Jump to content

விவிலிய மாந்தர்கள் : பூமிப்பந்தின் முதல் மானுடன்


Recommended Posts

விவிலிய மாந்தர்கள் 01: பூமிப்பந்தின் முதல் மானுடன்

 

 
Viviliya%20Maandhargalcol
 
 
 

று நாட்கள் செலவிட்டுப் பூமியைப் படைத்த கடவுள், ஏழாம் நாள் ஓய்வெடுத்தார். அந்த ஓய்வுநாளைக் கிறிஸ்தவம், இஸ்லாம், யூதம் உள்ளிட்ட ஆபிரகாமிய மதங்கள் புனித நாளாகக் கடைப்பிடிக்கின்றன. அந்தப் புனித நாளுக்குப் பின் பூமியின் முதல் மனிதனாக மட்டுமல்ல, முதல் புனிதனாகவும் கடவுளால் படைக்கப்பட்டவர் ஆதாம்.

 

வானத்தையும் பூமியையும் கடவுள் படைத்தபோது, ‘பூமி ஒழுங்கில்லாமல் வெறுமையாக இருந்தது’ எனக் கூறுகிறது விவிலியத்தின் தொடக்க நூல். அந்த வெறுமையைப் போக்கவே கடவுள் இருளையும் வெளிச்சத்தையும் உருவாக்கி, பூமி முழுவதும் சூழ்ந்திருந்த தண்ணீரை ஒரே பக்கமாக ஒதுக்கி அதைக் கடலாக நிலைநிறுத்தினார். தரையை உண்டாக்கி அதற்கு நிலம் என்று பெயரிட்டார். நிலமாக மாறிய உலர்ந்த தரையில் கடவுள் வரைந்த உயிருள்ள ஓவியம் என, மரம், செடி, கொடிகள், புல், பூண்டு உள்ளிட்ட பசுமைக் கூட்டத்தைக் கூறலாம்.

 

பூமியை அழகாக்கிய அம்சங்கள்

“நிலத்தில் புற்களும் செடிகளும் மரங்களும் அந்தந்த இனத்தின்படியே முளைக்கட்டும். செடிகள் விதைகளைத் தரட்டும், மரங்கள் விதைகளுள்ள பழங்களைக் கொடுக்கட்டும்” என்று கடவுள் சொன்னார். அதன்படியே நிலத்தில் புற்களும் செடிகளும் மரங்களும் அந்தந்த இனத்தின்படியே முளைக்கத் தொடங்கின. செடிகள் விதைகளைத் தந்தன, மரங்கள் விதைகளுள்ள பழங்களைக் கொடுத்தன. கடவுள் அவற்றைப் பார்த்தபோது அவை நன்றாக இருந்தன என்று விவிலியம் விவரிக்கிறது.

படைப்பின் அடுத்தகட்ட அற்புதமாகக் கடல் உயிரினங்களையும் நிலத்தில் பறவைகளையும் விலங்குகளையும் அவர் சிருஷ்டித்தார். பூமியை அழகாக்கிய நீர், வெளிச்சம், பசுமை, உயிர்கள் ஆகியவற்றால் பூமிக்கு ஒரு தனி அழகு வந்திருப்பதைக் கடவுள் கண்டார். ஆனால், கடவுள் இதுபோதும் என்று இருந்துவிடவில்லை. இத்தனை அழகும் கம்பீரமுமாக படைத்துவிட்டபின் பூமியை மேலும் அழகுள்ளதாக அவர் ஆக்க விரும்பியதன் விளைவே, சிந்திக்கும் திறன்கொண்ட முதல் ஜீவாத்மாவாகிய ஆதாம் எனும் ஆதிமகனின் சிருஷ்டிப்பு!

 

கடவுளின் சாயல்

கடவுள் உருவத்தில் எப்படி இருப்பார் என்பதற்குப் பெரும்பாலான மதங்கள் ஏற்றுக்கொண்ட அடிப்படைத் தத்துவமாக இருப்பது மனித சாயல். ஆம்! விவிலியமும் அதையே நிறுவுகிறது. தொடக்க நூலின் தொடக்க அதிகாரத்தில், வசனம் 29-ல், ‘கடவுள், “மனிதனை நம்முடைய சாயலில் நம்மைப் போலவே உண்டாக்கலாம். கடலில் வாழும் மீன்களும், வானத்தில் பறக்கும் பறவைகளும், வீட்டு விலங்குகளும், ஊர்ந்து செல்லும் பிராணிகளும், முழு பூமியும் அவனுடைய அதிகாரத்தின்கீழ் இருக்கட்டும்”என்று சொன்னார் எனக் கூறுகிறது. தொடக்க நூலின் இரண்டாம் அதிகாரம், 7-வது வசனம் ‘கடவுளாகிய பரலோகத் தந்தை, நிலத்திலிருந்து மண்ணை எடுத்து, மனிதனை உருவாக்கத் தொடங்கினார்; அவனுடைய மூக்கில் உயிர்மூச்சை ஊதினார். அப்போது அவன் உயிருள்ளவன் ஆனான்’ எனக் கூறுகிறது.

தான் படைத்த மனிதன் தனது சாயலில் மட்டுமே இருக்க வேண்டும் என்று கடவுள் உறுதியாக இருந்தது மனித சமூகத்துக்கு எத்தனை பெரிய ஆசீர்வாதம்! அது மட்டுமல்ல; பூமியை வழிநடத்தும் தலைவனாகவும் அவனுக்குக் கடவுள் அதிகாரத்தைக் கொடுக்கிறார். அந்த அதிகாரம் மண்ணிலிருந்து கடவுளால் உருவாக்கப்பட்டதால் அவனுக்கு வழங்கப்பட்டது என்கிறார்கள் விவிலிய ஆராய்ச்சியாளர்கள். மேலும் விலியத்தின் மூல மொழிகளுள் ஒன்றாகிய எபிரேயத்தில் ‘ஏதாம்’ (a.dham) என்று வழங்கப்படும் சொல்லுக்கு ‘மண்ணுக்குரிய மனிதன்’ என்று பொருள் கொள்ளப்படுகிறது.

 

ஏதேன் எனும் பரிசு

ஆதாமைப் படைத்த பிறகு பூமியின் கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்து, அவனை அங்கே குடிவைத்தார். அதைப் பண்படுத்தவும் பராமரிக்கவும் சொன்னார். அதோடு, மனிதனுக்கு ஒரு முக்கியமான கட்டளையையும் கொடுத்தார்: “இந்தத் தோட்டத்தில் இருக்கிற எல்லா மரங்களின் பழங்களையும் நீ திருப்தியாக உண்ணலாம். ஆனால், ‘நன்மை தீமை’அறிவதற்கான மரத்தின் பழத்தை மட்டும் நீ சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால், அதே நாளில் நீ இறந்துபோவாய்.” என்று எச்சரித்தார்.

அவரது எச்சரிக்கையை மனத்தில் நிறுத்தியிருந்த ஆதாமுக்கு, ஏதேன் தோட்டம் பூமியின் சொர்க்கமாக இருந்தது.

அங்கே ஆதாமே தலைவன். ஏனெனில், ஏதேன் தோட்டத்தையும் அங்குள்ள அனைத்து உயிர்களையும் அவன் கவனத்துடன் கையாளவும் அவற்றை நேசிக்கவும் கூடிய பண்பை அவன் வளர்த்துக்கொள்கிறானா என்பதைக் காண விரும்பினார் கடவுள். இதற்காகத் தாம் படைத்த எல்லாக் காட்டு விலங்குகள், பறவைகள் உயிரினங்கள் ஆகிவற்றுக்கு ஆதாம் என்ன பெயர் வைப்பான் என்று பார்ப்பதற்காக, அவற்றை அவனிடம் கடவுள் கொண்டுவந்தார். ஒவ்வோர் உயிரினத்துக்கும் முதல் மனிதனாகிய ஆதாம் என்ன பெயர் வைத்தானோ அவையே அவற்றின் பெயர்களாக ஆயின என்று விளக்குகிறது விவிலியம்.

 

ஏவாள் எனும் தோழி

கடவுள் எதிர்பார்த்தபடியே அவன் கடவுளின் பிள்ளையாகவும் பூமியின் தலைவனாகவும் இருந்தான். ஆனால், அவனுக்குப் பொருத்தமான ஒரு துணை இல்லை என்பதைக் கடவுள் உணர்ந்தார். அவனுக்கு ஆழ்ந்த தூக்கத்தை வரவழைத்து அவன் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில், அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை எடுத்த கடவுள், அதிலிருந்து ஒரு பெண்ணை உருவாக்கி, அவளை ஆதாமிடம் கொண்டுவந்தார். அவளே ஏவாள். கடவுள் குறிப்பிட்டபடியே ‘அவர்கள் ஒரே உடலாக, கணவனும் மனைவியுமாக’ இருந்தார்கள். நிர்வாணத்தை உணர முடியாதவர்களாக அவர்கள் இருந்தார்கள். அதனால் அவர்கள் வெட்கப்படவில்லை. ஏவாள் தனக்குத் துணையாக விளங்கியதில் ஆதாம் மகிழ்ந்திருந்தான். தன் தந்தையாகிய கடவுளால் தனக்கு அளிக்கப்பட்டவளை அவன் நம்பினான். ஆனால், சாத்தானால் ஏவாள் ஏமாற்றப்பட்டாள். ஆதாமும் சாத்தானின் வலைக்குள் சிக்கிக்கொள்ள ஏவாள் காரணமாகிப்போனாள். எதை உண்ணக் கூடாது என்று கடவுள் எச்சரித்திருந்தாரோ அந்த மரத்தின் கனியை உண்ட ஏவாள், அதில் பாதியை ஆதாமையும் உண்ணும்படி செய்தாள். பூமியில் முதல் பாவம், ‘கீழ்ப்படிதல்’ எனும் கடவுள் தந்த ஞானத்தைப் பொருட்படுத்தாமல் இருவராலும் மீறப்பட்டதால் நிகழ்ந்துபோனது. புனிதமான ஏதேனில் கலகக் கறை படிந்தது. ஆதாமையும் அவனுடைய மனைவி ஏவாளையும் தோட்டத்தை விட்டு கடவுள் வெளியேற்றினார். ஆதாமும் ஏவாளும் இழந்தது ஏதேன் எனும் அற்புதத்தை மட்டுமல்ல, கடவுள் தந்திருந்த ‘சாகா வர’த்தையும்தான்.

(அடுத்த வாரம் ஏவாள்)

http://tamil.thehindu.com/society/spirituality/article24389304.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

விவிலிய மாந்தர்கள் 02: ஆசையின் அடையாளம்!

 

 
viviliyamjpg

னவே என் அன்பான சகோதரர்களே, சகோதரிகளே சாத்தானிடம் ஏமாந்துவிடாதீர்கள். சோதனைகளைச் சகித்துக்கொண்டே இருக்கும் மனிதன் சந்தோஷமானவன்; ஏனென்றால், கடவுளால்  வாழ்வு என்ற கிரீடம் அவனுக்குக் கிடைக்கும். தன்னிடம் தொடர்ந்து அன்பு காட்டுகிறவர்களுக்கு அதைத் தருவதாக அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். சோதனை வரும்போது, ‘கடவுள் என்னைச் சோதிக்கிறார்’ என்று யாரும் சொல்லக் கூடாது. கெட்ட காரியங்களால் கடவுளைச் சோதிக்க முடியாது, அவரும் யாரையும் சோதிப்பது கிடையாது.

 

ஒவ்வொருவரும் தங்களுடைய ஆசையால் கவர்ந்திழுக்கப்பட்டு, சிக்கவைக்கப்பட்டு, சோதிக்கப்படுகிறார்கள். பின்பு அந்த ஆசை கருத்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கிறது, பாவம் கடைசியில் மரணத்தை உண்டாக்குகிறது’ என்று எழுதியிருக்கிறார். ஆனால், பூமியின் முதல் மனுஷியாகிய ஏவாள் சாத்தானால் ஏமாற்றப்பட்டாள். ஆசையே அவளை வீழ்த்தியது.

எலும்பின் எலும்பு!

கடவுளாகிய பரலோகத் தந்தை, ஆதாமைப் படைத்து அவனைப் பூமிக்குத் தலைவனாக ஆக்கினார். அப்போது “மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல, அவனுக்குப் பொருத்தமான ஒரு துணையை நான் உண்டாக்குவேன்” என்று கூறியே ஆதாமின் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து ஏவாளைப் படைத்தார். அவளை ஆதாமிடம் கொண்டுவந்தபோது, இவள் தன்னிலிருந்து கடவுளால் உருவாக்கப்பட்டவள், தன்னில் சரிபாதி என்பதை அவனை உணரும்படி செய்தார்.

அதன் பின்னர் ஏவாளைக் கண்ட ஆதாம், “இதோ! இவள் என்னுடைய எலும்பின் எலும்பு! என் சதையின் சதை! இவள் மனுஷி என்று அழைக்கப்படுவாள். ஏனென்றால், இவள் மனுஷனிலிருந்து எடுக்கப்பட்டாள்” என்று அறிக்கையிட்டுக் கூறினான். அதைக் கேட்டு ஏவாள் மகிழ்ந்தாள். ஆதாமும் ஏவாளும் ஒருவர் மீது மற்றொருவர் அன்பு கூர்ந்தனர்.

அவர்களது தோழமையைக் கண்ட கடவுள் “மனிதன் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான். அவர்கள் ஒரே உடலாக இருப்பார்கள்” என்றார். மேலும், கடவுள் அவர்களிடம், “நீங்கள் பிள்ளைகளைப் பெற்று, ஏராளமாகப் பெருகி, பூமியை நிரப்புங்கள்; அதைப் பண்படுத்துங்கள். கடலில் வாழ்கிற மீன்களும் வானத்தில் பறக்கிற பறவைகளும் நிலத்தில் வாழ்கிற எல்லா உயிரினங்களும் உங்கள் அதிகாரத்தின்கீழ் இருக்கட்டும்” என்று சொல்லி ஆசீர்வதித்தார்.

ஆசையின் அறுவடை

ஏவாள் தனித்திருந்த ஒரு பொழுதை, சாத்தான் தன்னுடையதாக மாற்றிக்கொள்ள முயன்றான். ஏதேன் தோட்டத்தில் இருந்த பாம்பின் உடலுக்குள் புகுந்துகொண்டு, அவளுடன் பேசினான். தோட்டத்தின் நடுவில் இருக்கும் மரத்தின் பழத்தைப் பறித்து உண்ணும்படி ஏவாளைத் தூண்டினான். ஆனால், ஏவாள் மறுத்தாள். “தோட்டத்தின் நடுவில் இருக்கிற மரத்தின் பழத்தை நாங்கள் சாப்பிடக் கூடாது என்றும், தொடக் கூடாது என்றும் கடவுள் சொல்லியிருக்கிறார். மீறினால் நாங்கள் செத்துப்போவோம் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்” எனத் தனது கணவனாகிய ஆதாம் தனக்குக் கூறியிருந்த அறிவுரையைக் எடுத்துக்கூறித் திடமாக மறுத்தாள்.

ஆனால், சாத்தான் விடுவதாக இல்லை. “நீங்கள் கண்டிப்பாகச் செத்துப்போக மாட்டீர்கள். அதை நீங்கள் சாப்பிடும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும்;  நன்மை தீமையைத் தெரிந்துகொண்டு கடவுளைப் போல ஆவீர்கள். அது கடவுளுக்குத் தெரியும்” என்று ஆசையைத் தூண்டினான்.

அவன் அப்படிக் கூறியதும் அந்த மரத்தின் பழம் ஏவாளின் கண்களுக்கு மிகவும் நல்லதாகவும் அழகானதாகவும் தெரிந்தது. அதைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு ஆசையாக இருந்தது. ஒரு கட்டத்தில் ஆசையைக் கட்டுப்படுத்த முடியாதவளாக அந்தப் பழத்தைப் பறித்துச் சாப்பிட்டாள். அப்போது அவளைத் தேடிக்கொண்டுவந்த கணவனுக்கும் அந்தப் பழத்தைக் கொடுத்தாள்.  ஆதாமும் அதை வாங்கிச் சாப்பிட்டான். உடனே அவர்களது கண்கள் திறந்தன. தாங்கள் நிர்வாணமாக இருப்பதை உணர்ந்தார்கள். ஆசையின் முதல் அறுவடையாக உடலை மறைக்க அவர்கள் ஆடையைத் தேட வேண்டிய நிலை உருவானது. அதனால், அத்தி இலைகளைத் தைத்து இடுப்பில் கட்டிக்கொண்டார்கள்.

கடவுளாக ஆக முடியாமை

சாத்தான் கூறியதைப் போல் அந்தப் பழத்தை உண்டபின் கடவுளைப் போல் ஆகவில்லை என்பதை இருவருமே பட்டறிந்தார்கள். கடவுளை முகம் கொடுத்து காண முடியாதவர்களாக வெட்கப்பட்டு மரங்களுக்கு நடுவில் ஒளிந்துகொண்டார்கள். கடவுள் வந்து கேட்டபோது ஏவாள், “பாம்பு என்னை ஏமாற்றிவிட்டது” என்று கூறினாள்.  கடவுள் கொடுத்திருந்த கட்டளையை அவள் அறிந்திருந்தும் சாத்தான் தூண்டியதால் கீழ்ப்படியாமல் போனாள். ஆதாமும் தன்னைப் படைத்தவருக்கு உண்மையாக இருக்காமல் தன் மனைவியின் பேச்சுக்கு இசைந்தான்.

நல்லது எது கெட்டது எது எனத் தீர்மானிக்கும் உரிமை கடவுளிடம் மட்டுமே இருந்த நிலையில், அதைச் சுயமாக தீர்மானித்துக்கொண்டு, அந்த உரிமையை ஏவாளும் ஆதாமும் கையில் எடுத்துக்கொண்டார்கள். கீழ்ப்படியாமையின் இந்தத் தன்னிச்சையான செயல்பாடே அவர்களது முதல் பாவம் ஆனது. கடவுளோடு வைத்திருந்த பந்தமும், அவர்களுக்குக் கடவுள் அளித்திருந்த சாகாவரமும் கைவிட்டுப்போனது. அது மட்டுமல்ல; ஏதேன் தோட்டத்தை விட்டு அவர்களைக் கடவுள் வெளியே அனுப்பினார்.

கடவுள் ஆதாமிடம், “நீ உன் மனைவியின் பேச்சைக் கேட்டு, ‘சாப்பிடக் கூடாது’ என்று நான் சொல்லியிருந்த மரத்தின் பழத்தைச் சாப்பிட்டதால் இந்த நிலம் சபிக்கப்பட்டிருக்கும். வயிற்றுப் பிழைப்புக்காக உன் வாழ்நாளெல்லாம் நீ உழைத்து வேலை செய்ய வேண்டியிருக்கும். நிலத்தில் முட்செடிகளும் முட்புதர்களும் முளைக்கும்.

அதில் விளைவதைத்தான் நீ சாப்பிட வேண்டும். நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் மண்ணுக்குப் போகும்வரை நெற்றி வியர்வைச் சிந்தி தான் உணவு சாப்பிடுவாய். நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய்” என்றார். ஏதேனிலிருந்து வெளியே வந்த ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயர் வைத்தான். ஏனென்றால், அவள்தான் உயிருள்ள எல்லாருக்கும் தாய். அவளே ஆசையின் முதல் அடையாளம் ஆகிப்போனாள்.

(அடுத்த வாரம் ஏவாள்)

https://tamil.thehindu.com/society/spirituality/article24469545.ece

Link to comment
Share on other sites

விவிலிய மாந்தர்கள் 03: கீழ்ப்படிதலுக்கு ஒரு நோவா!

 

 

 
viviliyamjpg

பூமியில் வாழ்ந்த கெட்ட மனிதர்களுக்கு மத்தியில் ஒருவர் மட்டும் நீதிமானாகவும் குற்றமற்றவராகவும் இருந்தார். அவர் கடவுள் காட்டிய வழியில் நடந்தார். குடும்பத்தினரையும் தன் வழியில் அவர் வழிநடத்தினார். அவரே நோவா. அதனால் அவர் கடவுளுக்குப் பிரியமானவராக இருந்தார்.

ஆதாமின் பரம்பரையில் வந்த லாமேக் என்பவரின் மகனாகப் பிறந்தார் நோவா. அவர் பிறந்தபோது “கடவுள் சபித்த இந்த மண்ணில் நாம் படாத பாடுபடுகிறோம்; ஆனால், இவன் நமக்கு ஆறுதல் தருவான்” என்று கூறி, நோவா எனப் பெயர் சூட்டப்பட்டார். நோவாவின் காலத்தில் மனித இனம் பல்கிப் பெருகியிருந்தது. ஆனால், கடவுளுக்குப் பணிந்து நடக்க வேண்டும் என்ற பக்தி இல்லை. பக்தி இல்லாத காரணத்தால் மனிதர்கள் மத்தியில் நீதி இல்லாமல் இருந்தது. நீதி இன்மையால் வன்முறை தலைதூக்கித் திரிந்தது.

 

‘மனிதர்கள் மிக மோசமாக நடந்துகொண்டதையும், அவர்களுடைய உள்ளத்தின் எண்ணங்களும் ஆசைகளும் எப்போதும் மோசமாகவே இருந்ததையும் கடவுள் கவனித்தார்.

பூமியில் மனிதர்களைப் படைத்ததை நினைத்து மிகவும் வேதனைப்பட்டார். அதனால் “நான் படைத்த மனிதர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. அவர்களை இந்தப் பூமியிலிருந்து அடியோடு அழிக்கப்போகிறேன். வீட்டு விலங்குகள், ஊரும் பிராணிகள், பறக்கும் உயிரிகள் எல்லாவற்றோடும் சேர்த்து அவர்களை அழிக்கப்போகிறேன்” என்று கடவுள் கூறியதை விவிலியத்தின் தொடக்க நூல் வெளிப்படுத்துகிறது. ஆனால், தன் சாயலாகப் படைத்த மனித இனத்தை முற்றாக அழிப்பதற்குக் கடவுள் விரும்பவில்லை.

கடவுளின் கருணை 

நோவாவிடம் கடவுள் பேசினார். “வானத்தின் கீழிருக்கிற எல்லா உயிர்களையும் அழிக்க வேண்டுமென்று நான் முடிவுசெய்துவிட்டேன். அதற்காகப் பெரிய வெள்ளத்தைக் கொண்டு வரப்போகிறேன். அப்போது பூமியிலுள்ள எல்லா உயிர்களும் இறந்துபோகும். ஆனால், நான் உன்னோடு ஒரு ஒப்பந்தம் செய்கிறேன். நீ, உன் மனைவி, உன் மகன்கள், உன் மருமகள்கள் ஆகியோரையும் உங்களோடு சேர்ந்து மற்ற உயிர்களையும்  நான் காப்பாற்றப்போகிறேன்.

அதற்காக கொப்போர் மரத்தைப் பயன்படுத்தி நீ ஒரு பேழையை கட்டு. அதில் அறைகளை அமைத்து, அதன் உள்ளேயும் வெளியேயும் தார் பூசு. பேழையின் நீளம் 300 முழமும், அகலம் 50 முழமும், உயரம் 30 முழமும் இருக்க வேண்டும். வெளிச்சம் வருவதற்காகப் பேழையின் கூரைக்குக் கீழே ஒரு முழம் விட்டு ஜன்னல் வை. பேழையின் பக்கவாட்டில் ஒரு கதவைப் பொருத்து.

கீழ்த்தளம், நடுத்தளம், மேல்தளம் என மூன்று தளங்களையும் அமைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார். கடவுள் கூறியபடியே வெள்ளம் வருமா, வராதா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்துகொண்டிராமல், தன் மீதும் தனது குடும்பத்தின் மீதும் கடவுள் காட்டிய கருணையைக் கண்டு, கடவுளின் சொற்களுக்கு அப்படியே கீழ்ப்படிந்து பேழையைக் கட்டும் வேலையை நோவா தன் குடும்பத்தினருடன் சேர்ந்து தொடங்கினார்.

விமர்சனங்கள் வீழ்த்தவில்லை

கடவுள் குறிப்பிட்ட அளவிலேயே நோவா பேழையைக் கட்டத் தொடங்கினார். தன் மகன், மனைவி உள்ளிட்ட குடும்பத்தாரின் கடும் உழைப்பில் அந்தப் பேழை மெல்ல உருப்பெற்றுவந்தது. நாட்கள் உருண்டோடின. பேழையைக் கட்டுவது நோவாவுக்கு அவ்வளவு சுலபமாக இல்லை. ஆனால் நோவா சோர்ந்துவிடவில்லை. நோவாவின் குடும்பத்தைப் பார்த்த மற்ற மனிதர்கள் என்ன நினைத்திருப்பார்கள். ‘இவன் என்ன முட்டாளா; பூமி பெருவெள்ளத்தால் அழியப்போகிறது’ என்பதை ஏன் இவன் நம்ப வேண்டும் என்று கிண்டல் செய்திருப்பார்கள்.

ஆனால் கடவுளின் சொற்களை மனத்தை விட்டு விலக்காத நோவா, இதுபோன்ற விமர்சனங்களால்  மனத்தை மாற்றிக்கொள்ளவில்லை. கடவுளின் கட்டளையை நிறைவேற்றி முடித்தார். அதேபோல நோவா செய்தால் அது சரியாகவே இருக்கும், அவர் கடவுள் கூறுவதைத் தட்டமாட்டார் என்று அவரது குடும்பத்தார் அனைவரும் நோவாவின் பக்திக்கும் அவரது தலைமைத்துவத்துக்கும் மதிப்பளித்தனர்.

நோவாவின் இந்த விசுவாசத்தைப் பற்றி விவிலியத்தின் எபிரேயர் புத்தகம் இப்படிக் கூறுகிறது, “அதுவரை வெள்ளம் என்ற ஒன்றைப் பார்க்காத நோவா, அதைப் பற்றிக் கடவுளிடமிருந்து எச்சரிக்கை கிடைத்தபோது, கடவுள் மீதான தனது பயத்தையும் கீழ்ப்படிதலையும் காட்டினார். தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு பேழையைக் கட்டினார். இந்த விசுவாசத்தால்தான் உலகத்தை அவர் கண்டனம் செய்தார். அதே விசுவாசத்தால்தான் நீதிமான்களில் ஒருவரானார்.’

பெருவெள்ளத்தின் சாட்சி

“உன்னோடும் உன் குடும்பத்தினரோடும் சேர்த்து மற்ற ஒவ்வொரு உயிரினத்திலும் ஆண், பெண் என்று ஒரு ஜோடியைப் பேழைக்குள் கொண்டுபோ” எனக் கடவுள் உத்தரவிட்டதால் அவ்வாறே நோவா செய்தார். தனது குடும்பத்துக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உண்பதற்குத் தேவைப்படும் எல்லா வகையான உணவையும் பேழைக்குள் சேமித்து வைத்தார். கடவுள் கூறியபடியே பெருவெள்ளம் வந்தது. பூமியின் சகல உயிர்களையும் கடவுளுக்குக் கீழ்ப்படியாதவர்களையும் பெருவெள்ளம் அழித்தது.

அந்த அழிவின் மாபெரும் சாட்சியாக மட்டுமல்ல; கடவுளது மீட்பின் சாட்சியமாகவும் நோவா இருந்தார். நோவா உட்பட அவரது குடும்பத்தினர் எட்டுப் பேரும் நோவா தேர்ந்துகொண்ட உயிரினங்களும் உயிர்பிழைத்தனர். பூமியில் மனித இனம் புத்துயிர்பெற, நாம் இன்று உயிரோடு இருக்க, நோவா எனும் பெருமகனின் கீழ்ப்படிதலே காரணமாக இருந்தது. மண்ணில் மனித இனம் மறுமலர்ச்சி அடைய நோவா எனும் மூப்பனின் தெய்வ பக்தியே ஆதாரம்.

https://tamil.thehindu.com/society/spirituality/article24518309.ece

Link to comment
Share on other sites

  • 1 month later...

விவிலிய மாந்தர்கள் 04: பூமியில் வாழ்ந்த கடவுளின் நண்பர்!

 

 
viviliyamjpg

வன்முறையும் அதற்குக் காரணமான அதிகாரமும் பாவம் எனும் போர்வையால் பூமியை மூடியிருந்த காலம். அப்போது தன்னை அன்புகூர்ந்து விசுவாசிக்கிற வெகுசிலரோடு மட்டுமே கடவுள் உரையாடினார். அந்த வெகுசிலரில் ஒருவர் ஆபிரகாம். அவர் ஒரு பெரும் மக்கள் கூட்டத்தின் மூப்பர். அவர்களுக்குச் சிறந்த தலைவர். கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசியாகவும் இருந்தார்.

இந்த எல்லாக் குணங்களுக்கும் மேலாக அவர் கடவுளின் மீது பக்தியும் பயமும் அவரால் கூடாதது இந்த பூமியில் எதுவுமே இல்லை என்ற அசைக்க முடியாத விசுவாசமும் கொண்டவராக இறுதிவரை வாழ்ந்தார். அதனால் அவர் ‘விசுவாசத்தின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார். இன்று அனைவருக்கும் தேவைப்படும் இந்தக் குணத்தின் காரணமாக, கடவுளே ஆபிரகாமைத் தன் நண்பராகக் கருதினார் என்று ஏசாயா புத்தகத்தின் 44-வது அத்தியாயத்தின் 8-வது வசனம் ‘'என் நண்பனான ஆபிரகாமின் சந்ததியே' என்ற கடவுளின் கூற்று வழியாக நமக்குப் புலப்படுகிறது. அதேபோல் ரோமர் புத்தகம் அதிகாரம் 4-ன் 11-வது வசனம் ‘விசுவாசிக்கிற யாவருக்கும் தகப்பன்’ என்று ஆபிரகாமை விவிலியம் பெருமைப்படுத்துகிறது. இவ்வாறு விசுவாசத்தின் முன்மாதிரியாகக் கொண்டாடப்படும் ஆபிரகாம் அப்படி என்னதான் செய்தார்?

 

அவரது முழு வாழ்க்கையுமே கடவுள் மீதான விசுவாசத்தை வெளிக்காட்டும் சோதனைகள் நிறைந்ததாக இருந்தது. அந்தச் சோதனைகளில் எல்லாம் தலையானது ஒன்று உண்டு. தன் மகனைப் பலியாகச் செலுத்த வேண்டும் என்று கடவுள் கேட்டபோது, சிறிதும் தயங்காமல் அதை ஆபிரகாம் எதிர்கொண்ட விதத்தை, விவிலியத்தின் தொடக்க நூலான ஆதியாகமம் விவரித்துக் கூறுகிறது. அந்தப் பகுதியைக் கூர்ந்து கவனியுங்கள். அப்போது, கடவுளின் கட்டளையை எவ்வளவு உறுதியாக, பதற்றமின்றி அவர் பின்பற்றினார் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

கடவுளின் கோரிக்கை

ஆபிரகாமின் விசுவாசத்தைக் கடவுள் சோதித்துப் பார்த்தார். ஒருநாள் அவர், “ஆபிரகாமே!” என்று அழைத்தார். அதற்கு ஆபிரகாம், “சொல்லுங்கள் எஜமானே!” என்றார். அப்போது கடவுள், “நீ உயிருக்கு உயிராய் நேசிக்கிற உன்னுடைய ஒரே மகன் ஈசாக்கை அழைத்துக்கொண்டு மோரியா தேசத்துக்குப் போ. அங்கே நான் காட்டுகிற ஒரு மலையில் அவனைப் பலியாகக் கொடு” என்று கட்டளையிட்டார்.

அதை நிறைவேற்றுவதற்காக ஆபிரகாம் அதிகாலையில் எழுந்தார். தன்னுடைய கழுதைமேல் சேணத்தைப் பூட்டினார். பின்னர் தன்னுடைய மகன் ஈசாக்கையும் இரண்டு வேலைக்காரர்களையும் அழைத்துக்கொண்டு, தகன பலிக்கு வேண்டிய விறகுகளையும் வெட்டி எடுத்துக்கொண்டு கடவுள் குறிப்பிட்ட மோரியா தேசத்தின் மலைநோக்கிப் புறப்பட்டார்.

மூன்று நாள் பயணத்துக்குப் பின் மோரியாவின் மலை தென்பட்டது. தூரத்திலிருந்து அந்த மலையைப் பார்த்தார். பின் மலையை அடைந்ததும் தன் வேலைக்காரர்களிடம், “நீங்கள் இங்கேயே கழுதையுடன் காத்திருங்கள். நானும் என் மகனும் அங்கே ஏறிச்சென்று கடவுளை வணங்கிவிட்டு வருகிறோம்” என்று ஆபிரகாம் கூறினார்.

விறகு சுமந்த மகன்

பின்னர் தகன பலிக்கான விறகுகளை எடுத்து, தன்னுடைய மகன் ஈசாக்கின் தோள்மேல் வைத்தார். அது தன்னைப் பலியிடத் தேவைப்படும் நெருப்புக்கானது என்பதை அந்த இளைஞன் அறிந்திருக்கவில்லை. தந்தை கூறியதைத் தட்டாமல் செய்தார். அதன்பின் ஆபிரகாம் நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டார். தந்தையும் மகனும் ஒன்றாக நடந்து மலைமீது ஏறினார்கள்.

அப்போது ஈசாக்கு ஆபிரகாமிடம், “அப்பா...” என்றார். அதற்கு அவர், “என்ன மகனே?” என்று கேட்டார். அப்போது ஈசாக்கு, “நெருப்பும் விறகும் இருக்கின்றன. ஆனால், தகன பலி செலுத்த நம்மிடம் ஆடு இல்லையே?” என்று கேட்டார். அதற்கு ஆபிரகாம், “மகனே, தகன பலிக்கான ஆட்டைக் கடவுள் கொடுப்பார்” என்று சொன்னார். இருவரும் தொடர்ந்து நடந்து சென்று கடவுள் சொல்லியிருந்த இடத்தை அடைந்தார்கள். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தைக் கட்டினார். அதன்மேல் விறகுகளை அடுக்கினார்.

பின்னர், தன்னுடைய மகன் ஈசாக்கின் கைகளையும் காலையும் கட்டி, அடுக்கப்பட்ட விறகின்மேல் படுக்க வைத்தார். அதன்பின், தன்னுடைய மகனைக் கொல்வதற்காக ஆபிரகாம் கத்தியை எடுத்து தலைக்குமேல் உயர்த்தினார். உடனே வானிலிருந்து கடவுள் தனது தூதர் வழியாக, “ஆபிரகாமே, ஆபிரகாமே!” என்று அழைத்தார். அதற்கு ஆபிரகாம், “சொல்லுங்கள், எஜமானே!” என்றார். அப்போது அவர், “ உன் மகனைக் கொன்றுவிடாதே, அவனை ஒன்றும் செய்துவிடாதே. நீ என்மீது பயம் உள்ளவன் என்று இப்போது நான் தெரிந்துகொண்டேன். ஏனென்றால், எனக்காக உன்னுடைய ஒரே மகனைக் கொடுப்பதற்குக்கூட நீ தயங்கவில்லை” என்றார்.

அப்போது, சற்றுத் தூரத்தில் ஒரு செம்மறிக் கிடாய் இருப்பதை ஆபிரகாம் பார்த்தார். அதனுடைய கொம்புகள் ஒரு புதரில் சிக்கியிருந்தன. ஆபிரகாம் அங்கே போய் அந்தச் செம்மறி ஆட்டுக் கடாவைப் பிடித்துக்கொண்டு வந்து, தன் மகனுக்குப் பதிலாக அதைத் தகன பலியாகச் செலுத்தினார். பின்னர் ஆபிரகாம் அந்த இடத்துக்கு ‘யகோவாயீரே’ என்று பெயர் சூட்டினார்.

கடவுளின் உடன்படிக்கை

ஆபிரகாமுக்கு முன்பு நோவா உள்ளிட்ட பல சிறந்த விசுவாசிகள் மனித குலத்துக்கு எடுத்துக்காட்டாக இருந்தார்கள். ஆனால், பூமியின் சகல மக்களையும் ஆசிர்வதிப்பதற்கான உடன்படிக்கையைக் கடவுள், ஆபிரகாமுடன்தான் செய்துகொண்டார். இதைத் தொடக்க நூலின் 18-வது அத்தியாயம் 16 முதல் 18 வரையிலான வசனங்களில் காண முடியும்.

கடவுளின் தூதர் வானிலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு, “நீ உன்னுடைய ஒரே மகனை எனக்குக் கொடுக்கத் தயங்காததால், நான் உன்னை நிச்சயம் ஆசீர்வதிப்பேன். உன்னுடைய சந்ததியை வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் பெருகப் பண்ணுவேன். உன்னுடைய சந்ததி, எதிரிகளுடைய நகரங்களைக் கைப்பற்றும். நீ என் பேச்சைக் கேட்டதால், உன்னுடைய சந்ததியின் மூலம் பூமியிலுள்ள எல்லா தேசத்தாரும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள்” என்று சொன்னார்.

அது மட்டுமல்ல, “நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்.” என்று கடவுள் ஆபிரகாம் வழியாக மனித இனத்தை இன்றுவரையிலும் ஆசீர்வதிக்கிறார்.

https://tamil.thehindu.com/society/spirituality/article24630110.ece

Link to comment
Share on other sites

விவிலிய மாந்தர்கள் 05: இவரே நம் தாய்

 

 
viviliyamjpg

அன்னை மரியாள் விண்ணேற்புப் பெருவிழா: ஆகஸ்ட் 15

மரியாள் அல்லது மரியன்னை எனத் தமிழிலும்  மரியம் என எபிரேய, அரமேய மொழிகளிலும் அழைக்கப்படுகிறார்  இயேசுவின் தாய். விவிலியத்தை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ நம்பிக்கையின்படி,  தூய ஆவியினால் இயேசுவை அவர் கருவில் தாங்கினார். உருவில்லாத இறைவன் மரியாவின் கருப்பையைத் தேர்வுசெய்து அதன்வழியே மனித உடலெடுத்தார். அதன்பொருட்டே ‘இறைவனின் தாய்’ என்று மதிக்கப்படுகிறார்.

 

இயேசு உயிர்த்தெழுந்து விண்ணகம் சென்றபின் மரியாளைத் தலைவராகக் கொண்டே முதல் திருச்சபை உதயமானது. அந்த வகையில் ஆதித் திருச்சபையின் முதல் தலைவரும் அவரே என்பதை விவிலியம் எடுத்துக்காட்டுகிறது. ஓர் எளிய பெண்ணாக, கடவுளுக்கு முன்பாகப் பணிந்து வாழ்ந்த மரியாள், ‘கடவுளின் தாய்’ ஆக உயர்ந்தது மனிதகுல வரலாற்றில் ஓர் அற்புதம் ஆகும்.

தாழ்ச்சியால் உயர்ந்த மரியாள்

இஸ்ரவேல் தேசத்தில் நாசரேத் என்ற சிற்றூரில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் மரியாள். கன்னியான அவர் அதே ஊரைச் சேர்ந்த தாவீதின் வம்சாவளியில் வந்த யோசேப்பு  என்பவருக்குத் திருமண நிச்சயம் செய்யப்பட்டிருந்தார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் முன்பாக கடவுளால் அனுப்பப்பட்ட காபிரியேல் தேவதூதர் தோன்றினார். “பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவளே, உனக்கு வாழ்த்துகள்! கடவுள் உன்னோடு இருக்கிறார்” என்றார்.

அதைக் கேட்டு மரியாள் மிகவும் கலக்கமடைந்து, அவரது வாழ்த்துக்கு என்ன அர்த்தம் என்று யோசிக்கக் தொடங்கினார். உடனே தேவதூதர், “மரியாளே, பயப்படாதே; நீ கடவுளுக்குமுன் தாழ்ச்சி கொண்டவள். இதோ! நீ கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்; அவருக்கு இயேசு என்று நீ பெயரிடுவாயாக. அவர் மனிதருள் உயர்ந்தவராக இருப்பார்; உன்னதமான கடவுளின் மகன் என்று அழைக்கப்படுவார்; தாவீதின் சிம்மாசனத்தைக் கடவுள் அவருக்குக் கொடுப்பார்.

அவருடைய ஆட்சிக்கு முடிவே இருக்காது”என்று சொன்னார். காபிரியேலின் வார்த்தைகளால் மரியாள் கர்வம் கொள்ளவில்லை. ஏனென்றால் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தாவீதுக்குக் கடவுள் கொடுத்த வாக்குறுதியை, அதாவது அவருடைய சந்ததியில் வரும் ஒருவர் என்றென்றும் அரசாளுவார் என்ற வாக்குறுதியை, மரியாள் தம் பெற்றோர் வழியாகவும் அறிந்திருக்கிறாள். ஆகவே, பல நூற்றாண்டுகளாக மக்கள் ஆவலாய் எதிர்பார்த்திருந்த மீட்பனாக தனக்குப் பிறக்கப்போகும் மகன் இருப்பார் என்று தேவதூதர் கூறியதை நம்பினார்.

கேட்டுத் தெளிந்த மரியாள்

அதேநேரம் கற்புடன் இருக்கும் தனக்கு இது எப்படிச் சாத்தியம் என்ற சந்தேகத்தை “இது எப்படி நடக்கும், நான் கன்னிப்பெண்ணாக இருக்கிறேனே”என்று மரியாள் தேவதூதரிடம் தயங்காமல் கேட்டார். அதற்கு அவர், “கடவுளுடைய சக்தி உன்மேல் வரும்; அவரது வல்லமை உன்மேல் தங்கும். அதனால், உனக்குப் பிறக்கப்போகும் குழந்தை பரிசுத்தமானது என்றும், கடவுளுடைய மகன் என்றும் அழைக்கப்படும்.

இதோ! உன் சொந்தக்காரப் பெண் எலிசபெத்தும் வயதான காலத்தில் ஒரு மகனை வயிற்றில் சுமக்கிறாள்; மலடி என்று தூற்றப்பட்ட அவளுக்கு இது ஆறாவது மாதம். கடவுளால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதி எதுவுமே இல்லை”என்று கூறியவுடன் உளம் மகிழ்ந்த மரியாள், மண்டியிட்டு, “இதோ! நான் கடவுளின் அடிமை. நீங்கள் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்று கூறி கடவுளின் மகிமையை ஏற்க தலைவணங்கிப் பணிந்தபோது தேவதூதர் அங்கிருந்து மறைந்தார் என மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திப் புத்தகங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

எலிசபெத்தை சந்தித்தபோது…

தன்னைத் தேர்ந்தெடுத்த கடவுளின் கரங்களில் தான் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்த மரியாளுக்கு, தனது உறவினரான எலிசபெத்தைப் பற்றி காபிரியேல் வானத்தூதர் சொன்ன வார்த்தைகள் உற்சாகம் ஊட்டின. மரியாள் யூதா மலைப்பிரதேசத்துக்குக் கிளம்பிச் செல்கிறார். அங்குதான் எலிசபெத்தும் தேவாலய குருவான அவரது கணவர் சகாரியாவும் வசித்து வந்தனர். சில தினங்கள் பயணித்து எலிசபெத்தைச் சந்தித்து வாழ்த்தினார்.

மரியாளின் வாழ்த்தைக் கேட்டதும் எலிசபெத்தின் வயிற்றிலிருந்த குழந்தை சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது. எலிசபெத் கடவுளுடைய சக்தியால் நிரப்பப்பட்டு, “என் எஜமானருடைய தாய்” என மரியாளை அழைத்தார். மரியாளின் மகன் எஜமானராக, மெசியாவாக ஆகப்போகிறார் என்பதைக் கடவுள் எலிசபெத்துக்குத் தெரியப்படுத்தியிருந்தை அறிந்து மரியாள் மீண்டும் கடவுளின் உன்னதத்தை எண்ணி மனநிம்மதி

 கொண்டார். மரியாளைப் பார்த்து எலிசபெத் மேலும் கூறும்போது,  “நம்பிக்கை வைத்த நீ சந்தோஷமடைவாய்” என்று அவள் சொன்னார்.

அப்போது மரியாள் மறுமொழியாக “ இறைவனாகிய தந்தையை நான் மகிமைப்படுத்துகிறேன். அவருடைய பெயர் பரிசுத்தமானது. என் மீட்பராகிய கடவுளை நினைத்து என் உள்ளம் மகிழ்ச்சியில் பொங்குகிறது.

ஏனென்றால், அவர் தன்னுடைய அடிமைப் பெண்ணின் தாழ்ந்த நிலையைக் கவனித்திருக்கிறார். அவருக்குப் பயந்து நடப்பவர்களுக்குத் தலைமுறை தலைமுறையாக அவர் இரக்கம் காட்டுகிறார்” என்று கூறினார்.

சோதனையை வென்றார்

இதன்பிறகு தனக்கு நிகழ்ந்த யாவற்றையும் யோசேப்பிடம் எடுத்துக் கூறினார் மரியாள். கடவுளின் ஏற்பாட்டை, கணவர் எப்படி எதிர்கொள்வாரோ என்ற அச்சம் மரியாளுக்கு இல்லாவிட்டாலும் அவர் தன் பொருட்டு அதிக வேதனை அடைவாரோ என்ற மனப்போராட்டாம் இருந்தது. ஆனால் கடவுளின் மகிமையால் அந்தச் சோதனையைக் கடந்துவந்தார்.

‘யோசேப்பு நீதிமானாக இருந்ததால், எல்லார் முன்னாலும் மரியாளை அவமானப்படுத்த விரும்பவில்லை; அதனால், மரியாளை ரகசியமாக விவாகரத்து செய்ய முடிவுசெய்தபின் அவர் தூங்கிவிட்டார்; அப்போது கடவுளின் தூதர் அவருடைய கனவில் வந்து, “யோசேப்பே, உன் மனைவியான மரியாளை வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வரப் பயப்படாதே; அவளுக்கு ஒரு மகன் பிறப்பார்; அவருக்கு இயேசு எனப் பெயரிடு.

அவரே மக்களைப் பாவத்திலிருந்து மீட்பார்” என்று சொன்னார். தூக்கத்திலிருந்து எழுந்த யோசேப்பு உடனடியாகச் சென்று மனைவியைத் தனது வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்து கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டார்.’ என்று விவிலியம் கூறுகிறது.

தவித்துப்போன தாய்

கன்னி மரியாள் பெத்லகேமில் இருந்தபோது, குமாரன் இயேசுவை ஈன்றெடுத்தார். தங்க இடமின்றி தவித்த அந்த ஏழைப் பெற்றோருக்கு ஒரு மாட்டுத் தொழுவமே கிடைத்தது. அவ்விடத்தை மனமுவந்து ஏற்றுக்கொண்டார் அந்தத் தாய். குழந்தை இயேசுவை ஞானிகள் வணங்க வந்தபோது, அன்னை மரியாள் அவரைத் தமது கரங்களில் அரவணைத்திருந்த காட்சியை மத்தேயுவின் புத்தகம் கூறுகிறது.

பின்னர் அரசன் ஏரோதின் சதியிலிருந்து இயேசுவைக் காப்பாற்றுவதற்காக, மரியாவும் யோசேப்பும் எகிப்துக்குச் சென்றனர். பின்னர் பன்னிரெண்டு வயது பாலகனாக இயேசுவை அழைத்துக்கொண்டு, எருசலேம் தேவாலயத்தில் பாஸ்கா திருவிழாவைக் கொண்டாடச் சென்றபோது, தேவாலயத்திலேயே தங்கிவிட்ட இயேசுவைத் தேடி மரியாவும் யோசேப்பும் மூன்று நாட்கள் அலைந்து திரிந்தனர்.

அப்போது அந்தத் தாய் மகனைக் காணாமல் எப்படித் தவித்துப்போயிருப்பார்! அதேபோல மற்றொரு சமயம் தேவாலயத்தில் பாலகனாக தனது மகன் முதிய மறைநூல் அறிஞர்களுடன் வேதத் திருச்சட்டங்கள் குறித்து ஆழமாக விவாதித்துக்கொண்டிருந்தபோது அந்தத் தாய் ‘ஈன்ற பொழுதில் எப்படி பெரிதுவந்திருப்பாள்!’.

பின்னர் இயேசு தனது முப்பதாம் வயதில் இறை ஊழியத்தைத் தொடங்கியபோது கலிலேயாவின் கானா என்ற ஊரில் நடைபெற்ற திருமணத்தில், ‘தனக்கான தருணம் இன்னும் வரவில்லையே’ என்று இயேசு எடுத்துக் கூறியும் தாயார் கேட்டுக்கொண்டதால் தண்ணீரைத் திராட்சை ரசமாக மாற்றிய முதல் அருள் அடையாளத்தைச் செய்ய அன்னை மரியாளே தூண்டுதலாக இருந்தார் என்பதை யோவான் எடுத்துக் காட்டுகிறார்.

இவரே உம் தாய்

அதன்பின் இயேசுவின் வாழ்வு முழுவதும் மகனோடு பயணித்தார் அன்னை மரியாள். அப்படிப்பட்டவர், உயிரற்ற தன் மகனின் உடலை தன் மடியில் கிடத்திக்கொண்டிருந்தபோது எத்தனைத் துடித்திருப்பார். இயேசு உயிர்விடும் சில மணிநேரத்துக்கு முன், தன் சீடர்கள் சிலரோடு சிலுவை அருகில் நின்றுகொண்டிருந்த தன் தாயைப் பார்த்து “அம்மா இவரே உம் மகன்” என்றார்.

பின்னர் தம் சீடரைப் பார்த்து, “இவரே உம் தாய்”என்றார். இதை அவரது சீடரான யோவான் குறிப்பிடுகிறார். இயேசு தம் சீடருக்கு மட்டுமல்ல, உலக மக்கள் அனைவருக்கும் மரியாளைத் தாயாகக் கொடுத்தார்.

https://tamil.thehindu.com/society/spirituality/article24701684.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.