Jump to content

ஈழ இலக்கியமும் பிணச் சோதனை விமர்சன மரபும்- அனோஜன் பாலகிருஷ்ணன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ இலக்கியமும் பிணச் சோதனை விமர்சன மரபும்- அனோஜன் பாலகிருஷ்ணன்

mutha

ஈழ இலக்கியம் பற்றிய கூச்சல்கள்

தனிப்பட்ட வாழ்கையில் அலைக்கழிப்பும் துயரம் நிறைந்த அனுபவமும் இருந்தால் நல்ல இலக்கியம் பிறக்கும் என்பது பொதுவான நம்பிக்கை. டால்ஸ்டாய், ஜெயமோகன்,ஷோபாசக்தி, மிலன் குந்தேரா, ஹனீப் குரேஷி வரை அதற்கான முன்னோடிகள் இருக்கிறார்கள்தான். ஆனால் வெறுமே துயரும் அலைக்கழிப்பும் மட்டுமே நல்ல இலக்கியத்தைப்படைப்பதற்குப் போதுமானதாக இருப்பதில்லை. நல்ல உதாரணம் ஈழத்து எழுத்தாளர்களின் ஆக்கங்கள். ஈழம் என்றாலே போர், கண்ணீர், இனப்படுகொலை என்ற எண்ணமே மனதில் வரும். அதெல்லாம் சரிதான், ஆனால் அவற்றை முன்னிறுத்தி எழுதப்படும் படைப்பில் இலக்கியத்தரம் இருக்கிறதா என்பதே இலக்கியத்திற்கான அடிப்படை. இலக்கியம் என்பதே நிகர் அனுபவத்தைக் கொடுக்கக்கூடியது. அது ஆசிரியரின் தேடலின் ஊடாக தனக்கான கண்டடைதலை நிகழ்த்தும் ஒரு களம். அதென்ன இலக்கியத்தரம் என்ற வினா காலங்காலமாக எழுப்பப்படுவது. அதற்கான பதில்களும் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட பின்னரும் மறுபடியும் முதலிலிருந்து எழுப்பப்படுவது வழமை. அப்படி ஒரு நோயுற்ற சிதிலம் அடைந்த உடல்தான் ஈழ இலக்கிய உலகம். அதேநேரம் லௌகீக உலகில் அலைக்கழிப்பு இன்றி அகத்தத்தளிப்பில் நல்லிலக்கியம் படைத்தவர்களும் இருக்கிறார்கள்தான். ஆ.மாதவன், சுந்தரராமசாமி, பூமணி, அ.முத்துலிங்கம், இமையம், கலாமோகன் என்று ஒரு வரிசையை அதற்குச் சொல்லமுடியும். அலைக்கழிப்பும் அனுபவங்களின் செறிவும் ஒருபோதும் இலக்கியத்தின் முக்கிய அடிப்படையாகக் கொள்ள இயலாது.

ஈழ இலக்கியம் என்பதே அரசியலால் பிணைக்கப்பட்டதாக மாறிவிட்டது, அரசியலைப் பேசும் வெளிதான் ஈழ இலக்கியம் என்றான பின்பு இங்கே வெறும் ஒற்றைப்படையான பிரச்சாரங்களே இலக்கிய அந்தஸ்தைப் பிடித்துவிடுகிறன. வெறுமே ஓர் இனத்தின் துயரைச் சொல்வதோ அவர்களின் விடுதலையைப் பாடுவதோ இலக்கியத்தின் இடம் அல்ல. இதை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியுள்ளது.

நாவலுக்கும் நெடுங்கதைக்கும் வித்தியாசம் உள்ளது. நாவல் விரிவுத்தன்மையால் தன்னை விரித்துச் செல்லும். கதாமாந்தர்களின் வாழ்வியலின் வரலாறுகள் அவற்றினூடாகச் சொல்லப்படும். நிறைய கதை மாந்தர்கள் உலாவருவார்கள். நாயகன் நாயகி என்கிற இரண்டு சட்டகங்கள் மட்டுமே இருப்பதில்லை. பல்வேறு முரண்பாடுகளுக்கு இடையால் மானுடர்களின் இருப்பையும் அதன் சுழற்சியையும் விவாதிக்கும். நாவலின் அடிப்படையே மற்றமையின் மற்றையை தரப்பையும் விவாதிப்பதே. அடிப்படையில் அவை தத்துவநோக்கைக் கொண்டிருக்கும். நெடுங்கதையில் கதாமாந்தர்களின் வரலாறுகள் இருப்பதில்லை. அதீத தத்துவத் தேடல்களும் இருப்பதல்லை. குறைந்த கதாமாந்தர்களின் விசாரணை ஊடாக நகர்வது. நாவலில் இருந்து வரலாறுகள் பிய்த்து எறியப்படும் போது நெடுங்கதையாக மாறிவிடுகின்றது. இமையம் எழுதிய ‘எங்ககெத’ நாவல் இல்லை. அது நெடுங்கதை. இதேபோல் இலக்கிய அழகியலின் வகைமைப்பாடுகள் நிறையவே உண்டு. அவற்றைப் பற்றிய விவாதங்கள் இல்லாமல் பொத்தாம் பொதுவாக எல்லா இலக்கிய ஆக்கங்களையும் ஒரே தராசில் வைத்து எடை போட இயலாது.

யதார்த்தவாத எழுத்து, இயல்புவாத எழுத்து, மிகை புனைவு வாதம், செவ்வியல்  என்று இன்னும் இன்னும் இலக்கிய அழகியலை விவாதிக்கலாம். அவை இன்னும் சுவாரஸ்யமானது. இக்கட்டுரையின் நோக்கம் அவற்றை விவாதிப்பதல்ல என்பதால் அவற்றை இங்கே தவிர்த்துவிடுகிறேன். இந்த அழகியல் நிலைப்பாடுகள் கருத்துருவாக்கங்களால் உருவாக்கப்படுபவை. முன்னோடிகள் இதுவரை உருவாக்கிய விவாதங்களின் தொடர்ச்சியில் இருந்து அடுத்த தலைமுறை விவாதித்தும் மறுத்தும் கொண்டு செல்ல வேண்டியவை. உலக இலக்கியத்தில் மாஸ்டர் படைப்புகளாகக் கொள்ளப்படுபவையுடன் ஒப்பிட்டே இவற்றை விவாதிக்க இயலும். இவை எல்லாம் ஈழத்தில் நிகழ்கிறதா என்பதே இக்கட்டுரையின் முதன்மையான நோக்கம்.

***

நமது ஈழத்து இலக்கிய வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் இவ்வாறு வகுத்துக்கொள்ளலாம். மு.தளையசிங்கத்தின் ‘ஏழாண்டு இலக்கிய மறுமலர்ச்சி’, மு.பொன்னம்பலத்தின்‘திறனாய்வு சார்ந்த பார்வைகள்’  புத்தகத்தின் வாசிப்பின் மூலம் எனது புரிதல்களை அவர்களின் புரிதல்களின் ஊடாக என் சிந்தனையை இவ்வாறு தொகுக்கிறேன்.

அ. 1930-1940  ஈழ இலக்கிய முயற்சிகளின் ஆரம்பகாலம்.

ஆ. 1940- 1950 ஈழ இலக்கியப் போக்குகளில் தீவிரம் கூடிய மறுமலர்ச்சிக்காலம்.

இ. 1950-1965 ஈழ முற்போக்கு இலக்கியம் எழுச்சியுற்ற காலம்.

ஈ. 1965-1975 ஈழ முற்போக்கு, நற்போக்கு இலக்கியத்தின் விவாதங்கள் மோதல்கள் உருவாகிய காலம்.

உ. 1975-1985 இலங்கைவாழ் இனங்களுக்கு இடையிலான மோதல்கள் விரிவடைந்து இனப்பிரச்சினை விரிவடைந்த காலம்.

ஊ. 1985-2009 போர்ச்சூழலுக்கு உரிய காலம்.

எ. 2009 க்குப் பின்னர் பின்போர்ச்சூழலுக்கு உரிய காலம்.

ஈழ எழுத்தாளர்கள் சிறுகதைகள் எழுத ஆரம்பித்த போது பெரும்பாலும் அவை தமிழக இதழ்களிலேயே ஆரம்பத்தில் வெளியாகத் தொடங்கின. கிராம ஊழியன், கலைமகள் போன்ற பத்திரிகைகளில் இவை அதிகம் வெளியாகியுள்ளன. இருந்தபோதிலும் ஈழத்துக்கு என்ற தனித்தன்மையைக் கொண்டிராமல் தமிழக எழுத்தாளர்கள் எழுதும் கதைகளின் பாணியை ஒட்டியே அவை இருந்திருக்கின்றன. இந்திய சுதந்திர எழுசியின் மீதான ஈர்ப்பு, காந்தியின் மீதிருந்த பெரும் பற்று போன்றவை அவ்வாறான எழுத்துமுறைக்குள் தள்ளியதாக மு.பொ குறிப்பிடுகிறார்.

அதற்குப்பின் தோன்றிய மறுமலர்ச்சிக் காலத்தில் ஈழத்து நிலப்பரப்பில் நிகழும் கதைகளாகப் பரிமாணிக்கத் தொடங்கின. சுயாதீனமாகத் தமது நிலம் சார்ந்த சிக்கல்களையும்வாழ்வியலையும் எழுத்துக்குள் புகுத்தும் முயற்சி இக்காலப்பகுதில் நிகழ்ந்துள்ளன. இது ஒருவகையான மறுமலர்ச்சியை இலக்கியத்தில் உண்டு செய்ததாகக் கருதப்படுகின்றது.

இதன்பின்னர் ஏற்பட்ட முற்போக்கு இலக்கியம் என்பது பெரும் வீச்சில் நிகழ்ந்த ஒன்று. இதுவரை வடக்கில், கிழக்கில் ஏற்பட்டிருந்த சாதிய ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரலாகவும் வர்க்கப் பிரச்சினையை முதன்மைப்படுத்தி தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான இலாப நட்டக் கணக்கை கேள்விக்கு உட்படுத்தி தொழிலாளர்களுக்கான விடிவே மானுடத்தின் முழுமையான விடுதலை என்ற நோக்கை நோக்கி எழுதப்பட கதைகளாகவும் அவை இருக்கின்றன. முற்போக்கு இயக்கங்களின் தேவைகள் இன்றுபோலவே அன்றும் தேவையாக இருந்த சூடான காலப்பகுதி (இதனை ஓரளவு விரிவாகப் புரிந்துகொள்ள ‘எழுநா’ வெளியீடான அ.கௌரிகாந்தன் எழுதிய‘யாழ்ப்பாண சமூக உருவாக்கமும் விபுலாந்தரும்’ என்ற ஆய்வு நூலை வாசிக்கலாம்). யாழ்ப்பாணக் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கல்வி கற்க உள்வாங்கப்பட்டபோது அதனை எதிர்த்து உயர்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். எனினும் அந்தப்பாடசாலையின் அதிபரின் பிடிவாதத்தால் உயர்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களின் பகிஷ்கரிப்பு தோல்வியிலே முடிந்தது.  இவ்வாறான பகிஷ்கரிப்புச் சம்பவத்தால் சீற்றம் அடைந்த அந்தப் பாடசாலையின் முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்ட பழைய மாணவர்கள், யாழப்பாண மேட்டிமைச் சமூகத்தின் ‘பிற்போக்குச் செயற்பாடுகளை’ எதிர்க்க ஓர் அமைப்பாகத் திரண்டனர். பின்னர் அதுவோர் சமூக இயக்கமாக விரிவடைந்தது. பின்னர் அவ்வமைப்பு யாழ்ப்பாண ‘வாலிபர் காங்கிரஸ்’ என்று அழைக்கப்பட்டது. இவ்வமைப்பில் இருந்த பலர் இடதுசாரிச் சிந்தனைகளைக் கொண்டிருந்தனர். இந்த அமைப்பின் செயற்பாடுகளும் சிந்தனை அலைகளும் இலக்கியம் வரை நீண்டதாகப் புரிந்துகொள்ள இயல்கிறது. இந்த அமைப்பிலிருந்தவர்களால் நேரடியாக இலக்கிய எழுத்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா என்று அறியமுடியவில்லை. எனினும் இவர்களது தாக்கம் முற்போக்கு இலக்கிய எழுத்து முறைக்கு அடிப்படையாக இருந்துள்ளது என்பதை மறுக்கவியலாதாகிறது.

க.கைலாசபதி 1957-இல் ‘தினகரன்’ பத்திரிகையின் ஆசிரியராக வந்தபின்னர், முற்போக்கு எழுத்தாளர்களுக்கு இன்னும் வாய்ப்புக்கள் குமிந்தன. ஒருகட்டத்தில் முற்போக்கு எழுத்தாளர்களின் கதைகள் எல்லாமே பிரச்சாரமாக அமைய ஆரம்பித்தன. எந்தவித இலக்கியத் தகுதிகளும் இன்றி வெறுமே சாதிய, வர்க்க விடுதலையைப் பேசுகின்றன என்ற உள்ளடக்கத்துக்காக அவை பிரசுரிக்கப்பட்டன. ஈழ இலக்கியம் இலக்கிய அந்தஸ்தை இழந்து குப்பைக்காடாக மாறிக்கொண்டிருந்தது. இவற்றையெல்லாம் க.கைலாசபதி தன் மார்சிய பார்வையால் “இதுதான் சரியான கலை” என்று திறனாய்வுக் கட்டுரைகளையும் எழுதி எழுதிக் குமிக்க ஆரம்பித்திருந்தார்.

இலக்கியத்தின் அடிப்படையில் வாழ்க்கை சார்ந்த தேடல் இருக்கும். இருப்பையும் பிரபஞ்ச இயக்கத்துக்கான தத்துவார்ந்த கேள்விகளுக்கான விடைகளையும் நோக்கிச் செல்லும். ஒரு வாழ்க்கையை வெறுமே முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையிலான இலாப நட்டக் கணக்கிலிருக்கும் சமத்துவத்ததின் ஊடகப் பார்க்க இயலாது. சரியான ஊதியப் பகிர்வும்,அந்தஸ்தும் கிடைத்தால் ஊழியர்கள் விடுதலை அடைந்துவிடப் போவதும் இல்லை. வாழ்க்கை என்பது எண்ணற்ற கேள்விகளாலும் தனிப்பட்ட அகங்கார மோதல்களாலும் நிரம்பியது. உண்மை என்று நாம் நம்பும் ஒன்று பாதிதான் உண்மை; மிச்ச உண்மை மற்றைய தரப்பிலிருப்பது. இதனைத் துழாவிக் கண்டடைய வைப்பது இலக்கியம். இந்தப் புரிதலின்றி வெறுமே சூத்திரங்கள் ஊடாக அணுகிப்பார்க்கும் பார்வையைக் கொண்டது கைலாசபதியின் அணுகுமுறை. இந்த அணுகுமுறையில்தான் செ.கணேசலிங்கனின் செவ்வானத்தை மிகச்சிறந்த நாவல் என்பதோடு நில்லாமல், புதுமைப்பித்தனின் கதைகளில் வரும் பிச்சைக்காரர்கள் எப்படி வர்க்கரீதியாகச் சுரண்டப்பட்டு பிச்சைக்காரர்களாக ஆக்கப்பட்டார்கள் என்பதைச் சொல்லவில்லை என்று புதுமைப்பித்தனை நிராகரிக்கிறார். இது போன்ற அணுகுமுறையாலும், கைலாசபதியின் அரவணைப்புடனும் எண்ணற்ற பிரச்சாரங்களை எல்லாம் சிறுகதைகள் என்று வெளியிட்டது தினகரன்.

கைலாசபதி

கைலாசபதி

கைலாசபதியின் இலக்கிய அணுகுமுறைக்கு எதிராகக் குரல்கள் அன்றைய காலத்திலும் எழத்தான் செய்தன. அதில் வலிமையாகத் தன் கருத்துகளைப் பதிந்தவர்களில் முக்கியமானவர் மு.தளையசிங்கம். ‘விமர்சக விக்கிரகங்கள்’ என்ற தன் கட்டுரையில் மு.தளையசிங்கம் ஏ.ஜே கனகரந்தினா, செந்தில்நாதன், சிவகுமாரன், சில்லையூர் செல்வராசா,காவலூர் ராசதுரை, எஸ்.பொன்னுத்துரை, கைலாசபதி, கா.சிவத்தம்பி பற்றி அவர்களது விமர்சன முறைமையில் உள்ள ஆழமற்ற தன்மையையும் இலக்கியம் மீதான நுண்ணுணர்வுப் போதாமையையும் காரசாரமாகக் குறிப்பிட்டு விவாதிக்கிறார். அதற்கான உதாரணங்களை அந்தந்த எழுத்தாளர்கள் எழுதியவற்றோடு சேர்ந்து வாசித்தால் இன்னும் திறப்புகள் கிடைக்கும். இதில் கவனிக்க வேண்டியது மு.தளையசிங்கம் அவர்கள் கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரின் பலவீனங்களைச் சுட்டிக்காட்டி எழுதிய கட்டுரைகளை ‘தினகரன்’வெளியிட மறுத்ததுதான். தங்களுக்கு எதிராக எழும் தர்க்கபூர்வமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையிலே கைலாசபதியும் சிவத்தம்பியும் இருந்திருக்கிறார்கள். இதனால் தான் மு.தளையசிங்கம் கல்விமட்டங்களில் உயர்பதவியில் இருக்கும் பேராசிரியர்களை ‘துரைமார்கள்’ என்று அழைத்துச் சீண்டிப் பார்க்கிறார். சமூக மட்டத்தில் தங்களுக்கு இருக்கும் கௌரவம், எழுத்துலகில் தாம் தான் சிறந்த சிந்தனைவாதிகள் என்பதை அடுத்த தலைமுறை அவர்களின் போதாமையைச் சுட்டிக்காட்டி விவாதிக்கும்போது அல்லது உடைக்கும்போது அந்தக் கருத்துகளை அடியோடு ஒலிக்காமல் செய்யும் பாசிஸ நடவடிக்கைகளைத்தான் செய்திருக்கிறார்கள். இந்த வராலாறுகளை விளங்கிக்கொள்ளாமல் கைலாசபதியையும், சிவத்தம்பியையும் தூக்கிப்பிடிப்பவர்கள் நம் சூழலில் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவ்வாறு இன்று பேசுபவர்கள் ஈழத்துக்கு என்று விமர்சன மரபு இன்னும் இருக்கிறது என்று அப்பாவித்தனமாக நம்புகிறார்கள். ( எது? தன் கருத்துகளுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டு விவாதிக்க வருவதை முற்றாக நிராகரிப்பதா ஈழத்து விமர்சன மரபு?)

ஆரம்பத்தில் முற்போக்கு எழுத்தாளர் அணியில் எஸ்.பொன்னுத்துரை இருந்தாலும், அவரது தனிப்பட்ட தேடல் என்பது வெறுமே வர்க்கம் , சாதீயம் சார்ந்த ஒன்றல்ல. யாழ்பாண இடை நிலை வர்க்கத்து அகவுலகத்தை நுண்மையாகக் காட்சிப் படுத்துவதில் அவர் எழுத்து வென்ற ஒன்று. காமம்  x வாழ்க்கை சார்ந்து அவர் எழுதியவை முற்போக்கு எழுத்தாளர்களால் கடுமையாக மறுக்கப்பட்டன. இவை மஞ்சள் பத்திரிகை வகையான எழுத்து என்று அன்றைய காலப்பகுதியில் ஒதுக்கப்பட்டது. இதனால் சீண்டப்பட்ட எஸ்.பொ முற்போக்கு முகாமிலிருந்து வெளியேறி நற்போக்கு முகாமை உருவாக்கினார். உண்மையில் இந்த முகாம் முற்போக்கு எழுத்தாளர்களைச் சீண்டிப்பார்ப்பதிலே அதித நேரத்தைச் செலவிட்டது. தன்னைக் கலகக்காரனாகக் காட்டிக்கொள்ள சிகரெட் பிடிக்கும் புகைப்படத்தைத் தன் நாவல் பின்னட்டையில் எல்லாம் பிரசுரித்தார். இதுவோர் ஆரோக்கியமான விவாதமாக இருக்காமல் இலக்கியப் பூசலாகவே அதிகம் இருந்ததாக மு.தளையசிங்கம் குறிப்பிடுகிறார். அதேநேரம் முற்போக்கு அணியின் தலைமைப் பொறுப்பை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில் ஒதுக்கப்பட்டதாலே எஸ்.பொ விலகினார்; அதுவே அந்தரங்க காரணமாக இருக்கிறது – என்று மு.தளையசிங்கம் “ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி” நூலில் குறிப்பிடுகிறார். இன்று எஸ்.பொவை திரும்பி வாசிக்கும்போது இயல்புவாத அழகியலில் ஈழ இலக்கியத்தின் முன்னோடி என்று புரிந்துகொள்ள இயலும். “சடங்கு” நாவலில் காட்டும் சித்திரம் ஓர் தேர்ந்த ஆணின் உளவியல் மடிப்பின் கீறல்கள். இருந்தபோதும் ‘நனவிடை தோய்தல்’ என்ற ஆக்கமே எஸ்.பொவினது குறிப்பிடத்தக்க ஆக்கம் என்பது என் எண்ணம். அன்றைய யாழ்ப்பாணத்தின் நுணுக்கமான சித்திரமாக இன்றும் மீள்வாசிப்புச் செய்ய இயல்கிறது.

இந்த முற்போக்கு, நற்போக்கு குழுமோதலின் போது மு.தளையசிங்கம் மெய்யுள் எனும் கோட்பாட்டை முன்வைக்கிறார். மெய்யுளை ஓர் கோட்பாடாக முன்வைத்தாலும் உண்மையில் அது இலக்கியத்தை, வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கான ஓர் சிந்தனை முறைமைதான் என்றே கொள்ள வேண்டியுள்ளது. முற்போக்கு முகாமில் இருக்கும் எழுத்தாளர்களையும் சரி, நற்போக்கு அணியில் எஸ்.பொவுடன் இருந்த எழுத்தாளர்களையும் சரி தனக்குரிய இலக்கியப் பார்வையில் மிகக்கறாராகவே அணுகினார் தளையசிங்கம். அன்றைய காலத்தில் இவ்விரண்டு முகாங்களை விமர்சிக்கவும் புதிய சிந்தனையை உருவாக்கவும் மு.தளையசிங்கம் வைத்த கோணத்தை மூன்றாம் கோணம் எனலாம். உண்மையில் முற்போக்கு எழுத்தாளர்கள் என்ற பெயரை தங்களுக்குத் தாங்களே சூட்டிக்கொண்டாலும் அது உண்மையில் ‘முற்போக்கு’ எழுத்துத்தானா? என்பதை மு.த விமர்சனத்துக்கு உள்ளாக்குகிறார். அவை அவ்வாறு இருப்பதில்லை என்பதையும் குறிப்பிடுகிறார். (முற்போக்கும், கலாச்சாரமும் பத்து வருடத்துக்கு ஒருமுறை மாறிக்கொண்டு இருக்கும் ஒன்றல்லவா!) எஸ்.பொன்னுத்துரையின் எழுத்துப் பாணியைத் தழுவி எழுதியவர்களும் முற்போக்கு அணியில் இருந்ததை ஆதாரத்துடன் முன்வைக்கிறார். கிட்டத்தட்ட எல்லாமே ஒன்றுதான் என்ற பார்வையும் பல இடங்களில் மு.தளையசிங்கதிடன் வெளிப்படச் செய்கின்றது.  கடுமையாகவே க.கைலாசபதியை நிராகரிக்கும் விவாதங்களை இன்று வாசிக்கும்போது அதன் எதிர்கால இலக்கிய நிலைமை எப்படி இருக்கும் என்ற தளையசிங்கத்தின் ஊகங்கள் இன்று நிஜமாகி இருப்பதை வியப்புடன் நோக்க முடிகிறது.

“கைலாசபதியின் இலக்கியப் பார்வை ஆழம்தான். ஆரம்பத்தில் விரிந்து தெரிந்த ஒரு தரமான இலக்கியப்பார்வை ‘முற்போக்கு’ இலக்கியப் பார்வையாக மாறியபோது தன்னை ஓர் குறுகிய கட்சிக்குள்ளும் கொள்கைக்குள்ளும் திணிந்துத் தானும் குறுகிக்கொண்டது, பழைய தமிழ் இலக்கிய அறிவுமட்டுமல்ல மற்றைய நாட்டு இலக்கியங்களைப் பற்றித் தெரிந்திருக்கும் ஓர் ஒப்பிலக்கியப் பார்வையும் தேவை என்ற நல்ல கொள்கையும் அதனால் தேயத் தொடங்கிவிட்டது. பின்பு பின்னர் வந்த பிஞ்சுகளிடம் பின்பு  அகப்பட்ட போது தேய மட்டும் செய்யவில்லை தேய்ந்து சிதைந்து கோராமாகியும் விட்டது.” –  என்று குறிப்பிடும் தளையசிங்கத்தின் வரிகள் இன்றும் உண்மையுடனேயே ஈழ இலக்கியப்பரப்பில் இருக்கிறது.

பகீதரன் ஈழத்து முற்போக்கு எழுத்துக்களை வாசித்துவிட்டு, “தமிழ்நாட்டில் எழுதப்படும் இலக்கியங்களை விட  பத்துவருடங்கள் பின்தங்கி இருக்கிறது ஈழத்து இலக்கியம்” –  என்ற ரீதியில் ஒரு கருத்தை வெளியிட்டார். இது அப்போது பெரும் சீண்டலை அனைத்துத் தரப்பு ஈழத்து எழுத்தாளர்களுக்கு இடையில் உருவாக்கியது. அதற்கான எதிர்வினைகள் வழமைபோல் சாணிபூசும் மொழியில் இருந்தன. மு.தளையசிங்கம் கூட “பகீதரனுக்குப் பைத்தியம்” என்றார்.

ஏறக்குறைய இதே காலப்பகுதியில் வண்ணநிலவன் ஈழத்து முற்போக்கு எழுத்துகள் என்று அடையாளப்படுத்தப்படும் எழுத்துகளை வாசித்துவிட்டு மிகவும் நொந்துபோய் “ஈழத்துமுற்போக்கு எழுத்துகளுக்கு பூச்சிமருந்து அடிக்கவேண்டும்”-  என்றார். மேலும் ‘கோட்பாடுகளால் பாலைவனமாக்கப்பட்டது’ ஈழ இலக்கியம் என்றார். இன்று ஈழ இலக்கிய வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது பகீதரன், வண்ணநிலவன் சொன்னவை எத்தகைய கூர்மையான கூற்று என்பதை அரசியல் பூசல்களுக்கு அப்பால் சிந்திக்கும் திறமையான இலக்கிய வாசகர்கள் புரிந்துகொள்வார்கள்.

இலங்கையில் வசிக்கும் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள், தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது பாரிய கனத்துடன் எழுந்தது. தமிழரசுக்கட்சி  சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்தது. மு.பொ மற்றும் சு.வில்வரத்தினம் இணைந்து எழுதிய மு.தளையசிங்கத்தின் ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி’ நூலின் முன்னுரையில் “சமஷ்டி ஆட்சியின் தேவையை இடதுசாரிகள் உணர்ந்தபோதும், பலவித அரசியல் காரணங்களுக்காக அவர்கள் அதைப் புறக்கணித்து ஒற்றை ஆட்சி தேசியம் பேசித் தமிழ் மக்களின் ஏகோபித்த குரலை நசுக்கினர். இதுவே பொதுப் பின்னணி” என்று குறிப்பிடுகிறார்கள். அதனால்தான் இன முரண்பாடுகள் உச்சத்தை நோக்கி நகர்ந்த போதும் கம்னியூனிஸ்ட் கட்சிக்குள் அகப்பட்டிருந்த முற்போக்கு எழுத்தாளர்களாலும் கைலாசபதியாலும் இனப்பிரச்சினை சார்ந்து தங்களது உள்ளார்ந்த உண்மையை வெளியே வைக்க முடியாமல் போனது. இவர்கள் கட்சிக்காக இனமுரண்பாடுகள் நோக்கி தங்கள் தேடலை விரிக்காமல், மீண்டும் ஆலைத்தொழிலாளி x முதலாளி பிரச்சினை என்று எழுதிக்கொண்டிருந்தார்கள். அப்போதையை இனவுணர்ச்சியின் வீரியம் மக்களிடம் அதிகம் பரவத் தொடங்க, அது சார்ந்த தெளிவான பார்வையை இடதுசாரிகளால் முன்வைக்க இயலாமல் செல்ல அவர்களின் இடம் சரிந்தது என்பது வரலாற்றின் ஒருப்பக்க உண்மையாக இருக்கிறது.

இனப்பிரச்சினையின் வீரியம் கூடிப் போர்ச்சூழல் உருவாகிய ஈழ  இலக்கியத்தின் காலப்பகுதியின் பேசுபொருளை எழுச்சியூட்டல், துயரைப்பாடுதல் என்ற இரண்டு தனிப்பெரும் பிரிவாக பிரிக்கலாம். நட்சத்திரன் செவ்விந்தியன்,  அஸ்வகோஸ், எஸ்.போஸ் போன்ற அன்றைய கால இளைஞர்கள் இன்னுமொரு புதுத்தலைமுறையாக எழுந்து வந்தார்கள். இவர்கள் எழுதிய கவிதைகள் நேரடியாக உணர்வுகளைப் பேசுவதோடு எளிமையான சொற்களுடன் நின்றுவிடக்கூடியன. புதிய அழகியல் சாத்தியங்களைத் திறந்துவிடக்கூடியன. அவ்வாறேஇந்தக் கவிதைகளை அப்படியே இன்றைய தளத்திலிருந்து மதிப்பிட முடியும். இவர்கள் எழுதிய ஆக்கங்கள் எவ்வாறு விமர்சனத்துக்கு உள்ளாகின என்று தேடினால் இப்போதிருக்கும் தளத்திலிருந்து பார்க்க துன்பமே கிட்டுகிறது.

உதாரணத்துக்கு மு.பொன்னம்பலத்தின் விமர்சனங்கள் சிலவற்றைப் நோக்குவது மேலும் சில புரிதல்களுக்கு இட்டுச்செல்லும்.

1

சோலைக்கிளியின் கவிதைப் பாணி பற்றி ஏற்கனவே விரிவாக எழுதப்பட்டுள்ளதால் அது பற்றி விவபரிக்கத் தேவையில்லை. அவரது கவிதைகள்அஃறிணைப் பொருட்களை மனித குணாம்சங்களுக்குள் இட்டு உருவகப்படுத்துவதும்இத்தகைய  உருவகப்படுத்தல்களால் ஏற்படுத்தப்படும் ஒருவகைப் படிமமும் மினுக்கமுற வெளிவருவன. சில நன்றாக வந்து வாய்ப்பதும் உண்டு. சில எல்லாவற்றையும் கெடுத்து விடுவதும் உண்டு. அண்மையில் இவர் எழுதிய கவிதை ஒன்றுக்கு வைத்த தலைப்பு வறுக்க வறுக்க மணக்கும் பூச்சிஎன்பதாகும். சில பூச்சிகளைத் தொட்டாலே வயிற்றைக் குமட்டும் நாற்றம் அவ்விடத்தை விட்டு அகல அதிக நேரம் எடுப்பதுண்டு. அப்படிப்பட்ட பூச்சிகளை வறுத்தால் என்னவாய் இருக்கும் எம் நிலைஎனக்கு வயிற்றைக் குமட்டும் அந்த நாற்றத்தின் மீட்டலால் அக்கவிதையைப் படிக்கக் கஷ்டமாய் இருந்ததோடு படித்த பின்பும் அந்த நாற்றந்தான் கவிதைகளின் கருத்தை மீறி மிதப்பதாய் இருந்தது. சுடச்சுட வெண்மை தரும் சங்கு” என்று பழைய கவிஞர்கள் சொன்னதில் இருந்த பொருத்தப்பாட்டை புதிதாய் கவிதை பண்ணும் நாம் யோசிக்க வேண்டாமா?

-மு.பொன்னம்பலம்-

மு.பொவுக்கு படித்தவுடன் குமட்டல் கொடுத்த சோலைக்கிளியின் அந்தக் கவிதை இதுதான்.

வறுக்க வறுக்க மணக்கும் பூச்சி

என்னை வறுக்க வறுக்க

நாணர் முறுகி மணப்பேன்.

கருகேன்!

ஒரு சின்னப் பூச்சி நான்.

இந்த உலகத்தில் மிதந்து

இயன்றால் வானத்தை எட்டுவது,

இல்லையென்றால் போவதென்ற

பெரிய கங்கணங்கள் கட்டாத

ஒரு சின்னப் பூச்சி நான்!

சூரியனைத் திருப்பி என் பக்கம் வைக்க

எனக்கும் ஆசையுண்டு, ஆனாலும்

பிறரின் ஒளியை நான் ருசிக்க விரும்பவில்லை.

என் வீட்டிற்குள் விளக்கும் பிறர் இல்லத்துள் இருளுமைன்று,

நான்–

இந்த உலகத்தில் மிதக்க ஆசையில்லை.

எண் சிறகில் இந்த உலகத்தை ஒட்டி

எங்கோ பறந்து கொண்டுபோய் வைத்து

குப்பை கூழன்களை அகற்றி,

மிகச் சுத்தமான ஒரு நிலத்தை

அதில் சிரித்த முகங்களுடன் மிருகங்களை

ஆக்கிப் பார்க்க ஓர் ஆசையுணர்டு, அதற்காக

இந்த உலகத்தில் மிதக்கின்ற ஒரு பூச்சி!

இன்னும் ஒட்டவில்லை எண் சிறகில் உலகம்.

நான் மிதக்க மிதக்க

வெயில் இறைத்து வெயில் இறைத்து

எண் நீர்நிலைகள் வற்ற

முறுக வறுக்கிறது, ஏனோ தெரியவில்லை,

நானும் கருகவில்லை!

-சோலைக்கிளி- (எக்ஸில் இதழ் 4-இல் வெளியாகியது)

solai

சோலைக்கிளி

இங்கு மு.பொ சோலைக்கிளி எழுதியது கவிதை அல்ல என்று மறுப்பதில் நமக்கு பிரச்சினை இல்லை. மு.பொ சொல்லவருவதை விளங்கிக்கொள்ள முடிகிறது. ஆனால், மனித மன விவகாரங்களைப் படிமமாக பயன்படுத்தும் போது, இங்கு வரும் பூச்சி போல அது ஏன் கலை ரீதியாக வெல்கிறது அல்லது தோற்கிறது என்பதை புறவயமாக விளக்கமுடியவில்லை மு.பொவால். இங்குவரும் பூச்சி ஏன் இக்கவிதையில் சரியான படிமமாக உருவாகவில்லை என்பதைத் தன்தரப்பில் தெளிவாகச் சொல்ல முடிவதில்லை. அதற்கு அவர் கொடுக்கும் விளக்கம் “வயிற்றைக் குமட்டும் அந்த நாற்றத்தின் மீட்டலால் அக்கவிதையைப் படிக்கக் கஷ்டமாய் இருந்ததோடு படித்த பின்பும் அந்த நாற்றந்தான் கவிதை களின் கருத்தை மீறி மிதப்பதாய் இருந்தது” இதைச் சொல்ல ஓர் இலக்கிய விமர்சகர் தேவையா என்ன?

2

நாம் சில அவதானிப்புகளை முன்வைக்க வேண்டும். அப்போதுதான் 90களில் மிதந்துள்ள கவிதைப் போக்குகளை அவதானிக்கவும் இனி வரப்போகும் ஆரோக்கியமான போக்குகளைக் கணக்கிலெடுத்துப் பேணவும் முடியும்.

90களில் வெளிவந்த வாசுதேவனின் வாழ்ந்து வருதல்”நட்சத்திரன் செவ்விந்தியனின் வசந்தம் 91’, ஜபாரின் தரப்பட்டுள்ள அவகாசம்‘, ஓட்டமாவடி அறபாத்தின் எரிநெருப்பிலிருந்த”,சுபத் திரனின் ‘சுபத்திரன் கவிதைகள்‘, அஸ்வகோஸின் வனத்தின் அழைப்பு ஆகிய தொகுதிகளின் கவிதைகள் ஏற்கனவே நான் குறிப்பிட்ட பாணிக் கவிதைகளில் இருந்து வேறுபட்டவையாகவும்இனிவரும் போக்குகளை நோக்கிய உணர்கொம்புடையனவாகவும் உள்ளனவென்றால் மிகைப்படுத்தலாகாது.

93இல் வெளியான வாசுதேவனின் வாழ்ந்து வருதல்’ தொகுப்பில் உள்ள கவிதைகள் இப்புதிய போக்கின் வருகைக்கு அடிக்கல் லிட்டு பாதை அமைத்தவையாக நிற்கின்றன. ஒரு மாலையும் நானும் என்னும் அவரின் கவிதை பின்வருமாறு ஆரம்பிக்கிறது.

வானம் இருளடைந்து காற்றுபலமாய் வீசும் இந்த மாலையில் நான் பெருக்கெடுக்கிறேன். நான் நிம்மதி இழக்கிறேன். துயரில் நெஞ்சு கசிகிறது. காரணம்புரியாது அடிவற்றில் கத்திகள் பாய்கிறது.

படிமம்உருவகம்உவமை என்று எந்தவித ஆரவாரமும் இல்லாமல் சாதாரணமாக பெய்யப்படும் வார்த்தைகளால் கவிதை ஊற்றெடுப்பதை இக்கவிதையில் காண்கிறோம். நான் பெருக்கெடுக்கிறேன்’, ‘காரணம் புரியாது அடிவயிற்றில் கத்திகள் பாய்கின்றன’ –  என்னும் வார்த்தைப் பிரயோகங்கள் அத்தகையன.

-மு.பொன்னம்பலம்-

மு.பொவுக்குப் படிமம், உருவகம், உள்ளடக்கம் என்பவையெல்லாம் ஆரவாரமாகத்தான் தெரிகின்றன. கவிதையில் ஏன் படிமங்கள் தேவை, அவை எப்படி கனவுத் தன்மையாக விரிகின்றன என்பதையெல்லாம் அவரால் விளக்கவும் முடியவில்லை. கடைசிவரை மு.பொவினால் படிமம், உருவகம், உவமை இல்லாமல் எப்படி கவிதை சிருஷ்டிகரம் கொள்கிறது என்பதை விளக்கவே முடியவில்லை. கவிதையில் வாசகர் கவனிக்க மறந்த கோணம், அது அரூபமாக உணர்த்தும் அகவய உணர்வை புறவயமாக எழுத்தில் கொண்டுவருவது. விவரிப்பதே விமர்சகனின் கடமை.; அவையெல்லாம் முபொவுக்கு கிஞ்சித்தும் வரவில்லை என்பதை இங்கே நோக்கலாம்.

***

இக்கட்டுரையில் ஏன் தொடர்ச்சியாக மு.பொவை மட்டுமே கருத்தில் கொள்கிறீர்கள்?  வேறு விமர்சகர்கள் இல்லையா என்று கேட்கலாம்.

கைலாசபதி ஏன் ஓர் விமர்சகர் இல்லை என்பதை மேலே குறிப்பிட்டாகிவிட்டது. அவர் சமூகத்தை அளக்க இலக்கியத்தை பயன்படுத்த முனைந்தாரரே தவிர இலக்கிய விமர்சகர் இல்லை. மு.தளையசிங்கம்  கைலாசபதி உட்பட அந்தக்காலத்தில் இருந்த விமர்சக விக்கிரங்களளின் போதாமைகளை தெளிவாகச் சுட்டிக்காட்டி துகிலுரித்துவிட்டார். ஆனால், அவரின் தம்பியான மு. பொன்னம்பலம் பற்றி யாரும் அதிகம் பேசியதில்லை. அதேநேரம் மு.பொன்னம்பலம் ஈழத்து விமர்சன மரபில் தனக்கு ஓர் இடம் இருப்பதாக இன்னும் நம்புகிறார். ஆக அவர் நம்புகின்ற அவரது தகுதி மீதான விமர்சனங்களை முன்வைக்கக்கூடிய சுநதந்திரமும் எங்களுக்கு கிடைக்கிறது.

மு.பொவுக்கு ஒரு மனக்குறை இன்றுவரை உள்ளது. தமிழியல் வெளியீடாக வந்த யதார்த்தமும் ஆர்மார்த்தமும்’ என்கிற தனதுபுத்தகம் பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை என்பதுதான் அது. உண்மையில் மு.பொவின் குறிப்பிடத்தக்க புத்தகங்களில் ஒன்று அது மட்டும்தான் என்பதே என் எண்ணம். ஆனால்அப்புத்தகத்திலுள்ள “மஹாகவி, நீலவாணன்” பற்றிய திறனாய்வுக் கட்டுரைகள்கூட புறவயமான தர்க்கங்களுடன் நின்றுவிடுகின்றன. இன்று திரும்பிப் பார்க்கும்போது மேலதிக புரிதல்களுக்குச் செல்லவே இயலாத தன்மையுடன் வறட்டு மொழியுடனும் அக்கட்டுரைகள் மேற்கோள்களுடனும் அமைந்திருக்கின்றன என்பது துக்கரமானதே. மு.பொன்னம்பலம் ஈழத்து இலக்கியத்தில் யார் யார் பங்குபற்றினார்கள் என்ற வரலாற்று ஆவணப்படுத்தல் வேலையைத்தான் செய்தாரே தவிர, ஒரு படைப்பை ஆழமாகச் சென்று தொட்டு இன்னுமொரு புதிய கோணத்தை வாசகருக்குக் காட்டிவிடும் விமர்சனத்தைச் செய்யவே இயலவில்லை. முயன்று முயன்று பார்த்து தோல்வியுற்றவர்.

இன்னுமொரு மு.பொன்னம்பலத்தின் கூற்றை சுட்டவேண்டியுள்ளது. கீழே பார்க்கவும்.

“50களில் பகீரதன்ஈழத்து எழுத்தாளர்கள் தமிழ்நாட்டைவிட பத்து வருடங்கள் பிந்தியுள்ளார்கள் என்று கூறியபோது அது அவரது அறியாமை”  என நாம் சாடினோம். இன்று அதேவகைக்குரல் ஜெயமோகன் மூலம் மீண்டும் ஒலிக்கிறது. நமது சிறுகதைகள் தமிழ்நாட்டுச் சிறுகதைகளைவிட பின்தங்கி நிற்பதாகவும்ஒற்றைப் பரிமாணமுடைய தட்டையானவையாக இருப்பதாகவும் அவர்  கூறியுள்ளார். இக்கூற்றைப் பகீரதனுடையதுபோல நாம் ஒதுக்கிவிட முடியாது. இதில் கணிசமான உண்மை உண்டென்பதை நாம் ஒப்புக்கொள்வது எமது இலக்கிய ஆரோக்கியத்துக்கு அவசியம்”.

 -மு.பொன்னம்பலம்-

ஜெயமோகனின் கூற்றை பலமாக ஆமோதிக்கும் மு.பொன்னம்பலம் இன்று முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களுடன் உலாவருகிறார். இதை ஜெயமோகனின் “பூச்சிமருந்து”விவாதத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டியுள்ளது.

சு.வில்வரத்தினம் கவிதைகளின் படைப்புலகம் சார்ந்து ‘அகமெரியும் சந்தம்’ என்ற   கட்டுரையை ஜெயமோகன் ‘காலம்’ இதழ்-27 இல் எழுதியிருந்தார். அதில் வில்வரத்தினத்தை விதந்தோதி, தாழ்த்தி சில பொதுமைப்படுதல்களால் ஈழக் கவிஞர்கள் பற்றி ஜெயமோகன் தரக்குறைவாக ஏதோ சொல்லிவிட்டார் என்ற ரீதியில் மு.பொன்னம்பலம் அதற்கு எதிர்வினையாக காலம் இதழ் 28 & 29 இல் ‘அகமெரியும் சந்தத்தில்’ அடியோடும் நிராகரிப்பு” என்று ஒரு கட்டுரை எழுதினார். (கட்டுரையின் ஆரம்பம் இப்படி ஆரம்பிக்கும் : ஜெயமோகன் ஈழத்துக் கவிஞர் சு.வில்லரத்தினம் ‘அகமெரியும் சந்தனம்’ என்ற தலைப்பில் காலம்-27 இதழில் எழுதிய விமர்சனத்தை வாசித்தபோது மகிழ்ச்சி அடைந்தேன். காரணம் எந்தத் தமிழ்நாட்டு எழுத்தாளனும் ஈழத்துக் கவிஞர் ஒருவரை விமர்சன ரீதியாக ஆய்வுசெய்து பாராட்டி எழுதியதில்லை) இன்று மு.பொவின் அக்கட்டுரையை வாசிக்கும்போது வழமைபோல் மேற்கோள்களுடனும் அகவய உணர்வுகளுக்குள் நுழையாத புறவய தர்க்கங்களுடன் எழுதப்பட்ட கட்டுரையாக இருப்பதையே சலிப்புடன் நோக்க இயலுகிறது. அதில் அடுத்த தலைமுறையில் எக்கசக்கமான கவிகள் உண்டு,  அவற்றை ஜெயமோகன் கருத்தில் கொள்ளவில்லை என்ற ரீதியில் குறிப்பிடுகிறார்.

குறிப்பிடுவதோடு நில்லாமல் ஒரு பட்டியலையும் கொடுக்கிறார்:  கருணாகரன்,  யேசுராசா,  புஸ்பராஜன்,  அரவிந்தன்,  சிவசேகரம்,  சோலைக்கிளி, வாசுதேவன், ஜபார், நிலாந்தன், செழியன், முல்லைகமால், அமரதாஸ்,என்.கே .மகாலிங்கம்,   பலாகணேசன்,  சிவரமணி, ஊர்வசி,  சங்கரி,  ஒளவை,  ஆழியாள், ……….. என்று அந்தப்பட்டியல் நீள்கிறது.  அதற்கு ஜெயமோகன் நகைச்சுவையாக ஓர் பதில் பொதுவெளியில் அளித்தார். (மு.பொ குறிப்பிடும் கவிஞார்களில் பொருட்படுத்தத்தக்கவர்களின் கவிதைகளை ஜெயமோகன் மு.பொன்னம்பலத்தைவிட ஆழத்துக்குச் என்று எழுதியிருக்கிறார் என்பதையும் குறிப்பிட வேண்டியுள்ளது). அதாவது, ஜெயமோகன் பட்டியலின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் மு.பொ அனைவரையும் ஒரே பாயில் அமரரைவைப்பதில் இருக்கும் சமரசத்தையே வண்ணநிலவனின் பாணியில் – “அத்தனை கவிகள் நாட்டில் இருப்பின் பூச்சிமருந்து அடிக்கவேண்டும்” –  என்ற ரீதியில் நகைச்சுவையாகச் சீண்டும் தன்மையில் –  குறிப்பிட்டு இருந்தார்.

மு பொன்னம்பலம்

மு பொன்னம்பலம்

அதற்கு முன்னரும் இதேவிடயத்தை ஜெயமோகன் தனது  பல்வேறு கட்டுரைகளிலும் உரையிலும்  இதைப் பலதடவைகள்  முன்னமே திரும்பத் திரும்ப குறிப்பிட்டுள்ளார். ஆனால், திடீரென்று இப்போதுதான் ஓர் உரையில் இதைக் கண்டுபிடித்து நமது அன்பர்கள் பேசியிருக்கிறார்கள். நம்மவர்களுக்கு எப்போதுமே எல்லாமே கொஞ்சம் பிந்தித்தான் தெரியவரும். இது கொஞ்சம் அதிகம்தான்; சரி இருக்கட்டும். ஒரு நகைச்சுவையையும் அதற்குள்ளிருக்கும் மெலிதான சீண்டலையும் புரிந்துகொள்ளக்கூட முடியாமல் இங்கிருந்து எழும் எதிர்வினைகளைப் பார்க்க வெட்கமாகவும் சலிப்பாகவுமே இருக்கிறது.

இங்கே வசைகளைக் கொட்டிக்கொண்டிருப்பவர்கள் தாங்களும் இலக்கியவாதிகள் தான் என்று நினைக்கிறார்கள். சிலர்  வருடத்துக்கு ஒரு கதை என்ற பேரில் சிலவற்றையும்,விமர்சனம் என்ற பெயரில் கதைகளைச் சுருங்க மீண்டும் சொல்பவர்களாகவும் இருப்பவர்கள். சிலர் அதுவுமல்ல.

ஒரு காலத்தில் எஸ்.பொ “புலம்பெயர் இலக்கியம் தான் தமிழ் இலக்கியத்தை இனிமேல் ஆளும்” –  என்று சொன்னபோது சுந்தர ராமசாமி ஓர் எதிர்வினை வைக்க, இதேபோல் ஓர் கூச்சல் எழுந்தது. வெறுமனே சிற்றிதழ்களின் எண்ணிக்கையை வைத்து சொல்லப்பட்ட மிக மேம்போக்கான உணர்ச்சிக் கூற்று எஸ்.பொவினது என்பது பிற்பாடு தானாகவே தெரியவந்தது.

இன்று சாதாரணமாக ஓர் ஈழ இலக்கிய இதழைப் புரட்டினாலே அதனைத் தெரிந்து கொள்ளலாம். காரணம் நம் சூழலில் இலக்கியச் செயல்பாடு என்பது பலருக்கு ஆர்மார்த்தமானதாகஇல்லை. நிறைவேற்ற முடியாத அரசியல் ஆதங்கங்களைக் கரைக்கக் காகிதங்கள் தேவையாக இருந்தன என்றளவிலே இன்று ஈழத்தின் இலக்கிய சிற்றிதழ்களை “நூலகம்” தளத்தில் திரும்பிப் பார்க்கும்போது புரிந்துகொள்ள இயல்கிறது. இன்று புலம்பெயர் இதழ்கள் ஒன்று இரண்டு தான். அவற்றில்கூட எழுத முடியாதவர்களின் வெற்றுக் கூச்சலாகத்தான் இன்றைய இலக்கியத்திற்கு சம்பந்தம் இல்லாத கூக்குரல்களை நோக்க வேண்டியிருக்கிறது.

பட்டியலின் தேவையையும், இலக்கியத் தராதரத்தைப் பற்றிபேசும் போது இங்கே இந்தக் கூச்சல்கள் எப்பவும் ஒலிப்பவைதான். ஜெயமோகன் ஈழக் கவிஞர்களில் பலரை நிராகரிக்கிறார் என்றால், இங்கிருப்பவர்கள் “இல்லை ஜெயமோகன் சொல்பவர்களைத் தவிர்த்தும் இங்கே கவிகள் உண்டு,  இவர்களை இன்ன இன்ன கோணத்தில் பொருட்படுத்த வேண்டும்” –  என்று ஒரு கட்டுரையை முன்வைக்க வேண்டும்;.  உரையாடலைத் திறக்க வேண்டும். இந்தச் சீண்டலுக்கு பின்னுள்ளதும் அதுதான். ஆனால், அதைச் செய்ய இங்கிருப்பவர்களுக்கு வாசிப்பும் இல்லை, இலக்கிய  அறிவும் இல்லை. வெறுமனே வசைகளைத்தான் வழமைபோல் வைக்க இயல்கிறது. முகநூல் விருப்பக் குறிக்காக மலிவான உரையாடல்களைப் பெருக்க முடிகிறது. அவர்களால் முடிந்தது அவ்வளவு தான். ஆனால், உண்மையில் ஈழ இலக்கியம் சார்ந்து வாசிப்புள்ளவர்களால் அப்படியான கட்டுரையை எழுத முடியுமா என்பதும் சந்தேகமே. அங்கும் தீர்க்கமான பட்டியல் உருவாகும்; ஏனென்றால் உண்மையில்  அப்படி இலக்கியத் தரத்துடன் கவிதைகள் எழுதக் கூடியவர்கள் இங்கிருக்க வேண்டுமல்லவா. இங்கே தொடர்புகள் மூலம் ஓரளவுக்கு அறியக்கூடிய இதழ்களில் திரும்பத் திரும்ப ஒரே படிமத்தை வளைத்து வளைத்து மூக்குச் சிந்தவைப்பவைதானே கவிதைகள் என்ற பெயரில் அதிகமாக எழுதப்படுகின்றன.

“பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்” என்ற தொகுப்பை எம்.ஏ. நுஃமான் மற்றும் அ.யேசுராசா தொகுத்த போது சில எதிர்வினைகள் வரத்தான் செய்தன. ஆனாலும் அத்தொகுப்பிலுள்ள கவிதைகள் இன்றும் ஈழத்துக் கவிதைகளின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தை தரக்கூடியன. அவ்வாறானதொரு சிறந்த பட்டியலிட இன்றும் இங்கே எவரும் இல்லை என்பது நம் சோகோல்ட்-கவிகளுக்கு வரப்பிரசாதம் தான்.

ஈழத்து எழுத்தாளர்கள் தமக்குள்ளே முந்தைய தலைமுறை ஈழத்து எழுத்தாளர்கள் பற்றியோ, சக எழுத்தாளர்கள் பற்றியோ என்ன விரிவாக எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்தால் வசைகளையும் மேம்போக்கான விமர்சங்களையும் தான் நோக்க இயல்கிறது.

இன்று, ஈழ இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளான மு.தளையசிங்கம்,  கா.சிவத்தம்பி,  எஸ்.பொன்னுத்துரை,  அ.முத்துலிங்கம்,  சு.வில்வரத்தினம் , சேரன்,  தெளிவத்தை ஜோசப் உடற்பட ஏராளமானோர் பற்றி மிகவிரிவாக எழுதியவர் ஒருவராக ஜெயமோகனே இருக்கிறார். ஆழியாள், அனார், பஹீமா ஜகான் போன்றவர்களின் கவிதைகளைப் பற்றி எழுதிய‘மறுபக்கத்தின் குரல்கள்’ அளவுக்குக் கூட பெண்-கவிகள் சார்ந்து இன்னும் விரிவான கட்டுரைகள் ஈழத்திலிருந்து எழுதப்படாமலே இருக்கின்றன. இங்கே சோம்பேறிகளும்வறட்டுப்பிடிவாதம் கொண்டவர்களும்தான் அதிகம். முன்முடிவுகளுடன் வாசிப்பு எதுவும் இன்றி வசைகளை உமிழ்பவர்கள்; அல்லது நுண்ணுணர்வுகளால் கனவை விரித்து வாசித்துப் புரிந்துகொள்ள முடியாதவர்கள்.

இலக்கியம் சார்ந்த அறிவுச்செயற்பாடு என்பது ஈழ இலக்கியப் பரப்பில் கிஞ்சித்தும் இல்லை என்பதே வரலாற்று உண்மையாக இருக்கிறது. இலக்கியம் என்பது தனி அறிவுத்துறையாகவும், அறிதல் முறையாகவும் பார்ப்பதன் அவசியத்தை மீண்டும் மீண்டும் சொல்லவேண்டியிருக்கிறது. இந்த உரையாடல்களை அடித்துத் திறக்கும்போது மூர்க்கமான அரசியல் விவாதங்கள் அவற்றை விழுங்கிவிடுகின்றன.

ஈழத்தில் இருக்கும் வாசகர்களும் சரி, எழுத்தாளர்களும் சரி அநேகமானவர்கள் கருத்துத்தளத்தில் செயல்படுபவர்கள். எந்தத் தடிமனான புத்தகத்தைக் கொடுத்தாலும் அதைச் சுருக்கி ஒற்றைத் வரியில் புரிந்துகொள்ள முயல்பவர்கள். தங்களது அறிவுக்கு எட்டிய வகையில் ஓர் கருத்துநிலையை உருவாக்கி அதுதான் இந்தப்புத்தகம் சொல்லவருவதாக உருட்டியும் பிரட்டியும் நினைப்பவர்கள். இதையே புனைவு படைப்புகளுக்குள்ளும் செலுத்திப் பார்க்கிறார்கள். இறுதிவரை கவித்துவ தருணங்களையோ, சொல்லாமல் உணர்த்தும் உணர்வுகளையோ அகவயமாக புரிந்து கொள்ள இயலாதவர்கள். எனவே அவர்களால் இலக்கியத்தைப் புரிந்துகொள்ளவே இயல்வதில்லை. இறுதிவரை அரசியல் சரி, பிழை நிலைகளுக்குள்ளே முடங்கிவிடுகிறார்கள். நேரடியாகப் பேசும் கருத்து நிலைகளையே இலக்கியமாக நினைக்கிறார்கள். பெரும் துன்பம் தான்.

பார்த்தீனியம், ஜெப்பான பேக்கரி போன்றவை வெறும் அரசியல் காரணக்களுக்கா உடனடியாகப் பேசப்படுகின்றன. இலக்கிய தரத்தை அடைந்ததைப் போல பாவனை செய்து பிரகாசிக்கின்றன.  பின்னர் அந்தப் பிரகாசம் காலப்போக்கில் தானாகவே மங்கிச் செல்கின்றது. நல் இலக்கிய வாசகர்கள் இலக்கியம் என்பதற்குள்ளே அவற்றை பொருட்படுத்தப்  போவதில்லை. சிலகாலம் கழித்து எந்த இலக்கிய விவாதங்களிலும் அவை நினைவு கூறப்படப் போவதும் இல்லை. ஒற்றைப்படையான அரசியல் கருத்துகளை மிகையுணர்ச்சி கூட்டி எழுதப்பட்டு நாவலாகவே சிருஷ்டிகம் கொள்ளாதவை எப்படி நினைவில் நிக்கும். நாவல் என்ற விரிவுத் தன்மைக்குள் நுழையவே நுழையாதவை அவை. ஆனால், இவற்றை அவர்கள் ஈழத்தின் மானுட சாட்சியமாக முன் வைக்கிறார்கள். ஓர் புனைவை மானுடத்தின் சாட்சியமாக முன்வைப்பதில் இருக்கும் அடிப்படை வழுவே எழுத்தாளர்களுக்கும் சேர்த்து பலருக்கும் புரிவதில்லை. புனைவு என்பதே எழுத்தாளர் தன் தத்தளிப்பு சார்ந்து கண்டடையை எழுதும் அந்தரங்க வெளி. தன் உள உள்ளுணர்வு, தேடல், புரிதல், போதாமை ஊடக எழுந்துவருவது. அதில் கண்டடைவதை வாசகருக்கு உணர்தினாலே அந்த ஆக்கம் இலக்கிய ரீதியில் வெல்கிறது. அதுவொரு புனைவு என்ற ரீதயில் அதை தனி அறிதல் துறையாக எடுத்துக்கொண்டு விவாதிப்பதும் மதிப்பிடுவதுமே இலக்கியத்தில் செல்லுபடியாகும். அதை வரலாற்றின் உண்மையாக ஒருபோதும் வைக்க இயலாது. அது என்ன அரசியலை பேசினாலும் அதன் எல்லை மட்டுப்படுத்தப்பட்டதே. மற்றமையின் மற்றையை தரப்பை தன் உள்ளுணர்வாலும் ஆழ் உள்ளதாலும் நெருங்கிச் சென்று கனவை விரித்து எழுத முடியாதவையாக தொக்கி நிக்கும் ஆக்கங்களே பின்போர் சூழலில் ஈழத்தில் அதிகம் வெளியாகின்றன. அதனை விமர்சிக்கும் விமர்சகர்களும் வரலாற்றுத் தளத்தில் நின்று உண்மையைத் தேடுவதையே விமர்சனமாக நினைக்கிறார்கள் (இங்கு உண்மை என்று குறிப்பிடுவது தரிசனத்தை அல்ல) இதுவோர் படைப்பை அணுகும்முறை அல்ல என்பதை திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியுள்ளது. இந்த அரசியல் தளத்திலே விவாதம் செய்பவர்களுக்கு காசியானந்தன் தான் பெரும்கவியாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

ஈழத்தில் இந்த இலக்கிய நுண்ணுணர்வு இல்லாமல் போனதற்கு முக்கிய காரணம் தொடர்ச்சியாக இலக்கியம் சார்ந்து எழுதி கருத்துக்களை உருவாக்கி இலக்கிய இயக்கமாகவோ,சிந்தனைக்கூடமாக ஆக்கியவர்கள் என்று ஈழத்தில் எவரும் இல்லாமல் போனதே என்ற முடிவுக்கே இன்றைய தலைமுறை (இலக்கியப் பற்றும், தேடலும் உள்ளவர்கள்) வரவேண்டியுள்ளது. அ.முத்துலிங்கம், ஷோபாசக்தி போன்றவர்களிடம்கூட இந்தக் குறைபாட்டைச் சுட்ட முடியும். கைலாசபதி, சிவத்தம்பியின் மார்சிய விமர்சன முறையைக்கூட அவர்களின் மாணவர்கள் வளர்த்தெடுத்தார்களா என்ன? அந்தச் சிந்தனைப் பள்ளியிலிருந்து யார் யார் எழுத வந்தார்கள்?, எழுதுகிறார்கள்? ஈழத்திலிருந்து இவர்கள் (விமர்சன மரபு உள்ளது என்பவர்கள்) எவரைச் சுட்ட முடியும் என்றால் மௌனத்தைத்தான் பதிலாகச் சொல்ல வேண்டியுள்ளது.

மு.தளையசிங்கத்தின் அசல் சிந்தனைகளை விரிவாக்கியவர்கள் ஈழத்தில் யார்? இங்கே அதை அடுத்த தலைமுறையிடம் எடுத்துச்சென்று ஒரு சிந்தனை முறையாக வளர்த்தெடுத்தவர்கள் யார்? என்.கே மாகாலிங்கம் போன்றவர்களால் கூட அதைச் செய்ய முடியவில்லை. வெறுமனே மொழிபெயர்ப்பாளர்களாக மட்டுமே சுருங்க முடிந்தது. நம்மவர்களுக்கு அவற்றைப் புரிந்துகொள்ள ஆற்றலும் இல்லை, வளர்த்து ஓயாமல் எழுதியும் விவாதித்தும் அதனை ஓர் அறிவியக்கமாக எடுத்துச் செல்ல திறனும் கிடையாது என்பதையே வெட்கத்தைவிட்டுச் சொல்லவேண்டியுள்ளது.

இலக்கியம் சார்ந்த கருத்துருவாக்கங்களும், சிந்தனை முறைகளும் ஈழத்தில் உருவாகவே இல்லை (விதிவிலக்கு மு.தளையசிங்கம்). அதற்கு வாசிப்புப் பின்புலம் கொண்ட சிந்தனைவாதிகளும் இல்லை. வெறுமே வாய்சாடல் தான். அதன் பிரதிபலன்களைத் தான் இன்று பார்க்கிறோம். (மு.தலையசிங்கம் முன்னமே இதனை எதிர்வுகூறியிருந்தார்!)

இவர்களிடம் சென்று அடுத்த தலைமுறை யதார்த்தவாதத்தின் அழகியலுக்கும், இயல்புவாதத்தின் அழகியலுக்கும் இடையிலான வேறுபாட்டைப் பற்றி பேச இயலுமா? தேவகாந்தனின் அழகியல் இயல்புவாதத்திற்குள் வருமா என்று விவாதிக்க முடியுமா என்ன? நாவலுக்கும் நெடுங்கதைக்கும் வித்தியாசம் தெரியாமல் ஈழ மூத்த எழுத்தாளர்கள் முகநூலில் விமர்சனம் என்ற பெயரில் “ஆறாவது அத்தியாயம் படித்தவுடனே புத்தகத்தை மூடிவைத்துவிட்டேன்; ‘நெஞ்சு கனக்குகிறது’ என்ற வகையில் டெம்பிளேட் பதிவுகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இதுதான் நம் முன்னோர்களின் இலக்கிய அறிவும் தெளிவும். கஷ்டம் தான்.

anojan

அனோஜன் பாலகிருஷ்ணன்

அதேபோல் நம் சூழலில் நடக்கும் இலக்கியக்கூட்டங்களில் இலக்கியம் சார்ந்து ஏதும் பேசப்படுகிறதா என்றால் அபூர்வமே, எல்லாமே அலுப்பூட்டக்கூடிய அரசியல் தான். சிலகாலம் முதல் ஓர் அமைப்பு கனடாவில் நடத்திய தேவகாந்தனின் “கலிங்கு” நாவல் விமர்சனக் கூட்டத்தை காணொளிப்பதிவாக இணையத்தில் பார்த்தேன். ஒரு விமர்சகர் தேவகாந்தனின் சிந்தனை என்பது “காவியகால கீழைத்தேயத் தத்துவங்கள் பண்பாடு மற்றும் சிந்தனைகளின் பின்னணியில் வளர்த்தெடுக்கப்பட்ட நவீனகால தமிழ் படைப்பாளிக்கு உரிய தனித்துவமான சிந்தனை” என்றார். நானும் நிமிர்ந்து முள்ளந்தண்டு சிலிர்க்கப் புதிதாக ஏதோ சொல்லப் போகிறார் என்று அமர்ந்தேன். ஆனால், அந்தச் சிந்தனை எப்படி படைப்பில் வெளிப்படுகிறது? அந்தச் சிந்தனையை எப்படி வரையறுக்கலாம் என்று ஒரு சுருக்கமான விளக்கத்தைக் கூட கொடுக்க முடியவில்லை. இறுதிவரை கமராவை பார்த்து வெட்கப்பட்டுக்கொண்டே பேச முடிந்தது அவரால்; என்னோடு சேர்ந்து இன்னும் ஏழு நபர்கள்தான் அந்தக் காணொளிப்பதிவைப் இன்றுவரை பார்த்திருக்கிறார்கள். இப்படியான மேம்போக்கான உரையாடல்களைப் பேசித்திரிந்தால் எப்படி அடுத்த தலைமுறை இவர்களிடம் இருந்து எதையாவது கற்றுக்கொள்ள முடியும்? உரைகளைக் கேட்க வருவார்கள்?

புலம்பெயர் தேசங்களில் ஆங்காங்கே பத்துபேர் கொண்ட இலக்கியக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. இளைய தலைமுறையே வர அஞ்சும் வகையில் சலிப்பூட்டக்கூடிய உரையாடல்களே நடைபெறுகின்றன. தத்தமது புத்தகங்களைத் தாங்களே பணம் கொடுத்து அச்சடித்துப் பத்துப்பத்துப் புத்தகமாக நான்கு நாடுகளில் வெளியீடு செய்தால் போதும் என்பதுதான் இங்கிருக்கக் கூடியவர்களின் இலக்கிய இலட்சியம். ஏதாவது ஒரு சீண்டல் நடந்தால் கண்டன அறிக்கை எழுதிவிட்டு முகநூலில் கையெழுத்து வைக்க ஆள்பிடிப்பது. இதைத்தான் இலக்கிய இயக்கமாக நினைக்கிறார்கள். சமகால இலக்கியம் சார்ந்து இவர்களிடம் என்ன வாசிப்பும் தெளிவும் இருக்கிறது என்பதை நினைக்கவே கடும் வேடிக்கையாக இருக்கிறது. கூறுவது போல ‘வாழையடி வாழையாக என் வாசகர்கள் வருவார்கள் அவர்களுக்காகவே எழுதுகிறேன்’ –  என்பதற்கு இணங்க ஈழ இலக்கியம் சார்ந்த சலிப்பில் இருந்துவிடுபட்டு எழுத எதிர்காலம் நோக்கியே சிந்திக்க வேண்டியுள்ளது. அவர்களுக்காகவே இக்கட்டுரையை எழுத வேண்டியுள்ளது. ஒரு மறுப்பின் குரல் இருக்கத்தான் வேண்டும். இல்லையெனில் வரப்போகிறவர்களுக்கு இவர்கள் சொல்லும் வசைகளும் திரிபுகளுமே வரலாறாகிவிடும். இலக்கிய இயக்கத்தில் நம் முன்னோடிகளில் இருந்து கருத்துக்களைப் பெற்று நம் சிந்தனையை பெருக்கிக் கடந்து செல்லவேண்டும். ஆனால், ஈழத்தில் அடுத்த தலைமுறை முன்னைய தலைமுறை மிதித்துத்தான் செல்ல வேண்டியுள்ளது என்பது துரதிர்ஷ்டவசமானது. ஆனால், வேறு வழியில்லை.

-அனோஜன் பாலகிருஷ்ணன்-

 

 

https://www.jeyamohan.in/119092#.XIlhWi-nxR4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.