Jump to content

கவி நாயகி/ muse - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

2016 பனி உறையும் கனடாவின் கூதிர்காலத்தில் டொறன்ரோ நகரில் இருந்தேன். கைகுலுக்கிச் சிரிக்கும் வெண்மணல்  பாலைப் பொன் மணல் அல்லது கருங்கற் சிற்பங்களுக்கு மத்தியில் உயிர்த்த சுடுமண் பாவையாக என்னுடைய கவிதையின் சினேகிதியை சந்தித்தேன். மொழிமட்டும் எனது தாய்தந்தது.  கவிதையும் விநோதங்களும் அழகும் நம்மைச் சூழ்ந்து நம்மை வாழவைக்கும் இயற்கையும் பெண்களும் தருகிற வரங்கள் தானே. இன்று மீண்டும் அந்தக் கவிதையை நினைத்தேன். 
.
கவி நாயகி/ muse
- வ.ஐ.ச.ஜெயபாலன்
.
வெண்பனிக் கோலமும் இல்லாத
புகை வண்ணக் கொடுங்குளிர் நாள்.
தேனீரால் உயிரை சூடாக்கியபடி
கண்ணாடி மாளிகையுள் இருந்தேன்
*
தூரத்துக் கரும் அணில்கள்
கோடையில் புதைத்த கொட்டைகளை
மீட்க்க அலைந்தன.
நானோ அந்த உறைந்த நெடும் பகலில்
சென்ற வருகையில் எனக்காக
நாளொரு பறவையும்
பொழுதொரு பூவுமாய்க் கமழ்ந்த
டொரன்டோ நகரின் நினைவுகளை
மீட்டிக் கொண்டிருந்தேன்.
சில கவிதையாய் சிறகசைத்தபடி.

*
கடந்த வசந்தகால வருகையைவிட. 
இக் கொடுங் கூதிர் வருகை இனிதாகுமென
ஒருபோதும் நம்பவில்லை.
ஆனாலும் வாழ்வு
தேன் சிந்தும் விநோத விளையாட்டு
என்பதை அறிவேன்.

*
இருள் சூழும் அந்தப் பிற்பகலில்
மின்விழக்குகளும் நாண
இன்னும் சூளையுள் எரிகிற 
செம்மண் தேவதையாய்
என்னை நோக்கி அவள் வந்த பொழுதில்
அச்சுடைந்த சூரியன்
வடதுருவ வானில் உருண்டது.
என்னை சூழ வனங்கள் பூத்தன
எங்கும் பறவைகளின் பாடல்கள்.

*
இன்னும் வெந்து கொண்டிருந்த
அந்த சுடு மண் தேவதையோ
புன்னகைத்து
என் ஆன்மாவை பற்றிக் குலுக்கியது

*
துருவகரடியே
நீளக் குகை துயிலும் கூதிரில்
நெடுந்துயில் சிதறி
உயிர்தெழுந்ததே என் கவி மனசு

(காலம் 2016)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.