Jump to content

கதை அல்ல பகிர்வு


Recommended Posts

மனிதநேயம் என்றபெயரில் புகழ்ச்சி தேடும் கரங்கள்
*******************************************
மாலைநேர வகுப்பிற்கு சென்றுவந்த மகள் 
அறைக்குள் சென்று  சத்தமாக அடித்து கதவைச் சாத்துவது கேட்டது,ஒருநாளும் இப்படி கோபப்படாதவள்,இன்றைக்கு ஏன் இப்படி  செய்கிறாள்..?

ஏதோ நடந்திருக்கு என்று மட்டும் ஊகிக்க முடிந்தது என்னால்,போய் கதவில் தட்டி எழில் கதவைத்திறவம்மா என்று கூப்பிட்டேன்,வெளியே வந்தவள் அம்மா எனக்குப் படிக்கப்போக சைக்கிள் தேவை. யாரிட்டயாவது வாங்கித்தாங்கோ என்று உங்களிட்ட கேட்டனா.,?எனக்கு பள்ளிக்கூடத்துக்கும் பின்னேர வகுப்புக்கும் நடந்துபோகத் தெரியாதா என்று கேட்டாள்..?

ஏன் பிள்ளை என்ன நடந்தது சொன்னால்த்தானே தெரியும் என்றேன்,எனக்கு சைக்கிள் தந்த போட்டோவை பத்திரிகையிலையும்,முகநூலிலையும் போட்டிருக்கினமாம்,நான் என்ன சின்ன பிள்ளையே. அவயல் உதவிசெய்த போட்டோவை முகநூலிலை  கட்டாயம் போடனுமா அம்மா..?என்றாள்,

வகுப்பிலை எல்லோரும் என்னை நக்கலடிக்கிறாங்கள். உன்ர போட்டோ பேப்பரில வந்திருக்கு.பார்த்தனியோ
என்று கேட்கிறாங்கள்,எனக்கு வெட்கமா இருக்குதம்மா,என்ர அப்பா இருந்திருந்தால்  நான் ஏன் அம்மா இப்படி மற்றவர்களிட்ட அவமானப்படுறன் என்று அழுதாள்,

நான் அவளை தேற்றினேன்,அவர்கள் உதவி செய்வதால் முகநூலில் போடுகிறார்கள் பிள்ளை,நாங்கள் கைநீட்டி வாங்குகிறோம்,சொல்லமுடியுமா..?என்ர பிள்ளைக்கு 15வயதாகிட்டுது,வளர்ந்திட்டால் போட்டோ எடுக்காதயுங்கோ முகநூலிலை பத்திரிகையிலை போடாதயுங்கோ என்று.

அப்படி போடுவதால் அவர்களிற்கும் ஒரு மனத்திருப்தி,உதவி செய்ய பணம் கொடுப்பவர்களும் நம்பிக்கையா உதவி செய்வினம் என்றுதான் போடினம் என்றேன்.ஏனம்மா அப்படி போடுபவர்கள் பெண் பிள்ளைகளின் போட்டோ போடும்போது முகத்தை மறைத்து போடேலாதா..?என்றாள் கோபமாக,

எனக்கும் மகளின் கண்ணீரைப்பார்க்க வேதனையாக இருந்தது.என்னம்மா செய்வது நாங்களும் மற்றவர்களைப்போல சுயநலத்தோடு குடும்பத்தை பார்த்துக்கொண்டு போராடாமல் இருந்திருந்தால் இன்று நீ கண்ணீர் சிந்தியிருக்க மாட்டாய்,என்ன செய்வது எம்மால் அப்படி வாழமுடியவில்லை. அதுதான் நாங்கள் இன்றுவரை கண்ணீரோடு வாழுகிறோம்,

என் கணவனோடு நாம் மகிழ்வாக வாழ்ந்த  வாழ்வின் இனிய நினைவுகளை மீட்டுப்பார்க்கிறேன்.......

நானும் என் கணவனும் போராளிகளாக இருந்தோம்.போராட்ட காலத்தில் எமக்கு திருமணம்பேசி செய்துவைத்தார்கள், திருமண பந்தத்தில் நாம் இருவரும் இணைந்துகொண்டோம்.

எமது மகிழ்வான வாழ்வின் அடையாளமாக இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள்.மகன் கருமுகிலன்.மகள் எழில்நிலா.

நாம் திருமணம் செய்திருந்தாலும் போராளிகளாகவே இருந்தோம்,பிள்ளைகளும் நன்றாக படித்தார்கள்,எமக்கு துணையாக கணவனின் நண்பர் ஒருவரின் குடும்பம் அருகில் இருந்தார்கள்,எமக்கு மிக ஆறுதலாக இருந்தார்கள்.

யுத்தம் அகோரமாகிக்கொண்டிருந்தது.இராணுவத்தினர் முன்நகர்ந்தபடி இருந்தார்கள்,எனது கணவன் களமுனையில் நின்றபடியால் வருவது குறைவாகவே இருந்தது,வட்டக்கச்சியில்தான்  நாங்கள் ஆரம்பத்தில் இருந்தோம்,இராணுவம் முன்நகர்ந்து வர வர ஒவ்வொரு இடமாக அருகில் இருந்த குடும்பத்தவர்களோடு தேவிபுரம்வரை சென்றோம்.

எனது மகளிற்கு தகப்பன்தான் எப்போதும் வேண்டும்,அப்பா எங்க அப்பா எங்க அப்பாவை வரச்சொல்லுங்கோ அம்மா என்று கூறியபடி இருப்பாள்,தேவிபுரம்வரை இடம்பெயர்ந்து போனதோடு நான் எனதுபோராட்ட பணிகளை நிறுத்தி பிள்ளைகளோடு நின்றுகொண்டேன்.

ஒருநாள் பயங்கரமான செல்லடி தொடங்கியது.இராணுவம் செல்மழை பொழிந்தான்,ஒரு சிறிய பங்கரில் பலபேர் ஓடிப்போய் இருந்தோம்,மூச்சுவிடக்கூட முடியாதநிலை,சனநெரிசலில் மூச்சு நின்றுவிடுவதுபோல் இருந்தது.

செல்அடித்து ஓய்ந்தபின் மரண ஓலம் வானைத்தொட்டுநின்றது.பலநூறு மக்கள் செல்தாக்குதலுக்கு இரையாகிப்போனார்கள்,பலநூறுபேர் காயமடைந்தார்கள்.எங்கும் அவலக்குரல்கள்,இறந்தவர்களை கண்ட இடமெல்லாம் கிடங்குவெட்டி அதற்குள் போட்டு மூடிவிட்டு அடுத்த இடத்திற்கு நகர்ந்தார்கள் மக்கள்,

இனிமேல் பங்கர் இல்லாமல் இருக்கேலாது என்று தெரிந்து, என் கணவனிடம் சொன்னேன்,எங்கு போனாலும் எனக்கும் பிள்ளைகளிற்கும் பங்கரை வெட்டித்தாங்கோ என்று.

அதேபோல் என் கணவனும் நான் எங்கு இடம்பெயர்ந்து சென்றாலும் பெரிய எண்ணை பரல்களை அடுக்கியும் பனம் குற்றிகளை போட்டும்  தான் தனிய நின்று பங்கர் அமைத்து தருவார்,

இராணுவம் முன்னோக்கி வந்து கொண்டிருந்தபடியால் வேறிடத்தில் நின்ற எனது கணவனிற்கு நான் முள்ளிவாய்க்கால் போகப்போகிறேன் ஒருக்கா வந்திட்டு போங்கோ என்று  தொலைத்தொடர்பு கருவியூடாக அறிவித்தேன்,

ஓடிவந்தவர் எமக்கு முள்ளிவாய்க்கால் பொதுச்சந்தைக்கு பின்னால ஒரு பனிச்ச மரத்தடிக்கு கீழ தான் தனிய நின்று பங்கர் அடிச்சு தந்திட்டு போனவர்,அதுக்குப்பிறகு ஒரு பத்துநாளாக எங்களைப்பார்க்க வரவும் இல்லை,

ஒழுங்கான சாப்பாடில்லை.பிள்ளைகள் இரண்டும் பசியில அம்மா பசிக்குது சாப்பாடுதாங்கோ பசிக்குது என்று கேட்டு அழுதபடி இருந்தார்கள்,

நான் தனிமரமாக நின்றேன்,என்ர பிள்ளைகளிற்கு சாப்பிடக் கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை,எல்லாமக்களின் நிலையும் இதேதான்,யாரிடம் போய்க்கேட்க முடியும் பசிக்குது என்று.?

மகள் பசியில அழத்தொடங்கினாள்.மகனிற்கு 7-வயதும்,மகளிற்கு 5வயதும்,எந்தத்தாய்தான் பிள்ளைகள் அழுவதை பார்த்துக்கொண்டிருப்பாள்.

ஒரு 50மீற்றர் தூரத்தில் நிறுவனங்களால் கஞ்சி காய்ச்சி கொடுக்கும் இடம் இருந்தது,பிள்ளைகள் இருவரையும் பங்கரிற்குள் விட்டுவிட்டு ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டுபோய் கஞ்சிவாங்க லைனில் நின்றன்,

அப்போதுதான் கஞ்சி காய்ச்ச தொடங்கியிருந்தார்கள்.எல்லோரும் கால்கடுகடுக்க நடுவெய்யிலுக்க நின்றம். இடைக்கிடை எல்லா இடமும் செல்லுகள் வந்து விழுந்தபடி இருந்தது,அந்த இடத்திலயே படுத்தெழும்பி நின்றம்,சரியான சனம்,இரண்டு மணித்தியாலம் பிடிச்சுது கஞ்சி வாங்குவதற்கு,

வாங்கிய கஞ்சியை கொண்டுவந்து பிள்ளைகளிற்கும் கொடுத்து நானும் கொஞ்சம் குடிச்சன்.சரியான சாப்பாடில்லாதத்தில காதும் அடைச்சுப்போய் இருந்தது,

நீண்ட நேரம் வெய்யிலுக்குள்ளும் நிண்டது, ஏலாம இருந்தபடியால் பங்கருக்க அப்படியே நித்திரையாபோனன்,யாரோ வான்மதி என்று கூப்பிடும் சத்தம் கேட்டது.

கண்விழித்துப் பார்த்தேன்,என் கணவன் நிற்பது தெரிந்தது,அவரின் முகம் என்றும் இல்லாதபோல வாடி இருப்பதை பார்த்தேன்.

அவரோட நின்ற நெருக்கமான போராளிகள் யாரும் வீரச்சாவோ தெரியாதென்று நினைத்துக்கொண்டு ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்கள் என்று கேட்டேன்.

எதுவும் கூறாமல் இருந்தார்,மீண்டும் கேட்டு வற்புறுத்தினேன்,பிள்ளைகள் சாப்பிட்டார்களா..?நீங்கள் சாப்பிட்டீங்களா என்று அன்போடு கேட்டார்,ஓம் சாப்பிட்டம்,நீங்கள் சாப்பிட்டீங்களா என்றேன்..?

அந்த பையில கொஞ்ச அரிசியும் பருப்பும் இருக்கு,அதை எடுத்து பிள்ளைகளிற்கு சமைத்து கொடுங்கோ.கஞ்சி வாங்க லைனில நிற்கிறீங்களாம் என்று என்னோட நின்ற மணிமாறன் கண்டிட்டுவந்து இந்த அரிசியையும் பருப்பையும் தந்தவன்,

அண்ணி கஞ்சி வாங்க லைனில நிற்கிறா உடன ஒருக்கா போங்கோ அண்ண என்டவன்,அதுதான் வந்தனான் என்றார் தலையை நிமிர்த்தாமல்,அவர் வேதனைப்படுகிறார் என்பது புரிந்தது.

நாளைக்கு சோறும் காய்ச்சி பருப்பையும் சமைச்சு பிள்ளைகளுக்கு கொடுங்கோ கவனமா இருங்கோ,நான் போகோனும்,பெடியல் சாப்பிடாம நிற்கிறாங்கள் நான்போறன் என்று கூறிவிட்டு பிள்ளைகளையும் கொஞ்சிப்போட்டு பங்கருக்க கவனமாக இருங்கோ என்றிட்டு போட்டார்,

மறுநாள் எழும்பி நேரத்தோட சோறும் காய்ச்சி,தனிய பருப்பை தண்ணில அவிச்சுப்போட்டு பிள்ளைகளிற்கு சாப்பிடக்கொடுத்திட்டு நானும் சாப்பிட்டு  பிள்ளைகளை பங்கருக்க இருக்கவிட்டிட்டு பக்கத்த இருந்த கிணத்தடிக்கு குளிக்கபோனன்,

ஆமிஅடிச்ச செல் ஒன்று திடீரென்று வந்து கிட்ட விழுந்திச்சு.உடன அந்த இடத்திலயே மண்ணுக்க விழுந்து படுத்தன்,எல்லா இடமும் மல்ரிசெல் அடிக்க தொடங்கினான்,ஒரு தடவை 40-50 செல் அடிப்பான்,

மக்கள் செறிவா வாழ்ந்த இடம் எல்லாம் செல்விழத்தொடங்கியது,எனக்கு என்ர பிள்ளைகள் முக்கியம்,எனக்கு என்ன நடந்தாலும் பறவாயில்லை.அடுத்த செல் விழுந்து வெடிச்ச உடன என்ர பிள்ளைகளிட்ட ஓடோனும் என்று நினைச்சபடி படுத்திருந்தன்,

அதுக்கிடையில என்ர பாலனுகள் இருந்த பங்கருக்க செல்விழுந்திட்டுது,குளிக்க வரும்போதும் என்ர மூத்த மகன் சொல்லித்தான் விட்டவன் அம்மா செல்லடி தொடங்கினா உடன ஓடிவாங்கோ பங்கருக்க என்று.

என் உடம்பெல்லாம் நடுங்கத்தொடங்கியது, பிள்ளைகளுக்கு ஏதும் ஆகக்கூடாதென்று நினைத்தபடி எழும்பி ஓடினேன், செல்பீஸ்கள் சிதறியபடி இருந்தது,எதையும் பொருட்படுத்தும் மனநிலையில் நான் இல்லை,வேகமாக ஓடிப்போனேன் என் பிள்ளைகளை கூப்பிட்டபடி,

நாங்கள் இருந்த பங்கள் சரிந்து கிடந்தது,பங்கர் வாசலும் தெரியேல,ஒரே புகைமூட்டம்,என்ர உயிர் இரண்டையும் காணேல,ஒருமாதிரி பரலுகள இழுத்துபோட்டுவிட்டு உள்ளே பார்த்தேன்,

பலபேர் உள்ளே கிடந்தார்கள்.செல்லடி தொடங்க எங்கட பங்கருக்க பக்கத்த இருப்பவர்கள் எல்லோரும் ஓடிவந்து இருப்பார்கள்,பங்கருக்கு மேலேயே செல் விழுந்திருந்தது,

என்மகளை கண்டுவிட்டேன், உடல் எல்லாம்  இரத்தம் வழிய கிடந்தாள்,மரக்குற்றிகளை இழுத்து வெளியே தள்ளிவிட்டு என் மகளை இழுத்து எடுத்தேன்,அம்மாச்சி அம்மாச்சி நோகுது  தூக்குங்கோ.என்ர அம்மா தூக்கு என்று கத்தியபடி இருந்தாள்,

உடல் முழுவதும் காயம்,அவள் இரத்தத்தில் தோய்ந்துபோய் இருந்தாள்.யாராவது ஓடிவாங்கோ என்ர பிள்ளையை காப்பாத்துங்கோ என்று கத்தியபடி அங்கும் இங்கும் ஓடித்திரிந்தேன்,

செல்லடி ஓயவில்லை.பயத்தில் யாரும் உதவிக்கு வரேல,என்ர மகன் என்ன ஆனான் என்று தெரியாது,நான் கத்திய சத்தம் பல மீற்றருக்கு கேட்டிருக்கும்,யாரும் உதவிக்கு வரேல,

அங்கும் இங்கும் ஓடுவதும் திரும்பி வந்து என்ர பிள்ளைக்கு மூச்சிருங்கா என்று பார்ப்பதுமாக இருந்தேன்,பக்கத்து பங்கருக்குள் இருந்தவர்களிடம் ஓடினேன்,அவர்கள் யாரும் வெளியில் வரவில்லை.அதன்பின் அருகில் போராளிகள் இருந்த தறப்பாள் கொட்டிலுக்கு ஓடினேன்,

யாராவது ஒருவர் உதவி புரிந்தால் என் மகனையும் தூக்கிவிடுவேன்,பங்கர் வாசலில் இருக்கும் பனம் குற்றிகளை தூக்க உதவி செய்யுங்கோ என்று மன்றாடியபடி ஓடித்திரிந்தேன்,

அங்கிருந்த போராளிகளில் பெரும்பாலானோர் பெரிய காயக்காறரும்,கண்பார்வை அற்றவர்களுமே,அக்கா நாங்கள் என்னக்கா செய்வது எங்களால ஏலாது.ஏலுமென்றால் உங்கட அவலக்குரல கேட்டிட்டு பேசாமல் இருப்பமாக்கா..?என்றார்கள்,

நான் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவித்தேன்,யாரிடம் போவது,பலர் ஏற்கனவே இடம்பெயர்ந்து முன்னக்கு சென்றவிட்டார்கள்.

ஓடிவந்து மகளை தூக்கி மடியில் வச்சு அழுதேன்.மூச்சுவருகுதா என்று அடிக்கடி இதயதுடிப்பைப் பார்த்தபடி இருந்தேன்,என் அவலக்குரலை கேட்கமுடியாது  பெரும் காயங்களோடு இருந்த போராளி ஒருவன் ஊன்றுகோலோடு வந்து அக்கா வாங்கோ என்னால ஏலுமான உதவி செய்றன் என்றான்,

அவனைப்பார்க்கவே பாவமாக இருந்தது.அந்தபோராளியின் உதவியோடு வாசலில் இருந்த மரக்குற்றிகள் இரண்டை அகற்றினேன்,செல் விழுந்ததில் இருந்து 30நிமிடத்தின் பின்பே மரக்குற்றிகளை அகற்றி என் மகனை தேடினேன்,

அப்போது ஒரு மூன்று (3 )வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் உடல் முழுவதும் இரத்தத்தோடு வெளியே ஓடிவந்தான்.வந்தவன் என் சட்டையை பிடித்தபடி அம்மா நெருப்பு சுட்டுப்போட்டுது தூக்கு தூக்கு என்று கத்தினான்,என்னைத் தூக்கு அம்மா தூக்கு என்று என் கையைப் பிடித்து அழுதான்.

எனக்கு அந்தச் சிறுவனை தூக்குவதா என்ர மகனை தேடுவதா..?என்ற மனநிலை.பலர் அந்த பங்கருக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்கள்,அதற்குள் காயக்காறரை ஏற்றும் வாகனம் வந்துவிட்டது,

பலர் வந்து மரக்குற்றிகளை தூக்கி இறந்த உடல்களை 
வெளியே எடுத்தார்கள்,ஒரு 30 உடல்கள் பங்கருக்குள் கிடந்தது,சிலர் காயங்களோடும் கிடந்தார்கள்,

என் மகளை காயங்களோடு முள்ளிவாய்க்கால் மருத்துவமனைக்கு ஏற்றினார்கள்,மகனின் உடலை பார்க்க துடித்தேன்.என்ர பிள்ளைக்கு காயம் எதுவும் இருக்ககூடாது என்று உள்ளநாட்டு தெய்வம் எல்லாத்துக்கும் நேர்த்தி வச்சன்,

ஆனால் தூங்கி பார்த்தவார்கள் இறந்த உடல்களோடே என் மகனின் உடலையும் வாகனத்துக்குள் போட்டார்கள்,ஓடிச்சென்று பார்த்தேன்,தலைப்பகுதி நசிந்தபடி இரத்தம் பிடரிபக்கத்தால் வழிந்தபடி இருந்தது.என்ர பிள்ளை என்னை விட்டிட்டு போட்டான் என்று கத்திஅழுதேன்,

என்ர இரண்டு குஞ்சுகளையும் பறிகொடுத்திட்டனே கடவுளே உனக்கு கண் இல்லையா..?இனிநான் உயிரோட இருந்துதான் என்னத்துக்கு, வாய்விட்டு அழுதேன்.என் கத்தல் சத்தம்தான் அந்த பகுதி எங்கும் கேட்டது.

என் சட்டையை பிடித்தபடி நின்ற சிறுவன் என்னைவிடவில்லை.அவன் குடும்பத்தவர்கள் அனைவரும் பங்கருக்குள் இறந்து விட்டார்கள்போல்,அவனை  யாரும் தேடவும் இல்லை.
என் பிள்ளைகளை பார்க்கவா அந்த சிறுவனை பார்க்கவா.?சிறுவனையும் தூக்கிக்கொண்டு ரக்ரர்பெட்டிக்க இருந்து முள்ளிவாய்க்கால் மருத்தவமனை போனேன்,

எப்படியாவது என்ர இரண்டு பிள்ளைகளையும் காப்பாற்றி தாங்கோ டொக்டர்,என்ர கணவன் பிள்ளைகளை கவனமா இருக்கசொல்லி எங்க போனாலும் பங்கர் வெட்டி தாறவர்,என்ர கணவனிற்கு நான் என்ன பதில் சொல்லுவன்.?

கடவுளே என்ர பாலனுகள் இரண்டையும் காப்பாற்றித்தா என்று அங்கும் இங்கும்
 ஓடியபடி இருந்தேன்.கண்ணாடிபக்கத்தால எட்டிப்பார்த்தேன் என் மகளிற்கு சேலைன் ஏறுவது தெரிந்தது.என்ர கடவுளே என்ர பிள்ளைகளை காப்பாத்து என்று அழுதபடி உள்ளே ஓடினேன்,போராளி மருத்துவர்கள் உள்ளே என்னை விடவில்லை,

அதற்குள் தகவல் அறிந்து என் கணவனும் வந்துவிட்டார்.என் கணவனிடம் ஓடிச்சென்று கால்களை பிடித்து அழுதேன்,என் பிள்ளைகளை காப்பாற்றேலாத பாவியா போனன். என்னை மன்னிச்சிடுங்கோ என்று அழுது புலம்பினேன்.என் கணவர் என்னைத் தேற்றினார்,

உள்ளே சென்றுவிட்டு வந்த என் கணவன் சோகமாக இருந்தார்,ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என்று ஊகித்தேன்,மகனிற்கு என்ன நடந்தது,தம்பிக்கு சுகமா..?உயிருக்கு ஒன்றும் இல்லைத்தானே  என்றேன்,எதுவும் கூறாது நிலத்தை பார்த்தபடி இருந்தார்.என்ர பிள்ளைக்கு என்ன நடந்ததென்று சொல்லுங்கோ என்று அழுதேன்,

தம்பி எங்களைவிட்டிட்டு போட்டான் என்று கூறினார்,

இல்லை என்ர பிள்ளை சாகேல,நான் குளிக்கபோகவும் தம்பி சொல்லித்தான் விட்டவன் அம்மா செல்வந்தால் உடன பங்கருக்க ஓடிவாங்கோ என்று.அம்மாக்கு எதுவும் நடந்திடக்கூடாதென்று என்ரபிள்ள துடிச்சது,என்ர பிள்ளைக்கு ஒன்றும் நடந்திருக்காது,திரும்பப்போய் ஒருக்கா வடிவா பார்த்திட்டுவாங்கோ என்று துரத்திவிட்டேன்,

 என்ர பிள்ளையை இழந்திட்டன்,என் மூத்த ஆண்பிளைப்பிள்ளை என்னை விட்டிட்டு போட்டான்,நான் இனி அவனை இந்த ஜென்மத்தில் பார்க்கமுடியாது..?

என் கணவனில்தான் கோபம் வந்தது,நீங்கள் நேற்று வரச்சொல்லி கோல் எடுக்கேக்க வந்திருந்தால் நாங்கள் வட்டுவாகல் போயிருப்பம்,என்ர பிள்ளை தப்பி இருப்பான்,எல்லாம் உங்களாலதான்.

உங்களுக்கு கடமைதானே முக்கியம்.எங்கள வட்டுவாகலில கொண்ட விட்டிருந்தால் என்ர பிள்ளை தப்பியிருக்கும்,நீங்கள் என்ர பிள்ளையின்ர உடலைத்தாக்க வேண்டாம்,நீங்கள் உங்கட கடமையை பார்த்துக்கொண்டு போங்கோ,என்ர பிள்ளை செத்ததுபோல நானும் செல்லடிக்க நின்று சாகிறன் என்று அழுதேன்,

என் கணவர் என்னை தேற்றினார்,என்னால் எப்படி ஆறுதல் அடையமுடியும்..?அதற்குள் மறுதடவையும் செல்லடி தொடங்கியது,

சேலைன் ஏறிய படியே நான் மகளைத்தூக்கிக்கொண்டு  நடையாக வட்டுவாகலுக்கு கொண்டு சென்றேன் ,என் கணவர் என் மகனின் உடலை தூக்கிக்கொண்டு வந்தார்.

என் பின்னாலே என்சட்டையை  பிடிச்சபடியே பயம் அப்பியமுகத்தோடு அந்த சிறுவனும் வந்தான்.பெற்றோரை இழந்து காயத்தோடு நிற்பவனை எப்படி தனியே விட்டிட்டுவர முடியும்.? அவனையும் கூட்டிக்கொண்டு வட்டுவாகலுக்கு போனோம்,

எம்மை ஒரு றோட்டுகரை மரத்தடியில் இருக்கவிட்டிட்டு அருகில் இருந்தவர்களிடம் மண்வெட்டி வாங்கி கிடங்குவெட்டி ஒரு ஆலமரத்துக்குகீழ மகனை தாட்டார் என்கணவர்.

மகளின் உடல் நிலையும் மோசமாகவே இருந்தது,சிறுவனுக்கும் சிறுசிறு காயங்கள்,எனக்கும் சிறுகாயம்,என் கணவரே அவனிற்கு காயத்திற்கு துணிவைத்துகட்டினார்.அவனிடம் நாங்கள் எதுவும் கேட்கவில்லை,என்னத்தை கேட்பது..?

அவன் அம்மா  நோகுது நெருப்பு சுட்டுப்போட்டுது நோகுதென்று மட்டுமே கூறியபடி இருந்தான்,பீஸ்பட்டது பிள்ளைக்கு நெருப்புசுட்டதுபோல இருந்திருக்கு என்று ஊகித்தோம்,

என் கணவர் ஒரு நாள் எம்மோடு நின்றார்,மறுநாள் கூறினார் பெடியல் தனிய பாவங்கள் நல்ல சாப்பாடும் இல்லாம கஸ்ரபடுறாங்கள்.

இந்தநேரத்தில நான் உங்களோட நிற்கிறது சரியில்ல,நான் போறன் இரண்டு பேரையும் பாருங்கோ,பிள்ளை கவனம்,நான் போட்டுவாறன் என்றார்.எனக்கு என் கணவனை அனுப்புவது விருப்பம் இல்லை. அழுதேன் எங்களோடு நில்லுங்கள் எழில் உங்களைதான் தேடுவாள் என்றேன்.

 ஆமிகிட்டவந்தால் சனங்கள் ஆமிக்க போகேக்க சனங்களோட சனமா நீங்களும்  போங்கோ,என்னைப் பார்த்துக்கொண்டு நிற்கவேண்டாம்.நான் பார்த்துவருவன் என்றிட்டு என்னைப் பார்த்தார்,

அந்த பார்வையில் ஓராயிரம் ஏக்கங்கள் தெரிந்தது....

என்னை நம்பி வந்தவளை நாட்டின் கடமைக்காக நடுத்தெருவில் விட்டிட்டு போறன் என்றுதான் வேதனைப்படுறார் என்று புரிந்தது,ஆனால் எதுவும் செய்யேலாத நிலை.

நீயும் போராளி என்ர நிலையை புரிஞ்சுகொள்ளுவாய் என்று நம்புறன் என்டார்,உங்கட கடமையாலதான் என்ர பிள்ளையை இழந்தன்,இனியும் என்ன இருக்கு......நீங்கள் போங்கோ,கவனமா இருங்கோ என்றேன்.

 கவலைபடிந்த முகத்தோடு மகளை முத்தமிட்டவர் சென்றுவிட்டார்,அவர் தேசத்திற்கான கடமையைத்தேடிச் சென்றார்,நான் என் குடும்பத்தை இழந்து நின்றேன்,

இறுதிப் போரில் என் கணவனிற்கு என்ன நடந்ததென்று தெரியாமல் போனது,என் கணவனை கூட்டிவரவேண்டும் என்று 2009-05- 18ஆம் திகதி காலைவரை நின்றுவிட்டே வட்டுவாகல் ஊடாக இராணுவத்திடம் சரணடைந்தேன்,

என்மகனை போரால் இழந்தேன்,ஆனால் யுத்தம் தந்த பங்கரில் கிடைத்த மகனோடும் என்மகளோடும் வாழ்கிறேன்,உயிரிழந்த என் மகனின் பெயரான கருமுகிலன் என்றபெயரையே பங்கரில்  கிடைத்த மகனிற்கு வைத்தேன்,

மகன் சிறுவனாக என்னோடு வந்தபடியால் என்னையே அம்மா என்று 
அழைப்பான்,அவனிற்கு சிறுவயது சம்பவம் எதுவும் நினைவில் இல்லை,என் மகளும் காட்டிக்கொடுக்க மாட்டாள்.

தம்பியோடு பாசமாக இருக்கிறாள்.தேசத்தின் கடமையை நேசித்த படியால் என் மகனை தந்தை இழந்து நின்றார்,இன்று நான் இருவரையும் இழந்து வாழ்கிறேன்.

இன்று ஏனையோரை பார்க்கும்போது அவர்களைப்போல் இல்லாமல் நாம் நமது தேசத்தை அதிகமாக நேசித்துவிட்டோமா..?

 இன்று பல துயர்களை சுமக்கிறோம், மற்றவர்களைப்போல் நாமும் சுயநலத்தோடு வாழ்ந்திருக்கலாமா..?அப்படி எம்மால் வாழமுடிந்திருக்குமா..?என்று எண்ணத்தோன்றும்,

இன்றுவரை கணவனைதேடி நடைப்பிணமாக அலையும் என்அவலம் எப்போது ஓயும்...?புதிது
புதிதாய் கவலைகள் வந்தபடியே உள்ளது.

ஒரு உணவு பாசலை கொடுத்திட்டே இன்று கொடுக்கும்போது தாங்களும் நின்று போட்டோ எடுக்கிறார்கள்.முகநூலில் போடுகிறார்கள்,உதவி செய்கிறோம் என்ற பெயரில் உதவி செய்துவிட்டு பாலியல் தொல்லைகள் கொடுக்கிறார்கள்.

ஒரு தொழில் முயற்சியில் உதவிபெற்றபெண் தனியே நின்று சாதித்து நின்றால் அவளை வாழ்த்திபோடுவது வேறு,இன்று பலர் ஏழைகளிற்கு உதவி செய்துவிட்டு உதவிய அடையாளமே இல்லாமல் இருக்கிறார்கள்,

ஆனால் சிலர் இன்னொருவரிடம் உதவியைப்பெற்று தம்செலவில் கொடுப்பதுபோல் முகநூலிலும் பத்திரிகையிலும் போட்டோக்களைபோட்டு தமக்கு புகழ்தேடுவதுதான் வேதனை,

என் மகளின் முகத்தைப் பார்க்கிறேன் எதைச்சொல்லி அவளைத் தேற்றுவேன்..?அவளின் கேள்வியும் நியாயமே நான் என்னசெய்வேன்,

முகநூல் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாணயத்திற்கு இரு பக்கம்போல் எந்த செயல்களுக்கும் கூட இன்னொரு பக்கம் உண்டு, தாங்கிக் கொண்டு கடந்துதான் போகவேண்டும்...பகிர்வுக்கு நன்றி அபராஜிதன்....!   😗

Link to comment
Share on other sites

On 3/28/2019 at 12:38 PM, அபராஜிதன் said:

மனிதநேயம் என்றபெயரில் புகழ்ச்சி தேடும் கரங்கள்
*******************************************

எனக்கு சைக்கிள் தந்த போட்டோவை பத்திரிகையிலையும்,முகநூலிலையும் போட்டிருக்கினமாம்,நான் என்ன சின்ன பிள்ளையே. அவயல் உதவிசெய்த போட்டோவை முகநூலிலை  கட்டாயம் போடனுமா அம்மா..?என்றாள்,

நான் அவளை தேற்றினேன்,அவர்கள் உதவி செய்வதால் முகநூலில் போடுகிறார்கள் பிள்ளை,நாங்கள் கைநீட்டி வாங்குகிறோம்,சொல்லமுடியுமா..?என்ர பிள்ளைக்கு 15வயதாகிட்டுது,வளர்ந்திட்டால் போட்டோ எடுக்காதயுங்கோ முகநூலிலை பத்திரிகையிலை போடாதயுங்கோ என்று.

ஒரு உணவு பாசலை கொடுத்திட்டே இன்று கொடுக்கும்போது தாங்களும் நின்று போட்டோ எடுக்கிறார்கள்.முகநூலில் போடுகிறார்கள்,உதவி செய்கிறோம் என்ற பெயரில் உதவி செய்துவிட்டு பாலியல் தொல்லைகள் கொடுக்கிறார்கள்.

ஒரு தொழில் முயற்சியில் உதவிபெற்றபெண் தனியே நின்று சாதித்து நின்றால் அவளை வாழ்த்திபோடுவது வேறு,இன்று பலர் ஏழைகளிற்கு உதவி செய்துவிட்டு உதவிய அடையாளமே இல்லாமல் இருக்கிறார்கள்,

ஆனால் சிலர் இன்னொருவரிடம் உதவியைப்பெற்று தம்செலவில் கொடுப்பதுபோல் முகநூலிலும் பத்திரிகையிலும் போட்டோக்களைபோட்டு தமக்கு புகழ்தேடுவதுதான் வேதனை,

என் மகளின் முகத்தைப் பார்க்கிறேன் எதைச்சொல்லி அவளைத் தேற்றுவேன்..?அவளின் கேள்வியும் நியாயமே நான் என்னசெய்வேன்,

தனிப்பட்ட ரீதியில் செய்யும் உதவிகளை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து பிரசித்தம் தேடுவது வேதனை. நிறுவனங்கள் accountabilityக்காக செய்வதை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம், உதவிபெறுபவர்கள் உண்மையிலேயே பயனடைந்தால். (அதுவும் பயனாளரின் அடையாளத்்தை மறைத்துப் போடலாம்). மற்றப்படி இவ்வாறான சமூகவலைப் பகிர்வுகள் செய்த உதவியைப் பாராட்டுவதை விட வெறுப்படையத்தான் செய்யும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலுவலகத்தில் கையில் வெள்ளிக்கிழமை  பியருடனும்,    மனதில் குற்றஉணர்ச்சியுடனும்,  கண்ணில் நீருடனும்    நான் .......

இவளும் எனது மகள் போன்றவள் தானே .
செய்வதற்கு நிறைய இருக்கின்றது என்று மட்டும் தெரிகின்றது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு மிகவும் சென்சிடிவ் ஆன முக்கியமான விடயம் । எனது inbox  இல் இது போன்ற புகைப்படங்கள் ஒரு கிழமைக்கு ஓன்று என்றாலும் வரும்.  உண்மையில் சம்பந்தப்பட்டவர்கள் குறிப்பாக இளவல்கள் இதனை என்ன மாதிரி எடுப்பார்கள் என யோசித்திருந்திருக்கவில்லை என்பது நல்லாவே தெரியுது.  அடுத்த முறை இப்படியான படம் வரும் பொது இந்த  "கதையல்ல உண்மையை" அவைகளுக்கு அனுப்ப இருக்கிறேன்  .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/28/2019 at 1:39 AM, suvy said:

ஒரு நாணயத்திற்கு இரு பக்கம்போல் எந்த செயல்களுக்கும் கூட இன்னொரு பக்கம் உண்டு, தாங்கிக் கொண்டு கடந்துதான் போகவேண்டும்...பகிர்வுக்கு நன்றி அபராஜிதன்....!   😗

சரியான உதாரணம் சொல்லியுள்ளீர்கள் சுவி.

 

9 hours ago, மல்லிகை வாசம் said:

தனிப்பட்ட ரீதியில் செய்யும் உதவிகளை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து பிரசித்தம் தேடுவது வேதனை. நிறுவனங்கள் accountabilityக்காக செய்வதை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம், உதவிபெறுபவர்கள் உண்மையிலேயே பயனடைந்தால். (அதுவும் பயனாளரின் அடையாளத்்தை மறைத்துப் போடலாம்). மற்றப்படி இவ்வாறான சமூகவலைப் பகிர்வுகள் செய்த உதவியைப் பாராட்டுவதை விட வெறுப்படையத்தான் செய்யும்.

ஒருவிதத்தில் உண்மையாக இருந்தாலும் சமூகவலைத் தளங்களில் பத்திரிகைகளில் வரும் செய்திகளை வைத்து தான் ஏதாவது உதவிகள் செய்கிறார்கள்.
அடுத்தவர் செய்யும் உதவியைப் பார்க்க இன்னொருவருக்கும் செய்ய வேண்டும் போல இருக்கும்.ஆனபடியால் இதில் ஒருநிலையான முடிவு எடுப்பது கஸ்டம்.

இணைப்புக்கு நன்றி அபராஜிதன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காலத்தில் பெரும்பாலோனோர் பேரும்,புகழும் எதிர்பார்த்து தான் உதவி செய்கின்றனர் 

Link to comment
Share on other sites

6 hours ago, ஈழப்பிரியன் said:

ஒருவிதத்தில் உண்மையாக இருந்தாலும் சமூகவலைத் தளங்களில் பத்திரிகைகளில் வரும் செய்திகளை வைத்து தான் ஏதாவது உதவிகள் செய்கிறார்கள்.

அடுத்தவர் செய்யும் உதவியைப் பார்க்க இன்னொருவருக்கும் செய்ய வேண்டும் போல இருக்கும்.ஆனபடியால் இதில் ஒருநிலையான முடிவு எடுப்பது கஸ்டம்.

இதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் அண்ணை. ஒரு விழிப்புணர்வுக்காக, நல்ல நோக்கத்தில் பகிரப்பட்டால் வரவேற்கத்தக்கது. 

எனினும் பல தசாப்த காலமாக போரினால் பல்வேறு இன்னல்களை அனுபவித்த எம்மவர்களுக்கு மற்றவர்கள் சொல்லாமலே இயல்பாக உதவிசெய்யும் உணர்வு இருக்கவேண்டும். தனிப்பட்ட ரீதியில் உதவி செய்ய நிறைய வழிவகைகள் உண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சிக்கலானது. அவர்களாக விரும்பினால் மாத்திரமே சம்பந்தப்பட்டவர்களின் படங்களை பெற்ற உதவிகளை  போட வேண்டும் என்று நினைக்கிறன். உதவி பெறும் நிலையில் இருப்பவர்கள் விரும்பாவிட்டாலும்  மறுக்கும் நிலையில் இருக்க மாட்டார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலர் எப்போதோ எடுத்த படத்தை முகநூல்களில் போட்டுத் தாம் பலரிடமிருந்து பணத்தைப்பெற்றுக் கொள்கிறார்கள். படத்துக்கு உரியவர்காளுக்கே தெரியாமல் . 

Link to comment
Share on other sites

On 4/12/2019 at 5:29 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பலர் எப்போதோ எடுத்த படத்தை முகநூல்களில் போட்டுத் தாம் பலரிடமிருந்து பணத்தைப்பெற்றுக் கொள்கிறார்கள். படத்துக்கு உரியவர்காளுக்கே தெரியாமல் . 

நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.