Jump to content

என்னே இந்த நகைமுரண் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                என்னே இந்த நகைமுரண் !

                         ( What an irony! )

                                            - சுப.சோமசுந்தரம்

வீட்டிற்கு உறவினர் வந்திருந்தனர். உறவுமுறையில் எனக்கு மருமகளான பெண்ணொருத்தி தூங்குகின்ற தன் கைக்குழந்தையை அறையொன்றில் விட்டுவிட்டு முன்பக்க அரங்கில் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தாள். தற்செயலாக அறைக்குச் சென்றதால் குழந்தையைப் பார்த்த நான் அவளிடம் சொன்னேன், "குழந்தையைத் தனியே விட்டிருக்கும் பட்சத்தில் இடையிடையே பார்த்துக்கொள்; சன்னல் வழியே எப்போதாவது பூனை வருவதுண்டு". இதைத் தொடர்ந்து என் மனதில் ஏதோ ஒரு காட்சி ஓடியது- சிலப்பதிகாரத்தில் பெண்ணொருத்தி குழந்தையைத் தனிமையில் விடுத்து நீர்நிலைக்குச் சென்று வந்ததும், குழந்தையைத் தீண்ட வந்த அரவத்தைக் கீரிப்பிள்ளை கொன்ற கதையும்; சங்கிலித் தொடர் போல் வேறு கருத்தும் வேறொரு இலக்கியக் காட்சியும். எழுதுகிற எல்லோருக்கும் இப்படித்தான் ஏதோ நிகழ்வொன்று கருவாக அமையுமோ? அல்லது நான் எழுத்துலகில் பழகுநர் என்பதாலோ என்னவோ, எனக்கு இப்படித்தான் இந்தக் கட்டுரைக்கான பொருள் தோன்றியது. இந்த எழுத்துக்கான பீடிகை கூட நான் கணித ஆசிரியன் என்பதால் அமைந்ததோ? பொதுவாக வயதிற் குறைந்த என் ஆசிரிய நண்பர்களுக்குச் சொல்வேன் - ஒரு ஆசிரியன் எந்தக் கணித வினாவிற்கும் தீர்வை மட்டும் சொன்னால் போதாது; அத்தீர்வு எப்படித் தோன்றியது என்பதை இயன்றவரை சொல்லுதல் நலம்.

                    இனி என் காட்சிப் படலம். காட்சிக் களம் சிலம்பில் மதுரைக் காண்டம் அடைக்கலக் காதையில் கோவலனிடம் மாடலமறையோன் கூற்றாக அமைவது.

  " பிள்ளை நகுலம் பெருபிறிதாக

   எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல

   - - - - - - - - - - - - - - - - - - - - -

   கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை

   - - - - - - - - - - - - - - - - - - - - -

   - - - - - - - - - - - - - - - - - - - - -

   தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத்

   தானஞ் செய்தவள் தன்துயர் நீக்கிக்

   கானம் போன கணவனைக் கூட்டி

   ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து

   நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ"

( நகுலம்-கீரி )

        குழந்தைக்குத் தீங்கிழைக்க வந்த அரவத்தைக் கொன்ற கீரி, வாயில் அந்த இரத்தத்துடன் வந்து, தன்னையும் பேணிய, நீர்நிலை சென்று திரும்பும் தாயைக் காண வெளியே வந்து நிற்கிறது. தாயான அப்பார்ப்பனப் பெண், கீரிப்பிள்ளை தன் குழந்தையைத்தான் கடித்து விட்டதாய் எண்ணி கீரியைக் கொன்று விடுகிறாள். ஆராயாமல் கொன்ற கொடிய பாவத்திற்கு ஆளாகியதால், அப்பெண்ணின் கணவன் அவளைப் பிரிந்து செல்கிறான். மேலும், பிரிந்து செல்கையில் பார்ப்பனனான அம்மறையவன் பாவ நிவர்த்தியாக ஆற்ற வேண்டிய தரும காரியங்களை வடமொழியில் எழுதி அவளிடம் தந்து உரிய செல்வமும் மனமும் கொண்டோரை அணுகி இறைஞ்சுமாறு சொல்லிச் செல்கிறான். புகார் நகரத்தில் பெருவணிகர் வாழும் இடங்களில் அந்த அபலைப் பெண் அலைந்து திரிகிறாள். இதனைக் கேள்வியுற்ற கோவலன் அப்பெண்ணின் குறையறிந்து, அவளின் சார்பாக தான தருமங்களைச் செய்து அவள் கணவனையும் வருவித்து, பெரும்பொருளீந்து அவர்களை நல்வழிப் படுத்தி வாழச் செய்கிறான். எனவே மாடல மறையோனால் " செல்லாச் செல்வ " (செல்லாத-குறையாத-செல்வமுடையவன்) என வாழ்த்தப் பெறுகிறான்.

                ஆராயாமல் கீரியைக் கொன்ற பார்ப்பனப் பெண்ணுக்கு உய்வினை அளித்த கோவலன் என்னும் செல்லாச் செல்வன்,செல்வம் வேண்டி சிலம்பினை விற்க கண்ணகியுடன் மதுரை வந்ததும், பாண்டிய மன்னனால் ஆராயாமல் கொலைக்களப்பட்டதும் என் மனதிற்பட்ட நகைமுரண். இம்முரண் களைய முற்படின், கையறு நிலையில் மாடல மறையோன் கோவலனுக்கு உரைத்த கூற்று அன்றி எம்மிடம் வேறொன்றுமில்லை:

  " இம்மைச் செய்தன யானறி நல்வினை

   உம்மைப் பயன்கொல் ஒருதனியுழந்து இத்

   திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது "

                 இளங்கோவடிகளைத் தொடர்ந்து சங்கிலித் தொடர் போல் அடுத்து என் மனதில் முரண் தொடுப்பவன் கம்ப நாடன். இவ்விரண்டாவது காட்சியின் திறப்புக் களம் பால காண்டம் அகலிகைப் படலம். இந்திரனால் ஏமாற்றப்பட்ட அகலிகை, தனக்கு துரோகம் இழைத்ததாக, அவளது கணவன் கௌதம முனிவரால், கல்லாய்ச் சமைய சபிக்கப்பட்டாள். முனிவர்களின் வேள்விகளுக்கு இடையூறு விளைவித்த அரக்கியான தாடகையை வதம் செய்து ராமன் தன் இளவல் இலக்குவனோடும் மகரிஷி விஸ்வாமித்திரரோடும் மிதிலை நோக்கி வருகிறான். அவன் பாதம் பொருந்திய தூசி பட்டு அகலிகை உயிர் பெறுகிறாள். தாடகை வதத்தையும் அகலிகை உயிர்த்தெழுதலையும் குறித்து விஸ்வாமித்திரர்,

   " கைவண்ணம் அங்கு கண்டேன்

     கால்வண்ணம் இங்கு கண்டேன் "  

 என்பது ஈண்டு நினைவிற் கொள்ளத்தக்கது.

பின் கௌதம முனிவரை வரவழைத்து,

   " நெஞ்சினால் பிழைப்பு இலாளை நீ அழைத்திடுக என்ன "

( மனதினால் பிழை செய்யாத இவளை நீ அழைத்துக் கொள்வாயாக என இராமன் கூற ),

பின்னர் " கஞ்சமா மலரோன் அன்ன முனிவனும் கருத்துள் கொண்டான் " எனவும்

   " மாசறு கற்பின் மிக்க அணங்கினை(அகலிகையை)

     அவன்(கௌதமன்) கை ஈந்து..... "

இராமன் அச்சோலை நீங்கி மிதிலையின் புறமதிலை அடைந்தான் எனக் குறிக்கிறார் கம்பர்.

        நமக்கு இக்காட்சியின் நிறைவுக் களம் யுத்த காண்டம் மீட்சிப் படலம். இராவணனை வதம் செய்து இலங்காபுரியின் ஆட்சியை வீடணனிடம் தந்த பின் சீதை வீடணனால் இராமனிடம் அழைத்து வரப் பெறுகிறாள். கற்பினுக்கு அணியான அத்தலைவி தன் கற்பின் திறம் காட்ட

  " மனத்தினால் வாக்கினால் மறு உற்றேனெனின்

   சினத்தினால் சுடுதியால் தீச் செல்வா........................ " என்று தீயிடைப் புகத் துணிகிறாள். மௌனம் சம்மதம் என்பது இராமனின் நிலைப்பாடு. எரியிடை மாசற்று விளங்கிய தலைவியை தலைவன் இராமன் மனமுவந்து ஏற்கிறான். மெய்யால் பிழையினும் மனதால் பிழையாளாயின், தலைவன் இராமனைப் பொறுத்தமட்டில் மாசறு கற்பின் மிக்க அணங்கானாள் அகலிகை. மெய்யாலும் மனத்தினாலும் வாக்கினாலும் பிழையாத தலைவி சீதைக்கு எரிதழல் சோதனை. ஈது நகைமுரணன்றி வேறு யாது?

             இந்நிகழ்வில் சீதை இராமனைக் கண்டதும் இறும்பூதெய்தலும், இராமன் சீதையைக் கொடுஞ்சொற்களால் கடிதலும், அதன் பின்னரே சீதை எரியிடைப் புகுதலுமான கம்பனின் செய்திகள் நான் அடக்கி வாசித்தவை. அதன் காரணிகள் இரண்டு. முதலாவது, நம் காவியத் தலைவன் இராமன் பல்லோர்க்கும் பிரான்; அவனை மக்கள் நியாயப்படுத்துதலில் என் இலக்கியப் பார்வை காணாமல் போகும். இரண்டாவது, நம் காவியத் தலைவி சீதையே முன் வந்து, உலகோர் அறியவே தான் அவ்வாறு செய்ததாக, நம்மை விடுத்துத் தன் தலைவனையே சார்ந்து நிற்பாள். சூடாமணிப் படலத்தில் அசோகவனத்தில் அனுமனிடம்,

   " எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்

     சொல்லினால் சுடுவேன் அது தூயவன்

     வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன் "

என விளம்பியவள் ஆயிற்றே!

             இவ்விரு காப்பியங்களிலும் கதாப்பாத்திரங்களில் குறை காண்பது நம் நோக்க்கமல்ல. குறிப்பாக சீதையின் எரி புகுதலில் இராமன் குற்றவாளியா இல்லையா என்பதெல்லாம் ஆண்டாண்டு காலமாகப் பட்டிமன்றங்களில் சான்றோர் பெருமக்கள் பேசியும் கருத்தாக்கங்களில் எழுதியும் புளித்து ஏப்பம் விட்ட கதை. ஒவ்வொன்றிலும் இரண்டு நிகழ்வுகள் முரண்களாய் அமைவதைச் சுட்டுவதும் ரசிப்பதுமே நம் நோக்கம். கதாபாத்திரங்களை இந்த நகை முரண்களோடு பொருத்துவதானால், அவர்கள் மீது வீசுவது அனுதாப அலை மட்டுமே. இம்முரண்களோடு இக்காவியங்களைத் தூக்கி நிறுத்துவது ஆக்கியோரின் சான்றாண்மை; மொழியின் சிறப்பு. முன்னதில் முரண் அமைந்து சிறப்பு; பின்னதில் முரண் அமைந்தும் சிறப்பு.       

            

    

    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவு ஐயா.

Irony என்பது நகைமுரணா இல்லை முரண்நகையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான பதிவு..

goshan_che போலவே எனது சந்தேகமும்

Irony- நகைமுரணா? முரண்நகையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு சொல்லாடல்களும் (ironyக்கு) உண்டு எனக் கேள்வியுறுகிறேன். சான்றாக ஒரு இணைப்பை அனுப்புகிறேன். இருப்பினும் அதனைப் பலமான சான்றாக நான் நினைக்காததால், எனக்கு வாய்த்த சான்றோர் கேண்மையில் மேலும் விளக்கம் கிடைத்தால் எழுதுகிறேன். நீங்களும் சொல்லலாம்.https://www.google.com/amp/s/dailyreflections365.wordpress.com/2014/01/15/daily-reflections-day-15/amp/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஐயா. தொடர்ந்தும் எழுதுங்கள். நீங்கள் சொல்வது போல இரெண்டும் பொருந்தியே வருகிறது.

Link to comment
Share on other sites

நெஞ்சை அள்ளிய நகைமுரண் !

சிலப்பதிகாரம் என்னும் தமிழ்த் தாயின் மணியாரம் என் நெஞ்சை அள்ளியதோ என எனக்குத் தெரியாது! ஆனால், இலக்கிதமான தங்கள் கட்டுரையின் தமிழ்த் திறம் என் நெஞ்சை அள்ளியது என்பதே உண்மை! கம்பநாடனுடன் இளங்கோவின் படைப்பை ஒப்பாய்வு செய்து காட்டிய உரைநடைக் காவியம் தங்கள் கட்டுரை என்றால் மிகையில்லை!

இனி, தங்கள் படைப்பின் தமிழ்ச்சுவை கடந்து என் மனத்தில் எழுந்த ஐயங்களைத் தங்களிடம் பகிர்கின்றேன்!

சிலப்பதிகாரம் சமைத்த இளங்கோவடிகள் தாம்கொண்ட தாம்கொண்ட சமயத்தின் கொள்கையான, 'ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்' என்னும் கருதுகோளை மெய்ப்பட நிலைநாட்டல் வேண்டி, ஆராயாமல் கீரியைக் கொன்ற பார்ப்பனப் பெண்ணுக்கு உய்வினை அளித்த கோவலன் என்னும் செல்லாச் செல்வனே ஆயினும், கோவலனின் முன்வினைப் பயனாம் ஊழ்வினை உருத்து வந்து ஊட்ட, செல்வம் வேண்டிச் சிலம்பினை விற்க கண்ணகியுடன் மதுரை வந்தது நிகழ்ந்தே தீரும் என்பதைத் தம் கவித்திறத்தால்
 " இம்மைச் செய்தன யானறி நல்வினை
   உம்மைப் பயன்கொல் ஒருதனியுழந்து இத்
   திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது " எனத் திறம்பட நிறுவியுள்ளார்.
 
எனவே இளங்கோவடிகள் தம் சமயக் கொள்கையையே சிலம்பின் மதுரைக் காண்டம் அடைக்கலக் காதையில் கோவலனிடம் மாடலமறையோன் கூற்றாகத் திறம்பட அமைத்தார் என்க. அஃது வருபொருள் உரைத்தலாதலின் நகைமுரண் அன்று என்பது அடியேனின் நிலைப்பாடு.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்; உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்;  ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் - என்பன வருபொருள் உரைத்தலாம். சிலப்பதிகாரத்தில்  பின்னால் வரப் போகும் முப்பது காதைகளையும் இளங்கோவடிகள் குறிப்பிட்டிருப்பது அம்முறையிலேயே என்பர் தமிழறிஞர்.  

ஆனால், கம்பநாடரின் காப்பியம் அவ்விதம் திட்டமிடப்படாத உணர்ச்சிக் காவியம். இராமபிரான் திருமாலின் அவதாரம் என்ற கருத்தில் பரவசமெய்திய நிலையில்
 " கைவண்ணம் அங்கு கண்டேன்; கால்வண்ணம் இங்கு கண்டேன் "  என்று பாடிப் பரவிய கவிச்சக்கரவர்த்திக்குப் பின்னாளில் அப்பிரானே கொடியவனாகக் காட்சி தருகிறான்.

இராமனின் கீழ்த்தரமான பேச்சும் சீதையின் சீற்றமும்!

சீதை மீட்கப்படுகின்றாள்; விபீடணன் சீதையை இராமனிடம் அழைத்து வருகின்றான். இந்த இடத்தில் இராமகாதை தடம் புரளுகின்றது. எதிர்பாராமல் இராமன் சீதையைத் கண்டபடி ஏசுகின்றான். இராமபிரானின் வில்லிலிருந்து அம்புகள் புறப்படுவது போல் கொடுமையான சுடுசொற்களால் சீதையைச் சுடுகின்றான்.

"ஊண் திறம் உவந்தனை ஒழுக்கம் பாழ்பட
மாண்டிலை; முறை திறம்பு அரக்கன் மாநகர்
ஆண்டு உறைந்து அடங்கினை அச்சம் தீர்ந்து,
இவண் மீண்டது என் நினைவு? எனை விரும்பும் என்பதோ?” - (கம்பன்-10013)

"பெண்மையும் பெருமையும் பிறப்பும் கற்பு எனும்
திண்மையும் ஒழுக்கமும் தெளிவும் சீர்மையும்
உண்மையும். நீ எனும் ஒருத்தி தோன்றலால்
வண்மை இல் மன்னவன் புகழின் மாய்ந்தவால்” - (கம்பன்-10017)

என்பன அவற்றுள் சில பாடல்கள். தவத்தின் தவமாய சீதாதேவி, காப்பியம் முழுவதிலும் நெடிது பேசாது வந்த சிறையிலிருந்த செல்வி பேசுகின்றாள். இல்லை! வினாத் தொடுக்கின்றாள். கற்புக்கனலியாகிய சீதை அழுத்தமான குரலில் இராமனை அடக்க நிலைமாறா வகையில் சுடுகின்றாள்! "தலைவனே! அசோகவனத்தில் சோர்ந்து கிடந்த-கற்புத் தவத்தில் இருந்த-என்னை, அனுமன் கண்ட வண்ணம் தங்களிடம் கூறவில்லையா? அனுமன் தங்களுடைய தூதன் அல்லவா? ஒரு தூதன் கண்டதையும் கேட்டதையும் ஒளிக்காமல் சொல்லும் கடமையுடையவனல்லவா? அல்லது தூதனாகிய அனுமனிடம் தாங்கள் நம்பிக்கை வைக்கவில்லையா? மேன்மையான குணத்தையுடையவரே! நான் வருந்திச் செய்த தவம், பேணிக் காத்த நற்குணம், கற்புடைமை எல்லாம் பைத்தியக்காரத்தனமாகி அவமாகி விட்டதே! உத்தமரே, உங்கள் மனத்து உணராமையால்' என்று பேசுகிறாள்.

இத்துடன் சீதை நிறுத்திக் கொள்ள வில்லை. ஆண் ஆதிக்கத்தின் அற்பச் செயல்களை, கொடுமைகளைச் சாடுகின்றாள்; பொதுவாகப் பெண்களின் மனத்தை உள்ளவாறு அறியும் அல்லது உணரும் தன்மை ஆடவருக்கு அன்று மட்டுமல்ல! என்றும் இல்லை!

சீதாபிராட்டியின் வாதம்! என் கணவர் இராமனும் ஒர் ஆண் மகன் தானே! அவன் எப்படி என்னை, என்னுடைய உள்ளத்தை, உணர்வினைப் புரிந்து கொள்வான்? பரம் பொருளே! இனி நான் யாருக்கு என்னுடைய கற்புத் தவத்தைக் காட்ட வேண்டும்? இப்பொழுது நான் இறப்பதே நன்று. உமது கட்டளையும் பொருத்தமானதே! இப்போது சாவதே என் கடமை! என்றாள்.

கற்பினுக்கு அணியான அத்தலைவி தன் கற்பின் திறம் காட்ட

"மனத்தினால் வாக்கினால் மறு உற்றேனெனின்
 சினத்தினால் சுடுதியால் தீச் செல்வா........................ " என்று தீயிடைப் புகத் துணிகிறாள்.

சீதை, எரியில் மூழ்க ஆயத்தமானாள்; அக்கினி தேவனே! நான் என் மனத்தினாலும் உடம்பினாலும் வாக் கினாலும் என் கற்புக்குக் குற்றம் உண்டாகும்படி நடந்திருந்தால் நீ கோபத்தோடு என்னைச் சுடுவாயாக!' என்று கூறி இராமனுக்கு வணக்கம் செய்துவிட்டு எரியில் இறங்கினாள்: அன்னைக்கு நேர்ந்த அநீதியைக் கண்ட கம்பன்,

நீந்த அரும் புனலிடை நிவந்த தாமரை
ஏய்ந்த தன் கோயிலே எய்துவாள் எனப்
பாய்ந்தனள், பாய்தலும், பாலின் பஞ்சு எனத்
தீய்ந்தது அவ் எரி, அவள் கற்பின் தீயினால்! (கம்பன்-10036)

என்றான். ஐயோ, பாவம்! அன்னை சீதா பிராட்டியின் கற்புக் கனலால் அக்கினிதேவன் சுடப்பட்டான்!

தீக்கடவுள் தன்னுள் மூழ்கிய சீதையை எடுத்து வருகின்றான்; வந்து ஆற்றாது புலம்புகின்றான்; கற்புக் கனலியாகிய சீதா பிராட்டியார் வெகுண்டால், இந்த உலகம் அழிந்து விடுமே! படைப்பாளனாகிய நான்முகனும் அழிந்து விடுவான்! வான்மழை பொய்க்கும்! இப்புவிக்கோள் உடை யும் ஐயனே! சீதா பிராட்டியை ஏற்றருள்க என்று வேண்டு கின்றான். தீக்கடவுளின் உரைகேட்ட இராமன் மகிழ்ந்தான்.

"மெய்யால் பிழையினும் மனதால் பிழையாளாயின், தலைவன் இராமனைப் பொறுத்தமட்டில் மாசறு கற்பின் மிக்க அணங்கானாள் அகலிகை. மெய்யாலும் மனத்தினாலும் வாக்கினாலும் பிழையாத தலைவி சீதைக்கு எரிதழல் சோதனை." என்று  தாங்கள் கூறியதுபோல் அது ஒரு நகைமுரண் அன்று! மன்னிக்கவும்!! ஆணாதிக்கத் திமிர்!!!

Link to comment
Share on other sites

கடைசி வரியில் ஒரு சிறு திருத்தம்.

"இராமன் என்னும் இராமபிரானின் ஆணாதிக்கத் திமிர்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம் said:

அஃது வருபொருள் உரைத்தலாதலின் நகைமுரண் அன்று என்பது அடியேனின் நிலைப்பாடு.

நான் கட்டுரையில் குறிப்பிட்டதைப் போல் நிகழ்வுகளில் உள்ள irony யை ரசிப்பது மட்டுமே நம் நோக்கம். இளங்கோவைப் பொறுத்தமட்டில் அவர் நோக்கங்களில் ஒன்றே சமணக் கோட்பாட்டின் வழி ஊழ்வினையை  வலியுறுத்துவதாதலின், அவருக்கு அது முரணன்று. கம்பனைப் பொறுத்தமட்டில் (கட்டுரையில் நான் குறிப்பிட்டவாறு) கட்டுரையின் நோக்கம் கருதி நான் அடக்கி வாசித்த விடயங்களை, பின்னூட்டத்தில், தங்களைப் போன்று கற்றார் ஒருவர், அறியாதாரும் அறியச் செய்தல் நலம்தானே !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகு தமிழில் கொஞ்சம் விளங்க கடினமானதாய் ஒரு செய்யுளை வாசிக்க கிடைக்கின், அதை நமது அறிவிற்கேற்ப விளங்கி வைத்திருப்போம். பின்னர் ஒரு சமயம் இன்னொரு அறிஞர் அதே செய்யுளுக்கு கொடுத்திருக்கும் பொழிப்புரையை வாசிக்கும் போது, அடடா, இப்படியும் ஒரு அழகான கருத்து வருகிறதே என்று தோன்றும். உங்களிருவரின் உரையாடலை வாசிக்கும் போது இதே மனோநிலை தான். 

சீனிவியாதி வராத ஒரே அமுதம் தமிழமுதமே. 

தொடரட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகமிக அருமையான பதிவு ஐயா.....!

ஆயினும் என் மனதினுள் எழும் சில ஐயங்களையும் இங்கு பதிவிட்டு விடுதல் நலம் என்று எண்ணுகின்றேன். பிழையாயின் பொருத்தருள்வீர்.......!

சிலப்பதிகாரத்தில் கறாராக ஊழ்வினை வந்து ஊட்டும் என அடிகளார் கூறிவிட்டார்......ஆயினும் நான் கணக்க எழுதாமல் சுருங்க சொல்கிறேன்.....!

--- பொற்கொல்லன் செய்த சதியால் பாண்டிய மன்னனும் ஆராயாமல் கோவலனை தண்டித்து விட்டான். பின்பு கண்ணகி சபைக்கு வருகிறாள், மன்னா உனது மனைவியின் சிலம்பு முத்து ,எனது சிலம்பு மாணிக்கம் என்று சொல்லி உடைத்தெறிகிறாள். அதை பார்த்த மன்னனும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு நானோ மன்னன் நானே கள்வன் என்று சொல்லி (தனது பிரசையான பொற்கொல்லன் செய்த தப்பை தான் ஏற்றுக்கொண்டு) உயிரை விடுகின்றார்.(அரசர்களுக்கு சில விதி விலக்குகள் உண்டு.இதற்காக மன்னன் இறக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை).கூடவே அரசியாரும் இறக்கின்றார். இனி கோவலன் உயிர்த்து வர முடியாது.மற்றும்படி கண்ணகி , மன்னன் நெடுஞ்செழியன் இருவருக்குமான நீதி இத்துடன் முடிகின்றது.கூடுதலாக பாண்டிமாதேவியின் மரணமும்.....!

---- இப்ப எதற்காக கண்ணகி மதுரையை எரிக்க வேண்டும்.ஒன்றுமறியாத இந்த வழக்கில் சம்பந்தமே இல்லாத மக்களையும் பிள்ளைகளையும் இவர் கொல்ல வேண்டும். எந்த ஊழ்வினை வந்து அவர்களை உறுத்தியது.இன்னும் பார்க்கப்போனால் கோவலனுடன் வாழ்ந்ததும் பிள்ளை(மணிமேகலை என்று நினைக்கின்றேன்) பெற்றதும் மாதவிதானே. இடையில் இவ என் இவ்வளவு தூரம் சினிமா காட்டுவான்.....!

(சமீபத்தில்தான் வற்றாப்பளை கண்ணகை அம்மனை மனதார வழிபட்டு விட்டு வந்தனான்).

--- கௌதம முனிவர் தனது மனைவியான அகலிகைக்கு கல்லாக மாற சாபம் குடுக்கிறார். அவள் சாபவிமோசனம் வேண்டி நிக்கிறாள்.(அப்போது அகலிகைக்கு அண்ணளவாக ஒரு 13 அல்லது 14 வயசுதான் இருக்கும். முனிவனுக்கோ ஐந்து மடங்கோ அல்லது அதை விட கூடுதலாக இருக்கலாம்). உடனே அவர் சொல்கிறார் நாராயணர் இராமனாக பிறந்து இங்கு வருகையில் அவர் பாதம் பட்டு நீ சாப விமோசனம் அடைவாய் என்று.( அன்னையின் மேல் கால் பட வேண்டாம் என்று இராமன் வரும்பொழுது அந்த பாத தூசி பட சாபம் தீர்ந்தது என்று கம்பன் பாடுகின்றார். ஏன் கால் பட்டால் என்னவாம்.தேவர்களுக்கும் கிடைத்தாற்கரிய பாதம்.  அங்கால ஒரு தாய்  இராமன் பாதம் பட வேண்டும் என்று வழியெல்லாம் பூக்கள் பரப்பி ன் பழங்களையெல்லாம் கடித்து ருசித்து வைத்து கொண்டு வழி மேல்  விழி வைத்து காத்துக் கிடக்கிறாள்). அப்பொழுது இராமர் பிறக்கவே இல்லை.தசரதனும்  இருந்தாரோ தெரியாது.

--- சீதாதேவி புத்திசாலிதான் ஆனால் சமயத்தில் தான் என்ன பேசுகின்றோம் என்று யோசிக்காதவள். ஒரு கணவன் மனைவிக்குள் உள்ளுக்குள் சில பிரசினைகள் இருக்கலாம், வெளியாருக்கு அது தெரியாது. அவர்கள் வேறொன்றை நினைத்து சமரசம் செய்ய முற்படுவார்கள்.அதுதான் இங்கும் நடந்திருக்கு.....!

---- யுத்தம் முடிந்து விட்டது. சீதையை அக்னி  பிரவேசம் செய்ய வேண்டும். இராமன் இலக்குமானனிடம் சொல்கின்றார் சிதை மூட்டும்படி.... ஏன் இலக்குமானனிடம் சொல்ல வேண்டும். அங்கே விபீஷணன் நிக்கிறான், வாலி மகன் அங்கதன் நிக்கிறான், அதிகம் ஏன் அனுமன் நிக்கிறார், சேனைகள் நிக்கின்றன அவர்களை சொல்லி இருக்கலாம்தானே. அதென்ன இலக்குமனனிடம் சொல்லுறது.....!

--- பர்ணசாலையில் இருக்கின்றார்கள். ஒரு பொன்மான் வந்து நிக்கிறது. சீதை அதை பிடித்து தரும்படி கேட்கிறாள். இராமன் புறப்படும் பொழுது இலக்குவன் தடுக்கிறான். இப்படி ஒரு பொன்மான் மூவுலகங்களிலும் கிடையாது.இது அரக்கர்களின் சதி. போக வேண்டாம் என்று. ஆனால் மனிசன் கேட்டால்தானே. புட்டுக்கொண்டு போறார். கணக்க இல்லை  ஒரு கிலோ மீட்டார்  இருக்கும். இலக்குமானா அபயம் என்று சத்தம் கேட்கிறது. ஜானகி சொல்கிறாள் அண்ணனுக்கு ஆபத்து போய்ப் பார் என்று. அப்பவும் அவன் சொல்கிறான், அண்ணனுக்கு ஒரு ஆபத்தும் வராது நீங்கள் பயப்பிட வேண்டாம் என்று. கேட்கவில்லையே.... வெஞ்சினமாக ஒரு வார்த்தை சொல்கிறாள்..... "அண்ணன் செத்தால் என்னை பெண்டாளலாம் என்று நினைக்கிறியோ" என்று.... இந்த வார்த்தை சொல்லலாமா ஒரு தாய் ஸ்தானத்தில் இருக்கும் அண்ணி.....! பின்பு அவளை தேடும் சமயம் அவள் கீழே போட்ட  நகைகளை காட்டி இராமன் கேட்கிறான் ஒட்டியாணத்தில் இருந்து நெற்றி சுட்டி வரை எதுவுமே தெரியாது என்றவன் கால் மெட்டியை பார்த்ததும் இது அண்ணியுடையது என்கிறான். அப்படி பட்டவனை ,   அவள் சொல் அம்பு பாய  அவன் கண்ணீருடன் தன் வில் அம்பால்  கோடு இட்டு இதை தாண்ட வேண்டாம் என்று சொல்லி  அப்பால் போகிறான். அப்படியும் கேட்டாளா சீதை. சந்நியாசிக்கு அதைத் தாண்டி வந்து அன்னமிடுகிறாள்.இதுக்க எங்கட மனிசிமாரை திட்டி என்ன பிரயோசனம்..... அங்கே மாயமான் இறந்து கிடக்கு, இராமனுக்கு இப்பதான் ஆபத்து புரியுது. ஓடோடி வருகின்றார்.வழியில் தம்பி இலக்குவனை பார்க்கின்றார், ஏன் அண்ணியை தனியா விட்டிட்டு வந்தாய் என்று கேட்க அவனும் உண்மையை கூறாமல் உங்களுக்கு ஆபத்து என்று ஓடி வந்தேன் என்று சொல்கிறான். ஆனாலும் அவனது கலங்கிய முகம், இராமன் புரிந்து கொள்கிறான். அவனுக்கு தெரியும் பத்னி படி தாண்டுவாளே தவிர  தம்பி  தன் சொல் தாண்ட மாட்டான் என்று.....!

--- நான் நினைக்கின்றேன் மாரீசனின் ஓலம் இவர்களுக்கு கேட்டதுபோல்  சீதையின் ஓலமும் கேட்கத்தானே வேண்டும். ஏழு மரா  மரங்களை துளைத்து கடலில் குளித்து வரும் இராமபாணம் ஒரு புஷ்பக விமானத்தை  அடிக்க எவ்வளவு நேரம் ஆகும். ஆனால் வாலி வதம், சபரிக்கு மோட்ஷம், இராவண கும்பகர்ண வதம்  போன்ற காரணங்களால் அதை தெரியாதது போல் விட்டுட்டார்  போகட்டும்.....!

இலக்குவனை கொண்டு சிதை மூட்ட  சீதைக்கு புரிந்திருக்கும் தனக்கு அக்னி பிரவேசம் அவசியம் தேவைதான் என்று......!  😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/14/2019 at 11:54 PM, suvy said:

எதற்காக கண்ணகி மதுரையை எரிக் வேண்டும்

 

On 5/14/2019 at 11:54 PM, suvy said:

ஏன் கால் பட்டால் என்னவாம்

 

On 5/14/2019 at 11:54 PM, suvy said:

இலக்குவனை கொண்டு சிதை மூட்ட  சீதைக்கு புரிந்திருக்கும் தனக்கு அக்னி பிரவேசம் அவசியம் தேவைதான் என்று.....

தங்களின் கருத்துக்கள் தாங்கள் ஆரம்பத்தில் தயக்கம் கொண்டது போல் தவறானவையோ, ஏறக்குறைய மக்களால் பேசப்படாதவையோ அல்ல. நீங்கள் கூறியவற்றைப் பரந்த அளவில் மேற்குறிப்பிட்ட மூன்று தலைப்புகளில் பகுத்துள்ளேன். இவற்றையொட்டி என் சிந்தனைகளை எனக்கென்று உள்ள பாணியில் எழுத நினைக்கிறேன். அது உங்களுக்கான பதில் அல்ல. நீங்கள் சொன்னதில் எனக்கு மாறுபாடு இல்லாதபோது எப்படிப் பதிலாக அமைய முடியும்? இலக்கியங்களில் நம் பார்வைகள் சற்று வேறுபடலாம் ; பெரும்பாலும் முடிவான முடிவு என்று இருப்பதில்லை. சில இடங்களில் நியாயப்படுத்த நாம் முயற்சிக்கலாம் ; சில இடங்களில் நியாயப்படுத்த வழியே இல்லை என்று ஒதுங்கலாம். மேம்போக்காகவே இவ்வளவு நீளம் பேசுகிறேன் என்றால், எனக்குள் நீங்கள் தூண்டிய சிந்தனைகளைப் பதிவு செய்ய பின்னூட்டம் என்னும் பகுதி பொருந்தாது. விரைவில் சிறிய கட்டுரையுடன் உங்களைச் சந்திக்கிறேன். பின்னூட்டம் தந்த ஒருவர் கட்டுரை தருவது எனக்கு முதல் முறையாக இருக்கும். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/14/2019 at 11:54 PM, suvy said:

மிகமிக அருமையான பதிவு ஐயா.....!

ஆயினும் என் மனதினுள் எழும் சில ஐயங்களையும் இங்கு பதிவிட்டு விடுதல் நலம் என்று எண்ணுகின்றேன்

உங்கள் பின்னூட்டம் என்னை இன்னொரு சிறிய கட்டுரை எழுதத் தூண்டுவது உண்மை. அலுவல் காரணமாகச் சிறிது தாமதம் ஏற்படுவதால், ஒன்றிரண்டு விடயங்களை இங்கு பதிவு செய்ய எண்ணுகிறேன். (1) இராமனின் (குரலில் மாரீசனின்) அபயக் குரல் கேட்டும் செல்லாத இலக்குவனிடம் சீதை "அண்ணன் இறந்த பின் என்னைப் பெண்டாள நினைத்தாயோ?" எனக் கேட்பது வால்மீகி ராமாயணத்தில். ஆரிய மண்ணில் தோன்றிய கதையைக் கம்பன் இயன்றவரை நம் மண்ணுக்கேற்ப மாற்றியதாலும், கம்பனே நம் மூதாதையன் என்பதாலும் அவன் கண்ட களத்திலேயே நிற்பது நமக்கு ஏற்புடையது. கம்பன் காவியத்தில், " ஒரு நாள் பழகியோரே (குகன் போல்) உயிரைத் தரத் தயாராக இருக்கும் போது, அண்ணனின் நிழலான நீ அவனைக் காக்கச் செல்லாதது நெறிமுறையன்று" என்ற முறையிலேயே கடுமையாகப் பேசுகிறாள். (2) இராமனின் சுடுசொல் தாங்காது  இலக்குவனிடம் தீ மூட்டுமாறு சொல்பவள் சீதையே. மனம் ஒப்பாத இலக்குவன் அண்ணன் இராமனை நோக்க, பார்வையிலேயே அவன் சம்மதம் தருகிறான். 'இராமனே சொன்னான்' என்று நீங்கள் குறித்தவாறு எடுப்பதில் தவறில்லை. தானே சொன்னால் என்ன, சம்மதித்தால் என்ன எல்லாம் ஒன்றுதான். (3) இலக்குவன் விடயத்தில் வால்மீகி சீதையைக் கைவிட்டாலும், கம்பன் கைவிடவில்லை. ஆனால் இராமன் அவ்வளவு பாக்கியசாலி இல்லை. சீதையை மீட்டதும் இராமனிடமிருந்து வரும் சொல்லம்புகளை அப்படியே பதிவு செய்து விட்டான் கம்பன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வால்மீகி  இராமாயணம் நேரடியாக படித்ததில்லை, இவை கேள்வி ஞானத்தில் ஞாபகத்தில் இருந்ததுதான்....இருந்தபோதும் நான் அன்றாடம் வணங்கும் தெய்வங்கள்......!   👍

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 5/14/2019 at 11:54 PM, suvy said:

ஏன் கால் பட்டால் என்னவாம்

தங்களின் மூன்று கருத்துக்களில் இரண்டினை இணைத்து அவற்றையொட்டி ‘எரிதழல்’ எனும் தலைப்பிட்டு ‘தமிழும் நயமும்’ பகுதியில் பதிவிட்டுள்ளேன். அகலிகை தன்வடிவம் எய்தியமை பற்றிய தங்கள் கேள்வியினை / கருத்தினை ஒட்டி நான் எழுத எண்ணியதை இவ்விடமே பதிவிடுகிறேன்

அகலிகைப் படலத்தில்

' கண்ட கல்மிசைக் காகுத்தன்

கழல் துகள் கதுவ

.......................................

பண்டை வண்ணமாய் நின்றனள்'   

எனும் கம்பன் வாக்கினால் கல்லான அகலிகை இராமனின் கால் தூசு (கழல் துகள்) பட்டு உயிர் பெற்றாள் என அறிகிறோம். கால் பட்டால் என்ன தவறு என்பது தற்போதைய அளவை (scale). இதனை வைத்துக் கம்பனின் காலத்தை அளக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். சிறிது காலத்திற்கு முன்பு வரை ஒரு ஆணும் பெண்ணும் பாராட்டிக் கை குலுக்குவதே தவறு எனும் பார்வை நம் சமூகத்திலேயே நிலவி வந்த ஒன்று. அகலிகை அறியாமல் (‘அறியாமல்’ என்பது கம்ப ராமாயணத்தில்; வால்மீகி ராமாயணத்தில் அகலிகை அறிந்ததேதான்) கணவனைத் தவிர்த்து வேறு ஆடவனின் (இந்திரனின்) மெய்தீண்டலால் சாபம் பெற்று கல்லாய்ச் சமைந்தாள். மீண்டும் வேறு ஆடவனின்(இராமனின்) மெய்தீண்டலால் உயிர் பெற்றாள் என்பது கம்பனுக்கு இடித்திருக்கலாம் (இதையும் நகைமுரணாய்க் காட்டி இவன் கட்டுரையில் குறித்து விடுவான் என்று பயமாக இருந்திருக்குமோ!!!) இங்கு நான் ‘மெய் தீண்டல்’ என்பதை 'தொடுதல்' என்ற பொருளிலேயே எடுத்தாண்டுள்ளேன்.

    ‘மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்

    சொற்கேட்டல் இன்பம் செவிக்கு’

எனும் வள்ளுவம் இங்கு குறிக்கத்தக்கது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.