Jump to content

திசை திருப்பும் முயற்சி


Recommended Posts

திசை திருப்பும் முயற்சி – பி.மாணிக்கவாசகம்

 

நீறுபூத்த நெருப்பாக உள்ள அரசியல் கைதிகள் விவகாரம் மீண்டும் ஒரு முறை கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது. அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றது. அவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல தடவைகள் போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. சிறைச்சாலைகளுக்குள்ளேயும், அவர்களுக்கு ஆதரவாக வெளியிலும் இந்த போராட்டங்கள் வலுவாக நடத்தப்பட்டிருக்கின்றன.

 

ஆனால், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் அரசாங்கம் அக்கறையற்ற விதத்திலேயே நடந்து கொண்டிருக்கின்றது. மேலோட்டமான பார்வையில் இதனை ஒரு சுரணையற்ற போக்கு என்றுகூட குறிப்பிடலாம். ஆனால் உண்மையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் அரசாங்கம் இனவாத அரசியல் போக்கின் அடிப்படையில் இராஜதந்திர ரீதியான ஓர் அணுகுமுறையைப் பின்பற்றியிருப்பதையே நுணுகி நோக்க முடிகின்றது.

பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டத்தின் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களே இந்த அரசியல் கைதிகளாவர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக இன்னும் வழக்கு தாக்கல் செய்யப்படாமல், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் படையினருக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அனுகூலங்களின் பலர் பல வருடங்களாகத் தடுத:;து வைகக்கப்பட்டுள்ளார்கள். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மிக மோசமான பிரிவுகளில் ஒன்றாகிய ஒப்புதல் வாக்குமூல சாட்சியத்தின் மூலம் தண்டனை விதிக்கப்பட்டு தண்டனை அனுபவிப்பவர்களும் இருக்கின்றார்கள்.

அரசியல் கைதிகள் சாதாரண சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களல்ல. சாதாரண சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டவர்களுமல்ல. தமிழ் மக்களின், மறுக்கப்பட்ட அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஆயுதமேந்தி அரசுக்கு எதிராகப் போராடிய விடுதலைப்புலிகளை அடக்கி ஒடுக்குவதற்காக விசேடமாக, அதுவும் தற்காலிக ஏற்பாடாக நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், அவசரகாலச் சட்டத்தையும் துணையாக இணைத்துக் கொண்டு இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்: தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றார்கள்.

விடுதலைப்புலிகள் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது ஆயுத ரீதியாகச் செயலிழக்கச் செய்யப்பட்டார்கள். அரச தரப்பினுடைய பாணியில் சொல்வதானால், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக நடத்தப்பட்ட யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. எனவே, யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட தினமாகிய 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதியுடன் பயங்கரவாதத் தடைச்சட்டமும், அவசரகாலச் சட்டமும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு அரசியல் கைதிகளின்; விடயத்திற்கும் முடிவு காணப்பட்டிருக்க வேண்டும்.

அரசியல் உரிமைகளுக்காக, முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே முப்பது வருடங்களாக யுத்தம் தொடர்ந்து நடத்தப்பட்டது. அதுவும், நாட்டில் உள்ள தனது குடிமக்களின் ஒரு பகுதியினர் சார்பில் நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டத்தை முறியடிப்பதற்காகவே யுத்தம் நடத்தப்பட்டது. அரசியல் உரிமைக்கான அந்த ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்தரித்து, சர்வதேச அளவிலான ஒரு குற்றச்செயலாக அதற்கு ஓர் அந்தஸ்தை வழங்கிச் செயற்பட்டு, அந்த யுத்தத்தில் வெற்றிபெற்ற அரசாங்கம், வெற்றி பெருமிதத்திலும் மனிதாபிமான ரீதியில் நடந்து கொண்டிருக்க வேண்டும்.

ஓர் அரசாங்கம் என்ற வகையில் பாதிக்கப்பட்ட தனது நாட்டின் ஒரு பிரிவினராகிய குடிமக்கள் மீது தனக்குள்ள அக்கறையையும், கரிசனையையும் இந்த மனிதாபிமானத்தின் மூலம் வெளிப்படுத்தும் வகையில் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால், அது நடைபெறவில்லை. அவ்வாறு அரசாங்கம் நடந்து கொள்ளவில்லை. மாறாக அந்த அரசியல் கைதிகள் மீது பகைமை பாராட்டும் வகையிலேயே நடந்து கொண்டது. யுத்தம் முடிவுக்கு வந்து பத்து வருடங்களாகப் போகின்ற நிலையிலும், அந்தப் போக்கில் இன்னுமே மாற்றம் ஏற்படவில்லை. பகைமை பாராட்டுகின்ற இந்தப் போக்கு சட்டம், ஒழுங்கு, நீதி என்ற விடயங்களை, அரசு தனது பேரினவாத அரசியல் போக்கிற்கு சாதகமாகப் பயன்படுத்தி யுபோர்க்குற்றம் புரிந்தவர்களைப் பாதுகாக்கின்ற நீண்டநாள் திட்டத்தின் கீழ் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

விருப்பமில்லாத போக்கா விபரீதமான போக்கா?

பயங்கரவாதம் என சித்தரிக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்களின் முப்பது வருடகால ஆயுதப் போராட்டம், அவ்வப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கங்களை ஆட்டிப்படைத்து விழி பிதுங்கச் செய்திருந்தது. இதனால், விடுதலைப்புலிகளின் தாக்குதல்களை முறியடிப்பதற்கும், அவர்களுடைய அரச எதிர்ப்பு நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் பல்வேறு இராணுவோபாயங்களின் மூலம் முன்னெடுத்திருந்தது. அவற்றில் அதீத சக்தியைப் பயன்படுத்துவது ஒரு முக்கிய உத்தியாகப் பயன்படுத்தப்பட்டது.

அதன் ஓர் அம்சமாகவே விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்றும், அவர்களுக்கு உதவி புரிபவர்கள் என்றும் சந்தேகிக்கப்ட்;டவர்களுக்கு எதிராகவும், அவர்களுக்கு ஆதரவான மனப்போக்கைக் கொண்டவர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்களுக்கு எதிராகவும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் விசேட அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த வகையிலேயே பலர் சந்தேகத்தின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்;டார்கள். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களே நீண்ட காலமாக விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

பயங்கரவாதம் என்றால் என்ன, பயங்கரவாதி என்றால் யார் என்பதற்கு உரிய வரைவிலக்கணம் இல்லாத நிலையிலேயே பயங்கரவாதத் தடைச்சட்டம் தமிழ் இளைஞர் யுவதிகள் மீது பாய்ந்தது. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், ஆயுதமேந்தி படையினருக்கு எதிராக போர்புரிந்த முன்னாள் போராளிகள் பதினோராயிரம் பேரை புனர்வாழ்வளித்து விடுதலை செய்ததாக் பெருமையாகக் கூறுகின்ற அரசாங்கம், சந்தேகத்தின் பேரில் கைது செய்து, தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை காலம் கடந்த நிலையிலும் விடுதலை செய்வதற்குத் தயாராக இல்லை.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாதிகள். அவர்களை விடுதலை செய்தால், நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கச் செய்வதற்கு வழிவகுத்ததாக முடியும். எனவே, அவர்களை விடுதலை செய்வது தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்துகின்ற ஒரு செயற்பாடாகக் காரணம் கற்பிக்கப்பட்டிருக்கின்றது. அது மட்டுமல்லாமல், பயங்கரவாதிகளே தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று பிடிவாதமாகக் கூறி வருகின்றது.

மறுபுறத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளில் அவர்களுக்கு அளவில்லாத சேதங்களை விளைவிப்பதற்கும் வைத்தியசாலைகள், நிவாரண உதவிகளைப் பெறுவதற்காக பொதுமக்கள் கூடுகின்ற இடங்கள் போன்ற சிவில் இலக்குகள் மீது
அரச படைகள் தாக்குதல்களை நடத்தி பொதுமக்களுக்குச் சேதங்களை ஏற்படுத்தி விடுதலைப்புலிகளை நெருக்கடிகளுக்குள்ளாக்கும் தந்திரோபாயச் செயற்பாட்டை முன்னெடுத்திருந்தன. இத்தகைய நடவடிக்கைகளையே சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் மனிதாபிமான செயற்பாடுகளுக்கான அமைப்புக்களும் அளவுக்கு அதிகமான இராணுவ பலப் பிரயோகம் செய்திருந்ததாகச் சுட்டிகாட்டி குற்றம் சுமத்தியிருக்கின்றன.

அதீத இராணுவ சக்தியைப் பயன்டுத்குகின்ற போக்கையும் அரச படைகள் கடைப்பிடித்திருந்தன என்பது அரச படைகள் மீதான மற்றுமொரு குற்றச்சாட்டாகும். வான்வழி தாக்குதல்கள், கடற்படைக் கப்பல்கள், பீரங்கிப்படகுகளில் இருந்து நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதல்கள் மட்டுமல்லாமல், பலத்த சேதத்தை ஏற்படுத்துவதற்கென்றே சுயமாகத் தயாரிக்கப்பட்ட பரல் குண்டுகள், இரசாயன குண்டுகள், எரிகுண்டுகள் என்பன பயன்படுத்தப்பட்டதாக அரச படைகள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது. சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், பொது அமைப்புக்களும் முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டுக்களே இலங்கை அரசாங்கத்தை போர்க்குற்றச்சாட்டை எதிர்கொள்ளச் செய்திருக்கின்றது.

விடுதலைப்புலிகளுக்கு எதிராகவே அரச படைகள் போரிட்டன. பொதுமக்களாகிய தமிழ் மக்களுக்கு எதிராகப் போர் புரியவில்லை என்றும், ஒரு கையில் ஆயுதமும், மறு கையில் மனிதாபிமானத்தையுமே ஏந்தி இராணுவத்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என்று முன்னைய அரசாங்கம் பிரசாரம் செய்து வந்தது. நல்லாட்சி அரசாங்கமும் அந்த வழியைப் பின்பற்றியே செயற்பட்டு வருகின்றது. இராணுவத்திற்கு எதிராக எந்த நிலையிலும் குற்றங்கள் சுமத்தப்படமாட்டாது. எந்த இராணுவ வீரரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படமாட்டார்கள். அவர்கள் எவரும் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட மாட்டார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடித்துக் கூறி வருகின்றார்.

மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் என்பவற்றில் படையினர் ஈடுபட்டிருந்தார்கள் என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலமாக இதனைக் கருத முடியும். சர்வதேச அளவில் கடப்பாட்டுக்கு உள்ளாகியிருக்கின்ற அரசாங்கம், பொறுப்புகூறல் செயற்பாட்டில், இராணுவத்திற்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கமாட்டாது என்பதை ஜனாதிபதி, பிரதமர் மட்டுமல்லாமல், அரசாங்கத் தரப்பைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்களும் உறுதியாகக் கூறி வருகின்றார்கள். பொறுப்பு கூறும் செயற்பாட்டில் இதுவே தமது நிலைப்பாடு என்பதையும் அரசாங்கம் இதனூடாக வெளிப்படுத்தி இருக்கின்றது.

இந்த நிலைப்பாட்டில் முன்னேறிச் செல்வதற்காகவே, தமிழ் அரசியல் கைதிகளுக்கும், இராணுவத்தினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற புதிய கோரிக்கை எழுந்திருக்கின்றது. கடந்த ஒன்பது வருடங்களாக இத்தகைய கோரிக்கை முன்வைக்கப்படவில்லை. அதேபோன்று அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எனவே, அரசியல் கைதிகளைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கின்ற படையினருக்குப் பொதுமன்னிப்பு அளிப்பதே அரசாங்கத்தின் நீண்டகால நோக்கமாக இருந்து வந்துள்ளதோ என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

யாருக்கு பொதுமன்னிப்பு – தண்டனை அனுபவிப்பவர்ளுக்கா, தண்டனை பெறாதவர்களுக்கா?

அரசியல் கைதிகளுக்கும் இராணுவத்திற்கும் சேர்த்து பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற புதிய யோசனை – புதிய கோரிக்கை வேடிக்கையானது. விபரீதமானது என்றே கூற வேண்டும். அமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்வைத்துள்ள இந்த யோசனைக்கு எதிர்;ப்பு கிளம்பியிருக்கின்றது என்பது கருத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும்.

மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்களில் ஈடுபட்டிருந்த படைத்தரப்பினர் தண்டனை பெறுவதில் இருந்து தப்பியிருக்கின்ற கலாசாரத்தின் கீழ் எந்தவிதமான பாதிப்புகளுமின்றி சுதந்திரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட படையினரை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே சர்வதேசமும், ஐநா மனித உரிமைகள் பேரவையும் வலியுறுத்தி வருகின்ற பொறுப்புகூறல் கடப்பாட்டின் சாராம்சமாகும்.

குற்றம் செய்த படையினரே விசாரணைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும். குற்றம் செய்யாதவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என்பது சாதாரண நியதியாகும். இதனை அனைவரும் நன்கு அறிவார்கள். ஆனால் இலங்கையின் பொறுப்பு கூறல் என்பது அரச படைகள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக விசாரணைக்கு உட்படுத்தி தண்டனை வழங்குகின்ற ஒரு கைங்கரியமாகப் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றது.

உண்மைக்கு மாறானதும், நடைமுறையில் இல்லாததுமான இந்த நடைமுறை குறித்த பிரசாரம் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டியது அவசியம். பொறுப்பு கூறுகின்ற விடயத்தில் முதலாவது நடவடிக்கையாக இது உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். பொறுப்புகூறலின் உண்மையான நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட வேண்டுமேயல்லாமல், அதனைத் திரித்துக்; கூறி பெரும்பான்மையினராகிய சிங்கள மக்களை பிழையாக வழிநடத்தக் கூடாது.

தமிழ் அரசியல் கைதிகளையும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இராணுவத்தினரையும் ஒரே நிலையில் வைத்து அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஆலோசனை முழு இராணுவத்திற்கெதிராகவும் விசாரணைகள் நடத்தப்படுவதே பொறுப்பு கூறலின் நோக்கம் என்ற பிரசாரத்தின் அடிப்படையிலானது.

அரசியல் போராட்டத்தின் ஓர் அம்சமாக முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்களே அரசியல் கைதிகளாவர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் விசேட சட்டமாகிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள் அல்லது பயங்கரவாதிகளுக்கு உதவியிருந்தார்கள், ஒத்துழைப்பு வழங்கியிருந்தார்கள் என்ற தோரணையிலேயே அவர்கள் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

அத்தகைய விசாரணைகளின் பின்னர், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலமே அவர்களுக்கு எதிரான சாட்சியங்களாகப் பயன்படுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது. ஒப்புதல் வாக்குமூலம் என்பது தனக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்படுவதற்கும் தண்டனை வழங்கப்படுவதற்கும் மனம் ஒப்பி வழங்குகின்ற சுயமான சாட்சியமாகும். நீண்டகாலமாக மறுக்கப்பட்டு வந்துள்ள அரசியல் உரிகை;கான போராட்ட நடத்தப்படுகின்ற சூழலில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட எவரும், தனக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று மனம் ஒப்பி, ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவதில்லை.

அவ்வாறு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் சித்திரவதை செய்த பின்னரே பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இயல்பான நிலையில் மனமுவந்து ஒப்புதல் வாக்குமூலம் பெறப்படவில்லை என்பது பல வழக்குகளில் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டு அல்லது கண்டறியப்பட்டு, குற்றம்சாட்டப்பட்ட பலர் நீதிமன்றங்களினால் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

விசாரணையின்போதே தண்டனை

இது ஒரு,புறமிருக்க, பயங்கரவாதத் தடைச்சடத்தின் கீழ் வெறுமனே சந்தேகத்தை மட்டுமே ஆதாரமாகக கொண்டு கைது செய்யப்பட்டவர்கள் மீது நீண்ட நெடும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. இதற்கு அந்தச் சட்டத்தில் உள்ள சட்டப்பிரிவுகள் படையினருக்கு அவசியமான அதிகாரங்களை வழங்கியிருக்கின்றன. கைது செய்யப்படுவதற்கு ஏதுவான சந்தேகத்தை, நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிப்பதற்குத் தேவையான உறுதியான ஆதாரங்களைத் தேடிக் கண்டறியப்படுவதற்காகவே இந்த நீண்ட விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

இந்த விசாரணைக்காலம் நாட்கணக்கிலானதல்ல. மாதக்கணக்கிலானதுமல்ல. வருடக்கணக்கான காலப்பகுதியிலேயே அந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த விசாரணை காலத்தில் சந்தேக நபர்களான அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் அதிகூடிய பாதுகாப்பு பிரிவில் தடுத்து வைக்கப்படுகின்றார்கள். அவர்களுக்கு எதிரான விசாரணைகளின்போது பல்வேறு சித்திரவதைகளும் சித்திரவதை அணுகுமுறைகளும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த சித்திரவதைகள் பற்றிய ஆதாரபூர்வமான பல விபரங்கள் ஏற்கனவே வெளிவந்திருக்கின்றன. அந்த வரிசையில், சர்வதேச மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் முதன்மை நிலையில் உள்ள உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் தலைவியாகிய யஸ்மின் சூக்கா ஆண் கைதிகள் மீது படையணியைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் பாலியல் ரீதியான சித்திரவதைகளை மேற்கொண்டிருந்தனர் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல்களை ஜெனிவாவில் வெளியிட்டிருக்கின்றார்.

விசாரணை காலத்தில் அரசியல் கைதிகள் எத்தகைய மோசமான நிலைமைக்கு ஆளாக்கப்படுகின்றார்கள் என்பதற்கு யஸ்மின் சூக்காவின் பிந்திய அறிக்கையைவிட வேறு ஆதாரங்கள் அவசியமில்லை. எனவே, என்ன குற்றம் செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்களுடன் கூடிய குற்றச்சாட்டுக்களும், விசாரணைகளும் இல்லாமலே நீதிமன்ற விசாரணைக்கு முன்னரும், நீண்ட கால தாமதம் கொண்ட நீதிமன்ற விசாரணையின் போதும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் வழக்கு தீர்ப்பு வருவதற்கு முன்பே அதீத அளவிலான தண்டனையை அனுபவிக்கின்றார்கள்.

வழக்கு விசாரணைகளின் போது, மிக நீண்ட விசாரணை காலத்தில் அனுவித்த சிறைவாசம் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. விசாரணைகளின் பின்னர் நீதி வழங்கப்படும்போது, அவர்கள் முழு அளவிலான தண்டனையையே அனுபவிக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். அவர்கள் அந்த வழக்கு முடியும் வரையில் அனுபவித்த அதிகாரபூர்வமற்ற சிறைத் தண்டனை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. தீர்ப்புகளில் அளிக்கப்படுகின்ற தண்டனைக்கு மேலதிகமாக அவர்கள் ஏற்கனவே அனுபவித்த தண்டனை சட்ட ரீதியாகவும்சரி, மனிதாபிமான ரீதியாகவும்சரி கணக்கில் எடுக்கப்படுவதில்லை. இதனால் அவர்கள் இரட்டை தண்டனை முறைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். வழக்கு தாக்கல் செய்யப்படாமல் விசாரணை நிலையில் உள்ள அரசியல் கைதிகள் நீதிமன்றத்திற்குச் செல்லாமலே சிறைத் தண்டனை அனுபவிக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இத்தகயை நிலையில் உள்ள அரசியல் கைதிகளே பொதுமன்னிப்பின் அடிப்படையில், தமக்கு குறுகிய கால புனர்வாழ்வு தண்டனையை வழங்கி விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு ஆதரவாக பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பலதரப்பினரும் வடக்கில் போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றார்கள்.

தண்டனை அனுபவிப்பவர்களுக்கே பொதுமன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. இதே பொது மன்னிப்பை சர்வதேச அளவில் கணிக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு விசாரணைகளையே எதிர்கொள்ளாமல் தண்டனை பெறுவதில் இருந்து தப்பியிருப்பவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரியிருப்பது எந்த வகையில் நியாயமானது என தெரியவில்லை.

தமிழ் அரசியல் கைதிகள் நியாயமான முறையில் விடுதலை செய்யப்பட வேண்டியது அவசியம். அதனை திசைதிருப்பி அவர்களுடைய விடுதலையை கிடப்பில் போடுவதற்கான முயற்சியாகவே படையினருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இந்தத் திசை திருப்பும் முயற்சிக்கு இடமளிக்காமல் அரசு தமிழ் அரசியல் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய முன்வர வேண்டும்.

http://globaltamilnews.net/2018/96615/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.