Jump to content

2019 ஐ.பி.எல். ரி-20 தொடர் செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.பி.எல். ரி-20 தொடர்: அணிகளில் பல மாற்றங்கள்!

IPL-1.jpg

இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின், அடுத்த கட்டத்துக்கான தயார்படுத்தல்கள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இத்தொடர் குறித்த புதிய செய்திகள் குறித்து அறிந்துக் கொள்ள இரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்த நிலையில், இத்தொடரில் இடம்பெற்றுள்ள அணிகளில், மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பல செய்திகள் வெளிவந்துள்ளன. அந்த மாற்றங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்,

கடந்த தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷிவம் மவி, கம்லேஷ் நகர்கோடி ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.

ஆனால் தற்போது இருவரும் காயம் அடைந்துள்ளனர். இதனால் இந்த தொடரில் அவர்கள் இருவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெறவில்லை.

இதற்கு பதிலாக ரஞ்சி கிண்ண தொடரில், சிறப்பாக பந்து வீசிய கேரளாவைச் சேர்ந்த சந்தீப் வாரியர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும், அவுஸ்ரேலிய கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஹர்திக் பாண்ட்யா, காயம் காரணமாக அணியில் இருந்து விலகினார். இதனால் அவர் ஐ.பி.எல். தொடரில் விளையாடு சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது அவர் உடற்தகுதி பெற்றுவிட்டதனால், அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களம் இறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெல்லி கேப்பிட்டலஸ் அணியின் ஆலோசகராக, இந்திய அணியின் முன்னாள் தலைவரான சௌரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.

நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர், மார்ச் 23ஆம் திகதி முதல் மே மாதம் 19ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 17 போட்டிகள், 8 நகரங்களில் நடைபெறுகின்றன.

இந்த ஐ.பி.எல். தொடரில், சென்னை சுப்பர் கிங்ஸ், பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், மும்பை, இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ரோயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் 4 போட்டிகளில் விளையாடுகின்றன. இதில் டெல்லி கேபிடல்ஸ், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மட்டும் 5 போட்டிகளில் விளையாடுகின்றன. ஒவ்வொரு அணியும் 2 போட்டிகளை சொந்தமாநிலத்திலும், 2 போட்டிகளை வெளிமாநிலத்திலும் விளையாடுகின்றன. டெல்லி கேபிடல்ஸ், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 3 போட்டிகளை வெளிமாநிலத்தில் விளையாடுகின்றன.

இதற்கிடையில், இத்தொடரின் முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி முதல் போட்டி மார்ச் 23ஆம் திகதி சென்னையில் நடைபெறுகின்றது. இதில் நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ஏப்ரல் 5ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டுள்ள போட்டி அட்டவணையின் இறுதிப் போட்டியில், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் பெங்களூரில் மோதவுள்ளன.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 11 ஐ.பி.எல். தொடர்களில் ராஜஸ்தான் ரோயல்ஸ், டேக்கன் சார்ஜஸ், சன்ரைசஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் தலா ஒருமுறையும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இரண்டு முறைகளும் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா மூன்று முறைகளும், சம்பியன் கிண்ணங்களை ஏந்தியுள்ளன.

 

http://athavannews.com/ஐ-பி-எல்-ரி-20-தொடர்-அணிகளில்/

 

 

Link to comment
Share on other sites

  • Replies 106
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2019: 5 முக்கிய வீரர்களுக்கு இந்த ஐபிஎல் கடைசி சீசன்?

ஐ.ஏ.என்.எஸ்புதுடெல்லி
5-playersjpg

ஐபிஎல் அணிகளில் பல்வேறு அணிகளைச் சேர்ந்த 5 முக்கிய வீரர்களுக்கு இந்த சீசன் கடைசியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

12-வது ஐபிஎல் சீசன் வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. கடந்த 11 சீசன்களாக ஏராளமான வீரர்கள் பல்வேறு அணிகளில் வந்துள்ளார்கள், வெளியே சென்றுள்ளார்கள். ஆனால், சில வீரர்கள் மட்டுமே நீண்டகாலமாக அணியில் தொடர்ந்து வருகின்றனர். ஆனால், வயது மூப்பு, களத்தில் பிரகாசிக்க முடியாமை,  இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டிய கட்டாயம் போன்ற காரணங்களால் 5 முக்கிய வீரர்களுக்கு இந்த சீசன் கடைசி சீசனாக இருக்கலாம்.

யுவராஜ் சிங்

 

-yuvraj-singh-nets-ptijpg

 

டி20 கிரிக்கெட் போட்டிகளின் நாயகன் என்று யுவராஜ் சிங்கை குறிப்பிடலாம். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரே ஓவரில் 6 சிக்ஸர் அடித்த யுவராஜ் சிங்கின் காட்டடியை இன்னும் யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.

ஐபிஎல் போட்டிகளில் கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து யுவராஜ் சிங் விளையாடி வருகிறார். கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே வாரியர்ஸ், ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் அணி, என பல்வேறு அணிகளில் விளையாடியுள்ளார். ஆனால், கடந்த இரு சீசன்களாக யுவராஜ் சிங்கின் பேட்டிங் திறமையை கேள்விக்குள்ளாகி வருகிறது. 

இந்த சீசனில் ஏலத்தில் யுவராஜ் சிங்கை எடுக்க யாரும் தயாராக இல்லை என்ற நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.ஓரு கோடிக்கு விலைக்கு வாங்கியது. இந்த முறை 37 வயதாகும் யுவராஜ் சிங் தனது பேட்டிங் திறமயை நிரூபிக்காவிட்டால், இந்த சீசன் அவருக்கு கடைசியாக அமையலாம்.

ஷேன் வாட்ஸன்

ஆஸ்திரேலியாவின் 37 வயது வீரர் ஷேன் வாட்ஸன். பந்துவீச்சு, பேட்டிங் இரு துறைகளிலும் சிறப்பாகச் செயல்படக்கூடியவர். கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து 2015-ம் ஆண்டுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த வாட்ஸன், அதன்பின் ஆர்சிபி அணியிலும், கடந்த இரு ஆண்டுகளாக சிஎஸ்கே அணியிலும் உள்ளார்.

கடந்த ஆண்டு சீசனில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்று 15 ஆட்டங்களில் 555 ரன்கள் குவித்து, 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் வாட்ஸன். சிஎஸ்கே அணிக்கு அதிரடியான தொடக்கத்தை அளிப்பதில் வாட்ஸன் பங்கு முக்கியம். ஆனால், இந்த சீசனில் அவருக்கு 38 வயதாகிறது என்பதால், அடுத்த ஆண்டு சீசனில் வாட்ஸன் பங்கேற்பது சந்தேகம் என ஆஸி. ஊடங்கள் தெரிவிக்கின்றன.

shane-watson-bcjpg

 

360 டிகிரி வீரர்

தென் ஆப்பிரிக்க முன்னாள் வீர் ஏபி டிவில்லியர்ஸ் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து ஐபிஎல் அணிகளில் விளையாடி வருகிறார். தொடக்கத்தில் 2008 முதல் 2012-ம் ஆண்டு வரை டெல்லி டேர்டெவில்ஸ் அணியிலும் 2013 முதல் ஆர்சிபி அணியில் தவிர்க்க முடியாத வீரராக டிவில்லியர்ஸ் வலம் வருகிறார்.

சிறந்த விக்கெட் கீப்பர், 360 டிகிரி கோணத்திலும் மைதானத்தில் பந்துகளை விரட்டி அடிக்கும் வல்லவமை படைத்தவர் என்று டிவில்லியர்ஸ வர்ணிக்கப்பட்டாலும், வயது முக்கியமான காரணியாக இருக்கிறது. தனிவீரராக டெய்லன்டர்களுடன் சேர்ந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார் டிவில்லியர்ஸ்.

ஆனால், ஆர்சிபி அணியில் இளமைக்கும், துடிப்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதனால்தான் ஜெய்பூரில் நடந்த ஏலத்தில் அனுபவம் வாய்ந்த வயது முதிர்ந்த வீரர்களுக்கு பதிலாக இளம் வீரர்களை  ஏலத்தில் எடுத்தனர். 

தற்போது 37 வயதாகும் டிவில்லியர்ஸ் அடுத்த ஆண்டு ஏலத்தில் அணியில் இருந்து நீக்கப்படலாம் என்ற சமிக்ஞையை அணி நிர்வாகம் காட்டிவிட்டது. ஆதலால், சிறப்பாக விளையாடினாலும் டிவில்லியர்ஸ்க்கு இந்த சீசன் கடைசியாக இருக்கும் எனத் தெரிகிறது.

அதிரடி வீரர் கெயில்

யுனிவர்ஸல் பாஸ் என்று தன்னைதானே கூறிக்கொள்ளும் மேற்கிந்தியத்தீவுகள் வீரர் கிறிஸ் கெயில். இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 111 இன்னிங்ஸ்களில் விளையாடி 3,994 ரன்கள் சேர்த்து மிரமிப்பை ஏற்படுத்தி வருகிறார். கடந்த 2011 முதல் 2013ம் ஆண்டுவரை கெயிலின் பேட்டிங் உச்ச கட்டத்தில் இருந்து, உச்ச ஃபார்மில் இருந்தார். இந்த 3ஆண்டுகளில் கெயின் பேட்டிங் சராசரி 60 ஆக உயர்ந்திருந்தது.

gaylejpg

 

ஆர்சிபி அணிக்காக கெயில் விளையாடியபோதெல்லாம், தனிவீரராக களத்தில் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற ஆட்டங்களும இருந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பேட்டிங்கில் சொதப்பியதால், அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டு கடந்த 2018-ம் ஆண்டு கழற்றிவிடப்பட்டார். 

ஆனால், கெயிலை கிங்ஸ்லெவன் பஞ்சாப் விலைக்கு வாங்கியது. கடந்த சீசனிலும் சில போட்டிகளில் சிறப்பாக விளையாடிய கெயிலுக்கு அடுத்த ஆண்டு  40 வயதாகிறது. ஆதலால், வயதுமூப்பை காரணமாகக் கொண்டு கிங்ஸ் லெவன் அணியும் அடுத்த சீசனில் கெயிலை கழற்றிவிடும். மேலும், கெயிலும் இந்த ஆண்டோடு கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விலகப் போவதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்ரான் தாஹிர்

தென் ஆப்பிரிக்காவின் உணர்ச்சிமிகு சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர். 37 வயதான தாஹிர் டி20 போட்டியில் நம்பர்ஒன் பந்துவீச்சாளராக இருந்து வருகிறார். இம்ரான் தாஹிருக்கும் 40 வயதாகிறது என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்.

தற்போது சிஎஸ்கே அணியில் இடம் பெற்று சிறப்பாக பந்துவீசி வரும் இம்ரான் தாஹிர் அடுத்த ஆண்டு ஏலத்தில் இருந்து கழற்றிவிடப்பட அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. 

ஏனென்றால், இந்த ஆண்டு ஏலத்தில்அதிகமான மாற்றங்களைச் செய்யாத சிஎஸ்கே அணி நிச்சயம் அடுத்த சீசன் ஏலத்தின் போது ஏராளமான மாற்றங்களைச் செய்ய காத்திருக்கிறது. ஆதலால், வயது மூப்பின் அடிப்படையில் இம்ரான் தாஹிருக்கு இது கடைசி சீசனாக அமையலாம்.

 

 

https://tamil.thehindu.com/sports/article26597822.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.பி.எல். முதல் போட்டியில் சி.எஸ்.கே.யின் அதிரடி முடிவு

12 ஆவது ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டித் தொடர் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், முதல் போட்டியில் நடப்பு சம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோயல் சேஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

csk.jpg

இப் போட்டி சென்னை சேப்பாக்கம், சிதம்பரம் மைதானத்தில் இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், இப் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது. 

இந்த நிலையில் ஐ.பி.எல். முதலாவது ஆட்டத்தின் டிக்கெட் மூலம் கிடைக்கும் வருமானத்தை காஷ்மீரின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் தோனி, இராணுவத்தில் கெளரவப் பொறுப்பில் உள்ளதனால், நலநிதிக்கான இந்த காசோலையை அவர் வழங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

http://www.virakesari.lk/article/52377

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12 ஆவது ஐ.பி.எல். திருவிழா நாளை ஆரம்பம் : நீங்கள் அறியாத விடயங்கள் இதோ !

(ஜெ.அனோஜன்)

12 ஆவது ஐ.பி.எல். இருபதுக்கு - 20 கிரிக்கெட் திருவிழாவானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை சனிக்கிழமை கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.

ipl1.jpg

இம்முறை ஐ.பி.எல். தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ஷிரியாஸ் ஐயர் தல‍ைமையிலான டெல்லி கெப்டல்ஸ், அஸ்வீன் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப், தினேஸ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ், விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபத் ஆகிய எட்டு அணிகள் களமிறங்குகின்றன.

ipl.jpg

இந் நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை , ஐ.பி.எல். போட்டிக்கான முழுமையான லீக் அட்டவணையை அண்மையில் அறிவித்ததுடன் ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி ஆகியவற்றின் போட்டி நேர அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தது.

இந்தியாவிலுள்ள எட்டு கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறவுள்ள 12 ஆவது ஐ.பி.எல். தொடரில் மொத்தமாக 60 போட்டிகள் இடம்பெறவுள்ளன. 

95355651_cricket-xlarge_trans_NvBQzQNjv4

12 ஆவது ஐ.பி.எல் தொடர் நாளை 23 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்த 60 போட்டிகளைக் கொண்ட தொடரில் 56 லீக் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

லீக் போட்டிகளின் நிறைவில் இறுதிச் சுற்றுக்கான முதலாவது தகுதிகாண் போட்டியும் நீக்கல் போட்டியும் இறுதிச் சுற்றுப் போட்டிக்கான 2 ஆவது தகுதிகாண் போட்டியும் இடம்பெற்று 12 ஆவது ஐ.பி.எல். தொடருக்கான இறுதிப் போட்டி இடம்பெறும்.

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வர‍ை இடம்பெற்ற ஐ.பி.எல். தொடரின் சாதனைகள் பின்வருமாறு ;

* அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி மும்பை இந்தியன்ஸ் 

மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 171 போட்டிகளை எதிர்கொண்டு 97 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.

* அதிக தோல்விகளை பதிவு செய்த அணி டெல்லி கெபிடல்ஸ்

டெல்லி கெபிடல்ஸ் அணி இதுவரை 161 போட்டிகளை எதிர்கொண்டு 91 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

* அதிக ஓட்டங்களை பெற்ற அணி ரோயல்ஸ் செலஞ்சர்ஸ் பெங்களூர்

ரோயல்ஸ் செலஞ்சர்ஸ் அணி புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியின்போது 5 விக்கெட்டுக்களை இழந்து 263 ஓட்டங்களை குவித்தது.

* குறைந்த ஓட்டங்களை பெற்ற அணி ரோயல்ஸ் செலஞ்சர்ஸ் பெங்களூர்

ரோயல்ஸ் செலஞ்சர்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியின் போது அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 49 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

* அதிகபடியான வெற்றியிலக்கை துரத்தியடித்த அணி (chases) ராஜஸ்தான் ரோயல்ஸ்

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி கடந்த 2008 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை துரத்தி அடித்தது (217).

* குறைந்த வெற்றியிலக்கையும் அடையாது தோல்வியடைந்த அணி கிங்ஸ் லெவன் பஞ்சப்

கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 116 ஓட்டங்களை குவித்தது. 117 ஓட்டம் என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 92 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

* அதிக ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி மும்பை இந்தியன்ஸ் 

மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 145 ஓட்டத்தினால் வெற்றி பெற்றது.

* அதிக ஓட்டங்களை விளாசிய வீரர் சுரேஷ் ரய்னா

சுரேஷ் ரய்னா 172 இன்னிங்ஸுக்களில் விளையாடி, 4 ஆயிரத்து 985 ஓட்டங்களை குவித்துள்ளார்.

* ஒரு இன்னிங்ஸில் கூடுதாலான ஓட்டங்களை பெற்ற வீரர் கிறிஸ் கெய்ல்

கிறிஸ் கெய்ல் 2013 ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் ஆட்டமிழக்காது 175 ஓட்டங்களை குவித்தார்.

* அதிக ஆறு ஓட்டங்களை விளாசிய வீரர் கிறிஸ் கெய்ல்

கிறிஸ் கெய்ல் 111 இன்னிங்ஸ்களில் விளையாடி 292 ஆறு ஓட்டங்களை விளாசித் தள்ளியுள்ளார்.

*  ஒரு இன்னிங்ஸில் கூடுதலான ஆறு ஓட்டங்களை விளாசிய வீரர் கிறிஸ் கெய்ல்

கிறிஸ் கெய்ல் 2013 ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் 17 ஆறு ஓட்டங்களை விளாசித் தள்ளியுள்ளார்.

* வேகமாக சதம் விளாசிய வீரர் கிறிஸ் கெய்ல் 

கிறிஸ் கெய்ல் 2013 ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் 30 பந்துகளில் சதம் விளாசினார்.

* வேகமாக அரைசதம் விளாசிய வீரர் கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுல் கடந்த 2018 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் 18 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

* துடுப்பாட்ட சராசரியில் முன்னிலையில் உள்ள வீரர் ரஸல்

இவரது சராசரி 177.29 ஆகும்.

* அதிக விக்கெட்டுக்களை எடுத்த வீரர் லசித் மலிங்க

மலிங்க 2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் 110 இன்னிங்ஸ்களில் விளையாடி 154 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

* ஒரு இன்னிங்ஸில் குறைந்த ஓட்டங்களை கொடுத்து அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர் சொஹைல் தன்வீர் 

கடந்த 2008 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய தன்வீர் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 14 ஓட்டங்களை கொடுத்து 6 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

* பந்து வீச்சு சராசரியில் முன்னிலையில் உள்ள வீரர் ஆண்ட்ரூ டை

2017 - 2018 காலப் பகுதியில் பஞ்சாப் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிக்காக ஆண்ட்ரூ டை மொத்தமாக 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவரது சராசரி 16.36 ஆகும்.

* அதிக ஓட்டமற்ற பந்து வீச்சுக்களை (Dot ball) பரிமாற்றிய வீரர் ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங் 145 போட்டிகளில் பந்து வீசி ஆயிரத்து 128 பந்துளுக்கு எவ்வித ஓட்டமும் வழங்காது கட்டுப்படுத்தியுள்ளார்.

* அதிக ஓட்டமற்ற ஓவர்களுக்காக (maiden over)பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட வீரர் பிரவின் குமார்

பிரவின் குமார் 119 போட்டிகளில் விளையாடி பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட அவர், மொத்தமாக 14 ஓவர்களுக்கு ஓட்டங்கள் வழங்காது கட்டுப்படுத்தியுள்ளார்.

* முதல் ஹெட்ரிக் எடுத்த வீரர் பாலஜி

சென்னை அணிக்காக விளையாடிய பாலாஜி கடந்த 2008 ஆம் ஆண்டு பஞ்சாப் அணியுடனான போட்டியில் மூன்று விக்கெட்டுக்களை அடுத்தடுத்து வீழ்த்தி ஹெட்ரிக் சாதனை படைத்தார்.

* அதிக பிடியெடுப்புகளை எடுத்த வீரர் சுரேஷ் ரய்னா

சுரேஷ் ரய்னா 95 பிடியெடுப்புக்களை எடுத்துள்ளார்.

http://www.virakesari.lk/article/52486

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று தொடக்கம்; சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் பலப்பரீட்சை

மு.யுவராஜ்சென்னை
ipl-t20JPG

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் 12-வது சீசன் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவானது வரும் மே 12-ம் தேதி வரை சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, மொஹாலி, ஜெய்ப்பூர், டெல்லி, மும்பை ஆகிய 8 நகரங்களில் நடைபெறுகிறது.

இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், பெங்களூரு ராயல் சேலஞ்

சர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோதுகின்றன.

தொடக்க நாளான இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது. கடந்த சீசனில் அதிக வயதான வீரர்களை உள்ளடக்கிய அணி என விமர்சிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இரு ஆண்டுகள் தடைக்குப் பின்னர் திரும்பிய நிலையில் சாம்பியன் பட்டம் வென்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தது.

‘அப்பாக்களின் ஆர்மி’ என செல்லப் பெயருடன் அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு 37 வயது ஆகிறது. ஆல்ரவுண்டரான ஷேன் வாட்சனும் 37 வயதை கடந்தவர்தான். டுவைன் பிராவோ 35 வயதையும், டு பிளெஸ்ஸிஸ் 34 வயதையும், அம்பதி ராயடு, கேதார் ஜாதவ் ஆகியோர் 33 வயதையும் எட்டியவர்கள். சுரேஷ் ரெய்னா 32 வயதை விரைவில் எட்ட உள்ளார்.

சுழற்பந்து வீச்சாளர்களான இம்ரன் தகிர் 39 வயதையும், ஹர்பஜன் சிங் 38 வயதையும் எட்டிய போதிலும் தங்களது அனுபவத்தால் ஆட்டத்தின் போக்கை எந்த சூழ்நிலையிலும் மாற்றும் திறன் கொண்டவர்கள். இவர்களுடன் கரண் சர்மா, மோஹித் சர்மா ஆகியோரும் 30 வயதை எட்டிவிட்டனர்.

கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்றதால் சாதிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தங்களது அனுபவத்தால் நிருபித்துக்காட்டினர். பங்கேற்ற அனைத்து தொடர்களிலும் அரை இறுதியில் கால்பதித்த ஒரே அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான். 

இம்முறையும் அதே வீரத்துடன் களம் காண்கிறது சிங்கத்தின் கர்ஜனையை லோகோவாக கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ்.

விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பெயரளவில் பெரிதாக பேசப்பட்டாலும் இதுவரை அந்த அணி ஒருமுறை கூட பட்டம் வென்றதில்லை. பெங்களூரு அணிக்கு 8 ஆண்டுகளாக கேப்டனாக இருந்து வரும் விராட் கோலி பேட்ஸ்மேனாக மட்டையை சுழற்றுவதில் எந்தவித குறையையும் வைக்கவில்லை என்றாலும் கூட கேப்டனாக அணிக்காக ஒருமுறைகூட கோப்பையை வென்று கொடுக்காதது விமர்சனங்களையும் எழுப்பாமல் இல்லை.

இன்றைய ஆட்டத்தைப் பொறுத்தவரையில் சிறப்பாக பந்து வீசும் அணியும், நெருக்கடியான சூழ்நிலையை திறம்பட கையாளும் அணியே வெற்றியை வசப்படுத்தும். ஏனெனில் இரு அணியிலும் ஆட்டத்தின் போக்கை எந்த நேரத்திலும் மாற்றக்கூடிய திறன் உள்ள வீரர்கள் உள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் தேர்வுக்கு பரிசீலனையில் உள்ளதால் இன்றைய ஆட்டத்தில் உயர்மட்ட திறனை வெளிப்படுத்த முயற்சிக்கக்கூடும். அதேவேளையில் பெங்களூரு அணியில் உமேஷ் யாதவும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறும் வகையில் சிறந்த திறனை வெளிப்படுத்தக்கூடும்.

தொடக்க விழா கிடையாது

ஐபிஎல் தொடரின் தொடக்க விழா வழக்கமாக பிரம்மாண்டமாக நடத்தப்படும். ஆனால் பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் இறந்தனர். இதனால் ஜபிஎல் போட்டியின் பிரம்மாண்ட தொடக்க விழாவை பிசிசிஐ  ஏற்கெனவே ரத்து செய்திருந்தது.

மேலும் தொடக்க விழாவுக்காக ஒதுக்கப்படும் தொகை புல்வாமா தாக்குதலில் இறந்த இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் எனவும் பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்த வகையில் சுமார் ரூ.20 கோடியை பிசிசிஐ வழங்கக்கூடும் என தகவல் வெளியாகியிருந்தது. இந்த தொகையின் ஒரு பகுதி இன்றைய ஆட்டத்தின்போது, ராணுவ உயர் அதிகாரிகளிடம் வழங்கப்படக்கூடும் என தெரிகிறது.

அணிகள் விவரம்

சென்னை சூப்பர் கிங்ஸ் 

மகேந்திர சிங் தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன், டு பிளெஸ்ஸிஸ், முரளி விஜய், கேதார் ஜாதவ், சேம் பில்லிங்ஸ், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஷோரே, சைதன்யா பிஷ்னோய், ரிதுராஜ் கெய்க்வாட், டுவைன் பிராவோ, கரண் சர்மா, இம்ரன் தகிர், ஹர்பஜன் சிங், மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்குர், மோஹித் சர்மா, கே.எம்.ஆஷிப், டேவிட் வில்லி, தீபக் ஷகார், என்.ஜெகதீசன்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

விராட் கோலி (கேப்டன்), டி வில்லியர்ஸ், பார்தீவ் படேல், மார்கஸ் ஸ்டாயினிஸ், ஷிம்ரன் ஹெட்மையர், ஷிவம் துபே, நேதன் கவுல்டர் நைல், வாஷிங்டன் சுந்தர், உமேஷ் யாதவ், யுவேந்திர சாஹல், மொகமது சிராஜ், ஹென்ரிச் கிளாசென், மொயின் அலி, காலின் டி கிராண்ட்ஹோம், பவன் நெகி, டிம் சவுதி, அக் ஷ்தீப் நாத், மிலிந்த் குமார், தேவ்தத் படிக்கல், குர்கீரத் சிங், பிரயாஸ் ரே பர்மான், குல்வந்த் கேஜ் ரோலியா, நவ்தீப் ஷைனி, ஹிமாத் சிங்.

நேரம்: இரவு 8

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

நேருக்கு நேர்

சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இதுவரை ஐபிஎல் தொடரில் 23 ஆட்டங்களில் மோதி உள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளது. 7 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் பெங்களூரு அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்ந்தது இல்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது பெரும்பாலான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து சமநிலை பெற்றுள்ளது. பெங்களூரு அணியில் இடம் பெற்றுள்ள சில வெளிநாட்டு வீரர்கள் சீசன் முழுவதும் விளையாட முடியாத நிலை உள்ளது. அந்த அணியின் ரிஸ்ட் ஸ்பின்னரான யுவேந்திர சாஹல் கடந்த சீசன்களில் அணியின் துருப்பு சீட்டாக இருந்து வந்துள்ளார். இம்முறையும் அவர், எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவால் தரக்கூடும்.

சிஎஸ்கே சார்பில் நிதி

புல்வாமா தாக்குதலின்போது இறந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கும் விதமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையிலான போட்டியின் மொத்த டிக்கெட் விற்பனை தொகை வழங்கப்பட உள்ளது. இதனை இந்திய ராணுவத்தில் கவுரவ லெஃப்டினென்ட் கர்னலாக  உள்ள தோனி, ராணுவ உயரதிகாரிகளிடம் வழங்க உள்ளார்.

 

https://tamil.thehindu.com/sports/article26616789.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, புலவர் said:

link please

 

crictime.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IPL 2019: கோஹ்லியின் படையை வீழ்த்தியது டோனியின் படை

CSK-vs-RCB-1st-Match-IPL-2019.jpg

2019 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் இலகுவாக வெற்றிகொண்டது.

சென்னை,  சிதம்பரம் மைதானத்தில் ஆரம்பமான குறித்த போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி களதடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பெங்களூர் அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கட்டுக்களை இழந்து தடுமாறியது. இதன் காரணமாக அந்த அணி 17.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 70 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அந்த அணி சார்பில் அதிகபட்சமாக பார்தீ பட்டேல் 29 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் சென்னை அணி சார்பில் ஹர்பஜன் சிங் மற்றும் தாஹீர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் 71 என்ற இலகுவான வெற்றியிலக்கினை நோக்கித் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி ஆரம்பத்தில் பெங்களூர் அணி பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சுக்குத் தடுமாறியது. இதில் ஷேன் வொட்சன் ஓட்டங்கள் எதுவுமின்றி ஆட்டமிழந்தார்.

இதையடுத்து நிதானமாக துடுப்பெடுத்தாடிய சென்னை அணி  17.4 ஓவர்களில்  3 விக்கெட்டுகளை இழந்து தனது வெற்றியிலக்கை அடைந்தது.

சென்னை அணி சார்பில் அம்பதி ராயுடு 28 ஓட்டங்களையும் சுரெஷ் ரெய்னா 19 ஓட்டங்களையும், கேதர் யாதவ் 13  பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் பெங்களூர் அணி சார்பில் ஷாகல், மொயின் அலி மற்றும் மொகம்மட் ஷிராஜ் ஆகியோர் தலா ஒவ்வாரு விக்கெட்டை கைப்பற்றினர்.

 

http://athavannews.com/ipl-2019-முதல்-போட்டியில்-சென்ன/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் நாளான இன்று இரு ஆட்டங்கள்

 

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் இன்று இரண்டாம் நாளான இரு போட்டிகள் இடம்பெறவுள்ளன. 

ipl.jpg

அதன்படி இன்று மாலை 4.00 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டனில் இடம்பெறவுள்ள போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதவுள்ளன.

srh.jpg

கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணியில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய முன்னாள் ஐதரபாத் அணியின் தலைவர் டேவிட் வார்னருக்கு கடந்த ஆண்டு ஐ.பி.எல். இல் விளையாட தடை விதிக்கப்பட்டது. 

சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்கு மார்ச் 28 ஆ திகதி‍ வரை தடை காலம் நீடித்தாலும் கிளப் போட்டிகளில் அவர் விளையாட தகுதியானவராகவே இருக்கிறார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தோள்பட்டையில் ஏற்பட்ட உபாதை காரணமாக கேன் வில்லியம்சன் இந்தப் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவர் இப் போட்டியில் விளையாடாது போனால் அவருக்குப் பதிலாக அணியின் உப தலைவர் புவனேஷ்வர் குமார் அணியை வழநடத்துவார். 

மறுமுணையில் கொல்கத்தா அணியானது தினேஷ் கார்த்திக் தலைமையில் களமிறங்கவுள்ளது. கொல்கத்தா அணியின் முன்னாள் தலைவர் கம்பீர் இந்த ஐ.பி.எல். தொடரில் உள்வாங்கப்படாமையின் காரணமாக அணியின் தலைமைப் பொறுப்பு தினேஷ் கார்த்திக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. 

அத்துடன் கொல்கத்தா அணியானது சொந்த ஊரில் ஐதராபாத் அணியை சந்திக்கவுள்ளதனால் போட்டி சுவாரஷ்யமாக இருக்கும். 

இவ்விரு அணிகளும் இதுவரை 15 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஐதராபாத் அணி 6 போட்டிகளிலும், கொல்கத்தா அணி 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இதேவேளை இன்றிரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் ஆரம்பமாகும் மற்றொரு போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரோயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன.

mi.jpg

இத் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி டெல்லி கெப்பிட்டல்ஸ் என்ற பெயர் மாற்றத்துடன் களமிறங்குகின்றது.

இவ் விரு அணிகளும் இதுவரை 22 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் இரு அணிகளும் தலா 11 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/52573

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றி

A70I2214.jpg

ஐ.பி.எல் தொடரின் இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சண்ரைசஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைவர் தினேஸ் கார்த்திக் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.

இதற்கமைய துடுப்பெடுத்தாட களமிறங்கிய சண்ரைசஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அந்த அணி சார்பில் அதிகபட்சமாக டேவிட் வோர்னர் 85 ஓட்டங்களையும், தமிழக வீரர் விஜய் சங்கர் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து 182 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களை பெற்று 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் ரசல் அதிகபட்சமாக 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.

 

http://athavannews.com/கொல்கத்தா-நைட்ரைடர்ஸ்-அண/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பமே அமர்க்களம்: மும்பை அணிக்கு அதிர்ச்சி அளித்தது டெல்லி அணி!

286992-720x450.jpg

கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் தொடர், தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கப்பிட்டல்ஸ் அணியும் மோதின.

மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய டெல்லி கப்பிட்டல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக ரிஷப் பந்த் ஆட்டமிழக்காது 78 ஓட்டங்களையும், கொலின் இங்ரம் 47 ஓட்டங்களையும், ஷிகர் தவான் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் மிட்செல் மெக்லினெகன் 3 விக்கெட்டுகளை பெற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து, 214 என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 19.2 ஓவர்கள் நிறைவில் 176 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி, 37 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக யுவராஜ் சிங் 53 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் இசாந் சர்மா மற்றும் கார்கிஸோ ரபாடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 27 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 7 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 78 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ரிஷப் பந்த் தெரிவுசெய்யப்பட்டார்.

 

http://athavannews.com/ஆரம்பமே-அமர்களம்-மும்பை/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ் கெயில் அதிரடி – Kings XI Punjab அணிக்கு த்ரில் வெற்றி!

9S6A7519.jpg

2019ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரின் 4வது போட்டியில் Kings XI Punjab அணி 14 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

Rajasthan Royals மற்றும் Kings XI Punjab அணிகளுக்கிடையிலான இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Rajasthan Royals அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதற்கமைய துடுப்பெடுத்தாட களமிறங்கிய Kings XI Punjab அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அந்த அணி சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் கெயில் 79 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதனைத்தொடர்ந்து 185 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய Rajasthan Royals அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை பெற்று 14 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது.

அந்த அணி சார்பில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 69 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்திருந்தார்.

 

http://athavannews.com/கிறிஸ்-கெயில்-அதிரடி-kings-xi-punjab-அ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீண்டிப் பார்த்த டெல்லிக்கு பதிலடி கொடுத்த சி.எஸ்.கே

சீண்டிப் பார்த்த டெல்லிக்கு பதிலடி கொடுத்த சி.எஸ்.கே

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

DMIPL_2626.jpg

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் ஐந்தாவது போட்டி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்றிரவு 8.00 மணிக்கு ஜெய்பூரில் ஆரம்பமானது.

DMIPL_1617.jpg

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை குவித்தது.

DMIPL_1821.jpg

148 ஓட்டம் என்ற வெற்றியிலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சென்னை அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வோட்சன் மற்றும் ராயுடு களமிறங்கி துடுப்பெடுத்தாடிவர 2 ஆவாது ஓவரின் நான்காவது பந்தில் சென்னை அணியின் முதலாவது விக்கெட் தகர்க்கப்பட்டது. 

அதன்படி ராயுடு 5 ஓட்டத்துடன் இஷான் சர்மாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து 2 ஆவது விக்கெட்டுக்காக ரய்னாவும், வோட்சனும் ஜோடி சேர்ந்தாடி அதிரடி காட்டினார். இதனால் சென்னை அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது.

முதல் 5 ஓவர்களில்  சென்னை அணி ஒரு விக்கெட்டை இழந்த நிலையில் 50 ஓட்டங்களை கடக்க 7 ஓவரை எதிர்கொண்ட வேட்சன் அந்த ஓவரின் 2,4 ஆவது பந்தில் இரண்டு ஆறு ஓட்டங்களை விளாசித் தள்ளினார். எனினும் அவர் அடுத்த பந்தில் ஸ்டம்ப் முறையில் 44 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (73 -2). 

இதேவேளை வேட்சனுக்கும் டெல்லி அணியின் பந்து வீச்சாளர்களான இஷான் சர்மா மற்றும் ரபடாவுக்குமிடையில் மைதானத்தில் முறுகல் நிலையே காணப்பட்டது. இருந்தபோதும் நடுவர் முறுகல் நிலையை முடிவுக்கு கொண்டு வந்தார்.

ஒரு கட்டத்தில் சென்னை அணி 10 ஓவர்களின் முடிவில் 97 ஓட்டங்களை பெற்றிருந்தது. ரய்னா 30 ஓட்டத்துடனும், யாதவ் 13 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். எனினும் 10 ஆவது ஓவரின் இரண்டாவது பந்தில் ரய்னா 30 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து சென்றார். 

DMIPL_2599.jpg

இதனால் சென்னை அணியின் மூன்றாவது விக்கெட் 98 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட தோனி ஆடுகளம் நுழைந்து, தான் எதிர்கொண்ட முதல் பந்தையே நான்கு ஓட்டமாக மாற்ற சென்னை அணி 100 ஓட்டங்களை கடந்தது.

ஒரு கட்டத்தில் சென்னை அணி 15 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 120 ஓட்டங்களை பெற்றது. தோனி 12 ஓட்டத்துடனும், கேதர் யாதவ் 22 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வர, வெற்றிக்கு 28 பந்துகளில் 30 ஓட்டம் தேவை என்ற நிலையில் இருந்தது.

இறுதியாக சென்னை அணி 19.4 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் டெல்லி அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது. ஆடுகளத்தில் தோனி 32 ஓட்டத்துடனும், பிராவோ 4 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

1K1L4400.jpg

பந்து வீச்சில் டெல்லி அணி சார்பில் அமித் மிஸ்ரா 2 விக்கெட்டையும், இஷான் சர்மா, ரபாடா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா 28 ஓட்டத்தால் இரண்டாவது வெற்றி

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 28 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.

A70I2700.jpg

12 ஆவது ஐ.பி.எலின் ஆறவாது போட்டி இன்று கொல்கத்தா எடன் கார்டன் மைதானத்தில் இரவு 8.00 மணிக்கு தினேஷ் கார்த்திக் தலைமையிலான  கொல்கத்தா கிநைட் ரைடர்ஸ் அணிக்கும், அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கிடையிலும் ஆரம்பமானது.

DQ0Q1088.jpg

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு கொல்கத்த அணியை பணிக்க, கொல்கத்தா அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 218 ஓட்டங்களை குவித்தது.

A70I2498.jpg

219 ஓட்டம் என்ற வெற்றியிலக்க‍ை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பஞ்சாப் அணியின் முதல் மூன்று விக்கெட்டுக்களும் 60 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன.

அதன்படி கே.எல்.ராகுல் ஒரு ஓட்டத்துடனும், கிறிஸ் கெய்ல் 20 ஓட்டத்துடனும், சப்ராஸ் கான் 13 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். 

இதைத் தொடர்ந்து 4 ஆவது விக்கெட்டுக்காக டேவிட் மில்லர் மற்றும் மாயங் அகர்வால் ஜோடி சேர்ந்து அதிரகாட்ட ஆரம்பித்தனர். இதனால் பஞ்சாப் அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது.

எனினும் 15 ஆவது ஓவரின் இரண்டாவது பந்தில் அகர்வால் மொத்தமாக 34 பந்துகளை எதிர்கொண்டு 6 நான்கு ஓட்டம், ஒரு ஆறு ஓட்டம் உள்ளடங்களாக 58 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (134 - 4).

தொடர்ந்து மண்டீப் சர்மா களமிறங்கி துடுப்பெடுத்தாட மறுமுணையில் அதிரடி காட்டி வந்த  மில்லர் 19.4 ஓவரில் மொத்தமாக 36 பந்துகளை எதிர்கொண்டு 5 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் அடங்களாக அரைசதம் கடந்தார்.

A70I2762.jpg

இறுதியாக பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது. ஆடுகளத்தில் மில்லர் 59 ஓட்டத்துடனும், மண்டீப் சர்மா 33 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

SA-i-KAT_-63686.jpg

SA-i-KAT_-63844.jpg

பந்து வீச்சில் கொல்கத்தா அணி சார்பில் ரஸல் 2 விக்கெட்டுக்களையும், லொக்கி பெர்குசன் மற்றும் சாவ்லா தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

RON_5938.jpg

 

 

நன்றி : ஐ.பி.எல். இணையத்தளம்

 

http://www.virakesari.lk/article/52834

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.பி.எல். ரி-20 தொடர்: பரபரப்பான போட்டியில் பெங்களூர் அணியை வீழ்த்தியது மும்பை அணி!

media-desktop-mumbai-indians-vs-royal-challengers-bangalore-2019-3-20-t-20-30-9-1-720x450.jpg

ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஏழாவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

பெங்களூர் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக ரோஹித் சர்மா 48 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் அதிகபட்சமாக யுஸ்வேந்திர சஹால் 4 விக்கெட்டுகளையும், மொஹமட் சிராஜ் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து, 188 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக ஏபி டிவில்லியர்ஸ் 70 ஓட்டங்களையும், விராட் கோஹ்லி 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜஸ்பிரிட் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்போட்டியின் போது, விராட் கோஹ்லி ஐ.பி.எல். போட்டிகளில் 5,000 ஓட்டங்களை கடந்தார். இதன் மூலம் ஐ.பி.எல். போட்டிகளில் 5,000 ஓட்டங்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

இதற்கு முன்னதாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா, 5,000 ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

அத்தோடு, இப்போட்டியில் பெங்களூர் அணிக்கு சற்று வெற்றி வாய்ப்பு இருந்த போதும், இறுதி ஓவரை வீசிய லசித் மாலிங்க இறுதி பந்தில் நோ போல் பந்தை வீசியதை களநடுவர் காண தவறியமை, அந்த அணிக்கு சற்று பாதகமாக அமைந்தது.

இதனால் இச்சம்பவம் தற்போது சமூகவலைதளங்களில் காரசாரமான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, மும்பை அணி சார்பில், 4 ஓவர்கள் வீசி 20 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜஸ்பிரிட் பும்ரா தெரிவுசெய்யப்பட்டார்.

 

 

http://athavannews.com/ஐ-பி-எல்-ரி-20-தொடர்-பரபரப்பா/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் - ஐதராபாத்

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 8 ஆவது லீக் ஆட்டத்தில் இன்றைய தினம் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ரோயல் அணியும் மோதவுள்ளன.

ipl.jpg

இந்தப் போட்டியானது இன்றிரவு 8.00 மணிக்கு ஐதராபாத் காந்தி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. 

ஐதராபாத் அணி கொல்கத்தாவுக்கு எதிரான தனது முதல் போட்டியில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 181 ஓட்டங்களை குவித்திருந்தது. எனினும் கொல்கத்தா அணி வீரர் ரஸலில் அதிரடி காரணமாக ஐதராபாத் தோல்வியைத் தழுவியது.

A70I1909.jpg

அத்துடன் கடந்த போட்டியில் காயம் காரணமாக ஆட்டத்தை தவிர்த்த கேன் வில்லியம்சன் இன்றைய போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமுணையில் துடுப்பாட்டத்தில் பலம் பொருந்திய அணியான ராஜஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் 14 ஓட்ட வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் தோல்வி அடைந்தது. 

9S6A7132.jpg

இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர் (69 ரன்) ‘மன்கட்’ முறையில் ரன்–அவுட் செய்யப்பட்டமை அணிக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இந்த சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில் அதை ஒதுக்கிவிட்டு வெற்றி வேட்டைய தொடங்கும் நோக்குடன் ராஜஸ்தான் இன்று களமிங்குகிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை ஒன்பது போட்டிகளில் மோதியுள்ளன. அதில் ராஜஸ்தான் அணி 4 போட்டிகளிலும், ஐதராபாத் அணி 5 போட்டிகளிலும் பெற்றிபெற்றுள்ளன.

ஐதராபாத் அணி காந்தி மைதானத்தில் இதுவரை 11 போட்டிளில் விளையாடியுள்ளது. அதில் 3 போட்டிகளில் மாத்திரம் வெற்றிபெற்றுள்ளது. 

அதேபோன்று ராஜஸ்தான் அணி 8 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மாத்திரம் வெற்றிபெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

நன்றி : ஐ.பி.எல். இணையளத்தளம்

 

http://www.virakesari.lk/article/52945

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வோர்னர் - பெயர்ஸ்டோவின் அதிரடியுடன் ராஜஸ்தானை வீழ்த்திய  ஐதராபாத்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வோர்னர் மற்றும் பெயர்ஸ்டோவின் அதிரடியான ஆரம்பத்துடன் ஐதராபாத் அணி 5 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

VRP8236.jpg

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 8 ஆவது லீக் ஆட்டம் இன்றிரவு 8.00 மணிக்கு பெங்களூரு ரஜிவ்காந்தி மைத்தானத்தில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ரோயல் மற்றம் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.

0U5A6432.jpg

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 198 ஓட்டங்களை குவித்தது.

GAZI_0188.jpg

199 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஐதராபாத் அணிக்கு அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான வோட்சன் மற்றும் பெயர்ஸ்டோ சிறந்த ஆரம்பத்த‍ை அதிரடியாக பெற்றுக் கொடுத்தனர்.

இதனால் ஐதராபாத் அணி முதல் ஐந்து ஓவர்களில் 54 ஓட்டத்தையும், 10 ஆவது ஓவரில் ஒன்பது ஓவரின் முடிவில் 104 ஓட்டங்களையும் விக்கெட் இழக்காது பெற்றனர். ஆடுகளத்தில் வோர்னர் 69 ஓட்டத்துடனும், பெயர்ஸ்டோ 34 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.

VRP8190.jpg

எனினும் 9 ஆவது ஓவரின் நான்காவது பந்து வீச்சில் டேவிட் வோர்னர் மொத்தமாக 37 பந்துகளில் 9 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் உள்ளடங்களாக 69 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற, அணித் தலைவர் கேன் வில்லியம்சன் ஆடுகளம் நுழைந்து துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க 10 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் பெயர்ஸ்டோ 28 பந்துகளில் 6 நான்கு ஓட்டம், ஒரு ஆறு ஓட்டம் அடங்களாக 45 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இதனால் ஐதராபாத்  அணி 11 ஓவர்களில் 2 விக்கெட்டுக்க‍ளை இழந்து 117 ஓட்டத்தை பெற்றது.

ஆடுகளத்தில் கேன் வில்லியம்சன் மற்றும் விஜய் சங்கர் 3 ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்து எதிர்கொண்ட பந்துகளில் வான வேடிக்கை காட்ட 14 ஆவது ஓவரின் முடிவில் ஐதராபாத் அணி 150 ஓட்டங்களை கடந்தது.

இந் நிலையில் அணித் தலைவர் 14 ஆவது ஓவரின் நான்காவது பந்தில் ஆட்டமிழந்து வெளியறினார். 15.3 ஆவது ஓவரில் விஜய் சங்கர் 15 பந்துகளில் 3 ஆறு ஓட்டம், ஒரு நான்கு ஓட்டம் அடங்களாக 35 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க மறுமுணையில் மணீஷ் பாண்டே அடுத்த பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார் (167-5).

இதையடுத்து ஆறவாது விக்கெட்டுக்காக யூசப் பத்தான் மற்றும் ரஷித் கான் ஜோடி சேர்ந்தாட 17 ஆவது ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களை ஐதராபாத் பெற்றதுடன், வெற்றிக்கு 18 பந்துகளில் 20 ஓட்டங்கள் என்ற நிலை இருந்தது. 

இறுதியாக ரஷத் கான் 19 ஆவது ஓவரை எதிர்கொண்டு ரஜாஸ்தான் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை அடித்து நொருக்கினார். அதனால் குஜராத் அணி 19 ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 201 ஓட்டங்களை குவித்தது.

ஆடுகளத்தில் ரஷத் கான் 15 ஓட்டத்துடனும், யூசப் பத்தான் 16 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

0U5A6508.jpg

பந்து வீச்சில் ராஜஸ்தான் அணி சார்பில் ஷிரியாஸ் கோபால் 3 விக்கெட்டுக்களையும், உனாட் கட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

GAZI_0781.jpg

நன்றி : ஐ.பி.எல். இணையத்தளம்

 

 

http://www.virakesari.lk/article/52993

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கட்டுக்களினால் வெற்றி

9S6A0667.jpg

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 9 ஆவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன் அணிக்கும், அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையிலான இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை குவித்தது.

மும்பை அணி சார்பில் ரோகித் சர்மா 32 ஓட்டத்தையும், குயின்டன் டீகொக் 60 ஓட்டத்தையும், ஹர்த்தீக் பாண்டியா 31 ஓட்டத்தையும், பெற்றுக்கொடுத்திருந்தனர்.

பந்து வீச்சில் பஞ்சாப் அணி சார்பில் மொஹமட் ஷமி, ஹார்டஸ் வில்ஜென் மற்றும் முருகன் அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், ஆண்ட்ரூ டை ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 177 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 177 ஓட்டங்களை பெற்று 8 விக்கட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

பஞ்சாப் அணி சார்பில் கிறிஸ் கெய்ல் 40 ஓட்டத்தையும், மாயங் அகர்வால் 43 ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்ததுடன், கே.எல்.ராகுல் 71 ஓட்டத்துடனும், டேவிட் மில்லிர் 15 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

 

http://athavannews.com/கிங்ஸ்-லெவன்-பஞ்சாப்-அணி-8/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் ஓவரில் கொல்கத்தாவை வீழ்த்தியது டெல்லி

A70I4439.jpg

ஐ.பி.எல். தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். தொடரில் நேற்று(சனிக்கிழமை) நடைபெற்ற 10 ஆவது லீக் போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக்கொண்டன.

இதில் நாணயச் சுழற்றியில் வெற்றி பெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி களத்தடுப்பைத் தெரிவு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியானது, ஆரம்பம் முதலேயே தடுமாற்றத்துடன் கூடிய துடுப்பாட்டத்தையே வெளிப்படுத்தி வந்தது.

அந்தவகையில், நிகில் நாய்க் 7 ஓட்டங்களிலும், கிறிஸ் லின் 20 ஓட்டங்களுடனும், உத்தப்பா 11 ஓட்டங்களுடனும், நிதிஷ் ராணா 1 ஓட்டத்திலும், சுப்மான் கில் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

எனினும், கொல்கத்தா அணித் தலைவர் தினேஷ் கார்த்திக், ஆந்த்ரே ரஸ்செல்லும் அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் கொல்கத்தா அணியானது 8 விக்கெட் இழப்புக்கு 185 ஓட்டங்களை குவித்தது.

இதனையடுத்து 186 எனும் வெற்றி இலக்கை நோக்கி டெல்லி அணி களமிறங்கியது.

அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

மேலும், ஷிகர் தவான் 16 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் ஸ்ரேயாஸ் அய்யர் 43 ஓட்டங்களுடனும், ரிஷாப் பான்ட் 11 ஓட்டங்களிலும் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

இதனால், 20 ஆவது ஓவரில் டெல்லி அணியானது 185 ஓட்டங்களை பெற்று போட்டியை சமநிலைப்படுத்தியது.

இதையடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க ‘சூப்பர் ஓவர்’ முறைமைக்கு இணங்க, டெல்லி அணியானது ஒரு விக்கெட்டுக்கு 10 ஓட்டங்களை எடுத்தது.

இதனைத் தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணியால் சூப்பர் ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 7 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இதனால் டெல்லி அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்றது.

 

http://athavannews.com/சூப்பர்-ஓவரில்-கொல்கத்தா/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

300 சிக்சர்கள் அடித்து கிறிஸ் கெயில் சாதனை

8 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை மொகாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும்  மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத்துள்ளது.

இதைத்தொடர்ந்து  177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும்  கிறிஸ் கெயிலும் இறங்கினர். அணியின் எண்ணிக்கை 53 ஆக இருந்தபோது கெயில் 24 பந்தில் 4 சிக்சர், 3 பவுண்டரியுடன் 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.

http://thinakkural.lk/article/26102

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது போட்டியிலும் தோல்வி

 

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 118 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.

VRP8894.jpg

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 11 ஆவது லீக் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் இன்று மாலை 4.00 மணிக்கு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையே ஆரம்பானது.

0U5A6968.jpg

இப் போட்டியில் ஐதராபாத் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் விளையாடாதாக் காரணத்தினால் தலைமைப் பொறுப்பை புவனேஷ்வர் குமார் ஏற்று அணியை வழி நடத்தினார்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு  அணித் தலைவர் விராட் கோலி களத்தடுப்பை தேர்வு செய்ய ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 231 ஓட்டங்களை குவித்தது.

VRP8711.jpg

ஐதராபாத் அணி சார்பில் பெயர்ஸ்டோ 114 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 100 ஓட்டங்களையும் அதிரடியாக பெற்றுக் கொண்டனர்.

232 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பெங்களூரு அணி அடுத்தடுத்த ஆட்டமிழப்பினால் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 118 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

VRP8972.jpg

பெங்களூரு அணி சார்பில் பார்தீவ் படேல் 11 ஓட்டத்துடனும், சிம்ரன் ஹெட்மேயர் 9 ஓட்டத்துடனும், விராட் கோலி 3 ஓட்டத்துடனும், வில்லியர்ஸ் ஒரு ஓட்டத்துடனும், மொயின் அலி 2 ஓட்டத்துடனும், சிவம் டூப் 5 ஓட்டத்துடனும், பிரயாஸ் பார்மன் 19 ஓட்டத்துடனும், உமேஷ் யாதவ் 14 ஓட்டத்துடனும், கிரேண்ட்ஹோம் 37 ஓட்டத்துடனும், சஹால் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.

GAZI_1677.jpg

பந்து வீச்சில் ஐதராபாத் அணி சார்பில் மொஹமட் நபி 4 விக்கெட்டுக்களையும், சண்டீப் சர்மா 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

0U5A7236.jpg

0U5A7095.jpg

இந்த தோல்வியின் மூலம் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொண்ட மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி : ஐ.பி.எல். இணையத்தளம்

 

http://www.virakesari.lk/article/53075

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.