Jump to content

`ஹைட்ரோ கார்பனால் தமிழகம் எத்தியோப்பியாவாக மாறிவிடும்!’ - எச்சரித்த வைகோ;


Recommended Posts

தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை எம்.பி-க்கள் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். அவர்களில் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வைகோவும் ஒருவர். சுமார் 23 வருடங்களுக்குப் பிறகு,நாடாளுமன்றத்துக்குச் சென்ற வைகோ, நேற்று தன் பேச்சில் அவையை அதிரவைத்துள்ளார்.

 

இரண்டாவது நாளான இன்று, தமிழகத்தில் நிலவும் ஹைட்ரோ கார்பன் பிரச்னை தொடர்பாகப் பேசியுள்ளார் வைகோ. `` தமிழ்நாட்டின் காவிரி பாசனப் பரப்பை, விளைநிலங்களை முற்றிலும் அழிக்கக்கூடிய மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்றவை தோண்டும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முனைகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இத்தகைய திட்டத்தைச் செயல்படுத்துவதில் மிகவும் தீவிரமாக இருக்கிறது.

தூத்துக்குடியைச் சீரழித்த ஸ்டெர்லைட் உரிமையாளர்களுக்கு, காவிரி பாசனப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட 276 இடங்களில் உரிமம் வழங்கி இருக்கிறார்கள். ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு 67 உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அதில் அவர்கள் தற்போது இரண்டு கிணறுகளைத் தோண்டிக்கொண்டு இருக்கிறார்கள். இந்தக் கிணறுகளைத் தோண்டுவதற்காக அவர்கள், 20 மில்லியன் லிட்டர் தண்ணீரை அதிக அழுத்தத்தில் நிலத்துக்குள் உட்செலுத்தப்போகிறார்கள். அத்துடன் 636 நச்சு வேதிப் பொருள்களையும் கலந்து நிலத்துக்குள் செலுத்தப் போகிறார்கள். இதனால் அந்தப் பகுதியில் உள்ள ஒட்டு மொத்த பாசன நிலப்பரப்பும் சீரழிந்துவிடும். மேற்கொண்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

`எதிர்ப்பைப் பற்றி கவலை இல்லை. ஹைட்ரோ கார்பன் திட்டங்களை உறுதியாகச் செயல்படுத்துவோம்’ என்று கடந்த 17-ம் தேதி பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டங்களை எதிர்த்து லட்சக்கணக்கான விவசாயிகள் வீதிக்கு வந்து போராடிக்கொண்டு இருக்கிறார்கள். கடந்த மூன்று நாள்களாகப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக விவசாயிகள், டெல்லி ஜந்தர்மந்தர் வீதிகளில் போராட்டம் நடத்தினார்கள்.

இந்த ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் மத்திய அரசுக்குப் பல லட்சம் கோடி வருமானம் கிடைக்கும். உங்களுடைய கருவூலம் பொற்காசுகளால் நிரம்பி வழியும். ஆனால் அதேவேளையில், ஆசியாவின் நெற்களஞ்சியமான தஞ்சை மண்டலம் விவசாயத்துக்கு உதவாத பாலை நிலமாக மாறிவிடும். தமிழகம் மற்றொரு எத்தியோப்பியா ஆகிவிடும். எனவே, இந்தத் திட்டங்களைக் கைவிடுமாறு மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். இல்லையேல், தமிழக மக்கள் மத்திய அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுவார்கள் என எச்சரிக்கிறேன்” என்றார்.
 
அப்போது குறுக்கிட்ட மாநிலங்களவை சபாநாயகர் வெங்கைய நாயுடு, ``இந்தச் சபையில் எச்சரிக்கை விடுக்க முடியாது. வைகோ நீங்கள் மிகவும் வேகமாகப் பேசுகிறீர்கள். உங்களின் கருத்துகளைச் சொல்லுங்கள், கோரிக்கை விடுங்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுக்காதீர்” என அறிவுரை கூறினார்.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.