Jump to content

மாவீரர் நாள் கவிதைகள்!!!


Recommended Posts

மாவீரர் நாள் கவிதைகள்!!! (புதுவை இரத்தினதுரை)

மாரிமழை பொழியும். மண்கசியும்
ஊர்முழுதும்
வாரியடித்து வெள்ளம் வான்பாயும்
கார்த்திகையில்
பூமி சிலிர்த்துப்போய் பேறடையும்.
துயிலுமில்லச் சாமிகளுக்கான
சந்தனநாள் வந்தடையும்.
மாவீரச்செல்வங்கள்
மண்கிழித்து வெளிவந்து
சாவீரச்செய்தி சாற்றி
உறவுரைத்து பேசும் நாள்.
விழியில் பொலபொலன்று
நீர்த்தாரை வீசும் நாள்.
தமிழீழம் விடியும் என நம்பி
பாடும் நாள்.
விதைத்த பயிர்கள்
நிமிர்ந்தழகாய் கூடும் நாள்.
தமிழர் குலம் குதிக்கும் நாளிதுதான்.
குன்றிக் குரல் நடுங்கி குற்றேவல் செய்த இனம்
இன்றிந்த நிமிர்வுக்கு இட்ட முதல் விதைப்பு.
சாவைக்கொடுத்தேனும் தமிழ்வாழ்வு
என நிமிர்ந்து பேசும்படியான‌
புதுவாழ்வின் புலர்வுதினம்.
புனிதர்களின் துயிலுமில்லம்
விழிசொரியும் உறவுகளால் விளங்கும்.
உள்ளுறங்கும் பிள்ளைகளின்
வாய்கள் பேசுவது காதுவிழும்.
பள்ளிகொள்வோர் எம்மைப்
பார்ப்பதையும் விழியுணரும்.
நாமழுதால் சிரிக்குமொலி
நாற்திசையும் எதிரொலிக்கும்.
தாயழுதால் அம்மா தளராதே எனுமொற்றைச்
சொல்லே துயிலுமில்லச் சூழலிலே கேட்டிருக்கும்.
பூச்சொரிந்து,
நெய்விளக்கில் பொறியேற்றி,
விழிசொரிந்து,
கார்த்திகையில் அந்நாள் கலங்கி,
வெளியில்வர‌
பூத்திருக்கும் நம்பிக்கைப் பூ...!!!

 
LikeShow more reactions
Link to comment
Share on other sites

விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை
ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை - போராட்டத்தில் பங்கேற்று புரட்சிப் பாக்களை எழுதி இளைஞர்களை எழுச்சிகொள்ள செய்தவர்.

    “இழந்து போனவனுக்கு வாழ்க்கை துயரம்
    எழுந்து நடப்பவனுக்கு எல்லாமே மதுரம்”
    “துயரம் அழுவதற்காக அல்ல... எழுவதற்காக"

    - இத்தகைய மகத்தான சொற்களை கவிதையாக எழுதியவர் அவர்…

    ”அட மானுடனே!
    தாயகத்தைக் காதலிக்கக் கற்றுக்கொள்
    பெற்ற தாய் சுமந்தது பத்து மாதம்
    நிலம் சுமப்பதோ நீண்ட காலம்.
    அன்னை மடியில் இருந்து கீழிறங்கி
    அடுத்த அடியை நீ வைத்தது
    தாயகத்தின் நெஞ்சில்தானே.
    இறுதியில் புதைந்தோ
    அல்லது எரிந்தோ எருவாவதும்
    தாய்நிலத்தின் மடியில்தானே.
    நிலமிழந்து போனால் பலமிழந்து போகும்
    பலமிழந்து போனால் இனம் அழிந்து போகும்
    ஆதலால் மானுடனே!
    தாய்நிலத்தைக் காதலிக்கக் கற்றுக் கொள்”

வாழ்க்கையின் மீதான அதி உன்னதமான நம்பிக்கைகளையும், அழகியலையும் தரும் இத்தகைய உக்கிரமான கவிதைகளை எழுதிய கவிஞர் புதுவை இரத்தினதுரை, தனது பதினான்காவது வயதில் கவிதை எழுத தொடங்கி, முப்பத்தேழாவது வயதில் (1935) விடுதலைப் பாதையில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டவர், ஒரு சிற்பக் கலைஞரும் கூட.

“எமது மக்களுடைய நுகத்தடிகளை உடைத்தெறிவதில் நானும் போராட வேண்டும் என்று நினைத்தேனே தவிர, தொடர்ந்தும் கவிதை எழுதிக் கொண்டிருப்பேன் என்ற நினைப்பில் நான் வரவில்லை. ஆனால், அமைப்புக்கு வருவதற்கு முன்பே எனது துறை கலையாக இருந்தபடியால், அமைப்புக்குள் நுழைந்த பின்பும் இயக்கத்தில் கலைப் பண்பாட்டுத் துறையை கவனிக்க வேண்டியதே எனக்கிடப்பட்ட பணி ஆகியது. இந்தப்பணியை நான் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்” என உறுதியுடன் கூறிவந்த புதுவை இரத்தினதுரை, ”ஈழத்தில் மட்டுமல்ல மானுடம் எங்கு வதைபடுகிறதோ, அங்கெல்லாம் அவர்களுடைய மொழியில் எனது கவிதை பேசும்” என்கிறார்.

கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதைகளை படித்தும், கவிதைப் பாடல்களை கேட்டும் பலநூறு இளைஞர்களும், இளைஞிகளும் விடுதலைப் படையினில் வந்து சேர்ந்து “மண் மீட்புக்காக” களமாடிக் கொண்டிருப்பதை சென்னையில் என் அண்டை வீட்டில் வாழும் ஈழத் தமிழ் நண்பர் யொனி, சொல்ல கேட்கும் பொழுது - கவிஞரின் “கவிதாயுதம்” இருப்பதிலேயே உயர் கருவியாக மதிக்கப்பட்டு - மெய் சிலிர்க்க வைக்கிறது.

ஈழமண்ணில் தோன்றிய மிகச்சிறந்த ஆய்வாளர்களும் ஒருவரான பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள், புதுவை இரத்தினதுரை கவிதைகள் பற்றி குறிப்பிடும்பொழுது,

    “...இந்த மண் எங்களின் சொந்த மண் இதன்
    எல்லைகள் மீறி யார் வந்தவன்.
    நிலைகள் தளர்ந்து தலைகள் குனிந்து
    நின்றது போதும் தமிழா - உந்தன்
    கலைகள் அழிந்து கவலை மிகுந்து
    கண்டது போதும் தமிழா இன்னும்
    உயிரை நினைத்து உடலை சுமந்து
    ஓடவா போகிறாய் தமிழா...”

என நெருப்பாக தொடங்கி நீளும் ஒரு பாட புதுவை இரத்தினதுரை எழுதியுள்ளார். அந்த பாடல் வரிகள் எத்தகைய தாக்கத்தை மக்கள் மனத்தில் ஏற்படுத்தியது என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்கிறேன் - ஈழத்திலுள்ள திருநல்வேலி சந்தியில் 1993இல் ஒரு நாள் அதிகாலை 4 மணியளவில் ஒருவர் தேநீர் குடித்துவிட்டு, சுருட்டு பற்ற வைத்துக்கொண்டு குளிருக்காக தலையையும் காதையும் மறைத்து தான் போட்டிருந்த போர்வையுடன் மிதிவண்டியில் ஏறிய நேரத்தில் இந்தப் பாடலும், “வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்” பாடலும் ஒலிபரப்பாக மிதிவண்டியில் அப்படியே நின்றபடி கேட்டுவிட்டு சென்றார். புதுவை இரத்தினதுரையின் புரட்சிக் கருத்துக்களையும் நெகிழ்ச்சியான அனுபவங்கலையும் பாடலில் கேட்டு, உறைந்துபோன அந்த ஈழத் தமிழனின் செயலை கண்டு மனம் நெகிழ்ந்தேன்” என்று பூரிப்போடு கா.சிவதம்பி எழுதியுள்ளார்.

விரும்பி இடம்பெயர்வது வேறு - விரும்பாமல் வன்முறை செய்து இடம்பெற வைப்பதென்பது வேறு. புலம் பெயர வைப்பவன் - இறுதியில் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் அவனை மன்னிக்கவே கூடாது என மனம் பதற வைக்கிறது புதுவை இரத்தினதுரையின் சில படைப்புகள்.

    “ஊர் பிரிந்தோம்
    ஏதும் எடுக்கவில்லை
    அகப்பட்ட கொஞ்சம் அரிசி,
    பருப்பு, இரண்டு பாய், இருமல் மருந்து,
    மனைவியின் மாற்றுடுப்பு மூன்று,
    காற்றுப் போய்க்கிடந்த மிதிவண்டி,
    காணியுறுதி,
    அடையாள அட்டை அவ்வளவே,
    புறப்பட்டு விட்டோம்.
    இப்போ உணருகிறேன்
    உலகில் தாளாத துயரெது?
    ஊரிழந்து போதல் தான்.”

இந்த நிலை - அரை நூற்றாண்டாக... ஈழமண்ணில் தொடர்கிறது. இது நாளையும் தொடரும் என்கிற போது... சொல்லி புலம்ப சொற்களில்லை. இயலாமையால் மனம் மௌனமாகிறது.

    “தம்பி பெஞ்சாதியின் தமையன் வீட்டில்
    இரவில் பாய்விரிக்க எங்கு இடமிருந்தாலும்
    அங்கு உடல் சரிப்பு.
    வீட்டுக்காரரின் தூக்கம் கலையுமென
    இருமலைக் கூட உள்ளே புதைப்பு
    களவுக்கு வந்தவன் போல மனைவியுடன் கதைப்பு
    கிணற்று வாளி தட்டுப்பட்டாலே படபடப்பு
    ஒண்டுக்கிருத்தல்,
    குண்டி கழுவுதல்
    ஒவ்வொன்றையும் பயந்தபடி ஒப்பேற்றல்.”

இப்படி காலம் காலமாக சிதைந்தும் - மனம் சிதையாமல் இருப்பதெப்படி?. நம்பிக்கை. உண்மையின் மேல் ஈழத் தமிழர்கள் வைத்திருக்கும் பெரு நம்பிக்கை. இந்த நூற்றாண்டிற்கு மட்டுமல்ல - இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தமிழனின் விடுதலைப் போராட்டத்திற்கான இந்த “எரிசக்தி” கையிருப்பாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

    “இன்று நடை தளர்ந்தும்
    நரை விழுந்தும் தள்ளாடும்
    ஐம்பது ஆண்டுகளுக்கு முந்திய இளைஞர்களே!
    வெள்ளைத் தோல் சீமான்கள்
    வீடு திரும்ப மூட்டை கட்டியபோது
    நீங்கள் ஏன் ஊமையானீர்கள்?”

என்று ஒரு ஞாயமான வினாவை தனது கவிதை மூலம் புதுவை இரத்தினதுரை எழுப்புகிறார். செய்யவேண்டிய வேலையை, செய்ய வேண்டிய நேரத்தில் செய்து விட்டால் தலைமுறைகள் ஏன் தத்தளித்தாடுகிறது என்று கேட்ட கவிஞர், இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கும் சுருக்கென சூடு வைக்க தயங்கவில்லை,

    “உடல்கீறி விதை போட்டால்
    உரமின்றி மரமாகும்
    கடல் மீது
    வலை போட்டால்
    கரையெங்கும் மீனாகும்.
    இவளின் சேலையைப் பற்றி
    இந்தா ஒருவன்
    தெருவில் இழுக்கின்றான்
    பார்த்துவிட்டுப்
    படுத்துறங்குபவனே!
    நீட்டிப்படு.
    உனக்கும் நெருப்பூட்டிக் கொளுத்த
    அவனுக்கு வசதியாக இருக்கட்டும்.
    ‘ரோஷ’ நரம்பை
    யாருக்கு விற்று விட்டுப்
    பேசாமற் கிடக்கின்றாய்?”

இத்தகைய அற்புத படைப்பின் மூலம் - ஈழத் தமிழ்மக்களை போராட்ட களத்திற்கு செல்ல வழியமைத்தவர் புதுவை இரத்தினதுரை.

    “......சும்மா காற்றில் பற்றியா இந்தத் தீ மூண்டது?
    இந்த அனல் பிடித்தெரிய எத்தனை காலம் பிடித்தது.
    எத்தனை பேரைத் தீய்த்து
    இந்த தீ வளர்த்தோம்.
    எத்தனை பேரை நெய்யாக வார்த்தோம்
    அணைய விடக்கூடாது
    ஊதிக்கொண்டேயிரு.
    பற்றியெரியப் போகுதெனப் பதறுவர்
    ஊதுவதை நிறுத்தி விடாதே
    இந்தத் தீயின் சுவாலையிற்தான்
    மண் தின்னிகள் மரணிக்கும்.”

http://uthayakumarthamizhan.blogspot.com/2013/04/blog-post_9368.html

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

யாரோ ஒருவருடைய பிள்ளை

அழிந்த வெளியில் ஒலிக்கும் மயானப் பாடல்கள்
அரண்களைக் கரைத்துக் கொண்டிருக்கிறது
சிதைமேட்டில் அழிக்க முடியாத
உயிரும் முகமும் வளர்ந்து கொண்டிருக்கிறது
உடைத்தெறியப்படுவதும்
சிதைத்து புதைக்கப்படுவதும்
யாரோ ஒருவருடைய பிள்ளையை.

நொருக்கப்பட்ட கல்லறைகளை என்ன செய்ய முடியும்?
எதிலும் நிரப்ப முடியாத
எலும்புத்துகள்களை அவர்கள் தங்கள்
உணவுக்கோப்பைகளில் நிரப்ப இயலுமா?
அவற்றை தின்று தீர்த்து பசியாறி ஆடலாமா?
பெற்றவர்கள் யாரோ எல்லாம்
இருதயத்திற்குள் அடித்தழுது
புலம்பும்பொழுது கண்ணீர் சிதைகளை நனைக்கின்றன.

யாரோ ஒருவருடைய பிள்ளை
ஏதோ ஒன்றுக்காக வெடிபட்டு வீழ்ந்திருக்கிறது
நெருங்க முடியாத எருக்கலைக்காட்டில்
உள் நுழைந்து சாம்பிராணிகளை யாரே கொளுத்தியிருக்கிறார்கள்
புகை எழும்புகிறது
விளக்குகள் எரிகின்றன
எருக்கலை வேர்களைச் சுற்றி
யாரோ கூடியிருந்து பேசுகிறார்கள்.

முன்பொரு காலத்தில் இந்தச் சனங்கள் பிள்ளைகளை
பெற்று ஏதோ ஒன்றுக்காக அனுப்பியிருக்கிறார்கள்
எல்லாவற்றுக்காகவும் உதைத்து இடிக்கப்படும்
ஒவ்வொரு கல்லறையிலும்
நீள உறங்கிக் கொண்டிருந்த
யாரோ ஒருவருடைய பிள்ளை உறக்கமற்றலைகிறது.

தீபச்செல்வன்
@2011

Link to comment
Share on other sites

/இறந்த பின்னர் என்னை எரிக்கக்கூடாது.
ஏன் தெரியுமா?
என் தாயகம்
எரிகாயங்களுக்கு உள்ளாகக் கூடாது.
என்னைப் புதைப்பதையே விரும்புகின்றேன்.
புதைக்கும் போதும் புற்களின் வேரறுந்து போகாமல்
குழிவெட்டுங்கள்.
உப்புப் போட்டு புதையாதீர்
நிலம் உவராகிவிடும்
மண்போட்டு மூடினால் போதும்.
மழை பெய்ததும்
வேர்கள் துளிர்த்துக்கொள்ளும்...........//

வரிகள் - புதுவை இரத்தினதுரை

Image may contain: one or more people and outdoor
 
 
 

நஞ்சுண்ட வீரம்

46506399_10156536537243801_5378289907842

ஓரினத்தை அழிக்கும் யுத்தத்தில்
சுற்றி வளைக்கப்பட்ட களமொன்றின் ஈற்றில் 
நஞ்சை ஆயுதமாக்க
உயிரை வேலியாகினர் போராளிகள்

வெற்றியடைந்த எண்ணற்ற சமர்களின் கதைகளை
அலங்கரிக்கும் கனவு வீரர்களின்
கருணையான முகத்தை
அன்புறைந்த வார்த்தைகளை
சனங்களுக்காய் களமாடும் வீரத்தை
கடக்க முடியா நஞ்சு

தன்னலமற்று நஞ்சருந்திய போராளிகளின் 
கனவுகளால் பச்சை நிறமானது நிலம்.

பொறிக்குள் எல்லா வகையான
தந்திரங்களையும் முறியடிக்க 
நெடுநேரம் போராடினர்
சூழ்ச்சியால் அபாயமாக்கப்பட்ட 
நஞ்சு வலயத்தில் 
காற்றுக்குத் தவித்தனர் குழந்தைகள்

மரணத்தின் நிழல் வீசியது எங்கும்

பறவைகள் முட்களுக்குள் மாட்டுண்டதுபோல்
குழந்தைகள் கிடங்குகளில் விழுந்தது போல்
குட்டிமான்கள் பொறிக்குள் சிக்குண்டதுபோல்
நஞ்சுப் பொறியில் அகப்பட்டது நிலம் 

உயிர்கள் எரிய 
காடு துடித்தது.

கனவு நிரம்பிய விழிகளோடிருந்த குழந்தைகளுக்கு 
நஞ்சை பருக்கையில்
அதை தாமருந்தினர் போராளிகள்

கனவு மிகுந்த புன்னகையில்
இலட்சியம் நிறைந்த பார்வையில்
விடுதலையின் பேராவாவில்
வளர்த்தெடுக்கப்பட்ட வீரத்தில்
சூழ்ச்சியால் வீசப்பட்ட நஞ்சு 
நனைத்தது உடலை மாத்திரமே
0

தீபச்செல்வன்

(2010 Edited 2018)

https://goo.gl/TVabYm

Link to comment
Share on other sites

செங்காந்தள் பூக்கள்

 
%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE


நினைவு பூத்திருக்கும் கற்களை 
வேர்களுடன் அகழ்ந்து உடைக்கையில்
ஆடியது நம் நிலம்
நிலம் எரிக்கப்பட்டு 
கல்லறைகள் உடைக்கப்பட்டன
மறுக்கப்பட்ட இருப்பிற்காய்
போராடி மாண்டவர்களுக்கு
உறங்க இடம் மறுக்கப்பட்டிருக்கிறது
நிலத்தில் பெரும் பூதம்
நுழைந்து வேர்களைத் தின்றும்
கொல்ல முடியாத மரங்கள் 
மீண்டும் தழைக்கின்றன
வீடுகளின் மூலைகளிலும்
தெருக்களின் சந்துகளிலும் 
நகரங்களுக்கு மேலாயும் 
கிராமங்களிலும் ஒளி ஊற்றெடுக்கிறது
வெளிச்சம் அணைக்கப்பட்ட
நிலத்தில் விளக்குகள் எரிகின்றன
உயிர்மரங்கள் தறிக்கப்படுகையில்
துடித்தன தாய்மார்களின் வயிறுகள்
காலம் சூழன்று கொண்டேயிருக்கிறது
அழிக்கப்பட்ட நிலத்தில்
செங்காந்தள் பூக்கள் பூத்திருக்கின்றன.

http://deebam.blogspot.com/2011/11/blog-post_22.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.