Jump to content

நெல்சன் மண்டேலா 100: எதை நினைவுகூர்வது?


Recommended Posts

நெல்சன் மண்டேலா 100: எதை நினைவுகூர்வது?
 
 

வரலாறு, நாயகர்களை எவ்வாறு மதிப்பிடுகிறது என்பது மிகவும் சுவையான வினா.   

வரலாறு மிகப் பெரிய ஆசான் என்பது மட்டுமல்ல, அது மிகப்பெரிய விமர்சகனும் கூட. எந்தப் பெரிய ஆளுமையும் அதன் கண்களில் இருந்து தப்பிவிட முடியாது.   

வெறுமனே தியாகம் மட்டும் ஒருவரை மதிப்பிடும் அளவுகோலாகாது. தியாகம் உயர் மதிப்புக்குரியது. ஆனால், தியாகிகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களல்ல.   

அண்மையில், தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரப் போராட்ட வீரருமாகிய நெல்சன் மண்டேலாவின் 100ஆவது பிறந்தநாள், உலகக் கவனம் பெற்றது.  

 இதன்போது, மண்டேலாவின் அறவழிப் போராட்டத்தின் முக்கியத்துவமும் மன்னிப்பின் மாண்பும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டன. ஆனால், மண்டேலாவை எவ்வாறு நினைவுகூர்வது.   

தென்னாபிரிக்காவின் நிறவெறி ஆட்சிக்கெதிராக, அமைதியான போராட்டங்களில் தொடங்கி, பின்னர் ஆயுதப் போராட்டத்தின் மூலமே அது சாத்தியமெனக் கண்டு, அதைப் பரிந்துரைத்து, அதில் ஈடுபட்டு, தென்னாபிரிக்க விடுதலையைச் சாத்தியமாக்கிய மனிதராக, நெல்சன் மண்டேலாவை நினைவு கூர்வதா?  

இல்லாவிடின், நீண்ட சிறைவாசத்தின் பின்னர் விடுதலையடைந்த மனிதராக, தனது மக்களுக்குரிய தேவைகளை நிறைவேற்றத் தவறியதோடு, மேற்குலக நலன்களுக்குப் பலியாகி, சமரசப் பாதையில் பயணித்த ஒருவராக அவரை நினைவுகூர்வதா?  

தென்னாபிரிக்க விடுதலை இயக்கத்தின் முக்கியமான தலைவரான நெல்சன் மண்டேலாவை, ஒருகாலத்தில் ‘பயங்கரவாதி’ என்று வெறுத்தொதுக்கிய மேற்குலகு, இன்று அவரைக் கொண்டாடுகிறது.  
 ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அமைப்பின், முக்கிய தலைவராயிருந்த மண்டேலா, அரசாங்கத்துக்கு எதிராக, ஆயுதச் சதி செய்தாரென்று, 1964இல் அவருக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அது மட்டுமன்றி, அவர் தப்பிச் செல்லவோ, வெளி உலகுடன் தொடர்பு வைக்கவோ இயலாதவாறு, ‘ரொபென்’ தீவில், கடும் பாதுகாப்புடன் சிறை வைக்கப்பட்டார்.   

அவர் சிறையில் இருந்த 27 ஆண்டுகளில், அவரால் ஆபிரிக்க தேசிய காங்கிரஸை வழிநடத்த இயலவில்லை. ஆனால், ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் பிற முக்கியமான தோழர்களும், தென்னாபிரிக்க நிறவெறிக்கு எதிராகவும் விடுதலை வேட்கை கொண்டு வீரத்துடனும்  போராடிய, தென்னாபிரிக்க கொம்யூனிஸ்ட் கட்சியும் தென்னாபிரிக்க நிறவெறி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார்கள்.   

இன்று மண்டேலாவின் பெயரால், அந்த வீரம்செறிந்த ஆயுதப் போராட்டமும் அதில், தென்னாபிரிக்க கொம்யூனிஸ்ட் கட்சியின் பங்கும் மறுக்கப்படுகின்றன. அவ்வாறு மறுக்கப்படுகின்ற இன்னொரு பெயர் ஸ்ரிவ் பிகோ (Steve Biko). நிறவெறிக்கெதிராக, வீரம் செறிந்த போராட்டத்தை முன்னெடுத்து, தனது 30ஆவது வயதில், பொலிஸ் காவலில் கொலை செய்யப்பட்டிருந்தார்.    

இன்னொரு முக்கியமான பெயர் ஒலிவர் தம்போ (Oliver Tambo). மண்டேலா சிறையிலிருந்த போது, ஆபிரிக்க தேசிய காங்கிரஸுக்குத் தலைமையேற்று, ஆயுதப் போராட்டத்தை வழிநடத்தியவர் இவர்தான்.   

இன்று, இவையெல்லாம் மறக்கடிக்கப்பட்ட பெயர்கள். மண்டேலாவை மேற்குலகு கொண்டாடுவதற்குக் காரணம், அவர்மீது அஹிம்சாவதி என்ற கருதுகோள் பதிக்கப்பட்டிருக்கிறது.   

தென்னாபிரிக்க விடுதலை, அஹிம்சையால் சாத்தியமாகவில்லை. அதை மறைக்கும் கருவியாக, மண்டேலா என்ற அஹிம்சாமூர்த்தி இருக்கிறார். அதனால் அவர் கொண்டாடப்படுகிறார்.   

தென்னாபிரிக்க விடுதலை எவ்வாறு சாத்தியமாகியது என்பதை விளங்குவது முக்கியமானது. மண்டேலாவைச் சிறைவைத்தாலும், பிற ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர்களை வேட்டையாடியதாலும், தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டத்தை முடக்க இயலவில்லை.   

ஆபிரிக்கா கண்டத்தில், 1970களில் ஆயுதப் போராட்டங்கள் முனைப்புற்று, முன்னைய போர்த்துக்கேயக் கொலனிகள் மூன்றும், 1974இல் போர்த்துக்கலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையொட்டி விடுதலை பெற்றன. இந்நிலைமை, ஆபிரிக்க கொலனியத்துக்கும் தென்னாபிரிக்கா, சிம்பாவே ஆகிய நாடுகளின் வெள்ளை நிறவெறி ஆட்சிகளுக்கும் ஓர் அதிரடியாயிற்று.   

முன்னாள் போர்த்துக்கல் கொலனியான அங்கோலாவில், மேற்குலக ஆதரவுடன், தென்னாபிரிக்கா உள்நாட்டுப் போரை ஆதரித்து, நேரடியாகவும் குறுக்கிட்டது. கியூபப் படையினரின் உதவியுடன், உள்நாட்டுப் போரும் தென்னாபிரிக்கக் குறுக்கீடும் முடிவுக்கு வந்தன.   

தென்னாபிரிக்க அரசாங்கம் சர்வதேச ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்ட சூழலில், இவ்வாறான தோல்விகளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் போன்ற அமைப்புகளின் தொடரான ஆயுதப் போராட்டங்களும் மக்கள் எழுச்சிகளும், நிறவெறி அரசாங்கத்துடன் அடையாளப்படுவது அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் கேடாகும் நிலையை உருவாக்கி, தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சிக்கு முடிவுகட்டுவதை ஏற்குமாறு அவற்றைக் கட்டாயப்படுத்தின.  

தென்னாபிரிக்காவின் கனிம மூல வளங்களை ஏகாதிபத்தியம், மலிவான கூலி உழைப்பை சூறையாட, நிறவெறி ஆட்சி உதவியது. தொடர்ந்தும் சூறையாட, நிறவெறி ஆட்சியின் தொடர்ச்சி தடையாகும் என்ற நிலையில், சூறையாடலைத் தொடரப் புதியதொரு சூழலை அவர்கள் நாடினர்.  

இந்த அடிப்படையிலேயே ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைமையுடனும் மண்டேலாவுடனும் இரகசியப் பேச்சுகள் நடந்தன. அவற்றின் விளைவாக, மண்டேலாவின் விடுதலையும் நிறப் பாகுபாட்டுச் சட்டங்களை நீக்குவதும் சர்வஜன வாக்குரிமையின் அடிப்படையிலான தேர்தல்களும் உடன்பாடாயின.   

எவ்வாறெனினும், இந்த மாற்றத்தை ஏற்பது, நூற்றாண்டு காலமாகக் கறுப்பினத்தவரை அடிமைகள் போல் நடத்திப் பழகிய ஒரு வெள்ளையர் சமூகத்துக்கு எளிதல்ல. எனவே, பலவாறான சமரசங்கள் தேவைப்பட்டன.   

எனினும், அவை அனைத்தினதும் முக்கியமாக, ஏகாதிபத்தியமும் சில முக்கிய நிபந்தனைகளை விதித்தது. ஏகாதிபத்தியத்தைப் பொறுத்தவரை, தென்னாபிரிக்கா மீதான அதன் பொருளாதாரச் சுரண்டல், தடையின்றித் தொடர்வதற்கு உத்தரவாதங்கள் இல்லாமல், அங்கு நிலையான கறுப்பின ஆட்சியை அது ஏற்காது.  

 1980களில் பலவீனப்பட்ட சோவியத் ஒன்றியம், 1991இல் உடைந்து, ரஷ்யாவில் மேற்குலகுக்குச் சாதகமான ஒர் ஆட்சி ஏற்பட்ட நிலையில், அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் மீது கடும் நெருக்குவாரங்களைச் செலுத்தியது. அவர்களுக்கு தேவையான உத்தரவாதங்கள் வழங்கப்பட்ட பின்னரே, மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.   

இரண்டு முக்கிய உறுதிமொழிகளைச் சிறையிலிருந்த போது மண்டேலா வழங்கினார். உண்மையில், அவரது விடுதலைக்காகச் சமரசங்கள் செய்யப்பட்டன.   

சிறையிலிருந்து விடுதலையாவதற்கு முன், 1990 ஜனவரியில் தனது ஆதரவாளர்களுக்கு எழுதிய குறிப்பில், இரண்டு உறுதிமொழிகளை மண்டேலா மக்களுக்கு வழங்கினார்.   

முதலாவது, ‘வங்கிகள், சுரங்கங்கள், பாரிய தொழிற்சாலைகள் ஏகபோக வியாபாரங்கள் யாவும் தேசியமயமாக்கப்படும். கறுப்பர்கள், தங்கள் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப இவை தவிர்க்கவியலாவை’.   

இரண்டாவது, ‘நிலச் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு, நிலமற்றவர்களுக்கு நிலங்கள் பகிர்ந்தளிக்கப்படும்’. இரண்டையும் இறுதிவரை மண்டேலா நடைமுறைப்படுத்தவில்லை.   

இப்பின்புலத்திலேயே, மண்டேலா ‘அஹிம்சாவாதி’யாக, ‘ஆபிரிக்காவின் காந்தி’யாகச் சித்திரிக்கப்படுகிறார். தென்னாபிரிக்காவின் நிறவெறி அரசாங்கத்துக்கெதிராக, போராட்டம் வெற்றியடைந்தது ஆயுதப் போராட்டத்தாலாகும்.    

இதை மறைத்து, அதற்கு ஓர் அஹிம்சை முகத்தை வழங்க வேண்டிய தேவை, மேற்குலகுக்கு உள்ளது. இதனாலேயே அவர் கொண்டாடப்படுகிறார்.   

1994இல் நெல்சன் மண்டேலாவின் விடுதலையோடு, தென்னாபிரிக்க நிறவெறி ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, மண்டேலா தலைமையிலான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஆட்சிபீடம் ஏறியது.   

இந்த அதிகார மாற்றம், 1990களில் மிகச் சிறந்ததாக மெச்சப்பட்டது. மோதலின் பின்னரான வன்முறைகள் எதுவுமற்று, நிலைமாற்றம் நடந்த தேசமாகத் தென்னாபிரிக்கா போற்றப்பட்டது.   

வேறுபாடுகளை இனங்கண்டு, எல்லோரையும் அரசமைப்பின் வழியாக உள்வாங்கிய தேசமாகையால், அது, ‘வானவில் தேசம்’ எனப்பட்டது.   

அத்துடன், நவதாரளவாதத்தை முழுமையாக உள்வாங்கி, வளர்ந்த ஒரு நாடாக அது, இன்று காட்டப்படுகிறது. ஆனால், உண்மை நிலைவரமோ வேறுமாதிரி உள்ளது.   

குறிப்பாகக், கடந்த பத்தாண்டுகளில் அபிவிருத்தி எனும் பெயரால் செய்யப்பட்டவை, எவ்வாறு மக்களுக்கு விரோதமானவையாக மாறியுள்ளன என்பது கவனிப்புக்குரியது.   

இன்று, தென்னாபிரிக்காவில் அரைவாசிக்கும் அதிகமானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழுகிறார்கள். 2010இல், கால்பந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டியை தென்னாபிரிக்கா நடாத்தியபோதும், அவ் வருடம் மட்டும், 1.5 மில்லியன் தென்னாபிரிக்கர்கள் தங்கள் வேலைகளை இழந்தார்கள்.   

தாராளமயமாக்கல், தென்னாபிரிக்காவுக்குப் பரிசாகக் கொடுத்திருப்பவை இவை மட்டுமல்ல. இன்று, தென்னாபிரிக்காவில் எல்லாம் தனியார்மயமாகி விட்டன. தண்ணீர், மின்சாரம், வீட்டுக்கான வரி என்பன மிக அதிகமான விலையில் மக்களுக்கு விற்கப்படுகின்றன. அதனால் மக்களால் அவற்றுக்கான விலையைக் கொடுக்க முடிவதில்லை. ஆண்டொன்றுக்குச் சராசரியாக, 1.5 மில்லியன் தென்னாபிரிக்கர்களுக்கு நீர் வழங்கல் துண்டிக்கப்படுகிறது. இது இன்றைய தென்னாபிரிக்க நிலைவரம்.  

அதே வேளை, உலக ஊடகங்கள் தொடர்ச்சியாக இருட்டடிப்புச் செய்யும் நிகழ்வுகள், தென்னாபிரிக்காவில் நிகழ்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில், நாளொன்றுக்குச் சராசரியாக மூன்று அரச எதிர்ப்புக் கூட்டங்களோ, ஆர்ப்பாட்டங்களோ நடைபெற்றுள்ளன.  

இவை தன்னெழுச்சியான ஆர்ப்பாட்டங்களாகவும் எதிர்ப்பு ஊர்வலங்களாகவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மக்களுக்கு அடிப்படை வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடனேயே, இவை நடாத்தப்படுகின்றன.  

இதற்கும் மண்டேலாவுக்கும் என்ன தொடர்பு என நீங்கள் வினவக் கூடும். 1980களின் இறுதியில், நிறவெறிக் கொடுமைக்கு எதிரான, கருப்பின மக்களின் வீரம்செறிந்த போராட்டத்தால், தென்னாபிரிக்க நிறவெறி அரசாங்கம், உலக அளவில் அம்பலப்பட்டதோடு, சோவியத் ஒன்றியமும் அதன் ஆதரவு நாடுகளும் அணிசேரா நாடுகளும் தென்னாப்பிரிக்காவைத் தனிமைப்படுத்திப் பொருளாதாரத் தடைகளையும் விதித்திருந்தன.   

இந்நிலையில், தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டத்தையும் மண்டேலா அங்கம் வகித்த ஆபிரிக்க தேசிய காங்கிரஸையும் ஆதரித்து வந்த சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி முக்கிய காரணியானது.  

இதைத் தொடர்ந்து, ‘ஜனநாயகம்’ என்ற தனது ஆட்சிமாற்றக் கொள்கையை, உலகெங்கும் அமெரிக்கா முன்தள்ளியது. பல்வேறு நாடுகளில் ஆட்சிமாற்றங்கள், ‘ஜனநாயகத்தின்’ பெயரால் நிகழ்ந்தன.   

தென்னாபிரிக்க நிறவெறிப் பாசிச ஆட்சியை மேற்கொண்டிருந்த போத்தாவின் ஆட்சி மாற்றப்பட்டு, ‘ஜனநாயகம், மனித உரிமை’ என்ற முற்போக்கு முகமூடியணிந்த டி கிளார்க்கின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மண்டேலாவுடன் சமரசப் பேச்சுகள் நடந்தன.   

வீரம் செறிந்த விடுதலைப்போராட்டங்களை இணைந்து மேற்கொண்ட தென்னாபிரிக்கக் கொம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் ஆகியன பிரிந்தன.   

மண்டேலா தலைமையேற்ற ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸூடன் மேற்குலகு சமரச உடன்பாட்டுக்கு வந்தது. அச்சமரசமே, அவரது ஆட்சியின் தூணாகவும் மேற்குலக நலன்களின் காவல் அரணாகவும் இருந்தது.   

பொதுப்போக்குவரத்து, மின்சாரம் முதலான அரசதுறைகள், மண்டேலாவின் ஆட்சிக் காலத்திலேயே தனியார் மயமாக்கப்பட்டன. உலக வங்கியின் ஆலோசனைப்படி, தண்ணீர் கூட தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டது.   

அவரது ஆட்சியிலேயே, முற்பணம் கட்டி மீற்றர் பொருத்தினால்தான், தண்ணீர் தரப்படும் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.   

பன்னாட்டு நிறுவனங்கள் அதிக விலைக்கு நீரை விற்கத் தொடங்கியதால், கொலரா நோய் ஏற்பட்டபோது, பாதுகாப்பான குடிநீர் இல்லாமல், நோய் பரவி மக்கள் இறந்தனர்.   

தனியார்மயத்தின் சுதந்திர தாண்டவம், அரசாங்கத்தை ஊழல்மிக்கதாக மாற்றியது. மண்டேலாவின் ஆட்சியில் வேலையின்மை தீவிரமானது. குறிப்பாக, சுரங்கத் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் வேலையிழந்தனர்.   

மறுபுறம், மண்டேலா புகுத்திய தனியார்மய, தாராளமயக் கொள்கையால் ஏகபோகங்களுடன் கூட்டுச் சேர்ந்து, புதியவகை கருப்பின தரகு முதலாளிகள் உருவாகினர்.   

ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவர்கள் சிலர் கோடீஸ்வரர்களானார்கள். முன்னாள் தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சூமா, தற்போதைய தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா ஆகியோர் இதற்குச் சாட்சிகளாக உள்ளனர்.  

பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளின் கொள்ளை விலையிலான மருந்துகளை வாங்க முடியாமல், எய்ட்ஸ் நோயால் தென்னாப்பிரிக்கா பரிதவித்தபோது, இந்தியா போன்ற நாடுகள், மலிவு விலையில் மருந்து கொடுக்க முன்வந்திருந்தன.   

இந்நிலையில், அதை மேற்குலகும் அதன் பன்னாட்டு நிறுவனங்களும் ‘காட்’ ஒப்பந்தத்தின் அறிவுசார் சொத்துரிமை விதிகளைக் காட்டித் தடுத்தபோது கூட, மனிதாபிமானமற்ற இக்கொள்ளையர்களை மண்டேலா எதிர்க்கவில்லை.   

எண்ணெய் வளத்தைக் கொள்ளையிட்டு, மக்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் நாசமாக்கியதோடு, பன்னாட்டு ‘ஷெல்’ எண்ணெய் நிறுவனம் அடக்குமுறையையும் கட்டவிழ்த்து விட்டிருந்தது. இதற்கு எதிராகப் போராடிய, பிரபல மனித உரிமைப் போராளியும் கவிஞருமான கென் சரவீவோவாவை, நைஜீரிய சர்வாதிகார அரசு 1995இல் தூக்கிலிட்டுக் கொன்றது. இதன்போது, அதற்கெதிராகக் கண்டனம் தெரிவிக்கக்கூட மண்டேலாவுக்குத் திராணியிருக்கவில்லை.   

1960களில் கொங்கோவில், பெல்ஜிய கொலனியாதிக்கத்தை எதிர்த்து, பாட்ரீஸ் லுமும்பாவும் கென்யாவில் பிரிட்டிஷ் கொலனியாதிக்கத்தை எதிர்த்து ஜோமோ கென்யட்டாவும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் வெற்றியை ஈட்டிய கதையை மண்டேலா அறியாதவரல்ல.   

அவர் சிறையிலிருந்த காலத்திலும், விடுதலையான காலத்திலும் கினியா பிசாவ், அங்கோலா, மொசாம்பிக் முதலான நாடுகளில் கொம்யூனிஸ்டுகளும் நாட்டுப்பற்றாளர்களும் இணைந்து, ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாக நின்று, ஆயுதப் போராட்டப் பாதையில் முன்னேறி, அதில் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டிய நிலைவரங்களையும் அவர் அறிந்திருந்தார்.   

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான பொறுப்பும் கடமையும் இருந்தபோதிலும், மண்டேலா அதை அறிந்தே அவற்றைத் தவிர்த்தார்.   

அவரது சமரசத்தையும் மறுகொலனியாதிக்கத்துக்கு அவர் தென்னாபிரிக்காவைத் திறந்துவிட்டதையும் இதனடிப்படையில் விளங்க முடியும்.   

தென்னாபிரிக்கா இயற்கை வளங்கள் நிறைந்த நாடு. அங்கு சுரங்கங்களில் மிகக் கொடுமையான நிலைமைகளில், ஏழைத் தென்னாபிரிக்கர்கள் வேலை பார்க்கிறார்கள்.   

அவர்களது உழைப்பு மிகையாகச் சுரண்டப்படுகிறது. ஆனால், அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பெதையும் கறுப்புத் தென்னாபிரிக்காவின் காவலர்கள் எனப்படுகிற, ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் அரசாங்கம் செய்துகொடுக்கவில்லை.   

மாறாகத், தாங்களும் தங்களுக்கு முந்திய வெள்ளை நிறவெறி ஆட்சியாளர்களைப் போல, அல்லது அதற்கும் மேலாக மக்களைச் சுரண்டவும் கொடிய அடக்குமுறையின் மூலம் எதிர்ப்புகளைக் கட்டுப்படுத்தவும் வல்லவர்கள் என்பதைக் கடந்த பத்தாண்டுகளில், தனது நடவடிக்கைகளின் ஊடாக, ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸின் தென்னாபிரிக்க அரசாங்கம் காட்டியுள்ளது.   

1994இல் மண்டேலா ஆட்சியில் அமர்த்தப்பட்ட போது, முதலாளித்துவத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் நலன்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்ற உறுதிமொழியை அவர் அளித்தார்.  

அதைத் தவறாமல் இன்றும் அவரது ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் பேணுகிறது. எந்த மக்களுக்காக அவர் போராடினாரோ, அவர்களது வாழ்க்கையையும் அவர்களது எதிர்கால சந்ததியின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கினார்.

இப்போது, உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள், உங்களது பிள்ளைகளுக்கு, நீங்கள் மண்டேலாவை எவ்வாறு நினைவுகூர்வீர்கள்?   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நெல்சன்-மண்டேலா-100-எதை-நினைவுகூர்வது/91-219602

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.