Jump to content

கம்போடியா பரிசு


Recommended Posts

கம்போடியா பரிசு - சிறுகதை

 
 

தமிழ்மகன் - ஓவியங்கள்: ஸ்யாம்

 

தோளில் பாந்தமாக அழுத்திய அந்த விரல்கள் சரவணனு டையவை என நினைத்தேன். மிக மிருதுவாக அழுத்திய படி இருந்தன அந்த விரல்கள். எதிரில் அமர்ந்திருந்த ரமேஷ் சிரிக்கவேதான் சந்தேகம் வந்தது. கண்களைத் தாழ்த்தி, அழுத்திய அந்த விரல்களைக் கவனித்தேன். இரண்டு கைகளின் விரல்களிலும் செக்கச் சிவப்பாய் நகப்பூச்சு. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். இன்னும் சிவப்பாய் உதட்டுச் சாயம் பூசிய கறுப்பு ஸ்கர்ட் போட்ட ஒரு பெண் நின்றிருந்தாள். மேலும் திடுக்கிட்டு எழுந்து நின்றேன்.

அந்தப் பெண் சிரித்தாள். ``உட்கார்’’ என்றாள் ஆங்கிலத்தில். ராகம்போல இழுத்துப் பேசும் அவளின் உச்சரிப்பு பாணியும், கெஞ்சலான அல்லது கொஞ்சலான குரலும் பதிலுக்குச் சிரிக்கவைத்தன. `சின்னப் பெண். என்ன துணிச்சலில் என்மீது கை வைத்து அழுத்துகிறாள்?’

``நோ’’ என்றேன்.

46p1_1528266378.jpg

அவள் உரிமையோடு என் கையைப் பிடித்து அழுத்தி உட்காரவைத்தாள். நண்பர்கள் அனைவரும் சிரித்தனர். எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. நானும் சிரித்தேன். சிரிப்பதைத் தவிர்த்து வேறு என்ன செய்வது எனத் தெரியவில்லை. நண்பர்களின் ஏற்பாடு இது எனத் தெளிவாகப் புரிந்தது. கம்போடியா வந்து இன்று ஆறாவது நாள். ஆயிரம் வருஷத்து அங்கோர்வாட் தமிழ்க்கோயிலில் ஆரம்பித்து நாம்பென் நகரத்து நவீனயுகம் வரை பார்த்தாயிற்று. நாளை சென்னைக்குக் கிளம்ப வேண்டும். அதற்குள் என்னை வைத்து அவர்களுக்கு ஒரு விளையாட்டு தேவையாக இருக்கிறது.
சரவணன் நெருங்கி வந்து கண் சிமிட்டி, `என்ன சொல்றே?’ என்றான் பார்வையாலேயே நான் ``ஆளை விடுங்கப்பா’’ என எழுந்தேன்.

அந்தப் பெண் என்னைத் தோளில் அழுத்தி, தன்மேல் சாய்த்துக்கொண்டு, ``ஃபிப்தி தாலர்’’ என்றாள். அதிகம் பாலூற்றிய தேநீரின் நிறத்தில் இருந்தாள். மஞ்சளுக்கும் வெண்மைக்கும் இடையில் ஒரு நிறம். லிப்ஸ்டிக் தீட்டிய உதடு. இங்கு எல்லாப் பெண்களுமே தீட்டியிருக்கிறார்கள். உதடும் கண்களும் சேர்ந்து சிரித்தன. நான் அவளைப் பார்க்கிறேன் என்பது தெரிந்ததும் போலீஸுக்கு அளவெடுக்க நிற்பதுபோல சற்றே விறைப்பாக நின்று அவளைச் சரிபார்த்துக்கொண்டாள். மங்கிய வெளிச்சத்தில் கறுப்பு உடையில் அவளுடைய நிறம் மட்டுமே தெரிந்தது. ``ஃபிப்தி தாலர் ஓகே?’’
``என்னம்மா சொல்றே?’’ என்றேன்.

``தமிழ்ல கேட்கிறான் பாரு... ஃபிப்டி டாலர் கேக்கறாப்பா’’ என்ற ரகு, ``ஓகே... ஓகே’’ என்றான் அவளைப் பார்த்து.

``உனக்கு ஓகே-ன்னா நீ கூட்டிட்டுப் போ... என்னை வம்புல மாட்டிவிடாத.’’

``ஒண்ணும் பண்ணிட மாட்டா. பயப்படாமப் போடா.’’

மணி, நள்ளிரவைக் கடந்துவிட்டது. இரவு மையம் கொள்ளக் கொள்ள பெண்கள் அதிகமாக நடமாடுவது தெரிந்தது.

நாம்பென் நகர பார் ஒன்றில் இப்படி என்னை ஏடா கூடமாகச் சிக்கவைக்க, நண்பர்கள் திட்டமிட்ட சம்பவத்தின் பின்னணியில் என்னுடைய டீடோட்டலர் விரதம் முக்கிய காரணமாக இருந்தது. எனக்காக ஒருவர் ஐம்பது டாலரை எடுத்துக் கொடுக்க, ஒருவர் என் அறை எண்ணை அவளிடம் சொல்லி அரை மணி நேரம் கழித்து வரச் சொல்ல, என்னை உடனே மூட்டை கட்டி ரூமுக்குச் சென்று தயாராகச் சொல்ல... எல்லாமே சில விநாடிகளில் நடந்தன.

``உனக்குப் பிடிக்கலைன்னா... மசாஜ் பண்ணச் சொல்லிட்டுப் போகச் சொல்லிடு. புரொஃபஷனல் மசாஜ் டிரெய்னர்ஸ் இவங்கள்லாம்’’ என என் காதருகே கிசுகிசுத்தான் ரகு.

ஒரு மாதிரியாக மனதைத் தேற்றிக்கொண்டு, அறைக்குக் கிளம்பினேன். எங்கள் மூவருக்குமே தனித்தனி அறைகள். அறையில் போய் டிவி போட்டுவிட்டு `கியாமித்தாய்... கிச்சாய்... மியாய்’ என அவர்கள் கெமர் மொழியில் இழுத்து இழுத்துப் பேசும் விவாத நிகழ்ச்சி ஒன்றைச் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். ஜில் ஏசி-யில் சின்னச்சின்ன வியர்வைத் துளிகள் அரும்பிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.

`டிங்... டிங்...’

இதயம் நின்று துடித்தது. மனைவிக்குத் துரோகம், பிறன்மனை நோக்கும் சிற்றாண்மை, பொதுவெளியில் சொல்லத் தயங்கும் செயல் என்ற குற்ற உணர்வு, குறுகுறு எதிர்பார்ப்பு... எல்லாமாக வயிற்றிலிருந்து புறப்பட, எச்சில் விழுங்கி... கதவைத் திறந்தேன்.

அவ்வளவு கிட்டத்தில் வந்து ``ஹாய்...’’ என்றாள். இன்னும் அழகாக மாறியிருந்தாள்.

``ஹாய்!’’

பெர்ஃப்யூம் வாசனை.  கட்டிலின் மேல் துள்ளி அமர்ந்து குஷன் அதிர்வில் அப்படியே மகிழ்ந்து ஆடினாள். வாட்சைக் கழற்றி போன் அருகே வைத்தாள்.

``இரவில் இந்த பாரில்தான் தங்குவியா?’’

``இல்லை... தினமும் என் வீட்டுக்குப் போயிடுவேன்.’’

46p2_1528266397.jpg

``வீடு எங்கே?’’ - இது தேவையற்ற கேள்வி. எனக்கு, நான் இருக்கும் ஹோட்டலின் பக்கத்துத் தெருவில் விட்டாலே திரும்பி வருவதற்கு வழி தெரியாது.

ஆனால், அவள் பதில் சொன்னாள். ``இங்கிருந்து 15 கிலோமீட்டர். ஒரு கிராமம். எங்கள் ஊரிலிருந்து நான்கு பேர், இங்கு உள்ள பார்களில் வேலைசெய்கிறோம்.’’

தேவையில்லாத... தேவைக்கு அதிகமான விளக்கம். பேச்சு போதும்போல இருந்தது. அவளுக்கும் அப்படி இருந்திருக்க வேண்டும்.

``குளித்துவிட்டு வந்துவிடட்டுமா?’’ என்றாள்.

``நிச்சயமாக.’’

சரக்கென ஜிப்பை இழுத்து அவளுடைய மேலாடையை அகற்றினாள். பதறிப்போய் ஓடி அறைக் கதவைச் சாத்தினேன். அதுவரை அது திறந்தே கிடந்தது. அவள் சிரித்தாள். ஸ்கர்ட்டைக் கழற்றினாள். இரட்டை ஆடையில் மேலும் வெள்ளை வெளேர் எனத் தெரிந்தாள். குளியல் அறைக் கதவைத் திறந்து வழிகாட்டினேன். கழற்றிய இரண்டு துணி வகையறாவையும் தோளில் போட்டுக்கொண்டு லேசாக உரசியபடி உள்ளே சென்றாள்.

``நீ குளிக்கவில்லையா?’’ என்றாள்.

``அப்பவே குளிச்சுட்டேன்.’’ தமிழில்தான் சொல்ல வந்தது. அவள் புரிந்துகொண்டு, கதவைச் சாத்திக்கொண்டாள். ஷவர் சத்தம் கேட்டது. இதுதான் தருணம் என வெளியில் ஓடி, பாரில் கிண்டலடித்து உட்கார்ந்திருக்கும் நண்பர்களுடன் ஐக்கியமாகிவிடலாமா என நினைத்தபோது, அவள் வெள்ளை டர்க்கி டவலை நடுவாகக் குறுக்கில் கட்டிக்கொண்டு வெளியே வந்தாள்.

``நான் தயார்.’’

அருகே வந்து அணைக்க நினைத்தவள், இன்னொரு கையால் பாத்ரூம் கதவை இழுத்து அறைந்து சாத்தினாள். `க்ளுக்’ என ஒரு சத்தம் கேட்டது. அது, சாத்திய கதவிலிருந்து வந்தது.

கண்களை அழகாக உருட்டி... `என்ன சத்தம்?’ என்பதாகப் பார்வையால் கேட்டாள். நான் முன்வந்து கதவை ஒருமுறை தள்ளித் திறக்கப் பார்த்தேன். திறக்கவில்லை. அவளும் நான் என்ன செய்கிறேன் என்பதைக் கவனிக்க ஆரம்பித்தாள். குளியல் அறையைத் திறப்பதற்கான குமிழைத் திருகித் திறக்க முயன்றேன். அது அசையவில்லை. அவளும் சேர்ந்து என் கையோடு சேர்த்து குமிழைத் திறக்க எத்தனித்தாள். உட்பக்கம் தாழிட்டுக்கொண்டது தெரிந்தது.

மூர்க்கமாக இரண்டு மூன்று முறை இழுத்தும் திருகியும் பார்த்தாள். நான் மெள்ள என் கைகளை எடுத்துக்கொண்டேன்.

``ஏன் திறக்கவில்லை?’’ என்றாள்.

``உள் பக்கம் பூட்டிக்கொண்டுவிட்டது’’ சைகையும் ஆங்கிலமுமாகச் சொன்னேன்.

``என் டிரெஸ் எல்லாம் உள்ளே இருக்கிறது’’ அவள் கண்கள் பதறுவதைப் பார்த்தேன்.

கடிகாரத்தைப் பார்த்தேன். இரவு 1:50.

46p3_1528266419.jpg

ஒரு திருப்புளி இருந்தால் தாழ்ப்பாள் இருக்கும் இடத்துக்குள் விட்டு நெம்பிப் பார்க்கலாம். பாக்கெட்டில் இருந்த பால்பாயின்ட் பேனாவால் ஏதாவது செய்ய முடியுமா என நம்பிக்கையில்லாமல் முயன்றேன்.

``திறக்கவில்லையா?...’’ என்றது அவளுடைய பெருமூச்சுடன் வந்த குரல்.

உள்ளே சென்று வேறு உபகரணங்கள் கிடைக்குமா எனப் பார்த்தேன். கப், டிஷ்யூ பேப்பரில் சுற்றிய கண்ணாடி டம்ளர், சர்க்கரை நிரப்பிய சாஷே, ஸ்பூன்.

ஸ்பூனை எடுத்துக்கொண்டு கதவு அருகே வந்தேன். அது உள்ளே செல்ல வழியில்லை. அதை வைத்து இப்படியும் அப்படியும் குத்திப்பார்த்தேன். அவள் ஏதோ அமானுஷ்யம் நிகழ்த்திக்காட்டுவேன் என, விழி பிரமித்துக் காத்திருந்தாள். அவள் பார்ப்பதை நானும் பார்த்தேன்.

``ப்ளீஸ்!’’ என்றாள்.

டெலிபோன் அருகே சென்று அதில் ஒட்டப்பட்டிருந்த அவசர சேவைக்கான எண்களைப் பார்த்தேன். ரூம் சர்வீஸ் - ஒன்று பூஜ்ஜியம் பூஜ்ஜியம்.

வெகுநேரம் அடித்தது. நம்பிக்கையிழந்த நேரத்தில் ஒருவன் எடுத்தான். `கிய்ய முய்ய’ என என்னவோ சொன்னான். அந்தப் பெண்ணிடமே கொடுத்து விளக்கச் சொன்னேன்.

அவள் வாங்கிப் பேசினாள். ஏமாற்றத்துடன் போனை வைத்தாள். ``காலை 10 மணிக்குதான் கார்ப்பென்டர் வருவாராம்.’’

``என் சட்டையையும் ஷார்ட்ஸையும் போட்டுக் கொண்டு போய்விடு... நாளைக்கு உன் ஆடைகளை எடுத்துவந்து அந்த பாரில் கொடுத்து விடுகிறேன்.’’

நல்ல யோசனைபோல முகத்தில் ஒரு மலர்ச்சி ஏற்பட்டு அடுத்த விநாடியே மறைந்து விட்டது. ``இல்லை... அம்மா திட்டுவார். நான் இப்படிச் செய்வது வீட்டில் தெரியாது.’’

``எப்படிச் செய்வது?’’

``பாரில் வேலை செய்வதற்கு மட்டும்தான் அனுமதி. 3 மணிக்கு பார் மூடிவிடுவார்கள். எங்களை எங்கள் கிராமத்துக்கு அழைத்துச் செல்ல டுக் டுக் வந்துவிடும்.’’

டுக் டுக் என்பது, நம் ஊர் ஆட்டோ போன்ற ஒரு வாகனம். கடிகாரத்தைப் பார்த்தாள். 2:20.

அவளுக்கு அழுகை வந்தது. எந்த உணர்ச்சியும் இல்லாமல் கண்ணில் மட்டும் நீர் கொட்டிக்கொண்டிருந்தது. ``அழாதே’’ என்றேன். துடைத்துவிட நினைத்து தைரியம் இல்லாமல் தவிர்த்துவிட்டேன்.

முதலில் அவள் பதற்றத்தைப் போக்க வேண்டும். வென்டிலேஷனுக்காக மேலே சிறிய திறப்பு இருந்தது. ஸ்டூலை இழுத்துப் போட்டு அதன் வழியாக எட்டிப்பார்த்தேன். அந்தவழி, கண்ணாடிப் பட்டைகளால் ஏணிபோல வரிசையாக அடுக்கி மூடப்பட்டிருந்தது. ஆனால், அதை உள்பக்கம் இருந்துதான் ஒவ்வொன்றாக எடுக்க முடியும். உடைத்து அகற்றலாம். ஆனால், அதன் வழியாக உள்ளே செல்ல முடியுமா எனத் தெரியவில்லை. கையில் கைக்குட்டையை நன்றாகச் சுற்றிக்கொண்டு ஒரு குத்து விட்டேன். கண்ணாடிச் சில்லுகளை அகற்றிவிட்டு, தலையை மெள்ள உள்ளே நுழைக்க முயன்றேன். காது வரை மட்டுமே உள்ளே போனது. தலையை பத்திரமாக வெளியே எடுத்தேன்.

46p4_1528266439.jpg

``உள்ளே தாழ்ப்பாள் எதுவும் இல்லை. இது எலெக்ட்ரானிக் தாழ்ப்பாள்போல் இருக்கிறது.’’

அவளுக்குப் புரியவில்லை. ``என்னால் போக முடிகிறதா பார்க்கிறேன்’’ என்ற அவள் என்னைக் கீழே இறங்கச் சொன்னாள். இறங்கி, அவள் ஸ்டூலில் ஏறுவதற்கு உதவினேன். அவளுக்கு அந்த வென்டிலேஷன் எட்டவில்லை. ``கொஞ்சம் தூக்கிவிடுங்கள்.’’

அவளுடைய கால்களைப் பிடித்துத் தூக்கினேன். எதிர்பாராத விதமாக அந்த டர்க்கி டவல் அவிழ்ந்து என் மேல் விழுந்தது. அவள் பதறி, கீழே குதித்து டவலை வாங்கிக் கட்டிக்கொண்டாள். ``சிறிய வழி. அதற்குள் போக முடியாது.’’

சம்பந்தமில்லாமல் அந்த வழியையும் தாழ்ப்பாளையும் பார்த்தேன். ``நேரமாகிவிட்டது. வண்டி வந்துவிடும்.’’

தோள்பட்டையால் மோதி கதவை உடைத்துத் திறக்கும் கதாநாயக உத்திகள் எடுபடவில்லை. கெட்டியான மரக்கதவு அது. இரண்டு அங்குல தடிமன் இருக்கலாம். கம்போடியாவில் மரத்துக்குப் பஞ்சமில்லை. கொத்தி, இடித்து, உடைத்து, நெம்பி என இருக்கும் வாய்ப்புகள் எதுவுமே சரியாக வராது என நன்றாகத் தெரிந்தது. 3 மணிக்கு இன்னும் 10 நிமிடங்களே இருந்தன.

எல்லாமே எலெக்ட்ரானிக்ஸ். கதவைத் திறக்க ஒரு காந்த அட்டை கொடுத்திருந்தார்கள். அதைக் காட்டினால்தான் வெளிக்கதவு திறக்கும். அதை உள்ளே சுவரோடு பிணைத்த காந்தப் படிப்பானில் செருகினால்தான் மின் இணைப்பு கிடைக்கும். சிறு யோசனை. அந்தக் காந்தத் தகட்டை எடுத்தேன். ஒரு நிமிடத்தில் விளக்குகள் அனைத்தும் அணைந்தன. அவள் அருகில் நிற்கிறாள். வாசனையும் மூச்சும். ``என்ன?’’ என்றாள் ராகமாக.

மீண்டும் அந்தத் தகட்டைச் செருகினேன். விளக்குகள் எரிந்தன. ஏசி மோட்டார் சத்தம். நான் மெள்ள பாத்ரூம் கதவைத் திறந்து பார்த்தேன். சரக்... திறந்துகொண்டது. அவளுக்கு ஆச்சர்யம் தாளவில்லை. வேகமாக உள்ளே நுழைந்து ஆடைகளை அணிந்தாள். சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி 3 ஆக 5 நிமிடம் இருந்தது.

``ஸோம் ஆர்குன்!’’

நன்றி சொல்கிறாள்.

வெளியே செல்ல நினைத்தவள், ``ஓ... நீ இன்னும் எதுவும் செய்யவில்லையே!’’ என நின்றாள்.

``பரவாயில்லை. உனக்கு நேரமாகிவிட்டது.’’

``வெரி ஸாரி... இந்தா உன் நண்பர் கொடுத்த பணம்.’’

50 டாலரில் 10 டாலர் மட்டும் எடுத்துக்கொண்டாள். ``இந்த `10 டாலரை என் பார் முதலாளிக்குக் கொடுக்க வேண்டும். அது முறை.’’

``பரவாயில்லை. 50 டாலரையும் வைத்துக்கொள்.’’

``எதற்கு?’’

``உன் செலவுக்கு.’’

``வேண்டாம்.’’

``பிரச்னையில்லை.’’

வாங்கிக்கொண்டாள். ``நாளைக்கும் இருப்பீர்களா?’’

``இல்லை. காலை 10 மணிக்குக் கிளம்பிவிடுவோம்.’’

சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தாள். இன்னும் ஒரு நிமிடத்தில் என்ன செய்துவிட முடியும்?

இறுகக் கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்தாள். அவள் கண்கள் நீர் துளிப்பதற்கு முன்பான சிவப்பில் மாறியிருந்தன. நன்றி, அன்பு, இயலாமை, மன்னிப்பு எல்லாம் கலந்திருந்த முகம்.

``என் பெயர் நவி. மீண்டும் எப்போது வருவீர்கள்?’’

``தெரியாது.’’

லிஃப்டுக்குள் பட்டனை அழுத்திவிட்டுக் காத்திருந்தாள். புன்னகைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தேன். லிஃப்ட் அவளைக் கவ்விய நேரத்தில், சிறிய இடைவெளியில் மலர்ச்சியுடன் ``ஐ லவ் யூ’’ என்றாள். நானும் சொல்லலாம் என நினைத்தபோது மூடிக்கொண்டது.

கதவைச் சாத்திக்கொண்டு உள்ளே வந்தேன். அவளுடைய வாட்ச் டெலிபோன் அருகே இருந்தது. அடடா... எங்கோ ஒரு டுக் டுக் கிளம்பும் சத்தம் கேட்டது. அவளும் அவள் தோழிகளும் அவர்களின் கிராமத்துக்குச் செல்லும் அந்த வாகனமாக இருக்கலாம். பால்கனி வழியாகப் பார்த்தேன். மீகாங் ஆறு, நாம் பென் நகரத்தின் வண்ண விளக்குகளில் ஜாலம் காட்டியது. சில்லென்ற காற்று. பெண்களால் ஆன நகரம். கடைகளில், ஹோட்டலில், படகில், பாரில்... எங்குமே பெண்கள். விவசாயம், டிரைவிங் என ஆண்களின் அடையாளங்கள் பெண்களுக்குப் பின்னால் பதுங்கியிருந்தன.

திடீரென்று போன் ஒலித்தது. மனைவி. `இந்தியாவில் இப்போது என்ன நேரம்?’

``என்னங்க... சாப்பிட்டீங்களா?’’

``பொழுது விடியப்போகுது...’’

``ஓ... அங்க என்ன டைம்?’’

``மூணு.’’

``இங்க ஒன்றரை. திடீர்னு ஒரு கெட்ட கனவு...’’

``ஒண்ணுமில்ல... தைரியமாத் தூங்கு. நாளைக்கு வந்துடுவேன்.’’

``எனக்கு என்ன வாங்கிட்டு வர்றீங்க?’’

குறிப்பாக அவளுக்கென்று எதுவும் வாங்கவில்லை. காலையில் வாங்குவதற்கும் நேரம் இருக்காது.

``வாட்ச்!’’ என்றேன் அவசரமாக.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
    • 39 சீட்டில் 49 இடத்தில் நாம் தமிழர் வெல்லவேண்டியது. அநியாயமாக சின்னத்தை மாத்தி அத்தனை தொகுதியையும் இழக்க வைத்துள்ளார்கள். திமுக 39 தொகுதியிலும் டிபாசிட் இழக்கும் என நினைக்கிறேன். மார்க்கம், டொரெண்டோ கிழக்கு, ஈஸ்ட்ஹாம், பிரெண்ட் நோர்த், பெர்லின் மத்தி தொகுதிகளில் நாம் தமிழர் முன்னிலையில் என சொல்கிறன கருத்து கணிப்புகள்.   சின்னக் கருணாநிதி. #அன்றே #சொன்னார் #கோஷான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.