Jump to content

கள்ளக் கணக்கு - வாசித்திராத கதைவெளி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாசித்திராத கதைவெளி

க.வை. பழனிசாமி

82-1.jpg

கள்ளக் கணக்கு (சிறுகதைகள்)
ஆசி கந்தராஜா
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி. சாலை நாகர்கோவில் 629 001 
பக். 128 ,ரூ.145

புலம் பெயர்ந்த தமிழர்கள் மொழிமீது ஏற்படுத்துகிற தாக்கமும் நவீன வாழ்க்கைமுறை ஏற்படுத்துகிற தாக்கமும் தமிழைத் தற்கால வாழ்வுக்கானதாக மாற்றுகின்றன. இதனால் தமிழ் மொழி புதுப்பிக்கப்படுவதாகவும் கருதலாம். கந்தராஜாவின் ‘கள்ளக் கணக்கு’ தமிழ் இலக்கியத்தில் நம் வாசகன் அறிந்திராத வாழ்வெளிப் பரப்பை அறிமுகம் செய்கிறது.

அவசரம் பற்றிக்கொள்ளாமல் நிதானமாக உரையாடுகிற நவீன கதைசொல்லியாக கந்தராஜாவைப் பார்க்கிறோம். இவர் தேர்வு செய்யும் மனிதர்கள் எப்படி படைப்பின் பாத்திரமாக உருமாறுகிறார்கள் என்பது இவரது சிறுகதை ரகசியம்.

‘பத்தோடு பதினொன்று’ கதையில் மூன்று சிறார்கள். தாய் இல்லை. வேலைக்குப் போகிற தந்தை. இவர்களது வாழ்க்கையிலிருந்து சில நிகழ்வுகள். வாழ்க்கையை இன்னொரு கட்டத்துக்கு உயர்த்துவதுதான் ஒரே குறிக்கோள். படிப்பு மட்டுமே அதற்கு உதவும். ஆனால் அது அந்த வயதுப் பிள்ளைகளுக்குச் சுமக்க முடியாத பாரம். ஜப்பானிய நடுத்தர மக்களின் வாழ்க்கைதான் பின்புலம். இந்தப் பின்புலம் வாசகனுக்கு முன் வாசித்திராத எழுத்தைத் தருகிறது.

புலம் பெயர்ந்த தமிழ்ப்பெண் நளாயினியின் பார்வையிலிருந்து கதை சொல்கிறபோது இரு வேறு வாழ்க்கை முறைகளும் கூடவே பயணிக்கின்றன. நவீன வாழ்வின் வேர்களைத் தீண்டிவிட்ட அனுபவம். கெய்கோ ஒரு வெளிச்சக் கீற்றுபோல சட்டென தோன்றி மறைகிறாள். அந்த வெளிச்சத்தில் காட்சியாகி அதிர்கிற பிம்பம் பேரதிர்ச்சியைத் தருகிறது. கெய்கோவின் மரணம் பத்தோடு பதினொன்றாகப் பதிவாகிறது. மரணம் நிகழ்ந்தும் அவளின் தந்தை அவளது சகோதரி அன்றாட வாழ்வின் நிர்ப்பந்தத்தில் கட்டுண்டு நகர்கிறார்கள்.

சகோதரி பள்ளிக்குச் சென்றுவிட்டாள். இறுதிச்சடங்கு எங்கே என்று கேட்கும் நளாயினியிடம் தந்தை சொல்கிறார், ‘‘தொழிற்சாலைக்கு அருகிலுள்ள சவச் சாலையிலே இன்று இரண்டாவது சிப்ட் முடிந்தவுடன் நடைபெறும். வேலை முடிந்தவுடன் மாலை ஆறுமணிக்கு நான் சவ அடக்கத்துக்கு வந்துவிடுவேன். நீங்களும் அங்கு வாருங்கள்,” என்றார் கமாடா கண்களில் நீர் ததும்ப இப்படி ஓர் இறுதிச்சடங்கை நம்மால் கற்பனை செய்ய முடியுமா? இதில் ‘நீர் ததும்ப’ என்பதுதான் வாசகனிடம் உரையாடுகிற இடம். 
‘ஒட்டு மரங்கள்’ கதையில் செயல்படுகிற புறம், அகம் புதிய சங்ககாலத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்தத் தொகுப்பின் ஆகச் சிறந்த வெற்றி புற, அக மாற்றம்தான். தமிழைப் பரந்துபட்டவெளிக்கு நகர்த்திய பங்களிப்பு குறிப்பாக இலங்கைத் தமிழர்களுக்கே சேரும். புலம் பெயர்ந்த தமிழர்களின் இலக்கிய உள்ளடக்கம் உலகளாவியது. இவர்களது படைப்புகளே மொழியைத் தற்கால வாழ்வில் நிறுத்துகிறது. அவர்களால் யூகலிப்டஸ் மரத்தில் அவரைக்கொடியைப் படரவைக்க முடிகிறது. ஒரு யாழ்ப்பாண மனம் ஆஸ்திரேலியாவில் முட்டிக்கத்திரிக்காயை விளைவிப்பதை எளிய நிகழ்வாகக் கதைக்குள் வாசிக்க முடியாது.

கதையிலிருந்து சில வரிகள்...

‘‘அபியின் அம்மா இன்னமும் தான் பிறந்து வளர்ந்த மண்ணின் அருமை பெருமைகளைச் சுவாசித்தே வாழ்கிறார்.”

“அபியை நீங்கள்தான் கேளுங்கோ. எந்த நேரமும் றோட்டிலை, வெள்ளைக்கார பொடியன்களோடை குதியன் குத்திறாள்.”

“நீங்கள்தான் அவளுக்குச் செல்லம் குடுக்கிறது. அவளைக் கண்டிச்சுப்போடாதேங்கோ. இந்த வயதிலைதானே சங்கீதா இங்கே வந்தவள். வெள்ளைக்காரக் குஞ்சுகளோடையே சுத்தித் திரிஞ்சவள்? அபியாலே பின்னுக்கு ஏதோ பிரச்சனை வந்தால் அதுக்கு நான் பொறுப்பில்லை. இப்பவே சொல்லிப்போட்டன்..”

யாழ்ப்பாணத் தாயின் மனம் ஆஸ்திரேலியாவில் படும்பாடு மேற்குறித்த வரிகளில் தெரிகிறது. இறுதியில் இப்படியான வரிகளில் கதை முடிகிறது. “ஆஸ்திரேலிய சூழலிலே ‘யாழ்ப்பாணம் மட்டும்’, என்று வேலியடைத்து வாழ்தல் தோதுப்படமாட்டாது என்ற ஞானத்தினை, அம்மா யூக்கலிப்ரஸ் மரத்தின்கீழே பெற்றிருக்க வேண்டும்.”
ஞானத்தைக் கருவேப்பிலை மரத்திலிருந்து இப்போது யூக்கலிப்ரஸ் மரத்தில் பெற அபியின் அம்மாவுக்கு இடையில் என்ன நடந்தது என்பது இங்கே கதை.

விழுமியங்களோடு வாழ்வின் எதார்த்தம் முட்டி மோதுகிற தளமே ‘வெள்ளிக்கிழமை விரதம்’. உடல், மனம் இரண்டையும் ஓர் ஆப்பிரிக்க இளம்பெண் எப்படி பார்க்கிறாள் என்பதை உணர்த்துவதோடு விழுமியங்கள் என்று நாம் நின்று பார்க்கிற இடத்தைப் போகிற போக்கில் அடித்துத் துவம்சம் செய்கிறாள். வார்த்தைகளின் உலகத்தை அழித்து உணர்வின் மொழியில் நிகழ்கிறது கதையாடல். குளோறியா என்ற ஆப்பிரிக்க இனப் பெண்ணின் காதல் நாம் அறியாத வேறு காதல். காண்டாமிருகத்தின் கொம்பு பெண்களை அழுத்தும் பாரங்களை முட்டி மோதித் தூர எறிகிறது. மொறிஸ் மீதான குளோறியாவின் காதல் காவியக் காதலினும் மாசற்றது.

‘மணப்பெண் கூலி’ என்பது தந்தைக்கானதாக ஆகிறபோது அதை ஆப்பிரிக்கப் பெண்கள் கடந்துபோகிற இடம் முற்றிலும் அறம் சார்ந்தது. ஆப்பிரிக்கப் பெண்ணின் சமூக வாழ்வும் ஜப்பானியப் பெண்ணின் சமூக வாழ்வும் முற்றிலும் வேறானவை.  இந்த இரு நிலைகளையும் இக் கதைகளின் வழியாகச் சந்திக்கிற வாசகனின் மனத்தில் குளோறியாவின் வார்த்தைகள் அழிக்க முடியாது தங்கிவிடும். ஆப்பிரிக்கப் பெண்ணிடம் வாழ்தல் மட்டுமே இருக்கிறது. வாழ்தலைப் பேசுவதுதானே இலக்கிய மாண்பு. இந்தக் கதையில் வரும் ‘பயனுள்ள பெண்’ என்று மொறிஸ் குறிப்பிடும் சொற்கள் தோற்றுவிக்கிற அலைகள் சிறுகதையின் விளைவு.

பாரசீக -& அராபிய கலப்பினச் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த றொஸ்நாக், ஈராக் & ஈரான் எல்லையோரக் கிராமத்தில் பிறந்தவள். அமீர் பாரசீகப் பிரபுத்துவக் குடும்பத்தைச் சார்ந்தவன். தேரான் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த றொஸ்நாக் முதல் வருஷமே அழகு ராணிப் போட்டியொன்றில் பேரழகியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறாள். அவளது அழகில் மயங்கி அமீர் அவளைக் காதலிக்கிறான். தந்தையோடு போராடித் திருமணம் செய்துகொள்கிறான். ஆஸ்திரேலிய வாழ்க்கை இவர்களது வாழ்வில் குறுக்கிடுகிறது.

“தூய பாரசீக ரத்தத்துடன் வந்திருந்தால் இப்படி செய்யாள்” என சிட்னிக்குப் படிக்கவந்த ஈரானிய மாணவர்கள் பேசித் திரிந்தார்கள். ஆனால் றொஸ்நாக் பின் நாளில் தனது கணவரின் பேராசிரியரிடம் இப்படி சொல்கிறாள்.

“நான் ஆஸ்திரேலியாவுக்கு வந்தபோதுதான் சுதந்திரம் என்றால் என்ன என்பதைக் கண்டு கொண்டேன். சுதந்திரம் அழகானது. அது இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல. பெண்களுக்குச் சுதந்திரம் வேண்டும். பெரும்பாலான இஸ்லாமியப் பெண்கள் இந்த விடயத்தில் வலிமையற்றவர்களாகச் சந்ததி சந்ததியாக ஏதோ ஓர் ஆணிடம் அடிமைப்பட்டுக்கொண்டுதான் வாழ்கிறார்கள்.”

இந்த இரு கூற்றையும் சந்திக்கிறது கதை. ஆனால் சிறுகதையாக உருகண்டு ஒளிரும் இடம் வேறு. இஸ்லாமியப் பெண்களுக்கு விதிக்கப்பட்ட எல்லையில் மோதி றொஸ்நாக் தனது காதல் கணவனின் வரவுக்காகக் காத்திருப்பது சிறுகதையாகிறது. தொகுப்பில் பேசப்படும் பல பெண் பாத்திரங்களோடு றொஸ்நாக் பாத்திரம் மோதி அதிர்வது தொகுப்பின் வெற்றி.

நவீன வாழ்வில் திறன்வெளிதான் உண்மையில் வாழ்வெளி. இதைப் புரிந்துகொண்ட புலம் பெயர்ந்த பலர் வாழ்க்கையில் வெற்றி அடைந்திருக்கிறார்கள். உலகில் இப்போது இந்த வெளிதான் இருக்கிறது. திறன்வெளியைச் சந்திக்கும் போராட்டமே நவீன வாழ்க்கை.

கதைசொல்வதான தொனியில் ஆசிரியர் கந்தராஜா மனித வாழ்க்கையின் இருள்வெளிமீது கொஞ்சமான ஒளிக்கற்றைகளைப் பரவவிடுகிறார். அப்போது வாசகன் பார்க்கிற சிறுவெளி, பார்வைக்கு வராத மேலுமான இடங்களை முடிவிலாது விரிக்கிறது.

 

http://www.kalachuvadu.com/magazines/காலச்சுவடு/issues/226/articles/9-வாசித்திராத-கதைவெளி

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

 

ஆசி.கந்தராஜாவின் 'கள்ளக் கணக்கு'

 

Monday, December 31, 2018


சி.கந்தராஜாவின் புதிய தொகுப்பான 'கள்ளக்கணக்கில்'  பதின்மூன்று கதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே  வெளியான அவரின் சிறுகதைத் தொகுப்புக்களான 'பாவனை பேசலன்றி' (2000), 'உயரப்பறக்கும் காகங்கள் (2003) ஆகியவற்றிலிருந்து ஆறிற்கும் மேலான கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. இளவயதில் எழுதிவிட்டு, நீண்ட காலத்திற்கு எழுதாமல் இருந்து பிறகு மீண்டும் எழுதத்தொடங்கியமை மற்றும் பல நாடுகளுக்கு தொழில் நிமித்தம் பயணஞ்செய்தவை என்பவற்றில் தனக்கும் அ.முத்துலிங்கத்திற்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றதென ஆசி.கந்தராஜா  குறிப்பிடுகின்றார்.

இத்தொகுப்பில் இருக்கும் கதைகள் பல பல்வேறு நாடுகளின் பின்னணியில் நிகழ்கின்றன. எனினும் இலங்கையோ அல்லது ஆஸ்திரேலியாவோ ஓர் இணைநாடாக இந்தக் கதைகள் ஒவ்வொன்றிலும் வந்தபடியும் இருக்கின்றன. இத்தொகுப்பில் இருப்பவற்றில் 'அன்னை', 'யாவரும் கேளிர்', 'புகலிடம்', 'காதல் ஒருவன்', 'மிருகம்' மற்றும் 'வெள்ளிக்கிழமை விரதம்' ஆகிய கதைகள் அதன் பேசுபொருளாலும், நடையாலும் முக்கியமாகின்றன.

'அன்னை'யும், 'வெள்ளிக்கிழமை விரதமும்' ஆபிரிக்கா நாடுகளில் நடைபெறுகின்றவை.  இரண்டு கதைகளிலும், வரும் பாத்திரங்களும் கிட்டத்தட்ட ஒரேவிதமான சிக்கல்களைச் சந்திக்கின்றன. 'அன்னை'யில் ஒரு கொலையோடு அந்தச் சிக்கல் தீர்க்கப்படுகின்றது. 'வெள்ளிக்கிழமை விரதத்தில்' உடலை நுகர்வாக்கி வேறொருவகையில் அந்தச் சிக்கலிருந்து முக்கிய பாத்திரங்கள் தப்பிக்கொள்கின்றன.
 
1.jpg
ஆபிரிக்காக் கண்டத்தில் பல்வேறு பழங்குடிகள் (tribes) இன்னமும் உயிர்ப்புடன் இருந்துகொண்டிருக்கின்றன. அதை அதன் மானிடவியல்தன்மையுடன் விளங்காதவரை நமக்கு அவர்களின் மரபுகள்/பண்பாடுகள் என்பவை ஆச்சரியத்தையும், திகைப்பையும் தரக்கூடியவையாக இருக்கும். சினுவா ஆச்சுபேயின் நாவல்களை, முக்கியமாய்  Things Fall Apart, No Longer At Ease போன்றவற்றை வாசித்திருப்பவர்க்கு ஆபிரிக்கக் குழுமங்களை எப்படி விளங்குவதென்ற ஒரு வரைபடம் கிடைக்கக்கூடும். எனினும் தமிழ்ச்சூழலில்  இலத்தீன் அமெரிக்கக் கலாசாரம் அறியப்பட்டவளவுக்கு, இன்னும் ஆபிரிக்கப் பழங்குடி இனங்களின் பண்பாட்டு வரைவியல்கள் விரிவாகப் பேசப்படவில்லை. அந்தவகையில் ஆசி.கந்தராஜாவின் இந்தக் கதைகள்- ஒருவகையில் நேரடிச்சாட்சியாக இருப்பதாலும்- வாசிக்கும் நமக்குச் சுவாரசியமாகத் தெரிகின்றன.

'புகலிடம்' என்கின்ற கதை, அகதிகளாக உலகெங்கும் பரவிய நம்மைப்போன்றவர்க்கு மிக அணுக்கமாக உணரக்கூடிய கதையாகும். கதை லெபனானில் நிகழ்கின்றது. சிரிய உள்நாட்டு யுத்தத்தினாலும் பெற்றோரை இழந்து அகதிகளான சகோதரர்கள் இருவர் ரோஸாப்பூக்களை விற்பதால், அவர்களோடு நெருக்கமாகப் பழகும் சந்தர்ப்பம் இந்தக் கதையில் வரும் கதைசொல்லிக்கு கிடைக்கின்றது. இவ்வாறு ரோஸாப்பூக்களை ஐரோப்பாவின் தெருக்களில் விற்கும் ஈழத்தமிழர்களைப் பற்றி  வி.என்.நைபால் தனது 'Magic Seeds' நாவலில்  எழுதியதும் நினைவுக்கு வருகின்றது. அலி என்கின்ற சிரியாவிலிருந்து அகதியாகிய பதின்மவயதினன், தனது பத்து வயதுத் தங்கையோடு லெபனானின் பெய்ரூட் தெருக்களில் அலைந்துதிரிகின்றான். இவ்வளவு சிறுவனாக இருந்தாலும் அலிக்கு சிரிய உள்நாட்டுப் பிரச்சினை குறித்து தெளிவான புரிதல்கள் இருக்கின்றன. அதைக் கதைசொல்லிக்குப் பகிரும் அலி தனது தந்தையார் ஒரு பாடசாலையில் அதிபராக இருந்தபோது கொல்லப்பட்டார் என்கின்றான். பின்னர் தாயாரோடு ஒரு அகதிமுகாமில் இருந்தபோது,  தங்கள் தலையில் துப்பாக்கி அழுத்தப்பட தாயும் தங்களின் முன்நிலையில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகிச் சுட்டுக்கொல்லப்பட்டார் என்கின்றான். எந்தக் குழந்தையாலும் தாங்கமுடியாத, பார்க்கவே கூடாத  சம்பவங்களை அனுபவித்த  அலியும், அவனது சகோதரியும் பெரும் மன அழுத்ததோடும் துயரத்தோடும் வாழ்வதை கதைசொல்லி புரிந்துகொள்கின்றார்.

ஒருநாள் அகதிகளாக அலையும் அவர்களுக்கு லெபனானிலும் நிம்மதியில்லாது போகின்றது. சிறுமியான சகோதரி மீது தெருவில் போகும் ஒருவன் பாலியல் அத்துமீறல் செய்கின்றான். தங்கையைக் காப்பாற்றுவதற்காக கொலை செய்கின்ற நிலைக்குப் போகின்றான் அலி. இனி பொலிஸ் வந்து அலியைக் கைதுசெய்து அலியின் வாழ்வு சிதையப்போகின்றது என்று நினைக்கும் தருணத்தில் ஒரு முஸ்லிம் பெரியவர் வந்து அந்தக் குழந்தைகளை கூட்டத்திலிருந்து பிரித்தெடுத்து எங்கேயாவது தப்பிப்பிழையுங்கள் என தப்பவைப்பதோடு கதை முடிகின்றது.

அகதிகளுக்கு அவர்கள் சொந்தமண்ணில் இருந்த விரட்டப்பட்ட துயரத்தோடு, அவர்கள் அடைக்கலம் புகுந்த நாடுகளிலும் ஒரு எளிதான வாழ்வு அமையாததையும் இந்தக்கதையினூடு நாம் புரிந்துகொள்ளலாம். இலங்கையிலிருந்து போர்க்காலங்களில் 'தொப்பூள்கொடி உறவு' எனக் காலம் காலம் சொல்லப்படுகின்ற இந்தியாவுக்கு படகுகளில் போய் அங்கே கவனிக்கப்படாத மானிடர்களாய் அகதிமுகாங்களில் முடக்கப்பட்ட ஏதிலித்தமிழர்களின் வரலாறும் நம்முன்னே நிகழ்ந்துகொண்டிருப்பதை அசையாய்ச் சாட்சிகளாய்ப் பார்த்துக் கொண்டிருப்பவர்களும் நாமல்லவா?


தேபோன்று இலங்கையில் இன்னும் துயரமான வாழ்வைக் கொண்டிருக்கும் இந்திய வம்சாளியினரின் கதையை 'யாவரும் கேளிர்' கூறுகின்றது. எத்தனையோ தலைமுறைகளுக்கு முன் இலங்கை சென்ற பரம்பரையைச் சேர்ந்த முத்துசாமியின் வாழ்க்கை 1983ம் ஜூலைக் கலவரத்தின்போது திசைமாறுகின்றது. ஏற்கனவே தொழில்சங்க நடவடிக்கைகளால் சிங்களவரின் வெறுப்பைச் சம்பாதித்த முத்துச்சாமியை, கலவரத்தை முன்வைத்து அவரின் வீட்டைக் கொளுத்துவதுடன், முத்துசாமியின் தங்கையையும் காடையர் குழு பாலியல் வன்புணர்ந்து செய்து கொலைசெய்கின்றது. அந்தத் துயரத்தோடு நாடுவிட்டு மீண்டும் தமிழகம் திரும்பும் முத்துச்சாமியும் அவரின் தாயும் ஏற்காட்டுத் தேயிலைத் தோட்டத்திற்குள் அடைக்கலம் புகுகின்றனர்.

அங்கேயும் 'சாதி தெரியாத சிலோன்காரர்' என ஏற்காடு தேயிலைத்தோட்டங்களைச் சொந்தமாக வைத்திருக்கும் ஆதிக்க சாதிகளால் முத்துச்சாமியைப் போன்றவர்கள் விலத்தி வைக்கப்பட்டுப் பலிவாங்கப்படுகின்றனர். இலங்கையிலும் நிம்மதியாக இருக்கமுடியாது இந்தியாவிற்கு வந்தும், இயல்பான வாழ்க்கை வாழமுடியாத பலரின் வாழ்க்கை இந்தக் கதையினூடு காட்டப்படுகின்றது. எப்போதும் விளிம்புநிலையாகவே வைக்கப்பட்டிருக்கும் மலையகத்தமிழரை நமது எந்த அரசியல் கட்சிகள் மட்டுமின்றி இலக்கியம் சார்ந்தும்  புறமொதுக்கும் நிலையே இன்னும் இருக்கின்றதென்பதையும் நாமனைவரும் நன்கு அறிவோம்.
 
2.jpg

'காதல் ஒருவன்' கதை, ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்தாலும் அதனூடு ஈரானின் கலாசாரம் பற்றிய ஒரு குறுக்குவெட்டுப் பரப்பு நமக்கு காட்சிப்படுத்தப்படுகின்றது. தனது மனைவி தனக்குத் 'துரோகம்' செய்துவிட்டாள் என்பதற்காக வாழ்க்கை இழக்கும் ஒரு தம்பதியினர் கதை. தனிமனிதருக்கான சுதந்திரம் பல்வேறு புலம்பெயர்ந்த நாடுகளில் -இலங்கைத்தமிழர் உட்பட- பல இனங்களுக்கு இருந்தாலும்,  ஏதோ ஒருவகையில் சமூகத்தளைகளிலிருந்து அவர்களில் பலரால் வெளிவரமுடியாமல் சிக்கல்படுவதையே, இந்த ஈரானியத் தம்பதிகள் நமக்கு வெளிப்படுத்துகின்றனர். காலம் அதன்பாட்டில் நகர்ந்தாலும், வாழ்வின் மீது நம்பிக்கை இழக்காது தனது முதல் இரண்டு பிள்ளைகளை தனது விவாகரத்துப் பெற்ற கணவனுக்கு - முஸ்லிம் முறைப்படி- விட்டுக்கொடுக்கவேண்டி வந்தாலும், மூன்றாவது பிள்ளையைத் தன்சொந்தக் காலில் நின்று வளர்த்து பல்கலைக்கழகத்திற்கு அனுப்பும் றொற்நொக் என்னும் பெண்ணின் உறுதி நம்மை அதிசயக்க வைக்கின்றது.

புலம்பெயர்ந்த வாழ்வென்பென்பதை பல ஆண்கள் தாம் 'இழந்து வந்த சொர்க்கமென' நனவிடைதோய்ந்து கவலையுறும்போது, பெரும்பாலான பெண்கள் அதை வசந்தி ராஜா தனது கவிதையொன்றில் கூறியதுமாதிரி 'தங்கத்தாம்பாளத்தில் வைத்துத் தரப்பட்ட சுதந்திரம்' எனக்கொண்டாடுவதையும் நாம் நினைவில் கொள்ளலாம். அந்தக் கவிதையிற்குப் பொருத்தமான ஒரு கதையாக 'காதல் ஒருவனை'க் கொள்ளலாம்.

'அந்நியமாதல்' கதை பங்களாதேஷில் நிகழ்கின்ற கதை. எப்படி இன்னமும் முதலாளிகள் என்ற மமதை கொண்டு, தம் சக பணியாளரை அடக்குவதையும், அதேவேளை வெள்ளை நிறத்தைக் கண்டு மண்டியிட்டு அடிபணியும் இன்னமும் போகாத 'காலனித்துவ மனோபாவத்தை'யும் இந்தக் கதையில் வரும் யூசூப் என்கின்ற அப்பாவி மனிதனின் பாத்திரத்தினூடு நமக்கு விவரித்துக் காட்டப்படுகின்றது.

பலர் பல்வேறு நாடுகளுக்கு தொழில் நிமித்தமோ அல்லது புதிய நாடுகளைத் தரிசிக்கவேண்டுமென்கின்ற அளப்பரிய காதலினாலோ போய்க்கொண்டிருப்பார்கள். எனினும் மிகச்சிலரே அந்த அனுபவங்களைச் சேகரமாக்கி புனைவாக்கும் பொறுமையும், திறமையும் கொண்டிருப்பவர்கள். அந்தவகையில் ஆசி.கந்தராஜாவின்  இந்தத்தொகுப்பிலுள்ள கதைகள் பல மிகச்சிறப்பாகவே இருக்கின்றன. நம்மில் பலருக்கு பிற மனிதர்களை/அவர்களின் கலாசாரங்களை புரிந்துகொள்வதில் மிகுந்த சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால் ஆசி.கந்தராஜா,வெவ்வேறு நாட்டுப் பின்புலங்களில் வரும் கதாபாத்திரங்களை எழுதும்போது, அவர்களின் பண்பாட்டுப் பின்புலங்களில் வைத்து அப்பாத்திரங்களை விளங்கிக்கொள்ளவே விரும்புகின்றார்.

சமகாலத்திற்கோ அல்லது நமது விழுமியங்களுக்கோ உடன்படாத விடயங்கள் நடக்கின்றபோதும், தனக்கான தனிப்பட்ட தீர்ப்புக்களை அளிக்கவோ, வாசகர்களை ஒற்றைத்தன்மையில் விளங்கிக்கொள்ளும் புள்ளிகளையோ தராது, அவரவர் அவரவர்க்கு விரும்பியமாதிரி புரிந்துகொள்வதற்கான வெளிகளை கந்தராஜா தனது கதைகளில் தருவதைக் குறிப்பிட்டாக வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் தொகுப்பு என்றாலும், அண்மையில் வந்தவற்றில் தவிர்க்காது வாசிக்கவேண்டிய ஒரு தொகுப்பென இதைத் தயக்கமின்றிக் கூறலாம்.

---------------------------------------------
(நன்றி: 'காலம்' சஞ்சிகை, 2018)

 

http://djthamilan.blogspot.com/2018/12/blog-post_93.html?m=1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
    • 2013ம் ஆண்டு ல‌ண்ட‌ன் நாட்டு ஊட‌க‌மான‌ ச‌ண‌ல்4 த‌ப்பி பால‌ச்ச‌ந்திர‌னின் ப‌ட‌த்தை வெளியிட‌ அதை பார்த்த‌ லைய‌லோ க‌ல்லுரி மாண‌வ‌ர்க‌ள் போராட‌ அந்த‌ போராட்ட‌த்தை ஜெய‌ல‌லிதா காவ‌ல்துரைய‌ வைத்து குழ‌ப்பி அடிச்சா............ஆனால் அந்த‌ போராட்ட‌ம் அடுத்த‌ நாளே தமிழ‌க‌ம் எங்கும் தீயாய் ப‌ர‌விய‌து............இப்ப‌டியே போனால் த‌ன‌து க‌ட்சிக்கு ஆவ‌த்து வ‌ரும் என்று தெரிந்து தான் ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் அறிக்கை விட்டவ‌ர் நாங்க‌ள் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று....... அதே கூட்ட‌னில‌ இருந்த‌ திருமாள‌வ‌னும் ஊட‌க‌ம் மூல‌ம் சொன்னார் விசிக்காவும் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று...............இது தான் உண்மை ச‌ம்ப‌வ‌ம்..................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.