Jump to content

வெனிசுவேலா: இன்னோர் அந்நியத் தலையீடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெனிசுவேலா: இன்னோர் அந்நியத் தலையீடு

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 பெப்ரவரி 14 வியாழக்கிழமை, மு.ப. 01:38

அயற்தலையீடுகள் ஆரோக்கியமானவையல்ல; அவை எந்த நியாயத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்டாலும், ஒரு நாட்டின் இறைமையைக் கேள்விக்குள்ளாக்கும் செயல்கள். ஆனால், உலகெங்கும் அயற்தலையீடுகள் நடந்தவண்ணமுள்ளன. அவை பல்வேறு முகாந்திரங்களின் கீழ் நடந்தேறுகின்றன. அவை வேறுபாடின்றிக் கண்டிக்கப்பட வேண்டியவை. 

எம்மத்தியில், அயற்தலையீடுகளைக் கூவி அழைப்போர் இருக்கிறார்கள். அதைத் தீர்வுக்கான வழியாகக் காண்போர், அது தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் ஆபத்தைக் காணத் தவறுகிறார்கள். அவர்கள், அந்த ஆபத்தை இனங்காணும் போது, காலம் கடந்திருக்கும். 

வெனிசுவேலாவில் இப்போது சதிப்புரட்சி ஒன்று மெதுமெதுவாக அரங்கேறுகிறது. வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவைப் பதவிவிலகுமாறு, அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் கோரியுள்ளன. இந்த நெருக்கடியின் பின்கதை மற்றும் முன்கதை என்பவற்றைச் சுருக்கமாகப் பார்த்துவிடலாம். 

உலகின் எண்ணெய் வளம் அதிகமாக உள்ள நாடுகளில் வெனிசுவேலாவுக்குத் தனியிடம் உண்டு. உலகில் கணக்கிடப்பட்டுள்ள எண்ணெய் வளங்களில் அதிகமான எண்ணெய் வளத்தைக் கொண்ட நாடு வெனிசுவேலா. 

மத்திய கிழக்கு நாடுகள் எல்லாம் பின்னால் வருபவை. 1918ஆம் ஆண்டு, எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டது முதல், இந்நாடு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. 1918 முதல் 1998 வரையான 80 ஆண்டுகளில், வெனிசுவேலாவின் எண்ணெய் ஏற்றுமதி, பன்மடங்கு அதிகரித்தது. ஆனால், 70சதவீதமான வெனிசுவேலர்கள், ஊட்டச்சத்து குறைபாட்டால்  அவதிப்பட்டார்கள். 55சதவீதமானவர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருந்தார்கள். அமெரிக்க நிறுவனங்கள், எதுவிதப் பிரச்சினையுமின்றி, மிகக்குறைந்த விலையில் எண்ணெய் பெற்றுக் கொண்டிருந்தன. 

1998இல் ஆட்சியைப் பிடித்த ஹூயுகோ சாவேஸ், எண்ணெய்க் கிணறுகளை அரசுடமையாக்கினார். அதன்மூலம் பெறப்பட்ட வருவாயை மக்களுக்கு அளித்தார். ஐந்து ஆண்டுகளில், வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்கள், 55 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகக் குறைந்தனர். 

அன்றுமுதல், வெனிசுவேலாவின் ஆட்சிமாற்றத்துக்காக அமெரிக்கா துடித்து வருகிறது. சாவேஸின் திடீர் மரணத்தைத் தொடர்ந்து, பதவியேற்ற நிக்கொலஸ் மதுரோ, தனது ஆட்சிக்காலத்தின் போது, பொருளாதாரச் சவால்களை எதிர்கொண்டார். 

image_a5764a4207.jpg

குறைவடைந்த சர்வதேச சந்தை விலைகள், வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் என்பன, வெனிசுவேலாப் பொருளாதாரத்தைப் பாதித்தன. இதன் விளைவால், தேர்தலில் நிக்கொலஸ் மதுரோ தோல்வியடைவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், கடந்தாண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில், மதுரோ 68 சதவீதமான வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். இது, தேர்தல்கள் மூலம் வெனிசுவேலாவில் ஆட்சிமாற்றம் சாத்தியமில்லை என்பதை உணர்த்தியது. 

இதன் பின்னணியில், கடந்த சில மாதங்களாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், அமெரிக்க சார்புத் தன்னார்வ நிறுவனங்களின் நிதியுதவின் கீழ் நடத்தப்பட்டன. இது, வெனிசுவேலாவின் அரசாங்கத்துக்கு எதிரான, மக்கள் கிளர்ச்சி என்று சொல்லப்பட்டது. ஊடகங்களும் அவ்வாறே எழுதின. ஆனால், ஜனாதிபதி மதுரோவைப் பதவியிலிருந்து அகற்ற முடியவில்லை. 

இந்நிலையில் கடந்த மாதம் 23ஆம் திகதி, வெனிசுவேலா நாடாளுமன்றின் தலைவர் குவான் குவைடோ, தன்னை ‘வெனிசுவேலாவின் இடைக்கால ஜனாதிபதி’ என்று அறிவித்துப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அவர், “கடந்தாண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல், முறையாக நடத்தப்படவில்லை. இதனால் சட்டத்தின் அடிப்படையில், நான் இடைக்கால ஜனாதிபதியாகப் பதவியேற்கிறேன்” என அறிவித்தார். 

ஆனால், வெனிசுவேலா அரசமைப்பின்படி ஜனாதிபதி இறந்து, பதவிவிலகினாலேயே அப்பதவி வெற்றிடமாகும். அவ்வாறு நடக்கும்போது அப்பதவிக்குத் தகுதியானவர் உபஜனாதிபதியாவார்.  

இந்த நகைச்சுவை நாடகம் அரங்கேறிய சில மணித்தியாலங்களில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வெனிசுவேலா ஜனாதிபதியாக குவான் குவைடோவை அங்கிகரிப்பதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, பல்வேறு மேற்குலக நாடுகளும் அவரை அங்கிகரித்தன. 

ஆனால், நாட்டின் சட்டபூர்வ ஜனாதிபதியாக மதுரோவே இருக்கிறார். அவருக்கு, இராணுவத்தின் முழுமையான ஆதரவு இருக்கிறது. இவ்வாறான ஒரு நெருக்கடியில் வெனிசுவேலா சிக்கவைக்கப்பட்டு உள்ளது. 

ஈராக்கில் தொடங்கி, லிபியாவில் தொடர்ந்து, சிரியாவில் தோல்விகண்ட அமெரிக்காவின் ஆட்சிமாற்றச் சூத்திரம், இப்போது வெனிசுவேலாவில் அரங்கேறுகிறது. ‘ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது’, ‘மனிதாபிமானத் தலையீடு’ என்பன இங்கும் பேசப்படுகின்றன. 

வெனிசுவேலாவின் எண்ணெய் மீது, அமெரிக்கா கண்வைத்துள்ளது. இதை இப்போதைய அமெரிக்க ஆட்சியாளர்கள் மறைக்கவில்லை. கடந்த மாதம், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன், தொலைக்காட்சி நேர்காணலில் “அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் உண்மையில் வெனிசுவேலாவில் உள்ள எண்ணெய் திறன்களில், முதலீடு செய்து உற்பத்தி செய்ய முடியுமானால், அது அமெரிக்காவின் பொருளாதாரத்துக்கு பெரிய வேறுபாட்டை ஏற்படுத்தும். அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியில், வெனிசுவேல எண்ணெய் மீதான செல்வாக்கு, மிகப்பெரிய பங்களிப்புச் செய்யும்” என்று தெரிவித்தார். 

image_8c0e0b8fb4.jpg

இதேவேளை, வெனிசுவேலாவின் மீது சீன, ரஷ்யச் செல்வாக்கு அதிகரித்துள்ளது. தன் கொல்லைப்புறத்தில் அதிகரிக்கும் இச்செல்வாக்கை, மிகப்பெரிய அச்சத்துடன் அமெரிக்கா நோக்குகிறது. இதனால், வெனிசுவேலாவில் ஆட்சிமாற்றம் மூலம், தனது செல்வாக்கை மீள நிலைநிறுத்த அமெரிக்கா விரும்புகிறது. 

இவ்விரண்டு நோக்கங்களுக்காகவும் வெனிசுவேலாவில் எந்த எல்லைக்கும் செல்ல, அமெரிக்கா தயாராக உள்ளது. இதனாலேயே, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், “இராணுவத் தலையீட்டுக்கான வாய்ப்புகள் இல்லாமல் இல்லை” என மதுரோவை எச்சரித்தார். 

இதேவேளை, அமெரிக்க வௌியுறவுச் சிந்தனை முகாமைச் சேர்ந்த சிந்தனையாளர்கள் தற்போதைய கட்டமானது, மதுரோ வெளியேறுவதற்கான பாதையைக் கட்டமைக்கிறது. இப்பாதையைத் தேர்தெடுத்து, மதுரோ வெளியேறாவிட்டால், ஈராக்கில் சதாம் ஹூசைன், லிபியாபில் முஹம்மர் கடாபி ஆகியோரின் வரிசையில் மதுரோவும் இடம்பெறுவார் என்று எழுதுகிறார்கள். அதேவேளை, இவர்கள் சிரியாவின் அல் அசாத்தைத் தங்கள் வசதிக்காகத் தவிர்க்கிறார்கள். இங்குதான் மிகப்பெரிய செய்தி ஒளிந்துள்ளது. 

அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஈராக்கிலும் லிபியாவிலும் செய்ததை, சிரியாவில் செய்ய முடியவில்லை. அதற்கு மிகப்பெரிய தடையாக இருந்தது ரஷ்யாவும் அதன் கூட்டாளிகளான ஈரானும் ஹிஸ்புல்லாவுமே. 

இப்போது, வெனிசுவேல நிலைவரங்களில், ரஷ்யா முக்கிய பங்கு வகிக்கக்கூடும். ரஷ்யாவின், பெரிய எண்ணெய் முதலீடுகள் வெனிசுவேலாவில் உள்ளன. அதை இழக்க ரஷ்யா தயாராக இராது. எனவே தற்போது, அமெரிக்கா அரங்கேற்றும் சதிப்புரட்சி, அவ்வளவு எளிதாக முடிவடையப் போவதில்லை.  
கடந்த பத்தாண்டுகளில் சீனாவும் வெனிசுவேலாவில் வலுவாக முதலிட்டுள்ளது; கடன் வழங்கியுள்ளது. சீன முதலீடுகள் வெனிசுவேலவின் எண்ணெய் உற்பத்திகளுடன் தொடர்புபட்டவை. 

வெனிசுவேலாவில் ஆட்சி மாற்றத்துக்கான, அமெரிக்காவின்  பிரயத்தினத்தின் அடிப்படையானது, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் செல்வாக்கை, ஒழிப்பதை இலக்காகக் கொண்டது. இது, ‘இலத்தீன் அமெரிக்காவுக்க முக்கியத்துவம்’ என்ற அமெரிக்காவின் வௌியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாகும். 

இதை, அமெரிக்கப் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன், ‘கொடுங்கோண்மைக் கூட்டாளிகள்’ என கியூபா, வெனிசுவேலா, நிக்கரகுவா ஆகிய நாடுகளை விவரித்துள்ளதோடு, “இந்நாடுகளில் ஏற்படுத்தப்படும் ஆட்சிமாற்றங்களே சீன, ரஷ்ய ஆதிக்கத்துக்கு எதிரானதாகவும் அமெரிக்கச் சார்புடையதாகவும் இலத்தீன் அமெரிக்காவைக் கட்டமைக்க அடிப்படையானதுமாகும்” என்றார். 

சுருக்கமாக, அமெரிக்கா தனது கொல்லைப்புறத்தைக் காப்பாற்றாமல், கிழக்கு ஐரோப்பாவிலும் ஆசியாவிலும், ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் எதிரான போராட்டத்தை நடத்தவியலாது என்பதை, அமெரிக்கா உணர்ந்துள்ளது. எனவே தனது கொல்லைப்புறத்தைக் காக்கப் படாதபாடு படுகிறது.

ஜனநாயகத்தைக் காப்பது என்ற கோஷம் மிகுந்த கேலிக்குரியதாக உள்ளது. மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஒருவர் இருக்கையில், நாடாளுமன்றத்தின் தலைவர், தன்னை ஜனாதிபதியாகத் தன்னிச்சையாக அறிவித்தால், அவரை, நாட்டின் ஜனாதிபதியாக அங்கிகரிப்பது எந்தவகை ஜனநாயகம். இதையும் ஜனநாயகத்தின் பெயரால், அமெரிக்காவும் அதன் ஐரோப்பியக் கூட்டாளிகளும் நியாயப்படுத்துகின்றன.

தன்னை ஜனாதிபதியாகப் பிரகனப்படுத்தியுள்ள குவான் குவைடோ, “சர்வதேச நாடுகள் மனிதாபிமான உதவிகளை வழங்கவேண்டும். அதை மேற்கு நாடுகளுடன் ஒழுங்குபடுத்துவேன்.  அவ்வாறு கிடைக்கும் உதவிகளை, வெனிசுவேலா இராணுவம் தடுக்கக்கூடாது” என்றும் கூறுகிறார். 

இதற்குச் செவிசாய்த்து, பல நாடுகள் எல்லைப் பகுதியில் உதவுவதற்குத் தயாராக உள்ளன. இராணுவம் இதை அனுமதிக்கவில்லை. குவான் குவைடோவினதும் உதவி அனுப்பத் தயாராகவுள்ள நாடுகளினது செயற்பாடுகள், சர்வதேச சட்டங்களையே கேள்விக்கு உள்ளாக்குகின்றன. 

வெனிசுவேலாவில் இன்று ஏற்படுத்தப்பட்டுள்ள நெருக்கடி, முழு இலத்தீன் அமெரிக்காவையே போருக்குள் தள்ளிவிடும் அபாயத்தை எதிர்நோக்கியிருக்கின்றது. அமெரிக்கா, தனக்கு உதவியாக, வெனிசுவேலாவின் அண்டை நாடுகளான, பிரேஸில், கொலம்பியா ஆகிய நாடுகளைச் சேர்த்துள்ளது. 

குறிப்பாக, பிரேஸிலின் புதிய ஜனாதிபதி, வெனிசுவேலா ஆட்சி மாற்றத்தை ஆதரிக்கிறார். அதேவேளை, மெக்சிக்கோ, நிகரகுவா, கியூபா ஆகியன வெனிசுவேலாவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன. 

எனவே, முடிவுறாத நீண்ட உள்நாட்டுப் போருக்கான ஆயத்தங்கள், மெதுமெதுவாக அரங்கேறுகின்றன. வெனிசுவேலாவில் நடப்பது, முழு இலத்தீன் அமெரிக்காவின் எதிர்காலத்தையே தீர்மானிக்க வல்லது. அந்நிய உதவியைக் கோருவோர், கவனத்துடன் கற்க வேண்டிய இன்னொரு பாடம் இங்கே நடக்கிறது.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வெனிசுவேலா-இன்னோர்-அந்நியத்-தலையீடு/91-229547

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.