Jump to content

நீக்கமற்ற நினைவுகளில்......!


Recommended Posts

நீக்கமற்ற நினைவுகளில்......!
____________________________

பதின்மூன்று வயதில்
காதலித்தாய்.

பதின்மக்காதல் உன்
வாழ்வை பலிகொண்ட துயரை
நானறியேன்.
ஆனால் உனக்காக அழுதிருக்கிறேன்.

நீயே ஒரு குழந்தை - உன்
வயிற்றில் குழந்தை வந்த போது
ஒளித்துத் திரிந்தாய்.

பிறகு நீ பெரிய மனிசிபோல
என்னைத்தாண்டிப் போன தருணங்களில் உன்னோடான உறவு துண்டிக்கப்பட்டது.

உன் காதல் உன்னைவிட்டு
வேறோரு காதலில்
உன்னை வஞ்சித்த போது
நீ தனித்துப் போனாய்.

காலம் எழுதிய கதையில்
நீ நான் மறந்தே போனது.
அவரவர் வாழ்வு அவசரம்
யாரும் யாரையும் தேடவில்லை.

உனது ஞாபகமும் அரிதாய்
நீ நினைவுகளிலிருந்து
மெல்லத் தேய்ந்து
மறைந்தே போனாய்.

25வருடங்கள் கழித்து
என்னைத் தேடிக்கொண்டிருப்பதாய்
உறவொன்றின் சந்திப்பில்
சொல்லியனுப்பியிருக்கிறாய்.

கண்ணீரோடு என்னை
நினைவு கூர்ந்து
கதை(ன)க்கச் சொல்லியிருக்கிறாய்.

உன்னை அடிக்கடி நான்
நினைத்துக் கொள்ளவில்லைத் தான்.
ஆனாலும் பக்கத்திலிருந்து
நீ சொன்ன சினிமாக் கதைகளும்
நடிகர்களின் பெயர்களும் முகங்களும்
இன்னும் உன் நினைவில் தான்
திரையில் வருகிறார்கள்.

சினிமாவை எனக்கு முதலில்
அறிமுகப்படுத்தியவள் நீ.
சின்னத் தொலைக்காட்சிக்குள்
வலம் வந்தவர்களை உயிரூட்டிய
கதைசொல்லி நீ.

காலம் ஞாபகங்களை
மறை(ற)க்க நினைத்தாலும்
பொய்யற்ற நேசிப்புகளால்
காலம் கடந்தும்
நினைவுகள் நீக்கமற்று வாழும்
சாட்சி நீயும் நானும்.

28. 10. 2016
நேசக்கரம் சாந்தி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.