Jump to content

நூறு கதை நூறு படம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 22 – தலைவாசல்

aathma-poster-2.jpg

தொண்ணூறுகளுக்கு முன்பிருந்த தமிழ் சினிமாவுடன் ஒப்பிடுகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்திலேயே வித்யாசமான மடைமாற்றும் நோக்குடனான திரைக்கதை முயல்வுகள் உருவாக்கப் படத் தொடங்கின. உதாரணமாகச் சொல்வதானால் ஒற்றைக் கதா முறையுடனான போலீஸ் படங்களும் கிராமத்துப் படங்களும் ஆங்காங்கே தொடக்கம் பெற்றன. இரண்டாயிரம் வரையிலான திசைவழிக்கான தொடக்கத் திருப்பங்களாக இவை அமைந்தன.

காதல் படங்கள் என்ற எப்போதைக்குமான வணிக நிர்ப்பந்த சினிமாவின் பின்புலமாக அதுவரை கையாளப்பட்ட கல்லூரி என்ற களனை முன்பில்லாத அளவுக்கு நிஜத்துக்கு நெருக்கமாய்ச் சென்று அவதானித்து எடுக்கப்பட்ட சொற்ப திரைப்படங்கள் காலம் கடந்து இன்றும் ரசிக்க வைக்கின்றன. அந்தவகையில் தமிழ் சினிமாவின் கல்லூரிக் களத்தினை மையப்புலமாக்கி எடுக்கப்பட்ட படங்களில் தலையாயதென்று தலைவாசல் திரைப்படத்தினை முன் வைக்கலாம்.தொலைக்காட்சியில் செல்வாக்குப் பெற்ற நீலா மாலா தொடரின் மாந்தர்கள் அதே ஹன்சாலயா பேனரில் சோழா பொன்னுரங்கம் விமலாரமணன் ஆகியோர் இணைந்து உருவாக்கிய முதல் படம் தலைவாசல். தென் தமிழகத்தின் புதியவர்களான செல்வா பாலபாரதி சந்தானம் தொடங்கிப் பலரும் ஒன்றிணைந்து உருவான படம் இது.

இதன் மூலம் அறிமுகமான செல்வா தன் அடுத்த படமான அமராவதியில் இதே பேனருக்காக அறிமுகம் செய்த நாயகன் தான் அஜீத் குமார். செல்வா அதன் பிற்பாடு பல வணிகப் படங்களை இயக்கினார். தலைவாசல் தமிழின் கலை அடையாளங்களில் ஒன்றாக தனித்ததற்கு ஒன்றல்ல பல காரணங்கள் உண்டு.கானா எனப்படுகிற பாடல்வகைமையை முன்பு அங்குமிங்கும் அதன் நீர்த்த வடிவங்கள் மாத்திரமே பயன்படுத்தப்பட்டு வந்த தமிழ் சினிமாவில் முன்பில்லாத வகையில் இந்தப் படத்தின் ஒரு அரூபப் பாத்திரமாகவே சித்தரித்திருந்தார் செல்வா. பாலபாரதி சந்திரபோஸ் அஷோக் ஆகியோர் பாடிய கானா பாடல்கள் அன்றைக்கு எல்லோரின் விருப்பங்களாக மாறின. இந்தப் படத்தின் வசனங்கள் அன்றைய காலத்தில் பெரும் பிரசித்தி பெற்றன.திரும்பத் திரும்ப உச்சரிக்க வைத்தன. போறியா போறதுக்கு முந்தி ஒரு கானா வுட்டுட்டு போ என்று விட்டில்பூச்சிகளின் விட்டேற்றி மனங்களை அத்தனை அழகாக முன்வைத்தது தலைவாசல் படம்.

இளையராஜாவின் இசைமீது பெரும் பற்றுக்கொண்ட பாலபாரதி தனித்துவம் மிக்க இசையமைப்பாளராக இதன் மூலம் அடையாளம் காட்டப் பட்டார். அமராவதி உள்ளிட்ட வேறு படங்களுக்கும் இசை அமைத்தார் என்றாலும் முதல் படத்தின் அதே ஒளிர்தலைப் பற்றிக்கொண்டு மாபெரும் இசைமனிதனாக வந்திருக்க வேண்டியவர். இந்தப் படத்தில் அதிகாலைக் காற்றே நில்லு பாடலை புதியவர் சந்தானம் எழுதினார். கானா பாடல்களை எழுதிய மூர்த்தி ரமேஷின் கைவண்ணத்திலேயே இந்தப் படத்தின் வசனங்களும் அமைந்தன. மற்ற பாடல்களை எல்லாம் வைரமுத்து எழுதினார்.வாசல் இது வாசல் தலைவாசல் பாடலையும் வாழ்க்கை என்பது பள்ளிக்கூடமா இல்லை பாடலையும்  உன்னைத் தொட்ட தென்றல் இன்று என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி பாடலையும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடினார்.

அந்தப் பாடலை அவரோடு இணைந்து பாடியவர் சித்ரா.அதிகாலைக் காற்றே நில்லு பாடல் எஸ்.ஜானகியின் அடைமழைக்குரலால் பெருகிற்று.வான் நிலவே என்றாரம்பிக்கும் பாடல் அஷோக் குரலில் மின்னிற்று.இந்தப் படத்தின் இசைப்பேழை இன்றளவும் தன் ஒலித்தலை நிறுத்தாத நல்லிசைப் பறவையாய் ஜொலிக்கிறது.நாச்சியப்பன் கல்லூரியில் இரு தரப்பு மாணவர்கள் வெளியிலிருந்து வந்து அவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யும் மனிதர்கள் அவர்களை இயக்கும் நகரத்தின் பயங்கர மனிதன் பீடாசேட் அவனது பேச்சிற்கு எதிர்ப்பேச்சு பேச திராணியற்ற அவன் மனைவி சாரதா அவர்களது ஒரே மகன் சிறுவன் சித்தார்த்.

கல்லூரி மாணவர்களின் உபசரிப்பில் வாழ்வை ஓட்டும் பழைய மாணவன் கானா பாபு அந்த ஊரில் விலைமகளிர்கூடம் ஒன்றை நடாத்தி வரும் பெண் அம்சா அவளுக்கு பாபு மீது ஒருதலையாய்க் காதல் இரு தரப்பு மாணவர்களில் ஒரு தரப்பின் நாயகன் சுதாகர் எனும் வேடத்தில் ஆனந்த் என இந்தப் படத்தின் மனிதர்கள் அனைவருமே நம்பகத்தின் வரம்புகளுக்குள் சுழல்பவர்கள் என்பது பெரும் ஆறுதல்.எப்படியாவது ப்ரின்சிபால் ஆகிவிட வேண்டுமென்று துடிக்கும் வைஸ் பிரின்சிபல் வேடத்தில் நெப்போலியன் அவரது இம்சை தாங்காமல் பழைய பிரின்சிபல் விலக மாணவர்கள் பிரச்சினைகளை சமாளித்து கல்லூரியைப் புத்தாக்கம் செய்யப் புறப்பட்டு வரும் புதிய பிரின்சிபல் சண்முக சுந்தரமாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர் மகள் அந்தக் கல்லூரியிலேயே படிக்க சேர்கிறாள்.அவரது தம்பி அசிஸ்டெண்ட் கமிஷனர்தன் சுயநலனுக்காக மாணவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் இரக்கமற்ற பீடாசேட்டின் பிடியிலிருந்து நாச்சியப்பன் கல்லூரி எப்படி மீள்கிறதென்பதே தலைவாசல் படத்தின் கதை. ராஜூவின் எடிடிங்கும் ராயின் ஒளிப்பதிவும் படத்திற்கு உறுதுணையாகின.பாடியறிந்த பாலுவை நடிப்பின் மூலமாக அறிவதற்கான சிறந்த வாய்ப்பாகவே இந்தப் படம் அமைந்தது.

வஸந்த் ஆனந்த் தலைவாசல் விஜய் சபீதா ஆனந்த் வைஷ்ணவி விசித்ரா சீனுமோகன் பரதன் தொடங்கிப் பலரும் சிறப்பாக மிளிர்ந்திருந்தார்கள் என்றாலும் இந்தப் படத்தின் மொத்த அறுவடையும் நாஸருக்குப் பின்னால் தான் சகலருக்கும் என்றானது. மனிதர் நம் கண்முன் பீடா சேட்டாகவே தோன்றினார் நம்பச் செய்தார். இன்றளவும் மனசுக்குள் பீடா சேட் என்று உச்சரித்தாலே நாஸரின் சகல பரிமாணங்களும் வந்து செல்கின்றன.அந்த அளவுக்கு ஸ்கோர் செய்தார் நாசர்.கல்லூரி என்ற பதத்தை இத்தனை அழகாக முன்வைத்த படம் இன்னொன்றைச் சொல்வது அரிது என்ற அளவில் தொண்ணூறுகளின் தேவகானம் தலைவாசல் படம்.

 

https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-22-தலைவா/

Link to comment
Share on other sites

  • Replies 127
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 23 – பில்லா

aathma-poster-2.jpg

சுரேஷ் பாலாஜி தயாரிப்பு ஆர் கிருஷ்ணமூர்த்தி இயக்கம் ஜி.ஆர் நாதன் ஒளிப்பதிவு சக்ரபாணி எடிடிங் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை கண்ணதாசன் பாடல்கள் ஏஎல் நாராயணன் வசனம்  ரஜனிகாந்த் ஸ்ரீப்ரியா பாலாஜி மேஜர் சுந்தர்ராஜன் தேங்காய் ஸ்ரீனிவாசன் மனோகர் அசோகன் மனோரமா ஏவிஎம் ராஜன்
1980 ஜனவரி 26 அன்று வெளியானது.

எதிர் மனிதர்களை விரும்பச் செய்வதில் காட்சி ஊடகமான திரைப்படத்தின் பங்கு அளப்பரியது. எம்ஜி.ஆருக்கும் ரஜினிக்கும் இடையிலான புறத்தோற்ற வித்யாசங்களே எம்ஜி.ஆருக்கு அப்புறமான தமிழ் சூப்பர் ஸ்டாராக ரஜினியை விரும்பச் செய்தது என்றால் சிலருக்குக் கசக்கக் கூடும். ஆனால் அதுதான் நிஜம். அதுவரை விரும்பத்தக்க என்பது பொத்தி வைக்கப்பட்ட நற்குணங்களின் தோரணமாகவே இருந்து வந்த நிலையில் கமல்ஹாஸன் தான் அடுத்த உச்ச நட்சத்திரமாக வருவார் என்பதும் நிச்சயிக்கப்படாத எழுபத்தி ஐந்தாம் ஆண்டுவாக்கில் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ரஜினிகாந்த் முதலில் சின்ன வேடங்கள் அப்புறம் வில்லன் வேடங்கள் என்று தன் ஆரம்பத்தை நிகழ்த்தினார். கிடைத்த வேடங்களிலெல்லாம் நடித்துக்கொண்டே தனக்கான ஒளிர்தலம் ஒன்றை நோக்கிப் பயணித்த ரஜினிகாந்த் ஆரம்ப நாட்களில்தான் சென்று சேரப் போவது சூப்பர்ஸ்டார் ஸ்தானம் என்று சத்தியமாக எதிர்பார்த்திருக்க மாட்டார். எண்ணாததை எல்லாம் நிகழ்த்திப் பார்ப்பதன் பேர்தான் இந்த வாழ்வென்பது. அதுதான் நிகழ்ந்தது.

220px-Billa_1980_poster-190x300.jpg

ஸ்டைல் வில்லன் ரஜினிகாந்த் இதுதான் ஆரம்பத்தில் தன்னைக் கவனிக்க ரஜினி கைக்கொண்ட ஆயுதம். அது எதிர்பார்த்ததைவிடப் பன்மடங்கு விளைச்சலைத் தந்த நல்விதையானது. ரஜினியின் கொஞ்சுதமிழ் வேகமான உச்சரிப்பு சிரிப்பு சிகரட் புகைக்கும் பாணி சண்டைக் காட்சிகளின்போது அவர் தனக்கே உரித்த விதத்தில் பிறரை எதிர்கொண்டது. மிக முக்கியமாக அவரது தலை முடி என எல்லாவற்றின் பின்னாலும் ஒரு மாய இழை கொண்டு கோர்த்தால் அது சென்றடையும் இடம்தான் வெற்றி சிகரம்.

முழுமையான விதத்தில் ரஜனிகாந்தை நிலைநிறுத்திய படமாக பில்லா வெளியானது. பில்லா ஒரு எதிர்நாயகனின் பெயர். முழுப்பெயர் டேவிட் பில்லா. அவன்தான் சர்வதேச குற்றவுலகத்தின் சக்கரவர்த்தி. அவனை எல்லா தேசத்தின் போலீஸூம் தேடி வந்தன. அவனும் அவனது நெருக்கமான உள்வட்ட சகாக்களும் இந்தியாவில் இருக்கையில் கூட்டத்தை விட்டுவிட்டு திருமணம் செய்துகொண்டு தனித்த வாழ்க்கை நோக்கி செல்ல முயலும் ராஜேஷைக் கொல்கிறான் பில்லா. அவனது தங்கை ராதாவும் அவனது காதலி ரீனாவும் பில்லாவின் எதிரிகளாகின்றனர். ராதா பல தற்காப்புக் கலைகளை எல்லாம் கற்றுக்கொண்டு பில்லாவின் குழுவில் இணைகிறாள். அவளை பில்லா நம்புகிறான். பில்லாவைத் தேடும் போலீஸ் டீஎஸ்பி அலெக்சாண்டர் பல முறை அவனைப் பிடிக்க முயன்று தவற விடுகிறார்.

கடைசியாக போலீஸ் துரத்தலில் பில்லா கொல்லப்படுகிறான். அவனது பிணத்தை டிஎஸ்.பி யாருமறியாமல் புதைத்துவிடுகிறார். எங்கோ எப்போதோ சந்தித்த ராஜப்பா என்பவன் அச்சு அசலாக பில்லாவின் முகசாயலில் இருந்ததை நினைவுகூர்ந்த அலெக்சாண்டர் அவனை பில்லாவாக மாற்றி அதே குழுவிற்குத் தன்னுடைய நபராக அனுப்பி வைக்கிறார். ராஜப்பா என்றறியாத ராதா அவனைக் கொல்லத் துடிக்கிறாள். தன் மனைவி மரணத்திற்கு காரணம் டி.எஸ்.பி என்று அவரைப் பழிவாங்கத் துடித்தபடி ஜெயிலில் இருந்து விடுதலையாகிறான் ஜேஜே.

பில்லாவாகத் தன்னை நம்பும் குழுவினருக்கு சந்தேகம் வராதபடி டி.எஸ்பியின் திட்டத்தை அரங்கேற்றி சர்வதேச குற்றவாளிகளையும் கூடவே இண்டர்போல் அதிகாரியாக நடித்துக் கொண்டிருக்கும் கயவன் ஒருவனையும் பிடித்துத் தருகிறான் ராஜப்பா. மீண்டும் தன் சுயவாழ்வு நோக்கித் திரும்புவதோடு நிறைகிறது திரை.

ரஜினி என்ற ஒற்றைச் சொல்லை எடுத்துவிட்டு இந்தத் திரைப்படத்தை கற்பனை செய்யவே முடியாது. இதே படத்தை வேறொரு வண்ணத்தில் முற்றிலும் வெளிநாடுகளில் நடக்கிற கதையாக மாற்றி அஜீத்குமார் நடிக்க இருபத்தி ஏழு ஆண்டுகளுக்கு அப்புறம் பில்லா என்ற அதே பெயரில் மீவுருவாக்கம் செய்தார் விஷ்ணுவர்தன். ஆனால் அதற்கும் பழைய பில்லாவுக்கும் பெயரும் கதையின் அடி நாதமும் மட்டும்தான் ஒற்றுமை என்ற அளவுக்கு வெவ்வேறான அனுபவங்களையே இரண்டு படங்களும் முன்வைத்தன. பில்லா முதல் உருவேகூட இந்தியில் டான் என்ற பேரில் அமிதாப் நடித்த படத்தின் மறுவுருதான் என்றாலும் பில்லாவின் செல்வாக்கு ரஜினியின் திரைவாழ்வில் முக்கிய ஒளியாய் பெருகிற்று.

Art-350-300x300.jpg

ரஜினிகாந்தின் நாயகத்துவத்தைக் கட்டமைத்த அவரது வாழ்வின் முதல் இருவேடப் படமாக பில்லா அமைந்தது. ரஜினியின் ஆரம்பகால வண்ணப்படங்களில் பில்லாவுக்கு முதன்மையான ஒரு இடம் உண்டு. சண்டை மற்றும் பாடல் காட்சிகளில் அழகிய வித்தியாசங்களை எல்லாம் தந்து மகிழ்வித்தார் ரஜினி. இரவுக்கும் பகலுக்கும் இடையிலான அத்தனை வித்தியாசங்களை, ராஜப்பாவும் பில்லாவுமாக வழங்கித் தன் திரைவாழ்வின் சிறந்த படமொன்றை நிகழ்த்தினார்.

எம்.எஸ்.விஸ்வநாதனின் பாடல்கள் இன்று அளவும் மீண்டுகொண்டே இருக்கக்கூடிய கரையோரத்து அலைகளாகவே பில்லாவை நினைவுபடுத்துவதைச் செய்துகொண்டே இருக்கின்றன. மை நேம் இஸ் பில்லா தேவமோதிரமாகவே மனமென்னும் வாத்தியத்தை விடாமல் இசைக்கும் விரலொன்றில் மிளிர்கிறது.

இந்தப் படத்தின் குணச்சித்திர நடிகர்கள் மேஜர் சுந்தரராஜன், பாலாஜி, மனோகர், அசோகன், தேங்காய் சீனிவாசன், மனோரமா, மற்றும் நாயகி ஸ்ரீப்ரியா, அனைவரும் தங்கள் நடிப்புத் திறமையின் சிறந்தவற்றை வழங்கி இந்தப் படத்தைச் சிறப்பித்தார்கள். மொத்தத்தில், வில்லத்தனத்திலிருந்து நாயகராஜாவாக நடைபோடுவதற்கான செந்நிறக் கம்பளமாகவே பில்லா திரைப்படத்தை ரஜினியும், இன்றளவும் அவரை விரும்புவதைக் கைவிடாத பெருங்கூட்டமொன்றின் முதற்கூட்டமும் பயன்படுத்திக் கொண்டார்கள்.

பில்லா நில்லாமழை.

தொடரலாம்.

 

https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-23-பில்ல/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 24 – இருவர்

aathma-poster.jpg

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் மணிரத்னம் உருவாக்கிய இருவர் தமிழ் சினிமாவின் நெடுவரலாற்றில் நினைவுகூரத்தக்க ஒரு முக்கிய சினிமா. புனைவுக்கும் நிஜத்துக்கும் நடு இழையை நிரடுவதன் மூலம் சிற்சில இடவல மாற்றங்கள் சாத்தியப்படும். அதனூடாக, ஒரு சிறப்பான திரைக்கதையை எழுதிவிட முடியும் என்பதற்கான உதாரணம் ’இருவர்’. பயோபிக் எனப்படுகிற அப்படியே தனிமனித வரலாற்றைத் துல்லியம் குன்றாமல் திரைப்படுத்துகிற படங்கள் யூகத்துக்கு அப்பாற்பட்ட சலிப்பொன்றை நிகழ்த்துவது தவிர்க்க முடியாதது. பாரதியின் வாழ்க்கையைப் படமாக்கும்போது சுதந்திரத்துக்குப் பின் அமைந்த அமைச்சரவையில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக அவர் பதவி வகித்தார் என்று எடுக்க முடியாது. அல்லது அப்படி எடுப்பதற்கான கதா நியாயத்தைச் சரிவரச் செய்யவாவது வேண்டும். புனைவென்பது இனி நிகழப்போகும் உண்மையாகக் கூட இருக்கலாம் என்பது அதன் வசீகரம்.

Iruvar-Tamil-2016-500x500-300x300.jpg

கொட்டை எழுத்துக்களில் இது உண்மைக் கதை அல்ல என்றுதான் படத்தை ஆரம்பித்தார் மணிரத்னம். புனைவு இங்கே திருத்தம் செய்யப்பட்ட உண்மையாக இருந்தது. மகா மனிதர்களின் வாழ்வை அவற்றின் பக்கவாட்டுப் பின்புலங்களுக்குள் சென்று பார்ப்பதான நுட்பமான அனுபவமாக இருவர் படத்தைச் சொல்ல முடியும். Nuances எனப்படுகிற நுண்வெளிகளை எல்லாம் அழகான மாலை போல் கோர்த்திருந்தார் மணிரத்னம். சர்வ நிச்சயமாய் இருந்த ஒருவரும் அப்போது விஞ்சிய ஒருவரும் மொத்தத்தில் ஆகச் செல்வாக்கான இரண்டு நபர்களே இருவர். மன ஓட்டங்கள், பாவனைகள், பழக்க வழக்கங்கள், முகக் குறி, மற்றும் தனக்கு மிக நெருக்கமானவர்களுக்கு மட்டும் கிடைக்கச் செய்கிற சொந்த உளவியலின் அசல் வெளிப்பாடுகள். இவற்றையெல்லாம் பார்த்துப் பார்த்து வழங்கினார் இயக்குனர்.

ப்ரகாஷ் ராஜ் மற்றும் மோகன்லால் இருவருக்குமிடையிலான நட்பும் நெருக்கமும் மெல்ல விரிசலாக மாறுவதாகட்டும் முரண்களும் அடுத்தடுத்த நகர்தல்களும் பிரிதலை நோக்கி இருவரையும் செலுத்தும் போது கையறு நிலையில் தவிக்கும் மௌனமாகட்டும் உறவுகளும் திசைகளும் வெவ்வேறான பிறகு யதார்த்தமான சந்திப்புக்களின் எதிர்பாரமையைக் கண்களில் பிரதிபலிப்பதாகட்டும் கடைசியில் ஒருவரை ஒருவர் இழந்த பிறகு தனியே தவிக்கும் தமிழ்ச்செல்வனாக ஆர்ப்பரிக்கும் மனதின் நினைவுகளின் அலையாட்டத்தில் தானும் தனிமையுமாய்த் தகிக்கும் நட்பின் வெம்மை தாளாமல் தவித்துருகுவதிலாகட்டும் ப்ரகாஷ் ராஜ் தனக்குக் கிடைத்த பாத்திரத்தின் நுட்பமான குணாதிசயங்களைப் பிரதிபலிப்பதில் வென்றார் என்றால் தகும்.

உடனிருந்த நண்பனை எதிராட வேண்டிய நிர்ப்பந்தம் தொடங்கி விதியின் வழி நகரும் நதியென்றே தன் வாழ்வு மீதான பற்றுதலைக் கொண்ட ஆனந்தனாகத் தன் கேசம் தொடங்கிக் கண்புருவம் வரைக்கும் உடல்மொழியாலும் முகவன்மையாலும் பாத்திரத்துக்கு நியாயம் செய்தார் மோகன்லால்.மேலும் அவரது இதழ்களும் ஓரக்குறுநகையும் கூட இந்தப் படத்தில் பெருஞ்சுமை கடத்திற்று என்பது நிசம்.அடுத்த நிலத்தின் தமிழ் உச்சரிப்பும் எல்லாவற்றிலும் வென்றான் என்று கோடியில் ஒருவனுக்குக் கிடைக்கும் பெருவரம் தன் வாழ்வு என்பதை உள்ளார உணர்ந்த நாயகராஜாவாக மோகன்லால் ஆனந்தனாகவே மாறினார்.

நாசர், ஐஷ்வர்யா ராய், தபு, ரேவதி, ராஜேஷ், மேஜர் சுந்தரராஜன், என்று ஆனமட்டும் தங்கள் பிரபல செல்வாக்கை அழிக்க முயற்சித்து வென்ற நட்சத்திரப் பட்டாளம் இந்தப் படத்தின் பலம். சாபு சிரிலின் கலை இயக்கம். சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு, சுகாசினி, சுசி கணேசன் ஆகியோரின் வசனங்கள், வைரமுத்துவின் கவிதைகள் மற்றும் பாடல்கள் இவற்றோடு ஏ.ஆர்.ரஹ்மான் இசைத்தவற்றில் அதுவரைக்குமான ஆகச்சிறந்த படம் என்று நான் இருவரை முன்வைப்பேன். ஒரு கடிதத்தின் தபால் தலையைப் போல இந்தத் திரைப்படத்தின் மகா அடையாளம் இசை. எழுத்தின் மூலமாக மிக எளிதாகத் தொகுக்கப்பட்ட ஒரு நெடிய காலத்தின் உப அடுக்குகளை எல்லாம் நிரூபிக்க வேண்டிய பெரும் பொறுப்பு, கலை மற்றும் ஒளிப்பதிவு இரண்டு துறைகளைச் சாரும். ஒரு உப்புக் கூடினாலும் சுவை கெடும் என்கிற அளவுக்கு பயப் பெருக்கெடுத்தலாகவே இப்படியான படங்களுக்கு இசைக்க முடியும். பாடல்கள், வரிகள், பாடல் இசை, பாடிய குரல்கள், பின்னணி இசை, என எல்லாமுமே இட்டு நிரப்பாமல், முடிந்தவரை முயன்று பார்க்காமல், பார்ப்பவர்கள் கண்ணைக் கட்டி, மாபெரிய அனுபவ நம்பகத்தைத் தன் இசைக் குறிப்புகளால் நிகழ்த்தினார் ஏஆர்ரகுமான்.

IMG_6263-300x216.png

இசை என்பது உண்மையேதுமற்ற பொய். புனைவு என்று வருகையில் ஒரு செவிலித் தாய் போல், தேவைக்கு அதிகமான ஆதுரத்தைப் படைப்பின் மீது பொழியத் தலைப்படுவது அதன் இயல்பு. சரிபார்த்தலுக்குப் பின்னதான யூகத்துக்கு அப்பாற்பட்ட மற்றும் தவிர்க்க முடியாத நேர்தல் பிழையாகவே இசையின் திரிபுகள் பலமுறை நிகழ்ந்ததை உணர முடியும். அந்த அடிப்படையில் இந்தியத் திரையிசை முயல்வுகளில் அரிதான உன்னதங்களில் ஒன்றெனவே ’இருவர்’ ஆல்பத்தைச் சொல்ல முடியும். புனைய முடியாத ஒற்றைகளில் ஒன்றுதான் குரல் என்பது. மனோ, ஹரிஹரன் ஆகிய இரு குரல்களை இந்தத் திரைப்படம் கையாண்டிருப்பதன் திசைவழிகளை ஆராய்ந்தால் ஒரு அபாரம் புரிபடும். பிரகாஷ்ராஜ் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும், அவரது கதாபாத்திரத்தில் நாசர் நடித்திருந்தால் இந்தப் படம் இன்னும் சிறந்திருக்கும் என்பது என் எளிய அபிப்ராயம். நாடறிந்த நிஜங்களைக் கையிலெடுத்துக் கொண்டு திரையரங்கத்துக்கு வந்த பொதுமக்கள் திருத்தி அமைக்கப்பட்ட புனைவின் மலர்களை ஏமாற்றங்களாக உணர்ந்தது இந்தப் படத்தின் வணிக வருகையைத் தோல்விக்கு உட்படுத்தியது. ஆனாலும் உன்னதம் அடுத்த காலத்தின் ஆராதனையாக இந்தத் திரைப்படத்தை மாற்றி வைத்திருக்கிறது.

இருவர் நிஜத்தின் நிழலுரு

 

 

https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-24-இருவர்/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்:25 – அவதாரம்

aathma-poster.jpg

ஒரு கலையின் ஆரம்பக் காலம் அபரிமிதமான அமைதியுடனும் முன் தீர்மானங்களுடனும் அமையவல்லது. அதன் உச்சகாலம் வரைக்குமான இருத்தலும் வெற்றி தோல்விகள் எல்லாமும் அர்த்தமுள்ள பேரேட்டில் இடம்பெறத்தக்கது.எந்தக் கலையாக இருந்தாலும் அதன் அழிதல் காலம்தான் மிக முக்கியமானது. ஒரு கலை அழியும் விதமும் அதன் வழிகளும் க்ரூரமானவை. எப்படியாவது அதனைத் தப்புவிப்பதற்காக அந்தக் கலையைத் தொழுபவர்கள் தங்கள் உடல் பொருள் ஆவி இத்யாதிகளை இழந்து முயன்றபோதிலும் அந்தக் கலையானது அதற்கு ஈடு கொடுத்து உடனோடுவதிலிருந்து மெல்ல தன்னை விடுவித்துக்கொள்ளும். இதனை வஞ்சகமென்று தனியே சொல்லத் தேவையில்லை. கலையின் அழிதல் அதனளவில் நீதியற்ற வஞ்சகத்தின் தீர்ப்புக்கூறல்தான்.

Art-350-1-300x300.jpg

உலகத்தின் சரித்திரத்தில் பல்வேறு நியதிகள் உண்டு. மானுட வாழ்வின் அழிதல் அதன் பூர்த்தி. கலை ஒன்றின் அழிதல் எந்தப் பூர்த்தியுமற்றது. ஒரு கலை மெல்லச் செல்லரித்து வேறொரு மற்றொன்றாய் மறுமலர் காலம் காண்பதும் உண்டு. நம்புவதற்காகாத தனி மனித சாதனைகள் சந்ததிகளின் வழியே கசிந்து வரத் தலைப்படுகிற முன்காலக் கூட்டமொன்றின் கலாபலனாக இருந்துவிடவும் வாய்ப்புண்டன்றோ? உலகில் மொழியும் கலைகளும் அழிவது க்ரூரத்தின் விவசாயமன்றி வேறில்லை. மதம் தன்னைத் தக்கவைத்துக் கொள்வதற்காகக் கலைகளைப் பலி தருவதும் நிகழ்ந்திருக்கிறது. ஒரு கலையின் வாழ்காலத்தில் அது மதத்தின் முன் சேவகனாக இருக்க நிர்ப்பந்திக்கப் படுகிறது. அமைப்பு அதிகாரம் இவற்றை எந்தக் கலைவடிவம் எதிர்க்கிறதோ அது மாற்றங்களுக்குப் பின்னால் அதன் முந்தைய எதிர்ப்பியல்புக்காகவே கட்டுப்படுத்தப்படுவதும் அழிவதும் கூட நிகழ்ந்திருக்கிறது.

தன்னைக் கலைஞன் என நம்பத் தொடங்குகிற எவனும் சராசரியின் எந்த இருப்பிடத்திலும் தன் மனதார அமர்வதே இல்லை. மெல்ல நசிவதற்கென்றே மனமும் உடலுமாய்த் தன்னைக் கொளுத்தியாவது தன் கனவைத் தப்பவைக்கிற கலாமுயல்வுகளில் ஏதேனுமொன்றிற்குத் தன் ஆவியைப் பலிதந்தவர்கள் எண்ணிக்கை பல லட்சமிருக்கும். உலகம் அப்படியானவர்கள் மீது பரிவும் கசிவுமாய்த் தானிருப்பதாகக் காட்டிக்கொள்வது ஒரு பாவனை. உண்மை அர்த்தமற்றது மாத்திரம் அல்ல. அது கருணையற்றதும் கூட.

வீழ்பவர்களுக்கான வரலாறு எளியது. வெற்றிக்கதைகளின் எதிராடல் அவர்களுக்குரியது. ஆனாலும் களம் கண்ட வகையில் வெற்றியும் தோல்வியும் இரு திசைகள் மட்டுமே. இறுதிப் போட்டியில் தோற்கிற அணிக்கென்று பரிதாபத்தின் சுழற்கோப்பை தனியே தரப்படுவதுண்டு. அதனை உரமாகக்கொண்டு அடுத்தமுறை நீ முதலிடம் பெறுவாயாக என்று கண் கசியும் பார்வையாள ரசிக ஜனக் கூட்டம். சாமான்யர்களின் சரித்திரம் வேறு வகையில் அடங்குவது. கூட்டத்தில் நிறைந்து நின்று கரவொலி எழுப்புகிற மகா மனங்கள் அவர்கள். இவர்களுக்கென்று தனித்த தோல்வியின் ரத்த அழுகை இருப்பதில்லை. காலம் என்ற வசியவாதியின் கணிதம் புரிபடாமல் நாளும் தனக்கென்று தாயமொன்று விழுந்திடாதா என்று நித்தியத்தின் எல்லாக் குதிரைகளையும் இழந்துவிட்ட பிற்பாடு மானசீகத்தினுள்ளே அயர்ந்தபடி மரணத்தை எதிர்நோக்குகிற வேறொரு தரப்பு உண்டு. அவர்கள்தான் வாய்ப்புக் கிடைக்காத திறமைசாலிகள். நானெல்லாம் எங்கே எப்படி இருக்க வேண்டியவ்ன் தெரியுமா என்ற ஒற்றை இழையைக் கைப்பற்றியபடி நாளும் இரவும் கைநழுவிப் போவதையே வாழ்வெலாம் நோக்கியபடி தன் மனதின் கனம் தாளாமல் வெறுமையை உபாசிக்கிற அவர்களில் ஒருவன் கதை தான் அவதாரம். அவன் பெயர் குப்புசாமி.

அந்தவகையில் கலையின் கைவிடுதல் காலத்தின் கதைகள் கண்ணீர் ததும்பச் செய்பவை. அப்படியான ஒரு கைவிடுதல் காலத்தில்தான் அவதாரம் படத்தின் கதைவிரிதல் தொடங்குகிறது. கூத்து என்கிற கலைவடிவம் தன் பெருவாரி செல்வாக்கை இழந்து கொண்டிருக்கக் கூடிய கடின காலத்தில் பாண்டி வாத்தியாரின் கூத்துக்குழுவில் தனக்கொரு இடம் கிட்டாதா என்று ஏங்கியபடி அவர்களை நாளும் சுற்றிச்சுற்றி வருபவன் குப்புசாமி. வாத்தியாரின் மகள் கண் பார்வை அற்ற பொன்னம்மா. அவள் மாத்திரமே குப்புசாமியின் ஈடுபாட்டை நன்கு உணர்ந்தவள். அவனது திறமைகள் மீது நம்பிக்கை கொண்டவளும் கூட. மற்றவர்களைவிடவும் பாசி என்கிற முக்கிய நடிகன் மனம் வைத்தால்தான் தனக்கொரு வேடம் கிடைக்கும் என அவனுக்கு ஏவல் செய்து அவனது அன்பை எப்படியாவது பெற்றுவிட மாட்டோமா என்று ஏக்கத்தோடு தொடரும் உப பறவையாகவே பாசியைத் தொழுதபடி திரிகிறான் குப்புசாமி. பாசி ஒரு உல்லாசி. செல்வத்தின் செழிப்பும் திறமை தந்த கர்வமும் பல தொழில் பார்க்கும் செருக்கும் யாரும் கண்டிக்க ஆளில்லா சூழலும் அவனைக் குடி புகை மற்றும் விலைமாதரைத் தேடுவது என நாளும் தன் இஷ்டத்துக்கு அலைபவனாக்குகிறது. .

பாண்டி வாத்தியார் எத்தனையோ அறிவுரைகள் கூறியும் கூத்தின் மீது அடவு கட்டி ஆடுவதன் மீது தான் கொண்ட  மாறாப் பித்தின் துளியும் குறைத்துக் கொள்ளாத குப்புசாமியை ஒரு கட்டத்தில் மகள் பொன்னம்மாவின் அன்பு நிர்ப்பந்தம் காரணமாகக் குழுவில் இணைத்துக் கொள்கிறார்.குப்புசாமி தன் கனவின் முதல் கதவைத் திறந்த திருப்தியுடன் அவர்களில் ஒருவனாகிறான்.பெண்கள் குளிக்கிற படித்துறைக்கு அத்துமீறிச் செல்லும் பாசி அங்கே தனியே குளித்துக் கொண்டிருக்கிற பெண்ணை வமபிழுக்கிறான்.அவளோ தண்ணீரின் அடியிலிருந்து சேற்றை எடுத்தள்ளி பாசியின் முகத்தில் பூசி விட்டுத் தப்பிவிடுகிறாள்.அவளைத் துரத்துகிற பாசியை குளிக்க வருகிற பிற பெண்கள் எள்ளி நகைக்கின்றனர்.அங்கே வரும் குப்புசாமியை விட்டு அவர்களின் துணிகளை எடுத்து வரச் சொல்கிறான் பாசி.அதற்கு முயலும் குப்புசாமியை பெண்கள் சப்தமிட்டு ஊரார் பிடித்து அடிக்கின்றனர்.தன்னை அப்படிச் செய்யத் தூண்டியது பாசி தான் என்றும் தன்னால் அவனை எதிர்க்க முடியவில்லை என்றும் கூத்தில் நடிப்பதற்காக பாசியைத் தான் தொடர்ந்து அவனுடைய குணக்கேடுகளைப் பொறுத்துக் கொண்டதாகவும் பொன்னம்மாவிடம் அழுகிறான் குப்புசாமி.தன் தந்தையிடம் அவற்றை தைரியமாக சொல்கிறாள் பொன்னம்மா தானில்லாமல் கூத்து நடக்காது எனச் செருக்கோடு பேசும் பாசிக்கும் பாண்டி வாத்தியாருக்கும் முட்டிக் கொள்கிறது முரண்.தன் பெருமையைப் பேசியபடியே இன்னும் எத்தனை காலத்துக்கு கூத்துன்னு இருப்பீங்க எதுனாச்சும் வேலை பாருங்கய்யா என்று ஏளனம் பேசியபடி தனக்கும் அவர்களுக்கும் பொருந்தாது என்று கிளம்பிச் செல்கிறான் பாசி.தன்னால் தான் கூத்துக்குழுவினுள் விரிசல் வந்தது என்றெண்ணி பாசியைத் தனியே சந்தித்து மன்னிப்பு கோருகிறான் குப்புசாமி.அவனை புரட்டி அடித்துவிட்டுக் கிளம்பிப் போகிறான் பாசி.

hqdefault-1-300x225.jpg

வழக்கமாக பாண்டி குழுவிற்குக் கூத்து வாய்ப்புத் தரும் அசலூர்த் திருவிழாவிற்கு அழைப்பில்லாத போதும் கிளம்பிச் செல்கிறார்கள்.அந்த வருடம் தர்மகர்த்தா மாறி எட்டூரில் இருட்டில் சாராயம் விற்கும் புது செல்வந்தன் ஒருவன் தர்மகர்த்தாவானதால் கூத்தை நீக்கி விட்டு ஆடல்பாடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பதாக சொல்லி உணவுக்கு அமர்ந்த பாண்டி குழுவினரை அங்கே வரும் பாசி அவமானப் படுத்துகிறான்.பாசிக்கு ஏற்றிக்கொண்டு புது தர்மகர்த்தாவும் பேசுகிறான்.அத்தனை அசிங்கத்தையும் சகித்துக் கொண்டு ஊர்த்திருவிழாவில் ஒரு ஓரமாகத் தங்கள் கூத்தை நிகழ்த்தி விட்டுச் செல்வதாக இறைஞ்சி அனுமதி வாங்குகிறார் பாண்டி.அப்படியே நரசிம்மாவதாரக் கதையை நிகழ்த்தும் போது அரிதாரம் பூசி அமர்ந்த நிலையிலேயே தன் உயிரை விட்டுவிடுகிறார் பாண்டி வாத்தியார்.ஊருக்குத் திரும்பியதும் கூத்துக் குழுவின் அனைவரும் ஒவ்வொரு காரணத்திற்காகக் கூத்தைக் கைவிட்டுக் கிளம்புகின்றனர்.கூத்துக்குழு கலைகிறது.
எஞ்சுவது பொன்னம்மாவோடு குப்புசாமி மட்டும் தான்.

மெட்ராஸூக்குச் சென்று சினிமாவில் நடிக்கும் முடிவோடு ஊரார் உற்றாரிடம் சொல்லி விட்டு பொன்னம்மாவை அழைத்துக் கொண்டு பஸ்ஸில் புறப்படுகிறான் குப்புசாமி.எடுத்த எடுப்பிலேயே நகரம் அவர்களை ஒரே விழுங்காக விழுங்குகிறாற் போல் அயர்த்துகிறது.
அன்றைய இரவு ஒதுங்க இடம் கிட்டாதாவென்று அலைபவர்களுக்கு ஒரு பெண் வழக்கறிஞர் தன் வீட்டில் இடம் அளிக்கிறார்.அந்த இரவை அங்கே கழித்து விட்டு ஊருக்குத் திரும்பலாம் எனப் பொன்னம்மா சொல்வதைக் கேட்காமல் நடிப்பு லட்சியத்திற்காக தனக்காக உட்ன வருமாறு சமரசப்படுத்தி அழைத்துச் செல்கிறான்.வழியில் நளினமான தோற்றத்திற்கு மாறி இருக்கிற பாசியை பார்க்கிறார்கள்.அவன் தன்னோடு அவர்களை அழைத்துச் சென்று உபசரிக்கிறான்.தனக்குத் தெரிந்த இயக்குனரிடம் சொல்லி வாய்ப்பு வாங்கித் தரச் சொல்வதாக வாக்குத் தருகிறான் பாசி.அவனை அப்படியே நம்புகிறான் குப்புசாமி.நடிப்பாசை அவன் கண்ணை மறைக்கிறது.பொன்னம்மா பல முறை ஊருக்குத் திரும்பிவிடலாம் என்று இறைஞ்சியும் அவளை அமர்த்திவிட்டு நடிப்பு வாய்ப்புத் தேடி பாசியோடு கிளம்பிச் செல்கிறான்.குப்புசாமியை ஷூட்டிங் நடக்கும் இடமொன்றில் இருத்தி விட்டுத் தான் மட்டும் ஆட்டோவில் கிளம்பி வீட்டுக்கு வருகிறான் பாசி.

வீட்டுக்குத் திரும்பி வரும் குப்புசாமி பொன்னம்மா இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்கிறான்.அவளைக் கொன்றது குப்புசாமி தான் என்று தனக்கு சாதகமான காவலதிகாரி துணையுடன் குப்புசாமி பைத்தியம் என்றும் நீதிமன்றத்தில் நிறுவுகிறான் பாசி.தன் வெள்ளந்தித் தனத்தால் அதிகாரம் அமைப்பு லஞ்சம் என எதையும் எதிர்க்க திராணியற்ற குப்புசாமி சிறை செல்கிறான். அங்கே இருந்து தப்பி வரும் குப்புசாமியை காப்பாற்ற வழக்கறிஞர் ஸ்ரீவித்யா முயல்கிறார். பாசியை தன் மறைவிடத்துக்கு வரவழைக்கும் குப்புசாமி அவனை நரசிம்ம வேடமாக மாறிக் கொன்றழிக்கிறான்.

அவதாரம் தமிழில் கொண்டாடப்படுகிற நவீனங்களில் ஒன்றாக உறைந்திருக்கும் சினிமா.இந்தப் படத்தின் மூலமாக நூற்றுக்கணக்கான வேடங்களில் நடித்து தமிழின் முக்கிய குணச்சித்திர நடிகராக விளங்கும் நாஸர் இயக்குனராகத் தன் இன்னொரு கனவை மெய்ப்பித்தார்.இளையராஜா இந்தப் படத்திற்கு உன்னதமான பின்னணி இசையை பாடல்கள் இசையை வழங்கியதோடு பாடலாசிரியராகவும் பல பாடல்களை எழுதி நாஸருக்குப் பாடல்குரலாகத் தானே பாடி அவதாரத்தின் கட்டமைப்பில் பெரும்பங்கு வகித்தார்.இதன் நடிகர்கள் வெண்ணிற ஆடைமூர்த்தி சச்சு டெல்லிகணேஷ் முரளிகுமார் தியாகு அனைவருமே தங்கள் பங்கை உணர்ந்து அளவீடு மிகாத மென் மழையென நிறைந்தார்கள்.

இந்தப் படத்தின் மூலமாக பாலாசிங் தன் கணக்கைத் தமிழில் தொடங்கினார்.பாசியாகவே மாறி நடிப்பின் உன்னத உயரங்களைத் தன்னாலான அளவு நிரடினார் என்றால் தகும்.ரேவதி கண் தெரியாத பொன்னம்மாவாக இந்தப் படத்தில் அத்தனை நெகிழ்வுக்குரிய நடிப்பை நல்கினார்.ஏற்கனவே கைகொடுக்கும் கை முதலிய படங்களில் கண் தெரியாதவராக நடித்திருந்தாலும் அவதாரம் அவரது நடிக வெளிப்பாட்டில் மாபெரும் பாத்திர பங்கேற்பை நிறைவேற்றிய படம்.

அவதாரம் வெளியாகி இருபத்தி ஐந்து ஆண்டுகளாகின்ற நிலையில் இன்றைக்கு இந்த இதே படம் இன்னொரு கனத்தோடு பார்வை முன் விரியக் கூடும்.காலம் முன் நகர்ந்து செல்லச் செல்ல அவதாரம் போன்ற அபூர்வங்கள் தங்களை மேலெழுதிக் கொள்ளக் கூடியவை.காலத்தின் சாட்சிக்குரலாகத் தனித்தொலிப்பவை.மறக்க முடியாத நவீனகதை

 

https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்25-அவதாரம/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்:26 – ஆவாரம்பூ

aathma-poster-3.jpg

ஒரு சின்ன இழையை வைத்துக்கொண்டு யூகங்களுக்கு மத்தியிலான ஒரு தங்க நிஜத்தைச் சென்றடையக்கூடிய அல்லது சென்று கிளைக்கக்கூடிய திரை முயல்வுகள் வணிகப் பிடியிலிருக்கும் யாதொரு நிலத்தின் சினிமாவிலும் அபூர்வமே. இப்படி இன்னும் கொஞ்சம் சொல்லிப் பார்க்கலாம். எங்கே வணிகப் பற்றுதல் அல்லது அழுத்தம் குறைவாக இருக்கிறதோ, அங்கே அடிக்கடி அபூர்வங்கள் நிகழக்கூடும். மராத்தி, பெங்காலி, கன்னட, மலையாள மொழிவாழ் சினிமாக்களில் இத்தகைய படங்கள் அதிகம் நிகழ்ந்தன. நெடுநாள் ஓட்டம், மக்கள் அபிமானம், வசூல், ஆகியவை கலைக்கு எதிரானவை எனக் கொள்ளத் தேவையில்லை. இவற்றுக்கு மத்தியில்தான் இலைகளோடு மலர்கிறாற் போல் கலை விளையும்.

maxresdefault-1-300x169.jpg

இங்கே கவனிக்கத்தக்கவை கலைவிழையும் மனங்கள் மாத்திரமே. பரதன் அப்படியான பிடிவாதிகளில் ஒருவர். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில்தான் எடுத்த ‘தகரா’ எனும் சின்னஞ்சிறு திரைப்படத்தை ஜான்ஸனும், எம்ஜி.ராதாகிருஷ்ணனும் முறையே பின்னணி இசையையும், பாடல் இசையையும் இழைத்துத் தர, அஷோக்குமாரின் ஒளிப்பதிவில் பிரதாப் போத்தன், நெடுமுடி வேணு என தன்னிகரற்ற தகராவை, முற்றிலும் வேறு அணியினருடன் தமிழில் மீவுருச் செய்தார். வினீத், நந்தினி, கவுண்டமணி, நாசர். தமிழுக்கு இதன் மூலமாக வினீத் நல்வரவானார். மலங்கித் திரியும் பேரழகாக முன்னர் தமிழ்த்திரை அதிகம் கண்ணுறாத தாமரையாக மலர்ந்தார் நந்தினி. குழந்தையின் பாதத்தைப்போல ஒரு எளிய அன்பை நோக்கிப் பயணிக்கும் சின்னஞ்சிறிய கதை. எல்லோருக்கும் நம்பகத்தினுள் முழுவதுமாக இயங்கிப்படர்ந்த வசனங்கள், கேரளத்தின் பல தலங்கள், கண்ணில் ஒற்றிக்கொள்ளக்கூடிய ஒளிப்பதிவு, இவற்றை எல்லாம் எழுதிய பிறகு, எழுதவேண்டிய இன்னொன்று, இளையராஜாவின் அன்பு.

இசை என்பது பாரபட்சம்தான். கூடுவதும் குன்றுவதுமான ஒலிகளின் உயிர்த்தலே இசை. ரத்த அழுத்த மானி பொதிந்து தரக்கூடிய குழந்தைகளின் பட்டத்தின் வாலையொத்த காகிதத்தில் இருதய ரத்தக் குறிப்பு மேலும் கீழுமாய் ஏறி இறங்குவதையே மனித வாழ்வில் உயிர்த்தல் என்று சொல்ல முடியும். அந்த வகையில் தன்னை அகழ்ந்து தேனை நிறைக்கிற வேலையாகவே இசை படைக்க விழைந்தார் இளையராஜா, பரதன் தொடங்கிப் பல காரணங்களை எல்லாம் தாண்டி, தன் ஆகச் சிறந்த இசை அளித்தல்களை எப்போதும் வழங்கப் பிரியப்படும் சின்னஞ்சிறிய ஒரு பெயர்ப் பட்டியலைத் தயாரித்தால் அதில் பாலு மகேந்திரா, மகேந்திரன், பஞ்சு அருணாச்சலம், சங்கிலி முருகன், எனும் பெயர்களின் மத்தியில் இன்னொரு பெயரைச் சேர்க்க முடியும். அவர் ஆவாரம்பூ படத்தின் தயாரிப்பாளார் கேயார் எனும் கோதண்டராமையா. ஈரமான ரோஜாவே, தர்மா, இரட்டை ரோஜா, வனஜா கிரிஜா, காதல் ரோஜாவே, என அந்தப் பட்டியல் கட்டியம் கூறும். கேயாரின் திரைப்படங்களுக்கு அன்பை இசையாக்குவதை வழக்கமாகக் கொண்ட ராஜா, ஆவாரம்பூ படத்தை பாடல்களுக்காகவே பார்க்க வைப்பது எனத் தனக்குத்ட் ஹானே சபதம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டாற் போல் இசை தந்தார்.

இளையராஜாவின் வருகையும், நிஜமான கிராமப் படங்களின் தொடக்கமும் அருகமை நிகழ்வுகளாக அமைந்தது சரித்திரம். கிராமம் சார்ந்த நிறைய படங்களுக்கு இசைத்திருந்தாலும் கூட, கதையின் தேவை பிம்பங்களுக்கான மறுதலிப்பு அல்லது மேலதிகம் என இசைசார் சமரசங்களுக்கு இடம் கொடுத்த வண்ணமே அதுகாறும் ஓடிக் கொண்டிருந்தது படநதி. நகர்த்தன்மையோ, நாகரிகமோ, எந்த விதத்திலும் நீர்த்துவிடாத உள்ளார்ந்த கிராமம் ஒன்றின் மாசற்ற மனோநிலை ஒன்றை படத்தின் தொடக்கக் காட்சி முதலே உருவாக்க விழைந்தார் ராஜா. எந்த விதத்திலும் யாதொரு முறையீடும் இன்றி, சன்னமான மற்றும் பலவீனமான மனிதர்களின் இசையாக ஆவாரம்பூ படத்தின் பின் இசை அமைந்தது. எப்போதெல்லாம் ஏற்கனவே எடுக்கப்பட்ட படத்தை மீவுரு செய்யும்போது அதற்குத் தான் முதல்முறையாக இசையமைக்க நேர்கிறதோ, அங்கெல்லாம் தன் ஆகச் சிறந்த இசையை வழங்கவே ராஜா முனைவார். அப்படியான ஒன்றுதான் ஆவாரம்பூ.

220px-Aavarampoo_DVD_cover.jpg

ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே

இதுவரை இந்தப் பாடல் சாதாரணமாக இருக்கும். இதற்கு முன்பே வெறும் ஒற்றைக் குழலோசையாக இந்தப் பாடலைத் தொடங்கியிருப்பார் ராஜா. “தனியானால் என்ன துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு” பலகோடிச் செதில்களாகத் துண்டாடிப் பின் மீண்டும் ஒன்றே எனப் பெருகும் இப்பிரபஞ்சம்.

நின்று நிதானிட்த்து எந்தவிதமான ஆர்ப்பாட்டமோ அவசரமோ இல்லாமல் தானுண்டு தன் பாதையுண்டு என்று மெல்ல அசைந்தபடி ஏறியும் இறங்கியும் பயணிக்கிற மலைரயில் போலவே இந்தப் படத்தின் பின்னணி இசை அமைந்தது.வாத்தியங்களின் சப்த சுத்தம் முன்னில்லாத அளவுக்கு இசைக்கோர்வைகள் துல்லியமாக மனம் புகுந்தன.பாடல்களும் தேவலோகத்திலிருந்து ஒலித்துச் சிறந்தன. அடுக்குமல்லி எடுத்து வந்து தொடுத்து வச்ச மாலை பாடலாகட்டும் சாமிகிட்ட சொல்லி வச்சி சேர்ந்ததிந்த செல்லக்கிளியே பாடலாகட்டும் நதியோரம் கரையோரம் ஒரு ராகம் அலைபாயும் பாடலாகட்டும் இன்றளவும் தத்தமது ரீங்காரத்தை நிறுத்திக் கொள்ளாமல் தொடர்ந்தொலிக்கும் நற்பாடல்கள்.

அந்த ஊரே கிண்டலும் எள்ளலுமாய் அணுகுகிறது அவனை.சக்கரை மனநிலை சமனற்ற வெள்ளந்தி.அவன் கண்ணறியும் தேவதை தாமரை.அவளுடைய அப்பா ஒரு மூர்க்கன். அவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு வாழ்கிறவர்.தாமரை மீது அந்த ஊரில் பலருக்கும் கண்.கபடமனம் கொண்டவர்களின் எண்ணங்களினால் சர்க்கரை பலமுறை பாதிக்கப்படுகிறான்.அவனுக்கும் தாமரைக்கும் இயல்பாகப் பூக்கிறது பேரன்பொன்று. தாமரையின் தகப்பன் சர்க்கரையை அவமானப்படுத்தி அடித்து விரட்டுகிறான்.ஒரு நாள் கத்தியோடு வந்து தாமரையின் தகப்பனைக் கொன்று விட்டு அவளை மணமுடிப்பதே சர்க்கரையின் லட்சியமாகிறது.மலையாள மூலத்தில் கொலைக்குப் பின்னால் காதலனோடு வர மறுக்கும் நாயகி வழியேதுமற்று ஓடும் ரெயில் முன் பாய்ந்து மாயும் தகரா எனும் அப்பாவின் கதையாக விரிந்திருக்கும்.தமிழில் தாமரையின் அப்பாவே நீ அவனோடு சென்று சேர்ந்து கொள் என ஆசீர்வதித்து அனுப்புவதும் சிவப்புத் துணியைக் காட்டி ரெயிலைத் தாமரை நிறுத்தி சர்க்கரையோடு சேர்வதுமாக ஆவாரம்பூ சோகத்திற்குப் பக்கவாட்டில் சந்தோஷ முடிவாகவே நிறைந்து கொண்டது.

ஆவாரம்பூ தொன்மமும் கிராமியமும் வழியும் இசைக்கோர்வைகளுக்காகவும் யதார்த்தத்தின் அளவுக்குறிப்புகள் மீறாமல் வேடங்களை அணிந்து கொண்ட நடிகர்களின் பரிமளிப்பிற்காகவும் காலமெல்லாம் கொண்டாடப் படத்தக்க ஒரு படம்.

https://uyirmmai.com/செய்திகள்/சினிமா/நூறு-கதை-நூறு-படம்26-ஆவாரம/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 27 – டும் டும் டும்

aathma-poster-3.jpg

மணிரத்னத்தின் பள்ளியிலிருந்து வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் அழகம்பெருமாள். மெட்ராஸ் டாகீஸ் என்ற நாமதேயத்திலான மணிரத்னத்தின் சொந்தப் பட நிறுவனத்தின் வாயிலாக அவர் தயாரித்த படம் டும்டும்டும். தமிழில் தென் நிலம் என்றாலே மதுரை என்ற தோற்ற மயக்கம் பலகாலமாக நிகழ்ந்துவருவது. அதனைப் புறந்தள்ளி நெல்லைப்புறத்து வாழ்வியலை முன்வைத்த படங்களின் வரிசையில் டும்டும்டும்முக்கு தனித்த இடமொன்று எப்போதும் உண்டு.

71MlFqCjAL._RI_SX300_-225x300.jpg

மருதப்பிள்ளை வசதியானவர். அவர் மகன் ஆதி பட்டண வாசி. மருதப்பிள்ளையிடம் முன் காலத்தில் வேலை பார்த்த வேலுத்தம்பி இன்றைக்கு ஓரளவு தனித்து நின்று தன் வசதியைப் பெருக்கிக் கொண்டவர் எனினும் பழைய முதலாளி மீதான விசுவாசம் குன்றாதவர்.வேலுத்தம்பியின் இரண்டாம் மகள் கங்கா மாநிலத்தில் இரண்டாவது மாணவி எனும் பெருமையோடு ப்ளஸ் டூ படிப்பில் தேறுகிறாள்.ஊர் பாராட்டுகிறது மருதப்பிள்ளை தன் மகன் ஆதிக்கு கங்காவைப் பெண் கேட்கிறார். மனம் மகிழும் வேலுத்தம்பியும் நெகிழ்ந்து சம்மதிக்கிறார்.படிப்பு பாழாகாது என உறுதி கூறப்பட்டாலும் முன் பின் தெரியாத ஆதியை எப்படி மணப்பது எனச் செய்வதறியாமல் திகைக்கிறாள் கங்கா.தனக்கென்று தனிக்கனவுகள் கொண்ட ஆதியும் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று அழைத்து வரப்பட்டு கல்யாணப் பேச்சு முன்வைக்கப்படுவதைத் தடுக்க முடியாமல் தவிக்கிறான்.பெண்ணும் மாப்பிள்ளையும் ஒற்றுமையாய் முயன்று இந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்த வேண்டுமென முயன்று அதில் வெல்கிறார்கள்.இரண்டு குடும்பங்களுக்கும் இடையே பெரும்பகையாவதற்கு வேலுத்தம்பி மீது சுமத்தப்படுகிற பொய் அனுமானம் ஒன்றைக் கண் மூடித் தனமாக நம்புகிறார் மருதப்பிள்ளை என்பது காரணமாகிறது.கலியாணம் நின்று குடும்பங்கள் பிரிகின்றன.

பட்டணத்தில் தன் ஒன்று விட்ட தம்பி வக்கீல் சிவாஜி வீட்டில் தங்கி கங்காவைப் படிக்க வைக்கிறார் வேலுத்தம்பி.அவருடைய மூத்த மகளின் கணவர் சின்னஞ்சிறு குழந்தையோடு தன்னைத் தவிக்க விட்டு இறந்துபோன மனைவியையே எண்ணி வாடியபடி வாழ்வை நகர்த்துவதை நினைத்து உருகுகிறார்.பட்டணத்தில் யதேச்சையாக சந்தித்துக்கொள்ளும் ஆதியும் கங்காவும் மெல்ல ஸ்னேகிதமாகி காதலிக்கத் தொடங்குகின்றனர்.வேண்டாமென்று தாங்கள் நிறுத்திய கல்யாணத்தை மறுபடி என்ன செய்தாவது நடத்த வேண்டுமென்ற ஆவலில் திரிகிறான் ஆதி.அதை எப்படியாவது கெடுத்து விட வேண்டுமென அவனது நண்பன் ஜிம் முயல்கிறான்.சிவாஜியிடம் ஜூனியர் வக்கீலாக சேர்கிறான் ஆதி.

பட்டணத்துக்கு வருகை தரும் மருதப்பிள்ளைக்கு ஆதி சிவாஜியிடம் பணி புரிவது தெரிய வந்து கடுமையாக ஆட்சேபிக்கிறார்.அங்கே யதார்த்தமாக சந்திக்க நேர்கையில் அவருக்கும் வேலுத்தம்பிக்கும் இடையே பெரும் வாக்குவாதம் வருகிறது.வேலுத் தம்பி தன் மூத்த மருமகனுக்கே கங்காவை இரண்டாம் தாரமாக கல்யாணம் செய்து வைக்கப் போவதாகக் கூறுகிறார்.இத்தனை குழப்பங்களுக்கும் இடையே தான் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டதையும் வேலுத்தம்பி குற்றமற்றவர் என்பதும் தெரிய வரும் மருதப்பிள்ளை ஊரறிய வேலுவிடம் மன்னிப்பு கோருகிறார்.மனம் நெகிழும் வேலுவும் தன் சொற்களால் ஆதுரம் காட்ட தங்கள் திருமணத்தை நிறுத்திய பிறகு காதலிக்கத் தொடங்கிய கங்கா ஆதி இருவருக்கும் கல்யாணம் இனிதே நடக்க டும்டும்டும் கொட்டுகிறது. சுபம்.

maxresdefault-1-1-300x169.jpg
இந்தப் படத்தின் சீரான கதையும் உறுத்தாத அதே நேரத்தில் தென் வட்டாரத்து உரையாடல்களைக் கண் முன் கொணர்ந்த வசனங்களும் திரைக்கதை அமைப்பும் ராம்ஜியின் ஒளிப்பதிவும் கார்த்திக் ராஜாவின் இசையும் என எல்லாமே இதன் ப்ளஸ் பாயிண்ட்களாகின.ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ எனும் பாடல் காலம் கடந்து ஒளி குன்றாமல் நிரந்தரித்த ஒரு கலாவைரமாக மாறியது.மற்ற பாடல்கள் எல்லாமுமே கச்சித அற்புதங்களாகவே தனித்தன. விவேக்கின் காமெடி இருவித இழையோடல்களுடன் கதையினை ஒட்டியும் சற்றே நகர்ந்துமென பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. இந்தக் கதையில் எளிதில் யூகிக்க முடியாத கௌதம் கல்பனா இருவரின் பாத்திரங்களுடைய சித்தரிப்பு மானுடம் மீதான வாஞ்சையைப் பறை சாற்றிற்று.

மனிதன் சொற்களால் ஆவதும் அழிவதுமாக இவ்வாழ்வு இருக்கிறது எனும் ஒற்றை வரியைக் கொண்டு பின்னப் பட்ட குடும்பச் சித்திரம் டும்டும்டும் இதில் பங்கேற்ற ஆர்.மாதவன் ஜோதிகா டெல்லி குமார் மலையாள நடிகர் முரளி கௌதம் சுந்தர்ராஜன் கல்பனா விவேக் எம்.எஸ்.பாஸ்கர் வையாபுரி மணிவண்ணன் விகேராமசாமி கலைராணி ரிச்சா மற்றும் சின்னி ஜெயந்த் ஆகியோர் யாவருமே சொல்லிக் கொள்ளத் தக்க பூரிப்பாகவே இந்தப் படத்தை வழங்கினார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத சித்திரம் டும்டும்டும்.
 

https://uyirmmai.com/செய்திகள்/சினிமா/நூறு-கதை-நூறு-படம்-27-டும்-ட/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 28 – மூடுபனி

aathma-poster-1.jpg

பிரதாப் போத்தன் மலையாளக் கரையொற்றித்  தமிழ் நிலம் நோக்கி வந்த நடிக மீன். தனக்கு முன்பிருந்தவர்களையோ அல்லது தன் சமகாலத்தவர்களையோ எந்த விதத்திலும் போலச்செய்யாமல் நடிப்பை நல்குவதுதான் ஒரு தேர்ந்த நடிகனின் முதல் தகுதி. அதனை சரிவரக் கொண்டவர் பிரதாப். அவரது முகம் யூகிக்க முடியாத நிரந்தரத் தடையாகவே விளங்குவது. பிரதாப்பின் கண்கள் பலமொழி பேசும் பண்டிதம் மிகுந்து பொங்குபவை. பூச்சியத்திலிருந்து நூறுவரை பகுபடக்கூடிய கதாபாத்திரங்களின் தன்மைகளை அனாயாசமாக உள்ளெடுத்து நல்குவதில் மிகச்சிறந்த கலைஞன் பிரதாப். அவருடைய படங்களில் பல காலத்தால் அழியாதவை. அவற்றில் முதற்பெயரெனவே தங்குவது மூடுபனி.

ஷோபா கிடைத்தற்கரிய நல்முத்து. இந்தியத் திரைவானில் நிகழ்ந்த நட்சத்திரங்களில் இன்றளவும் பூர்த்தி செய்யப்படாத வெற்றிடம் ஷோபாவினுடையது. அந்தக் கண்களும் சிரிப்பும் நடிப்பதற்கான தளவாடங்கள் என்பதனை மெய்ப்பித்தவர் ஷோபா. உறங்கும் சித்திரமாகத் தேங்கக் கூடிய மங்கி ஒளி குன்றிய மிட் ஷாட் ஒன்றில் கூட ஷோபாவின் தோன்றலொளியைக் குறைத்துவிட முடியாது. ஒப்பிடற்கரிய டல் கலர் தேவதை ஷோபா. சிறிய தூரமே உடன்வந்த சன்னல் பயணத் தூறல் போலவே மாறா ஞாபகமாய் விளைந்து மறைந்தார் ஷோபா. அவரது நடிப்பில் உருவான அத்தனை படங்களுமே சோடை போகாத நல்மணிகள். அவற்றில் சிறந்தது மூடுபனி.


moodup10-300x259.jpg
பாலுமகேந்திரா அறியப்பட்ட ஒளிப்பதிவாளராக இருந்துகொண்டே தன் அகக்குரலுக்குப் பதில்சொல்லும் படங்களை இயக்கவும் செய்தார். கன்னடத்தில் கோகிலா அவரது பெயரை ஓங்கி ஒலித்தது. அழியாத கோலங்களுக்கு அப்பால் அவர் தமிழில் தன் மூடுபனியை இயக்கினார். இளையராஜா இசைத்தார். ராஜேந்திரக் குமாரின் இதுவும் ஒரு விடுதலைதான் என்ற குறுநாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கினார் பாலு மகேந்திரா. தனக்கே உண்டான திரைமொழியும் காட்சிகளை அமைப்பதில் அவர் காட்டிய ஈடுபாடும் மற்ற படங்களிலிருந்தெல்லாம் அவருடைய ஒவ்வொரு ஃப்ரேமையும் தனிக்கச் செய்தன. இந்தப் படத்தை இயக்கும்போதே பாலுவின் பெயருக்கு உரித்தாக அரைடஜனுக்கு மேலான அரசு விருதுகள் பல மொழிகளுக்காக அணிவகுத்திருந்தன.

மூடுபனியின் நாயகன் சந்துரு மனம் பேதலித்தவன். அடுத்தடுத்து இரண்டு விலைமாதர்களைக் கொல்கிறான். இன்ஸ்பெக்டர் ரகுநாத்தின் மகள் ரேகா அவள் மனம் கவர்ந்த ரவியோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டவள் அவளைத் தேடி பெங்களூருவுக்கு வருகிற பல்லவியை விபச்சார விடுதி நடத்தும் ஒரு பெண்  ஏமாற்றி அழைத்துச் சென்று அடைத்து வைக்கிறாள். தன்னைத் தேடி வந்த பல்லவியைக் காணாமல் தேடுகிறாள் ரேகா. அந்த விடுதியிலிருந்து பல்லவியைத் தன் காரில் அழைத்துச் சென்று கொல்கிறான் சந்துரு. அவர்களுக்கு பரஸ்பரம் அறிமுகம் உண்டென்றாலும் கூட அவன்தான் கொலைகாரன் என்பதை ரேகாவோ ரகுநாத்தோ அறியவில்லை.

பாஸ்கர் எனும் ஸ்டில் புகைப்படக்காரன் தனது தோழியை விதவிதமாய்ப் புகைப்படம் எடுக்கும் போது ஒரு படத்தில் வீடொன்றின் வாசலில் நிறுத்தப்பட்டிருக்கும் புல்லட் மோட்டார் சைக்கிளின் நம்பர் ப்ளேட் அதில் பதிந்துவிடுகிறது. அந்த வீட்டிலிருக்கும் ஒரு பெண்ணை சந்துரு கொன்றுவிட்டு தப்புகிறான். மறுதினம் அந்த இடம் குறித்து நாளிதழ்களில் செய்தி பார்த்து பாஸ்கர் ரகுநாத்திட்ம தன் புகைப்படங்களைத் தருகிறான். வழக்கு சூடுபிடிக்கிறது. மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் தன் நண்பர் ஒருவரிடம் அந்த பைக்கைத் தந்திருப்பதாக சொல்கிறார்.

இந்த இடத்தில் தன் தொடர்கொலைகளில் அயர்ச்சியுற்று  மன நல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுகிறான்.அவர் சீக்கிரமே திருமணம் செய்துகொள் என்கிறார்.இவனது தீராக்கோபத்தின் விளைவுகளாய்  செய்த கொலைகளை அம்மருத்துவர் அறிவதில்லை.அவர் சொன்ன பிறகு அதையே சிந்திக்கும் சந்துரு அடுத்து இயல்பாக சந்திக்கும் ரேகாவிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வேண்டுகிறான்.திரும்பத் திரும்பக் கெஞ்சுகிறான்.அவனது விசித்திரமான அணுகலை தன் அப்பாவிடம் சொல்கிறாள் ரேகா.அவர் சந்துரு மீது கோபமாகிறார்.ரேகாவை ஒரு சந்தர்ப்பத்தில் ஊட்டியிலிருக்கும் தன் வனமாளிகைக்கு கடத்திச் செல்கிறான் சந்துரு.அவன் மன விகாரத்தை முன்பே யூகித்து விடும் ரேகா அவனிடம் முரண்படாமல் நல்லதொரு சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறாள்.இன்னொரு புறம் ரேகாவைத் தேடும் ரகுநாத் சந்துருவின் அலுவலகம் சென்று அவனது இருப்பிடம் மற்ற தகவல்களை தோண்டுகிறார்.சந்துருவின் உள்முகம் அறியவருகிறது.

moodupani-300x208.jpg
சந்துருவின் அம்மாவை அவன் குழந்தையாக இருக்கையில் கொடுமைப் படுத்திய தந்தைமீதும் அவர் தினமும் உறவு கொண்ட பெண்கள் மீதும் மனம் சிதைந்து ஆறாக் கோபமாகும் சிறுவன் சந்துரு வளர்ந்து தன் மன நோயினால் கொலைகாரனாக மாறிவிட்டிருப்பது அவனது வாழ்க்கைக் கதை.கடைசியில் சந்துருவிடமிருந்து ரேகா தப்புவதும் சந்துரு கைதாவதுமாக முடிவடைகிறது மூடுபனி.

மூடுபனி இளையராஜாவின் நூறாவது படம்.கங்கை அமரன் எழுதி கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய என் இனிய பொன் நிலாவே நிலம் தாண்டி விழும் நிழலாய்க் காலத்தின் மேனியெங்கும் படர்ந்தது.இன்றளவும் ராஜாவின் இசைத்தலில் பெருவிருப்பப் பாடல்களில் கட்டாயம் இடம்பெறுகிறது இந்தப் பாடல்.பல மேதமைகள் இந்தப் பாடலுக்கு உண்டு.மீவுரு செய்யவேண்டிய தேவையற்று இன்றைய காலத்திலும் நின்றொலிக்கும் நற்கானமாகவே தனிக்கிறது இந்தப் பாடல்.ஏகாந்தத்தின் வெறுமையின் உலர்ந்த மனவெளிப் பயணமாகவே இந்தப் பாடல் தமிழ் மனசுகளை வென்றெடுத்தது.ஜேசுதாஸின் டாப் ஹிட்ஸ் பட்டியலிலும் அனேகமாகத் தன் முதலிடத்தைப் பெருங்காலம் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது

ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் இயக்கிப் பெரும்புகழ் பெற்ற சைக்கோ படத்தின் உந்துதல் கொண்டே இப்படத்தை உருவாக்கியதாகப் பின் நாட்களில் தனது பேட்டிகளில் தெரியப்படுத்தினார் பாலுமகேந்திரா.இந்தப் படத்தின் காலம் 1980 என்பதை நம்பமுடியாத தகவலாகவே புறத்தில் வைத்து விட்டு சென்ற வருடம் வெளியான புத்தம் புதிய சித்திரமாகவே இதனை இன்றைக்கும் உணரமுடிவதே மூடுபனியின் மாபெரிய வெற்றி.சொல்லப் பட்ட விதம் உருவாக்கத் திறன் நடிகர்களின் உடல்மொழி மற்றும் பங்கேற்பு இசை ஒளிப்பதிவு எனப் பல காரணிகளுக்காகத் தமிழில் எடுக்கப் பட்ட நேர்கோட்டு த்ரில்லர் படங்களில் முக்கியமான படம் மூடுபனி.


 

https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-28-மூடுப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 29 – கண் சிவந்தால் மண் சிவக்கும்

aathma-poster-3.jpg

 

இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் அகாதமி விருதுபெற்ற புதினம். அதன் திரையாக்கம் ஸ்ரீதர்ராஜனின் முதற்படமாக வெளியாகி தேசிய விருதை அவருக்குப் பெற்றளித்தது. அனந்துவும் கூத்துப்பட்டறை ந.முத்துச்சாமியும் வசனங்களை எழுத இளையராஜா இசையில் தமிழின் சிறந்த படங்களில் ஒன்றானது.

கலைகளெல்லாம் பாம்பு உரிச்சு போட்ட சட்டை மாதிரி. அதை எறும்பு இழுத்துட்டு போறபோது பாம்பு ஊர்றமாதிரி ப்ரம்மைல இருக்காங்க எல்லாரும்.
கலை இயக்கம் அது இதுன்னு ஒரு சிலர் தங்களைத் தாங்களே ஏமாத்திக்கிறாங்க. இன்னும் சிலர் சமூகத்து கண்ல மண்ணைத் தூவுறாங்க.

இது ஒரு ஸாம்பிள் வசனம் மட்டுமே. படம் முழுவதும் அனல் தெறிக்கும் எழுத்துகள் குறிப்பிடத்தக்கவை.

கௌதம் பத்திரிக்கையாளன், புகைப்படக்காரன், சினிமா நாட்டம் கொண்டவன், ஓவியனும் கூட. அதிகாரவர்க்கத்தின் பாரபட்சத்தினால் அயர்வுறுகிறவனுக்கு பரத நாட்டியம் கற்கும் அருந்ததியின் சினேகம் வாய்க்கிறது. நந்தனாரின் வாழ்க்கையைப் பரதநாட்டியத்தில் அங்கம் பெறச் செய்ய விரும்புகிறாள் அருந்ததி. கௌதமின் ஆலோசனைக்கப்பால் கூத்துக் கலை ஆசான் தம்பிரானை சந்திக்க கௌதமும் அருந்ததியும் வெண்மணிக்குச் செல்கிறார்கள். பெரும் பணக்காரரான ராஜரத்தினத்தின் வீட்டில் தங்குகிறார்கள். வெண்மணி கிராமத்தில் ஆண்டையாகத் திகழும் ராஜரத்தினத்தை எதிர்த்து உழைக்கும் மக்களுக்குரிய கூலிக்காக போராடுகிறான் வைரம். அவனுக்கு உறுதுணையாக நிற்பவன் காளை. அருந்ததியின் கலை முயல்வும் கிராமத்து மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையும் ஒன்றாய்ப் பின்னுகிற திரைக்கதையின் மிகுதியில் சுயநலமும் அடுத்தவர்களைச் சுரண்டுகிற யுக்தியும் நிரம்பிய ஆண்டேயின் சதியால் ஊரே தீக்கிரையாகிறது. காளை கொல்லப்படுகிறான். வைரம் கைதாகிறான். எல்லாம் தன் திட்டப்படி நடந்து முடிந்ததாய் சந்தோசப்படும் ஆண்டேயை அவர் வயல் நடுவே அவர் வீட்டில் வேலை பார்த்த பாப்பாத்தி கத்தியால் குத்திக் கொல்கிறாள்.

சௌமேந்து ராய் நான்கு தேசிய விருதுகளைத் தன் ஒளிப்பதிவுக்காகப் பெற்ற மேதை. தமிழில் அவர் பணியாற்றிய ஒரே படமான இதற்கும் தமிழகத்தின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதைப் பெற்றார். அனேகமாக பிசி.ஸ்ரீராமின் ஆதர்ஸமாக இவரைக் கருதமுடியும். இந்தப் படத்தின் எண்ணற்ற இரவு நேர ஷாட்கள் ஒன்றுக்கொன்று அளவாக வழங்கப்பட்ட ஒளியோடு இயற்கையில் இயல்புவரம்புகளுள் உறுத்தாமல் ஒளிர்ந்தன. படத்தின் அடிநாதமாக ஒரு இரவுப் பொழுது தனிமையை ஒரு பருவமெங்கும் தொடர்கிற சூழல் நிமித்தத் தனிமையாகவே தொடர்ச்சியான காட்சிகளின் மூலமாக உருவாக்கித் தந்தார். இந்தப் படத்தைப் பொறுத்தளவு இரவென்பது ஒரு குணச்சித்திர நடிகருக்கு உண்டான பொறுப்பேற்றலுடன் பங்கேற்றது.

வந்தாளே அல்லிப்பூ என் வாழ்வில் தித்திப்பூ இந்தப் பாடல் படத்தின் மைய நதியோட்டத்திற்குச் சற்றே விலகினாற்போல் கேட்கும்போது ஒலித்தாலும் படத்தில் முழுவதுமாக மாண்டேஜ் ஷாட்களால் நிரம்பி நகரும் இந்தப் பாடல் இளையராஜா குரலில் அடியாழத்தில் இதனைப் பாடினார். இதன் முதல் சரணத்தின் நிறைகணத்தில் பூர்ணிமாவைத் தேடி அவரது அறை நோக்கி வருவார் விஜய்மோகன். அப்போது பூர்ணிமாவுக்குப் பின்புலத்தில் இருக்கும் சுவரில் பெரிய செவ்வண்ண ஓவியத்தில் சே குவேரா தோற்றமளிப்பார். அனேகமாக சே குறித்த ஆரம்ப தமிழ்நிலத் திரைத் தோற்றமாக இந்த ஷாட் இருக்கக்கூடும். ‘மனிதா மனிதா இனியுன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்’ என்ற பாடல் வைரமுத்துவின் ஆரம்பகால முத்திரைப் பாடல்களில் முக்கிய இடத்தைப் பிடித்தது. இன்றளவும் அதன் வெம்மை குன்றாமல் ஒலிக்கிறது.

ஜெய்சங்கர், பூர்ணிமா, ஜெயமாலா, சுபத்ரா ராஜேஷ், விஜய்மோகன், கல்கத்தா விஸ்வநாதன், ரவீந்தர் ஆகியோரது நடிப்பில் தமிழில் யதார்த்தத்தின் ஆட்டக்களத்தின் எல்லைக்கோடுகளுக்குள் முழுப்படமும் விழிவசம் விரிந்த வெகு சில படங்களுக்குள்  ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ படத்துக்கு முக்கிய இடமுண்டு.

 

https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-29-கண்-சி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 30 கடலோரக் கவிதைகள்

aathma-poster-3.jpg

சத்யராஜ் சென்ற நூற்றாண்டின் கடைசி மிகை யதார்த்த நடிகர். குறிப்பிடத்தக்க அண்டர்ப்ளே நடிகருக்கான அத்தனை தகுதிகளும் கொண்டவர். சிவாஜி கணேசனும் எஸ்.வி.சுப்பையாவும் கலந்து செய்தாற் போன்ற ஆச்சர்யம் சத்யராஜ். தன்னை எம்.ஜி.ஆரின் மாபெரிய ரசிகராகவே அடையாளப் படுத்திக்கொண்ட சத்யராஜின் ட்ராக் ரெகார்டில் பிற தென் நில நடிகர்கள் முயற்சி செய்தே பார்த்திராத பல அரிய வேடங்களை அனாயாசமாகக் கடந்து வென்றிருப்பது புரியவரும். அவரது திரைவாழ்வின் ஆரம்பத்தில் கிட்டத்தட்ட நூறு படங்கள் அடியாள் வேடம் தொடங்கி வில்லன் வரைக்கும் எதிர்நாயக ஏரியாவிலேயே கடும்பணியாற்றிவிட்டு சொந்த ஊருக்குத் திரும்புகிற மிலிட்டரிக்காரரைப் போல் ஹீரோவானார். வணிக வரம்புகள் ஒரு நடிகனின் கழுத்தில் புகழ்மாலையாய்த் தொங்குவதுபோலத் தோற்றமளித்தாலும் கூடவே நீ எப்படித் திரும்ப வேண்டும் தெரியுமா என்று எப்போதும் அவனைக் கட்டுப்படுத்திக் கொண்டும் இருப்பவை. சத்யராஜ் தன்னை என்ன செய்தால் ஹீரோவாக ஏற்றுக்கொள்வார்கள் என்று முழுமுடிவுகளுக்கு வருவதற்குப் பெரும்பலம் சேர்த்தது பாரதிராஜா இயக்கத்தில் அவர் நடித்த கடலோரக் கவிதைகள்திரைப்படம்.

05-1409913341-kadalora-kavithaigal-rekha

பருத்திவீரன் படத்தின் வீரன் கதாபாத்திரத்துக்கு முன்னோடி என்றே தாஸ் கதாபாத்திரத்தைக் கொள்ள முடியும். சிறைப் பறவையான தாஸ் வாழ்வைப் புரட்டிப் போடுவது ஒரு டீச்சர். ஏபிசீடி என்பதை லாங் ஷாட்டில் கூட அறிந்திடாத ஒருவன் சின்னப்பதாஸ். அவனுக்கும் டீச்சரான ஜெனிஃபருக்கும் இடையே முரணாய்த் தொடங்கும் பரிச்சயம் மெல்ல நட்பாக மலர்கிறது. கடலும் கடலின் கரை சார்ந்த நிலமுமாய் இதன் கதைக்களன் முக்கிய கதாபாத்திரமாகவே கடலோரக் கவிதைகள் படத்தில் இடம்பெற்றது. தனி மனிதர்களுக்கு இடையே வாய்க்கக்கூடிய ஏற்றத்தாழ்வுகள் இயலாமை பொருத்தமற்ற தகுதிகள் வேற்றுமைகள் என எத்தனைக்கெத்தனை முரணும் பிளவுகளுமாய்ப் பெருகுகின்றனவோ அத்தனைக்கத்தனை அவை யாவுமே இல்லாமற் போய்க் காதல் மட்டுமாய் எஞ்சுவதுதான் நிதர்சனம். காதல் என்றே இனம் காண முடியாத இரு மன ஊசலாட்டமும் அதை ஒற்றிச் செல்லும் வாழ்வுமாய் கடலோரக் கவிதைகள் முன்வைத்தது காதலின் அபரிமிதமான உறுதியின் கதை ஒன்றை. ராஜா ரஞ்சனி கமலாகாமேஷ் ஜனகராஜ் என இதில் பங்கேற்ற எல்லோருமே உணர்ந்து நடித்தார்கள்.

ராஜேஷ்வரின் கதைக்கு ஆர்.செல்வராஜ் வசனம் எழுத திரைக்கதை அமைத்து இயக்கினார் பாரதிராஜா. பி.கண்ணனின் ஒளிப்பதிவும் திருநாவுக்கரசு எடிட்டிங்கும் ஏற்று வழங்க வைரமுத்து கங்கை அமரன் பாடல்களுக்கு இசைமீட்டினார் இளையராஜா. பொடி நடையா போறவரே பாடல் கங்கை அமரன் எழுத வேறாராலும் தரமுடியாத உற்சாகத்தோடு அதனைப் பாடினார் சித்ரா. கொடியிலே மல்லிகைப்பூ ஒரு கல்ட் க்ளாஸிக். சோக விரும்பிகளுக்கும் காதல் ததும்பிகளுக்குமான பாடல்களாக போகுதே போகுதே பாடலும் அடி ஆத்தாடி இளமனசொண்ணு இரண்டும் மிளிர்ந்தன. பாடல்களின் அத்தனை வரிகளும் துணுக்கிசை தொட்டு மௌன முற்றுதல் வரைக்கும் தமிழகத்தின் இதயநாதமாக இரவுகீதமாக கிட்டத்தட்ட ஒருவருட கால ரேடியோ ஃபர்ஸ்ட் ஹிட் பாடல்களாக இப்படத்தின் பாடல்கள் திகழ்ந்தன.

பாரதிராஜாவின் தொடர் வெற்றிப் படங்களில் கடலோரக்கவிதைகளுக்கு என்றுமோர் இடமுண்டு. காதலைப் போற்றுவதன் மூலமாக அதனைவிடாமல் பற்றிக்கொள்வதன் மூலமாக சமூக ஏற்றத்தாழ்வுகளை முற்றிலுமாக நீக்கிவிட முடியும் என்ற நம்பகத்துக்கு வலு சேர்க்கும் முகமாய் சென்ற நூற்றாண்டின் கலாச்சாரக் கலகக் குரல்களில் ஒன்றெனவே இத்தகைய திரைப்படங்கள் விளங்கின. கடலோரக் கவிதைகளின் பட நிறைவில் பாரதிராஜாவின் குரலில் ஒலிக்கும் கீழ்க்காணும் வணக்கச்செய்தி அதனை நன்குரைக்கும்.

காதல் கூடக் கடவுள் மாதிரிதான்
காலதேச தூரங்களைக் கடந்தது அது
காதல் எனும் அமுத அலைகள்
அடித்துக்கொண்டே இருப்பதனால்தான்
இன்னும் இந்தப் பிரபஞ்சம்
ஈரமாகவே இருக்கிறது.

 

https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-30-கடலோரக/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 31 அழகன்

aathma-poster-3.jpg

பாலசந்தர் ட்ராமாவிலிருந்து சினிமாவுக்கு வந்தவர். எது நாடகம் என்பதில் இருக்கும் குழப்பங்கள் ஒரு பக்கம். நாடகக் கலை நம்பகத்துக்கும் நிரூபணத்துக்கும் இடையில் எப்போதும் இரு வேறாய்க் காணக்கிடைத்திருக்கிறது. வாழ்வாதாரக் கவலையற்ற மத்யமக் கண்களைக் கொண்டு, கவலைகள் என்று உணர்ந்தவற்றை நாடகமாக்கும் போக்கு சினிமாவின் செல்வாக்குக் காலத்தின் ஆரம்பத்தில் ஒரு இணை நிகழ்வாக நடந்தேறியது. மேடை நாடகங்கள் புராண இதிகாச ஒருமையிலிருந்து விலகி, திராவிட இயக்கத்தின் தோன்றல் காலத்தில் ஒரு தொடர் பிரச்சாரச் சாதனமாகவே நிலைபெற்றது.

அதே காலகட்டத்தில் சொந்த தாகத்துக்கான கானல் நீர்ச் சுனைகளைத் தேடி அலையும் அமெச்சூர் பாணி நாடக முயல்வுகள், குழுக்கள், அவற்றை நிகழ்த்துவோரில் தொடங்கி, சிறு சிறு தோன்று முகங்கள்வரை பலருக்கும் சமூக வாழ்வின் உள்ளிருந்தபடியே மிதமாய்த் தனித்தல் வாய்த்தது. சினிமாவுக்குக் கதைகள் தேவைப்பட்டன. வெற்றிகரமான நாடகங்கள் அவற்றுக்குக் கிடைத்த வரவேற்பு மற்றும் கரவொலிகள் ஒரு முன்படத் தயாரிப்புக்கு நிகரான உத்தரவாதத்தை ஏற்படுத்தின. சினிமா மாயக் கயிற்றின் கண்ணுக்குத் தெரியாத விழுதொன்றைப் பற்றிக் கொண்டு அந்தர மரத்தில் ஏறிப் பறிக்க வேண்டிய கனி. திசையாவது, வெளிச்சமாவது தெரிவது நல்லதுதானே.azhagan1-300x191.png

ஏஜி’ஸ் அலுவலகத்தில் அரசு சம்பளம் பெறும் வேலையிலிருந்து நட்சத்திர வனத்தின் ராஜராஜ நாற்காலிக்கு இடம் பெயர்ந்தவர் பாலசந்தர். அவர் பார்த்துப் பார்த்து வடிவமைத்த கமலஹாசன், போனால் போகிறதென்று வரவழைத்த ரஜினிகாந்த் இருவரும் தமிழ்த் திரை உலகின் இரண்டாம் முதலாம் இடங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். பாலசந்தர் பள்ளியிலிருந்து கிளம்பிச் சென்ற பல்லிகூட திரை பழகியதென்றே தமிழ் நிலம் நம்பிற்று. நாகேஷை, ஜெமினி கணேசனை, ஸ்ரீதேவியை, டெல்லி கணேஷை, ராதாரவியை, நாஸரை, சிவச்சந்திரனை, பிரகாஷ் ராஜை, ஏ.ஆர்.ரஹ்மானை எனத் தொடங்கி ஒரு பெரும் பட்டாளத்தை சொந்தம் கோருவதற்கான முழுத் தகுதி கொண்ட ஒருவராக பாலசந்தர் திகழ்ந்தார். மின் பிம்பங்களும், கவிதாலயாவும் திரையுலகச் சந்நிதானங்களகவே மதிக்கப் பெற்றன.

தன் பாணியைத்தானே கலைத்தபடி அடுத்ததைத் தேடும் தீரா ஆர்வம் கொண்டவர் பாலசந்தர். எதிர்பாராத மற்றும் விதவிதமான சேர்மானங்களைப் படங்கள் தோறும் முயன்று பார்ப்பவர். அந்தவகையில் மரகதமணியின் இசையில் மம்முட்டி, மதுபாலா, பானுப்ரியா, கீதா, இவர்களையெல்லாம் கொண்டு பாலசந்தர் எடுத்த அழகான திரைப்படம் அழகன். நிகழ்தலும், நெகிழ்தலும் கலந்த கதாமுறையைத் தன் படங்களுக்குள் முயன்றுகொண்டே இருந்தார் பாலசந்தர். குடும்பம் எனும் அமைப்பின் சகல அங்கங்களையும் முரண்பட்டு மீறுவதன் மூலமாக அவ்வமைப்பின் உட்புறப் புரையோடல்களைத் தன் படங்களின் மூலமாக தொடர்ந்து சாடினார்.

சின்னஞ்சிறிய குழந்தைகளுடன் வசித்து வரும் அழகப்பன் தன் கடின உழைப்பால் முன்னேறிய ஓட்டல் அதிபர். மனைவியை இழந்தவரான அழகப்பன் வாழ்வில் அடுத்தடுத்து மூன்று பெண்கள் அவர் மீதான அன்புவிருப்பத்தோடு நுழைகிறார்கள். ஒருவள் கல்லூரி மாணவி, அடுத்தவளோ நடனத் தாரகை, மூன்றாமவர் ட்யூடோரியல் ஆசிரியை. இந்த மூவருக்கும் அழகப்பனுக்கும் இடையிலான பரிச்சயம் பந்தம் என்னவாகிறது நடனத் தாரகைக்கும் அவனுக்கும் ஒருங்கே மலரும் காதல் எங்கனம் வாழ்வில் அவர்கள் இணைகிறார்கள் என்பதையெல்லாம் கதையாகக் கொண்ட படம் அழகன். சின்னச்சின்ன உணர்வுகள் காதலின் ஊசலாட்டங்கள் சொல்ல முடியாத அன்பின் கனம் எதிர்கொள்ளக் கடினமான அன்பின் வெளிப்பாடுகள் இத்தனையும் கலந்து பிசைந்த நிலாச்சோற்றுக் கலயம்தான் அழகன்.

மதுபாலாவின் உற்சாகமும் கீதாவின் உலர்ந்த மேலோட்டமான அணுகலும் பானுப்ரியாவின் தனித்துவக் கோபமும் திரைக்கதையிலிருந்து படமாக்கப்பட்டதுவரை நன்கு இயங்கின. சாதாரண அறிதல், பிரிதல், சேர்தல் கதைபோலத் தோற்றமளித்தாலும் கவிதை பொங்கும் கணங்களினாலும் அழகனை அழகுபடுத்தினார். மரகதமணியின் இசையும் வைரமுத்துவின் வரிகளும் அழகனின் அணிகலன்களாயின. துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி என்ற பாடலும் தத்தித்தோம் பாடலும் சித்ராவின் குரலில் பிரமாதமாய் ஒலித்தன. சாதி மல்லிப் பூச்சரமே மழையும் நீயே நெஞ்சமடி நெஞ்சம் இவையாவும் எஸ்.பிபாலசுப்ரமணியத்தின் குரலால் மிளிர்ந்தன. அழகன் படத்தின் அடையாளப்பாடலாகவே ஒரு இரவெல்லாம் மம்முட்டியும் பானுப்ரியாவும் தொலைபேசியில் பேசிக்கொண்டே இருக்க பின்னணியில் ஒலிக்கும் மாண்டேஜ் பாடலான சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா பாடல் உருக்கொண்டது.

கோவை செழியனின் தயாரிப்பில் பாலச்சந்தர் இயக்கிய அழகன் எக்காலத்திற்குமான காதல் படங்களின் வரிசையில் நிச்சய இடம் வகிக்கும் நற்படம்.

 

https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-31-அழகன்/

  • Like 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 32 அமரன்

aathma-poster-2.jpg

தமிழ் சினிமாவுக்கென்று தனித்த குணங்கள் காலம் காலமாய் பார்த்துப் பராமரிக்கப்பட்டு வந்தன. அவ்வப்போது திசை திருப்பும் மடைமாற்றும் படங்கள் வரத்தும் நிகழும். எல்லா மாற்றங்களையும் எந்தக் கலையும் அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. கலையின் உடலில் ஒவ்வொரு படைப்புமே அதன் திசையை போக்கை மற்றும் அணுகுமுறையை இன்னபிறவற்றையெல்லாம் மாற்றி அமைப்பதற்கான முயல்வுகள்தானே..? அது வரையிலான கதையைத்தானே திருத்தி எழுதுகின்றன ஒவ்வொரு புதிய வரவுகளும்?

சில ஆதார விசயங்களை எப்போதும் மாற்றுவதற்கான அல்லது மீறுவதற்கான தைரியம் எல்லாக் கலைப் படைப்பாளிகளுக்கும் இருந்து விடுவதில்லை. வணிகம் பணம் எனும் இரண்டு சொற்கள் லெவல் க்ராஸிங்கில் பூட்டப்படுகிற ராட்சஸ இரும்புக் கதவுகளுக்குப் பின்னதான நிர்ப்பந்திக்கப்பட்ட காத்திருப்பு கணம் போலவே எந்தப் படைப்பாளியையும் அச்சுறுத்துவதுண்டு. அதை மீறி அவ்வப்போது ஒன்றிரண்டு விதிவிலக்குகள் வந்தே தீரும். அது கலையின் தன்மை.

 

R-11698392-1520855508-5768.jpeg-298x300.

1992 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியான 70 எம்.எம் படமான அமரன் அப்படியான தைரிய முயல்வுகளில் ஒன்று. தமிழில் டான் வகைப் படங்களில் முக்கிய இடம் அமரன் படத்துக்கு உண்டு. பில்லாவுக்கும் அதன் மீவுருவுக்கும் இடையிலான நெடுங்காலத்தினுள் குறிப்பிடத்தக்க டான் வகைப் படம் என நிச்சயம் அமரனைச் சொல்ல முடியும். தப்பானவனைத் தண்டித்து அழிக்கிற கதைமுடிவு அனேகமாக தமிழ்ப் படங்களில் சிலாகிக்கப்பட்டதைவிட புறக்கணிக்கப் பட்டதே அதிகம். அப்படி இருந்தும் அமரன் அதே போன்ற முடிவை நோக்கி பார்வையாளர்களை அழைத்துச் சென்ற படம்.

அமரனின் ஒளிப்பதிவு உலகத் தரமாயிருந்தது. பிசி.ஸ்ரீராமின் படங்களில் அனேகமாக முதற்படமாகவே சொல்லத்தக்க அளவில் இந்தப் படமெங்கும் அவர் கோர்த்துத் தந்த ஷாட்கள் அதிகதிக லாங் ஷாட்களைக் கொண்டதாக மிகப் பிரம்மாண்டமாக கண்கள் முன் விரிந்தது. பின் நாட்களில் அனேகப் படங்களில் கண்டதும் ரசித்ததுமான பல விஷயங்களின் ஆரம்பங்களைத் தொடங்கி வைத்தது அமரன் படம். மிக முக்கியமாக இந்தப் படத்தில் இடம்பெற்ற சண்டைக்காட்சிகளை ஒளிவழிக் காதலோடு படமாக்கித் தந்தார் ஸ்ரீராம். முன் பார்த்திராத துல்லியத்தோடு அமைந்தன சண்டைகள்.

அடுத்த விடயம் இசை. ஆதித்யன் இந்தப் படத்துக்கு இசையமைத்தார். பாடல்கள் தேவைக்கு அதிகமான பரபரப்பை உண்டு பண்ணி இருந்தன. கார்த்திக் தன் சொந்தக் குரலில் பாடிய வெத்தல போட்ட ஷோக்குல பாடல் முந்தைய அத்தனை ஹிட் பாடல்களையும் வந்து பார் என்றது. இத்தனைக்கும் ரஜினியின் தளபதி கமலின் குணா தொடங்கி பிரம்மா, மன்னன், ரிக்சாமாமா, பாண்டித்துரை என ஒரு டஜன் ஹிட் பேழைகளைத் தொடர்ந்து தந்தார் இளையராஜா. அத்தனைக்கும் எதிராய் அனாயாசம் காட்டியது இந்த ஒற்றைப் பாடல். படத்தின் தொடக்கத்திலேயே இந்தப் பாடலைக் காணச்செய்தது பின்னதான படத்தின் மீதான எதிர்பார்த்தலைக் குறைத்ததென பார்வையாளர்கள் கருதினார்கள். பின்னணி இசையில் வழக்கத்தை முற்றிலுமாக உடைத்தார் ஆதித்யன். சண்டைகளுக்கெல்லாம் பின்னால் ஹிந்துஸ்தானி கோர்வைகளைப் பயன்படுத்தி தனித்துவம் செய்தார். சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே பாடல் இன்றளவும் அமானுட வாஞ்சையோடு ஒலித்து வருகிறது. வசந்தமே அருகில் வா பாடலும் இன்னொரு சூப்பர்ஹிட்டாக மாறியது. பக்திப் பாடல்களுக்கு இசையமைத்து அறியப்பட்ட இசையமைப்பாளர் விஸ்வகுரு இசையில் இப்படத்தில் இடம்பெற்ற ஒரே பாடலான முஸ்தஃப முஸ்தஃபாவைப் பாடி ஆடினார் கார்த்திக்..

கார்த்திக்கின் இருவேறு தோற்றங்கள் ஃபங்க் கூந்தலிழையும் முன் தோற்றமும் வழித்து வாரப்பட்ட டான் தோற்றமும் இரண்டு நிலைகளுக்குமிடையே தன் உடல்மொழி குரல் என எல்லாவற்றிலும் அவர் காட்ட விழைந்த வித்யாசங்கள் ரசிக்க வைத்தன.

பழிவாங்கும் கதைதான். ஆனால் எடுத்த விதம் வித்யாசம்.

பத்து பேர்ல ஒருத்தன் புத்திசாலி ஆக முடியும் லட்சத்துல ஒருத்தன் மேதையாக முடியும். கோடில ஒருத்தன்தான் தலைவனாக முடியும். கோடிகோடில ஒருத்தன் தான் அவதாரமாக முடியும். அமரன் மனுஷன் ஆண்டவப் பெருமாள் ஆதாரம் வேண்டாம் எங்கிட்ட வேண்டாம் என்பார் ராதாரவி

அவதாரம்…ஒரு மன நோயாளியோட பேசுறதுக்கு நேரமில்லை எனக்கு எனப் பதில் வரும் அமரனிடமிருந்து

எங்கிட்ட யாரும் இப்படிப் பேசுனதில்ல இது ராதாரவி

உன் மிருகபாஷை தெரியாதது தப்பு அமரன் இப்படிச் சொல்கையில் அரங்கங்கள் நொறுங்கும்.

பின்னால் பல படங்களில் நல்ல வில்ல சந்திப்புக் காட்சிகள் வந்திருந்தாலும் இதில் அமரனும் ஆண்டவர்பெருமாளும் சந்திக்கிற காட்சியின் அபாரம். முதன்முதலாகப் பெருகியது.

ஆண்டவர் பெருமான்தான் தன் அப்பாவைக் கொன்று குடும்பத்தை அழித்தவனென்பதை அமரன் விளக்கிய பின்னரும் “அதெல்லாம் பேசிக்குவம் நம்ம சமரசம்…” என்பார் ராதாரவி… அதற்கு பதிலாக “உன் சாவுதான் எனக்கு சமரசம். நான் உன்னை அழிக்க வந்த ஆயுதம்” என முடிப்பார் கார்த்திக்.

ஆண்டவர் பெருமாளாக இந்தப் படத்தின் மூலமாக இந்தியத் திரையின் க்ரூர வில்லன்களில் ஒருவராக பேரெழுச்சி கண்டார் ராதாரவி. அவருடைய மேக் அப் மற்றும் குரல் ஆகியனவும் அவருக்குத் துணை புரிந்தன. சந்தர்ப்பவசத்தால் அமரன் எப்படி ஆண்டவர் பெருமாளைக் கொன்றழிக்கிறான் என்பதுதான் ஒன்லைன். அதை திரைக்கதை அமைத்து இயக்கியவர் கே.ராஜேஷ்வர். படத்தின் தயாரிப்பும் அவரே.

அமரனுக்கும் ஆண்டவர் பெருமாளுக்கும் இடையிலான படிப்படியான முரண்களும் இறுதிவரை அழகாகப் பின்னப்பட்டிருந்தாலும் அதிகரித்து வைக்கப்பட்ட முன் எதிர்பார்ப்பு.

அமரன் அந்தக் காலகட்டத்தில் புரிந்துகொள்ள முடியாத மௌனத்தையே மறுவினையாக அறுவடை செய்தது என்றபோதும் இன்றைக்கும் தமிழில் எடுக்கப் பட்ட வித்யாசமான காட்சியனுபவப் படங்களில் ஒன்றாக முன்வைப்பதற்கான பல கூறுகளைத் தனதே கொண்டிருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை.

அமரன் – குருதியின் கதையாடல்

 

https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-32-அமரன்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 33 ஜெண்டில் மேன்

aathma-poster-3.jpg

ஷங்கர் தமிழ் சினிமாவின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கிய படம். அடுத்த காலத்தின் பெருவெற்றிகர மனிதராக ஷங்கர் ஆவதற்கான அனைத்துக் கூறுகளையும் தனதே கொண்டிருந்தது அவரது முதற்படமான ஜெண்டில்மேன். அப்போது பெரும் வணிக மதிப்பினைக் கொண்டிருந்த பிரபுதேவா இதன் நடன இயக்கத்தோடு ஒரு பாடலில் தோன்றினார். உடன் அவரது அண்ணன் ராஜூ சுந்தரம். வசனம் எழுதியவர் பாலகுமாரன். ஒளிப்பதிவு ஜீவா, எடிடிங் லெனின், வீடீ விஜயன், பாடல்களை எழுதியவர்கள் வாலியும் வைரமுத்துவும். திரும்பிய திசையெல்லாம் ஏ.ஆர்.ரஹ்மானின் அடுத்தடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பு உச்சத்திலிருந்த நேரமும் கூட. இத்தனை வலுவான கூட்டணியோடு தன் பேனரில் அடுத்தடுத்து இரண்டு சூப்பர்ஹிட் படங்களைத் தயாரித்தவரான கேடி.குஞ்சுமோனின் மூன்றாவது தயாரிப்பாக உருவானது ஜெண்டில்மேன். அதனை இயக்கினார் அறிமுக இயக்குனர் ஷங்கர். கமல் தொடங்கி சரத்குமார் வரை பலரும் வெவ்வேறு காரணங்களுடன் இதன் நாயக பாத்திரத்தை மறுக்க இறுதியில் அமைந்தவர் அர்ஜூன்.

அவருக்கு ஜோடி ரோஜா மூலம் நாடெங்கும் தன் முகத்தைப் பலரது அகங்களுக்குள் விதைத்திருந்த மதுபாலா. நம்பியார், மனோரமா, அஜய்ரத்னம், சுபாஸ்,ரீ சரண்ராஜ், கவுண்டமணி, செந்தில், ராஜன், பி தேவ் எனப் பலரும் உடன் நிற்க 1993ஆம் ஆண்டின் ஜூலை 30ஆம் நாள் வெளியான ஜெண்டில்மேன் ஒரு ட்ரெண்ட் செட்டர். திசைவழி திருப்பிய நற்படம்.Gentleman-Tamil-2016-500x500-300x300.jpg

இன்றளவும் கவுண்டமணி செந்திலின் மகாத்மியங்களின் வரிசையில் இதற்கு முக்கிய இடமிருக்கிறது.

வாட் யூ வாண்ட்?

“பீஸ் ஆஃப் மைண்ட்”

இதெல்லாம் அடக்க முடியாத பெருஞ்சிரிப்புக்கான திறப்பு. கவுண்டமணிக்கு காமிக் வேடத்தைத் தாண்டிய உடன்பங்காளி கதாபாத்திரம் நன்றாகவே செய்தார்… லெஸ் டென்சன் மோர் ஒர்க் போன்ற செந்திலிச டயலாக்குகளும் வண்டுருட்டான் தலையா, பச்சிலைப் பிடுங்கி போன்ற மணிமொழிகளும் உக்கிரம் காட்டின.

நாட்டின் பல பாகங்களிலும் பல கோடி ரூபாய்களைத் தொடர்ந்து கொள்ளை அடிக்கிற பலே எத்தன் ஒருவனை என்ன செய்தும் பிடிக்க முடியவில்லை. அவன் யாரென்றே தெரியாமல் விழிக்கிறது போலீஸ். இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பை ஏற்கிறார் அழகர் நம்பி (சரண்ராஜ்). அவர் திருமணமாகாதவர். கறார் அதிகாரி. தன் நண்பன் மணி(கவுண்டமணி) உதவியுடன் அப்பளக் கம்பெனி நடத்தி வருகிறான் கிச்சா. அவனது தொழிலை நம்பிப் பலரும் அவனிடம் பணி புரிகின்றனர். இந்தக் கிச்சாவின் மறுமுகம்தான் அந்தக் கொள்ளைக்கார வேடம் என்பது தெரியவருகிறது. என்ன பின்னணியில் அந்தக் கொள்ளைகளைச் செய்தான் கிச்சா அவனது முன் கதை என்ன என்பது ஜெண்டில்மேன் படத்தின் மிச்சம்.

ஃபாண்டஸி, த்ரில் என்றொரு வகைமை உண்டு. பார்த்தியா எப்டி எடுத்திருக்காங்க இந்தப் படத்தை என்று தோன்றவைப்பதற்காகக் கதையிலிருந்து நிகழும் சம்பவங்கள் வரைக்கும் எதைப் பற்றிய லாஜிக் யோசனைகளுக்குள்ளேயும் ரொம்ப சிந்திக்கவிடாமல் முழுவதுமாகப் பார்க்கிறவர்களைப் பரவசம் கொள்ள வைப்பதிலேயே குறியாக செயல்பட்டுப் படமெடுக்க விழைவது. தமிழில் அந்த வகைமைப் படங்களின் ஆரம்பமாகவே ஜெண்டில்மேனை சுட்டமுடிகிறது. எப்படி என்பதை யோசிக்கவிடாமல் நம்ப வைப்பதுபோல் அடுத்தடுத்த காட்சிகளை ஆவென்று வாய்பிளக்க வைப்பது. ஷங்கரின் தாரக மந்திரமே இதுதான். ஜெண்டில்மேனில் தொடங்கி இன்றுவரைவிடாமல் அவர் கைக்கொள்கிற லாவக லகான்.

கொள்ளை அடித்தும் கற்கை நன்றே எனத் திருத்தப்பட்ட அறமொழி ஒன்றை அடிநாதமாகக் கொண்டு ஜெண்டில்மேன் உருவானது. இதன் வசனங்களும் நகைச்சுவைக் காட்சிகளும் சண்டைகளும் பாடல்களும் என எல்லாமுமே மக்களின் பெருவிருப்ப மலர்களை மலர்த்திற்று. பாடல்களை உருவாக்க ஷங்கரின் மெனக்கெடுதல்கள் சின்ன பட்ஜெட் படங்கள் அளவுக்கு இருந்தன. இவையெல்லாம் முதல் தடவை நிகழ்ந்து பின்னர் ஷங்கர் பாணி என்றே மாறியது.

சாமான்யனால் செய்ய முடியாத எல்லாவற்றையும் திரையில் ஒரு நாயகனுக்கான சவால்களாக அடுக்குவது காலங்காலமாக திரைப்படங்களை உருவாக்குவதற்கான வழிமுறைகளில் முதன்மையானது. ஒரு பக்கம் அப்பளம் விற்பவன். இன்னொரு பக்கம் ராபின் ஹூட் என இருவேறுபட்ட தோற்றங்களை ஏற்று சிறப்பாக நடித்தார் அர்ஜூன். அவரது சம்பளத்தையும் செல்வாக்கையும் பலமடங்கு உயர்த்தியது ஜெண்டில்மேன். ஒட்டகத்தைக் கட்டிக்கோ போன்ற சுதந்திரமான சொற்களைக் கொண்டு தமிழின் மெகா ஹிட் பாடல்களை வழங்கினார் ரஹ்மான். இதே படம் பின் நாட்களில் தெலுங்கு இந்தி ஆகியவற்றிலும் பெயர்த்தெடுக்கப்பட்டது.

சினிமா என்பது வழங்குமுறை என்று அதன் திரைமொழியை மாற்றி அமைத்த வகையில் ஷங்கரின் படங்களுக்கு அவற்றின் வணிக முகங்களைத் தாண்டிய மதிப்பொன்று எப்போதும் உள்ளது. ஜெண்டில்மேன் அதற்கான தொடக்க ஊற்று.

 

https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-33-ஜெண்டி/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 34 வாலி

aathma-poster-2.jpg

இரட்டைவேட படங்கள் தனக்கு உண்டான குறைந்தபட்ச உத்தரவாதத்தை கொண்டவை வணிகரீதியிலான அத்தகைய உறுதி எந்த படம் ஓடும் என தெரியாத இந்திய சினிமாவின் வரவு வருமானம் குறித்து அச்சத்தை பெரும்பாலும் நீக்கி விடுபவை டபுள் ஆக்சன் திரைப்படங்கள்.காலம் காலமாக இரு வேடப் படங்களுக்கான திரைக்கதை அமைத்தலுக்கென்று சிலபல தனித்த விதிமுறைகளும் உண்டு. படமாக்கும்போது இவற்றுக்கென கூடுதல் சமரசங்களை ரசிகர்கள் அனுமதிப்பதும் ஏற்படுத்தப்பட்ட புரிதல் ஒன்றின் அங்கமே. அந்தவகையில் இரண்டு மனிதர்கள் நடித்தாற்போலவே உருவாக்க நேர்த்தியை முதன்முதலில் ஏற்படுத்திக் காட்டிய படங்கள் சென்ற நூற்றாண்டின் இறுதியில் வரத் தொடங்கின. அப்படியான வரிசையில் முதல் என்றே வாலி படத்தைச் சொல்ல முடியும்

atkdbjtarv-1494006435-300x174.jpg

தேவாவும் சிவாவும் இரட்டையர்கள். சிவா தம்பி. அண்ணன் தேவாவுக்கு காது கேட்காது. வாய்பேச முடியாது. சிவாவும் ப்ரியாவும் காதலிக்கின்றனர். யாரைப் பார்த்தும் தன்னுள் காதலை உணராத தேவா தற்செயலாக யாரென்றே தெரியாத ப்ரியாவைத் தானும் பார்த்துத் தன்னுள் காதலாகிறான். அவளைத் தன் வருங்கால மனைவி என்று தன்னிடம் அறிமுகம் செய்து வைக்கிற தம்பி சிவாவைத் தன் காதல் குறுக்கீடாகத்தான் நினைக்கிறான். போதாக் குறைக்கு தேவாவின் திறமைகளைப் புகழ்ந்தபடியே உங்களிருவரில் நான் முதலில் உன்னைப் பார்த்திருந்தால் உன்னைத்தான் காதலித்திருப்பேன் என்று சொல்கிறாள் ப்ரியா. தன் செயல்களுக்கான நியாயங்களைத்தானே தயாரித்துக் கொள்கிறான் தேவா. அண்ணன் மீது தன் உயிரையே வைத்திருக்கும் தம்பி சிவாவுக்கு அவன் என்ன எண்ணுகிறான் எனத்தெரியாது. இந்த நிலையில் சிவா ப்ரியா கல்யாணம் நடக்கிறது. எப்படியாவது ப்ரியாவை அடைந்தாக வேண்டுமென்று தன்னால் ஆன எல்லா வில்லத்தனங்களையும் செய்கிறான் தேவா. முதலில் ப்ரியா சொல்வதை நம்பாத சிவா ஒரு கட்டத்தில் தேவாவின் மனப்பிறழ்வை உணர்கையில் காலம் கடந்துவிடுகிறது. கடைசியில் தேவா சிவாவைத் தாக்கி மயக்கமுறச் செய்துவிட்டு ப்ரியாவை நெருங்குகிறான். அவன் தேவா என அறியும் ப்ரியா அவனிடமிருந்து தப்பி ஓடுகிறாள், ப்ரியாவைத் தேடி வரும் சிவா தன் துப்பாக்கியால் தேவாவை சுட்டு வீழ்த்துகிறான். நீச்சல் குளத்தில் பிணமாகி மிதக்கும் தேவாவின் ஆன்மா தன்னால் வெளிக்காட்டவியலாத தன் காதலின் சொற்களை உச்சரிப்பதாக நிறைவடைகிறது படம்.

தேவா என்று வில்ல பாத்திரத்துக்கு பெயர் வைத்தாலும் தேவாதான் இதன் நிஜ நாயகனும் ஆனார். சோனா ஏ சோனா இளைய மனங்களின் புதிய கீதமாய் ஓங்கி ஒலிக்கலாயிற்று. படத்தின் இசைப்பேழை வெளியாகி ஒரு வருடகாலத்துக்கும் மேலான காத்திருப்புக்கு அப்புறம்தான் படம் வெளியானது. அது படத்திற்கான நல்ல முன்விளம்பரமாக மாறியது. ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்தஜாமத்தில் என் ஜன்னலோரத்தில் நிலா நிலா பாடல் அதிரிபுதிரியானது. நிலவைக் கொண்டுவா கட்டிலில் கட்டிவை பாடலும் வானில் காயுதே வெண்ணிலா பாடலும் கூட சூப்பர்ஹிட்களே. எல்லாவற்றையும் வைரமுத்து எழுதினார். நடனங்களை ராஜூ சுந்தரம் அமைத்தார். இதன் கலை இயக்கம் தோட்டா தரணி ஒளிப்பதிவை ஜீவாவும் சில பகுதிகளை ரவிவர்மன் மற்றும் எம்.எஸ்.பிரபு ஆகியோரும் கையாண்டார்கள்.

ரெப்ரெசெண்டேடிவ் விக்கியாக அதகளம் செய்தார் விவேக். அவருக்கென்று தனியொளி மிகுந்திருந்த காலத்தில் வாலி அவரது உச்சபட்சங்களில் ஒன்றானது. அதெல்லாம் சிவா கிட்டே வாங்கிக்கப்பா என்று போகிற போக்கில் சிக்ஸ் அடிப்பார். சில இடங்கள்ல இப்பிடி சில இடங்கள்ல இப்பிடி என்று தன் திருட்டை நியாயம் செய்வார். எனக்கு இந்தப் பக்கம் வேலை இல்லை நான் அந்தப் பக்கம் போறேன் எனக் கண்கலங்கச் சிரிக்க வைத்தார் விவேக். அவரும் அஜீத்தும் சேர்ந்து சோனா என்றொரு பொய்யை உருவாக்கி சிம்ரனிடம் அளந்துவிடும் கதைப்பாம்பு விவேக்கைப் பதம் பார்க்கும். அதற்குப்பின் அவர் வந்து அஜீத்திடம் முறையிட்டபடி படத்திலிருந்தே விடைபெற்று ஓடும் காட்சி சொற்களால் விவரிக்க முடியாத அட்டகாசமானது.

அஜீத்குமாரும் சிம்ரனும் இந்தப் படத்தின் ஆதாரங்கள். அதிலும் வணிகப் படங்களில் எப்போதாவது பூக்க வாய்க்கும் அரிய நடிக மலர்களாகவே இந்தப் படத்தில் நடித்தனர். குறிப்பாக இரண்டு அஜீத்களுடன் டாக்டரைப் பார்க்கச் செல்வார் சிம்ரன். அந்த ஒரு காட்சியில் மாபெரும் பங்கேற்பை நிகழ்த்தினார் என்றால் தகும்.
எஸ்.ஜே சூர்யா வஸந்திடமிருந்து வந்தவர். இது சூர்யாவின் முதல்படம். தமிழ்த் திரை உலகத்தில் தனக்கென்று பெரிய ரசிகபட்டாளத்தை உண்டாக்கிக் கொண்டவரான சூர்யா பின்னாட்களில் நடிகராகவும் வென்றார். முதல் படம் மூலமாய்ப் பெரும் பெயர் பெற்றவர்களில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

அஜீத்குமாருக்கு விருதுகளை வாங்கித் தந்து ரசிக பலத்தை அதிகரித்த வகையில் வாலி அவருடைய திரை ஏற்றத்தில் மிக முக்கியமான படமாயிற்று.

 

https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-34-வாலி/

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

The Corsican Brothers என்ற நாவலைத் தழுவி 1949இல் வாசன் ‚அபூர்வ சகோதரர்கள்’என்றொரு படத்தை தயாரித்திருந்தார். எம்.கே.ராதா, பி.பானுமதி இணைந்து நடித்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அது. பின்னாளில் இந்த திரைப்படத்தை ‚நீரும் நெருப்பும்‘ என்ற பெயரில் எம்ஜிஆர், ஜெயலலிதா  நடித்திருந்தார்கள். எஸ்.ஜே.சூர்யா தயாரித்த வாலி திரைப்படத்துக்கு முன்னோடி அபூர்வசோதர்ர்கள். கட்டுரையாளர் இளம் வயதாளர் என்று நினைக்கிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kavi arunasalam said:

ஜோதிகாவைப் பற்றி ஒண்ணும் சொல்லவேயில்லை😏

ஜோவுக்கு அதிக காட்சிகள் இல்லாதது காரணமாக இருக்கலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

1 minute ago, கிருபன் said:

ஜோவுக்கு அதிக காட்சிகள் இல்லாதது காரணமாக இருக்கலாம்!

ஆனாலும் ஜோவின் முதல் படம் அல்லவா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kavi arunasalam said:

 

ஆனாலும் ஜோவின் முதல் படம் அல்லவா

ஆமாம். ஜோவின் பல காட்சிகளை எடிற்றிங்கில் வெட்டிவிட்டார்களாம்! ஒரு லட்சம்தான் சம்பளமாம்.

நடிகர்களின் முதல் படங்களைத் தேடினால் யாழ் இணைப்புத்தான் வந்தது😊

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

நடிகர்களின் முதல் படங்களைத் தேடினால் யாழ் இணைப்புத்தான் வந்தது😊

அன்றுதான் யாழ் இணையம்  இப்பொழுது யாழ் களஞ்சியம் 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 35 சேது

aathma-poster-1.jpg

காதல் யூகத்திற்குள் அகப்படாத வினோதங்களில் ஒன்று. பாலுமகேந்திராவின் பள்ளியிலிருந்து கிளம்பியவர்களின் பட்டியலில் முக்கியப் பெயராக பாலாவின் பெயரை எழுதுவதற்கான காரணப் படம் சேது. கையாள்வதற்குச் சிரமமான காதலின் தனித்த கடினத்தைச் சொல்ல முற்பட்ட படம். அச்சு அசலான பதின்பருவத்தின் தளைகளற்ற ஆண் மனம் ஒன்றை கொஞ்சமும் புனைவுத் தன்மை துருத்தாத வண்ணம் சித்தரித்தார் விக்ரம். நாயகவேஷத்தின் அதீதங்கள் எதுவும் கலக்காமல் படிகம் போன்ற துல்லியத்தோடு ஆடவனின் தனியாவர்த்தன உலகம் நம் கண் முன்னால் விரிந்தது. அங்கே தென்பட்ட தேவதை அபிதாவின் மீது சேதுவுக்கு ஏற்பட்ட வாஞ்சை ஆதுரமாகித் தேடலாய்க் கனிந்து காதலாவதெல்லாமும் நம்பகத்தின் ஓடுபாதையில் பிசகாமல் நிகழ்ந்தேறியது. சொல்லவந்த காதலின் ஒற்றை இழையை, முன்பறியா யதார்த்த நேர்த்தியுடன் சித்தரித்ததும், தன்னைத் தானே நகர்த்திக் கொண்டு செல்லக்கூடிய திரைக்கதையின் சொலல் முறையும் சேதுவின் பலங்கள்.

குரல் மொழி இசை எனத் தன் மூன்று மலர்களைக் கொண்டு இந்தப் படத்தை உயிர்ப்பித்தார் இளையராஜா. திரைப்படத்தின் பாடல்கள் என்பவை இந்தியசினிமாவின் கதாநம்பகத்துக்கு வெளியே அழைத்துச் சென்று திருப்புவது எப்படி நோக்கினாலும் காட்சியனுபவத்தில் இடையூறாகவே விளையும். அபூர்வமாக சேதுவின் பாடல்கள் லேசாக வெளுத்த, முகிழ்ந்து முடிக்காத, மொட்டும் பூவுமான, பாதி மலர் ஒன்றாகவே இயைந்து ஒலித்தன.

81ZHs5fXsRL._SY550_-220x300.jpg

கலை, காதலைக் கையாளும்போது மாத்திரம் ஒரு சிட்டிகை புனிதத்தை அதன்மீது கூடுதலாய்த் தெளித்துவிடுகிறது. பரஸ்பரம் சரிவர நுகரப்படாத, பாதியில் கலைந்த ஒரு கனவேக்கத்தை ஒத்த அரிதான காதலை சேதுவும் அபிதாவும் கொண்டிருந்தார்கள். மலர் பறிப்பதுபோலக் காதலைக் கையாண்டு கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில், உயிர் பறிக்கிற கடினத்தோடு தன் காதலை முன்வைத்தான் சேது. ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிந்தும் நிராகரிக்கவே முடியாது என்பதையும் தெரிந்துகொண்டு அவனைப் பெற்றுக்கொண்டு, தன் மனதைத் தர முனைந்தாள் அபிதா. அவனது தாமத வீதியில் உதிர்ந்து கிடக்கும் சருகுப் பூக்களில் ஒன்றென உயிரைத் துச்சம் செய்து கொண்டு, கதைகளை முடிவுக்கு அழைத்தாள் அபிதா.

பச்சை வண்ணம் ததும்பும் பிறழ் மனங்களின் வனாந்திரமாம் பாண்டி மடத்திலிருந்து, தன் மன மீள்தலை நிரூபித்தபடி, காதலாளைத் தேடி வருகிற சேது, அவளற்ற தன் உலகில் எஞ்சுகிற ஒரே இடமான அதே இடத்துக்குத் திரும்புகிறதோடு முடிகிறது படம். துக்கமும், கண்ணீரும் காதலை எப்போதும் சுற்றி இருக்கிற எடையற்ற குறளிகள் அல்லது காதலின் இருபுறச் சிலுவைகள்.
வென்ற காதல்களின் பேரேடுகள் தணிக்கைக்கு அப்பால் கைவிடப்படுகிற வெற்றுத் தகவல்கள் காலச்செரிமானத்துக்குத் தப்பிப் பிழைக்கிற வல்லமை தோற்ற காதல்களுக்கு மட்டுமே உண்டு. அந்த வகையில் தேவதாஸ் பார்வதி வரையிலான பாதிமுழுமைகளின் சின்னஞ்சிறிய பட்டியலில் சேதுவும் அபிதாவும் நிரந்தர ஒளிப்பூக்கள்.

யதார்த்தமான மனிதர்களைப் பாத்திரமாக்கியதன் வெற்றியை அறுவடை செய்தார் பாலா. தன்னை எந்தளவுக்கும் வருத்திக்கொள்ளக் கூடிய இன்னொரு மகா நடிகனாகவே விக்ரம் தன் அடுத்த கணக்கைத் தொடங்கினார். அனேகமாக இந்திய அளவில் நெடிய காத்திருத்தல் காலத்தினைக் கடந்து ஒளிவட்டம் பெற்ற நட்சத்திரமாக விக்ரமைச் சொல்ல முடியும். பாடல்களும் ஒளிப்பதிவும் இயல்பின் சுவர்களுக்குள் இயங்கிக் கடந்த வசனங்களும் சிவக்குமார் ஸ்ரீமன், மோகன் வைத்யா, அபிதா என பாத்திரங்களுக்கான நடிக தேர்வுகளும் என்று எல்லாமே காரணங்களாயின. சேது தமிழ் நிலத்தின் அடுத்த தேவதாஸ் ஆகவே தன் தடத்தைப் பதித்தது.

சொல்லாக் காதலில் தொடங்கி வெல்லாக் காதல் வரைக்கும் வென்ற காதல் வெல்லக் கட்டி தோற்ற காதல் வைரக்கட்டி என்பதுதான் காதலுக்கான புனைவுலக அந்தஸ்து. அதனைக் கம்பீரமாகப் பொன்னேட்டில் பொறித்துத் தந்த படம் சேது.


 

https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-35-சேது/

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சியான் மறக்கமுடியாத பாத்திரம்.

இந்தப் படத்தில் அப்பா சிவகுமார் ஓகே. பின்னாட்களில் பாலா எடுத்த படங்களில் அப்பாக்கள்  ‘லூசு’க்கள்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 36 காக்க காக்க

aathma-poster-3.jpg

 

கௌதம் வாசுதேவ் மேனன் தமிழ்ப் படங்களின் கதை சொல்லும் முறையில் குறிப்பிடத்தகுந்த திருப்பங்களை நிகழ்த்தியவர்களில் ஒருவர். தனது முதல் படத்தைக் கண்களும் மனசும் பிழியப் பிழியக் காதல் கசிதல் படமாகத் தந்தார் தன்னை யாரென்று நிறுவிய அடுத்த கணமே காக்க காக்க என்ற ரெண்டாம் படத்தை சூர்யா ஜோதிகா இருவரையும் கொண்டு காவல் துறைப் படமாக ஆரம்பித்தார். அதுவரைக்குமான சூர்யாவின் ஏறுமுக வரைபடத்தில் ஜிவ்வென்று மேலேற்றிக் காட்டியது காக்க காக்க. எல்லாமே நன்றாக அமைவது சினிமாவில் அபூர்வமாய்த்தான் நிகழும். இது மூட நம்பிக்கைபோலத் தோன்றக்கூடும். ஆனால் இதன் பின்னால் ஒரு படத்தை இப்படியான பெருவெற்றியை நோக்கி இட்டுச் செல்வதன் பின்னால் உறைந்திருக்கக்கூடிய மகா மகா உழைப்பு எத்தனை பேரின் கடின வியர்வை கண்ணீர் ரத்தம் இத்யாதிகளைக் கலந்து சொரிவது என்பதை உணர்கையில் அதன் அரிய வருகை புரியவரும்.

காமிரா வழியாக எதையெல்லாம் சொல்லப் போகிறோம் என்பதில் தெளிவு கொண்ட இயக்குனராக கௌதம் மேனன் தன் கதைகளைத் திரைநோக்கி நகர்த்தினார். மணிரத்னத்தின் பட்டறையிலிருந்து கிளம்பியவர்களில் முதன்மையானவர் கௌதம். வணிக அந்தஸ்தும் அதே நேரத்தில் விரும்பத்தக்க படங்களும் என்பதில் ஆணித்தரம் காட்டும் இயக்குநர் இந்தப் படத்தில் BLACK MAIL TERRORISM எனப்படுகிற ஆள் கடத்தி மிரட்டிப் பணம் பறிக்கும் சமூகவிரோத மனிதர்களின் சின்னஞ்சிறு அசைவுகளைக்கூட சமரசம் இன்றிப் படமாக்கித் தந்தார்.

நாலு போலீஸ் அதிகாரிகள் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் எனப் பேர் பெற்றவர்கள் சென்னையில் எல்லை மீறிக் கொண்டிருக்கக்கூடிய ஆள் கடத்தல் பேர்வழிகளை ஒருவர்விடாமல் ஒழித்துக்கட்டியே விடுகையில் கடைசி ஒருவன் சேதுவின் தம்பி எனப் புதிதாய் முளைத்து வருகிறான் பாண்டியா. யாரும் எதிர்பாராதவகையில் யாரென்றே தெரியாமல் இருளில் ஒளிந்துகொண்டு தன் அண்ணனைக் கொன்ற போலீஸ் அதிகாரிகளை சின்னாபின்னமாக்கத் துடிக்கிறான். அன்புச்செல்வன் என்ற பேரிலான நாயகனுக்கும் பாண்டியாவுக்கும் நடக்கிற யுத்தமும் முடிவில் நல்லவன் வாழ்வான் கெட்டவன் அழிவான் எனும் நல் முடிவும் காக்க காக்க கதைக்களன்.

இந்தப் படம் வெளிவருவதற்குமுன் தினம் யாருக்கும் ஜீவன் என்ற பெயர் கூட சரிவரத் தெரிந்திருக்காது. அவர் நடித்து யுனிவர்ஸிடி என்ற படம் வெளியான சுவடற்றுக் காணாது போயிருந்தது. வந்தது காக்க காக்க எத்தனைக்கெத்தனை சூர்யாவை ரசித்தார்களோ அதைவிட ஒரு சதவீதம் அதிகமாகவே யார்றா இந்த வில்லன் என்று அந்தப் பக்கம் சரிந்தார்கள் எதிர் நாயகனை ரசித்தல் என்பதெல்லாம் எளிதில் நடந்து விடுகிற காரியமில்லை. ஒரு ரஜினி அப்புறம் ஒரு ரகுவரன் அதற்கப்புறம் ஒரே ஒரு ஜீவன் தான் அதில்கூட மேற்சொன்ன மூவரையும் ரசிக்கும் சதவீதமும் அவர்கள் மேல் பொழியும் அன்பும் வித்யாசப்படும்… சர்வ நிச்சயமாக இது ஜீவனின் படம். அவரை அகற்றிவிட்டு யோசிக்கவே இயலாத அளவுக்கு ஆக்ரமித்தார் ஜீவன்.

ஜீவன் தன் சுருள் கேசத்தினுள்ளே முகத்தை மறைத்துக் கொண்டார் யூகிக்க முடியாத அமைதியோடு அவரது குரல் துணை கதாபாத்திரமாகவே உடன் வந்தது. சொற்களைப் கடித்துப் பற்களுக்கு நடுவே வைத்து கரும்பை முறித்து சாறெடுக்கிறாற்போல் ஜீவன் பேசியதில் மனங்கள் மயங்கின.

தன் அண்ணனிடம் “சேதுண்ணே எங்க போனாலும் அந்த ஊரை நம்ம ஆளணும். அந்த ஊரை ஒரு கலக்கு கலக்கணும். இந்த ஊருக்கே நாம யார்னு காட்டணும்ணே” என்பார்.அள்ளிக்கொண்டு போகும். சண்டைக்காட்சிகளில் அவரை ஏன் அடிக்கிறீங்க சூர்யா என்று கதையை மீறி கத்தியவர்களில் நானுமொருவன். ஜோதிகாவுக்கும் சூர்யாவுக்குமான காதல் இந்தப் படத்தின் வருகைக் காலத்தை ஒட்டி அவர்கள் வாழ்வில் நிசமாயிற்று என்பது இந்தப் படத்தைப் பற்றிய மேலதிகப் புள்ளி விவரங்களில் ஒன்று.

பணம் ஆள் கடத்தல் குற்றவுலகம் அதிகாரம் மனித உரிமை சட்டம் காவல்துறை சீருடை பிறப்பிக்கும் கர்வம் பெண் குழந்தைகளுக்குத் தேவைப்படுகிற சமூகப் பாதுகாப்பு நகர்ப்புறங்களில் ஈவ் டீஸிங் எனும் க்ரூரத்தை எதிர்கொள்வதில் தோன்றும் இடர்கள் என காக்க காக்க சமூகம் சார்ந்த பல முக்கிய விசயங்களைப் பேசிற்று.

ஹாரிஸ் ஜெயராஜ் தாமரை கூட்டணியில் உருவான பாடல்கள் ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு என எல்லாமே ப்ளஸ் பாயிண்டுகளாகின. உறுத்தாத சலிக்காத நற்படமாயிற்று காக்க காக்க.

காக்க காக்க சூப்பர்ஹிட் போலீஸ் ஸ்டோரி.

 

https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-36-காக்க-க/

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 37 பார்த்திபன் கனவு

aathma-poster.jpg

கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய வரலாற்றுப் புதினமான பார்த்திபன் கனவு 1960களில் தமிழில் படமாக்கப்பட்டது. இந்தப் பலவண்ணப் பார்த்திபன் கனவு 2003 ஆமாண்டு வெளியானது முந்தைய கனவல்ல. கரு பழனியப்பன் எழுதி இயக்கிய இந்தப் பார்த்திபன் கனவு தமிழின் புத்திசாலித்தனமான திரைக்கதைகளின் பட்டியலில் தனது இடத்தை உறுதி செய்து கொண்ட படம். பல காரணங்களுக்காக இந்தப் படத்தின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. மாய யதார்த்தப் புனைவாக்க வரிசையில் இந்தப் படத்தை தாராளமாக சேர்க்க முடியும் வாழ்வின் எதிர்பாராமை முன் வைக்கக் கூடிய சின்னஞ்சிறு பொறி போதுமானதாக வேறொரு கதையை அல்லது நிகழ்ந்து கொண்டிருக்கக் கூடிய கதையின் முற்றிலும் எதிர்பாராத திசையைத் திறந்து வைத்துவிடும் என்பதைக் கொண்டு தன் கதையை இழைத்தார் பழனியப்பன்.

இரட்டை வேடக் கதைகளில் இந்தப் படம் ஒரு மடைமாற்று. பார்த்திபன் ரசனை மிகுந்தவன். வாழ்வில் தனக்கென்று கனவுகளைக் கையிலேந்திக் காத்திருப்பவன். தான் அடிக்கடி சந்திக்கிற பெண்ணைப் பார்த்து மனதினுள் அவள் மீது பெரிய ஈர்ப்பை வளர்த்துக் கொண்டவனுக்குப் பெண் பார்க்கச் செல்கையில் அவளே வரனாகப் பார்க்க வாய்க்கிறது. மேற்கொண்டு எதையுமே கேளாமல் நீயே என் நாயகி எனத் திருமணத்தைப் பேசி முடிக்கிறான். திருமணமும் நிகழ்ந்து விடுகிறது. தனக்குப் பிரியமானவளே தன் வாழ்விணை என்பதில் பூரித்துக் கொண்டே அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் ஒரு பெண்ணைப் பார்க்கிறான். அவன் பார்க்கும் அவள் தான் அவன் ஏற்கனவே பலமுறை பார்த்ததும் விருப்பம் கொண்டதுமாகிய ஜனனி என்பது தெரியவருகிறது. திருமணம் செய்துகொண்டதோ ஜனனியின் தோற்ற ஒற்றுமையில் இருக்கும் சத்யாவை. உருவம் ஒன்று என்றாலும் உள்ளம் வெவ்வேறு ரசனைகள் வேறு குணம் வேறு எல்லாமே வேறாகப் புரிய வரும் புள்ளியில் இனித்த அதே வாழ்வு துவர்க்கத் தொடங்குகிறது. தன்னுள் மருகுகிறான் பார்த்திபன்.

 

.1000x1500_f9693c3f-a498-4384-be2e-78fcc7

அந்த ஜனனி அவர்கள் வசிக்கும் அதே அபார்ட்மெண்டுக்கு எதிர்வீட்டுக்குக் குடிவருவதும் மெல்ல பார்த்திபனுக்கும் அவளுக்கும் லேசான அறிமுகம் பூப்பதும் இரண்டு பெண்களுக்கும் இடையே நட்பு வலுப்பதும் பார்த்திபனின் வினோதமான இழத்தல் குறித்து அவனது நண்பன் மனோ ஜனனி என நினைத்துக் கொண்டு சத்யாவிடமே பகிர்வதும் ஊடல் விரிசலாகிப் பிரிதல் பின் சேர்தலுமாய் நிறையும் திரைக்கதை.மணிவண்ணன் தேவன் உள்ளிட்ட அனைவருமே நன்கு பரிணமித்தார்கள். ஸ்ரீகாந்த்தும் சினேகாவும் மிகச்சிறப்பான நடிப்பை வழங்கியதன் மூலம் அவரவர் திரைப்பட்டியலில் முக்கியமான பங்கேற்றலை நிகழ்த்திக் கொண்டனர்

வசனங்களும் கதை நகர்வுக்குத் துணை நிற்கும் காட்சிகளின் கோர்வையும் யதார்த்தத்தை மீறாமல் களமாடினார் கரு.பழனியப்பன். அத்தனை பாத்திரங்களும் தத்தமது தனித்துவமும் கெடாமல் மைய நீரிழைய்லும் கலந்து தொனித்தது அழகு. கரு பழனியப்பன் படைத்த உலகத்தில் பெண் கதாபாத்திரங்கள் தனித்துவம் ஓங்கித் தென்பட்டனர்
விவேக் தேவதர்ஷனி சோனியா பங்குபெற்ற நகைச்சுவைக் காட்சிகள் கருத்தாழம் கலந்து உருக்கொண்டது நளினம். வித்யாசாகரின் இசையில் அத்தனை பாடல்களுமே தித்திக்க மறுக்கவில்லை. ஆலங்குயில் கூவும் ரயில் பாடல் சிப்பியிருக்குது முத்துமிருக்குது பாடலின் வேறொரு புதிய கால நல்வரவானது. கனாக்கண்டேனடி பாடலில் தன்னைக் கரைத்து அமுதம் படைத்தார் மதுபாலகிருஷ்ணன் பக் பக் பக் ஹே மாடப்புறா பாடல் படமாக்கப் பட்ட விதம் ரசிக்கவைத்தது.

எளிய மனிதர்களைக் கூட அவரவர் சுயமரியாதை வளையத்துக்குள் படைத்துத் தன் படங்களெங்கும் தோன்றச் செய்தது இயக்குனர் கரு பழனியப்பனின் தனித்துவம். லேசான எள்ளலும் எதிர்பார்ப்பை முன்வைக்கிற கண்டிப்பும் மிக்க மனிதரின் படங்களாகவே கரு.பழனியப்பனின் படங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது.திரைக்கதை என்பதன் தன் மெனக்கெடல் படைப்பாளியின் பிடிவாதமாகவே மாறுவது பலமுறை நிகழ்கிறது. அந்த வகையில் தான் சேராமல் பிரச்சினை தீர்வு என்பதைத் தாண்டி வாழ்வென்பது நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய கலயம் மட்டுமே. இதனை நெருங்கிச் சென்று படமாக்கியவர் கரு பழனியப்பன். மாபெரும் திருப்பங்களோ மிகைக் கூவல்களோ இல்லாமல் பார்த்திபன் கனவு யாருக்கு வேண்டுமானாலும் நிகழக் கூடிய சாத்தியங்களின் இருப்புப் பாதையில் நேரந்தவறாமல் கிளம்பிச் சேர்விடம் காண விரைந்தோடும் யதார்த்த ரயிலாய் மனங்கவர்ந்தது. வெளிவந்து பதினைந்து ஆண்டுகளுக்கு அப்பாலும் அடிக்கடி வெவ்வேரு காரணங்களுக்காகக் குறிப்பிடப் பட்டுக் கொண்டே இருக்கக் கூடிய பார்த்திபன் கனவு புத்தகத்தினிடையே பொத்தி வைத்துத் தொலைக்க விரும்பாத மயிலிறகு போலவே அவரவர் மனங்களில் உறைகிற

பார்த்திபன் கனவு: அழகான நல்ல படம்
 

https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-37-பார்த்/

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

ஆலங்குயில் கூவும் ரயில் பாடல் சிப்பியிருக்குது முத்துமிருக்குது பாடலின் வேறொரு புதிய கால நல்வரவானது.

எப்போதாவதுதான் இப்படியான படம் வரும்.

சிறிகாந்த், சினேகா ஜோடிப் பொருத்தம்  பேசப்பட்ட காலம்.

 ‘ஆலங்குயில்’  பாடல் வானொலியில் அப்போது தினமும் தவறாது ஒலித்துக் கொண்டிருந்தது. அந்தப் பாடலில்  ‘யாவும் இசை கூறுமடா கண்ணா’ என்ற வரியில் மூன்று தரம் கண்ணா சொல்லும் போது சினேகாவின் கண்ணை குளோசப்பில் காட்டும் வேளையில்  கிரங்கித்தான் போனேன்.

 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.