Jump to content

ஈழப்போர்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு செய்தியை இணைப்பதற்கே ஆதாரம், மூலம் யாழில் கேட்கப்படுகிறது,

பல லட்சம்பேர் கிட்ட நின்று பார்க்காத ஒரு வரலாற்றையே எழுதும் பீஷ்மர்,அவர் எழுதும் தொடருக்கு,அறிந்த மிக இரகசியமான தகவல்களுக்கு ஆதாரங்கள் சிலதையாவது சொல்லி தொடங்காதது ஏனோ?

யுத்த காலங்களில் புலத்தில் ஆய்வாளர்கள் கொடிகட்டி பறந்தார்கள், ஒவ்வொரு நாட்டிலும்  பல ஆய்வாளர்கள், பல பெயர்களில் ,, ஒருவர் பல பெயர்களில் எல்லாம் என்று மணிக்கணக்கில் ஆய்வு செய்தார்கள்,பந்தி பந்தியாய் எழுதி குவித்தார்கள், 

இறுதியுத்தம் முடிவதற்கு முதல்நாள்கூட, புலிகள் இன்னும் பதுங்குவது எதற்கு, பல அணிகள் இன்னும் களமிறக்கப்படாது இருப்பதன் மர்மம் என்ன என்று கேள்வியெல்லாம் கேட்டு மனசாட்சியே இல்லாமல் வெற்றி முரசு கொட்டினார்கள், எல்லாம் முடிந்தபின்னர் இப்போ அவர்கள் எங்கேயிருக்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்பதே யாருக்கும் தெரியாது.

மழைவிட்டும் தூறல் நிக்காததுபோல, இன்னும் ஒருசிலர் நரம்புகளை சூடேற்றி புகழ்தேடும் அவர்கள் தொழிலை விடுவதாகவே இல்லை. எல்லாம் முடிந்து மயானத்தில் வந்து நிற்கிறோம் என்று தெரிந்தும் அங்கும் வந்து வார்த்தை அலங்காரம் பண்ணுபவர்களுக்கு இரண்டே இரண்டு நோக்கங்கள்தான் இருக்கும்

ஒன்று: காசு பார்க்கும் ஊடக வியாபாரம், அல்லது தனிப்பட்ட பிரபல்யம்,

ஒரு அழிவில்கூட ஆதாயம் பார்க்கும் இனம் எம்மைவிட்டால் இந்த பூமியில் வேற யார் இருக்கிறார்கள்?

Link to comment
Share on other sites

  • Replies 315
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரை எழுதியவர் ஆதாரம் இல்லாமல் கேள்விப்பட்டதைக்கொண்டு எழுதினால் இதுவும் சாத்திரியார் எழுதிய “அன்று சிந்திய இரத்தம்” மாதிரித்தான் இருக்கும் என்று முன்னரே சொல்லிவிட்டேன்.?

முன்னர் இராணுவ ஆய்வாளர்கள் இக்பால் அத்தாஸ், டிபிஸ் ஜெயராஜ்,  வேல்ஸிலிருந்து அரூஸ் என்று பலர் தாங்கள் நேரே நின்று பார்த்தமாதிரி எழுதியவற்றையும்,  வன்னியன் என்ற ஒருவர் எதிர்வுகூறிய தேள்வடிவத் தாக்குதலையும் புளுகிப்புளுகி வாசித்து சுடச்சுட யாழில் இணைத்த மாதிரித்தான் இந்தத் தொடரும்.?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

கட்டுரை எழுதியவர் ஆதாரம் இல்லாமல் கேள்விப்பட்டதைக்கொண்டு எழுதினால் இதுவும் சாத்திரியார் எழுதிய “அன்று சிந்திய இரத்தம்” மாதிரித்தான் இருக்கும் என்று முன்னரே சொல்லிவிட்டேன்.?

முன்னர் இராணுவ ஆய்வாளர்கள் இக்பால் அத்தாஸ், டிபிஸ் ஜெயராஜ்,  வேல்ஸிலிருந்து அரூஸ் என்று பலர் தாங்கள் நேரே நின்று பார்த்தமாதிரி எழுதியவற்றையும்,  வன்னியன் என்ற ஒருவர் எதிர்வுகூறிய தேள்வடிவத் தாக்குதலையும் புளுகிப்புளுகி வாசித்து சுடச்சுட யாழில் இணைத்த மாதிரித்தான் இந்தத் தொடரும்.?

 

 

அவர்கள் எல்லோரும் நடக்கப் போவதை கற்பனையோடு,இட்டுக் கட்டி எழுதினார்கள்.ஆனால்,இவர் நடந்து முடிந்ததை எழுதுவதால் 75% உண்மையாத் தான் இருக்க வாய்ப்பு உண்டு...நடந்ததை கண்டவர்கள் இன்னும் உயிரோடு தான் உள்ளார்கள் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்து சமுத்திரத்தின் நடுவே ஒரு தீவுக்குள் உலக வல்லரசுகளும்.. வல்லாதிக்கங்களும் சூழ்ந்து நின்று கொண்டு நடத்திய சாட்சியமற்ற யுத்தத்தில்.... சாட்சியமற்ற கட்டுக்கதைகள் வருவதும் அவரவர் தங்கள் விளம்பரங்களை வியாபாரங்களைப் பெருக்கிக் கொள்வதும்.. கடந்த 9 வருடங்களாக அளவு கணக்கின்றி நடந்தேறியே வருகின்றன.

இவற்றை எல்லாம் வாசிக்கிற மனநிலையில் இப்ப 75% மக்கள் இல்லை. ?

ரூ லேட். இருந்தாலும்.. வியாபாரம் கொஞ்சம் நடக்கும் விளம்பரமும் கொஞ்ச கிடைக்கும். தொடர்ந்து முயற்சிக்கவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாள்ஸ் அன்ரனியின் கட்டளையால் கோபப்பட்ட பிரபாகரன்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 08

April 29, 2018
389975_286240058080594_100000838051682_7

பீஷ்மர்

சாள்ஸ் அன்ரனி இராணுவ கட்டமைப்பில் கீழிருந்து வளர்ந்தவர் அல்ல. களசெயற்பாட்டிலும் கீழ் மட்டத்திலிருந்து வளர்ந்தவர் அல்ல. அமைப்பின் தலைவரின் மகன் என்ற சாதகம் அவரை உச்சத்தில் அமர வைத்திருந்தது. இராணுவ படிநிலையில் கீழிருந்து மேலெழாதது சாள்ஸ் அன்ரனியின் மிகப்பெரிய பலவீனமாக இருந்தது.

திடீரென இயக்கத்திற்குள் நுழைந்து, கண்ணிமைக்கும் பொழுதுக்குள்ளேயே எல்லா தளபதிகளையும் கட்டுப்படுத்துபவராக அவர் மேலெழுந்தது, சில அதிருப்திகளையும் கிளப்பாமல் இல்லை. நாம் சொல்லும் இந்த தகவல்கள், மேலோட்டமாக புலிகளை கவனிப்பவர்களிற்கு தெரிந்திருக்க நியாயமில்லை. உண்மையை சொன்னால், விடுதலைப்புலிகள் அமைப்பு இயங்குநிலையில் இருந்தபோது, அமைப்பின் மேல்நிலை உறுப்பினர்கள் மத்தியில் மட்டும் உணரப்பட்ட விசயம் இது. அப்பொழுது யாரும் இதைப்பற்றி வாய் திறந்து இன்னொருவருடன் பேசமாட்டார்கள். யுத்தம் முடிந்த பின்னர் சில மேல்நிலை உறுப்பினர்கள் இதை மெல்ல மெல்ல பேசுகிறார்கள்.

 

தமிழ் பக்கத்தின் இந்த தொடரை பற்றி இரண்டு விசயங்களை முதலில் தெளிவுபடுத்திவிட வேண்டும். முதலாவது, இந்த தொடரை படிப்பவர்களிற்கு விடுதலைப்புலிகள் பற்றிய முழுமையான குறுக்குவெட்டு முகத்தை அறிந்துகொள்ளகூடியதாக இருக்கும்.

இரண்டாவது- இந்த பாகத்தின் ஆரம்பத்தில் புலிகளின் மேல்நிலை உறுப்பினர்கள் சிலர் மட்டுமே அறிந்த விசயம் என்றோம். புலிகளின் மேல்நிலை உறுப்பினர்கள் எல்லோருமே இறந்துவிட்டார்களே, வேறு யார் இப்பொழுது இருப்பார்கள் என நீங்கள் சந்தேகப்படலாம்.

27_11_06_banu_01-300x206.jpg தளபதி பானு

இந்த சந்தேகத்தையும் தீர்த்துவிடலாம். புலிகளின் கட்டமைப்பை சரியாக புரிந்துகொண்டவர்களிற்கு இனி நாம் சொல்லப்போவது நன்றாக தெரியும். புலிகளின் மையம் எனப்படுவது பிரபாகரன் மற்றும் அவரை நெருக்கமாக சுற்றியுள்ள போராளிகள்தான். அதற்காக மற்ற தளபதிகள் டம்மிகள் என்பதல்ல. அவர்களிடம் நிர்வாகம், களத்தை வழிநடத்தல் முதலான பொறுப்புக்கள் இருந்தன. அமைப்பு ரீதியாக முடிவெடுக்கும் பிரபாகரனை சுற்றியிருந்தவர்களிடம் வேறுவிதமான முக்கியத்துவம் இருந்தது. யுத்தத்தின் இறுதியில் புலிகளின் நிர்வாகங்கள் சீர்குலைய, இந்த தளபதிகள் எல்லோருமே முக்கியமிழக்க, முடிவெடுக்கும் நிலையிலிருந்த பிரபாகரனை சுற்றியிருந்தவர்களிடம் மட்டுமே அனைத்து விடயங்களையும் கையாளும் பொறுப்பு வந்தது. இப்பொழுது இதை புரிந்துகொள்ள பலருக்கு சிரமமாக இருந்தாலும், தொடரை படித்துக் கொண்டு போக அது புரியும்.

இப்பொழுது ஏன் அதை குறிப்பிட்டோம் என்றால், இந்த விசயங்களை சாதாரண போராளிகள், புலிகள் அமைப்பின் பணியாளர்கள், ஆதரவாளர்கள் அறிந்திருக்க நியாயமில்லை. மொத்தத்தில், புலிகள் பற்றிய மிக ஆழமான தொடராக இதுதான் இருக்குமென நினைக்கிறோம்.

சரி, இனி விடயத்துக்கு வருகிறோம்.

சாள்ஸ் அன்ரனியின் வயது, அனுபவத்தை மீறிய பொறுப்புக்கள் குவிந்தது. 2006 இன் பின்னர் புலிகள் அமைப்பிற்குள் ஆளணி, வளம் அதிகமுள்ள பிரிவாக கணினி பிரிவு மாற்றமடைந்தது.

1970களின் தொடக்கத்தில் பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியபோது அவர்தான் மிக இளையவர். மற்றையவர்கள் எல்லோரும் அவரை தம்பி என்றழைத்தனர். ஆனால் அவரை புலிகள் அமைப்பிற்குள் தம்பி என்றழைத்தவர்கள் குறைவு. அதுவும் பிற்காலத்தில் பாலசிங்கம் போன்ற வெகுசிலர்தான் அப்படி அழைத்தனர். அவர் எல்லோருக்கும் அண்ணை ஆனார். 1970களில் பிரபாகரனிற்கு நடந்தது 2000களில் சாள்ஸ் அன்ரனிக்கு நடந்தது. அவரை தளபதிகள் தம்பி என அழைத்தனர்.

 

23843620_10155789022578548_6081401854221

சாள்ஸ் அன்ரனி அமைப்பின் தலைமையை நோக்கி நகர தொடங்க, சில தளபதிகளிற்கு அது அதிருப்தியை கொடுத்ததென கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். அதில் முதன்மையானவர் சூசை. அதேபோல, சாள்ஸ் அன்ரனியுடன் நெருக்கமான ஒரு அணியும் உருவாகியது. அதில் தளபதிகள் பானு, வேலவன், பாண்டியன் வாணிப பொறுப்பாளர் குட்டி போன்றவர்கள் முக்கியமானவர்கள். இதில் பானுவிற்கும், சாள்ஸ் அன்ரனிக்குமிடையில் மிகமிக நெருக்கமிருந்தது. சாள்ஸ் அன்ரனி என்ன முடிவெடுத்தாலும், அது சரியென முதலாவது ஆளாக பானு ஆமோதிப்பார்.

இதற்கு ஒரு உதாரணம்.

புதுக்குடியிருப்பிற்கு நெருக்கமாக இராணுவம் நிலை கொண்டிருந்த 2009 இன் ஜனவரி மத்திய பகுதி. யுத்தத்தை தொடர புலிகளிற்கு ஆளணிப்பற்றாக்குறை பெரும் பிரச்சனையாக இருந்தது. கட்டாய ஆட்சேர்ப்பு உபாயம் வெற்றியளிக்கவில்லை. அப்படி இணைக்கப்பட்டவர்கள் தப்பியோடி விடுகிறார்கள். அப்பொழுது ஒருநாள் தளபதிகள் இரணைப்பாலையில் சந்தித்து கொண்டார்கள். ஆளணி பிரச்சனையை சரி செய்ய, தப்பியோடுவதை தடுக்க என்ன செய்யலாமென்பதையே அன்று ஆராய்ந்தார்கள். பெண்கள் தப்பியோடுவதை தவிர்க்க, படைக்கு இணைக்கப்படும் பெண்கள் அனைவருக்கும் ஒரு இஞ்ச் அளவில் (பொலிஸ் குறோப்) முடிவெட்டலாமென சாள்ஸ் அன்ரனி சொன்னார். மகளிர் படையணி தளபதிகளான விதுஷா, துர்க்கா ஆகியோர் இதனை கடுமையாக எதிர்த்தனர். தமிழ் பெண்களின் வாழ்வில் தலைமுடி செலுத்தும் உணர்வுபூர்வமான பாத்திரம் பற்றி இருவரும் கூறி, பெண்களின் விருப்பமின்றி அப்படி வெட்ட முடியாதென எதிர்ப்பு தெரிவித்தனர்.

vithusa_2-300x208.jpg தளபதிகள் விதுஷா, துர்க்கா

அப்பொழுது சாள்ஸ் அன்ரனிக்கு சார்பாக நிலைப்பாடெடுத்த ஒரே தளபதி பானு. இறுதியில் சாள்ஸ் அனிரனியின் யோசனையே தீர்மானமாக்கப்பட்டது.

இந்தவகையான கூட்டங்கள் பல தளபதிகளை எரிச்சலடைய வைக்கவும் செய்தது. அது பற்றிய தகவல்களை இந்த தொடரின் பின்பகுதிகளில் குறிப்பிடுகிறோம்.

 

2006 இல் யுத்தம் ஆரம்பித்த பின் புலிகளின் தாக்குதல் முயற்சிகள் எதுவும் எதிர்பார்த்த வெற்றியடையவில்லையென்பதே உண்மை. இது தளபதிகளை செய்வதறியாது திணற செய்தது.

2009இன் ஆரம்பத்தில் விசுவமடுவிற்கும் அம்பகாமத்திற்கும் இடைப்பட்ட காட்டு பிரதேசத்தில் புலிகள் இராணுவத்தின் மீது ஒரு வலிந்த தாக்குதல் மேற்கொண்டனர். 2006 இன் பின் புலிகள் நடத்திய தாக்குதலில் இராணுவம் சில அடிகளாவது பின்னால் சென்ற சம்பவங்கள் ஓரிரண்டுதான். அதில் அம்பகாம தாக்குதலும் ஒன்று. அதில் சாள்ஸ் அனிரனி முக்கிய பங்கு வகித்திருந்தார். (இந்த தாக்குதல் தொடர்பாக பின்னர் விரிவாக பார்க்கலாம்)

இந்த தாக்குதலின் பின்னர் தளபதிகளுடனான சந்திப்பொன்றில் வேலவன் பேசும்போது – “நாங்கள் பெரியாட்கள் இருந்து என்ன செய்யிறம். ஒன்றுமில்லை. அவன் (சாள்ஸ் அனிரனி) சின்னப்பொடியன். ஒரு சண்டை செய்து காட்டியிருக்கிறான். இனியாவது நாங்கள் சண்டையொன்று செய்து காட்ட வேணும்“ என்றுள்ளார். சாள்ஸ் அன்ரனிக்கு கிடைப்பதைபோல வளங்களை ஒருங்கிணைத்து தருவீர்களா என மற்றைய தளபதிகள் சூடாக கேட்க, அன்றைய சந்திப்பில் அனல் பறந்தது.

சாள்ஸ் அன்ரனியின் தலைமைத்துவம், அவருக்கு கிடைத்த திடீர் முக்கியத்துவம் தொடர்பாக வெளிப்படையான அதிருப்தியை பதிவு செய்தவர் சூசை. அதற்கு காரணம், கடற்புலிகளிற்குள்ளும் சாள்ஸ் அன்ரனி மூக்கை நுழைக்க ஆரம்பித்ததே. கணினி பிரிவென ஆரம்பிக்கப்பட்ட பிரிவில், மற்றைய அனைத்து பிரிவுகளின் வேலைகளும் உள்ளடக்கப்பட்டன. தாக்குதலணி இருந்தது. பொறியியல் பிரிவிருந்தது. மருத்துவமிருந்தது. கனரக ஆயுதப்பிரிவிருந்தது. கடற்புலிகள் மட்டுமிருக்கவில்லை.

 

கடற்புலிகளை போல தனியான கடற்கட்டமைப்பொன்றை கணினி பிரிவின் கீழ் உருவாக்க சாள்ஸ் அன்ரனி முயன்றார். சுண்டிக்குளத்தில் கணினி பிரிவின் கண்காணிப்பில் ஒரு கடல் அணி உருவாக்கப்பட்டது. அவர்கள் தாக்குதல், கடல்வழி ஆயுத விநியோக நடவடிக்கைகளை கையாள முயற்சித்து கொண்டிருந்தார்கள். கடற்புலிகளின் நடவடிக்கைகளும், கணினி பிரிவின் நடவடிக்கைகளும் ஒன்றையொன்று இடைவெட்ட முரண்பாடுகள் ஆரம்பித்துள்ளன.

கணினி பிரிவின் அபரிமித வளர்ச்சி, அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் சூசைக்கு அவ்வளவு நல்ல அபிப்பிராயம் இருக்கவில்லை. சாள்ஸ் அன்ரனியின் முடிவுகள் நன்றாக அமையாத பட்சத்தில் மற்றைய தளபதிகள் மௌனமாக இருந்தாலும், சூசை பகிரங்கமாக அதனை குறிப்பிடுபவராக இருந்தார். ஒருநாள் ஆத்திரம் மிகுதியில் “அப்பா உருவாக்கினதெல்லாவற்றையும் அழிக்கவா வந்தனி“ என திட்டியிருந்தார்.

சூசையின் கோபம், அதிருப்தி எதுவும் சாள்ஸ் அன்ரனியின் அபரிமித வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடவில்லை. ஏனெனில் சாள்ஸ் அன்ரனியிடமே இயக்கத்தை ஒப்படைக்கும் திட்டம் பிரபாகரனிடம் இருந்திருக்க வேண்டும். பொட்டம்மானை தவிர்த்து, சாள்ஸ் அன்ரனியிடம் தலைமையை ஒப்படைத்தாலும் பொட்டம்மான் அதிருப்தி கொள்ளமாட்டார் என்பதை பிரபாகரன் அறிந்திருந்தார். பிரபாகரன் மற்றும் இயக்கத்தில் பொட்டம்மானின் விசுவாசம் அப்படி.

28055943_1834086606644203_62293449292992 பிரபாகரன்- சூசை (ஆரம்பகால படம்)

ஆனால் சாள்ஸ் அன்ரனியின் அனுபவமின்மைதான் சிக்கலாக இருந்தது. மேலே குறிப்பிட்டிருந்த அம்பகாம- விசுவமடு காட்டு பகுதி தாக்குதல் சாள்ஸ் அன்ரனியை முன்னிறுத்தி பல தளபதிகளின் பங்களிப்புடன் நடந்தது. சாள்ஸ் அன்ரனிதான் ஒருங்கிணைப்பாளர். விடிகாலையில் தாக்குதல் ஆரம்பிக்க திட்டதிடப்பட்டபோதும், அது காலை நன்றாக விடிந்த பின்னரே ஆரம்பித்தது. சரியான ஒழுங்கமைப்பு இருக்கவில்லை.

அதுவரையான தாக்குதல்களில் இராணுவம் பின்வாங்கியே இருக்காத நிலையில், இந்த தாக்குதலில் மட்டும் சிறிது பின்வாங்கினார்கள். பின்னர் சுதாகரித்து கொண்டு புலிகளின் அணியொன்றை சுற்றிவளைத்துவிட்டனர். அப்போது கட்டளை மையத்தில் சாள்ஸ் அன்ரனி உட்கார்ந்திருந்தார்.

அந்த முற்றுகையை கடுமையான எறிகணை தாக்குதல் மூலம் முறியடிக்க பிரபாகரன் ஆலோசனை கொடுத்தார். அதனை சாள்ஸ் அன்ரனி சரிவர செய்ய முடியவில்லை. தூய தமிழில் கட்டளைகளை கொடுக்க வேண்டுமென எதிர்பார்த்தாரே தவிர, தாக்குதலால் எதிரி திண்டாட வேண்டுமென நினைக்கவில்லை.

 

தொலைத்தொடர்பு கருவியில் சாள்ஸ் அன்ரனியின் கட்டளையை கேட்டுக்கொண்டிருந்த பிரபாகரனிற்கு எரிச்சல்தான் வந்தது.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/2955/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/9/2018 at 3:25 AM, கிருபன் said:

ஈழப்போராட்ட வரலாற்றில் நடந்த இந்த சகோதரப் படுகொலையை பின்னணியில் நின்று இந்தியாதான் நடத்தி முடித்தது. இயக்கங்கள் நிதானமாக, விழிப்பாக நடந்து இந்த சிக்கலை கடந்து ஒற்றுமையாக செயற்பட்டிருந்தால் ஈழப்போராட்டம் வேறு முடிவுகளை எட்டியிருக்கலாம். ஆனால் அது நடக்காதது உண்மையில் துரதிஸ்டமே

இனியென்ன யாவும் கற்பனை கலந்த உண்மைகள் ......என்று போட்டு வாசிக்க வேண்டியான்....எழுத்தாளர்கள் தாங்கள் எந்த கட்சி என்பதை தங்கள் எழுத்து மூலம் காட்டிக்கொள்வார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்டம்.... ஒற்றுமையாக இருந்திருந்தாலும் அத்ன் முடிவு இதுதான் என்பதை இந்த பந்தி எழுத்தாளர்கள் புரிந்து கொள்ளாமை எமது துரதிஸ்டமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்பகாமம் சண்டையில் புலிகள் ஏன் தோற்றனர்?: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? – 09

May 2, 2018
LTTE_cropped_2_web-1.jpg

பீஷ்மர்

அம்பகாமம் களமுனையில் புலிகள் நடத்திய ஊடறுப்பு தாக்குதலில் சாள்ஸ் அன்ரனி தூய தமிழில் கட்டளைகள் வழங்கிக் கொண்டிருந்தார் என்பதையும், அதை கேட்டுக் கொண்டிருந்த பிரபாகரனிற்கு எரிச்சல் வந்ததென்பதை கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

அம்பகாமம் தாக்குதல் புலிகளிற்கு கிட்டத்தட்ட வாழ்வா சாவா தாக்குதல்தான்.. ஏனெனில், 2006 இன் பின்னர் புலிகளால் குறிப்பிடத்தக்க வலிந்த தாக்குதல் எதனையும் செய்ய முடியவில்லை. சம்பூரில், முகமாலையில் செய்த தாக்குதல்கள் வெற்றியளிக்கவில்லை. அதன் பின்னர் வன்னியில் குறிப்பிடத்தக்கதாக தாக்குதல் எதையும் செய்ய முடியவில்லை.

 

அதற்கு காரணம், இராணுவத்தின் இடைவிடாத நகர்வு. புலிகள் ஆசுவாசப்பட, சுதாகரிக்க, ஒன்றுதிரள அவகாசம் கொடுப்பதில்லையென்பதில் இராணுவம் குறியாக இருந்தது. இதுதான் நான்காம் ஈழ யுத்தத்தில் இராணுவத்தின் அடிப்படையான போருத்தி.

Related image சூட்டுவலுவை பெருக்க, ஒவ்வொரு மூவரை கொண்ட கொமாண்டோ செக்சனில் ஒரு எல்.எம்.ஜி இயந்திர துப்பாக்கியை இராணுவம் இணைத்தது

வன்னியை நாலா பக்கத்திலும் வளைத்து அவகாசமே இல்லாமல் போரிட்டு புலிகளை களைப்படைய செய்தது. இதனை புலிகளால் எதிர்கொள்ள முடியவில்லை. நிலப்பரப்பு பெரியதாக இருந்தபோது அணிகளை ஒருங்கிணைத்து தாக்குதல் நடத்த அவர்களால் முடியவில்லை. வன்னியின் பெரும்பகுதியை கைப்பற்றி, புலிகளை விசுவமடு தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை நெருக்கிய பின்னர் புலிகள் மேற்கொண்ட வலிந்த தாக்குதல் இது. இதில் வெற்றியடைய வேண்டுமென புலிகள் விரும்பினார்கள். ஏனெனில் வாழ்வா சாவா நிலையை அப்பொழுதே உணரத் தொடங்கிவிட்டார்கள். தொடர்ந்து பின்வாங்கி சென்றால், மீளவே முடியாத பொறிக்குள் சிக்கிவிடுவோமென்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

விடுதலைப்புலிகளுடனான அதுவரையான போரியல் அனுபவங்களை திரட்டி, நான்காம் ஈழப்போரில் இராணுவம் புதிய போருத்திகளை பயன்படுத்த ஆரம்பித்திருந்தது. புலிகள் வலிந்த தாக்குதல் நடத்தினால் தற்காலிகமாக அரண்களை பின்நகர்த்துவது, புலிகளை உள்ளே வரவிட்டு பெட்டி (BOX) அடிப்பது போன்ற பல உத்திகளை கையாண்டு கொண்டிருந்தனர். ஜெயசிக்குறுவில் முன்னேறி வந்த படையினரை ஓயாத அலைகள் மூன்றில் ஒரேயடியாக விரட்டியதை போன்ற ஒரு சந்தர்ப்பத்திற்காக புலிகள் காத்திருந்தனர். ஆனால், இனி அப்படியான சந்தர்ப்பத்தை கொடுத்துவிடக் கூடாதென்பதில் இராணுவம் குறியாக இருந்தது.

 

ஜெயசிக்குறு காலத்தில் விட்ட தவறு கைப்பற்றிய பிரதேசத்தை வெறும் கோதாக- முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் முன்னரணை மாத்திரம் பலப்படுத்தி வைத்திருந்தது. முன்னரணை தகர்த்தால் சரி. உள்ளே ஓட்டை. அதுதவிர, ஆயுதக்களஞ்சியங்களையும் முன்னரணிற்கு நெருக்கமான பேணினார்கள். களஞ்சியத்தை அழிக்க அல்லது கைப்பற்றவும் புலிகளிற்கு வாய்ப்பாக இருந்தது. நான்காம் கட்ட போரில் இவற்றையெல்லாம் இராணுவம் மாற்றியது.

அம்பகாமத்தில் புலிகள் தாக்கத் தொடங்கிய போது இராணுவம் மூர்க்கமாக எதிர்த்து போரிடவில்லை. சிலபகுதி முன்னரண்களிலிருந்து அணிகளை பின்னகர்த்தியது. நான்காம் ஈழப்போரில் புலிகள் இராணுவத்தை அதிகம் பின்னகர்த்திய தாக்குதல்களில் இதுவும் ஒன்று. ஆனால் இதில் இராணுவம் பின்னகர்ந்ததும் ஒரு தந்திரோபாய நகர்வே.

Related image குடாரப்பு தரையிறக்க அணிகள் இத்தாவிலில் நிலைகொண்டிருந்தபோது, ஆனையிறவு நீரேரியூடாக அந்த அணிகளிற்கான 120எம்.எம். மோட்டாரை கொண்டு செல்லும் பெண் புலிகள்

அது மழைக்காலம். நினைத்ததைபோல புலிகளால் தாக்குதல் நடத்த முடியவில்லை. ஆட்லறிகளை நினைத்த வேகத்தில் நகர்த்த முடியவில்லை. காட்டிற்குள் உருவாக்கப்பட்ட பாதையில் சப்ளை வாகனங்கள் ஆங்காங்கு புதையத் தொடங்கிவிட்டன. காலநிலையும் புலிகளிற்கு எதிராக நின்றது. பொதுவாகவே புலிகள் வலிந்த தாக்குதல் ஒன்றை செய்வதென்றால் ஆறு மாதத்திற்கு முன்னரே நன்றாக திட்டமிடுவார்கள். அந்த தாக்குதல் இலக்கிற்கு செல்லும் வீதிகளை செப்பனிட்டு, பாலங்களை சரி செய்வார்கள். ஆட்லறி, ராங்கியென கனரக ஆயுதங்களை புலிகள் பெற்ற பின்னர், இப்படியான ஏற்பாடுகளை கச்சிதமாக செய்ய வேண்டியிருந்தது. மூன்றாம் ஈழப்போரில் நடந்த தாக்குதல்கள் அனைத்தையும் இப்படித்தான் புலிகள் திட்டமிட்டனர்.

அம்பகாம சண்டையில் புலிகள் தோல்வியடைந்ததற்கு முறையான திட்டமிடலின்மையும் முக்கிய காரணங்களில் ஒன்று. புலிகளின் வழக்கமான தாக்குதல்களின்போது, தாக்குதலிற்கு பல மணித்தியாலங்கள் முன்னரே ஆட்லறிகளை தேவையான நிலைகளிற்கு நகர்த்திவிடுவார்கள். ஆனால் அம்பகாம தாக்குதலில் முன்னரணில் சண்டை தொடங்கும்வரை சில இடங்களிற்கு ஆட்லறி மோட்டார்கள் சென்றுசேரவேயில்லை. மழை, சகதி காரணமாக புதைந்து, அவற்றை எடுப்பதில் பெரும் பிரயனப்பட வேண்டியிருந்தது. சண்டையொரு பக்கம், புதைத்த ஆட்லறிகளை இழுத்தெடுப்பது இன்னொரு பக்கமென பெரும் திண்டாட்டம் ஏற்பட்டது.

 

வன்னிக்கான ஆயுத மார்க்கங்கள் முடங்கியதன் பின்னர் விடுதலைப்புலிகளின் எறிகணை இருப்பு பெருமளவு தீர்ந்து போய்விட்டது. ஓயாத அலைகள் ஒன்றில் முல்லைத்தீவு கைப்பற்றிய தாக்குதலிலிருந்து பின்னால் நடந்த எல்லா தாக்குதல்களிலும் புலிகளின் வெற்றிக்கான காரணங்களில் ஒன்று எறிகணை. தாராளம் மற்றும் துல்லியம்தான் புலிகளின் ஆட்லறி பிரிவின் வெற்றி இரகசியம். துல்லியமாகவும் தாராளமாகவும் எறிகணைகளை ஏவினால் எதிரிகள் நிலைகுலைந்து போய்விடுவார்கள். ஆனால் கடல் மார்க்க ஆயுத விநியோகம் தடுக்கப்பட்டதன் பின் துல்லியம் மட்டுமிருந்ததே தவிர தாராளம் இல்லாமல் போனது. கையிருப்பிலிருந்த எறிகணைகளை மருந்து பாவிப்பதை போலத்தான் பாவிக்க வேண்டியிருந்தது.

அம்பகாமத்தில் தாக்குதல் மேற்கொண்டபோது தாராள எறிகணை பாவனை புலிகளிடம் இருக்கவில்லை. அதுதவிர்ந்த நேரடி சமரில் சூட்டுவலுவில் இராணுவம்தான் மேலோங்கியிருந்தது. நான்காம் கட்ட ஈழப்போரில் இராணுவம் பாவித்த அடுத்த போருத்தி இது. புலிகளை விட சூட்டுவலுவில் மேலோங்க வேண்டுமென்பது. ஆகவே, அம்பகாம தாக்குதலை இராணுவம் சுலபமாக கையாண்டது. ஆரம்பத்தில் சில பகுதி அணிகளை பின்நகர்த்தி, இன்னொரு பகுதியில் விடுதலைப்புலிகளின் அணியொன்றை முற்றுகையிட்டு விட்டது.

Image result for பà¯à®²à®¿à®à®³à®¿à®©à¯ à®à®à¯à®²à®±à®¿

தாக்குதல் திட்டம் வெற்றியளிக்கவில்லை. முற்றுகைக்குள்ளிருந்த அணியை மீட்டு தாக்குதலை கைவிட புலிகள் முடிவு செய்தார்கள். சாள்ஸ் அன்ரனி கட்டளை மையத்தில் உட்கார்ந்திருந்து தூய தமிழில் கட்டளைகளை வழங்கினார். அது தமிழிற்கு நல்லதே தவிர களத்திற்கு நல்லதல்ல.

 

இவற்றை அவதானித்துக் கொண்டிருந்த பிரபாகரன் உடனடியாக கட்டளை மையத்தில் மாற்றம் செய்ய பணித்தார். பானு கட்டளை மையத்திற்கு மாற்றப்பட்டார். பானுதான் குட்டிசிறி மோட்டார் அணியை உருவாக்கி களங்களில் வெற்றிகரமாக கையாண்டவர். களத்திற்கு பின்னால் உள்ள மோட்டார்நிலைகளில் இருந்து துல்லியமாக எறிகணை ஏவுவதற்கு மோட்டார்காரர்கள் மட்டுமல்லாமல், வரைபடம் தயாரிப்பவர்கள், களத்தில் நின்று இலக்கு குறிப்பவர்கள் என பலதரப்பட்டவர்களின் கூட்டு முயற்சி மற்றும் தொழில்நுட்ப விடயம் அது. அதனை பானு சிறப்பாக உருவாக்கியிருந்தார். மூன்றாம் கட்ட ஈழப்போரில் பெரும்பாலும் அவர் மோட்டார் அணிகளைத்தான் வழிநடத்தினார்.

பிரபாகரனின் உத்தரவையடுத்து, சாள்ஸ் அன்ரனிக்கு பதிலாக பானு கட்டளையிடும் அதிகாரியானார்.

Image result for தளபதி à®à¯à®¯à®®à¯ தளபதிகள் ரமேஷ், ஜெயம், சூசை

இந்த தாக்குதலில் பகுதி பொறுப்பாளர்களாக ஜெயம், கீர்த்தி, வசந்தன், லோறன்ஸ் உள்ளிட்ட பலர் பங்காற்றினார்கள். இறக்கும்வரை சாள்ஸ் அன்ரனியிடம் களத்தை வழிநடத்த முடியாத பலவீனம் இருந்தது. பின்னாளில் நடந்த கேப்பாப்பிலவு, தேவிபுர சண்டைகளிலும் சாள்ஸ் அன்ரனி நிறைய தடுமாறி, அந்த தாக்குதல்களும் எந்த பலனையும் கொடுக்கவில்லை. (அதைப்பற்றி பின்னர் விபரமாக குறிப்பிடுவோம்) ஆனால், அதனை புலிகள் கணக்கில் கொள்ளவில்லை. இறுதிவரை அவர்தான் முடிவெடுப்பவராகவும், களங்களை திட்டமிடுபவராகவும் இருந்தார். சடுதியான தோல்விகளிற்கு இதுவும் காரணம்.

போரிடும் திறன் குறைந்த புதிய போராளிகள், போதிய ஆயுததளபாடங்கள் இன்மை, முறையான திட்டமிடல் வழிகாட்டல் இல்லையென எல்லாமும் சேர புலிகளின் வீழ்ச்சி சடுதியானது. அப்படியெடுக்கப்பட்ட சில முடிவுகள் மூத்ததளபதிகள் பலருக்கு பிடிக்காமலும் இருந்தது. ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதுபோல மூத்த தளபதிகள் வைத்த யோசனைகள் ஏற்றும்கொள்ளப்படவில்லை. அப்படிப்பட்ட இரண்டு சம்பவங்களை குறிப்பிட வேண்டும்.

அந்த யோசனையை வைத்த தளபதிகள் பால்ராஜ், தீபன்.

அவர்கள் வைத்த யோசனை என்ன?

(தொடரும்)

 

http://www.pagetamil.com/3373/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பால்ராஜை பார்த்து சிரித்த தமிழ்செல்வன்… புலிகளின் பாதுகாப்பு செயலாளர்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 10

May 6, 2018
20-10-696x466.jpg பொட்டம்மான்- பால்ராஜ்

பீஷ்மர்

நான்காம் கட்ட ஈழப்போரில் தளபதிகளின் கைகளிலேயே பெரும்பாலான விடயங்களை பிரபாகரன் விட்டுவிட்டார் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். முன்னர் ஒரு காலத்தில் விடுதலைப்புலிகளின் இராணுவ தாக்குதல்களில் அதிஉச்சப்பட்ச இரகசியம் பேணப்படும். தாக்குதல் திகதிக்கு ஒருசில நாட்களின் முன்னர்தான் மிக முக்கிய அணிகளிற்கு, எந்த முகாமை தாக்க போகிறோம் என்பதே தெரியும்.

இலக்கு வைக்கப்பட்ட முகாமையொத்த தரைத்தோற்றமுள்ள பிரதேசமொன்றில், தாக்குதலுக்குட்படவுள்ள இராணுவ முகாமின் மாதிரி அமைப்பை உருவாக்கி பயிற்சிபெறுவார்கள். தரைத்தோற்றம், எந்த முகாமை தாக்க வாய்ப்புள்ளதென்பதை ஊகிக்கும் கில்லாடிகள், ஓரவிற்கு ஊகிக்கலாமே தவிர, மற்றும்படி விசயத்தை சொல்வதில்லை புலிகள். உப அணிகளிற்கு, தாக்குதல் இடத்திற்கு செல்லும் வரை எங்கு போகப்போகிறோம் என்பதே தெரியாது. அவ்வளவு இரகசியமாக விசயத்தை வைத்திருந்தார்கள்.

 

ஆனால், பின்னாளில் அப்படியான தன்மை இல்லாமல் போய்விட்டது. தாக்குதல் ஒன்றுபற்றிய தகவல் போராளிகள் மத்தியில் சாதாரணமாக உலாவத் தொடங்கிவிட்டது. இது தளபதிகளின் பலவீனமாக இருக்கலாம். அல்லது, பல பிரிவுகளை சேர்ந்தவர்களை இந்த கூட்டத்தில் இணைப்பதாலும் இருக்கலாம்.

தளபதிகளின் மந்திராலோசனையில் முக்கிய தளபதிகள் பலரும் இணைந்திருப்பார்கள். அரசியல், இராணுவ, நிதி, புலனாய்வு பிரிவுகளை சேர்ந்த தளபதிகள் கலந்து கொள்வார்கள். ஒரு விடயத்தை திட்டமிடும்போது தமது துறை சார்ந்த பார்வையை வெளியிடுவார்கள். இது சில சமயங்களில் ஒட்டுமொத்த இயக்கத்தின் பார்வையை வெளிப்படுத்தாது.

பால்ராஸ், தீபனின் யோசனைகள் நிராகரிக்கப்பட்டதாக கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம் அல்லவா, அந்த நிராகரிப்பு மேற்படி நிலைமையால்தான் நடந்தது.

Related image முல்லைத்தீவு தாக்குதல் திட்டத்தை விபரிக்கும் பால்ராஜ்

மன்னாரில் இராணுவம் படைநடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒரு சந்திப்பொன்று நடந்தது. அதில் விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் இராணுவத்தின் திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

இராணுவத்தில் அதிகளவு ஆளணி பெருக்கப்பட்டது, விமானப்படை பலம், புலிகளின் ஆயுததளபாட பற்றாக்குறை என்பவற்றை கருத்தில் கொண்ட பால்ராஜ் ஒரு யோசனை முன்வைத்தார்.

 

இதுவரையான காலத்தைபோல இனி இராணுவத்துடன் மரபுப்போர் புரிய முடியாது. வன்னியின் பரந்த நிலப்பரப்பை குறைந்த போராளிகளுடன் தக்கவைப்பது சிரமம். அதனால் தவிர்க்க முடியாமல் சில நிலப்பரப்புக்களை விட்டுத்தான் கொடுக்க வேண்டும். ஆனால் கேந்திர முக்கியத்துவமான பகுதிகளை உள்ளடக்கி ஒரு பாதுகாப்பு நிலையை உருவாக்குவோம். எஞ்சிய பகுதிகளை விட்டுவிடுவோம். அந்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்திவிட்டு போர் புரிவோம் என கூறி அவர் ஒரு வரைபடத்தை அங்கிருந்தவர்களிடம் காண்பித்தார்.

அதில் வடக்கு திசையில் முகமாலை முன்னரணும், கிழக்கு மேற்கில் புதிய உத்தேச முன்னரணொன்றையும் குறித்திருந்தார். புதிய அரண் கிழக்கில் மணலாறு தொடக்கம் மேற்கில் மல்லாவி ஊடாக நாச்சிக்குடா வரை சென்றிருந்தது. அப்போது இராணுவம் மன்னாரின் எல்லையில் தாக்குதலை ஆரம்பிக்கவேயில்லை. நாச்சிக்குடாவிலிருந்து மணலாறுவரை 20 அடி உயரத்தில் மண்அணை உருவாக்கி, அதன முன்பாக அகழிகள், பொறிவெடிகள் அமைப்பதுதான் பால்ராஜின் திட்டம். அதற்காக உத்தேசமாக 5 கோடி செலவையும் மதிப்பிட்டிருந்தார்.

ஆனால் அன்றைய கூட்டத்தில் அதனை பலரும் நகைச்சுவையாக பார்த்தனர்.

 

அப்பொழுது இராணுவம் நிலைகொண்டிருந்தது மன்னார் தள்ளாடியில்.

தள்ளாடியிலிருந்து பால்ராஜ் குறிப்பிட்ட நாச்சிக்குடா பகுதி 29.4 மைல் தொலைவில் இருந்தது. இராணுவத்திற்கு சும்மா அவ்வளவு தூரத்தை விட்டுக் கொடுப்பது பைத்தியக்காரத்தனம் என்பதே மற்றைய தளபதிகளின் நிலைப்பாடு.

ஏனெனில், முன்னரைவிட அதிநவீன ஆயுதங்கள் இருப்பதால் இராணுவத்தின் நகர்வை சுலபமாக தடுத்துவிடலாமென அவர்கள் கருதினார்கள்.

பால்ராஜின் திட்டத்தை நிராகரிப்பதில் தமிழ்செல்வன், தமிழேந்தி ஆகியோர் முன்னின்றனர். குறிப்பாக தமிழேந்தி ஒரேயடியாக மறுத்தா

Image result for பாலà¯à®°à®¾à®à¯ பால்ராஜ்- தமிழ்ச்செல்வன்

ர். 5 கோடி பணத்தில் நிறைய ஆயுதங்கள் வாங்கி வந்து மன்னாரிலிருந்தே இராணுவத்தை விரட்டி, அந்த பகுதியையும் கைப்பற்றலாமென்றார்.

மூன்றாம் ஈழப்போரிற்கும் நான்காம் ஈழப்போரிற்குமிடையிலான பிரதான வேறுபாடே இதுதான். மூன்றாம் ஈழப்போரில் பிரபாகரன் என்ற ஒருவரின் சிந்தனையை மையப்படுத்தியே அனைத்தும் இயங்கியது. அவர் தனது நோக்கத்தை அடைய எதை முன்னிலைப்படுத்துவது, எதை ஒத்திவைப்பதென தீர்மானித்தார். தனது பலத்தை உணர்ந்து அதற்கேற்ப உபாயங்களை வகுத்தார். நான்காம் ஈழப்போரில் அந்த தன்மையில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவுதான் மேலே சொன்ன உதாரணம்.

 

இராணுவ விவகாரங்களில் தேர்ச்சிகுறைந்த தமிழ்ச்செல்வன், தமிழேந்தி போன்றவர்கள் இராணுவ விவகாரங்களில் முடிவெடுக்கும் அதிகாரமிக்கவர்களாக மாறியது ஒரு பாதிப்பே. தமிழேந்தி புலிகளின் நிதித்துறை பொறுப்பாளராக நீண்டகாலம் இருந்தவர். வீணான செலவில்லாமல் ஒரு மனிதன் எப்படி வாழலாமென கணக்குப்பண்ணி, அதையே போராளிகளின் வாழ்க்கைமுறையாகவும் ஆக்கியவர். ஒரு போராளியின் ஒருநாள் பட்ஜெட்டை வடிவமைப்பது அவர்தான். விடுதலைப்புலிகளின் நிதி உள்ளிட்ட குறைந்த வளங்களை கச்சிதமாக பிரித்து, நிர்வாகத்தை சீராக நகர்த்தியதில் தமிழேந்தியின் பங்கு பெரியது. 1990களில் இருந்து அவர்தான் நிதித்துறை பொறுப்பாளராக இருந்தார். பின்னாளில்தான் பாலதாஸ் அதன் ஒரு பகுதிக்கு பொறுப்பாளராகினார். ஆனால், தமிழேந்திதான் நிதித்துறையின் அதிகாரம்மிக்க நபர்.

பொருளாதாரத்தடை காலத்திலும் அவர் வளங்களை கையாண்ட விதம் அலாதியானது. அந்த விடயத்தில் அவரை மிஞ்ச ஒருவர் கிடையாது. வயதில் மூத்தவர் என்ற காரணத்தாலும் எல்லா தளபதிகளும் அவருடன்ஒத்துழைத்தனர். ஒத்துழைக்காவிட்டாலும் வளங்களை பங்கிடுவது, பயன்படுத்துவதில் அவர் சிறப்பாக செயற்பட்டார்.

thamilenthi-242x300.jpg தமிழேந்தி- தமிழ்செல்வன்

இதனால்தான் இறுதி யுத்த சமயத்தில் விடுதலைப்புலிகளின் பாதுகாப்பு செயலர் என்ற பதவி உருவாக்கப்பட்டு அந்த பொறுப்பில் தமிழேந்தி நியமிக்கப்பட்டார். 2008 இன் இறுதியில் அது நிகழ்ந்தது. பெரும் ஆளணி, ஆயுத தளபாட நெருக்கடியில் புலிகள் திண்டாடினார்கள். ஆனால் நிறைய ஆளணி மற்றும் ஆயுதங்கள் பல பிரிவுகளிடம் சிதறிக்கிடந்தது. அதனை முறையாக ஒழுங்கமைக்க முடியாமல் இருந்தது. அந்த சமயத்தில் இலங்கை பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச சிறப்பாக செயற்பட்டு புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அந்த தாக்கமோ என்னவோ புலிகளும் பாதுகாப்பு செயலர் பதவியை உருவாக்கினார்கள். புலிகள் அமைப்பில் முதலும் கடைசியுமாக அந்த பொறுப்பு உருவாக்கப்பட்டது அப்போதுதான்.

ஆட்களை வேலைவாங்கும், வளங்களை சரியாக பங்கிடும் திறனிருந்த தமிழேந்தி யுத்த அணுகுமுறையிலும் செல்வாக்கு செலுத்துபவராக மாறியதன் விளைவுதான் பால்ராஜின் திட்டம் ஆரம்பத்திலேயே நிராகரிக்கப்பட்டது. எனினும், பின்னர் பால்ராஜின் திட்டம்தான் பொருத்தமானதென புலிகள் செயற்பட முனைந்தபோது நிலைமை கைமீறி சென்றுவிட்டது. நாச்சிக்குடாவிலிருந்து ஒரு மண்அணையை உருவாக்கிய போதும் அது முழுமையடையவில்லை. மண்அணை இல்லாத பகுதிக்குள்ளால் இராணுவம் நுழைந்து அந்த பகுதியை கைப்பற்றிவிட்டது. பால்ராஜின் திட்டப்படி முன்னரே மண்அணையை உருவாக்கியிருந்தால் சிலவேளைகளில் நிலவரங்களில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/3771/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎6‎/‎9‎/‎2018 at 8:25 PM, கிருபன் said:

சாள்ஸ் அன்ரனியை முகத்துக்கு நேரே திட்டிய சூசை: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன?- 07

April 27, 2018
charles-anthony-5.jpg சாள்ஸ் அன்ரனி

பீஷ்மர்

விடுதலைப்புலிகள் அமைப்பின் இறுதி முடிவெடுக்கும் அதிகாரமையமாக பிரபாகரன் இருந்தார் என்றாலும், சமாதான உடன்படிக்கையின் பின்னர் பிரபாகரனின் அணுகுமுறையில் சிறிய வித்தியாசம் ஏற்பட்டது. அமைப்பின் உள்ளக நிர்வாக முடிவுகளை எடுக்கும் அதிகாரங்களை தளபதிகளிடம் பகிர்ந்தளித்தார். சமாதான உடன்படிக்கை வரை அமைப்பின் ஒவ்வொரு சின்னசின்ன விசயத்தையும் பிரபாகரன்தான் கவனித்தார். ஆனால், தனக்கு பின்னரும் அமைப்பு செயற்பட வேண்டுமென கருதியதாலோ என்னவோ, உள்ளக முடிவுகளை எடுக்கும் பொறுப்பை தளபதிகளிடம் கையளித்தார்.

இந்த நிர்வாக பகிர்ந்தளிப்பில் இன்னொரு விசயமும் நடந்தது. அது – பிரபாகரனின் மூத்தமகன் சாள்ஸ் அன்ரனியின் எழுச்சி.

நிர்வாக முடிவுகளை தளபதிகளே எடுக்கலாமென அனுமதிக்கப்பட்டதன் பின்னர், 2005ம் ஆண்டில் அமைப்பிற்குள் முழுமையாக இறக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி, அடுத்த சில வருடங்களில் அமைப்பின் உள்ளக முடிவுகளை எடுப்பவராக மாறினார்.

டயப்பிற்றிஸ், கொலஸ்ரோல் போன்ற பிரச்சனைகளையும் பிரபாகரன் எதிர்கொள்ள தொடங்க, அவருக்கு ஓய்வு அவசியமாக இருந்தது. 1970களின் ஆரம்பத்தில் தலைமறைவாக செயற்பட காலம் தொடங்கி 2002 இல் ரணிலுடன் சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது வரையான 32 வருடங்கள் பிரபாகரன் ஓய்வொழிச்சல் இல்லாமல் போராடியவர். ஒரு மனிதனின் வாழ்நாளில் 32 வருடங்களை போராட்டத்தில் செலவிடுவதென்பது மிகப்பெரிய தியாகம். பதினாறு வயதில் ஆரம்பித்தது. 48 வயதில் ரணிலுடன் சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். இடைப்பட்ட காலத்தில் பிரபாகரனை கொல்ல நடந்த உள்வீட்டு சதிகள், எதிரிகளின் முயற்சிகள், உயிர் நிச்சயமற்ற போர்க்களங்கள் என அவர் கடந்து வந்த பாதை நினைத்தும் பார்க்க முடியாதது. வெளியுலக தொடர்புகளை துண்டித்து, குடும்பத்துடனும் நேரத்தை செலவிட முடியாமல் அவர் போராளிகளுடன் இரகசிய வாழ்க்கை வாழ்ந்தார். ஓய்வொழிச்சல் இல்லாமல் சிந்தித்தார், செயற்பட்டார். இதனாலேயே விரைவாக களைத்தும் விட்டார்.

 

Untitled-2-copy-1-1-300x155.jpg

இதனால் அமைப்பிற்குள் புது வடிவத்தை கொடுக்க பிரபாகரன் விரும்பியிருக்கலாம். இன்னொன்று- கால மாற்றம், தலைமுறை மாற்றம், தொழில்நுட்ப மாற்றம் என்பன புது இரத்தங்களின் தேவையை அமைப்பிற்குள் உருவாக்கியிருக்கலாம். எப்படியோ, புதிய தளபதிகளின் எழுச்சி அமைப்பிற்குள் நடந்தது.

சமாதான காலப்பகுதியில் இன்னும் அதிகமாக நிர்வாக கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. அவற்றை அந்தந்த பிரிவு பொறுப்பாளர்களே முழுமையாக கையாண்டார்கள். பிரபாகரன் பொறுப்புக்களிலிருந்து மெதுமெதுவாக விடுபட தொடங்கினார். 2003 காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளிலொன்று, விடுதலை புலிகள் அமைப்பின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துபவராக பொட்டு அம்மான் நியமிக்கப்பட்டது.

மாத்தையா சதியின் பின்னர் பிரபாகரன் எடுத்த உறுதியான முடிவு, இனி எந்த சந்தர்ப்பத்திலும் அமைப்பில் பிரதிதலைவர் ஒருவரை நியமிப்பதில்லை. (அந்த முடிவை அவர் 2009 மே ஆரம்பத்தில் கைவிட்ட சந்தர்ப்பத்தை பின்னர் பார்க்கலாம்) அதனை அவர் உறுதியாக கடைப்பிடித்தார். மாத்தையாவின் பின்னர் அமைப்பை வழிநடத்த தகுதியானவராக பொட்டம்மான் இருந்தார். முடிவுகள் எடுப்பதில், மற்றவர்களை கட்டுப்படுத்தும் ஆளுமையில் என மற்றைய தளபதிகளை விட முன்னிலையில் இருந்தார். மாத்தையா விவகாரத்தில் அவரை கைது செய்ய அனுமதி வாங்கி, விசாரணை செய்து, மரணதண்டனை வழங்கியதுவரையான நடவடிக்கையில் பொட்டம்மானின் பங்கு முக்கியமானது. இயக்கத்தின் பிரதி தலைவரையே இல்லாமலாக்கும் வல்லமை மிக்கவராக 1994இலேயே அவர் விளங்கினார் என்பது அவரது வல்லமையை புரிய வைக்கும்.

 

புலனாய்வு கட்டமைப்பை உருவாக்கி இந்திய பிரதமரை, இலங்கை ஜனாதிபதியை இன்னும் பல அமைச்சர்கள் உள்ளடங்களாக பல அரசியல் தலைவர்களை இல்லாமலாக்கிய திட்டங்கள் எல்லாம் பொட்டம்மானின் மூளைக்குள் உதித்தவைதான். விடுதலைப்புலிகளின் முக்கிய நகர்வுகள் அனைத்தையும் பிரபாகரனுடன் இணைந்து அவர்தான் எடுத்தார். பிரபாகரனின் இரகசிய இருப்பிடத்திற்கு சோதனைகள் இல்லாமல் நேரடியாக சென்ற- இம்ரான் பாண்டியன், ராதா படையணி தளபதிகளை தவிர்த்த- ஒரே தளபதி பொட்டம்மான்தான்.

lead14-1-300x223.jpg பிரபாகரன்- பொட்டம்மான்- தீபன்- ஜெயம்

2003 இல் கிட்டத்தட்ட அவர்தான் அமைப்பின் இரண்டாவது தலைவர் என்ற நிலையை பிரபாகரன் உருவாக்கினார். இயக்கத்தின் நிர்வாக, அன்றாட செயற்பாடுகள் தொடர்பாக தளபதிகள் கூடி ஆராய்வார்கள். ஆரம்பத்தில் பிரபாகரன் தலைமையில்த்தான் அந்த கூட்டங்கள் நடந்தன. 2003 இலிருந்து பொட்டம்மான் தலைமையில் அவை நடக்க தொடங்கின. இயக்கத்தின் அன்றாட நடவடிக்கைகள் பற்றிய முடிவை அந்த கூட்டத்தில் எடுத்தார்கள். பிரபாகரன் இல்லாமலேயே கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

நிர்வாக, செயற்பாட்டு முடிவுகளை பொட்டம்மான் எடுக்க அனுமதித்தார். பொட்டம்மான் தளபதிகளிற்கு ஓரளவு சுதந்திரம் வழங்கினார்.

 

2005ஆம் ஆண்டு இதில் சிறிய மாற்றம் ஏற்பட்டது. அப்பொழுதுதான் பிரபாகரனின் மூத்த மகன் சாள்ஸ் அன்ரனி விடுதலைப்புலிகள் அமைப்பின் முழுநேர போராளியாகினார். அதற்கு முன்னர் சில வருடங்களின் முன்னரே விடுதலைப்புலிகளின் தொழில்நுட்ப பிரிவினால் நிர்வாகிக்கப்பட்ட போராளிகளிற்கான உயர்தொழில்நுட்ப கல்லூரியில் சாள்ஸ் அன்ரனி (அவருடன் பிரபாகரனின் மகள் துவாரகாவும்) சிலகாலம் படித்தார்தான். ஆனால் செயற்பாட்டு ரீதியான விடுதலைப்புலியானது 2005 இல்த்தான்.

charles-anthony-5-300x244.jpg சாள்ஸ் அன்ரனி

அமைப்பிற்குள் நுழைந்த சாள்ஸ் அன்ரனியை, பிரபாகரன் தடல்புடலாக வரவேற்றார் என்பதே உண்மை. எப்படியெனில், கணினி பிரிவென்ற பிரிவொன்றை ஆரம்பித்து அதற்கு சாள்ஸ் அன்ரனியை பொறுப்பாக நியமித்தார். சிறிய பிரிவாக ஆரம்பிக்கப்பட்ட கணினி பிரிவு வெகுவிரைவிலேயே பிரமாண்டமாக விஸ்தரிக்கப்பட்டு விட்டது. பெருமளவு நிதி, வளம் ஒதுக்கப்பட்டது. ஆளணி ஒதுக்கப்பட்டது. வாய்ப்புக்கள் வழங்கப்பட்டது.

2007 இல் கணினிப்பிரிவில் காணப்பட்ட ஆளணியும், விடுதலைப்புலிகள் அமைப்பின் ஏனைய பிரிவுகளில் காணப்பட்ட ஆளணியும் சமமானதென கூறுவார்கள். அந்தக்காலப்பகுதியில் போராளிகள் பகிடியாக இன்னொன்றையும் பேசிக்கொள்வார்கள். எல்லா பிரிவுகளில் இருந்தும் கணிணி பிரிவிற்கு சடுதியாக ஆளணி திருப்பப்பட்ட நேரமது. போராளிகள் “நீ எந்த இயக்கம் மச்சான்.. தலைவரின் இயக்கமா? சாள்ஸ் அன்ரனியின் இயக்கமா?“ என பகிடியாக பேசிக்கொண்ட சம்பவங்களும் உள்ளன!

சாள்ஸ் அன்ரனி நல்ல தொழில்நுட்ப மூளையுடையவர். சண்டியன், மொக்கன் முதலான புலிகளின் சொந்த தயாரிப்பு எறிகணை செலுத்திகளை உருவாக்க முன்னின்றவர். இரசாயன ஆயுத தயாரிப்பிலும் முயற்சிகளை செலுத்தினார். ஆனால், அவர் நல்ல வழிநடத்தும் திறனுள்ள தலைவரல்ல.

வடிவேலுவின் இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் வந்த சமயம். இந்த பெயரை கொண்டு சாள்ஸ் அன்ரனியை இரகசியமாக தமக்குள் பகிடி செய்தனர்- அவரது நிர்வாகத்துடன் தொடர்புடைய மூத்த போராளிகள். சாள்ஸ் அன்ரனி நல்ல சாப்பாட்டு பிரியர். ரோல்ஸ் என்றால் அலாதி பிரியம். அதனால் தன்னை சூழ ஒரு சாப்பாட்டு இராச்சியத்தையே நிறுவினார்.

babamortar_1-300x211.jpg புலிகளின் தயாரிப்பு சண்டியன்

 

சாள்ஸ் அன்ரனியை முதன்முதலில் எடைபோட்டவர் சூசை. இறுதிவரை அவர் சாள்ஸ் அனிரனியின் தலைமைத்துவத்தை ஏற்கவில்லை. அவரின் குறைகளை பகிரங்கமாக சுட்டியும் காட்டினார்.

 

யாரும் சாள்ஸ் அன்ரனியை குறைசொல்ல தொடங்க முன்னர் முல்லைத்தீவு கடற்கரையில் ‘கொப்பர் உருவாக்கினதெல்லாத்தையும் அழிக்கிறதுக்காகத்தான் வந்தனியா?’ என சூசை ஒருநாள் கோபத்தின் உச்சியில் திட்டினார்.

(தொடரும்)

 

 

http://www.pagetamil.com/2763/

நான் அப்பவே இதே யாழில்  மகனால் தகப்பனுக்கும் பிரச்சனை வரும் என்று எழுதியிருந்தேன்.. .தமிழிச்சி வந்து என்னை திட்டி இருந்தார்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ரதி said:

நான் அப்பவே இதே யாழில்  மகனால் தகப்பனுக்கும் பிரச்சனை வரும் என்று எழுதியிருந்தேன்.. .தமிழிச்சி வந்து என்னை திட்டி இருந்தார்

உண்மைதான்

அப்பன் மகன் பிரச்சினையால  தோற்றுப்போய்  விட்டோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, விசுகு said:

உண்மைதான்

அப்பன் மகன் பிரச்சினையால  தோற்றுப்போய்  விட்டோம்

அப்படி எளிமைப்படுத்தமுடியாது.

சண்டைகளில் ஈடுபட்டு அனுபவம் இல்லாதவரை தாக்குதல்களுக்கு தலைமை தாங்க விட்டது பிரச்சினைகளை உருவாக்கும்தானே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனின் கட்டளை … அதிர்ச்சியடைந்த தீபன்: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 11

May 10, 2018
images-1.jpg

பீஷ்மர்

பால்ராஜிற்கு ஏற்பட்டதை போன்ற அனுபவம் ஒன்று தீபனிற்கும் ஏற்பட்டது. அது 2009 இன் தொடக்கம். யுத்தம் வன்னியை இறுக்கத் தொடங்கி, புலிகளிற்கு என்ன செய்வதென தெரியாத இக்கட்டான சந்தர்ப்பத்தில் ஏற்பட்டது. அந்த சம்பவத்திற்கு முன்னர், சில பின்னணி தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

அரசுக்கும் புலிகளிற்குமிடையிலான சமாதான உடன்பாடு முறிவடைந்தபோது புலிகள் இரண்டு முனைகளில் களங்களை திறந்தார்கள். ஒன்று, சம்பூரில். மற்றையது யாழை குறிவைத்து முகமாலை, கிளாலி முனைகளில். சம்பூரில் சிறிய முன்னேற்றத்தை புலிகள் கண்டார்கள். ஆனால் பின்னர் இராணுவம் அதனை முறியடித்தது. யாழ் நோக்கிய நகர்வில் எதுவும் நடக்கவில்லை.

 

2006 நடுப்பகுதியில் யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்றுவதற்கான திடீர் தாக்குதல் ஒன்றை புலிகள் மேற்கொண்டனர். முகாலை தொடக்கம் கிளாலி, சங்குப்பிட்டி வரையான இராணுவ முன்னரண்களை தகர்த்து ஊடறுக்க புலிகள் முயன்றனர். கேரதீவு பகுதிக்கு அண்மையில் மாலதி படையணியின் அணியொன்றுதான் ஊடறுத்து உள்நுழைந்தது. வேறெந்த முனைகளிலும் புலிகளால் உள்நுழைய முடியவில்லை. ஊடறுத்து உள்நுழைந்த மகளிர் அணியை இராணுவம் சுற்றிவளைத்துவிட்டது.

Related image முகமாலை முன்னரணில் விக்டர் கவச எதிர்ப்பு அணி

புலிகள் கிட்டத்தட்ட ஒரு வாரமாக முயன்றும் இராணுவ முன்னரணை உடைக்க முடியவில்லை. உண்மையில் புலிகளின் அந்த முயற்சி ஒரு விசப்பரீட்சை. புலிகள் எடுத்த தவறான இராணுவ முடிவுகளில் ஒன்று. பலனில்லாத அந்த யுத்தத்திற்கு செலவிட்ட ஆளணி, ஆயுததளபாடங்களை சேமித்திருந்தால் அல்லது சாதகமான வேறொரு முனையில் தாக்குதல் நடத்தியிருந்தால் வேறுவிதமாக சூழ்நிலைகள் மாற்றமடைந்திருக்கும். புலிகளிற்கான ஆயுததளபாட வரவு கடல்மார்க்கமாக தடுக்கப்பட்டிருந்தது. ஆளணி பற்றாக்குறை நிலவியது. யாழ்ப்பாண யுத்தத்தை நடத்தினால் இராணுவத்திற்கு பேரழிவை ஏற்படுத்தி ஆயுததளபாடங்களை பெற்றுக்கொள்ளலாமென நினைத்தார்கள்.

ஆனால் முகமாலை முன்னரண் இரண்டு தரப்பாலும் கடக்க முடியாதது என்பதே உண்மை. இராணுவம் அதற்கு முன்னர் பலமுறை முயன்று கையை சுட்டுக் கொண்டது. முகாமாலையிலுள்ள புலிகளின் அரண்களை உடைத்து உள்நுழைய இராணுவம் தன்னால் இயலுமானவரை முயற்சி செய்துவிட்டுத்தான் கைவிட்டது. அதன்பின்னர்தான் புலிகள் கையை சுட்டுக்கொண்டார்கள்.

 

முகமாலை பகுதி குறுகியது. கேந்திர முக்கியத்துவம் மிக்கது. அதனால் இரண்டுதரப்பும் நெருக்கமாக, பலமான முன்னரணை அமைத்திருந்தன. மன்னார் பகுதி போன்ற பரந்தமுனையென்றால் ஒரு பகுதியில் முடியாவிட்டால் இன்னொரு பகுதியால் முயன்று நுழையலாம். முகமாலையில் அது முடியாது. இரண்டு தரப்பும் முன்னரணிற்கு முன்பாக கண்ணிவெடி வயலை உருவாக்கி வைத்திருந்தன. அதனைவிட, இரண்டு தரப்பு முன்னரணிற்கும் முன்பாக வெளியான பிரதேசம் இருந்தது.

Image result for jaffna battle

வன்னி மீதான யுத்தத்தின் வெற்றியென்பது கிளிநொச்சி, முல்லைத்தீவை கைப்பற்றுவதே. 2006இல் இராணுவம் நிலைகொண்டிருந்த பகுதிகளிலிருந்து பார்த்தால், இந்த இரண்டு இடங்களிற்கும் நெருக்கமாக இருந்தது யாழ். முன்னரண்தான். ஆனால் இராணுவம் இறுதி யுத்த நகர்வை யாழில் இருந்து செய்யவில்லை. பலநூறு மைல்களிற்கு அப்பாலிருந்த மன்னாரின் எல்லையிலிருந்து ஆரம்பித்தது.

அது ஏன்?

இலங்கை இராணுவத்தில் திறமையான அதிகாரிகள் முன்னணிக்கு வந்ததன் விளைவது. வழக்கமாக இப்படியான சந்தர்ப்பங்களில் முகமாலையிலிருந்து நான்கைந்து முறை முயன்று பார்த்துவிட்டு, முடியாதப்பா என இராணுவம் இருந்துவிடும். ஆனால் இம்முறை புலிகளை அழிப்பதில் மிக கவனமாக திட்டமிட்டு படைநடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

முதலாவதாக, முகமாலையிலிருந்து நகர முடியாதென்பது இராணுவத்திற்கு மிக தெளிவாக தெரியும். ஏற்கனவே முயன்று பார்த்து தெரிந்து கொண்டுவிட்டது. அதனால், மன்னாரிலிருந்து நடவடிக்கையை ஆரம்பித்தது. மன்னாரிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட படைநடவடிக்கைக்கு மூன்று நோக்கங்கள்.

 

ஒன்று, புலிகளின் ஆளணியை சிறுகச்சிறுக அழிப்பது. மன்னாரில் தள்ளாடியிலிருந்து இராணுவத்தின் 58வது டிவிசன் நகர்வு ஆரம்பித்து மடு, பெரிய பண்டிவிரிச்சான், பாலமோட்டை, அடம்பன் பகுதிகளில் யுத்தம் மிகநீண்ட நாட்கள் நீடித்தது. அந்த யுத்தங்களில் அதிக தூரம் கைப்பற்றும் ஆவலெதுவும் இராணுவத்திடம் இருக்கவில்லை. தினமும் சிறிய முன்னகர்வு, புலிகளின் அணிகளை பெட்டி (BOX) அடித்தல்தான் இராணுவத்தின் நோக்கம். தினமும் யுத்தம். இறந்த போராளிகளின் உடல்கள் கிளிநொச்சிக்கு வரிசையாக வரத் தொடங்கியது.

Image result for மாலதி பà®à¯à®¯à®£à®¿

ஆரம்பத்தில் இராணுவம் முன்னகர முயல்வதை போல காட்டினாலே புலிகள் தீவிரமாக போரிட்டனர். பின்னர்தான் இராணுவத்தின் உத்தியை புரிந்து கொண்டார்கள். புலிகளின் கோட்டையான கிளிநொச்சி, முல்லைத்தீவிற்குள் நுழைவதற்கு முன்னரேயே எல்லையோரத்தில் புலிகளின் ஆளணியை சிறிதுசிறிதாக அழித்துவிடுவது படையினரின் நோக்கங்களில் ஒன்று.

 

அடுத்தது, மேற்கு கரையோரமாக தமிழகத்துடன் கொண்டிருந்த பின்தள தொடர்பை நிறுத்துவது.

மற்றையது, முகமாலை புலிகளின் முன்னரணை அப்புறப்படுத்துவது. முகமாலை முன்னரணிலிருந்து கிட்டத்தட்ட 150 மைல்கள் அப்பாலிருந்து படையினர் நகர்ந்து வந்து, அதனை பின்பக்கமாக தாக்கி அகற்ற திட்டமிட்டார்கள். முகமாலை முன்னரண் அகற்றப்பட்டால்தான் யாழில் குவிக்கப்பட்டிருந்த போரிடும் ஆற்றலுள்ள 40,000 படையினர் வன்னியை நோக்கி முன்னகர்த்தப்படலாம். (முகமாலையிலிருந்து புலிகள் பின்வாங்கியதன் பின்னர் நாகர்கோவிலை மையமாக கொண்டிருந்த 55வது டிவிசனும், முகமாலையில் நிலைகொண்டிருந்த 53வது டிவிசனும் முன்னகர ஆரம்பித்தனர்) முகமாலை புலிகளின் அரணை உடைக்க முடியாமல் மன்னாரிலிருந்து படை நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டியிருந்ததெனில், அந்த நிலைகளின் இறுக்கத்தை கற்பனை செய்துகொள்ளுங்கள்.

முகமாலை உள்ளிட்ட வடபோர்முனை கட்டளைத்தளபதியாக செயற்பட்டவர் தீபன்.

Image result for தளபதி தà¯à®ªà®©à¯ தளபதி தீபன்

மன்னாரிலிருந்து முன்னகர்ந்த இராணுவம் 2009 ஜனவரி முதலாம் நாள் பரந்தன் சந்தியை எட்டிவிட்டது. முகமாலை உள்ளிட்ட வடபோர்முனை முன்னரணிற்கு நேரடியான தரைப்பாதை துண்டாடப்பட்டுவிட்டது. அதற்காக அனைத்துவழிகளும் துண்டாடப்பட்டு முற்றுகைக்குள் சிக்கிவிட்டார்கள் என்று அர்த்தமல்ல. வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளத்தின் ஊடாக பாதை இருந்தது. அப்போது மாரிகாலம் என்பதால் சுண்டிக்குளம் கடற்கரையையொட்டிய பாதை சிறிது தூரத்திற்கு  கடலுடன் இணைந்திருந்தது. சுமார் ஒரு கிலோமீற்றர் கடல்வழி பயணமிருந்தது.

யாழ்ப்பாணத்திலிருந்து படையினர் முன்னகர முடியாது. பரந்தனிற்கு வந்த இராணுவத்தினர் ஆனையிறவு பக்கமாக நகரவிடாமல் இன்னொரு அரண் அமைத்துவிட்டு, அந்த பகுதியை தக்கவைக்கலாமென தீபன் நினைத்தார். ஆனால், திடீரென அணிகளை பின்னகர்த்துமாறு தலைமைபீடம் கட்டளையிட்டது.

தீபன் அதிர்ந்து போனார். முகமாலையை தக்கவைத்திருப்போம் என்பதே அவரது நிலைப்பாடு. தலைமையும் அதே முடிவைத்தான் எடுக்கும் என தீபன் நம்பியிருந்தார். ஆனால் தலைமை வேறு முடிவெடுத்தது. இந்த முடிவு தீபனிற்கு சிறிதும் விருப்பமில்லை.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/4330/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வை எல்லாம் உண்மையானாலும் , இவை தந்திர முறையுடன் தொடர்புடையவை.

புலிகளின் கேந்திர தவறு புலனாய்விலேயே (intelligence) இருந்தது.

கருணா ராணுவத்தை இரகசியமாக சந்தித்ததை, புலிகளின் புலனாய்வு அமைப்பு சந்திப்பிற்கு பின்பே அறிந்து கொண்டது.

அந்த சந்திப்பு மூன்று முறை நடைபெற்று இருந்ததது.

மட்டக்களப்பு புவியியல் அமைப்பை என்னக்கு தெரியாது.  முதல் சந்திப்பு, மட்டக்களப்பு வாவி அல்லது ஆறு ஓன்றை கிழக்கு நோக்கி கடந்தவுடன், மிகவும் அடர்ந்த, பச்சக் கம்பளம் விரித்து போன்ற ஓர் காட்டுப் பிரதேசத்தில், அந்தி சாய்ந்த பின் மைம்மல் இருளாக இருக்கும் நேரத்தில் நடைபெற்றது.   

இதனாலேயே கருணா பிரதேச வாதத்தை கையில் எடுத்தார்.   

ஆயினும், இதுவே முதல் புலனாய்வு தவறா இல்லாள் சாதத்திற்கு முன்பும் ஏதாவது நடந்ததா என்று இதுவரை தெரியவில்லை.
     
கருணா போன்று இன்னும் இருவர் சிறிலங்கா ராணுவ புலனாய்வுடன் இணைந்து இயங்கத் தொடக்கி இருந்தனர். அவர்கள் இலங்கைத் தீவில் தான் இருந்திருப்பார்கள் என்று கூறமுடியாது.

அவர்கள் யார் என்று  இதுவரை தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவின் பிளவு பற்றி இந்தத் தொடரில் புதிய விடயங்கள்  வருமா தெரியாது. ஆனால் தலைவர் கருணாவை அளவுக்கு அதிகமாக நம்பியிருந்தார் என்றுதான் நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடற்புலிகளிற்கு பொறிவைத்த விமானங்கள்… தனக்குதானே சுட்ட பாப்பா: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 12

May 13, 2018
ltte-sea-tigers.jpg

யுத்தத்தில் புலிகளின் தோல்விக்கு முக்கிய காரணங்களில் ஒன்று கடற்புலிகளின் முடக்கம். நவீன போரியல்முறைக்கு தக்கதாக கடற்புலிகள் மாற்றமடையாததால் நான்காம் ஈழப்போரில் கடற்புலிகளால் ஒரு வெற்றிகரமான தாக்குதலை கூட செய்ய முடியாமல் முடங்க வேண்டியதாகி விட்டது.

நான்காம் ஈழப்போர் என்பது வன்னியில் நடத்தப்பட்ட ஒரு சர்வதேச யுத்தம். புலிகளை அழிப்பதென சில நாடுகளால் ஏற்படுத்தப்பட்ட நீண்டநாள் இணக்கத்தின் வெளிப்பாடு. சமாதான பேச்சுக்கள் நடந்து கொண்டிருந்தபோது பாதுகாப்பு தரப்பை தொழில்நேர்த்தி மிக்கவர்களாக மாற்றும் பணி பல சர்வதேச நாடுகளால் மேற்கொள்ளப்பட்டது. ஆயுத தளபாட விநியோகம் மட்டுமல்ல, இராணுவ நுணுக்கங்கள் பலவும் பிறநாட்டு இராணுவங்களினால் போதியளவில் புகட்டப்பட்டது.

 

விடுதலைப்புலிகளின் உயிர்வாழ்விற்கு பிரதான காரணம் கடல்வழி விநியோகம் என்பதை இலங்கையும், பிறநாடுகளும் சரியாக கணக்கு பண்ணியிருந்தன. இந்த விடயம் ஒன்றும் சிதம்பர இரகசியம் கிடையாது. இலங்கைக்கும் நீண்டகாலமாக தெரியும்.

யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய பின்னர் புலிகளை வன்னிக்குள் வளைத்து அழித்து விடலாமென்றுதான் நினைத்தார்கள். ஆனால் புலிகள் முல்லைத்தீவு இராணுவ முகாமை அழைத்து, முல்லைக்கடலால் ஒரு சர்வதேச வாசலை திறந்தார்கள். அதுபோல பூநகரி, மன்னார் கடற்பரப்பினால் தமிழகத்துடன் பிணைப்பை பேணினார்கள். ராஜீவ்காந்தி கொலையின் பின்னர் தமிழகத்திலிருந்து பெருமெடுப்பிலான விநியோகம் நடக்கவில்லை. ஆனால் மருந்து, எரிபொருள், தொழில்நுட்ப சாதனங்கள் முதலான சிறுசிறு வரத்துக்கள் தமிழகத்திலிருந்து வந்து கொண்டிருந்தது. முக்கியமாக மருத்துவத்திற்கான விநியோகம் பெரும்பாலும் தமிழகத்தையே நம்பியிருந்தது.

3ம் ஈழப்போர் காலத்திலேயே பூநகரி ஏ 35 சாலையை கைப்பற்றி தமிழக தொடர்பை அறுக்க இராணுவம் முயன்றது. ரணகோஷ என்ற பெயரில் இதற்காக ஆரம்பிக்கப்பட்ட படைநடவடிக்கை வெற்றியளிக்கவில்லை.

Image result for à®à¯à®°à®¾ பà®à®à¯ டோரா படகு

முல்லைத்தீவை கைப்பற்றிய பின்னர் சர்வதேச கடற்பரப்பிற்குள்ளால் புலிகள் பெருமளவு ஆயுதங்களை கொண்டு வந்து சேர்த்து விட்டனர். புலிகளை முடக்குவதெனில் கடல்வழி விநியோகத்தை தடுத்து, கடற்புலிகளை செயலிழக்க செய்ய வேண்டுமென்பதை பாதுகாப்பு தரப்பு உணர்ந்து, சமாதானபேச்சு காலத்திலேயே இதற்கான நடவடிக்கைகளில் இறங்கிவிட்டது. புலிகளின் ஆயுதக்கப்பல்களின் நடமாட்டங்களை அமெரிக்கா, இந்தியா போன்ற வல்லரசுகளின் தகவல் உதவியுடன் நடக்கடலிலேயே புலிகளின் ஆயுதக்கப்பல்கள் அழிக்கப்பட்டன. சமாதானகாலத்தில் புலிகளின் ஆயுதக்கப்பல்கள் சுமார் 12 வரையில் நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை சர்வதேச கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்டன. கரையிலிருந்து வெகுதொலைவிற்கு சென்று எதிரிகளின் கடற்கலங்களை மூழ்கடிக்கும் ஆற்றலை அதுவரை இலங்கை கடற்படை பெற்றிருக்கவில்லை. அதனால்த்தான் சர்வதேச கடலில் புலிகளின் கப்பல் மூழ்கடிப்பில் இந்திய பங்களிப்பு இருக்கலாமென்ற அபிப்பிராயம் பரவலாக எழுந்தது.

விடுதலைப்புலிகள் விட்ட மிகப்பெரிய தவறு- எதிர்தரப்பை குறைவாக எடைபோட்டது. வாகனங்கள், படையணி கட்டுமானங்கள், நிர்வாக அலகுகள், சர்வதேச தொடர்புகள் அதிகரிக்க, அதனை பெரு வளர்ச்சியாக கற்பனை செய்யும் போக்கு இயக்கத்திற்குள் பெருகியது. முக்கியமாக கடற்புலிகள் அப்படியான மாயைக்குள் சிக்கியிருந்தனர்.

 

கடற்புலிகள் சமாதானகாலத்தில் சில பல தொழில்நுட்ப உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து பெற்றிருந்தனர். தாமே சிலவற்றை உருவாக்கியுமிருந்தனர். ஆனால் கடற்புலிகளின் போரிடும் ஆற்றலில் மேம்பாடு எட்டப்படவில்லை. கடற்புலிகளின் போருத்தியில் மேம்பாடு எட்டப்படவில்லை. இதை சற்று விளக்க வேண்டும்.

மூன்றாம் ஈழப்போரில் கடற்புலிகள் கணிசமாக வெற்றியை பெற உதவியது- கடற்புலிகளின் போரியல் முறைமை. கடற்படையின் கட்டளை கப்பல் ஒன்று பின்னணியில் நிற்க டோரா அதிவேக பீரங்கி படகுகளுடன் கடற்படையினர் முன்னணிக்கு வருவார்கள். அதில் 20 mm, 12.7 mm கனோன்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

கடற்புலிகளின் சிறியரக படகுகளில் அதிவேக இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கும். இவற்றில் பெரும்பாலும் 12.7 mm கனோன்கள் இருக்கும். ஆர்.பி.ஜியும் சில படகுகளில் இருக்கும். இப்படியான அதிவேக சண்டை படகுகள் சிலவற்றுடன் சற்றே பெரிய படகொன்றும் களத்திலிருக்கும். அதில் 20 mm மாதிரியான ஆயுதங்கள் இருக்கும்.

Image result for à®à®à®±à¯à®ªà¯à®²à®¿à®à®³à¯ கரும்புலி படகுகள்

கடற்புலிகளின் படகுகள் உருவில் சிறியவை. அலையில் தாவிச்செல்லும். அவற்றை இலகுவாக குறிவைப்பது சிரமம். மறுவளமாக, போக்கு காட்டும் கடற்புலிகளின் சிறிய படகுகள் கடற்படை படகுகளை இலகுவாக குறிவைக்கலாம்.

2002 ரணில்- பிரபா உடன்படிக்கை காலத்தில் இலங்கை பாதுகாப்பு படைகளின் அத்தனை கட்டமைப்பை போலவும் கடற்படையிலும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன. அதுவரை பிரதான தாக்குதல் படகுகளாக இருந்த டோராக்களை தவிர்த்து அளவில் சிறிய தாக்குதல் படகுகள் உருவாகின. இவற்றில் பெரும்பாலானவை உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டவை. அவற்றில் அதிக சூட்டுவலு ஏற்படுத்தப்பட்டன.

 

அடுத்தது, கடல் வேவு விமானம் பயன்பாட்டிற்கு வந்தது. சுமார் 36 மணித்தியாலங்கள் இடைவிடாமல் பறத்தலை மேற்கொள்ளும் ஆற்றல் மிக்க விமானம் விமானப்படையிடம் இருந்தது.

புலிகளின் வீழ்ச்சிக்கு பிரதான காரணங்களில் ஒன்று இந்த வேவு விமானங்கள். வேவு விமானங்களை களமிறக்கியது மட்டுமல்ல, வேவு விமானங்கள் மூலம் இனம்காணும் இலக்குகளை வானிலிருந்தும் தரையிலிருந்தும் ஒருங்கிணைத்து தாக்கும் வல்லமையை இலங்கை பெற்றது. வேவு விமானங்கள் அடையாளம் காணும் இலக்கை வானிலிருந்தும், தரையில் தொலைவிலிருந்து எறிகணை மூலமும் தாக்கும் வல்லமையினால் புலிகள் பேரிழப்பை சந்தித்தார்கள்.

கடலில் புலிகளின் படகுகளை வேவு விமானங்கள் அடையாளம் காண, தாக்குதல் விமானங்கள் தாக்கியழிக்க ஆரம்பித்தன. கடற்புலிகளின் படகுகளிற்கு எதிராக நின்று போரிடும் கடற்படையின் படகுகளினால் ஏற்படும் ஆபத்தைவிட பல மடங்கு ஆபத்தை இவை கொடுத்தன. மிக், கிபிர், எம்.ஐ 24, 35 ஹெலிகொப்ரர்கள் மூலம் கடற்புலிகளின் படகுகளை கடலிலேயே நிர்மூலம் செய்யப்பட்டன.

 

ஒரு கட்டத்தில் கடற்புலிகளால் கடலில் படகை இறக்கவே முடியவில்லை. கடற்புலிகளுடன் பூனை, எலி விளையாட்டில் கடற்படை இறங்கியது. கடற்புலிகளை தூண்டி கடலில் இறங்க வைத்து அவர்களின் படகுகளை அழிக்கும் உத்தியையும் கையாண்டார்கள். இதனை புரிந்த கடற்புலிகள் கடலில் இறங்குவதையே தவிர்த்தார்கள். யுத்தகாலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி கரையோரத்தை அண்மித்த கடற்படை என்ற செய்தியை அடிக்கடி கேள்விப்பட்ட நினைவு உங்களிற்கு இருக்கலாம். இதற்கு உதாரணம், யுத்தம் மன்னாரில் உச்சமடைந்திருந்த சமயத்தில் நாச்சிக்குடா கடற்கரையோரம் வரை இலங்கை கடற்படை படகுகள் நெருங்கி வந்து, புலிகளிற்கு வலைவீசியது. நாச்சிக்குடாவில் கரையை தொடும் தூரத்திற்கு கடற்படை படகுகள் வந்தன. ஆனால் கடற்புலிகள் கடலில் இறங்கவில்லை. விமானப்படை விமானங்களை கட்டுநாயக்காவில் தயார் நிலையில் நிற்க, வைத்துவிட்டுத்தான் கடற்படை இந்த உத்தியை கையாண்டது. கடற்புலிகளின் படகுகள் கடலில் இறங்கியிருந்தால் உடனே விமானங்கள் வந்து தாக்குதல் நடத்தியிருக்கும். ஆனால், புலிகள் அதை ஊகித்து, கடலில் இறங்கவில்லை.

இப்படியான நிலைமையில், புலிகளால் ஒரு ஆயுதக்கப்பலை கூட கரைக்கு கொண்டு வர முடியவில்லை. மிகச்சிறிய கப்பல்கள்தான் சில சமயங்களில் கரையை எட்டின. அப்படியான ஒரு படகு 2008 இன் இறுதியில் சுண்டிக்குளம் தொடுவாயில் விமானப்படையால் தாக்கியழிக்கப்பட்டது.

இதேகாலப்பகுதியில் நடந்த இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட்டு விடுகிறோம்.

ஆட்சேர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டவர்கள் களமுனைக்கு செல்ல பயந்தவர்கள் என போராளிகளிற்குள் ஒரு அபிப்பிராயம் இருந்தது. அந்த அபிப்பிராயத்தை மெய்ப்பிப்பதைபோல ஒரு சம்பவம் நடந்தது. அது வவுனியா களமுனைக்குட்பட்ட பாலமோட்டை பகுதியில் நடந்தது.

hqdefault-300x225.jpg

 

கடுமையாக ஆட்சேர்ப்பில் ஈடுபட்ட பாப்பா அந்த களமுனைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் களமுனையில் நிற்க பாப்பா தயாரில்லை. களமுனையிலிருந்து பின்னால் செல்ல பல உபாயங்களை கடைப்பிடித்தார். ஒன்றும் பலனளிக்கவில்லை. இறுதியில், அவர் தனது காலில் தானே துப்பாக்கியால் சுட்டார்.

(களமுனையில் நிற்பதற்கு பயந்தவர்கள் நீண்டகாலமாகவே இந்த உத்தியை கையாள்வது வழக்கம். தமது காலில் பாதிப்பில்லாமல் சூட்டை நடத்துவார்கள். இப்படி செய்பவர்களை அமைப்பிற்குள் மதிப்பதில்லை)

 

வடபோர்முனையில் சிறப்பாக செயற்பட்ட லோரன்ஸ்தான் அப்போது பாலமோட்டை பகுதியில் கட்டளை தளபதியாக செயற்பட்டார். களமுனையில் தமக்கு தாமே சூடு நடத்துபவர்களை லோரன்ஸ் கடுமையாக அணுகினார். அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பவதில்லை. காயத்திற்கு கட்டுப்போட்டு, குறிப்பிட்டளவான நேரம் களமுனையிலேயே வைத்திருப்பார். இப்படியான நடவடிக்கை மூலம் தமக்குதாமே சூட்டை நடத்துபவர்களை கட்டுப்படுத்தலாமென நினைத்தார்.

பாப்பா தனது காலில்தானே சுட்டதும், சாதாரண போராளிகளிற்கு என்ன நடவடிக்கையோ, அதையே கடைப்பிடித்தார். பாப்பாவின் கால் காயத்திற்கு முதலுதவி செய்துவிட்டு, அவரை களமுனையிலேயே வைத்திருந்தார் லோரன்ஸ். கிட்டத்தட்ட அரைநாளின் பின்னர்தான் பாப்பா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/4666/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பால்ராஜிற்கும் கருணாவிற்குமுள்ள வித்தியாசம்: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 13

May 17, 2018
Balraj-discussing-Iththaavil-landing-pre

பீஷ்மர்

விடுதலைப்புலிகள் அமைப்பு முள்ளிவாய்க்காலில் முழுமையாக செயலிழந்து நாளையுடன் ஒன்பது வருடங்களாகிறது. 2009 மே மாதம் யுத்தம் முடிவிற்கு வந்தது. பல தசாப்தங்களாக அசைக்க முடியாத இராணுவ சக்தியாக விஸ்பரூபம் எடுத்திருந்த புலிகள் சடுதியான தோல்வியை சந்தித்ததற்கு பிரதான காரணங்களில் ஒன்று கருணாவின் பிளவு. கருணாவின் பிளவு நிகழ்ந்திருக்காவிட்டால் யுத்தம் நீண்டிருக்க வாய்ப்பிருந்தது. அல்லது முடிவிற்கு வந்த காலப்பகுதி நீண்டிருக்கலாம். யுத்தம் நீண்டுகொண்டிருக்க, அதனால் நிகழ்ந்த மனிதப்பேரவலத்தை காரணம் காட்டி வெளித்தலையீடுகள் நிகழ்ந்திருக்கவும் வாய்ப்புண்டு.

கருணாவின் பிரிவால் புலிகளிற்கு ஏற்பட்ட பேரிழப்பு- ஆளணி. சிறப்பாக சண்டையிலீடபடக்கூடிய சுமார் ஐயாயிரம் போராளிகளை புலிகள் இழக்க வேண்டியதாகிவிட்டது. அதுதவிர, கருணாகுழு என்ற துணைஇராணுவக்குழுவிற்கு எதிராகவும் போரிட வேண்டியிருந்தது. அவர்கள் இராணுவத்துடன் நெருங்கிச்செயற்பட்டு, புலிகளிற்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார்கள். கருணா பிளவு புலிகள் அமைப்பை மிகப்பலவீனப்படுத்தியதென்பதே உண்மை.

 

கருணா பிளவு தொடர்பாக இரண்டு தரப்பும் வெளிப்படையாக பேசவில்லை. மட்டக்களப்பு போராளிகளை அழைத்து வடக்கில் போராடுகிறார்கள், பெரும் படையணியுடன் வன்னிக்கு வந்து, சிறுகுழுவாக கிழக்கிற்கு போனபோது கருணாவின் ஆத்மா உறுத்தியதென்பதெல்லாம் மிகைப்படுத்தப்பட்டவை. அதுபோல விடுதலைப்புலிகள் அறிவித்த பாலியல்குற்றம் உள்ளிட்ட சிலவும் விலக்கப்பட்டதற்கான உண்மைக் காரணமல்ல.

br9-300x203.jpg

 

விடுதலைப்புலிகள் அமைப்பிற்குள் கருணா இராணுவ முக்கியத்துவம் மிக்கவராக எழுச்சிபெற்றார். விடுதலைப்புலிகளின் கடந்தகால வரலாற்றில், கருணா அளவில் எழுச்சிபெற்ற ஒருவர் அமைப்பின் இரண்டாம் நிலை தலைவராக நோக்கப்படுவதுண்டு. முன்னர் மாத்தையா, சில காலம் பால்ராஜ், சொர்ணம் என நீண்ட பட்டியல் பின்னர் பொட்டம்மானில் வந்து நின்றது. பொட்டம்மான்தான் புலிகளின் இரண்டாம் நிலை தலைவர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லையே தவிர, கட்டமைப்பு ரீதியில் அப்படித்தான் செயற்பட்டார்.

 

அதீத இராணுவ முக்கியத்துவம்மிக்கவராக எழுச்சிபெற்றபோதும், இரண்டாம் நிலை தலைவராக முடியவில்லையென்ற அதிருப்தி கருணாவிற்குள் இருந்தது. பொட்டம்மானின் இரண்டாம்நிலையை ஏற்றுக்கொள்ள முடியாததாலோ என்னவோ, பொட்டம்மானை வெட்டி ஓடத் தொடங்கினார் கருணா.

இது பொட்டம்மானையும் அதிருப்தியடைய வைத்தது. ஜெயசிக்குறு எதிர்ச்சமரிற்காக 1997இல் மட்டக்களப்பிலிருந்து ஐயாயிரம் போராளிகளுடன் கருணா வன்னிக்கு வந்திருந்தார். 1998இன் பிற்பகுதியில் பொட்டம்மான்- கருணா சுமுகமற்ற உறவு ஆரம்பித்தது. (இருவருக்குமிடையில் பல வருட மோதல் பின்னணியுண்டு. அதை இந்த தொடரின் பின்பகுதியில் விலாவாரியாக தருவோம்)

இதற்குள் ஒரு பிளாஸ்பேக் சம்பவம். கிழக்கு மகளிர்படையணியான அன்பரசி படையணியின் தளபதியாக இருந்தவர் நிலாவினி (சாளி). கருணா வன்னிக்கு வந்தபோது நிலாவினியும் வந்தார். நிலாவினியின் தனிப்பட்ட நடத்தைகள் தொடர்பான முறைப்பாடுள் அமைப்பின் தலைமைபீடத்திற்கு சென்றது. அவர் பாலியல்ரீதியான பலவீனம் உள்ளவரென்பது அந்த முறைப்பாடுகளின் சாரம். இதனையடுத்து அவரை அமைப்பிலிருந்து விலக்கிவிடுமாறு பிரபாகரன் உத்தரவிட்டார்.

ஆனால் கருணா வேறுவிதமாக செயற்பட்டார். நிலாவினியை அன்பரசி படையணி தளபதியிலிருந்து அகற்றி வேறொருவரை நியமித்துவிட்டு, ஒரு கௌரவ உறுப்பினராக நிலாவினியை செயற்பட வைத்தார். பின்னர், கிழக்கிற்கு சென்றதும், அங்கு மீளவும் நிலாவினி பொறுப்பேற்றுக் கொண்டார்.

commentary1.jpg கருணா

கிழக்கு போராளிகள் 1996 வரை பல வருடங்களாக பிரபாகரனை காணவேயில்லை. அவர்களிற்கு கருணாதான் எல்லாமும். தவிரவும், ஜெயசிக்குறு சமயத்தில் கிழக்கு போராளிகளிடம், “நாங்கள் இல்லாவிட்டால் இயக்கத்தில் ஒன்றுமில்லை“ என்ற அபிப்பிராயம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. போராளிகள் சந்திப்புக்களில் கிழக்கு தளபதிகள் இதனை அடிக்கடிகூற, போராளிகளிற்கிடையில் இந்த எண்ணம் வலுவாகிவிட்டது. இது எதிரொலித்த சம்பவமொன்று 2000 ஆம் ஆண்டு நிகழ்ந்தது.

கிழக்கு தளபதிகள், வடக்கு தளபதிகளை அவ்வளவாக கண்டுகொள்ளாமல், கருணாவின் கட்டளையைதான் ஏற்போம் என்பதைபோல செயற்படுவதை அவதானித்த பிரபாகரன் ஒரு அதிரடி நடவடிக்கை எடுத்தார். களமுனைகளில் ஆங்காங்கே பதிவான சிறுசிறு சம்பவங்களின் பாரதூரதன்மையை முன்னரே ஊகித்ததால் பிரபாகரன் எடுத்த முடிவது.

 

வன்னியை மீட்ட ஓயாதஅலைகள் 3 நடவடிக்கையை, வேறு தளபதிகளை கொண்டு செயற்படுத்தினார். ஜெயசிக்குறு சமயத்தில் கருணா வகித்த பாத்திரத்தை, ஓயாத அலைகள் 3 இல் தீபன் வகித்தார். கருணா பின்னணியில் செயற்படுபவராக இருந்தார்.

வன்னி தெற்கில் ஒட்டுசுட்டானில் ஆரம்பித்த நடவடிக்கை, ஒருமுனையில் வவுனியாவை நெருங்க, மறுமுனையில் மணலாற்றின் மண்கிண்டிமலையை அடைந்தது. பின்னர் ஆனையிறவு, யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து ஆரம்பித்தது. யாழ்ப்பாணத்தின் வாசல்ப்படி வரை வந்த நடவடிக்கை. இதில் பால்ராஜ், தீபன், சொர்ணம் போன்றவர்கள் பிரதான பாத்திரம் வகித்தார்கள். கிழக்கு அணிகளும் களத்திலிருந்தன.

Karuna-1-e1441074326586-300x194.jpg

இயக்கச்சிக்கு சமீபமாக களமுனை இருந்தது. பால்ராஜ் கட்டளை தளபதி. நெருக்கடியான சமயமொன்றில் கிழக்கு அணிகளை வழிநடத்திய இரண்டாம்நிலை தளபதிகள், பால்ராஜின் கட்டளையை ஏற்க மறுத்துவிட்டனர். “எங்களுக்கு அம்மான்தான் கொமாண்ட் பண்ண வேண்டும்“ என கூறிவிட்டனர்.

இதுபின்னர் சர்ச்சையானது. களமுனைகளில் நடப்பவற்றை, பிரச்சனைகளை விசாரணை செய்ய களமுனை ஆய்வுப்பிரிவு என ஒன்றை புலிகள் உருவாக்கி வைத்திருந்தனர். தமிழ்நாட்டின் 9ம் பயிற்சிமுகாமில் பயிற்சிபெற்ற நோயல் அதன் பொறுப்பாளராக இருந்தார். அவர் இந்த சம்பவத்தை விசாரணை செய்து, பிரபாகரனிற்கு அறிக்கை சமர்ப்பித்தார். உடனடியாக கருணாவை அழைத்த பிரபாகரன், கடும் தொனியில் பேசியிருக்கிறார். இயக்கத்திற்காகவே போராளிகள் வளர்க்கப்பட வேண்டும், தனிநபர்களிற்காக அல்ல என அறிவுறுத்தி, கிழக்கு போராளிகளுடன் உடனடியாக மட்டக்களப்பிற்கு செல்லுமாறு கட்டளையிட்டார்.

சுமார் மூன்றரை வருடம் வன்னிப்போரில் முக்கிய பங்காற்றிய கிழக்கு படையணிகள் 2000 ஆம் ஆண்டு மீண்டும் கிழக்கிற்கு திரும்பின.

கிழக்கில் கருணா தனியான நிர்வாக கட்டமைப்புக்களை ஏற்படுத்தி வைத்திருந்தார். நிதி, நிர்வாகம் இரண்டும் கருணாவின் கட்டுப்பாட்டில் இருந்தன. நிர்வாக விடயங்களில் கருணா மற்றவர்கள் ஆச்சரியப்படும் விதத்தில் செயற்படகூடியவர். கிழக்கில் படையணிகளை பெருக்கி, முறையான கட்டமைப்பை ஏற்படுத்தினார். புதியதொழில்நுட்பங்களை உள்வாங்கி, வேலைகளை இலகுபடுத்துவதிலும் கில்லாடி. புலிகள் அமைப்பிற்குள் முதன்முறையான மின்சார பேக்கரி அமைத்தார்.

யுத்தகளத்தில் கருணாவின் கட்டளை மையங்கள் பிரமாண்டமாகவும், அதிக வசதிகளுடனும் இருக்கும். அதிக உதவியாளர்கள், மெய்ப்பாதுகாவலர்களை வைத்துக்கொள்வதும் கருணாவின் வழக்கம். ஜெயசிக்குறு களமுனையை வழிநடத்திய சமயத்திலும், அவரது கட்டளை மைய பதுங்குகுழிக்கு மின்சாரம் இருந்தது. இதற்காக சிறிய ஜெனரேட்டர்களை வைத்திருப்பார். அவரது பதுங்குகுழிகள் விஸ்தாரமாக, வசதிகளுடன் இருக்கும். உள்ளேயே தங்கியிருக்கத்தக்கவை. மின்விசிறிகளும் இருக்கும்.

balraj-with-fellow-commanders-sasikumar-

தளபதி பால்ராஜின் கட்டளைமைய பதுங்குகுழியை முதல்முறையாக நேரில் பார்த்த கிழக்கு இளநிலை தளபதிகள் அதை நம்ப மறுத்த சம்பவமும் உள்ளது. பால்ராஜ் எளிமையானவர். போராளிகளுடன் முன்னணி நிலையிலும் தங்கக்கூடியவர். தனது இருப்பிடத்தை வசதியாக வைத்துக்கொள்வதையும் விரும்பாதவர். நெருக்கிக்கொண்டு உட்காரத்தக்க சிறிய பதுங்குகுழி ஒன்றிற்குள் இருந்தபடியா பால்ராஜ் கட்டளையிடுகிறார் என அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

கிழக்கிற்கு திரும்பிய கருணா, வடக்கிற்கு எதிரான மனநிலையை தனது தளபதிகளிடம் வளர்த்தார். பிரிவிற்கான விதை போடப்பட்டு, மெல்லமெல்ல அது துளிர்விடத் தொடங்கியது. சமாதானகாலத்தில் புலிகளின் நிர்வாக, நிதி கட்டமைப்புக்கள் கிழக்கிற்கும் விஸ்தரிக்கப்பட, பிரச்சனைகள் அதிகரித்தன.

கருணா பிரிவு என்பது ஒருநாளில் நடந்ததல்ல. நீண்ட பலகால முரண்களின் இறுதி முடிவு. 2001 இல் ஆரம்பித்த சின்னசின்ன முரண்பாடுகளை புலிகள் ஆரம்பத்தில் அவ்வளவாக முக்கியத்துவப்படுத்தவில்லை. அது 2004இல் உலகத்திற்கு தெரிந்தது. ஆனால் 2003 இலேயே முரண்பாடு உச்சமாகிவிட்டது. அதை இரண்டு வழிகளில் கையாள புலிகள் முயன்றார்கள். ஒன்று, பேசித்தீர்ப்பது. இரண்டு, சேர்ஜிக்கல் ஓப்ரேசன். அதாவது, படையணிகளை குழப்பாமல் கருணாவை மட்டும் வன்னிக்கு தூக்கி வருவது.

எப்படி இரண்டையும் செய்தார்கள், முடிவு என்னானது என்பது அடுத்த பாத்தில்.

http://www.pagetamil.com/5238/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டம்மான்- கருணா பதினேழு வருட பகை!: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன 14

May 20, 2018
karadiyarau_5.jpg

பீஷ்மர்

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா விலகியது எப்படியான பாதிப்புக்களை ஏற்படுத்தியது? விடுதலைப்புலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு கருணாதான் காரணமா? கருணா பிரிந்ததன் பின்னர் புலிகள் ஏன் ஒரு போர்முனையிலும் வெல்லவில்லை? போர்த்தந்திரோபாயங்களில் பிரபாகரனா, கருணாவா தேர்ந்தவர்?

இந்த விடயங்கள் தொடர்பாக பரவலாக குழப்பங்கள் மக்களிடம் இருக்கிறது. இந்த சந்தேகங்களையெல்லாம் இந்த தொடர் தீர்த்து வைக்கும்.

 

மேலேயுள்ள கேள்விகளில் ஒன்றிற்கு, இந்த பகுதியை ஆரம்பிக்கும்போதே பதில்  சொல்லி விடுகிறேன்.

போர்த்தந்திரோபாயங்களில் பிரபாகரனா, கருணாவா தேர்ந்தவர்?

சந்தேகமேயில்லாமல் பதில் சொல்லி விடுகிறோம்- பிரபாகரன்தான். இளைஞர்களிற்கு புரியும்விதமாக சொன்னால், கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட்மாஸ்ரர்!

இதற்கு மட்டும் எப்படி இவ்வளவு உறுதியாக பதில் சொன்னோம் என்பதை, இந்த தொடரை படிக்கும்போது புரிந்துகொள்வீர்கள்.

விடுதலைப்புலிகளை அழிக்க முடியுமென ஒரு காலத்தில் யாராவது கற்பனை கூட செய்யவில்லை. இப்பொழுது ஒரு கதையொன்று பரவுகிறது- கோத்தபாய ராஜபக்ச புலிகளை அழிக்க முடியுமென 2005 இலேயே நினைத்திருந்தார் என. இது உண்மையா?

இப்போதைக்கு ஒன்றை மட்டும் சொல்லிவைக்கிறோம். காட்டில் சிங்கம் எழுதுவதுதான் வரலாறு.

 

இந்த யுத்தத்தை வெல்லலாமென மகிந்த ராஜபக்ச குழாமை நம்பிக்கையூட்டியதில் இருந்து, படைக்கட்டுமானங்களை வலுப்படுத்தி, யுத்தத்தை மறைகரமாக இருந்து வழிநடத்தியதெல்லாமே இந்தியாதான்.

புலிகளை அழிக்கலாம் என்ற நம்பிக்கை இந்தியாவிற்கு எப்படி வந்தது தெரியுமா?

கருணா மூலம்!

Image result for karuna amman

கருணா பிளவு புலிகளை அழித்ததென்பதுதான் உண்மை. ஆனால் கருணாவின் ஆளணி பலத்தை இழந்ததைவிட, கருணாவின் மூலம் இந்தியா திரட்டிய தகவல்கள்தான் காரணம். இதை இப்படி மேலோட்டமாக சொல்ல உங்களிற்கு தலையை சுற்றுகிறதல்லவா? தொடரை முழுமையாக படியுங்கள். அனைத்தையும் தெளிவாக அறிந்து கொள்வீர்கள்.

கருணா பிரிந்தது இராணுவரீதியில் புலிகளிற்கு இழப்புத்தான். 2004 மார்ச்சில் புலிகளை விட்டு பிரிந்து செல்கிறேன் என கருணா அறிவித்தபோது, அவரின் கீழ் 5,858 போராளிகள் இருந்ததாக புலிகளின் தலைமைச்செயலக பதிவு குறிப்பிடுகிறது. அதில் 1,800 பேர் கடுமையான காயமடைந்தவர்கள், திருமணமானவர்கள். அப்பொழுது கிழக்கில் கருணா ஆட்சேர்ப்பை ஆரம்பித்திருந்தார். அப்படி இணைக்கப்பட்டவர்கள் 2,300 பேர். மிகுதி 1,700 பேரும் யுத்த அனுபவம்மிக்க போராளிகள்.

 

கிழக்கு படையணிகள் சிதையாமல் புலிகளிடம் இருந்திருந்தால், யுத்தம் நீண்டு சென்றிருக்கும். இது வெளித்தலையீடுகளிற்கான வாய்ப்பை ஏற்படுத்தி புலிகளிற்கு சார்பான நிலைமையை ஏற்படுத்தியிருக்கும்.

இதெல்லாம் புலிகளிற்கு தெரியாதா? தெரியாமலா கருணாவை விலக்கும் முடிவை எடுத்தார்கள்?

இதெல்லாவற்றையும் விட பெரிய கேள்வி, கருணா ஏன் பிரிந்தார்?

விடுதலைப்புலிகள் அமைப்பின் 32 துறைகளிலும் வடக்கை சேர்ந்தவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள், மத்திய குழுவில் கிழக்கிற்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை, கிழக்கு போராளிகளை வைத்து வன்னிச்சண்டை செய்கிறார்கள் என கருணா குற்றம்சாட்டினார்.

கருணா மீது நிதி, பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்ததாக புலிகள் அறிவித்தார்கள். இதில் எது உண்மை?

இரண்டு தரப்பு சொன்னதிலும் சில உண்மைகள் இருக்கலாம். ஆனால் கருணா பிளவிற்கு இரு தரப்பு சொன்ன காரணங்களும் உண்மையல்ல. இரண்டு தரப்பும் தேடிப்பிடித்த காரணங்கள் அவை.

 

கருணா பிளவை பற்றிய தொடரை, ஒரு சம்பவத்துடன் ஆரம்பிக்கிறோம்.

Image result for பாலà¯à®°à®¾à®à¯ பொட்டம்மான்- பால்ராஜ்

1997 மே 13ம் திகதி இராணுவத்தினர் வன்னியின் ஏ9 பிரதான வீதியை கைப்பற்ற ஒரு பிரமாண்ட படைநடவடிக்கையை ஆரம்பித்தார்கள். படையினர் ஜெயசிக்குறுவிற்கு திட்டமிடுவதை அறிந்த புலிகள், மட்டக்களப்பிலிருந்த புலிகளின் படையணிகளை வன்னிக்கு அழைத்தனர். வன்னிக்கு படையணிகளுடன் வந்த கருணாவை, பிரபாகரன் உயரிய கௌரவத்துடனே நடத்தினார். இன்னும் சொன்னால், தேவைக்கதிகமான கௌரவம் கொடுத்தார்.

கருணா வன்னிக்கு வந்த சமயத்தில் பெரிய மரபு யுத்த முனைகளை வழிநடத்தியிருக்கவில்லை. வவுணதீவு முகாம் தாக்குதல், புளுகுணாவ தாக்குதல் போன்ற பெரிய தாக்குதல்களை கருணா மேற்கொண்டிருந்தார்தான். ஆனால் புளுகுணாவ தவிர்ந்த மற்றையதெல்லாம் பெரும் வெற்றிகரமான தாக்குதல்கள் அல்ல. வவுணதீவு தாக்குதலில் 84 புலிகள் மரணமானார்கள். சுமார் 100 படையினர் இறந்ததாக அறிவித்தனர். இந்த சமன்பாட்டை புலிகள் விரும்புவதில்லை. இருதரப்பு இழப்பும் கிட்டத்தட்ட சமனாக இருந்தால், விரைவிலேயே இராணுவம் யுத்தத்தை வென்றுவிடும்.

 

வடக்கிலும் இப்படியான சில தாக்குதல்கள் நடந்துள்ளனதான். ஆனால் அவையெல்லாம் தோல்வி தாக்குதல்கள் பட்டியலில் போட்டு, அதை தலைமை தாங்கிய தளபதியின் “காற்றை பிடுங்கி“ விடுவதுதான் பிரபாகரனின் ஸ்டைல்.

வடக்கு, கிழக்கு என்ற பாகுபாட்டை உருவாக்குவதோ… யாரையும் தரம் குறைக்க வைப்பதோ இந்த ஒப்பீடுகளின் நோக்கமல்ல. யதார்த்தம் இதுதான். இதற்கு புறக்காரணங்கள் பலவுள்ளன. கிழக்கில் இப்படியான பெரிய மோதல்களில் அதிகமாக ஈடுபடாமல் கொரில்லா தாக்குதல்களில்தான் அதிகமான ஈடுபட்டது, பிரபாகரனின் முழுமையான கட்டுப்பாட்டில் வடக்கு இருந்தது, அதிக வளங்கள் வடக்கில் இருந்தது போன்றன அதற்கு காரணமாக இருக்கலாம்.

வடக்கு தளபதிகளில் பால்ராஜ் ஏற்கனவே மரபு யுத்தமுனைகளில் சிறப்பாக செயற்படுபவர் என்ற பெயரை எடுத்துவிட்டார். ஒரு சமயத்தில் புலிகள் உருவாக்கிய கூட்டுப்படை தலைமையகத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டவர். அப்படிப்பட்ட பால்ராஜை, கருணா வன்னியில் இருந்தபோது, அவரின் கீழ் செயற்பட வைத்தார் பிரபாகரன்.

கருணாவிற்கு கீழ் இயங்குபவராக என்றும் சொல்ல முடியாது. கருணாவிற்கு கீழ் செயற்படும் ரமேஷின் கட்டளைக்கு கீழ் செயற்படுபவராக நியமித்தார். 1998 ஜனவரியில் ஆனையிறவு மீது புலிகள் ஒரு தாக்குதல் நடத்தினார்கள். ஆனையிறவின் மையத்திற்குள்- இயக்கச்சி- பெரிய ஆட்லறி படைத்தளம் ஒன்று இருந்தது. புலிகளின் அணியொன்று ஆட்லறி முகாமை கைப்பற்றி ஆட்லறிகளை கைப்பற்றி விட்டனர். பல முனை தாக்குதல்கள் அது. அப்போது மணலாறு மாவட்ட சிறப்பு தளபதியாக இருந்த கேணல் ராஜேஷ் (ஆனந்தபுரத்தில் இறுதியுத்தத்தில் மரணமானவர்) கொம்படி பகுதிக்குள்ளால் நகர்ந்து, அந்த பகுதி முன்னரண்களை தகர்த்து, உள்பக்கமாக இருந்த மினிமுகாம் ஒன்றையும் தகர்க்க வேண்டும். அதை சரியாக செய்தால் மட்டுமே கைப்பற்றப்பட்ட பதினொரு ஆட்லறிகளையும் வெளியே கொண்டு வரலாம்.

ஆனால் ராஜேஷின் அணியால் அந்த மினிமுகாமை கைப்பற்ற முடியவில்லை. முகாமை கைப்பற்றாததால் ஆட்லறியையும் வெளியே கொண்டு வர முடியவில்லை. ஆனையிறவையும் கைப்பற்ற முடியவில்லை. ராஜேஷிடமிருந்து எல்லா பொறுப்புக்களையும் பிரபாகரன் பிடுங்கினார். தாக்குதலை ஒட்டுமொத்தமாக வழிநடத்திய பால்ராஜிற்கும் காற்றை பிடுங்கினார். காற்றை பிடுங்குவதென்பது புலிகள் அமைப்பிற்குள் நிலவிய ஒரு குறியீட்டு சொல். பொறுப்புக்கள் பறிக்கப்படுவதை குறிக்கும்.

வவுனியாவிலிருந்து முன்னேறி வந்த ஜெயசிக்குறு படையினருக்கு எதிராக மூன்றுமுறிப்பில் புலிகள் முன்னரண் அமைத்திருந்த சமயத்தில் அந்தப்பகுதிக்கு கேணல் ரமேஷ் பொறுப்பாக இருந்தார். 75 பேரை கொண்ட அணியொன்றின் பொறுப்பாளராக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். அந்த அணி ரமேஷின் கீழ் செயற்பட்டது. அதாவது பால்ராஜிற்கு கட்டளையிட்டது ரமேஷ்!

 

அதாவது பால்ராஜ் வகித்த பொறுப்பு, விடுதலைப்புலிகள் அமைப்பில் சாதாரணமாக மேஜர் தர நிலையில் உள்ள ஒருவர் வகிக்கும் பொறுப்பையே. வேறு தளபதிகள் என்றால் இப்படியான “காற்று இறக்கல்களை“ விரும்பமாட்டார்கள். அதற்கு ஒரு உதாரணம் ரவி.

blogger-image-69580438-300x199.jpg

1996இல் யாழ்மாவட்ட தளபதியாக இருந்தவர் ரவி. அவரது அசட்டையான முன்னரண் அமைப்பினாலேயே சூரியக்கதிர் நடவடிக்கை இராணுவத்தினர் எதிர்ப்பின்றி சாவகச்சேரியை கைப்பற்றினார்கள். புலிகள் வன்னிக்கு பின்வாங்கியதும் பிரபாகரன் செய்த முதலாவது வேலை ரவியின் காற்றை பிடுங்கியது. மாவட்ட சிறப்பு தளபதியாக இருந்தவர், தாக்குலணியொன்றில் சாதாரண போராளியாக விடப்பட்டார். ரவிக்கு இது பிடிக்கவில்லை. சிறிதுகாலத்திலேயே இயக்கத்திலிருந்து விலகிச்சென்றுவிட்டார். இப்பொழுது ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கிறார்.

ஆனால் பால்ராஜ் அப்படியானவரல்ல. இயக்கத்தில் என்ன வேலை கொடுத்தாலும் சிரித்தபடி செய்வார். நேற்று இயக்கத்தில் இணைந்தவரின் கட்டளையை கேட்குமாறு பிரபாகரன் சொன்னாலும் கேட்பார். ஆனால் அவரது எகத்தாள கதைகள் மாறாது. பால்ராஜின் எகத்தாள கதைகள் பற்றி தனி தொடரே எழுதலாம். சுவாரஸ்யமான அந்த கதைகள் பற்றி பின்னர் குறிப்பிடுகிறோம்.

மூன்றுமுறிப்பில் தனது சிறிய அணியுடன் பால்ராஜ் நிற்பது தளபதிகளிற்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. பலர் துக்கம் விசாரிப்பதைபோல பால்ராஜிடம் பேசப்போவார்கள். “இயக்கம் தரும் என்ன வேலையென்றாலும் நான் செய்யத்தானே வந்தனான். தளபதியாக இருக்கவா இயக்கத்திற்கு வந்தனான்“ என அவர் கேட்டு அதகளம் பண்ணிக்கொண்டிருந்தார்.

கருணா, ரமேஷ் ஆகியோருக்கு கீழேயே பால்ராஜ் செயற்பட்டார். கருணாவிற்கு புலிகள் முக்கியத்துவம் கொடுக்கவில்லையென்ற குற்றச்சாட்டு உண்மையல்ல.

ஒரு சம்பவத்துடன் தொடங்குகிறோம் என்றுவிட்டு, சம்பவத்தையே சொல்லவில்லையென்கிறீர்களா? சம்பவம் இதுதான்.

1998 காலப்பகுதியில், மாங்குளத்திற்கு அண்மையாக புலனாய்வுத்துறை அணியொன்று- ஜெயசிக்குறு படையினரை வழிமறித்து-  நிலைகொண்டிருந்தது. புலனாய்வுத்துறையில் தாக்குலணி ஒன்று இருந்தது. அது அப்போது மன்னாரில் நிலைகொண்டிருந்தது. அப்போது ஏற்பட்ட கடுமையான ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய எல்லா படையணிகளில் இருந்தும் ஆட்களை அனுப்பினார்கள். பொட்டம்மானும் தனது பங்கிற்கு ஒரு ரிஸ்க் எடுத்தார்.

சம்பவத்தை சொல்வதற்கு முன்னர் ஒரு சிறிய விளக்கம். கொழும்பில் இருந்த மறைமுக கரும்புலிகள், கொழும்பில் தங்கியிருந்து நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை ஏதாவது அவசர சந்திப்பு, நடவடிக்கைகளை திட்டமிடுவதற்காக  வன்னியிலுள்ள புலனாய்வுத்துறை இரகசிய முகாம் ஒன்றிற்கு அழைக்கப்படுகிறார்கள் என வைப்போம். அவர்கள் எப்படி தங்கவைக்கப்படுவார்கள் என்பது தெரியுமா?

இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களில் இருந்து பல வழிகளில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிற்கு வருவார்கள். ஏ9 பாதை திறந்துள்ள சமயத்தில் பேரூந்தில் வருவார்கள், கடல்மார்க்கமாக வருவார்கள், காடுகளிற்குள்ளால் வருவார்கள். முகாமிற்கு அழைத்து வரப்படும்போது அவர்களின் முகத்தை முழுமையான மூடும் முகமூடி ஒன்று வழங்கப்படும். ஒவ்வொருவருக்கும் தனி அறை வழங்கப்படும். அந்த அறைக்குள் இருக்கும் சமயத்தில் முகமூடியை கழற்றிக்கொள்ளலாமே தவிர, அறை கதவை திறந்து வெளியில் வரும்போது முகமூடியில்லாமல் வரக்கூடாது. இரண்டு பேர் இரகசிய நடவடிக்கையில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் ஈடுபட்டிருந்தாலும், ஒருவரையொருவர் அறிந்து கொள்ளகூடாது. இதுதான் இரகசிய புலனாய்வு செயற்பாடுகளின் அடிப்படை சூத்திரம்.

வன்னியிலுள்ள ஒருவர்தான் அவர்களிற்கு தாக்குதல் திட்டத்தை விளங்கப்படுத்துவார். அவர் முகமூடி அணியமாட்டார். ஆனால் தான் திட்டத்தை விளங்கப்படுத்துபவர்களின் முகத்தை அவர் அறியமாட்டார். அந்த இடத்தில் இருப்பவர்களும் பக்கத்திலிருப்பவரை அறியமாட்டார். யாராவது ஒருவர் எக்குத்தப்பாக இலங்கை புலனாய்வுத்துறையிடம் எக்குத்தப்பாக சிக்கிக்கொண்டால், வரிசையாக மற்றவர்களும் மாட்டுப்படாமல் இருக்க இந்த நடைமுறை.

 

Image result for karuna amman

மறைமுக கரும்புலி பயிற்சிக்காக செல்பவர்களுக்கும் இதுதான் நிலை. ஆறு மாதமோ ஒரு வருடமோ அடுத்தவர் முகத்தை தெரியாமல் முகமூடி வாழ்க்கைதான் வாழ்வார்கள்.

ஜெயசிக்குறு களமுனையில் போராளிகள் பஞ்சம் வந்தது. ஜிம்கெலி தாத்தாவின் அணி நீண்டநாட்களாக ஓய்வின்றி களத்தில் நின்றது. அவர்களிற்கு ஓய்வளிக்க வேண்டும். மாற்று அணியொன்று இருந்தாலே சாத்தியம். இந்த பிரச்சனை பிரபாகரனிடம் வந்தது. இயக்கத்தின் உயர்மட்ட முடிவுகளை பொட்டம்மானுடன் பேசியே பிரபாகரன் எடுப்பார். இந்த பிரச்சனையை பொட்டம்மானிடம் பேச, ஒரு அணியை உடனே திரட்டி திருவதாக கூறினார்.

இராணுவகட்டுப்பாட்டு பகுதியில் நிலைகொண்டிருந்த நடவடிக்கையாளர்களையெல்லாம் உடனே வன்னிக்கு அழைத்து ஒரு அணியை உருவாக்கினார். அது பயங்கர ரிஸ்க் எடுக்கும் வேலை. இவர்கள் முன்னரணில் நின்று இறந்தாலும், காயமடைந்தாலும், உயிருடன் இராணுவத்திடம் பிடிபட்டாலும் பிரச்சனைதான். காயமடைந்தால்கூட பின்னர் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் வேலை செய்ய முடியாது. காயத்தளும்பு அடையாளம் காட்டிக்கொடுத்து விடும். அவர்களிற்காக புதியவர்களை தயார்செய்வது சாதாரண விடயம் அல்ல. ஆனாலும் பொட்டம்மான் செய்தார்.

பொட்டம்மான் ஒரு மாற்று ஐடியா போட்டார். ஏ9 வீதிக்கு மேற்கு பக்கமாக நிலைகொண்டிருந்த நிதித்துறை படையணியை எடுத்து ஜிம்கெலி தாத்தாவின் படையணி நிலைகளில் நிறுத்திவிட்டு, நிதித்துறை படையணியின் நிலைகளில் புலனாய்வுத்துறை அணியை நிறுத்தலாம். ஏனெனில், ஜிம்கெலி தாத்தாவின் அணி நின்ற பகுதி அடிக்கடி சண்டை நடக்கும் இடம். நிதித்துறை படையணியின் பகுதியில் இராணுவம் அடிக்கடி கண்வைக்கவில்லை.

இதை படிப்பவர்களிற்கு குழப்பம் வரலாம். நிதித்துறை, ஜெயந்தன் படையணி போராளிகள் ஆபத்தான இடத்தில் நிற்கலாம், புலனாய்வுத்துறை போராளிகள் நிற்க முடியாதா என. இதற்கு ஒரே பதில் இல்லையென்பதே. இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் ஒரு புலனாய்வுத்துறை உறுப்பினரை நிலைகொள்ள வைப்பதென்பது சாதாரண விடயமல்ல. அதனால்தான் பொட்டம்மான் அப்படி ஐடியா போட்டார். பிரபாகரனிற்கும் அது சரியெனபட, விடயத்தை கருணாவிற்கு விளங்கப்படுத்தி அந்த அணியை அனுப்பினார்கள். ஆனால் அந்த அணி ஜிம்கெலி தாத்தாவின் அணிநின்ற இடத்திலேயே நிறுத்தப்பட்டது!

Image result for மறà¯à®®à¯à® à®à®°à¯à®®à¯à®ªà¯à®²à®¿மறுநாள் அந்த இடத்தில் இராணுவம் சிறிய முன்னேற்றத்தை செய்ய, புலனாய்வுத்துறையின் ஒருவர் மரணமாகி, இருவர் கடுமையான காயமடைந்தனர்.

 

பின்னர் இது இயக்கத்திற்குள் விவகாரமாகி, விசாரணை வரை சென்றது. புலனாய்வுத்துறை அணியை, நிதித்துறையின் இடத்தில் நிறுத்தாமல், ஜிம்கெலி தாத்தாவின் இடத்திற்கு அனுப்பியது யார் என தளபதிகள் மட்டத்தில் இது பேசப்பட்டபோது, பொட்டம்மான் கொஞ்சம் காரசாரமாக கருணாவை பேசிவிட்டார். தனக்கு இதில் சம்பந்தமில்லை, தனது கட்டளை மையத்தை சேர்ந்த யாரோ தளபதிதான் மாறி செயற்பட்டு விட்டார் என கூறி கருணா சமாளித்தார். ஓரளவிற்கு மிஞ்சி புலிகளும் அதை விவகாரமாக்கவில்லை. அப்பொழுது கள விசாரணை பகுதியை புலிகள் உருவாக்கியிருந்தார்கள். களத்தில் நடக்கும் சிக்கல்களை விசாரணை செய்து அறிக்கையிடுவதே வேலை. அவர்களிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டது. அதற்கு கருணா அவ்வளவாக ஒத்துழைக்கவில்லை. பின்னர் அந்த விசாரணை கைவிடப்பட்டது!

அதற்கு பின்னர் வன்னியில் பொட்டம்மான், கருணா மோதல் உக்கிரமடைந்தது. விடுதலைப்புலிகளின் இரண்டாவது தலைவராக பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லையே தவிர, அப்படி செயற்பட்டது பொட்டம்மான்தான். பிரபாகரன் அதற்கு அனுமதித்திருந்தார்.

வன்னியில் கருணாவிற்கு பிரபாகரன் கொடுத்த முக்கியத்துவத்தால் அவரை தனித்து செயற்பட வைத்தது. மட்டக்களப்பில் எப்படி நிர்வாக கட்டமைப்புக்களிற்கு கீழ்ப்படாமல் சுயாதீனமாக இயங்கினார்களோ, அப்படியே வன்னிக்குள்ளும் இயங்கினார்கள்.

அந்த சமயத்தில் போராளிகளின் போக்குவரத்திற்கென ஒரு பேருந்து சேவை இயக்கப்பட்டது. அதற்கு பெயர் சிறப்பு பணி. தனியார் பேருந்துகளில் போராளிகள் ஏறினால், பேருந்து உரிமையாளர்களால் தொழில் செய்ய முடியாது. இதை கருத்தில் கொண்டுதான் சிறப்பு பணி ஆரம்பிக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பில் இருந்து விசுவமடுவிற்கு வந்த தனியார் பேருந்தை ஜெயந்தன் படையணி போராளிகள் ஆறுபேர் மறித்துள்ளனர். போராளிகளிற்கு சிறப்பு பணி இருக்கிறதுதானேயென நினைத்தோ என்னவோ, நிறுத்தாமல் சென்றார் சாரதி. பேருந்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி நிறுத்தி, சாரதியையும் கடுமையாக தாக்கினார்கள் ஜெயந்தன் படையணியினர். பொதுமக்கள் பேருந்தில் இருந்தபோதும் நல்லவேளையாக உயிரிழப்புக்கள் நிகழவில்லை.

புலிகள் அமைப்பில் இருந்த யாராவது இப்படி துப்பாக்கியை தவறாக பயன்படுத்துவது கிட்டத்தட்ட மரணதண்டனைக்குரிய குற்றம். புலிகள் அமைப்பில் இருந்தாலும் சிவில் குற்றங்களில் சம்பந்தப்பட்டால் அவர்களை காவல்துறை கைது செய்து, வழக்கமான காவல்துறை நடைமுறைப்படியே விசாரணைகள், தண்டனைகள் அமையும். துப்பாக்கிச்சூட்டுடன் சம்பந்தப்பட்ட ஆறுபேரையும் காவல்துறை விசாரணைக்கு எடுக்க முயல, கருணா கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இறுதியில் கடுமையான இழுபறியின் பின் அவர்களை காவல்துறை கைது செய்தது.

இதுவே ஏனைய படையணிகள் என்றால், சிறிய சிக்கலுமில்லாமல் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைத்திருப்பார்கள். கிழக்கில் புலிகளின் சிவில் நிர்வாக கட்டமைப்புக்கள் இருக்கவில்லை. கிழக்கு தளபதிகள், போராளிகளிற்கும் அதனுடன் இணைந்து செயற்பட்ட அனுபவம் இருக்கவில்லை.

புலிகளிற்குள் பிளவு ஏற்பட இதைவிட இன்னும் இரண்டு காரணங்களும் உள்ளன. அதில் முக்கியமானது பொட்டம்மான், கருணா மோதல். அது 1987 இல் இருந்தே இருக்கிறது. அதாவது பொட்டம்மானுடனான 17 வருட பகை முற்றிய சமயத்திலேயே இயக்கத்திலிருந்து கருணா வெளியேறினார்.

1987இல் இருவருக்குமிடையில் ஆரம்பித்த மோதலை அடுத்த வாரம் குறிப்பிடுகிறேன்.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/5470/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சதாம் ஹுசைன்,
கேர்ணல் கடாபி,
பின்லாடன்,
ஜசீர் அரபாத்,
போன்றோரின் ஆட்சியும்,அமைப்புக்களும் 

எப்படி வீழ்த்தப்பட்டனவோ, வீழ்த்தப்பட்டார்களோ அது போன்று எமது அமைப்பும் தலமையும் வீழ்த்தப்பட்டது.....அம்பிட்டுந்தான்...

உலக சக்தி ஒன்று ஒரு அமைப்பை வீழ்த்த வேணும் என்று நினைத்து விட்டால் அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது....25, 30 வருடஙகள் சென்றாலும் வீழ்த்தியே தீர்வார்கள்....
இதில் ஒற்றுமை,பிரதேசவாதம் ,சாதி ...எல்லாம் ஒரு பொருட்டே இல்லை....
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டம்மானாலும்,,புலனாய்வு துறையினரின் தேவையற்ற போட்டியாலும் தான் இந்த நிலைக்கு வந்து உள்ளார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ரதி said:

பொட்டம்மானாலும்,,புலனாய்வு துறையினரின் தேவையற்ற போட்டியாலும் தான் இந்த நிலைக்கு வந்து உள்ளார்கள் 

கருணா இயக்கத்தின் கொள்கைகளுக்கு விசுவாசமாக இல்லாமல் தன்னைப் பற்றிமட்டும் சுயநலமாகச் சிந்தித்து செயற்பட்டது காரணமாகத் தெரியவில்லையா?

பால்ராஜ் போல சொல்லப்பட்ட எதையும் இயக்கத்திற்காக கேள்விகேட்காமாலேயே செய்த பலர் இருந்திருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

கருணா இயக்கத்தின் கொள்கைகளுக்கு விசுவாசமாக இல்லாமல் தன்னைப் பற்றிமட்டும் சுயநலமாகச் சிந்தித்து செயற்பட்டது காரணமாகத் தெரியவில்லையா?

பால்ராஜ் போல சொல்லப்பட்ட எதையும் இயக்கத்திற்காக கேள்விகேட்காமாலேயே செய்த பலர் இருந்திருக்கின்றார்கள்.

 

தலைவர், நீச்சல் குளம், நல்ல வசதியடன் கூடிய நிலக்கீழ் மாளிகையில் வசிக்கலாம்; பொட்டம்மான் நல்ல வசதியுடன் வாழலாம்...கருணா அம்மான் வசதியாய் இருக்கோணும் என்று நினைத்தால் அது பிழை  இல்லையா கிருபன்?

பால்ராஜ் அண்ணா மாதிரி எல்லாரும் இருக்க மாட்டினம்(தலைவர் உட்பட)...தவிர அவருக்கு குடும்பம் இல்லை 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயக்கத்தின் கொள்கை என்ன?  எதைக் கருணா கடைப்பிடிக்கவில்லை ...யாரால் பிரிவினைகள் வந்தது?...பொட்டம்மானை உப தலைவராக தலைவர் நியமித்தவரா?....பதவிப் போட்டி தான் எல்லாத்துக்கும் காரணம்...கருணாவிற்கு எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை பொட்டு பதவி ஆசையில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரதி said:

இயக்கத்தின் கொள்கை என்ன?  எதைக் கருணா கடைப்பிடிக்கவில்லை ...யாரால் பிரிவினைகள் வந்தது?...பொட்டம்மானை உப தலைவராக தலைவர் நியமித்தவரா?....பதவிப் போட்டி தான் எல்லாத்துக்கும் காரணம்...கருணாவிற்கு எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை பொட்டு பதவி ஆசையில் 

தொடரை ஆறி அமர்ந்து வாசித்தால் நீங்கள் கேட்டகேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கிருபன் said:

தொடரை ஆறி அமர்ந்து வாசித்தால் நீங்கள் கேட்டகேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்?

கிருபன்,தலைவரின் எந்த கட்டளையை கருணா மீறினார் என சொல்லுங்கள்...பொட்டம்மானின் கட்டளையைத் தான் அவர் கடைப் பிடிக்கவில்லை ...தலைவர் ,தனக்கு அடுத்த அதிகாரத்தில் உள்ளவர் பொ தான்...அவரின் கட்டளைக்கு எல்லோரும் கீழ் பணிய வேண்டும் என சொல்லி இருக்க வேண்டும் ...இருவரும் சம பதவியில் இருக்கும் போது ஈகோ இருக்கும் தான் ....தலைவர் வேண்டாம் என மறுத்தும் அவரை மீறி பொட்டு தான் கல்யாணம் செய்து கொண்டார்...அதனால் ஏற்பட்ட்து தான் கருணா மேல் தீராத பகையின் ஆரம்பம்

கருணா சரி,பொட்டு பிழை என்று நான் சொல்ல வரவில்லை...புலிகளின் பிரிவுக்கு கருணா எவ்வளவு காரணமோ அதேயளவு இவரும், இவர்களை போன்ற பலரும் காரணம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.