Jump to content

காமக் கட்டுப்பாடு


Recommended Posts

காமக் கட்டுப்பாடு

14 காரட் தங்கத்தை விட உயர்ந்த தர தங்கத்தை நகை செய்து அணியாதே என்கிறது தங்கக் கட்டுப்பாட்டு விதி. அதிகமான பிள்ளைகளைப் பெறாதே என்கிறது குடும்பக் கட்டுப்பாட்டு விதி. 30 ஏக்கருக்கு மேல் விளைநிலம் வைத்துக் கொள்ளாதே என்கிறது உச்ச வரம்புக் கட்டுப்பாட்டு விதி. இன்னும்பல கட்டுப்பாட்டு விதிகளிருக்கலாம். அவ்விதிகளை மீறுபவருக்குத் தண்டனையும் உண்டு. அவற்றைச் சில பல அரசியற் கட்சிகளும் ஆதரிக்கின்றன. காமக்கட்டுப்பாடு என்பதொன்று. அதுவே மக்கள் மக்களராய் வாழ உதவுது, ஆகலின் அக்கட்டுப்பாடு ஏனைய கட்டுப்பாடுகளை விட மிகவும் அவசியமானது.

காமம் கட்டுப்படுவதா? அன்றா? சாத்தன் ஒரு யெளவன புருஷன். அவனது குடும்பத்தில் அவனுக்குத் தங்கைமார், தமக்கைமார், புத்திரிமார் முதலிய பெண்டிர் இருக்கின்றனர். அடிக்கடி அவரைச் சந்திக்கிறான், அவரோடு அளவளாவுகிறான் அவன். அவன் ஒழுங்கீனனாயிருந்தாலுங் கூட அவரைச் சிறிதுங் காமக்கண்கொண்டு பாரான். சாத்தியும் ஒரு குடும்பப்பெண். அவளும் தன் தமையன் தம்பியாதியோரை அக்கண்கொண்டு பார்ப்பதில்லை. காமம் பொல்லாதது, ஆயினுங் கட்டுக்கடங்குவதே என்பது அதனால் தெரிகிறது. காமம் இயற்கையுணர்ச்சி, அதனைக் கட்டுப்படுத்தக் கூடாது, முடியாது எனப் பேசித்திரிபவன் சம்சயத்துக் கிடமாவான்.

மண் பெண் பொன் என ஆசைகள் மூன்று. ஆண் எனவும் ஓராசை சொல்லப்படவில்லை. 'கண்டுகேட்டுண்டுயிர்த் துற்றறியுமைம்புலனு மொண்டொடிக் கண்ணே யுள' என்றார் திருவள்ளுவர். அவ்வனுபவம் பெண்டிர்க்கு ஆடவரிடம் உண்டு என அவர் பாடிலர். அதனால் பெண்டிர் கலியாணஞ் செய்து கொள்வதற்கு முன் காதலென்ற பேராலும், கலியாணம் ஆன பிறகு கணவன் ஆண்டுக்கணக்கில் வெளியூர் சென்று பிரிந்திருக்குங் காலத்தில் மறைந்த வெறியாலும், இள விதவையராய் விட்டால் அடங்காமையாலும் வரம்பழிந்து மானங்கெடமாட்டார் என்பது தெரிகிறது. கலியாண மாகாத பெண்கள் காதலை இலட்சியமாக வைத்து மகாநாடுகள் கூட்டிக் காதல்மண உரிமைத் தீர்மானம் போட்டனர், இளவிதவைகள் மகாநாடுகள் கூட்டி இரண்டாவது மூன்றாவது ஆடவரோடு வாழ்க்கை யொப்பந்தஞ் செய்து கொள்ளும் உரிமைத்தீர்மானம் போட்டனர் என்ற செய்திகள் பத்திரிகைகளில் வந்திருக்கின்றனவா? பொதுவாகப் பெண்டிருள்ளம் லஜ்ஜைக் கிடமானது. அ·தவர்பால் காமத்தைத் தலைதூக்க விடாது. 'இவ் விஷயத்தில் பெண்களை விட ஆடவரே பெரிய குற்றவாளிகள். காமத்தினால் கண்மண் தெரியாது போகும் ஆடவன் ---', 'ஆடவன் பெண்ணின் நன்மையைக் கோருவதானால் தன்னை அடக்கிக் கொள்ளட்டும். வலிய வந்து இழுப்பது அவளல்ல, அவனேயாகையால் உண்மையில் குற்றவாளி அவனே', 'ஆடவனைப் போல் பெண்ணுக்கு அவ்வளவு சிற்றின்பப் பைத்தியம் உண்டென்று நான் எண்ணவில்லை. புலன்களை அடக்குதல் அவனைவிட அவளுக்குச் சுலபம்', 'என்னிடமுள்ள ஆதாரங்க ளெல்லாம் பெண்ணைவிட ஆணுக்கே தன் ஆசைகளை அடக்கும் சக்தி குறைவு என்பதைக் காட்டுகின்றன' என்றார் காந்தியார். அத்தகைய பெண்ணுலகிற்குப் பரிந்து பேசச் சில ஆடவர் தலைப்பட்டிருக் கின்றனர். காதல் மணமே சிறந்தது. இள விதவைகளினுணர்ச்சியைக் கட்டுப்படுத்துவது அக்கிரமம் என்றெல்லாம் ஆர்ப்பரிக்கின்றாரவர். பல பெண்கள் தம் பெண்ணியலிலிருந்து நழுவுவதற்கு அதுவே காரணம். ஆயினும் கலியாணம் ஆகாத காலத்தும், கணவன் பிரிந்திருக்குங் காலத்தும், இளமையில் வைதவ்வியம் அடைந்த காலத்தும் தம் பிறப்புரிமையாகிய அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்னும் பெண்ணியல்பால் மேம்பட்டு உத்தமிகளாய் வாழ்ந்து வரும் பெண்ணரசிகள் இலட்சோப லட்சமாக இன்றும் உள்ளனர்.

'ஒருவன் தன் மிருக விச்சைகளை முழுதும் அடக்கியாகிவிட்டால் அவனுக்குத் தெரியாமலே வீரியம் போவதற்கு இடமில்லாமற் போய்விடவும், போகவிச்சையினால் கூடுதல் அறவே நின்று போகும். அப்பொழுதுபிள்ளை வேண்டுமென்ற ஆசை பிறக்கையில் மட்டுமே கலவி நடக்கும். இல்லற பிரமசரியம் எனப்படுவது இதுவே. அதாவது, இந்த விதியின்படி நடப்பவன் இல்லறத்தி லிருப்பினும் சுகபோகத்தில் சிறிது ஈடுபடாதவன் நிலையை எய்தி, அவனுக்குச் சிறிதும் குறையாத மகிமை பெற்றிருப்பான். ஏனெனில் இவன் பிள்ளையைக் கருதியின்றி வெறும் சிற்றின்பத்திற்காகக் கலவி புரியவே மாட்டான்' என்றார் காந்தியார். கணவன் மனைவியை மாத்திரங் காமக்கண்கொண்டு பார்க்கலாம். அதுவும் அவர் சொன்ன பிரமசரிய விரதத்துக்குப் பங்கமில்லாமலிருக்க வேண்டும். அதுவே குடும்ப வாழ்க்கை, இல்லற வாழ்க்கை, அக் குடும்பங்களே நாட்டில் மிக வேண்டும். மிகுவிப்பது காமக் கட்டுப்பாடொன்றே.

அவ் வாழ்க்கைக்குப் பிரதிகூலங்களே இப்போது அதிகங் காணப்படுகின்றன. வீசிய நடை, ஆடம்பர வுடை, மமதையைப் புலப்படுத்தும் பாவனை, சுவையும் மணமும் ஏற்பட்டால் எதனையுந் தின்னும் ஆசை, புகையை யுறிஞ்சி யூதி யுமிழ்தல், கலவி நிர்வாணப் படங்களைக் கண்டு களித்தல், ஆண் பெண் அணைப்புக் கேற்ற இசைப் பாடல்களைக் கேட்டு மகிழ்தல், காமக்கதைப் புத்தகங்களைப் படித்துப்பூரித்தல், ஸினிமாக்களில் நடன்நடிகளின் அணைப்புக்களைக்கண்டு ஏங்குதல் முதலியன காமத்தைக் கட்டுப்படுத்த உதவாமல் காந்தியார் சொன்ன பிரமசரியத்தைச் சிதைக்கவே உதவுகின்றன. அவை நன்மக்கட்குத் தேவையா?

அவற்றுள் புலாலுணவு மாத்திரம் சில விலங்கு பறவைகளிடமுண்டு. மற்றவையெல்லாம் மனிதரிடமே யுள்ளன. அவை அவருக்கு எவ்வகையில் கெளரவம் அளிப்பன?

மிருகங்கள் காமத்தாற்கூடிக் குட்டி போடுகின்றன. அக்குட்டிகள் தாய்ப் பெட்டைகளின் பராமரிப்பில் வளர்கின்றன. அதுபோற் பெற்ற ஆண் இவனெனத் தெரியாமல் பிள்ளைகளைப் பெற்றுத் தோளி லொன்றும், இடுப்பி லொன்றும், கைப்பிடியி லொன்றுமாகச் சுமந்து திரியும் தாய்ப் பெண்கள் மனித வர்க்கத்திலுமுளர். மனித சமுகத்திற்கு அது மானக் கேடு. காமக் கட்டுப்பாடின்மையே அதற்குக் காரணம்.

காம மிகுதி மிருக வியல்பு என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் அவற்றிடம் இயற்கைக் கட்டுப்பாடு உண்டு. 'மிருகங்கள் விதியை மீறுவதே இல்லை. மனிதனுக்கு மீறவோ, கட்டுப்படவோ - இடமிருப்பதால் மீரும் பெரும் பிழையைச் செய்து வந்திருக்கிறான்' என்றார் காந்தியார். ஆடவர் கட்டுப்பாட்டை மீறுவதே பெரும்பான்மை என்பது அதனால் தெரிகிறது. பெண்டிற் பெரும்பாலும் அடக்க முடையாரென்பதுந் தெரியலாயிற்று. அவர் பொருட்டாயின் கலியாணம் என்பதே வேண்டாம். ஆடவர் கட்டுக் கடங்காத காரணத்தால் அவர்பொருட்டே கலியாணம் மனிதவர்க்கத்துள் உளதாயிற்று. கலியாணத்தின் நோக்கமே காந்தியார் சொன்னபடி ஆடவன் காமத்தைக் கண்ட விடத்திற் செல்லவிடாமற் கட்டுப்படுத்தி மனைவியுடன் பிரமசரிய விரதத்தில் வாழ்வது என்பது தான் அவன் கலியாணத்தாற் கொண்ட மனைவியும் அவனுக்கு அவள் வயிற்றிற் பிறந்த பிள்ளைகளும் அவன் பொறுப்பில், மேற் பார்வையில் இருந்து வருவர். கலியாணத்தின் அந்த நோக்கம் இப்போது போயிற்று. அதுவுங் காம விளையாட்டுக்கா மென்ப தாயிற்று.

காமக் கட்டுப்பாட்டுக்கு பிரதிகூலங்களாயுள்ளன சில சொல்லப்பட்டன. அவையும் அவை போன்றவையும் மாறவேண்டும். அனுகூலமான சூழ்நிலைகள் வேண்டுமட்டில் அமைய வேண்டும். 'கற்பவை', 'இலங்கு நூல்' எனத் திருவள்ளுவர் வரையறுத்த நூற் பயிற்சியே மிக வேண்டும் 'எல்லா மதங்களுமே காமத்தை மனிதனது பெரும் பகையென்று கருதுகின்றன; கோபமும் துவேஷமும் அடுத்தபடியில் இருப்பவையே. இவை காமத்திலிருந்தே விளைவதாக கீதை கூறுகிறது' என்றார் காந்தியார். அதன்படி சமய நெறி நிற்றல் என்ற அறம் பரவுதற்கு இடம் தரப்பட வேண்டும். 'இப் புலனடக்கம் கடவுள் அருள் இருந்தாலல்லது நமக்குக் கைவராது' என்றும் அவர் சொன்னார். அதில் இரட்டை எதிர்மறை யிருக்கின்றது. காமக்கட்டுப்பாட்டுக்கு மிகவும் இன்றியமையாதது ஈசுரோபாசனையால் அவனருளைப் பெறுதல் என்பது புலனாம்.

Link to comment
Share on other sites

ஆறுமுகநாவலரே! ஒரு நல்ல பாலியல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். இதை உங்கள் மீது இருக்கும் அக்கறையில்தான் சொல்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம்

Link to comment
Share on other sites

பிள்ளை பிறக்க வேண்டும் என்று ஆசை வரும் போது மட்டும்தான் மனைவியுடன் உறவு கொள்ள வேண்டும் என்ற பேய்த்தனமான கருத்தை ஆறுமுக நாவலர் போன்றவர்களால் மட்டும்தான் சொல்ல முடியும்.

சைவசமயம் அப்படியா சொல்கிறது? ஆசையில் மட்டும் மனைவியுடன் உறவு கொண்டால் நரகத்தில் என்ன தண்டனை கிடைக்கும் என்று சொன்னால் நல்லது

Link to comment
Share on other sites

இந்து மதத்தின் புராணங்களை எடுத்துக் கொண்டால், அனைத்துக் கடவுள்களும் ஆசை மேலிட்டுத்தான் கலவி கொள்கிறார்கள். இதில் மச்சான், மகள் முறை என்று எதையும் பார்க்காது மோகத்தில் கலவி கொண்டுள்ளார்கள்.

பின்பு அதில் ஒரு பிள்ளை பிறக்கும். ஆனால் கலவிக்கு காரணமாக காமம்தான் இருக்கும்.

Link to comment
Share on other sites

ஆறுமுக நாவலர் வாழ்ந் காலத்தில் வாழாததாலும், அந்தக் காலப் பகுதி மக்கள் தமக்குரிய பெறுமதிகளாக எதை எதற்காக எந்தெந்த அக புற காரணிகளின் அடிப்படையில் கொண்டிருந்தார்கள் என்று தெரியாததாலும், இதர ஒளுங்குபடுத்தப்பட்ட சயமங்களில் உள்ளைதைப் போல் சைவ சயமயத்திற்கு எந்த மனிதரும் தலைவராக நியமிக்கப்பட்டு அவர்சொல்வதே சைவம் சொல்வது என்று ஏற்றுக் கொள்ளும் வழக்கோ மரபோ இல்லாததாலும், ஆறுமுக நாவலர் சொன்னதாகக் கூறப் படும் விடயங்கள் உண்மையிலேயே எந்த வித திரிபுபோ தவறான புரிதல்களோ அற்று அவர் சொன்னது போலவே இன்றும் சேமித்து வைக்கப்பட்டுள்ளனவா என்பதனைப் பிரத்தியேகமாக நிறுவதற்கான வழிகள் எதுவும் தென்படாமையினாலும், ஆறுமுக நாவலர் பற்றி விவாதிப்பதை நான் இங்கு தவிர்த்துக் கொள்கின்றேன். எனினும், யாழ் களத்தில் ஆறுமுக நாவலர் என்ற முகமூடியில் பதிவிடுபவரிடம், எனது தனிப்பட்ட ஆர்வமிகுதியினால் மாத்திரம் இரு சிறிய கேள்விகள்.

1) நீங்கள் பதிகின்ற பதிவுகளில் உள்ள விடயங்களை எழுத்திற்கு எழுத்து உங்கள் பதிவுகளில் சொல்லப்பட்டுள்ளது போலவே நீங்கள் எடுத்துக் கொள்வதோடு அப்படியே பின்பற்றியும் வருகிறீர்களா அல்லாது போனால் அவற்றில் இருந்து உங்களின் உணர்விற்கும் பக்குவத்திற்கும் ஏற்ப விடயங்களை உய்த்தறிந்து கொள்கின்றீர்களா?

2) உய்த்தறிந்து கொள்கின்றீர்கள் என்றால் அவை என்ன என்பதனை உங்கள் அளவிற்குப் பக்குவம் பெறாதவர்களிற்காக இங்கு உங்களது சுயமான மொழியில் இலகு தமிழில் தெளிவாகப் பதிவிட முடியுமா?

நன்றி

Link to comment
Share on other sites

அவர் உய்த்தறிந்து ஏற்றுக் கொண்ட முக்கிய விடயங்களுக்கு வண்ணம் தீட்டி இருக்கிறார். நீங்கள் கவனிக்கவில்லையா?

Link to comment
Share on other sites

அவர் உய்த்தறிந்து ஏற்றுக் கொண்ட முக்கிய விடயங்களுக்கு வண்ணம் தீட்டி இருக்கிறார். நீங்கள் கவனிக்கவில்லையா?

எனக்கு அவை தெளிவாகத் தெரியவில்லை. அப்படித் தெரியும் பட்சத்தில், அவை அவருடைய உய்த்தறிதல்கள் மட்டுமே என்பது தான் கோடிடப்படவேண்டியது.

சமூகம் சார் பொதுப்பட்ட கருத்துக்கள் கருதுகோள்களை நிறுவுதற்கு ஒரு சக மனிதருடைய உய்த்தறிதல்கள் போதுமானதா என்பது கேள்விக் குறியே.

மேலும் எத்தனை புத்தகங்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள,; தொலைக்காட்சி நிகழ்ச்சிகள,; திரைப்படங்கள் என்று எமக்கு எண்ணற்ற தெரிவுகள் இருப்பினும் நாம் எமது நேரத்தைச் செலவிட எது உகந்தது என்று நாம் தானே முடிவு செய்கின்றோம்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.