Jump to content

`உதவிதான் செய்தேன்!' - போலீஸிடம் தெரிவித்த எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

`உதவிதான் செய்தேன்!' - போலீஸிடம் தெரிவித்த எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா

எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா

கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் ஒருவரின் சடலத்தின் அருகில் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா அமர்ந்திருந்தார். இதனால் சடலமாக கிடந்தவரை பிரான்சிஸ் கிருபா கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்தது. இந்தத் தகவல் தமிழ் வாசகர் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வணிகர்தினத்தையொட்டி கோயம்பேடு மார்க்கெட் நேற்று செயல்படவில்லை. இதனால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பிளாக் 11-ல் ஒருவர் இறந்துகிடக்க அவரின் அருகில் இன்னொருவர் அமர்ந்திருந்தார். இதைப்பார்த்த மூட்டைத் தூக்கும் தொழிலாளி ஒருவர் கோயம்பேடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் தீபக்குமார் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்து கிடந்தவரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சடலத்தின் அருகில் அமர்ந்திருந்தவரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் இறந்தவர் யாரென்று தெரியவில்லை. மேலும் அவர், சில மாதங்களாக கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சுற்றித்திரிந்தார் என்ற தகவல் மட்டும் போலீஸாருக்கு கிடைத்தது. இதனால் இறந்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர்.  சடலத்தின் அருகில் இருந்தவரிடம் விசாரித்திருக்கின்றனர்.

எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா

அதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் மர்மமான முறையில் ஒருவர் இறந்துகிடந்தார். இதனால் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ளோம். இறந்தவர் குறித்த விவரங்கள் இதுவரை தெரியவில்லை. ஆனால், சடலத்தின் அருகில் அமர்ந்திருந்தவர் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் கிருபா என்று தெரியவந்தது. இவர் பிரபல எழுத்தாளர் மற்றும் கவிஞர். இவர் எழுதிய மல்லிகைக்கிழமைகள், ஏழுவால் நட்சத்திரம் எனும் கவிதை நூல்கள் பிரபலமானவை. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு ஷூட்டிங்கிற்காக பிரான்சிஸ் கிருபா வந்துள்ளார். அப்போது ஒருவர் வலிப்பு நோயால் துடித்துக் கொண்டிருந்துள்ளார். அதைப்பார்த்த பிரான்சிஸ் கிருபா அவருக்கு உதவி செய்துள்ளார். ஆனால் அவர் இறந்துவிட்டார். இறந்தவர் யார் என்றுகூட எழுத்தாளருக்குத் தெரியவில்லை. இதனால் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம்’’ என்றனர். 

பிரான்சிஸ் கிருபாவிடம் போலீஸார் விசாரித்தபோது, ``நான் கொலை செய்யவில்லை, உதவிதான் செய்தேன்!’’ என்று கூறினாராம். இதற்கிடையில், காவல் நிலையத்தில் பிரான்சிஸ் கிருபா இருக்கும் தகவல் அவரின் நண்பர்களுக்குத் தெரியவந்தது. உடனடியாக அவர்கள் காவல் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள், பிரான்சிஸ் கிருபா யாரையும் கொலை செய்திருக்க மாட்டார் என்று போலீஸாரிடம் தெரிவித்தனர். 

பிரான்சிஸ் கிருபா

பிரான்சிஸ் கிருபாவின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம். இவருக்குத் திருமணமாகவில்லை. சென்னையிலேயே தங்கியிருந்தார். மல்லிகைக் கிழமைகள், சம்மனசுக்காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார். மேலும், கன்னி என்கிற புதினத்தை எழுதியுள்ளார். 2008-ல் சுந்தரராமசாமி விருதும் 2017-ல் சுஜாதா விருதும் பெற்றுள்ளார். `கன்னி' என்ற புதினத்திற்காக 2007-ல் ஆனந்த விகடன் விருது பெற்றுள்ளார். பிரான்சிஸ் கிருபா சில மாதங்களாக கோயம்பேடு மார்க்கெட் பகுதியிலேயே தங்கியிருந்ததாகக் கூறும் போலீஸார், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவருகின்றனர். 

எழுத்தாளரும் கவிஞருமான பிரான்சிஸ் கிருபா மீதான இந்தக் குற்றச்சாட்டு, எந்த திசையில் பயணிக்கும் என பிரேதப் பரிசோதனைதான் விடை சொல்லும்!

 

https://www.vikatan.com/news/tamilnadu/156778-chennai-police-arrests-writer-francis-kiruba-over-alleged-murder.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸிஸ் கிருபா விவகாரம்: யாரை குற்றம் சாட்டுவது?

Image result for பிரான்ஸிஸ் கிருபா


பிரான்ஸிஸ் கிருபா தமிழின் சிறந்த நவீன கவிஞர்களில் ஒருவர். ஓரளவுக்கு நவீன கவிதை வாசிக்கும் யாருக்கும் அவரை தெரிந்திருக்கும். கிருபாவுக்கு மற்றொரு பிம்பமும் உண்டு - அவரது போதைப்பழக்கமும் ஒருவித விளிம்புநிலை வாழ்க்கையையும் அதை கட்டுவித்தன. அந்த பிம்பத்தையும் கடந்த ஒரு நல்ல மனிதர் அவர் அடிப்படையில் என்பதை கடந்த இரு நாட்களாய் சர்ச்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த விவகாரம் சுட்டுகிறது.  


நேற்று முன் தினம் சென்னை கோயம்பேட்டில் பிரான்ஸிஸ் கிருபா தன் அருகே இருந்த நபர் ஒருவர் உடல் நலமற்று துடிப்பதைக் கண்டு ஆறுதல்படுத்துகிறார். இதைக் கண்டு சிலர் போலீசுக்கு தகவல் சொல்ல, போலீசாரும் தம் வழக்கப்படி உதவி பண்ணினவரையே கொலைகாரன் என முடிவு பண்ணி கைது செய்கிறார்கள். இதில் பெரிய கொடுமை நமது நாளிதழ்கள் செய்தியை தந்த விதமே - உதாரணமாய் தினமலர், முதலில், இரு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தமக்குள் மோதியதில் அதில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் கொலைகாரர் போலீஸ் வரும் வரை பிணத்தின் அருகே காத்திருந்ததாகவும், கொலைகாரர் திருநெல்வேலியை சேர்ந்த பிரான்ஸிஸ் கிருபா என்றும் கூறியது. கூடுதலாய் கொலையை நேரில் கண்ட ஒருவரே போலீசுக்கு தகவல் சொன்னதாய் குறிப்பிட்டது. இந்த செய்திக் குறிப்பில் தினமலர் பயன்படுத்திய மொழி மிக மலினமானது - ஊடகப் பயிற்சி பெற்ற ஒரு ஜூனியர் ரிப்போர்ட்டர் என்ன ஒரு கல்லூரி மாணவர் கூட இதை விட துல்லியமாய் குறிப்பெழுதுவார். செய்தி எழுத்தின் அடிப்படையே பார்ததாய் எழுதாமல் கேட்டதாய் எழுதுவது, புறவயமாய் தகவல்களை மட்டும் அளிப்பது. ஆனால் தினமலரோ காவல்துறையிடம் சில தகவல்களை வாங்கி தன் கற்பனை சரக்கை சேர்த்து ஏதோ நேரில் கண்டது போல எழுதுகிறது. உதாரணமாய், “நேற்று மாலை அம்பாசமுத்திரத்தை சேர்ந்த அம்புஜம் குளியலறையில் உல்லாசமாய் குளித்துக் கொண்டிருந்த போது செபாஸ்டியன் கதவைத் தட்டினார், அவரது இடுப்பில் ஒரு கத்தி தொங்கிக் கொண்டிருந்தது..” என எழுதாமல் இருப்பதே நல்ல நாளிதழின் லட்சணம்.

இந்த செய்தி பேஸ்புக்கில் பரவ பலரும் அதிர்ச்சி அடைந்தனர். செய்தி அறிக்கை அது நிஜமாகவே நடந்த தொனியை கொண்டிருக்க படித்த பலரும் (என்னையும் சேர்த்தே) உண்மையிலேயே கிருபா கடுமையாய் மனநலம் பாதிக்கப்பட்டு கொலை செய்ததாக நம்பினர். இரண்டு விதமாய் முகாம்கள் பிரிந்தன - ஒரு பக்கம் எழுத்தாளர்களே இப்படித் தான், அத்தனை பேரும் குடிகாரர்கள், கஞ்சா பயன்படுத்திக் கொண்டு சித்தம் கலங்கியோர் என புலம்புவோரும், லஷ்மி மணிவண்ணனைப் போல இந்த சமூகத்தின் பால் கவிஞனுக்குள்ள கோபமே மனநலக்கோளாறாகிறது, அது அனைவருக்குள்ளும் நொதித்துக் கொண்டிருக்கும் ஒன்றே என கூறியோருமாய்.

அடுத்து காவல் துறை சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டிவி கேமரா காணொளியை ஆய்வு செய்த போது ஆச்சரியம் காத்திருந்தது - இறந்தவர் கொல்லப்படவில்லை; அவர் மாரடைப்பு வந்து துடிப்பதையும் கிருபா சென்று அவருக்கு உதவ முயல்வதையும் காணொளி நிரூபிக்கிறது. அடுத்து, உடற்கூறியல் அறிக்கையும் இதை உறுதி செய்கிறது. இப்போது கிருபாவின் சொற்கள் அனைவர் செவிகளுக்கும் வந்து சேர்கின்றன - “நான் கொல்லவில்லை, உதவி செய்யவே முயன்றேன்!” மொத்தமாய் பேஸ்புக் சமூகமே அவரை கொண்டாடுகிறது.

எவ்வளவு குழப்பம்! ஒரே நாளில் ஒருவர் சித்தம் கலங்கி கொலை செய்து விட்டு அடுத்து உடனே சாகும் தறுவாயில் துடிப்பவருக்கு உதவிய நல்ல மனம் படைத்தவர் ஆகிறார். இவ்விசயத்தில் காவல் துறையையும் நான் பழிக்க மாட்டேன். (பாம்பு கொத்துகிறது என நாம் புகார் சொல்வோமா? அதன் இயல்பு கொத்துவது, விடம் கக்குவது.) அவர்கள் சந்தேகப்படும் யாரையும் உள்ளே தள்ளுவார்கள்; சீக்கிரம் வழக்கை முடிக்க வேண்டும் என்பதே அவர்களின் காலாகாலமான கொள்கை. ஆனால் ஊடகம் இதை “கொலை செய்ததாய் சந்தேகத்துக்குள்ளான இன்ன நபர் கைதாகி இருக்கிறார்” என்றே கூற வேண்டும். ”கொலை செய்ததை பார்த்த வழிப்போக்கர் ஒருவர் தகவல் போலீசுக்கு சொல்லிட காவல்துறை அவரே உடனே கைது செய்து தன் கடமையை ஆற்றியது” எனும் கணக்கில் எழுதலாகாது. இது ஒரு தவறான பிம்பத்தை ஏற்படுத்துகிறது. பல கோடி பேர் இதைப் படித்திருப்பார்களே! சரி தினமலர் இப்போது திருத்தின அறிக்கையை வெளியிட்டிருப்பார்களே. ஆனால் அந்த கொடுமையைத் தான் பாருங்கள்:

”சென்னை, கோயம்பேடு அருகில் நேற்று (மே.5) இரவு இரு நபர்களுக்கிடையில் போதையில் தள்ளு முள்ளு நடந்துள்ளது. அதில்,, கீழே விழுந்த நபர் இறந்துவிட்டார். இந்தக் கொலை சம்பந்தமாக கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். முடிவில் அவரை விடுவித்தனர்.”


இதில் சி.சி.டிவி கேமரா பதிவு பற்றியோ மாரடைப்பு பற்றியோ எந்த செய்தியும் இல்லை. பைத்தியக்காரர்கள் மோதியதாய் முதல் அறிக்கையில் எழுதிவர்கள் இப்போது குடிகாரர்கள் தள்ளுமுள்ளு செய்ததாய் சொல்கிறார். கழுத்தை நெரித்து கொன்றதாய் எழுதியவர்கள் கீழே தள்ளப்பட்டதில் இறந்ததாய் சொல்கிறார்கள். இப்போதும் என்ன காரணத்துக்காக கிருபா விடுவிக்கப்பட்டார் என்று சொல்லவில்லை. இந்த குறிப்பின் கடைசி வரி இது:  “சம்பவத்தில் இறந்து போன நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றொரு தகவலையும் கோயம்பேட்டில் சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறுகின்றனர்.” இதிலும் எனக்கு இப்போது ஐயம் ஏற்படுகிறது. குடிகாரர்கள் மோதியதாய் சொல்லும் தினமலர் இப்போது ஏன் கொல்லப்பட்ட நபரை மீண்டும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்கிறது. சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் யார்? அவர்களின் பெயர் விபரங்களை வெளியிட முடியுமா? இவர்கள் தானே “கழுத்தை நெரித்து சம்மந்தப்பட்டவர் கொல்லப்பட்டதை பார்த்த சாட்சிகள்”? இத்தகையோர் மற்றும் இவர்கள் சொல்வதை சாட்சிமொழியாய் ஏற்று அப்படியே நடந்ததை பார்த்தது போல எழுதும் தினமலர் போன்ற பத்திரிகைகளுக்கு எதிராய் கிருபா நிச்சயம் வழக்கு தொடுக்க வேண்டும்.

தினமலர் ஆன்லைனில் இந்த செய்திக்குறிப்பின் கீழ் பிரசுரிக்கப்படும் பின்னூட்டங்கள் இன்னும் கேவலமாய் உள்ளன. “கொலைகாரனுகளையெல்லாம் எழுத்தாளர்ன்னு சொல்ல கூடாது.....” என்று ஒருவர் சொல்கிறார். விகடன் விருது வாங்கினாலே அவன் குடிகார இடதுசாரி தானே, அவன் கொலைதானே செய்வான் என மேலும் பலர் எழுதுகிறார்கள்.

ஒன்று இத்தகைய குறிப்புகளை எழுதும் தினமலர் நிருபர்கள் அடிப்படை ஊடக அறம் கூட இல்லாதவர்களாக இருக்க வேண்டும். அடுத்து, இவர்களை மேய்ப்பவர்கள், இத்தகைய பின்னூட்டங்களை ரசித்து வெளியிடுபவர்கள் பெரிய சாடிஸ்டுகளாக இருக்க வேண்டும்.

நாம் ஏன் இந்த மாதிரியான சாடிஸ்டுகள் மத்தியில் வாழ்கிறோம்?

http://thiruttusavi.blogspot.com/2019/05/blog-post_7.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.