Jump to content

Recommended Posts

ரத்த மகுடம்-70

வனமே அதிர்வது போல் இடி இடி என நகைத்தான் அந்த கஜ சாஸ்திரி!ஓலையின் இறுதியில் இருந்த ‘சிவகாமி’ என்ற பெயரைத் தன் விரல்களால் தடவியவன், ‘ஒற்றர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்...’ என தனக்குள் சொல்லிக் கொண்டான்.

28.jpg

சுற்றிலும் இருந்த பல்லவ வீரர்களின் முகத்தில் எந்த உணர்ச்சியும் வெளிப்படவில்லை. கஜ சாஸ்திரி குறித்து அவர்களுக்கு நன்றாகவே தெரியும் என்பதால் திடீரென அவன் நகைத்ததையோ சட்டென மவுனமானதையோ அவர்கள் பொருட்படுத்தவில்லை. அவனது கட்டளைக்காக மட்டும் காத்திருந்தார்கள்.

 

ஆனால், பிடிபட்ட மூன்று சாளுக்கிய வீரர்களும் அப்படி இல்லை. தங்கள் முன் நின்றவனும் தங்களிடம் இருந்து ஓலையைப் பறித்துக் கொண்டு அதைப் படிக்கத் தொடங்கியவனுமான மனிதனையே உற்றுப் பார்த்தார்கள். அவர்களது இதயங்கள் முன்பை விட அதிகமாகத் துடிக்கத் தொடங்கின.
 

இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஓலையின் மீது தன் கருவிழிகளை அந்த கஜ சாஸ்திரி பதித்தான். படித்ததையே திரும்பவும் வாசித்தான்.‘யானைகளைத் தரம் பிரித்து பல்லவப் படைக்கு பலம் சேர்க்கும் கஜ சாஸ்திரியே... கரிகாலனின் நண்பனே நலமா?!

சாளுக்கியர்களை வீழ்த்த பல்லவர்களின் பங்காளியான ஹிரண்ய வர்மர் கொண்டு வந்த விஷம் தோய்த்த ஆயுதங்களை - குறிப்பாக வாட்களை - எங்கள் போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபர் தலைமையில் கைப்பற்றினோம். ஆனால், உன் நண்பனான கரிகாலன் அதை சாதுர்யமாக எங்களிடம் இருந்து அபகரித்து உன்னிடமே சேர்ப்பித்துவிட்டான். அதுவும் எப்படி..? கெடில நதியில் மரக்கிளைகளை மிதக்க விட்டு அதனுள் வாட்களைப் பதுக்கி...

ஒப்புக் கொள்கிறோம். கரிகாலனும் நீயும் புத்திசாலிகள்தான். ஆனால், சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தரை விட அப்படியொன்றும் நீங்கள் இருவரும் அறிவாற்றலில் சிறந்தவர்கள் அல்ல! எதனால் இப்படிச் சொல்கிறேன் என்பதை காலம் உனக்கு உணர்த்தும்.காஞ்சியை சாளுக்கியர்கள் கைப்பற்றுவதற்கு முன்பாகவே உங்களுக்குத் தேவையான அசுவங்களை கரிகாலன் வரவழைத்து தரம் பிரித்து எல்லோருக்கும் கொடுத்துவிட்டான்.

சாளுக்கியர்களின் ஆதிக்கத்தில் பல்லவ நாடு இருக்கும்போது கஜ சாஸ்திரியான நீ, யானைகளை பாரதம் முழுவதிலும் இருந்து வரவழைத்து அவற்றைத் தரம் பிரித்து படைகளிடம் சேர்ப்பித்து விட்டாய்.இதனால் சாளுக்கியர்களை விட பல்லவர்களான நீங்கள் படை பலத்தில் சிறந்து விளங்குவதாக இறுமாப்பு அடையாதே! உங்களிடம் விலங்குகள் இருக்கின்றன. எங்களிடம் ரத்தமும் சதையும் அறிவும் நிரம்பிய வீரர்கள் இருக்கிறார்கள்.

விலங்குகள், சொல்வதை மட்டுமே கேட்கக் கூடியவை. வீரர்கள் அப்படியல்ல. சுயமாக யோசித்து முடிவெடுக்கக் கூடியவர்கள். அப்படித்தான் தன் படையை எங்கள் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் உருவாக்கி இருக்கிறார்.இத்தனையும் உனக்கு நான் சொல்லக் காரணம்... இறுமாப்பில் மிதக்காதே என சுட்டிக் காட்டத்தான். நடக்கவிருக்கும் போரில் புத்தியிலும் எண்ணிக்கையிலும் எங்களுக்கு சமமாக இருப்பவர்களுடன் மோதவே நாங்கள் விரும்பு
கிறோம். அப்பொழுதுதான் யுத்தத்துக்கான அர்த்தம் முழுமை அடையும்.

மான் வேட்டையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில் சிறுத்தையின் பாய்ச்சலில் இருந்து மான்களால் தப்பிக்க முடியாது என்பது உலகுக்கே தெரியும்.இத்தனை காத தொலைவை நாங்கள் கடந்து வந்திருப்பது இன்னொரு சிறுத்தையுடன் மோதத்தான்.எங்களை ஏமாற்றாமல் பல்லவப் படையை சிறுத்தையாக மாற்றி நீயும் கரிகாலனும் கொண்டு வாருங்கள். புஜபலத்துடன் உங்களை நிர்மூலமாக்க சாளுக்கியர்களாகிய நாங்கள் காத்திருக்கிறோம்.
இதையெல்லாம் எதற்காக உன்னிடம் சொல்கிறேன் தெரியுமா..?

இன்னமும் நீயும் கரிகாலனும் சிறுபிள்ளைகளாக இருப்பதால்தான். இந்த வனம் உன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கரிகாலனும் இப்பொழுது உன்னுடன் இணைந்திருப்பதால் அதையே ‘உங்கள் கட்டுப்பாட்டில்’ என்றும் சொல்லலாம்.

ஆனால், என்ன பயன்..? சாளுக்கியர்களின் ஆயுதம்தான் நான் என்பதை ‘அரும்பாடுபட்டு’ கண்டறிந்த கரிகாலன், என்னைச் சிறைப்பிடித்து விசாரணைக்காக உன்னிடத்தில் அழைத்து வந்திருக்கிறான். இந்த நிலையிலும் சாளுக்கியர்களுக்கு என்னால் செய்தி அனுப்ப முடிகிறது! அதற்கு சாட்சிதான் உன்னால் பிடிக்கப்பட்ட மூன்று வீரர்களும், அவர்கள் கொண்டு வந்த ஓலையைக் கைப்பற்றி நீ படித்துக் கொண்டிருப்பதும்!
இதிலிருந்தே எந்தளவுக்கு பல்லவர்களான நீங்கள் பலவீனமாக இருக்கிறீர்கள் என்பதை உணரலாம். உணர்த்தத்தான் இந்தக் காரியத்தையே நான் செய்தேன்!

விலங்குகளை நம்பாதே! மனிதர்களைத் திரட்டு!எங்கள் மன்னர் விக்கிரமாதித்தர் மேலும் உங்களுக்கு அவகாசம் வழங்குகிறார். தயவுசெய்து வீரர்களைத் திரட்டி அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து போருக்கு அழைத்து வா! அப்பொழுதுதான் யுத்தம் சுவாரஸ்யமாக இருக்கும். எங்களுக்கும் நாங்கள் பெறும் வெற்றி அர்த்தம் பொதிந்ததாக மாறும்!இப்படிக்கு களத்தில் பல்லவர்களை துவம்சம் செய்யக் காத்திருக்கும் சாளுக்கியர்களின் ஒற்றர் படைத் தலைவியும், தற்சமயம் உன்னிடம் விசாரணைக் கைதியாக இருப்பவளுமான -சிவகாமி!

முக்கிய குறிப்புகள்:

* கஜ சாஸ்திரியான நீ உண்மையில் யாரென்று எனக்குத் தெரியும்! அதை விசாரணை மண்டபத்தில் அறிவிக்கிறேன்!

* நியாயமாகப் பார்த்தால், பகைவனாக இருந்தும் உனக்கு மரியாதை அளிக்க வேண்டும்! அப்படிப்பட்டவர்களின் வீட்டில்தான் நீ பிறந்திருக்கிறாய்! ஆனாலும் ஒருமையில்தான் உன்னை அழைக்கிறேன்; அழைத்திருக்கிறேன்! அது ஏன் என்பதை, இல்லாத மூளையைத் தேடிக் கண்டுபிடித்து உன் கபாலத்துக்குள் இறக்கி யோசி!

* பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மரின் வளர்ப்பு மகளும் நரசிம்மவர்ம பல்லவரின் அருமைக் காதலியான சிவகாமி அம்மையாரின் வளர்ப்பு பேத்தியுமான சிவகாமி எங்கு இருக்கிறாள்... அவளது உருவத்தில் வந்திருக்கும் நான் யார் என்பதை முடிந்தால் கண்டுபிடி!

* இந்த ஓலையை நீ படிக்கும்போது உன் நண்பனான கரிகாலன் என் மேனியை முகர்ந்துகொண்டிருப்பான்! ஒருபோதும் உன்னால் அவனை எனது மயக்கத்தில் இருந்து விடுவிக்க முடியாது..!’

கோபத்துக்கு மாறாக புன்னகைத்தபடியே அந்த கஜ சாஸ்திரி ஓலைகளைப் படித்து முடித்தான். ஆம். மூவரிடமும் இருந்த மூன்று ஓலைகளையும்! அனைத்திலும் இதே செய்திதான் எழுதப்பட்டிருந்தன. மூன்று ஓலைகளிலும் ஒரே கையெழுத்துதான். ஒருவரால் எழுதப்பட்டதுதான்.
அலட்சியத்துடன் அந்த மூன்று ஓலைகளையும் ஒரு வீரனிடம் கொடுத்தான். கண்களால் செய்தி சொன்னான்.

புரிந்து கொண்டதற்கு அடையாளமாக தலையசைத்த அந்த பல்லவ வீரன், கஜ சாஸ்திரியை வணங்கிவிட்டு வனத்துக்குள் புகுந்து மறைந்தான்.
‘‘உங்கள் முகத்தைப் பார்த்தால் களைப்பு தாண்டவமாடுகிறது. ஓய்வில்லாமலும் உணவு அருந்தாமலும் பயணப்பட்டு வந்திருக்கிறீர்கள்... எனவே...’’ என்றபடி தன்முன் நின்றிருந்த மூன்று சாளுக்கிய வீரர்களையும் அந்த கஜசாஸ்திரி பார்த்தான்.

மூவரும் தங்கள் சுவாசத்தை நிறுத்தியபடி துடிக்கும் இதயத்துடன் அவனை ஏறிட்டார்கள்.ஆறு கண்களையும் சில கணங்கள் சந்தித்த கஜ சாஸ்திரி, பல்லவ வீரர்களின் பக்கம் திரும்பினான். ‘‘இவர்களுக்கு வயிறார உணவளியுங்கள்! இவர்கள் ஏறி வந்த புரவிகளுக்கு தண்ணீர் காட்டிவிட்டு கொள்ளை கொடுங்கள். இவர்களும் புரவிகளும் சாப்பிட்டு முடித்தபின் அனுப்பிவிடுங்கள்!’’

கட்டளையிட்டுவிட்டு சாளுக்கிய வீரர்களின் பக்கம் திரும்பினான். ‘‘அடுத்த முறை உங்கள் மூவரையும் இந்தப் பக்கம் பார்த்தால் அந்த இடத்திலேயே உங்கள் உயிர் பிரிந்துவிடும். ஒருமுறைதான் உங்களுக்கு மன்னிப்பு. சென்று வாருங்கள்... உங்கள் மன்னர் விக்கிரமாதித்தருக்கு என் வணக்கங்களை தெரிவியுங்கள். ராமபுண்ய வல்லபரை விசாரித்ததாக சொல்லுங்கள்!’’ சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தவனை சாளுக்கிய வீரனின் குரல் நிறுத்தியது. ‘‘நீங்கள்..?’’

‘‘கஜ சாஸ்திரி என்று சொல்லுங்கள்! உங்கள் மன்னரும் போர் அமைச்சரும் புரிந்து கொள்வார்கள்!’’  புன்னகையுடன்தான் இதை அவன் சொன்னான். அதே மலர்ச்சியுடன்தான் வனத்துக்குள் புகுந்தும் மறைந்தான்.சிவகாமியால் எழுதப்பட்ட அந்த ஓலைகளின் வாசகங்களே அவனுக்குள் சுற்றிச் சுற்றி வந்தன. குறிப்பாக, ‘இந்த ஓலையை நீ படிக்கும்போது உன் நண்பனான கரிகாலன் என் மேனியை முகர்ந்து  கொண்டிருப்பான்! ஒருபோதும் உன்னால் அவனை எனது மயக்கத்தில் இருந்து  விடுவிக்க முடியாது..!’ என்ற பதம்!உண்மையில் அப்பொழுது கரிகாலன் சிவகாமியைப் பதம் பார்த்துக் கொண்டுதான் இருந்தான்!

அருவியில் இருந்து பின்னணியில் நீர் கொட்டியபடி இருக்க... வழிந்த நீர் நதியாகப் பெருக்கெடுத்து கரை தொட்டு ஓட... கரையில் வளர்ந்திருந்த புற்களின்மேல் நின்றபடி சிவகாமியை தன்னை நோக்கி இழுத்தான்.‘‘விடுங்கள்... இப்படித்தான் பல்லவர்கள் விசாரணைக் கைதியை நடத்துவார்களா..?’’ முத்துக்களைச் சிதறவிட்டாள் சிவகாமி.

‘‘ஏன்... இந்த விசாரணை முறை உனக்குப் பிடிக்கவில்லையா..? பார்த்தால் அப்படித் தெரியவில்லையே...’’‘‘ஓஹோ... பார்த்ததுமே கண்டுபிடிக்கும் வல்லமை படைத்தவரா நீங்கள்..?’’
‘‘சந்தேகமா..?’’ சிவகாமியின் வதனத்தை தன் முகத்துடன் இழைத்தபடி கரிகாலன் முணுமுணுத்தான்.

அவன் உதடுகள் தன் கன்னங்களில் பட்டுப் பட்டு விலகியதால் நெகிழ்ந்த தன் உடலை அடக்கியபடி, ‘‘போதும் விடுங்கள்... வெட்ட வெளி... வீரர்கள் யாராவது வந்தால் நன்றாக இருக்காது...’’ என்றபடி தன் கண்களை மூடினாள்.‘‘அப்படியானால் அந்தப் புதருக்குள் சென்றுவிடலாமா..?’’ கேட்டபடியே அவள் பின்னெழுச்சியில் தன் இரு கைகளையும் பதித்து கிள்ளினான்.

‘‘ஆ...’’ முகத்தைச் சுளித்தவள், ‘‘உங்களுக்கு விவஸ்தையே இல்லையா..?’’ சிணுங்கினாள். ‘‘ஏன், என் விவஸ்தைக்கு என்ன குறைச்சல்..?’’
‘‘புதருக்கு செல்லலாமா என்று கேட்டதன் அர்த்தம் என்ன..?’’
‘‘யாராவது வந்தால் என்ன செய்வது என்றாய்... அதற்கு, யாரும் பார்க்காதபடி புதரின் மறைவுக்கு செல்லலாமா என்றேன்... பேசத்தானே அழைத்தேன்... வேறு எதற்கு என்று நினைத்தாய்..?’’

கேட்டபடியே அவளது பின்னெழுச்சியை தன் இரு கரங்களாலும் உயர்த்தினான்.அதற்கு ஏற்ற பதிலை சிவகாமியின் உடல் அளித்தது. தன் இரு கால்களையும் உயர்த்தினாள். சட்டென்று அவளைத் தூக்கினான். உடனே தன் இரு கால்களையும் அவன் தொடைகளைச் சுற்றி படரவிட்டு கரிகாலனின் இடுப்பில் அமர்ந்தாள்.

‘‘கேட்டேனே...’’ அவள் கழுத்தில் முகம் பதித்தான்.‘‘ம்... ம்...’’
‘‘இதுதான் பதிலா..?’’ அவளது கச்சையைக் கடித்தான். ‘‘புதருக்குள் எதற்காக உன்னை அழைத்தேன் என்று நினைத்தாய்..?’’ மீண்டும் கேட்டான்.
என்னவென்று சொல்லுவாள்... பெருமூச்சுடன் தன் இமைகளை மூடி அவனிடம் ஒன்றினாள்.சிவகாமியின் பெருமூச்சால் தன் முகத்துக்கு நேராக எழுந்து தாழ்ந்த கொங்கைகளை ரசிக்கும் நிலையில் கரிகாலன் இல்லை...

அவளை நெகிழ்ச்சி அடையச் செய்துவிட்டதை ஒன்றுக்கு இருமுறை உறுதிப்படுத்திக் கொண்டான். பிறகு அவளது கழுத்தில் பதித்திருந்த தன் முகத்தை அவள் தலைக்கு வெளியே கொண்டு சென்றான்.அவளை அணைத்துத் தாங்கியபடியே எவ்வித சந்தேகமும் எழாதபடி, கஜ சாஸ்திரி கொடுத்து அனுப்பிய மூன்று ஓலைகளையும் படிக்கத் தொடங்கினான்!

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15903&id1=6&issue=20190913

Link to comment
Share on other sites

  • Replies 171
  • Created
  • Last Reply

ரத்த மகுடம்-71

‘‘தொந்தரவுக்கு மன்னிக்க வேண்டும் மன்னா..!’’காவலாளி தகவல் சொல்லி அனுமதி பெற்று வருவதற்கு முன்பாகவே சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் அந்தரங்க அறைக்குள் ஸ்ரீ ராமபுண்ய வல்லபர் நுழைந்துவிட்டார்.மன்னருக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் தெரிவித்துவிட்டு, ‘தங்களைக் காண போர் அமைச்சர் வந்திருக்கிறார்...’ என்று சொல்ல வாயைத் திறந்த சாளுக்கிய வீரன் தனக்குப் பின்னால் இருந்து ஒலித்த குரலைக் கேட்டு திடுக்கிட்டான்.
23.jpg

மன்னரின் முகத்தைக் கண்ட அந்த வீரன் புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக ,அவரை மீண்டும் வணங்கிவிட்டு மூன்றடிகள் அவரைப் பார்த்தபடியே பின்னோக்கி நகர்ந்து பின்னர் மன்னருக்கு முதுகைக் காட்டாமல் அப்படியே அறையை விட்டு வெளியே வந்தான். கதவை மூடினான்.
 
பழையபடி அறை வாசலில் காவலுக்கு நின்றான்.‘‘காரணமில்லாமல் இப்படி அவசரமாக நுழைய மாட்டீர்கள் என்று தெரியும்... சொல்லுங்கள்... என்ன விஷயம்..?’’

‘‘மன்னா! நாம் வெற்றி பெற்றுவிட்டோம்!’’ முகமெல்லாம் மலர ஸ்ரீராமபுண்ய வல்லபர் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

விக்கிரமாதித்தரின் முகத்தில் அந்த மலர்ச்சி எதிரொலிக்கவில்லை. மாறாக, ஆழ்ந்த சிந்தனையுடன் ‘‘அப்படியா..?’’ என்றார்.‘‘என்ன மன்னா இப்படி சர்வசாதாரணமாகச் சொல்லி விட்டீர்கள்! இது எப்படிப்பட்ட வெற்றி... பல்லவர்களை நாம் போரில் முறியடித்திருக்கிறோம்! அதுவும் நேருக்கு நேர் போரிட்டு...’’ வெற்றிக் களிப்புடன் போர் அமைச்சர் அறிவித்தார்.

‘‘காஞ்சியை நாம் கைப்பற்றியதுகூட பெரிய விஷயமில்லை மன்னா... ஏனெனில் போர் புரிந்து நாம் காஞ்சி மாநகரத்தைக் கைப்பற்றவில்லை. நகரத்தைத் திறந்து வைத்துவிட்டு பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மர் தன் படைகளுடனும் குடும்பத்துடனும் வெளியேறினார். எனவே காஞ்சி அரண்மனைக்குள் நாம் நுழைந்தது வெற்றியாகக் கருதப்பட மாட்டாது. ஆனால், இப்பொழுது...’’

கண்கள் விரிய தன் மன்னரை ஏறிட்டார் ஸ்ரீ ராமபுண்ய வல்லபர். ‘‘உண்மையிலேயே நாம் ஜெயித்திருக்கிறோம். சாளுக்கியர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியிருக்கிறது. இனி வரலாறு உங்களது இந்த வெற்றியை... சாளுக்கியர்களின் வீரதீர பராக்கிரமத்தை எக்காலத்திலும் போற்றிப் புகழும்...இந்த வெற்றி முழுக்க முழுக்க தங்களுக்கே சொந்தமானது மன்னா...’’ சொல்லும்போதே ஸ்ரீராமபுண்ய வல்லபரின் குரல் தழுதழுத்தது.

‘‘எவ்வளவு தீர்க்கத்துடன் யோசித்தீர்கள்... அப்பப்பா... காஞ்சியில் சாளுக்கியப் படைகளைக் குவித்து வைத்திருக்கிறோம்... வாதாபியில் போதுமான படைகள் இல்லை... எனவே, மறைந்து வாழும் பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மர் படைகளைத் திரட்டி சாளுக்கிய தேசத்தைத் தாக்கி கைப்பற்ற முயற்சிப்பார் என்ற உங்கள் கணிப்பு பொய்க்கவில்லை.

பரமேஸ்வர வர்மர் அப்படித்தான் செய்தார். இதை முன்பே ஊகித்து கங்க மன்னருக்கு தூது அனுப்பி படைகளுடன் அவரை பல்லவ மன்னரை எதிர்பாராமல் நீங்கள் தாக்கச் சொன்னது நல்லதாகப் போயிற்று! இந்தத் தாக்குதலை எதிர்பார்க்காத பல்லவப் படைகள் சிதறிவிட்டன. வாதாபியைக் கைப்பற்ற பரமேஸ்வர வர்மர் மேற்கொண்ட முயற்சியை இப்படியாக நீங்கள் முறியடித்திருக்கிறீர்கள்!’’

மூச்சு விடாமல் பேசிய ராமபுண்ய வல்லபர், சாளுக்கிய மன்னரை நோக்கி வணங்கினார். ‘‘என்னதான் சாளுக்கியப் படைகளுக்கு நான் போர் அமைச்சராக இருந்தாலும், தங்கள் தந்தை காலம் முதலே பணியில் இருந்தாலும், தங்கள் அளவுக்கு எனக்கு புத்தி சாதுர்யம் இல்லை மன்னா! தங்களைப் போன்ற ஒருவரை மன்னராகப் பெற ஒவ்வொரு சாளுக்கியனும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!’’

‘‘கற்பனையான விஷயத்துக்கு புகழ்கிறீர்கள் அமைச்சரே... அதனாலேயே இப்புகழ்ச்சியை ஏற்க மனம் மறுக்கிறது...’’ நிதானமாகச் சொன்னார் விக்கிரமாதித்தர்.‘‘மன்னா!’’ அலறினார் ராமபுண்ய வல்லபர். ‘‘பல்லவப் படைகள் சிதறி ஓடியிருப்பதும் நாம் வெற்றி பெற்றிருப்பதும்...’’‘‘உண்மையல்ல...’’ இடைவெட்டினார் சாளுக்கிய மன்னர்.

என்ன சொல்வது என்று தெரியாமல் பிரமை பிடித்து நின்றார் சாளுக்கிய போர் அமைச்சர். உள்ளங்கை நெல்லிக்கனியாக நாம் வெற்றி பெற்றிருப்பது தெளிவாக இருக்க மன்னர் எதற்காக அதை நிராகரிக்கிறார் என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது.

விக்கிரமாதித்தரே அதற்கு விடை அளித்தார். ‘‘போக்குக் காட்டி நம்மை பல்லவர்கள் திசை திருப்பியிருக்கிறார்கள்... இதைப் புரிந்து கொள்ளாமல் நாம் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொண்டிருக்கிறோம்... நானும் பெரிய யுத்த தந்திரத்தை அமைத்துவிட்டதாக எண்ணி இறுமாந்திருக்கிறேன்...’’

‘‘மன்னா...’’‘‘யோசிக்க யோசிக்கத்தான் விடைகள் கிடைக்கின்றன ராமபுண்ய வல்லபரே...’’‘‘புரியவில்லை மன்னா...’’‘‘இன்னமுமா..?’’ கேட்ட சாளுக்கிய மன்னரின் கண்கள் இடுங்கின. ‘‘தன் நாட்டை எதிரி அபகரித்திருக்கும்போது எந்த ஒரு மன்னனும் என்ன செய்வான்..? அதை மீட்க முயல்வான். மாறாக, எதிரியின் தலைநகரத்தை நோக்கி படைகளைச் செலுத்துவானா..?’’‘‘மன்னா...’’

‘‘அப்படிச் சென்ற படைகளில் பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மர் இருந்திருக்கிறார். ஆனால்...’’ நிறுத்திய விக்கிரமாதித்தர் தன் முன்னால் பிரமை பிடித்து நின்றிருந்த ராமபுண்ய வல்லபரின் கண்களை உற்றுப் பார்த்தார். ‘‘அப்படையில் போர்த் தளபதியான சோழ மன்னர் இல்லை! இளமைத் துடிப்புடனும், சாதிக்க வேண்டும் என்ற பரபரப்புடனும் வலம் வரும் பல்லவ இளவரசன் இல்லை! அவ்வளவு ஏன்... பல்லவர்களின் அசுவ சாஸ்திரியும் உப தலைவனுமான கரிகாலன்கூட வாதாபியைத் தாக்க முற்பட்ட பல்லவப் படையில் இல்லை!

புரிகிறதல்லவா..? நம்மை முழுக்க முழுக்க ஏமாற்றவும், திசை திருப்பவும் இந்த நாடகத்தை பல்லவ மன்னர் அரங்கேற்றி இருக்கிறார்!’’‘‘இதனால் அவருக்கு என்ன பயன் மன்னா..?’’‘‘அவகாசம் அமைச்சரே... அவகாசம்... போக்குக் காட்டி நம் கவனத்தை வேறு பக்கம் திருப்பிவிட்டு நிதானமாக படைகளைத் திரட்டி வருகிறார்கள். குறிப்பாக யானைப் படைகளையும் புரவிப் படைகளையும் வலுப்படுத்தி வருகிறார்கள்... இவை எல்லாம் இப்பொழுது புரிகிறது... ஆனால், ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லை...’’‘‘என்ன மன்னா..?’’

‘‘எதற்காக கரிகாலன் அத்தனை நாட்கள் காஞ்சியில் இருந்தான்..? என்ன காரணத்துக்காக நம் கவனத்தை எல்லாம் தன் பக்கமே இருக்கும்படி பார்த்துக் கொண்டான்..?’’ஸ்ரீ ராமபுண்ய வல்லபரிடம் சாளுக்கிய மன்னர் கேட்ட அந்தக் கேள்விக்கான விடையை வனத்தில் இருந்த பெரு மரத்தின் மீது சாய்ந்தபடி சிவகாமி பட்டுத் துணியில் எழுதினாள்.எழுதியதை திரும்ப ஒருமுறை படித்தாள்.அவள் தோள் மீது அமர்ந்தபடி புறா ஒன்றும் அதை வாசித்தது!

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15933&id1=6&issue=20190920

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ரத்த மகுடம்-72

‘‘மன்னா...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் மென்று விழுங்கினார். மேற்கொண்டு என்ன செய்வது அல்லது பேசுவது என்று அவருக்குத் தெரியவில்லை.

அதிர்ச்சியும் பிரமையும் சேர சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தரையே கண்கொட்டாமல் பார்த்தார்.

24.jpg

‘‘என்ன அமைச்சரே... அமைதியாகி விட்டீர்கள்..?’’ புன்னகைத்தார் விக்கிரமாதித்தர்.அந்தப் புன்னகை சாளுக்கிய போர் அமைச்சரை இயல்புக்குக் கொண்டு வந்தது. தலைக்கு மேல் அப்படி ஒன்றும் வெள்ளம் சென்றுவிடவில்லை என்பதையும் உணர்த்தியது. துணிவுடனேயே பேசத் தொடங்கினார்.


‘‘அமைதி என்று சொல்ல முடியாது மன்னா... குழப்பம் என்று வேண்டுமானால் வரையறுக்கலாம்...’’‘‘அதாவது சுருக்கமாக நான் இதுவரை சொன்னதை சற்றே விரிவாகச் சொல்லும்படி கேட்கிறீர்கள்... அப்படித்தானே..?’’மன்னரின் கேள்விக்கு தன் தலையை அசைத்து ‘ஆம்’ என்று பதிலளித்தார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்.தான், அமர்ந்திருந்த ஆசனத்தை விட்டு விக்கிரமாதித்தர் எழுந்தார். மெல்ல நடந்து தன் போர் அமைச்சரின் அருகில் வந்தார்.
‘‘ராமபுண்ய வல்லபரே...’’‘‘மன்னா...’’

‘‘என் தந்தையின் காலம் முதல் சாளுக்கியப் படைகளுக்கு நீங்கள் அமைச்சராக இருக்கிறீர்கள் அல்லவா..?’’
‘‘ஆம் மன்னா...’’‘‘நரசிம்மவர்ம பல்லவர் வாதாபியைக் கைப்பற்றி நம் தலைநகரை தீக்கிரையாக்கியபிறகு நடந்த சம்பவங்கள் உங்களுக்கு நினைவில் இருக்கும்...’’‘‘பசுமரத்தாணி போல் மனதில் பதிந்திருக்கிறது மன்னா... அதற்கு பழிவாங்கத்தானே இப்பொழுது நாம் வந்திருக்கிறோம்...’’ படபடவென ராமபுண்ய வல்லபர் பதிலளித்தார்.

விக்கிரமாதித்தர் அதைப் பொருட்படுத்தாமல் தன் பேச்சைத் தொடர்ந்தார்.‘‘என் தந்தையும் பாரதத்தின் மாபெரும் மன்னர்களில் ஒருவருமான இரண்டாம் புலிகேசி காலமானார்... இதனைத் தொடர்ந்து நம் நாட்டில் உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டது. ஆட்சியைக் கைப்பற்ற சகோதரர்களுக்குள் யுத்தம் நடந்தது... இறுதியில் சாளுக்கியர்களின் அரியணையில் நான் அமர்ந்தேன்... இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்து முடிய சில தசாப்தங்கள் ஆகின...’’
அமைதியாக தன் மன்னர் சொல்வதை சாளுக்கிய போர் அமைச்சர் கேட்டுக் கொண்டிருந்தார்.

‘‘அந்தக் காலகட்டத்தில் நானும் சரி... நீங்களும் சரி... ஏன், ஒவ்வொரு சாளுக்கிய தேசத்து குடிமகனும் சரி... என்ன செய்தோம்..?’’ கேள்வி கேட்ட விக்கிரமாதித்தர், தானே பதில் அளிக்கவும் தொடங்கினார்.‘‘நம் தேசத்தை காப்பாற்றத்தான் முழுமூச்சாக இறங்கினோம். சாளுக்கிய தேசத்தை வேறு யாரும் கைப்பற்றி விடக் கூடாது... நம் பிரதேசங்களை எடுத்துக்கொள்ளக் கூடாது என மெனக்கெட்டோம்.

அப்போதும் நமக்குள் பல்லவர்கள் மீது பகை இருந்தது. பகை உணர்ச்சி நாடி நரம்பெல்லாம் ஊடுருவி இருந்தது. நம் தலைநகரை தீக்கிரையாக்கிய பல்லவர்களை வேரோடு சாய்க்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு சாளுக்கிய வீரனும் துடித்துக் கொண்டிருந்தான்...’’ஆமோதிப்பதற்கு அறிகுறியாக ராமபுண்ய வல்லபர் தலையசைத்தார்.

‘‘ஆனாலும் பல்லவர்களுடன் போர் புரியவோ, காஞ்சியைக் கைப்பற்றவோ நாம் மெனக்கெடவில்லை... அதற்கான எந்த நடவடிக்கைகளிலும் இறங்கவில்லை... ஏன்..? நம் தேசம் மட்டுமே நமக்கு அப்போது பிரதானமாக இருந்தது. அதைக் காப்பாற்றவே நம் சக்தியை எல்லாம் அக்காலகட்டத்தில் செல்வழித்தோம். சாளுக்கிய தேசம் ஸ்திரப்படும்வரை நம் ஆற்றல்கள் அனைத்தையும் தேச பக்தியிலேயே குவித்தோம்...’’
 

உணர்ச்சியுடன் பேசிய விக்கிரமாதித்தர், சில கணங்கள் அமைதியாக இருந்தார்.மன்னரைத் தொந்தரவு செய்யாமல் சாளுக்கிய போர் அமைச்சரும் சலனமின்றி நின்றார்.கணங்கள் யுகங்களானதும் விட்ட இடத்தில் இருந்து சாளுக்கிய மன்னர் தொடர்ந்தார்.
 
‘‘அதுதான் இயல்பு. அதுவேதான் உலக நியதி. தனது நிலத்தையும் நிலப்பகுதியையும் காப்பாற்றத்தான் எந்தவொரு மனிதனும் முதலில் முற்படுவான். அதன் பிறகுதான்... தன் பிரதேசத்துக்கு இனி எந்த ஆபத்தும் இல்லை என்பது உறுதியானதும்தான்... அருகில் இருக்கும் நிலங்களை, பிரதேசங்களைக் கைப்பற்றும் நடவடிக்கைகளில் இறங்குவான்...


ஆனால், இப்பொழுது நடந்திருப்பது என்ன..?
உலக நியதிக்கு மாறானது மட்டுமல்ல... மனித இயல்புக்கே அப்பாற்பட்ட காரியம் நடந்திருக்கிறது! இதை என்னால் சாதாரணமாகக் கருத முடியவில்லை.சாளுக்கிய தேசம் முழுக்க முழுக்க நம் கட்டுப்பாட்டில், நமது பாதுகாப்பில் இருக்கிறது. வடக்கிலிருந்தும் நம் நாட்டைக் கைப்பற்ற முற்படலாம் என்பதால் வடக்கு எல்லையிலும் படைகளை நிறுத்தியிருக்கிறோம்; கோட்டைகள் அனைத்தையும் ஆயுதம் தாங்கிய வீரர்களால் நிரப்பியிருக்கிறோம்.

இந்த நடவடிக்கைகள் எல்லாம் திருப்திகரமாக முடிந்தபிறகே பல்லவர்களை பழிக்குப்பழிவாங்க நாம் புறப்பட்டு வந்தோம்... எண்ணியது போலவே பல்லவர்களின் தலைநகரான காஞ்சியையும் கைப்பற்றி விட்டோம்.நம்மை எதிர்க்காமல், நம்முடன் எந்தப் போரிலும் ஈடுபடாமல், நாம் வருவதை அறிந்ததும் பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மர், தன் வீரர்களுடன் காஞ்சியை விட்டு வெளியேறி விட்டார்.
 

இப்பொழுது பல்லவ மன்னர் நாடு இழந்தவர். பிடி மண்ணுக்குக் கூட சொந்தமில்லாதவர். இதுபோன்ற சூழலில் சிக்கிய ஒரு மன்னன் என்ன செய்வான்..? ரகசிய இடத்தில் இருந்தபடி படைகளைத் திரட்டி தன் நாட்டை மீட்க முற்படுவான்.
 
ஆனால், பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மர் என்ன செய்திருக்கிறார்..? தன் நாட்டைக் கைப்பற்றும் எந்த நடவடிக்கைகளிலும் இறங்காமல், தன் படைகளையும் முழுமையாகத் திரட்டாமல், சாளுக்கிய தேசத்தை வெற்றி கொள்ளப் புறப்பட்டிருக்கிறார்.


இதை அறிந்து நாம் கங்க மன்னரை அனுப்பி அப்படைகளைச் சிதறடித்து மீண்டும் பல்லவ மன்னரை ஓடி ஒளிய வைத்திருக்கிறோம்... இவை எல்லாம் மர்மமாக உங்களுக்குத் தெரியவில்லையா..?’’ அழுத்தம் திருத்தமாகக் கேட்டார் விக்கிரமாதித்தர்.சட்டென இதற்கு பதில் அளிக்க ஸ்ரீராமபுண்ய வல்லபர் வாய் திறந்தார்.கையை உயர்த்தி அவரைத் தடுத்துவிட்டு, தானே தொடர்ந்தார் சாளுக்கிய மன்னர்.

‘‘யோசித்துப் பாருங்கள். காஞ்சியைக் கைப்பற்ற நாம் ரகசியமாக படை திரட்டினோம்; அதே ரகசியத்துடனேயே வணிகர்களின் போர்வையில் நம் வீரர்களை நடமாட வைத்து காஞ்சியை நோக்கி வந்தோம்.பல்லவ ஒற்றர்களால் கூட நம் நடவடிக்கைகளை அறிய முடியவில்லை. எனவேதான் பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மனால் நம்மை எதிர்கொள்ள முடியாமல் போயிற்று. தற்காத்துக் கொள்ளவும், தன் மக்களையும், படைகளையும், கலைப் பொக்கிஷங்களையும் காப்பாற்றவும் அவர் காஞ்சியை விட்டு வெளியேறினார்.

இதுவரை சரி. ஆனால், இதற்குப் பிறகும் பல்லவ ஒற்றர்கள் அமைதியாக எதையும் அறியாமலேயே காலத்தைக் கழிப்பார்கள் என்று நினைக்கிறீர்களா..?
நமக்குள் எப்படி சாளுக்கிய தேச வெறி பெருக்கெடுத்து ஓடுகிறதோ அப்படி பல்லவர்களுக்குள்ளும் தேச பக்தி வெறி ஆறாக பெருக்கெடுத்து ஓடவே செய்யும். எதிரிகளை எடை போடுவதில் தவறில்லை.

ஆனால், தவறாக எடை போடுவது நம் தலையை நாமே கொய்து கொள்வதற்குச் சமம்!நிச்சயம் போதுமான படைகளை நம் எல்லைகள் முழுக்க நிறுத்திவிட்டே நாம் காஞ்சிக்கு வந்திருக்கிறோம் என்பதை பல்லவ ஒற்றர்கள் உறுதி செய்திருப்பார்கள். அதை தங்கள் மன்னரிடமும் தெரிவித்திருப்பார்கள்.

அப்படியிருந்தும் எந்த துணிச்சலில் சாளுக்கிய தேசத்தை நோக்கி பல்லவ மன்னர் தன் படைகளுடன் சென்றிருப்பார் என்று நினைக்கிறீர்கள்..?’’
‘‘யுத்த தந்திரம்தான் மன்னா..!’’ பட்டென்று ஸ்ரீராமபுண்ய வல்லபர் பதிலளித்தார். ‘‘சாளுக்கிய தேசத்தைக் கைப்பற்ற, தான் சென்றால் அதைத் தடுக்க நாம் காஞ்சியை விட்டு வெளியேறுவோம்...

வாதாபியைப் பாதுகாக்க முற்படுவோம்... என பரமேஸ்வரவர்மர் நினைத்திருக்கலாம்...’’ ‘‘ம்...’’‘‘அப்படி நாம் காஞ்சியை விட்டு வெளியேறும் பட்சத்தில் உடனடியாக தனது படையின் இன்னொரு பகுதியைக் கொண்டு பல்லவ நாட்டைக் கைப்பற்ற திட்டமிட்டிருக்கலாம்...’’‘‘இதன் காரணமாகவே தனது படைத்தளபதியான சோழ மன்னரையும், அசுவ சாஸ்திரியான கரிகாலனையும், தனது மகனான இராஜசிம்மனையும் பல்லவ மன்னர் தன்னுடன் அழைத்துச் செல்லவில்லை என்கிறீர்களா..?’’‘‘ஆம்... மன்னா...’’

‘‘ஒரு வாதத்துக்கு நீங்கள் சொல்வது சரி என்றே வைத்துக் கொள்வோம்... இவ்வளவு பிரச்னைகள் நடக்கையில்... தனது நாடே எதிரி
வசம் சிக்கியிருக்கையில், கரிகாலன் எதற்காக சிவகாமியுடன் காடு மேடு எல்லாம் அலைந்து கொண்டிருந்தான்..? காஞ்சி மாநகரத்துக்கும் எதற்காக வந்து சேர்ந்தான்..?’’‘‘தனது தந்தையை சிறையில் இருந்து மீட்க மன்னா...’’
 

‘‘அதாவது காஞ்சி மாநகர சிறையில் இருந்து... அப்படித்தானே..? அமைச்சரே... இந்த நகரம் அவர்களுடைய தலைநகரம்... இங்குள்ள ஒவ்வொரு பகுதியும் இடமும் அவர்களுக்குத்தான் நம்மை விட அத்துப்படி. நாம் அறியாத சுரங்கங்கள் இங்கு அநேகம் இருக்கலாம்; இருக்கும்.
 
இவை எல்லாம் சோழ மன்னருக்குத் தெரியாதா..? அவரால் தன்னந்தனியாக நம் சிறையில் இருந்து - அதாவது தன் நாட்டுச் சிறையிலிருந்து - தப்பிக்க முடியாதா..? இதற்காகவா கரிகாலன் வேலை மெனக்கெட்டு வந்தான்..?’’


‘‘மன்னா..?’’
‘‘உண்மையில் நமக்கு போக்கு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். காஞ்சிக்கு வந்த கரிகாலனை நான் சந்தித்ததோ அல்லது அவன் என்னைச் சந்தித்ததோ தற்செயலாக நடந்தது. ஆனால், அவன் காஞ்சிக்கு வந்தது தற்செயல் அல்ல! ஏதோ ஒரு காரியத்தை முன்னிட்டே வந்திருக்கிறான். அது என்ன..?’’
‘‘மன்னா..?’’
 

‘‘வந்தவனை கடிகைக்கு அனுப்பி வைத்தேன்... அர்த்த சாஸ்திர சுவடிகளில் மர்மம் இருப்பதாகத் தெரிவித்தேன்... ஆனால், கடிகையில் இருந்து அவன் எடுத்துச் சென்றது அர்த்த சாஸ்திர சுவடிகளைத்தானா..?’’சட்டென்று சாளுக்கிய போர் அமைச்சர் சிரித்துவிட்டார்.
 

விக்கிரமாதித்தர் அவரைக் கூர்ந்து பார்த்தார்.மன்னர் முன், தான் அப்படி சிரித்திருக்கக் கூடாது என்பதை உணர்ந்த ராமபுண்ய வல்லபர், ‘‘மன்னிக்க வேண்டும் மன்னா...’’ என மனமார மன்னிப்புக் கேட்டார்.

‘‘பாதகமில்லை. எதற்காக அப்படிச் சிரித்தீர்கள்..?’’
‘‘உண்மையைச் சொல்லலாமா மன்னா..?’’
‘‘உண்மையை மட்டும் சொல்லுங்கள்!’’
‘‘பல்லவர்கள் நமக்கு போக்குகாட்டவில்லை... அவகாசமும் பெறவில்லை...’’
‘‘பிறகு..?’’

‘‘சாளுக்கிய மன்னரான நீங்கள்தான் பல்லவர்களுக்கு போக்கு காட்டியிருக்கிறீர்கள்! சாளுக்கியர்களான நாம்தான் போதுமான அவகாசத்தைப் பெற்றிருக்கிறோம்!’’‘‘...’’‘‘கரிகாலனாக காஞ்சிக்கு வரவில்லை... நீங்கள் அவனை வரவைத்திருக்கிறீர்கள்! நம் கவனம் முழுக்க அவன் மீது குவியவில்லை... மாறாக அவனது கவனத்தை சிவகாமியின் மீதே குவியும்படி பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்!’’

‘‘என்ன சொல்கிறீர்கள் அமைச்சரே... எனக்கு எதுவும் புரியவில்லை... இதுவரை உங்களிடம் நான் விளக்கி வந்தது என்ன... ஆமோதித்தபடியே அதைக் கேட்டு வந்த நீங்கள் திடீரென்று இப்பொழுது சொல்லிக் கொண்டிருப்பது என்ன..?’’ விக்கிரமாதித்தர் தன் முகத்தில் வியப்பைக் காட்டினார்.
‘‘உண்மையிலேயே உங்களை மன்னராகப் பெற இந்த சாளுக்கிய நாடு தவம் செய்திருக்க வேண்டும் மன்னா...

உங்கள் அளவுக்கு ராஜ தந்திரியை பாரத தேசத்தில் இன்று காண்பது அரிது... கச்சிதமாக என்ன அழகாக திட்டமிட்டு பரமேஸ்வரவர்மரை நம் நாட்டை நோக்கி படையுடன் தன்னந்தனியாகச் செல்ல வைத்திருக்கிறீர்கள்... அப்போரில் அவரைப் படுதோல்வி அடைய வைத்திருக்கிறீர்கள்... இதனால் நமக்கு என்ன லாபம் மன்னா..? தயவுசெய்து மூடி மறைக்காமல் இனியாவது சொல்லுங்கள்...’’ சொல்வதற்காக விக்கிரமாதித்தர் வாயைத் திறந்தார்.

அப்பொழுது அவரது அறைக் கதவு தட்டப்பட்டது.‘‘வரலாம்...’’ என சாளுக்கிய மன்னர் குரல் கொடுத்தார்.இதனைத் தொடர்ந்து வந்து நின்றவனைப் பார்த்ததும் ஸ்ரீராமபுண்ய வல்லபருக்கு தலையே சுற்றியது.காரணம், வந்து நின்று மன்னருக்கு தலை வணங்கியவன் வேறு யாருமல்ல... கடிகை பாலகன்தான்!

Link to comment
Share on other sites

ரத்த மகுடம்-73

வந்து நின்று சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தருக்கு வணக்கம் தெரிவித்த கடிகை பாலகனைக் கண்டதும் ஸ்ரீராமபுண்ய வல்லபர் கற்பனைக்கும் அப்பாற்பட்ட உணர்வில் சஞ்சரித்தார். பல விஷயங்கள் புரிவது போலவும் புரியாதது போலவும் இருந்தன.
20.jpg
இதே பாலகனை கைது செய்ய மன்னருக்கே தெரியாமல், தான் முற்பட்டதும்... ஒவ்வொரு முறையும், தான் அனுப்பிய வீரர்களிடம் இருந்து இந்தப் பாலகன் தப்பித்ததும்... தப்பிப்பதற்கு மன்னரே உதவி புரிந்ததும்... அதன் காரணமாக விக்கிரமாதித்தர் மீது தனக்கு எழுந்த மனஸ்தாபங்களும்... அடுக்கடுக்காக ராமபுண்ய வல்லபரின் மனதில் காட்சிகளாக விரிந்தன.


இதே பாலகன்தான் காஞ்சிக்கு வந்த கரிகாலனுக்கு வலது கையாக விளங்கினான்... உதவினான். பின்னணியில் இருந்து இந்த பாலகனை இயக்கியது நம் மன்னர் விக்கிரமாதித்தர்தான். ஏதோ ஒரு காரணத்துக்காக இந்த பாலகனை வைத்து சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் பகடையாட்டம் ஆடுகிறார்... அது எதற்கு என்று புரியாமல், தான் தவித்தது எல்லாம் அவர் மனக்கண்ணில் சடசடவென்று வந்து போயின.

ஒருவேளை இந்த பாலகன், நம் சாளுக்கிய இளவரசர் விநயாதித்தனாக இருப்பாரோ என்று, தான் சந்தேகப்பட்டதும்... மன்னரிடமே ஆவேசத்துடன் அதைக் கேட்டதும் அக்கணத்தில் அவர் நெஞ்சில் நிழலாடின.அனந்தவர்மர், இந்த பாலகனை வைத்து தன் சகோதரர் விக்கிரமாதித்தரை குற்றம் சாட்ட முற்பட்டதையும்... இதற்காகவே விசாரணை மண்டபத்தில் அமைச்சர் பெருமக்களையும் குறுநில மன்னர்களையும் கூட்டியதையும் நினைத்துப் பார்த்தார்.

வீரர்களின் பலத்த காவலையும் மீறி அந்த விசாரணை மண்டபத்தில் இருந்து இந்த பாலகன் தப்பித்தான். இவன் தப்பிக்க காரணமாக இருந்தவன் கரிகாலனா அல்லது நம் மன்னர்பிரானா என்ற ஐயம் இப்பொழுது வரை ராமபுண்ய வல்லபரின் மனதை அரித்து வருகின்றது.
இந்நிலையில் எங்கு சென்றான்... என்ன செய்கிறான்... என சாளுக்கிய ஒற்றர்களாலும் வீரர்களாலும் சல்லடை போட்டு சலித்தும் கண்டறியப்படாமல் இருந்த கடிகை பாலகன், இதோ வந்து நிற்கிறான்.... சாளுக்கிய மன்னருக்கு வணக்கம் தெரிவிக்கிறான்.

அதுவும் மன்னரின் அந்தரங்க அறைக்கு வெளியே காவலுக்கு நிற்கும் எந்த வீரனும் முறைப்படி வந்து பாலகன் வந்திருக்கும் தகவலை அறிவிக்கவில்லை! ஏதோ, பழக்கப்பட்ட இடம் போலவும், தனது சொந்த அறைக்குள் நுழைவது போலவும் நுழைந்திருக்கிறான். மரியாதைக்கு வெறும் கதவை மட்டும் தட்டிவிட்டு!

தனக்குக் கூட இல்லாத உரிமை இது! பொறாமை கலந்த உணர்வுகள் பூக்க ராமபுண்ய வல்லபர் பெருமூச்சு விட்டார். சில நாழிகைகளுக்கு முன் தனது வரவை மன்னரிடம் அறிவிக்க முதலில் காவலுக்கு நின்ற வீரன் நுழைந்ததும்... மன்னரிடம் தன் வருகையைத் தெரிவித்ததும்... அவசர விஷயம் என்பதால் வீரனின் பதிலுக்காகக் காத்திராமல், தான் அவனுக்குப் பின்னாலேயே மன்னரைக் காண அறைக்குள் வந்ததையும் நினைத்துப் பார்த்தார்.

நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை! தனக்கு வழங்கப்படாத உரிமை இந்த பாலகனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மன்னரே அறைக்கு வெளியில் இருக்கும் காவலர்களிடம் இதை தெரிவித்திருக்க வேண்டும். இல்லையெனில் இவ்வளவு சர்வசாதாரணமாக மன்னரின் அந்தரங்க அறைக்குள் இப்பாலகனால் நுழைந்திருக்க முடியாது!

எனில் இவன் மன்னரின் மனம் கவர்ந்தவனாக இருக்க வேண்டும் அல்லது மன்னருக்கு சமமானவனாக இருக்க வேண்டும்!
யார் இந்த பாலகன்..? ஒருவேளை, தான் சந்தேகப்பட்டது போல் இவன் சாளுக்கிய இளவரசர் விநயாதித்தன்தானா..?
புள்ளியாக விழுந்த வினா, விருட்சமாக ராமபுண்ய வல்லபருக்குள் வளர்ந்தது.

மன்னரின் முன்னால் மரியாதைக்குரிய உடல் மொழியுடன் நின்றிருந்த கடிகை பாலகனை ஆராய்ந்தார்.
முகம் முழுக்க சாந்தமும் அமைதியும் தவழ்ந்து காணப்பட்டான். தலை முழுக்க மழிக்கப்பட்டிருந்தது. நெற்றியில் திருநீறு. மார்பில் ஸ்படிக மணி மாலை. வெற்று மார்பு. இடுப்பில் காவி வேஷ்டி. அதை பஞ்சகச்சமாகக் கட்டியிருந்தான். தீட்சண்யமான பார்வை. கூர்மை. ஆனால், அதில் அமைதியே தவழ்ந்திருந்தது.

சாளுக்கிய இளவரசர் விநயாதித்தரும் இதே உயரம், இதே வயதுதான். அவர் பார்வையிலும் தீட்சண்யம் சுடர்விடும். கூர்மையும் பளபளக்கும். ஆனால், அமைதி குடிகொண்டிருக்காது. மாறாக வீரம் கொப்பளிக்கும். நாட்டை ஆளும் தகுதி தனக்கு இருப்பதை அவரது உடல்மொழி சதா தெரியப்படுத்திக் கொண்டிருக்கும்.

எனில், இந்த பாலகன், தான் எண்ணியது போல் சாளுக்கிய இளவரசர் அல்ல. தொலைவில் இருந்து பார்த்தபோது எழுந்த ஐயம், அருகில் உற்றுப் பார்க்கையில் உதிர்ந்துவிட்டதை தெளிவாகவே சாளுக்கியர்களின் போர் அமைச்சர் உணர்ந்தார்.எனில், இந்த பாலகன் யார்..? தங்களது மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய சாளுக்கிய மன்னரின் மனம் கவர்ந்த இளைஞராக எப்படி மாறினார்..? எதனால் மன்னர் இந்தப் பாலகனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்..?

ராமபுண்ய வல்லபருக்குள் பூத்த அனைத்து வினாக்களுக்குமான விடை அடுத்தடுத்து அவருக்குக் கிடைக்கத் தொடங்கின. அதற்கு அச்சாரமாக சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் மலர்ச்சியுடன் அந்த பாலகனை வரவேற்றார்.‘‘வா குழந்தாய்... உனது வருகைக்காகத்தான் காத்திருக்கிறேன்... எப்படி இருக்கிறாய்..?’’‘‘தங்கள் ஆசியில் அடியேனுக்கு குறையேதும் இல்லை மன்னா..!’’ மீண்டும் ஒருமுறை விக்கிரமாதித்தரை வணங்கினான்.
‘‘சென்ற காரியம்..?’’

‘‘தங்கள் திட்டப்படியே சகலமும் அரங்கேறின...’’ சொன்ன பாலகன் தன் மடியில் இருந்த ஓலையை எடுத்து சாளுக்கிய மன்னரிடம் பயபக்தியுடன் கொடுத்தான்.மன்னரும் சரி... பாலகனும் சரி... தான், அங்கு இருப்பதையே பொருட்படுத்தவில்லை என்பதை ராமபுண்ய வல்லபர் உணர்ந்தார். காயப்பட்டது போல் அவர் உள்ளம் துடித்தது. கணப் பொழுதுதான். அதற்குள் தன் முன்னாலேயே அந்தரங்கமாக உரையாடத் தொடங்குகிறார்கள் என்றால் அந்தளவுக்கு தன்னை நம்புகிறார்கள் என்றுதானே அர்த்தம்..?

இந்த எண்ணம் துளிர்விட்டு சாளுக்கிய போர் அமைச்சரின் மேனி எங்கும் மலர்ந்ததும் உற்சாகமானார். இருவரது உரையாடலையும் உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கினார். பாலகன் கொடுத்த ஓலைக்குழலை வாங்கிய சாளுக்கிய மன்னர் உடனடியாக அதைப் பிரித்துப் பார்க்கவில்லை. மாறாக, ‘‘பிரச்னை ஒன்றுமில்லையே..? யாருக்கும் உன் மீது எந்த சந்தேகமும் எழவில்லையே..?’’ என்று கேட்டார்.

‘‘இல்லை மன்னா... தங்கள் திட்டப்படியே கரிகாலனுடன் சென்றேன்...’’ பாலகன் பதிலளித்தான்.‘‘கரிகாலனுக்கு உன் மீது எந்த சந்தேகமும்..?’’
‘‘ஏற்படவில்லை மன்னா! முழுமையாக என்னை நம்பினார். விசாரணை மண்டபத்தில் இருந்து என்னையும் சிவகாமியையும் அழைத்துச் சென்றவர் கெடில நதிக்கரைப் பக்கம் வந்ததும் தன் முத்திரை மோதிரத்தை எடுத்து என்னிடம் கொடுத்து காஞ்சிக்கு திரும்பிப் போகும்படி கூறினார்...’’
‘‘ம்...’’

‘‘அவரிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டவன் உங்கள் கட்டளையை நிறைவேற்றத் தொடங்கினேன். கரிகாலனின் முத்திரை மோதிரம் என்னிடம் இருந்ததால் ஆங்காங்கே மறைந்திருந்த பல்லவப் படைகள் என்னைத் தடுக்கவில்லை. நேராக மதுரைக்குச் சென்றேன்... பாண்டிய மன்னரைச் சந்தித்தேன்...’’

அதுவரை பாலகன் பேசிக் கொண்டிருந்ததை உன்னிப்பாக கவனித்து வந்த ராமபுண்ய வல்லபர் சட்டென்று பரபரப்படைந்தார்.
பாண்டிய மன்னரை பாலகன் சந்தித்தானா..?தனது போர் அமைச்சர் பரபரப்படைந்ததை கவனித்த விக்கிரமாதித்தரின் வதனத்தில் புன்னகை பூத்தது.
‘‘பாண்டிய மன்னர் என்ன சொன்னார்..?’’ பாலகனை நோக்கி சாளுக்கிய மன்னர் வினவினார்.

‘‘என்னிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால், உங்களிடம் கொடுக்கும்படி இந்த ஓலையைக் கொடுத்தனுப்பினார்...’’ என்றபடி மன்னரிடம், தான் கொடுத்த ஓலைக்குழலை பாலகன் சுட்டிக் காட்டினான்.‘‘வேறு செய்தி..?’’ தன்னிடம் இருந்த குழலைப் பார்த்தபடியே விக்கிரமாதித்தர் கேட்டார்.
‘‘இளவரசர் தகவல் அனுப்பியிருக்கிறார்...’’ ‘‘யார்...? நம் விநயாதித்தரா..?’’ அதுவரை அமைதியாக இருந்த ராமபுண்ய வல்லபர் உரையாடலில் நுழைந்தார்.

‘‘ஆம்... போர் அமைச்சரே...’’ மரியாதையுடன் அவருக்கு பதில் சொன்ன பாலகன், சாளுக்கிய மன்னரை ஏறிட்டான். ‘‘உங்கள் திட்டத்துக்கு இணங்கும் நிலையிலேயே பாண்டிய மன்னர் இருப்பதாகவும் எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்றும் இளவரசர் சொன்னார்...’’
‘‘அப்படியானால் சாளுக்கிய இளவரசரும் மதுரையில்தான் இருக்கிறாரா..?’’ அடக்க முடியாமல் மன்னரிடம் கேட்டார் ராமபுண்ய வல்லபர்.
‘‘ஆம் அமைச்சரே...’’ விக்கிரமாதித்தர் முகமெல்லாம் மலர புன்னகைத்தார். ‘‘நான்தான் அவனை அங்கு அனுப்பினேன்...’’
‘‘எதற்கு மன்னா..?’’ ராமபுண்ய வல்லபர் படபடத்தார்.

‘‘பல்லவர்களை வெற்றி கொள்ள!’’ சட்டென்று பதில் அளித்த விக்கிரமாதித்தரின் கண்கள் கனவுலகில் சஞ்சரிக்கத் தொடங்கின. சாளரத்தை நோக்கி நடந்தபடியே பேசத் தொடங்கினார்.‘‘பாண்டியர்களும் நமக்கு எதிரிதானே... தமிழகத்தையே வெற்றி கொள்ளத்தானே நாம் முயற்சிக்கிறோம்... அப்படியிருக்க எதற்காக பாண்டியர்களுடன் இப்பொழுது நட்பு பாராட்டுகிறோம்... என்றுதானே கேட்க வருகிறீர்கள்..?

காரணம் இருக்கிறது ராமபுண்ய வல்லபரே. பாண்டியர்கள் நமக்கு மட்டுமல்ல... பல்லவர்களுக்கும் எதிரிதான். எப்படி பல்லவர்களையும் பாண்டியர்களையும் ஜெயித்து சாளுக்கிய பேரரசை நாம் ஸ்தாபிக்க நினைக்கிறோமோ அப்படி பல்லவர்களும் நம்மையும் பாண்டியர்களையும் வெற்றி கொள்ள நினைக்கிறார்கள்; பாண்டியர்களும் நம்மையும் பல்லவர்களையும் வீழ்த்த வியூகம் வகுக்கிறார்கள்!

நம் மூவருக்குமே அடுத்த இருவரின் எண்ணம் தெரியும். போலவே, இரு எதிரிகளையும் ஒரே நேரத்தில் வீழ்த்த முடியாது என்பதையும் மூன்று அரசுகளும் அறிந்திருக்கின்றன. ஒருவரை வெற்றி கொண்ட பிறகே அடுத்தவரை நோக்கி நகர முடியும் என்ற புரிதல் மூன்று அரசுகளிடமும் நிலவுகின்றன.

எனவேதான் பல்லவர்கள் முந்துவதற்குள் நாம் காய்களை நகர்த்தியாக வேண்டும் என்று முடிவு செய்தேன். என் மகன் விநயாதித்தனை மதுரைக்கு அனுப்பி வைத்தேன். ‘பல்லவர்களுடன்தான் எங்களுக்குப் பகை... எங்கள் தலைநகரை தீக்கிரையாக்கிய பல்லவர்களைப் பழிக்குப் பழி வாங்கவே தமிழகத்துக்கு வந்திருக்கிறோம்... மற்றபடி பாண்டியர்கள் மீது போர் தொடுக்கும் எண்ணம் துளிக்கூட எங்களுக்கு இல்லை... எனவே நடக்கவிருக்கும் போரில் யார் பக்கமும் நிற்காமல் பாண்டியர்கள் நடுநிலை வகிக்க வேண்டும்...’ என பாண்டிய மன்னருக்கு வேண்டுகோள் வைத்தேன்.

முதல் கட்ட நடவடிக்கைகளை என் மகன் செய்துவிட்டான். இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன் அங்கிருக்கும் நிலையை அறிய இந்த பாலகனை அனுப்பி வைத்தேன்...’’ நிதானமாகச் சொன்னார் விக்கிரமாதித்தர்.‘‘இதற்கெல்லாம் அவகாசம் தேவை என்றுதான் கரிகாலனை காஞ்சிக்கு வரவைத்து போக்குக் காட்டினீர்களா மன்னா..?’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் வியப்புடன் கேட்டார்.ஆமோதிக்கும் வகையில் தலையசைத்தார் விக்கிரமாதித்தர்.

‘‘இந்த பாலகன் யார் மன்னா..?’’
கேட்ட தன் போர் அமைச்சருக்கு எந்த பதிலையும் சொல்லாமல் தன் கரங்களில் இருந்த ஓலைக் குழலைப் பிரிக்க விக்கிரமாதித்தர் முற்பட்டார்.
ஆனால், குழலை அவர் பிரிப்பதற்குள் -சாளரத்தில் ஒரு புறா வந்து அமர்ந்தது.பரபரப்புடன் அந்தப் புறாவைப் பிடித்து அதன் கால்களில் கட்டப்பட்டிருந்த பட்டுத் துணியைப் பிரித்தார்.வனத்தில் இருந்து சிவகாமிதான் அவருக்கு செய்தி அனுப்பி யிருந்தாள்!

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15990&id1=6&issue=20191004

Link to comment
Share on other sites

ரத்த மகுடம்-74

தன் மகன் விநயாதித்தன் குழந்தையாக இருந்தபோது கூட இந்தளவுக்கு அணைத்திருப்பாரா என்று தெரியாது. அந்தளவுக்கு சாளரத்தில் வந்து அமர்ந்த புறாவை எச்சரிக்கையுடன் தன் கையில் அள்ளி எடுத்து அணைத்தார் சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர்.அவசரப்படவே இல்லை. நிதானமாகவே இருந்தார். செய்தியை பார்ப்பதை விட, அச்செய்தியை சுமந்து வந்த புறாவுக்கு மரியாதை செலுத்துவதே மன்னரின் முதல் நோக்கமாக இருந்தது.
19.jpg
எனவே கையில் ஏந்திய புறாவின் தலையை ஆசை தீர முதலில் தடவினார். பிறகு புறாவின் உடலை குழந்தைகளுக்கு கால் பிடித்து விடுவதுபோல் பிடித்து விட்டார்.தன் கண்களை உயர்த்தி மன்னரைப் பார்த்தது அந்தப் புறா.புறாவின் எதிர்பார்ப்பு சாளுக்கிய மன்னருக்குப் புரிந்தது. எனவே அதை உயர்த்தி அதன் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டார்.

‘கீச்...’ என குரல் எழுப்பி தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட அப்புறா, அவரது கைகளில் தவழ்ந்தபடியே தன் சிறகை அசைத்தது.
புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக அதன் சிறகுகளை தன் விரல்களால் விரித்தார்.இலையின் காம்பு அளவுக்கு பட்டுத் துணி ஒன்று தென்பட்டது.
புறாவுக்கு வலிக்காதபடி அதை அதன் உடலில் இருந்து எடுத்தார்.

மகிழ்ச்சிக்கு அறிகுறியாக அப்புறா மீண்டும் ‘கீச்...’சிட்டது; திரும்பவும் தன் சிறகுகளை அசைத்தது.தன் மார்புடன் அப்புறாவை அணைத்து தன் கைகளை விரித்தார்.படபடவென சிறகுகளை அசைத்த அந்தப் புறா... மெல்ல அவரை வட்டமிட்டபடி பறந்தது; அவர் தோளில் அமர்ந்து தன் அலகால் அவர் கன்னத்தை முத்தமிட்டது!அடுத்த கணம் வந்த வழியே பறந்து சென்று மறைந்தது!இமைகளை மூடாமல் அதேநேரம் வியப்புடன் சாளுக்கியர்களின் போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபரும், கடிகை பாலகனும் இவற்றை எல்லாம் மவுனமாகப் பார்த்தார்கள்.

பறந்து சென்ற புறா மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்த சாளுக்கிய மன்னர், மலர்ச்சியுடன் சாளரத்தை விட்டுத் திரும்பி தன் முன்னால் நின்றுகொண்டிருந்த இருவரையும் பார்த்தார்.கண்களைச் சிமிட்டி, ‘‘நம் சிவகாமிதான் செய்தி அனுப்பியிருக்கிறாள்; அதுவும் நாம் எதிர்பார்த்த தகவல்...’’ என்றபடி தன் கையில் சுருட்டப்பட்டிருந்த பட்டுத்துணியைப் பார்த்தார்.பிறகு அதை மெல்ல பிரித்தார்.

சுருட்டப்பட்ட நிலையில் இலையின் காம்பைப் போல் காணப்பட்ட அத்துணி, விரிக்க விரிக்க ஓராள் உயரத்துக்கு வளர்ந்தது!
‘‘சீனர்களின் திறமைக்கு இந்தப் பட்டே சாட்சி!’’ பொதுப்படையாக அறிவித்த மன்னர் வழக்கத்துக்கு மாறான நிதானத்துடன் அதில் எழுதப்பட்டிருந்த வாசகங்களைப் படித்தார். ஒரு முறையல்ல... இரு முறையல்ல... ஐந்து முறைகள்.

‘‘எதிர்பார்த்தபடியே காரியங்கள் நடக்கின்றன...’’ ராமபுண்ய வல்லபரைப் பார்த்து விக்கிரமாதித்தர் சொன்னார். ‘‘திட்டமிட்டது நீங்கள் அல்லவா... எப்படி பிசகும்..?’’ தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் போர் அமைச்சர்.அதை ஆமோதிக்கும் விதமாக கடிகை பாலகன் லையசைத்தான்.‘‘திட்டமிட்டது நாமாக இருந்தாலும் அதைச் செயல்படுத்துவது சிவகாமிதானே... எனவே பெருமை அனைத்தும் அவளைத்தான் போய்ச் சேரவேண்டும்... அவளது தியாகத்துக்கு ஈடாக நம்மால் எதையும் கொடுக்க முடியாது ராமபுண்ய வல்லபரே...’’ பெருமூச்சு விட்ட சாளுக்கிய மன்னர் தன் ஆசனத்தில் அமர்ந்தார்.

‘‘சிவகாமி உருவத்தில் சென்றிருப்பவள் நம்மால் அனுப்பப்பட்டவள் என்பதை கரிகாலன் உணர்ந்துவிட்டான்... ஆனால், அதை நிரூபிக்க சரியான ருசு கிடைக்கவில்லை. அந்தளவுக்கு வலுவான பச்சிலை தைலத்தை நமது தலைமை மருத்துவர் மூன்று அடுக்குகளாக பூசியிருக்கிறார்... எனவே, காயம்பட்ட சிவகாமியை சிகிச்சை செய்த பல்லவ மருத்துவன், அவள் மீது தைலம் பூசப்பட்டிருப்பதைத்தெரிந்துகொண்டபோதும்... பூசிய தைலத்தை முற்றிலுமாக எடுத்துவிட்டபோதும்... அவளது உண்மை ஸ்வரூபம் வெளிப்படவே இல்லை! சட்டையை உரித்த பாம்பு மீண்டும் வேறொரு சட்டையை அணிந்து கொள்வதுபோல் சிவகாமி, சிவகாமியாகவே காட்சி அளிக்கிறாளாம்!’’

‘‘பலே! பலே!’’ தன்னை மறந்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ராமபுண்ய வல்லபர். ‘‘நம் தலைமை மருத்துவர் தைல காப்பில் கைதேர்ந்தவர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்!’’‘‘உண்மைதான் அமைச்சரே!’’ ஆமோதித்த மன்னர், ‘‘எனவே சிவகாமி சுதந்திரமாகவே பல்லவர்களின் படையில் நடமாடுகிறாளாம். அவ்வப்போது கரிகாலனுடன் கொஞ்சவும் அவள் தவறவில்லையாம். நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் மத்தியில் கரிகாலன் ஊசல் ஆடுகிறானாம்! சிவகாமியை விட்டுப் பிரியவும் முடியாமல் அவளைச் சிறை செய்யவும் இயலாமல் தவிக்கிறானாம்!’’ புன்னகைத்தார் விக்கிரமாதித்தர்.

‘‘தேகத்தின் இசையில் மயங்காத ஆணும் உண்டோ!’’ சிரித்தார் ராமபுண்ய வல்லபர்.‘‘இதன்பிறகு பல்லவர்களின் யானைப் படை, குதிரைப்படை, காலாட் படை குறித்த விவரங்களை பட்டியலிட்டிருக்கிறாள்... அவை இருக்கும் இடங்களையும் குறிப்பிட்டிருக்கிறாள்... அவை எல்லாம் உங்களுக்கு உதவும்! இந்தாருங்கள் அவள் அனுப்பிய செய்தி. கவனமாகப் படித்து அதற்கு ஏற்றபடி நம் படைகளை வழிநடத்துங்கள்!’’

மன்னர் கொடுத்த பட்டுச் சீலையை பயபக்தியுடன் பெற்றுக் கொண்ட ராமபுண்ய வல்லபர், அதை பத்திரமாக தன் இடுப்பில் செருகி வைத்துக் கொண்டார்.கடிகை பாலகன் அவர்கள் இருவரையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.அவன் பார்வையை விக்கிரமாதித்தர் கவனித்தார்.‘‘ஏன் அமைதியாக இருக்கிறாய்...?’’ சாளுக்கிய மன்னர் வாஞ்சையுடன் கேட்டார்.‘‘ஒன்றுமில்லை மன்னா...’’ தயக்கத்துடன் பாலகன் பதில் அளித்தான்.

‘‘பரவாயில்லை... மனதில் தோன்றுவதை வெளிப்படையாகச்சொல்...’’ என்றபடி தன் ஆசனத்தில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்தார் விக்கிரமாதித்தர்.
‘‘வேறென்ன சொல்லப் போகிறான்..? வியப்பைத்தான் வெளிப்படுத்தப் போகிறான்... அப்படித்தானே..?’’ ராமபுண்ய வல்லபர் புன்னகையுடன் அவனைப் பார்த்தார்.‘‘வியப்பைப் போல் தெரியவில்லை அமைச்சரே...’’ பதில் அளித்த மன்னர், பாலகனை அன்பு தவழ ஏறிட்டார்.

‘‘அச்சப்படத் தேவையில்லை... சொல்...’’ஒரு கணம் பாலகன் தயங்கினான். மறுகணம் அம்பென தன் மனதில் இருந்ததை வெளிப்படுத்தினான். ‘‘இந்தச் செய்தியே பொய்யாக இருக்கும் என்று தோன்றுகிறது மன்னா...’’அதிர்ந்து போனார் ராமபுண்ய வல்லபர். கண்கள் சிவக்க பதில் சொல்ல முற்பட்டார்.

தன் கரங்களை உயர்த்தி அவரைத் தடுத்த விக்கிரமாதித்தர், எந்த உணர்ச்சியும் இன்றி பாலகனிடம் கேட்டார். ‘‘எதை வைத்து அப்படிச் சொல்கிறாய்..?’’

‘‘கரிகாலனின் திறமையை வைத்து மன்னா...’’‘‘சற்று விளக்க முடியுமா..?’’‘‘கரிகாலனை அருகில் இருந்து பார்த்தவன் என்ற முறையில் இதை உறுதியாகச் சொல்கிறேன் மன்னா...
 
நிச்சயம் இதில் ஏதோ சூது இருக்கிறது...’’‘‘எந்த வகையில்..?’’‘‘ஒன்று இந்தச் செய்தியை கரிகாலனே அனுப்பியிருக்க வேண்டும்...’’
‘‘அதற்கு வாய்ப்பில்லை பாலகனே... எனக்கும் சிவகாமிக்கும் மட்டுமே தெரிந்த சங்கேத மொழியில் சில பகுதிகளை இதில் அவள் எழுதியிருக்கிறாள். எனவே இதை தன் கைப்பட எழுதியவள் சிவகாமிதான்...’’ விக்கிரமாதித்தர் நிதானமாகச் சொன்னார்.

‘‘அப்படியானால் இதை அனுப்பிய சிவகாமி நீங்கள் ஏற்பாடு செய்த சிவகாமியாக இருக்க வாய்ப்பில்லை...’’ துணிவுடன் சொன்னான் பாலகன்.
‘‘உளறாதே!’’ ராமபுண்ய வல்லபர் சீறினார்.‘‘பொறுங்கள் அமைச்சரே...’’ அவரைத் தடுத்துவிட்டு பாலகனின் நயனங்களை உற்று நோக்கினார் சாளுக்கிய மன்னர். ‘‘எதை வைத்து இந்த முடிவுக்கு வந்தாய்..?’’ ‘‘மன்னா! நம் அனுபவங்களைக் கேள்வி கேட்டு நம் திறமையை சந்தேகப்படும் அளவுக்கு இந்தப் பாலகன் முக்கியமானவனா..?’’ உதடுகள் துடிக்க ராமபுண்ய வல்லபர் கேட்டார்.
 
‘‘ஆம் அமைச்சரே!’’‘‘அப்படியானால் மன்னா... இந்தப் பாலகன் யார்..?’’‘‘வேளிர்களின் தலைவன்!’’ அழுத்தம்திருத்தமாக கஜ சாஸ்திரியிடம் சொன்னான் கரிகாலன். கஜ சாஸ்திரி எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தான்.கணங்கள் கடந்தன.
 
சட்டென கஜ சாஸ்திரி நிமிர்ந்தான். ‘‘வா கரிகாலா! இப்போது சிவகாமியின் விசாரணை நமக்காகக் காத்திருக்கிறது!’’மவுனமாக இருவரும் வனத்துக்குள் புகுந்து சிறிது தூரம் நடந்தார்கள்.
 

சட்டென வெட்ட வெளி கண்ணில் பட்டது.பல்லவ வீரர்கள் அமர்ந்திருக்க... சங்கிலியால் பிணைக்கப்பட்டு நெஞ்சை நிமிர்த்தியபடி சிவகாமி நின்று கொண்டிருந்தாள்!

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16021&id1=6&issue=20191011

Link to comment
Share on other sites

ரத்த மகுடம்-75

தன் வாழ்நாளில் அதுபோல் என்றும் கரிகாலன் அதிர்ந்ததில்லை... இனியும் இப்படியொரு அதிர்ச்சி தனக்கு ஏற்படாது என்பது அவனுக்கு திட்டவட்டமாகத் தெரியும். அந்தளவுக்கு மின்னல் தாக்கியது போலவும் இடி விழுந்தது போலவும் கரிகாலன் தடுமாறினான்.
31.jpg
காரணம், கஜ சாஸ்திரி உச்சரித்த ஒரேயொரு சொல்தான்.‘வேளிர்களின் தலைவன்’.தன்னை நிதானப்படுத்திக் கொள்ள கரிகாலனுக்கு பல கணங்கள் ஆகின. காஞ்சி மாநகரத்தில், தான் தப்பிக்க உதவிய கடிகை பாலகன் வேளிர்களின் தலைவனா...?இந்த வினாதான் அவனைச் சுற்றிச் சுற்றி வந்தது. இறுக்கமாக பிணைக்கவும் செய்தது.
 
இதைத் தொடர்ந்து காட்சிகளும் அவன் மனக்கண்ணில் விரிந்தன. காஞ்சி கடிகையில் அந்த பாலகனைச் சந்தித்ததும், பிறகு சுரங்கத்தில் அவனை எதிர்கொண்டதும், விசாரணை மண்டபத்தில் உயிரைத்துச்சமென நினைத்து அவன் நின்ற கோலமும் கரிகாலன் மனதில் வந்து வந்து போயின.
 
அனைத்தையும் கடந்து விஸ்வரூபம் எடுத்து நின்றது சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் மனம் கவர்ந்த மனிதனாக அந்த பாலகன் விளங்கியதுதான்... அப்போது பெருமையாக உணர்ந்த அந்த சேர்க்கை... இப்போது இடித்தது.

ஒரு நாட்டின் மன்னராக இருந்தபோதும் சாதாரணமாக கடிகையில் படிக்கும் ஒரு பாலகன் மீது விக்கிரமாதித்தர் அன்பைக் கொண்டிருக்கிறாரே... என்று அப்போது வியந்தது இப்போது விஷமாகக் காட்சியளித்தது. ஏனெனில் அந்த பாலகனும் சாளுக்கிய மன்னரும் பரஸ்பரம் மரியாதை செலுத்தி அன்பைப் பொழிவது பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் நல்லதல்லவே...

‘‘நிஜமாகத்தான் சொல்கிறீர்களா..? அந்த பாலகன் வேளிர்களின் தலைவனா..?’’ தன்னைக் கட்டுப்படுத்தியபடி கஜ சாஸ்திரியிடம் கரிகாலன் கேட்டான்.
உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத புன்னகையுடன் கரிகாலனை ஏறிட்டான் கஜ சாஸ்திரி. ‘‘உண்மையை மட்டுமே நான் சொல்வேன் என்பது உனக்குத் தெரியாதா..?’’கரிகாலன் தன் இமைகளை மூடினான். மனதில் சூழ்ந்த காரிருள் பார்வைக்கும் படர்ந்தது. ‘‘இந்தக் கூட்டணி தமிழகத்துக்கு மிக மிக ஆபத்தாயிற்றே..?’’ தன்னையும் மீறி முணுமுணுத்தான்.

‘‘தமிழகத்துக்கு அல்ல... பல்லவர்களுக்கு என்று குறிப்பிடுவதே சாலப் பொருத்தம் கரிகாலா...’’‘‘விளங்கவில்லை... என்ன சொல்ல வருகிறீர்கள்..?’’ இமைகளைப் பிரித்து சட்டென கஜசாஸ்திரியிடம் கேட்டான்.‘‘மதுரைக்குச் சென்று பாண்டியர்களைச் சந்தித்துவிட்டு அந்த பாலகன் திரும்பியிருக்கிறான் என்று சொல்கிறேன்...’’கரிகாலன் தன் உமிழ்நீரை விழுங்கினான். என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமைதியாக நின்றான்.
‘‘உண்மையிலேயே ஒரு மாபெரும் வீரன் முன்னால் நாம் நிற்கிறோம் கரிகாலா...

இன்றைய சரித்திரம் மட்டுமல்ல... நாளைய வரலாறும் சாளுக்கியர்களின் மாமன்னர் இரண்டாம் புலிகேசி என்றே குறிப்பிடும். ஆனால், உண்மையில் சாளுக்கிய மன்னர்களிலேயே சிறந்த விவேகியும் ராஜதந்திரியும் விக்கிரமாதித்தர்தான்... இந்த விஷயம் அவருக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் தெரியும்... என்றாலும் தன் தந்தை இரண்டாம் புலிகேசிக்கு மொத்த புகழையும் கொடுத்துவிட்டு அமைதியாக அவர் நிழலில் இளைப்பாறுகிறார்... எதிரியாக இருந்தாலும் விக்கிரமாதித்தர் வணக்கத்துக்கும் மரியாதைக்கும் உரியவர்...’’

‘‘இதே உணர்வைத்தான் வேறு வார்த்தைகளில் சாளுக்கிய மன்னரும் என்னிடம் வெளிப்படுத்தினார்...’’ வறண்ட குரலில் கரிகாலன் சொன்னான்.
‘‘அப்படியா..?’’ கஜ சாஸ்திரி கேட்டான்.‘‘ஆமாம்... நம் பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மரை மிக மிக உயர்வாக மதிக்கிறார்... நாட்டு மக்களைக் காக்கவும் கலைப் பொக்கிஷங்கள் சேதமடையக் கூடாது என்பதற்காகவும் தன் தலைநகரையே எதிரிகளிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்ற மகான் என்று குறிப்பிட்டார்... போரில் நம் அனைவரையும் சந்திக்கவே, தான் விரும்புவதாகவும், அதன் காரணமாகவே என்னையும் என் தந்தையையும் சிறை செய்ய முற்படும் அவரது போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபரின் நடவடிக்கைகளுக்கு எதிராக, தான் இருப்பதாகவும் சொன்னார்...’’
‘‘மாபெரும் வீரர் அல்லவா..? அதனால்தான் அப்படி நினைக்கிறார்...

நினைத்ததை தன் எதிரி நாட்டு உபதளபதியிடமும் மனம்திறந்து சொல்லியிருக்கிறார்... இது அவரது பலவீனத்தை காண்பிக்கவில்லை... மாறாக அவரது வீரத்தையே பறைசாற்றுகிறது... வீரர்களுக்கு என வகுக்கப்பட்ட அறத்துடனும் விழுமியங்களுடனும் பல்லவர்களை வெற்றி கொள்ள நினைக்கிறார்... இந்த விஷயத்தில் அறத்தை விட்டு விலக அவர் விரும்பவில்லை... அதேநேரம் தன் தேசத்துக்கு துரோகம் செய்யவும் அவர் முற்படவில்லை...

ராஜதந்திரமாக காய்களை நகர்த்தி பல்லவர்களை வேரோடு சாய்க்க திட்டமிடுகிறார்... இதன் வழியாக தன் தந்தைக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்க நினைக்கிறார்... மாபெரும் வீரரான விக்கிரமாதித்தர் வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம்... அந்த மாபெரும் வீரரை, மனிதரை எதிர்த்து போர்க்களத்தில் நிற்கப் போகிறோம்... என்பதில் பெருமை கொள் கரிகாலா...’’உணர்ச்சியின் கொந்தளிப்பை மறைக்காமல் கஜ சாஸ்திரி வெளிப்படுத்தினான்.

அவை எல்லாம் உண்மை என்பது கரிகாலனுக்கும் புரிந்தே இருந்தது. சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தரை நேருக்கு நேர் சந்தித்து உரையாடி அவரது மனப்போக்கை ஸ்படிகம் போல் அறிந்தவன் அவன்தானே..? எதிரிகளை எந்தளவுக்கு அவர் மதிக்கிறாரோ அதே அளவுக்கு தன் நாட்டுக்கு ஏற்பட்ட அவப்பெயரைத் துடைக்கவும் விக்கிரமாதித்தர் முற்படுகிறார் என்பதை அப்போது உணர்ந்தான். இப்போது கஜ சாஸ்திரியும் அதையே வெளிப்படுத்தியபோது சாளுக்கிய மன்னர் மீதான அவனது மரியாதை அதிகரிக்கவே செய்தது...

இதைத் தொடர்ந்து கிளைவிட்ட கரிகாலனின் சிந்தனை சட்டென்று நின்றது. காரணம், கஜ சாஸ்திரி தொடர்ந்து பேசியதுதான்.
‘‘நரசிம்மவர்ம பல்லவரும் அவரது படைத்தளபதியான பரஞ்ஜோதியும் சாளுக்கியர்களின் மாமன்னரான இரண்டாம் புலிகேசியை போரில் தோற்கடித்ததுடன் அவர்களது தலைநகரான வாதாபியையும் தீக்கிரையாக்கினார்கள். அதற்குப் பழிவாங்க இப்பொழுது விக்கிரமாதித்தர் புறப்பட்டு வந்திருக்கிறார்...

உண்மையில் நரசிம்மவர்ம பல்லவர் சாளுக்கியர்களை வென்றதைவிட இப்போதைய பல்லவ மன்னரான பரமேஸ்வர வர்மர் சாளுக்கியர்களை வெல்லப் போவதுதான் முக்கியம் கரிகாலா... இந்த விஷயம் நம்மை விட விக்கிரமாதித்தருக்கு நன்றாகத் தெரியும்... அதனால்தான் பல்லவர்களை முறியடிக்க தன் தந்தை திட்டமிடாத எல்லைக்குள் புகுந்து போர்த் தந்திரம் வகுத்திருக்கிறார்... அதன் ஒரு பகுதிதான் வேளிர்களின் தலைவனான அந்த கடிகை பாலகனை தன் பக்கம் ஈர்த்தது... அந்த பாலகனையே மதுரைக்கு அனுப்பி பாண்டியர்களிடம் பேச வைத்தது...’’நிறுத்திய கஜ சாஸ்திரி, நின்று கரிகாலனை உற்றுப் பார்த்தான்.

‘‘உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும் கரிகாலா... வேளிர்களை தன் பக்கம் ஈர்த்திருக்கும் விக்கிரமாதித்தரின் நடவடிக்கை
இதுவரை இந்த பாரத தேசம் காணாத யுத்த தந்திரம்...’’அது உண்மைதான் என்பது சோழனான கரிகாலனுக்கு நன்றாகவே தெரியும். ஏனெனில் வேளிர்களால் அதிகமும் பாதிக்கப்பட்டது அவனது முன்னோர்கள்தான். அரசுகள் உருவாகாத காலத்தில் தமிழகத்தின் நிலப்பரப்பை ஆண்டவர்கள் வேளிர்கள்தான்.

வேளிர் என்போர் சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒருசார் குடிமக்கள். இவர்களின் அரசராக இருந்தவர் ‘வேள்’ என அறியப்பட்டார். அரசன் பெயரோடு வேள் என்னும் சொல்லும் சேர்ந்து வந்ததால் வள்ளல் என்றும் அழைக்கப்பட்டார்கள். இதன் பொருள் உதவி என்பது.
ஆம். மற்றவர்களுக்கு கொடை அளிப்பதில் இவர்களே பெயர் போனவர்கள்.

கால மாற்றத்தில் அரசுகள் தோன்ற ஆரம்பித்து தமிழகத்தில் மூவேந்தர்களாக சோழ, பாண்டிய, சேரர்கள் தலைதூக்கியபோது அவர்களுக்குக் கட்டுப்படாமல் தன்னாட்சி நடத்தியவர்கள் வேளிர்கள்தான். என்றாலும் சமயத்துக்கு ஏற்றபடி மூவேந்தர்களுக்கும் வேளிர்கள் யுத்த காலங்களில் உதவியிருக்கிறார்கள்.

சங்ககால இலக்கியங்களின் அடிப்படையில் பாண்டிநாட்டு வேளிர்களாக ஆய் ஆண்டிரன், பொதியிற் செல்வன் திதியன், பாரிவேள், இருங்கோவேள் ஆகியோர் இருந்திருக்கிறார்கள். சோழநாட்டு வேளிர்களாக நெடுங்கை வேண்மான், நெடுவேளாதன், செல்லிக்கோமான் ஆதன் எழினி, வாட்டாற்று எழினியாதன், அழுந்தூர்வேள் திதியன், வேளேவ்வி, வீரைவேண்மான் வெளியன் தித்தன், நன்னன்சேய் நன்னன், பொருநன் உள்ளிட்டோர் திகழ்ந்திருக்கிறார்கள்.

சேரநாட்டு வேளிர்களாக நெடுவேளாவி, வேளாவிக் கோமான் பதுமன், வையாவிக் கோப்பெரும் பேகன், நன்னன் வேண்மான், வெளியன் வேண்மான் ஆய், எயினன், வெளிமான், எருமையூரன் ஆகியோர் வாழ்ந்திருக்கிறார்கள்.

இவர்கள் தவிர வரலாற்றின் ஏடுகளில் பதிவாகாத எண்ணற்ற வேளிர்கள் தத்தம் மக்களின் காவலர்களாக இருந்திருக்கிறார்கள். அரசு உருவாக்கத்துக்கு எதிராகவும் மூவேந்தர்கள் நிலப்பரப்பை கூறுபோட்டு ஆளவும் தடைக் கற்களாக இருந்த இவர்களை எதிர்த்து சோழ, பாண்டிய, சேர அரசர்கள் இணைந்தும், விலகியும் பல காலம் போர் புரிந்திருக்கிறார்கள்.ஒரு கட்டத்தில் வேளிர்கள் அனைவரும் ஒடுக்கப்பட்டார்கள். இதன் பிறகே பல்லவர்கள் தோன்றினார்கள்.
 
காலங்கள் உருண்டோடியபோதும் மக்கள் மனதில் இன்றும் வேளிர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். பாணர்கள் நாள்தோறும் வேளிர்களின் அருமை பெருமைகளைப் பாடித் திரிகிறார்கள். கலைஞர்கள் விழாக்காலங்களில் கூத்து நடத்தி வேளிர்களின் புகழை அணையாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.
 
இந்நிலையில் வெளிப்படையாக இல்லாமல் ரகசியக் குழுவாக இன்றும் வேளிர்களின் தலைவர்கள் சந்தித்து அவ்வப்போது தங்கள் பழம்பெருமைகளைப் பேசி வருகிறார்கள் என கரிகாலன் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால், ஒருபோதும் அதற்கு அவன் அழுத்தம் கொடுத்ததில்லை. ஆட்சியும் நிலமும் படைபலமும் இல்லாத அவர்களால் என்ன செய்ய முடியும் என அலட்சியமாக இருந்துவிட்டான்.

ஆனால், அப்படி, தான் அலட்சியப்படுத்தியதையே பல்லவர்களுக்கு எதிரான போரில் முக்கிய துருப்புச் சீட்டாக சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர் பயன்படுத்த முற்படுகிறார் என்பதை அறிந்ததும் கரிகாலன் உண்மையிலேயே நிலைகுலைந்தான்.

ஏற்கனவே பல்லவர்களின் மூதாதையர்கள் எந்த இனம், நிலப்பரப்பைச் சேர்ந்தவர்கள் என்ற சர்ச்சை அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வரும் நிலையில் மண்ணின் மைந்தர்களாக பழம்பெருமை பேசி வரும் வேளிர்கள் சாளுக்கியர்களின் பக்கம் சேர்ந்தால் கண்டிப்பாக அதன் தாக்கம் பல்லவப் படைகளில் எதிரொலிக்கும் என்பதை நினைத்து கரிகாலன் கவலைப்பட்டான். போதும் போதாததற்கு வேளிர்களின் தலைவனான கடிகை பாலகன் வேறு பாண்டிய மன்னரைச் சந்தித்திருக்கிறான்...

‘‘சாளுக்கியர்களின் சார்பில் தூது சென்ற வேளிர்களின் தலைவருக்கு பாண்டிய மன்னர் என்ன பதில் சொல்லி அனுப்பினார்..?’’ சட்டென கஜ சாஸ்திரியிடம் கேட்டான் கரிகாலன்.பதில் சொல்ல முற்பட்ட கஜ சாஸ்திரி திடீரென்று அமைதியானான்.காரணம், கண் முன்னால் விரிந்த காட்சி.
பேசிக்கொண்டே வனத்தில் நடந்து வந்த கஜ சாஸ்திரியும் கரிகாலனும் இப்பொழுது வெட்ட வெளியை அடைந்திருந்தார்கள்.

அங்கு பல்லவ வீரர்கள் அமர்ந்திருக்க... சங்கிலியால் பிணைக்கப்பட்டு நெஞ்சை நிமிர்த்தியபடி சிவகாமி நின்றுகொண்டிருந்தாள்!தொலைவில் இருந்து அவளைப் பார்த்த கரிகாலனின் கண்கள் இடுங்கின. ஒரே சிவகாமிதான் அங்கு நின்றிருந்தாள்.
 
ஆனால், அவள் ஒருத்தி அல்ல. அசுவ சாஸ்திரி, வாள் சண்டை வீராங்கனை, அம்புகளைக் குறி தவறாமல் எய்யும் வித்தை அறிந்தவள், தன்னுடன் காதல் மொழி பேசியவள், சாளுக்கியர்களின் ஒற்றர் படைத் தலைவி... என பல முகம் கொண்டவள். இதில் எந்த முகம் உண்மை வதனம்..? அறிந்தபோது கரிகாலனின் உணர்வுகள் ஊசி முனையில் ஆடத் தொடங்கின...அவளா இவள்..?!
Link to comment
Share on other sites

ரத்த மகுடம்-76

பல்வேறு உணர்வுகளால் சூழப்பட்ட கரிகாலன், நிதானமாக கஜ சாஸ்திரிக்கு பின்னால் நடந்து வந்தான்.கடிகை பாலகன் குறித்த உண்மை ஒருபக்கம் அவனைச் சுழன்றடித்தது என்றால் நடக்கவிருக்கும் சிவகாமி குறித்த விசாரணை முற்றிலுமாக கரிகாலனை அலைக்கழித்தது.இதுநாள் வரை தன் கணிப்பின் மேல் அலாதியான நம்பிக்கை கொண்டிருந்த அவன், அவை அனைத்துமே தவிடுபொடியானதில் நிலைகுலைந்தான்.
18.jpg

வேளிர்களின் தலைவனாக கடிகை பாலகன் இருப்பான் என்பது சற்றும் அவன் எதிர்பாராதது. அவனுடன் பழகிய பொழுதுகளில் இம்மி அளவுக்குக் கூட எவ்வித சந்தேகமும் அந்த பாலகன் மீது அவனுக்கு ஏற்படவில்லை. இந்தளவுக்கா, தான் மதியிழந்து இருப்போம்..?திகைத்த கரிகாலனுக்கு சாளுக்கியர்களின் ஒற்றர் படைத்தலைவியாக சிவகாமி நிற்கும் நிலை பித்துப் பிடிக்க வைத்தது.
 
அவளுடன் ஒட்டி உறவாடிய பொழுதுகளும், உரசியபடி இருந்த காலங்களும், உதடுகளால் ஒற்றி எடுத்த கணங்களும் வந்து வந்து போயின. எந்தச் சூழலிலும் அவளை, தான் சந்தேகிக்கவில்லை என்பதை கரிகாலனால் நம்பவும் முடியவில்லை; நம்பாமல் இருக்கவும் இயலவில்லை.


அந்த அளவுக்கா காமத்தின் பிடியில், தான் சிக்கியிருக்கிறோம்..? இத்தனைக்கும் ஹிரண்யவர்மர் முதல் சாளுக்கிய மன்னர் வரை பலரும் சிவகாமியை நம்ப வேண்டாம் என தன்னை எச்சரித்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் மையலில் கட்டுண்டு கிடந்திருக்கிறோம் என்றால்... உண்மையில் விசாரணை நடைபெற வேண்டியது சிவகாமிக்கு அல்ல. பல்லவ வீரர்கள் சூழல் தன்னைத்தான் விசாரிக்க வேண்டும்.

போர் மேகங்கள் சூழ்ந்த நிலையில் எதிரி நாட்டு ஒற்றர் படைத் தலைவியுடன் தங்கள் நாட்டு உபதளபதி ஒட்டி உறவாடியிருக்கிறார் என்பதை அறியும் பல்லவ படையைச் சேர்ந்த ஒவ்வொரு வீரனும் தன் மீது கோபம் கொள்ளவே செய்வான்... அதுதான் நியாயமும் கூட.சிவகாமியின் மீதான விசாரணை எப்படிச் சென்றாலும் நடந்தாலும் சரி... அதில் நாம் பங்கேற்கக் கூடாது... பார்வையாளனாக மட்டுமே நிற்கவேண்டும். அவளுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டதும், தானாகவே முன்வந்து தன்னையும் அக்குற்றத்தில் இணைத்து தண்டனையைப் பெறவேண்டும். இதுதான்... இது மட்டும்தான்... நாட்டுப்பற்றுக்கு, தான் ஆற்றும் உச்சபட்ச செயலாக இருக்கும்.

முடிவுக்கு வந்த கரிகாலனின் எண்ணங்கள் ஊசலாட்டத்தை நிறுத்தின. மனதில் பிறந்த தெளிவு அவன் நடையிலும் எதிரொலித்தது.
கரிகாலனின் காலடி ஓசையை வைத்தே அவனது எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொண்ட கஜ சாஸ்திரியின் உதட்டில் புன்னகை பூத்தது. எதுவும் சொல்லாமலேயே முன்னால் நடந்தான்.

கால் நாழிகை பயணத்துக்குப் பின் இருவரும் அடர் வனத்தின் மத்தியில் இருந்த அந்த வெட்டவெளிக்கு வந்தார்கள்.
வட்ட வடிவில் பல்லவ வீரர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு நடுவில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் அலட்சியமாக சிவகாமி நின்றிருந்தாள். அவளது முகம் மட்டுமல்ல... பார்வை கூட தரையைப் பார்வையிடவில்லை.

சற்றுத் தொலைவில் குறிப்பிட்ட இடைவெளியில் வில் அம்புகளுடனும், வாள் வேல்களுடனும் சில பல்லவ வீரர்கள் நின்றிருந்தார்கள்.
சூழ்ந்த இருளைப் போக்க ஆங்காங்கே தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டு மரத்தில் கட்டப்பட்டிருந்தன.சருகுகள் மிதிபடும் ஓசையைக் கேட்டு அந்தப் பக்கம் திரும்பிய பல்லவ வீரர்கள், கஜ சாஸ்திரியையும், கரிகாலனையும் கண்டதும் பரபரப்பானார்கள்.

அமர்ந்திருந்த வீரர்கள் சட்டென எழுந்து நின்றார்கள்.யார் ஜாடை காட்டினார்கள் அல்லது கண்களால் சைகை செய்தார்கள் என்று தெரியாது. ஆனால், ஜெயகோஷம் எழுப்ப தங்கள் வாய்களைத் திறந்த பல்லவ வீரர்கள் அனைவரும் சொல்லி வைத்ததுபோல் சட்டென்று உதட்டை மூடினார்கள்.
பார்வையால் அங்கிருந்த ஒவ்வொரு வீரனிடமும் உரையாடியபடியே சிவகாமிக்கு அருகில் வந்த கஜ சாஸ்திரி, சற்றே ஓரமாக இருந்த பாறையின் மீது அமர்ந்தான்.

கரிகாலன் அவனுக்கு அருகில் நின்றுகொண்டான்.கஜ சாஸ்திரி அமர்ந்ததுமே அதுவரை தரையில் அமர்ந்திருந்த பல்லவ வீரர்கள் மீண்டும் அதே புல்தரையில் அமர்ந்தார்கள்.எங்கும் அமைதி. சூழலை, தானும் உணர்ந்து கொண்டதற்கு அறிகுறியாக இலைகளை அசைக்கவும் காற்று மறந்தது.
சிவகாமியையே பார்த்துக்கொண்டிருந்த கஜ சாஸ்திரி தன் பார்வையை விலக்கி சுற்றிலும் பார்த்தான்.
 

உடனே சற்று தள்ளி நின்றிருந்த நடுத்தர வயதுள்ள மனிதன் முன்னால் வந்து நின்றான். அங்கிருந்த படைக்கு அவன்தான் தலைவன் என்பது பார்த்ததுமே புரிந்தது. தன் உடலை வளைத்து வணங்க முற்பட்டவனின் கருவிழிகளை கஜ சாஸ்திரி உற்று நோக்கினான்.
 

அதிலிருந்து என்ன செய்தியை அத்தலைவன் உள்வாங்கினானோ... வளைய முற்பட்ட தன் உடலைச் சமாளித்து நிறுத்தியவன் கண்களால் மட்டும் கஜ சாஸ்திரியை வணங்கிவிட்டு தொண்டையைக் கனைத்தான்.

திரும்பி சிவகாமியை ஒரு பார்வை பார்த்தான். ‘‘நம் பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மரின் வளர்ப்பு மகள் சிவகாமி, தான்தான் என்று அறிவித்தபடி நம் படைக்குள் ஊடுருவிய இந்தப் பெண்... உண்மையில் சாளுக்கியர்களின் ஒற்றர் படைத் தலைவி. இதற்கான அத்தாட்சிகள் ஏற்கனவே இங்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன...’’அறிவித்துவிட்டு சில அடிகள் பின்னோக்கி நகர்ந்து கூட்டத்துடன் கலந்து நின்றான் அந்தத் தலைவன்.

துடிக்கும் இதயத்தை அடக்கியபடி சங்கிலியால் பிணைக்கப்பட்டு நின்றிருந்த சிவகாமியை விழி அகற்றாமல் பார்த்தான் கரிகாலன்.அவன் பக்கமே அவள் திரும்பவில்லை. மாறாக அவள் பார்வை பாறையின் மீது அமர்ந்திருந்த கஜ சாஸ்திரியின் மீதே படிந்திருந்தது. மரணதண்டனை தனக்கு விதிக்கப்படலாம் என்ற நிலையிலும் எவ்வித பதற்றமும் இன்றி அவள் நின்றிருந்தாள். உதட்டோரம் புன்னகையும் பூத்தது.

‘‘இப்படியொரு சூழலில் தங்களை சந்திப்பேன் என்று துளியும் நான் எதிர்பார்க்கவில்லை...’’ அமைதியைக் கிழித்தபடி கஜ சாஸ்திரி சொற்களை உச்சரித்தான். அதில் கோபம் வெளிப்படவில்லை. மரியாதையே நிரம்பி வழிந்தது என்பதை கரிகாலன் கவனித்தான். பொதுவாக பல்லவர்களின் இயல்பு அதுதான். எதிரியாகவே இருந்தாலும் மரியாதையுடன் நடத்துவதே வழக்கம். என்றாலும் அந்தப் பொதுத்தன்மையை மீறி சிவகாமியின் மீது ஒரு வாஞ்சை கஜ சாஸ்திரியிடம் வெளிப்பட்டதை கவனிக்க கரிகாலன் தயங்கவில்லை.

இனம் புரியாத உணர்வுகள் அவனைச் சூழத் தொடங்கின. என்ன நடக்கிறது இங்கே... அல்லது என்ன நடக்கப் போகிறது இங்கே... ஒவ்வொரு அணுவிலும் பூத்த பரபரப்பை அரும்பாடுபட்டு அடக்கினான். எது நடந்தாலும் அல்லது நடக்கப் போவதாக இருந்தாலும் அதை உச்சி முதல் உள்ளங்கால் வரை கவனிப்பதுதான் இப்போதிருக்கும் ஒரே வழி...

ஆனாலும் முற்றிலும் எதிர்பாராத விஷயங்கள் நடக்கப் போகின்றன என்பதை கரிகாலனின் உள்ளுணர்வு அறிவித்தது. நடப்பது விசாரணையாகவே தெரியவில்லை... ஏதோ அறிந்தவர்களுக்குள் நடைபெறும் சகஜமான உரையாடல்களாகவே தென்பட்டது.
பரபரப்புக்கும் அமைதிக்கும் இடையில் கரிகாலன் ஊசலாடிய கணத்தில், அவன் உணர்வு மேலும் வெடித்துச் சிதறும் வண்ணம் கஜ சாஸ்திரி கேட்ட கேள்விக்கு சிவகாமி பதிலளித்தாள்.

‘‘ஆம்... இப்படியொரு சூழலில் தங்களைச் சந்திக்க நேரும் என நானும் எதிர்பார்க்கவில்லை...’’
கஜ சாஸ்திரி புன்னகைத்தான். ‘‘வேறு எந்த சூழலில் என்னைச்சந்திக்க வேண்டும் என நீங்கள் நினைத்தீர்கள்..?’’
‘‘அது பல்லவர்களின் உபதளபதியும் உங்கள் நண்பருமான கரிகாலருக்கு நன்றாகவே தெரியும்...’’ ‘‘யார்... இவனையா சொல்கிறீர்கள்..?’’ திரும்பாமலேயே தன் கைகளை மட்டும் கரிகாலனை நோக்கி சுட்டிக் காட்டி கஜ சாஸ்திரி கேட்டான்.

‘‘ஆம்... பாரத தேசத்தின் தலைசிறந்த அசுவ சாஸ்திரியான தங்கள் நண்பரைத்தான் குறிப்பிடுகிறேன்... தங்களைச் சந்திக்கும் பொருட்டுதான் அவரையே முதன்முதலில் சந்தித்தேன்... அதுவும் தங்களது குருவான புலவர் தண்டியின் கட்டளைப்படி...’’ சிவகாமி அலட்சியமாக பதில் சொன்னாள்.
கரிகாலன் எதையோ சொல்ல முற்பட்டான்.தன் கரங்களை உயர்த்தி அதைத் தடுத்த கஜ சாஸ்திரி, ‘‘அப்படி ஏதும் நீங்கள் சொல்லவில்லை என்கிறார் என் நண்பர்...’’ என்றான்.‘‘அவர் பொய் சொல்கிறார்...’’ சிவகாமி அழுத்தம்திருத்தமாகச் சொன்னாள்.

‘‘இல்லை... நீ... நீங்கள் பல்லவர்களின் கஜ சாஸ்திரியைச் சந்திக்க வேண்டும் என என்னிடம் சொல்லவோ கேட்கவோ இல்லை...’’ கரிகாலன் சட்டென பதிலளித்தான்.‘‘ஆமாம்... கஜ சாஸ்திரி என்று எங்குமே... எந்த இடத்திலுமே இவரை நான் குறிப்பிடவில்லை...’’ நிறுத்திய சிவகாமி, புன்னகையுடன் பாறையில் அமர்ந்திருந்த கஜ சாஸ்திரியைப் பார்த்தாள். கருவிழியை உயர்த்தி கரிகாலனை ஏறிட்டாள். ‘‘பல்லவ இளவரசரைச் சந்திக்க வேண்டும்... அவரிடம் ஒரு விஷயத்தைத் தெரிவிக்க வேண்டும்...

என்றுதான் தங்களிடம் சொன்னேன்... கேட்டுக்கொண்டேன்... இது உண்மையா இல்லையா..?’’கரிகாலனின் புருவங்கள் விரிந்தன. தரையில் அமர்ந்திருந்த வீரர்களும், காவலுக்கு நின்றபடி தன் செவிகளை இந்தப் பக்கம் திருப்பி இருந்த வீரர்களும் பரபரப்படைந்தார்கள்.அனைத்து மாறுதல்களையும் கவனித்தபடி, ‘‘இந்த பாரத தேசத்தின் தலைசிறந்த கஜ சாஸ்திரியும் பல்லவ இளவரசர் இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவர் என்கிற இராஜசிம்ம பல்லவரும் வேறு வேறல்ல என்பது பிறந்த குழந்தைக்கும் தெரியும்... அப்படியிருக்க சாளுக்கியர்களின் ஒற்றர் படைத்தலைவியாக குற்றம்சாட்டப்பட்டு உங்கள் முன் நிற்கும் எனக்கு இதுகூடத் தெரியாமலா இருக்கும்..?’’ நிதானமாகக் கேட்டாள் சிவகாமி.

மறுகணம் வாய்விட்டுச் சிரித்தார் - ஆம்... இனி பல்லவ இளவரசரை மரியாதையுடன் அழைப்பதுதானே முறை - கஜ சாஸ்திரி என அதுவரை அறியப்பட்ட பல்லவ இளவரசர். ‘‘ஆக... நான் யாரென்பது தங்களுக்கு முன்பே தெரியும்..?’’‘‘ஆம்...’’‘‘எங்கள் ரகசியங்கள் அனைத்தையும் அறிவீர்கள்..?’’‘‘அப்படித்தான் குற்றம்சாட்டப்பட்டு உங்கள் முன்னால்
நிறுத்தப்பட்டிருக்கிறேன்!’’

‘‘இப்படி நீங்கள் சொல்வதில் இருந்து உங்கள்மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொள்கிறீர்கள் என எடுத்துக் கொள்ளலாமா..?’’
‘‘அது இளவரசரின் விருப்பம் சார்ந்தது...’’‘‘எனது விருப்பமா..?’’‘‘ஆம் இளவரசரே! ‘குற்றங்கள்’ என நீங்கள் சொல்கிறீர்கள்... நானோ ‘குற்றம்சாட்டப்பட்டு’ என்கிறேன்... இரண்டுக்குமான பொருள் வேறு வேறு என்பது தாங்கள் அறியாததல்ல...’’
 

‘‘நான் அறிந்ததைக் குறித்து இங்கு விசாரணை நடைபெறவில்லை... கரிகாலர் அறிந்ததை வைத்து தங்கள் மீது சந்தேகத்தின் நிழல் படிந்திருக்கிறது... ஓலைக்குழலுடன் சிக்கிய சாளுக்கிய வீரர்கள் உதிர்த்த விவரங்கள் அந்த நிழலை வீரர்கள் மத்தியில் நிஜமாக்கி இருக்கிறது... எனவேதான் நீங்கள் இங்கு நிறுத்தப்பட்டிருக்கிறீர்கள்...’’‘‘நிழலை நீங்களாகவே நிஜமாக்கிய பின்னர்...
 
நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? கையோடு தீர்ப்பையும் அளித்து விடுங்கள்... அது மரண தண்டனை எனில் தங்கள் நண்பர் கரிகாலரின் கையால் என் கழுத்து சீவப்பட வேண்டும்... இது மட்டுமே எனது வேண்டுகோள்...’’


‘‘உங்கள் வேண்டுகோளை கடைசியாக பரிசீலிக்கலாம்... இப்போது உங்கள் தரப்பை தாங்கள் சொல்லலாம்... இவர்கள் நினைக்கும் நிஜம் வெறும் நிழல்தான் என்பதை புரிய வைக்கலாம்...’’பல்லவ இளவரசர் இப்படிச் சொல்லி முடித்ததும் கண்கள் சிவக்க சிவகாமி பேசத் தொடங்கினாள்.அந்த கொற்றவையே வந்து தங்கள் முன்னால் பேசுவது போல் அங்கிருந்தவர்கள் உணர்ந்தார்கள்!

Link to comment
Share on other sites

ரத்த மகுடம்-77

‘‘என் தரப்பை எதற்காக நான் முன்வைக்க வேண்டும் இளவரசே..?’’ சாதாரணமாகத்தான் சிவகாமி கேட்டாள். ஆனால், அதில் இருந்த சீற்றத்தை அங்கிருந்த பல்லவ வீரர்களால் உணர முடிந்தது.‘‘இவர்கள் நினைக்கும் நிஜம் வெறும் நிழல்தான் என்பதை நீங்கள் புரிய வைக்க வேண்டாமா..?’’ இயல்பாகச் சொன்னார் பல்லவ இளவரசர் இராஜசிம்மர்.‘‘புரிய வைத்து..?’’
‘‘நீங்கள் குற்றமற்றவர் என விடுதலை பெறலாம்...’’
20.jpg
‘‘அப்படியொரு விடுதலையை நான் விரும்பவில்லை இளவரசே!’’ அழுத்தம்திருத்தமாகச் சொன்னாள் சிவகாமி.
‘‘சில கணங்களுக்கு முன் தாங்கள்தானே குற்றங்களுக்கும் குற்றச்சாட்டுக்கும் இருக்கும் வேறுபாட்டை அடிக்கோடிட்டுக் காட்டி
னீர்கள்..?’’‘‘பெண் அல்லவா..? சற்றே உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை உதிர்த்துவிட்டேன்... நான் சொன்னதை மறந்துவிடுங்கள்...

என்னை நிரூபித்து இங்கிருக்கும் அனைவரிடமும் நல்லெண்ணம் பெற விரும்பவில்லை... அதை அவமானமாகக் கருதுகிறேன்... உங்கள் நண்பர் கரிகாலர் உட்பட இங்கிருக்கும் அனைவரும் என்மீது சுமத்திய எல்லாவற்றையும் அப்படியே ஏற்கிறேன்... இதற்கு என்ன தண்டனையோ அதை வழங்குங்கள்... மரண தண்டனை என்றால் மிக்க மகிழ்ச்சி அடைவேன் இளவரசே... முன்பே சொன்னபடி என் சிரசை நீக்கும் பொறுப்பை தங்கள் நண்பர் கரிகாலர் ஏற்க வேண்டும்... இது மட்டுமே எனது வேண்டுகோள்...’’

‘‘உங்கள் வேண்டுகோளை கடைசியாகப் பார்க்கலாம்...’’ முன்பு சொன்னதையே மீண்டும் உச்சரித்த பல்லவ இளவரசர், புன்னகைத்தார். ‘‘யாரங்கே...’’ பல்லவ வீரனை அழைத்தவர், ‘‘இவர்களைக் கட்டியிருக்கும் சங்கிலியை முதலில் அகற்றுங்கள்...’’கட்டளைக்கு அடிபணிந்து அந்த வீரன் சிவகாமியைப் பிணைத்திருந்த சங்கிலியை அகற்றினான்.மாறாப் புன்னகையுடன் சிவகாமியை ஏறிட்டார் இராஜசிம்மர். ‘‘ஆக, நீங்களாக உங்கள் தரப்பை முன்வைக்க விரும்பவில்லை... அப்படித்தானே..?’’
‘‘ஆம்...’’

‘‘எனில் சில வினாக்களுக்கு விடை அளியுங்கள்...’’
‘‘கட்டளையா..?’’‘‘இல்லை... வேண்டுகோள்...’’
சொன்ன பல்லவ இளவரசரை உற்றுப் பார்த்தாள் சிவகாமி. ‘‘குற்றவாளியிடம் வேண்டுகோள் வைக்கும் இளவரசரை இப்பொழுதுதான் பார்க்கிறேன்...’’
‘‘குற்றம்சாட்டப்பட்டு நிற்பவர் அதே இளவரசரின் தங்கை என்னும்போது எப்படி கட்டளையிட முடியும்..?’’

‘‘நான் உங்கள் தங்கை அல்ல இளவரசே... உங்கள் தங்கையின் தோற்றத்தில் வந்திருக்கும் சாளுக்கியர்களின் ஒற்றர் படைத் தலைவி... பல்லவர்கள் மத்தியில் ஊடுருவ பச்சிலைக் களிம்புகளால் தோற்றத்தையே மாற்றிக்கொண்டவள்... இதை உங்கள் நண்பர் கரிகாலர் தக்க சமயத்தில் கண்டுபிடித்துவிட்டார்...’’

‘‘அதாவது அம்புகள் பாய்ந்த நிலையில் இருந்த உங்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது இந்த உண்மையை இவன் கண்டுபிடித்தான்... அப்படித்தானே..?’’
‘‘ஆம்...’’‘‘இது நம்பும்படியாக இல்லையே... காயங்களைக் குணப்படுத்த உதவும் பச்சிலைக் களிம்பு எப்படி ஒரு மனிதரின் தோற்றத்தையே மாற்றும்..?’’
‘‘சாளுக்கியர்களின் பச்சிலை ரகசியங்கள் எல்லா வித்தைகளையும் அரங்கேற்றும்...

இதற்கு சாட்சி காலத்தால் அழியாத அஜந்தா குகை ஓவியங்கள்... அந்த வர்ணக் கலவை ரகசியங்களை அறியத்தான் ஆயனச் சிற்பியும் மகேந்திரவர்மரும் அரும்பாடு பட்டார்கள்... மாறுவேடத்தில் எங்கள் சாளுக்கிய நாட்டுக்குள் புகுந்து இதைத் தெரிந்து கொள்ளவும் மகேந்திரவர்மர் முற்பட்டார்... இவை எல்லாம் தாங்கள் அறியாததல்ல...’’‘‘அறிந்ததால்தான் ஐயமே ஏற்பட்டிருக்கிறது...’’‘‘புரியவில்லை இளவரசே...’’

‘‘அவ்வளவு சக்தி வாய்ந்த மூலிகை ரகசியங்களை அறிந்த சாளுக்கியர்கள் ஒரு சிகிச்சையின்போது தங்கள் மர்மம் வெளிப்படும் வகையிலா பச்சிலைக் களிம்புகளை உங்கள்மீது பூசி தோற்றத்தை மாற்றியிருப்பார்கள்..? சாளுக்கியர்களின் தலைமை மருத்துவர் இந்தளவுக்கு அலட்சியமாக இருப்பவர் அல்ல...’’

‘‘ஒப்புக் கொள்கிறேன் இளவரசே... அதேநேரம் பல்லவர்களின் மருத்துவக் குழுவும் சாதாரணமானதல்ல... களிம்பு ரகசியங்களை அவர்கள் அறியாமல் இருக்கலாம்... ஆனால், பச்சிலைகள் என்னவெல்லாம் செய்யும் என்பதை நன்கு அறிந்தவர்கள்... அதனால்தான் என் ரகசியத்தை அவர்கள் கண்டுபிடித்தார்கள்...’’

‘‘அது ரகசியமே இல்லை என்றல்லவா நான் சொல்கிறேன்..!’’ உதட்டோரம் புன்னகை வழிய பல்லவ இளவரசர் சொன்னார். ‘‘நீங்கள் சிவகாமியின் தோற்றத்தில் வந்திருப்பவர்தான்... அதற்காக களிம்பைப் பூசி உங்கள் தோற்றத்தையே மாற்றியிருப்பவர்தான்... அதனால்தான் அம்பு பாய்ந்ததற்கு உங்களுக்கு சிகிச்சை அளித்த எங்கள் மருத்துவர்கள் இந்த தோற்ற மாறுதலைக் கண்டுபிடித்தார்கள்... ஆனால், சாளுக்கியர்கள் அனுப்பிய ஆயுதம் நீங்கள் அல்ல!’’

இராஜசிம்மர் இப்படிச் சொன்னதும் அங்கிருந்த பல்லவ வீரர்கள் பரபரப்படைந்தார்கள். விசாரணையின் தொடக்கம் முதலே மரியாதையுடன் அவர் சிவகாமியை அழைத்து வந்ததற்கான காரணம் அவர்களுக்குப் புரிவதுபோலவும் புரியாதது போலவும் இருந்தது.

பல்லவ இளவரசரின் பின்னால் நின்றிருந்த கரிகாலனுக்குத்தான் உலகமே சுற்றுவது போல் இருந்தது. இராஜசிம்மர் என்ன சொல்கிறார்..? இங்கே நிற்பவள்... தன்னுடன் உறவாடியவள்... தனக்கு சமமாக நின்று சாளுக்கியர்களுடன் போர் புரிந்தவள்... சாளுக்கியர்களின் ஒற்றர் படைத் தலைவி அல்லவா..? அப்படியானால் இவள் யார்..?

தன்னை நிதானப்படுத்திக் கொண்டு சிவகாமி அளிக்கப் போகும் பதிலுக்காக கரிகாலன் காத்திருந்தான்.ஆனால், சிவகாமி எந்த பதிலையும் அளிக்கவில்லை. மாறாக வாய்விட்டுச் சிரித்தாள். தொடர்ந்து அந்தப் பிரதேசமே நடுங்கும்படி சிரித்தவள் சட்டென்று அமைதியானாள். ‘‘மீண்டும் உணர்ச்சிவசப்பட்டு தவறு செய்துவிட்டேன் இளவரசே... உங்கள் முன்னால் இப்படி நான் சிரித்திருக்கக் கூடாது...

சமயம் சந்தர்ப்பம் தெரியாமல் ஒரு பெண் சிரித்தால் என்ன நடக்கும் என்பதற்கு மகாபாரத திரவுபதியே உதாரணமாக இருக்கும்போது அதே பிழையை அடியேனும் செய்திருக்கக் கூடாது... என்னை மன்னித்து விடுங்கள்... ஆனால், நீங்கள் சொன்னதைக் கேட்டதும் என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை...’’‘‘சிரிக்கும் அளவுக்கு நான் சொன்னதில் நகைச்சுவை அம்சங்கள் நிறைந்திருக்கிறதா..?’’‘‘நிரம்பி வழிகிறது இளவரசே! சாளுக்கியர்கள் அனுப்பியிருக்கும் ஆயுதமே நான் அல்ல என்றல்லவா சொல்கிறீர்கள்..?’’‘‘அதுதானே உண்மை!’’

‘‘இல்லை இளவரசே... பல்லவர்களை அழிக்க சாளுக்கியர்களால் அனுப்பப்பட்ட ஆயுதம்தான் நான்! ஓலைக்குழலுடன் பிடிபட்ட சாளுக்கிய வீரர்கள் இந்நேரம் என்னைப் பற்றிய உண்மைகளை தங்களிடம் தெரிவித்திருப்பார்களே..?’’
‘‘அதையெல்லாம் கேட்டு ஆராய்ந்த பிறகுதான் இந்த முடிவுக்கே வந்தேன்!’’
‘‘சாளுக்கியர்களால் அனுப்பப்பட்டவள் நான் அல்ல என்பதா..?’’
‘‘ஆம்...’’

‘‘போதும் இளவரசே... உங்கள் கருணைக்குப் பாத்திரமானவள் அல்ல நான்... என்னைப் பற்றிய ஆதாரங்கள் அனைத்தயும் உங்கள் முன் இவர்கள் சமர்ப்பித்திருக்கிறார்கள்... அவை அனைத்தையும் நான் மறுக்கப் போவதில்லை... உடனடியாக எனக்கு தண்டனை அளியுங்கள்...’’
‘‘தண்டனை பெறுவதிலேயே குறியாக இருக்கிறீர்களே..?’’

‘‘வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்..? யாரை உயிருக்கு உயிராக நேசித்தேனோ அவரே என் மீது குற்றம் சுமத்துகிறார்... யாரை எல்லா தருணங்களிலும் உயிரைக் கொடுத்து காக்க முற்பட்டேனோ அவரே என் உயிரை எடுக்க இப்போது காத்திருக்கிறார்...’’ என்றபடி கரிகாலனை ஒரு கணம் பார்த்த சிவகாமி, சட்டென தன் பார்வையை இராஜசிம்மர் பக்கம் திருப்பினாள். ‘‘வாழ விருப்பமில்லை இளவரசே...’’
‘‘வாழ்வதும் இறப்பதும் நம் கையிலா இருக்கிறது..?’’

‘‘என் இறப்பு உங்கள் கரங்களில் இருக்கிறது இளவரசே... அதை கரிகாலர் வழியாக நிறைவேற்றுங்கள் என்றுதான் ஆரம்பம் முதலே சொல்லி வருகிறேன்...’’‘‘சரி... இதுதான் என் தங்கையின் விருப்பம் என்றால் அதை இந்த அண்ணன் நிறைவேற்றுகிறேன்...’’ அமர்ந்திருந்த பாறையில் இருந்து இராஜசிம்மர் எழுந்தார். ‘‘அதற்குமுன் ஒரேயொரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லி விடுங்கள்...’’‘‘என்ன இளவரசே..?’’

‘‘என் தங்கை சிவகாமியின் தோற்றத்தில் சாளுக்கியர்கள் அனுப்பிய பெண் எங்கே? அவளை எங்கு மறைத்து வைத்திருக்கிறீர்கள்..?’’  
இராஜசிம்மன் இப்படிக் கேட்டதும் அவரை வெறித்தாள் சிவகாமி.அவள் சொல்லப்போகும் பதிலுக்காக அனைவரும் காத்திருக்க -
கண்ணிமைக்கும் நேரத்தில் தன் அருகில் நின்றிருந்த பல்லவ வீரனிடம் இருந்த வாளை சிவகாமி உருவினாள். அந்த வாளால் தன் கழுத்தை, தானே வெட்டத் தொடங்கினாள்!
Link to comment
Share on other sites

ரத்த மகுடம்-78

அரச பரம்பரையினர் வேட்டையாடுவதற்காகக் காட்டு முகப்பில் கட்டிவைத்த அந்த வேட்டுவ மாளிகையின் மாடிஅறையிலே அந்தக் கட்டழகியைக் கண்ணெடுத்து ஆராய்ந்த கரிகாலனின் மனம் படாதபாடு பட ஆரம்பித்தது.அவள் ஒரு காலை எடுத்து கட்டிலின் மேல் ஊன்றி முழங்காலுக்குக் கீழும் கணுக்காலுக்கு மேலும் கட்டப்பட்டிருந்த மான் தோல் கச்சையை அவிழ்க்க குனிந்து நின்றிருந்ததால், அவள் உடல் வானவில்லைப் போல் வளைந்திருந்தது.
24.jpg
ஆனால், சிறு தூற்றல் ஏற்படும்போது சூரியக் கிரணங்களால் உதயமாகும் அந்த வானவில்லில் இத்தனை வர்ணஜாலங்கள் எங்கிருக்கின்றன என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான் கரிகாலன். விடையேதும் கிடைக்கவில்லை!தான், உள்ளே வந்த சத்தம் கேட்டு திடீரெனத் திரும்பிப் பார்த்ததால் அவள் விழிகளில் தெரிந்த பிரகாசத்தில் ஓர் இம்மி கூட வானவில்லில் என்ன... இயற்கையின் எந்த சிருஷ்டியிலும் இருக்க முடியாது என கரிகாலன் நினைத்தான்.

கட்டிலின் மேல் வைத்த ஒற்றைக் காலை எடுக்காமலேயே அவள் அவனைப் பக்கவாட்டில் பார்த்தபடியாலும், அறையின் தூங்கா விளக்கு சற்று அவளைத் தள்ளியே தொங்கிக் கொண்டிருந்ததாலும் விளக்கின் வெளிச்சம் அவள் முகத்தின் ஒரு பாகத்தில் மட்டும் அடித்ததன் காரணமாக ஏதோ செடிகளில் மறைந்து ஒளிந்து விளையாடி ஒரு பாதி முகத்தைக் காட்டும் வனமோகினி போல் விளையாடினாள் அந்தக் கட்டழகி.

செண்பகப்பூவின் மஞ்சள் நிறத்தையே தோற்கடிக்கவல்ல அவளுடைய கன்னத்தைத் தடவிய விளக்கொளி கூட அந்தக் கன்னத்தின் மினுமினுப்புக்கு முன்னால் பளபளக்க மாட்டாமல் சற்று மங்கியே கிடந்ததாகத் தோன்றியது கரிகாலனுக்கு.கருமை பாய்ந்த இமைகளாலும், இமைகளுடன் இணைந்து நின்ற சின்னஞ்சிறு பட்டுச் சருமக் குழிகளாலும் பாதுகாக்கப்பட்ட அவளதுஇரு விசால விழிகளும் சிப்பியால் பாதுகாக்கப்பட்ட பாண்டி நாட்டின் பெரு முத்துக்களைப் போல் பளபளப்பதைக் கண்ட கரிகாலன், ‘முத்தினிடையே கரும்புள்ளி இருந்தால் குறைபாடு என்று சொல்வார்களே... அது என்ன முட்டாள்தனம்! அதோ அவள் இமைக்குள்ளே பதுங்கிக் கிடக்கும் இரண்டு பெரும் முத்துக்கள் எத்தனை அழகாக இருக்கின்றன!’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான்.

இப்படி ஒரு முறை பார்த்த பார்வையிலேயே அவள் கண்களால் பலவந்தமாக இழுக்கப்பட்ட கரிகாலனின் விழிகள், பெரிய சமுத்திரத்தில் விழுந்துவிட்ட துரும்புகள் போல் அவளுடைய சவுந்தர்ய சாகரத்தின் சுழல்களில் சிக்குண்டும் அலைகளால் தூக்கி எறியப்பட்டும் திணறின.
அவளது விசாலமான நெற்றியில் இட்டிருந்த திலகம் பயணக் களைப்பால் சிறிது அழிந்து கிடந்தாலும், அதிலும் ஒரு தனிச்சிறப்பு இருந்ததையும், அது அழிந்து சற்றுக் கீழே இறங்கியிருந்த வகையே முகத்துக்கு இணையற்ற கம்பீரத்தைக் கொடுக்க முற்பட்டதையும் கரிகாலன் கண்டான்.

அந்த நெற்றிக்கு மேலே அவள் எடுத்துக் கட்டியிருந்த கார்மேகக் குழல் தன்னை வளைத்து நின்ற கதம்ப மலர் சரத்தைப் பல இடங்களில் ஊடுருவி உதிரி உதிரியாகத் தொங்கிக் கொண்டிருந்ததால், சிவபிரானுடன் நாட்டியமாடிக் களைத்துவிட்ட சக்தியே இந்த உலகத்தில் வந்து குதித்துவிட்டாளோ என்ற பிரமையை ஏற்படுத்தியது.

வழவழப்பும் செழுமையும் நிரம்பிய அவள் கன்னங்களின் ஓரங்களைத் தொட்டவண்ணம், செண்பக மொட்டையும் பழிக்கும் நாசிக்கும் கீழே அமைந்திருந்த செவ்விய உதடுகள் இருக்கவேண்டிய அளவுக்கு மேல் கொஞ்சம் பெரியதாக இருந்தபடியாலும், அவற்றின் அசாத்தியச் சிவப்பை அவற்றிலிருந்த நீரோட்டம் இன்னும் அதிகமாகக் காட்டியபடியாலும் இரண்டு உதடுகளும் பிரமாத நீரோட்டமுள்ள கெம்புக் கற்களின் வரிசையைப் போல் பிரகாசிப்பதை கரிகாலன் கண்டான்.

உறுதியாக அழகாகக் கீழ்நோக்கி இறங்கிய கழுத்தில் அவள் அதிக நகைகளை அணியாமல் ஒரே ஒரு முத்து மாலையை மட்டுமே அணிந்திருந்தாள்.
அதைக் கண்ணுற்ற கரிகாலன், அவை செய்த பாக்கியத்தை,தான் என்று பெறப்போகிறோமோ என்ற நினைப்பின் காரணமாக ஒருமுறை பெருமூச்சு விட்டான்.வளைந்த அவள் உடலின் விலாப்புறத்தில் தெரிந்த அவளுடைய இடையின் உறுதியைக் கவனித்த கரிகாலன், எத்தனை பயிற்சிகளை அவள் மேற்கொண்டிருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டதோடு, அத்தனை திண்மையிலும் அந்த இடை மிகவும் குறுகிக் கிடந்ததைப் பார்த்து, நல்ல வேளை, இத்தனை போர்ப் பயிற்சியிலும் பெண்மை குன்றவில்லையே என மகிழ்ச்சி அடைந்தான்.

ஆனால், குறுகிப் போன இடையை இயற்கை வேறு இடங்களில் ஈடு செய்திருந்ததையும், இடையை அடுத்து இலங்கிய பிரதேசங்களில் அளவோ அழகோ இம்மியும் குறையாமல் எதேஷ்டமாக மண்டிக் கிடந்ததையும் கண்டவன், இயற்கையை விடச் சிறந்த வள்ளல் இருக்க முடியாது என்று தீர்மானித்துக் கொண்டான்.

இயற்கை செப்பனிடும் எதிலும் மர்மமும் புதைந்து கிடக்கிறது. வெளிப்படையாகச் சிலவற்றையும் மர்மமாகச் சிலவற்றையும்
தோற்றுவிக்கின்றன, இயற்கையின் காட்சிகள்.மேகத்தைச் சிருஷ்டிக்கும் இயற்கை அதன் கருமையைக் கண்ணுக்குக் காட்டுகிறதே தவிர அதில் கர்ப்பமாக இருக்கும் நீரைக் கண்ணுக்குத் தோற்றுவிப்பதில்லை.

உலகத்தின் சிருஷ்டி எதிலும் தெரிவது பாதி, தெரியாதது பாதி. தெரிந்ததை மட்டும் அறிந்து திருப்தி அடைகிறான் அறிவு குறைந்தவன்; ஆராய்ச்சியாளன் தெரியாததிலும் ஊகத்தைச் செலுத்த முயல்கிறான். அந்த ஊகத்திலும் ஆராய்ச்சியிலும் விளையும் இன்ப துன்பங்கள் ஏராளம்.
சில ஆராய்ச்சிகளில் துன்பமும் இன்பமாக இருக்கும்; இன்பமும் துன்பமாக இருக்கும்.

இணையற்ற இன்பத்தையும் வேதனையையும் கலந்து தருவது எழில் ஆராய்ச்சி. அதுவும் பெண்ணின் எழிலில் ஓர் ஆண்மகன் ஊகத்தைச்
செலுத்தும்போது, எத்தனை மனவேதனைகள்! எத்தனை இன்ப அலைமோதல்கள்! எத்தனை கொந்தளிப்புகள்! சொல்லுக்கே
அடங்காத மகா விசித்திரம் அது!

வேட்டையாடும் யானைகளின் துதிக்கையைப் பழிக்கும் அவள் தொடைகளுக்குக் கீழேயிருந்த முழங்காலையும், முழங்காலுக்குக்
கீழேயிருந்த ஆடு சதை அமைந்து இறங்கிய மாதிரியையும் கவனித்த கரிகாலன், இவற்றுக்கு எல்லாம் கவிகள் சொன்ன உவமை சரியா என்று கூட யோசித்தான்.யானைத் துதிக்கையின் கடினம் எங்கே? இவற்றின் வழவழப்பு எங்கே? கவிகள் எத்தனை பார்வைக் குறைபாடு கொண்டிருக்கிறார்கள் என்று கவிகளைக் கண்டிக்கவும் தொடங்கினான்.

இந்தக் கண்டிப்புடன் ஓடிய கரிகாலன் கண்கள், அவள் இடையில் வரிந்து கட்டப்பட்டிருந்த சேலையைக் கண்டன. மனமோ, ‘எதற்காக இவ்வளவு வரிந்து கட்டவேண்டும்? பூவைவிட மென்மையான இடை கன்றிப் போகாதா?’ என்று கோபத்தால் கொந்தளித்தன!

இப்படி எழிலை ரசிக்க அக்கக்காக அலசியதால் அவள் உணர்ச்சிகள் கணவேகத்தில் சுழன்றன. உயிர் அணுக்கள் ஊசி முனையில் நின்றன.
கால் கச்சையை அவிழ்க்க முயன்று அவனை நோக்கித் திரும்பிய அந்தப் பெண், அவன் கலக்கத்தை கணப்பொழுதில் கண்டு கொண்டாலும் அதைப்பற்றி சிறிதும் லட்சியம் செய்யாமல் கால் கச்சைகளை நிதானமாகவே அவிழ்த்து முடித்தாள்.

தோளிலிருந்த புலிக்கச்சையையும் எடுத்துவிட்டு சேலையைப் பிரித்து உடலை மூடிக்கொண்டதால் முழுப் பெண் உருவம்
கரிகாலன் கண் எதிரே எழுந்தது.அவள் நிதானமாகத் தன் வேட்டுவக் கோலத்தைக் களைந்து அவனை நோக்கி புன்முறுவல் செய்துவிட்டு கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள்.அப்படி உட்கார்ந்து கொண்டவள், எதிரே ஓர் ஆண்மகன் நிற்கின்றானே என்ற நினைப்பு சிறிதும் இல்லாமலும், அவனை உட்காரக் கூடச் சொல்லாமலும் அமைதியாக இருந்தாள்.

கரிகாலன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.அந்த வேட்டுவ மாளிகையையே மரத்தின் உச்சியில் மறைந்திருந்தபடி பல கணங்கள் ஆராய்ந்தான் அந்த கடிகை பாலகன். இல்லாத வேளிர்களின் தலைவனாக சில திங்களுக்கு முன் ரகசியமாக, தான் முடிசூடப்பட்டதை அப்போது நினைத்துக் கொண்டான். அதில் அவனுக்கு வருத்தமேதும் இல்லை. தமிழ் பேசும் நிலங்களின் பூர்வகுடிகள் தாங்களே... இன்று பிடி மண் கூட சொந்தமில்லாமல் இருக்கலாம்... ஓரடியை ஆட்சி செய்யக் கூட இயலாத நிலை இருக்கலாம்... ஆனால், காலம் மாறும்.

பல்லவர்கள் யார் என்ற சர்ச்சை சாளுக்கியர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில் ஓடிக்கொண்டிருக்கிறது. மக்கள் இது குறித்து எந்த அக்கறையையும் காட்டவில்லை. அவர்கள் எப்போதும் அப்படித்தான். அவர்களது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாத வரை தங்களை ஆள்பவர்கள் யார் என ஒருபோதும் பொருட்படுத்த மாட்டார்கள். யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களுக்கு விளைச்சலில் பங்கும் வரியும் செலுத்திவிட்டால் போதும் என்றே நினைக்கிறார்கள்.

இந்த மனநிலையை பல்லவர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பிராகிருதத்தை ஆட்சி மொழியாகக் கொண்டவர்கள் இப்பொழுது மெல்ல மெல்ல தமிழ் எங்கள் மூச்சு என அறிவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்! தமிழ்ப் புலவர்களை ஆதரிக்கிறார்கள்! சொல்வதற்கில்லை... இதே நிலை நீடித்தால் நாளை ஏதேனும் ஒரு பல்லவ மன்னன், தானே கவிதையோ கலம்பகமோ இயற்றி வரலாற்றில் இடம் பிடித்துவிடுவான்!

இதைத் தடுத்தே ஆகவேண்டும்... உடனடி எதிரியான பல்லவர்களை வீழ்த்த தற்காலிகமாக சாளுக்கியர்களுடன் கூட்டு சேர்ந்திருக்கிறோம்... மெல்ல மெல்ல இனி மக்கள் மனதில் வேளிர்களின் பழம்பெருமைகளைக் குறித்து கூத்துப்பாட்டு வடிவில் பிரசாரம் செய்யவேண்டும்... நடைபெறவிருக்கும் போரில் பல்லவர்களை வேருடன் அழித்துவிட்டு பிறகு பாண்டியர்களுடன் சேர்ந்து சாளுக்கியர்களை வீழ்த்த வேண்டும்.
எங்கிருந்தோ வந்த பல்லவர்களால் இந்த மண்ணை ஆள முடியும் என்னும்போது மண்ணின் மைந்தர்களான வேளிர்கள் நூற்றாண்டு
களுக்குப் பிறகு மீண்டும் தலையெடுக்க முடியாதா என்ன..?

முடிவுடன், தான் இருந்த மரத்தைவிட்டு இறங்கிய கடிகை பாலகன், அங்கிருந்த ஒன்பது சாளுக்கிய வீரர்களையும் மூன்று குழுக்களாகப் பிரித்தான்.
‘‘ஒரு காத தொலைவில் இருக்கும் வேட்டுவ மாளிகையை நாம் சுற்றி வளைக்க வேண்டும். இருப்பது இருவர்தான். ஆனால், ஒவ்வொருவரும் முப்படைக்கும் சமமானவர்கள். புரிந்ததா..? சருகுகள் மிதிபடும் ஓசைகூட கேட்கக் கூடாது... கால்நடையாகவே நிதானமாக மாளிகையை நோக்கி நகர்வோம்!’’

‘‘புதிதாகப் பார்ப்பதுபோல் அப்படிப் பார்க்கிறீர்களே..?’’ அமைதியைக் கிழித்தபடி அந்தப் பெண் கேட்டாள்.
‘‘புதிதாகத்தான் இருக்கிறது, சற்று நேரத்துக்கு முன் நீ தரித்திருந்த மான் தோல் உடை...’’ கரிகாலன் இழுத்தான்.
‘‘ம்...’’‘‘இப்பொழுது அணிந்திருக்கும் சேலை...’’
‘‘ம்...’’

‘‘இவை எல்லாம் நான் காணாதவை!’’
‘‘எப்பொழுதும்போல் சிவப்பு நிறக் கச்சையுடன் மட்டும் உங்களுக்கு தரிசனம் தரச் சொல்கிறீர்கள்... அப்படித்தானே..?’’
கேட்டவளின் குரலில் கோபமோ வெறுப்போ இல்லை. ஏன்,உணர்ச்சிகளின் கொந்தளிப்பும் பொங்கி வழியவில்லை. சாதாரணமாகத்தான் கேட்டாள். ஆனால், கரிகாலனுக்கு அதுவே அசாதாரணமாகத் தென்பட்டது.

மெல்ல நடந்து வந்து அவள் முன்னால் மண்டியிட்டான்.தலையை உயர்த்தி அவள் நயனங்களை ஊடுருவினான்.அந்தப் பெண்ணும் தன் பார்வையை விலக்காமல் அவனை எதிர்கொண்டாள்.மறுகணம் அவளை அள்ளி அணைத்து உயரே தூக்கினான். அவள் தன் கால்கள் இரண்டையும் அவன் கழுத்தைச் சுற்றி போட்டுக் கொண்டாள்.அப்படியே முன்னோக்கி குனிந்து அவன் உதட்டில் தன் ஆதுரங்களைப் பதித்தாள்.‘‘சிவகாமி...’’ என்றபடி கரிகாலன் அவள் உதட்டைக் கடித்தான்!

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16147&id1=6&issue=20191108

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ரத்த மகுடம்-79

‘‘ம்...’’ முணுமுணுத்த சிவகாமி, அப்படியே கரிகாலனுடன் ஒன்றினாள்.வெந்து தணியும் உடலை சாந்தப்படுத்த இயலாமல் தன்னையும் மீறி கரிகாலன் மீண்டும் அழைத்தான். ‘‘சிவகாமி...’’‘‘ம்... சொல்லுங்கள்...’’தன் ஆதுரங்களை அவன் உதட்டில் தடவியபடியே சிவகாமி கேட்டாள். ‘‘என்ன..? எதற்காக என் பெயரை இப்படி மனனம் செய்கிறீர்கள்..?’’பதில் சொல்ல வாயைத் திறந்தவன், என்ன தோன்றியதோ அப்படியே மீண்டும் அவள் உதட்டைக் கடித்தான்.
21.jpg
உமிழ்நீரின் சங்கமத்தில் தன்னை மறந்த சிவகாமி அப்படியே அவன் முகத்தை தன் மார்பில் புதைக்கவிட்டு தொலை தூரத்தை வெறித்தாள்.
பார்வைதான் அங்கிருந்ததே தவிர பார்க்கும் இடம் எதுவும் மனதில் பதியவில்லை. பதிய வைக்க வேண்டும் என சிவகாமியும் முயற்சிக்கவில்லை. கரிகாலனும் அவளை முயற்சிக்கும்படி செய்யவில்லை.

செய்யத் தோன்றவில்லை என்பதே நிஜம். அந்த உண்மையை இருவருமே அக்கணத்தில் ஏற்றார்கள். கணத்துக்கு தங்களை ஒப்புக் கொடுத்தார்கள்.
இருவர் மனதிலும் சுற்றிச் சுழன்றது வனத்தில் நடந்த விசாரணை முறைதான். அது குறித்து இருவர் மனதிலும் பல்வேறு விதமான வினாக்கள் கிளைத்து எழுந்தன. இருவருக்கும் விடைகள் தேவைப்பட்டன. ஆனால், முடிந்த வரை இருவரும் அவற்றை அறியும் கணத்தை தள்ளிப்போட்டார்கள்.

இருவரும் இருவரையும் நம்பவில்லை என்பது நன்றாகவே தெரிந்திருந்தது. விசாரணையின் முடிவும் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்கவில்லை. மாறாக துணைக் கேள்விகளாக பல முளைக்கும்படியே வித்திட்டன. பேசினாலும் தீராதுதான். ஆனால், உரையாடுவதைத் தவிர வேறு தீர்வும் இதற்கு இல்லை. என்றாலும் சிவகாமியும் சரி... கரிகாலனும் சரி... பேசப் பயந்தார்கள். உரையாடாமல் இருப்பதே இப்போதைக்கு நல்லது என்ற முடிவுக்கு அவர்களாகவே வந்தார்கள்.

இந்த முடிவை இருவரது உடல்களும் ஏற்றன. ‘அப்பாடா...’ என சருமங்கள் விட்ட பெருமூச்சை இருவருமே தங்கள் அந்தராத்மாவில் உணர்ந்தார்கள். அதனாலேயே ஓர் உடலின் தாள கதிக்கு ஏற்ப மறு உடல் சப்தஸ்வரங்களை இசைத்தது.சிவகாமியின் கச்சையை மீறி திமிறிய கொங்கைக்குள் தன் வதனத்தைப் புரட்டியபடியே இவற்றை எல்லாம் யோசித்த கரிகாலனின் சிந்தனை இறுதியாக விசாரணையின் கட்டத்தில் தன் கழுத்தை, தானே அறுக்க முற்பட்ட சிவகாமியின் செயலில் வந்து நின்றது.

தன்னையும் அறியாமல் அவளது கொங்கைகளின் பிளவில் பதித்த தன் உதட்டை விலக்கி, அவள் கழுத்தை நாக்கால் தடவினான். காயங்கள் ஏதும் இல்லை என்பதை நூற்றியெட்டாவது முறையாக உணர்ந்ததும் பெருமூச்சுடன் தன் முகத்தை மீண்டும் அவள் கச்சையின் மேல் பதித்தான்.
கரிகாலனின் செய்கையை வைத்தே அவனது எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொண்ட சிவகாமி மெல்ல நகைத்தாள்.

அந்தச் சிரிப்பில் நிம்மதிதான் பரிபூரணமாக வழிந்தது. ஒருவேளை அந்த வாள் தன் கழுத்தை சீவியிருந்தால் இந்நேரம் கரிகாலனின் நிலை என்னவாக இருக்கும்..?யோசித்தவள் தன்னையும் அறியாமல் பல்லவ இளவரசருக்கு மனதுக்குள் நன்றி சொன்னாள். இராஜசிம்ம பல்லவர் மட்டும் சமயோசிதமாக செயல்பட்டிருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும்..?பெருமூச்சு விட்டாள்.

எழுந்து தாழ்ந்த கொங்கைகளுடன் சேர்ந்து கரிகாலனின் முகமும் அசைந்தது.இருவரின் மனக்கண்ணிலும் அதே காட்சிதான் விரிந்தது.
தன் அருகில் இருந்த பல்லவ வீரனின் இடுப்பில் இருந்து இமைக்கும் நேரத்தில் வாளை உருவிய சிவகாமி, தன் சிரசை, தானே கொய்ய முற்பட்டாள்.
இதை சற்றும் எதிர்பார்க்காத கரிகாலன், அதிர்ந்தான். பல்லவ இளவரசரின் பின்னால் நின்றிருந்த அவனது இதயம் துடிக்கவும் மறந்தது.

அடுத்த கணம், சிவகாமியின் சிரசு தரையில் உருளும் என்றுதான் அங்கிருந்த அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஏனெனில் நாள்
தோறும் வாள் பயிற்சி மேற்கொள்ளும் பல்லவ வீரர்கள் கையோடு வாளின் கூர்மையை தங்கள் கரங்களாலேயே பட்டை தீட்டுவார்கள்.
பயிற்சியின் ஓர் அங்கமாகவே இதுவும் இருந்தது. எனவேதான் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியின் உச்சியில் ஊசலாடினார்கள்.  

ஆனால், மனித எத்தனங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்டதாகத்தானே வாழ்க்கை நகர்கிறது..? இந்த இயற்கையின் விதியிலிருந்து எந்த மனிதன் தப்பியிருக்கிறான்..? அந்த விதிதான் பல்லவ இளவரசர் இராஜசிம்மரின் உருவத்தில் இடி இடி என நகைக்க வைத்து அந்த இருப்பைக் காட்டியது!சிவகாமி தன் சிரசை அறுக்க முற்பட்டதும்... அவளது அந்திமக் காலம் முடிந்தே விட்டது என அங்கிருந்தவர்கள் நினைத்த நேரத்தில்தான் அந்த வனமே அதிரும்படி இராஜசிம்மர் நகைத்தார்.

அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கலந்த உணர்வில் பல்லவ இளவரசரை அனைவரும் ஏறிட்டார்கள். அதிர்ச்சிக்குக் காரணம் அவரது நகைப்பு என்றால் ஆச்சர்யத்துக்குக் காரணம் சிவகாமியின் சிரசு வெட்டுப்படாத நிலை!‘‘சகோதரி! இப்படியொரு நிலையை ஊகிக்க முடியாதவன் பல்லவ நாட்டின் இளவரசனாக இருக்க முடியாது... பல உண்மைகளை சொல்லத் தயங்கி இந்த முடிவைத்தான் நீ எடுப்பாய் என்று  தெரியும். அதனால்தான் உன்னருகில் நிறுத்தப்பட்டிருந்த பல்லவ வீரனின் இடுப்பில் கூர் மழுங்கிய வாளை வைத்தேன்!’’

நிதானமாகச் சொன்ன இராஜசிம்மர், தான் அமர்ந்திருந்த பாறையில் இருந்து எழுந்தார். ‘‘வா சிவகாமி... என்ன அப்படிப் பார்க்கிறாய்..? என் தங்கை சிவகாமியின் தோற்றத்தில் வந்திருந்தாலும், உனது பெயர் என்னவாக இருந்தாலும், என்னைப் பொறுத்தவரை நீ சிவகாமிதான்! எழுந்திரு. என்னுடன் வா... வீரர்களே, அவரவர் இடங்களுக்குச் செல்லுங்கள்... இந்த விசாரணையின் முடிவும், சிவகாமிக்கு நாம் அளிக்கும் தண்டனையும் இன்னும் சில நாழிகைகளில் உங்களுக்கு தெரிவிக்கப்படும்... கரிகாலா... என் தங்கையை அழைத்து வா...’’

சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் விடுவிடுவென நடந்தார் இராஜசிம்மர்.சிவகாமியை எழுப்பி இனம் புரியாத உணர்வுடன் அவளை அழைத்துக்கொண்டு பல்லவ இளவரசரைப் பின்தொடர்ந்தான் கரிகாலன்.எந்த பர்ணசாலையில் அம்பு பாய்ந்த நிலையில் வந்த சிவகாமிக்கு மருத்துவச்சி சிகிச்சை அளித்தாளோ... அந்த பர்ணசாலையை நெருங்கியதும் இராஜசிம்மர் நின்றார்.

‘‘கரிகாலா... யாரேனும் வருகிறார்களா என்று பார்...’’ கட்டளையிட்ட இராஜசிம்மர், சிவகாமியை அழைத்துக்கொண்டு பர்ண
சாலைக்குள் நுழைந்தார். கதவைத் தாழிட்டார்.நாழிகைகள் ஊர்ந்தன; தவழ்ந்தன; நகர்ந்தன.இருப்புக் கொள்ளாமல் பர்ணசாலையின் மூடிய கதவைப் பார்த்தபடியே கரிகாலன் நின்றான்.தன் பொறுமையை அவன் இழந்த சமயத்தில் பர்ணசாலையின் கதவு திறந்து இராஜசிம்மர் மட்டும் வெளியில்
வந்தார். கதவை மீண்டும் மூடினார்.

‘‘கரிகாலா...’’
‘‘இளவரசே...’’
‘‘உடனடியாக நீயும் சிவகாமியும் தெற்கு நோக்கிச் செல்ல வேண்டும்...’’
‘‘தங்கள் கட்டளை இளவரசே...’’‘‘மதுரைக் கோட்டைக்குள் நுழைந்து பாண்டிய மன்னரிடம் இந்த ஓலையைத் தரவேண்டும்...’’ என்றபடி தன் இடுப்பில் இருந்த ஓலைக்குழலை எடுத்து கரிகாலனிடம் கொடுத்தார்.

பதில் சொல்லாமல் அதைப் பெற்றுக் கொண்டான்.‘‘திருமணத்துக்கு முன் எல்லை மீறாமல் நடந்துகொள் கரிகாலா...’’ முகமெல்லாம் மலர தன் நண்பனின் தோளைத் தட்டி கண்சிமிட்டிவிட்டு இராஜசிம்மர் சென்றார்.கரிகாலனுக்கு எதுவும் புரியவில்லை. ஆனால், தன் மனதை ஆக்கிரமித்த பெண், பல்லவர்களுக்கு எதிரானவள் அல்ல என்பது மட்டும் அவனுக்கு தெளிவாகப் புரிந்தது. இல்லாவிட்டால் பல்லவ இளவரசர் இப்படி நடந்துகொள்ள மாட்டாரே...

ஆனால், உண்மையில் இவள் யார்..? நிஜமான பல்லவ இளவரசி எங்கிருக்கிறாள்..? சாளுக்கியர்களால் அனுப்பப்பட்ட ஒற்றர் படைத் தலைவியை இந்தப் பெண் எங்கு அடைத்து வைத்திருக்கிறாள்..? சிவகாமி என்னும் பெயரில் நடமாடும் இவளது உண்மையான பெயர்தான் என்ன..?
கேள்விகள்... கேள்விகள்... கேள்விகள்... விடை தெரியாத வினாக்கள் பதிலைத் தேடாமல் அப்படியே இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன...

இத்தனைக்கும் மத்தியில் தன் மனதில் நிம்மதி படர்வதை கரிகாலனால் உணரவும் அனுபவிக்கவும் முடிந்தது.தழுவிய தென்றலை அனுபவித்தபடி அவன் பெருமூச்சுவிட்டபோது -பர்ணசாலையின் கதவுகள் திறந்தன.மான் தோலும் புலித்தோலும் தன் உடலைத் தழுவ பூரண வேட்டுவ கோலத்தில் பர்ணசாலைக்குள் இருந்து சிவகாமி வெளியில் வந்தாள்.

கரிகாலன் அவளை இமைக்கவும் மறந்து பார்த்தான்.அவன் பார்வை தன் அங்கங்களை ஊடுருவுவதை இனம்புரியாத மகிழ்ச்சியுடன் சிவகாமி அனுபவித்தபோது, குதிரைகளின் குளம்பொலிகள் கேட்டன.பல்லவ வீரன் ஒருவன் இரு அஸ்வங்களை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு நகர்ந்தான்.

இராஜசிம்மரின் ஏற்பாடு!
கரிகாலனும் சிவகாமியும் எதுவும் பேசாமல் தத்தம் புரவிகளில் ஏறினர். தெற்கு நோக்கி பயணத்தைத் தொடர்ந்தனர்.
இடையில் பயணக் களைப்பு நீங்க வேட்டுவ சத்திரத்துக்கு வந்ததும்... இதோ ஈருடல் ஓர் உயிராக பிணைந்தபடி கிடப்பதும்...  
‘‘விடை தெரிய வேண்டுமா..?’’ கரிகாலனின் இடுப்பில் அமர்ந்தபடியே தன் முகத்தை விலக்கியபடி சிவகாமி கேட்டாள்.

‘‘எதற்கு..?’’‘‘பர்ணசாலைக்குள் பல்லவ இளவரசர் என்னை விசாரித்ததையும், அதற்கு நான் சொன்ன பதிலையும்...’’
‘‘அவசியமில்லை...’’பட்டென்று சொன்ன கரிகாலனின் கண்களை சிவகாமி உற்றுப் பார்த்தாள். ‘‘ஏன்..?’’
‘‘இந்நிலையே சவுகரியமாக இருக்கிறது!’’தன்னை மறந்து கலகலவெனச் சிரித்தாள் சிவகாமி.

அவன் மீது, தான் அமர்ந்திருக்கும் நிலையை எவ்வளவு நாசுக்காகக் குறிப்பிடுகிறான்..?‘‘ம்... ம்... இருக்கும்... இருக்கும்...’’நெகிழ்ந்த சிவகாமியை தன் இடுப்பில் இருந்து இறக்கினான் கரிகாலன்.

‘‘ஏன்..?’’ என்பதை தன் புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.‘‘தலைவர் வரும்போது இப்படி நாம் இருப்பது மரியாதைக்குரிய செயல் அல்ல சிவகாமி!’’
‘‘தலைவரா... யார்..?’’ என்றபடி கரிகாலனின் கண்கள் சென்ற திசையை நோக்கித் திரும்பிய சிவகாமியின் முகத்தில் புன்னகை பூத்தது.
வாளை உருவியபடி அங்கு கடிகையின் பாலகன் நின்றிருந்தான்!

‘‘வாருங்கள் தலைவரே...’’ மரியாதையுடன் கடிகை பாலகனை கரிகாலன் வரவேற்றான். ‘‘பயணம் எல்லாம் சவுகரியமாக இருந்ததா..?’’
இப்படியொரு வரவேற்பை, தான் எதிர்பார்க்கவில்லை என்பதற்கு அறிகுறியாக கடிகை பாலகனின் முகம் மாறியது. கரிகாலனையும் சிவகாமியையும் மாறி மாறிப் பார்த்தவன், பிறகு கரிகாலனை உற்றுப் பார்த்தான். ‘‘தலைவரா..? யாரைச் சொல்கிறீர்கள் அண்ணா..?’’

‘‘தங்களைத்தான்! புதையுண்டு போய்விட்டதாகக் கருதப்படும் வேளிர் குலத்துக்கு உயிர் கொடுக்க வந்திருக்கும் தலைவர் தாங்கள்தானே..? இந்த சிறியவனை அண்ணனாக அழைக்கும் தங்கள் பெருஞ் செயலில் இருந்தே தங்கள் இயல்பு எங்களுக்குப் புரிகிறதே!’’

உருவிய வாளை தன் இடையில் புகுத்தியபடியே கரிகாலனை ஆராய்ந்தான் கடிகையின் பாலகன். சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் தன்னை வேளிர்களின் தலைவனாக நியமித்து செய்த ரகசிய காப்பு பிரமாணத்தை கரிகாலனும் அறிந்திருக்கிறான் என்பது அவனுக்கு வியப்பாக இல்லை. ஓரளவு இதை எதிர்பார்க்கவே செய்தான்.

எனவே, சிந்தனையுடன் குறுக்கும் நெடுக்குமாக அந்த வேட்டுவ சத்திரத்தில் நடந்த கடிகையின் பாலகன், சாளரத்தை ஏறிட்டபடி திரும்பிப் பார்க்காமல் கேட்டான். ‘‘என்ன செய்வதாக உத்தேசம் அண்ணா..?’’ ‘‘தங்களுடன் மதுரைக்கு வர எண்ணுகிறோம் தலைவரே...’’கரிகாலனின் இந்த பதில் கடிகையின் பாலகனை அதிர்ச்சி அடைய வைத்தது. சட்டென்று திரும்பினான்.

‘‘எங்கள் இருவருக்கும் எதிர்க்கும் எண்ணமில்லை... வேட்டுவ சத்திரத்தைச் சுற்றிலும் நீங்கள் நிறுத்தியிருக்கும் சாளுக்கிய வீரர்களை வந்த வழியே திரும்பிப் போகச் சொல்லுங்கள். பாண்டிய மன்னருக்கு நீங்கள் வாக்களித்தபடி எங்கள் இருவரையும் மதுரைக்கு அழைத்துச் சென்று அவரிடம் ஒப்படையுங்கள்!’’

சொன்ன கரிகாலன், கடிகை பாலகனை மேற்கொண்டு பேச விடவில்லை. ‘‘சிவகாமி... சாதாரண தமிழ்ப் பெண்ணாக உடை அணிந்து கொள். நாங்கள் இருவரும் சத்திரத்துக்கு வெளியில் நிற்கிறோம்...’’அடுத்த ஒரு நாழிகை கால்நடையாக கடிகை பாலகனைப் பின்தொடர்ந்து பயணம் செய்த கரிகாலனும் சிவகாமியும் மதுரைக் கோட்டையை நெருங்கினார்கள்!
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

தொடர் இத்துடன் நின்றுவிட்டதா ???? சதீஷ்குமாரைக் காணவில்லை

Link to comment
Share on other sites

ரத்த மகுடம்-80

கடவுளின் மாயை அற்புதமானது. அநித்தியத்தை நித்தியமாகக் காட்டக் கூடியது.  உண்மையைப் பொய்யாகவும் பொய்யை உண்மையாகவும் தோற்றமளிக்கச் செய்ய வல்லது.தினசரி  கணக்கற்ற மக்கள் கண்ணுக்கு எதிரே மடிந்து மயானம் செல்வதைக் கண்டாலும் தன்  வாழ்வு மட்டும் சதமென்று நினைத்து மனிதன் பொய்யான மண்ணையும் பொன்னையும்  கட்டிக் கொண்டு திண்டாடக் கூடிய மனோநிலையைச் சிருஷ்டிக்கக் கூடிய மாயையின்  வல்லமையை வர்ணிக்க முடியாது.
19.jpg
மனிதனுடைய கண்ணுக்கும் உண்மைக்கும் இடையே  சட்டென்று திரைபோடக் கூடிய இப்பேர்ப்பட்ட மாயையைப் பெரியவர்கள் பெண் இனத்தில்  சேர்த்திருக்கிறார்கள்.எந்த உண்மையையும் கணத்தில் மறைத்து ஆண்கள் கண்ணில் மண்ணைப் போடும் திறமை பெண்களுக்கு உண்டு என்பது பெரியோர்கள் சித்தாந்தம்.

எப்பேர்ப்பட்ட  அசந்தர்ப்பமான நிலையில் இருந்தும் பெண்கள் தங்களை விடுவித்துக்கொண்டு  ஆண்களைத் தங்களின் நிரந்தர அடிமைகளாக வைத்துக் கொள்கிறார்கள்.இந்த சக்தியை மட்டும் ஆண்டவன் பெண் இனத்துக்கு அளிக்காமல் இருந்தால் கரிகாலனின் கதி அன்று அதோகதியாகத்தான் போயிருக்கும்!ஏனெனில் மதுரை மாநகரின் கோட்டைக்கு வெளியிலும் கோட்டைக்குள்ளும் இதை கரிகாலனே அனுபவபூர்வமாக உணர்ந்தான். மாறுவேடம் தரித்து சாதாரண பணிப்பெண்ணாகக் காட்சி அளித்த சிவகாமி அதை உணர வைத்தாள்.

இந்த உண்மையை கரிகாலன் உணர்வதற்கு முன்னால் மெய்மறந்து நின்றான். அப்படி அவனை மெய்மறக்கச் செய்தது மதுரை மாநகரம்தான்.
கடிகை பாலகனைப் பின்தொடர்ந்து கால்நடையாக சிவகாமியுடன் ஒரு நாழிகை பயணம் செய்த கரிகாலன் மதுரைக் கோட்டையை நெருங்கியதும் அப்படியே நின்றுவிட்டான். கண் முன்னால் விரிந்த காட்சி அவன் சித்தத்தைக் கட்டிப் போட்டது.  

மனோகரமான அந்த மாலை வேளையில் மெல்ல மெல்ல மங்கிக் கொண்டிருந்த மஞ்சள் வெயிலின் மயக்கம் தரும் பிரகாசத்தில், மதுரை மாநகர் மிக ரம்மியமாகக் காட்சியளித்தது.அதைப் பார்க்கப் பார்க்க அவனுக்குள் பல்வேறு உணர்வுகள் கிளர்ந்தெழுந்தன.பைந்தமிழும் பாவலரும் இரண்டறக் கலந்து உறவாடியதால் எழுந்த பல இன்பக் கவிதைகளின் இருப்பிடமான

மதுரை மாநகர் -

ஆழ்கடலில் இருந்து முதன் முதலாக எழுந்த ஒரே நிலப்பரப்பான ஜம்பூத்வீபத்தின் ஆரம்பக் காலத்திலேயே ஏற்பட்டதால் மூதூர் (பழைய ஊர்) எனப் பிரசித்தமாகி பின்பு காலத்தின் வாக்கினிலே மதுரை என மருவிவிட்டதுமான ஆதி மதுரை ஒன்று இருந்ததற்கு அத்தாட்சியாக இன்றும் விளங்கும் மதுரை மாநகர் -மூதூரை மும்முறை கடல்கொண்டும் அதன் தமிழ் மக்கள் மாளாது பின்னடைந்து வாழ இடம் கொடுத்ததால் சரித்திரத்திலும் இறவா இடம் பெற்றுள்ள மதுரை மாநகர் -கண்ணன் அடிவைத்த வட மதுரைக்கு ஒரு சவாலாகவும், ஆண்டவன் திருவிளையாடல்களாலும், அவற்றால் மலர்ந்த அடியார்களின் உள்ளத்திலிருந்து தெள்ளமுதென எழுந்த தீந்தமிழ்ப் பாக்களாலும் தெய்வீகம் பெற்றுத் துலங்கும்

 தென்மதுரை மாநகர் -‘நாவலம் பெரும் தீவினில் வாழ்பவர்’ என அப்பர் பெருமானும் மற்றோரும் போற்றிப் புகழ்ந்த பெருமக்கள் வாழ்ந்த தமிழன்னையின் மடியெனத் திகழும் மதுரை மாநகர் -

எட்டுரெண்டும் தெரியாத கெட்ட மானிடர் உய்யப் பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படியும் பட்டதால் ஆண்டவனும் அடியாரும் ஒன்றே என்பதையும், சிற்றுயிர்கள் எல்லாம் பேருயிர் பாவித்து கிடக்கிறதென்ற பிரபஞ்ச தத்துவத்தையும் உலகுக்கு விளக்கிக் காட்டிய எம்பெருமான் கோயில் கொண்ட மதுரை மாநகர் -அர்த்தநாரீசுவரியான அம்பாளும் அடியார்களை ஆட்கொள்ள அரசன் உடலில் இருந்து பிரிந்து இறங்கினாளோ என ஐயுறும்படி அவதரித்து தன் அருள் விழிகளால் அஷ்ட ஐசுவரியத்தையும் அளித்ததோடு அரியணையில் இருந்து அரசும் ஆண்ட தேவி மீனாட்சியின் தலைமைத் தலமாம் மதுரை மாநகர் -காவியத்துக்கும் ஓவியத்துக்கும் வாணிபத்துக்கும் விவசாயத்துக்கும் ஆய கலைகள் அறுபத்து நான்குக்கும் இருப்பிடமாகத் திகழ்ந்த மதுரை மாநகர் -வைர வைடூரியங்களும் முத்துக்களும் குவியல் குவியலாகக் கடைத் தெருக்களில் கிடந்ததால் செல்வத்துக்குப் பேர்போன மதுரை மாநகர் -கற்பரசி கண்ணகி சிலம்பெறிந்து தீப்பொறி கிளப்பி அக்கினிப் பிழம்பிலே குளிக்க வைத்ததால் தூய்மை பெற்றுத் தீயிட்ட தங்கம்போல் புது மெருகுடன் ஜொலிக்கும் மதுரை மாநகர் -அப்பப்பா... இன்னும் இன்னும் என விவரணைக்கு அடிகோலும் அத்தகைய புராதன நகரம் பெரிய கோபுரங்களுடனும் வானத்தைத் தொடும் கட்டடங்களுடனும் ஓங்கி உயர்ந்த கோட்டைச் சுவர்களுடனும் மிக அழகாகத் தன் கண்முன்னால் எழுந்து நின்றதைப் பார்த்தான் கரிகாலன்.

அவனையும் அறியாமல் உள்ளம் நெகிழ்ந்தது. எப்பேர்ப்பட்ட பழம் பெருமை வாய்ந்த நிலத்தில் தன் காலடி படுகிறது... இதற்காக, தான் எவ்வளவு பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று எண்ணி உள்ளம் கசிந்தான்.கரிகாலனின் உள்ளக்கிடக்கையை அறிந்ததற்கு அறிகுறியாக சிவகாமி அவனை நெருங்கினாள். அவன் கரத்தைப் பற்றி அழுத்தினாள்.

அந்தக் கரங்கள் சொன்ன செய்தியை அவன் மனம் அறிந்தது. அதற்கு அறிகுறியாக அவளைப் பார்த்த அவன் நயனங்களில் காதல் சொட்டியது.தன் கண்களால் ‘வாருங்கள்’ என்றழைத்த சிவகாமி, நிற்காமல் முன்னால் சென்று கொண்டிருந்த கடிகை பாலகனை பார்வையால் சுட்டிக் காட்டினாள்.புரிந்ததற்கு அறிகுறியாகத் தலையசைத்த கரிகாலன், அவளுடன் இணைந்து நடக்கத் தொடங்கினான்.
 
கோட்டை வாசலை அவர்கள் மூவரும் நெருங்க நெருங்க ஊர் மக்கள் பேசும் சத்தமும் வீரர்கள் ஆணையிடும் கூச்சலும் வாகனங்கள் புரண்டோடுவதால் ஏற்படும் ஒலியும் எல்லாமாகச் சேர்ந்து பேரிரைச்சலாகக் கேட்ட மதுரை மாநகர் முழு உயிருடன் சஞ்சரிப்பதைப் புலப்படுத்தியது.
 

இதனை அடுத்து தாரை வாத்தியங்கள் பலமாக முழங்கின.கரிகாலனை விட, கடிகை பாலகனை விட இதனால் அதிகம் அதிர்ந்தது சிவகாமிதான்!
மூவரும் அதிர்ச்சியுடன் தங்களுக்குப் பின்னால் திரும்பிப் பார்த்தார்கள்.
 

சுற்றிலும் புரவிகள் சூழ நடுவில் வந்த வெண்மை நிறக் குதிரையின் மேல் இளைஞன் ஒருவன் அமர்ந்திருந்தான்.பார்த்ததுமே கரிகாலனுக்கு அந்த இளைஞன் யார் என்று புரிந்துவிட்டது. வயது இருபதுக்குள் இருக்கலாம். களையான முகம்.
 
அரச பரம்பரையில் வந்தவன் என்பதற்கு அடையாளமாக அவன் வதனத்தில் கம்பீரம் சுடர்விட்டது. புரவியில் அமர்ந்திருந்த தோரணையும் அதையே எடுத்துக் காட்டியது. சிரசில் மணிமுடி தரித்திருந்தான். ஆனால், அது மன்னர்கள் அணியும் மணிமுடி அல்ல. அளவிலும் வேலைப்பாட்டிலும் சற்றே குறைந்தது. இளவரசர்கள் மட்டுமே அணியக் கூடியது.


இதை வைத்து வெண்புரவியில் வருபவன் இளவரசன்தான் என்பதை கரிகாலன் ஊகித்துவிட்டான். எந்த தேசத்து இளவரசன் என்பதும் அப்புரவி ஊர்வலம் அருகில் வந்ததும் தெள்ளத் தெளிவாக கரிகாலனுக்குப் புரிந்து விட்டது.வருபவன் சாளுக்கிய இளவரசர் விநயாதித்தன்!
மாலைச் சூரியனின் கதிர்கள் தெளிவாகவே புரவியின் மீது வருபவனின் முகத்தில் விழுந்தன.

அதுதான் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தருக்கும் புரவியில் வருபவனுக்கும் இடையிலான உறவை கரிகாலனுக்குப் புரிய வைத்தது. அந்தளவுக்கு ஜாடை சரியாக இருந்தது.‘‘வருபவன் சாளுக்கிய இளவரசன்...’’ அருகில் இருந்த சிவகாமியின் செவியில் கரிகாலன் முணுமுணுத்தான்.
‘‘ஆம்... ஒரு திங்களாக இளவரசர் விநயாதித்தர் மதுரையில் இருப்பதாக பல்லவ இளவரசர் தெரிவித்தார்...’’

‘‘ஏன் உன் அண்ணன் என்று சொல்லக் கூடாதா..?’’கேட்ட கரிகாலனின் இடுப்பை சிவகாமி யாரும் அறியாமல் கிள்ளினாள்.
‘ஆ’ எனக் கத்த முற்பட்டவன் சுற்றிலும் மக்கள் இருப்பதை அறிந்து வாயை மூடிக் கொண்டான்.இந்தக் கணத்தில்தான் மாயை சிருஷ்டித்து பாண்டியர்களின் பார்வையில் இருந்தும் சாளுக்கிய இளவரசன் விநயாதித்தனின் கவனத்தில் இருந்தும் தாங்கள் தப்பிப்பதற்கான வழியை சிவகாமி ஏற்படுத்தத் தொடங்கினாள்.
 

அதன் ஒரு பகுதியாக ‘‘வேளிர் குலத் தலைவரே...’’ என ஒதுங்கி நின்றிருந்த கடிகை பாலகனை அழைத்தவள், ‘‘உங்கள் நண்பரான சாளுக்கிய இளவரசர் எங்கோ சென்றுவிட்டு மதுரை மாநகருக்குள் நுழைகிறார்... அவருடன் நீங்களும் செல்லுங்கள். வடக்கு வீதியில் இருக்கும் சத்திரத்தில்தான் நாங்கள் இருவரும் தங்கப் போகிறோம். பாண்டிய மன்னரைச் சந்திக்கும்போது நாளை நாங்கள் அவரைப் பார்க்க வருவதாகச் சொல்லுங்கள்...’’ என்றாள்.
 

கட்டளை போல் தொனித்த இந்த வாக்கியங்களைக் கேட்டதும் கடிகை பாலகன் துணுக்குற்றான். அதை அதிகப்படுத்துவது போலவே சிவகாமி அடுத்து பேசினாள்:.

‘‘உங்கள் கைதியாக நாங்கள் மதுரைக்கு வரவில்லை... உங்கள் சகோதரர் கரிகாலர் முன்பு சொன்னபடி பாண்டிய மன்னரைப் பார்க்கவே நாங்கள் வந்திருக்கிறோம். அதுவும் பல்லவ மன்னரின் தூதராக! தூதுவர்களைக் கைது செய்யும் வழக்கம் எந்த தேசத்திலும் இல்லை! இதோ சாளுக்கிய இளவரசர் நெருங்கிவிட்டார். செல்லுங்கள்...’’கடிகை பாலகனை நோக்கிச் சொன்ன சிவகாமி, அதன்பிறகுதாமதிக்காமல் கரிகாலனைப் பற்றி இருந்த தன் கரத்துடன் கூட்டத்தில் கலந்துவிட்டாள்.

செய்வதறியாமல் திகைத்த கடிகை பாலகன், வேறு வழியின்றி விநயாதித்தனின் பரிவாரத்துடன் கலந்தான். தாரை வாத்தியங்கள் பலமாக முழங்க... குதிரைப் படையினர் அணிவகுத்து சாளுக்கிய இளவரசரை எதிர்கொள்ள வந்தார்கள். குதிரைப் படையினரில் இருபது பேர் புடைசூழ விநயாதித்தன் மதுரைக் கோட்டைக்குள் நுழைந்தான்.

நட்பு பாராட்டப்பட்ட சாளுக்கிய நாட்டின் இளவரசன் என்பதால் ஒவ்வொரு கோட்டை வாசலிலும் விநயாதித்தனுக்கு வரவேற்பு பலமாக இருந்தது. பிரமாதமாகவும்.காவலுக்காக நிறுத்தப்பட்டிருந்த யானைகள் துதிக்கைகளைத் தூக்கி வணங்கியதோடு சந்தோஷமாகக் கூச்சலும் போட்டன.
குதிரைகள் மீது காத்து நின்ற வீரர்கள் வாட்களைத் தாழ்த்தி வணங்கினார்கள்.

சாளுக்கிய இளவரசர் விநயாதித்தனும் அவரைத் தொடர்ந்து வந்த சிறு குதிரைப் படையும் உட்புகுவதற்காக கோட்டைக் கதவுகளை அகலத் திறந்த காவலாளிகளின் தலைகள் வணங்கின. வீதிகளில் விநயாதித்தரைக் கண்ட சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் கூச்சல் போட்டார்கள். வீட்டுத் திண்ணைகளில் அமர்ந்திருந்தவர்கள் எழுந்து நின்றார்கள்.
 

விநயாதித்தர் வருவதற்கான தாரை முழங்கப்பட்டதால் மாடிக் கைப்பிடிச் சுவர்களில் வந்து கூடிய மங்கையர் விநயாதித்தரை சுட்டிக் காட்டி ஏதேதோ பேசிக் கொண்டார்கள்.
 
சிலர் வெட்கத்துடன் சிரித்தார்கள்.எதற்கும் அஞ்சாத சிவந்த யவனர்கள் கூட மிக வேகமாக வந்து கொண்டிருந்த தங்கள் வாகனங்களை ஓரமாக நிறுத்தி இறங்கி நின்று தலை தாழ்த்தி விநயாதித்தருக்கு வழிவிட்டார்கள். என்னதான் நட்பு தேசத்தின் இளவரசன் என்றாலும் மன்னருக்கு உரிய மரியாதையை மதுரை மக்கள் விநயாதித்தனுக்கு அளித்தது கரிகாலனை யோசிக்க வைத்தது.


அவனும் சிவகாமியும் பாண்டிய வீரர்களுக்கு எவ்வித சந்தேகமும் எழாதபடி விநயாதித்தனின் பரிவாரத்துடன்தான் மதுரை மாநகரில் நுழைந்தார்கள். எனவே, எல்லா வரவேற்பையும் அருகில் இருந்து அவனால் பார்க்க முடிந்தது. சமயத்தில் இந்த வரவேற்பு எல்லாம் சாளுக்கிய இளவரசனுக்கு அல்ல... தனக்கும் சிவகாமிக்கும்தானோ என்றும் நினைக்க வைத்தது!அது உண்மைதான் என்பதற்கு அடையாளமாக கோட்டைக் காவலனிடம் தன் கரங்களை மீனைப் போல் குவித்து சமிக்ஞை காட்டினாள் சிவகாமி!

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16206&id1=6&issue=20191122

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/24/2019 at 12:01 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தொடர் இத்துடன் நின்றுவிட்டதா ???? சதீஷ்குமாரைக் காணவில்லை

சதீஸ் வந்து கடைசி வாங்கில் இருக்கும் மாணவன் மாதிரி.......சத்தமாய் கத்தினால்தான் சமூகமளிக்கிறார்......!   😁

Link to comment
Share on other sites

அத்தியாயம் 81

‘‘என்ன... வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டதா..?’’
கரிகாலனை நெருங்கி அவனுக்கு மட்டும் கேட்கும் விதத்தில் சிவகாமி கண்சிமிட்டியபடி முணுமுணுத்தாள்.கண்கொட்டாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்த கரிகாலன் தன்னை மீறி புன்னகைத்தான்.

‘‘
இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்..?’’‘‘வேதாளம் எந்த முருங்கை மரத்திலும் ஏறவில்லை என்பதுதான்!’’‘‘இது மட்டும் உண்மையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..?’’‘‘உண்மையாகத்தானே இருக்கிறது... அதை ஏன் நம்ப மறுக்கிறாய் சிவகாமி..?’’‘‘உங்கள் கண்கள் பேசும் மொழி வேறாக இருக்கிறதே... அதனால்தான்...’’‘‘அந்தளவுக்கு நயன பாஷையிலும் நீ கரை கண்டவளா..?’’‘‘உங்கள் கண்கள் பேசும் மொழியை பிசிறின்றி புரிந்து கொள்ளும் அளவுக்கு கசடற நயன பாஷையைக் கற்றவள்தான் நான்!’’சிவகாமியை உற்றுப் பார்த்தான் கரிகாலன்.

‘‘
என்ன... அப்படிப் பார்க்கிறீர்கள்..?’’
‘‘
இப்போது மட்டுமல்ல... மதுரைக் கோட்டைக் காவலனிடம் நீ பேசும்போது கூட உன்னை சாதாரணமாகத்தான் பார்த்தேன்... பார்க்கிறேன்... ஏனோ உனக்கு அது அசாதாரணமாகத் தெரிகிறது...’’‘‘என்ன செய்யச் சொல்கிறீர்கள்..? இன்னமும் தங்கள் மனதில் என்னைக் குறித்த சந்தேகங்கள் மேலும் மேலும் முளைத்தபடி இருக்கின்றதே...’’கரிகாலன் எந்த பதிலையும் சொல்லவில்லை. என்ன பதில் சொல்வது என்றும் அவனுக்குத் தெரியவில்லை.

‘‘
ஆம்... பார்த்ததுமே மதுரைக் கோட்டைக் காவலர் என்று தெள்ளத் தெளிவாகப் புரியும் வகையில் நடமாடும் அந்த வீரரிடம் என் இரு கரங்களையும் மீனைப் போல் குவித்து சமிக்ஞை காட்டினேன். அது பாண்டியர்களின் அடையாளமேதான்... எனவே, பாண்டியர்களின் ஒற்றர் படைத் தலைவியாகவும் நான் இருக்கலாமோ என்ற சந்தேகம் உங்களுக்குள் எழுந்தது... உங்கள் கண்கள் அதைப் பிரதிபலித்தது...’’
‘‘
அதென்னஉம்விகுதி..?’’

‘‘
என்ன செய்ய..? சாளுக்கியர்களின் ஆளுகைக்கு உட்பட்ட காஞ்சி மாநகரத்தில் நாம் இருவரும் நடமாடுகையில் என்னை சாளுக்கியர்களின் ஒற்றர் படைத்தளபதியாக நினைத்தீர்கள்... அங்கு நடைபெற்ற சம்பவங்களும் உங்களையும் என்னையும் தனித்தனியே சந்தித்த நபர்களும் உங்கள் எண்ணத்துக்கு தூபம் போட்டார்கள். இதை வைத்து பல்லவ இளவரசர் முன்னால் என் மீது விசாரணையும் நடத்தப்பட்டது.

ஏனோ தன்னுடன் இருக்கும் உங்களை எல்லாம் நம்பாமல் ஊர் பெயர் தெரியாத என்னை பல்லவ இளவரசர் நம்பினார்... என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் புறந்தள்ளினார்... ஆனாலும் உங்களுக்குள் இன்னமும் சந்தேகம் தீரவில்லை... மதுரைக்குள் நாம் காலடி எடுத்து வைத்ததுமே பாண்டியர்களின் சமிக்ஞையை வேறு கோட்டைத் தலைவரிடம் நான் காட்டினேனா... முடிவே செய்துவிட்டீர்கள், பாண்டியர்களின் ஒற்றர் படைத் தலைவியாகவும் நான் இருக்கலாமோ என்று! ‘உம்விகுதிக்கு காரணம், இப்போதும் உங்கள் மனதின் அடி ஆழத்தில் சாளுக்கியர்களின் ஒற்றர் படையைச் சேர்ந்தவளாக நான் இருக்கலாம் என்ற ஐயம்!’’

வருத்தமோ கோபமோ இல்லாமல் சர்வ சாதாரணமாக இதை தன் கண்களைப் பார்த்தபடி சொன்ன சிவகாமியை அப்படியே அள்ளி அணைக்க வேண்டும் என்று கரிகாலனுக்குத் தோன்றியது!என்ன அழகாக அவளை நம்புவதா வேண்டாமா... அவள் யாராக இருப்பாள்... என்றெல்லாம் தன்னுள், தான் அலைபாய்வதை ஸ்படிகம் போல் தனக்கே காட்டிவிட்டாள்!அவள் கரங்களைப் பற்றி கரிகாலன் அழுத்தினான்.

‘‘
ம்... ம்... இது பொது இடம்... சுற்றிலும் மக்கள் நடமாட்டம் இருக்கிறது... உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள்! வேண்டுமானால் சத்திரத்துக்குச் சென்று நமக்கான அறையில் நாம் மட்டுமே இருக்கும்போது அதை வெளிப்படுத்துங்கள்! தடையேதும் சொல்ல மாட்டேன்!’’ சிவகாமி கண்களைச் சிமிட்டினாள்.யாரும் அறியாமல் ரகசியமாக அவளை ரகசிய இடத்தில் கரிகாலன் கிள்ளினான்!செல்லமாக அவனை முறைத்தவள், ‘‘வாருங்கள்...’’ என்றபடி நடக்கத் தொடங்கினாள்.

தோளோடு தோள் உரச... கரங்களைப் பற்றியபடி நடந்த அவர்கள் இருவரையும் பார்த்த மதுரை மக்கள் தங்களுக்குள் புன்னகைத்துக் கொண்டார்கள். காதலர்கள்! புதியதாகத் திருமணமானவர்கள்! இருட்டத் தொடங்கி இருந்ததால் மதுரை வீதிகளில் இருந்த தூண்களில் பாண்டிய வீரர்கள் தீபங்களை ஏற்றியிருந்தார்கள். மக்களுக்கு இடையூறு செய்யாமல், குறிப்பிட்ட இடைவெளியில் வேல்களையும் வாட்களையும் தாங்கியபடி காவலர்கள் நின்றிருந்தார்கள்.

கால்களாலும் கண்களாலும் கரிகாலன் உணர்ந்தான்; அளந்தான். காஞ்சியைப் போலவேதான் மதுரையும் காட்சியளித்தது. அங்காடிகள் இருந்த வீதிகள் அகலமாகவும் அதன் குறுக்கே குறுகிய சந்துகளும் காணப்பட்டன.

 

வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என திசைகளைக் குறி வைத்தே மதுரையின் வேர்களும் சாலைகளாகப் படர்ந்திருந்தன.எனில், மதுரை அரண்மனைக்குள்ளும் சுரங்கங்கள் இருக்கும்! அவையும் காஞ்சி போலவே இருக்கலாம். ஒரே மனையடி சாஸ்திரம்தானே நகரங்களை உருவாக்கப் பயன்படுகிறது? மதுரையை வேடிக்கை பார்த்தபடியே வணிகர் வீதியை அடைந்தார்கள்.


காஞ்சி வணிகர் வீதியில் நம் பெரிய தாயாரைக் கண்டோம்..? அப்படி மதுரை வணிகர் வீதியில் யாரையேனும் காண்போமா..? வாய்ப்பு இருக்கிறது. சாளுக்கியர்கள் ஒன்றும் லேசுப்பட்டவர்கள் அல்ல!சிந்தித்தபடியே வணிகர் வீதியின் நடுவில் கிழக்கு நோக்கிச் சென்ற குறுகிய சந்துக்குள் செல்ல முயன்றான்.‘‘மேற்குப் பக்கம்...’’ அவனைத் தடுத்து எதிரில் இருந்த சந்தினை சிவகாமி சுட்டிக் காட்டினாள்.

‘‘சத்திரம் கிழக்கில் இருப்பதாகத்தானே சொன்னார்கள்..?’’ கரிகாலன் தன் புருவத்தை உயர்த்தினான்.‘‘ஆம், அங்கும் சத்திரம் இருக்கிறது. ஆனால், நம்மை மேற்கில் இருக்கும் சத்திரத்தில் தங்கும்படி கோட்டைக் காவலர் கேட்டுக் கொண்டார்...’’ ‘‘மீன் சமிக்ஞை காட்டி அவனிடம் நீ கேட்டது இதைத்தானா..?’’‘‘ஆம்!’’‘‘யார் நம்மை மேற்கு சத்திரத்தில் தங்கச் சொன்னார்களாம்..?’’‘‘சாளுக்கிய இளவரசர் விநயாதித்தர்!’’ பளிச்சென்று பதில் அளித்தாள் சிவகாமி. ‘‘நாளைக் காலை நம்மை அவர் சந்திக்கிறாராம்!’’கரிகாலன் பதிலேதும் பேசாமல் சிவகாமியைப் பின்தொடர்ந்தான்.
 

‘‘சிவகாமி ஏதும் சொன்னாளா..?’’ சாளுக்கிய இளவரசர் விநயாதித்தர் சட்டென்று கேட்டார்.‘‘இல்லை இளவரசே... அவர்களுடன் பேசும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை... கரிகாலர் எந்நேரமும் அவர்களுடனேயே இருந்தார்...’’ கைகளைக் கட்டியபடி கடிகை பாலகன் பதிலளித்தான்.

 

படுக்கையில் இருந்து மெல்ல சிவகாமி எழுந்தாள்.அறுசுவை உணவை உண்ட மயக்கத்திலும், நடந்து வந்த களைப்பிலும் கரிகாலன் தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்தான்.

சத்திரத்தின் தீபம் சாளரத்தின் இடைவெளி வழியே ஊடுருவி அவன் முகத்தை முத்தமிட்டுக் கொண்டிருந்தது.சப்தம் எழுப்பாமல் எழுந்த சிவகாமி, மெல்ல அடியெடுத்து வைத்து அவனை நெருங்கினாள்.சுவாசம் சீராக இருந்தது. அவனது நாசிக்கு அருகில் தன் வலது கை ஆள்காட்டி விரலை வைத்துப் பார்த்தாள்.திருப்தியுடன் தன் இடுப்பில் இருந்து மூலிகைக் குப்பியை எடுத்தாள். அதன் மூடியைத் திறந்து பருத்தித் துணி ஒன்றின் மீது ஐந்து துளிகள் விழும்படி தெளித்தாள்.

பிறகு அந்த பருத்தித் துணியை லாவகமாக கரிகாலனின் நாசிக்கு அருகில் கொண்டு சென்றாள்.அதிலிருந்து கிளம்பிய மணத்தை உறங்கிக் கொண்டிருந்த கரிகாலன் சுவாசித்தான்.தன் மூச்சை அடக்கி அதை சுவாசிக்காதபடி எச்சரிக்கையுடன் சிவகாமி சில கணங்கள் அசைவற்று இருந்தாள்.
கரிகாலன் முகத்தில் புள்ளி புள்ளியாக வியர்க்கத் தொடங்கியதும் கையில் இருந்த பருத்தித் துணியை அறையின் மூலையில் வீசி எறிந்துவிட்டு தங்கள் அறையை விட்டு வெளியே வந்தாள்.

காலை வரை மயக்க மருந்து வேலை செய்யும். கரிகாலன் அசைவில்லாமல் படுத்திருப்பான்!அரசாங்க விருந்தினர்கள் தங்கும் வீதிக்குள் நுழைந்த சிவகாமி, வெளிச்சம் படாமல் நிழலிலேயே நடந்து வலமிருந்து இடமாக இருந்த ஐந்தாவது மாளிகைக்குள் நுழைந்தாள்.‘‘சிவகாமி... நான் இங்கிருக்கிறேன்...’’ குரல் வந்த திக்கை நோக்கிச் சென்றாள்.

‘‘பல்லவ இளவரசரையும் நம்ப வைத்துவிட்டாயே..?’’ மகிழ்ச்சியுடன் அவளை வரவேற்றார் சாளுக்கியர்களின் போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபர்!‘‘எல்லாம் நீங்கள் கொடுத்த பயிற்சிதான் குருவே!’’ என்றபடி அவரை வணங்கினாள் சிவகாமி.நிழல்படிந்த மாளிகையின் தூணில் சாய்ந்தபடி அவர்கள் இருவரும் உரையாடுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான் கரிகாலன்!

அத்தியாயம் 82

கரிகாலனின் உதடுகளில் புன்னகை பூத்தது. தூணில் நன்றாக சாய்ந்து கொண்டான். அதேநேரம் தன் உடல் பாகங்கள் வெளிச்சத்தில் படாதபடியும் பார்த்துக் கொண்டான்.‘‘பல்லவ இளவரசரை எப்படி நம்ப வைத்தாய்...’’ குறுஞ்சிரிப்புடன் ஸ்ரீராமபுண்ய வல்லபர் கேட்டார்.‘‘படாதபாடு பட்டுதான்...’’ மரியாதையுடன் சிவகாமி பதிலளித்தாள்.

‘‘கரிகாலன் சொன்னதை அவர் நம்பவில்லையா..?’’‘‘இம்மியளவு கூட நம்பவில்லை...’’‘‘உங்கள் இருவருக்கும் இடையில் உரையாடல் நடக்கையில் கரிகாலன் இடையில் புகுந்து எதுவும் சொல்லவில்லையா..?’’‘‘இல்லை...’’
‘‘கொஞ்சம் புரியும்படியாக சொல்...’’‘‘திறந்தவெளியில் பல்லவ வீரர்கள் மத்தியில் விசாரணை நடைபெற்றது...’’
‘‘ம்...’’

‘‘என் மீதான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன... கொஞ்சம் நாடகீயத்தன்மையுடன் அனைத்துக்கும் பதில் அளித்தேன்...’’
‘‘ம்...’’‘‘அதன் பிறகு என்னை தனியாக அழைத்துச் சென்றார்...’’
‘‘அப்போது கரிகாலன் கூட அங்கு அனுமதிக்கப்படவில்லையா..?’’
‘‘இல்லை...’’

சாளுக்கிய போர் அமைச்சர் எதுவும் சொல்லாமல் மவுனமானார்.
சிவகாமி தொடர்ந்தாள். ‘‘என் தரப்பை தனிமையில் கேட்டுவிட்டுஉன்னை நம்புகிறேன் சகோதரி...’ என்று இராஜசிம்மர் சொன்னார்...’’
‘‘அவ்வளவுதானா..?’’

‘‘ஆம்... அவ்வளவுதான்... அதன்பிறகு பல்லவ இளவரசரின் கட்டளையை ஏற்று கரிகாலரும் நானும் மதுரைக்கு புறப்பட்டு வந்திருக்கிறோம்...’’
‘‘இப்போது கரிகாலன்..?’’‘‘மயக்கத்தில் இருக்கிறார்... காலை வரை எழுந்திருக்க மாட்டார்...’’
ராமபுண்ய வல்லபரின் முகத்தில் ஆழ்ந்த யோசனைகள் படர்ந்தன. ‘‘சிவகாமி...’’
‘‘தெரியும் குருவே...’’ சட்டென அவள் இடைமறித்தாள்.

‘‘தெரியுமா..? என்ன தெரியும்..?’’
‘‘இப்போது நீங்கள் சொல்லப் போவது!’’
சாளுக்கிய போர் அமைச்சர் வியப்புடன் அவளைப் பார்த்தார்.‘‘பல்லவ இளவரசரும் கரிகாலரும் உன்னை நம்பவில்லை... சந்தேகத்தின் சாயல் இன்னும் அதிகமாகி இருக்கிறது... இதைத்தானே கூற வருகிறீர்கள் குருவே!’’புருவங்கள் உயர, ‘‘ஆம்...’’ என பதிலளித்தார் ராமபுண்ய வல்லபர்.

‘‘இதை நானும் ஊகித்தேன் குருவே... அப்படித்தான் இருக்கும் என நம்பவும் செய்கிறேன்... ஏன் தெரியுமா..?’’ சாதாரணமாக இதுவரை பேசி வந்த சிவகாமி சட்டென தன் குரலை உயர்த்தினாள். ‘‘நாம் இருவரும் பேசுவதை இப்போது மறைந்திருந்து கரிகாலர் கேட்டுக் கொண்டிருக்கிறார்!’’
சாளுக்கிய போர் அமைச்சர் திகைத்தார் என்றால்... தூணில் சாய்ந்திருந்த கரிகாலன் அதிர்ச்சியின் விளிம்புக்குச் சென்றான்!
‘‘மயக்க மருந்து கொடுத்ததாக சொன்னாயே சிவகாமி...’’ ராமபுண்ய வல்லபர் படபடத்தார்.

‘‘என்னை சந்தேகக் கண்ணோடு பார்ப்பவர்... நிழலாக என்னைத் தொடருபவர்... மதுரையில் நான் என்ன செய்யப் போகிறேன் என்று காணாமல் அசதியால் உறங்குவாரா என்ன..? தினமும் பிராணாயாமம் செய்யும் மனிதர் அவர்... மூச்சை எப்போது எதற்கு ஏன் அடக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும்...’’

‘‘அறிந்தும் எதற்காக அவனுக்கு மயக்க மருந்தைக் கொடுத்தாய்..?’’
‘‘அது என் கடமை என்பதால்...’’
‘‘அவன் அதை சுவாசிக்க மறுத்தது..?’’
‘‘அவரது கடமை என்பதால்!’’

‘‘தெரிந்தும் இதையெல்லாம் இப்போது ஏன் சொல்கிறாய்..?’’
‘‘செவி குளிர கரிகாலர் இதைக் கேட்க வேண்டுமென்று!’’
‘‘சிவகாமி...’’
‘‘கோபப்படாதீர்கள் குருவே... மதுரையில் ஒரு காரியத்தை நிறைவேற்ற பல்லவ இளவரசர் கரிகாலரை அனுப்பியிருக்கிறார்... அது மட்டும் நிறைவேறிவிட்டால் அவர்கள் பக்கம் வலு கூடிவிடும்...’’

‘‘அப்படியென்ன காரியம் அது..?’’
‘‘‘பகலில் பக்கம் பார்த்துப் பேசு... இரவில் அதுவும் பேசாதேஎன்பது தமிழர் வாக்கு குருவே... அதுவும் கரிகாலர் நம்மை கவனித்துக் கொண்டிருக்கும் நிலையில் வெளிப்படையாக நாம் பேசவே கூடாது...’’
‘‘இரு... உடனே வீரர்களை சல்லடையிட்டு தேடச் சொல்கிறேன்...’’

‘‘அது பயனற்ற வேலை என்பதை காஞ்சியிலேயே தெரிந்து கொண்டிருப்பீர்களே! குருவே, கரிகாலர் அசுவ சாஸ்திரி மட்டுமல்ல; கஜ சாஸ்திரியும் கூட! காற்றின் பயன்பாட்டை நன்கு அறிந்த அவரை அவர் போக்கில்தான் வசப்படுத்த வேண்டும்! அதை நான் பார்த்துக் கொள்கிறேன். பல்லவ இளவரசரும் நானும் தனிமையில் பேசிய விவரங்களை நம் வழக்கப்படி சாளுக்கிய மன்னருக்கு செய்தியாக அனுப்பிவிட்டேன்!’’
‘‘என்ன..?’’

‘‘கோபம் கொள்ளாதீர்கள் குருவே... உங்களால் அனுப்பப்பட்ட ஆயுதம்தான் நான் என்றாலும்... தனக்கு அதில் உடன்பாடில்லை என்றாலும்... சாளுக்கியர்களின் நலன் கருதி எனது உண்மை வடிவம் வெளிப்படக் கூடாது என்பதில் இப்போது நம் சாளுக்கிய மன்னர் உறுதியாக இருக்கிறார்... அக்கறையும் செலுத்துகிறார்... எனவேதான் தங்களை மீறி அவருக்கு செய்தி அனுப்பினேன்!’’

‘‘என்னவென்று..?’’
‘‘அதை வேளிர்களின் தலைவராக மாறியிருக்கும் கடிகை பாலகர் தங்களிடம் தெரிவிப்பார்!’’
‘‘சிவகாமி...’’‘‘ஆச்சர்யத்துக்கும் ஆவேசத்துக்கும் இப்போது நேரமில்லை குருவே... பாண்டிய மன்னரிடம் பக்குவமாக பேசி நீங்களும் சாளுக்கிய இளவரசரும் வந்த காரியத்தை முடியுங்கள்...’’

‘‘நாங்கள் வந்திருக்கும் காரியம்..?’’
‘‘எனக்கு மட்டுமல்ல... பல்லவ இளவரசருக்கும் கரிகாலருக்கும் கூடத் தெரியும்! அதை உடைப்பதற்கான செயலில்தான் கரிகாலர் இறங்கப் போகிறார்! அவரை நான் பார்த்துக் கொள்கிறேன்...’’சிவகாமியை உற்றுப் பார்த்தார் ராமபுண்ய வல்லபர். அவருக்கு தலைசுற்றியது. இப்போது, அவளை நம்புவதா வேண்டாமா என்ற கேள்வி அவருக்குள்ளும் எழுந்தது!

‘‘என்னை பரிபூரணமாக நம்புங்கள் குருவே... தாய்நாட்டுக்கு ஒருபோதும் நான் துரோகம் செய்யமாட்டேன்...’’ சொன்னவள் சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு பரபரப்பானாள். ‘‘கரிகாலர் இந்நேரம் இங்கிருந்து அகன்றிருப்பார்... அவரை நான் பின்தொடர வேண்டும்...’’ என்றபடியே அருகில் வந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கினாள். ‘‘வருகிறேன் குருவே...’’

பதிலை எதிர்பார்க்காமல் விடுவிடுவென்று மாளிகையை விட்டு வெளியேறி இருளில் மறைந்தாள்; கரைந்தாள்.
மனதில் புயலடிக்க சாளுக்கிய போர் அமைச்சர் அவள் சென்ற திசையை வெறித்துப் பார்த்துவிட்டு மாளிகைக்குள் புகுந்தார்!
சில கணங்களுக்குப் பின் கரிகாலன் தன் மறைவிடத்தை விட்டு வெளியே வந்தான். ராமபுண்ய வல்லபரும் சிவகாமியும் பேசிய இடத்தை அடைந்தவன் சட்டென நின்றான்.

மரத்தின் கீழே என்பதால் இலைகளின் அசைவில் அவ்வப்போது நிலவின் ஒளி தரையை முத்தமிட்டு முத்தமிட்டு அகன்று கொண்டிருந்தது.
கரிகாலன் அந்த இடத்தை அடையவும் நிலவின் ஒளி பூமியை முத்தமிடவும் சரியாக இருந்தது.
பளீரென ஒளி வீசிவிட்டு மறையவே சட்டென குனிந்து அந்தப் பொருளை எடுத்தான். அதிர்ந்தான்.
அது பாண்டியர்களின் முத்திரை மோதிரம்!

மீனின் கண்களில் பொருத்தப்பட்டிருந்த இரு முத்துக்களும் இருளிலும் ஒளிர்ந்தன.இந்த மோதிரம் சிவகாமிக்கு எப்படிக் கிடைத்தது..? கண்கள் சுருங்க கரிகாலன் அங்கு நின்றது ஒரு கணம்தான். அதற்குள் கூகையின் குரல் அவனை நடப்புக்கு அழைத்து வந்தது.புருவங்கள் முடிச்சிட ஆந்தையின் அலறல் வந்த திசை நோக்கிச் சென்றான். அது ராமபுண்ய வல்லபர் தங்கியிருந்த மாளிகைக்கு அடுத்த மாளிகைக்கு அழைத்துச் சென்றது.
இருளில் தன்னைக் கரைத்தபடி அந்த மாளிகைக்குள் நுழைந்தான்.

சட்டென அவன் தோளில் ஒரு கரம் வந்து விழுந்தது.கூகைதான். ஆந்தையேதான். ஆனால், பறவை அல்ல... சீனன்! சோழ மன்னருக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்திய அதே சீனன்!மீண்டும் ஆந்தையைப் போல் அலறிவிட்டு கரிகாலனைப் பார்த்து கண்சிமிட்டிய சீனன், தன்னைப் பின்தொடரும்படி சைகை செய்துவிட்டு அந்த மாளிகையை நோக்கி நடந்தான்.இருவரும் மாளிகையின் பின்புறத்தை அடைந்தார்கள்.

படர்ந்திருந்த கொடியைப் பிடித்தபடி சீனன் ஏறத் தொடங்கினான். இடைவெளிவிட்டு கரிகாலனும் ஏற ஆரம்பித்தான்.
இருவரும் கொடியைப் பிடித்து ஏறுவதை இன்னொரு மரத்தின் பின்னால் நின்றபடி புன்னகையுடன் சிவகாமி பார்த்துக் கொண்டிருந்தாள்!

அத்தியாயம் 83

மாடத்தை சீனன் நெருங்கியதும் ஆந்தை அலறியது.குனிந்து பார்த்தான். இருளும் ஒளிர்ந்தது. அதில் கரிகாலனின் கண்கள் சிமிட்டின. கூகையைப் போல் குரல் எழுப்பியது கரிகாலன்தான் என சீனன் புரிந்துகொண்டான்.  

பார்வையால் என்னவென்று கேட்டான்.ஜாடையால் சாளரம் ஒன்றை கரிகாலன் காண்பித்தான்.புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக சீனன் தலையசைத்தான்.அடுத்த கணம் கொடியைப் பிடித்தபடி, தான் ஜாடை செய்த சாளரத்தின் அருகில் கரிகாலன் வந்தான். எச்சரிக்கையுடன் தலையை உட்புறமாக நீட்டி இரு பக்கங்களிலும் பார்த்தான். யாருமில்லை.மெல்ல சாளரத்தைப் பிடித்தபடி ஓசை எழுப்பாமல் உள்ளே குதித்தான்.

ஏறிய வேகத்தில் இறங்கிய சீனன் சாளரத்தின் பக்கமாக வந்து கரிகாலன் போலவே உள்ளே இறங்கினான்.இருவரும் மிக மெதுவாக நடந்தார்கள். பாத ஒலியும் எழாதபடி பார்த்துக் கொண்டார்கள்.வலப்பக்கமாக நடந்தபடி வந்தவர்கள் மூடியிருந்த அறை ஒன்றின் முன்னால் நின்றார்கள்.

 

கரிகாலன் திரும்பிப் பார்த்தான். சீனன் தலையசைத்தான். இருவரும் கதவின் இருபுறமும் நின்றுகொண்டார்கள். தத்தம் இடுப்பில் இருந்து குறுவாளை எடுத்துக்கொண்டு கைகளில் கெட்டியாக பிடித்துக்கொண்டார்கள்.

பார்வையால் உரையாடிவிட்டு கரிகாலன் கதவின் மீது கை வைத்தான். உட்புறமாகத் தாழிடப்படாததால் கதவு திறந்துகொண்டது. புழக்கத்தில் இருந்த அறை என்பதற்கு அறிகுறியாக ஓசை எதையும் அது எழுப்பவில்லை. இருவரும் கவனத்துடன் அறைக்குள் நுழைந்தார்கள். எதிர்பார்த்தது போலவே அறையில் யாருமில்லை.‘‘கரிகாலரே...’’ சீனன் அழைத்தான்.புருவத்தை உயர்த்தி என்னவென்று கரிகாலன் கேட்டான்.

‘‘ஆந்தையைப் போல் நீங்கள் அலறச் சொன்னதற்கான காரணம் புரிகிறது. இரவில் கூகைகளின் ஆட்சி என்பதால் யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் எழாது. எனவே நீங்கள் கேட்டுக் கொண்டபடி கொடியை மாடம் வரை ஏறுவதற்கு வசதியாக வைத்துவிட்டு நான் வந்துவிட்டதற்கு அறிகுறியாக ஆந்தையைப் போல் அலறி சமிக்ஞை செய்தேன்...’’
‘‘அதற்கென்ன இப்போது..?’’

‘‘இல்லை... மாடம் வரை கொடியைப் படரும்படி வைக்கச் சொல்லிவிட்டு எதற்காக சாளரத்தில் நுழையச் சொன்னீர்கள்..?’’
‘‘சிறிது நேரத்தில் நீயே அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வாய்...’’ கரிகாலன் புன்னகைத்தான்.‘‘நம்மால் சமாளிக்க முடியும்... குறிப்பாக உங்களால்... என்றாலும் எதிரிகள் சூழ்ந்துகொண்டால் தப்பிப்பது கடினமல்லவா..? நீங்கள் வேறு வாட்களை எடுத்துக் கொள்ள வேண்டாம்... குறுவாள் போதும் என்று சொல்லிவிட்டீர்கள்...’’‘‘வாட்களுக்கு தேவை ஏற்படாது...’’‘‘மாளிகை..?’’

‘‘மாளிகையின் சூட்சுமம் எனக்குத் தெரியும்... அஞ்சாதே! காஞ்சியில் மாளிகையை நிர்மாணித்த சிற்பியின் சீடர்கள்தான் மதுரை வணிக வீதியையும் அமைத்திருக்கிறார்கள்... என்ன... கொஞ்சம் மாறுதல் செய்திருக்கிறார்கள்! சிற்ப சாஸ்திரமும் வாஸ்து சாஸ்திரமும் அறிந்தவனுக்கு இந்த மாளிகையை விட்டு எப்படி வெளியேற வேண்டும் என்றும் தெரியும்...’’

‘‘ஆனால், இது வணிகர் வீதி அல்லவா..?’’
‘‘வணிகனான நீ இப்போது ஒற்றனாகச் செயல்படவில்லையா..? நிலம் மாறலாம்... தேசம் பிரியலாம்... ஆனால், வணிக வீதிதான் உலகத்தையே இணைக்கிறது! சமாதானமும் சச்சரவும் தீர்மானிக்கப்படுவது பிரபஞ்சம் எங்கும் வணிகர்களால்தான்! தேசங்களை உருவாக்குவதும் யுத்தத்துக்கான தேவையை விதைப்பதும் காலம் காலமாக வணிகர்கள்தான்! அதனால்தானே காஞ்சி வணிக வீதியை சாளுக்கிய போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபர் தேர்ந்தெடுத்தார்?! அதே வழியைத்தான் மதுரையில் நாம் பின்பற்றப் போகிறோம்!’’
‘‘புரிகிறது கரிகாலரே...’’ சீனன் இழுத்தான்.

‘‘பரவாயில்லை... தொண்டைக்குள் சிக்கி இருப்பதையும் கேட்டு விடு!’’
‘‘காஞ்சியை மீட்க வேண்டிய நேரத்தில் எதற்காக பல்லவ இளவரசர் உங்களை மதுரைக்கு அனுப்பியிருக்கிறார்..? எதற்காக யாருக்கும் ஐயம் எழாதபடி என்னையும் இங்கு வரச் சொன்னீர்கள்..?’’‘‘எந்த இடத்தில் போர் நடைபெற வேண்டும் என்று தீர்மானிக்க!’’
‘‘கரிகாலரே...’’‘‘தமிழகத்தின் நிலை உனக்குப் புரியாது... வணிகம் செய்ய வந்தவன் பல்லவ இளவரசருக்கு நட்பாகி அவருக்காக உன் உயிரையும் கொடுக்க சித்தமாகி இருக்கிறாய்... அதற்காகவே எங்கள் சார்பில் ஒற்றனாகவும் மாறியிருக்கிறாய்... உண்மையில் இந்த மண்ணில் பிறந்த என்னைவிட நீயே உயர்வானவன்...’’ நெகிழ்ச்சியுடன் சொன்ன கரிகாலன், சீனனை நெருங்கி அவனை அணைத்துக் கொண்டான்.

‘‘இதை ஏன் இப்போது சொல்கிறீர்கள்..?’’ கூச்சத்துடன் சீனன் கேட்டான்.‘‘உன் கேள்விக்கு பதில் அளிக்க! உன் நாட்டில் போர் புரிவது போலவே இங்கும் யுத்தம் நடைபெறும் என்று நினைத்து அதற்கேற்ப யோசிக்கிறாய்... ஆனால், இந்த நிலத்தின் யுத்த தந்திரங்களே வேறு... சில முடிச்சுகளை அவிழ்க்க வேண்டும்... அப்போதுதான் நமக்குத் தேவையான இடத்தில் முடிச்சிட முடியும்... எனது கணிப்பு சரியெனில் நாளைக் காலை நீ உறையூருக்குச் செல்லவேண்டி இருக்கும்...’’

ஏதோ கேட்க வாயைத் திறந்த சீனன், சட்டென்று அமைதியாக தன் செவிகளைக் கூர்மைப்படுத்தினான்.
கரிகாலனின் காதுகளும் எழுந்து தாழ்ந்தன.
யாரோ யாரிடமோ பேசும் சப்தம்.
‘‘கரிகாலரே... அது சிவகாமியின் குரல்...’’
‘‘ம்...’’ கரிகாலன் புன்னகைத்தான்.

‘‘நாம் இருவரும் கொடியைப் பிடித்து ஏறுவதை அவர்கள் பார்த்தார்கள்...’’
‘‘தெரியும்... அவள் பார்க்க வேண்டும் என்றுதான் அவ்வப்போது வெளிச்சம் என்மீது படும்படி பார்த்துக் கொண்டேன்!’’
‘‘சிவகாமி யார் பக்கம் இருக்கிறார்கள்..?’’
‘‘உனக்கென்ன தோன்றுகிறது..?’’
‘‘குழப்பமாக இருக்கிறது!’’

‘‘ராஜ தந்திரத்தின் ஒரு பகுதி எதிராளியைக் குழப்புவது... சிவகாமி அதைத்தான் செய்கிறாள்... பல்லவர்களை மட்டுமல்ல, சாளுக்கியர்களையும் குழப்புகிறாள். அடுத்து பாண்டியர்களையும் குழப்பப் போகிறாள்... அவள் யார் பக்கம்... யாருடைய ஆயுதம்..? இந்தக் கேள்வியை மட்டும்தான் எல்லோர் மனதிலும் விதைத்திருக்கிறாள். இதற்கு தீர்வு காண ஒவ்வொருவரும் முற்படுவதற்குள் தனக்கு வேண்டியதை சாதித்துக் கொள்கிறாள்...’’
‘‘அவர்களுக்கு என்ன வேண்டும்..?’’

‘‘கலங்கிய குட்டை தெளிந்த பிறகு உள்ளே இருப்பது ஸ்படிகமாகத்
தெரியும்!’’‘‘எப்போது தெளியும்..?’’
‘‘தெளியாது... தெளிய வைக்க வேண்டும்... வா...’’
சீனனை அழைத்துக் கொண்டு குரல் வந்த திசையை நோக்கி கரிகாலன் நகர்ந்தான்.சூழலை உணர்ந்து அதன் பிறகு எதுவும் பேசாமல் சீனனும் பின்தொடர்ந்தான்.

அவர்கள் இருந்த அறை இன்னொரு அறைக்கு வழிகாட்டியது. அங்கிருந்து இன்னொன்று. பிறகு மற்றொன்று. குரலையே பாதையாகப் பின்பற்றினார்கள். ஒருகட்டத்தில் அவர்கள் இருவருக்கும் வழிகாட்டுவதற்காகவே சிவகாமி தன் குரலை உயர்த்திப் பேசுகிறாளோ என்றுகூட கரிகாலனுக்கும் சீனனுக்கும் தோன்றியது!குரலின் ஓசை அதிகரித்தபோது சுவர் ஒன்றின் முன்னால் நின்றுகொண்டிருந்தார்கள்.

கரிகாலன் அந்தச் சுவரை ஆராய்ந்தான். ஓரிடத்தில் அவன் பார்வை நிலைத்தது. கண்கள் பளிச்சிட்டன. தன் வலது கையை அந்த இடத்தில் வைத்து தடவினான். திருப்தியுடன் நகத்தால் அங்கு சக்கரம் வரைந்தான். சக்கரத்தின் மையத்தை விரல்களால் பிடித்துத் திருகினான்.
ஓசை எழாமல் அந்த சுவர் கதவாக மாறித் திறந்தது!சீனன் பிரமிப்புடன் கரிகாலனைப் பார்த்தான்.

எந்த சமிக்ஞையும் காண்பிக்காமல் கரிகாலன் நுழைந்தான். கூடவே சீனனும்.பாதாள சிறையைப் போல் கும்மிருட்டாக இருந்தது. இருள் பழகியதும் தொலைவில் ஒளி தென்பட்டது. அதை நோக்கி மெல்ல நடந்தார்கள்.அந்த ஒளி தீப்பந்தம் என்பதும் சிவகாமி நடுவில் அமர்ந்திருக்க அவளைச் சுற்றிலும் சாளுக்கிய, பாண்டிய தளபதிகள் நின்று கொண்டிருப்பதும் கால் நாழிகை பயணத்துக்குப் பின் தெரிந்தது.இருளோடு கரைந்தபடி அவர்கள் பேசுவது துல்லியமாகக் கேட்கும் தொலைவில் கரிகாலனும் சீனனும் நின்றார்கள்.

சிவகாமியின் கையில் அரக்கு இருந்தது. அவள் முன்னால் வெள்ளை நிற பட்டுத்துணி விரிந்திருந்தது.‘‘புரிகிறதல்லவா..? இனி கவனியுங்கள்...’’ சிவகாமியின் குரல் அழுத்தமாக ஒலித்தது.குனிந்து அரக்கினால் பட்டுத் துணியின் ஓரிடத்தை வட்டமிட்டாள்.‘‘இது புள்ளலூர். காஞ்சிபுரத்துக்கு பத்து கல் தொலைவில் இருக்கும் ஊர். இங்குதான் பல்லவ மன்னர் மகேந்திரவர்மருக்கும் சாளுக்கிய மாமன்னர் இரண்டாம் புலிகேசிக்கும் போர் நடந்தது. பல்லவர்களுக்கு தெற்கே சிற்றரசாக சோழர்களும், பேரரசாக பாண்டியர்களும் இருந்தனர். மேற்கே கங்கர்கள் வலிமையுடன் இருந்தார்கள்.

மாமன்னர் இரண்டாம் புலிகேசி, சோழர்களையும் பாண்டியர்களையும் தவிர்த்துவிட்டு கங்கர்களை நட்பாக்கிக் கொண்டார். அந்தப் போரில் பல்லவர்களும் சாளுக்கியர்களும் சம அளவில் வெற்றி பெற்றனர். பல்லவ ராஜ்ஜியத்தை சாளுக்கியர்களால் கைப்பற்ற முடியவில்லை. இது பல்லவர்களுக்கு சாதகமான விஷயம்.

அதேநேரம் பல்லவர்களின் விஸ்தரிப்பை சாளுக்கியர்கள் இப்போரில் தடுத்தனர். இது சாளுக்கியர்களுக்கு சாதகமாக அமைந்தது. எனவேதான் இருநாட்டினரும் தத்தம் வெற்றிகளைக் கொண்டாடும் வகையில் கல்வெட்டைச் செதுக்கியுள்ளனர்... இந்த விவரங்கள் உங்களுக்குத் தெரியும்...’’

நிறுத்திய சிவகாமி நிமிர்ந்து அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு எதேச்சையாக பின்னால் திரும்புவதுபோல் திரும்பினாள்.
அங்குதான் கரிகாலனும் சீனனும் இருளில் மறைந்திருந்தார்கள்!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அத்தியாயம் 84

சிவகாமி தனக்குள் புன்னகைத்தபடி அலட்சியமாகத் திரும்பினாள். கரிகாலனும் சீனனும் அங்கு நிழலோடு நிழலாக மறைந்தபடி நிற்பதைக் கவனித்தாளா... அல்லது ஊகித்தாளா..?தெரியாது.

 

ஆனால், தன் பேச்சை அவள் நிறுத்தவுமில்லை. யாரோ மறைந்து நின்று நாம் உரையாடுவதைக் கவனிக்கிறார்கள் என எச்சரிக்கையையும் மற்றவர்களுக்குச் செய்யவில்லை.மாறாக தன் முன்னால் நின்றிருந்த சாளுக்கிய, பாண்டிய சேனாதிபதிகளை சிவகாமி உற்றுப் பார்த்தாள்.

 

‘‘அங்கென்ன பார்வை..? இங்கே கவனியுங்கள்...’’ என்றபடி அவர்களின் கவனத்தை தன் முன்னால் பரப்பப்பட்டிருந்த வெண்மைநிற பட்டுத் துணியின் மீது திருப்பினாள். தன் கையில் இருந்த அரக்கைச் சுற்றியபடியே பேசத் தொடங்கினாள்.

 

‘‘மகேந்திரவர்ம பல்லவருக்கும் நமது மாமன்னர் இரண்டாம் புலிகேசிக்கும் நடைபெற்ற போர் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்பது உங்களுக்கே தெரியும். ‘ஹைஹொளேகல்வெட்டு சாளுக்கியர்களின் வெற்றி குறித்து முரசறைந்து சொல்கிறது. பல்லவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த வேங்கி நாட்டை இந்தப் போரில்தான் நம் மாமன்னர் இரண்டாம் புலிகேசி கைப்பற்றினார்.


ஆனால்...’’நிறுத்தியவள் மீண்டும், தான் வட்டமிட்ட பகுதியிலேயே இன்னொரு வட்டத்தைப் பெரியதாக அரக்கினால் வரைந்தாள்.
‘‘கைப்பற்றிய பகுதியை... வேங்கி நாட்டைச் சுதந்திரமாக ஆளும் பொறுப்பை... தன் சகோதரரான விஷ்ணு வர்த்தருக்கு கொடுத்தார். இப்போதும் வேங்கிப் பகுதியை ஆண்டுவருவது விஷ்ணுவர்த்தர்தான். இதனால் இரு சாளுக்கிய அரசுகள் நிலவுகின்றன. இப்படி ஒரு தேசம் இரண்டாகப் பிரிந்திருப்பது நல்லதல்ல...’’‘‘யாருக்கு..?’’ இடைமறித்தான் சாளுக்கிய உபசேனாதிபதி.

‘‘எதிரிகளுக்கு...’’ சட்டெனப் பதிலளித்தாள் சிவகாமி.
‘‘பல்லவர்களை குறிப்பிடுகிறீர்களா..?’’ பாண்டிய சேனாதிபதி தன் புருவத்தை உயர்த்தினான்.
‘‘இல்லை...’’ சிவகாமி கண் சிமிட்டினாள்.
‘‘பிறகு..?’’ சாளுக்கிய உபசேனாதிபதி உறுமினான்.

‘‘சோழர்களுக்கு சாதகமாகலாம்!’’
சிவகாமி இப்படி சொல்லி முடித்ததும் பாண்டிய சேனாதிபதி கடகடவென சிரித்தான்.‘‘இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது மாறவர்மரே...’’ பெயர் சொல்லி அவரை அழைத்த சிவகாமி, தானே தொடர்ந்தாள். ‘‘இன்று சோழர்கள் குறுநில மன்னர்களாக இருக்கலாம். கையளவு நிலப்பகுதி அவர்களின் ஆளுகையின் கீழ் நிலவலாம். ஆனால், என்றுமே அவர்கள் புலிகள்தான். ஆயிரம் ஆண்டுக்கால குருதி அவர்களின் உடலில் பாய்கிறது. என்றேனும் ஒருநாள் நிச்சயம் பேரரசை ஸ்தாபிப்பார்கள்... அடிபட்டு பதுங்கி வாழும் புலியின் வன்மம் எவ்வளவு ஆபத்தானது என்பதை வேட்டைக்காரர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்...’’

‘‘அப்போது பாண்டியர்களாகிய நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்போம் என்று நினைக்கிறீர்களா..?’’ பாண்டிய சேனாதிபதியான மாறவர்மன் உறுமினார்.‘‘நிச்சயம் மாட்டீர்கள். ஏனெனில் சோழர்களும் பாண்டியர்களும் ஜென்மாந்திரப் பகைவர்கள்... யுகம் யுகமாக உங்கள் பகை நிலவுகிறதோ என்றுகூட நான் சந்தேகப்படுகிறேன்... சரி... நடப்புக்கு வருவோம்.

எதிர்காலம் குறித்து நாம் பேசி பொழுதைக் கழிக்க வேண்டாம்... எனது ஊகத்தை தெரியப்படுத்தினேன். கண்டிப்பாக சோழர்கள் வருங்காலத்தில் பேரரசை ஸ்தாபிப்பார்கள் என்ற என் உள்ளுணர்வை அறிவித்தேன். அவ்வளவுதான். மற்றபடி இரு சாளுக்கிய தேசங்கள் நிலவுவது இப்போதைக்கு நமக்கு... அதாவது விக்கிரமாதித்த மாமன்னர் ஆட்சி செய்யும் சாளுக்கிய தேசத்துக்கும் பாண்டியர்களுக்கும் எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது...’’

சில கணங்கள் அமைதியாக இருந்த சிவகாமி, அரக்கினால் மூன்று முறை பட்டுத் துணியின் மீது தட்டிவிட்டு தொடர்ந்தாள்.
‘‘மாமன்னர் புலிகேசியின் தலைமையிலான சாளுக்கியப் படையை எதிர்கொள்ள முடியாமல் மகேந்திரவர்ம பல்லவர் காஞ்சிக்குள் ஒளிந்து கொண்டார். சாளுக்கியப் படைகள் வேங்கியை கைப்பற்றின. இதன் பிறகும், தான் மறைந்திருப்பது அழகல்ல என மகேந்திரவர்மருக்கு புரிந்தது. தன் படைகளுடன் வெளிப்பட்டு சாளுக்கியப் படைகளை புள்ளலூரில் நேருக்கு நேர் எதிர்கொண்டார். இந்தப் போர் வெற்றி தோல்வி இன்றி முடிந்தது. பல்லவ நிலப்பரப்பு சுருங்கியது. சாளுக்கிய தேசம் விரிவடைந்தது.

ஆம். நம் மாமன்னர் இரண்டாம் புலிகேசி பாணர் தலைவரான இரண விக்கிரமனை சிம்பிகைப் போரில் முறியடித்து அவன் நாட்டையே சூறையாடினார். இந்த நேரத்தில்தான் கன்னோசி பேரரசர் ஹர்ஷவர்த்தனர் தென்னாட்டின் மீது போர் தொடுக்க ஆயத்தமாவதை அறிந்தார். உடனே புயலென புறப்பட்ட மாமன்னர் இரண்டாம் புலிகேசி, கன்னோசியை சின்னாபின்னமாக்கினார். ஹர்ஷவர்த்தனர் தன் தோல்வியை ஒப்புக்கொண்டார்.
இதன் பிறகு நம் மாமன்னர் நினைத்திருந்தால் வடக்கு நோக்கி தன் படைகளை நகர்த்தி மேலும் மேலும் ராஜ்ஜியங்களைக் கைப்பற்றியிருக்கமுடியும்.

ஆனால், பல்லவர்களை வேரோடு வேராக சாய்க்க வேண்டும் என்பதுதான் இரண்டாம் புலிகேசி மாமன்னரின் நோக்கம். எனவே வடதிசை மன்னர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டார். இதற்குள் பாணர்கள் மீண்டும் தங்கள் பலத்தை பெருக்கிக் கொண்டு சாளுக்கியர்களை எதிர்த்தனர். தண்டக்கல், முனயத்தூர் என பல்லவ நாட்டுக்கு வடதிசையில் இருந்த ஊர்களில் பாணர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் போர் நடந்தது.

இவை எல்லாம் நடக்கையில் பல்லவ நாட்டில் பல மாறுதல்கள் நிகழ்ந்தன. புள்ளலூர் தோல்வியைத் தொடர்ந்து மன அமைதியை இழந்த மகேந்திரவர்மர் அதிக நாள் வாழவில்லை. காலமானார். இதன் பிறகு பல்லவ நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நரசிம்மவர்மர், தங்கள் பரம்பரைக்கு ஏற்பட்ட இழுக்கை, அவப்பெயரைத் துடைக்க முடிவெடுத்தார். படைகளைத் திரட்டினார்.

இதே நேரம் பல்லவர்களை நிர்மூலமாக்க நம் மாமன்னர் இரண்டாம் புலிகேசியும் படைகளுடன் மீண்டும் தெற்கு நோக்கி வந்தார். பரியளம், மணிமங்கலம், சூரமாரம் ஆகிய மூன்று இடங்களிலும் பல்லவர்களும் சாளுக்கியர்களும் நேருக்குநேர் அடுத்தடுத்து மோதினார்கள்.

மூன்று இடங்களிலும் பல்லவர்களின் கையே ஓங்கியது. சாளுக்கியப் படைகளை அவர்கள் ஓடஓட விரட்டினார்கள். ‘யானைக் கூட்டத்துக்குச் சிங்கம் போன்றவனும், நரசிங்கப் பெருமானை ஒத்தவனும், வணங்கா முடிமன்னர் மகுடத்தின் மேல் இருக்கும் சூடாமணியைப் போன்றவனுமான நரசிம்மவர்மன் வெற்றி என்னும் பதத்தை புலிகேசியின் முதுகாகிய பட்டயத்தின் மீது எழுதினான்என பல்லவ தேசம் முழுக்க பேசும்படி அவர்கள் வெற்றி பெற்றார்கள்.

பின்வாங்கி பின்வாங்கி ஓடிய சாளுக்கியப் படைகளைத் துரத்திக்கொண்டே வாதாபி வரை பல்லவர்கள் வந்தார்கள். சாளுக்கியர்களின் தலைநகரையே எரித்து தங்கள் வெறியை தீர்த்துக் கொண்டார்கள்.இந்தப் படுதோல்விக்கு பழிவாங்கத்தான் நம் மாமன்னர் இரண்டாம் புலிகேசியின் மகனும் நம் பெருமைக்குரிய மன்னருமான விக்கிரமாதித்தர் இப்போது படைதிரட்டி வந்திருக்கிறார்.

முன்பு இப்படி நாம் படைதிரட்டி வந்தபோது மகேந்திரவர்மர் காஞ்சியில் ஒளிந்துகொண்டார். அப்படிப்பட்ட மனிதரின் வம்சத்தை சேர்ந்தவர்தானே இப்போதைய பல்லவ மன்னரான பரமேஸ்வர வர்மர்... எனவே இவரும் ஓடி ஒளிந்துவிட்டார்... என்ன காஞ்சியில் பதுங்காமல் நாட்டையே நம்மிடம் ஒப்படைத்துவிட்டு எங்கோ கண்காணாத இடத்தில் மறைந்து வாழ்கிறார்.

இப்போது சாளுக்கிய மன்னர்தான் பல்லவ நாட்டையும் ஆள்கிறார். ஆனால், நம் மன்னர் விக்கிரமாதித்தருக்கு இது போதுமானதாக இல்லை. எப்படி நரசிம்மவர்மர் போரில் தங்களைத் தோற்கடித்தாரோ அப்படி சாளுக்கியர்களும் யுத்தத்தில்தான் பல்லவர்களை வீழ்த்த வேண்டும்... அதுதான் தன் தந்தைக்கு, தான் செய்யும் மகத்தான கைம்மாறு என சாளுக்கிய மன்னர் நினைக்கிறார்.

அவர் எண்ணத்தை நிறைவேற்றவே இப்போது நாம் மதுரைக்கு வந்திருக்கிறோம்... நிச்சயம் நம் மன்னரின் கனவு ஈடேறும். அதற்கு நாம் ஓர் இடையூறை சமாளிக்க வேண்டும்...’’ நிறுத்திய சிவகாமி அங்கு நின்றுகொண்டிருந்தவர்களை இமைக்காமல் பார்த்தாள்.‘‘என்ன இடையூறு..?’’ சட்டென சாளுக்கிய சேனாதிபதி கேட்டார்.‘‘இப்போதைய பல்லவ இளவரசர் ராஜசிம்மரை குறிப்பிடுகிறீர்களா..?’’ பாண்டிய சேனாதிபதியான மாறவர்மன் படபடத்தார். ‘‘நாங்களும் கேள்விப்பட்டோம்... ராஜசிம்மரின் வீரம் குறித்தும் அவரது கலை ஆர்வம் பற்றியும்... மாமல்லபுரகடற்கரைக் கோயில்களை விட மகத்தான படைப்பை தன் ஆட்சியில் அவர் ஏற்படுத்தப் போகிறாராமே..?’’

‘‘அதற்கு ராஜசிம்மர் பல்லவ அரியணையில் ஏற வேண்டுமே...’’ அலட்சியமாக பதில் சொன்னார் சாளுக்கிய சேனாதிபதி. ‘‘எங்கள் மன்னர் விக்கிரமாதித்தர் தலைமையில் நாங்கள் பெரும் படையாகத் திரண்டிருக்கிறோம்... நிச்சயம் இம்முறை பல்லவர்கள் வேரோடு சாய்க்கப்படுவார்கள்.

அதன் பிறகு புல்கூட முளைக்காது...’’‘‘நல்லது... இந்த நம்பிக்கை உங்களிடம் இருப்பது போருக்கு உதவும்... ஆனால்...’’ மாறவர்மர் சில கணங்கள் அமைதியாக இருந்துவிட்டு சிவகாமியை ஏறிட்டார். ‘‘என்ன இடையூறு என்று இன்னமும் நீங்கள் சொல்லவில்லையே..?’’‘‘ஒரு மனிதன்...’’ நிமிர்ந்து அமர்ந்தபடி சிவகாமி பதிலளித்தாள்.‘‘யார்..?’’ அனைவரும் ஒரே குரலில் கேட்டார்கள்.மெல்ல ஆனால், அழுத்தமாக சிவகாமி பதில் சொன்னாள். ‘‘கரிகாலன்!’’

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16239&id1=6&issue=20191129

தாமதத்திற்கு வருந்துகிறேன்....

Link to comment
Share on other sites

ரத்த மகுடம்-85

‘‘கரிகாலனா..?’’ அலட்சியமாகக் கேட்டார் பாண்டிய சேனாதிபதியான மாறவர்மன்.‘‘பல்லவர்கள் போட்ட பிச்சையில் விட்ட குறை தொட்ட குறையாக நான்கைந்து தெருக்களைப் பெற்று, அதையே ‘தங்கள் நிலப்பரப்பாகப் பாவித்து’, குறுநில மன்னர்கள் என்ற அதிகாரத்துடன் வலம் வரும் சோழர்களின் வருங்கால மன்னனைக் குறிப்பிடுகிறீர்களா..?’’
24.jpg
 கடகடவெனச் சிரித்தார் மாறவர்மன்: ‘‘அந்தப் பொடிப் பயலால் சாளுக்கியர்களுக்கு அப்படியென்ன இடையூறு ஏற்பட்டு விடும்..?’’

‘‘அதானே...’’ சாளுக்கிய உப சேனாதிபதி ஆமோதித்தார்: ‘‘குறைந்தபட்சம் நாட்டை மீட்பதற்காக படை திரட்டி வரும் பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மரோ அல்லது அவரது மைந்தனும் பல்லவ இளவரசருமான இராஜசிம்மனோ இடையூறாக வருவார்கள் என்று நீங்கள் சொன்னால் கூட அதில் ஒரு நியாயம் இருக்கும்.
 
ஏனெனில் தங்கள் ஜென்மப் பகைவர்களான சாளுக்கியர்களை வீழ்த்தும் வெறியும் கடமையும் அவர்களுக்கு இருக்கிறது. எனவே சாளுக்கியர்களின் கனவு நிறைவேறாமல் தடுக்க அவர்களே முற்படுவார்கள். ஆனால், கரிகாலன்..?’’


நிறுத்திவிட்டு தன் புருவத்தை உயர்த்தி உதட்டைப் பிதுக்கினார் சாளுக்கிய உப சேனாதிபதி: ‘‘நம்பும்படியாக இல்லை. அளவுக்கு மீறி அவனை மதிப்பிடுகிறீர்களோ என்று தோன்றுகிறது...’’‘‘இந்த எண்ணத்தை சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரிடம் வெளிப்படுத்தினீர்களா..?’’ உதட்டில் பூத்த முறுவலுடன் சிவகாமி கேட்டாள்.  

‘‘சாளுக்கியர்களின் கனவுக்கு இடையூறாக நிற்கும் மனிதன் கரிகாலன்தான் என நீங்கள்தானே இப்பொழுது குறிப்பிட்டீர்கள்..?’’ படபடத்தார் சாளுக்கிய உப சேனாதிபதி.‘‘ஆம்... இப்பொழுதும் அதைத்தான் சொல்கிறேன்...’’ நகைப்பதை தொடர்ந்தாள் சிவகாமி.
‘‘அப்படியானால் உங்களிடம்தானே என் கருத்தை வெளிப்படுத்த வேண்டும்..? ஏனெனில் உங்கள் முன்தானே நான் நின்று கொண்டிருக்கிறேன்...’’
‘‘இக்கணத்தில் நிற்கிறாய்... அக்கணத்தில் என்ன செய்தாய்..?’’ புன்னகைப்பதை நிறுத்திவிட்டு சாளுக்கிய உப சேனாதிபதியை கூர்மையாகப் பார்த்தாள் சிவகாமி.

‘‘அக்கணமா..? எக்கணம்..?’’
‘‘மந்திராலோசனையில்!’’ சட்டென பதில் சொன்னாள் சிவகாமி.
என்ன மறுமொழி சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார் சாளுக்கிய உபசேனாபதி.
‘‘காஞ்சிக்கு கரிகாலர் வந்தபோது என்ன நடந்தது என்று நினைவில் இருக்கிறதா..?’’
சிவகாமியின் கேள்விக்கு பதில் சொல்ல சாளுக்கிய உப சேனாதிபதி திணறினார்.

அலட்சியத்துடன் சிவகாமியே தொடர்ந்தாள்: ‘‘அவரது பெரியம்மாவை சாளுக்கிய போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபர் சிறைப் பிடித்தார். அந்த அம்மையாரைக் காட்டி கரிகாலரை நம் பக்கம் இழுக்க பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்காக முன்பே சிறையில் அடைக்கப்பட்டிருந்த சோழ மன்னரின் நிலையையும் சுட்டிக் காட்டினார்... இவை எல்லாம் எதற்கு என்று நினைக்கிறீர்கள்..? சோழர்களை நம்பக்கம் இழுக்கத்தானே..?’’
இதற்கு பதில் சொல்ல முற்பட்டார் சாளுக்கிய உபசேனாதிபதி.

தன் கரங்களை உயர்த்தி அவரை அமைதியாக இருக்கும்படி சொல்லிவிட்டு சிவகாமியே தொடர்ந்தாள்:‘‘இதுகுறித்து மந்திராலோசனையில் விவாதிக்கப்பட்டபோது நீயும் அங்கிருந்தாய்தானே..? சோழர்களை நம் பக்கம் இழுக்க வேண்டும் என்ற யோசனையை ராமபுண்ய வல்லபர் முன்வைத்தபோது நீ உட்பட அங்கிருந்த அனைவரும் அதை ஆதரித்தீர்கள்... ஒரேயொருவர் மட்டுமே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் நம் மன்னரும் சாளுக்கிய தேசத்தின் பேரரசருமான விக்கிரமாதித்தர்.

‘ராஜதந்திர அடிப்படையில் இந்த யோசனை சரி... ஆனால், இந்தப் போரில் சோழர்கள் பல்லவர்கள் பக்கமே நிற்க வேண்டும்... அப்படையையே நாம் வெற்றி கொள்ள வேண்டும்... அதுதான் என் தந்தையும் நம் மாமன்னருமான இரண்டாம் புலிகேசி அவர்களின் ஆன்மாவுக்கு நாம் செலுத்தும் மரியாதை...’ என்று சொன்னாரா இல்லையா..? உன்னிரு செவிகளாலும் அதைக் கேட்டாய்தானே..?

என்றாலும் மந்திராலோசனையில் இருந்த அனைவரும் - நீ உட்பட - ராமபுண்ய வல்லபரின் யோசனையை ஏற்றதால் சோழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நம் மன்னர் விக்கிரமாதித்தர் ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்தே சாளுக்கிய போர் அமைச்சரும் கரிகாலருடன் பேசினார். இதற்கு கரிகாலர் ஒப்புக் கொள்ளவில்லை. இதன் பிறகு நடந்ததெல்லாம் இங்கு பேசிப் பயனில்லை... எல்லோருக்கும் தெரிந்ததுதான். எனவே விட்டுவிடலாம்.  

எனது கேள்வி இதுதான்...’’ அரக்கை கையில் பிடித்தபடி சாளுக்கிய உபசேனாதிபதியின் கண்களை சிவகாமி உற்றுப் பார்த்தாள்: ‘‘அப்போது நம் பக்கம் சோழர்கள் வந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்ன நீ... இப்போது கரிகாலரால் என்ன இடையூறு ஏற்பட்டு விடும் என்று கேட்பது சரியாக இல்லையே...’’

‘‘அம்மணி... இப்பொழுதும் சோழர்களின் பலத்தை நான் குறைத்து மதிப்பிடவில்லை...’’ என்று சாளுக்கிய உபசேனாதிபதி ஆரம்பித்ததும் தன் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக மாறவர்மன் உறுமினார்.‘‘இருங்கள் ஐயா... நீங்கள் வேறு... சோழர்களை விட பாண்டியர்களான நீங்கள் பலமிக்கவர்கள். போதுமா..?’’ சலித்துக் கொண்டார் சாளுக்கிய உபசேனாதிபதி.‘‘விஷயத்துக்கு வா... சோழர்களின் பலத்தை ஏற்கிறாய்... ஆனால், கரிகாலரின் பலத்தை ஏற்க மறுக்கிறாய்... அப்படித்தானே..?’’ சிவகாமியின் நாசி துடித்தது.

‘‘சோழர்கள் வேறு கரிகாலர் வேறா... சில கணங்களுக்கு முன் மாறவர்மர் சொன்னது நினைவில் இருக்கிறதா..? பெயருக்கு நான்கு தெருக்கள்... சில நூறு வீரர்கள்... இவைதான் சோழர்களின் படை... ஆனால், இப்படையைத்தான் தங்களுடன் இணைக்க சாளுக்கியர்கள் முற்பட்டார்கள்; பல்லவர்கள் அந்தப் படையைத்தான் மதித்து தங்களுடன் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்... ஏன்..? காரணம், கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கேற்ப அப்படை பெரும் படைகளுக்கே அச்சம் ஏற்படுத்துவதுதான்...

அந்த நூறு பேரில் ஒவ்வொருவரும் ஆயிரம் பேருக்கு சமமாக இருக்கிறார்கள். அப்படி அவர்களை மாற்றியிருப்பதும் எப்போதும் அவர்களுக்கு பக்கபலமாக இருப்பதும் ஒரேயொருவர்தான். கரிகாலர்..!  சாளுக்கியர்களின் படையை எதிர்த்து களத்தில் நிற்கப் போகும் பல்லவ படைக்கு பல்லவ மன்னரோ அல்லது பல்லவ இளவரசரோ தலைமை ஏற்கலாம். ஆனால், அவர்களின் படை வியூகத்தை வகுக்கப் போகிறவர் சாட்சாத் கரிகாலர்தான்!

நம் படை மீது எந்தளவுக்கு நம்பிக்கை வைக்கிறாயோ அந்தளவுக்கு பல்லவ படை மீதும் நம்பிக்கை வை... அப்பொதுதான் நம்மால் வெற்றி பெற முடியும். எதிராளியை மதிப்பவனே படைகளை நடத்தும் தகுதி படைத்தவன்!’’ ஆவேசம் வந்ததுபோல் கர்ஜித்த சிவகாமி, சட்டென எழுந்தாள்:
‘‘பல்லவ ஒற்றர் படை லேசுப்பட்டதல்ல.

பல்லவ மன்னராக இருந்த மகேந்திரவர்மரே நம் சாளுக்கியப் படைக்குள் ஊடுருவி ஒற்று பார்த்திருக்கிறார். அஜந்தா குகைக்குள் மாறுவேடத்தில் நுழைந்திருக்கிறார். புரிகிறதல்லவா..? பல்லவ தேசத்தின் மன்னர்களாக இருப்பவர்களும் தேவை ஏற்பட்டால் ஒற்றர்களாக மாறக் கூடியவர்கள். அப்படியிருக்க மதுரை மாநகருக்குள் பல்லவர்களின் சார்பில் கரிகாலர் நுழைந்திருக்கிறார்... ஏன்..? இந்தக் கேள்விதான் என்னைத் துரத்திக் கொண்டிருக்கிறது.

சாளுக்கியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையில் நடக்கவிருக்கும் போரில் பாண்டியர்கள் யார் பக்கம் நிற்கிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள். இந்த உண்மை சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தருக்கு புரிந்திருக்கிறது. எனவேதான் தன் சார்பில் தன் மகன் விநயாதித்தரை மதுரைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.  சாளுக்கிய இளவரசரும் பாண்டியப் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

இதே காரியத்தை பல்லவ இளவரசரான இராஜசிம்மரும் செய்யலாம். பாண்டியர்களிடம் உதவி கேட்டு பகிரங்கமாக வரலாம். சாளுக்கியர்களால் அதைத் தடுக்க முடியாது. ஆனால், பல்லவர்கள் அப்படிச் செய்யவில்லை. மாறாக மாறுவேடத்தில் கரிகாலரை மதுரைக்கு அனுப்பியிருக்கிறார்கள். ஏன்..? எந்தக் காரணத்துக்காக கரிகாலர் மதுரைக்கு வந்திருக்கிறார்..? யாரை சந்திக்கப் போகிறார்..?’’இருளில் மறைந்திருந்தபடி அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த கரிகாலன் தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்!

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16365&id1=6&issue=20191227

Link to comment
Share on other sites

ரத்த மகுடம்-86

‘‘கரிகாலனை எதற்காக பாண்டிய நாட்டுக்கு பல்லவ இளவரசரான ராஜசிம்மர் அனுப்பியிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும்..!’’
கணீரென்று சொல்லிவிட்டு தன் நாசிக்குக் கீழே அடர்த்தியாக வளர்ந்திருந்த மீசையைத் தடவினார் பாண்டிய சேனாதிபதியான மாறவர்மன்.
‘‘என்ன... உங்களுக்குத் தெரியுமா..?’’ பரபரப்புடன் கேட்டான் சாளுக்கியர்களின் உபசேனாதிபதி.‘‘வரலாற்றை அறிந்த அனைவருக்குமே அந்தக் காரணம் தெரியும்!’’ அலட்சியமாக பதில் அளித்தார் மாறவர்மன்.
24.jpg
சொன்னவரை உற்று நோக்கினாள் சிவகாமி. அந்தப் பார்வையில், ‘அது என்ன காரணம்...’ என்ற வினா தொற்றி நின்றது.புரிந்துகொண்ட மாறவர்மன், தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டார்: ‘‘ஆண்டுக்கணக்காகத் தொடரும் பந்தம்தான்... அதனுடன் ஊடாடும் பகையும்தான்...’’
‘‘புரியவில்லையே..?’’ சிவகாமி தன் புருவத்தை உயர்த்தினாள்.

‘‘அம்மணி... பல்லவர்கள் இடையில் வந்தவர்கள். ஆனால், சோழர்களும் பாண்டியர்களும் அப்படியல்ல! பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்த நிலப்பரப்பில் அரசுகளை நிறுவியவர்கள்; நல்லாட்சி செய்தவர்கள். அன்று காவிரிப்பூம்பட்டினம் புகழ்பெற்றிருந்தது போலவே எங்கள் கொற்கையும் வணிகர்களின் சொர்க்க பூமியாகத் திகழ்ந்தது. எங்கள் இருவருக்கும் இடையில் ஒருவகையில் தாயாதி உறவு உண்டு என்றே சொல்லலாம். பெண் கொடுத்து பெண் எடுக்கும் வகையில் நெருக்கம் இருந்திருக்கிறது...’’

‘‘அதனால்தான் சோழ இளவரசரான கரிகாலரை பொடிப் பயல் என சில கணங்களுக்கு முன் அழைத்தீரா..?’’ நிதானமாகக் கேட்டாள் சிவகாமி.
சங்கடத்துடன் நெளிந்தாலும் மீசையைத் தடவியபடி மாறவர்மன் தன்னை சமாளித்துக் கொண்டார்: ‘‘அதுதான் குறிப்பிட்டேனே... சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில் உறவும் உண்டு... பகையும் உண்டு என்று...’’‘‘அதாவது பகையை மனதில் வைத்து உன் வார்த்தைகளை நீ உதிர்த்தாய்... நட்பை மனதில் வைத்து கரிகாலர் பாண்டிய மன்னரைச் சந்தித்து பல்லவர்களுக்கு ஆதரவு திரட்ட வந்திருக்கிறார் என்கிறாய்... அப்படித்தானே..?’’
&

ரத்த மகுடம்-86

‘‘கரிகாலனை எதற்காக பாண்டிய நாட்டுக்கு பல்லவ இளவரசரான ராஜசிம்மர் அனுப்பியிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும்..!’’
கணீரென்று சொல்லிவிட்டு தன் நாசிக்குக் கீழே அடர்த்தியாக வளர்ந்திருந்த மீசையைத் தடவினார் பாண்டிய சேனாதிபதியான மாறவர்மன்.
‘‘என்ன... உங்களுக்குத் தெரியுமா..?’’ பரபரப்புடன் கேட்டான் சாளுக்கியர்களின் உபசேனாதிபதி.‘‘வரலாற்றை அறிந்த அனைவருக்குமே அந்தக் காரணம் தெரியும்!’’ அலட்சியமாக பதில் அளித்தார் மாறவர்மன்.
24.jpg
சொன்னவரை உற்று நோக்கினாள் சிவகாமி. அந்தப் பார்வையில், ‘அது என்ன காரணம்...’ என்ற வினா தொற்றி நின்றது.புரிந்துகொண்ட மாறவர்மன், தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டார்: ‘‘ஆண்டுக்கணக்காகத் தொடரும் பந்தம்தான்... அதனுடன் ஊடாடும் பகையும்தான்...’’
‘‘புரியவில்லையே..?’’ சிவகாமி தன் புருவத்தை உயர்த்தினாள்.

‘‘அம்மணி... பல்லவர்கள் இடையில் வந்தவர்கள். ஆனால், சோழர்களும் பாண்டியர்களும் அப்படியல்ல! பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்த நிலப்பரப்பில் அரசுகளை நிறுவியவர்கள்; நல்லாட்சி செய்தவர்கள். அன்று காவிரிப்பூம்பட்டினம் புகழ்பெற்றிருந்தது போலவே எங்கள் கொற்கையும் வணிகர்களின் சொர்க்க பூமியாகத் திகழ்ந்தது. எங்கள் இருவருக்கும் இடையில் ஒருவகையில் தாயாதி உறவு உண்டு என்றே சொல்லலாம். பெண் கொடுத்து பெண் எடுக்கும் வகையில் நெருக்கம் இருந்திருக்கிறது...’’

‘‘அதனால்தான் சோழ இளவரசரான கரிகாலரை பொடிப் பயல் என சில கணங்களுக்கு முன் அழைத்தீரா..?’’ நிதானமாகக் கேட்டாள் சிவகாமி.
சங்கடத்துடன் நெளிந்தாலும் மீசையைத் தடவியபடி மாறவர்மன் தன்னை சமாளித்துக் கொண்டார்: ‘‘அதுதான் குறிப்பிட்டேனே... சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில் உறவும் உண்டு... பகையும் உண்டு என்று...’’‘‘அதாவது பகையை மனதில் வைத்து உன் வார்த்தைகளை நீ உதிர்த்தாய்... நட்பை மனதில் வைத்து கரிகாலர் பாண்டிய மன்னரைச் சந்தித்து பல்லவர்களுக்கு ஆதரவு திரட்ட வந்திருக்கிறார் என்கிறாய்... அப்படித்தானே..?’’
‘‘அப்படியில்லை என்கிறீர்களா..?’’ இடைமறித்தார் மாறவர்மன்.

சாளுக்கிய உபசேனாதிபதிக்கு ஒன்றும் புரியவில்லை. எனவே, அமைதியாக இருவரும் உரையாடுவதைக் கவனிக்கத் தொடங்கினான்.
‘‘ஏன் இப்படி இருக்கக் கூடாது என்று கேட்கிறேன்..?’’ முகத்தில் பறந்த முடியை ஒதுக்கியபடி உதட்டைச் சுழித்தாள் சிவகாமி.

‘‘எப்படி இருக்கக் கூடாது என்கிறீர்கள்..?’’ கேட்டார் மாறவர்மன். தன் வயதையும் அனுபவங்களையும் பதவியையும் மதிக்காமல் ஒருமையில் அழைத்து சாதாரண வீரனைப் போல் தன்னை நடத்தும் சிவகாமியின் குரலும் உடல்மொழியும் அவரை எரிச்சல் அடைய வைத்தன. குரலிலும் அவை வெளிப்பட்டன. என்றாலும் சிவகாமி என்ன சொன்னாலும் அதை செவி கொடுத்து கேட்க வேண்டும் என பாண்டிய மன்னர் தன்னிடம் சொல்லியிருந்ததால் பொறுமையைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்தார்.

மாறவர்மனின் எண்ண ஓட்டத்தை அவரது உடல் அசைவுகள் பிரதிபலித்தன. சிவகாமி அதை கவனிக்கவே செய்தாள். அவளுக்கு வேடிக்கையாக இருந்தது. ஆனால், அவரை மேலும் சீண்டிவிட்டு பார்க்க அவளுக்கு விருப்பமில்லை. அதேநேரம் தன் தொனியிலும் மரியாதையைக் கொண்டு வர அவள் முற்படவில்லை. இந்த மனநிலையுடனேயே ஒருமுறை பார்வையாளனாக நின்றுகொண்டிருக்கும் சாளுக்கிய உபசேனாதிபதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு உரையாடலைத் தொடர்ந்தாள்:

‘‘இப்படித்தான்...’’ சிவகாமி தன் உதட்டைச் சுழித்தாள்: ‘‘பாண்டியர்களும் சோழர்களும் ஏதோ ஆண்டுக்கணக்கில் இந்த நிலப்பரப்பை ஆண்டு வருவதாகக் கூறுகிறாய்... ஆனால், இடையில் களப்பிரர் சிலகாலம் இந்த மண்ணை ஆட்சி செய்ததை மறந்துவிட்டாய்...’’
‘‘மறக்கவில்லை...’’ மாறவர்மன் தன் பற்களைக் கடித்தார்.

‘‘எனில் இப்படி பேசியிருக்க மாட்டாய்... மாறவர்மா... நீ குறிப்பிடுவதெல்லாம் உண்மைதான். பாண்டியர்களும் சோழர்களும் நீண்ட வரலாற்றைக் கொண்டவர்கள்தான். இதை நான் மறக்கவில்லை. அதனால்தான் கரிகாலரைக் குறித்து உயர்வாக சற்று நேரத்துக்கு முன் பேசினேன்... ஆனால்...’’
நிறுத்தியவள் மாறவர்மனின் கண்களை உற்றுப் பார்த்தாள்.

‘‘ம்... ம்...’’ என மேலே சொல்லும்படி நாசி துடிக்க மாறவர்மர் ஒலி எழுப்பினார்.‘‘களப்பிரர் காலத்தில் சோழர்கள் எங்கிருந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது... பொறு... கரிகாலருக்கு தெரிந்திருக்கலாம் தனது மூதாதையர் குறித்து. ஆனால், உனக்கும் எனக்கும் தெரியாது. புரிகிறதல்லவா..? போலவே பாண்டியர்களும் எங்கே, எப்படி வாழ்ந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது! வேண்டுமானால் நீ அறிந்திருப்பாய்! இந்நிலையில் கடுங்கோன் தலைமையில் களப்பிரர்களை வீழ்த்திவிட்டு மீண்டும் பாண்டியர்கள் அரசு அமைத்தார்கள். கடுங்கோனே பாண்டிய மன்னராகவும் பதவி ஏற்றார்...’’
‘‘இவை எல்லாம் சரித்திரத்தில் இருப்பதுதானே..?’’ மாறவர்மன் புன்னகைத்தார்.

‘‘ஆம். அதே சரித்திரத்தில் பல்லவ மன்னர் சிம்ம விஷ்ணுவும் களப்பிரரை எதிர்த்தார் என்று இருக்கிறது!’’
சிவகாமி இப்படிச் சொன்னதுமே மாறவர்மரின் முகம் மாறியது.‘‘ஆவேசப்படுவதில் பயனில்லை மாறவர்மா! கடுங்கோனும் சிம்ம விஷ்ணுவும் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்துடனும் கூட்டணி அமைத்தே களப்பிரர்களை வீழ்த்தினார்கள்! அப்போது சோழர்கள் எப்பக்கமும் இல்லை!’’

சிவகாமி என்ன சொல்ல வருகிறாள் என்பது மாறவர்மனுக்கு புரிந்தது. அதனாலேயே அவரது உடல் நடுங்கியது.அவரது அசைவுகளை அலட்சியப்படுத்திவிட்டு சிவகாமி தொடர்ந்தாள்: ‘‘எனவே, சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் எந்த அளவுக்கு நட்பும் பகையும் இருக்கிறதோ அதே அளவுக்கு பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் கூட நட்பும் பகையும் இருக்கிறது! பெண் கொடுத்து பெண் எடுப்பது வரை!’’

‘‘அட... ஆமாம்...’’ அதுவரை அமைதியாக நின்றிருந்த சாளுக்கிய உபசேனாதிபதி வியப்புடன் சொன்னான்: ‘‘எப்படி மகேந்திரவர்ம பல்லவரை சமண நெறியில் இருந்து திருநாவுக்கரசர் சிவநெறிக்கு மாற்றினாரோ அப்படி நின்ற சீர் நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னரையும் திருஞான சம்பந்தர் சைவ நெறிக்கு மாற்றினார் அல்லவா..? அந்த நின்ற சீர் நெடுமாறனின் மனைவியும் பாண்டியமாதேவியாக இருந்தவரும் கூட சோழ இளவரசி அல்லவா..?’’

‘‘சரியாகச் சொன்னாய் சாளுக்கிய உபசேனாதிபதி!’’ சிவகாமி தன் கரங்களைத் தட்டினாள்: ‘‘மாறவர்மா... பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் இருக்கும் உறவு புரிகிறதல்லவா..? உங்கள் மூவருக்குள்ளும் கொடுக்கல் வாங்கல் இருக்கிறது... எனவேதான் பல்லவர்களுக்கும் தங்களுக்கும் இடையில் இருக்கும் பகையைத் தீர்க்க பாண்டியர்களின் உதவியை நாடி சாளுக்கிய இளவரசர் விநயாதித்தர் மதுரையில் முகாமிட்டிருக்கிறார்.

இதே விஷயத்துக்காக பல்லவ இளவரசரான இராஜசிம்மரும் மதுரைக்கு வந்தால் தவறில்லை என இதன் காரணமாகத்தான் சொன்னேன்... ஆனால், தான் வராமல் எதற்காக சோழ இளவரசரான கரிகாலரை பாண்டிய நாட்டுக்கு பல்லவ இளவரசர் அனுப்பியிருக்கிறார் என்பதுதான் கேள்வி. ஏனெனில் இந்த வினாவுக்குள் யாரைச் சந்திக்க கரிகாலர் வந்திருக்கிறார் என்ற சந்தேகமும் ஊடாடி நிற்கிறது...’’
‘‘ம்... ம்...’’ மாறவர்மன் அசைந்தார்: ‘‘யாரை கரிகாலன் சந்திக்கப் போகிறான்..?’’

‘‘அதைத்தான் நாம் கண்டுபிடிக்க வேண்டும்!’’‘‘உத்தேசமாக உங்களால்கூட கணிக்க முடியவில்லையா அம்மணி..?’’ மாறவர்மன் ஆச்சர்யப்பட்டார்.‘‘இல்லை! கணிப்புக்கு அப்பாற்பட்டவராக கரிகாலர் இருக்கிறார். காஞ்சியில் அவருடன்தான் நான் இருந்தேன்! ஆனாலும் காஞ்சிக்கு அவர் சென்ற காரியம் இப்போது வரை தெரியவில்லை...’’‘‘இதில் என்ன மர்மம் இருக்கிறது... பல்லவ மன்னரின் தாயாதியான ஹிரண்யவர்மர் அனுப்பிய ஆயுதங்களை எங்கள் போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபர் கைப்பற்றினார். அவரிடம் இருந்து அவற்றை மீட்டு பல்லவர்கள் வசம் அதை ஒப்படைக்கவும், காஞ்சி சிறையில் இருந்த தன் தந்தையை விடுவிக்கவும் கரிகாலன் காஞ்சிக்கு வந்தார்...’’ சாளுக்கிய உபசேனாதிபதி படபடத்தான்.

‘‘இதையெல்லாம் கண்ணாரக் கண்டாயா..? ஊகத்தின் அடிப்படையில்தானே சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் உட்பட நாம் அனைவரும் சொல்கிறோம்...’’ தன் கையில் இருந்த அரக்கை தூக்கிப் போட்டு பந்தைப் போல் பிடித்தாள் சிவகாமி.‘‘அப்படியானால்..?’’ சாளுக்கிய உபசேனாதிபதியின் குரலில் திகைப்பு வழிந்தது.

‘‘வேறொரு காரியமாகவே காஞ்சிக்கு கரிகாலர் வந்திருக்கிறார்... அந்தக் காரியத்தின் தொடர்ச்சியாகவே இப்போது மதுரைக்குள் நுழைந்திருக்கிறார்... அந்தக் காரியம் என்னவென்பதை நாம் கண்டுபிடித்தே ஆக வேண்டும்... நடைபெறவிருக்கும் பல்லவ- சாளுக்கியப் போருக்கும் கரிகாலரின் நடவடிக்கைகளுக்கும் சர்வநிச்சயமாக தொடர்பிருக்கிறது!’’

‘‘புரிகிறது அம்மணி... ஆனால், எப்படி கண்டுபிடிக்கப் போகிறோம்..?’’ மாறவர்மரின் குரலில் இப்போது சிவகாமியின் மீதான மரியாதை வெளிப்பட்டது.இந்த மாற்றத்தை சிவகாமி கவனித்தாள். பொருட்படுத்தவில்லை:‘‘அதற்காகத்தான் ஒரு வலையை விரித்தேன்...’’
‘‘என்ன வலை..?’’ சாளுக்கிய உபசேனாதிபதியும் மாறவர்மனும் ஒருசேர கேட்டார்கள்.

‘‘முத்திரை மோதிரம்! ஆம். பாண்டியர்களின் முத்திரை மோதிரத்தை கரிகாலரிடம் கொடுத்திருக்கிறேன்!’’
‘‘அதெப்படி உங்களுக்குக் கிடைத்தது..?’’ மாறவர்மன் குரலில் அதிர்ச்சி.‘‘இந்தக் கேள்வி அநாவசியம்... அவசியமானது அந்த முத்திரை மோதிரத்தை வைத்துக் கொண்டு கரிகாலர் என்ன செய்யப் போகிறார் என கண்காணிப்பது...’’‘‘எப்படி கண்காணிப்பது..?’’ உதடு துடிக்க மாறவர்மன் கேட்டார்.‘‘இதோ இப்படித்தான்...’’ சிரித்தபடி தனக்குப் பின்னால் திரும்பி சிவகாமி குரல் கொடுத்தாள்: ‘‘கரிகாலரே... சீனரே... மறைந்திருந்தது போதும்... வெளியே வாருங்கள்...’’

‘‘என்ன... அவ்விருவரும் இவ்வளவு நேரமாக இங்கேதான் இருக்கிறார்களா..?’’ கேட்டபடி சாளுக்கிய உபசேனாதிபதி வாளை உருவினான்.  
மாறவர்மன் அதற்குள் தன் வாளை ஓங்கியபடி அந்த இருட்டுக்குள் பிரவேசித்து விட்டார்.அடுத்த கணம் அவரைப் பின்தொடர்ந்தபடி சாளுக்கிய
உபசேனாதிபதியும் அங்கு சென்றான். இருவரும் இருள் பழகும்வரை காத்திருக்காமல் தங்கள் வாட்களைச் சுழற்றத் தொடங்கினார்கள். ஆனால், இருவராலும் காற்றை மட்டுமே கிழிக்க முடிந்தது! ‘‘அம்மணி... இங்கு ஒருவரும் இல்லை..!’’ மாறவர்மன் குரல் கொடுத்தார்.

‘‘இருக்கிறார்கள்...’’ நிதானமாகச் சொன்னபடி சிவகாமி அந்த இருட்டுக்குள் நுழைந்தாள். அவள் கரங்களில் வாள் ஒன்று பள
பளத்தது: ‘‘கரிகாலரின் சுவாசக் காற்றை சுவாசித்தவள் நான்...’’ தன் நாசியை ஆழமாக இழுத்தாள்: ‘‘அந்த மணத்தை இப்பொழுதும் நுகர்கிறேன்! இங்குதான் அவர் இருக்கிறார்...’’மாறவர்மனும் சாளுக்கிய உபசேனாதிபதியும் சுற்றிலும் தங்கள் பார்வையால் அலசினார்கள். சுவர்கள்தான் தட்டுப்பட்டதே தவிர மனிதர்கள் இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.கேள்வியுடன் இருவரும் சிவகாமியை நோக்கினார்கள்.

சிவகாமி அவர்கள் இருவரையும் பார்க்கவில்லை. அசையாமல் அப்படியே சிலையென நின்றாள்.எதற்காக அப்படி அவள் நிற்கிறாள் என இருவரும் யோசித்தார்கள்.சிவகாமியின் காதுகள் இரண்டும் ஒருமுறை எழுந்து தாழ்ந்தன. இதனைத் தொடர்ந்து அவள் உதட்டில் புன்னகை பூத்தது.
அடுத்த கணம் கரகரவென்ற ஒலி அங்கிருந்த அமைதியைக் கிழித்தது.திடுக்கிட்டபடி மாறவர்மனும் சாளுக்கிய உபசேனாதிபதியும் ஓசை வந்த திசையை நோக்கினார்கள். மேலிருந்து சுவர் ஒன்று இறங்கிக் கொண்டிருந்தது!

சற்றும் தாமதிக்காமல் இருவரும் பாய்ந்து அந்தச் சுவரை மேலும் கீழே இறங்காதபடி தங்கள் தோளில் தாங்கி தடுக்க முற்பட்டார்கள்! முடியவில்லை. சுவர் இறங்குவதும் நிற்கவில்லை.மெல்ல மெல்ல கீழே இறங்கி தரையைத் தொட அந்தச் சுவர் முற்பட்டபோது -சிவகாமி தரையில் தவழ்ந்தபடியே, இறங்கிக் கொண்டிருந்த சுவருக்கும் தரைக்கும் இடையில் நுழைந்தாள்!
http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16395&id1=6&issue=20200103
Link to comment
Share on other sites

ரத்த மகுடம்- 87

ஆனால், பாண்டிய சேனாதிபதியான மாறவர்மனாலோ அல்லது சாளுக்கிய உபசேனாதிபதியாலோ சுவரைத் தாண்டி நுழைய முடியவில்லை.இறங்கிக் கொண்டிருந்த சுவரை முடிந்தளவு தாங்கி நிற்கவும் சிவகாமி அதற்குள் நுழையவுமே தங்கள் ஆற்றலைச் செலவிட்டார்கள்.
21.jpg
புரிந்து கொண்ட சிவகாமியும் தரையோடு தரையாக சறுக்கியபடி இறங்கிக் கொண்டிருந்த சுவருக்கு அப்பால் சென்றுவிட்டாள்!உடனே மாறவர்மனும் சாளுக்கிய உபசேனாதிபதியும் சட்டென்று சுவரைத் தாங்குவதை நிறுத்திவிட்டு அகன்றார்கள்.சுவரும் வேகத்துடன் இறங்கி தரையில் பதிந்தது.
மூச்சு வாங்க இருவரும் திரும்பி சுவரைப் பார்த்தார்கள்.சாளுக்கிய  உபசேனாதிபதி அந்த சுவரைத் தொட்டு அசைத்தான். துளிக்கூட அசைவில்லை. ஏதோ  கட்டும்போதே தரையோடு தரையாக கட்டியதைப் போல் சுவர் ஊன்றி நின்றிருந்தது.
 
யாரிடமாவது,  இந்தச் சுவர் எங்கள் கண்முன்னால்தான் தரையில் இறங்கியது... இந்தச் சுவர்  மேலும் கீழுமாக இறங்கும்படி சிற்பி நிர்மாணித்திருக்கிறான்... இதற்கான பொறி  அமைப்பு எங்கோ இருக்கிறது... என்று சொன்னால் சிரிப்பார்கள்; நம்ப  மறுப்பார்கள்.


அவ்வளவு ஏன்... மாறவர்மனுக்கும் சாளுக்கிய  உபசேனாதிபதிக்கும் கூட நடந்தவற்றை நம்ப கடினமாக இருந்தது. ஒருவேளை  உறக்கத்தில் கனவு காண்கிறோமோ என்றுகூட அவர்களுக்குத் தோன்றியது.ஒருவரையொருவர்  பார்த்துக் கொண்டார்கள். மற்றவரின் கவனத்தைக் கவராதபடி தங்களைத் தாங்களே  கிள்ளிக் கொண்டார்கள். வலித்தது. ஆக, எதுவும் கனவில்லை.

‘‘இந்தச் சுவரை மேலே தூக்குவதற்கான பொறி எங்கிருக்கிறது..?’’
தன்னை நோக்கிக் கேட்ட சாளுக்கிய உபசேனாதிபதியை வெறித்தபடி பார்த்தார் மாறவர்மன். பதிலேதும் சொல்லவில்லை.
‘‘உங்களைத்தான்...’’ அருகில் வந்து மாறவர்மனை உலுக்கினான் சாளுக்கிய உபசேனாதிபதி.‘‘தெரியாது...’’‘‘தெரியாதா..?  நீங்கள் பாண்டியப் படையின் சேனாதிபதிதானே..? இந்த மதுரை மாநகரம் உங்கள்  தலைநகரம்தானே..? வணிகர் வீதியில் இருக்கும் இந்த மாளிகை உங்கள் ஆளுகைக்கு  உட்பட்டதுதானே..?’’ சாளுக்கிய உபசேனாதிபதி படபடத்தான்.

அவனை வெறுப்புடன்  பார்த்தார் மாறவர்மன். ‘‘நீ கேட்கும் எல்லா வினாக்களுக்குமான விடை  ஒன்றுதான். ஆம்... ஆம்... ஆம்... கேட்காததற்கும் பதில் சொல்லி  விடுகிறேன்... நாற்பது ஆண்டுகளாக பாண்டியப் படையில் இருக்கிறேன்... நான்கு  தலைமுறைகளாக பாண்டிய மன்னருக்கு சேவை செய்து வருகிறோம்... இந்த மாளிகை  உட்பட மதுரை மாநகரத்தில் இருக்கும் அனைத்தையும் நிர்மாணித்தது எங்கள்  சிற்பிகள்தான்... ஒவ்வொரு மாளிகையும் எப்படி இருக்க வேண்டும்...

எந்தெந்த  அமைப்பில் இயங்க வேண்டும் என்பதை எல்லாம் பட்டுத்துணியில் வரைந்து காட்டி  அதன்படி கட்டச் சொன்னவர் அன்று பாண்டிய சேனாதிபதியாக இருந்த எனது  பாட்டனார்தான்... மதுரைக்கு உயிர்கொடுத்த சிற்பிகள் அனைவரும் பாண்டிய  மன்னருக்கு விசுவாசமானவர்கள். தங்கள் உயிரே போனாலும் மதுரையின் ரகசியத்தை  காற்றிடமும் வெளிப்படுத்த மாட்டார்கள்... போதுமா..?’’
‘‘அப்படியானால்..?’’ சாளுக்கிய உபசேனாதிபதி வாக்கியத்தை முடிக்காமல் விழுங்கினான்.

‘‘இந்த  சுவரின் மேல் கீழ் அசைவும் சூட்சுமமும் எனக்குத் தெரியாது! உன்னைப் போலவே  நானும் இப்பொழுதுதான் முதல் முறையாக இதைப் பார்க்கிறேன்! வா...’’‘‘எங்கு..?’’‘‘எங்கள்  மன்னரிடம்! இதுவரை இங்கு நடந்ததையும் இந்த சுவரின் ரகசியத்தையும் அவரிடம்  தெரியப்படுத்த வேண்டும்... என்ன பார்க்கிறாய்..? எங்கள் மன்னர் உறங்கச்  சென்றிருக்க மாட்டார்! நம் வரவுக்காக காத்திருப்பார். சிவகாமி என்ன  சொல்கிறாள் என்பதை தன்னிடம் எத்தனை ஜாமம் ஆனாலும் வந்து தெரியப்படுத்த  வேண்டும் என்று சொல்லித்தான் அனுப்பினார்...’’

அதன் பிறகு சாளுக்கிய உபசேனாதிபதி எதுவும் பேசவில்லை. ஒருமுறை அந்தச் சுவரைப் பார்த்தான். தட்டினான்.‘‘வா...’’ என்றபடி மாறவர்மன் நடக்கத் தொடங்கினார்.‘‘ஒன்று சொல்ல வேண்டும்...’’ பின்தொடர்ந்தபடியே சாளுக்கிய உபசேனாதிபதி இழுத்தான்.‘‘அந்த சந்தேகம் எனக்கும் இருக்கிறது!’’ பட்டென்று பதிலளித்தார் மாறவர்மன்.வியப்புடன் அவரது கரங்களைப் பற்றி நிறுத்தினான் சாளுக்கிய உபசேனாதிபதி.நின்று  அவனை ஏறிட்டார் மாறவர்மன். ‘‘சிவகாமியும் கரிகாலனும் கூட்டுக் களவாணிகள்  என்றே நானும் நினைக்கிறேன்! இந்த சுவரின் ரகசியம் கரிகாலனுக்கு தெரியும்  என்பது போலவே சிவகாமியும் அறிவாள் என ஊகிக்க இடமிருக்கிறது! இல்லையென்றால்  ஓடிவராமல் எதற்காக சறுக்கியபடி வரவேண்டும்..?

சுவர் கீழே இறங்கும் ஒலி  நம் இருவரின் செவிகளிலும் விழவில்லை. ஆனால், துல்லியமாக சிவகாமி அதைக்  கேட்டிருக்கிறாள்! எப்படி..? காலக் கணக்கு... இந்த ஜாமத்தில்... இந்த  நாழிகையில் சுவர் இறங்கும் என இருவரும் முன்பே திட்டமிட்டிருக்கிறார்கள்!  அதனால்தான் நம் இருவரையும் இந்தப் பக்கம் நிறுத்திவிட்டு அவர்கள் இருவரும்  அந்தப் பக்கம் சென்றிருக்கிறார்கள்.

எங்கு சென்றார்கள்... என்ன செய்யப் போகிறார்கள்..? தெரியவில்லை... நாம்  இருவரும் எந்த ரகசியத்தையும் வெளிப்படுத்தவில்லை... பெரும்பாலும்  சிவகாமிதான் பேசினாள்... அதுவும் வரலாற்றுத் தகவல்களைத்தான் தெரிவித்தாள்.  எதற்காக..? யார் கேட்பதற்காக..? ஒருவேளை கரிகாலனுடன் யாராவது  இருந்தார்களா..? சீனன் என்று சொன்னாள்... ஆனால், சீனனுக்கு நம் மூன்று  அரசுகளின் சரித்திரம் எதற்கு..?’’
‘‘மாறவர்மரே...’’ கூவிய சாளுக்கிய உபசேனாதிபதிக்கு தலையே சுற்றியது.

‘‘நம்மிருவரால்  இதற்கு மேல் எதுவும் யோசிக்க முடியாது. மன்னரிடம் அனைத்தையும்  தெரிவிப்போம். அவர் அமைச்சருடன் கலந்தாலோசித்து எல்லா முடிச்சுகளையும்  அவிழ்ப்பார்...’’‘‘முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டிருக்கிறேன்...’’ நிதானமாக சொல்லிவிட்டு தன் மைந்தனைப் பார்த்தார் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மன்.எதுவும் பேசாமல் அவர் முன் கைகட்டியபடி நின்றார் பாண்டிய இளவரசரான கோச்சடையன் இரணதீரன்.

‘‘‘இன்னமும் உறங்கவில்லையா..? இந்த நேரத்தில் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்...’ என்று என்னைக் கேட்டாய். பதில் சொல்லிவிட்டேன். இப்போது அதே வினாவை நான் கேட்கிறேன்... உறங்கவில்லையா..?’’ எவ்வித உணர்ச்சியும் இன்றி சாதாரணமாகக் கேட்டார் அரிகேசரி மாறவர்மன்.
‘‘உறக்கம் வரவில்லை மன்னா... காற்று வாங்கியபடி யோசிப்பதற்காக உப்பரிகைக்கு வந்தேன்...’’ தந்தையின் கண்களைப் பார்த்தபடியே சொன்னார் இரணதீரன்.

பாண்டிய மன்னர் புன்னகைத்தார். ‘தந்தையே’ என்று அழைக்காமல் ‘மன்னா’ என தன் மைந்தன் அழைத்ததை எண்ணி சிரித்தார். அப்படியானால் இனிவரும் உரையாடல்கள் அந்தரங்கமாக இருக்கப் போவதில்லை...

‘‘உன் சிநேகிதன் என்ன செய்கிறான்..?’’
‘‘யாரைக் குறிப்பிடுகிறீர்கள் மன்னா..?’’
‘‘சாளுக்கிய இளவரசர் விநயாதித்தனை!’’
‘‘நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறான்...’’
‘‘அந்த நிம்மதி உனக்கு ஏற்படவில்லையா..?’’
‘‘இல்லை மன்னா...’’
ஏன் என்பதுபோல் புருவத்தை உயர்த்தினார் அரிகேசரி மாறவர்மன்.

‘‘மதுரைக்குள் சோழ இளவரசர் நுழைந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன்...’’
‘‘ம்...’’‘‘எதற்காக மாறுவேடத்தில் நுழைய வேண்டும் என யோசித்துக் கொண்டிருக்கிறேன் மன்னா...’’
‘‘வேளிர் குலத் தலைவனான கடிகை பாலகன் இதற்கு பதில் சொல்லியிருப்பானே..!’’ சிரித்தபடி கேட்டார் அரிகேசரி மாறவர்மன்.
‘‘சொன்னான்...’’ ‘‘கரிகாலனைப் பற்றியா..? சிவகாமியைக் குறித்தா..?’’‘‘இருவரைப் பற்றியும்!’’‘‘அதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்ற ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறாயா..?’’‘‘ஆம் மன்னா... தாங்களும் இந்த முடிச்சுகளைத்தான் அவிழ்த்துக் கொண்டிருக்கிறீர்களா..?’’

பதிலேதும் சொல்லாமல் தன் மைந்தனை சில கணங்கள் உற்றுப் பார்த்தார். பின் தொண்டையைக் கனைத்துக் கொண்டார். ‘‘ரணதீரா..!’’
‘‘தந்தையே...’’ அழைத்தபடி அவர் அருகில் வந்து மண்டியிட்டு அமர்ந்தார் பாண்டிய இளவரசர்.‘மன்னா’ என இம்முறை தன்னை அழைக்கவில்லை என்பதை மனதுக்குள் அரிகேசரி மாறவர்மர் குறித்துக் கொண்டார். இதற்குக் காரணம், ‘ரணதீரா...’ என பெயர் சொல்லி, தான் அழைத்ததே என்பதும், இதன் வழியாக இனி அந்தரங்கமாக உரையாடலாம் என்ற சமிக்ஞையை, தான் வெளிப்படுத்தியதே என்பதும் அவருக்குப் புரிந்திருந்தது.
‘‘சில கணங்களுக்கு முன் எங்கு நின்றிருந்தாய்..?’’
‘‘அங்கு தந்தையே...’’

‘‘அப்போது நம் இருவருக்கும் இடையில் எத்தனை அடிகள் இருந்தன..?’’
‘‘ஐந்தடிகள்...’’‘‘பத்தடிகள் என ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்... திடீரென்று நம் இருவருக்குமிடையில் மேலிருந்து ஒரு சுவர் இறங்கினால் எப்படி இருக்கும்..?’’கேட்ட அரிகேசரி மாறவர்மரை அதிர்ச்சியுடன் பார்த்தார் பாண்டிய இளவரசர். ‘‘மன்னா...’’ சட்டென எழுந்து நின்றார். ‘‘இது... இது... ரத்த வழியுள்ள பாண்டிய மன்னர் குலம் மட்டுமே அறிந்த ரகசியமல்லவா..? இந்த மதுரை மாநகரில் இதுபோன்ற பொறி அமைப்புள்ள மாளிகைகள் எங்கிருக்கின்றன என்பது நமக்கு மட்டும்தானே தெரியும்..? யுத்த காலங்களில் மட்டுமே அது குறித்து உரையாடக் கூட வேண்டும் என்று என்னிடம் சொன்ன நீங்கள், இப்போது எதற்காக அதைக் குறிப்பிடுகிறீர்கள்..?’’‘‘போர் மேகங்கள் சூழ்ந்திருப்பதால்...’’
‘‘மதுரையிலா..?’’

‘‘பாண்டிய நாட்டிலும்!’’ நிறுத்திய பாண்டிய மன்னர், வணிகர் வீதி இருந்த பக்கம் தன் பார்வையைத் திருப்பினார். ‘‘அந்த சிற்ப ரகசியம் இன்னும் ஒருவனுக்கு தெரிந்திருக்கிறது ரணதீரா..!’’
‘‘அறிந்தவன் யார் தந்தையே..?’’
‘‘சோழ இளவரசன்... கரிகாலன்!’’
‘‘எப்படித் தெரியும்... யார் சொன்னது..?’’
‘‘சிவகாமி!’’ சொல்லிவிட்டு தன் இமைகளை மூடி சிந்தனையில் ஆழ்ந்தார் அரிகேசரி மாறவர்மர்.

மூடிய சுவரை ஒரு கணம் திரும்பிப் பார்த்தாள் சிவகாமி. அதன் பிறகு அவள் திரும்பவே இல்லை. வாளை முன்னோக்கி நீட்டியபடி சில கணங்கள் நின்றாள். இருளும் ஒளியானதும் தன் முன் விரிந்த பாதையில் ஓடத் தொடங்கினாள்.வளைந்து நெளிந்து அருவத்தைப் போல் காணப்பட்ட அந்த ஒற்றையடிப் பாதையை புயல் போல் கடந்தாள். பாதையின் இருபக்கமும் சுவர்கள். வலப்பக்க சுவர் எந்த இடத்தைச் சுட்டுகிறது என்பதும் இடப்பக்க சுவர் எந்த அறையின் எல்லை என்பதையும் அவள் அறிவாள். அதனாலேயே இரு பக்கங்களிலும் தன் கவனத்தை அவள் செலுத்தவில்லை.
தான், ஓடி வரும் பாதை எந்த இடத்தில் முடியும் என்பதை அறிந்தவளைப் போலவே இலக்கை நோக்கி நகர்ந்தாள்.

எதிர்பார்த்தது போலவே அவள் வந்த பாதை ஒரு சுவரின் முன்னால் நின்றது.சுவாசத்தை நிலைப்படுத்தி அந்த சுவரை மூன்று முறை தட்டினாள்.மறுகணம் அந்த சுவர், திரைச்சீலையைப் போல் மேலே ஏறத் தொடங்கியது.படுத்தபடியே உருண்டு வெளியே வந்தாள்.வந்த சிவகாமியை நோக்கி ஒரு வாள் இறங்கியது!தன் வாளால் அதைத் தடுத்தாள். தன்னை நோக்கி இறங்கிய வாளை பலமாகத் தள்ளினாள்.

அந்த வேகத்தில் அந்த வாளைப் பிடித்திருந்த நபர் பின்னோக்கி இரண்டடிகள் நகர்ந்தார்.இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு சிவகாமி துள்ளி எழுந்தாள். தன் மீது வாளை இறக்கிய நபர் யாரென்று பார்த்தாள். அதிர்ந்தாள்.

காரணம், அது ஆணல்ல, பெண்!‘‘நீயா..? நீ... எப்படி... இங்கு..?’’கேட்ட சிவகாமிக்கு அந்தப் பெண் தன் உதட்டைப் பிரித்து எந்த பதிலையும் சொல்லவில்லை. மாறாக தன் கரத்தில் இருந்த வாளால் விடையளிக்க முற்பட்டாள். சிவகாமியை நோக்கி தன் வாளைச் சுழற்றத் தொடங்கினாள்!

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16422&id1=6&issue=20200110

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சதீஷ்குமாரைக் காணவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சதீஷ்குமாரைக் காணவில்லை

உஸ் ......மெதுவா கூப்பிடுங்கள்.... பிறகு அவர் படங்களை தவிர்த்து கதையை மட்டும் போட்டு விடுவார்......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

உஸ் ......மெதுவா கூப்பிடுங்கள்.... பிறகு அவர் படங்களை தவிர்த்து கதையை மட்டும் போட்டு விடுவார்......!  😁

அட இப்பிடியானவையும் கதை வாசிக்கிறன் எண்ட சாட்டிலை வரீனமே ???😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அட இப்பிடியானவையும் கதை வாசிக்கிறன் எண்ட சாட்டிலை வரீனமே ???😂

பின்ன.....இதுக்கு முதல் நாங்கள் அவசரப்படுத்த அவரும்  அவசரத்தில் நாலைந்து கதையை ஒன்றாய் போட்டுட்டு போயிட்டார் படங்களே இல்லாமல். அரச கதைகளில் அரைவாசிக் கதையை ஓவியங்கள் சொல்லிவிடும். சில்பி, ம.செ, மாருதி, ஜெயராஜ் ஓவியங்கள் சொல்லி வேல இல்ல. இந்த கதையிலும் ஓவியங்கள் பக்காவா இருக்கு......!   😂

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ரத்த மகுடம்-88

 

பிரமாண்டமான சரித்திரத் தொடர்

தன்னை நோக்கி வாளைச் சுழற்ற முற்பட்ட பெண்ணைக் கண்டு சிவகாமி ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்தாள்.ஆச்சர்யத்துக்குக் காரணம், அந்தப் பெண்ணை சிவகாமி நன்றாகவே அறிவாள். அவளது வயதுதான். கொற்கைக்கு அப்பால் தென்பாண்டி நாட்டில் வசித்து வரும் அவளை பலமுறை பல இடங்களில் பார்த்திருக்கிறாள்.
19.jpg
கூர்மையான நாசியும், எடுப்பான தாடைகளும், மிரட்சியுடன் கூடிய நயனங்களையும் தாண்டி எந்நேரமும் மயிலின் கழுத்து நிறத்தில் கச்சையையும் இடுப்புத் துணியையும் அணிந்திருப்பதுதான் அவளது அடையாளம். இதோ, இப்போதும் அதே வண்ண ஆடையைத்தான் அணிந்திருக்கிறாள். நிலவின் ஒளியிலும் உப்பரிகையின் தூணில் எரிந்து கொண்டிருந்த தீப் பந்தத்தின் வெளிச்சத்திலும் அந்த அடையாளம் துலக்கமாகவே தெரிகிறது.

அது என்னவோ... இந்தப் பெண்ணைப் பார்க்கும்போதெல்லாம் இந்த வண்ண ஆடையில்தான் காட்சி அளிக்கிறாள். எப்படி சிவப்பு நிற உடையிலேயே, தான் வலம் வருகிறோமோ அப்படி என தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள் சிவகாமி.என்றாலும் சிவகாமி ஆச்சர்யப்பட்டதற்குக் காரணம், இந்த புற அடையாளம் மட்டுமல்ல... அகத்தின் மாற்றமும்தான்.ஆம். தலைகீழாக அந்தப் பெண் மாறியிருந்தாள்.

சிவகாமி அவளைச் சந்திக்க நேர்ந்தபொழுதெல்லாம் ஒன்றைக் கவனித்திருக்கிறாள். அதுதான் அந்தப் பெண்ணின் கண்களில் வழியும் மிரட்சி. சின்னச் சின்ன ஓசைக்கும் அச்சப்படுவாள். தன்னையும் அறியாமல் அருகில் இருப்பவர்களின் கரங்களைப் பற்றிக் கொள்வாள். ஒருமுறை முயல் ஒன்று பாய்ந்து ஓடியபோது சிவகாமியின் கைகளையும் அப்படிப் பற்றி இருக்கிறாள். அப்போது தன் கரங்களுக்குள் நடுங்கிய இப்பெண்ணின் விரல்களை ஆதரவாக, தான் பற்றி அவளுக்கு ஆறுதல் சொன்னதை இப்போது நினைத்துக் கொண்டாள்.

ஒருபோதும் இந்தப் பெண்ணை தனியாக சிவகாமி பார்த்ததேயில்லை. வேறு இரு பெண்கள் சூழத்தான் வலம் வருவாள். அவர்களுக்கும் இந்தப் பெண்ணின் வயதுதான் இருக்கும். இவளைப் போலவே அவ்விருவர் நயனங்களிலும் மிரட்சி தாண்டவமாடும். என்றாலும் அவ்விருவரும் இந்தப் பெண்ணைப் போல் மயிலின் கழுத்து வண்ணத்தில் ஆடைகளை அணிய மாட்டார்கள். மாறாக மெல்லிய காவி வண்ணத்தில்தான் கச்சையையும் இடுப்புத் துணியையும் அணிந்திருப்பார்கள்.

அதாவது சிவகாமி, பார்த்த சமயத்தில் எல்லாம், சந்திக்க நேர்ந்த தருணங்களில் எல்லாம் இந்தப் பெண் அவ்விருவருடனும்தான் காட்சி தந்தாள். ஆடைகளின் வண்ணங்கள் ஒருபோதும் மூவரிடமும் மாறியதில்லை.ஒரே வயதுதான் என்பதால் அம்மூவருடனும் சிவகாமி பேசி சிரித்திருக்கிறாள். அப்போது ஒரு விஷயத்தை கவனித்தாள். மூவருமே பூரண நிலவிலும் வெளியே வர அஞ்சினார்கள். சூரிய அஸ்தமனத்துக்கு முன்பே தத்தம் இல்லங்களுக்குச் சென்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். யாராவது சற்றே குரலை உயர்த்தினாலும் அம்மூவரின் கண்களும் கலங்கிவிடும். உதடுகளும் நாசிகளும் ஒருசேர துடிக்கத் தொடங்கிவிடும்.

அப்படிப்பட்ட குணாம்சமுள்ள மூவரில் ஒருத்தியான இந்தப் பெண், மதுரைக்கு வந்திருக்கிறாள்... அதுவும் தன் இரு தோழிகளும் இல்லாமல்!
ஆச்சர்யமளித்த இந்த புள்ளி, சிவகாமிக்குள் அதிர்ச்சியாக விஸ்வரூபம் எடுத்ததற்குக் காரணம், எப்போதும் போல் இரவின் மூன்றாம் ஜாமத்தில் தன் இருப்பிடத்தில் அடங்கி, முடங்கி, ஒடுங்கி இருக்காமல் இந்தப் பெண் தன்னந்தனியாக வணிகர் வீதியில் இருந்த மாளிகை ஒன்றின் உப்பரிகைக்கு வந்து நின்றதுதான்.

அதுவும் ‘உங்களை மாதிரி என்றுதான் நாங்கள் தைரியசாலியாக மாறுவோமோ...’ என இமைகள் படபடக்க தன்னைப் பார்த்து எப்போதும் வியப்பவள் இப்போது தன்னை நோக்கியே வாளைச் சுழற்ற முற்படுகிறாள் என்றால் அதிர்ச்சி அடையத்தானே வேண்டும்!

கரிகாலன் உட்பட சாளுக்கிய, பல்லவ, பாண்டிய பேரரசுகள், தான் யார்... தனது பூர்வீகம் என்ன... உண்மையில், தான் எந்த தேசத்தின் ஒற்றர் என குழம்பித் தவித்து வரும் நிலையில்... அப்படி முப்பேரரசுகளையும் குழப்பத்தில், தான் ஆழ்த்தி வரும் சூழலில்... தனது சித்தத்தையே இந்தப் பெண் கலங்க வைக்கிறாளே...

ஆமாம்... எல்லோரும் தன்னைக் கேட்கும் அதே கேள்வியை, தானும் இப்பெண்ணை நோக்கி கேட்க வேண்டியதுதான்!
யார் இவள்..? எந்த தேசத்தின் ஒற்றர் இவள்..?

தனக்குள் கேட்டுக்கொண்ட சிவகாமி, அதிர்ச்சி விலகாமல் ‘‘நீயா..? நீ... எப்படி... இங்கு..?’’ என்று வினவினாள்.
கேட்ட சிவகாமிக்கு அந்தப் பெண் உதட்டைப் பிரித்து எந்த பதிலையும் சொல்லவில்லை. மாறாக தன் கரத்தில் இருந்த வாளால் விடையளிக்க முற்பட்டாள்.

சிவகாமியின் புருவங்கள் எழுந்து தாழ்ந்தன. முன்னால் இருந்த பெண்ணை ஊன்றிக் கவனித்தாள்.கண்களில் மிரட்சிக்கு பதில் தீர்க்கம். வீச்சில் கைதேர்ந்தவள் என்பதைப் போல் வாளை இறுக, வலுவாகவே பற்றியிருந்தாள். எனில், பயந்த சுபாவம் கொண்டவளாக இவள் தோற்றம் தந்தது நாடகமே! யாருக்கு விசுவாசமாக இருக்க எல்லோரையும் இதுநாள் வரை ஏமாற்றியிருக்கிறாள்..? ஒட்டிப் பிறந்த இரட்டை வாழையாக எப்போதும் இவளுடன் வலம் வரும் அந்த இரு காவி வண்ண உடைகள் அணியும் பெண்கள் எங்கே..? அவர்களும் இவளைப் போலவே இன்னொரு பக்கத்தைக் கொண்டவர்களா அல்லது தன்னைப் போலவே இவளிடம் ஏமாந்தவர்களா..?

சிவகாமி யோசித்தாள். அதை அறுத்து எறிந்தது முன்னால் இருந்த பெண்ணின் வாள் வீச்சு.தன்னிரு கரங்களாலும் வாளைப் பிடித்து தன் சிரசுக்கு மேல் உயர்த்தினாள். அதே வேகத்தில் சிவகாமியை நோக்கி இறக்கினாள்.சிவகாமி இதை எதிர்பார்க்கவில்லை. என்றாலும் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை வாள் சண்டையிலும், அசுவங்களைப் பிரித்து பயிற்சி அளிப்பதிலும் செலவிட்டிருந்ததால் அநிச்சையாகவே அவள் உடல் வாள் சண்டைக்கு தயாரானது. இறங்கிய வாளைத் தடுத்து நிறுத்தியது.

சரியான வேகம். எனில், அல்லும்பகலும் இந்தப் பெண் வாள் பயிற்சியில் ஈடுபட்டிருப்பவள். தான், கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முற்படவில்லை. அதாவது பேச்சுக் கொடுக்கவோ உரையாடலில் பொழுதைக் கழிக்கவோ இவள் விரும்பவில்லை. தன்னை வீழ்த்துவது மட்டுமே குறிக்கோள் எனச் செயல்படுகிறாள்.

இங்கு... இந்த இடத்துக்கு, தான் வருவோம் என அறிந்து காத்திருக்கிறாள். அப்படியானால் மதுரை மாளிகையில் இருக்கும் சுவர் பொறிகளை அறிந்தவள். ஒருவேளை பாண்டிய சேனாதிபதி மாறவர்மனுடனும் சாளுக்கிய உபசேனாதிபதியுடனும், தான் பேசும்போது இந்தப் பெண்ணும் அங்கு மறைந்து இருந்தாளா..? அதாவது கரிகாலனுடன் நிழலில்... அவரை ஒன்றியபடி... பரந்த அவரது முதுகுக்குப் பின்னால் நின்றிருப்பாளோ... உரசியிருப்பாளோ...

சட்டென சிவகாமியின் கண்கள் சிவந்தன. உக்கிரத்துடன் அந்தப் பெண்ணின் வாள் வீச்சை சமாளிக்கத் தயாரானாள்.
அவள் இறக்கிய வாளைத் தடுத்து, தான் அப்பால் தள்ளியதுமே இரண்டடி பின்னோக்கிச் சென்றாள்தான். ஆனால், மூன்றடியாக அதை அதிகரிக்கவில்லை! பாதங்களை அழுத்தமாக ஊன்றி அப்படியே நின்றவள், மீண்டும் வாளை நீட்டினாள்.

சிவகாமி கவனித்தது இதை மட்டுமல்ல... அவளது பாதங்களின் அசைவுகளையும்தான். இத்தனைக்கும் அந்தப் பெண்ணின் பார்வை தனது கருவிழிகளையே ஊடுருவிக் கொண்டிருந்தது. அதாவது பார்வையால் தன்னைக் கட்டிப் போட்டபடி தாக்குதலை நிகழ்த்த ஆயத்தமாகிறாளாம்!
முகத்தின் அசைவை வைத்தே உடலின் இயக்கத்தை அறியும் திறன் தனக்கு உண்டு என்பதை பாவம் இவள் அறியவில்லை! பெண்ணே! நீ வாள் பயிற்சி பெற்ற பள்ளியின் ஆசான் நான்! அதுவும் கரிகாலரின் உள்வட்டத்தைச் சேர்ந்தவளாக நீ இருக்கலாம் என்ற பொறி எனக்குள் விழுந்த பிறகு... ம்ஹும்... உன்னை விடுவது என் மனதுக்கு நானே செய்யும் துரோகம்!

மனம் எரிய... கண்கள் கனலைக் கக்க... உடல் அதிர... அப்பெண்ணை வீழ்த்தும் நடவடிக்கையில் சிவகாமி இறங்கினாள்!
‘‘வா  மாறவர்மா... மாளிகைக்குள் திடீரென சுவர் ஏறி இறங்கியதா..?’’

சர்வசாதாரணமாகத்தான் பாண்டிய மன்னர் அரிகேசரி மாறவர்மர் கேட்டார்.ஆனால், அந்த வாக்கியம் அசாதாரணமான அமைதியை அந்த இடத்தில் ஏற்படுத்தியது. அதிர்ச்சியின் உச்சிக்கே பாண்டிய சேனாதிபதியான மாறவர்மனும், சாளுக்கிய உபசேனாதிபதியும் சென்றார்கள். சிலையாக நின்றார்கள்.
உண்மையில் அவ்விருவரும் சிந்திக்கும் ஆற்றலை இழந்து நாழிகை ஆகியிருந்தன. வணிகர் வீதியில் நடந்தவை அனைத்தும் அவர்களது கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது என்றால்... அரண்மனைக்குள் அவர்கள் நுழைந்தது முதல் நடைபெறும் சம்பவங்கள் மேலும் மேலும் அவர்களை ஸ்தம்பிக்கச் செய்தன.

அரண்மனைக்குள் அவர்கள் இருவரும் நுழைந்தபோது காவலுக்கு நின்றிருந்த வீரர்கள் தலை வணங்கி தங்கள் சேனாதிபதியை வரவேற்றார்கள். ஓடோடி வந்தான் காவல் தலைவன். ‘‘மூன்றாம் ஜாமத்தில் மன்னரை எழுப்புவது தவறுதான். ஆனால், வேறுவழியில்லை... உடனடியாக அவரைப் பார்க்க வேண்டும்...’’ என்று காவல் தலைவனிடம் சொல்ல பாண்டிய சேனாதிபதியான மாறவர்மன், வாயைத் திறந்தார்.

ஆனால், அதற்குள் அவனே, ‘‘வாருங்கள் சேனாதிபதி... உங்களுக்காகத்தான் நம் மாமன்னர் காத்திருக்கிறார்... நீங்கள் வந்ததுமே உப்பரிகைக்கு வரச் சொன்னார்...’’ அழைத்தபடி சென்ற காவல் தலைவனை அதிர்ச்சி நீங்காமல் இருவரும் பின்தொடர்ந்தார்கள்.உப்பரிகையை நெருங்கியதும் இருவருக்கும் தலைவணங்கிவிட்டு அங்கேயே காவல் தலைவன் நின்றுவிட்டான்.புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக இருவரும் அவனைக் கடந்து உப்பரிகைக்குச் சென்றார்கள்.

கம்பீரமாக அமர்ந்திருந்த பாண்டிய மன்னரை வணங்கினார்கள்.இதனை அடுத்துதான் ‘‘என்ன விஷயம் மாறவர்மா..?’’ என்று கேட்காமல், தாங்கள் சொல்ல வந்த சுவர் ரகசியத்தை தனக்கு முன்பே தெரியும் என்பதுபோல் மன்னர் சொன்னார்.

‘‘ஆம் மன்னா...’’ பாண்டிய சேனாதிபதி மென்று விழுங்கினார்.
‘‘சரி... சிவகாமி என்ன சொன்னாள்..?’’
‘‘சோழ இளவரசன் எதற்காக மாறுவேடத்தில் மதுரைக்கு
வந்திருக்கிறான் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்றாள்...’’
‘‘அவளுக்கு எதுவும் தெரியாதா..?’’
‘‘அறிய முடியவில்லை என்று
தான் சொன்னாள் மன்னா...’’
‘‘இப்போது அவள் எங்கே..?’’
‘‘இறங்கிய சுவருக்கு அப்பால் சென்றுவிட்டாள்...’’
‘‘அங்கு கரிகாலனும் சீனனும் மறைந்திருப்பதாக அவள் சொன்னாளா..?’’
‘‘....’’
அரிகேசரி மாறவர்மர் புன்னகைத்தார். ‘‘நல்லது... இருவரும் சென்று ஓய்வெடுங்கள்... நாளை பகலில் சந்திக்கலாம்...’’ சொல்லி
விட்டு தனது சயன அறையை நோக்கி நிதானமாக நடந்தார் பாண்டிய மன்னர்!

தன் வாள் வீச்சை சமாளிக்க முடியாமல் தரையில் விழுந்துவிட்ட அந்தப் பெண்ணை சிவகாமி அலட்சியமாகப் பார்த்தாள்.
உதட்டைப் பிதுக்கியபடி அவளைக் கடந்து செல்ல சிவகாமி முற்பட்டபோது -
எங்கிருந்தோ காவி உடை அணிந்த ஒரு பெண் வாளுடன் குதித்தாள்.
அடுத்த கணம் இன்னொரு காவி உடை அணிந்த பெண் வாளுடன் தோன்றினாள். முந்தையவளின் தோள் மீது ஏறினாள்.
அவ்விருவரையும் பார்த்து வாய்விட்டுச் சிரித்தாள் சிவகாமி!
 

(தொடரும்)


கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16448&id1=6&issue=20200117

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரத்த மகுடம்-89

பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘பேசா மடந்தைகள் வாட்கள் கொண்டு உரையாட வந்ததற்கு வந்தனங்கள்!’’
தன் வாளை நீட்டியபடி சொன்ன சிவகாமி, சற்றே அதைத் தாழ்த்தி ஒருவர் மீது ஒருவராக நின்றிருந்த அவ்விரு பெண்களுக்கும் வணக்கம் தெரிவிப்பதுபோல் குனிந்தாள்.இதுதான் சமயம் என்று காவி உடை தரித்திருந்த பெண்ணின் தோள் மீது நின்றிருந்த மற்றொரு காவி உடை அணிந்த பெண், தன் வாளுடன் சிவகாமியின் மீது பாய்ந்தாள்.
22.jpg
இதற்காகவே காத்திருந்தது போல் தன் வலது காலை அரைவட்டமிட்ட சிவகாமி, நின்றிருந்த காவி உடை தரித்த பெண்ணின் பாதங்களைத் தட்டிவிட்டாள்.இதை சற்றும் எதிர்பார்க்காத அந்தப் பெண், நிலைதடுமாறி சரிந்தாள்.அதேநேரம் தன் வாளின் இரு பக்கங்களையும் தன்னிரு கைகளால் பிடித்தபடி மல்லாந்து படுத்தவண்ணம் தன் மீது பாய்ந்த மற்றொரு காவி உடை அணிந்த பெண்ணின் வாளை சிவகாமி தடுத்து நிறுத்தினாள்.

இமைக்கும் பொழுதுக்குள் வாளைத் தடுத்தபடியே படுத்த நிலையில் இருந்து சிவகாமி எழுந்தாள். மேலிருந்து தன்மீது பாய்ந்த பெண்ணை தன் இடது காலால் எட்டி உதைத்தாள். காவி உடை அணிந்திருந்த இரு பெண்களும் இருவேறு திக்குகளில் விழுந்தார்கள்.
அலட்சியமாக தனது ஒரு காலை மடக்கி, இன்னொரு காலை நீட்டி, வாளைப் பிடித்திருந்த கையை நீட்டியும் மறு கையை மடக்கி
யும் நின்றாள் சிவகாமி.

அவளது கருவிழிகள் அவ்விருவரையும் அலசின. தடுமாறி விழுந்த நிலையிலும் அவர்கள் தத்தம் வாட்களை இறுக்கமாகப் பிடித்திருந்தார்கள். வாட்களை ஏந்திய அவர்களது தோரணை, தொடர்ந்து அவர்கள் வாட்பயிற்சி மேற்கொண்டு வருவதைப் பறைசாற்றியது.எப்போது, எந்த இடத்தில் இவர்கள் வாட் பயிற்சி மேற்கொண்டார்கள்... இவர்களுக்கு பயிற்சி அளிப்பது யாராக இருக்கும்..?

கிளைவிட்ட வினாக்களை வெட்டி எறியாமல் தன்னுள் அவற்றை சிவகாமி படரவிட்டாள். அதேநேரம் தன் கவனத்தை அவ்விருவர் மீதும் குவித்தாள்.
விழுந்த அதிர்ச்சியில் சற்றே உறைந்த அவர்கள், கணங்களில் தங்களைச் சமாளித்துக் கொண்டு எழுந்தார்கள்.சிவகாமியை இருபுறங்களில் இருந்தும் தாக்க ஆயத்தமானார்கள்.

அவ்விருவரின் பாத அசைவுகள் சிலம்பாட்டத்தை நினைவுபடுத்தின. ‘வீடு கட்டுகிறார்கள்’!தனக்குள் புன்னகைத்த சிவகாமி, சிலையாக அப்படியே நின்றாள். தன் கருவிழிகளை மட்டும் இருவர் பக்கமும் மாறி மாறி சுழற்றினாள். ஆனால், மனதுக்குள் அவர்களை எப்படி சமாளிப்பது என திட்டமிட்டாள். அதன் ஒருபகுதியாக தன் பங்குக்கு அகத்தில் ‘வீடு கட்டினாள்’!

ஆனால், கணங்கள்தான் நகர்ந்தனவே தவிர அவ்விருவரும் தத்தம் இடங்களை விட்டு அசையவில்லை. தாக்குதலைத் தொடுக்கவில்லை.
சிவகாமிக்கு இது புதிராக இருந்தது. இருவரும் தன்னை நோக்கி வாட்களை நீட்டியிருக்கிறார்கள். ஆனால், சண்டையிட முற்படவில்லை. மாறாக தங்கள் பாதங்களை மட்டும் சிலம்புப் பயிற்சி மேற்கொள்ளும்போது அடி எடுத்து வைப்பதுபோல் அசைக்கிறார்கள்.

ஆனால், அசைக்கவில்லை! அசைப்பதுபோல் தங்கள் செய்கை செய்கிறார்கள்.கவனித்த சிவகாமியின் புருவங்கள் எழுந்து தாழ்ந்தன. இருவரும் தங்கள் உடலை இறுக்கத்தில் இருந்து தளர்த்துகிறார்கள்; கொடியாக மாறுகிறார்கள்!இது ஒருவகையான போர் முறை. மரத்தைப் போல் உடலின் நாடி நரம்புகளை இறுக்கினால், வளைவது கடினம். தசைகள் பிடிக்கலாம். எதிராளி தன் முழு வலுவையும் பயன்படுத்தும் பட்சத்தில் எலும்புகள் முறியவும் வாய்ப்பிருக்கிறது.

மாறாக செடி போல் உடலின் நாடி நரம்புகளைத் தளர்த்தினால், புயலிலும் வளைந்து தாக்குப் பிடிப்பதுபோல் யுத்தத்தில் நிற்கலாம். எதிராளியின் வலிமை அப்போது பயன்படாமல் போகும்.சொல்வதற்கு எளிதாக இருக்கும் இச்செயல், கடுமையான பயிற்சிக்குப் பிறகே கைகூடும் என்பதை சிவகாமி அறிவாள். எனில், நாள் தவறாமல் இப்பெண்கள் இப்பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள்... யார் தலைமையில்..? எவரது மேற்பார்வையில்..?
இவர்களுடன் பேசிப் பழகிய காலங்களில் தங்கள் உடல்மொழியால் கூட, தாங்கள் வாள் பயிற்சி மேற்கொண்டு வருவதை இவர்கள் பறைசாற்றவில்லையே..? அந்தளவுக்கு ரகசியத்தைக் காப்பாற்றி வந்திருக்கிறார்கள் என்றால்...

தன் பாத கட்டை விரலை இருமுறை உயர்த்தி தாழ்த்தினாள் சிவகாமி. ஆச்சர்யத்தின் ரேகைகள் அவளது மேனி முழுவதும் படர்ந்தன. இவர்களது ஆசான் யார்..? யாராக இருந்தாலும் தமிழக வரலாற்றில் அவர் தவிர்க்க முடியாத போர்த் தளபதியாக, முக்கியமானவராக இருக்க வேண்டும்.
தனக்குக் கூட தெரியாதபடி வாழ்ந்து வரும் அந்த நபர் யார்..?

அறிந்து கொள்ளும் ஆவல் சிவகாமிக்குள் பொங்கி எழவே, இருவரிடமும் பேச்சுக் கொடுக்க முற்பட்டாள்.ஆனால், அதற்குள் கனவிலும் அவள் நினைத்துப் பார்க்காத காட்சிகள் எல்லாம் அரங்கேறத் தொடங்கின.தனக்கு இரு பக்கமும் இருந்த அவ்விரு பெண்களையும் ஒரு பக்கமாக வரவழைக்க, சிவகாமி நகர்ந்தாள்.இதை ஊகித்தது போல் சாளரத்தின் அந்தப் பக்கத்தில் இருந்து ஒரு பெண் வாளுடன் குதித்தாள்.

குதித்தவள் வேறு யாருமல்ல... சில கணங்களுக்கு முன் சிவகாமியால் தள்ளிவிடப்பட்ட மயிலின் கழுத்து நிற ஆடையை உடுத்தியிருந்தவள்தான்!
ஆக, இப்போது, தான் மூவரை எதிர்க்க வேண்டும். அதுவும் குனிந்த தலை நிமிராதவர்கள்... பயந்த சுபாவம் கொண்டவர்கள் என்றெல்லாம் தங்களைக் குறித்த பிம்பங்களை சுற்றிலும் இருந்தவர்களுக்கு ஏற்படுத்தியவர்கள்!

வித்தைக்காரன்தான் இவர்களின் ஆசான்... காற்றுக்குக் கூட தெரியாதபடி எவ்வளவு ரகசியமாக இம்மூவரையும் வீராங்கனைகளாக தயார்படுத்தியிருக்கிறான்... கண்டிப்பாக அந்தப் பயிற்சியாளனை சந்தித்தே ஆக வேண்டும்... அதற்கு இம்மூவரையும் விரைவாக
வீழ்த்திவிட்டு விசாரிக்க வேண்டும்...

முடிவுடன் தன் வாளைச் சுழற்றி காற்றைக் கிழித்த சிவகாமி தாக்குதலில் இறங்க முற்பட்டபோது -
சர்... சர்... சர்... என பல பெண்கள் உப்பரிகைக்குள் குதிக்கத் தொடங்கினார்கள்!
அனைவரது கரங்களிலும் வாட்கள் அந்த நள்ளிரவிலும் மின்னின.
சொல்லி வைத்ததுபோல் சிவகாமியை அவர்கள் சூழ்ந்து கொண்டார்கள்.
அனைவருமே தென் தமிழக கிராமப் பெண்கள்!
‘‘மன்னா...’’

தயக்கத்துடன் ஒலித்த குரலைக் கேட்டு சட்டென திரும்பினார் பாண்டிய மன்னர் அரிகேசரி மாறவர்மர்.அவரை வணங்கியபடி நின்றிருந்தான் கடிகை பாலகன். மறைந்து, கரைந்துவிட்டதாகக் கருதப்பட்ட வேளிர்களின் தலைவனாக திடீரென்று சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரால் ‘முடிசூட’ப்பட்டவன்!தனது சயன அறையின் கதவுக்கு நடுவில் கம்பீரமாக நின்ற அரிகேசரி மாறவர்மர், பாலகனை உற்றுப் பார்த்தார்.

அவர் உதட்டில் புன்னகை மலர்ந்தது. ‘‘சொல்லுங்கள் வேந்தே! நடுச்சாமத்தில் என்னைக் காண தாங்கள் வந்திருப்பதன் காரணத்தை அடியேன் அறியலாமா..?’’‘‘மன்னா...’’ அதிர்ந்துபோனான் கடிகை பாலகன். ‘‘என்ன வார்த்தை சொல்லிவிட்டீர்கள்..? காஞ்சி கடிகையில் பயிலும் சாதாரண மாணவன் நான்... என்னைப் போய் தாங்கள் வேந்தே என அழைக்கலாமா..?’’
‘‘அழைப்பது தவறா..? வேளிர்களின் தலைவன்தானே நீங்கள்..?’’

‘‘இல்லை மன்னா... கடிகை மாணவன்தான்... பல்லவர்களை வீழ்த்த என்னை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார் சாளுக்கிய மன்னர்...’’
‘‘அந்த ஆயுதம் பாண்டியர்களுக்கும் எதிரானதுதானே..?’’
‘‘இல்லை மன்னா...’’‘‘எப்படி நம்புவது..?’’ நிறுத்திய அரிகேசரி மாறவர்மர், பாலகனை உற்றுப் பார்த்தார். ‘‘வேளிர்களை வேரோடு வீழ்த்தி பேரரசு காலத்தை உருவாக்கியது பல்லவர்கள் மட்டுமல்ல... பாண்டியர்களும்தான்...’’

‘‘அந்தப் பாண்டியர்கள் இப்போது வேளிர்களின் நண்பர் என்னும்போது எப்படி ‘இந்த’ ஆயுதம் தங்களுக்கு எதிராகத் திரும்பும்..?’’
தலைதாழ்த்தி வணங்கியபடி கேட்ட பாலகனைக் கண்ட அரிகேசரி மாறவர்மரின் கண்கள் ஒளிர்ந்தன: ‘‘சொல்... என்ன விஷயம்..?’’ மரியாதையைக் கைவிட்டு நேரடியாக உரையாட முற்பட்டார்.‘‘மன்னா... வந்து... ஒரு விஷயம்...’’ பாலகன் உமிழ்நீரை விழுங்கியபடி தவித்தான்.
‘‘அதுதான் வந்துவிட்டாயே... என்ன விஷயம்..?’’‘‘எங்கள் படை...’’

பாலகன் முடிப்பதற்குள் அரிகேசரி மாறவர்மர் குறுக்கிட்டார்: ‘‘இப்பொழுது சிவகாமியை சுற்றி வளைத்திருக்கிறது... அப்படித்தானே..?’’
பிரமை பிடித்து நின்றான் பாலகன்.
‘‘இதைச் சொல்லத்தான் இங்கு வந்தாயா..?’’
‘‘மன்னா... தங்களுக்கு எப்படி...’’
‘‘வேளிர்களின் ரகசியப் படை குறித்து தெரியும் என்று கேட்கிறாயா..?’’

பதிலேதும் சொல்லாமல் பாலகன் தலைகுனிந்தான்.‘‘தென் தமிழகத்தை ஒரு குடையின் கீழ் ஆளும் மன்னன் நான்... ஆயிரம் கண்கள் இல்லாமல் அரியாசனத்தில் அமர முடியாது... என்னதான் கால ஓட்டத்தில் வேளிர்கள் ஒடுங்கிவிட்டாலும் முற்றிலுமாக அவர்கள் அழியவில்லை என்பதும்... இழந்த தங்கள் நிலப்பரப்பைப் பெற என்றேனும் ஒருநாள் அவர்கள் முயற்சிப்பார்கள் என்பதும்... சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் தமிழக மன்னர்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும். குறிப்பாக பல்லவனுக்கும் பாண்டியனுக்கும்! அப்படியிருக்க எனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் அதுவும் தென்பாண்டி கிராமத்தில் வேளிர்களின் படை பயிற்சி பெற்று வருவதை அறியாமல் இருப்பேனா என்ன..?’’  
‘‘மன்னா...’’

‘‘தடுக்காமல் இருந்ததற்கான காரணம், அப்படையை எப்போது வேண்டுமானாலும் பாண்டியப் படையுடன் இணைக்கலாம் என்பதால்தான்!’’
சட்டென மலர்ந்தான் பாலகன்: ‘‘நன்றி மன்னா... நீங்கள் எப்பொழுது சொல்கிறீர்களோ அப்பொழுது படையை இணைத்து விடுகிறேன்!’’
‘‘கடிகை பாலகனாக இல்லாமல் வேந்தனாக வாக்குக் கொடுக்கிறாய்!’’ கடகடவென சிரித்தார் அரிகேசரி மாறவர்மர்: ‘‘நல்லது... படையில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?’’

‘‘நூ...று பேர் மன்னா...’’
‘‘நூற்றைம்பது!’’ அழுத்திச் சொன்னார் பாண்டிய மன்னர்.
‘‘ம...ன்...னா...’’‘‘அனைவரும் பெண்கள். வீராங்கனைகள்! வாள் சண்டையில் சூரர்கள். அதங்கோட்டாசான்தானே வாள் பயிற்சி அளிக்கும் ஆசான்..?’’
பாலகன் சிலையென நின்றான்: ‘‘மன்னா... தங்களுக்கு அதங்கோட்டாசானைத் தெரியுமா..? அவர்... அவர்...’’
‘‘எவர் கண்ணிலும் படாமல் மறைந்து வாழ்கிறார்!’’

‘‘தங்கள் பார்வையில் எப்பொழுது அவர் தட்டுப்பட்டார் மன்னா..?’’
‘‘அவர் பிறந்தபோது!’’ அலட்சியமாக சொன்ன அரிகேசரி மாறவர்மர், ஏதோ சொல்ல வந்த பாலகனை தன் கரம் உயர்த்தி தடுத்தார்: ‘‘நாளை சந்திப்போம். உனது படையிடம் சிவகாமி சிக்க மாட்டாள். சென்று வா...’’

சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் தன் சயன அறைக்குள் நுழைந்தார் அரிகேசரி மாறவர்மர்.படுக்கைக்கு அருகில் இருந்த மேஜையில் தாயப் பலகை இருந்தது. கூடவே மூன்று முத்துக்கள்.அவற்றை எடுத்து திக்குக்கு ஒன்றாக வைத்தார்: ‘‘இது பல்லவன்... இது சாளுக்கியன்... இது பாண்டியன்...’’ முணுமுணுத்த அரிகேசரி மாறவர்மர், தந்தத்தாலான தாயத்தை எடுத்து உருட்டினார்.

சிவகாமி சலிக்கவேயில்லை. துவளவுமில்லை. தன்னைச் சூழ்ந்த அத்தனை பெண்களையும் வாளால் தடுத்து நிறுத்தினாள்.சூழ்ந்த பெண்கள் அனைவருமே சிலம்பாட்டம் கற்றவர்கள் என்பதை அவர்களது பாத நடவுகளில் இருந்தே அறிந்துவிட்டாள். எனவே தன் வாளையும் சிலம்பம் போலவே சுற்றினாள். தன்னைச் சுற்றிலும் எதிராளிகளின் வாள் நுழையாதபடி பார்த்துக் கொண்டாள்.

யாரையும் காயப்படுத்தவோ அல்லது வீழ்த்தவோ சிவகாமி விரும்பவில்லை. ஆண்களுக்கு சமமாக பெண்கள் உக்கிரமாக வாள் சண்டையிட்டது அவளைக் கவர்ந்தது. அவர்களது திறமைக்கு மதிப்பளிக்க வேண்டும்... அதேநேரம், தானும் அவர்கள் கையில் சிக்கக் கூடாது. தவிர கரிகாலனும் சீனனும் என்ன ஆனார்கள்... மதுரையில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்... அதற்கு முதலில் இங்கிருந்து வெளியேற வேண்டும்...
 

முடிவுடன் தன் வாளைச் சுழற்றியபடியே நகர ஆரம்பித்தாள். உப்பரிகையின் அந்தப் பக்கம் சுவர் இருப்பதை முன்பே பார்த்துவிட்டாள். எனவே சுவருக்கு அந்தப் பக்கமோ இந்தப் பக்கமோ கதவு இருக்க வேண்டும். சுவரை நோக்கி சிவகாமி நகர்ந்தாள்.
 

சரியாக சுவரை அவள் நெருங்கவும், திரைச்சீலை போல் அந்தச் சுவர் உயரவும் சரியாக இருந்தது!ஒரு கரம் வலுவாக அவளை உள்ளே இழுத்தது!

சிவகாமி உள்ளே வந்ததும் பழையபடி அந்தச் சுவர் மூடிக் கொண்டது!
பாண்டிய மன்னர் அரிகேசரி மாறவர்மர் யோசிக்கத் தொடங்கினார்: ‘‘இந்த தாயம்தான் அதங்கோட்டாசான்... எந்த எண்ணை விழவைத்து யாரை எப்படி நகர்த்தப் போகிறான்..? அவனுக்கும் சிவகாமிக்கும் தொடர்பு இருக்கிறதா..?’’
 

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16475&id1=6&issue=20200124

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரத்த மகுடம்-90

பிரமாண்டமான சரித்திரத் தொடர்

சிந்தனை தடைப்பட தலையை மட்டும் திருப்பினார் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர்.‘‘என்ன..?’’ என்பதற்கு அறிகுறியாக அவரது புருவங்கள் உயர்ந்தன.‘‘நமது போர் அமைச்சர் ஸ்ரீராமபுண்ய வல்லபரிடம் இருந்து செய்தி வந்திருக்கிறது...’’ காவலர் தலைவன் பயபக்தியுடன் தெரிவித்தான்.
அவன் கையில் எந்த ஓலையும் இல்லாததை விக்கிரமாதித்தர் கண்டுகொண்டார்: ‘‘வரச் சொல்...’’ உத்தரவுக்கு அடிபணிந்து அவரை வணங்கிவிட்டு வெளியேறினான் காவலர் தலைவன்.
24.jpg

மீண்டும் சாளரத்துக்கு வெளியே தன் பார்வையைத் திருப்பினார் சாளுக்கிய மன்னர். அவரால் எந்த முடிவுக்கும் வர இயலவில்லை. நாட்டைப் பறிகொடுத்த பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மன், இன்னமும் மறைந்து திரிகிறார். பல்லவ நாட்டை மீட்பதற்கான எந்த நடவடிக்கையிலும் அவர் இறங்கவில்லை.அப்படியும் சொல்ல முடியாது.
 
படைகளை அவர் திரட்டி வருவதாக ஒற்றர்கள் தெரிவிக்கிறார்கள். ஆங்காங்கே பாசறைகள் அமைக்கப்பட்டும் வருகின்றன. சாளுக்கிய நாட்டைத் தாக்கவும் தன் படையின் ஒரு பிரிவை அனுப்பினார். அப்போரில் பல்லவ மன்னர் தோல்வியும் அடைந்தார்.


இவை அனைத்துமே சாளுக்கிய மன்னருக்கு விளையாட்டாகத் தெரிந்தது. பல்லவ மன்னரின் மனதில் என்னதான் இருக்கிறது..? எதற்காக இப்படி போக்கு காட்டிக் கொண்டிருக்கிறார்..? இந்த வினாதான் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரைக் குடைந்துகொண்டிருந்தது. இதில் ஏதோ செய்தி இருக்கிறது. குறிப்பாக சாளுக்கியர்களான தங்களுக்கு. அது என்ன..? பல்லவர்களின் உபதளபதியும் சோழ இளவரசனுமான கரிகாலன் எதற்காக காஞ்சிக்கு வந்தான்... இப்பொழுது எதற்காக மதுரைக்கு சென்றிருக்கிறான்..? காஞ்சியில் இருந்தபோது கடிகைக்கு ஏன் சென்றான்..?

அர்த்த சாஸ்திர ஓலைச்சுவடியில் சிவகாமி குறித்த மர்மம் இருப்பதாகச் சொல்லி அங்கு அவனை அனுப்பியதும், தான்தான்... ஆனால், உண்மையில் தன் வார்த்தைக்கு கட்டுப்பட்டுதான் கடிகைக்கு கரிகாலன் சென்றானா..? அர்த்த சாஸ்திர சுவடிகளை அவன் எடுத்ததாக வேளிர்களின் தலைவனாக தன்னால் ‘முடி’சூட்டப்பட்ட பாலகன் சொல்கிறான்... ஆனால், எடுத்த சுவடிகளை இப்பொழுதுவரை அவன் படிக்கவேயில்லை என்கிறாள் சிவகாமி.
என்ன நடக்கிறது... பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மனும் கரிகாலனும் என்ன நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்..? என்ன சூது இதற்குள் புதைந்திருக்கிறது..?

தொடரும் வினாக்களின் அடிவேரைக் காண சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் முற்பட்டபடி திரும்பினார்.
அதேநேரம் ராமபுண்ய வல்லபரிடம் இருந்து செய்தியைத் தாங்கியபடி மதுரையில் இருந்து வந்த வீரனும் அவரது அந்தரங்க அறைக்குள் நுழைந்தான். அவரை வணங்கினான்.‘‘செய்தி என்ன..?’’

‘‘பாண்டிய மன்னரை விரைவில் நம் பக்கம் இழுத்துவிடலாம் என போர் அமைச்சர் ராமபுண்ய வல்லபர் தெரிவித்தார்...’’
‘‘அதாவது இன்னமும் பாண்டிய மன்னர் பிடி கொடுக்கவில்லை... அப்படித்தானே..?’’

‘‘அப்படியில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக தங்களிடம் அவர் தெரிவிக்கச் சொன்னார்... நம் இளவரசர் விநயாதித்தர் தன் கடமையை சரிவர ஆற்றியிருப்பதாகவும், விரைவில் நல்ல செய்தி தங்களை வந்தடையும் என்றும் தெரிவித்தார்...’’
‘‘நல்லது... இப்போதைய என் மனநிலைக்கு இச்செய்தி ஆறுதல் அளிக்கிறது...’’
‘‘தங்களை உற்சாகப்படுத்தும் செய்தியும் இருக்கிறது மன்னா...’’

விக்கிரமாதித்தர் கேள்வியுடன் அவனைப் பார்த்தார். கணத்தில் அவர் முகம் பிரகாசமடைந்தது. உதட்டிலும் புன்முறுவல் பூத்தது. ‘‘சிவகாமி என்ன சொல்லி அனுப்பினாள்..?’’

வீரன் மீண்டும் அவரை வணங்கினான். ‘‘அதங்கோட்டாசான் இருக்கும் இடத்தை, தான் அறிந்துவிட்டதாக உங்களிடம் நம் ஒற்றர் படைத்தலைவி தெரிவிக்கச் சொன்னார்!’’

அதுவரை பிடிபடாமல் இருந்த ஆழம், துல்லியமாகத் தெரியத் தொடங்கியதும் வியப்பின் எல்லைக்குச் சென்றார் சாளுக்கிய
மன்னர் விக்கிரமாதித்தர். ‘‘அதங்கோட்டாசான்... அதங்கோட்டாசான்...’’ முணுமுணுத்தார். ‘‘இன்னமுமா அவர் உயிருடன் இருக்கிறார்..?’’
‘‘இல்லை மன்னா... அதங்கோட்டாசான் மறைந்து பல ஆண்டுகள் ஆகின்றன என்ற பேச்சும் அடிபடுகிறது...’’ நிதானமாகச் சொன்னார் பாண்டிய அமைச்சர்.

‘‘இதை நீங்கள் நம்புகிறீர்களா அமைச்சரே..?’’ மாறாத அமைதி
யுடன் கேட்டார் பாண்டிய மன்னர் அரிகேசரி மாறவர்மர்.
‘‘அடிபடும் பேச்சைக் குறிப்பிட்டேன் மன்னா...’’
‘‘வதந்திகளின் ஊற்றே பேச்சுதானே..?’’
‘‘உண்மையின் பிறப்பிடமும் அதுதானே மன்னா...’’

வாய்விட்டுச் சிரித்தார் அரிகேசரி மாறவர்மர்:  ‘‘அதாவது அதங்கோட்டாசான் மறைந்துவிட்டார் என்கிறீர்கள்...’’
‘‘அப்படியும் ஒரு கோணம் இருக்கிறது என்கிறேன் மன்னா...’’
‘‘எனில், வேளிர்களின் தலைவனாக சாளுக்கிய மன்னரால் ‘முடி’சூட்டப்பட்ட பாலகன், தனது ரகசியப் படைக்கு அதங்கோட்டாசான்தான் வாள் பயிற்சி அளித்து வருகிறார் என்கிறானே..?’’
‘‘அதை முழுக்க நம்ப வேண்டாம் என்கிறேன் மன்னா...’’

‘‘அவன் சொல்வதையா..?’’
‘‘அவனையே!’’ நிதானத்தைக் கைவிடாமல் அதேநேரம் அழுத்தமாகச் சொன்னார் பாண்டிய அமைச்சர்.
பழுத்த பழமாக தன் வயதை ஒத்த அந்த முதியவரை உற்றுப் பார்த்தார் பாண்டிய மன்னர் அரிகேசரி மாறவர்மர்: ‘‘சிவகாமி யார்... அவள் எந்தப் பக்கம் இருக்கிறாள்... என்ற குழப்பம் சாளுக்கியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையில் நிலவுவதுபோல் பாண்டியர்கள் பக்கமும் ஒரு நிலையாமை சர்ச்சை என்னும் பெயரில் உலாவ வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா அமைச்சரே..?’’
‘‘அந்தப் பார்வையுடனும் அணுகுவது நல்லது என்கிறேன் மன்னா...’’

‘‘சற்று விளக்க முடியுமா..?’’
‘‘அறிந்த தங்களுக்கு அடியேன் அறிவிக்க வேண்டுமா..? சோதிக்காதீர்கள் மன்னா... வேளிர்கள் என எவருமே இன்று இல்லை என்பதும் அக்குலம் பாண்டிய பல்லவ அரச குலத்துடனும் இரு நாட்டு படைகளுடனும் இரண்டறக் கலந்துவிட்டன என்பதும் தங்களுக்குத் தெரியாதா..? என்றோ எப்பொழுதோ பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த வேளிர் இனம் மீண்டும் இன்று இப்பொழுது உயிர்பெற்று எழும் என்பது நம்பும்படியாகவா இருக்கிறது..?’’

‘‘சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் அதை நம்புகிறாரே..?’’
‘‘அவரை அப்படி நம்ப வைத்தவர்கள் பல்லவர்களாகவும் இருக்கலாம் அல்லவா..?’’
‘‘அமைச்சரே..!’’

‘‘மன்னா! உங்கள் ஊகம் சரி! கரிகாலனால் ஏற்பாடு செய்யப்பட்டவன்தான் அந்த பாலகன்! கரிகாலன் சொல்படியே சாளுக்கிய மன்னரைச் சந்தித்து வேளிர்களின் தலைவனாக அவன் மாறியிருக்கிறான்! காஞ்சியை பல்லவர்கள் ஆண்டபோது அங்குள்ள கடிகையில் அப்பாலகன் பயிலவேயில்லை என்பதும், சாளுக்கியர்களின் வசம் காஞ்சி சென்றபிறகே அந்தப் பாலகன் கடிகையில் மாணவனாக சேர்ந்தான் என்பதும் உலகம் அறிந்த செய்தியல்லவா!’’

‘‘அந்த பாலகனை கடிகையில் சேர்த்தது சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர்தான் என்பதும் உண்மைதானே..? அமைச்சரே... பல்லவர்களையும் பாண்டியர்களையும் வீழ்த்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆள சாளுக்கியர்கள் நினைக்கிறார்கள். போலவே பல்லவர்களும் பாண்டியர்களான நாமும் நினைக்கிறோம். இதற்காக மூவருமே மூவருடனும் நட்பும் பாராட்டுகிறோம்... பகைமையையும் வெளிப்படுத்துகிறோம்...’’
சட்டென பாண்டிய அமைச்சர் தன் மன்னரை வணங்கினார்: ‘‘அடியேன் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் மன்னா..?’’

‘‘மதுரை காவலைப் பலப்படுத்துங்கள். நகரை விட்டு வெளியேறும் மக்கள் அனைவரும் அத்தாட்சியை வாயிலில் காண்பிக்க வேண்டும் என வீரர்களிடம் சொல்லுங்கள்...’’
‘‘எதற்காக மன்னா..?’’
‘‘நமக்கே தெரியாமல் பல்லவப் படை நம் மண்ணில் பயிற்சி எடுத்து வருகிறது அமைச்சரே! அதங்கோட்டாசான் அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்!’’
‘‘மன்னா...’’

‘‘அதங்கோட்டாசான் இறக்கவில்லை! பிறப்பில் இருந்தே அவரை அறிந்தவன் நான்... அப்படியிருக்க அவர் மறைவு எனக்குத் தெரியாமலா போய்விடும்?!’’
 

கண்விழித்த சிவகாமி, நிலவறையில், தான் இருப்பதை உணர்ந்தாள். மயக்கத்தின் பிடியில் சில நாழிகை, தான் இருந்ததை உணர அவளுக்கு அதிக கணம் பிடிக்கவில்லை. சுவர் எழுந்து தன்னை இழுத்த நபர் கண்டிப்பாக கரிகாலன் இல்லை என்பதை தொடுகையில் இருந்தே அறிந்துவிட்ட அவள், தன்னைக் காப்பாற்றியதும் மயக்கமடைய வைத்து தன்னை உறங்க வைத்ததும் யாராக இருக்கும் என யோசித்தபடியே சுற்றிலும் பார்த்தாள்.
 

கண்ட காட்சியில் அவள் நயனங்கள் விரிந்தன.அகண்ட மீசை கொண்ட முதியவர் ஒருவரின் மேற்பார்வையில் கட்டிளம் காளைகள் வாள் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்!
 

(தொடரும்)

கே.என்.சிவராமன் ஓவியம்: ஸ்யாம்
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரத்த மகுடம் 91 ஐக் காணவேயில்லை குங்குமம் தொடர்களில். வேறு யாராவது முயன்று கண்டுபிடித்தால் போட்டுவிடுக.

ரத்த மகுடம்-92

பிரமாண்டமான சரித்திரத் தொடர்

நெகிழ்ந்த நரம்புகள் சட்டென பாறையைப் போல் கடினமாகின.‘‘என்ன கேட்டீர்கள்..?’’ கரிகாலனை உதறியபடியே சிவகாமி நாசி துடிக்கக் கேட்டாள்.
உதறியவளை இழுத்து அணைத்தான் கரிகாலன்: ‘‘ஒரு காத தொலைவில் இருந்தபடி ஒருவர் சுவாசித்தாலும் அந்த ஓசையை உள்வாங்கும் இயல்பு படைத்தவள் நீ என்பது உலகுக்கே தெரியும்... அப்படியிருக்க உன் செவியை வருடிய என் சொற்களின் அர்த்தம் உனக்குப் புரியவில்லையா..?’’
‘‘இல்லை...’’‘‘நம்பும்படி இல்லையே..?’’‘‘இதுவரை எதைத்தான் நம்பியிருக்கிறீர்கள்..?’’


27.jpg


‘‘அனைத்தையும் நம்புவதால்தானே சகலத்தையும் நம்பாமல் இருக்கிறேன்!’’
‘‘இந்த வார்த்தை ஜாலங்கள் என்னிடம் வேண்டாம்...’’ சீறியபடி அவனை விட்டு விலகினாள்: ‘‘முத்துக்கள் உதிர்ந்தாலும் பரவாயில்லை... சொல்லுங்கள்... என்ன கேட்டீர்கள்..?’’‘‘அதங்கோட்டாசான் உயிருடன் இருப்பதை சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரிடம் தெரிவித்து விட்டாயா என்று கேட்டேன்...’’‘‘இதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்..?’’‘‘உன்னிடம் கேட்காமல் வேறு யாரிடம் வினவ முடியும்..?’’
‘‘உரியவரிடம்...’’‘‘அவரிடம்தானே கேட்டுக் கொண்டிருக்கிறேன்!’’

எரித்து விடுவதுபோல் கரிகாலனைப் பார்த்தாள் சிவகாமி: ‘‘போதும்... விளையாடுவதற்கும் எல்லையிருக்கிறது...’’
‘‘அந்த எல்லையை வகுத்தது யார் சிவகாமி..?’’‘‘நீங்கள்!’’‘‘நானா..?’’‘‘ஆம்... கணம்தோறும் எல்லையை விரிவுபடுத்திக்கொண்டே செல்கிறீர்கள். இதோ, இப்பொழுது சாளுக்கிய மன்னரிடம் ஏதோ தகவலைச் சொல்லிவிட்டாயா என்று கேட்டீர்களே... அப்படி!’’
‘‘இது எல்லையை விரிவாக்கும் செயலா..?’’

‘‘இல்லையா..? சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தருக்கும் எனக்கும் என்ன தொடர்பிருக்கிறது..?’’
‘‘அதைச் சொல்லாமல் நீதானே விளையாடிக் கொண்டிருக்கிறாய்!’’‘‘இன்னமும் என்னை நீங்கள் நம்பவில்லை... அப்படித்தானே..?’’ உதட்டைக் கடித்தபடி கேட்ட சிவகாமி, சட்டென திரும்பி நடக்கத் தொடங்கினாள்: ‘‘என் அண்ணன் என்னை நம்புகிறார்... அது போதும்...’’

அவளுடன் இணைந்தபடியே கரிகாலன் நடக்கத் தொடங்கினான்: ‘‘அண்ணனா..? அது யார் சிவகாமி... நான் அவரைச் சந்தித்ததேயில்லையே!’’
நின்ற சிவகாமி தன் காலை உயர்த்தி ஓங்கி தரையை அடித்தாள்: ‘‘பல்லவ இளவரசர் இராஜசிம்மர்தான் என் அண்ணன்... உங்கள் முன்னால்தானே என்னை தன் சகோதரி என்றார்... அதற்குள் மறந்துவிட்டீர்களா..?’’

‘‘குடிமக்கள் அனைவரையும் தன் உடன் பிறந்தவர்களாக நினைப்பது அவரது வழக்கம்... அப்படி...’’
‘‘என்னையும் தன் சகோதரியாக ஏற்றுக்கொண்டார்... பூவை புஷ்பம் என்றும் சொல்லலாம்... மலர் என்றும் அழைக்கலாம்... எப்படியிருந்தாலும் அது பூதான்... நான் அவர் சகோதரிதான்... எனவே...’’

‘‘பல்லவ பிரஜை என்கிறாய்... சாளுக்கிய மன்னருக்கும் உனக்கும் தொடர்பேதும் இல்லை என்கிறாய்... அப்படி...’’
‘‘...தான்! இப்பொழுது விளங்கிவிட்டதல்லவா..?’’

‘‘விளங்காததால்தான் விளக்கம் கேட்டுக் கொண்டிருக்கிறேன்!’’
நேருக்கு நேராக கரிகாலனை உற்றுப் பார்த்தாள் சிவகாமி: ‘‘உங்கள் பிரச்னை என்ன..?’’
‘‘சிக்கலை அறிவதுதான்...’’‘‘சிக்க வைத்தா..?’’
‘‘சிக்குகளை அவிழ்த்து..!’’

‘‘அவிழ்ப்பது போல் தெரியவில்லை...’’ தலையைச் சிலுப்பிக் கொண்டாள் சிவகாமி: ‘‘மேலும் மேலும் முடிச்சிடுபவராகத்தான் இருக்கிறீர்கள்...’’
‘‘முடிச்சுப் போடுவதே அவிழ்ப்பதற்குத்தான்...’’
‘‘அதாவது..?’’
‘‘பொறியை வைப்பதே பிடிக்கத்தான்!’’
‘‘பிடித்துவிட்டதாகக் கருதுகிறீர்களா..?’’
‘‘இல்லை என்கிறாயா..?’’

‘‘பிடிபட்டது அப்பாவி என்கிறேன்!’’
‘‘எந்த விதத்தில்..?’’
‘‘எல்லா வகையிலும்!’’ சொல்லும்போதே சிவகாமிக்கு மூச்சு வாங்கியது. எந்தளவுக்கு அவள் உள்ளுக்குள் வெந்து சாம்பலாகிறாள் என்பதை அனலாக வெளிப்பட்ட அவளது சுவாசம் உணர்த்தியது: ‘‘எப்படி வளைத்து வளைத்து நீங்கள் கேட்டாலும் பதில் ஒன்றுதான். சாளுக்கிய மன்னருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை... இல்லை... இல்லை... இதுதான் உண்மை..!’’
‘‘யாருக்கு..?’’
‘‘என்ன..?’’

‘‘யாருக்கு உண்மை என்று கேட்டேன்!’’‘‘நபருக்கு நபர் உண்மை மாறுமா..?’’‘‘மாறும்... அதற்கு நாம் இருவருமே உதாரணம்! சிவகாமி... தொடக்கம் முதலே நாம் இருவர் மட்டுமல்ல... நாம் சந்தித்த அனைவருமே - சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர், சாளுக்கிய போர் அமைச்சர் ராமபுண்ய வல்லபர், கடிகை பாலகன், பல்லவ இளவரசர்... என சகலரும் அவரவருக்கான உண்மைகளுடன்தான் நடமாடிக் கொண்டிருக்கிறோம்... அதனாலேயே நம் கதையை பிற்காலத்தில் யார் சொன்னாலும் எழுதினாலும் அதை யார் பார்வையில்... யாரது கண்ணோட்டத்தில் சொல்வது எனத் தடுமாறுவார்கள்... ஏனெனில் பலரது பார்வையில் பலவாறாக கிளை பரப்பும் வல்லமை படைத்தது நம் கதை..!’’

‘‘நல்ல கதை!’’ இகழ்ச்சியுடன் சொன்ன சிவகாமி நகர முற்பட்டாள்.கரிகாலன் அவளது கரங்களைப் பிடித்து தடுத்து நிறுத்தினான்: ‘‘எங்கு செல்கிறாய்..?’’
‘‘எனக்கான உண்மையைத் தேடி!’’‘‘அதற்கு எனக்கான உண்மையின் வழியேதான் நீ பயணப்பட்டாக வேண்டும்...’’
‘‘கட்டளையா..?’’‘‘தண்டனை!’’ அழுத்தம்திருத்தமாகச் சொன்ன கரிகாலன், சட்டென சிவகாமியை இழுத்து தன் மார்பில் சாய்த்தான். அவள் சுதாரித்து விலகுவதற்குள் அவள் இதழ்களில் தன் உதட்டைப் பதித்தான்:

‘‘சிவகாமி... கவனி... சற்று நேரத்துக்கு முன் நிலவறையில் ஒரு முதியவரைச் சந்தித்தாயே... ம்... ம்... இளைஞர்களுக்கு எல்லாம் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தாரே... அவரேதான்... அவர்தான் அதங்கோட்டாசான்! அவர் உயிருடன் இருக்கும் தகவலை... ம்ஹும்... புருவத்தை இப்படி உயர்த்தாதே...’’ என்றபடி தன் ஒரு கரத்தால் அவளது புருவங்களை நீவினான் கரிகாலன்: ‘‘நீ எழுதுவது போலவே எழுதி... அந்த ஓலைக்குழலுக்கு உனது முத்திரையையிட்டு... அதை சாளுக்கிய ஒற்றனிடம் கொடுத்துவிட்டேன்... இந்நேரம் சாளுக்கிய மன்னருக்கு அந்த விவரம் போய்ச் சேர்ந்திருக்கும்!’’
‘‘எதற்காக இப்படிச் செய்தீர்கள்..?’’

‘‘உண்மையை நோக்கிப் பயணப்பட... அதாவது... எனக்கான உண்மையை நோக்கி நீ செல்ல!’’
‘‘மறுத்தால்..?’’‘‘எந்த நோக்கத்துக்காக ‘சிவகாமி’யைப் போல் நீ நாடகமாடிக் கொண்டிருக்கிறாயோ... அந்த நோக்கம் நிறைவேறாமல் போகும்..!’’
‘‘மிரட்டுகிறீர்களா..?’’‘‘சேச்சே... உனக்கு உதவி செய்கிறேன்..!’’ அவள் கன்னத்தை அழுத்தமாகக் கடித்துவிட்டு இமைக்கும் நேரத்தில் கரிகாலன் விலகினான்: ‘‘இன்று இரவு பாண்டிய இளவரசனுக்கு விருந்தளிக்கப் போகிறான் சாளுக்கிய இளவரசன்... அதற்கு உனக்கும் அழைப்பு வரும். மறுக்காமல் செல். தனிமையில் பாண்டிய இளவரசன் உன்னிடம் ஓலை ஒன்றைக் கொடுப்பான்... அதை அப்படியே கொண்டு வந்து என்னிடம் கொடு!’’

சிவகாமியின் கன்னத்தில் தட்டிவிட்டு கரிகாலன் அகன்றான்.வெறித்தபடி எத்தனை கணங்கள் சிவகாமி அங்கு நின்றாளோ...
சுயநினைவுக்கு அவள் வந்தபோது கதிரவன் உச்சியில் இருந்தான்.முகமெல்லாம் இறுக மெல்ல அந்த நந்தவனத்தைவிட்டு வெளியே வந்தாள். வணிகர் வீதியைக் கடந்து, தான் தங்கியிருந்த சத்திரத்துக்கு வந்தாள். எதிர்பார்த்ததுபோலவே இரவு விருந்துக்கு அழைப்பு வந்திருந்தது.

தலையசைத்துவிட்டு ஸ்நான அறைக்குள் நுழைந்தாள். கதவை இறுகத் தாழிட்டுவிட்டு தன் இடுப்பில் இருந்து ஓலைக்குழல் ஒன்றை எடுத்து முத்திரையை உடைத்தாள். பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த ஓலையை எடுத்துப் படித்தாள்: ‘அதங்கோட்டாசான் உயிருடன் இருக்கிறார்...’ அவளது கையெழுத்தில், அவளைப் போலவே கரிகாலன் எழுதியிருந்தான்!

சிவகாமியின் உதட்டில் புன்முறுவல் பூத்தது. தன் இடுப்பில் இருந்த சுருக்குப் பையை எடுத்தாள். அதனுள் இருந்த சிக்கிமுக்கிக் கல்லை எடுத்து உரசி, நெருப்பை வரவழைத்தாள். அந்த ஓலையைப் பஸ்பமாக்கினாள்.பின்னர் அலுப்புத்தீர வாசனைப் பொடிகளைப் பூசியபடி குளித்து முடித்தாள்.
அறுசுவை உணவு காத்திருந்தது. சாப்பிட்டாள்.

அறைக்குச் சென்று படுத்தாள்.உறக்கம் கலைந்தபோது இருட்டத் தொடங்கியிருந்தது.தன்னை அலங்கரித்துக்கொண்டு வெளியே வந்தவள், சாளுக்கிய இளவரசர் தங்கியிருந்த மாளிகையை நோக்கி நிதானமாக நடந்தாள்.வாசலில் காத்திருந்த ராமபுண்ய வல்லபர், பார்வையாலேயே அவளை வரவேற்று அழைத்துச் சென்றார்.

மாளிகை நந்தவனத்தில் பந்தல் போடப்பட்டிருந்தது. சற்றுத் தள்ளி கூத்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. தனக்குரிய ஆசனத்தில் அமர்ந்திருந்த பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரன், எழுந்து நின்று சிவகாமியை வணங்கினான்.

பதிலுக்கு வணக்கம் தெரிவிக்காமல் சிலையென நின்றாள் சிவகாமி. அவள் பார்வை பாண்டிய இளவரசனின் மீது படியவில்லை. பதிலாக கோச்சடையன் இரணதீரனுக்குப் பக்கத்தில், பாண்டிய இளவரசனின் தோழனாக நின்றிருந்த வாலிபனின் மீது படிந்தது. அந்த வாலிபன், கரிகாலன்தான்!
 

(தொடரும்)

செய்தி: கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.