Jump to content

Recommended Posts

 

நன்றி

 

நிவேதாவுக்கு வெறுத்துப் போயிற்று. சமையலில் அவள் கெட்டி. தன் குடும்பத்தினருக்காக ஒவ்வொரு நாளும் எதையாவது புதுசு புதுசாகச் செய்ய வேண்டுமே என பதைபதைப்பாள். அதில் தன் திறமை முழுவதையும் காட்டி சுவை கூட்டுவாள். அவள் புத்தக கலெக்‌ஷன் முழுவதுமே சமையல் கலை புத்தகங்களால் நிரம்பி வழியும். ஆனாலும் என்ன? ஒரு சின்ன பாராட்டுகூட கிடைக்காது! இன்று அவள் பார்த்துப் பார்த்து செய்த அரிதான ரெஸிபி... சாப்பிட்ட யாருமே ‘‘நல்லா இருக்கு’’ என வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை. கணவன் சாப்பிட்டு கை கழுவிய வேகத்தில் ஆபீஸ் கிளம்பிப் போய் விட்டான். குழந்தைகள் இருவரும் வேகவேகமாக அள்ளிப் போட்டுக்கொண்டு பள்ளிக்கு ஓடிவிட்டனர்.

16.jpg

மாமியாரும் சாப்பிட்டு முடித்தவுடன் அரட்டை அடிக்க பக்கத்து வீட்டுக்குப் போய்விட்டார். ‘‘நன்றியே யாருக்கும் இல்லை!’’ - இந்தப் புலம்பலின் முடிவில் நிவேதாவுக்கு அழுகையே வந்துவிட்டது. ‘‘சே, செய்த ரெஸிபிக்கு ஒரு சின்ன அங்கீகாரம் கூட கிடைக்கலையே! எதுக்காக கஷ்டப்படணும்?’’ - முணுமுணுத்தபடியே சாப்பிட்டவள், மீதத்தை நாய்க்குக் கொண்டுபோய் போட்டாள். அதைச் சாப்பிட்ட விக்கி, வாலை ஆட்டிக்கொண்டு வந்து நிவேதாவின் காலை நக்கிற்று. மனதுக்குள் ஒரு சின்ன பூரிப்பு. மலர்ச்சியுடன் மறுநாள் சமையலுக்கான ரெஸிபியைத் தேடத் துவங்கினாள் நிவேதா!    

 

இல்லை

தெருமுனையில் தியாகராஜனின் தலை தெரிந்ததும், பால்கனியில் நின்றிருந்த பால்சாமி ‘சட்’டென தன் அறைக்குள் நுழைந்தார். மனைவியை அழைத்து, ‘‘இதோ பார்! தியாகு வர்றான். என்னைக் கேட்டால் ‘வெளியூர் போயிருக்கார். வர ஒரு வாரம் ஆகும்’னு சொல்லி அனுப்பிடு. எப்போ பார்த்தாலும் கடன் கேட்டு வந்து நிக்கறான்’’ என்று சொல்லிவிட்டுப் பதுங்கிக்கொண்டார். அவளும் அப்படியே செய்ய, தியாகராஜன் திரும்பிப் போய்விட்டார். ஒரு வாரத்துக்குப் பின் தியாகராஜன் போன் செய்து, ‘‘நீ வெளியூர் போயிருந்த நேரத்துல ஒரு நல்ல ஆஃபர். ஒரு பெரிய பார்ட்டி ஆயிரம் ஜோடி ஷூ ஆர்டர் கொடுத்தாங்க. நீ இல்லாததால வேறு ஆள் மூலமா சப்ளை செஞ்சேன்!’’ என்று சொல்ல, பால்சாமிக்கு பகீரென்றது.

10.jpg

போனை கட் செய்துவிட்டு தன் மனைவி பக்கம் திரும்பிய தியாகராஜன், ‘‘நண்பனா இருந்து என்ன பிரயோஜனம்? ஒரு ஆத்திர அவசரத்துக்கு ஆயிரம் ரூபா கூட கடன் தரமாட்டேங்கறான். கஞ்சப் பய. வீட்ல இருந்துக்கிட்டே இல்லைன்னு வேறே பொய் சொல்றான். அதான் வருத்தப்படட்டும்னு சும்மா புருடா விட்டேன்’’ என்றார்.   

 

தெய்வம்

‘‘ஹலோ, சம்பத் சாரா? சுதா நர்சிங் ஹோமுக்கு உடனே வாங்க!’’ ‘‘என்ன விஷயம்? நீ யாருப்பா?’’ ‘‘என் பேர் பொன்னுச்சாமி... சீக்கிரம் வாங்க சார், நேர்ல சொல்றேன்!’’ இருபது நிமிடங்களில் அங்கிருந்தான் சம்பத். ‘‘சார், உங்க பையன் ஸ்கூல் விட்டு வரும்போது ஆட்டோக்காரன் மோதிட்டுப் போயிட்டான். தம்பியோட பள்ளிக்கூட அட்டையில இருக்கிற உங்க போன் நம்பரை வச்சுதான் போன் பண்ணேன். தம்பிக்கு தலையில பலமா அடி பட்டிருச்சி. எல்லாரும் வேடிக்கை பாக்கறாங்களே தவிர, உதவிக்கு வரல. அதான் நானே ஆட்டோ பிடிச்சி இங்கே கொண்டுவந்து சேர்த்தேன்!’’ - முடிக்கும் முன்னமே பதட்டமாகிவிட்ட சம்பத், ஓடிப் போய் டாக்டரைப் பார்த்தான்...

2.jpg

‘‘சரியான சமயத்தில் தூக்கிட்டு வந்ததால ஆபத்து ஒண்ணுமில்ல... காப்பாத்திரலாம்!’’ என நம்பிக்கை தந்தார் டாக்டர். நிம்மதிப் பெருமூச்சோடு வெளியே வந்த சம்பத், அப்போதுதான் பொன்னுச்சாமியை கவனித்துப் பார்த்தான். அழுக்கேறிய உடை... ஒரு கால் செயல் இழந்து தொங்கிக் கொண்டிருந்தது. ‘‘நீங்க...’’ ‘‘நான் அந்த ஸ்கூல் பக்கத்தில் இருக்கிற கோயில்ல பிச்சை எடுக்குறவன் சார்!’’ அதிர்ச்சியில் உறைந்த சம்பத், தெய்வம் கோயிலுக்கு உள்ளே மட்டுமல்ல, வெளியிலும் இருக்கிறது எனப் புரிந்துகொண்டான்!

 

http://kungumam.co.in

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.