Jump to content

‘இந்துத்துவா வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘இந்துத்துவா வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’

எம். காசிநாதன் / 2019 மே 20 திங்கட்கிழமை, பி.ப. 08:00 Comments - 0

image_777f00c9a5.jpgஇந்திய மக்களவைக்கான கடைசிக்கட்ட வாக்குப்பதிவுடன் தமிழகத்தில் உள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. டொக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்ட தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிட்ட தேனி நாடாளுமன்றத் தொகுதி ஆகியவற்றில், சில வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு ஆகியன நடந்து முடிந்திருக்கின்றன. 

இந்த நான்கு சட்டமன்றத் தொகுதிகளும் தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சி நீடிப்பதற்கான, அச்சாரமாக அமையுமா அல்லது ஆட்சி கலைவதற்கான காரணமாக உருவெடுக்குமா என்பது, அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்த நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் நடப்பது இடைத் தேர்தல் என்றாலும், அரசியல் கட்சித் தலைவர்கள் பம்பரமாகச் சுற்றி, அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். தி.மு.க தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி மீதான தாக்குதல், பிரதமர் மோடி மீதான தாக்குதல் என்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அ.தி.மு.கவின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ ஸ்டாலின் மீதான தாக்குதல், தினகரன் மீதான தாக்குதல் என்று பிரசாரத்தை முடித்தார். 

ஆனால், நடிகர் கமல்ஹாசனின் பிரசாரம்தான் தமிழ்நாட்டின் தேர்தல் களத்தை திடீரென்று அகில இந்திய அளவில் திசை திருப்பியது. “மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேதான், முதல் இந்துத் தீவிரவாதி” என்று அரவக்குறிச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் முதல் வெடிகுண்டை வீசினார். உடனே பா.ஜ.கவும், அதன் கூட்டணிக் கட்சியாக இருக்கும் அ.தி.மு.கவும் கமல்ஹாசன் மீது தாக்குதலைத் தொடுத்தன. 

அமைச்சராக இருக்கும் ராஜேந்திரபாலாஜி, எல்லையைத் தாண்டி “கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும்” என்றார். பின்னர் ஒரு கட்டத்தில் “ஐ.எஸ்.ஐ.எஸ்ஸிடம் பணம் வாங்கிக் கொண்டு கமல்ஹாசன் பேசுகிறாரா என்பதை இந்தியஉளவுத்துறை விசாரிக்க வேண்டும்” என்றே கோரிக்கை விடுத்தார். 

அதேநேரத்தில் கமலின் இந்த ‘இந்து தீவிரவாதி’ பிரசாரத்துக்கு திராவிட கழக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால் அ.தி.மு.க கூட்டணியின் தலைவராக உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ, தி.மு.க கூட்டணியின் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலினோ நடிகர் கமலின் பேச்சுப் பற்றி கருத்துக் கூறவில்லை. 

அதேநேரத்தில் எதிர்பாராத விதமாக, குறிப்பாக தமிழகத்தில் நடைபெறும் எந்த நிகழ்வுக்கும் உடன் பதில் சொல்லாத பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் கமலின் கருத்துக்கு மறு கருத்துச் சொன்னார். “எந்த ஓரு் இந்துவும் தீவிரவாதியாக இருப்பதில்லை” என்று சுடச்சுட பிரதமர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்தார்.

ஆகவே, கமலின் ‘இந்து தீவிரவாதி’ பிரசாரம் ஏதோ ஓர் அரவாக்குறிச்சி இடைத் தேர்தலில் சிறுபான்மையின சமுதாயத்தின் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமல்ல, அந்த பிரசாரத்தின் பின்னணி அகில இந்திய அளவில் இருக்கிறது என்பது பிரதமர் உடனே பதிலளித்த விதத்தில் எதிரொலித்தது. 

தமிழ்நாடு தேர்தல் களம், இதுவரை இந்து, இந்து அல்லாதோர் என்ற பிரசாரக் களத்தைப் பார்த்தது இல்லை. பா.ஜ.க பல வருடங்களாகத் தேர்தல் களத்தில் தமிழ்நாட்டில் போட்டியிட்டாலும், இந்த முறை போல் இந்து மத உணர்வுகள் அடிப்படையில் இவ்வளவு ஆவேசமாக பிரசாரத்தை மேற்கொண்டதில்லை. சமூக வலைத்தளங்களிலும் முழு வீச்சில் பிரசாரம் நடைபெற்றதில்லை. 

அதற்கு முக்கியக் காரணம், இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம் தி.மு.க தலைவர் கருணாநிதி இருந்தார். அவர் மீது சிறுபான்மை மக்கள் அசாத்திய நம்பிக்கை வைத்திருந்தார்கள். அதற்காக தி.மு.கவில் உள்ள இந்து வாக்காளர்கள் கருணாநிதியிடம் கோபித்துக் கொள்ளவில்லை. 

அ.தி.மு.கவின் சார்பில் ஜெயலலிதா களத்தில் இருந்தார். அவரை பொதுமக்கள் மட்டுமின்றி, பா.ஜ.கவும் கூட, இந்துக்களின் உணர்வுகளின் ஆதரவாளராகவே பார்த்தனர். உ.பியில் ராமர் கோவில் கட்ட கரசேவைக்கு தமிழகத்தில் இருந்து தொண்டர்களை அனுப்பியது, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஆதரவளித்தது என்று பா.ஜ.கவை விட, ஜெயலலிதா மிகவும் உறுதியாக இருந்தார். ஆகவே அவரது தலைக்கு மேல் சென்று, இந்துமத உணர்வாளர்களின் வாக்குகளைப் பெற்றுவிட முடியும் என்று பா.ஜ.க நம்பவில்லை. 

அதேபோல், “கருணாநிதி இந்து மத விரோதி” என்று பிரசாரம் செய்து அனைத்து இந்துகளின் ஆதரவையும் பெற்றுவிட முடியும் என்றும் பா.ஜ.க. நினைக்கவில்லை. அதனால் கருணாநிதி, ஜெயலலிதா இருந்த தேர்தல்களில் பா.ஜ.க, இந்துமத உணர்வுகள் அடிப்படையில், ஏன் இந்துத்துவா பிரசாரத்தை முன் வைத்துச் செல்வதில் பின்னடைவு பெற்ற நிலையிலேயே இருந்தது. 

ஆனால் தற்போது ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் இருக்கின்ற நேரத்தில், திராவிட இயக்க உணர்வுகளைப் பின்னுக்குத்தள்ளி இந்துத்துவா களத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி விட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்தத் தேர்தலை பா.ஜ.க சந்தித்தது. 

பா.ஜ.கவின் இந்தப் பிரசாரத்துக்கு மறுப்பு ஏதும் சொல்ல முடியாமல் அ.தி.மு.கவும் ஒத்துழைத்தது. ஆகவேதான், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, கிருஷ்ணர் பற்றிக் கூறிய கருத்துகளுக்கு அ.தி.மு.கவும், பா.ஜ.கவும் போட்டி போட்டுக் கொண்டு கண்டனக் கணைகளைத் தொடுத்தன. குறிப்பாக தி.கவை விட தி.மு.க மீதுதான் அதற்காகக் கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தி, “இந்துக்கள் யாரும் தி.மு.கவுக்கு வாக்களிக்கக் கூடாது” என்றே பிரசாரத்தை சூடுபிடிக்க வைத்தன.

அதன் தொடர்ச்சியை அரவாக்குறிச்சியில் நடிகர் கமல்ஹாசன் தொடங்கி வைத்துள்ளார். அதற்குக் காரணமில்லாமல் இல்லை. ஏப்ரல் 18ஆம் திகதி தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யக் கட்சியின் வேட்பாளர்களுக்கு முதல் தலைமுறை வாக்காளர்கள், தி.மு.கவும் அ.தி.மு.கவும் வேண்டாம் என்று கருதும் வாக்காளர்கள் எல்லாம் கணிசமாக வாக்களித்துள்ளார்கள் என்று பரவலான கருத்து நிலவுகிறது. ஆகவே, இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தி.மு.க, அ.தி.மு.கவுக்கு மாற்றாக நடிகர் கமல்ஹாசன் உருவாகலாம் என்று பா.ஜ.க நினைக்கிறது. 

அந்த வேளையில், ரஜினி அரசியலுக்கு வராத நிலையில், நடிகர் கமல்ஹாசனின் கட்சி இப்போதுள்ள திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக வரும் என்ற எண்ணம் பா.ஜ.கவில் உள்ள பல தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அ.தி.முகவை வழி நடத்திய ஜெயலலிதாவின் இடத்தில் வைத்து, நடிகர் கமல்ஹாசனை அவர்கள் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆகவே, இவரை முன் நிறுத்தி இந்துத்துவா அரசியலை தமிழகத்தில் முழு வீச்சில் கொண்டு வந்து விட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இந்துத்துவா மற்றும் இந்துத்துவா அல்லாதோர் என்ற அரசியல் மட்டுமே தமிழகத்தில் நடக்க வேண்டும் என்றும் பா.ஜ.க முன்னணித் தலைவர்கள் விரும்புகிறார்கள். 

திராவிட அரசியலைப் பின்னுக்குக் கொண்டு சென்று, இந்துத்துவா அரசியலை முன் வைக்க, தமிழக மக்களின் மனதில் பதிய வைக்க கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாத இந்தத் தருணமே தக்க தருணம் என்று பா.ஜ.கவின் சிந்தனையாளர்கள் எண்ணுகிறார்கள். அதன் தாக்கமே நடிகர் கமல்ஹாசனின் இந்து தீவிரவாதி பேச்சும் அதற்கும் உடனடியாக வட இந்தியாவின் ஒரு மூலையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் விளக்கமும் ஆகும். 

சிறுபான்மையின மக்கள் மத்தியிலும் தற்போது தி.மு.க, அ.தி.மு.க போன்ற கட்சிகளிடம் உள்ள இந்து வாக்காளர்கள் மத்தியிலும் நடிகர் கமல்ஹாசன் இடம்பிடித்துக் கொள்ள வேண்டும். முழுக்க முழுக்க இந்துத்துவா எண்ணம் கொண்ட மக்களைக் கடுமையான பிரசாரத்தின் மூலம் அதிகப்படுத்தி அந்த ஆதரவை பா.ஜ.க பெற்றுவிட வேண்டும் என்பதுதான் திட்டத்தின் முக்கிய நோக்கம். 

அதை நிறைவேற்றும் வகையில்தான், இந்த நான்கு இடைத் தேர்தல்களில் குறிப்பாக அரவக்குறிச்சி இடைத் தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் இந்து தீவிரவாதி பேச்சுக்கு அகில இந்திய முக்கியத்துவம் கிடைத்தது.

திராவிட அரசியல் பற்றிப் பேசுவதற்கு இப்போது தி.மு.கவிலும் சரி, அ.தி.மு.கவிலும் சரி, முக்கியத் தலைவர்கள் இல்லை என்பதைத் திடமாக பா.ஜ.க நம்புகிறது. தி.மு.க ஆரம்பித்து 70 வருடங்கள்; அ.தி.மு.க தொடங்கி 47 வருடங்கள். இந்நிலையில் திராவிட இயக்கக் கொள்கைகள் பலவீனமடைந்து விட்டன என்று இந்துத்துவா ஆதரவாளர்கள் நம்புகிறார்கள். ஆகவே, இந்துத்துவாக் கொள்கையை, முழு வீச்சில் தமிழகத்தில் பயன்படுத்தி, ஆட்சிக்கு வந்து விட முடியும் என்பது பா.ஜ.கவின் தொலைநோக்கு கணிப்பு. 

‘இந்துத்துவா என்ற துருவத்துக்கு பா.ஜ.க; எதிர் துருவத்துக்கு நடிகர் கமல்ஹாசன்’ ‘இந்துத்துவா வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ என்பது அரங்கேறி விட்டது. விழித்துக் கொள்ள வேண்டியது திராவிட இயக்கங்கள் தானே தவிர, தமிழக மக்கள் அல்ல. 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இந்துத்துவா-வரும்-பின்னே-மணியோசை-வரும்-முன்னே/91-233345

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.