Jump to content

நூறு கதை நூறு படம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kavi arunasalam said:

எப்போதாவதுதான் இப்படியான படம் வரும்.

சிறிகாந்த், சினேகா ஜோடிப் பொருத்தம்  பேசப்பட்ட காலம்.

 ‘ஆலங்குயில்’  பாடல் வானொலியில் அப்போது தினமும் தவறாது ஒலித்துக் கொண்டிருந்தது. அந்தப் பாடலில்  ‘யாவும் இசை கூறுமடா கண்ணா’ என்ற வரியில் மூன்று தரம் கண்ணா சொல்லும் போது சினேகாவின் கண்ணை குளோசப்பில் காட்டும் வேளையில்  கிரங்கித்தான் போனேன்.

 

நீங்களும் சினேகாவின் கண்களுக்கு ரசிகரா ..... எனக்கு ரொம்ப பிடித்திருக்கு .....!    😂

Link to comment
Share on other sites

  • Replies 127
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 38 பார்த்தேன் ரசித்தேன்

aathma-poster-3.jpg

சரண் பாலச்சந்தரின் பள்ளியிலிருந்து வந்த இயக்குனர். மாபெரும் மர நிழலிலிருந்து அடுத்தது தழைப்பது அரிது. சரண் அரிய வைரம். தனக்கென்று தனித் திரைமொழி கண்டவர் சரண் அவரது படங்கள் அவற்றின் பின்புலங்களுக்காகவே கொண்டாடப்பட்டன. பாலகுமாரனின் நாவல்களில் இந்தத் தன்மையை நம்மால் உணர முடியும். சரண் திரைக்கதையை வழங்குவதில் செய்துகொண்ட நல்லதொரு வித்யாசம் இத்தகைய கதாசொலல் முறை. யாருடைய கதையில் என்னவெல்லாம் எப்படி நிகழ்ந்து என்னவாக நிறைகிறது என்பதில் எங்கே நிகழ்கிறது என்ற ஏரியாவைத் தன்னுடைய ஸ்பெஷாலிடி சர்க்கிளாகவே ஆக்கிக்கொண்டார். சரண் ரசிகர்களின் மனம் அந்தப் புள்ளியில் ஒன்றிப்போன பிற்பாடு கதை வெண்ணையில் இறங்கும் ஊசியெனவே வழுக்கிக் கொண்டு சென்றாக வேண்டுமே அது நியதியல்லவா வேறுவழி ?0e782e4d-aaa9-4e12-9e53-211f06b7f26b_512

அண்ணன் பன்னீர்செல்வம் வக்கீல் (ரகுவரன்). தங்கை பானு மருத்துவக் கல்லூரி மாணவி (சிம்ரன்). இருவரும் பேசிக்கொள்வதில்லை. இவர்களின் வீட்டு மாடி போர்ஷனில் குடியிருப்பவன் பட்டதாரி சங்கர் (ப்ரஷாந்த்). சங்கரும் பானுவும் நெருக்கமான சினேகிதர்கள். அவளிடம் தான் சரிகாவை காதலிப்பதை சொல்லி உருகுபவன் சங்கர். அவன்மீதான தன் காதலை சங்கருக்கே தெரியாமல் தனக்குள் உடைந்து சிதறி நொறுங்குகிறாள் பானு. அவனோடு இருந்துகொண்டே அவன் மீதான தன் காதலை வென்றெடுப்பதற்கான எல்லாமும் செய்கிறாள் பானு. இதை கொஞ்சமும் யூகிக்காதவனாக நட்பும் காதலுமாய்த் தனித்தேங்கும் சங்கர். அவர்கள் வழக்கமாய் பயணிக்கும் பேருந்து வாழ்வில் அடிக்கடி சந்திக்கும் மனிதர்கள் தங்கைக்காக என்ன வேண்டுமானாலும் செய்துவிடத் தயாரான அண்ணன் எதுவுமறியாத சரிகா எல்லாம் தெரிந்த பானு காதலுக்காகக் கசிந்து கரையும் சங்கர் என மெல்லிய முடிச்சுகளும் நல்ல திருப்பங்களும் திரை மீது லயிக்கும் கண்களும் பதைபதைத்துக் காத்திருக்கும் மனங்களுமாய் சரண் எழுதி இயக்கிய பார்த்தேன் ரசித்தேன் நல்ல முறையில் சொல்லப் பட்ட அழகான காதல் கதை.

பரத்வாஜ் தேர்ந்த இசைஞானமும் பாடல்களை வழமையிலிருந்து விலகி ஒலிக்கச் செய்யும் வல்லமையும் மிகுந்தவர். அவருக்குப் பெரிய பலம் வைரமுத்துவின் சொந்தச்சொற்கள். சரண் முன்வைத்த சூழல்களுக்கு பரத்வாஜ் உண்டுசெய்த பாடல்கள் நல்லிசை மழையாய்ப் பொழிந்தன. தமிழ் திரையிசை சரிதத்தில் மிக உன்னதமான இடம் பரத்வாஜூக்கு அவரது பாடல்களின் வழி கிட்டியது. இந்தப் படம் அவைகளுள் வைரவைடூர்யங்கள். பின் இசைக் கோர்வைகள் உடனொலிகள் இடையிசை இழைதல்கள் உப குரல்கள் என அதுவரைக்குமான திரையிசையைத் தன்னாலான அளவு மடைமாற்றவே செய்தன பரத்வாஜின் பாடல்கள். வெள்ளத்தைத் திசை திருப்புவதை விட பெருங்காற்றைத் திசைதிருப்புவது கடினம். அந்த வேலையைத் திறம்படச் செய்தார் பரத்வாஜ். இந்தப் படத்தின் பின்னணி இசைப்பேழை இன்றும் கேட்கத் திகட்டாத நல்மன மருந்தெனவே எஞ்சுகிறது.

எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ பார்த்தேன் பார்த்தேன் ரசித்தேன் ரசித்தேன் கிடைக்கலை கிடைக்கலை பூவே புன்னகை தின்னாதே பாடல்கள் தேன் பாட்டில் தேன் டை தேன் மழை தேன் இத்யாதிகளாகவே ஒலித்தன. இன்னும் தொடர்கின்றன.

இந்தப் படத்தின் பலம் சிம்ரன். நடிப்பில் ராட்சஸத்தை உணரச்செய்தார் சிம்ரன். லைலாவும் பிரஷாந்தும் சிம்ரனுக்கு முன்னால் சின்னஞ்சிறிய பொம்மைகளைப் போலானார்கள். ரகுவரன் வினுச்சக்கரவர்த்தி ஜெய்கணேஷ் ஃபாத்திமா பாபு வையாபுரி சார்லி தாமு ஆகியோர் அவரவர் பங்கை நல்முறையில் நேர்த்தினர். ஒரு பாடலுக்கு ஆடிச் சென்றாலும் லேசான வில்லத்தனத்தை மீறித் தன் புன்னகையால் கவர்ந்தவர் ராகவா லாரன்ஸ்

பார்த்தேன் ரசித்தேன் : தேன் தீராக் கலயம்
 

https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-38-பார்த்/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 39 நான் அவனில்லை

aathma-poster-2.jpg

நான் அவனில்லை மராத்திய மொழியில் புகழ்பெற்ற நாடகம். To Mee Navhech 1962இல் எழுதப்பட்டது. கல்யாண மோசடிப் பேர்வழியான மாதவ் காஜி என்பவனது குற்ற சரித்திரமே இந்த நாடகமாயிற்று, பல பெண்களைப் பலவிதப் பெயர்களும் பின்புலங்களும் கொண்ட வெவ்வேறு மனிதர்களாக உருமாறி திருமணம் செய்து கைவிட்டுச் சென்ற குற்ற மனிதனின் கதையை கே.பாலச்சந்தர் தமிழில் ‘நான் அவனில்லை’ என்ற பேரியல் உரிமம் பெற்றுப் படமாக்கினார். இதன் வில்ல நாயகனாகப் பரிணமித்தவர் காதல் மன்னன் என்றழைக்கப்பட்ட ஜெமினி கணேசன். தன் திரை வாழ்வில் அனேக மென் மனிதர்களின் பாத்திரங்களையே பெரிதும் ஏற்று நடித்தவரான ஜெமினி இந்தக் கதாபாத்திரத்தை ஏற்றதே சுவாரசியமானது மட்டுமன்றி சவாலானதும்தான். ஆனால் இந்தப் படத்தைத் தயாரித்து நாயக வேடத்தைத் தரித்ததன்பின் காரணம் இந்தக் கதாபாத்திரம் மீதான நடிக ஈர்ப்புத்தான். இதில் நடித்ததற்காக ஜெமினிக்கு அந்த வருடத்தின் ஃபிலிம் ஃபேர் விருது கிடைத்தது.


Naan_Avan_Illai_1974.jpg

 

மேதமையும் திறமையும் கெட்ட எண்ணம் கொண்டவனிடம் இருக்கும்போது அவையும் தீமையின் விளைநிலங்களாகின்றன, இந்தக் கதையின் நாயகனின் ஆளை அசத்தும் தோற்றமாகட்டும் பன்மொழிப் புலமையாகட்டும் யார்க்கும் தளராத மன உறுதியாகட்டும் மனித முகங்களின் வழியாக மனங்களை வாசிக்கிற திறனாகட்டும் யாரையும் வசீகரிப்பது இயல்பான ஒன்றுதான். தன் திறமைகளை எல்லாம் பயன்படுத்தி ஒன்று இரண்டல்ல பலரை ஏமாற்றுவதன் மூலமாக வேடங்களைப் பங்கேற்றுக் கலைத்துச் செல்லும் பரபரப்பான நடிகனின் நியாயமற்ற விரைதலைத் தன் வாழ்வில் எதிர்ப்படுகிற எல்லாரிடத்திலும் காண்பித்துச் செல்லும் இரக்கமற்றவனுக்கு வாழ்வின் விதி இரக்கத்தைப் பதிலீடு செய்யாதல்லவா அப்படியான முடிதலோடு நிறைவடைவது நான் அவனில்லை படத்தின் கதை.

படத்தில் ஒரு கட்டத்தில் லக்ஷ்மி பேசுகிற வசனம் “ho…What a sweet cheat..?” . அதுதான் கதையின் பலம். மெல்ல மெல்ல நடப்பதை எல்லாம் கண்ணுற்றவாறே நாமும் நம் முன் நிற்கக்கூடிய பலபொய் சித்திரம் ஒன்றைத் தாண்டி அந்தப் பொய் மனிதனை ரசிக்க ஆரம்பித்துவிடுவோம். இது உலகமெங்கும் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கும் விடயம்தான். நல்லனவற்றைவிட ஈர்க்கத்தக்கவையாக தீயன சில ஆவது புலன் மயக்கும். மதி பிறழ்த்தும். பிறிதொரு நாள் தெரியவரும் இழத்தலின் கணிதம்.

‘ராதா காதல் வராதா…’ பாடல் காலம் கடந்த கல்லெழுத்தாக எஞ்சிற்று. கண்ணதாசனின் பாடல்களுக்கு இசைத்தவர் மெல்லிசை மன்னர். ஜெமினியோடு கமல்ஹாசன் பூர்ணம் விஸ்வநாதன், தேங்காய் சீனிவாசன், அசோகன் செந்தாமரை, லக்ஷ்மி, ஜெயபாரதி, ஜெயசுதா, காந்திமதி, ராஜசுலோசனா, லீலாவதி இன்னும் பலர் தோன்றினார்கள். எம்.எஸ்.விஸ்வநாதனின் பின்னணி இசை இந்தப் படத்தில் மிக உன்னதம். டைடில்ஸ் எனப்படுகிற படத்தின் ஆரம்பக் காட்சிக்குத் தனித்த இசைக்கோர்வையை அளித்தார் எம்.எஸ்.வி. முன்னர் கேட்டறியாத புத்திசையாக அது இருந்தது. இந்தப் படத்தின் நடன இயக்குனர்களில் ஒருவராக கமல்ஹாஸனும் துணை இயக்குனர்களில் ஒருவராக எழுத்தாளர் கோவி மணிசேகரனும் பங்கேற்றார்கள்.

ஏமாற்றுவதை ஒரு கலையாக அதன் மீதான ஈர்ப்பையே அதனைக் கைக்கொள்வதற்கான காரணமாகக் கொண்டவர்கள் அவ்வப்போது தோன்றுவர். உலகத்தில் குற்றத்தை அதன்மீதான ஈர்ப்பின் நிமித்தம் செய்பவர்களும் இருப்பது மன வினோதங்களில் ஒன்று மட்டுமல்ல அதுவொரு பிறழ்வும் ஆகும். அப்படியான கதையைத் தேர்ந்தெடுத்து இயக்கினார் கே.பாலச்சந்தர். இந்த உலகத்தின் வழமைகளும் நியதிகளும் பெருவாரி மனிதர்களின் நம்பிக்கை சார்ந்த விழுமியங்களே. அவற்றை ஊடாடிச் சிதைப்பது பெரிய வித்தகம் அல்ல. சூழலைப் பயன்படுத்திக்கொண்டு நம்பிக்கை துரோகம் செய்வதன் மீது எந்தவித நியாயமும் இருந்துவிடப் போவதே இல்லை. பிடிபடுகிற கணங்களில் தன்மீதான குற்றவாசித்தலைக் கேட்டுக் கொண்டே நான் அவனில்லை என்பதை மட்டும் தன் பதிலாகச் சொல்லும் மன ஈரமற்ற கொடுமனிதனாகத் தோன்றினார் ஜெமினி கணேசன்.

படம் வெளியாகி முப்பதாண்டுகளுக்கு அப்பால் ஜீவன் நடிப்பில் இதே கதை தமிழில் மீவுரு செய்யப்பட்டது. காலத்தைத் தவிர வேறெந்த இடைவெளியும் இல்லாமல் முன் பிரதியைப் போலவே இம்முறையும் விரும்பப்பெற்றது. தெளிவான திரைக்கதைக்காகவும் நீதிமன்ற வழக்காடல் காட்சிகளுக்காகவும் இனிய பாடல்களுக்காகவும் நினைவில் நிற்கும் படங்களில் ஒன்றானது.

 

https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-39-நான்-அவ/

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 40 ஆளவந்தான்

 

திரைப்படங்களில் தோன்றுகிற கட்டுப்படுத்தப்பட்ட வன்முறை பல வருட காலங்களாகவே ஒப்புக்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது ஒவ்வொருவரையும் வருத்தம் கொள்ளச்செய்வது எதுவெனில் திரையில் வன்முறையின் விளைவுகளை விலாவாரியாகக் காண்பிப்பதுதான்.

—ஸ்டான்லி குப்ரிக்

சுடரும் சூறாவளியும் என்ற தலைப்பினை வைத்திருக்கலாம். ஆளவந்தான் என்று வந்தது. தாயம் என்ற தலைப்பில் எழுத்தாளராக கமல்ஹாசன் எழுதிய தொடர்கதையின் திரைக்கதையாக்க வடிவம் ஆளவந்தான். அபய் என்ற பேரில் இந்தியிலும் வந்தது. அன்றைய காலத்தின் அதிகப்படி பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்ற முதல்மொழியும் இதற்கு இருந்தது. அதிகரித்து வைக்கப்பட்ட எதிர்பார்ப்பை நல்ல முறையில் பூர்த்தி செய்ததா வசூல் வெற்றியா என்பதெல்லாம் வேறு வினாக்கள். ஆளவந்தான் திரை வழங்கல் முறையில் மிக முக்கியமான இந்தியப் படம்.

அன்பை இழத்தல் என்பதன் ஊற்றுக்கண்ணிலிருந்து தொடங்கி இரட்டையர்களின் மனநிலைப் பகிர்தல் வரை பல நுட்பமான விசயங்களைத் தனதே கொண்டிருந்தது தாயம் கதை. இரட்டையர்களில் ஒருவன் நம்மைப் போன்றவன். அடுத்தவனோ அறிவுஜீவி. தன் அறிவுக்குத் தீனி கிட்டாமல் எப்போதும் தீராத தாகத்தோடு அலைபவன். அப்படியானவன் மனநிலை சமன்படுத்தலுக்கான அசைலத்தில் வளர்க்கப்படுபவனாக நந்து என்கிற ஜீனியஸ் ஆக எழுதியதை சற்றும் எதிர்பாராத மனிதப் பேருரு ஒருவனாக மூர்க்கத்தனத்தின் உச்சமாகத் திரைக்காக மாற்றினார் கமல்.

அவர் எழுதியதை அப்படியே எடுத்திருக்கலாம் அல்லது எடுத்திருக்க வேண்டும் என்பதில் பெரும் ஆதங்கமே எனக்கு உண்டு. தமிழில் எழுதப்பட்ட கதையை திரைக்காக இந்தியப் படமாக ஹிந்தி உள்பட நிலங்களுக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்ய வேண்டி வந்தது நடிகராக படைப்பாளியாக புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான் என்றாலும் எழுதப்பட்ட தாயம் உன்னதம். எழுதுவதற்கும் எடுத்ததற்கும் இடையே முற்றிலும் வேறாக மாறிப்போயிருந்தது எழுத்தாளர் கமல்ஹாஸன் எழுதிய கதையின் தனித்துவம்.

கொலை என்பதை இச்சையாகக் கொண்டுவிடுகிற மனப்பிறழ்வாளனைத் தேடி அலைந்து பிடித்துக் கொல்லும் கதைகள் உலகமெல்லாம் அவ்வப்போது வருகிறவைதான் என்றாலும் இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பின்னால் கமல் எழுத்தில் சுரேஷ்கிருஷ்ணா எடுத்த ஆளவந்தான் பல விதங்களில் முன்னோடியாகத் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

உதாரணமாக வன்முறை மிகுந்த கதையின் கனம் மிகுந்த பகுதி ஒன்றை கார்ட்டூன் சித்திரங்களின் நகர்தலாக்கிக் கதையைத் தேவையான மறுகரைக்கு நகர்த்திச் செல்லக்கூடிய உத்தி இதில் கையாளப்பட்டது மிகவும் பாராட்டுக்குரியது. பின் காலத்தில் இந்த ஒன்று இப்படியான நகர்த்துதல்களுக்கான பொதுமுறைமையாகவே கடைப்பிடிக்கவேண்டியதாக மாறியது.

ஷங்கர், எஸான், லாய் மூவரின் இசையில் இந்தப் படத்தின் ஆல்பம் பெரிதும் கவனம் குவித்தது. படம் வெளிவருவதற்கு முன்பாகவே ஒரு எதிர்பாராமையை அதிகரித்து வைப்பதான விளம்பரப் பதாகை போலவே இதன் பாடற் பேழை திகழ்ந்தது. ஆப்ரிக்கா காட்டுப்புலி உற்சாகக் கொண்டாட்டத்தை முன்வைத்தது. உன் அழகுக்கு தாய் பொறுப்பு பாடல் ஆக மென்மையாக வருடிற்று. உன் அழகுக்கு தாய் பொறுப்பு பாடலும் மெல்லிசை பாடியது. ஆனாலும் இந்த ஆல்பத்தில் மின்னி மிளிர்ந்த பாடல் வேறொன்று.

தமிழ்ப் பாடல்களின் தத்துவார்த்த நிரவல் பன்னெடுங்காலமாகவே இருந்து வருகிறதுதான். சமரசம் உலாவும் இடமே, பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர் புண்ணியமின்றி விலங்குகள்போல் என்ற பாடல் திரைப்படத்தில் இடம்பெற்றது கிட்டத்தட்ட எண்பதாண்டுகளுக்கு முன்னால் என்பது அதன்மீதான வசீகரத்தைக் கூட்டுகிறது. இந்திய அளவில் கண்ணதாசன் தமிழில் முயன்ற பல விடயங்கள் முதன்மையான முயல்வுகளாகவும் கவனம் பெறுபவை. அப்படியான பாடல்களின் வரிசையில் கடவுள் மற்றும் மிருகம் என்ற இரண்டாய்க் கிளைத்தல் குறித்த பல பாடல்களை கண்ணதாசன் எழுதினார். அவரது சமகாலத்தின் கவிஞர்களும் அப்படியான பாடல்களைத் தந்தார்கள். அடுத்த காலத்தின் கவியான வைரமுத்து கடவுளையும் மிருகத்தையும் கொண்டு ஒன்றல்ல பல பாடல்களை உருவாக்கினார். அவற்றில் ஆளவந்தான் படத்தில் இடம்பெற்ற ‘கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்’ பாடல் முதலிடம் வகிக்கிறது.

அறிவின் சிதைவையும் குன்றியும் ததும்பியும் ஆவேசம் காட்டும் சலன மனதின் உக்கிரத்தையும் வெளிப்படுத்தும் வண்ணம் இந்தப் பாடல் உருவானது.

கடவுள் பாதி… மிருகம் பாதி… கலந்து செய்த கலவை நான்!
வெளியே மிருகம் உள்ளே கடவுள் விளங்க முடியா கவிதை நான்…
மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்க… பார்க்கின்றேன்
ஆனால்…
கடவுள் கொன்று, உணவாய் தின்று, மிருகம் மட்டும், வளர்கிறதே,

ஆளவந்தான் வன்முறையை இசைத்தவன்
 

https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-40-ஆளவந்த/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 41 பூவே உனக்காக

aathmarthi.jpg

அவர்கள் கூற்றின்படி நீ எப்போது உன் வாழ்வின் காதலை சந்திப்பாயோ அப்போது காலம் அப்படியே உறைந்துவிடும்.
அது உண்மையுங்கூட

Big Fish (திரைப்படத்திலிருந்து)

எல்லோரும் நல்லவரே என்பது ஸ்வீட் நத்திங் வகையறா சினிமா. காலம் காலமாக அப்படியான படங்களை யாராவது எடுத்துக்கொண்டே இருப்பார்கள். ஊரே ஒதுங்கும் திசையைவிட்டுத் தனக்கென்று தனித்திசை காண்பது அப்படியான ஜிகினாப் பொய் ஒன்றை நிசமென்று நிறுவ விழையும் சினிமா முயல்வு வகைமை. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தனது புது வசந்தம் படத்தின் மூலமாகத் திரைக்கணக்கைத் தொடங்கிய விக்ரமன் பிறகு எடுத்த அனேக படங்களின் மூலமாக விக்ரமன் படங்கள் என்றே தனித்த வகைமையாக உருக்கொண்டது நிகழ்ந்தது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளில் பத்துக்கும் மேற்பட்ட அதிரி புதிரி வெற்றிகளின் மூலமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவராக மாறிய விக்ரமன் மனித மனங்களின் மென்மையான நசிவுகளை அவற்றின் ஊசலாட்டங்களை முடிவெடுக்க இயலாத மனத்திணறலைப் படமாக்கி வகையில் நினைவில் கொள்ளப்பட வேண்டியவராகிறார். அவருக்குக் காலமும் நடிகர்களும் நல்ல முறையில் ஒத்துழைக்கவே எளிதாக மக்களுக்குப் பிடித்தமான படங்களாக மாறின விக்ரமனின் படங்கள்

 

.MV5BMzIxYzAxZDItNTJhYS00OTEzLTlkZTEtMmM2

ஆணையும் பெண்ணையும் பரஸ்பரம் ஏமாற்றுகிற கைவிடுகிற காதல் தோல்விக்குக் காரணமாகிற ஆண்களையும் பெண்களையும் அவர்கள் திரும்பி திருந்தி வருகிறதற்குள் வேறொரு நல்வாழ்க்கையை நல்ல இணையரைக் கண்டறிந்து விடுகிற எல்லோருக்கும் எப்போதும் பிடித்தமான படங்களை அதிகம் உருவாக்கினார் விக்ரமன். தொண்ணூறுகளில் காதல் முன்பிருந்த நிலையிலிருந்து மெல்ல நகர்ந்து புதிய திசைக்குச் செல்வதற்கு முந்தைய பயண முன் பொழுதுக் காத்திருப்புக் கணங்களின் திசைகளற்ற மாற்றங்களெனவே விக்ரமனின் ஒரு டஜன் காதல்படங்கள் கரைந்து கலைந்தன என்றாலும் அவற்றைக் கொண்டாடியவர்கள் அடுத்த காலத்தில் மத்யம வயதுகளிலிருந்து நினைத்துப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கொள்ளக்கூடிய பழைய புனித ஞாபக வழிபாட்டு உப பொருளாகவே தங்கள் காதலைப் பத்திரப்படுத்த விழைந்தார்கள்.

விக்ரமன் எடுத்த படங்களிலிருந்து பூவே உனக்காக எப்படி வேறுபடுகிறது என்றால் அதுவரை என்ன மாதிரியான படங்களில் நடித்து எப்படி நிலைகொள்வதென்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த விஜய் என்கிற புதிய நடிகரது ஏழெட்டுப் படங்கள் வெளியாகி ஓரளவு மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் மட்டும் கொண்டிருந்த நிலையில் அவரது முதல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக வெளியான புண்ணியத்தைக் கட்டிக்கொண்டது பூவே உனக்காக. ஒரே இரவில் சாக்லேட் பய்யன் நிலையிலிருந்து கன்னத்தைக் கிள்ளி அரவணைத்துக் கொண்டு நீ நம்ம பய்யண்டா கண்ணா எனக் கண் கலங்கக் கசிந்துருகும் நிலைக்கு அவரை நம்மில் ஒருவராக்கியது சாதனைதான். அதுவும் ஒரே படத்தில் மட்டுமே நிகழக்கூடிய அற்புதம் பூவே உனக்காக என்பது அந்த ஒரு படமானது.

எஸ்.ஏ.ராஜ்குமார், வாலி தலா ஒரு பாடல்களை எழுத பழனிபாரதி மற்ற எல்லாப் பாடல்களையும் எழுதினார். மல்லிகைப்பூ வாசம் என்னைக் கொல்லுகின்றது அடி பஞ்சுமெத்தை முள்ளைப்போலக் குத்துகின்றது போன்ற வரிகள் சாகாவரம் பெற்றன இதயங்கள் இணைந்தது இது என்ன மாயம் போன்ற சிறுபாடல்கள்கூட மனதைக் கவர்ந்தன. பாடிய குரல்கள் பாடல்களின் ஆன்மாவாகவே மாறின. இசையில் எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு புதிய முகவரி மாற்றத்தை இப்படம் நிகழ்த்தியது. இதில் நடித்தவர்களுக்கு எல்லாமும் இப்படம் ஒரு புதிய திசையைத் திறந்தது.

சார்லி, மதன்பாப், மீசைமுருகேசன், சங்கீதா, எம்.என்.நம்பியார் இவர்களோடு விஜய் இணைந்து நிகழ்த்திய காமெடி காட்சிகள் பரவலான வரவேற்பைப் பெற்றன.

பூவே உனக்காக ஒருதலை காதலை காதல் கை கூடாத ஏமாற்றத்தை காதலுக்காகத் தன் உயிரையே வார்த்தெடுத்துத் தரும் உன்னதத்தை காதலின் ஒருசார்பு புனிதங்களை எல்லாம் அப்படியே அங்கீகரித்தபடியே இன்னொரு மறுபக்கத்தை மேலெழுதிய ஒன்றாயிற்று.

காதலியின் காதலை நிசமாக்கித் தரும் ஒருவனாக விஜய் எல்லோர் கண்வழி மனங்களை வென்றார். முதல் ஒரே காதல் பூ போன்றது அது அப்படியேதான் இருக்கும் அதனை மறக்கவே முடியாது. மீண்டும் மீண்டும் பூப்பதற்கில்லை அந்த முதல் மலர் என்று விஜய் கண்கலங்கச் செப்பியபோது ரசிகர்கள் கண்களிலிருந்து தாரைகள் வழிந்தன.

இந்தப் படம் வெளியாகி இருபத்தி மூன்று ஆண்டுகளாகின்றன. இன்று இதன் கதையை மறுபடி எடுத்தால் அதன் முந்தைய வரவேற்பை முற்றிலுமாக இழந்திருக்கும் என்பதே நகர்ந்திருக்கும் புதிய நிஜம் என்றாலும் காதல் எனும் நுட்பமான உணர்வின் சன்னிதியில் அவரவர் அறிதல்கள் அவரவர் ஞானம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அந்தவகையில் பூவே உனக்காக காதலின் க்ளாஸிக் கானம்.

 

https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-41-பூவே-உன/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 42 வீடு

aathmarthi.jpg

சினிமாவில் ஆகச்சிறந்த வில்லன் சூழ்நிலைதான். மனித வில்லத்தனங்கள் யாவற்றையும்விட சூழ்நிலை தன் கருணையற்ற முகத்தோடு வாழ்க்கையை ஊடாடும்போது அபரிமிதமாய்ப் பெருகுகிறது. சினிமா கதைகள் என்றில்லை எந்தக் கலைவடிவமானாலும் கூட மகிழ்ச்சியை சாட்சியம் சொல்கிற படைப்புகள் குறைவாகவே காணப்படும். சோகத்தை துன்பத்தை சாட்சியம் சொல்கிற ஏராளமான படைப்புகள் காணப்படுவது கலையின் தன்மை. துன்பத்தை மீபார்வை பார்க்கிற மனிதன் அன்பை கருணையை நன்மை தீமைகளை எல்லாம் ஆழ்மனதின் கண்களால் காண முயலுகிறான். கலை துன்பத்தின் சாரதியாகவே செயல்படுகிறது. கலையின் பயண சேர்விடம் பண்பாடாகிறது.

வீட்டைக் கட்டிப் பார் என்ற முதுமொழியின் கலையிருப்பு அலாதியானது. மேலோட்டமான நாடக முயல்வுகள் தொடங்கி மறக்க இயலாத படங்கள்வரை இந்த ஒற்றை வரியின் அலைதலும் அடைதலும் மெச்சத்தக்கது. பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான ‘வீடு’ திரைப்படம் அன்றைய நடுத்தர வர்க்கத்தின் பொதுமுதல் கனவான சொந்த வீடு கட்டி வாழ்தல் எனும் பெரும் பற்றுதலின்மீது தன் வினாக்களை நிகழ்த்திய படம். கலை மக்களை அச்சுறுத்துவதன் மூலமாகப் படிப்பிக்கும். படிப்பித்தலின் வழி அச்சுறுத்தல் விலகி வெறுமை பூக்கும். அத்தகைய வெறுமைக்கு அப்பால் கிட்டக்கூடிய வெளிச்சம் இன்றியமையாத வாழ்க்கை இடுபொருளாகவே மாறும்.1_-LuXyEXWP12btaBEUPNyuw-300x170.jpeg

நீதிக் கதைகளின் அதே பொறுப்பேற்றலுடன் தன் படத்தை ஆக்கினார் பாலு. குடும்பம் என்பது நாடு எனும் மாபெரிய அம்சத்தின் மாதிரியாகும். அப்படியாக வீடு என்பது சுதா எனும் ஒற்றை மனுஷியின் பிரச்சினையின் படிநிலைகளின் வழியாக அந்தக் காலகட்டத்தில் நாடு எவ்வாறான அரசியல் உச்ச நீச்சங்களுக்கு இடையிலான பரவலைத் தன்னகத்தே கொண்டிருந்தது என்பதை விளக்குகிற மாதிரியாகவும் கொள்ள முடிகிறது. வீடு திரைப்படம் சமூக அரசியலின் நுட்பமான அலசல்களுக்காகவும் முக்கியத்துவம் கொண்டதாகிறது. வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் கருணையற்ற சமரசங்களுக்கெதிரான பலவீனமான போராட்டத்தை எந்தவித சமரசமும் இல்லாமல் பதிவுசெய்ய முயன்று அதில் வெற்றியும் கண்டார் பாலுமகேந்திரா.

பாலுமகேந்திராவின் திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம் ஆகிய பொறுப்பேற்றல்கள் மெச்சத்தகுந்த தரத்தில் அமைந்தன. அகிலா மகேந்திரா எழுதிய கதையை வீடு என்று திரைப்படமாக்கிய பாலுவுக்கு சரிநிகர் உபயோகமாகவே தன் பின்னணி இசையை வழங்கினார் இளையராஜா. சொக்கலிங்க பாகவதர், அர்ச்சனா, பானுச்சந்தர், செந்தாமரை ஆகியோரின் நிறைநடிப்பு இப்படத்திற்குப் பெரும்பலம் வீடென்பது கட்டிடம் அல்ல. வீடென்பது குடும்பம். மாதாமாதம் ஒரு தேதிக்கு முன்பின்னாய்க் கிளைத்து இரண்டுபடும் நடுத்தரவர்க்கத்தின் சம்சாரநதியை ஒரே சீராக்கும் மாமருந்து சொந்த வீடு. ஒரு பிடி மண்ணைக்கூட இவ்வுலகிலிருந்து எடுத்துச் செல்ல முடியாதென்ற வேதாந்த சித்தாந்தங்களுக்கு மத்தியில் தன்வழி தோன்றியவர்கள் வசம்விட்டுச் செல்வதற்கான கட்டிடக்கனாவின் பேர்தான் சொந்த வீடு. அதன் சாத்திய அசாத்தியங்களுக்கு நடுவே அல்லாடுவதன் மீதான எந்த ஆட்சேபமும் இல்லாமல் வாழ்வை அதன் போக்கில் எடுத்துக்கொள்ள பழகும் பெருங்கூட்டத்தின் மறுபெயர்தான் சாமான்ய சனம்.

தன் தங்கையுடனும் தாத்தாவுடனும் வாடகை வீட்டில் வசித்து வரும் சுதா தாத்தாவுக்கு சொந்தமாக இருக்கும் இரண்டு மனைகளில் ஒன்றை விற்று மற்றதில் தங்களுக்கென்று சொந்தமாய் ஒரு வீட்டைக் கட்டி அதில் குடியேறிவிட வேண்டுமென்ற லட்சியத்துக்கு வருவதிலிருந்து தன் திரைப்படத்தைத் தொடங்கும் பாலுமகேந்திரா கட்டிடமாக ஒரு வீட்டின் அடுத்தடுத்த நிலைகள் பூர்த்தி வரைக்குமான ஏற்றத்தாழ்வுகள் மனித துரோகங்கள் மரணங்கள் கைவிடுதல் பொய் புரட்டு கடைசியில் எதிர்க்க முடியாத மாபெரும் யானை போல் நீ கட்டி இருக்கும் வீடு இருக்கிற அந்த இடத்தை மெட்ரோ வாட்டர் ப்ராஜெக்டுக்காக அரசாங்கம் கையகப்படுத்திவிட்டது. இதில் வீடு கட்டியது செல்லாது என்று அரசாங்க யானையின் ஒரு முகம் அவளை விரட்டுகிறது. தனக்கு அங்கே வீடு கட்ட அனுமதி அளித்த அதே யானையின் மறுமுகம் அவளைக் கைவிடுகிறது. தன் வீட்டைத் தனக்கே தந்தாக வேண்டுமென்று கையறு நிலையோடு அதே யானையின் கடைசி முகமான நீதிமன்றத்தில் மன்றாடிவிட்டுக் காத்திருப்பதோடு நிறைவடைகிறது பாலு மகேந்திராவின் வீடு திரைப்படம்.

வாழ்க்கையின் இடவல மாற்றங்களும் அவற்றின் வருகையின் முன்பின் வித்யாசங்களும்தான் மனித அனுபவத்தின் சாரமாய் எஞ்சுகிறது. சின்னஞ்சிறு வயதில் சமூகத்தின் தனி மனித நம்பகத்தையும் கூட்டு நம்பகத்தையும் ஒருங்கே இழந்த பிறகு கசந்து வழியும் இக்கதையின் முற்றுக் கணத்தினை எதிர்கொண்டபடி வாழ்க்கையை வெறிக்கும் இந்தக் கதையின் நாயகியை மாத்திரம் அல்ல; எண்ணிலடங்கா சுதாக்களை மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்துகொண்டே இருப்பதுதான் மனசாட்சியற்ற மனிதர்களின் சுயநலம். விதிகளைக் கடுமையாக்குவதும் சட்ட திட்டங்களை மேலும் காத்திரமாக்குவதும் தவிர்த்து வேறொன்றும் செய்வதற்கில்லை. இந்தப் படத்தின் ஆகச்சிறப்பாக இதன் க்ளைமாக்ஸ் காட்சியை சொல்ல முடியும்.

செந்தாமரையை வந்து சந்தித்து தான், ஏமாற்றப்பட்டதைக் குமுறலோடு எடுத்துரைப்பார் அர்ச்சனா. உடன் பானுச்சந்தர் இருப்பார். அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க என்று அவர்களை வேறொரு அறைக்கு அழைத்து வந்து அமர்வித்துவிட்டுத் தன் அலுவலக அறைக்குத் திரும்பும் செந்தாமரை தன் கீழ் பணிபுரியும் அலுவலரை வரச்சொல்லுவார். அவர் வந்ததும் செந்தாமரையின் கையெழுத்தை ஃபோர்ஜரி செய்தது குறித்தும் சட்டவிரோதமாய் அர்ச்சனா வீட்டுக்கு அனுமதி அளித்தது குறித்தும் மெல்லிய குரலில் கடிந்துகொள்வார். அப்போது அந்த அலுவலர் காலில் விழுவதுபோல பாவனை செய்வார். அவரே இத்தனை சீக்கிரம் கண்டுபிடிக்கப் படுவோம் என நினைக்கவில்லை என்றும் அதற்குள் ரிடையர் ஆகிவிடுவோம் என்ற நப்பாசையில் செய்துவிட்டதாகவும் சொல்வார். லஞ்சம் என்பதனுள்ளே இயங்கக் கூடிய சூது, வன்மம் அடுத்தவர் எக்கேடு கெட்டாலென்ன என்ற துர் எண்ணம் மேலதிகாரியின் கையொப்பத்தைக் கூடத் தானே போலி செய்யுமளவு தைரியம் எல்லாவற்றுக்கும் மேலாக அடுத்த அறையில் காத்திருக்கும் சுதாவுக்கு சொல்வதற்கு எதுவுமே தன்னிடத்தில் இல்லை எனத் தெரிந்த பிறகும் அவர்களைக் காத்திருக்க வைக்கும் மேலதிகாரி செந்தாமரையின் கையறு நிலை இவற்றோடு படம் முடியுமிடம் ஒரு கவிதை.

இந்தியாவில் எடுக்கப் பெற்ற உலகப் படம் வீடு: வாழ்க சினிமா!

 

https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-42-வீடு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 43 அந்த ஏழு நாட்கள்

aathmarthi.jpg

நல்ல சினிமா என்பது எதை நம்மால் நம்ப முடியுமோ அது. நம்மால் நம்ப முடியாதது மோசமான சினிமா…

அப்பாஸ் கிரோஸ்தமி.

வாழ்க்கை நகர்ந்து செல்லும் பாதை நபருக்கு நபர் மாறிக்கொண்டே இருக்கக்கூடிய மேடு பள்ளங்களைத் தனதே கொண்டது. அவரவர் தடுமாற்றங்கள், அவரவர் தடைகள். சரியான சரி எது என்று தேடுவதே சாத்தியம். பலித்த மட்டும் தாயம். இன்றைய ஒவ்வாமை அடுத்த காலத்தின் இயல்பாகவும் இன்றைய நியதி அடுத்த காலத்தில் கைவிடுதல்களாகவும் தற்போதைய மறுமலர்ச்சியும் புரட்சியும் வருங்காலத்தின் உரிமைகளாகவும் யதார்த்தங்களாகவும் மாறுவது மாற்றம் என்பதன் தன்மைகள். அந்தவகையில் ஒரு காலத்தில் அதெப்படி? என்று மறுதலிக்கப்பட்ட ஒன்று அடுத்த காலத்தில் ஸோ வாட்? என ஏற்றுக்கொள்ளப்படுவதும் நடக்கிறது.

காதலுக்கு எதிராக ஏற்படுத்தப்படுகிற முட்டுக்கட்டைகளில் உணர்வு வழி அச்சுறுத்தல், பாசம், சாதி, பண வழி ஏற்றத்தாழ்வுகள் காலம் காலமாய்த் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வருபவை. காரணிகளை வென்ற காதல்களும், கைகூடாமற் போகையில் உயிரையே துச்சமென்று உதறிய காதல்களும் தங்களது விதிவழி நடப்பதை ஏற்றுக்கொண்டு காதலை ஆழப் புதைத்துக்கொண்ட சமரசங்களும், கூடாமற்போன காதலை எண்ணி ஒற்றையராகவே வாழ்வெல்லை வரைக்கும் இருக்கத் துணிந்த காதற் பிடிவாதிகளும் காதலின் சென்ற நூற்றாண்டு சரித்திரத்தின் பக்கங்களெல்லாம் நிரம்பினார்கள்.maxresdefault-5-300x169.jpg

பாரதிராஜாவின் பாடசாலையிலிருந்து அவரது பெயர்சொல்லிப் புறப்பட்டவர்களில் நடிகராகவும், இயக்குனராகவும் தனக்கென்று தனியிடம் உருவாக்கிக் கொண்டவர் பாக்கியராஜ். இந்தியத் திரைக்கதை சொல்லிகளில் ஆச்சர்யம் மிகுந்த பெயர் பாக்கியராஜ். திரைக்கதையின் போக்கு, திசை, பரவல் எனப் பலவற்றையும் அடுத்த காலத்திற்கு ஏற்ப முன்கூட்டி மாற்றி அமைக்க முனைந்த தைரியமீறல்கள் அவருடைய திரைக்கதைகள். பெரும்பான்மை யதார்த்தத்தின் சாத்தியங்களுக்கு உள்ளேயே, பலரும் கவனிக்க மறந்த அதீதங்களை மிகச் சரியாக அறுவடை செய்தவர் பாக்கியராஜ். நாயகன் இடுப்பில் கயிறைக் கட்டிவிட்டு அவன் பிடிமானத்தைத் தன் கையில் ஏந்தி, ‘என்னை நம்பு, பயப்படாம குதி’ என்று மலை உச்சியிலிருந்து கீழே தாவச் சொல்லும் இயக்குனர் மற்றும் முன் சொல்லப்பட்ட நடிகன் ஆகிய இரண்டையுமே கிளைத்துத் தனித்த கலை வினோதம் பாக்கியராஜின் படங்களாகின.

ஓர் உதாரணத்துக்கு இப்படிச் சொல்லலாம், சமகாலத்தின் நடிக உச்சம் கமலஹாசன். திரைப்படத்தின் ஒரு பாத்திரத்துக்காகப் புதுவகை நடனம் ஒன்றையோ, சிலம்பு சுற்றுதல் போன்ற வீர விளையாட்டு ஒன்றையோ, மலையாளம் போன்ற அயல் மொழி ஒன்றைப் பேசுதலையோ, கமலஹாசன் படத் தேவைக்காக அதைக் கற்றுக்கொண்டு செய்து காண்பிப்பது அப்படிச் செய்வதன் துல்லியத்துக்கு மிக அருகில் இருப்பதை உணரலாம். அதுவே பாக்கியராஜ் அவற்றைக் கையாளும்போது சாமான்ய மனிதரின் சராசரி ஏற்றத் தாழ்வுகளுடன் அவற்றைக் கையாள்வது நிகழும். இதில் வியப்புடன் கமலஹாசனை ஒப்புக்கொள்ளக்கூடிய அதே காலத்தின் அதே ரசிக மனங்கள் எதார்த்தத்தின் ஆட்சேபமற்ற நம்பகத்தோடு பாக்கியராஜை ஏற்றுக்கொண்டார்கள். தன் பலம், பலவீனம் இரண்டையும் முற்றிலுமாக அறிந்தவர் பாக்கியராஜ். அவரது இயக்கத்தில் வெளிவந்த எண்பது சதவிகிதப் படங்கள் கணிதம் தப்பாத வெற்றிகளை அவருக்குத் தந்தன.

ஆண்களும் பெண்களுமாய் வாழ்க்கையின் உரையாடல்களை உணர்வுகளின் வாதப் பிரதிவாதங்களாய் முன்வைக்கும் வண்ணம் பாக்கியராஜின் திரைப்படங்கள் அமைந்தன. மத்யம வாழ்க்கையின் நிகழ்கணச் சிக்கல்களை அழகுறக் கதையாண்டவர் பாக்கியராஜ். தன்னைக் கலைத்துக் கிழித்து இகழ்ந்து எள்ளலுக்கு உட்படுத்துவதன் மூலமாகத் தன்னை முன்னிறுத்திக் கொள்ளக்கூடிய நாயகவினோதத்தை முதல்முறை படைத்தார் பாக்கியராஜ். நடிகரும் இயக்குனருமாகிய பொறுப்பு-இடை-முரணை உலக அளவில் வெற்றிகரமாகக் கையாண்ட வெகு சிலரில், சார்லி சாப்ளின், மைக்கேல் ஜாக்சன், மெல் கிப்ஸன், போன்ற படைப்பாளிகளின் வரிசையில் பாக்கியராஜைச் சொல்ல முடியும்.

ஆனந்த் ஒரு மருத்துவன். மனைவியை இழந்தவன். நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் தன் அன்னையின் விருப்பத்திற்காக பெண் பார்த்து வசந்தியைக் கல்யாணம் செய்து கொள்கிறான். திருமணத்தன்று இரவு தற்கொலைக்கு முயல்கிறாள் புதுமணப்பெண் வசந்தி. தற்கொலைக்கு முயன்றதன் காரணம் வசந்திக்கும் மாதவனுக்கும் இடையிலான காதல் என்பதை அறிந்து கொள்ளும் ஆனந்த், ஒரு வாரம் மட்டும் அந்த வீட்டில் இருக்கும்படி வேண்டுகிறான். அதன் பின் நீ உன் காதலனோடு சென்றுகொள்ளலாம் என்பதற்கிணங்க வசந்தி அந்த ஏழு நாட்கள் ஆனந்த் வீட்டில் இருக்கிறாள். அதன் முடிவில் பாலக்காட்டு மாதவனைக் கண்டறிந்து அழைத்து வந்து வசந்தியை அவள் விருப்பப்படி மாதவனோடு செல்லுமாறு கூறுகிறான். வசந்தி மறுத்து விடுகிறாள், மாதவனின் க்ளைமாக்ஸ் வசனம் புகழ்பெற்றது என் காதலி உனக்கு மனைவியாகலாம். ஆனால் உன் மனைவி என் காதலியாக முடியாது”

கவிதை அரங்கேறும் நேரம், மலர்க்கணைகள் பரிமாறும் தேகம் எண்ணி இருந்தது ஈடேற, தென்றலது உன்னிடத்தில் சொல்லிவைத்த சேதி என்னவோ போன்ற பாடல்கள் எம்.எஸ்.விஸ்வநாதனின் தேன் நிகர் இசையில் உள்ளங்கொய்தன.

கே.பாக்யராஜின் திரை ஆளுமையை வடிவமைத்த படங்களில் மிக முக்கியமான படம் அந்த ஏழு நாட்கள். வாழ்க சினிமா!
 

https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-43-அந்த-ஏழ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஏழு நாட்கள் படம் பதின்ம வயதில் பார்த்திருந்தேன். திரைக்கதை, நகைச்சுவை பிடித்திருந்தாலும் ஆணாதிக்க கருத்தைக் தூக்கிப்பிடிக்கும் முடிவு அப்போதே பிடிக்கவில்லை.

பாக்கியராஜ் தாலியை அறுத்துவிட்டு வர அம்பிகாவை கேட்டபோது, அம்பிகா அறுக்கமுடியாமல் தயங்குவதும், ராஜேஸ் தாலியை அறுக்க முயன்றபோது அம்பிகா அவரை தடுத்து அழுவதும்,  தாலி என்பது பெண்ணைப் பூட்டி வைக்கும் ஒரு விலங்கு என்றுதான் காட்டியது.

ஆனால் அதைப் புனிதப்படுத்தி பாக்கியராஜ் பேசிய வசனம்தான் “என் காதலி உனக்கு மனைவியாகலாம். ஆனால் உன் மனைவி என் காதலியாக முடியாது”.

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 44 வறுமையின் நிறம் சிவப்பு

aathmarthi.jpg

அன்பை விட 
பணத்தை விட 
விசுவாசத்தை விட 
புகழை விட 
நன்மையை விட 
எனக்கு 
உண்மையைத் தா 
போதும்

(SEAN PENN எழுதி நடித்து இயக்கிய INTO THE WILD 2007 படத்தின் ஒரு வசனம்)

பல தலங்களுக்கும் எடுத்துச் சென்று படமாக்கப்பட்ட விரிந்த நாடகங்களாகவே கே.பாலச்சந்தரின் ஆரம்பகாலப் படங்களைக் கொள்ள முடியும். மனித உணர்வுகளின் அதீதங்கள் வினோதங்கள் விளிம்புகளைத் தாண்ட விழையும் சாமான்ய மனங்களின் சரி மற்றும் தவறுகள் அவரவர் கதையில் வாய்க்கவல்ல அவரவர் நியாயம் எல்லாவற்றினூடாக பாலச்சந்தர் தொடர் குரலொன்றை எழுப்பினார். இதை நீ ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்கிற எல்லா நிர்ப்பந்திக்கப்பட்ட சமூக நியாயங்களையும் முன் வடிவமைக்கப்பட்ட சார்புநிலைகள் பூர்த்தி செய்யப்பட்ட பாரபட்ச தர்மங்கள் எனத் தன்னாலான அளவு தன் பாத்திரங்களின் தைரியத்தை முன்வைத்து ஆனமட்டிலும் வினவுதலையும் மீறலையும் அந்தத் தொடர்குரல் சாத்தியம் செய்தது. அவர் இயங்க வந்த காலத்தோடு பொருத்திப் பார்க்கையில் கே.பாலச்சந்தர் நல்லதொரு கதைசொல்லி மேலும் தைரியமான படைப்பாளியும் ஆகிறார்.

ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பதாம் ஆண்டு வெளியான வறுமையின் நிறம் சிவப்புஅன்றைய இந்தியாவின் தேசிய பிரச்சினைகளில் தலையாயதான வேலை இல்லாத் திண்டாட்டத்துக்கு எதிரான கலைவழிக் கலகக் குரல்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. சிறந்த படமாக 1980 ஆமாண்டுக்கான தமிழ்நாடு மாநில விருதைப் பெற்ற படம். இதை இயக்கியதற்காக பாலச்சந்தருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் மாநில மற்றும் ஃபிலிம்ஃபேர் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் ஸ்ரீதேவி, எஸ்.வி.சேகர், திலீப், ப்ரதாப் போத்தன், பூர்ணம் விஸ்வநாதன், தேங்காய் ஸ்ரீனிவாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

தந்தை ஒரு இசைமேதை அவரது சொல்வழி எதிலும் ஈடுபாடற்ற தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற ரங்கன் தன் வழி செல்கிறான். வீட்டைவிட்டு ஓடிவந்து டெல்லியை அடைகிறான். அங்கே நண்பர்கள், காதல், வேலையில்லா சூழல், வறுமை, உபகதைகள் எல்லாவற்றுக்கும் அப்பால் என்னவாகிறான் தந்தையை மகன் மறுபடி சந்திக்கையில் எப்படியான சந்திப்பாக அது விளங்குகிறது என்பதெல்லாம் வறுமையின் நிறம் சிவப்பு முன்வைத்த மீதக் கதை.

 

varumaiyin-niram-sivappu-movie-review-21

பாரதியாரின் பாடல்களைத் தன் நெஞ்சகத்தில் ஒளிர்விதையென்றே தூவிய நாயகன் படத்தின் இறுதியில் தன் தகப்பனிடம் சொல்லும் அத்தனை பெரிய வசனம் இந்தப் படத்தின் முதுகெலும்பு எனலாம். ஸ்ரீதேவிக்குத் தெரியாமல் வெறும் கலயங்களை சப்தித்து தாங்கள் விருந்துண்ணுகிறாற்போல நடிக்கும் நண்பர்கள் மாட்டிக்கொண்டு விழிப்பது அந்தக் காலகட்டத்தின் துன்பியல் மென்மலர் என்றால் திலீப் என்ற கற்பனை கதாபாத்திரத்தை கிட்டத்தட்ட தன் பொய்களால் வழிபடும் திலீப் கதாபாத்திரம் இண்டர்வ்யூவுக்கு ரங்கன் செல்வதற்காக வழிப்போக்கர் ஒருவரிடமிருந்து கோட்டை அவரறியாமல் திருடித் தரும் காட்சி அற்புதம் என்றால் அதே கோட்டை வழியில் செல்கையில் சேறடித்து கமல் திகைப்பதும் இண்டர்வ்யூவில் கோட்டை மடித்து வைத்துக்கொண்டு விரக்தியில் தன் சான்றிதழ்களைக் கிழித்தெறியும் காட்சி யூகிக்கமுடியாத ஒன்று. கல்வியின் பின்னதான இருளும் நிச்சயமற்ற எதிர்காலமும் வறுமையும் பசியும் மெல்ல மெல்ல சமாதானமடைந்து எதாவது செய் என்று தன்னைத்தானே கெஞ்சும் இளைய மனங்களின் யதார்த்தமும் இந்தப் படத்தினூடாக துல்லியமாக வெளிக்காட்டப்பட்டன.

ஸ்ரீதேவி, திலீப் ப்ரதாப், எஸ்.வி.சேகர் நால்வரின் திரைவாழ்விலும் இந்தப் படம் மிகவும் முக்கியமான இடத்தைப் பெற்றது. குறிப்பாக ப்ரதாப் பின்னியிருந்தார் எனலாம். சாகாவரம் பெற்ற சிப்பியிருக்குது முத்துமிருக்குது பாடல் இந்தப் படத்தின் அணிகலனாயிற்று. எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை கண்ணதாசனின் பாடல்கள் தவிர பாரதியாரின் தீர்த்தக்கரையினிலே நல்லதோர் வீணை செய்தே போன்றவை இசையுடன் கூடி ஒலித்தன.

கலைப் படைப்பு என்பது தன்னளவில் ஒரு பூர்த்தியை தைரியமான தீர்வை இதுதான் இன்னதுதான் என்று முடிவைக் கொண்டிருத்தல் அவசியம். அந்த வகையில் இந்தப் படம் அப்படியான நிறைவை நோக்கி நகர்ந்தோடியது நல்லதொரு ஆறுதல். கமல்ஹாசன் கதாபாத்திரத்தின் கதாமுடிவோடு ப்ரதாப்பின் பாத்திர முடிவும் எஸ்.வி.சேகரின் அழிதலும் திலீப்பின் சிதைவுமாக நான்கு மனிதர்களின் கதை-முடிவு-முரண் வாயிலாக அழகான கற்பனைக் கோலமொன்றை சாத்தியம் செய்தார் பாலச்சந்தர்.

கே.பாலச்சந்தர் எழுதி இயக்கிய வறுமையின் நிறம் சிவப்பு ஓங்கி ஒலித்த சாமான்யர்களின் நடுங்கும் குரல். வாழ்க சினிமா!

 

https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-44-வறுமைய/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 45 ஆறிலிருந்து அறுபது வரை

aathmarthi.jpg

ஒரு குழந்தையாகவும் முதியவராகவும் ஒருங்கே திகழ்வதற்கான வாய்ப்பை ஒருவருக்கு சினிமா வழங்குகிறது. நிஜ வாழ்வில் அது நிகழாவொன்று.

அப்பாஸ் கிராஸ்தொமி

காவியத் தன்மை மிகும் கலைப்படைப்புகள் அவை உண்டாகிவரும் காலத்தில் பெறக்கூடிய வெற்றி தோல்வியைத் தாண்டிய வேறொன்றாக காலத்தின் மடியில் உறைபவை. அப்படியான தன்மை சினிமாவுக்கும் உண்டு. பல படங்கள் அவை வெளியான காலத்தில் அலட்சியப்படுத்தப்பட்டும் நிராகரிக்கப்பட்டும் சரிவர ஏற்றுக்கொள்ளாமலும் கடந்து சென்று பிற்பாடு கலையின் ஒளிர்தலை நிரந்தரமாக்கிக் கொண்ட காவிய மலர்களெனவே உயிர்த்திருக்கின்றன. அதைவிடவும் அபூர்வமான வெகு சில படங்களுக்கு மட்டுமே வெளியாகும் காலத்திலும் கொண்டாடப்பட்டு காலங்கடந்தும் போற்றப்படுவது நிகழும். அப்படியான ஒரு படம் ஆறிலிருந்து அறுபது வரை.

ரஜினி கர்நாடக மாநிலத்திலிருந்து மதராஸூக்கு வந்து நடிகரானவர். அன்றைய காலத்தில் தென் மொழிப் படங்கள் மட்டுமின்றி பெருவாரி இந்திப் படங்களுமே சென்னை சார்ந்து படப்பிடிப்புகளும் பிற்சேர்க்கை வேலைகளும் நடந்து வந்தது சரித்திரம். அப்படி இருக்கையில் எல்லா மொழிப் புதுமுகங்களுக்கும் சென்னை ஒற்றை ஸ்தலமாக தேடலுக்கும் காத்திருத்தலுக்குமாய் இருந்ததில் வியப்பில்லை. ரஜினிகாந்த் தமிழில் நடிகரானார். முதல் சில படங்களில் சாதாரணமான வேடங்களில் நடித்தவர் தன்னைப் பிறரினின்றும் அன்னியம் செய்து தனித்து நோக்கச் செய்வதற்காகக் கையில் எடுத்த விஷயம்தான் ஸ்டைல் என்பது, முன் காலத்தின் சூப்பர் ஸ்டாரான எம்ஜி.ஆர் அரசியலில் கடுமையான போராட்டத்தில் இருந்து கொண்டிருந்த நேரம் ரஜனியின் உதயம் நிகழ்ந்தது. எம்.ஜி.ஆரின் சகாவான சிவாஜி போட்டியில்லாத ராஜாவாக வலம்வரத் தொடங்கி இருந்தார். அடுத்த காலத்தின் ஒளிர்தலை நோக்கிய பயணத்தில் கமல்ஹாஸன், விஜய்குமார், ஜெய்கணேஷ், சிவச்சந்திரன், சுமன், ஸ்ரீகாந்த், ஜெய்சங்கர், ஏவிஎம்ராஜன், முத்துராமன் எனக் கலந்து கட்டிய பழைய புதியவர்களுக்கிடையிலான போட்டியும் அடுத்தது யார் என்கிற வினவாத வினாவுமாய்க் குழம்பிய காலம் 1975 முதல் 1980 வரையிலான 5 ஆண்டுகள். இந்தக் காலத்தில் தன்னை ஒரு நாயகனாக நின்று நிதானமாக நிலை நிறுத்திக்கொண்ட கமல்ஹாசனையும் விஞ்சி முதலிடத்தை அடைந்த ஆச்சர்யம்தான் ரஜ்னிகாந்த்.

 

rajinikanth-06-1507290223-300x225.jpg

ரஜினியிடம் இருப்பதை மாற்றித் தன்னை வேரூன்றிக் கொள்ளும் பிடிவாதம் இருந்தது. எத்தனை பேர் கொண்ட கூட்டத்திலும் தான் தனித்துத் தெரியவேண்டியதன் அவசியத்தை எப்போதும் மறந்துவிடவில்லை. ஒரு பக்கம் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டாற்போலத் தோற்றமளித்தாலும்கூட அவற்றால் தன்னுடைய ஏற்றத்திற்கு என்ன பயன் என்பதைப் பார்த்தவண்ணமே ரஜினி நடை போட்டார். ஒருவழியாக பைரவி, பில்லா, ப்ரியா போன்ற படங்கள் இனி ரஜினி என்று ஆக்கிற்று. மக்கள் தங்கள் தேர்வுகளில் எந்தவித ஆதிக்கத்தையோ பரிந்துரையையோ ஏற்பதேயில்லை என்பதை இன்னொரு முறை நிரூபித்தவண்ணம் உதயமானார் தமிழின் அடுத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

அனேகமாக ரஜினியின் ஐம்பதாவது படமாக வந்திருக்க வேண்டிய அவரது 51ஆவது படம் ஆறிலிருந்து அறுபது வரை. ரஜினிகாந்த் எனும் மக்கள் ப்ரிய நடிகர் தனக்கென்று நடித்து மிளிர்ந்த வெகு சில படங்களில் முள்ளும்மலரும் ஜானி ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்கள் எப்போதும் இடம்பெறும். தணியாத நடிப்பு தாகம் கொண்ட கலைஞன் ஒருவனால் மட்டுமே வென்றெடுக்கக்கூடிய காத்திரமான சந்தானம் எனும் பாத்திரத்தில் மிளிரவே செய்தார் ரஜனி. ‘கண்மணியே காதல் என்பது கற்பனையோ’ பாடல் இப்படத்தின் முகவரியானது.

சிறுவயதில் தாய் தந்தையரை இழக்கும் சந்தானம் எனும் சின்னஞ்சிறுவன் தன்னை அடுத்த தம்பி தங்கையரை வளர்த்தெடுக்க தன்னையே மெழுகாக்கிக் கொள்வதும் மாறும் காட்சிகளில் அவனால் வளர்க்கப்பட்டு முன்னேற்றம் கண்ட உடன்பிறந்தோர் மின்மினிக் காலம் முடிந்ததென எண்ணி உறவைத் துச்சமென்றெண்ணித் துண்டாடிப் பிரிவதும் சந்தானம் வாழ்க்கையின் எல்லா கடினங்களையும் ஒன்றன்பின் ஒன்றென அடைவதும் அவனது ப்ரியமான மனைவியை தீவிபத்தில் இழப்பதும் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதும் அந்தக் குழந்தைகள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுவதும் சந்தானம் பெரிய எழுத்தாளனாகப் புகழடைவதும் சுயநலமிக்க அவனது சகோதரர்கள் அவனை மீண்டும் அண்டுவதும் தனக்கென்று இருந்த ஒற்றை உறவான தன் மனைவியை எண்ணியபடி அறுபது வயதில் மரித்துப் போகும் சந்தானத்தின் முழு வாழ்க்கையின் குறுக்கு வெட்டுத் தோற்றம்தான் ஆறிலிருந்து அறுபது வரை. நம் கண்களுக்கு முன்பாக சந்தானம் எனும் மனிதனைத் தெரியச் செய்ததுதான் ரஜினி எனும் புகழ்பிம்பத்தின் வியக்கத்தக்க நடிப்பாற்றலின் பலன் எனலாம்.

“உதவி செய்தவன் உயர்ந்த நிலையில் இருந்தால்தான் உதவி பெற்றவன் அதை உயர்வாகப் பேசுகிறான்”  என்றொரு வசனம் வரும் இந்தப் படத்தின் இறுதியில் வணிக நிர்ப்பந்தங்கள் எது குறித்த சிந்தனையும் இன்றி முழுவதுமாகக் கதையின் செல்திசையிலேயே படத்தை எடுத்திருந்தார் எஸ்.பி.முத்துராமன். பிற்காலத்தில் ரஜினியை முழு சூப்பர்ஸ்டாராக வடிவமைத்து வார்த்தெடுத்ததில் பெரும் பங்கு வகிக்கும் அதே எஸ்.பி.எம் இயக்கத்தில்தான் நம்பமுடியாத அபூர்வமான ஆறிலிருந்து அறுபது வரை எனும் காவியமும் உருவானது.

ஆறிலிருந்து அறுபது வரை மலைக்குறிஞ்சி
 

https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-45-ஆறிலிர/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 46 துலாபாரம்

 

சினிமா என்பது சுருக்கப்பட்ட கருத்துகளின் சேகரமல்ல. மாறாக அது தருணங்களைத் தொகுத்தளிக்கிறது.

ழான்-லூக்-கோடார்ட்

மலையாள தேசத்தின் நல்ல தங்காள் கதை என்று கூறத்தக்க படம் துலாபாரம். அதே பெயரில் தமிழில் மீவுரு செய்யப்பட்டது. தொழில்முறை நடிகையாக இந்தப் படத்தின் வத்சலா எனும் பெண் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த சாரதாவுக்கு இந்தியாவின் சிறந்த நடிகைக்கான தேசியவிருதான ஊர்வசி விருது மலையாளத்துக்காக வழங்கப்பட்டது. பின்னரும் இருவேறு படங்களுக்காக அதே விருதை மீண்டும் பெற்ற திறன் மிளிர் தாரகையான சாரதாவின் மெச்சத்தக்க நடிப்புக்குப் பெயர்போன படம் துலாபாரம். வாழ்வில் சில படங்களை சின்னஞ்சிறு வயதில் பார்த்த பிற்பாடு அடுத்தமுறை பார்த்திடவே கூடாது என்ற முடிவில் மனம் உறுதி கொள்ளும். அப்படியான படங்களில் ஒன்றெனவே துன்பியல் ஒவ்வாமை கொண்டு தனித்து இருத்திய படங்களில் துலாபாரத்துக்கு முக்கிய இடம் உண்டு.

11KIMP_THULABHARAM_-300x199.jpg

மானுட வாழ்வின் ஆகப் பெரிய சிக்கல் மிருகங்களைக் கையாள்வதோ விதி அல்லது வாழ்வின் சூதாட்டத்தை எதிர்கொள்வதோ அல்ல. அவற்றைவிடக் கடினமானதும் எவராலும் எளிதில் வரையறுத்துவிட முடியாததுமான ஆகச்சிக்கலான காரியம்தான் சக மனிதர்களைக் கையாள்வது. உலகம் தோன்றிய தினத்திலிருந்து இன்றுவரை அன்பாலும் நட்பாலும் மிளிர்ந்த கதைகளை ஒருபுறம் இட்டால் மறுபுறம் துரோகத்தாலும் வஞ்சகத்தாலும் அழிந்த கதைகளை இன்னொரு புறம் குவிக்கலாம். அப்படி எல்லா நன்மை தீமைகளுக்கும் அப்பால் அவரவர் வாழ்வை வாழ்ந்து செல்வதற்கான வாய்ப்புத்தான் இந்த உலகில் மானுட வருகை என்பதன் சாரம். இது ஒருபுறமிருக்க எந்தத் தவறுமே செய்யாமல் சக மனிதர்களின் சதியால் அழிந்த ஒரு குடும்பத்தின் கதைதான் துலாபாரம். தன் கணவனை இழந்தது விதியின் செயல் என்றால் சத்தியம் தவறாத தந்தை சொத்துக்களை எல்லாம் இழந்தது நம்பிய வக்கீல் கைவிட்டதன் பின்னாலான துரோகத்தின் பலன். வாழ்வெனும் நாகம்விடாமல் துரத்தத்தான் பெற்ற குழந்தைகளைத்தானே கொன்றுவிட்டுத்தானும் சாகத் துணிகிற வத்சலாவை சட்டத்தின் பிடிமுன் நிறுத்தி வழக்காடி மரண தண்டனைக்கு ஆளாக்குவதே துலாபாரத்தின் கதை. அதிகாரம் பணம் செல்வாக்கு வளைந்து கொடுக்கும் சட்டம் எதற்கும் ஆதாரத்தை நாடிக் காத்திருக்கும் நீதி சத்தியத்திற்கு நிகழும் சோதனை எதிர்பாராத விதியின் சதி தொடர்ந்து விபரீதத்தை நாடும் அபலைப் பெண்ணின் கையறுநிலை இவற்றைக் கண் முன் நிறுத்திற்று துலாபாரம்

டி.எஸ்.பாலையா, ஏவி.எம்ராஜன், மேஜர் சுந்தர்ராஜன், முத்துராமன் ஆகிய நால்வரோடு காஞ்சனாவும் ஈடு கொடுத்து நடித்திருந்தார் என்றாலும் இந்தத் திரைப்படம் சாரதாவின் பேராற்றலைப் பறைசாற்றுகிற படம். சாரதாவின் அபாரமான நடிப்பின் முன்னே மற்ற எல்லாம் சற்றே தள்ளிக்குறுகவே செய்தது. வாழ்வின் மீதான அச்சத்தை பெண் என்பவளுக்கு இந்தச் சமூகம் வெண்மையும் கருமையுமாகக் கை நிறைய அள்ளி அள்ளிப் பூசக் காத்திருக்கும் துன்பத்தை அலட்சியத்தை அயர்ந்து சலித்த பிறகான விரக்தியை கருணையற்ற இறுதிமுடிவொன்றை எடுத்த பிறகு அவள் கண்டடைகிற நியாயமற்ற ஞானத்தை எனப் பண்பட்ட தன் நடிப்பால் கொண்ட பாத்திரத்துக்குத் தன்னால் ஆன மட்டிலும் நியாயம் செய்தார் சாரதா.

ஜி.தேவராஜன் கேரளத்தின் இசை வைரம். தமிழில் வெகு சில படங்களே இசைத்திருக்கிறார். அவற்றில் கமல்ஹாசனைப் பாடகராக்கிய ஞாயிறு ஒளிமழையில் இடம்பெற்ற படமான அந்தரங்கம் படமும் குறிப்பிடத்தக்கது. பூஞ்சிட்டுக் கன்னங்கள் என்ற துலாபாரம் படத்தின் பாடல் காலம் கடந்து ஒலித்து வருவது. இதே படத்தின் தொடக்கப் பாடலான வாடி தோழி கதாநாயகி மனதுக்கு சுகந்தானா என்ற பாடலை அந்தக் காலத்தின் ஃப்யூஷன் மற்றும் செமி ஜிப்ஸி வகைமைகளில் அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

துலாபாரம் படத்தை அதன் கதையை எழுதியவர் தோப்பில் பாஸி. இயக்கியவர் ஒளிப்பதிவு மேதை வின்செண்ட். இசை தேவராஜன் பாடலெழுதியவர் கண்ணதாசன்.

இந்தியத் திரையில் பதிவான துன்பியல் உச்சம். துலாபாரம்.


https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-46-துலாபா/

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“காற்றினிலே பெரும் காற்றினிலே ஏற்றி வைத்த தீபத்திலும்..”

”சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப் புலவர் காத்த தமிழ்..” இரண்டும் நல்ல பாடல்கள்தானே?

தேவராஜனின் இசை எனக்கும் பிடிக்கும். அன்னை வேளாங்கண்ணியில் வரும் “ நீலக் கடலின் ஓரத்தில்...” பாடல் நான் விரும்பிக் கேட்கும் பாடல்களில் ஒன்று.

துலாபாரம் படம் பார்த்து விட்டு இனி இப்படியான சோகப் படங்களை பார்ப்பதில்லை என்று எனக்குள் அன்றொரு தீர்மானம் எடுக்கும் அளவுக்கு என்னைப் பாதித்த படம். இந்தப் படத்தின் கதை ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டது என்று நான் எங்கேயோ வாசித்ததாக நினைவு

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/5/2020 at 10:40 AM, Kavi arunasalam said:

“காற்றினிலே பெரும் காற்றினிலே ஏற்றி வைத்த தீபத்திலும்..”

”சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப் புலவர் காத்த தமிழ்..” இரண்டும் நல்ல பாடல்கள்தானே?

தேவராஜனின் இசை எனக்கும் பிடிக்கும். அன்னை வேளாங்கண்ணியில் வரும் “ நீலக் கடலின் ஓரத்தில்...” பாடல் நான் விரும்பிக் கேட்கும் பாடல்களில் ஒன்று.

துலாபாரம் படம் பார்த்து விட்டு இனி இப்படியான சோகப் படங்களை பார்ப்பதில்லை என்று எனக்குள் அன்றொரு தீர்மானம் எடுக்கும் அளவுக்கு என்னைப் பாதித்த படம். இந்தப் படத்தின் கதை ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டது என்று நான் எங்கேயோ வாசித்ததாக நினைவு

துலாபாரம் படத்தில் வந்த “பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில் பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே” என்ற பாடல் எங்கள் வீட்டில் தாலாட்டுப் பாடலாகப் பாடப்பட்டது! அந்தப் பாட்டினால் நானும் கண்ணுறங்கி நித்திரையாகப் போயிருந்திருப்பேன்☺️

நான் துக்கமான முடிவுள்ள படங்களை அதிகம் விரும்புவதில்லை. அதனால் துலாபாரம் போன்ற படங்களைப் பார்க்க விரும்புவதில்லை.

 

 

Edited by கிருபன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 47 எங்க வீட்டுப் பிள்ளை

 

திரைப்படக் கலைதான் இருப்பதிலேயே விபரீதமான கலை. நீங்கள் விரும்புவதை ஒருபோதும் உங்களுக்கு அது தராது. மாறாக அது உங்களுக்கு விரும்புவது எப்படி என்பதைக் கற்றுத் தருகிறது.

-யூகோஸ்லோவிய அறிஞர் ஸ்லாவோஜ் ஜிஸெக்

நாடறிந்த உலகறிந்த கதையின் காலங்காலமாய்த் தொடரும் வெற்றிக்கான காரணம் என்ன? அப்படியான வெற்றியின் பின்னால் ஆழ்ந்திருக்கக்கூடிய மந்திரம் அல்லது சூட்சுமம் என்ன?அப்படி எதுவுமே இல்லை என்று மறுக்க முடியாதல்லவா? அப்படியென்றால் ஏன் அப்படி ஜெயிக்கிறது அந்தக் கதை? எந்தக் கதை? இரட்டை வேடக் கதை ஆள்மாறாட்டக் கதை நல்ல வெர்ஸஸ் கெட்ட நல்ல வெர்ஸஸ் நல்ல கெட்ட வெர்ஸஸ் கெட்ட என்றேல்லாம் எத்தனையோ தூரம் கடந்து வந்த பிறகும் அந்தக் கதைக்குதிரை களையிழக்கவே இல்லை. அப்படிப்பட்ட கதையின் பெருவெற்றிக்குக் காரணம் உலகில் காண வாய்க்கிற சாமான்ய அற்புதமான இரட்டைக் குழந்தைகள்மீது உலகத்திற்கே பொதுவாய் பங்களிக்கப்பட்டிருக்கும் ஆழ்மன ஆசை மற்றும் வியத்தல் காரணமாக அவரவர் மனங்களில் படர்ந்திருக்கும் இரட்டைக் குழந்தைகள் மீதான மரியாதை. யாருக்குத்தான் பிடிக்காது இரட்டைக் குழந்தைகளை?

 

evp-300x219.jpg

ஆச்சர்யம் என்னவெனில் இந்தியாவில் மௌனப்படக் காலத்தில் 1917 ஆமாண்டு உருவான லங்காதகன் என்கிற மராட்டிய நில மௌனப் படத்தில் ஒரே நடிகர் அண்ணா சலூங்கே ராமனாகவும் சீதையாகவும் நடித்ததுதான் முதல் இந்திய இரட்டை வேடப் படமாகக் கருதப்படுகிறது. இரட்டை வேடம் என்பதற்கான திரை தர்க்க நியாயங்களை எல்லாம் மீறியவண்ணமே முதல் படம் உருவாகியது வியப்புக்குரியதுதானே? கடந்த நூற்றிரண்டு ஆண்டுகளில் எத்தனை எத்தனை நடிகர்கள் இரட்டை வேடமேற்று மக்களை மகிழ்வித்திருக்கின்றனர்? எத்தனை பொய்களை நிஜமென்று நம்ப விரும்பச் செய்திருக்கிறது இந்தியத் திரையில் எழுந்த இரட்டையர் கதை?

எந்த அளவுக்கு ஈர்க்கிறதோ அதே அளவுக்கு எளிதில் கடுக்கவும் செய்யும், இது கலைக்கும் பொருந்தும். திரைக்கதை அமைப்பின் சூட்சுமங்கள் இருவேடப் படங்களில் அந்த இரண்டு வேடங்களுக்கு இடையிலான சம்பவ காரண நியாய பொருத்தங்களை கட்டமைப்பதில் பெரிதும் கவனத்தோடு உழைத்தார்கள். நெடுங்காலத்துக்குப் பின்னால் தற்போது லாஜிக் எனப்படுகிற தர்க்க நியாயமோ பின்புலக் காரணமோ எதற்கும் பெரிதாக மெனக்கெடாமல் இதோ பார் இதான் படம் உனக்கு என்ன தோணுதோ நீ யூகிச்சிக்க தம்பி என்று கைகளை உயர்த்தியபடி விலகினார்கள். தற்போதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகருகையில் அதற்கே உரித்தான சிக்கலுடன் இரட்டைவேடப் படங்கள் தத்தமது அடுத்த காலப் பயணத்தினுள் அலையாடும் என்பது திண்ணம்.

இந்தியத் திரையுலகின் இரட்டை வேடப் படங்களின் பொதுவான தர்க்க நியாயம் ஆள் மாறாட்டம். இவன் அவனாகி அவன் இவனாதல் முரணுக்கு அப்பால் சுபம் இதைப் பிரதானமாகக் கொண்டே படங்கள் எழுந்தன. இன்றளவும் இடர் அதிகமற்ற சினிமா முயல்வாக மினிமம் கியாரண்டி சினிமா என்று போற்றப்படுகிறது இருவேடக் கதை சினிமா. உளவியல் காரணங்கள் ஒருபுறம் சரித்திரத்தின் புள்ளிவிபரம் மறுபுறம் நெடிதுயர்ந்தோங்குகிறது இரட்டை வேடக் கொடி.
டிவி நரஸராஜூ எழுதிய மூலக்கதையை செறிவூட்டி வசனம் எழுதியவர் சக்தி கிருஷ்ணசாமி வாலியும் ஆலங்குடி சோமுவும் எழுதிய பாடல்களுக்கு இசை அமைத்தவர்கள் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் வின்ஸெண்ட் சுந்தரம் இணைந்து ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்தை நாகிரெட்டி சக்ரபாணி ஆகியோர் தயாரிக்க இயக்கியவர் சாணக்யா. எம்.ஜி.ஆரின் ஒளிவிளக்கு புதிய பூமி படங்களும் சாணக்யாவின் இயக்கத்தில் உருவானவையே.

என்ன லெட்டர்
அது ரகசியம்
பரவாயில்லை சொல்லுங்க
ரகசியத்தை சொல்ற அளவுக்கு நாம இன்னும் பழகல்லியே
ரகசியத்தை சொல்லுங்க அதிலயே பழக்கம் ஆயிடும்.

இதுவொன்றும் நாயக நாயகிக்கிடையிலான காதல் ததும்பும் வசனம் அல்ல. நாகேஷூக்கும் மாதவிக்கும் இடையே பூத்த உரையாடல் மலர் இது. அந்தக் காலம் வசனங்களின் ஆட்சி தழைத்தோங்கியிருந்ததல்லவா?

ஒரு சூலில் உருக்கொண்ட இரட்டையர் எனும் உண்மை தெரியாமல் வெவ்வேறு சூழ்நிலைகளில் வளர்ந்து வரும் ராமுவும் இளங்கோவும் இடம் மாறும் வரை ராமு தாய்மாமன் கஜேந்திரனின் அடிமையாக அச்சத்தில் ஆழ்ந்து வளர்கிறான். இடம்மாறிவந்த இளங்கோ மாமனின் கொட்டத்தை அடக்குகிறான். இறுதியில் எல்லோரும் திருந்தி நல்லவர்களாகி குடும்பம் ஒற்றுமையாகிறது சுபம். கதையாக எழுதினால் இதுதான் எங்க வீட்டுப் பிள்ளையின் ஒன்லைன். படமாக எடுத்ததிலும் பாத்திரமுரண்களைக் கொண்டே திரைக்கதையைத் திருப்ப முயன்ற உத்திகளிலும் எடுத்த விதத்தினாலேயே முழுக்க முழுக்க இந்திய கொண்டாட்ட சினிமாவின் ஒப்பில்லா அற்புதமாக மாறியது. இன்றளவும் திரைக்கதையைப் பாடமாகப் படிப்பவர்களுக்கு இந்திய சினிமாவின் ஆழ அகல உயரங்களத்தனைக்குமான எடுத்துக்காட்டு சினிமாக்களில் ஒன்றாக எங்க வீட்டுப் பிள்ளை விளங்குகிறது.

எம்.ஜி.ஆர் எதைச் செய்தாலும் அதற்கான அர்த்தங்கள் ஆயிரம் என்ற அளவில் 1965இல் நம்பியாரிடமிருந்து சவுக்கை அதாவது அதிகாரத்தைப் பறிக்கிறார். அதை அவர் மீதே திருப்புகிறார் அதிகாரம் எம்.ஜி.ஆர் கைகளுக்கு வந்த பிறகு அதுவரை பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த சாமான்ய ஏழை சனங்கள் நிம்மதி பெறுகிறார்கள்  ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்’ என்று கிட்டத்தட்ட உணர்ச்சிகளின்மீதான ஆட்டமாகவே அந்தப் பாடலும் எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு திரை அசைவுகளும் புரிந்துகொள்ளப்பட்டு அதிலிருந்து ஏழு வருடங்கள் கழித்து அவர் சார்ந்திருந்த கட்சியிலிருந்து வெளியேறி அதன் பின்னர் ஐந்தாண்டுகள் கழித்து ஆட்சியில் அமர்ந்த போதும் அதன் பின்னரும் இந்தப் பாடல் இந்தப் படத்தைத் தாண்டி வேறொரு வெளியைத் தனக்கென்று உருவாக்கிக் கொண்டது. எம்.ஜி.ஆர் தெற்காசிய அளவில் மாபெரும் பூடகங்களைக் கையாண்ட நட்சத்திர நடிகராக விளங்கினார். அதற்கான சாட்சியமாக இப்படம் திகழ்கிறது. எத்தனையாவது முறை பார்த்தாலும் தன்னைப் புத்தம்புதியதாக்கிக் கொள்ளும் ஏதோவொன்றை இன்னமும் தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறது ஒரே தோற்றத்தில் இருவர் என்பதன் அதீதத்தில் விளைந்த கோடிமலர்களில் இன்றும் தன் குன்றாவொளிர்தலுடன் மிளிர்கின்ற அதிசயமலர் எங்கவீட்டுப்பிள்ளை.

காலத்தின் மீது கலை நிகழ்த்திய கண்கட்டு வசியம் வாழ்க சினிமா!
 

https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-47-எங்க-வீ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 48 ஊமை விழிகள்

 

ஒரு சிறந்த கதையை அடைய வேண்டுமானால் நாயகனை விரும்புகிறாற்போலவே நீங்கள் வில்லனையும் விரும்பியாக வேண்டும்

-ஆண்ட்ரூ ஸ்காட்

சோழா பிக்னிக் வில்லேஜின் மர்மங்களைத் துப்பறியச் செல்கிறான் பத்திரிகையாளன் ராஜா. அவனுக்கும் பத்திரிகை ஆசிரியர் சந்திரனுக்கும் படிப்படியாக எதிர்ப்புகள் வருகின்றன. ராஜாவுக்கு உதவுகிறாள் எம்.எல்.ஏ சட்டநாதனிடம் வேலை பார்க்கும் உமா. சட்டநாதனுக்கும் பிக்னிக் வில்லேஜ் உரிமையாளன் கே.ஆர்.கேவுக்கும் இருக்கும் ரகசிய தொடர்புகளை அம்பலமாக்குகின்றான் ராஜா. அதனால் கோபமடையும் எதிரிகள் உமாவைக் கொல்கின்றனர். அந்த வழக்கை விசாரிக்க வருகிறார் டீ.எஸ்.பி தீனதயாள் மர்மம், பகை, அரசியல் அதிகாரம் எனப் பல சூழ்ச்சிகளை முறியடித்து எங்கனம் சோழா வில்லேஜின் அனைத்து மர்மங்களையும் வெளிக்கொணர்கின்றனர் என்பது மீதிக் கதை.

51jHrz5XaNL-218x300.jpg

ஊமை விழிகள் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் முதலில் குறும்படமாக எடுத்து அதை அடுத்து விரித்துப் பெருந்திரை நோக்கி நகர்த்திய படம். அகில இந்திய அளவில் மாபெரும் தொடக்கத்தை திரைப்படக் கல்லூரி மாணவர்களின் முயற்சிக்குக் கிடைக்கக் காரணமாக இருந்தது ஊமை விழிகள். ஆபாவாணன் திரைக்கதை, பாடல்கள், வசனம் இவற்றை எழுதி தயாரித்தார். மனோஜ் கியான் இரட்டையர்கள் இசையமைத்தார்கள். ரமேஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய அரவிந்தராஜ் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்றது ஊமை விழிகள்.

எந்த நாயக பிம்பமும் இல்லாமல் வழங்கப்பட்ட பாத்திரத்துக்கு நியாயம் செய்தார் விஜய்காந்த். அவருக்கு இணையாக வேடமேற்றார் சரிதா. கார்த்திக், சசிகலா, சந்திரசேகர், விசு, கிஷ்மு, அருண்பாண்டியன், மலேசியா வாசுதேவன் மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னால் மீண்டும் திரை கண்டார் ரவிச்சந்திரன். தன் முந்தைய அத்தியாயத்தின் அமுல்குழந்தை நடிப்பிலிருந்து விலகி மாபெரும் வில்லனாக இந்தப் படத்தில் தோன்றினார். அதுவும் இந்தப் படத்தின் வில்லனுக்கு வழங்கப்பட்ட பூர்வ கதை உணர்வுகளைக் கிளறுவதாக அமைந்திருந்தது. எடுத்துக்கொண்ட கதையை படமாக்கிய விதத்தில் சர்வதேச மர்மப் படங்களுக்கு இணையான வழங்கலைக் கொண்டிருந்தது இந்தத் திரைப்படம்.

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் தூண்களைப்போலத் தாங்கின எனலாம். திரைக்கதையின் போக்குக்கு உறுத்தாத பாடல்களும் வசனங்களும் ஊமைவிழிகளின் பலங்கள். அதுவும் க்ளைமாக்ஸில் அணிவகுத்து வரும் அத்தனை அம்பாஸிடர் கார்வலக் காட்சி அகில இந்திய அளவில் பேசப்பட்டது.

முப்பதாண்டுகளுக்குப் பிறகும் இன்றளவும் விறுவிறுப்புக் குறையாமல் இருப்பது ஊமைவிழிகள் பட உருவாக்கத்தின் பெருஞ்சிறப்பு.

ஊமைவிழிகள் பேசாப் பெருமொழி

 

https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-48-ஊமை-விழ/

Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 49 உதிரிப்பூக்கள்

aathmarthi.jpg

திரைப்படக்கலை நம்பமுடியாத அளவு ஜனநாயகத்தன்மை மிகுந்தது மற்றும் அணுகக்கூடியது. நீங்கள் வெறுமனே மறு அலங்காரம் செய்வதை விடுத்து உண்மையாகவே உலகை மாற்ற விரும்பினால் அதுவொரு சிறந்த வழி!

-பாங்க்ஸி

அரிதினும் அரிய படைப்பாளி மகேந்திரன். தமிழில் மகேந்திரன் நிகழ்ந்தது நம் நிலத்தின் கொடுப்பினை. உலக அளவில் பெரும் படைப்பாளிகளுக்கான இலக்கணம் பொய்த்திராத நம் காலத்தின் சாட்சியம் மகேந்திரன். ஆகச் சிறந்த படங்களுக்கு அடுத்து முற்றிலுமாகக் கைவிடப்படுகிற படைப்புகளும் முயன்று பிறகு பெரிய கால ஓய்வைக் கொண்டிருந்து தன் இறுதிக் காலத்தில் நடிகராக சிற்சில பாத்திரங்களில் நடித்து சமீபத்தில் காலத்தோடு கரைந்தார் மகேந்திரன். மிக மிக அரிதாகத் தன் படங்களை நிகழ்த்தித் தந்தவர்.

புதுமைப்பித்தனின் சிற்றன்னை கதையை எடுத்துக்கொண்டு அதனைத் திரைக்கேற்ப மிக லேசான மாற்றங்களைச் செய்தார் மகேந்திரன். 19.10.1979 உதிரிப்பூக்கள் வெளியாகி நாற்பதாம் ஆண்டில் நிற்கிறோம். இன்றளவும் யாராலும் முறியடிக்க முடியாத திரைவைரமாக உச்சத்தில் தனிக்கிறது உதிரிப்பூக்கள். எழுதப்பட்ட கதையைத் திரைப்படுத்துவதற்கான முழுமையான இலக்கணங்களை வகுத்தார் மகேந்திரன். திரைப்படத்திலிருந்து முற்றிலுமாக முடியாதபோதும் இயன்றவரை நாயகன் என்ற பதத்தை நீக்கினார். சொல்லப் போனால் இந்தப் படத்தில் கதைதான் நாயகன் சரத்பாபு, சுந்தர் ஆகியோர் கலைத்து உடைத்தெறியப்பட்ட பழைய நாயகச் சில்லுகளைப்போலத்தான் படமெங்கும் வலம்வந்தார்கள். எது தேவையோ அதுவே நாயகத்துவம் என்பதைக் கடுமையாக நம்பினார் மகேந்திரன்.uthiripookal-300x163.jpg

தான்சார்ந்த காலம் தனக்கு முன்பாக இயங்கிக் கொண்டிருப்பவர்களின் செல்திசை இரண்டையும் மறுதலித்தார் மகேந்திரன். அந்த ஊரின் பெரிய மனிதர் சுந்தரவடிவேலு (விஜயன்) மனைவி லட்சுமி (அஸ்வினி) குழந்தைகள் (ஹாஜா மற்றும் அஞ்சு) இருவருடனும் வசித்து வருபவர். அவருக்குச் சொந்தமான பள்ளிக்கூடத்தின் தலைமை நிர்வாகியாக சுந்தரவடிவேலு திகழ்கிறார். அந்தப் பதவி ஏற்படுத்தித் தந்திருக்கும் குறுகிய அளவு அதிகாரத்தின் விளைதலான கர்வமும் திமிரும் பணம் வைத்திருக்கிறோம் என்ற ஆணவமும் எப்போதும் தொனிக்கும் மனிதராக வலம் வருபவர். அவருக்கு சங்கீத வாத்தியார் ஒருவர் எப்போதும் எடுபிடி மற்றும் துந்துபியாகத் திகழ்கிறார். அவருடைய சொந்தத் தம்பியையே முரண்பட்டு வீட்டைவிட்டுத் துரத்திவிடுகிறார் சுந்தரவடிவேலு.

லட்சுமிக்கு திருமணமாகாத தங்கை செண்பகம் மதுமாலினி தந்தை சாருஹாசனோடு வாழ்ந்து வருகிறார். அந்தக் குடும்பத்தின் ஏழ்மையை சாக்காக வைத்துக் கொண்டு செண்பகத்தைத் தானே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கிறார் சுந்தரவடிவேலு. அதற்கு மாமனாரும் செண்பகமும் ஒப்புக்கொள்ளவில்லை. லட்சுமியை சீக்காளி என்று முத்திரை குத்தி தள்ளி வைத்துவிட்டு மறு கல்யாணத்துக்கு முயல்கிறார் வடிவேலு. லட்சுமி மரணமடைகிறாள். வேறொரு பெண்ணோடு இரண்டாம் திருமணத்தை முடித்துக்கொள்கிறார் சுந்தரவடிவேலு வாத்தியார் ப்ரகாஷூக்கும் செண்பகத்துக்கும் திருமணம் நிச்சயமாகிறது. தன் ஆத்திரத்தை தான் நினைத்தது நடக்கவில்லை என்ற வெறியை செண்பகத்தை பாலியல் பலாத்காரம் செய்வதன் மூலமாக தீர்த்துக்கொள்ள முனைகிறார் சுந்தரவடிவேலு.

ஊர் கூடி ஆத்திரமடைந்து சுந்தரவடிவேலுவுக்கு நூதனமான முறையில் தற்கொலையை தண்டனையாக நிறைவேற்றுகிறது. இரண்டு குழந்தைகளும் நிர்க்கதியாக உதிரிப்பூக்களாக உறைவதோடு நிறைகிறது படம்.

விஜயன் உள்ளிட்ட பலரது பாத்திரப் பின்புலம் பாதிக் கதையைச் சுமக்கிறது. தனக்குக் கீழே வேலை பார்ப்பவர்கள் கீஃபிட் ஆக உடை அணிவதை விரும்பாத விஜயன் அவர்களை தொள தொள ஜிப்பா பைஜாமா மட்டுமே அணிய வேண்டுமென நிர்ப்பந்திப்பது ஒரு சோற்றுப் பதம். படத்தின் நடுவே இயல்பாக ஒரு காட்சி வரும், வாத்தியார் ப்ரகாஷ் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது துந்துபி அங்கே வருவார் மிஸ்டர் தயவு செய்து குளிக்கிறதை நிறுத்துங்க.மேனேஜர் சுந்தரவடிவேலு ஸாருக்கு நீச்சல் தெரியாது. மத்தவங்க நீச்சலடிச்சு குளிக்கிறது தெரிஞ்சா அவர் ரொம்ப வருத்தப்படுவார். இந்த ஒரு காட்சியில் வில்லனுக்கு நீச்சல் தெரியாது என்பதையும் தானறியாத எதையும் பிறர் கையிலெடுப்பதை அவர் விரும்புவதில்லை என்பதையும் ஒருங்கே ரசிக மனங்களில் விதைத்துவைப்பார் இயக்குனர். சொட்டாங்கல் விளையாட்டை நிறுத்திவிட்டு ப்ரகாஷை கண்டித்து அனுப்பிவிட்டு யாருமற்ற பொழுதில் தான் அந்தக் கல்லை ஒரு தடவை முயன்று பார்ப்பதெல்லாம் டிபிகல் சாடிசம்.

அதிராத குரல், அமைதியான முகம், லேசான குறுநகை என்று யாராலும் வெறுக்க முடியாத பலவற்றையும் தாண்டித் தமிழின் ஆகச்சிறந்த வில்லனாக இந்தப் படத்தில் காட்சி தந்தார் விஜயன். அமைதியான நடிப்பினால் அஸ்வினியும் அளவான நடிப்பால் சரத்பாபுவும் மாண்பும் ரோஷமும் மிகுந்த மனிதராக சாருஹாசனும் தோன்றினார்கள். அஷோக்குமாரின் ஒளிப்பதிவு அபாரமாய் இருந்தது. தன் ஷாட்களால் பாதி உரையாடல்களை நீக்கிவிடும் வல்லமைதான் சிறந்த ஒளிப்பதிவுக்கு இலக்கணம். அப்படிப் பார்த்தால் மௌனம் பேசாத இடங்களில் மட்டுமே வசனம் எழவேண்டும் என்பது திரைக்கதையின் விதிகளில் ஒன்று. அதனை மிகச்சிறந்த முறையில் வெளிப்படுத்திய படம் உதிரிப்பூக்கள்.

என் குழந்தைகளுக்கு நான் அப்பாவா மட்டும் இருக்கேன். புரோக்கரா இருக்க சொல்லாதீங்க. இது போகிற போக்கில் இடம்பெறும் வசனம் ‘இத்தன நாளும் நான் கெட்டவனா இருந்தேன். அப்பெல்லாம் நீங்க நல்லவங்களா இருந்தீங்க. ஆனா இப்போ, உங்களையும் நான் என்னைமாதிரி ஆக்கிட்டேன். நான் பண்ணதிலேயே பெரிய தப்பு இதுதான்’ இதைச் சொன்னபடியே தூக்குமேடை நோக்கிச் செல்லும் வழியற்ற தண்டனைவாசிபோலவே தன் முகபாவங்களை வெளிக்காட்டுவார் விஜயன்.

கொஞ்சம் கூடிக்குறைந்திருந்தாலும் அறுந்து விழுந்துவிடக்கூடிய அபாயமிக்க மெல்லிய சரடு போன்ற முகபாவங்கள் உலகத்தரமாய் அமைந்தன. வசனங்கள் நறுக்குத் தெறித்தன. திரைப்படத்தைக் கலையாகக் கற்க முனையும் யாவருக்கும் படங்கள் அதிகதிகம் உண்டென்ற பட்சத்திலும் பாடங்கள் குறைவானவையே. இந்தப் படம் ஒரு பாடம்.

இளையராஜாவின் இசை அபாரங்களில் முக்கியமான படம் உதிரிப்பூக்கள். பார்வையாளர்களின் தனித்த சமமற்ற மன நிலையை அழிப்பதும் தேவையான கூட்டு மனோநிலை ஒன்றினைத் தன் இசை மூலமாக உருவாக்குவதும் மாற்றி அமைப்பதும் பராமரிப்பதும் வேறொன்றை நிறுவுவதும் இவையெல்லாமும் திரைப்படத்தின் உள்ளே இசை என்பதன் தேவைகளாகத் தொடர்பவை. மேற்சொன்ன யாவற்றையும் துல்லியமாக நிறைவேற்றினார் இளையராஜா. படம் முடிவதற்கு முன்பாக விஜயனை ஊர் நடுவாந்திரத்தில் இருந்து பிடித்து அழைத்துக்கொண்டு ஊர்வெளியே ஆற்றங்கரைக்கு வந்துசேரும் வரையிலான காட்சிப்படுத்தலாகட்டும் அதற்காக ராஜா வழங்கிய இசையாகட்டும் நல்நிறைவு.

கலை என்பது மாபெரும் புரிந்துணர்வு ஒப்பந்தம் –  உதிரிப்பூக்கள் அதற்கான நிகழ்கால சாட்சியம்.


https://uyirmmai.com/literature/நூறு-கதை-நூறு-படம்-49-உதிரிப/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/9/2019 at 09:31, கிருபன் said:

நூறு கதை நூறு படம்: 21 – யுத்தம் செய்

aathma-poster-3.jpg

பைபிள் கதாபாத்திரமான ஜூதாஸ் காட்டிக் கொடுத்தவன். இந்தக் கதையில் ஒரு ஜூதாஸ் வருகிறார். அவர் ஒரு டாக்டர். காட்டிக் கொடுக்காமல் உயிரை விடும் டாக்டர். கொஞ்சம் மூளையும் நிறையப் பணமும் வச்சிட்டு அதிகாரத்தால பணத்தால ஆள்பலத்தால அரசியல் பலத்தால போலீஸ் பலத்தால விரட்டி விரட்டி ஓட முடியாம செய்றியே எங்களுக்கு இருக்கிற மூளைக்கு நாங்க விரட்டுறோம். நீ ஓடு. எங்க ஓடினாலும் தப்பிக்கவே முடியாது என்றாற் போல் தன் கடைசி வாக்குமூலத்தை ஜூதாஸ் தந்தபடி தன் உயிரை விடுகிற காட்சியில் நாம் வாழும் உலகம் என்னமாதிரியானது என்பதைப் பற்றிய சித்திரம் மனதை நெருக்குகிறது.

நகரின் பரபரப்பான இடங்களில் வரிசையாக வெட்டப்பட்ட மனிதக் கரங்கள் அட்டைப் பெட்டியிலிடப்பட்டு கிடக்கின்றன.மக்கள் பீதியடைகிறார்கள்.காவல் துறையை அரசாங்கம் நெருக்குகிறது.தன் காணாமற் போன தங்கை சாருவைத் தேடுவதற்காக விடுப்பு கோரி தன்னை சந்திக்க வரும் ஜேகேயிடம் நீ இந்த கரங்கள் வெட்டப்பட்ட வழக்கை கண்டுபிடி இதோடு உன் தங்கை காணாமற் போன வழக்கையும் சேர்த்து விசாரிக்க கமிஷனரிடம் அனுமதி வாங்கித் தருகிறேன் என்று சிபிசி ஐடி பிரிவு டிஎஸ்.பி சந்திரமௌலி ஜேகேயைப் பணிக்கிறார்.தனக்கு உதவியாக ஒரு பெண் இரண்டு ஆண் காவலர்களுடன் அந்த வழக்கினுள் நுழைகிறான் ஜேகே.

அடுத்தடுத்த சம்பவங்கள் ஒரு கட்டத்தில் கரங்களுக்கு பதிலாக மனிதத் தலை ஒன்று இமைகள் நீக்கப்பட்டு காவல் நிலையத்தின் எதிரே தர்பூஸ் பழக்கடையின் மூடிய தார்பாலின் போர்வைக்குள் பழங்களுக்கு மத்தியில் இருத்தப்படும் போது வழக்கு சூடுபிடிக்கிறது.

Yuththam-Sei-240x300.jpg

சில காலத்துக்கு முன்பாகக் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட டீன் புருஷோத்தமன் குடும்பத்தின் அந்த முடிவுக்கும் தற்போதைய வெட்டுண்ட கரங்கள் ப்ளஸ் மனிதத் தலை ஆகியவற்றோடு இருக்கும் சம்பந்தம் ஆகியவற்றைத் தொடர்ந்து செல்கையில் ஜேகேயுடன் பார்வையாளர்களுக்கும் இரண்டே முக்கால் மணி’ நேரத்தின் நகர்தலின் அயர்ச்சி துளியும் இன்றி ஒச்சமற்ற கதைசொலல் மூலமாக மாபெரும் உணர்வு இழைகளைப் பெயர்த்துத் தருகிறார் மிஷ்கின்.பணம் கண்ணை மறைக்கையில் அதிகாரம்

வளைந்து கொடுக்கையில் அன்பைக் கடவுளாகத் தொழுவதைத் தவிர வேறொரு குற்றமும் புரியாத கையறு நிலையில் தள்ளப்படுகிற மென்மன மனிதர்களது வாழ்வில் மிருகங்களாய் நுழைவோர் மனிதர்கள் இல்லை என்பதும் அவர்களைத் தீர்த்துக் கட்டுகிற வரை மனிதத் தன்மையோடு அணுகத் தேவையில்லை என்பதும் அன்பு கொடூரமாய்க் கையாளப்படும் போது கொடிதினும் கொடிய வழிமுறைகளில் தண்டிக்கப் படுவதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதும் யுத்தம் செய் திரைப்படத்தின் திரைக்கதை நகரும் திசைவழி.

மிஷ்கின் தான் நம்புகிற கதையினூடாகத் தானே எல்லாருமாய் புகுந்து திரும்பிய பிறகே கதை தொடங்கும் இயல்புள்ள படைப்பாளி.அவருடைய மனிதர்கள் எளியவர்கள்.அவர் முன்வைக்கிற உலகம் கடும் சட்ட திட்டங்களுக்கான கீழ்ப்படிதலை முன்வைத்த வண்ணம் எப்போதும் பாதுகாக்கப்பட்டுக் கொள்ள வேண்டிய உலகமாகவே இருக்கிறது.அவருடைய உலகம் மனம் கொண்ட்வர்கள் மனமற்றவர்கள் என்று இரண்டாய்க் கிளைக்கிறது.மனம் கொண்டவர்களைத் தீண்டியும் துன்புறுத்தியும் கொன்றும் மனமற்றவர்கள் செயல்படும் போதெல்லாம் மிஷ்கின் பரமாத்மாவாகிறார்.அவருடைய கதை ஒரு போதும் துன்பியலுக்குத் துக்கமே தீர்வு என்று முடிவதே இல்லை.கணக்கைத் தீர்த்துக் கறைகளை சுத்தம் செய்து அச்சத்தை நிலை நாட்டி அன்பை மாற்றற்ற ஒரே ஒரு
ஒன்றாகவே முன்வைப்பவர் மிஷ்கின்.அவருடைய கெட்டவர்களுக்குள் கையறு நிலையும் தொடங்கியதை முடிக்கத் தெரியாத தன்மையும் ஆங்காங்கே காணப்படுவது ரசம்.ஒரு கடவுள் தோன்றிக் கதைகளைப் பாதியில் தீர்த்துத் தந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என
மிஷ்கினின் தீயவர்கள் கூட ஒரு ஓரத்தில் ஏங்குவதைக் காணமுடியும்.இது திரைப்படைப்புகளில் அத்தனை எளிதில் காணக்கிடைக்கிற சமாச்சாரம் இல்லை.அபூர்வமான அரிய ஒன்றுதான்.

யுத்தம் செய் படத்தில் திரிசங்குவாகத் தோன்றும் செல்வா ஜேகேயின் தங்கை சாருவிடம் பேசும் காட்சியும் இசக்கிமுத்துவாகத் தோன்றும் மாரிமுத்து தன் கண்ணில் அடிக்கப் பட்ட ஸ்ப்ரேயைப் பற்றித் திட்டியவாறே வண்டியில் ஏறும் காட்சியும் யதார்த்தமான மனித சித்திரங்களை முன்வைக்கிறவை.அதிகாரத்தின் மீதான சாடலே படைத்தலின் உச்சபட்ச சுதந்திரம்.இந்தப் படத்தில் இன்னும் இரண்டு காட்சிகள் வரும். அதுவரை ஜேகே தன் தங்கை காணாமற் போன இடத்தின் எதிர்வீட்டுப் பெண்ணிடம் தன்னை போலீஸ் என்றே காண்பித்துக் கொள்ளாமல் விசாரிப்பார்.ஆட்டோக்காரர்களிடமும் கூட காவலர் என்றே காண்பித்துக் கொள்ள மாட்டார்.பொது உடுப்பு தான் அணிவது சிபிசி ஐடி பிரிவினரின் வழக்கம் என்பது வசதியாக இருக்கும்.எந்தத் தகவலும் கிடைக்காது.ஒரு கட்டத்தில் ஜேகேவுக்கு இன்னொரு தகவல் கிடைக்கும்.ஆட்டோவில் இரண்டு பேர் இருந்தார்கள் என்ற தகவலை உறுதி செய்வதற்காக இன்னொரு முறை அதே பெண் வீட்டுக்கு செல்வார்.ஜேகேயைப் பார்த்ததும்

vlcsnap-2011-03-25-15h42m12s101-300x134.

“ஏம்பா அறிவில்ல உனக்கு எத்தினி வாட்டி சொல்றது?” என எகிறுவார் அந்தப் பெண்ணின் தாய்.உடனே சேரனுக்கு உதவியாளர் கிட்டப்பாவாக வரும் ஈ.ராமதாஸ் அடி செருப்பால வாயை மூடிட்டு உள்ள போ.ப்ராத்தல் கேஸ்ல உள்ள தள்ளிருவேன்..போ உள்ளே என்பார்.ஏற்கனவே பல முறை காவல்துறையினர் விசாரித்து எல்லாம் சொல்லிவிட்டேனே என அதே பெண் சென்றமுறை சேரனிடம் பதில் சொல்லும் காட்சியும் வரும்.சேரன் காவலர் என்று தெரியாமல் அவரைத் திட்டும் அந்த வீட்டின் பெண்மணியிடம் தான் எந்தப் பிரிவில் என்ன பணியிடத்தில் இருந்தாலும் குறைவான அதிகாரத்தை மட்டுமே கையில் கொண்டிருக்கக் கூடிய கிட்டப்பா அந்தப் பெண்மணியிடம் சிந்தும் சொற்கள் போலீஸ் எனும் துறையின் பொது அதிகாரமாக எங்கேயும் தமது கரத்தில் உயர்த்திப் பிடிக்க விரும்புகிற ஒற்றைச் சவுக்காக பார்வையாளன் கண்முன் விரியும்.இன்னொரு காட்சியில் காவல் நிலையத்துக்கு நேர் எதிரே தர்பூஸ் பழங்களை ப்ளாட்ஃபாரத்தில் அடுக்கி வியாபாரம் செய்யும் எளிய மனிதன் தன்னால் இயன்ற அளவு தார்பாலின் ஷீட் கொண்டு அந்தக் கடையை மூடிப் போர்த்திக் கட்டி விட்டு வீட்டுக்குச் செல்வது காட்சியாய் விரியும்.அடுத்த கணமே தன் பணி முடிந்து வீட்டுக்குக் கிளம்பும் அந்த ஸ்டேஷன் காவலர் ஒருவர் தன் இருசக்கர வாகனத்தை அந்தக் கடைமுன் நிறுத்துவதும் தார்பாலீன் ஷீட்டை நெகிழ்த்தி ஒரு தர்பூஸ் பழத்தை எடுத்துத் தன் வாகன பெட்ரோல் டேங்க் மீது இருத்திக் கொண்டு கிளம்பிப் போவதும் காட்சியாகும்.

காவல் நிலையத்திற்கு எதிரே தன் தர்பூஸ் பழக் கடையை நடத்தி வருகிற மனிதன் வீட்டுக்குச் சென்றபின்னரும் கூட தனக்குண்டான கனியைக் கொய்து செல்லும் மாமூலான காவல்கரங்களை கண்ணுறும் அதே வேளையில் அந்தக் கடைக்காரன் நாளும் கடை நடத்துகையில் நித்யத்தின் எத்தனை கனிகளை அதிகாரத்திற்கான வாடகையாக/விலையாக/அன்பளிப்பாக/லஞ்சமாக தரவேண்டி இருக்கும் என்கிற கணக்கு புரியாமல் இல்லை.இன்னும் ஆழ்ந்தால் அது மேற்சொன்ன எந்த வகைமைக்குக் கீழும் வராது என்பதும் ஒரு கம்பீரத்துக்கு மாற்றாய்த் தரவேண்டிய காணிக்கை என்பதும் புரியவரும்.பின்னே காவல் நிலையத்துக்கு நேர் எதிர் ப்ளாட்ஃபாரத்தில் இருக்கிற கடை என்பது கம்பீரமில்லையா என்ன..அந்தக் கடைக்காரனுக்கே அதுவொரு அந்தஸ்தான ஸ்தலமாகவும் அடையாளமாகவும் இருக்கும் தானே..?

மிஷ்கின் தமிழில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அற்புதமான படைப்பாளுமை.அவரது படவரிசையின் மூலமாக மிஷ்கினின் கதாமாந்தர்களும் அவர்தம் கதைகளும் கூட்டு மனங்களின் தனித்த இடத்தை நிரடியபடி நிலைக்கின்றன.

இந்தத் திரைப்படம் முன்வைக்கிற அன்பு எளியவர்களின் வாழ்வின் மீதான வன்முறை இவற்றிற்கெதிரான யுத்தத்தை முன் வைக்கிறது.நல்ல எனும் பதத்திற்கும் கெட்ட எனும் பதத்திற்கும் இருந்து வரக் கூடிய காலகால முரண் இப்படியான யுத்தங்களின் பின்னே இருக்கக் கூடிய குறைவற்ற நியாயமாகிறது.எப்போதும் உலர்ந்துபோகாத ஈரமான அன்பை இறைஞ்சுகிற நல்மனங்களின் கூட்டுக்குரல் யுத்தம் செய்.

 

https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-21-யுத்த/

 

மிஷ்கின். இவரின் ஒவ்வொறு படமும் / கதையும் அற்புதமானது. 

 

On 8/2/2020 at 12:22, கிருபன் said:

அந்த ஏழு நாட்கள் படம் பதின்ம வயதில் பார்த்திருந்தேன். திரைக்கதை, நகைச்சுவை பிடித்திருந்தாலும் ஆணாதிக்க கருத்தைக் தூக்கிப்பிடிக்கும் முடிவு அப்போதே பிடிக்கவில்லை.

பாக்கியராஜ் தாலியை அறுத்துவிட்டு வர அம்பிகாவை கேட்டபோது, அம்பிகா அறுக்கமுடியாமல் தயங்குவதும், ராஜேஸ் தாலியை அறுக்க முயன்றபோது அம்பிகா அவரை தடுத்து அழுவதும்,  தாலி என்பது பெண்ணைப் பூட்டி வைக்கும் ஒரு விலங்கு என்றுதான் காட்டியது.

ஆனால் அதைப் புனிதப்படுத்தி பாக்கியராஜ் பேசிய வசனம்தான் “என் காதலி உனக்கு மனைவியாகலாம். ஆனால் உன் மனைவி என் காதலியாக முடியாது”.

 

 

ராஜேஷ் என்ன ஒரு அருமையான நடிகர். இவரும் லக்ஷ்மியும் நடித்த சிறை என்னும் படம் இன்னும் இந்த விமர்சனத்தில் வராவில்லை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, colomban said:

இவரும் லக்ஷ்மியும் நடித்த சிறை என்னும் படம் இன்னும் இந்த விமர்சனத்தில் வராவில்லை. 

100 க்குள் வருகின்றதா தெரியவில்லை!

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

 

நூறு கதை நூறு படம்: 50 புதுப்பேட்டை

 

வலி என்பது தற்காலிகமானது : திரைப்படம் எப்போதைக்குமானது

-ஜான் மிலியஸ்

பாலகுமாரனுடன் செல்வராகவன் இணைந்து வசனங்களை எழுதிய படம் புதுப்பேட்டை. வெளியான காலத்தில் குழப்பமான வரவேற்பை ரசிகர்களிடமிருந்து பெற்றது பின்வந்த காலகட்டங்களில் தமிழின் உன்னதங்களில் ஒன்றாகக் கொண்டாடப்பட்டு வருகிற படம் புதுப்பேட்டை. உயர்ந்ததே உயிர்த்திருக்கும் என்பதை இந்தப் படத்தின் பெயர்கீழ் வாசகமாக இடம்பெறச்செய்தார் செல்வராகவன். இந்தியாவில் எடுக்கப்பட்ட அரசியலினூடாக சாமான்யனின் வாழ்க்கையை தரிசிக்கச் செய்த படங்களில் குறிப்பிடத்தக்க படமாக புதுப்பேட்டையை முன்வைக்க முடியும். தமிழில் அதுவரை போற்றுதலுக்கு உரித்தாக்கப்பட்ட அல்லது அதிகம் கவனிக்காமற்போன படர்க்கை உலகத்தைத் தன் படத்தின் இயங்கு களமாக நிர்ணயித்ததில் தொடங்குகிறது செல்வராகவனின் வெற்றி பாத்திரங்கள் அனைத்துமே ஆழமாக காலங்காலமாய்க் கதாபுராணங்களின் பாத்திரங்களைப் போலவே அவற்றின் தோன்றலும் எழுச்சியும் முரணும் வீழ்ச்சியும் இடம்பெறச் செய்திருந்தது நன்றாகக் கரம் கொடுத்தது. புதுப்பேட்டை அதன் மனிதர்களுக்காகவும் அவர்தம் வாழ்க்கை மாறுபாடுகளுக்காகவும் அதனூடாகக் கிட்டிய அந்தரங்கமான அக அனுபவமாக மாறியது. நெடுங்காலமாய்த் தனித்தலையும் ஒற்றைப் படகின் மீது படரும் ஒருபுற நிலவொளியும் அதற்கீடெதிர் நிழலிருளுமாய் இந்தப் படம் ஒரு அற்புதம்.69873-5_1024-300x138.jpg

குமாரின் உலகம் அவனுடைய அம்மாவுக்கும் அவனுக்குமான பிணைத்தல். தன் மகனை ஆபீசராக்கி அழகுபார்த்துவிட வேண்டுமென்பதே அவளது ஒற்றைப் பெருங்கனா. அதற்கிடையூறாக குமாரின் அப்பனின் கோபக் கணமொன்றில் அவன் கையால் கொல்லப்படுகிறாள் அம்மா. அவளது மரணத்தைப் பார்த்து விக்கித்து அழுதபடியே அந்த இரவெல்லாம் கழிக்கிறான் குமார். எப்படியான இரவு அது? சற்றுமுன்தான் அவனுடைய அப்பனின் சிநேகிதர்கள் வந்து பிணத்தைக் கொண்டு போய் நடுக்கடலில் மூட்டைகட்டி வீசிவிடுகின்றனர். இந்த உபகாரத்தின் இணைப்பாக அவர்களில் ஒருவன் குமார் எப்போதும் அழுதபடி இருக்கிறான். எப்படியும் வெளியே சென்று அம்மாவை அப்பன் கொன்றுவிட்டதாகக் கூறிவிடப் போகிறான், ஆகவே அவனை விட்டுவிடாதே என அப்பனை எச்சரிக்கிறான். மேலதிகமாக உனக்குத்தான் இன்னொரு குடும்பம் இருக்குதில்ல என்று போகிற போக்கில் OFFER விளம்பரங்களின் கண்மயக்கும் வாசகம்போல ஏற்றிச் சொல்ல அதனை சிரமேற்கொண்டு குமாரையும் முடித்துவிடலாம் என்று முடிவில் வந்து அன்றைய இரவைக் குமாரோடு கழிக்கிறான் தகப்பன். ஒரு உசிதகணத்தில் அப்பனின் பிடியிலிருந்து தப்பி ஒரே ஓட்டமாக ஓடி சென்னை எனும் யாருமற்ற நகரத்தின் இருளில் கலைந்து ஒளியில் மீள்கிறான் குமார். அந்தக் குமாருக்கு என்ன நடந்தது என்பது இந்தக் கதையின் முடிச்சு.

யாருமற்றவர்களை ஒரு செவிலித் தாய்போல அரவணைத்துக் கொள்வது நகரங்களின் இயல்பு. குமார் வேலை தேடித் தோற்று அயர்கிறான். அவனுக்குப் பசிக்கிறது. குமார் பிச்சை எடுக்கிறான். கிடைத்த பணத்தில் சாப்பிடுகிறான். அது அவனது விடுதலைக்குப் பிந்தைய முதல் உணவு. பிறகு குமார் பிச்சை எடுப்பதிலிருந்து அன்பு எனும் அந்த வட்டாரத்தின் செல்வாக்கான மனிதரின் குழுவில் ஒருவனாக இடம்பெறுகிறான். அவனுக்கென்று நண்பர்கள் உருவாகின்றனர். மெல்ல மெல்ல அன்பு கூட்டத்தில் குமாருடைய நாற்காலி கனம் பெறுகிறது. அவன் தேவைப்படுகிறான். தன் கால்களால் உறுதியாக நிற்கத் தொடங்குகிறான். கிருஷ்ணவேணிமீது அவனுடைய அன்பின் முதல் மலர் வியப்பின் தினமொன்றில் பூத்து மிளிர்கிறது. கிருஷ்ணவேணி அன்புவின் கட்டுப்பாட்டில் இருக்கிற பல பெண்களில் ஒருத்தி. ஏழ்மையை பாதுகாப்பின்மையை நோய்மையை இரக்கமற்ற தனிமையை இன்னபிறவற்றை எல்லாம் கையிலெடுத்துத் தன் அடிமைகளாக எளிய மனிதர்களை மாற்றிக்கொள்பவன் அன்பு. அவனுக்கு மேலே கட்சி இருக்கிறது. அதன் தலைவர் தமிழ்ச்செல்வன் மாநிலத்துக்கே எதிர்க்கட்சி நாயகர். அவரது அன்பும் ஆசீர்வாதமும் பெற்றவன் அன்பு என்பது அவனுடைய விலாசம்மீதான பயத்தின் இருள்மீது எந்தச் சிறு ஒளியுமே பூத்துவிடாமல் பார்த்துக் கொள்கிறது. அப்படியான அன்புவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவனாக மாறும் குமாருக்குக் கிருஷ்ணவேணி மீது பித்தாகிறது. அவள் தனக்கே தனக்கென்று வேண்டுமென அவன் நினைப்பதற்குக் காரணம் அவள் ஒருத்தியை மாத்திரம் வன்மவாழ்விலிருந்து விபச்சாரத்தின் கரங்களிலிருந்து விடுவித்துவிடவேண்டும் என்கிற பேரன்பின் சொல்லில் வராத காதல்தான். அதை உணரும் குமார் அன்புவிடம் நேரே சென்று கிருஷ்ணவேணியை விட்டுவிடுமாறு கேட்கிறான். தன் கால் பற்றி வாழத் தொடங்கிய இரண்டு பேர் என்ற கருணை கொஞ்சமும் இல்லாத அந்த மனிதன் பெயரில் மட்டும் அன்பு என்று கொண்டவன் குமாரைக் கடுமையாக எச்சரித்து அனுப்பி விடுகிறான். கிருஷ்ண வேணியை மிகவும் க்ரூரமாகத் தாக்கி குமாருக்கும் சேர்த்து அவளைத் தண்டித்து அதன் மூலமாக அவளை எச்சரிக்கிறான். குமார் வழியற்றுத் திகைக்கிறான். அவனுடைய நண்பர்கள் அவனை சமரசம் செய்து மறுபடி அன்புவிடம் ராசி செய்துவைக்க அழைத்துச் செல்கிறார்கள். அன்பு முதலில் குமாரை வெறி அடங்கும்வரை அடித்து நொறுக்கிவிட்டு எச்சரித்து லேசாக மன்னிக்கவும் செய்து இனி ஒழுங்காக இரு என்கிறான். அந்த நேரத்தில் அவன் காலில் விழுந்து நன்றி சொல்கிற சாக்கில் அன்புவை வெட்டிக் கொலை செய்கிறான் குமார். அந்தக் குமாருக்கு என்ன நடந்தது என்பதுதான் இந்தக் கதையின் முடிச்சு.pudhupettai-3-300x126.png

தமிழ்ச்செல்வனிடம் அன்பு மரணச்செய்தி தெரிவிக்கப்படுகிறது. இனி அன்புவின் ஏரியாவை யார் பார்த்துக் கொள்வார்கள்? இனி தனக்கு யார் கப்பம் கட்டுவார்கள் என்கிற தன் கவலைகளுக்கு நடுவே அவரைச் சந்திக்க வரும் குமார் மற்றும் நண்பர்களைக் காறி உமிழ்ந்து அன்புவின் இழப்புக்கு யார் பதில் சொல்வது எனக் கேட்கிறார். ‘என்னை நீங்க உயிரோட விட்டா உங்களை நானும் உயிரோட விட்டுர்றேன்’ என்று முதுகிலிருந்து பெருவாள் ஒன்றை உருவும் குமாரைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறார் தமிழ்ச்செல்வன். இத்தினி பெரிய கத்தியை வச்சிட்டா எங்கிட்ட அடிவாங்குனே என்று வியக்கிற தலைவர். ‘இங்கேருந்து போயிட்டா நீ தப்பிச்சுடுவியா..? அன்புக்கு எத்தினி பசங்க இருக்கானுங்க..? விசுவாசிங்க உன்னை உயிரோட விடப்போறதில்லை. நீ மட்டும் இன்னிக்கு ஒரு ராத்திரி உசிரோட இருந்து தப்பிச்சிட்டா நாளைக்கு காலைல அன்போட ஏரியா உன்னுதுடா’ என்று ஏற்றிவிட்டு அனுப்புகிறார். குமாரின் உயிர் வீதியில் எதிராடுகிற அத்தனை பேரின் ஆயுத நுனிகளில் இருக்கிறது. தன் சொற்பக் கூட்டத்தையும் உயிர் பயத்தையும் வீரமாய் வாள் நுனிக்கு மாற்றிக் கொண்டபடி அந்த இரவின் மடியில் புகுகிறான் குமார். ஒருகட்டத்தில் தன் தகப்பனின் இரண்டாவது குடும்பத்தின் விலாசத்தில் அடைக்கலம் புகுகிறான். அந்தக் குமாருக்கு என்ன நடந்தது எனபது இந்தக் கதையின் முடிச்சு.

இரவெல்லாம் ரத்தம் எதிரில் வருகிர யார் முகத்தைப் பார்த்தாலும் பயம். அந்த இரவு நீண்டுகொண்டே செல்கிறது. ஒரு கட்டத்தில் இருளின் கரத்திலிருந்து சாவியைப் பிடுங்கி அடுத்த தினத்தைத் திறந்து வைக்கிறது சூரியன். நேரே தலைவர் தமிழ்ச்செல்வன் வீட்டு வாசலுக்குச் சென்று அவரது புதிய தளபதியாகப் பதவியேற்றுக் கொள்கிறான் குமார். அவர் அவனை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டாலும் முன்பு அன்புவுடன் இணக்கத்திலிருந்த சிலரால் அவனது எழுச்சியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்களில் ஒருவன் தாட்டியத்தோடு எழுந்துவந்து குமாரின் கன்னத்தில் ஓங்கி அறைகிறான். இனி நான்தான் என்று அங்கேயிருந்து கிளம்பிச் செல்கிறான். இந்தப் புதிய வந்து சேர்ந்திருக்கும் இடத்திலிருந்து பார்க்கும்போது தன்னை எதிர்க்கும் அனைவரையும் கொன்று தள்ளுகிறான் குமார். தன்னுடைய புதிய வாழ்வின் செல்வந்தத்தில் கொஞ்சத்தை தகப்பனின் இரண்டாவது குடும்பத்திற்கு பகிர்ந்து தந்து அவர்களை அனுப்பி வைக்கிறவன் தகப்பனை மட்டும் நண்பர்களோடு தனியே அனுப்புகிறான். அவர்கள் தகப்பனை ஊரின் ஒதுக்குப் புறத்துக்குக் கூட்டிச் சென்று குழிவெட்டி அதில் படுக்கச் சொல்கிறார்கள். குமாரிடம் கெஞ்சுகிறான் தகப்பன். அவனது ஈவு இரக்கமற்ற அதே குணங்களை அவனுக்கே பரிசாய் மீட்டுத்தந்து அந்தக் குழியில் தள்ளிக் கொல்லுமாறு கட்டளையிடுகிறான் குமார். சகாக்கள் செவ்வனே செய்கிறார்கள். தாயின் ஆன்மா மீது கொலைமலர்களைச் சொரிந்தபடி எதுவும் நடக்காத பாவனையில் தன் குற்றவுலகில் சஞ்சரிக்கிறான் குமார். அவனுக்கு என்ன நடந்தது என்பது இந்தக் கதையின் முடிச்சு.vlcsnap-2017-09-16-17h39m37s103-300x128.

குமார் வளர்கிறான். தமிழ்ச்செல்வனின் குடும்பத்தில் ஒரு பிரச்சினை வருகிறது. அவரது மகளை போதையில் சிலர் படமெடுத்து மிரட்டுவதைச் சொல்லித் தனக்காக எதாவது செய் என்று குமாரிடம் கெஞ்சுகிறார் தலைவர். அத்தனை பேரையும் கொன்று அந்த வீடியோ டேப்பை அவரிடம் தருகிற குமாரிடம் நன்றிப் பெருக்கில் கண் நீர் உகுக்கிறார் தமிழ்ச்செல்வன். அவர் குடும்பமே குமாருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கும் என்று போற்றுகிறார். தன் மகள் காலமெல்லாம் குமாரின் படத்தைக் கடவுளாக எண்ணி வழிபடவேண்டும் என்று காற்றில் கட்டளையிடுகிறார். எல்லாவற்றையும் நாசூக்காகக் கடந்து தன் உலகம் திரும்புகிறான் குமார். கூடவே இருக்கும் மணியின் தங்கை செல்வி கல்யாணத்தில் தடபுடல் மரியாதை குமாருக்கு தாலியை ஆசீர்வதித்துத் தரச்சொல்கிறார்கள். அவனோ செல்வி கழுத்தில் தாலியைத் தானே கட்டி விடுகிறான். காதலற்ற கட்டாயத்தின் நிமித்தம் அவனோடு வாழவேண்டி நிர்ப்பந்திக்கப்படுகிறாள் செல்வி. மணி குறிவைத்தது பிசகி குமாருக்கு பதிலாக ரவியைக் கொன்றுவிடுகிறான். தன் அண்ணனைக் கொன்றுவிடவேண்டாம் என்ற வேண்டுகோளோடு அவனோடு வாழத் தொடங்குகிறாள் செல்வி. தன் வயிற்றில் குமாரின் குழந்தை வளர்வதைச் சொல்லி தன்னால் இறக்கவும் முடியவில்லை வாழவும் முடியவில்லை என்று அழுகிறாள் கிருஷ்ணவேணி. தன் வாரிசின் வருகைக்காக அந்தக் கணத்திலிருந்தே பரவசத்தோடு காத்திருக்கிறான் குமார். அந்தக் குமாருக்கு என்ன நடந்தது என்பது இந்தக் கதையின் முடிச்சு.

குமாரின் அடுத்தகட்ட வளர்ச்சி அவன் எழும்பூர் பகுதிச் செயலாளராக அறிவிக்கப்பட்ட நொடியிலிருந்து ஆரம்பமாகிறது. தன்னை எதிர்க்கும் மூர்த்தியின் தம்பியைக் கொன்று மூர்த்தியை பாதிக்குமேல் உடல் செயலிழக்கச் செய்து பேருரு எடுக்கிறான் கொக்கி குமார். அடுத்து வரக்கூடிய இடைத்தேர்தலில் தனக்கு எழும்பூர் தொகுதி ஸீட் வேண்டுமெனக் கேட்கிறான் குமார். அதனை எள்ளி நகையாடுகின்றனர் கட்சியின் மனிதர்கள். அவனிடம் இன்னும் பத்து வருசம் போகட்டும் பார்க்கலாம் என்று
கடுமை காட்டும் தலைவரிடம் முரண்பட்டு அவர் குடும்ப மானத்தைத்தான் காத்தது உட்பட, கட்சிக்காகத் தன் தியாகங்களை பட்டியலிட்டு கிட்டத்தட்ட மிரட்டல் விடுக்கிறான் குமார். அவனது மிரட்டல் பலனற்றுப் போகிறது. கட்சி எழும்பூருக்கு வேறொருவரை அறிவிக்கிறது. கூட்டமத்தியில் தலைமையை எதிர்த்து பேசும் குமாரை அங்கேயே கொன்றுவிடக் கட்சியினர் துடிக்கிறார்கள். இங்கே வேண்டாம் வெளியே வைத்துக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துகிறார் தமிழ்ச்செல்வன். அங்கே இருந்து தப்பித்து ஓடுகிறான் குமார். அவனுடைய உடனாளிகளை எல்லாம் அனுப்பிவிட்டுத் திகைக்கும்போது மணி அங்கே வருகிறான். கொக்கி குமாரின் கையில் அவனது குழந்தையைத் தந்துவிட்டு என்ன இருந்தாலும் ஒரு குழந்தையைக் கொல்ல மனம் வரவில்லை என்று செல்கிறான். குழந்தையை யாரென்றே தெரியாத ஒரு பெண்ணிடம் தந்து எப்படியாவது படிக்கவைத்து வளர்க்குமாறு வேண்டியபடி மீண்டும் தன் குற்ற இருளுக்குள் திரும்புகிறான். இந்தக் குமாருக்கு என்ன நடந்தது என்பது புதுப்பேட்டையின் இறுதிக் காண்டம்

 

.dhoolpet9-300x200.jpg

மூர்த்தியை இந்தமுறை மிச்சம் மீதியின்றிக் கொன்றழிக்கிறான் குமார். மூர்த்தியின் கட்சியான ஆளுங்கட்சிக்கு மூர்த்தியின் இடத்தை நிரப்ப ஒருவன் தேவைப்படுகிறான். அந்த இடத்தை அக்கட்சியின் தலைவர் குமாரைக் கொண்டு நிரப்புகிறார். அவனுக்கு அங்கே எம்.எல்.ஏ ஸீட் வழங்கப்படுகிறது. அவனைவிட்டு வெகுதூரம் சென்றுவிடுகிறாள் செல்வி. தன் தொலைந்த குழந்தையைத் திரும்பப் பார்க்கவே முடியவில்லை குமாருக்கு. அடுத்த காலங்களில் எம்.எல்.ஏ மந்திரி எனப் பல பதவிகளை வகிக்கிறான் குமார். தமிழ்ச்செல்வன் அரசியல் துறவறம் பெற்று வெளிநாடு சென்று விடுகிறார். இப்படியான சிதைவுகள் இழத்தல்களுக்கு அப்பால் நிலைபெற்று ஓடுகிறது கொக்கி குமாரின் வாழ்க்கை நதி. இங்கே நிறைகிறது புதுப்பேட்டை.

இந்தப் படத்தினூடாகப் பெறக்கூடிய அனுபவம் அலாதியானது. அன்பு கதாபாத்திரத்தில் வரக்கூடிய பாலாசிங் அவருடைய நடிப்பு ஒரு அரக்கனை ஈவு இரக்கமற்ற மனித உருவிலான கொடூரனை அச்சு பிசகாமல் நம் மனத்திரைகளில் லயிக்கச் செய்கிறது. எத்தனையோ திரைப்படங்களில் எவ்வளவோ அதீதமான மன ஒப்புமைக்கு சம்மந்தமே அற்ற வில்லன்களைப் பார்த்துச் சலித்த மனங்களுக்கு மத்தியில் யதார்த்தத்தின் அளவீடுகளுக்குச் சற்றும் பிசகாத முழுமையான மனிதராகவே கண்முன் தோன்றினார் பாலாசிங்.

தனுஷின் திரைவாழ்வில் ஆடுகளத்தை அனைவரும் போற்றக்கூடும் என்றாலும் புதுப்பேட்டை ஒரு ஒற்றை. இனி ஒரு சட்டகத்தைக்கூட இதனை விஞ்சி தனுஷ் எனும் கலைஞனால் செய்துவிட முடியாது என்று சொல்வதுகூட ஏற்றிச் சொல்வதாகாது. புதுப்பேட்டை படத்தை தனுஷ் என்கிற கலைஞனைத் தவிர்த்து வேறொரு நடிகரைக் கொண்டு ஒரு ஷாட்டைக்கூட கற்பனை செய்துவிட முடியாது. அப்படி ஒரு முழுமையான சித்திரம் தனுஷ் என்பவரின் ஆளுமைக்கு உள்ளேயும் வெளியேயும் கொக்கி குமார் என்ற கற்பனை மனிதனை இயல்புமாறா அவதரித்தலெனவே தன் நடிப்பை நல்கினார் தனுஷ். அவருடைய உடல்மொழி குரல் கண்கள் முகமொழி எனப் பல காரணிகள் முன்பறியாத நல் நடிப்பை வெளிப்படுத்தின. தனுஷ் ஆடுகளத்திற்காக தேசிய விருது பெற்றார். அது புதுப்பேட்டையின் கொக்கி குமாருடைய கரங்களில் ஒரு வருடலுக்குத் தந்தே ஆகவேண்டியது.

தமிழ்ச்செல்வனாக வந்த அழகம்பெருமாளை அவருக்கு நன்றாக அறிமுகமானவர்கள் கூட அதன் பிற்பாடுகளில் அரசியல்வாதி என்றே அறிய விரும்புவார்கள். சற்றே பிசகி இருந்தாலும் கூடிக் குன்றி இருந்தாலும் தமிழின் வழமையான வில்ல பாத்திரங்களின் வரிசையில் சென்று காலாவதி ஆகிவிடக்கூடிய அபாயம் இந்தப் பாத்திரத்தின் தோன்றல் கணங்களெங்கும் தொடர்ந்து வந்தது என்றாலும் அனாயாசமாக அதனையெல்லாம் தன் தனித்துவம் கொண்டு தகர்த்தெறிந்தார் அழகம்பெருமாள். உள்ளூர ஒரு இயக்குநர் நடிகராகவே அவர் தன்னை உணர்ந்திராவிட்டால் இந்தப் பாத்திரம் சோபித்திருக்காது. புதுப்பேட்டை படத்தை இவர்கள் இன்றி மீவுரு செய்யவே முடியாது என்று சொல்வதற்கான காரணங்களாக வருங்காலத்தில் எஞ்சப் போகிற காரணிகளில் தனுஷூக்கு அடுத்த காரணியாகவே அழகம்பெருமாளைச் சொல்லத் தோன்றுகிறது. அரசியல்வாதி என்னும் பதத்தின் ஏற்ற இறக்கங்கள் ஆழவுயரங்கள் துரோகத்தின் உச்சம் கைகழுவிச் செல்லும் பட்டவர்த்தனம் என்று அவர் இந்தப் படத்தில் தோற்றுவித்த பல பிம்பங்கள் அசலானவை மாத்திரமல்ல முதன்முதலானவைகளும் கூட.bay_dustbin_grande_1_1200x1200-300x128.p

செல்வராகவனின் பெண் கதாபாத்திரங்கள் செல்வியும் கிருஷ்ணவேணியும் அவர்களது தோன்றுதலும் சொற்களும் இயலாமையைக் கண்கள் வழி படர்த்துவதும் நடிகைகளின் நிஜம் அழிந்து அந்தப் பெண்களாகவே நமக்கெல்லாம் காணவாய்த்த வகையில் இருவருமே முக்கியத்துவம் பெறுகிறார்கள். இத்தனை நெடிய குமாரின் கதைகளில் மூன்றாவது பெண்ணாகத் தன் பெயர்சொல்லாப் பெரியவளாக வந்து குமாரின் குழந்தையைக் கைகளில் ஏந்திச் செல்லக் கூடிய பசி சத்யாவின் வருகையும் நீங்குதலும் புதுப்பேட்டையின் திசைகளாகவே நிலைபெறுகின்றன.

யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்தின் பின் இசைக்காகவும் தீம் ம்யூசிக் கோர்வைகளிலும் தனித்துப் பல இடங்களில் ஸ்கோர் செய்தார். உறுத்தாத பாடல்கள் புதுப்பேட்டையின் தனிகீதங்களாகவே காலம் தாண்டி ஒலிக்கின்றன. இசை இந்தப் படத்தின் ஒரு கூடுதல் கதாபாத்திரமாகவே வியாபித்தது என்பதே சரிநிகர் சொல்லாடல்.

அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு பொறுப்பான ஒளி இருள் பங்கீட்டை நேர்த்தியதன் மூலம் நிஜத்திற்கருகாமையில் காண்விழிகளைக் கொணர்ந்து நிறுத்திற்று. கோலாபாஸ்கரின் தொகுப்பு நல்ல அனுபவத்திற்கான உடனிருத்தலாகவே கவனம் கொள்ளத்தக்கது.

செல்வராகவன் தமிழில் இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பின்னால் எடுக்கப்பட்ட மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக புதுப்பேட்டையை அளித்தார்.

கொண்டாட்டத்திற்குரிய சினிமா.

 

https://uyirmmai.com/literature/நூறு-கதை-நூறு-படம்-50-புதுப்/

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு சினிமா: 51 மகாநதி

 

மகிழ்ச்சியான குடும்பங்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை; ஒவ்வொரு மகிழ்ச்சியற்ற குடும்பமும் அதன் சொந்த வழியில் மகிழ்ச்சியற்றவை.

-டால்ஸ்டாய் (அன்னா கரீனினா நாவலின் தொடக்க வரியில்)

நல்லவன் வாழ்வான் என்பது பொது நம்பகம். சினிமா எப்போதும் தனித்த நுட்பங்களை வரிசைப்படுத்துவதற்கும் தனி அனுபவங்களை அதன் அலாதித் தன்மையை நெருக்கமாகச் சென்று தரிசிப்பதற்கும் முனைகிறது. அதே சமயம் பொது என்கிற பெருங்கூட்டத்தின் நகர்திசையை மாற்றுவதற்கு முனையாத ஜாக்ரதை உணர்வுடனேயே அது தன்னைத் தயாரித்துக்கொள்ள விரும்புகிறது. கடந்தவற்றின் சாட்சியத்தில் சினிமா காட்டுகிற தன்முனைப்பை நிகழ்ந்து கொண்டிருப்பவற்றின் மீதான வினவுதலைத் திறந்த தன்மையோடு முன்வைப்பதில் அது காட்டுவதில்லை. கலைகளின் தொகுப்பாக சினிமா அமைவதன் வசதிகளில் ஒன்றென அது வினவுதலைப் பிற உபகலைகளின் மூலமாக நிகழ்த்தவே விரும்புகிறது. சினிமா என்பது பெரும்பாலும் முடிவுற்ற கலையாகவே திகழ்கிறது.maxresdefault-300x169.jpg

கிருஷ்ணசாமி அதிகம் படிக்காதவன். செல்வந்தன். நகரமாகிவிடாத செழித்த பெருங்கிராமமொன்றின் விவசாயி. மறு திருமணம் குறித்து யோசிக்காமல் காலமான மனைவியின் நினைவில் வாழ்பவன். தன் குழந்தைகள்மீது தன் உயிரைப் பதியனிட்டவன். மாமியார் மெச்சும் மகாமகன். இப்படியானவன் தன்னை அணுகிய புதிய மனிதன் ஒருவன் பின்னால் செல்வதன் மூலம் வாழ்க்கை நொறுங்கிப் போவதும் அதிலிருந்து மீள்வதுமான பெருங்காலக் கதை மகாநதியென்றோடுவது.

இந்திய சினிமாவில் தென்பட்ட ஆகச்சிறந்த தகப்பன் பாத்திரங்களில் ஒன்றை இப்படத்தின் மூலம் காணச்செய்தார் கமல்ஹாஸன். அடுத்த காலத்தின் சினிமா மீதான நிரந்தரக் காதல் மனிதனாகவே தன் சினிமாவினுட்புகுந்த முதல் தினம் தொட்டுத் தன்னைப் பிரகடனம் செய்து கொண்டவர் கமல்ஹாஸன்.வெற்றி, தோல்வி, வணிகஸ்தானம், சம்பளம் இவற்றின் மீதெல்லாம் கவனம் குவியாமல் தன்னால் ஆன அளவுதான் விரும்புகிற சினிமாக்களைச் செய்தவண்ணமே தன் தொழில் சார் வரைபடத்தின் கோடுகளை உயர்த்திச் சென்றவர். அவற்றின் பலன்களைத் தாண்டி இந்தியாவின் வெகுசில நடிக முகங்களில் ஒருவர் என்று கமலைச் சொல்லியாக வேண்டும். தானொரு இயக்குனர் நடிகராகவும்தானே பின் நாட்களில் இயக்குனராகவும் தன் பரிணமித்தலை அதிகரித்துக் கொண்ட கமல் தொண்ணூறுகளில் சிலபல படங்களின் கதையைத் திரைக்கதையை எழுதினார். அவற்றில் மகாநதி ரா.கி.ரங்கராஜனோடு இணைந்து வசனத்தை கமல் எழுதிய படம். இந்தியத் திரைப்படங்களில் வசனத்தின் கூர்மைக்கான சிலாக்கியப் பட்டியல் ஒன்றைத் தயாரித்தால் முதல் பத்துப் பெயர்களில் ஒன்றென மகாநதியைச் சேர்க்கலாம். தகும். உதாரணத்துக்கு கீழே தோன்றும் வசனம்:

கிருஷ்: ஏன்?
முத்துசாமி: ஏன்னா?
கிருஷ்: நான் இப்பிடி இருக்கேன். அவன் அப்பிடி இருக்கானே அதான் ஏன்னேன்?
பஞ்சாபகேசன் ஐயர்: அதெல்லாம் பகவானா பார்த்து தண்டிப்பாண்டா…
கிருஷ் கோபத்தோடு அட சும்மா இருங்க ஐயரே… நின்னு கொல்ற தெய்வமும் சும்மா இருக்கு. அன்று கொல்ற சட்டமும் சும்மா இருக்கு. ஆனா எனக்கு மட்டும் தண்டனை. ஏன் நான் நேர்மையா இருந்ததுக்காகவா?
முத்து: எனக்கே இந்தக் கேள்வி பல தடவை மனசுல வந்திருக்கு. நம்மளை மாதிரி நேர்மையா இருக்குறவங்களுக்கு மரியாதையே இல்லை. ஆனா கொஞ்சம் யோசிச்சு பார்த்தா நேர்மையானவன்னு ஒருத்தன்கூட கிடையவே கிடையாது. என்னை விட அயோக்கியன்னு வேணா சொல்லலாம். ஆனா இந்தக் காலத்துல நான்தான் நேரமையானவன்னு யாருமே சொல்ல முடியாது.
கிருஷ் நான்..
அவனை இடைமறித்து, முத்துச்சாமி இருப்பா இரு சினிமா பார்க்கணுங்கிற ஆசையில நீ ப்ளாக்ல டிக்கட் வாங்கிருப்ப ட்ரெய்ன்ல டீடி. ஆருக்கு லஞ்சம் குடுத்து டிக்கட் வாங்கிருப்ப. ஆகக்கூடி எல்லாருமே திருடனுக்கு துணை போகிறவந்தான். ஆனாலும் அரசியல்வாதியையும் போலீஸ் காரனையும் மட்டும் இந்தியா பூராவும் திட்டுறானுங்க. வேட்டியும் சேலையும் வாங்கிட்டு ஓட்டு போடுற உனக்கு ஏதுரா இந்த வக்குன்னு அவன் திருப்பி கேட்டா எப்டி இருக்கும் தனுஷ் மாதிரி ஆளுங்களை பழிவாங்குறது கதையிலதான் முடியும். வாழ்க்கையில முடியாது. சாக்கடை தண்ணி நம்ப சட்டைலபட்டு அழுக்காகாம ஒதுங்கிப் போகணுமே தவிர சாக்கடையில எறங்கி அதை சுத்தம் பண்ண நினைக்கக்கூடாது.
கிருஷ்:என் சட்டை ஏற்கனவே அழுக்காயிருச்சு. 

விதி கடவுள் வேறுவழியற்ற நிர்க்கதி என்பனவற்றை எல்லாம் மறுதலித்து இந்தப் படத்தில் கமல் முன்வைத்த அன்பு எனும் பெருஞ்சொல்லின் பிற சொற்கள்தான் இப்படத்தின் முழுக்கதையுமாகவே விரிந்தது. ஒரு மலரின் பல பிரதிகள்தான் அன்பெனும் மகாவனத்தின் அத்தனை உதிர்தலும் என்பதை விழிவழி சாத்தியம் செய்தார் கமல். மகாநதியை இயக்கிய சந்தானபாரதிக்கும் கமல்ஹாஸனுக்கும் இடையிலான பலவருட கால நட்பும் தொழில்முறைத் தொடரபும் இணைந்த நற்புள்ளியிலிருந்து இப்படியான ஒரு படத்தின் சாத்தியம் தொடங்கிற்று. அந்த வருடத்தின் சிறந்த தமிழ்ப்படத்துக்கான தேசிய விருதினைப் பெற்ற மகாநதியின் பரவலினூடே வணிகப் படத்துக்கான சின்னஞ்சிறிய சமரசத்தைக்கூட நம்மால் காண முடியாது.

எளிய மனிதனின் வாழ்வினுட் புகுகிற மனமிலி மிருகங்களின் செய்கைகள் ஏற்படுத்தக்கூடிய கெடுமதிவிளைவுகளைக் கோர்த்துக் கதை செய்தார் கமல். குடும்பம் சிதறி செய்யாத குற்றத்துக்காக சிறைவாசம் அடைந்து மகளைத் தேடி நாட்டின் அடுத்த முனைக்குச் சென்றலைந்து ஒரு வழியாய் அவளைக் கண்டடைகிற வரைக்கும் பலவீனமான சாமான்யன் ஒருவனின் கையறுநிலையை யதார்த்தத்தின் அளவீடுகள் எதுவும் மீறிவிடாமல் சாத்தியப்படுத்திய கமல்ஹாஸன் பிற்பாடு தன் வாழ்வை நிர்க்கதியாக்கிய ஒவ்வொருவரையும் தேடிச் சென்று வதம் செய்கையிலும் தன் நாயகத் தொடர்ச்சியின் பிம்பநிழல் கொஞ்சமும் பாத்திரம்மீது படிந்துவிடாமல் அதன் நியாயமான இருளுடனேயே நடிப்பை நல்கினார். கொஞ்சம் பிசகி இருந்தாலும் இன்னொரு பழிவாங்கும் திரைப்படமாகக் கண்ணுறப் பட்டிருக்கக் கூடிய அபாயக் கயிற்றின்மீது அனாயாசமாக நடந்து நிறைந்தார்.

முதல் காட்சியிலிருந்து பார்ப்பவர்களின் மனோநிலையைத் தேவையின் சட்டகத்துக்குள் அறைந்து பொருத்துவதைத் தன் இசைவழி நிறைவேற்றினார் இளையராஜா. இந்தப் படத்தின் இசையும் பாடல்களும் கதையின் ஓட்டத்துக்கு எவ்வகையிலும் உறுத்தவோ அல்லது ஊடாடவோ இல்லாமல் பார்த்துக்கொண்டது பலமாயிற்று. வாலி தன் வரிகளைக் கண்ணீரில் மை கலந்து எழுதித் தந்தார். கமல் ஒரு பாடகராகவும் மின்னியது கூடுதல் தகவல்.

என்னை விட்டுரு உனக்கு எவ்வளவு பணம் வேணாலும் தரேன் என்று கடைசியின் பேரம் பேசும் மோகன் நடராஜனைக் கமல் ஒரு கணம் உற்றுப் பார்ப்பார். போற்றுதலுக்குரிய அபூர்வம் அந்த ஸீன். முகமொழியால் நடிப்பதற்கான இலக்கணமாகவே மாறினார் கமல்.

‘ஸ்ரீ ரங்கரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி’ என்ற பாடல் பிற்காலத்தில் கமல் படங்களில் தொடர்ந்து ஒலித்த முகுந்தா முகுந்தா (தசாவதாரம்) உன்னைக் காணாது நானிங்கு (விஸ்வரூபம்) என மறக்கமுடியாத வரிசையின் முதற்பாடலாயிற்று. இவற்றில் மூன்றாவது பாட்டைக் கமல்ஹாஸனே எழுதினார். மற்றவை இரண்டும் வாலியின் ஆரங்கள்.

பூர்ணம் விஸ்வநாதன், சுகன்யா, மகாநதி, சங்கர், ராஜேஷ், மகாநதி சோபனா, மோகன், நடராஜன், கொச்சின் ஹனீஃபா என்று இப்படத்தில் நடித்த எல்லாருமே அவரவர் பாத்திரங்களுக்குள் நிறைந்தார்கள். பிசகின்றித் தெரிந்தார்கள். சதீஷின் எடிடிங் எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு இரண்டும் அவற்றின் துல்லியங்களுக்கென்று நினைவில் நின்றன. அம்மன் க்ரியேஷன்ஸ் நிறுவனத்திற்காக எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரித்தார்.

மகாநதி படவுருவில் பாடம்.

https://uyirmmai.com/literature/நூறு-கதை-நூறு-சினிமா-51-மகாந/

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு சினிமா: 52 கில்லி

 

“கனவான்களே..நீங்கள் இங்கே சண்டையிட இயலாது. இது போருக்கான அறை.”

(ஸ்டான்லி குப்ரிக் எழுதி இயக்கிய  டாக்டர் ஸ்ட்ரேஞ்லவ் 1964 திரைப்படத்தின் ஒரு வசனம்)

தெலுங்கில் குணசேகர் இயக்கிய ‘ஒக்கடு’தான் தமிழில் கில்லி என்கிற பெயரில் மீவுரு செய்யப்பட்டது என்றபோதிலும் பல காரணங்களுக்காக கில்லி மிக முக்கியமான படமாகிறது. ஒரு பண்டிகை தினத்தின் முன்தின மாலை தன்னைத்தானே தின்று பெருகும் பொழுதுபோகும் திசையறியாத சுவையான பரபரப்பு ஒன்றை முன்பு இல்லாத முதல் முறையாகப் படமாக்கித் தந்தார் தரணி. அமர்ந்ததும் எழுந்ததும் தெரியாமல் இடைவேளை வந்ததை நம்ப மறுத்தது ரசிக மனம். செகண்ட் ஹாஃப் அதற்குரிய அழகுகளோடு நிகழ்ந்து முடிந்தது. தான் முதல்முறை பார்த்ததை நம்புவதற்கே அதே படத்தை இரண்டாம் முறை பார்க்கவேண்டியவனானான் தமிழ் ரசிகன்.

அரிசியில் உருவம் செதுக்கும் கலை ஒன்று உண்டு. நுண்பெருக்கி கொண்டுதான் அதைப் பார்க்கவே முடியும். திருக்குறள் சின்னது. அதைவிடப் பல மடங்கு சின்னதான அரிசியில் திருக்குறளை எழுதியவர் உண்டு. நாயகன் என்பவன் நம்ப முடியாதவற்றைச் செய்பவன் என்பது ஒருபுறம் இருக்க, அரிசியில் திருக்குறள் எழுதினாற்போல் சின்னஞ்சிறு கதையை ஒரு திரைப்படத்துக்கு உண்டான அளவு நீளமாய் விரித்தது சாகசம்.

vikatan_2019-05_a706186e-376b-45e1-9b25-

 

நாயகன் அறிமுகம் — — கபடிக்காக மதுரை செல்வது — — நாயகியை அடைவதற்காக அண்ணன்களைக் கொல்லும் வில்லன் — — வில்லனிடமிருந்து தப்பித்துச் செல்ல வில்லனை நோக்கியே ஓடும் நாயகி — — கோழி அமுக்குகிறாற்போல் அவளைப் பிடிக்கும் வில்லன் — — அந்த இடத்தில் வந்தால்தானே ஆபத்பாந்தவன் — — வில்லனை நல்லதனமாய் நாலு சார்த்திவிட்டு நாயகியைக் காப்பாற்றி சென்னை திரும்பும் நாயகன் — — இந்த இடத்தில் இடைவேளை ஸ்வாமி

வில்லனின் பிடியில் சிக்காமல் நாயகியைத் தப்பவைக்கும் நாயக வேலையின் நடுவே வரும் வில்லன் அவனைக் கொன்றழிக்கும் நாயகன் இது இரண்டாம் பகுதி.

கில்லி புதுவித சினிமாத் திரையாக்கத்திற்கான வாசலாக விளங்கியது. திரைக்கதையைச் செலுத்தும் விதத்தில் இது தெலுங்கில் முயலப்பட்டதோ வென்றதோ பெரிய செய்தியல்ல. ஏன் எனில் இன்றுவரை சினிமாவின் அத்தனை வகைமை உபவகைகளிலும் அங்கே படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழில் அப்படி அல்ல.திருவிளையாடல் போன்ற படங்கள் இன்றைக்கு ஒன்றுகூட இல்லை எனலாம். தமிழில் கால இடைவெளிகளுடன் முயன்று பார்க்கப்பட்டு கைவிடப்பட்ட அத்தனை வகை சினிமாக்களும் அங்கே உண்டு. ஆடி வெள்ளியும் உண்டு, ஆயிரத்தில் ஒருவனும் உண்டு, திருவிளையாடலும் உண்டு, மாயாபஜாரும் உண்டு, மர்மத்தீவும் உண்டு எப்போதும் எல்லா வகைமையும் விரும்பப்படுகிற கமர்ஷியல் ப்ரதேசம்தான் தெலுங்கு பேசும் இருதேசமும்.

தமிழில் கில்லி அதுவரைக்குமான கதாமுறையின் அழுத்தம் மற்றும் திருத்தம் ஆகியவற்றை மாற்றி அமைத்தது. இரு வித்யாசமான ஒன்றுக்கொன்று பொருந்தவே பொருந்தாத நாயக வில்ல பாத்திரங்களை சந்திக்க வைப்பதிலிருந்து அவர்களுக்கு இடையிலான முரணை பகையை வெறியை வெற்றி, தோல்விகளை, அழித்தலை, காத்தலை, தப்புதலை என எல்லாவற்றையும் அடுத்தடுத்த நகர்வுகளாக்கி அதையே திரைக்கதையுமாக்கிப் படம் செய்வது என்ற புதிய பாணி உருவானது. ரொம்பக் கேள்வி கேட்காதமாதிரி வேகமா படமெடுத்தா போதும் என்ற உபதேசத்தைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டார் தரணி. அதெப்படி என்று யாருமே யோசித்திராத வண்ணம் அப்படியான நாயக வில்ல வாழ்வுகளில் அதிகம் சென்றால் ஒரு வார காலத்து நிகழ்வுகளை மாத்திரம் கொத்தாக்கிக் கதை செய்தது புதியது. நன்றாகப் பலித்தது.

தரணியின் படமாக்கல் கில்லியை எப்போதும் கொதிநிலையிலேயே ரசிகர்களைப் பிடித்து வைத்ததன் மூலமாக பெரு வெற்றிப் படமாக்கிற்று. த்ரிஷாவை விஜய் காப்பாற்ற முனைவதற்கு காதல் என்பதைக் காரணமாக்காமல் இருந்தது பெரிய ஆறுதலாக பார்க்கப்பட்டது. கதையினூடே பெருகும் நகைச்சுவையும் கற்பனைக் காட்சிகளாய்ப் பாடல்களும் கழிந்தன. வித்யாசாகரின் பாடலிசையும் பின்னணி இசையும் பெரிய வேலையை உடனிருந்து பார்த்தாற்போல் நிகழ்ந்தன. தொழில்நுட்ப கச்சிதமும் இதன் வெற்றிக்கு இடுபொருளாயிற்று. த்ரிஷா இந்த நூற்றாண்டின் நதியாவானார். விஜய் எத்தகைய சாகசத்தையும் செய்யத்தக்க வியப்பின் திருவுருவாகவே இப்படத்தில் தன்னை நிகழ்த்தினார். அவரது நாயக மாலையில் முக்கியமான மலராயிற்று கில்லி. ஆசிஷ் வித்யார்த்தி, ஜெனிஃபர், ஜானகி ,த்ரிஷா, தணிகலபரணி, தாமு, டிகே, கலா, மயில் சாமி, பொன்னம்பலம் என பெரும் பட்டாளமே கில்லியில் தோன்றினார்கள் என்றாலும் இது விஜய் மற்றும் பிரகாஷ்ராஜ் படம்.

ப்ரகாஷ்ராஜின் நிழல்கூட நடிக்கும். இந்திய சினிமாவில் சென்ற நூற்றாண்டில் தோன்றிய கடைசி மிகை நடிகர் என்று தாராளமாய் ப்ரகாஷ்ராஜை சொல்ல முடியும். மிகை நடிப்பின் வசதி அப்படியான நடிகர்கள் அண்டர்ப்ளே செய்தால் அதுவும் பெரிதாக விரும்பப்படும். பல படங்களில் ப்ரகாஷ்ராஜ் இவ்விரண்டு நடிப்பு வகைகளையும் நமக்கு அளித்தார்.

கில்லி படத்தில் மதுரை முத்துப்பாண்டி என உள்துறை அமைச்சரின் செல்ல மகனாக அதகளம் செய்தார். இந்த வேடத்தில் எத்தனை நடிகர்களை யோசித்தாலும் ப்ரகாஷ் அளவுக்கு அவர்களில் யாருமே நியாயம் செய்துவிட முடியாது என்பது அவருடைய நடிப்பின் மேன்மைக்கான சாட்சியம்.

கில்லி : பேரிசையின் ஆரவாரம்

https://uyirmmai.com/literature/நூறு-கதை-நூறு-சினிமா-52-கில்/

 

 

 

 

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு சினிமா: 53 – கௌரவம்

 

சட்டத்தைப் போன்று ஊதாரித்தனமானது ஒன்றும் இல்லை. நீங்கள் ஜெயித்தாலும் தோற்றாலும் செலவு அதிகம்

-கில்பெர்ட் பார்க்கர் (கனடிய நாவலாசிரியர் மற்றும் அரசியல்வாதி)

இந்தியத் திரைப்படங்களில் காண்பிக்கப்படுகிறதற்கும் உண்மையான நீதிமன்றங்களுக்கும் இடையிலான வித்யாசம் மலையினும் பெரியது. இதுவரை ஒரு சதவீதப் படங்களில்கூட நீதிமன்றங்களை அவற்றின் நடைமுறை இயல்பு மீறாமல் காண்பித்ததே இல்லை. இங்கே படங்களில் காண்பிக்கப்படுகிற அதீதங்கள் ஒருபுறம் என்றால் ‘ஆர்டர்… ஆர்டர்… ஆர்டர்…’ என்று சுத்தியலால் தட்டிவிட்டு மென்போக்கைக் கடைபிடிக்கக் கூடியவர்களாக நீதியரசர்களைத் திரைப்படங்களில் கண்டவண்ணமே கற்பனை செய்துகொண்டால் உண்மை கடுமையான விளைதல்களைக் கொண்டிருக்கும் என்பது பெருவாரி மக்களுக்குத் தெரியாது.

பாரிஸ்டர் ரஜனிகாந்த் எடுத்த வழக்குகளிலெல்லாம் வெற்றி கண்ட சட்ட மேதை. அவரைவிட அனுபவமும் தகுதியும் குறைந்தவர்களுக்கு நீதிபதியாகப் பதவி உயர்வு வழங்கப்படுவதைக் கண்ணுறும் ரஜினிகாந்த் மனம் பாதிக்கப்படுகிறார். இனி சட்டம் யாரையெல்லாம் தண்டிக்கிறதோ அவர்களை நான் குற்றமற்றவர்கள் என நிறுவி விடுதலை பெற்றுத் தருவேன் என்று வினோதமான ஒரு முடிவுக்கு வருகிறார். அவரது அன்பான குடும்பத்தில் அவரது தம்பி, மகன், கண்ணனும் ஒருவன் அவனொரு இளம் வழக்குரைஞன். தன் பெரியப்பாவைத் தொழிலிலும் முன்னொளி தீபமாகக் கைக்கொண்டு நடைபோடுகிறவன். சக வழக்கறிஞரான ராதாவுக்கும் கண்ணனுக்கும் மனப்பொருத்தம்.

maxresdefault-1-300x165.jpg

மோகன் தாஸ் கோர்ட்டில்தான் நிரபராதி எனவும் தன் மனைவியைத் தான் கொல்லவில்லை என்றும் சப்தமாக முறையிட்டபடி சிறைக்குச் செல்கிறான். அவன் வழக்கை அவனது சார்பாக ரஜினிகாந்த் ஆஜராகி அப்பீல் செய்கிறார். அந்த வழக்கை சின்னச் சின்ன சில்லுகளாக்குகிறார். எதிராட முடியாமல் அரசு தரப்பு திணறுகிறது. ஒரு கட்டத்தில் மோகன் தாஸ் அந்தக் கொலையைச் செய்யவில்லை என்ற முடிவுக்கு நீதிமன்றம் வருகிறது. விடுதலை செய்யப்படுகிறான். ஊரே ரஜினிகாந்தின் வாதத் திறமையை வியந்து பாராட்டுகிறது. மோகன் தாஸ் தன் கண் அறிந்த கடவுளாகவே ரஜினிகாந்தை வணங்குகிறான். தன் அடிபட்ட சுயத்துக்கு இந்த நம்ப முடியாத வெற்றி மூலமாக மருந்திட்டாற்போல ஆறுதலடைகிறார் சட்டமேதை.

விதி ஒரே ஆட்டத்தை அடுத்தடுத்து ஆடக்கூடியது. இந்த முறை மோகன் தாஸ் அவன் திருமணம் செய்ய இருந்த பெண் மரணத்துக்கு அவன்தான் காரணம் எனக் கைது செய்யப்படுகிறான். இந்த முறையும் ரஜினிகாந்த் அவனுக்கு ஆதரவாக அவன் குற்றமற்றவன் என வாதிட அவன் சார்பில் ஆஜராகிறார். எதிர்த்து கண்ணனை வழக்காட எல்லா வக்கீல்களுமாக முடிவெடுத்து கண்ணனையும் அதற்கு ஒப்புக்கொள்ள வைக்கின்றனர். பெரியப்பா வீட்டிலிருந்து கண்ணன் வெளியேறுகிறான். வழக்கு ஆரம்பமாகிறது.

யானைக்கும் சறுக்குமல்லவா அடி அப்படித்தான் ரஜனிகாந்தின் கணக்கு இந்த முறை தப்புகிறது. சொல்வதானால் முன்னர் செய்த குற்றத்தை மறுக்கும்போது மோகன் தாஸை விடுதலை செய்ய முடிந்த அவரால் இந்தமுறை செய்யாத தவறிலிருந்து அவனை விடுவிக்க முடியவில்லை. கண்ணன் எல்லாப் பந்துகளையும் அடித்து நொறுக்கும் புதிய புலியெனவே வழக்காட மெல்ல மெல்ல குழப்பத்தில் ஆழ்கிறார் பெரியவர். தீர்ப்பு தினத்தன்று தீர்ப்பு என்னவாக இருக்குமோ என்ற குழப்பத்தில் வீட்டிலேயே இருந்து விடுகிறார். வழக்கில் கண்ணன் வாதம் அரசுத்தரப்புக்கு சாதகமாகிறது தீர்ப்பு செய்த குற்றத்திலிருந்து தப்பிய மோகன் தாஸ் செய்யாத குற்றத்துக்கு இந்த முறை தண்டனை பெறுகிறான்.

தன் வெற்றிச் செய்தியை மட்டுமல்ல பெரியப்பா ரஜனிகாந்த்துக்கு ஜட்ஜாகப் பதவி உயர்வு வந்திருக்கும் செய்தியையும் சேர்த்துச் சொல்வதற்காகத் தேடிச் செல்லும் கண்ணன், ரஜனிகாந்த் காலமான காட்சியைக் கண்டு அதிர்கிறான். நிறைகிறது படம். கௌரவம் நீதிமன்றக் காட்சிகளுக்காகப் பலகாலமாக விரும்பப்பட்டு வருகிற படங்களில் ஒன்று. சுயகர்வமும் பிடிவாதமும் கண்ணை மறைக்கும் தொழில்பெருமையும் கொண்டவராக சிவாஜி தன் மிகை நடிப்பின் உச்சத்தை இப்படத்தில் வழங்கினார் என்றால் இதற்கு நேர்மாறான அண்டர்ப்ளே நடிப்பை கே.பாலச்சந்தர் இயக்கிய ‘எதிரொலி’ படத்தில் வழங்கினார். பிற்காலத்தில் படிக்காதவன் உள்படப் பல படங்களில் வக்கீலாகவும் நீதிபதியாகவும் நடித்திருந்தாலும் கௌரவம் அதன் வசனங்களுக்காகவும் நீயும் நானுமா கண்ணா… நீயும் நானுமா போன்ற அழியாத அதன் பாடல்களுக்காகவும் எப்போதைக்குமான குதூகலச்சித்திரங்களில் ஒன்றாகத் தன்னைத் தக்கவைத்துக் கொள்கிறது.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையும் வின்செண்டின் ஒளிப்பதிவும் தேவராஜனின் எடிட்டிங்கும் கௌரவம் படத்தைத் தூண்களெனத் தாங்கின. இப்படத்தை எழுதி இயக்கிய வியட்நாம் வீடு சுந்தரம் நிஜத்துக்குரிய அதே மாண்போடு இந்தக் கற்பனைச் சித்திரத்தை நிகழ்த்தினார். பொது மனிதர்களை சிவாஜி ரசிகர்களாக மாற்றக் கூடிய குறிப்பிடத்தகுந்த படங்களில் ஒன்று கௌரவம்

கௌரவம் நிழல்நதி
 

https://uyirmmai.com/literature/நூறு-கதை-நூறு-சினிமா-53-கௌரவ/

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு சினிமா: 54 – சுப்ரமணியபுரம்

நான் என் சூழலின் விளைபொருளாக இருப்பதை விரும்பவில்லை. என் சூழல் எனதொரு விளைபொருளாக இருப்பதையே விரும்புகிறேன்.

(ஃப்ராங்க் கோஸ்டெல்லோ எனும் கதாபாத்திரம் பேசும் வசனம் The Departed 2006)

மதுரை நகரின் வரைபடத்தில் சுமார் பதினேழு அல்லது பதினெட்டுத் தெருக்கள் அதன் உப வீதிகள் இவற்றை உள்ளடக்கிய பகுதியின் பெயர் சுப்ரமணியபுரம். தனக்கென்று தனி முகம் ஒன்றை உருவாக்கிக் கொண்ட பிரதேசம். அதே சமயத்தில் மதுரையின் முகமாக வெளி நிலங்களின் புரிதலைப் பராமரித்து வருகிற பகுதிகளில் சுப்ரமணியபுரமும் ஒன்று. ஊர் என்பது ஒவ்வொரு மனிதனின் உள்ளெயும் வெளியேயும் நிரம்பியும் கசிந்தும் அவரவர் கதைகளைக் காலத்தோடு இயைந்த சரித்திரத்தில் மனிதப் பெயர்களோடும் சம்பவங்களோடும் சேர்த்தெழுதப்படுகிற அவனது முதல் விபரம். ஊர் என்பது வெறும் ஊர் மட்டுமல்ல. பல கதைகளின் தலைவாசலும் அதுவே.

 

2-81-300x191.jpg

பழி மற்றும் பகை ஆகிய இரண்டும் இரட்டைக் குழந்தைகள். வீரம் என்பதன் நிரூபணம் உயிர்த்திருத்தல் மற்றும் பழிவாங்கல் என இரண்டுமாகையில் மனித வாழ்வில் இயல்பாகக் காணப்படுகிற அச்சமற்ற தன்மை அற்றுப் போகிறது. நீ என்னைக் கொல்லாவிட்டால் நான் உன்னைக் கொல்வேன் என்று எல்லோரும் எல்லோரிடமும் சொல்லத் தலைப்படுகையில் காரணம் இரண்டாம் பட்சமாகிவிடுகிறது. சமாதானம் என்பது எட்டிக்காயாய்க் கசக்கையில் தீர்வுகள் எல்லாமுமே ஒருமுகம் கொள்கின்றன. அது யாராவது அழிந்த பிறகு யார் மட்டும் எஞ்சப் போவது என்கிற சூத்திரத்தின் நிரந்தர விடையாகிறது. ஆயுதமும் அச்சமும் இணையாத வரைக்கும் எல்லாக் கதைகளும் நெடியனவாக இருக்கின்றன. அச்சம் ஆயுதத்தின் பிடியாகையில் ரத்தம் அதன் நுனியாகிறது.

கத்தி எடுத்தவன் கத்தியாலேயே சாவான் என்பது போன்ற முதுமொழிகள் தங்களுக்குள் சேமித்து வைத்திருக்கிற ரத்த சாட்சியங்கள் ஆயிரமாயிரம். இந்த உலகத்தில் கொன்றழிக்கப்பட்டவர்களின் கதை இருவிதமானது. ஒன்று போர் என்ற பேரில் பெரும் எண்ணிக்கையிலான கொன்றொழித்தல். இன்னொன்று காரண காரிய நியாய தர்மத் தேவைகளுக்காகக் கொல்லப்பட்டவர்களின் கணக்கு. இதுவரை போரே பார்த்திராத நிலமென்ற ஒன்று இருக்குமானால் அதுகூடக் கொலை மற்றும் பழி ஆகியவற்றை நிச்சயமாகப் பார்த்திருந்தே தீரும். இது குருதியின் நியதி.

அவரவர் தரப்பின் வழக்காடலாகத்தான் ஆயுதங்களைக் கைக்கொள்வது நடக்கிறது. ஒரு கொலை பிறகு நடக்கப் போகும் பல கொலைகளைக் கைப்பிடித்து அழைத்து வருவது அதன் இயல்பு. முதற்கொலை நல்விதை நிலத்தில் விழுந்தால் போலத்தான் அந்த உயிரைப் பறிக்கிறது. தொடர்ந்து கொலைகள் நடந்துகொண்டே இருக்கையில் ஒரு கட்டத்தில் எஞ்சுவோர் யாருமின்றித் தனிக்கும் ஒரு தரப்பும் அதன் எதிர்தரப்பில் எஞ்சும் சிலருமாய்க் கதை அப்போதைக்கு முடிவதுபோல நேர்கிறது. உலகம் கொலைகளின் சுரங்கம். காலம், மானுட வாழ்தலைத் தோண்டத் தோண்டக் கொலைகள் பூத்துக் குலுங்கும் உயிரழியும் வனம்.

சின்னப் பொறிதான் பெருவனத்தை அழிக்கும் என்பதுபோல முதல் முதலில் விழும் சாவு பல காவுகளைக் கேட்ட வண்ணம் அந்தரத்தில் அமைதியின்றி அலையும் ஆன்மாபோல அலைகிறது. உறவுக்காகவும் நட்புக்காகவும் உடனிருந்தவர்கள் தங்கள் கைகளை உயர்த்தியபடி கொலைக்கடவுளின் முன்பாகச் சரணடைகிறார்கள். கூட இருந்ததற்காகவும் உதவி செய்ததற்காகவும் வெட்டி வீசப்பட்டவர்களின் சரித்திரமானது இன்னும் நெடியது. சட்டமும் தர்மமும் சற்றே தள்ளியிருப்பதாகவே பாவிக்கும் மானுட எத்தனம் கொலைகளுக்குப் பழியெடுக்காமல் சமாதானமடைவதே இல்லை.

ஊடு வேலை என்றொரு பதம் காலங்காலமாகப் புழக்கத்தில் உண்டு. ஒரு கொலை என்பது வெறும் சம்பவமல்ல. அதொரு திட்டமிட்ட நிகழ்வு. கொலை என்பது ஒரு மனிதனை இந்த உலகத்திலிருந்து நீக்குவது. அவனது வாழ்கால மிச்சத்தை அவனிடமிருந்து பறித்துக் கொள்வது. இந்த உலகத்தில் யாரெல்லாம் இருக்கக்கூடாது என்பதை கருணையோடு ஒருபோதும் இயற்கை தீர்மானிப்பதில்லை. இதற்கு மேல் இருக்கமுடியாது எனும் நிலையில் இயற்கை, மரணத்தை ஒரு பரிசைப்போல எல்லோர்க்கும் வழங்குவதில்லை. நோய் விபத்து தற்கொலை சட்டம் வழங்குகிற தண்டனை இவற்றுக்கிடையே சக மனிதனால் அல்லது சக மனிதர்களால் கொல்லப்படுதல் இருப்பதிலேயே வன்மம் மிகுந்த மரணவழியாகிறது.

யார் வாளைப் பாய்ச்சுவது என்பதைவிட யார் சம்பவ இடத்துக்கு வரவழைப்பது என்பது நுட்பமாகப் பார்க்க வேண்டியது. எதிரிகளை அருகருகே வரச்செய்வதைக் காட்டிலும் வாள் நுனி ஒன்றும் கொடுமையானதல்ல. எப்படி நிகழ்ந்தது என்பதிலிருந்துதான் கொலையின் கதை தொடங்குகிறது. யார் சொல்லி யாரை நம்பி யார் அழைத்துச் சென்று கொலையாகும் இடத்துக்குச் சென்று சேர்ந்தான் சம்மந்தப்பட்டவன் என்பது காலமெல்லாம் வெவ்வேறு தரப்புகளால் மற்றும் மனிதர்களால் நினைவில் வைத்துக்கொண்டே இருக்கப்படுவதான முள்கொத்து. அதுவெறும் நிகழ்வின் உப குறிப்பல்ல.

சுப்ரமணியபுரத்தின் கதை மேலோட்டமாகப் பார்த்தால் பழியெடுத்தலின் கதைதான் என்றாலும் இந்திய சினிமாவில் முக்கியமான இடத்தை அது பெற்றதற்குப் பல காரணங்கள் இருந்தன. கதையின் வழங்கல் விதம் முதல் காரணம் காலம் என்பதைக் கதையின் ஒரு பாத்திரமாகவே ஆக்கியது இயக்கத்தின் புத்திசாலித் தனம் என்பதை மீறிக் கதையின் பிடிக்குள் காண்பவரை வரவழைத்து லயிக்கச் செய்துவிட்ட சாமர்த்தியமும்கூட. 1980 ஆமாண்டு தொடங்கும் கதைக்கு முன்பாக இந்தக் கதையின் நிகழ்காலமான 2008ஆமாண்டு ஜெயில் வாசலில் ரிலீசாகி வெளியே வரும் ஒருவனை கொட்டும் மழையில் வாசல் தாண்டிச் சாலையில் கால்வைக்கும் கணத்தில் கத்தியால் குத்துகிறான் ஒருவன் அவனுடன் இருக்கிறான் இன்னொருவன். குத்தியதும் குத்துப்பட்டதும் யார் என்பதெதுவும் தெரிவதற்காகும் முன்
1980 ஆமாண்டு என்று காலக்குறிப்போடு பழைய கதைக்குள் நுழைகிறது கதை.

பரமன், அழகர், காசி, சுப்ரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள். முன்னாள் கவுன்ஸிலர் சோமு அவரது தம்பி கனகு அடிக்கடி இவர்களுக்கு உதவுகிறாற்போல் போலீஸூக்குப் பசங்களைப் பற்றிப் புகாரும் அளித்து வருகிற இரட்டைநிலைக்காரன். கனகுவின் அண்ணன் மகள் துளசியும் அழகரும் காதலாகின்றனர். அண்ணனுக்கு வரவேண்டிய மாவட்டச் செயலாளர் பதவி இன்னொருவருக்குச் செல்லவே ஆத்திரமடையும் கனகு அழகரையும் பரமனையும் கொம்புசீவி விடுகிறான். ஏரியா நன்மைக்காக புதிய செயலாளரைக் கொன்றுவிடுமாறு தூபம் போடுகிறான். துளசி மீதான ஈர்ப்பும் ஒரு காரணியாக கனகுவிடம் நற்பெயர் ஈட்டுவதற்கான வாய்ப்பாக அதனை ஏற்கும் அழகருக்காக பரமனும் சேர்ந்து மாவட்டச் செயலாளரைக் கொன்றுவிடுகிறார்கள். நண்பர்கள் இருவரும் முன் திட்டமிட்டபடி சரணடைகின்றனர்.

கனகு தன் இரட்டை வேடத்தை தொடங்குகிறான். வெளிப்படையாக அவர்களை ஆதரித்தால் அரசியல் வாழ்வு கெட்டுப்போகும் என்று ஒதுங்குவதாக முடிவெடுத்தால்கூட மறைமுகமாக இருவருக்கும் உதவுவான் என நண்பர்கள் நம்புவதும் கெடுகிறது. சுயநலக் கனகு தனக்கும் அந்தக் கொலைகளுக்கும் சம்மந்தமில்லை என்றாற்போல் உருவிக் கொண்டு கழன்றுவிடுகிறான். கையறு நிலையில் தவிக்கிறார்கள் நண்பர்கள். ஜாமீனில் வெளியே எடுக்க உள்ளே ஜெயிலில் கிடைக்கும் புதிய நண்பர் ஒருவர் உதவுகிறார். நண்பர்கள் நன்றியோடு வெளியே வருகிறார்கள். தேடிச் சென்று வெட்டினால்தான் ஆச்சு எனக் கனகுமீது வெறியாகிறார்கள். கனகு தப்பி விடுகிறான். தங்களை ஜாமீனில் எடுத்த நண்பருக்காக அவரது பகையாளியைக் கொல்கிறார்கள். கனகுவைக் கொல்வதற்காக அலையும் அதே சமயம் துளசியைச் சந்திப்பதையும் தொடர்கிறான் அழகர். கனகுவின் ஆட்களின் கையிலகப்பட்டு சாவின் விளிம்புவரை சென்று தப்பிக்கிறான் அழகர். தான் உயிர் வாழ்வதற்கான துருப்புச்சீட்டாகத் தன் அண்ணன் மகள் துளசியை அனுப்புகிறான் கனகு. காதலியை நம்பி வரச்சொன்ன இடத்துக்குச் செல்லும் அழகரைக் கனகுவும் ஆட்களும் கொல்கிறார்கள். சூழ்நிலையின் பிடியிலகப்பட்ட துளசி அழுது வெறித்தபடி சித்தப்பாவோடு செல்கிறாள்.

பரமன் கனகுவை சந்தர்ப்பம் பார்த்து கொல்கிறான். அவனது தலையை வெட்டி எடுத்துக்கொண்டு சென்று அழகர் கொல்லப்பட்ட இடத்தில் வைக்கிறான். தன்னை அரும்பாடுபட்டு சந்திக்க வரும் காசியிடம் எப்படி அழகர் கொல்லப்பட்டான் என்பதையும் கனகுவைத் தான் கொன்றதையும் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனோடு சோமுவின் ஆட்கள் வந்திருப்பதை அறிகிறான். காசி அங்கிருந்து சென்ற பிற்பாடு பரமன் கொல்லப்படுகிறான்.

spacer.png

 

கதை தீர்ந்து போய் மறுபடி 2008க்குள் எழுகிறது. சிறைவாசலில் குத்திச் சாய்க்கப்பட்டவன் காசி. தண்டனைக் காலம் முடிந்து அவன் வெளியே வரும் வரை காத்திருந்த டும்கானும் இன்னொரு நண்பனும் தங்கள் நண்பன் பரமனுக்காகப் பழியெடுக்கச் செருகிய கத்திதான் அது. பின்னரும் உயிருக்குப் போராடும் காசியின் மூக்கிலிருந்து உயிர்க்காற்றுக்குழாயைப் பறித்து அவன் இறப்பதைப் பார்த்து உறுதி செய்தபிறகே ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறுகிறான் டும்கான்.

பழியின் சரித்திரத்தின் களமாக உறைகிறது சுப்ரமணியபுரம். பழிவிதைகள் கொலைமலர்களைப் பூத்துத் தருவதன் ஆவேசவனம் இந்தப் படம்.ஜேம்ஸ் வசந்தன் இந்தப் படத்துக்கான பின்னணி இசையை நின்று ஒலிக்கும் மென் கோர்வைகளின் சரளியாகவே உண்டாக்கினார். எல்லா இடத்திலும் சற்றே நிதானிக்கப்பட்ட இசைத்தல்கள் ஒருவிதமான மேற்கத்திய மெல்லியல் உணர்வை நிச்சயித்துத் தந்தன. ‘காதல் சிலுவையில் அறைந்தாய் என்னை’ பாடல் ஒரு துன்பியல் நட்சத்திரம். ஷங்கர் மகாதேவனின் அரிய மற்றும் காத்திரமான குரல்வகைமைக்கு நூறு சதவீதம் பொருந்திய பாடலானது. ‘கண்கள் இரண்டால் என் கண்கள் இரண்டால்’ எண்பதுகளின் காதல் பாடல்களை நினைவுகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டது. ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ ‘தலையைக் குனியும் தாமரையே’ இவ்விரண்டு பாடல்களையும் அதிகம் நெருக்கமாக உணரச்செய்த மீவுருத் தன்மையோடு உண்டாகியிருந்தது கண்கள் இரண்டால் பாடல். பொய்யின் மேனிமுழுவதுமிருக்கக் கூடிய செதில்களைச் சுரண்டி எடுத்துவிட்டு நம்பவே முடியாத மெய்மையின் நிறத்தை ஏற்றிவிடுவதன் மூலமாக இல்லா மீன் ஒன்றை மெய்யென்று நம்பச் செய்தாற்போல் அரிதினும் அரிய பாடலொன்றை நிகழ்த்தினார் ஜேம்ஸ் வஸந்தன்.

எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவும் ரெம்போனின் கலை இயக்கமும் ராஜாமுகமதுவின் தொகுப்பும் மெச்சத்தக்க வகையில் முன் எப்போதோ வாழ்வில் கடந்துவிட்ட காலமென்னும் ரயிலை ஞாபகக் கயிற்றால் பிணைத்துப் பின்னோக்கி இழுத்து வந்து மனக்கண் முன் நிறுத்தின.

தன் முதல் படமாக இதனை இயக்கித் தயாரித்து பரமனாக நடிக்கவும் செய்தார் எம்.சசிக்குமார்.

அழிதலை நோக்கித் திருப்புவதற்கு வாழ்வின் மாபெரிய சம்பவங்கள் அல்லது மானுட எத்தனங்கள்தான் தேவை என்று மீண்டும் மீண்டும் பதியவைத்துக் கொண்டிருந்த சினிமா கதைகளுக்கு மத்தியில் மீனுடலின் துண்டத்தில் ஒட்டிக்கொண்டிருக்கக்கூடிய சிறுமுள் நுனிகூடப்போதும் என்பதான கதானுபவத்தை முன்வைத்த வகையில் முக்கியமான திரைப்படமாகிறது சுப்ரமணியபுரம்.

கொஞ்சமே கொஞ்சம் கனகுவின் சூது வினயத்தைக் குறித்த முன் யோசனை இருந்திருக்குமேயானால் பரமனின் அறிவுறுத்தலை அழகர் ஏற்றிருந்தானேயானால் சுப்ரமணியபுரத்தின் கதை நகர்ந்து விரியும் சாலைகள் எல்லாமும் மாற்றப்பட்டு மொத்தக் கதையுமே மாறி இருக்கும். அரசியல் என்பது உச்சபட்ச நிராகரித்தலுக்கும் எள்ளலுக்கும் உரித்தானது என்பதை முன்வைக்கும் கோயில் ட்ரஸ்டியின் சொற்களில் தெறிக்கும் வன்மமும்தானே வலியச் சென்று செலவை ஏற்கும் சோமுவின் நைச்சியமும் எப்படியாவது தன் அண்ணன் நிலையை உயர்த்திவிட வேண்டுமென்று துடிக்கும் கனகுவின் சுயநலமும் காதலியின் உறவினன் தேடி வந்து தன்னிடம் உதவி கேட்பதைத் தனது வாழ்வின் நகர்தலில் முக்கியத்துவம் வாய்ந்த திருப்பமாகவே உணரத் தலைப்படும் அழகரும் தனக்காக ஒரு கொலை செய்யுமாறு வேண்டும் ஜெயில் நண்பனின் முகத்துக்கு நேரான கோரிக்கையும் அழகரின் மரணத்துக்குத்தான் காரணமாகப் போகிறோம் என்று தெரிந்தும் குடும்பத்துக்காக அதனைச் செய்தேவிடும் துளசியின் இயலாமையைத் தாண்டிய துரோகமும் அழகருக்காகப் பழியெடுக்கும் பரமனின் வன்மமும் பரமனைக் காட்டிக் கொடுத்துத்தான் லாபமடைய நினைக்கும் காசியின் காட்டிக்கொடுத்தலும் கடைசிவரை நட்புக்கான கொலைகள் தொடர்கதை என்று அறிவித்தபடி கதையை பூர்த்தி செய்யும் டும்கானுமாக இந்தப் படத்துக்கு முன்னும் பின்னுமாய் மதுரை என்ற பெருநகரத்தின் காலம் மாந்தர் கதை இவற்றிலெல்லாம் பின்னிப் பிணையப்பட்ட நம்பமுடியாத அதீதங்களுக்கு நடுவே தனித்த நம்பக மலராய்ப் பொன்னை நிகர்த்து ஆர்ப்பரிக்கிறது சுப்ரமணியபுரம். இந்தக் கதையின் உபகதைகளோடு பெருகும் நகைச்சுவைக் கிளைகள் அத்தனையும்கூட சினிமாவில் காணவாய்த்த அதி உன்னதத் தனி அனுபவங்களே.

சுப்ரமணியபுரம்: வன்மத்தின் வழிபாடு.

 

https://uyirmmai.com/literature/நூறு-கதை-நூறு-சினிமா-54-சுப்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு சினிமா:55 – திருடாதே

திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

படத்தின் தொடக்கமே ஆங்கிலப் படங்களுக்கு இணையான விறுவிறுப்போடு அமைந்திருக்கும். நகைக்கடை கண்ணாடியை உடைத்து ஒரே ஒரு நெக்லேஸை மட்டும் எடுக்கும் பாலு துரத்தப்படும்போது யாருமறியாமல் அவனைக் காப்பாற்றுகிறது ஒரு உருவம். அந்த உருவத்தை பார்த்துவிடலாம் என்று தீப்பெட்டி எடுத்து உரசுகிறான் பாலு. அந்த ஒளியை ஊதி அணைக்கும் அவ்வுருவம்  “இருட்டிலே ஏற்பட்ட சினேகம் இருட்டிலேயே இருக்கட்டும். உன் திருட்டைப் பத்தி நான் யாருட்டயும் சொல்லமாட்டேன். உன்னைத் துரத்திட்டு வந்தவங்க போயிட்டாங்க. இனிமே நீ போகலாம்” என்று வழியனுப்புகிறது. பாலு அங்கேயிருந்து மெல்ல நகர்ந்து காணாமற் போகிறான்.

 

Dqqq2EmX0AE_pCr-186x300.jpg

இப்போது வெளிச்சம் அந்த இருள்முகம் மீது பாய்கிறது. அங்கே நிற்பவன் துளசிங்கம் (எம்.என்.நம்பியார்.) அதன் கையில் பாலு திருடி வந்த நெக்லேஸ்
நம்மிடம் இப்படிச் சொல்கிறான் துளசிங்கம் “அவன் திருட்டுக்கு ராஜான்னா நான் திருட்டுக்கு சக்கரவர்த்தி” இதிலிருந்து கிளைத்துத்தான் கதைபெருகுகிறது.

பாலு வேலை கிடைக்காததால் தன் தாயைப் பேணவேண்டுமே என்ற நோக்கத்தில் திருடனாகிறான். திருட்டு என்பதன் யாதொரு விளைவையும் அறியாமல் அவ்வப்போது திருட்டுகளில் ஈடுபடுகிறான். ஒரு கட்டத்தில் தபாலாபீஸில் பணம் கட்ட வந்திருக்கும் ராஜூவிடமிருந்து பணத்தைத் திருடுகிறான். பணம் பறிபோன அதிர்ச்சியில் ராஜூ காலமாகிறான். தன் செயலின் விளைவை அறிந்து மனம் நொறுங்கும் பாலு ராஜூவின் வீட்டைத் தேடிச் சென்று அவர்கள் வீட்டை அடகிலிருந்து மீட்கதான் கொள்ளையடித்த பணத்தைத் தந்து உதவுகிறான்.

ராஜூவின் முதலாளி பொன்னம்பலத்தின் இரண்டாவது முகம் பர்மாவில் தேடப்படுகிற பெருங்கொள்ளையன் துளசிங்கம் என்பது யாருக்கும் தெரியாதது. அவனிடமிருந்து ராஜூ எடுத்துச்சென்று பாலுவிடம் களவுகொடுத்த பணம்கூட வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் விள்ளல் தான். இது தெரியவரும்போது போலீஸ் பாலுவைத் தேடுகிறது. பொன்னம்பலத்தின் அண்ணன் மகள் பாலு மீது ஒருதலைப் பித்தாகிறாள். அவனையே மணக்க வேண்டுமென்று பல சாகசங்களைச் செய்து பார்க்கிறாள். எல்லாமே பொய்க்கின்றன. பொன்னம்பலத்துக்கும் பிரத்யேக நோக்கங்கள் இருக்கின்றன. இருவருமே எப்படியாவது பாலுவை அவளுக்கு திருமணம் செய்தாக வேண்டும் என்று தீராப் பேராவலோடு திரிகின்றனர்.

ஒரு கட்டத்தில் பாலு காவலர்களுக்குத் தப்பி ஒளிந்தபடி நிசத் திருடனைக் கண்டுபிடிக்க முனைகிறான். அவனது உற்ற நண்பன் ஜம்பு அவனுக்கு உதவுகிறான். ராஜூவின் தங்கை சாவித்ரி பாலுமீது தன் உயிரையே வைத்திருக்கிறாள். முதலில் பாலுவை நம்பாத அவள் பிற்பாடு நிசம் தெரிந்து தெளிகிறாள். கடைசியில் குற்றவாளி பொன்னம்பலத்தைக் காவலர்கள் கைது செய்கிறார்கள். பரிசும் பாராட்டும் தந்து பாலுவை கவுரவிக்கும் அதே சமயத்தில் பழைய குற்றங்களுக்காக அவனுக்கு 3 மாத சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. தன்னைப் புடம்போடுவதற்கான நற்சந்தர்ப்பமென்று எண்ணி மகிழ்ச்சியோடு அதனை ஏற்கிறான் பாலு.

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய ‘திருடாதே பாப்பா திருடாதே’ கடந்த நூற்றாண்டு உலகத்துக்கு அளித்த நன்மறைகளில் ஒன்று. திரைப்பாடல் என்பதனைத் தாண்டிப் பள்ளிகளில் பாடமாக்கப்படவேண்டிய ஒன்று. அதன் தத்துவ அலசலும் ஏன் திருடக்கூடாது என்பதற்காக அவர் தரும் விளக்கங்களும் கடைசியில் அவர் முன்வைக்கிற தீர்வுகளுமாக இப்பாடல் திறந்து தருகிற ஞானம் பெரியது.

எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசை மேதமைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக திருடாதே படத்தைச் சொல்ல முடியும். படத்தின் டைட்டிலின் பொழுது அவர் இசைத்துத் தரும் கோர்வை ரசிக மனங்களை ஒரு வித்யாசமான அனுபவத்தினை நோக்கித் திருப்பி வைக்கிறது. படமெங்கும் பல இடங்களில் இடைமௌனத்தைத் தன் அதீதமான ஒப்பில்லா இசைக்கோர்வைகளின் மூலமாக எஸ்.எம்.எஸ். வழங்கிய அனுபவம் அலாதியானது. குறிப்பிட்ட ஒரு இடத்தில் சரோஜாதேவியை அடைத்து வைத்திருப்பார் நம்பியார். அங்கே இருந்து தப்புவதற்காக காவலுக்கு இருக்கும் குண்டு என்பவனை நைச்சியமாகப் பேசி ரேடியோவை ஒலிக்கச் செய்வார் சரோஜாதேவி. அப்போது ஒலிக்கும் இசையின் துள்ளல் 60 வருடங்களைக் கடந்தும் தன் புத்தம்புதுத் தன்மையைத் தக்கவைத்திருப்பது ஆச்சரியம். ‘என்னருகே நீ இருந்தால்’ என்ற பாடல் அனைத்துகாலப் ப்ரியப் பாடல்களின் வரிசையில் வரும் ஒன்று. எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப் படத்தில் அரிதினும் அரிய பைலா வகை பாடலொன்றை இசைத்திருப்பார் எஸ்.எம்.எஸ். ‘கண்ணும் கண்ணும் சேர்ந்தது’ எனத் தொடங்கும் அப்பாடல் அந்தக் காலத்தில் எப்படிக் கொண்டாடப்பட்டது என்பதைத்தாண்டி இரண்டாயிரமாம் ஆண்டுவாக்கில் தயாரான அலைபாயுதே படத்திலிடம் பெறுகிற செப்டம்பர் மாதம் எனத் தொடங்கும் வேகவகை ராப் பாடலுக்கான முன்னோடியாக விளங்குவது அழகிய திருப்பம்.

இரண்டு பாடல்களுமே அடுத்தடுத்த இயங்குதிசைகளில் நகர்பவை என்பது தொடங்கி இரண்டுக்குமான ஒற்றுமைகள் அதிகம். தன் செல்வாக்கை அழுத்தந்திருத்தமாக அலைபாயுதே பாடலில் பதிந்திருக்கும் கண்ணும் கண்ணும் பாடல்.

ரிக்ஷாக்காரன் படத்துக்கு இந்தியாவின் சிறந்த நடிகர் விருது பெற்றார் எம்ஜி.ஆர். ஆனால் அவரது நடிப்புவரிசையில் திருடாதே படத்துக்காக அந்த விருதை வழங்கியிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். திருட்டு என்பதன் விளைவுகளைப் பற்றியெல்லாம் இன்னும் கொஞ்சம் விலகியிருந்தால் மேலோட்டமான பிரச்சாரப் படமாக மாறியிருக்கும் அபாயத்தைத் தன் அளவான ஈடுபாட்டாலும் இயல்பான நடிப்பாலும் கச்சிதமாக நிறைவேற்றித் தான் ஏற்றவேடத்துக்கு நியாயம் செய்தார் எம்ஜி.ஆர்.

சரோஜாதேவி, நம்பியார், நாகைய்யா, டணால், தங்கவேலு உள்பட அனைவருமே மிளிர்ந்தார்கள். ப.நீலகண்டனின் துல்லியமான இயக்கம் எம்ஜி.ஆர் எனும் நாயகபிம்பத்தை வலுவாக மக்கள் மனங்களில் செதுக்கித் தந்தது. கண்ணதாசன் தன் பன்முக ஆளுமையை நிரூபித்த படங்களில் முக்கியமான படம் திருடாதே. பாடலாசிரியராக கவிஞராக அறியப்பட்ட அவர் சிறந்த வசனகர்த்தாவாக மிளிர்ந்தார். வாழ்க்கைக்கு எடுத்துச் செல்வதான வசனங்களை எழுதியதற்காகக் காலம் கடந்து போற்றப்பட வேண்டியவராகிறார். திருடாதே படம் அதன் வசனத்திற்காக மேலோங்கிய கவனத்திற்கு உரியதாகிறது.

Dqqq2IoXQAAbB6m-300x238.jpg

பாலுவின் அம்மா ஜம்புவிடம்,

அம்மா:ஏம்பா இப்பிடித் திருடித் திங்குறியே உனக்கு வெக்கமாயில்ல…

ஜம்பு:ஏம்மா எனக்கு முன்னால திருடிக்கிட்டிருந்த எவனுக்கும்மா வெக்கமிருந்தது எனக்கிருக்கறதுக்கு..?

அதே ஜம்புவை மறுபடி அழைத்து நன்றாக உணவளிக்கும் அன்னையிடம் உணவுக்கு நன்றி சொல்கிறான் ஜம்பு
அம்மா:ஆமா…உலகத்துலயே பசிதான் பல கொடுமைகளுக்கு காரணமாயிருக்கு
ஜம்பு:ஆங்க்…அப்டி சொல்லுங்க.. இது தெரியாம ஒருத்தன் அட்றாங்குறான், ஒர்த்தன் புடிறாங்குறான், காலை ஒட்றாங்குறான், போலீஸ் ஸ்டேஷனுக்கு நட்றாங்குறான்.. ஏது ஏது வருங்காலத்துல திருடவிடமாட்டானுங்க போலருக்கே
அம்மா:எதுக்காகப்பா திருடணும் உன்னைப் பார்த்தா நல்ல பிள்ளை மாதிரி தெரியுதே நாணயமா வாழக்கூடாதா..?
நீ ஒருத்தன் கிட்டே திருடுனா அந்தப் பணத்தைப் பறிகொடுத்தவன் எவ்வளவு வேதனையடைவான்..? அதை சம்பாதிக்க அவன் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான்..?உலகத்துலயே ஈனத்தனமான தொழில் திருடறது தான்ப்பா.. மானமா உயிர்வாழ முடியலைன்னா செத்தாவது போகலாம். திருடக் கூடாது.

பாலுவிடம் சாமியார் நாகையா

அய்யய்யோ இன்னொரு தடவை அப்படிச் சொல்லாதே. தாயின் பேரால திருடுறேன்னு சொல்லாதே அப்பா… நமக்கெல்லாம் கண் கண்ட தெய்வம் தாய்தான். எந்தத் தாயும் தன் மகன் திருடித் தன்னைக் காப்பாற்றுவதை விரும்பவே மாட்டா. இன்னைக்குச் செய்யுற சின்னத் திருட்டு நாளைக்குப் பெரிய கொள்ளை கொலைவரைக்கும் போனாலும் போகலாமப்பா. தம்பி கொஞ்சம் மனசைக் கட்டுப்படுத்திக்கிட்டா நீயும் சமூகத்தில நல்ல மனுஷனாயிடுவே அப்பா.

ராஜூவின் மனைவி ராஜூவிடம்

கவலைப்படாதீங்க.
மானம் உயிருக்கு நகை
இது உடலுக்குத் தானே நகை..?
அவசரத்துக்கு உதவாதது அழகுக்கு எதுக்கு
இதை வித்து அந்தப் பணத்தோட சேர்த்து ஊருக்கு அனுப்பி வையுங்க

பாலு சாமியாரிடம்

நான் திருடிக்கிட்டு இருந்தேன் யாரும் என்னைய ஒன்னும் சொல்லல திருடு ரக நிப்பாட்டினேன் எல்லாரும் என்னை நல்லவன் சொல்லனும்னு நினைச்சேன் எல்லாரும் திருடன் சொல்றாங்க

கண்ணதாசன் தானே அத்தனை கதாமாந்தருமாக மாறி அவரவர் மனங்களை ஊடுருவி எண்ணங்களை அகழ்ந்தெடுத்து அத்தனை வசனங்களை அமைத்தார் என்றால் நம்பலாம். திரைப்படம் சமூகத்தைப் பண்படுத்தக் கூடிய ஊடகம். பல்லாயிரக்கணக்கான மனிதர்களை அது பண்படுத்தி இன்னும் மேன்மையை நோக்கி அழைத்துச் செல்ல வல்லது. தன் திரைப்படங்களின் சின்னஞ்சிறிய அசைவுகளையும் உன்னிப்பாக மேற்காணும் கட்டுப்பாட்டிற்கு உகந்து அடங்கிச் செல்வதாகவே அமைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.. அவரது சமூகப் பங்களிப்புகளாகவும் அரசியலுக்கான அடித்தளங்களாகவும் அவரது படங்களைப் பார்க்கலாம். கதாபாத்திரத்தின் சின்னஞ்சிறிய மௌனம்கூட மக்களுக்குத்தான் அளிக்கும் சமிஞைகள் என்பதை நன்கு உணர்ந்திருந்ததால்தான் அவர் நிழலைப் பின்பற்றி நிஜத்திலும் கோலொச்சினார்.

இதற்கான சின்னஞ்சிறு சான்று திருடாதே மற்றும் நல்லதுக்குக் காலமில்லை என இரண்டு டைட்டில்களை இப்படத்துக்காக திரைக்கதையை கண்ணதாசனோடு சேர்ந்தெழுதிய வித்வான் லட்சுமணன் பரிந்துரைத்தபோது நல்லதுக்குக் காலமில்லை என்று எம்ஜி.ஆரே சொல்லிட்டார் என்று பலரும் நம்பத் தொடங்கிவிடுவார்கள். ஆகவே திருடாதே என்பதே டைட்டிலாக இருக்கட்டும் என்று கறார் காட்டினாராம் மாண்புமிகு நடிகர் எம்.ஜி.ஆர்.

 

https://uyirmmai.com/literature/நூறு-கதை-நூறு-சினிமா55-திரு/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு கிருபன்.ஒன்றிரண்டைத்தவிர மிச்சமெல்லாம் பார்த்திருக்கிறேன். ஒரு தொகுப்பாக வரும்போது அட நாம இவ்வளவு கதைகளையும்  நம்ம மண்டைக்குள்ளேயும் போட்டு கரைச்சிருக்கிறோமே என்ற பிரமிப்பு ஏற்படுகிறது. முன்பு ஒரு காலத்தில் இருந்த கதைகள் அறிதல் கிரகிப்பு என்பதில் இருந்த அதீத ஆர்வம் இப்போது இல்லை. எதையாவது வாசிக்கப் போனாலே தூக்கம் வந்து விடுகிறது.😴

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.