Jump to content

Recommended Posts

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

நான்காவது

திருநின்ற சருக்கம்

திருநாவுக்கரசுநாயனார் புராணம்

sh1.jpg

appar.jpg

naapparp_i.jpg

naapparp.gif

http://www.shaivam.org/naapparp.html - Click this to view the English Version of this Nayanmaar's Life History.

Link to comment
Share on other sites

  • Replies 479
  • Created
  • Last Reply

திருநாவுக்கரசுநாயனார் புராண சூசனம்

1.கற்பு நிலை வழுவாது சிவனை வழிபடல்

கற்பாவது நாயகனிற் சிறந்த தெய்வம் இல்லை எனவும் அவனை வழிபடும் முறைமை இது எனவும் தந்தை தாயரும், பிராமணரிடத்தும் சான்றோரிடத்தும் ஆசாரியரிடத்தும் கடவுளைச் சுட்டியும் ஒழுகும் ஒழுக்கம் இப்படி என நாயகனும் கற்பித்த வழி நிற்றலாம். ஆதலால், சுமங்கலிக்கு, தன் கணவனை வணங்கி அவனுக்கு ஏவல் செய்தலே மேலாகிய தருமமாம் ஏவல் செய்து வரும் பொழுது, பரமபதியாகிய சிவனை வழிபடல் வேண்டும் என்னும் விருப்பம் உண்டாகில், தனக்கெனச் சுதந்தரம் இல்லாமையால், கணவனது அனுமதியைப் பெற்று, ஆசாரியரை அடைந்து சிவதீக்ஷை பெற்று, கணவனுக்குச் செயற்பாலதாகிய ஏவலின் வழுவாது நின்றே சிவனை விதிப்படி வழிபடுக. கணவன் இறந்துவிடில், ஆபரணங்கள் அணியா தொழிதலும், வெற்றிலை பாக்கை ஒழித்தலும், ஒரு பொழுது பகலிலே உண்டலும், பாயல் வேண்டாது தரையிலே நித்திரை செய்தலும், ஐம்புலன்களை அடக்கலும், சிவ புண்ணியங்களை விதிவழுவாது செய்தலும் வேண்டும். இதற்குப் பிரமாணம் சிவதருமோத்தரம். "ஏந்திசைக்குப் பதியேவ லியற்றுதலே நியதி யீசனிணைத் தாளணைய வேசறவு பெருகிற் - காந்தனனு மதிபெற்றுக் கைக்கொள்க பூசை கலித்திடினே யிருதுசுலுழ்ந்தொரு மூன்று நாளும் - வாய்ந்திடச் செய் துடற்சுத்தி மற்றையர்நீர் தரவே மானதபூ சனைபுரிக மற்றையநாட் புனலுட் - டோய்ந் தருந்திக் கவ்வியத்தைச் சூட்டுகபோ தரற்குக் சூதகமுன் பெரு நோய்முன் சூட்டுவிக்க பிறரால்" எ-ம்: வாயுசங்கிதை, கருநெறிக் கூந்தலார்க்குக் கணவரை வணங்க றானே - யுரியநற் றரும மாகுமொண்டிறற் கணவர் சொல்லாற் - பருவரை பயந்த நங்காய் பணிந்துநம் - பாதம் போற்றிப் - புரிய甭ிழ் மலர்கடூவிப் பூசனை புரிதலாமால். கணவர்தமேவல் பூண்டு கற்பினி லொழுகிடா தார் - நணுகருங் கொடிய வெய்ய நரகினு ளழுந்து வாராற் - பணிவுறு கணவர் தம்மை யிகழ்ந்துநற் பான்மை யின்றி - யணிகலன் றுறந்த மாதர் தன்மையை யறைகுவாமே. தரையினிற் கிடத்த றான நல்கிட றயங்கு நீரி - லரியவெண் ணீற்றின் மூழ்க லன்பொடு நமைப்பூ சித்த - லொருபசு லுண்டு வைக லட்டமி பதினான்கோடு - மருவுபூ ரணையி லுண்டி யொழிந்திடல் வழக்க தாமே" எ-ம்.: காசிகாண்டம், "மருவுகாதலன் மாய்ந்திடின் மங்கைய - ரொருப கற்பொழு துண்டரும் பாகிலை - விரியும் பாயல் வெறுத்துமண் மேற்றுஞ்சி - யரிய நோன்புக ளாற்றிட வேண்டுமால், சுடர்செய் பொற்கல னீத்திடுந் தோகையர் - கடவுள் பூசனை காதலி னாற்றியு - முடல மாசுண வுள்ளுயிர் நீத்திடா - தடகு மூல மருந்திட வேண்டுமால்" எ-ம். வரும்.

naapparp_i.jpg

இப்புராணத்திலே சுட்டப்பட்ட திலகவதியார், தம்மைக் கலிப்பகையார் விவாகம் செய்திலர் ஆயினும், அவர் இறந்தமை கேட்டவுடனே, 'என்னுடைய தந்தை தாயர்கள் என்னை அவருக்கு மணம் செய்து கொடுக்க உடன்பட்டிருந்தமையால், இவ்வுயிர் அவருக்கே உரியது; ஆதலால், இவ்வுயிரை அவருயிரோ டிசைவிப்பேன்' என்று சாவத்துணிந்தமையாலும், தம்பியாராகிய மருணீக்கியார் பொருட்டு அக்கருத்தை ஒழித்து உயிர்தாங்கிய பின்னும், இளமைப்பருவத்தராய் இருந்தும் விவாகம் செய்து கொள்ளாமல், தமது வீட்டிற்றானே தவஞ்செய்து கொண்டிருந்து, பின்னர்த் திருவதிகை வீரட்டானத்திற் சென்று, சிவ சின்னங்களைத் தரித்துக் கொண்டு, திருக்கோயிலிலே திருவலகிடுதல் திருமெழுக்கிடுதல் பூக்கள் கொய்து திருமாலைகள் தொடுத்தல் முதலிய திருப்பணிகள் பலவற்றை நாடோறும் விதிவழுவாது சிவன்மாட்டுள்ள மெய்யன்போடு செய்தமையாலும், இவரது கற்பின் பெருமையும் ஐம்புலன்களை அடக்கி நின்ற அருமையும் சிவபத்தி முதிர்ச்சியும் செவ்விதிற் றெளியப்படும்.

appar.gif

இவர் இத்திருப்பணிகளை மெய்யன்போடு செய்தனர் என்பது, இவர் புறச்சமயப் படுகுழியில் வீழ்ந்த தமது தம்பியாராகிய மருணீக்கியாரை அதில் நின்றும் தூக்கி ஆளும்பொருட்டுச் செய்த வேண்டுகோளுக்கு இசைந்து, கருணாநிதியாகிய சிவன் அவரைச் சூலைநோயினால் வருத்தி ஆட்கொண்டருளினமையாலே துணியப்படும்.

Link to comment
Share on other sites

2. சிவனது திருவருள் இல்வழி உண்மைநெறி கூடாதெனல்

உலகத்திலே, சமயங்களும், அந்த அந்தச் சமய சாத்திரங்களும் அந்தச் சாத்திரங்களிலே சொல்லப்படும் பொருள்களும், ஒன்றொடொன்று ஒவ்வாது பலதிறத்தனவாய் இருக்கும். இவைகள் எல்லாவற்றுள்ளும், மேலாகிய சமயம் யாது? சாத்திரம் யாது? பொருள் யாது? எனில், இச்சமயப் பொருள்கள் எல்லாம், இது ஆகும் அது அன்று என்னும் பிணக்கு இன்றி, தன்னிடத்தே காண நிற்பது எந்தச் சமயமோ அந்தச் சமயமே சமயம்; அந்தச் சமய சாத்திரமே சாத்திரம்; அந்தச் சாத்திரத்திற் சொல்லப்படும் பொருளே பொருள். இப்படி எல்லாச் சமயப் பொருள்களையும் தன்னிடத்து அடக்கி நிற்கும் சற்சமயம் சைவ சித்தாந்தமேயாம். ஆதலால், அந்தச் சமயமே சமயம்; அந்தச் சமய சாத்திரங்களாகிய வேத சிவாகமங்களே சாத்திரம்; அந்தச் சாத்திரங்களிற் சொல்லப்படும் பதி பசு பாசம் என்னும் முப்பொருள்களுமே மெய்ப்பொருள்கள். அது "ஓதுசம யங்கள்பொரு ளுணரு நூல்க ளொன்றோ டொன்றொவ்வாம உளபலவு மிவற்றுள் - யாதுசமயம் பொருணூல் யாதிங் கென்னி லிதுவாகு மதுவல்ல வெனும் பிணக்க தின்றி - நீதியினா லிவையெல்லா மோரிடத்தே காண நிற்பதியா தொரு சமய மதுசமயம் பொருணூ - லாதலினா லிவையெல்லா மருமறையா கமத்தே யடங்கியிடு மவையிரண்டு மரனடிக்கீ ழடங்கும்" என்னும் சிவஞான சித்தித் திருவிருத்தத்தால் உணர்க.

சமய சாத்திரங்கள் எல்லாம் வேதாகமங்களிலே சுருக்கிக் கூறப்பட்டிருக்கும். அவைகளைச் சமுத்திரகலச நியாயமாக உருத்திரர்களும் தேவர்களும் இருடிகளும் தத்தம் அறிவளவாகத் தனித்தனி விரித்து உட்சமய புறச் சமய சாத்திரங்களாகப் பண்ணினார்கள். ஒன்றோடொன் றொவ்வாத சாருவாகம் முதலிய பல சமயப் பொருள்களை வேதாகமங்களில் சிவன் கூறுதல் என்னை ஏனின், ஆன்மாக்களது அதிகார பேதம் பற்றி என்க. முன்னர் அதிதாமதர்களாய், மந்த மதிகளாய், லெளகிக சுகத்தையே பரமபுருஷார்த்தம் எனவும், புறமாகிய புத்திராதிகளையே ஆன்மா எனவும் அபிமானிக்கும் அதிகாரிகளைக் குறித்து, துக்கம் முதலியவற்றோடு உடன் விரவி இருத்தலால் லெளகிக சுகம் பரம புருஷார்த்தம் அன்று எனவும், புத்திராதிகள் ஆன்மா அல்ல எனவும் உணர்த்தி, அவர்களுக்குப் புத்தி ஸ்திரமாதற் பொருட்டு நுண்பொருள் உணரும் வன்மை இன்மையால், தூலதேகத்தையே ஆன்மா என்றும் அதனழிவையே பரம புருஷார்த்தம் என்றும் உபதேசிக்கின்றனர். பின்னர், அதிற்கூறிய தருமானுட்டானத்தினாலே சிறிது பிரசாதம் பெற்றுச் சற்றே சித்த சுத்தி அடைந்து தேகான்மா முதலியவற்றில் பச்சாத்தாபம் உதிக்கப்பெற்ற அதிகாரிகளைக் குறித்து, தேகாதிகளில் ஏற்றிய ஆன்மத்தன்மையை மறுத்தற்குப் புத்த சாத்திரம் உபதேசிக்கின்றனர். இவ்வாறே மேலும் சோபானக்கிரமமாக உபதேசித்தலால், விரோதம் இன்மை தெளிக. முன்முன் உள்ள சமயங்கள் பின்பின் உள்ள சமயங்களால் வாதிக்கப்படும். வாதிக்கப்படுவது பூருவபக்ஷமும், வாதிப்பது சித்தாந்தமுமாம். சைவ சித்தாந்தம் மற்ற எச்சமயங்களையும் பூருவபக்ஷம் பண்ணி நிற்றலானும், அதனைப் பூருவபக்ஷம் பண்ணுதற்கு ஒரு சமயமும் இன்மையானும், அதுவே சித்தாந்தம் எனப்படும். "சித்தாந்தமே சித்தாந்தம்; அவைக்கு வேறானவை பூருவபக்ஷங்கள்" என்று இரத்தினத்திரயத்திற் கூறப்பட்டது.

இச்சைவசித்தாந்த நூல்களை, பசுக்களாகிய நாம் பரதந்திரர்களாதலால் ஒன்றனை உள்ளவாறு உணர்தலும், அதன் வழி நிற்றலும் இயலாவாம் எனத் தெளிந்து, சுவதந்திரராகிய சிவனை மறவாது அவரது திருவருளையே முன்னிட்டு நின்று, விதிப்படி கற்றுணர்தல் வேண்டும். இவ்வாறே திருவருளை முன்னிடாது எத்துணை நூல்களைக் கற்பினும், எத்துணைத் தருமங்களைச் செய்யினும், சைவ சித்தாந்தமே உண்மைநெறி என்று ஐயந்திரிபறத் துணிதலும், அந்நெறியின் வழுவாது நிற்றலும் கூடாவாம். திருவருளே கண்ணாகக் காண்டல் வேண்டும் என்பதும், அஃது இல்வழி உண்மை நெறியை உணர்ந்து சிவனை அடைதல் கூடாது என்பதும், "உயிரா வணமிருந் துற்றுநோக்கி யுள்ளக்கிழியி னுருவெழுதி - யுயிரா வணஞ் செய்திட் டுன்கைத் தந்தா லுணரப் படுவாரோ டொட்டி வாழ்தி - யயிரா வணமேறா தானே றேறி யமரர்நா டாளாதே யாரூராண்ட - வயிரா வணமேயென் னம்மா னேநின் னருட் கண்ணா னோக்காதா ரல்லாதாரே." - ஆட்டுவித்தா லாரொருவ ராடா தாரே யடங்குவித்தா லாரொருவ ரடங்காதாரே - யோட்டுவித்தா லாரொருவ ரோடா தாரே யுருகுவித்தா லாரொருவ ருருகா தாரே - பாட்டுவித்தா லாரொருவர் பாடாதாரே பணிவித்தா லாரொருவர் பணியாதாரே - காட்டுவித்தா லாரொருவர் காணாதாரே காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே" என்னும் தேவாரங்களானும், "அவனருளாலே யவன்றாள் வணங்கி" என்னும் திருவாசகத்தானும் உணர்க.

இம்மருணீக்கியார், யாக்கை நிலையாமையையும் செல்வ நிலையாமையையும் நினைந்து பல தருமங்களைச் செய்தும், பிரபஞ்ச வாழ்வினது அநித்தியத்தை அறிந்து இல்வாழ்க்கையிலே புகாமல் எல்லாவற்றையும் துறந்தும், சைவ நூல்களை ஓதி உணர்ந்தும், எவ்வுயிர்க்கும் முதல்வராகிய சிவனது திருவருள் இன்மையாலன்றோ! சமணர்களது துர்ப் போதனையினாலே மயங்கி, அவர்களது ஆருகத சமயமே உண்மை நெறி என்று துணிந்து, அதிலே பிரவேசித்தார். சிவனன்றி முதல் இல்லை என்பது "சிவமுதலே யன்றி முதலில்லை யென்றுஞ் - சிவனுடைய தென்னறிவ தென்றுஞ் - சிவனவன - தென்செயல தாகின்ற தென்று மிவை யிற்றைத் - தன்செயலாக் கொள்ளாமை தான்" எனத் திருக்களிற்றுப்படியாரிற் கூறுமாற்றானுங் காண்க. இவர் சைவ நூல்களை ஓதி உணர்த்தும் சிவனது திருவருள் இன்மையால் சைவமே உண்மைநெறி என்னும் உணர்ச்சி இவருக்குப் பிறந்திலது என்பது, இங்கே "நில்லாத வுலகியல்பு கண்டுநிலை யாவாழ்க்கை - யில்லேனென் றறத் துறந்து சமயங்க ளானவற்றி - னல்லாறு தெரிந்துணர்ந்து நம்பரரு ளாமையினாற் - கொல்லாமை மறைந்துறையு மமண்சமயங் குறுகுவார்" என்னும் திருவிருத்தத்தால் உணர்த்தப்பட்டது. இத் திருவருள் தன்னைப் பெறல் வேண்டும் என்னும் ஆசையோடு பெருந்தவம் செய்த வழி யன்றிக் கிடையாது. இந்நாயனார் சிவனை அடைதற் பொருட்டு முற்பிறப்பிலே பெருந்தவம் செய்தாராயினும், அத்தவத்திலே சிறிது வழுவுற்றமையாலன்றோ, இப்பிறப்பிலே நெடுநாள் பெய்ந்நெறியாகிய பரமத்தை அனுட்டித்தனர். கருணாநிதியாகிய சிவன் அச்சிறுகுற்றத்தின் பொருட்டு. இவரை இப்பிறப்பிலே தண்டித்தும், பின்னர் இவர் முன் செய்த தவத்தினாலன்றோ, இவரைக் கை விடாது வலிந்தாட்கொள்ளத் திருவுளங்கொண்டு, சூலை நோயினால் வருத்தி, உண்மை நெறியாகிய தமது சைவ சமயத்திலே புகும்படி, திருவருள் சுரந்தனர். சிவபுண்ணியம் செய்த ஆன்மாக்கள் ஒரோவழித் தீது செய்யினும், அவர்களைக் கைவிடாது காக்கும் பெருங் கருணையினர் சிவனே என்பது, இதனாலே துணியப்படும். "இன்றிங் கசேதனமா மிவ்வினைக ளோரிரண்டுஞ் - சென்று தொடருமவன் சென்றிடத்தே - யென்றுந்தான் - றீதொருவ னானாற் சிவபதிதான் கைவிடுமோ - மாதொருகூ றல்லனோ மற்று" எனத் திருக்களிற்றுப்படியாரிற் கூறுமாற்றானும் காண்க. புறச்சமயங்கள் பொய்ந்நெறிகள் என்பது "இருமுச் சமயத் தொருபேய்த் தேரினை - நீர்நசை தரவரு நெடுங்கண் மான்கணந் - தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடு - மவப்பெருந் தாப நீங்கா தசைந்தன" எனத் திருவாசகத்தினும், "சாவிபோ மற்றைச் சமயங்கள் புக்குநின் - றாவி யறாதேயென் றுந்தீ பற - வவ்வு用ை கேளாதே யுந்தீபற" எனத் திருவுந்தியாரினும் கூறுமாற்றால் அறிக. சிவன் இவரைச் சூலைநோயினால் வருத்தி ஆட்கொண்டமையால், அவர் ஆன்மாக்களைத் தண்டிப்பதெல்லாம் அவர்கள் குற்றத்தினின்றும் நீங்கித் தம்மை அடைந்து பேரின்பம் பெற்று உய்தல் வேண்டும் என்னும் பெருங் கருணையினாலே யாம் என்பது தெளியப்படும். அது "தந்தைதாய் பெற்ற தத்தம் புதல்வர்க டஞ்சொ வாற்றின் - வந்திடா விடினுறுக்கி வளாரினா லடித்துத் தீய - பந்தமு மிடுவரெல்லாம் பார்த்திடிற் பரிவே யாகு - மிந்தநீர் முறைமை யன்றோ வீசனார் முனிவு மென்றும்" என்னும் சிவஞான சித்தித் திருவிருத்தத்தானும் உணர்க.

Link to comment
Share on other sites

3. சீவன் முத்தி நிலை

ஆன்மாவுக்கு ஆணவ மல பரிபாகத்தினாலே தீவிரதர சத்திநிபாதம் உண்டானபோது, கருணாநிதியாகிய சிவன், தமது திருவருளினாலே சிவஞானத்தை உதிப்பித்து, சிவானந்தம் அனுபவிப்பித்து, மேல்வரும் பிறப்புக்கு ஏதுவாகிய சஞ்சித ஆகாமியங்களைக் கெடுத்து எடுத்த சரிரத்திலே பிராரத்துவம் புசிக்கும்படி சீவன் முத்தனாக வைத்து, தேகாந்தத்திலே பரமுத்தியைக் கொடுத்தருளுவார். அது "சித்தாந்த தேசிவன்றன் றிருக்க்டைக்கண் சேர்த்திச் சென்னமொன்றிலே சீவன் முத்த ராக - வைத்தாண்டு மலங்கழுவி ஞானவாரி மடுத்தானந் தம்பொழிந்து வரும் பிறப்பை யறுத்து - முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்ப னென்று மொழிந்திடவு முகலரெல்லா மூர்க்க ராகிப் பித்தாந்தப் பெரும்பிதற்றுப் பிதற்றிப் பாவப் பெருங் குழியில் வீழ்ந்திடுவ ரிதுவென்ன பிராந்தி" என்னும் சிவஞான சித்தித் திருவிருத்தத்தால் உணர்க. சத்திநிபாதமாவது திரோதான சத்தி நீங்க அனுக்கிரக சத்தி பதிதலாம். இத்திருநாவுக்கரசு நாயனார் தீவிரதர சத்திநிபாதமுடையராய், சிவனது திருவருளினாலே மலவிருள் நீங்கிச் சிவத்துவம் விளங்கப் பெற்று, சிவானந்தம் மேலிட்டு, சீவன் முத்தராய் இருந்தார். சிவானந்த விளக்கத்துக்கு அடையாளம் ஆனந்த அருவியும், புளகமும், விம்மலும், தழுதழுத்தலும், பரவசமும் இடையறாது எழும் அத்தியற்புத சின்மயமாகிய பாடலுமாம். இந்நாயனார் தமது தமக்கையாராலே விபூதி அணியப் பெற்று சிவசந்நிதியை அடைந்தவுடனே, சிவனது திருவருளினாலே மலநீக்கமும், சிவத்துவ விளக்கமும் இவருக்கு உண்டாயின என்பதும், சிவானந்தம் வெளிப்பட விளங்கியது என்பதும், இங்கே "நீறணித்தா ரகத்திருளும்" என்பது முதல் "அங்கங்களடங்க" என்பது இறுதியாய் உள்ள ஐந்து திருவிருத்தங்களால் உணர்த்தப்பட்டன. சிவானந்தம் வெளிப்பட விளங்கினமை, இன்னும் இப்புராணத்திற் பல விடங்களில் விரித்துக் கூறியவாற்றால் உணர்க. இவரது சிவானந்த விளக்கம், இவர் திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகங்களினாலே மெய்யுணர்வு உடையோர்க்கு, தெள்ளிதின் விளங்கும்.

சீவன் முத்தராவார் அளத்திற்பட்ட புற்போலச் சிவப்பிரகாசத்தினாலே போக சாதனமாயுள்ள உட்கரணங்களும் புறக்கரணங்களும் ஆகிய பசு கரணங்கள் எல்லாம் சிவகரணமாய் நிகழப் பெற்று, சகல கருவிகளோடும் கூடியிருக்கும் சாக்கிராவத்தையிலே நிருமல துரியாதீதத்தைப் பொருந்தினோர்களாய், பூமியின்கணுள்ள ஆன்மாக்களை ஈடேற்றும் பொருட்டுச் சஞ்சரிக்கும் இயல்புடையோராம், அது "இநிலைதா னில்லையே வெல்லா மீச னிடத்தனினு மீசனெல்லா விடத்தினினு நின்ற - வந்நிலையை யறிந்தந்தக் கரணங்க ளடக்கி யறிவதொரு குறிகுருவி னருளினா லறிந்து - மன்னு甒ிவன் றனையடைந்து நின்றவன்ற னாலே மருவுபசு கரணங்கள் சிவகரண மாகத் - துன்னியசாக்கிரமதனிற் றுரியா தீதந் தோன்றமுயல் சிவானுபவஞ் கவானுபூ திகமாம்". "சாக்கிரத்தே யதீதத்தைப் புரிந்தவர்களுலகிற் சருவசங்க நிவிர்த்தி வந்த தபோதனர்களிவர்கள் - பாக்கியத்தைப் பகர்வதுவெ னிம்மையிலே யுயிரின் பற்றறுத்துப் பரத்தையடை பராவுசிவ ரன்றோ - வாக்க甹முடி கவித்தரசாண் டவர்களரி வையரோ டனுபவித்தங் கிருந்திடினு மகப்பற்றற் றிருப்பர் - நோக்கியிது புரியாதோர் புறப்பற்றற் றாலு நுழைவர் பிறப் பினில்வினைகணுங்கிடாவே" என்னுஞ் சிவஞானசித்தித் திருவித்தங்களானும், "காணுங் கரணங்க ளெல்லாம்பே ரின்பமெனப் - பேணு மடியார் பிறப்பகலக் - காணும் - பெரியானை நெஞ்சே பெருந்துறையி லென்றும் - பிரியானை வாயாரப் பேசு" என்னும் திருவாசகத்தானும் உணர்க. இத்திருநாவுக்கரசு நாயனாரும் அவ்வியல்பினையுடையரே. ஆதலால், இவர் அருளிச் செய்த தமிழ்வேதமாகிய தேவாரம் சிவவாக்கியம் என்றே ஐயந்திரிபறத் துணியப்படும். இவ்வாறன்றி, பசுவாக்கியம் என்று நினைப்பினும், அந்நினைவு அதிபாதகமாகிய சிவத்துரோகமாகி, எரிவாய் நரகம் பயந்தே விடும். இவர் வாக்கியம் சிவவாக்கியம் என்றே துணிந்து, சருவான்மாக்களும் அதனை ஓதி உணர்ந்து முத்தி பெற்றுய்தற் பொருட்டன்றோ, கிருபா சமுத்தரமாகிய சிவன், யாவரும் கேட்ப, இவருக்கு நாவுக்கரசு என்ப பெயர் கொடுத்தருளினார்.

சிவஞானிகள் சரியை முதலியன செய்யவேண்டுவதின்றன்றோ, அங்ஙனமாக, இத்திருநாவுக்கரசு நாயனார் சிவஸ்தலங்கடோறுஞ் சென்று, சிவனைத் தரிசித்து வலம் வந்து வணங்கித் துதித்தல்களும், திருக்கோயிற் பிராகாரங்களினும் திருவீதிகளினும் புற்செதுக்குதலும் (திருகோயிற் பிராகாரங்களிலும் திருவீதிகளிலும் உள்ள புல்லைச் செதுக்குதல் சிவபுண்ணியம் என்பது 'சினக ராலயந் தூர்ப்பது திருமெழுக் கிடுதல் - புனன்மு கந்தெமை யாட்டுவித் தெமக்கெனப் புரித - றின்னு மாலயத் தகவையி னெழுந்தபுற் சீத்த - னனைந றுந்துணர் நாண்மல ரெடுத்துட னல்கல்" என்னும் உபதேச காண்டச் செய்யுளானும் அறிக.), பிறவும் செய்தமை என்னையெனின்; இவர் பசுத்துவம் நீங்கித் தஞ்செயலற்றுச் சிவனேயாய் நின்றமையால், இவை எல்லாம் இவர் செயலாகாது சிவன் செயலேயாய் நிகழ்ந்தன என்க. அது "நஞ்செய லற்றிந்த நாமற்ற பின்னாதன் - றன்செய றானேயென் றுந்தீ பற - தன்னையே தந்தானென் றுந்தீ பற" என்னும் திருவுந்தியாரானும் உணர்க. இங்ஙனம் இவையெல்லாம் சிவன்செயலாய் நிகழ்தல் எற்றுக்கெனின், ஆன்மாக்களுக்கு அறிவுறுத்தி அவர்களை உய்வித்தற் பொருட்டென்க. அது சிவன் தக்ஷிணாமூர்த்தியாய், திருக்கையிற் செபமாலை கொண்டு செபம் பண்ணுதல் உயிர்களுக்கு உய்யுநெறி காட்டுதற் பொருட்டாதல் போலும் என்க. இந்நாயனார் செயலெல்லாம் உயிர்கள் பொருட்டே நிகழ்ந்தன என்பது, "அன்ன தன்மையர் கயிலையை யணைவதற் கருளார் - மன்னு தீந்தமிழ் புவியின் மேற் பின்னையும் வழுத்த - நன்னெ டும்புனற் றடமு மொன்றுடகொடு நடந்தார் - பன்ன கம்புனை பரமரோர் முனிவராம் படியால்" என இங்கும் குறிப்பிக்கப் பட்டமை காண்க. சிவஞானிகள் சரியை கிரியை முதலியவற்றைத் தாங்களாக வேண்டா என்று விடுவதும் இல்லை; செய்து வரல்வேண்டும் என்று சங்கற்பித்துச் செய்வதும் இல்லை; நித்திரை செய்வோர் கையிற் பொருள் அவரறியாது தானே போதல் போல, சிவஞானிகளுக்குச் சரியை கிரியை முதலியன வெல்லாம் தாமே நீங்கும். இவ்வாறன்றி, தாங்களே இவற்றைச் செய்யாதொழிந்தோர் நரகத்து வீழ்வர். அது "குறிப்பிடங் காலந்திக்கா சனங்கொள்கை குலங் குணஞ்சீர் - சிறப்புறு விரதஞ் சீலந் தவஞ்செபந் தியான மெல்லா - மறுத்தற வொழிதல் செய்தன் மருவிடா மன்னு செய்தி - யுறக்குறு பவர் போல் வாய்மை யொழிந்தவை யொழிந்து போமே" எனச் சிவப்பிரகாசத்தினும், "ஞாலநீதியு நான்மறை நீதியும் - பாலருன் மத்தர் பிசாசரி லெனவு - முறங்கி னோன்கை வெறும்பாக் கெனவுந் - தானே தவிரா தானாற் புரியா - தொழிந்திடி னிரயட் தழுந்துத றிடமே" எனச் சங்கற்ப நிராகரணத்தினும் கூறுமாற்றாற் தெளிக.

இந்நாயனார் இவ்வுண்மை நிலையைப் பொருந்திய பெருந்தகைமையினர் என்பது, சமணர்கள் இவரை மிக்க சூட்டினை உடைய நீற்றறையில் ஏழுநாள் இருத்தியும், நஞ்சு கலந்த பாலும் அன்னமும் உண்பித்தும், இவரைக் கொல்லும் பொருட்டு யானையை ஏவியும், இவரைக் கல்லோடு சேர்த்துக் கட்டிக் கடலிலே தள்ளியும், அவைகள் சிறிதாயினும் இவரை வாதிக்காமையானும், தமது வேண்டுகோளின்படி சிவனது திருவருளினாலே தமது தோளிலே சூலக்குறியும் இடபக்குறியும் பொறிக்கப்பட்டமையானும், அப்பூதியடிகணாயனாரது புத்திரர் விஷத்தினால் இறந்தபோது அவரை உயிர்ப்பித்தமையானும், திருவீழிமிழலையிலே சிவனடியார்களை அமுது செய்வித்தற் பொருட்டுச் சிவனிடத்தே படிக்காசு பெற்றமையானும், வேதாரணியத்திலே வேதங்களாலே திருக்காப்புச் செய்யப்பட்ட திருக்கதவு திறக்கப் பாடினமையானும், திருப்பைஞ்ஞீலிக்குச் செல்லும் வழியிலே சிவனிடத்தே பொதிசோறு பெற்றமையானும், திருவையாற்றிலே கைலாசந் தரிசித் தமையானும், செவ்விதிற் றுணியப்படும். இவை எல்லாம் இவ்வுண்மை நிலையில்லாதாரால் இயலா என்பது "துரியங்கடந்தசுடர்த் தோகையுட னென்றும் - பிரியாதே நிற்கின்ற பெம்மான் - றுரியத்தைச் - சாக்கிரத்தே செய்தருளித் தான் செய்யுந் தன்மைகளு - மாக்கிடும்வந் தன்பர்க் கவன்", "கொல்கரியி னீற்றறையி னஞ்சிற் கொலைதவிர்த்தல் - கல்லே மிதப்பாக் கடனீந்த - னல்ல - மருவார் மறைக்காட்டில் வாயிறிறப் பித்த - றிருவாமு ராளி செயல்" எனத் திருக்களிற்றுப்படியாரிற் கூறுமாற்றானும் உணர்க. இன்னும் இவர் சிவனது ஆஞ்ஞையினாலே தமது உழவாரம் நுழைந்த இடங்களெங்கும் பொன்னும் நவரத்தினங்களும் கிடக்கக் கண்டும், அவைகளைப் பருக்கைக் கற்களோடு சமமாக எண்ணி, உழவாரத்த்ல் ஏந்திக் குளத்தில் விழ எறிந்து விட்டமையானும், அரம்பையர்கள் தம்முன் நின்று தம்மை மோகிப்பிக்கும் பொருட்டுப் பல முயற்சிகள் செய்தும், தமது சித்தநிலை சிறிதும் வேறுபடாது தாம் செய்யும் திருப்பணியிலேயே உறுதிகொண்டு நின்றமையானும், இவரது பெருமை தெளியப்படும். இவ்வருமை "ஓடுஞ் செம்பொனு மொக்கவே நோக்குவார்", "ஏந்திழையார் தஞ்சயனத் தெய்தித்தம் மெய்தொடினுங் - காய்ந் துவர்த்த லேதுறவு காண்" என்னும் திருவாக்குகளால் அறிக. இவர் பரமுத்தி பெற்றமை இங்கே, புண்ணியா வுன்னடிக்கே போதுகின்றே னெனப்புகன்று - நண்ணரிய சிவானந்த ஞான வடிவேயாகி யண்ணலார் சேவடிக்கீழாண்ட வர செய்தினார் என்பதனால் உணர்த்தப்பட்டது.

இதுகாறும் கூறியவாற்றால், இந்நாயனார், ஆன்மாக்கள் புறச்சமயப் படுகுழியில் வீழாது சைவமே சற்சமயம் என்று தெளிந்து, அதன்வழி நின்று சிவனை வழிபட்டு உய்யும் பொருட்டு, தமது செயல்களாலும், திருவாக்குகளானும், மெய்யறிவுச் சுடர் கொளுத்திய சமயகுரவராயினார் என்பது, தெள்ளிதிற் பெறப்படும். ஆதலால் பரசமயங்களிற் புகாது சிவனே பரமபதி எனத் துணிந்து, இந்நாயனார் காட்டியவாறே விபூதி உருத்திராக்ஷம் என்னும் சிவசின்னங்கள் தரித்து, சிவனை இடையறாது மேன்மேலும் பெருகி வளரும் மெய்யன்பினோடு மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றினாலும் வழிபட்டு உய்தலே நாம் அருமையாகப் பெற்ற இச்சரீரத்தினால் பெறப்படும் பயன் என்பது கருங்கன் மனமும் கரைந்துருகச் செய்யும் பெருஞ்சிறப்பினதாகியும், காமுகருக்கு இளம் பெண்களுடைய வசனம் போலச் சிவனுக்குப் பிரீதியைச் செய்யும் இயல்பினதாகியும் விளங்கும் இந்நாயனாரது தேவாரத்தைச் சித்தசமாதானத் தோடும் மெய்யன்போடும் விதிப்படி ஓதி உணர்க.

Link to comment
Share on other sites

நான்காவது

திருநின்ற சருக்கம்

குலச்சிறைநாயனார் புராணம்

கோதில்புகழ் தருமணமேற் குடியார் கோவண்

குலச்சிறையார் தென்னர்குல வமைச்சர் குன்றா

மாதவர்க ளடிபரவு மரபார் பாண்டி

மாதேவி யாரருள்வான் பயிர்க்கு வேலி

காதன்மிகு கவுணியர்கோன் வாதிற் றோற்ற

கையரைவை கைக்கரைசேர் கழுவி லேற்று

நீதியினா ராலவாய் நிமலர்ச் சேர்ந்த

நின்மலனா ரென்மலங்க ணீக்கி னாரே.

பாண்டிநாட்டிலே, மணமேற்குடியிலே, குலச்சிறைநாயனார் என்பவரொருவர் இருந்தார். அவர் விபூதி உருத்திராக்ஷந்தரிக்கின்றவர

Link to comment
Share on other sites

குலச்சிறை நாயனார் புராண சூசனம்

1. சிவனடியார் பத்தி

சிவன் சுவதந்திரர் நாம் பரதந்திரர். சிவனுக்கும் சிவபத்தர்களுக்கும் நாம் அடிமை என்று தெளிந்த மெய்யுணர்வு உடையோர், தாம் எத்துணைச் செல்வத்தோடும் எத்துணை அதிகாரத்தோடும் கூடி யிருப்பினும், சிறிதாயினும் அவைகளாலே அகங்காரம் கொள்ளாமல், சிவனடியார்களைக் கண்டால், அவர்கள் எக்குலத்தர்களாயினும், அவர்களைச் சிவன் எனவே பாவித்து, எதிர்கொண்டு வணங்கித் துதித்து, விதிப்படி அமுது செய்விப்பர். இப்படிச் சிவனடியாரிடத்து அன்புடையவரே சிவனிடத்து அன்புடையர் என்று தெளியப்படுவர். அகங்காரம் முதலியன உடையோர் சிவனது திருவருளை அடையார்கள். அது "ஒருமையுடனீசனரு ளோங்கி யென்றுந் தூங்க - லருமை யருமை யருமை - பெருமையிடும் - பாங்காரங் கோப மபிமான மாசையிவை - நீங்காத போது தானே" என்னும் சிவபோகசார வெண்பாவால் அறிக. இக்குலச்சிறை நாயனார், தாம் பெருஞ் செல்வரும் பாண்டியனுக்கு முதன்மந்திரியாருமாய் இருந்தும், சிறிதும் செருக்கு உறாது, இச்சிவபுண்ணியத்தைச் செய்தமையால், சிவனிடத்தே மெய்யன்புடையர் என்பது தெள்ளிதிற் றுணியப்படும். இவரது பத்தித்திறம் "வெற்றவேயடியா ரடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளைநீ றணியுங் - கொற்றவன் றனக்கு மந்திரியாய குலச்சிறை குலாவிநின்றேத்து - மொற்றைவெள் விடைய னும்பரார் தலைவனுலகினி லியற் கையை யொழிந்திட - டற்றவர்க் கற்ற சிவனுறைகின்ற வாலவா யாவது மிதுவே; கணங்களாய்வரினுந் தமியராய் வரினு மடியவர் தங்களைக் கண்டாற் - குணங்கொடு பணியுங் குலச்சிறை பரவுங் கோபுரஞ் சூழ்மணிக் கோயின் - மணங்கமிழ் கொன்றை வாளராமதியம் வன்னிவண் கூவிள மாலை - யணங்குவீற் றிருந்த சடைமுடி யண்ண லாலவா யாவது மிதுவே, நலமில ராக நலமதுண்டாக நாடவர் நாடறி கின்ற - குலமில ராகக் குலமதுண்டாகத் தவம்பணி குலச்சிறை பரவுங் - கலைமலி கரத்தன் மூவிலை வேலன் கரிபுரி மூடிய கண்ட - னலைமலி புனல்சேர் சடைமுடி யண்ண லாலவா யாவது மிதுவே; நாவணங் கியல்பா மஞ்செழுத் தோதி நல்லராய் நல்லியல் பாகுங் - கோவணம் பூதிசாதனங் கண்டாற் றொழுதெழு குலச்சிறை போற்ற - வேவணங் கியல்பா மிராவணன் றிண்டோ ளிருபது நெரிதர வுன்றி - யாவணங் கொண்ட சடைமுடி யண்ண லாலவா யாவது மிதுவே; தொண்டராயுள்ளார் திசைதிசைதோறுந் தொழுதுதன் குணத்தினைக் குலாவக் - கண்டுநா டோறு மின்புறுகின்ற குலச்சிறை கருதிநின் றேத்தக் - குண்டரா யுள்ளார் சாக்கியர் தங்கள் குறியின்கணெறி யிடைவாரா - வண்டர்நா யகன்றா னமர்ந்துவீற் றிருந்த வாலவா யாவது மிதுவே" எனத் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாராற் புகழப்பட்டமை காண்க.

Link to comment
Share on other sites

2. சைவ சமயத்தை வளர்க்க விரும்பல்

புறச்சமயிகளுடைய துர்ப்போதனையினாலே ஆன்மாக்கள் சற்சமயமாகிய சைவத்தை விட்டு அவர்களது சமயப் படுகுழியிலே விழுந்து கெடுதலைக் காணின், மிக இரங்கிக் கவலை கொண்டு, அப்புறச்சமயங்களை ஒழித்து, சைவத்தை வளர்த்தற்கு வேண்டும் முயற்சியைச் சிரத்தையோடு செய்தல் மிக மேலாகிய சிவபுண்ணியமாம்; அது செய்யாமை மிகக் கொடிய பாதகமாம். அம்முயற்சி சிரத்தையோடு செய்யப்படுமாயின், வேண்டுவார் வேண்டியதே ஈவாராகிய சிவன் அதனை முற்றுவித்தருளுவர். இக்குலச்சிறை நாயனார் இச்சிவபுண்ணியத்தான் மிகச் சிறப்புற்றவர் என்பது, சமணர்களுடைய பொய்ச் சமயத்தைக் கெடுத்துப் பாண்டி நாடெங்கும் திருநீற்றை வளர்க்கும் பொருட்டுத் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாருடைய திருவடிகளை வணங்கினமையாலும், வாதிலே அந்நாயனாருக்குத் தோற்ற சமணர்களைக் கழுவிலே ஏற்றுவித்தமையாலும், செவ்விதிற்றெளியப்படும். இவர் இவ்வாறு செய்தபின்பு, பாண்டி நாடெங்கும் புறச்சமயமாகிய இருள் கெடச் சைவ சமயமாகிய பேரொளி தழைத்து ஓங்கியதன்றோ? ஆதலால், இதனின் மிக்க புண்ணியம் வேறு இல்லை எனத் தெளிந்து, சைவத்தை வளர்த்தற்குச் சிவனது திருவருளையே முன்னிட்டுக் கொண்டு இடைவிடாது பெருமுயற்சி செய்க.

திருச்சிற்றம்பலம்

naneduma_i.jpg

Link to comment
Share on other sites

நான்காவது

திருநின்ற சருக்கம்

பெருமிழலைக்குறும்பநாயனார் புராணம்

கொண்டல்பனி வளர்சோலை மிழலை நாட்டுக்

கோதில்புகழ்ப் பெருமிழலைக் குறும்ப னார்சீ

ரண்டர்பிரா னடியவருக் கடியா ராகு

மாதரவா லணுக்கவன் றொண்டர்க் காளாய்

மண்டொழுமெண் டருசித்தி வாய்த்து ளார்தாம்

வன்றொண்டர் வடகயிலை மருவு நாண்மு

னெண்டிகழு மறைமூல நெறியூ டேகி

யிலங்கொளிசேர் வடகயிலை யெய்தி னாரே.

மிழலைநாட்டிலே பெருமிழலை என்னும் ஊரிலே, சிவபத்தி அடியார் பத்திகளிற் சிறந்த பெருமிழலைக்குறும்ப நாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவனடியார்களைக் காணுந்தோறும் விரைந்தெதீர்கொண்டு வணங்கி, அவர்களுக்குக் குறிப்பறிந்து தொண்டு செய்பவர். அவர்களை நாடோறுந் திருவமுது செய்வித்து, அவர்களுக்கு வேண்டுந்திரவியங்களைக் கொடுப்பவர். அவர் சுந்தரமூர்த்தி நாயனாருடைய பெருமையை அறிந்து அவருடைய திருவடிகளை மனம் வாக்குக் காயங்களினாலே சிந்தித்துத் துதித்து வணங்குதலே பரமசிவனுடைய திருவடிகளை அடைதற்கு உரிய நெறியென்று அப்படிச் செய்து வந்தார். அதனால் அவர் அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்னும் அஷ்டமகாசித்திகளையும் அடைந்தார். அடைந்து ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஜபித்து வந்தார்.

இப்படி நிகழுங்காலத்திலே, திருவஞ்சைக்களத்திற் சென்று திருப்பதிகம்பாடுஞ் சுந்தரமூர்த்திநாயனாருக்குப

Link to comment
Share on other sites

பெருமிழலைக்குறும்ப நாயனார் புராண சூசனம்

குருபத்தி முதிர்ச்சி

கண்மணியானது இது நன்று இது தீது என்று காட்டுதல் போலச் சற்குருவானவர் இது நன்னெறி இது தீநெறி என்று உணர்ந்து வோராதலால், அவரைச் சிவபெருமான் எனவே பாவித்து, நியமமாக மனம் வாக்குக் காயங்களினாலே சிரத்தையுடன் வழிபடுவோர் சித்தி முத்திகளைப் பெறுவர். அது "சிவனே சிவஞானி யாதலாற் சுத்த - சிவனே யெனவடி சேரவல் லார்க்கு - நவமான தத்துவ நன்முத்தி நண்ணும் - பவமான தின்றிப் பரலோக மாமே; தெளிவு குருவின் றிருமேனி காண்ட - றெளிவு குருவின்றிருவார்த்தை கேட்ட - றெளிவு குருவின் றிருநாமஞ் செப்ப - றெளிவு குருரூபஞ் சிந்தித்த றானே" எனத் திருமந்திரத்திற் கூறுமாற்றால் அறிக. இப்பெருமிழலைக் குறும்பநாயனார் உலகம் உய்யும் பொருட்டுத் திருத்தொண்டத்தொகை அருளிச் செய்த சமயகுரவராகிய சுந்தரமூர்த்தி நாயனாரை நியமமாகச் சிரத்தையோடு சிந்தித்துத் துதித்து வணங்கினமையாலன்றோ, அணிமா முதலிய அட்டசித்திகளையும் பெற்று, ஸ்ரீ பஞ்சாக்ஷரமே தமக்குச் சுற்றமும் பொருளும் உணர்வும் எனக் கொண்டார். இவரது குருபத்தி முதிர்ச்சி, சுந்தரமூர்த்தி நாயனார் உத்தர கைலாசத்தை அடைவதை முன்னுணர்ந்து, தாம் அவரைப் பிரிதலாற்றாமையால் முதனாள் யோக முயற்சியினாலே பிரமரந்திர வழியால் உடலினின்றும் பிரிந்து, திருக்கைலாசத்தை அடைந்தமையாலே செவ்விதிற்றெளியப்படும்.

naperumi_i.jpg

திருச்சிற்றம்பலம்

Link to comment
Share on other sites

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

கங்காளர்

gangalar.jpg

"குறளா யணுகி மூவடிமண் கொண்டு நெடுகி மூவுலகுந்

திறவான் அளந்து மாவலியைச் சிறையிற் படுத்து வியந்தானை

இறவேச வட்டி வெரி நெலும்பை யெழிற் கங்காளப்படையென்ன

அறவோர் வழுத்தக் கைக்கொண்ட அங்கணாணன் திருவுருவம்"- காஞ்சிப்புராணம்

Link to comment
Share on other sites

திருமால், வாமனவடிவேற்று, மாவலிபால் சென்று மூவடி மண் கேட்டுப் பெற்று, ஈரடியால் மூவுலகும் அளந்து, மூன்றாவது அடியால் மாவலியைக் கீழுலகிற்கு அனுப்பிய திரிவிக்கிரம வடிவங் கொண்டார். அதன்பின் அவர் உலகையும் அழிக்கத் தொடங்கினார். வாமனனது உக்கிரத்தைத் தணிக்க வேண்டித் தேவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமானும் உலகைக் காத்தற் பொருட்டு, வஜ்ஜிராயுதங் கொண்டு வாமனன் மார்பில் அடிக்க, வாமனன் இறந்து வீழ்ந்தார்.

வாமனனது கங்காளத்தை (முதுகெலும்பை) எடுத்துத் தனது தண்டாகச் சிவபெருமான் வைத்துக் கொண்ட வடிவமே கங்காளமூர்த்தி என அழைக்கப்படுகிறது. உபதேச காண்டத்தில் கங்காளர் வரலாறு கூறப்படுகிறது.

"பற்றினன் வயிரத்தண்டம் பகிரண்டம் அதிர ஓச்சிச்

சுற்றினன் உருமுக்காலத் தொழித்தனன் துளவமார்பின்

எற்றினன் எற்றலோடும் எரிபடு சண்டவாயு

முற்றுற விற்றுவீழு மூவெங்கிரியிற் சாய்ந்தான்"

"கருநிறக் கமஞ்சூன் மேகக் காரதள் உரித்து வாங்கித்

திருநிறத் தமையக் காளகஞ்சுக மென்னச் சேர்த்தி

வெரிநுறப் பிடுங்கு மென்புதண்டென வெடுத்துக்கொண்டான்

மருமலர்த் துளவ மாயோன் ஆணவ மயக்கந் தீர்ந்தான்"

Link to comment
Share on other sites

ஆணவம் போக்கிய அரனாரின் அருளாடலைக் காட்டுவது கங்காள மூர்த்தியாகும்.

அம்சுமத் பேதாகமம், காமிகாமம், காரணாகமம், சில்பரத்தினம் போன்ற நூல்களில் கங்காளமூர்த்தி திருவுருவம் காட்டப்படுகின்றது.

கங்காளமூர்த்தி நின்ற கோலத்தில் இருப்பார். அவரது இடக்கால் பூமியில் நன்கு ஊன்றியிருக்கும்; வலக்கால் சற்றே வளைந்து அவர் நடந்து செல்வதைக் காட்டும். ஊமத்தை மலர், சர்ப்பம், பிறை ஆகியவற்றைச் சூடிய ஜடாமகுடம் புனைந்திருப்பார். மகிழ்ச்சி நிறைந்த முகத்தினராய், இனிய பாடல்களை இசைத்துக் கொண்டு, புன்முறுவல் பூத்து அவர் திகழ்வார். அவரது முத்துப் போன்ற பற்கள் பாதி தெரியுமாறு வாய் அமைந்திருக்கும். இரு காதுகளிலும் சாதாரண குண்டலங்கள் அல்லது வலக்காதில் மகரகுண்டலமும், இடக்காதில் சங்கபத்திரமும் அணிந்திருப்பார். நான்கு கரங்கள் இவர் கொண்டிருப்பார். முன் வலக்கரம் பாணத்தையும், முன் இடக்கரம் உடுக்கையும் ஏந்தியிருக்கும். பின் வலக்கரம் நீண்டு வளர்ப்புப் பிராணியான மானின் வாய்க்கருகே கடக ஹஸ்தமாயிருக்கும். பின் இடக்கரத்தில் கங்காளதண்டம் ஏந்தியிருப்பார். அதில் இறந்தோரது எலும்புகள் கட்டப்பட்டிருக்கும். மயில் இறகாலும் கொடியாலும் அது அலங்கரிக்கப்பட்டிருக்கும். படுக்கை வாட்டில் இக்கங்காள தண்டமானது இடது தோளில் வைத்து, அதன் ஒரு முனையைப் பின் இடக்கையில் பற்றி இருப்பார். அரையில் கச்சமும், அதில தங்கத்தாலமைந்த ஒரு சிறுவாள் வெள்ளிப் பிடியுடன் தொங்குமாறு விளங்கும். திருவடியில் மரப் பாதுகைகளை அணிந்திருப்பார். உடலெங்கும் பாம்பு அணிகலன்களாகத் திகழும். அவரைச் சுற்றிலும் எண்ணற்ற பூதகணங்களும் பெண்டிரும் ஆடியும் பாடியும் கூடியிருப்பர். ஒரு பூதம் பெரிய பாத்திரம் ஒன்றைத் தனது தலைமீது வைத்துக் கொண்டு இடப்பக்கம் நிற்கும். பிச்சை ஏற்கும் உணவு வகைகளைச் சேமித்து வைக்கவே அப்பாத்திரத்தை அப்பூதம் சுமந்து நிற்கும். கங்காளமூர்த்தியிடம் கொண்ட காமத்தால் பெண்டிர் ஆடைநெகிழ நிற்பர். எண்ணற்ற முனிவர், தேவர், கந்தருவர், சித்தர், வித்தியாதரர் ஆகியோர் இவரைச் சுற்றி நின்று கைகுவித்து அஞ்சலி செய்து கொண்டிருப்பர். இவருக்கு முன்னால் வாயு தெருவைச் சுத்தம் செய்வார்; வருணன் நீர் தெளிப்பார்; பிறதேவர்கள் மலர் தூவிப் போற்றுவர்; முனிவர்கள் வேதம் ஓதுவர்; சூரியனும், சந்திரனும் குடைபிடிப்பர்; நாரதரும் தும்புருவும் தம் இசைக் கருவிகளுடன் பெருமானுக்கு உகந்த பாடல்களைப் பாடுவர்.

Link to comment
Share on other sites

hp1.jpg

கும்பகோணம் நாகேசுவர சுவாமி கோயில் என்னும் குடந்தைக் கீழ்க் கோட்டத்தில் கங்காளமூர்த்தி திருவுருவம் மேற்குறித்த அமைப்பில் சிறப்பாகத் தனி சந்நிதியாக அமைந்துள்ளது. சுசீந்திரம், தென்காசி, திருச்செங்காட்டங்குடி, தாராசுரம் கோயில்களில் விளங்கும் கங்காளமூர்த்தி வடிவங்கள் சிறப்புடையன.

திருமுறைகளில் கங்காளமூர்த்தி குறிப்பிடப் பெறுகிறார் வள்ளல் கையது மேவுகங்காளமே என்று திருஞானசம்பந்தரும், கங்காள வேடக்கருத்தர் என்று திருநாவுக்கரசரும், கங்காளம் தோள் மேலே காதலித்தான் என்று மணிவாசகரும் பரவுகின்றனர்.

"கங்காளர் கயிலாய மலையாளர்

கானப்பே ராளர்மங்கை

பங்காளர் திரிசூலப் படையாளர்

விடையாளர் பயிலும் கோயில்

கொங்காளப் பொழில்நுழைந்து கூர்வாயால்

இறகுலர்த்திக் கூதல் நீங்கிச்

செங்கானல் வெண்குருகு பைங்கானல்

இரைதேரும் திருவையாறே"

அப்போது விஷ்ணுவும் ஆகா! துஷ்டர்களுக்கு அபயம் கொடுத்தால் உலகங்கட்குப் பீடையல்லவா என்று அவர்களுக்கு அபயம் கொடுத்த அப்பிருகு பத்தினியின் தலையைத் துண்டித்து, பின்னர் அந்த அசுரர்களையும் சமுகரித்துவிட்டுப் போனார்.

Link to comment
Share on other sites

பிருகுமாமுனிவர் அங்குவந்து தனது மனைவியும் அசுரர்களும் வெட்டுண்டு கிடப்பதைக் கண்டார். இச்செயலைச் செய்தது விஷ்ணுதான் என்று ஞானதிருட்டியால் அறிந்தார். அசுரர்களோடு கூடத் தம் மனைவியையும் கொன்றவரான அவ்விஷ்ணு மீது மிகுதியாய்ச் சினம் கொண்டார். உடன் அவரைச் சபித்தார்.

ஓகோ! இவ்விஷ்ணுவுக்குப் பூவுலகில் கோடி கோடிகளான பிறவிகள் உண்டாகி அந்த ஒவ்வொரு பிறவியிலும் மகா துக்கத்தையளிக்கலுற்ற தமது பெண்டிரை இழத்தல் நேரக்கடவது.

இவ்வாறு சபித்துவிட்டுப் பரமசிவனிடமிருந்து தாம் சித்திபெற்ற மிருதசஞ்சீவினி என்ற வித்தையால் தமது மனைவியை பிழைப்பித்து விட்டார். அதன் பின்னர் அசுரர்களைக் கண்டிப்பவரான திருமாலும் அதனைக் கேட்டு நடுநடுங்கியவராகி அப்பாவம் தொலைவதற்காகப் வேண்டியதை அளிக்கலுற்ற சிவத்தலமான காஞ்சீபுரத்துக்குச் சென்று அங்குத் தேவாதி தேவரை பூசித்ததன் மேல் சிவபெருமான் இடபவாகன ரூடராய் தோன்றினார்.

ma_rish_p1.jpg

திருமால் மிக்க பயத்தோடு வணங்கித் தமது சாபம் தீரும் வழியை வேண்டினார்.

Link to comment
Share on other sites

அவ்வமயம் திருமால் பிரமன் யாவருக்கும் அதிபரான பரமசிவன் திருமாலே! நமது அடியார்களால் இடப்பட்ட சாபத்திற்கு அவர்களாலேயே பிரதிசாபம் கொடுக்கத் தக்கதேயன்றி, நாம் பரிகாரம் கொடுப்பது இல்லை என்று நம்மால் சபதம் செய்யப்பட்டிருக்கிறது என்று திருமாலை நோக்கி, மந்த காசத்தோடு மேலும் திருவாக்கருளியதாவது:

பிருகுமா முனிவரே! இவ்விஷ்ணுவை பல கோடி பிறவிகளைக் கொடுக்கலுற்ற உமது சாபத்தினின்று நீர் விடுதலை செய்விக்க வேண்டும். ஏனென்றால் இவரும் நம்மைப் பூஜிப்பதில் அக்கறைகொண்ட நமது ஓர் அடியவரென்றே அறியும். ஆயினும் இவருக்குப் பத்துப் பிறவிகள் உண்டாகி அவைகளில் ஒரு பிறவியில் மாத்திரம் இவர் பெண்டிரை விட்டுப் பிரிந்து நீண்டகால மளவும் துக்கமடைந்திருக்கலாகட்டும். இன்றி இதற்கு மேல் வேண்டாம். நீர் நம் அடியார்கட் கெல்லாம் முதல்வராகையால் நமது ஆக்கினையின்படி இவ்வாறே செய்யலாவீர் என்றார். முனிவரும் உடனே அவரை வணங்கி அப்படியே பாக்கியம் என்றார். அப்போது உடனே இலக்குமி வேந்தனும் பார்வதி நாதனைத் தண்டனிட்டு வேண்டிக் கொண்டதாவது.

siva.jpg

கருணைக்கடலும் அடியாருக்கு அன்பருமான தேவதேவேசா! பத்து பிறவிகளிலும் அடியேனுடைய அஞ்ஞானம் தொலைவதற்காகத் தேவரீர் நிக்கிரகானுக்கிரகங்களைச் செய்தருள வேண்டும் என்றார். அது கேட்டு இறைவரும் அப்படியே நல்லதென்றருளி மறைந்து அருளினார். திருமாலும் தமது இருப்பிடம் அடைந்தனர்

திருச்சிற்றம்பலம்.

Link to comment
Share on other sites

நான்காவது

திருநின்ற சருக்கம்

காரைக்காலம்மையார் புராணம்

நம்பன் றிருமலை நான்மிதி யேனென்று தாளிரண்டு

மும்பர் மிசைத்தலை யானடத் தேற வுமைநகலுஞ்

செம்பொன் னுருவனென் னம்மை யெனப்பெற் றவள் செழுந்தேன்

கொம்பி னுகுகாரைக் காலினின் மேய சூலதனமே.

தங்குபுகழ்க் காரைக்கால் வணிகன் மிக்க

தனதத்தன் றரும்புனித வதியார் மாவின்

செங்கனிக டிருவருளா லழைப்பக் கண்டு

திகழ்கணவ னதிசயித்துத் தேச நீங்க

வங்கவுட லிழந்துமுடி நடையா லேறி

யம்மையே யெனநாத னப்பா வென்று

பொங்குவட கயிலைபணிந் தாலங் காட்டிற்

புனிதனட மனவரதம் போற்றி னாரே.

சோழமண்டலத்திலே, காரைக்காலிலே வைசியர்குலத்திலே, தனதத்தன் என்பவன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் புனிதவதியார் என்கின்ற ஒரு புத்திரியார் பிறந்தார். அத்தனதத்தன் அப்புத்திரியாரை நாகப்பட்டணத்தில் இருக்கின்ற நிதிபதி என்பவனுடைய புத்திரனாகிய பரமதத்தனுக்கு விவாகஞ்செய்து கொடுத்துத் தனக்கு வேறு பிள்ளையின்மையால் அவரை நாகபட்டணத்திற்குப் போகவிடாமல், தன்னுடைய வீட்டுக்கு அருகிலே ஒருவீடு கட்டுவித்து, அளவிறந்த திரவியங்களையும் கொடுத்து, கணவனோடும் அதிலிருத்தினான். பரமதத்தன் அந்தச் செல்வத்தை விருத்தி செய்து இல்லறத்தை ஒழுங்குபெற நடத்தி வந்தான். அவன் மனைவியாராகிய புனிதவதியார் பரமசிவனுடைய திருவடிகளிலே அன்பு மேன்மேலும் பெருக, இல்லறத்திற்கு வேண்டுவனவற்றை வழுவாது செய்வாராயினார். தம்முடைய வீட்டுக்குச் சிவனடியார்கள் வரின், அவர்களைத் திருவமுது செய்வித்து, அவரவர் வேண்டியபடி பொன் இரத்தினம் வஸ்திரம் முதலாயின உதவுவார்.

இப்படி நிகழுங்காலத்தில் ஒருநாள் பரமதத்தனிடத்திற் காரியமூலமாக வந்தவர்கள் சிலர் அவனுக்கு இரண்டு மாம்பழங்கொடுக்க; அவன் அவைகளை வாங்கிக்கொண்டு அவர்கள் கருத்தை முடித்து, அவைகளை மனைவியாரிடத்திற்கு அனுப்பிவிட்டான். மனைவியார் அவைகளை வாங்கி வைத்த பின்பு, சிவனடியார் ஒருவர் பசியினால் வருந்தி, அவர் வீட்டிற்சென்றார். புனிதவதியார் அவ்வடியவருடைய நிலையைக் கண்டு, கலத்தை வைத்துச் சோறு படைத்து, அந்நேரத்திலே கறியமுது பாகம் பண்ணப்படாமையால், "சிவனடியவரே பெறுதற்கு அரிய விருந்தினராய் வந்தபொழுதே, இதைப் பார்க்கிலும் பெறவேண்டிய பேறு நமக்கு ஒன்றும் இல்லை" என்று நினைந்து, தம்முடைய கணவன் அனுப்பிய மாம்பழங்கள் இரண்டினுள் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து படைத்து, அவ்வடியாரைத் திருவமுது செய்வித்தார். அடியவர் சோற்றை மாங்கனியோடு உண்டு, புனிதவதியாருடைய செய்கையை உவந்து போயினார்.

போயபின், பரமதத்தன் நடுப்பகலிலே வீட்டுக்கு வந்து போசனம்பண்ணும் பொழுது, மனைவியார் எஞ்சியிருந்த மாங்கனியைக் கொண்டுவந்து, கலத்திலே வைத்தார். பரமதத்தன் மிக இனிய அந்தக்கனியை உண்டு அதன் இனிய சுவையினாலே திருத்தியடையாமல் மனைவியாரை நோக்கி, "மற்றக் கனியையுங் கொண்டுவந்து வை" என்றான். மனைவியார் கொண்டு வரச் செல்பவர் போலப் போய் நின்று, கொண்டு, சோகித்து, தம்மை விசுவசிக்கின்ற மெய்யன்பர்களுக்கு உற்றவிடத்து உதவும் பரமசிவனுடைய திருவடிகளைத் தியானித்தார். உடனே, அக்கடவுளுடைய கருணையினால், அதிமதுரமாகிய ஒருமாங்கனி அவர் கையில் வந்திருந்தது.

karikalammai.jpg

Link to comment
Share on other sites

காரைக்காலம்மையார் புராண சூசனம்

இக்காரைக்காலம்மையார் புராணத்தால் அறிதற்பாலனவாகிய விஷயங்கள் மாகேசுர பூசையும் அன்புமாம். மாகேசுர பூசை இளையான்குடி மாறநாயனார் புராணத்துச் சூசனத்தினும், அன்பு கண்ணப்ப நாயனார் சூசனத்தினும் உணர்த்தப்பட்டன. இவ்வம்மையார் பெருமை இவரைப் பரமபதியாகிய சிவபெருமான் "அம்மையே" என்று அழைத்தருளினமையானும், இவர் திருத்தலையாலே நடந்தருளிய திருவாலங்காட்டை மிதித்தற்குத் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அஞ்சி யருளினமையானும் அறிக.

nakaarai_i.jpg

திருச்சிற்றம்பலம்

Link to comment
Share on other sites

அவர் அதைக் கொண்டுவந்து, கணவனுடைய காலத்திலே படைக்க; அவன் அதை உண்டு, அதன் சுவை தேவாமிர்தத்தைப்பார்க்கிலுஞ

Link to comment
Share on other sites

31. ஆகமங்கள் - குறிப்பு தருக.

ஆகமங்களும் சிவபிரானால் சிறப்பாக சைவர்களுக்கு அருளிச் செய்யப்பட்டன. சிவ ஆகமங்கள் 28 உள்ளன. சைவசமயம் வேதத்தைப் பொது எனவும், ஆகமத்தை சிறப்பு எனவும் கருதுகிறது.

32. சமயங்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

அகச்சமயம், அகப்புறச்சமயம், புறச்சமயம், புறபுறச்சமயம் என நான்கு வகைப்படும்.

அகச்சமயம் ................ அகப்புறச்சமயம்

1. பாடாணவாத சைவம்................ 1. பாசுபதம்

2. பேதவாத சைவம்................ 2. மாவிரதம்

3. சிவசமவாத சைவம்................ 3. காபாலம்

4. சிவசங்கிராந்தவாத சைவம்................ 4. வாமம்

5. ஈசுவர அவிகாரவாத சைவம்................ 5. பைரவம்

6. சிவாத்துவித சைவம்................ 6. ஐக்கியவாத சைவம்

புறச்சமயம்................ புறப்புறச்சமயம்

1. நியாயம்................ 1. உலகாயதர்

2. சாங்கியம்................ 2. சமணர்

3. யோகம்................ 3. செளத்திராந்திகர்

4. மீமாஞ்சை ................ 4. யோகசாரர்

5. வேதாந்தம்................ 5. மாத்யமிகர்

6. பாஞ்சராத்திரம் ................ 6. வைபாடிகர்

33. சைவசித்தாந்தம் - ஒரு வார்த்தையில் விளக்கம் தருக.

முடிந்த முடிபு.

34. சைவ சித்தாந்தர் என்ற குறிப்பினைத்தரும் திருமுறை எது?

திருமந்திரம்

"கற்பனைக் கற்று கலைமன்னும் மெய்யோகம்

முற்பத ஞானம் முறைமுறை நண்ணியே

சொற்பதங் கடந்து துரிசற்று மேலான

தற்பரம் கண்டுளோர் சைவசித்தாந்தரே"

35. சைவ சித்தாந்த தத்துவத்தின் சிறப்பு யாது?

1. தர்க்க ரீதியானது (Logic)

2. அறிவியற் பூர்வமானது (Scientific)

3. வரலாற்றுத் தொன்மையுடையது (Historic)

4. நடைமுறைக்கு இயைந்தது (Easy to Adapt)

5. உலகளாவியது (Universal)

6. முற்போக்குச் சிந்தனைகளை உடையது (Optimistic)

இன்னும் பல.

36. சற்காரிய வாதம் - சிறுகுறிப்பு தருக.

'உள்ளது அழியாது, இல்லது தோன்றாது' என்ற விஞ்ஞான அடிப்படையில் தான் சைவசித்தாந்த தத்துவம் தனது கொள்கைகளை நிலைநிறுத்துகிறது.

Link to comment
Share on other sites

களவு

களவாவது பிறருடைமையால் இருக்கும் பொருளை அவரை வஞ்சித்துக் கொள்ளுதல். களவினால் வரும் பொருள் வளர்வதுபோலத் தோன்றி, தான் போம் பொழுது பாவத்தையும் பழியையுமே நிறுத்திவிட்டு, முன்னுள்ள பொருளையும் தருமத்தையும் உடன்கொண்டு போய்விடும். களவுசெய்பவர், அப்பொழுது, 'யாவராயினும், காண்பாரே அடிப்பாரோ, கை கால்களைக் குறைப்பாரோ' என்றும், பின்பும் 'இராசா அறிந்து தண்டிப்பானோ' என்றும், பயந்து பயந்து மனந்திடுக்குறுதலினால், எந்நாளும் மனத்துயரமே உடையவராவர். அறியாமையினாலே களவு அப்பொழுது இனிது போலத் தோன்றினும், பின்பு தொலையாத துயரத்தையே கொடுக்கும்.

களவு செய்தவர் இம்மையிலே அரசனாலே தண்டிக்கப்பட்டு எல்லாராலும் இகழப்படுவர். அவரை அவர் பகைவர் மாத்திரமா, உறவினரும் சிறிதாயினும் நம்பாது அவமதிப்பார். களவினாலாகிய இகழ்ச்சியைப் பார்க்கினும் மிக்க இகழ்ச்சி பிறிதில்லை. ஒருகாற் களவு செய்தவரென்று அறியப்பட்டவர் சென்ற சென்ற இடங்களினெல்லாம், பிறராலே செய்யப் பட்ட களவும் அவராற் செய்யப்பட்டதாகவே நினைக்கப்படும்.

களவென்னுங் பெருங்குற்றத்தைச் சிறுபருவத்திற்றானே கடிதல் வேண்டும். கடியாதொழிந்தால், அது மேன்மேலும் வளர்ந்து பெருந்துன்பக்கடலில் வீழ்த்தி விடும். ஆதலாற் சிறுவர்களிடத்தே அற்பக்களவு காணப்படினும், உடனே தாய் தந்தையர்கள் அவர்களைத் தண்டித்துத் திருத்தல் வேண்டும். அப்படிச் செய்யாது விட்டால், அப்பிள்ளைகளுக்குப் பின் விளையும் பெருந்துன்பத்துக்குத் தாய் தந்தையர்களே காரணராவார்கள்.

களவு செய்தவரையும், களவுக்கு உபாயஞ் சொன்ன வரையும், களவு செய்தவருக்கு இடங்கொடுத்தவரையும், நரகத்திலே இயமதூதர்கள், அவயங்களெங்கும் இருப்பு முளைகளை அறைந்து, வருந்துவார்கள். பாசத்தினாலே அவயவங்களெல்லாவற்றையுங் கூட்டிக்கட்டி, அக்கினி நரகத்திலே, குப்புறப்ப்போடுவார்கள். அவர்கள் நெடுங்காலம் நரகத் துன்பம் அனுபவித்த பின்பு, பூமியிலே பிறந்து, குட்டம், காசம், வாதம், மூலரோகம் முதலிய நோய்களினாலே வருந்துவார்கள்.

Link to comment
Share on other sites

வியபிசாரம்

வியபிசாரமாவது காம மயக்கத்தினாலே தன் மனையாளல்லாத மற்றைப் பெண்களை விரும்புதல். மற்றைப் பெண்கள் என்பது கன்னியரையும் பிறன் மனைவியரையும் பொதுப் பெண்களையும். பிறன் மனையாளை விரும்புவோரிடத்தே தருமமும் புகழும் சிநேகமும் பெருமையுமாகிய நான்கும் அடையாவாம். அவரிடத்தே குடி புகுவன பாவமும் பழியும் பகையும் அச்சமுமாகிய நான்குமாம். ஒருவன் தன் மனையா¨ளைப் பிறன் விரும்புதலை அறியும் பொழுது தன் மனம் படுந்துயரத்தைச் சிந்திப்பானாயின், தான் பிறன் மனையாளை விரும்புவானா! விரும்பானே.

பிறன் மனையாளை விரும்பாத ஆண்மையே பேராண்மை. பிறராலே 'இவன் பரதாரசகோதரன்' எனப்படுதலே பெரும்புகழ். இப்பேராண்மையையும் பெரும்புகழையும் உடைய மகாவீரனை அவன் பகைவரும் அவன் இருக்குந்திக்கு நோக்கி வணங்குவர். இவ்வாண்மையும் புகழும் இல்லாதவரை, அவருக்குக் கீழ்ப்பட்டோராகிய மனைவியர் பிள்ளைகள் வேலைக்காரர் முதலாயினோரும், நன்கு மதியார். அச்சத்தாலும் பொருளாசையாலும், அவரெதிரே நன்குமதிப்பார் போல நடிப்பினும், தமது உள்ளத்தினும் அவரெதிரல்லாத புறத்தினும் அவமதிப்பே செய்வர். வியபிசாரஞ் செய்வோர் தாமாத்திரமன்றித் தங்கீழுள்ளாரும் வியபிசாரஞ் செய்து கெடுதற்குக் காரணராவர். ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் அவரின் மூத்தோரிடத்துஞ் செல்லும். ஒழுக்கமில்லாதார் வாய்ச்சொல் அவரின் இளையோரிடத்துஞ் செல்லாது. ஆதலினால், ஒழுக்கமில்லாதவர் பிறரைத் திருத்துதற்கும் வல்லராகார்.

தூர்த்தர்களோடு பழகுதலும், பெண்களுடைய கீதத்தைக் கேட்டலும், பெண்களுடைய நடனத்தைப் பார்த்தலும், சிற்றின்பப் பாடல்களைப் படித்தல் கேட்டல்களும், பார்க்கத் தகாத படங்களையும் பிரதிமைகளையும் பார்த்தலும், பொதுப் பெண்களுடைய தெருவுக்குப் போதலும், பெண்கள் கூட்டத்திலே தனித்துப் போதலும், பெண்களோடு சூது சதுரங்கம் முதலியவை ஆடுதலும் வியபிசாரத்துக்கு ஏதுக்களாம். உயிர்க்கு உறுதி பயக்கும் நூல்களைப் படித்தல் படிப்பித்தல் கேட்டல்களிலும், கடவுளுக்குத் திருத்தொண்டுகள் செய்தலிலும், தரும வழியாகப் பொருள் சம்பாதித்தலிலுமே காலத்தைப் போக்கல்வேண்டும். வயசினாலும் நல்லறிவினாலும் நல்லொழுக்கத்தினாலும் முதிர்ந்த பெரியோரோடு கூடல் வேண்டும். சிறிது நேரமாயினும் சோம்பலாய் இருக்கலாகாது. சோம்பேறிக்கு அச்சோம்பல் வழியாகவே, தீச்சிந்தை நுழையும். அத்தீச்சிந்தை வியபிசாரத்துக்கு ஏதுவாகும்.

வியபிசாரமே கொலைகளுக்கெல்லாம் காரணம். வியபிசாரமே களவுகளுக்கெல்லாம் காரணம். வியபிசாரமே அறிவை மயக்கும் பொருள்களாகிய கள்ளு, அவின், கஞ்சா முதலியவைகளெ உண்டற்குக் காரணம். வியபிசாரமே பொய் சொல்லற்குக் காரணம். வியபிசாரமே சண்டைக்குக் காரணம். வியபிசாரமே குடும்ப கலகத்திற்குக் காரணம். வியபிசாரமே வியாதிகளெல்லாவற்றிற்குங் காரணம். வியபிசாரமே திரவிய நாசத்திற்குக் காரணம். வியபிசாரமே சந்ததி நாசத்திற்குக் காரணம்.

பிறன் மனையாளைக் கூடினவர் நரகத்திலே அக்கினி மயமாகிய இருப்புப் பாவையைத் தழுவி வருந்துவர். இயமதூதர்கள் அவரை இருப்புக் குடத்தினுள்ளே புகுத்தி அதன் வாயை அடைத்து, அக்கினிமேல் வைத்து எரிப்பார்கள். அவர் சரீரத்தை உரலிலிட்டு இடிப்பார்கள்; அக்கினி மயமாகிய சிலையிலே சிதறும்படி அறைவார்கள். இருட்கிணற்றிலே விழுத்துவர்கள்; அங்கே இரத்தவெள்ளம் பெருகும்படி கிருமிகள் அவருடம்பைக் குடையும். பின்னும் அவர் அக்கினி நரகத்திலே வீழ்த்தப்பட்டு 'என் செய்தோம் என் செய்தோம்' என்று நினைந்து நினைந்து அழுங்குவர்.

பிறன் மனையாளை இச்சித்துத் தீண்டினவரை, நரகத்திலே இயமதூதர்கள் அக்கினியிற் காய்ச்சிய ஊசிகளினாலே குத்துவர்கள்; அவருடம்பிலே தாமிரத்தை உருக்கி வார்ப்பார்கள்; அவருடம்பிலே தாமிரத்தை உருக்கி வார்ப்பார்கள்; அவரை மற்ற நகரங்களினும் விழுத்தி வருந்துவர்கள். பிறன் மனையாளை இச்சித்துப் பார்த்தவருக்குக் கண்களிலே அக்கினியிற் காய்ச்சிய ஊசிகளினாலே குத்தி, முற்கூறிய மற்றைத் துயரங்களையுஞ் செய்வார்கள்.

வியபிசாரஞ் செய்தவர் பிரமேகம், கிரந்தி, பகந்தரம், கல்லடைப்பு, நீரிழிவு முதலிய வியாதிகளினால் வருந்துவர். பிறன் மனையாளை இச்சித்துப் பார்த்தவர் நேத்திர ரோகங்களினால் வருந்துவர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.