Jump to content

பிரபஞ்ச சக்தி முத்ரா பயிற்சி


Recommended Posts

பிரபஞ்ச சக்தி முத்ரா பயிற்சி

 

பிரபஞ்சம் முழுக்க பரவி நிறைந்து கிடக்கும் தூய்மையான சக்தியை, ஆற்றலை (Positive Energy) எவ்வாறு நமது உடல் உள்வாங்க முடியும் என்பதையும், அதற்கு முத்திரை பயிற்சிகள் எவ்வாறு பயன்தரும் என்பதையும் பார்க்கலாம்.

p44.jpg

உதாரணமாக, ஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் வாயிலாக குறைந்தது 500 முதல் 600 வரையிலான சேனல்களைப் பார்க்க முடிகிறது. டி.வி.யில் படம் தெரிவதற்கு ஒரு டிஷ் ஆன்டெனா (உணர் கொம்பு) தேவைப்படுகிறது. இந்த உணர் கொம்பானது செயற்கைக்கோள் வழியாக ஒலி, ஒளி அலைகளை உள்வாங்கி டி.வி.யில் சேனல்களாக வெளிப்படுத்துகிறது.
அதைப்போன்று மனிதனின் கைவிரல்கள் அனைத்தும் பஞ்சபூத தத்துவத்தை உள்ளடக்கியது. ஒரு டிஷ் ஆன்டெனா செயல்படுவதுபோல, நமது விரல்கள் செயல்பட்டு பிரபஞ்சத்தில் உள்ள எண்ணற்ற நல்ல சக்திகளை உள்வாங்கி உடல் உள்ளுறுப்புகள் நல்ல முறையில் செயல்பட உதவுகின்றன. முத்திரைகளை நாம் முறையாகப் பயிற்சி செய்யும் போது பல நோய்கள் குணமாவதைக் கண்கூடாக உணர முடியும்.
நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் மிகவும் அவசியமான, சில நோய்களைத் தடுக்கும் மற்றும் சில நோய்களைத் தீர்க்கும் எளிமையான முத்திரைகளைப் பழகுவோம். நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவோம். ஐந்து விரல்களில் பஞ்சபூத தத்துவத்தைப் பார்ப்போம்.
சுண்டு விரல் - நீரைக் குறிக்கிறது.
மோதிர விரல் - நிலத்தைக் குறிக்கிறது.
நடுவிரல் - ஆகாயத்தைக் குறிக்கிறது.
ஆள்காட்டி விரல் - காற்றைக் குறிக்கிறது.
கட்டை விரல் - நெருப்பைக் குறிக்கிறது.
இப்போது கட்டை விரலை மற்ற விரல்களின் முனைப்பகுதியுடனோ அல்லது அடிப்பகுதியுடனோ இணைக்கும்போது வளிமண்டலத்திலுள்ள உயிராற்றல் விரல்கள் வழியாக உறிஞ்சப்பட்டு சக்தி மையங்களுக்கு மேலும் சக்தியூட்டப்படுகிறது. இத்தகைய உணர்வினை முத்திரைப் பயிற்சி செய்யும்போது உணர முடியும்.
இப்போது சில எளிய முத்திரைகளைப் பற்றியும், அதன் பயன்களையும் பார்ப்போம். பின்வரும் முத்திரைகளை தினசரி பயிற்சி செய்வதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு தன்னம்பிக்கையும், மனோதைரியமும் அதிகரிக்கும்.
அதிகாலை நான்கு மணிக்கு பின்பு, ஆறு மணிக்கு முன்பாகச் செய்வது மிகுதியான பலனைக் கொடுக்கும். அதைப்போன்று காலை 11.30 மணிக்கு பிறகு, மதியம் 12 மணிக்கு முன்பும் செய்வது நலம். மாலை நான்கு மணிக்கு பிறகு, ஆறு மணிக்கு முன்பாகவும் பழகலாம். பயிற்சி செய்யலாம். 
உணவுக்கு முன் பழகுவது நலம். உணவருந்திய நான்கு மணி நேரம் கழித்து, ‘முத்ரா’ பயிற்சி பழகலாம். பக்கவிளைவுகள் இல்லாதது. கடுமையான நோய்களைக் கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் முத்ரா பயிற்சியினால் சாத்திய மாகும்.

p44a.jpg

யோகி சிவானந்தம், பரம்பரைச்சித்த வைத்தியக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ‘யோகா தெரபி’யில் எம்.எஸ்ஸி., பட்டம் பெற்றவர். மருந்தில்லா மருத்துவ முறையில் யோகப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி மற்றும் முத்திரைப் பயிற்சியின் மூலம் நோய்களை நீக்கும் யோக சிகிச்சையை 15 வருடங்களாக ஒரு தவம் போல் மேற்கொண்டு வருகிறார்.
‘ஆதி முத்திரை’

 

பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் என்று ஏதேனும் ஒரு தியான ஆசனத்தில் தரைவிரிப்பில் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ளவும். கைகளைப் படத்தில் உள்ளவாறு வைத்துக் கொள்ளவும். இப்போது கட்டை விரலின் நுனிப்பகுதி 
சுண்டு விரலின் மேல்பகுதியைத் தொட்டவாறு இருக்கட்டும். இரு கைகளிலும் இப்படிச் செய்து இரண்டு கைகளையும் மூடி வைத்துக்கொள்ள வேண்டும். கைகளை இறுக்கி மூட வேண்டாம். சாதாரணமாக மூடி வைத்துக் கொண்டு இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடம் வரை இந்த நிலையில் இருக்கலாம்.
பயன்கள் : 1. மன உறுதியை அளிக்கும் 2. பாதுகாப்பு உணர்வைத் தரும் 3. உள்ளுறுப்புகளின் செயல் மேம்படும்
4. தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
‘சின் முத்ரா’

 

பத்மாசனம், சுகாசனம் என்று ஏதேனும் ஆசனத்தில் கிழக்கு நோக்கி தரை விரிப்பில் அமர்ந்து கொள்ளவும். கண்கள் மூடி இருப்பது நலம். கட்டை விரல் ஆள்காட்டி விரலின் நுனியைத் தொட்டவாறு இருக்க வேண்டும். விரல்களை அழுத்தாமல் இருக்க வேண்டும்.
மனதினுள் ‘ஓம்... ஓம்...’ என்று உச்சரித்தவாறு இருப்பது மேலும் மிகுந்த பலனைத் தரும். இரு கைகளிலும் முத்திரை அமைத்துக்கொள்ள வேண்டும். குறைந்தது ஐந்து நிமிடம் இந்த நிலையில் இருக்கலாம் ‘ஓம்’ என்று உச்சரித்தவாறே.
பயன்கள் : 1. வளி மண்டலத்தில் உள்ள அண்ட ஆற்றலை உடல் உள்வாங்கும் 2. ரத்த ஓட்டம் சீராகும் 
3. இதயத் துடிப்பு இயல்பாக இருக்கும் 4. ரத்த அழுத்தம் வராது 5. ரத்த அழுத்தம் இருப்பின் படிப்படியாகக் குணம் அடையும்.
‘பிராண முத்ரா’

 

அமர்ந்த நிலை ஆசனம் ஏதேனும் ஒன்றில் தரை விரிப்பில் கிழக்கு நோக்கி அமர வேண்டும். சுவாசம் இயல்பாக இருக்கட்டும். கண்கள் மூடிய நிலையில் இருக்கட்டும். கட்டை விரலின் நுனிப் பகுதியை, சுண்டு விரல் மற்றும் மோதிர விரலின் நுனிப் பகுதியுடன் (படத்தில் உள்ளவாறு) இணைத்து வைத்துக் கொள்ளவும். ஆள்காட்டி விரலும், நடுவிரலும் நேராக நீட்டியவாறு இருக்கட்டும். 5 முதல் 10 நிமிடங்கள் வரை இந்நிலையில் இருக்கவும்.
பயன்கள்: 1. நரம்புத் தளர்ச்சி தடுக்கப்படும் 2. உடல் சோர்வு நீங்கும் 3. நினைவாற்றல் பெருகும் 4. மூளையின் செயல்திறன் மேம்படும் 5. மூட்டுவலிகள் குணமாகும் 6. பிராண சக்தி அதிகரிக்கும்.
‘மகா சிரசு முத்ரா’

 

தியான ஆசனம் ஏதேனும் ஒன்றில் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ளவும். கட்டை விரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் மூன்றின் நுனிப் பகுதியையும் ஒன்றாக இணைத்து வைத்துக் கொள்ளவும். மோதிர விரலின் நுனிப் பகுதி உள்ளங்கையைத் தொட்டவாறு இருக்க வேண்டும். சுண்டு விரல் நீட்டியபடி இருக்கட்டும். ஐந்து நிமிடம் முதல் பத்து நிமிடம் வரை இந்த நிலையில் இருக்கலாம்.
பயன்கள்: 1. தீராத தலைவலி குணமாகும் 2. தலை பாரம் சைனஸ் பிரச்னை நீங்கும் 3. மனஅமைதி ஏற்படும் 
4. ஜீரண உறுப்புகளின் செயல்பாடு தூண்டப்படும்.
‘இருதய முத்ரா’

 

தியான ஆசனத்தில் தரை விரிப்பில் கிழக்கு நோக்கி கண்களை மூடி அமர்ந்துகொள்ளவும். கட்டை விரல், மோதிர விரல், நடுவிரல் மூன்று விரல்களின் நுனிப் பகுதியும் தொடுமாறு இணைத்து வைத்துக் கொள்ளவும். கட்டை விரலின் அடிப்பகுதியில் உள்ள கோட்டை ஆள் காட்டி விரலை மடக்கி தொட்டவாறு வைத்துக் கொள்ளவும். சுண்டு விரல் நீட்டியவாறு இருக்கட்டும். ஐந்து முதல் பத்து நிமிடம் வரை இந்த நிலையில் இருக்க வேண்டும்.
பயன்கள்: 1. இதய நோய் வராமல் தடுக்கும் 2. நுரையீரலின் செயல்பாடு தூண்டப்படும் 3. கெட்ட கொழுப்பு இரத்தத்தில் படிவதைத் தடுக்கும் 4. மாரடைப்பு வராமல் தடுக்கும் 5. ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

http://hinduspritualarticles.blogspot.com/2018/03/blog-post_31.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.