை அப்படியிருக்குமோ என்று நினைத்துக் கேட்டேன்...’’ சாளுக்கிய போர் அமைச்சர் புன்னகைத்தார்‘‘நினைப்பதெல்லாம் நடப்பதில்லை என்பதை இப்பொழுது புரிந்துகொண்டிருப்பீர்களே..!’’ கரிகாலன் தலைதாழ்த்தி கண்களால் சிரித்தான்.‘‘நினைப்பதை நடத்திக் காட்டுவதுதானே வீரனுக்கு அழகு!’’ தன் இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்தார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்.

‘‘எனில் நடத்திக் காட்டலாமே..!’’‘‘அதுதானே அரங்கேறிக்கொண்டிருக்கிறது!’’ வாய்விட்டு சிரித்த சாளுக்கிய போர் அமைச்சர், தன் கண்களால் கரிகாலனின் பெரிய தாயார் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதை அவனுக்குச் சுட்டிக் காட்டினார். ‘என் இழுப்புக்கு ஏற்றபடிதான் இங்கு ஒவ்வொரு அணுவும் அசைகிறது... புரிகிறதல்லவா..?’ புருவத்தை மேலும் கீழும் இறக்கியபடி வினவினார்.

கரிகாலன் இமைக்காமல் அவரைப் பார்த்தான். இழுக்கும் கயிற்றை எப்படி, எந்த இடத்தில் அறுக்க வேண்டும் என்பது அவனுக்குப் புரிந்தது. அதற்கு முன்னால் எதற்காக தன் பெரிய தாயார் காஞ்சிக்கு வந்திருக்கிறார்... வந்தவர் ஏன் இந்த மாளிகையில் அதுவும் சாளுக்கியப் போர் அமைச்சருடன் தங்கியிருக்கிறார் என்பதை அறியவேண்டும். மனதுக்குள் திட்டமிட்டவன் அதன் ஒரு பகுதியாக இழுப்புக்கு ஏற்றபடி அசைய முடிவு செய்தான். வாய்விட்டு சிரிக்கவும் செய்தான். 

‘‘எதற்காக சிரிக்கிறாய் கரிகாலா..?’’
‘‘தாயாரின் காஞ்சி வருகையைக் கூட உங்கள் அரங்கேற்ற காதையில் இணைத்துவிடுவீர்கள் போலிருக்கிறதே!’’ 
இப்படி திடுதிடுப்பென்று வெளிப்படையாக கேட்டுவிடுவான் என்பதை ராமபுண்ய வல்லபர் மட்டுமல்ல... அவனது பெரிய தாயாரும் எதிர்பார்க்கவில்லை. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். 

அவர்களை யோசிக்க இடம் தராமல் கரிகாலன் தொடர்ந்தான். ‘‘காஞ்சியும் எங்கள் ஊர்தான் சாளுக்கிய போர் அமைச்சரே! இங்கு நானோ என் தாயோ வருவது பெரிய விஷயமல்ல... எனவே நாடக இலக்கணப்படி இது உங்கள் அரங்கேற்ற காதையில் இடம்பெறாது!’’ 
‘‘அப்படியா சொல்கிறாய்..?’’

‘‘அப்படி மட்டும்தான் சொல்கிறேன் ராமபுண்ய வல்லபரே!’’‘‘இந்த மாளிகைக்கு உன் தாய் வருகைபுரிந்ததைக் கூடவா..?’’
‘‘இதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது..? பல்லவ நாட்டின் பெரு வணிகருக்கு சொந்தமான மாளிகை இது... வணிகத்தின் பொருட்டு அவரைச் சந்திக்க தாயார் வந்திருக்கலாம்...’’‘‘உறையூரில் இப்போதும் வணிகம் நடைபெறுகிறதா..?’’‘‘எப்போதும் நடைபெறுகிறது!’’

‘‘அதை விரிவுபடுத்த வேண்டும் என்று நினைக்கிறேன் கரிகாலா...’’ அதுவரை அமைதியாக இருந்த கரிகாலனின் பெரிய தாயார் வாய் திறந்தார்.
கரிகாலன் மேலும் நிதானத்துக்கு வந்தான். கயிற்றை அறுக்க வேண்டிய தருணம். சொற்களைக் கவனமாகப் பயன்படுத்தினான். ‘‘நல்ல விஷயம்தான் தாயே... இதற்கு சாளுக்கிய போர் அமைச்சர் எந்த வகையில் உதவப்போகிறார்..?’’

‘‘இந்த வகையில்தான்...’’ தோளைக் குலுக்கிய ஸ்ரீராமபுண்ய வல்லபர், பெரிய தாயார் அமர்ந்திருந்த சிம்மாசனத்தை தன் கரங்களால் சுட்டிக் காட்டினார்.சந்தேகம் விலகியபோதும் அவர் உதடுகளில் இருந்தே உண்மை வெளிப்பட வேண்டும் என கரிகாலன் நினைத்தான். ‘‘ஆசனமா..?’’
‘‘சிம்மாசனம்!’’ தலையை உயர்த்தி கம்பீரமாக அறிவித்தார் சாளுக்கிய போர் அமைச்சர். ‘‘பல்லவ நாட்டின் சிம்மாசனத்தில் இனி உங்கள் வம்சாவளியினர் அமரலாம் கரிகாலா..!’’

‘‘அப்படியா..?’’
‘‘ஆம். சாளுக்கியர்களின் படை உங்களுக்கு அரணாக நிற்கும்...’’‘‘அதாவது சிற்றரசர் என்ற தகுதியுடன்!’’‘‘அப்படியும் சொல்லலாம். இப்போது பல்லவர்களுக்கு கட்டுப்பட்டு உறையூரில் நீங்கள் இருப்பதுபோல் சாளுக்கியர்களுக்கு கட்டுப்பட்டு இனி காஞ்சியில் வசிக்கலாம் என அதையே விரிவு
படுத்தவும் செய்யலாம்!’’

எதிர்பார்த்த உண்மைதான். என்றாலும் அது வெளிப்பட்டபோது முகத்தில் அறைந்தது போலிருந்தது. சமாளிப்பதற்கு கரிகாலனுக்கு சில கணங்கள் தேவைப்பட்டன.இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு காய்களை நகர்த்த ஆரம்பித்தார் ஸ்ரீராமபுண்ய வல்லபர். ‘‘இதில் யோசிப்பதற்கோ திகைப்படையவோ எதுவும் இல்லை கரிகாலா... நேரடியாக இல்லாவிட்டாலும் சோழப் பேரரசின் கிளை என உங்களைச் சொல்லலாம். அதனால்தான் பல்லவ மன்னர்கள் உங்களை மதிப்பதுபோல் நடிக்கிறார்கள்!’’

‘‘அப்படியா..?’’
‘‘அப்படியேதான்! யோசித்துப் பார்... ஒரு காலத்தில் இப்பிரதேசத்தையே உன் மூதாதையர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். காட்டை அழித்து இப்பகுதியை உருவாக்கியதே நீங்கள்தான். எனவேதான் உங்களை பகைத்துக்கொள்ள பல்லவ மன்னர் விரும்பவில்லை...’’
‘‘சாளுக்கியர்களும்!’’ இடையில் வெட்டினான்.

‘‘மறுக்கவில்லையே... என்றாலும் நாங்கள் பல்லவர்களை விட பல படிகள் மேலானவர்கள்!’’‘‘எப்படியோ..?’’‘‘எந்தப் பகுதி உங்களால் உருவாக்கப்பட்டதோ அந்தப் பகுதியை மீண்டும் உங்களுக்கே வழங்க சாளுக்கிய மன்னர் முடிவு செய்திருக்
கிறார்..! இனி காஞ்சி மாநகரத்தின் சிம்மாசனத்தில் அமர்ந்து நீங்களே ஆட்சி செலுத்தலாம்!’’

‘‘பதிலுக்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்..?’’
‘‘பல்லவர்களுடனான உறவைத் துண்டிக்க வேண்டும்!’’
‘‘அதாவது ராஜ துரோகம் செய்யச் சொல்கிறீர்கள்...’’

‘‘இல்லை. ராஜ தந்திரத்தை பயன்படுத்தச் சொல்கிறேன். வாய்ப்பு வந்து கதவைத் தட்டும்போது அதை வரவேற்பதுதான் முறை. உன் தாயாரிடம் கலந்தாலோசித்துவிட்டு முடிவைச் சொல்...’’ எழுந்த ஸ்ரீராமபுண்ய வல்லபர் ஒரு கணம் அவன் இடுப்பில் இருந்த சுவடிக் கட்டைப் பார்த்தார். பின் பெரிய தாயாரை வணங்கிவிட்டு வாயில்புறமாக வெளியேறினார்.

அவர் செல்வதையே பார்த்துவிட்டு தன் பெரிய தாயாரின் பக்கம் திரும்பினான். ‘‘தாயே...’’‘‘கரிகாலா..!’’ அழைத்தவரின் உதடுகள் துடித்தன.பதற்றத்துடன் அவர் அருகில் சென்றான்.அவன் கரங்களில் தன் முகத்தைப் புதைத்தார். அவர் காலடியில் மண்டியிட்டான்.உள்ளறையிலிருந்து இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சிவகாமிக்கு முதுகு பளிச்சென்று தெரிந்தது.அது கரிகாலனின் பெரிய தாயார் முதுகு!தன் பின்புறத்தில் மறைத்து வைத்திருந்த குறுவாளை எடுத்தாள்!
 

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்

 

http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14677&id1=6&issue=20181221

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரத்த மகுடம்-33

பிரமாண்டமான சரித்திரத் தொடர்

 

‘‘தாயே...’’ கரிகாலன் மெல்ல அழைத்தான்.மண்டியிட்டு அமர்ந்திருந்தவனின் தலை கேசத்தை தன் விரல்களால் பெரிய தாயார் கோதினார். பால்யத்தில் இப்படிக் கொஞ்சியது. ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. 

23.jpg

ஆனாலும் அப்போது எப்படி தன் மடியில் முகத்தைப் புதைத்தானோ அப்படித்தான் இப்போதும் புதைக்கிறான். அடைக்கலம் தேடுகிறான். ஆற்றுப்படுத்தலை எதிர்பார்க்கிறான். காலங்கள் மாறினாலும் அடிப்படை உணர்ச்சிகள் மாற்றம் அடைவதில்லை. அதை வெளிப்படுத்தும் விதமும் வேறாகவில்லை.

அவன் தலையை நிமிர்த்தி முகத்தை ஏறிட்டார். ‘‘சொல் கரிகாலா...’’ 
‘‘நீங்கள்தான் கட்டளையிட வேண்டும் தாயே...’’ 
‘‘எது குறித்து..?’’
‘‘ஸ்ரீராமபுண்ய வல்லபர் சற்று முன் சொன்னது குறித்து...’’
‘‘நீ என்ன நினைக்கிறாய்..?’’
‘‘தெரியவில்லை...’’
‘‘புரியவில்லையே..?’’ 

சொன்ன பெரிய தாயாரின் நயனங்களை இமைக்காமல் பார்த்தான். ‘‘உங்களுக்கா புரியவில்லை..?’’
‘‘ஆம் கரிகாலா. நிச்சயமாகப் புரியவில்லை. சூழலை ஆராய்ந்து கணத்தில் முடிவெடுக்கும் திறன் படைத்தவன் என் மகன் என இத்தனை நாட்களாக நினைத்திருந்தேன்...’’
‘‘இப்போது அதில் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறதா தாயே..?’’
‘‘இல்லை என்கிறாயா..?’’

‘‘எனில் உங்கள் ஐயத்துக்கான காரணம்..?’’
‘‘தெரியவில்லை என்று நீ சொன்ன பதில்!’’ அழுத்தமாகச் சொன்னார் பெரிய தாயார்.
வெறுமையுடன் அதுவரை இருந்த கரிகாலனின் கண்களில் உணர்வுகளின் ரேகைகள் படர்ந்தன. ‘‘இதையே தெரிந்ததைச் சொல்ல தயக்கப்படுவதாகவும் சொல்லலாம் அல்லவா..?’’

‘‘‘லாம்’தானே? ‘முடியும்’ என அறுதியிட்டு உன்னாலேயே கூற முடியவில்லையே... கரிகாலா, என் மீது எந்தளவுக்கு மரியாதையும் மதிப்பும் வைத்திருக்கிறாய் என்று மற்றவர்களை விட எனக்கு நன்றாகத் தெரியும். ஒருவேளை என் புத்தி அலைபாய்ந்தாலும் மனம் ஒருபோதும் தடுமாறாது. எனவே வெளிப்படையாகச் சொல்! சாளுக்கிய போர் அமைச்சர் முன்வைத்திருக்கும் யோசனைக் குறித்து நீ என்ன நினைக்கிறாய்..?’’‘‘அது கட்டளையல்லவா..?’’
 

சட்டென்று கேட்ட தன் மகனின் கன்னத்தை வாஞ்சையுடன் தடவினார். உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு தன் மகனாக கம்பீராக உரையாட இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறான். இதுதான் அவனது இயல்பு. பாலில் கலந்த நீரை எதிர்பார்த்தது போலவே இனி பிரித்தெடுப்பான்!

 

நிம்மதியுடன் உரையாடலைத் தொடர்ந்தார். ‘‘எதுவாக இருந்தால் என்ன கரிகாலா..?’’‘‘அர்த்தங்கள் வேறு வேறு அல்லவா தாயே!’’ கேட்டபடி எழுந்து நின்றான்.

‘‘உண்மைதான். ஆனால், அது கட்டளைதான் என்று எப்படி முடிவுக்கு வந்தாய்..?’’
‘‘நீங்கள் இங்கு வருகை தந்ததை வைத்து!’’சிம்மாசனத்தில் இருந்து எழுந்த பெரிய தாயார் தன் புருவத்தை உயர்த்தினார். ‘‘காஞ்சிக்கு நான் வந்திருப்பதைக் குறிப்பிடுகிறாயா..?’’
 

‘‘இந்த நேரத்தில் வந்ததை சுட்டிக் காட்டுகிறேன்! பல்லவப் பேரரசு இப்போது சாளுக்கியர்களின் வசம் இருக்கிறது. பல்லவர்கள் போல் இவர்கள் நம் உறவினர்களுமல்ல; நண்பர்களுமல்ல. 

 

எதிரிகள்! அப்படியிருக்க நீங்கள் இங்கு வந்திருப்பதும் சாளுக்கிய போர் அமைச்சருடன் இயல்பாக பேசுவதும் சில சந்தேகங்களை எழுப்புகின்றன...’’ ‘‘அதாவது உன் தந்தையையும் என் கணவரையும் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்து உன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த என்னை அனுப்பியிருக்கிறார்கள் என்று நினைக்கிறாய்! அப்படித்தானே..?’’கரிகாலன் மவுனமாக தலைகுனிந்தான்.

‘‘இப்படி எண்ணுவதன் மூலம் உன் தந்தை இருவரையும் நீ குறைத்து மதிப்பிடுகிறாய்... உன்னைக் குறித்து மிகை மதிப்பு கொள்கிறாய்!’’‘‘தாயே..!’’‘‘ஒன்றைப் புரிந்துகொள் கரிகாலா... சாளுக்கியர்கள் காஞ்சியை கைப்பற்ற முடிவு செய்திருப்பதும் அது தொடர்பான வேலைகளில் இறங்கியிருப்பதும் உன் தந்தையர் இருவருக்கும் முன்பே தெரியும்! நம்மிடமும் ஒற்றர்கள் இருக்கிறார்கள்.

 

வாதாபியில் மட்டுமல்ல... சாளுக்கிய பிரதேசங்கள் அனைத்திலும் ஊடுருவியிருக்கிறார்கள்! எனவே நரசிம்மவர்ம பல்லவரால் வாதாபி எரிக்கப்பட்டதற்கு பழிவாங்க சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் ரகசியமாக படை திரட்டி வருவதை அறிவோம். பல்லவ மன்னரான பரமேஸ்வரவர்மரிடம் இது குறித்து எச்சரிக்கையும் செய்திருக்கிறோம்..!’’

கரிகாலன் இடைமறிக்க முற்பட்டான்.வலது கையை உயர்த்தி அதை தடுத்தார். ‘‘பொறு! காஞ்சியில் போர் நிகழ்ந்தால் இங்கிருக்கும் கலைச்செல்வங்கள் அனைத்தும் அழிய வாய்ப்பிருக்கிறது என்பதால் பதுங்கிப் பாயும் விதமாக பல்லவ மன்னரையும் படைகளையும் இந்நகரத்தை விட்டு வெளியேறி மறைந்து வாழும்படி ஆலோசனை சொன்னதும் உன் தந்தையர் இருவர்தான்!’’பெரிய தாயார் பேசப் பேச கரிகாலன் பிரமை பிடித்து நின்றான்.

நெருங்கி, அவன் தோளில் தன் இரு கரங்களையும் வைத்தார். ‘‘இவ்வளவு தெரிந்த உன் தந்தையருக்கு நீ நினைப்பதுபோல் சாளுக்கியர்கள் தங்களை பிணைக்கைதியாக பிடித்து வைத்து உன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த என்னை அனுப்புவார்கள் என்று தெரியாமலா இருக்கும்..?!’’‘‘தாயே... அப்படியானால்...’’ மேற்கொண்டு பேச முடியாமல் கரிகாலன் தடுமாறினான்.

‘‘நான் ஏன் இங்கு வந்திருக்கிறேன் என்று கேட்க வருகிறாய் அல்லவா..? சொல்கிறேன்...’’ என்றபடி உள்ளறையை நோக்கி பெரிய தாயார் நடந்தார்.
அதுவரை மறைந்திருந்து நடப்பதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த சிவகாமி, தன்னை நோக்கி அவர் வருவதைக் கண்டதும் தன்னைக் குறுக்கிக் கொண்டு மேலும் கதவுக்குப் பின்னால் ஒண்டினாள். கையில் இருந்த குறுவாளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

ஆனால், உள்ளறைக்குள் பெரிய தாயார் நுழையவில்லை. மாறாக ஐந்தடிகள் நடந்தப் பிறகு திரும்பி கரிகாலனை பார்த்தார். அவர் அருகில் செல்ல கரிகாலன் முற்பட்டான்.கண்களால் அங்கேயே நிற்கும்படி பெரிய தாயார் வேண்டுகோள் வைத்தார்.புரிந்ததற்கு அறிகுறியாக அவர் உணரும்படி சமிக்ஞை செய்தான்.
 

நிச்சயமாக தாங்கள் உரையாடுவதை யாரோ மறைந்திருந்து கேட்கிறார்கள். உள்ளறையில் அவர்கள் மறைந்திருக்கவே வாய்ப்பு அதிகம். அங்கு சென்றது சிவகாமிதான். 

 

எனவே அவள்தான் கண்காணிக்கிறாள் என்பதை தன்னைப் போலவே பெரிய தாயாரும் எண்ணுகிறார். எனவேதான் அவள் அல்லது அவர்கள் செவியிலும் இனிதான் பேசப்போவது தெளிவாகக் கேட்கட்டும் என்று இரு இடங்களுக்கும் பொதுவான இடத்தில் நிற்கிறார்.

எச்சரிக்கையுடன் நிமிர்ந்து நின்றான்.மகன் தயாராகிவிட்டதைக் கண்டவர் மலர்ந்தார். விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். ‘‘கரிகாலா! நேர் வழியோ அல்லது தூரத்து சொந்தமோ... எப்படியிருந்தாலும் சோழ வம்சத்தின் குருதிதான் நமக்குள்ளும் ஓடுகிறது. இன்று நம்மிடம் பெரும் நிலப்பரப்பு இல்லை. என்றாலும் நம் ஆளுகைக்கும் சொந்தமாக பிரதேசங்கள் இருக்கின்றன. 

அவை அளவில் சிறியதுதான். அதனால் என்ன... அது நம்முடையது! இன்றைய வரலாற்றைக் குறித்து நாளை எழுதும் சரித்திர ஆசிரியர்கள் நம்மை... சோழர்களை... குறுநில மன்னர்களாகக் கூட அன்று இல்லை எனக் குறிப்பிடலாம். ஆனால், இப்போது வாழ்பவர்கள் ஒருபோதும் நம்மை ஏளனமாக கருதமாட்டார்கள். ஏனெனில் கையளவு நிலத்தில் வாழ நிர்பந்திக்கப்பட்டாலும் காட்டை ஆளும் தகுதியை புலிகள் இழப்பதில்லை!’’ 
 

அழுத்தமாக சொல்லிவிட்டு சில கணங்கள் அமைதியாக நின்றார். பிறகு நிமிர்ந்தபோது அவர் கண்களில் கனவு மின்னியது. ‘‘இருளில் இருந்தாலும் புலியின் உடலில் இருக்கும் வரிக் கோடுகள் மறைவதில்லை! ஒருகாலத்தில் தமிழகத்தின் தன்னிகரற்ற சக்தியாக நாமே திகழ்ந்தோம். காவிரிபூம்பட்டினம் உலகின் வணிக ஸ்தலமாக விளங்கியது. 

 

கடல் கடந்தோம். செல்வங்களை ஈட்டினோம். தமிழகத்தின் பெரும் நிலப்பரப்பை நம் குடைக்குக் கீழ் கொண்டு வந்தோம். கால மாறுதலில் இப்போது ஒடுங்கி நிற்கிறோம். அதற்காக நம் வீரம் குறைந்துவிட்டதாக அர்த்தமில்லை... புரிகிறதல்லவா..?’’

பதில் பேசாமல் கரிகாலன் தலையசைத்தான். 
‘‘நம்மால் மீண்டும் திமிறி எழ முடியும்... பேரரசை ஸ்தாபிக்க முடியும்..!’’இமைகளை விரித்தானே தவிர அமைதியாகவே நின்றான்.‘‘அது முடிய வேண்டும் என்றுதான் காஞ்சிக்கு வந்திருக்கிறேன்! மகனே... இரு பேரரசுகள் மோதுகின்றன. நாம் தடுத்தாலும் தடுக்காவிட்டாலும் பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையில் பெரும் போர் மூளப் போகிறது. இதை ஏன் நமக்கு சாதகமாகப் பயன்படுத்தக் கூடாது..?’’
‘‘சற்று விளக்கமாகச் சொல்லுங்கள் தாயே..!’’ உள்ளறையில் இருப்பவர்களுக்கும் கேட்கட்டும் என எடுத்துக் கொடுத்தான்.
 

‘‘பல்லவ நாடு வானம் பார்த்த பூமி. அவர்களின் உணவுத்தேவையை சோழ நாட்டைச் சேர்ந்த நாம்தான் நிறைவேற்றுகிறோம். எனவே பல்லவர்களுக்கு நாம் தேவை. அதனாலயே நம்மை நட்பு சக்தியாக கருதுகிறார்கள். பெண் கொடுத்து பெண் எடுத்து உறவினர்களாகவும் கைகோர்க்கிறார்கள்...’’

 

‘‘ம்...’’‘‘பல்லவ நாட்டை இப்போது கைப்பற்றியிருக்கும் சாளுக்கியர்களுக்கும் நம் உதவி தேவை. உணவுத் தேவைக்காக மட்டுமல்ல. தமிழகத்தையே அவர்கள் ஆள! பல்லவ நாட்டைக் கைப்பற்றியதுடன் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் திருப்தி அடைவார் என்றா நினைக்கிறாய்..? இல்லை... 
பாண்டிய நாட்டையும் தன் குடையின் கீழ் கொண்டு வர முடிவு செய்திருக்கிறார். பாண்டிய நாட்டையும் கைப்பற்ற வேண்டுமென்றால் சாளுக்கியர்களின் படை எவ்வித இடையூறும் இன்றி சோழ நாட்டைக் கடக்க வேண்டும். எனவே நம்மை நண்பர்களாக்கிக் கொள்ளத் துடிக்கிறார். இதுகுறித்து உன் தந்தையர் இருவரிடமும் பேசி விட்டார். 

அவர்கள் முடிவெடுக்கும் பொறுப்பை உன்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். எனவேதான் காஞ்சிக்கு எப்படியும் நீ வருவாய் என்பதை அறிந்து உன்னிடம் பேச என்னை அனுப்பியிருக்கிறார்கள்! ஸ்ரீராமபுண்ய வல்லபரும் இதைத்தான் சுட்டிக் காட்டினார். எனவே அவர் வெளிப்படுத்திய ஆலோசனையை... கட்டளையை அல்ல... யோசிக்கச் சொல்கிறேன்...’’கண்கள் இடுங்க தன் பெரிய தாயாரைப் பார்த்தான்.

‘‘அலசி ஆராய்ந்து சீர்தூக்கிப் பார்த்து முடிவு எடுக்க வேண்டியது உன் கடமை. உன்னை வளர்த்தவள் என்ற முறையில் ஒன்றை மட்டுமே குறிப்பிட விரும்புகிறேன். நீ சாதாரண தனி மனிதன் அல்ல. சோழ வம்சத்தின் பிரதிநிதி. இதை மனதில் வைத்து முடிவு எடு. தனிப்பட்ட நலன், உணர்ச்சிகளை விட தேசம் முக்கியம்... புரிந்ததல்லவா..?’’கரிகாலன் சிலையாக நின்றான்.
 

‘‘உனக்கான உடைகள் ஸ்நான அறையில் தயாராக இருக்கின்றன. குளித்துவிட்டு வா! சேர்ந்து உணவருந்தலாம்...’’சொல்லிவிட்டு உள்ளறையை நோக்கி விடுவிடுவென நகர்ந்தார்.தன் பெரிய தாயாரையே கரிகாலன் இமைக்காமல் பார்த்தான். உள்ளறைக்கு சென்றவர் அக்கம்பக்கம் பார்க்காமல் மேலும் நடந்து அடுத்த அறைக்கு சென்றதையும், இந்த அறையை ஒட்டி இருந்த உள்ளறையில் இதன் பிறகு ஒரு நிழல் அசைந்ததையும் கவனித்தான்.

 

அவ்வளவுதான். சீனர்களின் பாணியில் கால் கட்டை விரலை அழுத்தி ஒரே தாவாகத் தாவி உள்ளறைக்குள் நுழைந்தவன், அசைந்த நிழலை பின்பக்கமாக இறுக்கிப் பிடித்து அதன் கரங்களில் இருந்த குறுவாளை தட்டிவிட்டான்.
எதிர்பார்த்தது போலவே அது சிவகாமிதான்.திமிறியவளின் கழுத்தில் தன் முகத்தைப் பதித்தான்.அந்த அறையின் மேல் கூரையை ஒட்டியிருந்த சாளரத்தில் நின்றபடி இக்காட்சியைக் கண்ட ஒருவனின் முகத்தில் புன்னகை அரும்பியது.அவன், பாலகன்! கடிகையில் கரிகாலனை சந்தித்து அர்த்த சாஸ்திரம் குறித்த குறிப்பைக் கொடுத்தவன்!
 

(தொடரும்) 
  
கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்

 

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14710&id1=6&issue=20181228

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரத்த மகுடம் : பிரமாண்டமான சரித்திரத் தொடர்

கே.என்.சிவராமன் - 34
ஓவியம்: ஸ்யாம்


எதிர்பாராத தாக்குதலால் ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருந்த சிவகாமி, எப்போது கரிகாலன் தன் கழுத்தில் முகத்தைப் பதித்தானோ... எந்த கணத்தில் அவன்  சுவாசம் தன் சருமத்தை ஒற்றி எடுக்கத் தொடங்கியதோ... அப்போது முற்றிலுமாக தன் வசத்தை இழந்தாள்.துவண்ட கால்களால் ஊன்றி நிற்க முடியவில்லை.  அநிச்சையாக சரியத் தொடங்கினாள்.விழிப்புடன் இருந்த கரிகாலன் இந்த நிலையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டான். அவளது பலவீனமான  இடத்தை அறிந்திருந்தவன் உடனடியாக தன் முகத்தை கழுத்திலிருந்து கீழ் நோக்கி இறக்கி கச்சைக்கு மேல் திமிறிக் கொண்டிருந்த ஸ்தனங்களின் பிளவில் தன்  உதட்டைப் பதித்தான்!மீட்டப்பட்ட யாழின் தந்திகளாக சிவகாமியின் நரம்புகள் அனைத்தும் அதிரத் தொடங்கின. பிறந்த ஏழு ஸ்வரங்களின் நாதம்,  அக்னிப்பிழம்பாக மாறி அவள் இடுப்பைக் குழைத்தன!
4.jpgதன்னிலை மறந்து தரையில் படுத்தவள் தன் கால்கள் இரண்டையும் ஒடுக்க முற்பட்டாள். இதற்காகவே காத்திருந்த கரிகாலன் தன் வலுவைப் பயன்படுத்தி  அதைத் தடுத்தான்! வல்லூறுக்குக் கீழ் சிக்கிய குருவியாக சிவகாமியின் நிலை மாறியது. ஊசி முனையில் ஊசலாடிய உணர்ச்சிகளின் முனை சமநிலைக்கு  வரவேயில்லை. படர்ந்த கரிகாலனின் தேகமும், மேயத் தொடங்கிய அவனது உதடுகளும் அதற்கு இடமும் கொடுக்கவில்லை. உடல் கொதிக்கத் தொடங்கிய  கணத்தில்... வதனத்தில் அலைபாய்ந்து கொண்டிருந்த கரிகாலனின் விரல்கள், அவள் அதரங்களைத் தடவின! தாங்க முடியாமல் தன் முகத்தை உயர்த்தினாள்.  தன் உள்ளங்கையாலேயே அழுத்தி அவள் முகத்தை பழையபடி தரையில் கிடத்தியவன், தேகத்துடன் முழுமையாக உரசியபடியே மேல் நோக்கி நகர்ந்தான்!  நெகிழத் தொடங்கியது தன் கச்சை மட்டுமல்ல... முழு அங்கங்களும்தான் என்பது தெளிவாகவே சிவகாமிக்கு புரிந்தது! ஆனால், வெந்து சாம்பலாவதைத் தவிர  வேறு வழியேதும் அவளுக்குத் தெரியவில்லை!

சரியாக அவள் முகத்துக்கு நேராக வந்த கரிகாலன், தன் இடது கையால் அவள் தலையைக் கோதினான். வலது உள்ளங்கையால் அவள் கன்னங்களைத்  தடவினான். தன் ஆள்காட்டி விரலின் நக நுனியால் ஒரு ஓவியனைப் போல் அவள் முகத்தை பிரதியெடுத்து, அதே வதனத்திலேயே தீட்டத் தொடங்கினான்! நீள் வட்ட முகத்தை வரைந்தவன், பிறகு அவள் புருவங்களைக் கீறினான்! இமைகளின் ரோமங்களை பட்டும் படாமலும் கோடுகளாக்கினான்! நாசியை  அளவெடுத்தான்! மூக்குக்கும் உதடுக்கும் இடைப்பட்ட பகுதியை தன் விரல் ரேகையால் ஒற்றி ஒற்றி எடுத்தான்! மறைந்திருந்த சிவகாமியின் ரோமங்கள்  அனைத்தும் சருமத்தைப் பிளந்து வெளிப்பட முயன்றன!கொதி நிலையின் உச்சத்தில் உடல் வேகத் தொடங்க... அவன் உதடுகளை வரவேற்கும் விதமாக மூடிய  தன் அதரங்களைத் திறந்தாள்! கண்ட கரிகாலனின் கண்கள் நகைத்தன. தன் உதடுகளைக் கீழிறக்கவே இல்லை. மாறாக தன் கட்டை விரலாலும் ஆள்காட்டி  விரலாலும் அவளது கீழுதட்டை ஒன்று குவித்தான். மேலும் கீழுமாக அசைத்தான்!

முகத்தை பக்கவாட்டில் திருப்பியவளின் உடல் சர்ப்பம் போல் வளைந்து நெளிந்தது. இதற்காகவே காத்திருந்த கரிகாலன், சட்டென்று தன்னால் குவிக்கப்பட்ட  அவள் கீழ் உதட்டைக் கவ்வினான். பற்களால் அழுத்தமாகக் கடித்தான்! ‘‘ஆ..!’’ அலறியபடி கண்களைத் திறந்த சிவகாமியின் பார்வையில் தரையில் கிடந்த  குறுவாள் தட்டுப்பட்டது! கொதித்த உடலும் கணத்தில் அடங்கியது! எல்லாமும் நினைவுக்கு வந்தது. படர்ந்திருந்தவனைத் தள்ளிவிட்டு எழுந்தாள். இம்முறை  அவளை அடக்க அவன் முற்படவேயில்லை! தள்ளிவிடுவதற்காகவே காத்திருந்தவன் போல் இயல்பாகப் புரண்டான். மல்லாந்து படுத்தபடியே எழுந்து  நின்றவளை உச்சி முதல் உள்ளங்கால் வரை பார்வையால் கொஞ்சினான். குறிப்பாக கலைந்திருந்த அவள் ஆடைகளையும், நெகிழ்விலிருந்து கடினப்படத்  தொடங்கிய அவள் சருமத்தையும்! காணக் காண சிவகாமியின் உடல் கூசத் தொடங்கியது. அதுவும் அவன் கண்கள்... அதில் தென்பட்ட அலட்சிய சிரிப்பு...பொங்கிய காமம், வன்மமாக உருவெடுத்தது! என்ன அழகாக தன் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான்! நினைக்க நினைக்க முகம் சிவப்பேறத்  தொடங்கியது!

தலையில் கைவைத்தபடி வாய்விட்டு சிரிக்கத் தொடங்கியவனைக் காணக் காண பற்றிக் கொண்டு வந்தது. கோபத்துடன் அவனை எட்டி உதைத்தாள்!ஆனால்,  கால் நகம் கூட அவன் அங்கங்களில் படவில்லை! எதிர்பார்த்தவன் போல் படுத்தபடியே விலகி நகர்ந்தவன் நிதானமாக எழுந்து நின்றான். தன் இடுப்பு முடிச்சை  அவிழ்த்து மீண்டும் அதை இறுக்கிக் கட்டினான்!  குறிப்பாக சுவடிக் கட்டை!பார்த்த சிவகாமி கையறு நிலையில் தன் உள்ளங்கைகளை மடக்கி இறுக்கினாள்.  தன்னைக் குறித்த ரகசியங்களைத் தாங்கியிருக்கும் சுவடி அல்லவா..? இதைக்கூட மறக்கும் நிலையிலா இருந்தோம்..? எவ்வளவு தரக்குறைவாக தன்னை  நினைத்திருந்தால் இந்தளவுக்கு தன் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பி விளையாடியிருப்பான்..? தேகம் எங்கும் படர்ந்தவன் வேறொரு கண்ணோட்டத்துடன் தன்னை  அணுகியிருக்கிறான் என்பதைக் கூட உணரும் சக்தியை தன் உடல் இழந்து விட்டதா..? அந்தளவுக்கா காதலில் மூழ்கியிருக்கிறோம். அதுவும் தன்னை இழிவாகக்  கருதும் இந்த மனிதனிடம்... 

கழிவிரக்கம் மேலோங்க கையறு நிலையில் கண்ணீர் ஊற்றெடுத்தது. வேண்டாம்... இவன் முன் அழ வேண்டாம். அது இன்னும் அசிங்கம். உதட்டைக் கடித்தபடி  தலைகுனிந்தாள். அவள் நிலை கரிகாலனுக்கு நன்றாகப் புரிந்தது. தன்னுடன் கலந்திருந்தவளின் சருமம் கூசி சுருங்குவதைப் பார்க்க ஏனோ அவனுக்குப்  பிடிக்கவில்லை. உண்மைதான். இருவருமே ஒருவரையொருவர் நம்பவில்லை. பரஸ்பர சந்தேகங்கள் இருவரது அணுக்களிலும் நிரம்பி வழிகின்றன. அதற்கு  அத்தாட்சியாக தன் இடுப்பில் சுவடிக் கட்டு கனக்கிறது. தரையில் குறுவாள் விழுந்து கிடக்கிறது.ஆனால், இந்தக் கணத்துக்கு முன்பு இழைந்திருந்த இரு  உடல்களின் செயல்களும் உண்மையானவை. பரிசுத்தமானவை. தன் உடலைவிட்டு உள்ளம் விலகியிருந்தபோதும் அவள் மனம் தேகத்துடன் ஒன்றியிருந்தது  சத்தியம். அந்தக் கணத்தை அசுத்தப்படுத்துவது ஒன்றுபட்டு ஒப்புக்கொடுத்த இருவரது உடல்களையும் அவமதிப்பதற்கு சமம். 

கேள்விகளுக்கு அடுத்த கணத்தில் கூட விடை தேடலாம். ஆனால், ஆற்றுப்படுத்துவதற்காக காத்திருக்கும் இக்கணம் முக்கியமானது.ஒரு முடிவுடன் அவளை  நோக்கி நகர்ந்தான். குனிந்த தலையை சிவகாமி நிமிர்த்தவில்லை. அதேநேரம் தன்னை நோக்கி வரும் கால்களை வரவேற்கவும் தயாராக இல்லை. பின்னோக்கி நகர்ந்தாள். முன்னோக்கி வந்தான்.பின்னோ... முடியவில்லை. சுவர் தடுத்தது. அப்படியே அதனுள் புதைந்துவிடும் நோக்கத்துடன் ஒன்றினாள்.நெருங்கியவன் அவளை தன்னை நோக்கி இழுத்தான். வெறுப்புடன் விலக முற்பட்டவளைத் தடுத்து தன் மார்பில் சாய்த்தான். ஒன்றாமல் வெறுமையாக  நின்றாள். கண்டுகொள்ளாமல் தன் கரங்களை அவளுக்குப் பின்புறம் கொண்டு சென்றவன், இறுக்கம் தளர்ந்திருந்த அவளது கச்சையின் முடிச்சை முற்றிலுமாக  அவிழ்த்தான்.இதை சற்றும் எதிர்பார்க்காதவள் தன் தலையை உயர்த்தி அவனைப் பார்வையால் எரித்தபடி ‘‘சீய்...’’ என்றாள்.

கரிகாலன் பதிலேதும் சொல்லவில்லை. மாறாக தன் இரு கரங்களுக்குள் அவளை வலுவாக சிறைப்படுத்தி என்ன ஏது என்று சிவகாமி சுதாரிப்பதற்குள் அவள்  ஸ்தனங்களை சரிசெய்து கச்சையை இறுக்கிக் கட்டினான். பிரமை பிடித்து அவனை ஏறிட்டாள். அவள் வதனத்தை தன் கரங்களில் ஏந்தி வகிட்டின் நுனியில் தன்  உதட்டை நாசுக்காக ஒற்றி எடுத்தான்.சிவகாமி அசையவில்லை. கடினப்பட்டிருந்த... சுருங்கியிருந்த அவள் சருமங்கள் மெல்ல மெல்ல இயல்புக்கு வந்தன. பெரும் மூச்சு ஒன்று அவள் நாசியிலிருந்து வெளியேறியது. அது பாரம் நீங்கியதன் வெளிப்பாடு என்பது இருவருக்குமே புரிந்தது. அந்த பாரம் என்ன என்பதும்! குழைந்ததை தவறாக அவன் எண்ணவில்லை என்பதே அவளுக்குப் போதுமானதாக இருந்தது. ஒருவித நிம்மதியுடன் பரந்து விரிந்திருந்த அவன் மார்பில்  தலைசாய்க்க வேண்டும் என்று பீறிட்ட உணர்வை சிரமப்பட்டு அடக்கினாள்.நல்லவேளையாக விலகினான். அப்பாடா என்றும் இருந்தது... ஏன் விலகினாய் என்று  கேட்கவும் தோன்றியது. 

இதென்ன... தான், ஏன் இப்படி இருக்கிறோம்..? என்ன நடக்கிறது தனக்குள்..?‘‘சிவகாமி...’’ கரிகாலனின் குரல் கரகரத்தது. ‘‘ம்...’’ கொட்டினாள். ‘‘சுவடிகளைப் பார்க்க  வேண்டுமா..?’’ கேட்டதுடன் நிற்காமல் தன் இடுப்பிலிருந்து அதை எடுக்க முற்பட்டான். ஏற்கனவே மறையத் தொடங்கியிருந்த அவளது கழிவிரக்கம், அவனது  இந்த செய்கைக்குப் பின் முற்றிலுமாகக் கரைந்து மறைந்தது. தன்னை அவன் தவறாக எண்ணவில்லை... நெகிழ்ந்த தன் உடலை அவமதிக்கவில்லை...நிமிர்ந்து  அவனை நேருக்கு நேர் பார்த்தாள். பழைய சிவகாமியாக, எப்போதும் துளிர்விடும் அதே கம்பீரத்துடன்! ‘‘பார்..!’’ சுவடிகளை நீட்டினான். ‘‘தேவையில்லை!’’  அலட்சியத்துடன் சொன்னாள். ‘‘ஏன்..? இது உன்னைப் பற்றிய ரகசியம்..?’’‘‘அறியாதவருக்குத்தான் அறிந்து கொள்ள அது தேவை. எனக்கெதற்கு..?’’ புருவத்தை  உயர்த்தினாள். மலர்ந்து சிரித்தான்.

‘‘தாயார் சொன்னபடி குளித்துவிட்டு வாருங்கள். உணவு தயாராக இருக்கிறது...’’ நகர்ந்தாள். ‘‘நில்!’’ சொன்ன கரிகாலன், தன் கால் விரல் இடுக்கால் குறுவாளின்  பிடியைப் பிடித்தான். மேல் நோக்கி அதைச் சுழற்றினான். பறந்து வந்ததை லாவகமாகப் பிடித்து அவளை நோக்கி வந்தான். தன் இடுப்பில் அவன் கை  வைப்பதற்கு ஏதுவாக மூச்சை இழுத்து தன் வயிற்றை உள்ளடக்கினாள். புரிந்து கொண்டதற்கு அடையாளமாக எந்தக் கீறலும் விழாதபடி குறுவாளை அவள்  இடுப்பில் செருகினான். ‘‘அம்மாவை குத்திவிடாதே!’’‘‘குறி பார்த்தது அவர்களை அல்ல!’’ அழுத்தம்திருத்தமாக சொன்னவள், அவன் மார்பை ஒரு கணம்  பார்த்தாள். ‘‘வைத்த குறியை அகற்றுவதாக இல்லை!’’ பதிலை எதிர்பார்க்காமல் நகர்ந்தாள்.புன்னகையுடன் அவள் மறையும் வரை அங்கேயே நின்ற கரிகாலன்,  பிறகு குளியலறையை நோக்கி நகர நினைத்தான். முடியவில்லை. காரணம், ‘‘நல்லவேளை, சுவடிக் கட்டை அந்தப் பெண்ணிடம் நீங்கள் கொடுக்கவில்லை.  அப்படி மட்டும் நிகழ்ந்திருந்தால் சாளுக்கிய மன்னர் என்னை மன்னித்திருக்கவே மாட்டார்!’’ என்றபடி சாளரத்திலிருந்து ஒரு மனிதன் உள்நோக்கி குதித்ததுதான். அவன், கடிகையில் தான் சந்தித்த பாலகன் என்பதைக் கண்ட கரிகாலன் ஆச்சர்யப்பட்டான்.

 

http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14727&id1=6&issue=20190104

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரத்த மகுடம்-35

பிரமாண்டமான சரித்திரத் தொடர்

கே.என்.சிவராமன்
ஓவியம்: ஸ்யாம்

‘‘உன்னை இங்கு எதிர்பார்க்கவில்லை..!’’ மனதில் பூத்ததை வார்த்தைகளாக கரிகாலன் உதிர்த்தான். ‘‘ஆனால், நான் தங்களை எதிர்பார்த்தேன்!’’ மலர்ச்சியை அந்தப் பாலகன் கசியவிட்டான்.ஆச்சர்யத்தில் கரிகாலன் உறைந்து நின்றான். காரணம், கடிகையில், தான் சந்தித்த பாலகனை அந்த மாளிகையில் பார்க்க நேர்ந்தது மட்டுமல்ல. தன் முன்னால் அவன் வந்து நின்ற கோலமும்தான்.
28.jpgகுறிப்பாக சாளரத்தில் இருந்து அவன் குதித்த விதம் கரிகாலனை திகைப்பின் உச்சிக்கு அழைத்துச் சென்றது.பல்லவ இளவரசர் ராஜசிம்மனும், தானும் மட்டுமே அறிந்த சீனர்களின் பாணியில் அல்லவா ஒலியெழுப்பாமலும் கால்கள் பிசகாமலும் அவ்வளவு உயரத்திலிருந்து குதித்திருக்கிறான்! இது எப்படி சாத்தியம்..? கடிகையில் வாள் பயிற்சி, போர் வியூகம் முதல் சகலத்தையும் கற்பிக்கிறார்கள்தான். 

ஆனால், இந்தப் பாணி..? வாய்ப்பேயில்லை. அது சீனர்களின் ரகசியம். முழுமையாக தாங்கள் நம்புபவர்களுக்கு மட்டுமே இப்பயிற்சியை அதுவும் ரகசியமாக கற்றுத் தருவார்கள். எனில் இந்தப் பாலகன் சீனர்களுக்கு நெருக்கமானவனா..? அப்படியானால் பல்லவ இளவல் குறித்தும் இவன் அறிந்திருக்க வேண்டுமே..!

கிளை பரப்பிய வினாக்களுக்கு எல்லாம் பதில் காணும் விதமாக மெல்ல அந்த பாலகனிடம் பேச்சுக் கொடுக்க முற்பட்டான். ‘‘என்ன... என்னை இங்கு எதிர்பார்த்தாயா..?’’‘‘ஆம் வணிகரே..!’’ வேண்டுமென்றே ‘வணிகரே’ என்பதற்கு அந்த பாலகன் அழுத்தம் கொடுத்தான்.
கரிகாலனின் உதட்டில் புன்னகை விரிந்தது. 

தான், சோழ வம்சத்தைச் சேர்ந்தவன் என்ற உண்மையை அறிந்திருக்கிறான். என்றாலும் தெரியாததுபோல் கடிகையில் உரையாடியது போலவே பேச்சுக் கொடுக்கிறான். விஷமக்காரன்தான். தந்திரசாலியுமா என அறிய வேண்டும். அதற்கு அவன் போக்கிலேயே செல்வதுதான் நல்லது.

‘‘அதனால்தான் சிவகாமியை சத்திரத்திலிருந்து இந்த வீதிக்கும் மாளிகைக்கும் அழைத்து வந்தாயா..?’’
‘‘இல்லை வணிகரே!’’கரிகாலனின் புருவங்கள் ஏறி இறங்கின. ‘‘ஆனால்...’’‘‘இந்த மாளிகைக்கு வெளியே நந்தவனத்தில் சிவகாமி உங்களிடம் கூறியது அனைத்தும் பொய்!’’ கரிகாலனின் பேச்சை இடைமறித்து சொன்ன பாலகன், தொடர்ந்தான். ‘‘உங்களைக் கண்காணிக்கவும் பின்தொடரவும்தான் எனக்கு உத்தரவு. எனவே வேறு யாரையும் நான் சந்திக்கவும் இல்லை. எச்சரிக்கவும் இல்லை...’’

‘‘யார் இட்ட கட்டளை..?’’
‘‘சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர்!’’ சிரசையும் நெஞ்சையும் நிமிர்த்தி அந்த பாலகன் மரியாதையுடன் சொன்னான்.‘‘எதற்காக அப்படிச் சொன்னார்..?’’‘‘தெரியாது. ஆனால், காஞ்சியை விட்டு நீங்கள் வெளியேறும் வரை உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கச் சொன்னார்!’’
‘‘தனது வீரர்கள், படைகளை விட உன்னை அவர் அதிகம் நம்புகிறாரா..?’’

‘‘அவரிடம்தான் கேட்க வேண்டும் வணிகரே!’’‘‘கேட்பதை நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால், ஒரே ஆணையின் மூலம் என்னைக் கைது செய்ய வேண்டாம் என்று உத்தரவிடுவதற்குப் பதிலாக கடிகையில் பயிலும் ஒரு பா... மாணவனிடம் என் பாதுகாப்பை அவர் ஒப்படைக்கக் காரணம்..? நீ சொல்வது நம்பும்படியாக இல்லையே..!’’ ‘‘நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம். ஆனால், உங்களுக்கு எந்த சந்தேகமும் வரக்கூடாது என்பதற்காக மன்னரும் நீங்களும் தனித்து சந்திக்கையில் அவர் உங்களிடம் கொடுத்த தனது அந்தரங்க முத்திரை மோதிரத்தை நினைவுபடுத்தச் சொன்னார்...’’
‘‘இதுகுறித்து சிவகாமியும்...’’

‘‘...வனத்தில் உங்களிடம் குறிப்பால் உணர்த்தினார். கிளைகளில் மறைந்திருந்த எனது செவியிலும் அது விழுந்தது. ஆனால், அது குறித்து எனக்கு அக்கறையில்லை...’’ ‘‘என்ன சொல்கிறாய்..? மன்னரும் நானும் தனித்துப் பேசியதை அப்படியே சிவகாமி சொல்கிறாள். உன்னிடமாவது மன்னர் குறிப்பிட்டார். அதாவது நீ அப்படிச் சொல்கிறாய். அவளுக்கு யார் சொன்னது..? இந்த ஐயம் உனக்கு எழவில்லையா..?’’ கரிகாலன் உண்மையாகவே ஆச்சர்யப்பட்டான்.‘‘இல்லை!’’

‘‘ஏன்..? ஒருவேளை உன்னிடம் தெரிவித்தது போலவே அவளிடமும் சொல்லியிருப்பார் என்ற முடிவுக்கு வந்துவிட்டாயா..?’’
‘‘இல்லை... அப்படி நடக்க வாய்ப்பேயில்லை!’’‘‘எதை வைத்து அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய்..?’’‘‘கடிகைக்கு உங்களை மன்னர் அனுப்பி வைத்ததை வைத்து..!’’பதில் சொன்னவனை உற்றுப் பார்த்தான் கரிகாலன். 

பாலகன் என்ன சொல்ல வருகிறான்... குறிப்பால் எதை உணர்த்துகிறான் என்பது நன்றாகவே புரிந்தது. ஆனாலும் அவன் உதடுகளில் இருந்தே அது வெளிப்படட்டும் என பேச்சை நீட்டித்தான். ‘‘புரியவில்லையே... கடிகைக்கு என்னை அவர் அனுப்பியதற்கும் இதற்கும் என்ன தொடர்பு..?’’‘‘சிவகாமி!’’ பட்டென்று பாலகன் பதிலளித்தான்.

‘‘விளக்கமாகச் சொல்..!’’‘‘அறிந்துகொண்டே கேட்கிறீர்கள் என்பது புரிகிறது வணிகரே! பரவாயில்லை. தேங்காயை உடைத்து விடுகிறேன். சிவகாமி யார்... அவள் சபதம் என்ன என்பதை நீங்கள் அறிய வேண்டும் என சாளுக்கிய மன்னர் விரும்பியதாலேயே காபாலிகன் வழியாக...’’‘‘எந்த காபாலிகன்..?’’‘‘புலவர் தண்டியின் அந்தரங்க ஒற்றர்! அவர் மூலமாகத்தான் மன்னர் உங்களை காஞ்சிக்கு வரவழைத்தார். 

எதனால் காபாலிகர் இதற்கு ஒப்புக்கொண்டார் என்பதை காஞ்சிக்கு வெளியே தெரிந்து கொள்ளுங்கள். சொல்ல வந்ததை முடித்துவிடுகிறேன். காஞ்சி அரண்மனையில் உங்கள் பார்வையில் படும்படி சிவகாமியின் ஓவியத்தை விக்கிரமாதித்த மாமன்னர் வைத்ததும்... கடிகைக்கு தங்களை அனுப்பி என் வழியாக அர்த்தசாஸ்திர சுவடிகளின் பகுதியை எடுக்கவைத்ததும் ஒரே விஷயத்துக்காகத்தான்.

 அது சிவகாமி குறித்த ரகசியம். இதை மற்றவர் மூலமாக நீங்கள் தெரிந்து கொள்வதைவிட தகுந்த ஆதாரத்துடன் நீங்களே அறியவேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடுகளை தன் வீரர்களுக்கோ படைகளுக்கோ தெரியாதபடி ரகசியமாகச் செய்திருக்கிறார். அப்படியிருக்க, 
உங்களுடன் தனிப்பட்ட முறையில் அவர் உரையாடியது குறித்து எப்படி சிவகாமியிடம் சொல்லியிருப்பார்..?’’

பதிலேதும் சொல்லாமல் குறுக்கும் நெடுக்குமாக கரிகாலன் நடந்தான். பாலகன் சொல்வது அனைத்தும் உண்மை. தனது முத்திரை மோதிரத்தை என்னிடம் கொடுத்ததை சாளுக்கிய மன்னர் கண்டிப்பாக சிவகாமியிடம் சொல்லியிருக்க மாட்டார். அப்படியானால் அவளுக்கு எப்படி இது தெரிய வந்தது..? 

திரும்பி பாலகனை ஏறிட்டான். ‘‘மன்னர் என்னிடம் முத்திரை மோதிரத்தைக் கொடுத்தது சிவகாமிக்கு எப்படித் தெரிய வந்தது என்ற சந்தேகம் உனக்கு எழவில்லையா..?’’
‘‘இல்லை!’’‘‘ஏன்..?’’ 

‘‘உண்மை தெரியும் என்பதால்..!’’
‘‘என்ன உண்மையோ..?’’
‘‘அப்படியே உப்பரிகைக்குச் சென்று வெளியில் என்ன நடக்கிறது என்று பாருங்கள் வணிகரே! உங்களுக்கே தெரியும்!’’ புன்முறுவலுடன் பாலகன் பதிலளித்தான்.ஒரு கணம் அவனைப் பார்த்துவிட்டு உப்பரிகை பக்கம் கரிகாலன் சென்றான். அங்கு அவன் கண்ட காட்சி விவரணைகளுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.

மூங்கில் கழியின் துணை கொண்டு மகேந்திரவர்மன் வீதி, நரசிம்மவர்மன் வீதி ஆகியவற்றை தாவித் தாவி அந்தரத்தில் கடந்துகொண்டிருந்தாள் சிவகாமி! எங்கு செல்கிறாள்... எதற்காக இப்படிச் செய்கிறாள்... அதற்கும், பாலகனிடம், தான் தொடுத்த வினாவுக்கும் என்ன தொடர்பு..?

கேள்விகளை தன் கண்களில் தேக்கியபடி பாலகனை ஏறிட்டான்.அதற்கு அவன் கூறிய பதில் கரிகாலனின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது! சிவகாமி குறித்த மர்மமும் அதிகரித்தது!

 

(தொடரும்)

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14780&id1=6&issue=20190111

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரத்த மகுடம்-36


 

பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘இதில் வியப்பதற்கோ அல்லது சந்தேகத்தின் சாயல் படியவோ என்ன இருக்கிறது..?’’
மனதைச் சுற்றி ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்த எந்த ஐயமும் தன் முகத்தில் படராதபடி வெகு கவனமாக அந்த பாலகனிடம் கேட்டான் கரிகாலன். 

அனுபவம் கற்றுக் கொடுத்த பாடம். 

22.jpg

குருவான புலவர் தண்டி செதுக்கி செதுக்கி கற்பித்த கல்வி. முழுமையாக அறிந்த ஒருவரிடம் ஓரளவு அகத்தை வெளிப்படுத்தலாம். அறியாதவர்களிடமும்,  ஐயம் கொள்ளத்தக்க நடவடிக்கைகளில் இறங்குபவர்களிடமும் ஒருபோதும் அறிந்ததை அள்ளிக் கொடுக்கக் கூடாது. 

அதுபோன்ற தருணங்களில் எது வெளிப்படுவதாக இருந்தாலும் அது எதிராளியின் சொற்களிலும் செயல்களிலுமே வெளிப்படும்படி கவனமாகக் காய்களை நகர்த்தவேண்டும். வெளிப்படுவதில் இருந்து உண்மைகளைக் கண்டறியவேண்டும். உதிர்க்கும் சொற்களுக்குள் புதைந்திருக்கும் மவுனங்களுக்கான அர்த்தங்களைத் தோண்டி எடுக்க வேண்டும். எடுத்தது எவற்றை மறைக்க முற்படுகிறது என்பதைப் பகுத்தறிய வேண்டும்.

இந்த ராஜதந்திரத்தைத்தான் சிவகாமி விஷயத்தில் கடைப்பிடித்தான்; கடைப்பிடிக்கிறான். இதையேதான் இந்தப் பாலகன் விஷயத்திலும் பயன்படுத்தத் தொடங்கினான். அதற்கான தொடக்கமாகவே ‘ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது...’ என்ற வினாவையும் தொடுத்தான்.இதைக் கேட்டு அப்பாலகன் அசரவேயில்லை. மாறாக, ‘‘அதுதானே... அஸ்வ சாஸ்திரியான சிவகாமியின் திறமைகள் குறித்து என்னைவிட தங்களுக்கல்லவா அதிகம் தெரியும்..?!’’ எனப் புன்னகைத்தான். 

கரிகாலன் எதிர்வினை ஆற்றாமல் அவன் நயனங்களையே உற்றுப் பார்த்தான். அந்தப் பார்வை எதை உணர்த்தியதோ... கிண்டலைக் கைவிட்டு பாலகன் பேசத் தொடங்கினான். ‘‘வணிகரே... சிவகாமி அஸ்வ சாஸ்திரி மட்டுமல்ல... ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் கைதேர்ந்தவர்தான். அத்துடன் சீனர்களின் போர் முறைகளைக் கசடறக் கற்று அதற்குத் தக நிற்பவர்தான். என்னைவிட இந்த உண்மை தங்களுக்கு நன்றாகவே தெரியும். கண்கூடாக அத்திறமைகளை மல்லைக் கடற்கரையிலும் பிறகு வனத்திலும் காணவும் செய்திருக்கிறீர்கள்...’’

கரிகாலனின் கண்கள் கூர்மை அடைந்தன. அருகில் இருந்து பார்த்ததுபோல் இந்தப் பாலகனால் எப்படி அவ்வளவு துல்லியமாக அதுவரை நடந்ததை எல்லாம் சொல்ல முடிகிறது..? யார் வழியாக இதை அறிந்தான்..? அறிந்து கொள்ளும் அளவுக்கு சக்தி படைத்தவனாக இருக்கிறான் என்றால்... உண்மையில் இந்தப் பாலகன் யார்..?

‘‘புரிகிறது வணிகரே... இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும் என்றுதானே யோசிக்கிறீர்கள்..? சாளுக்கிய மன்னர்தான் சொன்னார்!’’
கரிகாலன் தன் புருவத்தை மட்டும் உயர்த்தினான். ‘‘உங்கள் இருவரது திறமையையும் சொல்லிச் சொல்லி ஆச்சர்யப்பட்டார். குறிப்பாக சாளுக்கிய வீரர்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு அடர்ந்த காட்டிலிருந்து நீங்கள் இருவரும் தப்பித்த விதம் அவரை சிலிர்க்க வைத்தது. மரத்துக்கு மரம் தாவினீர்களாமே... நுனிக் கிளை உடையாதபடி அதன்மீது தக்கையைப்போல் நின்றீர்களாமே... சுவாசப் பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டுமே கைகூடும் வித்தை என்று சொல்லி சிலாகித்தார்..!’’

‘‘மகிழ்ச்சி. மன்னர் எங்களைப் புகழ்ந்ததற்காக மட்டுமல்ல... தனது எண்ணங்களை உன்னிடம் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு அவருக்கு நெருக்கமாக நீ இருக்கிறாய் என்பதைக் குறிப்பால் எனக்கு உணர்த்தியதற்காகவும்!’’‘‘ஆம் வணிகரே... எதன் காரணமாகவோ விக்கிரமாதித்த மாமன்னர் என்னை நம்புகிறார். அதனாலேயே தங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருக்கிறார். அதை நிறைவேற்ற வேண்டியது என் கடமை...’’
‘‘குறைவில்லாமல் அதை நிறைவேற்றுகிறாய்... நல்லது. நீ யார்..?’’ 

‘‘கடிகையில் படிக்கும் மாணவன்!’’
‘‘உன்னை இதற்குமுன் பார்த்ததில்லையே..?’’
‘‘சமீபத்தில்தான் கடிகையில் சேர்ந்தேன்...’’
‘‘அதாவது..?’’
‘‘பல்லவ நாட்டை கத்தியின்றி ரத்தமின்றி சாளுக்கியர்கள் 
கைப்பற்றிய பிறகு!’’

கரிகாலன் புன்னகைத்தான். 
‘‘நீங்கள் எண்ணுவது போல் சாளுக்கிய மன்னர் என்னை 
கடிகையில் சேர்க்கவில்லை...’’‘‘கற்கும் ஆசையில் நீயாகச் சேர்ந்திருக்கிறாய்... அப்படித்தானே..?’’ 
‘‘ஆம்...’’‘‘புரிகிறது. சூழல் காரணமாக எனக்குப் பாதுகாப்பு அளிக்க வந்திருக்கிறாயே தவிர ஆத்மார்த்தமாக அல்ல. அப்படித்தானே..?’’
‘‘அதை தவறென்று நினைக்கிறீர்களா..?’’

‘‘நிச்சயமாக இல்லை. சொல்லப் போனால் சாளுக்கிய மன்னரின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு நீ நடப்பது உன்மீதான மதிப்பை அதிகரிக்கத்தான் செய்கிறது. என்னைப்பற்றி நீ அறிந்ததுபோல் உன்னைப் பற்றியும் நானாகத் தெரிந்துகொள்கிறேன்... ஒருபோதும் உன்னைக் கேள்வி கேட்டு சங்கடப்படுத்த மாட்டேன்..!’’பாலகன் முகத்தில் திருப்தி படர்ந்தது.
‘‘ஒன்றை மட்டும் தெளிவுபடுத்திவிடு...’’
‘‘என்ன வணிகரே..?’’

‘‘உன்னை ஒருமையில் அழைக்கலாம் அல்லவா..?’’
‘‘அப்படித்தான் அழைக்கவேண்டும்! வயதிலும் அனுபவத்திலும் ஆற்றலிலும் நீங்கள் மூத்தவர். சகலத்தையும் கற்றவர். எனவே, கற்பவரை எப்படி விளிக்கவேண்டுமோ அப்படி அழைக்கிறீர்கள். பன்மையில் பேசாமல் இருப்பதே எனக்கும் பிடித்திருக்கிறது. இனம்புரியாத நெருக்கத்தையும் உண்டாக்குகிறது. தவிர...’’

‘‘தயங்காமல் சொல்...’’ கரிகாலன் ஊக்கப்படுத்தினான்.
‘‘உங்களை என் மூத்த சகோதரர் போல் கருதி பழகச் சொன்னார்...’’
‘‘யார்..? சாளுக்கிய மன்னரா..?’’

‘‘ஆம். எதற்காக அப்படிச் சொன்னார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், முதன்முதலில் தங்களைப் பார்த்ததுமே எனக்கு அப்படித்தான் தோன்றியது. அவர் சொல்லாவிட்டாலும் என் அண்ணனாகத்தான் உங்களைப் பாவித்திருப்பேன்...’’கரிகாலன் பதிலேதும் சொல்லாமல் தன் முகத்தைத் திருப்பி உப்பரிகைக்கு வெளியே பதித்தான். இனம் புரியாத உணர்வுகள் மனதில் பூத்து விருட்சமாகின. எண்ணங்களும் எங்கெங்கோ பறந்தன.
 

அதை அறுத்து எறிவது போல் ‘‘ஹூ... ஹா...’’ என கூச்சல்கள் கிளம்பின. தாவித் தாவி அந்தரத்தில் பறந்த சிவகாமியை ஆச்சர்யத்துடன் பார்த்து காஞ்சிபுர மக்கள் எழுப்பிய குரல் அது எனப் புரிந்தது. நடப்புக்கு வந்தான். 

 

இதற்குள் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலிருந்து மீண்ட பாலகன், ‘‘சிவகாமியின் இந்தச் செயல்தான் நீங்கள் கேட்டதற்கான பதில் வணிகரே...’’ என்றான்.‘‘எது..? அந்தரத்தில் அவள் தாவித் தாவிப் பறப்பதா..?’’ 

 

‘‘இல்லை... காஞ்சி மாநகரத்தில் இப்படிச் செய்வது! இங்கு அவரைத் தடுப்பவரோ துரத்துபவரோ யாருமில்லை. அப்படியிருக்க, சாலைகளில் நடக்காமல் அல்லது புரவியில் செல்லாமல் எதற்காக இந்த சாகசத்தை மேற்கொள்ள வேண்டும்..?’’
பாலகனே தொடரட்டும் என கரிகாலன் அமைதியாக நின்றான்.புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக அவனே தொடர்ந்தான். ‘‘பல்லவ இளவல் எங்கிருக்கிறார் என்ற தகவல் சிவகாமிக்குத் தெரிந்திருக்கவேண்டும்! அதனால்தான் உங்களுக்கு முன், தான் அங்கு செல்லவேண்டும் எனப் பறக்கிறார்!’’
கரிகாலன் வாய்விட்டுச் சிரித்தான். 

‘‘எதற்காக நகைக்கிறீர்கள் வணிகரே..?’’
‘‘பல்லவ இளவரசர் இருக்கும் இடம் ஒருவேளை அவளுக்குத் தெரிந்திருக்கலாம் என்று சொன்னாய் அல்லவா... அதற்காகத்தான் நகைத்தேன்...’’
‘‘அதற்கு வாய்ப்பில்லை என்கிறீர்களா..?’’‘‘ம்...’’

‘‘பிறகு ஏன் சிவகாமி இப்படி அந்தரத்தில் பறந்து செல்லவேண்டும்..?’’
‘‘ஒரு சந்தேகம் இருக்கிறது... உறுதியானதும் சொல்கிறேன்..! ஆனால், ஒன்று. என் வழியாக அவளுக்கு நடக்க வேண்டிய காரியம் முடியும்வரை என்னைவிட்டு அகலமாட்டாள்!’’ சொன்ன கரிகாலனின் கண்கள் பளிச்சிட்டன.கேட்ட பாலகனின் நயனங்களும் ஒளிர்ந்தன. 

இருவரும் கண்களால் உரையாடினார்கள். அதன் முடிவு இருவரது உதடுகளிலும் புன்னகையாகப் பூத்தது.‘‘சரி...’’ மகிழ்ச்சியுடன் தலையசைத்த பாலகன், ‘‘இரண்டு விஷயங்களை மட்டும் இப்போது தெளிவுபடுத்தி விடுகிறேன்...’’ என்றான்.
‘‘என்ன..?’’

‘‘சாளுக்கிய மன்னர் இதுவரை சிவகாமியைச் சந்திக்கவும் இல்லை... அவளிடம் பேசவும் இல்லை...’’‘‘இதைத்தான் முன்பே கூறிவிட்டாயே!’’‘‘திரும்பவும் இதற்கு அழுத்தம் தரவேண்டியது என் கடமை வணிகரே!’’‘‘சரி... இரண்டாவது..?’’‘‘விக்கிரமாதித்த மாமன்னர் உங்களிடம் அந்தரங்கத்தில் பேசியதும், முத்திரை மோதிரம் கொடுத்ததும் எப்படி சிவகாமிக்குத் தெரியும் என்று சற்று நேரத்துக்குமுன் கேட்டீர்கள்... அந்த சந்தேகம் உனக்கு வரவில்லையா என்றும் என்னிடம் விசாரித்தீர்கள்...’’

‘‘அப்போது கேட்டேன்... இப்போது பதில் கிடைத்துவிட்டது!’’
பாலகனுக்குத் தூக்கி வாரிப்போட்டது. ‘‘என்ன... விடை 
கிடைத்துவிட்டதா..?’’‘‘ஆம். ஸ்ரீராமபுண்ய வல்லபர் அவளிடம் சொல்லியிருப்பார்!’’

பாலகனின் கண்கள் தெறித்து விழுந்துவிடுவதுபோல் விரிந்தன. கரிகாலன் அவனை நெருங்கி அணைத்துக் கொண்டான். ‘‘ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பதுபோல்தான் இது! மன்னராகவே இருந்தாலும் அவரைக் கண்காணிக்க வேண்டியதும்; அவரது அந்தரங்க மெய்க்காப்பாளர்களில் ஒருவனை தனது நம்பிக்கைக்குரிய ஒற்றனாக மாற்றுவதும் ஓர் அமைச்சரின் கடமை! அப்படியிருக்க, சாளுக்கிய போர் அமைச்சர் மட்டும் இப்படிச் செய்யாமலா இருப்பார்?! தன் கடமையைத்தான் அவர் செய்கிறார். அது நாட்டுப்பற்று. 

நீயாக இருந்தாலும் நானாக இருந்தாலும் அப்படித்தான் செய்வோம்!’’நிம்மதியுடன் அந்த அணைப்பிலிருந்து பாலகன் அகன்றான். ‘‘சாளுக்கிய மன்னர் எதனால் உங்கள் மீது அவ்வளவு மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார் என்பது இப்போது புரிகிறது! இதைத்தான் இரண்டாவது விஷயமாகத் தெளிவுபடுத்த முயன்றேன்...’’
 

கரிகாலன் தன் கேசத்தைக் கோதிவிட்டான். ‘‘விக்கிரமாதித்த மன்னர் என்னைக் காப்பாற்ற நினைக்கிறார். இதை சாளுக்கிய போர் அமைச்சர் விரும்பவில்லை. என்னைப் பிணைக் கைதியாகப் பிடித்து, மறைந்திருக்கும் பல்லவ இளவலை வெளியில் வரவைக்கலாம் எனத் திட்டம் வகுக்கிறார். 

 

இதற்காக மன்னருக்குப் பிடிக்காத செயலிலும் இறங்கத் துணிந்துவிட்டார். இதற்காகவே சிவகாமியையும் பயன்படுத்துகிறார்... பதிலுக்கு அவள் இவரைப் பயன்படுத்துகிறாள்! இருவருக்குமே தாங்கள் ஒருவரையொருவர் நம்பவில்லை என்று தெரியும். ஆனாலும் பல்லவ இளவலை என் வழியாகப் பிடிக்கும் விஷயத்தில் கூட்டணி அமைத்திருக்கிறார்கள்!’’

‘‘இப்படிச் சரியாக நீங்கள் கணக்கிடுவீர்கள் என்று மன்னர் சொன்னார்..!’’ பாரம் இறங்கிய திருப்தி பாலகனின் குரலில் வழிந்தது. ‘‘இனி தாமதிக்க நேரமில்லை வணிகரே. சாளுக்கிய போர் அமைச்சர் எப்போது வேண்டுமானாலும் இங்கு வந்துவிடுவார். அதற்குள் நாம் வெளியேற வேண்டும்...’’ ‘‘சரி... வா...’’ பாலகனின் கரங்களைப் பிடித்தபடி கரிகாலன் அறையை விட்டு வெளியேற முற்பட்டான்.

‘‘நேர் வழியில் அல்ல வணிகரே! காவலுக்கு நிற்கும் வீரர்களை மீறி நீங்கள் வெளியேறுவீர்கள் என்று தெரியும். ஆனால், இந்த மாளிகையில் சண்டை நடக்கவும், மக்களின் கவனம் இதன்மீது திரும்பவும் மன்னர் விரும்பவில்லை...’’சொன்ன பாலகன், நேராக அறையின் மூலையில் இருந்த சிற்பத்தை மூன்று முறை வலப்பக்கமாகத் திருப்பினான்.

மறுகணம் சிலை அகன்று சுரங்கம் விரிந்தது. சிலைக்குப் பின்னால் இருந்து பந்தத்தை எடுத்த பாலகன், அறையில் எரிந்துகொண்டிருந்த தீபத்தில் அதைப் பற்ற வைத்துவிட்டு கரிகாலனைப் பார்த்து வரும்படி செய்கை செய்துவிட்டு சுரங்கத்தினுள் நுழைந்தான்.பல்லவர்களின் சுரங்க ரகசியம் கடிகை மாணவனுக்கும் தெரிந்திருக்கிறது!  
 

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்

 

 

http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14805&id1=6&issue=20190118

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ரத்த மகுடம்-37

பிரமாண்டமான சரித்திரத் தொடர்

 

இருளில் நடமாடியவன் என்பதாலும், இருளும் ஒளிதான் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவன் என்பதாலும் கரிகாலன் வெளிச்சத்தில் நடப்பது போலவே சுரங்கத்துக்குள்ளும் நடந்தான்.அவனுக்கு முன்னால் பந்தத்தை ஏந்தியபடி பாலகன் சென்று கொண்டிருந்தான். நடையில் தள்ளாட்டமில்லை. ஏதோ பழகியவன் போலவே அவன் நடந்தது உண்மையிலேயே கரிகாலனை ஆச்சர்யப்படுத்தியது. குறிப்பாக பாதை.
28.jpg
சுரங்கங்களின் பாதை சமதளம் போல் இருக்காது. சற்றே கரடுமுரடாகவே உருவாக்கப்பட்டிருக்கும். தவிர நேர்கோட்டிலும் இருக்காது. வளைந்து நெளிந்தே செல்லும். பழக்கப்பட்டவர்கள் கூட தடுமாறுவார்கள். பிடிமானத்துக்கு சுவரைப் பிடித்துக் கொள்வார்கள். சுவரும் சுவருக்கான அங்க லட்சணங்களுடன் இருக்காது. பெயருக்குத் தான் அவை சுவரே தவிர மற்றபடி பாறைகளின் புடைப்புதான்.

உயரமும் அகலத்தைப் போலவே ஏறக்குறையத்தான் இருக்கும். தலையை நிமிர்த்தியும் நடக்க முடியாது; குனிந்தபடியே செல்லவும் முடியாது. செதுக்கப்பட்டதற்கு ஏற்றாற்போல் நிமிரவும் குனியவும் வளையவும் வேண்டும்.இவை அனைத்தையுமே கச்சிதமாக அந்தப் பாலகன் கடைப்பிடித்தான். அதனாலேயே அவனைக் குறித்து அறியும் ஆவல் கரிகாலனுக்குள் அதிகரித்தது. 

சில கணங்களுக்கு முன், ‘நானாக உன்னைப் பற்றி அறிந்துகொள்கிறேன்...’ என்று அவனிடம் சொன்னதுகூட அத்தருணத்தில் மறந்துவிட்டது! தூண்டில் வீசும் விதமாக பேச்சுக் கொடுத்தான்.‘‘பலமுறை இந்தப் பாதை வழியே வந்திருக்கிறாயா..?’’
‘‘இல்லை வணிகரே..!’’ திரும்பிப் பார்க்காமல் நடந்தபடியே பாலகன் பதிலளித்தான்.
‘‘நம்ப முடியவில்லை...’’
 

‘‘சரித்திரம் கற்றவர்கள் நிச்சயம் நம்புவார்கள்!’’‘‘அதாவது வரலாறு குறித்து நான் ஏதும் அறியாதவன் என்கிறாய்... அப்படித்தானே..?’’‘‘நிச்சயமாக இல்லை. என் அண்ணன் எந்தளவுக்கு ஆய கலைகள் அறுபத்து நான்கையும் கற்றுத் தேர்ந்தவர் என்பது எனக்குத் தெரியும். கண்களால் கண்டிருக்கிறேன். 
 
சாளுக்கிய மன்னர் வழியே தீர விசாரித்தும் அறிந்திருக்கிறேன். எனவே அந்த நோக்கத்தில் நான் சொல்லவில்லை என்பதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்...’’ பாதையில் வளைந்து நெளிந்து நடந்தபடியும் அதனால் குரலில் தொனித்த எச்சரிக்கையுடனும் பாலகன் சொன்னான்.
 

‘‘எனில் நோக்கம் என்னவோ..?’’
 

‘‘கற்றது கூட சூழல் காரணமாக நினைவுக்கு வராது. பனி போல் மூடியிருக்கும். அதை விலக்கும் சூரியன் போல் ஊடுருவிப் பாருங்கள் என்றே குறிப்பிட வந்தேன்... பார்த்து வணிகரே... இனி பாதை பள்ளம் நோக்கிச் செல்லும். படிக்கட்டுகள் இல்லை. சரிவு. எச்சரிக்கையுடன் வாருங்கள்...’’
 

‘‘எனக்கு இது பழக்கப்பட்ட இடம்தான். இந்த இடத்தில் தொடங்கும் பள்ளம் சமதளத்தை அடைந்து வலப்பக்கமாகத் திரும்பும். கால் நாழிகை அதனூடாக நடந்தால் இடதுபுறமாக மேல் நோக்கி ஏறும். அங்கு படிக்கட்டுகள் உண்டு...’’
‘‘தெரியும் வணிகரே..!’’

‘‘வந்தது இல்லை என்றாயே..?’’
‘‘உங்கள் அளவுக்கு இல்லை என்றாலும் அடியேனும் கடுகளவு சரித்திரமும் சிற்ப சாஸ்திரமும் கற்றிருக்கிறேன்! அதை வைத்துதான் இந்த சுரங்க அமைப்பையும் தெரிந்து கொண்டேன். விக்கிரமாதித்த மாமன்னர் அதை அறியவைத்தார்!’’கரிகாலனுக்குள் விதையாக விழுந்த கேள்வி இப்போது தோப்பாக வளர்ந்திருந்தது. கிடைக்கும் விடைகள் அனைத்தும் மறு வினாக்களாகவே இருந்தன. ஆணிவேரைக் கண்டறிந்து பிளக்காமல் பதிலைத் தெரிந்துகொள்ள முடியாது!
 

‘‘அறையின் ஈசான மூலையில் இருந்த பெண் சிலையை மூன்று முறை வலப்பக்கமாக சாளுக்கிய மன்னர் திருப்பச் சொன்னாரா..?’’
 

‘‘ஆம் வணிகரே! இந்த மாளிகைக்கு உங்களை எப்படியும் ராமபுண்ய வல்லபர் வரவழைப்பார் என மன்னர் கணக்கிட்டார். அதனாலேயே என்னையும் அனுப்பி வைத்தார். மாளிகையைச் சுற்றிக் காவல் இருக்கும் என்பதால் இந்த சுரங்க வழியை பயன்படுத்தச் சொன்னார்! சிலைக்குப் பின்னால் பந்தம் தயாராக எரிந்துகொண்டிருக்கும் என்று சொன்னதும் அவர்தான்!’’

‘‘சாளுக்கிய மன்னர் இந்த சுரங்கம் வழியாக..?’’
‘‘வந்ததில்லை! எனக்கு உறுதியாகத் தெரியும்!’’கரிகாலனின் உதட்டில் புன்னகை பூத்தது. ‘‘திரியை நிமிட்டியதும் பற்றி எரிய ஆரம்பித்திருக்கிறாய்!’’
‘‘ஆம்! சாதவாகனர்களின் தீபம் கொழுந்துவிட்டு எரிகிறது!’’கேட்டதும் கரிகாலன் வாய்விட்டுச் சிரித்தான். பாலகனும் அதை எதிரொலித்தான். சுரங்கம் அதிர்ந்தது! 

சாதவாகனர்களிடம் அடங்கியிருந்த இரு சிற்றரசுகளே இப்போது பல்லவர்கள்... சாளுக்கியர்கள் என தனித்தனி சாம்ராஜ்ஜியங்களாக விரிந்திருக்கிறது என்பதையும், இருவருக்கும் இடையிலான பகை, படைத்தளபதிகளாக அவர்களது முன்னோர்கள் இருந்த காலம்தொட்டே தொடர்கிறது என்பதையுமே ‘சரித்திரம் கற்றவர்கள் நிச்சயம் அறிவார்கள்’ என பாலகன் சற்று நேரத்துக்கு முன்பு குறிப்பிட்டான். 

அதையே கணத்தில் கரிகாலனும் உணர்ந்தான்.ஆக, சாதவாகனர்கள் காலத்து சுரங்க உருவாக்கம் இப்போதும் வாதாபியிலும் காஞ்சி மாநகரத்திலும் வாழையடி வாழையாகத் தொடர்கிறது! இதனால்தான் சுரங்கத்தைக் காணாமலேயே சாளுக்கிய மன்னர் அது இருக்கும் இடத்தை அரண்மனையில் இருந்தபடியே சொல்கிறார்... வரலாறும் சிற்பமும் கற்ற இந்த பாலகன் கணத்தில் அதன் வரைபடத்தை தன் மனக்கண்ணில் வரைந்திருக்கிறான்!
அநேகமாக இதேபோன்ற சுரங்கம் ஒன்றில் பலமுறை அவன் நடந்திருக்கவேண்டும். அதனால்தான் கால்கள் பழகியிருக்கிறது; இங்கும் தடுமாறாமல் நடக்க முடிகிறது. 

காஞ்சிபுரத்துக்கு சமீபத்தில்தான் வந்திருக்கிறான். அப்படியானால் இந்த பாலகன் நடமாடிய சுரங்கம் வாதாபியில் இருக்க வேண்டும்! சாளுக்கிய மன்னரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக அதனால்தான் மாற முடிந்திருக்கிறது.‘‘படிக்கட்டு வருகிறது வணிகரே..!’’ பாலகன் குரல் கொடுத்தான்.‘‘சொன்னவனிடமே சொல்கிறாயா?!’’‘‘ஒப்படைக்கப்பட்ட வழிகாட்டியின் பொறுப்பை சரிவர நிறைவேற்ற வேண்டாமா?!’’ 
சிரித்தான். சிரித்தார்கள். பரஸ்பர சந்தேகங்களுக்கு அப்பால் இருவருக்கும் இடையில் ஓர் இணக்கம் உருவாகியிருந்தது.

பந்தத்தை ஏந்தியபடி பாலகன் ஏற, கரிகாலன் பின்தொடர்ந்தான். ஏழு படிக்கட்டுகளுக்குப் பின் பாதை நேராகும். அரை காத தூரம் வரை எந்த வளைவும் நெளிவும் கிடையாது. பாதை குறுகலாக இருக்கும் என்பதால் ஒருவர் பின்னால்தான் மற்றவர் செல்ல முடியும். அருகருகில் நடக்க வாய்ப்பில்லை.‘‘தம்பி...’’ முதல்முறையாக உறவுமுறை சொல்லி கரிகாலன் அழைத்தான்.‘‘சொல்லுங்கள் அண்ணா!’’‘‘இருவருக்குமே பாதை தெரியும்...’’
‘‘ஆம்!’’‘‘முடியும் இடமும்!’’
‘‘...’’

‘‘என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதல்லவா..?’’‘‘தெளிவாக அண்ணா!’’‘‘பிறகென்ன..? வந்த வழியே திரும்பிவிடு!’’‘‘அங்கு ராமபுண்ய வல்லபர் காத்திருப்பார்! அவரிடம் சிக்க விரும்பவில்லை!’’‘‘மாளிகைக்கு வரத் தெரிந்த உனக்கு வெளியேறவும் வழி தெரிந்திருக்குமே! தவிர மாளிகையில் இருந்து மட்டும் சுரங்கம் தொடங்கவில்லையே!’’

‘‘ஆம்... இப்போது படிக்கட்டில் ஏறினோமே... அப்படி ஏறாமல் நேராகச் சென்றால் கடிகையை அடையலாம்!’’‘‘சிற்ப சாஸ்திரிதான்! ஒப்புக்கொள்கிறேன்! எனக்கு பந்தம் அவசியமில்லை. நீயே எடுத்துச் செல்!’’‘‘மன்னிக்க வேண்டும் அண்ணா! கோட்டைக்கு வெளியே தங்களை அனுப்பும் வரை உடன் இருக்கும்படி மன்னர் கட்டளையிட்டிருக்கிறார்! மீற முடியாது... தவிர கோட்டைக்கு வெளியே எனக்கும் வேலை இருக்கிறது..!’’

‘‘அதுவும் சாளுக்கிய...’’
‘‘மன்னரின் கட்டளையில்லை! சொந்த விஷயம்!’’அது என்ன என்று கரிகாலனும் கேட்கவில்லை. பாலகனும் சொல்லவில்லை. குறுகலான பாதையில் நடந்தார்கள். இடப்பக்கம் திரும்ப சில அடிகளே எடுத்துவைக்கவேண்டும். சட்டென்று கரிகாலன் தன் சுவாசத்தை இழுத்து முன்னால் சென்றுகொண்டிருந்த பாலகனின் கரங்களைப் பற்றினான்.

அந்தப் பற்றுதல் உணர்த்திய செய்தி பாலகனுக்கு புரிந்தது. எதுவும் பேசாமல் அதேநேரம் திரும்பியும் பார்க்காமல் அசையாமல் நின்றான். நெருங்கி அவன் செவியில் கரிகாலன் முணுமுணுத்தான். ‘‘சிற்ப சாஸ்திரத்தை ஸ்ரீராமபுண்ய வல்லபரும் கற்றிருக்கிறார் என்பதை நாம் மறந்துவிட்டோமே!’’சத்தம் வராமல் பாலகன் சிரித்தான்.

அதே மவுனப் புன்னகையை கரிகாலனும் எதிரொலித்தான்.நான்கு நயனங்களும் உரையாடின.பிறகு கரிகாலன் பழையபடி அவனை முன்னால் செல்லும்படி சைகை செய்தான்.ஆமோதிக்கும் வகையில் தலையசைத்த பாலகன், பந்தத்தை ஏந்தியபடி நடக்கத் தொடங்கினான்.‘‘இனிதான் அன்னம் உண்ண வேண்டுமா..?’’ குரலை உயர்த்தாமல் முன்பு போலவே கரிகாலன் பேச்சுக் கொடுத்தான்.

‘‘கடிகையில் பத்திய சமையல். அலுத்துவிட்டது. நாக்கும் செத்துவிட்டது. கோட்டைக்கு வெளியே தெரிந்தவரின் இல்லம் இருக்கிறது. இன்று அறுசுவை உணவு. வரச்சொல்லியிருக்கிறார்கள். அருந்தப் போகிறேன்...’’பாலகன் சொல்லி முடிக்கவும் இடப்பக்கம் பாதை திரும்பவும் சரியாக இருந்தது.பேச்சுக் கொடுத்தபடியே இதைக் கணக்கிட்டிருந்த கரிகாலன் உடனே செயலில் இறங்கினான்.

இப்படி நடக்கும் என்பதை ஏற்கனவே நயனங்களின் வழியே தெரியப்படுத்தி இருந்ததால் பாலகன் சட்டென்று சுவருடன் தன்னை ஒட்டிக்கொண்டபடி நின்றான்.இந்த அவகாசம் கரிகாலனுக்குப் போதுமானதாக இருந்தது. தன் கால் கட்டை விரல் இரண்டையும் தரையில் ஊன்றியவன், சுவாசத்தை இழுத்துப் பிடித்து ஓர் எம்பு எம்பினான்.

தன் வலது கை முஷ்டியை இறுக்கி திருப்பத்தை நோக்கி ஓங்கு ஒரு குத்துவிட்டான்!‘‘அம்மா..!’’ என்ற அலறல் சுரங்கத்தையே அதிர வைத்தது.

தாமதிக்கவேயில்லை. 
 
குத்து வாங்கியவனை தன் ஒரு கையால் மேலே தூக்கி சுரங்கத்தின் கூரையில் மோதும்படி செய்தான். அத்துடன் தன் வலது காலை உயர்த்தி முன்னோக்கி உதைத்தான்.அங்கு மறைந்து நின்றிருந்தவன் இதை எதிர்பார்க்கவில்லை. கரிகாலனின் பாதம் தன் தொண்டையில் இடியென இறங்கியதும் சமாளிக்க முடியாமல் தரையில் சரிந்தான்.


கூரையில் மோதப்பட்டவனும் சுயநினைவை இழந்து கீழே விழுந்தான்.இருவருமே தங்கள் முகத்தை மறைக்கும்படி ஆடையைச் சுற்றியிருந்தார்கள்.பாலகன் குனிந்து அவர்களது நாடியைப் பரிசோதிக்கத் தொடங்கினான்.‘‘உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை தம்பி... மயக்கத்தில் இருக்கிறார்கள். தெளிய மூன்று நாழிகைகள் ஆகும்...’’ குனிந்து பார்க்காமல் சொன்ன கரிகாலனின் கண்கள் சுற்றிலும் ஆராய்ந்தன.

‘‘கணக்கிட்டு உதைத்திருக்கிறீர்கள்! நீங்கள் பாய்ந்த வேகத்தில் நியாயமாகப் பார்த்தால் இவர்களது உயிர் போயிருக்க வேண்டும்..!’’‘‘வேண்டாம் என்றுதான் அப்படிச் செய்யவில்லை...’’‘‘அண்ணா..! இவர்கள் சாளுக்கிய வீரர்கள் அல்ல!’’ மயங்கிக் கிடந்த இருவரது முகத்தையும் மறைத்திருந்த ஆடையை விலக்கிவிட்டு அந்தப் பாலகன் சொன்னான்.

‘‘தெரியும்! இன்னும் பலர் சுரங்கத்தைச் சுற்றி நம்மைச் சிறைப்பிடிக்கக் காத்திருக்கிறார்கள்!’’‘‘அறிவீர்களா..?’’‘‘ம்... சாளுக்கிய வீரர்களின் காலடி ஓசை வேறு மாதிரியாக இருக்கும்!’’‘‘அப்படியானால் இவர்கள்..?’’ பாலகன் ஆச்சர்யத்துடன் கேட்டான்.நிதானமாக அதற்கு கரிகாலன் அளித்த பதில் அந்த சுரங்கத்தையே நடுங்க வைத்தது!
 

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்

 

 

http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14839&id1=6&issue=20190125

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரத்த மகுடம்

பிரம்மாண்ட சரித்திர தொடர் - 38

‘‘பல்லவர்கள்!’’ நிதானமாகத்தான் கரிகாலன் அந்த ஏழு எழுத்துக்களையும் உச்சரித்தான். ஆனால், ஈரேழு உலகங்களும் நடுங்குவதுபோல் அந்த பாலகன் பிரமை பிடித்து நின்றான்! ‘‘என்ன சொல்கிறீர்கள் வணிகரே..?’’ தன் செவிகளை நம்ப இயலாமல் பாலகன் தடுமாறினான். ‘‘உண்மையை!’’ என்றபடியே தன் நயனங்களை எட்டுத் திசையிலும் கரிகாலன் சுழலவிட்டான். ‘‘பாதங்களை இந்தளவுக்கு கவனமாக எடுத்து வைத்து ஊன்றுபவர்கள் பல்லவ வீரர்கள்தான்! இதற்காக தனிப் பயிற்சியே அவர்களுக்கு அளிக்கப்படுகிறது!’’ 
26.jpg

‘‘அப்படியானால் உங்களைத் தாக்க எதற்காக இவர்கள் முயற்சிக்க வேண்டும் அண்ணா..?’’ இக்கட்டான அந்தக் கணத்திலும் வாய்விட்டு கரிகாலன் சிரித்தான். ‘‘‘உங்கள்’ என என்னை விலக்கி வைத்ததன் வழியாக நாம் இருவரும் வேறு வேறு என்பதை உணர்த்தி விட்டாய்!’’ ‘‘அண்ணா...’’ ‘‘இதில் வியப்படைய ஏதும் இல்லை. சொல்லப்போனால் முன்பே தெரிந்ததுதான்..!’’ ‘‘...’’ ‘‘என்ன அப்படிப் பார்க்கிறாய்? எப்போது சாளுக்கிய மன்னரின் விஸ்வாசியாக நீ இருக்கிறாயோ அப்பொழுதே நாம் இருவரும் எதிர் எதிர் திசைகளில் பயணம் செய்பவர்கள்தான் என்பதை உணர்த்திவிட்டாய். 

மன்னரின் கட்டளைக்கு அடிபணிந்து இந்தக் கணத்தில் என்னைக் காப்பாற்ற முயற்சிக்கிறாய்! மற்றபடி வாளை எடுத்து என்னைத் தாக்கவே உன் புஜங்கள் துடிக்கின்றன! ஸ்ரீராமபுண்ய வல்லபரைப் போல் என்னைச் சிறை செய்யவே அடி மனதிலிருந்து விரும்புகிறாய்!’’ ‘அதில் தவறொன்றுமில்லையே...’’ தன் பார்வையை விலக்கினான் பாலகன். ‘‘பிழையென்று நானும் குறிப்பிடவில்லையே! அவரவர் நாட்டுப் பற்று அவரவர்களுக்கு!’’ தன் கரங்களை உயர்த்தி விரல்களுக்கு சொடுக்கு போட்டான். 

அடுத்த தாக்குதலுக்கு தன் உடலை கரிகாலன் தயார்படுத்துகிறான் என்பது பாலகனுக்கு புரிந்தது. கரங்களையே வாளாக மாற்றும் வல்லமை படைத்தவன் என்பதை சில கணங்களுக்கு முன் கண்கூடாகப் பார்த்திருக்கிறான். ‘வாள்’ வீச்சில் சாய்ந்தவர்கள் வேறு அத்தாட்சியாக தரையில் மயக்கமடைந்து கிடக்கிறார்கள்! ஆனால், தன் வீரர்கள் எனத் தெரிந்தும் எதற்காக கரிகாலன் மீண்டும் ஒரு தாக்குதலுக்கு ஆயத்தமாகிறான்..? ‘‘அண்ணா...’’ மெல்ல பேச்சை ஆரம்பித்தான். ‘‘சொல் தம்பி!’’‘‘இன்னும் பலர் சுரங்கத்தை சூழ்ந்திருப்பதாகச் சொன்னீர்கள்...’’ 

‘‘ஆமாம்! அவர்களது சுவாச ஒலி உன் செவியில் விழவில்லையா..?! அதோ அந்தச் சிலைக்கு அப்பால் கூட ஒருவன் மறைந்திருக்கிறானே!’’ அந்தப் பக்கம் பார்த்துவிட்டு பாலகன் உமிழ்நீரை விழுங்கினான். ‘‘தயங்காமல் கேள் தம்பி!’’ ‘‘அடிபட்டு விழுந்திருப்பவர்கள் போல் மறைந்திருப்பவர்களும் உங்கள் நாட்டை... வந்து பல்லவர்களாக இருக்கலாம் அல்லவா?’’ ‘‘இருக்கலாம் அல்ல! அவர்களேதான்!’’ ‘‘அப்படியானால் நீங்கள் இப்போது தாக்குதலுக்குத் தயாராவது..?’’

 ‘‘சொந்த நாட்டைச் சேர்ந்தவர்களை வீழ்த்தத்தான்!’’ பட்டென்று கரிகாலன் சொன்னான். ‘‘உங்கள் நண்பர்களையா..?’’ பாலகனின் குரலில் வியப்பு வழிந்தது.
‘‘தோழர்களாக இருந்தவர்கள்! இப்போது யாருக்குப் பணிபுரிகிறார்கள் என்று அறிய வேண்டாமா..?’’ இதை சத்தமாகச் சொன்ன கரிகாலன், மேலும் குரலை உயர்த்தினான். ‘‘ஒருவேளை தன் எண்ணத்துக்கு இணங்க வைக்க என் பெரிய தாயார் இவர்களை அனுப்பியிருக்கலாமே! 

ஸ்ரீராமபுண்ய வல்லபர் இப்படிச் செய்யும்படி என் தாயாரை முடுக்கிவிட்டிருக்கலாமே! என்ன... நான் சொல்வது சரிதானே!’’ சுரங்கம் முழுக்க அவன் குரல் எதிரொலித்ததே தவிர பதிலேதும் வரவில்லை! கரிகாலனின் கண்கள் இடுங்கின. செவிகள் உயர்ந்தன; கூர்மையடைந்தன. மெல்லியதாக ஒலித்த சுவாசங்களின் ஒலியை ஒன்றுதிரட்டினான். ஒவ்வொன்றாகப் பிரித்தான். உடற்பயிற்சி மற்றும் மல்யுத்தப் பயிற்சியினால் வலுவான உடல்களில் இருந்து வெளியேறும் சுவாசங்கள் எப்படி இருக்கும் என அவனுக்கு நன்றாகத் தெரியும்! 

அவற்றை எல்லாம் ஒருபுறமாக ஒதுக்கினான்! இவை அனைத்தும் வீரர்களுக்குச் சொந்தமானவை! எஞ்சி நின்றது ஒரேயொரு சுவாசம்! அந்த ஒலியை உள்வாங்கி வாட்களைக் கூர்மைப்படுத்துவது போல் மனதுக்குள் தட்டினான்! இறுகிய உடலுக்குச் சொந்தமான சுவாசம் அதுவல்ல என்பது கணத்தில் புரிந்தது.  இந்த உடலுக்கு உரியவர் சற்றே பருமனானவராக இருக்க வேண்டும்! வயிறு பெருத்தவர்! தொடைகள் பொல பொல என்று இருக்க வேண்டும். 

கால்களை அடிக்கடி அகற்றும் ஒலி வேறு காற்றைக் கிழிக்கிறது. அதாவது மல்யுத்தங்களுக்கு பழக்கப்படாதவர். சுவாச ஒலி சர்ப்பம் போல் ‘உஸ்ஸ்ஸ்ஸ்...’ என்றிருக்கிறது. அநேகமாக வீரர்களுக்கு தலைமை ஏற்று வந்திருக்க வேண்டும்! ஆராய்ந்தவன் மெல்ல மெல்ல தன் மனதில் சித்திரம் வரைந்தான். பருமன். வயிறு. பொல பொல தொடைகள். அகற்றுவதும் ஒன்றுசேர்வதுமான பாதங்கள். பெருமூச்சாக வெளியேறும் சுவாசம்...  ‘‘மறைந்திருந்துதான் உங்களுக்குப் பழக்கமில்லையே! எதற்காக சிரமப்பட்டு ஒடுங்கி நிற்கிறீர்கள்? 

வெளியே வாருங்கள்..!’’ கரிகாலன் குரல் கொடுத்தான். பாலகன் வியப்புடன் அவன் பார்வை பதிந்த இடத்தை உற்றுப் பார்த்தான். ஒன்றும் தெரியவில்லை. கையிலிருந்த பந்தத்தை உயர்த்தினான். கிடைத்த வெளிச்சத்திலும் அங்கிருந்த சிலை மட்டுமே தெரிந்தது. குழப்பத்துடன் கரிகாலனை ஏறிட்டான். அப்பார்வையை அவன் எதிர்கொள்ளவில்லை. மாறாக புன்னகை தவழும் முகத்துடன் அதே இடத்தைப் பார்த்து சத்தம் போட்டான். ‘‘உங்களைத்தான்! வெளியே வாருங்கள் காபாலிகரே!’’ அடுத்த கணம் சிலையின் பின்புறமிருந்து காபாலிகர் வெளியே வந்தார். 

பந்தத்தின் ஒளியில் அவர் முகம் முழுக்க பற்களாகியிருந்தது! ‘‘கண்டுபிடிக்க மாட்டீர்கள் என்று நினைத்தேன்...’’  ‘‘நினைப்புதான் பிழைப்பைக் கெடுக்கும் என்பது தமிழர் வழக்கு!’’ அறைவதுபோல் அவர் தோளில் ஓங்கித் தட்டினான் கரிகாலன். ‘‘இந்த வேலைக்கு உங்களை நியமித்தவர் யார்..? புலவர் தண்டியா..?’’ ‘‘இல்லை...’’ பதிலளித்த காபாலிகர், பாலகனை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சொன்னார். ‘‘சாளுக்கிய மன்னர்!’’ கரிகாலனும் பாலகனும் ஒருசேர அதிர்ந்தார்கள்.

‘‘அவர் எதற்கு உங்களை, அதுவும் பல்லவ வீரர்களுடன் இந்த சுரங்கத்துக்கு அனுப்ப வேண்டும்?’’ பாலகனின் குரலில் சந்தேகம் பூரணமாக நிரம்பியிருந்தது. ‘‘உங்களை இதிலிருந்து விடுவிக்க! கடிகையில் உங்களைத் தேடத் தொடங்குவார்களாம். நீங்கள் இல்லை என்று தெரிந்தால் ஸ்ரீராமபுண்ய வல்லபருக்கு சந்தேகம் அதிகரித்துவிடுமாம். எனவே கரிகாலரை காஞ்சிக்கு வெளியே அழைத்துச் செல்லும் பொறுப்பை என்னை ஏற்கச் சொல்லிவிட்டு உங்களை கடிகைக்கு உடனடியாகத் திரும்பச் சொன்னார்!’’

 ‘‘பல்லவ வீரர்களை உடன் அழைத்துச் செல்லும்படி சொன்னதும் அவர்தானா..?’’ பாலகன் இகழ்ச்சியுடன் கேட்டான். ‘‘இல்லை! தனிப்பட்ட முறையில் எனக்குத்தான் கட்டளையிட்டார். தனி மனிதனாக என்னால் இதைச் செய்ய முடியுமோ முடியாதோ என சந்தேகம் வந்தது. எனக்கு நம்பகமானவர்கள் பல்லவ வீரர்கள்தான்! எனவே, அவர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து காஞ்சிக்கு வெளியில் இருந்து சுரங்கத்துக்குள் நுழைந்தேன்!’’ 

‘‘வெளிப்படையாக இதை எதிர்கொண்டு சொல்லியிருக்கலாமே! எதற்காக மறைவாக நின்று தாக்குதலை நிகழ்த்த வேண்டும்..?’’ பாலகன் கொக்கி போட்டான். ‘‘கரிகாலர் இன்னமும் அதே கூர்மையுடன் இருக்கிறாரா என சோதிக்க நினைத்தேன்!’’ ‘‘காரணம்..?’’ பாலகன் புருவத்தை உயர்த்தினான். ‘‘காஞ்சிக்கு வெளியே அவர் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன!’’ ‘‘அது என்னவோ..?’’ ‘‘சொல்ல அனுமதியில்லை! அது பல்லவர்களின் ரகசியம்! சாளுக்கிய மன்னரே அதுகுறித்துக் கேட்காதபோது நீ... நீங்கள் கேட்பது சரியல்ல!’’ காபாலிகன் இப்படிச் சொல்வான் என்று பாலகன் எதிர்பார்க்காததால் விழித்தான். 

அதுவரை அமைதியாக இருந்த கரிகாலன் வாய் திறந்தான். ‘‘இதற்கு மேல் உரையாடல் அவசியமில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் காபாலிகர் இனி இதுகுறித்து எந்த பதிலும் சொல்ல மாட்டார். கேட்பது முறையுமல்ல. தம்பி...’’

‘‘அண்ணா...’’ ‘‘இவர் மீது இன்னமும் சந்தேகம் இருக்கிறதா..?’’ பாலகன் அமைதியாக நின்றான். புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக காபாலிகன் தன் இடுப்பில் இருந்து முத்திரை மோதிரம் ஒன்றை எடுத்தான். அது சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் அந்தரங்க முத்திரை மோதிரம்! பார்த்ததுமே பாலகனின் முகத்தில் இருந்த சந்தேகம் அகன்றது. ‘‘நல்லது அண்ணா... நான் உத்தரவு வாங்கிக் கொள்கிறேன்!’’ சொல்லும்போதே அவன் குரல் தழுதழுத்தது.

கண்ட கரிகாலன் உணர்ச்சிவசப்பட்டான். சட்டென அவனை இழுத்து அணைத்தான்! கரிகாலனின் மார்பில் பாலகன் ஒன்றினான். கணங்களுக்குப் பின் விடுவித்தான். ‘‘பந்தத்தை எடுத்துக் கொண்டு கடிகைக்கு பத்திரமாகச் செல் தம்பி! எங்களுக்கு பழக்கப்பட்ட பாதைதான். ஒளி தேவையில்லை. வாய்ப்பு அமையும்போது நேரில் சந்திக்கலாம். அநேகமாக அது போர்க்களமாக இருக்கும் என்று நினைக்கிறேன்! எதிர் எதிர் அணியில் நின்றபடி அவரவர் கடமையை இருவரும் நிறைவேற்றுவோம்!’’

‘‘அண்ணா...’’ ‘‘சாளுக்கிய மன்னருக்கு என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துவிடு!’’ பதில் பேசாமல் குனிந்து கரிகாலனின் கால்களைத் தொட்டு வணங்கிவிட்டு பாலகன் விடைபெற்றான். வந்த வழியே பந்தத்துடன் மறைந்தான். அவன் செல்வதையே மவுனமாக கரிகாலன் பார்த்துக் கொண்டிருந்தான். கண்கள் கலங்கின. காலடி ஓசை தேய்ந்து மறைந்ததும், காபாலிகன் பக்கம் திரும்பி கண்களால் ஜாடை காட்டினான்.

இருள் பழகியதும் பிறந்த ஒளியில் அந்த செய்கை காபாலிகனுக்கு தெளிவாகப் புரிந்தது. குனிந்து மயங்கியிருந்த வீரர்களின் கன்னத்தில் மூன்று முறை தட்டினான். சட்டென்று விழுந்திருந்தவர்கள் எழுந்து நின்றார்கள்! ‘‘நீங்கள் சொன்னபடியே எல்லாம் நல்லபடியாக நடந்திருக்கிறது...’’ முணுமுணுத்த காபாலிகன், சாளுக்கிய மன்னரின் முத்திரை மோதிரத்தை கரிகாலனிடம் கொடுத்தான். ‘‘இந்தாருங்கள் மன்னர் உங்களிடம் கொடுத்த முத்திரை மோதிரம்!’’

அதை வாங்கி தன் இடுப்பில் கரிகாலன் பத்திரப்படுத்தினான். ‘‘எங்கே உங்களிடம் ‘மன்னர் கொடுத்த முத்திரை மோதிரத்தைக் காட்டுங்கள்’ என அந்த பாலகன் கேட்டுவிடுவானோ என்று பயந்தேன்!’’ காபாலிகன் பெருமூச்சு விட்டான். ‘‘அப்படிக் கேட்டிருந்தால் நமது உத்தி வேறு மாதிரியாகியிருக்கும்! சுரங்கத்துக்குள் நுழைவதற்கு முன்னால் ரகசியமாக நான் வைத்த மோதிரத்தை எடுத்துக்கொண்டு நன்றாக நடித்தாய்!’’

‘‘ஒற்றர்களின் கலை!’’ தலைதாழ்த்தினான் காபாலிகன். ‘‘பேச நேரமில்லை. எப்போது வேண்டுமானாலும் நம் குட்டு வெளிப்பட்டு விடும்...’’ ‘‘அதற்கு வாய்ப்பு இருக்கிறதா..?’’ ‘‘இருக்கிறது! நாம் நடித்திருப்பது பாலகனிடம் அல்ல. சாளுக்கிய மன்னரிடம்! இதை மறந்துவிடாதே...’’ சொன்ன கரிகாலன் மயங்கியதுபோல் நடித்த பல்லவ வீரர்களை ஏறிட்டான். ‘‘அடி பலமாகப் பட்டுவிட்டதா..?’’ ‘‘இல்லை. பயிற்சிக் காலத்தை நினைவுபடுத்தியது!’’ பெருமையுடன் சொன்னார்கள்.

மலர்ச்சியுடன் அவர்களை அழைத்துக்கொண்டு வந்த வழியே கரிகாலன் திரும்பினான்! ‘‘பாதை இதுவல்ல...’’ காபாலிகன் மெல்ல குரல் கொடுத்தான். ‘‘தெரியும்! நாம் காஞ்சிக்கு வெளியே செல்லப் போவதில்லை...’’ ‘‘பிறகு..?’’ ‘‘காஞ்சியில் இன்னும் முடிக்க வேண்டிய பணி இருக்கிறது!’’ அதற்குமேல் கரிகாலன் எதுவும் பேசவில்லை. காபாலிகனும் பல்லவ வீரர்களும் அவனைப் பின்தொடர்ந்தார்கள். 

கால்கள் தடுமாறாமல் இருளில் நடந்து சென்ற கரிகாலன், சட்டென்று ஓரிடத்தில் நின்றான். அங்கே நான்கைந்து சிலைகள் திசைக்கு ஒன்றாக செதுக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு சிலையின் இடுப்பில் கை வைத்தான். ‘‘எதிர்பார்த்தேன் சிவகாமி...’’ என்றபடியே அவள் நாபியில் தன் ஆள்காட்டி விரலை நுழைத்து ஒரு சுற்று சுற்றினான்!

(தொடரும்)

- கே.என்.சிவராமன்

http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14868&id1=6&issue=20190201

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ரத்த மகுடம்-39

பிரமாண்டமான சரித்திரத் தொடர்

நாபியைச் சுற்றிலும் இருந்த ரோமங்கள் வீறுகொண்டு எழுந்தன! சொற்களை உதிர்க்காமல் சிலையோடு சிலையாக சிவகாமி நின்றாள். அடங்கியிருந்த சுவாசம் பெருமூச்சுகளாக வெளிப்பட்டதையும் அதற்கு ஏற்ப ஸ்தனங்கள் எழுந்து தாழ்ந்ததையும் கரிகாலன் அந்த இருளிலும் கவனித்தான்.பளபளத்த அவன் கண்கள் எதைக் காண்கின்றன என்பதை அறிந்திருந்த சிவகாமி வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட உணர்ச்சிகளில் தத்தளித்தாள்!


21.jpg

‘‘கரிகாலரே..!’’ தொண்டையைக் கனைத்தான் காபாலிகன்.‘‘என்ன..?’’ திரும்பிப் பார்க்காமல் குரல் கொடுத்தான்.‘‘அந்தப் பக்கமாக காலடி ஓசை கேட்கிறது! யாரென்று நாங்கள் பார்த்துவிட்டு வருகிறோம்!’’ சொன்ன காபாலிகன் வீரர்களுக்கு சைகை செய்துவிட்டு அவர்களைக் கடந்து சென்றான்!தங்களைப் பார்த்து நகைக்கிறானோ..? கணத்தில் சிவகாமிக்குத் தோன்றியது. 

அது சரிதான் என்பதற்கு அடையாளமாக காபாலிகன் முணுமுணுத்தான். ‘‘விரைவில் முடித்துவிடுங்கள்..!’’‘முடித்து..?’ சிவகாமிக்கு தூக்கிவாரிப் போட்டது. கண்களும் கனலைக் கக்கின.‘‘அவன் உரையாடலைக் குறிப்பிட்டான்! நீ எதை நினைத்தாய்..?!’’ கேட்டபடியே அவள் கழுத்தில் கரிகாலன் தன் முகத்தைப் பதித்தான்!

என்னவென்று சொல்வாள்..? அந்தச் சூழலில் எந்த சொற்களை உச்சரித்தாலும் அது வேறு பொருளைத்தான் தரும். தமிழ் மொழி சுவை மிகுந்தது மட்டுமல்ல... சங்கடம் தருவதும் கூட!அசையாமல் நின்றாள். அசைவு ஏற்படுத்த விரும்பினான்!அவளை அணைத்தபடியே அரைச்சுற்று திரும்பினான். இப்போது அவன் சுரங்கத்தின் சுவரில் சாய்ந்திருந்தான். அவன் மேல் அவள் பரவியிருந்தாள். இல்லை, பரப்பியிருந்தான்!

விழித்துக்கொண்ட அவளது புலன்களின் துடிப்பை அவன் தேகம் உணர்ந்தது; அதற்கு ஏற்ற மறுமொழியை அவன் நரம்புகள் அவளுக்கு அளித்தன! 
வீரர்களுடன் சென்ற காபாலிகனின் பாத ஒலி மெல்ல மெல்ல அடங்கியது. அடங்கியதா அல்லது அதை உணரும் சக்தி தன் செவிக்கு இல்லையா..? 
சிவகாமிக்கு பதில் தெரியவில்லை. அவளுக்குள் பெருக்கெடுத்த ஊற்று நீரின் ஒலியே செவிப்பறையைக் கிழித்தது! கரிகாலனின் தேகம் அவள் உணர்ச்சியை எதிரொலித்தது!

ஏதும் பேசாமல் மவுனமாக இருவரும் சாய்ந்திருந்தாலும் அவர்கள் நெஞ்சங்களில் எழுந்து மோதிய உணர்ச்சி அலைகள் மட்டும் சிறிதும் மவுனம் சாதிக்காமல் பேரிரைச்சலாக எழுந்து அவர்கள் உடலில் ஊடுருவிச் சென்றன! பரஸ்பரம் ஒருவர் உடலிலிருந்து மற்றவர் அங்கங்களுக்குப் பாய்ந்தது! என்றாலும் சிவகாமியின் அழகிய இடையில் தவழ்ந்து அணைத்துக் கொண்டிருந்த கரிகாலனின் இடக்கரம் மேலே செல்ல தைரியமின்றி முதலில் பதித்த இடத்திலேயே தடைப்பட்டு நின்றது.

காரணம், அரங்கேறிய விசித்திர சம்பவங்கள்தான். அதனாலேயே தன் உள்ளத்தை எல்லாம் கொள்ளை கொண்ட சிவகாமி சுரங்கம் அளித்த காரிருளில் தனியே கையில் சிக்கிக் கிடந்த அந்த நேரத்தில் கூட, அவளைத் தழுவத் துணிவில்லாதபடி கிடந்தான்... பொருமினான்.
இந்தப் பொருமலை சருமத்தின் வழியே உணர்ந்த சிவகாமியும் கொந்தளிக்கவே செய்தாள்.

கரிகாலனின் கரம் இடையில் அணைத்தது ஆதரவாக இருந்தாலும் அத்தனை காதலையும் இன்பத்தையும் அனுபவிக்க முடியாதபடி இடையே பாய்ந்தன, அவனைப் பற்றி அவள் நெஞ்சிலும் ஆழப்பதிந்துவிட்ட நிகழ்வுகள்; வினாக்கள். அவ்வளவு சொல்லியும் இன்னமும் தன்னை நம்பவில்லையே..! ‘நீயாக சொல்லும்வரை உன்னைப் பற்றிய ரகசியத்தை நானாக அறிய மாட்டேன்...’ என்று சொல்லிவிட்டு தேடித் தேடி தன்னைப்பற்றித் தெரிந்துகொள்ள ஏன் முற்பட வேண்டும்..?

பூத்த வினா அவளை அசைய வைத்தது. அந்த அசைவு ஓரிடத்தில் இடித்து நின்றது. இடித்த பொருள் அவன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த ஓலைச்சுவடிகள்!சட்டென இருவரும் நடப்புக்கு வந்தார்கள். அக்கணத்தில் இருவர் மனங்களிலும் தாண்டவமாடியது வெறுப்பு என்னும் உணர்ச்சிதான். கரிகாலன் உள்ளத்தில் ஏற்பட்டது சூழ்நிலை அவளுக்கு எதிராக இருப்பதால் ஏற்பட்ட வெறுப்பு; இவ்வளவுக்கு இடம்கொடுத்து நெருக்கமானபின்பும் தன்னை இன்னும் நம்பாமல் சந்தேகத்தின் சாயையுடனேயே அணுகுகிறானே என்ற குமுறலில் தன்மீதே சிவகாமிக்கு வெறுப்பு.இரண்டுவித வெறுப்புக்கும் ஆளான இருவரும் ஒரேசமயத்தில் பெருமூச்சு விட்டார்கள்.

காபாலிகன் திரும்பி வருவதற்குள் இரண்டொரு வார்த்தைகள் பேசிவிடலாம் என முடிவெடுத்து ‘‘சிவகாமி...’’ என்றழைத்தான் கரிகாலன்.அவள் உள்ளம் பலவித உணர்ச்சிகளுக்கு இலக்காகி நின்றதால் பதிலேதும் சொல்லாமல் மவுனமாக நின்றதுடன் தன் இடையிலிருந்த கரிகாலனின் கரங்களையும் மெல்ல விலக்கினாள்.

இச்செயலில் இருந்தே அவள் உள்ளத்தில் மூண்டெழுந்த கோபத்தை ஊகித்துக்கொண்ட கரிகாலன், அவளை வழிக்குக் கொண்டு வர வேறொரு தந்திரத்தைக் கையாள முயன்றான்.‘‘உன்னை எப்படிக் கண்டறிந்தேன் என்று கேட்கவில்லையே?’’‘‘அதற்கு அவசியமில்லை...’’ என்றபடி புரண்டாள். அவன்மீதுதான்!‘‘அவசியமில்லையா..?’’ கரிகாலன் ஆச்சர்யப்பட்டான்.‘‘இல்லை...’’ அழுத்தமாகச் சொன்னாள்.‘‘ஏன்..?’’

‘‘நிழலின் கால் நிழல் அறியும்!’’
‘‘அதாவது..?’’
‘‘உங்களை விட்டு நான் விலகுவதுமில்லை...’’

‘‘...உன்னைக் கைவிடுவதுமில்லை!’’ அவள் ஆரம்பித்த வாக்கியத்தை கரிகாலன் முடித்ததுடன் அவளை இறுக்கவும் செய்தான். அத்துடன் அவள் கேசத்தைக் கொத்தாகப் பிடித்து வதனத்தை உயர்த்தி நயனங்களை உற்றுப் பார்த்தான்.‘‘தேடியது கிடைத்ததா..?’’ அசையாமல் கிண்டலாகக் கேட்டாள்.

‘‘வேண்டிய அளவுக்கு!’’
‘‘அது என்ன என்று அறியலாமா..?’’
‘‘அறியவேண்டியவள் அறிந்துதானே ஆகவேண்டும்..?!’’
‘‘எனில் சொல்வதுதானே..?’’
‘‘என்னை விட்டு விலகுவதில்லை என்றாய்...’’
‘‘ஆம்...’’‘‘இதன் பொருள் என்னவென்று தெரியுமா..?’’

‘‘பின்தொடர்வேன் என்று அர்த்தம்! அதனால்தானே சுரங்கம் வழியாக நீங்கள் வருவீர்கள் என்று ஊகித்து காஞ்சிக்கு வெளியே சென்று சுரங்கத்தின் அந்தப்பக்க வழியாக நுழைந்தேன்! நான் சென்றதை உப்பரிகையின் வழியே நீங்களும்தானே கண்டீர்கள்...’’
புருவத்தை உயர்த்திய சிவகாமி, அவன் குறுக்கிட முற்படுவதை அறிந்து, தானே பேச்சைத் தொடர்ந்தாள். ‘‘எப்படி சுரங்கத்தின் வழியே நான் வெளியேறுவேன் என்று கணக்கிட்டாய் என்றுதானே கேட்க வருகிறீர்கள்..?’’

இமைக்காமல் அவளையே கரிகாலன் புன்னகையுடன் பார்த்தான்.
‘‘சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர்தான் குறிப்பால் உணர்த்தினார்!’’வாய்விட்டுச் சிரித்தான் கரிகாலன்.‘‘ஏன்... நம்பவில்லையா..? பாலகன் சொன்னால் நம்புகிறீர்கள்! காபாலிகன் சொன்னால் பாலகன் நம்புகிறான்! நான் சொன்னால் மட்டும் ஏன் சிரிக்கிறீர்கள்..?’’பதிலேதும் சொல்லாமல் அவள் அதரங்களைத் தன் உதட்டால் மூடினான். சிவகாமி விலகவுமில்லை... பதிலுக்கு ஒத்துழைக்கவும் இல்லை. இணைந்து அவளை வினையாற்றும்படி அவனும் செய்யவில்லை!

உமிழ்நீரைப் பருகாமல் அதரங்களை மட்டும் தன் உதட்டால் ஒற்றிவிட்டு விலக்கினான்! ‘‘சிற்ப சாஸ்திரம் கற்றிருக்கிறாயா..?’’
‘‘அதையும்! குறிப்பாக சார்வாகனர்களின் சிற்ப சாஸ்திரத்தை! இல்லாவிட்டால் உடன் இருந்தே பல்லவர்களை வீழ்த்த எப்படி திட்டமிட முடியும்..?’’
‘‘அதைத்தான் நான் நம்பவில்லையே?’’

‘‘நம்புகிறேன் நீங்கள் சொல்வதை!’’ என்றபடியே அவன்மேல் அசைந்தாள். அவன் இடுப்பில் இருந்த ஓலைச் சுவடிகளைத் தன் சரீரத்தால் அசைய வைத்தாள்!‘‘இந்தச் சுவடிகள் எதற்குத் தெரியுமா..?’’‘‘பூஜை செய்ய!’’‘‘ஆம்... பூஜை செய்யத்தான். சுவடிகளால் உன்னை! அதற்கு நீ திரையை விலக்கி வெளியே வரவேண்டும்!’’‘‘நமக்குள் திரை இருக்கிறதா என்ன..?’’ சிவகாமி நகைத்தாள்.
‘‘புறத்தில் அல்ல..!’’

‘‘பின்... அகத்திலா..?’’
‘‘ஆம்! என்னைவிட்டு விலகுவதில்லை என்று சொல்லிவிட்டு ஒன்றாமல் இருக்கிறாயே!’’
சிவகாமி இமைகளை மூடினாள். எப்படிப்பட்ட வீரனும் அசடனாகும் தருணம் காதல் மொழியைப் பேசும்போதுதான். பெண்ணும் இதற்கு விதிவிலக்கல்ல. இலக்கை எட்ட காய்களை நகர்த்தும் விதமாக தொடர்பே இல்லாமல், அதேசமயம் இருவருக்கு மட்டுமே புரியும் அர்த்தத்துடன் காதல் வயப்பட்டவர்களால் மட்டுமே உரையாட முடியும்! 

விவரமறிந்த ஆணும் பெண்ணும் பேசும்போது ஏற்படும் இதுமாதிரியான சங்கடங்கள் இறுதியில் மவுனத்தையே விளைவிக்கும்! பற்களால் தன் கீழுதட்டைக் கடித்தாள். இந்த மவுனத்துக்கான காரணத்தைப் புரிந்துகொண்ட கரிகாலன், கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் தொடர்ந்து பேச்சுக் கொடுத்தான்.‘‘ஒன்றலாமா..?’’

‘‘தாராளமாக! பல்லவர்களின் விசுவாசியும் பல்லவர்களின் துரோகியும் பல்லவ சுரங்கத்தில் ஒன்றலாம்!’’ 

 

அவள் பேச்சு கோபமாகத்தான் இருந்தது. ஆனால், குரலில் கோபத்துடன் ஆசையும் கலந்திருந்ததை கரிகாலன் கவனித்தான்.

பெண்களின் இயல்பு அது. அவர்கள் ஆசைக்குக் கோபம் ஒரு மெல்லிய திரை. அதை ஆண் மகன் கிழித்து பலவந்தமாக உள்ளே நுழைய வேண்டும் என்பது அவர்கள் எண்ணம் எழுப்பும் அவா. இந்த பலவந்தத்தில்தானே இருவரும் இன்பத்தைக் காண்கிறார்கள்!
எட்டும் பழத்தை விட எட்டாத பழத்துக்கு இனிப்பு அதிகம்! முயற்சியின் கஷ்டம் அதற்குள்ள மதிப்பை பல மடங்குகளாக அதிகரிக்கிறது! பிணக்கின் தத்துவமே இதுதான்!

இதை உணர்ந்திருந்த கரிகாலன், சாளுக்கிய மன்னரை மறந்தான். தன்னைச் சிறைசெய்யக் காத்திருக்கும் ராமபுண்ய வல்லபரை மறந்தான். தன்னை வெளியேற்ற தன்னையே பணயம் வைத்த பாலகனை மறந்தான்.அவனும் அவளும் அப்போதிருந்தது தனி உலகம்! வேறு யாருமே இல்லாத ஓர் இன்ப உலகம்!இன்னும் கொஞ்ச நேரம் அவகாசம் இருந்திருந்தால் அந்த உலகம் பெரிதும் விரிவடைந்திருக்கும்!

ஆனால், அந்த உலகத்துக்குள் காபாலிகன் தடதடவென்று நுழைந்தான். உண்மையில் எப்படி பூனை போல் அகன்றானோ அப்படித்தான் இப்போதும் திரும்பினான், வீரர்கள் இல்லாமல் தனியாக. என்ன... அவன் சாதாரணமாகத் திரும்பியது அவர்கள் இருவருக்கும் தடதடவென என்றிருந்தது! சிவகாமி சட்டென எழுந்து நின்றாள். கலைந்திருந்த தன் ஆடைகளை திரும்பி நின்று இருளில் சரிப்படுத்தினாள்.

‘‘என்ன..?’’ சீறினான் கரிகாலன்.
‘‘நேரமாயிற்று...’’ சிரிப்பை காபாலிகன் விழுங்கினான்.
‘‘அதற்கு..? இன்னும் முடியவில்லையே!’’
காலால் அவனை சிவகாமி எட்டி உதைத்தாள்!
‘‘அம்மா!’’ என்று அலறினான் கரிகாலன்.
விழுங்காமல் வெடித்துச் சிரித்தான் காபாலிகன்.

‘‘கிளம்பலாம்...’’ அதட்டினாள்.
‘‘எங்கு..?’’ கேட்ட கரிகாலனின் குரலில் எரிச்சல் மண்டிக் கிடந்தது.

‘‘காஞ்சிக்கு!’’ சிரித்துக் கொண்டிருந்த காபாலிகனைக் கண்களால் எரித்தபடி சிவகாமி பதில் சொன்னாள்.

 

‘‘அங்கு எதற்கு..?’’
‘‘பணியை முடிக்க!’’

‘‘என்ன வேலையோ..?’’ எழுந்து நின்று தன் உடைகளை மணல் போகத் தட்டியபடி கரிகாலன் கேட்டான்.அதற்கு சிவகாமி சொன்ன பதில் அவனை மட்டுமல்ல... உடன் இருந்த காபாலிகனையும் அதிரவைத்தது.  ஏனெனில் கரிகாலன் தன் மனதில் திட்டமிட்டிருந்ததை அப்படியே சொற்களாக உதிர்த்தாள்.‘‘காஞ்சி சிறையிலிருக்கும் உங்கள் தந்தையை மீட்க!’’
 

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்

 

 

http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14891&id1=6&issue=20190208

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரத்த மகுடம்-40


 

பிரமாண்டமான சரித்திரத் தொடர்

கரிகாலனும் காபாலிகனும் ஒருசேர அதிர்ந்தார்கள்.இருளுக்குப் பழக்கப்பட்டிருந்த அவர்கள் இருவரது கண்களும் சந்தித்து உறவாடின.சிவகாமி அதை லட்சியம் செய்யவில்லை. ‘‘தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் ஆபத்தின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும். 

27.jpg

இந்நேரம் மாளிகையில் நீங்கள் இல்லாததை சாளுக்கிய போர் அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபர் கண்டுகொண்டிருப்பார். அடுத்ததாக நீங்கள் செல்லும் இடம் காஞ்சி சிறைச்சாலையாகவே இருக்கும் என்பதையும் ஊகித்திருப்பார். அவர் செயலில் இறங்குவதற்கு முன் அடைபட்டிருக்கும் உங்கள் தந்தையை நாம் மீட்டாக வேண்டும். வாருங்கள்!’’

‘‘இந்த விஷயம்...’’ என்று ஆரம்பித்த கரிகாலனை இடைவெட்டினாள். ‘‘பல்லவ இளவரசரைச் சந்திக்கச் சென்ற நாம் காஞ்சிக்கு வந்ததே அதற்குத்தானே! சங்கேத மொழியில் காபாலிகர் உங்களிடம் தெரியப்படுத்தும்போது அருகில்தானே நான் இருந்தேன்!’’
கரிகாலன் புன்னகைத்தான். ‘‘அளவுக்கு மீறி அறிவாளியாக இருக்கிறாய்!’’

‘‘அதனால்தான் ஆபத்தானவளாகவும் உங்கள் கண்களுக்குத் தெரிகிறேன்!’’
‘‘அறிவிருக்கும் இடத்தில் ஆபத்து இருக்காது என்கிறாயா..?’’‘‘அந்த ஆபத்து எந்தத் தரப்புக்கு என்று கூட உணர முடியாத அறிவாளி இதற்கான விடையை அறிந்து என்ன செய்யப் போகிறார்..?!’’ காபாலிகன் தொண்டையை கனைத்தான். பூர்த்தியாகாத எரிச்சலில் இருவரும் வார்த்தை விளையாட்டு ஆடுவதைக் காண அவனுக்கு சங்கடமாக இருந்தது.

கரிகாலன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. சிவகாமியும் உரையாடலைத் தொடரவில்லை.‘‘ம்...’’ என கரிகாலன் கட்டளையிட, காபாலிகன் முன்னால் சென்றான். அவனுக்குப் பின்னால் சிவகாமி. கடைசியாக கரிகாலன்.மூவருக்குமே இருளின் ஒளி வழிகாட்டியதால் தடுமாறாமல் சுரங்கப் பாதையில் நடந்தார்கள். என்றாலும் சிவகாமிக்கு எங்கே கால் இடறிவிடுமோ என்று அஞ்சி அவ்வப்போது கரிகாலன் அவளைப் பிடித்தான்! தோளில். பிறகு இடுப்பில். 

பதிந்த கரம் இடுப்பிலிருந்து கீழ்நோக்கி நகர முற்பட்டதும், ‘‘வீரர்கள் எங்கே?’’ என காபாலிகனிடம் கேட்டாள். இதன் மூலம் ‘சும்மா இருங்கள்!’ என கரிகாலனை எச்சரித்தாள்!‘‘அவர்களை அனுப்பிவிட்டேன்...’’ திரும்பிப் பார்க்காமல் 
காபாலிகன் பதிலளித்தான்.
‘‘காஞ்சிக்கா..?’’

‘‘ஆம். நமக்காகக் காத்திருக்கும்படி கட்டளையிட்டிருக்கிறேன்...’’
‘‘காஞ்சி சிறைக்கு வெளியிலா..?’’
‘‘இல்லை. சிறைச்சாலையில்!’’ 

‘‘பிரமாதமான திட்டம். ராமபுண்ய வல்லபர் அதை உடைப்பதற்கான வேலையில் இறங்காவிட்டால் கண்டிப்பாக சோழ மன்னரை மீட்டு விடலாம்!’’
‘‘எதிர் நடவடிக்கைகளில் அவர் இறங்கினாலும் என் தந்தையை மீட்கலாம்...’’ கரிகாலனின் குரல் உரையாடலில் கலந்தது.
சிவகாமி புன்னகைத்தாள்.

‘‘கரிகாலரின் துணிவை நேரில் கண்ட பிறகும் நீங்கள் புன்னகைப்பது சரியல்ல...’’ காபாலிகன் எதிர்ப்பு தெரிவித்தான்.
சிவகாமி எதுவும் சொல்லவில்லை. பின்னால் வந்தபடியே என் பின்னெழுச்சியில் அவர் கரங்களைப் பதிக்கிறார்... அதனால்தான் வெட்கத்தில் சிரித்து நெளிந்தேன்... என்பதை அவளால் எப்படிச் சொல்ல முடியும்?! ‘‘துணிவெல்லாம் சூழலைப் பொறுத்தது...’’ கரிகாலன் முற்றுப்புள்ளி வைத்தான். 
‘‘எந்தச் சூழலையும் சாதகமாக்கும் வித்தைதான் உங்களுக்குத் தெரியுமே!’’ இதைச் சொன்னபோது ஏனோ காபாலிகன் புன்னகைத்தான்.
சிவகாமி நெளிந்தாள்.

‘‘சரி சரி... போதும். திருப்பத்தை நெருங்குகிறோம். திரும்பியதும் நீ வலப்பக்கம் செல்...’’ கரிகாலன் கட்டளையிட்டான்.
‘‘நீங்கள்..?’’
‘‘நாங்கள் இருவரும் நேராகச் சென்று இடப்பக்கம் திரும்பு
கிறோம்...’’
‘‘அப்படியானால்..?’’
‘‘வலப்பக்கம் செல்லும் பாதை எங்கு முடிகிறதோ அங்கிருக்கும் ரகசியக் கதவைத் திறந்து காத்திரு. அங்கு உன்னைச் சந்திக்கிறோம்...’’
கரிகாலனின் கட்டளையை மறுக்காமல் ஏற்று காபாலிகன் விடைபெற்றான்.

‘‘இந்தாருங்கள்...’’ முன்னால் நடந்தபடியே சிவகாமி தன் கரங்களை பின்னால் நீட்டினாள்.
‘‘உன்னிடமே இருக்கட்டும்...’’
‘‘என்ன கொடுக்க வருகிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா..?’’
‘‘ம்... கடிகையிலிருந்து நான் எடுத்து வந்த ஓலைச்சுவடிகள்! உன்னைப் பற்றிய ரகசியங்கள்!’’
சட்டென சிவகாமி நின்று திரும்பினாள். நின்றபடியே அவளை அணைத்து கரிகாலன் முத்தமிட்டான். ‘‘தரையில் விழுந்ததை எடுத்து நீ வைத்துக் கொண்டதை கவனித்தேன்!’’

‘‘இது உங்களுக்கு வேண்டாமா..?’’
‘‘தேவைப்படும்போது கேட்டு வாங்கிக் கொள்கிறேன்...’’
‘‘அதற்குள் இதை நான் மறைக்கலாம்...’’

‘‘எரிக்கவும் செய்யலாம்...’’ வாக்கியத்தை கரிகாலன் பூர்த்தி செய்தான். ‘‘படித்துத்தான் அறிய வேண்டும் என்பதில்லை...’’
‘‘அதாவது அர்த்த சாஸ்திரத்தைக் கரைத்துக் குடித்திருப்பதால் அதில் இருக்கும் ஒவ்வொரு சொல்லும் உங்களுக்கு அத்துப்படி என்கிறீர்கள்!’’
‘‘ம்...’’‘‘இந்த விஷயம் சாளுக்கிய மன்னருக்கும்தானே தெரியும்? அதாவது காஞ்சிக் கடிகையின் சிறந்த மாணவர்களில் நீங்களும் ஒருவர் என்பது...’’
கரிகாலன் பதிலேதும் சொல்லாமல் அவள் நயனங்களை உற்றுப் பார்த்தான்.

‘‘அப்படியிருந்தும் உங்களை ஏன் அர்த்த சாஸ்திரத்திலிருக்கும் குறிப்பிட்ட பகுதி சுவடிகளை மட்டும் எடுக்கச் சொன்னார்..? எடுத்தும் கொடுத்தார்..? என்னைப் பற்றிய ரகசியம் இதில் குறிப்பால் உணர்த்தப்பட்டிருக்கிறது என்றா..?’’கரிகாலன் அவள் கீழுதட்டை தன் ஆள்காட்டி விரலாலும் கட்டை விரலாலும் ஒன்றுகுவித்து தன் அதரத்தால் கவ்வினான்.

சில கணங்கள் அதை ஏற்று அப்படியே நின்றவள், பின் விலகினாள். ‘‘சொல்லுங்கள்...’’
‘‘ஏன் இவ்வளவு புத்திசாலியாக இருக்கிறாய்..?’’
‘‘கேட்டதற்கு இதுவல்ல பதில்...’’
‘‘விடையை சொல்வதை விட காண்பிப்பது மேலானதல்லவா..?
‘‘அரங்கேற்றக் காதையை எந்த இடத்தில் ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்..?’’

‘‘சிறைச்சாலையில்!’’
‘‘அங்கு சென்றால் இந்த சுவடிக்கான மர்மம் விலகுமா..?’’
‘‘சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் என்மீது காட்டிய அன்புக்கான காரணமும் தெரிய வரும்..!’’
சிவகாமி தன் பாதங்களை உயர்த்தி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
கரிகாலன் அவளை இறுக்கினான்.

‘‘போதும்...’’ விலகி நின்ற சிவகாமி, ஏதோ சொல்ல  முற்பட்டாள். தன் கையால் அவள் உதட்டை மூடினான். ‘‘வா...’’
தோளைக் குலுக்கிவிட்டு முன்னால் நடந்தாள். நிறுத்தி அவள் கரங்களில் இருந்த சுவடிக் கட்டுகளை வாங்கினான். அவள் இடுப்பில் அதை முடிச்சிட்டான்.
தன் கண்களால் அவனிடம் ஏதோ சொல்ல முற்பட்டாள்.
 

அவள் கன்னத்தைக் கிள்ளினான். ‘‘தூண்டாதே! நட...’’ஒருவர் பின் ஒருவராக நடந்தார்கள். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. கால் நாழிகைக்குப் பின் திருப்பம் வந்தது. இடப்பக்கம் சிவகாமி திரும்பினாள். பதினைந்தடி சென்றதும் நின்று திரும்பினாள்.பக்கவாட்டில் கை வைத்தபடி நின்ற கரிகாலன் தன் தலையை ஆமோதிக்கும் விதமாக அசைத்தான்.

 

புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக சிவகாமி வழியை விட்டு அகன்றாள்.அவள் இருந்த இடத்துக்கு வந்த கரிகாலன் தன் முன்னால் கையை நீட்டி சற்றே உள்ளடங்கிய நிலையில் இருந்த சிலையைத் தொட்டான். தடவினான். அளவெடுத்தான்.‘‘என்ன..?’’ சிவகாமி கேட்டாள்.

‘‘உன்னைப் பார்த்துதான் சிற்பி இச்சிலையைச் செதுக்கியிருக்க வேண்டும்...’’
‘‘அப்படியா..?’’‘‘ஆம். அங்கங்கள் எல்லாம் அப்படியே அளவெடுத்ததுபோல் உன் தேகத்தைப் பிரதிபலிக்கின்றன!’’‘‘ஆண்களின் புத்தி... வந்த வேலையைப் பாருங்கள்...’’ பற்களைக் கடித்தாள்.

வாய்விட்டுச் சிரித்தபடியே அச்சிலையின் தலையைத் தொட்டான். 
பார்த்துக் கொண்டிருந்த சிவகாமிக்கு தன் சிரசில் அவன் கை வைப்பதுபோல் இருந்தது.
அங்கிருந்து அவன் கரங்கள் நெற்றியைத் தொட்டன. பிறகு புருவங்கள். கண்கள். இமைகள். நாசி. கன்னங்கள். உதடு. கழுத்து... பார்க்கப் பார்க்க சிவகாமிக்கு சிலிர்த்தது. 

சிலையின் கழுத்திலிருந்த அவன் கரங்கள் அப்படியே மெல்ல மெல்ல கீழே இறங்கின. அவளுக்கு மூச்சு முட்டியது! சரியாக ஸ்தனங்கள் மேல்...சிவகாமிக்கு சுவாசம் தடைப்பட்டது....இல்லை. ஸ்தனங்களைத் தொடாமல் தாவி இடுப்பில் கை வைத்தான்! அப்பாடா என அவளுக்கு இருந்தது. அது நிம்மதியா அல்லது ஏமாற்றமா என அவளால் உணர முடியவில்லை.

இதற்குள் அவன் கரங்கள் அச்சிலையின் இரு கால்களும் ஒன்றிணையும் இடத்துக்கு நகர்ந்தது.‘‘என்ன இது... கைகளை எடுங்கள்!’’ தன் கால்களைக்  குறுக்கியபடி சத்தம் வராமல் சப்தமிட்டாள்!‘‘ஷ்... பேசாமல் இரு. முக்கியமான இடத்தை இனிதான் அடையப் போகிறேன்!’’ சொன்னவன் சட்டென்று சிலையின் இரு கால்களும் இணையும் இடத்தில் தன் வலக் கையை வைத்தான்!சிவகாமிக்கு உயிரே போய்விடும்போல் இருந்தது.

கண நேரம்தான். அதற்குள் தன் கரங்களை மெல்ல மெல்ல பின்னோக்கி இழுத்தான்.கையோடு, தேங்காய் நாரினால் தயாரான கயிறு ஒன்று சுருட்டப்பட்ட நிலையில் வந்தது. சிவகாமிக்குள் இனம் புரியாத உணர்வுகள் தாண்டவமாடின. சமாளித்துக்கொண்டு அக்கயிற்றைப் பார்த்தாள். மெல்லியதாக இருந்தாலும் வலுவானது என்பது பார்த்ததுமே புரிந்தது.

‘‘ஆபத்துக் காலத்தில் பயன்படும் என சிற்பி செய்த ஏற்பாடு இது. ஆமாம்... நான் சிலை மீது என் கைகளை வைத்துத் தடவியபோது ஏன் தடுக்க முற்பட்டாய்..?’’கண்களால் சிரித்தபடி கேட்டவனைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு பற்றிக்கொண்டு வந்தது! தன் பலத்தை எல்லாம் திரட்டி அவன் தலையில் குட்டினாள்!

‘‘அம்மா...’’ அலறியபடி தன் தலையைத் தடவிக் கொண்டான். ‘‘ராட்சஷி... இப்படியா குட்டுவார்கள்..?’’‘‘நியாயமாகப் பார்த்தால் கூறு கூறாக வெட்டிப் போட வேண்டும்! போனால் போகிறது என குட்டுவதுடன் நிறுத்தியிருக்கிறேன்! சரி சரி... திரும்பி சிலையை நகர்த்துங்கள்...’’ உதட்டைக் குவித்து அவனுக்கு பழிப்புக் காட்டிவிட்டு அவனிடமிருந்து கயிற்றைப் பெற்றாள்.

இரு உள்ளங்கைகளையும் தட்டிவிட்டு தரையில் அமர்ந்த கரிகாலன், சிலையின் அடிப்பகுதியை இறுக்கிப் பிடித்தான். பிறகு மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு அச்சிலையை முன்னோக்கி இழுத்தான்!எந்தவித சப்தத்தையும் எழுப்பாமல் அச்சிலை அசைந்து அசைந்து அவனை நோக்கி வந்தது.

அவன் இடுப்பை அச்சிலை இடித்ததும் சட்டென்று அதை வலப்பக்கம் திருப்பினான்.சிலை இருந்த இடத்தில் இப்போது மெல்லியதாக வெளிச்சம் வந்தது.கரிகாலனும் சிவகாமியும் எதுவும் பேசாமல் அந்த வெளிச்சத்தையே பார்த்தார்கள்.வெளிச்சத்தை ஊடுருவிய தூசிகள் அகன்றதும் அவர்கள் கண்களுக்குக்  கீழேயிருந்த அறை தட்டுப்பட்டது. ஒரு மனிதர் பாறையாலான திண்ணை மீது அமர்ந்திருந்தார். அவருக்கு வயது ஐம்பதிருக்கும். ராஜ உடைகளை அணிந்திருந்தார்.பார்வையாலேயே சிவகாமி ‘உங்கள் தந்தையா?’ என்று கேட்டாள்.

கரிகாலன் தலையசைத்தான்.தன்னிடமிருந்த கயிற்றால் சிலையைச் சுற்றிலும் முடிச்சிட்டாள். கரிகாலனிடம் கண்களால் செய்தி சொல்லிவிட்டு அக்கயிற்றைப் பிடித்தபடி அந்தத்  துவாரத்தின் வழியாக அறைக்குள் இறங்கினாள்!
 

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்

 

 

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14924&id1=6&issue=20190215

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அத்தியாயம் 41

 

யவன நாட்டுப் புரவிகள் எப்படி நாவாய்களில் ஏறும்போதும் இறங்கும்போதும் தங்கள் பாதங்களையும் உடலையும் கச்சிதமாக குறுக்கிக் கொள்ளுமோ அப்படித்தான் சிவகாமியும் கயிற்றைப் பிடித்தபடி சிறைக்குள் இறங்கினாள்.சந்தேகமேயில்லாமல் அவள் அசுவ சாஸ்திரிதான்!

சட்டென்று மண்டியிட்டு தன் சிரசை அந்தத் துவாரத்தின் மீது பதித்து சுரங்கத்துக்குள் ஒளி வருவதைத் தடுத்தான். இதன்மூலம் சிறைக்குள் நடப்பதை அவனால் கவனிக்கவும் முடிந்தது; சிவகாமியை மேலிருந்து அணு அணுவாக ரசிக்கவும் முடிந்தது.

கற்பாறையின் மேல் அமர்ந்திருந்த தன் தந்தையின் சிந்தனையோட்டம் பல்வேறு திசைகளிலும் அலைந்துகொண்டிருப்பதை கரிகாலனால் உணர முடிந்தது. இல்லையெனில் இந்நேரம் சிறைக்கு மேல் துவாரம் தோன்றியதையும், ஒரு பெண் - மருமகள் என்று சொல்ல வேண்டுமோ?! - கயிற்றைப் பிடித்தபடி உள்ளே இறங்குவதையும் பார்த்திருப்பாரே!

தந்தைக்கு எந்தவித சமிக்ஞையையும் கரிகாலன் தரவில்லை. சிவகாமி என்ன செய்யப் போகிறாள் என்பதிலேயே அவனது ஆர்வம் குவிந்தது. தேவையெனில் சுரங்கத்தில் குதிக்கத் தயாராக இருந்தான்.தன் கால் விரல்களைக் கொண்டு கயிற்றை இறுகப் பற்றியபடியும் அதற்கு ஏற்ப தன் கரங்களை உயர்த்தி மேல்நோக்கி அதே கயிற்றைப் பிடித்தபடியும் நிதானமாக சிவகாமி இறங்கினாள். வலது கால் கீழேயும் இடது கால் சற்றே மடிந்து அதன் மேலும் பதிந்திருந்தது. கரங்கள் இப்படி மேல் கீழ் என்ற அளவுகளைத் தவிர்த்துவிட்டு இணைந்த பிடிமானமாக கயிற்றைப் பற்றி இருந்தன.

இதனால் இறங்கும்போது அக்கயிறானது அவளது இரு ஸ்தனங்களுக்கும் நடுவே பதிந்து ஒவ்வொன்றின் கூர்மையையும் வெளிச்சமிட்டுக் காட்டியது! இதனால் நகர்ந்த கச்சையின் மேற்புறம் பிறைகளின் அளவை குறைத்தும் அதிகரித்தும் காட்டியது!கயிற்றில் கால் விரல்களை ஊன்றியிருந்த விதத்தினால் இரு பின்னெழுச்சிகளில் ஒன்று தாழ்ந்தும் மற்றொன்று உயர்ந்தும் முன்பக்கம் எந்தளவுக்கு கயிறானது அழுத்துகிறது என்பதை கரிகாலனுக்கு உணர்த்திக் கொண்டிருந்தன!

பாவம் வலிக்கும்... பிறகு அந்த இடங்களைத் தடவி ஒத்தடம் கொடுக்க வேண்டும்!’ தனக்குள் கரிகாலன் முடிவு செய்யவும் சிவகாமியின் பாதங்கள் தரையைத் தொடவும் சரியாக இருந்தது.இத்தனைக்கும் அவள் குதிக்கவில்லை; வெளியே காவலுக்கு நிற்கும் வீரர்கள் எச்சரிக்கை அடையும்படி ஓசையும் எழுப்பவில்லை.என்றாலும் சிந்தனை வசப்பட்டு கற்பாறையின் மீது அமர்ந்திருந்த கரிகாலனின் தந்தைக்கு அவள் பாதம் பதிந்த விதத்தில் கிளம்பிய சிறு ஒலியே சட்டென சுதாரிக்கப் போதுமானதாக இருந்தது.

சட்டென தன் தலையை உயர்த்தினார்.இனம்புரியாத நிம்மதியை இச்செய்கை கரிகாலனுக்கு அளித்தது. ஆபத்தான நிலையிலும் அப்படியொன்றும் அவர் தன்வசத்தை இழக்கவில்லை... எச்சரிக்கையுடனேயே இருக்கிறார் என்பதை உணர்ந்ததால் பாரம் நீங்கிய மனநிலையுடன் அடுத்து நடப்பதை கவனிக்கலானான்.கற்பாறையிலிருந்து எழுந்த அவன் தந்தை தன் கரங்களை உயர்த்தி சோம்பல் முறித்தார்!

மேலிருந்து கவனித்துக் கொண்டிருந்த கரிகாலன் மட்டுமல்ல... சிறைக்குள் இறங்கியிருந்த சிவகாமியும் இதைக் கண்டு ஆச்சர்யப்பட்டாள்.
கவனித்தும் கவனிக்காததுபோல் அவள் பக்கம் திரும்பிய கரிகாலனின் தந்தை உச்சி முதல் உள்ளங்கால் வரை அவளை ஆராய்ந்தார்.
இனம் புரியாத உணர்வு அவளுக்குள் ஊடுருவியது. தன்னையும் அறியாமல் குனிந்து அவரது பாதத்தைத் தொட்டு வணங்கினாள்.
‘‘எழுந்திரு மருமகளே!’’

கணீரென்று ஒலித்த அவரது குரல் சிவகாமியை மட்டுமல்ல, மேலிருந்து நடப்பதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த கரிகாலனையும் அதிர்ச்சியடைய வைத்தது.‘‘என்ன... தாங்கள்...’’ வார்த்தைகள் வராமல் சிவகாமி தடுமாறினாள்.புன்னகையுடன் நெருங்கி அவள் தலையைக் கோதினார். ‘‘தனக்கு ஏற்ற அசுவத்தைத்தான் என் மகன் தேர்ந்தெடுத்திருக்கிறான்!’’‘‘நான்... நான்...’’‘‘சிவகாமி! எங்கள் வணக்கத்துக்கும் மரியாதைக்கும் உரிய பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மரின் வளர்ப்பு மகள்! ரகசியமாக இருந்தவள் இப்போதுதான் வெளிப்பட்டிருக்கிறாய்!’’

அவர் சொல்லச் சொல்ல சிவகாமியின் நயனங்கள் அகன்று விரிந்தன. ‘‘அப்படியொன்றும் நான் முக்கியமானவள் அல்ல. அப்படியிருந்தும் என்னை நீங்கள் அறிந்து வைத்திருப்பது நான் செய்த பாக்கியம்...’’‘‘பாக்கியசாலி நாங்கள்தான். எங்களைப் போலவே நீயும் அல்லவா பல்லவ நாட்டுக்காக உயிரைப் பணயம் வைத்திருக்கிறாய்..! அப்படிப்பட்ட உன்னைக் குறித்து நாங்கள் எப்படி அறியாமல் இருக்க முடியும்!’’ கேட்டதுமே சிவகாமியின் கண்கள் கலங்கிவிட்டன. அவர் காணக் கூடாது என்பதற்காக அவசரமாகத் தலைகுனிந்தாள்.

அவளது அசைவில் இருந்தே எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டவர் அவள் வதனத்தை உயர்த்தினார்.கண்களுக்குள் ததும்பிக் கொண்டிருந்த நீர், கரை உடைத்து அவள் கன்னத்தில் வழிந்தது.‘‘அழாதே சிவகாமி! என் மகன் உன்னைப் புரிந்துகொள்வான்!’’எவ்வளவு அடக்கியும் சிவகாமியால் பீறிட்ட கேவலை அடக்க முடியவில்லை.சட்டென்று அவளைத் தன் மார்பில் சாய்த்துக் கொண்டார்.

தாய்க் கோழியிடம் அடைக்கலம் தேடும் குஞ்சைப் போல் அவர் மார்பில் ஒன்றினாள்.மேலிருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கரிகாலன் இனம் புரியாத உணர்வில் தத்தளித்தான். அதை அதிகப்படுத்துவது போலவே அவன் தந்தையின் பேச்சு அடுத்தடுத்து அமைந்தது.  ‘‘இப்படியொரு மகள் பல்லவ மன்னருக்கு இருப்பதை முன்பே கரிகாலனிடம் தெரியப்படுத்தி இருக்க வேண்டும்

சமயம் வரும்போது சொல்லலாம் என நினைத்து காலம் கடத்தியது தவறாகி விட்டது. அதனால்தான் எதிர்பாராத வகையில் நீங்கள் இருவரும் மல்லைக் கடற்கரையில் சந்தித்து அதன்பிறகு வனத்துக்குப் பயணப்பட்டு அங்கிருந்து காஞ்சிக்கு வந்து சேர்ந்து... அதற்குள் இருவருக்கும் இடையில் முரண்பாடுகளும் அன்பும் அதிகரித்து...’’

வாக்கியத்தை அவர் முடிக்கும் முன்பே பிரமை தட்டிய முகத்துடன் சிவகாமி விலகினாள். ‘‘தங்களுக்கு எல்லாம் தெரியுமா..?’’
‘‘ஏன்... சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் மட்டும்தான் ஒற்றர்கள் வழியே அனைத்தையும் அறிவார் என்று நினைத்தாயா..?’’
‘‘அப்படியில்லை...’’

‘‘மறைந்திருக்கும் பல்லவ இளவலைக் காண என் மகன் உன்னுடன் சென்றிருக்கிறான் என்பதைத் தெரிந்துகொண்டபிறகும் என்னால் எப்படி சும்மா இருக்கமுடியும்? கரிகாலனின் உயிரை விட பல்லவ இளவரசர் ராஜசிம்மர் எங்களுக்கு முக்கியமல்லவா..? அப்படியிருக்க உங்கள் நடமாட்டத்தை கண்காணிக்காமலா இருப்போம்..? சோழர்கள் இன்று வலு குன்றியிருக்கலாம். ஆனாலும் தன் குணத்தை புலி இழப்பதில்லை சிவகாமி!’’
அவள் உடல் சிலிர்த்தது. ‘‘தங்களைப் போன்றவர்கள் தந்தைக்கு அணுக்கமாக இருப்பது நாங்கள் செய்த புண்ணியம்...’’

‘‘இல்லையம்மா... புண்ணியம் செய்திருப்பது தமிழக மக்கள்தான். இல்லாவிட்டால் பரமேஸ்வரவர்மர் போன்ற சிவனேச செல்வர் நமக்கு மன்னராகக் கிடைத்திருப்பாரா...’’ சொன்ன கரிகாலனின் தந்தை அவளது முகத்தை உயர்த்தினார். ‘‘மேலிருந்து கவனித்துக் கொண்டிருக்கிறானா..?’’
சிவகாமிக்குத் தூக்கி வாரிப்போட்டது. ‘‘யா...ர்..?’’‘‘என் மகன்தான்!’’‘‘அவர்... அவர்...’’‘‘சுரங்கத்திலிருந்து நம்மிருவரையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்!’’‘‘அருகில் இருந்து பார்த்ததுபோல் எப்படி எல்லாவற்றையும் சொல்கிறீர்கள்..?’’

‘‘கரிகாலன் என் மகனம்மா! அவனைத் தூக்கி வளர்த்தவன். யுத்தக் கலைகளைக் கற்றுக் கொடுத்தவன். நான் சிறைப்பட்டதை அறிந்தபிறகும் என்னை மீட்காமல் அவனால் எப்படியிருக்க முடியும்? காபாலிகன் சொன்னதுமே காஞ்சிக்கு வந்தவன், ராமபுண்ய வல்லபரின் கட்டுப்பாட்டில் தன் பெரிய தாயார் இருப்பதைக் கண்டபிறகு ஆபத்தின் அளவைப் புரிந்துகொண்டிருப்பான். என்னை மீட்கவும் முயற்சி எடுப்பான் என்று தெரியும்...’’
‘‘அப்படியானால் எங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தீர்களா..?’’

‘‘ஆமாம்! சுரங்கத்தின் வழியே மேலிருந்து கயிறு வழியாக இறங்குவீர்கள் என்று தெரியும். என்ன... கரிகாலன் இறங்குவான் என்று நினைத்தேன்... மாறாக என் மருமகள் வந்து நிற்கிறாள்!’’‘‘தெரிந்தும் ஏன் கண்டுகொள்ளாமல் இருந்தீர்கள்..?’’
‘‘மேலிருந்து உன்னை அவன் ரசித்துக் கொண்டிருக்கிறான்
நான் ஏன் இடையூறாக இருக்க வேண்டும்!’’
 

சிவகாமியின் கன்னங்கள் சிவந்தன! புத்திக்கூர்மையும் விஷமத்தனமும் கரிகாலனுக்கு எங்கிருந்து வந்தன என்பது தெளிவாகப் புரிந்தது! ‘‘....ரை... ...ழை..க்..கி..றே..ன்!’’ முணுமுணுத்தபடி தன் தலையை உயர்த்த முற்பட்டாள்.அதற்குள் தடதடவென காலடி ஓசைகள் கேட்டன.

 

உடலின் அணுக்கள் எல்லாம் விழிப்படைய எச்சரிக்கையுடன் நின்றாள்.உருவிய வாட்களுடன் சாளுக்கிய வீரர்கள் சிறைக்குள் நுழைந்தார்கள். தன் கண்களால் அவர்களை அளவெடுத்தாள். வந்திருப்பவர்கள் மூவர்தான். ஆனால், சிறைக்கு வெளியே பத்து பேராவது இருப்பார்கள்!மேலிருந்து கரிகாலன் கவனித்துக் கொண்டிருக்கிறான்... தேவைப்படும்போது நிச்சயம் உதவுவான்... இந்த உணர்வே அவளுக்கு அசாத்திய பலத்தை அளித்தது.


தவிர, காபாலிகனுடன் வந்த பல்லவ வீரர்கள் வேறு சிறைச்சாலையில் இருக்கிறார்கள்... அப்படித்தானே காபாலிகன் சொன்னான்..? ஆக, சாளுக்கியர்களை சமாளிப்பதும் கரிகாலனின் தந்தையை மீட்பதும் எளிதுதான்... என்ன, கொஞ்சம் போக்குக் காட்ட வேண்டும்...
தன் வலது காலை உயர்த்தி தரையில் அரைவட்டம் கிழித்தவள், சட்டென கரிகாலனின் தந்தையைத் தன் பக்கம் இழுத்தாள். இடுப்பிலிருந்து குறுவாளை எடுத்து அவர் கழுத்தில் வைத்தாள்
 

‘‘யாரும் அசையாதீர்கள்... பிறகு எந்தக் காரணத்துக்காக இவரைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறீர்களோ... அது நடக்காமலேயே போய்விடும்..!’’சிவகாமி என்ன செய்ய நினைக்கிறாள் என்பதை ஊகித்த கரிகாலன், செயலில் இறங்க முடிவு செய்து சிறைக்குள் இறங்க முற்பட்டான்.

 

ஆனால், முடியவில்லை.காரணம், ‘‘தவறு செய்துவிட்டாயே கரிகாலா!’’ என அவனுக்குப் பின்னால் சுரங்கத்திலிருந்து ஒலித்த குரல்தான்.அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர், சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர்!

அத்தியாயம் 42

சித்தம் கலங்குவதும் சித்தம் திடப்படுவதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல. கலங்குவதை தேர்வு செய்கிறோமா அல்லது திடத்தை ஒவ்வொரு அணுவிலும் பாய்ச்சுகிறோமா என்பதைப் பொறுத்தே குறிப்பிட்ட சூழலை எதிர்கொள்வதன் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.

16.jpgஇந்த அனுபவ மொழியை நன்றாக அறிந்தவன் கரிகாலன் என்பதால் எந்த வகையிலும் அவன் கலங்கவில்லை. இதுபோல் பல நிகழ்வுகளை எதிர்கொண்ட திறன் இருந்ததால், சிறைக்குள் இறங்குவதைக் கைவிட்டு விட்டான். சர்வசாதாரணமாக தன் சிரசை பின்னுக்கு இழுத்து எழுந்து நின்றான்.

கணத்துக்கும் குறைவான நேரம் சிறைக்குள் அவன் பார்வை சென்றது. அவன் தந்தையின் கழுத்தில் குறுவாளைப் பதித்தபடியே சாளுக்கிய வீரர்களை ஒதுங்கி நிற்கும்படி சிவகாமி கட்டளையிட்டுக் கொண்டிருந்தாள்.சமாளித்து விடுவாள். அவளுக்கு ஆபத்து சூழ்வதற்குள் சாளுக்கிய மன்னரை, தான் சமாளிக்க வேண்டும்.பார்வையைத் திருப்பி விக்கிரமாதித்தரை ஏறிட்டான். 

சிறையில் எரிந்துகொண்டிருந்த பந்தத்தின் ஒளி, துவாரத்தின் வழியே அவர் முகத்தில் பதிந்தது. அதனால் வதனத்திலிருந்த ஒவ்வொரு துணுக்கின் அசைவையும் அவனால் சரியாகக் கவனிக்க முடிந்தது.புன்னகையுடனும் நேசத்துடனும்தான் காட்சியளித்தார். என்றாலும் அந்த பிரியத்துக்குப் பின்னால், தன் பேச்சை கரிகாலன் கேட்கவில்லையே என்ற எரிச்சல் மண்டிக் கிடந்தது. தனியாகத்தான் இடுப்பில் ஒரு கையை வைத்தபடி நின்றுகொண்டிருந்தார். பந்தத்தை ஏந்தியபடி வீரர்கள் யாரும் அருகில் பயபக்தியுடன் நிற்கவில்லை. 

ஒன்று தனியாக வந்திருக்க வேண்டும் அல்லது உடன் வந்த வீரர்கள் சுரங்கத்தில் மறைந்திருக்க வேண்டும். கொண்டு வந்த பந்தத்தை அணைத்திருக்க வேண்டும். இல்லை... பந்தம் அணைந்ததும் வீசும் நெடி நாசியைத் தழுவவில்லை. இறுதிப் புகையின் கருகலும் தேகத்தைத் தழுவவில்லை. 

ஆக, பந்தத்தின் துணையில்லாமல்தான் இருளில் வந்திருக்கிறார். சாதவாகனர்களின் சிற்ப சாஸ்திரத்தை சாளுக்கிய மன்னரும் அறிந்தவர்தானே..? எனவே, காஞ்சியின் சுரங்கப் பாதையில் இதற்கு முன் அவர் வந்திருக்காவிட்டாலும், அவர் பாதங்கள் மேடு பள்ளங்களையும் வளைவு நெளிவுகளையும் ஸ்படிகம் போல் தெள்ளத்தெளிவாக அறிந்திருக்கும். எனவேதான் சிறு தடுமாற்றமும் இல்லாமல், சின்ன ஓசையையும் எழுப்பாமல் தன் அருகில் வந்து நின்றிருக்கிறார்.

அதற்காக தனியாக மட்டுமே வந்திருப்பார் என முடிவு செய்வதற்கில்லை. துணைக்கு வீரர்கள் வந்திருக்கக் கூடும். மறைவாக அவர்கள் நிற்கவும் வாய்ப்பிருக்கிறது. அப்படி ஒளிந்து நிற்கிறார்கள் என்றால் எத்தனை பேர்..? எந்தெந்த திசையில் மறைந்திருக்கிறார்கள்..? 
தெரியவில்லை. அறியாதிருப்பதாலேயே அலட்சியமாக இருக்கக் கூடாது. 

விழித்துக்கொண்ட அகத்தின் ஒளியை புறத்தில் பாய்ச்சினான். சாளுக்கிய மன்னரின் அசைவு அல்லது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து எந்தக் கணத்திலும் தன்மீது வீரர்கள் தாக்குதல் நடத்தக்கூடும். எதையும் எதிர்கொள்ளும் திடத்துடன் அவரது நயனங்களை ஏறிட்டான்.  

‘‘இவ்வளவு விழிப்பு தேவையில்லை கரிகாலா..! தனியாகத்தான் வந்திருக்கிறேன். சுரங்கத்தின் எந்த மூலையிலும் சாளுக்கிய வீரர்கள் இல்லை. ஒருவேளை உனக்குத் துணையாக பல்லவ வீரர்கள் வந்திருந்து மறைந்திருக்கிறார்கள் என்றால்... அதுகுறித்து எனக்குக் கவலையுமில்லை!’’இம்முறை கரிகாலன் புன்னகைத்தான். ‘‘விழிப்புடன் இருப்பது வீரர்களின் இயல்பு!’’‘‘அப்படித் தெரியவில்லையே..?’’

கரிகாலனின் கண்களில் சீற்றம் பரவ ஆரம்பித்தது. 
அதை அதிகப்படுத்தும் விதமாகவே சாளுக்கிய மன்னர் தன் உரையாடலைத் தொடர்ந்தார். ‘‘வீரனுக்குரிய எந்த லட்சணமும் உன்னிடம் இல்லை!’’
‘‘சீண்டிப் பார்க்கிறீர்களா மன்னா..?’’
‘‘ஏன், புலி பாயக் காத்திருக்கிறதா..?’’
கரிகாலன் அவரையே உற்றுப் பார்த்தான்.

விக்கிரமாதித்தர் அதை அலட்சியம் செய்தார். ‘‘எல்லா தருணங்களிலும் விழிப்புடன் இருப்பவனே வீரன். பல்லவ மன்னர்... ஆம். மன்னனல்ல... மன்னர்தான்... பரமேஸ்வர வர்மரை மரியாதையுடன் அழைக்கவே விரும்புகிறேன். ஏன் தெரியுமா..?’’அவனை நெருங்கினார். கம்பீரமாக தன் தோள்களை உயர்த்தினார். ‘‘அவர் சுத்தமான வீரர்! மக்களைக் காக்கவும் கலைச்செல்வங்களுக்கு சேதாரம் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகவும் காஞ்சியை என்னிடம் ஒப்படைத்துவிட்டு அகன்றவர்...’’

கரிகாலன் உணர்ச்சியை வெளிக்காட்டாமல் அப்படியே நின்றான்.‘‘அதே மக்களைக் காக்கவும் சாளுக்கியனான எனக்கு... ஆம், எனக்கு மரியாதை தேவையில்லை! பாடம் கற்பிக்கவும் வீரர்களைத் திரட்டி வருகிறார். போரில் வெற்றி பெறக் காத்திருக்கிறார். ஆனால், நீ..?’’ சாளுக்கிய மன்னரின் முகத்தில் ஏமாற்றத்தின் ரேகைகள் படரத் தொடங்கின. ‘‘வீரனுக்குரிய எந்த இலக்கணமும் இல்லாமல், ஒரு பெண்ணுக்காக, அதுவும் பல்லவர்களைப் பூண்டோடு அழிக்கத் துடிக்கும் வஞ்சகிக்காக உனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புகளை எல்லாம் நழுவ விடுகிறாய்...’’
 

‘‘ஏன் நிறுத்திவிட்டீர்கள் மன்னா? ‘வெட்கமாக இல்லையா..?’ என வாக்கியத்தை பூர்த்தி செய்திருக்கலாமே..?’’‘‘சொல்லாமலே அதுதான் புரிந்துகொண்டிருக்கிறாயே?!’’‘‘ஆனால், நீங்கள் இன்னும் உணராமல் இருக்கிறீர்களே மன்னா..!’’
 

வாய்விட்டுச் சிரித்தார் விக்கிரமாதித்தர். ‘‘சிறையில் இருக்கும் உன் தந்தையைச் சொல்கிறாயா..?’’ஆம் என ஆமோதிக்கவும் செய்யாமல் இல்லை என மறுக்காமலும் அவரையே கரிகாலன் ஏறிட்டான்.

சாளுக்கிய மன்னரே தொடர்ந்தார்: ‘‘தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் வழக்கம் இந்த விக்கிரமாதித்தனுக்கு இல்லை கரிகாலா! எங்கள் போர் அமைச்சரின் வியூகம் அது. அவரைத் தடுத்தால் அது தேவையற்ற சலசலப்பை சாளுக்கிய வீரர்கள் மத்தியில் உருவாக்கும். எனவேதான் அவர் போக்கில் அவரைப் போக அனுமதிக்கிறேன். அதேநேரம் என் விருப்பப்படி சகலத்தையும் நகர்த்துகிறேன்...’’கரிகாலன் பதிலே பேசவில்லை. புருவத்தை மட்டும் உயர்த்தினான்.

‘‘ராமபுண்ய வல்லபர் உன்னை... அதாவது சோழர்களை... எங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கிறார். அதன் ஒருபகுதியாக உன் தந்தையைப் பிணைக் கைதியாக சிறையில் அடைத்திருக்கிறார். இதைக் காட்டி உன் பெரிய தாயாரைக் கலங்க வைத்து உன்னுடன் பேச வைத்திருக்கிறார்...’’
‘‘.......’’
‘‘எனக்கு இதில் உடன்பாடில்லை...’’
‘‘ஏன் மன்னா! சோழர்களின் உதவி தங்களுக்கு வேண்டாமா..?’’

‘‘இந்தப் போரில் வேண்டாம்!’’ அழுத்திச் சொன்னார் விக்கிரமாதித்தர். ‘‘வாதாபியை நரசிம்மவர்மர் அழித்து எரித்தபோது நீங்கள் யார் பக்கம் நின்றீர்கள்..? பல்லவர்கள் பக்கம்தானே? அதே கூட்டணியை இம்முறை போரில் நேருக்கு நேர் சந்திக்கவே விரும்புகிறேன். அப்போதுதான் பழி வாங்கிய திருப்தி எனக்குக் கிடைக்கும்! என் தந்தை இரண்டாம் புலிகேசியின் ஆன்மாவும் சாந்தி அடையும்!’’
கர்ஜித்த சாளுக்கிய மன்னரை வியப்புடன் பார்த்தான் கரிகாலன்.

‘‘நடைபெறவிருக்கும் போரில் கண்டிப்பாக பல்லவ சேனையை முறியடிப்பேன். யுத்தத்தில் ஜெயித்தபிறகு பல்லவ நாடே எங்களுக்கு சிற்றரசாகத் தான் மாறும். அதன்பிறகு அழைப்புவிடுக்காமலேயே சோழர்களாகிய நீங்கள் சாளுக்கியர்களுக்கு சேவகம் புரிவீர்கள்! அந்தத் தருணத்துக்காகத் தான் காத்திருக்கிறேன். ஏனெனில் அப்போதுதான் உங்களால் பற்ற வைக்கப்பட்டு வாதாபியில் கொழுந்துவிட்டு எரிந்த தீ... அணையும்!’’
கண்களை இறுக மூடி சில கணங்கள் அமைதியாக நின்ற விக்கிரமாதித்தர், தன்னை நிதானப்படுத்திக் கொண்டு மெல்ல இமைகளைப் பிரித்தார்.

 ‘‘போரை எதிர்பார்க்கிறேன் கரிகாலா... அதற்காகவே உன்னை தப்ப வைக்கவும் முயற்சி எடுக்கிறேன்! பரமேஸ்வர வர்மரால் எனக்குத் தாரை வார்க்கப்பட்ட இந்த காஞ்சி மாநகரத்தில் வசிக்கவே அவமானமாக இருக்கிறது. பல்லவ சிம்மாசனத்தில் அமரவோ அருவருப்பாக இருக்கிறது! ஏன் தெரியுமா..? யுத்தத்தில் ஜெயிக்காமல் இந்த அரியணை கிடைத்திருக்கிறது. பல்லவ மன்னரின் தலையை போர்க்களத்தில் சீவாமல் இந்தப் பேரரசு கிடைத்திருக்கிறது! எப்படி கூச்சமின்றி சிம்மாசனத்தில் அமர்ந்து பல்லவ ராஜ்ஜியத்தை ஆள முடியும்..?!’’
‘‘......’’

‘‘உன்னையே காப்பாற்றத் துணிந்த எனக்கு உன் தந்தையை விடுதலை செய்ய எவ்வளவு நாழிகை தேவைப்படும்..? இதைக் கூட புரிந்துகொள்ளாமல் ஏன் காஞ்சிக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வருகிறாய்? இதைக் கூட தந்தைப் பாசம் என்று கொள்ளலாம். ஆனால், அவ்வளவு எடுத்துச் சொல்லியும் போயும் போயும் சிவகாமியை நம்புகிறாயே... பைத்தியக்காரா..!’’
‘‘......’’
‘‘பல்லவ இளவரசன் ராஜசிம்மனுக்கு அடுத்தபடியாக புலவர் தண்டியின் நம்பிக்கைக்குரிய மாணவன் நீதான் என்பது உலகுக்கே தெரியும். அப்படியிருக்க சிவகாமி குறித்த மர்மத்தை நீ அறிய வேண்டும் என அர்த்தசாஸ்திர சுவடிகளைக் கொடுத்தா புரியவைக்க முயற்சிப்பேன்? கடிகையில் படித்து வந்த பாலகன் வழியாக உன்னிடம் நான் சேர்ப்பித்த சுவடிக்குள் என்ன இருக்கிறது என்பதைக்கூட புரட்டிப் பார்க்காமல் அவளிடம் கொடுத்து விட்டாயே! இதன் மூலம் பல்லவ நாட்டை அழிக்கவும் அல்லவா துணை போயிருக்கிறாய்!’’
‘‘மன்னா..?!’’

‘‘இந்த ஒரு விஷயத்தில் என்னை நம்பு! காஞ்சியை விட்டு நீ வெளியேறும் வரை... உன்னை வெளியேற்றும் வரை... நான் உன் நண்பன்! நலம் விரும்பி! விழிப்பு, பழிப்பு என்றெல்லாம் குழப்பிக் கொள்ளாமல் நான் சொல்வதைக் கேள்! முதலில் அவளிடம் கொடுத்த சுவடிக் கட்டுகளை வாங்கு! அத்துடன் உன் தந்தையைக் காப்பாற்று! உண்மையில் சிவகாமி உன் தந்தையைக் கொலை செய்யத்தான் உன் துணையுடனேயே சிறைக்குள் இறங்கியிருக்கிறாள்!’’
‘‘......’’

‘‘அதிர்ச்சியை எல்லாம் பிறகு வெளிப்படுத்து! முதலில் சிறைக்குள் இறங்கி உன் தந்தையின் உயிரைக் காப்பாற்று! இந்தா...’’ என ஒரு வாளையும், சிறைக்குள் அவன் இறங்க கயிறையும் கொடுத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் சுரங்கத்துக்குள் நடந்து மறைந்தார். 

கரிகாலனுக்கு எதுவும் புரியவில்லை. தந்தையின் உயிருக்கு ஆபத்து என்பது மட்டும் திரும்பத் திரும்ப ஒலிக்கவே, பதற்றத்துடன் துவாரத்தின் அருகில் சென்றான். சிவகாமி, தான் இறங்கிய கயிற்றை அறுத்திருந்தாள்!   உடனே சாளுக்கிய மன்னர் கொடுத்த கயிற்றை சிலையில் கட்டிவிட்டு துவாரத்தின் வழியே சிறைக்குள் இறங்கினான். 

சூழ்ந்திருந்த வீரர்களைப் பாய்ந்து பாய்ந்து சிவகாமி தன் கால்களால் உதைத்துக் கொண்டிருந்தாள்! மற்றபடி வீரர்களிடம் இருந்து வாட்களைத் தட்டிப் பறித்து அதைப் பயன்படுத்த அவள் முயற்சிக்கவேயில்லை.அவள் கரங்களில் இருந்த குறுவாள் மட்டும் அவன் தந்தையின் மார்பைக் குறி பார்த்துக் கொண்டிருந்தது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கிருபன் தொடர்ந்து இணைப்பதற்கு

Link to comment
Share on other sites

ரத்த மகுடம்-43

முழுமையான அசுவமாக சிவகாமி மாறியிருந்தாள். அதுவும் நாவாயிலிருந்து அப்போதுதான் இறங்கிய புத்தம் புது அரபு நாட்டுப் புரவியாக. மல்லைக் கடற்கரையில்தான் இதற்கு முன்பு இப்படிப்பட்ட காட்சியைக் கண்டிருக்கிறான். நாவாயிலிருந்து இறக்கப்படும் அரபு அசுவங்கள் கடற்கரை மணலில் திமிறிக் கொண்டிருக்கும். புதிய சூழலும் அறிமுகமாகாத மனிதர்களும் அவற்றின் இருப்பை கேள்விக்குள்ளாக்கி இருக்கும். எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் மணல் மட்டுமே அதன் ஒரே பிடிப்பாகத் தென்படும்.
17.jpg
எனவே, அம்மணல் பரப்பை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், அறிமுகமற்ற மனிதர்களை வீழ்த்தவும் மூர்க்கமாக முயற்சிக்கும். இதன் ஒரு படியாக பாயவும் தறிகெட்டு ஓடவும் முயலும். அதை அடக்குவதற்காக வீரர்கள் அரணமைத்து சூழ்வார்கள். முன்னங்கால்களை மணலில் உதைத்தபடி தன் நாசியை அப்படியும் இப்படியுமாக அசைக்கும். பின்னங்கால்களை பின்னோக்கி ஓரடியும் முன்னோக்கி இரண்டடியும் வைத்து, சூழ்ந்திருக்கும் வீரர்களைக் குழப்பும். குளம்புகளால் மணலில் தடங்களைப் பதித்தபடியே இருக்கும். ஓரிடத்தில் நிற்காது. அரை வட்டமும் முழு வட்டமுமாக அப்பரப்பை தன் ஆளுகைக்குள் கொண்டுவர முயலும்.

அத்துடன் அரணமைத்தபடியே தன்னருகில் வரும் வீரர்களை நோக்கி முன்னங்கால்களை உயர்த்தும். சிலிர்க்கும் பிடரியை மேலும் உதறியபடி உயர்த்திய குளம்புகளை வீரர்கள் மேல் இறக்கவும் உதைக்கவும் மிதிக்கவும் முயற்சிக்கும்.வேறு வழியின்றி அச்சத்துடன் வீரர்கள் விலகுவார்கள். அமைத்த அரணும் கலையும். பிறகென்ன... அச்சூழல் அப்புரவியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். இதன்பின்னர் என்னதான் வீரர்கள் கைகோர்த்தாலும் வியூகம் வகுத்தாலும் அந்த அசுவத்தை ஒருபோதும் அவர்களால் நெருங்கவும் முடியாது; அடக்கவும் இயலாது.

எனவேதான், தேர்ந்த அசுவ சாஸ்திரி, புரவிகளைப் பழக்கும்வரை தன் கட்டுப்பாட்டிலேயே சூழலை வைத்திருப்பார். விரல் நகம் அளவுக்குக் கூட அசுவத்தின் கை ஓங்க அனுமதிக்க மாட்டார். இந்த யுக்தியை சாளுக்கிய வீரர்கள் அறியாமல் இருந்தது சிவகாமிக்கு வசதியாகப் போயிற்று. கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அந்தச் சிறை அறையை முழுவதுமாகத் தன் கட்டுப்பாட்டுக்குள் அவள் கொண்டுவந்திருந்தாள்.

சாளுக்கிய மன்னர் கொடுத்த கயிற்றைப் பிடித்தபடி இறங்கிய கரிகாலனுக்கு நடப்பது அனைத்தும் புரிந்தது. குறிப்பாக நாவாயிலிருந்து இறக்கப்பட்ட புதிய அசுவமாக சிவகாமி மாறியிருந்த விதம்.சுரங்கத்திலிருந்து, தான் பார்த்த காட்சியை மெல்ல அசைபோட்டான்.உருவிய வாட்களுடன் சாளுக்கிய வீரர்கள் சூழ ஆரம்பித்ததுமே சிறிதும் தாமதிக்காமல் அவன் தந்தையின் அருகில் சென்றாள். தன் இடுப்பிலிருந்து குறுவாளை எடுத்து அவரது தொண்டைக் குழியில் பதித்தாள்.

அதுவரை அந்தரங்கமாகத் தன்னுடன் உரையாடிக் கொண்டிருந்தவள் சட்டென இப்படிச் செய்ததைக் கண்டு அவன் தந்தை அதிர்ச்சியடையவில்லை. ஆமாம். அவர் முகத்தில் அப்படிப்பட்ட ரேகைகள் எதுவும் படரவில்லை. சூழும் ஆபத்திலிருந்து தப்பிக்க அவள் இப்படிச் செய்கிறாள் என்பதை உணர்ந்தவர் அதற்கு ஏற்ப தன் பங்குக்கு தானும் நாடகத்தைத் தொடர்ந்தார். அச்சப்படுவதுபோல் நடித்தார்.

இதுவரைதான் கரிகாலன் கவனித்திருந்தான். இதன் பிறகுதான் மறைவிலிருந்து சாளுக்கிய மன்னர் வெளிப்பட்டார். அவனுடன் பேசினார். சிவகாமியை நம்பாதே என முன்பு சொன்னதற்கு மீண்டும் அழுத்தம் கொடுத்துவிட்டு, ‘உன் தந்தையைக் கொலை செய்யத்தான் உன் உதவியுடன் சிறைக்குள் இறங்கியிருக்கிறாள்!’ எனச் சொல்லிவிட்டு அகன்றார். 

இதனை அடுத்துதான் சாளுக்கிய மன்னர் கொடுத்த கயிற்றைப் பிடித்தபடி சிறைக்குள் அவனும் இறங்கினான்.இடைப்பட்ட பொழுதில் அசுவமாக மாறி அச்சூழலைத் தன் கட்டுப்பாட்டுக்குள் சிவகாமி கொண்டு வந்துவிட்டாள்.எப்படி இதைச் சாதித்தாள் என்பது ஊகிக்காமலே கரிகாலனுக்குப்புரிந்தது.

அவன் தந்தையின் கழுத்தில் குறுவாளைப் பதித்து அவர் பின்னால் நின்றவள் நிச்சயம், ‘‘யாரும் அசையவேண்டாம்... நெருங்கினால் சோழ மன்னரின் சடலத்தைத்தான் நீங்கள் எடுத்துச் செல்ல நேரிடும்...’’ என மிரட்டியிருப்பாள்.என்ன செய்வதென்று தெரியாமல் இதைக் கேட்டு சாளுக்கிய வீரர்கள் அதிர்ச்சியுடன் நின்றிருப்பார்கள்.பதித்த குறுவாளை விலக்காமல் மெல்ல சிவகாமி அவன் தந்தையின் அருகில் வந்திருப்பாள்.

இந்த அசைவு வீரர்களின் அதிர்ச்சியைப் போக்கியிருக்கும். எப்படியும் அவளையும் சிறை செய்யும் நோக்கத்துடன் அரணமைத்து இருவரையும் சூழ முயற்சி செய்திருப்பார்கள்.இப்படி அவர்கள் அரண் அமைக்கவேண்டும் என்பதற்காகவே காத்திருந்த சிவகாமி, இதன்பிறகு தன் ருத்திர தாண்டவத்தை அரங்கேற்றியிருப்பாள். அசுவம் போலவே தன் கால்களை உயர்த்தி இடியாக வீரர்களின் தலையில் இறக்கியிருப்பாள்.

எப்படி அரபுப் புரவிகளுக்கு கடற்கரை மணலோ அப்படி சிவகாமிக்கு சிறைச்சாலையில் இருந்த மண் தரையும் பாறைகளும்! தனது ஆட்சிக்கு உட்பட்ட அப்பிரதேசங்களில் புகுந்து விளையாடியிருக்கிறாள்!கயிற்றைப் பிடித்தபடி சிறைக்குள் அவன் இறங்கியபோது கண்ட காட்சியே இதற்கு சாட்சி. சூழ்ந்திருந்த வீரர்களை அந்தரத்தில் பறந்தபடி பாய்ந்து பாய்ந்து தன் கால்களால் உதைத்துக் கொண்டிருந்தாள். பாய்வதற்கு ஏதுவாக சிறைச்சாலைச் சுவர்களில் பதிந்திருந்த பாறைகள் அவளை வரவேற்றன; உதவின.

அடி தாங்காமல் வீரர்கள் மூலைக்கு ஒருவராகச் சிதறினார்கள்.இதையெல்லாம் கவனித்தபடி இறங்கி நின்றவனுக்கு ஒரு விஷயம் மட்டும் தொண்டையில் சிக்கிய முள்ளாக உறுத்தியது. சாளுக்கிய வீரர்களைத் தாக்கினாள்; பந்தாடினாள்; அடித்தாள்; உதைத்தாள்; சிதறடித்தாள். ஆனால், அவர்களிடம் இருந்து வாட்களைத் தட்டிப் பறிக்கவும் இல்லை. அதை வைத்து அவர்களை வீழ்த்தவும் முயற்சிக்கவில்லை! 

‘‘முதலில் அவளிடம் கொடுத்த சுவடிக் கட்டுகளை வாங்கு! அத்துடன் உன் தந்தையைக் காப்பாற்று! உண்மையில் சிவகாமி உன் தந்தையைக் கொலை செய்யத்தான் உன் துணையுடனேயே சிறைக்குள் இறங்கியிருக்கிறாள்!’’சில கணங்களுக்கு முன் சுரங்கத்தில் அவனிடம் எச்சரித்த சாளுக்கிய மன்னரின் குரல் இப்போதும் அவனுக்குள் ஒலித்து அதிர வைத்தது.

அதன்பிறகு துளியும் அவன் தாமதிக்கவில்லை. நடக்கும் சண்டையில் கலந்துகொள்ளாமல் தனியாக நின்று அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த தன் தந்தையின் அருகில் சென்றான்.‘‘என் மருமகள் எப்படிப்பட்ட வீராங்கனை என்பதைப் பார் கரிகாலா!’’ உணர்ச்சியுடன் அவனை அணைத்துக் கொண்டார் சோழ மன்னர். 

கரிகாலனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அகம் கொந்தளிப்பதை புறத்தில் வெளிப்படுத்தாமல் அவர் கரங்களை இறுகப் பற்றினான்.
‘‘வீரனுக்கு அழகு சக வீரனைக் காப்பாற்றுவது! ஆனால், சிவகாமி அதற்கு இடம் தரவில்லை... பார்த்தாயா... உன் உதவியோ என் உதவியோ இல்லாமல் தனி ஆளாக, வந்த வீரர்கள் அனைவரையும் செயலிழக்கச் செய்துவிட்டாள்!’’

ஆமாம்... சாளுக்கிய வீரர்கள் அனைவரும் செயலிழந்து மயக்கத்தில் ஆழ்ந்து தரையில் வீழ்ந்து கிடந்தார்கள். அத்துடன் வாட்கள் அனைத்தும் அவர்கள் கரங்களிலேயே இருந்தன!தன் வலது கை ஆள்காட்டி விரலால் நெற்றியில் பூத்த வியர்வை முத்துக்களைத் துடைத்தபடி அவர்கள் அருகில் வந்தாள் சிவகாமி.‘‘இப்படியொரு வீரத்தை இதற்குமுன் நான் கண்டதில்லை மருமகளே!’’ மலர்ச்சியுடன் சோழ மன்னர் அவளை வரவேற்றார். 

நாணத்துடன் அவரை நோக்கிப் புன்னகைத்துவிட்டு கரிகாலனைப்பார்த்தாள். அவன் கண்களில் வெளிப்பட்ட வெறுமை அவளை நிதானப்பட வைத்தது. ‘‘சுரங்கத்தில் சாளுக்கிய மன்னர் உங்களைச் சந்தித்தாரா..?’’ எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் கேட்டாள். கரிகாலன் பதிலேதும் சொல்லவில்லை.‘‘இந்தாருங்கள்...’’ தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த சுவடிக் கட்டுகளை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
பெற்றுக் கொள்ளாமல் அவளையே கரிகாலன் பார்த்துக் கொண்டிருந்தான்.

கண்களில் குறுஞ்சிரிப்பு மின்ன அக்கட்டுகளை அவன் இடுப்பு வஸ்திரத்தில் கட்டினாள். ‘‘திரும்பவும் விக்கிரமாதித்தரைச் சந்திக்க நேர்ந்தால் அர்த்த சாஸ்திர சுவடி உங்களிடமே இருப்பதாகத் தெரிவியுங்கள்!’’‘‘என்னம்மா நடக்கிறது இங்கே!’’ சோழ மன்னர் இருவரையும் மாறி மாறிப் பார்த்தார்.
‘‘ஒன்றுமில்லை...’’ சொல்லும்போதே சிவகாமியின் குரல் கம்மியது.

‘‘என்னிடம் சொல்லக் கூடாதா..?’’
‘‘அப்படியெல்லாம் எதுவுமில்லை...’’
‘‘கரிகாலா! நீயாவது சொல்...’’
‘‘அவரை வற்புறுத்தாதீர்கள்...’’
‘‘ஏன்? சொல்ல மாட்டானா..?’’

‘‘சொல்லும் நிலையில் அவர் இல்லை...’’ கரிகாலனைப்பார்த்தபடியே சோழ மன்னருக்கு பதிலளித்தாள்.
‘‘ஏன், மயக்கத்தில் இருக்கிறானா..?’’ 
‘‘இல்லை. எச்சரிக்கையுடன் இருக்கிறார்!’’
‘‘எச்சரிக்கையா..?’’ சோழ மன்னர் வியந்தார். ‘‘என்னம்மா சொல்கிறாய்..?’’ 
‘‘சாளுக்கிய வீரர்களைப் பந்தாடி செயலிழக்கச் செய்திருக்கிறேன் அல்லவா..?’’
‘‘ம்...’’

‘‘ஆனால், அவர்களிடம் இருந்து வாட்களை நான் பறிக்கவில்லை...’’‘‘கவனித்தேன். சுவற்றில் அவை மோதாமலும் பார்த்துக் கொண்டாய். இதன் மூலம் வாயிலில் நிற்கும் காவலர்களுக்கு எந்த ஓசையும் கேட்காதபடி கவனமாக சண்டையிட்டாய்...’’‘‘அப்படிச் சொல்ல முடியாதே... வீரர்கள் கீழே விழுந்த ஒலி கேட்காமலா இருந்திருக்கும்..?’’
 

‘‘வாய்ப்பில்லை சிவகாமி! நான் அடைபட்டிருக்கும் இந்த அறையின் வாயில் தொலைவில் இருக்கிறது. அதற்கான பாதை வளைந்து வளைந்து செல்லும். சொல்லப் போனால் நாம் இங்கே நிற்பது கூட காவலுக்கு நிற்கும் வீரர்களுக்குத் தெரியாது...’’‘‘அப்படியா..?’’

‘‘ஆம் மகளே! அரச குடும்பத்தினரை அடைத்து வைக்கும் சிறை இது. பொதுவாக தனியாக யாரையும் இங்கு அடைக்க மாட்டார்கள். குடும்பமாகத்தான் இவ்விடத்தில் வசிக்க விடுவார்கள். அப்போது அவர்கள் அந்தரங்கமாக உரையாட வேண்டும் என்பதற்காக 
பல்லவ மன்னர் செய்த ஏற்பாடு இது. கரிகாலன் நன்றாகவே இதை அறிவான்...’’
‘‘அறிந்ததால்தான் ஐயப்படுகிறாரோ என்னவோ..?’’
‘‘என்ன ஐயம்..?’’

‘‘உங்களை நான் கொலை செய்து விடுவேனோ என்றுதான்...’’
கரிகாலனின் தந்தைக்கு ஒன்றும் புரியவில்லை. புருவங்கள் முடிச்சிட தன் மகனையும் சிவகாமியையும் மாறி மாறிப் பார்த்தார்.‘‘உன்னால் எப்படி என்னைக் கொல்ல முடியும்..?’’‘‘இதோ... இப்படித்தான்..!’’ என்றபடி தன் கையிலிருந்த குறுவாைள அவர் வயிற்றில் செருகினாள்! 
 

(தொடரும்)
Link to comment
Share on other sites

எல்லா தருணங்களிலும் விழிப்புடன் இருப்பவன் என பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மராலும் பல்லவ இளவல் ராஜசிம்மனாலும் போற்றப்பட்ட கரிகாலன், உண்மையிலேயே அத்தருணத்தில் செயலிழந்துதான் போனான்.
30.jpg

கணத்துக்கும் குறைவான நேரம்தான். ஆனால், அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.காதலும் காமமும் அவன் கண்களை மறைத்த அந்தப் பொழுதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சிவகாமி, தன் கையிலிருந்த குறுவாளால் சரேலென சோழ மன்னரின் வயிற்றில் குத்தி விட்டாள்!
 

அவளைத் தடுக்கவோ குறுவாளைத் தட்டிவிடவோ அவனுக்கு நேரம் ஒதுக்கப்படவேயில்லை; அதற்கான அவகாசத்தை சிவகாமியும் தரவில்லை.
அதிர்ச்சியுடன் ‘அப்பா...’ என அலறியபடி அவரை நோக்கிப் பாய முற்பட்டவன் -நிதானித்தான். காரணம், புன்முறுவலுடன் நின்றுகொண்டிருந்த சோழ மன்னர்தான்!

‘‘என்ன கரிகாலா... என் மருமகள் என்னைக் கொலை செய்து விடுவாள் என்று நினைத்தாயா..?’’ அலட்சியத்துடன் தன் மகனைப் பார்த்துக் கேட்டார்.
‘‘தந்தையே...’’ ஓரக்கண்ணால் கரிகாலனை ஏறிட்டபடியே உரையாடலில் சிவகாமி புகுந்தாள்.கரிகாலன் அமைதியாக இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.‘‘சொல் சிவகாமி...’’ கட்டளையிடும் தொனியில் பேசிய சோழ மன்னரின் உதட்டில் புன்னகை பூத்தது.
‘‘தங்கள் மகன் அப்படி நினைக்கவில்லை...’’‘‘அப்படியா..?’’

‘‘ஆமாம்... தீர்மானித்தே விட்டார்!’’ கலீரென்று சிரித்த சிவகாமி சட்டென்று தன் உதட்டைக் கடித்தாள்.‘‘வெளியில் கேட்காது! அஞ்சாதே...’’ தைரியம் சொன்ன சோழ மன்னர் தன் மகனைப் பார்த்து புருவத்தை உயர்த்தினார். ‘‘சிவகாமி என்னைக் கொலை செய்துவிடுவாள் என முடிவே கட்டி விட்டாயா..?’’கரிகாலனின் கண்கள் சுருங்கின. புரிபடாத மர்மங்களும் வெளிச்சத்துக்கு வந்தன. என்றாலும் அவர்கள் இருவருமே அதை சொற்களால் வெளிப்படுத்தட்டும் என முன்பு போலவே அமைதியாக தன் இரு கரங்களையும் மார்புக்கு குறுக்காகக் கட்டியபடி நின்றான். 

அவனது உடல்மொழியைப் புரிந்துகொண்டதாலோ என்னவோ இருவரும் அவனைப் பொருட்படுத்தாமல் உரையாடலைத் தொடர்ந்தார்கள்.
‘‘அவரைக் குற்றம் சொல்லாதீர்கள் தந்தையே! அவரும்தான் பாவம் என்ன செய்வார்... கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் அல்லவா சாளுக்கிய மன்னர் தங்கள் மகனிடம் சொல்லி அனுப்பியிருக்கிறார்..?’’ 

‘‘அட என்னம்மா நீ..? யார் சொன்னாலும் அதை அப்படியே நம்பி விடுவதா..? ஆராய்ந்து பார்க்க வேண்டாமா..? பகுத்தறியும் பக்குவத்துடன்தானே இவனை வளர்த்தேன்..?’’‘‘அவரும் அப்படித்தான் வளர்ந்திருக்கிறார் தந்தையே!’’‘‘எப்படி..?’’

‘‘இதோ இப்படித்தான்...’’ நிமிர்ந்து நின்று தன் நெஞ்சில் கை வைத்தாள். ‘‘ஆய்ந்து பார்க்கும் தெளிவு இருப்பதால்தானே இப்போது நான் உயிருடன் இருக்கிறேன்! அவசரக் குடுக்கையாக உங்கள் மகன் இருந்திருந்தால் இந்நேரம் என் மீது பாய்ந்து கழுத்தை நெரித்திருப்பாரே...’’

‘‘அப்படி அவன் செய்யாததற்காக வருத்தப்படுகிறாயா..?’’ கலகலவெனச் சிரித்த சோழ மன்னர், நகர்ந்து தன் மகனின் தோளில் கைபோட்டார். ‘‘பயந்துவிட்டாயா..?’’‘‘இல்லை...’’ எனத்  தலையசைத்த கரிகாலன் அவரிடம் ஒண்டினான்.

சோழ மன்னர் கனிவுடன் அவன் சிரசைக் கோதினார். தந்தைக்கு ஆபத்தோ என்ற எண்ணம் ஒரு பக்கம்... அந்த ஆபத்தை தன் மனம் கவர்ந்தவளே ஏற்படுத்துகிறாளோ என்ற சந்தேகம் மறுபக்கம்... பாவம் குழந்தை. போர்க்களத்தில் நேருக்கு நேராக நூற்றுக்கணக்கானவர்களுடன் மோதும் வல்லமைபடைத்தவன், காதலி குறித்த சந்தேகத்தில் அல்லாடுகிறான்.‘‘இப்போது தெளிவாகி விட்டதா..?’’ மகனை நேருக்கு நேராக நிறுத்தி அவன் கண்களை ஊடுருவினார்.

‘‘ம்...’’
‘‘அடுத்து செய்ய வேண்டியதையும் தீர்மானித்து விட்டாயா..?’’
நாண் விடுபட்டதும் வில் எப்படி நிமிருமோ அப்படி கரி
காலன் நிமிர்ந்தான். பழைய தோரணையும் விஷமத்தனமும் அவன் தேகமெங்கும் பரவின. ‘‘அதுதான் சிவகாமி சொல்லிவிட்டாளே..!’’ கண்சிமிட்டினான்.

‘‘நான் சொன்னேனா..?’’ உண்மையிலேயே சிவகாமிக்கு எதுவும் புரியவில்லை.
‘‘ம்... முடிவே செய்துவிட்டேன் என்றாய் அல்லவா..?’’
சோழ மன்னரையும் கரிகாலனையும் மாறி மாறிப் பார்த்தாள். ‘‘ஆமாம்!’’
‘‘அதைத்தான் தந்தையிடம் குறிப்பிட்டேன். உன்னிடம் இருக்கும் குறுவாள், உண்மையில் குறுவாளே அல்ல! அது உயிரையும் குடிக்காது; காயங்களையும் ஏற்படுத்தாது!’’

முகத்தில் படர்ந்த உச்சி முடியைக் கைகளால் ஒதுக்கியபடி 
கரிகாலனைக் காதலுடன் சிவகாமி பார்த்தாள்.
‘‘தேகத்தில் வைத்து அழுத்தும்போது அது தன்னால் உள்ளே சென்றுவிடும்! இந்த பொறி அமைப்புடன் குறுவாளைத் தயாரிக்கும் வல்லமை சீனர்களிடம் மட்டுமே உண்டு! அவர்களிடம் இருந்து இதை நீ பெற்றிருக்கிறாய்!’’

‘‘அப்பாடா! இப்பொழுதாவது உங்களுக்குப் புரிந்ததே!’’ என்றபடி சோழ மன்னரை ஏறிட்டாள் சிவகாமி. ‘‘உங்கள் மகன் புத்திசாலிதான் என்று நான் சொன்னபோது நம்பாமல் இருந்தீர்களே!’’
‘‘இப்போது நம்புகிறேன் மருமகளே!’’
‘‘இருவரும் சேர்ந்து என்னைக் கிண்டல் செய்வது இருக்கட்டும்... இனி நடக்க வேண்டியதைப் பார்ப்போம்... எந்த நேரத்திலும் சாளுக்கிய வீரர்கள் இங்கு வந்துவிடுவார்கள்...’’ என்று சொன்ன கரிகாலன் தன் இடுப்பிலிருந்து குறுவாளை எடுத்து சிவகாமியை நோக்கி நீட்டினான். 
‘‘இது எதற்கு..?’’ 

‘‘என் தந்தையைக் கொலை செய்ய!’’
சிவகாமியின் கண்கள் விரிந்தன.
சோழ மன்னர் கேள்வியுடன் தன் மகனைப் பார்த்தார்.

‘‘இது சாளுக்கிய மன்னரின் யோசனை! பல்லவ மன்னரைச் சேர்ந்த யாரையும் சிறை செய்யும் எண்ணம் விக்கிரமாதித்தருக்கு இல்லை! ஆனால், அவரது போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபர் என் தந்தையை சிறையில் அடைத்து சோழர்களைத் தங்கள் பக்கம் இழுக்கப் பார்க்கிறார்!’’
சிவகாமியும் சோழ மன்னரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

‘‘சாளுக்கிய மன்னருக்கு இதில் உடன்பாடில்லை. போரில் நேருக்கு நேராக பல்லவ மன்னருடன் சோழப் படையையும் சந்திக்க விரும்பு
கிறார். அதனால்தான் இந்த ஆலோசனையை வழங்கியிருக்கிறார்...’’‘‘எது..? உங்கள் தந்தையை நான் கொலை செய்யவேண்டும் என்பதா..?’’ சிவகாமியின் முகத்தில் சீற்றம் வெடித்தது.  

‘‘ஆம்!’’
‘‘உங்களுக்கு என்ன சித்தம் கலங்கிவிட்டதா..? என் மீதுள்ள வெறுப்பில் விக்கிரமாதித்தன்...’’

‘‘விக்கிரமாதித்தர்..!’’ கரிகாலன் அழுத்திச் சொன்னான். ‘‘அவர் மன்னர்! மரியாதையுடன் அழைப்பதுதான் பல்லவ இளவரசிக்கு அழகு!’’
பெருமூச்சுகளால் சிவகாமி தன்னை நிதானப்படுத்திக் கொள்ள முயன்றபடி தொடர்ந்தாள். ‘‘சாளுக்கிய மன்னர், நான் உங்கள் தந்தையைக் கொலை செய்யக்கூடும் எனச் சொல்லியிருப்பார்... அதை நீங்களும் நம்பியிருப்பீர்கள்... அந்தப் போக்கிலேயே சென்று ஒரு நாடகத்தை அரங்கேற்றலாம் என்றுதான் இந்தப் போலியான குறுவாளை தந்தை மீது பாய்ச்சுவதுபோல் நடித்தேன்... இப்போது பார்த்தால்...’’
‘‘நிஜமான குறுவாளைக் கொடுத்து என் தந்தையைக் குத்தச் சொல்கிறேன்!’’

‘‘அதுதான் ஏன்..?’’ வெடித்தாள் சிவகாமி.‘‘உன் நோக்கமே அதுதானே..!’’‘‘என்ன சொன்னீர்கள்...’’ சிவகாமி ஆக்ரோஷத்துடன் குறுவாளை ஓங்கியபடி கரிகாலன் மீது பாய்ந்தாள்.லாவகமாகக் குனிந்து அந்த வீச்சில் இருந்து விலகிய கரிகாலன், அவள் கரங்களை கெட்டியாகப் பிடித்தான். ‘‘இவ்வளவு நேரம் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டவள் ஏன் சட்டென ஆத்திரப்பட்டு அறிவை இழக்கிறாய்..?’’
‘‘உன் மீதுள்ள காதல்தான்!’’ அப்பாவியாக சோழ மன்னர் பதில் சொன்னார்.

அவரை முறைத்துப் பார்க்க மனமில்லாமல் கரிகாலனைப் பார்வையால் எரித்தாள். ‘‘எந்தவகையில் அறிவை இழந்துவிட்டேன்..?’’
‘‘சற்றுமுன் என்மீது பாய்ந்தாயே... அந்த முறையில்தான்..!’’
‘‘இப்போது நான் என்ன செய்யவேண்டும்..?’’‘‘நிஜமான இந்தக் குறுவாளால் என் தந்தையைக் குத்த வேண்டும்!’’
‘‘ஏன்..?’’

‘‘அப்போதுதான் அவரால் இச்சிறையிலிருந்து வெளியேற முடியும்..!’’
‘‘ஏன்... நம்மால் இவரை அழைத்துச் செல்ல முடியாதா..?’’‘‘முடியாது!’’ அழுத்திச் சொன்னான் கரிகாலன். ‘‘நாம் வந்த சுரங்க வழியையும் இந்நேரம் ராமபுண்ய வல்லபர் அடைத்திருப்பார்!’’‘‘எனில், காவலுக்கு நிற்கும் சாளுக்கிய வீரர்களை வீழ்த்திவிட்டு செல்வோம்...’’
‘‘நம்மால் அது முடியும்! ஆனால், இப்போது அப்படி வேண்டாம் என்று நினைக்கிறார் சாளுக்கிய மன்னர்...’’
‘‘அவர் நினைப்பதைத்தான் நாம் செயல்படுத்த வேண்டுமா..?’’ சிவகாமியின் முகம் சிவந்தது.

‘‘இந்த விஷயத்தில்! கவனி சிவகாமி... பல்லவ மன்னர் படைகளைத் திரட்டி வருகிறார். அவருக்கு உதவியாக இப்போது தந்தை உடன் இருந்தாக வேண்டும். படை அணிவகுப்பதற்குள் பல்லவ இளவரசரை நாம் அழைத்து வரவேண்டும். இவை எல்லாம் நடக்க வேண்டுமென்றால் இங்கிருந்து நாம் எந்தப் பிரச்னையும் போரும் இன்றி அமைதியாக வெளியேற வேண்டும். இதற்கு சாளுக்கிய மன்னர் கூறும் யோசனையே சரி...’’
‘‘எது..? தந்தையை நான் கொலை செய்ய வேண்டும் என்பதா..?’’‘‘சின்ன திருத்தம். குத்த வேண்டும் என்பது!’’
‘‘அதனால் என்ன பயன்..?’’

‘‘சிறைச்சாலையிலிருந்து என்னை அப்போதுதானே சிகிச்சைக்காக ஆதுரச் சாலைக்கு அழைத்துச் செல்வார்கள்..?’’ அதுவரை அமைதியாக நின்றிருந்த சோழ மன்னர் உரையாடலில் புகுந்தார். ‘‘அங்கிருந்து நம்மை தப்பித்துப் போகச் சொல்கிறார் சாளுக்கிய மன்னர்... என்ன கரிகாலா... நான் சொல்வது சரிதானே..?’’ஆமோதிக்கும் வகையில் கரிகாலன் தலையசைத்தான்.‘‘இந்தக் காரியத்தை நான் ஏன் செய்யவேண்டும்..?’’ சிவகாமி 
புருவத்தை உயர்த்தினாள்.

‘‘என்னால் செய்ய முடியாது என்பதால்!’’ கரிகாலன் நிதானமாக பதில் அளித்தான்.
‘‘என்னால் மட்டும் முடியுமா..?’’‘‘உன்னால் மட்டுமே முடியும்! 
ஏனெனில் பல்லவர்களை வேரோடு அழிக்க வந்திருப்பவள் நீதான்!’’
 

கரிகாலன் இப்படிச் சொன்னதுமே மீண்டும் ஒருமுறை அவனை நோக்கி குறுவாளை ஓங்கினாள் சிவகாமி.‘‘போதும் உங்கள் விளையாட்டு...’’ தொண்டையைக் கனைத்த சோழ மன்னர், ‘‘என் இடுப்புப் பகுதியில் அக்குறுவாளால் குத்து சிவகாமி..!’’ என்றார்.
 

‘‘அந்த இடத்தை ஏன் தேர்வு செய்கிறீர்கள் தந்தையே..?’’ கரிகாலன் வியப்புடன் கேட்டான்.‘‘வயிற்றைக் கிழித்து சிறிது ரண சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என முன்பே காஞ்சியின் தலைமை மருத்துவர் கூறியிருந்தார்! வேலை நெருக்கடியில் அது இயலாமல் போனது. இப்போது கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை அதற்கு பயன்படுத்திக் கொள்கிறேன்..!’’சிவகாமி தர்மசங்கடத்துடன் இருவரையும் பார்த்தாள்.

‘‘தயங்காதே சிவகாமி... சொன்னதைச் செய்! தந்தையைக் குத்திவிட்டு, வளைந்து செல்லும் பாதை வழியே வாயிலுக்குச் சென்று சாளுக்கிய வீரர்களை அழைத்து வா!’’ கரிகாலன் கட்டளையிட்டான்.‘‘நீங்கள்..?’’

‘‘நான் இங்குதான் இருப்பேன்! ஆனால், வீரர்களின் பார்வையில் படமாட்டேன்! தாமதிக்காதே... சொன்னதைச் செய்..!’’ கரிகாலனின் கட்டளைக்கு அடிபணிந்து அதன்படியே சோழ மன்னரைக் குத்திவிட்டு வாயிலை நோக்கி சிவகாமி ஓடினாள். இதையெல்லாம் மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த ராமபுண்ய வல்லபரின் உதட்டில் குரூரம் பூத்தது!     

 

 (தொடரும்)
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உது யார்?...உந்த கதையை இணைக்க மட்டும் வந்து போபவர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

உது யார்?...உந்த கதையை இணைக்க மட்டும் வந்து போபவர்?

நவீனனாக இருக்குமோ?

ஐபிஎல் திருவிழாவும் வருது யார் நடாத்தப் போறாங்களோ தெரியலை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/15/2019 at 7:49 PM, ஈழப்பிரியன் said:

நவீனனாக இருக்குமோ?

ஐபிஎல் திருவிழாவும் வருது யார் நடாத்தப் போறாங்களோ தெரியலை?

இது கடைசிவரை நவீனனாக இருக்க முடியாது .

ஆனாலும்
தொடர்ந்து இணைப்பதற்கு  நன்றி சதீஸ்குமார்

Link to comment
Share on other sites

ஏதோ என்னால் முடிந்த சிறு பங்களிப்பு...

 

ரத்த மகுடம்-45

‘‘நில் சிவகாமி..!’’ 
சொல்வதற்காக வாயைத் திறந்த கரிகாலன் அப்படியே நின்றான். ஏனெனில் முன்பு அவனது கட்டளைக்கு அடிபணிந்து சிறைச்சாலையின் வாயிலை நோக்கி வளைந்து நெளிந்து சென்ற பாதையில் ஓட முற்பட்டவள் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு திரும்பியதுதான்!
‘என்ன’ என்று தன் பார்வையால் வினவினான்.‘பின்னால் பார்...’ என கருவிழிகளை அசைத்தாள்.
கரிகாலன் உதடுகள் விரிந்தன. எதற்காக அவளை நிற்கும்படி அழைக்க நினைத்தானோ, அதையே அவளும் உணர்ந்தது அவனுக்கு ஆசுவாசத்தை அளித்தது.அதேநேரம் குருதி வழிய தரையில் கிடந்த தன் தந்தையின் நிலை அவனுக்கு கவலையை ஏற்படுத்தியது. தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் தன் தந்தைக்கு ஆபத்துதான் என்பதை அவனது ஒவ்வொரு அணுவும் உணர்த்தியது.திரும்பிப் பார்க்காமல் சிவகாமியை ஏறிட்டபடியே 
நிதானமாகக் குரல் கொடுத்தான். ‘‘வெளியே வரலாமே...’’அசைவேதும் இல்லை.

கரிகாலனின் குரல் மட்டும் சிறைச்சாலையின் பாறைகளில் மோதி எதிரொலித்தது.சிவகாமியின் கருவிழிகளையே உற்றுப் பார்த்தான். தனக்குப் பின்னால் இருக்கும் தூணின் மறைவில் ராமபுண்ய வல்லபர் பதுங்குவது தெரிந்தது.மற்ற சமயம் என்றால் சற்றே போக்குக்காட்டி அவரைத் தன் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியிருப்பான். இப்போது அதற்கெல்லாம் வழியில்லை. உடனடி சிகிச்சை தேவை என்பதால் அவன் தந்தையின் வயிற்றில் சற்றே ஆழமாகவே குறுவாளை சிவகாமி பாய்ச்சியிருந்தாள். 

சோழ மன்னரின் மார்புத் துடிப்பை அவனால் நின்ற இடத்திலிருந்தே கேட்க முடிந்தது. போராடிக் கொண்டிருக்கிறார்... காப்பாற்ற வேண்டும்... அதற்கு முதலில் வெளியேற வேண்டும்...‘‘அதுதான் கேட்க வேண்டியதை எல்லாம் கேட்டுவிட்டீர்களே... இனியும் ஏன் பதுங்கியிருக்க வேண்டும்! வாருங்கள் சாளுக்கிய போர் அமைச்சரே... நிதானமாகவே உரையாடலாம்!’’

‘‘முன்பே நான் இருப்பதை அறிந்திருப்பாய் என்று நினைத்தேன்...’’ புன்னகையுடன் தூண் மறைவிலிருந்து ராமபுண்ய வல்லபர் வெளிப்பட்டார்!
சிவகாமியின் கருவிழிகளை விட்டு தன் பார்வையை கரிகாலன் விலக்கவில்லை. சாளுக்கிய போர் அமைச்சர் மட்டுமே மறைவி
லிருந்து வெளிப்பட்டு முன்னோக்கி வந்தார்.

அவருக்குப் பின்னால் இருந்த கற்சுவர் மூடியிருந்தது. சிறிதும் அசையவில்லை.அது சுரங்கத்தின் மற்றொரு வாசல். காஞ்சி பெருவணிகரின் மாளிகையையும் இந்த சுரங்கத்தையும் இணைக்கும் வழி அதுதான். அவ்வழி மூடியிருக்கிறது என்றால் ராமபுண்ய வல்லபர் தனியாகத்தான் வந்திருக்கிறார் என்று அர்த்தம். சிறைக்கு வெளியே சாளுக்கிய வீரர்கள் காவலுக்கு நிற்பது இந்த தைரியத்தை அவருக்கு வழங்கியிருக்கலாம். அல்லது மூடப்பட்ட சுரங்க வாயிலின் அந்தப்பக்கம் சில வீரர்களைத் தன் பாதுகாப்புக்கு அவர் நிறுத்தியிருக்கலாம்.

எப்படியிருந்தாலும் இப்போது இந்த இடத்தில் தனியாகத்தான் இருக்கிறார். எத்தனை வீரர்கள் இருந்தாலும் சமாளிக்க முடியும் என்னும்போது, தனியாக வந்திருப்பவரை எதிர்கொள்வது ஒன்றும் பிரச்னையில்லை. ஆனால், துரிதமாகச் செயல்பட வேண்டும். அது முக்கியம்; அவசியம்.
சிவகாமியிடம் கண்களாலேயே தன் தந்தையைக் காட்டி சைகை செய்தான்.

குறிப்பால் அதை உணர்ந்து சட்டென குனிந்து அவரது இடுப்பு வஸ்திரத்தின் நுனியை தன் குறுவாளால் கிழித்தாள். குத்துப்பட்ட இடத்தைச் சுற்றிலும் கட்டி குருதி வெளியேறுவதைத் தடுத்தாள்.இமைகளை கணத்துக்கும் குறைவான நேரம் மூடித் திறந்துவிட்டு இயல்பாகத் திரும்பினான் கரிகாலன். ‘‘முன்பே நீங்கள் இருப்பதை அறிந்தால் மட்டும் என்னவாகி விடப் போகிறது சாளுக்கிய அமைச்சரே..?’’
ராமபுண்ய வல்லபர் பதிலேதும் சொல்லவில்லை. குத்துப்பட்டுக் கிடந்த சோழ மன்னரின் அருகில் வந்து நின்றார். ‘‘இதைத் தவிர்த்திருக்கலாம்!’’ அவர் உதட்டில் விஷமம் வழிந்தது.

‘‘நீங்கள் இருப்பதை அறிந்ததாலேயே சிவகாமி இவர் வயிற்றில் குறுவாளைப் பாய்ச்சினாள்... பாய்ச்சும்படி சொன்னேன் என்றால் நம்பப் போகிறீர்களா..?’’‘‘நம்புவேன்!’’ அழுத்தமாகச் சொன்ன சாளுக்கிய போர் அமைச்சர் நிமிர்ந்து கரிகாலனை நேருக்கு நேர் சந்தித்தார். ‘‘தந்தையை பிணையாக வைத்து தப்பிக்க முற்படும் தனயனை... அதுவும் பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் வீராதி வீரரைப் பார்க்கும் பாக்கியம் இல்லாவிட்டால் அடியேனுக்கு எப்படிக் கிட்டும்..?!’’

‘‘குறுநில மன்னரை சிறையில் அடைத்து தங்களுக்கு இணங்க வைக்க முற்படும் ஒரு ராஜ்ஜியத்தின் போர் அமைச்சரைக் காணும் வாய்ப்பு எங்களுக்கும் இப்போதுதானே கிடைத்திருக்கிறது..!’’‘‘அது யுத்த தந்திரம்!’’‘‘எனில், இது போர்த் தந்திரம்..!’’‘‘தோல்வியில் முடியும் தந்திரம் என்று சொல் கரிகாலா..!’’ இடுப்பில் கைவைத்தபடி இடி இடியெனச் சிரித்தார் ராமபுண்ய வல்லபர்.

‘‘அதாவது நீங்கள் தனியாக இல்லை... உங்கள் பாதுகாப்புக்கு வீரர்கள் இருக்கிறார்கள் என்கிறீர்கள்..?’’
‘‘அதுவும்தான். ஆனால், அதுமட்டுமல்ல...’’ நிறுத்திய சாளுக்கிய போர் அமைச்சர், இரண்டடி எடுத்து வைத்து கரிகாலனின் அருகில் வந்தார். ‘‘தன் நாட்டின் மன்னரை எதிர்த்து செயல்படத் துணிந்த ஓர் அமைச்சனுக்கு எவ்வளவு எச்சரிக்கை தேவையோ அவ்வளவு ஜாக்கிரதை உணர்வு என்னிடம் இருக்கிறது!’’

முடிச்சிட்ட கரிகாலனின் புருவங்கள் விலகி இயல்புக்கு வந்தன. தன் மீது அதீத நம்பிக்கை  கொண்ட ஒரு வீரனை வீழ்த்துவது சுலபம். இது போர் தந்திரத்தின் பாலபாடம். இதற்காகவே எதிராளியை அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்து ஒருவிதமான மயக்கத்தில் ஆழ்த்தும் பயிற்சி போர் வீரர்களுக்கு அளிக்கப்படுவதுண்டு. அப்படிப்பட்ட பயிற்சியையே பல்லவ வீரர்களுக்கு அளிக்கும் தகுதி படைத்த கரிகாலனுக்கு இந்த வாய்ப்பு போதாதா..?! கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். அந்தப் பிடி இறுக அவரை மேலும் அந்த அதீத மயக்கத்துக்குள் ஆழ்த்தும் வகையில் தன் உரையாடலைத் தொடர்ந்தான்.

‘‘இதற்காகவே தங்களைப் பாராட்ட வேண்டும்...’’‘‘உன்னைப் போலவே சாளுக்கிய மன்னரும் உண்மை அறிந்த பிறகு என்னை மெச்சுவார்!’’
‘‘அதில் சந்தேகமென்ன... வேண்டுமானால் தங்கள் ராஜ விசுவாசத்தை என் பங்குக்கு நானும் எடுத்துச் சொல்கிறேன்..!’’
‘‘எதிராளியின் சிபாரிசு அடியேனுக்கு தேவையில்லை! சொந்தக் காலில் நிற்பவன் நான்! உன்னைப்போல் எதிரி நாட்டு மன்னர் அளிக்கும் உயிர்ப் பிச்சையில் தப்பிப் பிழைப்பவன் அல்ல!’’ 

கரிகாலன் தன் கால் கட்டை விரல்களை அழுத்தி ஊன்றினான். தான் எய்த அம்பை தன் பக்கமே திருப்புகிறார். அவரைப் புகழ்ந்து மயக்கத்தில் ஆழ்த்த வேண்டும் என்று நினைத்தோம். இதற்கு மாறாக நம்மை ஆத்திரப்பட வைத்து தன் காரியத்தைச் சாதிக்க ராமபுண்ய வல்லபர் முயற்சிக்கிறார். 
இடம் கொடுக்கக் கூடாது. நூல் முனை நுழைய வழி கிடைத்தாலும் அதை அகலப்படுத்தி ராஜபாட்டையாக்கி விடுவார். இந்த வித்தையை அறிந்திருப்பதால்தானே சாளுக்கிய போர் அமைச்சராக பதவி வகிக்கிறார்..?எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றான்.

அவன் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த ராமபுண்ய வல்லபர் பொறுமை இழந்தார். ‘‘சரி... என்ன முடிவு எடுத்திருக்கிறாய்..?’’
‘‘எது குறித்து..?’’‘‘எங்களுடன் இணைவது குறித்து! ஒப்புக்கொண்டால் உன் தந்தையின் உயிரைக் காப்பாற்றலாம். பல்லவ சிம்மாசனத்திலும் அமரலாம்!’’
‘‘இல்லையெனில்..?’’‘‘தன் மருமகள் குத்தியதால் மரணமடைந்தார் என்ற கீர்த்தியுடன் உன் தந்தை அழியாப் புகழ் பெறுவார்!’’ அலட்சியத்துடன் தன் தலையைச் சிலுப்பிய ராமபுண்ய வல்லபர், அதிர்ந்துபோய் அப்படியே சிலையானார்!

காரணம், அவர் கழுத்தைத் தடவிய சிவகாமியின் குறுவாள்! 
கரிகாலனையே பார்த்துக் கொண்டிருந்ததால் தனக்குப் 
பின்னால் அவள் வந்து நின்றதை அவர் அறியவில்லை!

‘‘மாமனாரை குத்தத் தெரிந்தவளுக்கு உங்கள் தொண்டை நரம்பை அறுக்க கண நேரம் போதும்! அசையாமல் நில்லுங்கள்...’’ எச்சரித்துவிட்டு கரிகாலனை ஏறிட்டாள்.புன்னகையை அவளுக்குப் பரிசாக வழங்கிவிட்டு துரிதமாக செயல்பட்டான். எந்தக் கயிற்றைப் பிடித்து மேலிருந்து இறங்கினானோ அதே கயிற்றால் சாளுக்கிய போர் அமைச்சரின் இரு கரங்களையும் பின்புறமாகக் கட்டினான். அவரது தலைப்பாகையை அவிழ்த்து அதை அவர் வாயில் திணித்தான். அப்படியே அவரைத் தூக்கி தன் தந்தை முதலில் அமர்ந்திருந்த இடத்தில் அமர வைத்தான்!

‘‘தொலைவிலிருந்து யார் பார்த்தாலும் சோழ மன்னர்தான் இங்கு அமர்ந்திருக்கிறார் என்று நினைப்பார்கள். தந்தை ஸ்தானத்தில் இருந்து எனக்கு நீங்கள் புரியும் இந்த உதவிக்கு தக்க சமயத்தில் கைமாறு செய்வேன்!’’அவர் கன்னத்தைத் தட்டிவிட்டு தன் தந்தையை அடைந்த 
கரிகாலன் அவரை எச்சரிக்கையுடன் தன் இரு கரங்களிலும் ஏந்தினான். ‘‘சிவகாமி... ராமபுண்ய வல்லபர் அமர்ந்திருக்கும் இடத்துக்குப் பின்னால் இருக்கும் சுவர் பக்கமாகச் செல். ஈசான்ய மூலையில் கீழிருந்து மேலாக எட்டாவது பாறையை இரண்டு முறை தட்டு!’’
அவன் சொன்னபடியே சிவகாமி தட்டினாள்.

பாறை லேசாக அசைந்தது. மறுகணம் ஓராள் குனிந்து நுழையும் அளவுக்கு ஒரு வாயில் அந்த இடத்தில் தோன்றியது.கண்கள் அகல சாளுக்கிய போர் அமைச்சர் இதைப் பார்த்தார்.‘‘சாதவாகனர்களின் சிற்ப சாஸ்திரத்தில் பல்லவர்கள் நுழைத்த புதிய பாணி இது! சாளுக்கியர்கள் அறியாதது! உங்கள் மன்னரோ நீங்களோ உதவவில்லை என்றாலும் எங்களால் தப்பித்திருக்க முடியும்! இவ்வழி அறிந்தும் என் தந்தை பயன்படுத்தாததற்குக் காரணம், நாங்கள் இருவரும் வந்து சேரவேண்டும் என்றுதான்! வருகிறோம் அமைச்சரே! போர்க்களத்தில் சந்திப்போம்..!’’ 

முதலில் சிவகாமி நுழைந்தாள். அவளிடம் தன் தந்தையை பக்குவமாக ஒப்படைத்துவிட்டு பிறகு கரிகாலன் நுழைந்தான். இமை மூடித் திறப்பதற்குள் பழையபடி சுரங்கம் மூடிக் கொண்டது.காலம் தாழ்த்தாமல் இருவரும் சுரங்கப் பாதையில் சென்றார்கள். சின்ன அசைவும் தன் தந்தையின் உடலைப் பாதிக்கும் என்பதால் எச்சரிக்கையுடன் கரிகாலன் அவரைச் சுமந்தான்.

கால் நாழிகைக்கும் குறைவான நேரத்துக்குப் பிறகு இருவரும் புரவிக் கொட்டடியை அடைந்தார்கள். இவர்களுக்காகவே அங்கு தேர் ஒன்று காத்திருந்தது! ‘‘காபாலிகனின் வேலை!’’ அவளைப் பார்த்துக் கண்சிமிட்டிவிட்டு தன் தந்தையுடன் தேரில் ஏறினான்.
சாரதியின் இருக்கையில் அமர்ந்து சிவகாமி தேரைச் செலுத்தத் தொடங்கினாள்.வாட்களை உயர்த்தியபடி சாளுக்கிய வீரர்கள் தங்கள் 
புரவிகளில் அவர்களைத் துரத்தத் தொடங்கினார்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி சதீஸ்குமார் இணைப்புக்கு.

Link to comment
Share on other sites

தொடர்ந்து வாசிப்பதற்கு நான் தான் நன்றி தெரிவிக்க வேண்டும் சகோதரி...

ரத்த மகுடம்-46

‘‘ஐந்து புரவிகள் நம்மைத் துரத்துகின்றன...’’ தந்தையை மடியில் கிடத்தியபடி கரிகாலன் முணுமுணுத்தான்.‘‘ஆம்... 40 குளம்பொலிகள் சீராகக் கேட்கின்றன...’’ தேரைச் செலுத்தியபடியே சிவகாமி பதிலளித்தாள்.இருவரும் திரும்பிப் பார்க்கவேயில்லை. அவரவர் கடமைகளில் அவரவர் கண்ணும் கருத்துமாக இருந்தனர். 
20.jpg
தந்தையின் வயிற்றிலிருந்து குருதி பெருகுவதைத் தடுக்க தன்னால் இயன்றதை எல்லாம் கரிகாலன் செய்தான். வழக்கத்தை விட சற்று அகலமாகவே தேர் இருந்தது. காபாலிகன் கெட்டிக்காரர்தான். தன் தந்தையின் உடல் வாகுக்கு ஏற்றாற்போலவே தேரை ஏற்பாடு செய்திருக்கிறார். பருமனான இருவர் தாராளமாக அமரலாம். மரக் கட்டைகளின் மேல் வேண்டிய அளவுக்கு இலவம் பஞ்சு பதிக்கப்பட்டிருந்ததால் இருக்கை சவுகரியமாகவே இருந்தது. 

சோழ மன்னரின் சிரசை தன் மடியில் சாய்த்துக் கொண்டான். சிறுவயதில் அவர் மடியில், தான் படுத்தது நினைவுக்கு வந்தது. காலத்தின் பகடையாட்டம் அனைத்தையும் தலைகீழாக மாற்றியிருக்கிறது. என்றாலும் பரஸ்பர அன்பு மட்டும் குறையவேயில்லை. அன்று தன் கேசத்தைக் கோதி தந்தை தூங்க வைத்ததுபோலவே இன்று அவர் சிரசைத் தடவி அவரது வலியைப் போக்க முயன்றான்.
 
‘‘பல்லவ மன்னர் மீண்டும் அரியணையில் அமரவேண்டும்...’’ தந்தையின் முணுமுணுப்பு கரிகாலனின் இதயத்தைக் கீறியது. 
 

‘‘சிவகாமி... நேராக ஆதுரச் சாலைக்குச் செல்...’’ காற்றைக் கிழித்தபடி குரல் கொடுத்தான்.‘‘அது சாத்தியமில்லை...’’ சிவகாமி தன் பங்குக்கு காற்றைக் கிழித்தாள்.‘‘சாத்தியமாக வேண்டும்...’’ தந்தையைக் கீழே விழாமல் தன் கரங்களால் அணைத்தபடி முன்னோக்கி நகர்ந்தான். ‘‘தந்தையின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது...’’

‘‘ஆனால், அணையாது..!’’ புரவிகளைச் சொடுக்கியபடியே பதிலளித்தாள். ‘‘குத்தியவளுக்கு குறுவாளின் ஆழம் தெரியும்! சோழ மன்னர் ஆரோக்கியமாக இருப்பதால் இன்னும் ஐந்து நாழிகைகள் சுயநினைவுடன் இருப்பார்! அதற்குள் நாம் காஞ்சியை விட்டு அகன்று பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுவிடலாம்...’’
 

‘‘பிடிவாதம் பிடிக்காதே! துரத்தி வருபவர்களை என்னால் சமாளிக்க முடியும். தேவையான ஆயுதங்களை தேரில் காபாலிகர் வைத்திருக்கிறார்!’’
 

‘‘தெரியும். ஆனாலும் வேண்டாம்...’’ சாரதியின் இருக்கையில் அமர்ந்திருந்த சிவகாமி சற்றே பின்னோக்கி நகர்ந்தாள். ‘‘நம்மைப் பிடிக்க வீரர்களை அனுப்பியிருக்கும் ராமபுண்ய வல்லபர் இந்நேரம் ஆதுரச் சாலையைச் சுற்றி வளைத்து நமக்காகக் காத்திருப்பார். தலைமை மருத்துவரின் மார்பை குறுவாள் ஒன்று குறி பார்த்துக் கொண்டிருக்கும். 

சோழ மன்னரின் உயிரைப் பணயமாக வைத்து உங்களிடம் மீண்டும் பேரம் பேசத் தொடங்குவார்...’’‘‘இதையெல்லாம் நானும் ஊகித்தேன் சிவகாமி! ஆனால், காஞ்சியைத் தாண்டிவிட்டால் ரண சிகிச்சையை மேற்கொள்ளும் அளவுக்கு ஆதுரச் சாலைகள் ஏதும் வசதிகளுடன் இல்லையே...’’‘‘இருக்கிறது..!’’ அழுத்திச் சொன்னாள்.

‘‘என்ன சொல்கிறாய்? இதுவரை நான் கேள்விப்பட்டதில்லையே...’’‘‘நீங்கள் மட்டுமல்ல... பல்லவ நாட்டின் தலைமை மருத்துவருக்கே அப்படியொரு ஆதுரச்சாலை சகல வசதிகளுடன் காஞ்சிக்கு வெளியில் இயங்கி வருவது தெரியாது!’’கரிகாலனின் புருவங்கள் முடிச்சிட்டன. ‘‘உனக்கு மட்டும் அது இருப்பது எப்படித் தெரியும்..? சமீபத்தில்தானே பல்லவ நாட்டுக்கு நீயே வந்தாய்..?’’
 

‘‘எதிர்பார்த்தேன் இந்தக் கேள்விகளை!’’ புரவிகளைச் சொடுக்கினாள். ‘‘உங்கள் சந்தேகப் புத்தி அப்படியே இருக்கட்டும்! இப்போதைக்கு என்னை நம்புங்கள்! உங்களை விட சோழ மன்னரின் உயிர் எனக்கு முக்கியம்! வரவிருக்கும் சாளுக்கியர்களுக்கு எதிரானபோரில் அவரே பல்லவப் படைகளைத் தலைமையேற்று நடத்தப் போகிறார். 
 
அப்படிப்பட்டவரை இழக்க எனக்கு சம்மதமில்லை. தவிர அவர் வயிற்றில் குறுவாளைப் பாய்ச்சியவள் நான்தான்! அவர் பிழைக்காவிட்டால் அந்தப் பழி ஆயுள் முழுக்க என்னைத் தொடரும். நீங்களும் என்னை கண்டம்துண்டமாக வெட்டி விடுவீர்கள்! எதற்கு வம்பு! கண்டிப்பாக அவரைப் பிழைக்க வைப்பேன். பேசாமல் சற்று நேரம் அமைதியாக இருங்கள்..!’’


அதன் பிறகு சிவகாமி எதுவும் பேசவில்லை. கரிகாலனும் பேச்சு ஏதும் கொடுக்கவில்லை.தேரில் ஏறும்போதே புரவிகளைப் பார்த்து ஓரளவு கணித்துவிட்டான். இரு குதிரைகளும் வைகாசி மாதத்தில், அதுவும் முதல் ஜாமத்தில் ஜனித்தவை. புஷ்டியான தேகமும் வலுவான எட்டுக் கால்களும் அவற்றின் ஆரோக்கியத்தை தெளிவாகவே பறைசாற்றின. போதும் போதாததற்கு தங்களைக் கண்டதுமே ஆனந்தத்தில் கூத்தாடின. புரவி லட்சணப்படி இவை எல்லாமே நல்ல அறிகுறிகள்.

‘‘இரண்டுமே பிரம்ம சாதிப் புரவிகள்..!’’ சிவகாமி திடீரென்று இப்படிச் சொன்னதும் கரிகாலன் தனக்குள் புன்னகைத்தான். குறிப்பால் அவள் எதை உணர்த்த வருகிறாள் என்று புரிந்தது.தண்ணீரைக் கண்டால் பிரம்ம சாதிப் புரவிகள் சந்தோஷமடையும். கண் வரையில் மூழ்கி தண்ணீர் குடிக்கும். நீரில் இறங்க ஒருபோதும் தயங்காது. புலன்கள் அனைத்தும் விழிப்புடன் இருக்கும். தன் எஜமானர்களைக் காப்பாற்ற எல்லா சாகசங்களிலும் இறங்கும். எதிரிகளை நெருங்கவே விடாது!

அப்படியானால் எந்தக் கணத்திலும் நீருக்குள் தேர் இறங்கும்! இதைத்தான் சிவகாமி உணர்த்த முற்படுகிறாள். காஞ்சிக்கு அருகாமையில் நீர்நிலை என்றால் அது பாலாறுதான்.முதல்முறையாக திரைச்சீலையை விலக்கி வெளியே பார்த்தான். நகரைத் தாண்டி புறவழிச் சாலையில் தேர் பறந்து கொண்டிருந்தது. கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை பொட்டல் வெளி. பருவமழை பொய்த்திருந்ததால் நிலங்கள் அனைத்தும் வெயிலில் தகித்துக் கொண்டிருந்தன.
 

பாலாறும் இப்படி வறண்டுதான் காணப்படும். அப்படியிருக்க எதற்காக ‘பிரம்ம சாதிப் புரவிகள்’ என அழுத்தம் கொடுத்தாள்..?
 

யோசித்தபடியே தந்தையைப் பார்த்தான். இமைகளை மூடுவதும் திறப்பதுமாக இருந்தார். குருதிப் பெருக்கு தடைப்பட்டிருந்தது. முதல்கட்ட சிகிச்சைக்கான மூலிகைகளை இப்போது குறுவாள் பதிந்த இடத்தில் வைத்துக் கட்ட வேண்டும்..? மூலிகைகளுக்கு எங்கு போவது..?

குளம்பொலிகள் முன்பை விட அதிக ஒலியுடன் செவிப்பறையைக் கிழித்தன. சாளுக்கிய வீரர்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். காயத்துடன் துடிக்கும் தன் தந்தையின் உடல் குலுங்கக் கூடாது என்பதற்காக சிவகாமி தேரின் வேகத்தைக் கூட்டவில்லை. இதை சாளுக்கிய வீரர்கள் தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ள முற்படுகிறார்கள். இனி செயலில் இறங்க வேண்டியதுதான்...

செவிகளைக் கூர்மையாக்கி குளம்பொலிகளின் ஓசையை உள்வாங்கினான். எத்தனை காத தூரத்தில் அவை பாய்ந்து வருகின்றன எனக் கணக்கிட்டான். மனதுக்குள் திட்டம் ஒன்று உருவாகியது.மடியில் இருந்த தந்தையின் சிரசை எச்சரிக்கையுடன் உயர்த்தி எழுந்தான். உயர்த்திய அவர் தலையை பக்குவமாக தேரின் இருக்கையில் வைத்தான். தேரைச் சுற்றி இருந்த திரைச்சீலையை கைகளால் பிடித்து இழுத்தான். கையோடு வந்தது. அதை வைத்து இருக்கையிலிருந்து தன் தந்தை விழாதபடி கட்டினான்.
 

கடிவாளத்தை ஒருமுறை சிவகாமி பிடித்து இழுத்தாள். கணத்துக்கும் குறைவான நேரம்தான். உடனே அதைத் தளர்த்தினாள்.
 

இந்தக் குறிப்பை புரவிகள் மட்டுமல்ல... அமர்ந்திருந்த கரிகாலனும் புரிந்து கொண்டான். இருக்கைக்குப் பின்னால் எம்பி கைகளை விட்டான். தோல் பை ஒன்று தட்டுப்பட்டது. எடுத்தான். அதனுள் மூன்று குறுவாள்கள் இருந்தன. மூன்றையும் எடுத்து தன் இடுப்பில் செருகிக்கொண்டு இடது கையால் தேரின் மேற்புறத்தைப் பிடித்தபடி வெளியே தலையை நீட்டினான்.
 

எதற்காக தங்கள் தேரைச் செலுத்திக் கொண்டிருப்பது பிரம்ம சாதிப் புரவிகள் என சிவகாமி சொன்னாள் என்பது புரிந்தது!
 

பின்தொடர்ந்து வந்த குதிரைகள் அனைத்தும் சத்திரிய சாதிப் புரவிகள். மூக்கு வரையில் விட்டு தண்ணீரைப் பருகும். நீரினுள் துணிந்து இறங்கும். ஆனால், மூர்க்கமானவை. எல்லாவற்றுக்கும் கோபப்படும் இயல்பு கொண்டவை. இந்தக் குணத்தை பயன்படுத்திக் கொள் என கோடிட்டுக் காட்டியிருக்கிறாள்!

எப்படி அவளால் இது முடிந்தது..? திரும்பிப் பார்த்து புரவிகளின் சாதியை அறியாமலேயே வெறும் குளம்பொலிகளை வைத்து கணித்திருக்கிறாள் என்றால்... நிச்சயம் கைதேர்ந்த அசுவ சாஸ்திரிதான்!மனதுக்குள் சிவகாமியைப் புகழ்ந்தபடியே தன் இடுப்பிலிருந்து ஒரு குறுவாளை வலது கையில் எடுத்தான்.தேரின் அகலத்துக்கு ஏற்ப ஐந்து குதிரைகளும் வலப்புறம் இரண்டும் இடப்புறம் மூன்றுமாகப் பிரிந்திருந்தன. 

எடுத்த குறுவாளை இடப்பக்கம் வந்த சாளுக்கிய வீரனின் மார்பைக் குறிபார்த்து எறிந்தான். தப்பாமல் மார்பைத் தைத்தது! அந்த வீரன் சுருண்டு நிலத்தில் விழுந்தான். இதனால் பின்னால் வந்த மற்ற இரு குதிரைகளும் சற்றே தடுமாறி வேகத்தைக் குறைத்தன.இவை சுதாரித்து நிலைபெறுவதற்குள் மற்றொரு குறுவாளை எடுத்து வலப்பக்கம் முன்னால் வந்த சாளுக்கிய வீரனின் மார்பை நோக்கி எறிந்தான்!

இருபக்கமும் முன்னால் வந்த இரு வீரர்களும் நிலைகுலைந்து நிலத்தில் சாய்ந்ததும் நீட்டிய தன் தலையை தேருக்குள் இழுத்துக் கொண்ட கரிகாலன் தன் தந்தையைப் பார்த்தான். வலியால் துடித்துக் கொண்டிருந்தார். இருக்கையுடன் அவரைப் பிணைத்திருந்த திரைச்சீலையின் முடிச்சை இன்னொருமுறை பரிசோதித்தான்.‘‘ஆபத்து...’’ சிவகாமி குரல் கொடுத்தாள்.

என்னவென்று பார்க்கும் நிலை கரிகாலனுக்கு ஏற்படவில்லை. பக்கவாட்டில் இருந்து ஏராளமான புரவிகள் தங்களை நோக்கி வருவது தெரிந்தது.
பாதங்களை பலமாக ஊன்றியபடி குனிந்து இருக்கைக்கு அடியிலிருந்து இரு வாட்களை கரிகாலன் எடுத்து ஒன்றை முன்பக்கம் நீட்டினான்.காத்திருந்தது போல் தன் கைகளை உயர்த்தி சிவகாமி அதைப் பெற்றுக் கொண்டாள்.

பாய்ந்து வந்த புரவிகள் மெல்ல தேரைச் சுற்றி வளைத்தன. தேரைச் செலுத்தியபடியே தன் வாளை சிவகாமி வலப்பக்கமாக சுழற்றத் தொடங்கினாள். நீள் வட்டமாக அது சுழன்றதால் சாளுக்கிய வீரர்களால் தேரை நெருங்க முடியவில்லை. இடப்பக்கம் தேருக்கு வெளியே தன் தலையை நீட்டியபடி அவளைப் போலவே கரிகாலன் தன் வாளைச் சுழற்றினான்.சுழற்றப்பட்ட இரு வாள்களும் இருபுறமும் தேருக்கு கேடயமாகின.அதையும் மீறி அந்த வளையத்துக்குள் புகுந்த வீரனின் தலை வெட்டுப்பட்டு உருண்டது!

சட்டென்று தன் வாளை வானை நோக்கி உயர்த்தி மூன்று முறை சிவகாமி சுற்றினாள். அந்த சமிக்ஞையை கணத்தில் கரிகாலன் உள்வாங்கினான். முன்னோக்கிப் பாய்ந்து செல்லும் தேர், திடீரென வட்டமடிக்கப் போகிறது!தன்னிடம் கடைசியாக இருந்த குறுவாளை எடுத்து நெருங்கிக் கொண்டிருந்த வீரன் மீது எறிந்துவிட்டு தன் தந்தையை இறுகப் பற்றினான்.

அதேநேரம் சிவகாமியும் புரவிகளைப் பிணைத்திருந்த கடிவாளத்தை இழுத்தாள்.இரு குதிரைகளும் தங்கள் முன்னங்கால்களை உயர்த்தின. தேர் முழு வட்டம் அடித்தது...

Link to comment
Share on other sites

சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் தன் புரவியை வேகமாகச் செலுத்தியபடி காஞ்சி அரண்மனையை அடைந்தபோது பொழுது சாய்ந்திருந்தது.அவரைக் கண்டதும் அரண்மனை வாயிலில் காவல்புரிந்து கொண்டிருந்த வீரர்கள், ‘‘வாழ்க! வாழ்க! சக்கரவர்த்திப் பெருமான் வாழ்க!’’ என கோஷமிட்டு வணங்கி வழிவிட்டார்கள். 
26.jpg
காவலர்களுடைய வாழ்த்து ஒலியுடன் அங்கே வரிசை வரிசையாக நின்ற குதிரைகளின் கனைப்பு ஒலியும் சேர்ந்தது. அரண்மனை முன் வாசலைத் தாண்டி அவர் உள்ளே நுழைந்ததும் அங்கேயிருந்த விசாலமான நிலா முற்றத்தில் வீரர்கள் பலர் அணி வகுத்து நிற்பது தெரிந்தது.
சக்கரவர்த்தியைக் கண்டதும் அந்த வீரர்களும் ஜயகோஷம் செய்தார்கள். எல்லோருக்கும் முன்னால் நின்ற ஒருவர் மட்டும் தனியே பிரிந்து முன்னால் வந்து பணிவுடன் நின்றார்.

‘‘சேனாதிபதி! தூதர்களுக்கு எல்லா விஷயமும் சொல்லியாகி விட்டதா! புறப்படுவதற்கு ஆயத்தமாயிருக்கிறார்களா?’’ நிதானமாகக் கேட்டார் விக்கிரமாதித்தர். ‘‘ஆம், பிரபு! எல்லோருக்கும் சொல்லியாகிவிட்டது. அவரவர்களும் இன்னின்ன திக்குக்குச் செல்ல வேண்டுமென்று தெரிவித்து விட்டேன். எல்லோரும் கிளம்ப ஆயத்தமாகித் தங்கள் கட்டளைக்காகக் காத்திருக்கிறார்கள்!’’ 

எதுவும் சொல்லாமல் சுற்றிலும் தன் பார்வையைச் சுழற்றிய சாளுக்கிய மன்னரின் கண்களில் அந்த இளைஞன் தட்டுப்பட்டான். கங்கநாட்டு இளவரசன்!முகத்தில் மலர்ச்சியுடன் அவனை அருகில் அழைத்தார்.பணிவுடன் அவர் முன்னால் வந்து வணங்கினான். ‘‘சக்கர
வர்த்திக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!’’அன்புடன் அவனை ஏறிட்டார். குழந்தையாகப் பார்த்தவன்... எப்படி வளர்ந்து நிற்கிறான்! ‘‘குழந்தாய்! எப்போது வந்தாய்..? வீட்டில் அனைவரும் நலமா..?’’

‘குழந்தையா’ என்ற சொல் கங்க இளவரசனை சங்கடப்படுத்தியது! அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ‘‘இப்போதுதான் வந்தேன் சக்கரவர்த்தி...’’ என்றான்.‘‘நல்லது! உன் தாயார் அந்தப்புரத்தில்தான் இருக்கிறார். அவருடன் அளவளாவியபடியே போஜனத்தை முடித்துவிட்டு மேல் மாடத்துக்கு வா. தூதர்களை அனுப்பிவிட்டு நானும் அங்கு வந்து சேர்கிறேன்!’’‘‘உத்தரவு சக்கரவர்த்தி...’’ மீண்டும் அவரை வணங்கிவிட்டு கங்க இளவரசன் அரண்மனைக்குள் நுழைந்தான். 

தாயார் என சாளுக்கிய மன்னர் குறிப்பிட்டது அவனது சொந்த தாயாரைத்தான். சாளுக்கியர்களின் நட்புச் சக்தியாக கங்கநாடு இருப்பதால் இரு குடும்பத்தாரும் உறவு முறையுடன்தான் பழகி வந்தார்கள். அந்த வகையில் காஞ்சி மாநகரத்தையும் இங்கிருக்கும் கோயில்களையும் பார்க்க வேண்டும் என்ற தன் ஆவலைப் பூர்த்தி செய்யும் விதமாக அவன் தாயார் பத்து நாட்களுக்கு முன் காஞ்சிக்கு வந்திருந்தார்.

கங்க இளவரசன் அகன்றதும் விக்கிரமாதித்தர் தன் சேனாதிபதியைப் பார்த்தார்.‘‘மன்னா...’’ மரியாதையுடன் சற்றே அருகில் வந்து அவர் நின்றார்.‘‘தூதுவர்களிடம் சொல்லி அனுப்ப வேண்டிய செய்தி இது; தொண்டை மண்டலத்திலும் சோழ மண்டலத்திலும் உள்ள 
ஒவ்வொரு கோட்டத்திலும் ஆயிரம் வீரர் அடங்கிய படைகளைத் திரட்டி ஆயத்தமாக வைத்திருக்க வேண்டியது. மறுபடியும் செய்தி அனுப்பியவுடனே படை புறப்படச் சித்தமாயிருக்க வேண்டும்! புரிந்ததா..?’’ ‘‘புரிந்தது பிரபு!’’
 

‘‘காஞ்சிக் கோட்டையைப் பாதுகாப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் செய்தாகிவிட்டதல்லவா?’’
 

‘‘துறவிகளைத் தவிர வேறு யாரையும் விசாரிக்காமல் கோட்டைக்குள் விடக்கூடாதென்று கட்டளையிட்டிருக்கிறேன். வெளியே போகிறவர்களையும் கவனிக்கச்சொல்லியிருக்கிறேன். நகருக்குள்ளேயும் யார் பேரிலாவது சந்தேகத்துக்கு இடமிருந்தால் சிறைப்படுத்திக் காவலில் வைக்கச் சொல்லியிருக்கிறேன்!’’ ‘‘கோட்டைச் சுவர்கள்..?’’

‘‘பழுது பார்க்கும் வேலைகள் மும்முரமாக நடக்கின்றன மன்னா!’’ 
‘‘கடிகையில்..?’’‘‘காவலைப் பலப்படுத்த வேண்டுமா மன்னா..?’’ சேனாதிபதியின் குரலில் ஆவல்.விக்கிரமாதித்தர் புன்னகைத்தார். ‘‘போர் அமைச்சரை 
எதிரொலிக்கிறீர்கள்! கடிகையில் மட்டும் காவல் தேவையில்லை!’’

‘‘புரிந்தது மன்னா!’’ தலையசைத்த சேனாதிபதி ஒவ்வொரு தூதுவரையும் தனித்தனியாக அழைத்து எந்தெந்த கோட்டத்துக்கு யார் யார் செல்கிறார்கள் என சக்கரவர்த்தியிடம் தெரியப்படுத்தினார். ஒவ்வொரு தூதுவரும் தனித்தனியே விக்கிரமாதித்தரை வணங்கி விடைபெற்றுக்கொண்டு தத்தம் குதிரை மீதேறி விரைந்து சென்றார்கள்.சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் கட்டளைக்கு அடிபணிந்து அரண்மனை நிலா முற்றத்தைக் கடந்து சென்ற கங்க இளவரசன், உள்வாசலை நெருங்கியதும் குதிரை மீதிருந்து இறங்கினான். 
 

சித்தமாகக் காத்திருந்த பணியாட்கள் புரவியைப் பிடித்து கொட்டடிக்குக் கொண்டு சென்றார்கள். பிறகு, கங்க இளவரசன் விசாலமான அந்த அழகிய அரண்மனைக்குள் பிரவேசித்து, தீபம் ஏந்துவோர் தம்மைப் பின் தொடர்ந்து வருவதற்குத் திணறும்படியாக விரைவாக நடந்து சென்றான். 
 

புதிதாக அரண்மனைக்குள் பிரவேசிக்கிறவர்கள் அங்கே குறுக்கும்நெடுக்குமாகச் சென்ற நடைபாதைகளில் வழி கண்டுபிடித்துச் செல்வது அசாத்தியமாயிருக்கும். கங்க இளவரசனும் புதிதாகத்தான் காஞ்சிக்கு வந்திருக்கிறான். என்றாலும் பழக்கப்பட்டவன் போல் வளைந்துவளைந்து சென்று அரண்மனை அந்தப்புரத்தை அடைந்தான்.

அங்கே சிற்ப வேலைகளினால் சிறப்படைந்த வாசலை அணுகியதும், ‘‘குழந்தாய்! வந்தாயா?’’ என்று உள்ளே இருந்து ஒரு குரல் கேட்டது.அழைத்தவர் அவனது சொந்தத் தாயார் அல்ல! சாளுக்கிய மன்னரின் பட்டத்தரசி! அவருடைய கம்பீரமான தோற்றமும் முதிர்ந்த சவுந்தர்ய வதனமும், ‘திரிபுவன சக்கரவர்த்தினி’ என்று சாளுக்கிய சாம்ராஜ்யத்தின் மக்கள் அவரைக் கொண்டாடுவது முற்றும் பொருந்தும் என்று தெரியப்படுத்தின. ‘‘அம்மா!’’ பாசத்துடன் அழைத்தபடி அருகில் சென்று அவர் கால்களைத் தொட்டு வணங்கினான்.

 

‘‘நன்றாக இருக்கிறாயா..?’’

‘‘சாளுக்கிய சக்கரவர்த்தியின் ஆட்சியில் நலத்துக்கு என்ன குறை...’’ என்றபடி தன் பார்வையைச் சுழலவிட்டான்.
‘‘உன் அம்மா கோயிலுக்குச் சென்றிருக்கிறார்!’’ பட்டத்தரசி புன்னகைத்தார்.
சங்கடத்துடன் தலைகுனிந்த கங்க இளவரசன், ‘‘இளவரசர் 
எங்கிருக்கிறார்..?’’ என்று கேட்டான்.

‘‘விநயாதித்தனைக் கேட்கிறாயா..?’’
‘‘ஆம்...’’ 
பட்டத்தரசி பெருமூச்சு விட்டார். ‘‘என் மைந்தனைத்தான் 
நானும் தேடிக்கொண்டிருக்கிறேன்!’’
‘‘என்ன சொல்கிறீர்கள் தாயே!’’ கங்க இளவரசன் அதிர்ந்தான். ‘‘உங்களுடன்தானே இளவரசரும் காஞ்சிக்கு வந்தார்..?’’
‘‘ஆம்! வந்தான். அதன் பிறகு எங்கு சென்றான் என்று தெரியவில்லை...’’

‘‘சக்கரவர்த்தியிடம் விசாரிக்கலாமே..?’’
‘‘அனுப்பியதே அவர்தானே குழந்தாய்!’’ பட்டத்தரசியின் 
கண்கள் கலங்கின. ‘‘வந்துவிடுவான் என ஒவ்வொரு நாளும் 
காத்திருக்கிறேன்...’’ துயரத்தை மீறிப் புன்னகைத்தார்.
கங்க இளவரசன் எதுவும் சொல்லவில்லை. இருவரும் உள்ளே சென்றார்கள்.

தனது தலை அணியையும் ஆபரணங்களையும் எடுத்து வைத்துவிட்டுக் கால் கை சுத்தம் செய்துகொண்டு கங்க இளவரசன் வந்தான். இருவரும் அந்தப்புர பூஜா மண்டபத்துக்குள் நுழைந்தார்கள். அங்கே, மத்தியில் நடராஜ மூர்த்தியின் திருவுருவம் திவ்ய அலங்காரங்
களுடன் ஜொலித்தது. பின்புறச் சுவர்களில் சிவபெருமானுடைய பல வடிவங்களும், பாலகோபாலனுடைய லீலைகளும் வர்ணங்களில் அழகாகச் சித்தரிக்கப்பட்டிருந்தன.

பூஜையெல்லாம் முன்னமே முடிந்தபடியால், இருவரும் அந்தத் திருவுருவத்தை வழிபட்டுவிட்டு வெளியே வந்து போஜன மண்டபத்தை அடைந்தார்கள். 
உணவருந்த அமர்ந்ததுமே பட்டத்தரசி வாயைத் திறந்தார். ‘‘குழந்தாய்! காஞ்சி மாநகரமே அல்லோலகல்லோலப்படுகிறது. யாரோ கரிகாலனாம்... சிவகாமியாம்... ரகசியமாக நகரத்துக்குள் நுழைந்துவிட்டு வெளியேறிவிட்டார்களாம். உனக்கு ஏதாவது தெரியுமா..?’’

‘‘கேள்விப்பட்டேன் தாயே! ஆனால், விவரம் தெரியவில்லை. சக்கரவர்த்தி மேல்மாடத்துக்கு வரச் சொன்னார். அவரைக் கேட்டால் முழுவிவரம் கிடைக்கலாம்!’’ உணவு பரிமாறிக் கொண்டிருந்த பணியாட்களைப் பார்த்து சாளுக்கியப் பட்டத்தரசியிடம் ஜாடை காட்டிவிட்டு மவுனமாக உணவருந்தினான்.புரிந்துகொண்டதற்கு அறிகுறியாகச் சக்கரவர்த்தினி பெருமூச்சு விட்டார். 

காஞ்சி அரண்மனையில் பகல் போஜனம் ராஜரீக சம்பிரதாயங்களுடன் ஆடம்பரமாக நடக்கும். அதாவது பல்லவர்கள் இருந்தபோது எப்படி நடக்குமோ அப்படி. பெரிய சாம்ராஜ்ய உத்தியோகஸ்தர்கள், அந்நிய நாடுகளிலிருந்து வந்த பிரமுகர்கள், சிவனடியார்கள், வைஷ்ணவப் பெரியார்கள், பிரசித்தி பெற்ற கலைஞர்கள், தமிழ்க் கவிஞர்கள், வடமொழிப் பண்டிதர்கள் முதலியோரைச் சாளுக்கிய மன்னரும் விருந்தாளிகளாக அழைத்து கவுரவப்படுத்தினார். 

எனவே பகல் போஜன நேரத்தில் அரண்மனைவாசிகள் ஒருவரோடொருவர் அளவளாவுதல் இயலாத காரியம். தவிர பகல் நேரமெல்லாம் சக்கரவர்த்தியும் ராஜரீககாரியங்களில் ஈடுபட்டிருப்பார். எனவே அவருடன் சற்றே பேச வாய்ப்பு கிடைப்பது இரவு போஜனத்தின்போதுதான்.அப்பொழுதெல்லாம் தன் மகன் விநயாதித்தன் குறித்து பட்டத்தரசி பேச்செடுப்பார். 

அதை நாசுக்காக சாளுக்கிய சக்கரவர்த்தி தட்டிக் கழிப்பார். இப்படியே நாட்கள் சென்றுகொண்டிருந்த நிலையில்தான் மகனுக்குச் சமமான கங்க இளவரசன் வந்து சேர்ந்திருக்கிறான். இவனிடமாவது விவரம் பெறலாம் என்றால் அதற்கும் வழியில்லாதபடி எதுவும் தெரியாதவனாக இருக்கிறான். ம்... கடவுள் விட்ட வழி...இருவரும் போஜனத்தை முடித்துக்கொண்டு மேல் மாடத்துக்குச் சென்றார்கள். 

‘‘சக்கரவர்த்தி வருவதற்குச் சற்று நேரமாகும்... உங்களைக் காத்திருக்கச் சொன்னார்...’’ பக்தியுடன் அறிவித்துவிட்டு அந்த வீரன் அகன்றான்.இருவரும் அங்கிருந்த பளிக்குத் திண்ணையில் அமர்ந்தார்கள். ‘‘குழந்தாய்! சிவகாமி என்னும் பெண்ணைக் குறித்து உனக்கு ஏதேனும் தெரியுமா..? அவளைக் குறித்து இந்த அரண்மனை முழுக்க ஏதேதோ பேசுகிறார்களே..!’’   ‘‘தெரியும் அம்மா..!’’ என்றபடி கங்க இளவரசன் மர்மமாகப் புன்னகைத்தான்!

இரவு போஜனம் முடிந்து அவரவர் அவரவர் இடங்களுக்குச் சென்றதும் மெல்ல கடிகையை விட்டு நழுவி வெளியே வந்தான் அந்த பாலகன். கரிகாலனுக்கு உதவினானே... அவனேதான்! கடிகையைச் சுற்றிக் காவல் இல்லாததால் அவனை யாரும் தடுக்கவில்லை. நூலகம் செல்வதாகத் தன்னுடன் தங்கும் வித்யார்த்தியிடம் அவன் ஏற்கனவே தெரியப்படுத்திவிட்டதால் அவன் இல்லாததை ஒருவரும் பொருட்படுத்தவில்லை.

மகேந்திரவர்மர் வீதிக்கு வந்தவன் மக்களோடு மக்களாகக் கலந்தான். யாருக்கும் எந்த ஐயமும் எழாத வண்ணம் நடந்தான். வீரர்கள் நடமாட்டம் தென்படும்போது இருளடர்ந்த பகுதிக்கு நகர்ந்தான். செல்ல வேண்டிய இலக்கு அவனுக்குத் தெரியும். நரசிம்ம
வர்மர் வீதி. நேர்வழியில் அங்குச் செல்லாமல் குறுக்குவழியாக அந்த வீதிக்கு வந்தான்.

இருபக்கமும் மாட மாளிகைகள் அணிவகுத்தன. ஆங்காங்கே பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. ஒளி ஏதும் தன் முகத்தில் விழாதபடி நடந்தவன் ஐந்தாவதாக இருந்த மாளிகைக்குள் நுழைந்தான்.அவனது வருகையை எதிர்பார்த்து கதவு திறந்திருந்தது. நுழைந்தவனைத் தடுக்க அங்கு யாரும் இல்லை. மடமடவென்று படிக்கட்டில் ஏறி உப்பரிகையை அடைந்தான். ‘‘அமர்வதற்காக வரவில்லை மன்னா!’’ என்ற குரல் பாலகனை தடுத்தது.பதுங்கி குரல் வந்த அறைக்குள் எட்டிப் பார்த்தான்.

சாளுக்கிய மன்னருடன் ஸ்ரீராமபுண்ய வல்லபர் சற்றே ஆவேசமாக உரையாடிக்கொண்டிருந்தார்.அவர்களுக்குப் பின்னால் இருந்த திரைச்சீலையில் ஒரு பெண்ணின் உருவம் வரையப்பட்டிருந்தது.அந்தப் பெண், சிவகாமி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடையில்ஒரு பகுதி இல்லையா??46 க்குப் பின் இதுதானா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடையில் தொடர்பு அற்றுவிட்டதுபோல் இருக்கிறது. அதுதான் கேட்டேன்.

Link to comment
Share on other sites

ரத்த மகுடம்-48

‘‘உங்கள் கோபம் புரிகிறது...’’ நிதானமாகவே சொன்னார் சாளுக்கிய மன்னர். ‘‘முதலில் அமருங்கள்... பிறகு வந்த விஷயத்தைச் சொல்லுங்கள்...’’ 
‘‘பரவாயில்லை மன்னா...’’ சொல்லும்போதே ராமபுண்ய வல்லபருக்கு உதடு துடித்தது. ‘‘அமர்வதற்காக வரவில்லை...’’ மீண்டும் அழுத்திச் சொன்னார்.
‘‘எனில் நிற்பதற்காகத்தான் வந்திருக்கிறீர்கள்... அப்படித்தானே..?’’
33.jpg
‘‘ஆம்!’’
‘‘வேண்டுதலா..?’’ சாதாரணமாகவே கேட்டார் விக்கிரமாதித்தர்.ஆனால், கொந்தளித்துக் கொண்டிருந்த சாளுக்கிய போர் அமைச்சரின் உள்ளத்தில் இக்கேள்வியே எண்ணெயைக் கொட்டியது போல் ஆனது. ‘‘வேண்டுதல்தான் மன்னா!’’ நெஞ்சை நிமிர்த்தினார். ‘‘சாளுக்கியர்களின் வெற்றிக்கான வேண்டுதல் இது!’’‘‘இப்போது நாம் எங்கிருக்கிறோம் ஸ்ரீராமபுண்ய வல்லபரே..?’’ எந்த மாற்றமும் இன்றி இயல்பான குரலில் சாளுக்கிய மன்னர் கேட்டார். 

‘‘காஞ்சியில் மன்னா..!’’
‘‘இந்த மாளிகை..?’’
‘‘பல்லவ பெரு வணிகருக்குச் சொந்தமானது..!’’
‘‘பல்லவர்கள் யார்..?’’
‘‘நம் பரம வைரிகள்!’’

‘‘அப்படிப்பட்டவர்களின் இருப்பிடத்தில் நாம் இருக்கிறோம் என்றால்...’’ கேட்டபடியே ராமபுண்ய வல்லபரின் அருகில் வந்தார் விக்கிரமாதித்தர். ‘‘இது சாளுக்கியர்களின் வெற்றியைக் குறிக்காதா..?’’
‘‘பதில் உங்களுக்கே தெரியும்!’’ மன்னரை நேருக்கு நேர் பார்த்தபடியே சாளுக்கிய போர் அமைச்சர் பதிலளித்தார்.
‘‘எனக்குத் தெரியுமா அல்லவா என்பதல்ல பிரச்னை... 
உங்களுக்கு அதில் சந்தேகமா என்பதே என் வினா...’’
‘‘உண்மையைச் சொல்ல வேண்டுமா பொய் சொல்ல வேண்டுமா..?’’
‘‘எப்போதும் எதைச் சொல்வீர்களோ அதைச் சொல்லுங்கள்...’’
‘‘சமயத்துக்குத் தகுந்தபடி வெளிப்படுத்துவேன் மன்னா...’’
‘‘அதாவது..?’’

‘‘பொய்மையும் வாய்மை இடத்து!’’‘‘தமிழர்களின் மூதுரை!’’
‘‘தமிழகத்தை ஆள நினைப்பவர்கள் வள்ளுவனின் வாக்கைப் பின்பற்றுவதில் தவறேதும் இல்லையே மன்னா..!’’
‘‘சரி...’’ விக்கிரமாதித்தர் புன்னகைத்தார். ‘‘இந்த சமயத்துக்கு எதைச் சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லுங்கள்!’’
‘‘எந்த சமயத்துக்கும் நீங்கள் கேட்ட வினாவுக்கு விடை ஒன்றுதான் மன்னா..! இது... இந்த காஞ்சி மாநகரத்தில் நாம் இருப்பதும் வசிப்பதும் சாளுக்கியர்களுக்கு வெற்றி ஆகாது!’’

‘‘அப்படியானால் எப்போது வெற்றி என்பதை ஒப்புக் கொள்வீர்கள்..?’’
‘‘பாண்டியர்களையும் வெற்றி பெற்று எப்போது மொத்த தமிழகத்திலும் வராகக் கொடியைப் பறக்கவிடுகிறோமோ அப்போது ஒப்புக்கொள்வேன்!’’
சாளுக்கிய மன்னரின் முகம் மலர்ந்தது. ‘‘அதற்கான முதல் படியாக இப்போது நாம் பல்லவ நாட்டில் இருப்பதைக் குறிப்பிடலாம் அல்லவா..?’’
‘‘வாய்ப்பில்லை மன்னா!’’ ராமபுண்ய வல்லபரின் முகம் இறுகியது.

‘‘ஏனோ..?’’
‘‘முதல் படியே ஆட்டம் காணும்போது அடுத்தடுத்த படிகளைக் குறித்து எப்படி திட்டமிட..?’’ கசப்புடன் சொன்ன சாளுக்கிய போர் அமைச்சர் சில கணங்கள் அமைதியாக இருந்தார். 
‘‘ஆட்டம் காண்கிறோமா..?’’
‘‘ஆம்! பாதாளத்தில் விழும் தருவாயில் இருக்கிறோம்!’’
‘‘அதை நிறுத்த உங்களிடம் வழி இருக்கிறதா..?’’

‘‘இருக்கிறது!’’
‘‘சொல்லுங்கள்...’’
‘‘சொல்லி என்ன ஆகப் போகிறது மன்னா..?’’ கேட்ட ராமபுண்ய வல்லபரின் கண்களில் துக்கத்தின் சாயை படர்ந்தது.
‘‘சொன்னால்தானே சரி செய்ய முடியும்...’’
‘‘முடியும் என்று தோன்றவில்லை...’’

‘‘ஏனோ..?’’
‘‘காரணமே நீங்களாக இருக்கும்போது யாரிடம் சென்று நிறுத்துவதற்கான வழியைச் சொல்ல முடியும்..?’’ 
‘‘நானா..?’’ விக்கிரமாதித்தர் ஆச்சர்யப்பட்டார். ‘‘நம் பரம வைரியான பல்லவர்களை வேரடி மண்ணோடு வீழ்த்தும் விஷயத்தில் நான் தடையாக இருக்கிறேனா..?’’

‘‘இல்லை என்கிறீர்களா மன்னா..?’’ சீறினார் சாளுக்கிய போர் அமைச்சர். ‘‘எதற்காக கரிகாலனைத் தப்ப விடுகிறீர்கள்..?’’
சாளுக்கிய மன்னர் அமைதியாக ராமபுண்ய வல்லபரை ஏறிட்டார்.மறைந்திருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்த பாலகனும் தன் செவிகளைக் கூர் தீட்டினான்.‘‘சொல்லுங்கள் மன்னா... ஏன் அமைதியாக நிற்கிறீர்கள்..?’’ முடிந்தவரை நிதானத்தை வரவழைத்துக்கொண்டு சாளுக்கிய போர் அமைச்சர் கேட்டார்.விக்கிரமாதித்தரின் உதட்டில் புன்னகை மலர்ந்தது.

சட்டென தன் முகத்தை ராமபுண்ய வல்லபர் திருப்பிக் கொண்டார்.
‘‘ஏன் அமைச்சரே... நான் சிரிப்பது அழகாக இல்லையா..?’’ விஷமம் தொனிக்க சாளுக்கிய மன்னர் கேட்டார்.
‘‘அழகுக்கு என்ன குறைச்சல் மன்னா...’’ தன் கீழ் உதட்டைக் கடித்தார் சாளுக்கிய போர் அமைச்சர். ‘‘என்றுமே நீங்கள் அழகுதான்...’’
‘‘பிறகு ஏன் முகத்தைத் திருப்பிக் கொள்கிறீர்கள்..?’’

‘‘சிவகாமியை ஆராய!’’ திரைச்சீலையில் இருந்த சித்திரத்தைச்சுட்டிக் காட்டினார்.‘‘நன்றாக வரையப்பட்டிருக்கிறதா..?’’
‘‘கச்சிதமாக! எதன் பொருட்டு இந்த ஓவியம் வரையப்பட்டதோ... எதற்காக சிவகாமியைத் திரைச்சீலையில் தீட்டினோமோ அதற்கு பலன் இல்லாதபோது நாம் தீட்டிய திட்டமெல்லாம் வீணாகிறதே என வெறுப்புடன் ஆராய்கிறேன்...’’ என்றபடி மன்னரை ஏறிட்டார். ‘‘சொல்லுங்கள் மன்னா... கரிகாலனை ஏன் தப்ப விடுகிறீர்கள்..? குறிப்பாக சிவகாமியை! அவள் நமக்குக் கிடைத்திருக்கும் ஆயுதமல்லவா..?’’

‘‘என்ன குழந்தாய் சொல்கிறாய்!’’ சாளுக்கிய சக்கரவர்த்தினி உண்மையிலேயே திகைத்தாள். ‘‘சிவகாமி நம் ஆயுதமா..?’’
‘‘ஆம் அம்மா!’’ நிதானமாகச் சொன்னான் கங்க இளவரசன். ‘‘அவளை வைத்து மன்னர் பெரும் விளையாட்டையே நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்...’’
‘‘புரியவில்லையே..?’’‘‘எனக்கும் முழுமையாகத் தெரியவில்லை அம்மா... சக்கரவர்த்தி மேல்மாடத்துக்கு வந்ததும் அவரிடம் இதுகுறித்து கேட்பதாக இருக்கிறேன்... தவிர...’’‘‘சொல் குழந்தாய்... ஏன் நிறுத்திவிட்டாய்..?’’

‘‘நிறுத்தவில்லை அம்மா! ஒரு சந்தேகம் இருக்கிறது...’’
‘‘என்ன சந்தேகம்..?’’ பட்டத்து அரசி படபடத்தாள்.
‘‘வந்து... நம் இளவரசர்...’’
‘‘விநயாதித்தனா..?’’
‘‘ம்... காஞ்சிக்கு வந்தவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை என்றீர்கள் அல்லவா..?’’
‘‘ஆமாம்...’’

‘‘அவர் மறைந்திருப்பதற்கும் சிவகாமிக்கும் கூட தொடர்பு 
இருக்குமோ என நினைக்கிறேன்...’’
சாளுக்கிய சக்கரவர்த்தினி திக்பிரமை பிடித்து அப்படியே 
அமர்ந்தாள். ‘‘என்னப்பா சொல்கிறாய்..?’’
‘‘ஐயம்தான் அம்மா... உறுதியில்லை...’’

‘‘பகவானே!’’ தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டாள் பட்டத்து அரசி. ‘‘சிவகாமி ஆபத்தானவள் என்கிறார்களே... அவளால் விநயாதித்தனுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிட்டால்...’’ தழுதழுத்தபடி முணுமுணுத்தாள்.‘‘அச்சம் தவிர்க்க  அமைச்சரே! என் மகன் விநயாதித்தனுக்கு எந்த ஆபத்தும் இல்லை!’’ விக்கிரமாதித்தர் உறுதியுடன் சொன்னார்.

‘‘அப்படியானால் இளவரசர் எங்கே..?’’ ராமபுண்ய வல்லபர் உஷ்ணத்துடன் கேட்டார். ‘‘இந்தக் கேள்வியை நான் கேட்கவில்லை மன்னா... நம் சாளுக்கியப் படை வீரர்கள் தங்களுக்குள் கேட்டுக் கொள்கிறார்கள். வீரர்களுடனேயே உணவு உண்டு, உறங்கி, அவர்களது சுக துக்கங்களில் பங்கேற்று, அவர்களுள் ஒருவராகக் கலந்துவிட்ட நம் இளவரசர் காஞ்சிக்கு வந்ததும் எங்கு சென்றார் என்ற கேள்வி அனைவருக்குள்ளும் இருக்கிறது. எப்போது வெளிப்படையாக இதே வினாவைத் தொடுப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால், தொடுக்கும்போது பிரளயம் ஏற்படுவது உறுதி...’’
சாளுக்கிய மன்னர் அசையாமல் நின்றார்.

மறைந்திருந்து இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பாலகன் இருந்த இடத்தில் நின்றபடியே அசைந்தான்.
‘‘ஒருபோதும் நீங்கள் இப்போது சொன்னீர்களே... அதை நம் வீரர்கள் ஏற்க மாட்டார்கள்!’’ திட்டவட்டமாகச் சொன்னார் சாளுக்கிய போர் அமைச்சர்.
‘‘என்ன... மன்னரின் பேச்சை படைகள் கேட்காதா..?’’ 
விக்கிரமாதித்தரின் புருவங்கள் உயர்ந்தன.

‘‘உரிய பதில் கிடைக்கவில்லை என்றால் கேட்க மாட்டார்கள் மன்னா... கலகம் செய்வார்கள்! வரலாறு நெடுக இதற்கு உதாரணங்கள் இருக்கின்றன!’’
இதைக் கேட்டதும் சாளுக்கிய மன்னர் தன் கண்களைச் சுருக்கினார். ‘‘என் பதில் திருப்தியாக இல்லையா..?’’

‘‘இல்லை மன்னா! பல்லவ சைன்யத்துடன் எந்தெந்த குறுநில மன்னர்கள் எல்லாம் வந்தார்களோ... நம் வாதாபியைத் தீக்கிரை ஆக்கினார்களோ... அவர்களை எல்லாம் போர் முனையில் மட்டுமே வீழ்த்தி பழிக்குப் பழிவாங்கவேண்டும் என்கிறீர்கள்... அப்போதுதான் தங்கள் தந்தையும், நம் அனைவருக்கும் சக்கரவர்த்தியுமான இரண்டாம் புலிகேசியின் ஆன்மா சாந்தியடையும் என்கிறீர்கள்...’’
‘‘ஆம்...’’

‘‘இதன் காரணமாகவே கரிகாலன் தப்பித்துச் செல்ல உதவினீர்கள்...’’ 
‘‘ஆம்...’’‘‘அப்படி உங்கள் உதவியால் வெளியேறியவன் தன் தந்தையான சோழ மன்னரையும் அல்லவா உடன் அழைத்துச் சென்றிருக்கிறான்..?’’
‘‘அவரை மீண்டும் சிறைப்பிடிக்கத்தான் வீரர்களை அனுப்பியிருக்கிறீர்களே...’’‘‘அனைவரையும் வீழ்த்தி தன் தந்தையுடன் தப்பித்துவிட்டானே...’’ ராமபுண்ய வல்லபரின் குரலில் ஆற்றாமை வழிந்தது.

‘‘அதனால் என்ன... குறுவாள் பாய்ந்த தன் தந்தைக்கு எப்படியும் சிகிச்சை அளிக்க ஆதுரச்சாலைக்குத்தானே சென்றிருப்பான்..? சுற்றி வளைக்கலாமே..?’’
கேட்ட மன்னரை உற்றுப் பார்த்தார் ராமபுண்ய வல்லபர். ‘‘சுற்றி வளைக்கத்தான் கேட்கிறேன் மன்னா... எந்த ஆதுரச்சாலைக்கு அவர்களை அனுப்பியிருக்கிறீர்கள்..?’’

‘‘நானா அனுப்பியிருக்கிறேன் என்கிறீர்கள்..?’’ விக்கிரமாதித்தர் ஆச்சர்யத்துடன் கேட்டார்.‘‘இல்லை என்கிறீர்களா..?’’‘‘ஆம்... நிச்சயமாக நான் அவர்களை மறைத்து வைக்கவில்லை. கரிகாலன் புத்திசாலி... காஞ்சியில் இல்லையென்றால் வேறு எங்காவது அழைத்துச் சென்றிருப்பான்...’’‘‘அந்த இடம் பல்லவ இளவரசன் ராஜசிம்மன் மறைந்திருக்கும் பிரதேசமாக இருந்தால்..?’’
சாளுக்கிய மன்னர் அமைதியாக நின்றார்.

‘‘நீங்களே சொல்கிறீர்கள் கரிகாலன் புத்திசாலி என்று...’’ புத்திசாலிக்கு அழுத்தம் கொடுத்தார் ராமபுண்ய வல்லபர். ‘‘அப்படிப்பட்ட புத்திசாலி சிக்கியபோது அவனை நம் பக்கம் இழுப்பதுதானே ராஜ தந்திரம்? அதைத்தானே நான் செய்ய முற்பட்டேன்... அதற்காகத்தானே அவன் தந்தையைச் சிறையில் அடைத்து... அவன் பெரியம்மாவை மாளிகைக் காவலில் வைத்து... எல்லா திட்டங்களையும் உங்கள் பெருந்தன்மையால் குலைத்து விட்டீர்களே மன்னா!’’ சொல்லும்போதே அவர் குரல் தழுதழுத்தது.

சில கணங்கள் அமைதியாக இருந்தவர் தன்னைச் சமாளித்துக் கொண்டு தொடர்ந்தார்: ‘‘உங்கள் நோக்கம் உயர்ந்தது மன்னா... ஆனால், அதே நோக்கமே சாளுக்கியர்களுக்கு எதிராக மாறும்போது போர் அமைச்சர் என்ற முறையில் என்னால் அமைதியாக இருக்க முடியாது! தங்கள் தந்தை இரண்டாம் புலிகேசி மாமன்னரின் உப்பைத் தின்று வளர்ந்தவன் நான். அவரது கனவு, வராகக் கொடி பாரதம் முழுக்க பறக்க வேண்டும் என்பது. அதற்காக என் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணிப்பேன்... இதற்காக உங்களையே எதிர்க்க வேண்டிய சூழல் வந்தாலும்...’’ 

மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் சாளுக்கிய மன்னருக்கு தலை வணங்கினார். ‘‘அந்த நிலைக்கு என்னை ஆளாக்க மாட்டீர்கள் என நம்புகிறேன் மன்னா! நீங்கள்தான் தப்பிக்க வைத்தீர்களோ அல்லது கரிகாலனே தப்பித்தானோ... எதுவாக இருந்தாலும் அவனையும் அவன் தந்தையையும் நிச்சயம் சிறைப்பிடிப்பேன்... அதற்கு...’’நிமிர்ந்து விக்கிரமாதித்தரின் பின்னால் இருந்த திரைச்சீலையைச் சுட்டிக் காட்டினார். ‘‘சிவகாமி எனக்கு உதவி புரிவாள்!’’
கம்பீரமாக அறிவித்துவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் ராமபுண்ய வல்லபர் வெளியேறினார்.

அவர் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த சாளுக்கிய மன்னரின் உதட்டில் குறுநகை பூத்தது.மறைந்திருந்து இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பாலகனின் கண்களில் ஒளி வீசியது. ஆமாம்... கரிகாலரும் சிவகாமியும் இப்போது எங்கிருக்கிறார்கள்..?
‘‘இங்குதான் இருக்கிறேன்...’’ என்றபடி சிவகாமியின் கொங்கை பிளவுக்குள் தன் முகத்தைப் பதித்தான் கரிகாலன்!
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.