Jump to content

Recommended Posts

பொய்

பொய்யாவது உள்ளதை இல்லதாகவும் இல்லதை உள்ளதாகவும் சொல்லல். பொய் மிக இழிவுள்ளது. ஒரு பொய் சொன்னவன், அதைப் தாபிக்கப்புகின், ஒன்பது பொய் சொல்லல் வேண்டும். 'நான் சொன்ன பொய்யைப் பொறுத்துக் கொல்லல் வேண்டும்' என்பானாயின், ஒன்றுடனொழியும். பொய் சொல்லத் துணிகின்றவன் களவு முதலிய தீமைகளைச் செய்தற்கு அஞ்சான். பொய் சொல்லலாகிய பாவமொன்றை ஒழிப்பின், அதுவே வழியாக மற்றைப் பாவங்களெல்லாம் தாமே ஒழிந்துவிடும். பொய்யன் மெய்யைச் சொல்லுகிற பொழுதும் பிறர் அதனை நம்பார். ஆதலால், விளையாட்டுக்காயினும் பொய் சொல்லலாகாது.

மெய் சொல்லுகிறவனுக்கு அதனால் ஒரு கேடு வந்த தாயினும், அவனுள்ளத்திலே மகிழ்ச்சி உண்டாகும். அவன் பகைவர்களும் அவனை நன்கு மதிப்பர்கள். பிறராலே நன்கு மதிக்கப்படவும் தன்காரியம் சித்திபெறவும் விரும்புகின்றவன் எப்பொழுதும் தன்மானத்தோடு பொருந்த மெய்யே பேசல் வேண்டும். ஒருவன் தன் மனம் அறிந்ததொன்றைப் பிறர் அறிந்திலர் என்று பொய் சொல்லாதிருக்கக்கடவன். பொய் சொன்னானாயின், அவன் மனமே அப்பாவத்துக்குச் சாக்ஷ¢யாய் நின்று அவனைச் சுடும்.

உண்மை சொல்பவன் இம்மையிற் பொருளையும் மறுமையிற் புண்ணிய லோகத்தையும் அடைவன். சத்தியமே, மேலாகிய தானமும் தவமும் தருமமுமாம். எவனுடைய புத்தி சத்தியத்தில் நிற்குமோ அவன் இகத்திலே தெய்வத் தன்மையை அடைவன். சத்தியத்தின் மிக்க தருமமும் அசத்தியத்தின் மிக்க பாவமும் இல்லை.

பொய்ச்சான்று சொன்னவரும், பொய்வழக்குப் பேசின வரும், வழக்கிலே நடுவுநிலைமையின் வழுவித் தீர்ப்புச் செய்தவரும், ஏழுபிறப்பில் ஈட்டிய எல்லாப் புண்ணியங்களையும் கெடுத்தவராவர். பிரமவதையும் சிசுவதையும் தந்தைவதையும் செய்தவராவர். மிகக் கொடிய ரெளரவ முதலிய நரகங்களை அடைவர். அவரை இயமதூதர்கள் வாயிலே அடித்து, அவருடைய நாக்கையும் அறுத்து, பல துக்கங்களையும் உறுவிப்பார்கள். பின்னும் ஊர்ப்பன்றி, கழுதை, நாய், நீர்க்காக்கை, புழு என்னும் பிறப்புக்களிற் பிறந்து, பின்பு மனிதப் பிறப்பிலே பிறவிக்குருடரும், செவிடரும், குட்டநோயினரும், வாய்ப்புண்ணினரும், ஊமைகளுமாய்ப் பிறப்பர். மிக்க பசிதாகமுடையவராகித் தம் பகைவர் வீட்டிலே தம் மனைவியரோடும் பிச்சையிரந்து உழல்வர்.

Link to comment
Share on other sites

  • Replies 479
  • Created
  • Last Reply

நான்காவது

திருநின்ற சருக்கம்

அப்பூதியடிகணாயனார் புராணம்

தனமா வதுதிரு நாவுக் கரசின் சரணமென்னா

மனமார் புனற்பந்தர் வாழ்த்திவைத் தாங்கவன் வண்டமிழ்க்கே

யினமாத் தனது பெயரிடப் பெற்றவ னெங்கள்பிரா

னனமார் வயற்றிங்க ளுரினில் வேதிய னப்பூதியே.

அந்தமினற் றிங்களுர் வருமப் பூதி

யருமறையோர் திருநாவுக் கரசி னாமம்

பந்தரிடை யெழுதக்கண் டரக மெய்தப்

பணிந்துபரி கலநேடிப் படப்பை சேர்ந்த

மைந்தனுயி ருயர்கதலி யிலைமேற் றுஞ்சும்

வாளரவு கவரவுடன் மறைத்தல் கேட்டுச்

சிந்தைமகிழ்ந் துயர்பதிக மருந்தாற் றீர்த்துத்

திருவமுது செயவருளைச் சேர்ந்து ளாரே.

சோழமண்டலத்திலே, திங்களுரிலே பிராமணகுலத்திலே, பாவங்கள் என்று சொல்லப்பட்டவைகள் எல்லாவற்றையும் நீக்கினவரும், புண்ணியங்களென்று சொல்லப்படவைகளெல்லாவற்றையும

Link to comment
Share on other sites

நான்காவது

திருநின்ற சருக்கம்

திருநீலநக்கநாயனார் புராணம்

நீதிதரு மறையோர்வாழ் சாத்த மங்கை

நீலநக்க ரயவந்தி நிமலர் மேனி

யூதிவிழுஞ் சிலம்பிகடிந் தவளை நீத்தார்க்

குமியாத விடநாத னுறுநோய் காட்டக்

காதன்மிகு மனைவியையு மகிழ்ந்து மேவிக்

காழியார்கோ னமுதுசெயக் களித்து வாழ்ந்து

வேதிகையிற் பாணனார்க் கிடமு நல்கி

விளங்குபெரு மணத்தரனை மேவி னாரே.

சோழமண்டலத்திலே, சாத்தமங்கையிலே, பிராமண குலத்திலே, திருநீலநக்கநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் வேதத்தின் உள்ளுறையாவது பரமசிவனையும் அவருடைய அடியார்களையும் அன்பினோடு அருச்சித்து வணங்குதலே என்று துணிந்து தினந்தோறுஞ் சைவாகம விதிப்படி சிவார்ச்சனைப் பண்ணி, சிவபத்தர்களுக்குத் திருவமுது செய்வித்தல் முதலாகிய பலவகைப்பட்ட பணிகளையுஞ்செய்வார்.

அப்படிச்செய்யுநாளிலே, ஒரு திருவாதிரை நக்ஷத்திரத்திலே சிவபூசையை முடித்துக்கொண்டு, அந்த ஸ்தலத்திலுள்ள அயவந்தி என்னும் ஆலயத்தில் வீற்றிருக்கின்ற சுவாமியையும் அருச்சிக்க விரும்பி, தம்முடைய மனைவியார் பூசைக்கு வேண்டும் உபகரணங்களைக் குறைவறக் கொண்டுவர, அவ்வாலயத்திற்சென்று, பூசைபண்ணிப் பிரதக்ஷிணஞ்செய்து, சந்நிதானத்தில் நமஸ்கரித்து, இருந்து கொண்டு, வேதாகமாதி சமஸ்த சாஸ்திரங்களின் உண்மைப்பொருளாகிய ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஜபித்தார். ஜபிக்கும் பொழுது, ஒரு சிலம்பி மேலே நின்று வழுவி, சிவலிங்கத்தின் மேல் விழுந்தது. அதைச் சமீபத்திலே நின்ற மனைவியார் கண்டு அச்சமடைந்து, விரைந்து, குழந்தைமேல் விழுச் சிலம்பி நீங்கும்படி ஊகித்துமிபவர்போல அன்பு மிகுதியினாலே அந்தச் சிலம்பி நீங்கும்படி ஊதித்துமிந்தார். திருநீலநக்கநாயனார் அதைக்கண்டு தம்முடைய கண்ணைப் புதைத்து, அறிவில்லாதவளே! "நீ இப்படிச் செய்ததென்னை" என்று சொல்ல மனைவியார் "சிலம்பி விழுந்தபடியால் ஊத்திதுமிந்தேன்" என்றார். நாயனார் மனைவியாருடைய அன்பின் செய்கையை நன்கு மதியாமல், அது அநுசிதம் என்று நினைந்து, அவரை நோக்கி "நீ சிவலிங்கத்தின்மேலே விழுந்த சிலம்பியை வேறொரு பரிசினாலே நீக்காமல் முற்பட்டுவந்து, ஊதித்துமிந்தாய் இந்த அநுசிதத்தைச் செய்த உன்னை நான் இனித் துறந்தேன்; நீங்கிவிடு" என்றார். அப்பொழுது சூரியாஸ்தமயனமாயிற்று மனைவியார் நாயனாருடைய ஏவலினாலே ஒருவழி நீங்க; நாயகர் பூசையை முடித்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பி விட்டார். மனைவியார் அஞ்சுகின்ற உள்ளத்தோடும், அவரிடத்திற் செல்லாமாட்டாதவராகி, ஆலயத்தில் இருந்தார். நாயனார் நித்திரைசெய்யும்பொழுது, பரமசிவன் அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி, தம்முடைய திருமேனியைக் காட்டி "உன்மனைவி மனம் வைத்து ஊதித் துமிந்த இடமொழிய இப்புறம் சிலம்பியின் கொப்புளம்" என்று சொல்லியருளினார். நாயனார் அச்சத்துடனே அஞ்சலிசெய்து கொண்டு விழித்து எழுந்து, கூத்தாடினார்; பாடினார், சிவபிரானுடைய திருவருளை வியந்து நின்று அழுதார். விடிந்தபின், ஆலயத்துக்குப் போய், சுவாமியை நமஸ்கரித்து, ஸ்தோத்திரஞ்செய்து, மனைவி யாரையும் அழைத்துக்கொண்டு, வீட்டுக்குத் திரும்பினார். அதற்குப்பின், முன்னிலும்பார்க்க மிகுந்த மகிழ்ச்சியோடு சிவார்ச்சனையையும் மாகேசுரபூசையையுஞ் செய்து கொண்டு இருந்தார்.

அப்படியிருக்குநாளிலே, பரமாசாரியராகிய திருஞானசம்பந்தமூர்த்திநாயன

Link to comment
Share on other sites

நான்காவது

திருநின்ற சருக்கம்

நமிநந்தியடிகணாயனார் புராணம்

நண்ணுபுகழ் மறையோர்வா ழேமப் பேறூர்

நமிநந்தி யடிகடிரு விளக்கு நல்க

வெண்ணெயம ணர்கள் விலக்க நீரா லாரு

ரிலங்குமா னெறியாருக் கேற்று நாளிற்

கண்ணமணர் கெடக்கண்பெற் றடிகள் வாழக்

காவலனா னிபந்தங்கள் கட்டு வித்தே

யண்ணலருள் காண்டாரு ரமர்ந்து தொண்டர்க்

காணியெனு மரசினரு ளடைந்து ளாரே.

சோழமண்டலத்திலே, ஏமப்பேறூரிலே, பிராமண குலத்திலே, பரமசிவனுடைய திருவடிகளை மிகுந்த அன்போடும் ஒழியாதே அகோராத்திரம் வழிபடுதலே இன்பமெனக் கொண்ட நமீநந்தியடிகள் என்பவர் ஒருவர் இருந்தார்.

அவர் பலநாளுந் திருவாரூருக்குப் போய் வன்மீகநாதரை வணங்கினார். ஒருநாள் வணங்கிக் கொண்டு, புறப்பட்டுத் திருமுன்றிலை அடைந்து பக்கத்தில் இருக்கின்ற அரநெறி என்னும் ஆலயத்துட்புகுந்து, சுவாமியை நமஸ்கரித்து, அங்கே செய்யவேண்டிய பலதொண்டுகளைச் செய்து, இரவிலே அங்கே எண்ணில்லாத தீபமேற்றுதற்கு விரும்பி எழுந்தார். எழுந்தபொழுது செல்லும் என்று நினைந்து, சமீபத்திலே ஓர் வீட்டில், அது சமணர்வீடென்று அறியாமையினாலே புகுந்து, "சிவாலயத்தில் விளக்கேற்றுதற்கு நெய் தாருங்கள்" என்று கேட்டார். அதற்கு அவர்கள் "கையிலே சுவாலிக்கின்ற அக்கினியையுடைய பரமசிவனுக்கு விளக்கு மிகையன்றோ இங்கே நெய்யில்லை, விளக்கெரிப்பீராகில் நீரை முகந்து எரியும்" என்றார்கள். நமிநந்தியடிகணாயனார் அந்தச் சொல்லைப் பொறாதவராகி, அப்பொழுதே மிகுந்த மனவருத்தத்தோடும் திரும்பிப்போய், சுவாமி சந்நிதானத்திலே விழுந்து நமஸ்கரித்தார். அப்பொழுது ஆகாயத்திலே "நமிநந்தியே! நீ உன்னுடைய கவலையை நீக்கு, இதற்குச் சமீபத்தில் இருக்கின்ற குளத்தில் நீரை முகந்து கொண்டு வந்து விளக்கேற்று" என்று ஒரு அசரீரிவாக்குத் தோன்றிற்று, நமிநந்தியடிகணாயனார் அதைக்கேட்டு, மனமகிழ்ந்து திருவருளை வியந்துகொண்டு எழுந்துபோய், குளத்தில் இறங்கி, சிவநாமத்தை உச்சரித்து, நீரை முகந்துகொண்டு, திருக்கோயிலிலே வந்து அகலிலே முறுக்கிய திரியின்மேலே அந்நீரைவார்த்து, விளக்கேற்றினார். அது சுடர்விட்டெழுந்தது. அது கண்டுஅவ்வாலயம் முழுதிலும் சமணர்களெதிரே மிகுந்த களிப்புடனே நாடறிய நீரினாலே திருவிளக்கெரித்தார். திருவிளக்கு விடியுமளவும் நின்று எரியும்படி குறைகின்ற தகழிகளுக்கெல்லாம் நீர் வார்த்து, இரவிலே தானே தம்முடைய ஊருக்குப்போய், சிவார்ச்சனைப்பண்ணி, திருவமுது செய்து நித்திரைகொள்வார். உதயகாலத்திலே பூசையை முடித்துக் கொண்டு, திருவாரூரை அடைந்து, அரநெறி என்னும் ஆலயத்திற்சென்று, சுவாமிதரிசனம்பண்ணி, பகன்முழுதினும் திருத்தொண்டுகள் செய்து, இரவிலே எங்கும் விளக்கேற்றுவார்.

இப்படி நிகழுங்காலத்திலே, தண்டியடிகளாலே சமணர்கள் கலக்கம் விளைந்து நாசமடைய; திருவாரூர் பெருமையடைந்து விளங்கியது. சோழமகாராஜா, நமிநந்தியடிகணாயனாரே அத்தியக்ஷராக, வன்மீகநாதருக்கு வேண்Dஉம் நிபந்தங்கள் பலவற்றையும் வேதாகமவிதி விளங்க அமைத்தார். நமிநந்தியடிகள் வீதிவிடங்கப் பெருமாளுக்குப் பங்குனி மாசத்திலே மகோற்சவம் நடத்துவித்தார். நடத்துவிக்கும் பொழுது, சுவாமி ஒருநாள் திருமணலிக்கு எழுந்தருள; சகல சாதியார்களும் ஒருங்கு சேவித்துப்போனார்கள். நமிநந்தியடிகணாயனாரும் சேவித்துப் போய், அங்கே சுவாமியுடைய திருவோலக்கத்தைக் கண்டு களிப்படைந்தார். பொழுதுபட, சுவாமி திரும்பித் திருக்கோயிலிலே புக, நமிநந்தியடிகள் வணங்கிக்கொண்டு, தம்முடைய ஊரை அடைந்து, வீட்டினுள்ளே புகாமல், புறக்கடையிலே படுக்க, மனைவியார் வந்து, "உள்ளே எழுந்தருளிச் சிவார்ச்சனையையும் அக்கினிகாரியத்தையும் முடித்துக் கொண்டு பள்ளிகொள்ளும்" என்றார். நமிநந்தியடிகள் "இன்றைக்குச் சுவாமி திருமணலிக்கு எழுந்தருளியபோது நானும் சேவித்துப்போனேன். சகல சாதியும் கலந்து வந்தபடியால், தீட்டுண்டாயிற்று. ஆதலால் ஸ்நானம் பண்ணிப் பிராயச்சித்தஞ்செய்து கொண்டே உள்ளே புகுந்து சிவார்ச்சனையைத் தொடங்கல்வேண்டும். அதற்கு நீ ஜலமுதலாயின கொண்டு வா" என்று சொல்ல; மனைவியாரும் கொண்டு வரும் பொருட்டு விரைந்து சென்றார். அப்பொழுது நமிநந்தியடிகணாயனார் சிறிதுறக்கம் வர, நித்திரை செய்தார். செய்யும் பொழுது, வீதிவிடங்கப்பெருமாள் அவருக்கு சொப்பனத்திலே தோன்றி, "திருவாரூரிலே பிறந்தவர்களெல்லாரும் நம்முடைய கணங்கள்; அதை நீ காண்பாய்" என்று சொல்லி மறைந்தருளினார். நமிநந்தியடிகணாயனார் விழித்தெழுந்து, தாம் நினைத்தது குற்றமென்றுகருதி, எழுந்தபடியே சிவார்ச்சனையை முடித்து, மனைவியாருக்கு நிகழ்ந்ததைச் சொல்லி, விடிந்தபின் திருவாரூருக்குப் போனார். போனபொழுது, அந்தத் திருப்பதியிலே பிறந்தவர்களெல்லாரும் சிவசாரூப்பியமுள்ளவர்களாய்ப

Link to comment
Share on other sites

அழுக்காறு

அழுக்காறாவது பிறருடைய கல்வி செல்வம் முதலியவற்றைக் கண்டு பொறாமையடைதல். பொறாமை யுடையவன் தன்னுடைய துன்பத்துக்குத் தானே காரணனாகின்றான். அக்கினியினாலே பதர் எரிவதுபோலப் பொறாமையினாலே மனம் எரிகின்றது. ஆதலினாலே பொறாமையுடையவனுக்குக் கேடு விளைத்தற்கு வேறு பகைவர் வேண்டாம். அப்பொறாமை ஒன்றே போதும்.

பொறாமையுடையவனுடைய மனசிலே ஒருபோதும் இன்பமும் அமைவும் உண்டாகா. பொறாமையாகிய துர்க்குணம் மனிதனுக்கு இயல்பாகும். அது தோன்றும் பொழுதே அறிவாகிய கருவியினால் அதைக் களைந்துவிடல் வேண்டும்; களைந்துவிட்டால், அவன் மனசிலே துன்பம் நீங்க இன்பம் விளையும். பொறாமையுடையவனிடத்தே சீதேவி நீங்க, மூதேவி குடிபுகுவள். பொறாமையானது தன்னையுடையவனுக்கு இம்மையிலே செல்வத்தையும் புகழையும் கெடுத்து, எல்லாப் பாவங்களையும் விளைவித்து, அவனை மறுமையிலே நரகத்திற் செலுத்திவிடும்.

Link to comment
Share on other sites

தாய்க்கு நிகரான பசுவைக் கொல்லக்கூடாது என்று சொன்னதற்கு இவ்வளவு எதிர்ப்பா?

சிப்பாய் கலகம் நம்முடைய இந்திய நாட்டில் எதனால் வந்தது தெரியுமா?

பன்றியின் கொழுப்பினால் ஆன தோட்டாக்களை செய்தது ஆங்கில அரசு, அதைக் கடித்து தான் துப்பாக்கியில் வைக்க வேண்டும். பன்றியின் கறியை முஸ்லீம் சகோதரர்கள் உண்ண மாட்டார்கள். இந்துக்களும் தான். அதனால் முஸ்லீம் மற்றும் இந்து மக்கள் துவங்கியதே இந்த சுதந்திரத்திற்கான புரட்சி. அதில் எது முக்கியத்துவம் பெற்றது பாருங்கள்.

அதைப் போல பசுவும் நம் அனைவருக்கும் பால் கொடுக்கிறது.

நாம் தினமும் உபயோகிக்கும் பால், தயிர், வெண்ணெய், நெய், சாணம், என்று அனைத்தையும் தருவது பசு.

அதனிடம் இருந்து அனைத்தையும் பெற்றுக் கொண்டு அதனையே கொல்லலாமா? இது தான் என்னுடைய கேள்வி? இதை மதச் சம்பந்தமாக இல்லாமல் அன்பு சம்பந்தமாக பாருங்கள்.

ஒரு கன்றுக்குட்டி சாலையில் செல்கிறது திடீரென ஒரு பேருந்து வந்து மோதுகிறது அது துடி துடித்து இறக்கிறது அதை நீங்கள் நேரில் காண்கிறீர்கள்.

இப்போது உங்களது மனோநிலை எப்படி இருக்கும்?

1. சந்தோசமாக இருக்குமா?

2. வருத்தப்படுவீர்களா?

வருத்தப்படுவீர்கள் என்றால் ஏன்?

இதே வருத்தம் நீங்கள் அதை உணவாக உண்ணும் போதும் வருகிறதா?

வருவில்லை என்றால் ஏன்?

இது அன்புக்கும் வம்புக்கும் நடக்கும் போராட்டம்!!!

முடிவு உங்கள் கையில்

Link to comment
Share on other sites

புலாலுண்ணல்

புலாலுண்ணலாவது உயிரின் நீங்கிய ஊனைப் புசித்தல், புலால் கொலையினாலே கிடைத்தலால், புலாலுண்ணல் கொலைப் பாவத்தின் காரியமாகும். புலாலுண்டவன் பின்னும் கொலை வாயிலாகப் புலாலை விரும்புதலால், புலாலுண்ணல் கொலைப் பாவத்துக்குக் காரணமுமாகும். இப்படியே எல்லா விதத்தாலும் புலாலுண்ணல் கொலையோடு தொடர்புடையதாதலால், புலாலுண்பவர் உயிர்களிடத்து அருளில்லாதவரே. ஆதலால் புலாலைப் புசித்துக்கொண்டு உயிர்களிடத்து அருளுடையோம் என்பது நடிப்பு மாத்திரமாமன்றி உண்மையாகாது. உலகத்திலே புலாலுண்பவர் இல்லையாயின், புலாலை விற்றற்பொருட்டு உயிர்க்கொலை செய்பவரும் இல்லை. ஆதலாற் கொலைப் பாவத்தைப் பார்க்கிலும் புலாலுண்ணலே பெருங்கொடும் பாவம்.

அயல் வீட்டிலே பிணங்கிடந்தாலும் போசனஞ் செய்தற்குமனம் பொருந்தாத மனிதர்கள் மிருகம் பக்ஷ¢ முதலியவைகளுடைய பிணத்தைக் கலத்திலே படைத்துக்கொண்டு புசிக்கின்றார்களே! அன்னம் பானீயம் முதலியவைகளிலே மயிர், ஈ, எறும்பு முதலியவைகளுள் ஒன்று விழுந்திருக்கக் கண்டாலும், மிக அருவருத்து உண்ட சோற்றையும் கக்கும் மனிதர்கள் மற்ற மாசிசங்களைப் புசிக்கின்றார்களே! ஊறுகாய் முதலியவைகளிலே ஒரு புழுவைக்கண்டால் அருவருத்துச் சரீரங் குலைந்து அவைகளை எடுத்தெறிந்துவிடும் மனிதர்கள் புழுத்த மாமிசங்களை விரும்பிப் புசிக்கின்றார்களே! தங்களெதிரே ஆடுகள் சிந்தத்தெறித்த கோழை தங்களுடம்பிலே படுதலும், பொறாது மனங் குலையும் மனிதர்கள் அவ்வாடுகளின் மாமிசங்களை விரும்பிப் புசிக்கின்றார்களே! தங்களெதிரே ஆடுகள் சிந்தத்தெறிந்த கோழை தங்களுடம்பிலே படுதலும், பொறாது மனங் குலையும் மனிதர்கள் அவ்வாடுகளின் மாமிசத்தை மூளையோடு மனமகிழ்ந்து புசிக்கின்றார்களே! பூமியில் உள்ள சுடுகாடுகள் மனிதர்களுடைய பிணத்துக்குச் சுடுகாடுகளாயிருக்கும்; மிருகங்களுக்கும் பக்ஷ¢களுக்கும் மற்சங்களுக்கும் சுடுகாடுகள் சீவகருணையில்லாத மனிதர்களுடைய வயிறுகளேயாம்.

கொலை செய்தவரும், புலாலை விற்றவரும், புலாலை விலைக்கு வாங்கினவரும், புலாலைப் புசித்தவரும், புலால் புசியாதவரைப் புசிப்பித்தவரும், சிலர் சொல்லுக்கு அஞ்சிப் புலாலைப் புசித்தவருமாகிய எல்லாரும் பாவிகளேயாவர். அப்பாவிகளை நரகத்திலே இயமதூதர்கள் அக்கினி சுவாலிக்கும் முள்ளிலமரத்திலே குப்புறப்போட்டு, இருப்பு முளைகளை நெருங்கக் கடாவிய தண்டத்தினாலே முதுகில் அடிப்பார்கள். அதுவன்றிக் குடாரியினாலே கொத்தி, ஈர்வானினால் அறுப்பார்கள்; இரும்பு முதலிய உலோகங்களை உருக்கி, அவர்கள் வாயிலே வார்ப்பார்கள். புலாலுண்ணாமையினாலே தங்கள் உடம்பு மெலிகின்றது என்று உண்ணப்புகும் மனிதர்கள், புலாலுண்டு தங்கள் உடம்பைப் பருக்கச்செய்து நரகத்திலே நெடுங்காலம் துன்பம் அநுபவித்தல் நல்லதோ, புலாலுண்ணாமல் தங்களுடம்பை வாட்டி நித்தியமாகிய முத்தியின்பத்தைப் பெற்று வாழுதல் நல்லதோ இதனைச் சிந்திக்கக்கடவர்கள்.

மேற்கூறிய பாவிகள் எண்ணில்லாத காலம் நரகத் துன்பத்தை அனுபவித்து, பின்பு பூமியிலே பன்றி முதலிய இழிந்த பிறப்புக்களாய்ப் பிறந்திறந்து உழன்று, மனிதப் பிறப்பை எடுத்து, பெருவியாதி, கருங்குட்டம், வெண்குட்டம், நீரிழிவு, கண்டமாலை முதலிய வியாதிகளினாலே வருந்துவார்கள்.

கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களெல்லாவற்றினும் ஸ்நானஞ் செய்தானாயினும், கடவுளைப் பூசித்தானாயினும், எண்ணில்கோடி தானஞ்செய்தானாயினும், ஞான சாத்திரங்களை ஓதி உணர்ந்தானாயினும், புலாலைத் தள்ளாது புசித்தவன் நரகத்தை அடைவன்.

அசரமாகிய மரமுதலியவைகளைக் கொன்று புசித்தல் பாவமாயினும், அவைகள் எழுவகைத் தோற்றத்துள்ளும் தாழ்ந்த பருவத்தை உடையவையாதலால் அக்கொலை யாலாகும் பாவம் சிறிதாகும். அசரபதார்த்தங்களை நாடோறும் கடவுள் அக்கினி குரு அதிதிகள் என்னும் நால்வகையோருக்கும் முன்னூட்டிப் பின்னுண்பானாயின் அவ்வசரக் கொலையால் வரும் பாவமும், உழுதல், அலகிடல், மெழுகுதல், நெருப்பு மூட்டல், தண்ணீர், சுவர்தல், நெற்குத்துதல் முதலிய தொழில்களால் வரும் பாவமும் அவ்வக் காலத்திலே நீங்கிவிடும்.

Link to comment
Share on other sites

ஆத்மநாததேசிகர்: இதுகாறும் உலகின் கண் உள்ள எல்லாச் சமயங்களையும் 24 சமயங்களில் அடக்கலாம் என்றும், இவைகளைத் (தனித்தனி 6 சமயங் கொண்ட) புறப்புறம், புறம், அகப்புறம், அகம் என்னும் நான்கு பிரிவுகளில் அடக்கலாம் என்பதையும் தெரிந்து கொண்டோம். இனித் தோன்றும் சமயங்களையும் நுண்ணூர்வால் இவைகளில் அடங்குமாறு அடக்கிக் கண்டு கொள்ளலாம் என்பதையும் தெரிந்து கொண்டோம். இச்சமயங்களில் அடங்காது இவைகள் எல்லாவற்றிற்கும் அப்பார்பட்ட மேலான உண்மைச் சமயமே சைவ சித்தாந்தம் என்பதும், அது சித்தாந்த சைவம் வைதிக சைவம் என்ற பெயர்களில் அழைக்கப்படும் என்று உணர்க. அந்தம் என்றால் முடிவு; சித்தி என்றால் சித்திக்கப் பெற்றது அல்லது கைகூடப்பட்டது என்று பொருள்படும். ஆகவே தர்க்க விதிகளின்படி ஆராய்ந்து அவ்வாராய்ச்சியின் காரணமாக சித்திக்கப் பெற்ற முடிவு சித்தாந்த சைவம் என்பது தெளிவு. இச்சமயத்தில் சித்திக்கப்பெற்ற முடிவுகள் ஏனைய சமயங்களைப் போல் கேவலம் நம்பிக்கையை மட்டும் பொருத்ததல்ல. அளவை (தர்க்கம்) நூல் உணர்ந்த பெரியோர்களால் அளவைக்குப் பொருந்தியவை என்றும், ஆகையால் அறிவுக்குப் பொருத்தமானவை என்றும் நிருபித்துக் காட்டப்பட்டவை என்று உணர்க. இச்சமயத்தைப் பற்றி ஆன்றோர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று பாருங்கள்.

Link to comment
Share on other sites

ஐந்தாவது

வம்பறாவரிவண்டுச் சருக்கம்

ஏயர்கோன்கலிக்காமநாயனார் புராணம்

ஏதமில்வே ளாளர்பெரு மங்க லத்துள்

ஏயர்கோன் கலிக்காமர் 'இறையை நேரே

தூதுகொளும் அவன் அணுகில் என்னாம்' என்னும்

துணிவினர்பால் இறைவன் அருஞ் சூலைஏவி

'வேதனைவன் றொண்டன்வரின் நீங்கும்' என்ன

வெகுண்டு உடல்வாள் கொடுதுறந்து மேய நாவாற்

போதகமும் உடல்இகழ எழுந்துதாழ்ந்து

போற்றியது விலக்கியருள் பொருந்தி னாரே.

சோழநாட்டிலே, திருப்பெருமங்கலத்திலே, வேளாளர் குலத்திலே, சோழராஜாக்களிடத்திலே பரம்பரையாகச் சேனாதிபதித் தொழில்பூண்ட ஏயர்குடியிலே, கலிக்காமநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் குருலிங்க சங்கமபத்தியிலே சிறந்தவர். திருப்புன்கூரிலுள்ள சிவாலயத்திலே அளவில்லாத திருப்பணிகள் செய்தவர்.

அவர் சுந்தரமூர்த்திநாயனார் சிவபெருமானைப் பரவையாரிடத்திற்குத் தூதாக அனுப்பிய சமாசாரத்தைக் கேள்வியுற்று, வெம்பி மிகக் கோபித்து, "நாயனை அடியான் ஏவுங் காரியம் மிகநன்று. இப்படிச் செய்பவன் தொண்டனாம்! இது என்ன பாவம்! பொறுக்கவொண்ணாத இந்தப் பெரும் பாதகத்தைக் கேட்டும் உயிரோடிருக்கிறேனே" என்றார். "ஒருவன் பெண்ணாசைமேலீட்டினால் ஏவ ஒப்பில்லாத கடவுள் தூதராய் ஓரிரவு முழுதும் போக்கு வரவு செய்து உழன்றாராம். அரிபிரமேந்திராதி தேவர்களாலும் அறியப்படாத கடவுள் இசைந்தாராயினும், அவன் அவரை ஏவலாமா? இதற்கு மனநடுங்காத அந்தத் துரோகியை நான் காணு நாள் எந்நாளோ! பெண்பொருட்டுக் கடவுளை இரவிலே தூதனுப்பிய பாதகனைக் காண்பேனாயின் யாது சம்பவிக்குமோ" என்று சொல்லி மிகச் செற்றங் கொண்டிருந்தார்.

சுந்தரமூர்த்திநாயனார் அதனைக் கேள்வியுற்று அடியார்க் கெளியாராகிய பரமசிவனுக்கு விண்ணப்பஞ்செய்ய; பரமசிவன் இருவரையும் கூட்டுதற்குத் திருவுளங்கொண்டு, கலிக்காம நாயனாரிடத்திலே சூலைநோயை ஏவ; அது அக்கினியிலே காய்ச்சப்பட்ட வேல்குடைதல்போல மிக்கவேதனை செய்ய; கலிக்காமநாயனார் அதனால் மிகவருந்தி வீழ்ந்து, உயிர்த்துணையாகிய பரமசிவனுடைய திருவடிகளைச் சிந்தித்துத் துதித்தார். அப்பொழுது பரமசிவன் அவரிடத்தில் எழுந்தருளி, "சுந்தரனாலன்றி இந்நோய் தீராது" என்று அருளிச்செய்ய; அவர் "எம்பெருமானே! பரம்பரையாகத் தேவரீரே மெய்க்கடவுளென்று துணிந்து தேவரீருக்குத் திருத்தொண்டுகள் செய்து வருகின்ற குடியிலுள்ளேனாகிய என்னை வருத்துகின்ற சூலைநோயை, நூதனமாக ஆண்டுகொள்ளப்பட்ட ஒருவனா வந்து தீர்ப்பான். அவனாலே தீர்க்கப்படுதலிலும் தீராதொழிந்து என்னை வருத்துதலே நன்று. தேவரீர் செய்யும் பெருமையை அறிந்தவர் யாவர்! வன்றொண்டனுக்கு ஆகும் உறுதியையே செய்யும்" என்றார். உடனே பரமசிவன் அவர்முன்னே மறைந்து, "சுந்தரமூர்த்தி நாயனாரிடத்திற்சென்று, "நம்முடைய ஏவலாலே கலிக்காமனை வருத்துகின்ற சூலையை நீ போய் தீர்ப்பாய்" என்றார். சுந்தரமூர்த்திநாயனார் அதைக் கேட்டு திருவுள மகிழ்ந்து, கலிக்காமநாயனாரிடத்திற்குப் போம்படி தீர்ப்பாய்" என்றார். உடனே பரமசிவன் அவர்முன்னே மறைந்து, சுந்தரமூர்த்தி நாயனாரிடத்திற்சென்று, "நம்முடைய ஏவலாலே கலிக்காமனை வருத்துகின்ற சூலையை நீ போய்த் தீர்ப்பாய்" என்றார். சுந்தரமூர்த்திநாயனார் அதைக்கேட்டு திருவுள மகிழ்ந்து, கலிக்காமநாயனாரிடத்திற்குப் போம்படி புறப்பட்டு, சூலை தீர்க்கும்படி தாம் வருஞ் சமாசாரத்தை அவருக்குத் தெரிவித்தற்கு முன்னே ஆள் அனுப்பினார். அவ்வாளினாலே சுந்தரமூர்த்திநாயனாருடைய வரவை அறிந்த கலிக்காமநாயனார் "எம்பெருமானைத் தூதனுப்பியவன் சூலை நோய் தீர்த்தற்கு வந்தால் நான் செய்வது என்னாம்! அவன் இங்கே வந்து தீர்த்தற்கு முன்னே இச்சூலையை வயிற்றினோடுங் கிழிப்பேன்" என்று உடைவாளினாலே தம் வயிற்றைக் கிழித்துக்கொண்டு இறந்துபோனார். அது கண்ட அவர் மனைவியாரும் அநுமரணஞ்செய்யப் புகுந்தார். அப்போது 'சுந்தரமூர்த்திநாயனார் சமீபத்தில் எழுந்தருளி வந்துவிட்டார்" என்று முன் வந்தோர் சொல்ல; மனைவியார் "ஒருவரும் அழாதொழிக" என்று சொல்லி, பின்பு தம்முடைய நாயகரது செய்கையை மறைத்து, சுந்தரமூர்த்தி நாயனாரை எதிர்கொள்ளும் பொருட்டுத் தங்கள் சுற்றத்தார்களை ஏவ; அவர்கள் போய் எதிர்கொண்டு வணங்கினார்கள்.

சுந்தரமூர்த்திநாயனார் அவர்களுக்கு அருள்செய்து வந்து, கலிக்காமநாயனார் வீட்டிற்புகுந்து, ஆசனத்தில் எழுந்தருளியிருந்து, தமக்குச் செய்யப்பட்ட அருச்சனைகளை ஏற்றுக் கொண்டு, "கலிக்காமநாயனாருடைய சூலையை நீக்கி அவருடன் இருத்தற்கு மிக வருந்துகின்றேன்" என்றார். அப்பொழுது மனைவியாரது ஏவலால் வீட்டுவேலைக்காரர் வணங்கி, நின்று, "சுவாமீ! அவருக்குத் தீங்கு ஒன்றும் இல்லை உள்ளே பள்ளி கொள்கின்றார்" என்று விண்ணப்பஞ்செய்ய; "சுந்தரமூர்த்திநாயனார் தீங்கும் ஒன்றும் இல்லை என்றீர் ஆயினும், என் மனந்தெளிந்திலது. ஆதலால் அவரை நான் காணல் வேண்டும்" என்றார். அவர்கள் அது கேட்டு, கலிக்காம நாயனாரைக்காட்ட, சுந்தரமூர்த்திநாயனார் இரத்தஞ் சோரக் குடர் சொரிந்து உயிர் பொன்றிக் கிடந்தவரைக் க்ண்டு "புகுந்தவாறு ந்னறு. நானும் இவர்போல இறந்து போவேன்" என்று சொல்லி உடைவாளை எடுத்தார். உடனே பரமசிவனது திருவருளினால் கலிக்காமநாயனார் உயிர்த்து எழுந்து அவர்கையில் வாளைப் பிடித்துக்கொள்ள; அவர் விழுந்து நமஸ்கரித்தார். கலிக்காமநாயனாரும் சுந்தரமூர்த்திநாயனாரை நமஸ்கரித்தார்.

அதன்பின் இருவரும் அதிக நண்புள்ளவர்களாகித் திருப்புன்கூருக்குப் போய் சுவாமிதரிசனஞ் செய்து கொண்டு, சிலநாட் சென்றபின்பு, திருவாரூரை அடைந்தார்கள். கலிக்காமநாயனார் சிலநாள் அங்கே சுவாமிதரிசனஞ் செய்து கொண்டிருந்து, பின்பு சுந்தரமூர்த்திநாயனாரிடத்தி

Link to comment
Share on other sites

ஐந்தாவது

வம்பறாவரிவண்டுச் சருக்கம்

திருமூலநாயனார் புராணம்

கயிலாயத் தொருசித்தர் பொதியிற் சேர்வார்

காவிரிசூழ் சாத்தனூர் கருது மூலன்

பயிலாநோ யுடன்வீயத் துயரம் நீடும்

பசுக்களைக்கண்டு அவனுடலிற் பாய்ந்துபோத

அயலாகப் பண்டையுடல் அருளால் மேவி

ஆவடுதண் டுறையாண்டுக்கு ஒருபா வாகக்

குயிலாரும் அரசடியில் இருந்து கூறிக்

கோதிலா வடகயிலை குறுகி னாரே.

திருக்கைலாசத்திலே, சிவபெருமானது ஆலயத்துக்கு முதற்பெருநாயகராகிய திருநந்திதேவருடைய திருவருளைப் பெற்ற மாணாக்கர்களாகிய சிவயோகிகளுள் ஒருவர், அகத்திய மகாமுனிவரிடத்தே பொருந்திய நண்பினாலே அவருடன் சிலநாள் இருத்தற்கு, அவர் எழுந்தருளியிருக்கும் பொதியமலையை அடைதற்பொருட்டு, திருக்கைலாசத்தை அகன்று வழிக்கொண்டு, திருக்கேதாரம், பசுபதிநேபாளம், காசி, ஸ்ரீசைலம், திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சீபுரம், திருவதிகை, சிதம்பரம் என்னுந் தலங்களை வணங்கிக் கொண்டு திருவாவடுதுறையை அடைந்து, அங்கே சுவாமி தரிசனஞ்செய்து கொண்டிருந்தார்.

ஒருநாள் அந்தத்தலத்தை அகன்று செல்லும்பொழுது, காவிரியாற்றங்கரையிலுள்ள வனத்திலே பசுக்கூட்டங்கள அழுதலை எதிரே கண்டார். சாத்தனூரில் இருக்கின்ற இடையனாகிய மூலனென்பவன் ஒருவன் அவைகளை மேய்க்கின்றவன். அவன் அத்தினத்திலே அவ்விடத்தில் இறந்து கிடந்தான். அப்பசுக் கூட்டங்கள் அவனுடைய சரீரத்தை வந்தணைந்து, சுற்றி மிகக் கதறிச் சுழன்று மோப்பனவாக; சிவயோகியார் கண்டு, "பரமசிவனது திருவருளினாலே இப்பசுக்களுடைய துயரத்தை நீக்கல் வேண்டும்" என்று ஆலோசித்து, "இவ்விடையன் உயிர் பெற்றெழுந்தாலன்றிப் பசுக்கள் துயரநீங்கா" என்று திருவுளங் கொண்டு தம்முடைய திருமேனிக்குக் காவல்செய்து, தாம் அவ்விடையனுடைய சரீரத்தினுள்ளே பிரவேசித்து, திருமூலராய் எழுதார். எழுதலும், பசுக்களெல்லாம் நாத்தழும்ப நக்கி மோந்து, கனைத்து, மிகுந்த களிப்பினாலே வாலெடுத்துத் துள்ளி, பின்புபோய் மேய்ந்தன. திருமூலநாயனார் அது கண்டு திருவுளமகிழ்ந்து, அவைகள் மேயுமிடத்திற்சென்று, அவைகளை நன்றாக மேய்த்தார். சூரியன் அஸ்தமயனமாக, பசுக்கள் தத்தங் கன்றுகளை நினைந்து, தாமே முன் பைய நடந்து, சாத்தனூரை அடைந்தன சிவயோகியார் அப்பசுக்களுக்குப் பின்சென்று, அவைகளெல்லாம் வீடுகடோறும் போகத் தாம் வெளியிலே நின்றார்.

மூலனுடைய மனைவி "நாயகர் இன்றைக்கு மிகத் தாழ்த்தார்" என்று பயங்கொண்டு சென்று, சிவயோகியார் நின்ற இடத்தை அடைந்து, "இவருக்கு ஈனம் அடுத்தது போலும்" என்று. அவருடைய திருமேனியைத் தீண்ட; அவர் அதற்கு இசையாராயினார். அவள் அச்சுற்று மயங்கி, "என்செய்தீர்" என்று, தளர, திருமூலநாயனார் "உனக்கு என்னோடு யாதொரு சம்பந்தமும் இல்லை" என்று மறுத்து, ஒரு பொதும்டத்தினுள்ளே புகுந்து, சிவயோகத்தில் இருந்தார். மனைவி அவ்விரவு முழுதிலும் நித்திரை செய்யாது கவலை கொண்டிருந்து, மற்ற நாள் அதனை விவேகிகள் பலருக்குத் தெரிவிக்க; அவர்கள் வந்து பார்த்து, அவளை நோக்கி, "இது பைத்தியமன்று, வேறு சார்புள்ளதுமன்று. இவர் கருத்துச் சிவயோகத்தினிடத்தேயாம். இனி இவர் உங்கள் சுற்றவியல்போடு கூடார்" என்றார்கள். அவள் அது கேட்டுத் துயரம் எய்தி மயங்க; அவர்கள் அவளைக் கொண்டு போய்விட்டார்கள்.

சிவயோகத்தில் இருந்து திருமூலநாயனார் எழுந்து, முதனாளிலே பசுக்கள் வந்த வழியே சென்று தாஞ்சேமித்த சரீரத்தைக்காணாது, மெய்ஞ்ஞானத்தையுடைய சிந்தையினால் ஆராய்ந்து, "சிவபெருமான் ஆதிகாலத்திலே தம்முடைய பஞ்சவத்திரத்தினின்றும் தோற்றுவித்த காமிக முதலிய சைவாகமங்களிலே பேசப்பட்ட மெய்ப்பொருளைத் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு உபயோகமாகும் பொருட்டுத் தமியேனைக்கொண்டு தமிழினாலே ஒரு நூல் செய்வித்தற் பொருட்டு இச்சரீரத்தை மறைத்தருளினார்" என்று தெளிந்து, திருவருளைத் துதித்து, திருவாவடுதுறையை அடைந்து, அங்குள்ள சிவாலயத்திலே பிரவேசித்து; சிவபெருமானை வணங்கி, அதற்கு மேற்குப்பக்கத்தில் இருக்கின்ற அரசின் கீழே போய், சிவயோகத்தில் இருந்தார். அவர் மூவாயிரம் வருஷமளவு அங்ஙனம் இருந்து, ஒவ்வொரு வருஷத்திற்கு ஒவ்வொரு திருப்பாட்டாக மூவாயிரம் திருப்பாட்டினால் சைவாகமங்களின் உணர்த்தப்பட்ட ஞானம் யோகம் கிரியை சரியை என்னும் நான்கு பாதங்களையும் பேசுகின்ற திருமந்திரமென்னுந் தமிழ்நூலைப் பாடியருளி, பின் திருக்கைலாசத்தை அடைந்தார். திருப்பெருமங்கலத்திலே, வேளாளர் குலத்திலே, சோழராஜாக்களிடத்திலே பரம்பரையாகச் சேனாதிபதித் தொழில்பூண்ட ஏயர்குடியிலே, கலிக்காமநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் குருலிங்க சங்கமபத்தியிலே சிறந்தவர். திருப்புன்கூரிலுள்ள சிவாலயத்திலே அளவில்லாத திருப்பணிகள் செய்தவர்.

திருச்சிற்றமபலம்

thirumular.jpg

Link to comment
Share on other sites

கோபம்

கோபத்தைச் செய்தற்குக் காரணம் ஒருவனிடத்து உண்டாயினும், அதனைச் செய்யலாகாது. கோபந்தோன்றுமாயின், மனக்கலக்கம் உண்டாகும். அது உண்டாகவே அறிவு கெடும். அது கெடவே, உயிர்கண்மேல் அருள் இல்லையாகும். அது இல்லையாகவே, அவைகளுக்குத் துன்பஞ் செய்தல் நேரிடும். ஆகையால், கோபத்தை எந்நாளும் அடக்கல் வேண்டும்.

யாவனொருவன் தம்மை இழிவாகச் சொல்லிய பொழுது தம்மிடத்து அவ்விழிவு உள்ளதாயின், " இது நமக்கு உள்ளதே" என்று தம்மைத் தாமே நொந்து திருத்தமடைதல் வேண்டும். அப்படிச் செய்யாது கோபித்தாராயின், தமது கோபம் அநீதி என்பது தமக்கே தெரியுமாதலால், தம் மனமே தம்மைக் கண்டிக்கும். தம்மிடத்து அவ்விழிவு இல்லையாயின், 'இவன் சொல்லியது பொய்; பொய்யோ நிலைபெறாது' என்று அதனைப் பொறுத்தல் வேண்டும். நாயானது தன்வாயினாற் கடித்த பொழுது மீட்டுத் தம் வாயில் அதனைக் கடிப்பவர் இல்லை. கீழ்மக்கள் தம் வாயினால் வைதபொழுது மேன் மக்கள் மீட்டுத் தம்வாயினால் வைதபொழுது மேன் மக்கள் மீட்டுத் தம்வாயினால் அவரை வைவரோ, வையார். தமக்குப் பிறர் தீங்கு செய்தபொழுது தாம் அதனைப் பொறுப்பதேயன்றி 'இவர் நமக்குச் செய்த தீங்கினாலே எரிவாய் நரகத்தில் வீழ்வாரே' என்று இரங்குவதும் அறிவுடையவருக்குக் கடன். தன்னை வெட்டிய குடாரத்துக்கும் தனது நறுமணத்தையே கொடுக்குஞ் சந்தனமரம் போலத் தமக்குத் தீமை செய்தவருக்கும் நன்மையே செய்வது அறிவுடையோருக்கு அழகு.

வலியார்மேற் செய்யுங்கோபம் அவருக்குத் தீங்கு செய்யாமையால், அதனைத் தடுத்தவிடத்துந் தருமமில்லை. மெலியார்மேற் செய்யுங்கோபம் அவருக்குத் தீங்கு செய்தலால், அதனைத் தடுப்பதே தருமம். வலியார்மேற் செய்யுங்கோபம் இம்மையில் அவராலே துன்பமொன்றையே அடைவித்தலாலும், மெலியோர்மேற் செய்யுங்கோபம் இம்மையிலே பழியையும் மறுமையிலே பாவத்தையும் அடைவித்தலாலும், இதுவே மிகக் கொடியதாகும். ஆகவே, கோபம் ஓரிடத்தும் ஆகாதென்பதே துணிவு.

ஒருவனுக்கு அருளினால் உண்டாகும் முகமலர்ச்சியையும் மனமகிழ்ச்சியையும் கொன்று கொண்டெழுகின்ற கோபத்தின் மேற்பட்ட பகை வேறில்லை. ஆதலினாலே, தன்னைத்தான் துன்பமடையாமற் காக்க நினைத்தானாயின், தான் மனத்திலே கோபம் வாராமற் காக்கக்கடவன். காவானாயின், அக்கோபம் அவனையே இருமையினும் கடுந்துன்பங்களை அடைவிக்கும்.

Link to comment
Share on other sites

சூது

சூதாவது, கவறு சதுரங் முதலியவற்றால் ஆடுதல். சூது, தருமமும் பொருளும் இன்பமுமாகிய மூன்றுக்கும் இடையூறாய் உள்ளது. சூதாட்டத்தில் வென்று பெரும் பொருள், இரையென்று மீன் விழுங்கிய தூண்டின் முள்ளைப் போலச் சூதாடுவோர் நீங்காமைக்கு இட்ட ஒரு தளையாகி மற்றைத்தொழில்களை யெல்லாங் கெடுத்துப் பின்பு துன்பத்தைத் தரும். ஆதலால், ஒருவன் தனக்குச் சூதாடுதலில் வெல்ல வல்லமை யிருந்தாலும் சூதாடலாகாது. சூதாடுவோர் ஒன்றை முன்பெற்று இன்னும் வெல்லுவோமென்னும் கருத்தால் ஆடி நூற்றை இழப்பர். அவர் பொருள் அப்படியே அழிந்து வருதலால், அப்பொருளினால் அடையதக்க தருமமும் இன்பமும் அவருக்கு இல்லை. செல்வத்தைக் கெடுத்து வறுமையைக்கொடுத்தற்றொழிலிலே தவறாமையால் சூதை மூதேவியென்பர் அறிவுடையோர்.

சூதாடலை, விரும்பினவர் வெல்லினும் தோற்பினும் ஒருபொழுதும் அச்சூதைவிடாது தங்காலத்தையும் கருத்தையும் அதிலே தானே போக்குவர். ஆதலால் ஒளியும் கல்வியும் செல்வமும் போசனமும் உடையுமாகிய ஐந்தும் அவரை அடையாவாம். சூதானது தோல்வியினாலே பொருளைக் கெடுத்துக் களவை விளைவித்து, வெற்றி பெறுவதற்காகப் பொய்யை மேற்கொள்ளப்பண்ணிய பகையை விளைவித்தலால், அருளைக் கெடுத்து, இம்மை மறுமை இரண்டினுந் துன்பத்தையே அடைவிக்கும். ஆதலினாலே, சூதானது தரித்திரத்துக்குத் தூது, பொய்க்குச் சகோதரம், களவு சண்டை முதலிய கீழ்த் தொழில்களுக்கு மாதா, சத்தியத்துக்குச் சத்துரு என்பர் அறிவுடையோர்.

Link to comment
Share on other sites

ஐந்தாவது

வம்பறாவரிவண்டுச் சருக்கம்

தண்டியடிகணாயனார் புராணம்

திருவாரூர் வருந்தண்டி யடிகள் காட்சி

சேராதார் குளந்தொட்டற்கு அமணர் சீறிக்

"குருடா! நீ முன்செவிடுங் கூடிற்று" என்று

குறித்தறியைப் பறித்தெறியக் கொதித்துத் தங்கண்

அருளாலே விழித்தெவரும் அந்தராக

அமணர் கலக் கம்பலகண் டவர்கள் பாழிப்

பருவான கற்பறித்தா விக்கரையுங் கட்டிப்

பரனருளால் அமருலகம் பற்றி னாரே.

சோழமண்டலத்திலே, திருவாரூரிலே, தண்டியடிகணாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பிறவிக்குருடர். அவர் தம்முடைய அகக்கண்ணினாலே சிவபெருமானைத் தரிசித்துத் தோத்திரம் பண்ணுகின்றவர். எப்பொழுதும் ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை மிகுந்த அன்பினோடு ஜபிக்கின்றவர். அந்தத் திருப்பதியிலுள்ள பூங்கோயிலைக் காலந்தோறும் வலஞ்செய்து வணங்குகின்றவர்.

இப்படியிருக்கு நாளிலே, அவ்வாலயத்துக்கு மேற்றிசையில் இருக்கின்ற திருக்குளம் பக்கமெங்கும் சமணர்களுடைய பாழிகளாகி இடத்தினாலே குறைவடைந்தமையால், தண்டியடிகள் அதனை அறிந்து, அத்திருக்குளத்தைத் தாம் பெருகக் கல்லல் வேண்டும் என்று நினைந்து, அவ்விடத்திற்சென்று திருக்குளத்தினுள்ளே கல்லுமிடத்தில் ஒருதறி நட்டு, அதிலே கயிறு கட்டி, கரையிலும் தறி நட்டு, அக்கயிற்றினுனியை அதனில் இசையக் கட்டி, மண்வெட்டியையும் கூடையையும் எடுத்து, அக்கயிற்றைத் தடவிக் கொண்டு சென்று, மண்ணைக் கல்லிக் கூடையில் எடுத்துக் கொண்டு, மீண்டும் அக்கயிற்றைத் தடவிப் போய்க் கரையிலே போடுவார் இப்படித் தினந்தோறும் மிகுந்த விருப்பத்துடன் திருக்குளங் கல்லும் பொழுது, சமணர்கள் பொறாமை கொண்டு அவரை அணைந்து, "மண்ணைக் கல்லிற் பிராணிகள் இறந்துபோம்; வருத்தல்வேண்டாம்" என்று சொல்ல தண்டியடிகள் "அவிவேகிகளே! இதுமெய்க் கடவுளாகிய பரமசிவனுக்குச் செய்யுங்குற்றமற்ற புண்ணியம். இதனருமை உங்களுக்கு விளங்குமா? என்றார். அது கேட்ட சமணர்கள் "நாஞ்சொன்ன தருமமுறையைக் கேட்டாயில்லை. நீ கண்ணேயன்றிக் காதினையும் இழந்தனையோ" என்று சொல்ல; தண்டியடிகள் "மந்தபுத்தியும் காணாக்கண்ணும் கேளாச் செவியும் உங்களுக்கே உள்ளன" என்று சொல்லி, "திரிபுரதகனஞ் செய்த கடவுளுடைய திருவடிகளையேயன்றி வேறொன்றையும் நான் காணேன். அதனையறிதற்கு நீங்கள் யார்? அக்கடவுளுடைய திருவருளினால் உலகமெல்லாம் அறியும்படி என்கண் காணவும் உங்கள் கண் குருடாகவும் பெற்றால், நீங்கள் யாது செய்வீர்கள்? என்றார் சமணர்கள் "நீ உன் கடவுளது அருளினால் கண்பெற்றாயாகில், நாங்கள் இவ்வூரில் இரோம்" என்று சொல்லி, அவருடைய மண்வெட்டியைப் பறித்துக் குறித்தறிகளைப் பிடுங்கி எறிந்தார்கள். தண்டியடிகள் மிகக்கோபங்கொண்டு, திருக்கோயில் வாயிலிலே சென்று நமஸ்கரித்து, "எம்பெருமானே! தேவரீரை நிந்தனைசெய்யும் அதிபாதகர்களாகிய சமணர்கள் இன்றைக்குத் திருக்குளங்கல்லுதலாகிய சிவ புண்ணியத்தையும் அதனைச் செய்யப்பெற்ற அடியேனையும் அவமானஞ் செய்தமையால், அடியேன் அது பொறாது மிக வருந்துகின்றேன் சர்வ சாமர்த்தியமுடைய தேவரீர் இவ்வருத்தத்தை நீக்கியருளல் வேண்டும்" என்று பிரார்த்தித்து, நமஸ்காரஞ்செய்து, தம்முடைய திருமடத்திற்குசென்று, அழுதுகொண்டிருந்தார்.

அன்றிரவு அவர் நித்திரை செய்யும் பொழுது, பரமசிவன் அவருக்குச் சொப்பனத்தில் தோன்றி "தண்டியே உன் கவலையை ஒழி, நாளைக்கு உன் கண் காணவும் அந்தச் சமணர்களுடைய கண்கள் மறையவும் அருள் செய்வோம் பயப்படாதொழி" என்று அருளிச் செய்து, சோழராஜாவுக்கும் சொப்பனத்திலே தோன்றி "தண்டியென்பவர் நமக்குக் குளங்கல்ல, சமணர்கள் அதுகண்டு பொறாது, அப்பணிக்கு விக்கினஞ் செய்தனர் நீ அவனிடத்திலே சென்று அவன் கருத்தை முடிப்பாய்" என்று ஆஞ்ஞாபித்து மறைந்தருளினார். சோழராஜா விழித்து எழுந்து, பரமசிவனைத் தோத்திரஞ்செய்து சூரியன் உதித்தபின் தண்டியடிகளை அடைந்து தாங்கண்ட சொப்பனத்தைச் சொல்ல தண்டியடிகள் "மகாராஜாவே! நான் திருக்குளங்கல்லும்போது சமணர்கள் வந்து, அது தருமமன்றென்று பல சொல்லி நான் நட்ட குறித்தறிகளைப் பிடுங்கி, என்னை வலிசெய்து, மண்வெட்டியைப் பறித்துகொண்டார்கள். இன்னும் "நீ கண்ணேயன்றிக் காதினையும் இழந்தலையோ" என்றார்கள். அதற்கு நான் நம்முடைய சிவபெருமானது திருவருளினால் என் கண்காணவும் உங்கள் கண்கள் மறையவும் பெற்றால் நீங்கள் யாது செய்வீர்கள் என்று கேட்க; "நாங்கள் இந்த ஊரில் இரோம் என்று ஓட்டினார்கள். இனி நிகழ்வதைக் கண்டு, நீர் இந்த வழக்கை முடித்தல்வேண்டும்" என்றார். அப்பொழுது அரசன் சமணர்களை அங்கே அழைத்துக் கேட்க, அவர்கள் அதற்கு உடன்பட்டார்கள். அதுகண்டு, தண்டியடிகள் முன்செல்ல; அரசன் பின்சென்று திருக்குளக் கரையிலே நின்று தண்டியடிகளை நோக்கி "சிவபத்தரே! நீர் பரமசிவனது திருவருளினாலே கண்பெறுதலைக்காட்டும்" என்று சொல்ல தண்டியடிகள் "சிவபெருமானே மெய்க்கடவுளும் சிறியேன் அவருக்கு அடியானுமாயின் இவ்வரசனுக்கு முன்னே நான் கண்பெற்றுச் சமணர்கள் கண் இழப்பார்கள்" என்று சொல்லி, ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை உச்சரித்துக் கொண்டு திருக்குளத்திலே முழுகிக் கண்பெற்றெழுந்தார். சமணர்களோ கண்ணிழந்து தடுமாறினார்கள். அதுகண்ட அரசன் தன்னேவலாளரை நோக்கி, "தண்டியடிகளுடனே ஒட்டிக் கெட்ட சமணர்களைத் திருவாரூரினின்றும் அகன்று போம்படி துரத்துங்கள்" என்று ஆஞ்ஞாபிக்க, அவர்கள் அவ்வாறே துரத்தலும் சமணர்கள் கண்காணாமையால் மனங் கலங்கிக் குழியிலே விழுவார்கள். "கோலும் இல்லையோ" என்பார்கள். "இது வழி என்று தூற்றை அடைவார்கள்" "பொய்ப் பொருளை மெய்ப்பொருளெனக் கொண்டு அழிந்தோம்" என்பார்கள்; பாய்களை இழப்பார்கள்; பீலிகளைத் தடவிக்காணாமல் திரும்புவார்கள்; மயங்கி நிற்பார்கள்; காலும் கையும் முறியக் கற்களின்மேல் இடறி விழுவார்கள்; மிக நெருங்கி ஒருவரை ஒருவர் முட்டிக்கொள்வார்கள்; ஓடுவதற்கு வழியறியாது மயங்குவார்கள்.

இந்தப் பிரகாரம் சமணர் கலக்கங்கண்டு அவர்களை ஓடத்துரத்தியபின்னர், சோழராஜா சமணர்களுடைய பாழிகளையும் பள்ளிகளையும் பறித்து, திருக்குளத்துக்கு கரைகட்டி, மனமகிழ்ந்து, தண்டியடிகளை வணங்கிக் கொண்டு போயினான். அவர் பரமசிவனைத் தியானித்து, ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஜபித்து, திருத்தொண்டு செய்துகொண்டிருந்து சிவபதம் அடைந்தார்.

திருச்சிற்றம்பலம்

Link to comment
Share on other sites

செய்ந்நன்றியறிதல்

செய்ந்நன்றியறிதலாவது தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை. காரணமின்றிச் செய்த உதவிக்கும், காலத்தினாற்செய்த உதவிக்கும், பயன் றூக்காது செய்த உதவிக்கும், பூமியையும் சுவர்க்கத்தையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் அவைக்கு இவை ஈடாகா. காரணமின்றிச் செய்த உதவியாவது தனக்கு முன்னே ஒருதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவி. காலத்தினாற் செய்த உதவியாவது ஒருவனுக்கு இறுதி வந்தபொழுது ஒருவன் செய்த உதவி, பயன் றூக்காது செய்த உதவியாவது இவருக்கு இது செய்தால் இன்ன பிரயோசனங் கிடைக்கும் என்று ஆராயாது செய்த உதவி.

இந்த மூன்றுமல்லாத உதவியும், அறிவொழுக்க முடையவருக்குச் செய்தபோது, அவருடைய தகுதி எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரியதாகும். ஆதலினால், அறிவொழுக்கமுடையவர், தமக்குப் பிறர்செய்த உதவி தினையளவினதாயினும், அதனை அவ்வளவினதாக நினையாது பனையளவினதாக நினைப்பர்.

யாவராயினும் தமக்கு நன்றி செய்தவருடைய சிநேகத்தை விடலாகாது. ஒருவன்றானே முன்பு ஒருநன்றி செய்து, பின்பு தீமை செய்வானாயின், அவன் செய்த அவ்விரண்டினுள்ளும் தீமையை அப்பொழுதே மறந்து, நன்றியை எப்பொழுதும் மறவாமற்கொள்வதே மிக மேலாகிய தருமம். தமக்கு ஒரு நன்றி செய்தவர் பின்பு நூறு தீமைகளைச் செய்தாராயினும், மேலோர், அந்நன்றி ஒன்றையுமே உள்ளத்தில் வைத்துத் தீமை நூற்றையும் பொறுப்பர். தமக்கு நூறு நன்றி செய்தவர் பின்பு ஒரு தீமை செய்தாராயினும், கீழோர் அந்நன்றி நூற்றையும் மறந்துவிட்டு, அத்தீமையொன்றின் பொருட்டு அவர்மேல் வைரஞ் சாதிப்பர்.

மகாபாதகங்களைச் செய்தவருக்கும் பிராயச் சித்தத்தினால் உய்வு உண்டாகும்; ஒருவர் செய்த நன்றியை மறந்தவருக்கு உய்வு இல்லை. செய்ந்நன்றி மறந்தவர் அளவில்லாத காலம் நரகங்களிலே கிடந்து துன்புற்று, பின்பு பூமியிலே பிறந்து, வரதரோகம், சூலை, மசூரிகை, குட்டம் முதலிய வியாதிகளினால் வருந்துவர்.

Link to comment
Share on other sites

"சைவ சமயமே சமயம் சமயாதீதப் பழம் பொருளைக்

கைவந் திடவே மன்றுள்வெளி காட்டும் இந்தக் கருத்தை விட்டுப்

பொய் வந் துழலும் சமய நெறி புகுத வேண்டாம் முத்திதருந்

தெய்வ சபையைக் காண்பதற்குச் சேர வாருஞ் சகத்தீரே"

gshiva.jpg

Link to comment
Share on other sites

"முத்தாந்த வீதி முளரி தொழும் அன்பருக்கே

சித்தாந்த வீதி வருந் தேவே பராபரமே"

"அயர்வறச்சென் னியில் வைத்து ராசாங்கத்தில்

அமர்ந்ததுவை திகசைவம் அழகி தந்தோ'

இவ்வாறு ஸ்ரீ தாயுமான சுவாமிகள் அருளிச் செய்திருக்கிறார்கள். சைவ சமயமே உண்மைச் சமயம் என்றும் அது மற்றச் சமயங்களுக்கெல்லாம் மேலான ராஜபீடத்தில் அமர்ந்திருக்கிறது என்றும் அருளிச் செய்திருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

உருத்திராக்கம்

சிவமணி, அக்குமணிமாலை, கண்டிகை, தாழ்வடம் என்று உருத்திராக்கத்திற்கு பல பெயர்கள் உண்டு. திருஅடையாள மாலை என்பதும் இதுவே.

உருத்திராக்க மரம் கிழக்கு ஆசியா, மலேசியா, ஆஸ்திரேலியா, பசுபிக் தீவுகள் ஆகியவற்றில் நிறைய இருக்கிறது. இந்தியாவை ஓட்டிய நேபாளத்திலும் இவை இருக்கின்றன. இந்தியாவில் பீகார், வங்காளம், அஸ்ஸாம், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரம் ஆகியவற்றிலும் உருத்திராக்க மரம் இருக்கிறது.

செந்நெறியின் உடல், உண்மை உணர்த்தலாகிய திருவெண்ணீற்றுப்பூச்சு, உள்ளம், அனைத்துயிர்கள் மாட்டும் வைக்கும் கண்ணோட்டத்தின் அடையாளமாகிய சிவமணி. மணி என்பது கடவுள் மணி இதனையே கடவுள் கண்மணி என்பர். உயிர், மெய்யுணர்வு கைவரச் செய்துய்ய சிவனடியார்க்குச் சேர்ப்பிக்கும் 'சிவாய நம' என்னும் ஐந்தெழுத்து.

நீறு, சிவமணி, ஐந்தெழுத்து என்னும் மூன்றனுள் நடுவாகக் காணப்படும் சிவமணி காந்த ஆற்றலையும், மின் ஆற்றலையும் ஒருங்குடையது. அம்மணியினை அணிபவர்க்கு அவ்விருவகையாலும்

உயிர் ஆற்றல் பெருகும்

நோய் அணுகாது

உடற்பொலிவும் வளரும் பெருகும்

உடல் வலுவுண்டாகும்

உடல் வலுவுண்டாகவே உள்ளத்துரன் உண்டாம்

உள்ளத்துரன் உண்டாக நல்லொழுக்கம் பெருகும்

நல்லொழுக்கம் பெருகுதலால் நன்மையே புரிவர்.

அக்குறிப்புத் தோன்றும் உருவகமாகக் கடவுள் கண்மணி என்றனர்.

உருத்திராக்கம் செந்நீரைத் தூய்மை செய்யும், மூளை, மூச்சுப்பை, குருதிப்பை, குண்டிக்காய்ம் நரம்பு, நாடி முதலிய உள்ளுறுப்புக்கள் செவ்வையாக வேலை செய்யத்தக்க ஆற்றலைத் தந்து துணை புரியும். அங்ஙனம் செய்வதற்கு ஏற்றவாறு உடம்பில் பல்வேறு இடங்களில் அம்மணிகளை இடையறாது அணியப்படுதல் வேண்டும்.

"பரமசிவன் மலன் பக்தர்க்குச் சின்ன

முருவுடலிற் கண்டியு நீறும்" -சைவ சமய நெறி 1922

சைவ சமயிகளுடைய சிவசின்னங்கள் விபூதி, உருத்திராக்கம் என்னும் இரண்டுமாம். இன்றைக்கு சைவ சமயிகள் முறையோடு பொருந்தாது பெயரளவிலாது விபூதி தரிக்கின்றனர். ஆனால் உருத்திராக்கம் தரிக்கும் சைவர்கள் நம் மத்தியில் குறைந்து கொண்டே வருகின்றனர். காரணம் அதன் மகிமையை அறியாது தரிக்க கூசியதே ஆகும். அப்படி கூச்சம் கொண்டோரை கூத்தபிரான் காண கூசுவார்.

"பூண்பதற்கு கண்டியினைக் கூசியிடும் புல்லியரைக்

காண்தற்குக் கூசுமரன் கைத்து" -சைவ சமய நெறி 138

மதுபானமும் மாமிச போசனமும் இல்லாதவராய், ஆசாரமுடையவராய் உள்ளவர் உருத்திராக்கம் தரித்தற்கு யோக்கியர் ஆவர். உருத்திராக்கம் தரித்துக் கொண்டு மதுபானம் மாமிச போசனம் முதலியவை செய்தவர் தப்பாது நரகத்தில் வீழ்ந்து, துன்பத்தை அநுபவிப்பர்.

ஆறுமுக சிவனாராகிய முருகவேளின் மறக்கருணைக் குட்பட்ட தாராகாசுரன் புத்திரர்களாகிய தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்துன்மாலி என்னும் திரிபுராதியர்களாலே தேவர்கள் அடைந்த துன்பத்தை ஸ்ரீகைலாபதியிடம் முறையிட்ட போது பரமேஸ்வரர் ஆயிரம் தேவ வருஷம் தம்முடைய மூன்று திருக்கண்களை மலர்த்திக் கொண்டிருப்ப அவைகளிலிருந்து நீர் பொழிந்தது. சூரிய ருபமாகிய நெற்றிக்கண் பொழிந்த 12 உருத்திராக்க மரமும், சந்திரரூபமாகிய இடக்கண் பொழிந்த நீரிலே 16 உருத்திராக்க மரமும், அக்கினி ரூபமாகிய நெற்றிக்கண் பொழிந்த நீரிலே 10 உருத்திராக்க மரமும் உதித்தன. வலக்கண்ணினின்று கபிலநிற உருத்திராக்கமும். அதனின்று செந்நிற உருத்திராக்கமும், அதனின்று பொன்நிற உருத்திராக்கமும் தோன்றின. இடக்கண்ணினின்று வெண்ணிற உருத்திராக்கமும் தோன்றிற்று. நெற்றிக்கண்ணினின்று கருநிற உருத்திராக்கமும் தோன்றிற்று.

உருத்திரன் + அக்ஷம் (கண்) = உருத்திராக்க்ஷம்

(ஈண்டு வரும் உருத்திரன் மூவரில் ஒருவர் அன்று சுத்த மாயா புவனம் வரையுஞ் சஞ்சரிக்கும் மகாருத்திரர்)

இயல்பான நேர்கோடுகளை முகம் என்று கணக்கிட்டு ஒன்று முதல் பதினாறு வரையுள்ள மணிகளை கண்டறிந்து அவைகளை அணியும் பலன்களையும் சைவ சமய நூல்கள் சிறப்பித்துச் சொல்லும்.

சைவசமயிகள் சந்தியாவந்தனம், சிவமந்திர செபம், சிவபூசை, சிவத்தியானம், சிவாலய தரிசனம், சிவ புராணம் படித்தல், சிவபுராணங்கேட்டல், சிரார்த்தம் முதலியவை செய்யும் காலங்களில் அவசியமாகியத் தரித்துக் கொள்ளல் வேண்டும். தரித்துக் கொள்ளாது இவை செய்தவருக்குப் பலன் அற்பம்.

ஸ்நானம் செய்யும் போது உருத்திராக்க மணியிற்பட்டு வடியும் நீர் கங்கா நீருக்கு சமமாகும்.

உருத்திராக்க மணியை பொன்னினாயினும், வெள்ளியாயினும், தாமிரமாயினும், முத்தாயினும், பவளமாயினும், பளிங்காயினும் இடையிடையே இட்டு முகத்தோடு முகமும், அடியோடு அடியும் பொருந்தக் கோர்த்துத் தரித்தல் வேண்டும்.

பூணூல், குடுமியில் ஒரு மணியும், தலையில் இருப்பத்திரண்டு மணியும், காதுகளிலே முப்பத்திரண்டு மணியும், புயங்களிலே தனித்தனி பதினாறு மணியும், மார்ப்பிலே நூற்றெட்டு மணியும் தரித்தல் வேண்டும். பூணூலும், குடுமியும் ஒழிந்த மற்றைத் தானங்களிலே அவ்வத்தானங் கொண்ட அளவு மணி தரித்தலும் ஆகும். குடுமியிலும், பூணூலிலும், காதுகளிலும், கண்டத்திலும் (கண்டமணி) எப்போதும் தரிக்கலாம். மற்றையத் தானங்களில் உள்ள மணியைச் சயனத்திலும், மலசலம் போகும் காலத்திலும், நோயுற்ற போதும் மற்றைய தீட்டு நாட்களிலும் தரித்தல் கூடாவாம்.

எக்காலத்திலும் உருத்திராக்கம் தரித்தல் உத்தமம். அப்படி இல்லாவிடில் காலை, உச்சி, மாலை என்று சந்தியா காலத்தில் அவசியம் தரித்தல் வேண்டும். உருத்திராக்க மாலையை பட்டுப்பையில் சுற்றிப் பெட்டகத்தில் வைத்தல் வேண்டும்.

இது வன்றி சிவமணி ஜெபம் செய்யும் பொருட்டு பயன்படுத்தப்படும். திருஐந்தெழுத்தை எண்ணும் பொழுது சிவமணி கையிற் கொண்டு ஒவ்வொரு மணியாக உருட்டுதல் வேண்டும். இதனை சிவம் செய்தல் என்பர். திருவைந்தெழுத்து ஜெபம் செய்ய வாய்ப்பாக 108 பொடி மணியாகவோ அல்லது 54 அல்லது 27 மணியாகவோ கோர்த்து நுனி இரண்டையும் ஒன்றாகக் கட்டி நாயக மணியை சேர்த்து கோத்து முடிக்க வேண்டும். அப்படி கோர்க்கும் போது 2 முக உருத்திராக்கமும், 12 முக உருத்திராக்கமும், 13 முக உருத்திராக்கமும் ஆகாது. பல விதமாகிய முக உருத்திராக்கங்களையும் கலந்து கோர்த்தலும் கூடாவாம். மந்திரம் கணிக்கும் போது தூய வஸ்திரத்தால் ஜெபமாலையை மறைத்து உருத்திராக்கம் ஒன்று கொன்று உரசும் ஓசை கேட்காது உருட்டி ஜெபித்தல் வேண்டும். ஜெபிக்கும் போது மேரு மணியாகிய நாயக மணியை எண்ணில் சேர்க்காமல், துறவறத்தார் கீழாகவும், இல்லறத்தார் மேலாகவும் தள்ளக் கடவர்.

உருத்திராக்க மணியாவது, மாலையாவது கீழே விழுந்தால் எடுத்து கண்களில் ஒற்றி நீரில் அபிசேகம் செய்து மலர் கொண்டு அருச்சித்து 108 முறை ஐந்தெழுத்து மந்திரம் ஜெபித்தல் வேண்டும். மாலைக் கயிறு அறுந்தாலும், தகாதவர் தீண்டி விட்டாலும் இப்படியே செய்க. மாத விலக்குடைய பெண்கள் தீண்டி விட்டால் வேறு மாலையை கொள்ளுக.

உருத்திராக்கம் தரிப்போர் யாவராயினும் சீவன் முத்தராவதோடு எல்லா புண்ணிய நதியில் மூழ்கிய பலனும், பல யாகங்கள் செய்த பலனும், பல புண்ணிய தலங்கள் சென்று தரிசித்த பலனும் கிட்டும். உருத்திராக்கப் பெயரை உச்சரிப்பினும், அதனைக் காணினும் தொட்டாலும், உட்கொண்டாலும் பேரின்பம் நல்கும். எனவே தான் ஆன்றோர்கள் ஒவ்வொருவரும் சந்திக்காலம் கிட்டும் போது கழுத்தில் சிவமணி தரிக்கச் செய்தனர். 108 மணி மாலையை அணிந்து சிவாலய தரிசனம் செய்தால் ஆலயத்தினுள் நடக்கும் ஒவ்வொரு அடியும் ஒவ்வொரு அசுவமேதயாகப் பலனைக் கொடுக்கும். சிவனடியார்க்கு சிவமணி மாலையை அல்லது சிவமணியை தானஞ் செய்வது மகா புண்ணியம் ஆகும்.

உருத்திராக்கத்தின் முகங்கள் தேய்தலில்லாதனவாகவும் செயற்கை தயாரிப்பில்லாததாகவும், பிஞ்சாக இல்லாததாகவும் இருத்தல் வேண்டும்.

மிகவும் உயர்ந்ததான ஒரு முகமணியை சோதிக்க விரும்பின். ஒரு முகமணியை கீழே வைத்து அதன் மேல் எண்ணிக்கையில் எத்தனை ஆயிரம் மணிகளை குவிப்பினும் அந்த ஒரு முக மணியை கீழே வைத்து அதன் மேல் எண்ணிக்கையில் எத்தனை ஆயிரம் மணிகளை குவிப்பினும் அந்த ஒரு முக மணியை கீழே வைத்து அதன் மேல் எண்ணிக்கையில் எத்தனை ஆயிரம் மணிகளை குவிப்பினும் அந்த ஒரு முகமணி மட்டும் துருவி மேலே வந்து நிற்கும்.

Link to comment
Share on other sites

முகமணி=====அதிதேவதை====== யாருக்கு ப்ரீதி======= பலன்== =============சிறப்புப் பலன்

1 ========== தற்பரமசிவன்========= சிவன்========= பிரமகத்தி========= நிவர்த்தி மனோதிடத்தை வளர்க்கும்

2 ==========ஸ்ரீ கண்ட பரமசிவன் ======சிவசக்தி====== கோகத்தி நிவர்த்தி====== இச்சைகளைக் கட்டுப்படுத்தும்

3 ==========அக்னி தேவன்====== மும்மூர்த்தி====== ஸ்திரீ ஹத்தி நிவர்த்தி ======வேலைக் கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும்

4 ==========பிரம்மா ======பிரம்மா====== நரஹத்தி நிவர்த்தி====== சித்தப்பிரமைப் போக்கும்

5 ==========காலாக்கினி ருத்ரர் ======சதாசிவம்====== புணர்தற் பாலரல்லாதாரை புணர்ந்த பாவமும் விலக்கப் பட்டவைகளை புசித்த பாவமும் நிவர்த்தி ======இருதய நோயைக் குணப்படுத்தும்

6 ==========சுப்பிரமணியர்====== ஆறுமுகர்====== பிரமஹத்தி நிவர்த்தி ======மயக்கம் இரத்த அழுத்தம் ஆகியவற்றை நீக்கும்

7 ==========ஆதிசேடன்====== சத்தமாதர்====== கோகத்தி, பொற்களவுப் பாவ நிவர்த்தி ======ஆயுளை அதிகரிக்கும்

8 ==========விநாயகர்====== அட்ட

வித்தியேசுரர்====== குருபத்னியை புணர்ந்த பாவம், தானம் ஏற்ற பாவம் பிறரன்னம் கவர்ந்துண்ட பாவம் நிவர்த்தி ======செல்வத்தை ஈட்டும்

9 ==========வைரவர்====== நவதீர்த்தங்கள்====== பல பிராணகத்தி, 100 பிரம்மஹத்தி நிவர்த்தி, பூதம், பிசாசும், சர்ப்ப விக்கினங்கள் விலக அட்டமாசித்தி கைகூடும் முக்திக்கு வழிகாட்டும்,====== இருதய் பலவீனத்தைக் குணப்படுத்தும்

10 ==========விட்டுணு ====== திக்கு பாலகர்கள் ======நாள், கோள், பேய், பூதம், பிரம்மராக்கத தீமை விலகல்====== இருமலைக் குணப்படுத்தும்

11========== பதினொரு ருத்திரர்கள்====== 11 ருத்திரர்கள் ======ஆயிர அசுவமேத யாக பயனும் 100 வாச பேய பலத்தையும் லட்ச கோதான பலமும் தரும்====== தீவிரத் தொற்று நோய்களை நீக்கும்

12 ==========பன்னிரெண்

டாதித்தர்====== விட்டுணு முதலிய 12 தேவர்கள்====== கோதான பலமும், அசுவமேத பலமும் பொன் தான் பலமும் கிடைக்கும்====== இந்திரியப் பலத்தை வலுப்படுத்தும்

13 ==========சுப்பிரமணியர்====== சதருத்ரர்====== சர்வா பீஷ்டத்தையும் ======சர்வ சித்தியையும் கொடுக்கும். மாதா, பிதா, சகோதரர், புத்திரர், கொலை கருவைக் கலைத்த பாவம் நீக்கும்====== ஞானத்தை தரும்

14 ==========சிவமும் சக்தியும்====== அசுவினி தேவர்====== அட்ட பசுக்கள் தேவமுனிவர் எல்லோரையும் வசப்படுத்தி சிவபதம் கொடுக்கும் உடல் தேஜஸையும்,====== உள்ளத்தின் ஒளியையும் பெருக்கி சிறந்த ஞானியாக்கும்

15 ==========சதாசிவம் ======சந்திரன், வருணன் முதலிய தேவர்கள் ======சகல பாவ நிவர்த்தி

16 ==========அனந்த தேவர் ======பிரம விஷ்ணு ருத்ரர் மற்றும் 33 கோடி தேவர்கள் ======சாயுஜய பேறு கிட்டும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.