Jump to content

பக்கவாதம் ஏன் வருகிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பக்கவாதம் ஏன் வருகிறது

கேள்வி- பக்கவாதம் ஏற்படக் காரணம் என்ன?
எஸ்- மூர்த்தி தெல்லிப்பளை

பக்கவாதம் ஏற்படுவது எமது மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு குருதி செல்லாமல் தடைப்படுவதால் ஆகும். குருதி செல்லாவிட்டால் முளையின் அந்தப் பகுதியில் உள்ள கலங்கள் இறக்க நேரிடும். கலங்கள் இறந்தால் முளையின் அந்தப் பகுதி எதைஎதையெல்லாம் இயங்க வைக்கிறதோ அவை செயலற்றுவிடும்.

6stroke-iStock20360282lr.jpg

உதாரணமாக உடலின் வலது பக்கத்தை இயங்க வைக்கும் கலங்கள் இறந்தால் பாதிக்கப்பட்டவரின் வலது பக்க கைகால்கள் இயங்காது. மாறாக பேச்சுத் திறனுக்கான பகுதிக்கான இரத்த ஓட்டம் தடைப்படால் பேச முடியாமல் போய்விடும்.

 எங்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதுடன் முளையின் எவ்வளவு இடம் பாதிக்கப்படுகிறது என்பதும் முக்கியமாகும்.

மிகச் சிறிய இடம் மட்டும் பாதிப்புற்றிருந்தால் கை கால் இயக்கமின்மை தற்காலிமாக இருந்து குணமாகிவிடலாம்.

மாறாக பாதிப்புற்றது பெரிய பகுதியானால் ஒரு பக்கம் இயங்காமலே போய்விடலாம்.

அதே போல பேச்சுக்காக பகுதியானால், பாதிக்கப்பட்ட முளையின் அளவுக்கு ஏற்ப அவ்வாறே சில நாட்களில் திரும்பக் கூடும் அல்லது முழுமையாக பாதிப்படையவும் கூடும்.

மூளையின் கலங்களுக்கு குருதி கிடைக்காமல் விடுவது இருவகை காரணங்களாலாகும்.

முதலாவதும் அதிகமானதும் குருதிக் குழாய்கள் (நாடிகள்) கொழுப்பினால் அடைபடுவதாலாகும்.

இரத்தத்தில் கொலஸ்டரோலின் அளவு அதிகரிக்கும் போது அவை நாடிகளின் உட்புறத்தில் படிகின்னறன. தொடர்ந்து படியும் போது நாடிகளின் உட்புற அளவு குறைந்து குறைந்து வந்து இறுதியில் அடைத்துவிடும். அல்லது அவ்விடத்தில் இரத்தம் உறைந்து குருதி பாய்வதைத் தடுத்துவிடும்.

மூளையில் அவ்வாறு நடக்கும்போது பக்கவாதம் வருகிறது. இருதயத்தில் அவ்வாறு அடைத்தால் மாரடைப்பு வரும் என்பதையும் இங்கு சுட்டிக் காட்டலாம். இந்த வகை பக்கவாதமே மிக அதிகமானதாகும். 10 பேருக்கு பக்கவாதம் வந்தால் அதில் 8 பேருக்கு இவ்வாறு நாள அiடைப்பினாலேயே ஏற்படுகிறது.

இரண்டாவது வகையில் சிறிய இரத்தக் குழாய் வெடித்து இரத்தம் வெளியேறுவதால் மூளையின் அந்தப் பகுதிக்கான குருதி ஓட்டம் தடைப்படுகிறது. இது மிகவும் ஆபத்தானது. ஆனால் இந்த வகை பக்கவாதம் குறைவானது. 10 பேருக்கு பக்கவாதம் வந்தால் அதில் 8 பேருக்கு மட்டுமே இவ்வாறு குருதிக் கசிவினால் ஏற்படுகிறது.

எவருக்குமே பக்கவாதம் வரலாம் எனினும் சில வகை நோயாளிகளுக்கு அதற்கான சாத்தியம் அதிகம்.

மிக முக்கியமானது பிரஸர் என்று அழைக்கப்படும் உயர் இரத்த அழுத்தமாகும். பிரஸர் நோயுள்ள சிலர் 'எனக்கு தலையிடி தலைச்சுத்து ஒண்டும் இல்லைதானே' என்று சொல்லி மருந்து சாப்பிடுவதை கைவிட்டுவிடுகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. மருந்தைத் தொடர் ந்து சாப்பிட வேண்டும். ஒருவரின் பிரஸரின் அளவுக்கு ஏற்ப மருத்துவர் மருந்தின் அளவைத் தீர்மானிப்பார்.

அடுத்த முக்கிய காரணம் புகைத்தல் ஆகும். புகைத்தல் மட்டுமின்றி புகையிலை வெற்றிலை சப்புதலும் அவ்வாறே. புகையிலையில் உள்ள நிக்கரின் போன்ற இரசாயனங்கள் குருதிக் குழாய்களை சுருங்கச் செய்வதுடன் கழுத்தின் ஊடாக மூளைக்கு செல்லும் நாடிகளில் கொழுப்பு படிவுகளை ஏற்படுத்துவதாலும் பக்கவாதம் வருகிறது.

இதைத் தவிர,
நீரிழிவு நோய்,
இரத்தத்தில் அதிகரித்த கொலஸ்டரோல் பிரச்சனை,
அதீத மது பாவனை,
எண்ணெய் கொழுப்பு, உப்பு ஆகியவற்றை அதிகம் உட்கொள்ளும் தவறான உணவு முறை,
போதிய உடலுழைப்பு அல்லது உடற்பயிற்சி அற்ற வாழ்க்கை முறை,
அதீத எடை
ஆகியவையும் பக்கவாதம் வருவதற்குரிய ஏனைய காரணங்களாகும்.

இளவயதை விட வயது முதிரும்போதும் பக்கவாதம் வரக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். அத்துடன் ஏற்கனவே ஒரு முறை பக்கவாதம் சிறிய அளவிலேனும் வந்து குணமாகியவர்களுக்கு மீண்டும் வரக் கூடிய சாத்தியம் அதிகம்.

எனவே எண்ணெய் உப்பு கொழுப்பு இனிப்பு போன்றவற்றைக் குறைத்து, அதிகளவு காய்கற்களையும் பழவகைகளையும் மீன் ஆகியவற்றை உண்ணும் ஆரோக்கியமான உணவு முறையைக் கடைப்பிடிப்பதுடன் தினசரி உடற்பயிற்சி செய்து அளவான உடம்புடன் ஆரோக்கியமாக வாழ்ந்தால் பக்கவாதம் மட்டுமல்ல ஏனைய பல நோய்களிலிருந்தும் எம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.

எதிரொலி பத்திரிகையின் சொல்லுங்கோ டொக்டர் கேள்வி பதில் பகுதியில் வெளியானது

 

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்

 

http://hainallama.blogspot.com/2018/10/blog-post.html?m=1

Link to comment
Share on other sites

பக்கவாதம் தடுப்பது எப்படி?

 
 
 


 

 

அக்டோபர் 29 - உலக பக்கவாத விழிப்புணர்வு நாள்

முதுமை என்பது நமக்கெல்லாம் ஒரு பருவம். இக்காலகட்டத்தில் முதுமையின் விளைவாக பல நோய்கள் நம்மிடம் எட்டிப் பார்க்கும். அவற்றில் முதன்மையானது மாரடைப்பு. இந்த நோயினால் உடனே மரணமும் வரலாம் அல்லது சரியான நேரத்தில் சரியான சிகிச்சை பெற்று பல ஆண்டுகள் நலமாகவும் வாழ முடியும். 
24.jpg
ஆனால், பக்கவாதம் வந்தவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே முழுவதுமாக குணம் கிடைக்கும். பலரையும் இது படுக்கையில் போட்டுவிடும். இவர்களுக்கு கை, கால் செயல் இழந்து விடுவதால் மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கும். அதனால், இந்த நோயைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகவே தெரிந்துகொள்வது நல்லது.

எது பக்கவாதம்? 

மூளையின் ஒரு பக்கத்தில் ரத்த ஓட்டம் குறைந்து, அந்தப் பகுதி செயல்படாமல் போகும்போது, உடலின் எதிர்பாகத்தில் ஒரு கை, ஒரு கால் மற்றும் முகத்தில் ஒரு பகுதி செயலற்றுப் போவதைப் ‘பக்கவாதம்’  (Stroke)  என்று சொல்கிறோம். வலது, இடது என்று மூளையை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். உடலின் வலது பக்கச் செயல்பாட்டை இடது பக்க மூளை கட்டுப்படுத்துகிறது.

 இடது பக்கச் செயல்பாட்டை வலது பக்க மூளை கண்காணிக்கிறது. ஆகவே, மூளையின் வலது பக்கம் செயல்படவில்லை என்றால், உடலில் இடது பக்கம் செயல்படாது. மூளையின் இடது பக்கம் செயல்படவில்லை என்றால், உடலில் வலது பக்கம் செயல்படாது. பொதுவாக, வலது பக்கம் பக்கவாதம் வருமானால் பேச்சு பாதிக்கும். காரணம், பேச்சுக்குத் தேவையான சமிக்ஞைகள் மூளையின் இடது பக்கத்திலிருந்து வருவதுதான்.

எப்படி வருகிறது?

பெருமூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குப் பெருமூளை நடுத்தமனிக் குழாய்   (Middle Cerebral Artery)   ரத்தத்தை விநியோகிக்கிறது. இதில் ரத்தம் உறைந்து அடைத்துக் கொள்ளும்போது அல்லது ரத்தக்கசிவு ஏற்படும்போது, அந்தப் பகுதிக்கு ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதனால் அங்குள்ள மூளை செல்கள் செயலிழந்துவிட, அந்தப் பகுதியின் கட்டுப்பாட்டில் இருக்கும் உடல் உறுப்புகள் ஓட்டுநர் இல்லாத பேருந்து போல செயலற்றுப்போகும். 

முக்கியமாக, உடலின் ஒரு பக்கத்தில் கை, கால் மற்றும் முகத்தில் பாதிப்பகுதி செயலிழந்துவிடும். ஆகவேதான், இந்த நோய்க்குப் ‘பக்கவாதம்’ என்று பெயர் வந்தது. இதையே ‘ஹெமிபிலிஜியா’ (Hemiplegia) என்ற மருத்துவ மொழியில் அழைக்கிறார்கள்.

காரணங்கள்50 வயதைத் தாண்டியவர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம். அதாவது, இந்த வயதுக்கு மேல் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை பக்கவாதம் வருகிற வாய்ப்பு 2 மடங்கு 
அதிகரிக்கிறது. குடும்பத்தில் பெற்றோருக்கு அல்லது அவர்களின் சந்ததியினருக்கு பக்கவாதம் வந்திருந்தால், அவர்கள் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, அதிக ரத்தக் கொழுப்பு, மாரடைப்பு, இதயவால்வு கோளாறுகள், இதயச் செயலிழப்பு, இதயத்துடிப்புக் கோளாறுகள் போன்றவை பக்கவாதம் வருவதற்கு அடித்தளம் அமைக்கின்ற முக்கிய நோய்கள். 

புகைப்பிடித்தல், அடுத்தவர் விடும் புகையைச் சுவாசித்தல், மது அருந்துதல், பருமன், உடல் உழைப்பு குறைந்த வாழ்க்கைமுறை ஆகியவை பக்கவாதம் வருவதைத் தூண்டுகின்றன. தலைக்காயம், மூளையில் ஏற்படும் தொற்று போன்றவற்றாலும் பக்கவாதம் வரலாம். முன் அறிவிப்புகள் பக்கவாதம் பெரும்பாலும் திடீரென்றுதான் வருகிறது. 

பக்கவாத நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்து வரும்போது, ‘அஞ்சு நிமிஷம் முன்னாடி வரைக்கும் நல்லாத்தான் சார் இருந்தார். பாத்ரூமுக்குப் போய்ட்டு திரும்பும்போது மயங்கி விழுந்தாரு. அப்புறம் பார்த்தா ஒரு கை வரலே, ஒரு கால் வரலே, வாய் கோணிப்போச்சு, மூச்சு மட்டும் வருது’ என்றுதான் சொல்வார்கள். 

ஆனால், நோயாளியானவர் நன்றாக யோசித்துப் பார்த்தாரென்றால், முழுமையான பக்கவாதம் வருவதற்கு முன், அவருக்கு முன்னறிவிப்பு செய்வதைப்போல சில அறிகுறிகள் அவ்வப்போது தோன்றி மறைந்திருக்கும். அந்த அறிகுறிகள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொண்டால் பக்கவாதத்தைத் தடுக்க உதவும். இதோ அந்த அலார அறிகுறிகள்...

1.வாய் கோணுதல்

முகத்தில் அல்லது உடலில் ஒரு பக்கத்தில் மரத்துப்போதல், பலவீனம் அடைதல், தளர்ச்சி அடைதல் அல்லது ஒரு பக்கமாக இழுப்பது போன்ற உணர்வு, உடல் செயலிழத்தல்.

2.வார்த்தைகள் குழறுதல்

பேசும்போது திடீரென வார்த்தைகள் குழறுதல்... மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்வதில் பிரச்னை... எளிய வாக்கியங்களைக்கூட வெளிப்படுத்த முடியாத நிலைமை...

3.கால் தடுமாற்றம்

நடக்கும்போது தள்ளாடுதல்... நேராக நிற்க முடியாத நிலைமை, ஒரு காலில் மட்டும் உணர்ச்சி குறைந்திருப்பது...

4.இதர அறிகுறிகள்

*பேசிக்கொண்டிருக்கும்போது சட்டென்று சில நொடிகள் பேச்சு நின்றுபோகும்.

*பார்வை திடீரென்று குறைந்து உடனே தெளிவாகும். இரட்டைப் பார்வை ஏற்படும்.

*நடந்து செல்லும்போது தலைசுற்றும்.

*உணவை வாய்க்குக் கொண்டுசெல்லும்போது கை தடுமாறும்.

*கையெழுத்துப் போடும்போது கை விரல்கள் திடீரென ஒத்துழைக்காது.

*வழக்கத்துக்கு மாறான தலைவலி, வாந்தி.

பொன்னான நேரம்! பக்கவாத நோயின் அறிகுறிகள் வெளியில் தெரிந்த 2 அல்லது 3 மணி நேரத்துக்குள் தக்க சிகிச்சை அளிக்காவிட்டால் உடலின் ஒரு பகுதி முழுவதுமாக 
செயலிழந்துவிடும். ஆகவே, காலம் தாழ்த்தாமல் சிகிச்சை பெறுகிறவர்களுக்கு பாதிப்பு குறையும். 

என்னென்ன பரிசோதனைகள்?

பக்கவாதம் வந்தவுடனே ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்படும். ரத்தச் சர்க்கரை, ரத்தக் கொழுப்பு உள்ளிட்ட வழக்கமான ரத்தப் பரிசோதனைகள் செய்யப்படும். அவற்றுடன் ஈசிஜி, மூளைக்கான எக்ஸ்ரே, டாப்ளர் பரிசோதனை, சி.டி. ஸ்கேன்/எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஆகிய பரிசோதனைகளைச் செய்வார்கள். 

இவற்றில் மிகவும் முக்கியமான பரிசோதனை மூளை ஸ்கேன். அது சி.டி. ஸ்கேனாகவோ, எம்.ஆர்.ஐ. ஸ்கேனாகவோ இருக்கலாம். இதன் மூலம் ஒருவருக்கு மூளையில் ரத்தக் குழாய் அடைத்து ரத்த ஓட்டம் குறைந்திருக்கிறதா அல்லது ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறதா என்று உறுதியாகக் கூறமுடியும்.  

என்னென்ன சிகிச்சைகள்?

ரத்தச் சர்க்கரையையும்  ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துவது, நோயாளிக்கு மூளையில் ஏற்பட்டுள்ள ரத்தக்குழாய் அடைப்பை சரிசெய்வது, ரத்த உறைவுக்கட்டியைக் கரைப்பது, ரத்தக்கசிவை நிறுத்துவது, ரத்தக் கொழுப்பைக் கரைப்பது, இதயம் பழுதுபடாமல் பாதுகாப்பது, சுவாசம் சீராக நடைபெற உதவுவது போன்றவை முதல் கட்டத்தில் செய்யப்படுகின்ற சிகிச்சை முறைகள். சிலருக்கு மூளையில் ரத்தக்குழாய் உடைந்து ரத்தக்கசிவு பெருவாரியாக இருக்கும். அப்போது அவர்களுக்கு மூளையில் அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டியிருக்கும்.

இவற்றைத் தொடர்ந்து ‘பிசியோதெரபிஸ்ட்‘ (Physiotherapist)  மூலம் நோயாளியின் செயலிழந்துபோன கை, கால்களுக்குப் பயிற்சிகள் தந்து அவரை நடக்க வைப்பது சிகிச்சையின் அடுத்தகட்டம். நோயாளிகள் நம்பிக்கையுடன் இந்தப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மருத்துவமனையில் நோயாளி இருக்கிறவரை அவரை கவனிப்பது மட்டுமின்றி, வீட்டுக்கு வந்தபிறகும் இந்தப் பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தசைப்பயிற்சிகள் மிக முக்கியம்!

பக்கவாதத்தைப் பொறுத்தவரை இதற்கான அடிப்படைக் காரணத்தை ஒரு சில நாட்களில் சரிப்படுத்திவிடலாம். ஆனால், செயலிழந்துபோன காலையோ கையையோ மறுபடியும் பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்கு தசைப்பயற்சிகள்தான் உதவும். அதிலும் இந்தப் பயிற்சிகளை எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரம் ஆரம்பிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு சீக்கிரம் சரியாகும். இல்லையென்றால், கை, கால் தசைகள் இறுகிவிடும். பிறகு அந்தத் தசைகளைப் பழையநிலைக்குக் கொண்டுவருவது சிரமம். 

இந்த மாதிரி அலட்சியமாக விடப்பட்டவர்கள் படுத்த படுக்கையாகி விடுவார்கள். குளிப்பது, உடை உடுத்துவது, உணவு உண்பது, பாத்ரூம் போவது போன்ற அன்றாட தேவைகளுக்குக்கூட மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயநிலைக்குத் தள்ளப்படுவார்கள். இதனால் மனச்சோர்வு வந்து சரியாகச் சாப்பிடமாட்டார்கள். படுத்தபடுக்கையில் கிடப்பார்கள். அப்போது ‘பெட் சோர்’ என்ற படுக்கைப் புண் வந்துவிடும். இதனால் வேறு பிரச்னைகள் தலைதூக்கும். உயிருக்கே ஆபத்து வரலாம்.

ஆரம்பத்திலேயே உடற்பயிற்சிகளைச் செய்துகொள்கிறவர்கள் ஓரளவு பழையநிலைக்குத் திரும்பிவிடுவார்கள். சிலரால் கைத்தடி, வாக்கர் கொண்டு நடக்கமுடியும். வீட்டில் உள்ளவர்கள், உறவினர்கள், நண்பர்கள் போன்றோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய தேவைகளை அவர்களே செய்துகொள்ள ஊக்குவிக்க வேண்டும். பக்கவாதம் சரியாகி பழையநிலைக்கு வந்துவிட முடியும் என்ற நம்பிக்கையை ஊட்ட வேண்டும்.

தடுப்பதுதான் எப்படி? 

இக்கொடிய நோயை வரவிடாமல் தடுப்பதே புத்திசாலித்தனம். அதற்கு என்ன செய்யலாம்?

ரத்த அழுத்தம் சரியாக இருக்கட்டும்! 

முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் மாதம் ஒருமுறை தங்கள் ரத்த அழுத்தத்தை சோதித்துக் கொள்ள வேண்டும். இந்த அளவு அதிகமாக இருந்தால், அதைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளைத் தொடர்ந்து முறைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்.

 ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க வேண்டுமென்றால், உணவுமுறையும் முக்கியம். ரத்த அழுத்த நோய்க்கு முதல் எதிரி சமையல் உப்பு (சோடியம் குளோரைடு). நாளொன்றுக்கு 3லிருந்து 5 கிராம் வரை உப்பு போதுமானது. இதற்கு மேல் உப்பு உடலுக்குள் போனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். இதைத் தவிர்க்க ஊறுகாய், 

கருவாடு, அப்பளம். வடகம், சிப்ஸ், பாப்கார்ன், முந்திரிப்பருப்பு, புளித்த மோர் போன்றவற்றை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். இறைச்சி, முட்டையின் மஞ்சள்கரு, தயிர், நெய், வெண்ணெய், பாலாடை, ஐஸ்கிரீம், சாஸ் மற்றும் சாக்லெட் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. காரமும் புளிப்பும் மிகுந்த உணவுகள், சோடா உப்பில் தயாரிக்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றை ஒதுக்க வேண்டும். 

எண்ணெயில் பொரித்த, வறுத்த, ஊறிய உணவுகள் வேண்டவே வேண்டாம். தேங்காய் எண்ணெயும் பாமாயிலும் ஆகவே ஆகாது. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றைக்கூட மிகக் குறைந்த அளவில்தான் உபயோகிக்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவுகளை விரும்பிச் சாப்பிடுங்கள்.

கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற முழு தானியங்கள்... கொய்யா, தர்ப்பூசணி, மாதுளை போன்ற பழங்கள்... பீன்ஸ், பட்டாணி போன்ற பயறுகள்... புதினா, கொத்தமல்லி போன்ற பச்சை இலைகள்... காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகம். 

ரத்தக்கொழுப்பு கவனம்! 

ரத்தத்தில் கொழுப்பு மிகுந்தால், அது ரத்தக்குழாய்களை அடைத்து பிரச்னை பண்ணும். ஆகவே, கொழுப்பைக் கட்டுப்படுத்த வேண்டியது அடுத்த கட்ட நடவடிக்கை. ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, பால், முட்டை, தயிர், நெய், வெண்ணெய், வனஸ்பதி, பாலாடை, பால்கோவா, பாமாயில், தேங்காய், முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு ஆகிய உணவுகளை ஓரங்கட்டுங்கள்.

பீட்சா, பர்கர் போன்ற விரைவு உணவுகள்... கேக், பப்ஸ், ஐஸ்கிரீம், பாதாம்கீர், சாக்லெட் போன்ற பேக்கரி பண்டங்கள்... பூந்தி, லட்டு, ஜிலேபி, அல்வா போன்ற இனிப்பகப் பண்டங்கள்... மிக்ஸர், முறுக்கு, வேர்க்கடலை, அப்பளம், வடை, பஜ்ஜி, போண்டா, பூரி, சிப்ஸ், சமோசா, வடகம் போன்ற நொறுக்குத் தீனிகள்... டின்களில் பதப்படுத்தப்பட்ட அசைவ உணவுகள் ஆகியவற்றை முடிந்தவரை தவிர்க்கவும்.

நீரிழிவைக் கட்டுக்குள் வைத்திருங்கள் பக்கவாதம் வருவதற்கு நீரிழிவு (சர்க்கரை நோய்) ஒரு முக்கியக் காரணம் . முக்கியமாக, டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு இதன் பாதிப்பு அதிகம். மற்றவர்களோடு ஒப்பிடும்போது சர்க்கரை நோயுள்ள ஆண்களுக்குப் பக்கவாதம் வருவதற்கு 5 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோயுள்ள பெண்களுக்குப் பக்கவாதம் வருவதற்கு 12 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆகவே, சரியான மாத்திரைகள் மற்றும் இன்சுலின் ஊசி மூலம் ரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிக மிக முக்கியம்.

எடையைப் பராமரியுங்கள்

சமச்சீரான உணவு சாப்பிடுதல், குறிப்பாக சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உணவு சாப்பிடுதல், எண்ணெய் வகைகளைக் குறைத்துக்கொள்ளுதல், உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்தல் போன்றவற்றின் மூலம் உங்கள் உயரத்துக்கு ஏற்ப எடையைப் பராமரியுங்கள்.

புகைப்பழக்கம் வேண்டாமே!

புகைப்பிடிக்கும் பழக்கம் பக்கவாதத்துக்கான வாய்ப்பை இரட்டிப்பாக்குகிறது. புகையிலையில் இருக்கும் நிகோடின் ரத்தக்குழாய்களைத் தாக்குகிறது. அவற்றை உள்ளளவில் சுருங்க வைக்கிறது. ரத்தக்கொழுப்பு படிவதற்கு வழி அமைக்கிறது. எனவே, புகைப் பிடித்தலுக்கு உடனே ‘நோ’ சொல்லுங்கள்.

மது அருந்தாதீர்கள்!

மது அளவுக்கு மீறினால் கல்லீரலில் கொழுப்பு சேரவும், ரத்தக்குழாய்களில் கொழுப்பு படியவும் ஊக்குவிக்கிறது. இதனால் மது குடிப்போருக்கு சீக்கிரத்தில் பக்கவாதம் வந்துவிடுகிறது. எனவே, மதுவைக் குடிக்காதீர்கள். என்ன உடற்பயிற்சி செய்யலாம்?

பக்கவாதத்தைத் தடுப்பதில் உடற்பயிற்சிகளின் பங்கும் நிறைய உண்டு.  உங்களுக்கு வசதிப்பட்ட ஒரு பயிற்சியை மேற்கொள்ளலாம். எந்தப் பயிற்சியை எவ்வளவு நேரம் செய்யலாம் என்பதை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

*சுலப நடை - தினமும் 45 நிமிடங்கள். 
*வேக நடை - மணிக்கு 8 கி.மீ. வேகம். தினமும் 40 நிமிடங்கள்.
*மெல்லோட்டம் - மணிக்கு 3 கி.மீ. வேகம். தினமும் 30 நிமிடங்கள்.
*ஓடுதல் - மணிக்கு 3.5 கி.மீ. வேகம்.தினமும் 15 நிமிடங்கள்.
*டென்னிஸ் - தினமும் 35 நிமிடங்கள்.
*நீச்சல் - தினமும் 40 நிமிடங்கள். 
*சைக்கிள் ஓட்டுதல் - மணிக்கு 8 கி.மீ. வேகம். தினமும் 40 நிமிடங்கள்.

மன அமைதி முக்கியம்!

தவறாமல் செய்யும் தியானம், யோகா  இரண்டும் மன உளைச்சலையும் மனப்பதற்றத்தையும் தவிர்ப்பதால், இவர்களுக்கு ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும். இதுபோல் சர்க்கரை நோயும் கட்டுப்படும். இதய நோய் வருவதற்கு யோசிக்கும். பக்கவாதம் ஏற்படுவது தடுக்கப்படும்.தொடர் மருத்துவப் பரிசோதனை வயது காரணமாகவோ, பரம்பரை ரீதியாகவோ, சர்க்கரை நோய், இதய நோய், பருமன், ரத்தக் கொழுப்பு அதிகம் போன்ற காரணத்தாலோ பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு உள்ளவர்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறை உடலை மாஸ்டர் செக்கப் செய்துகொள்ளுங்கள். கடைசியாக ஒன்று... 

உங்களுக்கு இருக்கிற உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய், ரத்தக் கொழுப்பு போன்றவற்றுக்கு டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுங்கள். இவற்றை இடையில் நிறுத்திக்கொள்வதோ, விட்டுவிட்டுச் சாப்பிடுவதோ, நீங்களாக அளவைக் குறைத்துக்கொள்வதோ கூடாது. இப்படிச் செய்வது ஆபத்தை நீங்களே வரவழைத்துக்கொள்ள வாய்ப்பாகிவிடும். எனவே, சிகிச்சையில் அலட்சியம் வேண்டாம். பக்கவாதத் தடுப்புக்குத் தொடர் சிகிச்சை அவசியம்.

குடும்பத்தில் பெற்றோருக்கு அல்லது சந்ததியினருக்கு பக்கவாதம் வந்திருந்தால், அவர்கள் குடும்பத்தில் யாருக்கு வேண்டுமானாலும் இது வரலாம்.

பெண்கள் கவனம்!

இந்த நோய் ஆண்களுக்குத்தான் அதிகம் என்று முன்பு சொன்னார்கள். இப்போதோ பெண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். பொதுவாக மாதவிலக்கு நிற்கும் காலம் வரை ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு தாராளமாக இருக்கும். இது இவர்களுக்குப் பக்கவாதம் வராமல் தடுத்துக்கொள்ளும். ஆனால், மாதவிலக்கு நின்றபிறகு, பெருவாரியான பெண்களை பக்கவாதம் தாக்குகிறது. ஆகவே, எச்சரிக்கை தேவை!
 
டாக்டர் கு.கணேசன்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.