Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரத்த மகுடம்-91


 

பிரமாண்டமான சரித்திரத் தொடர்

எல்லோருமே இருபது வயதுக்கு உட்பட்டவர்கள். ஆண்களின் எண்ணிக்கைக்கு சமமாக பெண்களும் அங்கிருந்தார்கள். இரு பாலினருக்குமே தேகங்கள் வலுவாக இருந்தன. நாள்தவறாமல் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்பதற்கு அத்தாட்சியாகத் திகழ்ந்தன.உண்மையிலேயே அக்கணத்தில் சிவகாமி வியப்படையத்தான் செய்தாள். 

27.jpg

போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் வீரர்கள் பயிற்சி எடுப்பது புதிதல்ல. ஆனால், தங்களுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு தேசத்தில், அதுவும் பகையா நட்பா என என்றுமே உறுதியாகாத ஒரு நாட்டில் சர்வசாதாரணமாக வீரர்கள் பயிற்சி எடுத்து வருவது என்பது அசாத்தியமல்லவா..?

அதைத்தான் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரை மாநகருக்குக் கீழே இருந்த நிலவறையில் பல்லவ வீரர்கள் அவள் கண் முன்னால் சாதித்துக் காட்டிக் கொண்டிருந்தார்கள். பக்கங்களில் கெட்டிப்பட்ட மண்ணும், கற்களுமாக சுவர்கள். பொதுவாக நிலவறை என்றால் நீளவாக்கில் பாதை செல்லும். சதுரமாகவோ அகலமாகவோ அறைகள் போல் ஒன்று பாதையின் முடிவிலோ, பாதையின் நடுவிலோ தென்படும்.
 

ஆனால், மைதானமாக விரிந்த நிலவறையை தன் வாழ்க்கையில் இப்போதுதான் சிவகாமி காண்கிறாள். காற்றுப் புக ஆங்காங்கே துளைகள் இருந்தன. சரியாக அவையும் மேல் கூரையில் செதுக்கப்பட்டிருந்தன. உட்புற வெளிச்சத்துக்கு பகலிலும் தீப்பந்தங்கள். 

 

எந்த வழியாக இந்த நிலவறை மைதானத்துக்கு எப்போது எப்படி வருவார்கள்... எப்படி வெளியேறுவார்கள் என்று தெரியவில்லை. நிச்சயம் பல்லவ வீரர்கள் சாமர்த்தியசாலிகள்தான். இல்லையெனில் பாண்டியர்களின் கண்ணில் இப்படி மண்ணைத் தூவிவிட்டு அவர்கள் மண்ணிலேயே பயிற்சி எடுக்க முடியாதே! எத்தனை காலங்களாக இது அரங்கேறி வருகிறதோ! 

தாவிக் குதித்தும் ஒருவருக்கொருவர் முட்டி மோதியும் பயிற்சி செய்து வந்தபோதும் ஒருவரும் எவ்வித ஒலியையும் எழுப்பவில்லை. சுவாசத்தின் அளவுகள் மட்டுமே மேற்கொள்ளும் பயிற்சிக்கு ஏற்ப உயர்ந்தும் தாழ்ந்தும் வேகமாகவும் சீராகவும் இருந்தன; அதுவும் நிசப்தமாக! எழுந்து தாழ்ந்த மார்பகங்கள் மட்டுமே ஒவ்வொரு வீரனின் சுவாசத்தையும் பிரதிபலித்தன!

பயிற்சி பெறுவது பல்லவ வீரர்கள்தான் என்பதில் சிவகாமிக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனெனில் அவள் ஐயப்படக் கூடாது என்பதற்காகவே ரிஷபக் கொடி பட்டொளி வீசிப் பறந்துகொண்டிருந்தது!திரைச்சீலை போல் சுவர் உயர்ந்ததையும், தான் அதனுள் நுழைந்ததையும், ஒரு கரம் தன்னை உள்ளே இழுத்ததையும் நினைத்துப் பார்த்தாள். அந்தக் கரம் கரிகாலனுடையதல்ல என்பதை ஸ்பரிசத்தில் இருந்தே உணர்ந்துகொண்டாள். 

எனில், யாராக இருக்கும் என திரும்பிப் பார்க்க முற்பட்டபோது தனது நாசியின் மேல் வெண்மை நிற பருத்தித் துணி ஒன்று அழுத்தப்பட்டது. 

அதன் பின் இப்போதுதான் கண்விழிக்கிறாள். எத்தனை நாழிகள், தான் மயக்கத்தில் இருந்தோம்..? தெரியவில்லை. எழுந்து அமர்ந்தவளின் பார்வையில் முதியவர் ஒருவர் தென்பட்டார்.

 

தலைக்குழலும் மீசையும் மட்டுமே நரைத்திருந்தன. இதை வைத்து மட்டுமே அவரை முதியவராக மதிப்பிட முடியும். ஏனெனில் முப்பது வயதுள்ள திடகாத்திரமான ஆண் போலவே காணப்பட்டார். புஜங்களும் கணுக்கால்களும் பாறைகளைப் போல் இறுகியிருந்தன. மார்பு, அகன்று விரிந்திருந்தது. ஆறடி உயரம். அதற்கேற்ற உடல்வாகு.

கண்களாலும் செய்கைகளாலும் மட்டுமே பயிற்சி பெறும் வீரர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டி 
திருத்திக் கொண்டிருந்தார். மற்றபடி அவரது உதடும் சரி... பயிற்சி பெற்றவர்களின் உதடுகளும் சரி... பிரியவே இல்லை!புருவங்கள் சுருங்க சிவகாமி எழுந்து நின்றாள். யாரோ தோளைத் தொட்டார்கள்.திரும்பினாள்.

இரவின் மூன்றாம் ஜாமத்தில் தன்னுடன் உப்பரிகையில் வாட் போரிட்ட இளமங்கை புன்னகையுடன் நின்றிருந்தாள்! செய்கையால் தன்னைப் பின்தொடரும்படி ஜாடை காட்டிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தாள்.உதட்டில் பூத்த புன்னகையுடன் சிவகாமி அவளைத் தொடர்ந்தாள்.
எந்த இடத்தில் மயக்கமாகி சிவகாமி படுத்திருந்தாளோ அந்த இடத்துக்கு எதிர்ப்பக்கமாக இருந்த மைதானத்தில்தான் வீரர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அப்பெண் சிவகாமியை அழைத்துச் சென்றது பின்பக்கமாக. அதாவது மைதானத்துக்கு எதிர்ப்புறமாக.ஒற்றையடிப் பாதை போல் நீண்ட நிலவறையின் பாதையில் எவ்வித உரையாடலும் இன்றி இருவரும் நடந்தார்கள்!‘‘வாருங்கள்... வாருங்கள்...’’ சாளுக்கிய இளவரசனான விநயாதித்தன் படபடத்தான்: ‘‘சொல்லி அனுப்பியிருந்தால் நான் வந்திருப்பேனே...’’ என்றபடி ராமபுண்ய வல்லபரின் பாதங்களைத் தொட்டு வணங்கினான்.

‘‘தீர்க்காயுஷ்மான் பவ...’’ சாளுக்கிய போர் அமைச்சர் அவனை ஆசீர்வதித்தார். அவர் கண்களில் அன்பும் பரிவும் வழிந்தது.கைக்குழந்தையாக விநயாதித்தனை தன் கரங்களில் ஏந்தியது முதல் அவனை ஸ்ரீராமபுண்ய வல்லபர் பார்த்துக் கொண்டிருக்கிறார். சாஸ்திரங்கள் முதல் போர்ப் பயிற்சி வரை சகலத்தையும் அவனுக்குக் கற்பித்தது அவர்தான். கற்பிக்கும் நேரத்தில் எவ்வளவு கண்டிப்புடன் இருப்பாரோ அவ்வளவு தோழமையுடன் மற்ற நேரங்களில் பழகுவார்.எனவே, தன் தந்தையைவிட அவரை அதிகமும் விநயாதித்தன் நேசித்தான். 
 

சாளுக்கிய சாம்ராஜ்ஜியத்தின் அதிபதியாக தன் தந்தை இருந்ததால் விவரம் தெரிந்த நாள் முதலே ‘அப்பா’ என ஒன்ற முடியாமல் ஒரு படி தள்ளியே நின்றான். மரியாதை இமயமலை அளவுக்கு இருந்தது. அதே அளவுக்கு அன்பு ராமபுண்ய வல்லபரிடம்தான் விநயாதித்தனுக்கு அமைந்தது.  

 

‘‘அவசரம்... அதனால்தான் நானே வந்தேன்...’’ நிதானமாகத்தான் ராமபுண்ய வல்லபர் சொன்னார். ஆனால், அதனுள் மறைந்திருந்த பரபரப்பை விநயாதித்தன் உணர்ந்து கொண்டான்:
‘‘சொல்லுங்கள் குருதேவா... நான் என்ன செய்ய வேண்டும்..?’’
‘‘சொல்கிறேன்... காலை உணவை அருந்திவிட்டு வா...’’‘‘நீங்கள் வருவதற்கு முன்தான் உண்டு முடித்தேன்... பாண்டிய நாட்டில் விருந்தோம்பல் பலமென்றுதான் தங்களுக்குத் தெரியுமே...’’‘‘நல்லது...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் தொண்டையைக் கனைத்துக் கொண்டார்: ‘‘கடிகை பாலகனை இறுதியாக எப்போது சந்தித்தீர்கள் இளவரசே..?’’‘‘குருதேவா... இந்த மதுரை விருந்தினர் மாளிகையில் நாம் இருவரும் மட்டும்தான் இருக்கிறோம்... மரியாதை வேண்டாம்... ஒருமையிலேயே தங்கள் சீடனை அழைக்கலாம்...’’

கண்களால் புன்னகைத்தார் சாளுக்கியர்களின் போர் அமைச்சர்: ‘‘சரி... கேட்டதற்கு என்ன பதில்..?’’
‘‘நேற்றிரவு குருதேவா..?’’
‘‘எப்போது..?’’‘‘முதல் ஜாமத்தில்...’’
‘‘அதன் பிறகு கடிகை பாலகன் எங்கு சென்றான்..?’’‘‘தெரியாது குருதேவா... ஏதேனும் பிரச்னையா... வேண்டுமானால் வேளிர்களின் தலைவனை இப்போது இங்கு வரச் சொல்லவா..?’’‘‘வேளிர்களின் தலைவன்...’’ தன் பற்களைக் கடித்தபடி ராமபுண்ய வல்லபர் முணுமுணுத்தார்: ‘‘வரச் சொல்...’’
அவரை புருவம் உயர பார்த்துவிட்டு அகன்ற விநயாதித்தன், அறைக்கு வெளியே நின்றிருந்த சாளுக்கிய வீரனிடம் கடிகை பாலகனை உடனடியாக அழைத்து வரும்படி கட்டளையிட்டுவிட்டு வந்தான்.

எதுவும் பேசாமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்த ராமபுண்ய 
வல்லபர், சட்டென திரும்பி விநயாதித்தனை உற்றுப் பார்த்தார்.
இமைக்காமல் அவரது பார்வையை சாளுக்கிய இளவரசன் எதிர்கொண்டான்.

‘‘மதுரைக்கு நீ வந்து ஒரு திங்கள் இருக்குமா..?’’
‘‘வரும் பவுர்ணமியுடன் ஒரு திங்களாகிறது குருதேவா...’’
‘‘எத்தனை முறை பாண்டிய மன்னரைச் சந்தித்தாய்..?’’
‘‘ஆறேழு முறை அந்தரங்கமாக... பத்து முறை அமைச்சர் பெருமக்கள் சூழ...’’
‘‘அதாவது இருநாளைக்கு ஒருமுறை அரிகேசரி மாறவர்மரைச் சந்தித்து உரையாடி இருக்கிறாய்... அப்படித்தானே..?’’
‘‘ஆம் குருதேவா...’’

‘‘என்ன சொன்னார்..? நடக்கவிருக்கும் போரில் நம் பக்கம் இருப்பதாக உறுதி அளித்தாரா..?’’‘‘பட்டும் படாமலும்தான் பேசிக்கொண்டிருக்கிறார்...’’
‘‘நினைத்தேன்...’’ ராமபுண்ய வல்லபர் சாளரத்தின் அருகில் சென்று தன் கண்முன்னால் தெரிந்த அரண்மனையைப் பார்த்தார்: ‘‘பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரன் உன்னுடன் எப்படிப் பழகுகிறான்..?’’

‘‘தோழனாகத்தான் குருதேவா... ஒன்றாக வேட்டைக்குச் செல்கிறோம்... நாள்தோறும் மதியம் அல்லது இரவு சேர்ந்தே உணவருந்துகிறோம்... ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறோம்...’’
‘‘ஆனால், அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை... சரிதானா..?’’
‘‘...’’
‘‘என்ன பதிலைக் காணும்..?’’ கேட்டபடியே ஸ்ரீராமபுண்ய வல்லபர் திரும்பினார்.

விநயாதித்தன் தலைகுனிந்து நின்றான்.அந்தக் கோலத்தில் சாளுக்கிய இளவரசனைப் பார்க்க அவருக்கு என்னவோ போல் இருந்தது.அருகில் வந்து அவன் தோள்களைத் தொட்டார். தாடையைப் பிடித்து அவன் முகத்தை உயர்த்தினார்: 

 

‘‘அரசியல் என்றால் அப்படித்தான் விநயாதித்தா... போகப் போக நீயே புரிந்து கொள்வாய்... விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற தமிழர்கள் தங்களைத் தேடி எதிரியே வந்தாலும் வரவேற்று உபசரிப்பார்கள்... ஆனால், வாக்கு கொடுக்க மாட்டார்கள்... தேனாகப் பேசுவார்கள்... ஆனால், உறுதிமொழி வழங்கமாட்டார்கள்... பக்குவமாக அவர்களது கழுத்தை நெரித்தால்தான் நம் வழிக்கு வருவார்கள்...’’

‘‘பாண்டியர்களின் கழுத்தை ‘அன்பாக’ நான் நெரிக்க என்ன செய்ய வேண்டும் குருதேவா..?’’
‘‘இன்றிரவு பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரனை விருந்துக்குக் கூப்பிடு!’’
புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக சட்டென விநயாதித்தனின் விழிகள் அகன்றன: ‘‘உத்தரவு குருதேவா...’’ சில கணங்கள் அமைதியாக இருந்துவிட்டு மெல்லக் கேட்டான்: ‘‘வேறு யாராவது விருந்துக்கு வருகிறார்களா..?’’
‘‘ஆம்...’’

‘‘யாரென்று அடியேன் அறியலாமா..?’’
ராமபுண்ய வல்லபர் வாய்விட்டுச் சிரித்தார்: ‘‘உனக்குத் தெரிந்த
வர்தான். சிவகாமி!’’
நிலவறையின் பாதை ஓரிடத்தில் முடிந்தது. 
முன்னால் சென்ற பெண் திரும்பி தன் இடுப்பில் இருந்து 
கருமை நிற துணி ஒன்றை எடுத்தாள்.

சிவகாமி புரிந்து கொண்டாள். முன்னால் வந்து நின்றாள்.
கையில் இருந்த துணியால் சிவகாமியின் கண்களை இறுகக் கட்டினாள் அந்தப் பெண்.
அதன் பிறகு சிவகாமியின் கைகளைப் பிடித்தபடி அந்தப் பெண் 
நடந்தாள். வலது, இடது... என மாறி மாறித் திரும்பினார்கள்.

ஒரு நாழிகை பயணத்துக்குப் பின் தென்றல் தன்னை தழுவுவதை சிவகாமி உணர்ந்தாள். நிலவறையை விட்டு வெளியே வந்திருக்கிறோம்!
அவளது கண்களைக் கட்டியிருந்த கட்டை அப்பெண் அவிழ்த்தாள்.
நந்தவனம் ஒன்றில் தாங்கள் இருப்பதை அறிந்த சிவகாமி, தன்னை அழைத்து வந்த பெண்ணைப் பார்த்தாள்.
முன்னே செல்லும்படி அப்பெண் சைகை செய்தாள்.

அங்கு கரிகாலன் புன்னகையுடன் நின்றுகொண்டிருந்தான்!
‘‘வா இரணதீரா...’’ தன் மைந்தனை அன்போடு அழைத்தார் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மர்.
வந்த பாண்டிய இளவரசன், தன் தந்தையின் கால்களைத் தொட்டு வணங்கினான்: ‘‘சொல்லுங்கள் தந்தையே...’’
‘‘இன்று விநயாதித்தனுடன் வேட்டைக்குச் செல்லவில்லையா..?’’
‘‘நாளைதான் செல்கிறோம் தந்தையே...’’
‘‘இன்று என்ன திட்டம்..?’’
‘‘மாலை தன் மாளிகைக்கு சாளுக்கிய இளவரசர் அழைத்திருக்கிறார்...’’
‘‘எதற்கு..?’’

‘‘ஏதோ விருந்து என்றார்...’’
‘‘நல்லது... இந்தா...’’ என்றபடி முத்திரையிடப்பட்ட ஓலைக்குழல் 
ஒன்றை கோச்சடையன் இரணதீரனிடம் கொடுத்தார். 
‘‘விருந்துக்கு சிவகாமியும் வருவாள். அவளிடம் இதைக் கொடுத்துவிடு!’’

‘‘ஏன் கடிகை பாலகனை வெளியிலேயே நிறுத்தி விட்டாய்... அவனை உள்ளே அனுப்பு...’’ தன்னை வணங்கிய சாளுக்கிய வீரனிடம் விநயாதித்தன் சொன்னான்.வீரன் தயங்கினான்.‘‘என்ன..?’’
‘‘அவர் தன் இருப்பிடத்தில் இல்லை...’’

‘‘எங்கு சென்றானாம்..?’’

 

‘‘அங்கிருக்கும் நம் வீரர்களுக்கு எதுவும் தெரியவில்லை...’’‘‘எப்போது சென்றானாம்..?’’
‘‘நேற்றிரவு தங்களைப் பார்க்க வந்ததுதானாம்... அதன் பிறகு திரும்பவில்லை என்கிறார்கள்...’’

‘‘சரி... நீ செல்...’’ அதுவரை அமைதியாக இருந்த ஸ்ரீராமபுண்ய வல்லபர் கட்டளையிட்டார்.இருவரையும் மீண்டும் வணங்கிவிட்டு வீரன் அகன்றான்.‘‘குருதேவா... என்ன இது..?’’‘‘அரசியல் சதுரங்க விளையாட்டு விநயாதித்தா!’’ ஆழ்ந்த சிந்தனையுடன் பதிலளித்தார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்: ‘‘என் கணிப்பு சரியென்றால் ‘வேளிர்களின் தலைவன்’ இப்போது சிறையில் இருக்கிறான்...’’‘‘பாண்டியர்களின் சிறையிலா குருதேவா..?’’

‘‘இல்லை... கரிகாலனின் தனிப்பட்ட சிறையில்!’’
தன்னை நோக்கி வந்த சிவகாமியை இழுத்து அணைத்தான் கரிகாலன்.
‘‘ச்சூ... என்ன இது...’’ சிவகாமி திமிறினாள்: ‘‘அந்தப் பெண் அங்கு நிற்கிறாள்...’’
‘‘எந்தப் பெண்..?’’ கேட்டபடி அவள் கழுத்தில் தன் இதழ்களைப் பதித்தான்.
‘‘என்னை அழைத்து வந்தவள்...’’
 

‘‘அவள் அப்பொழுதே அகன்றுவிட்டாள்...’’‘‘உங்களுக்கு வசதியாக!’’‘‘ஆம்...’’ என்றபடி ஆலிலை போல் அகன்றிருந்த அவள் வயிற்றை இறுக்கி, நாபிக் கமலத்தில் தன் ஆள்காட்டி விரலை நுழைத்தான்.‘‘ம்...’’ முணுமுணுத்த சிவகாமி அவன் மார்பில் அப்படியே சாய்ந்தாள்.

 

‘‘சிவகாமி...’’‘‘என்ன...’’கரிகாலன் குனிந்தான். அவன் சுவாசம் அனலாக சிவகாமியின் செவிகளை வருடியது: ‘‘அதங்கோட்டாசான் உயிருடன் இருப்பதை சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரிடம் தெரிவித்து விட்டாயா..?’’

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்

 

 

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16542&id1=6&issue=20200207

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 171
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

பா. சதீஷ் குமார்

ரத்த மகுடம்-70 வனமே அதிர்வது போல் இடி இடி என நகைத்தான் அந்த கஜ சாஸ்திரி!ஓலையின் இறுதியில் இருந்த ‘சிவகாமி’ என்ற பெயரைத் தன் விரல்களால் தடவியவன், ‘ஒற்றர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்...

கிருபன்

ரத்த மகுடம்   பிரமாண்டமான சரித்திரத் தொடர்- 27 எழுந்த திகைப்பை அடக்கியபடி அந்தப் பாலகனை உற்றுப் பார்த்தான் கரிகாலன்.‘‘எதற்காக அப்படிப் பார்க்கிறீர்கள் வணிகரே..?’’ பதிலேதும் சொல்லாமல்

கிருபன்

ரத்த மகுடம் : பிரமாண்டமான சரித்திரத் தொடர் கே.என்.சிவராமன் - 34 ஓவியம்: ஸ்யாம் எதிர்பாராத தாக்குதலால் ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருந்த சிவகாமி, எப்போது கரிகாலன் தன் கழுத்தில் முகத்தைப் பதித்தான

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி எடுத்தீர்கள். நான் தேடிக் களைத்துப்போனன். நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எப்படி எடுத்தீர்கள். நான் தேடிக் களைத்துப்போனன். நன்றி

நம்ம தோஸ்த்து சுந்தர் பிச்சைக்கு நேரடி ஹொட்லைன் இருக்கே!😎 ஆன்ரி அழுவுறா.. உடனே கண்டுபிடின்னேன். ஒரு செக்கனுக்குள்ளார தூக்கிப்போட்டானே! சுந்தரா கொக்கா!!😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

நம்ம தோஸ்த்து சுந்தர் பிச்சைக்கு நேரடி ஹொட்லைன் இருக்கே!😎 ஆன்ரி அழுவுறா.. உடனே கண்டுபிடின்னேன். ஒரு செக்கனுக்குள்ளார தூக்கிப்போட்டானே! சுந்தரா கொக்கா!!😂🤣

பிச்சைக்கும் நன்றி. என்னைத் தெரிந்து வைத்துள்ளமைக்கு 😃

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ரத்த மகுடம்-93

பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘சிவகாமி...’’ அவளை லேசாக இடித்து நடப்புக்குக் கொண்டு வந்தார் ராமபுண்ய வல்லபர். ‘‘இவர்தான் பாண்டிய மண்டலத்தின் சக்கரவர்த்தியான அரிகேசரி மாறவர்மரின் அருந்தவப்புதல்வர் கோச்சடையன் இரணதீரன். தந்தையைப் போலவே மிகப்பெரிய வீரர். தீரர். சூரர். தன் காலத்தில் தமிழக வரலாற்றை இவர் திருத்தி எழுதுவார் என ஜோதிடர்கள் ஆருடம் கூறுகிறார்கள்...’’‘‘பெற்ற பொற்காசுகளுக்குத் தகுந்தபடி அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
27.jpg
பெரிதுபடுத்த வேண்டாம் அம்மணி...’’ சிவகாமியைப் பார்த்து நிதானமாகச் சொன்ன கோச்சடையன் இரணதீரன், சாளுக்கிய போர் அமைச்சர் பக்கம் திரும்பினான்: ‘‘இவர் யாரென்று அறிமுகப்படுத்தவில்லையே..?’’ ‘‘இவர்... இவள்... சிவகாமி...’’ என ராமபுண்ய வல்லபர் சொல்லும்போதே வெளியில் அரவம் கேட்டது.

திரும்பி வாசலைப் பார்த்தவருக்கு எதுவும் புரியவில்லை: ‘‘இளவரசே...’’‘‘சொல்லுங்கள்...’’ சாளுக்கிய இளவரசன் விநயாதித்தனும் பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரனும் ஒருசேர குரல் கொடுத்தார்கள்.பாண்டிய இளவரசன் அருகில் நின்றிருந்த கரிகாலன் வாய்விட்டுச் சிரித்தான்: ‘‘நியாயமாகப் பார்த்தால் நானும் உங்கள் இருவருடனும் சேர்ந்து ‘சொல்லுங்கள்’ என்று கேட்டிருக்க வேண்டும்! ஏனெனில் அடியேனும் சோழ மண்டலத்தின் இளவரசன்தான்!’’

அவனை எரித்து விடுவதுபோல் பார்த்தார் ராமபுண்ய வல்லபர்: ‘‘இரண்டு தெரு... மிஞ்சிப்போனால் ஒரு சிற்றூர்... அது மண்டலமாகுமா..?’’
‘‘ஜீவநதிகளின் பிறப்பிடங்கள் அனைத்தும் சிறிய ஊற்றுதானே..?’’ கேட்ட கரிகாலனின் புருவங்கள் உயர்ந்தன.‘‘உன்னிடம் பேசுவதற்காக நான் இங்கு வரவில்லை...’’‘‘உங்களிடம் பதில் சொல்வதற்காக நானும் இங்கு வரவில்லை...’’‘‘கரிகாலா... என்ன இது..? வயதில் பெரியவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும் என நீதானே என்னிடம் சொன்னாய்... அப்படியிருக்க நீயே அதிலிருந்து பிறழலாமா... அமைதியாக இரு...’’ நண்பனை சாந்தப்படுத்திவிட்டு ராமபுண்ய வல்லபரை ஏறிட்டான் கோச்சடையன் இரணதீரன்: ‘‘என் நண்பன் பேசியதற்கு தங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்...’’

‘‘என்ன இது... பெரிய பெரிய வார்த்தைகளைச் சொல்கிறீர்கள்...’’ என்றபடி பாண்டிய இளவரசனின் கரங்களைப் பற்றினார் சாளுக்கிய போர் அமைச்சர்: ‘‘தவறு என்னுடையதுதான்... சாளுக்கிய இளவரசரை அழைத்தேன்...’’‘‘பெயர் சொல்லியே அழைத்திருக்கலாமே? உங்கள் சீடன்தானே விநயாதித்தன்..?’’ கரிகாலன் இடைமறித்தான்: ‘‘என்ன விநயாதித்தா... உன்னைப் பெயர் சொல்லி அழைக்கக் கூடாது என இந்த முதியவருக்கு ஏதேனும் கட்டளையிட்டிருக்கிறாயா..?’’

‘‘அவர் என் குரு... நான் எப்படி அவருக்கு கட்டளை பிறப்பிப்பேன்...’’ பதறிய விநயாதித்தன், ‘‘நீங்கள் பேசிக் கொண்டிருங்கள்...’’ என பொதுவாகச் சொல்லிவிட்டு, ராமபுண்ய வல்லபரின் கரங்களைப் பற்றினான்: ‘‘என்ன விஷயம் குருதேவா... வாருங்கள்... அங்கு என்ன அரவம் என்று பார்ப்போம்...’’

இருவரும் நடந்தார்கள். சாளுக்கிய போர் அமைச்சர் தன் பற்களைக் கடித்தார்: ‘‘சின்னப் பயல்... என்ன பேச்சு பேசுகிறான்... அவனை...’’
‘‘ஷ்... குருதேவா... அமைதி... கரிகாலன் இப்போது பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு... உடன் பாண்டிய இளவரசன் இருப்பதை மறந்துவிட்டீர்களா..? அவனை அழைத்து வந்ததும் கோச்சடையன் இரணதீரன்தான்... இப்போது... இந்த இடத்தில்... நாம் அமைதி காப்பதே புத்திசாலித்தனம்... இது தங்களுக்கே தெரியும்...’’

‘‘ம்... தெரியும்...’’ சீறினார் ராமபுண்ய வல்லபர். ‘‘ஆடட்டும்... கரிகாலனால் எந்த அளவுக்குச் செல்ல முடியும்..? பாண்டிய இளவரசன் அருகில் இருக்கும்வரைதானே..? அதன் பிறகு அவனைக் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்கிறேன்... சரி... விநயாதித்தா... நீ செல்...’’
‘‘சற்று நேரம் கழித்து செல்கிறேன் குருதேவா... இப்பொழுதே சென்றால் கேள்விகள் எழும்...’’‘‘எழட்டுமே..? சிவகாமி அங்கு தனியாக இருக்கிறாள் விநயாதித்தா...’’‘‘அதனால்தான் நிம்மதியாக தங்களுடன் வருகிறேன் குருதேவா... எல்லா சூழல்களையும் சந்திக்கும் திடம் சிவகாமிக்கு உண்டு என்பதுதான் தங்களுக்கே தெரியுமே...’’

‘‘தெரியும்தான்... ஆனால், கரிகாலன் அங்கிருக்கிறானே... அவளால் அவனை சமாளிக்க முடியுமா..?’’ முணுமுணுத்தார் ராமபுண்ய வல்லபர்.
சாளுக்கிய போர் அமைச்சர் சந்தேகப்பட்டதுபோலவேதான் அங்கு சூழல் நிலவியது. தன்னை தற்காத்துக்கொள்ள சிவகாமி போராடிக் கொண்டிருந்தாள். அவள் எந்தப் பக்கம் சென்றாலும் அந்தப் பக்கத்தில் அம்பு எய்ய கரிகாலன் தயாராக இருந்தான்.
அதன் ஒரு பகுதியாகவே முதல் அம்பை எய்தான்.

‘‘பாண்டிய இளவரசே... அம்மணி யாரென்று கேட்டீர்கள் அல்லவா..?’’
‘‘ஆமாம்... சிவகாமி என சாளுக்கிய போர் அமைச்சர் கூறினாரே..!’’ இரணதீரன் புன்னகைத்தான்.
‘‘பெயரைத்தானே அவர் சொன்னார்...’’‘‘அதைத்தாண்டியும் இருக்கிறதா..?’’‘‘விந்திய மலை உயரத்துக்கு இருக்கிறது பாண்டிய இளவரசே!’’ சிவகாமியைப் பார்த்தபடி கரிகாலன் சொன்னான்.

‘‘அதில் ஒரு பகுதியைச் சொல் கரிகாலா...’’ சுவாரஸ்யத்துக்குத் தயாரானான் கோச்சடையன் இரணதீரன்.
‘‘ஒரு பகுதியை விட உச்சி முனையை சொல்கிறேன் பாண்டிய இளவரசே... இந்த அம்மணி சிவகாமிதான் சாளுக்கியர்களின் ஒற்றர் படைத் தலைவி!’’
‘‘அப்பாடா... எங்கே உண்மையைச் சொல்லி, பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கோமகனான உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்வீர்களோ என்று நினைத்தேன்...’’ சிவகாமி நகைத்தாள்.

‘‘அப்படியானால் கரிகாலன் பொய் சொல்கிறானா அம்மணி..?’’
‘‘பெயர் சொல்லியே என்னை தாங்கள் அழைக்கலாம் பாண்டிய
இளவரசே... வயதில் என்னை விட தாங்கள் பெரியவர்...’’

‘‘அதாவது நீங்கள் கிழவராம்... இந்த அம்மணி குமரியாம்!’’ கரிகாலன் உதட்டைப் பிதுக்கினான்.
‘‘பேசாமல் இரு கரிகாலா... அம்மணி... சரி... சிவகாமி... நீ சாளுக்கியர்
களின் ஒற்றர் படைத் தலைவி இல்லையென்றால்... யார் நீ..?’’ இரணதீரன் புருவத்தை உயர்த்தினான்.
‘‘பல்லவ இளவரசி!’’‘‘என்ன..?’’ பாண்டிய இளவரசன் அதிர்ந்தான்.

‘‘ஆமாம்... இரணதீரா...’’ நட்பின் அடிப்படையில் ஒருமையில் விளித்தான் கரிகாலன்: ‘‘இன்னும் சற்று நேரம் இவளிடம் சிரித்துப் பேசிவிட்டு நீ நகர்ந்ததும் ‘நான் பாண்டிய இளவரசி’ என யாரிடமாவது தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வாள். காரியத்தைச் சாதித்துக் கொள்வாள்.

அதற்காகத்தான் ‘வயதில் நான் இளையவள்... தங்கள் சகோதரி போன்றவள்...’ என்றெல்லாம் இவள் தூண்டிலை வீசுகிறாள்...’’
‘‘தங்கள் நண்பர் வழக்கம்போல் பொய் சொல்லி விளையாடுகிறார்...’’ கரிகாலன் பக்கம் திரும்பாமல் இரணதீரனைப் பார்த்தபடி சொன்னாள்.
‘‘விளையாடுவது நானா..? நல்லது... இரணதீரா... இந்த அம்மணிதான் பல்லவ இளவரசி என்றால் எதற்காக மாறுவேடத்தில் மதுரை மாநகருக்குள் நுழைய வேண்டும்..?’’ கண்களால் சிரித்தபடி கரிகாலன் கேட்டான்.

‘‘என்ன செய்ய... உடன் வந்தவர் மாறுவேடத்தில் நுழையும்படிதானே நிர்ப்பந்தப்படுத்தினார்...’’ சிவகாமி பளிச்சென்று பதில் அளித்தாள்.
‘‘அட... பரவாயில்லையே... நிர்ப்பந்தம் செய்தால் அடிபணிவாயா..?’’
‘‘அது நிர்ப்பந்தம் செய்பவரைப் பொறுத்தது! உதாரணமாக...’’
‘‘உதாரணமாக..?’’

‘‘நிர்ப்பந்தம் செய்யாமல் நீங்கள் சாதாரணமாக எது சொன்னாலும் அதை தலையால் நிறைவேற்றுவேன்! அந்த உரிமையை தங்களுக்கு மட்டுமே வழங்கியிருக்கிறேன்!’’‘‘பலே... இது அடுத்த கட்ட பொய்யா..?’’
‘‘இறுதிக்கட்ட உண்மை... அதற்கு இரண்டு அத்தாட்சிகள் இருக்கின்றன...’’
‘‘என்னவோ..?’’

‘‘முதலாவது, நீங்களும் நானும் இணைந்துதான் மதுரைக்கு வந்தோம். அதுவும் மாறுவேடத்தில்... நீங்கள் கேட்டுக் கொண்டதால் என் தோற்றத்தை நானும் மாற்றிக்கொண்டேன்...’’‘‘வேறு யாரிடமும் இப்படிச் சொல்ல வேண்டாம் அம்மணி... நவ துவாரங்களாலும் சிரிப்பார்கள்...’’ தன் குழலை ஒதுக்கியபடி சொன்னான் கரிகாலன்: ‘‘ஏனெனில் இரணதீரன் என் அத்தை மகன்..! அத்தை வீட்டுக்குள் எந்த தோற்றத்திலும் நான் நுழைவேன்... ஆனால், நீ...’’

‘‘உங்களை மணக்கவிருப்பவள்! தலைவன் எவ்வழியோ அவ்வழியே தலைவி!’’
மார்புக்கு நேராக தன் கைகளைக் கட்டியபடி கரிகாலனும் சிவகாமியும் உரையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த கோச்சடையன் இரணதீரன் மெல்ல புன்னகைத்தான்: ‘‘மணம் வரை சென்றுவிட்டாயா கரிகாலா... என்னிடம் கூட மறைத்துவிட்டாயே...’’

‘‘எல்லோரிடமும் எல்லாவற்றையும் மறைப்பதுதானே உங்கள் மாமன் மகனின் இயல்பு..? அதனால்தான் அண்ணா இவரை பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கோமகன் என்கிறேன்!’’ தன் பங்குக்கு சிவகாமியும் நகைத்தாள்.‘‘சரி சிவகாமி... இரண்டாவது: அத்தாட்சி என எதனைக் குறிப்பிடுகிறாய்..?’’ இரணதீரன் கேட்டான்.

கரிகாலன் இடைமறித்தான். ‘‘தங்கள் தந்தையார் இவளிடம் கொடுக்கச் சொல்லி ஓர் ஓலையை உங்களிடம் கொடுத்திருக்கிறார் அல்லவா..?’’
‘‘...’’‘‘அதை அப்படியே வாங்கி என்னிடம் தந்துவிடும்படி சில நாழிகைகளுக்கு முன் இவளிடம் சொன்னேன். அதைக் குறிப்பிடுகிறாளோ என்னவோ..! ’’
இரணதீரனும் சிவகாமியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அப்போது எங்கிருந்தோ ஐந்து புறாக்கள் பறந்து வந்து இவர்கள் மூவருக்கும் மேல் வட்டமிட்டன!
 

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்

 

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16603&id1=6&issue=20200221

ரத்த மகுடம்-94

பிரமாண்டமான சரித்திரத் தொடர்

பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரனின் முகம் மாறியது. சலனமற்று தன் பார்வையை மேலே உயர்த்தி, பறந்த ஐந்து புறாக்களையும் பார்த்தான்.‘‘பாண்டிய இளவரசே...’’ அழைத்த கரிகாலனின் குரலில் இப்போது மரியாதை வெளிப்பட்டது. நண்பன் என்ற நெருக்கத்தையும், அத்தை மகன் என்ற உரிமையையும் விட்டுவிட்டு இரணதீரனின் அந்தஸ்துக்குரிய சொல்லை உதிர்த்தான்.
29.jpg

இதைக் கவனித்த சிவகாமியின் நயனங்கள் விரிந்தன. எந்தத் திசையை நோக்கி கரிகாலன் நகர்கிறான் என்பதை உணர்ந்துகொண்டதுபோல் அவள் அதரங்கள் துடித்தன. எதையோ சொல்ல முற்பட்டவள் தொடர்ந்து கரிகாலன் பேசத் தொடங்கியதை அடுத்து மவுனமானாள்.
 
‘‘பார்த்தீர்களா பாண்டிய இளவரசே...’’ வானில் பறந்த ஐந்து புறாக்களையும் கரிகாலன் சுட்டிக் காட்டினான். ‘‘இது பாண்டிய தேசத்தின் தலைநகரமான மதுரை. அதுவும் தமிழ் வளர்த்த மாநகரின் விருந்தினர் வீதியில் அமைந்திருக்கும் மாளிகை ஒன்றின் நந்த வனத்தில் போடப்பட்ட பந்தலுக்குள் நாம் நிற்கிறோம்...’’
 

திரும்பி கரிகாலனைப் பார்த்தான் இரணதீரன்: ‘‘இதை ஏன் என்னிடம் இப்போது குறிப்பிடுகிறாய் கரிகாலா..? இவை எதுவும் எனக்குத் தெரியாது என்று நினைத்து விட்டாயா..? இந்த மண்ணின் இளவரசன் நான்...’’

‘‘அதனால்தான் தங்களுக்கு நினைவுபடுத்துகிறேன் இளவரசே...’’ ‘தங்களுக்கு’ என்ற சொல்லுக்கு கரிகாலன் அழுத்தம் கொடுத்தான்.
‘‘புரியவில்லை... நேரடியாகவே சொல்... என்ன விஷயம்..?’’‘‘இளவரசே... பல தேசத்தில் இருந்தும் முக்கியப் பிரமுகர்கள் மதுரைக்கு வருகை தருகிறார்கள். பாண்டிய மாமன்னரையும் இளவரசரான தங்களையும் காண பல காத தொலைவில் இருந்து வருகிறார்கள்... அப்படி வருபவர்கள் தங்கி இளைப்பாறுவதற்காக அமைக்கப்பட்ட வீதி அல்லவா இது..?’’  ‘‘ஆமாம்...’’

‘‘மன்னரும் நீங்களும் அமைச்சர் பிரதானிகளும் குடியிருக்கும் முக்கிய வீதியை ஒட்டி இந்த விருந்தினர் வீதி அமைக்கப்பட்டிருக்கிறதல்லவா..?’’
‘‘ம்...’’‘‘இங்கிருந்து வணிகர் வீதிக்குச் செல்ல வேண்டுமென்றால் நான்கு வீதிகளைக் கடக்க வேண்டும் அல்லவா..?’’
‘‘ம்...’’‘‘அப்படியிருக்க இந்த விருந்தினர் வீதிக்கு... குறிப்பாக சாளுக்கிய இளவரசர் விநயாதித்தரை நீங்கள் தங்க வைத்திருக்கும் மாளிகைக்கு... அதுவும் இந்த அந்தி சாயும் நேரத்தில் புறாக்கள் எங்கிருந்து வந்தன..? எதற்காக வந்திருக்கின்றன..? யார் அனுப்பியிருக்கிறார்கள்..?’’

கரிகாலன் சொல்லி முடித்ததும் சிவகாமியின் வதனத்தில் அச்சத்தின் சாயைகள் படர ஆரம்பித்தன.பாண்டிய இளவரசனின் கண்களில் அனல் தெறித்தது: ‘‘என்ன சொல்ல வருகிறாய் கரிகாலா..?’’‘‘எதையும் சொல்ல வரவில்லை இளவரசே... எனது ஐயங்களை எழுப்புகிறேன்... பொதுவாக தூது செல்வதற்காக அரசாங்கப் பணியில் இருப்பவர்கள் புறாக்களைப் பயன்படுத்துவார்கள் அல்லது தங்கள் வியாபார விஷயங்களுக்காக வணிகர்கள் புறாக்களை உபயோகப்படுத்துவார்கள்... இது தவிர வேறு எந்த தேசமும் செய்யாத ஒரு காரியத்தை இந்த பாரத தேசத்திலேயே ஒரேயொரு அரசு மட்டும் செய்கிறது... அதற்காக புறாக்களைப் பயன்படுத்துகிறது...’’ கரிகாலன் நிறுத்தினான்.

‘‘சாளுக்கிய தேசத்தைக் குறிப்பிடுகிறாயா..?’’
‘‘தாங்கள் அப்படிக் கருதினால் அது தவறு என்று நான் சொல்ல மாட்டேன் இளவரசே...’’ கோச்சடையனை நோக்கிச் சொன்ன கரிகாலன், ஓரப் பார்வையால் சிவகாமியைப் பார்த்து நகைத்தான்: ‘‘மாமன்னர் இரண்டாம் புலிகேசியின் போர்த் தந்திரங்களில் ‘ஐந்து புறாக்கள்’ என்பது பிரபலமானது என்பதை தாங்கள் அறிவீர்கள்...’’
‘‘...’’

‘‘இந்த மாளிகையில் நீங்கள் தங்க வைத்திருப்பவர் சாளுக்கிய தேசத்தின் இளவரசர்... அவர் இந்த தேசத்தின் இளவரசரான உங்களுக்கு இரவு விருந்து அளிக்கிறார்... நீங்களும் அதற்கு இசைந்து வருகை புரிந்திருக்கிறீர்கள்...’’
‘‘...’’‘‘இந்தச் சூழலில்... அதுவும் புறாக்கள் வருவதற்கு அவசியமே இல்லாத இந்த இடத்துக்கு... அதுவும் இந்த நேரத்தில்... அதுவும் சரியாக ஐந்து புறாக்கள் மட்டும் ஏன் பறக்க வேண்டும்..?’’

அதுவும்... அதுவும்... என கரிகாலன் தொடர்ந்து வினாக்களை எழுப்பிக் கொண்டே வந்தபோது -
மேலே பறந்த ஐந்து புறாக்களில் ஒன்று சரியாக இறங்கி சிவகாமியின் தோளில் அமர்ந்தது! அவளது கேசத்தைக் கொத்தியது!
‘பார்த்தீர்களா..?’ என இரணதீரனுக்கு ஜாடை காட்டிவிட்டு சிவகாமியை நெருங்கிய கரிகாலன், அவள் தோளில் அமர்ந்த புறாவை
லாவகமாகப் பிடித்தான்.

யாரையும் பார்க்காமல் கருமமே கண்ணாக அதன் இறக்கைகளை விரித்து ஆராய்ந்தான்.ஓரிடத்தில் விரல் இடறியது.புறாவைத் தூக்கிப் பிடித்து இடறிய இடத்தைப் பார்த்தான். அவன் உதடுகளில் புன்னகை பூத்தது. ஆள்காட்டி விரல் நகத்தால் மெல்ல மெல்ல பட்டுச் சுருள் ஒன்றை எடுத்தான்.
அடுத்த கணம் புறா பறந்து சென்றது. வட்டமிட்டுக் கொண்டிருந்த மற்ற நான்கு புறாக்களும் அதைப் பின்பற்றி வானில் சென்றன.
வளர்ந்த நகத்தின் அளவிருந்த அந்தப் பட்டுச் சுருளை கரிகாலன் விரித்தான்.

‘எல்லாம் தயார்... வலையை விரித்து மீனைப் பிடிக்கவும்...’அரக்கினால் எழுதப்பட்ட அந்த வாசகங்களை கோச்சடையன் இரணதீரனிடம் காட்டினான் கரிகாலன்: ‘‘இதில் மீன் எனக் குறிப்பிடப்பட்டிருப்பது பாண்டிய இளவரசரான தங்களை என நினைக்கிறேன்... ஒருவேளை நான் எண்ணுவது பிழை என்றால் மன்னிக்கவும்...’’எதுவும் பேசாமல் தன் முன் நீட்டப்பட்ட வெண் பட்டுத் துணியைப் பார்த்துவிட்டு நிமிர்ந்தான் இரணதீரன்.
பாண்டிய இளவரசனின் கண்கள் சிவகாமியை ஊடுருவின: ‘‘இதற்கு என்ன அர்த்தம்..?’’

சிவகாமி பதில் சொல்வதற்குள் சாளுக்கிய இளவரசன் விநயாதித்தனும் சாளுக்கிய போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபரும் அங்கு வந்து சேர்ந்தார்கள். ‘‘சித்திரான்னம் சமைத்துக் கொண்டிருந்த வீரன் மேல் தவறுதலாக வெந்நீர் கொட்டிவிட்டது... அதுதான் அந்த அலறல்... மன்னிக்கவும்...’’ இரணதீரனைப் பார்த்துச் சொன்னார் ராமபுண்ய வல்லபர்.‘‘அதற்கு மன்னிப்பு கேட்டீர்கள். சரி... இதற்கு எப்போது மன்னிப்பு கேட்கப் போகிறீர்கள்..?’’ என்றபடி அந்த பட்டுத் துணியை சாளுக்கிய போர் அமைச்சர் முன்பு காண்பித்தான் கரிகாலன்.

‘‘எ...ன்...ன... இ...து...’’ வாக்கியத்தை வாசித்தபடியே அதிர்ச்சியுடன் கேட்டார் ராமபுண்ய வல்லபர்.‘‘அதைத்தான் பாண்டிய இளவரசர் கேட்கிறார்... என்ன இது..?’’ இம்முறை கரிகாலன் அழுத்திக் கேட்டான்.நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த விநயாதித்தனுக்கு எங்கோ தவறு நடந்திருப்பது புரிந்தது.சாளுக்கிய போர் அமைச்சரை உற்றுப் பார்த்தான் இரணதீரன்: ‘‘இவள் பெயர் சிவகாமி என்றீர்கள்... ஆனால், உங்களுக்கு இவர் யார் என்று சொல்லவில்லையே..?’’

‘‘நிச்சயம் சாளுக்கியர்களுக்கு மிக மிக வேண்டப்பட்டவராக இருக்கவேண்டும்! இல்லையென்றால் சாளுக்கிய இளவரசர் தங்களுக்கு அளிக்கும் விருந்துக்கு இந்த அம்மணியையும் அழைத்திருப்பார்களா..?’’ நகைக்காமல் நகைத்தான் கரிகாலன்.பட்டுத் துணியில் இருந்த வாக்கியத்தையும், தலைகுனிந்தபடி நின்றிருந்த சிவகாமியையும், திருதிருவென விழித்துக் கொண்டிருந்த ராமபுண்ய வல்லபரையும், இறுகிய முகத்துடன் காணப்பட்ட பாண்டிய இளவரசனையும், விஷமத்துடன் பேசிக்கொண்டிருந்த கரிகாலனையும் மாறி மாறிப் பார்த்த விநயாதித்தன் சட்டென முன்னே வந்தான்:

‘‘பாண்டிய இளவரசே... இந்த பட்டுத் துணியில் எதற்காக இப்படி எழுதப்பட்டிருக்கிறது... இந்தப் பெண்ணுக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு... இதையெல்லாம் நீங்கள் அறியவும் விசாரிக்கவும் முற்படுகிறீர்கள்... அனைத்துக்கும் நாங்கள் ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம்... சாளுக்கியர்கள் மீது எந்தக் களங்கமும் இல்லை என்பதை நிரூபித்துவிட்டே இந்த மண்ணை விட்டு அகலுவோம்...’’

‘‘அப்படியானால் அதுவரை சந்தேகத்துக்கு இடமான இந்த அம்மணி மதுரை சிறையில் அடைக்கப்படுவதுதான் சரி என்கிறீர்கள்... நல்லது... இரணதீரா...’’ இம்முறை நண்பன் என்ற உரிமையில் ஒருமையில் அழைத்தான் கரிகாலன்: ‘‘சாளுக்கிய இளவரசரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதில் உனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லையே..?’’

பதிலை எதிர்பார்க்காமல் பாண்டிய வீரர்களை அழைத்த கரிகாலன், சிவகாமியை மதுரையின் பாதாளச் சிறையில் அடைக்கும்படி கட்டளையிட்டான்.
முக அசைவில் அதை ஆமோதித்தான் கோச்சடையன் இரணதீரன்.அடுத்த கால் நாழிகைக்குப் பின் மதுரை பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டாள் சிவகாமி.

சிறையின் தரையில் கம்பீரமாக அமர்ந்தவள் சோம்பல் முறித்தாள். வாய்விட்டுச் சிரித்தாள். தன் தலைக்கேசத்தைக் கலைத்தாள். அதனுள்ளிருந்து ஒரு பட்டுச் சுருளை எடுத்தாள்.அவள் தோளில் புறா அமர்ந்தபோது தன் அலகுக்குள் மறைத்து வைத்திருந்த நக அளவு பட்டுச் சுருளை அவளது கேசத்தில் சாதுர்யமாக பதுக்கியிருந்தது!
 

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்

 

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16634&id1=6&issue=20200228

  • Like 1
Link to comment
Share on other sites

ரத்த மகுடம்-95

‘‘இதற்குத்தான் குருநாதரின் பேச்சை தட்டக் கூடாது என்பது... இப்போது பார்... என்னவெல்லாம் நடந்திருக்கிறது...’’
சொன்ன ஸ்ரீராமபுண்ய வல்லபர் சாளரத்துக்கு வெளியே தன் பார்வையைச் செலுத்தினார். சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தான். இந்த உதயம் சாளுக்கியர்களுக்கு இல்லை என்பது மட்டும் அவருக்குத் தெளிவாகவே புரிந்தது.
19.jpg
மவுனமாக நின்றான் சாளுக்கிய இளவரசனான விநயாதித்தன். நேற்று இரவு நடைபெற்ற சம்பவங்களுக்குப் பிறகு இதே வாசகங்களைத்தான் ஸ்ரீராமபுண்ய வல்லபர் சொல்லிக் கொண்டிருக்கிறார். கோபமாக, ஆற்றாமையாக, சலிப்பாக, கையறு நிலையாக... என உணர்ச்சிகள்தான் மாறியதே தவிர சொற்களும் வாக்கியங்களும் மாறவே இல்லை.

விநயாதித்தனுக்கும் இதற்கு என்ன பதில் சொல்வதென்று கடந்த மூன்று நாழிகைகளாகவே தெரியவில்லை. பாண்டிய இளவரசனான கோச்சடையன் இரணதீரனுக்கு, தான் அளித்த இரவு விருந்து இப்படியொரு இக்கட்டில் தங்களைச் சிக்கவைக்கும் என்று அவன் துளியும் எதிர்பார்க்கவில்லை.
‘‘நீ மட்டும் என்னைப் பின்தொடர்ந்து வராமல் சிவகாமியின் அருகிலேயே நின்றிருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது...’’ மெல்ல உச்சரித்த ராமபுண்ய வல்லபரின் குரலில் இம்முறை ஆழ்ந்த சிந்தனை வழிந்தது.

‘‘அவள் சமாளித்துக் கொள்வாள் என்று நினைத்தேன்...’’ விநயாதித்தன் மவுனத்தைக் கலைத்தான்.
‘‘நினைப்புதான் பிழைப்பைக் கெடுக்கும் என்கிறார்கள் தமிழர்கள்...’’‘‘சாளுக்கியர்கள் அப்படிச் சொல்வதில்லையே!’’
‘‘ஆனால், வாதாபியில் இப்பொழுது நாம் இல்லையே!’’ வாள் வீச்சைப் போல் தன் சொற்களை வீசிய சாளுக்கிய போர் அமைச்சர் திரும்பி விநயாதித்தனைப் பார்த்தார்.அவர் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலைகுனிந்தான் சாளுக்கிய இளவரசன்.

மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை ஆளப் போகிறவன் இப்படி தன் முன்னால் தலைகுனிந்து நிற்பதைப் பார்க்க ராமபுண்ய வல்லபருக்கு சங்கடமாக இருந்தது. என்னதான் இருந்தாலும் இவன் சாளுக்கிய இளவரசன்... இந்த எண்ணம் தோன்றியதுமே தன் கோபத்தைக் கைவிட்டார்: ‘‘நானும் ஒருவகையில் குற்றவாளிதான் விநயாதித்தா... ‘திரும்பிச் சென்று சிவகாமியுடன் நில்...’ என உன்னிடம் அழுத்தமாகச்
சொல்லியிருக்க வேண்டும்...’’

தன்னை ஆற்றுப்படுத்த தன் குருநாதர் முற்படுகிறார் என்பதை உணர்ந்து கொண்டதுமே விநயாதித்தன் தன் தலையை உயர்த்தினான். மனதுள் தத்தளித்துக் கொண்டிருந்த வினாவைக் கேட்க இதுதான் சரியான சந்தர்ப்பம்: ‘‘குருநாதா...’’
‘‘என்ன விநயாதித்தா..?’’‘‘நாம் இருவருமே தவறு செய்யவில்லை...’’
‘‘அப்படியா..?’’‘‘ஆம்... இதில் சிவகாமியின் பங்கும் எதுவுமில்லை...’’
‘‘அப்படியானால் எங்கு பிழை நிகழ்ந்தது விநயாதித்தா..?’’

‘‘ஐந்து புறாக்களில்!’’ அழுத்தமாகச் சொன்னான் விநயாதித்தன்: ‘‘அந்த நள்ளிரவில், அதுவும் விருந்து நடந்த மாளிகையில் அதைப் பறக்க விட்டது யார்..? அல்லது அந்த நேரத்தில் அந்த ஐந்து புறாக்களும் அங்கு வரும்படி அவற்றின் செவியில் ஓதி அனுப்பியது யார்..?’’
‘‘அதில் ஒரு புறாவின் இறக்கைக்குள் செய்தியைத் திணித்து அனுப்பியது யார் என்றும் கேட்டுவிடு விநயாதித்தா...’’
‘‘குருநாதா...’’ மேற்கொண்டு எதுவும் பேசாமல் விநயாதித்தன் மவுனம் காத்தான்.

‘‘கேட்டு விடு விநயாதித்தா... இந்த நேரத்தில் எதையும் கேட்காமல் அமைதியாக நிற்பது சாளுக்கியர்களுக்குத்தான் ஆபத்தாக முடியும்... என் மீது எந்தளவுக்கு நீ மரியாதை வைத்திருக்கிறாய் என்று எனக்குத் தெரியும்... அதை இப்பொழுது நிரூபிக்க வேண்டும் என்ற அவசியமில்லை... நாட்டின் நலன்தான் நமக்கு முக்கியம்... என்னவெல்லாம் கேட்க நினைக்கிறாயோ அதையெல்லாம் கேட்டுவிடு...’’
‘‘கேட்டுவிட்டேன் குருநாதா... தாங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்...’’

‘‘எது..? அந்த ஐந்து புறாக்களா..?’’ ராமபுண்ய வல்லபர் தன் புருவத்தை உயர்த்தினார்: ‘‘அதில் மர்மம் இருப்பதாக நினைக்கிறாயா..?’’
‘‘இல்லையா..?’’‘‘இல்லவே இல்லை! சாளுக்கிய தேசத்தைக் கைப்பற்ற உன் பெரிய தந்தை அனந்தவர்மர் துடித்துக் கொண்டிருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்... இதற்காக உன் தந்தையும் நம் சாளுக்கிய தேசத்தின் முடிசூடா மன்னராக இப்போது திகழ்பவருமான விக்கிரமாதித்த மாமன்னரை எதிர்த்து அவர் போர் தொடுத்ததையும் நாம் எல்லோரும் அறிவோம். இதற்காக நமது பரம எதிரிகளான பல்லவர்களின் உதவியை அவர் நாடினார்...’’
‘‘...’’
‘‘நடைபெற்ற சகோதர யுத்தத்தில் நம் மாமன்னர் விக்கிரமாதித்தர் வெற்றி பெற்று சாளுக்கிய தேசத்தின் அரியணையில் அமர்ந்தார்... போனால் போகட்டும் என தன் சகோதரரையும் மன்னித்தார்... ‘வேண்டாம்... இப்படிச் செய்யாதீர்கள்...’ என்று தடுத்தேன்... மன்னர் கேட்கவில்லை. தண்டிக்கப்படாத அனந்தவர்மர் சுதந்திரமாக நடமாடினார்... என்றாலும் மன்னராக வேண்டுமென்று அவர் மனதுக்குள் இருந்த பேராசை மறையவில்லை... இப்போது சமயம் பார்த்து பல்லவர்களுக்கு தன் விசுவாசத்தைக் காண்பித்து நம் இருவரையும் சிக்கலில் சிக்க வைத்திருக்கிறார்...’’
‘‘நான் அப்படி நினைக்கவில்லை குருதேவா...’’ நிதானமாக சொன்னான் விநயாதித்தன்: ‘‘நேற்றிரவு ஐந்து புறாக்களைப் பறக்கவிட்டது என் பெரிய தந்தை அல்ல... கரிகாலன் என்று நினைக்கிறேன்!’’

ராமபுண்ய வல்லபரின் கண்களில் பெருமை சுடர் விட்டது. விநயாதித்தனையே இமைக்காமல் பார்த்தார்.
‘‘இந்த சந்தேகம் தங்களுக்கும் இருக்கிறது என்பதை நானறிவேன் குருதேவா... கரிகாலனுடன் வந்த சீனன்தான் அந்த ஐந்து புறாக்களையும் பறக்கவிட்டு நம்மை சங்கடத்தில் ஆழ்த்தி சிவகாமியை சிறையில் அடைத்திருக்க வேண்டும்...’’சாளுக்கிய போர் அமைச்சர் புன்னகைத்தார்.

‘‘புறாவில் இருந்த செய்தி கூட கரிகாலனே எழுதியதாக இருக்கலாம்...’’
ராமபுண்ய வல்லபர் நெருங்கி வந்து விநயாதித்தனைக் கட்டிப் பிடித்தார்: ‘‘ஓர் இளவரசனுக்குரிய தகுதியுடன் சம்பவங்களை
அலசுகிறாய்... பெருமையாக இருக்கிறது... கவலைப்படாதே... இன்னும் இரண்டு நாட்களுக்கு சிவகாமியின் மீதான விசாரணை நடைபெறாது!’’
‘‘குருநாதா...’’‘‘அதற்குள் சாளுக்கிய மன்னருக்கு நடந்த விஷயங்களை எல்லாம் நாம் தெரிவித்தாக வேண்டும்... கூடவே அடுத்து நாம் செய்யவிருக்கும் காரியங்களுக்கும் அனுமதி பெற வேண்டும்! மனதை அலைபாயவிடாமல் நிம்மதியாக இரு... நான் இருக்கிறேன்!’’
‘‘வா இரணதீரா...’’ தன் மைந்தனை வரவேற்றார் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மர்: ‘‘நள்ளிரவே என்னைச் சந்திக்க வந்திருந்தாய் போலிருக்கிறது... வயதாகி விட்டதல்லவா..? ஆழ்ந்து உறங்கிவிட்டேன்... சொல் இரணதீரா! என்ன விஷயம்..? நேற்றிரவு சாளுக்கிய இளவரசன் கொடுத்த விருந்து எப்படியிருந்தது..?’’

தன் தந்தையின் பாதங்களைத் தொட்டு வணங்கிவிட்டு, நடந்ததை எல்லாம் சுருக்கமாகச் சொல்லி முடித்தான் கோச்சடையன் இரணதீரன்.
நெற்றியைச் சுருக்கியபடி ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார் பாண்டிய மன்னர்.அவரைத் தொந்தரவு செய்யாமல் தன் கைகளைக் கட்டியபடி அமைதியாக நின்றான் இரணதீரன்.இருக்கையை விட்டு எழுந்த அரிகேசரி மாறவர்மர், தன் கரங்களைப் பின்னால் கட்டியபடி குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். அவ்வப்போது நின்றார். அண்ணாந்து பார்த்தார். தலையை உலுக்கிக் கொண்டார். நடையைத் தொடர்ந்தார்.

கணங்கள் யுகங்களாகக் கடந்ததும் சட்டென நின்றார். திரும்பி கோச்சடையன் இரணதீரனைப் பார்த்துப் புன்னகைத்தார்: ‘‘கரிகாலன் இப்பொழுது எங்கிருக்கிறான்..?’’ ‘‘அன்னையுடன் பேசிக் கொண்டிருக்கிறான்...’’‘‘அதாவது தன் அத்தையுடன்! நல்லது... நல்லது... என்னைச் சந்திக்க நீ வருவது அவனுக்குத் தெரியுமா..?’’‘‘தெரியும் தந்தையே...’’‘‘தெரிந்தும் அவன் வரவில்லை...’’ அரிகேசரி மாறவர்மர் வாய்விட்டுச் சிரித்தார்: ‘‘பொடிப் பயல் என்று நினைத்தேன்... பரவாயில்லை... சதுரங்கக் காய்களை திறம்பட நகர்த்துகிறான்... சோழ ரத்தம் அல்லவா... அப்படித்தான் இருக்கும்... இரணதீரா...’’
‘‘தந்தையே...’’ என்றபடி முன்னால் வந்தான்.

அவன் தோளில் கை போட்டார் அரிகேசரி மாறவர்மர்: ‘‘மாமன் மகன்தானே என அவனிடத்தில் அலட்சியமாக இருக்காதே... எப்போதும் அவனிடம் எச்சரிக்கையாக இரு... பாண்டியர்களின் எதிரி அவன்தான்...’’‘‘மன்னா...’’ திகைப்படைந்த சூழலிலும் மரியாதையுடன் அழைத்தான் கோச்சடையன் இரணதீரன்.

‘‘என் காலத்திலோ அல்லது உன் காலத்திலோ அது நடக்காமல் போகலாம்... ஆனால், என்றேனும் ஒருநாள் பாண்டியர்களுக்கு ஆபத்து வருகிறது என்றால் அது கண்டிப்பாக சோழர்களால்தான் ஏற்படும்...’’‘‘கரிகாலனை சந்தேகிக்கிறீர்களா..?’’‘‘முழுமையாக! பல்லவர்கள் நன்றாக இருந்தால்தான் சோழர்களால் நிம்மதியாக வாழமுடியும்... எனவே, நடைபெறவிருக்கும் போரில் பல்லவர்கள் பக்கம்தான் சோழர்கள் நிற்பார்கள்... இந்தப் போரில் பாண்டியர்களான நாமும் பங்கேற்க வேண்டும் என சாளுக்கியர்கள் விரும்புகிறார்கள்... யுத்தத்தில் நாம் கலந்து கொள்ளவே கூடாது என பல்லவர்கள் கருதுகிறார்கள்... அதாவது உன் மாமன் மகன் கரிகாலன் அப்படி எண்ணுகிறான்... எனவே நமக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையில் பரஸ்பர சந்தேகச் சுவரை எழுப்புகிறான்...’’

‘‘நேற்றிரவு நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் கரிகாலனின் திட்டம் என்கிறீர்களா தந்தையே..?’’
‘‘இல்லை... திட்டம் வேறொருவருடையது... ஆனால், அதை தனக்கு சாதகமாக கரிகாலன் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான்... சிவகாமியைச் சிக்க வைத்து நமக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்தி இருக்கிறான்... இந்நேரம் மதுரை முழுக்க சிவகாமி கைது செய்யப்பட்டது பரவியிருக்கும்... கரிகாலனே பரப்பியிருப்பான்! எனவே விசாரணையை நாம் மேற்கொண்டுதான் ஆக வேண்டும்...’’
‘‘என்று தந்தையே..?’’‘‘இரண்டு மூன்று நாட்கள் கழித்து!’’‘‘எதற்கு இந்த அவகாசம் மன்னா..?’’‘‘கரிகாலனுக்கு அவகாசம் தேவைப்படுகிறது... பரவாயில்லை வழங்குவோம்... என்னதான் இருந்தாலும் அவன் என் மைத்துனரின் மகனல்லவா!’’
‘‘தந்தையே..?’’

‘‘என்ன இரணதீரா...?’’
‘‘நேற்றிரவு ஐந்து புறாக்களை அனுப்பியது யார்..?’’
‘‘சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர்!’’‘‘ஆம்... நான்தான் ஐந்து புறாக்களை அனுப்பினேன்... ஆனால், விருந்தினர் மாளிகைப் பக்கமாக அவற்றைப் பறக்கச் சொல்லவில்லையே..?’’தனக்குள் முணுமுணுத்தபடி தன் கையில் இருந்த ஓலையை மீண்டும் ஒருமுறை படித்தார் சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர்.நடந்ததை நடந்தபடி ராமபுண்ய வல்லபர் அதில் எழுதி
யிருந்தார்.சாளுக்கிய மன்னரின் புருவங்கள் முடிச்சிட்டன.
‘‘மன்னா...’’குரல் கேட்டுத் திரும்பினார்.

காவலர் தலைவன் அவரை வணங்கினான்: ‘‘காஞ்சி கடிகையில் இருந்து தங்களுக்கு செய்தி வந்திருக்கிறது...’’
‘‘ம்...’’ தலையசைத்தார் விக்கிரமாதித்தர்.மீண்டும் மன்னரை வணங்கிவிட்டு காவலர் தலைவன் அகன்றான்.
அடுத்த சில கணங்களில் காவி நிற காஷாயம் அணிந்த ஒருவர் உள்ளே நுழைந்தார்: ‘‘வணங்குகிறேன் மன்னா... காஞ்சி கடிகையில் ஆசார்யனாக இருக்கிறேன்...’’‘‘வணக்கம் ஆச்சார்யரே... கடிகை தலைவர் என்ன செய்தி அனுப்பியிருக்கிறார்..?’’

‘‘கடிகை நூலகத்தில் இருக்கும் சுவடிகளை மூன்று திங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்து அடுக்குவது எங்கள் வழக்கம்... அப்படி இம்முறை சுத்தம் செய்கையில் சில சுவடிகள் காணாமல் போயிருப்பதை அறிந்தோம்...’’

காஞ்சி மாநகரத்துக்கு கரிகாலனும் சிவகாமியும் வந்ததும்... சிவகாமி குறித்த சந்தேகத்தை கரிகாலன் மனதில், தான் விதைத்ததும்... அதன் ஒருபகுதியாக கடிகைக்கு அவனை அனுப்பி அர்த்த சாஸ்திர சுவடிகளைப் பார்க்கச் சொன்னதும் விக்கிரமாதித்தரின் மனதில் நிழலாடின: ‘‘காணாமல் போனவை அர்த்த சாஸ்திர சுவடிகளா..?’’‘‘இல்லை மன்னா...’’விக்கிரமாதித்தரின் கண்கள் விரிந்து சுருங்கின: ‘‘இல்லையா..?’’

‘‘இல்லை மன்னா... காணாமல் போயிருப்பது சிறைச்சாலை சுவடிகள்... ஒவ்வொரு தேசத்திலும் சிறைச்சாலைகள் எப்படி அமைக்கப்பட்டிருக்கின்றன... அதற்குள் இருக்கும் பொறி அமைப்புகள்... அவற்றை இயக்கும் விதம்... ஆகியவை அடங்கிய சுவடிகள் மன்னா!’’சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் நெற்றியில் வியர்வைமுத்துக்கள் பூக்கத் தொடங்கின!
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ரத்த மகுடம்-96

உள்ளத்தில் பொங்கிய அனைத்து உணர்ச்சிகளையும் உள்ளுக்குள்ளேயே சிறைப்பிடித்தபடி இயல்பான முகத்துடன் தன் முன்னால் நின்ற காஞ்சி கடிகையின் ஆச்சார்யரை ஏறிட்டார் விக்கிரமாதித்தர்: ‘‘புரியவில்லை ஆச்சார்யரே... சற்று விளக்க முடியுமா..?’’எவ்வளவு தடுத்தும் தன் கண்களில் வழியும் ஆச்சர்யத்தை அந்த ஆச்சார்யரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவருக்குத் தெரிந்து சாளுக்கிய மன்னர் எது ஒன்று குறித்தும் மீண்டும் சொல்லும்படி கேட்டதில்லை. விளக்கும்படியும்.
22.jpg
எப்போதும் சொல்ல வரும்போதே அதன் உட்பொருளை உணர்ந்து விடுபவர் அவர். அப்படிப்பட்டவர் எதற்காக தன்னை மீண்டும் சொன்னதையே சொல்லும்படி கேட்கிறார்..?எழுந்த வினாவுக்கு விடை தேட முற்படாமல் மன்னரின் வேண்டுகோளுக்கு அடிபணிந்தார் ஆச்சார்யர்: ‘‘காணாமல் போயிருப்பது சிறைச்சாலை தொடர்பான சுவடிகள் மன்னா...’’‘‘அதாவது கட்டடக் கலை சார்ந்த சிற்ப சாஸ்திர சுவடிகள்... அப்படித்தானே..?’’

‘‘ஆம் மன்னா... மயன் சாஸ்திர சுவடிகள்... எல்லா தேசத்து நகர அமைப்புகளும், வீதி அளவுகளும், சந்தைகளின் இருப்பிட எல்லைகளும் கிட்டத்தட்ட ஒன்றுதான். போலவே மாட மாளிகைகளின் வெளித் தோற்றங்களும். ஆனால், அந்தந்த தேசங்களின் பண்பாட்டு, கலாசாரங்களுக்கு ஏற்ப அந்தந்த நகர உருவாக்கங்கள் நுணுக்கமான முறையில் மாறுபடும். குறிப்பாக மாட மாளிகைகள் மற்றும் அரண்மனைகளின் உட்புறங்கள் தேசத்துக்கு தேசம் மாறுபடும்...’’‘‘ம்... வாதாபிக்கும் காஞ்சிக்கும் இருக்கும் மாறுபாடுபோல்...’’

‘‘காஞ்சிக்கும் மதுரைக்கும் இருக்கும் மாறுபாடு போலவும்!’’ அழுத்திச் சொன்னார் ஆச்சார்யர்: ‘‘இதற்கு அழுத்தம் கொடுக்கக் காரணம், ஒரே தமிழகப் பரப்பு என்றாலும் காஞ்சி மாநகரும் மதுரை மாநகரும் பலவிதங்களில் வேறுபட்டது என்பதைச் சொல்லத்தான்...’’
‘‘புரிகிறது ஆச்சார்யரே...’’

‘‘பொதுவில் அனைத்தும் கட்டட - சிற்ப - மயன் சாஸ்திரத்தில் வரும் என்றாலும் இதற்குள்ளேயே ஆலயங்கள், வீதிகள், மாளிகைகள், மாடங்கள், மண்டபங்கள்... என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி உட்பிரிவுகள் உண்டு. பயிலும் வித்யார்த்திகளும் பொதுவானவற்றை பொதுவாகத் தெரிந்துகொண்டு தங்களுக்கு விருப்பமான விஷயத்தில் சிறப்புப் பயிற்சி பெறுகிறார்கள். எனவேதான் கோயில் சிற்பிகள் மாட மாளிகைகளை நிர்மாணிப்பதில்லை. அதற்கென இருப்பவர்களே அதை அதை செய்கிறார்கள்...’’

‘‘ம்...’’
‘‘அப்படி ஒவ்வொரு தேசத்தின் சிறைக்கூடங்களும் அந்தந்த தேசத்தின் அறநெறிகளுக்கும் தர்மங்களுக்கும் ஏற்ப மாறுபடும்... அதுமட்டுமல்ல...’’ நிறுத்தினார் ஆச்சார்யர்.‘‘சொல்லுங்கள்... ஏன் நிறுத்திவிட்டீர்கள்..?’’ விக்கிரமாதித்தர் தூண்டினார்.
‘‘மன்னர் தவறாக எண்ணக் கூடாது... உதாரணத்துக்காகத்தான் ஒன்றைச் சொல்லப் போகிறேன்...’’
‘‘பாதகமில்லை... மனதில் இருப்பதை வெளிப்படுத்துங்கள்...’’

‘‘நன்றி மன்னா... ஒவ்வொரு தேசத்தின் சிம்மாசனத்திலும் அமரும் மன்னரின் விருப்பத்துக்கு ஏற்ப அவரது காலத்தில் சிறைச்சாலை
களில் சிற்சில மாற்றங்களும் ஏற்படுத்தப்படும்...’’‘‘தண்டிக்கும் முறையைக் குறிப்பிடுகிறீர்களா..?’’‘‘அதையும் சேர்த்தே சொல்கிறேன்... உதாரணமாக, ராஜத் துரோக வழக்கில் குற்றம் நிருபிக்கப்பட்டவர்கள் சில தேசங்களில் பாதாளச் சிறையில் அடைக்கப்படுவார்கள்... வேறு சில தேசங்களில் ஐந்தடுக்கு பாதுகாப்புடன் சிறை வைக்கப்படுவார்கள்... இப்படி அடுக்கிக் கொண்டே செல்லலாம்...’’‘‘ம்...’’‘‘காஞ்சி கடிகையில் காணாமல் போயிருக்கும் சுவடிகள் சிறைச்சாலைகளின் அமைப்பை துல்லியமாகப் படம் வரைந்து பாகங்களைக் குறித்திருக்கும் சுவடிகள் மன்னா... எந்தெந்த நகரங்களில் இருக்கும் எந்தெந்த சிறைகள் எப்படிப்பட்ட பொறி அமைப்புகள் கொண்டவை... என்பதை எல்லாம் விளக்குபவை...’’

சில கணங்களில் யோசனையில் ஆழ்ந்த விக்கிரமாதித்தர், சட்டென கேட்டார்: ‘‘அவை பழைய சுவடிகள்தானே..?’’
‘‘ஒருவகையில் ஆம் மன்னா... ஆனால், அவை புதிய சுவடிகளும் கூட...’’புருவங்களை உயர்த்தி எப்படி என்பதுபோல் ஆச்சார்யரைப் பார்த்தார் சாளுக்கிய மன்னர்.‘‘பாரத தேசத்தில் இருக்கும் எந்த நாட்டு சிறைச்சாலையும் எந்த அமைப்பில் மாற்றி அமைக்கப்பட்டாலும் அவை உடனுக்குடன் கடிகைக்கு தெரிய வரும். அந்த மாற்றங்களை புதியதாக ஓர் ஓலையில் எழுதி முந்தைய கட்டுடன் இணைத்துவிடுவோம்...’’

சொன்ன ஆச்சார்யரை நெருங்கி வந்து உற்றுப் பார்த்தார் விக்கிரமாதித்தர்: ‘‘இது ராஜத் துரோகமல்லவா..? ஒரு மன்னர் தன் நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்ப செய்யும் ஒரு மாற்றத்தை இப்படி பகிரங்கமாக இன்னொரு நாட்டின் கடிகையில் ஆவணப்படுத்தலாமா..?’’
‘‘கூடாதுதான் மன்னா... ஆனால், சாஸ்திரங்கள் இதை அனுமதிக்கின்றன... எப்படி ஒவ்வொரு நாட்டு தர்மங்களும் நியாயங்களும் ஆவணப்படுத்தப்பட்டு மற்ற தேசத்தவர்களுக்கும் வழிகாட்டியாக காலவெள்ளத்தில் மாறுகிறதோ... அடுத்தடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுகிறதோ...

அப்படி சிற்ப - கட்டடக் கலைகளையும் சொல்லலாம்... அதேநேரம் எப்படி அர்த்த சாஸ்திரம் உள்ளிட்ட ராஜ தந்திரங்கள் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கற்பிக்கப்படுகிறதோ அப்படி சிற்பம் - கட்டடக் கலைகளில் ஏற்படுத்தப்படும் மேம்பாடுகள் அந்தந்த துறை மாணவர்களுக்கு மட்டுமே கற்பிக்கப்படும்... இதிலும் சில நியதிகளை கடிகைகள் பின்பற்றுகின்றன...’’
‘‘என்ன விதிகள் ஆச்சார்யரே..?’’

‘‘கட்டடக்கலை பயிலும் எல்லா மாணவர்களுக்கும் பொதுவான அமைப்புகள் மட்டுமே கற்பிக்கப்படும் மன்னா... ஒவ்வொரு தேசத்தின் ரகசியங்களாகவும் இருக்கும் கட்டட நுணுக்கங்கள் ஒருபோதும் அந்த தேசத்தைச் சேர்ந்த வித்யாதிபதிகளுக்குக்கூட கற்பிக்கப்பட மாட்டாது...’’
‘‘ம்...’’

‘‘தொடர்புள்ள தேசத்தின் மன்னர் தன் கைப்பட ஓலை எழுதிக் கொடுத்தால் மட்டுமே அந்த தேசம் தொடர்பான கட்டடக்கலை ரகசியங்கள் கற்பிக்கப்படும்... அதுகூட யாருக்கு கற்பிக்கலாம் அல்லது யார், சம்பந்தப்பட்ட அந்த சுவடிகளைப் பார்வையிடலாம் என அந்த மன்னர் சொல்கிறாரோ அந்த மாணவருக்கு மட்டுமே சொல்லித்தரப்படும் அல்லது அந்த நபர் மட்டுமே பார்வையிட அனுமதிப்படுவார்...’’
‘‘ம்...’’

‘‘இந்த வகையில் காஞ்சி கடிகையில் இருந்த சிறைச்சாலை தொடர்பான சுவடிகள் அனைத்தும் இன்றிருக்கும் அனைத்து தேசத்து ரகசியங்களையும் உள்ளடக்கியவை. அவை பழமையானவைதான்... ஆனால், எந்த தேசத்திலும் சிறைக்கூடங்களில் புதியதாக எந்த மாற்றங்களும் செய்யப்படாததால் அவை புதிய சுவடிகள் என்றும் சொல்லலாம்...’’

விக்கிரமாதித்தர் எதுவும் பேசாமல் தன் கரங்களை பின்புறம் கட்டியபடி குறுக்கும் நெடுக்கும் நடந்தார்.ஆச்சார்யர் மரியாதை நிமித்தமாக தன் கரங்களை தன் மார்பில் கட்டியபடி அமைதியாக நின்றுகொண்டிருந்தார்.‘‘ஆச்சார்யரே...’’ அழைத்த சாளுக்கிய மன்னர் சாளரத்துக்கு வெளியே தன் பார்வையைச் செலுத்தினார்: ‘‘காஞ்சி கடிகையில் பாரத தேசத்தின் அனைத்து நாடுகளைச் சேர்ந்த சிறைச்சாலைகளின் ரகசியங்களும் இருக்கிறதா..?’’
‘‘கடல் கடந்த தேசத்தின் சிறைக்கூட வரைபடங்களும் அங்குண்டு மன்னா...’’

‘‘அவை அனைத்தும் காணாமல் போயிருக்கிறதா..?’’
‘‘இல்லை மன்னா... தமிழக சிறைக்கூடங்களின் ரகசியங்கள் அடங்கிய சுவடிகள் மட்டுமே மறைந்திருக்கின்றன...’’
கேட்டதும் முடிச்சிட்ட விக்கிரமாதித்தரின் புருவங்கள் சட்டென்று உயர்ந்தன: ‘‘கடைசியாக அந்த சுவடிகள் இருந்த பகுதிக்கு யார் சென்றது..?’’
‘‘கரிகாலன் மன்னா!’’சாளுக்கிய மன்னரின் உதடுகளில் புன்முறுவல் பூத்தது. ஆனால், அவர் நயனங்களில் அனல் தெறித்தது: ‘‘நல்லது ஆச்சார்யரே... தகவல் சொன்னதற்கு நன்றி... காணாமல் போன சுவடிகள் விரைவில் உங்கள் கடிகைக்கு வந்து சேரும்...’’

‘‘அது அவ்வளவு முக்கியமில்லை மன்னா... எங்கள் ஆச்சார்யரில் ஒருவருக்கு அந்த சுவடிகளில் இருந்த விஷயங்கள் அனைத்தும் மனப்பாடம். இன்னும் இரண்டொரு நாட்களில் புதியதாக அவற்றை எழுதி கடிகை நூலகத்தில் சேர்ப்பித்து விடுவார்... நான் வந்தது தங்களுக்கு தகவலைச் சொல்ல...’’
‘‘இதே தகவல் பாண்டிய மன்னருக்கும் தெரிவிக்கப்படுமா..?’’

‘‘கண்டிப்பாக மன்னா... அவர்கள் தேசத்து சிறைக்கூட ரகசியங்கள் அடங்கிய சுவடியும்தானே மறைந்திருக்கிறது..? எனவே அவர்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டியது எங்கள் கடமை... என்னைப் போலவே வேறொரு ஆச்சார்யர் மதுரைக்கு சென்றிருக்கிறார்...’’விக்கிரமாதித்தர் எதுவும் சொல்லவில்லை. வந்த ஆச்சார்யர் மரியாதையுடன் அவரை வணங்கிவிட்டு விடைபெற்றார்.அதன் பிறகு யாரையும் சந்திக்காமல் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார் சாளுக்கிய மன்னர். தன் முன்னால் இருந்த சதுரங்கப் பலகையில் காய்களை முன் பின்னாக நகர்த்தத் தொடங்கினார்.
ஒரு நாழிகைக்குப் பின் காவலர் தலைவன் அவர் இருந்த அறைக்குள் நுழைந்தான்: ‘‘மன்னா...’’

கோபத்துடன் அவனை ஏறிட்டார்: ‘‘நான்தான் யாரையும் இப்போது சந்திக்கப் போவதில்லை என்றேனே... எதற்காக என்னைத் தொந்தரவு செய்கிறாய்..?’’‘‘ஒற்றர் படை உபதலைவர் உங்களைச் சந்தித்தே ஆகவேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கிறார்... அவசரமாம்...’’
‘‘ஒற்றர் படை உபதலைவரா..? சரி... வரச் சொல்...’’காவலர் தலைவன் வெளியேறிய அடுத்த கணமே புயலென சாளுக்கிய ஒற்றர் படை உபதலைவன் நுழைந்தான்: ‘‘வணக்கம் மன்னா... சமீபத்தில் கடல் கடந்து பறக்கும் திறமை வாய்ந்த சில புறாக்களை அரபு வணிகர்களிடம் இருந்து ஒருவர் வாங்கியிருக்கிறார்...’’‘‘எத்தனை புறாக்கள்..?’’

‘‘சரியாக பதினைந்து மன்னா... ஆனால், தற்சமயம் அவரிடம் பத்து புறாக்கள் மட்டுமே இருக்கின்றன...’’
‘‘மீதமுள்ள ஐந்து..?’’
‘‘மதுரையில் பறந்திருக்கிறது!’’
‘‘அரபு வணிகரிடம் இருந்து வலுவான பதினைந்து தூதுப் புறாக்களை வாங்கியவர் யார்..?’’
‘‘தங்களால் வேளிர்களின் தலைவனாக முடிசூட்டப்பட்ட
கடிகை பாலகன்!’’

‘‘குருநாதா...’’
குரல் கேட்டு ஆழ்ந்த சிந்தனையில் இருந்து விடுபட்டார் ராமபுண்ய வல்லபர்: ‘‘என்ன விநயாதித்தா... இன்னமும் சிவகாமியை பாண்டிய மன்னர் விசாரிக்கவில்லையே என்று யோசிக்கிறாயா..? நான்தான் இன்னும் சில நாட்களுக்கு விசாரணை நடைபெறாது என்றேனே..?’’
‘‘சிவகாமி குறித்து பேசுவதற்காக தங்களைத் தேடி வரவில்லை குருநாதா...’’
‘‘பிறகு..?’’

‘‘இன்று பாண்டிய மன்னர் அரிகேசரி மாறவர்மரை ஒருவர் சந்தித்திருக்கிறார்...’’
‘‘யார்..?’’
‘‘காஞ்சி கடிகையைச் சேர்ந்த ஆச்சார்யர் ஒருவர்...’’
ராமபுண்ய வல்லபரின் கண்கள் சட்டென ஒளிர்ந்தன: ‘‘என்ன விஷயமாக..?’’

‘‘கடிகை நூலகத்தில் இருந்த சில சுவடிகள் காணாமல் போயிருக்கிறதாம்... அவை அனைத்தும் தமிழக சிறைச்சாலை குறித்த ரகசியங்கள் அடங்கிய சுவடிகளாம்...’’‘‘என்ன சொல்கிறாய் விநயாதித்தா..? எப்படி அவை மறைந்தனவாம்..?’’
‘‘தெரியவில்லை குருநாதா... ஆனால், கடைசியாக அந்த சுவடிகளை சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் சொல்லி பார்வையிட்டது கரிகாலன் என்கிறார் அவர்...’’

துள்ளி எழுந்தார் ராமபுண்ய வல்லபர்: ‘‘தமிழக சிறைச்சாலை ரகசியங்கள் அடங்கிய சிற்பச் சுவடிகள்... கரிகாலன்...’’ முணு
முணுத்தவர் சாளுக்கிய இளவரசனைக் கட்டிப் பிடித்தார்:‘‘புரிகிறதா விநயாதித்தா... காஞ்சி சிறையில் கரிகாலனின் தந்தையான சோழ மன்னரை நான் அடைத்து வைத்திருந்தேன்... அவரை மீட்க கரிகாலனும் சிவகாமியும் காஞ்சி சிறைக்குச் சென்றார்கள்... இப்போது சிவகாமி மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறாள்...

காஞ்சி, பல்லவர்களின் தலைநகரம்... மதுரை, பாண்டியர்களின் தலைநகரம்... காஞ்சி சிறைக்கு அன்று கரிகாலனுடன் சிவகாமி சென்றாள்... இன்று மதுரை சிறையில் அவளே அடைபட்டிருக்கிறாள்... இரு தேசத்து சிறைச்சாலை ரகசியங்களும் அடங்கிய சுவடியை கரிகாலன் களவாண்டிருக்கிறான்... துண்டு துண்டாக இருக்கும் இவை அனைத்தையும் முடிச்சிட்டுப் பார்... விளங்காமல் நாம் தவித்த அனைத்துக்கும் விளக்கம் கிடைக்கும்!’’

‘‘சிவகாமியைச் சந்தேகிக்கிறீர்களா குருநாதா..? அவள் நம் ஒற்றர் படைத் தலைவி...’’‘‘இப்போது கேள்வியே அவள் எந்த தேசத்து ஒற்றர் படைத் தலைவி என்பதுதான்!’’‘‘குருநாதா..!’’‘‘நீயே சொல் விநயாதித்தா... சிவகாமியும் கரிகாலனும் காதலர்களா அல்லது ஒருவரையொருவர் வீழ்த்த முற்படும் இரு தேசத்து ஒற்றர்களா..?’’
http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16690&id1=6&issue=20200313
  • Like 2
Link to comment
Share on other sites

ரத்த மகுடம்-97

‘‘சிவகாமி நம்மைச் சேர்ந்தவள்தான் குருநாதா...’’ அழுத்தமாகச் சொன்னான் சாளுக்கிய இளவரசனான விநயாதித்தன்.‘‘இவ்வளவு தீர்மானமாக நீ சொல்லக் காரணம்..?’’ புருவத்தை உயர்த்தினார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்.‘‘நடந்த விஷயங்கள்தான் குருநாதா...’’ அமைதியாகச் சொன்ன விநயாதித்தன் தொடர்ந்தான்:‘‘சாளுக்கியர்களின் போர் அமைச்சராக நீங்கள் இருப்பதாலும் ஒற்றர் படை உங்கள் கட்டுப்பாட்டில் இயங்குவதாலும் ஒவ்வொரு சம்பவத்தையும் சந்தேகத்துடனேயே நீங்கள் அணுகுகிறீர்கள்...’’‘‘அது தவறு என்கிறாயா விநயாதித்தா..?’’
18.jpg
‘‘நிச்சயமாக இல்லை குருநாதா... கனவிலும் தங்களைக் குறித்து அப்படி நான் எண்ண மாட்டேன்...’’‘‘பிறகு ஏன் எனக்கு இவ்வளவு விளக்கம் அளிக்கிறாய்..?’’‘‘தங்களுக்கு பதில் சொல்லத்தான்... குருநாதா... சிவகாமி நம்மைச் சேர்ந்தவள்தான் என்று அழுத்தமாக நான் சொல்லக் காரணம், அவள் கைது செய்யப்பட்ட சூழல்தான்...’’புருவத்தை சுருக்கிய ஸ்ரீராமபுண்ய வல்லபர், தன் சீடனை உற்றுப் பார்த்தார்:

‘‘பாண்டிய இளவரசருக்கு நாம் இரவு விருந்து அளித்தோம். அப்போது நடந்த சம்பவங்களை தங்களுக்கு நினைவுபடுத்த விரும்பவில்லை... ஐந்து புறாக்கள் பறந்தன... அதில் ஒன்று அவள் மீது அமர்ந்தது... அதன் இறகில் இருந்து கரிகாலன் செய்தி ஒன்றை எடுத்தான்... சந்தேகத்தின் சாயை சிவகாமி மீது படரவே பாண்டிய இளவரசர் அவளை சிறையில் அடைத்திருக்கிறார்... இன்னும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை... இப்போது சிவகாமி குற்றம்சாட்டப்பட்டவள்தான்...’’

‘‘அதற்குள் என்னை தீர்ப்பு எழுத வேண்டாம் என்கிறாய்... அப்படித்தானே..?’’

மெல்ல தலையசைத்தான் சாளுக்கிய இளவரசன்: ‘‘குருநாதா... நீங்கள் சந்தேகப்படுவதுபோல் ஒருவேளை கரிகாலனும் சிவகாமியும் ஒரே நாட்டின் ஒற்றர்களாக இருந்தால்... அதாவது பல்லவர்களின் பக்கம் சிவகாமி இருந்தால்... கரிகாலன் எதற்காக சிவகாமியை சிக்க வைக்க வேண்டும்..?’’
‘‘...’’
‘‘இரவு விருந்துக்கு அவன் முன்னதாகவே பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரனுடன் வந்துவிட்டான். அப்பொழுதே என் மனதில் எச்சரிக்கை மணி அடித்தது. அதற்கேற்ப சிவகாமி நுழைந்தது முதலே அவளைப் பற்றி அலட்சியமாகத்தான் பேசத் தொடங்கியிருக்கிறான்... அவள் சாளுக்கியர்களின் ஒற்றர் படைத்தலைவி என்றும் அவளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் திரும்பத் திரும்ப சொல்லி இரணதீரனின் மனதில் சந்தேகத்தை விதைத்திருக்கிறான்... அங்கிருந்த நம் ஆட்கள் அனைவரும் சொல்லி வைத்ததுபோல் இதைத்தான் நம்மிடம் தெரிவித்திருக்கிறார்கள்...’’
‘‘ம்...’’

‘‘இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது பொறி வைத்துப் பிடிப்பதுபோல் சிவகாமியை சிக்க வைத்திருக்கிறான்... நமக்காக அவள் பணிபுரிந்து வருவதைத் தடுத்திருக்கிறான்... என தங்களுக்குத் தோன்றவில்லையா..?’’‘‘இல்லை விநயாதித்தா...’’ ‘‘எப்படிச் சொல்கிறீர்கள்..?’’ என்று கேட்காமல் கையைக் கட்டி அமைதியாக நின்றான் விநயாதித்தன்.அருகில் வந்து அவன் தோளில் கையைப் போட்டார் ராமபுண்ய வல்லபர்: ‘‘இரவு விருந்தில் நடந்ததை மட்டும் நீ ஆராய்கிறாய் விநயாதித்தா... தொடக்கம் முதலே நாம் ஏமாந்து வருகிறோமோ என நான் இப்போது யோசிக்கிறேன்...’’

சாளுக்கிய இளவரசனை விட்டு விலகி இரண்டடி தள்ளி நின்றார் சாளுக்கிய போர் அமைச்சர்: ‘‘மற்ற எல்லோரையும் விட சிவகாமியை எனக்கு நன்றாகத் தெரியும்... வாயாடுவதில் அவளை அடித்துக் கொள்ள ஆளில்லை... எவ்வளவு லாவகமாக அவளைக் குற்றம் சாட்டினாலும் தன் பேச்சு சாமர்த்தியத்தால் அதிலிருந்து அவள் தப்பித்து விடுவாள்... அதனால்தான் சாளுக்கியர்களின் ஒற்றர் படைத்தலைவியாகவே அவள் நியமிக்கப்பட்டாள்...’’
‘‘...’’
‘‘அப்படிப்பட்டவள் கரிகாலன் தொடர்ந்து தன்னை ‘ஆள்காட்டி... ஒற்றர்... பாண்டியர்களையே அழிப்பாள்...’ என்றெல்லாம் அடுக்கடுக்காக குற்றம்சாட்டியபோது - இதை அவமானப்படுத்தியபோது என்று குறிப்பிடுவதே சரி - ஏன் அமைதியாக நின்றாள்..?’’‘‘தாங்கள் சந்தேகப்பட இதுதான் காரணமா குருநாதா..? திகைப்பினாலும் பேச்சிழந்து அவள் நின்றிருக்கலாமே..?’’‘‘சாமான்ய மக்களுக்கு உன் வாதம் பொருந்தும் விநயாதித்தா... முக்கியமான காரியத்தை நிறைவேற்ற எதிரி நாட்டுக்குள் ஊடுருவியிருக்கும் ஒற்றர்களுக்கு... அதுவும் ஒற்றர் படைத் தலைவிக்கு இது பொருந்தாது...

திகைப்பையும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் கணந்தோறும் எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்களே முக்கியமான காரியங்களுக்கு வேவு பார்க்க அனுப்பப்படுவார்கள்... சிவகாமி நம்மால் அனுப்பப்பட்ட ஆயுதம்... அதுவும் அதன் தரத்தை எல்லா வகையிலும் சோதித்த பிறகே நாம் பல்லவர்கள் மீது ஏவினோம்... அப்படியிருக்க அன்று சிவகாமி அமைதியாக இருந்தது பலத்த சந்தேகத்தைக் கிளப்புகிறது விநயாதித்தா... தவிர காஞ்சி சிறைச்சாலை முதல் எல்லா இடங்களிலும் கரிகாலனும் அவளும் சேர்ந்தே இருந்திருக்கிறார்கள்; பயணப்பட்டிருக்கிறார்கள்...’’
‘‘புரிகிறது குருநாதா...’’

‘‘ஒன்று கரிகாலன் மீதுள்ள மையலில் சிவகாமி சாளுக்கியர்களுக்கு துரோகம் செய்ய முடிவெடுத்திருக்க வேண்டும்... அல்லது...’’ நிறுத்திய ராமபுண்ய வல்லபர் அருகில் வந்து சுற்றிலும் பார்த்துவிட்டு விநயாதித்தனின் செவியில் மெல்ல முணுமுணுத்தார்... ‘‘ஏதோ ஒரு காரணத்துக்காக... அதுவும் நமக்கு சாதகமாக அமைய... அவள் சிறைக்குச் சென்றிருக்க வேண்டும்...’’ ‘‘அழைத்தீர்களா மன்னா...’’ தலைமை மருத்துவர் பவ்யமாக கேட்டார்.

‘‘ஆம்... மருத்துவரே...’’ நிதானமாகச் சொன்னார் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர்: ‘‘சிவகாமிக்கு நீங்கள் பூசிய தைலப் பூச்சு எந்தச் சூழலிலும்
அகலாது அல்லவா..? தெரியும்... சில நாட்களுக்கு முன் இதுகுறித்து நாம் பேசினோம்... நீங்களும் விளக்கம் அளித்தீர்கள்... இப்போது அவசியம் ஏற்பட்டிருப்பதால் மீண்டும் கேட்கிறேன்...’’‘‘காரணமில்லாமல் எதையும் நீங்கள் வினவ மாட்டீர்கள் என்று தெரியும் மன்னா... விளக்குவது என் கடமை...’’ தலைவணங்கிய மருத்துவர் உறுதியுடன் சொல்லத் தொடங்கினார்:

‘‘ஓவியத்தில் எந்தப் பெண்ணின் உருவத்தை நீங்கள் காண்பித்தீர்களோ அதே பெண்ணின் தோற்றத்தைத்தான் ‘சிவகாமி’யிடம் வரவழைத்திருக்கிறோம்... அதுவும் ஒன்றுக்கு மூன்று முறை தைலம் பூசியிருக்கிறோம்... சாளுக்கியர்களின் தைல ரகசியம் பிரபஞ்சம் எங்கும் புகழ்பெற்றது. அதற்கு அஜந்தா குகை ஓவியங்களே சாட்சி. நம் தைலத்தை முறியடிக்கும் தைலத்தை எந்த தேசமும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை... இனியும் கண்டுபிடிக்க முடியாது...’’
‘‘உறுதியாகச் சொல்கிறீர்களா..?’’

‘‘சத்தியமாகச் சொல்கிறேன் மன்னா... நம்மால் வடிவமைக்கப்பட்ட ‘சிவகாமி’க்கு எந்த நோய் வந்தாலும்... அதற்கு மருந்தாக எந்தக் குளிகையை எந்த மருத்துவர் கொடுத்தாலும்... ஏன், ‘சிவகாமி’யின் தேகத்தில் காயம் ஏற்பட்டு அதற்காக எந்த தைலத்தை அவள் உடலில் யார் பூசினாலும்... நாம் பூசிய தைலம் அகலாது... உதிராது...’’

தலையசைத்தார் விக்கிரமாதித்தர்: ‘‘நல்லது மருத்துவரே... தங்களை சிரமப்படுத்தியதற்கு...’’‘‘அதெல்லாம் ஒன்றுமில்லை மன்னா... இது என் கடமை...’’ சாளுக்கிய மன்னரை வணங்கிவிட்டு விடைபெற்றார் மருத்துவத் தலைவர்.ஆழ்ந்த யோசனையுடன் தன் கையில் இருந்த ஓலையை மீண்டும் படித்தார் விக்கிரமாதித்தர். மதுரையில் நடைபெற்று வரும் விஷயங்களை எல்லாம் ஒன்றுவிடாமல் அதில் ஸ்ரீராமபுண்ய வல்லபர் எழுதியிருந்தார். படிக்கப் படிக்க கேள்விகள்தான் முளைத்தன.குறுக்கும் நெடுக்குமாக நடந்தவர் சட்டென அறையை விட்டு வெளியே வந்தார்.வெளியில் நின்றிருந்த காவலர்களின் தலைவன் ஓடோடி வந்தான்.

‘‘புரவி வேண்டும்...’’சில கணங்களில் அவரது புரவியை அழைத்து வந்து நிறுத்தினார்கள். ‘‘யாரும் என்னைப் பின்தொடர வேண்டாம்...’’ கட்டளையிட்டுவிட்டு புரவியின் மீது ஏறிய விக்கிரமாதித்தர், காற்றைக் கிழித்தபடி மேற்குத் திசை நோக்கிப் பறந்தார்.‘‘அது சரியாக வருமா குருதேவா..?’’ அதிர்ச்சியுடன் கேட்டான் விநயாதித்தன்.‘‘ஏன் சரியாக வராது... சிவகாமி குற்றவாளியல்ல... குற்றம்சாட்டப்பட்டவள்தான் என்று சில கணங்களுக்கு முன் நீதானே கூறினாய்..?’’ பட்டென்று சொன்னார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்.‘‘அதில்லை குருதேவா...’’

‘‘இங்கே பார் விநயாதித்தா... சிவகாமியை நாம் சந்தித்துப் பேசியே ஆக வேண்டும்... அவள் நம்மைச் சேர்ந்தவளா அல்லது பல்லவர்களின் ஆளா என்பதை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்... முதலில் சேதாரம் இன்றி அவளை வெளியே எடுக்க வேண்டும்... ஏனெனில் சாளுக்கியர்களின் எதிர்காலமே இதில் அடங்கியிருக்கிறது...’’விநயாதித்தனுக்கும் விபரீதம் புரிந்தது: ‘‘சரி குருதேவா... இரணதீரனைச் சந்தித்து நாம் இருவரும் பாதாளச் சிறைக்குச் சென்று சிவகாமியைச் சந்திக்க அனுமதி வாங்குகிறேன்... ஆனால், இதற்கு பாண்டிய தரப்பு ஒப்புக் கொள்ளுமா..?’’

‘‘பொதுவாக குற்றம்சாட்டப்பட்டு பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டவர்களை மற்றவர்கள் சந்திக்க அனுமதி வழங்க மாட்டார்கள்... என்றாலும் ராஜாங்க விஷயத்தில் எப்போதுமே விலக்குகள் உண்டு... அவள் நம்மைச் சேர்ந்தவள் என பாண்டிய இளவரசனிடம் நாமே அறிமுகப்படுத்தி இருக்கிறோம்... அதனால் இரணதீரனுக்குமே இது தனி மனித பிரச்னை அல்ல... இரு தேசங்கள் சம்பந்தப்பட்டது என்று தெரியும்... தவிர பாண்டியர்களுக்குமே இந்த வழக்கு சங்கடம் தரக் கூடியதுதான்... எனவே நடைமுறையை மாற்றி சிவகாமியை நாம் சந்திப்பதற்கு பாண்டிய தரப்பு ஒப்புக் கொள்ளும்...’’

‘‘அனுமதி கொடுத்து விடு...’’ பட்டென்று சொன்னார் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மர்.‘‘மன்னா...’’ இரணதீரன் அதிர்ந்தான்: ‘‘நாளை இது குறித்து அரசவை கேள்விகள் எழுப்பாதா..?’’‘‘தகுந்த பதிலை நான் அளிக்கிறேன்...’’மன்னரே சொன்னபிறகு அதை எப்படி மறுக்க முடியும்..? பாண்டிய இளவரசன் தலையசைத்தான்: ‘‘உத்தரவு மன்னா...’’‘‘பாதாளச் சிறையில் இருக்கும் சிவகாமியைச் சந்திக்க யார் யார் அனுமதி கேட்டிருக்கிறார்கள்..?’’
‘‘சாளுக்கிய இளவரசன் மட்டும்தான் மன்னா...’’அரிகேசரி மாறவர்மரின் புருவங்கள் உயர்ந்தன: ‘‘கரிகாலன் கேட்கவில்லையா..?’’
‘‘இல்லை மன்னா...’’

‘‘விசாரணை எப்பொழுது நடைபெறும் என்றுகூட விசாரிக்கவில்லையா..?’’
‘‘இல்லை மன்னா...’’‘‘நம்ப முடியவில்லையே...’’ உதட்டைச் சுழித்த பாண்டிய மன்னர், உத்திரத்தை நோக்கினார்: ‘‘சிவகாமி குறித்தாவது ஏதாவது கரிகாலன் பேசினானா..?’’‘‘இல்லை மன்னா...’’‘‘இல்லை... இல்லை... இல்லை... இதன் எதிர்ப்பதம் ஆம்... ஆம்... ஆம்...’’ தனக்குள்ளேயே முணுமுணுத்தார் பாண்டிய மன்னர்: ‘‘கரிகாலன் எங்கிருக்கிறான்..?’’‘‘நமது அரண்மனையில்தான்...’’‘‘சந்தேகப்படும்படி...’’‘‘எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை... வெளியாட்கள் யாருடனும் பேசுவதில்லை... வேளாவேளைக்கு உண்கிறான்... அடித்துப் போட்டது போல் நன்றாக உறங்குகிறான்...’’
‘‘அதாவது அடுத்த பயணத்துக்கு தயாராகிறான்...’’
‘‘...’’

‘‘சும்மா சொல்லக் கூடாது... ஸ்ரீராமபுண்ய வல்லபரையும் விநயாதித்தனையும் பித்துப் பிடித்து அலைய வைக்கிறான்... கெட்டிக்காரன்தான்... சரி... எப்பொழுது விநயாதித்தனையும் ஸ்ரீராமபுண்ய வல்லபரையும் பாதாளச் சிறைக்கு அனுப்பப் போகிறாய்..?’’
‘‘தந்தையே..!’’‘‘பதறாதே! சிவகாமியைச் சந்திக்க எப்பொழுது அவர்களுக்கு நேரம் ஒதுக்கி இருக்கிறாய் என்று கேட்டேன்!’’
‘‘நீங்கள் குறித்துத் தரும் காலத்தில்!’’‘‘அப்படியானால் இன்றிரவு இரண்டாம் ஜாமத்தில் அவர்களை பாதாளச் சிறைக்கு அனுப்பு... சிவகாமியிடம் அவர்கள் தனிமையில் பேசட்டும்... நீ உடன் இருக்க வேண்டாம்...’’

‘‘சரி மன்னா...’’ சில கணங்கள் இரணதீரன் மவுனமாக நின்றான்: ‘‘இரண்டாம் ஜாமத்தில் ஏதேனும் சிறப்பு உண்டா..?
‘‘உண்டு! அப்பொழுதுதான் நம் மதுரை மாநகரில் கூட்டம் கூட்டமாக புறாக்கள் பறக்கப் போகின்றன..!’’
‘‘அதை நாம்...’’‘‘...தடுக்க வேண்டாம்... வேடிக்கை பார்ப்போம்...’’
‘‘ஏன் அமைதியாக இருக்கச் சொல்கிறீர்கள்..?’’

‘‘பாண்டிய நாட்டைக் காப்பாற்ற!’’
தன் தந்தையை உற்றுப் பார்த்தான் இரணதீரன்: ‘‘புறாக்களைப் பறக்க விடப்போவது கரிகாலனா..?’’
‘‘இல்லை... அதங்கோட்டாசான்!’’
  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 months later...

அத்தியாயம் 98

சாளுக்கிய மன்னரை சுமந்து வந்த அந்தப் புரவி, வனத்துக்குள் நுழையவும் கூகை ஒருமுறை அலறவும் சரியாக இருந்தது.மெல்ல தன் வலது கையால் குதிரையின் வயிற்றைத் தட்டிக் கொடுத்தார். புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக அப்புரவி தன் வேகத்தைக் குறைத்து பழக்கப்பட்ட ஒற்றையடிப் பாதைக்குள் நுழைந்தது.

 

செடிகளையும் மரங்களையும் ஊடுருவியபடி தன் பயணத்தைத் தொடர்ந்தது.கால் நாழிகை பயணத்துக்குப் பின் மீண்டும் கோட்டான்கள் இருமுறைக் கூவின. அரை நாழிகை கடந்ததும் ஒரு சிறிய வெட்டவெளியை அப்புரவி அடைந்தபோது மூன்று முறை கூகை அலறியது. புரவியை விட்டு இறங்கிய விக்கிரமாதித்தர், அதன் நெற்றியை முத்தமிட்டு தட்டிக் கொடுத்தார்.


தலையை அசைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அக்குதிரை, புற்களை மேயத் தொடங்கியது.நிதானமாக வெட்டவெளியைக் கடந்து தென்பட்ட பாறைகளை நோக்கி சாளுக்கிய மன்னர் நடந்தார்.ஐந்து முறை கோட்டான்கள் அலறி முடித்ததும் பாறை இடுக்கில் இருந்து தீ பந்தத்துடன் சாளுக்கிய வீரன் ஒருவன் வெளிப்பட்டு மன்னரை வணங்கினான்.‘‘சந்தேகப்படும்படி யாரேனும் இந்தப் பக்கம் நடமாடினார்களா..?’’‘‘இல்லை மன்னா...’’‘‘பொருள்..?’’

‘‘பலத்த பாதுகாப்புடன் நீங்கள் வைத்த இடத்திலேயே இருக்கிறது...’’புருவத்தை உயர்த்தி அந்த வீரனை ஏறிட்டார் விக்கிரமாதித்தர்.‘‘உறுதியாகத் தெரியும் மன்னா... வனம் முழுக்க நம் வீரர்கள் கண்ணும் கருத்துமாக காவல் காக்கிறார்கள்... அவர்களை மீறி சிற்றெறும்புகள் கூட நுழைய முடியாது... உங்கள் வருகையைக் கூட அவர்கள்தான் கோட்டான்களின் அலறல் வழியே எனக்குத் தெரியப்படுத்தினார்கள்...’’தன் வலக்கரத்தை நீட்டினார் சாளுக்கிய மன்னர்.தன்னிடமிருந்த தீ பந்தத்தை அவரிடம் கொடுத்துவிட்டு விலகி நின்றான் அந்த காவல் வீரன்.

பந்தத்தைப் பிடித்தபடி பாறை இடுக்கில் நுழைந்த விக்கிரமாதித்தர், பத்தடிக்கு பின் இடதுபக்கம் திரும்பினார்.பாறை ஒன்று அகற்றப்பட்டிருந்தது. பந்தத்தின் ஒளியில் இறங்குவதற்கு ஏதுவாக படிக்கெட்டுகள் குடையப்பட்டிருந்தன. ‘‘இறங்கி நேராகச் செல்லுங்கள்... எங்கும் திரும்ப வேண்டாம்... முடியும் இடத்திலேயே சிவகாமி அடைக்கப்பட்டிருக்கிறாள்!’’ அமைதியாகச் சொன்னான் பாண்டிய இளவரசன்
கோச்சடையன் இரணதீரன்.

‘‘எங்களுடன் நீங்கள் வரவில்லையா..?’’ சாளுக்கிய இளவரசனான விநயாதித்தனின் குரலில் ஆச்சர்யம் வழிந்தது.‘‘அவசியமில்லை...’’‘‘ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா..?’’ ராமபுண்ய வல்லபர் தன் புருவத்தை உயர்த்தினார்.‘‘பெரியதாக ஒன்றுமில்லை சாளுக்கிய போர் அமைச்சரே! நீங்கள் இருவரும் தனிமையில் சிவகாமியுடன் உறவாடுவீர்கள்... இடையில் நான் எதற்கு..?’’
‘‘இல்லை... பாண்டிய மன்னர்...’’ இழுத்தான் விநயாதித்தன்.

‘‘தந்தைதான் என்னை உடன் இருக்க வேண்டாம் என்றார்...’’ பதிலை எதிர்பார்க்காமல் இரணதீரன் சென்றான்.
‘‘குருதேவா...’’‘‘நேரமில்லை... வா...’’ பாதாள சிறையின் படிக்கெட்டுகளில் ராமபுண்ய வல்லபர் இறங்கத் தொடங்கினார். தரையைத் தொட்டதும் சொன்னார். ‘‘எனக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது விநயாதித்தா... நம்முடன் விளையாடுகிறான் கரிகாலன்..!’’
‘‘கரிகாலா... தாயம் விளையாடலாமா..?’’தன் அத்தையான பாண்டிய அரசியுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த கரிகாலன் துள்ளி எழுந்தான். ‘‘இந்த
நேரத்திலா மன்னா...’’

‘‘ஆட்டத்துக்கு நேரம் காலம் இருக்கிறதா என்ன..?’’
கேட்ட பாண்டிய மன்னர் அரிகேசரி மாறவர்மரை உற்றுப் பார்த்தான்.
மன்னரின் நயனங்கள் நகைத்தன.பதிலுக்கு தன் கண்களால் சிரித்தான் கரிகாலன். ‘‘இரவில் தாயம் ஆடக் கூடாது என்பார்களே..?’’
‘‘அது மக்களுக்கு... மன்னர்களுக்கல்ல!’’

‘‘நான் மன்னன் இல்லையே மன்னா... பல்லவர்களின்
உபசேனாதிபதிதானே..?’’
‘‘ஆனால், சோழர்களின் பிற்கால மன்னனாயிற்றே!’’
‘‘தேசமற்ற தேசத்தின் மன்னன்!’’

‘‘இல்லை... தேசத்தை விரிவுப்படுத்தப் போகும் மன்னன்! உன் குருதியின் ஆட்டம் என்னவென்று பார்க்க ஆசைப்படுகிறேன்...’’ என்ற அரிகேசரி மாறவர்மர், தன் மனைவியை நோக்கினார். ‘‘உன் பிறந்த வீட்டுப் பெருமையை நாளை பேசிக் கொள்... இன்றிரவு உன் சகோதரனின் மகன் என்னுடன் விளையாடட்டும்!’’‘‘என்னிடம் எதற்கு அனுமதி..? மாமனாயிற்று... மருமகனாயிற்று...’’ என்ற பாண்டிய அரசி, தன் கணவரின் பார்வையைப் புரிந்து கொண்டு, ‘‘எனக்கும் உறக்கம் வருகிறது...’’ என்றபடி நகர்ந்தாள்.அத்தை செல்வதையே இமைக்காமல் பார்த்த கரிகாலன், பாண்டிய மன்னரை நோக்கித் திரும்பினான். ‘‘கேளுங்கள் மன்னா...’’

‘‘எதைக் கேட்க வேண்டும்..?’’‘‘அதை தாங்கள்தான் சொல்ல வேண்டும்! தனிமையில் என்னுடன் உரையாடத்தானே அத்தையை அகற்றினீர்கள்..?’’
வாஞ்சையுடன் அவன் தோளில் கைபோட்டார் அரிகேசரி மாறவர்மர். ‘‘எதிர்பார்த்ததை விட புத்திசாலியாக இருக்கிறாய்... உண்மையிலேயே தாயம் ஆடத்தான் அழைத்தேன்...’’கண்கொட்டாமல் அவரைப் பார்த்தான் கரிகாலன்.தன்னை மீறி புன்னகைத்தார் அரிகேசரி மாறவர்மர்.

‘‘விளையாடிக் கொண்டே பேசலாம், வா!’’
தாங்கியில் தீ பந்தத்தை செருகிய விக்கிரமாதித்தர், சில கணங்கள் அங்கேயே நின்றார். தன் பார்வையை சுழற்றினார்.
குறிப்பிட்ட இடைவெளியில் பந்தங்கள் எரிந்துக் கொண்டிருந்தன. கூர்மையான முனைகள் மழுங்கடிக்கப்பட்டு பாறைகள் குடையப்பட்டிருந்தன.
தன் முன் நீண்ட பாதையைப் பார்த்தார். இரு பக்கங்களிலும் அறைகள் போல் ஆங்காங்கே பாறைகள் உள்வாங்கியிருந்தன. இரும்புக் கம்பிகளால் அமைக்கப்பட்டிருந்த கதவுகள் அவற்றை மூடியிருந்தன. ஆனால், அவைகள் காலியாக இருந்தன.

பலத்த சிந்தனையுடன் நேராக நடந்தார். பாதையின் முடிவில் இருந்த அறையை நெருங்கினார். அறைக்குள் எரிந்து கொண்டிருந்த பந்தங்களின் ஒளியில் ஒரு பெண் தரையில் குப்புறப்படுத்திருப்பது தெரிந்தது.கம்பிகளைப் பிடித்தபடி உற்றுக் கவனித்தார்.‘‘ஒவ்வொரு வேளையும் இந்த குளிகையில் ஒன்றை உணவில் கலந்து கொடுங்கள். அப்பொழுதுதான் பாதி மயக்கத்திலேயே இவர் இருப்பார். உறக்கமும் எந்நேரமும் இவரை ஆக்கிரமிக்கும்...’’ அன்று தலைமை மருத்துவர் சொன்ன வாசகங்கள் அப்படியே சாளுக்கிய மன்னரின் செவியில் இன்றும் எதிரொலித்தன.

சிறைக் கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே சென்றார். படுத்திருந்தப் பெண்ணை சுற்றி வந்தார். குனிந்து அவள் முகத்தை ஆராய்ந்தார்.
மெல்ல ஒலி எழுப்பாமல் வெளியே வந்து சிறைக்கதவைத் தாழிட்டார்.ஆலமரத்தின் வேர்களைப் போல் விக்கிரமாதித்தரின் முகமெங்கும் சிந்தனை
ரேகைகள் படர்ந்தன.‘‘சிந்திப்பதற்கு அவகாசமில்லை ராமபுண்ய வல்லபரே...’’ அழுத்தமாகச் சொன்னாள் சிவகாமி.
‘‘ஆனாலும்...’’ சாளுக்கிய போர் அமைச்சர் மென்று விழுங்கினார்.

‘‘வேறு வழியில்லை. இதை நாம் செய்தே ஆக வேண்டும்... இல்லையெனில் சாளுக்கிய மன்னர் நம்மை மன்னிக்க மாட்டார்!’’
சிவகாமி சொல்வது சரியென்றே விநயாதித்தனுக்கும் தோன்றியது. பார்வையை தன் குருநாதர் மீது திருப்பினான்.
ராமபுண்ய வல்லபரின் புருவங்கள் முடிச்சிட்டன. ‘‘இன்னும் ஏன் யோசிக்கிறீர்கள்..?’’
‘‘பாண்டிய மன்னரைப் பற்றி நினைக்க வேண்டாமா சிவகாமி..?’’ எரிச்சலுடன் கேட்டார் ராமபுண்ய வல்லபர்.
‘‘ஏன்... அவருக்கென்ன..?’’

‘‘என்ன இப்படி கேட்டுவிட்டாய்..?’’ விநயாதித்தனின் நாசி துடித்தது. ‘‘குருநாதர் சொல்வது சரிதானே..? பாண்டிய மன்னரின் விருந்தினராக நாம் மதுரைக்கு வந்திருக்கிறோம்...’’‘‘நாம் என என்னையும் சேர்க்க வேண்டாம்... நான் கைதியாக பாதாளச் சிறையில் அடைப்பட்டிருக்கிறேன்...’’ சிவகாமி
இடைமறித்தாள்.  ‘‘இதற்கு முழுக்க முழுக்க நீதானே காரணம்..?’’சொன்ன சாளுக்கிய போர் அமைச்சரை சிவகாமி உற்றுப்
பார்த்தாள். ‘‘நானா..?’’‘‘பின்னே... நாங்களா..? கரிகாலன் அடுக்கடுக்கடுக்காக உன் மீது குற்றம் சுமத்தியபோது எந்தப் பதிலும் பேசாமல் நின்றவள் நீதானே..?’’

‘‘அப்படி நின்றதால்தானேஇதைசாதிக்க முடிந்தது..?’’ என்றபடி தன் சிகையில் முடிச்சிட்டிருந்த சுருளான பட்டுத் துணியை எடுத்து ராமபுண்ய வல்லபரின் கரங்களில் திணித்தாள்.என்னவென்று அதை பார்க்க சாளுக்கிய போர் அமைச்சர் முற்பட்டார்.‘‘இங்கே பிரிக்காதீர்கள்! உங்கள் மாளிகைக்குச் சென்று சாளரங்களை அழுத்தமாக மூடிவிட்டு பிரித்துப் பாருங்கள்...’’‘‘இது...’’ விநயாதித்தன் இழுத்தான்.‘‘புறா வழியே வந்த உண்மையான செய்தி!’’ சிவகாமி கண்சிமிட்டினாள்.‘‘அப்படியானால் கரிகாலன் உன் மீது குற்றம் சுமத்தக் காரணமாக இருந்த புறா வழியே வந்தச் செய்தி..?’’ ஆச்சர்யத்துடன் ராமபுண்ய வல்லபர் கேட்டார்.

‘‘அவனை ஏமாற்ற நான் நடத்திய நாடகம்!’’
‘‘அதற்காக நீ சிறைப்பட வேண்டுமா..?’’
‘‘அப்பொழுதுதானே இந்தச் சிறையில் இருக்கும் மர்மத்தை கண்டறிய முடியும்!’’ராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.‘‘எதற்கு ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்கிறீர்கள்..?’’ சிவகாமி உதட்டைச் சுழித்தாள். ‘‘இந்நேரம் காஞ்சி கடிகையில் இருந்து சிறைச்சாலை தொடர்பான சுவடிகள் காணாமல் போய்விட்டதாக செய்தி வந்திருக்குமே!’’
‘‘சிவகாமி...’’

‘‘எதற்காக சத்தம் போடுகிறீர்கள் ராமபுண்ய வல்லபரே..? உங்கள் முன்தானே நிற்கிறேன்! என்ன... நமக்கு நடுவில் கம்பிகள் இருக்கின்றன!’’
‘‘விளையாடாதே!’’ ராமபுண்ய வல்லபரின் உதடுகள் துடித்தன. ‘‘இந்தச் சிறையில் என்ன மர்மம் இருக்கிறது..?’’
‘‘காஞ்சி சிறையில் இல்லாத மர்மம்!’’‘‘சிவகாமி...’’‘‘எதற்கு என் பெயரை திரும்பத் திரும்ப மனனம் செய்கிறீர்கள்..?’’ சிவகாமி சிரித்தாள். ‘‘மர்மத்தை முழுமையாக அறிந்த பின் நானே உங்களுக்கு சொல்கிறேன்.

என்னை பரிபூரணமாக நம்புங்கள். தேவையில்லாமல் நான் பல்லவர்களின் பக்கம் சாய்ந்துவிட்டதாக நினைத்து உங்களை நீங்களே வருத்திக் கொள்ள வேண்டாம்! சென்று வாருங்கள். இன்றிரவு மதுரையின் மேல் புறாக்கள் பறக்கும். அப்பொழுது நான் சொன்னதை செய்யுங்கள்!’’‘‘நீ சொன்னதை அப்படியே சொற்கள் மாறாமல் ராமபுண்ய வல்லபரிடமும் விநயாதித்தனிடமும் இந்நேரம் சிவகாமி சொல்லியிருப்பாள் அல்லவா..?’’ தாயத்தை உருட்டியபடியே அரிகேசரி மாறவர்மர் கேட்டார்.

சட்டென்று கரிகாலன் நிமிர்ந்தான்.‘‘மதுரையின் மேல் புறாக்கள் பறக்க இன்னும் எத்தனை நாழிகைகள் இருக்கின்றன?!’’

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16834&id1=6&issue=20200515

 

அத்தியாயம் 99

‘‘கேட்டது புரியவில்லையா அல்லது தொடுத்த வினா அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதா..?’’ புருவங்களை உயர்த்தியபடியே கேட்டார் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மர்.

‘‘இரண்டுமே அல்ல மன்னா...’’ நிதானத்
துடன் பதிலளித்தான் கரிகாலன்.
‘‘பிறகு ஏன் எதுவும் சொல்லாமல் என்னைப் பார்க்கிறாய்..?’’
‘‘குழப்பத்தை வெளிப்படுத்த அடியேனுக்கு வேறு உபாயம் தெரியவில்லை...’’

‘‘உனக்கா..?’’ வாய்விட்டு நகைத்தார் அரிகேசரி மாறவர்மர்.
‘‘குழம்புவது உன் அகராதியிலேயே கிடையாதே!’’
‘‘அகராதிக்கு சொற்களே சூழலில் இருந்துதானே மன்னா கிடைக்கின்றன..?’’
‘‘அப்படியொரு சூழல் இக்கணத்தில் பிறந்திருக்கிறதா..?’’
‘‘ஆம் மன்னா...’’

‘‘அதாவது நாம் தாயம் ஆடும் சூழலைக் குறிப்பிடுகிறாய்...’’
‘‘தாயத்தை உருட்டியபடியே நீங்கள் கேட்ட கேள்விகளால்
உருவாகி இருக்கும் சூழலைக் குறிப்பிடுகிறேன்...’’

‘‘அப்படியொரு புதிய சூழலை என் வினாக்கள் உருவாக்கி இருக்கிறதா என்ன..?’’
‘‘உருவாகி இருப்பதால்தானே மன்னா அடியேன் பேச்சிழந்து நிற்கிறேன்...’’
‘‘ஆனால், தொடுத்த வினாக்கள் பழமையானவை அல்லவா..?’’
‘‘பழமையில் இருந்துதானே மன்னா புதியவை பிறக்கின்றன...’’

‘‘என்னை பழமையானவன் என்றும் உன்னை புதியவன் என்றும் குறிப்பிடுகிறாயா..?’’
‘‘மீனே பழமையானது என்ற உயிரியலின் தோற்றச் செயல்பாட்டை
ஒருபோதும் நிராகரிக்க முடியாது என்ற உண்மையை நினைவு
படுத்துகிறேன் மன்னா...’’

பாண்டிய மன்னரின் நயனங்களில் திருப்தி மலர்ந்தது. ‘‘இதை புலி குறிப்பிடுவதால் ஏற்கத்தான் வேண்டும்!’’ நிறுத்திவிட்டு கரிகாலனின் கண்களை உற்றுப் பார்த்தார். ‘‘ஆனால், இப்பொழுது நான் குழம்பி நிற்கிறேன்...’’
‘‘எதனால் மன்னா...’’
‘‘நீ குறிப்பிட்ட வாக்கியத்தில் இருந்து பிறந்திருக்கும் சூழலால்!’’
‘‘சற்றே விளக்க முடியுமா மன்னா..?’’

‘‘புலியின் இயல்பு ரிஷபத்தை அடித்துக் கொல்வது! இப்படித்தானே
 நீ குறிப்பிட்ட உயிரியலின் தோற்றச் செயல்பாடு குறிப்பிடுகிறது..?’’
‘‘ஆம் மன்னா...’’
‘‘ஆனால், இங்கோ ரிஷபத்தைக் காக்க புலி முன்னால் நிற்கிறது! இதை நான் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்று
எதிர்பார்க்கிறாய்..?’’
‘‘அதே உயிரியலின் தோற்றச் செயல்பாட்டில் இருந்துதான் மன்னா...’’
‘‘அப்படியா..?’’

‘‘அப்படித்தான் என்று மட்டுமே இந்த சிறியவனால் விடையளிக்க முடிகிறது மன்னா...’’
‘‘அது எப்படி என இந்தப் பெரியவனுக்கு கொஞ்சம் எடுத்துச் சொல்ல முடியுமா...’’
‘‘தாங்கள் அறியாததா மன்னா... இருந்தாலும் இந்த எளியவனை பரிசோதிக்க கேட்கிறீர்கள்... புரிந்து கொண்டதை சொல்கிறேன்... தவறு இருந்தால் திருத்துங்கள்...’’

சொன்ன கரிகாலனை உற்றுப் பார்த்தார் அரிகேசரி மாறவர்மர். கரிகாலனின் கருவிழிகளில் எந்த பாசாங்கும் இல்லை என்பதைக் கண்டதும் தாயம் இல்லாத தன் கரத்தை உயர்த்தி மேலே சொல்லும்படி சைகை செய்தார்.

அதை ஏற்று கரிகாலன் தொடர்ந்தான். ‘‘வனமிருந்தால்தான் அது புலி... காட்டில் வாழ்ந்தால்தான் அது வேட்டைப் புலி! வனமற்ற நிலத்தில் வாழ சபிக்கப்பட்ட புலி, புலியல்ல... இன்னொரு வளர்ப்புப் பிராணி...’’
‘‘அவ்வளவுதானா..?’’

‘‘அவ்வளவேதான் மன்னா! சபிக்கப்பட்ட புலிக்கு அடைக்கலம் கொடுத்து வனமற்ற நிலத்திலும் வளமோடு அதை வளர்ப்பது ரிஷபம்தான்! எனவேதான் அந்த ரிஷபத்தை தன் தாய் ஸ்தானத்தில் வைத்து புலி வணங்குகிறது; ரிஷபத்தைக் காக்க முன்னால் வந்து நிற்கிறது, ஒரு வளர்ப்புப் பிராணியைப் போல்..!’’
‘‘என்றாலும் தன் மீதுள்ள கோடுகளை புலி மறைப்பதில்லையே!’’
‘‘அது புலியின் இயல்பு மன்னா...’’
‘‘வேட்டையாடுவதும் புலியின் குணம்தானே..?’’

‘‘அப்படித்தான் உயிரியலின் தோற்றச் செயல்பாடு குறிப்பிடு
கிறது மன்னா...’’
‘‘எனில் தன்னை வளர்க்கும் ரிஷபத்தை எப்பொழுது வேண்டுமானாலும் புலி வேட்டையாடும்... அப்படித்தானே..?’’
‘‘ஒருபோதும் தன் தாயை வேட்டையாடாது...’’
‘‘அதே தாயே மாற்றாந் தாயாக இருந்தால்..?’’

‘‘அன்னை என்றுமே அன்னைதான் மன்னா... தன் குழந்தைக்கு மட்டுமல்ல... தாயற்ற குழந்தைக்கும் பால் கொடுப்பதால்தான் அவள் அன்னை!’’
‘‘ஆனாலும் பெற்ற அன்னைக்கும் வளர்ப்பு அன்னைக்கும் வித்தியாசம் இருக்கிறதே..?’’
‘‘இதை நாட்டின் மக்களை தன் மக்களாகக் கருதும் மன்னரான நீங்கள் சொல்லலாமா..?’’  

‘‘பிரமாதம்...’’ வாய்விட்டு மெச்சினார் பாண்டிய மன்னர். ‘‘வளர்ப்புப் பிராணியாக மாறினாலும் புலி, புலிதான் என்பதை
நிரூபிக்கிறாய்...’’
‘‘தங்கள் ஆசிகள் மன்னா...’’
‘‘இந்த இடத்தில் இன்னொன்று கேட்கத் தோன்றுகிறது...’’
‘‘பதிலளிக்க சித்தமாக இருக்கிறேன் மன்னா...’’

‘‘ரிஷபமோ அடைக்கலம்தான் கொடுத்திருக்கிறது... எருதோ, புலிக்காக கானகம் ஒன்றையே சிருஷ்டிக்கத் தயாராக இருக்கிறது... எனில் வளர்ப்புப் பிராணியாக இருக்கும்
புலி என்ன செய்ய வேண்டும்..?’’

‘‘எருதின் கோரிக்கையை ஏற்காமல் ரிஷபத்தின் பக்கமே நின்று அதைக் காக்க
வேண்டும்!’’
‘‘ஏனோ? புலிக்கு வனம் வேண்டாமா..?’’
‘‘சுதந்திரத்தை விட சுவாசம் முக்கியம் மன்னா... கிடைக்கும் கானகமே தனக்கு உயிர் கொடுத்த ரிஷபத்தின் இடமாக இருக்கையில் அதை மறுப்பதே புலிக்கு அழகு!’’
‘‘வேட்டையாடும் எந்தப் புலியும் விசுவாசம் பார்ப்பதில்லை...’’

‘‘வளர்ப்புப் பிராணி விசுவாசத்தைத் தவிர வேறு எதையும் கணக்கில் கொள்வதில்லை!’’
‘‘எந்த ஓர் உயிரினமும் தன் தர்மத்தை மறப்பது அதர்மம்...’’
‘‘தர்மமும் அதர்மமும் தர்க்கத்துக்குள் அடங்குபவை மன்னா... மனித வாழ்க்கையோ தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவை... சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்வதே உயிரினத்தின் நியதி...’’  

‘‘அதைத்தான் நானும் சொல்கிறேன்! ஒருபோதும் புலி, வளர்ப்புப் பிராணி அல்ல!’’
‘‘ரிஷபம் இருக்கும்வரையில் புலி வளர்ப்புப் பிராணிதான்...’’
‘‘ரிஷபத்தை எருது அழித்து விட்டால்..?’’

‘‘பாதுகாப்பாக புலி இருக்கும் வரையில் எருதால் ரிஷபத்தை நெருங்கக் கூட முடியாது!’’
‘‘ஒருவேளை ரிஷபமும் எருதும் கூட்டு சேர்ந்தால்..?’’
‘‘அப்படி ஒருபோதும் நடக்காது மன்னா...’’
‘‘நடந்து விட்டால்..?’’

‘‘கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை அப்படி நடைபெற
சாத்தியமே இல்லை மன்னா...’’
‘‘ஒருவேளை எதிர்காலத்தில் அப்படி நடந்தால்..?’’

‘‘அப்பொழுது புலியின் வாரிசுகள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வார்கள்!’’
‘‘அதுவரை மீன் என்ன செய்ய வேண்டும்..?’’
‘‘கழுவும் நீரில் நழுவியபடியே இருக்க வேண்டும்...’’
‘‘இது புலியின் கட்டளையா..?’’
‘‘வளர்ப்புப் பிராணியின் வேண்டுகோள்!’’
‘‘இப்படி இறைஞ்சும்படி புலியை அனுப்பி வைத்தது ரிஷபமா..?’’

‘‘இல்லை! எருதின் திட்டத்தை அறிந்த வளர்ப்புப் பிராணியான புலி,
தானாகவே முன்வந்து இந்த கோரிக்கையை மீனின் முன்
சமர்ப்பிக்கிறது...’’
‘‘அது என்ன எருதின் திட்டம்..?’’
‘‘ரிஷபத்தை அழித்துவிட்டு மீனை ஒழிப்பது!’’
‘‘அது அவ்வளவு எளிதான செயல் என்று நினைக்கிறாயா..?’’

‘‘இல்லை என எருதே நினைக்கிறது! அதனால்தானே ரிஷபத்தை அழிக்க மீனின் தயவை நாடி அந்த எருதே இங்கு வந்திருக்கிறது!’’
‘‘ரிஷபமும் மீனின் உதவியை நாடித்தானே...’’‘‘வரவில்லை மன்னா! குறுக்கிட்டுப் பேசுவதற்கு மன்னிக்கவும். மீனின் உதவி தனக்குத் தேவை என ரிஷபம் நினைத்திருந்தால், தனது வளர்ப்புப் பிராணியை இங்கே அனுப்பியிருக்காது. மாறாக ரிஷபமே இங்கு வந்திருக்கும்!’’
‘‘எவர் உதவியும் இன்றி தன்னால் எருதை வீழ்த்த முடியும் என ரிஷபம் கருதுகிறதா..?’’

‘‘சின்ன திருத்தம் மன்னா... தான், வளர்க்கும் புலியின் உதவியுடன் எருதை வீழ்த்த முடியும் என ரிஷபம் நினைக்கிறது!’’
‘‘ஆக, வேண்டுகோள் வைக்க மட்டுமே புலி இங்கு வந்திருக்கிறது... அப்படித்தானே!’’
‘‘ஆம் மன்னா...’’
‘‘இதை மீன் நம்பும் என நினைக்கிறாயா..?’’

‘‘நம்ப வேண்டும் என்றே புலி மனதார பிரார்த்தனை செய்கிறது! ஏனெனில் ரிஷபத்துக்கும் மீனுக்கும் நட்பும் இல்லை... பகையும் இல்லை. தற்சமயம் அவரவர் இடங்களில் அவரவர் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது ரிஷபத்தின் இடத்தைக் கைப்பற்ற எருது முயல்கிறது. இந்த நேரத்தில் ரிஷபத்துக்கும் எருதுக்கும் இடையில் மீன் நுழையாமல் வேடிக்கை பார்த்தால் நன்றாக இருக்குமே என புலி நினைக்கிறது. ரிஷபமோ எருதோ... இறுதியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அதை வைத்து தன் அடுத்த கட்ட நகர்வை மீன் திட்டமிட்டால் அதற்கு சேதாரம் ஏற்படாதே என்று யோசிக்கிறது...’’

‘‘வளர்ப்புப் பிராணியாக இருந்தாலும் தந்திரமாகத்தான் புலி இருக்கிறது!’’
‘‘தம் கோடுகளை அவை மறைப்பதில்லை என சில கணங்களுக்கு முன் தாங்கள்தானே மன்னா குறிப்பிட்டீர்கள்!’’
‘‘நிறைய குறிப்பிட்டேன். இது மட்டும்தான் உன் நினைவில்
தங்கியிருக்கிறதா..?’’

‘‘சொல்லப்படும் செய்திகளில் தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக் கொள்வதுதானே உயிரினத்தின் இயல்பு!’’
‘‘அந்த இயல்புப்படிதான் புலி நடந்து கொள்கிறதா..?’’

‘‘வளர்ப்புப் பிராணி அப்படித்தான் நடந்து கொள்கிறது மன்னா!’’
‘‘இதன் அடிப்படையில்தான் கோரிக்கை வைக்கப்பட்டதா..?’’
‘‘ஆம் மன்னா!’’

‘‘இதை சொல்லத்தான் புலி... உன் மொழியில் வளர்ப்புப் பிராணி... இங்கு வந்திருக்கிறதா..?’’
‘‘அதற்காகவும்தான் மன்னா..!’’
‘‘எனில் இன்னொரு காரணமும் இருக்கிறது...’’
‘‘அது மீனுக்கே தெரியும் மன்னா...’’

‘‘கேள்வி, மீனுக்குத் தெரியுமா தெரியாதா என்பதல்ல...
இன்னொரு காரணத்தைச் சொல்ல தன் வளர்ப்புப் பிராணிக்கு ரிஷபம் உத்தரவிட்டுள்ளதா இல்லையா என்பதுதான்!’’  
‘‘இதற்கு உத்தரவிட வேண்டுமென்று அவசியமில்லை மன்னா...கடலின் நீள அகலங்களும், ஆழங்களும் எருதை விட, ரிஷபத்தை விட, புலியை விட மீனுக்கு நன்றாகத் தெரியும் என்பது...’’

‘‘...ரிஷபத்துக்கும் வளர்ப்புப் பிராணியான புலிக்கும் நன்றாகவே தெரியும்! அப்படித்தானே..?’’
‘‘அப்படியேதான் மன்னா...’’
‘‘இப்படி சொல்லச் சொன்னது...’’
‘‘...ரிஷபமல்ல மன்னா...’’
‘‘வளர்ப்புப் பிராணியே சுயமாகச் சொல்கிறதா..?’’

‘‘ஆம் மன்னா! இப்படி சுயத்துடன் புலியை வாழ ரிஷபம் அனுமதித்திருப்பதால்தான்... ரிஷபம், புலியின் அன்னையாக மாறியிருக்கிறது... ரிஷபத்தைக் காக்க புலி முன்னால் நிற்கிறது..!’’‘‘மீனிடம் தைரியமாக நின்று இதை சொல்கிறது! ஆனால், தொடக்கத்தில் கேட்ட இரு கேள்விகளுக்கு மட்டும்் விடை அளிக்காமல் பேச்சை மாற்றுகிறது...’’ தாயத்தை உருட்டினார் அரிகேசரி மாறவர்மர்.

‘‘மன்னா...’’
‘‘சரி... மூன்றாவது கேள்விக்காவது பதிலைச் சொல்...என் முன் இங்கு அமர்ந்திருப்பது ரிஷபத்தின் உண்மையான வளர்ப்புப்
பிராணியா அல்லது எருதின் வளர்ப்புப் பிராணியா..?’’‘‘மன்னா...’’‘‘சொல்! நீ உண்மையான கரிகாலனா அல்லது கரிகாலன்
வேடத்தில் வந்திருக்கும் போலியா?!’’

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16855&id1=6&issue=20200522

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அத்தியாயம் 100

‘‘ஏன் இப்படி திகைத்து அதிர்ச்சியில் சிலையாக மாறியிருக்கிறாய் கரிகாலா..?’’ வாய்விட்டுச் சிரித்தார் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மர். ‘‘இப்படியொரு நிலையைத்தானே சாளுக்கியர்கள் மத்தியில் சிவகாமியை முன்வைத்து சிருஷ்டித்திருக்கிறாய்..? ராஜ தந்திரத்தில் இது அனுமதிக்கப்பட்டதுதான் என்றாலும் நீ செய்யும் காரியம் கத்தியின் மீது நடப்பதற்கு சமம்... சற்றே பிசகினாலும் நீ விசுவாசம் காட்டும் பல்லவர்களையும் அது பதம் பார்த்துவிடும்...’’‘‘மன்னா...’’

‘‘நீ உண்மையான கரிகாலனா அல்லது கரிகாலன் வேடத்தில் வந்திருக்கும் போலியா என்று உன்னைப் பார்த்து நான் கேட்டது உன்னால் உருவாக்கப்பட்ட சூழலை உனக்கே புரிய வைக்கத்தான்...’’‘‘மன்னா...’’

‘‘உன்னை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் கரிகாலா... உன்னளவு திறமை வாய்ந்தவனை இதுவரை நான் கண்டதில்லை. நல்லவேளையாக நீ பல்லவ இளவரசனாக இல்லை... இல்லையென்றால் என் மகன் மிகப்பெரிய எதிரியை தன் ஆட்சிக் காலத்தில் எதிர்கொண்டிருப்பான்...’’  
கரிகாலன் சற்றே முன்நகர்ந்து பாண்டிய மன்னரின் கால்களைத் தொட்டு வணங்கினான்.

நெகிழ்ச்சியுடன் அவனது தோள்களைத் தொட்டுத் தூக்கினார் அரிகேசரி மாறவர்மர். ‘‘நீ சிருஷ்டித்திருப்பது பத்மவியூகம். அபிமன்யு போல் அல்லாமல் இந்த பத்மவியூகத்திலிருந்து நீ சேதாரமின்றி வெளியேறுவாய் என்று நான் நம்புகிறேன்...’’‘‘தங்கள் நம்பிக்கையை கண்டிப்பாகக் காப்பாற்றுவேன் மன்னா...’’ ‘‘நல்லது... உன்னால் பாண்டியர்களின் பாதாளச் சிறைக்கு அனுப்பப்பட்ட சிவகாமி யார் என்றெல்லாம் கேட்கப் போவதில்லை... அவள் உன் காதலியா அல்லது பல்லவர்களின் இளவரசியா அல்லது உண்மையான சிவகாமியின் தோற்றத்தில் அனுப்பப்பட்ட சாளுக்கியர்களின் ஒற்றர் படைத்தளபதியா என்பதை எல்லாம் எங்கள் ஒற்றர் படை ஏற்கனவே என்னிடம் தெரிவித்துவிட்டது...’’

‘‘பாண்டியர்களின் ஒற்றர் படையை ஒருபோதும் நான் குறைத்து மதிப்பிடவில்லை மன்னா...’’‘‘அதற்கு மாறாக உனது திறமையின் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்திருக்கிறாய்...’’ கரிகாலனின் கருவிழிகளை உற்றுப் பார்த்தபடியே சொன்னார் பாண்டிய மன்னர்.இம்முறை அவரது பார்வையை எதிர்கொள்ளாமல் தலைகுனிந்தான் கரிகாலன்.‘‘தலையைக் குனிவது புலிக்கு அழகல்ல... என்னதான் உன்னை நீயே வளர்ப்புப் பிராணி என்று கூறிக்கொண்டாலும் மீனைப் பொறுத்தவரை என்றுமே நீ புலிதான்... சாளுக்கியர்களுக்கு எதிராக நீ நடத்தி வரும் நாடகம் பாண்டிய நாட்டைப் பாதிக்காத வரையில் ஒரு பார்வையாளனாக நான் வேடிக்கை பார்ப்பேன்... இதை மட்டும் இந்தக் கணத்தில் என்னால் சொல்ல முடியும்... உறுதி அளிக்க முடியும்...’’‘‘நன்றி மன்னா... இந்த நாடகத்தில் மீனுக்கு எந்த கதாபாத்திரமும் இல்லை... இதை என்னால் இந்தக் கணத்தில் அழுத்தம்திருத்தமாகச் சொல்ல முடியும்...’’‘‘அதங்கோட்டாசான் கூடவா..?’’

அரிகேசரி மாறவர்மர் இப்படிச் சொன்னதும் கரிகாலன் நிமிர்ந்து அவரைப் பார்த்தான்.‘‘பல்லவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் மட்டுமல்ல... சாளுக்கியர்களின் ஒவ்வொரு நகர்வையும் மட்டுமல்ல... உனது ஒவ்வொரு காலடிச்சுவட்டையும் கூட எனது ஒற்றர்கள் கண்காணித்து வருகிறார்கள்... காஞ்சி சிறையில் நீயும் சிவகாமியும் எதைத் தேடினீர்கள்... இப்பொழுது மதுரை சிறைக்கு உன்னால் எதற்காக சிவகாமி அனுப்பப்பட்டிருக்கிறாள்...’’
‘‘என்னால் சிவகாமி அனுப்பப்படவில்லை மன்னா... அவள் பல்லவ இளவரசியாக வேடமிட்டிருக்கும் சாளுக்கிய ஒற்றர் படைத் தலைவி...’’
‘‘என்னிடமே இந்த விளையாட்டைத் தொடர்கிறாயா..?’’‘‘அதில்லை மன்னா... நான் சொல்ல வருவது...’’
‘‘...உண்மை எனக்குத் தெரியும்... ஆட்டம் போதும். முடித்துக் கொள்...’’‘‘மன்னா...’’

‘‘பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மரின் தாயாதியான ஹிரண்ய வர்மர், உங்களுக்கு அளித்த ஆயுதக் குவியலும் அக்குவியல் இருந்த மலைக் குகையும் உனக்கு நினைவில் இருக்கிறதா..?’’கரிகாலன் தலையசைத்தான்.‘‘அந்தக் குகையின் மற்றொரு மூலையில் இருக்கும் பாதாளச் சிறையில்தான்உண்மையானசிவகாமியை சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர் அடைத்து வைத்திருக்கிறார்... என் கணிப்பு சரியெனில், இந்நேரம் அவர் அங்கு சென்று, தான் அடைத்து வைத்திருக்கும் சிவகாமி மயக்கத்தில் இருக்கிறாளா என பரிசோதித்திருப்பார்...’’கரிகாலன் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக நின்றான்.

‘‘பிடி இறுகி வருகிறது கரிகாலா... உடனடியாக நீ சிருஷ்டித்த பத்மவியூகத்தில் இருந்து வெளியே வா...’’‘‘இந்தச் சிறியவன் மீது தாங்கள் கொண்டிருக்கும் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி மன்னா... தாங்கள் கூறியபடியே வெளியே வந்து விடுகிறேன்...’’‘‘என்னைத் திருப்திப்படுத்தச் சொல்கிறாயோ அல்லது உண்மையிலேயே வெளியே வரப் போகிறாயோ... அது உன் விருப்பம்... ஆனால் ஒன்று - பொழுது விடிவதற்குள் அதங்கோட்டாசானையும் அவரால் பயிற்சி அளிக்கப்பட்ட வீரர்களையும் மதுரையில் இருந்து வெளியேற்றிவிடு... இந்த இரவு மட்டுமே உனக்கு அவகாசம்...’’
‘‘மன்னா...’’

‘‘எனக்கு பாண்டியர்களின் நலம் முக்கியம் கரிகாலா... பல்லவ - சாளுக்கிய பிரச்னையில் என் மக்களின் தலை உருள்வதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது...’’ ‘‘அப்படி நடக்காது மன்னா...’’‘‘நடக்காமல் இருப்பதே பல்லவர்களுக்கும் உனக்கும் நல்லது!’’ அழுத்திச் சொன்ன பாண்டிய மன்னர், விடை கொடுப்பதற்கு அறிகுறியாக அறைக் கதவைப் பார்த்தார்.

புரிந்துகொண்டதுபோல் கரிகாலன் தலைவணங்கினான். ‘‘நன்றி மன்னா... நான் வருகிறேன்...’’அறைக் கதவை அவன் நெருங்கியபோது அரிகேசரி மாறவர்மர் அழைத்தார். ‘‘கரிகாலா...’’நின்று திரும்பி அவரைப் பார்த்தான். ‘‘மன்னா...’’‘‘சில கணங்களுக்கு முன் ரிஷபம் எருது குறித்து உரையாடினோம் அல்லவா..?’’‘‘ஆம் மன்னா...’’‘‘அப்பொழுது மருந்துக்குக் கூட நான் வராகத்தைக் குறிப்பிடவில்லை...’’‘‘காரணம் புரிந்தது மன்னா... ரிஷபமும் எருதும் ஒன்றுதான் என்பதை குறிப்பால் உணர்த்தினீர்கள்... அதாவது பல்லவர்களும் சாளுக்கியர்களும் வேறு வேறல்ல... சாதவாகனப் பேரரசில் சிற்றரசர்களாக இருந்தவர்கள்... ஒரே உறையில் இருந்த இரு கத்திகள் என்பதாலேயே தொடக்கம் முதல் உரசிக் கொண்டிருக்கிறார்கள்... இன்றைய வராகம் நிஜத்தில் எருதுதான்... என்பதை இந்த சிறியவனுக்குப் புரியவைக்க முயற்சித்தீர்கள்...’’அரிகேசரி மாறவர்மரின் கண்களில் கனிவு வழிந்தது. ‘‘உன் முயற்சி வெற்றி பெற வேண்டுமென்று எல்லாம்வல்ல மதுரை மீனாட்சியைப் பிரார்த்திக்கிறேன்...’’மீண்டும் அவரை வணங்கிவிட்டு கரிகாலன் அறைக்கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான்.

அவனது வருகைக்காகவே அங்கு பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரன் நின்று கொண்டிருந்தான்!
‘‘உறங்கச் செல்லவில்லையா..?’’ கரிகாலன் ஆச்சர்யத்துடன் கேட்டான்.‘‘உன்னுடன் இந்த இரவு முழுக்க பேசிகொண்டிருக்க வேண்டுமென்று தோன்றியது... உனக்கொன்றும் பிரச்னையில்லையே..?’’ இரணதீரன் புருவத்தை உயர்த்தினான்.‘‘பிரச்னையா..? மகிழ்ச்சியாக இருக்கிறது... வா...’’ புன்னகையுடன் சொல்லிவிட்டு இரணதீரனுடன் நடந்தான்.

இன்றிரவு முழுக்க உன் தந்தையின் கட்டளைப்படி என்னைக் கண்காணிக்கப் போகிறாய்... அப்படித்தானே..?’ மனதுக்குள் கரிகாலன் சொல்லிக் கொண்டான். அதேநேரம் வேறொரு வினாவும் அவன் உள்ளத்தில் பூத்தது. ‘ஆமாம்... தாயத்தை தரையில் உருட்டாமல் தன் கைகளிலேயே பாண்டிய மன்னர் உருட்டிக் கொண்டிருந்தார்... இதற்கு என்ன அர்த்தம்..?’

‘‘ம்...’’ கனைத்துவிட்டு தன் கையில் இருந்த பட்டுச் சுருளை சாளுக்கிய இளவரசனான விநயாதித்தனிடம் கொடுத்தார் ராமபுண்ய வல்லபர்.
மவுனமாக அதை வாங்கிப் படித்தான் விநயாதித்தன்.‘இன்றிரவு மதுரையின் மேல் புறாக்கள் பறக்கும்... அதுதான் மதுரையில் பயிற்சி பெற்று வரும் பல்லவ வீரர்களுக்கான சமிக்ஞை. இதனைத் தொடர்ந்து கருக்கலில் மதுரைக் கோட்டைக் கதவுகள் திறக்கப்பட்டதும் வணிகர்களோடு வணிகர்களாக அந்த வீரர்கள் வெளியேறுவார்கள்.

வடக்கு நோக்கிச் செல்லும் அவர்களை மதுரை கோட்டைக்கு மூன்று கல் தொலைவில் வளைத்துப் பிடிக்கவும்...’
‘‘நம்மிடம் சிவகாமி ரகசியமாகக் கொடுத்து அனுப்பிய செய்தி இதுதான்...’’ தன் அறையில் இருந்த சாளரத்துக்கு வெளியே வானத்தைப் பார்த்தபடி ராமபுண்ய வல்லபர் சொன்னார். ‘‘இது நாமும் அறிந்த செய்திதான்... என் ஊகம் சரியெனில், மதுரை மன்னரும் இதை அறிவார்... இப்படி எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தை ரகசிய செய்தியாக நம்மிடம் ஏன் சிவகாமி கொடுக்க வேண்டும்..?’’
விநயாதித்தன் அமைதியாக அவரைப் பார்த்தான்.

‘‘இந்தச் செய்தியை புறா வழியே சிவகாமிக்குத் தெரியப்படுத்தியவர் யாராக இருக்கும் விநயாதித்தா..?’’
‘‘தெரியவில்லை குருநாதா...’’‘‘அதுவும் சரியாக பல்லவ இளவரசருக்கு நாம் இரவு விருந்து அளிக்கும்போது புறா வழியே சிவகாமிக்கு செய்தி வரவேண்டுமா..? ஒற்றர் படையில் கடைநிலை வீரனாக இருப்பவன் கூட அதுபோன்ற சூழலில், தான் அனுப்பும் செய்தி சேர வேண்டும் எனக் கணக்கிட மாட்டானே..?’’விநயாதித்தன் திரும்பி, மூடியிருந்த அறைக்கதவை உற்றுப் பார்த்தான்.

‘‘எதற்காக அறைக்கதவை ஆராய்கிறாய் விநயாதித்தா..?’’ திரும்பி சாளுக்கிய இளவரசனை நேருக்கு நேர் பார்த்தபடி கேட்டார் சாளுக்கிய போர் அமைச்சர்.‘‘பதிலுக்காக குருதேவா...’’ நிதானமாகச் சொன்னான் விநயாதித்தன்.‘‘என்ன பதில்..?’’‘‘நீங்கள் அனுப்பிய வீரர்களிடம் இருந்து வரப்போகும் பதில்!’’பெருமையுடன் தன் சீடனை அவர் பார்த்தபோது, அறைக்கதவைத் திறந்துகொண்டு நான்கு வீரர்கள் உள்ளே நுழைந்தார்கள்.

அவர்கள் தூக்கி வந்தது கடிகை பாலகனை என்பது தீபத்தின் ஒளி இல்லாமலேயே ராமபுண்ய வல்லபருக்கும் விநயாதித்தனுக்கும் புரிந்தது.
வந்த வீரர்களில் தலைவன் போல் இருந்தவன் முன்னால் வந்து சாளுக்கிய போர் அமைச்சரையும் சாளுக்கிய இளவரசனையும் வணங்கினான். ‘‘மதுரையிலேயேதான் இவர் பதுங்கி இருந்தார்...’’ கடிகை பாலகனை சுட்டிக் காட்டினான். ‘‘எந்த இடத்தில்..?’’ கேட்ட ராமபுண்ய வல்லபரின் கண்கள் ஒளிர்ந்தன.

‘‘பாதாளச் சிறைக்குச் செல்லும் வழியில்!’’
ராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
‘‘இவரிடம் இருந்து சிலவற்றைக் கைப்பற்றி இருக்கிறோம்...’’சொன்ன வீரர்களின் தலைவனைப் பார்த்தான் விநயாதித்தன். ‘‘புறாக்களையா..?’’
‘‘இல்லை இளவரசே...’’‘‘பிறகு..?’’

‘‘செய்திகளை...’’ என்றபடி 15 பட்டுச் சுருள்களை எடுத்து வீரர்களின் தலைவன் காண்பித்தான். ‘‘அனைத்திலும் ஒரே செய்திதான் ஒரே மாதிரியாக எழுதப்பட்டுள்ளது...’’‘‘என்ன செய்தி அது..?’’ நாசி அதிர சாளுக்கிய போர் அமைச்சர் கேட்டார்.‘‘இன்றிரவு மதுரையின் மேல் புறாக்கள் பறக்கும்... அதுதான் மதுரையில்  பயிற்சி பெற்று வரும் பல்லவ வீரர்களுக்கான சமிக்ஞை.

இதனைத் தொடர்ந்து  கருக்கலில் மதுரைக் கோட்டைக் கதவுகள் திறக்கப்பட்டதும் வணிகர்களோடு  வணிகர்களாக அந்த வீரர்கள் வெளியேறுவார்கள். வடக்கு நோக்கிச் செல்லும்  அவர்களை மதுரைக் கோட்டைக்கு மூன்று கல் தொலைவில் வளைத்துப் பிடிக்கவும்...’’ படுத்த நிலையில் கரிகாலனைக் கொத்தாகத் தன் தலைக்கு மேல் தூக்கினாள் சிவகாமி.சரியாக அவளது அதரங்களுக்கு நேராக வந்ததும் அதில் தன் உதடுகளைப் பதித்தான் கரிகாலன்.நான்கு உதடுகளும் பின்னிப் பிணைந்தன!

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16879&id1=6&issue=20200529

  • Thanks 1
Link to comment
Share on other sites

ரத்த மகுடம்-101

நகரம் என்பது மண் அல்ல. நகரம் என்பது மனிதர்களும் அல்ல. நகரம் என்பது நினைவுகள். நகரம் அல்லாத பிராந்தியங்களில் வசிப்பவர்களுக்கு மண்ணும் மனிதர்களும் முக்கியமாகத் தெரிவார்கள். நகரவாசிகளுக்கு நினைவுகள் மட்டுமே நெடுந்துணை. ஏனெனில் நகரங்களுக்கு வந்து போகிறவர்கள் மிகுதி.
22.jpg
நிலைத்திருப்போர் ஒப்பீட்டளவில் குறைவானவர்கள். அதனால்தான் காலங்கள் உருண்டோடினாலும் நகரமே அழிந்தாலும் நகர நினைவுகள் மட்டும் தலைமுறைதோறும் தொடர்கிறது. நினைவுகளின் தொகுப்புதானே தொன்மங்களின் அடித்தளம்?
 
இல்லாத நகரத்துக்கே இது பொருந்தும் என்னும்போது மூத்த குடியின் மூத்த நகரான மதுரைக்கு இது உச்சமாக அல்லவா பொருந்தும்? அதுவும் காலங்களைக் கடந்தும் தன் கம்பீரத்தையும் ஜொலிப்பையும் இருப்பையும் நடமாட்டத்தையும் இழக்காமல் இருக்கும் நகரமல்லவா மதுரை..?
 

அதனால்தானே மதுரை குறித்த நினைவுகளின் தொகுப்பு பரிபாடல்களுக்கு முன்பே தோன்றி சிலப்பதிகாரம், மணிமேகலை, மதுரைக் காஞ்சியில் நிலைபெற்று அரிகேசரி மாறவர்மரின் ஆட்சிக் காலத்திலும் தன் தடங்களைப் பதித்து வருகிறது...

இதனால்தானே ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் இமயத்தை விட உயர்ந்ததாக மதுரை நினைவுகள் வீற்றிருக்கின்றன?!
இதை மெய்ப்பிப்பது போலவும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அதைக் கடத்தவும் தங்கள் பங்களிப்பைச் செய்வது போல்
அன்றைய இரவுக் காவல் பணிக்கு நியமிக்கப்பட்ட பாண்டிய வீரர்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இமயம் கொலுவீற்றிருந்தது! அது அவர்களது நடை உடை பாவனைகளிலும் பிரதிபலித்தது! உறங்கா நகரத்தை உறங்க வைக்க அவர்கள் முயற்சிக்கவேயில்லை. மாறாக, உறங்காதவர்களுக்கும் உறங்குபவர்களுக்கும் பாதுகாப்பு அளித்துக் கொண்டிருந்தார்கள்!

குறிப்பாக, மதுரைக்கே அழகு சேர்க்கும் வைகை நதிக்கரையில்!இரவின் இரண்டாம் ஜாமம் முடிந்து மூன்றாம் ஜாமம் தொடங்கப் போவதற்கான அறிகுறிகளை நட்சத்திரங்கள் அறிவித்துக் கொண்டிருந்தன. அதைக் குறித்து சிறிதும் கவலைப்படாமல் நதிக்கரையில் இருந்த சுங்கச் சாவடி பகலைப் போலவே பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது.

ஆங்காங்கே தூண்களில் பொருத்தப்பட்ட வளையங்களில் செருகப்பட்ட தீப்பந்தங்களின் ஒளி, இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தது. கணக்கர்கள் ஓய்வில்லாமல் சுவடிகளில் சரக்குப் போக்குவரத்தின் விவரங்களை எழுதிக் கொண்டிருந்தார்கள். அருகிலேயே எடை போடும் கருவி இருக்க... எடைக்குத் தகுந்தபடி நாணயங்களின் எண்ணிக்கையை அளவிட்டு வசூலிக்கும் பணியில் மும்முரமாக இருந்தார் வருவாய் அலுவலர்.

உள்நாட்டுச் சந்தைகளுக்கான பொருட்கள் கொற்கை துறைமுகத்தில் இருந்து சிறு படகுகள், தோணிகள் வழியே வைகை
நதியில் பயணித்து மதுரைக்கு வந்தன. அப்படி வந்த படகுகளும் தோணிகளும் சுங்கச் சாவடிக்குள் ஒன்றன்பின் ஒன்றாக நுழைய வரிசைகட்டி நின்றன.
மற்ற தேசங்களுக்கு ஏற்றுமதியாக வேண்டிய பொருட்கள் மாட்டு வண்டியில் சுங்கச் சாவடிக்குக் கொண்டுவரப்பட்டு சாவடியின் மறுபுறத்தில் இறக்கப்பட்டன.

இறங்கிய பொருட்கள் அடங்கிய மூட்டையைப் பிரித்துப் பார்த்து சோதனையிட்ட அரசாங்க ஊழியர்கள் பின்பு அவற்றை எடை போட்டனர். எந்த தேசத்துக்கு அப்பொருட்கள் செல்லப் போகிறதோ அதற்கேற்ப சுங்கத் தொகையை கணக்கர் கணக்கிட்டு அறிவித்துக் கொண்டிருந்தார்.  

அதற்கேற்ப உரிய நாணயங்களைப் பெற்றுக்கொண்ட வருவாய் அலுவலர், தன் உதவியாளர்களால் எழுதப்பட்டு தயார் நிலையில் இருந்த அத்தாட்சி ஓலையை ஒருமுறைக்கு இருமுறை படித்து சரிபார்த்துவிட்டு அரசாங்க முத்திரையைப் பொறித்துக் கொண்டிருந்தார்.

எடைபோடப்பட்டு அத்தாட்சி ஓலை வழங்கப்பட்ட சரக்கு மூட்டைகளை அந்தந்த வணிகர்களின் பணியாளர்கள் பாண்டிய வீரர்களின் மேற்பார்வையில் படகுகளிலும் தோணிகளிலும் வரிசையாக அடுக்கினர். ஒவ்வொரு மூட்டையிலும் அரக்கினால் முத்திரை பதிக்கும் பணியை இருவர் சளைக்காமல் செய்தனர்.

மொத்தத்தில் படகுகளும் தோணிகளும் வைகைக் கரையை விட்டு நகர்வதும் கரைக்கு வருவதுமாக இருந்தன. பகலிலாவது உச்சிப் பொழுதில் சில நாழிகைகள் ஓய்வு கிடைக்கும். இரவில் இயற்கை உபாதைகளைக் கழிக்கக் கூட நகர முடியாதபடிக்கு பணிச்சுமை அழுத்தும். அதுவும் துறைமுகங்களில் நங்கூரமிட்ட பிற தேசத்து பெரும் மரக்கலங்கள் கருக்கல் சமயத்தில் தம் பயணத்தைத் தொடர தயாராகும் என்பதால் அதற்குள் சரக்குகளைச் சேர்க்கவேண்டுமே என வணிகர்கள் பதற்றத்துடன் கூச்சலிட்டு தங்கள் பணியாளர்களை வேலை வாங்கிக் கொண்டிருந்தனர்.

இப்படி அனைவருமே தத்தம் பணிகளில் மும்முரமாக இருந்து கூச்சலிட்டுக் கொண்டிருந்ததால் எழுந்த நானாவித ஓசைகளை அனுபவித்துக் கொண்டிருந்த வைகை, ‘பார்த்தாயா எனது முக்கியத்துவத்தை’ என இரு கரைகளிடமும் மாறி மாறி கேட்டுக் கொண்டிருந்தது!
‘நாங்கள் மட்டும் சளைத்தவர்களா... எங்களை மிதித்துவிட்டுத்தானே பொருட்களை உன் மீது ஏற்றுகிறார்கள்...’ என இரு கரைகளும் தங்கள் மீது மோதிய வினாக்களுக்கு விடையளித்துக் கொண்டிருந்தன.

இவற்றையெல்லாம் கேட்டபடி தனக்குள் சிரித்துக் கொண்டான் அந்த சீனன். யார் கண்ணிலும் படாதவாறு சுங்கச் சாவடிக்கு ஒரு காத தொலைவில் இருந்த புதருக்குள் அமர்ந்திருந்த அவன், வைகையில் தன் கால்களை நனைத்தபடி வானத்தை ஏறிட்டான். தனக்குள் நேரத்தைக் கணக்கிட்டான்.
பிறகு சுங்கச் சாவடி பக்கம் தன் பார்வையைச் செலுத்தினான். இமைக்காமல் அங்குள்ள நடமாட்டத்தையே ஆராய ஆரம்பித்தான்.
‘‘யார் அந்த 15 பேர்..?’’ கர்ஜித்தார் ராமபுண்ய வல்லபர்.

‘‘எதற்காக ஒரே செய்தியை ஒரே மாதிரி எழுதியிருக்கிறாய்..?’’ குரலை உயர்த்தாமல், அதே நேரம் அழுத்தத்தைக் குறைக்காமல் வினவினான் விநயாதித்தன்.அலட்சியமாக அவர்கள் இருவரையும் நோக்கினான் கடிகை பாலகன்.

‘‘நாங்கள் இருவரும் கேட்டது காதில் விழவில்லையா..?’’ அவன் சிகையைப் பிடித்து உலுக்கினார் ராமபுண்ய வல்லபர்.
‘‘விழுந்தது...’’ கண்களால் சிரித்தான் கடிகை பாலகன்.விநயாதித்தன் அவனை உற்றுப் பார்த்தான். ‘‘பிறகு ஏன் பதில் சொல்லாமல் இருக்கிறாய்..?’’
‘‘கேள்வி தவறாக இருப்பதால்..!’’‘‘என்ன தவறைக் கண்டுவிட்டாய்..?’’
‘‘15 என்றார் சாளுக்கிய போர் அமைச்சர்...’’‘‘ம்...’’

‘‘ஆனால், 16 அல்லவா இளவரசே..? சிவகாமி வழியாக உங்களிடம் வந்து சேர்ந்ததையும் கணக்கில் சேர்க்க வேண்டுமல்லவா..?’’
ராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
‘‘சிவகாமிக்கு..?’’

‘‘அனுப்பியது நான்தான் ராமபுண்ய வல்லபரே...’’ அவர் கண்களை நேருக்கு நேர் பார்த்தபடி சொன்னான் கடிகை பாலகன்.
‘‘அவளுக்கு ஏன் அனுப்பினாய்..?’’ விநயாதித்தன் படபடத்தான்.‘‘சாளுக்கிய மன்னர்தான் அனுப்பச் சொன்னார்...’’
‘‘என் தந்தையேதான் அதே செய்தியை அதேபோல் 15 பட்டுத் துணிகளில் தனித்தனியாக எழுதச் சொன்னாரா..?’’
‘‘ஆம் இளவரசே! அவரது கட்டளைப்படிதான் நடக்கிறேன்!’’

‘‘எதற்காக ஒரே செய்தியை 16 துணிகளில் எழுதச் சொன்னார்..?’’
‘‘பாண்டியர்களையும் கரிகாலனையும் ஏமாற்றி திசைதிருப்ப...’’

‘‘இதை நாங்கள் நம்புவோம் என நினைக்கிறாயா..?’’ ராமபுண்ய வல்லபரின் நயனங்கள் தீயைக் கக்கின.
‘‘நம்பாவிட்டால் இதைக் காண்பிக்கச் சொன்னார்...’’ என்றபடி வராக உருவம் பொறித்த மோதிரம் ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்தான்.
அதைப் பெற்றுக்கொண்டு, எரிந்துகொண்டிருந்த விளக்கின் அருகில் சென்றவர், எண்ணெய்க்கசடை எடுத்து மோதிரத்தின் மீது தடவினார். பின்னர் தன் அங்கவஸ்திரத்தால் அதை பளபளவென்று தேய்த்தார். அவர் முகத்தில் குழப்பத்தின் ரேகைகள் படர்ந்தன. ‘‘மன்னரின் அந்தரங்க முத்திரைதான்... குழப்பமாக இருக்கிறது...’’ முணுமுணுத்தபடி விநயாதித்தனிடம் அந்த மோதிரத்தைக் கொடுத்தார்.

தன் சிகையைச் சரிசெய்தபடி இமையோரம் புன்னகைத்தான் கடிகை பாலகன்.அதைக் கவனித்த விநயாதித்தனின் புருவங்கள் முடிச்சிட்டன. ராமபுண்ய வல்லபரிடம் இருந்து பெற்ற மோதிரத்தை தீப்பந்தத்தின் அருகில் உயர்த்திப் பிடித்து ஆராய்ந்தான்.
பின்னர் நிதானமாக நடந்து கடிகை பாலகனின் அருகில் வந்தான்.

இமைக்கும் பொழுதில் ஓங்கி அவனை அறைந்தான்.
வலி தாங்காமல் சுருண்டு விழுந்தான் கடிகை பாலகன்.
‘‘இவனை நிற்க வைத்து முகத்தில் தண்ணீர் தெளியுங்கள்...’’
தங்கள் இளவரசரின் கட்டளையை அங்கிருந்த வீரர்கள் கணத்தில் நிறைவேற்றினார்கள்.

உதட்டோரம் குருதி வழிய மயக்கம் முழுமையாகத் தெளியாத நிலையில் விநயாதித்தனை ஏறிட்டான் கடிகை பாலகன்.
‘‘உண்மையைச் சொல்...’’ அடிக்குரலில் சீறிய விநயாதித்தன், கடிகை பாலகன் சுதாரிப்பதற்குள் அவன் நாசியில் ஒரு குத்துவிட்டான்.
உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்த அரிகேசரி மாறவர்மர், மெல்ல படுக்கையை விட்டு எழுந்தார்.  

அருகில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பாண்டிமாதேவியைக் கண்டதும் தனக்குள் புன்னகைத்தார். ‘கொடுத்து வைத்தவள்... கட்டியவனை நம்பி நிம்மதியாக உறங்குகிறாள்...’ஓசை எழுப்பாமல் கட்டிலை விட்டு இறங்கியவர் சாளரத்தின் அருகில் வந்தார். வானத்தை ஏறிட்டார். மதுரை மாநகரத்தை ஆராய்ந்தார். ‘மக்களில் பலர் உறங்குகிறார்கள்... சிலர் இரவிலும் தங்கள் தொழிலை கவனிக்கிறார்கள். எல்லோர் மனதிலும், நம் நலத்தை கவனிக்க மன்னன் இருக்கிறான் என்ற நம்பிக்கை இருக்கிறது... அந்த நம்பிக்கைக்கு நான் பாத்திரமானவன்தானா..? நம்பிக்கையைக் காப்பாற்றும் சக்தி எனக்கு இருக்கிறதா..?’ பெருமூச்சுடன் மீனாட்சியம்மன் கோபுரத்தைப் பார்த்தார்.

‘அன்னையே... உன் மகனின் நிலையைப் பார்த்தாயா..? இக்கணம் வரை பாண்டியர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை... ஆனால், அடுத்த கணத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாமே..? பல்லவ சாளுக்கிய பிரச்னையில் இதுவரை பாண்டியர்கள் சம்பந்தப்படாமல் இருக்கிறார்கள். ஆனால், விதி தொடர்புபடுத்திவிடும் போல் இருக்கிறதே..?

விருந்தினராக வந்திருக்கும் சாளுக்கிய இளவரசனும் நிம்மதியாக உறங்குகிறான்... தன் அத்தை வீட்டுக்கு வந்திருக்கும் பல்லவ உபசேனாதிபதியான சோழ இளவரசனும் எவ்வித கவலையும் இன்றி நித்திரையில் இருக்கிறான். ஆனால், அவ்விருவர் பிரச்னையிலும் சம்பந்தப்படாத பாண்டிய மன்னனான நான் மட்டும் உறக்கம் வராமல் தவிக்கிறேன்... இதென்ன சோதனை..? இன்றிரவு ஏதோ நடக்கப் போகிறது என உள்ளுணர்வு சொல்கிறது... அப்படி நடப்பது பாண்டி யர்களின் எதிர்காலத்துக்கு நன்மையைச் செய்யுமா, அல்லது...’

நினைத்துப் பார்க்க முடியாமல் அரிகேசரி மாறவர்மர் ஆலய கோபுரத்தை நோக்கி கையெடுத்து கும்பிட்டார். ‘அன்னையே... இந்த தேசத்தைக் காப்பாற்று...’சில கணங்கள் வரை இமைகளை மூடி தியானத்தில் ஆழ்ந்தவர் ஏதோ முடிவுடன் கண்களைத் திறந்தார். திரும்பி அடிமேல் அடியெடுத்து வைத்து அறைக்கதவின் அருகில் வந்தார். ஓசை எழுப்பாமல் தாழ்ப்பாளை அகற்றி வெளியே வந்தார்.சட்டென காவலுக்கு நின்றிருந்த வீரன் வணங்கினான்.

கண்களால் அவனை எச்சரித்துவிட்டு விடுவிடுவென பாதாளச் சிறையை நோக்கி நடந்தார்.‘‘சும்மா இருங்கள்...’’ சிணுங்கியபடி, தன் கொங்கைகளை நோக்கி நகர்ந்த கரிகாலனின் கைகளைப் பிடித்து தடுத்தாள் சிவகாமி.‘‘சும்மா இருந்தால் சுதந்திரம் எப்படி கிடைக்கும்..?’’ கேட்டபடி அவளது நாபிக்கமலத்தில் முத்தமிட்டான்.பாதாளச் சிறையின் கல்தரையும் பட்டு மெத்தையாக சிவகாமிக்கு இனித்தது!

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16905&id1=6&issue=20200605

  • Like 2
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

102

‘‘சுதந்திரத்துக்காக கச்சையின் மீது கை வைக்க வேண்டுமா..?’’ கரிகாலனுக்கு மட்டும் கேட்கும் வகையில் சிவகாமி முணுமுணுத்தாள்.‘‘ஆம்... பூரண சுதந்திரம்தானே பல்லவர்களின் லட்சியம்!?’’ கரிகாலனின் உதடுகள் அவள் செவியை வருடின.தன் உடலே யாழ் ஆக மாற... தேகத்தின் நரம்புகளில் இருந்து பிறந்த சப்தஸ்வரங்களால் சிவகாமி அதிர்ந்தாள். ‘‘ம்... ம்... உங்கள் போதைக்கு ஏன் பல்லவர்களை பயன்படுத்துகிறீர்கள்..?’’

20.jpg

‘‘நீ பல்லவ இளவரசியாக இருப்பதால்...’’ தன் நாக்கின் நுனியால் கச்சையை மீறிப் பிதுங்கிய அவளது கொங்கைகளின் பிளவில் கோடு கிழித்தான்.
துள்ளினாள்.

‘‘எறும்பு கடித்துவிட்டதா..?’’
புன்னகைத்தாள். ‘‘ஆமாம்... சோழ எறும்பு...’’
‘‘அது எப்படி பாண்டியர்களின் பாதாளச் சிறைக்கு வந்தது..?’’
‘‘பல்லவ இளவரசியைத் தேடி!’’ கலகலவெனச் சிரித்தாள்.

‘‘பின்னே... தேனைத் தேடித்தானே எறும்பு வரும்?!’’
‘‘அது சரி...’’ நாசிகள் அதிர புன்னகைத்தவள், ‘‘மிக்க மிக்க... நன்றி...’’ என்றாள்.‘‘எதற்கு..? தேனைச் சுவைக்க எறும்பு முற்படுவதற்கா..?’’ உதடுகளால் வினவியவன் தன் கரங்களை அவளது இடுப்புக்குக் கீழ் கொண்டு சென்றான்.
‘‘அங்கே என்ன தேடுகிறீர்கள்..?’’
‘‘தேனைத் தேடிச் சென்ற எறும்பு கடித்த இடத்தை! ஒத்தடம் தர வேண்டாமா..?’’
‘‘அவசியமில்லை...’’

‘‘வலிக்கவில்லையா..?’’
‘‘இன்பமாக இருக்கிறது!’’
‘‘பிறகு ஏன் துள்ளினாய்..?’’
‘‘உங்கள் நாக்கின் நுனியால் கோடு கிழித்ததால்...’’ என்று அவளால் எப்படிச் சொல்ல முடியும்?
மவுனமாக தரையில் நீண்டிருந்த தன் கால் கட்டை விரலால் அரைவட்டமிட்டாள்.
‘‘ஏன் பேசாமல் இருக்கிறாய்..?’’
‘‘சொற்களைத் தொலைத்துவிட்டேன்...’’

கரிகாலன் போலியாக அதிர்ந்தான். ‘‘நல்லவேளை இதை என்னிடம் சொன்னாய்...’’
‘‘வேறு யாரிடம் சொல்லவில்லை என்கிறீர்கள்..?’’
‘‘ராமபுண்ய வல்லபரிடம்!’’
‘‘அந்த வயதானவரை எதற்கு வம்புக்கு இழுக்கிறீர்கள்..?’’

‘‘நீ சொன்னதுடன் முழுமையாக சம்பந்தப்பட்டவர் சாளுக்கிய போர் அமைச்சரான அவர் என்பதால்!’’
‘‘புரியவில்லை...’’‘‘உனக்கா..?’’
‘‘என்ன மறுபடி மறுபடி புதிர் போடுகிறீர்கள்..?’’ குழப்பமும் கோபமுமாக சட்டென எழுந்தாள்.
‘‘புதிராகவே நீ இருப்பதால்!’’ சொன்ன கரிகாலன் அவளை இழுத்து தன் மேல் சாய்த்துக் கொண்டான்.

‘‘இதற்கெல்லாம் நான் மசிய மாட்டேன்... எதற்காக ராமபுண்ய வல்லபரை நம் உரையாடலில் இழுத்தீர்கள்..?’’
‘‘இழுக்கும்படி செய்தவளே நீதானே..?’’ தன் உள்ளங்கையை அவள் இடுப்பில் பரப்பியவன், ஆள்காட்டி விரலின் நுனியால் அவளது நாபிக் கமலத்தை துழாவினான்.சிவகாமியின் வயிற்றில் முளைத்திருந்த பூனை ரோமங்கள் சிலிர்த்தன. ‘‘அப்படியென்ன நான் செய்துவிட்டேன்..?’’ கேட்டவளின் குரலில் கோபம் குறைந்திருந்தது.

‘‘என்னதான் செய்யவில்லை..?’’ தன் உள்ளங்கையை மேல் நோக்கி நகர்த்தினான்.அவன் கரங்களைப் பிடித்து தடுத்தாள். ‘‘கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும்... மாறாக மற்றொரு வினா தொடுக்கக் கூடாது...’’

‘‘அப்படியென்ன தொடுத்துவிட்டேன்..?’’
‘‘அப்படியென்ன தொடுக்கவில்லை..?’’
‘‘இப்பொழுது பதில் கேள்வி கேட்பது யார்..?’’ கரிகாலன் நகைத்தான்.

‘‘பேச்சிலும் உங்களை வெல்ல முடியுமா..?’’
‘‘இதைத்தான் உன்னை நோக்கி மறைபொருளாகக் குறிப்பிட்டேன்...’’
‘‘எப்பொழுது..?’’ திரும்பி அவனை நோக்கி அமர்ந்தபடி கேட்டாள்.
‘‘சில கணங்களுக்கு முன்...’’
புருவங்கள் முடிச்சிட அவனை ஏறிட்டாள் சிவகாமி.

அவள் வதனத்தை தன்னிரு கரங்களிலும் ஏந்தினான் கரிகாலன். ‘‘சொற்களைத் தொலைத்துவிட்டேன் என்று நீ சொன்னதும்...’’
‘‘...நல்லவேளை இதை என்னிடம் சொன்னாய் என்றீர்கள்...’’ என்றபடி தன் முகத்தைத் திருப்பி அவன் உள்ளங்கையில் முத்தமிட்டாள்.
‘‘இதைத் தொடர்ந்த உரையாடலில் ராமபுண்ய வல்லபரின் பெயரை நான் இழுத்தேன்...’’ என்றபடி அவள் வதனத்தை தன் முகத்துக்கு நேராகக் கொண்டு வந்தான்.

‘‘ம்...’’ சிவகாமியின் நாசிகள் துடித்தன. பொங்கிய உணர்ச்சிகள் சுவாசத்தின் அளவை அதிகரிக்கவே... யாரும் அவிழ்க்காமலேயே அவளது கச்சையின் முடிச்சுகள் தளர ஆரம்பித்தன.‘‘ஏன் அவரது பெயரைக் குறிப்பிட்டேன் தெரியுமா..?’’ தன் உதட்டால் அவளது அதரங்களை உரசினான். ‘‘வாய்ச் சொல்லில் நீயே வல்லவள் என அவர் நினைக்கிறார்... உனது சொற்களின் மாயாஜாலத்தால் எதிரில் இருப்பவர்களை முழுமையாகக் குழப்பி விடுவாய்... உன் பக்கம் இழுத்துவிடுவாய்... என பரிபூரணமாக நம்புகிறார்... அப்படி அவரால் நம்பப்படும் நீ... என்னிடம் பேச முடியாமல் சொற்களைத் தொலைத்துவிட்டதாகச் சொன்னதை மட்டும் கேட்டால்..?’’‘‘கேட்டால்..?’’ அவனது நயனங்களை உற்றுப் பார்த்தபடி கேட்டாள்.

அவளது கருவிழிகளை விட்டு தன் பார்வையை அகற்றாமல் தொடர்ந்தான். ‘‘தன் நாட்டின் ஒப்பற்ற ஒற்றர் படைத் தலைவி இப்படி பேச்சிழந்து நிற்கிறாளே என்ற அதிர்ச்சியில் சிலையாகி இருப்பார்!’’  கரிகாலன் சொல்லி முடிப்பதற்குள் அவன் மார்பில் தன் இரு கரங்களையும் பதித்து அவனைத் தள்ளினாள்.இதை சற்றும் எதிர்பார்க்காத கரிகாலன், பாதாளச் சிறையின் கட்டாந்தரையில் மல்லாந்து விழுந்தான். எழுந்திருக்க முற்படவில்லை. மாறாக விட்டத்தைப் பார்த்து சிரிக்கத் தொடங்கினான்.

இதைக் கண்டு ஆவேசத்துடன் அவன் மீது சிவகாமி அமர்ந்தாள். அவன் கன்னங்களை மாறி மாறி அறைந்தாள்!
அரிகேசரி மாறவர்மர் நடப்பதை நிறுத்தினார். யோசனையில் ஆழ்ந்தவர், ஒரு முடிவுக்கு வந்ததுபோல் தன் பாதையை மாற்றி கரிகாலன் தங்கியிருந்த அறையை நோக்கிச் சென்றார்.அறைக்கதவு மூடியிருந்தது. தள்ளிப் பார்த்தார். உட்புறம் தாழிடப்பட்டிருந்தது.

ஓசை எழுப்பாமல் மெல்ல அடியெடுத்து வைத்து சாளரத்தின் அருகில் வந்தார். காற்றில் அசைந்துகொண்டிருந்த சாளரக் கதவை நன்றாகத் திறந்தார்.
அறையின் உள்ளே மங்கலாக எரிந்துகொண்டிருந்த விளக்கொளியில் பஞ்சணையும் அதில் தன் மகன் கோச்சடையன் இரணதீரன் ஆழ்ந்த நித்திரையில் இருப்பதும் தெரிந்தது. தன் நாசியை வருடிய காற்றில் மயக்கத்தின் அறிகுறியை அரிகேசரி மாறவர்மர் உணர்ந்தார்.

மயக்க சாம்பிராணியை அகலில் தூவி தன் மைந்தனை உறங்க வைத்துவிட்டு கரிகாலன் வெளியேறியிருக்கிறான்...கண்கள் சிவக்க திரும்பினார்.‘‘மன்னா... தங்களுக்காகத்தான் காத்திருக்கிறேன்!’’குரல் கேட்டு மீண்டும் சாளரத்தை நோக்கித் திரும்பினார் அரிகேசரி மாறவர்மர்.
சாளரத்தின் அந்தப் பக்கம், அறைக்குள் நின்றபடி இரணதீரன் புன்னகைத்தான்!‘‘இரணதீரா... உனக்கொன்றும்...’’‘‘ஆபத்தில்லை மன்னா..! மயக்க சாம்பிராணிக்கு மயங்குபவன் உங்கள் மைந்தனாக எப்படி இருப்பான்..?’’இமைகளை மூடி நிம்மதியுடன் திறந்தார் பாண்டிய மன்னர்.

 ‘‘கரிகாலன் எங்கே..?’’‘‘நீங்கள் எதிர்பார்த்து கணித்த இடத்துக்குச் சென்றிருக்கிறான்!’’ ‘‘எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய்..?’’
‘‘பாதாளச் சிறைக்குள் அவன் நுழைந்ததை என் இரு கண்களாலும் பார்த்தேன்!’’ கேள்வியுடன் அவனை நோக்கிவிட்டு சாளரக் கம்பிகளை அசைத்தார். கையோடு அது வந்தது! அரிகேசரி மாறவர்மரின் உதடுகளில் புன்னகை பூத்தது! ‘‘சிறைக் காவலர்கள்..?’’
‘‘கரிகாலனைத் தடுக்கவில்லை...’’‘‘ஏன்..?’’

‘‘தடுக்க வேண்டாம் என்று நீங்கள் நினைத்ததை அடியேன் உத்தரவாக பிறப்பித்தேன்!’’‘‘அப்படி நான் நினைத்தேன்...’’‘‘... என்று ஊகித்தேன் மன்னா! கரிகாலனைக் கையும் களவுமாகப் பிடிக்கத்தானே நீங்கள் திட்டமிட்டீர்கள்..?’’
பதிலேதும் சொல்லாமல் அரிகேசரி மாறவர்மர் சாளரத்துக்குள் தன் வலது கையை நுழைத்து இரணதீரனின் கேசத்தைத் தடவினார்.
தலையைக் குனிந்து அதை மவுனமாக ஏற்றான் இரணதீரன்.

அடுத்த கணம் பாண்டிய மன்னர் நெஞ்சை நிமிர்த்தியபடி பாதாளச் சிறையை நோக்கி நடக்கத் தொடங்கினார். அவர் பார்வை மீனாட்சியம்மனின் கோபுரத்தை நோக்கியது. பாண்டிய நாட்டையும் பாண்டிய தேசத்து மக்களையும் காப்பாற்ற அடுத்த மன்னன் தயாராகிவிட்டான்! எல்லாம் அன்னையே... உன் அருள்!சிரிப்பதையும் கரிகாலன் நிறுத்தவில்லை. சிவகாமி தன்னை அறைவதையும் தடுக்கவில்லை! ‘‘சாளுக்கிய ஒற்றர் படைத் தலைவியே...’’ மெல்ல அழைத்தான்.

‘‘இதே உதடுகள்தானே சில கணங்களுக்கு முன் என்னை பல்லவ இளவரசி என்று அழைத்தது... அதற்காகத்தானே உங்களுக்கு மிக்க மிக்க நன்றி சொன்னேன்...’’ அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டாள்!கரிகாலனின் உதட்டோரம் குருதி பூத்தது. தன் நாக்கினால் அதை சுவைத்தான். ‘‘உப்பு கரிக்கிறது! உப்பிட்ட பல்லவர்களை உள்ளளவும் நினை...’’ சொன்ன கரிகாலன் படுத்திருந்தபடியே தன் உடலை உதறினான். மறுகணம் அவன் மீது அமர்ந்திருந்த சிவகாமி, நிலைதடுமாறி தரையில் சரிந்தாள்.

அவளுக்கு குறுக்காக தன் கைகளை வலுவாக ஊன்றியவன், அவள் கன்னங்களைக் கடித்தான். ‘‘சாளுக்கிய மன்னருக்கு செய்தி அனுப்பிவிட்டாயா..?’’
சிவகாமியின் நயனங்கள் கனலைக் கக்கின. ‘‘என்ன செய்தி..?’’‘‘கொற்கையிலிருந்து மாமல்லபுரத்துக்கு வரும் மரக்கலங்களை ஆராயும்படி!’’வெறுப்புடன் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.