Jump to content

Recommended Posts

ஆரியப் புரட்டும் அயிரமீனும்

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி

சமஸ்கிருதத்திலிருந்தே பல தமிழ்ச் சொற்கள் உருவாயின என்று ஆரியர்கள் காலம் காலமாகப் புளுகி வருகின்றனர். அதற்கு எடுத்துக்காட்டாக அவர்கள் பயன்படுத்தும் சொற்களில் மிகவும் முக்கியமான சொல் தமிழில் நாம் புழங்கிவரும் "ஆயிரம்" என்னும் சொல்லாகும். ஆயிரம் என்னும் சொல் 'ஸகஸ்ர' என்னும் வடசொல்லில் இருந்தே பெறப்பட்டதாகக் காட்டுவர் ஆரியர்கள்.

தரம் உயர்ந்த வைரம், தரம் குறைந்த வைரம் என்று வைரக்கற்களின்  தரத்தைச் சோதித்து அறிய சாமானியனால் இயலாது; ஆனால், 'மணிநோட்டகன்' எனப்படும் வைரப் பரிசோதகன் எளிதில் கண்டுபிடித்துவிடுவான்.  அதுபோல், சொற்களின் வேர், சொற்பொருள் காரணம் போன்றவை மொழிநூல் இலக்கணம் அறிந்தவன் எளிதில் இனம் கண்டுகொள்வான். அதுபோல, ஆயிரம் என்னும் சொல் தூய தமிழ்ச் சொல்லே என்றும்  'ஸகஸ்ர' என்னும் வடசொல்லில் இருந்து வந்தது அன்று என்றும் நிறுவியவர் மொழிஞாயிறு என்று அறியப்பட்ட மொழிநூல் அறிஞர் தேவநேயப் பாவாணர் ஆவார். அதற்கு அவர் பயன்படுத்திய அறிவியல்முறை உத்தியே வேர்ச் சொற்களை இனம் காணுதல் என்பது.

முதலில் ஆயிரம் என்னும் சொல் தூய தமிழ்ச்சொல்லே என்று நிறுவினார் பாவாணர். எண்ணமுடியாத கணக்கற்ற நுண்மணலுக்கு அயிர் என்று தமிழில் வழங்குவர் என்பதை முதலாகக் கொண்டு, எண்ணற்றது என்ற பொருளில் அயிர் - அயிரம் - ஆயிரம் என்று வேர்ச்சொல் வழியில் அற்புதமாகச் சொன்னார் பாவாணர்.

அயிர் = நுண்மணல். அயிர் - அயிரம் - ஆயிரம்.

 ஆற்றுமணலும் கடற்கரைமணலும் ஏராளமாயிருப்பதால், மணற்பெயர் ஒரு பெருந்தொகைப் பெயராக உருவாயிற்று.


 எ.கா. :"வாழிய...நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே"
                "நீநீடு வாழிய...வடுவாழ் எக்கர் மணலினும் பலவே" - (புறம். 55)

மலையாளத்தில்.ஆயிரம் என்றும், குடகு மொழியில் .ஆயிரெ என்றும், கன்னடத்தில் சாவிர என்றும், துளு மொழியில் சாவிர என்றும், இந்தி மொழியில் ஹசார் (hazƒr) என்றும் வழங்கப்படுகின்றது.

வடமொழியில் இதற்கு மூலமில்லை. அகரமுதலாய சொற்கள் சகர முதலாய்த் திரிவதும், யகரம் வகரமாய் மாறுவதும் இயல்பாதலால், கன்னடத்தில் ஆயிரம் என்பது சாவிர எனத் திரிந்தது. இவ்வுண்மையை

"இளை - சிளை, உதை - சுதை, உவணம் - சுவணம், ஏண் - சேண், நீயிர் - நீவிர், சேயடி - சேவடி."

என்று திரியும் சொற்களால் ஒத்து நோக்கி அறியலாம்.

கன்னடச் சொல்லையொட்டியே துளுவச் சொல்லும், இவற்றையொட்டியே சமஸ்கிருதத்தில் சகர முதலாய் 'ஸகஸ்ர' என்றும் திரிந்துள்ளன. இதை அறியாமல், பேராசிரியர்.பரோ அவர்கள் வடசொல்லையே தென்சொல்லிற்கு மூலமாய்த் தம் அகரமுதலியிற் காட்டியிருப்பது, தமிழைப் பற்றிய தவறான  கருத்தினாலேயே என்று நிறுவினார் பாவாணர்.

"பாவாணர் கடும் தமிழ்ப்பற்றினால் இப்படியெல்லாம் கூறிவிட்டார்; அயிர் = நுண்மணல்; அயிர் - அயிரம் - ஆயிரம்; அயிர் என்றால் 'நுண்ணிய ' என்ற பொருளில் பாவாணர் காட்டியதற்குச் சான்றாகச் சங்கப்பாடல் ஏதேனும் இருக்கிறதா", என்று கொதித்தார் கடும் ஆரியப்பற்றுக் கொண்ட எனது நண்பர்.

சிரித்துக்கொண்டே தொலைக்காட்சியில் தெரிந்த முதல்மரியாதைக் காட்சியில் கண்ணை ஓட்டினேன்; நண்பரும் திரும்பினார்; ராதா ஊற்றும் மீன்குழம்பின் மீனைச் சப்புக்கொட்டிச் சுவைக்கும் சிவாஜியைப் பார்த்தாரோ இல்லையோ, சட்டென மூடுமாறி பரபரப்பானார் நண்பர்.

"மதுர வர போவேண்டிருக்குப்பா! மொதல்ல தல்லாக்குளம் சந்திரன் மெஸ்ல போயி அயிரை மீன் கொழம்பை ஒரு பிடி பிடிச்சுட்டுத்தான் போற வேலையப் பாக்கணும். புல்ல மேயிர மாடு நீ! (அசைவம் சாப்பிடாத என்னை  இப்படித்தான் அன்போடு அழைப்பார் நண்பர்) ஓன்ட்ட போய் சொல்றம்பாரு! வர்ரம்பா!" என்று ஓட்டம்பிடித்தார் நண்பர். சிரித்துக்கொண்டே, "போ! போ!" என்று வழியனுப்பினேன் நான்.

"சங்கப்பாடல் சான்று இருக்கா?" என்ற நண்பனின் கொதிப்பு நினைவுக்கு வரவும், சட்டென, "அயிர் = நுண்மணல். அயிர் - அயிரம் - ஆயிரம்" என்ற வரிகள் என் பொறிகளைத் தட்டவும், கூகுள் தேடுதளத்தில் அயிரமீனைத் தேடினேன்.

 

எவ்வளவு சிறியமீன்! அயிர் என்றால் நுண்மணல் என்பதுபோல, நுண்ணிய மீனாக இருப்பதால் அயிரமீன் என்று பெயரிட்டார்கள் போலும்!

அயிரமீனைப் பாடும் சங்கப்பாடல்கள் பலவும் நினைவுக்கு வந்தன. முதலில் வந்த பிராந்தையார் தம்நண்பன் கோப்பெருஞ்சோழனிடம் அன்னச்சேவலைத் தூது விடுகிறார்.

"அன்னச் சேவலே! போரில் வெற்றி கொண்ட அரசன் தன் நாட்டைக் காப்பது போல உலகுக்கு ஒளி தர முழுநிலா தோன்றும் மாலை நேரத்தில் நான் துணை இல்லாமல் வருந்துகிறேன். நீ குமரித்துறை அயிரை மீனை வயிறார அருந்திய பின்னர், வடமலையை (திருப்பதி) நோக்கிச் செல்வாய்; வழியில், கோழி(உறையூர்) நகர் மாடத்தில் தங்கி இளைப்பாறி,  அரண்மனைக்குள் சென்று, அங்குள்ள பெருங்கோக்கிள்ளி கேட்கும்படி “பெருமைமிக்க(இரும்) பிசிராந்தையாரின் வளர்ப்பு அன்னம்” என்று சொல்வாயாயின் உன் பெண்-அன்னம் அணிந்து மகிழத்தக்க அணிகலன்களை அவன் தருவான். (பெற்று இன்புறலாம்)" என்று பாடுகின்றார்.

அன்னச் சேவல்! அன்னச் சேவல்! ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்
நாடுதலை அளிக்கும் ஒண்முகம் போலக் கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்

மையல் மாலையாம் கையறுபு இனையக் குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை ஆயின் இடையது சோழ நன்னாட்டுப் படினே கோழி
உயர்நிலை மாடத்துக், குறும்பறை அசைஇ

வாயில் விடாது கோயில் புக்கு எம் பெருங்கோக் கிள்ளி கேட்க இரும்பிசிர்
ஆந்தை அடியுறை எனினே, மாண்ட நின் இன்புறு பேடை அணியத்தன்
நன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே. புறநானூறு - 67.

தொண்டி முன்றுரை அயிரை மீனைப் பற்றி பரணர் பாடியுள்ள குறுந்தொகைப் பாடல் ஒன்றுள்ளது. இப்பாடலில் "கீழைக்கடலில் வாழும் சிறகு-வலிமை இல்லாத நாரை ஒன்று மேலைக்கடலில் இருக்கும் பொறையன் என்னும் சேர-மன்னனின் தொண்டித்-துறை அயிரைமீனை உண்ண விரும்பியது போல, அடைய முடியாத ஒருத்தியை அடையத் தன் நெஞ்சு ஆசைப்படுகிறது" என்று தலைவன் தன்னைத் தானே நொந்துகொள்கிறான்.

"குண கடல் திரையது பறை தபு நாரை திண் தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை அயிரை ஆர் இரைக்கு அணவந்தாஅங்கு" (குறுந்தொகை 128)

கடல் காக்கையின் ஆண்-காக்கை கருவுற்ற தன் பெண்-காக்கைக்குக் கடற்கழிச் சேற்றில் அயிரை மீனைத் துழவிக் கண்டுபிடிக்கும் என்கிறது ஒரு நற்றிணைப் பாடல்.

"கடல்அம் காக்கைச் செவ் வாய்ச் சேவல்,  படிவ மகளிர் கொடி கொய்து அழித்த பொம்மல்
அடும்பின் வெண் மணல் ஒரு சிறை,  கடுஞ் சூல் வதிந்த காமர் பேடைக்கு,
இருஞ் சேற்று அயிரை தேரிய,  தெண் கழிப் பூஉடைக் குட்டம் துழவும்"  (நற்றிணை 272)

மற்றுமொரு குறுந்தொகைப் பாடலோ, "மேலைக்கடலோர மரந்தைத் துறைமுகத்தில் வாழும் வெண்நாரை அலையில் புரண்டு வரும் அயிரை மீனை உண்ணும்." என்கின்றது.

"தண் கடற் படு திரை பெயர்த்தலின், வெண் பறை நாரை நிரை பெயர்ந்து அயிரை ஆரும், ஊரோ நன்றுமன், மரந்தை" - (குறுந்தொகை 166)

அயிரை மீன் வயலில் மேயும்.

"அயிரை பரந்த அம் தண் பழனத்து" (குறுந்தொகை 178)

கடல்வெண்காக்கை கழியில் வாழும் அயிரைமீனை உண்ணும்.

"பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை இருங் கழி மருங்கின் அயிரை ஆரும்" (ஐங்குறுநூறு 164)

காயவைத்திருக்கும் அயிரைக் கருவாட்டை மேயவரும் குருகுகளை மகளிர் ஓட்டுவர்.

"அயிரைக் கொழு மீன் ஆர்கைய மரம்தொறும் குழாஅலின், வெண் கை மகளிர் வெண் குருகு ஓப்பும்"  (பதிற்றுப்பது 29)

அயிரை மீனைத் தூண்டிலில் மாட்டிப் போட்டு வரால் மீனைப் பிடிப்பர்.

"வேண்டு அயிரை இட்டு வராஅஅல் வாங்குபவர்" (பழமொழி 302)

"அயிரமீன் மீன் இந்தியாவுக்கு வந்தே முன்னூறு ஆண்டுதான் ஆகுது! பாவாணர் கற்பனேலே கதவுட்டா நாங்க நம்பிறனுமா?" என்று கேள்விக்கணை தொடுக்கப்போகும் "தல்லாகுளம் ஆரிய(அயிர)மீன்கொழம்புப் பார்ட்டிய"(என் நண்பரைத்தான்) எதிர்கொள்ளத் தேவையான  சங்கப்பாடல்கள் தொகுப்பைச் சேர்த்த மகிழ்வுடன் அன்றைய வாசிப்பை முடித்துக் கொண்டேன்.

 

 

Link to comment
Share on other sites

  • 1 year later...

திரு. ந. கிருஷ்ணன் அவர்களே.

நீண்ட நாட்களாக என் மனதில் தோன்றிய விடயம். ஒரு 50 அல்லது 60 வருடங்களுக்கு முன், தமிழ்நாட்டில் துறைபோன தமிழறிஞர்கள் நிறையவே இருந்திருக்கிறார்கள். வரகனேரி வேங்கடேச சுப்ரமணிய ஐயர், மு.வரதராசனார், மீ.ப.சோமசுந்தரம், போன்றோர். ஆனால் இன்று அப்படி பெயர் சொல்லக்கூட யாரும் இல்லையே? திறமை ஜொலிக்கவில்லையே? காரணம் என்ன?

இன்னொன்று:
தமிழும் சம்ஸ்கிருதமும் இந்தியாவின் இரு கண்கள். இரண்டிற்கும் வெவ்வேறு பயன்பாடுகள் உண்டு. ஒலிக்கட்டுக்களால் ஆன சம்ஸ்கிருதம், ஒலி ரூபமாக நூல்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கு உதவியிருக்கலாம். உதாரணமாக, நன்னூல்களை ஓதி உணர் என்று தான் தமிழில் கூட சொல்வார்கள். தமிழ்வேதம் திருஞானசம்பந்த பெருமான் “வேதம் ஓதி வெண்ணீறணிந்து ” என்று கூறவில்லையா? அச்சு ஊடகங்கள் இல்லாத காலத்தில் பதினாயிரக்கணக்கான பாசுர செய்யுட்களை கர்ண பரம்பரையாக தான் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முடியும். இன்று எமக்கு கிடைத்துள்ள தமிழ், சம்ஸ்கிருத சுவடிகள்கூட எண்ணற்ற மானுட ஜீவன்களின் முயற்சியால் தலைமுறை தலைமுறையாக கொண்டுவரப்பட்டு எமக்கு தரப்பட்டுள்ளன. இவற்றின் நுண்மான் நுழைபுலமறிந்து, மனித மேம்பாட்டிற்காக பாமர மக்களுக்கும் சுவறச்செய்யவேண்டியது கற்றோர் கடனல்லவா? வீணே யார் பெரிது என்று எண்ணாமல், எனது சமூகத்துக்கு நான் தரக்கூடிய உன்னதமான தகவல் எது என்று கண்டறிவதே ஆராட்சி.

தமிழ் = அமிர்தம் 
சம்ஸ்கிருதம் = நன்றாக செய்யப்பட்டது

அன்புடன்
- ஈழத்திருமகன் -

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.