Jump to content

தாய்மையே வெல்லும்!


Recommended Posts

தாய்மையே வெல்லும்!

 

 
k5

"அவன் வந்துவிடுவானோ எனும் அச்சத்துடன் தேவகியும் கோமதியும் ரயில்நிலைய இருக்கையில் நிலை கொள்ளாமல் அமர்ந்திருந்தார்கள்.
"நான் பொறந்தப்பவே கழுத்தை நெறிச்சோ வாயில நெல்லைப் போட்டோ என் கதைய முடிச்சிருந்தா இப்ப இந்தக் கஷ்டம் வந்திருக்காதில்லம்மா'' என்ற தேவகி வானத்தை நோக்கினாள்.
வானம் இருண்டு கிடந்தது. இடி முழக்கங்களும் மின்னல் வீச்சுக்களும் பூமியை துவம்சம் செய்யப்போவது போல் தொடர் தாக்குதல் நடத்தத்தொடங்கி இருந்தன.. மெல்ல மெல்ல மழையும் இறங்கிற்று, பயணிகள் ஆங்காங்கே ஒதுங்கி, ஒண்டிக் கொண்டு நின்றார்கள்.
"ரயில் எப்ப வரும்?''
"வருமோ வராதோ.. வந்தாதான் தெரியும்''
இத்தகைய வினாக்களுக்கு பதில் சொல்லுவதுபோல் ரயில் நிலைய ஒலிபெருக்கி அலறியது... 
"பயணிகள் கவனத்திற்கு: இரவு ஒன்பது மணிக்கு வரவேண்டிய ரயில் தண்டவாளத்தில் விரிசல் காரணமாக மூன்று மணி நேரம் தாமதமாக வந்து சேரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது' 
"மூன்று மணி நேரம் லேட்டா.. அப்ப விடிஞ்சிடும்''
"மழை எப்ப ஓயும்ன்னு தெரியலையே.''
கோமதி மகளின் கையைப் பற்றிக் கொண்டாள்.
"அவன் வந்திருவானோன்னு பயமாக இருக்கு தேவகி. பக்கத்தில எங்கேயாவது ராத்திரிக்கு தங்கியிருந்திட்டு காலையிலப் போகலாமா?''
"வேணாம்,வேணாம்'' என்றாள், தேவகி அவசரமாக.
"வந்தா வரட்டும். அதுக்காக இனியும் ஓடி ஒளிய முடியாதும்மா''
"நாம ரெண்டுபேர் மட்டும்ன்னா சரி... ஆனா உன் வயித்திலே இன்னொரு உயிர் வளருதே... அதுக்கு ஊறு வந்திரக் கூடாதே'' 
"ஆமா - தவமிருந்து வரம் வாங்கி வந்த கர்ப்பம். அதுதான் என் வாழ்க்கையை மாத்தி அமைக்கப்போகுதா! அன்பிலேயும் பாசத்திலேயும் உருக் கொண்டதா அது! தினசரி வசை, வதை, உதை, பட்டினின்னு எத்தனை இம்சை. அதைப் பெத்து பாலூட்டி சீராட்டி வேறே வளர்க்கணுமாக்கும்''
கோமதி அந்தப் பேச்சைத் தொடராமலிருக்க மௌனம் காத்தாள். நேரம் நகர்ந்து கொண்டே இருந்தது. சால்வையை எடுத்து மகளுக்குப் போர்த்திவிட்டாள். இடியும் மின்னலும் மழையும் கொட்டித் தீர்த்துவிட்டு ஓயத்தொடங்கின.
ஒரு வழியாக ரயில் வந்து சேர்ந்தபோது எத்தனை மணியென்று தெரியவில்லை. தூங்கிக் கொண்டிருந்தவர்களை தட்டி எழுப்பிக் கொண்டு ரயிலை நோக்கி ஓடினார்கள்.
ரயில் பெட்டிகளில் அதிக கூட்டமில்லை. சில பெட்டிகள் காலியாகக் கிடந்தன. தேவகியும் கோமதியும் அமர்ந்த இருக்கைக்கு எதிரே ஒரு மூதாட்டி ஒருக்களித்துப் படுத்திருந்தாள். ஓரத்தில் இளம் பெண்ஒருத்தி அமர்ந்திருக்க, இருவருக்கும் நடுவில் அந்த இரவில் ஒரு குழந்தை தானாக சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது. தூக்கி வைத்துக் கொஞ்சத் தோன்றும் துருதுருப்பு.
அரைகுறையாக கண்களை மூடிக் கொண்டிருந்த மூதாட்டி சடக்கென எழுந்து உட்கார்ந்தாள்.
"ஊரு வந்துரிச்சா?''
"இல்லத்தே'' என்று பதிலளித்தாள் இளம் பெண்
ரயில் புறப்பட்டது. மூதாட்டி கோமதியிடம் பேச்சுக் கொடுத்தாள்.
"நீங்க தாயும் மகளுமா?''
"ம்''
"எந்த ஊரு?''
குழந்தை இரு கைகளையும் கோமதியை நோக்கி விரித்து "ம்மா... ம்மா'' என்றது. கோமதி சட்டென எழுந்து குழந்தையை ஏந்திக் கொள்ள அது வாய்விட்டுச் சிரித்தது.
"வயசு ஒண்ணு ஆவுது. பேபின்னு பேரு, பொறந்த மூணாம் மாசமே அப்பனை முழுங்கிடுச்சு'' என்றாள் மூதாட்டி
"அப்படி சொல்லாதிய'' என்றாள் குழந்தையின் தாய் அவள் கண்களில் நீர்த்திரையிட்டது.
"இந்தப் பிஞ்சு என்ன செய்யும்?'' என்ற கோமதி குழந்தையை அணைத்துக் கொள்ள, அது இவளிடம் ஒட்டிக் கொண்டது.
முன்னும் பின்னும் தொடர்பு இல்லாமல் இவர்கள் பேசிக் கொண்டிருக்க, குழந்தை கோமதியின் மடியிலேயே தூங்கிவிட்டது.
தேவகி கண்டும் காணாததுபோன்று பின்னோக்கிச் செல்லும் மரங்களையும் வீடுகளையும் இருளினூடே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பிறந்த ஆறுமாதப் பருவத்திலேயே, விபத்து ஒன்றில், தந்தையை இழந்தவள் தேவகி. "ஆறுமாசத்திலே அப்பனை முங்கிட்டா'' என்று அவளது பாட்டி சாகும்வரை திட்டிக் கொண்டுதானிருந்தாள்.
கோமதியின் அழுகையும் சிரிப்பும் இன்பமும் துன்பமும் மகள் தேவகியே என்றானாது. சமூக ஏளனங்களை சகித்துக் கொள்ளப் பழகிவிட்டாள். தையல் தொழில் அவளது வருமானத்துக்குக் கை கொடுத்தது. மகளை செல்லமாக வளர்த்தாள்.
தேவகி சுறுசுறுப்பும் பிடிவாதமும் நிரம்பியவளாக வளர்ந்தாள். படிப்பிலும் கெட்டிகாரியாய்த் திகழ்ந்தாள்.
கல்லூரியில் படித்தபோது, அவளைத் துரத்தி காதலித்தான் அவளுடன் படித்தவன். அவள் நெஞ்சில் கற்பனைகளைக் கிளர்த்தினான். படிப்பு முடிந்ததும் கல்யாணம் என்று உத்தரவாதமளித்தான். ஆயினும் கைகளைத் தொடுவதற்குக் கூட நிபந்தனை விதித்தாள் தேவகி.
கல்லூரிப் படிப்பு முடிந்தபின் அவனை நேரில் சந்திப்பது அபூர்வமாயிற்று, காலப்போக்கில் கைப்பேசி உரையாடலும் மெல்ல மெல்லக் குறைந்து போயிற்று.
ஒருநாள் கைப்பேசி அழைப்பொலி கேட்டது. எடுத்தாள்.
"தேவகி''
"சொல்லு''
"என்னை மன்னிச்சிரு தேவகி''
"எதுக்கு?''
"எங்க தாய் தகப்பன் எனக்குப் பெண் பார்த்து முடிவு பண்ணிட்டாங்க, மறுத்தா தற்கொலை செய்வோம்ன்னு மிரட்டுறாங்க. எனக்கு வேறே வழி தெரியலே''
"எனக்கு என் வழி தெரியும்''
அதுதான் அவனுடனான கடைசி உரையாடல். கைப்பேசியைத் தூர எறிந்தாள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நினைவாகத் தூக்கி எறிந்தாள்.
அம்மாவுக்கு உதவியாக சமையல், தையல் தொழிலில் உதவி பிறவேளைகளில் வாசிப்பு என்று நாட்கள் உருண்டோடின.
ஒருநாள் மகளின் தலையைக் கோதியபடி, "எனக்கு வயசாகிக்கிட்டேபோகுது. வரவர ஒடம்புக்கும் முடியலே தேவகி'' என்றாள் கோமதி
"அதுக்கு நான் என்ன செய்யணும்?''
"என் காலம் வரைக்கும் எல்லாம் சரி, அதுக்கப்புறம்...''
"என்னதான் சொல்ல வர்றேம்மா''
"ஒனக்கு ஒரு கல்யாணம் பண்ணிப் பார்க்கணும் தேவகி''.
"முதல்லே நான் ஒரு வேலைத் தேடிக்கிறேன்'' என்றாள் தேவகி
மகள் மாறுவாள் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தாள் கோமதி. ஒரு கணிப்பொறி பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றதேவகி அங்கேயே ஒரு கணிசமான ஊதியத்தில் பணியில் அமர்ந்தாள். அங்கு பணி செய்த இளைஞன் "தேவகி... தேவகி...' என்று இவள் பின்னால் ஓடி ஓடி வந்தான். இவள் ஒதுங்கி ஒதுங்கிப் போனாள். அவ்வேளையில் கல்யாணத் தரகர் ஒருவர் கோமதியை தினமும் நச்சரித்துக் கொண்டிருந்தார்.
"பையன் நல்ல பையன், குமரன்னு பேரு, சொந்தமா தொழில் செஞ்சு வளர்ற பையன். தேவகிக்கு பொருத்தமான பையன்''
"தேவகிகிட்ட பேசுறேன்''
"காலந்தள்ளிப் போடாதே. வரன் கை நழுவிப்போயிரும். தேவகிக்கும் வயசாகிட்டே போகுது''
ஒரு வழியாக இருவரையும் சம்மதிக்க வைத்துவிட்டார் தரகர். திருமணத்தின்போது நகை நட்டு, சீர்வரிசை என்று குறைவைக்காமல் செய்து புருசனுடன் அவனது ஊருக்கு அனுப்பிவைத்தாள் கோமதி. தொலைதூர ஊருக்கு மகளைக் கட்டிக் கொடுத்துவிட்டோமே என்று கவலை இருந்தாலும் "அவ நல்லா இருப்பாள்' என்ற மனசைத் தேற்றிக் கொண்டாள்.
ஆனாலும் நிஜம் வேறாக இருந்தது.
தேவகியின் முதல் இரவே வதையோடுதான் தொடங்கிற்று. " நீ யாரையோ லவ் பண்ணுனியாமே... அவன் ஒன்னைக் கழட்டிவிட்டானா... இல்ல... நீ அவனைக் கை கழுவிவிட்டியா?''
ஒவ்வொரு இரவும் விதம் விதமான வசை, வதை...
"சில மாதங்களிலேயே இவளது நகைகள் அடகுக் கடைக்குப் போயின. "தொழில் டெவலப் ஆனதும் திருப்பிக்கலாம்'' என்றான்.
ஆனால் தொழில் வளரவில்லை. ஆடம்பரச் செலவு, மது என்று அவனது நண்பர்களின் வளையத்துள் சிக்கிக் கொண்டுவிட்டான், அவன்.
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடிக்கும் கதையாகி மாமியாரின் வீடு, நகைகள் மீது கவனம் திரும்பிற்று, ஏற்கெனவே ஒரு கல்யாணம் நடந்து அவளைத் துரத்திவிட்டவன் என்ற தகவல் தேவகிக்கு கிடைத்தபோது, அதிர்ந்துதான் போய்விட்டாள். அம்மாவுக்குத் தெரியாமல் எதை மறைப்பது?
எத்தனை காலம்தான் மறைப்பது?
இந்தச் சூழலில்தான் வாந்தியும் தலைவலியும் தாங்காமல் பெண் மருத்தவரிடம் போனாள். "உன் வயித்துல குழந்தை உண்டாகி இருக்கும்மா.. நல்லா ரெஸ்ட் எடு, கீரைகள், பழங்கள் சாப்பிடு, நிறைய தண்ணீர்க்குடி. அடுத்த மாசம் வந்து செக்கப் பண்ணிக்க'' என்றார் டாக்டர்.
கவலையுடன் வீடு திரும்பிய தேவகி குழம்பிப் போயிருந்தாள், இப்போதைக்கு குழந்தை தேவையா என்ற கேள்விதான் அவளுக்குள் மேலோங்கியிருந்தது. எனினும் ஒரு சிறுநம்பிக்கை. தந்தையாகப் போகும் செய்தி அவனை மாற்றாதா?
அவனுக்காக சாப்பிடாமல் காத்திருந்தாள். அவன் வழக்கத்தைவிட அதிகமான போதையுடன் வீட்டுக்குள் நுழைந்தான். கீழே விழுந்துவிடாதபடி பற்றிச் சென்று படுக்கையில் கிடத்தினாள்.
"டாக்டரம்மாவைப் பார்த்தேன், நான் கர்ப்பமாக இருக்கிறதா சொன்னாங்க.'' 
"வேணாம்'' என்றான் அவன்.
"என்ன வேணாம்?''
"உனக்கு இப்ப கொழந்தை வேணாம்''
"ஏன் வேணாம்''
"வேணாம்ன்னா வேணாம்! நான் சொல்றதைத்தான் நீ கேக்கணும். கலைச்சிடு''
"சரி கலைச்சிடலாம். சாப்பிடவாங்க''
"நான் வயிறுபுல்லா சாப்பிட்டுட்டேன்''
அலங்கோல நிலையில் அவன் உறங்கத் தொடங்கினான். விடியும்வரை அவள் அழுது கொண்டிருந்தாள்.
முதல் நாளிரவு எதுவும் நடவாதது போன்று காலையில் எழுந்தவன் நடந்து கொண்டான். "தேவகி... தேவகி'' என்று குழைந்தான். அவளது கைகளைப் பற்றி கொண்டான்.
"என்ன இன்னைக்கு புதுசா இருக்கு?''
"என் தொழிலுக்கு ரெண்டு பிரண்ட்ஸ் உதவி செய்றதா உறுதி சொல்லி இருக்காங்க தேவகி''
"ம்''
"என்ன வெறுமே "ம்' கொட்டுறே? அவங்க ரெண்டு பேரும் நாளைக்கு இரவுக்கு நம்ப வீட்டுக்கு வர்றாங்க''
"பிரண்ட்ஸ்ங்களை வெளியிலேயே வச்சுக்கோங்க. வீட்டுக்கெல்லாம் வேணாம்''
"என்ன அப்படி சொல்லிட்டே, அவங்களை நீ அனுசரிச்சுப்போனா... நிறையப் பணம் கிடைக்கும். என் தொழில் வளர்ச்சி உன் கையில்தான் இருக்கு தேவகி. நான் சாயந்திரம் போன்ல பேசிறேன்''
அவனது கால்களை வாரி நிலத்தில் அடித்துக் கொல்ல வேண்டும் என்று எழுந்த வெறியை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள், "நான் ஒன்னைக் கொல்றதுக்குள்ளே இங்கேயிருந்து ஓடிப்போயிடு'' என்றெழுந்த கோபக்கனலை திசை மாற்றி, "யோசிச்சு சொல்றேன்'' என்றாள். அவள் கன்னத்தில் செல்லமாகத் தட்டிவிட்டு வெளியேறினான், அவன்.
அவன் போய்விட்டதை உறுதி செய்து கொண்ட தேவகி, தாய் கோமதியை கைப்பேசியில் அழைத்தாள்.
"எப்படி தேவகி இருக்கே?'' என்றாள் அம்மா.
"நீ ஒடனே பொறப்பட்டுவா''
"என்னம்மா விசேஷம்''
"இங்க ரெண்டு மூணு கொலை விழுகிற மாதிரி இருக்கு. நீ ஒடனே பொறப்புட்டு வா'' அலறியடித்துக் கொண்டு வந்து சேர்ந்தாள் கோமதி. நடந்தது அறிந்து "பாழும் கிணற்றிலே உன்னைத் தள்ளிட்டேனடி'' என்று குமுறி அழுதவள் ஒரு முடிவுக்கு வந்தாள்.
"நீ இவனோட வாழவும் வேணாம், இந்தப் பாவியைக் கொல்லவும் வேணாம், நம் ஊருக்குப் போயிரலாம். இப்பவே பொறப்படு. அவன் ஊருக்கு வந்தா வெட்டரிவாள் இருக்கு. நான் பாத்துக்கிறேன்'' என்று துரிதப்படுத்தினாள்.
இருளில் யாருக்கும் தெரியாமல் கிளம்பினார்கள் இருவரும்.

இடி , மின்னல், மழை ஓய்ந்து வானம் வெளி வாங்கியபோது, அவர்கள் இறங்க வேண்டிய ரயில் நிலையம் வந்துவிட்டது. பொழுது புலர்வதற்கு இன்னும் சற்று நேரமே இருந்தது.
கோமதி தன் மடியில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையைப் பிரிய மனமில்லாதவளாக அதன் தாயிடம் ஒப்படைக்கையில் அது இவள் சேலையைக் கையில் இறுகப்படித்துக் கொண்டிருந்தது. மெல்ல அதன் பிஞ்சுக்கரங்களிலிருந்து சேலையை விடுவித்துக் கொண்டு இறங்குவதற்கு முன் சொன்னாள்.
"குழந்தை ரொம்ப சூட்டிகையா இருக்கும்மா, திட்டாதீங்க, நல்லபடியா வளர்த்து விடுங்க. உங்களைக் காப்பாத்தும்''
"புள்ளைய எழந்திட்டோமோங்கிற வேதனையில் ஏதாச்சும் சொல்லிர்றதுதான், ஆனா அதானே எங்க ரெண்டு பேருக்கும் உயிரு. அது இல்லேன்னா நாங்க இருந்து என்ன பிரயோசனம்?'' என்றாள் முதியவள் தழுதழுத்த குரலில். 
ஊருக்குள் இறங்கி நடந்துச் சென்ற தாயையும் மகளையும் விநோதமாகப் பார்த்தனர் சிலர். 
"என்ன வீட்டுக்காரர் வரலையா?''
"அவுகளுக்கு கம்பெனியில முக்கிய வேலை'' என்று பதிலளித்தாள் கோமதி
மறுநாள் மகளை பெண் மருத்துவரிடம் அழைத்துச் சென்றாள் கோமதி. பரி சோதித்த மருத்துவரிடம், " இவ இப்போதைக்கு குழந்தை வேணாம்ங்கிறாம்மா'' என்றாள் 
"ஏம்மா குழந்தை வேண்டாம்ங்கிறே?''
கணவனின் சித்தரவதைகளையும், துரோகத்தையும் தேவகி சொல்லுகையில் கண்ணீர் திரண்டது.
"நான் இனி அந்தக் கயவனோட வாழ முடியாது டாக்டர். அவன் ஒரு வேளை தேடி வந்தாலும் இந்தக் குழந்தை யாருக்குப் பிறந்ததுன்னு கேட்டு அவமானப்படுத்தக் கூடியவன். இங்கே ஊரிலே ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லி மாளாது. கலைச்சிருங்க டாக்டர்''
"இதபாரும்மா, நான் சட்டத்துக்கும், சமூகத்துக்கும் கட்டுப்பட்டு சேவை செய்யிறவ. நீ கல்யாணமான பொண்ணு, எதுக்கு பயப்படணும்? குழந்தை வரம் கேட்டு கோயில் கோயிலா அலையிறங்க எத்தனையோ பேரு எந்தக் க ருவும் பாவம் நிரம்பியதல்ல. ஒவ்வொரு குழந்தைக்கும் பூமியிலே பிறக்கிற உரிமை உண்டு. அதைக் கொல்வது குற்றம். பாவம் கோமதியம்மா... உங்க மகளுக்கு எடுத்துச் சொல்லுங்க... ரெண்டுபேரும் டயம் எடுத்துக்கிட்டு நல்லா யோசிச்சு முடிவு பண்ணிட்டு வாங்க''
இருவரும் வெளியில் வந்தார்கள்.
"டாக்டர் சொன்னதை கேட்டியா தேவகி? நல்லா யோசி... முடிவு எடுக்க வேண்டியவ நீ தான்''
" ஒரு அயோக்கியனோட மனைவிங்கிறதே எனக்கு மகா கேவலம். இதிலே அவனோட குழந்தையைவேறே வயித்திலே சுமந்து காலம்பூராவும் அவமானமும் வேதனையும் சுமக்கச் சொல்றியா?''
எனக்கு ஒண்ணு தோணுது, சொன்னா காது குடுத்துக் கேட்பியா தேவகி?
"புதுசா என்ன சொல்லப்போறே?''
"குழந்தை நல்லபடியா பொறக்கட்டுமே, அது வரைக்கும் பொறுக்கமாட்டியா? ஒரு எட்டு மாசமோ, ஒன்பது மாசமோ''
"அப்புறமா?''
"குழந்தை பொறந்ததும் ஒரே ஒரு வாரம் தாய்ப்பால் குடு, போதும் அதை எங்கேயாவது இல்லத்திலே விட்டுரலாம். இல்லேன்னா யாருக்காவது தத்துக் குடுத்திரலாம். இந்த பூமியிலே அது எங்கேயாவது வாழ்ந்திட்டு போகட்டுமே''
"ஒரேடியா சாகிறத்துக்குப் பதிலா ஆயுள் பூராவும் தினம் தினம் சாகலாம்ங்கிறியா?
"வார்த்தையாலே என்னைக் கொல்லாதடீ என்னோட ஆசையெல்லாம் ஒண்ணெ ஒண்ணுதான். என் பொண்ணு ஒரு கொலைகாரியாவோ குற்றவாளியாகவோ ஆயிரக்கூடாது.''
வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், தரையிலமர்ந்து குலுங்கிக் குலுங்கி அழுத தாயின் தோள்களில் கரங்களைப் பதித்தாள் தேவகி.
"உன் பேச்சுக்கு சம்மதிக்கிறேன். ஆனா ஒரு கண்டிசன்''
"என்ன கண்டிசன்னாலும் கேட்கிறேன், சொல்லு''
"நான் குழந்தைக்குப் பால் குடுக்கமாட்டேன். அது பொறந்ததும், எங்கேயாவது இல்லத்திலே விட்டுரணும், இல்லே யாருக்காச்சும் தத்துக் குடுத்திரணும், நான் மறுபடி குழந்தையைப் பார்க்கமாட்டேன்.''
"சரிம்மா, சரிம்மா'' என்றாள் கோமதி. 
தேவகியை மறுபடியும் அழைத்துக் கொள்ள குமரன் போட்ட நாடகம் எடுபடவில்லை. நீதிமன்றத்துக்குப் போய்விட்டாள், அவள்....
விவாகரத்துக்காக காத்திருந்தபோது, பிரசவத்திற்கான காலம் நெருங்கிவிட்டது.
கோமதி இரவு பகல் பாராது மகளின் அருகிலேயே இருந்தாள். பிரசவ வலி எடுத்ததும், மருத்துவமனையில் சேர்த்தாள். அறுவை சிகிச்சை இல்லாத சுகப்பிரசவம், அழகான ஆண் குழந்தை.
தேவகி தனது முடிவிலிருந்து மாறவில்லை. கோமதியும் அவளை மாற்றவில்லை.
வெளியில் பால் வாங்கி வைத்திருந்து சங்கின் மூலம் புகட்டினாள். அன்றைய பொழுது முழுவதும் அப்படியே கழிந்தது. 
மறுநாள் யாரோ ஒரு பெண்மணி வந்து ரகசியமாக கோமதியை வெளியில் அழைத்துச் சென்றாள்.
சோர்வும் மயக்கமும் முற்றிலும் விடுபடாத நிலையில் படுத்திருந்த தேவகி குழந்தையின் அழுகுரல் கேட்டு கண்களைத் திறந்தாள். கட்டிலுக்கு அருகே போடப்பட்டிருந்த தொட்டிலில் கிடந்த அவளது குழந்தையின் அழுகுரல்தான்.
"ஏம்மா குழந்தை அழுவுதே... காதிலே விழலையா? தூக்கிப்பால் குடும்மா'' என்றாள் பக்கத்துக் கட்டிலுக்குப் புதிதாக வந்திருந்த கர்ப்பிணி ஒருத்தி.
இவள் திரும்பிப்படுத்துக் கொண்டாள். குழந்தை வீரிட்டு அழத்தொடங்கியது. அதன் குரல் தேவகியின் மார்பை ஊடுருவிச் செல்வதுபோல் உரக்க எழுந்தது. மார்புக்குள்ளே எரிமலை கனன்றெரிவது போலிருக்க, இரு கைகளையும் நெஞ்சின் குறுக்கே வைத்து அழுத்திக் கொண்டாள். குழந்தை மீண்டும் வீரிட்டது.
வெளியே போயிருந்த கோமதி அவசரமாக உள்ளே வந்தாள். அவளுக்குப் பின்னே ஓர் ஆணும் பெண்ணும்.
"தேவகி உன் குழந்தையை தத்தெடுக்க சரியான ஆள் கிடைச்சிட்டாங்க. சொத்து சுகம் வீடுன்னு வசதியானவங்க, மொதத் தவணையா ஒரு லட்சம் ரூவா தர வந்திருக்காங்க''
தேவகி மெல்லத் திரும்பினாள், மார்பில் பால் குடிக்கும் குழந்தை... நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். வார்த்தைகள் அழுகைக் கலந்து வெளிப்பட்டன.
"வேணாம் பணமும் வேணாம், சொத்தும் வேணாம் இது என்னோட குழந்தை. யாருக்கும் தரமாட்டேன். யாருக்கும் தரமாட்டேன். போயிடுங்க.''

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.