Jump to content

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கிறது அரசியலமைப்பு வரைவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கிறது அரசியலமைப்பு வரைவு

- பி.கே.பாலச்சந்திரன்

இலங்கை பாராளுமன்றத்தில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் நிபுணர் குழுவின் அறிக்கை சகல வல்லமையும் பொருந்திய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்து அதற்குப் பதிலாக பலம்பொருந்திய பிரதமரையும் சம்பிரதாயபூர்வமான ஜனாதிபதியையும் கொண்ட வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்ற ஆட்சிமுறையை விதந்துரைக்கிறது.

parliment1.jpg

அரசியலமைப்பு வரைவு என்று வர்ணிக்கப்படக்கூடிய இந்த அறிக்கையின் பிரகாரம்    ஜனாதிபதி மக்களினால் நேரடியாகத் தெரிவுசெய்யப்படமாட்டார். பதிலாக இரு சபைகளைக்கொண்ட சட்டவாக்கசபையினால் ( 233 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தினாலும் 55 உறுப்பினர்களைக் கொண்ட இரண்டாவது சபையினாலும்) தெரிவுசெய்யப்படுவார். இரு சபைகளையும் சேர்ந்த முழு உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்களே  ஜனாதிபதியைத்  தெரிவுசெய்வர்.

இது ஜனாதிபதியின் தார்மீக அதிகாரத்தில் பாரிய வேறுபாட்டை ஏற்படுத்துகிறது. தற்போது ஜனாதிபதி மிகப்பெரிய அதிகார உணர்வை அனுபவிக்கிறார். ஏனென்றால் இலங்கையின் முழு வாக்காளர்களினாலும் நேரடியாகத் தெரிவுசெய்யப்படுகின்ற இலங்கையின் அதியுயர் பதவிக்குரிய கதிரையில் அவர் அமர்ந்திருக்கிறார். மற்றவர்கள் சிறிய தொகுதிகளில் வாக்காளர்களினால் பாராளுமன்றத்துக்கு  தெரிவுசெய்யப்படுகிறார்கள்( பிரதமரை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளலாம்.) 

அதனால் ரேடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்ற ஜனாதிபதி தானே இலங்கையின் இறைமையினதும் சுயாதிபத்தியத்தினதும் முழுநிறைவான கருவூலம் என்று என்று சட்டப்படி  உரிமையைக் கோரமுடியும். மறைமுகமாகத் தெரிவுசெய்யப்படுகின்ற ஜனாதிபதியினால் அவ்வாறு உரிமைகோர முடியாது.

புதிய அரசியலமைப்பு வரைவின் கீழ்  பிரதமரையும் அமைச்சரவையையும் தெரிவுசெய்கின்ற தனது அதிகாரத்தை ஜனாதிபதி இழக்கிறார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைக்கொண்டிருப்பவர் என்று தான் கருதுகின்ற ஒருவரை அல்ல, பெரும்பான்மை ஆதரவை ஐயத்துக்கு இடமின்றி கொண்டிருப்பவரையே ஜனாதிபதி பிரதமராக நியமிக்கவேண்டும். பிரதமரின் ஆலோசனையின் பேரில் மாத்திரமே ஐனாதிபதி அமைச்சர்களை நியமிக்கவேண்டியிருக்கும். பிரதமரின் சம்மதம் இல்லாமல் அமைச்சுகளுக்கு திணைக்களங்களை ஒதுக்கீடு செய்கின்ற அதிகாரத்தையும் ஜனாதிபதி இழக்கிறார்.

இப்போது நடைமுறையில் இருப்பதைப் போலன்றி, ஜனாதிபதி அரசாங்கத்தின் தலைவராக இருக்கவோ அமைச்சுப் பொறுப்புக்களை தன்வசம் வைத்திருக்கவோ அல்லது அமைச்சரவைக்குத் தலைமைதாங்கவோ முடியாது. அவர் அரச தலைவராகவும் ஆயுதப்படைகளின் பிரதம தளபதியாகவும் மாத்திரமே இருப்பார். ஆனால், பிரதம தளபதி என்ற வகையில் ஜனாதிபதியின் ஒவ்வொரு நடவடிக்கையும் பிரதமரின் ஆலோசனைக்கு இணங்கவே முன்னெடுக்கப்படவேண்டும்.

தனது விருப்பப்படி பாராளுமன்றத்தைக் கலைக்கும் உரிமையையும் ஜனாதிபதி இழப்பார். பாராளுமன்றத்தை அதன் ஐந்து வருட பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாக கலைப்பதாக இருந்தால், அதன் முழு உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினரின் ஆதரவுடன் சபையில் நிறைவேற்றப்படக்கூடிய பிரேரணை ஒன்றின் மூலமாக மாத்திரமே அவ்வாறு செய்யமுடியும்.

பிரதமரரையும் அமைச்சரவையையும் தனது விருப்பப்படி ஜனாதிபதி பதவி நீக்கமுடியாது. சபையில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றில் தோற்கடிக்கப்பட்டால் அல்லது முதல் இரு வருடங்களுக்குள் வருடாந்த பட்ஜெட்  மூன்றாவது தடவை தோற்கடிக்கப்பட்டால் அல்லது முதல் மூன்று வருடங்களுக்குள் வருடாந்த பட்ஜெட் இரண்டாவது தடவை தோற்கடிக்கப்பட்டால் மாத்திரமே பிரதமரும் அமைச்சர்களும் பதவியிழப்பர்.

மன்னிப்பு வழங்குவது தொடர்பாக கொண்டிருக்கும் தற்துணிபு அதிகாரத்தையும் ஜனாதிபதி இழப்பார். மன்னிப்பு வழங்கும் பொறுப்பு பிரதமரினாலும் நீதித்துறைக் குழுவொன்றினாலேயே செயற்படுத்தப்படும். இது தொடர்பிலான தீர்மானங்களுக்கு கைப்பொறிப்பு முத்திரை குத்தும் ஒருவராக மாத்திரமே ஜனாதிபதி இருப்பார்.

ஜனாதிபதி மனநலம் குன்றியவராக அல்லது உடல்ரீதியாக இயலாமைகொண்டவராக அடையாளம் காணப்பட்டால் பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை உள்ளடக்கிய குழுவினால் அவரை பதவி நீக்கமுடியும். பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்படக்கூடிய தீர்மானம் ஒன்றின் மூலமாகவும் ஜனாதிபதியை பதவி நீக்கமுடியும்.

தெரிவாகியதற்குப் பின்னர் ஜனாதிபதி எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கொண்டிருக்கக்கூடிய சகல தொடர்புகளையும் துண்டித்துவிட வேண்டும். கட்சி சார்பின்றி அல்லது பக்கச்சார்பின்றி  அவர் செயற்படவேண்டும். ஜனாதிபதி கட்சியொன்றின் தலைவராக இருக்க அனுமதிக்கின்ற தற்போதைய அரசியலமைப்பின் ஏற்பாடுகளில் இருந்து இது முக்கியமான ஒரு விலகலாகும்.

மாகாண சுயாட்சிக்கான கோரிக்கையைப் பொறுத்தவரை,  அரச நிலம் தொடர்பான அதிகாரங்களை மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண அரசாங்கங்களுக்கும் ( தேசிய காணி ஆணைக்குழுவின் விதிமுறைகளுக்கு இணங்க நிலப் பயன்பாடு நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்ற நிபந்தனையுடன்) அரசியலமைப்பு வரைவு கொடுக்கிறது. ஆனால், ஆணைக்குழுவின் கொள்கைகள் சகல மாகாணசபைகளுடனும் கலந்தாலோசனை செய்தே வகுக்கப்படவேண்டும்.

மாகாணங்கள் பிரதி பொலிஸ்மா அதிபர் தரத்திலான அதிகாரிகளின் தலைமையிலான சொந்த பொலிஸ்படையையும் கொண்டிருக்கும். தேசிய மட்டத்திலும் மாகாண மட்டங்களிலும் நியமனங்கள், இடமாற்றங்கள் மற்றும் பதவியுயர்வுகளை செய்வதற்கு தனித்தனியான தேசிய பொலிஸ் ஆணைக்குழுவும் மாகாண பொலிஸ் ஆணைக்குழுவும் இருக்கும்.

தேசிய சட்டவாக்க சபைக்கு இரண்டாவது சபையொன்றை அரசியலமைப்பு வரைவு அறிமுகம் செய்கிறது. கீழ்சபையான மக்கள் பிரதிநிதிகள் சபை ( பாராளுமன்றம்) 233 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். பதவிக்காலம் ஐந்து வருடங்களாக இருக்கும். இவர்களில் 140 பேர் தனியொரு உறப்பினருக்கான தொகுதிகளில் இருந்து தெரிவாவர். எஞ்சிய உறுப்பினர்கள் மாகாண அடிப்படையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் கீழ் தெரிவுசெய்யப்படுவர்.

இரண்டாவது சபை 55 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். இவர்கள் பாராளுமன்றத்தினாலும் மாகாண சபைகளினாலும் தெரிவுசெய்யப்படுவர். இந்த இரண்டாவது சபை பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்படுகின்ற சட்டமூலங்களை தடுக்கின்ற வகையிலான எந்தப்பணியையும் செய்யாமல் அவற்றை ஆராய்ந்துபார்த்து மேம்படுத்தல்களைச் செய்வதற்கான யோசனைகளைத் தெரிவிக்கும். சட்டமூலங்களை வரையும் செயற்பாடுகளைப் பொறுத்தவரை பாராளுமன்றம் இரண்டாவது சபையினால் தெரிவிக்கப்படக்கூடிய கருத்துக்களையும் பரசீலனைக்கு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையை ' ஏக்கிய ராஜ்ஜிய ' என்று சிங்களத்திலும் ' ஒருமித்த நாடு ' என்று தமிழிலும் ( இதன் அர்த்தம் ஐக்கியப்பட்ட நாடு) அரசியலமைப்பு வரைவு வர்ணிக்கிறது. ' ஒற்றையாட்சி ' அல்லது ' சமஷ்டி ' என்ற கோட்பாடுகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கடுமையான உணர்வுகள் இருப்பதை கருத்திற்கொண்டு அரசியலமைப்புக்கு நாமகரணஞ்சூட்டுவதற்கு அந்த இரு சொற்களில் எந்தவொன்றையும் பயன்படுத்துவதை நிபுணர்குழு தவிர்த்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. 

பௌத்த மதத்திற்கு தற்போதைய அரசியலமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள ' அதிமுதன்மை ' அந்தஸ்தை அவ்வாறே விட்டுவைத்திருக்கும் அதேவேளை, இந்த வரைவு  ஏனைய மதங்களை பின்பற்றி அனுஷ்டிப்பதற்கான சுதந்திரத்தையும் உத்தரவாதம் செய்திருக்கிறது. ஏனைய அரசியலமைப்புகளில் இருந்து ஒரு விலகலாக, வரைவு தனிநபர்களினதும் குடும்பங்களினதும் அந்தரங்கத்தை உத்தரவாப்படுத்துகிறது.

வரைவை சமர்ப்பித்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதை ஒரு ' வரைவு' மாத்திரமே என்று அழுத்தியுரைத்தார். 6 உப குழுக்களில் வெளிப்படுத்தப்பட்ட சகல கருத்துக்களினதும் சுருக்கத்தொகுப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். வரைவுகளையும் வெளிப்படுத்தப்பட்ட கருத்துகளையும் ஆழமாக ஆராய்ந்து பார்த்து அரசியலமைப்பின் ஒவ்வொரு அம்சம் தொடர்பிலும் கருத்தொருமிப்புக்கு வருமாறு உறுப்பினர்களிடம் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். 

இந்த அரசியலமைப்பு நீண்டதூரம் பயணிக்கவேண்டியிருக்கிறது. பாராளுமன்றத்தில் அது மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்படவேண்டும் என்பதுடன் சர்வஜன வாக்கெடுப்பொன்றில் மக்களின் அங்கீகாரத்தையும் பெறவேண்டும்.

( நியூஸ் இன் ஏசியா)

 

http://www.virakesari.lk/article/48094

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.