Jump to content

இலங்கை வானொலி- கே.எஸ்.ராஜா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வானொலி- கே.எஸ்.ராஜா

 

imageproxy

அன்புள்ள ஜெ.,

நீங்கள் இலங்கை சென்றிருக்கிறீர்களா? இந்த பதிவு இலங்கை சம்பந்தப்பட்டது.

சென்னைத் தொலைக்காட்சியின் கொடைக்கானல் ஒளிபரப்பு 1987-ல் தொடங்கப்பட்டது. அப்போது ஊருக்கு நான்கு வீடுகளில் டிவி இருந்தால் அதிசயம். பஞ்சாயத்து போர்டில் டிவி பார்க்க மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். 1987 உலகக்கோப்பையில் மரடோனாவின் சாகசங்களைப் பஞ்சாயத்து போர்டில் பார்த்தது ஞாபகம் இருக்கிறது. 1987க்கு முன்பு மக்களுக்கு ஒரே பொழுதுபோக்கு வானொலி மட்டுமே. அதிலும் சிலோன் ரேடியோ என்று அன்போடு மக்களால் அழைக்கப்பட்ட இலங்கை வானொலி அளித்த பொழுதுபோக்கு இன்பத்தை என்றென்றும் மறக்க முடியாது. குறிப்பாக 1975-85 இடையேயான காலகட்டம் அப்போது பதின் வயதில் இருந்தவர்கள் மறக்க முடியாதவை.

சினிமாப் பாடல்களை இத்தனை விதமாய் வழங்க முடியுமா? நெஞ்சில் நிறைந்தவை, பொங்கும் பூம்புனல் – மாலை 5 மணிக்கு – இந்த நிகழ்ச்சியின் தொடக்க இசை மறக்க முடியாதது, நேயர் விருப்பம் – சங்களா மங்களா என்ற பெயர் அடிக்கடி வரும், ஒரு படப்பாடல்கள், பாட்டும் பதமும், இசையும் கதையும், இந்திப்பாடல்கள் – மதியம் 1.30-க்கு, விவசாயிகள் விருப்பம். சனி மற்றும் ஞாயிறுகளில் “திரை விருந்து” – பாசமலர் அடிக்கடி ஒலிபரப்புவார்கள் – பெண்கள் விசும்பி விசும்பி அழுது கொண்டிருப்பார்கள், பார்த்திருக்கிறேன். நல்ல தமிழ் கேட்போம் நிகழ்ச்சியில் அநேகமாக சிவாஜியின் பழைய படத்திலிருந்து எதாவது ஒலிச்சித்திரம் இருக்கும். ஜெமினி கணேசன் பாட்டு வாத்தியாராக நடிக்கும் ஒரு ஒலிச்சித்திரம் மிகவும் பிரபலம்.அடிக்கடி ஒலி பரப்புவார்கள். படம் ஞாபகமில்லை. சாயங்காலம் 5.30-க்கு “பிறந்தநாள் இன்று பிறந்தநாள். நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்” என்று டி.எம்.எஸ் ஆரம்பித்து விடுவார் – அதாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிகழ்ச்சி. காலையில் சிறிதுநேரம் பக்திப் பாடல்கள். இரவில் கொஞ்சம் கர்நாடக இசை. இரவு 9 மணிக்கு “இரவின் மடியி-லோடு தூங்க வைப்பார்கள். நடு நடுவே விளம்பரங்கள், மரண அறிவித்தல்கள், செய்திகள், பொப்பிசைப் பாடல்கள். தேர்ந்தெடுத்த பாடல்கள். மிகப் பழைய பாடல் கூட ஒலிபரப்புவார்கள். A.M. ராஜா, ஜிக்கி பாடல்கள் நிறைய போடுவார்கள். என்னுடைய வயது நாற்பத்தியொன்பது. நான் 40 மற்றும் 50களில் வெளிவந்த பாடல்களையும் பாடிக்கொண்டிருக்கிறேன் என்றால் ஒரே காரணம் இலங்கை வானொலிதான்.

அவர்கள் ஒலிபரப்பும் சில பாடல்கள் நம்முடைய வானொலி நிலையங்களில் நாம் கேட்கக் கிடைக்காதவை “தசரதனுக்கு ஒன்பது பெண்கள்” “அக்ரஹாரத்தில் கழுதை” “புதுச்செருப்பு கடிக்கும்” போன்ற வெளிவராத படங்களில் இருந்து. “புத்தம் புது காலை…” (அலைகள் ஓய்வதில்லை) “தூரத்தில் நான் கண்ட உன் முகம்…”(நிழல்கள்), “மஞ்சள் வெயில்..மாலையிட்ட பூவே..” (நண்டு) போன்ற படங்களில் இல்லாத, படமாக்கப்படாத பாடல்களை முதன் முதலில் இலங்கை வானொலியில் தான் கேட்டேன். மலேசியா வாசுதேவன் பாடிய “ஒரு மூடன் கதை சொன்னான்.. ” (நெஞ்சில் ஆடும் பூ ஒன்று), பட்டுல சேலை…(பண்ணைப்புரத்து பாண்டவர்கள்) அநேகமாக தினமும் ஒரு முறையாவது போட்டு விடுவார்கள். இன்று ஒரு படத்தை பார்க்கிற பரபரப்பு அன்று ஒரு பாடலைக் கேட்பதில் இருக்கும் – நிகழ்ச்சி அறிவிப்பாளர்களின் பங்களிப்பு அந்த அளவிற்கு இருக்கும். மயில்வாகனம் சர்வானந்தா, சாய் விதூஷா, ஜெயகிருஷ்ணா, கே எஸ் ராஜா (இனக்கலவரத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்), ராஜேஸ்வரி ஷண்முகம், அப்துல் ஹமீத் – மறக்கக் கூடிய பெயர்களா அவை. இன்று இவர்களை ஞாபகப்படுத்த சூரியன் பண்பலையில் யாழ் சுதாகர் இருக்கிறார்.

கூகுளின் உபயத்தில் “பொங்கும் பூம்புனலின்” தொடக்க இசையை மறுபடி கேட்டபோது நனவு மறைந்தது காலம் உறைந்தது. இசை முடிந்தவுடன் “அந்த நாள் போனதம்மா… ஆனந்தம் போனதம்மா…” என்ற டி எம் எஸின் பாடல் தான் நினைவுக்கு வந்தது.

பொங்கும் பூம்புனல் தொடக்க இசை

 

 

 

மறக்க முடியாத சில பாடல்கள்

 

அன்புள்ள

கிருஷ்ணன் சங்கரன்.

***

 

 

அன்புள்ள கிருஷ்ணன்

உங்கள் கடிதம் வழியாக இணையத்தில் கே.எஸ்.ராஜாவின் குரலைச் சென்றடைந்தேன். என் வயதை ஒட்டியவர்களுக்கு அக்குரலின் கம்பீரமும் விரைவும் ஒரு பெரிய கனவை விதைப்பவை. அவருடைய வானொலி அறிவிப்பு அக்காலகட்டத்தின் முதன்மையான அடையாளத்தில் ஒன்று.

என் இளமையில் ரேடியோ அவ்வளவாக கிடையாது. மர்ஃபி வால்வ் ரேடியோதான். பெரிய தேக்குபெட்டியில் பச்சை ஒளிப்பரப்புடன் பொன்னிற திருகு குமிழ்களுடன் நவீனத் தொழில்நுட்பத்தின் காட்சி அடையாளமாக வீடுகளில் உயரமாக அமைக்கப்பட்ட பீடங்களில் அமர்ந்திருக்கும். ஒலிக்காதபோது மஞ்சள், நீலம், சிவப்பு நிறங்களில் வெல்வெட் திரைபோட்டு மூடி வைத்திருப்பார்கள். அப்பாக்களோ மூத்த அண்ணன்களோதான் தொடமுடியும். அக்காக்கள் கெஞ்சிக்கேட்டுத்தான் அதை போட்டு கேட்கவேண்டும்.

குமரிமாவட்ட்த்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தெளிவாகவே எடுக்கும். நெல்லையும் திருவனந்தபுரமும் அதற்கு அடுத்தபடியாகத்தான். திருச்சியும் மதுரையும் கரகரக்கும். ஆகவே தமிழிசை என்றால் இலங்கை வானொலிதான். அன்றெல்லாம் படிப்பு முடித்து திருமணத்திற்குக் காத்திருக்கும் அக்காக்களின் உலகமே வானொலிதான். திரைப்படப் பாடல்கள், திரைப்பட ஒலிச்சித்திரங்கள், வானொலி நாடகங்கள் என அதிலேயே வாழ்வார்கள். மர்ஃபி வானொலிக்கு வலை போன்ற அதிர்வுவாங்கி தேவை. அதை வீட்டிலிருந்து அருகே உள்ள தென்னை மரம் வரை இழுத்துக் கட்டி வைப்போம். அப்படியும் மழைநாட்களில் கரகரப்புதான் மைய ஒலியொழுக்காக இருக்கும். பயிற்சி ஏட்டில் கோடுமீது எழுத்துக்கள் போல கரகரப்பின்மேல் பாடல்கள், பேச்சுக்கள்.

எழுபதுகளில்தான் டிரான்ஸிஸ்டர் ரேடியோ பிரபலமாக ஆரம்பித்த்து. வால்வ் ரேடியோக்களின் கரகரப்பு மறைந்த்து. வானொலியை குழந்தைபோல அருகே வைத்துக்கொண்டு அக்காக்கள் இரவு துயில்கொண்டார்கள். மானசீக்க் காதலனைப்போல அது அவர்களை கொஞ்சிக்கொண்டே இருந்த்து. அதிலிருந்து கே.எஸ்.ராஜாவின் குரல், ஆண்மையின் சின்னம் அது. அவர்களில் அது எழுப்பிய கனவுகளை என்னால் இன்று ஊகிக்க முடிகிறது. சைக்கிள் சர்க்கஸ்கள், கிராமத்திருவிழாக்களில் கே.எஸ்.ராஜாவை குரல்போலி செய்யும் உள்ளூர் அண்ணன்கள் கே.எஸ்.ராஜாவின் புகழின் ஒரு பகுதியை தாங்களும் பெற்று காதலிகளை வென்றனர்.

கே.எஸ்.ராஜாவின் வாழ்க்கையைப்பற்றி குறைவாகவே இணையத்தில் உள்ளது. இலங்கை ஒலிபரப்புநிலைய ஊழியராக இருந்த கனகரத்தினம் ஸ்ரீஸ்கந்தராஜா யாழ்ப்பாணம் காரைநகரில் பிறந்தார். தந்தை மருத்துவர். தாயார் ஆசிரியை. நான்கு தமக்கையரும் மருத்துவர்கள். 1966ல் கொழும்பு ராயல் கல்லூரியில் பள்ளிப்படிப்பை முடித்தார். இலங்கைப்பற்கலைக் கழகத்திலும் பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்திலும். கணிதம் மற்றும் வேதியியலில் பட்டம் பெற்றார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் விரிவுரையாளராகப் பணியாற்றிய பின்னர் இலங்கை வானொலியில் பணியில் சேர்ந்தார்.

1983ல் இலங்கையில் இனக்கலவரம் ஆரம்பித்தபோது ராஜா தமிழகத்திற்குச் சென்றார். அங்கே தமிழர்ஒற்றுமை சார்ந்த சில பாடல்களை ஒலிபரப்பியமையால் அவரை தமிழர் சிலரே காட்டிக்கொடுத்த்தாகவும், இலங்கை ராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டமையால் தமிழகத்திற்கு வந்த்தாகவும் அவர் விகடனுக்கு அளித்த பேட்டியில் சொன்னார். தமிழகத்தில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள் போன்றவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புடன் இணைந்து செயல்பட்டார். ஆனால் அவருக்கு பெரிய அளவில் அரசியல் ஈடுபாடு இருக்கவில்லை. எதனுடனும் இணைந்து அவர் செயல்படவுமில்லை. அனைத்து இயக்கங்களும் ஒன்றுபடவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். அதையும் விகடன் பேட்டியில் சொல்கிறார்

1987ல் இந்தியா இலங்கை அமைதி ஒப்பந்தம் உருவானது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் இந்தியச் சார்புகொண்ட அமைப்பாதலால் இந்திய ஆதரவுடன் அது இலங்கையில் வேரூன்றியது. ராஜா இலங்கை திரும்பி வானொலி அறிவிப்பு வேலைக்கு மீண்டும் சேர்ந்தார். அவரை எவரோ கடத்தி கொன்று கொழும்பு கடற்கரையில் வீசிவிட்டுச் சென்றனர். அவருடைய கொலை விடுதலைப்புலிகளால் செய்யப்பட்டது என்றே பரவலாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் அன்று ஈபிஆர்எல்எஃப் அமைப்பின் முதன்மை எதிரியாக இருந்த்து புலிகள் அமைப்பே. ஆனால் டக்ளஸ் தேவானந்தாவால் நடத்தப்பட்ட அரசு ஆதரவு அமைப்பான ஈழ மக்கள் ஜனநாயக்க் கட்சியினரால் கொல்லப்பட்ட்தாக அக்கட்சியிலிருந்து வெளியேறிய டி.மதிவாணன் என்பவர் சொன்னதாக அனைத்து ஊடகங்களிலும் இப்போது செய்தி தொடர்ச்சியாகப் பதிவுசெய்யப்படுகிறது.டக்ளஸ் தேவானந்தாவின் அமைப்பு ஏன் கே.எஸ்.ராஜாவைக் கொல்லவேண்டும் என்ற கேள்விக்கு மறுமொழி இல்லை. உண்மையை இன்று உணர்வது மிகடினம்.

கே.எஸ்.ராஜா இலங்கைக்குத் திரும்பி மீண்டும் வானொலியில் வேலைசெய்யவேண்டும் என்பதை மட்டுமே தன் ஆசையாக விகடன் பேட்டியில் சொல்கிறார். அது எளிய கலைஞனின் ஆசை. அரசியல் இரும்புச்சக்கரம் கொண்ட வாகனம். அது மென்மையான நத்தைகளைத்தான் அரைத்துச்செல்கிறது. கலைஞர்கள் ஓடில்லாத நத்தைகள்.

ஜெ

***

ksராஜா-பற்றிய-ஒரு-குறிப்பு-பழைய-விகடனில்-இருந்து

 

https://www.jeyamohan.in/110424#.Wy8ZdBbTVR4

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ஜெயமோகன் தளத்தில் உள்ள இந்தச் சுட்டி யாழ்களத்தில் ஒட்டப்பட்ட பழைய பதிவைத்தான் காட்டுகின்றது. கூகிள் ஆண்டவர் யாழ் களத்தில் உள்ள பொக்கிஷங்களை மேலே தள்ளிவிடுகின்றாராக்கும்?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, கிருபன் said:

....

என் இளமையில் ரேடியோ அவ்வளவாக கிடையாது. மர்ஃபி வால்வ் ரேடியோதான். பெரிய தேக்குபெட்டியில் பச்சை ஒளிப்பரப்புடன் பொன்னிற திருகு குமிழ்களுடன் நவீனத் தொழில்நுட்பத்தின் காட்சி அடையாளமாக வீடுகளில் உயரமாக அமைக்கப்பட்ட பீடங்களில் அமர்ந்திருக்கும். ஒலிக்காதபோது மஞ்சள், நீலம், சிவப்பு நிறங்களில் வெல்வெட் திரைபோட்டு மூடி வைத்திருப்பார்கள். அப்பாக்களோ மூத்த அண்ணன்களோதான் தொடமுடியும். அக்காக்கள் கெஞ்சிக்கேட்டுத்தான் அதை போட்டு கேட்கவேண்டும்.

குமரிமாவட்டத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தெளிவாகவே எடுக்கும். நெல்லையும் திருவனந்தபுரமும் அதற்கு அடுத்தபடியாகத்தான். திருச்சியும் மதுரையும் கரகரக்கும். ஆகவே தமிழிசை என்றால் இலங்கை வானொலிதான். அன்றெல்லாம் படிப்பு முடித்து திருமணத்திற்குக் காத்திருக்கும் அக்காக்களின் உலகமே வானொலிதான். திரைப்படப் பாடல்கள், திரைப்பட ஒலிச்சித்திரங்கள், வானொலி நாடகங்கள் என அதிலேயே வாழ்வார்கள். மர்ஃபி வானொலிக்கு வலை போன்ற அதிர்வுவாங்கி தேவை. அதை வீட்டிலிருந்து அருகே உள்ள தென்னை மரம் வரை இழுத்துக் கட்டி வைப்போம். அப்படியும் மழைநாட்களில் கரகரப்புதான் மைய ஒலியொழுக்காக இருக்கும். பயிற்சி ஏட்டில் கோடுமீது எழுத்துக்கள் போல கரகரப்பின்மேல் பாடல்கள், பேச்சுக்கள்.

எழுபதுகளில்தான் டிரான்ஸிஸ்டர் ரேடியோ பிரபலமாக ஆரம்பித்த்து. வால்வ் ரேடியோக்களின் கரகரப்பு மறைந்த்து. வானொலியை குழந்தைபோல அருகே வைத்துக்கொண்டு அக்காக்கள் இரவு துயில்கொண்டார்கள். மானசீக்க் காதலனைப்போல அது அவர்களை கொஞ்சிக்கொண்டே இருந்த்து.

....

https://www.jeyamohan.in/110424#.Wy8ZdBbTVR4

இலங்கை வானொலி இரண்டு மத்திய அலைவரிசைகளில் ஒலிபரப்பியதாக ஞாபகம் இருக்கிறது. ஒன்று மண்டைத் தீவிலிருந்தும், மற்றொன்று கொழும்பிலிருந்தும் என நினைக்கிறேன்.

இலங்கை வானொலி நிகழ்ச்சிகளை வட தமிழ்நாட்டின் கடலூர் வரை கேட்டுள்ளேன்.. கால நிலையைப் பொறுத்து சில நேரம் ஒலி இழுக்கும்.

எங்களுக்கு சிலோனை அறிமுகப்படுத்தியதே இலங்கை வானொலிதான். அதன் மூலமே ஈழத்தமிழை, ஈழத்தமிழரை நாங்கள் அறிந்தோம். ஒருநாள் இலங்கை வானொலி ஒலிபரப்பு நின்றுவிட்டால் எங்களின் அவயங்களில் ஒன்றை இழந்தது போலவே இருக்கும். 'அகில கிந்திய ரேடியோ'க்களை நாங்கள் அடியோடு வெறுத்து ஒதுக்கவும் இலங்கை வானொலிதான் காரணம்.

பேச்சுவழக்கில் பல தூய தமிழ் சொற்களை பயன்படுத்த இலங்கை வானொலியே எங்களுக்கு பழக்கப்படுத்தியது..(அம்மம்மா.. அப்பப்பா.. இன்னும் பல..). மிகச் சரளமாக தூய தமிழால் ஈழத்தமிழர்கள் உரையாடும்பொழுது சில சமயம் பொறாமையாகவும், நாமும் அவ்வாறு பழகவில்லையே என்ற ஏக்கமும் இருக்கும்.

சிறுவயதில் எங்கள் வீட்டிலிருந்த பிலிப்ஸ் வால்வு ரேடியோ, பிலிப்ஸ் பகதூர் டிரான்ஸிஸ்டர் போன்றவற்றை அருகிலேயே வைத்துக்கொண்டு நான் தூங்குவது வழக்கம்.

மாலை 05:58க்கு தமிழ்ச்சேவை இரண்டின் அன்றைய நிகழ்ச்சிகள் நிறைவு பெறும்.. அதுவரை கிராமத்தின் அனைத்து வீடுகள், டீக்கடைகளில் சத்தமாக ஒலித்துக்கொண்டிருந்த இலங்கை வானொலி பாடல்கள் நின்றதும் ஊரே நிசப்தமாகிவிடும்.

அன்றைய அடுத்த பொழுது போக்கு ஊரின் எல்லையிலுள்ள டூரிங் டாக்கீஸ்தான்.

இலங்கை வானொலி மட்டும் இல்லையென்றால், தமிழகத்துடனான ஈழத்தமிழர்களின் உறவுப்பாலம் இவ்வளவு நெருக்கமாக இருந்திராது. இன்றும் நான் யாழை, ஈழத்தை நேசிப்பதற்கு இலங்கை வானொலி இட்ட அடித்தளமே காரணம்.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கே.எஸ்.ராஜா அற்புதமான அறிவிப்பாளர்.

வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிகளுக்கு முன்னால் மக்களை கட்டிப் போட்ட அழகான, வேகமான, துல்லியமான குரலுக்கு சொந்தமானவர்.

E6995_F28-5_B01-4_C04-9069-84_E029_A6_B9

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வரைந்த இந்தச் சிரிப்பு மிகவும் நன்றாக வந்துள்ளது கவி அருணாசலம் ஐயா! விரைவாகவும் வரைந்தமைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ராசவன்னியன் said:

இலங்கை வானொலி இரண்டு மத்திய அலைவரிசைகளில் ஒலிபரப்பியதாக ஞாபகம் இருக்கிறது. ஒன்று மண்டைத் தீவிலிருந்தும், மற்றொன்று கொழும்பிலிருந்தும் என நினைக்கிறேன்.

இலங்கை வானொலி நிகழ்ச்சிகளை வட தமிழ்நாட்டின் கடலூர் வரை கேட்டுள்ளேன்.. கால நிலையைப் பொறுத்து சில நேரம் ஒலி இழுக்கும்.

எங்களுக்கு சிலோனை அறிமுகப்படுத்தியதே இலங்கை வானொலிதான். அதன் மூலமே ஈழத்தமிழை, ஈழத்தமிழரை நாங்கள் அறிந்தோம். ஒருநாள் இலங்கை வானொலி ஒலிபரப்பு நின்றுவிட்டால் எங்களின் அவயங்களில் ஒன்றை இழந்தது போலவே இருக்கும். 'அகில கிந்திய ரேடியோ'க்களை நாங்கள் அடியோடு வெறுத்து ஒதுக்கவும் இலங்கை வானொலிதான் காரணம்.

பேச்சுவழக்கில் பல தூய தமிழ் சொற்களை பயன்படுத்த இலங்கை வானொலியே எங்களுக்கு பழக்கப்படுத்தியது..(அம்மம்மா.. அப்பப்பா.. இன்னும் பல..). மிகச் சரளமாக தூய தமிழால் ஈழத்தமிழர்கள் உரையாடும்பொழுது சில சமயம் பொறாமையாகவும், நாமும் அவ்வாறு பழகவில்லையே என்ற ஏக்கமும் இருக்கும்.

சிறுவயதில் எங்கள் வீட்டிலிருந்த பிலிப்ஸ் வால்வு ரேடியோ, பிலிப்ஸ் பகதூர் டிரான்ஸிஸ்டர் போன்றவற்றை அருகிலேயே வைத்துக்கொண்டு நான் தூங்குவது வழக்கம்.

மாலை 05:58க்கு தமிழ்ச்சேவை இரண்டின் அன்றைய நிகழ்ச்சிகள் நிறைவு பெறும்.. அதுவரை கிராமத்தின் அனைத்து வீடுகள், டீக்கடைகளில் சத்தமாக ஒலித்துக்கொண்டிருந்த இலங்கை வானொலி பாடல்கள் நின்றதும் ஊரே நிசப்தமாகிவிடும்.

அன்றைய அடுத்த பொழுது போக்கு ஊரின் எல்லையிலுள்ள டூரிங் டாக்கீஸ்தான்.

இலங்கை வானொலி மட்டும் இல்லையென்றால், தமிழகத்துடனான ஈழத்தமிழர்களின் உறவுப்பாலம் இவ்வளவு நெருக்கமாக இருந்திராது. இன்றும் நான் யாழை, ஈழத்தை நேசிப்பதற்கு இலங்கை வானொலி இட்ட அடித்தளமே காரணம்.

.

உங்களைப்போல் நாங்களும் திருச்சி,சென்னை வானொலிகளை  தவறாது கேட்போம். அதிலும் திருச்சி வானொலியில் வயலும் வாழ்வும் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்  ஒரு குறிப்பிட்ட நேரத்தில் புதிய பாடல்களும் ஒலிபரப்புவார்கள். காலநிலை சரிவந்தால் சென்னை வானொலியின்  இரவு நேர தேன்கிண்ணம் எம் காதுகளுக்கு தேனூட்டும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மதுரக்குரல் மன்னன்…..

ksr-300x225.jpg

சாலையிற் தார் உருகிச் செல்லும் நெருப்பு வெயிலில் யாழ்ப்பாணத்தின் சிறு நகரம் ஒன்றிற்குள்ளால் எங்களது வாகனம் சென்றுகொண்டிருந்தது. வாகனத்திற்குள் எனது சகாக்கள் முழு ஆயுதபாணிகளாகப் போர்க்கோலத்திற் தயாராயிருந்தார்கள். வாகனத்தின் தலையில் ஒலிபெருக்கிகள் இரண்டு கட்டப்பட்டிருந்தன. வாகனத்தின் பின்இருக்கையில் நான் அமர்ந்திருந்து ஒலிவாங்கியில் அறிவிப்புச் செய்துகொண்டிருந்தேன். காலையிலிருந்து நாங்கள் இந்த வாகனத்திற் சிறு நகரங்களையும் கிராமங்களையும் அங்குலம் அங்குலமாக அளந்தவாறே வந்துகொண்டிருக்கிறோம். அந்தச் சிறு நகரத்தில் எங்களது வாகனம் ஒரு நிமிடம் நின்று கிளம்பியபோது வாகனத்திற்குள் புதிதாக ஏறி என்னருகே உட்கார்ந்தவரிடம் நான் ஒலிவாங்கியைக் கைமாற்றினேன். இனி அவர்தான் அறிவிப்புச் செய்யப்போகிறார். அந்தக் கறுத்த, சிறுத்த உருவமுடைய மனிதரிடம் அவர் செய்ய வேண்டியிருந்த அறிவிப்பு எழுதப்பட்டிருந்த காகிதத்தைக் கொடுத்தேன். காகிதத்தை வாங்கியவர் தனது தொப்பியை வருடியவாறே காகிதத்தை வரி வரியாகப் பார்த்துக்கொண்டிருந்த போது நான் அவரையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் அக்காலத்தில் என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான பொடியன்களின் கனவு நாயகன், மதுரக்குரல் மன்னன் கே.எஸ். ராஜா.

எனக்கு ஏழெட்டு வயதிருக்கும்போது என் தந்தை வழிப் பாட்டி இறந்துபோனார். தனித்துப்போன எங்கள் தாத்தா – நாங்கள் அவரை அப்பு என்றுதான் அழைப்போம் – தனது உடைமைகளுடன் எங்கள் வீட்டிற்கே வந்துவிட்டார். அப்புவிடம் உடைமைகளாக ஒரு துணிமூட்டையும் சாகும்போது ஆச்சி காதில் போட்டிருந்த அரைப் பவுண் தோடும் ஒரு ரேடியோவும் இருந்தன. அப்பு ஒரு விறுக்கர். எத்தனை கிலோ மீற்றர்கள் பயணிக்க வேண்டியிருந்தாலும் ஆள் நடந்துதான் போவார். பஸ்ஸில் ஏறவே மாட்டார். நத்தாருக்கோ வருசத்திற்கோ சுடச் சுடச் சோறும் இறைச்சிக் கறியும் கொடுத்தாற் கூட அதற்குள் ஒருசெம்பு பச்சைத் தண்ணீர் ஊற்றித் தான் பிசைந்து சாப்பிடுவார். எப்போது பார்த்தாலும் “எனக்கென்ன குறை? என்னட்ட அரைப் பவுண் தோடும் ரேடியோவும் இருக்கு” என்று சொல்லிக்கொண்டேயிருப்பார்.

ஒரு சிங்கள நாட்டார் கதையில் கமறாலவின் மனைவி அவள் வீட்டு உரலை ஏணியாகவும் உட்காரும் ஆசனமாகவும் விளக்கு ஏற்றி வைக்கும் பீடமாகவும் கதவுக்கு முட்டுக் கொடுக்கவும் பயன்படுத்துவாளே! அது போலவே நாங்கள் அப்புவின் ரேடியோவைப் பாடல்கள் நிகழ்ச்சிகள் கேட்கவும் கடிகாரமாயும் அலாரமாகவும் அவசரத்துக்கு அடவு வைக்கும் பொருளாகவும் பயன்படுத்திக்கொண்டோம்.

பத்திரிகைகள், சஞ்சிகைகள் படிக்கவோ திரைப்படம் பார்க்கவோ வசதி வாய்ப்புக்கள் என் சுற்று வட்டாரத்திலேயே கிடையாது. ரூபவாஹினி என்ற பெயரைக் கூட நாங்கள் அப்போது கேள்விப்பட்டிருக்கவில்லை. அப்பு கொண்டுவந்த ரேடியோ எனக்குப் புதியதோர் கனவுலகத்தையே திறந்து வைத்தது. திரைப்படத்தின் மூலமும் கட்சியின் மூலமும் எம்.ஜி.ஆரின் அதி தீவிர ரசிகர்களானவர்கள் ஆயிரமாயிரமுண்டு. ஆனால் நான் ஆயிரத்தில் ஒருவன். ரேடியோவில் எம்.ஜி.ஆரின் பாடல்களைக் கேட்டுக் கேட்டே முளைக்கும்போதே எம். ஜி. ஆர் ரசிகனாகவே நான் முளைத்தேன். அநேகமாக எம்.ஜி. ஆரின் அத்தனை ‘தத்துவப்’ பாடல்களையும் நான் மனப்பாடம் பண்ணிவைத்திருந்தேன். இன்று வரை எனக்கு அந்தப் பாடல்களில் ஒருவரி கூட மறந்து விடவில்லை.

நான் ஆறாம் வகுப்போ ஏழாம் வகுப்போ படிக்கும்போது ஒரு சம்பவம் நிகழ்ந்தது. நான் இங்கே தீவில் படித்துக்கொண்டிருந்தேன். எனது அண்ணர் எட்டாம் வகுப்போடு படிப்பு ஏறாமல் பள்ளிக்குப் போகாமல் நின்று விட்டார். அப்போது பப்பா யாழ்ப்பாணம் சின்னக்கடைச் சந்தையில் சாக்கு விரித்து தேசிக்காய், இஞ்சிக் கிழங்கு வியாபாரம் செய்துகொண்டிருந்தார். பள்ளிக்குப் போகாமல் நின்றிருந்த அண்ணரையும் பப்பா தனக்கு உதவியாய் சந்தைக்குக் கூட்டிப் போய் வந்துகொண்டிருந்தார். இதனால் சைக்கிளில் போகவும் வரவும் அண்ணருக்கு யாழ் நகரத்திலுள்ள சினிமாத் தியேட்டர்களின் முன்பு வைத்திருக்கும் ‘கட் அவுட்’டுக்களையும் நகரத்துச் சுவர்களில் ஒட்டியிருக்கும் திரைப்பட விளம்பரச் சுவரொட்டிகளையும் கண்டுகளிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஒவ்வொருநாள் இரவிலும் அந்தக் ‘கட் அவுட்’டுக்களைப் பற்றியும் சுவரொட்டிகளைப் பற்றியும் அண்ணர் எனக்குக் கதை கதையாகச் சொன்னார். தங்களோடு சந்தைக்கு வந்தால் என்னாலும் ‘கட் அவுட்’டுக்களைப் பார்க்க முடியும் என்றார் அண்ணர். திரைப்படங்கள் பார்ப்பதற்காக அல்ல! வெறும் கட் அவுட்டுக்களைப் பார்ப்பதற்காகவே நான் பள்ளியிலிருந்து நின்றுவிடத் தயாரானேன். பப்பாவிடம் அடி வாங்காமல் ஏதாவதொரு தகுந்த காரணத்தைக் கூறி நான் பள்ளியிலிருந்து நின்றுவிட வேண்டும். நான் ஒரு புத்திசாலித்தனமான திட்டத்தை உருவாக்கிவிட்டு அதை நிறைவேற்றும் தருணத்திற்காகக் காத்திருக்கலானேன்.

ஒருநாள் முன்னிரவிற் சந்தையிலிருந்து அப்போதுதான் திரும்பியிருந்த பப்பா முற்றத்திற் சாய்வு நாற்காலியில் அமைதியாகப் படுத்திருந்தார். நான் முற்றத்தில் ஆட்டுக்குப் புண்ணாக்குத் தீத்திக் கொண்டிருந்தேன். திடீரென பப்பா என்னைக் கூப்பிட்டு “மகன் படிப்பெல்லாம் எப்பிடிப் போகுது?” என்று விசாரித்தார். ஆகா! இது தான் நான் காத்திருந்த தருணம். இதை நழுவ விடலாமா? பப்பா வழக்கத்திற்கு மாறாக இன்று கொஞ்சம் சாந்தமாய் இருப்பது போலவும் தெரிகிறது. நான் எனது திட்டத்தின் முதற் பகுதியை நிறைவேற்றத் தொடங்கினேன்.

“பப்பா எனக்குப் படிக்க கஸ்ரமாக்கிடக்கு நான் பள்ளிக்கு போகயில்ல…”
“ஏன் என்ன கயிட்டம்?”
“எனக்கு படிக்கிறதெல்லாம் மறந்துபோகுது பப்பா”
“சரி கயிட்டமெண்டால் விடு, பள்ளிக்கூடத்த விட்டுப்போட்டு என்ன செய்யப் போறாய்?”
“நானும் உங்களோட சந்தைக்கு வாறன் பப்பா”
“சரி நாளைக்கு என்னோட யாவாரத்துக்கு வா! இப்ப ஒரு பாட்டுப் படி பார்ப்பம்…கேப்பம்!”

என்னுடைய திட்டம் இவ்வளவு சுலபமாக வெற்றியீட்டும் என்று நான் எண்ணியிருக்கவில்லை. பப்பா தண்ணியைப் போட்டால் அம்மாவைத்தான் பாடச் சொல்லிக் கரைச்சல் கொடுப்பார். ஒருநாளும் இல்லாத திருநாளாக இன்று என்னைப் பாடச் சொல்கிறார். இன்ப அதிர்ச்சியில் நின்றிருந்த நான் அப்பாவின் எதிரே முற்றத்து மணலில் உட்கார்ந்திருந்து பாடத் தொடங்கினேன்.

“பாடல் இடம் பெற்ற படம்: வா ராஜா வா!, பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன், பூவை செங்குட்டுவனின் பாடல் வரிகளுக்கு இசையமைத்தவர் குன்னக்குடி வைத்யநாதன்” என்று அறிவிப்புச் செய்யாத குறைதான். மற்றப்படிக்கு எந்தக் குறையுமில்லாமல் “இறைவன் படைத்த உலகையெல்லாம் மனிதன் ஆளுகின்றான், மனிதன் வடித்த சிலையிலெல்லாம் இறைவன் வாழுகின்றான்” என்று முழுமையாகப் பாடலைப் பாடி முடித்தேன். இந்தப் பாட்டைப் பாடுவதில் ஒரு நுணுக்கமுள்ளது. சரணத்தின் ஈற்றில் “இசையில் மயங்கி இறங்கி வருகின்றான்/இறைவன் இறங்கி வருகிறான்” என அரை மாத்திரையளவே நிறுத்தி மறுபடியும் பல்லவிக்குக்கு உச்சஸ்தாயில் சீர்காழி எகிறுவார். நான் அந்தப் பாவத்தையெல்லாம் பாடலில் கொண்டு வந்திருந்தேன். பாடல் முடிந்தது தான் தாமதம், அதுவரை கண்களை மூடிச் சாய்வு நாற்காலியில் படுத்திருந்த பப்பா துள்ளி எழுந்து சாய்வு நாற்காலியின் துணியில் சொருகப்பட்டிருந்த தடியை உருவியெடுத்துக்கொண்டு “அடப் பு********டி, ஒரு வரி மறக்காமல் சினிமாப் பாட்டுப் பாடத் தெரியுது… ஆனால் உனக்குப் பள்ளிக்கூடப் பாடம் மறக்குதோ?” என்று உறுமியவாறே என்மீது பாய்ந்தார். தடபடவெனத் தடியடிகள் என் தேகத்தில் விழுந்தன. சும்மாயிருந்த அம்மாவுக்கும் இரண்டு அடிகள் போட்ட பப்பா அம்மாவைப் பார்த்து “வே* எல்லாம் நீ வளர்த்த வளர்ப்புத்தானடி” என்று பற்களை நெருமினார். பப்பாவுக்குத் தெரியாது; நான் அம்மா வளர்த்த பிள்ளையல்ல, நான் ரேடியோ வளர்த்த பிள்ளை.

‘தணியாத தாகம்’, ‘இரைதேடும் பறவைகள்’, ‘கோமாளிகள்’ போன்ற தொடர் நாடகங்களும் ‘கதம்பம்’, ‘முகத்தார் வீடு’ போன்ற உரைச் சித்திரங்களும் ‘வரலாற்றில் ஓர் ஏடும் குறிப்பும் சலவாத்தும்’ சொல்லும் முஸ்லீம் நிகழ்ச்சியும் கிழமை தோறும் வரும் ஒலிச் சித்திரங்களும் என்னை ரேடியோவுக்கு அடிமையாக்கிப் போட்டன. அந்தக் காலகட்டத்தில் ரேடியோவில் ஒலிபரப்பாகிய நூற்றுக் கணக்கான திரைப்படப் பாடல்கள் பாடல் இடம் பெற்ற படம், பாடியவர்கள், எழுதியவர், இசையமைத்தவர் என்பன போன்ற குறிப்பான தகவல்களோடு முழுமையாக எந்தச் சிரமமும் இல்லாமலேயே என் சின்ன மண்டைக்குள் தரவிறக்கம் செய்யப்பட்டன. பாடசாலையில் ஆசிரிய ஆசிரியைகளுக்குத் திரைப்படப் பாடல்களில் ஏதும் சந்தேகமோ கேள்விகளோ இருந்தால் அவர்களுக்குப் பாடல்களைப் பற்றிய விபரங்கள் தேவைப்பட்டால் எடுத்த வீச்சுக்கு “அழைத்து வாருங்கள் 8 Bயில் படிக்கும் அன்ரனிதாசனை” என்றுதான் கூப்பிட்டார்கள். எங்கள் கிராமத்துச் சண்டியர் ‘குத்துக்கார’ இரத்தினம் கூட என்னைக் கூப்பிட்டு வைத்து எம். ஜி. ஆரின் பாடல்களைப் பாடச் சொல்லிக் கேட்குமளவிற்கு எனது கியாதி என்னைச் சுற்றி ஆகக் குறைந்தது ஒரு கிலோ மீற்றருக்குப் பரவியிருந்தது. நானொரு நடமாடும் குட்டி ‘ரேடியோ சிலோனா’கக் கிராமத்தை வலம் வந்துகொண்டிருந்தேன்.

அப்போதைய இலங்கை வானொலியின் உச்ச நட்சத்திரங்களான அப்துல் ஹமீட், முகத்தார் ஜேசுரட்ணம், அப்புக்குட்டி ராஜகோபால், உபாலி செல்வசேகரன், சிறீதர் பிச்சையப்பா, கே. எஸ் .பாலச்சந்திரன், எஸ்.எஸ். கணேசபிள்ளை போன்றவர்கள் போலெல்லாம் பேச முற்பட்டதோடு மட்டுமல்லாமல் என்னைத் தன் மழலைக் குரலால் மயக்கி வைத்திருந்த கமலினி செல்வராசன் போலப் பேசவும் நான் பெரும் பிரயத்தனங்களில் ஈடுபட்டேன். எதிர்காலத்தில் மேடைகளில் நடிக்க வேண்டும் அல்லது ரேடியோ சிலோனிற்குள் புகுந்துகொள்ள வேண்டுமென்ற இலட்சியத்துடன் நான் இந்தக் கடும் பயிற்சிகளை மேற்கொள்ளவில்லை. நான் என் அன்றாட வாழ்க்கையிலேயே இவர்களைப் போலத்தான் பேசிக்கொண்டு திரிந்தேன். ஆடு மேய்க்கும் போது முகத்தார் போல அகடவிகடம் செய்தேன். பஸ்ஸில் தொற்றி ஏறியபடியே “அண்ண ரைட்” என்று குரல் கொடுத்தேன். கிராமத்துக்கு நாற்காலி பின்ன வரும் சிங்களவரான ‘பாஸ்’ ஐயாவோடு உபாலி செல்வசேகரன் போலக் கொச்சைத் தமிழில் கதைத்தேன். தொட்டதற்கெல்லாம் கமலினி போலச் செல்லமாகச் சிணுங்கினேன். இவ்வளவு பேரையும் போலச் செய்ய முயன்றவன் கே.எஸ். ராஜாவைப் போலப் பேச ஆசைப்பட்டிருக்க மாட்டேனா என்ன?

இலங்கை வானொலியிலேயே எனக்கு ஆகவும் பிடித்த நிகழ்ச்சி திரைவிருந்து தான். அப்போதெல்லாம் வருடம் முன்னூற்று அறுபத்தைந்து நாளும் திரைப்படங்கள் பற்றிய கனவிலேயே நான் மூழ்கிக் கிடப்பேன். ஆனால் வருடத்திற்கு ஒன்றிரண்டு திரைப்படங்களுக்கு மேற் பார்க்க வாய்ப்புக் கிடைக்காது. அப்போது கலரி ரிக்கட் ஒரு ரூபாதான். ஆனால் அதற்கே பெரும் தட்டுப்பாடு. அப்படி ரூபாய் கிடைத்தாலும் படம் பார்க்கச் செல்வதற்கு வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள். வீட்டாருக்குத் தெரியாமலும் படம் பார்க்கப் போக முடியாது. யாழ்ப்பாணத்திலிருந்த பதினொரு தியேட்டர்களிலும் எந்தத் தியேட்டரில் நான் களவாகப் படம் பார்த்தாலும் பப்பாவுக்குத் தகவல் தெரிந்துவிடுகிறது. இந்த உளவறியும் விசயத்திலெல்லாம் பொட்டம்மான் என் பப்பாவிடம் பிச்சை வாங்க வேண்டும். மேதினத்தில் மட்டும் படம் பார்க்கச் செல்ல எனக்கு அனுமதி கிடைக்கும். மேதினமன்று நகரத்தின் எல்லாத் திரையரங்குகளிலும் ஐம்பது சதம் மட்டுமே நுழைவுக் கட்டணம். அந்த ஐம்பது சத நுழைவுச் சீட்டு எல்லா வகுப்புக்களிற்கும் செல்லுபடியாகும். நான் மே தினங்களில் ஐம்பது சதத்துடன் பல்கனியில் இருந்தும் படம் பார்த்திருக்கிறேன்.

ஒரு திரைப்படம் பார்க்கும் மகிழ்ச்சிக்கு நிகராகக் கே.எஸ் ராஜா வானொலியில் நிகழ்த்திய திரைவிருந்து நிகழ்ச்சியும் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. சில தருணங்களில் அந்த நிகழ்ச்சி ஒரு திரைப்படத்திலும் மேலாக எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. ‘வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகில் ஆவலுடன் காத்திருக்கும் ரசிசிசி….கப் பெருமக்களுக்கு’ என்று ஆரம்பித்து ‘வணக்கம் கூறி விடைபெறுவது கே.எஸ்.ராஜா’ என்று மதுரக்குரல் மன்னன் முடிக்கும் வரை நான் கள்ளால் மயங்குவது போல அதைக் கண்மூடி வாய் திறந்தே கேட்டிருப்பேன்.

மிகவும் எளிமையான ஒலி ஒட்டு வேலைகள் மூலமும் நடிகர்களின் படிமங்களுக்குத் தகுந்த வசனங்களைப் பொருத்தமான இடங்களில் ஒலிக்கவிட்டும் நிகழ்ச்சியை முடிக்கும் போது ஒரு ‘தொக்கு’ வைத்து முடித்தும் கே.எஸ். ராஜா தனது பாணியை உருவாக்கியிருந்தார். யாழ்ப்பாணத்தில் ராஜா திரையரங்கில் கலைஞரின் வசனத்தில் ஜெய்சங்கர், எம்.ஆர். ராதா நடித்த ‘வண்டிக்காரன் மகன்’ ஓடிக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் சிறீதர் திரையரங்கில் எம். ஜி. ஆரின் ‘மீனவ நண்பனும்’ ஓடிக்கொண்டிருக்கிறது. திரைவிருந்து நிகழ்ச்சியில் இந்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து கே.எஸ். ராஜா நிகழ்ச்சி செய்தார். நிகழ்ச்சி முடியும் தருவாயில் ராஜா ஓர் ஒட்டு வேலையைச் செய்வார். முதலில் வண்டிக்காரன் மகனிலிருந்து எம். ஆர். ராதாவின் குரல் “ஏய்! சுட்டுவிடுவேன்… சுட்டுவிடுவேன்” என்றொலிக்கும். அந்த இடத்தில் கே.எஸ். ராஜா அதை அப்படியே நிறுத்தி மீனவ நண்பனிலிருந்து எம். ஜி.ஆரின் குரலை ஒலிபரப்புவார். “அய்யா பெரியவரே, இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் துப்பாக்கிச் சூடுபட்ட அனுபவம் எனக்கு ஏற்கனவேயுண்டு” என்று எம்.ஜி.ஆர் சொல்வார். அந்த நேரத்தில் என் ஆன்மா காற்றிலே மிதக்கும். ராஜா சின்ன விசயங்களின் கடவுளாயிருந்தார்.

‘நினைத்ததை முடிப்பவன்’ திரைப்படத்துக்கு ராஜா விளம்பரம் செய்யும் போது “இந்த ரஞ்சித்துக்கு முன்னால யாரும் சிகரட் பிடிக்கக் கூடாது அண்டர்ஸ்ராண்ட்!” என்ற வசனத்தை மறுபடியும் மறுபடியும் ஒலிபரப்புவார். இதைத் தொட்டு இந்த ‘அண்டர்ஸ்ராண்ட்’ என்ற வார்த்தை எங்களை மயக்கிப் போட்டு எங்களுடனேயே நிழல்போல அலைந்தது. “குழை வெட்டப் போவமா அண்டர்ஸ்ராண்ட்!”, “ரெண்டு அவுன்ஸ் புளி தாருங்கோ அண்டர்ஸ்ராண்ட்” என வார்த்தைக்கு வார்த்தை அண்டர்ஸ்ராண்ட் என்று நாங்கள் சுற்று வட்டாரத்தையே கலக்கிக்கொண்டு திரிந்தோம்.

நிகழ்ச்சிகளை முடித்து வைக்கும் போதும் தன் கை வந்த கலையான ஒட்டு வேலைகளால் ராஜா எங்களை இன்ப லாகிரியில் ஆழ்த்துவார். சிவாஜிகணேசன் நடித்த ‘தீபம்’ திரைப்பட நிகழ்ச்சியை முடிக்கும் போது ‘மீண்டும் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுவது’ எனச் சொல்லி ‘ராஜா யுவராஜா’ என்ற பாடல் துண்டை ஒலிக்கவிடுவார். ‘நாளை நமதே’ திரைப்பட நிகழ்ச்சியை முடிக்கும் போது ‘மீண்டும் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுவது’ எனச் சொல்லி படத்திலிருந்து ‘மை நேம் இஸ் ராஜா’ என்ற வசனத் துண்டை ஒலிக்கச் செய்வார். ‘நீயா’ திரைப்பட நிகழ்ச்சியை முடிக்கும் போது படத்திலிருந்து ‘ராஜா என்னை விட்டுப் போறீங்களா?’ என்ற வசனத் துண்டை சிறீபிரியாவின் குரலில் ஒலிக்கவிட்டு ‘மீண்டும் அடுத்த வாரம் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுவது கே.எஸ். ராஜா’ என்பார்.

யாழ்ப்பாணத்தையே தாண்டியிருக்காத எனக்கு நாட்டின் மூலை முடுக்குகளிலிருந்த திரையரங்குகளை எல்லாம் ராஜா காற்றலைகளில் அறிமுகப்படுத்தி வைத்தார். “செல்லமஹால் கொட்டாஞ்சேனை – சமந்தா தெமட்டகொட – ராஜி திருமலை – ஈஸ்வரி வாழைச்சேனை – சிறீதர் யாழ்நகர் வெண்திரைகளில் இன்றே பார்த்து மகிழுங்கள் ‘ஹாய் பேபி’ புகழ் கமலஹாஸன், ‘ஸ்ரைல் நடிகர்’ ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய தேவர் பிலிம்ஸின் ‘தாயில்லாமல் நானில்லை’, பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள்! பார்க்காதவர்கள் பார்க்கத் துடிக்கிறார்கள்!!” என்று சடுதியில் ஏறியும் இறங்கியும் குழைந்தும் கொஞ்சியும் வரும் ராஜாவின் குரலைக் கேளாதோர்தான் தம் மழலை சொல் இனிதென்பர்.

கே.எஸ். ராஜாவை ஒரு தடவையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற தீராத ஆசையுடன் நான் தவித்துக்கொண்டிருந்தேன். ராஜா முற்றவெளியில் நிகழ்ச்சி செய்கிறார், ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் பொதுக்கூட்ட உரையை மொழிபெயர்க்க யாழ்ப்பாணம் வருகிறார் என்றெல்லாம் ராஜாவைப் பற்றிய செய்திகள் இடைவிடாமல் கிராமத்தில் அலைந்துகொண்டேயிருந்தன. இதைத் தவிர ராஜாவுக்கு மொட்டைத் தலை, ராஜா ஒரு கணித மேதை, ராஜா திரைப்படத்தில் நடிக்கப் போகிறார், ராஜாவிற்கும் பி.எச். அப்துல் ஹமீதுக்கும் இடையே மோதல் என ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகளும் எங்கள் வட்டாரங்களில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் அப்போதெல்லாம் ராஜாவை நேரில் பார்ப்பதற்கான வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. பின்பொரு நாள் ராஜாவைச் நேரில் காணும் எனது கனவு பலித்தபோது அது ஒரு கொடுங்கனவாகப் பலித்தது.

1983ல் ராஜா இலங்கை வானொலியிலிருந்து விலகினார் அல்லது நீக்கப்பட்டார். வெலிகடச் சிறையில் கொல்லப்பட்ட அய்ம்பத்து மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் பெயர்களையும் வானொலில் அறிவிக்கச் சொன்னபோது ராஜா அதற்கு மறுத்துவிட்டார் எனவும் இலங்கை வானொலியிலுள்ள அரச ஆதரவாளர்களின் சதியால் ராஜா இலங்கை வானொலியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார் என்றும் கதைகள் உலாவின. இதற்கு பின்பு ராஜா இந்தியா சென்றுவிட்டார் என அறிந்தேன். இந்தக் காலத்தில் நாட்டில் பல தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்தன. 1983 ஆடிக் காற்றில் அம்மியே பறந்தபோது நானும் ஒட்டிப் பறந்தேன்.

1986ன் முற்பகுதி! கே.எஸ். ராஜாவின் பெயர் மீண்டும் யாழ்ப்பாணத்தில் அமளியாய் அடிபடலாயிற்று. புங்குடுதீவில் நடக்கவிருந்த கலை இரவில் கே. எஸ். ராஜா கலந்துகொள்வதாக விளம்பரங்கள் வெளியாகியிருந்தன. மக்களுக்கு ராஜா மேலுள்ள அபிமானம் இம்மியளவும் குறையவில்லை என்பதை அன்றைய கலை இரவு நிரூபித்தது. ராஜாவைப் பார்ப்பதற்காகத் தூரத்துத் தீவுகளிலிருந்தெல்லாம் மக்கள் திரளாக வந்திருந்தார்கள். அந்தக் கலை இரவை ஈ.பி.ஆர். எல். எவ். இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சிக்கு மற்ற மற்ற இயக்கங்களும் போயிருந்தோம். மைதானத்தில் இயக்கத்திற்கொரு மூலைகளில் வாகனங்களை நிறுத்தி வைத்து ராஜாவுக்காகக் காத்திருந்தோம்.

வருவார் வருவார் எனச் சனங்கள் காத்திருந்த ராஜா நள்ளிரவுக்கு மேற்தான் மேடையிற் தோன்றினார். ‘எங்கள் தமிழினம் தூங்குவதோ சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ’ என்ற பாடல் வரிகள் பின்னணியில் முழங்க ஒற்றைக் கால் மேடையிற் துள்ள மற்றக் காலைத் தூக்கிக் காற்றிலே உதைத்து உதைத்துத் தலையை உலுக்கி உலுக்கி ஒரு விநோதமான நாட்டியத்தை ஆடியவாறே ராஜா மேடையைச் சுற்றிச் சுற்றி வந்தார். ராஜாவின் ஒரு கையில் ஒலிவாங்கி மற்றக் கையில் எரியும் சிகரட். அதற்கு மேல் ராஜா செய்ததெல்லாம் வெறும் அலம்பல். ஆள் நிறை வெறியில் தள்ளாடிக்கொண்டிருந்தார். இயக்கம் ஏற்பாடு செய்த கலை இரவென்றாலும் நிகழ்ச்சிகள் ‘பாட்டுக்குப் பாட்டு’, ‘ஆம் இல்லையென்று சொல்லக்கூடாது’ என்ற வகையில்தான் அமைந்திருந்தன. இவற்றுக்கு இடையிடையே ராஜா தமிழீழ ஆதரவு முழக்கங்களையும் மேடையில் சகட்டுமேனிக்கு முழங்கிக்கொண்டிருந்தார். ராஜாவின் குரல் மட்டும் கொஞ்சமும் வசீகரத்தை இழக்கவில்லை. ராஜாவின் பொருளில்லாத வார்த்தைள் கூட அந்த இரவில் மதுரமாய் ஒலித்துக்கொண்டிருந்தன.

இதற்குச் சில நாட்கள் கழித்து வேலணை மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இதே போன்றதொரு கலை இரவை ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் ராஜாவின் அட்டகாசம் உச்சத்தைத் தொட்டது. தரையில் ஓங்கி அடித்த பந்துபோல ராஜா மேடையில் துடித்துக்கொண்டிருந்தார். தனது காலை உயரத் தூக்கிக் காட்டி “இந்தக் காலணிகளைப் பாருங்கள்! இவை ஒரு சிங்கள இராணுவ வீரனிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட காலணிகள்” என்றார். “லலித் அத்துலத் முதலி எனது நண்பர்தான், ஆனாலும் அவரைக் கொன்றே தீருவேன் போரென்றால் போர் சமாதானமென்றால் சமாதானம்” என்று ராஜா மேடையில் சவால் விட்டார். ஆயிரக் கணக்கான இராணுவத்தினருக்குக் கொள்ளி போடத் தயாராயிருக்குமாறு ஜெயவர்த்தனாவை எச்சரிக்கை செய்தார். ஒரு ‘திரைவிருந்து’ நிகழ்ச்சியில் செய்வதைப் போலவே அவர் கலை இரவு மேடையில் சினிமாப் பாடல்களிற்கும் பாட்டுக்குப் பாட்டிற்கும் இடையே ஈழப் போராட்டம் குறித்து அர்த்தமில்லாத வெற்று வசனங்களைப் பேசி ஒட்டு வேலைகள் செய்துகொண்டிருந்தார். கொஞ்சம் விட்டால் ‘LTTE வல்வெட்டித்துறை – PLOT சுழிபுரம் – TELO கல்வியங்காடு – EPRLF சின்னமடு வெண்திரைகளில் கண்டுகளியுங்கள் சிவகுமாரன் பிலிம்ஸின் தமிழீழம்’ என்று கூட ராஜா சொல்லியிருப்பார்.

எனக்குச் சீயென்று போய்விட்டது. நான் அன்றிருந்த மனநிலையில் ராஜா ஈழப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாகவும் மலினப்படுத்துவதாகவுமே எனக்குத் தோன்றியது. எனக்கருகில் நின்றிருந்த என்னுடைய இயக்கப் பொறுப்பாளரிடம் “அம்மான்! கே.எஸ். ராஜா தேவையில்லாமல் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறான்” என்றேன். நானும் பொறுப்பாளரும் மட்டும் மேடையின் பின்புறத்துக்குச் சென்று ராஜாவுடன் பேசுவதற்காக வளம் பார்த்துக்கொண்டிருந்தோம். மேடையில் நின்றிருந்த ராஜா நிகழ்ச்சியின் நடுவே ஒரு முறை மேடைக்குப் பின்னே வரும் போது நான் ராஜாவிடம் “நீங்கள் நிகழ்ச்சி நடத்துவது என்றால் ஒழுங்காக நடத்துங்கள், போராட்டத்தைப் பற்றி அலம்பல் கதைகள் வேண்டாம்” என்றேன். ராஜா எங்களை முறைத்துப் பார்த்தார். தனது இடுப்பில் இரு கைகளையும் ஊன்றியவாறு தனது மதுரக்குரலால் அவர் எங்களைப் பார்த்துக் கலப்பில்லாத ஆங்கிலத்தில் கர்ச்சித்தார். எங்களுக்கு ஒரு இழவும் விளங்கவில்லை. ஆனால் அவர் எங்களைத் திட்டுகிறார் என்பது மட்டும் புரிந்தது. பொறுப்பாளர் ராஜாவைப் பார்த்து “இனிப் போராட்டத்தைப் பற்றிப் பேசினால் உன்னைத் தூக்குவேன்” என்றார். ராஜா திரும்பவும் மேடைக்குப் போய்விட்டார். இதற்குப் பின்பு ராஜா அந்த நிகழ்ச்சி முடியும் வரை அடக்கியே வாசித்தார்.

இதற்குப் பின் ராஜாவைப் பற்றிச் சில தகவல்கள் கேள்விப்பட்டேன். நிகழ்ச்சிகள் நடத்தச் செல்லும் கிராமங்களிலேயே அவர் தங்கிக் கோயில் மண்டபங்களிலும் பாடசாலைகளிலும் உறங்குகிறார், இருபத்து நான்கு மணிநேரமும் போதையிலேயே இருக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தன.

அது 1986 மே மாதம், திகதி ஏழோ எட்டோயிருக்கலாம். நாங்கள் எங்களது வாகனத்தில் அறிவிப்புச் செய்துகொண்டே அந்தச் சிறுநகரத்துக்குள் நுழையும் போதே சாலையோரத்துத் தேனீர்க் கடையில் ஒட்டி நின்றிருந்த கே.எஸ். ராஜாவைக் கண்டுவிட்டோம். அவரருகே வாகனத்தை நிறுத்தி அவரை வாகனத்தில் ஏறச் சொன்னபோது ராஜா மிரட்சியுடன் எங்களைப் பார்த்தார். பின் தயங்கித் தயங்கி வாகனத்துள் ஏறினார். நாங்கள் எழுதி வைத்திருந்த அறிவிப்பை ஒலிபெருக்கியில் அறிவிக்குமாறு ராஜாவுக்குக் கட்டளையிடப்பட்டது. ராஜா மிரட்சி கலையாமலேயே அங்குமிங்கும் பார்த்தபோது எங்களது வாகனத்திற்குள் சில துப்பாக்கிகளும் ஒரு ஒலிவாங்கியுமிருந்தன. ஒலிவாங்கியைக் கையில் வாங்கிக் குனிந்த தலையுடன் அறிவிப்பைத் தொடங்கிய ராஜாவின் குரல் ஒலிபெருக்கியால் அந்தச் சிறுநகரத்தை உலுக்கிப் போட்டது: “தமிழீழ விடுதலை இயக்கம் ‘TELO’வினருக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிவிப்பு! உடனடியாக நீங்கள் உங்கள் ஆயுதங்களுடன் எங்களிடம் சரணடைந்து விடுங்கள்….”அப்போது மதுரக்குரல் மன்னனின் குரல் நடுங்கிக்கொண்டிருந்தது.

இது நடந்து நான்கு ஐந்து வருடங்களிருக்கும். அப்போது நான் வெளிநாடொன்றில் இருந்தேன். குறிப்பான அந்தக் காலப் பகுதி இலங்கை அரசியலின் உச்சபட்சக் கொதிநிலைக் காலமாயிருந்தது. இந்தக் காலப் பகுதியிற் தான் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், உமாமகேஸ்வரன், பத்மநாபா, கிட்டு, ராஜீவ் காந்தி, அத்துலத் முதலி, காமினி திஸநாயக்கா, பிரேமதாசா எனப் பல முக்கியமான தலைகள் விழுந்துகொண்டிருந்தன. வீடு புகுந்து கொலை, மத்திய குழு கூட்டத்திற்குள் புகுந்து கொலை, மெய்ப் பாதுகாவலர்களால் கொலை, தேர்தற் பிரச்சார மேடையிற் கொலை, கப்பலை வெடிக்க வைத்துக் கொலை, மாலை அணிவிக்கையில் கொலை, மேதின ஊர்வலத்திற் கொலை எனக் கற்பனைக்கு எட்டாத சாகசங்களுடனும் கொடூரங்களுடனும் விடாது கொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இடையில் ஒருநாள் கே.எஸ். ராஜா கொலை செய்யப்பட்ட செய்தியும் என்னை வந்தடைந்தது. ராஜாவின் உடல் கொழும்புக் கடற்கரையில் வீசப்பட்டிருந்ததாம். இந்தச் செய்தி அப்போது என்னில் எந்தத் துக்கத்தையோ வேதனையையோ கிளர்த்தவில்லை. ஒரு மனிதனை எத்தனை தடவைகள்தான் கொல்வது என்ற சலிப்புத்தான் என்னுள் மேலிட்டது.

 

http://www.shobasakthi.com/shobasakthi/2006/12/16/¨¨¨¨¨¨¨¨¨¨-2/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் காலப் பகுதி இலங்கை அரசியலின் உச்சபட்சக் கொதிநிலைக் காலமாயிருந்தது. இந்தக் காலப் பகுதியிற் தான் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், உமாமகேஸ்வரன், பத்மநாபா, கிட்டு, ராஜீவ் காந்தி, அத்துலத் முதலி, காமினி திஸநாயக்கா, பிரேமதாசா எனப் பல முக்கியமான தலைகள் விழுந்துகொண்டிருந்தன. வீடு புகுந்து கொலை, மத்திய குழு கூட்டத்திற்குள் புகுந்து கொலை, மெய்ப் பாதுகாவலர்களால் கொலை, தேர்தற் பிரச்சார மேடையிற் கொலை, கப்பலை வெடிக்க வைத்துக் கொலை, மாலை அணிவிக்கையில் கொலை, மேதின ஊர்வலத்திற் கொலை எனக் கற்பனைக்கு எட்டாத சாகசங்களுடனும் கொடூரங்களுடனும் விடாது கொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இடையில் ஒருநாள் கே.எஸ். ராஜா கொலை செய்யப்பட்ட செய்தியும் என்னை வந்தடைந்தது. 

அது ஒர் கொலையுதிர்காலம்

70, 80 க்கு ஒருதடவை போய்வந்தால் போல் உணர்வு. என்ன ஒர் அருமையான நினவுகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

83 கலவரத்தின் போது கே.எஸ்.ராஜா ஒலிபரப்பிய பாடல்கள் எல்லாம் எம்ஜிஆர் படத்துப் புரட்சிப் பாடல்கள். அதிலும் , பணத்தோட்டம் படத்தில் இடம் பெற்றஎன்னதான் நடக்கும் நடக்கட்டுமே..” பாடல் மற்றது என் அண்ணன் படத்தில் இடம் பெற்றநெஞ்சமுண்டு நேர்மையுண்டு..” என்ற பாடலும் முதன்மையானவையாக இருந்தன.  

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே பாடலை ஒருதரம் பாருங்கள்.

“பின்னாலே தெரிவது அடிச்சுவடு

முன்னாலே இருப்பது அவன் வீடு

நடுவினிலே நீ விளையாடு

நல்லதை நினைத்தே நீ போராடு

உலகத்தில் திருடர்கள் சரி பாதி

ஊமைகள் குருடர்கள் அதில் பாதி

கலகத்தில் பிறப்பதுதான் நீதி

மனம் கலங்காதே மதிமயங்காதே

மனதுக்கு மட்டும் பயந்துவிடு

மானத்தை உடலில் கலந்துவிடு

இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு

இரண்டினில் ஒன்று பார்த்துவிடு 

அதுபோல் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு பாடலில்,

இரண்டில் ஒன்றை பார்பபதற்கு வாளை உயர்த்து 

நீதி உன்னை தேடிவரும் மாலை தொடுத்து என்ற வரிகள் இடம் பெற்றிருக்கும்

 (திரையில் தணிக்கை காரணமாகஇரண்டில் ஒன்றை பார்பபதற்கு தோளை நிமிர்த்து என்று இருக்கும்)  

இப்படியான பாடல்களை ஒலிபரப்பியதால் கே.எஸ்.ராஜா பல பிரச்சனைகளை சந்தித்தார் என்றும் நீண்ட காலம் ஒலிபரப்பு பணியில் இருந்து விலகி (விலக்கப்பட்டு)இருந்தார் என்று அன்று பேசிக் கொண்டார்கள்.

இதுபோல எம்ஜிஆர் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட போது, “போனால் போகட்டும் போடா”, “உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி  மனசை பாத்துக்க நல்படிஎன்று சிவாஜி கணேசனின் படப் பாடல்களை போட்டு ஆறுதல் சொல்லி இருப்பார்.

சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப அதுவும் இலங்கை வானொலிக்குள் இருந்து கொண்டே பாடல்களை ஒலிபரப்புவதில் கே.எஸ்.ராஜா போன்ற துணிச்சலான அறிவிப்பாளர்களை பிறகு வரவேயில்லை என்பேன்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்படியெல்லாம் லேசில விடமுடியாது பையா ....... எப்படியும் உங்களுக்கு சந்தர்ப்பம் தராத பெரியப்பாவுக்கு கொஞ்சம் மேல நின்றால்தான் மனம் ஆறும்.......!  😂
    • மீண்டும் மீண்டும் இந்த 5% வந்து கிலியைக் கிளப்புகிறதே😂?
    • "பேராசை"     "பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டு விட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும்.  ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுது தான் பிரச்சனையே ஏற்படுகிறது என்பதே உண்மை! இந்த உண்மையை அனுபவித்தான் உணர்ந்தவன் நான். அதனால் தான் உங்களுடன் என் கதையை பகிர்கிறேன்.   நான் பாடசாலையில் படிக்கும் பொழுதே முதலாவதாக வரவேண்டும் என்ற ஆசை நிறைய உடையவன். அதில் உண்மையில் எந்த பிரச்சனையும் இல்லை. அது உன்னை முன்னேற்றும். ஆனால் அந்த ஆசை என்றும் நிறைவேறவில்லை. நான் ஒரு கூலி தொழிலாளியின் மகன். ஆகவே வீட்டில் படிக்க, சொல்லித்தர பெரிதாக வசதி இல்லை. பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி இருந்தேன். நல்ல உடுப்பும் என்னிடம் இல்லை. வகுப்பு ஆசிரியர் என் தோற்றத்தை, நடை உடை பாவனையை பார்த்து என்னை பின் வாங்கில் அமர்த்தியது மட்டும் அல்ல,  என் கரடு முரடு தோற்றம் இவன் உருப்பட மாட்டான் என்றும் அவரை தீர்மானிக்க வைத்து விட்டது. ஆசை ஆர்வம் என்னிடம் நிறைய இருந்தும், நான் மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப் பட்டேன். அந்த வகுப்பு ஆசிரியர் என்னில் கவனம் செலுத்துவதே இல்லை!   காலம் போக நான் பத்தாம் வகுப்பு தேசிய பரீட்சையில், படுதோல்வி அடைந்து, பாடசாலையால் அகற்றப் பட்டேன். என் ஆசை எல்லாம் சுக்கு நூறாகியது! எப்படியும் நான் என் வகுப்பு ஆசிரியரை விட, பாடசாலை முதல்வரை விட, என்னுடன் படித்து, சிறந்த சித்தி பெற்று, இப்ப மருத்துவம், பொறியியல் துறைக்கு புக உயர் வகுப்பு படிப்பவர்களை விட, ஏன் இந்த நாட்டையே ஆளும் ஒருவனாக வரக்கூடாது என்ற ஒரு பெரும் ஆசை என்னைக் கவ்விக் கொண்டது. அதற்கு படிப்பு தேவை இல்லை என்பதை நான் அறிவேன்!. அதுவே என்னை ஊக்கம் கொடுத்தது!! பேராசையாக, பெரும் வியாதியாக என் உள்ளத்தில் மலர்ந்தது!!!    "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"    இப்படித்தான் என்னை அப்பொழுது பலர் நினைத்தார்கள். என் பேராசை உள்ளத்தில் புகைத்துக்கொண்டு இருப்பதையோ, எப்படியாவது அந்த நிலையை அடைய வேண்டும் என்ற வெறியையோ அவர்கள் அறியார்கள், பாவம் அவர்கள் !!   நான் மெல்ல மெல்ல கூலிவேலையில் இருந்து சிறு முதலாளியாக மாறினேன். வியாபாரத்தில் நான் எந்த கருணையும் காட்டுவதில்லை. எனக்கு அடியாட்கள் சேரத் தொடங்கினர். என் பேராசையை, வெறியை  வெளிப்படையாக  காட்டாமல் இருக்க  ஆண்டவன் சேவை ஒன்றை, என் வியாபாரத்துடன் ஆரம்பித்தேன். நான் இப்ப தரும தலைவன்! எனக்கே ஆச்சரியம் இப்ப !!    "வருடம்    உருண்டு    போக வருமாணம் உயர்ந்து    ஓங்க கருணை   கடலில்     மூழ்க மிருக - மனித அவதாரம்  நான்"   "தருணம்   சரியாய்      வர இருவர்   இரண்டாயிரம் ஆக ஒருவர்   முன்         மொழிய   தரும - தெய்வ அவதாரம்   நான்"     என் பழைய வாத்தியார் இப்ப என்னை வணங்குகிறார். பாடசாலை முதல்வர் கால் தொட்டு விசாரிக்கிறார். காலம் மாறுது ! கோலம் மாறுது, இது தான் வாழ்க்கை!! ஆனால் பேராசை திட்டம் போட்டுக் கொன்டே இருக்கிறது ! இப்ப நான் பெரும் முதலாளி, பெரும் சாமி, கூட்டம் இரண்டு இடமும் குறைவில்லை. வேடிக்கை என்ன வென்றால், எந்த பாடசாலையில் இருந்து நான் துரத்தப் பட்டேனோ, அதன் ஐம்பதாவது ஆண்டு விழாக்கு நானே தலைமை தாங்குகிறேன்! வெட்கம், அப்படி ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, அடித்து துரத்தியவனுக்கு கம்பளி வரவேற்பு!   "ஊருக்கு    கடவுள்     நான் பாருக்கு    வழிகாட்டி  நான் பேருக்கு    புகழ்       நான் பெருமதிப்பு கொலையாளி  நான்"   "குருவிற்கு  குரு       நான் குருடருக்கு கண்      நான் திருடருக்கு பங்காளி   நான் கருவிழியார் மன்மதன்  நான்"    என் பேராசை இத்துடன் நின்ற பாடில்லை, பாவம் புண்ணியம் , இது எல்லாம் எனக்கு தெரியாது. இன்னும் பதவி வேண்டும் , அதை எப்படியும் அடைய வேண்டும். இது ஒன்றே இப்ப என் பேராசை!     "குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு குடை பிடித்து பதவி உயர்ந்து குபேரன் வாழ்வை கனவு கண்டேன்!"   கள்ள வழிகளில் கனவு நியமாவதும், பின் அது கண்டு பிடித்ததும் உடைவது ஒன்றும் புதினம் இல்லை, ஆனால் நான் அப்பொழுது யோசிக்கவில்லை. தேர்தலில் தில்லு முல்லு செய்து வென்று மந்திரியும் ஆகிவிட்டேன் !  என்னை மணம் முடிக்க அழகிகள் கூட்டம்  போட்டி போட தொடங்கி விட்டது. எங்கோ ஒரு மூலையில் கடைசி வாங்கில் இருந்தவன், எங்கோ ஒரு மாளிகையில், மஞ்சத்துக்கு போய் விட்டான்! இதைத் தான் விந்தை என்பதோ!!  ஆனால் ஒன்றை நான் மறந்து விட்டேன். அது தான் பேராசை பெரும் நஷ்டம்!!       "ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும் ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி  ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!"   மக்கள் கூட்டம்  அரசுக்கு எதிராக எழுந்துவிட்டது.  கொள்ளையர்களே, ஏமாற்றி பிழைத்தவர்களே, அடித்த கொள்ளையை தந்து விட்டு சிறைக்கு போ ! எங்கும் ஒரே ஆர்ப்பாட்ட  ஒலி!  ஓடுவதற்கு இடம் தேடினேன், யாரும் தருவதாக இல்லை . எல்லாம் வெறிச் சோடி போய்விட்டது!    "நீர்க்கோல வாழ்வை நச்சி நான்  நீதியற்ற வழியில் நித்தம் சென்று நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து நீங்காத வாழ்வென கனவு கண்டேனே !"   பேராசை என்னும் நோயில் கட்டுண்டு, 'நல்லது, கெட்டது' எது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து அறியாத செயல்களை மேற் கொண்டு, இன்று ஒதுங்க இடம் இல்லாமல் தவிக்கிறேன். நான் இப்ப, இன்னும் என்னுடன் சேர்ந்து இருக்கும் அடியாட்கள் , பக்தர்கள் ஒரு சிலருடன் நாட்டை  விட்டு வெளியே களவாக, பணத்துடன் செல்வத்துடன் போய்க் கொண்டு இருக்கிறேன். மனைவி கூட என்னுடன் வர மறுத்துவிட்டார்.  பிடிபட்டால் நானே இல்லை!  உங்களுக்கு நான் கூறும் இறுதி வாக்கியம் இது தான்:   "ஒரு பரம ஏழைக்கும் ஒரு மிகப்பெரிய பணக்காரனுக்கும் இடையே உள்ள தொடர் ஓட்டத்துக்கு பெயர்தான் “பேராசை”!   இதற்கு பெயர் வைத்தது யார் என்று கேட்டால், அந்த பணக்காரனே தான்! அது மட்டும் அல்ல, பிறர் எவரும் தொட்டுவிட முடியாத தூரத்தில் இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான். ஆனால், அந்த பட்டத்தை [“பேராசை”] அவர்கள், முன்னுக்கு வர முயற்சிக்கும் ஏழைகளுக்கு, முகம் தெரியாதவர்களுக்கு, சாமானியர்களுக்கு, உழைப்பாளர்களுக்கு சூட்டிச் சூட்டி, அவர்களை வரவிடாமல் தடுத்து மகிழ்கிறார்கள்! உண்மையில் இவர்களே, நானே பேராசை பிடித்தவன்!!   நன்றி    அன்புடன்   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கட்டுரை தகவல் எழுதியவர், ஆலன் யென்டோப் மற்றும் நூர் நாஞ்சி பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் தனக்கு நடந்த கோரத் தாக்குதலைப் பற்றி பிபிசியிடம் விரிவாகப் பேசினார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ருஷ்டி, தாக்குதலின் போது அவரது கண் 'வேகவைத்த முட்டையைப் போன்று' முகத்தின் மீது தொங்கியதாகவும், அந்தக் கண்ணை இழந்தது ஒவ்வொரு நாளும் அவரை சோகத்தில் ஆழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். தாக்குதல் சம்பவத்தை நினைவு கூறுகையில் "அன்று நான் இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. பிழைத்துக் கொண்டேன்," என்கிறார். “Knife’’ (நைஃப்) என்னும் தனது புதிய புத்தகத்தை, தனக்கு நடந்த தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக ருஷ்டி கூறினார். ஆகஸ்ட் 2022இல் நியூயார்க்கில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் அவர் விரிவுரை வழங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 27 விநாடிகள் நீடித்த அந்த தாக்குதலில், தன்னை தாக்க வந்த நபர், எப்படி படிக்கட்டுகளில் ஏறி வந்து, தன் கழுத்து, வயிறு உட்பட உடல் முழுவதும் 12 முறை கத்தியால் குத்தினார் என்பதை ருஷ்டி நினைவு கூர்ந்தார். "என்னால் என்னைத் தாக்குபவருக்கு எதிராகச் சண்டையிட முடியவில்லை, தப்பித்து ஓடவும் முடியவில்லை," என்று அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் விவரித்தார். கத்தியால் தாக்கப்பட்டதும் அவர் தரையில் விழுந்தார். பெருமளவு ரத்தம் அவரைச் சுற்றி வெள்ளமாக ஓடியது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆறு வாரங்களுக்குப் பின்னர் படிப்படியாக குணமடைந்தார்.   'ஒவ்வொரு நாளும் மன உளைச்சல்' படக்குறிப்பு,ஆலன் யென்டோப், லேடி ருஷ்டி மற்றும் சல்மான் ருஷ்டி. ஆலனும் சல்மானும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள். இந்தியாவில் பிறந்த 76 வயதாகும் பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, நவீன காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாக பகிரப்பட்டது. சல்மான் 1988ஆம் ஆண்டு வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்னும் புத்தகத்தால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால், பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். "ஏதாவது ஒருநாள் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ஒருவர் மேடையில் குதித்து என்னை தாக்கக் கூடும். இவ்வாறு என் மனதில் தோன்றாமல் இருந்திருந்தால் அது அபத்தமாக இருந்திருக்கும்," என்று தன் பயத்தைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.   'கொலை முயற்சிக்கு இதுதான் காரணமா?' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சல்மான் தாக்கப்பட்டதையடுத்து, கருத்து சுதந்திரத்திற்கான ஆதரவை தெரிவிக்கும் பேரணி நியூயார்க்கில் நடைபெற்றது. முதன்முறையாக, ருஷ்டி தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தன் எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். நியூ ஜெர்சியில் வசிக்கும் 26 வயதுடைய ஹாடி மாதர் என்பவர் மீது சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து நியூயார்க் போஸ்ட் ஊடகத்திற்கு மாதர் அளித்த பேட்டியில், சல்மானின் வீடியோக்களை யூடியூப்பில் பார்த்ததாகக் குறிப்பிட்டு, "இது போன்ற நேர்மையற்ற நபர்களை நான் வெறுக்கிறேன்" என்று கூறியுள்ளார். சல்மான் ருஷ்டி 2022இல் தனக்கு நிகழ்த்தப்பட்ட கோரத் தாக்குதல் பற்றியும் அந்தச் சம்பவத்தின் பின்விளைவுகள் பற்றியும் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டார். இதையொட்டி அலன் யென்டோப் உடன் ஒரு நேர்காணலில் விரிவாகப் பேசினார். நைஃப் புத்தகத்தில், சல்மான் ருஷ்டி தன்னை தாக்கியவருடன் ஒரு கற்பனையான உரையாடலை நடத்துவது போன்றும், ருஷ்டிக்கு அந்த நபர் பதிலளிப்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது. "அமெரிக்காவில், பலர் நேர்மையானவர் போன்று நடிக்கிறார்கள், அவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு பொய் சொல்கிறார்கள். அவர்களைக் கொல்ல இது ஒரு காரணமாக இருக்குமா?" என்று அந்த நபர் கேட்பது போன்று புனையப்பட்டுள்ளது. ருஷ்டி இதுவரை தாக்குதல் நடத்திய மாதர் என்ற நபரைச் சந்தித்ததில்லை. ஆனால், வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளது. ருஷ்டியின் புத்தகத்தை மறுபரிசீலனை செய்ய தங்களுக்கு உரிமை உண்டு என்று பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதைத் தொடர்ந்து விசாரணை சற்று தாமதமானது. இந்த வழக்கு அடுத்து வரும் நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   'தி சாத்தானிக் வெர்சஸ்' சர்ச்சையை ஏற்படுத்தியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'தி சாத்தானிக் வெர்சஸ்' புத்தகம் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் தடைசெய்யப்பட்டது. சல்மான் ருஷ்டி 1981இல் 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' என்னும் புத்தகத்தின் மூலம் புகழ் பெற்றார். அந்தப் புத்தகம் பிரிட்டனில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. ஆனால் அவரின் நான்காவது புத்தகம், 'தி சாத்தானிக் வெர்சஸ்', இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமதுவின் சித்தரிப்பு மற்றும் மதத்தைப் பற்றிய அதன் குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் புத்தகம் தடைசெய்யப்பட்டது. இரானின் அப்போதைய தலைவர் ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனி 1989இல் ஃபத்வா (மத ஆணை) ஒன்றை வெளியிட்டு ருஷ்டியின் படுகொலைக்கு அழைப்பு விடுத்து, புத்தக ஆசிரியரின் தலைக்கு 25 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அந்த ஃபத்வா ரத்து செய்யப்படவே இல்லை. இதன் விளைவாக, ருஷ்டி ஏறக்குறைய பத்து ஆண்டு காலம் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ருஷ்டிக்கு வந்த எண்ணற்ற கொலை மிரட்டல்களின் காரணமாக ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தனர். நாத்திகவாதிகளாக மதத்தைப் பின்பற்றாத இஸ்லாமியர்களுக்கு மகனாகப் பிறந்த சல்மான் ருஷ்டி, கருத்து சுதந்திரத்திற்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகிறார். தற்போது அது "மிகவும் கடினமாகிவிட்டது" என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். "இளைஞர்கள் உட்படப் பலர், கருத்து சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் நல்லது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்," என்பதை வருத்தத்துடன் குறிப்பிடும் ருஷ்டி "கருத்து சுதந்திரத்தின் முழு அம்சம் என்னவென்றால், நீங்கள் உடன்படவில்லை என்றாலும் அந்தக் கருத்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும்" என்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, தனது தனிப்பட்ட உடமைகளைப் பற்றி எண்ணியது 'முட்டாள்தனமாக' பார்ப்பதாகவும் தனது ரால்ப் லாரன் உடை பாழாகிவிட்டதை எண்ணி அந்த நேரத்தில் வருத்தப்பட்டதாகவும் ருஷ்டி கூறினார். மேலும், தனது வீட்டுச் சாவியும் கிரெடிட் கார்டுகளும் தனது பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிடுமோ என்றும் அவர் கவலைப்பட்டாராம். "நிச்சயமாக, இது நகைப்புக்குரியதுதான். ஆனால் அந்தக் கோர நிகழ்வை பின்னோக்கிப் பார்த்தால், அது என்னிடம் சொல்வது என்னவென்றால், எனக்குள் இறக்கக்கூடாது என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தது. எனக்கு கீழே விழுந்த அந்த வீட்டுச் சாவி வேண்டும், எனக்கு அந்த கிரெடிட் கார்டுகள் தேவைப்படும் என்று எனது உடமைகளைப் பற்றிய எண்ணங்களும் ஓடியது. இவை நான் உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வு. 'நீங்கள் வாழப் போகிறீர்கள். வாழுங்கள், வாழுங்கள்...' என்று சொல்வதாகவே நான் பார்த்தேன்’’ என்றார். தாக்குதலுக்கு ஓராண்டு முன்பு, ருஷ்டி தனது ஐந்தாவது மனைவியான அமெரிக்க கவிஞரும் நாவலாசிரியருமான ரேச்சல் எலிசா கிரிஃபித்ஸை மணந்தார். லேடி ருஷ்டி பிபிசியிடம் பேசுகையில், தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டதும், கத்திக் கூச்சலிட்டதாகக் குறிப்பிடுகிறார். "அது என் வாழ்க்கையின் மோசமான நாள்" என்றும் கூறினார். லேடி ருஷ்டி, சல்மான் ருஷ்டியின் கண் இமைகளை மருத்துவர்கள் ஒன்றாகச் சேர்த்து தைத்தபோது தாம் அருகில் இருந்ததை விவரிக்கிறார். "நான் அவருடைய கண்களை அதிகம் நேசிக்கிறேன். அன்று அவர் இரண்டு கண்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார், அதன் பின்னர் எங்கள் உலகம் மாறியது. இப்போது நான் அவருடைய ஒற்றைக் கண்ணை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்" என்கிறார் லேடி ருஷ்டி. ருஷ்டி தனது நைஃப் புத்தகத்தை 'குறைந்தபட்ச காதல் கதை' என்றாலும், ஒரு திகில் கதையின் புத்தகம் என்றே குறிப்பிடுகிறார். "இந்த மோதலில் இரண்டு சக்திகள் இருந்தன. ஒன்று வன்முறை, மதவெறி. மற்றொன்று அன்பின் சக்தி. நிச்சயமாக, அன்பின் சக்தி என் மனைவி எலிசாவின் உருவில் கிடைத்தது. நடந்த சம்பவங்கள் இறுதியில் வெறுப்பின் சக்திகளைவிட அன்பின் சக்தி வலிமையானது என்பதை நிரூபித்தன. இந்த நிகழ்வைப் பற்றி நான் புரிந்துகொண்ட விதம் இதுதான்," என்கிறார் தீர்க்கமாக. மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்று குறிப்பிடும் ருஷ்டி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும், பாதுகாப்பு நடைமுறைகளில் நான் திருப்தி அடையாவிட்டால் நிகழ்வில் பங்கு பெறப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய நபரைப் பற்றிப் பேசுகையில் அவர் "ஒரு அழகான பிடிவாதமான நபர்" என்று குறிப்பிட்டு, "எனக்கு கட்டுப்பாடுகள் நிறைந்த அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை வேண்டாம். நான் என் வாழ்க்கையை வாழப் போகிறேன்" என்றார் நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/c51nxzjdrdxo
    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.