அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயார் – சரத் பொன்சேகா

 

sarath-fonseka-300x200.jpg

ஐக்கிய தேசியக் கட்சி  தலைமையிலான கூட்டணியினால், தனது  பெயர் முன்மொழியப்பட்டால், அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா  தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஜேவிபி போன்ற மற்றொரு கட்சியிலிருந்து வேட்பாளராகப் பரிந்துரைக்கப்பட்டால், அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாரா என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, அந்தக் கட்சியில் தான் உறுப்பினராக இல்லை என்றும் சரத் பொன்சேகா பதிலளித்தார்.

“பொதுஜன பெரமுன தனது அதிபர் வேட்பாளராக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவை, சரியாகவே தெரிவு செய்துள்ளது.

மக்கள் பாதுகாப்பு குறித்து அக்கறை கொண்டுள்ள நிலையில், பொதுஜன பெரமுன அதில் கவனம் செலுத்தியுள்ளது.

கோத்தாபய ராஜபக்ச அடுத்த அதிபராக வருவதற்கு மிகவும் பொருத்தமானவர் என்று நான் கூறவில்லை, ஆனால் மக்களின் மனதைப் புரிந்து கொண்டு, பொதுஜன பெரமுன சரியான தேர்வைச் செய்துள்ளது.

அண்மையில் நடந்த பேரணிகளில், அதிபர் பதவிக்கு போட்டியிட தயாராக இருப்பதாக இரண்டு பேர் கூறினர்.

ஒருவர் தனது தந்தையின் பெயரை தேர்தல் மேடையில் பயன்படுத்த முயற்சிக்கிறார்.  உண்மை என்னவென்றால், அவரது தந்தை கொடுத்த ஆயுதங்களைப் பயன்படுத்தியே, புலிகள் சிறிலங்கா இராணுவத்தைத் தாக்கினர்.

600 காவல்துறை அதிகாரிகளை விடுதலைப் புலிகளிடம் மற்றும் கருணாவிடம் சரணடைய உத்தரவிட்டது அவரது தந்தை தான்.

அந்த காவல்துறை அதிகாரிகளை கொன்றவர் மற்ற அரசியல் முகாமில், ஒரு மலர் மொட்டை கையில் ஏந்தியபடி இருந்தார்.

ஐதேக கூட்டணியின் அதிபர் வேட்பாளராக, கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டால், கட்சியின் அந்த முடிவுக்கு இணங்குவேன். நான் ஒரு ஒழுக்கமான நபர், கட்சி மற்றும் அதன் தலைவரின் முடிவை நான் ஏற்றுக்கொள்வேன். ”என்றும் அவர் கூறினார்.

http://www.puthinappalakai.net/2019/08/14/news/39547