Jump to content

நல்லதோர் வாழ்வு இருந்தது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் வாழ்வு இருந்தது 


நல்லதோர் வாழ்வு ஒன்று 
இருந்தது ஒரு காலம் 
நாலு பேர் வந்து போயினர் 
நமக்காய் ஒரு வாழ்வு இருந்தது 

ஒற்றுமை ஒன்று இருந்தது ஒரு காலம் 
உறவுகள் வந்து போயினர் பிரியாமல் 
முற்றத்தில் வந்து இருந்தது முழுநிலவு 
பக்கத்தார் வந்து பேசினர் பல நேரம் 

ஆயிரம் சனம் இருந்தனர் அருகோடு 
அமைதியாய் கூடி வாழ்ந்தனர் குலையாமல் 
அங்கு ஓர் பிரிவும் இல்லை 
அனாதை என்ற ஓர் சொல்லும் இல்லை 

அழகான பனை இருந்தது 
அருகில் ஒரு வேம்பு நின்றது 
அதன் கிளையில் ஒரு குயில் இருந்தது 
கூவிப் பல பாடல் கேட்டது 

காடு இருந்தது காடு நிறையப் பூ இருந்தது 
பூவோடு கனவு இருந்தது 
கனவு மெய்ப்படக் காத்து இருந்தது 
பாட்டும் கேட்டது கூத்தும் கேட்டது 
பகல் எல்லாம் குழந்தை சிரித்தும் கேட்டது 

பறவைகள் வந்தனர் அருகில் இருந்தனர் 
பாடிப் பல பாடல்கள் கேட்டன 
மாடு இருந்தது மடி நிறையப் பால் இருந்தது 
மனிதர்க்கு இதில் அன்பு இருந்தது 
தாயைப் போல் பாலும் தந்தது 
தமிழர்க்கு இது அடையாளமானது 

மார்கழி மாதம் மழையுடன் பூத்த 
மல்லிகை போல் பல பெண்கள் இருந்தனர் 
ஆலய மணியின் ஓசைகள் கேக்க 
அள்ளிக் கூந்தலை கட்டிய பெண்கள் 
துள்ளி திரிந்ததோர் காலம் ஒன்று இருந்தது 

கடல் இருந்தது கார்த்திகை பூ இருந்தது 
கல்லறை எங்கும் தீபங்கள் எரிந்தது 
கனவுகள் கண்ட உயிர்களின் பாடல் 
காத்தினில் கேக்கும் காலம் ஒன்று இருந்தது 

எம்மோடு மண் இருந்தது 
மண்ணில் பல மரம் இருந்தது 
மரத்தில் பல கூடு இருந்தது 
கூடிப் பல குஞ்சுகள் வாழ்ந்தது 

நிலம் ஒன்று இருந்தது நின்மதி இருந்தது 
கடல் இருந்தது வயல் இருந்தது 
வயிறு நிறைய சோறு போட்டது 
காவலுக்கு ஒரு படை இருந்தது 
அது வரை துணிவு இருந்தது 
நிமிர்வும் இருந்தது 

அன்று ஒரு நாள் யுத்தம் வந்தது 
அழகிய எம் வாழ்வை தின்று தீர்த்தது 
அழகிய நிலவு ஒன்று கடலில் வீழ்ந்தது 
அத்தனை கனவும் கரைந்தே போனது 
இருப்பது மட்டும் தொலைந்தவன் கண்ணீர்
இனி ஒரு காலம் இது போல் வருமோ .

 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.