Jump to content

சதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சதம்

Editorial / 2019 பெப்ரவரி 26 செவ்வாய்க்கிழமை, பி.ப. 04:39 Comments - 0

-ஜெரா

 

‘அஞ்சு சதத்துக்குப் பெறுமதியில்லாதவன்’ என்று, வேலை வெட்டியில்லாதவர்களைச் சொல்வதுண்டு. அதற்கிடையில், ஐந்து சதத்துக்கு இருந்த பெறுமதியை மறந்ததன் விளைவே, இந்தப் பழமொழி உருவாக்கம் என்பதைப் புரிந்துகொள்ளுமளவுக்கு நாம் யாரும் சிந்திக்கவில்லை. 

பழமொழி குறிப்பதுபோல, ஐந்து சதமோ, அதற்கு முன்னான சதங்களோ பெறுமதியற்றவையா? எப்போதாவது பெறுமதியற்று இருந்தவையா? சதங்களின் வளர்ச்சியும் ரூபாய்களின் அறிமுகமும், அரசியல், பொருளாதார, சமூக விடயங்களில் ஏதாவது தாக்கம் செலுத்தக் கூடியவையா? சதம் பற்றிய கதையை வைத்திருப்பவர்கள் அனைவரும், காலம் கடந்தவர்கள்தான். கிட்டத்தட்ட 50 வயதைத் தாண்டியவர்களிடம், சதத்தின் பெறுமதி குறித்த கதைகள் நிறையவே உண்டு. அவர்களுடைய காலத்தின் பொருளாதார நிலையை, குப்பைகளில் கிடக்கும் சதங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

பொதுவாக நாணயப் புழக்கம் என்பது, குறித்த சமூகம் ஒரு மய்யப்பட்ட அதிகார சக்திகளின் ஆளுகைக்குட்பட்ட நிலையிலேயே சாத்தியமாகும். அதாவது, அந்தச் சமூகத்தை ஆள்வதற்கு ஒரு தலைவனோ, மக்கள் மயப்பட்ட நிர்வாகமோ இருக்கும்போது, அவர்களின் கொடுக்கல் - வாங்கல்களுக்காகப் பணம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. அதை வெளியிடும் அமைப்பு, ஆளுபவர்களின் அங்கிகாரம் பெற்றதாக இருக்கும்.

இலங்கையை அல்லது வடக்கைப் பொறுத்த வரையில், கி.மு 2500ஆம் ஆண்டுகளில் இருந்து இவ்வாறான சதங்கள் கிடைக்கின்றன. ஆகவே, குறித்த காலப்பகுதியிலிருந்து இலங்கையில் அதிகாரமயப்பட்ட அரசுகள் உருவாகிவிட்டன என்ற முடிவுக்கு வரமுடியும். அத்துடன், கொடுக்கல் - வாங்கல் முறையான பண்டமாற்று முறையும் மாற்றம் கண்டு, பணம் கொடுத்துப் பொருள் வாங்கும் முறையும், வணிகமயப்பட்ட சுரண்டல் சமுதாயத்தின் உருவாக்கத்தையும், சதங்களின் வருகையிலிருந்து அவதானிக்கலாம்.

எங்கள் மத்தியில், அரைச் சதத்திலிருந்தே சதப் புழக்கம் ஏற்பட்டது. அதற்கு முன்னரான பணத்துக்கு நிகரான உலோகக் குற்றியை, அனா என்கின்றனர். “ஆறு அனாவுக்குக் குதிரையும் வேணும், ஆறுகடக்கப் பாயவும் வேணும்” என்ற பழமொழியும், சதத்துக்கு முன்னராக பணப்புழக்கத்தை நினைவுபடுத்துகின்றது. 

அரைச் சதம் பாவனையிலிருந்தது, இப்போதிலிருந்து 3 அல்லது 4 தலைமுறையினருக்கு முன்பான காலத்திலாகும். அதாவது, தமிழ் உறவு முறையின்படி பூட்டன், பூட்டிக்கும், அவர்களுக்கு முந்திய தலைமுறையினருக்கும் உரிய பணமே அரைச் சதம். அவர்களின் காலத்தில், அரைச் சதமென்பது பெரும் பணம். அதைக் கொண்டு, நாளொன்றின் முக்கிய பொருளாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ள முடியும். அதிகளவில் அரைச் சதத்தின் பயன்பாடு, இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பான காலத்திலேயே இருந்திருக்கின்றது. 

செப்பு, வெண்கலம் ஆகிய உலோகங்களால் தயாரிக்கப்பட்ட அரைச் சதங்களில், பிரித்தானிய இளவரசி அல்லது இளவரசனின் தலைச் சின்னம் பொறிக்கப்பட்டு, தமிழிலும் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் அரை என்பதை, ஒன்றின் கீழ் இரண்டாக எண்ணில் எழுதி வெளியிட்டிருப்பார்கள். அதிலும், தமிழில் எழுதப்படுகிகையில் “ரூ. சதம்” என்று தெளிவாகத் தனியாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த அரைச் சதங்களைக் கொண்டு, அந்தக் காலத்து அரசியலைச் சொல்லிவிடலாம். இலங்கை, நேரடியாக பிரித்தானியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. பணம் உள்ளிட்ட முக்கிய அரச விடயங்களை, அவர்களே கவனித்துக் கொண்டனர். அந்த அரச நிர்வாகம் எப்படி இருக்குமெனில், அரசாளுபவருக்கு முன்னிலையளித்திருக்கும். அதை நாணயத்தில் தம் தலையைப் பொறித்துக் கொள்ளவதிலிருந்து அறியலாம். இப்படி அவரவர் சிந்தனைக்கும் அறிவுக்கும் அமைவாக, இந்தக் காலத்தில் பெறுமதியற்றுக் கிடக்கும் அரைச் சதத்துக்குப் பின்னாலிருந்த அரசியலைப் புரிந்துகொள்ளலாம்.

இனி, ஒரு சதம். ஒரு சதத்தைப் பயன்படுத்தியவர்கள், நம்மிடையே இருக்கின்றார்கள். அதாவது, வாழ்வின் இறுதி அந்தத்தில் இருப்பவர்கள், ஒரு சதப் பாவனையளார்களாயிருப்பர். “அந்தக் காலத்தில, ஒரு சதத்துக்குத் தோடம்பழ இனிப்பும் கலர் கலராய் விற்கும் பல்லி முட்டாசும் வாங்கிச் சாப்பிட்டிருக்கிறன்” என்கிறார், அப்படியான ஒருவர். ஆக, ஒரு சதம், பாடசாலைக் குழந்தைகளில் பைக் காசாக அப்போது இருந்திருக்கிறது. ஒரு சதத்தையும், பிரித்தானியர்களே அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அரைச் சதம் போன்ற அமைப்புடன், ஆங்கிலத்தில் மட்டும், சதத்தின் பெறுமதியைக் குறித்து, தமிழ், சிங்கள மொழிகளில் சதம் என்பதை மட்டுமே குறித்திருக்கின்றனர். ஆரம்பகால ஒரு சதம், முழுக்க முழுக்க பிரித்தானியர்களின் பணமாக இருந்திருக்கின்றது. தமிழ் - சிங்கள மக்கள் பணத்தின் பெறுமதியை அறிந்து கொள்ள மாத்திரமே, அவர்களது சுதேசிய மொழியில் சதம் குறிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் வெளிவந்த ஒரு சதத்தில், சிங்களப் பெரும்பான்மைப் பலம் அதிகரிப்பதை அவதானிக்கலாம். ஆங்கிலத்தில் “சிலோன்” என்று பெரிய எழுத்தில் எழுதப்பட்டதற்குப் பதிலாக, அதைவிடப் பெரிய எழுத்துகளில, சிங்களத்தில் “ஸ்ரீ லங்கா” என்று பொறிக்கப்பட்டிருக்கும். சதத்தின் முன் பக்கத்தில் காணப்படும் இலங்கை - பிரித்தானிய இணைப்புச் சின்னத்தில், இந்த நாட்டைக் குறிக்கும் வாளேந்திய சிங்கமும், கீழே தமிழ் - ஆங்கிலத்தில் கண்ணுக்குத் தெரியாதளவில் “இலங்கை” என்று எழுதப்பட்டிருக்கும். உட்பக்கத்தில் கொட்டெழுத்தில் “சதம்” என சிங்களத்திலும், “ரூ.” (ரூபாய்) என்பதைத் தவிர்த்து, “சதம்” என்று தமிழிலும், “சென்ட்ஸ்” என்று ஆங்கிலத்திலும் சம அளவில் எழுதப்பட்டிருக்கும். பிரித்தானியாவிலிருந்து இலங்கை முற்றாக விடுதலை வாங்கிய 1971ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெளிவந்த ஒரு சதங்களில், உட்பக்கம் மட்டுமே தமிழில் “சதம்” என்பது மட்டும் பொறிக்கப்பட்டிருக்கும்.

“இப்போது பெறுமதியற்ற ஐந்து சதம், அப்போது பெரிய காசு. அந்த நாளில அஞ்சு சதம் குடுத்தால், ஒரு குவியல் மீனும் இறாலும் வாங்கி, நல்லாச் சமைச்சுச் சாப்பிடலாம். யாழ்ப்பாணத்தில உள்ளுக்குள்ள ஓடுற பஸ்களுக்கு, அஞ்சு சதந்தான் குடுப்பம். ஒரு இடியப்பம், 3 சதத்துக்கு சாப்பிட்டிருக்கிறன். இப்பத்தைய இடியப்பம் எண்டு நினைச்சிப் போடாதையுங்கோ. அந்த காலத்தில கோதுமை மா, பாடை ஒட்டுறத்துக்குத்தான் வாங்குறது. அதால, அரிசி மா இடியப்பம்தான் அவிப்பினம். 3 இடியப்பம் சாப்பிட்டா, 9 சதம். ஒரு சதம் எண்டாலும் திருப்பித் தந்துடுவார் கடைக்காரர். இப்ப 10 ரூபாய் மிச்சம் எண்டாலும் இனிப்புத் தாறாங்கள்” என்கிறார், ஐந்து சதத்தின் பெறுமதியறிந்த ஒருவர்.

பிரித்தானியர் இலங்கையில் வெளியிட்ட ஐந்து சதங்களில், அவர்கள் இந்திய, இலங்கை நிர்வாகங்களை ஒரே வரிசையில் மேற்கொண்டார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உண்டு. ஒருபக்கத்தில் இந்தியாவுடன் இணைந்ததே இலங்கை என்பதைக் குறிக்கும் எழுத்துகள், ஆங்கிலத்தில் இடம்பெற்றிருக்கும். சதத்தின் உட்பக்கத்தில் தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளுக்கு சம அந்தஸ்து வழங்கியிருப்பார்கள். இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னரான காலங்களில் வெளியிடப்பட்ட ஐந்து சதங்களில், சிங்களப் பெரும்பான்மைத்துவம் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும்.

“பத்துச் சதம் என்பது மிகப்பெரும் பணம். ஒரு நாள் செலவுக்கு, பத்துச்சம் (பத்துச் சதம்) மிச்சம்மிச்சமா போதும் தம்பி. அந்த நாளையில, ஒரு நாள் கூலிச் சம்பளமே பத்துச்சம்தான். சில பேர், சதம் வாங்குவாங்கள். சிலர் சாப்பிட்டிட்டுத் தோட்டத்தில இருக்கிற எதையாச்சும் எடுத்துக் கொண்டு போவாங்கள். தென்னை மரம் ஏறித் தேங்காய் புடுங்க, பத்துச்சம். பனை ஏற 15 சதம். சதம் வாங்காட்டி, 3 தேங்காய் வாங்கிக் கொண்டு போவாங்கள்” என்பவரிடம், சதம் பற்றிய அதிக குறிப்புகள் உண்டு. “அந்த நாளில புதுப்படம் எண்டால் 65 சதம், பழைய படம் எண்டா, 35 சதம், அரை ரிக்கேட் 25 சதத்திலிருந்து 10 சதம் வரைக்கும் போகும். 25 சதம் இருந்தா, படம் பாத்து, அண்டைய நாள் முழுதும் நண்பர்களோட யாழ்ப்பாணம் முழுதும் சுத்தித்திரிஞ்சிச் சாப்பிட்டும் போடுவம். இப்பயெண்டால் முடியுமே?” என்கிறார். அந்தத் தலைமுறை, வாழ்வைச் செலவின்றி அனுபவித்துத்தான் இருக்கின்றது என்பதை, சதப்பாவனை குறித்த அவர்களின் நினைவுகள் சொல்கின்றன.

பத்துச் சதத்திலும், பிரித்தானியர்கள் தெளிவாகவே செயற்பட்டிருக்கின்றனர். அவர்கள் தவிர்ந்த இலங்கையர்களுக்கு, சதத்தில் சம அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. சுதந்திரத்தின் பின்னர் வெளியிடப்பட்ட வெள்ளிப் பத்துச் சதங்களில், இலங்கை அரசின் குறியீடும், அதாவது சக்கரத்துக்குள் வாளேந்திய சிங்கம், உள்ளே தமிழில் பத்துச் சதம் என எழுத்தில் எழுதப்பட்டும் உள்ளது.

இவை அனைத்தையும் இணைத்தே 25 சதம் வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானியர் இலங்கையில் வெளியிட்ட 25 சதங்களில், தமிழில் தெளிவாக “சதம்” என்று பொறிக்கப்பட்டிருக்கும். சிங்களத்தில் வெறும் “சதம்” என்பது மட்டும் குறிக்கப்படும். வழமையான அவர்களின் இளவரசர் தலைச் சின்னம் பொறித்த சதமாகவே இதுவும் காணப்பட்டது. இலங்கை அரசாங்கம் வெளியிட்ட 25 சதங்களில், பெரும்பான்மைத்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டிருக்கும்.

இவ்வாறாக 25 சதத்தைத் தாண்டிய சதங்களின் பாவனை 50 சதமாகவும், பின்னர் ஒரு ரூபாயாகவும், இரண்டு, ஐந்து, பத்து, பத்தாயிரம் ரூபாயாகவும் மாறியது. உலகம் சுருங்கி வியாபாரமயப்பட சதங்களின் பெறுமதி குறைந்து, மறைந்தே போனது. ரூபாய்களின் பெறுமதி அதிகரிக்க அதிகரிக்க, சமூகத் தேவைகளும் அதிதீவிர சுரண்டல்களும் ஏற்பட்டன. நாளொன்றின் சராசரித் தேவை, அரைச் சதத்தில் தொடங்கி 1,000 ரூபாய்களைத் தாண்டிச் செல்கிறது. சதங்களின் காலத்தில் இல்லாத களவு, கொள்ளை, வழிப்பறிக் குற்றங்கள் ரூபாய்களின் காலத்தில் மிதமிஞ்சிவிட்டன. சதங்கள் பெறுமதியாக இருந்த காலத்தில், பெறுமதியாக இருந்த மனிதன், ரூபாய்கள் பெறுமதியாக இருக்கின்ற காலத்தில், பெறுமதியற்றுப் போகிறான். ரூபாய்களின் முன்னால், மனிதன் சதமானான்.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சதம்/91-230086

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.