Jump to content

ஆன்மா என்னும் புத்தகம்


Recommended Posts

ஆன்மா என்னும் புத்தகம் 01: மனிதர்கள் என்கிற இயந்திரம்

 

 
logo2col

ஜார்ஜ் ஐவனோவிச் குர்ஜிப், நவீன காலத்தின் குருவாக அறியப்படுகிறார். சமூகம் வழக்கமாகச் சிந்திக்கும் முறைகளில் இருந்து விடுவித்துக்கொள்ளாமல் ஒருவரால் தனது உண்மையான தனித்துவத்தை அடைய முடியாது என்று அவர் வலியுறுத்தினார். நியூசிலாந்து சிறுகதை எழுத்தாளர் கேத்ரின் மேன்ஸ்ஃபீல்டு, கட்டிடக் கலைஞர் ஃபிராங்க் லோய்ட் ரைட், எழுத்தாளர் பி.எல். ட்ராவெர்ஸ், கணிதவியலாளர் ஓஸ்பென்ஸ்கி போன்றவர்கள் இவருடைய மாணவர்கள். இருபதாம் நூற்றாண்டின் குறிப்பிடத்தகுந்த தத்துவ அறிஞர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவரது சிந்தனைகளும் பயிற்சிகளும் உலகம் முழுவதும் கலை, இலக்கிய, அறிவியல் ஆளுமைகளைப் பாதித்துள்ளது.

 

சந்திப்புகள் வழிகாட்டுதல்கள்

 

1,300 பக்கங்களில் அவர் எழுதிய ‘All and Everything, or Beelzebub’s Tales to His Grandson’ புத்தகம் அவரின் முக்கியப் படைப்பாகக் கருதப்படுகிறது. ஆனால், அவர் இந்தப் புத்தகத்தின் தொடர்ச்சியாக எழுதிய ‘மீட்டிங்ஸ் வித் ரிமார்க்கபிள் மென்’ (Meetings with Remarkable Men) அவரது தத்துவங்களைச் சுவாரசியமாகவும் எளிமையாகவும் விளக்குகிறது. அவர் இந்தப் புத்தகத்தில் ‘குறிப்பிடத்தக்கவர்கள்’ என்று அவருடைய வழிகாட்டிகள், நெருங்கிய நண்பர்கள், உலகப் பார்வையை உருவாக்கியவர்கள் போன்றவர்களின் சந்திப்புகளைத் தொகுத்திருக்கிறார்.

அவரது ஆன்மிகச் சிந்தனையையும் ஆளுமையையும் கட்டமைக்க இவர்கள் எந்தவிதத்தில் உதவியிருக்கிறார்கள் என்று இந்தப் புத்தகத்தில் விளக்கியிருக்கிறார். இந்தப் புத்தகத்தில் ‘குறிப்பிடத்தக்கவர்கள்’ வரிசையில் முதலில் குர்ஜிப் தன் தந்தையைப் பற்றித்தான் எழுதியிருக்கிறார். அவரைத் தொடர்ந்து குர்ஜிப்பின் ஆசிரியர் போர்ஷ், கேப்டன் போகோஸியன், ரஷ்ய இளவரசர் யூரி லுபோவெட்ஸ்கி, தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ஸ்கிரிட்லோவ், புத்தக விற்பனையாளர் யேலோவ் என வெவ்வேறு தளங்களில் அவர் சந்தித்த நபர்களைப் பற்றிய அனுபவங்களை இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

 

26chgowGurdjieff%20book
வித்தியாசமான சுயசரிதம்

இந்தப் புத்தகம் வழக்கமான சுயசரிதமாக இல்லாமல் மற்றவற்றிலிருந்து வித்தியாசப்பட்டிருக்கிறது. அவரின் இளமைக் காலம், ஞானத்தைத் தேடிக் கீழை நாடுகளுக்கு அவர் சென்ற பயணங்கள் ஆகியவற்றை இந்தப் புத்தகம் சுவாரசியமாகப் பதிவுசெய்திருக்கிறது. அவர் தன் சுயசரிதத்தைத் தான் சந்தித்த மனிதர்களின் துணிச்சல், உறுதி, ஞானம், மதிநுட்பம், விடாமுயற்சி போன்ற குணாம்சங்களின் மூலம் விளக்கிஇருக்கிறார். இறுதியில், அது அவர் வாழ்க்கையில் சந்தித்த குறிப்பிடத்தக்கவர்ளைப் பற்றிய சுயசரிதமாக மட்டுமில்லாமல், அவரது தத்துவங்களையும் வழிகாட்டுதல்களையும் உதாரணங்களுடன் விளக்கும் ஓர் ஆன்மிக வழிகாட்டி நூலாகவும் விளங்குகிறது. கடினமான தருணங்களில் மனிதர்கள் எப்படி வாழ்வது, வளர்ச்சியடைவது என்பதை அவர் இந்தப் புத்தகம் முழுவதும் விளக்கிஇருக்கிறார்.

 

தேடல்களும் பதில்களும்

இந்தப் புத்தகத்தில் அவர் குறிப்பிடத்தக்கவர்களைப் பற்றிய கதைகளை விளக்கும்போது சில கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் அவரது வழிகாட்டுதல்களாக விளங்குகின்றன. அவர் புத்தகத்தில் பதிலளித்திருக்கும் கேள்விகள்:

என்ன மாதிரியான குறிப்பிடத்தகுந்த மனிதர்களை நான் சந்தித்திருக்கிறேன்?

கிழக்கே எந்த மாதிரியான அற்புதங்களைப் பார்த்தேன்?

மனிதன் ஓர் ஆன்மாவா, அந்த ஆன்மா அழிவற்றதா?

மனிதனுக்குத் தனி விருப்புறுதி உண்டா?

வாழ்க்கை என்றால் என்ன? அதில் ஏன் துன்பம் இருக்கிறது?

நான் மறைஞானத்தையும் ஆன்மிக அறிவியலையும் நம்புகிறேனா?

மனோவசியம், ஈர்ப்பியல், தொலைஉணர்வு என்றால் என்ன?

இந்தத் தேடல்களில் எல்லாம் எனக்கு எப்படி ஆர்வம் வந்தது?

‘ஒரு விஷயம் உங்களுக்கு உண்மையாகப் பட்டால், அது உண்மையாகத்தான் இருக்கும். உங்கள் வாழ்க்கைக்கான அதிகாரம் உங்களிடம்தான் இருக்கிறது’. இது குர்ஜிப்பின் தத்துவமாக அறியப்படுகிறது. மனிதர்கள் ஆன்மாவுடன் பிறந்தவர்கள் அல்ல என்கிறார் குர்ஜிப். மனிதர் தமது பழக்கங்கள், நம்பிக்கைகள், விருப்பங்களை ஆழ்ந்து கவனிக்க வேண்டும் என்கிறார். அந்தப் பிரக்ஞையைக் கொண்டு தங்கள் விருப்பங்களுடன் போராடுவதன் மூலமே மனிதர் தமது ஆன்மாவை அடைய முடியும் என்று சொல்கிறார். மனிதர்களை இயந்திரமாக அவர் பார்த்தார். எண்ணங்கள், உணர்வுகளை ஒரு இயந்திரத்தின் முறைமையாக அணுகினார். தனது இயந்திரத்தின் மேல் வேலை செய்வதன் வாயிலாகவே மனிதர் விடுதலையை அடைய முடியும் என்கிறார். 20-ம் நூற்றாண்டில் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த ஓஷோவின் மீது தாக்கம் செலுத்தியவர் இவர்.
 

26chgowGurdjieff

ஜார்ஜ் குர்ஜிப்

 

 

http://tamil.thehindu.com/society/spirituality/article23670671.ece

ஜார்ஜ் ஐவனோவிச் குர்ஜிப்

இவர் 1877-ம் ஆண்டு, ஆர்மேனியாவிலுள்ள அலெக்சாந்தராபோல் நகரில் பிறந்தார். பல ஆண்டுகள் பயணம் செய்த பிறகு, அவர் 1913-ம் ஆண்டு ரஷ்யாவுக்கு வந்தார். நான்கு ஆண்டுகள் அங்கே தங்கியிருந்த பிறகு, ஐரோப்பாவில் பயணம் செய்து உரையாற்றினார்.

அவரது பயிற்சிகளை தார்தாரியப் பழங்குடிகள், சூபி துறவிகளிடமிருந்து வடிவமைத்துக் கொண்டார். 1922-ம் ஆண்டு, பாரிஸ் நகரில் ‘Institute for the Harmonious Development of Man in Fontainebleau’ என்ற நிறுவனத்தை உருவாக்கினார். அவரது முக்கியப் படைப்பாக ‘All and Everything, or Beelzebub’s Tales to His Grandson’ கருதப்படுகிறது. 1949-ம் ஆண்டு அவர் காலமானார்.

உலகம் முழுவதும் மக்கள் மீது தாக்கம் செலுத்திய மெய்ஞ் ஞானம், ஆன்ம மேம்பாடு, ஆன்மிக, சமய நூல்களையும் ஞானாசிரியர்களையும் அறிமுகப்படுத்தும் புதிய பகுதி இது.

Link to comment
Share on other sites

ஆன்மா என்னும் புத்தகம் 2: விழுமியங்களைத் தேடிய அசாத்

 

 
meccajpg

இஸ்லாம் மார்க்கத்துக்கு ஐரோப்பியா வழங்கிய கொடையாகக் கருதப்படுபவர் முஹம்மது அசாத். இஸ்லாம் என்பது அமைதி, சகோதரத்துவத்தைப் போற்றும் வாழ்க்கைமுறை என்பதை அவர் வலியுறுத்தினார். லியோபோல்ட் வைஸ் என்ற பெயரில் 1900-ம் ஆண்டு ஓர் ஐரோப்பிய யூதர் குடும்பத்தில் போலந்தில் பிறந்தார். 26 வயதில் மார்க்கத்தைத் தழுவிய அவர், இருபதாம் நூற்றாண்டின் சிறந்த இஸ்லாமிய அறிஞராக அறியப்படுகிறார்.

 

1954-ம் ஆண்டு, அவர் எழுதி அமெரிக்காவில் வெளியான ‘தி ரோட் டு மெக்கா’ (The Road to Mecca) என்ற புத்தகம் இப்போது பெரிய அளவில் பிரபலமாக இல்லை. ஆனால், சென்ற நூற்றாண்டில் பலரது வாழ்க்கையில் ஆன்மிக மறுமலர்ச்சியை ஏற்படுத்திய படைப்பாக இந்தப் புத்தகம் இருந்துள்ளது. ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதராக 1952-ம் ஆண்டிலிருந்து பணியாற்றிய அவர், அந்தப் பதவியிலிருந்து விலகிய பிறகு, ‘தி ரோட் டு மெக்கா’ புத்தகத்தை எழுதினார்.

 

பயணங்களின் அற்புதம்

இந்தப் புத்தகம் முஹம்மது அசாத்தின் வாழ்க்கை வரலாறாக அறியப்பட்டாலும், அது முழுமையாக அவரின் வாழ்க்கைக் கதையாக மட்டுமே இல்லை. இந்தப் புத்தகம் 1932-ம் ஆண்டில் ஓர் இளைஞனாக அரேபியாவில் அவரது 23 நாட்கள் மெக்கா பயணத்தையும் வாழ்க்கை அனுபவங்களையும் பதிவுசெய்கிறது.

அசாத் தன் முதல் மத்திய கிழக்குப் பயணத்தை 22 வயதில் மேற்கொண்டார். தன் தாயின் சகோதரருடன் சிறிதுகாலம் வசிப்பதற்காக அவர் ஜெருசலேம் சென்றபோதுதான் அவருக்கு இஸ்லாமிய கலாச்சாரம் அறிமுகமானது. அந்தப் பயணத்துக்குப் பிறகு, அவர் ‘பிராங்பர்ட் ஸைட்டுங்’ செய்தித்தாளில் செய்தியாளராகப் பணியாற்றினார்.

அவர் செய்திக் கட்டுரைகளை எழுதுவதற்காக அரேபியா, பாலஸ்தீனம், சிரியா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், எகிப்து, லிபியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார். அவரது இந்தப் பயண அனுபவத்தில், அவர் இஸ்லாம் மார்க்கத்தின் மீதான தன் ஈர்ப்பையும் எப்படி இஸ்லாம் தன் வாழ்க்கைக்கான நம்பிக்கையையும் அளித்தது என்பதை விளக்கியிருக்கிறார்.

 

அரேபிய அரசருடன் சந்திப்பு

மத்திய கிழக்கு நாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்களின் மூலம் இஸ்லாமிய உலகத்தை அறிந்துகொள்ள முயன்றார். ஐரோப்பாவின் அறிவுச் சமூகம் கடவுளைவிட்டு வெகுதூரம் விலகிவந்துவிட்டதை உணர்ந்த அவர் இஸ்லாம் மார்க்கத்தில் தன்னை இணைத்துகொண்டார். சவுதி அரேபியாவின் தந்தையான அரசர் இபின் சவுத்தின் அரசவையில் அவர் ஆறு ஆண்டுகள் அங்கம்வகித்தார்.

அவருக்கும் அரசருக்கும் இடையில் இருந்த நட்பை இந்தப் புத்தகத்தில் பதிவுசெய்திருக்கிறார். அத்துடன், ‘பெதோயின்’ (Bedouin) அரேபியப் பழங்குடியினருடனான தன் அனுபவங்களை அவர் பகிர்ந்துகொண்டிருக்கிறார். ஜெருசலேமில் இஸ்ரேலின் தந்தைகளில் ஒருவராகக் கருதப்படும் சைம் வைஸ்மானைச் சந்தித்ததைப் பற்றியும் அசாத் குறிப்பிட்டிருக்கிறார்.

 

அன்பைக் கற்பிக்கும் இஸ்லாம்

அவர் மத்திய கிழக்கு நாடுகளில் தான் செய்த பயண அனுபவங்களை மட்டுமல்லாமல் இஸ்லாத்தின் அர்த்தத்தையும் விளக்கியிருக்கிறார். மேற்கத்தியர்கள் இஸ்லாம் மார்க்கத்தின் மீது வைத்திருக்கும் தவறான அபிப்பிராயங்களுக்கான பின்னணிக் காரணங்களும் அலசப்படுகின்றன. இந்தப் புத்தகத்தை ஒரு சுயசரிதையாகவோ சாகசப் பயண அனுபவமாகவோ அவர் எழுதவில்லை.

மேற்கத்தியர்களுக்கு இஸ்லாம் மார்க்கத்தின் மீதிருக்கும் பிழையான பார்வையைப் போக்குவதற்காகவே எழுதியதாகக் குறிப்பிடுகிறார் அவர். மேற்கு, கிழக்கு என இரண்டு கலாச்சாரங்களையும் அறிந்ததால் இந்தப் புத்தகத்தை எழுதியதாகச் சொல்கிறார். “நான் ஓர் இஸ்லாமியன். ஆனால், நான் மேற்கத்திய கலாசாரத்தில் வளர்ந்தவன். அதனால், இரண்டு முனைகளின் அறிவார்த்தமும் கலாச்சாரமும் கூடிய மொழியில் என்னால் பேச முடியும்” என்று சொல்கிறார் முஹம்மது அசாத்.

அசாத், நபிகளின் போதனைகளே உலகைப் பல நூற்றாண்டுகளாக வழிநடத்திவருவதாகக் குறிப்பிடுகிறார். “ஒவ்வொரு இஸ்லாமிய ஆண், பெண்ணின் புனிதக் கடமையாக அறிவுத் தேடல்தான் இருக்க வேண்டும்” என்ற நபிகளின் மேற்கோளை வாழ்க்கை நெறியாக வலியுறுத்துகிறார் அசாத். ஒரு மனிதன் மாற்று மார்க்கத்தைத் தனக்குள் நிதானமாக உணர்வதையும் இலக்கியப் பார்வையையும் இந்தப் புத்தகம் பதிவுசெய்திருக்கிறது. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ள நினைப்பவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது.

முஹம்மது அசாத் (1900 – 1992)

இவரின் தலைசிறந்த படைப்பாக குரானின் ஆங்கில மொழிபெயர்ப்பு உரை ‘The Message of the Qur’an’ கருதப்படுகிறது. கவிஞர் முஹம்மது இக்பாலின் அறிவுரையின் பேரில் பாகிஸ்தானில் வசிக்கச் சென்ற அசாத், பாகிஸ்தான் அரசின் பல்வேறு தூதரகப் பொறுப்புகளை வகித்திருக்கிறார். இவரது நினைவாக வியன்னாவின் ஐ.நா. அலுவலகத்தின் நுழைவுச் சதுக்கத்துக்கு ‘Muhammad Asad Platz’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.

 

http://tamil.thehindu.com/society/spirituality/article23757369.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஆன்மா என்னும் புத்தகம் 03: யாரோ ஒருவராக மாற வேண்டியதில்லை

 

 

 
bookjpg

வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமென்பதை ஒரு பெரிய போராட்டமாக நம்மில் பலரும் நினைக்கிறோம். சாமானியர்களாக இருப்பதற்குப் பயப்படுகிறோம். இந்தப் போராட்டத்தையும் பயத்தையும் எப்படிக் கையாள்வது என தத்துவ அறிஞர் ஜே. கிருஷ்ணமூர்த்தி ‘Think on These Things’ புத்தகத்தில் விளக்கியிருக்கிறார்.

பள்ளி மாணவர்களிடம் ஜே. கிருஷ்ணமூர்த்தி நடத்திய கேள்வி-பதில் உரையாடலாக இந்தப் புத்தகம் விரிகிறது. இந்தப் புத்தகத்தில் அவர் கல்வி என்பது ஒரு வேலையைப் பெறுவதற்குத் தயார்படுத்தும் கருவி மட்டும் அல்ல; “அது ஒட்டுமொத்த வாழ்க்கையை நாம் புரிந்துகொள்ள உதவும் அம்சம்” என்று சொல்கிறார். பிரபலம், அந்தஸ்து, பணம், வெற்றி போன்ற அம்சங்களின் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைகளை இந்தப் புத்தகம் உடைக்கிறது.

 

அடைய விரும்புவதற்கான ஆசை எப்படித் துன்பத்துக்கு வழிவகுக்கிறது என்பதும் இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. நாம் அனைவருமே ‘யாரோ ஒருவராக’ மாறுவதற்கான முயற்சியை மேற்கொள்வதாகக் கூறும் கிருஷ்ணமூர்த்தி, இந்த முயற்சியில் நாம் சராசரி மனிதர்களாக மாறிவிடும் முரணையும் சுட்டிக்காட்டுகிறார்.

 

வெற்றியும் லட்சியமும்

‘Think on These Things’ புத்தகம், லௌகீக வெற்றியைப் பற்றி விரிவாக அலசுகிறது. லட்சியங்களையும் சாதனைகளையும் நமது பண்பாடு தொடர்ந்து புனிதப்படுத்தியும் கொண்டாடியும் வருகிறது. அதனால், நாம் அனைவரும் ஏதோவொரு லட்சியத்தின் பின்னால் ஓட வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், ஏதோவொன்றை அடைய வேண்டுமென்ற ஆசை எப்போதும் ஏமாற்றத்திலும் வெறுமையிலும் முடிவதாக விளக்குகிறார் அவர்.

இப்படி ஓடிக்கொண்டேயிருப்பது வாழ்க்கையை வாழ்வதற்கான அறிவார்த்த வழி இல்லை. ஏனென்றால், அது தற்காலத்தில் முடிவற்ற, நிறைவேறாத ஆசைகளால் மகிழ்ச்சியற்றவர்களாக நீங்கள் இருப்பதாகக் காட்டுவதாகக் குறிப்பிடுகிறார் அவர். “நாம் அனைவரும் பிரபலங்களாக இருக்க விரும்புகிறோம். நாம் வேறு யாரோ ஒருவராக மாற நினைக்கும் அந்த நொடியிலேயே நம் சுதந்திரத்தை இழந்துவிடுகிறோம்” என்று சொல்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

 

மாற்றுவழி

குறைவானவற்றை விரும்புவதால் மன நிறைவைப் பெற முடியும். ஆனால், யாரும் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தாமல் இருப்பதை விரும்ப மாட்டார்கள். இந்தப் புத்தகத்தில் மன அழுத்தத்துடன் வாழ்க்கையில் எதன் பின்னாலும் ஓடாமல் அதேவேளையில் படைப்பூக்கத்துடன் திகழ்வதற்கான மாற்றுவழியை விளக்குகிறார் இவர்.

மனிதர்கள் எதைச் செய்ய விரும்புகிறார்கள் என்பதை அடையாளம் கண்டுபிடிக்க உதவுவதுதான் கல்வியின் கடமை. மனம் விரும்பும் பணியைச் செய்வதால் அன்றாட வாழ்க்கையில் திருப்தியும் செய்யும் பணியின் மீதான உற்சாகமும் இயல்பாக வெற்றியை வசப்படவைக்கும் என்று விளக்குகிறார் அவர்.

 

படைப்பாற்றல் நிறைந்தவர்கள்

பிரச்சினைகளால் மனம் சூழப்பட்டிருக்கும்போது, அதற்கான தீர்வையும் அதுவே வழங்காது. “ஆக்கிரமிக்கப்படாத மனதால் மட்டுமே ஒரு பிரச்சினையைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள முடியும்” என்கிறார் அவர். உங்கள் எண்ணங்களுக்கிடையில் போதுமான இடைவெளியை உருவாக்கும்போது, உங்களால் துல்லியமான, படைப்பாற்றல் நிறைந்த மனதை அடைய முடியும் என்று விளக்குகிறார். நம்மில் பெரும்பாலானவர்கள் வெறும் இயந்திரத்திறனாளர்களாகவே வாழ்கிறோம் என்று சுட்டிக்காட்டும் அவர், “நாம் இயந்திரத்தனமாகத் தேர்வுகளில் வெற்றிபெறுகிறோம்.

பணிக்குச் செல்கிறோம். சமூகத்தில் வெற்றிபெறுவதற்கான உத்திகளைக் கற்றுக்கொள்கிறோம். ஆனால், வாழ்க்கைக்கு அவசியமான அழகு, நேசம், அமைதி ஆகிய அம்சங்களின் மீது நாம் கவனம் செலுத்தாவிட்டால், கடினமானதும் சிதறுண்டதாகவும் தோன்றக்கூடிய உலகத்தில் வாழ வேண்டியிருக்கும்” என்கிறார்.

“விட்டுவிடும் மனப்பான்மை இருக்கும்போதுதான் படைப்பாற்றலுடன் விளங்க முடியும். எங்கே நிர்பந்த உணர்வு இல்லையோ, எங்கே இல்லாமல் போவதைப் பற்றிய அச்சம் இல்லையோ, இலக்கு பற்றிய உணர்வு இல்லையோ அங்கு மட்டுமே நீங்கள் படைப்பாற்றலுடன் திகழ முடியும்” என்கிறார் அவர்.

 

மகிழ்ச்சியும் அன்பும்

பெரும்பாலானவர்கள் மகிழ்ச்சியை அடையக்கூடிய ஒரு பொருளாகவே பார்க்கிறோம். ஆனால், மகிழ்ச்சி அடையக்கூடிய பொருளல்ல என்று மறுக்கும் கிருஷ்ணமூர்த்தி, “மகிழ்ச்சியைக் கண்டடைய முடியாது. அது அச்சமில்லாத இடத்தில், வாழ்க்கை அர்த்தப்படுத்தும் உடன்விளைவாக இருக்கிறது” என்கிறார். அது சாதனைகளாலும் லட்சியங்களாலும் உருவாகவில்லை.

மகிழ்ச்சியைப் பற்றிச் சிந்திப்பதும் பேசுவதும் நாம் மகிழ்ச்சியாக இல்லை என்பதையே குறிப்பதாகச் சொல்கிறார் அவர். அதேபோல், மகிழ்ச்சியின்மை என்பது அன்பில்லாதபோதும், நமக்கும் மற்றவருக்கும் இடைவெளி உருவாகும்போதும் ஏற்படுகிறது. இந்த இடைவெளி நமது விமர்சனங்களாலும் முன்தீர்மானங்களாலும் ஏற்படுவதாக இந்தப் புத்தகத்தில் அவர் விளக்குகிறார்.

மனிதர்கள் தங்களது மனம் விரும்பும் வேலையைச் செய்ய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் போக்கு உலகில் பிரபலம் அடையாத காலகட்டத்திலேயே ‘Think on These Things’ என்ற இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் ஜே. கிருஷ்ணமூர்த்தி. இந்தப் புத்தகம், உங்களை ‘நான் என் வாழ்க்கையில் இயந்திரத்திறனாளனாக மட்டும் இருக்கிறேனா, அல்லது படைப்பாளியாகவும் இருக்கிறேனா’ என்ற கேள்வியைக் கேட்கவைக்கும்.

ஜித்து கிருஷ்ணமூர்த்தி

ஜே. கிருஷ்ணமூர்த்தி சென்னையில் 1895-ம் ஆண்டில் பிறந்தார். அவருடைய தந்தை சென்னை பிரம்மஞான சபையில் பணியாற்றினார். அவருக்குப் பதினைந்து வயதாகும்போது, மிரம்மஞான சபை நிறுவனர் அன்னி பெசண்ட் மற்றும் சி.டபிஸ்யூ. லெட்பீட்டர் ஆகியோர் அவரிடம் தெரிந்த பிரபையைக் கண்டு உலகத் தலைவராகப் பயிற்சிக் கொடுக்கத் தேர்ந்தெடுத்தனர். 1979-ம் ஆண்டு, தான் யாருக்கும் குருவோ, ரட்சகரோ அல்ல என்று கூறித் தனது பெரும்பதவியையும் அதற்குப் பின்னாலிருந்த சகல அதிகாரங்களையும் துறந்தார். அவர் 1985-ம் ஆண்டு மறைந்தார்.

http://tamil.thehindu.com/society/spirituality/article23826578.ece

Link to comment
Share on other sites

ஆன்மா என்னும் புத்தகம் 04: இது தாவோ வழி

 

 
17chgowChuang%20Tzu

அருவி பார்க்கும் சுவாங் ட்சு - தாவோ ஓவியம்

சீனா, 2,300 ஆண்டுகளுக்கு முன்னர் உள்நாட்டுப் போரினாலும் மக்கள் கிளர்ச்சிகளாலும் பாதிப்புக்குள்ளாகியிருந்தது. கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்கு ஆட்சியாளர்கள் எல்லா வகையிலும் முயன்றுகொண்டிருந்தனர். இந்தக் காலகட்டத்தில், சுவாங் ட்சு (Chaung Tzu) என்ற சிறந்த தத்துவ ஞானி வாழ்ந்துவந்தார்.

ஓர் அரசர், தனக்கு ஆலோசகராக இருக்கும்படி அவரை அழைத்தார். ஆனால், ஆட்சியின் அடிப்படை அம்சமான ஊழலில் கறைபட விரும்பவில்லை என்று சொல்லி அந்த அழைப்பை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

 

தாவோயிஸத்தின் அடித்தளங்களாகத் திகழும் புத்தகங்களில், இவர் எழுதிய ‘The Book of Chaung Tzu’ புத்தகமும் ஒன்று. பிரபல ‘தாவோ தே ஜிங்’ புத்தகம், இந்தப் புத்தகம் வெளியாவதற்கு 200 ஆண்டுகளுக்கு முன் வெளியானது. ‘The Book of Chaung Tzu’ புத்தகத்தில் ஏழு அத்தியாயங்களை சுவாங் ட்சு எழுதியதாகவும் மற்ற அத்தியாயங்களை அவருடைய மாணவர்கள் எழுதியதாகவும் கூறப்படுகிறது.

சீன வரலாற்றின் முக்கியமான பிரபல ஆளுமைகள் குறித்த உருவகங்களும் உப கதைகளும் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றன. அத்துடன், சீனாவின் சிறந்த சிந்தனையாளர்களான கன்ஃபூசியஸ், லாவோ ட்சு, லை ட்சு (Lieh Tzu) ஆகியோர் இடையிலான கற்பனை உரையாடல் பகுதிகள் இந்தப் புத்தகத்தின் சுவாரசியமான அம்சமாக இருக்கின்றன.

 

தாவோ என்றால் என்ன?

உலகில் அனைத்தும் இயல்பாக இயங்குவதற்கான மூலாதாரமாக தாவோ விளங்குகிறது. ஓர் அறிவார்ந்த, வெற்றிகரமான மனிதர், பிரபஞ்சத்தை இயக்கும் இந்தச் சக்தியைப் பற்றிய விழிப்புடன் செயல்படுகிறார். இந்தச் சக்தியுடன் ஒத்திசைவைப் பேணுகிறார். இந்தச் சக்திதான் எல்லாவற்றுக்குமான ஆதாரம் என்பதை அவர் எப்போதும் மறப்பதில்லை.

 

தாவோவில் அடைக்கலம்

இந்தப் புத்தகத்தின் ‘சீசன் ஆஃப் தி ஆட்டம் ஃப்ளட்ஸ்’ (Season of the Autumn Floods) என்ற அத்தியாயத்தில் இந்த உருவகக் கதை இடம்பெற்றிருக்கிறது.

ஓர் இலையுதிர்க் கால வெள்ளம் வந்தபோது, தன் நீர் எல்லைகள் விரிவடைந்ததால் மஞ்சள் நதியின் கடவுள் மகிழ்ச்சியடைந்தார். அவர் வடக்குக் கடலை அடையும்வரை கம்பீரத்துடன் ஆர்ப்பரித்துவந்தார். அங்கே, கடலின் கடவுளான ‘ஜோ’வை அவர் எதிர்கொண்டார். ‘ஜோ’ கடவுளின் எல்லை அற்ற பரப்பைப் பார்த்து மஞ்சள் நதியின் கடவுள் அமைதியைக் கைகொண்டார். இந்தக் கதையில் வரும் மஞ்சள் நதியின் கடவுள், கிணற்றின் மேல் அமர்ந்திருக்கும் தவளை, தனக்கு முன்னாலிருக்கும் நீரைப் பார்த்து வியப்பதைப் போல் தன்னை வியந்துகொள்கிறார்.

அந்தத் தவளை எப்படிக் கடலின் பெரும்பரப்பைப் பற்றி அறிந்திருக்கவில்லையோ, அதேபோல மஞ்சள் நதியின் கடவுளும் அறிந்திருக்கவில்லை. கோடையில் மட்டும் வாழும் பூச்சிக்குப் பனிக்கட்டியைப் பற்றி எதுவும் தெரியாது. அதேமாதிரி, ஏற்கெனவே போதனைகளால் நிரம்பிவழியும் ஓர் அறிஞரால், தாவோவைப் புரிந்துகொள்ள முடியாது. தாவோயிஸத்தைப் பற்றிக் கொஞ்சம் அறிந்துவைத்திருக்கும் ஒருவர், தன்னை மேம்பட்டவராக நினைத்துகொள்ளலாம். ஆனால், அது தாவோவுடன் ஒத்திசைவுடன் இருப்பது ஆகாது என்று விளக்குகிறார் சுவாங் ட்சு.

 

 

எளிமையே சிறந்தது

சீன அரசர் ஒருவர் பதவியைத் துறந்து துறவறம் ஏற்க நினைத்தார். தன் பதவியை ஷான் சுவான் என்பவருக்கு வழங்க நினைத்தார். இந்தக் காலகட்டத்தில் அரசர்கள் ‘சொர்க்கத்தின் மைந்தர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். அரசராக இருப்பது மாபெரும் பேறாகக் கருதப்பட்டது. ஆனால், ஷான் சுவான், “நான் ஏன் நாட்டை ஆட்சிபுரிய வேண்டும்?” என்று கேட்டார். அவர் தன் நிலத்தில் விவசாயம் செய்து மாறும் பருவநிலைகளைக் கொண்டாடியபடி எளிமையான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தார்.

அவருக்கு அதிகாரத்திலும் கவுரவங்களிலும் எந்த நாட்டமும் இல்லை. பதவியையும் புகழையும் ஒருவர் அடையும்போது, அவர்கள் அதைத் தக்கவைத்துகொள்ளவே வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தைச் செலவிடுகிறார்கள். அதனால் வாழ்க்கையை வாழ முடியாமல் போகிறது. இந்தப் புத்தகத்தில் சுவாங் ட்சு, “தாவோவுடன் ஒத்திசைவுடன் இருப்பவர்கள், எப்போதும் அதிகாரம் நிறைந்த வாழ்க்கையைவிட அமைதி நிறைந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பார்கள்” என்கிறார்.

 

தாவோவின் பண்புகள்

# இந்தப் புத்தகத்தில் சுவாங் ட்சுவின் கதைகளிலும், விளக்கங்களிலும் தாவோவுடன் ஒத்திசைவுடன் இருப்பவரின் பண்புகளாக கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடுகிறார்:

# தாவோவுடன் ஒத்திசைவுடன் இருக்கும் நபருக்குப் பெரிய திட்டங்கள் எவையும் இருக்காது. ஆனால், பிரச்சினைகள் உருவாகும்போது தகுந்தவாறு அவற்றை எதிர்கொள்வார்.

# தாவோவைப் பின்பற்றுபவர்கள் தங்கள் சுயத்திலிருந்து வெளியேறுவதை அனுமதிப்பார்கள். ஏனென்றால், அப்போதுதான் மற்றவர்களைத் தெளிவாகப் பார்க்க முடியும் என்று அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

# பெரும்பாலானவர்கள் நிறைவைக் கண்டடைய முயல்வார்கள். ஆனால், அறிவார்த்தமான நபர் ஒன்றுமில்லாதவராக மாறுவதற்கு முயல்வார். அதுதான் தாவோவை அடைவதற்கான வழி.

# தாவோவுடன் ஒத்திசைவுடன் இருப்பவரின் வாழ்க்கையில், ஒரு குழந்தையின் மகிழ்ச்சி, சாதுவின் அறிவு என இரண்டும் இணைந்திருக்கும்.

15chgowChuang%20Tzu

# அவர்கள் வழக்கமான அறநெறிகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கின்றனர். நற்பண்புகளைப் பற்றி ஒருவர் யோசித்தாலே, அவர் இயல்பாக வாழவில்லை என்று அர்த்தம்.

# தாவோவுடன் ஒத்திசைவுடன் இருக்கும் நபர், அறிவை வாழ்க்கை நோக்குடன் அணுகுவார்கள். அவர்களின் ஞானம் வாழ்க்கை முழுமைத்துவத்தின் விழிப்பிலிருந்து கிடைக்கிறது.

# தாவோயிஸத்தைப் பற்றி அடிப்படையாகப் புரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் வழிகாட்டும்.

சுவாங் ட்சு

சுவாங் ட்சு, சீனாவில் கி.மு. 400-ம் நூற்றாண்டில் வாழ்ந்த தலைசிறந்த தத்துவஞானிகளில் ஒருவர். தத்துவஞானி லாவோ ட்சுவின் கருத்துகளைப் பின்பற்றியே இவர் தன் படைப்புகளை எழுதியிருக்கிறார். கன்ஃபூசியஸ் காலச் சமூகத்தையும் பிரபலங்களையும் இவர் தன் படைப்புகளில் நகைமுரணுடன் விமர்சித்திருக்கிறார்.

 

 

http://tamil.thehindu.com/society/spirituality/article23903526.ece

Link to comment
Share on other sites

ஆன்மா என்னும் புத்தகம் 05: ரமணரைச் சந்தித்த லாரி டார்ரெல்

 

 
somerwsetjpg

இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் வில்லியம் சாமர்செட் மாம் எழுதிய ‘தி ரேஸர்ஸ் எட்ஜ்’ (The Razor’s Edge) நாவல் 1944-ம் ஆண்டு வெளியானது. இந்தப் புத்தகத்தை ஒரு நாவலைப் போன்று சாமர்செட் மாம் எழுதியிருந்தாலும், இந்த நாவலில் அவர் தன் வாழ்க்கையில் சந்தித்த முக்கியமான மனிதர்களைக் கதாபாத்திரங்களாகப் படைத்திருக்கிறார்.

அத்துடன், இந்த நாவலில் அவரே ஒரு கதாபாத்திரமாகவும் கதைசொல்லியாகவும் இருக்கிறார். இந்த நாவலின் பெயரை உபநிடதத்தில் இருக்கும் இந்த வரியிலிருந்து எடுத்திருக்கிறார்: “கத்தியின் முனையைக் கடப்பது எப்படிக் கடினமானதோ, அப்படித்தான் விமோசனத்துக்கான பாதையும் கடினமானது”.

 

 

கத்தி முனைகள்

இந்தப் புத்தகம் மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதையும், ஆன்மிகப் பாதையைத் தேர்ந்தெடுப்பவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் அலசுகிறது. கத்தியின் ஒரு முனையில் வாழ்க்கையைப் பற்றிய பாதுகாப்பு உணர்வு, சமூக லட்சியங்களை அடைதல், சமூக விதிகளுடனான இணக்கம் போன்றவை இருக்கின்றன. இன்னொரு முனையில், சமூகம் உறுதிப்படுத்திய அடையாளங்களைத் துறந்து வாழ்க்கையில் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கான பெரிய தேடல் அமைந்திருக்கிறது.

பெரும்பாலானவர்கள், இரண்டாவது பாதையைத் தேர்ந்தெடுக்கமாட்டார்கள். ஆனால், சாமர்செட் மாமுக்கு ஆன்மிகத்தின் மீதிருந்த ஆர்வம், ‘தி ரேஸர்ஸ் எட்ஜ்’ நாவலை எழுதுவதற்குக் காரணமாக அமைந்தது. அவரது படைப்புகளில், அதிகம் விற்பனையாகிய புத்தகங்களில் ‘தி ரேஸர்ஸ் எட்ஜ்’ நாவலும் ஒன்று.

 

காதலும் பிரிவும்

இந்த நாவல் 1920-களிலும் 1930-களிலும் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் பயணிக்கிறது. லாரி டார்ரெல் என்ற அமெரிக்க இளைஞனின் வாழ்க்கையைப் பின்தொடர்கிறது. முதலாம் உலகப் போரில் விமானியாகப் பணியாற்றி அதிர்ச்சிகரமான அனுபவங்களுடன் ஊர் திரும்புகிறான் லாரி. சிகாகோவைச் சேர்ந்த அழகான இளம்பெண் இஸபெல் பிராட்லியுடன் அவனுக்குத் திருமணம் நிச்சயமாகிறது. ஆனால், எந்த வேலைக்கும் செல்ல விருப்பமில்லாமலிருக்கும் லாரியின் பிடிவாதம், திருமணத்துக்குத் தடையாக நிற்கிறது.

வேலைக்குச் சென்றால்தான், திருமணம் என்று இஸபெல்லின் தாய் சொல்லிவிடுகிறார். இந்நிலையில், லாரிக்கும் இஸபெல்லுக்கும் அவர்களின் பணக்கார நண்பன் கிரே மட்டுரின் உதவ முன்வருகிறான். தன் தந்தையின் நிறுவனத்தில் லாரிக்கு வேலை வாங்கித் தருவதாகச் சொல்கிறார். ஆனால், லாரி அந்த வாய்ப்பை மறுத்து பாரிஸுக்குச் செல்வதாகச் சொல்கிறான். போர் அவனிடம் ஏற்படுத்திய தாக்கத்தால் வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடிப் பயணிக்கிறான் லாரி. லாரியின் பயண முடிவை ஏற்றுக்கொள்ளும் இஸபெல்லும் அவளின் தாயாரும் இரண்டு ஆண்டுகள் கழித்து திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று அவனை வழியனுப்புகிறார்கள்.

பாரிஸில் இஸபெல்லின் மாமா எலியட் டெம்பிள்டனைச் சந்திக்கும் லாரி, அங்கேயும் சமூக வாழ்க்கையில் நாட்டமில்லாமல் தவிக்கிறான். இரண்டு ஆண்டுகள் கழித்து இஸபெல்லும் லாரியும் சந்திக்கிறார்கள். அவர்களுக்கிடையில் உருவாகியிருக்கும் வேறுபாடுகளைத் தாண்டி இருவரின் காதலும் அப்படியே இருக்கிறது. இஸபெல் வசதிகள் நிறைந்த லௌகீக வாழ்க்கையை எதிர்பார்க்கிறாள். ஆனால், லாரி வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடும் தனது பயணத்தில் அவளை இணைத்துகொள்வதற்கு முயல்கிறான்.

ஆனால், ஒரு கட்டத்தில் இருவரும் வாழ்க்கையிடமிருந்து இருவேறு விஷயங்களை எதிர்பார்ப்பதைப் புரிந்துகொண்டு திருமண நிச்சயதார்த்தத்தை முறித்துக்கொள்கிறார்கள். ஓராண்டு கழித்து இஸபெல் கிரே மட்டுரினைத் திருமணம் செய்துகொள்கிறாள். லாரியை நேசிக்கும் அளவுக்கு அவளால் கிரேவை நேசிக்க முடியவில்லை. ஆனால், திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக கிரேவைத் திருமணம் செய்துகொள்கிறாள்.

 

பயணத்தின் தாக்கம்

லாரியின் வாழ்க்கைத் தேர்வை விளக்குவதற்காக இந்த நிகழ்வுகளைஎல்லாம் நாவலில் நினைவுகூர்கிறார் கதைசொல்லியான சாமர்செட் மாம். ஒரு சாமானிய இளைஞனின் வாழ்க்கைத் தேர்வு அவனின் ஆன்மிகப் பாதைக்கு எப்படி வழிவகுக்கிறது என்பதை விளக்குகிறது இந்தப் புத்தகம். போரில் ஒரு நாள் உயிரோடிருக்கும் லாரியின் நண்பர்கள், அடுத்த நாள் உயிரோடு இருக்க மாட்டார்கள். அதனால், லாரி தான் உயிரோடிருக்கும் ஒவ்வொரு நொடியையும் கொண்டாட நினைக்கிறான். அப்படியே வாழவும் செய்கிறான்.

இந்த நாவலின் ஒரு கட்டத்தில், லாரியை சாமர்செட் மாம் எழுத்தாளராகவே நுழைந்து சந்திக்கிறார். அப்போது லாரி, தத்துவ அறிஞர்கள் ஸ்பினோஸாவையும் தெக்கார்தேவையும் படித்துகொண்டிருக்கிறான். லாரிக்குக் காதலைவிட ஆன்மிகத் தேடல்தான் முக்கியம் என்பதை தான் உணர்ந்துகொண்டதாகச் சொல்கிறார் சாமர்செட் மாம். இதையடுத்து, ஒரு பிரெஞ்சு மடாலயத்தில் தங்கி ஆன்மிக இலக்கியங்களைப் படித்துத் தன்னைத் தெளிவுபடுத்திகொள்கிறான் லாரி.

 

குருவைச் சந்தித்தல்

பிரெஞ்சு நிலக்கரிச் சுரங்கம், ஜெர்மானியப் பண்ணை எனப் பல இடங்களில் பணியாற்றும் லாரி, கிழக்கே செல்லும் ஒரு கப்பலில் தொழிலாளியாகப் பயணிக்கிறான். அந்தக் கப்பல் மூன்று நாட்கள் மும்பையில் நிற்கிறது. கடைசி நாள், தான் இந்தியாவில் தங்க வேண்டுமென்று முடிவெடுக்கிறான் லாரி.

இரண்டு ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருக்கிறான். அப்போது குரு ஸ்ரீ கணேஷாவைப் பற்றி அறிந்துகொண்டு, அவரது ஆசிரமத்தில் மாணவனாக இரண்டு ஆண்டுகள் தங்குகிறான். இந்த நிகழ்வை ரமணாசிரமத்தில் ரமண மகரிஷிக்கும் தனக்கும் நடைபெற்ற சந்திப்பை அடிப்படையாக வைத்து எழுதியிருக்கிறார் சாமர்செட் மாம்.

இஸபெல், கிரே, எலியட் என வாழ்க்கையில் வெவ்வேறு விஷயங்களைத் தேடியவர்களை மீண்டும் சந்திக்கிறான் லாரி. அவர்களின் வாழ்க்கைத் தேர்வுகள் அவர்களை எப்படி அடியோடு மாற்றியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்கிறான். மடாலயங்களிலோ ஆசிரமங்களிலோ வாழ்வதைவிட, உலகை நேசித்து அதில் அமைதியாக வாழ்வதற்கு முடிவெடுக்கிறான் லாரி.

லாரியின் வாழ்க்கையின் வழியாக ஆன்மிகப் பாதையைத் தேர்தெடுப்பவர்களின் ஆத்ம திருப்தியை இந்த நாவலில் விளக்குகிறார் சாமர்செட் மாம். ‘தி ரேஸர்ஸ் எட்ஜ்’ நாவல் வாசகர்களின்மீது எந்தக் கருத்தையும் திணிக்காமல் எளிமையாகப் பயணிக்கிறது. ஆன்மிகப் பாதையைத் தனது பயணமாகத் தேர்ந்தெடுக்கும் ஒருவனின் வாழ்க்கையை அறிந்துகொள்ள உதவும் புத்தகம் இது.

வில்லியம் சாமர்செட் மாம்

எழுத்தாளர் வில்லியம் சாமர்செட் மாம், 1874-ம் ஆண்டு இங்கிலாந்தின் விட்ஸ்டேபில் நகரத்தில் பிறந்தார். லண்டனில் மருத்துவப் படிப்புப் படித்துவந்த அவர், தன் நாவல் ‘லிஸா ஆஃப் லாம்பெத்’ (Liza of Lambeth) வெற்றிக்குப் பிறகு முழு நேர எழுத்தாளராக மாறினார். எழுபதுக்கும் மேற்பட்ட இவரது படைப்புகளில், ‘Of Human Bondage’, ‘The Moon and Six pence’, ‘Cakes and Ale’, ‘The Summing Up’ (சுயசரிதை) போன்றவை முக்கியமானவை. 1965-ம் ஆண்டு அவர் மறைந்தார்.

http://tamil.thehindu.com/society/spirituality/article23970111.ece

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ஆன்மா என்னும் புத்தகம் 06: மகிழ்ச்சியின் ரசவாதம்

 

 
31chgowal-ghazali
 
 

அல் கஸாலி, பாரசீகத்தைச் சேர்ந்த சிறந்த இஸ்லாமிய சிந்தனையாளர். பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர், பாக்தாத்தின் நிஸாமையா கல்லூரியில் இஸ்லாமிய நீதி பரிபாலனத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். வாழ்வின் ஆழ்ந்த உண்மைகளைத் தேடுவதிலேயே அவர் தன் வாழ்க்கையின் பெரும்பாலான காலத்தைச் செலவிட்டார். “மனிதர்கள் நித்திரையில் இருக்கிறார்கள். இறப்பிலேயே அவர்கள் விழிப்படைகிறார்கள்” என்ற முகம்மது நபியின் வாக்கின்படி, அவர் தன் வாழ்வை அமைத்துகொண்டார்.

 

மதம், தத்துவம், உள்ளுணர்வு போன்ற அம்சங்களை அடிப்படையாக வைத்து அவர் வாழ்வின் ஆழ்ந்த உண்மைகளைத் தேடினார். தீவிரமான இந்தத் தேடல் அவருக்கு நரம்புத் தளர்ச்சியை அளித்தது. சில காலம் பேராசிரியர் பணியிலிருந்து விலகியிருந்தார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் சிரியாவில் மெய்ஞானத்தைத் தேடித் தெளிந்தபிறகே மீண்டும் பேராசிரியர் பணிக்குத் திரும்பினார்.

இறைவனை நேரடியாக உணர்வதற்கான பாதையை அவர் தன் படைப்புகளின் வழியாகப் பதிவு செய்தார். அந்த வகையில் ‘The Revival of the Religious Sciences’ என்ற அவரது ஆய்வுப் படைப்பு இஸ்லாமின் அரிய சொத்தாகக் கருதப்படுகிறது. இந்தப் படைப்பின் சுருக்கமான வடிவத்தைத் தான் பாரசீக மொழியில் 1105-ம் ஆண்டு, ‘கிமியா-இ-சாதத்’ (‘The Alchemy of Happiness’) என்று எழுதி அவர் வெளியிட்டார்.

 

இறையே மகிழ்ச்சி

‘தி அல்கெமி ஆஃப் ஹேப்பினெஸ்’ என்ற இந்தப் புத்தகத்தின் முதல் நான்கு அத்தியாயங்கள் முகம்மது நபிகளின் போதனைகளை விளக்குகிறது. இறையின் அருகில் இல்லாமல் உண்மையான மகிழ்ச்சியை அடைய முடியாது என்ற கருத்தை இந்தப் புத்தகம் வலியுறுத்துகிறது. இந்தப் புத்தகம் ஒன்பது நூற்றாண்டுகளாக இஸ்லாமிய மார்க்கத்தின் சிறந்த விழுமியங்களை அறிந்துகொள்வதற்கு உதவிவருகிறது. ஒரு சாமானிய மனிதனை ‘விலங்கிலிருந்து தேவதை நிலைக்கு’ உருமாற்றும் நான்கு அம்சங்களை கஸாலி இந்தப் புத்தகத்தில் விரிவாக அலசியிருக்கிறார். அவற்றை ‘சுய அறிவு’, ‘இறை அறிவு’, ‘உலக அறிவு’, ‘மறுமை உலக அறிவு’ என்று அவர் வகைப்படுத்துகிறார்.

 

சுயத்தை அறிவதற்கான பாதை

நம்மைப் பற்றி சரியாகத் தெரிந்துகொள்ளாமல் நம்மால் எதையும் இந்த உலகத்தில் அடைய முடியாது என்ற எளிய உண்மையை இந்தப் புத்தகம் புரியவைக்கிறது. சுயத்தை அறிந்துகொள்வதற்கான திறவுகோலாக இதயம்தான் செயல்படுகிறது. அது வெறுமனே உடலின் இதயம் அல்ல. இறைவனால் வழங்கப் பட்ட இதயம் அது. “அது ஒரு யாத்ரீகன் அந்நிய நிலத்துக்குச் செல்வதைப்போல இந்த உலகுக்கு வருகிறது. மீண்டும் அது வந்த இடத்துக்கே திரும்பச் சென்றுவிடுகிறது” என்று சொல்கிறார் கஸாலி. ஆன்மாவின்மீது போதிய கவனம் செலுத்தாதவன் இந்த உலகம், அந்த உலகம் என இரண்டிலும் தோற்றுப்போகிறான். சுயத்தை அறிந்து விலங்கின் நிலையிலிருந்து உயர் விழிப்பு நிலைக்குத் தன்னை உயர்த்திக்கொள்பவன் மகிழ்ச்சியின் சுய ரசவாதத்தை அனுபவிக்கிறான்.

 

இறை அறிவுக்கான பாதை

மனிதர்கள் இந்தப் பூமியில் தாங்கள் படைக்கப்பட்டதற்கான காரணத்தைத் தேடுவதற்கு மறுக்கிறார்கள். “மனிதன் வெறுமனே இருந்த காலம் அவனுக்கு ஒருபோதும் நினைவுக்கே வராதா?” திரு குர் ஆனின் வரிகளை மேற்கோள்காட்டுகிறார் கஸாலி. மனிதர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் மனக்குறைகள் அவர்களை இறைவனின் அருகில் அழைத்துவருவதாக விளக்குகிறார் அவர்.

 

உலக அறிவுக்கான பாதை

மனித உடலை குதிரையுடனும், ஒட்டகத்துடனும் ஒப்பிடுகிறார் கஸாலி. ஆன்மா தன் வாழ்க்கைப் பாதையை உடலைப் பயன்படுத்திக் கடப்பதாகத் தெரிவிக்கிறார். மெக்கா புனித யாத்திரைக்குச் செல்லும் பயணி எப்படித் தன் ஒட்டகத்தைப் பாதுகாப்பானோ, அப்படி ஆன்மா தன் உடலைப் பாதுகாக்க வேண்டும். அதேநேரத்தில், அந்தப் பயணி ஒட்டகத்தையே கவனித்துகொண்டிருந்தால், அந்தப் பயணம் தோல்வியில்தான் முடியும். இறைவனைவிட்டு விலகும் பெரிய முடிவைப் பெரும்பாலான மக்கள் எடுப்பதில்லை. ஆனால், அற்பமான விஷயங்களில் அவர்களுக்கு இருக்கும் நாட்டம், கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை இறைவனைவிட்டு விலகச் செய்கிறது.

 

மறுமை உலக அறிவுக்கான பாதை

குர்ஆனின் கூற்றுபடி, ஆன்மாக்களின் விருப்பத்தை மீறி சிறந்த அறிவையும் அனுபவத்தையும் பெறுவதற்காக பூமிக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. அவை பூமிக்கு வருவதற்கு அச்சப்படவோ, பீதியடையவோ தேவையில்லை என்று அதற்குச் சொல்லப்படுகிறது. எப்படி வாழ வேண்டும் என்ற இறைவனின் வழிகாட்டுதலுக்காக ஆன்மாக்கள் காத்திருந்தாலே போதுமானது. “நம்பிக்கையற்றவர்களையே நரகம் சூழ்கிறது” என்ற குர் ஆன் வரிகளை நினைவில் வைக்கச் சொல்கிறார் கஸாலி.

book-2a

1909-ம் ஆண்டு இந்துஸ்தானி மொழிபெயர்ப்பாளர் கிளவுட் ஃபீல்ட் இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அப்படித்தான் இந்தப் புத்தகம் மேற்கு உலகத்துக்கு அறிமுகமானது. பிரபல சூபி கவிஞர் ரூமி, கஸாலியின் ‘The Revival of the Religious Sciences’ படைப்பிலிருந்து பல நீதிக்கதைகளைத் தன் ‘மஸ்னவி’ படைப்பில் பயன்படுத்தியிருக்கிறார்.

“ஓர் அந்நிய நிலத்துக்கு வந்திருக்கும் யாத்ரீகர்கள்” என்பதை நாம் அறிந்துகொள்வது அவசியம். அனைத்து பொருட்களும் பிறக்கும் நித்தியமான இயல் கடந்த நிலைக்குத் திரும்பும் நீண்ட பயணத்துக்கான விருப்பும் இருந்தால் போதும்; மனித வாழ்க்கையில் அமைதியைக் கண்டடையலாம் என்று இந்தப் புத்தகத்தில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் கஸாலி.

 

கஸாலி

கஸாலியின் முழுப்பெயர் அபூ ஹமித் முகம்மது இப்னு முகம்மது அல்-கஸாலி. இவர் 1058-ம் ஆண்டு தூஸ் நகரத்தில் (தற்போதைய வடக்கு ஈரான்) பிறந்தார். இவர் இஸ்லாமிய மார்க்கத்தின் தலைசிறந்த பாரசீக இறையியல் வல்லுநராகவும், சட்டவியல் வல்லுநராகவும், தத்துவ அறிஞராகவும் விளங்கினார். இவர் தனது சுயசரிதையான ‘The Deliverance from Error’ புத்தகத்தில் தான் சந்தித்த ஆன்மிக நெருக்கடிகளைப் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார். இஸ்லாம் மார்க்கத்தின் செல்வாக்கு மிகுந்த ஆளுமையாக அறியப்படுகிறார். ‘இஸ்லாமின் சாட்சி’ என்ற தனித்துவமான பட்டம் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

http://tamil.thehindu.com/society/spirituality/article24036974.ece

Link to comment
Share on other sites

ஆன்மா என்னும் புத்தகம் 07: அவை தவளைகளாகவே இருக்கின்றன

 

 
7chgowShunryuSuzuki

ஜென் என்ற சொல்லை இன்றைய அன்றாட வாழ்க்கைச் சூழலில் அடிக்கடி எதிர்கொள்கிறோம். முதன்முதலில் இந்தச் சொல் ஜப்பானில் பவுத்தம் பரவியபோதுதான் உருவானது. ஜப்பானில் தனித்துவமான இயல்புகளுடனும் பயிற்சிகளுடனும் இயங்கிய பவுத்தம் ‘ஜென் பவுத்தம்’ என்று அறியப்படுகிறது. டெய்செட்ஸ் டி. சுஸுகி (Daisetz T. Suzuki) என்பவரால் ஜென் தத்துவம் மேற்குலகுக்கு ஏற்கெனவே அறிமுகமாயிருந்தது.

ஆனால், ஷுன்ரியு சுஸுகி 1960-களில் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் தொடங்கிய ‘ஜென் பயிற்சி’ மையம்தான் ஜென் தத்துவத்தின் தாக்கம் மேற்குலகில் நிலைபெறுவதற்குக் காரணமாக அமைந்தது. இவரின் ‘Zen Mind, Beginner’s Mind: Informal Talks on Zen Meditation and Practice’ என்ற புத்தகம் 1970-ம் ஆண்டு வெளியானது. ஷுன்ரியு சுஸுகியின் உரையாடல்களிலிருந்து தொகுக்கப்பட்ட இந்தப் புத்தகம் வாழ்க்கையில் ஜென் பயிற்சியை ஏன் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கான நோக்கத்தை எளிமையாக விளக்குகிறது.

 

 

கற்றுக்குட்டியின் மனம்

சுஸுகி, இந்தப் புத்தகத்தில் கற்றுக்குட்டியின் மனத்தை (Beginner’s Mind) விரிவாக அலசியிருக்கிறார். ஜென் பயிற்சியின் நோக்கமே எளிமையான, தூய்மையான, திறந்த மனத்தைப் பெறுவதுதான் என்று விளக்குகிறார் அவர். “உங்கள் மனம் காலியாக இருந்தால், அது எப்போதும் எதற்கும் தயாராக இருக்கிறது. அது அனைத்துக்கும் திறந்திருக்கிறது. கற்றுக்குட்டி மனம் எண்ணற்ற சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது. எல்லாம் தெரிந்த மனமோ குறைவான சாத்தியங்களையே கொண்டிருக்கிறது” என்று சொல்கிறார் அவர். ஒரு சாமானிய மனம் ஏதாவது ஒன்றைச் சாதிக்கும்போது தன்னைத்தானே வாழ்த்திக்கொள்கிறது. ஆனால், இது தன்னை மையப்படுத்தும் எண்ணங்களை உருவாக்கிவிடுவதால் கற்றலைச் சாத்தியமில்லாமல் செய்துவிடுகிறது.

பரந்து விளங்கும் பிரபஞ்ச மனத்தின் ஒரு வெளிப்பாடு மட்டுமே தான் என்பதை உணரும்போது கற்றுக்குட்டி மனம், ‘நான்’-க்கு அப்பால் கடந்துவிடுகிறது. இது இயற்கையாகவே பரிவை நம்மில் ஏற்படுத்தக்கூடியது. அது நல்லது, கெட்டது, ஏற்றுக்கொள்ளக்கூடியது, ஏற்றுக்கொள்ள முடியாதது என இரட்டைகளாகச் சிந்திப்பதிலிருந்து வெளியேறிவிடுகிறது. இதன் தொடர்ச்சியாக அது எப்படி இருக்கிறதோ அப்படியே அந்தத் தருணத்தின் முழுமையில் கவனம் குவிகிறது. வாழ்க்கையைக் குழப்பமானதாகவும், அமைதியற்றதாகவும் உணர்பவர்களுக்கு இந்த ‘Zen Mind, Beginner’s Mind’ புத்தகம் பல எளிமையான தீர்வுகளை முன்வைக்கிறது.

 

Frog
ஒழுங்கான மனம்

ஜென் பயிற்சிகளில் முக்கியமான தியான பயிற்சியாக ‘ஜாஜென்’ (Zazen) பயிற்சி கருதப்படுகிறது. இந்தப் பயிற்சி ஒரு குறிப்பிட்ட மனநிலையை அடைவதற்காகச் செய்யப்படுவதில்லை. இன்னும் சொல்லப்போனால், இந்தப் பயிற்சியைச் செய்வதால் மனம் அலைந்து திரியவே செய்யும். இந்த ‘ஜாஜென்’ தியான பயிற்சியைச் செய்வதற்காக எப்படி ஆசனத்தில் அமர்வது என்பதை எளிய வழிமுறைகளை இந்தப் புத்தகத்தில் விளக்கியிருக்கிறார் சுஸுகி.

இந்த ஆசனம், தொடர்ச்சியான எண்ணங்களின் போராட்டத்திலிருந்து மனத்தை விடுவிக்கிறது. அத்துடன், இந்த ‘ஜாஜென்’ பயிற்சியில் மூச்சுப் பயிற்சியும் முதன்மையாகத் திகழ்கிறது. இந்த ‘ஜாஜென்’ பயிற்சியை மேற்கொள்வதால் ‘சிறிய மனம்’ ‘பெரிய மனம்’ –ஆக உருவெடுப்பதாகச் சொல்கிறார் சுஸுகி. இந்தத் தியானப் பயிற்சியில் நாம் எந்த அளவுக்கு நேரம் செலவிடுகிறோமோ, அந்த அளவுக்கு நமது உலகம் ஒழுங்கானதாக மாறுகிறது என்று சொல்கிறார் அவர்.

 

தவளைகளைக் கவனிப்போம்

இந்த ஜென் தியானப் பயிற்சியைச் செய்வதால், நாம் தனிச்சிறப்புடையவர்கள் என்ற செருக்கு குறைகிறது. ஆனால், இந்தப் பயிற்சியை எதையும் எதிர்பார்க்காமல் செய்யச் சொல்கிறார் அவர். தியானம் என்பது சுய வெளிப்பாட்டின் உயர்ந்த வடிவம் என்று விளக்குகிறார் அவர். இந்தப் பயிற்சியைச் செய்வதற்கு ஒழுங்குமுறை தேவைப்படுகிறது. திரும்பச் செய்தல், இயல்பு மாறாநிலை, ஒரேமாதிரியாக இருப்பது ஆகியவற்றை ஜென் பாதையைப் பின்பற்றுவதற்கான வழிகளாக இந்தப் புத்தகம் முன்வைக்கிறது.

7chgowZen%20mind1

தவளைகள் அமர்ந்திருப்பதை உதாரணமாக வைத்து இந்தப் பயிற்சியை விளக்குகிறார் சுஸுகி. தவளைகள் தாங்கள் சிறப்பானவர்கள் என்று உணராமல்தான் அமர்ந்திருக்கின்றன. அவை அப்படி அமர்ந்திருந்தாலும் அவற்றின் அடையாளம் எந்தவிதத்திலும் மாறுவதில்லை. அவை தவளைகளாகவே இருக்கின்றன. இந்தப் பயிற்சியால் நம்மால் உலக இயல்புகளை எளிமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்று சொல்கிறார் அவர்.

‘Zen Mind, Beginner’s Mind’ என்ற இந்தப் புத்தகம், நாம் துன்பமாகக் கருதும் வாழ்க்கையின் நிலையற்ற தன்மையிலிருந்து இன்பம் காண முயல்வதே இந்த உலகில் வெற்றி பெறுவதற்கான ஒரே வழி என்பதை விளக்குகிறது.

ஷுன்ரியு சுஸுகி ()

1905-ம் ஆண்டு ஜப்பானில் பிறந்தார். இவர் தன் பன்னிரண்டு வயதில் ஜென் குரு ‘Gyokujun So-on-roshi’ யால் மாணவராகச் சேர்த்துகொள்ளப்பட்டார். இவர் கோமாஸோவாவில் உள்ள பவுத்தப் பல்கலைக்கழகத்தில் படித்தார். 1959-ம் ஆண்டு அமெரிக்காவுக்குப் பயணம்செய்த இவர், அங்கேயே சான் ஃபிரான்ஸிஸ்கோ நகரத்தில் தங்கிவிட்டார். அமெரிக்காவின் முதல் ஜென் பயிற்சி விஹாரத்தை இவர்தான் நிறுவினார். இவர் 1971-ம் ஆண்டு சான் ஃபிரான்ஸிஸ்கோ ஜென் மையத்தில் மறைந்தார்.

http://tamil.thehindu.com/society/spirituality/article24153191.ece

Link to comment
Share on other sites

ஆன்மா என்னும் புத்தகம் 08: ஒரு நேரத்தில் ஒரு செயல்

 

 
Aanma

வியட்நாம் பவுத்த துறவியான டிக் நாட் ஹான், 1968-ம் ஆண்டு வியட்நாம் போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அமெரிக்காவில் அமைதி உரைகள் நிகழ்த்த பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த உரைகளில், அவர் வியட்நாமின் கிராமப்புற வாழ்க்கைமுறையை எடுத்துக்கூறி, ‘எதிரி’ என்பவனும் எல்லாரையும் போன்றவன்தான் என்பதை அமெரிக்க மக்களுக்கு விளக்கினார். வியட்நாம் போரை மார்ட்டின் லூதர் கிங் எதிர்த்ததற்கு இவரது அமைதி உரைகளின் தாக்கமும் ஒரு காரணம். மார்ட்டின் லூதர் கிங், டிக் நாட் ஹானை நோபல் அமைதிப் பரிசுக்காகப் பரிந்துரை செய்திருக்கிறார்.

டிக் நாட் ஹான் நாடுகடத்தப்பட்டு பிரான்ஸில் வசித்தபோது, தான் வியட்நாமில் தொடங்கிய பவுத்த பள்ளியின் மூத்த பணியாளர் சகோதரர் குவாங் அவர்களுக்கு எழுதிய கடிதமே ‘The Miracle of Mindfulness: An Introduction to the Practice of Meditation’ என்ற புத்தகம். போரின்போது, பவுத்த பள்ளியின் பணியாளர்கள் அமைதியைக் கடைப்பிடிக்க நாட் ஹான் கடிதத்தில் விளக்கியிருந்த தியான பயிற்சிகள் உதவின. இந்தப் புத்தகத்தில் போர், அமைதி ஆகியவற்றுக்கான தீர்வுகளை அவர் முன்வைக்கவில்லை. மாறாக, அன்றாட வாழ்க்கையில் நமது எண்ணங்களை ஒழுங்கமைத்துக்கொள்வதற்கான வழிமுறைகளை முன்வைக்கிறார்.

 

 

21chgowMiracles%20of%20Mindfulness
தற்கண உணர்வு

மனிதர்கள் எப்போதும் ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டிருப்பதால் அவர்கள் தற்கண உணர்வுடன் இருப்பதற்கான வாய்ப்புகள் சாத்தியப்படவில்லை என்று சொல்கிறார் நாட் ஹான். ஆனால், தற்கண உணர்வேயில்லாமல் பொறுமையின்மை, கோபம் போன்றவற்றுடன் ஒரு பணியைத் தொடர்ந்து மேற்கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை என்பதையும் அவர் இந்தப் புத்தகத்தில் விளக்குகிறார். ஒரு நேரத்தில் ஒரு செயலை மட்டும் செய்வதால் தற்கண உணர்வைக் கைக்கொள்ள முடியும் என்று சொல்லும் அவர், இதன்மூலம் அமைதியை உடனடியாகக் கண்டடைய முடிவதையும் எடுத்துரைக்கிறார்.

 

தற்கண உணர்வை அடையும் வழிகள்

தற்கண உணர்வின் முரண் என்னவென்றால், அதை நம்மால் எளிதாக மறந்துவிட முடியும் என்பதுதான். நம் எண்ணங்கள் உடனடியாக அலைய ஆரம்பித்துவிடும். இந்தப் புத்தகம் தற்கண உணர்வைத் தக்கவைப்பதற்கான சிறந்த வழிகளை எளிமையாக விளக்குகிறது. ‘மூச்சுப் பயிற்சி’, ‘சுய கண்காணிப்பு’, ‘புன்னகை’, ‘தற்கண உணர்வுக்கான நாள்’ மூலம் தற்கண உணர்வை அடைவதற்கு இந்தப் புத்தகம் வழிகாட்டுகிறது.

மூச்சுப் பயிற்சி: “சுவாசத்தை ஆட்சி செய்யக் கற்றுக்கொண்டால், நம் உடல்களையும் மனங்களையும் கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டதாக அர்த்தம்” என்கிறார் நாட் ஹான். துயரமாக இருக்கும்போது, தியானத்தில் ஈடுபட முடியாது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், சுவாசத்தின் மீது கவனத்தைத் திருப்பும்போதே துயரச் சுமையிலிருந்து படிப்படியாக விடுபட்டுவிட முடியும் என்கிறார் அவர்.

மூச்சுப் பயிற்சியைச் சரியாக மேற்கொள்பவர்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் அமைதியாக இருக்க முடியும். எண்ணங்கள் தலையில் கூட்டம் கூட்டமாகத் தோன்றிக் கொந்தளிக்கும்போது, உடலுக்குக் கவனத்தைத் திருப்பி பிரக்ஞையுடன் சுவாசத்தை மேற்கொண்டால், மனதுக்கும் உடலுக்கும் ஆறுதல் ஏற்படுவதை உணர முடியும்.

சுய கண்காணிப்பு: தற்கண உணர்வு என்பது தியானப் பயிற்சியின்போது மட்டும் இருப்பதில்லை. அது இருபத்திநான்கு மணிநேரமும் நம்மிடம் இருப்பது. எந்தப் பணியை மேற்கொண்டிருந்தாலும் நமக்குத் தற்கண உணர்வு இருக்க வேண்டும். உங்களது எண்ணங்களைத் தொடர்ந்து நீங்கள் கண்காணிக்க வேண்டும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் உங்களுக்கு நீங்களே அமைதியாக விளக்க வேண்டும். உதாரணமாக, “நான் இந்தப் பாதையின் வழியாக என் கிராமத்துக்குச் செல்கிறேன்” என்று சொல்லும்போது, நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியின் அற்புதத்தையும் உங்களால் பாராட்ட முடியும்.

புன்னகை: காலையில் தூக்கத்திலிருந்து விழிக்கும்போதே புன்னகையுடன் விழிப்பது தற்கண உணர்வை அடைவதற்கான சுவாரசியமான வழி. இந்தப் புன்னகையை நாள் முழுவதும் தக்கவைத்துக்கொள்ளுங்கள். கோபமாக இருக்கும்போது, இசை கேட்கும்போது என நேரம் கிடைக்கும்போதெல்லாம் புன்னகையுங்கள். இந்தப் புன்னகை உணர்வுகளில் கரையாமல் தற்கணத்தில் உங்களை இருத்த உதவும்.

தற்கண உணர்வுக்கான நாள்: ஒரு வாரத்தில் ஒரு நாள் முழுவதும் தற்கண உணர்வைப் பயிற்சி செய்யுமாறு அறிவுறுத்துகிறார் நாட் ஹான். அந்த நாளில் வீட்டைச் சுத்தப்படுத்துவது, குளிப்பது என எந்தச் செயலைச் செய்தாலும் அந்தச் செயலைப் பொறுமையாகவும் விருப்பத்துடனும் அனுபவித்தும் செய்யச் சொல்கிறார் அவர். வாரத்தில் ஒரு நாள் இந்தத் தற்கண உணர்வுப் பயிற்சியை மேற்கொண்டால் அது வாரம் முழுவதும் பெரும் பயனைத் தரும் என்கிறார் அவர்.

 

இக்கணமே சிறந்தது

இந்தப் புத்தகத்தில், டால்ஸ்டாய் சொன்ன கதையை டிக் நாட் ஹான் மேற்கோள் காட்டுகிறார். ஒவ்வொரு செயலைச் செய்வதற்கும் எது சிறந்த நேரம்? ஒரு பணியை இணைந்து மேற்கொள்வதற்கான முக்கியமான நபர்கள் யார்? எப்போதுமே செய்ய வேண்டிய முக்கியமான பணி எது? என்ற மூன்று கேள்விகளுக்கான பதிலை ஓர் அரசர் தேடினார். அவசரகதியான வாழ்க்கையில் எதையாவது சாதிப்பதற்காக ஓடிக்கொண்டிருக்கும் பலரும் இந்த மூன்று கேள்விகளுக்குப் பதிலைத் தெரிந்துகொள்ள முயன்றுகொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு இந்தக் கதையில் டால்ஸ்டாய் சொல்லியிருக்கும் பதில் இதுதான்: மிகச் சிறந்த நேரம் என்பது இக்கணம்தான். மிக முக்கியமான நபர் என்பவர் எப்போதும் உங்களுடன் இருப்பவர்தான். மிக முக்கியமான பணி என்பது உங்களுடன் சேர்ந்து பயணிப்பவரை மகிழ்ச்சிப்படுத்துவதுதான்”.

மனிதகுலத்துக்கு மாபெரும் சேவை செய்வதற்கு நாம் முயன்றுகொண்டிருப்பததைவிட, இப்போது நாம் இருக்கும் நிலையில், நம் அருகிலிருப்பவர்களுக்கு எதைச் செய்ய இயலுமோ அதைச் செய்வதே சரியான செயல் என்று சுட்டிக்காட்டுகிறார் டிக் நாட் ஹான். நமக்கு அருகிலிருப்பவர்களின் மகிழ்ச்சிக்கு வழிசெய்யாமல் நம்மால் உலகத்தைச் சிறந்த இடமாக மாற்ற முடியாது என்று இந்தப் புத்தகத்தில் விளக்குகிறார் அவர்.

21chgowThich%20Nhat%20Hanh

டிக் நாட் ஹான்

இந்தப் புத்தகத்தை வியட்நாமிய மொழியிலிருந்து மொழிபெயர்ப்பாளர் மோபி ஹோ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். தியானப் பயிற்சிக்கான ஒரு எளிமையான வழிகாட்டியாக இந்தப் புத்தகம் பார்க்கப்பட்டாலும் ஆழமான மன அமைதிக்கான தேடல் இருப்பவர்களுக்கும் இந்தப் புத்தகம் வழிகாட்டுகிறது.

டிக் நாட் ஹான்

1926 –ம் ஆண்டு வியட்நாமில் பிறந்தார். தன் பதினாறாவது வயதில் பவுத்த துறவியானார். வியட்நாம் போர் பாதிப்பிலிருந்து அகதிகளை மீட்பதற்காக ‘engaged Buddhism’ என்ற இயக்கத்தைத் தொடங்கினார். தன் நாற்பதாவது வயதில் வியட்நாமிலிருந்து நாடு கடத்தப்பட்ட இவர், பிரான்ஸ் நாட்டில் ‘ப்ளம் வில்லேஜ்’ மையத்தில் தற்போது வாழ்ந்துவருகிறார். இவர், ‘Being Peace’, ‘The Sun My Heart’, ‘Living Buddha’, ‘A Guide to Walking Meditation’ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

http://tamil.thehindu.com/society/spirituality/article24211321.ece

Link to comment
Share on other sites

ஆன்மா என்னும் புத்தகம் 09: பறத்தலின் பொருட்டு பற

 

 
28chgowrichardbach

அமெரிக்காவின் பிரபல எழுத்தாளரான ரிச்சர்ட் பாக் எழுதிய ‘ஜோனாத்தன் லிவிங்ஸ்டன் ஸீகல்’ 1970-களில் அதிகமாக விற்பனையான புத்தகங்களில் ஒன்று. இந்தப் புத்தகத்தின் கதாநாயகனான ஜோனாத்தன் என்ற கடல் காகத்துக்கு, அந்தக் காலகட்டத்தில் நட்சத்திர அந்தஸ்தே இருந்தது. அந்த ஜோனாத்தன் கடல் காகம், மற்ற கடல்காகங்களைப் போல சாமானிய வாழ்க்கையை வாழ விரும்பாமல் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறது. நூறு பக்கங்களுக்குள் அடங்கிவிடும் இந்தப் புத்தகம், பறந்த விரிந்த உலகை ரசித்து வாழ நினைக்கும் ஒரு கடல் காகத்தின் வாழ்க்கையை விவரிக்கிறது. தற்போது, இந்தப் புத்தகம் நவயுக காலகட்டத்தின் ஆன்மிக அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.

 

பறக்க நினைக்கும் கடல் காகம்

 

ஜோனாத்தன், தான் வாழும் கடல் காகக் கூட்டத்தில் வித்தியாசமான கடல் காகமாக இருக்கிறது. “பெரும்பாலான கடல் காகங்கள் பறப்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அவற்றுக்குச் சாப்பிடுவது மட்டும்தான் ஒரே குறிக்கோள். ஆனால், இதற்கு மாறாக, ஜோனாத்தனுக்குச் சாப்பிடுவது மட்டுமே குறிக்கோளாக இன்றி பறப்பதே குறிக்கோளாக இருந்தது”. ஜோனாத்தனின் தந்தை அதனிடம், “நீ பறப்பது உணவைத் தேடி மட்டும்தான் இருக்க வேண்டும். பறக்க வேண்டும் என்ற ஆசையில் நீ பறக்கக் கூடாது” என்று எச்சரிக்கிறார்.

அவர் எச்சரிக்கையையும் மீறி, ஜோனாத்தன் அதிவேகமாகப் பறந்துவந்து நீரில் குதிப்பது, கடல் நீரில் தாழப் பறப்பது எனப் பல சோதனைகளை மேற்கொண்டது. அது தன் ஆற்றலை மீறிப் பறப்பதற்கு முயன்றது. ஆனால், அதன் பெரும்பாலான முயற்சிகள் தோல்வியடைந்தன. அதற்குத் தனக்கிருக்கும் வரம்புகள் தெரிந்துதான் இருந்தது.

“நான் ஒரு கடல் காகம். என்னுடைய இயல்பால் நான் வரையறுக்கப்பட்டிருக்கிறேன். நான் அதிவேகமாகப் பறப்பதற்கு விதிக்கப்பட்டிருந்தால், ராஜாளியைப் போல சிறிய இறக்கைகள் எனக்கு இருந்திருக்கும். நான் மீன்களுக்குப் பதிலாக எலிகளைச் சாப்பிட்டிருப்பேன்” என்று நினைத்தது ஜோனாத்தன். ஒருநாள், ஒரு மணி நேரத்தில் 140 மைல் வேகத்தில் பறந்தால், அடுத்தநாள் அது ஒரு மணி நேரத்தில் 200 மைல் வேகத்தில் பறந்து மகிழ்ச்சியடைந்தது. இந்த வேகத்தில் எந்த ஒரு கடல் காகமும் பறந்தது கிடையாது.

அது தன் இனத்தை வேறொரு கட்டத்துக்கு நகர்த்திச் சென்றுவிட்டதாக நினைத்து ஆனந்தம் அடைந்தது. தான் கற்றுக்கொண்டதைத் தன் கூட்டத்தாருக்கும் கற்றுக்கொடுத்தால் இரை தேடி ஒவ்வொரு மீன்பிடிப் படகாக ஓட வேண்டியிருக்காது என்று அது நினைத்தது. தன் கூட்டத்தினரின் உயர்ந்த நிலையை உணர்த்த நினைத்தது ஜோனாத்தன்.

 

பரிபூரணத்துக்கான தேடல்

ஆனால், அடுத்த நாள் ‘பொறுப்பற்று பறந்து’கொண்டிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டு ஜோனாத்தன் கடல் காகக் குழுவின்முன் நிறுத்தப்பட்டது. “உணவை உண்டு, எவ்வளவு காலம் வாழ முடியுமோ அவ்வளவு காலம் வாழும் வாழ்க்கையின் நோக்கம் அதற்குப் புரியவில்லை” என்று கூறிய குழுவினர் கூட்டத்தைவிட்டு ஜோனாத்தனை வெளியேற்றிவிட்டனர். சிறிது காலம், தனிமையில் பாறைகளின் மேல் பறந்துதிரிந்து கழித்த ஜோனாத்தன், தன்னைப் போலவே பறத்தலின் பொருட்டு பறக்க நினைக்கும் மேன்மையான கடல் காகக் கூட்டம் ஒன்றைச் சந்தித்தது.

அந்தக் கூட்டத்தின் கடல் காகங்களிடம் ஜோனாத்தன் பறத்தலின் பல்வேறு பரிமாணங்களைக் கற்றுக்கொண்டது. ஜோனாத்தனின் திறமையைப் பார்த்த கடல் காகங்கள், அதனிடம் லட்சத்தில் ஒரு கடல் காகத்திடம் இருக்கும் திறமை இருப்பதாகக் கூறின. அது பரிபூரணம் அடைவதற்கான தேடலைத் தொடங்க வேண்டும் என்று அவை வலியுறுத்தின.

“இந்த உண்மையைப் புரிந்துகொள்ள பெரும்பான்மையான கடல் காகங்களுக்கு 1000 ஜென்மங்கள் தேவைப்படும். இந்த உலகத்தில் நாம் என்ன கற்றுக்கொள்கிறோமோ அதைத்தான் நாம் அடுத்த உலகத்தில் அடைகிறோம். இந்த உலகில் எதையுமே கற்றுக்கொள்ளாவிட்டால், அடுத்த உலகத்திலும் எதையும் கற்றுக்கொள்ளப்போவதில்லை. அப்போது இந்த உலகத்தில் எந்தக் குறைகளுடன் வாழ்கிறோமோ அதே குறைகளுடன்தான் அடுத்த உலகத்திலும் வாழ வேண்டியிருக்கும்” என்று ஜோனாத்தனுக்கு அந்தக் கடல்காகங்கள் விளக்கின.

 

28chgowSeagull%20book
கடவுளைச் சந்தித்தல்

ஒரு முறை, நகராமலே நினைத்த இடத்துக்குப் பயணம் செய்யும் அற்புத சக்திவாய்ந்த முதிய கடல் காகத்தைச் சந்திக்கும் வாய்ப்பு ஜோனாத்தனுக்குக் கிடைக்கிறது. அந்த முதிய கடல் காகத்தைச் சந்தித்தவுடன், ஜோனாத்தனுக்கு தான் எலும்பும் இறக்கைகளும் கொண்ட பறவை மட்டுமல்ல; தன்னிடம் எதனாலும் கட்டுப்படுத்த முடியாத சுதந்திரமும் பறக்கும் திறனும் இருக்கின்றன என்பதை உணர்ந்தது. நாம் நம்மைப் பார்க்கும் பார்வையை மாற்றிக்கொள்ளாவிட்டால், நம்மிடம் இருக்கும் திறமைகளை கண்டுபிடிக்கவே முடியாது. இறுதியில் ஜோனாத்தன், பறக்க ஆசைப்படும் கடல் காகங்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தது.

இந்தப் புத்தகத்தில் ரிச்சர்ட் பாக் ‘சிறந்த கடல் காக’த்தை இயேசு கிறிஸ்துவின் உருவகமாக விவரிக்கிறார். இந்தப் புத்தகம் எளிமையான கருத்துகளை வலியுறுத்தவதாகப் பலர் நினைத்தாலும், மனித ஆற்றலின் எல்லைகளையும் சாத்தியங்களையும் கடக்க நினைக்கும் ஒவ்வொரு தலைமுறையினருக்கும், அவர்களை உந்தித் தள்ளும் லட்சிய உயிராகவே கடல் காகம் இருக்கும்.

ரிச்சர்ட் பாக்

இவர் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் 1936-ம் ஆண்டு பிறந்தார். அமெரிக்க விமானப் படையில் விமானியாகப் பணியாற்றிய இவர், விமானத் தொழில்நுட்ப எழுத்தாளராக விளங்கினார். இவர் பெரும்பாலான புத்தகங்களை பறவைகள், பறத்தலை உருவகமாக வைத்து எழுதியிருக்கிறார். ‘Illusions’, ‘Bridge Across Forever’, ‘Nothing By Chance’ ‘The Ferret Chronicles’ உள்ளிட்ட புத்தகங்களை இவர் எழுதியிருக்கிறார்.

http://tamil.thehindu.com/society/spirituality/article24271849.ece

Link to comment
Share on other sites

ஆன்மா என்னும் புத்தகம் 10: அறிவின் முட்செடிகளைக் களையெடுப்போம்

 

 
5chgowsufitale

சூபி அறிஞரும் எழுத்தாளருமான இத்ரிஸ் ஷா, மேற்குலகுக்கு சூபி தத்துவங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்களில் முக்கியமானவர். இஸ்லாம் மார்க்கத்தின் மறைஞானமாகவும், தனிப்பட்ட பரிமாணமாகவும் புரிந்துகொள்ளப்படும் சூபி ஞானம், முகம்மது நபிகள் காலத்துக்கும் முந்தையது என்ற கருத்தை முன்வைத்திருக்கிறார் இத்ரிஸ் ஷா. இவரது சிறந்த படைப்பாக இன்றளவும் ‘தி வே ஆஃப் தி சூபி’ (The Way of The Sufi) புத்தகம் விளங்குகிறது.

 

அறிஞர்களின் அறிமுகம்

 

மெய்ஞ்ஞானிகள், கவிஞர்களான கஸாலி, உமர் கய்யாம், அத்தர், இபின் எல்- அரபி, சாடி, ஹக்கிம் சானாயி, ஹக்கிம் ஜாமீ, ஜலாலுதீன் ரூமி ஆகிய எட்டு அறிஞர்களை இந்தப் புத்தகத்தில் அறிமுகப்படுத்துகிறார் இத்ரிஸ் ஷா. அத்துடன், ‘சிஷ்டி’, ‘குவாத்ரி’, ‘ஷுராவார்தி’, ‘நக்ஷ்பந்தி’ ஆகிய சூபியின் நான்கு கட்டளைகளையும் இந்தப் புத்தகம் விளக்குகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட சூபி கதைகள், விடுகதைகள், பழமொழிகளையும் இந்தப் புத்தகத்தில் தொகுத்திருக்கிறார் இத்ரிஸ் ஷா.

 

திறந்த மனமே சிறந்தது

பன்னிரண்டாம், பதின்மூன்றாம் நூற்றாண்டில் பிறந்த சூபி கருத்துகளில் பொதிந்திருந்த உளவியல் கருத்து நிலைகளும் நடைமுறைகளும் இருபதாம் நூற்றாண்டில்தான் பிராய்ட், யுங் போன்றவர்களால் ‘கண்டுபிடிக்கப்படுகின்றன’ என்கிறார் இத்ரிஸ் ஷா. சீரமைப்பும் போதனைகளும் உண்மையான ஆன்மிகத்தின் எதிரி என்று கஸாலி மேற்கோள்காட்டுவதைச் சுட்டிக்காட்டுகிறார் அவர். பெரும்பாலான மனிதர்கள் அவர்களிடம் வழங்கப்படும் நம்பிக்கைகளை எந்தவிதக் கேள்வியும் கேட்காமல் அப்படியே ஏற்றுக்கொள்கின்றனர். அவர்களால், உண்மையான ஞான மார்க்கத்தை அடைய முடிவதில்லை.

இந்தக் கருத்தை விளக்குவதற்காக அப்துல் அஸ்ஸிஸ் என்ற ஏழாம் நூற்றாண்டு சூபி அறிஞரின் கதையை விளக்குகிறார் ஷா. “ஒரு கழுதையிடம் பழக் கலவையைக் கொடுத்தால், எந்தமாதிரியான முட்செடி இது என்றுதான் அது கேட்கும்”. முட்செடிகளை மட்டுமே நாம் அறிந்துவைத்திருந்தால், நமக்கு வேறு எதுவுமே நல்லதாகத் தெரியாது. இந்தக் கருத்தை மனிதர்களுக்குப் பொருத்திப் பார்க்கும்போது, நம்முடைய மனங்கள், ஏற்கெனவே நமக்குள் நிலைபெற்றிருக்கும் அறிவின் முட்செடிகளுக்குத்தான் சாதகமாகச் செயல்படும். அதற்கு, வெளியில் அற்புதமான ஞானம் எப்படியிருக்கும் என்பதைப் பற்றித் தெரியாது.

5chgowsufis
 

ஒரே மார்க்கம், ஒரே தத்துவம்தான் உண்மை என்று நம்பி, அதில் சிக்கிக்கொண்டிருப்பது சூபியின் வழி கிடையாது. அதற்கு மாறாக, எதிர்த்தரப்பில் இருக்கும் கருத்துகளுடன் இணைந்து நமக்கு விடுதலையை அளிக்கும் திறந்த மனத்தை வளர்த்துகொள்வதாக அது இருக்கிறது.

 

சூபி ஞானம்

சூபியிசத்தை ஒரு கலாச்சார, மத இயக்கமாகப் படிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்று சொல்லும் ஷா, “அப்படிப் படித்துமுடித்த பிறகும், அதிலிருந்து எந்த அர்த்தத்தையும் புரிந்துகொள்ள முடியாமல் வெளியே வரமுடியும்” என்கிறார். சூபி துறவி சாடியின் இந்த மேற்கோளை இதற்கு உதாரணமாகக் காட்டுகிறார் அவர். “பேசுவதற்கு மட்டுமே விழையும் கற்றறிந்த மனிதனால் மற்றொரு மனிதனின் அகத்துக்குள் எப்போதும் ஊடுருவவே முடியாது”.

சூபி ஞானத்தைப் பட்டப்படிப்புகளின் வழியாக அடைய முடியாது. அதனால்தான் அதன் போதனைகள் எல்லாம் மரபுக் கதைகள், விடுகதைகள், நகைச்சுவை போன்ற அம்சங்களால் விளக்கப்படுகின்றன. “சூபித்துவம் என்பது எந்த வடிவமும் அற்ற உண்மையாகும்” என்னும் சூபி துறவி இபின் எல் ஜலாலியின் கருத்தை இந்தப் புத்தகத்தில் வழிமொழிகிறார் ஷா.

 

சூபியின் வழி

உண்மையான சூபிக்கள், தாங்கள் வாழும் கலாச்சாரத்தைக் கடக்க முயல மாட்டார்கள். ஆனால், அவர்கள் தங்கள் மொழி, வழக்கங்கள், முன்முடிவுகள், மார்க்கம் போன்றவற்றைப் பயன்படுத்தி அதிகபட்ச விளைவை ஏற்படுத்துவார்கள். மனிதனிடம் இருக்க வேண்டிய உண்மையான செல்வம் அறிவும் ஞானமும்தாம். மற்றவை எல்லாம் தற்காலிகமானவைதாம். இந்தக் கருத்தைத்தான் பல சூபி கதைகள் முன்வைக்கின்றன. ஒரு சூபி மாணவன், உண்மை எந்த வடிவத்தில் வந்தாலும் அதைத் திறந்த மனத்துடன் வரவேற்பான்.

சூபியிசம், மறைஞானமாக விவரிக்கப்பட்டாலும், ஆய்ந்த உண்மையின் வளத்தை இந்த உலகில் பெருகச் செய்வதே அதன் உண்மையான நோக்கமாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கண்டெடுக்கப்பட்ட மனித ஞானத்தின் ஆற்றலை சூபியிசம் வழியாகப் புரிந்துகொள்ளலாம். வாழ்வின் உறக்க நடை கதியைக் கலைத்து விழிப்பின் உயர்நிலையைத் திறக்கும் சாத்தியமாக சூபித்துவம் உள்ளது என்கிறார் இத்ரிஸ் ஷா.

5chgowidries-shah
இத்ரிஸ் ஷா

இத்ரிஸ் அபுதாஹிர் ஷா, 1924-ம் ஆண்டு, சிம்லாவில் பிறந்தார். இவரது குடும்பம் அவர் பிறந்தவுடனே இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்ததால், லண்டனிலேயே படித்து வளர்ந்தார். கீழைத்தேய உலகின் பாரம்பரிய போதனைகளை மேற்கு உலகத்துக்கு விளக்குவதில் இவர் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்டார்.

சூபி துறவிகள் சிலரைத் தன் முப்பதாவது வயதில் சந்தித்த பிறகுதான், அவருக்கு சூபி ஞானம் அறிமுகமானது. அதற்குப் பிறகுதான், இவர் ‘ஓரியண்ட்ல் மேஜிக்’ (Oriental Magic), ‘டெஸ்டினேஷன் மெக்கா’ (Destination Mecca) போன்ற நூல்களை எழுதினார். சமூக, கலாச்சார பிரச்சினைகளில் ஆர்வம்கொண்ட அவர், ‘கலாச்சார ஆராய்ச்சி மையத்தை’ நிறுவினார்.

‘தி சூபிஸ்’ (The Sufis), ‘திங்கர்ஸ் ஆஃப் தி ஈஸ்ட்’ (Thinkers of The East), ‘விஸ்டம் ஆஃப் தி இடியட்ஸ்’ (Wisdom of the Idiots) போன்ற 35 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவர் 1996-ம் ஆண்டு மறைந்தார்.

http://tamil.thehindu.com/society/spirituality/article24330303.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஆன்மா என்னும் புத்தகம் 11: புரிதல் என்னும் ஓடு உடைதல்

 

 
khaliljpg

லீல் ஜிப்ரான் என்ற லெபனிய அமெரிக்க எழுத்தாளரை உலகம் அறியச் செய்த புத்தகம் ‘தீர்க்கதரிசி’(The Prophet). 1923-ம் ஆண்டு வசன கவிதை வடிவத்தில் வெளியான இந்தப் புத்தகம், வாழ்வின் பொதுவான பண்புகளைப் பற்றிய ஆன்மிகப் பார்வையை முன்வைக்கிறது.

அர்ஃபலிஸே தீவில் வாழும் அல்முஸ்தஃபா என்ற மனிதனை இந்தப் புத்தகம் பின்தொடர்கிறது. அந்தத் தீவில் வாழும் மக்கள், அல்முஸ்தஃபாவை ஞானியாகக் கருதுகின்றனர். ஆனால், அவரோ தாயகம் திரும்பிச் செல்லும் கப்பலுக்காகப் பன்னிரண்டு ஆண்டுகளாகக் காத்திருக்கிறார். ஒரு நாள், தன் கப்பல் மலை உச்சியிலிருந்து துறைமுகத்துக்கு வருவதைக் காண்கிறார். அவர் பன்னிரெண்டு ஆண்டுகளாகப் பழகிய அந்தத் தீவின் மக்களைப் பிரிந்து செல்வதை நினைத்து வருந்துகிறார்.

 

அந்தத் தீவின் பெரியவர்கள் அவரைத் திரும்பி போக வேண்டாமென்று சொல்கின்றனர். அந்தக் கூட்டத்திலிருக்கும் பெண் துறவி ஒருவர், அல்முஸ்தஃபா புறப்படுவதற்குமுன், அவரது வாழ்க்கைத் தத்துவத்தைத் தங்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்கிறார். அவர், அந்தக் கூட்டத்திடம் பகிர்ந்துகொண்ட கருத்துகள்தாம் ‘தீர்க்கதரிசி’.

மனித வாழ்க்கையின் அடிப்படை அம்சங்களான கொடை, குற்றம், தண்டனை, சட்டங்கள், கற்றல், நேர நிர்வாகம், சமயம், இன்பம், மரணம், அழகு, நட்பு, உறவுகள் பற்றிய கருத்துகளை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஓவியங்கள் கலீல் ஜிப்ரான் வரைந்தவை.

காதல், திருமணம் குறித்து

“காதல் உங்களைக் கை காட்டி அழைக்கும்போது, அதைப் பின்தொடருங்கள்; அதன் வழிகள் எவ்வளவு கடினமானதாக, ஆழமானதாக இருப்பினும்” என்கிறார் மெய்ஞ்ஞானி. “காதலில் அமைதியையும் இன்பத்தையும் மட்டும் தேடுபவன் முட்டாள்” என்கிறார் அவர். காதலின் எல்லையை நம்மால் வரையறுக்க முடியாது என்று சொல்லும் அவர், “காதல் உங்களைத் தகுதியானவராகக் கருதினால், அதுவே உங்களை வழிநடத்தும்” என்கிறார்.

திருமணத்தைப் பொறுத்தவரை, இருவர் ஒருவராகும் வழக்கமான கருத்தை மறுக்கிறார் அவர். “ஒரு ஓக் மரமும் சைப்ரஸ் மரமும் ஒன்றின் நிழலில் மற்றொன்று வளர்வதில்லை. அதே போல், ஒரு உண்மையான திருமணம், இருவரும் தனித்துவத்தை வளர்த்துகொள்வதற்கு இடம்கொடுக்கும். இருவரின் கோப்பையையும் நாம் நிரப்பிக் கொள்ளலாம். ஆனால், ஒரு கோப்பையிலிருந்து மட்டும் பருகக் கூடாது. சேர்ந்து பாடி ஆடிக் களித்திருங்கள். ஆனால், உங்களில் இருவரையும் தனித்திருக்கவும் விடுங்கள்” என்கிறார். சிறந்த திருமண உறவுக்கான விதியாக இந்தக் கருத்தை முன்வைக்கிறார்.

 

பணி

அன்றாடப் பணிகளையும் சிலர் சங்கடமாகக் கருதுகின்றனர். ஆனால், “உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பணியைச் செய்வதால், பூமியின் தொலைதூரக் கனவின் ஒரு பகுதியை நனவாக்குகிறீர்கள். ஏனென்றால், அந்தக் கனவு இந்தப் பூமியில் பிறந்தவுடன், அது உங்களிடம் ஒப்படைக்கப்படுகிறது” என்கிறார். தாங்கள் செய்யும் பணியை நேசிப்பவர்களுக்கு அதுதான் நிறைவுக்கான ரகசியம் என்பது தெரியும்.

 

வலியும் துன்பமும்

“உங்களின் புரிதலை மூடிவைத்திருக்கும் முட்டையின் ஓட்டை உடைப்பது போன்றதுதான் உங்கள் வலி” என்கிறார் அவர். விலைமதிப்பற்ற வாழ்க்கையின் புதிய அனுபவம் போல், உங்கள் வலியை அற்புதமாக்க முயலுங்கள். அப்படி உங்களால் செய்ய முடிந்தால், காலங்கள் கடந்துபோவதைப் போல் அமைதியாக, உங்களை ஆட்கொள்ளும் உணர்வுகளையும் கடக்க முடியும்.

 

சுதந்திரம்

சுதந்திரத்துக்காக ஏங்கிக்கொண்டிருப்பதே அடிமைத்தனம் போன்றதுதான். மனிதர்கள் சுதந்திரமாக இருப்பதைப் பற்றிப் பேசும்போது, அது அவர்கள் தப்பிச்செல்வதற்கான அம்சங்களில் ஒன்றாகத்தான் இருக்கிறது.

 

நன்மை, தீமை

தீமை என்ற ஒரு விஷயமே கிடையாது. பசித்து, தாகமெடுக்கும் நிலையில் இருப்பதுதான் தீமை. அது, தன் தேவைகளை இருளில் மட்டுமே தேடித் திருப்தி அடைகிறது. வெளிச்சம் இருக்கிறது. வெளிச்சமின்மையும் இருக்கிறது. தீமையின் மீது வெளிச்சத்தை ஒளிரவிட்டால், அது மறைந்துவிடும்.

 

12chsrskhalil
வழிபாடு

கடவுளை வழிபடும்போது எதையும் உங்களால் கேட்க முடியாது. ஏனென்றால் உங்களது ஆழமான தேவைகளையும் கடவுள் அறிவார். கடவுளே நமது முக்கியமான தேவையாக இருக்கும்போது, மற்ற பொருட்களை அவரிடம் வேண்டக் கூடாது.

இந்தப் புத்தகத்தை வாழ்க்கையின் ரகசியங்களைத் திறக்கும் விதமாக எழுதியிருக்கிறார் ஜிப்ரான். நாம் இந்த உலகத்துக்கு வருகிறோம், மீண்டும் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே திரும்பிச் சென்றுவிடுகிறோம். இந்தப் புத்தகத்தின் முடிவில், ஞானி அல்முஸ்தஃபா கப்பலில் ஏறுவதற்குத் தயாராகும்போது, அவர் தன் கடற்பயணத்தைப் பற்றிப் பேசவில்லை. அவர் பிறப்பதற்கு முன், எங்கிருந்து வந்தாரோ, அங்கே செல்வதைப் பற்றிப் பேசுகிறார்.

அவர் வாழ்க்கை ஒரு சிறிய கனவுபோல் தோன்றுகிறது. வாழ்க்கையில் கிடைக்கும் எந்த அனுபவத்தையும் நினைத்து நாம் மகிழ்ச்சிஅடைய வேண்டும் என்று இந்தப் புத்தகம் வலியுறுத்துகிறது. உலக மொழிகளில் அதிகம் வாசிக்கப்படும் எழுத்தாளர்களில் ஒருவரான கலீல் ஜிப்ரானின் ‘தீர்க்கதரிசி’, ‘முறிந்த சிறகுகள்’ போன்ற புத்தகங்கள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வாசக செல்வாக்கைப் பெற்றது.

கலீல் ஜிப்ரான்

இவர் 1883-ம் ஆண்டு வடக்கு ஒட்டோமானில் உள்ள லெபனானில் பிறந்தார். இவர் தந்தையின் சூதாட்டப் பழக்கத்தால், இவருடைய தாய், குழந்தைகளுடன் அமெரிக்காவில் குடியேற நேர்ந்தது. கலீல் ஜிப்ரான், ஓவியத்தில் தனக்கு இருக்கும் திறமையை பள்ளியில் வெளிப்படுத்தினார். உயர்கல்விப் படிப்பை முடித்து, 19 வயதில் பாஸ்டன் திரும்பிய ஜிப்ரான், காசநோயில் தன் குடும்பத்தினரை இழந்தார். அப்போது, மேரி ஹஸ்கெல் என்ற ஒரு பள்ளித் தலைமை ஆசிரியை, கலீல் ஜிப்ரான் ஓவியங்கள் வரைவதற்கும் கவிதைகள் எழுதுவதற்கும் ஊக்கமளித்தார்.

பாரிஸில் இரண்டு ஆண்டுகள் கலைப்படிப்பை முடித்துவிட்டு, நியூயார்க்கில் தங்கி தன் ஓவிய, எழுத்துப் பணிகளைத் தொடர்ந்தார் அவர். 1920-ம் ஆண்டு, அரேபிய எழுத்தாளர்களுக்கான ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். லெபனானும் சிரியாவும் ஒட்டோமான் பேரரசிடமிருந்து விடுதலை பெறுவதை ஆதரித்து அரபி மொழியில் அவர் தொடர்ந்து எழுதினார். ‘தி புரோக்கன் விங்க்ஸ்’ (The Broken Wings), ‘தி மேட்மேன்’ (The Madman), ‘தி ஃபோர்ரன்னர்’ (The Forerunner) உள்ளிட்ட படைப்புகளைப் படைத்தார். அவர் 1931-ம் ஆண்டு மறைந்தார்.

http://tamil.thehindu.com/society/spirituality/article24389353.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஆன்மா என்னும் புத்தகம் 12: நீங்கள்தான் அந்த அற்புதம்

 

 

 
anmaajpg

அகத்தின் குரல் ஒன்று தனக்குள் ஒலித்ததைக் கேட்டு, உளவியலாளர் ஹெலன் ஷுக்மன் ’எழுதிய’தாகச் சொல்லப்படும் புத்தகம் ‘ஏ கோர்ஸ் இன் மிராக்கில்ஸ்’. இந்தப் புத்தகம் பிரபஞ்சத்தில் மனிதனாக வாழ்வதற்கான விதிமுறைகளை விளக்குகிறது. இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் கொள்கைகளை முன்வைக்கிறது. அற்புதப் பாடங்களின் பின்னணியில், இந்தப் புத்தகம் மனித வாழ்க்கையைப் பின்தொடர்கிறது.

“ஓர் அற்புதம் பல வகையான வடிவங்களில், உடல், மனம் சார்ந்து எப்படி வேண்டுமானாலும் வெளிப்படலாம். ஆனால், நமது தவறான கண்ணோட்டத்திலிருந்து உடனடிச் சுதந்திரம் வழங்குவது அதன் அடிப்படையான அம்சமாக இருக்க வேண்டும்.” இந்தப் புத்தகம் அற்புதத்தைப் பற்றி இப்படி விளக்குகிறது – “தடைகளைத் தாண்டி, அன்பின் இருப்பைப் பற்றி விழிப்படைதல்.” இது ‘புனித கணம்’ என்று விவரிக்கப்படுகிறது.

 
 

இந்தத் தருணம் நிகழும்போது, நாம் இறைவனின் அமைதியை உணர்வோம். அப்போது அகந்தையும் அறியாமையும் நம்மைவிட்டு விலகியிருக்கும். இந்த அற்புதத் தருணம் நிரந்தரமானது. அது நிகழ்ந்ததை நாம் மறந்துவிடலாம். ஆனால், அதை நினைவுபடுத்தும் ஒவ்வொரு தருணமும், அதே உணர்வை நம்மால் பெற முடியும்.

புனித உறவுகள்

உறவுகளைப் பற்றி முன்வைத்திருக்கும் கருத்துகள் இந்தப் புத்தகத்தின் சிறப்பம்சங்களாக இருக்கின்றன. ’சிறப்பு’ உறவுகள், ’புனித’ உறவுகள் என இரண்டு வகையாக இந்தப் புத்தகம் உறவுகளை விவரிக்கிறது. இந்தச் ’சிறப்பு’ உறவு என்பது அகந்தையின் ஆசைகளால் கட்டமைக்கப்படுகிறது. இந்த வகையான உறவையே பெரும்பாலானவர்கள் தொடர்கிறோம். ஆனால், இந்த வகையான உறவு, இறைவனிடமிருந்து நம்மைப் பிரித்துவிடுகிறது. இதற்கு மாறாக, ’புனித’ உறவு நம்மை இறைவனிடம் கொண்டு சேர்க்கிறது.

நம்முடைய உறவுகள் தன்னலத்திலிருந்தே கட்டமைக்கப்படுவதாக இந்தப் புத்தகம் விளக்குகிறது. ஒரு சாதாரண உறவில் நாம் எதிர்பார்த்தது கிடைக்கவில்லையென்றால், அதை முறித்துவிட முயல்கிறோம். ‘நமது  தேவை’ என்ற அகந்தையை முன்வைப்பதே இதற்குக் காரணம். நம்முடைய உறவுகளுக்கு உறுதியான அடித்தளம் இல்லாததும் இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்கிறது. ஆனால், இறைவன் நம்முடைய உறவுகளுக்கு நிச்சயமான இலக்கை நிர்ணயித்திருக்கிறார்.

‘பரிசுத்த ஆவி’யின் இருப்பை நம் உறவில் உணரும்போது, நமக்கு உறவுகளின் மீது நம்பிக்கை பிறப்பதாக இந்தப் புத்தகம் விளக்குகிறது. அப்போது நம்மிடமிருந்து நம் உறவுகளைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். அத்துடன், மன்னிப்பதன் பரிமாணங்களையும் இந்தப் புத்தகம் விளக்குகிறது. “மன்னித்தலின் வழியாகவே நாம் நினைவுகூர முடியும். மன்னித்தலின் மூலம் உலகம் தலைகீழாக மாறுகிறது” என்ற கருத்தை இந்தப் புத்தகம் வலியுறுத்துகிறது.

அற்புதமான பதில்கள்

இந்தப் புத்தகத்தில் ‘அன்பு மட்டுமே நிஜமானது’ என்ற கருத்து தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. அதன் மூலம், மற்றவை எல்லாம், இந்த முழு உலகமும் மாயை என்ற கருத்து சொல்லப்படுகிறது. இந்த உண்மையைப் பற்றிய தவறான கண்ணோட்டத்திலிருந்து வெளிவரவே இறை வழிபாடும் தியானமும் தேவையாக இருக்கிறது. நமது கேள்விகளுக்கான அற்புத பதில்களை முரண்பாடுகளிலிருந்து தேட முடியாது.

ஓர் அற்புத பதில் என்பது இறைவனின் பரிசாக, ஒரு கணத்தின் விழிப்பாக அமைந்திருக்கும். அந்த பதில் என்பது இன்றும் சரியானதாக இருக்கும், நாளையும் சரியானதாக இருக்கும். நாம் உண்மையை உணரும்போது அதுவே அற்புதமாகத் தோன்றும். இறைவனிடமிருந்து நாம் விலகியிருப்பதாக நினைப்பதே ஒரு மாயை என்று இந்தப் புத்தகம் விளக்குகிறது.

“தன்னைத்தானே” எழுதிக்கொண்ட எழுத்துகளுக்கு உதாரணமாகப் பல புத்தகங்கள் இருக்கின்றன. அதில், இந்தப் புத்தகம் மக்களால் அதிக அளவில் வாசிக்கப்பட்டது. பைபிள் கருத்துகளின் தாக்கம் இந்தப் புத்தகம் முழுவதும் இருக்கிறது. உலகில் அற்புதங்கள் நிகழ்வது ‘சாதாரணம்’ என்ற கருத்தை இந்தப் புத்ககம் முன்வைக்கிறது.

ஆனால், இந்தப் புத்தகம் வெளியானவுடன் அற்புதங்களைப் பற்றிய தவறான நம்பிக்கைகளை முன்வைப்பதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்தன. மனித வாழ்வின் மகிழ்ச்சிக்கான ஆன்மிக விதிகளை எளிமையாகப் புரிந்துகொள்ள இந்தப் புத்தகத்தை வாசிக்கலாம்.

aanmaa%202jpg

ஹெலன் ஷுக்மன், வில்லியம் தெட்ஃபோர்ட்

இவர்கள் இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்த உளவியல் ஆராய்ச்சி  நியூ யார்க்கில் அமைந்திருக்கும் கொலம்பியா-பிரஸ்பைடிரியன் மருத்துவ மையத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். முற்றிலும் நம்பமுடியாத வகையில், 1965-ம் ஆண்டிலிருந்து 1972-ம் ஆண்டுவரை, ஏழு ஆண்டுகளுக்கு ஷுக்மனின் அகத்திலிருந்து ஒலித்த ஒரு குரலைக் கேட்டு, அவர் “எழுதியதுதான்” ‘ஏ கோர்ஸ் இன் மிராக்கல்ஸ்’ என்ற 1200 பக்க புத்தகம். 

ஷுக்மன் எழுதிய கையெழுத்துப் பிரதியை வில்லியம் தெட்ஃபோர்ட் தட்டச்சு செய்து புத்தகமாகத் தொகுத்திருக்கிறார். 1975-ம் ஆண்டில் வெளியான இந்தப் புத்தகம், லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையானது.

https://tamil.thehindu.com/society/spirituality/article24469533.ece

Link to comment
Share on other sites

ஆன்மா என்னும் புத்தகம் 13: மனிதத்தைப் போதிக்கும் சகோதரத்துவம்

 

aanmajpg

மால்கம் எக்ஸை அமெரிக்கக் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய தலைவராகத்தான் பலரும் அறிவார்கள். ஆனால், ஒரு தனிநபராக அவருக்குள் ஏற்பட்ட ஆன்மிக மாற்றத்தைப் பற்றி நம்மில் பலரும் அறிந்திருக்க மாட்டோம். உலகப் புகழ்பெற்ற ‘வேர்கள்’ நாவலை எழுதியவரும் பத்திரிகையாளருமான அலெக்ஸ் ஹேலியின் அறிவுறுத்தலால்தான், மால்கம் எக்ஸ் தன் வாழ்க்கைக் கதையை எழுத ஒப்புக்கொண்டார். The Autobiography of Malcolm X என்ற இந்தத் தன்வரலாற்று நூலை அவருடன் இணைந்து அலெக்ஸ் ஹேலி எழுதியிருக்கிறார்.

இந்த நூலை எழுத ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய மால்கம் எக்ஸ், எழுதத் தொடங்கியதும் தன் குழந்தைப் பருவத்து ஏழ்மை, பதின்பருவத்தில் செய்த குற்றங்கள், ஆன்மிக விழிப்பு, தேசிய தலைவரிலிருந்து உலகத் தலைவராக உருவெடுத்ததுவரை அனைத்தையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார். இந்தத் தன்வரலாற்று புத்தகத்தை எழுதிமுடிப்பதில் ஒருவித அவசரத்தை அவர் தொடர்ந்து வெளிப்படுத்திவந்திருக்கிறார். அவர் காட்டிய அந்த அவசரத்தால், 1965-ம் ஆண்டு, அவர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன் அவரது தன்வரலாறு எழுதிமுடிக்கப்பட்டிருந்தது.

 

இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க வாழ்க்கையின் கீழ்மைகளை இந்தப் புத்தகம் பதிவுசெய்திருந்தது. அவர் வாழ்க்கையில் எதிர்கொண்ட சில கொந்தளிப்பான நிகழ்வுகளின் பதிவுகள், இந்தப் புத்தகத்தை ஓர் அறிவார்ந்த, ஆன்மிக ஞானத்தை நோக்கிய பயணமாக மாற்றியிருக்கிறது. இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியது தன் வாழ்க்கையில் எப்படிப்பட்ட திருப்புமுனையை உருவாக்கியது என்பதை மால்கம் எக்ஸ் அழுத்தமாக இந்தப் புத்தகத்தில் பதிவுசெய்திருக்கிறார்.

குழந்தைப் பருவம்

மால்கம் எக்ஸின் இயற்பெயர் மால்கம் லிட்டில். 1925-ம் ஆண்டு, அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்திலுள்ள ஒமாஹா நகரத்தில் பிறந்தார். அவருடைய தந்தை எர்ல் லிட்டில் ‘திருமுழுக்குத் திருப்பணியாள’ராகவும் ‘யுனிவெர்சல் நீக்ரோ மேம்பாட்டுச் சங்க’த்தை உருவாக்கிய மார்கஸ் கார்வேயின் ஆதரவாளராகவும் இருந்தார். 1931-ம் ஆண்டு, மால்கம் எக்ஸின் குடும்பம் மிச்சிகன் மாகாணத்துக்குக் குடிபெயர்ந்தது. அப்போது ‘பிளாக் லெகியான்’ என்ற வெள்ளையின மேலாதிக்கவாதக் குழுவினரால் மால்கம் எக்ஸின் தந்தை எர்ல் லிட்டில் கொல்லப்பட்டார்.

அவரது மரணத்துக்குப் பிறகு, குடும்பத்துக்குக் கிடைக்க வேண்டிய ஆயுள் காப்பீட்டுத் தொகையை வழங்காமல் அந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஏமாற்றிவிடுகிறது. மால்கம் எக்ஸின் தாயார் லூயிஸ் லிட்டில் மனநிலை பாதிக்கப்பட்டதைக் காரணம்காட்டி மனநல மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறார். அந்தக் குடும்பத்தின் குழந்தைகளையும் மாகாண அரசு பிரித்துவிடுகிறது.

“ஒரு மாகாண சமூக அமைப்பால் ஒரு குடும்பத்தை அழிக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். ஏனென்றால், அது எங்கள் குடும்பத்தை அழித்தது. நாங்கள் ஒரு குடும்பமாக ஒன்றாக இருக்க விரும்பினோம். அதற்காக நிறைய முயற்சிகள் மேற்கொண்டோம். எங்கள் குடும்பத்தை அழித்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், சமூக நல அமைப்புகள், நீதிமன்றங்கள், அதன் மருத்துவர்கள் எங்கள் முகங்களில் ‘ஒன்று-இரண்டு-மூன்று’ குத்துவிட்டார்கள்” என்று தன் குழந்தைப் பருவத்தை விவரிக்கிறார் மால்கம் எக்ஸ்.

வழக்கறிஞர் கனவு

பதின்மூன்று வயதில் தன் மோசமான நடிவடிக்கையின் காரணமாக மிச்சிகனில் இருக்கும் சீர்திருத்தப் பள்ளிக்கு மாற்றப்படுகிறார் மால்கம் எக்ஸ். ஆனால், அவர் வளர்ப்பதற்காக ஒப்படைக்கப்பட்டிருந்த வெள்ளைக் குடும்பம், அவரை வேறொரு நல்ல பள்ளிக்கு அனுப்புகிறது. அந்தப் பள்ளியில் சேர்ந்த பிறகு, படிப்பில் சிறந்து விளங்கத் தொடங்குகிறார். அவர் தான் வழக்கறிஞராக விரும்புவதாகத் தன் ஆசிரியரிடம் தெரிவிக்கிறார். அந்தக் காலத்தில், அமெரிக்காவின் கறுப்பின இளைஞர்கள் உணவுவிடுதியிலோ செருப்புக்கடையிலோ பணியாற்றுவதுதான் வழக்கம்.

“வழக்கறிஞர் கனவு என்பது ஒரு ‘நீக்ரோ’ காணும் யதார்த்தமான கனவு அல்ல. உன்னால் ஆகக்கூடிய லட்சியத்தைத்தான் நீ வளர்த்துக்கொள்ள வேண்டும்” என்று அந்த ஆசிரியர் பதின்மூன்று வயதுச் சிறுவனிடம் சொல்கிறார். தனது அறிவையும் உணர்வுகளையும் தன்னை வளர்க்கும் குடும்பமும் ஆசிரியர்களும் அங்கீகரிக்கவில்லை என்று புரிந்தவுடன், அங்கிருந்து பாஸ்டனிலிருக்கும் தன் சதோதரி எல்லாவிடம் சென்றுவிடுகிறார். அப்போது இரண்டாம் உலகப் போர் தொடங்கியிருக்கிறது.

தன் பதினேழு வயதில், பாஸ்டனிலிருந்து நியூயார்க் செல்கிறார் மால்கம். இந்தக் காலக்கட்டத்தில்தான் அவருக்கு அமெரிக்காவின் குற்ற உலகம் அறிமுகமாகிறது. திருட்டு, சட்டவிரோதமாக மதுபானம் விற்பது போன்ற பணிகளை அவர் செய்யத் தொடங்குகிறார். அந்தப் பணிகளின் காரணமாக 1946-ம் ஆண்டு அவருக்குப் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. அப்போது அவருக்கு இருபது வயது.

சிறை வாழ்க்கை

அவர் சிறையிலிருக்கும்போது, மால்கமின் சகோதரர் பில்பர்ட், தன் மற்ற சகோதரர்களுடன் ‘இஸ்லாம் தேசம்’ என்ற அமைப்பில் இணைகிறார். அந்த அமைப்பை சிகாகோவைச் சேர்ந்த எலிஜா முகம்மது என்பவர் நடத்திவருகிறார். அவர் கறுப்பின மக்களிடம் தங்கள் உரிமைகளுக்காகப் போராட வேண்டிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். அவர் சிறையிலிருக்கும்போது நாத்திகராக இருந்தார். ‘சாத்தான்’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.

ஆனால், தன் குடும்பத்தினரின் முயற்சியால் புகைபிடித்தல், போதைப் பழக்கம் போன்றவற்றிலிருந்து நீங்கி இஸ்லாம் மார்க்கத்தில் தன்னை இணைத்துக்கொள்கிறார் அவர். இஸ்லாமின் பாதையில் கடவுளிடம் தன்னை ஒப்படைக்கும் முறையைக் கற்றுக்கொள்கிறார். சிறையிலிருக்கும் நூலகத்தைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு பதினைந்து மணிநேரம் புத்தகங்களை வாசிக்கத் தொடங்குகிறார்.

aanma%202jpg

மதம், தத்துவங்கள், வரலாறு போன்ற தலைப்புகளில் இருக்கும் புத்தகங்களைத் தேடித்தேடிப் படிக்கிறார். வரலாறு என்பது வெள்ளை இன மக்களின் பார்வையிலேயே இதுவரை எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார். காந்தியின் சுதந்திரப் போராட்ட முறையால் அவர் ஈர்க்கப்பட்டார். அவர் வாசிப்பு உலகம் விசாலமானதைப் பற்றி, “நான் எப்போதும் இவ்வளவு சுதந்திரமாக உணர்ந்ததில்லை” என்று சொல்கிறார் அவர். ஒரு குற்றவாளியாகச் சிறையில் அடைக்கப்பட்டவர், ஆன்மிக, அரசியல் அறிவுபெற்ற ரவுத்திரத்தையும் தக்கவைத்துக் கொண்ட இளைஞனாக 1952-ம் ஆண்டு சிறையிலிருந்து வெளியே வருகிறார்.

மெக்காவுக்குப் புனித யாத்திரை

சிறையிலிருந்து வெளியே வந்தவுடன், ஆப்பிரிக்க அடிமைகளாக இருப்பவர்கள், தங்கள் பெயர்களின் பின்னால் வெள்ளை எஜமானர்களின் பெயர்களைச் சேர்க்கும்முறையைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். தன் பெயருக்குப் பின்னால் ‘எக்ஸ்’ என்பதை இணைத்துகொண்டார். ‘இஸ்லாம் தேசம்’ அமைப்புடன் இணைந்து ஆப்பிரிக்க அமெரிக்க மக்களின் உரிமைகளுக்காகப் போராடத் தொடங்குகிறார்.

ஆப்பிரிக்க அமெரிக்க மக்களின் தேசியத் தலைவராக உருவாகிறார். அப்போது மெக்கா செல்ல முடிவெடுத்தார். இந்த மெக்கா புனிதப் பயணத்தைப் பற்றி இந்தப் புத்தகத்தில் அவர் விவரித்திருக்கும் இரண்டு அத்தியாயங்கள் முக்கியமானதாக அமைந்திருக்கின்றன. இஸ்லாம் மார்க்கத்தில் அவர் உணர்ந்த சகோதரத்துவத்தையும் பிறிதில்லாப் பெருநிலையையும் உளப்பூர்வமாக விளக்குகிறார்.

“இந்த பூமியில் வாழ்ந்த 39ஆண்டுகளில், மெக்கா புனித நகரத்தில்தான் முதன்முதலாக இந்தப் பிரபஞ்சம் முழுமையையும் படைத்தவரின் முன் நிற்பதாக உணர்ந்தேன். நான் ஒரு முழுமையான மனிதனானேன்” என்று சொல்கிறார். இந்த மெக்கா புனிதப் பயணம் அவரிடம் பெரும் தாக்கத்தை உருவாக்கியது.

இஸ்லாம் மார்க்கம் அவருக்குக் கற்றுத்தந்த சகோதரத்துவத்தின் வழியை அவர் பின்பற்றினார். வெள்ளையினத்தவர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக அவர் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினார். இந்த மார்க்கத்தின் வழியாக அவர் மதங்களைக் கடந்து மனித குலத்தின் ஒருமைநிலையைப் புரிந்துகொண்டார்.

மால்கம் எக்ஸின் அரசியலில் இந்த ஆன்மிக விழிப்பு அமைந்திருக்காவிட்டால் அது முழுமையடைந்திருக்காது. அவரது மரணத்துக்குப் பிறகு, கறுப்பின மக்களுக்கு உத்வேகம் தரும் ஆற்றலாக அவர் உலகம் முழுவதும் நிலைபெற்றார்.

https://tamil.thehindu.com/society/spirituality/article24518131.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஆன்மா என்னும் புத்தகம் 14: அச்சுறுத்தும் இடங்களுக்குள் பயணிக்கலாம்

 

 

 
aanmaajpg

போதிச்சிட்டா என்ற பௌத்தக் கருத்தாக்கம் வழியாக வாழ்வில் அமைதியையும் கருணையையும் அடைவதை ஆராய்ந்த புத்த பிக்குனி பேமா சோட்ரோன். ‘போதிச்சிட்டா’ என்பது திறந்த மனத்தை, அதாவது எவ்வளவு மோசமான மனிதராக இருந்தாலும் அவருக்குள்ளும் இருக்கும் மென்மையான இடத்தைப் பற்றி விவரிப்பதாகும். பௌத்தத்தின் இந்தப் பாரம்பரிய கருத்தாக்கத்தைச் சமகால மக்களிடம் கொண்டுசேர்ப்பதற்காகத் தொடர்ந்து பணியாற்றிவருகிறார் பேமா சோட்ரோன்.

“பெரும்பாலான மக்கள் தங்களுக்குள் இருக்கும் மென்மையான இடத்தைக் கடினமானதாக மாற்றிவிடுகிறார்கள். இதன்மூலம் மற்றவர்களுக்காக மனத்தில் தோன்றும் பரிவுணர்வு எழாமல் அடைத்துவிடுகிறார்கள்” என்று இந்த போதிச்சிட்டா தத்துவத்தை விளக்குகிறார். மனத்தில் எழும் போதிச்சிட்டா உணர்வை, முன்தீர்மானங்கள், தீர்ப்புகள் எனச் செயற்கையாக உருவாக்கிக் கொண்ட தடைகளால் தடுக்க முயல்கிறோம்.

 

ஆனால், நம் மனத்தில் இருக்கும் மென்மையான இடங்கள் ’சுவரில் இருக்கும் விரிசல்கள்’ போன்று அப்படியே நிலைபெற் றிருக்கின்றன. அவை நமது உண்மையான இயல்பை நமக்குச் சுட்டிக்காட்டும்படி, எப்போதும் நமக்குள் இருக்கின்றன.

பேமா சோட்ரோனின் ‘தி ப்ளேஸ் தட் ஸ்கேர் யூ: எ கைடு டூ ஃபியர்லெஸ்நெஸ் இன் டிஃபிகல்ட் டைம்ஸ்’ (The Place that Scare You: A Guide to Fearlessness in Difficult Times) என்ற புத்தகம், மத்திய கிழக்கு நகரம் ஒன்றுக்கு வரும் அமெரிக்கப் பெண்ணின் அனுபவமாக எழுதப்பட்டிருக்கிறது. அமெரிக்கர்கள் என்ற காரணத்தால் அவரும் அவர் தோழியும் தொடர்ந்து ஏளனம் செய்யப்படுகிறார்கள். அவர்கள் எந்நேரமும் தாக்கப்படலாம் என்ற நிலையை அங்கே எதிர்கொண்டார்கள். இந்த உணர்வு, அவருக்கு வரலாற்றில் இந்தக் கட்டத்தை எதிர்கொள்ளும் சிறுபான்மையினரின் வலியைப் புரிந்துகொள்ள உதவியது.

இந்த மாதிரியான ஒரு சம்பவத்தை எதிர்கொள்ளும் மனிதர்கள், பொதுவாகத் தங்களைத் தங்கள் ஓட்டுக்குள் பின்னிழுத்துக் கொள்வார்கள். ஆனால், இந்தச் சம்பவத்திலிருந்து பேமா, மதிப்புமிக்க ஒரு வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொண்டார். “போதிசத்துவர்கள், துணிச்சலுடன் வலியை எதிர்கொள்வார்கள். அவர்கள் மற்றவர்களைவிடத் திறந்த மனத்துடன் இருப்பவர்கள். அந்த நேரத்தில், ஒரு போதிச்சத்துவரைப் போன்று முதல் அடியை நான் எடுத்துவைத்தேன்” என்று சொல்கிறார் பேமா.

உணர்வுகளை அனுமதித்தல்

போதிச்சிட்டா போதனைகள் முதன்முதலில் இந்தியாவில்தான் பிறந்தன. திபெத்தில் னொன்றாம் நூற்றாண்டில் அவை  அறிமுகமாயின. அன்றாட வாழ்க்கையின் அசவுகரியங்களில் இருந்து தப்பிப்பதற்கான வழியாகப் பலரும் தியானத்தை நம்புகிறார்கள் என்று சொல்கிறார் பேமா. ஆனால், போதிச்சிட்டாவின் வழியில் செல்வதற்கு முற்றிலும் இதற்கு எதிர்மறையான வழியில் பயணிக்க வேண்டும் என்று அவர் விளக்குகிறார். அன்றாடம் நமக்குள் எழும் நல்லது, கெட்டது என இரண்டு உணர்வுகளுக்குள்ளும் ஆழமாக ஊடுருவிச் செல்ல வேண்டும்.

அப்போது நம்மால் ஞானத்தை அடைய முடியும். முதல் முறையாக தியானம் செய்பவர்கள் அமைதி அடைவதற்குப் பதிலாக தங்களுக்குள் வலிமையான எண்ணங்கள் எழுவதை உணர்வார்கள். இந்த வலிமையான எண்ணங்களை அனுமதிக்கும்போது அவற்றை நம்மால் தெளிவாகப் பார்க்க முடியும். “உங்களுக்கு ஏதாவது ஒன்று கோபத்தை ஏற்படுத்துகிறது என்றால் அந்தக் கோபத்தை முழுமையாக உணர்வதற்கு அனுமதியுங்கள். அப்படிச் செய்வதன்மூலம் உங்களுக்குள் குற்ற உணர்வு எதுவும் எழாமல் உங்களைக் கூடுதலாகப் புரிந்துகொள்ள முடியும்” என்று விளக்குகிறார் அவர்.

வாழ்வு மட்டும் அல்ல

இந்தப் புத்தகத்தில், புத்தரிடம் தான் கற்றுக்கொண்ட கருத்தாக இதை முன்வைக்கிறார். “நாம் எப்போதும் ஒரு சாதாரண வாழ்க்கையை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறோம். வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். மனிதர்களையும் சூழ்நிலைகளையும் நம்மால் கணிக்க முடியாது. இது எல்லாவற்றுக்கும் பொருந்தும்.”

மனிதர்கள் தங்களுக்குப் பிடிக்காத தாங்கள் எதிர்பாராத ஒரு விஷயம் நடக்கும்போது, மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளாகிறார்கள். சில விஷயங்கள் நாம் நினைத்ததற்கு எதிராக நடக்கும்போது நமக்கு வலி ஏற்படுகிறது. ஆனால், அதை நமது தனிப்பட்ட தோல்வியாக நினைக்கத் தேவையில்லை.

ஏனென்றால், இதுதான் வாழ்க்கையின் இயல்பு. இதில் நாம் விரும்புவது, விரும்பாதது என இரண்டுமே கிடைக்கும் என்று விளக்குகிறார் அவர். ’நான் நன்றாக இருக்கிறேன்’ என்று நல்ல நாட்கள், கெட்ட நாட்கள் என இரண்டு விதமான நாட்களிலும் நம்மால் கூறமுடியும். இப்படிக் கூறுவதால் அன்றாட வாழ்க்கையில் முன்னேறுகிறோம்.

அச்சுறுத்தும் இடங்கள்

வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் விரும்பத்தக்கவையாக இருக்க வேண்டும் என நாம் விரும்புவதைச் சுட்டிக்காட்டுகிறார் பேமா. நிரந்தரம் என்ற கருத்தாக்கத்துடன் நம்மை உணர்வுபூர்வமாக இணைத்துக்கொள்கிறோம். அதனால், அந்த நிரந்தரத்தை உணர முடியாமல் போகும்போது உடைந்து பாதுகாப்பற்ற நிலைக்குச் சென்றுவிடுகிறோம்.

‘மாற்றத்தில் அமைதியைக் காண்’ என்பதுதான் பௌத்தத்தின் வழி. நிச்சயமற்ற தன்மை நம்மை அச்சுறுத்துவதால்தான்  நிச்சயத்தை விரும்புகிறோம். “நாம் எல்லாவற்றையும் சரியாகச் செய்தால், பாதுகாப்பான, வசதியான இடத்தில் மீதி வாழ்க்கையைக் கழிக்கலாம்” என்று பெரும்பாலானோர் விரும்புவதைச் சுட்டிக்காட்டுகிறார் பேமா.

ஆனால், வாழ்க்கை எப்போதும் அனைவருக்கும் நிச்சயமற்றதாகவே இருக்கிறது. நம்மை அச்சுறுத்தும் உணர்வைக் களைய நினைக்காமல், அதற்குள் ஊடுருவிப் பயணக்கும்போது அதன் வீரியத்தை அது இழந்துவிடுகிறது. ஒரு விஷயத்தைக் கையாள முடியாத சூழலில் எப்படி உணர்கிறோம்? நாம் எதைவிடுத்து ஓட நினைக்கிறோமோ அதைப் பிடிப்பதுதான் வளர்ச்சிக்கான வழி. “துரோகம், மறுப்பு என எந்த ஒரு வலிமிகுந்த உணர்விலும்  நிலைபெற்றிருக்கும்போது, அது நம்மை மென்மையானதாக மாற்றுகிறது” என்று சொல்கிறார் அவர்.

 இந்த உணர்வுகளை நமக்குள் அடக்கிவைக்கும்போது  உடைந்துபோய்விடுகிறோம். ஒரு வலியை ஆழமாக உணர்வது கடினமானது என்று நினைக்கலாம். ஆனால், இப்படிச் செய்வது நமக்கு நிம்மதியைக் கொடுக்கும். இது நமக்கு நாமே கருணைக் காட்டிக்கொள்வதாகும் என்று விளக்குகிறார் அவர். அப்படிச் செய்யாமல் விடும்போது, நமக்குள் அகந்தை உருவாகிறது. அந்த அகந்தை நம்மை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்துகிறது. நமக்குள் இருக்கும் அச்சுறுத்தும் இடங்களுக்குத் துணிச்சலுடன் பயணப்படும்போதுதான் இந்த அகந்தையைவிட்டு வெளியேற முடியும்.

இந்தப் புத்தகத்தில் பேமா விளக்கியிருக்கும் கருத்துகள் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. ஆனால், அவை துல்லியமாகச் செயல்படுவதாக நிரூபணமாகியிருக்கின்றன. அமைதியான கருணை மிகுந்த வாழ்க்கையை விரும்பும் அனைவருக்கும் பொருந்தக்கூடிய வகையில் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் அவர்.

பேமா சோட்ரோன்

1936-ம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்த பேமா சோட்ரோனின் இயற்பெயர் டெய்த்ர ப்ளோம்ஃபீல்ட்-ப்ரவுன். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆரம்ப கல்வியில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், பல ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். இவர் தன் முப்பத்தைந்தாவது வயதில் ‘பிரஞ்சு ஆல்ப்’ மலைப்பகுதிக்குச் சென்றபோது, திபேத்திய பவுத்த குரு லாமா சைம் ரின்போச்சேவின் மூலம் அவருக்கு பௌத்தம் அறிமுகமானது.

அதற்குப் பிறகு, 1972-ம் ஆண்டு, பேமா அவரது மூல குரு சோக்யம் ட்ருங்பா ரின்போச்சேவிடம் ஆன்மிகக் கல்வி கற்றார். 1981-ம் ஆண்டு, திபேத்திய பாரம்பரிய புத்த பிக்குனியாக மடாலய நியமனம் பெற்றார். தற்போது கனடாவின் ‘கம்போ அப்பே’ புத்த மடாலயத்தின் இயக்குநராக இருக்கிறார். ‘தி விஸ்டம் ஆஃப் நோ எஸ்கேப்’, ‘ஸ்டார்ட் வேர் யூ ஆர்’, ‘வென் திங்க்ஸ் ஃபால் அபார்ட்’ உள்ளிட்டவை இவரது படைப்புகளில் சில.

https://tamil.thehindu.com/society/spirituality/article24579440.ece

Link to comment
Share on other sites

ஆன்மா என்னும் புத்தகம் 15: உங்களுக்குள் இருக்கும் சித்தார்த்தன்

 

 
aanmajpg

ஜெர்மனியைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளரான ஹெர்மன் ஹெஸ்ஸே எழுதிய பிரபல குறுநாவல் ‘சித்தார்த்தன்’. ஜெர்மானிய  மொழியில் 1922-ம் ஆண்டு வெளியான இந்த குறு நாவல், 1951-ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பிறகுதான், உலகம் முழுவதும் பிரபலமானது. தமிழில் இந்தப் புத்தகத்தை திரிலோக சீதாராம் மொழிபெயர்த்திருக்கிறார்.

பவுத்தம், தாவோயிஸம், கிறித்தவம், இந்து போன்ற சமயக் கருத்தாக்கங்களின் தாக்கமாக இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருந்தாலும், இறுதியில் பொதுவான சமயக் கருத்துகளை நிராகரிக்கிறது. கவுதம புத்தர் வாழ்ந்த காலக்கட்டத்தின் பின்னணியில் இந்தக் குறுநாவலை எழுதியிருக்கிறார் ஹெர்மன் ஹெஸ்ஸே. புத்த நிலையை அவரவர் வழியில் அனுசரித்தே அடைய வேண்டுமென்கிறார் நூலாசிரியர்.

 

தனிமனிதனின் தேடல்

வாழ்க்கையின் உண்மை, அடையாளத்தைத் தேடும் அகப் பயணமாக இந்தக் குறுநாவலை எழுதியிருக்கிறார். அவரது பெரும்பாலான படைப்புகளை இந்த ‘அகப் பயண’க் கருவை அடிப்படையாக வைத்தே படைத்திருக்கிறார். இந்த ‘சித்தார்த்தன்’-ஐ அவர் தன் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களின் எதிரொலியாக எழுதியிருக்கிறார். இந்தக் குறுநாவலின் முதன்மைக் கதாபாத்திரமான சித்தார்த்தனின்  வாழ்க்கைக் கதையின் மூலம் விடுதலையின் பாதையை விளக்கியிருக்கிறார் ஹெர்மன் ஹெஸ்ஸே.

அந்தணர் குலத்தில் பிறக்கும் சித்தார்த்தன், அறிவின் மீதான தேடலுடன் வளர்கிறான். அவனது இந்த அறிவுத்தேடல் அவனுக்குள் ஒருவிதமான மன அமைதியின்மையை உருவாக்குகிறது. அனைவரும் பிரம்மத்தைப் பற்றியும் அதை அடைவதற்கான வழிமுறைகள் பற்றியும் பேசுகிறார்கள், ஆனால், அந்த நிலையை மெய்யாகவே யாராவது அனுபவித்திருக்கிறார்களா என்று கேள்வி சித்தார்த்தனுக்கு வருகிறது.

இந்தக் கேள்விக்கான விடையைத் தேடி, தன் தந்தையின் அறிவுரையைமீறி, சமணத் துறவிகளுடன் இணைந்து பயணம் செல்ல முடிவெடுக்கிறான் சித்தார்த்தன். இந்தப் பயணத்தில் அவன் நண்பன் கோவிந்தனும் அவனுடன் இணைந்துகொள்கிறான். இந்தத் துறவு வாழ்க்கையின் மூலம்  ஆசைகள், அகந்தை, பசி, தாகம், சோர்வு, வலி போன்ற உணர்வுகளைத் துறக்கவும் முயல்கிறான். ஆனால் அனைத்து சாதனைகளும் அகந்தையை வளர்த்து கண்ணாம்பூச்சியே காட்டுகிறது.

புத்தருடனான சந்திப்பு

 நண்பர்கள் மீண்டும் வெளியேறி அலைகிறார்கள்.  கவுதம புத்தரின் உபதேசங்களைப் பற்றி கேள்விப்பட்டு, சித்தார்த்தனும் கோவிந்தனும் அவரைச் சந்திக்க செல்கிறார்கள். புத்தரின் பரிவான முகம் அவனை ஈர்க்கிறது. ஆனாலும் அவரை மற்றவர்களைப் போலத் தொடரும் எண்ணம் அவனுக்கு  உருவாகவில்லை. குருவாலோ, குருவின் போதனைகளாலோ வாழ்க்கையின் துன்பங்களிலிருந்து விமோசனம் அடைய முடியாது என்றும், அவரவரின் தனிப்பட்ட வாழ்க்கை பாதையின் மூலம் மட்டுமே விமோசனம் அடைய முடியும் என்பதை அவன் நம்புகிறான்.

அதனால், தன் வாழ்க்கைப் பாதையைத் தானே அமைத்துகொள்ள முடிவுசெய்து தன் பயணத்தைத் தொடர்கிறான். ஆனால், புத்தரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட கோவிந்தன் புத்தருடனே தங்கிவிட முடிவுசெய்கிறான். புத்தரிடம் நட்புடன் விடைபெற்று தன் தேடலைத் தொடர்கிறான் சித்தார்த்தன்.

hermanjpg
 

சம்சார வாழ்க்கை

காட்டிலிருந்து நகரத்துக்கு வரும் சித்தார்த்தன், தன் உயிரின் தாகம் எதுவரை அழைத்துச் செல்லுமோ அதைப் பின்தொடர முடிவுசெய்தான். கமலா என்ற தாசியின் அழகால் ஈர்க்கப்படுகிறான். அவளுடைய மனத்தை வெல்வதற்காக, துறவு வாழ்க்கையிலிருந்து விலகி, காமஸ்வாமி என்னும் தொழிலதிபரிடம் பணியாற்றி பணம் சம்பாதிக்கிறான்.

அவனது தொழிலை எந்தவொரு பதட்டமும் பயமும் பேராசையும் இல்லாமல் மேற்கொண்டதால், எளிதில் வெற்றிபெறுகிறான். கமலாவின் காதலையும் பெறுகிறான். ஆனால், ஒரு கட்டத்தில் சமண வாழ்க்கை நெறியிலிருந்து முழுமையாக விலகி சம்சார வாழ்க்கைக்குள் முழுமையாகச் சிக்கிக்கொள்கிறான். காமமும் போதையும் லாப வேட்கையும் அவனது ஆன்மாவைக் களைப்படைய வைப்பதை உணர்கிறான். கமலாவைப் பிரிகிறான்.

படகோட்டியின் வாழ்க்கை

சம்சார வாழ்க்கையின் துன்பங்களிலிருந்து தப்பிப்பதற்காக காட்டுக்கு ஓடிவரும் சித்தார்த்தன் வாழ்வின் பொருளின்மையை உணர்ந்து இறப்பதற்குத் தயாராகிறான்.  அப்போது, எதிர்பாராதவிதமாகத் தன் நண்பன் கோவிந்தனைச் சந்திக்கிறான் சித்தார்த்தன். அவனைப் பார்த்தவுடன், தான் விலகி வந்த வாழ்க்கை பாதையின் நினைவுகள் அவனைத் துரத்துகின்றன. சம்சார வாழ்க்கையின் அம்சங்களான செல்வம், காதல், காமம் போன்றவை அவனைத் திருப்திபடுத்தவில்லை என்பதைப் புரிந்துகொள்கிறான். ஆறு அவனுக்கு ஒன்றைப் போதிக்கிறது.

எந்த ஆற்றைக் கடந்து நகரத்துக்குச் சென்றானோ, அந்த ஆற்றங்கரைக்கு மீண்டும் வருகிறான் சித்தார்த்தன். அந்த ஆற்றங்கரையில் வசித்துவரும் படகோட்டி வாசுதேவனின் உதவியாளனாகச் சேர்ந்து அங்கேயே தங்கிவிடுகிறான். அது ஒரு எளிமையான வாழ்க்கை. படகோட்டிச் செல்லும் சித்தார்த்தனிடம் தினசரி ஆறு உரையாடுகிறது. எந்தவொரு குருவாலும் கற்றுக்கொடுக்க முடியாத வாழ்க்கைப் பாடங்களை ஆறு அவனுக்குக் கற்றுக்கொடுக்கிறது.

நீண்ட காலத்துக்குப்பிறகு, அவன் வாழ்க்கையில் அமைதி திரும்புகிறது. ஒருநாள், புத்தரைச் சந்திப்பதற்காக ஒரு தாயும் மகனும் ஆற்றங்கரைக்கு வருகிறார்கள். அப்போது ஒரு பாம்புத் தீண்டியதால், அந்தத் தாய் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறாள். அங்கே வரும் சித்தார்த்தன், அந்தப் பெண் தன் முன்னாள் காதலி கமலா என்றும், அந்தச் சிறுவன் தன் மகன் என்பதையும் தெரிந்துகொள்கிறான்.

மீண்டும் மகனின் வழியாக சித்தார்த்தனுக்கு வாழ்க்கை கடைசித் தேர்வொன்றை வைக்கிறது. அந்தப் பரிட்சையை சித்தார்த்தன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதன் மூலம் வாழ்க்கைத் தத்துவத்தை விளக்குகிறார் ஹெர்மன் ஹெஸ்ஸே. ‘ஆயிரம் மடிப்புகளாலான ஆற்றின் பாடல்’ தனக்கு வாழ்க்கையைப் பற்றிய உண்மையான விழிப்பை ஏற்படுத்துவதாக இறுதியில் சித்தார்த்தன் கூறுகிறான். இன்பத்துக்குள்ளேயே துன்பத்தின் விதை உள்ளது.  வாழ்வு- மரணம், இளமை- முதுமை, காதல்- பிரிவு என நாம் எதிர்வு என்று நினைக்கும் எல்லாமும் ஒன்றுக்குள் ஒன்று புதைந்துள்ளதை ஆறு தனது ஒருமையால் சித்தார்த்தனுக்கு உணர்த்துகிறது.

விமோசனத்தை அடைவதற்காக உலகியலிலிருந்து பின்வாங்குவதற்கான முயற்சியை மேற்கொள்ளவேண்டிய அவசியமில்லை; மாறாக, வாழ்க்கையைவிட்டு விலகி ஓடுவதைவிட அதன் முழுமையோடு அரவணைத்து, அறிவதே சிறந்த வழி என்பதை  இந்தச் ‘சித்தார்த்தன்’ குறுநாவலில் விளக்கியிருக்கிறார் ஹெர்மன் ஹெஸ்ஸே.

ஹெர்மன் ஹெஸ்ஸே

hessejpg

ஹெர்மன் ஹெஸ்ஸே, நோபல் பரிசுபெற்ற ஜெர்மன் கவிஞர், எழுத்தாளர், ஓவியர். 1877-ம் ஆண்டு, ஜெர்மனியைச் சேர்ந்த கால்வ் நகரத்தில் பிறந்தார். இவரின் பெற்றோர் இருவரும் கிறிஸ்தவ மதபோதகர்களாக இந்தியாவில் சில காலம் பணியாற்றியதால், இவருக்கு கிழக்கு ஆன்மிக இலக்கியத்தின் அறிமுகம் கிடைத்தது. 1911-ம் ஆண்டு, இந்தியாவுக்கு வந்த இவர், ‘ரோஷால்டே’ என்ற நாவலை 1914-ம் ஆண்டு வெளியிட்டார். ‘டெமியன்’ (1919) நாவல் இவரது முதல் வெற்றி பெற்ற நாவலாகக் கருதப்பட்டது.

முதலாம் உலகப் போரின்போது ஸ்விட்சர்லாந்தின் மோன்டாக்னோலா கிராமத்தில் குடியேறிய இவர், ஜெர்மன் போர்க் கைதிகளுக்கான பத்திரிகையைத் தொகுத்தார். ஜெர்மனியின் ராணுவ, தேசியவாதக் கொள்கைகளையும் போரையும் தொடர்ந்து எதிர்த்துவந்த இவர் தன் வாழ்நாள் முழுவதும் அமைதியை வலியுறுத்தினார். ‘தி ஜர்னி டு தி ஈஸ்ட்’ (1923), ‘நார்சிஸ் அண்ட் கோல்முன்ட்’ (1930), ‘தி கிளாஸ் பீட் கேம்’ (1943) போன்றவை இவரது முக்கியமான சில படைப்புகள். 1946-ம் ஆண்டு, இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் 1962-ம் ஆண்டு மறைந்தார்.

https://tamil.thehindu.com/society/spirituality/article24631443.ece

Link to comment
Share on other sites

ஆன்மா என்னும் புத்தகம் 16: ஆன்மிகக் கடைக்குச் செல்ல வேண்டியதில்லை

 

 
aanmajpg

வஜ்ரயான பவுத்தத்தை மேற்கு நாடுகளுக்குக் கொண்டு சென்ற பவுத்த அறிஞர்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் சோக்யம் ட்ருங்க்பா. இவர் 1970-களில் கொலராடோ மாகாணத்தில் நரோபா பல்கலைக்கழகம், ஷம்பலா மலை மையம் போன்ற பவுத்த கல்வி மையங்களை உருவாக்கினார்.

இவர் 1970 -71-ம் ஆண்டுகளில் ஆற்றிய உரைகளை அடிப்படையாக வைத்து தொகுக்கப்பட்ட நூல் ‘கட்டிங் த்ரு ஸ்பிரிச்சுவல் மெட்டீரியலிசம்’ (Cutting through Spiritual Materialism). அந்தக் காலகட்டத்தில் இவர் கொலராடோவில் பல இடங்களில் தியானப் பயிற்சி மையங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

 

அப்போது பல மாணவர்கள் ஆன்மிகப் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைமுறைக்கு ஒவ்வாத எதிர்பார்ப்புகளுடன் அவரை அணுகினார்கள். அவர்கள் உண்மையைக் கண்டறிவதில் விருப்பமுள்ளவர்களாகத் தோன்றினாலும் சுயதிருப்தி அடைவதற்காகவே இந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்க விரும்பினார்கள் என்கிறார் ட்ருங்க்பா.

பல விதமான ஆன்மிகப் பயிற்சிகளை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து மேற்கொண்டுவருபவர்களுக்கு இந்தப் புத்தகம் அதிர்ச்சியளிப்பதாக இருக்கும்.  ஆன்மிகச் செறிவுவாய்ந்த மனிதர்களாக முயற்சித்துகொண்டிருப்பதற்குப் பின்னால் அகந்தையே செயல்படுவதாக சோக்யம் ட்ருங்க்பா சுட்டிக்காட்டுகிறார்.

ஞானத்தை அடையும் நோக்கத்தில் நாம் எந்த மாதிரியான பொறிகளுக்குள் சிக்கிக்கொள்கிறோம் என்பதை இந்தப் புத்தகத்தின் முதல் பாதி விளக்குகிறது. இரண்டாவது பாதியில் உண்மையான ஆன்மிகப் பயணத்தை மேற்கொள்வதற்கான கருத்தாக்கங்களான போதிச்சத்வம், வெற்றிடநிலை போன்றவற்றை விளக்குகிறது.

பொருள்முதல்வாதத்தின் கடவுள்கள்

திபெத்திய பவுத்தத்தில் பொருள்முதல்வாதத்துக்கு மூன்று கடவுளர்கள் இருக்கிறார்கள். வடிவம் (Form), உரை (Speech), மனம் (Mind) என்று அவர்கள் வகைப்படுத்தப் படுகிறார்கள். இதில் வடிவங்களுக்கான கடவுள் கையாளக்கூடிய, பாது காப்பான, கணிக்கக்கூடிய, மகிழ்ச்சியான உலகைக் கட்டமைப்பதற்கான நமது முயற்சிகளைக் குறிப்பதாக ட்ருங்க்பா விளக்குகிறார்.

கணிக்க முடியாத வாழ்க்கைக்குப் பதிலடிக் கொடுக்கும்வகையில், “நாம் எதிர்கொள்ளும் எரிச்சல்களைத் தவிர்த்து பாதுகாப்பாகத் தன்னை வைத்துகொள்வதே அகந்தையின் லட்சியமாக இருக்கிறது” என்கிறார் அவர். உரைகளுக்கான கடவுள், யதார்த்தங்களிலிருந்து தப்பிப்பதற்காக அனைத்தையும் கருத்தாக்கங்களாக வகைப்படுத்தவும் மாற்றவும் செய்யும் நமது முயற்சிகளைக் குறிக்கிறார். மனத்தின் கடவுள், தனித்துவமான சுயத்தை இழந்துவிடாமல் விழிப்புடன் இருப்பதற்கான நமது முயற்சிகளைக் குறிக்கிறார்.

உலகத்துடனான தொடர்புகளை அறுத்து கொண்டு, வாழ்க்கையின் எரிச்சல்களைத் தவிர்த்து கடவுளுக்கு அருகில் இருப்பதற்காக மலைகளிலும், குகைகளிலும் வாழ்பவர்களை ‘மனத்துக்கான கடவுளி’ன் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம்.

ஆன்மிகப் பொருள்முதல்வாதம்

அகந்தையின் திண்மை என்பது புதிதாக எதையும் உள்வாங்கிக் கொள்ளமுடியாமல் தடுக்கிறது. அதனால் அது உண்மையில் ஆன்மிகப் பயிற்சிகளை மட்டுமே பின்பற்றுகிறது. அகந்தையை வெளியேற்றும் முயற்சியில் அதுவே ஏன் ஈடுபடப்போகிறது என்ற கேள்வியை முன்வைக்கிறார் ட்ருங்க்பா. அகந்தை தன் அடையாளத்தை இழக்க நேரிடும் எந்த முயற்சியிலும் இறங்குவதில்லை.

‘சமயம்’ என்பதன் மூலம் தன் அடையாளத்தைக் காத்துக்கொள்ளலாம் என்று அகந்தை நினைத்தால், அந்த வழியில் அது பயணிக்கிறது. இதை அகந்தை உணர்வின் மற்றொரு நிலையாகப் பார்க்கலாம். இந்த முறையில் ஆன்மிகப் பொருள்முதல்வாதம் செயல்படுகிறது. ஆனால், உண்மையில் ஆன்மிகம் என்பது நமது நடத்தை, விழிப்பைக் கையாளும் அகந்தையின்  நிலைகளிலிருந்து விலகியிருப்பதே ஆகும்.

உண்மையான ஆன்மிகப் பாதை

வீரதீரமான ஆன்மிகத் தேடலுக்கான செயல்களை அகந்தை விரும்புகிறது. ஒரு வாரத்தை முழுமையாகத் தியானத்தில் செலவிடுவது, அசைவத்திலிருந்து சைவ உணவுக்கு மாறுவது போன்ற செயல்களை இதற்கு உதாரணங்களாக முன்வைக்கிறார் ட்ருங்க்பா. இந்த மாதிரியான செயல்கள் நமக்கு ஆன்மிகப் பாதையில் பயணிப்பதைப் போன்ற ஒருவிதமான மாயத் தோற்றத்தை உருவாக்கும். ஆனால், உண்மையில் அப்போதும் நாம் நாமாக மட்டுமே இருக்கிறோம்.

அகந்தையை விட்டு வெளியேறும் அனைத்து முயற்சிகளையும் கட்டுப்படுத்துவதை மட்டுமே இதன்மூலம் நாம் எதிர்கொள்கிறோம். அதனால், இந்த ஆன்மிகக் கடையில் பொருட்களை வாங்குவதை நிறுத்திவிட்டு, நாம் நாமாக இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்று சொல்கிறார் அவர். உண்மையான ஆன்மிகப் பயணத்தில் பயணிக்கும்போது நமது பாசாங்குத்தனத்தைப் பார்த்து நம்மால் சிரிக்கமுடியும். ஆனால், போலியாக அகந்தையைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் தங்களது நகைச்சுவை உணர்வை முற்றிலுமாக இழந்துவிடுகிறார்கள்.

அவர்களுக்கு எல்லாமே கருப்பு வெள்ளையாக மாறிவிடுகிறது. அவர்கள் தங்கள் ‘வாழ்க்கைப் பாதை’யைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கற்பனை செய்துகொள்கிறார்கள். ஆனால், உண்மையான ஆன்மிகம் மிகவும் சாதாரணமானதும் கடினமானதுமாகும். அதில் நமது நம்பிக்கைகளை ஒப்படைத்துவிட்டு ஏமாற்றங்களுக்குப் பழகிக்கொள்ள வேண்டியிருக்கும். “ஏமாற்றங்களை ஏற்றுகொள்வது அறிவின் அடையாளமாகும். ஏனென்றால், அது நமது அகந்தை, கனவுகளின் இருப்பை நிராகரிக்கிறது” என்று விளக்குகிறார் ட்ருங்க்பா.

நாம் வாழ்க்கையின் சூழ்நிலைகளை அதன் போக்கில் பார்க்கத் தயாராக இருக்க வேண்டும். அதை ஆன்மிகமாகவோ மறைபொருளாகவோ பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பதை இந்தப் புத்தகம் அழுத்தமாகப் பதிவுசெய்கிறது.

சோக்யம் ட்ருங்க்பா ரின்போச்சே

இவர் 1939-ம் ஆண்டு கிழக்கு திபெத்தில் பிறந்தார். ‘கக்யு’ வம்சத்தைச் சேர்ந்த திபெத்திய ஆசிரியர்கள் நடத்திவந்த தியானப் பள்ளியின் 11வது துல்குவாக இவர் இருந்திருக்கிறார். இவர் தன் பதின்பருவத்தின் பிற்பகுதியிலேயே சுர்மங் மடாலயங்களின் மடாதிபதியானார். 1959-ம்

ஆண்டில் சீனா, திபெத்தைக் கைப்பற்றிய பிறகு, இந்தியாவில் டல்ஹவுசியில் இயங்கிவரும் இளம் லாமாக்களுக்கான பள்ளியில் ஆசிரியராகச் சில ஆண்டுகள் பணியாற்றினார். சமய ஒப்பீடுகள், தத்துவம், கலை தொடர்பாகப் படிப்பதற்காக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கு நிதி நல்கையின் மூலம் 1963-ம் ஆண்டு சென்றார். 1967-ம்

ஆண்டு, ஸ்காட்லாந்தின் முதல் திபெத்திய பவுத்த பயிற்சி மையத்தைத் தொடங்கினார். ஆனால், ஒரு கார் விபத்தில் இடது பக்கத்தில் பகுதியளவு பக்கவாதத்தால் அவர் பாதிக்கப்பட்டார். அதன்பிறகு, தன் உறுதிமொழிகளை ரத்துசெய்துவிட்டு, திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் குடியேறினார். 1970-களில் அமெரிக்காவின் பல பகுதிகளில் தியானப் பயிற்சி மையங்களைத் தொடங்கினார். இவர் பயன்படுத்திய “egolessness” என்ற பதம் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் இணைக்கப்பட்டிருக்கிறது. 1987-ம் ஆண்டு இவர் மறைந்தார்.

https://tamil.thehindu.com/society/spirituality/article24701704.ece

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

ஆன்மா என்னும் புத்தகம் 17: புலன்கள் மட்டும் போதாது

 

 
aanmaajpg

“மானுட அனுபவத்தின் உண்மையான நோக்கம் எதுவாக இருக்கும் என்ற கேள்விக்கான பதிலை நாம் தேட முயன்றிருக்கிறோமா? கேரி ஸுகாவ் அதற்கான பதிலை முன்வைக்கிறார். ஆன்மாவின் ஆரோக்கியம்தான் அந்த உண்மையான நோக்கம் என்கிறார் அவர்.

கேரி ஸுகாவ் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆன்மிக எழுத்தாளர்.1989-ம் ஆண்டு வெளிவந்த இவரது ‘தி சீட் ஆஃப் தி சோல்’ (The Seat of the Soul) என்ற புத்தகம், வாழ்க்கையில் நிறைவை உணர்வதற்கு ஆன்மாவையும் ஆளுமையையும் எப்படி இணைத்துப் பார்க்க வேண்டும் என்பதை விளக்குகிறது.

 

 தத்துவ அறிஞர் வில்லியம் ஜேம்ஸ், உளவியல் நிபுணர் கார்ல் யுங், அறிவியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் போன்றவர்களின் கருத்துகளைத் தொடர்ந்து ஆய்வுசெய்துவந்தார்  கேரி ஸுகாவ். அந்த ஆய்வின் முடிவில், மனித வாழ்க்கை, பிரபஞ்சம் பற்றிய சிறந்த கருத்துகள் ‘ஆளுமை’க்கு அப்பாற்பட்டு இருப்பதாக முடிவுக்கு வருகிறார் அவர்.

இந்த ஆளுமைக்கு அப்பாற்பட்டு இருக்கும் திறன் ஆன்மிக உணர்வாகவோ சமய உணர்வாகவோ இருக்கும் என்று அவர் நம்பவில்லை. அதை அவர் ‘உண்மையான ஆற்றல்’ என்று குறிப்பிடுகிறார். இந்த ஆற்றல்தான் நம்மை ஆன்மாவுடன் இணைத்து, வாழ்க்கைக்கான நோக்கத்தை உருவாக்குகிறது என்கிறார் அவர். பரிணாம வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்தின் சிறந்த நோக்கத்துடன் இந்த நோக்கமும் பின்னிப் பிணைந்திருப்பதாக இந்தப் புத்தகத்தில் அவர் விளக்குகிறார்.

உண்மையான ஆற்றலின் பரிணாமம்

ஐம்புலன்களின் உதவியோடு நாம் அறிந்துவைத்திருக்கும் உலக அறிவுதான் நமக்குப் பரிணாமம் என்னும் கருத்தை விளக்குகிறது. ஆனால், ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்டுப் பிரபஞ்சத்தை விளக்க வேண்டுமானால், நமக்குப் பிரபஞ்சத்தைப் பற்றி பெரிய அளவிலான புரிதல் வேண்டும் என்கிறார் கேரி.

பெரும்பாலான நேரம், ஐம்புலன்களால் நம்மால் உணர முடியாத விஷயங்களின் இருப்பை நாம் கேள்விக்கு உள்ளாக்குகிறோம். அதனால், ஐம்புலன்களால் இயங்கும் இந்த உலகத்தில், பிழைத்திருப்பதற்கான திறனே பரிணாமம் அடைவதற்கான முக்கிய அம்சமாகப் பார்க்கலாம். அதனால், பிழைத்திருக்க முடியாமல் போய்விடுமோ என்பது குறித்த  பயமே மனித உறவுகளையும் அதன் உளவியல் அடிப்படைகளையும் விவரிக்கிறது.

சூழல், இயற்கை, மற்ற மனிதர்கள், மற்ற நாடுகள், பொருளாதாரம் போன்றவற்றைக் கட்டுபடுத்துவதே ஆற்றலின் முக்கிய அடையாளமாக இருக்கிறது. எனவேதான், அதிகாரம் என்பது புறம்சார்ந்த விஷயமாக இருக்கிறது. ஆனால், உலகின் முக்கிய ஆளுமைகளைப் பார்க்கும்போது, அவர்களில் பெரும்பாலானவர்களுக்குப் புறவயமான  எந்த அதிகாரமும் இருக்கவில்லை.

ரோமானியப் பேரரசைக் காட்டிலும் இயேசு கிறிஸ்துவின் சொல்லும் செயலும் வலிமைமிக்கவையாக இருந்ததை வரலாறு நிரூபிக்கிறது என்கிறார் கேரி ஸுகாவ். ‘தி சீட் ஆஃப் தி சோல்’ என்ற இந்தப் புத்தகம், அன்பு, பணிவு, கருணை, தெளிவான நோக்கம் போன்றவை எப்படிச் செல்வாக்குடன் செயல்படுகின்றன என்பதை விளக்குகிறது.

ஆன்மாவும் ஆளுமையும்

இந்தப் பூமியில் ஓர் உடலுக்குள் நுழைவதற்குமுன், தான் எதைச் சாதிக்க வேண்டும் என்பது ஓர் ஆன்மாவுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், நாம் பிறந்தவுடன் இந்த நோக்கம் மறந்துவிடுகிறது. நாம் பிறக்கும்போதுதான் நம் உடலுடன் ஆளுமையும் பிறக்கிறது. ஆனால், நமது ஆன்மா நம் உடலுக்கு அப்பாற்பட்டும் வாழ்கிறது. நமது ஆளுமைக்கு விருப்பு, வெறுப்புகள் இருக்கின்றன.

ஆனால், நமது ஆன்மாவோ சில நோக்கங்கள் நிறைவடைவதைப் பார்க்க விரும்புகிறது. அதனால், ஆன்மா தனது நோக்கங்களை நிறைவேற்ற வாழ்க்கையில் நமக்கு வழிகாட்டுகிறது. ஆனால், ஆளுமையை ஆசைகளே வழிநடத்துவதால், இறுதியில் அவைதான் நம் வாழ்க்கையை உண்மையில் வடிவமைப்பவையாகி விடுகின்றன. ஏனென்றால், நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஆன்மாவுக்கும் ஆளுமைக்குமான வித்தியாசம் தெரிவதில்லை.

அதனால், அவரவர் ஆளுமைக்குத் தகுந்தபடியே பெரும்பாலானோர் வாழ்கிறார்கள். ஆனால், ஞானம் பெற்றவர்கள் ஆன்மாவை மிளிரச்செய்து, அது தன் நோக்கத்தை அடைய வழிச்செய்கிறார்கள்.

பயம், கோபம், பொறாமை, துக்கம், வருத்தம், அலட்சியம், வெறுப்பு போன்ற ‘எதிர்மறையான’ உணர்வுகளை ஆளுமையால்தான் உருவாக்கவும் அனுபவிக்கவும் முடிகிறது. ஆன்மாவைப் பற்றிய விழிப்புடன் இருப்பவர்கள் தங்களிடமும் மற்றவர்களிடமும் இந்த நிலைகளுக்கு அப்பாற்பட்டும் பார்க்க முடியும்.

ஆன்மாவின் நோக்கங்களை நிறைவேற்ற முடிவெடுக்கும்போது இயல்பாகவே நாம் ஆற்றல்மிக்கவர்களாக ஆகிவிடுகிறோம். ஆன்மா கேட்கும் விஷயங்களை நாம் கொடுக்க மறுக்கலாம். ஆனால், அதன் தேவைகளைக் கவனித்துச் செயல்படுத்துவதில்தான் நமது பரிணாமம் அடங்கியிருக்கிறது. உண்மையான அதிகாரத்தைப் பெற விரும்பினால், ஆளுமையையும் ஆன்மாவையும் ஒழுங்குபடுத்துவதே நமது வாழ்க்கையின் முக்கியக் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

உள்ளுணர்வுக்கான காரணம்

உள்ளுணர்வை நம்புவதற்கு நமக்குக் கற்றுக்கொடுக்கப்படுவதில்லை. நாம் வாழ்க்கையை ஐம்புலன்களால் உணர மட்டுமே கற்றுக்கொள்கிறோம். அதனால் முன்னுணர்வுகளையும் விளக்கமற்ற உள்ளுணர்வுகளையும் அலட்சியம் செய்கிறோம். ஐம்புலன்களால் இயக்கப்படும் ஒரு நபர், உள்ளுணர்வுகளை ‘அறிவாக’ கருத மாட்டார். அதனால், அவற்றை  வெற்று ஆர்வங்கள் என்று நினைத்து அலட்சியப்படுத்துவார். உள்ளுணர்வுகளை அடைவதற்கு முதலில் வெளிப்படுத்தாமல் மனத்தில் எழும் உணர்வுகளை அடையாளம் காணக் கற்றுக்கொள்ள வேண்டும்.

நமது எண்ணங்களை நாமே தள்ளிநின்று சக்தியைத் தராமல் கவனிக்கும்போது, நமது மனம் அமைதியடைகிறது. வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்துக்கும் காரணம் இருக்கிறது, அவை நன்மைக்குத்தான் நடைபெறுகின்றன என்ற கருத்தை நம்புவதன் மூலம் உள்ளுணர்வை உருவாக்க முடியும் என்று சொல்கிறார் கேரி ஸுகாவ்.

நமக்குள்ளிருக்கும் ஆற்றலை உணராமல், ஆன்மாவின் ஞானத்தைப் புரிந்துகொள்ளாமல் பணம், புகழ், பதவி போன்றவற்றின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் நாம் எப்போதும் உண்மையான அதிகாரத்தை அடைய முடியாது என்பதை விளக்குகிறது இந்தப் புத்தகம். வாழ்க்கை, பிரபஞ்சம் போன்றவற்றைப் பற்றிய நமது பார்வையை மாற்றும் வலிமைவாய்ந்தது இந்தப் புத்தகம்.

கேரி ஸுகாவ்

இவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆன்மிக ஆசிரியரும் எழுத்தாளரும் ஆவார். 1979-ம் ஆண்டு, இவர் எழுதிய ‘தி டான்சிங் வூ லி மாஸ்டர்ஸ்’ புத்தகம் அமெரிக்காவின் சிறந்த அறிவியல் புத்தகத்துக்கான விருது பெற்றிருக்கிறது. குவாண்டம் இயற்பியலையும் சார்பியலையும் இணைக்கும் அம்சங்களைப் பற்றி இந்தப் புத்தகத்தில் அவர் எழுதியிருக்கிறார்.

மாற்று ஆன்மிகப் பாதையை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியவர்களில் இவர் முக்கியமானவர். பிரபலத் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘ஓப்ரா வின்ஃப்ரே ஷோ’வில் இவர் 36 முறை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். ‘சோல் ஸ்டோரிஸ்’, ‘தி ஹார்ட் ஆஃப் தி சோல்’ ‘தி மைன்ட் ஆஃப் தி சோல்’ ‘சோல் டு சோல்’ போன்றவை இவரது படைப்புகளில் சில.

தற்போது வட கலிஃபோர்னியாவில் வசித்துவரும் இவர், ‘தி சீட் ஆஃப் தி சோல் இன்ஸ்டிடியூட்’ என்னும் மையத்தை நிர்வகித்துவருகிறார்.

https://tamil.thehindu.com/society/spirituality/article24810845.ece

Link to comment
Share on other sites

ஆன்மா என்னும் புத்தகம் 18: வதைமுகாமில் அர்த்தம் தேடி...

 

 

 
aanmajpg

வாசித்தவுடன் வாழ்க்கையையே புரட்டிப்போடும் வலிமையுடன் சில புத்தகங்களே எழுதப்படுகின்றன. ஆஸ்திரிய உளவியல் மருத்துவர் விக்டர் ஃபிராங்கல் எழுதி 1946-ம் ஆண்டு வெளிவந்த ‘வாழ்வின் அர்த்தம் – மனிதனின் தேடல்’ (Man’s Search for Meaning) புத்தகம் அதற்கு ஓர் உதாரணம். இரண்டாம் உலகப் போரின்போது, நாஜி வதை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு உளவியல் மருத்துவரின் அனுபவங்கள் இவை.

எப்போது வேண்டுமானாலும் வாழ்க்கை பறிபோகும் என்ற சூழலில் ஒவ்வொரு நாளையும் கடக்கும் ஒரு சராசரிக் கைதியின் மனநிலை எப்படி இருக்கும் என்ற கேள்விக்கான பதிலைத் தேடுகிறது இந்தப் புத்தகம். வதை முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு கைதி, தன் வருங்காலத்தை எப்படிக் கற்பனை செய்கிறான் என்பதை வைத்து அவன் வாழ்நாள் தீர்மானிக்கப்படுவதாகச் சொல்கிறார் விக்டர் ஃபிராங்கல்.

 

இந்தப் புத்தகம், முதல் பாதியில் வதை முகாமில் ஃபிராங்கலுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் இரண்டாம் பாதியில், வாழ்க்கைக்கான அர்த்தத்தையும் ‘லோகோதெரபி’ என்று அவர் கண்டறிந்த உளவியல் சிகிச்சை முறை கோட்பாட்டையும் விளக்குகிறது. 24 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கும் இந்தப் புத்தகம் 1.2 கோடிப் பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. இந்தப் புத்தகத்தைத் தமிழில் ச. சரவணன் மொழிபெயர்த்திருக்கிறார்.

எதற்காக வாழ வேண்டும்?

எதற்காக வாழ வேண்டும் என்ற கேள்விக்கான பதிலைத் தெரிந்துவைத்திருக்கும் மனிதன், எப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையிலும் வைராக்கியத்துடன் வாழ்ந்துவிட முடியும் என்ற கருத்தை முன்வைக்கிறார் ஃபிராங்கல். வாழ்வதற்காக ஒரு வலிமையான நோக்கத்தை உருவாக்கி வைத்திருப்பவர்கள், தங்கள் இருப்புக்கு எவ்வளவு ஆபத்து வந்தாலும் அந்த ஆபத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள் என்று நிறுவுகிறது இந்நூல்.

அதற்கு மாறாக, வாழ்வதற்கான எந்த நோக்கமும் லட்சியமும் இல்லாதவர்கள் வாழ்க்கையை உள்ளூரத் தொடர விரும்புவதில்லை. அதனால் அவர்கள் சீக்கிரமே இந்த உலகத்தைவிட்டுக் காணாமல் போய்விடுகிறார்கள். ‘எதற்காக வாழ வேண்டும்?’ என்ற கேள்விதான் வதை முகாமில் தன்னை வழிநடத்தியதாகச் சொல்கிறார் அவர். இந்தக் கேள்விக்கான பதிலைத் தேட முயலாத வதைமுகாம் கைதிகள் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது விரைவில் உயிரிழந்திருக்கிறார்கள்.

எந்தக் குறிப்பிட்ட காரணமும் இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்ற சூழலில், நேசம், பணி, துன்பத்திலும் கைவிடாத கண்ணியம் என்ற மூன்று வாழ்க்கை நோக்கங்கள்தாம் தன்னையும் இன்னும் பல வதைமுகாம் வாசிகளையும் காப்பாற்றியதாகச் சொல்கிறார் ஃபிராங்கல்.

அன்பே விமோசனம்

ஒருபுறம், வதை முகாம் அனுபவங்களை எழுதிவைக்கும் தன் கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டு படியெடுப்பது எப்படி என்ற சிந்தனை. இன்னொருபுறம் நீண்ட நாட்களுக்குமுன் தன்னிடம் இருந்து பிரிக்கப்பட்டு பெண்கள் வதை முகாமுக்கு அனுப்பப்பட்ட தன் மனைவியைப் பற்றிய சிந்தனை வதை முகாமில் அன்றாடம் தூக்கமில்லாமல், சுமையுடனும், பசியுடனும் மோசமானதாகக் கடந்தாலும், தன் மனைவியின் மீது வைத்திருந்த நேசமே அவருக்கு விமோசனம் அளித்ததாகக் குறிப்பிடுகிறார்.

தன் மனைவியின் பிம்பத்தைத் தனக்குத் துணையாக எப்போதும் தன் மனத்தில் பதிந்து வைத்திருந்ததாகச் சொல்கிறார் அவர். வலிக்கு மாற்றுமருந்தாகக் காதல் இருந்தது என்கிறார் அவர். “மனிதன் நேசத்தின் வழியாகவோ, காதலில் இருப்பதன் வழியாகவே விமோசனத்தை அடைகிறான். இந்த உலகில் எதுவுமே மிச்சமில்லாமல் தீர்ந்த நிலையில் கூட, ஒரு மனிதனால்கூடத் தன்னை நேசிப்பவரைப் பற்றிச் சிந்திக்கும்போது பேரின்பத்தை உணர முடியும் என்பதை அப்போது உணர்ந்துகொண்டேன்” என்கிறார் ஃபிராங்கல்.

தன் மனைவி உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதைக் கூடத் தெரிந்துகொள்ள முடியாத சூழலில், அவர் மீது தான் வைத்திருந்த அளவற்ற அன்புதான் தன்னை வழிநடத்தியதாகச் சொல்கிறார் அவர்.

எதையும் தாங்க முடியும்

வதை முகாமில் தானும் தன் சக கைதிகளும் அனுபவித்த கொடுமையான தண்டனைகளைப் பற்றி விவரிக்கும்போது, மனித உடலும் மனமும் நாம் நினைப்பதைவிட உறுதியானது என்ற கருத்தை முன்வைக்கிறார் அவர்.

“ஆஷ்விட்ஸ் வதை முகாமில் அடைக்கப்பட்டிருந்த மருத்துவர்களாகிய நாங்கள் அனைவரும் புத்தகங்கள் பொய்களைக் கற்பிக்கின்றன என்பதைப் புரிந்துகொண்டோம். குறிப்பிட்ட காலம்வரை தூக்கம் இல்லாமல் கடக்கும் ஒரு மனிதன் இறந்துவிடுவான் என்று எங்களுக்குக் கற்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், இது எதுவுமே வதைமுகாமில் எடுபடவில்லை.

இந்த விஷயமில்லாவிட்டால் என்னால் வாழ முடியாது, இது இல்லாமல் என்னால் தூங்க முடியாது, இது இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்ற எதுவும் அங்கே எடுபடவில்லை. முகாமில் ரயில் பெட்டி இருக்கைகளைப் போல அடுக்கடுக்காக கட்டில்கள் ஆறரை அடியிலிருந்து எட்டு அடிவரை நீளம் இருந்தன.

அதில் ஒவ்வோர் அடுக்கிலும் ஒன்பது பேர் தூங்கினோம்” என்கிறார். இதுபோன்ற மிக மோசமான சூழ்நிலைகளிலும் மனிதனால் ஆன்மிக சுதந்திரத்தையும், மனத்தின் சுதந்திரத்தையும் உணர முடியும் என்பதை விளக்குகிறது இந்தப் புத்தகம்.

aanma%202jpg

நூல்: வாழ்வின் அர்த்தம் மனிதனின் தேடல் ஆசிரியர்: விக்டர் பிராங்கல் (தமிழில்: ச.சரவணன்) எண். 77, 53வது தெரு, அசோக் நகர், சென்னை - 600 083 தொலைப்பேசி: 098411 91397

 

துன்பத்தின் அர்த்தம்

மனிதன் எதிர்கொள்ளும் துன்பத்துக்கு அர்த்தம் இருப்பதாகச் சொல்கிறார் ஃபிராங்கல். வாழ்க்கைக்கு அர்த்தம் இருப்பதைப் போல துன்பத்துக்கும் அர்த்தம் இருக்கும். மரணத்தைப் போல வாழ்க்கையின் அழிக்க முடியாத பகுதியாக இருக்கிறது துன்பம். துன்பமும் மரணமும் இல்லாமல் மனித வாழ்க்கை முழுமையடையாது என்கிறார் அவர்.

வாழ்க்கையில் மனிதன் எப்படிப்பட்ட துன்பங்களைக் கடந்தும் வாழமுடியும் என்பதற்கான நம்பிக்கையையும் அதற்கு உதாரணமான பல அனுபவங்களையும் இந்தப் புத்தகம் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறது.

aanma%203jpg

விக்டர் ஃபிராங்கல்

1905-ம் ஆண்டு ஆஸ்திரியாவில் பிறந்த இவர், பிரபல ‘லோகோதெரபி’ என்ற உளவியல் சிகிச்சைமுறையை உருவாக்கிய நரம்பியல் நிபுணரும், மனநல மருத்துவரும் ஆவார். யூதப் படுகொலையிலிருந்து தப்பிப் பிழைத்தவர்.

1938-ம் ஆண்டில் ஆஸ்திரியா நாஜிக்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபிறகு, இவரின் யூத அடையாளத்தால் ஆரிய நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டது. 1940-ம் ஆண்டில் இவர் பணியாற்றிவந்த ரோத்ஸ்சைல்ட் மருத்துவமனையில் மட்டும்தான் அப்போது யூதர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.

அந்தக் காலகட்டத்தில் நாஜி கருணைக்கொலைத் திட்டத்திலிருந்து இவர் பல நோயாளிகளைக் காப்பாற்றினார். 1942-ம் ஆண்டிலிருந்து 1945-ம் ஆண்டுவரை, மூன்று ஆண்டுகளை இவர் நாஜி முகாமில் கழித்திருக்கிறார். ஆரம்பத்தில் நாஜி முகாமில் பொது மருத்துவராகப் பணியாற்றி வந்த இவர், பின்னர் உளவியல் துறை நிபுணத்துவத்தால் முகாமுக்கு அழைத்துவருபவர்களுக்கு உளவியல் சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். இவர் நாஜி முகாமில் தற்கொலை, உளவியல் தொடர்பான விழிப்புணர்வை தனது உரைகளின் வழியாக தொடர்ந்து ஏற்படுத்திவந்தார்.

1944-ம் ஆண்டு, ஆஷ்விட்ஸ் வதை முகாமுக்கு அனுப்பப்பட்ட இவர், அங்கே ஐந்து மாதங்கள் அடிமைத் தொழிலாளியாகப் பணியாற்றினார். இந்த முகாம் வாழ்க்கையில் இவர் தன் குடும்பத்தில் தங்கையைத் தவிர அனைவரையும் பலிகொடுத்தார். ‘தி வில் டு மீனிங்’, ‘மேன்’ஸ் ஸர்ச் ஃபார் அல்டிமேட் மீனிங்’, ‘தி டாக்டர் அண்ட் தி சோல்’ போன்றவை இவரது படைப்புகளில் சில. இவர் 1997-ம் ஆண்டு மறைந்தார்.

https://tamil.thehindu.com/society/spirituality/article24873011.ece

Link to comment
Share on other sites

ஆன்மா என்னும் புத்தகம் 19: சூபி உலகுக்குள் ஒரு சாகசப் பயணம்

 

 
aanma%202jpg

மேற்குலகின் சிறந்த சூபி ஞானாசிரியர்களில் ஒருவராக அறியப்படுபவர் ரெஷத் ஃபீல்ட். இவரது சுயசரிதையின் முதல் பகுதியான ‘தி லாஸ்ட் பேரியர்’ (The Last Barrier – A Journey into the Essence of Sufi Teachings) புத்தகம் 1976-ம் ஆண்டு வெளியானது.

சூபி மெய்ஞ்ஞானப் பாதையில் பயணம் செய்யும் ஒருவரின் அனுபவங்களை சாகசக் கதை போல இந்தப் புத்தகம் பதிவுசெய்திருக்கிறது. சூபி ஆசிரியர் ஒருவருக்கும் அவருடைய மாணவருக்கும் இருக்கும் ஆழமான அன்பையும் நட்பையும் ரெஷத் ஃபீல்டின் புத்தகம் பேசுகிறது.

 

பயணம் கற்றுத்தரும் பாடம்

லண்டனில், பாரம்பரியப் பொருட்களை விற்பனைசெய்யும் கடை வைத்திருக்கும் ரெஷத், ஒரு புதிரான சூழலில் 1969-ம் ஆண்டு சூபி ஆசிரியர் ஹமித்தைச்(அவரது இயற்பெயர்: ப்யூலென்ட் ரவுஃப்) சந்திக்கிறார். அவர் தன்னிடம் சூபி மெய்ஞ்ஞானத்தைக் கற்க விழையும் ரெஷத்தைத் துருக்கிக்கு அனுப்புகிறார். வெவ்வேறு மெய்ஞ்ஞானத் தேடல் முறைமைகளிலும், ஆற்றுப்படுத்தல் முறைகளிலும் இயல்பாகவே ஆர்வம்கொண்ட ரெஷத், லண்டனில் தனது கடையை விற்றுவிட்டு, தன் வாழ்க்கையையே மாற்றப்போகும் பயணத்துக்குத் தயாராகிறார்.

“நீங்கள் பல ஆண்டுகளாகப் பல விஷயங்களைப் படித்திருப்பீர்கள். நீங்கள் படித்த கருத்தாக்கங்களால் உங்கள் மூளை நிரம்பியிருக்கும். இந்தப் பயணத்தில் மற்றவர்களுக்குக் கிடைத்த அதே அனுபவம் உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படலாம். உங்களது உண்மையான இயல்பைப் புரிந்துகொள்வதற்குமுன், உங்களுக்குள் ஏற்கெனவே இருக்கும் கருத்தாக்கங்கள் கரைந்துபோக வேண்டும்.

இதற்குப் புத்தகங்கள் இல்லை. இயற்கையே நம்முன் உள்ள ஒரே கையெழுத்துப் பிரதி. வாழ்க்கைதான் அது சொல்லும் பாடம். பேரார்வத்துடன் வாழ்க்கையை வாழுங்கள்! இந்தப் பாதை இறுக்கமாக இருக்கும்; மகிழ்ச்சியானதாக இருக்காது என்று கருத வேண்டாம். இது ஆனந்தம் நிறைந்த சாகசப் பயணமாக இருக்கும்” என்று இந்தப் பயணத்தை மேற்கொள்ள தொடங்குவதற்குமுன் ரெஷத்திடம் விளக்குகிறார் ஹமித்.

இந்தப் பயணத்தில், சில அபூர்வமான சூபி துறவிகளைச் சந்திக்கும் ரெஷத், ஒரு புதுமையான தெய்வீக அன்பு நிறைந்த உலகத்துக்குள் நுழைகிறார். இந்தப் பயணத்தில், தனக்குள் இருக்கும் பலவீனங்களையும் போலித்தனங்களையும் தப்பிதங்களையும் துறக்க வேண்டிய சூழலை எதிர்கொள்கிறார் ரெஷத். அவரது ஆசிரியரான ஹமித், கடினமான வழிகளில் வாழ்வின் போலித்தனங்களிலிருந்து அவரை விடுவிக்க முயல்கிறார்.

இறைவனிடம் சரணடைதல்

வாழ்வின் உண்மையைத் தேடும் இந்தப் பயணத்தில், தன் ஆசிரியரான ஹமித்திடம் இருந்து தொடர் ஊக்கம் கிடைத்தாலும், தன் கருத்தாக்கங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, இறைவனிடம் சரணடைவது அவருக்குக் கடினமாகவே இருந்துள்ளது. சூபி மூச்சுப் பயிற்சியை அவருக்குக் கற்றுத்தரும் ஹமித், “ஒரு நாளில் எத்தனை முறை இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற நினைவு வரும்? நீங்கள் இறைவனை முழுமையாகச் சார்ந்திருக்கிறீர்கள்.

அவருக்குத்தான் எல்லா நன்றிகளையும் கொடுக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் இறைவனுக்கு நன்றியுள்ளவராக மாறும்வரை, இறைவனிடமிருந்து பிரிந்துதான் இருக்கிறீர்கள்” என்கிறார். வாய்ப்புகளால் எதுவும் நடைபெறுவதில்லை, அனைத்துக்கும் பின்னால் இறைவன் இருப்பதாகவும், மனிதர்கள் அனைவரும் இந்தத் தெய்வீக இருப்பையும் செயலையும் நம்ப வேண்டும் என்று ரெஷத்துக்குக் கற்பிக்கிறார் ஹமித்.

அன்னை மரியாள் வசித்த இடம்

இயேசு கிறிஸ்துவைச் சிலுவையில் அறைந்த பிறகு, அன்னை மரியாள் எபேசஸ் நகரத்தில் வசிக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அந்த இடத்துக்கு ரெஷத்தை அழைத்துச் செல்கிறார் ஹமித். “மரியாள் ஒரு தெய்வீக அன்னை. இந்த உலகத்தில் இருக்கும் அனைத்துவிதமான தெய்வீக சாத்தியங்களுக்கும் தளம் அமைப்பவராக அன்னை மரியாள் இருக்கிறார். அவரை நாம் அடையாளம் காண வேண்டும்” என்று எடுத்துரைக்கிறார் ஹமித்.

“ஒரு சூபி, அந்தத் தருணத்தின் குழந்தையாக இருக்கிறார். ஒவ்வொரு முறை அன்னை மரியாளுக்குள் உருகி கரையும்போதும், ஏதோவொன்று புத்துயிர்ப்பை அடைகிறது. எது பிறக்கிறதோ, அது அந்தத் தருணத்தின் குழந்தையாக மாறுகிறது. அந்தக் குழந்தை இறைவனை உணர்ந்ததாக ஆகி சூபி என்று அழைக்கப்படலாம்” என்று விளக்குகிறார் ஹமித்.

ரூமியின் கல்லறையில் மறுபிறப்பு

இந்தப் பயணத்தின் உச்சகட்டமாக ரெஷித், கோன்யா நகரத்தில் உள்ள மெய்ஞ்ஞானியும் கவிஞருமான ஜலாலூதீன் ரூமியின் கல்லறையை அடைந்தார். “அலைக்கழித்த புயலுக்குப் பிறகு வரும் அமைதியின் குளிர்மை ரூமியின் கல்லறையைப் பார்த்த பிறகு, என் வாழ்க்கை முழுவதும் நீடித்தது” என்று சொல்கிறார் ரெஷத். அங்கே மௌலவி ஷேக் சுலைமான் டிடியைச் சந்திக்கிறார் அவர்.

“இறைவனின் வழிகள்தான் எவ்வளவு அற்புதமாக இருக்கின்றன, அவர் யாருக்கு எந்தத் தருணத்தில் என்ன தேவையோ அதை அந்தத் தருணத்தில் வெளிப்படுத்துகிறார்” என்ற கருத்தை ரெஷத்துடன் பகிர்ந்துகொள்கிறார் மௌலவி ஷேக் சுலைமான்.

சூபி உலகத்துக்குள் பயணம் செய்ய விரும்பும் ஒரு மாணவன், தன் ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் எப்படி அந்தப் பயணத்தை வெற்றிகரமாக முடிக்கிறான் என்பதை இந்தப் புத்தகம் விளக்குகிறது. “வாழ்வதற்கு முதலில் இறக்க வேண்டும், அப்படி இறப்பதன் அர்த்தம் என்னவென்றால், உங்கள் லட்சியங்கள், ஆசைகள் அனைத்தையும் கைவிடுவதாகும்” என்ற கருத்தை இந்தப் புத்தகம் முன்வைக்கிறது.

aanmajpg
 

ரெஷத் ஃபீல்ட்

இவர் 1934-ம் ஆண்டில் இங்கிலாந்தில் பிறந்தார். இவர் இசைக் கலைஞராகவும் பாரம்பரிய பொருட்கள் விற்பனையாளராக இருந்தவர். சூபி ஞானிகளுடன் இவரது வாழ்வின் பிற்பகுதியில் ஏற்பட்ட அனுபவத்தில் சூபி ஞானாசிரியராகவும் எழுத்தாளராகவும் மாறியவர். சூபி போதனைகளைப் பற்றிய முக்கியமான புத்தகங்களை இவர் எழுதியிருக்கிறார்.

வாழ்வின் மெய்மையைத் தேடிய ஆயிரக்கணக்கான மேற்கத்தியர்களுக்கு இவர் வழிகாட்டியிருக்கிறார். 1960-களில் பிரபலமாயிருந்த ‘தி ஸ்பிரிங்ஃபீல்ட்ஸ்’ இசைக்குழுவின் நிறுவனர்களில் இவரும் ஒருவர். ஜப்பானின் ஜென் மடாலயங்கள், நேபாளத்தின் இமய மலை, துருக்கி போன்ற இடங்களுக்குத் தொடர் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

குர்ட்ஜிப், பி.டி. அவுஸ்பென்ஸ்கி, சோக்யம் ட்ருங்பா போன்ற ஞானாசிரியர்களின் தாக்கம் இவரிடம் இருந்தது. இவரை சூபி பாதையில் வழிநடத்தியவர்களில் முக்கியமானவர் ப்யூலென்ட் ரவுஃப் என்ற துருக்கிய ஆன்மிக ஆசிரியர். உளவியல் ஆலோசனையில் முனைவர் பட்டம் பெற்ற இவர், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் மறைஞானப் பள்ளிகளை நிர்வகித்துவந்தார்.

‘டு நோ வி ஆர் லவ்டு’ ‘கோயிங் ஹோம்’, ‘தி அல்கெமி ஆஃப் தி ஹார்ட்’ போன்றவை இவரது படைப்புகளில் சில. 2016-ம் ஆண்டு இவர் மறைந்தார்.

https://tamil.thehindu.com/society/spirituality/article24935811.ece

Link to comment
Share on other sites

ஆன்மா என்னும் புத்தகம் 20: வெற்றியின் பின்னால் ஓடத் தேவையில்லை

 

 
aanmajpg

உலகின் முன்னணி தலைமைப்பண்பு நிபுணர்களில் ஒருவராக அறியப்படுபவர் ராபின் ஷர்மா. 1998-ம் ஆண்டு வெளியான இவரது ‘தனது பொக்கிஷத்தை விற்ற துறவி’ (The Monk Who Sold His Ferrari) புத்தகம், இன்றளவும் தன்னிறைவான வாழ்க்கைக்கான வழிகாட்டியாகத் திகழ்கிறது. இன்றைய அவசரகதியான வாழ்க்கைமுறையில் இலக்குகளை அடைவதற்காகவும் பணத்தைத் தேடியும் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

இதனால், நம்மில் பெரும்பாலானோர் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக, தன்னிறைவுடன் இருக்கிறோமா என்பதை அறிந்துகொள்வதற்குகூட முயல்வதில்லை. அப்படி ஓய்வில்லாமல் வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருப் பவர்களை மனத்தில்வைத்து அவர்களுக்கு வழிகாட்டுவதற்காக எழுதப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகம்.

 

ஜூலியன் மேன்டில் என்ற வெற்றிகரமான வழக்கறிஞரின் ஆன்மிகத் தேடலின் பயணக்கதையாக இந்தப் புத்தகம் விரிகிறது. அந்த வழக்கறிஞரிடம் வெற்றி, அளவற்ற பணம், பெரிய வீடு, தனி விமானம், பலரின் கனவு வாகனமான சிவப்பு வண்ண ஃபெராரி என அனைத்தும் இருக்கின்றன. வெற்றி, வெற்றி என வெற்றிகளின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் அவரின் வாழ்க்கையில் எதிர்பாராத வகையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது.

கடிவாளமில்லாத வாழ்க்கைமுறையில் சிக்கித்த விக்கும் ஜூலியனுக்கு ஒருநாள் நீதிமன்றத்தில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு விழுந்துவிடுகிறார். அதுவரை, பணிவாழ்க்கையில் வெற்றிகளை மட்டுமே சுவைத்துக்கொண்டிருந்த அவர், ஆரோக்கியத்தில் தோல்வியடைந்துவிட்டதை முதன்முறையாக உணர்கிறார். 53 வயதிலேயே 70 வயது தோற்றத்தைப் பெற்றுவிடுகிகறார் அவர். மருத்துவமனையில் சேர்க்கப்படும் அவர், நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்கள் என அனைவரையும் சந்திக்கமறுத்துவிடுகிறார்.

அதற்குப் பிறகு, சில நாட்களில் தன் பணிவாழ்க்கையை விட்டு விலகி, தன் சொத்துகள் அனைத்தையும் விற்றுவிட்டு யாருக்கும் சொல்லாமல் எங்கோ சென்றுவிடுகிறார் அவர். ஜூலியனின் இந்தக் கதையை அவருடன் பணியாற்றும் சக வழக்கறிஞரான ஜான் விளக்குகிறார். மூன்று ஆண்டுகள் ஓடிவிட்ட பிறகும், ஜூலியனிடமிருந்து யாருக்கும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஒருநாள், திடீரென்று ஜானை அவரது அலுவலகத்தில் சந்திக்க வருகிறார் ஜூலியன்.

ஆனால், முப்பது வயதுத் தோற்றத்துடன் தன்னை சந்திக்க வந்திருக்கும் ஜூலியனை முதலில் ஜானால் அடையாளம் கண்டுகொள்ளமுடியவில்லை. ஆரோக்கியமான, ஆன்மிகத் தெளிவுடன் திரும்பிவந்திருக்கும் ஜூலியனைப் பார்த்து ஜான் ஆச்சர்யமடைகிறார். அவருக்குத் தன் ஆன்மிகப் பயணத்தை விளக்குகிறார் ஜூலியன்.

ஏழு நற்பண்புகள்

தன் சொத்துகள் அனைத்தையும் விற்றுவிட்டு, வாழ்க்கையில் நிம்மதியைத் தேடி இந்தியாவுக்குப் பயணம் சென்றதாகச் சொல்கிறார் ஜூலியன். அங்கே, இமயமலையில் வாழும் துறவிகளிடம் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக, தன்னிறைவுடன் வாழ்வதற்கான ரகசியங்களைக் கற்றுகொண்டதாகச் சொல்கிறார் அவர். தான் கற்றுவந்த வாழ்வின் ரகசியங்களை ஜானுடன் பகிர்ந்துகொள்கிறார் அவர். அவற்றை மற்றவர்களுக்கும் கற்றுகொடுக்கும்படி ஜானிடம் கேட்டுக் கொள்கிறார் அவர்.

உள்ளார்ந்த அமைதி, மகிழ்ச்சி, ஆன்மிக நிறைவுடன் வாழ்வதற்கு ஏழு நற்பண்புகள் தேவை என்று விளக்குகிறார் ஜூலியன். மனம், நோக்கம், நிலையான மேம்பாடு, ஒழுக்கம், நேரம், சேவை, இக்கணத்தை ஏற்றுக்கொள்வது ஆகிய ஏழு நற்பண்புகளை இந்தப் புத்தகத்தில் முன்வைக்கிறார் அவர். இந்தப் பண்புகளை வளர்த்துகொள்ளும்போது தன்னிறைவான வாழ்க்கை சாத்தியப்படும் என்று அவர் விளக்குகிறார்.

தன்னை அறிதலுக்கான உத்திகள்

மனதை ஒருநிலைப் படுத்துவதற்கான பல்வேறு எளிமையான உத்திகளை இந்தப் புத்தகம் விளக்குகிறது. ரோஜாவின் இதயத்தைக் கவனிப்பது, ஓடும் நதியைக் கவனிப்பது, கனவுப் புத்தகம் எழுதுவது, எந்தப் பயிற்சியையும் 21 நாட்கள் செய்து அதைப் பழக்கமாக மாற்றிக்கொள்வது என்பது போன்ற பல்வேறு உத்திகளை யதார்த்தமான முறையில் இந்தப் புத்தகம் விளக்குகிறது.

தன்னை அறிந்துகொள்வதுதான் அமைதியான வாழ்க்கைக்கான முதல் வழி என்பதை இந்தப் புத்தகம் முன்வைக்கிறது. “சாதனைகள் புரிவதற்காக மகிழ்ச்சியைத் தொலைக்கத் தேவையில்லை. இந்தக் கணத்தில் வாழ்வதிலேயே வாழ்வின் ரகசியம் அடங்கியிருக்கிறது” என்ற கருத்தை இந்தப் புத்தகம் உதாரணங்களுடன் பதிவுசெய்கிறது.

aanma%202jpg
 

ராபின் ஷர்மா

இவர் கனடாவின் டொராண்டோ நகரில் 1965-ம் ஆண்டு பிறந்தார். டல்ஹவுசி பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்த இவர், தன் பணிவாழ்க்கையை நிறுவன விவகாரங்களுக்கான வழக்கறிஞராகத் தொடங்கினார்.

பின்னர், வாழ்வின் அமைதி, மகிழ்ச்சிக்கான தேடல் பயணத்தில் வழக்கறிஞர் பணியை விட்டுவிலகி, ஒரு வெற்றிகரமான எழுத்தாளராக, தலைமைப்பண்புத்துவ நிபுணராகத் தன் பாதையை அமைத்துகொண்டார். தனிநபர் வளர்ச்சிக்கான பல்வேறு வெற்றிகரமான வழிமுறைகளை தன் புத்தகங்களில் முன்வைத்திருக்கிறார்.

இவரது புத்தகங்கள் 96க்கும் மேற்பட்ட நாடுகளில் 1.5 கோடி பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியிருக்கின்றன. ‘யார் அழுவார் நீ உயிர் துறக்கையில்’ (Who Will Cry When you Die?), ‘பெருவாழ்வு’ (Megaliving), ‘ரகசியக் கடிதங்கள்’ (The Secret Letters), ‘The Leader Who had no Title’, ‘The Greatness Guide’ போன்றவை இவரது பிரபலமான படைப்புகளில் சில.

https://tamil.thehindu.com/society/spirituality/article24992620.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.