Jump to content

Recommended Posts

37. அளவை - குறிப்பு தருக.

நீட்டல் அளவை, நிறுத்தல் அளவை போல உலகப் பொருள்களை அளப்பதற்கு பலவிதமான அளவை முறைகள் இருப்பவை போல சமய உலகிலும் பல அளவைகள் பேசப்படுகின்றன. குறிப்பாக மூன்று அளவைகள்.

1. காட்சி அளவை - (பிரத்தியட்சப் பிராமணம்)

2. கருதல் அளவை - (அனுமானப் பிராமணம்)

3. உரை அளவை - (ஆகமப் பிராமணம்)

மேலும் பல அளவை முறைகள் இருப்பினும் பொதுவாக அவைஎல்லாம் மேற்சொன்ன மூன்றில் அடங்கும்.

38. சைவசித்தாந்தம் கூறும் முப்பொருள்கள் யாவை?

1. இறைவன் - பதி

2. உயிர் - பசு

3. மலம் - பாசம்

இம்மூன்று பொருள்களுக்கும் உரிய தொடர்பினை கீழ்வரும் திருமந்திரப் பாடல் விளக்குகின்றது.

"பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்

பதியினைப் போல் பசு, பாசம் அநாதி

பதியினைச் சென்று அணுகா பசு பாசம்

பதி அணுகிற் பசு பாசம் நில்லாவே"

39. முப்பொருள்களும் அறிவுடைப் பொருள்களா?

இறைவன் - தாமே அறியும் பேரறிவு உடையவன்.

உயிர்கள் - அறிவிக்க அறியும் சிற்றறிவு உடையவன்.

மலங்கள் - அறிவித்தாலும் அறியாத சடப்பொருள்கள்.

40. பொருள்களின் இரண்டு இயல்புகள் யாவை?

பொருள்களுக்கு பொது இயல்பு, சிறப்பு இயல்பு என இரண்டு இயல்புகள் உண்டு.

பொது இயல்பு

ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளின் சார்பால் உண்டாகி, அச்சார்பு நீங்கிவிடும் போது நீங்கி விடும் இயல்பு.

(எ.கா) நீரில் வெம்மை

சிறப்பு இயல்பு

ஒரு பொருளுக்கு எச்சார்ப்புமின்றி இயற்கையாகவே அமைந்திருக்கும் இயல்பு.

(எ.கா) நீரின் குளிர்ச்சி

Link to comment
Share on other sites

  • Replies 479
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துயிர் ஒன்றென் றெண்ணி

அரும்பசி யவர்க்கு மாற்றி

மனதுள்ளே பேதா பேதம்

வஞ்சகம் பொய் களவு சூது

சினத்தையும் தவிர்ப்பாகிய கில்

செய்தவம் வேறோன் றுண்டோ

உனகிது உறுதியான

உபதேசம் ஆகுந்தானே!

Link to comment
Share on other sites

41. இறைவன் செய்யும் ஐந்தொழில்கள் யாவை?

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்.

42. மும்மூர்த்திகள் யாவர்?

படைத்தல் தொழிலைச் செய்யும் - பிரமன்

காத்தல் தொழிலைச் செய்யும் - திருமால்

அழித்தல் தொழிலைச் செய்யும் - உருத்திரன்

இவர்களே மும்மூர்த்திகள். இம்மும்மூர்த்திகளின் மேம்பட்டவர் சிவபெருமான். இவர்கள் சிவபெருமான் அருளினால் இந்தத் தொழிலைச் செய்யும் உருத்திரன் குணிஉருத்திரன். சிவபெருமான் மகாஉருத்திரன். இவ்வேறுபாட்டினை சிவஞான மாபாடியத்தில் சிவஞான சுவாமிகள் தெளிவாக விளக்குகிறார்கள்.

Link to comment
Share on other sites

ஆறாவது

வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்

சிறுத்தொண்டநாயனார் புராணம்

பல்குமருத் துவரதிபர் செங்காட்டங் குடிவாழ்

படைத்தலைவ ரமுதளிக்கும் பரஞ்சோதி யார்மெய்ச்

செல்வமிகு சிறுத்தொண்டர் காழி நாடன்

றிருவருள் சேர்ந் தவர்வளருஞ் சீராளன் றன்னை

நல்குதிரு வெண்காட்டு நங்கைசமைத் திடப்பின்

னன்மதிச்சந் தனத்தாதி தலைக்கறியிட் டுதவப்

புல்கவரும் வயிரவர்தா மகிழ்ந்துமக வருளப்

போற்றியவர் சிவனருளே பொருந்தினாரே.

சோழமண்டலத்திலே, திருச்செங்காட்டங்குடியிலே, மகாமாத்திரர் குலத்திலே, பரஞ்சோதியாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் ஆயுள் வேதங்களிலும், படைக்கலத் தொழில்களிலும், குதிரை யேற்றம், யானையேற்றங்களிலும் மிகச் சிறந்தவர். வேதமுதலிய நூல்களை மெய்ப்பொருளை அறிதல் வேண்டுமென்னும் அவாவினோடு திருவருளை முன்னிட்டு ஓதியுணர்ந்தமையால், பரமசிவனே மெய்க்கடவுள் என்றும், அவருடைய திருவடிகளை அடைதலே முத்தி நெறியென்றுந் தெளிந்து, அவருடைய திருவடிகளை அகோராத்திரம் இடைவிடாது அன்பினோடு தியானிப்பவராயினார். சிவனடியார்களுக்கு எக்காலமுந் திருத்தொண்டு செய்பவர்.

அவர் அரசனிடத்திலே அணுக்கராகி, அவன்பொருட்டு யானை செலுத்திக் கொண்டு சென்று, அவனோடு மாறுபட்ட பலவரசர்களை வென்று, அவர்களை தேசங்களைக் கைப்பற்றி, அவனால் நன்கு மதிக்கப்பட்டவர். ஒருமுறை உத்தரதேசத்திலே வாதாவியென்னும் நகரத்திற்சென்று, அதனை வென்று, பலவகையிரத்தினங்களும், நிதிக்குவைகளும் யானைக்கூட்டங்களும், குதிரைக்கூட்டங்களும் அரசனுக்கு முன்கொண்டுவந்தார். அது கண்டு, அரசன் அவருடைய யானையேற்றத்தின் வலிமையை அதிசயித்துப் புகழ்ந்து பேச, அவரை அறிந்த மந்திரிகள் அரசனை நோக்கி "மகாராஜாவே! இவர் பரமசிவனுக்குத் திருத்தொண்டு செய்கையால் இவ்வுலகத்திலே இவருக்கு எதிராவார் ஒருவருமில்லை" என்றார்கள். அரசன் அதைக் கேட்டு அஞ்சி நடுநடுங்கி, இரண்டு கண்களினின்றுஞ் சோகபாஷ்பஞ் சொரிய, 'இவர் நமது கடவுளாகிய பரமசிவனுடைய திருத்தொண்டர் என்பதை உணராது, கொடிய போர்முனையிலே விட்டிருந்தேன், ஐயையோ! இது எவ்வளவு கொடிய பாவம்" என்று சொல்லி, பின்பு பரஞ்சோதியாரை நோக்கி "சுவாமீ! இக்குற்றத்தைப் பொறுத்தருளல்வேண்டும்" என்று பிரார்த்தித்து நமஸ்கரித்தான். பரஞ்சோதியார் அரசன் தம்மை நமஸ்கரித்தற்கு முன் தாம் அவனை நமஸ்கரித்து, "மகாராஜாவே! நான் எனது உரிமைத் தொழிற்கு அடுத்த திறத்தைச் செய்வேன். அதனாலே என்ன தீங்கு" என்றார். அரசன் அவருக்கு நிறைந்த நிதிக்குவைகளையும் விருத்திகளையுங்கொடுத்து, "நீர் உம்முடைய நிலைமையை நான் அறியாவண்ணம் நடத்திக்கொண்டு வந்தீர். இனி என் மனக்கருத்துக்கு இசைந்து, எனக்குப் பணிசெய்தலை ஒழிந்து, நீர் விரும்பியவாறே சிவபெருமானுக்கும் சிவனடியார்களுக்கும் வெளிப்படத்ட் திருத்தொண்டு செய்யும்" என்று விடைகொடுத்தான். பரஞ்சோதியார் விடைபெற்றுக் கொண்டு, தம்முடைய திருப்பதியிற்சென்று, கணபதீச் சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற கடவுளை வணங்கி, அவருக்குத் திருத்தொண்டுகளை வழுவாது செய்வாராயினார். திருவெண்காட்டுநங்கையாரென்ன

Link to comment
Share on other sites

சிவனடியார்க்குரிய இலக்கணங்கள்

அகத்திலக்கணம்

1. திருநீரும், கண்டிகையும் அணிதல்

2. மாதா, பிதா, குரு, பெரியோர்கள் -இவர்களை வணங்குதல்

3. தேவாரத் திருமுறைகளை அன்புடன் ஓதுதல்

4. காலை, மாலை, இரவ்ய் ஆகிய காலங்களில் ஐந்தெழுத்தை உச்சரித்தல்

5. சிவ பூஜை செய்தல், செய்வதற்கு உதவுதல்

6. சிவ புண்ணியங்களைச் செய்தல், செய்வித்தல்

7. பெரிய புராணம், சிவ சாத்திரங்கள் திருவிளையாடல் புராணம் முதலியன கேட்டல்

8. சிவாலய வழிபாடு, திருப்பணிகள் முதலியன செய்தல்

9. சிவனடியார்க்கு வேண்டுவன உதவுதல்

10. சிவனடியாரிடத்தில் மட்டுமே உண்ணுதல்

புறத்திலக்கணம்

சிவபெருமானது புகழைக் கேட்குங்கால்,

1 மிடறு விம்முதல்

2 நா தழுதழுத்தல்

3 இதழ் துடித்தல்

4 உடல் குலுங்குதல்

5 மயிர் சிலிர்த்தல்

6 வியர்த்தல்

7 சொல் எழாமை

8 கண்ணீர் அரும்புதல்

9 வாய்விட்டழுதல்

10 மெய் மறத்தல்

பக்தியின் குறிக்கோள் மேற்கூறிய குணங்களை பெறுவதுதான்.

சாந்தம், அமைதி

சாந்தம், அமைதி, அன்பு, கருணை, இன்சொல், நற்செய்கை -முதலியன உடையவர்களாக சிவனடியார்கள் விளங்க வேண்டும்

பேராசை, பொய், களவு, வஞ்சம் இவற்றை ஒழித்து விட வேண்டும். எது நடந்ததோஅது சரியே என்றும், எது நடக்க் உள்ளதோ அது நன்றாகவே நடக்கும் என்றும் எண்ணி வாழ வேண்டும்.

திருச்சிற்றம்பலம்

Link to comment
Share on other sites

திருச்சிற்றம்பலம்

ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க

திருக்கலியாணம்

Eswaramoorthyb1.jpg

சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை

திருநெல்வேலி பேட்டை

--------------------------------------------------------------------------------

தோற்றுவாய்

தெய்வம் ஒன்று. அது முற்றறிவுள்ளது. எல்லாம் வல்லது. பேரருளூடையது. அதனால் வணங்காமை அதற்கியல்பாயிற்று. அது யாரையும் வணங்க வேண்டாம். விலங்கு பறவையாதியவற்றுக்கு அத்தெய்வகுணமில்லை. வணங்காமை அவற்றுக்கும் இயல்பு தான். ஏன்? வணங்க வேண்டுமென்ற உணர்ச்சி அவற்றுக்கில்லை. ஆகலின் அவையும் வணங்கா. ஆனால் மனிதன் வணங்கும் இயல்புடையான். வணங்குஞ்செயல் தொன்று தொட்டே அவனிடம் இருந்து வருகிறது. அ·தின்னும் இருந்து வரும். எம்மனிதன் வணங்க மறுக்கிறானோ அம்மனிதன் மனிதனல்லன்.

ஆனால் மனிதன் முக்கியமாக யாரை ஏன் எதற்காக வணங்க வேண்டும்? வணங்குபவன் அவ்வினாவுக்கு விடை தெரிக. அவ்விடை பலவாயிருக்கலாம். சமயநூல்களில் ஒரு விடையுண்டு. சமயங்கள் பல. பதி பசு பாசம் என்பவற்றின் இயல்வைச் செவ்வையாக விளக்குவதே சமயத்தின் இலக்கணம். அவ்விலக்கணம் நிரம்பிய சமயம் ஒன்று தான் இருக்க முடியும். சித்தாந்த சைவமே அச்சமயம். அது தான் அவ்வினாவுக்குச் சரியான விடை சொல்ல வல்லது. சிவபிரானே பரதெய்வம், பரமபதி, பரம்பொருள், பரமாத்மா, பரப்பிரமம். மனிதன் குறைவுடையவன், நிறைவை வேண்டுபவன். நிறைவாவது நிரந்தர வின்பம். அவனுக்கு அக்குறையை நீக்கி, அவ்வின்பத்தை யருள வல்லார் அக்கடவு ளொருவரே. அவனும் அவரை வணங்கியே அக்குறையிலிருந்து விடுபட்டு அவ்வின்பத்தைப் பெறுதற்குரியான். ஆகலின் அவன் அவரை வணங்குக. அதனால் அக்குறையைப் போக்கிக்கொள்க. அவ்வின்பத்தைப் பெற்று வாழ்க. வணக்கத்துக்குப்பயன் அது. இது அவ்விடை.

சைவசமயத்தவர் வணங்குமிடம் சைவாலயங்கள். அங்குச் செய்யப்படும் வணக்கமுறைகள் பல. அவை சிறப்பு, பூசனை என்ற இரண்டிலடங்கும். திருக்கலியாணமும் ஒரு வணக்கமுறை. அது சிறப்பிற்சேரும். வணக்க முறைகளுக்கெல்லாம் விதிநூலாவன சிவாகமங்கள்.

நாத்திகர், ஆத்திகர் என மாந்தர் இருவகைப்படுவர். தெய்வமில்லை யென்பார் நாத்திகர். தெய்வம் உண்டு. அது கலியாணஞ்செய்து கொண்டது என்பது அவருக்குச் சிரிப்பாகும். அவர் தொகை பல்கோடி. தெய்வம் உண்டென்பர் ஆத்திகர். அவருள் ஒரு சாரார் அத்தெய்வம் ஆண் எனக்கொண்டு வணங்குவர். அது கலியாணஞ் செய்து கொள்ளாது என்பது, அவர் கொள்கை அவர் தொகையும் மிக்கது. தெய்வம் ஆண். அது கலியாணஞ்செய்து கொண்டது என்பார் இன்னொரு சாரார். இவர் தொகை மிகச்சிறிது. அக்கலியாணத்தை அவருங்கேட்டுச் சிரிப்பர். பரிகசிப்பார் அங்ஙனம் இரு வகையார். அவர் கூட்டுச்சேர்ந்து கொள்வதுமுண்டு. அதனால் கலியாணசாமியை வணங்கிவருவார் மிகச்சிறுதொகையினர், அக்கலியாணத்தைப் பரிகசிப்பார் மிகப்பேரளவினர் ஆகின்றார். அப்பரிகாசமுங் கடுமை. கலியாணசாமியை வணங்குபவர் அவ்வெதிர்ப்புக்கு ஆளாகாமை வேண்டும்.

அதற்காக அவர் அவ்வணக்க முறையை ஆய்க. அதன் தாற்பரியத்தை அறிக. அதனைப்போற்றி உய்க. அவ்வகையிற் சிறிதே உதவ எழுந்தது இந்நூல்.

Link to comment
Share on other sites

மக்கட் பேறும் இன்ப நுகர்ச்சியும்

தாவரத்தில் ஆண் பெண் உண்டு. வண்டு ஈ முதலியவற்றால் பூக் கருவாகும். விதை வரும். விதை மீண்டும் மரமாம். தாவரத்தில் வமிசம் விருத்தியாவது இப்படி. அதில் ஆண் பெண் கலவா, இன்பமும் நுகரா, விதை வேண்டும், அது முளைத்து மரமாக வேண்டும், இனம் விருத்தியாக வேண்டும் என்ற ஆசை தாவரத்துக்கு எப்போதுமே கிடையாது.

விலங்கு பறவை முதலியவற்றிலும் ஆண் பெண் உண்டு. அவை இன்பத்தை மாத்திரம் இச்சிக்கின்றன. அதனால் அவை கலக்கும், இன்பத்தை நுகரும். கலவியில் தாய் தமக்கை தங்கை முதலிய முறைகளையும் அவை கவனியா. தமக்குக் குட்டி குஞ்சுகள் வேண்டுமென்ற ஆசை கலவிக்கு முன் அவற்றிடமுமில்லை. கலவியின்பத்தால் வருவன குட்டி குஞ்சுகள். அவை வந்தபின்னரும் அவற்றைத் தாய்மாத்திரம் நேசிக்கிறது. அந்நேசமும் சிறிது காலமே யிருப்பது. அவற்றை ஈன்ற தந்தைக்கும் அவற்றுக்குத் தொடர்பு சிறிது மிராது. பாசமும் பிறவாது.

மனித வருக்கத்துள் வேசியிடம் ஆடவர் வருகின்றனர் கலவி நிகழ்கிறது. இன்பங் கிடைக்கிறது. பிள்ளையாசை கலவிக்குமுன் அவளுக்கும் அவருக்கும் இருக்க முடியாது. ஆயினும் பிள்ளை பிறக்கிறது. அங்கும் விலங்குத் தாய்போல் வேசித்தாய்தான் அப்பிள்ளையை வளர்க்கிறாள், அப்பிள்ளைக்குத் தந்தையான ஆடவன் எவனோ? அவனும் விலங்குத் தந்தைபோல் அப்பிள்ளையை விட்டு விலகுகிறான்.

தாவரம் இனவிருத்தி செய்கிறது, இன்பம் அனுபவிக்கவில்லை. விலங்குப்பறவையாதிகளும். வேசியும் அவளைக் கலக்கிற ஆடவரும் இனவிருத்தியும் செய்கின்றன, இன்பமும் அநுபவிக்கின்றன. ஆனால் இனவிருத்தி, இன்ப நுகர்ச்சி ஆகிய இரண்டன்பொருட்டும் அத்தாவரமும், விலங்கு பறவையாதியவும், வேசியாதியரும் கலியாணஞ் செய்து கொள்ளுகின்றனவா? இல்லை. கலியாணமில்லாமலே அவற்றுக்கு அவ்விரண்டும் தாராளமாய்க் கிடைக்கும். அங்ஙனமாக அவ்விரண்டையுங் கலியாணத்தின் குறிக்கோளெனப் பேசுவது சிறிதும் பொருந்தாது.

Link to comment
Share on other sites

கலியாணம்

கலியாணம் என்பது மனிதசமுகத்திற்றான் இருந்து வருகிறது. அது தொன்று தொட்டது. அச்சமுகத்துக்கே உரியதொரு சிறப்பினது. அச்சமுகம் மனிதசமுகமாயிருக்கும் வரை அச்சிறப்பு அழியாது. கணவனுக்கு மனைவியை வாழ்க்கைத்துணை யென்றார் வள்ளுவர். அவள் எப்படித் துணை யாவாள்? சமையல் செய்துகொடுத்தல் முதலியவற்றாலா? அதற்கொரு வேலைக்காரனோ வேலைக்காரியோ போதும். மனைவியென ஒருத்தி வேண்டாம். அன்பை அரும்பச் செய்து வளர்க்கவா? கலவிக்குத் தகுதியற்றவள் ஒருத்தி. அது தெரியாமல் அவளை ஒருவன் மணக்கிறான். அவனுக்கு அவள் துணையாயிருந்து அன்பை வளர்ப்பது சாத்தியமா? சகோதர வாஞ்சையும் அன்பு தான். ஆனால் சகோதரன் சகோதரியை மணந்து அவ்விருவரும் பரஸ்பரம் வாஞ்சித்தலில்லை. நண்பரிருவர் நட்பின் ராகின்றனர். ஒருவனை ஒருவன் மணந்து அவ்விருவரும் நண்பராகிலர். ஆகலின் அவையும் கலியாணத்தின் நோக்க மல்ல.

பெண் மாதந்தோறும் நாலைந்து நாட்கள் கலவிக்கு உதவமாட்டாள். கருக்கொண்டால் வேதனைப்படுவாள் பிரசவத்திலும் அப்படியே. கருவுயிர்த்த பின்னர் நாலைந்து மாதங்களாவது கலவிக்கு அஞ்சுவாள். தொடர்ந்து கருவுயிர்த்தால் உடல்வலி குன்றினுங் குன்றுவள். துன்மார்க்கத்தால் கருக்கொண்டால் நிந்தைக்கு இலக்காவாள். நாற்பது நாற்பத்தைந்து வயதுக்குமேல் கருக்கொள்ளும் ஆற்றலை யிழப்பாள். இன்ன சங்கடங்கள் இன்னும் பல. அத்தனைக்கும் இடமானது பெண்பிறவி. ஆண்பிறவிக்கு அவையில்லை. அதனை அவள் உணரின் வமிச விருத்தியிலும் கலவியின்பத்திலும் அவளுக்கு மனங்கொள்ளாது. ஆகலின் கலியாணம் பெண்டிர் பொருட்டென்பது சரியன்று.

ஆனால் ஆடவரிடம் ஒரு சிறப்பியல்பு உண்டு. அது தான் பிள்ளையாசை யென்பது. வேறு எப்பிராணிகளிடத்திலும் ஆணுக்கு அவ்வாசையில்லை. குட்டி குஞ்சுகள் வந்த பின்னரும் அவ்வாண் அவற்றை விரும்பாது. அது முன் சொல்லப்பட்டது. ஆடவர் தமக்குப் பிள்ளை வேண்டுமென விரும்புகின்றனர். அவ்வாசை அவரிடம் கலியாணத்துக்கு முன்னரே அரும்பிவிடுகிறது. அ·தவரிடம் இயற்கையாயுள்ளது, தவறானது மன்று. அதை அவர் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். ஆனால் பெண்ணின் துணையின்றி எவனுக்கும் அது கூடாது. அவன் அதற்கென ஒரு பெண்ணைக் கொள்கிறான். எப்படி? அவன் பெற்றோர் முதலிய நல்லுறவினரும், அவள் பெற்றோர் முதலிய நல்லுறவினரும் சந்திக்கின்றனர். குலம், கோத்திரம், குணம் முதலிய பற்றி விசாரணை நடக்கிறதூ. அவ்விருதிறத்தினருஞ் சம்மதிக்கின்றனர். பின்னர் விதிமுறையில் அவன் அவளைக் கொள்கிறான். அதுவே கலியாணம். அவ்விருகுடும்பத்தினரின் சம்பந்தமே கொண்டான் கொடுத்தான் சம்பந்தமாகும். அச்சம்பந்திகளாவார் சம்மதமின்றி, விதிமுறையின்றிச் செய்து கொள்ளப்படுங் கலியாணம் கலியாண மாகாது. அச்சம் மதம் பெற்று, அவ்விதிமுறையே நடைபெறுங் கலியாணத்தால் அவன் கணவனும், அவள் மனைவியும் ஆகின்றனர். அன்றுமுதல் அவன் அவளை உடையவன். அவள் அவனுக்கு உடைமை. அவள் வாழ்க்கையின் பொறுப்பு முழுவதையும் அவனே ஏற்றுக்கொள்கிறான். அ·தவனுக்குக் கடன். மானந்தருவது மாகும். அவனாற்காக்கப்பட்டு அச்சமின்றி வாழ்கிறாள் அவள். அவன் அவளைக் கலக்கிறான், சுகிக்கிறான், பிள்ளை பெறுகிறான். அதனோடு கொஞ்சி மகிழ்கிறான். அவன் பாலுள்ள பிள்ளையாசை நிறைவேறுகிறது. அதற்கு வைத்ததே கலியாணம். ஆகலின் கலியாணம் ஆடவர்பொருட்டெந்தே சித்தம்.

Link to comment
Share on other sites

ஸ்பெர்மடோஸ¤ன் (spermatozoon) என்பது ஓர் உயிரணு. அது தந்தைவயிற்றில் இருப்பது; பின் கலவியில் தாய்வயிற்றுக்கு வருவது. அவள் வயிற்றில் ஓவம்(ovum) என்றோ ரணுவுண்டு. அது சடம். அவ்வுயிரணு அச்சடவணுவிற் புகுகிறது. அவள்வயிற்றில் வளருஞ் சிசு அது தான். பத்தாமாதம் அச்சிசு வெளிப்படும். ஆகலின் அச்சிசுவின் உயிருக்கு மூலஸ்தானம் எது? அத்தந்தையின் வயிறேயாம். அது பற்றிப் பிள்ளையாசை கொள்ளுதற்கு உரிமை ஆடவருக்கே யுண்டு என்க. உயிரணுவுக்குத் தாய் வயிறு மூலமன்று. அவ்வணு அவள் வயிற்றிலும் இருப்பதாயின் கலவிக்கு அவசியமில்லை. ஒரு சிசுவில் ஈருயின் ஏது? இன்பத்தின் பொருட்டுக் கலக்கலாமெனின் இனவிருத்திப் பொருட்டுக் கலவியென்பதே இயற்கைவிதி. அப்பொருட்டல்லாத கலவியை இயற்கையாகக் கொண்ட வருக்கம் எதுவுமில்லை. அக்கலவி இனநாசத்துக்கே ஏதுவாகும். அவன் வயிற்றிற் சடவணுவும் அவள் வயிற்றில் உயிரணுவும் இருப்பதாயின், அவள் ஒருமுறை கருக்கொண்டு அது வெளிப்படும் வரை அவள்வயிற்றிலுள்ள பிறவுயிரணுக்கள் பிள்ளையுருப்பெற வழியற்றுப்போம். உயிரணுக்கள் அவனிடமேயிருத்தலினால் அவன் பலமனைவியரைக் கலந்து பல சிசுக்கள் உருவாதற்கு வாய்ப்புண்டு. ஆகவே உயிரணு விருத்தற்கு மூலமல்லாத பெண்டிர் பிள்ளையாசை கோடற்கு உரியராகார். ஆனால் மனைவியாவாள் தன்கணவனை யநுசரித்து அவ்வாசை கொள்ளலாம். தந்தையின் பிள்ளையே தாய்க்குமாகும். அவளும் அப்பேற்றால் மகிழ்வாள். புத்ரவாதஸல்யம் அவ்விருவருக்கும் சமமாயுண்டு. அது வாழ்நாள் முழுவதும் அவரிடமிருக்கும்.

கணவன் பால் மனைவியின் கடனொன்றுண்டு. அ·தின்றிமையாதது. அது தான் கற்புடைமை. கற்புடைமையாவது பதிவிரதாதருமம். பதியாவான் கணவன். விரதையாவாள் அவனையன்றி வேறுயாரையும் கலப்பதில்லை யென்ற விரதங் கொண்ட மனைவி. விரதமாவது சத்திய சங்கற்பம். தருமமாவது விசுவசித்தொழுகுதல். அவனுடைய வாழ்விலுந்தாழ்விலும் அவனைத் தன் மரண பரியந்தம் அவள் வஞ்சித்தல் கூடாது. அக்கற்புச் சிறிதே குலையினும் அவள் வயிற்றுப்பிள்ளை அவள் பிள்ளை தான். ஆனால் அவளைக் கொண்ட கணவன்பிள்ளை யென்பதிற் சந்தேகம் பிறந்துவிடும். தந்தைக்குப் பிள்ளையையும், பிள்ளைக்குத் தந்தையையும் தெரியமுடியாது. அவ்விருவரையும் அறிமுகப்படுத்தி வைக்கத் தாயும் இயலாதவளாவாள். அவன் செய்த நன்றியைக் கொன்ற பாதகி அவள். ஆகவே பதிவிரதை பெற்ற பிள்ளை தான் அவளுக்குப் பிள்ளை யென்பதோடு அவள் கணவனுக்கும் பிள்ளை யென்க.

Link to comment
Share on other sites

கசப்பு மருந்தும் உண்டு. அதை உண்பவர் சிறிது வெல்லத்தைச் சேர்த்துக்கொள்வர். அம்மருந்து போல்வது கலவி. அது சங்கடமான தொழில். அவ்வெல்லம் போல்வது கலவியின்பம். அச்சங்கடத் தோன்றாமலிருத்தற்கு வைத்தது அது. வெல்லத் தின்ன ஆசைப்பட்டு மருந்துண்பார் அறிஞராவரா? அது போல இன்பத்துக்கு ஆசைப்பட்டுக் கலவிசெய்பவருந் தரமுடையராகார். அக்கலவி விலங்கின் செயல். அதனால் குட்டி பிறக்கும். அதுவும் விலங்குதான். மனிதனும் பலவகைகளில் விலங்கை யொத்தவன். அவற்றிலொன்று இன்பத்திற்கெனக் கலப்பது. அக்கலவியிலும் பிள்ளை பிறக்கும். அப்பிள்ளையும் மனிதவடி வுடையது தான். ஆயினும் விலங்கியல்பே அதனிடம் மிக்கிருக்கும். சோரைகளும் வேசிகளும் பெற்ற பிள்ளைகளிடம் பண்பாடிருப்பது துர்லபம். அவற்றின்பால் 'நலத்தின்க ணாரின்மை தோன்'றுவதே மிகுதி. செயற்கைக்கரு உற்பத்தி செயப்படுகிறதென்பது கேள்வி. அ·துண்மையாயின் அவனும் அவளும் மரப்பூக்கள். அவ்வுற்பத்தி செய்பவன் வண்டை, ஈயை யொப்பான். அக்கருவி லுதிக்கும் பிள்ளையும் மனிதவடிவினது தான், ஆனால் மரப்பண்பாட்டோடு கூடிய தாய்த்தானிருக்கும்.

கலியாணத்தா லன்றிப் பிறந்த மகன் இலெளகிகத்தில் மேல்நிலையிலிருக்கலாம். ஆயினும் அவனுக்கு முதன்மை கொடுத்து நன்மக்கட் சமுகம் அவன் வழிச்செல்லுதல் கூடாது. தன்னைப் பெற்றவர் போல மற்றவரும் ஆக வேண்டும் என்பது தான் அவனுக்காசை. அவனே கலியாணம் கலவியின்பத்தின் பொருட்டெனப் பிரசாரஞ் செய்வான், அவன் பேச்சுக்குச் செவிசாய்த்துத் தலையசைக்கும் பெண்டிருமுளர். அதனால் அவரை ஆடவர் பலர் பலபடியாலும் அசுசிப்படுத்த நேரும். பண்பாடில்லாத மக்கட்கூட்டம் பெருகுவதே அதற்குப்பயன்.

குலக்ஷயே ப்ரணசுயந்தி குலதர்மாஸ் ஸநாதநா:

தர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ நம தர்மோபி பவத்யுத:

அதர்மாபி பவாத் க்ருஷ்ணப் ரதுஷ்யந்தி குலஸ்திரீய:

ஸ்தீரீஷ¤ துஷ்டாஸ¤ வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸம்கர

ஸங்கரோ நரகாயைவ குலக்நா நாம் குலஸ்யச

பதந்தி பிதரோஹ்யே ஷாம்லுப்த பிண்டோதகக்ரியா:

தோஷைரேதை: குலக்நா நாம் வர்ண ஸங்கரகாரகை:

உத்ஸாத்யந்தே ஜாதி தர்மா: குலதர்மாச்ச சாச்வதா:

உத்ஸந்ந குலதர்மாணாம் மனுஷ்யாணாம் ஜநார்தந

நரகே நியதம் வாஸோ பவதீத்யநு சுச்ரும: (கீதை.I.40.45)

என்றான் அர்ச்சுனன்.

Link to comment
Share on other sites

வம்சம் நாசமடைந்தால் அநாதியாயிருக்கிற குலதர்மங்கள் முழுதும் நாசமடையும். ஆசாரங்கள் நசித்தால் குலம் முழுமையும் அனாசாரங்கள் வியாபிக்கும். ஹே க்ருஷ்ண! - - அனாசாரங்கள் வியாபித்தால் குலஸ்திரீகள் கெடுவார்கள். பெண்கள் கெடுவார்களே யாகில் ஜாதி வேற்றுமையின்றி ஜாதி கலப்பு களுண்டாகும். ---ஓ கிருஷ்ணா! ஜாதி கலப்பானது குலநாசம் செய்தவர்களுக்கும் குலத்திற்கும் நரகத்திற்கே யாகும். இதுவல்லாமல் இக்குலநாச நஷ்டமடைந்தவர் களுடைய பிதுருக்கள் பிண்டோதக லோபத்தினால் (நரகத்தில்) விழுவார்கள். குலத்தை கெடுத்தவர்களுடைய ஜாதிக்கலப்பைச் செய்த இந்தப் பாபங்களால் அனாதியாக விருக்கிறவர்ணாச்ரம தர்மங்களும் குலாசார தர்மங்களும் அழிந்துபோய்விடும்.--- ஓ. ஜனார்தனா! குலதர்மங்களை யிழந்த மனிதர்களுக்கு நரகத்தில் எப்பவும் நிவாஸமானது உண்டாகுமென்று (பெரியவர்களால்) கேட்டிருக்கிறோம்' என்பது அதற்கு உரைகாரர் தந்த தமிழ். இதில் எப்பகுதியையும் கிருஷ்ணன் மறுத்ததாகத் தெரியவில்லை. கற்புக்கேடே நாட்டைக் கெடுப்பது என்பதை அதிற்காண்க, விதிமுறைக் கலியாணமே அக்கற்புடைமைக்கு வாயில். அக்கற்புடைமையே நன்மக்களைத் தோற்ற வல்லது.

'மங்கல மென்ப மனைமாட்சி மற்றத

னன்கல நன்மக்கட் பேறு' (குறள்)

என்றது காண்க. அக்கற் பொழுக்கத்துக்குக் காவலாவார் பெண்டிரே. அக்காக்கு மாற்றை அவர் கற்றுக்கொள்வது நலம்.

தமிழில் புறம், அகம் என இரண்டு துறையுண்டு. வீரம் பற்றியது புறம். கலவியின்பம் பற்றியது அகம். அவை ஆன்றோரார் புகழப்பட்டன. ஆயினும் போரின் பொருட்டே வீரம் வேண்டப்படும். வீரத்தின் பொருட்டுப் போர் வேண்டப்படாது. அது போல இன்பமுங் கலவிப் பொருட்டே யாம். இன்பத்தின் பொருட்டன்று கலவி, அவ்வின்பம் எத்துணைச்சிறந்ததாயினும் அவ்வரம்புட்பட்டதே. அதனையும், ஆடவர்பாலுள்ள பிள்ளை ஆசை நிறைவேறுதற்பொருட்டு அவருக்காக விதிக்கப்பட்டதே கலியாணம் என்பதையும்.

Link to comment
Share on other sites

'தருக்குறு வனப்பிற் பிறர்க்குரி யவரைத்

தவ்வையிற் றங்கையிற் காண்க

வுருத்திர கணிகை மகளிரைத்தாயி

னுன்னுக வயிணவ மடவா

ரருப்பிளங் கொங்கைத் தாதிகண் மாட்டு

மன்னதே யாகலிற் புணர்ச்சி

விருப்பினை யவர்பான் மறப்பினு மெண்ண

லோம்புக நன்னெறி விழைவார்'

(காஞ்சிப்புராணம்)

'இருட்சுரி கருமென் மலர்க்குழன் மனையா

ளிளமுலைப் போகமு மகவின்

பொருட்டெனக் கொண்டே விலக்குநா ளொழித்துப்

புணர்ந்தபி னீங்கிவெம் பாந்த

ளரைக்கசைத் தருளு மடிகளீ ரடியு

மகந்தழீஇத் துயிலுக மற்றீங்

குரைத்தவா றென்று மொழுகுந ரெங்கோன்

றிருவருட் குரியவ ராவார்'

(காஞ்சிப்புராணம்)

என்ற பாடல்களாலுந் தெரிக.

Link to comment
Share on other sites

அகலியாணசாமி

அகலியாணசாமியை வணங்குபவர் கலியாணசாமியை நிந்திப்பர். அந்நிந்தைகள் பல. அவற்றுள் சாமி கலியாணம் பண்ணிக்கொண்டா ரென்றால் அவரும் மனிதரே. காமவெறி மனிதர்க்குப்போல அவருக்கும் இருக்கிறது என்பதாகும், அவரது கடவுளியல்புக்கு அது குற்றம், காமவெறி கொண்டவர் கடவுளாகார் என்பது முதன்மையானது. அதை மாத்திரம் இங்கே விசாரிக்கலாம். கலவியின்பத்தின் பொருட்டுத் தான் கலியாணம் என்பது அவர் கொள்கை. அ·த்ப்படியே யாகுக. கலவியின்பங் கடவுளின் தன்மை யன்றென்பதுஞ் சரி. ஆனால் அவ்வின்பம் மனிதனிடத்துப்போல் விலங்கிடத்தும் உள்ளது. அது மனிதனுக்குரிய தெனத்தனித்துச் சொல்லப்படாது. ஒரு செயல் மனிதனிடத்தும் விலங்கிடத்தும் சமமாயுண்டு. அச்செயல் விலங்கினியல்பு எனவேபடும். மனிதனியல்பு என்றால் சாலாது. ஆகவே விலங்கின் செயலாகிய கலவியின்பத்தின் பொருட்டு அவனுங் கலியாணம் பண்ணிக்கொள்ளுதல் நெறியன்று. ஆனால் மேளதாளத்தோடு அவன் அதைச் செய்துகொள்ளுகிறான். அதனிழிவு போய்விடுமா? போகாது. அக்கலியாணம் மனிதனுக்குக் கெளரவமாயின் கடவுளுக்குங் கெளரவமாகும். அது கடவுளியலுக்கு ஒவ்வாத தாயின் மனிதவியலுக்கும் ஒவ்வாததே. ஆகலின் அது மனிதனுக்கும் அகெளரவந்தான்.

ஆனால் அது மனிதனுக்கு இசையும், கடவுளுக்கு இசையாது என்றாரவர். மனிதருட் கலியாணம் பண்ணிக் கொள்ளாதவரும் உளர். அவரெல்லாங் கடவுளாகவேண்டும். ஆவரா? ஆகார். ஆகலின் கலியாணம் பண்ணிக்கொள்ளாமையும் விலங்கு முதலியவற்றுக்குப் போல் மனிதருக்கும் உரியது தான். அவர் கலியாணம் பண்ணிக்கொள்ளாம்லிருப்பதற்க

Link to comment
Share on other sites

சிவ சத்திகளின் திருக்கலியாணம்

கலியாணசாமிகளை வணங்கிவருபவர் பரதகண்டத்திற்றானிருக்கின்ற

Link to comment
Share on other sites

சிவன் கதிரவன். உமை அக்கதிரவனின் கதிர். சிவன் சத்தன். உமை அச்சத்தனின் சத்தி. சிவன்குணி. உமை அக்குணியின் குணம். சிவன் ஞானி. உமை அந்த ஞானியின் ஞானம். சிவன் பொருள். உமை அப்பொருளின் தன்மை. கதிரவன் உலகத்தோ டியையாது தன்னளவில் இருப்பவனாகக் கருதப்படும் போது கதிரவன் எனப்படுவான். அவன் உலகத்தோடியைந்து உபகரிப்பவனாகக் கருதப்படும்போது கதிர் எனப்படுவான். அப்படியே சிவன் தன்னிலையில் நிற்பவனாகக் கருதப்படும் போது சிவன் அல்லது சத்தன் எனப்படுவான். அவன் பிரபஞ்சத்தோடியைந்து உயிர்களுக்கு உபகரிக்கும் போது சத்தி எனப்படுவான்.

'தன்னை விளக்குவதூஉம், விடயங்களை விளக்குவதூஉம் தானேயாகிய ஞாயிறொன்று தானே விடயங்களை விழ்க்குழிக் கதிரெனவும், தன்னை விளக்குழிக் கதிரோனெனவுந் தாதான்மியத்தான் இருதிறப்பட்டியைந்து நிற்கும்: அதுபோலப் புறப்பொருளை நோக்காது அறிவு மாத்திரையாய்த் தன்னியல்பி னிற்பதூஉம், புறப்பொருளை நோக்கி நின்றுணர்த்துவதூஉ மாகிய இரண்டியல்புடைய பேரறிவாகிய சைதன்னிய மொன்றே அங்ஙனம் புறப்பொருளை நோக்கிநிற்கு நிலையிற் சத்தி யெனவும், புறப்பொருளை நோக்காது அறிவு மாத்திரையாய் அவாவாது நிற்கு நிலையிற் சிவமெனவுந் தாதான் மியத்தான் இருதிறப்பட்டியைந்து குண குணியாய் நிற்கும்' (சிவஞான பாடியம்) என்றது காண்க. உமையுஞ் சிவனுங் குணகுணி யென்பதை.

'பண்ணுமின் னிசையு நீருந் தண்மையும் பாலும் பாலி

னண்ணுமின் சுவையும் பூவு நாற்றமு மணியு மங்கேழ்

வண்ணமும் வேறு வேறு வடிவுகொண்டிருந்தா லொத்த

தண்ணலு முலக மீன்ற வம்மையு மிருந்த தம்மா'

(திருவிளையாடல்)

என்ற பாடலால் அறியலாம்.

ஒருவனுக்கு வீணை வாசிக்குஞ் சத்தி யிருக்கிறது. ஆயினும் அவன் சம்மதம் வேண்டும். அப்போது தான் அச்சத்தி அவ்வாசிப்பைச் செய்யும். மற்ற நேரங்களில் அச்சத்தி அவனால் ஒடுக்கப்பட்டு அவனிடம் அடங்கியிருக்கும் அதனை ஒடுக்கி வைப்பதற்கும் வெளிப்படுப்பதற்கும் அவனே அதிகாரி. அதுபோல் சிவன் தன் சத்தியை யொடுக்குவதும் வெளியிடுவதும் ஆகிய அதிகாரம் அவன்பாலே யுள்ளது. சிவனே அதிகார். அவன் சத்தி அவனை அனுசரிப்பதே. அது பற்றிச் சிவன் ஆண். அவன் சத்தி உமையாகிய பெண் எனப்பட்டனர். சிவசத்தியாவது சிவத்தின் வல்லபம் அல்லது வல்லமை. அத்திருவுருவங்கள் வேத சிவாகமங்களால் வந்திக்கப்பட்டவை. சிவன் அச்சத்தியைத் தன்வழியியக்குவதனால் கணவன். அச்சத்தி அவன்வழி யியங்குவதனால் அவனுக்கு மனைவி. கணவன் மனைவியுற வைத்தருவது கலியாணம் ஒன்றே. ஆகலின் சிவனார் உமையைக் கலியாணஞ் செய்து கொண்டாரென்றன அச்சுருதியாதிகள்.

Link to comment
Share on other sites

உயிர்களுக்கும் உடலங்களில் ஆண் பெண் அடையாளங்கள் வைக்கப்பட்டன. அதற்குக் காரணம் உயிர்கள் உடலங்களைப் பெற்று வாழவும். அவ்வாழ்க்கையின் குறிக்கோளை எய்தவுமேயா மென்பது. மனிதன் மனிதனாயின் அதனை யறிவான். ஆனால் விலங்காதியவற்றுக்கு அவ்வுண்மை தெரியாது கலவியின்பத்திற்கே அவை வைக்கப்பட்டன எனக்கொள்வது அவற்றின் இயற்கை.

அன்று பிறந்த குழந்தைகள் போல்வன அனைத்துயிர்களும், அறியாமை அவற்றைக் கெளவியிருந்தது. ஆனால் முத்திச் செல்வத்தை யனுபவித்தற் குரியன அவை. அச்செல்வம் சிவ்பிரானிட முள்ளது. அவர் தம் சத்தியைப் பிரயோகித்தார். தனுகரண புவன போகங்கள் உளவாயின. அம்முத்தியையெய்த அவ்வுயிர்களுக்குத் தகுதியும் வேண்டும். அதனைக் கொடுப்பவரும் அவரே. அதற்காக அவர் அவற்றை அத்தனுவாதியுடன் இயைத்தார். அதனால் அவர் தந்தை. உமைதாய். சரிவான்மாக்களும் புதல்வர் ஆயினர். சிவபிரானாகிய கணவர் உமாதேவியாகிய மனைவியைக் கலந்து உயிர்களாகிய பிள்ளைகளைப் பெற்றார் என்பதற்கு அவர் தம் சத்தியைப் பிரயோகித்து அறியாமையிர் கிடந்த உயிர்களுக்குத் தனுவாதிகளைக் கொடுத்து அவ்வறியாமையைப் போக்கி தம்மிடமுள்ள முத்திச் செல்வத்தைக் கொடுத்து அனுபவிக்கச் செய்கிறார் என்பது பிள்ளையைப் பெற்று வாழ்விக்க வேண்டுமென்ற ஆசை கொண்ட மனிதனாகிய கணவன் தன்னால் விதிமுறையில் மணஞ்செய்து கொள்ளப்பட்ட உத்தம மனைவியின் வழிப்பெற்றெடுத்த மகன் அத்தந்தை தாயரைக் கலவிவெறி கொண்டவரெனவும், அதனால் கணவனு மனைவியுமாயின்ரெனவும், தான் பிறந்ததற்கு அவரது வெறியே காரணமெனவும் பிதற்றுவானா? மாட்டான். அவன் போன்றாருக்கே அத்திறமுண்டு. அப்பொருளை அறியாதவன் ஒருவன். அறியவேண்டுமென்ற ஆசையும் அவனுக்கில்லை. பரிகசிப்பதே அவன் நோக்கம். அவன் தோற்றம் வேறு வித மானது. அவன் போன்றாரும் பலர். அவருக்குப் புத்தி சொல்ல எழுந்தன.

Link to comment
Share on other sites

'பொங்கருட் பரமா னந்த பூரண முதலே யிங்கு

நங்களை யாளத் தோன்றி யைந்தொழி னடாத்த லோரே

மங்கையை மணந்தா யென்று மக்களை யுயிர்த்தா யென்று

மெங்களி லொருவ னாக வெண்ணியே யிகழ்ந்துகெட்டேம்'

(காஞ்சிப்புராணம்)

'பெண்ணினைப் புணர்ந்தா னென்றும்

பிள்ளையை யுயிர்த்தா னென்று நீ

தண்ணிய கங்கை மாதைச்

சடையிடைக் கரந்தா னென்று

மெண்ணுறா திகந்தோர்க் கெல்லா

மிரும்பொடி வாயி னட்டி

யண்ணலாங் காமன் வெந்த

தறிந்தனர் சேனை மாதர் (பூவாளூர்ப்புராணம்)

என்ற பாடல்கள்.

சிவபிரானுக்கு விநாயகர், வைரவர், வீரபத்திரர், கந்தர் என்ற புதல்வருளர். அவர் ஒருவகையினர். அவரும் அப்பிரானாரின் கருணா விலாசமே. அவ்வவதார மூர்த்திகளை இங்கே விட்டுவிடலாம். மற்றொரு வகைப் புத்திரர் உயிர்கள். அவ்வுயிர்களுள் இவ்வுலகில் மனிதவர்க்கத்துக்கு மாத்திரமே யுரியது கலியாணம் மனிதர் கலியாணம் பண்ணிக்கொண்டே சந்ததிவிருத்தி செய்ய வேண்டும். சிவனார் திருவுள்ளம் அது. ஆகலின் கலியாண விதிமுறையையும் அவர் வகுத்தார். அம்மட்டில் அவர் நின்றிலர். தம் கலியாணத்தை அவ்விதிமுறையில் செய்துங் காட்டினாரவர். கலியாணத்துக்கு அவ்விதிமுறை அவ்வளவு அவசியம். அ·தில்லாத கலியாணம் கலியாண மாகாது. அவர் தம் கலியாணத்தைத் தம்பொருட்டன்றி மனிதர் பொருட்டே செய்தார் அதனை

'ஐய கேளுனக் கில்லையாற் பற்றிக் லடியே

முய்யு மாறிவண் மணஞ்செய் வுன்னினை'

(கந்த புராணம்)

என்றதா லறிக. அவர் செய்துகொண்ட பார்வதி திருக்கலியாணம், மீனாட்சி திருக்கலியாணம் ஆகியவற்றுள் அவ்விதிமுறைகள் சில வந்துள்ளன. அவற்றைத் தெரியலாம்

Link to comment
Share on other sites

1. பிள்ளைவீட்டார் தமக்குரிய பெரியோர் சிலரைப் பெண்வீட்டிற் கனுப்பிப் பெண்ணுக்குரிய பெரியோரிடம் பெண்பேசிச் சம்மதம் பெற்றுவரச் செய்க.

'அமலனம் முனிவர் மாற்றங் கேட்டலு மவரை நோக்கி

யிமயமே லிறைவன் றன்பா லேகியே யெமக்கிவ் வைக

லுமைதனை வதுவை நீராலுதவுவான் வினவி வல்லே

நமதுமுன் வம்மினென்னா நன்றருள் புரிந்தா னன்றே'

(கந்த புராணம்)

2. கலியாணம் பெண்வீட்டில் நடைபெறுத்துக.

'அனைய தன்மையிலாதியம் பண்ணவன்

பனிகொள் வெற்பிற் படரவம் மன்னவ

னினிய கேளொ டெதிர்கொடு தாழ்ந்துதன்

புனித மாநக ரிற்கொடு போயிணான்

(கந்த புராணம்)

3. கலியாண்த்திற்குச் சுபமுகூர்த்தங் காண்க.

'மணவினைக் கடுத்த வோரை தாம்வரு மளவும்'

(திருவிளையாடல்)

4. மாப்பிள்ளையைக் கலியாண வீட்டிற்கு அழைத்து வருக

'பையர வுரியினன்ன நடைப்படாம் பரப்பிப் பெய்த

கொய்யவிழ் போது நீத்தங் குரைகழ லடிந னைப்பத்

தெய்வமந் தார மாரி திருமுடி நனைப்பத் தென்ன

ருய்யவந் தருளு மையனுள்ளெழுந் தருளு மெல்லை'

(திருவிளையாடல்)

5. மாப்பிள்ளையை ஆசனத்தில் அமர்த்துக.

'அரிமணித் தவசி லேறி நிருத்தனாங் கிருந்து'

(திருவிளையாடல்)

Link to comment
Share on other sites

6. பெண்ணையும் அலங்கரித்து மாப்பிள்ளையின் அருகில் அழைத்து வந்து இருக்கச் செய்க.

'அற்பக விமைக்குஞ் செம்பொ னரதன பீடத் தும்பர்ப்

பொற்பக லாத காட்சிப் புனிதனோ டிருந்த நங்கை'

(திருவிளையாடல்)

7. பெண்ணுக்குரியார் பெண்ணின் கையைப் பிள்ளையின் கையில் வைத்துத் தாரைவார்த்துக் கொடுக்க.

'அத்தலை நின்ற மாயோ னாதிசெங் கரத்து நங்கை

கைத்தலங் கமலப் போது பூத்ததோர் காந்த ளொப்ப

வைத்தரு மனுவா யோதக் கரகநீர் மாரி பெய்தான்'

(திருவிளையாடல்)

8. மாப்பிள்ளைமேலும் பெண்மேலும் அக்ஷதையை ஆசிகூறி வீசுக.

'வேத வித்தனா ரடிக்கீள் வீழ விண்ணவர் முனிவ ரேனோர்

சுத்தநா வாசி கூறக்க்குங்குமத் தோயந் தோய்ந்த

முத்தவா லரிசி வீசி மூழ்கினார் போக வெள்ளம்'

(திருவிளையாடல்)

9. மாப்பிள்ளைக்குப் பால் பழங் கொடுக்க.

'காமரு சுரபித் தீம்பால் கற்பகக் கனிநெய் கன்ன

னாமரு சுவைய வின்ன நறுமது பருக்கஞ் செம்பொ

னாமணி வட்டத் திண்காற் பாசனத் தமையப் பெய்து

தேமரு கொன்றை யானைத் திருக்கைதொட்டருள்க வென்றார்'

(திருவிளையாடல்)

10. அப்போது சுமங்கலிகள் மங்கலம் பாடுக.

'புங்கவர் முனிவர் கற்பின் மகளிரும் போதின் மேய

மங்கைய ரிருவ ரோடு மங்கலம் பாட லுற்றார்'

(திருவிளையாடல்)

11. வேள்விச் சடங்கு செய்க

Link to comment
Share on other sites

ShivaParvatitrouwen.jpg

12. பெண்ணின் கழுத்திற் பிள்ளை மங்கல நாண் சாத்துக.

13. அவன் அவள்கையைப் பிடிக்க அதாவது பாணிக்கிரகணஞ் செய்க.

'சுற்றுநான் மறைகளார்ப்பத் தூரியஞ் சங்க மேங்கக்

கற்றநான் முகத்தோன் வேள்விச் சடங்குநூல் கரைந்த வாற்றான்

முற்றமங் கலநாண் சாத்தி முழுதுல கீன்றாள் செங்கை

பற்றினன் பற்றி லார்க்கே வீடருள் பரம யோகி'

(திருவிளையாடல்)

14. பெண்ணும் பிள்ளையும் நெற்பொரிகளை வாங்கி வேள்வித்தீயிற் பெய்க.

15. பெரியோருக்குத் தானங்கள் உதவுக.

16. வேள்வித்தீயை வலம் வருக.

'பின்பு தன் பன்னி யோடு பிறைமுடிப்பெருமான் கையி

னன்பொரி வாங்கிச் செந்தீ நாமடுத் தெனைத்து மான

தன்படி வுணர்ந்த வேத முனிவர்க்குத் தக்க தான

மின்பகந் ததும்ப நல்கி யெரிவல முறையால் வந்து'

(திருவிளையாடல்)

Link to comment
Share on other sites

17. பெண்ணின் பாதத்தைப் பிள்ளை பற்றி அம்மி மேல் வைத்து அவள் அருந்ததியைப் பார்க்குமாறு செய்க.

'மங்கலம் புனைந்த செம்பொனம்மிமேன் மணாட்டி பாத

பங்கய மலரைக் கையாற் பரிபுரஞ் சிலம்பப் பற்றிப்

புங்கவன் மனுவா லேற்றிப் புண்ணிய வசிட்டன் றேவி

யெங்கெனச் செங்கை கூப்பி யெதிர்வர வருட்கண் சாத்தி' (திருவிளையாடல்)

18. பிள்ளையையும் பெண்ணையும் சம்பிரமாக நகர் வலஞ் செய்விக்க.

'எட்டு மாதிரக் கரிகளு முடல்பனிப் பெய்த

நெட்டு யிர்ப்பெறி மதுகைவெள் விடைமிசை நீல

மட்டு லாங்குழன் மடவர லொடுமகிழ்ந் தேறிச்

சிட்டர் போற்றிட மறுகிடைத் திருவுலாப் போந்தான்' (காஞ்சிப்புராணம்)

பிற விதிகளையும் அன்னபிற நூல்களிற் காண்க. அங்ஙனம் சிவபிரானே விதியை வகுத்தும் அனுட்டித்துங் காட்டினார். அதனால் அவரது கலியாணம் திருக்கலியாணம் எனச் சிறப்பித்துக் கூறப்பட்டது.

Link to comment
Share on other sites

திருக்கலியாணம் பெண்பெயரால் வழங்கல்

திருக்கலியாணஞ் செய்து கொண்டவர் சிவபிரான் ஆனால் அது பார்வதி திருக்கலியாணம், மீனாட்சி திருக்கலியாணம் என்று தான் புராணங்களில் வந்துள்ளது. அதற்குங் காரணமுண்டு. அக்கலியாணங்கள் பெண்வீட்டில் நடந்தன. கலியாணம் பெண்வீட்டிற்றான் நடைபெற வேண்டும். அதன் பிறகு பெண் மாப்பிள்ளையுடன் அவன் வீட்டுக்கு அனுப்பப்படுவாள். அன்று தான் அவளது இல்லிகவாப்பருவம் பூர்த்தியாகிறது. மாப்பிள்ளை வீட்டிற் கலியாணம் சைவமர பன்று. கலியாணம் பெண்வீட்டில் நடைபெறுவது. அப்பொறுப்பு பெண்வீட்டாருடையது. மாப்பிள்ளை அவ்வூருக்குப் புதியனாயு மிருப்பான். பெண்ணின் பெயர் தான் விளம்பர மாகும்.

'வடமொழியில் பெரும் புலமை வாய்ந்தவரும் பல நூல்களை இயற்றிப் புகழ் பெற்றவருமான மகான் அப்பைய தீட்சதர். அவர்கள் ஒருமுறை தம்முடைய மாமனார் ஊருக்குப் போனார். யாரோ ஒருவர் புதிதாக நம் ஊருக்கு வருகிறாரே என்று ஊரிலுள்ள பல பெண்மணிகள் வாயிலில் தலையை நீட்டி நீட்டிப் பார்த்தார்கள். ஒரு பெண்மணி மற்றொருத்தியைப் பார்த்து, 'யாரடி இவர்?' என்று கேட்டதற்கு. 'இவர் தானடி நம் ஆச்சாள் அகத்துக்காரர்' என்று பதில் வந்தது. இந்தப்பதில் அப்பைய தீட்சிதர் காதிலும் விழுந்தது. அவர் தமக்குள் சிரித்துக்கொண்டார். அவரை அந்நூலாசிரியர் என்றோ குறிப்பிடாமல் அவருக்குத் தெரிந்த தம் மனைவியின் பெயரைச் சொல்லித் தம்மையும் குறிப்பிட்டிருக்கிறார்களே என்று எண்ணிக் கொண்டார். அப்பைய தீட்சதரின் மனத்தில் இந்த சம்பவம் ஆழப்பதிந்து விட்டது போலும்! எனவே தான், இதை வைத்துக் கொண்டே 'அஸ்மின் க்ராமே ஆச்சாள் ப்ரஸித்தா' (நமக்கு எவ்வளவு பெருமை இருந்தாலும் இந்தக் கிராமத்தில் ஆச்சாள்தான் புகமுடையவள்) என்று கூடச் சொன்னாராம்' (10-9-1961 ஆனந்த விகடன்) என்ற வரலாற்றையுங் காண்க. அம்முறையில் அத்திருக்கலியாணமும் மேற்கண்டவாறு பெண் பெயரோ டியைந்து வழங்குவதே பொருத்தமாகும்.

Link to comment
Share on other sites

திருக்கலியாண விழா

சைவாலயங்களில் ஆண்டுதோறும் திருக்கலியாண விழா நடைபெறுகிறது. அக்கலியாண கோலச் சிவபிரானையும் உமாதேவியையும் சைவ சமயப் பெருமக்கள் வணங்கி வழிபட வேண்டும். அது அப்பெருமக்களுக்கு நலஞ் செய்யும். வேதாகமங்கள் அவ்வாறு சொல்லுகின்றன. பார்வதி கலியாண முதலியன அதற்காகவும் நடந்தன. ஆனால் அவை நடந்த காலம் எப்போதோ? அக்கலியாண தரிசனம் பிரம விஷ்ணுவாதி தேவர்கள், நாரதாதி இருடிகள், இமயன் முதலிய வேந்தர்கள் ஏனைச் சிவபுண்ணிய சீலர்கள் ஆகியோருக்குக் கிடைத்தது. அவர் எய்திய பேறும் பெரிது.

'திரும ணத்திறங் கண்டவர் யாவருஞ் செழுந்தேன்

பருகு வண்டென வானந்த வெள்ளத்திற் படிந்தா

ருருகி யேத்தினர் கையிணை யுச்சிற் குவித்தா

ரிருக ணீர்மழைத் தாரையின் மூழ்கியின் புற்றார்'

(காஞ்சிப்புராணம்)

என்றது காண்க. அக்கலியாணத்துக்கு வந்திருந்தார் அகத்தியர். ஆனால் அக்கலியாண கோல தரிசனம் அவருக்குக் கிடைத்திலது. இடையில் பொதிகைக்கு அவர் வரவேண்டியவரானார். பின்னர் அக்காட்சி அங்கு அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவர் அதைத் தரிசித்து இன்புற்றார். அச்சைவ பரம்பரை இன்றும் இருந்து வருகிறது. பின் வருபவருக்குக் அக்காட்சியும் பயனுங் கிடைக்க வேண்டும். அதனால் திருக்கலியாணத் திருவிழாக் காட்சி அவசியமாயிற்று.

அவ்வுண்மையை அறியார் சிலர். திருக்கலியாணம் வருடந்தோறும் நடக்கவேண்டுமா? பார்வதிக்குச் சென்ற ஆண்டிற் கட்டினதாலி இவ்வாண்டில் எங்கே போயிற்று? இப்பரிகாசக் கேள்விகளை அவர் கேட்கின்றனர். சிந்தனையைப் பறிகொடுத்த பரிகாசம் அது. இலெளகிகத்தில் ஆண்டுதோறும் கொடியேற்றுவிழா நடக்கிறது. கொடி பல கருத்துக்களின் சின்னம். சென்ற ஆண்டில் ஏறிய கொடி இறங்கினாலும், சிதைந்தாலும், மறைந்தாலும் அக்கருத்துக்கள் இறங்கின, சிதைந்தன, மறைந்தன என்பதில்லை. அக்கருத்துக்களை அவ்வப்போது அக்கொடியேற்றத்தின் மூலம் நினைத்துப் பார்ப்பதாகவே கொள்ளப்படும். அப்படியே அக்கலியணத்தையும் அறிஞர் கருதுவார்.

Link to comment
Share on other sites

ஒருவன் பல கலியாணங்களைப் பார்க்கலாம். ஆனால் தன் தந்தை தாயாரின் கலியாணத்தை அவனால் பார்க்க முடியாது. ஆனால் அவரது சஷ்டியப்த பூர்த்தி யென்னுங் கலியாணத்தை அவன் பார்த்தல் கூடும். அவர் தரும் ஆசியையும் அவன் பெறுவான் அ·தவனுக்கு மகிழ்ச்சி. அதுபோல் அவன் நல்ல மகனாயிருப்பானாகில் சர்வான்ம பிதா மாதாக்களாகிய சிவ பார்வதி கலியாணத்தை வருடந்தோறும் நடத்திக்கண்டு அவ்விருவரின் அருளுக்குப் பாத்திர மாவான்.

ஒரு தாய் ஒரு பிள்ளையைப் பெற்றுவிட்டு இறந்தாள். அப்பிள்ளையின் தந்தை மற்றொருத்தியை மணக்கிறான். அவளுக்கும் ஒரு பிள்ளை பிறக்கிறது, மூத்தவள் வயிற்றுப் பிள்ளைக்கு இளையவள் வயிற்றுப்பிள்ளை தம்பி. அதிற் சந்தேகமில்லை. அவ்விரு பிள்ளைகளுஞ் சகோதரர்தான். சகஉதரர் ஒரு வ்யிற்றில் தோன்றியவர். அவ்வொரு வ்யிறாவது தந்தையின் வயிறு. அச்சகோதரரின் உயிரணுக்களுக்கு மூலம் அவ்வயிறே. அத்தந்தை இறந்துவிடுகிறான் அவ்விளையாள் மற்றொருவனோடு வாழ்க்கை யொப்பந்தஞ் செய்து கொள்கிறாள். அவனாலும் அவளுக்கு ஒரு பிள்ளை கிடைக்கிறது. அவள் வயிற்றில் முதற்கணவன் பெற்ற பிள்ளையும், இரண்டாமவனாகிய வாழ்க்கை யொப்பந்தக்காரன் பெற்ற பிள்ளையும் ஒரு தாய் வயிறே பற்றிச் சகோதரராக மாட்டார். ஏன்? அவ்விருவரின் உயிரணுக்களும் வேறு வேறு ஆடவரின் வயிற்றிலிருந்து வந்தன வென்க. வேம்பும் அரசும் ஒரு நிலத்தில் முளைத்தாலும் வேம்பு வேம்பு தான். அரசு அரசு தான். அந்நிலம் ஒன்றானது பற்றி வேம்பு அரசாகாது. அரசு வேம்பாகாது. தாய் வயிறும் நிலம் போல்வதே. மேலும் பதிவிரதை யென்னுஞ் சொல்லுக்கு அவள் பொருளாதலு மில்லை. பதிவிரதை புனர் விவாகத்துக்கு இசையவேமாட்டாள். அவள் உறவினர் மானமுள்ளவராயின் அதற்கு அனுமதி கொடார். பெற்ற்ப்பன் இறந்தால் அவன் மகன் வேறோரப்பனைத் தேடிக்கொள்ள முடியாது. அவன் சுவீகாரம் போனால் அவனைச் சுவீகரித்தவன் சுவீகாரத் தந்தையே, பெற்றப்பனாகான். அத்தந்தையின் மனைவியே அவனுக்குத் தாய். பெற்றம்மையையும் அவன் விட வேண்டியவனே. அண்ணன் இறந்துபோனால் அவன் தம்பிக்கு வேறோரண்ணன் கிடையான். அது போல் கணவன் போனால் அவன் மனைவி வேறொரு கணவனைத் தேடிக் கொள்ள முடியாது. தேடிக்கொண்டால் அவள் மனைவியும், அவன் கணவனுமாகார். கணவனே திரும்பத் திரும்ப வந்து மணந்து கொள்வதாயின் பதிவிரதை எத்தனை தடவையும் மணக்கட்டும். அதிற் குற்றமில்லை. சிவபிரானொருவரே பிறப்பு இறப்பு ஆதி உயிர்க்குணமில்லாதவர். அவருக்குத் துல்லியனாவானும், அதிகனாவானும் எவனுமிலன். அவருக்குப் பத்தினி உமை. அவளும் அன்னளே. அவளே தக்காயணி, பார்வதி, மீனாட்சியாக வந்தாள், அம்மூவரும் பதிவிரதைகள். அவர் கலியாணம் ஆண்டு தோறும் நடக்கிறது. அப்போதெல்லாம் சிவபிரானே வந்து அவரை மணந்து கொள்கிறார். அக்கலியாணத்தால் அச்சிவனாரது நித்தத்தன்மை அறிந்து போற்றப்படுகிறது. அதற்காகவும் தாக்காயணி கலியாணம். பார்வதி கலியாணம் மீனாட்சி கலியாணம் என்ற வழக்காறு உளதாயிற்று.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.