Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரத்த மகுடம்-91


 

பிரமாண்டமான சரித்திரத் தொடர்

எல்லோருமே இருபது வயதுக்கு உட்பட்டவர்கள். ஆண்களின் எண்ணிக்கைக்கு சமமாக பெண்களும் அங்கிருந்தார்கள். இரு பாலினருக்குமே தேகங்கள் வலுவாக இருந்தன. நாள்தவறாமல் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்பதற்கு அத்தாட்சியாகத் திகழ்ந்தன.உண்மையிலேயே அக்கணத்தில் சிவகாமி வியப்படையத்தான் செய்தாள். 

27.jpg

போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் வீரர்கள் பயிற்சி எடுப்பது புதிதல்ல. ஆனால், தங்களுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு தேசத்தில், அதுவும் பகையா நட்பா என என்றுமே உறுதியாகாத ஒரு நாட்டில் சர்வசாதாரணமாக வீரர்கள் பயிற்சி எடுத்து வருவது என்பது அசாத்தியமல்லவா..?

அதைத்தான் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரை மாநகருக்குக் கீழே இருந்த நிலவறையில் பல்லவ வீரர்கள் அவள் கண் முன்னால் சாதித்துக் காட்டிக் கொண்டிருந்தார்கள். பக்கங்களில் கெட்டிப்பட்ட மண்ணும், கற்களுமாக சுவர்கள். பொதுவாக நிலவறை என்றால் நீளவாக்கில் பாதை செல்லும். சதுரமாகவோ அகலமாகவோ அறைகள் போல் ஒன்று பாதையின் முடிவிலோ, பாதையின் நடுவிலோ தென்படும்.
 

ஆனால், மைதானமாக விரிந்த நிலவறையை தன் வாழ்க்கையில் இப்போதுதான் சிவகாமி காண்கிறாள். காற்றுப் புக ஆங்காங்கே துளைகள் இருந்தன. சரியாக அவையும் மேல் கூரையில் செதுக்கப்பட்டிருந்தன. உட்புற வெளிச்சத்துக்கு பகலிலும் தீப்பந்தங்கள். 

 

எந்த வழியாக இந்த நிலவறை மைதானத்துக்கு எப்போது எப்படி வருவார்கள்... எப்படி வெளியேறுவார்கள் என்று தெரியவில்லை. நிச்சயம் பல்லவ வீரர்கள் சாமர்த்தியசாலிகள்தான். இல்லையெனில் பாண்டியர்களின் கண்ணில் இப்படி மண்ணைத் தூவிவிட்டு அவர்கள் மண்ணிலேயே பயிற்சி எடுக்க முடியாதே! எத்தனை காலங்களாக இது அரங்கேறி வருகிறதோ! 

தாவிக் குதித்தும் ஒருவருக்கொருவர் முட்டி மோதியும் பயிற்சி செய்து வந்தபோதும் ஒருவரும் எவ்வித ஒலியையும் எழுப்பவில்லை. சுவாசத்தின் அளவுகள் மட்டுமே மேற்கொள்ளும் பயிற்சிக்கு ஏற்ப உயர்ந்தும் தாழ்ந்தும் வேகமாகவும் சீராகவும் இருந்தன; அதுவும் நிசப்தமாக! எழுந்து தாழ்ந்த மார்பகங்கள் மட்டுமே ஒவ்வொரு வீரனின் சுவாசத்தையும் பிரதிபலித்தன!

பயிற்சி பெறுவது பல்லவ வீரர்கள்தான் என்பதில் சிவகாமிக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனெனில் அவள் ஐயப்படக் கூடாது என்பதற்காகவே ரிஷபக் கொடி பட்டொளி வீசிப் பறந்துகொண்டிருந்தது!திரைச்சீலை போல் சுவர் உயர்ந்ததையும், தான் அதனுள் நுழைந்ததையும், ஒரு கரம் தன்னை உள்ளே இழுத்ததையும் நினைத்துப் பார்த்தாள். அந்தக் கரம் கரிகாலனுடையதல்ல என்பதை ஸ்பரிசத்தில் இருந்தே உணர்ந்துகொண்டாள். 

எனில், யாராக இருக்கும் என திரும்பிப் பார்க்க முற்பட்டபோது தனது நாசியின் மேல் வெண்மை நிற பருத்தித் துணி ஒன்று அழுத்தப்பட்டது. 

அதன் பின் இப்போதுதான் கண்விழிக்கிறாள். எத்தனை நாழிகள், தான் மயக்கத்தில் இருந்தோம்..? தெரியவில்லை. எழுந்து அமர்ந்தவளின் பார்வையில் முதியவர் ஒருவர் தென்பட்டார்.

 

தலைக்குழலும் மீசையும் மட்டுமே நரைத்திருந்தன. இதை வைத்து மட்டுமே அவரை முதியவராக மதிப்பிட முடியும். ஏனெனில் முப்பது வயதுள்ள திடகாத்திரமான ஆண் போலவே காணப்பட்டார். புஜங்களும் கணுக்கால்களும் பாறைகளைப் போல் இறுகியிருந்தன. மார்பு, அகன்று விரிந்திருந்தது. ஆறடி உயரம். அதற்கேற்ற உடல்வாகு.

கண்களாலும் செய்கைகளாலும் மட்டுமே பயிற்சி பெறும் வீரர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டி 
திருத்திக் கொண்டிருந்தார். மற்றபடி அவரது உதடும் சரி... பயிற்சி பெற்றவர்களின் உதடுகளும் சரி... பிரியவே இல்லை!புருவங்கள் சுருங்க சிவகாமி எழுந்து நின்றாள். யாரோ தோளைத் தொட்டார்கள்.திரும்பினாள்.

இரவின் மூன்றாம் ஜாமத்தில் தன்னுடன் உப்பரிகையில் வாட் போரிட்ட இளமங்கை புன்னகையுடன் நின்றிருந்தாள்! செய்கையால் தன்னைப் பின்தொடரும்படி ஜாடை காட்டிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தாள்.உதட்டில் பூத்த புன்னகையுடன் சிவகாமி அவளைத் தொடர்ந்தாள்.
எந்த இடத்தில் மயக்கமாகி சிவகாமி படுத்திருந்தாளோ அந்த இடத்துக்கு எதிர்ப்பக்கமாக இருந்த மைதானத்தில்தான் வீரர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அப்பெண் சிவகாமியை அழைத்துச் சென்றது பின்பக்கமாக. அதாவது மைதானத்துக்கு எதிர்ப்புறமாக.ஒற்றையடிப் பாதை போல் நீண்ட நிலவறையின் பாதையில் எவ்வித உரையாடலும் இன்றி இருவரும் நடந்தார்கள்!‘‘வாருங்கள்... வாருங்கள்...’’ சாளுக்கிய இளவரசனான விநயாதித்தன் படபடத்தான்: ‘‘சொல்லி அனுப்பியிருந்தால் நான் வந்திருப்பேனே...’’ என்றபடி ராமபுண்ய வல்லபரின் பாதங்களைத் தொட்டு வணங்கினான்.

‘‘தீர்க்காயுஷ்மான் பவ...’’ சாளுக்கிய போர் அமைச்சர் அவனை ஆசீர்வதித்தார். அவர் கண்களில் அன்பும் பரிவும் வழிந்தது.கைக்குழந்தையாக விநயாதித்தனை தன் கரங்களில் ஏந்தியது முதல் அவனை ஸ்ரீராமபுண்ய வல்லபர் பார்த்துக் கொண்டிருக்கிறார். சாஸ்திரங்கள் முதல் போர்ப் பயிற்சி வரை சகலத்தையும் அவனுக்குக் கற்பித்தது அவர்தான். கற்பிக்கும் நேரத்தில் எவ்வளவு கண்டிப்புடன் இருப்பாரோ அவ்வளவு தோழமையுடன் மற்ற நேரங்களில் பழகுவார்.எனவே, தன் தந்தையைவிட அவரை அதிகமும் விநயாதித்தன் நேசித்தான். 
 

சாளுக்கிய சாம்ராஜ்ஜியத்தின் அதிபதியாக தன் தந்தை இருந்ததால் விவரம் தெரிந்த நாள் முதலே ‘அப்பா’ என ஒன்ற முடியாமல் ஒரு படி தள்ளியே நின்றான். மரியாதை இமயமலை அளவுக்கு இருந்தது. அதே அளவுக்கு அன்பு ராமபுண்ய வல்லபரிடம்தான் விநயாதித்தனுக்கு அமைந்தது.  

 

‘‘அவசரம்... அதனால்தான் நானே வந்தேன்...’’ நிதானமாகத்தான் ராமபுண்ய வல்லபர் சொன்னார். ஆனால், அதனுள் மறைந்திருந்த பரபரப்பை விநயாதித்தன் உணர்ந்து கொண்டான்:
‘‘சொல்லுங்கள் குருதேவா... நான் என்ன செய்ய வேண்டும்..?’’
‘‘சொல்கிறேன்... காலை உணவை அருந்திவிட்டு வா...’’‘‘நீங்கள் வருவதற்கு முன்தான் உண்டு முடித்தேன்... பாண்டிய நாட்டில் விருந்தோம்பல் பலமென்றுதான் தங்களுக்குத் தெரியுமே...’’‘‘நல்லது...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் தொண்டையைக் கனைத்துக் கொண்டார்: ‘‘கடிகை பாலகனை இறுதியாக எப்போது சந்தித்தீர்கள் இளவரசே..?’’‘‘குருதேவா... இந்த மதுரை விருந்தினர் மாளிகையில் நாம் இருவரும் மட்டும்தான் இருக்கிறோம்... மரியாதை வேண்டாம்... ஒருமையிலேயே தங்கள் சீடனை அழைக்கலாம்...’’

கண்களால் புன்னகைத்தார் சாளுக்கியர்களின் போர் அமைச்சர்: ‘‘சரி... கேட்டதற்கு என்ன பதில்..?’’
‘‘நேற்றிரவு குருதேவா..?’’
‘‘எப்போது..?’’‘‘முதல் ஜாமத்தில்...’’
‘‘அதன் பிறகு கடிகை பாலகன் எங்கு சென்றான்..?’’‘‘தெரியாது குருதேவா... ஏதேனும் பிரச்னையா... வேண்டுமானால் வேளிர்களின் தலைவனை இப்போது இங்கு வரச் சொல்லவா..?’’‘‘வேளிர்களின் தலைவன்...’’ தன் பற்களைக் கடித்தபடி ராமபுண்ய வல்லபர் முணுமுணுத்தார்: ‘‘வரச் சொல்...’’
அவரை புருவம் உயர பார்த்துவிட்டு அகன்ற விநயாதித்தன், அறைக்கு வெளியே நின்றிருந்த சாளுக்கிய வீரனிடம் கடிகை பாலகனை உடனடியாக அழைத்து வரும்படி கட்டளையிட்டுவிட்டு வந்தான்.

எதுவும் பேசாமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்த ராமபுண்ய 
வல்லபர், சட்டென திரும்பி விநயாதித்தனை உற்றுப் பார்த்தார்.
இமைக்காமல் அவரது பார்வையை சாளுக்கிய இளவரசன் எதிர்கொண்டான்.

‘‘மதுரைக்கு நீ வந்து ஒரு திங்கள் இருக்குமா..?’’
‘‘வரும் பவுர்ணமியுடன் ஒரு திங்களாகிறது குருதேவா...’’
‘‘எத்தனை முறை பாண்டிய மன்னரைச் சந்தித்தாய்..?’’
‘‘ஆறேழு முறை அந்தரங்கமாக... பத்து முறை அமைச்சர் பெருமக்கள் சூழ...’’
‘‘அதாவது இருநாளைக்கு ஒருமுறை அரிகேசரி மாறவர்மரைச் சந்தித்து உரையாடி இருக்கிறாய்... அப்படித்தானே..?’’
‘‘ஆம் குருதேவா...’’

‘‘என்ன சொன்னார்..? நடக்கவிருக்கும் போரில் நம் பக்கம் இருப்பதாக உறுதி அளித்தாரா..?’’‘‘பட்டும் படாமலும்தான் பேசிக்கொண்டிருக்கிறார்...’’
‘‘நினைத்தேன்...’’ ராமபுண்ய வல்லபர் சாளரத்தின் அருகில் சென்று தன் கண்முன்னால் தெரிந்த அரண்மனையைப் பார்த்தார்: ‘‘பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரன் உன்னுடன் எப்படிப் பழகுகிறான்..?’’

‘‘தோழனாகத்தான் குருதேவா... ஒன்றாக வேட்டைக்குச் செல்கிறோம்... நாள்தோறும் மதியம் அல்லது இரவு சேர்ந்தே உணவருந்துகிறோம்... ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறோம்...’’
‘‘ஆனால், அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை... சரிதானா..?’’
‘‘...’’
‘‘என்ன பதிலைக் காணும்..?’’ கேட்டபடியே ஸ்ரீராமபுண்ய வல்லபர் திரும்பினார்.

விநயாதித்தன் தலைகுனிந்து நின்றான்.அந்தக் கோலத்தில் சாளுக்கிய இளவரசனைப் பார்க்க அவருக்கு என்னவோ போல் இருந்தது.அருகில் வந்து அவன் தோள்களைத் தொட்டார். தாடையைப் பிடித்து அவன் முகத்தை உயர்த்தினார்: 

 

‘‘அரசியல் என்றால் அப்படித்தான் விநயாதித்தா... போகப் போக நீயே புரிந்து கொள்வாய்... விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற தமிழர்கள் தங்களைத் தேடி எதிரியே வந்தாலும் வரவேற்று உபசரிப்பார்கள்... ஆனால், வாக்கு கொடுக்க மாட்டார்கள்... தேனாகப் பேசுவார்கள்... ஆனால், உறுதிமொழி வழங்கமாட்டார்கள்... பக்குவமாக அவர்களது கழுத்தை நெரித்தால்தான் நம் வழிக்கு வருவார்கள்...’’

‘‘பாண்டியர்களின் கழுத்தை ‘அன்பாக’ நான் நெரிக்க என்ன செய்ய வேண்டும் குருதேவா..?’’
‘‘இன்றிரவு பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரனை விருந்துக்குக் கூப்பிடு!’’
புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக சட்டென விநயாதித்தனின் விழிகள் அகன்றன: ‘‘உத்தரவு குருதேவா...’’ சில கணங்கள் அமைதியாக இருந்துவிட்டு மெல்லக் கேட்டான்: ‘‘வேறு யாராவது விருந்துக்கு வருகிறார்களா..?’’
‘‘ஆம்...’’

‘‘யாரென்று அடியேன் அறியலாமா..?’’
ராமபுண்ய வல்லபர் வாய்விட்டுச் சிரித்தார்: ‘‘உனக்குத் தெரிந்த
வர்தான். சிவகாமி!’’
நிலவறையின் பாதை ஓரிடத்தில் முடிந்தது. 
முன்னால் சென்ற பெண் திரும்பி தன் இடுப்பில் இருந்து 
கருமை நிற துணி ஒன்றை எடுத்தாள்.

சிவகாமி புரிந்து கொண்டாள். முன்னால் வந்து நின்றாள்.
கையில் இருந்த துணியால் சிவகாமியின் கண்களை இறுகக் கட்டினாள் அந்தப் பெண்.
அதன் பிறகு சிவகாமியின் கைகளைப் பிடித்தபடி அந்தப் பெண் 
நடந்தாள். வலது, இடது... என மாறி மாறித் திரும்பினார்கள்.

ஒரு நாழிகை பயணத்துக்குப் பின் தென்றல் தன்னை தழுவுவதை சிவகாமி உணர்ந்தாள். நிலவறையை விட்டு வெளியே வந்திருக்கிறோம்!
அவளது கண்களைக் கட்டியிருந்த கட்டை அப்பெண் அவிழ்த்தாள்.
நந்தவனம் ஒன்றில் தாங்கள் இருப்பதை அறிந்த சிவகாமி, தன்னை அழைத்து வந்த பெண்ணைப் பார்த்தாள்.
முன்னே செல்லும்படி அப்பெண் சைகை செய்தாள்.

அங்கு கரிகாலன் புன்னகையுடன் நின்றுகொண்டிருந்தான்!
‘‘வா இரணதீரா...’’ தன் மைந்தனை அன்போடு அழைத்தார் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மர்.
வந்த பாண்டிய இளவரசன், தன் தந்தையின் கால்களைத் தொட்டு வணங்கினான்: ‘‘சொல்லுங்கள் தந்தையே...’’
‘‘இன்று விநயாதித்தனுடன் வேட்டைக்குச் செல்லவில்லையா..?’’
‘‘நாளைதான் செல்கிறோம் தந்தையே...’’
‘‘இன்று என்ன திட்டம்..?’’
‘‘மாலை தன் மாளிகைக்கு சாளுக்கிய இளவரசர் அழைத்திருக்கிறார்...’’
‘‘எதற்கு..?’’

‘‘ஏதோ விருந்து என்றார்...’’
‘‘நல்லது... இந்தா...’’ என்றபடி முத்திரையிடப்பட்ட ஓலைக்குழல் 
ஒன்றை கோச்சடையன் இரணதீரனிடம் கொடுத்தார். 
‘‘விருந்துக்கு சிவகாமியும் வருவாள். அவளிடம் இதைக் கொடுத்துவிடு!’’

‘‘ஏன் கடிகை பாலகனை வெளியிலேயே நிறுத்தி விட்டாய்... அவனை உள்ளே அனுப்பு...’’ தன்னை வணங்கிய சாளுக்கிய வீரனிடம் விநயாதித்தன் சொன்னான்.வீரன் தயங்கினான்.‘‘என்ன..?’’
‘‘அவர் தன் இருப்பிடத்தில் இல்லை...’’

‘‘எங்கு சென்றானாம்..?’’

 

‘‘அங்கிருக்கும் நம் வீரர்களுக்கு எதுவும் தெரியவில்லை...’’‘‘எப்போது சென்றானாம்..?’’
‘‘நேற்றிரவு தங்களைப் பார்க்க வந்ததுதானாம்... அதன் பிறகு திரும்பவில்லை என்கிறார்கள்...’’

‘‘சரி... நீ செல்...’’ அதுவரை அமைதியாக இருந்த ஸ்ரீராமபுண்ய வல்லபர் கட்டளையிட்டார்.இருவரையும் மீண்டும் வணங்கிவிட்டு வீரன் அகன்றான்.‘‘குருதேவா... என்ன இது..?’’‘‘அரசியல் சதுரங்க விளையாட்டு விநயாதித்தா!’’ ஆழ்ந்த சிந்தனையுடன் பதிலளித்தார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்: ‘‘என் கணிப்பு சரியென்றால் ‘வேளிர்களின் தலைவன்’ இப்போது சிறையில் இருக்கிறான்...’’‘‘பாண்டியர்களின் சிறையிலா குருதேவா..?’’

‘‘இல்லை... கரிகாலனின் தனிப்பட்ட சிறையில்!’’
தன்னை நோக்கி வந்த சிவகாமியை இழுத்து அணைத்தான் கரிகாலன்.
‘‘ச்சூ... என்ன இது...’’ சிவகாமி திமிறினாள்: ‘‘அந்தப் பெண் அங்கு நிற்கிறாள்...’’
‘‘எந்தப் பெண்..?’’ கேட்டபடி அவள் கழுத்தில் தன் இதழ்களைப் பதித்தான்.
‘‘என்னை அழைத்து வந்தவள்...’’
 

‘‘அவள் அப்பொழுதே அகன்றுவிட்டாள்...’’‘‘உங்களுக்கு வசதியாக!’’‘‘ஆம்...’’ என்றபடி ஆலிலை போல் அகன்றிருந்த அவள் வயிற்றை இறுக்கி, நாபிக் கமலத்தில் தன் ஆள்காட்டி விரலை நுழைத்தான்.‘‘ம்...’’ முணுமுணுத்த சிவகாமி அவன் மார்பில் அப்படியே சாய்ந்தாள்.

 

‘‘சிவகாமி...’’‘‘என்ன...’’கரிகாலன் குனிந்தான். அவன் சுவாசம் அனலாக சிவகாமியின் செவிகளை வருடியது: ‘‘அதங்கோட்டாசான் உயிருடன் இருப்பதை சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரிடம் தெரிவித்து விட்டாயா..?’’

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்

 

 

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16542&id1=6&issue=20200207

 

Link to comment
Share on other sites

  • Replies 171
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எப்படி எடுத்தீர்கள். நான் தேடிக் களைத்துப்போனன். நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எப்படி எடுத்தீர்கள். நான் தேடிக் களைத்துப்போனன். நன்றி

நம்ம தோஸ்த்து சுந்தர் பிச்சைக்கு நேரடி ஹொட்லைன் இருக்கே!😎 ஆன்ரி அழுவுறா.. உடனே கண்டுபிடின்னேன். ஒரு செக்கனுக்குள்ளார தூக்கிப்போட்டானே! சுந்தரா கொக்கா!!😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

நம்ம தோஸ்த்து சுந்தர் பிச்சைக்கு நேரடி ஹொட்லைன் இருக்கே!😎 ஆன்ரி அழுவுறா.. உடனே கண்டுபிடின்னேன். ஒரு செக்கனுக்குள்ளார தூக்கிப்போட்டானே! சுந்தரா கொக்கா!!😂🤣

பிச்சைக்கும் நன்றி. என்னைத் தெரிந்து வைத்துள்ளமைக்கு 😃

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ரத்த மகுடம்-93

பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘சிவகாமி...’’ அவளை லேசாக இடித்து நடப்புக்குக் கொண்டு வந்தார் ராமபுண்ய வல்லபர். ‘‘இவர்தான் பாண்டிய மண்டலத்தின் சக்கரவர்த்தியான அரிகேசரி மாறவர்மரின் அருந்தவப்புதல்வர் கோச்சடையன் இரணதீரன். தந்தையைப் போலவே மிகப்பெரிய வீரர். தீரர். சூரர். தன் காலத்தில் தமிழக வரலாற்றை இவர் திருத்தி எழுதுவார் என ஜோதிடர்கள் ஆருடம் கூறுகிறார்கள்...’’‘‘பெற்ற பொற்காசுகளுக்குத் தகுந்தபடி அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
27.jpg
பெரிதுபடுத்த வேண்டாம் அம்மணி...’’ சிவகாமியைப் பார்த்து நிதானமாகச் சொன்ன கோச்சடையன் இரணதீரன், சாளுக்கிய போர் அமைச்சர் பக்கம் திரும்பினான்: ‘‘இவர் யாரென்று அறிமுகப்படுத்தவில்லையே..?’’ ‘‘இவர்... இவள்... சிவகாமி...’’ என ராமபுண்ய வல்லபர் சொல்லும்போதே வெளியில் அரவம் கேட்டது.

திரும்பி வாசலைப் பார்த்தவருக்கு எதுவும் புரியவில்லை: ‘‘இளவரசே...’’‘‘சொல்லுங்கள்...’’ சாளுக்கிய இளவரசன் விநயாதித்தனும் பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரனும் ஒருசேர குரல் கொடுத்தார்கள்.பாண்டிய இளவரசன் அருகில் நின்றிருந்த கரிகாலன் வாய்விட்டுச் சிரித்தான்: ‘‘நியாயமாகப் பார்த்தால் நானும் உங்கள் இருவருடனும் சேர்ந்து ‘சொல்லுங்கள்’ என்று கேட்டிருக்க வேண்டும்! ஏனெனில் அடியேனும் சோழ மண்டலத்தின் இளவரசன்தான்!’’

அவனை எரித்து விடுவதுபோல் பார்த்தார் ராமபுண்ய வல்லபர்: ‘‘இரண்டு தெரு... மிஞ்சிப்போனால் ஒரு சிற்றூர்... அது மண்டலமாகுமா..?’’
‘‘ஜீவநதிகளின் பிறப்பிடங்கள் அனைத்தும் சிறிய ஊற்றுதானே..?’’ கேட்ட கரிகாலனின் புருவங்கள் உயர்ந்தன.‘‘உன்னிடம் பேசுவதற்காக நான் இங்கு வரவில்லை...’’‘‘உங்களிடம் பதில் சொல்வதற்காக நானும் இங்கு வரவில்லை...’’‘‘கரிகாலா... என்ன இது..? வயதில் பெரியவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும் என நீதானே என்னிடம் சொன்னாய்... அப்படியிருக்க நீயே அதிலிருந்து பிறழலாமா... அமைதியாக இரு...’’ நண்பனை சாந்தப்படுத்திவிட்டு ராமபுண்ய வல்லபரை ஏறிட்டான் கோச்சடையன் இரணதீரன்: ‘‘என் நண்பன் பேசியதற்கு தங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்...’’

‘‘என்ன இது... பெரிய பெரிய வார்த்தைகளைச் சொல்கிறீர்கள்...’’ என்றபடி பாண்டிய இளவரசனின் கரங்களைப் பற்றினார் சாளுக்கிய போர் அமைச்சர்: ‘‘தவறு என்னுடையதுதான்... சாளுக்கிய இளவரசரை அழைத்தேன்...’’‘‘பெயர் சொல்லியே அழைத்திருக்கலாமே? உங்கள் சீடன்தானே விநயாதித்தன்..?’’ கரிகாலன் இடைமறித்தான்: ‘‘என்ன விநயாதித்தா... உன்னைப் பெயர் சொல்லி அழைக்கக் கூடாது என இந்த முதியவருக்கு ஏதேனும் கட்டளையிட்டிருக்கிறாயா..?’’

‘‘அவர் என் குரு... நான் எப்படி அவருக்கு கட்டளை பிறப்பிப்பேன்...’’ பதறிய விநயாதித்தன், ‘‘நீங்கள் பேசிக் கொண்டிருங்கள்...’’ என பொதுவாகச் சொல்லிவிட்டு, ராமபுண்ய வல்லபரின் கரங்களைப் பற்றினான்: ‘‘என்ன விஷயம் குருதேவா... வாருங்கள்... அங்கு என்ன அரவம் என்று பார்ப்போம்...’’

இருவரும் நடந்தார்கள். சாளுக்கிய போர் அமைச்சர் தன் பற்களைக் கடித்தார்: ‘‘சின்னப் பயல்... என்ன பேச்சு பேசுகிறான்... அவனை...’’
‘‘ஷ்... குருதேவா... அமைதி... கரிகாலன் இப்போது பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு... உடன் பாண்டிய இளவரசன் இருப்பதை மறந்துவிட்டீர்களா..? அவனை அழைத்து வந்ததும் கோச்சடையன் இரணதீரன்தான்... இப்போது... இந்த இடத்தில்... நாம் அமைதி காப்பதே புத்திசாலித்தனம்... இது தங்களுக்கே தெரியும்...’’

‘‘ம்... தெரியும்...’’ சீறினார் ராமபுண்ய வல்லபர். ‘‘ஆடட்டும்... கரிகாலனால் எந்த அளவுக்குச் செல்ல முடியும்..? பாண்டிய இளவரசன் அருகில் இருக்கும்வரைதானே..? அதன் பிறகு அவனைக் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்கிறேன்... சரி... விநயாதித்தா... நீ செல்...’’
‘‘சற்று நேரம் கழித்து செல்கிறேன் குருதேவா... இப்பொழுதே சென்றால் கேள்விகள் எழும்...’’‘‘எழட்டுமே..? சிவகாமி அங்கு தனியாக இருக்கிறாள் விநயாதித்தா...’’‘‘அதனால்தான் நிம்மதியாக தங்களுடன் வருகிறேன் குருதேவா... எல்லா சூழல்களையும் சந்திக்கும் திடம் சிவகாமிக்கு உண்டு என்பதுதான் தங்களுக்கே தெரியுமே...’’

‘‘தெரியும்தான்... ஆனால், கரிகாலன் அங்கிருக்கிறானே... அவளால் அவனை சமாளிக்க முடியுமா..?’’ முணுமுணுத்தார் ராமபுண்ய வல்லபர்.
சாளுக்கிய போர் அமைச்சர் சந்தேகப்பட்டதுபோலவேதான் அங்கு சூழல் நிலவியது. தன்னை தற்காத்துக்கொள்ள சிவகாமி போராடிக் கொண்டிருந்தாள். அவள் எந்தப் பக்கம் சென்றாலும் அந்தப் பக்கத்தில் அம்பு எய்ய கரிகாலன் தயாராக இருந்தான்.
அதன் ஒரு பகுதியாகவே முதல் அம்பை எய்தான்.

‘‘பாண்டிய இளவரசே... அம்மணி யாரென்று கேட்டீர்கள் அல்லவா..?’’
‘‘ஆமாம்... சிவகாமி என சாளுக்கிய போர் அமைச்சர் கூறினாரே..!’’ இரணதீரன் புன்னகைத்தான்.
‘‘பெயரைத்தானே அவர் சொன்னார்...’’‘‘அதைத்தாண்டியும் இருக்கிறதா..?’’‘‘விந்திய மலை உயரத்துக்கு இருக்கிறது பாண்டிய இளவரசே!’’ சிவகாமியைப் பார்த்தபடி கரிகாலன் சொன்னான்.

‘‘அதில் ஒரு பகுதியைச் சொல் கரிகாலா...’’ சுவாரஸ்யத்துக்குத் தயாரானான் கோச்சடையன் இரணதீரன்.
‘‘ஒரு பகுதியை விட உச்சி முனையை சொல்கிறேன் பாண்டிய இளவரசே... இந்த அம்மணி சிவகாமிதான் சாளுக்கியர்களின் ஒற்றர் படைத் தலைவி!’’
‘‘அப்பாடா... எங்கே உண்மையைச் சொல்லி, பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கோமகனான உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்வீர்களோ என்று நினைத்தேன்...’’ சிவகாமி நகைத்தாள்.

‘‘அப்படியானால் கரிகாலன் பொய் சொல்கிறானா அம்மணி..?’’
‘‘பெயர் சொல்லியே என்னை தாங்கள் அழைக்கலாம் பாண்டிய
இளவரசே... வயதில் என்னை விட தாங்கள் பெரியவர்...’’

‘‘அதாவது நீங்கள் கிழவராம்... இந்த அம்மணி குமரியாம்!’’ கரிகாலன் உதட்டைப் பிதுக்கினான்.
‘‘பேசாமல் இரு கரிகாலா... அம்மணி... சரி... சிவகாமி... நீ சாளுக்கியர்
களின் ஒற்றர் படைத் தலைவி இல்லையென்றால்... யார் நீ..?’’ இரணதீரன் புருவத்தை உயர்த்தினான்.
‘‘பல்லவ இளவரசி!’’‘‘என்ன..?’’ பாண்டிய இளவரசன் அதிர்ந்தான்.

‘‘ஆமாம்... இரணதீரா...’’ நட்பின் அடிப்படையில் ஒருமையில் விளித்தான் கரிகாலன்: ‘‘இன்னும் சற்று நேரம் இவளிடம் சிரித்துப் பேசிவிட்டு நீ நகர்ந்ததும் ‘நான் பாண்டிய இளவரசி’ என யாரிடமாவது தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வாள். காரியத்தைச் சாதித்துக் கொள்வாள்.

அதற்காகத்தான் ‘வயதில் நான் இளையவள்... தங்கள் சகோதரி போன்றவள்...’ என்றெல்லாம் இவள் தூண்டிலை வீசுகிறாள்...’’
‘‘தங்கள் நண்பர் வழக்கம்போல் பொய் சொல்லி விளையாடுகிறார்...’’ கரிகாலன் பக்கம் திரும்பாமல் இரணதீரனைப் பார்த்தபடி சொன்னாள்.
‘‘விளையாடுவது நானா..? நல்லது... இரணதீரா... இந்த அம்மணிதான் பல்லவ இளவரசி என்றால் எதற்காக மாறுவேடத்தில் மதுரை மாநகருக்குள் நுழைய வேண்டும்..?’’ கண்களால் சிரித்தபடி கரிகாலன் கேட்டான்.

‘‘என்ன செய்ய... உடன் வந்தவர் மாறுவேடத்தில் நுழையும்படிதானே நிர்ப்பந்தப்படுத்தினார்...’’ சிவகாமி பளிச்சென்று பதில் அளித்தாள்.
‘‘அட... பரவாயில்லையே... நிர்ப்பந்தம் செய்தால் அடிபணிவாயா..?’’
‘‘அது நிர்ப்பந்தம் செய்பவரைப் பொறுத்தது! உதாரணமாக...’’
‘‘உதாரணமாக..?’’

‘‘நிர்ப்பந்தம் செய்யாமல் நீங்கள் சாதாரணமாக எது சொன்னாலும் அதை தலையால் நிறைவேற்றுவேன்! அந்த உரிமையை தங்களுக்கு மட்டுமே வழங்கியிருக்கிறேன்!’’‘‘பலே... இது அடுத்த கட்ட பொய்யா..?’’
‘‘இறுதிக்கட்ட உண்மை... அதற்கு இரண்டு அத்தாட்சிகள் இருக்கின்றன...’’
‘‘என்னவோ..?’’

‘‘முதலாவது, நீங்களும் நானும் இணைந்துதான் மதுரைக்கு வந்தோம். அதுவும் மாறுவேடத்தில்... நீங்கள் கேட்டுக் கொண்டதால் என் தோற்றத்தை நானும் மாற்றிக்கொண்டேன்...’’‘‘வேறு யாரிடமும் இப்படிச் சொல்ல வேண்டாம் அம்மணி... நவ துவாரங்களாலும் சிரிப்பார்கள்...’’ தன் குழலை ஒதுக்கியபடி சொன்னான் கரிகாலன்: ‘‘ஏனெனில் இரணதீரன் என் அத்தை மகன்..! அத்தை வீட்டுக்குள் எந்த தோற்றத்திலும் நான் நுழைவேன்... ஆனால், நீ...’’

‘‘உங்களை மணக்கவிருப்பவள்! தலைவன் எவ்வழியோ அவ்வழியே தலைவி!’’
மார்புக்கு நேராக தன் கைகளைக் கட்டியபடி கரிகாலனும் சிவகாமியும் உரையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த கோச்சடையன் இரணதீரன் மெல்ல புன்னகைத்தான்: ‘‘மணம் வரை சென்றுவிட்டாயா கரிகாலா... என்னிடம் கூட மறைத்துவிட்டாயே...’’

‘‘எல்லோரிடமும் எல்லாவற்றையும் மறைப்பதுதானே உங்கள் மாமன் மகனின் இயல்பு..? அதனால்தான் அண்ணா இவரை பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கோமகன் என்கிறேன்!’’ தன் பங்குக்கு சிவகாமியும் நகைத்தாள்.‘‘சரி சிவகாமி... இரண்டாவது: அத்தாட்சி என எதனைக் குறிப்பிடுகிறாய்..?’’ இரணதீரன் கேட்டான்.

கரிகாலன் இடைமறித்தான். ‘‘தங்கள் தந்தையார் இவளிடம் கொடுக்கச் சொல்லி ஓர் ஓலையை உங்களிடம் கொடுத்திருக்கிறார் அல்லவா..?’’
‘‘...’’‘‘அதை அப்படியே வாங்கி என்னிடம் தந்துவிடும்படி சில நாழிகைகளுக்கு முன் இவளிடம் சொன்னேன். அதைக் குறிப்பிடுகிறாளோ என்னவோ..! ’’
இரணதீரனும் சிவகாமியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அப்போது எங்கிருந்தோ ஐந்து புறாக்கள் பறந்து வந்து இவர்கள் மூவருக்கும் மேல் வட்டமிட்டன!
 

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்

 

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16603&id1=6&issue=20200221

ரத்த மகுடம்-94

பிரமாண்டமான சரித்திரத் தொடர்

பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரனின் முகம் மாறியது. சலனமற்று தன் பார்வையை மேலே உயர்த்தி, பறந்த ஐந்து புறாக்களையும் பார்த்தான்.‘‘பாண்டிய இளவரசே...’’ அழைத்த கரிகாலனின் குரலில் இப்போது மரியாதை வெளிப்பட்டது. நண்பன் என்ற நெருக்கத்தையும், அத்தை மகன் என்ற உரிமையையும் விட்டுவிட்டு இரணதீரனின் அந்தஸ்துக்குரிய சொல்லை உதிர்த்தான்.
29.jpg

இதைக் கவனித்த சிவகாமியின் நயனங்கள் விரிந்தன. எந்தத் திசையை நோக்கி கரிகாலன் நகர்கிறான் என்பதை உணர்ந்துகொண்டதுபோல் அவள் அதரங்கள் துடித்தன. எதையோ சொல்ல முற்பட்டவள் தொடர்ந்து கரிகாலன் பேசத் தொடங்கியதை அடுத்து மவுனமானாள்.
 
‘‘பார்த்தீர்களா பாண்டிய இளவரசே...’’ வானில் பறந்த ஐந்து புறாக்களையும் கரிகாலன் சுட்டிக் காட்டினான். ‘‘இது பாண்டிய தேசத்தின் தலைநகரமான மதுரை. அதுவும் தமிழ் வளர்த்த மாநகரின் விருந்தினர் வீதியில் அமைந்திருக்கும் மாளிகை ஒன்றின் நந்த வனத்தில் போடப்பட்ட பந்தலுக்குள் நாம் நிற்கிறோம்...’’
 

திரும்பி கரிகாலனைப் பார்த்தான் இரணதீரன்: ‘‘இதை ஏன் என்னிடம் இப்போது குறிப்பிடுகிறாய் கரிகாலா..? இவை எதுவும் எனக்குத் தெரியாது என்று நினைத்து விட்டாயா..? இந்த மண்ணின் இளவரசன் நான்...’’

‘‘அதனால்தான் தங்களுக்கு நினைவுபடுத்துகிறேன் இளவரசே...’’ ‘தங்களுக்கு’ என்ற சொல்லுக்கு கரிகாலன் அழுத்தம் கொடுத்தான்.
‘‘புரியவில்லை... நேரடியாகவே சொல்... என்ன விஷயம்..?’’‘‘இளவரசே... பல தேசத்தில் இருந்தும் முக்கியப் பிரமுகர்கள் மதுரைக்கு வருகை தருகிறார்கள். பாண்டிய மாமன்னரையும் இளவரசரான தங்களையும் காண பல காத தொலைவில் இருந்து வருகிறார்கள்... அப்படி வருபவர்கள் தங்கி இளைப்பாறுவதற்காக அமைக்கப்பட்ட வீதி அல்லவா இது..?’’  ‘‘ஆமாம்...’’

‘‘மன்னரும் நீங்களும் அமைச்சர் பிரதானிகளும் குடியிருக்கும் முக்கிய வீதியை ஒட்டி இந்த விருந்தினர் வீதி அமைக்கப்பட்டிருக்கிறதல்லவா..?’’
‘‘ம்...’’‘‘இங்கிருந்து வணிகர் வீதிக்குச் செல்ல வேண்டுமென்றால் நான்கு வீதிகளைக் கடக்க வேண்டும் அல்லவா..?’’
‘‘ம்...’’‘‘அப்படியிருக்க இந்த விருந்தினர் வீதிக்கு... குறிப்பாக சாளுக்கிய இளவரசர் விநயாதித்தரை நீங்கள் தங்க வைத்திருக்கும் மாளிகைக்கு... அதுவும் இந்த அந்தி சாயும் நேரத்தில் புறாக்கள் எங்கிருந்து வந்தன..? எதற்காக வந்திருக்கின்றன..? யார் அனுப்பியிருக்கிறார்கள்..?’’

கரிகாலன் சொல்லி முடித்ததும் சிவகாமியின் வதனத்தில் அச்சத்தின் சாயைகள் படர ஆரம்பித்தன.பாண்டிய இளவரசனின் கண்களில் அனல் தெறித்தது: ‘‘என்ன சொல்ல வருகிறாய் கரிகாலா..?’’‘‘எதையும் சொல்ல வரவில்லை இளவரசே... எனது ஐயங்களை எழுப்புகிறேன்... பொதுவாக தூது செல்வதற்காக அரசாங்கப் பணியில் இருப்பவர்கள் புறாக்களைப் பயன்படுத்துவார்கள் அல்லது தங்கள் வியாபார விஷயங்களுக்காக வணிகர்கள் புறாக்களை உபயோகப்படுத்துவார்கள்... இது தவிர வேறு எந்த தேசமும் செய்யாத ஒரு காரியத்தை இந்த பாரத தேசத்திலேயே ஒரேயொரு அரசு மட்டும் செய்கிறது... அதற்காக புறாக்களைப் பயன்படுத்துகிறது...’’ கரிகாலன் நிறுத்தினான்.

‘‘சாளுக்கிய தேசத்தைக் குறிப்பிடுகிறாயா..?’’
‘‘தாங்கள் அப்படிக் கருதினால் அது தவறு என்று நான் சொல்ல மாட்டேன் இளவரசே...’’ கோச்சடையனை நோக்கிச் சொன்ன கரிகாலன், ஓரப் பார்வையால் சிவகாமியைப் பார்த்து நகைத்தான்: ‘‘மாமன்னர் இரண்டாம் புலிகேசியின் போர்த் தந்திரங்களில் ‘ஐந்து புறாக்கள்’ என்பது பிரபலமானது என்பதை தாங்கள் அறிவீர்கள்...’’
‘‘...’’

‘‘இந்த மாளிகையில் நீங்கள் தங்க வைத்திருப்பவர் சாளுக்கிய தேசத்தின் இளவரசர்... அவர் இந்த தேசத்தின் இளவரசரான உங்களுக்கு இரவு விருந்து அளிக்கிறார்... நீங்களும் அதற்கு இசைந்து வருகை புரிந்திருக்கிறீர்கள்...’’
‘‘...’’‘‘இந்தச் சூழலில்... அதுவும் புறாக்கள் வருவதற்கு அவசியமே இல்லாத இந்த இடத்துக்கு... அதுவும் இந்த நேரத்தில்... அதுவும் சரியாக ஐந்து புறாக்கள் மட்டும் ஏன் பறக்க வேண்டும்..?’’

அதுவும்... அதுவும்... என கரிகாலன் தொடர்ந்து வினாக்களை எழுப்பிக் கொண்டே வந்தபோது -
மேலே பறந்த ஐந்து புறாக்களில் ஒன்று சரியாக இறங்கி சிவகாமியின் தோளில் அமர்ந்தது! அவளது கேசத்தைக் கொத்தியது!
‘பார்த்தீர்களா..?’ என இரணதீரனுக்கு ஜாடை காட்டிவிட்டு சிவகாமியை நெருங்கிய கரிகாலன், அவள் தோளில் அமர்ந்த புறாவை
லாவகமாகப் பிடித்தான்.

யாரையும் பார்க்காமல் கருமமே கண்ணாக அதன் இறக்கைகளை விரித்து ஆராய்ந்தான்.ஓரிடத்தில் விரல் இடறியது.புறாவைத் தூக்கிப் பிடித்து இடறிய இடத்தைப் பார்த்தான். அவன் உதடுகளில் புன்னகை பூத்தது. ஆள்காட்டி விரல் நகத்தால் மெல்ல மெல்ல பட்டுச் சுருள் ஒன்றை எடுத்தான்.
அடுத்த கணம் புறா பறந்து சென்றது. வட்டமிட்டுக் கொண்டிருந்த மற்ற நான்கு புறாக்களும் அதைப் பின்பற்றி வானில் சென்றன.
வளர்ந்த நகத்தின் அளவிருந்த அந்தப் பட்டுச் சுருளை கரிகாலன் விரித்தான்.

‘எல்லாம் தயார்... வலையை விரித்து மீனைப் பிடிக்கவும்...’அரக்கினால் எழுதப்பட்ட அந்த வாசகங்களை கோச்சடையன் இரணதீரனிடம் காட்டினான் கரிகாலன்: ‘‘இதில் மீன் எனக் குறிப்பிடப்பட்டிருப்பது பாண்டிய இளவரசரான தங்களை என நினைக்கிறேன்... ஒருவேளை நான் எண்ணுவது பிழை என்றால் மன்னிக்கவும்...’’எதுவும் பேசாமல் தன் முன் நீட்டப்பட்ட வெண் பட்டுத் துணியைப் பார்த்துவிட்டு நிமிர்ந்தான் இரணதீரன்.
பாண்டிய இளவரசனின் கண்கள் சிவகாமியை ஊடுருவின: ‘‘இதற்கு என்ன அர்த்தம்..?’’

சிவகாமி பதில் சொல்வதற்குள் சாளுக்கிய இளவரசன் விநயாதித்தனும் சாளுக்கிய போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபரும் அங்கு வந்து சேர்ந்தார்கள். ‘‘சித்திரான்னம் சமைத்துக் கொண்டிருந்த வீரன் மேல் தவறுதலாக வெந்நீர் கொட்டிவிட்டது... அதுதான் அந்த அலறல்... மன்னிக்கவும்...’’ இரணதீரனைப் பார்த்துச் சொன்னார் ராமபுண்ய வல்லபர்.‘‘அதற்கு மன்னிப்பு கேட்டீர்கள். சரி... இதற்கு எப்போது மன்னிப்பு கேட்கப் போகிறீர்கள்..?’’ என்றபடி அந்த பட்டுத் துணியை சாளுக்கிய போர் அமைச்சர் முன்பு காண்பித்தான் கரிகாலன்.

‘‘எ...ன்...ன... இ...து...’’ வாக்கியத்தை வாசித்தபடியே அதிர்ச்சியுடன் கேட்டார் ராமபுண்ய வல்லபர்.‘‘அதைத்தான் பாண்டிய இளவரசர் கேட்கிறார்... என்ன இது..?’’ இம்முறை கரிகாலன் அழுத்திக் கேட்டான்.நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த விநயாதித்தனுக்கு எங்கோ தவறு நடந்திருப்பது புரிந்தது.சாளுக்கிய போர் அமைச்சரை உற்றுப் பார்த்தான் இரணதீரன்: ‘‘இவள் பெயர் சிவகாமி என்றீர்கள்... ஆனால், உங்களுக்கு இவர் யார் என்று சொல்லவில்லையே..?’’

‘‘நிச்சயம் சாளுக்கியர்களுக்கு மிக மிக வேண்டப்பட்டவராக இருக்கவேண்டும்! இல்லையென்றால் சாளுக்கிய இளவரசர் தங்களுக்கு அளிக்கும் விருந்துக்கு இந்த அம்மணியையும் அழைத்திருப்பார்களா..?’’ நகைக்காமல் நகைத்தான் கரிகாலன்.பட்டுத் துணியில் இருந்த வாக்கியத்தையும், தலைகுனிந்தபடி நின்றிருந்த சிவகாமியையும், திருதிருவென விழித்துக் கொண்டிருந்த ராமபுண்ய வல்லபரையும், இறுகிய முகத்துடன் காணப்பட்ட பாண்டிய இளவரசனையும், விஷமத்துடன் பேசிக்கொண்டிருந்த கரிகாலனையும் மாறி மாறிப் பார்த்த விநயாதித்தன் சட்டென முன்னே வந்தான்:

‘‘பாண்டிய இளவரசே... இந்த பட்டுத் துணியில் எதற்காக இப்படி எழுதப்பட்டிருக்கிறது... இந்தப் பெண்ணுக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு... இதையெல்லாம் நீங்கள் அறியவும் விசாரிக்கவும் முற்படுகிறீர்கள்... அனைத்துக்கும் நாங்கள் ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம்... சாளுக்கியர்கள் மீது எந்தக் களங்கமும் இல்லை என்பதை நிரூபித்துவிட்டே இந்த மண்ணை விட்டு அகலுவோம்...’’

‘‘அப்படியானால் அதுவரை சந்தேகத்துக்கு இடமான இந்த அம்மணி மதுரை சிறையில் அடைக்கப்படுவதுதான் சரி என்கிறீர்கள்... நல்லது... இரணதீரா...’’ இம்முறை நண்பன் என்ற உரிமையில் ஒருமையில் அழைத்தான் கரிகாலன்: ‘‘சாளுக்கிய இளவரசரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதில் உனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லையே..?’’

பதிலை எதிர்பார்க்காமல் பாண்டிய வீரர்களை அழைத்த கரிகாலன், சிவகாமியை மதுரையின் பாதாளச் சிறையில் அடைக்கும்படி கட்டளையிட்டான்.
முக அசைவில் அதை ஆமோதித்தான் கோச்சடையன் இரணதீரன்.அடுத்த கால் நாழிகைக்குப் பின் மதுரை பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டாள் சிவகாமி.

சிறையின் தரையில் கம்பீரமாக அமர்ந்தவள் சோம்பல் முறித்தாள். வாய்விட்டுச் சிரித்தாள். தன் தலைக்கேசத்தைக் கலைத்தாள். அதனுள்ளிருந்து ஒரு பட்டுச் சுருளை எடுத்தாள்.அவள் தோளில் புறா அமர்ந்தபோது தன் அலகுக்குள் மறைத்து வைத்திருந்த நக அளவு பட்டுச் சுருளை அவளது கேசத்தில் சாதுர்யமாக பதுக்கியிருந்தது!
 

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்

 

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16634&id1=6&issue=20200228

Link to comment
Share on other sites

ரத்த மகுடம்-95

‘‘இதற்குத்தான் குருநாதரின் பேச்சை தட்டக் கூடாது என்பது... இப்போது பார்... என்னவெல்லாம் நடந்திருக்கிறது...’’
சொன்ன ஸ்ரீராமபுண்ய வல்லபர் சாளரத்துக்கு வெளியே தன் பார்வையைச் செலுத்தினார். சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தான். இந்த உதயம் சாளுக்கியர்களுக்கு இல்லை என்பது மட்டும் அவருக்குத் தெளிவாகவே புரிந்தது.
19.jpg
மவுனமாக நின்றான் சாளுக்கிய இளவரசனான விநயாதித்தன். நேற்று இரவு நடைபெற்ற சம்பவங்களுக்குப் பிறகு இதே வாசகங்களைத்தான் ஸ்ரீராமபுண்ய வல்லபர் சொல்லிக் கொண்டிருக்கிறார். கோபமாக, ஆற்றாமையாக, சலிப்பாக, கையறு நிலையாக... என உணர்ச்சிகள்தான் மாறியதே தவிர சொற்களும் வாக்கியங்களும் மாறவே இல்லை.

விநயாதித்தனுக்கும் இதற்கு என்ன பதில் சொல்வதென்று கடந்த மூன்று நாழிகைகளாகவே தெரியவில்லை. பாண்டிய இளவரசனான கோச்சடையன் இரணதீரனுக்கு, தான் அளித்த இரவு விருந்து இப்படியொரு இக்கட்டில் தங்களைச் சிக்கவைக்கும் என்று அவன் துளியும் எதிர்பார்க்கவில்லை.
‘‘நீ மட்டும் என்னைப் பின்தொடர்ந்து வராமல் சிவகாமியின் அருகிலேயே நின்றிருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது...’’ மெல்ல உச்சரித்த ராமபுண்ய வல்லபரின் குரலில் இம்முறை ஆழ்ந்த சிந்தனை வழிந்தது.

‘‘அவள் சமாளித்துக் கொள்வாள் என்று நினைத்தேன்...’’ விநயாதித்தன் மவுனத்தைக் கலைத்தான்.
‘‘நினைப்புதான் பிழைப்பைக் கெடுக்கும் என்கிறார்கள் தமிழர்கள்...’’‘‘சாளுக்கியர்கள் அப்படிச் சொல்வதில்லையே!’’
‘‘ஆனால், வாதாபியில் இப்பொழுது நாம் இல்லையே!’’ வாள் வீச்சைப் போல் தன் சொற்களை வீசிய சாளுக்கிய போர் அமைச்சர் திரும்பி விநயாதித்தனைப் பார்த்தார்.அவர் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலைகுனிந்தான் சாளுக்கிய இளவரசன்.

மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை ஆளப் போகிறவன் இப்படி தன் முன்னால் தலைகுனிந்து நிற்பதைப் பார்க்க ராமபுண்ய வல்லபருக்கு சங்கடமாக இருந்தது. என்னதான் இருந்தாலும் இவன் சாளுக்கிய இளவரசன்... இந்த எண்ணம் தோன்றியதுமே தன் கோபத்தைக் கைவிட்டார்: ‘‘நானும் ஒருவகையில் குற்றவாளிதான் விநயாதித்தா... ‘திரும்பிச் சென்று சிவகாமியுடன் நில்...’ என உன்னிடம் அழுத்தமாகச்
சொல்லியிருக்க வேண்டும்...’’

தன்னை ஆற்றுப்படுத்த தன் குருநாதர் முற்படுகிறார் என்பதை உணர்ந்து கொண்டதுமே விநயாதித்தன் தன் தலையை உயர்த்தினான். மனதுள் தத்தளித்துக் கொண்டிருந்த வினாவைக் கேட்க இதுதான் சரியான சந்தர்ப்பம்: ‘‘குருநாதா...’’
‘‘என்ன விநயாதித்தா..?’’‘‘நாம் இருவருமே தவறு செய்யவில்லை...’’
‘‘அப்படியா..?’’‘‘ஆம்... இதில் சிவகாமியின் பங்கும் எதுவுமில்லை...’’
‘‘அப்படியானால் எங்கு பிழை நிகழ்ந்தது விநயாதித்தா..?’’

‘‘ஐந்து புறாக்களில்!’’ அழுத்தமாகச் சொன்னான் விநயாதித்தன்: ‘‘அந்த நள்ளிரவில், அதுவும் விருந்து நடந்த மாளிகையில் அதைப் பறக்க விட்டது யார்..? அல்லது அந்த நேரத்தில் அந்த ஐந்து புறாக்களும் அங்கு வரும்படி அவற்றின் செவியில் ஓதி அனுப்பியது யார்..?’’
‘‘அதில் ஒரு புறாவின் இறக்கைக்குள் செய்தியைத் திணித்து அனுப்பியது யார் என்றும் கேட்டுவிடு விநயாதித்தா...’’
‘‘குருநாதா...’’ மேற்கொண்டு எதுவும் பேசாமல் விநயாதித்தன் மவுனம் காத்தான்.

‘‘கேட்டு விடு விநயாதித்தா... இந்த நேரத்தில் எதையும் கேட்காமல் அமைதியாக நிற்பது சாளுக்கியர்களுக்குத்தான் ஆபத்தாக முடியும்... என் மீது எந்தளவுக்கு நீ மரியாதை வைத்திருக்கிறாய் என்று எனக்குத் தெரியும்... அதை இப்பொழுது நிரூபிக்க வேண்டும் என்ற அவசியமில்லை... நாட்டின் நலன்தான் நமக்கு முக்கியம்... என்னவெல்லாம் கேட்க நினைக்கிறாயோ அதையெல்லாம் கேட்டுவிடு...’’
‘‘கேட்டுவிட்டேன் குருநாதா... தாங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்...’’

‘‘எது..? அந்த ஐந்து புறாக்களா..?’’ ராமபுண்ய வல்லபர் தன் புருவத்தை உயர்த்தினார்: ‘‘அதில் மர்மம் இருப்பதாக நினைக்கிறாயா..?’’
‘‘இல்லையா..?’’‘‘இல்லவே இல்லை! சாளுக்கிய தேசத்தைக் கைப்பற்ற உன் பெரிய தந்தை அனந்தவர்மர் துடித்துக் கொண்டிருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்... இதற்காக உன் தந்தையும் நம் சாளுக்கிய தேசத்தின் முடிசூடா மன்னராக இப்போது திகழ்பவருமான விக்கிரமாதித்த மாமன்னரை எதிர்த்து அவர் போர் தொடுத்ததையும் நாம் எல்லோரும் அறிவோம். இதற்காக நமது பரம எதிரிகளான பல்லவர்களின் உதவியை அவர் நாடினார்...’’
‘‘...’’
‘‘நடைபெற்ற சகோதர யுத்தத்தில் நம் மாமன்னர் விக்கிரமாதித்தர் வெற்றி பெற்று சாளுக்கிய தேசத்தின் அரியணையில் அமர்ந்தார்... போனால் போகட்டும் என தன் சகோதரரையும் மன்னித்தார்... ‘வேண்டாம்... இப்படிச் செய்யாதீர்கள்...’ என்று தடுத்தேன்... மன்னர் கேட்கவில்லை. தண்டிக்கப்படாத அனந்தவர்மர் சுதந்திரமாக நடமாடினார்... என்றாலும் மன்னராக வேண்டுமென்று அவர் மனதுக்குள் இருந்த பேராசை மறையவில்லை... இப்போது சமயம் பார்த்து பல்லவர்களுக்கு தன் விசுவாசத்தைக் காண்பித்து நம் இருவரையும் சிக்கலில் சிக்க வைத்திருக்கிறார்...’’
‘‘நான் அப்படி நினைக்கவில்லை குருதேவா...’’ நிதானமாக சொன்னான் விநயாதித்தன்: ‘‘நேற்றிரவு ஐந்து புறாக்களைப் பறக்கவிட்டது என் பெரிய தந்தை அல்ல... கரிகாலன் என்று நினைக்கிறேன்!’’

ராமபுண்ய வல்லபரின் கண்களில் பெருமை சுடர் விட்டது. விநயாதித்தனையே இமைக்காமல் பார்த்தார்.
‘‘இந்த சந்தேகம் தங்களுக்கும் இருக்கிறது என்பதை நானறிவேன் குருதேவா... கரிகாலனுடன் வந்த சீனன்தான் அந்த ஐந்து புறாக்களையும் பறக்கவிட்டு நம்மை சங்கடத்தில் ஆழ்த்தி சிவகாமியை சிறையில் அடைத்திருக்க வேண்டும்...’’சாளுக்கிய போர் அமைச்சர் புன்னகைத்தார்.

‘‘புறாவில் இருந்த செய்தி கூட கரிகாலனே எழுதியதாக இருக்கலாம்...’’
ராமபுண்ய வல்லபர் நெருங்கி வந்து விநயாதித்தனைக் கட்டிப் பிடித்தார்: ‘‘ஓர் இளவரசனுக்குரிய தகுதியுடன் சம்பவங்களை
அலசுகிறாய்... பெருமையாக இருக்கிறது... கவலைப்படாதே... இன்னும் இரண்டு நாட்களுக்கு சிவகாமியின் மீதான விசாரணை நடைபெறாது!’’
‘‘குருநாதா...’’‘‘அதற்குள் சாளுக்கிய மன்னருக்கு நடந்த விஷயங்களை எல்லாம் நாம் தெரிவித்தாக வேண்டும்... கூடவே அடுத்து நாம் செய்யவிருக்கும் காரியங்களுக்கும் அனுமதி பெற வேண்டும்! மனதை அலைபாயவிடாமல் நிம்மதியாக இரு... நான் இருக்கிறேன்!’’
‘‘வா இரணதீரா...’’ தன் மைந்தனை வரவேற்றார் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மர்: ‘‘நள்ளிரவே என்னைச் சந்திக்க வந்திருந்தாய் போலிருக்கிறது... வயதாகி விட்டதல்லவா..? ஆழ்ந்து உறங்கிவிட்டேன்... சொல் இரணதீரா! என்ன விஷயம்..? நேற்றிரவு சாளுக்கிய இளவரசன் கொடுத்த விருந்து எப்படியிருந்தது..?’’

தன் தந்தையின் பாதங்களைத் தொட்டு வணங்கிவிட்டு, நடந்ததை எல்லாம் சுருக்கமாகச் சொல்லி முடித்தான் கோச்சடையன் இரணதீரன்.
நெற்றியைச் சுருக்கியபடி ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார் பாண்டிய மன்னர்.அவரைத் தொந்தரவு செய்யாமல் தன் கைகளைக் கட்டியபடி அமைதியாக நின்றான் இரணதீரன்.இருக்கையை விட்டு எழுந்த அரிகேசரி மாறவர்மர், தன் கரங்களைப் பின்னால் கட்டியபடி குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். அவ்வப்போது நின்றார். அண்ணாந்து பார்த்தார். தலையை உலுக்கிக் கொண்டார். நடையைத் தொடர்ந்தார்.

கணங்கள் யுகங்களாகக் கடந்ததும் சட்டென நின்றார். திரும்பி கோச்சடையன் இரணதீரனைப் பார்த்துப் புன்னகைத்தார்: ‘‘கரிகாலன் இப்பொழுது எங்கிருக்கிறான்..?’’ ‘‘அன்னையுடன் பேசிக் கொண்டிருக்கிறான்...’’‘‘அதாவது தன் அத்தையுடன்! நல்லது... நல்லது... என்னைச் சந்திக்க நீ வருவது அவனுக்குத் தெரியுமா..?’’‘‘தெரியும் தந்தையே...’’‘‘தெரிந்தும் அவன் வரவில்லை...’’ அரிகேசரி மாறவர்மர் வாய்விட்டுச் சிரித்தார்: ‘‘பொடிப் பயல் என்று நினைத்தேன்... பரவாயில்லை... சதுரங்கக் காய்களை திறம்பட நகர்த்துகிறான்... சோழ ரத்தம் அல்லவா... அப்படித்தான் இருக்கும்... இரணதீரா...’’
‘‘தந்தையே...’’ என்றபடி முன்னால் வந்தான்.

அவன் தோளில் கை போட்டார் அரிகேசரி மாறவர்மர்: ‘‘மாமன் மகன்தானே என அவனிடத்தில் அலட்சியமாக இருக்காதே... எப்போதும் அவனிடம் எச்சரிக்கையாக இரு... பாண்டியர்களின் எதிரி அவன்தான்...’’‘‘மன்னா...’’ திகைப்படைந்த சூழலிலும் மரியாதையுடன் அழைத்தான் கோச்சடையன் இரணதீரன்.

‘‘என் காலத்திலோ அல்லது உன் காலத்திலோ அது நடக்காமல் போகலாம்... ஆனால், என்றேனும் ஒருநாள் பாண்டியர்களுக்கு ஆபத்து வருகிறது என்றால் அது கண்டிப்பாக சோழர்களால்தான் ஏற்படும்...’’‘‘கரிகாலனை சந்தேகிக்கிறீர்களா..?’’‘‘முழுமையாக! பல்லவர்கள் நன்றாக இருந்தால்தான் சோழர்களால் நிம்மதியாக வாழமுடியும்... எனவே, நடைபெறவிருக்கும் போரில் பல்லவர்கள் பக்கம்தான் சோழர்கள் நிற்பார்கள்... இந்தப் போரில் பாண்டியர்களான நாமும் பங்கேற்க வேண்டும் என சாளுக்கியர்கள் விரும்புகிறார்கள்... யுத்தத்தில் நாம் கலந்து கொள்ளவே கூடாது என பல்லவர்கள் கருதுகிறார்கள்... அதாவது உன் மாமன் மகன் கரிகாலன் அப்படி எண்ணுகிறான்... எனவே நமக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையில் பரஸ்பர சந்தேகச் சுவரை எழுப்புகிறான்...’’

‘‘நேற்றிரவு நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் கரிகாலனின் திட்டம் என்கிறீர்களா தந்தையே..?’’
‘‘இல்லை... திட்டம் வேறொருவருடையது... ஆனால், அதை தனக்கு சாதகமாக கரிகாலன் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான்... சிவகாமியைச் சிக்க வைத்து நமக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்தி இருக்கிறான்... இந்நேரம் மதுரை முழுக்க சிவகாமி கைது செய்யப்பட்டது பரவியிருக்கும்... கரிகாலனே பரப்பியிருப்பான்! எனவே விசாரணையை நாம் மேற்கொண்டுதான் ஆக வேண்டும்...’’
‘‘என்று தந்தையே..?’’‘‘இரண்டு மூன்று நாட்கள் கழித்து!’’‘‘எதற்கு இந்த அவகாசம் மன்னா..?’’‘‘கரிகாலனுக்கு அவகாசம் தேவைப்படுகிறது... பரவாயில்லை வழங்குவோம்... என்னதான் இருந்தாலும் அவன் என் மைத்துனரின் மகனல்லவா!’’
‘‘தந்தையே..?’’

‘‘என்ன இரணதீரா...?’’
‘‘நேற்றிரவு ஐந்து புறாக்களை அனுப்பியது யார்..?’’
‘‘சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர்!’’‘‘ஆம்... நான்தான் ஐந்து புறாக்களை அனுப்பினேன்... ஆனால், விருந்தினர் மாளிகைப் பக்கமாக அவற்றைப் பறக்கச் சொல்லவில்லையே..?’’தனக்குள் முணுமுணுத்தபடி தன் கையில் இருந்த ஓலையை மீண்டும் ஒருமுறை படித்தார் சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர்.நடந்ததை நடந்தபடி ராமபுண்ய வல்லபர் அதில் எழுதி
யிருந்தார்.சாளுக்கிய மன்னரின் புருவங்கள் முடிச்சிட்டன.
‘‘மன்னா...’’குரல் கேட்டுத் திரும்பினார்.

காவலர் தலைவன் அவரை வணங்கினான்: ‘‘காஞ்சி கடிகையில் இருந்து தங்களுக்கு செய்தி வந்திருக்கிறது...’’
‘‘ம்...’’ தலையசைத்தார் விக்கிரமாதித்தர்.மீண்டும் மன்னரை வணங்கிவிட்டு காவலர் தலைவன் அகன்றான்.
அடுத்த சில கணங்களில் காவி நிற காஷாயம் அணிந்த ஒருவர் உள்ளே நுழைந்தார்: ‘‘வணங்குகிறேன் மன்னா... காஞ்சி கடிகையில் ஆசார்யனாக இருக்கிறேன்...’’‘‘வணக்கம் ஆச்சார்யரே... கடிகை தலைவர் என்ன செய்தி அனுப்பியிருக்கிறார்..?’’

‘‘கடிகை நூலகத்தில் இருக்கும் சுவடிகளை மூன்று திங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்து அடுக்குவது எங்கள் வழக்கம்... அப்படி இம்முறை சுத்தம் செய்கையில் சில சுவடிகள் காணாமல் போயிருப்பதை அறிந்தோம்...’’

காஞ்சி மாநகரத்துக்கு கரிகாலனும் சிவகாமியும் வந்ததும்... சிவகாமி குறித்த சந்தேகத்தை கரிகாலன் மனதில், தான் விதைத்ததும்... அதன் ஒருபகுதியாக கடிகைக்கு அவனை அனுப்பி அர்த்த சாஸ்திர சுவடிகளைப் பார்க்கச் சொன்னதும் விக்கிரமாதித்தரின் மனதில் நிழலாடின: ‘‘காணாமல் போனவை அர்த்த சாஸ்திர சுவடிகளா..?’’‘‘இல்லை மன்னா...’’விக்கிரமாதித்தரின் கண்கள் விரிந்து சுருங்கின: ‘‘இல்லையா..?’’

‘‘இல்லை மன்னா... காணாமல் போயிருப்பது சிறைச்சாலை சுவடிகள்... ஒவ்வொரு தேசத்திலும் சிறைச்சாலைகள் எப்படி அமைக்கப்பட்டிருக்கின்றன... அதற்குள் இருக்கும் பொறி அமைப்புகள்... அவற்றை இயக்கும் விதம்... ஆகியவை அடங்கிய சுவடிகள் மன்னா!’’சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் நெற்றியில் வியர்வைமுத்துக்கள் பூக்கத் தொடங்கின!
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ரத்த மகுடம்-96

உள்ளத்தில் பொங்கிய அனைத்து உணர்ச்சிகளையும் உள்ளுக்குள்ளேயே சிறைப்பிடித்தபடி இயல்பான முகத்துடன் தன் முன்னால் நின்ற காஞ்சி கடிகையின் ஆச்சார்யரை ஏறிட்டார் விக்கிரமாதித்தர்: ‘‘புரியவில்லை ஆச்சார்யரே... சற்று விளக்க முடியுமா..?’’எவ்வளவு தடுத்தும் தன் கண்களில் வழியும் ஆச்சர்யத்தை அந்த ஆச்சார்யரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவருக்குத் தெரிந்து சாளுக்கிய மன்னர் எது ஒன்று குறித்தும் மீண்டும் சொல்லும்படி கேட்டதில்லை. விளக்கும்படியும்.
22.jpg
எப்போதும் சொல்ல வரும்போதே அதன் உட்பொருளை உணர்ந்து விடுபவர் அவர். அப்படிப்பட்டவர் எதற்காக தன்னை மீண்டும் சொன்னதையே சொல்லும்படி கேட்கிறார்..?எழுந்த வினாவுக்கு விடை தேட முற்படாமல் மன்னரின் வேண்டுகோளுக்கு அடிபணிந்தார் ஆச்சார்யர்: ‘‘காணாமல் போயிருப்பது சிறைச்சாலை தொடர்பான சுவடிகள் மன்னா...’’‘‘அதாவது கட்டடக் கலை சார்ந்த சிற்ப சாஸ்திர சுவடிகள்... அப்படித்தானே..?’’

‘‘ஆம் மன்னா... மயன் சாஸ்திர சுவடிகள்... எல்லா தேசத்து நகர அமைப்புகளும், வீதி அளவுகளும், சந்தைகளின் இருப்பிட எல்லைகளும் கிட்டத்தட்ட ஒன்றுதான். போலவே மாட மாளிகைகளின் வெளித் தோற்றங்களும். ஆனால், அந்தந்த தேசங்களின் பண்பாட்டு, கலாசாரங்களுக்கு ஏற்ப அந்தந்த நகர உருவாக்கங்கள் நுணுக்கமான முறையில் மாறுபடும். குறிப்பாக மாட மாளிகைகள் மற்றும் அரண்மனைகளின் உட்புறங்கள் தேசத்துக்கு தேசம் மாறுபடும்...’’‘‘ம்... வாதாபிக்கும் காஞ்சிக்கும் இருக்கும் மாறுபாடுபோல்...’’

‘‘காஞ்சிக்கும் மதுரைக்கும் இருக்கும் மாறுபாடு போலவும்!’’ அழுத்திச் சொன்னார் ஆச்சார்யர்: ‘‘இதற்கு அழுத்தம் கொடுக்கக் காரணம், ஒரே தமிழகப் பரப்பு என்றாலும் காஞ்சி மாநகரும் மதுரை மாநகரும் பலவிதங்களில் வேறுபட்டது என்பதைச் சொல்லத்தான்...’’
‘‘புரிகிறது ஆச்சார்யரே...’’

‘‘பொதுவில் அனைத்தும் கட்டட - சிற்ப - மயன் சாஸ்திரத்தில் வரும் என்றாலும் இதற்குள்ளேயே ஆலயங்கள், வீதிகள், மாளிகைகள், மாடங்கள், மண்டபங்கள்... என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி உட்பிரிவுகள் உண்டு. பயிலும் வித்யார்த்திகளும் பொதுவானவற்றை பொதுவாகத் தெரிந்துகொண்டு தங்களுக்கு விருப்பமான விஷயத்தில் சிறப்புப் பயிற்சி பெறுகிறார்கள். எனவேதான் கோயில் சிற்பிகள் மாட மாளிகைகளை நிர்மாணிப்பதில்லை. அதற்கென இருப்பவர்களே அதை அதை செய்கிறார்கள்...’’

‘‘ம்...’’
‘‘அப்படி ஒவ்வொரு தேசத்தின் சிறைக்கூடங்களும் அந்தந்த தேசத்தின் அறநெறிகளுக்கும் தர்மங்களுக்கும் ஏற்ப மாறுபடும்... அதுமட்டுமல்ல...’’ நிறுத்தினார் ஆச்சார்யர்.‘‘சொல்லுங்கள்... ஏன் நிறுத்திவிட்டீர்கள்..?’’ விக்கிரமாதித்தர் தூண்டினார்.
‘‘மன்னர் தவறாக எண்ணக் கூடாது... உதாரணத்துக்காகத்தான் ஒன்றைச் சொல்லப் போகிறேன்...’’
‘‘பாதகமில்லை... மனதில் இருப்பதை வெளிப்படுத்துங்கள்...’’

‘‘நன்றி மன்னா... ஒவ்வொரு தேசத்தின் சிம்மாசனத்திலும் அமரும் மன்னரின் விருப்பத்துக்கு ஏற்ப அவரது காலத்தில் சிறைச்சாலை
களில் சிற்சில மாற்றங்களும் ஏற்படுத்தப்படும்...’’‘‘தண்டிக்கும் முறையைக் குறிப்பிடுகிறீர்களா..?’’‘‘அதையும் சேர்த்தே சொல்கிறேன்... உதாரணமாக, ராஜத் துரோக வழக்கில் குற்றம் நிருபிக்கப்பட்டவர்கள் சில தேசங்களில் பாதாளச் சிறையில் அடைக்கப்படுவார்கள்... வேறு சில தேசங்களில் ஐந்தடுக்கு பாதுகாப்புடன் சிறை வைக்கப்படுவார்கள்... இப்படி அடுக்கிக் கொண்டே செல்லலாம்...’’‘‘ம்...’’‘‘காஞ்சி கடிகையில் காணாமல் போயிருக்கும் சுவடிகள் சிறைச்சாலைகளின் அமைப்பை துல்லியமாகப் படம் வரைந்து பாகங்களைக் குறித்திருக்கும் சுவடிகள் மன்னா... எந்தெந்த நகரங்களில் இருக்கும் எந்தெந்த சிறைகள் எப்படிப்பட்ட பொறி அமைப்புகள் கொண்டவை... என்பதை எல்லாம் விளக்குபவை...’’

சில கணங்களில் யோசனையில் ஆழ்ந்த விக்கிரமாதித்தர், சட்டென கேட்டார்: ‘‘அவை பழைய சுவடிகள்தானே..?’’
‘‘ஒருவகையில் ஆம் மன்னா... ஆனால், அவை புதிய சுவடிகளும் கூட...’’புருவங்களை உயர்த்தி எப்படி என்பதுபோல் ஆச்சார்யரைப் பார்த்தார் சாளுக்கிய மன்னர்.‘‘பாரத தேசத்தில் இருக்கும் எந்த நாட்டு சிறைச்சாலையும் எந்த அமைப்பில் மாற்றி அமைக்கப்பட்டாலும் அவை உடனுக்குடன் கடிகைக்கு தெரிய வரும். அந்த மாற்றங்களை புதியதாக ஓர் ஓலையில் எழுதி முந்தைய கட்டுடன் இணைத்துவிடுவோம்...’’

சொன்ன ஆச்சார்யரை நெருங்கி வந்து உற்றுப் பார்த்தார் விக்கிரமாதித்தர்: ‘‘இது ராஜத் துரோகமல்லவா..? ஒரு மன்னர் தன் நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்ப செய்யும் ஒரு மாற்றத்தை இப்படி பகிரங்கமாக இன்னொரு நாட்டின் கடிகையில் ஆவணப்படுத்தலாமா..?’’
‘‘கூடாதுதான் மன்னா... ஆனால், சாஸ்திரங்கள் இதை அனுமதிக்கின்றன... எப்படி ஒவ்வொரு நாட்டு தர்மங்களும் நியாயங்களும் ஆவணப்படுத்தப்பட்டு மற்ற தேசத்தவர்களுக்கும் வழிகாட்டியாக காலவெள்ளத்தில் மாறுகிறதோ... அடுத்தடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுகிறதோ...

அப்படி சிற்ப - கட்டடக் கலைகளையும் சொல்லலாம்... அதேநேரம் எப்படி அர்த்த சாஸ்திரம் உள்ளிட்ட ராஜ தந்திரங்கள் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கற்பிக்கப்படுகிறதோ அப்படி சிற்பம் - கட்டடக் கலைகளில் ஏற்படுத்தப்படும் மேம்பாடுகள் அந்தந்த துறை மாணவர்களுக்கு மட்டுமே கற்பிக்கப்படும்... இதிலும் சில நியதிகளை கடிகைகள் பின்பற்றுகின்றன...’’
‘‘என்ன விதிகள் ஆச்சார்யரே..?’’

‘‘கட்டடக்கலை பயிலும் எல்லா மாணவர்களுக்கும் பொதுவான அமைப்புகள் மட்டுமே கற்பிக்கப்படும் மன்னா... ஒவ்வொரு தேசத்தின் ரகசியங்களாகவும் இருக்கும் கட்டட நுணுக்கங்கள் ஒருபோதும் அந்த தேசத்தைச் சேர்ந்த வித்யாதிபதிகளுக்குக்கூட கற்பிக்கப்பட மாட்டாது...’’
‘‘ம்...’’

‘‘தொடர்புள்ள தேசத்தின் மன்னர் தன் கைப்பட ஓலை எழுதிக் கொடுத்தால் மட்டுமே அந்த தேசம் தொடர்பான கட்டடக்கலை ரகசியங்கள் கற்பிக்கப்படும்... அதுகூட யாருக்கு கற்பிக்கலாம் அல்லது யார், சம்பந்தப்பட்ட அந்த சுவடிகளைப் பார்வையிடலாம் என அந்த மன்னர் சொல்கிறாரோ அந்த மாணவருக்கு மட்டுமே சொல்லித்தரப்படும் அல்லது அந்த நபர் மட்டுமே பார்வையிட அனுமதிப்படுவார்...’’
‘‘ம்...’’

‘‘இந்த வகையில் காஞ்சி கடிகையில் இருந்த சிறைச்சாலை தொடர்பான சுவடிகள் அனைத்தும் இன்றிருக்கும் அனைத்து தேசத்து ரகசியங்களையும் உள்ளடக்கியவை. அவை பழமையானவைதான்... ஆனால், எந்த தேசத்திலும் சிறைக்கூடங்களில் புதியதாக எந்த மாற்றங்களும் செய்யப்படாததால் அவை புதிய சுவடிகள் என்றும் சொல்லலாம்...’’

விக்கிரமாதித்தர் எதுவும் பேசாமல் தன் கரங்களை பின்புறம் கட்டியபடி குறுக்கும் நெடுக்கும் நடந்தார்.ஆச்சார்யர் மரியாதை நிமித்தமாக தன் கரங்களை தன் மார்பில் கட்டியபடி அமைதியாக நின்றுகொண்டிருந்தார்.‘‘ஆச்சார்யரே...’’ அழைத்த சாளுக்கிய மன்னர் சாளரத்துக்கு வெளியே தன் பார்வையைச் செலுத்தினார்: ‘‘காஞ்சி கடிகையில் பாரத தேசத்தின் அனைத்து நாடுகளைச் சேர்ந்த சிறைச்சாலைகளின் ரகசியங்களும் இருக்கிறதா..?’’
‘‘கடல் கடந்த தேசத்தின் சிறைக்கூட வரைபடங்களும் அங்குண்டு மன்னா...’’

‘‘அவை அனைத்தும் காணாமல் போயிருக்கிறதா..?’’
‘‘இல்லை மன்னா... தமிழக சிறைக்கூடங்களின் ரகசியங்கள் அடங்கிய சுவடிகள் மட்டுமே மறைந்திருக்கின்றன...’’
கேட்டதும் முடிச்சிட்ட விக்கிரமாதித்தரின் புருவங்கள் சட்டென்று உயர்ந்தன: ‘‘கடைசியாக அந்த சுவடிகள் இருந்த பகுதிக்கு யார் சென்றது..?’’
‘‘கரிகாலன் மன்னா!’’சாளுக்கிய மன்னரின் உதடுகளில் புன்முறுவல் பூத்தது. ஆனால், அவர் நயனங்களில் அனல் தெறித்தது: ‘‘நல்லது ஆச்சார்யரே... தகவல் சொன்னதற்கு நன்றி... காணாமல் போன சுவடிகள் விரைவில் உங்கள் கடிகைக்கு வந்து சேரும்...’’

‘‘அது அவ்வளவு முக்கியமில்லை மன்னா... எங்கள் ஆச்சார்யரில் ஒருவருக்கு அந்த சுவடிகளில் இருந்த விஷயங்கள் அனைத்தும் மனப்பாடம். இன்னும் இரண்டொரு நாட்களில் புதியதாக அவற்றை எழுதி கடிகை நூலகத்தில் சேர்ப்பித்து விடுவார்... நான் வந்தது தங்களுக்கு தகவலைச் சொல்ல...’’
‘‘இதே தகவல் பாண்டிய மன்னருக்கும் தெரிவிக்கப்படுமா..?’’

‘‘கண்டிப்பாக மன்னா... அவர்கள் தேசத்து சிறைக்கூட ரகசியங்கள் அடங்கிய சுவடியும்தானே மறைந்திருக்கிறது..? எனவே அவர்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டியது எங்கள் கடமை... என்னைப் போலவே வேறொரு ஆச்சார்யர் மதுரைக்கு சென்றிருக்கிறார்...’’விக்கிரமாதித்தர் எதுவும் சொல்லவில்லை. வந்த ஆச்சார்யர் மரியாதையுடன் அவரை வணங்கிவிட்டு விடைபெற்றார்.அதன் பிறகு யாரையும் சந்திக்காமல் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார் சாளுக்கிய மன்னர். தன் முன்னால் இருந்த சதுரங்கப் பலகையில் காய்களை முன் பின்னாக நகர்த்தத் தொடங்கினார்.
ஒரு நாழிகைக்குப் பின் காவலர் தலைவன் அவர் இருந்த அறைக்குள் நுழைந்தான்: ‘‘மன்னா...’’

கோபத்துடன் அவனை ஏறிட்டார்: ‘‘நான்தான் யாரையும் இப்போது சந்திக்கப் போவதில்லை என்றேனே... எதற்காக என்னைத் தொந்தரவு செய்கிறாய்..?’’‘‘ஒற்றர் படை உபதலைவர் உங்களைச் சந்தித்தே ஆகவேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கிறார்... அவசரமாம்...’’
‘‘ஒற்றர் படை உபதலைவரா..? சரி... வரச் சொல்...’’காவலர் தலைவன் வெளியேறிய அடுத்த கணமே புயலென சாளுக்கிய ஒற்றர் படை உபதலைவன் நுழைந்தான்: ‘‘வணக்கம் மன்னா... சமீபத்தில் கடல் கடந்து பறக்கும் திறமை வாய்ந்த சில புறாக்களை அரபு வணிகர்களிடம் இருந்து ஒருவர் வாங்கியிருக்கிறார்...’’‘‘எத்தனை புறாக்கள்..?’’

‘‘சரியாக பதினைந்து மன்னா... ஆனால், தற்சமயம் அவரிடம் பத்து புறாக்கள் மட்டுமே இருக்கின்றன...’’
‘‘மீதமுள்ள ஐந்து..?’’
‘‘மதுரையில் பறந்திருக்கிறது!’’
‘‘அரபு வணிகரிடம் இருந்து வலுவான பதினைந்து தூதுப் புறாக்களை வாங்கியவர் யார்..?’’
‘‘தங்களால் வேளிர்களின் தலைவனாக முடிசூட்டப்பட்ட
கடிகை பாலகன்!’’

‘‘குருநாதா...’’
குரல் கேட்டு ஆழ்ந்த சிந்தனையில் இருந்து விடுபட்டார் ராமபுண்ய வல்லபர்: ‘‘என்ன விநயாதித்தா... இன்னமும் சிவகாமியை பாண்டிய மன்னர் விசாரிக்கவில்லையே என்று யோசிக்கிறாயா..? நான்தான் இன்னும் சில நாட்களுக்கு விசாரணை நடைபெறாது என்றேனே..?’’
‘‘சிவகாமி குறித்து பேசுவதற்காக தங்களைத் தேடி வரவில்லை குருநாதா...’’
‘‘பிறகு..?’’

‘‘இன்று பாண்டிய மன்னர் அரிகேசரி மாறவர்மரை ஒருவர் சந்தித்திருக்கிறார்...’’
‘‘யார்..?’’
‘‘காஞ்சி கடிகையைச் சேர்ந்த ஆச்சார்யர் ஒருவர்...’’
ராமபுண்ய வல்லபரின் கண்கள் சட்டென ஒளிர்ந்தன: ‘‘என்ன விஷயமாக..?’’

‘‘கடிகை நூலகத்தில் இருந்த சில சுவடிகள் காணாமல் போயிருக்கிறதாம்... அவை அனைத்தும் தமிழக சிறைச்சாலை குறித்த ரகசியங்கள் அடங்கிய சுவடிகளாம்...’’‘‘என்ன சொல்கிறாய் விநயாதித்தா..? எப்படி அவை மறைந்தனவாம்..?’’
‘‘தெரியவில்லை குருநாதா... ஆனால், கடைசியாக அந்த சுவடிகளை சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் சொல்லி பார்வையிட்டது கரிகாலன் என்கிறார் அவர்...’’

துள்ளி எழுந்தார் ராமபுண்ய வல்லபர்: ‘‘தமிழக சிறைச்சாலை ரகசியங்கள் அடங்கிய சிற்பச் சுவடிகள்... கரிகாலன்...’’ முணு
முணுத்தவர் சாளுக்கிய இளவரசனைக் கட்டிப் பிடித்தார்:‘‘புரிகிறதா விநயாதித்தா... காஞ்சி சிறையில் கரிகாலனின் தந்தையான சோழ மன்னரை நான் அடைத்து வைத்திருந்தேன்... அவரை மீட்க கரிகாலனும் சிவகாமியும் காஞ்சி சிறைக்குச் சென்றார்கள்... இப்போது சிவகாமி மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறாள்...

காஞ்சி, பல்லவர்களின் தலைநகரம்... மதுரை, பாண்டியர்களின் தலைநகரம்... காஞ்சி சிறைக்கு அன்று கரிகாலனுடன் சிவகாமி சென்றாள்... இன்று மதுரை சிறையில் அவளே அடைபட்டிருக்கிறாள்... இரு தேசத்து சிறைச்சாலை ரகசியங்களும் அடங்கிய சுவடியை கரிகாலன் களவாண்டிருக்கிறான்... துண்டு துண்டாக இருக்கும் இவை அனைத்தையும் முடிச்சிட்டுப் பார்... விளங்காமல் நாம் தவித்த அனைத்துக்கும் விளக்கம் கிடைக்கும்!’’

‘‘சிவகாமியைச் சந்தேகிக்கிறீர்களா குருநாதா..? அவள் நம் ஒற்றர் படைத் தலைவி...’’‘‘இப்போது கேள்வியே அவள் எந்த தேசத்து ஒற்றர் படைத் தலைவி என்பதுதான்!’’‘‘குருநாதா..!’’‘‘நீயே சொல் விநயாதித்தா... சிவகாமியும் கரிகாலனும் காதலர்களா அல்லது ஒருவரையொருவர் வீழ்த்த முற்படும் இரு தேசத்து ஒற்றர்களா..?’’
http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16690&id1=6&issue=20200313
Link to comment
Share on other sites

ரத்த மகுடம்-97

‘‘சிவகாமி நம்மைச் சேர்ந்தவள்தான் குருநாதா...’’ அழுத்தமாகச் சொன்னான் சாளுக்கிய இளவரசனான விநயாதித்தன்.‘‘இவ்வளவு தீர்மானமாக நீ சொல்லக் காரணம்..?’’ புருவத்தை உயர்த்தினார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்.‘‘நடந்த விஷயங்கள்தான் குருநாதா...’’ அமைதியாகச் சொன்ன விநயாதித்தன் தொடர்ந்தான்:‘‘சாளுக்கியர்களின் போர் அமைச்சராக நீங்கள் இருப்பதாலும் ஒற்றர் படை உங்கள் கட்டுப்பாட்டில் இயங்குவதாலும் ஒவ்வொரு சம்பவத்தையும் சந்தேகத்துடனேயே நீங்கள் அணுகுகிறீர்கள்...’’‘‘அது தவறு என்கிறாயா விநயாதித்தா..?’’
18.jpg
‘‘நிச்சயமாக இல்லை குருநாதா... கனவிலும் தங்களைக் குறித்து அப்படி நான் எண்ண மாட்டேன்...’’‘‘பிறகு ஏன் எனக்கு இவ்வளவு விளக்கம் அளிக்கிறாய்..?’’‘‘தங்களுக்கு பதில் சொல்லத்தான்... குருநாதா... சிவகாமி நம்மைச் சேர்ந்தவள்தான் என்று அழுத்தமாக நான் சொல்லக் காரணம், அவள் கைது செய்யப்பட்ட சூழல்தான்...’’புருவத்தை சுருக்கிய ஸ்ரீராமபுண்ய வல்லபர், தன் சீடனை உற்றுப் பார்த்தார்:

‘‘பாண்டிய இளவரசருக்கு நாம் இரவு விருந்து அளித்தோம். அப்போது நடந்த சம்பவங்களை தங்களுக்கு நினைவுபடுத்த விரும்பவில்லை... ஐந்து புறாக்கள் பறந்தன... அதில் ஒன்று அவள் மீது அமர்ந்தது... அதன் இறகில் இருந்து கரிகாலன் செய்தி ஒன்றை எடுத்தான்... சந்தேகத்தின் சாயை சிவகாமி மீது படரவே பாண்டிய இளவரசர் அவளை சிறையில் அடைத்திருக்கிறார்... இன்னும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை... இப்போது சிவகாமி குற்றம்சாட்டப்பட்டவள்தான்...’’

‘‘அதற்குள் என்னை தீர்ப்பு எழுத வேண்டாம் என்கிறாய்... அப்படித்தானே..?’’

மெல்ல தலையசைத்தான் சாளுக்கிய இளவரசன்: ‘‘குருநாதா... நீங்கள் சந்தேகப்படுவதுபோல் ஒருவேளை கரிகாலனும் சிவகாமியும் ஒரே நாட்டின் ஒற்றர்களாக இருந்தால்... அதாவது பல்லவர்களின் பக்கம் சிவகாமி இருந்தால்... கரிகாலன் எதற்காக சிவகாமியை சிக்க வைக்க வேண்டும்..?’’
‘‘...’’
‘‘இரவு விருந்துக்கு அவன் முன்னதாகவே பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரனுடன் வந்துவிட்டான். அப்பொழுதே என் மனதில் எச்சரிக்கை மணி அடித்தது. அதற்கேற்ப சிவகாமி நுழைந்தது முதலே அவளைப் பற்றி அலட்சியமாகத்தான் பேசத் தொடங்கியிருக்கிறான்... அவள் சாளுக்கியர்களின் ஒற்றர் படைத்தலைவி என்றும் அவளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் திரும்பத் திரும்ப சொல்லி இரணதீரனின் மனதில் சந்தேகத்தை விதைத்திருக்கிறான்... அங்கிருந்த நம் ஆட்கள் அனைவரும் சொல்லி வைத்ததுபோல் இதைத்தான் நம்மிடம் தெரிவித்திருக்கிறார்கள்...’’
‘‘ம்...’’

‘‘இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது பொறி வைத்துப் பிடிப்பதுபோல் சிவகாமியை சிக்க வைத்திருக்கிறான்... நமக்காக அவள் பணிபுரிந்து வருவதைத் தடுத்திருக்கிறான்... என தங்களுக்குத் தோன்றவில்லையா..?’’‘‘இல்லை விநயாதித்தா...’’ ‘‘எப்படிச் சொல்கிறீர்கள்..?’’ என்று கேட்காமல் கையைக் கட்டி அமைதியாக நின்றான் விநயாதித்தன்.அருகில் வந்து அவன் தோளில் கையைப் போட்டார் ராமபுண்ய வல்லபர்: ‘‘இரவு விருந்தில் நடந்ததை மட்டும் நீ ஆராய்கிறாய் விநயாதித்தா... தொடக்கம் முதலே நாம் ஏமாந்து வருகிறோமோ என நான் இப்போது யோசிக்கிறேன்...’’

சாளுக்கிய இளவரசனை விட்டு விலகி இரண்டடி தள்ளி நின்றார் சாளுக்கிய போர் அமைச்சர்: ‘‘மற்ற எல்லோரையும் விட சிவகாமியை எனக்கு நன்றாகத் தெரியும்... வாயாடுவதில் அவளை அடித்துக் கொள்ள ஆளில்லை... எவ்வளவு லாவகமாக அவளைக் குற்றம் சாட்டினாலும் தன் பேச்சு சாமர்த்தியத்தால் அதிலிருந்து அவள் தப்பித்து விடுவாள்... அதனால்தான் சாளுக்கியர்களின் ஒற்றர் படைத்தலைவியாகவே அவள் நியமிக்கப்பட்டாள்...’’
‘‘...’’
‘‘அப்படிப்பட்டவள் கரிகாலன் தொடர்ந்து தன்னை ‘ஆள்காட்டி... ஒற்றர்... பாண்டியர்களையே அழிப்பாள்...’ என்றெல்லாம் அடுக்கடுக்காக குற்றம்சாட்டியபோது - இதை அவமானப்படுத்தியபோது என்று குறிப்பிடுவதே சரி - ஏன் அமைதியாக நின்றாள்..?’’‘‘தாங்கள் சந்தேகப்பட இதுதான் காரணமா குருநாதா..? திகைப்பினாலும் பேச்சிழந்து அவள் நின்றிருக்கலாமே..?’’‘‘சாமான்ய மக்களுக்கு உன் வாதம் பொருந்தும் விநயாதித்தா... முக்கியமான காரியத்தை நிறைவேற்ற எதிரி நாட்டுக்குள் ஊடுருவியிருக்கும் ஒற்றர்களுக்கு... அதுவும் ஒற்றர் படைத் தலைவிக்கு இது பொருந்தாது...

திகைப்பையும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் கணந்தோறும் எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்களே முக்கியமான காரியங்களுக்கு வேவு பார்க்க அனுப்பப்படுவார்கள்... சிவகாமி நம்மால் அனுப்பப்பட்ட ஆயுதம்... அதுவும் அதன் தரத்தை எல்லா வகையிலும் சோதித்த பிறகே நாம் பல்லவர்கள் மீது ஏவினோம்... அப்படியிருக்க அன்று சிவகாமி அமைதியாக இருந்தது பலத்த சந்தேகத்தைக் கிளப்புகிறது விநயாதித்தா... தவிர காஞ்சி சிறைச்சாலை முதல் எல்லா இடங்களிலும் கரிகாலனும் அவளும் சேர்ந்தே இருந்திருக்கிறார்கள்; பயணப்பட்டிருக்கிறார்கள்...’’
‘‘புரிகிறது குருநாதா...’’

‘‘ஒன்று கரிகாலன் மீதுள்ள மையலில் சிவகாமி சாளுக்கியர்களுக்கு துரோகம் செய்ய முடிவெடுத்திருக்க வேண்டும்... அல்லது...’’ நிறுத்திய ராமபுண்ய வல்லபர் அருகில் வந்து சுற்றிலும் பார்த்துவிட்டு விநயாதித்தனின் செவியில் மெல்ல முணுமுணுத்தார்... ‘‘ஏதோ ஒரு காரணத்துக்காக... அதுவும் நமக்கு சாதகமாக அமைய... அவள் சிறைக்குச் சென்றிருக்க வேண்டும்...’’ ‘‘அழைத்தீர்களா மன்னா...’’ தலைமை மருத்துவர் பவ்யமாக கேட்டார்.

‘‘ஆம்... மருத்துவரே...’’ நிதானமாகச் சொன்னார் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர்: ‘‘சிவகாமிக்கு நீங்கள் பூசிய தைலப் பூச்சு எந்தச் சூழலிலும்
அகலாது அல்லவா..? தெரியும்... சில நாட்களுக்கு முன் இதுகுறித்து நாம் பேசினோம்... நீங்களும் விளக்கம் அளித்தீர்கள்... இப்போது அவசியம் ஏற்பட்டிருப்பதால் மீண்டும் கேட்கிறேன்...’’‘‘காரணமில்லாமல் எதையும் நீங்கள் வினவ மாட்டீர்கள் என்று தெரியும் மன்னா... விளக்குவது என் கடமை...’’ தலைவணங்கிய மருத்துவர் உறுதியுடன் சொல்லத் தொடங்கினார்:

‘‘ஓவியத்தில் எந்தப் பெண்ணின் உருவத்தை நீங்கள் காண்பித்தீர்களோ அதே பெண்ணின் தோற்றத்தைத்தான் ‘சிவகாமி’யிடம் வரவழைத்திருக்கிறோம்... அதுவும் ஒன்றுக்கு மூன்று முறை தைலம் பூசியிருக்கிறோம்... சாளுக்கியர்களின் தைல ரகசியம் பிரபஞ்சம் எங்கும் புகழ்பெற்றது. அதற்கு அஜந்தா குகை ஓவியங்களே சாட்சி. நம் தைலத்தை முறியடிக்கும் தைலத்தை எந்த தேசமும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை... இனியும் கண்டுபிடிக்க முடியாது...’’
‘‘உறுதியாகச் சொல்கிறீர்களா..?’’

‘‘சத்தியமாகச் சொல்கிறேன் மன்னா... நம்மால் வடிவமைக்கப்பட்ட ‘சிவகாமி’க்கு எந்த நோய் வந்தாலும்... அதற்கு மருந்தாக எந்தக் குளிகையை எந்த மருத்துவர் கொடுத்தாலும்... ஏன், ‘சிவகாமி’யின் தேகத்தில் காயம் ஏற்பட்டு அதற்காக எந்த தைலத்தை அவள் உடலில் யார் பூசினாலும்... நாம் பூசிய தைலம் அகலாது... உதிராது...’’

தலையசைத்தார் விக்கிரமாதித்தர்: ‘‘நல்லது மருத்துவரே... தங்களை சிரமப்படுத்தியதற்கு...’’‘‘அதெல்லாம் ஒன்றுமில்லை மன்னா... இது என் கடமை...’’ சாளுக்கிய மன்னரை வணங்கிவிட்டு விடைபெற்றார் மருத்துவத் தலைவர்.ஆழ்ந்த யோசனையுடன் தன் கையில் இருந்த ஓலையை மீண்டும் படித்தார் விக்கிரமாதித்தர். மதுரையில் நடைபெற்று வரும் விஷயங்களை எல்லாம் ஒன்றுவிடாமல் அதில் ஸ்ரீராமபுண்ய வல்லபர் எழுதியிருந்தார். படிக்கப் படிக்க கேள்விகள்தான் முளைத்தன.குறுக்கும் நெடுக்குமாக நடந்தவர் சட்டென அறையை விட்டு வெளியே வந்தார்.வெளியில் நின்றிருந்த காவலர்களின் தலைவன் ஓடோடி வந்தான்.

‘‘புரவி வேண்டும்...’’சில கணங்களில் அவரது புரவியை அழைத்து வந்து நிறுத்தினார்கள். ‘‘யாரும் என்னைப் பின்தொடர வேண்டாம்...’’ கட்டளையிட்டுவிட்டு புரவியின் மீது ஏறிய விக்கிரமாதித்தர், காற்றைக் கிழித்தபடி மேற்குத் திசை நோக்கிப் பறந்தார்.‘‘அது சரியாக வருமா குருதேவா..?’’ அதிர்ச்சியுடன் கேட்டான் விநயாதித்தன்.‘‘ஏன் சரியாக வராது... சிவகாமி குற்றவாளியல்ல... குற்றம்சாட்டப்பட்டவள்தான் என்று சில கணங்களுக்கு முன் நீதானே கூறினாய்..?’’ பட்டென்று சொன்னார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்.‘‘அதில்லை குருதேவா...’’

‘‘இங்கே பார் விநயாதித்தா... சிவகாமியை நாம் சந்தித்துப் பேசியே ஆக வேண்டும்... அவள் நம்மைச் சேர்ந்தவளா அல்லது பல்லவர்களின் ஆளா என்பதை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்... முதலில் சேதாரம் இன்றி அவளை வெளியே எடுக்க வேண்டும்... ஏனெனில் சாளுக்கியர்களின் எதிர்காலமே இதில் அடங்கியிருக்கிறது...’’விநயாதித்தனுக்கும் விபரீதம் புரிந்தது: ‘‘சரி குருதேவா... இரணதீரனைச் சந்தித்து நாம் இருவரும் பாதாளச் சிறைக்குச் சென்று சிவகாமியைச் சந்திக்க அனுமதி வாங்குகிறேன்... ஆனால், இதற்கு பாண்டிய தரப்பு ஒப்புக் கொள்ளுமா..?’’

‘‘பொதுவாக குற்றம்சாட்டப்பட்டு பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டவர்களை மற்றவர்கள் சந்திக்க அனுமதி வழங்க மாட்டார்கள்... என்றாலும் ராஜாங்க விஷயத்தில் எப்போதுமே விலக்குகள் உண்டு... அவள் நம்மைச் சேர்ந்தவள் என பாண்டிய இளவரசனிடம் நாமே அறிமுகப்படுத்தி இருக்கிறோம்... அதனால் இரணதீரனுக்குமே இது தனி மனித பிரச்னை அல்ல... இரு தேசங்கள் சம்பந்தப்பட்டது என்று தெரியும்... தவிர பாண்டியர்களுக்குமே இந்த வழக்கு சங்கடம் தரக் கூடியதுதான்... எனவே நடைமுறையை மாற்றி சிவகாமியை நாம் சந்திப்பதற்கு பாண்டிய தரப்பு ஒப்புக் கொள்ளும்...’’

‘‘அனுமதி கொடுத்து விடு...’’ பட்டென்று சொன்னார் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மர்.‘‘மன்னா...’’ இரணதீரன் அதிர்ந்தான்: ‘‘நாளை இது குறித்து அரசவை கேள்விகள் எழுப்பாதா..?’’‘‘தகுந்த பதிலை நான் அளிக்கிறேன்...’’மன்னரே சொன்னபிறகு அதை எப்படி மறுக்க முடியும்..? பாண்டிய இளவரசன் தலையசைத்தான்: ‘‘உத்தரவு மன்னா...’’‘‘பாதாளச் சிறையில் இருக்கும் சிவகாமியைச் சந்திக்க யார் யார் அனுமதி கேட்டிருக்கிறார்கள்..?’’
‘‘சாளுக்கிய இளவரசன் மட்டும்தான் மன்னா...’’அரிகேசரி மாறவர்மரின் புருவங்கள் உயர்ந்தன: ‘‘கரிகாலன் கேட்கவில்லையா..?’’
‘‘இல்லை மன்னா...’’

‘‘விசாரணை எப்பொழுது நடைபெறும் என்றுகூட விசாரிக்கவில்லையா..?’’
‘‘இல்லை மன்னா...’’‘‘நம்ப முடியவில்லையே...’’ உதட்டைச் சுழித்த பாண்டிய மன்னர், உத்திரத்தை நோக்கினார்: ‘‘சிவகாமி குறித்தாவது ஏதாவது கரிகாலன் பேசினானா..?’’‘‘இல்லை மன்னா...’’‘‘இல்லை... இல்லை... இல்லை... இதன் எதிர்ப்பதம் ஆம்... ஆம்... ஆம்...’’ தனக்குள்ளேயே முணுமுணுத்தார் பாண்டிய மன்னர்: ‘‘கரிகாலன் எங்கிருக்கிறான்..?’’‘‘நமது அரண்மனையில்தான்...’’‘‘சந்தேகப்படும்படி...’’‘‘எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை... வெளியாட்கள் யாருடனும் பேசுவதில்லை... வேளாவேளைக்கு உண்கிறான்... அடித்துப் போட்டது போல் நன்றாக உறங்குகிறான்...’’
‘‘அதாவது அடுத்த பயணத்துக்கு தயாராகிறான்...’’
‘‘...’’

‘‘சும்மா சொல்லக் கூடாது... ஸ்ரீராமபுண்ய வல்லபரையும் விநயாதித்தனையும் பித்துப் பிடித்து அலைய வைக்கிறான்... கெட்டிக்காரன்தான்... சரி... எப்பொழுது விநயாதித்தனையும் ஸ்ரீராமபுண்ய வல்லபரையும் பாதாளச் சிறைக்கு அனுப்பப் போகிறாய்..?’’
‘‘தந்தையே..!’’‘‘பதறாதே! சிவகாமியைச் சந்திக்க எப்பொழுது அவர்களுக்கு நேரம் ஒதுக்கி இருக்கிறாய் என்று கேட்டேன்!’’
‘‘நீங்கள் குறித்துத் தரும் காலத்தில்!’’‘‘அப்படியானால் இன்றிரவு இரண்டாம் ஜாமத்தில் அவர்களை பாதாளச் சிறைக்கு அனுப்பு... சிவகாமியிடம் அவர்கள் தனிமையில் பேசட்டும்... நீ உடன் இருக்க வேண்டாம்...’’

‘‘சரி மன்னா...’’ சில கணங்கள் இரணதீரன் மவுனமாக நின்றான்: ‘‘இரண்டாம் ஜாமத்தில் ஏதேனும் சிறப்பு உண்டா..?
‘‘உண்டு! அப்பொழுதுதான் நம் மதுரை மாநகரில் கூட்டம் கூட்டமாக புறாக்கள் பறக்கப் போகின்றன..!’’
‘‘அதை நாம்...’’‘‘...தடுக்க வேண்டாம்... வேடிக்கை பார்ப்போம்...’’
‘‘ஏன் அமைதியாக இருக்கச் சொல்கிறீர்கள்..?’’

‘‘பாண்டிய நாட்டைக் காப்பாற்ற!’’
தன் தந்தையை உற்றுப் பார்த்தான் இரணதீரன்: ‘‘புறாக்களைப் பறக்க விடப்போவது கரிகாலனா..?’’
‘‘இல்லை... அதங்கோட்டாசான்!’’
Link to comment
Share on other sites

  • 2 months later...

அத்தியாயம் 98

சாளுக்கிய மன்னரை சுமந்து வந்த அந்தப் புரவி, வனத்துக்குள் நுழையவும் கூகை ஒருமுறை அலறவும் சரியாக இருந்தது.மெல்ல தன் வலது கையால் குதிரையின் வயிற்றைத் தட்டிக் கொடுத்தார். புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக அப்புரவி தன் வேகத்தைக் குறைத்து பழக்கப்பட்ட ஒற்றையடிப் பாதைக்குள் நுழைந்தது.

 

செடிகளையும் மரங்களையும் ஊடுருவியபடி தன் பயணத்தைத் தொடர்ந்தது.கால் நாழிகை பயணத்துக்குப் பின் மீண்டும் கோட்டான்கள் இருமுறைக் கூவின. அரை நாழிகை கடந்ததும் ஒரு சிறிய வெட்டவெளியை அப்புரவி அடைந்தபோது மூன்று முறை கூகை அலறியது. புரவியை விட்டு இறங்கிய விக்கிரமாதித்தர், அதன் நெற்றியை முத்தமிட்டு தட்டிக் கொடுத்தார்.


தலையை அசைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அக்குதிரை, புற்களை மேயத் தொடங்கியது.நிதானமாக வெட்டவெளியைக் கடந்து தென்பட்ட பாறைகளை நோக்கி சாளுக்கிய மன்னர் நடந்தார்.ஐந்து முறை கோட்டான்கள் அலறி முடித்ததும் பாறை இடுக்கில் இருந்து தீ பந்தத்துடன் சாளுக்கிய வீரன் ஒருவன் வெளிப்பட்டு மன்னரை வணங்கினான்.‘‘சந்தேகப்படும்படி யாரேனும் இந்தப் பக்கம் நடமாடினார்களா..?’’‘‘இல்லை மன்னா...’’‘‘பொருள்..?’’

‘‘பலத்த பாதுகாப்புடன் நீங்கள் வைத்த இடத்திலேயே இருக்கிறது...’’புருவத்தை உயர்த்தி அந்த வீரனை ஏறிட்டார் விக்கிரமாதித்தர்.‘‘உறுதியாகத் தெரியும் மன்னா... வனம் முழுக்க நம் வீரர்கள் கண்ணும் கருத்துமாக காவல் காக்கிறார்கள்... அவர்களை மீறி சிற்றெறும்புகள் கூட நுழைய முடியாது... உங்கள் வருகையைக் கூட அவர்கள்தான் கோட்டான்களின் அலறல் வழியே எனக்குத் தெரியப்படுத்தினார்கள்...’’தன் வலக்கரத்தை நீட்டினார் சாளுக்கிய மன்னர்.தன்னிடமிருந்த தீ பந்தத்தை அவரிடம் கொடுத்துவிட்டு விலகி நின்றான் அந்த காவல் வீரன்.

பந்தத்தைப் பிடித்தபடி பாறை இடுக்கில் நுழைந்த விக்கிரமாதித்தர், பத்தடிக்கு பின் இடதுபக்கம் திரும்பினார்.பாறை ஒன்று அகற்றப்பட்டிருந்தது. பந்தத்தின் ஒளியில் இறங்குவதற்கு ஏதுவாக படிக்கெட்டுகள் குடையப்பட்டிருந்தன. ‘‘இறங்கி நேராகச் செல்லுங்கள்... எங்கும் திரும்ப வேண்டாம்... முடியும் இடத்திலேயே சிவகாமி அடைக்கப்பட்டிருக்கிறாள்!’’ அமைதியாகச் சொன்னான் பாண்டிய இளவரசன்
கோச்சடையன் இரணதீரன்.

‘‘எங்களுடன் நீங்கள் வரவில்லையா..?’’ சாளுக்கிய இளவரசனான விநயாதித்தனின் குரலில் ஆச்சர்யம் வழிந்தது.‘‘அவசியமில்லை...’’‘‘ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா..?’’ ராமபுண்ய வல்லபர் தன் புருவத்தை உயர்த்தினார்.‘‘பெரியதாக ஒன்றுமில்லை சாளுக்கிய போர் அமைச்சரே! நீங்கள் இருவரும் தனிமையில் சிவகாமியுடன் உறவாடுவீர்கள்... இடையில் நான் எதற்கு..?’’
‘‘இல்லை... பாண்டிய மன்னர்...’’ இழுத்தான் விநயாதித்தன்.

‘‘தந்தைதான் என்னை உடன் இருக்க வேண்டாம் என்றார்...’’ பதிலை எதிர்பார்க்காமல் இரணதீரன் சென்றான்.
‘‘குருதேவா...’’‘‘நேரமில்லை... வா...’’ பாதாள சிறையின் படிக்கெட்டுகளில் ராமபுண்ய வல்லபர் இறங்கத் தொடங்கினார். தரையைத் தொட்டதும் சொன்னார். ‘‘எனக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது விநயாதித்தா... நம்முடன் விளையாடுகிறான் கரிகாலன்..!’’
‘‘கரிகாலா... தாயம் விளையாடலாமா..?’’தன் அத்தையான பாண்டிய அரசியுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த கரிகாலன் துள்ளி எழுந்தான். ‘‘இந்த
நேரத்திலா மன்னா...’’

‘‘ஆட்டத்துக்கு நேரம் காலம் இருக்கிறதா என்ன..?’’
கேட்ட பாண்டிய மன்னர் அரிகேசரி மாறவர்மரை உற்றுப் பார்த்தான்.
மன்னரின் நயனங்கள் நகைத்தன.பதிலுக்கு தன் கண்களால் சிரித்தான் கரிகாலன். ‘‘இரவில் தாயம் ஆடக் கூடாது என்பார்களே..?’’
‘‘அது மக்களுக்கு... மன்னர்களுக்கல்ல!’’

‘‘நான் மன்னன் இல்லையே மன்னா... பல்லவர்களின்
உபசேனாதிபதிதானே..?’’
‘‘ஆனால், சோழர்களின் பிற்கால மன்னனாயிற்றே!’’
‘‘தேசமற்ற தேசத்தின் மன்னன்!’’

‘‘இல்லை... தேசத்தை விரிவுப்படுத்தப் போகும் மன்னன்! உன் குருதியின் ஆட்டம் என்னவென்று பார்க்க ஆசைப்படுகிறேன்...’’ என்ற அரிகேசரி மாறவர்மர், தன் மனைவியை நோக்கினார். ‘‘உன் பிறந்த வீட்டுப் பெருமையை நாளை பேசிக் கொள்... இன்றிரவு உன் சகோதரனின் மகன் என்னுடன் விளையாடட்டும்!’’‘‘என்னிடம் எதற்கு அனுமதி..? மாமனாயிற்று... மருமகனாயிற்று...’’ என்ற பாண்டிய அரசி, தன் கணவரின் பார்வையைப் புரிந்து கொண்டு, ‘‘எனக்கும் உறக்கம் வருகிறது...’’ என்றபடி நகர்ந்தாள்.அத்தை செல்வதையே இமைக்காமல் பார்த்த கரிகாலன், பாண்டிய மன்னரை நோக்கித் திரும்பினான். ‘‘கேளுங்கள் மன்னா...’’

‘‘எதைக் கேட்க வேண்டும்..?’’‘‘அதை தாங்கள்தான் சொல்ல வேண்டும்! தனிமையில் என்னுடன் உரையாடத்தானே அத்தையை அகற்றினீர்கள்..?’’
வாஞ்சையுடன் அவன் தோளில் கைபோட்டார் அரிகேசரி மாறவர்மர். ‘‘எதிர்பார்த்ததை விட புத்திசாலியாக இருக்கிறாய்... உண்மையிலேயே தாயம் ஆடத்தான் அழைத்தேன்...’’கண்கொட்டாமல் அவரைப் பார்த்தான் கரிகாலன்.தன்னை மீறி புன்னகைத்தார் அரிகேசரி மாறவர்மர்.

‘‘விளையாடிக் கொண்டே பேசலாம், வா!’’
தாங்கியில் தீ பந்தத்தை செருகிய விக்கிரமாதித்தர், சில கணங்கள் அங்கேயே நின்றார். தன் பார்வையை சுழற்றினார்.
குறிப்பிட்ட இடைவெளியில் பந்தங்கள் எரிந்துக் கொண்டிருந்தன. கூர்மையான முனைகள் மழுங்கடிக்கப்பட்டு பாறைகள் குடையப்பட்டிருந்தன.
தன் முன் நீண்ட பாதையைப் பார்த்தார். இரு பக்கங்களிலும் அறைகள் போல் ஆங்காங்கே பாறைகள் உள்வாங்கியிருந்தன. இரும்புக் கம்பிகளால் அமைக்கப்பட்டிருந்த கதவுகள் அவற்றை மூடியிருந்தன. ஆனால், அவைகள் காலியாக இருந்தன.

பலத்த சிந்தனையுடன் நேராக நடந்தார். பாதையின் முடிவில் இருந்த அறையை நெருங்கினார். அறைக்குள் எரிந்து கொண்டிருந்த பந்தங்களின் ஒளியில் ஒரு பெண் தரையில் குப்புறப்படுத்திருப்பது தெரிந்தது.கம்பிகளைப் பிடித்தபடி உற்றுக் கவனித்தார்.‘‘ஒவ்வொரு வேளையும் இந்த குளிகையில் ஒன்றை உணவில் கலந்து கொடுங்கள். அப்பொழுதுதான் பாதி மயக்கத்திலேயே இவர் இருப்பார். உறக்கமும் எந்நேரமும் இவரை ஆக்கிரமிக்கும்...’’ அன்று தலைமை மருத்துவர் சொன்ன வாசகங்கள் அப்படியே சாளுக்கிய மன்னரின் செவியில் இன்றும் எதிரொலித்தன.

சிறைக் கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே சென்றார். படுத்திருந்தப் பெண்ணை சுற்றி வந்தார். குனிந்து அவள் முகத்தை ஆராய்ந்தார்.
மெல்ல ஒலி எழுப்பாமல் வெளியே வந்து சிறைக்கதவைத் தாழிட்டார்.ஆலமரத்தின் வேர்களைப் போல் விக்கிரமாதித்தரின் முகமெங்கும் சிந்தனை
ரேகைகள் படர்ந்தன.‘‘சிந்திப்பதற்கு அவகாசமில்லை ராமபுண்ய வல்லபரே...’’ அழுத்தமாகச் சொன்னாள் சிவகாமி.
‘‘ஆனாலும்...’’ சாளுக்கிய போர் அமைச்சர் மென்று விழுங்கினார்.

‘‘வேறு வழியில்லை. இதை நாம் செய்தே ஆக வேண்டும்... இல்லையெனில் சாளுக்கிய மன்னர் நம்மை மன்னிக்க மாட்டார்!’’
சிவகாமி சொல்வது சரியென்றே விநயாதித்தனுக்கும் தோன்றியது. பார்வையை தன் குருநாதர் மீது திருப்பினான்.
ராமபுண்ய வல்லபரின் புருவங்கள் முடிச்சிட்டன. ‘‘இன்னும் ஏன் யோசிக்கிறீர்கள்..?’’
‘‘பாண்டிய மன்னரைப் பற்றி நினைக்க வேண்டாமா சிவகாமி..?’’ எரிச்சலுடன் கேட்டார் ராமபுண்ய வல்லபர்.
‘‘ஏன்... அவருக்கென்ன..?’’

‘‘என்ன இப்படி கேட்டுவிட்டாய்..?’’ விநயாதித்தனின் நாசி துடித்தது. ‘‘குருநாதர் சொல்வது சரிதானே..? பாண்டிய மன்னரின் விருந்தினராக நாம் மதுரைக்கு வந்திருக்கிறோம்...’’‘‘நாம் என என்னையும் சேர்க்க வேண்டாம்... நான் கைதியாக பாதாளச் சிறையில் அடைப்பட்டிருக்கிறேன்...’’ சிவகாமி
இடைமறித்தாள்.  ‘‘இதற்கு முழுக்க முழுக்க நீதானே காரணம்..?’’சொன்ன சாளுக்கிய போர் அமைச்சரை சிவகாமி உற்றுப்
பார்த்தாள். ‘‘நானா..?’’‘‘பின்னே... நாங்களா..? கரிகாலன் அடுக்கடுக்கடுக்காக உன் மீது குற்றம் சுமத்தியபோது எந்தப் பதிலும் பேசாமல் நின்றவள் நீதானே..?’’

‘‘அப்படி நின்றதால்தானேஇதைசாதிக்க முடிந்தது..?’’ என்றபடி தன் சிகையில் முடிச்சிட்டிருந்த சுருளான பட்டுத் துணியை எடுத்து ராமபுண்ய வல்லபரின் கரங்களில் திணித்தாள்.என்னவென்று அதை பார்க்க சாளுக்கிய போர் அமைச்சர் முற்பட்டார்.‘‘இங்கே பிரிக்காதீர்கள்! உங்கள் மாளிகைக்குச் சென்று சாளரங்களை அழுத்தமாக மூடிவிட்டு பிரித்துப் பாருங்கள்...’’‘‘இது...’’ விநயாதித்தன் இழுத்தான்.‘‘புறா வழியே வந்த உண்மையான செய்தி!’’ சிவகாமி கண்சிமிட்டினாள்.‘‘அப்படியானால் கரிகாலன் உன் மீது குற்றம் சுமத்தக் காரணமாக இருந்த புறா வழியே வந்தச் செய்தி..?’’ ஆச்சர்யத்துடன் ராமபுண்ய வல்லபர் கேட்டார்.

‘‘அவனை ஏமாற்ற நான் நடத்திய நாடகம்!’’
‘‘அதற்காக நீ சிறைப்பட வேண்டுமா..?’’
‘‘அப்பொழுதுதானே இந்தச் சிறையில் இருக்கும் மர்மத்தை கண்டறிய முடியும்!’’ராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.‘‘எதற்கு ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்கிறீர்கள்..?’’ சிவகாமி உதட்டைச் சுழித்தாள். ‘‘இந்நேரம் காஞ்சி கடிகையில் இருந்து சிறைச்சாலை தொடர்பான சுவடிகள் காணாமல் போய்விட்டதாக செய்தி வந்திருக்குமே!’’
‘‘சிவகாமி...’’

‘‘எதற்காக சத்தம் போடுகிறீர்கள் ராமபுண்ய வல்லபரே..? உங்கள் முன்தானே நிற்கிறேன்! என்ன... நமக்கு நடுவில் கம்பிகள் இருக்கின்றன!’’
‘‘விளையாடாதே!’’ ராமபுண்ய வல்லபரின் உதடுகள் துடித்தன. ‘‘இந்தச் சிறையில் என்ன மர்மம் இருக்கிறது..?’’
‘‘காஞ்சி சிறையில் இல்லாத மர்மம்!’’‘‘சிவகாமி...’’‘‘எதற்கு என் பெயரை திரும்பத் திரும்ப மனனம் செய்கிறீர்கள்..?’’ சிவகாமி சிரித்தாள். ‘‘மர்மத்தை முழுமையாக அறிந்த பின் நானே உங்களுக்கு சொல்கிறேன்.

என்னை பரிபூரணமாக நம்புங்கள். தேவையில்லாமல் நான் பல்லவர்களின் பக்கம் சாய்ந்துவிட்டதாக நினைத்து உங்களை நீங்களே வருத்திக் கொள்ள வேண்டாம்! சென்று வாருங்கள். இன்றிரவு மதுரையின் மேல் புறாக்கள் பறக்கும். அப்பொழுது நான் சொன்னதை செய்யுங்கள்!’’‘‘நீ சொன்னதை அப்படியே சொற்கள் மாறாமல் ராமபுண்ய வல்லபரிடமும் விநயாதித்தனிடமும் இந்நேரம் சிவகாமி சொல்லியிருப்பாள் அல்லவா..?’’ தாயத்தை உருட்டியபடியே அரிகேசரி மாறவர்மர் கேட்டார்.

சட்டென்று கரிகாலன் நிமிர்ந்தான்.‘‘மதுரையின் மேல் புறாக்கள் பறக்க இன்னும் எத்தனை நாழிகைகள் இருக்கின்றன?!’’

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16834&id1=6&issue=20200515

 

அத்தியாயம் 99

‘‘கேட்டது புரியவில்லையா அல்லது தொடுத்த வினா அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதா..?’’ புருவங்களை உயர்த்தியபடியே கேட்டார் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மர்.

‘‘இரண்டுமே அல்ல மன்னா...’’ நிதானத்
துடன் பதிலளித்தான் கரிகாலன்.
‘‘பிறகு ஏன் எதுவும் சொல்லாமல் என்னைப் பார்க்கிறாய்..?’’
‘‘குழப்பத்தை வெளிப்படுத்த அடியேனுக்கு வேறு உபாயம் தெரியவில்லை...’’

‘‘உனக்கா..?’’ வாய்விட்டு நகைத்தார் அரிகேசரி மாறவர்மர்.
‘‘குழம்புவது உன் அகராதியிலேயே கிடையாதே!’’
‘‘அகராதிக்கு சொற்களே சூழலில் இருந்துதானே மன்னா கிடைக்கின்றன..?’’
‘‘அப்படியொரு சூழல் இக்கணத்தில் பிறந்திருக்கிறதா..?’’
‘‘ஆம் மன்னா...’’

‘‘அதாவது நாம் தாயம் ஆடும் சூழலைக் குறிப்பிடுகிறாய்...’’
‘‘தாயத்தை உருட்டியபடியே நீங்கள் கேட்ட கேள்விகளால்
உருவாகி இருக்கும் சூழலைக் குறிப்பிடுகிறேன்...’’

‘‘அப்படியொரு புதிய சூழலை என் வினாக்கள் உருவாக்கி இருக்கிறதா என்ன..?’’
‘‘உருவாகி இருப்பதால்தானே மன்னா அடியேன் பேச்சிழந்து நிற்கிறேன்...’’
‘‘ஆனால், தொடுத்த வினாக்கள் பழமையானவை அல்லவா..?’’
‘‘பழமையில் இருந்துதானே மன்னா புதியவை பிறக்கின்றன...’’

‘‘என்னை பழமையானவன் என்றும் உன்னை புதியவன் என்றும் குறிப்பிடுகிறாயா..?’’
‘‘மீனே பழமையானது என்ற உயிரியலின் தோற்றச் செயல்பாட்டை
ஒருபோதும் நிராகரிக்க முடியாது என்ற உண்மையை நினைவு
படுத்துகிறேன் மன்னா...’’

பாண்டிய மன்னரின் நயனங்களில் திருப்தி மலர்ந்தது. ‘‘இதை புலி குறிப்பிடுவதால் ஏற்கத்தான் வேண்டும்!’’ நிறுத்திவிட்டு கரிகாலனின் கண்களை உற்றுப் பார்த்தார். ‘‘ஆனால், இப்பொழுது நான் குழம்பி நிற்கிறேன்...’’
‘‘எதனால் மன்னா...’’
‘‘நீ குறிப்பிட்ட வாக்கியத்தில் இருந்து பிறந்திருக்கும் சூழலால்!’’
‘‘சற்றே விளக்க முடியுமா மன்னா..?’’

‘‘புலியின் இயல்பு ரிஷபத்தை அடித்துக் கொல்வது! இப்படித்தானே
 நீ குறிப்பிட்ட உயிரியலின் தோற்றச் செயல்பாடு குறிப்பிடுகிறது..?’’
‘‘ஆம் மன்னா...’’
‘‘ஆனால், இங்கோ ரிஷபத்தைக் காக்க புலி முன்னால் நிற்கிறது! இதை நான் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்று
எதிர்பார்க்கிறாய்..?’’
‘‘அதே உயிரியலின் தோற்றச் செயல்பாட்டில் இருந்துதான் மன்னா...’’
‘‘அப்படியா..?’’

‘‘அப்படித்தான் என்று மட்டுமே இந்த சிறியவனால் விடையளிக்க முடிகிறது மன்னா...’’
‘‘அது எப்படி என இந்தப் பெரியவனுக்கு கொஞ்சம் எடுத்துச் சொல்ல முடியுமா...’’
‘‘தாங்கள் அறியாததா மன்னா... இருந்தாலும் இந்த எளியவனை பரிசோதிக்க கேட்கிறீர்கள்... புரிந்து கொண்டதை சொல்கிறேன்... தவறு இருந்தால் திருத்துங்கள்...’’

சொன்ன கரிகாலனை உற்றுப் பார்த்தார் அரிகேசரி மாறவர்மர். கரிகாலனின் கருவிழிகளில் எந்த பாசாங்கும் இல்லை என்பதைக் கண்டதும் தாயம் இல்லாத தன் கரத்தை உயர்த்தி மேலே சொல்லும்படி சைகை செய்தார்.

அதை ஏற்று கரிகாலன் தொடர்ந்தான். ‘‘வனமிருந்தால்தான் அது புலி... காட்டில் வாழ்ந்தால்தான் அது வேட்டைப் புலி! வனமற்ற நிலத்தில் வாழ சபிக்கப்பட்ட புலி, புலியல்ல... இன்னொரு வளர்ப்புப் பிராணி...’’
‘‘அவ்வளவுதானா..?’’

‘‘அவ்வளவேதான் மன்னா! சபிக்கப்பட்ட புலிக்கு அடைக்கலம் கொடுத்து வனமற்ற நிலத்திலும் வளமோடு அதை வளர்ப்பது ரிஷபம்தான்! எனவேதான் அந்த ரிஷபத்தை தன் தாய் ஸ்தானத்தில் வைத்து புலி வணங்குகிறது; ரிஷபத்தைக் காக்க முன்னால் வந்து நிற்கிறது, ஒரு வளர்ப்புப் பிராணியைப் போல்..!’’
‘‘என்றாலும் தன் மீதுள்ள கோடுகளை புலி மறைப்பதில்லையே!’’
‘‘அது புலியின் இயல்பு மன்னா...’’
‘‘வேட்டையாடுவதும் புலியின் குணம்தானே..?’’

‘‘அப்படித்தான் உயிரியலின் தோற்றச் செயல்பாடு குறிப்பிடு
கிறது மன்னா...’’
‘‘எனில் தன்னை வளர்க்கும் ரிஷபத்தை எப்பொழுது வேண்டுமானாலும் புலி வேட்டையாடும்... அப்படித்தானே..?’’
‘‘ஒருபோதும் தன் தாயை வேட்டையாடாது...’’
‘‘அதே தாயே மாற்றாந் தாயாக இருந்தால்..?’’

‘‘அன்னை என்றுமே அன்னைதான் மன்னா... தன் குழந்தைக்கு மட்டுமல்ல... தாயற்ற குழந்தைக்கும் பால் கொடுப்பதால்தான் அவள் அன்னை!’’
‘‘ஆனாலும் பெற்ற அன்னைக்கும் வளர்ப்பு அன்னைக்கும் வித்தியாசம் இருக்கிறதே..?’’
‘‘இதை நாட்டின் மக்களை தன் மக்களாகக் கருதும் மன்னரான நீங்கள் சொல்லலாமா..?’’  

‘‘பிரமாதம்...’’ வாய்விட்டு மெச்சினார் பாண்டிய மன்னர். ‘‘வளர்ப்புப் பிராணியாக மாறினாலும் புலி, புலிதான் என்பதை
நிரூபிக்கிறாய்...’’
‘‘தங்கள் ஆசிகள் மன்னா...’’
‘‘இந்த இடத்தில் இன்னொன்று கேட்கத் தோன்றுகிறது...’’
‘‘பதிலளிக்க சித்தமாக இருக்கிறேன் மன்னா...’’

‘‘ரிஷபமோ அடைக்கலம்தான் கொடுத்திருக்கிறது... எருதோ, புலிக்காக கானகம் ஒன்றையே சிருஷ்டிக்கத் தயாராக இருக்கிறது... எனில் வளர்ப்புப் பிராணியாக இருக்கும்
புலி என்ன செய்ய வேண்டும்..?’’

‘‘எருதின் கோரிக்கையை ஏற்காமல் ரிஷபத்தின் பக்கமே நின்று அதைக் காக்க
வேண்டும்!’’
‘‘ஏனோ? புலிக்கு வனம் வேண்டாமா..?’’
‘‘சுதந்திரத்தை விட சுவாசம் முக்கியம் மன்னா... கிடைக்கும் கானகமே தனக்கு உயிர் கொடுத்த ரிஷபத்தின் இடமாக இருக்கையில் அதை மறுப்பதே புலிக்கு அழகு!’’
‘‘வேட்டையாடும் எந்தப் புலியும் விசுவாசம் பார்ப்பதில்லை...’’

‘‘வளர்ப்புப் பிராணி விசுவாசத்தைத் தவிர வேறு எதையும் கணக்கில் கொள்வதில்லை!’’
‘‘எந்த ஓர் உயிரினமும் தன் தர்மத்தை மறப்பது அதர்மம்...’’
‘‘தர்மமும் அதர்மமும் தர்க்கத்துக்குள் அடங்குபவை மன்னா... மனித வாழ்க்கையோ தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவை... சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்வதே உயிரினத்தின் நியதி...’’  

‘‘அதைத்தான் நானும் சொல்கிறேன்! ஒருபோதும் புலி, வளர்ப்புப் பிராணி அல்ல!’’
‘‘ரிஷபம் இருக்கும்வரையில் புலி வளர்ப்புப் பிராணிதான்...’’
‘‘ரிஷபத்தை எருது அழித்து விட்டால்..?’’

‘‘பாதுகாப்பாக புலி இருக்கும் வரையில் எருதால் ரிஷபத்தை நெருங்கக் கூட முடியாது!’’
‘‘ஒருவேளை ரிஷபமும் எருதும் கூட்டு சேர்ந்தால்..?’’
‘‘அப்படி ஒருபோதும் நடக்காது மன்னா...’’
‘‘நடந்து விட்டால்..?’’

‘‘கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை அப்படி நடைபெற
சாத்தியமே இல்லை மன்னா...’’
‘‘ஒருவேளை எதிர்காலத்தில் அப்படி நடந்தால்..?’’

‘‘அப்பொழுது புலியின் வாரிசுகள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வார்கள்!’’
‘‘அதுவரை மீன் என்ன செய்ய வேண்டும்..?’’
‘‘கழுவும் நீரில் நழுவியபடியே இருக்க வேண்டும்...’’
‘‘இது புலியின் கட்டளையா..?’’
‘‘வளர்ப்புப் பிராணியின் வேண்டுகோள்!’’
‘‘இப்படி இறைஞ்சும்படி புலியை அனுப்பி வைத்தது ரிஷபமா..?’’

‘‘இல்லை! எருதின் திட்டத்தை அறிந்த வளர்ப்புப் பிராணியான புலி,
தானாகவே முன்வந்து இந்த கோரிக்கையை மீனின் முன்
சமர்ப்பிக்கிறது...’’
‘‘அது என்ன எருதின் திட்டம்..?’’
‘‘ரிஷபத்தை அழித்துவிட்டு மீனை ஒழிப்பது!’’
‘‘அது அவ்வளவு எளிதான செயல் என்று நினைக்கிறாயா..?’’

‘‘இல்லை என எருதே நினைக்கிறது! அதனால்தானே ரிஷபத்தை அழிக்க மீனின் தயவை நாடி அந்த எருதே இங்கு வந்திருக்கிறது!’’
‘‘ரிஷபமும் மீனின் உதவியை நாடித்தானே...’’‘‘வரவில்லை மன்னா! குறுக்கிட்டுப் பேசுவதற்கு மன்னிக்கவும். மீனின் உதவி தனக்குத் தேவை என ரிஷபம் நினைத்திருந்தால், தனது வளர்ப்புப் பிராணியை இங்கே அனுப்பியிருக்காது. மாறாக ரிஷபமே இங்கு வந்திருக்கும்!’’
‘‘எவர் உதவியும் இன்றி தன்னால் எருதை வீழ்த்த முடியும் என ரிஷபம் கருதுகிறதா..?’’

‘‘சின்ன திருத்தம் மன்னா... தான், வளர்க்கும் புலியின் உதவியுடன் எருதை வீழ்த்த முடியும் என ரிஷபம் நினைக்கிறது!’’
‘‘ஆக, வேண்டுகோள் வைக்க மட்டுமே புலி இங்கு வந்திருக்கிறது... அப்படித்தானே!’’
‘‘ஆம் மன்னா...’’
‘‘இதை மீன் நம்பும் என நினைக்கிறாயா..?’’

‘‘நம்ப வேண்டும் என்றே புலி மனதார பிரார்த்தனை செய்கிறது! ஏனெனில் ரிஷபத்துக்கும் மீனுக்கும் நட்பும் இல்லை... பகையும் இல்லை. தற்சமயம் அவரவர் இடங்களில் அவரவர் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது ரிஷபத்தின் இடத்தைக் கைப்பற்ற எருது முயல்கிறது. இந்த நேரத்தில் ரிஷபத்துக்கும் எருதுக்கும் இடையில் மீன் நுழையாமல் வேடிக்கை பார்த்தால் நன்றாக இருக்குமே என புலி நினைக்கிறது. ரிஷபமோ எருதோ... இறுதியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அதை வைத்து தன் அடுத்த கட்ட நகர்வை மீன் திட்டமிட்டால் அதற்கு சேதாரம் ஏற்படாதே என்று யோசிக்கிறது...’’

‘‘வளர்ப்புப் பிராணியாக இருந்தாலும் தந்திரமாகத்தான் புலி இருக்கிறது!’’
‘‘தம் கோடுகளை அவை மறைப்பதில்லை என சில கணங்களுக்கு முன் தாங்கள்தானே மன்னா குறிப்பிட்டீர்கள்!’’
‘‘நிறைய குறிப்பிட்டேன். இது மட்டும்தான் உன் நினைவில்
தங்கியிருக்கிறதா..?’’

‘‘சொல்லப்படும் செய்திகளில் தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக் கொள்வதுதானே உயிரினத்தின் இயல்பு!’’
‘‘அந்த இயல்புப்படிதான் புலி நடந்து கொள்கிறதா..?’’

‘‘வளர்ப்புப் பிராணி அப்படித்தான் நடந்து கொள்கிறது மன்னா!’’
‘‘இதன் அடிப்படையில்தான் கோரிக்கை வைக்கப்பட்டதா..?’’
‘‘ஆம் மன்னா!’’

‘‘இதை சொல்லத்தான் புலி... உன் மொழியில் வளர்ப்புப் பிராணி... இங்கு வந்திருக்கிறதா..?’’
‘‘அதற்காகவும்தான் மன்னா..!’’
‘‘எனில் இன்னொரு காரணமும் இருக்கிறது...’’
‘‘அது மீனுக்கே தெரியும் மன்னா...’’

‘‘கேள்வி, மீனுக்குத் தெரியுமா தெரியாதா என்பதல்ல...
இன்னொரு காரணத்தைச் சொல்ல தன் வளர்ப்புப் பிராணிக்கு ரிஷபம் உத்தரவிட்டுள்ளதா இல்லையா என்பதுதான்!’’  
‘‘இதற்கு உத்தரவிட வேண்டுமென்று அவசியமில்லை மன்னா...கடலின் நீள அகலங்களும், ஆழங்களும் எருதை விட, ரிஷபத்தை விட, புலியை விட மீனுக்கு நன்றாகத் தெரியும் என்பது...’’

‘‘...ரிஷபத்துக்கும் வளர்ப்புப் பிராணியான புலிக்கும் நன்றாகவே தெரியும்! அப்படித்தானே..?’’
‘‘அப்படியேதான் மன்னா...’’
‘‘இப்படி சொல்லச் சொன்னது...’’
‘‘...ரிஷபமல்ல மன்னா...’’
‘‘வளர்ப்புப் பிராணியே சுயமாகச் சொல்கிறதா..?’’

‘‘ஆம் மன்னா! இப்படி சுயத்துடன் புலியை வாழ ரிஷபம் அனுமதித்திருப்பதால்தான்... ரிஷபம், புலியின் அன்னையாக மாறியிருக்கிறது... ரிஷபத்தைக் காக்க புலி முன்னால் நிற்கிறது..!’’‘‘மீனிடம் தைரியமாக நின்று இதை சொல்கிறது! ஆனால், தொடக்கத்தில் கேட்ட இரு கேள்விகளுக்கு மட்டும்் விடை அளிக்காமல் பேச்சை மாற்றுகிறது...’’ தாயத்தை உருட்டினார் அரிகேசரி மாறவர்மர்.

‘‘மன்னா...’’
‘‘சரி... மூன்றாவது கேள்விக்காவது பதிலைச் சொல்...என் முன் இங்கு அமர்ந்திருப்பது ரிஷபத்தின் உண்மையான வளர்ப்புப்
பிராணியா அல்லது எருதின் வளர்ப்புப் பிராணியா..?’’‘‘மன்னா...’’‘‘சொல்! நீ உண்மையான கரிகாலனா அல்லது கரிகாலன்
வேடத்தில் வந்திருக்கும் போலியா?!’’

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16855&id1=6&issue=20200522

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அத்தியாயம் 100

‘‘ஏன் இப்படி திகைத்து அதிர்ச்சியில் சிலையாக மாறியிருக்கிறாய் கரிகாலா..?’’ வாய்விட்டுச் சிரித்தார் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மர். ‘‘இப்படியொரு நிலையைத்தானே சாளுக்கியர்கள் மத்தியில் சிவகாமியை முன்வைத்து சிருஷ்டித்திருக்கிறாய்..? ராஜ தந்திரத்தில் இது அனுமதிக்கப்பட்டதுதான் என்றாலும் நீ செய்யும் காரியம் கத்தியின் மீது நடப்பதற்கு சமம்... சற்றே பிசகினாலும் நீ விசுவாசம் காட்டும் பல்லவர்களையும் அது பதம் பார்த்துவிடும்...’’‘‘மன்னா...’’

‘‘நீ உண்மையான கரிகாலனா அல்லது கரிகாலன் வேடத்தில் வந்திருக்கும் போலியா என்று உன்னைப் பார்த்து நான் கேட்டது உன்னால் உருவாக்கப்பட்ட சூழலை உனக்கே புரிய வைக்கத்தான்...’’‘‘மன்னா...’’

‘‘உன்னை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் கரிகாலா... உன்னளவு திறமை வாய்ந்தவனை இதுவரை நான் கண்டதில்லை. நல்லவேளையாக நீ பல்லவ இளவரசனாக இல்லை... இல்லையென்றால் என் மகன் மிகப்பெரிய எதிரியை தன் ஆட்சிக் காலத்தில் எதிர்கொண்டிருப்பான்...’’  
கரிகாலன் சற்றே முன்நகர்ந்து பாண்டிய மன்னரின் கால்களைத் தொட்டு வணங்கினான்.

நெகிழ்ச்சியுடன் அவனது தோள்களைத் தொட்டுத் தூக்கினார் அரிகேசரி மாறவர்மர். ‘‘நீ சிருஷ்டித்திருப்பது பத்மவியூகம். அபிமன்யு போல் அல்லாமல் இந்த பத்மவியூகத்திலிருந்து நீ சேதாரமின்றி வெளியேறுவாய் என்று நான் நம்புகிறேன்...’’‘‘தங்கள் நம்பிக்கையை கண்டிப்பாகக் காப்பாற்றுவேன் மன்னா...’’ ‘‘நல்லது... உன்னால் பாண்டியர்களின் பாதாளச் சிறைக்கு அனுப்பப்பட்ட சிவகாமி யார் என்றெல்லாம் கேட்கப் போவதில்லை... அவள் உன் காதலியா அல்லது பல்லவர்களின் இளவரசியா அல்லது உண்மையான சிவகாமியின் தோற்றத்தில் அனுப்பப்பட்ட சாளுக்கியர்களின் ஒற்றர் படைத்தளபதியா என்பதை எல்லாம் எங்கள் ஒற்றர் படை ஏற்கனவே என்னிடம் தெரிவித்துவிட்டது...’’

‘‘பாண்டியர்களின் ஒற்றர் படையை ஒருபோதும் நான் குறைத்து மதிப்பிடவில்லை மன்னா...’’‘‘அதற்கு மாறாக உனது திறமையின் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்திருக்கிறாய்...’’ கரிகாலனின் கருவிழிகளை உற்றுப் பார்த்தபடியே சொன்னார் பாண்டிய மன்னர்.இம்முறை அவரது பார்வையை எதிர்கொள்ளாமல் தலைகுனிந்தான் கரிகாலன்.‘‘தலையைக் குனிவது புலிக்கு அழகல்ல... என்னதான் உன்னை நீயே வளர்ப்புப் பிராணி என்று கூறிக்கொண்டாலும் மீனைப் பொறுத்தவரை என்றுமே நீ புலிதான்... சாளுக்கியர்களுக்கு எதிராக நீ நடத்தி வரும் நாடகம் பாண்டிய நாட்டைப் பாதிக்காத வரையில் ஒரு பார்வையாளனாக நான் வேடிக்கை பார்ப்பேன்... இதை மட்டும் இந்தக் கணத்தில் என்னால் சொல்ல முடியும்... உறுதி அளிக்க முடியும்...’’‘‘நன்றி மன்னா... இந்த நாடகத்தில் மீனுக்கு எந்த கதாபாத்திரமும் இல்லை... இதை என்னால் இந்தக் கணத்தில் அழுத்தம்திருத்தமாகச் சொல்ல முடியும்...’’‘‘அதங்கோட்டாசான் கூடவா..?’’

அரிகேசரி மாறவர்மர் இப்படிச் சொன்னதும் கரிகாலன் நிமிர்ந்து அவரைப் பார்த்தான்.‘‘பல்லவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் மட்டுமல்ல... சாளுக்கியர்களின் ஒவ்வொரு நகர்வையும் மட்டுமல்ல... உனது ஒவ்வொரு காலடிச்சுவட்டையும் கூட எனது ஒற்றர்கள் கண்காணித்து வருகிறார்கள்... காஞ்சி சிறையில் நீயும் சிவகாமியும் எதைத் தேடினீர்கள்... இப்பொழுது மதுரை சிறைக்கு உன்னால் எதற்காக சிவகாமி அனுப்பப்பட்டிருக்கிறாள்...’’
‘‘என்னால் சிவகாமி அனுப்பப்படவில்லை மன்னா... அவள் பல்லவ இளவரசியாக வேடமிட்டிருக்கும் சாளுக்கிய ஒற்றர் படைத் தலைவி...’’
‘‘என்னிடமே இந்த விளையாட்டைத் தொடர்கிறாயா..?’’‘‘அதில்லை மன்னா... நான் சொல்ல வருவது...’’
‘‘...உண்மை எனக்குத் தெரியும்... ஆட்டம் போதும். முடித்துக் கொள்...’’‘‘மன்னா...’’

‘‘பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மரின் தாயாதியான ஹிரண்ய வர்மர், உங்களுக்கு அளித்த ஆயுதக் குவியலும் அக்குவியல் இருந்த மலைக் குகையும் உனக்கு நினைவில் இருக்கிறதா..?’’கரிகாலன் தலையசைத்தான்.‘‘அந்தக் குகையின் மற்றொரு மூலையில் இருக்கும் பாதாளச் சிறையில்தான்உண்மையானசிவகாமியை சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர் அடைத்து வைத்திருக்கிறார்... என் கணிப்பு சரியெனில், இந்நேரம் அவர் அங்கு சென்று, தான் அடைத்து வைத்திருக்கும் சிவகாமி மயக்கத்தில் இருக்கிறாளா என பரிசோதித்திருப்பார்...’’கரிகாலன் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக நின்றான்.

‘‘பிடி இறுகி வருகிறது கரிகாலா... உடனடியாக நீ சிருஷ்டித்த பத்மவியூகத்தில் இருந்து வெளியே வா...’’‘‘இந்தச் சிறியவன் மீது தாங்கள் கொண்டிருக்கும் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி மன்னா... தாங்கள் கூறியபடியே வெளியே வந்து விடுகிறேன்...’’‘‘என்னைத் திருப்திப்படுத்தச் சொல்கிறாயோ அல்லது உண்மையிலேயே வெளியே வரப் போகிறாயோ... அது உன் விருப்பம்... ஆனால் ஒன்று - பொழுது விடிவதற்குள் அதங்கோட்டாசானையும் அவரால் பயிற்சி அளிக்கப்பட்ட வீரர்களையும் மதுரையில் இருந்து வெளியேற்றிவிடு... இந்த இரவு மட்டுமே உனக்கு அவகாசம்...’’
‘‘மன்னா...’’

‘‘எனக்கு பாண்டியர்களின் நலம் முக்கியம் கரிகாலா... பல்லவ - சாளுக்கிய பிரச்னையில் என் மக்களின் தலை உருள்வதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது...’’ ‘‘அப்படி நடக்காது மன்னா...’’‘‘நடக்காமல் இருப்பதே பல்லவர்களுக்கும் உனக்கும் நல்லது!’’ அழுத்திச் சொன்ன பாண்டிய மன்னர், விடை கொடுப்பதற்கு அறிகுறியாக அறைக் கதவைப் பார்த்தார்.

புரிந்துகொண்டதுபோல் கரிகாலன் தலைவணங்கினான். ‘‘நன்றி மன்னா... நான் வருகிறேன்...’’அறைக் கதவை அவன் நெருங்கியபோது அரிகேசரி மாறவர்மர் அழைத்தார். ‘‘கரிகாலா...’’நின்று திரும்பி அவரைப் பார்த்தான். ‘‘மன்னா...’’‘‘சில கணங்களுக்கு முன் ரிஷபம் எருது குறித்து உரையாடினோம் அல்லவா..?’’‘‘ஆம் மன்னா...’’‘‘அப்பொழுது மருந்துக்குக் கூட நான் வராகத்தைக் குறிப்பிடவில்லை...’’‘‘காரணம் புரிந்தது மன்னா... ரிஷபமும் எருதும் ஒன்றுதான் என்பதை குறிப்பால் உணர்த்தினீர்கள்... அதாவது பல்லவர்களும் சாளுக்கியர்களும் வேறு வேறல்ல... சாதவாகனப் பேரரசில் சிற்றரசர்களாக இருந்தவர்கள்... ஒரே உறையில் இருந்த இரு கத்திகள் என்பதாலேயே தொடக்கம் முதல் உரசிக் கொண்டிருக்கிறார்கள்... இன்றைய வராகம் நிஜத்தில் எருதுதான்... என்பதை இந்த சிறியவனுக்குப் புரியவைக்க முயற்சித்தீர்கள்...’’அரிகேசரி மாறவர்மரின் கண்களில் கனிவு வழிந்தது. ‘‘உன் முயற்சி வெற்றி பெற வேண்டுமென்று எல்லாம்வல்ல மதுரை மீனாட்சியைப் பிரார்த்திக்கிறேன்...’’மீண்டும் அவரை வணங்கிவிட்டு கரிகாலன் அறைக்கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான்.

அவனது வருகைக்காகவே அங்கு பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரன் நின்று கொண்டிருந்தான்!
‘‘உறங்கச் செல்லவில்லையா..?’’ கரிகாலன் ஆச்சர்யத்துடன் கேட்டான்.‘‘உன்னுடன் இந்த இரவு முழுக்க பேசிகொண்டிருக்க வேண்டுமென்று தோன்றியது... உனக்கொன்றும் பிரச்னையில்லையே..?’’ இரணதீரன் புருவத்தை உயர்த்தினான்.‘‘பிரச்னையா..? மகிழ்ச்சியாக இருக்கிறது... வா...’’ புன்னகையுடன் சொல்லிவிட்டு இரணதீரனுடன் நடந்தான்.

இன்றிரவு முழுக்க உன் தந்தையின் கட்டளைப்படி என்னைக் கண்காணிக்கப் போகிறாய்... அப்படித்தானே..?’ மனதுக்குள் கரிகாலன் சொல்லிக் கொண்டான். அதேநேரம் வேறொரு வினாவும் அவன் உள்ளத்தில் பூத்தது. ‘ஆமாம்... தாயத்தை தரையில் உருட்டாமல் தன் கைகளிலேயே பாண்டிய மன்னர் உருட்டிக் கொண்டிருந்தார்... இதற்கு என்ன அர்த்தம்..?’

‘‘ம்...’’ கனைத்துவிட்டு தன் கையில் இருந்த பட்டுச் சுருளை சாளுக்கிய இளவரசனான விநயாதித்தனிடம் கொடுத்தார் ராமபுண்ய வல்லபர்.
மவுனமாக அதை வாங்கிப் படித்தான் விநயாதித்தன்.‘இன்றிரவு மதுரையின் மேல் புறாக்கள் பறக்கும்... அதுதான் மதுரையில் பயிற்சி பெற்று வரும் பல்லவ வீரர்களுக்கான சமிக்ஞை. இதனைத் தொடர்ந்து கருக்கலில் மதுரைக் கோட்டைக் கதவுகள் திறக்கப்பட்டதும் வணிகர்களோடு வணிகர்களாக அந்த வீரர்கள் வெளியேறுவார்கள்.

வடக்கு நோக்கிச் செல்லும் அவர்களை மதுரை கோட்டைக்கு மூன்று கல் தொலைவில் வளைத்துப் பிடிக்கவும்...’
‘‘நம்மிடம் சிவகாமி ரகசியமாகக் கொடுத்து அனுப்பிய செய்தி இதுதான்...’’ தன் அறையில் இருந்த சாளரத்துக்கு வெளியே வானத்தைப் பார்த்தபடி ராமபுண்ய வல்லபர் சொன்னார். ‘‘இது நாமும் அறிந்த செய்திதான்... என் ஊகம் சரியெனில், மதுரை மன்னரும் இதை அறிவார்... இப்படி எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தை ரகசிய செய்தியாக நம்மிடம் ஏன் சிவகாமி கொடுக்க வேண்டும்..?’’
விநயாதித்தன் அமைதியாக அவரைப் பார்த்தான்.

‘‘இந்தச் செய்தியை புறா வழியே சிவகாமிக்குத் தெரியப்படுத்தியவர் யாராக இருக்கும் விநயாதித்தா..?’’
‘‘தெரியவில்லை குருநாதா...’’‘‘அதுவும் சரியாக பல்லவ இளவரசருக்கு நாம் இரவு விருந்து அளிக்கும்போது புறா வழியே சிவகாமிக்கு செய்தி வரவேண்டுமா..? ஒற்றர் படையில் கடைநிலை வீரனாக இருப்பவன் கூட அதுபோன்ற சூழலில், தான் அனுப்பும் செய்தி சேர வேண்டும் எனக் கணக்கிட மாட்டானே..?’’விநயாதித்தன் திரும்பி, மூடியிருந்த அறைக்கதவை உற்றுப் பார்த்தான்.

‘‘எதற்காக அறைக்கதவை ஆராய்கிறாய் விநயாதித்தா..?’’ திரும்பி சாளுக்கிய இளவரசனை நேருக்கு நேர் பார்த்தபடி கேட்டார் சாளுக்கிய போர் அமைச்சர்.‘‘பதிலுக்காக குருதேவா...’’ நிதானமாகச் சொன்னான் விநயாதித்தன்.‘‘என்ன பதில்..?’’‘‘நீங்கள் அனுப்பிய வீரர்களிடம் இருந்து வரப்போகும் பதில்!’’பெருமையுடன் தன் சீடனை அவர் பார்த்தபோது, அறைக்கதவைத் திறந்துகொண்டு நான்கு வீரர்கள் உள்ளே நுழைந்தார்கள்.

அவர்கள் தூக்கி வந்தது கடிகை பாலகனை என்பது தீபத்தின் ஒளி இல்லாமலேயே ராமபுண்ய வல்லபருக்கும் விநயாதித்தனுக்கும் புரிந்தது.
வந்த வீரர்களில் தலைவன் போல் இருந்தவன் முன்னால் வந்து சாளுக்கிய போர் அமைச்சரையும் சாளுக்கிய இளவரசனையும் வணங்கினான். ‘‘மதுரையிலேயேதான் இவர் பதுங்கி இருந்தார்...’’ கடிகை பாலகனை சுட்டிக் காட்டினான். ‘‘எந்த இடத்தில்..?’’ கேட்ட ராமபுண்ய வல்லபரின் கண்கள் ஒளிர்ந்தன.

‘‘பாதாளச் சிறைக்குச் செல்லும் வழியில்!’’
ராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
‘‘இவரிடம் இருந்து சிலவற்றைக் கைப்பற்றி இருக்கிறோம்...’’சொன்ன வீரர்களின் தலைவனைப் பார்த்தான் விநயாதித்தன். ‘‘புறாக்களையா..?’’
‘‘இல்லை இளவரசே...’’‘‘பிறகு..?’’

‘‘செய்திகளை...’’ என்றபடி 15 பட்டுச் சுருள்களை எடுத்து வீரர்களின் தலைவன் காண்பித்தான். ‘‘அனைத்திலும் ஒரே செய்திதான் ஒரே மாதிரியாக எழுதப்பட்டுள்ளது...’’‘‘என்ன செய்தி அது..?’’ நாசி அதிர சாளுக்கிய போர் அமைச்சர் கேட்டார்.‘‘இன்றிரவு மதுரையின் மேல் புறாக்கள் பறக்கும்... அதுதான் மதுரையில்  பயிற்சி பெற்று வரும் பல்லவ வீரர்களுக்கான சமிக்ஞை.

இதனைத் தொடர்ந்து  கருக்கலில் மதுரைக் கோட்டைக் கதவுகள் திறக்கப்பட்டதும் வணிகர்களோடு  வணிகர்களாக அந்த வீரர்கள் வெளியேறுவார்கள். வடக்கு நோக்கிச் செல்லும்  அவர்களை மதுரைக் கோட்டைக்கு மூன்று கல் தொலைவில் வளைத்துப் பிடிக்கவும்...’’ படுத்த நிலையில் கரிகாலனைக் கொத்தாகத் தன் தலைக்கு மேல் தூக்கினாள் சிவகாமி.சரியாக அவளது அதரங்களுக்கு நேராக வந்ததும் அதில் தன் உதடுகளைப் பதித்தான் கரிகாலன்.நான்கு உதடுகளும் பின்னிப் பிணைந்தன!

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16879&id1=6&issue=20200529

Link to comment
Share on other sites

ரத்த மகுடம்-101

நகரம் என்பது மண் அல்ல. நகரம் என்பது மனிதர்களும் அல்ல. நகரம் என்பது நினைவுகள். நகரம் அல்லாத பிராந்தியங்களில் வசிப்பவர்களுக்கு மண்ணும் மனிதர்களும் முக்கியமாகத் தெரிவார்கள். நகரவாசிகளுக்கு நினைவுகள் மட்டுமே நெடுந்துணை. ஏனெனில் நகரங்களுக்கு வந்து போகிறவர்கள் மிகுதி.
22.jpg
நிலைத்திருப்போர் ஒப்பீட்டளவில் குறைவானவர்கள். அதனால்தான் காலங்கள் உருண்டோடினாலும் நகரமே அழிந்தாலும் நகர நினைவுகள் மட்டும் தலைமுறைதோறும் தொடர்கிறது. நினைவுகளின் தொகுப்புதானே தொன்மங்களின் அடித்தளம்?
 
இல்லாத நகரத்துக்கே இது பொருந்தும் என்னும்போது மூத்த குடியின் மூத்த நகரான மதுரைக்கு இது உச்சமாக அல்லவா பொருந்தும்? அதுவும் காலங்களைக் கடந்தும் தன் கம்பீரத்தையும் ஜொலிப்பையும் இருப்பையும் நடமாட்டத்தையும் இழக்காமல் இருக்கும் நகரமல்லவா மதுரை..?
 

அதனால்தானே மதுரை குறித்த நினைவுகளின் தொகுப்பு பரிபாடல்களுக்கு முன்பே தோன்றி சிலப்பதிகாரம், மணிமேகலை, மதுரைக் காஞ்சியில் நிலைபெற்று அரிகேசரி மாறவர்மரின் ஆட்சிக் காலத்திலும் தன் தடங்களைப் பதித்து வருகிறது...

இதனால்தானே ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் இமயத்தை விட உயர்ந்ததாக மதுரை நினைவுகள் வீற்றிருக்கின்றன?!
இதை மெய்ப்பிப்பது போலவும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அதைக் கடத்தவும் தங்கள் பங்களிப்பைச் செய்வது போல்
அன்றைய இரவுக் காவல் பணிக்கு நியமிக்கப்பட்ட பாண்டிய வீரர்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இமயம் கொலுவீற்றிருந்தது! அது அவர்களது நடை உடை பாவனைகளிலும் பிரதிபலித்தது! உறங்கா நகரத்தை உறங்க வைக்க அவர்கள் முயற்சிக்கவேயில்லை. மாறாக, உறங்காதவர்களுக்கும் உறங்குபவர்களுக்கும் பாதுகாப்பு அளித்துக் கொண்டிருந்தார்கள்!

குறிப்பாக, மதுரைக்கே அழகு சேர்க்கும் வைகை நதிக்கரையில்!இரவின் இரண்டாம் ஜாமம் முடிந்து மூன்றாம் ஜாமம் தொடங்கப் போவதற்கான அறிகுறிகளை நட்சத்திரங்கள் அறிவித்துக் கொண்டிருந்தன. அதைக் குறித்து சிறிதும் கவலைப்படாமல் நதிக்கரையில் இருந்த சுங்கச் சாவடி பகலைப் போலவே பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது.

ஆங்காங்கே தூண்களில் பொருத்தப்பட்ட வளையங்களில் செருகப்பட்ட தீப்பந்தங்களின் ஒளி, இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தது. கணக்கர்கள் ஓய்வில்லாமல் சுவடிகளில் சரக்குப் போக்குவரத்தின் விவரங்களை எழுதிக் கொண்டிருந்தார்கள். அருகிலேயே எடை போடும் கருவி இருக்க... எடைக்குத் தகுந்தபடி நாணயங்களின் எண்ணிக்கையை அளவிட்டு வசூலிக்கும் பணியில் மும்முரமாக இருந்தார் வருவாய் அலுவலர்.

உள்நாட்டுச் சந்தைகளுக்கான பொருட்கள் கொற்கை துறைமுகத்தில் இருந்து சிறு படகுகள், தோணிகள் வழியே வைகை
நதியில் பயணித்து மதுரைக்கு வந்தன. அப்படி வந்த படகுகளும் தோணிகளும் சுங்கச் சாவடிக்குள் ஒன்றன்பின் ஒன்றாக நுழைய வரிசைகட்டி நின்றன.
மற்ற தேசங்களுக்கு ஏற்றுமதியாக வேண்டிய பொருட்கள் மாட்டு வண்டியில் சுங்கச் சாவடிக்குக் கொண்டுவரப்பட்டு சாவடியின் மறுபுறத்தில் இறக்கப்பட்டன.

இறங்கிய பொருட்கள் அடங்கிய மூட்டையைப் பிரித்துப் பார்த்து சோதனையிட்ட அரசாங்க ஊழியர்கள் பின்பு அவற்றை எடை போட்டனர். எந்த தேசத்துக்கு அப்பொருட்கள் செல்லப் போகிறதோ அதற்கேற்ப சுங்கத் தொகையை கணக்கர் கணக்கிட்டு அறிவித்துக் கொண்டிருந்தார்.  

அதற்கேற்ப உரிய நாணயங்களைப் பெற்றுக்கொண்ட வருவாய் அலுவலர், தன் உதவியாளர்களால் எழுதப்பட்டு தயார் நிலையில் இருந்த அத்தாட்சி ஓலையை ஒருமுறைக்கு இருமுறை படித்து சரிபார்த்துவிட்டு அரசாங்க முத்திரையைப் பொறித்துக் கொண்டிருந்தார்.

எடைபோடப்பட்டு அத்தாட்சி ஓலை வழங்கப்பட்ட சரக்கு மூட்டைகளை அந்தந்த வணிகர்களின் பணியாளர்கள் பாண்டிய வீரர்களின் மேற்பார்வையில் படகுகளிலும் தோணிகளிலும் வரிசையாக அடுக்கினர். ஒவ்வொரு மூட்டையிலும் அரக்கினால் முத்திரை பதிக்கும் பணியை இருவர் சளைக்காமல் செய்தனர்.

மொத்தத்தில் படகுகளும் தோணிகளும் வைகைக் கரையை விட்டு நகர்வதும் கரைக்கு வருவதுமாக இருந்தன. பகலிலாவது உச்சிப் பொழுதில் சில நாழிகைகள் ஓய்வு கிடைக்கும். இரவில் இயற்கை உபாதைகளைக் கழிக்கக் கூட நகர முடியாதபடிக்கு பணிச்சுமை அழுத்தும். அதுவும் துறைமுகங்களில் நங்கூரமிட்ட பிற தேசத்து பெரும் மரக்கலங்கள் கருக்கல் சமயத்தில் தம் பயணத்தைத் தொடர தயாராகும் என்பதால் அதற்குள் சரக்குகளைச் சேர்க்கவேண்டுமே என வணிகர்கள் பதற்றத்துடன் கூச்சலிட்டு தங்கள் பணியாளர்களை வேலை வாங்கிக் கொண்டிருந்தனர்.

இப்படி அனைவருமே தத்தம் பணிகளில் மும்முரமாக இருந்து கூச்சலிட்டுக் கொண்டிருந்ததால் எழுந்த நானாவித ஓசைகளை அனுபவித்துக் கொண்டிருந்த வைகை, ‘பார்த்தாயா எனது முக்கியத்துவத்தை’ என இரு கரைகளிடமும் மாறி மாறி கேட்டுக் கொண்டிருந்தது!
‘நாங்கள் மட்டும் சளைத்தவர்களா... எங்களை மிதித்துவிட்டுத்தானே பொருட்களை உன் மீது ஏற்றுகிறார்கள்...’ என இரு கரைகளும் தங்கள் மீது மோதிய வினாக்களுக்கு விடையளித்துக் கொண்டிருந்தன.

இவற்றையெல்லாம் கேட்டபடி தனக்குள் சிரித்துக் கொண்டான் அந்த சீனன். யார் கண்ணிலும் படாதவாறு சுங்கச் சாவடிக்கு ஒரு காத தொலைவில் இருந்த புதருக்குள் அமர்ந்திருந்த அவன், வைகையில் தன் கால்களை நனைத்தபடி வானத்தை ஏறிட்டான். தனக்குள் நேரத்தைக் கணக்கிட்டான்.
பிறகு சுங்கச் சாவடி பக்கம் தன் பார்வையைச் செலுத்தினான். இமைக்காமல் அங்குள்ள நடமாட்டத்தையே ஆராய ஆரம்பித்தான்.
‘‘யார் அந்த 15 பேர்..?’’ கர்ஜித்தார் ராமபுண்ய வல்லபர்.

‘‘எதற்காக ஒரே செய்தியை ஒரே மாதிரி எழுதியிருக்கிறாய்..?’’ குரலை உயர்த்தாமல், அதே நேரம் அழுத்தத்தைக் குறைக்காமல் வினவினான் விநயாதித்தன்.அலட்சியமாக அவர்கள் இருவரையும் நோக்கினான் கடிகை பாலகன்.

‘‘நாங்கள் இருவரும் கேட்டது காதில் விழவில்லையா..?’’ அவன் சிகையைப் பிடித்து உலுக்கினார் ராமபுண்ய வல்லபர்.
‘‘விழுந்தது...’’ கண்களால் சிரித்தான் கடிகை பாலகன்.விநயாதித்தன் அவனை உற்றுப் பார்த்தான். ‘‘பிறகு ஏன் பதில் சொல்லாமல் இருக்கிறாய்..?’’
‘‘கேள்வி தவறாக இருப்பதால்..!’’‘‘என்ன தவறைக் கண்டுவிட்டாய்..?’’
‘‘15 என்றார் சாளுக்கிய போர் அமைச்சர்...’’‘‘ம்...’’

‘‘ஆனால், 16 அல்லவா இளவரசே..? சிவகாமி வழியாக உங்களிடம் வந்து சேர்ந்ததையும் கணக்கில் சேர்க்க வேண்டுமல்லவா..?’’
ராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
‘‘சிவகாமிக்கு..?’’

‘‘அனுப்பியது நான்தான் ராமபுண்ய வல்லபரே...’’ அவர் கண்களை நேருக்கு நேர் பார்த்தபடி சொன்னான் கடிகை பாலகன்.
‘‘அவளுக்கு ஏன் அனுப்பினாய்..?’’ விநயாதித்தன் படபடத்தான்.‘‘சாளுக்கிய மன்னர்தான் அனுப்பச் சொன்னார்...’’
‘‘என் தந்தையேதான் அதே செய்தியை அதேபோல் 15 பட்டுத் துணிகளில் தனித்தனியாக எழுதச் சொன்னாரா..?’’
‘‘ஆம் இளவரசே! அவரது கட்டளைப்படிதான் நடக்கிறேன்!’’

‘‘எதற்காக ஒரே செய்தியை 16 துணிகளில் எழுதச் சொன்னார்..?’’
‘‘பாண்டியர்களையும் கரிகாலனையும் ஏமாற்றி திசைதிருப்ப...’’

‘‘இதை நாங்கள் நம்புவோம் என நினைக்கிறாயா..?’’ ராமபுண்ய வல்லபரின் நயனங்கள் தீயைக் கக்கின.
‘‘நம்பாவிட்டால் இதைக் காண்பிக்கச் சொன்னார்...’’ என்றபடி வராக உருவம் பொறித்த மோதிரம் ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்தான்.
அதைப் பெற்றுக்கொண்டு, எரிந்துகொண்டிருந்த விளக்கின் அருகில் சென்றவர், எண்ணெய்க்கசடை எடுத்து மோதிரத்தின் மீது தடவினார். பின்னர் தன் அங்கவஸ்திரத்தால் அதை பளபளவென்று தேய்த்தார். அவர் முகத்தில் குழப்பத்தின் ரேகைகள் படர்ந்தன. ‘‘மன்னரின் அந்தரங்க முத்திரைதான்... குழப்பமாக இருக்கிறது...’’ முணுமுணுத்தபடி விநயாதித்தனிடம் அந்த மோதிரத்தைக் கொடுத்தார்.

தன் சிகையைச் சரிசெய்தபடி இமையோரம் புன்னகைத்தான் கடிகை பாலகன்.அதைக் கவனித்த விநயாதித்தனின் புருவங்கள் முடிச்சிட்டன. ராமபுண்ய வல்லபரிடம் இருந்து பெற்ற மோதிரத்தை தீப்பந்தத்தின் அருகில் உயர்த்திப் பிடித்து ஆராய்ந்தான்.
பின்னர் நிதானமாக நடந்து கடிகை பாலகனின் அருகில் வந்தான்.

இமைக்கும் பொழுதில் ஓங்கி அவனை அறைந்தான்.
வலி தாங்காமல் சுருண்டு விழுந்தான் கடிகை பாலகன்.
‘‘இவனை நிற்க வைத்து முகத்தில் தண்ணீர் தெளியுங்கள்...’’
தங்கள் இளவரசரின் கட்டளையை அங்கிருந்த வீரர்கள் கணத்தில் நிறைவேற்றினார்கள்.

உதட்டோரம் குருதி வழிய மயக்கம் முழுமையாகத் தெளியாத நிலையில் விநயாதித்தனை ஏறிட்டான் கடிகை பாலகன்.
‘‘உண்மையைச் சொல்...’’ அடிக்குரலில் சீறிய விநயாதித்தன், கடிகை பாலகன் சுதாரிப்பதற்குள் அவன் நாசியில் ஒரு குத்துவிட்டான்.
உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்த அரிகேசரி மாறவர்மர், மெல்ல படுக்கையை விட்டு எழுந்தார்.  

அருகில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பாண்டிமாதேவியைக் கண்டதும் தனக்குள் புன்னகைத்தார். ‘கொடுத்து வைத்தவள்... கட்டியவனை நம்பி நிம்மதியாக உறங்குகிறாள்...’ஓசை எழுப்பாமல் கட்டிலை விட்டு இறங்கியவர் சாளரத்தின் அருகில் வந்தார். வானத்தை ஏறிட்டார். மதுரை மாநகரத்தை ஆராய்ந்தார். ‘மக்களில் பலர் உறங்குகிறார்கள்... சிலர் இரவிலும் தங்கள் தொழிலை கவனிக்கிறார்கள். எல்லோர் மனதிலும், நம் நலத்தை கவனிக்க மன்னன் இருக்கிறான் என்ற நம்பிக்கை இருக்கிறது... அந்த நம்பிக்கைக்கு நான் பாத்திரமானவன்தானா..? நம்பிக்கையைக் காப்பாற்றும் சக்தி எனக்கு இருக்கிறதா..?’ பெருமூச்சுடன் மீனாட்சியம்மன் கோபுரத்தைப் பார்த்தார்.

‘அன்னையே... உன் மகனின் நிலையைப் பார்த்தாயா..? இக்கணம் வரை பாண்டியர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை... ஆனால், அடுத்த கணத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாமே..? பல்லவ சாளுக்கிய பிரச்னையில் இதுவரை பாண்டியர்கள் சம்பந்தப்படாமல் இருக்கிறார்கள். ஆனால், விதி தொடர்புபடுத்திவிடும் போல் இருக்கிறதே..?

விருந்தினராக வந்திருக்கும் சாளுக்கிய இளவரசனும் நிம்மதியாக உறங்குகிறான்... தன் அத்தை வீட்டுக்கு வந்திருக்கும் பல்லவ உபசேனாதிபதியான சோழ இளவரசனும் எவ்வித கவலையும் இன்றி நித்திரையில் இருக்கிறான். ஆனால், அவ்விருவர் பிரச்னையிலும் சம்பந்தப்படாத பாண்டிய மன்னனான நான் மட்டும் உறக்கம் வராமல் தவிக்கிறேன்... இதென்ன சோதனை..? இன்றிரவு ஏதோ நடக்கப் போகிறது என உள்ளுணர்வு சொல்கிறது... அப்படி நடப்பது பாண்டி யர்களின் எதிர்காலத்துக்கு நன்மையைச் செய்யுமா, அல்லது...’

நினைத்துப் பார்க்க முடியாமல் அரிகேசரி மாறவர்மர் ஆலய கோபுரத்தை நோக்கி கையெடுத்து கும்பிட்டார். ‘அன்னையே... இந்த தேசத்தைக் காப்பாற்று...’சில கணங்கள் வரை இமைகளை மூடி தியானத்தில் ஆழ்ந்தவர் ஏதோ முடிவுடன் கண்களைத் திறந்தார். திரும்பி அடிமேல் அடியெடுத்து வைத்து அறைக்கதவின் அருகில் வந்தார். ஓசை எழுப்பாமல் தாழ்ப்பாளை அகற்றி வெளியே வந்தார்.சட்டென காவலுக்கு நின்றிருந்த வீரன் வணங்கினான்.

கண்களால் அவனை எச்சரித்துவிட்டு விடுவிடுவென பாதாளச் சிறையை நோக்கி நடந்தார்.‘‘சும்மா இருங்கள்...’’ சிணுங்கியபடி, தன் கொங்கைகளை நோக்கி நகர்ந்த கரிகாலனின் கைகளைப் பிடித்து தடுத்தாள் சிவகாமி.‘‘சும்மா இருந்தால் சுதந்திரம் எப்படி கிடைக்கும்..?’’ கேட்டபடி அவளது நாபிக்கமலத்தில் முத்தமிட்டான்.பாதாளச் சிறையின் கல்தரையும் பட்டு மெத்தையாக சிவகாமிக்கு இனித்தது!

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16905&id1=6&issue=20200605

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

102

‘‘சுதந்திரத்துக்காக கச்சையின் மீது கை வைக்க வேண்டுமா..?’’ கரிகாலனுக்கு மட்டும் கேட்கும் வகையில் சிவகாமி முணுமுணுத்தாள்.‘‘ஆம்... பூரண சுதந்திரம்தானே பல்லவர்களின் லட்சியம்!?’’ கரிகாலனின் உதடுகள் அவள் செவியை வருடின.தன் உடலே யாழ் ஆக மாற... தேகத்தின் நரம்புகளில் இருந்து பிறந்த சப்தஸ்வரங்களால் சிவகாமி அதிர்ந்தாள். ‘‘ம்... ம்... உங்கள் போதைக்கு ஏன் பல்லவர்களை பயன்படுத்துகிறீர்கள்..?’’

20.jpg

‘‘நீ பல்லவ இளவரசியாக இருப்பதால்...’’ தன் நாக்கின் நுனியால் கச்சையை மீறிப் பிதுங்கிய அவளது கொங்கைகளின் பிளவில் கோடு கிழித்தான்.
துள்ளினாள்.

‘‘எறும்பு கடித்துவிட்டதா..?’’
புன்னகைத்தாள். ‘‘ஆமாம்... சோழ எறும்பு...’’
‘‘அது எப்படி பாண்டியர்களின் பாதாளச் சிறைக்கு வந்தது..?’’
‘‘பல்லவ இளவரசியைத் தேடி!’’ கலகலவெனச் சிரித்தாள்.

‘‘பின்னே... தேனைத் தேடித்தானே எறும்பு வரும்?!’’
‘‘அது சரி...’’ நாசிகள் அதிர புன்னகைத்தவள், ‘‘மிக்க மிக்க... நன்றி...’’ என்றாள்.‘‘எதற்கு..? தேனைச் சுவைக்க எறும்பு முற்படுவதற்கா..?’’ உதடுகளால் வினவியவன் தன் கரங்களை அவளது இடுப்புக்குக் கீழ் கொண்டு சென்றான்.
‘‘அங்கே என்ன தேடுகிறீர்கள்..?’’
‘‘தேனைத் தேடிச் சென்ற எறும்பு கடித்த இடத்தை! ஒத்தடம் தர வேண்டாமா..?’’
‘‘அவசியமில்லை...’’

‘‘வலிக்கவில்லையா..?’’
‘‘இன்பமாக இருக்கிறது!’’
‘‘பிறகு ஏன் துள்ளினாய்..?’’
‘‘உங்கள் நாக்கின் நுனியால் கோடு கிழித்ததால்...’’ என்று அவளால் எப்படிச் சொல்ல முடியும்?
மவுனமாக தரையில் நீண்டிருந்த தன் கால் கட்டை விரலால் அரைவட்டமிட்டாள்.
‘‘ஏன் பேசாமல் இருக்கிறாய்..?’’
‘‘சொற்களைத் தொலைத்துவிட்டேன்...’’

கரிகாலன் போலியாக அதிர்ந்தான். ‘‘நல்லவேளை இதை என்னிடம் சொன்னாய்...’’
‘‘வேறு யாரிடம் சொல்லவில்லை என்கிறீர்கள்..?’’
‘‘ராமபுண்ய வல்லபரிடம்!’’
‘‘அந்த வயதானவரை எதற்கு வம்புக்கு இழுக்கிறீர்கள்..?’’

‘‘நீ சொன்னதுடன் முழுமையாக சம்பந்தப்பட்டவர் சாளுக்கிய போர் அமைச்சரான அவர் என்பதால்!’’
‘‘புரியவில்லை...’’‘‘உனக்கா..?’’
‘‘என்ன மறுபடி மறுபடி புதிர் போடுகிறீர்கள்..?’’ குழப்பமும் கோபமுமாக சட்டென எழுந்தாள்.
‘‘புதிராகவே நீ இருப்பதால்!’’ சொன்ன கரிகாலன் அவளை இழுத்து தன் மேல் சாய்த்துக் கொண்டான்.

‘‘இதற்கெல்லாம் நான் மசிய மாட்டேன்... எதற்காக ராமபுண்ய வல்லபரை நம் உரையாடலில் இழுத்தீர்கள்..?’’
‘‘இழுக்கும்படி செய்தவளே நீதானே..?’’ தன் உள்ளங்கையை அவள் இடுப்பில் பரப்பியவன், ஆள்காட்டி விரலின் நுனியால் அவளது நாபிக் கமலத்தை துழாவினான்.சிவகாமியின் வயிற்றில் முளைத்திருந்த பூனை ரோமங்கள் சிலிர்த்தன. ‘‘அப்படியென்ன நான் செய்துவிட்டேன்..?’’ கேட்டவளின் குரலில் கோபம் குறைந்திருந்தது.

‘‘என்னதான் செய்யவில்லை..?’’ தன் உள்ளங்கையை மேல் நோக்கி நகர்த்தினான்.அவன் கரங்களைப் பிடித்து தடுத்தாள். ‘‘கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும்... மாறாக மற்றொரு வினா தொடுக்கக் கூடாது...’’

‘‘அப்படியென்ன தொடுத்துவிட்டேன்..?’’
‘‘அப்படியென்ன தொடுக்கவில்லை..?’’
‘‘இப்பொழுது பதில் கேள்வி கேட்பது யார்..?’’ கரிகாலன் நகைத்தான்.

‘‘பேச்சிலும் உங்களை வெல்ல முடியுமா..?’’
‘‘இதைத்தான் உன்னை நோக்கி மறைபொருளாகக் குறிப்பிட்டேன்...’’
‘‘எப்பொழுது..?’’ திரும்பி அவனை நோக்கி அமர்ந்தபடி கேட்டாள்.
‘‘சில கணங்களுக்கு முன்...’’
புருவங்கள் முடிச்சிட அவனை ஏறிட்டாள் சிவகாமி.

அவள் வதனத்தை தன்னிரு கரங்களிலும் ஏந்தினான் கரிகாலன். ‘‘சொற்களைத் தொலைத்துவிட்டேன் என்று நீ சொன்னதும்...’’
‘‘...நல்லவேளை இதை என்னிடம் சொன்னாய் என்றீர்கள்...’’ என்றபடி தன் முகத்தைத் திருப்பி அவன் உள்ளங்கையில் முத்தமிட்டாள்.
‘‘இதைத் தொடர்ந்த உரையாடலில் ராமபுண்ய வல்லபரின் பெயரை நான் இழுத்தேன்...’’ என்றபடி அவள் வதனத்தை தன் முகத்துக்கு நேராகக் கொண்டு வந்தான்.

‘‘ம்...’’ சிவகாமியின் நாசிகள் துடித்தன. பொங்கிய உணர்ச்சிகள் சுவாசத்தின் அளவை அதிகரிக்கவே... யாரும் அவிழ்க்காமலேயே அவளது கச்சையின் முடிச்சுகள் தளர ஆரம்பித்தன.‘‘ஏன் அவரது பெயரைக் குறிப்பிட்டேன் தெரியுமா..?’’ தன் உதட்டால் அவளது அதரங்களை உரசினான். ‘‘வாய்ச் சொல்லில் நீயே வல்லவள் என அவர் நினைக்கிறார்... உனது சொற்களின் மாயாஜாலத்தால் எதிரில் இருப்பவர்களை முழுமையாகக் குழப்பி விடுவாய்... உன் பக்கம் இழுத்துவிடுவாய்... என பரிபூரணமாக நம்புகிறார்... அப்படி அவரால் நம்பப்படும் நீ... என்னிடம் பேச முடியாமல் சொற்களைத் தொலைத்துவிட்டதாகச் சொன்னதை மட்டும் கேட்டால்..?’’‘‘கேட்டால்..?’’ அவனது நயனங்களை உற்றுப் பார்த்தபடி கேட்டாள்.

அவளது கருவிழிகளை விட்டு தன் பார்வையை அகற்றாமல் தொடர்ந்தான். ‘‘தன் நாட்டின் ஒப்பற்ற ஒற்றர் படைத் தலைவி இப்படி பேச்சிழந்து நிற்கிறாளே என்ற அதிர்ச்சியில் சிலையாகி இருப்பார்!’’  கரிகாலன் சொல்லி முடிப்பதற்குள் அவன் மார்பில் தன் இரு கரங்களையும் பதித்து அவனைத் தள்ளினாள்.இதை சற்றும் எதிர்பார்க்காத கரிகாலன், பாதாளச் சிறையின் கட்டாந்தரையில் மல்லாந்து விழுந்தான். எழுந்திருக்க முற்படவில்லை. மாறாக விட்டத்தைப் பார்த்து சிரிக்கத் தொடங்கினான்.

இதைக் கண்டு ஆவேசத்துடன் அவன் மீது சிவகாமி அமர்ந்தாள். அவன் கன்னங்களை மாறி மாறி அறைந்தாள்!
அரிகேசரி மாறவர்மர் நடப்பதை நிறுத்தினார். யோசனையில் ஆழ்ந்தவர், ஒரு முடிவுக்கு வந்ததுபோல் தன் பாதையை மாற்றி கரிகாலன் தங்கியிருந்த அறையை நோக்கிச் சென்றார்.அறைக்கதவு மூடியிருந்தது. தள்ளிப் பார்த்தார். உட்புறம் தாழிடப்பட்டிருந்தது.

ஓசை எழுப்பாமல் மெல்ல அடியெடுத்து வைத்து சாளரத்தின் அருகில் வந்தார். காற்றில் அசைந்துகொண்டிருந்த சாளரக் கதவை நன்றாகத் திறந்தார்.
அறையின் உள்ளே மங்கலாக எரிந்துகொண்டிருந்த விளக்கொளியில் பஞ்சணையும் அதில் தன் மகன் கோச்சடையன் இரணதீரன் ஆழ்ந்த நித்திரையில் இருப்பதும் தெரிந்தது. தன் நாசியை வருடிய காற்றில் மயக்கத்தின் அறிகுறியை அரிகேசரி மாறவர்மர் உணர்ந்தார்.

மயக்க சாம்பிராணியை அகலில் தூவி தன் மைந்தனை உறங்க வைத்துவிட்டு கரிகாலன் வெளியேறியிருக்கிறான்...கண்கள் சிவக்க திரும்பினார்.‘‘மன்னா... தங்களுக்காகத்தான் காத்திருக்கிறேன்!’’குரல் கேட்டு மீண்டும் சாளரத்தை நோக்கித் திரும்பினார் அரிகேசரி மாறவர்மர்.
சாளரத்தின் அந்தப் பக்கம், அறைக்குள் நின்றபடி இரணதீரன் புன்னகைத்தான்!‘‘இரணதீரா... உனக்கொன்றும்...’’‘‘ஆபத்தில்லை மன்னா..! மயக்க சாம்பிராணிக்கு மயங்குபவன் உங்கள் மைந்தனாக எப்படி இருப்பான்..?’’இமைகளை மூடி நிம்மதியுடன் திறந்தார் பாண்டிய மன்னர்.

 ‘‘கரிகாலன் எங்கே..?’’‘‘நீங்கள் எதிர்பார்த்து கணித்த இடத்துக்குச் சென்றிருக்கிறான்!’’ ‘‘எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய்..?’’
‘‘பாதாளச் சிறைக்குள் அவன் நுழைந்ததை என் இரு கண்களாலும் பார்த்தேன்!’’ கேள்வியுடன் அவனை நோக்கிவிட்டு சாளரக் கம்பிகளை அசைத்தார். கையோடு அது வந்தது! அரிகேசரி மாறவர்மரின் உதடுகளில் புன்னகை பூத்தது! ‘‘சிறைக் காவலர்கள்..?’’
‘‘கரிகாலனைத் தடுக்கவில்லை...’’‘‘ஏன்..?’’

‘‘தடுக்க வேண்டாம் என்று நீங்கள் நினைத்ததை அடியேன் உத்தரவாக பிறப்பித்தேன்!’’‘‘அப்படி நான் நினைத்தேன்...’’‘‘... என்று ஊகித்தேன் மன்னா! கரிகாலனைக் கையும் களவுமாகப் பிடிக்கத்தானே நீங்கள் திட்டமிட்டீர்கள்..?’’
பதிலேதும் சொல்லாமல் அரிகேசரி மாறவர்மர் சாளரத்துக்குள் தன் வலது கையை நுழைத்து இரணதீரனின் கேசத்தைத் தடவினார்.
தலையைக் குனிந்து அதை மவுனமாக ஏற்றான் இரணதீரன்.

அடுத்த கணம் பாண்டிய மன்னர் நெஞ்சை நிமிர்த்தியபடி பாதாளச் சிறையை நோக்கி நடக்கத் தொடங்கினார். அவர் பார்வை மீனாட்சியம்மனின் கோபுரத்தை நோக்கியது. பாண்டிய நாட்டையும் பாண்டிய தேசத்து மக்களையும் காப்பாற்ற அடுத்த மன்னன் தயாராகிவிட்டான்! எல்லாம் அன்னையே... உன் அருள்!சிரிப்பதையும் கரிகாலன் நிறுத்தவில்லை. சிவகாமி தன்னை அறைவதையும் தடுக்கவில்லை! ‘‘சாளுக்கிய ஒற்றர் படைத் தலைவியே...’’ மெல்ல அழைத்தான்.

‘‘இதே உதடுகள்தானே சில கணங்களுக்கு முன் என்னை பல்லவ இளவரசி என்று அழைத்தது... அதற்காகத்தானே உங்களுக்கு மிக்க மிக்க நன்றி சொன்னேன்...’’ அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டாள்!கரிகாலனின் உதட்டோரம் குருதி பூத்தது. தன் நாக்கினால் அதை சுவைத்தான். ‘‘உப்பு கரிக்கிறது! உப்பிட்ட பல்லவர்களை உள்ளளவும் நினை...’’ சொன்ன கரிகாலன் படுத்திருந்தபடியே தன் உடலை உதறினான். மறுகணம் அவன் மீது அமர்ந்திருந்த சிவகாமி, நிலைதடுமாறி தரையில் சரிந்தாள்.

அவளுக்கு குறுக்காக தன் கைகளை வலுவாக ஊன்றியவன், அவள் கன்னங்களைக் கடித்தான். ‘‘சாளுக்கிய மன்னருக்கு செய்தி அனுப்பிவிட்டாயா..?’’
சிவகாமியின் நயனங்கள் கனலைக் கக்கின. ‘‘என்ன செய்தி..?’’‘‘கொற்கையிலிருந்து மாமல்லபுரத்துக்கு வரும் மரக்கலங்களை ஆராயும்படி!’’வெறுப்புடன் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

மாறாத புன்னகையுடன் அவள் வதனத்தை தன்னை நோக்கித் திருப்பி அவளது கீழ் உதட்டை தன் இரு விரல்களாலும் குவித்தான். ‘‘பதில் சொல்...’’
‘‘எதையும் நம்பாதவர் இப்போது நான் சொல்லப்போகும் விடையை மட்டும் நம்பப் போகிறீர்களா..?’’‘‘நான் நம்ப மாட்டேன்... ஆனால், இங்கு வருகை தரப்போகும் பாண்டிய மன்னர் நம்புவார் இல்லையா..?’’ சொன்ன கரிகாலன் அவளுக்கு அரைக்கால் அவகாசத்தையும் அளிக்காமல், அவளது கீழ் உதட்டை தன் அதரங்களால் கவ்வினான்!

‘‘உள்ளேதான் சோழ இளவரசர் இருக்கிறார் மன்னா...’’ பாதாளச் சிறையின் காவலாளி பவ்யத்துடன் தலைவணங்கியபடி சொன்னான்.
அரிகேசரி மாறவர்மர் அவனை ஆராய்ந்தார். அந்தக் காவலாளியின் இடுப்பைச் சுற்றிலும் பத்துக்கும் மேற்பட்ட குறுவாள்கள் பளபளத்தன. இரணதீரனின் ஏற்பாடு!
‘‘வா...’’ என்றபடி பாதாளச் சிறைக்குள் நுழைந்தார்.

காவலாளி அவரைப் பின்தொடர்ந்தான்.சிவகாமி அடைக்கப்பட்டிருந்த சிறை வாயிலை அடைந்ததும் திரும்பி காவலாளியை நோக்கினார் பாண்டிய மன்னர்.புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக இமைக்கும்பொழுதில் தன் இடுப்பில் இருந்த குறுவாள்கள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக சிறைக்குள் வீசினான்.முதல் குறுவாள் தன்னருகில் பாய்ந்ததுமே சிவகாமியை விட்டு கரிகாலன் விலகினான். அடுத்த குறுவாள் தன் கேசத்தை உரசியபடி தரையில் ஊன்றியதும் சிவகாமி எழுந்து அமர்ந்தாள். மூன்றாவது குறுவாள் தன் காலடியில் நிலைகுத்தியதும் கரிகாலன், தன்னிரு கால்களுக்கும் இடையில் அவளை அடைத்தான்.

நான்காவது... ஐந்தாவது... என வரிசையாக குறுவாள்கள் அவ்விருவரைச் சுற்றிலும் தரையில் ஊன்றின. ஒரேயொரு குறுவாளின் நுனி கூட அவர்கள் இருவரது உடல்களையும் கீறவில்லை!குறுவாள் வீசப்படுவது நின்றதும் கரிகாலன் பார்த்தான். குறுவாள்களின் அரணுக்கு மத்தியில் அவர்கள் இருவரும் அமர்ந்திருந்தார்கள்.

சிவகாமி எழுந்து கொள்ள முயற்சித்தாள். இதற்காகவே காத்திருந்ததுபோல், நெகிழ்ந்திருந்த அவளது கச்சையின் முடிச்சை கரிகாலன் தன்னிரு கரங்களாலும் அவிழ்த்தான். அதிர்ந்த சிவகாமி, பின்னோக்கிச் சாய்ந்து அவன் கேசத்தை அழுத்தமாகப் பற்றினாள்.அதற்குள் அவளது கச்சைக்குள் சிறைப்பட்டிருந்த ஒரு பொருள் கீழே விழுந்து உருண்டது.

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16926&id1=6&issue=20200612

Link to comment
Share on other sites

ரத்த மகுடம்-103

‘‘மன்னா....’’ கரிகாலன் குரல் கொடுத்தான். ‘‘சரியான நேரத்துக்கு வந்திருக்கிறீர்கள்...’’அரிகேசரி மாறவர்மர் நிதானமாக அந்த பாதாளச் சிறை அறைக்குள் நுழைந்தார். பின்னாலேயே சிறைக் காவலன். ‘‘காஞ்சி சிறையில் எந்தப் பொருளைக் கைப்பற்ற சிவகாமி முயன்றாளோ... எந்தப் பொருள் அங்கு கிடைக்காததால் மதுரை சிறைக்கு அவள் வந்திருக்கிறாளோ... அந்தப் பொருளை அவள் எடுத்துவிட்டாள்...’’ சொன்னபடியே, தான் அவிழ்த்திருந்த சிவகாமியின் கச்சை முடிச்சை கரிகாலன் பழையபடி இறுகக் கட்டினான்.
22.jpg

‘‘ம்... எழுந்திரு சிவகாமி... பாண்டிய மன்னர் முன் நாம் அமர்ந்திருப்பது தவறு...’’ கட்டளையிடும் தொனியில் வார்த்தைகளை உச்சரித்த கரிகாலன், அவளை முன்புறமாகத் தள்ளிவிட்டு எழுந்தான். குனிந்து, தரையில் உருண்ட பொருளை எடுத்து அரிகேசரி மாறவர்மரிடம் கொடுத்தான்.
 
அதைப் பெற்றுக் கொண்ட பாண்டிய மன்னர், அது என்ன என்று ஆராயவில்லை. மாறாக தன் இடுப்பில் அதை முடிந்து கொண்டார்.
‘‘ஆராயவில்லையா மன்னா..?’’
 
கேட்ட கரிகாலனை ஏறிடாமல், அவனுக்கு அருகில் நின்றபடி தன் உடைகளைச் சரிசெய்து கொண்டிருந்த சிவகாமியை பார்வையால் சலித்தார். ‘‘அறைக்கு சென்று ஆராய்கிறேன்... அதுதான் பொருள் எங்கும் செல்லாதபடி கைப்பற்றி என்னிடமே கொடுத்துவிட்டாயே..!’’
 
‘‘இதற்காகத்தான் மன்னா இந்த நள்ளிரவில் இங்கு வந்தேன்... பாண்டிய இளவரசரிடம் நிலைமையை எடுத்துச் சொல்லியிருக்கலாம்... ஆனால், எங்கே அவர் கேட்க மாட்டாரோ என்று நினைத்து தான்...’’

‘‘... சாம்பிராணியில் மயக்கப் பொடியைத் தூவினாய்...’’ சிவ காமியின் வதனத்தை ஆராய்ந்தபடியே அரிகேசரி மாறவர்மர்பதிலளித்தார்.
‘‘உள்ளதை உள்ளபடி ஊகிக்கும் திறன் தங்களிடம் இருப்பதால்தான் பாண்டிய நாடு நிம்மதியாக இந்த அகால வேளையில் உறங்குகிறது...’’
 
‘‘அந்த உறக்கத்தைக் கெடுக்கத்தான் புலி வந்திருக்கிறதே..?’’‘‘இல்லை மன்னா... மீனின் வாழ்விடத்துக்குள் என்றும் புலி நுழைவதில்லை... சமுத்திரத்தை தொந்தரவு செய்த வனம் என்ற சொற்றொடர் அகராதியிலேயே இல்லை...’’‘‘ஒருவேளை அகராதியில் புதிய சொற்கள் சேரலாம்...’’‘‘இக்காலத்தில் வாய்ப்பில்லை மன்னா...’’‘‘எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய்..?’’ கேட்டபடி முதல் முறையாக கரிகாலனை ஏறிட்டார் பாண்டிய மன்னர்.
‘‘வனத்துக்கான போராட்டத்தில்தான் புலி தற்சமயம் கவனம் செலுத்துகிறது... ரிஷபத்தை தாக்க முற்படும் வராகத்தை வீழ்த்தவே தன் உடல் பொருள் ஆன்மா... என சகலத்தையும் அர்ப்பணித்திருக்கிறது...’’

கணத்துக்கும் குறைவான நேரத்தில் தன் இமைகளை மூடித் திறந்தார் பாண்டிய மன்னர். ‘‘அதன் பொருட்டுதான் இந்த பாதாளச் சிறைக்கும் வந்தாயா..?’’‘‘ஆம் மன்னா...’’‘‘வேட்டையாடவா..?’’ அரிகேசரி மாறவர்மரின் புருவங்கள் முடிச்சிட்டன.‘‘ஆம் மன்னா... வராகத்தை...’’ சிவகாமியைப் பார்த்தபடியே அழுத்திச் சொன்னான் கரிகாலன்.எரித்து விடுவதுபோல் அவனை ஓரக் கண்ணால் பார்த்தாள் சிவகாமி.பாண்டிய மன்னரின் உதடுகளில் புன்னகை பூத்தது. ‘‘வராக அவதாரத்தை என்று சொல்லலாமே கரிகாலா...’’
சிவகாமி சட்டென நிமிர்ந்தாள்.

கரிகாலனின் நயனங்களில் அதிர்ச்சி. ‘‘என்ன சொல்கிறீர்கள் மன்னா..?’’
‘‘வராக போர் அமைச்சர் சந்தேகிப்பதை சொன்னேன்...’’

‘‘மன்னா...’’
‘‘சாளுக்கிய போர் அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபர், இவளை பல்லவ இளவரசி என சந்தேகிக்கிறாரே..?’’
‘‘அப்படி நினைப்பவர் எதற்காக சாளுக்கிய இளவரசருடன் தனித்து இங்கு வந்து இவளைச் சந்திக்க வேண்டும்..?’’
‘‘சந்தேகத்தைத் தீர்க்க...’’‘‘அதற்காகத்தான் நீயும் இங்கு வந்தாயா..?’’

‘‘அப்படி வந்திருந்தால் தன் கச்சைக்குள் இவள் மறைத்து வைத்திருந்த பொருளை எடுத்து தங்களிடம் கொடுத்திருப்பேனா..?’’
‘‘நான் வந்ததால் கொடுத்தாய்...’’‘‘வரவில்லை என்றால் தங்கள் அறைக்கு வந்து கொடுத்திருப்பேன்...’’‘‘சாம்பிராணியில் மயக்கப் பொடியைத் தூவியா..?’’
‘‘மன்னா...’’

தன் கரங்களை உயர்த்தி கரிகாலன் பேசுவதைத் தடுத்தார். ‘‘நாளை விசாரணை மண்டபத்துக்கு நீங்கள் இருவரும் வரவேண்டும்... எது சொல்வதாக இருந்தாலும் அங்கு சொல்... அதுவரை நீங்கள் இருவரும்...’’ தனக்குப் பின்னால் கைகட்டி நின்றிருந்த காவலனைப் பார்த்தார்.புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக அவன் தலையசைத்தான்.

கரிகாலனையும் சிவகாமியையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு சிறையை விட்டு அரிகேசரி மாறவர்மர் வெளியில் வந்தார்.பின்னால் வந்த காவலன் கவனமாக சிறைக்கதவைப் பூட்டினான்.படிக்கெட்டில் ஏறி வெளியில் வந்ததும் காவலனையும் அவன் இடுப்பில் தொங்கிக் கொண்டிருந்த சாவியையும் பார்த்தார். பின்னர் விடுவிடுவென தன் மாளிகையை நோக்கி நடந்தார்.அவர் முகம் மலர்ந்திருந்தது!

மல்லைத் துறைமுகம் விழித்துக் கொண்டது. மலங்க மலங்க விழித்தது!இந்த நள்ளிரவில் சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர் அரவமின்றி வருகை தருவார் என ஒருவரும் எதிர்பார்க்காததால் எட்டு திசைகளிலும் குழப்பம் தாண்டவமாடியது.‘‘சுங்கத் தலைவர் எங்கே..?’’ விக்கிரமாதித்தர் புரவியில் இருந்து இறங்கியதுமே கேட்டார்.

‘‘மன்னா...’’ என்றபடி சுங்கத் தலைவர் முன்னால் வந்து வணங்கினார்.‘‘எந்தெந்த மரக்கலங்கள் எந்தெந்த தேசத்திலிருந்து கடந்த ஒரு வாரத்தில் இங்கு வந்திருக்கின்றன... என்னென்ன பொருட்கள் வந்து இறங்கியிருக்கின்றன... எந்தெந்த வணிகர்களுக்கு சொந்தமான மரக்கலங்கள் அவை... என்ற விவரங்கள் எல்லாம் எனக்கு வேண்டும்... அதுவும் உடனடியாக!’’ உத்தரவிட்ட மன்னர், கடற்கரையில் இருந்த பாறையின் மீது அமர்ந்தார். ‘‘எடுத்து வாருங்கள்...’’

‘‘உத்தரவு மன்னா...’’ என்றபடி தலைதெறிக்க சுங்கச் சாவடியை நோக்கி சுங்கத் தலைவர் விரைந்தார்.சாளுக்கிய வீரர்கள் மன்னருக்கு அருகில் கம்புகளை ஊன்றி அதில் பந்தங்களைக் கட்டினார்கள்.கைகொள்ளா சுவடிகளுடன் சுங்கத் தலைவர் திரும்பியபோது சாளுக்கிய மன்னர் ஜெகஜோதியாக ஜொலித்துக் கொண்டிருந்தார்.அவர் முன்பு, தான் கொண்டு வந்திருந்த சுவடிகளை சுங்கத் தலைவர் நீட்டினார்.
 
பெற்றுக் கொண்ட விக்கிரமாதித்தர், பந்த ஒளியில் நிதானமாக ஒவ்வொரு சுவடியாகப் புரட்டினார்... அதிலிருந்த விவரங்களைப் படிக்கத் தொடங்கினார். ‘‘மன்னா...’’குரல் கேட்டு திரும்பினார் அரிகேசரி மாறவர்மர்.கோச்சடையன் இரணதீரன் அவரை வணங்கியபடி அங்கு நின்றிருந்தான்.
 
‘‘சொல்லுங்கள் பாண்டிய இளவரசே... உறங்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்..?’’தன் தந்தையை ஆச்சர்யத்துடன் ஏறிட்டான் இரணதீரன். உற்சாகமாக இருக்கும் பொழுதுகளில் மட்டுமே அவர் தன்னை ‘இளவரசே...’ என்றழைப்பார் என்பது அவனுக்குத் தெரியும். எனில், இது குதூகலத்துக்கான காலமா..? ‘‘தங்களைக் காண காத்திருக்கிறேன் மன்னா...’’ ‘‘என்ன விஷயம்..?’’

‘‘அதங்கோட்டாசானை கைது செய்திருக்கிறோம்... அவருடன் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் சிறைப்பட்டிருக்கிறார்கள்... நிலவறையில் இந்த அகாலவேளையில் அவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள்...’’அவன் அருகில் வந்து வாஞ்சையுடன் அணைத்தார். ‘‘வா... மாளிகையின் உச்சிக்கு செல்லலாம்...’’எதுவும் பேசாமல் தன் தந்தையுடன் படிக்கட்டு ஏறினான் பாண்டிய இளவரசன். புதர் மறைவிலிருந்து சீனன் வெளியே வந்தான். வைகையின் ஓட்டத்தை தன் கையில் இருந்த மூங்கிலால் அளந்தான்.திருப்தியுடன் தொலைவில் இருந்த சுங்கச் சாவடியைப் பார்த்தான்.
எந்த மாற்றமும் இல்லாமல் அங்கு வேலைகள் நடந்து கொண்டிருந்தன.
 
தன்னிரு கரங்களையும் உயர்த்தி சோம்பல் முறித்த சீனன், வானை ஏறிட்டு நட்சத்திரக் கூட்டங்களைக் கணக்கிட்டான்.
 
பின்னர் குனிந்து தன் கால்களுக்கு அடியில் இருந்த ஓர் ஆள்உயரமுள்ள மூங்கில் கூடையின் மூடியைத் திறந்தான்.அதனுள் இருந்த புறாக்களை ஒவ்வொன்றாக எடுத்து அவற்றை முத்தமிட்டு அதன் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தான். மதுரை திசையைக் காட்டினான். பின்னர் பறக்க விட்டான்!‘‘சொல்...’’ சாளுக்கிய இளவரசனான விநயாதித்தன் அதட்டினான். ‘‘யார் அந்த பதினைந்து பேர்..? எதற்காக ஒரே செய்தியை ஒரே மாதிரி எழுதியிருக்கிறாய்..?’’

‘‘இதற்கு மேலும் நீ மவுனமாக இருந்தால்..?’’ ராமபுண்ய வல்லபரின் நயனங்கள் நெருப்பைக் கக்கின. ‘‘வளைத்த மூங்கிலில் உன் கால்களைக் கட்டி உடலையே கிழித்து விடுவோம்...’’கடிகை பாலகன் அலட்சியமாகச் சிரித்தான்.‘‘செய்ய மாட்டோம் என நினைக்கிறாயா..?’’ கர்ஜித்த ராமபுண்ய வல்லபர் கோபத்துடன் அவனை நெருங்கினார்.கடிகை பாலகன் குருதி வடிய சிரிக்கத் தொடங்கினான். அவன் பார்வை சாளரத்தை நோக்கிக் கொண்டிருந்தது.

அப்படி எதைப் பார்த்து நகைக்கிறான் என்றறிய விநயாதித்தனும் ஸ்ரீராமபுண்ய வல்லபரும் சாளரத்தை நோக்கித் திரும்பினார்கள். திகைத்தார்கள்.
‘‘பார் இரணதீரா... அதங்கோட்டாசான் ஓடிக் கொண்டிருக்கிறான்..!’’அரிகேசரி மாறவர்மர் சுட்டிக் காட்டிய திசையை நோக்கிய இரணதீரன் அதிர்ந்தான்.
 
மதுரை வீதியில் கரிகாலன் ஓடிக்கொண்டிருக்க... பாண்டிய வீரர்கள் அவனைத் துரத்திக் கொண்டிருந்தார்கள்.‘‘மன்னா...’’‘‘கரிகாலனின் இன்னொரு பெயர் அதங்கோட்டாசான்!’’ இடி இடியென நகைத்த அரிகேசரி மாறவர்மர் குதிரையின் குளம்பொலியைக் கேட்டு சட்டென அமைதியானார்.


அவர்கள் இருவரும் நின்றிருந்த மாளிகைக்கு எதிர்த் திசையில் வரிசையாக இருந்த மாளிகையின் மேல் கைப்பிடிச் சுவரில்   புரவி ஒன்று நிதானமாக நடந்துகொண்டிருந்தது!அதன் மேல் கம்பீரமாக அமர்ந்திருந்த சிவகாமி, குனிந்து கரிகாலன் ஓடும் திசையைப் பார்த்தாள்!

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16952&id1=6&issue=20200619

Link to comment
Share on other sites

ரத்த மகுடம்-104

‘‘தேசத்துக்கு ஒரு பெயருடன் நடமாடுவதுதானே ஒற்றர்களின் வழக்கம்..? அப்படி நம் பாண்டிய நாட்டில் இப்பொழுது கரிகாலனின் பெயர் அதங்கோட்டாசான்!’’ சொல்லிவிட்டு நகைத்தார் அரிகேசரி மாறவர்மர்.கண்கள் இடுங்க தன் தந்தையைப்

பார்த்தான் கோச்சடையன் இரணதீரன்.

18.jpg

‘‘கெட்டிக்காரன்தான்... நம் தேசத்துக்குள் நமக்கு எதிராக படைகளைத் திரட்டி வந்த அதங்கோட்டாசான் என்கிற முதியவரின் பெயரையே தனக்கும் சூட்டிக் கொண்டு நம்மையெல்லாம் திசை திருப்பியிருக்கிறான்...’’‘‘நம்மை அல்ல மன்னா... எங்களை...’’ இரணதீரன் அழுத்திச் சொன்னான்.

 

கேள்வியுடன் அவனை நோக்கினார் பாண்டிய மன்னர்.‘‘பல்லவர்கள் குறிப்பிடும் அதங்கோட்டாசான் சாட்சாத் கரிகாலன்தான் என்பது எங்களுக்குத்தான் தெரியாது...’’‘‘அந்த உண்மையை நான் அறிவேன் என்கிறாயா..?’’ அமைதியாகக் கேட்டார் அரிகேசரி மாறவர்மர்.
 

‘‘தாங்கள் அறியாமல் ஓர் அணுவும் தமிழகத்தில் அசைவதில்லை என்கிறேன் மன்னா...’’‘‘இரணதீரா...’’ தழுதழுத்தார் பாண்டிய மன்னர். ‘‘இன்னொருவனும் அனைத்து அசைவுகளையும் அறிவான்...’’
‘‘யார் மன்னா..?’’

‘‘என் மகன்! பாண்டிய இளவரசன்! கோச்சடையன் இரணதீரன்!’’‘‘மிகைப்படுத்துகிறீர்கள் மன்னா... அடியேனுக்கு இந்த நிஜம் தெரியாது...’’
‘‘மற்ற உண்மைகள் அனைத்தையும் அறிவாயே...’’ வாஞ்சையோடு அவனை நெருங்கி அணைத்தார் அரிகேசரி மாறவர்மர். ‘‘உன் வயதில் இந்தளவுக்கு கூட நான் சூட்டிகையாக இல்லை... விருட்சமான பிறகு என்னையே மிஞ்சிவிடுவாய்... எதை வைத்து இப்படி
கணிக்கிறேன் தெரியுமா..?’’

அவரே பதிலையும் சொல்லட்டும் என அமைதியாக நின்றான் இரணதீரன்.‘‘பாதாளச் சிறையிலிருந்து சிவகாமியையும் கரிகாலனையும் நானே விடுவித்தேன் என்பதை அறிந்திருக்கிறாயே... இதை விட ஓர் இளவரசனுக்கு வேறென்ன தகுதி வேண்டும்...’’
நிமிர்ந்து பாண்டிய மன்னரை பார்த்துவிட்டு மீண்டும் தலைகுனிந்தான் இரணதீரன்.

‘‘ஏன் அவர்களை தப்பிக்க வைத்தேன் என்று தெரிய வேண்டுமா..?’’
‘‘தெரிய வேண்டிய நேரத்தில் தெரிவிப்பீர்கள் என்ற நம்பிக்கை அடியேனுக்கு இருக்கிறது மன்னா!’’
அதன் பிறகு இருவரும் அருகருகே நின்றபடி தங்களுக்கு எதிர் திசையில் நடப்பதை கவனிக்கத் தொடங்கினார்கள்.
சிவகாமியின் உதட்டோரம் புன்னகைப் பூத்தது. மீண்டும் தன் பார்வையை கீழே பதித்தாள்.

அகன்ற ராஜ வீதிகளைத் தவிர்த்துவிட்டு சின்னச் சின்ன சந்துக்குள் நுழைந்து கரிகாலன் ஓடிக் கொண்டிருந்தான்.
துரத்தி வரும் பாண்டிய வீரர்களைக் கணக்கிட்டாள். பத்து தலைகள்! மற்றவர்கள் அவனைச் சுற்றி வளைப்பதற்காக சிதறி சந்து முனைகளை நோக்கி ஓடினார்கள்.கரிகாலன் செல்லும் திசையை ஊகித்தவள் குதிரையின் கழுத்தில் சாய்ந்தாள். அதன் செவிகளில் முணுமுணுத்தாள். அதன் பிடரிகளை நீவிவிட்டாள்.புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக அப்புரவி தன் தலையை ஆட்டியது.

மெல்ல அதைத் தட்டிக் கொடுத்தாள்.மறுகணம் தன்னிரு முன்னங்கால்களையும் அக்குதிரை உயர்த்தியது!‘‘பார் இரணதீரா... நன்றாகப் பார்! எப்பேர்பட்ட அசுவ சாஸ்திரியாக சிவகாமி இருக்கிறாள் என்றுப் பார்!’’ உணர்ச்சிப் பிழம்பாக அரிகேசரி மாறவர்மர் முழங்கினார்.
இரணதீரனும் உணர்ச்சியின் சுழலில் சிக்கியிருந்தான். ராஜ பாட்டையிலும் ராஜ வீதிகளிலும் புரவியில் பயணிப்பது எளிது. அதற்கு சில நாட்கள் பயிற்சி எடுத்தால் போதும். வனங்களுக்குள் குதிரையுடன் ஊடுருவ பல திங்கள் இரவு பகலாக பயிற்சி எடுக்க வேண்டும்.

ஆனால், மாளிகையின் மேல் இருக்கும் கைப்பிடி சுவரில் புரவியுடன் பயணிக்க வேண்டுமென்றால்... தாயின் வயிற்றில் ஜனித்த கணத்திலிருந்து புரவிகளுடன் பழகியிருக்க வேண்டும்! அப்பொழுதுதான் இந்த வித்தை கைகூடும்!சற்றும் தடுமாறாமல் மாளிகையின் மேல் இருந்த கைப்பிடி சுவரில் அப்புரவி நடக்க ஆரம்பித்தது.

சிவகாமி அலட்சியமாக அதன் மீது அமர்ந்திருந்தாள். லகானை பிடித்திருந்தாளே தவிர அதை இழுக்கவில்லை.மாளிகையின் ஓரத்தை நெருங்கிய அக்குதிரை, சர்வசாதாரணமாக அருகில் இருந்த அடுத்த மாளிகையின் மேல் இருக்கும் கைப்பிடி சுவரை நோக்கித் தாவியது!
‘‘பத்தடி தொலைவு இருக்குமா..?’’ ராமபுண்ய வல்லபர் பதட்டத்துடன் கேட்டார்.

‘‘பன்னிரெண்டு அடிகள் குருவே!’’ சாளரத்தை வெறித்தபடி சொன்னான் சாளுக்கிய இளவரசனான விநயாதித்தன்.
‘‘எவ்வளவு அநாயாசமாக அந்தக் குதிரை தாண்டுகிறது... அதுவும் அந்தரத்தில்! துளிக்கூட அதற்கு அச்சமில்லையே..?’’
‘‘எப்படியிருக்கும் குருவே? அது சிவகாமியால் பழக்கப்படுத்தப்பட்ட புரவி... தவிர அதன் மீது அவளே அமர்ந்திருக்கிறாள். எப்படி அது தடுமாறும்? இந்த பாரத தேசத்தின் தலைசிறந்த இரு அசுவ சாஸ்திரிகளுள் அவளும் ஒருத்தியல்லவா..?’’
நம்ப முடியாத ஆச்சர்யத்துடன் ராமபுண்ய வல்லபர் பார்த்துக் கொண்டிருந்தார்.

‘‘உங்கள் சிஷ்யை கெட்டிக்காரிதான் குருவே...’’
‘‘விநயாதித்தா...’’ பற்களைக் கடித்தபடி அவனை நோக்கித் திரும்பினார். ‘‘மீண்டும் சொல்கிறேன்... இவள் என் சிஷ்யை அல்ல... சாளுக்கியர்களின் ஒற்றர் படைத்தலைவி இவள் அல்ல!’’‘‘அப்படியானால் இவள் யார் குருவே...’’‘‘கணத்துக்கு கணம் சந்தேகம் வலுத்துக் கொண்டே இருக்கிறது... இவள் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும்... அதற்கு முன்...’’‘‘... எப்படி இவள் பாதாள சிறையில் இருந்து தப்பித்தாள் என்று அறிய வேண்டும்!’’
‘‘ஆம் விநயாதித்தா!’’

‘‘இன்னமும் உங்களுக்குப் புரியவில்லையா..?’’ குருதி வடிய சிரித்தான் கடிகை பாலகன். ‘‘கீழே கரிகாலர் ஓடிக் கொண்டிருக்கிறார்! பாண்டிய வீரர்கள் அவரைத் துரத்துகிறார்கள்... அவரைக் காப்பாற்ற சிவகாமி முற்படுகிறாள்!’’‘‘வட்டம் கட்டுங்கள்...’’ தலைவன் குரல் கொடுத்தான்.உடனே பாண்டிய வீரர்கள் சிதறி சந்துக்குள் பாய்ந்தார்கள்.

அவர்களின் நோக்கத்தை உணர்ந்து கொண்ட கரிகாலன் சந்திலிருந்து பிரிந்த பிறிதொரு சந்துக்குள் நுழைந்தான்.வீரர்களின் கூட்டம் எட்டுத் திசைகளிலும் பரவியது.தன்னை அவர்கள் சுற்றி வளைத்து விட்டார்கள்... எல்லா சந்துகளின் முனைகளிலும் குறைந்தது ஐந்து வீரர்களாவது உருவிய
வாட்களுடன் காத்திருக்கிறார்கள்.

என்ன செய்யலாம் என்று மேல் நோக்கிப் பார்த்தான்.மாளிகையின் உச்சியில் இருந்த கைப்பிடி சுவரில் குதிரை ஒன்று நின்றிருந்தது. அதன் மீது சிவகாமி அமர்ந்திருந்தாள். அவளை நோக்கி செய்கை செய்ய கரிகாலன் தன் கரங்களை உயர்த்தினான்.மறுகணம் தன் இடுப்பில் இருந்த குறுவாளை எடுத்து அவன் மார்பை நோக்கி வீசினாள் சிவகாமி!காஞ்சிக்கு பலகாத தொலைவில் அமைந்திருந்த வசவசமுத்திர கிராமம் அமைதியாக அந்த அந்நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்தது.ஒரேயொரு இளைஞனைத் தவிர.

அவன் பல்லவ இளவரசனான இராஜசிம்மன்! நிதானமாக நடந்தபடி பாலாற்றின் கரைக்கு வந்து சேர்ந்தான்.தெற்கே மல்லை... சதுரங்கப்பட்டினம். வடமேற்கே திருக்கழுகுன்றம். கிழக்கே வயலூர்...திருப்தியுடன் தலையசைத்த இராஜசிம்மன், தன் முன்னால் கரைபுரண்டு ஓடிய பாலாற்றை கை கூப்பி வணங்கினான்.சமுத்திர அன்னையுடன் பாலாறு இரண்டறக் கலக்கும் இந்த ஸ்தலமே பல்லவர்களின் விடுதலைக்கான புள்ளி. நதியன்னையும் சமுத்திரத் தாயும் தன் லட்சியத்தை நிறைவேற்ற துணை புரிவார்கள்...

குனிந்து நீரை அள்ளி தன் தலையில் தெளித்துக் கொண்டான்.நிமிர்ந்தான். கால்களை ஊன்றி நின்றான்.சமுத்திர நதியின் மீது இராஜசிம்மனின் நிழல் உச்சியைக் காண முடியாத அளவுக்கு நீண்டு விழுந்தது.அந்த நிழலுக்குள் மரக்கலம் ஒன்று உற்சாகத்துடன் ஓசை எழுப்பாமல் நுழைந்தது!  

Link to comment
Share on other sites

ரத்த மகுடம்-105

‘‘ஒன்றும் புரியவில்லையே விநயாதித்தா..?’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் தன் தலையில் கைவைத்துக் கொண்டார். ‘‘என் இத்தனை வருட அனுபவத்தில் இதுபோல் வேறெப்போதும் நான் குழம்பியதில்லை...’’ தலையை உலுக்கியபடி சாளரத்தை வெறித்தார்.
11.jpg

இருளும் ஒளியான சூழலில் காட்சிகள் துல்லியமாகத் தெரிந்தன. ஆங்காங்கே வீதிகளில் எரிந்து கொண்டிருந்த பந்த வெளிச்சங்களும் மாளிகைகளின் வாசலில் கண்சிமிட்டிய விளக்கின் ஒளியும் பழுதின்றி விழுந்ததால் நடப்பதை அவரால் நன்றாகவே பார்க்க முடிந்தது.
 
பாண்டிய வீரர்களால் சூழப்பட்ட கரிகாலனையும், மாளிகையின் உச்சியில் இருந்த கைப்பிடி சுவரில் நிதானமாக குதிரை நடைபோட்டதையும், அதன் மீது கம்பீரமாக அமர்ந்திருந்த சிவகாமியையும் இமைக்காமல் பார்த்தார்.


கரிகாலன் சட்டென்று மேல் நோக்கி செய்கை செய்ததும் நிமிர்ந்தார்.இதனையடுத்து சிவகாமி தன் இடுப்பிலிருந்து குறுவாளை எடுத்து அவன் மார்பை நோக்கி வீசியதும் அதிர்ந்தார்!‘‘என்ன இது... கரிகாலனை கொல்லவே சிவகாமி துணிந்து விட்டாளா... அப்படியானால் உண்மையிலேயே அவள் என் சிஷ்யைதானா... சாளுக்கியர்களின் ஒற்றர்படைத் தலைவிதானா...’’ விநயாதித்தனை பார்த்து படபடத்தார்.
 

விநயாதித்தன் பதிலேதும் சொல்லவில்லை. அவன் கண்கள் மட்டும் முன்னிலும் அதிகமாக சுருங்கின. கூர்மையடைந்தன.
 

‘‘ஏன் அமைதியாக இருக்கிறாய் விநயாதித்தா..?’’‘‘அங்கே பாருங்கள் குருவே...’’‘‘கரிகாலன் மண்ணில் சாய்ந்துவிட்டானா?’’
‘‘சாய்த்துக் கொண்டிருக்கிறான்!’’அதிர்ச்சியுடன் தன் பார்வையைத் திருப்பி கரிகாலன் மீது பதித்தார்.

தன் கால்களால் வீடுகட்டியபடியே பாண்டிய வீரர்கள் தன்னை நெருங்காதபடி பார்த்துக் கொண்ட கரிகாலன், தன்னை நோக்கி குறுவாள் வந்ததும் பின்னோக்கி சாய்ந்தான்.ஆனால், தரையில் தன் தலையைப் பதிக்கவில்லை.மாறாக கால்களுக்கும் தலைக்கும் இடையில் சமமாக தன் மார்புப் பகுதி இருப்பதுபோல் சாய்ந்தவன், வந்த குறுவாளின் கைப்பிடியை லாவகமாகப் பிடித்தான்.மறுகணம் தன் உடலை நிமிர்த்தினான்.
 

பழையபடி நின்றான்.அவன் கரங்களில் இருந்த குறுவாளைப் பார்த்து பாண்டிய வீரர்கள் நகைத்தார்கள்; தாங்கள் பிடித்திருந்த வாட்களை இறுமாப்புடன் நோக்கினார்கள்.முன்னால் இருந்த வீரர்களின் தலைவன், தன் வாளை தன் முகத்துக்கு நேராகக் கொண்டு வந்தான்.
 

பந்தத்தின் ஒளி, வாளில் பட்டது. அதனால் உண்டான ஒளியில் அவன் முகம் பிரகாசித்தது.கண்களால் அலட்சியமாக சிரித்தபடி கரிகாலனை நோக்கினான்.

மெல்ல மெல்ல வீரர்களின் தலைவன் நிலைகுலைந்தான். அவன் புருவங்கள் ஆச்சர்யத்தில் அகலமாக விரிந்தன.உதடுகளை சற்றே திறந்தபடி பார்த்தான்.இப்போது நகைப்பது கரிகாலனின் முறையாக இருந்தது.பூச்சி ஊர்ந்தால் கைகளை உதறுவோமே... அப்படி கரிகாலன் குறுவாள் பிடித்திருந்த தன் கரத்தை உதறினான்.மறுகணம் அது மெல்லிய... அதேநேரம் வலுவான வாளாக நீண்டது!‘‘அது சீனர்களின் ஆயுதம்...’’ இரணதீரனை நோக்கித் திரும்பாமல் சொன்னார் அரிகேசரி மாறவர்மர்.

‘‘ஊகித்தேன் தந்தையே...’’ ‘மன்னர்’ என்ற அடைமொழியை தவிர்த்துவிட்டு சொன்னான் இரணதீரன்.

‘‘எப்படி ஊகித்தாய்?’’ வாயைத் திறந்து கேட்காமல் தன் மவுனத்தால் வினவினார் பாண்டிய மன்னர்.
 

‘‘பாண்டிய இளவரசனான இராஜசிம்மனுக்கு சீனர்கள் மத்தியில் செல்வாக்கு உண்டு. தமிழகத்தை சேர்ந்த அனைத்து சீன வணிகர்களும் அவன் மீது மரியாதை வைத்திருக்கிறார்கள்...’’‘‘ம்...’’

‘‘கரிகாலனும் இராஜசிம்மனும் ஒட்டிப் பிறந்த இரட்டை வாழைகள்... எனவே கரிகாலன் மீதும் சீனர்கள் அன்பைப் பொழிகிறார்கள்... தவிர மதுரைக்கு சிவகாமியுடன் மட்டும் கரிகாலன் வரவில்லை... கூடவே சீனன் ஒருவனும் வந்தான்... ஆனால், அவன் மதுரைக்குள் நுழைந்ததுமே மறைந்துவிட்டான்...’’
‘‘இப்பொழுது அவன்தான் வைகை ஆற்றங்கரையில் மறைந்தபடி புறாக்களை பறக்கவிட்டிருக்கிறான்...’’ கண்களில் சாந்தம் வழிய சொன்னார் அரிகேசரி மாறவர்மர். அவரது குரலில் தன் மகன் இரணதீரன் மீதான பெருமை வழிந்தது.

கணத்துக்கும் குறைவான நேரத்தில் தன் தந்தையை ஏறிட்ட இரணதீரன், அன்னாந்து பார்த்தான்.‘‘புறாக்களைத் தேடுகிறாயா..?’’ நகைத்தார் அரிகேசரி மாறவர்மர்.‘‘இல்லை மன்னா...’’ ‘‘பிறகு?’’‘‘புறாக்கள் என்பது மனிதர்களைக் குறிக்கும் சமிக்ஞை என்றால்... எந்தெந்த மனிதர்களை அது குறிப்பிடுகிறது என யோசிக்கிறேன்...’’
 

அருகில் வந்து தன் மகனை தோளோடு அணைத்தார் பாண்டிய மன்னர். ‘‘முதலில் நடப்பதைப் பார்... பிறகு யோசிக்கலாம்... ஏனெனில் கரிகாலனின் வாள் வீச்சை நீ கண்ணார காண வேண்டும்... அப்பொழுதுதான் வருங்காலத்தில் பாண்டிய அரியணையில் நீ அமர்ந்ததும் பல்லவர்களை தக்க முறையில் கையாள முடியும்... தமிழர்களின் மல்யுத்தக் கலையை எப்படி அநாயாசமாக சீனர்களின் யுத்தக் கலையுடன் கலக்க முடியும் என்பதை இக்கணத்தில்தான் நாம் அறிய முடியும். இத்தருணத்தை தவறவிட்டால் பின்னால் ஒருபோதும் இந்த வித்தையை நாம் கற்க முடியாமலேயே போகும்...’’
 

மல்யுத்த வீரன் போலவே தன் கால்களால் வீடு கட்டிய கரிகாலன், இமைக்கும் நேரத்தில் தன் வாளை உயர்த்தியபடி தன்னைச் சூழ்ந்திருந்த வீரர்களின் மீது பாய்ந்தான்.

சிலம்பைச் சுற்றுவதுபோல் தன் வாளை கரிகாலன் சுழற்றியதால் சூழ்ந்த பாண்டிய வீரர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள சிதறினார்கள்.இதனால் பெரு வட்டம், சிறு சிறு வட்டங்களாகின.இதன் பிறகு ஒவ்வொரு வட்டமாக கரிகாலனால் எளிதில் பந்தாட முடிந்தது.

அதை மீறி பாண்டிய வீரர்கள் ஒன்றிணைய முற்பட்டபோதெல்லாம் கரிகாலன் தன் வாளை ஓங்கியபடி குதித்தான். அருகிலிருந்த மாளிகைகளின் சுவரில் கால் வைத்து எகிறினான். சுவர் விட்டு சுவர் தாவினான். முன்னால் வந்த வீரர்களின் மீது விழுந்தான்.

எல்லோருக்கும் காயம் ஏற்படுத்தினானே தவிர யார் மீதும் தன் வாளை அவன் பாய்ச்சவில்லை.இத்தனைக்கும் கரிகாலனின் வாள் முனை பலமுறை பல வீரர்களின் மார்பைத் தொட்டது. ஆனால், ஊடுருவவேயில்லை!‘‘விநயாதித்தா...’’ ராமபுண்ய வல்லபர் அழைத்தார்.

பதிலேதும் வரவில்லை.உலுக்கினார். ‘‘விநயாதித்தா...’’‘‘கொஞ்சம் பொறுங்கள் குருதேவா...பல்லவர்களின் போர் முறை எப்படியிருக்கும் என்பதை கரிகாலன் நமக்கு காண்பித்துக் கொண்டிருக்கிறான்! இதை எந்தளவுக்கு இப்பொழுது நாம் உள்வாங்குகிறோமோ அந்தளவுக்கு பல்லவர்களுடன் நாம் போர் புரியும்போது வியூகம் வகுக்க முடியும்... சற்று அமைதியாக இருங்கள்...’’‘‘விநயாதித்தா...’’

‘‘தொந்தரவு செய்யாதீர்கள்...’’ விநயாதித்தனின் உதடுகள் எரிச்சலுடன் உச்சரித்தன. பார்வையை மட்டும் கரிகாலனை விட்டு அவன் அகற்றவில்லை.
தன் வாள் வீச்சினால் பாண்டிய வீரர்களை ஒரு பக்கமாக சேர்த்து அனைவரையும் பின்னோக்கி நகர வைத்தபடியே தாங்கள் இருந்த தெருவின் முனைக்குச் சென்ற கரிகாலன் வலது பக்கமாகத் திரும்பினான்.

அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை விநயாதித்தனால் பார்க்க முடியவில்லை.‘‘இப்போது சொல்லுங்கள் குருதேவா...’’ அமைதியாக ராமபுண்ய வல்லபரை நோக்கித் திரும்பினான். ‘‘என்ன விஷயம்?’’‘‘நான் அழைத்தபோதே நீ திரும்பியிருந்தால் சிவகாமியை பார்த்திருப்பாய்...’’
‘‘ஏன் அவளுக்கென்ன..?’’

‘‘மறைந்துவிட்டாள்!’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் பற்களைக் கடித்தார். ‘‘எங்குச் சென்றாள் என்றுத் தெரியவில்லை...’’
‘‘நம் மன்னரைக் காண சென்றிருக்கிறாள்!’’‘‘என்ன...’’ ராமபுண்ய வல்லபரின் குரலில் அதிர்ச்சி. ‘‘நம் மன்னரையா..?’’
‘‘ஆம்! சாளுக்கிய மன்னரை!’’‘‘எதற்கு?’’‘‘மதுரை பாதாள சிறையில், தான் எடுத்த ரகசியத்தை அவரிடம் ஒப்படைக்க!’’

Link to comment
Share on other sites

ரத்த மகுடம்-106

‘‘என்ன...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபரின் குரல் அதிர்ச்சியின் உச்சத்தைத் தொட்டது. தன்னையும் அறியாமல் அதே வினாவைத் தொடுத்தார். ‘‘நம் மன்னரையா..?’’‘‘ஆம்! சாளுக்கிய மன்னரை!’’ அழுத்திச் சொன்னான் விநயாதித்தன்.‘‘எதற்கு?’’ ‘‘அதுதான் முன்பே சொன்னேனே குருவே...’’
‘‘பாதகமில்லை... மீண்டும் ஒருமுறை சொல்...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபருக்கு மூச்சு வாங்கியது.
21.jpg
அவரை நிதானமாக ஆராய்ந்தான் விநயாதித்தன். அவன் நயனங்களில் மெல்ல மெல்ல பாசத்தின் ரேகைகள் படர்ந்தன. அறிவாளிதான்... மதியூகிதான்... என்னவோ கிரகங்களின் சேர்க்கை... இப்பொழுது விழிக்கிறார்.‘‘சொல் விநயாதித்தா...’’‘‘மதுரை பாதாளச் சிறையில், தான் எடுத்த ரகசியத்தை சாளுக்கிய மாமன்னரிடம் ஒப்படைக்க சிவகாமி சென்றிருக்கிறாள்!’’விழிகளை அகற்றாமல் விநயாதித்தனைப் பார்த்தார்.

அவர் தோளின் மீது ஆதரவாக விநயாதித்தன் கை வைத்தான். ‘‘சிவகாமி, சாளுக்கியர்களின் ஒற்றர் படைத்தலைவிதான்
குருநாதரே! சந்தேகத்தைப் பொசுக்கிவிட்டு வாருங்கள்...’’‘‘எங்கு..?’’‘‘பாண்டிய மன்னரைச் சந்திக்க!’’ஸ்ரீராமபுண்ய வல்லபர் துள்ளினார். ‘‘இந்த நள்ளிரவிலா..?’’‘‘இதே அகாலவேளையில்தான்!’’‘‘எதற்கு..?’’

‘‘அவருடன் உரையாட...’’‘‘உரையாடி..?’’‘‘உறவை பலப்படுத்த!’’ விநயாதித்தன் பெருமூச்சுவிட்டபடி சாளரத்தை ஏறிட்டான். சில கணங்களுக்கு முன் அமளிதுமளியாகக் காட்சியளித்த எதிர்ப்புறத்தை இப்பொழுது இரவு கழுவி சுத்தப்படுத்தியிருந்தது.

‘‘விநயாதித்தா...’’ சாளுக்கிய போர் அமைச்சர் அவனை உலுக்கினார்.திரும்பி அவரைப் பார்த்தான். அந்தப் பார்வையில் எதை உணர்ந்தாரோ... அவரையும் அறியாமல் அவர் உதடுகள் உச்சரித்தன... ‘‘இளவரசே...’’‘‘குருவே! சிவகாமியை பாதாளச் சிறையில் அடைத்தது பாண்டிய இளவரசன்...’’
‘‘ம்...’’‘‘நம் ஒற்றர் படைத்தலைவியாக பாண்டியர்களை அவள் வேவு பார்க்க வந்ததாக கரிகாலன் குற்றம் சுமத்தினான்... கிடைத்த ருசுக்களும் அவனுக்கு சாதகமாக இருக்கவே இரணதீரனும் அவளை சிறையில் அடைத்தான்...’’
‘‘ம்...’’‘‘இப்பொழுது சிவகாமி தப்பித்திருக்கிறாள்...’’
‘‘...’’

‘‘பாண்டியர்களின் ஆதரவை வேண்டி மதுரைக்கு வந்த நாம், அவர்களது விருந்தினர்களாக பாண்டியர்களின் தலைநகரில் தங்கியிருக்கிறோம்... நம்மைச் சேர்ந்தவள் பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டு அங்கிருந்தும் தப்பித்திருக்கிறாள்...’’
‘‘...’’‘‘இந்த சம்பவம் நடப்பதற்கு சில நாழிகைகளுக்கு முன் நாம் இருவரும் பாண்டிய இளவரசனின் துணையுடன் அவளைச் சந்தித்திருக்கிறோம்!’’
‘‘அவள் தப்பித்ததற்கும் நாம் அவளைச் சந்தித்ததற்கும்...’’

‘‘... தொடர்பு இருப்பதாக பாண்டிய மன்னர் கருதினால்..?’’

விநயாதித்தனின் இந்த வினா, ஸ்ரீராமபுண்ய வல்லபரின் நாடி நரம்புகளுக்குள் குருதி எனப் பாய்ந்தது. சட்டென திரை விலகியது போல் வெளிச்சம் பாய்ந்தது. நிமிர்ந்தார்.
 
‘‘நிச்சயம் அப்படித்தான் கருதுவார்...’’ இந்தக் குரல்... இந்தக் குரல்... விநயாதித்தனின் வதனத்தில் சுருக்கங்கள் களைந்தன. இப்போது தன் முன் நிற்பவர் நிலைகுலைந்திருந்த ஸ்ரீராமபுண்ய வல்லபர் அல்ல... சாளுக்கிய தேசத்தின் போர் அமைச்சர்... நம் தேசத்தின் தலைசிறந்த மதியூகி...

 

‘‘அதனால்தான் பாண்டிய மன்னரை உடனடியாக சந்திக்க வேண்டும் என்கிறேன் குருவே...’’ மரியாதையுடன் சொன்னான் விநயாதித்தன். ‘‘என்னை விட... ஏன், தன்னை விட... நீங்கள் கெட்டிக்காரர்... திறமையாகப் பேசி பாண்டியர்களுடன் உறவை வளர்ப்பீர்கள்...
 
பல்லவர்களுக்கு ஆதரவாக அவர்கள் சாயாதபடி தடுப்பீர்கள் என சாளுக்கிய மாமன்னர் நம்புகிறார்... அதனாலேயே மதுரைக்கு உங்களை அனுப்பினார்... அரசியல் பாடங்களை அடியேன் கற்க வேண்டும் என்பதற்காக என்னையும் உடன் அனுப்பியிருக்கிறார்... நம் மாமன்னரின் நம்பிக்கையை நாம் காப்பாற்ற வேண்டும்... அதற்கு இந்த நள்ளிரவில் நாம் பாண்டிய மன்னரைச் சந்தித்துதான் ஆக வேண்டும்...’’


‘‘அவர் உறக்கத்தில் இருப்பாரே...’’
‘‘இல்லை குருவே... நம்மைப் போலவே கரிகாலனையும் சிவகாமியையும் தன் மாளிகையின் உச்சியில் இருந்தபடி அவர் பார்த்துக் கொண்டிருந்தார்...’’
விநயாதித்தன் சுட்டிக் காட்டிய திசையின் பக்கம் தன் பார்வையைப் பதித்தார் ராமபுண்ய வல்லபர். ‘‘கரிகாலனும் சிவகாமியும் தன் பார்வையை விட்டு மறைந்ததுமே பாண்டிய மன்னர் அகன்றுவிட்டார்...’’

‘‘தப்பித்த சிவகாமியைப் பிடிக்க அவர் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லையா..?’’
‘‘தெரியவில்லை குருவே... கரிகாலனை தன் வீரர்கள் துரத்துவதையும் மாளிகையின் உச்சியில் புரவியின் மீது அமர்ந்தபடி சிவகாமி நடைபோட்டதையும் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தார்...’’

ஸ்ரீராமபுண்ய வல்லபரின் புருவங்கள் முடிச்சிட்டன. ‘‘மெய்மறந்தா..? இதுபோன்ற தருணத்தில் ஒரு நாட்டின் மன்னர் இப்படி நடந்து கொள்ளமாட்டாரே..?’’‘‘அதைத்தான் நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன் குருவே... ஏனெனில் பாண்டிய மன்னருக்கு அருகில் அவர் மகனும் அமைதியாக நின்று நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்... எந்தவிதமான நடவடிக்கைகளிலும் அவனும் இறங்கவில்லை...’’
‘‘யார்... பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரனா..?’’‘ஆம்...’ என விநயாதித்தன் தலையசைத்தான்.

‘‘எனில் தாமதிக்காமல் பாண்டிய மன்னரை நாம் சந்தித்து உரையாடத்தான் வேண்டும்... பல்லவர்களுக்கா நமக்கா... யாருக்கு உறவாக அவர் இருக்கிறார் என்பதை அறியத்தான் வேண்டும்...’’ தனது வலதுகை ஆள்காட்டி விரலால் தன் நெற்றியை மூன்று முறை தட்டினார். ‘‘நீ சொல்வதை வைத்துப் பார்த்தால் சிவகாமி தப்பித்ததற்கும்... கரிகாலனை பாண்டிய வீரர்கள் துரத்தியதற்கும்...’’
‘‘... பாண்டிய மன்னருக்கும் தொடர்பு இருக்குமோ என அஞ்சுகிறேன் குருவே...’’
 

‘‘உண்மைதான்... அவரது அனுமதியில்லாமல் இத்தனையும் நடந்திருக்க வாய்ப்பில்லை...’’ ஆமோதிக்கும் வகையில் தலையசைத்த ராமபுண்ய வல்லபர், சட்டென விநயாதித்தனின் தோள்களை தன் இரு கரங்களாலும் பற்றினார். ‘‘உண்மையா..?’’
 

‘‘உள்ளுணர்வு சொன்னதை வெளிப்படுத்தினேன்...’’ ‘‘நான் கேட்டது சிவகாமி குறித்து... அவள் நம்மைச் சேர்ந்தவள்தான் என எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய்..?’’  ‘‘மதுரையில் என்னைச் சந்தித்தபோது ஒரு விஷயத்தை அவள் சொன்னாள்...’’ஸ்ரீராமபுண்ய வல்லபர் தன் கண்களால் தொடரும்படி சைகை செய்தார்.

‘‘ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில், தான் கரிகாலனை நோக்கி குறுவாளை வீசினால்... உடனே எடுக்க வேண்டிய மர்மத்தை, தான் எடுத்துவிட்டதாகவும் அதை எவ்வித இடையூறும் இன்றி சாளுக்கிய மாமன்னரிடம் ஒப்படைக்க, தான் சென்று கொண்டிருப்பதாகக் கருத வேண்டும் என்றும் சொன்னாள்...’’
‘‘ஆனால், அவள் வீசியது குறுவாள் அல்லவே! குறுவாளுக்குள் இருந்த வாள் அல்லவா..?’’‘‘இந்த சந்தேகம் எழக் கூடாது என்பதற்காக நாம் இருந்த திசையை நோக்கி அவள் சைகை செய்தாள்!’’
‘‘எப்பொழுது?’’

‘‘கரிகாலன் மீது குறுவாளை எறிந்ததுமே!’’
‘‘நான் கவனிக்கவில்லையே..?’’‘‘அடியேன் கவனித்தேன்!’’
ஸ்ரீராமபுண்ய வல்லபர் சிந்தனையில் ஆழ்ந்தார்.‘‘அவளைச் சந்தேகிக்க வேண்டாம் குருவே... சிவகாமி நம்மைச் சேர்ந்தவள்தான்... நமக்காகத்தான் தன் உயிரையும் பணயம் வைத்து எல்லா சாகசங்களையும் செய்து கொண்டிருக்கிறாள்...’’‘‘அப்படியிருந்தால் மகிழ்ச்சிதான்... சரி... காஞ்சி சிறையில் இல்லாத எந்த மர்மத்தை அவள் மதுரைச் சிறையில் கைப்பற்றியிருக்கிறாள்?’’‘‘தெரியவில்லை குருவே...’’
 

‘‘ம்... ம்... வா... பாண்டிய மன்னரைச் சந்திக்கலாம்... அதற்கு முன்... இந்த கடிகை பாலகனை...’’ என்றபடியே திரும்பிய ராமபுண்ய வல்லபர் அதிர்ந்தார்!ரத்தம் சொட்டச் சொட்ட விழுந்து கிடந்த கடிகை பாலகன் அங்கில்லை!விநயாதித்தனின் கண்களும் சிவந்தன.
 
கோபத்துடன் தன் வீரர்களைப் பார்த்தான். அனைவரும் தலைகுனிந்து நின்றனர்.‘‘நம்மைப் போலவே சிவகாமியின் புரவி சாகசத்தையும் கரிகாலனின் வாள்வீச்சையும் வாயைப் பிளந்தபடி வீரர்கள் பார்த்திருக்கிறார்கள்... அந்தத் தருணத்தைப் பயன்படுத்தி கடிகை பாலகன் தப்பித்திருக்கிறான்...’’ விநயாதித்தன் முணுமுணுத்தான்.


‘‘பிரச்னை அவன் தப்பியது அல்ல...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் தன் பற்களைக் கடித்தார். ‘‘பதினைந்து பேர்... யார் அவர்கள்..? எதற்காக ஒரே மாதிரி பதினைந்து செய்திகளை அந்தப் பாலகன் வைத்திருந்தான்... சிவகாமியும் அதேபோன்ற செய்தியை ஏன் நம்மிடம் கொடுத்தாள்..?’’
‘‘யோசிப்போம் குருவே... அதற்குமுன் பாண்டிய மன்னரைச் சந்தித்து விடுவோம்!’’விநயாதித்தனும் ஸ்ரீராமபுண்ய வல்லபரும் அரண்மனையை நோக்கிச் சென்றார்கள்.

மல்லைக் கடற்கரையில் இருந்த பாறை மீது கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்த சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர், நிதானமாக சுங்கத் தலைவர் தன்னிடம் ஒப்படைத்தசுவடிக் கட்டை ஒவ்வொன்றாகப் படித்தார்.அவ்வப்போது சிந்தனையில் அவர் நயனங்கள் ஆழ்ந்தன. பிறகு இயல்புக்குத் திரும்பி தம் பணியைத் தொடர்ந்தன.முழுவதுமாக அந்த சுவடிக் கட்டை ஆராய்ந்ததும் நிமிர்ந்தார்.

‘‘அவ்வளவுதானா..?’’‘‘ஆம் மன்னா...’’ குனிந்து தன் வாயைப் பொத்தியபடி சுங்கத் தலைவர் பதில் அளித்தார். ‘‘கடந்த ஏழு நாட்களில் எந்தெந்த மரக்கலங்கள் எந்தெந்த தேசத்திலிருந்து மல்லைக் கடற்கரைக்கு வந்தன... என்னென்ன பொருட்கள் வந்திறங்கின... எந்தெந்த வணிகர்களுக்கு சொந்தமான மரக்கலங்கள் அவை... என்ற விவரங்கள் இந்த சுவடிக்குள் இருப்பவைதான் மன்னா... உண்மையைச் சொல்வதென்றால்...’’ உமிழ்நீரை விழுங்கினார்.‘‘கடந்த ஒரு திங்களாக நமக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சுங்கக் காசு வந்திருக்கிறது... அதுதானே..?’’‘‘ஆம் மன்னா...’’

சுவடிக் கட்டை சுங்கத் தலைவரிடம் திருப்பிக் கொடுத்த விக்கிரமாதித்தர், தன் கரங்களை உயர்த்தி அவருக்கு விடை கொடுத்தார். பின் நிதானமாக மல்லைக் கடற்கரையில் நடக்கத் தொடங்கினார்.நரசிம்மவர்ம பல்லவரால் தொடங்கப்பட்டு ஆயனச் சிற்பியால் மேற்கொள்ளப்பட்ட சிற்பப் பணிகள் இன்னும் நிறைவடையாமல் இருந்தன. ‘ஒருபோதும் இவை நிறைவடையவே கூடாது... சிற்பக் கலைக்கு பெயர்போன இடமாக மல்லை மாறக் கூடாது... பல்லவர்களுக்கு அந்தப் பெயர் கிடைக்கவே கூடாது...’
 

மனதுக்குள் உச்சரித்த விக்கிரமாதித்தர், அங்கிருந்த மரக்கலத்தில் ஏறி கடலை உற்றுப் பார்த்தார். சமுத்திரத்தின் ஓசை செவியை அறைந்தது... இரவுக் கடலோ கண்களை நிரப்பியது...தன் இடத்துக்கு வந்து சேர்ந்த சுங்கத் தலைவர், தலையை உயர்த்தி விக்கிரமாதித்தர் நின்றிருந்த கலத்தைப் பார்த்தார்.
 

தனக்குள் புன்னகைத்தபடியே தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த சுவடிக் கட்டு ஒன்றை எடுத்தார்.அது, கடந்த ஏழு நாட்களுக்குள் மல்லைக்கு வந்த மரக்கலங்கள் தொடர்பான உண்மையான விவரங்கள் அடங்கிய பட்டியல்!  

Link to comment
Share on other sites

ரத்த மகுடம்-107

‘‘அந்த அர்த்தத்தில் கேட்கவில்லை மன்னா...’’ ஆசனத்தின் நுனிக்கு வந்து சட்டென்று பதில் அளித்தான் சாளுக்கிய இளவரசன்.

‘‘வேறு எந்தப் பொருளில் வினவினாய் விநயாதித்தா..?’’ அரியாசனத்தில் நன்றாகச் சாய்ந்தபடி கேட்டார் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மர்.
அவருக்கு அருகில் இருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்த ஸ்ரீராமபுண்ய வல்லபர் தன் நயனங்களால் விநயாதித்தனுக்கு சமிக்ஞை செய்தார்.
சாளுக்கிய இளவரசனுக்கு அருகில் இருந்த பாண்டிய இளவரசனான கோச்சடையன் இரணதீரன் அதைக் கண்டு புன்னகைத்தான்.
8.jpg
விநயாதித்தன் இவர்கள் இருவர் பக்கமும் தன் பார்வையைப் பதிக்கவில்லை. அவனது கருவிழிகள் பாண்டிய மன்னரின் கண்களை மட்டுமே இமைக்காமல் பார்த்தன. ‘‘சாதாரணமாகத்தான் கேட்டேன் மன்னா...’’
‘‘ஆனால், அது அசாதாரணமான அர்த்தத்தை வெளிப்படுத்து
கிறதே..?’’ புருவத்தை உயர்த்தினார் அரிகேசரி மாறவர்மர்.

‘‘வரலாறும் அப்படி பதிவு செய்துவிடக் கூடாதே என்றுதான் மன்னா தங்கள் எண்ணத்தை அறிய வினவுகிறேன்...’’
‘‘அதனால்தான் இந்த அகால வேளையில் என்னைத் தேடி உங்கள் தேசத்தின் போர் அமைச்சருடன் வந்திருக்கிறாயா..?’’
‘‘ஆம் மன்னா...’’‘‘சரித்திரப் பதிவுகள் மீது உனக்கு அந்தளவு அக்கறை இருக்கிறதா..?’’
‘‘அனுபவப்பட்டவன்... அனுபவித்து வருபவன் என்பதால் எழுதப்படும் வரலாற்றுக் குறிப்புகள் மீது அடியேனால் மிகுந்த அக்கறை செலுத்த முடிகிறது...’’
‘‘விளக்க முடியுமா..?’’

இப்படி அரிகேசரி மாறவர்மன் கேட்டதுமே பதில் சொல்ல ராமபுண்ய வல்லபர் முற்பட்டார்.
தன் கரங்களால் அவரை அமைதியாக இருக்கும்படி கட்டளையாக இல்லாமல் மரியாதையுடன் சைகை செய்துவிட்டு விநயாதித்தனே விடையளிக்கத் தொடங்கினான். ‘‘தாங்கள் அறியாததல்ல மன்னா...’’

‘‘நான் அறிவேனா இல்லையா என்பதல்ல விஷயம்... உனது விளக்கம் என்ன என்பதுதான் வினா...’’
‘‘பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்குமான பகை சார்வாகனர் ஆட்சிக் காலத்தில் இருந்து தொடர்கிறது. சாளுக்கியர்களின் மாமன்னரான இரண்டாம் புலிகேசி அவர்கள் தமிழகத்தின் மீது...’’
‘‘பல்லவர்களின் மீது...’’ அழுத்தத்துடன் இடைமறித்தார் அரிகேசரி மாறவர்மர்.

‘‘மன்னிக்க வேண்டும் மன்னா... நா தடுமாறிவிட்டது...’’

‘‘உள்ளத்தில் இருப்பதை உதடுகள் உச்சரித்தன...’’ நகைத்தார் பாண்டிய மன்னர். ‘‘ம்... மேலே சொல்...’’
 

‘‘பல்லவர்களின் மீது போர் தொடுத்தார். அந்த யுத்தத்தில் சாளுக்கியர்களே வெற்றி பெற்றார்கள். மகேந்திரவர்ம பல்லவரின் படைகள் தோற்றன. இது அனைவருக்கும் தெரியும்... ஆனால், பல்லவ நாட்டின் பல பகுதிகளில் சாளுக்கியர்களை பல்லவர்கள் தோற்கடித்ததாக கல்வெட்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன...’’‘‘பல்லவர்கள் மட்டும்தான் அப்படி வைத்திருக்கிறார்களா..?’’‘‘மன்னா...’’
 

‘‘நீங்கள் வைக்கவில்லையா? தன் தந்தைக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்க நரசிம்மவர்ம பல்லவர் சாளுக்கியர்களின் மீது போர் தொடுத்தார். அந்த யுத்தத்தில் சாளுக்கியர்களின் தலைநகரான வாதாபியை அவர் தீக்கிரையாக்கினார். இதுவும் அனைவரும் அறிந்த செய்திதான்.
 
ஆனால், அப்படியா உங்கள் நாட்டில் கல்வெட்டு வைத்திருக்கிறீர்கள்..? அந்தப் போரில் சாளுக்கியர்கள் வெற்றி பெற்றதாகவும் நரசிம்மவர்மரின் படைகள் தோற்று ஓடியதாகவும் சாசனமாக செதுக்கியிருக்கிறீர்களே..!’’  தன்னையும் அறியாமல் சட்டென ஸ்ரீராமபுண்ய வல்லபரைப்பார்த்தான் விநயாதித்தன்.


இதைக் கண்டு அரிகேசரி மாறவர்மரும் கோச்சடையன் இரணதீரனும் நகைத்தார்கள்.
‘‘விநயாதித்தா...’’ அழைத்தார் பாண்டிய மன்னர்.
விநயாதித்தன் சங்கடத்துடன் அவரை ஏறிட்டான்.
 

‘‘இதில் சங்கடப்பட எதுவுமில்லை... எப்படி நீங்கள் செய்தது தவறில்லையோ அப்படி பல்லவர்கள் கல்வெட்டுகள் வைத்ததும் பிழையில்லை. அவரவர் தேசத்து மக்களை உற்சாகப்படுத்தவும் போர் வீரர்களுக்கு நம்பிக்கை அளித்து மறுமுறை யுத்தம் புரியும் வெறியை ஏற்றவும் இப்படி சின்னச் சின்ன வெற்றிகளைக் கூட பெரும் வெற்றியாக கல்வெட்டில் செதுக்கிவைப்பது அரச மரபுதான்... ராஜ தந்திரத்தில் இதுவும் அடக்கம்தான்...’’
 

‘‘புரிகிறது மன்னா...’’‘‘எது..? கல்வெட்டுகள் தொடர்பான இந்த சர்ச்சைகள்தானே..?’’
‘‘அதுமட்டுமல்ல மன்னா... சரித்திரப் பதிவுகள் தொடர்பாக நாம் உரையாடிக் கொண்டிருக்கும் விஷயமும்தான்!’’

‘‘பலே...’’ நிமிர்ந்து உட்கார்ந்தார் பாண்டிய மன்னர். ‘‘ஸ்ரீராமபுண்ய வல்லபரே... சரியாகத்தான் உங்கள் சிஷ்யனை வளர்க்கிறீர்கள்! சாளுக்கிய அரியணையில் விநயாதித்தன் அமரும்போது நிச்சயம் தன் தேசத்துக்கு விசுவாசமாக இருப்பான்... இருப்பார்! என்ன ரணதீரா... நான் சொல்வது சரிதானே..?’’‘‘உரைகல்லில் உரசிப் பார்த்து நீங்கள் சொல்லும்போது அது சரியாகத்தான் இருக்கும் மன்னா...’’ இரணதீரன் மரியாதையுடன் தன் தந்தைக்கு பதில் அளித்தான்.

‘‘அளவுக்கு மீறி என்னைப் புகழ்கிறீர்கள்...’’ விநயாதித்தன் நெளிந்தான்.‘‘உண்மையைச் சொல்கிறோம்...’’ அரிகேசரி மாறவர்மரின் விழிகள் சாந்தத்துடன் விநயாதித்தனை அளவெடுத்தன. ‘‘இதில் எனது சுயநலமும் கலந்திருக்கிறது...’’அங்கிருந்த மூவரும் கேள்வியுடன் பாண்டிய மன்னரை நோக்கினார்கள்.‘‘நாளை என் மகன் ரணதீரன் பாண்டிய அரியணையில் அமரும்போது அவனுக்கு சமமான வீரர்கள் அருகில் இருக்கும் தேசங்களை ஆட்சி புரிய வேண்டும்! அதுதான் என் மைந்தனின் வீரத்துக்கு அழகு!’’பெருமையுடன் விநயாதித்தனைப் பார்த்தார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்.
 

விநயாதித்தன் எழுந்து பாண்டிய மன்னரின் அருகில் வந்தான். அவரது கால்களைத் தொட்டு வணங்கினான்.
 

அவனைத் தூக்கி நிறுத்தினார் அரிகேசரி மாறவர்மர். ‘‘நன்றாக இரு... இறுதி மூச்சு நிற்கும் வரை உன் தேசத்து மக்களுக்கு ஒரு குறையையும் வைக்காதே... மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆட்சியை நடத்து... எதிரிகளை மன்னிக்காதே... அவர்கள் செய்ததை மறக்கவும் செய்யாதே!’’
‘‘மிக்க நன்றி மன்னா...’’ தன் ஆசனத்தில் இருந்து எழுந்து நின்ற ராமபுண்ய வல்லபர் திருப்தியுடன் பதில் அளித்தார்.

‘‘பழம்பெருமை வாய்ந்த பாண்டிய தேசத்தின் ஆசி சாளுக்கிய இளவரசருக்கு கிட்டியிருக்கிறது... இதைவிட வேறென்ன எங்களுக்கு வேண்டும்...’’
இதைக் கேட்டதும் அரிகேசரி மாறவர்மரின் கண்கள் சிந்தனையில் ஆழ்ந்தன. ‘‘ஆசி வேறு... உறுதிமொழி வேறு என்பதை அறியாதவரல்ல நீங்கள்...’’
‘‘மன்னா...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் ஓரடி முன்னால் எடுத்து வைத்தார்.

‘‘சாளுக்கிய போர் அமைச்சரே... விநயாதித்தனுக்கு நான் ஆசி வழங்கியது வயதிலும் அனுபவத்திலும் மூத்தவன் என்பதால்... ஆனால், பல்லவர்களுக்கும் உங்களுக்கும் விரைவில் நடக்கவிருக்கும் யுத்தத்தில் யாருக்கு நாங்கள் துணையாக நிற்போம் என்பதை இப்போது என்னால் சொல்ல முடியாது... அது தொடர்பான உறுதிமொழியையும் வழங்க இயலாது...’’விநயாதித்தன் நிமிர்ந்தான்.

‘‘அமைச்சரைவைக் கூட்டி மந்திராலோசனை நடத்திதான் யுத்தம் தொடர்பான முடிவை பாண்டிய மன்னனாக நான் எடுக்க முடியும்... இதில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை... தேசம் சம்பந்தப்பட்ட பிரச்னையில் நாட்டின் பிரதிநிதிகள்தான் ஒருமனதாக முடிவெடுக்க முடியும்... புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்...’’ஸ்ரீராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

‘‘நீங்கள் கணித்தது சரிதான்... பாதாளச் சிறையில் இருந்த சிவகாமியைத் தப்பிக்க வைத்தது நான்தான்...’’ நிதானமாகச் சொன்னார் அரிகேசரி மாறவர்மர்.‘‘இந்த நள்ளிரவு நேரத்தில் என்னைச் சந்திக்க நீங்கள் இருவரும் வந்தபோதே எதற்காக வருகை புரிந்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொண்டேன்...’’ சாளுக்கிய இளவரசனை அணைத்தபடி மெல்ல அந்த அறையில் நடந்தார் பாண்டிய மன்னர். ‘‘வந்ததும் நீ கேட்டதற்கான பதில் இதுதான் விநயாதித்தா...’’ ‘‘எதற்காக இப்படிச் செய்தீர்கள் மன்னா...’’ உடன் நடந்தபடி ஸ்ரீராமபுண்ய வல்லபர் வினவினார்.
 

‘‘சாளுக்கியர்களின் நலனுக்காக என்று சொன்னால் அது பொய்...’’ திரும்பி அவரைப் பார்த்து புன்னகைத்தார் அரிகேசரி மாறவர்மர். ‘‘பாண்டியர்களின் நலனுக்காக என்றால் அதுவே மெய்!’’‘‘புரியவில்லை மன்னா...’’ அணைப்பின் கூச்சத்துக்கு மத்தியிலும் விழிப்புடன் விநயாதித்தன் உரையாடலைத் தொடர்ந்தான்.
 
‘‘பாண்டியர்களின் உதவி கேட்டு நீங்கள் இருவரும் மதுரைக்கு வந்தீர்கள்... அரைத் திங்களாக எங்கள் விருந்தினராக இங்கு தங்கியிருக்கிறீர்கள்... உங்களுக்கு உரிய பதிலைச் சொல்வதற்குள் திடீரென்று பல்லவர்களின் உபசேனாதிபதியும், பல்லவ இளவரசனின் உயிருக்கு உயிரான நண்பனும், பாரத தேசத்தின் தலைசிறந்த அசுவ சாஸ்திரியுமான கரிகாலன் மதுரைக்கு வந்து சேர்ந்தான்...’’‘‘தன் பங்குக்கு பாண்டியர்களின் உதவியைக் கேட்டுத்தானே..?’’


‘‘இல்லை சாளுக்கிய போர் அமைச்சரே!’’ அதுவரை அமைதியாக நின்றிருந்த பாண்டிய இளவரசனான கோச்சடையன் இரணதீரன் பளிச்சென்று பதில் அளித்தான். மூவர் கண்களும் திகைப்புடன் அவனை நோக்கின.
‘‘கரிகாலன் மதுரைக்கு வந்தது பாண்டியர்களின் உதவியைக் கேட்டு அல்ல!’’ அழுத்தமாகச் சொன்னான் இரணதீரன்.
‘‘பிறகு..?’’ ராமபுண்ய வல்லபரின் குரலில் அதிர்ச்சி.

‘‘நமக்கு பாண்டியர்கள் உதவக் கூடாது என்பதற்காகவே
கரிகாலன் மதுரைக்கு வந்திருக்கிறான்...’’ சட்டென்று சொன்னான் விநயாதித்தன்.
இடுப்பில் கைகளை வைத்தபடி இரு இளவரசர்களையும்
அன்புடன் மாறி மாறிப் பார்த்தார் அரிகேசரி மாறவர்மர்.

‘‘சாளுக்கிய இளவரசர் சொல்வது நூற்றுக்கு நூறு சரி! கரிகாலனின் நோக்கம் அதுதான்... அதனால்தான் எனக்கு நீங்கள் விருந்தளித்தபோது அனைவர் முன்பாகவும் திட்டமிட்டு உங்கள் ஒற்றர் படைத் தலைவியான சிவகாமியின் மீது பெரும் ஐயத்தைக் கிளப்பினான். சந்தர்ப்ப சாட்சியங்கள் கரிகாலனுக்கு சாதகமாக இருக்கவே சிவகாமியைக் கைது செய்து பாதாளச் சிறையில் அடைக்க வேண்டியதாயிற்று.
 

இதற்குள் இந்த விஷயம் பாண்டிய தேசம் முழுக்க பரவிவிட்டது. ‘நட்பு பாராட்ட சாளுக்கிய இளவரசர் தன் நாட்டின் போர் அமைச்சருடன் மதுரைக்கு வருகிறார்... அதேநேரம் தனது ஒற்றர் படைத் தலைவியை வைத்து பாண்டிய நாட்டில் உளவும் பார்க்கிறார்... இது நியாயமா...’ இப்படித்தான் மக்கள் விவாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
 
இது நிச்சயமாக பாண்டிய மன்னர் கூட்டவிருக்கும் மந்திராலோசனையில் எதிரொலிக்கும்...’’‘‘புரிகிறது பாண்டிய இளவரசே... சாளுக்கியர்கள் பக்கம் பாண்டியர்கள் நிற்க முடியாத நிலையை கரிகாலன் உருவாக்கியிருக்கிறான்...’’ புருவங்கள் முடிச்சிட விநயாதித்தன் ஆமோதித்தான்.

 

‘‘அதேதான் சாளுக்கிய இளவரசே... அதற்காக பல்லவர்களுக்கு உதவியாக பாண்டியப் படைகள் திரளும் என்றும் நீங்கள் முடிவு செய்ய வேண்டாம்... இதுவும் நடக்காதபடி வெகு சாமர்த்தியமாக முதியவர் அதங்கோட்டாசானை வைத்து கரிகாலன் காய்களை நகர்த்தியிருக்கிறான்...’’
 

‘‘எதற்காக இப்படி பாண்டியர்கள் எங்கள் பக்கமும் வராமல் பல்லவர்கள் பக்கமும் செல்லாமல் கரிகாலன் முட்டுக்கட்டை போடுகிறான்..?’’ உதட்டைக் கடித்தபடி ஸ்ரீராமபுண்ய வல்லபர் கேட்டார்.

‘‘பதினைந்து பேருக்காக...’’ புன்னகைத்தார் அரிகேசரி மாறவர்மர். ‘‘உங்களிடம் சிக்கிய கடிகை பாலகனிடம் ஒன்றே போல பதினைந்து செய்திச் சுவடிகள் இருந்ததே... பாதாளச் சிறையில் ரகசியமாக சிவகாமி உங்களிடம் கொடுத்தாளே... அதேதான்!’’

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ரத்த மகுடம்-108

அதிர்ச்சியின் விளிம்பில் ஊசலாடினார் ஸ்ரீராமபுண்ய வல்லபர். ‘‘பதினைந்து பேர்... பதினைந்து பேர்...’’ அவரையும் அறியாமல் அவர் உதடுகள் முணுமுணுத்தன. மனதில் குருதி வடிய கடிகை பாலகன் சிரித்த  காட்சி வந்து போனது.‘‘பதினாறு மன்னா...’’ திகைப்பை வெளிக்காட்டாமல் விநயாதித்தன் பதில் சொன்னான். ‘‘கடிகை பாலகனிடம் இருந்தது ஒரே மாதிரியான பதினைந்து செய்திகள்தான். ஆனால்...’’‘‘... பாதாளச் சிறையில் சிவகாமி தன் பங்குக்கு உங்களிடம் அதே செய்தியைக் கொடுத்தாள். எனவே அவளையும் சேர்த்து பதினாறு என்கிறாய்... அப்படித்தானே..?’’
26.jpg
நிதானமாகக் கேட்டுவிட்டு பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மர் வாஞ்சையுடன் விநயாதித்தனை நோக்கினார்.
தன் தலையை அசைத்து ஆம்... என ஆமோதித்தான் சாளுக்கிய இளவரசன்.‘‘சிவகாமியை கணக்கிலேயே கரிகாலன் சேர்க்கவில்லை
விநயாதித்தா... அவனது குறி பதினைந்து பேர்! இவர்களுக்காகத்தான் பாண்டியர்களாகிய நாங்கள் சாளுக்கியர்கள் பக்கமோ அல்லது பல்லவர்கள் பக்கமோ சாயாதபடி காய்களை நகர்த்துகிறான்...’’‘‘யார் அந்த பதினைந்து பேர்...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் பட படத்தார்.

‘‘உங்கள் மன்னருக்கு தெரியும்!’’ கம்பீரமாக அறிவித்தார் அரிகேசரி மாறவர்மர்.‘‘சாளுக்கிய மன்னரா... அவர் இதை அறிவாரா..?’’ புருவங்கள் உயர... நயனங்கள் விரிவடைய... உதடுகள் துடிக்க சாளுக்கிய போர் அமைச்சர் குழறினார்.‘‘அப்படித்தான் நினைக்கிறேன்... கடிகை பாலகன் குறித்து எனது ஒற்றர்கள் தெரிவித்ததும் அந்த நினைப்பு உறுதியானது...’’குழப்பத்துடன் ஸ்ரீராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

இரணதீரன் தன் தந்தையான அரிகேசரி மாறவர்மரை பெருமைபொங்கப் பார்த்தான்.‘‘விநயாதித்தா... உண்மையிலேயே மாவீரரும் மிகச்சிறந்த ராஜதந்திரியுமான விக்கிரமாதித்தருக்கு நீ மகனாகப் பிறந்திருக்கிறாய்... ஸ்ரீராமபுண்ய வல்லபரே... தலைசிறந்த மன்னருக்கு நீங்கள் போர் அமைச்சராகப் பணிபுரிகிறீர்கள்... இதை என்றும் மறக்காதீர்கள்...’’ அரிகேசரி மாறவர்மரின் கண்கள் கனவில் சஞ்சரித்தன.

‘‘தன் தந்தையின் மரணத்துக்கு பழி தீர்க்க விக்கிரமாதித்தர் வந்திருப்பது புதிதல்ல... எல்லா மகனும் செய்யக் கூடியதுதான். போலவே தன் நாட்டுக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்க பல்லவ நாட்டின் மீது விக்கிரமாதித்தர் படையெடுத்ததும் அப்படியொன்றும் சிறப்பான செய்கை அல்ல. அடிபட்ட எல்லா நாட்டு மன்னர்களும் மேற்கொள்ளும் நடவடிக்கைதான் அது.

ஆனால்...’’விநயாதித்தனை நெருங்கி அவன் தோள்களில் தன்னிரு கரங்களையும் பதித்தார் பாண்டிய மன்னர். ‘‘எந்த இடத்தில் உன் தந்தை தனித்த ஆளுமையாக... மிகச்சிறந்த ராஜதந்திரிகளில் ஒருவராக வெளிப்படுகிறார் தெரியுமா..? பதினைந்து பேரை இனம் கண்ட விஷயத்தில்!’’  
‘‘வேலைகள் சிறப்பாக நடக்கின்றதா சுங்கத் தலைவரே...’’குரல் வந்த திசையை நோக்கி அதிர்ச்சியுடன் தன் தலையை உயர்த்தினார் மல்லைக் கடற்கரை சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்து தன் பணிகளை மேற்கொண்டிருந்த சுங்கத் தலைவர்.

‘‘மன்னா...’’
‘‘எழுந்திருக்க வேண்டாம்... அமருங்கள்...’’ என்றபடியே தரைவிரிப்பில் சகஜமாக அமர்ந்தார் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர்.அங்கிருந்த அலுவலர்கள் யாருமே மன்னரின் வருகையை எதிர்பார்க்கவில்லை. அது அவர்களது உடல்மொழியிலும் முக மாறுதலிலும் அப்பட்டமாகவே எதிரொலித்தது.

‘‘ஏன் சிலையாகி விட்டீர்கள்... வணிகர்கள் காத்திருக்கிறார்கள் அல்லவா... மரக்கலங்கள் புறப்பட வேண்டுமல்லவா..? பணிகளை கவனியுங்கள்...’’ அலுவலர்களுக்கு உத்தரவிட்டுவிட்டு தன் பார்வையால் சுங்கச் சாவடியை ஆராய்ந்தார் விக்கிரமாதித்தர்.சுங்கத் தலைவருக்கு உள்ளூர உதறல் எடுத்தது. மரக்கலங்களைப் பார்வையிடச் சென்ற மன்னர் அப்படியே புறப்படுவார்... அவரை வழியனுப்ப, தான் சென்றால் போதும் என்று நினைத்திருந்தார். இப்படி அரவமின்றி சுங்கச் சாவடிக்குள் நுழைந்து தன் எதிரே அமர்வார் என்று துளியும் எதிர்பார்க்கவில்லை.

நடுக்கத்தை மறைத்தபடி தன் முன் இருந்த ஓலையில் எழுதப்பட்டிருந்த பொருட்களின் விவரங்களைப் பார்வையிட்டார். மனமோ இடுப்பில் மறைத்து வைத்திருந்த சுவடியைச் சுற்றியே வட்டமிட்டது.‘‘சுங்கத் தலைவரே...’’‘‘மன்னா...’’அவரது கருவிழிகளை உற்றுப் பார்த்தபடியே விக்கிரமாதித்தர் கேட்டார். ‘‘பதினைந்து பேரைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?!’’‘‘பதினைந்து பேர்... ஆம்... பதினைந்து பேர்...’’ அழுத்தமாகச் சொன்னார் அரிகேசரி மாறவர்மர். ‘‘ஆனால், இவர்கள் வெறும் நபர்களல்ல... தமிழகப் பகுதிகளின் வேர்கள்!’’அங்கிருந்த மூவரும் தங்கள் சுவாசத்தின் ஒலி கூட இடையூறாகி விடக் கூடாதே என்ற கவனத்துடன் அமைதியாக பாண்டிய மன்னரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

‘‘புரியவில்லையா..? குறுநில மன்னர்கள்! தமிழக நிலத்தின் அடிவேர்களே இந்தப் பதினைந்து பேர்தான்! தலைமுறைக்கு தலைமுறை ஆட்கள் மாறுவார்கள்... ஆனால், பதினைந்து என்ற எண்ணிக்கை மட்டும் குறையாது. எப்படி ஆலமரத்தின் கிளைகளே விழுதுகளாகி மரமாக வளர்கிறதோ... அப்படித்தான் இந்த பதினைந்து பேரும் தமிழகப் பரப்பைக் காத்து நிற்கிறார்கள்.
 

பேரரசுகள் உருவாகும்... மறையும்... மன்னர்கள் தோன்றுவார்கள்... கரைவார்கள்... திடீரென பல்லவர்கள் மொத்த தமிழகப் பரப்பையும் ஆட்சி செய்வார்கள்... பிறகு பாண்டியர்கள் தலையெடுப்பார்கள்... பின்னர் சோழர்கள் தங்கள் ராஜ்ஜியத்தை விரிவுபடுத்துவார்கள்... இவையெல்லாம் நடக்கலாம்... அல்லது நடைபெறாமலும் போகலாம்...
 
ஆனால்...’’நிறுத்திவிட்டு ஆறு கருவிழிகளையும் ஒருசேர தன் நயனங்களால் நோக்கினார். ‘‘எது நடந்தாலும்... எந்த அரசு பேரரசாக வளர்ந்து தமிழகத்தை ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்ய முற்பட்டாலும் அதற்கு இந்த பதினைந்து பேர் துணையிருக்க வேண்டும்! இந்தப் பதினைந்து வேர்கள் தாங்கிப் பிடிக்காமல் எந்த மரமும் வளராது!
 
அதனால் தான்  உங்கள் மன்னர் விக்கிரமாதித்தர் பதினைந்தையும் தன் பக்கம் இழுக்க முற்படுகிறார்... ஏனெனில் தமிழக வரலாற்றை அவர் கசடற கற்றபிறகே தன் பழிவாங்கலைத் தொடங்கியிருக்கிறார்... இந்த நிலப்பரப்பின் வதனத்தில் ஓடும் பதினைந்து ரேகைகளையும் வசப்படுத்துவதற்கான காரியங்களில் இறங்கியிருக்கிறார்...
 
’’நிறுத்திய அரிகேசரி மாறவர்மர், புன்னகையுடன் தன் சிரசை சாய்த்தார். ‘‘கோபம் உயிரினத்தின் ஆதி உணர்ச்சி ஸ்ரீராமபுண்ய வல்லபரே... ஆனால், அந்த ஆதி உணர்ச்சியை... கோபத்தை... எந்த இடத்தில்... எப்பொழுது... ஏன்... எதற்காக... யாருக்கு எதிராக... எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை யார் அறிகிறானோ... எவன் இந்தக் கலையில் வல்லவனாகிறானோ... அவனே தன் இலக்கை அடைகிறான்... சாளுக்கிய மன்னர் அப்படி தன் நோக்கத்தை நோக்கிப் பயணிக்கிறார். அதனால்தான் விநயாதித்தா உன் தந்தையை தனித்த ஆளுமை கொண்டவர் என்கிறேன்!’’

‘‘கரிகாலன் என்ற ஒற்றை நபரால் எப்படி இதைத் தடுத்து நிறுத்த முடியும் மன்னா..?’’ புருவங்களை உயர்த்தியபடி விநயாதித்தன் வினவினான்.
‘‘அவன் பெயரே கரிகாலன் என்றிருப்பதால்!’’ இடியென நகைத்தபடி தன் மீசையை நீவினார் அரிகேசரி மாறவர்மர்.
 
‘‘புரியும்படி சொல்கிறேன்... அதற்கு முன்னால்... பல்லவர்களின் ஒற்றர் படையில் ஒரேயொரு காபாலிகன் உண்டு... பல திங்களாக அவனைக் காணவில்லை... அவன் என்ன ஆனான் என்று தெரியுமா... அவனுக்கும் பதினைந்து பேர்களுக்குமான தொடர்பை அறிவீர்களா..? இது தெரிந்தால் மட்டுமே கரிகாலன் - காபாலிகன் - சிவகாமி என்கிற முக்கூடல் சங்கமம் உங்களுக்குப் புரியும்!’’
 
Link to comment
Share on other sites

ரத்த மகுடம்-109

‘‘நீங்கள் விழிக்கும்படியோ திணறும்படியோ எதையும் நான் கேட்டுவிடவில்லையே சுங்கத் தலைவரே..? பதினைந்து பேரைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்றுதானே வினவினேன்...’’ அமர்ந்திருந்த நிலையில் தன் கால்களை நீட்டினார் சாளுக்கிய மன்னர்.
‘‘எந்தப் பதினைந்து பேர் மன்னா..?’’ எழுந்து நின்றபடி சுங்கத் தலைவர் மென்று விழுங்கினார். அவர் இடுப்பில் இருந்த சுவடிக்கட்டு கனத்தது!
‘‘அப்படியானால் உங்களுக்குத் தெரிந்து எண்ணற்ற பதினைந்து பேர் கொண்ட குழுக்கள் இருக்கின்றன... அப்படித்தானே..?’’
‘‘மன்னா...’’

‘‘என்ன மன்னா..?‘‘ சாளுக்கிய மன்னரின் நயனங்கள் சிவந்தன. ‘‘‘எந்தப் பதினைந்து பேர்’ என்று நீங்கள் கேட்டதற்கான அர்த்தம் என்ன..?’’
குளுமையாக கடல் காற்று வீசியபோதும் சுங்கத் தலைவருக்கு வியர்த்தது. தீப்பந்தத்தின் ஒளியில் ஜொலித்த சாளுக்கிய மன்னரின் முகத்தை எதிர்கொள்ள இயலாமல் தவித்தார்.‘‘நான் புத்தியில் மட்டு மன்னா...’’ ‘‘மட்டுப்பட்டவர்களை சுங்க அதிகாரியாக பரமேஸ்வர வர்மர் நியமிக்க மாட்டாரே..?’’‘‘பேசத் தெரியாதவனையும் புத்தியில் மட்டு என்று சொல்வதுண்டு மன்னா...’’‘‘பேச்சில் வல்லமை இல்லையென்றால் மல்லைக் கடல் வணிகத்தை பழுதின்றி நடத்த இயலாதே..?’’

சரமாரியாக அம்புகள் பாய்வதுபோல் விக்கிரமாதித்தரின் உதடு களில் இருந்து பிறந்த கணைகளால் சுங்கத் தலைவர் நிலைகுலைந்தார். அங்கிருந்த அலுவலர்களின் கண்களில் அச்சத்தின் ரேகைகள் படர்ந்தன.‘‘மன்னா...’’ தழுதழுத்தார். ‘‘யார் அந்தப் பதினைந்து பேர்...’’ கேட்டு முடிப்பதற்குள் ஒரு யுகமே கடந்ததுபோல் சுங்கத் தலைவர் உணர்ந்தார்.

‘‘ம்... இப்பொழுதுதான் உங்கள் வார்த்தைகள் என் கேள்வியை நோக்கி வந்திருக்கின்றன...’’ நீட்டிய காலை மடக்கினார் சாளுக்கிய மன்னர். ‘‘மல்லை துறைமுகம் வழியே மொத்தம் எத்தனை வணிகர்கள் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்கிறார்கள்..?’’‘‘நாள் ஒன்றுக்கு சிறியதும் பெரியதுமாக ஐம்பதுக்கும் மேற்பட்ட வணிகர்கள் இத்துறைமுகத்தை பயன்படுத்துகிறார்கள் மன்னா...’’
‘‘நான் கேட்டது சரியான எண்ணிக்கை...’’‘‘ஐம்பத்து ஏழு வணிகர்கள் மன்னா...’’
‘‘இங்கு எத்தனை வணிக சாத்துகள் இருக்கின்றன..?’’‘‘பதினாறு மன்னா...’’

‘‘அதாவது மரக்கலங்களில் இருந்து வந்திறங்கும் பொருட்களை அடுக்கி வைத்து தேவைக்கு ஏற்ப உள்நாட்டில் விநியோகிக்கவும்... உள்நாட்டிலிருந்து பொருட்களை சேகரித்து பாரத தேசம் முழுக்கவும், கடல் கடந்திருக்கும் மற்ற நாடுகளுக்கும் பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தக் கடற்கரைப் பகுதியில் தங்களுக்கென சொந்தமான இடத்தை இவர்கள் வைத்திருக்கிறார்கள்... அப்படித்தானே..?’’
‘‘ஆம் மன்னா...’’

‘‘இதையே வணிக சாத்துகள் என அழைக்கிறீர்கள்... சரியா..?’’சாளுக்கிய மன்னர் எதற்காக இப்படிக் கேட்கிறார் என சுங்கத் தலைவருக்குப் புரியவில்லை. ஆனால், தன்னைச் சுற்றிலும் வலை விரிக்கிறார் என்பது மட்டும் புரிந்தது. சிக்காமல் இருக்க வேண்டுமே என மனதுக்குள் பிரார்த்தித்தார். அவரையும் அறியாமல் அவர் கரங்கள் இடுப்பு வேட்டியைச் சரி செய்தது.

கணத்துக்கும் குறைவான நேரத்தில் விக்கிரமாதித்தரின் பார்வை அவரது இடுப்புக்குச் சென்று மீண்டது. ‘‘கேள்வி ஒன்று கேட்டேன்...’’
‘‘ஆம் மன்னா... அவரவருக்கான இடத்தின் வாசலில் சில்லறை விற்பனையை மேற்கொண்டாலும் அதன் உட்புறத்தில் ஏற்றுமதிக்கான பொருட்களும் இறக்குமதிக்கான பொருட்களும் சுங்க முத்திரையுடன் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன... பொதுவாக வணிக சாத்துகள் என்றால் அனைத்து விதமான பொருட்களையும் விற்பனை செய்யும் இடம் என்று பொருள்... என்றாலும் நம் வசதிக்காக கடற்கரையில் வணிகர்கள் தங்களுக்கென சொந்தமாக அமைத்திருக்கும் இடத்தையும்... இடங்களையும் கூட வணிக சாத்து என்றே அழைக்கிறோம்...’’

‘‘நம் வசதிக்காக... நம் வசதிக்காக... இந்த சொற்பிரயோகம் எனக்கு பிடித்திருக்கிறது சுங்கத் தலைவரே...’’ விக்கிரமாதித்தர் வாய்விட்டுச் சிரித்தார். ‘‘இந்த பதினாறு வணிக சாத்துகளை அமைத்திருப்பவர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களா..?’’‘‘இல்லை மன்னா... அரபு தேசத்தவர்கள்... யவனர்கள்... சீனர்கள்... என எல்லா நாட்டினரும் இதில் அடக்கம்...’’‘‘அதாவது அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இங்கு வணிக சாத்துகள் இருக்கின்றன... அப்படித்தானே..?’’‘‘ஆம் மன்னா...’’

‘‘இதில் ஹிரண்ய வர்மருக்கு சொந்தமான வணிக சாத்தும் அடக்கமா..?’’
‘‘மன்னா...’’‘‘எதற்காக இப்படி அலறுகிறீர்கள்?! பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மரின் தாயாதியான ஹிரண்ய வர்மருக்கும் இங்கு... இந்த மல்லைக் கடற்கரையில்... வணிக சாத்து இருக்கிறதா என்றுதானே கேட்டேன்...’’‘‘இருக்கிறது மன்னா...’’ சுங்கத் தலைவருக்கு உதறல் எடுத்தது. நடுக்கத்தைக் கட்டுப்படுத்த தன் கால் பெருவிரலை தரையில் அழுத்தினார்.

‘‘வாரிசுரிமைப் போர் வரவேண்டாம் என்பதற்காக கடல் கடந்த பகுதியில் பல்லவ மன்னர்களின் தாயாதிகள் தங்களுக்கென ராஜ்ஜியம் ஒன்றை அமைத்திருக்கிறார்கள் அல்லவா..? அந்தத் தாயாதி வம்சத்தில் இப்போது அங்கு அரசராக இருப்பவர் ஹிரண்ய வர்மர் அல்லவா..?’’
‘‘ஆ...ம்... மன்னா...’’

‘‘சங்க கால சோழர்களின் வழித்தோன்றல்களில் ஒரு பிரிவினரும் பல்லவ தாயாதிகளுடன் இரண்டறக் கலந்து எங்கோ இருக்கும் அத்தேசத்தை ஆள்கிறார்கள் அல்லவா..?’’சுங்கத் தலைவரின் உதடுகளில் இருந்து காற்று மட்டுமே வெளியேறியது. எனவே ‘ஆம்’ என தலையசைத்தார்.
‘‘ஒருவேளை பல்லவ அரசருக்கு வாரிசு இல்லாமல் போனால் ஹிரண்யவர்மரின் வம்சத்தைச் சேர்ந்த ஏதேனும் ஒரு பாலகனை இங்கு அழைத்து வந்து மன்னராக அமர வைப்பார்கள் அல்லவா..?’’‘‘தெரியவி...ல்...லை... ம...ன்...னா...’’

‘‘தெரியவில்லை... நல்ல பதில் சுங்கத் தலைவரே! சாளுக்கியர்களின் ஆளுகைக்குக் கீழ் பல்லவ நாடு வந்துவிட்டது... இனி என் வினாவுக்கு எந்தப் பொருளும் இல்லை என்பதால் தெரியவில்லை என்று நீங்கள் சொன்னதே சரி... ஆனால், பல்லவ நாட்டை மீட்க பரமேஸ்வர வர்மர் ரகசியமாக படை திரட்டி வருகையில்... ஹிரண்ய வர்மர் அவருக்கு உதவாமல் இருப்பாரா..? அவருக்கு சொந்தமான வணிக சாத்தில் என்னென்ன பொருட்கள் வந்து இறங்கியிருக்கின்றன..?’’‘‘வைரங்களும்... வைடூரியங்களும் மன்னா...’’

‘‘அப்படியா..? எங்கே உங்கள் இடுப்பில் இருக்கும் சுவடியை எடுங்கள்... நான் பார்க்கிறேன்!’’  
சப்த நாடிகளும் ஒடுங்க சாளுக்கிய மன்னரை வெறித்தார் சுங்கத் தலைவர்.‘‘ம்...’’ கர்ஜித்தார் விக்கிரமாதித்தர்.
கரங்கள் நடுங்க தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த சுவடிக் கட்டை எடுத்து அவரிடம் கொடுத்தார் சுங்கத் தலைவர்.
நிதானமாக அதை வாங்கிப் பிரித்தார் சாளுக்கிய மன்னர்.

முதல் ஓலையில் -மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய புலவர் தண்டி அவர்களுக்கு...
காபாலிகன் எழுதுவது... - என்று இருந்தது!காஞ்சியில் இருந்த தன் மாளிகையின் பூஜை அறையில் அமர்ந்தபடி சாக்த உபாசகரான புலவர் தண்டி வழக்கம்போல் பிரம்ம முகூர்த்தத்தில் அம்பாளுக்கு அபிஷேகம் செய்துகொண்டிருந்தார்.பால், தயிர், தேன், சந்தனம்... என பூரணமாக அபிஷேகம் செய்து முடித்ததும் வஸ்திரத்தால் அம்பாளை நன்கு துடைத்தார். பட்டு வஸ்திரத்தை புடவையாகக் கட்டினார். அம்பாளின் நெற்றியில் சந்தனம் இட்டு அதன் மீது குங்குமத்தை வைத்தார்.

பாரிஜாத மலர்கள் அடங்கிய தட்டை எடுத்து அர்ச்சனை செய்தவர், இறுதியில் மலர்களுக்கு அடியில் அத்தட்டில் இருந்த ஓலையை எடுத்தார். அம்பாளை கைகூப்பி வணங்கிவிட்டு பஞ்சமுக விளக்கின் ஒளியில் அதைப் படித்தார்.மதுரை பாதாளச் சிறையில் தன்னைக் காணவந்த ராமபுண்ய வல்லபரிடமும் விநயாதித்தனிடமும் எந்த வாசகங்கள் அடங்கிய பட்டுத் துணியை சிவகாமி கொடுத்தாளோ -ஒன்றே போல் எந்த வாசகங்கள் அடங்கிய பதினைந்து பட்டுத் துணிகளை சாளுக்கிய வீரர்கள் கடிகை பாலகனிடம் இருந்து கைப்பற்றி ராமபுண்ய வல்லபரிடமும் விநயாதித்தனிடமும் கொடுத்தார்களோ -அதே வாசகங்கள்தான் அந்த ஓலையிலும் எழுதப்பட்டிருந்தது!   

‘இன்றிரவு மதுரையின் மேல் புறாக்கள் பறக்கும்... அதுதான் மதுரையில் பயிற்சி பெற்று வரும் பல்லவ வீரர்களுக்கான சமிக்ஞை. இதனைத் தொடர்ந்து கருக்கலில் மதுரைக் கோட்டைக் கதவுகள் திறக்கப்பட்டதும் வணிகர்களோடு அந்த வீரர்கள் வெளியேறுவார்கள். வடக்கு நோக்கிச் செல்லும் அவர்களை மதுரைக் கோட்டைக்கு மூன்று கல் தொலைவில் வளைத்துப் பிடிக்கவும்...’
 
Link to comment
Share on other sites

  • 4 weeks later...

110

‘‘காபாலிகன்...’’ ஒன்றுக்கு இருமுறை உரக்கப் படித்தார் சாளுக்கிய மன்னர். ‘‘சுங்கத் தலைவரே...’’ நிமிர்ந்தார் விக்கிரமாதித்தர். ‘‘புலவர் தண்டியின் ஒற்றர் படையில் சைவ, வைணவ, சாக்த, கெளமார, புத்த, சமணப் பிரிவைச் சேர்ந்தவர்கள் பணிபுரிவதாகவும்... எட்டுத் திசைகளிலும் அலைந்து திரிந்து ஒற்று அறிந்து அதை அவரிடம் ஒப்பிப்பதாகவும் கேள்விப்பட்டேன்... உண்மையா..?’’
18.jpg
‘‘தெ...ரி...யா...து... மன்னா... அது... அரசு உள்விவகாரம்... என்னைப் போன்ற சாமான்யனுக்கு இந்த விஷயங்கள் குறித்த அறிவு மருந்துக்கும் இல்லை.. சுங்கச் சாவடி அரசு உள்விவகாரத்தில் வராதா..?’’ சாளுக்கிய மன்னர் சுற்றிலும் தன் பார்வையைச் செலுத்தி அங்கிருந்த அலுவலர்களை அலசினார். ‘‘புலவர் தண்டியின் ஒற்றர்கள் இந்த சுங்கச் சாவடியிலும் இருக்கிறார்களா..?’’ சுங்கத் தலைவருக்கு வியர்த்தது.

‘‘புரிகிறது... ஒற்றர்கள் எப்பொழுதும் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்கள்... எனவே உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்...’’
அப்பாடா என சுங்கத் தலைவர் பெருமூச்சு விட்டு முடிப்பதற்குள் அவரது சுவாசத்தையே இறுகப் பிடிக்கும் வகையில் வினா ஒன்றைத் தொடுத்தார் விக்கிரமாதித்தர்.‘‘கையும் களவுமாக பிடிபட்டாலும், தான் ஒற்றர்தான் என்பதை எந்த சாமான்யன் ஒப்புக் கொள்வான்..?’’
பூமி பிளந்து தன்னை அப்படியே உள்ளே இழுக்காதா... சுங்கத் தலைவர் தவித்தார்.

‘‘நீங்கள் காபாலிக பிரிவைச் சேர்ந்தவரா..?’’

‘‘இல்லை மன்னா... சைவன்...’’‘‘ஆமாம்... உங்கள் நெற்றியிலுள்ள பட்டையும் கழுத்தில் தொங்கும் ருத்திராட்சமும் நீங்கள் சைவர்தான் என்பதை அறிவிக்கின்றன... ம்... சுங்கத் தலைவரே... பல்லவர்களின் ராஜகுருவான புலவர் தண்டியின் ஒற்றர் படையில் ஒரேயொரு காபாலிகன் இருப்பதாகக் கேள்விப்பட்டேன்... காஞ்சியை நாங்கள் கைப்பற்றிய அன்று கரிகாலனுடன் அந்த காபாலிகன் மல்லைக் கடற்கரையில் சுற்றியதை என் ஒற்றர்கள் பார்த்திருக்கிறார்கள்.

அதன் பிறகு அவனைக் குறித்த எந்த விவரத்தையும் நான் கேள்விப்படவில்லை.  எங்கு சென்றான் அந்த காபாலிகன்... உங்களுக்குத் தெரியுமா..?’’‘‘சகலமும் அறிந்த தங்களுக்கே தெரியாத விவரம் எ...ன...க்...கெ...ப்...ப...டி...’’ ‘‘...தெரியாமல்தான் காபாலிகன் கொடுத்திருக்கும் இந்தச் சுவடியை புலவர் தண்டியிடம் ஒப்படைப்பதற்காக உங்கள் இடுப்பு அஸ்திரத்தில் மறைத்து வைத்திருந்தீர்களா..?’’
‘‘...’’
 

‘‘இதற்கு மேலும் நீங்கள் மெளனமாக இருப்பதில் அர்த்தமில்லை சுங்கத் தலைவரே... சொல்லுங்கள்... இந்த காபாலிகன் யார்..? புலவரின் ஒற்றர் பிரிவைச் சேர்ந்த அதே காபாலிகனா..?’’ கேட்டபடியே எழுந்த விக்கிரமாதித்தர், நிதானமாக சுங்கத் தலைவரை நெருங்கி அவரது கண்களை நெருக்கமாக உற்றுப் பார்த்தார்.
 
‘‘அல்லது காபாலிக வேடம் தரித்த பல்லவர்களின் முக்கியஸ்தனா..?’’‘‘பல்லவ அரச குலத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களில் ஒருவராக அந்த காபாலிகன் இருக்கவே வாய்ப்புகள் அதிகம்...’’ அழுத்தமாகச் சொல்லிவிட்டு ஸ்ரீராமபுண்ய வல்லபரையும் சாளுக்கிய இளவரசனான விநயாதித்தனையும் பார்த்தார் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மர்.


‘‘எதன் அடிப்படையில் இவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள் மன்னா..?’’ விநயாதித்தன் கேட்டான்.‘‘உன் பாட்டனார் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து பாண்டிய மன்னர் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்...’’ அமைதியைக் கிழித்தான் பாண்டிய இளவரசனான கோச்சடையன் இரணதீரன்.

தன் மகனைப் பார்த்து அரிகேசரி மாறவர்மர் புன்னகைத்தார். ‘‘ரணதீரன் குறிப்பிடுவது சரி... பெரும் படையுடன் வாதாபியில் இருந்து புறப்பட்டு வந்த சாளுக்கிய மன்னர் இரண்டாம் புலிகேசியை சாதாரண ஓவியன் வேடம் அணிந்த ஒருவர் சந்தித்து பேசினார்... ஓவிய வேடத்தில் வந்தவர் வேறு யாருமல்ல... அப்போதைய பல்லவ மன்னரான மகேந்திரவர்மர்! தமிழகம் முழுக்க அன்றும் இன்றும் பரவலாக சிலாகிக்கப்படும் இந்த சம்பவத்தைத்தான் நானும் என் மகனும் குறிப்பிடுகிறோம்...’’

‘‘அப்படியானால்... அப்படியானால்...’’  ஸ்ரீராமபுண்ய வல்லபர் மேற்கொண்டு வார்த்தைகள் வராமல் திணறினார்.‘‘வாய்ப்பில்லை மன்னா...’’ பட்டென்று விநயாதித்தன் பதில் அளித்தான். ‘‘தன் நாட்டைக் காப்பாற்ற வக்கற்று ஓடி ஒளிந்தவர் பல்லவ மன்னனாக அரியாசனத்தில் அமர்ந்திருந்த பரமேஸ்வர வர்மர். தன் பாட்டனார் போல் அவர் ஒன்றும் ராஜதந்திரி அல்ல. அப்படியிருந்திருந்தால் சாளுக்கியப் படைகள் காஞ்சியை நெருங்கும் வரை எதுவும் தெரியாதவராக இருந்திருக்க மாட்டார்.

அடிப்படையில் அவர் கோழை. எந்நேரமும் ஈசனைத் துதித்து பொழுதைக் கழிப்பவர். அரசராக இருக்கத் தகுதியற்றவர். அப்படிப் பட்டவர் காபாலிகன் வேடமணிந்து... ம்ஹும்... வாய்ப்பில்லை மன்னா...’’இரணதீரனின் கண்கள் இடுங்கின. ‘‘ஒரு நண்பனாக சொல்கிறேன் விநயாதித்தா... ஒருபோதும் எதிரிகளைக் குறைத்து மதிப்பிடாதே... அதுவும் நாளை சாளுக்கிய தேசத்தையே ஆளுப் போகிறவன் நீ... அப்படியிருக் கையில் அண்டை நாட்டு அரசர்களை...’’‘‘...பகையாளியை...’’ விநயாதித்தனின் கண்கள் கனலைக் கக்கின.

‘‘சரி, எதிரியை... சாதாரணமாக நினைத்து விடாதே...’’‘‘ரணதீரா... நடைபெறவிருக்கும் போரில் பல்லவ அரசகுலமே பூண்டோடு அழிந்து விடும்...’’
‘‘எண்ணம் வேறு நடப்பு வேறு விநயாதித்தா...’’ அரிகேசரி மாறவர்மரின் குரலில் ஆழ்ந்த சிந்தனை வெளிப்பட்டது.‘‘மன்னிக்க வேண்டும் மன்னா... நடப்பை... நடக்கப் போவதைத்தான் குறிப்பிடுகிறேன்... பல்லவர்களால் நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு படைகளைத் திரட்டி வந்திருக்கிறோம்...’’

‘‘பிறகு ஏன் பாண்டியர்களின் உதவியை நாடி இங்கே வந்திருக்கிறீர்கள்..?’’ புருவத்தை உயர்த்தியபடி கேட்டார் பாண்டிய மன்னர். ‘‘பொறு... நட்பு சக்தி தேவை என்ற எண்ணத்தில் என்றுதானே பதில் அளிக்க முயல்கிறாய்..? சாளுக்கியர்கள் சார்பில் நீங்கள் இருவரும் மதுரைக்கு வந்திருப்பதையோ பாண்டியர்களிடம் தோழமை பாராட்ட முயல்வதையோ நான் தவறென்று சொல்லவில்லை... போலவே போரில் பல்லவ குலத்தை அழித்து விடுவோம் என்ற உன் நம்பிக்கையையும் நான் தகர்க்க விரும்பவில்லை... ஆனால்... இதற்கெல்லாம் முட்டுக்கட்டையாக ஒருவன் இருக்கிறான் என்பதை மறந்துவிடாதே என்றுதான் நினைவூட்டுகிறேன்...’’‘‘யார் அவன்..?’’  ராமபுண்ய வல்லபர் கேட்டார்.

அரிகேசரி மாறவர்மரும் இரணதீரனும் ஒரே குரலில் பதில் அளித்தார்கள். ‘‘சோழ இளவரசனான கரிகாலன்...’’ கரிகாலனின் பின்னந்தலை சிகையை கெட்டியாகப் பிடித்தாள் சிவகாமி. ‘‘நீங்கள் யார்... என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்... என்பதை அறிவேன்...’’ பரந்து விரிந்திருந்த அவன் மார்பில் தன் கொங்கைகளை அழுத்தினாள். ‘‘நீங்கள் ஆடும் ஆட்டத்தின் விளைவாக இந்நேரம் மதுரை மன்னர் சாளுக்கிய இளவரசனிடமும் ஸ்ரீராமபுண்ய வல்லபரிடமும் தமிழகத்தின் வேர்களாக இருக்கும் பதினைந்து சிற்றரசர்களைக் குறித்து சொல்லிக் கொண்டிருப்பார்...

சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தரோ மல்லை சுங்கச்சாவடி தலைவனிடம் பதினைந்து வணிக சாத்துகளைக் குறித்து விசாரித்துக் கொண்டிருப்பார்... ஆனால், நீங்கள் உட்பட ஒருவராலும் நான் எழுதிய ஓலையில் இருக்கும் மறைபொருளைக் கண்டறியவே முடியாது... நடக்கவிருக்கும் போரில் பல்லவர்கள்...’’‘‘...தோற்க மாட்டார்கள்...’’ சிரித்த கரிகாலன் தன் முகத்துக்கு நேராக இருந்த அவளது கீழுதட்டைக் கவ்வி தன் நாக்கால் அவளது ஈறுகளைத் தேய்த்தான். ‘‘அடி வேஷக்காரி! உன் திட்டத்தைத் தவிடுபொடி ஆக்கிவிட்டேன்!’’  

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=17110&id1=6&issue=20200809

Link to comment
Share on other sites

111

 

‘‘தவிடுபொடி ஆக்கவே முடியாது...’’ பற்களைக் கடித்தான் விநயாதித்தன். ‘‘ஆம் மன்னா... எங்கள் திட்டத்தை... சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் ராஜ தந்திரத்தை... ஒருபோதும் கரிகாலனால் தகர்க்க முடியாது... என்ன சொன்னீர்கள் மன்னா... அவன் சோழ இளவரசனா..?’’

24.jpgவாய்விட்டு நகைத்தான் சாளுக்கிய இளவரசன். ‘‘இளவரசன் என்றால் அவனது தந்தை ஏதேனும் ஒரு பிரதேசத்தை ஆளவேண்டும்! அப்படி கரிகாலனின் தந்தை எந்த நிலப்பரப்பை ஆட்சி செய்கிறார்..?

பொறுங்கள் மன்னா... உறையூரையும் அதனைச் சுற்றியிருக்கும் ஊர்களையும்தானே குறிப்பிடுகிறீர்கள்..? அது பல்லவர்கள் இட்ட பிச்சை! பாண்டியர்களான நீங்களும் போனால் போகிறது என விட்டுவைத்த எச்சம்! பெயருக்கு நான்கைந்து ஊர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாலேயே அவன் தந்தை மன்னராகி விட மாட்டார்... கரிகாலன் இளவரசனாகி விட மாட்டான்!’’

இடுப்பில் கை வைத்தபடி நிமிர்ந்தான் விநயாதித்தன். ‘‘மன்னர் என்றால் என் தந்தையும் நீங்களும்தான்... வேண்டுமானால் கோழையைப் போல் நாட்டை விட்டுவிட்டு ஓடினானே... மன்னிக்க... ஓடினாரே பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மர்... அவரையும் மன்னராக சேர்த்துக் கொள்ளலாம்...’’

பேசியபடியே இரணதீரனின் அருகில் வந்து அவன் தோள்களை அணைத்தான்.
 
‘‘அந்த வகையில் நானும் ரணதீரனும்... எப்படியும் இழந்த நாட்டை மீட்டு விடுவோம் என்ற அசட்டு நம்பிக்கையில் காட்டில் மறைந்தபடி படைகளைத் திரட்டிக் கொண்டிருக்கிறானே... இன்றைய சாளுக்கியர்களின் ஒரு பகுதியாகிவிட்ட பல்லவ நாட்டு மன்னனின் மகனான ராஜசிம்மன்... அவனையும் சேர்த்து நாங்கள் மூவரும்தான் இளவரசர்கள்! அதுவும் உண்மையான இளவரசர்கள்!


நீங்கள் சொன்னீர்களே தமிழகத்தின் பதினைந்து குறுநில மன்னர்கள்... அவர்களின் வாரிசுகளையும் இளவரசர்களாக அழைப்பதில் எனக்கொன்றும் ஆட்சேபணையில்லை... பட்டியலில் எங்கள் மூவருக்குக் கீழ் அவர்களும் இடம்பெறட்டும்!

ஆனால், கையளவு நிலம் கூட சொந்தமில்லாத பரதேசியான கரிகாலனை இளவரசன் என்று அழைக்காதீர்கள் மன்னா... அது உங்கள் மைந்தனும் மாபெரும் வீரனுமான ரணதீரனை நீங்கள் குறைத்து மதிப்பிடுவதற்கு சமம்...’’சில கணங்கள் இமைகளை மூடித் திறந்தான் விநயாதித்தன்.
 

அமைதியாக அவனையே பார்த்தபடி நின்றிருந்தார்கள் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மரும் அவரது மகனும் பாண்டிய இளவரசனுமான கோச்சடையன் இரணதீரனும்.‘‘மன்னிக்க வேண்டும் மன்னா... சற்றே உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்...’’ என்றபடியே அதிர்ந்துபோய் நின்றிருந்த ராமபுண்ய வல்லபரை கணத்துக்கும் குறைவான காலத்தில் ஏறிட்டு விட்டு தலைகுனிந்தான்.
 
‘‘பெரியவர்களான உங்கள் முன்பு கோபத்தில் ஏதேதோ பேசிவிட்டேன்... தவறுதான்... இந்த சிறியவனின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு மன்னிக்க வேண்டுகிறேன்...’’என்றபடியே இரணதீரனின் அருகில் வந்தான் விநயாதித்தன். ‘‘உன்னிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்... நாம் சமவயதுள்ளவர்கள்... தோழர்கள்... எனவே பரஸ்பர உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது நம்மிருவருக்குள் பிழையாகாது...’’


‘‘அப்படி நீயே தீர்மானிக்க முடியாது விநயாதித்தா...’’ நேருக்கு நேராக அவனைப் பார்த்தபடி தன் வார்த்தைகளை உச்சரித்தான் இரணதீரன்.
‘‘கோபத்தை எந்த இடத்தில் எப்பொழுது வெளிப்படுத்த வேண்டும் என சற்று முன்னர்தான் பாண்டிய மன்னர் நம்மிடம் எடுத்துச் சொன்னார்... அதற்காகவே உன் தந்தையைப் புகழ்ந்தார்... அவர் சொல்லி முடித்த சொற்களின் ஈரம் கூட காயவில்லை... அதற்குள் தன்னிலை மறந்து வார்த்தைகளைச் சிதறவிட்டிருக்கிறாய்... நாளை சாளுக்கிய தேசத்தை ஆளப் போகும் உனக்கு இது தகுதியில்லை...

நான்தான் இளவரசன் என கம்பீரம் என நினைத்து ஆணவத்துடன் சொன்னாயே... அதற்கான இலக்கணம் இதுவல்ல... யாரை நீ பரதேசி... பிச்சை வாங்கிய நிலத்தை ஆள்பவர்கள் என்று இகழ்ந்தாயோ... அந்த சோழ தேசத்தின் வாரிசான கரிகாலன்தான் இளவரசனுக்குரிய இலக்கணத்துடன் வாழ்பவன்... திட்டங்களைத் தீட்டுபவன்... அதைச் செயல்படுத்துபவன்...’’ இரணதீரனை நோக்கி ஓரடி எடுத்து வைத்தபடியே எதையோ சொல்ல விநயாதித்தன் முற்பட்டான்.

‘‘நில் விநயாதித்தா...’’ என்ற பாண்டிய மன்னரின் குரல் அவனைத் தடுத்து நிறுத்தியது.நயனங்கள் சிவந்தபோதும் தன்னைக் கட்டுப்படுத்தியபடி அரிகேசரி மாறவர்மரை ஏறிட்டான் சாளுக்கிய இளவரசன்.‘‘என் மகன் சொன்னதில் பிழையேதுமில்லை... அதைக் கேட்டு நீ ஆவேசப்படுவதிலும் அர்த்தமில்லை... பிச்சையாக வழங்கப்பட்ட நிலம்... பாண்டியர்கள் போனால் போகட்டும் என விட்டுவைத்த எச்சம்... என்றெல்லாம் உன்னால் தூற்றப்பட்ட நான்கைந்து ஊர்களை ஆளும் சோழ மன்னரின் ஆதரவை வேண்டி நின்றது நாங்கள் அல்ல... இதோ இங்கே நிற்கிறாரே உனது குருநாதரும் சாளுக்கிய தேசத்து போர் அமைச்சருமான ராமபுண்ய வல்லபர்... அவர்தான்...

உங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்பதற்காகவே சோழ மன்னரை காஞ்சி சிறையில் அடைத்தார்... கரிகாலனின் பெரியன்னையை மாளிகைக் காவலில் வைத்து கரிகாலனிடம் பேரம் பேச ஏற்பாடு செய்தார்... அதுவும் எப்படி..? சாளுக்கியர்களுக்கு அடங்கிய சிற்றரசாக காஞ்சி மாநகரையும் சேர்த்து சோழர்களே ஆளலாம் என ஆசை காட்டி...

இதற்கு கரிகாலன் மசியவில்லை... அத்துடன் சிறையில் இருந்த தனது தந்தையையும் விடுவித்து உங்கள் கட்டுக்காவலை மீறி காஞ்சியை விட்டு வெளியேறினான்...இதன் பிறகே பாண்டியர்களான எங்களிடம் ஆதரவு கேட்டு நீங்கள் இருவரும் வந்தீர்கள்... ஒருவேளை உங்கள் கோரிக்கைக்கு சோழர்கள் சம்மதித்திருந்தால் மதுரை மண்ணை மிதித்திருக்க மாட்டீர்கள்!’’இடியென அரிகேசரி மாறவர்மர் முழங்கியதும் சில கணங்களுக்கு யாரும் வாயைத் திறக்கவில்லை.

நிலைமையைச் சமாளிக்கும் விதமாக ஸ்ரீராமபுண்ய வல்லபர் பாண்டிய மன்னரின் முன்னால் வந்து தன் கரங்களைக் குவித்தார். ‘‘என் சீடனை தாங்கள் மன்னிக்க வேண்டும்... பேசத் தெரியாமல் பேசி விட்டான்...’’சட்டென அவரது குவிந்த கரங்களை தன் கைகளால் பற்றினார் அரிகேசரி மாறவர்மர். ‘‘என்ன இது... கைகளை கீழே இறக்குங்கள்... என் மகன் தவறு செய்தால் நான் மன்னிக்க மாட்டேனா... விநயாதித்தனும் என் பிள்ளைக்கு சமமானவன்தான்... என்ன... ரணதீரன் ஒருபோதும் இப்படி வார்த்தைகளைச் சிதற விட மாட்டான்...’’
விநயாதித்தனை நோக்கித் திரும்பினார். ‘‘இங்கே வா...’’

தாயிடம் அடைக்கலமாகும் குஞ்சென அவரை நோக்கி சாளுக்கிய இளவரசன் சென்றான்.அவனை அணைத்தார் பாண்டிய மன்னர். ‘‘நேரமில்லை... சூர்யோதயத்துக்கான காலம் நெருங்கிவிட்டது... எப்பொழுது வேண்டுமானாலும் அரண்மனையில் உதயதாரகைகள் முழங்கலாம்... எனவே சொல்ல வேண்டியதை சொல்லி முடித்து விடுகிறேன்....

விநயாதித்தா... ஊர் பெயரற்றவர்களாக இன்று சோழர்கள் இருக்கலாம்... ஆனால், அவர்களின் வேர் தமிழக நிலத்தின் ஆணிவேர்! இப்பிரதேசத்தை வேளிர்களே ஆண்டுகொண்டிருந்தார்கள்... அவர்களை எல்லாம் அடக்கி ஓர் அரசை ஏற்படுத்தி அதைப் பேரரசாக முதன்முதலில் விரிவுபடுத்தியவர் கல்லணையைக் கட்டிய கரிகாலச் சோழர்தான்.

அப்படிப்பட்டவரின் பெயரைத் தாங்கி நிற்கும் இன்றைய கரிகாலன் எப்படி மீண்டும் வேளிர்களைத் தலையெடுக்க விடுவான்..? அதனால்தான் உன் தந்தையால் ரகசியமாக முடிசூட்டப்பட்ட வேளிர்களின் தலைவனான கடிகை பாலகனைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டான். இதன் வழியாக உன் தந்தையின் திட்டத்தை தவிடுபொடி ஆக்கியிருக்கிறான்...

அத்துடன் நின்றானா..? இல்லை.... சுதந்திர நாட்டைக் கேட்கும் தென்பாண்டியர்களை எங்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டு பாண்டிய நாட்டில் உள்நாட்டுக் கலவரத்தை ஏற்படுத்தியிருக்கிறான். இதை ஒடுக்காமல் சாளுக்கிய - பல்லவ போரில் நாங்கள் ஈடுபட முடியாது. அப்படிச் செய்தால் மக்களிடம் இருந்து நாங்கள் அந்நியப்பட்டு விடுவோம்!
 

கரிகாலன் செய்திருக்கும் காரியங்கள் புரிகிறதா..? தமிழகத்தைத் தாங்கி நிற்கும் பதினைந்து வேர்களையும் நடக்கவிருக்கும் போரில் இருந்து விலக்கியிருக்கிறான். உன் தந்தையாலேயே முடிசூட்டப்பட்ட வேளிர்களின் தலைவனான கடிகை பாலகனை வைத்து இதைச் சாதித்திருக்கிறான்.
 

இதனால் என்ன பலன் என்று நீ கேட்கலாம். அதற்கான பதில் நடக்கவிருக்கும் போரில் சாளுக்கியர்களும் பல்லவர்களும் மட்டுமே நேரடியாக ஈடுபடப் போவதுதான்!

கரிகாலன் எந்தளவுக்கு கெட்டிக்காரன் என்பதற்கு இது ஒரு சோறு பதம். பல்லவப் படைக்கு தலைமை தாங்கப் போவது யார்..? சோழ மன்னர்! அதாவது கரிகாலனின் தந்தை! இந்தப் போரில் பல்லவர்கள் வெற்றி பெற்றால் அதற்கான முழுப் பெருமையும் சோழர்களைச் சேரும்! இதுதான் கரிகாலன் போடும் கணக்கு!’’

‘‘இந்தக் கணக்கை என் தந்தை திருத்தி எழுதுவார் மன்னா...’’ உதடுகள் துடிக்க விநயாதித்தன் உச்சரித்தான்.‘‘அப்படி நடந்தால் மகிழ்ச்சிதான்...’’ அரிகேசரி மாறவர்மரிடம் இருந்து பெருமூச்சு வெளிப்பட்டது. ‘‘நல்லது... பொழுது விடிந்ததும் விருந்துக்கு அழைப்பு வரும். எங்களுடன் உணவருந்திவிட்டு நீங்கள் இருவரும் புறப்படுங்கள்... சாளுக்கிய மன்னரைக் கேட்டதாகச் சொல்லுங்கள்... பாண்டியர்கள் உதவ முடியாமல் இருக்கும் நிலையை எடுத்துச் சொல்லுங்கள்...’’‘‘மன்னா...’’ அதுவரை பார்வையாளராக இருந்த ராமபுண்ய வல்லபர் தன் வாயைத் திறந்தார்.
‘‘சொல்லுங்கள் சாளுக்கியர்களின் போர் அமைச்சரே...’’

‘‘சிவகாமி எங்களிடம் கொடுத்ததையும் சேர்த்து பதினாறு ஓலைகள்... ஆனால், நீங்கள் கடிகை பாலகனிடம் இருந்து நாங்கள் கைப்பற்றிய பதினைந்து ஓலைகளுக்கு மட்டுமே விளக்கம் சொன்னீர்கள்... அவை தமிழக குறுநில மன்னர்களைச் சுட்டுவதாகக் குறிப்பிட்டீர்கள்... வந்து...’’‘‘... பதினாறாவது ஓலை கங்க மன்னரைக் குறிப்பிடுகிறது ஸ்ரீராமபுண்ய வல்லபரே!’’‘‘அவர் எங்கள் மன்னரின் நண்பரல்லவா..?’’

‘‘நண்பராக நீடிக்க வேண்டும் என அன்னை மீனாட்சியைப் பிரார்த்திக்கிறேன்!’’‘‘அன்னை மீனாட்சி வேறு... காஞ்சி காமாட்சி வேறா..?’’ கரிகாலன் நகைத்தான்.‘‘ஆம் வேறுதான்... அதற்கு அத்தாட்சி இந்த சிவகாமி...’’ ஊஞ்சலாடியபடியே உதட்டைச் சுழித்தவள் தன் இடது காலை உயர்த்தி அவன் மார்பின் மேல் வைத்தாள்!

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=17139&id1=6&issue=20200816

Link to comment
Share on other sites

ரத்த மகுடம்-112

‘‘புரியவில்லை..?’’ கொடி ஊஞ்சலில் கொடியிடையுடன் நகைத்தாள். ‘‘எனில் அது இந்த சிவகாமிக்கு கிடைத்த வெற்றிதான்...’’ ஆடியபடியே மரத்தில் சாய்ந்திருந்த கரிகாலனை நெருங்கிய சிவகாமி, தன் இடது காலை உயர்த்தி அவன் மார்பின் மீது வைத்தாள்.அமர்ந்தவண்ணமே அவள் கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட கரிகாலன், அவளது பாத விரல்களுக்கு சொடக்கு போடத் தொடங்கினான்.
21.jpg
ஊஞ்சலை அசைவிக்க சிவகாமி முயற்சிக்கவில்லை. தன் இரு கரங்களாலும் மரத்தில் கட்டப்பட்டிருந்த கொடிகளைப் பிடித்தபடியே கரிகாலனை நோக்கினாள். ‘‘ஆனாலும் உங்களை நம்புவதாக இல்லை...’’ ‘‘ஏனோ..?’’ ‘‘பின்னே... அந்தப் பக்கம் பாண்டிய மன்னர் அரிகேசரி மாறவர்மர் உங்கள் ராஜ தந்திரங்களைக் குறித்து சாளுக்கிய போர் அமைச்சரும் எனது குருநாதருமான...’’சட்டென நிமிர்ந்து சிவகாமியைப் பார்த்தான் கரிகாலன்.
அவன் நயனங்களை இமைக்காமல் பார்த்தபடியே தொடர்ந்தாள். ‘‘ராமபுண்ய வல்லபரிடமும் சாளுக்கிய இளவரசனான விநயாதித்தனிடமும் விளக்கிக் கொண்டிருக்கிறார்... இந்தப் பக்கம் எனக்கு ஊதியமளிக்கும் சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர், மல்லைக் கடற்கரை சுங்கத் தலைவனிடம் விசாரித்துக் கொண்டிருக்கிறார்... இப்படி எல்லாத் திசைகளிலும் எல்லோரையும் உங்களைப் பற்றிப் பேச வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள்... நான் சொன்னது புரியவில்லை என்று சொன்னால் அதை நம்புவதற்கு நான் ஒன்றும்...’’‘‘... பேதையல்ல... கொங்கை ராணி!’’ கரிகாலனின் பார்வை அவள் கழுத்துக்குக் கீழே இறங்கியது.

சிவகாமியின் அடிவயிற்றில் ஊற்று சுரந்தது. சமாளிக்கும் விதமாக அவன் சொடக்கு எடுத்துக் கொண்டிருந்த தன் காலால் அவன் தாடையை எக்கினாள். பிடிமானமற்று கரிகாலன் அப்படியே மல்லாந்து விழுந்தான்.‘‘உலகை ரட்சிக்கும் அன்னையர்களாக அவர்கள் இருந்தாலும் மதுரை மீனாட்சியும் காஞ்சி காமாட்சியும் வேறு வேறுதான்... பகைவர்களை அழிக்க காஞ்சி காமாட்சி பாரபட்சம் காண்பிக்க மாட்டாள்... இந்த சிவகாமியைப் போல்!’’சொன்னபடியே ஊஞ்சலில் இருந்து மல்லாந்து விழுந்திருந்த கரிகாலன் மேல் தாவினாள். மார்பின் மீது அமர்ந்து தன் கால்களால் அவன் உடலின் இருபுறங்களிலும் அழுத்தினாள்.

‘‘மற்றவர்களை விட... ஏன், சூரிய சந்திரர்களை விட... நீங்கள் யாரென்று நான் அறிவேன் கரிகாலரே...’’ குனிந்து அவன் கன்னத்தைத் கடித்தாள்.வலி தாங்காமல் கரிகாலன் அலறினான்!‘‘காற்று புக கூட அஞ்சும் வனம் இது! நீங்கள் எவ்வளவு அலறினாலும் வெளியில் யாருக்கும் கேட்காது...’’ திமிறிய தன் கொங்கைகளை அவன் முகத்தில் அழுத்தித் தேய்த்தாள்.‘‘ஆனால், எதிர்பார்த்ததைவிட நீங்கள் கெட்டிக்காரர்தான்... இதை ஒப்புக்கொள்வதில் எனக்கு தயக்கமேதும் இல்லை. நரசிம்மவர்ம பல்லவர் ஆட்சியில் அப்போது அரிகேசரி மாறவர்மர் பாண்டிய இளவரசராக இருந்தார்.

பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் அப்படியொரு பகை இருந்தது. இதை மனதில் கொண்டுதான் நடைபெறவிருக்கும் பல்லவ - சாளுக்கிய போரில் பாண்டியர்களை எங்கள் பக்கம் இழுக்க சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் முயன்றார். இதற்கு அன்று இளவரசராகவும் இப்போது மன்னராகவும் இருக்கும் அரிகேசரி மாறவர்மர் சம்மதிப்பார் என்று நினைத்தார். ஆனால்...’’கரிகாலனின் நாசியை தன் கட்டை விரலாலும் ஆள்காட்டி விரலாலும் திருகினாள். ‘‘என்னை வைத்தே பாண்டிய மன்னர் நகராதபடி கட்டிப் போட்டிருக்கிறீர்கள்.

மதுரைக்குள் பதுங்கியிருந்த தென்பாண்டி மறவர்களை... அவர்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்த அதங்கோட்டாசானை பாண்டியர்களுக்கு அடையாளம் காட்டியிருக்கிறீர்கள். இதற்கு என்னை கருவியாகப் பயன்படுத்தி இருக்கிறீர்கள்! இது மன்னிக்க முடியாத குற்றம் கரிகாலரே!’’
சொன்ன சிவகாமி அவன் குரல்வளையை கெட்டியாகப் பிடித்தாள். ‘‘இதற்காக உங்கள் சங்கை அறுத்தாலும் தவறில்லை!’’ தன் நடுவிரல் நகத்தால் அவன் கழுத்தைக் கீறினாள்.

‘‘ இந்த சிவகாமியை குறைத்து எடைபோட்டு விட்டீர்கள் கரிகாலரே... அவ்வளவு சுலபத்தில் என் இலக்கில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன்... அதனால்தான் உங்கள் சுயரூபத்தை என்னால் இனம் காண முடிந்தது...’’கரிகாலனின் உதடுகள் மீது தன் உதட்டை வைத்து ஒத்தடம் கொடுத்தாள். ‘‘காபாலிகன் குறித்த மர்மத்தின் கீற்றை விக்கிரமாதித்தருக்கு தெரியப்படுத்தி இருக்கிறேன்... இனி அந்தக் கீற்றை பிரகாசமான ஒளியாக அவர் மாற்றிவிடுவார்!

என்னதான் நீங்கள் பதினைந்து போலிகளைத் தயாரித்து குழப்ப நினைத்தாலும் ராமபுண்ய வல்லபரிடமும் விநயாதித்தனிடமும் பாதாளச் சிறையில் நான் கொடுத்த ஓலையின் பொருளை... அதன் சரியான அர்த்தத்தில்... யார் புரிந்து கொள்ள வேண்டுமோ அவர் உணர்ந்து கொண்டிருப்பார்!’’
அப்படியே சரிந்து கீழிறங்கி அவன் மார்பில் தன் முகத்தைப் புதைத்தாள். ‘‘பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மருக்கு தெரியாமல் இருக்கலாம்... பல்லவ இளவரசர் ராஜசிம்மன் அறியாமல் இருக்கலாம்... விக்கிரமாதித்த சாளுக்கிய மன்னரும் அரிகேசரி மாறவர்மரும் ஊகிக்காமல் போகலாம்... ஆனால், சிவகாமியின் புத்தியும் மனமும் அறியும் கரிகாலரே...’’ தன் கொங்கையின் மீதிருந்த அவன் கரங்களைப் பார்த்து நகைத்தாள். ‘‘நரசிம்மவர்ம பல்லவர் காலத்தில் உங்கள் தந்தை விக்கிரமன்தான் சோழ இளவரசராக இருந்தார்...’’கரிகாலனின் கருவிழிகளில் அதிர்ச்சி வழிந்தது.

அப்படியே மேல் நோக்கி நகர்ந்து அவன் வதனத்தை அடைந்தவள், தன் நாவால் அந்த திகைப்பை வழித்து எடுத்தாள். ‘‘உப்புக் கரிக்கிறது!’’ சப்புக்கொட்டினாள். ‘‘இதுவரை உங்கள் தந்தையின் பெயரை ஒருவரும் உச்சரிக்காததால் யாருக்கும் தெரியாது என்று நினைத்தீர்களா! காஞ்சியில்
ராமபுண்ய வல்லபர் சோழ மன்னரின் திருநாமத்தை உச்சரிக்காததன் காரணம் இப்போது... இந்த இடத்தில்... உங்களை இப்படி வைத்து... என் உதடுகளில் இருந்து நான் சொல்ல வேண்டும் என்று தான்! இதுதான் என் குருநாதரின் கட்டளை! இதுவே எனக்கு ஊதியமளிக்கும் மன்னரின் உத்தரவு!’’

சரிந்தபடியே அவன் வயிற்றை அடைந்தவள் அவனது நாபியில் தன் சுவாசத்தைச் செலுத்தினாள். ‘‘உங்கள் பாட்டனாருக்கு ஒரு கனவு இருந்தது. சங்க காலத்தைப் போல் சோழர்கள் இப்போதும் தமிழக நிலம் முழுவதையும் ஆள வேண்டும்... மாபெரும் பேரரசை ஏற்படுத்த வேண்டும்... ஒரே குடையின் கீழ்... புலிக் கொடியின் ஆதிக்கத்தில் ஆட்சி செய்ய வேண்டும் என கனவு கண்டார். இதற்காக உங்கள் மாளிகையின் உட்புறத்தில் யாருக்கும் தெரியாமல் ஏராளமான ஓவியங்களை வரைந்து வைத்திருக்கிறார்... அவை எல்லாமே சோழர்களின் சிறப்பை பறை சாற்றுபவை! அவற்றை எல்லாம்
உங்கள் தந்தை விக்கிரமனுக்கு காண்பித்து அவருக்குள் தன் கனவை விதைத்தார்... தனக்குள் விருட்சமான அந்தக் கனவின் விதைகளை இப்பொழுது உங்களுக்குள் தூவியிருக்கிறார் சோழ மன்னர் விக்கிரமன்!’’

மேல் நோக்கி நகர்ந்து அவன் மார்பில் தன் கொங்கைகளை அளவுக்கு அதிகமாக அழுத்தியபடி கரிகாலனின் முகத்தை உற்றுப் பார்த்தாள் சிவகாமி. ‘‘உங்கள் பாட்டனார் பெயர் பார்த்திபன்! அந்த ‘பார்த்திபன் கனவு’ ஒருபோதும் நிறைவேறக் கூடாது என இப்பொழுது நான் அழுத்திக் கொண்டிருக்கிறேன்!’’

தன் கையை முதுகுக்கு பின்னால் கொண்டு சென்றாள். ‘‘நான் வேஷக்காரியாக இருக்கலாம்... ஆனால், உங்களைப் போல் கூடவே இருந்து குழிபறிக்கும் துரோகி அல்ல! ‘பார்த்திபன் கனவு’ நிறைவேற நரசிம்மவர்ம பல்லவரின் மகளை உங்கள் தந்தையார் திருமணம் செய்துகொண்டார். தன் மகளை பாண்டிய மன்னருக்கு உங்கள் பாட்டனார் மணமுடித்துக் கொடுத்தார்!

உறவு அடிப்படையில் பல்லவ - பாண்டியர்களுக்கு நெருக்கமாக இருந்தபடியே... அதுவும் பல்லவ இளவரசரின் உயிர் நண்பராக வலம் வந்தபடியே... பல்லவ - பாண்டிய அரசுகளை வீழ்த்த திட்டம் தீட்டுகிறீர்கள் பாருங்கள்... உங்களைப் போன்ற அயோக்கியரை இந்தப் பிரபஞ்சத்தில் எங்குமே பார்க்க முடியாது!’’

பின்னால் சென்ற கரத்தால் தன் கச்சையின் முடிச்சை நெகிழ்த்தினாள். ‘‘கரிகாலரே... நீங்கள் பல்லவ உபசேனாதிபதி அல்ல... ‘பார்த்திபன் கனவு’ மெய்ப்பட சாளுக்கியர்களின் ஒற்றர் படைத் தலைவராக ரகசிய பிரமாணம் எடுத்துக் கொண்டிருப்பவர்! சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தருக்கு ஓலை அனுப்பி அவரை காஞ்சிக்கு வரவைத்ததும் நீங்கள்தான்... பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மரை காஞ்சியை விட்டு வெளியேற வைத்து இன்று நாடற்றவராக அவரை அலைய வைத்ததும் நீங்கள்தான்!

மதுரைக்கு நீங்கள் வந்தது பாண்டிய - சாளுக்கிய கூட்டை தடுக்க அல்ல... பல்லவ - பாண்டிய கூட்டு ஏற்படாமல் இருக்க! இந்த உலகமே நான் இரட்டை வேடம் போடுவதாகக் கருதுகிறது... உண்மையில் பல்லவர்கள் பக்கம் இருக்கும் சாளுக்கிய ஒற்றர் நீங்கள்தான்!’’
அவிழ்ந்த தன் கச்சையை சட்டென உருவியவள், இமைக்கும் நேரத்தில் உருண்டு  கரிகாலனை இழுத்து மேலே கிடத்தி தன் மேனியை மேய்வதற்குள் அவன் கண்களை மேலாடையால் மூடினாள்.  

‘‘பல்லவர்களுக்குள் இருக்கும் ‘இந்த’ சாளுக்கிய வாளை வீழ்த்தத்தான் சாளுக்கியர்களுக்குள் இருக்கும் ‘இந்த’ பல்லவ வாளை தயார் செய்து அனுப்பியிருக்கிறார் பல்லவ ராஜகுருவான புலவர் தண்டி!’’  
http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=17162&id1=6&issue=20200823
Link to comment
Share on other sites

  • 3 weeks later...

அத்தியாயம் 113

‘‘நல்லது விநயாதித்தா...’’ சாளுக்கிய இளவரசனின் தோள்களில் கையைப் போட்டபடியே அரண்மனை வாயிலை நோக்கி நடந்தார் பாண்டிய மன்னர் அரிகேசரி மாறவர்மர்.பின்னாலேயே ஸ்ரீராமபுண்ய வல்லபரும், பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரனும். அவர்களுக்கும் பின்னால் பாண்டிய பணியாளர்கள் சீர்வரிசை தட்டுகளுடனும் வந்தார்கள்.

அரண்மனை வாயிலில் ரதங்களும் புரவிகளும் தயார் நிலையில் நின்றன.வந்தவர்களை நோக்கித் தலைவணங்கிய சாளுக்கிய வீரர்கள் பணிவுடன் ரதங்களின் கதவுகளைத் திறந்தார்கள்.பாண்டிய பணியாளர்கள், தாங்கள் கொண்டு வந்த சீர்வரிசைகளை அதனுள் பத்திரமாக அடுக்கினார்கள்.

‘‘
சென்று வாருங்கள்... தங்களுக்கான அன்ன ஆகாரங்கள் வழியிலுள்ள சத்திரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன...’’ விநயாதித்தனை அணைத்தார் அரிகேசரி மாறவர்மர். ‘‘சாளுக்கிய மன்னரைக் கேட்டதாகச் சொல். உதவ முடியாமல் நான் இருப்பதை எடுத்துச் சொல்...’’‘‘கண்டிப்பாக மன்னா...’’ விநயாதித்தன் குனிந்து பாண்டிய மன்னரின் கால்களைத் தொட்டு வணங்கினான். அவருக்குப் பின்னால் நின்றிருந்த இரணதீரனை இறுக அணைத்தான்.

கண்களாலேயே பாண்டிய இளவரசனிடம் விடைபெற்றான்.ராமபுண்ய வல்லபர் முன்னால் வந்து அரிகேசரி மாறவர்மரை வணங்கினார். ‘‘பாண்டியர்களின் விருந்தோம்பலை என்றும் மறக்க மாட்டோம்...’’‘‘சாளுக்கியர்களின் நட்பை எப்பொழுதும் நினைவில் வைத்திருப்போம்...’’ அரிகேசரி மாறவர்மரின் உதடுகளில் புன்னகை மலர்ந்தது. விடைபெற்ற விநயாதித்தனும் ராமபுண்ய வல்லபரும் தங்கள் பரிவாரங்கள் இருக்கும் இடத்தை அடைந்தார்கள்.சாளுக்கிய வீரர்கள் ரதங்களின் கதவுகளைத் திறந்தார்கள்.

அதைத் தவிர்த்துவிட்டு இருவரும் புரவிகளின் அருகில் வந்தார்கள். குதிரைகளின் மேல் ஏறினார்கள்.பாண்டிய மன்னரையும் பாண்டிய இளவரசனையும் பார்த்துக் கையசைத்துவிட்டு இருவரும் தங்கள் கால்களால் புரவியின் வயிற்றைத் தட்டினார்கள்.‘‘சாளுக்கிய இளவரசர்...’’‘‘வாழ்க... வாழ்க...’’
‘‘
சாளுக்கிய போர் அமைச்சர்...’’
‘‘
வாழ்க... வாழ்க...’’

பாண்டிய வீரர்களின் ஜெய கோஷங்களைக் கேட்டபடியே மதுரைக் கோட்டை வாயிலை நோக்கி நகர்ந்தார்கள்.தன் மைந்தனின் தோளை அணைத்தார் அரிகேசரி மாறவர்மர்.‘‘இந்த நாடகம் எதற்கு மன்னா..?’’ இரணதீரனின் குரலில் மரியாதை வழிந்தது.
‘‘
நாடகமா..? சாளுக்கியர்களை நல்லமுறையில்தானே வழியனுப்பி இருக்கிறோம்..?’’‘‘ஆனால் சிவகாமியையும் கரிகாலனையும் நாடகமாடி அல்லவா அனுப்பியிருக்கிறீர்கள்..? நீங்கள் நினைத்திருந்தால் பாண்டிய வீரர்களையும் சாளுக்கிய வீரர்களையும் இரவோடு இரவாகக் கோட்டைக்கு வெளியே அனுப்பி, பாதாளச் சிறையில் இருந்து தப்பித்த சிவகாமியையும் உடன் சென்ற கரிகாலனையும் பிடித்திருக்கலாம்.

ஆனால், அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாதே என்று கவனமாக இருந்தீர்கள். ஏதேதோ பேசி விநயாதித்தனையும் ஸ்ரீராமபுண்ய வல்லபரையும் இரவு முழுக்க உங்களுடனேயே இருக்க வைத்தீர்கள்... இதன் மூலம் கரிகாலனும் சிவகாமியும் பத்திரமாக பாண்டிய நாட்டின் எல்லையைக் கடக்க துணை  புரிந்திருக்கிறீர்கள்... காரணத்தை நான் அறியலாமா..?’’

கேட்ட இரணதீரனை நோக்கி கண்களால் சிரித்தார் அரிகேசரி மாறவர்மர். ‘‘வருங்கால பாண்டிய மன்னர் கண்டிப்பாக அறிய வேண்டும்...’’
சொல்லிவிட்டு பார்வையால் சுற்றிலும் அலசினார். பாண்டிய வீரர்கள் இருபதடி இடைவெளி விட்டே நின்றிருந்தார்கள். இரணதீரனும் தன் குரலைத் தாழ்த்தியே வினவியிருந்தான்.

என்றாலும் பாண்டிய மன்னர் தன் மகனை அணைத்து அவன் செவியில் முணுமுணுத்தார். ‘‘இரண்டு நாழிகைகளில் மந்திராலோசனை நடைபெற இருக்கிறது...’’இரணதீரன் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக நின்றான்.  ‘‘நேற்று மதியத்துக்கு மேல் அனைவருக்கும் தகவல் தெரிவித்தாகிவிட்டது...’’ அணைப்பில் இருந்து விலகி தன் மகனின் கருவிழிகளை உற்றுப் பார்த்தார்.

‘‘
ஆம்... சிவகாமியும் கரிகாலனும் பாதாளச் சிறையில் இருந்தபோதே இன்றைய மந்திராலோசனைக்கான ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டேன்!’’ மகனை அணைத்தபடியே அரண்மனைக்குள் நுழைந்தார் அரிகேசரி மாறவர்மர். ‘‘தளபதிகளும் உப தளபதிகளும் குறுநில மன்னர்களும் சபைக்கு வருவதற்குள் நீ ஒரு காரியம் செய்ய வேண்டும்...’’‘‘உத்தரவிடுங்கள் மன்னா...’’தன் இடுப்பில் இருந்து ஒரு பொருளை எடுத்து இரணதீரனின் கைகளில் திணித்தார்.

‘‘உன் அறைக்குச் சென்று இதைப் பார்... பாதாளச் சிறையில் சிவகாமியிடம் இருந்து கரிகாலன் கைப்பற்றிய பொருள் இது... அவள் முன்னிலையில் அவன்தான் என்னிடம் கொடுத்தான். இது சொல்லும் சேதி அனைத்து உண்மைகளையும் உனக்குப் புரிய வைக்கும்!’’

 

மல்லைக் கடற்கரை சுங்கத் தலைவரின் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை. அலுவலில் இருக்கும்போதும் இல்லாதபோதும் எப்படி இருப்பாரோ அப்படியே இப்பொழுதும் இருந்தார். உதட்டில் மலர்ந்த புன்னகை அவர் வதனத்துக்கு அழகு சேர்த்தது.

இடுப்பில், தான் மறைத்து வைத்திருந்த சுவடியை சாளுக்கிய மன்னர் கைப்பற்றியதை நினைத்துப் பார்த்தார். முதல் ஓலையில் இருந்த காபாலிகனின் குறிப்பைப் பார்த்து தன்னை விக்கிரமாதித்தர் விசாரித்தது அவர் நினைவுக்கு வந்தது. உதட்டின் புன்னகையும் அதிகரித்தது.
நிச்சயம் அந்தச் சுவடியில் இருக்கும் குறிப்புகளை ஒருபோதும் சாளுக்கிய மன்னரால் புரிந்துகொள்ள முடியாது!

நெஞ்சையும் தலையையும் உயர்த்தினார். தன்னைச் சுற்றிலும் சாளுக்கிய வீரர்கள் வாட்களுடனும் வேல்களுடனும் வந்ததை அவர் பொருட்படுத்தவேயில்லை. செல்லும் இடம் குறித்த தெளிவு இருந்ததால் அந்தப் பயணம் அவருக்கு சுகமாகவே இருந்தது.

எதிர்பார்த்தது போலவே மல்லைக்கும் காஞ்சிக்கும் இடையில் இருந்த ஒரு தோப்புக்குள் அவர்கள் நுழைந்தார்கள். அந்தத் தோப்பினுள் இருந்த சத்திரம் கடந்த சில திங்கள்களாக சாளுக்கியர்களின் சிறைச்சாலையாக செயல்பட்டு வந்ததை அவர் அறிந்திருந்ததால் இங்குதான் தன்னை அடைப்பார்கள் என்பதை ஊகித்திருந்தார்.

சத்திரத்தை நெருங்கியதும் சாளுக்கிய வீரர்கள் வாசலிலேயே நின்றார்கள்.‘‘ம்...’’ வீரர்களின் தலைவன் குரல் கொடுத்தான். அவனைப் பின்தொடர்ந்தபடி சுங்கத் தலைவர் சத்திரத்துக்குள் நுழைந்தார்.எங்கும் அமைதி. சூரியன் உதயமாகி இரண்டு நாழிகை ஆன பிறகும் சத்திரத்துக்குள் எந்த நடமாட்டமும் இல்லை.சுங்கத் தலைவரை அழைத்துக் கொண்டு மேல் தளத்துக்குச் சென்ற வீரர்களின் தலைவன் அங்கிருந்த ஒற்றை அறையின் பூட்டைத் திறந்தான். சுங்கத் தலைவரை உள்ளே செல்லுமாறு சைகை செய்தான்.

மாறாப் புன்னகையுடன் அந்த அறைக்குள் சுங்கத் தலைவர் நுழைந்தார். தனக்குப் பின்னால் அறை பூட்டப்படும் ஓசை கேட்டது.எதிர்பார்த்தபடியே எல்லாம் நடப்பதில் சுங்கத் தலைவருக்கு பரம திருப்தி ஏற்பட்டது. உணவுக்கு இன்னும் நேரமிருக்கிறது. அதுவரை உறங்கலாம் என அந்த அறையைச் சுற்றிலும் பார்த்தவர் அதிர்ச்சியில் அப்படியே உறைந்தார்.
 

எதிர்பார்க்காத மனிதர் ஒருவர் அந்த அறையின் மூலையில் அமர்ந்திருந்தார்.அவர், அனந்தவர்மர். சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் உடன்பிறந்த சகோதரர்!‘‘என்ன அப்படிப் பார்க்கிறாய்..?’’ விநயாதித்தனின் புரவியை ஒட்டி தன் குதிரையைச் செலுத்தியபடி ஸ்ரீராமபுண்ய வல்லபர் கேட்டார்.

 

‘‘மதுரை கோட்டை வாயில் புதியதாகவும் புதிராகவும்இருக்கிறது குருவே...’’‘‘அப்படியேதும் தெரியவில்லையே... கடந்த பல நாட்களாக மதுரையில்தான் நாம் தங்கியிருந்தோம்... பலமுறை கோட்டையை விட்டு வெளியே சென்றிருக்கிறோம்... திரும்ப வந்திருக்கிறோம்...


அப்பொழுது நாம் எப்படி கோட்டை வாயிலைப் பார்த்தோமோ அப்படித்தானே இப்பொழுதும் இருக்கிறது..?’’
‘‘கோட்டையின் அளவையோ மக்கள் கூட்டத்தையோ நான் குறிப்பிடவில்லை குருவே...’’
‘‘பிறகு..?’’‘‘இன்று மதுரையில் இருந்து வெளியேறும் மக்கள் கூட்டத்தைப் பாருங்கள்...’’
ராமபுண்ய வல்லபர் பார்த்தார். ‘‘ஆம்... வணிகர்களாக இருக்கிறார்கள்...’’

‘‘அதுவும் நெசவாளர்களாக இருக்கிறார்கள் குருவே... மாட்டு வண்டிகளில் வரும் கைவினைப் பொருட்களைப் பாருங்கள்...’’
‘‘ஆமாம்... அதற்கென்ன..?’’விநயாதித்தன் அவருக்கு பதில் சொல்லாமல் சாளுக்கிய வீரன் ஒருவனை அழைத்தான்.
‘‘இளவரசே...’’‘‘இந்த நெசவாளர்கள் எங்கு செல்கிறார்கள்..?’’
விசாரித்துவிட்டு வந்த வீரன், ‘‘காஞ்சி செல்கிறார்களாம் இளவரசே...’’ என்றான்.

அவனைப் போகச் சொல்லிவிட்டு சாளுக்கிய போர் அமைச்சரை ஏறிட்டான் விநயாதித்தன். ‘‘குழப்பமாக இருக்கிறது குருவே...’’
‘‘இதிலென்ன குழப்பம் விநயாதித்தா... காஞ்சியில் நெசவாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நெய்யும் பட்டுத் துணிகள் மல்லைத் துறைமுகம் வழியே மற்ற தேசங்களுக்கு ஏற்றுமதி ஆகின்றன...’’‘‘... அதுதான் குருவே...’’ விநயாதித்தன் இடைமறித்தான். ‘‘போதுமான நெசவாளர்கள் காஞ்சியில் இருக்கும்போது எதற்காக கூடுதலாக மதுரையில் இருந்து செல்கிறார்கள்..?’’

‘‘எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணோடு நீ பார்ப்பது மகிழ்ச்சி யளிக்கிறது விநயாதித்தா... அதேநேரம், எழுகின்ற அனைத்தும் சந்தேகங்கள் அல்ல... வினாக்களும் அதில் அடங்கியிருக்கலாம்... சற்றே யோசித்தால் அதற்கான விடைகளையும் அறியலாம் என்பதை மறக்காதே...’’‘‘அப்படியானால் இப்பொழுது எனக்குள் முளைவிடுவது..?’’‘‘சந்தேகச் செடி அல்ல. வினா!’’‘‘அதற்கு விடை..?’’

‘‘யவனர்கள் அல்லது அராபியர்கள் அதிக எண்ணிக்கையில் பட்டாடைகள் கேட்டு செய்தி அனுப்பியிருப்பார்கள்... அதற்காக காஞ்சி நெசவாளர்கள் தங்கள் உறவினர்களான மதுரை நெசவாளர்களை அழைத்திருப்பார்கள்...’’‘‘நீங்கள் சொல்வது ஊகம்தானே..?’’‘‘காஞ்சிக்குச் சென்று அதை உறுதிப்படுத்திக் கொள்ளலாமே!’’விநயாதித்தன் சிந்தனையில் ஆழ்ந்தான்.

‘‘பல்லவ வாள் நெகிழ்ந்து குழையும் அதேநேரம் இறுகவும் செய்கிறது!’’ சிவகாமியின் மேனியைத் தன் விரல்களால் தடவியபடியே கரிகாலன் சுருதி சேர்த்தான்.

யாழின் நரம்புகள் என சிவகாமியின் தேகம் அதிர்ந்தது.மீட்டியபடியே தன் கண்களை மறைத்த அவள் கச்சையை அதற்குரிய இடத்தில் கரிகாலன் பொருத்தினான்!காற்று புக முடியாத அளவுக்கு அவன் இமைகள் மூடியிருந்தன.

சிவகாமிக்கு அது பிடித்திருந்தது. குழைந்தாள். நெளிந்தாள். பின்னினாள். அவன் கேசத்தைப் பிடித்தாள். ‘‘சாளுக்கியர்களின் பட்டையான வாளை எதிர்கொள்ள இந்த மெல்லிய வாள் போதும்...’’‘‘வாள் மட்டுமா மென்மை... உறையும்தான்...’’ கச்சையை முடிச்சிட்டான்.

‘‘அதனால்தானே உங்கள் கண்களை மூடிய பிறகும் உங்களால் பார்க்க முடிந்தது!’’
‘‘ஆம்... நன்றாகப் பார்த்தேன்..!’’‘‘கண்டது போதுமா... அல்லது...’’
‘‘இதுவே அதிகம்!’’ அவள் உதட்டைக் கவ்வினான். ‘‘பார்த்ததை மனதில் பதிய வைத்துக் கொண்டேன்!’’ தன் மார்பை அழுத்தினான்.
கச்சைக்குள் இருந்த அவள் கொங்கைகள் நசுங்கின.

‘‘எவ்வளவு மெல்லியதாக நெய்திருக்கிறார்கள்...’’ கைகளால் கச்சையைத் தடவியபடியே முணுமுணுத்தான்.‘‘பின்னே... நீங்கள் அடையாளம் காட்டிய நெசவாளர் அல்லவா நெய்தார்... உங்கள் மனமறிந்தல்லவா நெய்திருக்கிறார்..!’’சிரித்தான். சிரித்தாள். சிரித்தார்கள்!

அத்தியாயம் 114

சிரித்தார் விக்கிரமாதித்தர். அந்தச் சிரிப்பில் இயலாமையால் பிறந்த கோபமே கொப்பளித்தது.மல்லை சுங்கத் தலைவனிடம் இருந்து, தான் கைப்பற்றிய சுவடிக் கட்டை மீண்டும் ஒருமுறை ஆராய்ந்தார்.மற்ற தேசங்களுக்கு ஏற்றுமதியான பொருட்களின் விவரங் களும் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி யான சரக்குகளின் விவரங்களுமே அதில் இருந்தன. எதற்காக  மல்லை சுங்கத் தலைவர் இதை தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்தார்...  

சுவடியின் முதல் ஓலை யில் எதற்காக புலவர் தண்டிக்கு காபாலிகன் குறிப்பு  எழுதியிருக்கிறான்..?

தலையை உயர்த்தி சற்று நேரம் வெறித்தவருக்கு பொறி தட்டியது.சட்டென சுவடியை எடுத்துப் பார்த்தார்.ஏற்றுமதியான பொருட்களின் விவரங்களில் குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை. மாறாக இறக்குமதி பொருட்களில் நெசவுப் பொருட்களே அதிகம் இருந்தன! குறிப்பாக பதினைந்து வணிகர்களே இவற்றை மல்லைத் துறைமுகத்தில் இறக்கியிருந்தார்கள்.சாளுக்கிய மன்னரின் புருவங்கள் முடிச்சிட்டன. தொண்டையில் சிக்கிய முள்ளாக இந்த விவரம் அவரை உறுத்தியது.

கைகளைத் தட்டினார்.‘‘மன்னா...’’ சாளுக்கிய வீரன் அவரை வணங்கினான்.‘‘அமைச்சரிடம் இருந்து கடந்த ஒரு திங்களாக மல்லை... இல்லை வேண்டாம்... மொத்தமாக பல்லவ துறைமுகங்களுக்கு வந்து சேர்ந்த வணிகப் பொருட்களின் பட்டியலை வாங்கி வா...’’மீண்டும் அவரை வணங்கிவிட்டு அந்த வீரன் வெளியேறினான்.காஞ்சி ஆலயங்களில் பூஜைகள் முடிந்து தீபாராதனைகள்  காட்டப்படுவதற்கு அறிகுறியாக மணிகள் ஒலித்தன.

அவற்றை செவிமடுத்தபடியே அரண்மனையில் இருந்த மன்னரின் அந்தரங்க அறையில் ஆழ்ந்த சிந்தனையுடன் விக்கிரமாதித்தர் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார்.‘‘மன்னா...’’திரும்பினார்.சாளுக்கிய வீரன் பயபக்தியுடன் ஓலைச் சுவடியைக் கொடுத்தான்.

 

அதை வாங்கியபடி சைகையால் அவனுக்கு விடை கொடுத்தார்.மன்னரை வணங்கிவிட்டு அந்த வீரன் வெளியேறினான்.முன்பு அமர்ந்த இருக்கையில் அமர்ந்து அமைச்சர் கொடுத்து அனுப்பிய சுவடியைப் பிரித்தார்.கடந்த ஒரு திங்களாக பல்லவ துறைமுகங்களுக்கு வந்து இறங்கிய... துறைமுகங்களில் இருந்து ஏற்றுமதியான பொருட்கள்...


சரக்குகளின் விவரங்கள் அதில் இருந்தன. எந்தெந்த வணிகர்கள் எந்தெந்த தேசங்களுக்கு என்னென்ன பொருட்களை ஏற்றுமதி செய்தார்கள்... அவைகள் எந்தெந்த கோட்டங்களில் இருந்து வந்தவை... எந்தெந்த நாடுகளில் இருந்து என்னென்ன சரக்குகளை இறக்குமதி செய்தார்கள்... அவைகள் எந்தெந்த கோட்டங்களுக்கு அனுப்பப்பட்டன... இதற்காக வசூலிக்கப்பட்ட சுங்கத் தொகைகள்... ஆகிய அனைத்தும் அதில் இருந்தன.

விக்கிரமாதித்தர் நிமிர்ந்து அமர்ந்தார். இந்த விவரங்களைப் பார்த்தல்ல. காஞ்சியை சாளுக்கியர்கள் கைப்பற்றியது முதலே நாள்தோறும் அமைச்சரால் இப்பட்டியல்கள் வாசிக்கப்பட்டு வருவதால் பெரியதாக அவரது கவனம் இதில் குவியவில்லை.ஆனால்... ஆனால்...இருக்கையில் இருந்து சட்டென எழுந்தார். அவரது நெற்றியில் வியர்வை பூக்கத் தொடங்கியது.இதை எப்படி கவனிக்கத் தவறினோம்...

சாளுக்கிய மன்னருக்கு இருப்புக் கொள்ளவில்லை.நாள்தோறும் அமைச்சர் படித்துச் சொன்ன பட்டியல்கள் அனைத்தும் மொத்த விவரங்கள் என்பதால் சாத்தன் பெருமாள்... 500 வராகன்... பெருஞ்சாத்தன்... இரண்டாயிரம் வராகன்... என்பதெல்லாம் அந்தந்த வணிகர்களின் பெயர்கள்... அந்தந்த நாட்களில் அவர்கள் செலுத்திய சுங்க வரி... இந்த இந்தப் பொருட்கள் ஏற்றுமதி ஆகின... இந்த இந்தப் பொருட்கள் இறக்குமதி ஆகின... என்பதை மட்டுமே அறிந்திருந்தார்.

இப்பொழுது ஒட்டுமொத்தமாக கடந்த ஒரு திங்களின் பட்டியலைக் காணும்போதுதான் பளிச்சென்று ஒரு விஷயம் அவருக்குப் புரிந்தது.
மல்லை மட்டுமே பல்லவர்களின் துறைமுகம் அல்ல!அல்லிக்கேணி, மயிலை, வசவசமுத்திரம், கெடிலக்கரை... என ஏழுக்கும் மேற்பட்ட சிறிய துறைமுகங்களும் பல்லவ தேசத்தைச் சேர்ந்தவைதான்.

கடலில் நிற்கும் பெரும் மரக்கலங்களில் இருந்து நூலேணி வழியாக தோணி அல்லது சிறிய மரக்கலங்களில் பொருட்களை இறக்கி அவற்றை சிறிய துறைமுகங்களுக்கு எடுத்துச் செல்கிறார்கள்... இந்த விவரங்களை பெரிய துறைமுகமான மல்லையில் இருக்கும் சுங்கச் சாவடியில் வணிகர்கள் தகவலாக தெரிவிக்கிறார்கள்... சிறிய துறைமுகங்களில் இருக்கும் அரசு அலுவலரிடம் சம்பந்தப்பட்ட வணிகரின் ஊழியர்கள் ஓலை நறுக்குகளைக் கொடுத்துவிட்டு ஊருக்குள் பொருட்களை எடுத்துச் செல்கிறார்கள்... பூகோளத்தை எந்தளவுக்கு சபிக்க முடியுமோ அந்தளவுக்கு விக்கிரமாதித்தர் சபித்தார்.

சாளுக்கிய தேசத்தில் சின்ன துறைமுகங்கள் கூட இல்லாததால் கடலைக் குறித்தோ கடல் வாணிபம் பற்றியோ அவர் அறிந்ததேயில்லை. காஞ்சியின் கலைச் செல்வங்களும் மல்லைத் துறைமுகத்தின் சுங்கத் தொகையும் மட்டுமே இதுநாள் வரை சாளுக்கியர்கள் அறிந்திருந்தார்கள்; கேள்விப்பட்டிருந்தார்கள்.

ஆனால், கடற்கரையில் மட்டுமல்ல... ஆற்றங்கரைகளிலும், முகத்துவாரங்களிலும் கூட துறைமுகங்கள் உண்டு என்பதை
இப்பொழுது... இக்கணத்தில்தான் அறிகிறார்.இந்த அறிதலே அவரை அதிரவைத்தது. சாளுக்கியர்கள் ஒவ்வொரு முறையும் பல்லவர்களை வீழ்த்த நில வழிகளை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இதை எதிர்கொள்ளும் பல்லவர்களோ நில வழிகளுடன் நீர் வழிகளையும் தந்திரமாக உபயோகப்படுத்துகிறார்கள்.

இப்பொழுதும் அதே தந்திரத்தைத்தான் செயல்படுத்துகிறார்களா..?

நெசவு... நெசவுப் பொருட்கள்... இவை எதைக் குறிக்கின்றன..?யோசித்தவர் சட்டென, சுருட்டப்பட்டு ஓர் ஓரமாக வைக்கப்பட்டிருந்த மான் தோலை எடுத்து விரித்தார்.பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் வரைபடம்.

 

நில வழிகளைத் தவிர்த்துவிட்டு நீர் வழிகளை மட்டும் தன் கண்களால் அலசினார்.

மல்லைத் துறைமுகத்தை ஒட்டியே நேர்க் கோட்டில் அல்லிக்கேணி, மயிலை, கெடிலக்கரை சிறு துறைமுகங்கள் இருந்தன.
அவரது கருவிழிகள் ஓர் இடத்தில் நிலைத்தது.

அது வசவசமுத்திரம்.மல்லையில் இருந்து சில நாழிகைப் பொழுதில் அத்துறைமுகத்தை அடையலாம் என்பதை வரைபடத்தைப் பார்த்து ஊகித்தார். அதுவும் மயிலைக்கும் மல்லைக்கும் இடையில் சிறு புள்ளியாகக் காட்சியளித்தது வசவசமுத்திரம்.சட்டென அமைச்சரிடம் இருந்து, தான் வரவழைத்த சுவடிக் கட்டை எடுத்தார். பிரித்தார். ஓலைகளைத் திருப்பிக் கொண்டே வந்தார். வசவசமுத்திரம் என்ற தலைப்பின் கீழ் இருந்த ஓலையை மட்டும் படித்தார்.

கடந்த ஒரு திங்களாக நாள் ஒன்றுக்கு குறைந்தது மூன்று வீதம் 100 நெசவுக் கருவிகள் வசவசமுத்திரத்தில் இறங்கியிருந்தன.
போலவே நாள் ஒன்றுக்கு நூறு பேர் வீதம் மூவாயிரம் நெசவாளர்கள் மதுரையில் இருந்தும் வஞ்சியில் இருந்தும் வசவசமுத்திரத்துக்கு வந்திருக்கிறார்கள்.எதற்காக இத்தனை நெசவாளர்கள் பல்லவ சாம்ராஜ்ஜியத்துக்கு வந்திருக்கிறார்கள்..?

தன் நெற்றிப் பொட்டைத் தட்டியபடி சில கணங்கள் அமைதியாக இமைகளை மூடி யோசித்த விக்கிரமாதித்தர், திடீரென கண்களைத் திறந்தார்.
சிவகாமி அனுப்பியிருந்த செய்தி அவர் நினைவுக்கு வந்தது.‘இன்றிரவு மதுரையின் மேல் புறாக்கள் பறக்கும்... அதுதான் மதுரையில் பயிற்சி பெற்று வரும் பல்லவ வீரர்களுக்கான சமிக்ஞை. இதனைத் தொடர்ந்து கருக்கலில் மதுரைக் கோட்டைக் கதவுகள் திறக்கப்பட்டதும் வணிகர்களோடு வணிகர்களாக அந்த வீரர்கள் வெளியேறுவார்கள்.

வடக்கு நோக்கிச் செல்லும் அவர்களை மதுரைக் கோட்டைக்கு மூன்று கல் தொலைவில் வளைத்துப் பிடிக்கவும்...’
இச்செய்திக்கும் பல்லவ சாம்ராஜ்ஜியத்துக்குள் இறங்கியிருக்கும் நெசவாளர்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா..?
எவ்வளவு சிந்தித்தும் சாளுக்கிய மன்னருக்கு பொறி தட்டவில்லை. அதற்காக அவர் யோசிப்பதை நிறுத்தவுமில்லை. ஏதோ சம்பந்தம் இருக்கிறது... ஓர் இணைப்பு ஓடுகிறது... அதைத்தான் சிவகாமி மறைபொருளாக சுட்டுகிறாள்... அது என்ன..?
‘‘மன்னா...’’விக்கிரமாதித்தர் நிமிர்ந்தார்.
 

சாளுக்கிய வீரன் தலை வணங்கினான். ‘‘மதுரையில் இருந்து புறா வழியே செய்தி வந்திருக்கிறது...’’ என்றபடி பட்டுத் துணி ஒன்றை அவரிடம் ஒப்படைத்தான்.பெற்றுக்கொண்டு பிரித்தார்.சாளுக்கிய போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபர்தான் எழுதியிருந்தார்.

 

மதுரை பாதாளச் சிறையில் அடைக்கப்பட்ட சிவகாமி, தங்களிடம் ஒரு செய்தியைக் கொடுத்ததாகவும், அதன் பிரதி ஒன்றை தங்களுக்கு அனுப்பிவிட்டதாக அவள் சொன்னதாகவும் குறிப்பிட்டிருந்த ஸ்ரீராமபுண்ய வல்லபர், அதே செய்தியையே பதினைந்து பட்டுத் துணிகளில் கரிகாலன் சொல்லி கடிகை பாலகன் எழுதியிருந்ததாகவும், அவற்றைத் தாங்கள் கைப்பற்றிவிட்டதாகவும், எதற்காக ஒரே செய்தியை மட்டும் பதினைந்து முறை கடிகை பாலகன் எழுதி யிருந்தான் என்பது மட்டும் தங்களுக்குப் புரியவில்லை என்றும்... ஸ்ரீராமபுண்ய வல்லபர் குறிப்பிட்டிருந்தார். விக்கிரமாதித்தர் நிமிர்ந்தார்.


ஒரே செய்தி... பதினைந்து முறை... ஒரே செய்தி... பதினைந்து முறை... ஒரே செய்தி... பதினைந்து முறை... ஒன்று... பதினைந்து... சேர்த்தால் நூற்றுப் பதினைந்து... கூட்டினால் பதினாறு...  பொறி இதுதானா..?விரித்திருந்த பல்லவ சாம்ராஜ்ஜிய வரைபடத்தின் மீது சாளுக்கிய மன்னரின் பார்வை பதிந்தது.இம்முறை நில வழிகளை அலசினார்.பல்லவப் பெருநாடு பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மண்டலமும் பல கோட்டங்களாகப் பகுக்கப்பட்டிருந்தது.

அதில் தொண்டை மண்டலத்தில் மட்டும் இருபத்து நான்கு கோட்டங்கள் இருப்பதை முன்பே விக்கிரமாதித்தர் அறிந்திருந்தார். அவரது கருவிழிகள் அக்கோட்டங்களின் மீதுதான் பதிந்தன.புழல் கோட்டம், ஈக்காட்டுக் கோட்டம், மணவிற் கோட்டம், செங்காட்டுக் கோட்டம், பையூர்க் கோட்டம், எயில் கோட்டம், தாமல் கோட்டம், ஊற்றுக்காட்டுக் கோட்டம், களத்தூர்க் கோட்டம், செம்பூர்க் கோட்டம், ஆம்பூர்க் கோட்டம், வெண்குன்றக் கோட்டம், பலகுன்றக் கோட்டம், இலங்காட்டுக் கோட்டம், கலியூர்க் கோட்டம், செங்கரைக் கோட்டம், படுவூர்க் கோட்டம், கடிகூர்க் கோட்டம், செந் திருக்கைக் கோட்டம், குன்றவட்டான கோட்டம், வேங்கடக் கோட்டம், வேலூர்க் கோட்டம், சேத்தூர் கோட்டம், புலியூர்க் கோட்டம்...இதில் பதினைந்தாவதாக இருப்பது கலியூர்க் கோட்டம்...
 

பதினாறாவதாக இருப்பது செங்கரைக் கோட்டம்...  இந்த இரு கோட்டங்களில்தான் மறைமுகமாக ஏதேனும் நடக்கிறதா..?

 

கலியூர்க் கோட்டம் ஜெகஜ்ஜோதியாகக் காணப்பட்டது. விவசாயிகளைவிட கைவினைக் கலைஞர்கள், குறிப்பாக நெசவாளர்கள் அதிக மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்கள். எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் துணி கேட்டு வணிகர்கள் வரத் தொடங்கியதே இதற்குக் காரணம்.எனவே, புதிதாக மூங்கில் படல்கள் முளைக்கத் தொடங்கின.

ஆண்களுக்குச் சமமாக பெண்களும் நெசவுகளில் ஈடுபடத் தொடங்கினர். இருவர் நூல்களை இறுக்கி இறுக்கி ஆடையாக்க... ஆடையான துணியில் வேறு இருவர் மூலிகைச் சாற்றினால் படங்கள் வரைந்தபடி இருந்தனர்.இதையெல்லாம் பார்த்தபடியே காபாலிகன் ஒரு மூங்கில் படலுக்குள் நுழைந்தான்!

அத்தியாயம் 115

‘‘என்ன நங்கை... படல் எல்லாம் பலமாக இருக்கிறது...’’ மூங்கிலை அசைத்துப் பார்த்துவிட்டு நுழைந்தார் காபாலிகர்.‘‘அடடே... அடிகளாரா..? வாருங்கள்... வாருங்கள்...’’ திரும்பிய நங்கை மலர்ந்தாள். தேங்காய் மட்டையில் இருந்து மூலிகைச் சாற்றை மயிலிறகால் ஒற்றி எடுத்து, நெய்த துணிகளுக்கு வர்ணம் தீட்டிக் கொண்டிருந்தவள் அதை அப்படியே கீழே வைத்துவிட்டு எழுந்தாள். காபாலிகரை வணங்கினாள்.

காபாலிகரின் கண்கள் அனலைக் கக்கின. ‘‘கடந்த ஒரு திங்களாக உன்னை சந்திக்கவில்லை... இடைப்பட்ட முப்பது தினங்களில்
இப்படி மாறிவிட்டாயே...’’‘‘என்ன சொல்கிறீர்கள் அடிகளாரே...’’‘‘பார்த்தாயா... திரும்பவும் தராதரம் இல்லாமல் பேசுகிறாய்...’’ கர்ஜித்தார்.

‘‘
தாங்கள் சொல்வது என்னவென்றே எனக்குப் புரியவில்லை... முதலில் அமருங்கள்... மோர் குடியுங்கள்... பிறகு பேசலாம்...’’
‘‘
அமர்வதற்காக வரவில்லை...’’ சுற்றிலும் பார்த்தார். ‘‘வசதி பெருகியதும் நடவடிக்கையே மாறிவிடுமா..?’’
‘‘
அடிகளாரே...’’‘‘இனி என்னை அப்படி அழைத்தால் உன் நாக்கையே அறுத்துவிடுவேன் நங்கை...’’ மூங்கில் படல்கள் அதிர சப்தமிட்டார்.
நங்கைக்கு எதுவும் புரியவில்லை. மிரட்சியுடன் அவரை ஏறிட்டார்.‘‘அடிகளாராம்... அடிகளார்... யார் அடிகளார்..? நானா..? நான் காபாலிகன்! மயான பேரரசரான ஈசனின் தொண்டன். என்னைப் போய் ஊரை ஏமாற்றும் பார்ப்பனர்களுடன் ஒப்பிடுகிறாயே... இதுதான் நீ மரியாதை கற்ற லட்சணமா..?’’
‘‘
மன்னிக்க வேண்டும் அடி... காபாலிகரே!’’‘‘ம்... இதுதான் சரி...’’

‘‘
ஊர் முழுக்க அடிகளாராக இருப்பதால்... திருநீறு அணிந்தவர்கள் அனைவரும் அடிகளார்களாக காட்சி அளிப்பதால்... வார்த்தைகள் தவறிவிட்டன... இந்த எளியவளை மன்னிக்க வேண்டும்...’’ சொன்னபடியே காபாலிகரை பாதம் தொட்டு வணங்கினாள்.

‘‘
உன்மீது குற்றமில்லை நங்கையே... பார்ப்பனர்கள் அப்படி இந்த பல்லவ நாட்டையே கெடுத்து வைத்திருக்கிறார்கள்! மன்னர்களை மயக்கி... ஆலயங்களை எழுப்பி... கோயில்களைப் பராமரிக்க என்னும் பெயரில் கிராமங்களை நிவேதனமாக வாங்கி... குந்துமணி அளவுக்குக் கூட வரி செலுத்தாமல் உண்டு கொழிக்கிறார்கள்... ஊரை ஏமாற்றுகிறார்கள்...

எல்லாம் இந்த மகேந்திரவர்ம பல்லவரால் வந்த வினை... அவர்தான் இறக்கும் தருவாயில் இருந்த சைவத்துக்கு உயிர்கொடுத்தார்... அவரது மகன் நரசிம்மவர்ம பல்லவன் இன்னும் ஒருபடி மேலே சென்றார்... தனது படைத்தளபதியும் வாதாபியைத் தீக்கிரை ஆக்கியவருமான பரஞ்சோதியின் துணையுடன் பல்லவ நாடு முழுக்க சிவாலயங்களை எழுப்பினார்...

ஈசனின் இருப்பிடம் மயானம்... இதற்கு மாறாக அவரை கற்களுக்குள் சிறை வைத்து அதற்கு ஆலயம் எனப் பெயரிட்டு பார்ப்பனர்கள் வாழ வழிசெய்திருக்கிறார்கள் இந்தப் பல்லவர்கள்... இப்போதைய மன்னரான பரமேஸ்வரவர்மரோ சிவப்பழமாகத் திரிகிறார்...நாட்டைக் காக்க வேண்டியவர் ஓடி ஒளிந்து சிவபூஜை செய்து வருகிறார்...

விளைவு... உன்னைப் போன்ற சாமான்ய மக்கள் எல்லாம் மூளைச் சலவை செய்யப்பட்டு காண்பவர்களை எல்லாம் அடிகளார் என அழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்... எல்லா மத வழிபாட்டினரையும் சைவர்களாக்குகிறீர்கள். காபாலிகர்கள் சைவர்கள் அல்ல... புரிந்ததா..? நான் காபாலிகன்!’’ தன் கையில் இருந்த எலும்புத் தண்டத்தை தரையில் ஓங்கி அடித்தார்.

‘‘
புரிந்தது காபாலிகரே...’’
‘‘
ம்... மோர் எங்கே..?’’

நங்கை திரும்ப... பின்னால் நின்றிருந்த ஒரு பெண் மண் குவளையை அவளிடம் கொடுத்தாள்.நங்கை அதைப் பெற்று காபாலிகரிடம் பயபக்தியுடன் தந்தாள். ‘‘உங்களுக்குப் பிடித்த புளித்த மோர்தான் காபாலிகரே... இரண்டு நாட்கள் ஊறியது...’’

 

‘‘நல்லது...’’ வாங்கி ஒரே மூச்சில் குடித்தவர் நீண்ட ஏப்பம் ஒன்றை வெளியேற்றினார். ‘‘இன்னும் ஒருநாள் ஊறியிருக்கலாம்...’’
‘‘அடுத்தமுறை வருகையில் தங்கள் விருப்பப்படியே அளிக்கிறேன்...’’
‘‘அதாவது நாளை...’’ தாடியை நீவினார் காபாலிகர்.

நங்கை அவரை உற்றுப் பார்த்தாள்.
காபாலிகர் அவளது கண்களுக்குள் ஊடுருவினார்.
நான்கு நயனங்களும் உரையாடின.
‘‘மூன்று நாட்களுக்குப் பிறகு வாருங்கள்...’’
‘‘இனிதான் ஊற வைக்க வேண்டுமா நங்கை..?’’
‘‘ஆம் காபாலிகரே...’’

‘‘சரி... எதிர்பார்ப்பது போல் இருக்குமா..?’’
‘‘நீங்கள் விரும்புவது போல் இருக்கும்...’’
காபாலிகரின் பார்வை படலை அலசியது. ‘‘விரிவுபடுத்தி இருக்கிறாய் போல..?’’
‘‘சமாளிக்க வேண்டுமே? வணிகர்களிடம் இருந்து அதிக அளவில் ஒப்பந்தங்கள் வருகின்றன...’’
‘‘பல்லவனை விட சாளுக்கியன் நன்றாக ஆட்சி செய்கிறான் என்று சொல்...’’
நங்கை அமைதியாக நின்றாள்.

‘‘என் பங்குக்கு உன்னுடன் நானும் ஓர் ஒப்பந்தம் செய்கிறேன்...’’
நங்கையின் கண்கள் பளிச்சிட்டன. ‘‘காத்திருக்கிறோம் காபாலிகரே...’’
தன் இடுப்பில் இருந்து துணி ஒன்றை எடுத்தார்.
‘‘காபாலிகரே... இது..?’’ நங்கையின் கண்கள் விரிந்தன.

‘‘கச்சை! பெண்கள் அணிவது...’’
நங்கை அவரை உற்றுப் பார்த்தாள்.
காபாலிகர் அவளது கண்களுக்குள் ஊடுருவினார்.

நான்கு நயனங்களும் உரையாடின.

 

புரிந்ததற்கு அறிகுறியாகத் தலையசைத்த நங்கை, அவரிடம் இருந்து கச்சையை தன் கரங்களில் குனிந்து பெற்றாள்.

 

அப்படி அவள் பெற்றுக்கொண்ட கச்சையை ஒரு கரம் பிடுங்கியது.‘‘யார் அது..?’’ கோபத்துடன் நிமிர்ந்த நங்கையின் கண்களில் அச்சத்தின் ரேகைகள் படர்ந்தன.
 

அவளையும் காபாலிகரையும் சுற்றி பத்துக்கும் மேற்பட்ட சாளுக்கிய வீரர்கள் உருவிய வாளுடன் நின்றிருந்தார்கள்.தலைவன் போல் காணப்பட்டவன், தான் கைப்பற்றிய கச்சையைச் சுருட்டி பாதுகாப்பாக தன் இடுப்பில் மறைத்து வைத்தான்.

 

‘‘போய் உன் பணியை கவனி...’’ நங்கைக்கு உத்தரவிட்ட தலைவன், காபாலிகரை நோக்கித் திரும்பினான். ‘‘செல்லலாமா..?’’
‘‘எங்கு..?’’ அலட்சியமாகக் கேட்டார் காபாலிகர்.

‘‘சொன்னால்தான் வருவீர்களா..? நடடா!’’ தன் வலது கையால் காபாலிகரைத் தள்ளினான்.‘‘தவறு செய்கிறாய்... இந்த விஷயம் மட்டும் சாளுக்கிய மன்னருக்குத் தெரிந்தால்..?’’ காபாலிகர் தன் கண்களை உருட்டினார்.

 

‘‘உன்னைக் கைது செய்யச் சொன்னதே அவர்தான்...’’ வாளினால் காபாலிகரின் கழுத்தைத் தடவினான் வீரர்களின் தலைவன். ‘‘நடடா பல்லவ ஒற்றனே!’’ஆடாமல் அசையாமல் தன் அந்தரங்க அறையில் அமைதியாக அமர்ந்திருந்தான் பாண்டிய இளவரசனான இரணதீரன்.
அவனது வலது கரம் நீண்டிருந்தது.
 

உள்ளங்கையில் மோதிரம் ஒன்று சாளரத்தின் வழியே ஊடுருவிய சூரிய ஒளியில் மின்னியது.பார்த்ததுமே அது முத்திரை மோதிரம் என்று இரணதீரனுக்கு புரிந்தது. ஓரளவு இதை அவன் எதிர்பார்த்தான்.

 

ஆனால், எதிர்பாராது அந்த மோதிரத்தில் செதுக்கப்பட்டிருந்த உருவம்.அதைப் பார்த்துதான் ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்தான்.கணங்கள் நகர்ந்து ஓடி நிலைபெற்றதும் எழுந்தான்.அறையின் மூலையில் இருந்த விளக்கின் அருகில் சென்றவன் அதிலிருந்த எண்ணெய் கசடை எடுத்து மோதிரத்தின் மீது தடவினான்.பின்னர் தன் இடுப்பு வஸ்திரத்தால் மோதிரத்தைத் தேய்த்தான்.


மீண்டும் உயர்த்தி சூரிய ஒளியில் ஆராய்ந்தான். மோதிரத்தில் தென்பட்ட உருவம் முன்பை விட அதிகமாகப் பளபளத்தது.

அந்த உருவத்தையே இமைக்காமல் பார்த்தான். பாண்டிய மன்னரும் தன் தந்தையுமான அரிகேசரி மாறவர்மர் கூறியவை அனைத்தும் அவன் அகத்துக்குள் எதிரொலித்தன.

 

இந்த மோதிரம் எப்படி சிவகாமியின் கைகளுக்குச் சென்றது..? கரிகாலன் அதை ஏன் கைப்பற்றி தன் தந்தையிடம் கொடுத்தான்..? அப்படியானால்... இந்த பல்லவ - சாளுக்கிய - பாண்டிய ஆட்டத்தில் இவர்களும் நுழைகிறார்களா..?

கேள்வியுடன் தன் கண்களுக்கு அருகில் இரணதீரன் அந்த மோதிரத்தைக் கொண்டு வந்து அதிலிருந்த உருவத்தை உற்றுப் பார்த்தான்.
பளிச்சிட்ட உருவம் அவனைப் பார்த்து நகைத்தது.
 

மோதிரத்தை தன் கைக்குள் அடக்கியபடி பாண்டிய மன்னர் ஏற்பாடு செய்திருந்த மந்திராலோசனைக்கு புறப்பட்டான்.

 

வழியெங்கும் மோதிரத்தில் இருந்த உருவமே அவன் முன் நிழலாடியது.அது சிங்க உருவம். சிங்கள அரசின் முத்திரை மோதிரம்!‘‘வணக்கம் மன்னா...’’குரல் கேட்டு நிமிர்ந்தார் சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர்.‘‘நீங்கள் கட்டளையிட்டபடி கலியூர்க் கோட்டம் சென்றோம்...’’ குனிந்து கரங்களால் தன் வாயைப் பொத்தியபடி சாளுக்கிய வீரர்களின் தலைவன் பேசினான்.

‘‘ம்...’’
‘‘நீங்கள் சொன்னபடியே காபாலிகரை அங்கு கண்டோம்... கைது செய்து விட்டோம்...’’
விக்கிரமாதித்தர் தன் வலது கையை நீட்டினார்.வீரர்களின் தலைவன் தன் இடுப்பில் இருந்த கச்சையை எடுத்து பவ்யமாக அதை மன்னரின் கரத்தில் வைத்தான்.புன்னகைத்த சாளுக்கிய மன்னர், சைகையால் அவனுக்கு விடை கொடுத்தார்.‘‘மன்னா... காபாலிகன்..?’’ வீரர்களின் தலைவன் இழுத்தான்.‘‘சிறையில் அடைத்து விடு...’’
‘‘உத்தரவு மன்னா...’’

‘‘இங்கு அல்ல. மயிலை சுங்கத் தலைவனையும் எனது சகோதரர் அனந்தவர்மரையும் எந்தச் சிறையில் அடைத்திருக்கிறாயோ
அங்கு! கையோடு கலியூர்க் கோட்டத்தில் எந்த நெசவாளியைச் சந்தித்து காபாலிகன் இந்த கச்சையைக் கொடுத்தானோ அந்த
நெசவாளியின் தலையை உடனடியாக சீவி விடு!’’
‘‘மன்னா... அந்த நெசவாளர் ஆண் அல்ல... பெண்!’’
‘‘எனில் என் உத்தரவு சாசனமாகிறது!’’

வீரர்களின் தலைவன் அதிர்ச்சியில் தன் இமைகளை உயர்த்தினான். சாளுக்கிய மன்னரை வணங்கிவிட்டு வெளியேறினான்.அறைக்கதவு மூடப்பட்டதும் கச்சையின் ஒருபக்க நுனியைப் பிடித்தபடி விக்கிரமாதித்தர் உதறினார். உயர்த்தினார்.

 

அறைக்குள் சூரிய வெளிச்சம் பாய்ந்திருந்ததால் அங்கிருந்த பொருட்கள் எல்லாம் துல்லியமாகத் தெரிந்தன. கச்சையின் வழியே தன் அந்தரங்க அறையை விக்கிரமாதித்தர் பார்த்தார்.

மிக மிக மெல்லியதாக நெய்யப்பட்டிருந்ததால் கச்சைக்கு அந்தப் பக்கம் இருந்த அறையின் பொருட்களை அவரால் பிசிறின்றி பார்க்க முடிந்தது.

ஆனால், கச்சையின் வழியே விக்கிரமாதித்தர் கண்டது அறையின் பொருட்களை அல்ல; கோடுகளை!

 ஆம்! கச்சையின் மீது ஊசியினால் குறுக்கும் நெடுக்குமாக கோடுகள் தீட்டப்பட்டிருந்தன. கைகளில் ஏந்தி விரித்தபோது தெரியாத அந்தக் கோடுகள் சூரிய ஒளியில் உயர்த்திப் பார்த்தபோது பளிச்சிட்டன!

புன்னகைத்தபடியே மான் தோலில் இருந்த பல்லவ வரைபடத்தையும் கச்சையில் இருந்த கோடுகளையும் மாறி மாறிப் பார்த்தார் விக்கிரமாதித்தர்!
பல்லவ நாட்டின் இருபத்து நான்கு கோட்டங்களில் ஐந்தாவதாக இருந்த பையூர்க் கோட்டத்துக்குள் நுழைந்த கடிகை பாலகன், குறுக்கு சந்துகளின் வழியே கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டிருந்த மூங்கில் படல் ஒன்றை அடைந்தான்.

நெசவு செய்துகொண்டிருந்த பெண்கள் அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு தங்கள் பணியைத் தொடர்ந்தார்கள்.படலுக்குள் நுழைந்த கடிகை பாலகன், தன் இடுப்பில் இருந்து ஒரு பொருளை எடுத்தான்.அது கச்சை!

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=17234&id1=6&issue=20200913

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ரத்த மகுடம்-116

படலை வலதும் இடதுமாகவும் மேலும் கீழுமாகவும் சுற்றிலும் பார்த்துவிட்டு தன் தொண்டையைக் கனைத்தான் கடிகை பாலகன்.
பணிபுரிந்து கொண்டிருந்த பெண்கள் அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு தங்கள் வேலையைத் தொடர்ந்தார்கள்.‘‘வாருங்கள்...’’ குரல் கேட்டு கடிகை பாலகன் திரும்பினான்.பனங்கற்கண்டும் மஞ்சளும் கலந்த நீரை ஏந்தியபடி அங்கு நங்கை நின்றிருந்தாள்.‘‘இது எதற்கு..?’’ கடிகை பாலகனின் கண்கள் விரிந்தன.‘‘உங்களுக்குத்தான்...’’ நங்கை புன்னகைத்தாள்.

‘‘எனக்கா..?’’
‘‘ஆம்... தொண்டையைக் கனைத்தீர்கள் அல்லவா..?’’
‘‘அதற்கு..?’’
‘‘கமறலை சரிசெய்ய நீரைக் கொதிக்க வைத்து அதில் பனங்கற்கண்டுத் துகள்களையும் மஞ்சள் பொடியையும் கலந்து தங்களுக்கு கொண்டு வந்திருக்கிறேன்...’’கடிகை பாலகன் எதுவும் சொல்லாமல் அந்த மண்குவளையை வாங்கிக் குடித்தான்.
 

உண்மையிலேயே தொண்டைக்கு இதமாக இருந்தது. குவளையை நங்கையிடம் கொடுத்தான். ‘‘கலியூர் கோட்டத்தில் இருப்பாய் என்று நினைத்தேன்...’’ குரலைத் தாழ்த்தி அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் கடிகை பாலகன் வினவினான். ‘‘நேற்று பகல் வரை அங்குதான் இருந்தேன்...’’ நங்கை
முணுமுணுத்தாள்.

‘‘ம்...’’
‘‘சிரசைப் பாதுகாக்க வேண்டும் என்று தோன்றியதால் பையூர்க் கோட்டத்துக்கு உடனடியாக வந்து சேர்ந்தேன்...’’
‘‘வழியில் யாரும் நிறுத்தவில்லையா..?’’‘‘நிறுத்தி விசாரிக்கும் இடங்கள் எவை எவை என்று தெரியும்... அவற்றைத் தவிர்க்கும் விதமும் அறிந்திருந்ததால் சாளுக்கியர்களின் கண்களில் மண்ணைத் தூவ முடிந்தது...’’ ‘‘காபாலிகர்..?’’ கடிகை பாலகன் இழுத்தான்.‘‘கரிகாலர் எதிர்பார்த்தது போலவே கைது செய்யப்பட்டார்...’’

‘‘கச்சை..?’’
‘‘கணக்கிட்டது போலவே சாளுக்கிய வீரர்கள் அதை அபகரித்து விட்டார்கள்...’’
‘‘கரிகாலரின் இழுப்புக்கு ஏற்ப சாளுக்கிய மன்னர் அசைகிறார்...’’ கடிகை பாலகன் புன்னகைத்தான்.
நங்கையின் நயனங்களில் சிந்தனை ரேகைகள் படர்ந்தன.
‘‘என்ன யோசிக்கிறாய்..?’’ கடிகை பாலகன் கேட்டான்.

‘‘விக்கிரமாதித்த மன்னரை அவ்வளவு குறைவாக எடை
போட்டுவிட முடியாது என்று தோன்றுகிறது...’’
‘‘இங்கும் சாளுக்கிய வீரர்கள் வருவார்கள் என்று நினைக்கிறாயா..?’’
‘‘ஒருவேளை வந்தால் என்ன செய்ய வேண்டும் என
சிந்திக்கிறேன்...’’
‘‘நங்கை...’’
‘‘ம்...’’

‘‘பெண்கள் எல்லாம் இவ்வளவு அறிவாளிகளாக இருந்தால் ஆண்களான நாங்கள் என்னதான் செய்வது..?’’
‘‘கரிகாலரைக் கேளுங்கள்...’’
‘‘அவரையா..?’’
‘‘ஆமாம்... அவர்தான் இந்த விஷயத்தில் அனுபவம் வாய்ந்தவர்... அறிவாளிப் பெண்களை எப்படி எதிர்கொள்வது என்பதை கசடற கற்று நிற்க அதற்குத் தக என்றிருப்பவர் அவர்தான்! உங்களுக்கு அவர் வழிகாட்டுவார்!’’
‘‘சிவகாமி யார் நங்கை..?’’
கடிகை பாலகனை உற்றுப் பார்த்தாள் நங்கை.

‘‘அவள் பல்லவ இளவரசியா... அல்லது சாளுக்கிய ஒற்றரா..?’’
கேட்ட கடிகை பாலகனுக்கு எந்த பதிலையும் சொல்லாமல்
தன் வலது கையை நீட்டினாள். ‘‘கொடுங்கள்...’’
‘‘எதை..?’’
‘‘கச்சையை!’’

கடிகை பாலகன் தன் கையில் இருந்த கச்சையை நங்கையிடம் கொடுத்தான். ‘‘எவ்வளவு துண்டுகள் என்று தெரியுமல்லவா..?’’
‘‘அதுதான் மதுரையில் ஒன்றே போல பதினைந்து செய்திகளை தயார் செய்தீர்களே!’’ நாசி அதிர சிரித்த நங்கை, கச்சையை அங்கிருந்த பணிப்பெண்ணிடம் கொடுத்தாள். ‘‘பதினைந்தும் ஒன்றுமாக மொத்தம் பதினாறு துண்டுகளாக இந்தக் கச்சையை வெட்டு. ஒவ்வொரு துண்டையும் ஒவ்வொரு படலுக்கு அனுப்பு!’’ உத்தரவிட்டுவிட்டு கடிகை பாலகனை ஏறிட்டாள். ‘‘அடுத்த பணிக்கு நீங்கள் செல்லலாம்...’’
கடிகை பாலகனின் கண்கள் வியப்பால் விரிந்தன. ‘‘அடுத்த பணியா..?’’

‘‘ம்... புலவர் தண்டி உங்களுக்கு கட்டளையிட்ட பணி! உங்கள் மீது வீசும் சாம்பிராணி மணம் புலவர் வீட்டில் மட்டுமே புகையும் பிரத்யேக மணம்! அவரைச் சந்தித்துவிட்டு இங்கு வந்திருக்கிறீர்கள். நாழிகைகள் கடந்தாலும் அந்த சாம்பிராணி வாசனை அகலாது... மூன்று நாட்களாவது அதன் வாசம் வீசும்!’’‘‘சாளுக்கியர்களும் இதை அறிவார்களா..?’’
‘‘வாய்ப்பில்லை. புலவரின் சீடர்கள் மட்டுமே அறிந்த உண்மை இது!’’ சொல்லிவிட்டு படலை நோக்கி நகர முற்பட்டாள்.
‘‘நங்கை...’’

திரும்பினாள். ‘‘என்ன..?’’  
‘‘நான் கேட்டதற்கு எந்த பதிலையும் சொல்லவில்லையே..?’’ கடிகை பாலகனின் கண்கள் கெஞ்சின.

நங்கை அவனை உற்றுப் பார்த்தாள். ‘‘நான் ஒரு கேள்வி கேட்கலாமா..?’’
‘‘நான் விடையைக் கேட்டேன்...’’
‘‘அதற்குத்தான் வினாவைத் தொடுக்கலாமா என்று வினவுகிறேன்...’’
‘‘கேள் நங்கை...’’

‘‘சிவகாமி யார் என்று அறிய முற்படுகிறீர்கள் அல்லவா..?’’
‘‘ஆம்...’’
‘‘அதற்கு முன்னால் கரிகாலர் யார் என்று தெரிந்து கொண்டீர்களா..?’’
கடிகை பாலகன் அதிர்ந்தான். ‘‘என்ன கேள்வி இது நங்கை..?’’

‘‘பல்லவ நாட்டைச் சுற்றும் வினா இது...’’ நங்கையின் கருவிழிகளில் சிந்தனை ரேகைகள் படர்ந்தன. ‘‘காஞ்சிக்கு எப்பொழுது தன் படையுடன் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் வர வேண்டும்... எந்தக் கணத்தில் வந்தால் பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மர் போர் புரியாமல் காஞ்சி நகரை சாளுக்கியர்களுக்கு தாரை வார்த்துவிட்டு வெளியேறுவார்... சேதாரமின்றி எப்படி பல்லவ நாட்டைக் கைப்பற்றலாம் என்பதையெல்லாம் சாளுக்கிய விக்கிரமாதித்தருக்கு துல்லியமாகக் குறிப்பிட்டு முகூர்த்தத்தைக் குறித்துக் கொடுத்தவர் கரிகாலர்தான் என்கிறார்கள்...’’
‘‘யார் அப்படிச் சொன்னது..?

சொல் நங்கை... உடனடியாக அவன் நாக்கை அறுத்து எறிகிறேன்...’’
‘‘அது பல்லவ மன்னராலும் பல்லவ இளவரசராலும் கூட
இயலாது...’’‘‘அப்படிப்பட்ட செல்வாக்கு படைத்த மனிதனா இப்படியொரு அபாண்டமான பழியை கரிகாலர் மீது சுமத்துகிறான்..?
‘‘ஆம்...’’
‘‘யாரவன்..?’’

‘‘யார் அவர் என மரியாதையுடன் கேளுங்கள்...’’
கடிகை பாலகன் கேள்வியுடன் அவளைப் பார்த்தான்.
நங்கை அவன் பார்வையை எதிர்கொண்டாள்.
‘‘சரி... யார் அவர்..?’’
‘‘புலவர் தண்டி!’’

‘‘என்ன... என்ன... திரும்பவும் சொல்...’’ தன்னை மறந்து நங்கையின் தோள்களைப் பற்றி கடிகை பாலகன் உலுக்கினான்.
தன் இமைகளை மூடித் திறந்த நங்கை பெருமூச்சு விட்டாள். ‘‘ஆம்... என் குருநாதரான... நமது வழிகாட்டியான புலவர் தண்டிதான் இந்த ஐயத்தை எழுப்பியிருக்கிறார்...’’
திகைத்தான் கடிகை பாலகன். ‘‘அப்படியானால் சிவகாமி..?’’
‘‘தெரியவில்லை...’’‘‘நங்கை...’’

‘‘உண்மையைத்தான் சொல்கிறேன்... இத்தனை நாட்களாக சிவகாமியாக நடமாடுபவள் யார் என்றுதான் தெரியாமல் இருந்தது... இப்பொழுது அதனுடன் கரிகாலர் யார் என்ற வினாவும் சேர்ந்திருக்கிறது! ஒன்று மட்டும் நிச்சயம்... கரிகாலரும் சிவகாமியுமாகச் சேர்ந்து பல்லவ, சாளுக்கிய, பாண்டிய நாடுகளை தங்கள் விருப்பப்படி ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறார்கள்... போர் அமைச்சரான ஸ்ரீ ராமபுண்ய வல்லபர் மட்டுமல்ல... மிகச்சிறந்த ராஜ தந்திரியான புலவர் தண்டியும் குழம்பித் தவிக்கிறார்...’’‘‘அப்படியானால் சிவகாமியும் கரிகாலரும் கூட்டாளிகளா..?’’ கடிகை பாலகன் படபடத்தான்.

‘‘இருக்கலாம்... அல்லது இல்லாமலும் போகலாம்...’’‘‘நங்கை...’’‘‘கத்தியோ என்னை உலுக்கியோ பயனில்லை... இக்கணம் வரை கரிகாலரும் சிவகாமியும் ஒரே அணியைச் சேர்ந்தவர்களா அல்லது தனித்தனி அணிகளின் பிரதிநிதிகளா என்று தெரியவில்லை... அவ்வளவு ஏன்... எந்த அணியைச் சேர்ந்தவர்கள் என்பதைக்கூட ஒருவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை... எதற்காக, யாருக்காக, ஏன் இவ்வளவு பெரிய நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள் என்பதற்கான விடையும் கிடைக்கவில்லை...’’
‘‘நாம் என்ன செய்வது..?’’

‘‘புலவரின் ஊழியர்கள் நாம்... அவரை நம்பி அவர் இட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டியதுதான்...’’
‘‘நம்மால் கண்டுபிடிக்க முடியாதா..?’’
‘‘எதை..?’’‘‘கரிகாலர் - சிவகாமி குறித்த ரகசியத்தை...’’
‘‘முடியும் என்று நினைக்கிறீர்களா..?’’ அவன் கருவிழிகளை உற்றுப் பார்த்தபடியே நங்கை கேட்டாள்.
‘‘முயற்சி செய்வதில் தவறில்லையே...’’

‘‘அப்படியானால் மல்லைக்கும் காஞ்சிக்கும் இடையில் இருக்கும் சத்திரத்துக்குச் செல்லுங்கள்... அங்குதான் மல்லைக் கடற்கரை சுங்கத்துறை தலைவரும் சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தரின் சகோதரர் அனந்தவர்மரும் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்...’’
‘‘அவர்களை நான் விடுவிக்க வேண்டுமா..?’’

‘‘இல்லை...’’ என்றபடி சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கடிகை பாலகனை நெருங்கி அவன் செவியில் சிலவற்றை நங்கை முணுமுணுத்தாள்.
கடிகை பாலகனின் வதனத்தில் மகிழ்ச்சி மலர்ந்தது. ‘‘நீ புத்திசாலி நங்கை... நாட்டை ஆள வேண்டியவள்... இதோ இப்பொழுதே புறப்படுகிறேன்... கவலைப்படாதே... மாறுவேடத்தில்தான் செல்வேன்...’’ கடிகை பாலகன் வேகமாக படலை விட்டு வெளியேறினான்.

தன் பார்வையை விட்டு அவன் மறையும் வரை அங்கேயே நின்ற நங்கை, அதன் பிறகு படலுக்குள் நுழைந்தாள்.ஓர் ஓரமாக அமர்ந்திருந்த ஒருவன் குறுவாளால் கச்சையை பதினாறு துண்டுகளாகக் கிழித்துக் கொண்டிருந்தான்.நிமிர்ந்து நங்கையைப் பார்த்துப் புன்னகைத்தான்.பதிலுக்கு நங்கையும் புன்னகைத்தாள்.அவன், கரிகாலன்!

‘‘குருவே வணக்கம்...’’ என்றபடியே புயலைப் போல் உறையூர் விருந்தினர் மாளிகைக்குள் நுழைந்தாள் சிவகாமி.
தன்னைத் தடுக்க வந்த சாளுக்கிய வீரர்களை நோக்கி ‘‘அதுதான் நுழைந்து விட்டேனே... பிறகென்ன..? செல்லுங்கள்...’’ என்று கட்டளையிட்டுவிட்டு, அமர்ந்திருந்த ஸ்ரீ ராமபுண்ய வல்லபரின் கால்களைத் தொட்டு வணங்கினாள்.

வீரர்களை வெளியேறும்படி மற்றொரு இருக்கையில் அமர்ந்திருந்த சாளுக்கிய இளவரசனான விநயாதித்தன் சைகை செய்யவே, வீரர்கள் அவனுக்கு தலைதாழ்த்திவிட்டு அறைக்கதவை மூடிவிட்டு வெளியேறினார்கள்.விநயாதித்தனும் ஸ்ரீ ராமபுண்ய வல்லபரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.‘‘எழுந்திரு சிவகாமி...’’ என்றார் சாளுக்கிய போர் அமைச்சர்.

நிமிர்ந்த சிவகாமி ஸ்ரீ ராமபுண்ய வல்லபரைப் பார்த்து மலர்ந்தாள். ‘‘குருவே... சொன்னபடி மதுரைக் கோட்டையில் இருந்து வெளியேறிய பல்லவ வீரர்களைக் கைது செய்து விட்டீர்களா..?’’விநயாதித்தனின் புருவங்கள் சுருங்கின. ‘‘வெளியேறியது வணிகர்கள்தான்... அதுவும் நெசவாளிகள்...’’

‘‘அவர்கள்தான் பல்லவ வீரர்கள் என்கிறாயா..?’’ ஸ்ரீ ராமபுண்ய வல்லபர் கிண்டலாகக் கேட்டார்.
 

‘‘இல்லை... நடக்கவிருக்கும் சாளுக்கிய-பல்லவ போரை வடிவமைப்பவர்கள் என்கிறேன்!’’ என்றபடியே சிவகாமி தன் இடுப்பில் இருந்து ஒரு பொருளை எடுத்தாள்.

அதைக் கண்ட சாளுக்கிய இளவரசனின் கண்களும் ராம
புண்ய வல்லபரின் நயனங்களும் சுருங்கி விரிந்து சுருங்கின.
‘‘என்ன இது..?’’ விநயாதித்தன் கர்ஜித்தான்.
‘‘பார்த்தால் தெரியவில்லையா இளவரசே..? கச்சை! நான் அணிந்திருந்த கச்சை!’’

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=17262&id1=6&issue=20200920

Link to comment
Share on other sites

ரத்த மகுடம்-117

‘‘இதை எதற்கு இங்கு வந்து உயர்த்திக் காட்டுகிறாய்..?’’ சாளுக்கிய இளவரசனின் நயனங்கள் அனலைக் கக்கின. ‘‘என்ன தைரியமும் நெஞ்சழுத்தமும் இருந்தால் ‘நான் அணிந்திருந்த கச்சை இது...’ என எங்களிடமே சொல்வாய்..? எங்களைப் பார்த்தால் உனக்கு எப்படித் தெரிகிறது..?’’ கர்ஜித்தான்.சிவகாமி உதட்டைச் சுழித்தாள். ஸ்ரீராமபுண்ய வல்லபரை ஏறிட்டாள். ‘‘என்ன குருநாதரே இளவரசர் இப்படி பச்சைக் குழந்தையாக இருக்கிறார்..?’’விநயாதித்தன் ஆத்திரத்துடன் அவளை நோக்கி அடியெடுத்து வைத்தான்.

ஸ்ரீராமபுண்ய வல்லபர் அவனது கைகளை இறுகப் பற்றி, கண்களால் ‘பொறு’ என்றார். உண்மையில் அவருக்கும் எதுவும் புரியவில்லை. என்ன சொல்வதென்றும் தெரியவில்லை. ஆனாலும், தான், அணிந்திருந்த கச்சை என்று சொல்லி சிவகாமி தங்களிடம் காட்டுகிறாள் என்றால் அதில் ஏதோ இருக்கிறது. இல்லையெனில் எந்தப் பெண்ணும் இப்படி நடந்து கொள்ள மாட்டாள்...

தொண்டையைக் கனைத்தார். ‘‘இது நீ அணிந்திருந்த கச்சையா..?’’
‘‘ஆம் குருநாதரே...’’‘‘எங்கு அணிந்திருந்தாய்... இல்லை இல்லை... எந்த இடத்தில் அணிந்திருந்தாய்... இல்லை இல்லை... எப்பொழுது அணிந்திருந்தாய்..?’’

சாளுக்கிய போர் அமைச்சரின் பதற்றத்தையும் அதனால் சொற்கள் குழறுவதையும் கண்டு சிவகாமி வாய்விட்டுச் சிரித்தாள்.
 

சாளுக்கிய இளவரசனுக்கு பற்றிக்கொண்டு வந்தது. ‘‘வாயை மூடு!’’ எரிந்து விழுந்தான். ‘‘குருநாதர் கேட்டதற்கு பதில் சொல்...’’
‘‘மன்னிக்கவும் குருவே...’’ நகைப்பதை அடக்கினாள் சிவகாமி.ராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் அவளை கண்களால் எரித்தார்கள்.

சிவகாமி அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனாலும் தொடர்ந்து, தான் விளையாடுவது நல்லதற்கல்ல என அவளுக்குத் தோன்றியது. இமைகளை மூடித் திறந்தாள். கணத்தில் அவள் வதனம் கம்பீரமாக மலர்ந்தது. ‘‘மதுரை பாதாளச் சிறையில் நான் அணிந்த கச்சை இது குருநாதரே...’’
நாணைப் போல் ராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் நிமிர்ந்தார்கள். ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

அமைதியாக அவர்கள் இருவரையும் நோக்கிவிட்டு அந்த அறையை சிவகாமி தன் பார்வையால் அலசினாள். ஈசான்ய மூலையில் தென்பட்ட அறையையும் அக்கதவு தாழிடப்படாமல் மூடியிருந்ததையும் கணத்துக்கும் குறைவான நேரத்தில் பார்த்தாள்.பெருமூச்சுடன் மேற்கொண்டு, தான் பேசப் போவதைக் கேட்பதற்காக மவுனமாகக் காத்திருந்த ஸ்ரீராமபுண்ய வல்லபரையும் விநயாதித்தனையும் நோக்கினாள்.
 

‘‘குருநாதா... இந்தக் கச்சைக்காகத்தான் ஒரு திங்களுக்கும் மேலாக கரிகாலனுடன் நடமாடினேன்; சுற்றினேன்; இழைந்தேன்; குழைந்தேன். எனது நடவடிக்கைகள் உங்களுக்குக் கூட சந்தேகத்தை எழுப்பியிருக்கும் என்பதை அறிவேன் இளவரசே... ஆனால், எனக்கு வேறு வழி தெரியவில்லை. நமது இலக்கு பல்லவர்களை வீழ்த்துவது.
 
அதுவும் வேரோடு... மண்ணோடு... இதற்காகத்தான் நம் சாளுக்கிய மாமன்னர் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தவமிருக்கிறார். அந்தத் தவம் பூர்த்தியாக வேண்டும் என்பதற்காகத்தான் என்னையே நீங்கள் உருவாக்கினீர்கள் குருநாதரே... இதை எக்காலத்திலும் நான் மறக்கவில்லை...’’இரு உள்ளங்கைகளையும் தேய்த்து தன்னிரு கன்னங்களிலும் பதிய வைத்த சிவகாமி தொடர்ந்தாள்.


‘‘காஞ்சி கடிகையில் இருந்து சில சுவடிக் கட்டுகளை கரிகாலன் களவாடிச் சென்றதை நீங்கள் இருவருமே அறிவீர்கள். அந்தச் சுவடிகளில் தமிழக சிறைச்சாலைகள் குறித்த விவரங்கள் இருந்தன. அதை ஏன் கரிகாலன் களவாடினான் என்ற வினா உங்களுக்குள் எழுந்திருக்கும். அதற்கான விடைதான் இந்தக் கச்சை... மதுரை பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டபோது நான் அணிந்திருந்த கச்சை...’’பேசியபடியே மெல்ல சிவகாமி நடக்கத் தொடங்கினாள்.

‘‘குருநாதரே... சாளுக்கிய பேரரசின் விடிவெள்ளியும், எக்காலத் திலும் சாளுக்கியர்களுக்கு வழிகாட்டி வருபவரும், பாரதத்தின் தக்காண சக்கரவர்த்திகளில் முதன்மையானவரும், எதிர்கால சந்ததியினரும் வியக்கும் மாவீரருமான நமது மாமன்னர் இரண்டாம் புலிகேசி எப்படி மறைந்தார் என்பது நினைவில் இருக்கிறதா..?’’‘‘இருக்கிறது...’’ விநயாதித்தன் சீறினான்.

‘‘ஆம்... இளவரசரால் மட்டுமல்ல... ஒவ்வொரு சாளுக்கிய குடிமகனாலும் அதை ஒருபோதும் மறக்க முடியாது...’’ நடந்தபடியே சொன்ன சிவகாமி, ஈசான்ய மூலையில் தாழிடப்படாமல் மூடியிருந்த அறையின் முன்னால் வந்து நின்றாள். கதவை ஒட்டி இருந்த சுவரில் தன் வலது கையை ஊன்றினாள். இடது கையில் இருந்த கச்சை காற்றில் நர்த்தனமாடியதை அவளும் சரி, அறையில் இருந்த ஸ்ரீராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் சரி பொருட்
படுத்தவில்லை.

சிவகாமியே தொடர்ந்தாள். ‘‘போரில் நம் மாமன்னரின் தலை சீவப்பட்டது. சீவியவர்... மரியாதை என்ன வேண்டிக்கிடக்கிறது... சீவியவன் பல்லவ தளபதியான பரஞ்சோதி...’’ தழுதழுத்தபடி இமைகளை மூடியவள் சில கணங்களுக்குப் பின் கண்களைத் திறந்தாள். அவளது கருவிழிகள் இரண்டும் தீ ஜ்வாலைகளாக எரிந்தன. ‘‘அதற்கு பழிவாங்க வேண்டும்... பழிவாங்கியே தீர வேண்டும்...’’‘‘அதற்குத்தான் உன் கச்சையை எங்கள் முன் நீட்டுகிறாயா..?’’ விநயாதித்தனின் உதடுகளில் இருந்து அம்பென சொற்கள் பாய்ந்தன.

‘‘ஆம் இளவரசே...’’
‘‘சே...’’ சாளுக்கிய இளவரசன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.‘‘பொறு விநயாதித்தா... இவள் என்ன சொல்கிறாள் என முழுமையாகக் கேட்போம்... சிவகாமி... ம்...’’ தனது வலது உள்ளங்கையை நீட்டி மேலே தொடரும்படி அவளுக்கு சைகை செய்தார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்.‘‘மகேந்திரவர்ம பல்லவன் ஆட்சியில் நம் மாமன்னர் இரண்டாம் புலிகேசி காஞ்சியை நோக்கிப் படையெடுத்தார்.

தர்மப்படி நடைபெற்ற அப்போரில் சாளுக்கியர்கள் மகத்தான வெற்றியை அடைந்தார்கள். பல்லவ நாட்டின் பரப்பளவு பெருமளவு சுருங்கியது. இதற்குப் பழிவாங்க மகேந்திரவர்மரின் மகன் நரசிம்மவர்ம பல்லவன் அரியணை ஏறியதும் புறப்பட்டான். இதற்குள் பல்லவ சேனாதிபதியான பரஞ்சோதி படைகளைத் திரட்டியிருந்தான்.

பல்லவப் படைகள் சாளுக்கிய நாட்டுக்குள் புகுந்து வெறியாட்டம் ஆடின. சாளுக்கிய ஊர்கள் அனைத்தும் பல்லவர்களால் கொள்ளையடிக்கப்பட்டன. ஏனெனில் தர்மப்படி பல்லவர்கள் யுத்தம் செய்யவில்லை. அசுரப் போரைக் கையாண்டார்கள். சாளுக்கிய தலைநகரான வாதாபியைக் கொளுத்தினார்கள்.
 

இந்தப் போரில்தான் நம் மாமன்னர் இரண்டாம் புலிகேசி வீரமரணம் அடைந்தார். உண்மையில் அது படுகொலை. ஆம். படுகொலைதான் அது. பல்லவ சேனாதிபதியான பரஞ்சோதி அதர்மமான முறையில் நம் மாமன்னரின் சிரசை தன் வாளால் வெட்டி எறிந்தான்...
 

இந்த அநியாயத்தை அந்தணர்கள் நியாயப்படுத்தினார்கள். எப்படி..? ஜோதிடத்தைக் கையில் எடுத்து. நினைக்க நினைக்க கோபத்தில் வெந்து தணிகிறேன் குருநாதரே... நம் மாமன்னர் இரண்டாம் புலிகேசி கிரகணத்து அன்று சாளுக்கிய அரசராக முடிசூட்டிக் கொண்டாராம்... அதனால்தான் கிரக சேர்க்கைப்படி யுத்தத்தில் அவரது சிரசு வெட்டப்பட்டதாம்...

பிராமணர்களும் அந்தணர்களும் இருக்கும் இடத்தில் அயோக்கியத்தனம்தானே ஆட்சி செய்யும்..? அதர்மம்தானே கோலோச்சும்..? அதுதான் அரங்கேறி வருகிறது.அந்தர்ணர்களின் தொடர் பிரசாரத்தால் தர்மப்படி போர் புரிந்த நம் மாமன்னர் இரண்டாம் புலிகேசியின் மரணம்... படுகொலை என்ற உண்மை நிலைக்கு அருகில் கூட செல்லவேயில்லை. மாறாக, நவகிரகங்களால்... ராசிக் கட்டங்களில் சேர்ந்த கோள்களின் கூட்டணியால்... அவரது சிரசு வெட்டப்பட்டதாகச் சொல்ல ஆரம்பித்தார்கள்.

வேதம் படித்தவன் பொய் சொல்ல மாட்டான் என்ற நம்பிக்கைதான் மக்கள் மனதில் நிலவுகிறதே... எனவே அவர்களும் இதை அப்படியே நம்பினார்கள். விளைவு... பரஞ்சோதி நல்லவனாகி விட்டான்... ஆம்... அதர்மமான முறையில் யுத்தம் செய்த... சாளுக்கிய தேசத்தை கொள்ளையனைப் போல் சூறையாடிய... அசுரப் போரைக் கையாண்ட... பல்லவ சேனாதிபதி பரஞ்சோதியின் நடவடிக்கை முற்றிலுமாக வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்டுவிட்டது.

காரணம் என்ன தெரியுமா..? பரஞ்சோதி என்னும் அயோக்கியன், யுத்த வெறியன், சிறு தொண்டராகிவிட்டான். சிவப் பழமாக மாறிவிட்டான். சைவம் வளர... சைவத்தின் பெயரால் மக்களைச் சுரண்டி அந்தணர்கள் வளர... அந்த சிறு தொண்டன் தேவை. எனவே வாதாபியைக் கொள்ளையடித்த அந்தக் கொள்ளையனின் செயலை... சிறுமைப்படுத்தி இகழ வேண்டிய அவனது நடவடிக்கையை... வீரம் என்ற பெயரில் சரித்திரத்தில் பதித்துவிட்டார்கள்...’’
‘‘இதை ஏன் இப்பொழுது சொல்கிறாய் சிவகாமி...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் நிதானமாகக் கேட்டார்.

‘‘இக்கணத்தில் அதைச் சொல்வதே சரி என்று தோன்றியதால் குருநாதரே...’’ என்றபடி இடது கையில் இருந்த கச்சையை வலது கைக்கு மாற்றினாள்.
‘‘எக்கணத்தில் சொன்னாலும் அது கடந்த காலம்தானே..?’’ விநயாதித்தன் புருவத்தை உயர்த்தினான்.‘‘எதிர்காலத்தில் அச்சுறுத்தலாக இருக்கப் போவதும் அதுதானே இளவரசே..?’’‘‘ஆனால், நாம் இருப்பது நிகழ்காலத்தில் அல்லவா..?’’ சாளுக்கிய இளவரசன் நகைத்தான்.‘‘அது கடந்த காலத்தின் தொடர்ச்சி அல்லவா..? தொடரப் போகும் நிகழ்ச்சி நிரல் அல்லவா..?’’  ‘‘அதற்கு வாய்ப்பில்லை சிவகாமி...’’ நெஞ்சை நிமிர்த்தினார் ஸ்ரீராமபுண்ய வல்லபர். ‘‘அசுரர்களால் கூட அவ்வளவு சுலபத்தில் அசுர வியூகத்தை அமைக்க முடியாது.
 

அதற்கு கசடற போர்க் கலைகளைக் கற்றிருக்க வேண்டும். இப்போதைய பல்லவ மன்னனான பரமேஸ்வரவர்மனும் சரி... அவனது மகன் ராஜசிம்மனும் சரி... ஏன், சோழ இளவரசனான கரிகாலனும் சரி... இந்த விஷயத்தில் சூன்யம்தான்... ஒருவேளை... தப்பித்தவறி அவர்கள் அசுர வியூகத்தை அமைத்தாலும்...’’ நிறுத்தியவர் தன் நெஞ்சில் கை வைத்தார். ‘‘அதை இந்த சாளுக்கிய போர் அமைச்சனால் தகர்க்க முடியும்...’’
 

‘‘பரஞ்சோதியின் அசுர வியூகங்களையா..?’’‘‘அவன்தான் இப்பொழுது இல்லையே..?’’‘‘நான் சொல்ல வருவது உங்களுக்கும் இளவரசருக்கும் புரியவில்லை என்று நினைக்கிறேன் குருநாதரே...’’ என்றபடியே தாழிடப்படாமல் இருந்த ஈசான்ய மூலைக் கதவை சிவகாமி திறந்தாள். ‘‘மன்னா... தங்களுக்குப் புரிந்ததல்லவா..?’’


அவர் அப்படிப் பார்ப்பதை இன்னொரு மனிதனும் மற்றவர்கள் பார்வையில் படாமல் மறைந்திருந்து பார்த்தான். அவன் உதட்டில் புன்னகை பூத்தது. அதுவரை அந்த ஈசான்ய மூலை அறையில் விக்கிரமாதித்தருடன்தான் அவன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். சிவகாமி சொன்னதை எல்லாம் மன்னருடன் சேர்ந்து கேட்டுக் கொண்டிருந்தான்.அவன் -கரிகாலன்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.