Jump to content

பொள்ளாச்சி பாலியல் தாக்குதல்: ‘எனக்கு முன்பே தெரியும்’ என்கிறார் 'பார்' நாகராஜ் - பிபிசி கள ஆய்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
மு.நியாஸ் அகமது பிபிசி தமிழ்
 
  •  
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்படத்தின் காப்புரிமை Getty Images Image caption சித்தரிப்புக்காக

கடந்த ஆண்டே எனக்கு இது குறித்து தெரியும். என் நண்பரின் தங்கையும் பாதிக்கப்பட்டிருந்தார். நான் போலீஸிடம் புகார் அளிக்கலாம் என்று கூறினேன். ஆனால், பாதிக்கப்பட்ட பெண் தரப்பு ஒப்புக் கொள்ளவில்லை என்கிறார் பொள்ளாச்சியை சேர்ந்த நாகராஜ்.

பொள்ளாச்சி பாலியல் தாக்குதல் வழக்கு தொடர்பாக செய்து சேகரிக்க கடந்த நான்கு நாட்களாக பொள்ளாச்சி மற்றும் கோவையில் பல்வேறு தரப்புகளை சந்தித்தோம். அதாவது பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பு, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், போலீஸ் தரப்பு மற்றும் செயற்பாட்டாளர்கள் ஆகியோரை பிபிசி தமிழ் சந்தித்தது.

அவர்கள் பிபிசி தமிழிடம் கூறியவற்றை பல்வேறு தரப்புகளிடம் உறுதி செய்த தரவுகளை மட்டும் இங்கே தொகுத்து இரண்டு பகுதிகளாக வழங்குகிறோம்.

'சபரி அண்ணன் வீடா?'

பிபிசி தமிழ் செய்தியாளர் பொள்ளாச்சி சென்ற வெள்ளிக்கிழமை (மார்ச் 15) பாலியல் தாக்குதல் வழக்கில் கைதான சபரிராஜன் வீட்டில் சி.பி.சி.ஐ.டி விசாரணை மேற்கொள்கிறது என்பதை அறிந்து சபரிராஜன் வீடு இருக்கும் பகுதிக்கு சென்றோம். அவர் வீட்டிற்கு ஓர் ஆட்டோ ஓட்டுநரிடம் வழி கேட்டபோது, அவர், "யாரு சபரி அண்ணன் வீடா?" என்று கூறி சபரி வீட்டிற்கு வழி காட்டினார். அந்த நான்கு பேரையும் அவர்கள் இருந்த பகுதியில் மரியாதைக்குரியவர்களாகவே பார்த்தனர் என்பதை களத்தில் இருந்தபோது காண முடிந்தது.

சபரி Image caption சபரிராஜன்

பிபிசி தமிழ் செய்தியாளர் அந்த பகுதியில் விசாரித்தவரையில் அந்த நான்கு பேர் மீதும் அக்கம்பக்கத்தினர் பெரிதாக எந்த குற்றச்சாட்டுகளையும் சொல்லவில்லை. ஆனால், அவர்கள் வாழ்க்கைத்தரம் கடந்த சில ஆண்டுகளில் வியத்தகு வகையில் மாறியது என்பதை மட்டும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

என்ன நடந்தது?

பிப்ரவரி மாதம் 24ஆம் தேதியன்று பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலையத்தில் கல்லூரி மாணவி ஒருவர் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரின்படி, கடந்த பிப்ரவரி 12ஆம் தேதியன்று அந்த மாணவியின் நண்பரான சபரிராஜன் என்ற ரிஸ்வந்த் தன்னை பொள்ளாச்சியில் உள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றில் வந்து சந்திக்கும்படி அழைத்திருக்கிறார்.

பொள்ளாச்சி பாலியல் தாக்குதல்: 'எனக்கு முன்பே தெரியும்' - உண்மையை போட்டுடைக்கும் நாகராஜ்

அன்று மதியம் அந்தப் பெண் அங்கு சென்றபோது காருடன் நின்றிருந்த சபரிராஜன், அதில் ஏறும்படி கூறினார். காரை திருநாவுக்கரசு என்பவர் ஓட்டிச் செல்ல, பின் இருக்கையில் அந்தப் பெண்ணும் சபரிராஜனும் அமர்ந்துகொண்டனர். நடுவழியில் வசந்தகுமார், சதீஷ் ஆகிய இருவரும் ஏறிக்கொண்டனர்.

கார் ஓடிக்கொண்டிருக்கும்போதே, அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீடியோ எடுத்த அவர்கள், அவரிடமிருந்த 20,000 ரூபாய் மதிப்புள்ள தங்கச் சங்கிலியையும் பறித்துக்கொண்டனர். தாங்கள் விரும்பும்போதெல்லாம் தங்களை வந்து சந்தித்து, தாங்கள் சொல்லுபடியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும்; கேட்கும் போதெல்லாம் பணம் தர வேண்டும்; இல்லாவிட்டால் அந்த வீடியோவை இன்டர்நெட்டில் வெளியிடுவோம் என்று மிரட்டியவர்கள், நடுவழியில் அந்தப் பெண்ணை இறக்கிவிட்டனர் என அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி

அந்தச் சம்பவத்தை உடனடியாக அந்தப் பெண் வீட்டில் சொல்லவில்லை. ஆனால், அடுத்தடுத்து போன் செய்து அந்த இளைஞர்கள் பணம் கேட்கவும், தன் குடும்பத்தினரிடம் நடந்த சம்பவத்தைச் சொன்னார் அந்தப் பெண்.

இதையடுத்து திருநாவுக்கரசையும் சபரிராஜனையும் தேடிப் பிடித்த அந்தப் பெண்ணின் சகோதரர், இருவரையும் அடித்து உதைத்து நடந்த சம்பவங்களைக் கேட்டறிந்தார். அவர்களிடமிருந்த செல்போன்களையும் பறிமுதல் செய்தார். அந்த செல்போன்களில் மேலும் மூன்று பெண்களிடமும் இவர்கள் இதேபோல மிரட்டி எடுத்த வீடியோக்கள் இருந்தன. இதையடுத்தே பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

குற்றம்சாட்டப்பட்ட நால்வரில் ஒருவரான சபரிராஜன் என்ற ரிஷ்வந்த், இளம்பெண்களிடம் பழகி அவர்களைத் தனிமையான இடத்திற்கு வரவழைத்து கட்டாயப்படுத்தியோ, மயக்கியோ உறவுகொள்வதை மற்றவர்கள் மறைந்திருந்து வீடியோ எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கின்றனர். பிறகு அந்த வீடியோவையும் படங்களையும் காட்டி அந்தப் பெண்களிடமிருந்து பணம் பறித்துவந்துள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் தாக்குதல் சம்பவம் எப்படி வெளிவந்தது என்பதை பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரின் நண்பர் விவரிக்கிறார். அவர் கேட்ட கொண்டதன் பெயரில் அவரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

கண்ணன், "நண்பரின் சகோதரி, சிலர் தன்னை ஆபாசமாக படமெடுத்து மிரட்டுவதாக தனது வீட்டில் கூறுகிறார். அவர் எங்களிடம் சொன்னவுடன் பிப்ரவரி பதினாறாம் தேதி, நானும் சில நண்பர்களும் திருநாவுக்கரசு மற்றும் அவர்களின் நண்பர்களை அழைத்து மிரட்டி அடித்து அந்த வீடியோக்கள் குறித்து கேட்டோம். முதலில் மறுத்த அவர்கள் பின் ஒப்புக் கொண்டார்கள்." என்கிறார்.

இந்த வழக்கில் பிப்ரவரி 24ஆம் தேதியன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாள் புகார் கொடுத்த பெண்ணின் சகோதரரை திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜனின் நண்பர்கள் தாக்கினர். அதே நாளில் திருநாவுக்கரசு தவிர்த்த மூன்று பேர் அன்றைய தினம் கைதுசெய்யப்பட்டனர்.

இதற்குப் பிறகு, தாக்குதல் வழக்கில் பிப்ரவரி 26ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டு, செந்தில், பாபு, மணி, வசந்தகுமார் ஆகியோர் மீது வழக்கும் பதிவுசெய்யப்பட்டது. பிறகு இந்த வழக்கில் ஆளும் அ.தி.மு.கவின் உறுப்பினரான 'பார்' நாகராஜ் என்ற முத்துசாமி ஐந்தாவது நபராக சேர்க்கப்பட்டார். இதையடுத்து நாகராஜை கட்சியிலிருந்து அ.தி.மு.க. நீக்கியது.

'பண்ணை வீடா?'

பெண்கள் திருநாவுக்கரசின் பண்ணைவீட்டில்வைத்துதான் சிதைக்கப்பட்டதாக தொடர்ந்து பேசப்பட்டுவந்தது.

பொள்ளாச்சி

அந்த வீட்டை பார்வையிட்டோம். பொள்ளாச்சி சின்னாம்பாளையம் பகுதியில் இருக்கும் அந்த வீடு உண்மையில் அது பண்ணைவீடு இல்லை. சுற்றி நெருக்கமாக வீடுகள் உள்ளன.

பொள்ளாச்சி

அந்த பகுதியில் உள்ள சிலரிடம் பேசினோம், "பெரும்பாலும் அந்த வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள். எப்போதாவது கார் வருவதை பார்த்திருக்கிறோம். ஊடகங்களில் வெளிவந்தபின்புதான் இவ்வளவு பெரிய விஷயம் நடந்தது இப்போது எங்களுக்கே தெரியும்" என்கிறார்.

'அரசியலாக்காதீர்கள்'

பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக அவர்களின் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் நம்மிடம் பேசினார், "பாதிக்கப்பட்ட பெண், அவருக்கான நியாயம் என்று இந்த வழக்கு பார்க்கப்படாமல், முழுக்க முழுக்க அரசியலாக பார்க்கப்பட்டதால்தான் பாதிக்கப்பட்ட பல பெண்கள் முன் வந்து புகார் கொடுக்கவில்லை." என்கிறார்.

அவர், "புகார் தெரிவித்த பெண் மிக தைரியமாக இருந்தார். குடும்பமும் அவரை அரவணைத்தது. ஆனால், அவரின் அடையாளம் போலீஸார் வெளியிடப்பட்டபின்புதான் அவர் அச்சப்பட தொடங்கினார். கல்லூரி செல்வதையும் நிறுத்திவிட்டார்." என்கிறார்.

இந்த வழக்கில் ஆளும் கட்சி அழுத்தம் இருப்பதாக கூறப்படுவது குறித்து அவரிடம் கேட்டோம், இதனை மறுத்த அவர், இந்த வழக்கை மிக சரியான திசையில் சி.பி.சி.ஐ.டி விசாரித்து வருவதாக கோபாலகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இது குறித்து விளக்கம் பெற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால், அவரர் கைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

பொள்ளாச்சி

'எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை'

எனக்கும் இந்த பாலியல் வழக்கிற்கும் தொடர்பு இருப்பதாக தவறாக சித்தரிக்கிறார்கள். ஆனால், அதற்கும் எனக்கும் தொடர்பில்லை என்கிறார் நாகராஜ்.

பொள்ளாச்சி

அவர், "திருநாவுக்கரசுவின் அம்மாவும், சபரிராஜன் வீட்டிலிருந்தும் தங்கள் மகனை யாரோ கடத்தி வைத்து பணம் கேட்கிறார்கள் என்று என்னிடம் சொன்னார்கள். இது தொடர்பாக விசாரிக்கதான் நான் சென்றேன். சென்ற இடத்தில் என் நண்பர்களுக்கும் அந்த பெண்ணின் சகோதரரின் நண்பர்களுக்கும் கைகலப்பு ஆகிவிட்டது. என்ன என்று விசாரித்தபின்தான் எனக்கு முழு தகவல் தெரிய வந்தது. பின் நான் அதிலிருந்து விலகிக் கொண்டேன். பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனும் எனக்கு வேண்டப்பட்டவர்தான்." என்கிறார்.

மேலும் அவர், "இது இப்போது நடப்பதல்ல, கடந்த ஆண்டே என் நண்பரின் சகோதரியை சபரிராஜன் இவ்வாறாக ஆபாச படம் எடுத்திருக்கிறார். அந்த நண்பர் என்னிடம் கேட்டுக் கொண்டதால், இது குறித்து சபரிராஜனிடம் கேட்டேன். முதலில் மறுத்த அவர், பின் ஒப்புக் கொண்டார். அந்த போட்டோகளையும் அழித்தார். இது குறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கலாம் என்றேன். ஆனால், தன் சகோதரியின் வாழ்க்கை சிதைந்துவிட்யும் ஏன்று அவர் மறுத்துவிட்டார். சி.பி.சி.ஐ.டி விசாரிக்கும் போது நான் விரிவாக அவர்களிடம் சொல்வேன்." என்கிறார்.

தற்போது சி.பி.ஐக்கு மாற்றப்பட்டுவிட்டாலும், அந்த அமைப்பு முறைப்படி விசாரணையைத் துவங்க சில நாட்கள் ஆகும் என்பதால் தற்போதும் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரே வழக்கை விசாரித்துவருகின்றனர்.

இது அனைத்தையும் கடந்து இந்த ஊர் மக்களின் பொதுவான கவலை ஒட்டுமொத்தமாக தங்கள் ஊர் பெயர் கெட்டுவிட்டது என்பதுதான்.

https://www.bbc.com/tamil/india-47639466

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொள்ளாச்சி பாலியல் தாக்குதல்: “இருநூறு ஆண்டுகளாக தொடரும் துயரம்” (பகுதி 2)

மு.நியாஸ் அகமது பிபிசி தமிழ்
 
  •  
பொள்ளாச்சி பாலியல் தாக்குதல்: “இருநூறு ஆண்டுகளாக தொடரும் துயரம்”படத்தின் காப்புரிமை Getty Images Image caption சித்தரிப்புப் படம்

பொள்ளாச்சி பாலியல் தாக்குதல் குறித்து பிபிசி தமிழ் இரண்டு பகுதிகளாக கட்டுரைகளை வெளியிடுகிறது. முதல் பகுதியில் கள நிலவரம், வழக்கு ஆகியவை குறித்து விளக்கி இருந்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த சம்பவத்தின் பின்னால் உள்ள சமூக அரசியல் காரணிகள் குறித்து பேசி இருக்கிறோம்.

பொள்ளாச்சி பாலியல் தாக்குதல் தொடர்பாக பல்வேறு தளங்களில் செயல்படும் செயற்பாட்டாளர்களை சந்தித்து உரையாடினோம். அவர்கள், "இது வெறும் கிரிமினல் வழக்கு அல்ல. இதில் பல்வேறு அடுக்குகள் உள்ளன. அதை புரிந்து கொள்ள தவறினால் எதிர்காலம் சூனியமாகும்" என்றனர்.

'இருநூறு ஆண்டு துயரம்'

"இது ஏழு ஆண்டுகளாக நடக்கும் கொடுமை என்கின்றனர். என் அறிவுக்கு எட்டிய வரையில் இந்த துயரமானது இரு நூறு ஆண்டுகளாக இந்த பகுதியில் நடக்கிறது" என்கிறார் தமிழர் அவையம் என்ற அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் செ. இளங்கோவன்.

பல நூற்றாண்டாக ஒரு சமூகத்திடம் நிலம் இருந்தது. அந்த நிலம் இவர்களை வளமாக்கியது. அந்த வளம் இவர்களிடம் அதிகாரத்தை கொண்டு வந்து சேர்த்தது. அந்த அதிகாரத்தை கொண்டு அனைத்தையும் ஒரு சாரார் சூறையாடினர். குறிப்பாக பெண்களை. அந்த நிலக்கிழார் மனோபாவத்தின் நீட்சிதான் இந்த சம்பவம் என்கிறார் இளங்கோவன்.

மேலும் அவர், பொள்ளாச்சி பகுதியை வெறும் கேளிக்கை நகரமாக மாற்றியதும் இவ்வாறான சம்பவத்திற்கு காரணம் என்கிறார்.

இதையே செயற்பாட்டாளர் மற்றும் எழுத்தாளருமான வழக்கறிஞர் இரா. முருகவேளும் சுட்டிக்காட்டுகிறார்.

'கேளிக்கை விடுதிகளான மலைகள்'

இரா. முருகவேள், "இந்த பகுதியில் உள்ள மலைகளின் மக்களை அவர்களின் வசிப்பிடங்களிலிருந்து அப்புறப்படுத்தி முழுக்க முழுக்க இந்த பகுதியினை கேளிக்கை விடுதியாக மாற்றிவிட்டோம். இதன் காரணமாகதான் இங்கே இவ்வாறான குற்றங்கள் நடக்கிறது." என்கிறார்

"நுகர்வு கலாசாரத்தில் ஊன்றி நின்று வெறும் கேளிக்கைக்காக மட்டும் இந்த பகுதிக்கு வரும் ஒரு சாராருக்கு மேலும் மேலும் கேளிக்கை தேவைப்படுகிறது. அதற்காக பெண்கள் தேவைப்படுகிறார்கள். இந்த தேவைதான் திருநாவுக்கரசு போன்ற நபர்களையும் உருவாக்குகிறது." என்று பிபிசி தமிழிடம் தெரிவிக்கிறார் முருகவேள்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தை சேர்ந்த கீதா பிரகாஷ், "இந்த பாலியல் தாக்குதல் சம்பவம் வெளியே வந்தபின் இந்த பகுதியில் மட்டுமே மூன்று திருமணங்கள் நின்று இருக்கிறது. மேலும், பொள்ளாச்சி பெண்களை சித்தரித்து மிக மோசமான மீம்ஸுகள் பகிரப்படுகின்றன. இதனை எப்படி புரிந்து கொள்வது? பெண்கள் வெறும் நுகர வேண்டிய பண்டம் எனும் பார்வைதானே இதற்கு காரணம். இந்த பார்வையை மாற்றாமல் எதனையும் சரி செய்ய முடியாது. அந்த மாற்றம் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் நிகழ வேண்டும்" என்கிறார்.

எழுத்தாளர் சரவண சந்திரனும் திருமண விஷயத்தை சுட்டிக்காட்டியே தனது உரையாடலை தொடங்குகிறார்.

'யாருக்கு மணம் முடிக்க விரும்பி இருப்போம்?'

"இந்த பசங்க இவ்வாறான பிரச்சனையில் சிக்கவில்லை என்றால், இவர்களின் இந்த முகம் வெளியே தெரியவில்லை என்றால், இந்த சமூகம் இவர்களுக்குதானே தங்கள் வீட்டு பிள்ளைகளை மணம் முடித்து கொடுக்க முந்தி அடித்து இருக்கும்?" என்கிறார் எழுத்தாளர் மற்றும் இயக்குநர் சரவணன் சந்திரன்.

சரவணன் சந்திரன்படத்தின் காப்புரிமை facebook/saravanan.chandran.77

அவர், "நான் குறிப்பிட விரும்புவது இவர்களின் பொருளாதார வளத்தை. எப்படி பொருளாதார செழிப்பு வந்தது என எதையும் யோசிக்காமல், சொந்த வீடு இருக்கிறது, கார் இருக்கிறது என இவர்களுக்குதானே பெண் கொடுக்க அனைவரும் முந்தி அடித்திருப்பார்கள்." என்கிறார்.

"நான் யாரையும் குற்றஞ்சாட்டுவதற்காக இதனை சொல்லவில்லை. சமூக எதார்த்தத்தை சொல்கிறேன். எல்லாவற்றையும், எல்லோரையும் பொருளாதார வசதி கொண்டே மதிப்பிட தொடங்கிவிட்டோம். அதன் விளைவுதான் இவை. பணம் வேண்டும். பணம் மட்டுமே கெளரவம் அளிக்கும். அதற்காக எந்த வழியில் வேண்டுமானாலும் செல்லலாம் என்று அறம் பிறழந்து யோசிக்க தொடங்கியதன் விளைவுதான் இது" என்கிறார் சரவணன் சந்திரன்.

மேலும் அவர், "சந்தையை முழுக்க திறந்துவிட்டுவிட்டோம். அனைத்தும் எந்த தங்குதடையுமின்றி உள்ளே வர தொடங்கிவிட்டது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் நடந்தது, பத்து ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் நடந்தது. இப்போது பொள்ளாச்சியில் நடந்து இருக்கிறது. நாளை ஏதாவது குக்கிராமத்திலும் நடக்கலாம். ஒரு குற்றத்தை எப்படி அணுகுகிறோம் என்பதில் ஒரு சமூகத்தின் மேதமை அடங்கியிருக்கிறது. இந்த விவகாரத்தை எப்படி அணுகி தீர்வு தேடுகிறோம் என்பதில்தான் பல பிரச்னைகளுக்கான தீர்வு அடங்கி இருக்கிறது" என்கிறார்.

https://www.bbc.com/tamil/india-47648653

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.