Jump to content

முடிவுற்ற ஆயுதப் போரும் முடிவுறாத உளவியல் போரும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முடிவுற்ற ஆயுதப் போரும் முடிவுறாத உளவியல் போரும்

காரை துர்க்கா / 2019 மே 23 வியாழக்கிழமை, பி.ப. 12:46 Comments - 0

கடந்த சனிக்கிழமை (மே 18), வலிகள் சுமந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு, தமிழர் தாயகத்தில் இதயம் கனத்த கவலையுடனும் எழுச்சி பொங்கிய உணர்வுடனும் நடைபெற்றது. ‘தமிழர்கள் மத்தியில் பயத்தைத் தக்க வைத்து, உளவியல் போர் செய்கின்றது ஸ்ரீ லங்கா அரசாங்கம்’ என, அங்கு வெளியிடப்பட்ட நினைவேந்தல் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

கடந்த 10 ஆண்டுகளில், ஆயுதப் போர் அற்றுப் போன நிலையில், உளவியல் போர் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதை, அனைத்துத் தமிழ் மக்களும், அன்றாடம் அனுபவித்தும் உணர்ந்தும் வருகின்றனர்.  

அதன் நீட்சியாக, எமது சமூகத்தில் நாளாந்தம் சந்தித்து வருகின்ற நபர்களது உரையாடல்களை மய்யமாகக் கொண்டு, இந்த ஆக்கம் வெளி வருகின்றது. இவை மக்களது ஆழ்மனங்களில் புதைந்திருக்கும் எண்ணங்களையும் வலிகளையும் வெளி உலகத்துக்குக் கொண்டு செல்லச் சிறப்பாக உதவுகின்றன.  

அவ்வகையில், கடந்த நாள்களில் சுகாதாரத் திணைக்களத்தில் பொதுச் சுகாதார பரிசோதகராகப் பணி புரிந்து வருகின்ற ஒருவருடன் உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. “முன்னர் ஆயுதப் போர், ஈவிரக்கமின்றி உயிர்களைப் பலி கொண்டது. தற்போது எம்மண்ணில், தற்கொலைகளுக்கு உயிர்கள் வீணே பலி கொடுக்கப்படுகின்றதே” எனக் கவலையுடன், தனது மனப்பாரத்தைப் பகிர்ந்து கொண்டார். 

தமிழ்ச் சமூகத்தில், அன்றாடம் நடைபெற்று வருகின்ற தற்கொலைகள் மற்றும் தற்கொலை முயற்சிகள் தொடர்பில், அவர் தனது ஆதங்கங்களையும் அதற்காக மிகநுட்பமாக உருவாக்கப்பட்ட காரணங்களையும் கையாலாகாத்தனத்துடன் கொட்டித் தீர்த்தார்.  

இது இவ்வாறு நிற்க, அண்மையில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வரும் வழியில், முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளில் கலந்து, இறையருள் வேண்டினோம். பின்னர், அங்குள்ள சிற்றுண்டிச்சாலையில் சாப்பிட்ட பின்னர், கச்சான் வியாபாரம் செய்து கொண்டிருந்த ஆச்சியுடன் கதைத்தோம்.  

“எப்படி அம்மா வியாபாரம், சனங்கள் வருகுதே” எனக் கேட்டோம். 

“அதை என்னன்டு மேனை சொல்லுறது. முந்த நாள் இரவு முழுக்கக் கண் விழித்து, வெறும் 300 ரூபாய்தான் வியாபாரம். நாளாந்த சீவியத்துக்கே பெரும்பாடு. நான் கிழவி. இன்டைக்கோ நாளைக்கோ என இருக்கின்றேன். ஆனால், என்னை நம்பி மூன்று சீவன்கள் இருக்குது” எனத் தொடர்ந்தார். 

“யார் அம்மா, அந்த மூன்று பேர்” எனக் கேட்டோம்.  

“அந்தக் கதையை ஏன் பிள்ளை கேட்கின்றாய். செல்லடியில என்ர மேள் போய்ச் சேர்ந்திட்டாள். மருமேனும் காணாமல் போய் விட்டார். இப்ப பேரப் பிள்ளையளை நான்தான் பார்த்துப் பராமரித்து வாறேன்” என்றார். 

“இதில கிடைக்கிற ஐந்து பத்தைக் கொண்டுதான், எங்கள் வாழ்க்கை ஏதோ ஓடுது” என்றார். “இதுவும் இல்லாது போனால், கடவுளே ........ ”எனத் தொடர்ந்தார்.  

இறுதி யுத்தம், அம்மாவின் மகளை பலி எடுத்துக் கொண்டது; மருமகனைக் காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியல் சேர்த்துக் கொண்டது; பேரப்பிள்ளைகளை அம்மாவின் கையில் கொடுத்தது. உண்மையில் இன்று அம்மா, யுத்தம் போன்ற ஒருவிதமான முற்றுகைக்குள் உள்ளார்.  

‘நானும் செத்து விட்டால், என் பேரப்பிள்ளைகள் நிலை என்னாகும், அவர்களுக்கு யார் சாப்பாடு கொடுப்பது, அவர்களது பாதுகாப்பு, அவர்களது படிப்பு, அவர்களின் ஒட்டுமொத்த எதிர்காலம், ஐயோ கடவுளே...’ என தினசரி அவருக்குள் ஓர் உளவியல் போர் நடந்து கொண்டிருக்கிறது.

இது, இலங்கை அரசாங்கத்தால் நேரடியாகத் தோற்றுவிக்காத இன்னொரு விதமான உளவியல் போர். ஆனால், அன்று நேரடியாகச் செய்ய ஆயுதப் போரின் இன்றைய உளவியல் போரே இதுவாகும்.  

இன்று, அந்த அம்மாவின் பிரச்சினை போதிய வருமானமின்மை ஆகும். இவ்வாறாகத் தங்களது வருமானக் குறைவுக்கு பயணிகள் வருகை குறைந்தமையே பிரதான காரணம் எனக் கூறினார் அம்மா. 

“பயணிகள் வருகையை அதிகரிக்க, ஏதேனும் வழிவகைகள் உண்டோ” எனக் கேட்க, அவர் அதற்கான யோசனையையும் முன்வைத்தார். 

முறிகண்டிப் பிள்ளையாரை அண்டி, கச்சான் கடைகள், தேநீர்க் கடைகள், அர்ச்சனைப் பொருட்கள் விற்கும் கடைகள் எனப் பல கடைகள் உள்ளன.  

முறிகண்டியில் கடவுளை வணங்குவது மட்டுமல்லாது, யாழ் - வவுனியா வீதியில் பயணிக்கையில், முறிகண்டியில் தமது கடைகளுக்கு வந்து, பொருட்கள் வாங்குவது தமது வியாபாரத்துக்குத் துணை நிற்கும். “நீங்கள் வருவீங்கள் என நம்பித்தானே, நாங்கள் நாள் முழுக்க இங்கு காத்திருக்கின்றோம்” எனக் கூறிப் பெருமூச்சு விட்டார்.  

எங்களுக்காக அவர்கள் காத்திருக்கின்றார்கள். ஆகவே, தனியே இந்து மதக் கடவுள் என்பதற்கு அப்பால், பிள்ளையாரைச் சுற்றி போரினால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள், ஆவலுடன் எம் வருகைக்காகக் காத்திருக்கின்றார்கள். செல்லும் வழியில், செய்யும் உதவியாக இந்தக் கைங்கரியத்தை ஆற்றுவோம்.  

ஆகவே, தயவு கூர்ந்து அவ்வழியால் பயணிக்கும் தனியார் பஸ்கள், அரச வாகனச் சாரதிகள் அவர்களது பொருளாதாரம் பெருக அவர்களுக்கு ஆதாரமாக மாறுவோம். ஏனெனில், தற்கொலைக்கான பல்வேறு காரணங்களில் வறுமையே பிரதான பங்கு வகிக்கின்றது. 

வேலைவாய்ப்புகள் இல்லாமை, அதனால் போதிய வருமானங்கள் இன்மை. இதனால் கடன் சுமை அதிகரிப்பு. அதுவே முடிவில் தற்கொலையில் முடிகின்றது.  

பொதுவாகத் தற்கொலை செய்வோரில் ஆண்களின் விகிதாசாரமே அதிகமாகக் காணப்படுகின்றது. இதில் அதிகரித்த கடன் சுமையால் தற்கொலை செய்வோரை அன்றாடம் கண்டு வருகின்றோம். இதற்கு முறையற்ற நிதி முகாமைத்துவம், மிதமிஞ்சிப் பெற்ற கடன் எனப் பல காரணங்களைக் கூறலாம்.  

கடந்த பத்து ஆண்டுகளில், யுத்தத்தால் சிதைவுற்ற வீதிகள் அமைக்கப்படுகின்றன. வீடுகள் கட்டப்படுகின்றன. தொழிற்சாலைகள் நிர்மாணிக்கப்படுகின்றன. ஆனால், அதே யுத்தத்தால் துண்டு துண்டாக உடைந்து நொருங்கிப் போயுள்ள மனங்களைச் சீர்படுத்த முன்னுரிமை கொடுக்கப்படவில்லை. 
பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆயுதப் போருக்கு முன்னர், குனிந்து உள்ளே போகின்ற குடிசை வீட்டில் வாழ்ந்த இனிமையான வாழ்வு, தற்போது நம்மிடம் உள்ள ஆடம்பரக் கல் வீட்டில் இல்லையே என்ற ஆதங்கங்களே எங்கும் உள்ளன.   

பொதுவாகச் சாதாரன மரணங்களே மனிதர்களுக்கு மனஅழுத்தம் மற்றும் நெருக்கீடு என்பவற்றை ஏற்படுத்தும். இவ்வாறான நிலையில் கண் முன்னே குண்டுத் தாக்குதலால் சிதறிய உடல்களையும் சிந்திய குருதியையும் முப்பது ஆண்டுகளாகக் கண்டு, அனுபுவித்தவர்களுக்கு அதன் தாக்கங்கள் எவ்வாறு இலகுவில் ம(கு)றையும்?  

போரால் மக்களின் மனங்களும் உடைந்து இருப்பதால், தமது அன்றாட செயற்பாடுகளின்போதும் இலகுவில் உடைந்து போய்விடுகின்றார்கள். தமிழ்ச் சமூகத்தில் வெளிக்காயங்களுக்கு கொடுக்கும் முன்னுரிமைகள் போன்று உட்காயங்களுக்கு முன்னுரிமைகள் வழங்கப்படுவதில்லை. ஆனால், மனிதனின் நிம்மதியைக் குழப்புவதில், இவை இரண்டுமே சம பங்குகள் வகிக்கின்றன.   

ஆகவே, பெரும் சமூகவடுவுக்கு  உட்பட்டிருக்கும் தமிழ்ச் சமூகத்துக்குள் தற்கொலை முயற்சிகள் தவிர்க்க முடியாததே. வெளிப்படையாகத் தற்கொலை முயற்சிக்கு பல்வேறு காரணங்களைக் கண்டு பிடித்தாலும் இனப்போரும் அதன் கொடிய விளைவுகளுமே பிரதான மூலவேராக அமைகின்றன. 

தமிழ்ச் சமூகத்துக்குள் தற்போது ஆழ ஊடுருவி அழிவை ஏற்படுத்தி வருகின்ற தற்கொலைகளுக்கும் இலங்கை இனப் பிணக்குக்கும் பிணைப்பு உள்ளது.  

தவிர, முள்ளிவாய்க்கால் அவலத்தைக் கட்சி அரசியல் மறந்து, தனிநபர் அரசியல் மறந்து, நினைவேந்தியமை ஆழ்ந்த துயரத்திலும் அங்கே சிறு நம்பிக்கை ஒளியைக் காட்டியது. இந்த வாய்ப்பை நழுவ விடாமல், இறுகப் பற்றிக் கொள்வோம். 

இது எமக்கான, தீர்வு நோக்கிய பயனத்துக்கான சிறப்பான முகவுரையாகக் கொள்வோம். ஆகவே, நமது அரசியல் தலைவர்கள் இனியும் அடுத்தவர் தவறுகளைக் கண்டு பிடிப்பதை நிறுத்தி ந(த)மது மக்களுக்கான தீர்வுகளைக் கண்டு பிடிக்க முயல வேண்டும்.  

போர் இல்லாத பத்து ஆண்டுகளாகத் தெற்கு, வெற்று வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் தமிழர்களிடம் பேசி வருகின்றது. எந்த மாற்றமும், உள்ளிருந்து வெளிக் கிளம்பவில்லை. பேரினவாதச் சிந்தனையில், செயற்பாட்டில் தமிழ் மக்களால் எந்த மாற்றத்தையும் இதுவரை காண முடியவில்லை.  

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முடிவுற்ற-ஆயுதப்-போரும்-முடிவுறாத-உளவியல்-போரும்/91-233433

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.