Jump to content

முள்ளிவாய்க்கால் இறுதி போரும் தமிழகத்தின் எதிர்வினையும்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரும் தமிழகத்தின் எதிர்வினையும் ..!

balachandran_630.jpg

தமிழீழ வரலாற்றில் மட்டுமல்ல, தமிழக வரலாற்றிலும் முள்ளிவாய்க்கால் நிகழ்வு, மனசாட்சியை உலுக்கும் மாபெரும் சோக வரலாறாக என்றென்றும் நிலைத்திருக்கும். இத்துன்பியல் நிகழ்வு, தமிழருக்கு - ஏன் உலக விடுதலை வரலாற்றுக்கும் - பல புதிய படிப்பினைகளை நல்கி உள்ளது.

இட்லரின் நாஜிப்படையினருக்கு நூரம்பர்க் விசாரணை கடும் தண்டனைகளை வழங்கியது போல், ஈழத்தமிழர்களை இனப்படுகொலை புரிந்த சிங்களக் காடையர்களுக்கும் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது தமிழர்களின் ஆறா வேட்கையாக இன்னும் கனன்று கொண்டிருக்கிறது.

தமிழீழத்தில் இனப் படுகொலை

பத்து ஆண்டுகள் கடந்த பிறகும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைத்து பார்த்தால், மனம் பதறுகிறது. சிந்தனை தடுமாறுகிறது.

ஐயோ! எவ்வளவு குரூரமான பேரழிவு?

முள்ளிவாய்க்கால் படுகொலைக்குக் கதறியது போல், வரலாற்றில் எந்த நிகழ்வுக்கும் தமிழ்நாடு அப்படிக் கதறி இருக்காது. கொழுந்து விட்டெறிந்த கோபம் - ஆற்றாமை - குற்ற உணர்வு - விரக்தி என மாபெரும் உளவியல் சிக்கலில் தமிழினம் அழுந்தி அல்லாடியது அப்பொழுது.

தமிழீழத்திலிருந்து வரும் ஒவ்வொரு செய்தியும் நடுநடுங்க வைத்தது. ஒரு படுகொலையைக் காட்டிலும் மற்றொரு படுகொலை கடும் பதற்றத்தைத் தந்தது.

இது போதும், இனி வேண்டாம்" என மனம் கிடந்து தவித்தது. ஆனால், நடைபெறும் சம்பவங்களை ஊடகங்கள் விலாவாரியாகக் கொட்டிக் கொண்டே இருந்தன. வெறும் செய்திகளாக மட்டுமல்லாமல், காட்சி வடிவிலும், நிழற்பட வடிவிலும் நிகழ்வின் கோரத்தை வெளியிட்டுத் தமிழ் மக்களைத் துன்பக்கேணியில் முழ்கடித்தன.

இக்கொடிய துன்பங்களின் சுமை தாங்க முடியாமல், பலருக்கு மனம் பேதலித்துப் போய்விட்டது. தீரா உளவியல் சிக்கல், வாழ்வின் இயல்பாகப் போன கொடுங்காலம் அது.

தமிழகத்தின் கொதிநிலை அப்பொழுது உச்ச கட்டத்தில் இருந்தது. நான் பேசும் தமிழைப் பேசிய ஒரே காரணத்திற்காக ஒண்ணரை இலட்சம் மக்கள் அநியாயமாகக் கொல்லப் பட்டார்கள். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள் என எந்த வேறுபாடும் இல்லாமல் தமிழர்கள் துடிதுடிக்கத் துடைத்தழிக்கப்பட்டனர்.

தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொடூரமாகச் சிதைக்கப்பட்டனர். சிங்கள இராணுவத்தினர் இசைப்பிரியா போன்றோரைச் சீரழித்துப் படுகொலை செய்ததை மனச்சான்றுள்ள எந்த மனிதனும் மன்னிக்க மாட்டான்.

மேதகு பிரபாகரன் அவர்களது 12 வயதுப் பாலகன் பாலச்சந்திரனுக்குப் பிஸ்கட் கொடுத்து விட்டு, பக்கத்தில் நின்று சுட்டுக்கொன்றதைக் கண்டு இந்த உலகமே அதிர்ச்சியில் உறைந்து போனது. மனித நேயமே இந்த உலகில் மடிந்து விட்டதா? என்ற கேள்வி, அனைவரது உள்ளத்திலும் பூதாகரமாக எழுந்தது.

"போரைக் கைவிட்டுச் சரண் அடைந்தால் துன்புறுத்த மாட்டோம்" என்று சிங்கள அரசு கொடுத்த உத்தரவாதத்தை நம்பி, வெள்ளைக் கொடி அசைத்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த நடேசன், புலித்தேவன் மற்றும் நடேசனின் துணைவியார் வினிதா ஆகியோர் கருணையின்றிக் கொல்லப் பட்டனர்.

"போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது, பாதுகாப்பு வளையம் (No Fire Zone) பகுதிக்குள் வந்தால் உயிர் பிழைக்கலாம்" என சிறீலங்கா அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நம்பி, பதுங்கு குழியிலிருந்து வெளியே வந்த பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் மீது குண்டு வீசி நரவேட்டை ஆடியது இராஜபட்ச அரசு.

போரில் இறந்தவர்கள், காயம் பட்டவர்கள், உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்கள் என்ற வேறுபாடு எதுவுமில்லாமல், அனைவர் மீதும் இராணுவ வாகனங்களை ஏற்றி நசுக்கித் தமிழீழத்தையே பிணக்காடு ஆக்கியது, பெளத்த இனவெறி அரசு.

உலகில் எந்த இனப்படுகொலையிலும் அதிகம் நடக்காத ஒன்று இலங்கையில் நடந்தது. ஆண் - பெண் வேறுபாடு இல்லாமல் அனைவரையும் நிர்வாணமாக்குதல் வெகு இயல்பாக நாள்தோறும் அங்கு நடந்தது.

தமிழ் இளைஞர்களை அம்மணமாக்கி, அவர்களை எள்ளிநகையாடி, இளித்துக் கொண்டே சிங்கள இராணுவம் அவர்களைப் பின்னாலிருந்து சுட்டுப் படுகொலை செய்வதை இங்கிலாந்தின் சானல் 4 ஊடகம் வெளியிட்ட பொழுது, தமிழகம் அதிர்ந்து போனது.

போரும் தமிழக எதிர்வினையும்

ஈழத்தமிழ் மக்கள் படும் சித்ரவதைகளைச் சகித்துக் கொள்ள முடியாமல் தமிழகத்தில் பேரணி - ஆர்ப்பாட்டம் - உண்ணா நோன்பு - மனிதச் சங்கிலி - நினைவேந்தல் - தீக்குளிப்பு எனப் போராட்டங்கள் மிகவும் தீவிரமடைந்தன. மக்கள் எழுச்சி கண்டு தமிழக அரசும், மைய அரசும் அஞ்சி நடுங்கின.

மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வக்கற்ற அரசாங்கம், வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. தமிழகமே இரத்தக் களரியாக மாறியது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (வைகோ) தமிழக வாழ்வுரிமைக் கட்சி (வேல்முருகன்) நாம் தமிழர் கட்சி (சீமான்) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
(திருமாவளவன்) இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி
(தா.பாண்டியன்) தமிழர் தேசிய முன்னணி (பழ. நெடுமாறன்) தந்தை பெரியார் திராவிடர் கழகம்
(கு.இராம கிருஷ்ணன்) திராவிடர் விடுதலைக் கழகம்
(கொளத்தூர் மணி) தமிழ்த்தேசியப்பேரியக்கம்
(பெ. மணியரசன்) மே 17 இயக்கம் (திருமுருகன்) ஆதித்தமிழர் பேரவை (இரா. அதியமான்) தமிழ்த்தேச விடுலை இயக்கம்
(தோழர் தியாகு) போன்ற பல்வேறு கட்சிகளும், இயக்கங்களும் தமிழீழ விடுதலைப் போரை ஆதரித்துப் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தன. இவை தவிரவும் தமிழகமெங்கும் பல்வேறு செயல்பாட்டாளர்களும், தமிழ் அமைப்புகளும், பொது மக்களும் பங்கேற்ற போராட்டங்கள் தொய்வுறாமல் நாள்தோறும் தொடர்ந்தன. அவற்றின் பட்டியல் மிக நீண்டது.

வேறுபாடு கடந்த பேராதரவு

தமிழகத்தின் மிகப் பெரும் சிக்கலாக இருக்கும் "சாதி" எனும் நச்சு வளையத்தைத் தாண்டி, ஈழச் சிக்கல் தமிழக மக்களை ஒன்றிணைத்தது என்பது மிகவும் குறிப்பிடத்தக்க வரலாற்றுச் செய்தியாகும். இதற்கு முன் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில்தான் இப்படி பட்ட சாதி கடந்த ஓர்மை தமிழ்நாட்டில் இருந்தது என்பதும் கருதத்தக்கதாகும்.

முள்ளிவாய்க்கால் போராட்டத்தின் முன்னும் பின்னும் இதற்கான ஆதரவுக் குரல், இந்தியத் துணைக் கண்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் எதிரொலித்தது. பெங்களூர், மும்பை, புதுதில்லி போன்ற இடங்களில் ஈழ ஆதரவுப் போராட்டங்கள் நடைபெற்றன. இருப்பினும், அவற்றை முன்னெடுத்து நடத்தியவர்கள் பெரும்பாலும் தமிழர்களாகவே இருந்தனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குறிப்பாக ஜம்மு - காஷ்மீர் விடுதலை இயக்கப் போராளி யாசின் மாலிக் அவர்கள், தமிழகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஈழப் போருக்குக் காஷ்மீர் மக்களின் பேராதரவினை வெளிப்படையாக உறுதி செய்தார். அதே வேளையில் ஈழ ஆதரவுப் போராட்டத்திற்கு எதிரான அரசாங்கத்தின் அடக்கு முறைகளையும் அப்பொழுது அவர் கண்டித்தார்.

" ஈழத் தமிழர்களின் விடுதலைக் குரலைத் தற்காலிகமாக ஒடுக்கலாம். ஆனால் விடுதலைக் கருத்தையோ, கோட்பாட்டையோ எந்தச் சக்தியாலும் ஒடுக்க முடியாது.

அதே போல் ஈழ ஆதரவுப் போராட்டங்களை ஒடுக்குவது அரசுக்கு வெற்றி ஆகாது. அடக்குமுறையால் அமைதியையும், பாதுகாப்பையும் உருவாக்க முடியாது. எனவே அரசு, தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல், மக்கள் தமக்கான தீர்வை அவர்களே கண்டடைவர். அமைதியை வெற்றிடத்தில் உருவாக்க இயலாது. வலிமையானதோர் அடித்தளம், அமைதிக்குத் தேவை" என யாசின் மாலிக் சுட்டிக் காட்டினார்.

தமிழீழ இனப்படுகொலைக்கு எதிராக இந்தியத் துணைக் கண்டத்தின் பிற பகுதிகளிலுள்ள சனநாயக சக்திகளின் ஆதரவை ஒருங்கிணைக்க "போர்க் குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம்" (Forum against War crimes and Genocide) எனும் அமைப்புத் தமிழகத்தில் தொடங்கப்பட்டது.

கவிஞர் இன்குலாப், எழுத்தாளர் அமரந்தா, பேராசிரியர் இராமு. மணிவண்ணன், சேவ் தமிழ்ஸ் இயக்கத்தைச் சார்ந்த செந்தில் மற்றும் இக்கட்டுரை ஆசிரியர் ஆகியோர் அதில் செயல்பட்டனர். இவ்வமைப்பின் சார்பாகக் கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு திரட்டப்பட்டது.

கலைஞர்கள் - எழுத்தாளர்கள் - மனித உரிமையாளர்கள் பங்களிப்பு

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு முன்பே தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்தன. ஈழ மக்களின் பெருந்துயரை விளக்கும் படக்காட்சிகள் பரவலாக நடைபெற்றன. ஒலிநாடாக்கள், குறும்படங்கள் பல வெளியிடப் பட்டன.

எடுத்துக்காட்டாக, 2009 மார்ச் 23 ஆம் நாள் ஐ.நா.மனித உரிமைக் கழகச் செயலர் நாயகம் திருமதி நவநீதம் பிள்ளை புது தில்லி வந்திருந்தார். அவரைச் சந்தித்து ஈழத்தில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை விளக்கிக் கூற வேண்டும் என மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (பியூசிஎல்) தமிழ்நாடு அலகு, அமைப்பின் அன்றைய அனைத்திந்தியத் தலைவராக இருந்த மூத்த வழக்கறிஞர் (மறைந்த) கே.ஜி.கண்ணபிரான் அவர்களை வேண்டிக் கொண்டது.

அதற்கேற்ப திருமதி நவநீதம்பிள்ளையை அவர் நேரில் சந்தித்து ஈழப் போரின் கொடுமைகளை விரிவாக எடுத்துரைத்தார். குறிப்பாக, இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட, தடை செய்யப்பட்ட வெப்ப எறி குண்டுகளை (Thermobaric Bombs) சிறீலங்கா அரசு, மக்கள் மீது போட்டு அழித்து வருகிறது என்றும், மருத்துவமனைகள் மீதும் எறிகணைகளை வீசி வருகிறது என்றும், போரில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையை இலங்கை அரசு வேண்டுமென்றே குறைத்துச் சொல்கிறது என்றும் பல்வேறு உண்மைகளைத் திரு.கண்ணபிரான், ஐ.நா. செயலர் நாயகத்திடம் ஆதாரபூர்வமாக விளக்கிச் சொன்னார். இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதைத் தடுக்கத் தன்னாலான முயற்சிகளைச் செய்வதாகத் திருமதி நவநீதம் பிள்ளை உறுதியளித்தார்.

தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் ஈழப் போராட்டத்திற்கும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கும் பேராதரவு தந்தனர். இவர்களது தீவிர எதிர்ப்பினால், கொழும்பில் நடைபெறவிருந்த இந்தியத் திரைப்பட விழாப் பரிசளிப்பு நிகழ்ச்சி புறக்கணிக்கப் பட்டது.

அதே போல், கொழும்பில் நடைபெறவிருந்த தமிழ் எழுத்தாளர் மாநாட்டைத் தமிழ் எழுத்தாளர்கள் புறக்கணித்தனர். தவிரவும், முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு முன்னும் பின்னும் எண்ணற்ற நூல்கள் தமிழகத்தில் வெளிவந்தன. அவை அனைத்தையும் இங்கு பட்டியலிட இயலாது.

இருப்பினும், சான்றாக இரண்டு நூல்கள் குறிப்பிடத்தக்கன. "இராஜபட்ச ஒரு போர்க் குற்றவாளி" எனத் தீர்ப்பளித்த டப்ளின் பேராயத்தின் அறிக்கை புது மலர் பதிப்பகம் (ஈரோடு) சார்பாகவும், சிறீலங்கா அரசின் அத்துமீறலை வெளிப்படுத்திய தாருஷ்மென் தலைமையிலான ஐ.நா.வல்லுநர் குழு அறிக்கை, புதுமலர் பதிப்பகம் - தலித் முரசு ஆகியவற்றின் சார்பாகவும் அச்சில் வெளிவந்தன. இவ்விரு அறிக்கைகளையும் பூங்குழலி அவர்கள் தமிழில் மொழியாக்கம் செய்தார்.

வேறு சில முக்கிய நிகழ்வுகள்

தமிழீழ விடுதலைக்கு மாபெரும் உந்து சக்தியாக இன்று வரை இருப்பது, முத்துக்குமாரின் தீக்குளிப்புதான். நினைத்தாலே நடுங்கச் செய்யும் ஒப்பற்ற தியாகம் அது. ஒட்டு மொத்தத் தமிழகத்தையும் எழுச்சி ஊட்டிய உன்னதத் தியாக நிகழ்வு அது.

"தமிழீழ விடுதலைப் போருக்கு எதிராகவும், சிங்கள இனவெறி இராணுவத்திற்கு உதவி செய்யவும் இந்தியா, இராணுவத் தளவாடங்களை அனுப்புகிறது; கோவை வழியாக இரயில் மூலம் அவை எடுத்துச் செல்லப் படுகின்றன" என்ற செய்தி கேட்டு அதிர்ந்து போய், கோவை கு.இராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் ஈழ ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு கோயமுத்தூர் சின்னியம்பாளையம் அருகில் அந்த இரயிலை இடைமறித்தனர். மேலும் அதிலிருந்த தளவாடங்களை உடைத்து நொறுக்கினர். இதனால் பலர் கைது செய்யப்பட்டனர். இப்போராட்டத்தை முன் நின்று நடத்தியதற்காகக் கோவை கு.இராமகிருஷ்ணன், பொன்.சந்திரன் (பியூசிஎல்) தனலட்சுமி (மக்கள் சிவில் உரிமைக் கழகம்) உள்ளிட்டோர் பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்குப் பிறகு, கோவை கு. இராமகிருஷ்ணன்,
கண. குறிஞ்சி,
பொன். சந்திரன்,
மருதுபாண்டியன்,
முத்து. முருகன்,
திருமொழி ஆகியோரது முன் முயற்சியில் "தமிழீழ இனப்படுகொலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு" கோவையில் உருவாக்கப்பட்டது. இதன் சார்பாகத் தமிழகம் தழுவிய மாபெரும் மாநாடு கோவையில் நடத்துவது எனத் தீர்மானிக்கப் பட்டது. எனவே பிற மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் பணி, இக்கட்டுரை ஆசிரியர்வசம் ஒப்படைக்கப்பட்டது. இம்மாநாட்டிற்கு ஆதரவு திரட்டத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

இறுதியாக 2011 நவம்பர் 6 அன்று கோவை வ.உ.சி. பூங்கா மைதானத்தில் திரு.பழ. நெடுமாறன்அவர்கள் தலைமையில் மாநாடு தொடங்கியது. திருவாளர்கள் வைகோ, திருமாவளவன், டி.ராஜா, கு.இராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி, பால் நியூமென், தோழர் தியாகு, மூத்த வழக்கறிஞர் சுரேஷ், அமெரிக்காவிலிருந்து செயல்பாட்டாளர் ரான் ரைட்னர் மற்றும் பல்வேறு இயக்க முன்னோடிகள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 40,000 - க்கும் அதிகமானோர் வந்து கலந்து கொண்டனர்.

கட்சி சார்பற்ற முறையில் தமிழீழத்திற்கு ஆதரவாகத் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் ஆர்வலர்கள் கலந்து கொண்ட மிகப்பெரிய மாநாடு இதுதான் எனக் குறிப்பிடலாம். ஆனால் கோவையில் 50 ஆண்டுகளில் பெய்யாத பலத்த மழை அன்று கொட்டித் தீர்த்ததால், தொடங்கிய சிறிது நேரத்திலேயே அம்மாநாடு நிறுத்தப்பட்டதுதான் பெரும் அவலம்.

முள்ளிவாய்க்காலை நினைவு கூரும் வண்ணம் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் திரு. பழ.நெடுமாறன் தஞ்சையில் உருவாக்கியுள்ள "முள்ளிவாய்க்கால் முற்றம்" சிங்கள இனவெறி அரசின் இன அழிப்பையும், போர்க் குற்றத்தையும் காலங்கடந்தும் அம்பலப் படுத்திக் கொண்டே இருக்கும் மாபெரும் நினைவுச் சின்னமாகத் திகழ்கிறது.

அதே போல், மே 17 இயக்கம் ஆண்டு தோறும் முன்னெடுக்கும் "முள்ளிவாய்க்கால்நினைவேந்தல்" சென்னை மெரினா கடற்கரையில் மிக எழுச்சியுடன் நடைபெற்று வந்தது. ஆனால், அரசின் நியாயமற்ற தடையால் அந்த நிகழ்வில் தற்பொழுது சிறிது பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தவிரவும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தமிழகம் எங்கும் பல்வேறு அமைப்புகள் ஆண்டுதோறும் பரவலாகக் கடைப்பிடித்து வருகின்றன.

முள்ளிவாய்க்கால் தரும் படிப்பினைகள்

தமிழகத்திலும், சர்வதேச அளவிலும் தமிழர்களின் நண்பர்கள் யார், பகைவர்கள் யார் என்பதை முள்ளிவாய்க்கால் நிகழ்வு தெளிவாக அடையாளம் காட்டி உள்ளது.

முள்ளிவாய்க்கால் படுகொலை நடைபெற்று முடிந்ததும், பச்சோந்திகள் சில மெல்லத் தலை தூக்கின. " படுகொலை நடந்து முடிந்து விட்டது. இனி மறப்போம், மன்னிப்போம். இது பகை மறக்கும் காலம்" என அருள்வாக்கு வழங்கத் தொடங்கினர். தமிழீழப் போராட்டத்தை எதிர்த்து அதை எவ்வளவு இழிவாகச் சித்தரிக்க முடியுமோ, அவ்வளவு கேவலமாக வெளிப்படுத்தியவர்கள் இவர்கள். அந்தச் சிங்களக் காடையர்களுக்கு இணையான துரோகத்தை இழைத்தவர்கள் இவர்கள். அறிவுலகிலும், சமூக வெளியிலும் நெளியும் இந்தப் புல்லுருவிகளை இனங்காண முள்ளிவாய்க்கால் நமக்கு உதவியுள்ளது.

தாய்த்தமிழகத்தின் பொறுப்பு

அடுத்து, தொடக்கத்திலிருந்தே தமிழீழ விடுதலைப் போருக்கு எதிரான நடவடிக்கைகளில் முனைந்து நின்றது, இந்திய அரசாங்கம்தான். ஈழ மக்களின் விருப்பத்திற்கு எதிராக 1987-ல் இந்திய - இலங்கை ஒப்பந்தம் போடப்பட்டது. அடுத்து அம்மக்களுக்கு எதிராக, சிங்களக் காடையர்களுக்கு ஆதரவாக, இந்திய அமைதிப்படை தமிழீழத்தில் எண்ணற்ற அட்டூழியங்களில் ஈடுபட்டது. புலேந்திரன் - குமரப்பா உள்ளிட்ட ஏழு போராளிகளின் சாவுக்குக் காரணமாக இருந்ததும், திலீபனின் அநீதியான மரணத்திற்குக் காரணமாக இருந்ததும் இந்தியாதான். தவிரவும், இன்று வரை சர்வதேச அரங்கில் இனப்படுகொலை புரிந்த சிறீலங்கா அரசுக்கு அனைத்து வகையிலும் ஆதரவு கொடுத்து அதைப் பாதுகாத்து வருவதும் இந்தியாதான். எனவே இந்திய அரசின் இத்தகைய தமிழீழ மக்களின் பாலான இன ஒதுக்கல் கொள்கையைக் கைவிடச் செய்ய, அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக மக்களுக்கு இருக்கிறது.

தமிழீழச் சிக்கலில் தெற்காசியச் சூழலில், இந்திய அரசின் பங்களிப்பு என்பது மிகவும் காத்திர மானது. எனவே இந்தியா, உதவி செய்யா விட்டாலும், ஈழத்தமிழர் நலனுக்கு எதிராகச் செயல்படாமல் அழுத்தம் தர வேண்டிய பொறுப்பு தமிழகத்திற்கு இருக்கிறது. அதற்கேற்ப இந்தியாவின் தெற்காசிய வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்.

தமிழீழ மக்களின் கடமை

அதே போல், தமிழீழமக்களின் முக்கியக் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, ஒன்றுபட்ட போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை தமிழீழத்தில் உள்ள மக்களின் கடமையாக இருக்கிறது.

(1) தமிழீழத்திலுள்ள சிங்கள இராணுவத்தைத் திரும்பப்பெறு!

(2) தமிழீழப் பகுதியைச் சிங்கள மயமாக்காதே!

(3) தமிழீழப் பகுதியில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணி நிலங்களை மீண்டும் தமிழர்களுக்கே வழங்கு!

(4) காணாமல் அடிக்கப்பட்ட தமிழர்கள், சிறையில் வாடும் தமிழர்கள் ஆகியோரை வெளிக்கொண்டு வா!

(5) மக்கள் மீது கருப்புச் சட்டங்களை ஏவாதே!

- என்பன போன்ற கோரிக்கைகளுக்கு ஆதரவாக மக்களைத் திரட்ட வேண்டிய கடமை தமிழீழ சனநாயக சக்திகளுக்கு உள்ளது.

புலம்பெயர் தமிழர்கள் பொறுப்பு

சர்வதேச அரங்கில், அரசுகள் பலவும் தமிழீழ விடுதலைப் போருக்கு எதிராகத்தான் உள்ளன. ஆனால் உலகளாவிய அளவில் சனநாயக சக்திகளும், அறிவுத் துறையினரும், பிற விடுதலை இயக்கங்களும், முற்போக்கு அமைப்புகளும் தேசிய இனங்களின் விடுதலைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றன. அத்தகைய சக்திகளின் ஆதரவைத் திரட்ட வேண்டிய பணி, புலம்பெயர்ந்த தமிழர்களின் முக்கியக் கடமையாக உள்ளது.

அதே போல்,

(1) தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை வெளிக்கொணர, பன்னாட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும்.

(2) தமிழீழத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

(3) சிறீலங்காவில் தமிழர் - சிங்களர் என இரண்டு தேசிய இனங்கள் உள்ளன என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும்.

- என்பன போன்ற கோரிக்கைகளுக்குச் சர்வதேச மக்களின் ஆதரவைப் பெறத் தமிழகத் தமிழர்களும், புலம் பெயர் தமிழர்களும் இணைந்து முயற்சிக்க வேண்டும்.

இன்றைய நிலையில் இறையாண்மை உள்ள அரசு, தமிழகத்திலும் இல்லை. தமிழீழத்திலும் இல்லை. இருப்பினும், எல்லாம் முடிந்து விட்டது எனச் சோர்ந்திடத் தேவையில்லை. நம்பிக்கை, மலைகளையும் நகர்த்த வல்லவை. எனவே இலக்கு நோக்கிய பயணத்தைத் தொடங்கியாக வேண்டும்.

பத்தாண்டுகள் என்பது தனி மனித வாழ்வில் மிக நீண்ட காலம். ஆனால், வரலாற்றில் அது ஒரு துளி ! இனப்படுகொலைக்கு உள்ளான தேசிய இனங்கள், 50/60 ஆண்டுகள் கழிந்த பிறகும் வரலாற்றில் உரிய நீதியைப் பெற்றுள்ளன. எனவே, நீதிக்கான நெடும் பயணம் தொடரப்பட வேண்டும்.

நமது இலட்சியம் வெற்றி அடைய, இடைக்காலத் திட்டம், தொலைநோக்குத் திட்டம் -- என இரண்டும் தேவைப்படுகிறது. அதற்குத் தமிழீழத் தமிழர், தமிழகத் தமிழர், புலம் பெயர்ந்த தமிழர் எனும் ஆயுத எழுத்தை வலுப்படுத்தினால், விடியலை வென்றெடுக்கலாம்.

- கண.குறிஞ்சி

http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/37360-2019-05-31-12-08-54

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.